Tuesday, June 24, 2025
முகப்பு பதிவு பக்கம் 217

தி கிரேட் இந்தியன் கிச்சன் || ஆணாதிக்கமும் மதமும் இங்கு தோலுரிக்கப்படும்

தி கிரேட் இந்தியன் கிச்சன் ஓரு பார்வை : ஆணாதிக்கமும் தான் சார்ந்த மதமும் பெண்களுக்கு எப்படியான உலகத்தையும் தருகிறது என்பதை துளியும் குறைவில்லாமல் காட்சிப்படுத்தியிருக்கிறது இப்படம்.

எப்போதும் இந்திய சினிமாவில் மலையாளத்திற்கு என்று என் திரைப்பட்டியலில் தனியிடம் உண்டு. இயல்பை இயல்பான மனிதர்களின் உணர்ச்சிகளையும், அவர்கள் அரசியலையும் காட்சிப்படுத்துவதில் மலையாள சினிமாவிற்கு தனியிடம் உண்டு.

“தி கிரேட் இந்தியன் கிச்சன்” என்றவுடன் சமையலையும் சுவையையும் தரும் படம் என்றுதான் பார்க்கத் துவங்கினேன். ஆனால் அது சுவையை தாண்டி பெண்ணின் சுமையையும், எந்தவித வன்முறையின்றி ஆதிக்கம் செலுத்தும் ஆணாதிக்க வன்மத்தையும் கேள்வி கேட்க வைத்திருக்கிறது என்பதே உண்மை.

படிக்க :
♦ என் பார்வையில் கில்ட்டி ! திரைவிமர்சனம்
♦ NGK : செல்வராகவன் – சூர்யா கூட்டணி Hangover-ல் ஒரு அரசியல் படம் !

படத்தின் துவக்கம் சமையலறையில் குக்கரின் விசிலும்,காய்கறி துண்டுகளை நறுக்கல், இனிப்பு பண்டங்கள் என தயார் ஆகிக்கொண்டு இருக்கிறது. கேரளத்தில் பெண் காணும் முறையைக் காட்டி அதன் பின் அடுத்தடுத்து காட்சிப்படுத்துகிறார் . இன்னொரு பக்கம் ஓரு பெண் அவளின் விருப்பமான நடனத்தை ரசித்து ஆடிக்கொண்டியிருக்கிறார் . பெண் காணும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாப்பிள்ளையும் பெண்ணை பேசச் சொல்ல, என்ன பேசுவது என்று தொடங்கும் முன் திருமணம் நடந்து முடிந்து விடுகிறது.

வீட்டில் பார்க்கும் பல திருமணங்கள் இப்படிதான் முடிகிறது. நாம் யார் என்பதை கூட அறியாமல் உடன் பயணிக்க ஓருவர்; அதுவும் அதற்கு இருமணம் இணையும் விழாவென்று பெயர். திருமணம் முடிந்து முதல் நாள் காலை அவளின் கணவர் யோகா செய்து மனதையும் உடலையும் ஆசுவாசப்படுத்திக்கொள்கிறார். அந்த பெண்ணின் மாமனார் பேப்பர் படித்திக் கொண்டே தனது மனைவி பேஸ்ட் தடவிய பிரஷ் எடுத்து வருவதற்குக் காத்துக் கொண்டிருக்கிறார். இதற்கு ஆங்கிலத்தில் ஆர்தோடக்ஸ் குடும்பம் என்று பெயருமுண்டு.

அந்த பெண்ணோ கனவர் யோகா செய்யும் நேரத்தில் குப்பைகளை கூட்டி சுத்தம் செய்து, குளித்து விட்டு விளக்கு வைத்து, பின் காலை உணவை செய்ய ஆயுத்தம் ஆகிறார். காலையில் முதலில் எழுந்து பின் இரவு கடைசியாக படுக்கைக்குச் செல்வது, இதுதான் அந்தப் பெண்ணின் திருமண வாழ்க்கை.

“நாளும் கோளும் நலிந்தோர்க்கு இல்லை, ஞாயிற்றுக் கிழமையும் பெண்களுக்கு இல்லை”  என்று கவிஞர் கந்தர்வன் தனது கவிதையில் அழகாக சொல்லியிருப்பார்.

வீட்டில் சுவையாக உணவு செய்யும் அம்மாவை பலமுறை புகழ்ந்து இருப்போம். ஆனால் சில சமயம் சரியாக செய்யாத ஒன்றை பலமுறை சுட்டிக் காட்டியபடியே அந்த உணவை நாம் சுவைத்திருக்கிறோம். அங்கு அவர்களுக்கு தேவை புகழ்ச்சியல்ல, புரிதல் என்பதை புரிய வைத்திருக்கிறது இந்தப் படம்.

அந்த பெண்ணின் மாமனார் விறகு அடுப்பில் வைத்த சாதம், அம்மியில் அரைத்த சட்னி, கையால் துவைத்த உடுப்பு என கேட்கிறார். சட்னி கையால் அரைக்கும் பக்குவம் தனி சுவைதான். அதற்காக அவர்களின் விருப்பத்தையும் அம்மியில் வைத்து நசுக்குவதற்கு பெயர் என்ன? மின் சாதனங்கள் பெருகிய இக்காலத்திலும் விருப்பம் என்ற பெயரில் பிறரை கட்டாயப்படுத்தி செய்ய வைப்பது எது?

அதே சமயம் சமையலறை பைப்பில் தண்ணீர் கசிவால் தினந்தோறும் மன்றாடும் அந்த பெண்ணின் குரல் அவரின் கணவரின் காதுக்கு எட்டாது இருப்பதன் காரணம் என்ன? பிறர் வலியை தான் உணராதது மட்டுமல்ல, தண்ணீர் கசிவடைவதால் தனக்கு பெரும் பாதிப்பு ஏதும் இல்லாததாக நினைப்பது போலவே, தன் மனைவியின் வீட்டு வேலை இடர்பாடுகளை தனக்கான பாதிப்பாக கருதுவதில்லை.

யாரேனும் சாப்பிட்டுவிட்டு, மிச்ச எச்சத்தை அப்படியே சாப்பிட்ட தட்டிலேயே விட்டுச் சென்றால் அதை எடுக்க, பெற்ற தாயாக இருப்பினும் ஒருவித சங்கடம் இருக்கும். ஆனால் அதை பெரும்பாலான ஆண்கள் மனதில் கொள்வதில்லை. அவர்களுக்கு அது தங்களது வேலையல்ல என்பதாகவும், தனது தாயின் / மனைவியின் / சகோதரியின் வேலை என்பதாகவுமே மனதில் படுகிறதே ஏன்? ஓரு ஆண் தான் சாப்பிட்ட இடத்தையோ அல்லது சாப்பிட்ட தட்டையோ சுத்தம் செய்ய ஏன் துணிவதில்லை? சமையல் முதல் எச்சில் தட்டில் கழுவுவது வரை பெண்களின் வேலையாகச் சொல்லிக் கொடுக்கப்பட்டு வளர்க்கப்படுவதுதான்.

சமையலறை வேலை தொடங்கி கழிவறை சுத்தம் செய்யும் வேலை வரை முடித்துவிட்டு, படுக்கையறை சென்றாலும் அங்கும் பல பெண்கள் வேலை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அங்கு அவர்களின் ஓய்வுகூட காணாமல் போகிறது.

காமமும் கூட காதலோடு சேரும் போது தான் முழுமையடைகிறது. ஆனால் வீட்டிலிருக்கும் பெண்களுக்கு பல சமயங்களில் விருப்பமின்றி தீண்டுதலும், தனது விருப்பங்களைக் கூட சொல்ல முடியாத நிலைதான் நீடிக்கிறது. காமம் மெல்லியது. அதை கட்டாயத்தில் கட்டிலில் கிடத்துவது எது போன்றது? அதுவும் ஓரு வன்முறையே.

ஆண்களுடைய தேவையின் நீட்சி மட்டுமே பெண் என்பதுபோல் இந்த சமூகம் கட்டமைத்திருக்கிறது.  இங்கு பாலியில் விருப்பம் பற்றி யார் பேச வேண்டும்? யார் கேட்க வேண்டும்? என்பதும் கூட ஆண்தான் நிர்ணயிக்கிறான்.

இங்கு ஆண் தனது தேவையையும் விருப்பத்தையும் பேச இடமிருக்கிறது. ஆனால் அதையே ஒரு பெண் பேசினால் அது வேறுவிதமாக புரிந்து கொள்ளப்படுகிறது. அந்தப் பெண் மட்டுமல்ல, பெரும்பாலான இல்லத்தரசிகளின் நாட்கள் இப்படித்தான் கழிகிறது.

இந்தப் படம் இந்தியக் குடும்பங்களின் பிரதிபலிப்பு என்பதால்தானோ என்னவோ, இந்த கதாபாத்திரங்களின் இடத்தில் எந்தக் குடும்பத்தையும் வைத்துப் பார்த்து இந்தக் காட்சிகளை நம் அன்றாட வாழ்வில் பொருத்திப் பார்க்க முடியும்.

குடும்பத்தின் அனைத்துப் பணிகளையும் செய்யும் பெண்ணுக்கு மாதத்தில் மூன்று நாட்கள் வரும் மாதவிடாயைத் தீட்டாகப் பார்ப்பதுதான் முட்டாள்தனத்தின் உச்சம். அதையும் கூட அந்த வேலைக்காரப் பெண், “அது தீட்டு என்றால் என் குழந்தைகளுக்கு யார் உணவளிப்பது?” என்று கேட்கும் கேள்வியே உழைக்கும் வர்க்கத்தின் வாழ்நிலையின் நிதர்சனம்.

அந்தப் பெண் அந்த மூன்று நாட்கள் தனிமையில் இருப்பது எப்படியான அசோகரியங்களை தருகிறது என்பதை கடந்து அது ஏதோ பெண்களுக்கான இழுக்காக பார்க்கும ‘தீட்டு’ எனும் பார்வை அவர்களை மேலும் பலவீனப்படுத்துகிறது.

நம் நாட்டில் அசாமில் உள்ள காமக்கியதேவி கோவிலில் ரத்தப்போக்குடன் பெண் கடவுள் காட்சியளிக்கிறார். ஆனால் சபரிமலை கடவுள் மாதவிடாயை தீட்டாகப் பார்க்கிறது. பெண்களை சபரி மலை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்ற பெண்களின் உரிமைக்கான போராட்டத்தை ஆதரித்துப் போடும் ஓரு முகநூல் பதிவுகூட, அந்தப் பெண்ணின் கணவரின் விருப்பத்தோடு மட்டுமேதான் பதிவிட முடிகிறது.

சமூக வலைத்தளத்தில் தனது கருத்தைத் தெரிவிக்கும் அடிப்படை உரிமையை முடக்குவது முதல், தான் கற்ற கலையை பிறருக்கு கற்றுத்தர விருப்பமிருந்தும் பிறரது கௌரவம் என்ற பெயரில் பெண்கள் மீது ஏற்படுத்தப்படும் கட்டுப்பாடுகள் வரை அனைத்தையும் மொழி எல்லைகளைக் கடந்து ஒட்டுமொத்த பெண்ணின் குரலாய் இயக்குனர் ஜூயோ பேபி படமாக்கியிருப்பது பாராட்டுக்குரியது.

நிமிஷா சஜ்யன் இங்கே தனது நடிப்பை வளர்த்துக் கொண்டு ஒவ்வொரு படத்திலும் தனது திறமையை மெருகேற்றியிருக்கிறார். ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’, அவரது நரம்புகள் வழியாக பாய்ந்து பெயரிடப்படாத மனைவியின் ஒவ்வொரு களத்திலும் சுவாசிக்கிறார் நிமிஷா.

அவர் நடித்த முதல் படமான ”தோண்டிமுதலம் டிரிக்சஷிய”த்தின் மூத்த துணை நடிகரான சூரஜ் வெஞ்சராமுடு, “தி கிரேட் இந்தியன் கிச்சனி”ல் கணவராய் தனது நடிப்பின் மூலம் சிறப்பான கலை நுண்ணறிவைக் காட்டியிருக்கிறார்.

வெளிப்படையாக வெறுக்கத்தக்க மனிதராக அல்லாமல், ஒரு வித்தியாசமான – எல்லா மனிதர்களுக்குள்ளும் நல்ல நடத்தை கொண்ட வில்லன்கள் இருப்பதை அவரது கதப்பாத்திரம் வலியுறுத்துகிறது. அது நமது பக்கத்து வீட்டு வழக்கமான அத்தியாயமாகக் கூட இருக்கலாம்.

தி கிரேட் இந்தியன் கிச்சன், பாதிக்கப்பட்ட பெண்கள் முதல் பாதிப்பை உணராமல் இருக்கும் பெண்கள் வரை அனைவருக்கும் ஓரு பாடமாக அமைந்திருக்கிறது. இந்தப் படத்தில் மாமியாராக வரும் கதாபாத்திரத்துக்கு தனி பாராட்டு. தான் முதுகலை படிப்பு படித்தும்கூட, “ஆடை, ஆண் கொடுத்த சுதந்திரம்” என்பதன் மூலம் எதார்த்தத்தை காட்டியிருப்பார். எனினும் மருமகளின் வலியை ஓரு சகமனிதியாக பார்ப்பதுதான் தேவை என்ற அவரது கதாபாத்திரம், சமூக மற்றும் சினிமா ஸ்டீரியோடைப்களுக்கு மாறாக, மாமியாரும் ஓரு பெண் என்ற பார்வையை மனதில் பதிய வைத்திருக்கிறது.

படத்தின் இன்னொரு சிறப்பம்சம் – ஒலி வடிவமைப்பாளரான டோனி பாபுவின் ஸ்விஷ், ட்ரிக்கிள்ஸ், கடுகின் கடுகல், எண்ணையை குமிழியின் சிரிப்பு, பாத்திரங்களின் பீயோனா , உணவை சுவைக்கும் இசை என எல்லாம் நம்மை படத்தோடு அழைத்து செல்கிறது.

ஓளி வடிவமைப்பில் டிஓபி சலு கே தாமஸ், அந்தப் பெண்ணின் திருமண வாழ்க்கையை மங்கலான ஓளியுடன் பயணிப்பது போன்று காட்சிப்படுத்தி, பின் படத்தின் முடிவில் ஒளியை அதிகரித்து திருமண வாழ்க்கை என்ற சிறைச்சாலையிலிருந்து அவளை சிறகசைத்த பறவையைப்போல் காட்டுவதில் தொழில்நுட்ப யுத்தியை அழகாக கையாண்டுள்ளார்.

பெண்களை கடவுளாகப் பார்க்க வேண்டும் என யாரும் நினைக்கவில்லை. ஆனால் பெண்ணை ‘தேவி’ என்று சொல்லி தியாகம், வலி, பெருமை, கௌரவம் எல்லாம் அவளின் அங்கம் முழுக்க அணிகலன்களைப் பூட்டுவது விருப்பமற்ற வெற்று ஜோடனைப் பேச்சாகவே இருக்குமே ஒழிய உள்ளார்ந்த பொருளில் அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் என்பதே எனது வேண்டுகோள்.

இங்கே ஆண்கள் பற்றி எதிர்மறையான கருத்துகளை மட்டும் முன் வைப்பது எனது விருப்பமல்ல. அதைச் செய்யவும் இல்லை. ஏனெனில் என்னை வளர்த்தெடுத்த சமூகத்தில் மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் போன்ற தோழர்களால் பெண் விடுதலை சாத்தியமானது என்பதை என் நினனவில் கொள்கிறேன்.

படிக்க :
♦ ” தந்தையர் இல்லா காஷ்மீர் ” – திரைப்படம் | கண்ணீர் பள்ளத்தாக்கின் கதை !
♦ செம்படையில் பெண்கள் – திரைப்படம்

இப்போது எல்லாம் ஆண்கள் இப்படியில்லை என்று பலருக்குத் தோன்றலாம். ஆனால், சேர்ந்து உணவு சமைப்பது, வேலைகளை பகிர்ந்து செய்வது, வரதட்சணை வேண்டாம் எனக் கூறுவதெல்லாம், லட்சத்தில் ஓரு பகுதியே. அதுவும் கூட தேவையை சார்ந்து மட்டுமே இயக்குவிக்கப்படுகிறது. அதுவே ஆண்களின் புரிதலின் அடிப்படையில் இயங்குமாயின், கட்டாயம் அவர்களுக்கு எனது பாராட்டுகள். எனது பார்வையில் தவறு இருப்பின் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள். கட்டாயம் பரிசிலிக்கிறேன். ஆனால் ஆண்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.

“மாற வேண்டியது மனம் மட்டுமே…   மாறக்கூடாது என்று தடுப்பது எதுவோ அதை தகர்த்து எறி ..”

தி கிரேட் இந்தியன் கிச்சன் என்பது ஒரு மிக மோசமான, ஆணாதிக்கத்தையும் அதற்கு ஆதாரமாக விளங்கும் மதத்தையும் கேள்வி கேட்டிருக்கிறது என்றால் அது மிகையாகாது. இயக்குனர் ஜியோ பேபி மிகவும் எளிமையான தனது கதைக் களத்தால், அதை சாத்தியப்படுத்தியிருக்கிறார். நம் வாழ்நாள் முழுவதும் எங்கோ ஏதோ ஒன்றில் அனுபவித்து கொண்டிருப்பதை நாம் அனைவரும் உணரும் வகையில் இப்படம் அமைந்திருக்கிறது !

சிந்துஜா
சமூக ஆர்வலர்disclaimer

விவசாயப் போராட்டத்தை திசைத் திருப்பும் ஊடகங்கள்!!

டெல்லியில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக சமரசமின்றி போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளின் வீரம் செறிந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரத் துடிக்கிறது மோடி அரசு. அதற்கு உறுதுணையாக தன்னுடைய சங்கப் பரிவார கும்பலையும், தன்னை தூக்கி நிறுத்தும் ஊடகங்களையும் களத்தில் இறக்கி விட்டுள்ளது.

அந்த வகையில், ”டெல்லியின் சிங்கு எல்லைப் பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர், சிங்கு எல்லையில் போராடி வரும் விவசாயிகளின் போராட்டத்தால் தங்களது வர்த்தகம் பாதிக்கப்பட்டுவிட்டது எனவும், குடியரசு தின டிராக்டர் பேரணியில் தேசியக் கொடியை அவமானப்படுத்தியதால் போராட்டக் களத்தை காலி செய்ய வேண்டும்” எனவும் உள்ளூர் மக்கள் தெரிவித்ததாக செய்தி வெளியிட்டுள்ளது ANI ஊடக நிறுவனம்.

இரண்டு மாதக் காலமாக அமைதியாக நடந்த போராட்டத்தில் அந்தப் பகுதி மக்கள் இதுவரை தங்கள் வாழ்க்கை பாதிக்கப்பட்டதாக எந்தப் புகாரும் அளிக்கவில்லை. திடீரென இப்போது அவர்கள் போராட்டத்தை கலைக்க வருவதாகக் கூறுவது பொய் என்பதும் இந்து சேனா அமைப்பை சேர்ந்த குண்டர்கள்தான்  விவசாயிகள் மீது என்பது தற்போது அம்பலமாகியுள்ளது.

படிக்க :
♦ கைவிடப் போகிறோமா நமக்கான விவசாயிகள் போராட்டத்தை !
♦ சர்வதேச நோக்கில் விவசாயிகள் போராட்டத்தின் முக்கியத்துவம் !

மேலும் பல கிராமங்களில் வீட்டிற்கு ஒருவர் போராட்டத்திற்குச் செல்ல வேண்டுமென்றும், செல்லாதவர்களுக்கு அபராதம் விதிப்பதாக கிராம தலைவர்கள் கூறியிருப்பதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது ANI. கிராம மக்கள் மிரட்டப்பட்டு போராட்டத்தில் பங்கேற்கச் செய்யப்படுவதாக ஒரு கருத்துருவாக்கத்தை இதன் மூலம் செய்திருக்க்கிறது ANI.

இதே வகையான செய்திகளைத்தான் தி இந்து, டைம்ஸ் நவ், இந்துஸ்தான் டைம்ஸ், சி.என்.என்., நியூஸ்18, இந்தியா டுடே உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களும் வெளியிட்டுள்ளன.

தமிழக ‘நடுநிலை’ ஊடகங்களும், தனது பங்கிற்கு போராடும் விவசாயிகளை வன்முறையாளர்களாகவும், ஈவு இரக்கமற்றவர்களாகவும் தன்னால் இயன்ற அளவிற்கு சித்தரித்து வருகின்றன.

நடுநிலை வகிப்பதாக கூறிக் கொள்ளும் தினகரன் நாளிதழும் தன் தலையங்கத்தில் போலீசின் அடாவடித்தனத்தை ஆதரித்து எழுதியுள்ளது.

”குடியரசு தினத்தில் விவசாயிகள் டெல்லிக்குள் டிராக்டர் பேரணி நடத்த போலீசார் அனுமதியளித்தது தான் பிரச்சனை எனவும், விவசாயப் பேரணிக்கு போலீசார் ஒதுக்கிய பகல் 11.30 மணிக்கு முன்பாகவே விவசாயிகள் 9 மணிக்கே பேரணியை தொடங்கி விட்டார்கள்; யார் தடுத்தும் கேட்கவில்லை; அதனால் தான் வன்முறை மோதல் ஏற்பட்டது” எனவும், “போலீசார் பேரணிக்கு அனுமதியளித்த மூன்று பாதைகளை விட்டு செங்கோட்டையை விவசாயிகள் முற்றுகையிட்டனர்” எனவும் பிரச்சினையை திசைத்திருப்பும் கண்ணோட்டத்தில் எழுதியுள்ளது.

மேலும், பொது மக்களுக்கும், விவசாயிகளுக்கும் இருக்கும் தொடர்பை துண்டிக்கும் வகையில் காசிபூர், சிங்கு, திக்ரி விவசாயிகள் போராட்டம் நடைபெறும் எல்லைப் பகுதியில் 31-ம் தேதி நள்ளிரவு 11 மணிவரை இணைய சேவை முடக்கத்தை அறிவித்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.

இதுவரையில் ஊடகங்களின் பொய்யை, விவசாயிகள் மற்றும் அப்பகுதி மக்களின் சமூக வலைத்தளப்பதிவுகளில் இருந்து தெரிந்து கொள்ளக் கிடைத்த வாய்ப்பையும் தற்போது பறித்துள்ளதன் மூலம், பொய் செய்திகளை பரப்பும் ஊடகங்களுக்கு நல் வாய்ப்பை வழங்கியுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்னர், புதுடெல்லியின் இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே குண்டு வெடித்த சம்பவத்தைப் பயன்படுத்தி டெல்லியிலும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் மேலதிகமான படைகளை டெல்லியில் குவித்துள்ளது.

விவசாயிகள் போராடும் எல்லைப் பகுதிகளில் அரசு மூலம், தண்ணீரை நிறுத்துவது, மின்சாரத்தை நிறுத்துவது என்ற வகையில் பல இடர்பாடுகளைக் கொடுத்துக் கொண்டிருக்கும் அதே சமயத்தில், சங்கபரிவாரக் கிரிமினல் கும்பல்களின் மூலம் கலவரத்தைத் தூண்டும் வேலையைச் செய்து வருகிறது மோடி அரசு.

போலீசும் ஊடகங்களும் அதற்கான அடியாள் வேலையைச் செவ்வனே செய்து வருகின்றன!!

மேகலை

 

பாசிஸ்டுகள் வென்றதில்லை : விவசாயிகள் போராட்டம் மறுதாம்பாய் எழும் | கருத்துப்படம்

பாசிஸ்டுகள் வென்றதில்லை !
விவசாயத்தை விழுங்க
கார்ப்பரேட்டை அனுமதியோம் !
காவியை வீழ்த்த
மறுதாம்பாய் எழுவோம் !

கருத்துப்படம் : மு. துரை

 

திருவாரூர் : விவசாயிகளுக்கு ஆதரவாக போராடினால் கொலை முயற்சி வழக்கு !

வேளாண் துறை சட்டங்களுக்கு எதிராக கடந்த டிசம்பர் 26-ம் தேதி இந்தியா முழுவதும் டிராக்டர் பேரணிகளை நடத்த வேண்டும் என்று அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு கேட்டுக்கொண்டது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் டிராக்டர் பேரணிகள், வாகன பேரணிகள் நடைபெற்றன. அன்றைய தினம் மட்டும் ஏறத்தாழ பத்தாயிரம் பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது. தன்னை முதல்வராக கூறிக்கொள்ளும் எடப்பாடி பழனிச்சாமி மோடிக்கு ஏற்ற ஜாடி என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.

டெல்லியிலே விவசாயிகள் பேரணிக்கு அனுமதி கொடுத்து விட்டு அதிலேயே போலீஸ் திட்டமிட்ட கலவரம் செய்தது போல, திருவாரூரிலும் அப்படிப்பட்ட முயற்சியை செய்தது போலீசு என்பதை அறிய முடிகிறது. அதுமட்டுமல்ல அப்படிப்பட்ட முயற்சியை தற்போது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

படிக்க :
♦ திருவாரூர் : பாஜக கும்பலை மண்டியிடச் செய்த முற்போக்கு இயக்கங்கள் !
♦ திருவாரூர் : கலெக்டர் உத்தரவை செயல்படுத்தக் கோரிய மக்கள் அதிகாரம் தோழர்களுக்கு சிறை !

டிசம்பர் 25-ம் தேதி பேரணிக்கு அனுமதி கேட்க செல்லும் பொழுது அனுமதி மறுக்கப்படுகிறது. பேச்சுவார்த்தைக்குப் பிறகு 50 டிராக்டர்களை மட்டும் ஓட்டிச் செல்லலாம் என்று அனுமதி கொடுக்கப்படுகிறது.

அன்றைய தினம் ஆயுதம் தாங்கிய போலீஸ் திருவாரூரில் நகர வீதிகளில் ஒத்திகை அணிவகுப்பு நடத்தி மக்களை அச்சுறுத்துகிறது. போலீசு ஒத்திகை அணிவகுப்பின்  நோக்கமே விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு யாரும் வரக்கூடாது என்பதுதான்.

டிசம்பர் 26-ம் தேதி திருத்துறைப்பூண்டியில் இருந்து திருவாரூர் நோக்கி வந்து கொண்டிருந்த டிராக்டர் பேரணியை மறித்த போலீசு, வேண்டுமென்றே தகராறு செய்தது. ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாக்கைத் துருத்திக்கொண்டு விவசாயிகளை அடிக்கப் போவதும், அதனால் விவசாயிகளை ஆத்திரமடையச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது. பின்னர் விவசாயிகள் அனைவரும் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

திருவாரூரிலே டிராக்டர் பேரணிக்கு அனுமதி கொடுத்துவிட்டு பின்னர் போலீஸ் அனுமதி திடீரென்று மறுக்கிறது. பூண்டி கலைவாணன் எம்எல்ஏ டிராக்டரை ஓட்டி வருகிறார். உடன் சிபிஎம், AIKSCC, மாவட்ட பொறுப்பாளர்கள் இருக்கிறார்கள். வேண்டுமென்றே அந்த ட்ராக்டர் முன்பு இரும்புத் தடுப்புகளை தூக்கி போலீஸ் வீசுகிறது.

ஓடிக்கொண்டிருக்கும் டிராக்டரை கையால் பிடிப்பதற்கு பெண் போலீசை ஏவி விடுகிறார்கள். டிராக்டர் ஓடும்போது வேண்டும் என்றே நடுவில் நின்று கொண்டிருக்கிறார்கள். எப்படியாவது ஒரு கலவரத்தை நடத்தி விட வேண்டும் என்று போலீஸ் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருந்தது. அதையும் மீறி விவசாயிகள் வெற்றிகரமாக பேரணியை நடத்தி முடித்திருக்கிறார்கள்.

This slideshow requires JavaScript.

அன்றைய தினம் மீண்டும் ஆயுதம் தாங்கிய போலீஸ் மக்களை அச்சுறுத்தும் விதமாக திருவாரூர் நகர வீதிகளில் வலம் வந்திருக்கிறது. பூண்டி கலைவாணன் எம்எல்ஏ, அகில இந்திய விவசாயிகளின் போராட்டக் குழுவின் மாவட்ட பொறுப்பாளர் மாசிலாமணி, மற்றும் சிபிஎம் திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் மீது கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட கொடூரமான பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. ஐந்து பேர் பயங்கரவாதிகளை கைது செய்யப்படுவது போல வீட்டில் புகுந்து அதிகாலை கைது செய்யப்படுகிறார்கள். மற்றவர்களைத் தேடிக்கொண்டிருக்கிறது போலீஸ். கொலை முயற்சி வழக்கு என்பதற்கு ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படலாம். ஆக விவசாயிகளுக்கு ஆதரவாக போராடினால் பேசினால் ஆயுள் தண்டனைதான் கிடைக்கும் என்பதை போலீசு பதிவு செய்கிறது.

விவசாயிகள் மீதும் விவசாய சங்கத் தலைவர்கள் மீதும் போடப்பட்ட பொய் வழக்குகளை கண்டித்து 31.1.2021 அன்று மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டம் தொடங்குவதற்கு முன்பு மேடைக்கு எதிரில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசு கைகளில் லத்தியோடும் கலவரத்தை தடுப்பதற்கான எல்லா கவசங்களோடும் தயாராக இருந்தது. மேடைக்குப் பின்னே வஜ்ரா வாகனங்களும் அதிவிரைவு படை போலீசாரும் குவிக்கப்பட்டு இருந்தது. எடப்பாடி போலிசின் எதிரி யார்? விவசாயிகளும் விவசாயிகளுக்கு ஆதரவானவர்களும்தான் என்பதைத்தான் இது நிரூபித்தது .

இதையெல்லாம் மீறி சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்கள். இந்த ஆர்ப்பாட்டம் முடிவடைவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னரே ஒரு டாடா ஏஸ் வாகனத்தில் அங்கிருந்த மக்களிடம் போலீஸ் தரப்பு நியாயத்தை எடுத்துரைக்கும் விதமாக போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஒருவர், அன்று போலீசார் மிகவும் பாதிக்கப்பட்டதாகவும் தாங்கள் எல்லாம் விவசாயி வீட்டுப் பிள்ளைகள் என்றும் கதையளந்து கொண்டிருந்தார் .

ஒரு ஆர்ப்பாட்டம் முடிவதற்கு முன்னரே இப்படியெல்லாம் போலீசு வேண்டுமென்றே ஆத்திரத்தை தூண்டும் வகையில் மைக்கில் பிரச்சாரம் செய்வது எந்த சட்டத்தில் இருக்கின்றது ? போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பேசிய வண்டிக்கு கீழே இரண்டு டிஎஸ்பிக்கள் நின்று கொண்டிருந்தார்கள். இதிலிருந்தே உயரதிகாரிகளின் திட்டப்படி ஆர்ப்பாட்டம் முடிவதற்கு முன்பு ஏதாவது அசம்பாவிதம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே போலீசு செயல்படுகிறது என்பதையும் அறிய முடிகிறது.

தமிழகத்தில் இருக்கக்கூடிய மிகப்பெரிய ரவுடிகள் எல்லாம் பிஜேபி – ஆர்.எஸ்.எஸ்-ல் இருக்கிறார்கள். எப்போது வேண்டுமானாலும் ஒரு கலவரத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பை தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைக் கைது செய்யத் துப்பில்லாத போலீஸ்தான் போராடுகின்ற விவசாயிகளையும் விவசாயிகளுக்கு ஆதரவானவர்களையும் கொடும் பிரிவுகளின் கீழ் வழக்குப் போட்டு கைது செய்ய தேடிக் கொண்டிருக்கிறது.

This slideshow requires JavaScript.

ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி கும்பல் தேர்தலுக்கு வெளியே அரசு நிர்வாகம், போலீஸ், ரவுடிகள் என அனைத்து இடங்களிலும் தனக்கான ஆட்களைத் தெரிவு செய்து வைத்திருக்கிறது. கலவரங்களை ஏற்படுத்துவதன் மூலம் மக்களுக்கு அச்சத்தை கொடுப்பது, மக்களை அச்சத்திலே நிரந்தரமாக இருக்க வைப்பது என்பதுதான் அவர்கள் நோக்கம்.

தேர்தலுக்கான ஒரு கூட்டணியை அமைப்பதை மட்டும் நோக்கமாகக் கொண்டிராமல் பிஜேபி – ஆர்.எஸ்.எஸ் கும்பலால் பாதிக்கப்பட்ட அனைத்து பிரிவினருக்கும் ஓரணியாக நிற்காமல் இந்த பாசிஸ்டுகளை வீழ்த்துவதைப் பற்றி ஒரு கணம் கூட யோசிக்க முடியாது.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தஞ்சை மண்டலம்,
திருவாரூர்-82207 16242.

டெல்லி விவசாயிகள் மீதான தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் : மக்கள் அதிகாரம் பங்கேற்பு !

குடியரசு தினவிழா அன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்திய விவசாயிகள் மீது டெல்லி போலீஸ் மற்றும் துணை ராணுவப் படையின் கொலைவெறி தாக்குதலை கண்டித்தும், வேளாண் சட்டத்தை ரத்து செய்ய கோரியும், அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பாக தமிழகம் முழுவதும் கடந்த 30-01-2021 அன்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற இருந்தது. இந்தப் போராட்டத்திற்கு எடப்பாடி அரசு அனுமதி மறுத்ததை கண்டித்தும் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டமாக நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் பகுதியில் கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரத்தின் சார்பில் காஞ்சிபுரம் பகுதி தோழர்கள் கலந்துக் கொண்டனர்.

This slideshow requires JavaScript.

இதில் மக்கள் அதிகாரத்தின் சார்பாக பேசிய தோழர் திலகவதி, எடப்பாடியை மட்டுமல்ல, இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்த போலீசையும் நோக்கி “எடப்பாடி உண்பது சோறா? மலமா?” என்ற கேள்வியை எழுப்பினார். இது வெறும் அம்பானி, அதானிகளுக்காகக் கொண்டுவரப்பட்ட சட்டம் அல்ல, கல்வி, மருத்துவம் போன்று அனைத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிதி மூலதன கும்பல் இந்த விவசாயத் துறையும், குறிப்பாக கிராம பொருளாதாரத்தைச் சூறையாடி விவசாயிகளை நடுரோட்டில் நிற்க வைப்பதன் மூலம், சோற்றுக்குக் கூட அந்நிய நாடுகளை கையேந்தி நிற்கும் பிச்சைக்காரனாக நமது மக்களையும், விவசாயிகளையும் நிற்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதாக பேசினார்.

மேலும் அடையாள ஆர்ப்பாட்டங்கள் உண்ணாவிரதங்கள் மூலமாக இந்த அரசை நிர்பந்திக்க முடியாது, டெல்லியில் போராடும் விவசாயிகளை போல, உயிரேபோனாலும் பரவாயில்லை என்று அஞ்சாமல் அடக்குமுறைகளை எதிர்கொண்டு, இந்த அரசுடன் நேருக்கு நேர் மோதும் போது மட்டும்தான் இந்தப் பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்ட முடியும். அதுவரை நமது போராட்டம் ஓயாமல் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்று பேசினார்.

இந்தப் போராட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்கம், மக்கள் அதிகாரம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய அமைப்புகளை சேர்ந்த தோழர்களும் பொதுமக்களும் இணைந்து கலந்து கொண்டனர்.

தகவல்:
மக்கள் அதிகாரம்,
காஞ்சிபுரம் மாவட்டம் .

கில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு மற்றும் ஜனநாயக சக்திகள் இணைந்து, டெல்லியில் விவசாயிகள் ஜன.26 நடத்திய டிராக்டர் பேரணியில் போலிசின் தாக்குதலை கண்டித்து  சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் 30.01.2021 அன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைப்பெற்றது.

This slideshow requires JavaScript.

இதில், சென்னை பகுதி மக்கள் அதிகாரம்  தோழர்கள் கலந்துக் கொண்டனர்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சென்னை.

 

டெல்லி போராட்டம் : துவங்கியது சங்கிகளின் வெறியாட்டம் !

டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியை, “வன்முறையாக” சித்தரித்து அவர்களை ஜனநாயக விரோதிகளாகவும், தேசியக் கொடியை மதிக்காத ‘தேச துரோகிகளாகவும்’ காட்டியதன் மூலம் விவசாயிகளுக்கு உலகம் முழுவதும் இருந்து வரும் ஆதரவை சீர்குலைக்க முயற்சித்தது. அதையே முகாந்திரமாக வைத்துக் கொண்டு தற்போது, சங்க பரிவாரக் கிரிமினல்கள் விவசாயிகள் அமைதியாகப் போராடும் இடத்தில் மோதலுக்காக திட்டமிட்டுக் களமிறக்கப்பட்டுள்ளனர்.

இன்று மதியம் முதல், டெல்லி சிங்கு, திக்ரி எல்லைகளில் விவசாயிகள் போராடும் இடங்களில் தகராறு செய்யும் நோக்கத்தோடே சங்க பரிவாரக் கிரிமினல் கும்பல்கள் களமிறக்கிவிடப்பட்டுள்ளன.

இன்று மதியம் சிங்கு எல்லையில் விவசாயிகளின் போராட்டக் களத்திற்குள் நுழைந்த இந்து சேனா எனும் சங்க பரிவாரக் கும்பல், அங்கிருக்கும் விவசாயிகளின் கூடாரங்களை அகற்றத் துவங்கியது. அதனை ஒட்டி விவசாயிகளுக்கும் சங்க பரிவாரக் கும்பலுக்கும் மோதல் துவங்கியிருக்கிறது.

படிக்க :
♦ வன்முறை பூச்சாண்டி காட்டி டெல்லி போராட்டத்தை கலைக்க முயலும் மோடி அரசு !
♦ டிராக்டர் பேரணி : விவசாயிகள் மீது போலீசு தடியடி ! கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு !

போலீசின் கட்டுப்பாட்டை மீறி விவசாயிகளின் போராட்டக் களத்திற்குள் தண்ணீர் லாரி கூட உள்ளே நுழைய முடியாத நிலையில் ஒரு பெரும் கும்பல் உள்ளே அனுமதிக்கப்பட்டிருப்பது என்பது போலீசின் ஒப்புதலின்றி நடந்திருப்பதற்குச் சாத்தியமில்லை.

இன்று மதியம் சுமார் 1.45 மணிக்கு சிங்கு எல்லையிலுள்ள விவசாயிகளின் போராட்டக் களத்திற்குள் இந்து சேனா கும்பல் நுழைந்துள்ளது. உள்ளூர் மக்கள் என்று தங்களை காட்டிக் கொண்ட இந்து சேனாவின் கொண்டையை பத்திரிகைகளும் ஊடகங்களும் அம்பலப்படுத்தியிருக்கின்றன.

முதலில் கையில் ஆயுதங்களின்றி நுழைந்த இந்து சேனா கும்பல், இரண்டாவது சுற்றில் ஆயுதங்களோடு நுழைந்து விவசாயிகளைத் தாக்கியுள்ளது. இந்தக் கும்பல் உள்ளே நுழைவதை அனுமதித்த போலீசு கிரிமினல் கும்பலும் தடியடி நடத்தி விவசாயிகளைத் தாக்கியிருக்கிறது. திக்ரி எல்லையிலும் முழுக்க முழுக்க படைகளைக் குவித்துள்ளது மோடி அரசு.

மேலும், காசியாபாத் எல்லையில் போராடி வரும் விவசாயிகள் உடனடியாக அப்பகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று நேற்று இரவு. காசியாபாத் நகர நிர்வாகம் உத்தரவிட்டிருக்கிறது. காசியாபாத் மாவட்ட ஆட்சியர் அஜய் ஷங்கர் பாண்டே போராடும் விவசாயிகளிடம் அப்பகுதியை விட்டு வெளியேறுமாறும் அல்லது அவர்கள் அங்கிருந்து அகற்றப்படுவார்கள் என்றும் மிரட்டி விட்டுச் சென்றுள்ளார்.

காசியாபாத் எல்லையில் விவசாயிகள் தங்கியுள்ள இடத்தில் நேற்று இரவே பலமுறை மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில்  நூற்றுக்கணக்கான போலீசு துணை இராணுவப் படைகளை குவித்து வருகிறது யோகி அரசு. அதோடு விவசாயிகளின் டிராக்டர் பேரணி குறித்து சமூக வலைத்தளங்களில் எழுதிய, சசி தரூர் மற்றும் 6 பத்திரிகையாளர்கள் மீது தேச துரோக வழக்கு தொடுத்துள்ளது உத்தரப் பிரதேச அரசு.

படிக்க :
♦ கைவிடப் போகிறோமா நமக்கான விவசாயிகள் போராட்டத்தை !
♦ தில்லி விவசாயிகள் மீதான தாக்குதல் || நயவஞ்சக மோடி அரசை வீழ்த்துவோம் !

இது ஒருபுறமிருக்க, காசியாபாத்தின் காசிப்பூர் எல்லையில் இருந்து விவசாயிகளை விரட்டியடிக்க   யோகி அரசும், மோடி அரசும் செய்து வரும் சதியை அம்பலப்படுத்தி, அனைத்து உத்தரப் பிரதேச விவசாயிகளும் இந்தப் போராட்டத்தை ஆதரிக்க வேண்டுமென்று பாரதிய கிஷான் யூனியன் அமைப்பின் தேசிய செய்தித் தொடர்பாளர் திகாயத் விடுத்த அறைகூவலை அடுத்து, உத்தரப் பிரதேச விவசாயிகள் நேற்று இரவே சுமார் 500-க்கும் மேற்பட்டோர் காசிப்பூர் எல்லைக்கு விரைந்துள்ளனர். மேலும் பலரும் தற்போது வரை காசிப்பூருக்கு வந்து குவிந்த வண்ணம் உள்ளனர் .

மேலும், பாஜக கிரிமினல் கும்பல் இதற்கு முன்னர் கலவரம் நடத்திய முசாபர் நகரில் உழவர்களின் மகா பஞ்சயத்து கூட்டப்பட்டு, அங்கிருக்கும் விவசாயிகள் அனைவரும் திகாயத்தின் அறைகூவலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். சாதிய ரீதியாகவும், மத ரீதியாகவும் யாரை இதுவரை தமது அடியாள் படையாக பயன்படுத்தி வந்ததோ அதே மக்கள் இன்று விவசாயிகள் எனும் வர்க்கமாய் ஒன்று திரண்டு  பாஜக கும்பலை எதிர்த்து நிற்கின்றனர்.

இந்தச் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெறாமல் இப்போராட்டக் களத்தில் இருந்து தாங்கள் பின்வாங்கப் போவதில்லை என்பதில் விவசாயிகள் உறுதியாக இருக்கின்றனர். விவசாயிகளை வன்முறையாளர்கள் என முத்திரை குத்தி அவர்களை அந்த இடத்தில் இருந்து வெளியேற்ற அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது மோடி அரசு.

அதற்காகவே வன்முறைக் கும்பல்களை களத்தில் இறக்கிவிட்டு, போலீசு காட்டுமிராண்டிக் கும்பலையும் முடுக்கி விட்டுள்ளது. விவசாயிகளின் மீது தாக்குதல் தொடுக்கக் காத்திருக்கும் சங்கப் பரிவாரக் கும்பலுக்கும், மோடி அரசுக்கும் எதிராக அனைத்து மாநிலங்களிலும் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுப்பதோடு, இந்த வெறியாட்டத்தை பின் நின்று இயக்கிவரும் கார்ப்பரேட் முதலாளிகளை புறக்கணிப்பதுதான் மூன்று வேளாண் மசோதாக்களையும் பின்வாங்கச் செய்வதற்கான ஒரே வழிமுறை


கர்ணன்

செய்தி ஆதாரம்
: The Wire, Business-standard

நூல் அறிமுகம் : வாட்டாக்குடி இரணியன் || சுபாஷ் சந்திரபோஸ் || சு. கருப்பையா

1950-ம் ஆண்டு மே மாதம் ஐந்தாம் தேதி, உலகம் முழுவதும் காரல் மார்க்சின் பிறந்த தினத்தைக் கொண்டாடும் போது, கம்யூனிச தத்துவத்தின் படி வாழ்ந்தவனும், தஞ்சை மாவட்டத்தின் பண்ணை முதலாளிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவனுமான வெங்கடாச்சலம் என்ற வாட்டாக்குடி இரணியனும், அவனது தோழன் ஆம்பலாப்பட்டு ஆறுமுகமும், பட்டுக்கோட்டைக்கு அருகில் உள்ள வடசேரி என்ற கிராமத்தில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்.

அவர்கள் ஏன்? எதற்காக? கொல்லப்பட்டார்கள் என்ற ஆவலை நமக்குள் ஏற்படுத்தி, இரணியனின் அப்பழுக்கற்ற, சுயநலக் கலப்பில்லாத, தியாகம் நிறைந்த வாழ்க்கையை சொல்லியிருக்கிறார் ச.சுபாஷ் சந்திர போஸ். இந்த நூல் சமூகத்திற்கு உரமாகிப்போன ஒரு மாமனிதனின் வரலாற்றைச் சொல்வதோடு மட்டுமல்லாமல் , அவனது தியாக வாழ்க்கையை நமக்குள் விதைத்து கனமான வேதனையையும் ஏற்படுத்துகிறது.

இரணியன் பிறப்பு

1920-ம் ஆண்டு நவம்பர் 15-ந்தேதி பிறந்த இரணியனுக்கு ஒரு அக்கா , தம்பி நாராயணன் , தங்கைகள் சிவபாக்கியம் மற்றும் மீனாட்சி ஆகியோர் உடன்பிறந்தவர்கள். இரணியனுன் இயற்பெயர் வெங்கடாச்சலம். தனது 14-வது வயதில் தனது அக்கா கணவருடன் சிங்கப்பூர் செல்லும் வெங்கடாச்சலம் அங்கு பணம் ஈட்டுவதற்கு புட்டு, இடியாப்பம் போன்ற உணவுப் பண்டங்களை விற்கும் சிறு வியாபாரியாக வாழ்கிறான். அந்த சூழ்நிலையில் தமிழர்களுக்கு, தீவிரத்தன்மை கொண்ட மலேசிய மற்றும் சீனர்களால் பல தொல்லைகள் ஏற்பட்டன . அவர்களையெல்லாம் அடித்து விரட்டி தமிழர்களுக்கு பாதுகாப்பாக இருந்தான். அதனால் இவனது பெயரும் புகழும் சிங்கப்பூரில் பிரபலமடையத் துவங்கியது. சில நாட்களுக்குப் பிறகு அவனது அக்கா கணவரின் தொடர்பும் துண்டிக்கப்படுகிறது. வெங்கடாசலம் சுயமாக வாழத் துவங்குகிறான்.

இந்த சமயத்தில் பிழைப்பிற்காக இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் வந்த தம்பிக்கோட்டையைச் சேர்ந்த மலேயா கணபதி மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மணல்மேல்குடி கிராமத்திலிருந்து வந்த வீரசேனன் ஆகியோர்களின் அறிமுகம் கிடைக்கிறது. அவர்கள் மூலம் கம்யூனிசச் சித்தாந்தங்களையும் உலக, இந்திய, தமிழக வரலாறுகளையும் நன்கு படித்துத் தெரிந்து கொள்கிறான்.

படிக்க :
♦ லெனினை நினைவுகூர்வதென்பது அவரைக் கற்றறிவது தான் !
♦ வேளாண் சட்டத்தினை அமல்படுத்தத் துடிக்கும் மோடி அரசு !

பழந்தமிழ் பாடல்களில் உள்ள தமிழர்களின் வீரமும் மானத்தோடு வாழ்ந்த வாழ்க்கையும் அவனுக்கு மெய் சிலிர்ப்பைத் தருகிறது. உயிர் போனாலும் தான் மானத்துடன் வாழ வேண்டும் என்பதைத் தாரக மந்திரமாகவே ஏற்றுக் கொள்கிறான். மண்ணாக இருந்த என்னைக் குழைத்துக் கல் ஆக்கினார்கள் என்று அவர்களைப்பற்றி நன்றியுடன் குறிப்பிடுகிறான் . கார்ல் மார்க்சின் சித்தாந்தம் உறுதிமிக்க செங்கல் ஆக்கியது.

இந்திய தேசிய இராணுவத்தில் இரணியனின் பங்கு

அப்போது, இரண்டாவது உலகப் போருக்கான மேகங்கள் தெரிந்தன. உலகப்போர் மூளுமானால் வெள்ளையரோடு ஒத்துழைக்காமல் அவர்களோடு போரிட்டுக் கிழக்காசியாவை மீட்கக் கம்யூனிஸ்ட் கட்சி தயாராக இருந்தது. இளைஞர்களுக்கு ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை அழைத்துக் கொரில்லாப் பயற்சி கொடுத்தது. இராஷ் பிஹாரி போஸ் அமைந்து இருந்த இந்திய தேசிய லீக்கில் ஆயிரக்கணக்கான கம்யூனிசிய இளைஞர்கள் சேர்ந்து பயிற்சி பெற்றார்கள். அதில் வெங்கடாசலமும் சேர்ந்தான். அங்கே வெங்கடாசலம் என்ற பெயரில் இருவர் இருந்ததால் தன் பெயரை “இரணியன்” என்று மாற்றிக்கொண்டான். இதுவே சரித்திரத்தில் நிலைத்துப் போன பெயராகி விட்டது.

இந்நிலையில் 1943-ம் ஆண்டு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஜெர்மனியிலிருந்து பல இடையூறுகளைத் தாண்டி சிங்கப்பூர் வருகின்றார். அவர் சிங்கப்பூர் வந்ததும் இந்திய மக்களிடையே ஒரு புதுத்தெம்பு பிறக்கின்றது. அவர் உருவாக்கிய இந்திய தேசிய இராணுவத்தில் இந்திய வம்சாவளி ஆண்களும் பெண்களும் சேர்ந்தார்கள். இரணியனும் “இந்திய தேசிய இராணுவத்தில்” சேர்ந்து இந்திய விடுதலைக்கான போராட்டத்தில் ஈடுபடுகிறான். ஏற்கனவே இருந்த பயிற்சியோடு கொரில்லா போர்முறையை இன்னும் நன்றாகக் கற்று தேர்ச்சி பெறுகிறான். இப்பயிற்சியே தஞ்சை மண்ணில் பண்ணையார்களுக்கு எதிரான போராட்டத்தில் மிகவும் உறுதுணையாக இருந்தது வரலாற்று உண்மை.

நேதாஜி

இரணியன் தனது தோழர்கள் மலேயா கணபதி , வீரசேனன் ஆகியோருடன் சேர்ந்து ஒரு முறை சுபாஷ் சந்திர போஸை சந்தித்தாகவும் , கிழக்காசியாவை ஜப்பான் பிடித்து விட்டால் , போருக்குப் பிறகு மக்களிடம் ஆட்சியை ஒப்படைக்குமா ? , முதலையைப் போல பிடியைவிடாமல் இருக்குமா? போரில் இந்திய தேசிய இராணுவம் வெற்றி பெற்றால் ஜப்பான் இந்தியாவிலும் தன் மூக்கை நீட்டுமா ? என்ற கேள்விகளை எழுப்பி வாக்குவாதம் அவரிடம் செய்ததாகவும், அதற்கு, போர் முடிவிற்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று இன்முகத்தோடு கூறி சுபாஷ் சந்திர போஸ் இவர்களை அனுப்பி வைத்ததாகவும் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் இந்திய தேச விடுதலைக்காக நேதாஜி தலைமையின் கீழ் போரிட்ட “விடுதலைப் போராட்ட தியாகி” இரணியன் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

பின்னர், அமெரிக்கா ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் மீது அணுகுண்டை வீசியது. ஜப்பான் அரசாங்கம் நிலை குலைந்தது. ஜப்பான் தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை . இதனால் இந்திய தேசிய இராணுவத்திற்குப் பயங்கரமான உயிர்ச்சேதம் ஏற்பட்டது. உணவு , உடைக்கு வழியில்லாமல் வீரர்கள் திண்டாடினார்கள். ஆங்கிலேய இராணுவத்தால் பலர் கைது செய்யப்பட்டனர். பலர் கைதாகாமல் தப்பி ஓடிவிட்டனர். இரணியனும் சில முக்கியமான தோழர்களும் ஆங்கில அரசின் பிடியில் சிக்காமல் தங்கள் பழைய இடத்திற்கு வந்தார்கள்.

சிங்கப்பூர் துறைமுகத் தொழிற்சங்கத் தலைவராக இரணியனின் பணிகள்:

இந்திய தேசிய இராணுவத்திலிருந்து திரும்பிய பிறகு , எண்ணிக்கையில் மூன்று லட்சம் தொழிலாளர்கள் இருந்த அகில மலேயா தொழிலாளர்களுக்குத் தலைவர் ஆகிறார் கணபதி. அதன் காரியதரிசி ஆகிறார் வீரசேனன். அப்போது எல்லாத் தொழிற்சங்கங்களும் ஓரளவு செயல்பட்டாலும் துறைமுகத் தொழிற்சங்கத்தை சிறப்பாக நடத்த முடியவில்லை. இந்தச் சங்கம் பலமாக இருந்தால் ஏற்றுமதி இறக்குமதி பாதிக்கும் என ஆங்கிலேய அரசு இதை நசுக்குவதில் கவனமாக இருந்தது. ஏறத்தாழ 12000 தொழிலாளிகள் இருந்த அந்தச் சங்கத்தை வலுப்படுத்த அதன் தலைவர் பதவி இரணியனுக்கும், காரியதரிசி பதவி பட்டுராசுவிற்கும் கொடுக்கப்படுகிறது.

இரணியன் பொறுப்பிற்கு வந்தவுடன், குடியின் பிடியிலிருந்த துறைமுகத் தொழிலாளர்களை நெறிப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்கிறான். தொழிலாளர்கள் யாரும் குடிக்கக்கூடாது என்று தீர்மானம் கொண்டு வருகிறான். மீறுபவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டார்கள்.

அப்போது சிங்கப்பூரில் ரவுடிகளின் பிடி அதிகமாக இருந்தது . ஒவ்வொரு பகுதிக்கு ஒரு ரவுடி என்று அவர்களுக்குள் சிங்கப்பூரை பிரித்துக் கொண்டு மக்களை கசக்கிப் பிழிந்து வந்தார்கள். அதில் துறைமுகத் தொழிலாளர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டார்கள். அதனால் அவர்களுக்கு பாடம் புகட்டத் திட்டமிட்டான் இரணியன். அதனால் பிரபலமான ரவுடி ஒருவனை தேர்ந்தெடுத்து அவனை மக்கள் முன்னிலையில் அடித்து நொறுக்குகிறான் . அவன் உயிருக்கு பயந்து சிங்கப்பூரை விட்டு ஓடி விடுகிறான்.

மற்ற சிலரையும் அடக்க முடிவெடுத்த இரணியன் , அவர்களில் முக்கியமான நால்வரைத் தேர்ந்தெடுத்து ஒரு நாள் இரவு இரகசியமாக சுட்டுக் கொன்று விடுகிறான். சிங்கப்பூர் ஆடிப்போகிறது. இக்கொலைகளை யார் செய்தார்கள் என்று தெரியாவிட்டாலும் இரணியனின் பெயர் தான் சிங்கப்பூர் நகரம் முழுவதும் எதிரொலிக்கிறது. அதனால் குடியும் , ரவுடிகளின் தொல்லைகளும் குறைந்து துறைமுகத் தொழிலாளர்களின் வாழ்வு செழித்தது.

படிக்க :
♦ கைவிடப் போகிறோமா நமக்கான விவசாயிகள் போராட்டத்தை !
♦ சர்வதேச நோக்கில் விவசாயிகள் போராட்டத்தின் முக்கியத்துவம் !

இந்தியா திரும்புதல்

இரணியனின் தலைமையில் துறைமுக தொழிற்சங்கம் மிகச் சிறப்பாக செயலாற்றியது. பட்டுராசுவின் நேர்மையான நடவடிக்கையால் சந்தாத் தொகை லட்சக்கணக்கான வெள்ளிகள் சேர்ந்தன. ஆனாலும் இரணியனும் , பட்டுராசுவும் தொழிலாளர்கள் நிதியிலிருந்து ஒரு வெள்ளி கூட எடுத்து செலவு செய்யமாட்டார்கள். அத்தகைய நேர்மையாளர்களாக நடந்து கொண்டார்கள்.

ஒரு நாள், இரணியன் மனதில் தனது குடும்பத்தைப் பற்றிய சிந்தனை எழுகிறது . நாம் எதற்காக இந்த சிங்கப்பூர் வந்தோம்? . பணம் சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றத்தானே! . ஆனால், இது வரை தான் ஒரு வெள்ளி கூட தனது குடும்பத்திற்கு அனுப்பவில்லை என்ற நினைவு ஏற்படுகிறது. அவனது மனம் வேதனையில் வாடுகிறது. அதனால் இரணியன் இந்தியா திரும்ப நினைக்கிறான். அவனுக்குத் தேவையான பணத்தைக் கொடுக்க பட்டுராசு முன்வந்த போது , வேண்டாம் என்று மறுத்து விடுகிறான். இரணியன் இந்தியாவிற்குள் கிளம்பும் செய்தி எங்கும் பரவி விட்டது. வழியனுப்ப ஆயிரக்கணக்கானோர் கூடி விட்டார்கள் . சொந்த நிலக்காரன் அறுவடை நாளில் அடையும் மகிழ்ச்சியைப் போல் இரணியன் தன சேவையின் பலனைக் கண்டான். அந்த மாவீரனின் மனம் நெகிழ்ந்து போனது.

தனது 14 வயதில் சிங்கப்பூர் வந்த இரணியன் , 28 வயதில் இந்தியா திரும்புகிறான். தனது குடும்பத்தினருக்கு மட்டும் ஒரு பெட்டியில் சில துணிமணிகள் வாங்கிக் கொண்டான். எப்படி வெறுங்கையோடு சிங்கப்பூர் வந்தானோ , அதே வெறுங்கையோடு இந்தியா திரும்புகிறான். ஆனாலும், அந்தப் பெட்டிக்குள் ஒரு துப்பாக்கியும் இருந்தது. அதற்கு வேலையும் இந்தியாவில் காத்திருந்தது.

தஞ்சை மண்ணில் களப்பணி:

இரணியன் நாடு திரும்பியபோது இந்தியா சுதந்திரமடைந்திருந்தாலும் , கீழ்த்தஞ்சைப் பகுதியில் பண்ணையார்களின் ஆதிக்கமே மேலோங்கி இருந்தது. அவர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். அவர்கள் பண்ணைத் தொழிலாளர்களை கசக்கிப் பிழிந்து வந்தார்கள். மரத்தில் கட்டி வைத்து அடிப்பது, மூங்கில் குழாயை வாயில் நுழைத்து சாணியைக் கரைத்து ஊற்றுவது மற்றும் அவன் மனைவியின் மூத்திரத்தைக் குடிக்கச் சொல்லி துன்புறுத்துவது போன்ற கொடுமைகளைச் செய்து வந்தார்கள்.

சாம்பவான் ஓடை சிவராமன்

அப்போது , 1948-ல் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டிருந்த காலம் அது . கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் தோழர் சீனிவாச ராவ் தலைமையில் இரகசியமாகவே தங்கள் பணியை செய்து வந்தார்கள். இரணியன் கம்யூனிஸ்ட் கட்சியில் சேருகிறான். ஆங்காங்கே கட்சியின் கிளைகளும், விவசாய சங்கங்கள் நிறுவப்படுகின்றன.. அந்த வகையில் “தென்பறை”யில் தான் முதன் முதலில் விவசாயச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. இரணியன் தன் பணியை தென்பறையிலிருந்து மீண்டும் துவங்குகிறான்.

அவனது பணியில் முத்துப்பேட்டைக்கு அருகில் உள்ள சாம்பவான் ஓடை சிவராமனும், ஆம்பலாப்பட்டைச் சேர்ந்த ஆறுமுகமும் இணைந்து கொள்கிறார்கள். இவர்கள் அனைவரும் முக்குலத்தோர் இனத்தில் அகமுடையார் இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களது சாதியத்தை உடைத்து , உழைக்கும் ஏழை மக்களுக்காக அவர்களது உயிரை பணயம் வைக்கும் அளவிற்கு கம்யூனிச சித்தாந்தம் அவர்களை ஒன்றிணைத்திருந்தது கம்யூனிசத்தின் வெற்றியாகவே பார்க்க முடிகிறது. இவர்கள் பண்ணை முதலாளிகளுக்கு எதிராக நடத்திய போராட்டங்கள் திகைப்பூட்டுவதாக இருக்கிறது.

ஆந்திராவில் இருந்த உத்திராபதி மடத்திற்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் வாட்டாக்குடி , முத்துப்பேட்டைப் பகுதிகளில் இருந்தது. அதை நிர்வகிக்கும் பொறுப்பு இராயர் என்ற பண்ணையாரின் கையில் இருந்தது. இரணியன் அவரது அடியாட்களை அடித்து நொறுக்கி அவருக்கு பயத்தை ஏற்படுத்துகிறான். அவர் தமது கொடுமைகளை அரங்கேற்ற முடியாமல் ஏழை கூலித் தொழிலாளிகளுக்கு சரியான கூலி கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

விவசாயச் சங்கம் ஊர் ஊருக்கு ஆரம்பித்துக் கம்யூனிஸ்ட் கட்சி நடவடிக்கைகள் தீவிரமான போது பண்ணை முதலாளிகளும் தீவிரமானார்கள். அவர்களும் ஒரு சங்கம் அமைத்துக்கொண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் நடவடிக்கைகளை ஒழிக்க முனைந்தார்கள். அவர்களில் முக்கியமானவர் பரவாக்கோட்டையை சேர்ந்த நாயுடும் ஒருவர். இந்த நாயுடுவும் சளைக்காமல் பண்ணைத் தொழிலாளர்களை நசுக்குவார்.

அவருக்கு பாடம் புகட்ட எண்ணிய இரணியன் , அவரது வீட்டை தனது தோழர்கள் ரகுநாதன் , தங்கவேலு கோட்டூர் இராசு மற்றும் ரெத்தினம் ஆகியோர்களின் துணையுடன் கொள்ளையிட்டு அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் நகைகள் அனைத்தையும் ஏழைகளுக்கு பிரித்துக் கொடுக்கிறான். இந்தக் கொள்ளை சம்பவத்தில் பாம்பு கடித்த ஒருவருக்கு மருந்து கட்ட செல்வது மற்றும் தென்னைமட்டையில் துப்பாக்கி செய்து பண்ணையாரின் அடியாட்களை மிரட்டுவது போன்ற இரணியனின் திட்டங்கள் அவனது புத்திசாலித்தனத்தை தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறது. இதன் மூலம் இரணியனின் பெயர் போலீஸ் குறிப்புகளில் ஒரு தீவிரவாதியாக அடையாளப்படுத்தப் படுகிறது.

சென்னை மாகாணத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை வளர்த்த இடங்களில் ஆம்பலாப்பட்டும் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறுகிறது . தென்பறையில் முதலாவது விவசாயத் சங்கம் ஆரம்பித்த பிறகு தஞ்சாவூர் மாவட்டத்தில் இரண்டாவதாக ஆரம்பித்த பெருமை உடையது . இந்த ஊரைச் சேர்ந்த ஆறுமுகம் என்ற துடிப்பான இளைஞன் இரணியனுக்கு மிகவும் நம்பிக்கைக்கு உகந்தவனாக இருக்கிறான். ஒரு தம்பியாக இருந்து அவனுக்கு வேண்டியதைச் செய்கிறான். ஆறுமுகத்திற்கு கம்யூனிச சித்தாந்தங்களை புரிய வைக்கிறான் இரணியன். அவன் இரணியனின் பிரிக்கமுடியாத அங்கமாக மாறிப்போகிறான். “அண்ணே நான் ஒங்களுக்காவச் சாகனும் ; இல்லாட்டி உங்களோட சாகனும்” என்று இரணியனிடம் சொன்னதோடு அவ்வாறே வாழ்ந்தவன்.

பொதுவாக அன்றைய பண்ணை முதலாளிகள் உழைக்கின்ற மக்களின் உழைப்பை மட்டும் சுரண்டுபவர்கள் என்பதில்லை. நூறு, ஐம்பது பணத்தை ஏழைத் தொழிலாளர்களிடம் கொடுத்து விட்டு ஆயிரக்கணக்கில் வட்டிகளைச் சேர்த்து எழுதி பிடுங்குவார்கள். கொஞ்சம் நிலம் வைத்து இருக்கும் குடியானவர்களிடமும் பணத்தைக் கொடுத்துக் கணக்கைக் கூட்டி எழுதிக் கடைசியில் நிலத்தை எழுதி வாங்கி விடுவார்கள்.

இந்த விஷயத்தில் செம்பாளுர் பண்ணையாரும் சளைத்தவர் இல்லை. இதற்கென்று ஒரு தனிக் கணக்குப்பிள்ளை போட்டு எழுதி வைத்து இருந்தார். கடன் வசூல் செய்கிறேன் என்று கணக்குப்பிள்ளை செய்த அட்டகாசம் தாங்க முடியவில்லை. ஒருநாள் ஆம்பலாப்பட்டுத் தோழர்கள் முருகையன், காசிநாதன் , ஆறுமுகம் , சுப்பையன் ஆகியோர்கள் கணக்குப்பிள்ளை வீட்டுக்குள் புகுந்து பிராம்சரி நோட்டுகள் இருந்த பெட்டியை வெளியே தூக்கி வந்து தீ வைத்துக் கொளுத்தினார்கள். ஆம்பலாப்பட்டு கிராமத்தில் ஒருவரை மிஞ்சி ஒருவர் கட்சிக்காக தங்களை அர்ப்பணிப்பதை எண்ணி இரணியன் மகிழ்ச்சியடைந்தான்.

படிக்க:
♦ நூல் அறிமுகம் : சாம்பவான் ஓடை சிவராமன் || சுபாஷ் சந்திரபோஸ் || காமராஜ்
♦ ஸ்டாலினும் அவியாத கோழிக் கதையும் : “இதுதான் அவதூறு அரிசியல்!”

இந்த வகையில் பண்ணை முதலாளிகளுக்கு சிம்மசொப்பனமாக இருந்த இரணியன் தஞ்சை மாவட்டத்தின் வனப்பகுதிகளிலும் , வயல்களிலும் ஒளிந்து திரிந்து அலைந்தான் . அவனை பிடிக்க முடியாமல் போலீசார் திணறினார்கள்; பிடிக்க முடியாவிட்டால் சுட்டுக் கொல்லவும் திட்டமிட்டு இருந்தனர். அதனால் இரணியனைப் பிடிப்பதற்காக அவன் தம்பி நாராயணனை பிடித்து அடித்து உதைக்கிறார்கள். அவனது அம்மா மற்றும் தங்கைகளுக்கு இடைவிடாத தொல்லைகள் தருகிறார்கள். இருந்தாலும் , பிறருக்காக வாழ்ந்த இரணியனுக்காக அவனது குடும்பம் மிகப்பெரிய துன்பங்களை அனுபவித்தது.

இரணியனின் குடும்ப வாழ்க்கை

இரணியனின் குடும்ப வாழ்க்கையானது மிகவும் வேதனைகள் நிறைந்தது. தனது தாயின் கண்ணீருக்காக தனது அக்காள் மகள் செல்லமணியை திருமணம் செய்துகொள்ள இரணியன் சம்மதிக்கிறான். ஆனால் , அவனது மைத்துனன் எதிர்ப்புத் தெரிவிக்க, அதை மறுத்து செல்லமணியை தூக்கி வந்து திருமணம் செய்து கொள்கிறான். திருமண செய்தியை அறிந்து கொண்ட போலீசார் இரணியனின் வீட்டை முற்றுகையிடுகின்றனர். இரணியன் தப்பி விடுகிறான். ஆனால் இரணியனின் அம்மாவையும் , மனைவி செல்லமணியையும் போலீசார் கைது செய்து அழைத்துச் செல்கிறார்கள்.

அவர்களை விடுவிக்க இரணியன் சரணடைய வேண்டும் , இல்லையென்றால் அவன் மனைவி செல்லமணிக்கு இன்னொரு திருமணம் செய்து வைத்து விடுவோம் என்று மிரட்டுகிறார்கள். இந்த வேதனையான நேரத்திலும் இரணியன் சரணடையவில்லை . அதனால் இரணியன் கட்டிய தாலியை போலீசார் அறுத்து, அவனது உறவுக்காரப் பையனிடம் கொடுத்து மறுபடியும் தாலி கட்டச் செய்கிறார்கள். அன்றைய போலீசு கொடுங்கோன்மைக்கு இதைவிட வேறென்ன சான்று வேண்டும்?

பொதுவுடைமை சித்தாந்தத்திற்கு முன்னால், குடும்பம் எல்லாம் இரண்டாம்பட்சம் தான் என தியாகமே உருவாக வாழ்ந்து காட்டியவன் இரணியன்.

இரணியனின் மரணம்:

இந்த சூழ்நிலையில் இரணியனின் தலையில் ஒரு பெரிய விஷப்பரு உருவாகிறது. அதற்கு மருந்து கட்ட இரணியனும், ஆறுமுகமும் மருத்துவரைப் பார்க்க வடசேரி கிராமத்தின் வழியாக வருகிறார்கள். அப்போது வடசேரி பட்டாமணியன் சம்பந்தமூர்த்தி கண்ணில் பட்டு, அவர் இரணியனின் துப்பாக்கியைப் பார்த்து பயந்து , திருடன் திருடன் என்று கத்தியவுடன் வடசேரி கிராம மக்கள் ஓடி வந்து இரணியனையும், ஆறுமுகத்தையும் பிடித்துக் கொள்கிறார்கள்.

ஆனால், தாங்கள் பிடித்து வைத்திருப்பது இரணியன் என்று அவர்களுக்கு தெரியாது; தெரிந்தவுடன் அவனை உடனே கிராமத்தை விட்டு போய்விடுமாறு கூறுகிறார்கள். இதற்கிடையில் இரணியனை பிடித்து வைத்திருக்கும் செய்தி பட்டாமணியன் மூலமாக போலீசிற்கு போய் சேருகிறது.

இரணியன்

போலீஸ் வரும்போது தான் இல்லையென்றால், தன்னை தப்ப விட்டதற்காக அவர்கள் வடசேரி கிராமத்தையே அழித்துவிடுவார்கள் என்பது இரணியனுக்குத் தெரியும். அதனால் அந்த கிராமத்தை காப்பாற்றும் பொருட்டு தான் சுடப்பட்டாலும் பரவாயில்லை என்ற முடிவை ஏற்றுக்கொண்டு அமைதியாக இருந்து விடுகிறான். ஆனால், ஆறுமுகத்தின் மீது போலீசில் எந்த குற்ற வழக்கும் நிலுவையில் இல்லாததால் அவனை தப்பிச் செல்லுமாறு கூறுகிறான். ஆறுமுகம் மறுத்து விடுகிறான். இரணியனோடு அவனும் மரணத்தைத் தழுவ தயாராகிறான்.

இரணியன் சுடப்படுவதற்கு முன்பு அவன் பேசுவதாக நூலாசிரியர் ச. சுபாஷ் சந்திர போஸ் பதிவு செய்திருக்கும் வார்த்தைகள் நம் மனதில் மிகுந்த கனத்தை ஏற்றுகிறது. இரணியன் இவ்வாறு கூறுகிறான்:

“சிங்கப்பூர் மக்கள் நிம்மதியாக வாழ, அந்த நாட்டையே நடுங்கச் செய்து கொண்டிருந்த நான்கு பேரைச் சுட்டுக் கொன்றேன். மற்றவர்கள் சிங்கப்பூரை விட்டே ஓடி விட்டார்கள். பொது மக்கள் நிம்மதியாக மூச்சு விட்டார்கள். அது என்னைத் தென்றலாக தழுவியது. துறைமுகத் தொழிற்சங்கத்தில் பேருக்குத் தலைவனாக இருந்தேன். ஆங்கில அரசால் சீரழிக்கப்பட்ட தொழிற்சங்கத்தைக் கட்டிக் காத்தேன் . தொழிலாளர்களின் குடும்பங்கள் நிம்மதியாக வாழப் பல வழிவகைகள் செய்தென். நான் நினைத்து இருந்தால் கிழக்காசிய ரவுடிகளுக்கே தலைவன் ஆகி இருப்பேன். கோடிக்கணக்கான வெள்ளிகள் என் காலடியில் கொட்டி இருக்கும்.

குடும்ப வறுமையின் காரணமாகவே என் பெற்றோரால் சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டேன். நெற்றியில் ஒட்டி வைக்கக் கூட ஒரு கால் ரூபாய்க் காசை நான் ஊருக்கு அனுப்பியது இல்லை. சிங்கப்பூரில் தொழிற்சங்கப்பணமும் என் மனமும் எண்ணெயும் தண்ணீரும் போலவே இருந்தன . என் தோழர் தொழிற்சங்கக் காரியதரிசி பட்டுராசுக்கு மட்டுமில்லை சிங்கப்பூரில் எல்லோருக்கும் தெரியும்.என்னால் பணக்காரனாக ஆக முடியவில்லை. ஆனால் ஒரு புரட்சியாளனாக ஆக முடிந்தது. அதற்காக பெருமைப்படுகின்றேன்”.

1950-ம் ஆண்டு மே மாதம் ஐந்தாம் தேதி வாட்டாக்குடி இரணியனும், அவனது தோழன் ஆம்பலாப்பட்டு ஆறுமுகமும் போலீஸ் டி.எஸ்.பி சுப்பையாபிள்ளை என்பவரால் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். உண்மையில் வாட்டாக்குடி இரணியன் என்ற புரட்சியாளன் புதைக்கப்படவில்லை.. விதைக்கப்பட்டிருக்கிறான் என்றே கருதுகிறேன். ஆனாலும், அந்த மாவீரனுக்குரிய அங்கீகாரத்தைக் கொடுக்காமல் இந்தச் சமூகமும், அவன் நேசித்த கம்யூனிஸ்ட் இயக்கமும் அவனை மறந்து போனது வலி மிகுந்த துயரத்தைத் தருகிறது.

சாதி- மத வெறியர்களும் , கார்ப்பரேட் முதலாளிகளும் நம் நாட்டை சூழ்ந்திருக்கும் தற்போதைய சூழலில், அவர்களுக்கு எதிராக போராட நம் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக இரணியனுக்கும், சாம்பவான் ஓடை சிவராமனுக்கும் உயிர் கொடுத்து உலாவ விட்டிருக்கிறார் நூலாசிரியர் ச. சுபாஷ் சந்திரபோஸ் என்றே கருதுகிறேன்.

உழைக்கும் மக்களும், கம்யூனிசமும் இருக்கும் வரை இரணியனும் வாழ்ந்து கொண்டிருப்பான்!

நூல் : வாட்டாக்குடி இரணியன்
நூல் ஆசிரியர் : ச. சுபாஷ் சந்திரபோஸ்
வெளியீடு : பாக்கியம் பதிப்பகம் , தஞ்சாவூர்
விலை : ரூ.250.00
பக்கங்கள் : 374
பதிப்பு: முதல் பதிப்பு 2017

கிடைக்குமிடம் : பாக்கியம் பதிப்பகம்,
22பி / 2739, தொப்புள் பிள்ளையார் தெரு,
தஞ்சை – 1
தொடர்புக்கு : 99405 58934

நூல் அறிமுகம் : சு. கருப்பையா

குறிப்பு : தோழர் சு. கருப்பையா அவர்கள் பொதுத்துறை நிறுவனமான BSNL இல் முதன்மை கணக்கு அதிகாரியாக பணிபுரிந்து விருப்பஓய்வு பெற்றவர். இடதுசாரி சிந்தனைகள் கொண்டவர். BSNL அதிகாரிகள் சங்கமான AIBSNLEA சங்கத்தின் மதுரை மாவட்டச் செயலராகவும், மாநில அமைப்புச் செயலராகவும் மத்திய சங்க செயற்குழு உறுப்பினராகவும் பல பொறுப்புகளில் பணியாற்றியவர்.

disclaimer

ஊழலுக்கு நினைவிடம் லட்சியம் ! களிமண் சிலை நிச்சயம் || கருத்துப்படம்

ஊழல் மகாராணி ஜெயாவுக்கு நினைவு மண்டபத்தை திறந்து வைத்தார் எடப்பாடி ‘ஊழல் சாமி’ :

கருத்துப்படம் : மு. துரை

கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்து : சென்னை பல்கலை மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் !

ன்பார்ந்த மாணவர்களே, பேராசிரியர்களே !!

தமிழகத்தின் தாய்ப் பல்கலைக் கழகமாக விளங்கும் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்கிப் பயிலும் மெரினா வளாக முதுகலை மாணவர்கள் விடுதியில் உணவகத்தை இழுத்து மூடி விட்டு, மாணவர்களை பட்டினியில் தள்ளி உணவகத் தொழிலாளர்களுக்கான சம்பளத்தையும் மாணவர்களையே கட்டச் சொல்லும் நிர்வாகத்தின் வழிப்பறிக் கொள்ளை அரங்கேறி வருகிறது.

மேலும், 2020 மார்ச் மாதம் பாதியிலிருந்து கொரோனா ஊரடங்கின் காரணமாக நாடு முழுவதும் கல்லூரி, பல்கலைக்கழகங்கள் இழுத்து மூடப்பட்டு இணைய வழியில் கல்வி நடந்து வந்த சூழலில், பல்கலைக்கழக விடுதி மாணவர்கள் அனைவரும் சொந்த ஊரில் இருந்த நிலையிலும், ஏப்ரல் முதல் தற்போதைய நவம்பர் 2020 வரையிலான உணவக தொழிலாளர்களுக்கான சம்பளத்தை மாணவர்களையே கட்டச் சொல்லி விடுதி நிர்வாகம் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது.

மேலும், ஜனவரி 2020 – லேயே விடுதியை காலி செய்துவிட்டு சென்ற ஒரு மாணவரின் கணக்கில் ஜனவரி 2020 முதல் ஜூன் 2020 வரை ரூபாய் 8500 பில் போட்டிருக்கிறார்கள்.

படிக்க:
♦ பாரதியார் பல்கலைக்கழக ஊழல் ! தமிழகமெங்கும் புமாஇமு ஆர்ப்பாட்டம் !
♦ வேளாண் சட்டத்திற்கு எதிராக ஆளுநர் மாளிகை முற்றுகை : மக்கள் அதிகாரம் பங்கேற்பு !

சென்னை பல்கலைக்கழகத்திற்கு சொந்தமாக தரமணி, கிண்டி, மெரினா வளாகம் ஆகிய மூன்று இடங்களிலும் உணவுடன் கூடிய விடுதியில் மாணவர்கள் தங்கிப் பயின்று வருகிறார்கள். இதில் சுமார் 35 மாணவர்களை உள்ளடக்கிய மெரினா வளாகத்தில் தற்போது ஆய்வியல் மாணவர்கள் உட்பட 27 மாணவர்கள் தற்சமயம் பல்கலைக்கழகத்தில் தங்களுக்கு நடைபெறும் நேரடி வகுப்புகளின் காரணமாக விடுதியில் தங்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு உணவை வழங்க மறுக்கும் நிர்வாகம், விடுதி தொழிலாளர்களுக்கான சம்பளத்தை மட்டும் மாணவர்கள் பாக்கெட்டிலிருந்து தட்டிப் பறிக்கிறது. தற்போது மேனேஜராக நிர்வாக பொறுப்பிலிருக்கும் ஆதி கண்ணன் அவர்களிடம் கேட்டால் அனைத்தும் பதிவாளர் சொல்லித்தான் செய்கிறேன் என்கிறார்.

இந்நிலையில் விடுதியில் தண்ணீர் வரவில்லை என்று கூறியபோது ஃபீஸ் கட்டினால் சரிசெய்வோம்என்கிறார். ஒரு அடிப்படை பிரச்சனைக்கும், ”பணத்தை கட்டு.. தீர்க்கலாம்” என்று நடைமுறையில் தனியார் நிர்வாகமாகவே மாறி நிற்கிறார்கள்.

எங்கள் பிரச்சனைகளை தீர்க்க பல்கலைக்கழகத்தின் பதிவாளரை பலமுறை விடுதி மாணவர்கள் சந்திக்க முயன்றும் இதுவரை எங்களை ஒருமுறைகூட அனுமதிக்கவில்லை. கடிதங்கள் அளித்து வெறுத்துப் போனதுதான் மிச்சம்.

இந்நிலையில் நேற்று மதியம் 2.30 மணியளவில் இருந்து கீழ்க்கண்ட கோரிக்கைகள் அடிப்படையில் போராட்டத்தை துவக்கினோம். ஆனால், பதிவாளர் தரப்பு முறையாக பேச்சுவார்த்தையில் ஈடுபட விரும்பாமல் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களை துறைத் தலைவர்களை வைத்து மிரட்டுகிறார்கள். தொடர்ந்து நாங்கள் பல்கலைக்கழக சேப்பாக்க வளாகத்திலேயே உள்ளிருப்பு போராட்டம் நேற்றைய இரவைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் நாளாக தொடர்நது நடைபெற்று வருகிறது.

கோரிக்கைகள் :

*விடுதி உணவகத்தை உடனடியாக திறந்து மாணவர்களுக்கு உணவளி !
* ஊரடங்கு காலத்தில் செயல்படாத விடுதிகபோடப்பட்டிருக்கும் போட்டிருக்கும் விடுதி கட்டணத்தை ரத்து செய் !
* ஊரடங்கில் விடுதி ஊழியர்களுக்கான சம்பளத்தை மாணவர்களிடமிருந்து பறிப்பதை தடுத்து நிறுத்தி நிர்வாகமே வழங்கு !

எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தொடர்ந்து எங்கள் போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

படிக்க :
வன்முறை பூச்சாண்டி காட்டி டெல்லி போராட்டத்தை கலைக்க முயலும் மோடி அரசு !
கைவிடப் போகிறோமா நமக்கான விவசாயிகள் போராட்டத்தை !

மேலும் இந்த கட்டணக் கொள்ளை என்பது எங்களுக்கு மட்டுமல்லாமல் பொதுவாகவே இந்த ஊரடங்கில் அரசு பல்கலைக்கழகம், கல்லூரி நிர்வாகங்கள் வரவில் எத்தகைய நெருக்கடியும் ஏற்படக்கூடாது என்பதில் தெளிவாகவே இருக்கிறார்கள். அதற்கு மாணவர்களின் தலையை உருட்டுகிறார்கள்.

உதாரணமாக சிதம்பரம் பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஒரு செமஸ்டர் முடிவதற்குள்ளாகவே அடுத்த செமஸ்டருக்கான கட்டணத்தை கட்ட சொல்லியிருக்கிறார்கள். குறிப்பிட்ட தேதியை அடுத்து தாமதம் செய்யும் ஒவ்வொரு நாளுக்கு ரூ. 25 ஃபைன் கட்ட வேண்டும் என்றிருக்கிறார்கள். இவ்வாறு அரசு மற்றும் தனியார் கல்லூரி பல்கலைக்கழக நிர்வாகங்கள் தங்களது நெருக்கடிக்கு மாணவர்களிடம் தீவிரக் கட்டணக்கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது.

எனவே எங்களின் கோரிக்கைகளுக்காக அனைத்து கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள், சமூக ஜனநாயக சக்திகள் அனைவரும் ஆதரவளிக்க வேண்டுமென்று இதன் வழியாக கூறிக்கொள்ள விரும்புகிறோம்.

இப்படிக்கு
மெரினா வளாக விடுதி மாணவர்கள்
சென்னைப் பல்கலைக்கழகம்
தொடர்புக்கு : சிவப்பிரகாசம்96001 62343

வன்முறை பூச்சாண்டி காட்டி டெல்லி போராட்டத்தை கலைக்க முயலும் மோடி அரசு !

டெல்லியில் நடைபெற்ற விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் ஏற்படுத்தப்பட்ட போலீசுடனான மோதல்களைக் காரணம் காட்டி, விவசாயிகளுடனான வேளாண் சட்டத் திருத்தம் குறித்த பேச்சுவார்த்தைகளில் தனது கை ஓங்கியிருப்பதாகக் கருதுகிறது மோடி அரசு. மேலும் விவசாய சங்கங்கள் குறித்த அவதூறுகளையும் பாஜக மற்றும் தமது அடிவருடி ஊடகங்களின் மூலமும் செய்து வருகிறது.

கடந்த 26-01-2021 அன்று டெல்லியில் நடைபெற்ற விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் போலீசால் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட மோதல் சம்பவங்களைத் தொடர்ந்து இதனை விவசாயிகளின் வன்முறையாக சித்தரிக்கத் துவங்கியது மோடி அரசு.

மோடி அரசுக்கு ஒத்து ஊதும் வண்ணம் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், ஊடகங்களும் இதனை “விவசாயிகளின் வன்முறை” என்றே குறிப்பிட்டன. இதன் போக்கில் இது விவசாய சங்கங்களின் ஜனநாயக விழுமியங்களின் மீதான கேள்வியாக மாற்றப்பட்டது.

படிக்க :
♦ கைவிடப் போகிறோமா நமக்கான விவசாயிகள் போராட்டத்தை !

♦ தில்லி விவசாயிகள் மீதான தாக்குதல் || நயவஞ்சக மோடி அரசை வீழ்த்துவோம் !

இதன் விளைவாக விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் கமிட்டியிலிருக்கும் ஒரு சில விவசாயிகள் சங்கங்கள், டெல்லியில் நடந்த மோதலில் பாஜக – சங்க பரிவாரக் கும்பலின் சதி குறித்தும் குற்றம்சாட்டினர். மேலும் போராட்டத்தில் ”வன்முறை” வெடித்ததற்கு காரணமாக ஒரு சில விவசாய சங்கங்களை, வேறு சில விவசாய சங்கங்கள் குற்றம்சாட்டின.

இந்தக் குற்றச்சாட்டுகளையே பெரும் பிளவாகக் காட்டும் வேலையை மோடி அரசு தற்போது துவங்கியிருக்கிறது. அதனை அரசாங்கத் தரப்பிலிருந்தும், பாஜக தரப்பிலிருந்து முன்னெடுத்திருக்கிறது. இப்படிக் காட்டுவதன் மூலம், விவசாயிகள் சங்கங்கள் மற்றும் போராட்டங்களின் மீதான மக்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் சீர்குலைத்துவிட முடியும் என்று நம்புகிறது.

விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவாக உலகம் முழுவதும் இருந்து வரும் குரல்கள்தான் விவசாயிகள் களத்தில் நிற்பதற்கான உத்வேகத்தை அவர்களுக்கு வழங்குகின்றன. இந்த அடித்தளத்தைக் கலைக்க விரும்புகிறது மோடி அரசு.

மேலும் விவசாய சங்கங்களின் இடையே உள்ள சிறு சிறு கருத்து வேறுபாடுகளைப் பயன்படுத்திக் கொண்டு பேச்சுவார்த்தைக்கு வருவதற்கு முன்னரே அவர்கள் கொடுத்த சலுகைகளை ஏற்றுக் கொள்ளுமாறு அவர்களுக்கு நெருக்கடி கொடுக்கவும் திட்டமிட்டுள்ளது மோடி அரசு. இது குறித்து மோடி அரசின் பிரதிநிதிகள் சிலரிடம் பேசிய இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தளம் விரிவாகக் கூறியிருக்கிறது.

“பேச்சுவார்த்தை மேஜையில் அரசாங்கத்தின் கை இப்போது ஓங்கியுள்ளது. எங்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் வேளாண் சங்கத் தலைவர்கள், போராட்டக்காரர்கள் மீதான தங்களது பிடிப்பை இழந்துவிட்டனர். இந்த வாய்ப்பை கருணைமிக்க வெளியேறும் வழியாக கருதிக் கொண்டு அரசாங்கம் ஏற்கெனவே முன் வைத்தனவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும்.” என்று அரசாங்கத்தைச் சேர்ந்த ஒரு நபர் கூறியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவிக்கிறது.

அதே நேரத்தில் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பில் மாற்றுக் கருத்து கொண்டுள்ளோரையும் தனித்தனியாகப் பார்த்துப் பேசி அவர்களை போராட்டத்தில் இருந்து விலகச்செய்வதற்கான முயற்சிகளில் அரசுத் தரப்பு ஈடுபட்டுள்ளதாகவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தளம் தெரிவிக்கிறது.

அரசுத் தரப்பில் இருந்து இத்தகைய வேலைகளைச் செய்து கொண்டிருக்கையிலேயே அக்கம்பக்கமாக பாஜக மற்றும் சங்க பரிவாரக் கும்பல், ஊடக விவாதங்களின் மூலமாகவும், சமூக வலைத்தளங்களின் மூலமாகவும் விவசாயிகள் சங்கத்தில் இருக்கும் சிறு சிறு சலசலப்புகளை பூதாகரமாக காட்டி பேசி வருவதோடு அவர்கள் பலமிழந்துவிட்டதாகவும் பேசி வருகிறது.

ஜனவரி 26, 2021 அன்று டெல்லியில் நடத்தப்பட்ட விவசாயிகளின் டிராக்டர் பேரணி, சரியான ஒரு போராட்டத்தை முன்னெடுத்த நாளாக வரலாற்றில் பதிவாக வேண்டுமே தவிர விவசாயிகளின் போராட்டங்கள் பின்வாங்க அடித்தளமிட்ட நாளாக அடையாளப்படுத்தப்பட்டு விடக் கூடாது. அதற்கு உடனடியான தேவை விவசாய சங்கங்களை அனைத்து ஜனநாயக சக்திகளும் தொடர்ந்து ஆதரித்து அவர்களுக்கு ஊக்கமளிப்பதுதான்.

பெரும்பான்மை மக்களாகிய நாம் விவசாயிகளுடன் இருக்கிறோம் என்பதை அவர்களிடம் உறுதியாகக் காட்டும்போது, உத்வேகமாக வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிரானப் போராட்டத்தை வெற்றியை நோக்கி எடுத்துச் செல்ல முடியும்.


கர்ணன்

செய்தி ஆதாரம் : Indian express

கைவிடப் போகிறோமா நமக்கான விவசாயிகள் போராட்டத்தை !

6

டெல்லியில் நேற்று (26-01-2021) நடந்த விவசாயிகளின் டிராக்டர் பேரணியை வன்முறைக் களமாக மாற்றியிருக்கிறது போலீசு. தீரமிக்க போராட்டத்தை தொடர்ச்சியாக நடத்திவரும் விவசாயிகள், வன்முறையாளர்களாகவும் சட்டத்திற்குக் கட்டுப்படாதவர்களாகவும் காட்டப்பட்டு வருகின்றனர். இதன் விளைவாக இந்தப் போராட்டத்தில் இருந்து பின்வாங்குவதாக விவசாய சங்கங்களின் கூட்டமைப்பிலிருக்கும் இரண்டு முக்கிய விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

மோடி அரசும், அதன் ஆதரவு ஊடகங்களும், நீதிமன்றமும் விரும்பியது இத்தகைய பிளவைத்தான். இந்தப் பிளவை இதற்கு முன்னரே நைச்சியமான முறையில் ஏற்படுத்த முயற்சித்த மத்திய அரசின் முயற்சிகளை விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு முறியடித்தது. பெரும்பான்மை விவசாய சங்கங்களின் உறுதி, விவசாயிகளின் இந்தப் போராட்டத்திற்கு மக்களிடையேயும் சர்வதேச அளவிலும் கிடைத்த ஆதரவு ஆகியவை இந்தப் பிளவு முயற்சிக்கு விவசாய சங்கங்களின் தலைமைகளே விரும்பினாலும் துணைபோக முடியாத வகையில் நெருக்கடியைக் கொடுத்து வந்தது.

இந்நிலையில் உச்சநீதிமன்றம்,  விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த கமிட்டியை அமைப்பதாகவும் அதன் காரணமாக போராட்டத்தை விலக்கிக் கொள்ளுமாறும் விவசாயிகளிடம் மிகவும் இறங்கிப் பேசுவதாகக் காட்டிக் கொண்டே, விவசாயிகள் மீது “பேச்சுவார்த்தையை விரும்பாத வீம்பு பிடித்தவர்கள்” என்ற முத்திரையைக் குத்தியது.

படிக்க :
♦ டிராக்டர் பேரணி : விவசாயிகள் மீது போலீசு தடியடி ! கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு !
♦ அம்பானி – அதானி கொழுக்கவே வேளாண் சட்டத் திருத்தம்!

இந்நிலையில் நேற்று (26-01-2021) நடந்த டிராக்டர் பேரணியில் விவசாயிகள் அனுமதி வழங்கப்படாத செங்கோட்டை பகுதிக்குச் சென்றதையும் அங்கிருந்த தடுப்புகளை அகற்றி உள்ளே நுழைந்ததையும், தங்களைத் தாக்கிய போலீசுடன் மோதலில் ஈடுபட்டதையும் வன்முறை என்று சித்தரித்து விவசாயிகள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.

போதாத குறைக்கு, செங்கோட்டையில் இந்தியக் கொடியை இறக்கி காலிஸ்தான் கொடியை ”காலிஸ்தான் தீவிரவாதிகள்” ஏற்றியதாகவும் மோடியின் அடிவருடி ஊடகங்கள் அலறத் துவங்கின. விவசாய சங்க கொடிதான் அது என்பதையும் இந்தியக் கொடியை விட உயரம் குறைவான கம்பத்தில்தான் ஏற்றப்பட்டது என்பதையும் பலரும் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டும் சங்கிகளின் அவதூறுகளும் பொய்களும் குறையவில்லை.

மாநில உரிமைகள் பறிக்கப்பட்டு, பாசிசத்தின் கொடுங்கொன்மையின் கீழ் அரசியல் சாசனச் சட்டம் அவமதிக்கப்பட்டிருக்கும் ஒரு நாட்டில் குடியரசு தினம் கொண்டாடப்படுவது என்பது உண்மையில் குடியரசு தினத்திற்குத் தான் அவமானம் என்பது ஒருபுறமிருக்க, எந்தக் கொடி உயரத்தில் ஏற்றப்பட்டிருந்தது என்பதா இப்போதைய பிரச்சினை?

இந்தப் பிரச்சினையில் விவசாயிகள் போராட்டத்தில் சீர்குலைவு சக்திகள் உள்ளே நுழைந்து பேரணிக்குத் தீர்மானிக்கப்பட்ட பாதையை விட்டு விலகியதாக விவசாய சங்கங்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர். மேலும் அனுமதி மறுக்கப்பட்ட பாதையில் செல்ல வழிகாட்டியதாக சில விவசாய சங்கங்கள் மீது சக விவசாய சங்கங்களும் குற்றம் சாட்டியிருக்கின்றன.

டெல்லியில் நேற்று நடந்த போலீசு – விவசாயிகள் மோதலை, “விவசாயிகளின் வன்முறை” என ஒட்டுமொத்த மோடி அடிவருடி ஊடகங்களும் கதற, தங்களை லிபரல் ஊடகங்கள் எனக் காட்டிக் கொள்ளும் என்.டி.டி.வி மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற ‘நடுநிலை’ ஊடகங்களும் அந்த அலறலுக்கு கோரஸ் பாடிக் கொண்டிருக்கின்றன.

பிற அரசியல் கட்சித் தலைவர்களும் “அமைதி வழி“ குறித்து வகுப்பெடுக்கத் துவங்கினர். வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக ஓட்டுப் போட்ட கல்லூளி மங்கன்களின் தலைவரான அடிமை எடப்பாடியோ தமிழகத்தில் டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாகப் பேரணி நடத்திய தமிழக விவசாயிகள் மீது போலீசை ஏவிக் கொண்டிருந்தார். எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலினும் ”வன்முறை அரசின் திசை திருப்பல் முயற்சிக்கு வித்திடும்” என்று தனது “அட்வைசை” விவசாயிகளுக்குத் தெரிவித்திருக்கிறார்.

நடந்தது விவசாயிகளின் வன்முறை என்று இவ்வாறாக “நிரூபிக்கப்பட்ட” பின்னர், விவசாயிகள் வன்முறைக்கு எந்த விவசாயிகள் சங்கத்தினர் காரணம் என்பதாக கேள்வி முன்வைக்கப்பட்டது. இதுதான் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பிற்குள் பிளவு ஏற்படுவதற்கான அடிப்படைக் கேள்வி. இந்தக் கேள்விக்கு விவசாய சங்கங்கள் நிதானமாக பதில் சொல்ல முடியாதபடிக்கு, “விவசாயிகள் வன்முறை” ஓலம் முதல் அனைத்து வகையான நெருக்கடிகளையும் இந்த கேடுகெட்ட ஊடகங்களும், “நடுநிலை” அரசியல் கட்சிகளும் ஏற்படுத்திவிட்டன.

தற்போது வரை இரு விவசாய சங்கங்கள், “இந்தப் போராட்டத்தில் கட்டுப்பாட்டுக்கு உட்படாதவர்க்ளுடன் இணைந்து பயணிக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளனர். விவசாயிகளின் போராட்டத்தில் சங்க பரிவாரக் கும்பலும், கார்ப்பரேட் கும்பலும் எதிர்பார்த்துக் காத்திருந்த ஒரு பிளவை, ஒரு உடைப்பை, மேற்குறிப்பிட்டவர்களின் “வன்முறை” கோசங்கள் ஏற்படுத்தியுள்ளன.

விவசாயிகள் டெல்லியில் பேரணியை முடித்துவிட்டு, கண்டிப்பாக மீண்டும் டெல்லி எல்லைக்கு திரும்புவதாக உறுதியளித்துதான் இந்தப் பேரணியை விவசாயிகள் நடத்தினர். அப்படி இருக்கையில், விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் முடிவை மீறி சில சங்கங்களோ அல்லது அவற்றின் சிறு பிரிவினரோ செங்கோட்டை இருந்த பகுதிக்குள் சென்றாலும் அவர்கள் மீண்டும் மாலையில் சிங்கு, டிக்ரி, காசிப்பூர் எல்லைக்குத் திரும்புவதாகத் தானே கூறியிருக்கிறார்கள். பின்னர் எதற்கு அவர்கள் மீது தேவையில்லாமல் தடியடி நடத்தவேண்டும் ?

படிக்க:
♦ பிகார் : வேளாண் மசோதாவுக்கு ரத்த சாட்சியாக நிற்கும் விவசாயிகள் !
♦ வேளாண் சட்டத் திருத்தம் : சந்தை ஒரு பிணம் தின்னும் கழுகு !

செங்கோட்டை பகுதிக்குள் விவசாயிகள் பேரணி நுழைவதற்கு முன்னரே, வருமானவரித்துறை அலுவலகப் (ITO) பகுதிக்குள் பேரணி நுழைந்ததுமே தடியடியையும் கண்ணீர்ப் புகை குண்டுகளையும் வீசி, விவசாயிகளுடனான மோதலை உண்டாக்கியிருக்கிறது மோடியின் டெல்லி போலீசு.

வன்முறையை விவசாயிகள் மீது கட்டவிழ்த்து விட்டது போலீசு. அதற்குப் பதிலடி கொடுத்த விவசாயிகளை வன்முறையாளர்கள் என்று கதறும் ஊடகங்கள், கையில் தடிக்கம்புடனும் கண்ணீர்ப் புகை குண்டுகளுடனும் காத்துக் கிடந்த போலீசு வெறியர்களை வன்முறையாளர்களாகச் சித்தரிப்பதில்லை. ஏனெனில் போலீசின் கைகளில் இருக்கும் லத்திக் கம்புகள் அவர்களது “மூலதனத்தை”யும் காக்கின்றனவே.

அமைதியான முறையில் முடிந்திருக்க வேண்டிய விவசாயிகளின் பேரணியை திட்டமிட்டு சீர்குலைத்து, விவசாயிகளின் மீது “வன்முறையாளர்கள்” முத்திரையை குத்தியிருப்பதன் மூலம், வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு போராட்டத்திற்கான முடிவுரையை எழுதத் துவங்கியிருக்கிறது கார்ப்பரேட் ஆதரவு மோடி அரசு !

திட்டமிட்ட வகையில் துவக்கப்பட்டு, கட்டுக்கோப்பான முறையில் நடத்தப்பட்ட விவசாயிகளின் போராட்டம் ஒரு அவலமான முறையில் முடிவுக்குக் கொண்டு வருவதை அனுமதிக்கப் போகிறோமா என்பதுதான் இப்போது நம் முன் உள்ள கேள்வி.

விவசாயிகளின் இந்தப் போராட்டத்தை துவக்கத்தில் இருந்தே உதாசீனப்படுத்தி வந்த மோடி அரசு, அவர்களது கோரிக்கையை ஏற்க முடியாது என்பதில் உறுதியாக நிற்கின்றது. தனக்குப் படியளக்கும் கார்ப்பரேட் கடவுளர்களான அம்பானி, அதானியின் நலன்தான் தனக்கு முக்கியம் என்பதை சொல்லாமல் சொல்லி வந்திருக்கிறது மோடி அரசு.

எஜமானன் சுட்டிக் காட்டும் நபர்களைப் பாய்ந்து தாக்கும் விசுவாசமான ஏவல் நாயைப் போல, போராடும் விவசாயிகளின் கழுத்தில் தாவிக் கடிக்கச் சாதகமான தருணத்துக்காக காத்திருந்த மோடி அரசுக்கு இந்த ”வன்முறை” தருணம் பொன்னான வாய்ப்பாக இருக்கிறது.

இதை முறியடிக்க வேண்டுமெனில், விவசாயிகளைக் காக்க வேண்டுமெனில், விவசாயிகளின் இந்தப் போராட்டம் முடிவுறாமல் தடுக்கப்பட வேண்டுமெனில், மோடி அரசு எனும் ஏவலாளியைச் சாடுவதோடு நின்றுவிடாமல் அதனை ஏவிய எஜமானர்களின் “கைகளை” முறிக்க வேண்டும். அதாவது வேளாண் சட்டத்தை நிறைவேற்றுவதால் பலனடையப் போகும் கார்ப்பரேட் கும்பலின் மூலதன நலன்களைப் பதம் பார்க்க வேண்டும். அந்நிறுவனங்களின் பொருட்களை நிராகரிக்க வேண்டும்.

இதை ஏற்கெனவே தங்களது “ஜியோ” எதிர்ப்பு மூலமாகச் செய்து காட்டியிருக்கின்றனர் விவசாயிகள். முகேஷ் அம்பானி வெளிப்படையாகவே கதறியதும், நீதிமன்றத்தில் வேளாண் சந்தையில் தாம் மூலதனமிடவில்லை எனப் பச்சையாகப் புளுகியதும் அதன் விளைவு தான்.

விவசாயிகளுக்கு எதிராக கிளப்பிவிடப்பட்டிருக்கும் “வன்முறை” எனும் ஓலங்களை புறக்கணித்து, அவர்களுக்கு ஆதரவாக அனைத்துப் பிரிவு மக்களும் களமிறங்குவதோடு, அம்பானி, அதானி உள்ளிட்ட வேளாண் சட்டத்தால் பயன்பெறப் போகும் கார்ப்பரேட்டுகளை நேரடியாக காரணத்தைக் குறிப்பிட்டு புறக்கணிப்பதன் மூலம் மட்டுமே வேளாண் சட்டத் திருத்தங்களைத் திரும்பப் பெறச்செய்ய முடியும் !

இது விவசாயிகளின் போராட்டம் மட்டுமல்ல.. நமக்குமான போராட்டம்தான். கார்ப்பரேட்டுகளின் கைகளில் கொடுக்கப்பட்ட பின்னர் நாளுக்கு நாள் அதிகரித்து தற்போது 92 ரூபாய்க்கு வந்து நிற்கும் பெட்ரோல் விலையைப் போல அரிசியின் விலை ஏறிக் கொண்டே போவதை அனுமதிக்கப் போகிறோமா ? பெட்ரோல் இல்லையெனில் நடந்து கூடப் போகலாம்! உணவின்றி வாழ முடியுமா?


சரண்

 

திருவாரூரில் தடையைத் தகர்த்து விவசாயிகள் பேரணி !

மோடி அரசால் கொண்டு வரப்பட்டுள்ள மூன்று வேளாண் சட்டம் திருத்தங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் இந்திய விவசாயத்தை அம்பானிகளுக்கும், அதானிகளுக்கும் தாரை வார்த்து விவசாயிகளை கார்ப்பரேட்டுகளின் கொத்தடிமைகள் ஆக்கி விவசாயிகளின் நிலத்தை பறிக்கும் மிக மோசமான சட்ட திருத்தத்திற்கு எதிராக டெல்லியில் கடந்த 62 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர்.

கடுமையான குளிரிலும் உயிர்த்தியாகம் செய்தும் பூமிப்பந்தில் இதுவரை கண்டிராத வகையில் போர்க்குணமிக்க போராட்டத்தை நடத்தி வரும் விவசாயிகளை ஆதரித்தும் மோடி அரசை கண்டித்தும் அகில இந்திய விவசாய ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பாக தமிழகம் முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக 26/01/2021 அன்று, திருவாரூரில் மாபெரும் டிராக்டர் பேரணி காவல்துறையின் தடையையும் மீறி நடந்தது. இந்த மாபெரும் பேரணியில் பல்வேறு விவசாய சங்கங்களோடு இணைந்து பல தொழிற்சங்க அமைப்புகள், மாணவர் அமைப்புகள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் கட்சி, திராவிடர் கழகம், மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்பினரும் அவர்களுடன் நூற்றுக்கணக்கான மக்களும் கலந்து கொண்டனர்.

படங்கள் :

இந்தப் பேரணிக்கு போலீசு அனுமதி கொடுக்காத சூழலில், தடையை மீறி இந்தப் பேரணி துவங்கியது. உழவர் பேரணியில் கலந்து கொண்ட வந்தவர்களில் பலரையும் தண்டலை என்ற இடத்தில் தடுத்து நிறுத்தியது எடப்பாடி அரசின் போலீசு.

மோடி அரசுக்கு எதிராகவும் எடப்பாடி அரசுக்கு எதிராகவும் இதுபோன்ற போராட்டங்களை ஒடுக்கும் காவல்துறைக்கு எதிராகவும் விண்ணைப் பிளக்கும் முழக்கங்களோடு இந்தப் பேரணியில் பல்வேறு அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் கண்டன உரையாற்றினர்.

போலீசின் தடைகளைத் தகர்த்து முன்னேறிச் சென்ற விவசாயிகளையும் முன்னணியாளர்களையும் இன்று அதிகாலையில் கைது செய்தது போலீசு.

தகவல்
மக்கள் அதிகாரம்
தஞ்சை மண்டலம், திருவாரூர்.
82207 16242

தில்லி விவசாயிகள் மீதான தாக்குதல் || நயவஞ்சக மோடி அரசை வீழ்த்துவோம் !

PP Letter headபத்திரிகைச் செய்தி

27.01.2021

தில்லி விவசாயிகள் மீதான தாக்குதல் !
டிராக்டர் பேரணிக்கு அனுமதியளித்துவிட்டு நயவஞ்சகமாக தாக்குதல் நடத்திய பாசிச மோடி அரசு !

மாணவர்கள் – தொழிலாளர்கள் – விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை முறியடிப்போம் !
பாசிச மோடி அரசை வீழ்த்துவோம் !

னவரி 26-ம் தேதி “குடியரசு நாளன்று” விவசாயிகள் மீது கட்டவிழ்த்து வன்முறையை விட்டிருக்கிறார் மோடி. அறுபது நாட்களுக்கு மேலாக லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லையை முற்றுகையிட்டு தங்கள் வாழ்வாதாரத்தையே அழிக்கும் மூன்று வேளாண் திருத்தச்சட்டங்களுக்கு எதிராக கடும் குளிரில் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். கடும் குளிரிலும் விபத்துக்களிலும் தன்னை மாய்த்துக் கொண்டும் இறந்து போனவர்களின் எண்ணிக்கை நூற்று அறுபதைத் தாண்டி விட்டது.

வேளாண் திருத்தச்சட்டங்களை திரும்பப்பெறு என்பதுதான் விவசாயிகளின் ஒற்றை முழக்கம். அதை நிறைவேற்றாமல் சதித்தனமாக, புரோக்கர்கள்தான் போராடுகிறார்கள்; தீவிரவாதிகள்தான் போராடுகிறார்கள் என்று அரசும் ஊடகங்களும் விவசாயிகள் மீது அவதூறுகளை அள்ளிவீசினர். ஆனாலும் உறுதியாக விவசாயிகள் களத்தில் இருந்தனர். நாட்டு மக்களும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்தனர். மோடி அரசுக்கு விவசாயிகளின் கோரிக்கையை பேச்சுவார்த்தை மூலம் நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கம் இல்லாததால்தான் திட்டமிட்டே விவசாயிகளை அலைக்கழித்து தாமதப்படுத்தி அவமானப்படுத்தியும் வந்தது.

சனவரி 26 டிராக்டர் பேரணிக்கு அனுமதியும் கொடுத்து விட்டு விவசாயிகள் மீது போலீசை ஏவிவிட்டு கொலைவெறித் தாக்குதல் நடத்தி அரச பயங்கரவாதத்தை ஏவிவிட்ட இச்செயல் கழுத்தறுப்பு, மாபெரும் நம்பிக்கை துரோகம். அரசே ஒரு வன்முறைக்கருவி என்பதை அரசின் செயல்பாடுகள் எப்போதும் நிரூபித்துக்கொண்டே இருக்கின்றன.

மெரீனாவில் ஜல்லிக்கட்டு என்ற ஒற்றைக் கோரிக்கைக்காக ஒன்று திரண்ட மக்கள் மீது திட்டமிட்டே வன்முறையை ஏவி பல பெண்களை மானபங்கம் செய்தும் மீனவர் குடியிருப்புக்களை எரித்து நாசம் செய்தும் பல இளைஞர்களை கொடுங்காயப்படுத்தியும்தான் அப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது, பேச்சுவார்த்தை மூலம் அல்ல. அப்போதும் தீவிரவாதிகள் நுழைந்துவிட்டனர் என்று தனது பயங்கரவாத செயல்களை எல்லாம் நியாயப்படுத்தியது அரசு.

சி...-க்கு எதிரான மக்கள் போராட்டத்திலும் கூட ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் போலீசோடு இணைந்து தாக்குதல் நடத்தி முசுலீம் மக்களின் குடியிருப்புக்களை எரித்தார்கள்.

படிக்க :
♦ சர்வதேச நோக்கில் விவசாயிகள் போராட்டத்தின் முக்கியத்துவம் !
♦ கிரிமினல்களின் கூடாரமாகும் சங்கபரிவாரம் !

ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராக அமைதியாக நூறு நாட்கள்வரை போராடி கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரை துடிதுடிக்கக் கொன்றும் நூற்றுக் கணக்கானவர்களை முடமாக்கியும் போட்டது இந்த அரசுதான். அப்போதும் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் தீவிரவாதிகள் நுழைந்துவிட்டனர் என்று அரசும் ஊடகங்களும் அவதூறு செய்தனர்.

அதே அரசும் ஊடகங்களும்தான் டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் தீவிரவாதிகள் ஊடுருவிவிட்டனர் என்கின்றன. எல்லாவிதமான அமைதிவழிப் போராட்டங்களையும் மக்கள் கோரிக்கைகளையும் வன்முறை மூலம் நசுக்கி மக்களின் உரிமைகளை அழித்தொழிப்பதே பாசிச மோடி அரசின் ஒரே நோக்கம்.

நீட் தேர்வால் பாதிக்கப்படும் மாணவர்கள் போராடுகிறார்கள். தொழிலாளர் நல திருத்தச் சட்டங்களால் பாதிக்கப்பட்ட தொழிலாளிகள் போராடுகிறார்கள். மறுகாலனியாக்கக் கொள்கைகளால் பாதிக்கப்பட்ட சிறுமுதலாளிகளும் வியாபாரிகளும் போராடுகிறார்கள். ஆனாலும் நமது கோரிக்கைகள் நிறைவேறவில்லை.

தனித்தனியாக நடத்தப்படும் அனைத்துப் போராட்டங்களையும் வன்முறை மூலமாக ஒடுக்குகிறது பாசிச மோடியின் அரசு. உண்மையான மக்கள் பிரச்சினையை மறைக்க தேசத்துரோகம் என்ற முத்திரையை குத்தி ஒடுக்குகிறது. நேற்றைய தினம் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட பாசிச மோடி அரசின் அரச பயங்கவாத நடவடிக்கையை கண்டிப்பதுடன் வேளாண் திருத்தச் சட்டங்களை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று மக்கள் அதிகாரம் வலியுறுத்துகிறது.

மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், வியாபாரிகள், சிறுமுதலாளிகள் என பாதிக்கப்படும் அனைத்து மக்களும் ஒன்று திரளவேண்டும். அரசை ஸ்தம்பிக்க வைக்கும் போராட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் மட்டுமே வேளாண் திருத்தச்சட்டங்களை ரத்துச் செய்வது மட்டுமல்ல, நாட்டின் பெரும்பான்மை மக்களை கார்ப்பரேட் கொள்ளைக்கு காவு கொடுக்கும் பாசிச மோடி அரசினை வீழ்த்தவும் முடியும்.

தோழமையுடன்
சி.
வெற்றிவேல் செழியன்
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு புதுவை

கார்ப்பரேட்டுகளின் கைக்கூலி பாசிச மோடி அரசை விரட்டியடிப்போம் || கருத்துப்படம்

♦ அதானி அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக விவசாயிகளையும் இந்திய விவசாயத்தையும் ஒழித்துக்கட்டத் துடிக்கும் மோடி அரசை வீழ்த்துவோம்!
♦ விவசாயிகளின் டிராக்டர் பேரணியை திட்டமிட்டு சீர்குலைத்து போலீசு தடியடியைக் கட்டவிழ்த்துவிட்ட மோடி அரசை வீழ்த்துவோம் !

கருத்துப்படம் : மு. துரை

நூல் அறிமுகம் : தெபாகா எழுச்சி || “வங்காள விவசாயிகள் பேரெழுச்சி” || அபானி லகரி || காமராஜ்

இந்திய துணைக் கண்டத்தில் அழிக்க முடியாத வரலாற்று தடங்களை பதித்த மாபெரும் போராட்ட எழுச்சி பற்றிய  வரலாறு.  உழைக்கும் மக்கள் நடத்திய போராட்டங்களின் உண்மை கதைகள், அந்தப் போராட்டக்களத்தில் களமாடிய மாவீரர்களின் அனுபவங்கள், சுய தேடல்கள், அழுத்தமான மனப்பதிவுகள் ஒரு விரிவான நேர்காணல் ஆக இந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வார குத்தகை விவசாயிகளும் கிராமப்புற ஏழை மக்களும் நடத்திய  மாபெரும் போராட்டம். போர்க்குணமிக்க போராட்டத்தில் உருக்கி வார்க்கப்பட்ட புதிய வார்ப்புகள், நெஞ்சுரம் மிக்க போராளிகளாக, தன்னல உணர்ச்சியை போரிட்டு வென்ற மாவீரர்களாக திகழ்ந்த பொதுவுடமையாளர்கள், இந்தப் போராட்டத்தில் இடம் பெற்றிருந்தார்கள்.

பழமை (பழைய வரலாறு) மறக்கப்படும் ஒரு அபாயகரமான சூழலில், மிக மிக தேவைப்படும் ஒரு குரலாக இந்த நூல் வெளிவருகிறது. பிற்போக்கு சக்திகள் அணி திரண்டு வரும் சூழலுக்கு மத்தியில், இது  இன்னும் ஆழமான பொருத்தத்தை பெறுகிறது.(இந்த நூலுக்கான அறிமுக உரையில் தோழர் சுமித் சர்க்கார் )

நில உரிமையாளருக்கு உண்மையான சாகுபடி செய்பவருக்கும் இடையில் உள்ள ஓர் உறவு முறை, வார குத்தகை முறை என்பது ஒரு நீண்ட வரலாறு கொண்டது. அன்றைய நாட்களில் வார குத்தகை விவசாயிகள், கூலி விவசாயிகள் உதவியோடு நிலம் பயிரிட்டு வந்த வழக்கத்தை இது எடுத்துக் காட்டுகிறது. நிலத்தின் விளைச்சலை பொறுத்து நான்கில் ஒரு பங்கு, எட்டில் ஒரு பங்கு அல்லது பன்னிரண்டில் ஒருபங்கு நில வாடகை செலுத்தப்பட்டு வந்தது.

விளைச்சலில் பாதியை சாகுபடியாளர்கள் தருவது போன்ற ஒப்பந்த விதிமுறைகளின்படி கூலி தொழிலாளர்களை வைத்து சாகுபடி செய்யப்பட்ட இடங்களில், விதைகளை சாகுபடி செய்பவர்களே ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும். இரும்பு முனை கொண்ட கலப்பை, மரக் கலப்பை, நுகத்தடி, கிணற்றில் இருந்து பாசனத்துக்கு நீர் இறைக்க தோல்பை, கயிறு ஆகிய பொருட்களை நிலவுடைமையாளர்கள் தந்துவிட வேண்டும். இந்த முறை பல நூற்றாண்டுகள் வரை நீடித்து வந்தது.

பாரம்பரியமாக இருந்து வந்த வார குத்தகை முறையானது 1793-ல் காரன்வாலிஸ் கொண்டுவந்த நிரந்தர குடியிருப்பு சட்ட வடிவத்தில் ஒரு மாற்றத்திற்கு உள்ளானது. சாகுபடி வேலைகள் அதற்கான செலவு என முழுமையும் படிப்படியாக குத்தகைதாரர் மீது விழுந்தது. நிலத்தின் உரிமையாளர்களே பயிர்களுக்கும் உரிமையாளர் ஆனார். இதுதான் குத்தகைதாரர்கள் இடம் ஏற்பட்ட முதல் அதிர்ச்சி ஆகும். சிறிது சிறிதாக சேர்ந்த நூற்றாண்டுகால அதிருப்தி தீப்பொறியாக வெடித்து, வங்காள விவசாயிகளின் மகத்தான  எழுச்சியாக வெடித்தது.

தெபாகா உழவர் பேரெழுச்சி நடைபெற்று பல்லாண்டுகள் உருண்டோடி விட்டபோதும், “உழுபவனுக்கே நிலம் சொந்தம்” என்ற அடிப்படைக் கோரிக்கை இதுவரை முழுமையாக அடையப்படவில்லை. வார குத்தகை விவசாயிகள் தங்கள் விவசாயம் செய்துவரும் நிலத்திற்கு இன்னும்கூட உரிமையாளர்களாக ஆக முடியவில்லை. இப்போதும்கூட விளைச்சலில் 25 விழுக்காடு விவசாயத்தில் ஈடுபடாத நில உரிமையாளர்களுக்கு போய் சேருகிறது. “நிலமற்ற விவசாயிகளின் நெஞ்சில் நிலத்திற்கான தாகம் இன்னமும் அப்படியே இருக்கிறது” என்று அந்த மாபெரும் விவசாயிகள் எழுச்சியின் தளகர்த்தர் தோழர் அபானி லகரி கூறுகிறார்.

எரிமலையாய் வெடித்து சிதறிய வங்கத்தின் உழவர் பேரெழுச்சி கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைத்தது.

1. விளைச்சலில் மூன்றில் இரண்டு பங்கு உரிமை வேண்டும்.
2. தானிய கடனுக்கு வட்டி இல்லை.
3. அறுவடை முழுவதும் விவசாயிகளுக்கு சொந்தம்.
4. நிலத்தில்  இருந்து வெளியேற மாட்டோம்.
5.உழுபவனுக்கே நிலம் சொந்தம்.

போராட்டத்தின் விளைவாக, விவசாயிகள் விளைச்சலை தங்கள் சொந்த களஞ்சியங்கள் எடுத்துச் சென்றார்கள். சட்டவிரோத பறிமுதல் முடிவுக்கு வந்தது. தானிய கடனுக்கு வசூலித்து வந்த வட்டி கொடுமை முடிவுக்கு வந்தது. நிலபிரபுத்துவ கொடுங்கோலர்கள் தங்கள் கிராம வீடுகளை காலி செய்து விட்டு நகரங்களுக்கு ஓடிவிட்டனர்.

வங்காளத்தின் 19 மாவட்டங்களில் 60 லட்சம் மக்கள் இந்தப் போராட்டத்தில் பங்கு கொண்டனர். போர்க்குணமும், அளவற்ற வீரமும், வலிமையும் கொண்ட மாபெரும் கிளர்ச்சிப் போராட்டத்தில் வார குத்தகை விவசாயிகளும், கிராம கைத்தொழில் தொழிலாளர்களும், ஆதிவாசிகளும் உணர்வுபூர்வமாக நின்று களமாடினார்கள்.

இந்த நூற்றாண்டில் வங்கத்தில் நடைபெற்ற மாபெரும் மக்கள் எழுச்சி, அரச பயங்கரவாதத்தால் ரத்தவெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டது. ஆற்று வெள்ளம் போல் ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. நிலப்பிரபுத்துவ தரகு முதலாளித்துவ பிரதிநிதியாக செயல்பட்ட காங்கிரஸ் கட்சியும், முஸ்லிம் லீக்கும் இரக்கமற்ற அரச பயங்கரவாதத்திற்கு பல்லக்குத் தூக்கினர்.

எளிய மக்களின் உரிமை வாழ்வுக்காக தங்களது இளமை காலத்தை அர்ப்பணித்த தியாக சீலர்கள் மக்களை அணிதிரட்ட எத்தகைய இன்னல்களையும் எதிர்கொள்ளத் தயாராக இருந்தார்கள். கிராமப்புறங்களில் பணியாற்றும்போது கடுமையான சோதனைகளை எதிர் கொண்டார்கள் .

போராட்ட தலைவர்களில் ஒருவரான தோழர் சுசில்சென்  பின்வருமாறு பதிவு செய்துள்ளார். “சில நேரங்களில் ஏராளமான பன்றிகள் மத்தியில் நாங்கள் இரவை கழிக்க நேர்ந்தது உண்டு. சில நேரங்களில் மாட்டுத் தொழுவத்தில் வைக்கோல் மெத்தைகளில் ஆடு மாடுகள் ஆகியவற்றின் அருகில் துங்க நேர்ந்தது. விவசாயிகள் உண்டுவந்த உணவே நாங்களும் பங்கிட்டுக் கொண்டோம். அப்போது விவசாயிகள் உண்டுவந்த உணவு என்பது சணல் இலைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட கஞ்சி மட்டுமே. அவர்களுக்கு சாப்பிட கிடைக்காத நாட்களில் நாங்களும் பட்டினி இருந்தோம். அடக்குமுறை, அநீதி ஆகியவற்றின் ஒவ்வொரு வடிவத்திற்கு எதிராகவும் அவர்களை அணிதிரட்டி வந்தோம். இதற்குக் காரணம் நாங்கள் கம்யூனிஸ்டுகள் என்ற உண்மையை ஒவ்வொரு நொடியும் நாங்கள் உணர்ந்து இருந்தோம்”

விடுதலைப் போராட்ட சூறைக்காற்று சுழன்றடித்த அந்த காலகட்டத்தில் அனைத்து வங்காள மாணவர் சங்கமானது (All Bengal Students Association) அனுசீலன் சமதியின் மாணவரணியாகவும் ஆதரவு அமைப்பாகவும் இருந்தது. தீவிரமான கனவுகளால் தூண்டப்பட்ட ஒரு இளைஞன், தேசிய விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது எப்படி என்ற உணர்ச்சி மிகுந்த வரலாறு, இந்த நேர்காணலின் வழியிலேயே நம்மால் உணர முடிகிறது.

“ஒருநாள் விடுதியிலிருந்து கிராமத்தில் உள்ள என் வீட்டிற்கு வந்திருந்தேன். நான் ஒரு திட்டம் வைத்திருந்தேன், சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தேன். கடைசியாக அந்த சந்தர்ப்பம் கிடைத்தது. ஒரு நாள் மதியம் என் அம்மா தூங்கிக் கொண்டிருந்தார். எங்கள் குடும்ப நகைகள் எங்கே வைக்கப்பட்டிருக்கிறது? அலமாரியின் சாவி எங்கே இருக்கும், அந்த விஷயம் எல்லாம் எனக்கு தெரியும். எனக்கு பூணூல் சடங்கு நடந்தபோது அணிவிக்கப்பட்ட மோதிரத்தை தங்க நாணயத்தை மட்டுமே எடுத்துக் கொள்வது என்றுதான் முதலில் முடிவு செய்து இருந்தேன். அதை எடுக்கத் தொடங்கியபோது ஏன் என்னுடையது மட்டும் எடுக்க வேண்டும். என் அம்மா மற்றும் சகோதரிகளின்  நகைகளையும் ஏன் எடுக்க கூடாது? தாய் நாட்டின் விடுதலை என்ற புனித லட்சியத்திற்கு தானே இதை செய்கிறோம், ஆகவே எல்லா நகைகளையும் எடுத்துக் கொண்டு யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் கிளம்பிவிட்டேன்.

என் அப்பாவின் தலையணையின் கீழ் ஒரு கடிதத்தை மட்டும் எழுதி வைத்துவிட்டு வந்தேன். நாட்டு விடுதலைக்காக நடத்தப்படும் போராட்டத்திற்காக இவை அனைத்தையும் செலவு செய்யப்படும் என்று”

அனுசீலன் சமதியின் ஆயுதக் கிளர்ச்சி நடவடிக்கைகளுக்காக, தேசவிடுதலைப் புரட்சியாளர்களுக்கு ஆயுதம் வாங்குவதற்கு தேவையான நிதி இல்லாத சூழ்நிலையில், இளம் மாணவரான அபானி லகரி அவர்கள் இதை செய்தார். தன் சகோதரிகளின் திருமணத்திற்காக, எளிய நடுத்தர வர்க்கப் பின்னணி கொண்ட அவருடைய தந்தை சிறுக சிறுக சேமித்த நகைகளை தேச விடுதலைப் போராட்டத்திற்காக எடுத்துச் செல்கிறார்.

தாய் நாட்டின் விடுதலைக்காக, சர்வ பரி தியாகம் செய்யத் தயாராக இருந்த அந்த இளம் புரட்சியாளரின் செயல் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. தன் குடும்ப உறவுகளை விட தேச விடுதலையை தன் உயிர் மூச்சாகக் கொண்ட மாவீரர்களின் தியாக உணர்வை எண்ணிப்பார்க்கையில், அத்தகைய வாழ்க்கையை  ஒப்பிடும்போது, குற்ற உணர்வு நம்மை வாட்டுகிறது.

வங்காள விவசாயிகளின் போராட்ட எழுச்சியை நேரில் பார்த்த கவிஞரும், எழுத்தாளருமான குலாம் குத்தூஸ் அவர்கள் “தலைமையிடம் இருந்து ஊக்கமும் அனுமதியும் கிடைத்திருந்தால் விவசாய போராளிகளால் நிச்சயம் ஒரு சில ஏனான்-களை (சீனாவின் ஏனான் பிரதேச விவசாயிகள் எழுச்சி) உருவாக்கி இருக்க முடியும்” என்று கூறுகிறார் .

“மாக்சிய சமூக அறிவியல் வழிப்பட்ட பாதையில் நடைபோடுவது ஒன்றுதான் ஒடுக்கப்பட்ட இந்திய மக்களுக்கு உள்ள ஒரே வழி என்று நான் நம்புகிறேன். பாராளுமன்ற ஜனநாயகம் என்ற சறுக்கல் பாதையை நம் வளர்ச்சியை தடுத்துவிட்டதோ என்று நான் அஞ்சுகிறேன். சொத்து சேர்ப்பதற்கும், அதிகாரத்திற்குமான ஆசைதான் கம்யூனிஸ்டுகளை ஆட்சியில் அமர்த்தி உள்ளதா, சுரண்டலற்ற ஒரு சமூகத்தை நிர்மாணிக்க வேண்டும் என்ற கருத்தியலுக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட கம்யூனிஸ்டுகள், சுயநலமிகள் மத்தியில் காணாமல் போய் விட்டார்களா?

வெளிப்படையான எளிய வாழ்க்கை முறையும், தங்கள் தத்துவத்தின் மீது கொண்டிருந்த ஆழமான பற்றுறுதி, ஒரு காலத்தில் கம்யூனிஸ்டுகளை நோக்கி மக்களை ஈர்த்து வந்தது. வாழ்க்கையின் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் எங்களைப் போன்ற பல பேருக்கு இந்த கேள்வி முக்கியமான ஒன்றாகும். என் மூச்சு இருக்கும் வரையிலும் ஒரு புதிய பாதைக்கான தேடலில் நாங்களும் சக பயணிகளாக தொடர்ந்து வருவோம் என என் சார்பிலும் நீண்ட நெடுங்காலமாக என்னுடன் இருக்கும் என் தோழர்கள் சார்பிலும் நான் உறுதி கூறுகிறேன்” என்று தனது நேர்காணலில் முத்தாய்ப்பாக தோழர் அபனி லஹரி அவர்கள் குறிப்பிடுகிறார்.

அடிபணியாத தீரத்தோடும் சுய நம்பிக்கையோடும் ஒரு முன்னேற்றத்தை நோக்கி அடியெடுத்து வைக்கும் ஒரு தலைமையை வரலாறு நிச்சயம் உருவாக்கும். வரலாறு என்பது உருவாக்கப்படுவது; ஆனால் அது சுயமாக உருவாகாது; அதற்கு மனித தலையீடு மிக அவசியமாகும்.

இந்தியத் துணைக் கண்டத்தை உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கின்ற மாபெரும்  விவசாயிகளுடைய போராட்டம் கடந்த 58 நாட்களாக டெல்லி தலைநகரில் நடைபெற்று வருகிறது. கடும் குளிரும் உறையவைக்கும் பனிப்பொழிவும் அவர்களது போராட்ட உணர்வை அசைத்துப் பார்க்க முடியவில்லை. போராட்டத்தை நீர்த்துப்போக வைக்கும் மோடி வித்தைகள் செல்லுபடியாகவில்லை.

சமகாலத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் விவசாயிகளின் இந்த பேரெழுச்சி இன்னும் பல போராட்டங்களை முன்னெடுக்க திறவுகோலாக இருக்கும். மாபெரும் வங்காள உழவர் போராட்ட வரலாற்றுப் படிப்பினைகளை உள்வாங்கிக் கொள்ள வேண்டியது இன்றைய வரலாற்றின் தேவை ஆகும்.

சமதர்ம லட்சியத்திற்காக போராடும் அனைவரும் இந்தப் போர்க்குணமிக்க வரலாற்றுப் பாரம்பரியத்தை அறிந்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். வர்க்க அடித்தளத்தில் ஊன்றி நின்று, போர்க் குணத்தோடு சமத்துவ பயணத்தில் பீடுநடை போட தோழர் அபானி லஹரி அவர்களின் இந்த வரலாற்றுப் பதிவு ஊக்கத்தையும் , உற்சாகத்தையும் தரும்.

 

நூல் : “தெபாகா எழுச்சி”
வங்காள ஏழை விவசாயிகளின் போராட்டம் 1946-1950

நுல் ஆசிரியர் : அபானி லகரி
பக்கங்கள் : 280
வெளியீடு : சிந்தன் புக்ஸ்
விலை : ரூ. 250.00
கிடைக்குமிடம் : சிந்தன் புக்ஸ்
132/251, அவ்வை சண்முகம் சாலை,
கோபாலபுரம், சென்னை – 86.
தொடர்புக்கு : 94451 23164.

நூல் அறிமுகம் : காமராஜ்

disclaimer