Sunday, June 28, 2026
முகப்பு பதிவு பக்கம் 358

ஹைட்ரோகார்பனுக்கு எதிராக பேசினாலே சிறை ! குட்கா புகழ் எஸ்.பி ஜெயக்குமாரின் அடாவடி !

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராகப் பேசினால் கைது ! குட்கா புகழ் விழுப்புரம் எஸ்.பி ஜெயக்குமாரின் புது சட்டம் !

மிழகமே ஹைட்ரோ கார்பன் என்ற அழிவுத்திட்டத்திற்கு எதிராகப் போராடுகிறது, போராடிக்கொண்டு இருக்கிறது. “ஹைட்ரோ கார்பன் திட்டம் சரியானது, அது தேவையானது” என்று அரசு பேசும் போது, “ஹைட்ரோ கார்பன் திட்டம் தவறானது” என்று பேசுவதற்கு உரிமை இருக்கிறதா? என்றால் “உரிமை இல்லை” என்கிறது போலீசு.

தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிதான் நிலவுகிறது. ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக போராடுகின்ற ஏன் பேசுகின்ற அனைவரையும் போலீசு அடக்குகிறது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக துண்டறிக்கை வினியோகித்த விழுப்புரம் மக்கள் அதிகாரம் தோழர்கள் மூவர் கைது – சிறை !

விழுப்புரத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த 3 பேர் ஹைட்ரோகார்பன் திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புக்களை விளக்கும் பிரசுரங்களை கொடுத்துக்கொண்டு இருக்கும்போது, போலீசு ‘விசாரிக்க வேண்டும்’ என்று விழுப்புரம் தாலுகா போலீசு நிலையத்திற்கு வலுக்கட்டாயமாக கொண்டு போய் ஒரு நாள் முழுவதும் சட்டவிரோதக் காவலில் வைத்திருந்தனர். இது பற்றி டி.எஸ்.பி திருமாலிடம் பேசினால் அவரோ நான் எதுவும் செய்ய முடியாது, எல்லாம் மேலிடத்து உத்தரவு என்றார்.

முதல் தகவல் அறிக்கையில் போலீசு குறிப்பிட்டுள்ளபடி,

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

“மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினார்களாம், அவர்களை போலீசு விசாரித்ததாம், மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்தவர்கள் கைகளில் கருங்கற்களை வைத்திருந்தார்களாம், பேருந்து கண்ணாடிகளையும் மின்விளக்குகளையும் உடைப்பதற்காக சதி செய்து கொண்டிருந்தார்களாம். பொதுமக்களின் அமைதிக்கும் உயிருக்கும் கேடு விளைவிப்பதோடு அரசுக்கு எதிராக சதி செய்து சட்டம் ஒழுங்கு பிரச்சினையை சீர் குலைத்துவிடுவார்கள் என்ற நியாயமான காரணத்தாலும் ரிமாண்ட் செய்தார்களாம்.”

குட்கா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயக்குமார்தான் தற்போது விழுப்புரம் எஸ்.பி. ஹைட்ரோ கார்பன் மட்டுமல்ல, டாஸ்மாக் எதிர்ப்பு மற்றும் பல்வேறு மக்கள் பிரச்சினையை யார் பேசினாலும்; போஸ்டர் ஒடினால் கூட, ரிமாண்ட்தான் செய்கிறார்.

குட்கா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயக்குமார்

மக்களுக்கு ஆதரவாகவும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகவும் நோட்டீசு கொடுத்தவர்கள் கைது செய்யப்பட்டு 4 நாட்கள் கழித்து கடலூர் மத்திய சிறையிலிருந்து பிணையில் வந்திருக்கிறார்கள். நீதிமன்றத்தில் தினமும் கையெழுத்து போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். குட்கா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயக்குமாரோ விழுப்புரம் எஸ்.பி-யாகிவிட்டார்.

பிரசுரம் கொடுத்தது தவறா? அணுக்கழிவு – ஹைட்ரோகார்பன் – எட்டுவழிச்சாலை என தமிழகத்தை அழிவுத்திட்டங்களால் நாசமாக்காதே என்று பேசக்கூட உரிமை இல்லை என்கிறார் குட்கா கேஸ் அக்கியூஸ்டு எஸ்.பி. ஜெயக்குமார்.

விழுப்புரத்தில் எந்த அமைப்பிற்கும் மக்கள் பிரச்சினையைப் பேச அனுமதி இல்லை. அனைத்து அமைப்புக்களும் இந்த ஜனநாயக விரோதத்துக்கெதிராக, ஒருங்கிணைந்த போராட்டங்களை முன்னெடுக்க வேண்டுமென்பதே தற்போதைய தேவையாக உள்ளது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு.
தொடர்புக்கு : 99623 66321.

நூல் அறிமுகம் : கல்வித்துறை அவலங்கள்

ந்தியாவில் பள்ளி செல்லும் பருவத்திலுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 22 கோடியாகும். இதில் 12 கோடி குழந்தைகளால் மட்டுமே கல்விக்கூடம் செல்ல முடிகிறது. இந்த 12 கோடி குழந்தைகளிலும் பள்ளிப் படிப்பை முழுவதுமாகப் படித்து முடிப்பவர்களின் எண்ணிக்கை 3 கோடிக்கும் குறைவாகும்.

பள்ளி முடிப்பவர்களின் எண்ணிக்கை மொத்த மாணவர்களில் சுமார் 20 சதவிகிதமாகும். இதுதான் இந்தியா கல்வியில் சாதித்துள்ள மகத்தான சாதனையாகும்.

1951-ல் இந்தியா குடியரசான பிற்பாடு இருந்த தொடக்கப் பள்ளிகளின் எண்ணிக்கை சுமார் 2,10,000. 2005-ல் தற்போதுள்ள தொடக்கப் பள்ளிகளின் எண்ணிக்கை சுமார் 5, 81,000. அறியாமை இருள் விலக்கி ஜனத்தொகை வளர்ச்சிக்கேற்ப, பொருளாதார, கலாச்சார வளர்ச்சிக்கேற்ப கல்விக் கூடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருக்குமானால் குறைந்தபட்சம் 20 லட்சம் தொடக்கப் பள்ளிகளாவது இந்தியாவில் தற்போது இருந்திருக்க வேண்டும்.

ராணுவச் செலவுக்கு தன்னுடைய பட்ஜெட்டில் 30 சதவிகிதத்திற்கு மேல் பணம் ஒதுக்கி தாராளமாகச் செலவு செய்யும் நமது அரசாங்கம் எதிர்காலத் தலைமுறையைப் பட்டை தீட்டும் கல்விக்கூடங்களுக்கு மட்டும் கஞ்சத்தனமாக 3.4 சதவிகிதத்தைத் தான் ஒதுக்குகிறது.

ஆகவே கல்வி என்பது ஏழைகளைப் பொறுத்த அளவில் எட்டாக்கனியாகவே நாளுக்கு நாள் விலகிச் சென்று கொண்டிருக்கிறது.

கல்விக்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு 3.4 சதவிகிதத்திலிருந்து 10 சதவிகிதமாக வேண்டும் என்றும், மாநில அரசின் கல்விக்கான நிதி ஒதுக்கீடு 21 சதவிகிதத்திலிருந்து 30 சதவிகிதமாக உயர வேண்டும் என்றும் தொடர்ந்து கல்வியாளர்கள் வற்புறுத்தி வருகின்றனர். ஆனால் இக்கோரிக்கைகள் கிடப்பில் உள்ளன.

இந்தியாவில் தனிப்பட்ட வி.வி.ஐ.பி.க்களையும், வி.ஐ.பி.க்களையும் பாதுகாக்க அரசாங்கம் ஒதுக்கி வரும் நிதி கூட ஒட்டுமொத்தக் கல்விக்காக ஒதுக்கும் நிதியைக் காட்டிலும் அதிகம்!

இழுத்து மூடப்பட்டு வரும் அரசுப் பள்ளிக்கூடங்கள், புற்றீசல்கள் போல் பெருகிவரும் தனியார் பள்ளிகள் என தமிழகக் கல்விச் சூழல் கதிகலங்கிக் கொண்டிருக்கிறதே?

ஆம்! தமிழகக் கல்விச் சூழலைப் பொறுத்தவரை அது மிகவும் கதி கலங்கிக் கிடக்கிறது. நாளுக்கு நாள் அரசாங்கப் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டு வருகின்றன. இதற்குப் பிரதான காரணம் ஆசிரியர்கள் பற்றாக்குறைதான். தமிழகத்தில் ஐந்தாம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளிகள் 37,000 உள்ளன. எட்டாம் வகுப்பு வரையிலான நடுநிலைப் பள்ளிகள் 6,200 உள்ளன. இவற்றிற்குத் தேவைப்படும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 1,93,000. இதில் நிரப்பப்படாத காலியிடங்கள் சுமார் 70,000. தொடர்ந்து பல ஆண்டுகளாக இப்படி காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாததால் கல்விச் சூழல் மிகவும் சீர்கேடடைந்துள்ளது.

தமிழகத்தில் 3,200 தொடக்கப் பள்ளிகளுக்குத் தலைமை ஆசிரியர்களே இல்லாத நிலை தொடர்ந்துகொண்டிருக்கிறது. பள்ளிக் கூடங்கள் என்றால் உடற்பயிற்சிக் கல்வி, விளையாட்டு என்பது மிக அவசியம். ஆனால் 6,200 நடுநிலைப் பள்ளிகளில் உடற்பயிற்சி ஆசிரியர்களையே நியமிக்கவில்லை தமிழக அரசு.

இப்படியாகப் பள்ளிக்கூடத்தை வழிநடத்தும் தலைமை ஆசிரியர், மற்றும் தேவையான ஆசிரியர்கள் இல்லாத நிலையில் அப்பள்ளிகள் எவ்வாறு சிறப்பாகச் செயல்பட முடியும்? ….

….. 2002-ம் ஆண்டு வரை மூன்று ஆசிரியர்களைக் கொண்டு செயல்பட்ட பள்ளிகளை ஈராசிரியர் பள்ளிகளாக மாற்றியது தமிழக அரசு. இவ்விதம் ஆசிரியர்கள் குறைக்கப்பட்ட பள்ளிகளின் எண்ணிக்கை 18,000. நடைமுறையில் இந்த ஈராசிரியர்களில் ஒருவர் நிர்வாக நடைமுறைகளைக் கவனித்துக்கொள்ளும் அலுவல்களையே பார்க்க வேண்டியுள்ளதால் இந்தப் பதினெட்டாயிரம் பள்ளிகளும் ஏறத்தாழ ஓராசிரியர் பள்ளிகளாகவே தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதுதான் யதார்த்தமான நிலவரம். (நூலிலிருந்து பக்கம் 4,5)

தமிழகத்தில் இன்னும் ஏழை எளிய மாணவர்கள் சுமார் 70 லட்சம் பேர் அரசாங்கக் கல்விக்கூடங்களில்தான் கல்வி பயின்று வருகின்றனர். எத்தனையோ விதமான தனியார் பள்ளிகள் இருந்தும் அதில் சேரக்கூடிய வசதி வாய்ப்புகள் இல்லாததினாலேயே பெரும்பாலான மாணவர்கள் அரசு பள்ளிக் கூடங்களில் படித்து வருகின்றனர்.

படிக்க:
அரசியலமைப்பை புறக்கணிக்கும் தேசியக் கல்விக் கொள்கை – 2019 !
♦ நூல் அறிமுகம் : தமிழக ஆறுகளில் மணல் கொள்ளை

குறிப்பாக நகர்ப்புற மாணவர்களில் 20 சதவிகிதம் பேர் குழந்தைத் தொழிலாளர்களாக அவ்வப்போது வேலைக்குச் செல்லக்கூடியவர்களாக உள்ளனர். பீடி சுற்றுதல், பூட் பாலீஸ் போடுதல், பேப்பர் போடுதல், மெக்கானிக் ஷாப்புகளில் வேலை செய்தல், டீக்கடைகள், ஹோட்டல்களில் வேலை செய்தல் அல்லது தந்தை செய்யும் தொழில்களில் உதவுதல், விவசாய வேலைகள் செய்தல், ஆடு, மாடு மேய்த்தல் போன்ற பல வேலைகளை இம்மாணவர்கள் செய்கின்றனர். அரசாங்கப் பள்ளிகளில் கல்வி ஒழுங்காகக் கிடைக்காத சூழ்நிலை தொடரும்போது இம்மாணவர்களில் கணிசமானோர் பள்ளிக்கூடங்களை விட்டு நின்றுவிடுகின்றனர். முழுநேரக் குழந்தைத் தொழிலாளர்களாகி விடுகின்றனர்.

தமிழக அரசு தரும் புள்ளி விபரப்படியே சுமார் 16 சதவிகித மாணவர்கள் ஐந்தாம் வகுப்பு படித்து முடிப்பதற்குள்ளாகவே பள்ளிக் கல்வியைப் பாதியிலேயே விட்டுவிடுகின்றனர். ஐந்து முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களில் சுமார் ஐம்பது சதவிகிதத்திற்கு மேற்பட்டோர் பள்ளிப் படிப்பைத் தொடர முடியாமல் இடையிலேயே நின்றுவிடுகின்றனர். (நூலிலிருந்து … பக்கம் 6)

மாணவர்களுக்கான பாடத்திட்டங்களை உருவாக்குவதில் சமூகப் பிரக்ஞையுள்ள ஆசிரியர்களின் பங்களிப்பு போதுமான அளவில் இல்லை. பெரும்பாலான ஆசிரியர்களிடையே இது குறித்த விழிப்புணர்வே இல்லாமல் உள்ளது.

கற்பித்தல் என்ற வகையிலும் மாணவர்களை மனப்பாடம் செய்து எழுத வைக்கும் இயந்திர ரீதியிலான திறமைசாலிகளாக உருவாக்குவதில்தான் ஆசிரியர்கள் சிரத்தை எடுத்துக் கொள்கின்றனரேயன்றி மாணவர்களை உயிர்ப்புள்ள, சமூக அனுபவங்களோடு தொடர்புடைய கல்வியைப் பயிலுபவர்களாக உருவாக்குவதில் பெரும்பாலான ஆசிரியர்கள் ஆர்வம் காட்டுவதில்லை.

அமெரிக்கா போன்ற, மிகவும் வளர்ச்சியடைந்த நாடுகளில் கூட மாணவர்களின் முழுப் படிப்புச் செலவுகளையும் அரசாங்கமே கவனித்துக்கொள்கிறது. அமெரிக்காவில் மிகப் பெரும்பாலானவர்கள் அரசாங்கப் பள்ளிக்கூடங்களில்தான் படிக்கின்றனர். தனியார் பள்ளிகள் என்பதே மிகக் குறைவாகத்தான் அமெரிக்காவில் உள்ளது. ‘இளந் தலைமுறையினருக்கு முறையான கல்வி பெறச் செலவழிக்கும் பணம் என்பது நாட்டின் வருங்கால முன்னேற்றத்திற்கான முதலீடேயன்றி வேறல்ல’ என்ற கருத்து முதலாளித்துவ நாடான அமெரிக்காவிற்கு உள்ளது. இதனால்தான் அமெரிக்காவில் பள்ளிக் கல்வியை முடித்தவர்களில் 76 சதவிகிதத்தினர் உயர் கல்வி வாய்ப்பைப் பெற்றுவிடுகின்றனர். ஜப்பானில் 87 சதவிகிதத்தினரான மாணவர்களுக்கு உயர் கல்வி வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் இந்தியாவிலோ இது இன்னும் ஏழு சதவிகிதத்தைக் கூட தாண்ட முடியவில்லை. (நூலிலிருந்து… பக்கம் 8)

நூல் : கல்வித் துறை அவலங்கள்
ஆசிரியர் : சாவித்திரி கண்ணன்
முதற்பதிப்பு :  ஏப்ரல் 2005

வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
எண்:7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
தொலைபேசி எண்: 044 – 24332424, 24332924.
மின்னஞ்சல்: thamizhbooks@.com

பக்கங்கள்: 32
விலை: ரூ 5.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

ஏன் ? விடுமுறையன்று பள்ளிக்கூடத்தில் ஓய்வெடுக்கக் கூடாதா ?

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 3 | பாகம் – 01

பரஸ்பர உறவு பற்றிய விதி

னிய மணியொலி கேட்கிறது …

நான் திடீரென வகுப்பறையினுள் நுழைந்து குழந்தைகளைப் பார்க்கிறேன். உடனே நிசப்தம் நிலவுகிறது.

“குழந்தைகளே, வணக்கம்!” என்று மகிழ்ச்சியோடு கூறுகிறேன்.

வகுப்புகள் தொடங்கி இன்று இருபதாவது நாள். குழந்தைகள் என்னிடம் நெருங்கி வருவதை என்னால் உணர முடிந்தது.

ஒரு சிறுவன் சனிக்கிழமையும் தன்னைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லுமாறு எப்படி வேண்டினான் என்று அவனுடைய தாய் கூறினாள். “இன்று விடுமுறை நாள்” என்றாள் அம்மா. “நான் அங்கு ஓய்வெடுக்கிறேன்!.. ஏன் பள்ளியில் ஓய்வெடுக்கக் கூடாது?” என்று அச்சிறுவன் பிடிவாதமாக இருந்தான்.

ஆம், குழந்தைகள் பள்ளியை நோக்கி, சக நண்பர்கள், ஆசிரியரை நோக்கி, பாடங்களை நோக்கிக் கவர்ந்திழுக்கப்படுகின்றனர். ஏன்? எது இவர்களை இப்படி ஈர்க்கிறது?

ஆசிரியர் பணியில் வெளிப்படும் ஒரு விசேசமான புறவய விதி உள்ளது என்று நம்ப விரும்புகிறேன். இதை “பரஸ்பர உறவு பற்றிய விதி” என்றழைக்கலாம்:

குழந்தைகளைச் சந்திக்க ஆசிரியர் எப்போதுமே விருப்பத்தோடு செல்லட்டும், இவர்களைக் சந்திக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மகிழ்ச்சியடையட்டும்; அப்போது குழந்தைகளும் விருப்பத்தோடு பள்ளிக்கு வருவார்கள், தம் ஆசிரியரைச் சந்திக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மகிழ்ச்சியடைவார்கள்.

“வணக்கம்!” என்று அவர்கள் மகிழ்ச்சியோடு பதில் அளிக்கின்றனர்.

“உட்காருங்கள்! இன்று நிறைய வேலைகள் நமக்கு உள்ளன. ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்காது துவங்குவோம் வாருங்கள்!”

படிக்கத் துவங்க வேண்டுமென பல குழந்தைகள் பொறுமையின்றித் துடிக்கின்றனர். “எழுத்துகளைப் படிக்க ஆரம்பிப்போம்!” என்று 3-4 நாட்களாக அவர்கள் இடையறாது என்னிடம் வேண்டினார்கள். “எழுத்துகளைச் சொல்லிக் கொடுப்பதற்கு முந்தைய காலகட்டத்தை” 3-4 நாட்கள் குறைக்க வேண்டுமென நான் இப்போது நினைக்கிறேன், நான் எனது கட்டமைப்புப் பகுப்பாய்வில் சிறிது அதிக நேரத்தைக் கழித்து விட்டேன்.

நான் என்ன செய்ய வேண்டும்!

வார்த்தைகளைப் பற்றிய ஒலிப் பகுப்பாய்வுக் கோட்பாட்டை குழந்தைகள் புரிந்து கொண்டபின் (15 பாட நாட்களுக்குப் பின் இவ்வாறு புரிந்து கொண்டனர்) குழந்தைகளுக்கு எழுத்துகளைச் சொல்லித் தரத் துவங்கியிருக்க வேண்டும், கூடவே, வார்த்தைகள், வாக்கியங்களை எழுதும் முறைகளைக் குழந்தைகளுக்குச் சொல்லித் தர ஆரம்பித்திருக்க வேண்டும்.

நானோ, ஏதோ தெளிவற்ற “எழுத்துக்களைச் சொல்லிக் கொடுப்பதற்கு முந்தைய கட்டத்தை” பின்பற்றினேன். குறைந்தபட்சம் குழந்தைகளை 3-4 நாட்கள் தாமதப்படுத்தி விட்டேன். “குழந்தைகளே, என்னை மன்னியுங்கள், நான் வேண்டுமென்றே இப்படிச் செய்யவில்லை. நீங்கள் போகும் போக்கிலேயே எனது விஞ்ஞானத்தை முறிக்கின்றீர்கள், எனக்கு எல்லாவற்றையும் முன்கூட்டியே பார்ப்பது கடினம். இப்போது 1½ – 2 வயதுள்ளவர்கள் நான்கு வருடங்கள் கழித்து என் வகுப்பிற்கு வரும்போது இதை நான் சரி செய்கிறேன்!”

“எழுத்து வெறி”

என் வகுப்புக் குழந்தைகள் எழுத்துக்களை நோக்கிப் பாய்கின்றனர். நானே இதற்குத் துணை புரிந்தேன். வகுப்பறைக்கு வெளியில் உள்ள தாழ்வாரத்தில் அழகிய படங்களுடன் கூடிய குழந்தை நூல்கள் சிறு மேசைகளில் வைக்கப்பட்டன. இவற்றில் என்ன எழுதியிருக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆசை. ஆனால் படிக்கத் தெரியவில்லை. லேலா என்னிடம் ஓடிவந்து கேட்கிறாள்: “இங்கு என்ன எழுதியுள்ளது!”. கியோர்கி கேட்கிறான்: “இந்தக் கதையை தயவு செய்து படித்துக் காட்டுங்கள்!” சாஷா, இடைவேளைகளின் போது ஏதாவது புத்தகத்தை எடுத்துக் கொண்டு சொற்களையும் வாக்கியங்களையும் படிக்க முயலுகிறான். “இது என்ன எழுத்து? இது ’க’ இல்லையா?” என்று தோழர்களைக் கேட்கிறான்.

ஒவ்வொரு நாளும் நான் காலையில் முன்னதாகவே வந்து, தாழ்வாரத்தில் உள்ள கரும்பலகையில் சில வார்த்தைகளையும் எழுத்துகளையும் எழுதுவேன். குழந்தைகள் காலையில் வரும் போதே கரும்பலகையில் ஏதோ புதிதாக எழுதப்பட்டுள்ளதைப் பார்த்து விடுவார்கள். உடனே விவாதம் ஆரம்பமாகும்:

“இது ‘த’!”

“இல்லை, இது ‘த’ இல்லை ‘ட’!”

“இதோ ‘ட’, இது ‘த’. எனக்கு நன்கு தெரியும்.”

“இங்கு ‘மகிழ்ச்சி’ எனும் சொல் எழுதப்பட்டுள்ளது.”

“நெ.. நெநெ… நெருப்பு. நான் படித்து விட்டேன்!.. ‘நெருப்பு!..’ “

“’மக்க்க்கள்!… மக்கள்! ஓ… நானும் படித்து விட்டேன்!”

எங்கள் வகுப்பிற்கு வெளியே சலசலவென ஒலி எழுந்தது. இதை விட இசை நயமானதை எந்தக் காட்டிலும் கேட்க முடியாது. எழுத்துகள், வார்த்தைகளைப் படிக்க குழந்தைகள் பரஸ்பரம் உதவி செய்து கொண்டனர். நான் கரும்பலகையில் எழுதிய சொற்கள் தற்செயலானவையல்ல. இவையெல்லாம் வகுப்பறையில் ஏற்கெனவே ஒலித்தவை, இவை ஒவ்வொன்றைப் பற்றியும் விரிவாக ஒலிப் பகுப்பாய்வு நடத்தியுள்ளோம். எனவே, வகுப்பறையில் பாடங்களின் போது எழுத்துகளைச் சொல்லிக் கொடுப்பதற்கு முந்தைய கட்டம்’ நீண்டு கொண்டே போனபோது தாழ்வாரத்தில் “எழுத்துக் கட்டம்” மும்முரமாக இருந்தது. கடந்த 3-4 நாட்களாக என் வகுப்புக் குழந்தைகளை ஆட்கொண்ட நிலையை “எழுத்து வெறி” என்று தான் என்னால் அழைக்க முடியும்.

இந்த எழுத்துக் கட்டத்தை உடனடியாகத் தாழ்வாரத்திலிருந்து வகுப்பறைக்கு, பாடங்களுக்கு மாற்ற வேண்டும். இல்லாவிடில், பேச்சு எதார்த்தம் பற்றி அவர்களிடம் சமீபத்தில் கேள்வி கேட்டபோது ஏற்பட்டதைப் போன்ற முட்டுக்கட்டை உண்டாகும். அப்போதுதான் வெறிக்கான அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்தன.

“நான் இப்போது செய்யப் போவதை எந்தச் சொல்லால் குறிக்கலாம்?” நான் வகுப்பறையில் நடந்து காட்டினேன்.

”நடப்பது!..” என்று குழந்தைகள் பதில் சொன்னார்கள்.

“இது?”

“உட்காருவது!..”

”இது?”

கையில் சாக்பீசை எடுத்துக் கொண்டு தற்செயலாக தோன்றிய சொல்லை எழுதி விட்டு எழுதுவது” என்று பதில் வருமென நம்பிக்கையோடு திரும்பிப் பார்க்கிறேன்.

ஏக்கா: “’துணிவு.”

“துணிவா! அப்படியென்றால் என்ன?” என்று நான் வியப்போடு கேட்டேன்.

வோவா: “நீங்கள் தானே ‘துணிவு’ என்று எழுதினீர்கள்.”

“நான் என்ன எழுதினேன் என்று கேட்கவில்லை. நான் செய்த செயலை எப்படி அழைக்கலாம் என்றுதான் கேட்கிறேன். இதோ பாருங்கள்!” என்றபடியே நான் இன்னமும் சிக்கலான ஒரு வார்த்தையை (”எதிர்பார்த்திரு”’) தெளிவின்றி விரைவாக எழுதிக் காட்டுகிறேன். “இந்தச் செயலுக்கு என்ன பெயர்?”

எழுதுவது என்று பெயர். அதே சமயம் என்ன நடந்தது தெரியுமா? பலர் தம் விரல்களைச் சுட்டிக் காட்டியபடியே மெதுவாக உச்சரிக்கத் துவங்குகின்றனர்.

மாயா: ”எஎஎ… திர்…”

தாத்தோ: “எதிர்பார்…”

கீகா: “இல்லை ! எதிர்காண்!”

மாயா: “’எதி-ர்-பா-ர்… எதிர்பார்த்திரு!” என்று உற்சாகமாகக் கூறுகின்றனர் “அங்கே ‘எதிர்பார்த்திரு’ என்று எழுதியுள்ளது.”

“சரி, நல்லது!” என்று நான் யோசித்தபடியே பேச்சு யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளும் பயிற்சிகளை நிறுத்தினேன். “அடுத்த முறை வேறு பயிற்சிகளில் இதைத் தொடர்வோம்! இப்போது…”

“சிறிது விளையாடுவோமா? நான் வார்த்தைகளை எழுதுவேன். உங்களால் முடிந்தால் உடனேயே இவற்றை உரக்கப் படியுங்கள்.”

நான் கரும்பலகையை விட்டு அகன்று குழந்தைகள் நான் எழுதியதைப் பார்த்ததுமே “சூரியன்!” என்று ஒரு பெரும் ஓசை எழுந்தது.

நான் மீண்டும் அவர்களுக்குத் தெரியாதபடி கரும் பலகையின் முன் நின்று ஒரு வார்த்தையை எழுதி விட்டு நகர்கிறேன்.

“மரம்!” என்று மகிழ்ச்சியோடு குழந்தைகள் கூறுகின்றனர்.

பின்னர்: “வீடு!.. அம்மா!.. அப்பா!.. பாட்டி!..”

எல்லோரும் படிக்கவில்லை. எழுத்துக் கூட்டிப் படிக்கச் சிலருக்கு நேரம் போதவில்லை, மற்றவர்கள் இவ்வார்த்தையை உச்சரித்தனர்.

முடிவாக ஒரு துணிச்சலான சம்பவம் பற்றிய கதையைப் படித்தோம். ஓய்வு நேரம் கிடைத்த போதும், பெரும் இடைவேளைகளின் போதும், பூங்காவில் உலாவும் போதும் இப்படிப்பட்ட புத்தகத்தை என்னாலியன்றவரை உணர்ச்சியோடு, பாவனை நயத்தோடு படித்துக் காட்டினேன். படிப்பதைத் தொடர்ந்து கேட்கவே அவர்களுக்குப் பொறுமையில்லை. “இப்படிப் படிக்க முடியுமெனில் நீங்கள் எவ்வளவு சந்தோஷமானவர்!” என்று சமீபத்தில் ஏல்லா கூறினாள். “ஆம், குழந்தைகளே, படிக்கத் தெரிந்திருப்பதும், படிக்கும் ஆர்வமும் உண்மையான மானுட மகிழ்ச்சி. புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ளப் படிக்கும் ஆர்வத்தை உங்களுக்கு எப்படி ஊட்டுவது? இதுதான் இனி என் அக்கறை!” என்று நான் என் மனதினுள்ளேயே ஏல்லாவிற்குப் பதில் சொல்லிக் கொண்டேன்.

நான் இப்படியாக “எழுத்து வெறியை” ஏற்படுத்தினேன்: குழந்தைகள் என்னையும், தம் பெற்றோர்களையும் துளைத்து எடுத்தனர். ”இது என்ன எழுத்து!.. இங்கு என்ன எழுதியுள்ளது!.. இதைப் படித்துக் காட்டு!” என்று கேட்டவண்ணமிருந்தனர். தாழ்வாரத்திலிருந்த கரும்பலகையில் காலைதோறும் நான் எழுதிய எழுத்துகள், சொற்கள், வாக்கியங்களின் அருகிலேயே நீண்ட நேரம் நின்றார்கள்…..

நாளை முதல் அவர்களுக்கு எழுத்துக்களைச் சொல்லித் தர ஆரம்பிப்பேன். அப்போது விரைவாகத் தெரிந்து படிக்கும் பழக்கத்தை அவர்களிடம் ஏற்படுத்துவேன். இன்று 25 நிமிட மினி-பாடவேளைகளின் போது வார்த்தைகளின் கட்டமைவுப் பகுப்பாய்வு சம்பந்தமான பயிற்சிகளைத் தருவேன், படிக்கவும் எழுதவும் பயிற்றுவிக்க வேண்டும்.

படிக்க:
இராஜஸ்தான் : வெள்ளைகாரனிடம் மண்டியிட்ட ‘வீர’ சாவர்க்கர் வெறும் சாவர்க்கரானார் !
தளர்ந்த வயதிலும் தளராமல் உழைக்கும் டோக்கியோவின் வயோதிகர்கள் ! – படக்கட்டுரை

இந்த மினி- பாடவேளைகள் எவ்வளவு நல்லவை, கச்சிதமானவை, முழுமையானவை தெரியுமா! குழந்தைகள் களைப்படைவதேயில்லை, இடைவேளை நேரம் வந்ததும் உலோகத்தாலான ஒரு வளையத்தில் மாட்டப்பட்டுள்ள மூன்று பொன்னிற மணிகளை எடுத்து ஆட்டி ஐந்து நிமிட வகுப்பு இடைவேளை ஆரம்பமாகியதைக் குறிப்பிடுகிறேன். சில சமயங்களில் குழந்தைகள் என்னுடன் சேர்ந்து உடற்பயிற்சிகள் செய்வார்கள். சில சமயங்களில் அவர்கள் விருப்பப்படி விட்டு விடுவேன். மற்றும் சில நேரங்களில் தலையைக் குனிந்தபடி இருந்த இடத்திலேயே உட்கார்ந்தபடி நல்ல இசையைக் கேட்கும்படி அல்லது ஏதாவது நல்ல விஷயங்களைப் பற்றி யோசிக்கும்படி சொல்வேன், கற்பனை செய்து பார்க்கும்படி சொல்வேன். பின் என் கைவசமுள்ள மணிகள் ஐந்து நிமிடங்களுக்குப் பின் இனிய ஒலியை எழுப்பும். பள்ளி முழுவதற்குமான மின்சார மணி அடித்து இடைவேளை ஆரம்பமாகும்வரை எங்கள் பாடம் தொடரும்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க :
குழந்தைகள் வாழ்க!

அரசியலமைப்பை புறக்கணிக்கும் தேசியக் கல்விக் கொள்கை – 2019 !

தேசியக் கல்விக் கொள்கை – 2019 : சனநாயக கல்விமுறை நீர்த்துப் போகுமா ?

தேசியக் கல்விக் கொள்கை -2019 (வரைவு), மே மாதம் 30 -ம் தேதியில், புதிதாகப் பதவியேற்ற அரசு வெளியிட்டுள்ள முதல் ஆவணங்களில் ஒன்றாகும். 484 பக்கங்களைக் கொண்ட இந்த வரைவு, 4 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை முறையே பள்ளிக் கல்வி, உயர்கல்வி, கூடுதல் கவனத்திற்கான முக்கிய பகுதிகள், மற்றும் கல்விமுறையில் மாற்றம் போன்றவற்றை பேசுகின்றன.

ஒரு ‘துடிப்பான அறிவு சமூகத்தை’ உருவாக்க உதவும் ‘இந்தியாவை மையப்படுத்திய கல்விமுறையை’ வென்றெடுப்பது என்பதே இந்த புதிய கல்விக் கொள்கைக்கு வழிகாட்டு நெறியாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வரைவின் மீது பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய தரப்பினர், ஜூன் 30-ம் தேதிக்குள் தங்களது கருத்தினை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மிக குறுகிய காலமே உள்ள நிலையில், இந்த வரைவுக் கொள்கைகள், இதுவரை எந்த ஒரு தீவிரமான விவாதத்திற்கும் எடுத்துக் கொள்ளப்படாதது மிகவும் வேதனையானது.

இவ்வாறு விவாதமின்றி அவசரமாக அமல்படுத்தப்பட்டால், இவை மிக மோசமான விளைவுளை ஏற்படுத்துவதோடு, கடந்த பல வருடங்களாக, இந்திய கல்வி முறையை சனநாயகப்படுத்துவதற்காக எடுத்துக்கொண்டு அனைத்து தீவிர முயற்சிகளையும் நீர்த்துப்போகச் செய்துவிடும்.

வலுவிழக்கும் அரசியலமைப்பு

பொதுவாக, இதுபோன்ற அரசு ஆவணங்கள், சட்டங்கள் மற்றும் கொள்கை வரைவுகள், இந்திய அரசியலமைப்பு கோடிட்டுக் காட்டியுள்ள மதிப்புகளையும், வழிகாட்டிகளையும் மேற்கோள்காட்டி தொடங்குவது வழக்கம்.

ஆனால் தேசியக் கல்விக் கொள்கை-2019 (இனிமேல் தே.க.கொ-2019), இந்த வழக்கத்திலிருந்து மாறுபட்டுள்ளது. இதன் வரைவுக் குழுத் தலைவர் முனைவர். கஸ்தூரி ரங்கன் இதன் முக்கிய நோக்கமாக ‘இந்தியாவின் மரபுகளையும் மதிப்புகளையும் நிலைநிறுத்தும் அதே வேளையில், 21-ம் நூற்றாண்டுகளின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக ஒரு புதிய முறையை உருவாக்குவது’ என கூறுகிறார்.

ஒருசில இடங்களில் அரசியலமைப்பு குறிப்பிடப்பட்டிருந்தாலும் ( ப.எண்; 83, 289, 303), பொதுவாக அது முதன்மைப்படுத்தப்படவில்லை . இதற்கு பதிலாக ‘அதீத ஊக்குவிப்பு’ (heavy promotion), மேம்பாடு (upliftment), சமுதாயம் (community) போன்ற வார்த்தைகள் அதிகம் வலியுறுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, பள்ளிக் கல்வியின் அனைத்து நிலைகளிலும் இந்திய, வட்டார பாரம்பரியங்கள், மரபுகள் அதீதமாக ஊக்குவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது (ப.எண்.76). ஒரு புதிய வீரியத்துடன் இந்திய மொழிகளை கற்பித்தல் அதீதமாக ஊக்குவிக்கப்படும்(ப.எண்.82). மொழி கற்பித்தலுக்கு உதவியாக இந்திய இலக்கியங்களை வாசிப்பது, ஆராய்வது மேம்படுத்தப்படும்(ப.எண். 85). இதுபோன்ற முயற்சிகள் இந்திய மொழிகளையும் இலக்கியங்கள் மீதான பயிற்சியையும் அறிவையும் வளர்த்தெடுக்க கட்டாயமாக உதவும் என்றாலும், இது ஒரு ஒற்றை கண்ணோட்டத்திலான ஒழுக்கநெறி சார்ந்த போதனைக்கு இட்டுச்செல்லும் என்ற பயமும் மேலோங்குகின்றது.

மேலும் 21-ம் நூற்றாண்டின் குழந்தைகளுக்கு, உலக இலக்கியங்கள், கலை வெளிப்பாடுகள் மீதான அறிவு மிக முக்கியமானதாக இருக்கின்றது. எனவே, உலக இலக்கியங்கள் இந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்தலின் தேவை அவசியமாகிறது. இவ்வகையான அறிவை, பரந்த கண்ணோட்டத்தை குழந்தைகள் பெறுவதற்கு இந்தக் கல்விக் கொள்கை தடையாக இருப்பது வருந்தத்தக்கது.

படிக்க:
♦ புதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 ! புதிய கலாச்சாரம் நூல் !
♦ தமிழில் தேசியக் கல்விக் கொள்கை 2019 – பிடிஎஃப் டவுண்லோடு

ஒற்றைச் சமூதாயம்

மேலே குறிப்பிட்டதுபோல், அரசியலமைப்பு முன்னிறுத்தப்பட வேண்டிய இடங்களில், கையாளப்படும் மற்றொரு வார்த்தை ‘சமுதாயம்’ (community) ( ப.எண்.29). இதன்படி, கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள் ‘சமுதாயத்தின்’ மேற்பார்வையின் கீழ் கொண்டுவரப்படுகிறது.

இது தே.க.கொ-2019 கூறும் ‘சமூதாயம்’ என்பது என்ன என்ற கேள்வியை கேட்கத் தூண்டுகின்றது. சாதி, மதம் மற்றும் வர்க்கம் என்று பிளவுண்டு கிடக்கும் இந்திய சமூகத்தை ஒரு ஒற்றை சமூகமாக கட்டமைப்பது மிகவும் ஆபத்தானது. இது சமூகத்தின் ஆதிக்க சக்திகளின் பிடியில் பொதுக்கல்வி அடிமைப்பட்டுவிடும் வாய்ப்பை ஏற்படுத்தும்.

எடுத்துக்காட்டாக, தே.க.கொ-2019 -ன்படி, கல்வித்திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தும் வகையில், பள்ளி நிர்வாக குழுக்களில் (School Complex Management committees) ‘சமுதாயம்’ முக்கியப் பங்கை வகிக்க வாய்ப்பு கொடுக்கப்படுகிறது (ப.எண்.173). இதுமட்டுமல்லாமல், ஆரம்ப குழந்தைப் பராமரிப்பு மற்றும் கல்வி (Early childhood care and education), கல்வி மற்றும் எண் அறிவு திறமைகளை மேம்படுத்துதல் (ப.எண்.57), கல்விக்கான உரிமையை நடைமுறைபடுத்துதல் (ப.எண்.67) போன்றவற்றிலும் ‘சமூதாயத்தின்’ பங்கு ஊக்குவிக்கப்படுகிறது.

மேலும், 6 -லிருந்து 8 -ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எந்த வகையான தொழிற்பயிற்சி கொடுக்கப்படவேண்டும் என்று தீர்மானிப்பதில் இந்த ‘சமூதாயம்’தான் பரிந்துரைகளைக் கொடுக்கும் (ப.எண்.95). ஆரம்பக் கல்விபோல், உயர் கல்வித் துறைகளும் ‘சமூதாயத்துடன்’ இணைந்து செயல்படும் (ப.எண்-202). இவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், தே.க.கொ-2019 கூறும் ‘சமுதாயம்’ ஒடுக்கப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள், ஆதிவாசிகள், உடல் ஊனமுற்றோர், மற்றும் உழைக்கும் வர்கத்தினரின் பிரதிநிதித்துவத்தை கொண்டிருத்தல் முக்கியம்.

ஆனால் பிரதிநிதித்துவம் குறித்து எவையும் உறுதிபடுத்தப்படவில்லை ஆகையால், தே.க.கொ-2019 ஒரு ஒற்றைப்பார்வை கொண்ட ஆளும் வர்கத்தின் சாதியின் ஆதிக்கத்தை வலுப்படுத்தும் ஒரு கல்வி முறையை திணிக்க முற்படும் செயலாகவே அமையும்.

பால் சார்ந்த அடையாளங்கள்

இ.க.கொ-2019 -ல், பால் சார்ந்த அடையாளங்கள் மிகச் சாதாரணமாகவும் கவனக்குறைவுடனும் கையாளப்படுகின்றன. இதில் வரும் Manpower மற்றும் chairman போன்ற வார்தைகள் பொதுவாக பால்-சரிசமமான வார்த்தைகளாகப் பார்க்கப்படுவதில்லை.

குழந்தைக் கல்வியில் பெண்கள் மற்றும் தாய்மார்களின் பங்கு முக்கியமாக வலியுறுத்தப்படுகின்றது (ப.எண்.57, 60). பெண் கல்வியின் முக்கியத்துவம் (ப.எண்.116, 146,) பள்ளிக்கல்வி வரை மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. உயர் கல்விக்கு வரும்போது இதன் முக்கியத்துவம் காணாமல் போகின்றது.

பெண்கல்வியை குறித்து இந்த வரைவு, ‘பெண்கல்வி என்பது, வறுமை ஓழிப்புக்கும், வன்முறைகளை ஒடுக்குவதற்குமான வழி. சமூக ஆரோக்கியத்திற்கும், பொதுமக்கள் உடல் நலத்தையும் பேணும் வழி. அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவேண்டிய வளர்ச்சி கூறுகளை வளர்த்தெடுக்க உதவுவது’ என குறிப்பிடுகிறது.

வேறு வார்த்தையில் கூறினால், பெண்களுக்கான கல்வி என்பது அவர்களின் உரிமை என்ற நோக்கில் அணுகாமல், அதன் முக்கியத்துவத்தை பொதுநலன் என்ற பார்வையின் அடிப்படையிலே முன்வைக்கப்படுகின்றது.

கல்வி நிறுவனங்களில் பாலியல் துன்புறுத்தல் பற்றி ஒருசில இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன (ப.எண்.66,69). ஆனால் இவற்றில் ஈடுபடுவோர் ஒழுக்கப்படுத்த பட வேண்டும்(ப.எண்.69) என்ற கண்ணோட்டமே உள்ளது. பொதுவாக, ஆண் மாணவர்களுக்கு பால் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் எந்த ஒரு நீண்ட காலத் திட்டமும் இதில் குறிப்பிடப்படவில்லை. பெண்களை மதிப்பது, பாதுகாப்பு, குடும்ப கட்டுப்பாடு, போன்றவற்றை மாணவர்கள் கற்கவேண்டும் (ப.எண்.97).

21-ம் நூற்றாண்டின் பால்சார்ந்த எந்த ஒரு புதுக் கண்ணோட்டத்தையும் இந்த வரைவு கொண்டிருக்கவில்லை. மேலும் பால், பாலியல், மாற்றுபால் நோக்குநிலைகளை பற்றி பேசத்தயங்குவது வெளிப்படையாகத் தெரிகின்றது.

கடந்த சில வருடத்தில், பல்கலைகழகங்களில் women studies போன்ற துறைகள் ஊக்குவிக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வந்தாலும், தே.க.கொ-2019 இதைப்பற்றி எதுவும் பேசவில்லை .

ஏழைப் பெற்றோர்

தே.க.கொ -2019 பிரதிநிதித்துவப்படாத குழுக்கள் ( Under Represented Groups) என்ற பதத்தை ஒடுக்கப்பட்டோர், பட்டியல் இனத்தினர், பின்தங்கியோர், போன்றோரை குறிப்பதற்காக பயன்படுத்துகின்றது. குழந்தைகளின் கல்விக்கும் குடும்பத்தின் வருமானத்திற்குமான தொடர்பு பேசப்பட்டிருந்தாலும், இவை ஆழமாக சிந்திக்கப்படவில்லை.

குழந்தைக் கல்வி மற்றும் பராமரிப்பு பற்றிப் பேசும்போது, ஒற்றை பெற்றோர், அமைப்புச்சாரா துறைகளில் வேலை செய்வோர் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை (ப.எண். – 48). இவ்வகை பெற்றோர்கள் குழந்தைக் கல்வி செயல்பாடுகளில் எவ்வாறு பங்கேற்பார்கள் என்ற புரிதல் இல்லை.

குழந்தைகளுக்கான வீட்டுப் பாடங்கள் செயல்பாடுகளில் பெற்றோர்களின் பங்கு பேசப்படுகின்றது (ப.எண்.62). இவற்றில் பெரும்பாலும், வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கும் பெற்றோர்களை கணக்கில் கொள்ளவில்லை.

வசதியற்ற பெற்றோர்கள், தங்களின் தலைவிதிக்கு தாங்களே பொறுப்பு என்பது போன்ற செய்தியே மறைவாக முன்வைக்கப்படுகின்றது. எடுத்துக்காட்டாக, தே.க.கொ-2019 -ல் வரும் ஒரு பத்தியை பார்போம்; பால்ய திருமணம், குழந்தைத் தொழில், இளம் வயதிலேயே வேலைக்குச் செல்லவேண்டிய கட்டாயம், சாதித் தொழிலை பின்பற்ற வேண்டிய நிலை, போன்ற காரணங்களால் சில குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரை பள்ளிக்கு அனுப்புவதில்லை.

தம்பி தங்கைகளை வளர்கவேண்டிய சூழ்நிலை வளர்ந்த குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்கு தடையாக இருக்கின்றது. சுகாதாரமற்ற வாழ்விடங்கள், துப்பரவு வசதிகள் இன்மை, தூய்மையற்ற உணவு போன்றவற்றால் குழந்தைகள் நீண்டகால நோய்களுக்கு ஆளாவது போன்றவை குழந்தைகளின் கல்விக்கு தடையாகக் காரணம் காட்டப்படுள்ளது. ஆனால் தே.க.கொ-2019 இதற்கான தீர்வுகளைப் பற்றி ஆழமாக சிந்திக்கவில்லை .

குழந்தைகளுக்கு ஆங்கிலக் கல்விமூலம் காலங் காலமாக சமூகத்தில் பின்தேங்கி நிற்கும் நிலையிலிருந்து விடுபட நினைக்கும் பெற்றோர்களுக்கு தே.க.கொ-2019 ஆதரவானது அல்ல. இது இவ்வகை எதிர்பார்ப்பை இயற்கைக்கு புறம்பானது என்பதோடு மட்டுமல்லாமல் ஆங்கிலம் மேட்டுக்குடியினருக்கான மொழியென வரையறுக்கின்றது. இருந்தபோதிலும், ஏழை குடும்பத்தில் இருந்து வரும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை பற்றி பேசுவதன் மூலம் (ப.எண்.245) தே.க.கொ-2019 வசதியற்றோரை முழுவதுமாக கைவிட்டுவிடவில்லை எனக் கூறலாம்.

படிக்க:
♦ கழிப்பறைக்காக கல்வி மறுக்கப்படும் பெண் குழந்தைகள்!
♦ பெண் குழந்தைகளைப் பாதுகாக்கும் மோடி அரசின் இலட்சணம் !

இட ஒதுக்கீடு

மிக முக்கியமாக தே.க.கொ-2019 சாதியைப்பற்றி குறிப்பிடுவதில் லாவகமாக தவிர்த்து மௌனம் சாதிக்கிறது. ஆணாதிக்கம், நிறவெறி போன்றவைகூட ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தாலும் (ப.எண்.101), சாதி ஒரு சமூக பிரச்சினையாக பார்க்கப்படவில்லை.

பக்கம் எண் 138-ல் குழந்தைகள் எதிர்காலத்தில் வளர்ந்தபின் ஒரு சமத்துவமான உள்ளடக்கிய சமூகத்தில் அங்கமாக இருப்பார்கள். எனவே இது அமைதிக்கும் தேசிய ஒற்றுமைக்கும் வழிவகுக்கும் என்று கூறப்படுகின்றது. ஆனால் தற்போது புறந்தள்ளப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வரும் மாணவர்களின் உரிமையைப் பற்றி பேசவில்லை.

குறிப்பாக, இந்த வரைவு, கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கான அல்லது ஆசிரியர்களுக்கான இட ஒதுக்கீடு பற்றி எங்குமே குறிப்பிடவில்லை. கடந்த சில வருடங்களாக, இட ஒதுக்கீடு சமூக ஏற்றத் தாழ்வை குறைக்கும் ஆயுதமாக இருந்துள்ளது. தே.க.கொ-2019, இதுவரை இட ஒதுக்கீடு சம்பந்தமாக எடுத்துக்கொண்ட அனைத்து முயற்சிகளையும் மறுதலிப்பதாக உள்ளது.

இத்துடன், பக்கம் எண் 334 -ல், தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு கொள்கைகளை கடைபிடிக்க வேண்டிய தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

பக்கம் எண்கள் 148 – 49-ன் படி, பட்டியல் இனம், பின்தங்கிய இனம் இவற்றில் இருந்து வரும் மாணவர்கள் இவ்வினத்திலிருந்து வரும் ஆசிரியர்கள் மூலமே கற்பிக்கப்பட வேண்டும். ஏனென்றால், இவ்வாசிரியர்கள் இம்மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருப்பார்கள். இஸ்லாமிய மாணவர்கள், உருது தெரிந்த ஆசிரியர்கள் மூலம் கற்பிக்க வேண்டும். இங்கு உருது தெரியாத இஸ்லாமிய மாணவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

இட ஒதுக்கீடு பேசப்படாத நிலையில், ‘மெரிட் சிஸ்டம்’ பேசப்படுகின்றது. கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்க்கை முதல் ஆசிரியர் நியமனம்வரை ஒரு கடுமையான ‘மெரிட் சிஸ்டம்’ கடைபிடிக்கப்படும் (ப.எண்கள்; 114, 116, 119) என கூறப்பட்டுள்ளது..

மாற்றுத் திறனாளிகள்

தே.க.கொ – 2019, CwSN (children with special needs) என்ற பதத்தை பயன்படுத்துகின்றது. இவை பெரும்பாலும், இவ்வரைவின் தொடக்கப் பக்கங்களில், ஆரம்பக் கல்வியைப் பற்றி பேசும்போது குறிப்பிடப்படுகின்றன. ஆனால், உயர்கல்வி பற்றி பேசும் பக்கங்களில் இவை காணப்படவில்லை.

பக்கங்கள் 154 மற்றும் 155 மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தேவைகளைப் பற்றி பேசுகின்றன. ஆனால் மாற்றுத் திறனாளி ஆசிரியர்களை நியமனம் செய்வது குறித்த வழிமுறைகளைப் பற்றியோ அல்லது அவர்களுக்கான சிறப்பு தேவைகளை பூர்த்தி செய்வது பற்றியோ எந்தவித குறிப்பும் இல்லை.

மேலும், ஒவ்வொரு கொள்கைக்கும், அவற்றை அமல்படுத்துவதற்கான ஒரு காலக்கெடுவை முன்வைக்கும் தே.க.கொ-2019, மாற்றுத் திறனாளிக்கான சிறப்பு தேவைகள் பற்றி குறிப்பிடும்போது மட்டும் எந்த காலக்கெடுவையும் கொடுக்கவில்லை.

மொழிக் கொள்கை

கடந்த சில தினங்களாக, தே.க.கொ-2019-ன் மொழிக் கொள்கைக்கான எதிர்வினைகள் பல்வேறு தரப்பினரிடமிருந்து வெளிவருகின்றன. இதன் பயனாக கட்டாய ஹிந்தி என்ற நிலையிலிருந்து அரசு பின்வாங்கியுள்ளது.

தே.க.கொ-2019-ல் 86-வது பக்கத்தில் ஒரு புதிய, ‘இந்தியாவின் மொழிகள்’ என்ற பாடம் 6 முதல் 8-ம் வகுப்புவரை அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, இந்த ‘புதிய’ பாடத்தில், இந்தியாவின் முக்கியமான மொழிகளுக்கிடையே குறிப்பிடும்படியான ஒற்றுமைகளை மாணவர்கள் கற்பார்கள். இவற்றிற்கிடையேயான பொதுவான உச்சரிப்பு, அறிவியல்பூர்வமாக அமைந்துள்ள எழுத்து வரிசை, எழுத்துருக்கள், இவற்றின் இலக்கண அமைப்புகள், சமஸ்கிருதம் மற்றும் ஏனைய செம்மொழிகளிருந்து இவற்றின் தொடக்கம், மற்றும் இவற்றின் ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகள் போன்றவற்றை பயில்வார்கள் என்கிறது.

ஏற்கெனவே, பல்வேறு பாடத் திட்டங்களாலும் புத்தகப் பளுவாலும் துயரில் உழலும் மாணவர்களுக்கு இதுபோன்றதொரு பாடத்தை புகுத்தி அவர்களை மேலும் துயரத்தில் ஆழ்த்துவதற்கான காரணத்தை நம்மால் அவதானிக்க முடியவில்லை.

பக்கம் எண் 87-ல், 6-லிருந்து 8-ம் வகுப்பு வரை தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் ஒரு இந்திய செம்மொழியை பயில்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்த செம்மொழிகளின் வரிசையில், சமஸ்கிருத்துடன், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா, பாலி, பாரசீகம், மற்றும் பிராகிருதம் போன்ற மொழிகள் இருந்தாலும், பயன்பாட்டில் சமஸ்கிருதம் கற்றல் வலியுறுத்தப்படும் என்பதில் சந்தேகமில்லை.

பொதுவாக, இந்த வரைவு சமஸ்கிருதத்தின் முக்கியத்துவத்தை முன்வைக்கின்றது. எடுத்துக்காட்டாக, பக்கம் எண் 86 -ல், “ஒரு நவீன கால மொழியாக இருந்தபோதிலும், தன்னிடம் லத்தின் மற்றும் கிரேக்க மொழிகளில் உள்ள அனைத்து இலக்கியங்களையும் ஒன்று சேர்த்து தொகுத்தாலும், அம்மொழிகளில் உள்ள இலக்கியங்களை விட அதிகமான தொன்மை இலக்கியங்களை சமஸ்கிருதம் கொண்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. ‘இவை பல்லாயிரம் வருடங்களாக, வெவ்வேறு சமூக சூழ்நிலையிருந்து வந்த மதம் சார்ந்த மற்றும் மதம் சாராத ஆசிரியர்களால் எழுதப்பட்டவை’. இது ஒரு உண்மையை திரித்து கூறிய கருத்தாக பார்க்க வேண்டியுள்ளது. மேலும் முக்கியமாக, இவ்வகை ஒப்பீட்டு மொழி கற்றலிலிருந்து அரபு மற்றும் சீனம் போன்ற மொழிகள் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டுள்ளன.

படிக்க:
♦ இராஜஸ்தான் : பண்டாரம் பரதேசிகள் உருவாக்கிய பள்ளி பாடத்திட்டம் ! என்ன எழவு நாடிது ?
♦ இராஜஸ்தான் : வெள்ளைகாரனிடம் மண்டியிட்ட ‘வீர’ சாவர்க்கர் வெறும் சாவர்க்கரானார் !

தொன்மை, பாரம்பரியம், பண்பாடு

தே.க.கொ-2019 வரைவு முழுவதும் ஒரே விடயங்கள் திரும்பத்திரும்ப சொல்லப்பட்டு, பிழைகள் மலிந்தும், பல்வேறு கருத்துகளுக்கு ஆதாரங்கள் சுட்டிக் காட்டப்படாமலும் இருப்பதையும் எளிதாகக் காண முடியும்.

மேலும், பழைய பண்பாடு, புராதனம், மரபுகள் போன்றவற்றை கற்றல் கற்பித்தலில் வலியுறுத்தும் போக்கு எங்கும் வியாபித்துள்ளது. இந்தியாவின் மரபுகளையும், மதிப்புகளையும் பேணுதல் என்பது தே.க.கொ-2019-ன் முக்கிய அம்சமாக ஆங்காங்கு பேசப்படுகின்றது.

குறிப்பாக ஆசிரியர் பயிற்சியை திடப்படுத்துவது, இவற்றை வென்றடைவதற்கான ஒரு வழியாக முன்வைக்கப்படுகின்றது. இதன்படி ‘ஆசிரியர்கள் தற்போதைய நவீன கல்வி மற்றும் கற்பித்தலில் முழுத் திறமையோடு இருக்கும் அதே வேளையில், இந்திய மதிப்புகள், பண்பாடு, பாரம்பரியம் மற்றும் அறிவு போன்றவற்றில் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்’.

மேலும், பல்வேறு கொள்கைகளுக்கான விளக்கங்கள் சமஸ்கிருத இலக்கியங்களிருந்தும், இராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற காப்பியங்களிலிருந்து எடுக்கப்பட்ட குறிப்புகளுடன் கொடுக்கப்பட்டுள்ளது. இக்குறிப்புகள்கூட பிழைகள் மலிந்து தவறாகவும் உள்ளன. தக்ஷிலா மற்றும் நலந்தா போன்ற பண்டைய பல்கலைக் கழகங்கள் முக்கிய உதாரணங்களாக காட்டப்பட்டுள்ளன.

இந்திய வரலாறு என்பதை சமஸ்கிருத மொழியை சார்ந்த வரலாறாக காட்டும் உந்துதல் அதிகமாக உள்ளது. அண்மைக் காலங்களில் வரலாற்று ஆய்வுகள் மேட்டுக்குடி மக்களின் வரலாற்றை எழுதுவதிலிருந்து விலகி, சாமானிய மக்களின் வரலாற்றை வாசிப்பதில் ஆர்வம் காட்டியுள்ளன. உழைக்கும் மக்கள், பெண்கள், ஒதுக்கப்பட்ட நிலப்பரப்புக்கள் அதன் குடிகள், ஒடுக்கப்பட்ட சாதி சமூகங்கள், என இவர்களின் வரலாறுகள் ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்க்க தொடங்கியிருக்கிறது. ஆனால், தே.க.கொ-2019-ல் இதுபோன்ற புது தகவல்களை, சிந்தனைகளை உள்வாங்கும் தாராளப் போக்கு காணப்படவில்லை.

மாணவ, ஆசிரியர் சங்கங்கள்

தே.க.கொ-2019-ல், மாணவ சங்கங்கள் பற்றிய எந்த குறிப்பும் இல்லாததோடு, இச்சங்கங்களை அங்கீகரிப்பது சம்பந்தமான எந்த வழிமுறைகள் பற்றியும் பேசப்படவில்லை. பேச்சுவார்த்தைக்கும், விமர்சனத்திற்கும், போராட்டத்திற்கும், எதிர்வினையாற்றுவதற்குமான எந்ததொரு வாய்ப்பையும் தே.க.கொ-2019 கொடுக்கவில்லை.

வரைவின் 292-ம் பக்கத்தின்படி, ஆசிரியர்களுக்கு ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், அவர்கள் அரசு அதிகாரிகளிடம் புகார் செய்ய முடியும் அல்லது பிரதம மந்திரி தலைமை தாங்கும் RSA அமைப்பிடம் தெரிவிக்கவேண்டும் (ப.எண்.292).

தே.க.கொ-2019-ஐ அமல்படுத்துவது வருங்கால சந்ததியினரை கருத்தில் கொண்டு செயல்படவேண்டும் என்பதனால், இக்கொள்கைகளின் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பது பற்றிய ஒரு தெளிவான ஆழமான விவாதம் மிகமுக்கியமானதாகும். இந்த வரைவுதிட்டம் சமூகபொருளாதார-பண்பாட்டு வேறுபாடுகளை மதிப்பது ஏற்றுக்கொள்வது என்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் கல்வி கொள்கைகளை வடிவமைப்பதன் சாத்தியத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுபோல் தெரிகின்றது.

ஆழ்ந்து வாசிக்கும்போது, இவை சமூக, பொருளாதார வேறுபாடுகளை கலைவதற்கு பதிலாக அவை மறுகட்டமைப்பு செய்யப்படுவதற்கான ஆபத்துகள் அதிகமாக தெரிகின்றன. கல்விக் கொள்கைகள் அரசியலமைப்பு கூறுகின்ற வழிகாட்டுதலை அடிப்படையாக கொண்டு வரையப்பட வேண்டும். கல்விக் கொள்கைகளை அரசியலமைப்பின் பிடியிலிருந்து நீக்கி ‘சமுதாயத்தின்’ ஆளுகைக்கு மாற்றுவது பேராபத்தை விளைவிக்கும்.

கப் பஞ்சாயத்து - வெறிபிடித்தவர்களின் சாதிமன்றம்
காப் பஞ்சாயத்து – வெறிபிடித்தவர்களின் சாதிமன்றம்

ஒருகணம் காப்-பஞ்சாயத்தின் கீழ் பள்ளிகூடங்கள் வருகின்றன என்ற நினைத்து பாருங்கள், இதன் விளைவுகள் என்னவாக இருக்கும். ஒடுக்கப்பட்ட சாதியினர், பழங்குடியினர், பெண்கள், உழைக்கும் வர்க்கத்தினர், உடல் ஊனமுற்றோர், சிறுபான்மையினர் இவர்களின் உணர்வுகளை உரிமைகளை மதிப்பதாக கல்விதிட்டங்கள் அமைய வேண்டும்.

கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு சமூக மாற்றத்திற்கான தொடக்கப் புள்ளியாக இருந்துள்ளது, இதை அழிக்க விழையும் எந்த கொள்கையையும் உடனே நீக்க வேண்டும். இந்த வரைவு திட்டத்தை எழுதியோர், கல்வி என்பது மக்களின் உரிமை, மக்களுக்கான சேவை அல்ல என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

ஒவ்வொரு மொழியும் முக்கியமானது என்றபோதிலும், சமஸ்கிருதம் மற்றும் ஹிந்தி இவற்றை முதன்மைபடுத்துவதன் மூலம் மற்ற மொழிகளை பின்னுக்குத்தள்ளவது ஏற்றுக்கொள்ள முடியாது. பழைய பண்பாட்டின் பெருமைகளை பண்டைய ஆட்சியாளர்களின் சாதனைகளைப் பட்டியலிடுவதைவிட, 21 -ம் நூற்றாண்டு மாணவர்கள் சதாரண மக்களின் வரலாற்றை, போராட்டங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியதும் அவசியமாக உள்ளது.

சௌ. குணசேகரன்
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்,
புதுதில்லி.

(சக பேராசிரயர், முனைவர் கும்கும்ராய் அவர்கள் வரைவு குழுவிற்கு எழுதிய நீண்ட எதிர்வினையைத் தழுவி எழுதப்பட்டது)

கை கால் நல்லா இருக்கும்போதே எங்களைக் கூட்டிட்டு போயிடு…! பிச்சை எடுக்க வச்சிடாத..!”

மிழகம் முழுவதும் செங்கல் அறுக்கும் தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இருக்கின்றன. இந்த தொழிலில் இருக்கும் பலரும் கிராமங்களிலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்.

சொந்த கிராமத்தில் விவசாயம் அழிந்து, பிழைக்க வேறு வழியின்றி குடும்பத்தோடு கிளம்பி விடுகிறார்கள். அதன் பிறகு சொந்த ஊருக்கு செல்வது அரிதினும் அரிதாகிறது.

இப்படி வரும் தொழிலாளர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது ?

சென்னை தரப்பாக்கம் அருகே உள்ள செங்கல் சூளையில் வேலை செய்யும் தொழிலாளி பாலகிருஷ்ணன் சொல்கிறார். “விழுப்புரம்-அரசூர் சுத்துப்பட்டு கிராமத்திலிருந்து நாங்க இங்க மொத்தமாக 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தார் வந்து தங்கி வேலை செய்யுறோம். கிராமத்துல விவசாயம் இல்லாதப்ப கல்லறுக்க வெளியூர்களுக்குப் போவோம். இப்ப வானம் சுத்தமா காஞ்சி போனதால விவசாயிங்களுக்கு இந்தத் தொழில் நிரந்தரம் ஆயிடுச்சு.

செங்கல் சூளை தொழிலாளி பாலகிருஷ்ணன்

குழந்தை குட்டிங்கள ஊர்லயே விட்டுட்டு இந்தத் தொழில் செஞ்சிகிட்டிருக்கோம். ஒவ்வொரு வேலையிலயும் ஒரு கஷ்டம் இருக்கும். அத செய்யும்போதுதான் அதோட வலி தெரியுது. பச்சை மண்ணை பதமா கூட்டி கல்லு அறுக்குறது ஒரு பெருஞ்சொமைய கொடுக்கிற வேலை.

களிமண்ணில் தண்ணியவிட்டு மண்ண மிதிச்சி, கெட்டிப்பதமா குழைச்சி அதை அச்சில் வார்த்து ஒவ்வொரு கல்லாக அறுக்கனும். அடுத்து காஞ்ச கல்லை ஓரம் சீவி காயவைத்து அடி போடுவது, பிறகு அதை ஜன்னல் கட்டி போட வேண்டும். இந்த வேலையை குடும்பமாத்தான் செய்ய முடியும். குறைஞ்சதது இரண்டு பேர் வேணும். மூன்று பேர் இருந்தால் கொஞ்சம் அலுப்பு தெரியாம வேலை செய்யலாம்.

செங்கல் சூளை தொழிலாளி பாலகிருஷ்ணனின் மனைவி.

கொளுத்தும் வெயிலில வேலைக்கு கிராக்கி இருக்கும். ஆனா வெயில் காலந்தான் கல்லறுக்க உகந்த காலம். வேலை செய்யும்போதே உடம்புக்கு மேலேயும் கீழேயும் கொதிக்கும். வேக்காடா இருக்கேன்னு கொஞ்ச நேரம் இளப்பாறினா பச்சைமண் இளகிடும். அச்சுல மண்ணை வார்த்தால் மாடு சாணி போட்ட மாதிரி வழியும். “கல்லா இது”ன்னு முதலாளிங்க திட்டுவாங்க.

பச்சை மண்ணை மிதிச்சி கூட்டி பதம் பார்க்கிறது லேசுப்பட்ட விஷயம் இல்ல. பல வருச அனுபவம் வேணும். இந்த வேலையை பெரும்பாலும் ஆம்பளைங்கதான் செய்ய முடியும். ஏன்..னா பல மணி நேரம் மூச்சு பிடிச்சு செய்யும் வேலை இது.

பொம்பளைங்க செய்யும் வேலை சேம்பர் களத்துமேட்டுல கொளுத்தும் வெய்யில்ல குத்துக்காலிட்டு குனிஞ்ச தலை நிமிராம செய்யும் வேலை. களத்தை சவுடு மண் தூவி பச்சை மண் தரையில ஒட்டிக் கொள்ளாம தயார் செய்யணும். அதற்குமேல் ஃபைபர் அச்சு வெச்சு அளவாக மண்ணை உருட்டி அழுத்தமாக அறையணும். பிறகு மண்ணை சமமாக நிறுவி அலுங்காமல் குலுங்காமல் அச்சை எடுக்கனும். இப்படி ஒவ்வொரு அச்சாக வைத்து பின்னாடியே கோடு கிழித்த மாதிரி ஒவ்வொரு கல்லாக வார்த்துக்கிட்டே போகணும்.

வெயில் காலமுங்குறதால இந்த வேலையை நைட்டு 10 மணிக்கு டியூப்லைட் வெளிச்சத்தில் குடும்பமா செய்வோம். இரவு முழுக்க கண்முழிச்சி காலைல 10 மணிக்கு இடைவேளை விடுவோம். அப்பவரைக்கும் சுமார் 2000, 2500 கல்லு விழுந்திருக்கும். (மூணு பேர் 12 மணி நேரம் இடைநிறுத்தம் இல்லாமல் செய்யும் இந்த வேலைக்கு, ஆயிரம் கல்லுக்கு 500 ரூபாய் கூலி.)

இந்த வேலை இதோடு முடியறது இல்லை. கல்லு பதமாக காய்ந்த பிறகு ஒழுங்கு செய்யணும். அந்த வேலையை பகல் 3 மணிக்கு செய்ய ஆரம்பிப்போம். இதுக்கிடையில காலை பத்து பதினோரு மணிக்கு குடிசைக்கு சென்று, கை, கால் கழுவி கஞ்சியோ கூழோ குடிச்சிட்டு, கொஞ்சம் ஓய்வு எடுத்து உடம்பை ஆசுவாசப்படுத்திக்குவோம். மூணு மணிக்கு வந்தா வெயில் கொளுத்தும். கல்லை நான்கு பக்கமும் வடிவா சீவி திருப்பி போட்டுட்டு ஆறு-ஆறரை மணிக்கு குடிசைக்கு திரும்புவோம்.

உணவு சமைக்கும் பெண் தொழிலாளி.

வந்ததும் சுள்ளி கட்டை போட்டு அடுப்பு பத்த வைப்போம். வாங்கிய ரேஷன் அரிசியை வைச்சி அதுக்கு ஏத்தமாதிரி, காரமான கொழம்பு செய்து குழந்தைங்களுக்கு போட்டு நாங்களும் சாப்பிடுவோம். அதுக்குள்ள ஒடம்பு மேலெல்லாம் வலிக்கும் எப்ப தூங்கினோம்ன்னு எங்களுக்குத் தெரியாது.

இரவு 10 மணிக்கு திரும்பவும் எழுந்திருச்சி கல்லு சீவி போட வருவோம். தூக்கமில்லாமல் கண்ணு நெருப்பு மாதிரி கொதிக்கும். இதுதான் எங்க பொழப்பு. இப்படி ஆறு மாசம் தூக்கம் இருக்காது. மண்ணோடு மண்ணா, காயும் வெயிலில் தொடர்ந்து வேலை பார்த்து வாங்கிய கடனை அடைச்ச பிறகுதான் வீடு திரும்ப முடியும். சொந்த ஊர் திரும்பிய பிறகுதான் எங்களுக்கு தூக்கமும் ஓய்வும் நிம்மதியும் கிடைக்கும்.

இன்று இரவு வயிறு நிரம்புமா தெரியாது, ஆனால் வாய் நிறைய புன்னகை உதிர்க்கின்றன இச்செல்வங்கள்.

இப்படி கஷ்டப்பட்டாக்கூட குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் வயிறார கஞ்சி ஊத்த முடியல. குழந்தைகளை பத்தாவதுக்கு மேல் படிக்க வைக்க முடியரதில்லை. வேற வழி இல்லாம பொம்பள பசங்கள சின்ன வயசிலேயே கட்டி கொடுத்துடுவோம். அதுங்க கல்யாணத்துக்கு வாங்கிய கடனை கொஞ்சம் கொஞ்சமாக பல வருசம் ஒழைச்சி அடைப்போம்.

இந்த வேலையில 40 வயசுலேயே கண் பார்வை குறைஞ்சு போயிடுது. கழுத்து நரம்பு வலிக்கும். கால் முட்டி மடங்கி… நிமிர்ந்து நடக்க முடியாம இழுத்து இழுத்து குறை காலத்தை ஓட்டுவோம். ஒடம்பு முடியாதபோது எங்களுக்கு கஞ்சி ஊத்த யாருமிருக்க மாட்டங்க. எங்கள் குழந்தைகளை நெனைச்சி எங்களுக்கு கோபமும் வராது. அவங்களுக்குன்னு எதிர்காலம் ஒன்னுமே இல்லை. அவங்களை அவுங்க பாத்துக்கிட்டாலே போதும்’னு நெனச்சிக்குவோம்!

ஆண்டவனிடம் நாங்கள் வேண்டுறதெல்லாம் கை கால் நல்லா இருக்கும்போதே எங்களைக் கூட்டிக்கொண்டு போ…..! எங்களை பிச்சை எடுக்க வைக்காதே..!” என்பதுதான்.

மண்ணை மிதித்துக் குழைத்து பதமாக்கும் தொழிலாளி.

 

படித்து தன் வாழ்க்கை கனவை கட்டமைக்க வேண்டிய வயதில், யாரோ ஒருவரின் ‘கனவு இல்லத்தை’ கட்ட செங்கல் சூளையில் உழைக்கும் சிறுவன்.

 

கல் அறுக்கும் பணியில் ஒரு தொழிலாளி

 

உழைப்புக்கும் இங்கு வயது வரம்பில்லை, சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் குடும்பமாக உழைக்கின்றனர்

 

குழந்தையில் இருந்தே வீட்டு உழைப்பும் சேர்ந்து விடுகிறது, இப்பிஞ்சுகளுக்கு.

 

முகப்பூச்சு வாழ்க்கைக்கு மத்தியில், செங்கல்லுக்கு மேற்பூச்சு வீசும் பெண்

 

அன்னாந்து பார்க்கும் கட்டிடங்களின் அஸ்திவாரமாய் இவர்களின் உழைப்பு, ஆனால் நிமிரவே முடியாத வாழ்க்கை.

 

தலை சுமையை இறக்கிவிடலாம், வாழ்க்கை சுமையை என்ன செய்வது !

 

குளியலறை தொட்டிககளில் வழியும் தண்ணீரில் மிதப்பவர்கள் வாழும் நாட்டில்தான், சேற்று நீரில் இவர்கள் துணி துவைக்கின்றனர்.

 

உழைப்பின் களைப்பைக் கலைக்க சற்று நேர ஆசுவாசம்.

 

இவர்களின் வாழ்வும் இப்போது சுட்ட கற்களாய் குவிந்து விட்டது, சரியான பொறியாளர்தான் கட்டமைக்க தேவைப்படுகிறார்.

 

அந்த பொறியாளர் வேறு யாரும் இல்லை, அணிதிரட்டப்பட்ட தொழிலாளி வர்க்கம்தான்

 

பூர்ஷுவாக்களின் தாக்குதலை முறியடிப்பதற்கு ஒரே வழிதான் !

பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் | விரிவுரை – 2 |  பாகம் – 11

டோக்ளியாட்டி

பூர்ஷுவாக்களின் இந்தத் தாக்குதலை முறியடிப்பதற்கு வேறு வழி என்ன? ஒரே ஒரு வழிதான் இருந்தது. பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர போராட்டம்தான் அது. இதுதான் ஒரே தீர்வு. எனவே இது விஷயத்தில் நமக்கிருந்த சகல வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்தோம். ஆர்டிட்டி டெல் பாப்பலோவை இதற்கு உதாரணமாகக் கூறலாம். எனினும் இதற்குள்ளாக, ரோம் படையெடுப்பு நடைபெற்ற சமயத்தில் சக்திகளின் சமவலிமை நிலை பெரிய அளவுக்கு நமக்குப் பாதகமாக மாறிவிட்டது.

கம்யூனிஸ்டுக் கட்சியின் ஒரு சிறந்த, மிகச் சரியான கொள்கை வழி நமக்கு மிகப் பெரும் வாய்ப்புகளை அளித்திருக்கக்கூடும்; போராட்டத்தை மிகவும் கூர்மையும் தீவிரமுமடையச் செய்திருக்கக்கூடும். அதிருப்தியுற்ற அனைத்து வெகுஜனப் பகுதியினரையும் ஒரு பரந்து விரிந்த போர் முனையில் அணிதிரட்டும் கொள்கையை அப்போது கம்யூனிஸ்டுக் கட்சி கடைப்பிடித்திருக்குமானால் நிலைமை பெரிதும் மாற்றமடைந்திருக்கும். புரட்சிகர நெருக்கடி தோன்றக்கூடிய சாத்தியக் கூறுகளை மீண்டும் தோற்றுவித்திருக்கும்.

ஆனால் அந்தச் சமயத்தில் சக்திகளின் பரஸ்பர வலிமை நமக்குச் சாதகமாக இல்லை. இந்தப் பிரச்சினையை இங்கு நான் ஏன் குறிப்பிடுகிறேன் என்றும் கேட்கலாம். ஆரம்பத்தில் நான் கூறியதை நினைவுபடுத்தவே இவ்வாறு செய்திருக்கிறேன்: பாசிசத்துடனான போராட்டம் முடிந்துவிட்டதாக ஒருபோதும் நினைக்கக் கூடாது என்பதை மீண்டும் இங்கு வலியுறுத்த விரும்புகிறேன்.

பிப்ரவரி 6-ம் தேதி பிரான்சில் என்ன நடைபெற்றது என்பதைப் பாருங்கள்.10  அப்போது உருவான நிலைமை கட்சிக்கு எதிர்பாராத அதிர்ச்சியை அளித்தது. எனினும் உடனே அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு விட்டது. திறமையும் சாதுர்யமுமிக்க ஒரு ஐக்கிய முன்னணிக் கொள்கையின் மூலம் கட்சி வெகுஜனங்களுக்குத் தலைமை ஏற்றது. அவர்களுக்கு உத்வேகமூட்டி பாசிசத்துக்கு எதிரான போராட்டத்தில் அவர்களை வழிநடத்திச் சென்றது. பாசிசத்தின் தாக்குதலுக்கு எதிராக ஒரு வலிமைமிக்க தடையரணை கட்டியெழுப்பிற்று.

இதனை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. பாசிசத்தில் பிளவும் வெடிப்பும் ஏற்படும் ஒவ்வொரு சமயமும் அந்தப் பிளவை நாம் அதிகப்படுத்த வேண்டும்; நிலைமையை நெகிழச் செய்து, போராட்டத்துக்கான சாத்தியக் கூறுகளை மீண்டும் தோற்றுவிக்க வேண்டும்.

ரோம் படையெடுப்புக்குப் பிறகு பாசிசம் எத்தகைய திட்டத்தை மேற்கொண்டது? இச்சமயம் பாசிஸ்டுக் கட்சியில் ஒரு புதிய காலகட்டம் ஆரம்பமாயிற்று – சர்வாதிகாரமல்லாத ஒரு பாசிஸ்டுக் கட்சியைக் கட்டி உருவாக்குவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்ட காலகட்டம் என இதனைக் கூறலாம்.

ரோம் படையெடுப்புக்குப் பிறகு ஆட்சி அமைக்கும்படி முசோலினி அழைக்கப்பட்டார். அப்போது அவர் ஓர் அனைத்து பாசிஸ்டு அமைச்சரவையை அமைப்பது குறித்து கணநேரம் கூட சிந்திக்கவில்லை. அதற்கு மாறாக நாடாளுமன்றத்தில் பல்வேறு சக்தியினரும் ஒத்துழைக்கும் அடிப்படையில் அமைந்த ஓர் அமைச்சரவையை உருவாக்கினார். சோஷலிஸ்டுகளுக்குக்கூட தமது அமைச்சரவையில் இடமளிக்க முன்வந்தார்.

படிக்க:
பீகார் : வெப்பத்தால் அதிவேகமாகப் பரவும் மூளைக் காய்ச்சல் – 80 பேர் பலி !
♦ மந்திரம் என்று மயக்கமொழி பேசிப் பார்ப்பனர் வாழ்ந்தனர் !

ஒருநாள் நாடாளுமன்றத்தில் பியோஸ்ஸி11 யுடனும் பல்டேசியுடனும் பேசிக் கொண்டிருந்தேன். “அரசாங்கத்தில் எங்களுக்கு இடமளிக்க முசோலினி முன்வந்திருக்கிறார். என்ன செய்வது என்று எங்களுக்குத் தெரியவில்லை. நாங்கள் பகைவனின் பீரங்கியின் முன்னால் இருக்கிறோம். அவரது விருப்பத்துக்கு இசையத்தான் வேண்டும் போலிருக்கிறது” என்று அவர்கள் கூறினார்கள்.

அரசாங்கத்தில் சேரவில்லை என்றால் அதற்காக அவர்களை யாரும் பாராட்ட மாட்டார்கள். பூர்ஷுவாக்கள்தான் அவர்கள் சேருவதை விரும்பவில்லை. கியோலிட்டியின் ஒத்துழைப்புத் திட்டம் அப்போது ஏற்கெனவே காலாவதியாகிவிட்டிருந்தது.

சோஷலிஸ்டுகளை அரசாங்கத்தில் சேர்ப்பதற்கு செய்யப்படும் முயற்சிகளை ஒருபுறம் பாசிஸ்டுக் கட்சியின் நடுத்தர ஊழியர்களான ஸ்குவாட்ரிஸ்டிகளும், இன்னொருபுறம் பூர்ஷுவா வர்க்கத்தில் மிகவும் பிற்போக்கான சக்திகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசியவாதிகளும் கடுமையாக எதிர்த்தனர்.

எனினும் முயற்சி தொடர்ந்தது. பல இன்னல்களும் பிரச்சினைகளும் எதிர்ப்பட்டதன் விளைவாக அந்த முயற்சி தோல்வியடைந்தது. இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டிய அவசியம் காரணமாக சர்வாதிகாரத்தை மேன்மேலும் வலுப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு பாசிசம் உள்ளாயிற்று.

நாட்டில் ஸ்திர நிலைமையை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் 1922, 1923, 1924-ம் ஆண்டுகளில் ஏற்பட்டது; அந்தக் கால கட்டத்தைத்தான் இப்போது நாம் அணுகிக் கொண்டிருக்கிறோம். ஸ்திர நிலைமை சம்பந்தப்பட்ட எல்லாப் பிரச்சினைகளும் இத்தாலியில் தலைதூக்கின.

இந்நிலைமையில் பாசிசம் என்ன செய்ய முடியும்? தனது எசமானனான பூர்ஷுவா வர்க்கத்தின் ஆணைகளைத்தான் அது சிரமேல் ஏற்று நிறைவேற்ற முடியும். முதல் நெருக்கடி ஆரம்பமாயிற்று. இந்தக் காலகட்டத்தில் எப்போதும் தோன்றக்கூடிய நெருக்கடிதான் இது. பாசிசத்தின் கொள்கைக்கும் அதன் ஆரம்பகால வெகுஜனத் தளத்துக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடுதான் இந்த நெருக்கடிக்குக் காரணம். கட்சியின் அடிமட்ட ஊழியர்களும் ஆதரவாளர்களும் பழைய திட்டத்தைத் தொடர்ந்து ஆதரித்து வந்தனர் அல்லது அதிகாரத்தைக் கைப்பற்றும் கருத்துக்களை வளர்த்துக் கொண்டிருந்தனர். இந்தக் கருத்துகள் பூர்ஷுவாக்களுக்கு ஏற்புடையவையாக இல்லை.

(தொடரும்)

பின்குறிப்புகள் :

10. 1934 பிப்ரவரி 6ம் தேதி பிரான்சில் நடந்த வலதுசாரிக் கலகங்கள், காவல்படையால் ஒடுக்கப்பட்டன; பாசிஸ்டு ஆட்சி அமைப்புகள் மேலும் பரவுவதற்கான அபாயம் பற்றி பிரான்சின் இடதுசாரிகளையும் அகிலத்தையும் விழிப்படையச் செய்ய உதவின. எனவே பொதுஜன அணிக் கொள்கைக்கு இந்த சம்பவம் வழிவகுத்தது.

11. புரூனோ பியோஸ்ஸி (1881-1944) ஒரு சீர்திருத்தவாத மக்கள் பிரதிநிதி, தொழிற்சங்கவாதி. 1920 செப்டம்பரில் தொழிற்சாலைகள் கைப்பற்றிக் கொள்ளப்பட்டபோது உலோகத் தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவராக இருந்தார். பல ஆண்டுகள் நாடு கடத்தப்பட்டு, பியோஸ்ஸி 1943 ஜூலையில் புனரமைக்கப்பட்ட பொது தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவராக இத்தாலிக்குத் திரும்பி வந்தார். 1944 ஜூன் 6 இல், ரோம் நகருக்குச் சுற்றுப்புறத்தில், நாஜிகளால் கொலை செய்யப்பட்டார். 

கினோ பல்டேசி (1879-1934) ஒரு சீர்திருத்தவாத சட்டமன்ற பிரதிநிதி. பொதுத் தொழிலாளர் சம்மேளனத்தில் மிகவும் பலம்வந்த நபர்களில் இவரும் ஒருவர். பொதுத் தொழிலாளர் சம்மேளனத்திற்கும் சோஷலிஸ்டுக் கட்சிக்கும் இடையேயான செயல்-ஒற்றுமை ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டுமென பல்டேசி வலியுறுத்தினார். சீர்திருத்தவாதிகள், பொது தொழிலாளர் சம்மேளனத்தின் பெரும்பாலான நிர்வாகிகள் உட்பட, 1922 அக்டோபரில் சோஷலிஸ்டுக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டபோது அவரது கோரிக்கை நிறைவேறியது. பாசிஸ்டு ஆட்சியின் முதல் ஆண்டுகளில் பல்டேசியை தனது அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருந்தார் முசோலினி. வர்க்கச் சங்கங்களை பாசிஸ்டுத் தொழிற்சங்கங்களோடு இணைக்கும் திட்டங்கள் சம்பந்தமாகவும் பல்டேசியின் பெயர் அடிப்பட்டது. 1924-க்குப் பின் பாசிச- எதிர்ப்புப் போக்கைக் கடைப்பிடித்தார்.

பால்மிரோ டோக்ளியாட்டி
ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள்
தமிழில் : ரா. ரங்கசாமி
பக்கங்கள் : 233
விலை : ரூ. 50.00
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

முந்தைய பகுதிகள் : பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் !

மந்திரம் என்று மயக்கமொழி பேசிப் பார்ப்பனர் வாழ்ந்தனர் !

அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் | பகுதி – 04

இந்தியாவில் ஆரிய ஆட்சி’ என்றொரு நூல்; ஹாவல் (Havell) என்பவர் எழுதியுள்ளார். அதிலே,

”மதச் சடங்குகளைச் செய்விக்கும் புரோகிதத் தொழிலிலே, பிராமணர்கள் ஏகபோக உரிமை பெற்றனர். இதனால் சுரண்டிப் பிழைக்கவும், ஆபாசமான காட்டுமிராண்டித்தனமான மூட நம்பிக்கைகளைப் பரப்பவும் முடிந்தது. மந்திரத்தால் ஆகாதது ஒன்றுமில்லை! போரில் ஜெயமோ அபஜெயமோ மந்திர உச்சாடனத்தாலே சாதிக்க முடியும்! சமஸ்தானங்களின் க்ஷேமத்துக்கு எதிரியின் வாயை அடக்குதற்கு, இருமலை நீக்குவதற்கு, சடை வளர்தற்கு, எதற்கானாலுஞ் சரியே, மந்திரத்தால் பலன் உண்டு! நித்திய கர்மானுஷ்டானங்களிலே, பிரமாத காரியமோ, அற்ப விஷயமோ எதற்கும் அந்த மந்திரம் அவசியம் தேவை என்று ஆரியர் கூறி வைத்தனர்”

ஹாவல் (Havell).

என்று ஆசிரியர் கூறுகிறார். இவர் ஈரோட்டுவாசியா? பெரியாரின் சீடரா? சுயமரியாதைப் பிரச்சாரகரா? ஏன் சுரண்டிப் பிழைக்க ”மந்திரம்” என்று மயக்கமொழி பேசிப் பார்ப்பனர் வாழ்ந்தனர் என்பதை எழுதுகிறார். ஆரிய மாயையிலே சிக்கி நம்மவர் மீது ‘துவஜம்’ தொடுக்கும் தமிழர்கள் இந்த ஆராய்ச்சியாளரின் கண்டனத்தைப் பற்றி யோசிக்கக் கூடாதா? “வேதகாலம் முதற்கொண்டு ஆரியர்கள் அனுஷ்டித்து வந்த யாகம் பிராமணருக்கு, மற்றவரைக் கொடுமைப்படுத்தவும், ஏமாற்றவும் ஒரு கருவியாக உபயோகப்பட்டது”  என்றும் ஹாவல் எழுதுகிறார். மந்திரம், யாகம் என்பவை பார்ப்பனப் புரட்டு என்று தன்னுணர்வு இயக்கத்தார் கூறினால் கோபங்கொள்ளும் ”தாசர்கள்’ இந்த ஆராய்ச்சிக்காரரின் உரை கேட்ட பிறகாவது தம் கருத்தை மாற்றிக் கொள்ளக் கூடாதா?

‘ஆரிய ஆட்சி’ ஒரு புரட்டர் கூட்டம் வெள்ளை சனத்தினரை வாட்டி வைத்த வரலாறேயாகும். இல்லை என்பதற்கு எங்கிருந்தாவது ஆதாரம் தேடிக்காட்ட, யாராவது முன் வருவார்களா? என்று கேட்கிறேன்!

“கருத்து சுருண்டு அங்குமிங்கும் அலைந்து உன் மனதிலே அலைமோதிடச் செய்யும். அழகுடன் விளங்கும் கூந்தல், உண்மையிலே நரைத்தது! மினுக்குத் தைலமும் கத்திரிக் கோலும், அவளுடைய கைத்திறனும், உன் காமக்கிறுக்கும் கலந்து உனக்கு மயக்க மூட்டுகிறது!

‘வதனமே சந்திர பிம்பமோ, மலர்ந்த சரோஜமோ’ என்று நீ சிந்து பாடுகிறாயே, சற்று சபலத்தை ஒதுக்கிவிட்டு அந்த முகத்தை உற்று நோக்கு! நல்ல இரத்தமில்லாததால் வெளுத்து , காலத்தின் கீறல்கள் நிறைந்த காமுகரின் கரத்தினால் கசங்கிக் கிடக்கும் மோசமும், அதை மாற்ற அவள் அணிந்துள்ள பூச்சு வேஷமும் புலனாகும்!

ஹாவல் (Havell) எழுதிய ”இந்தியாவில் ஆரிய ஆட்சி’ என்ற நூலின் முகப்பு அட்டை.

அந்தச் சிரிப்பிலே நீ சொக்குகிறாய். அது சிலந்தியின் மொழி! வலைவீசும் சாகசம்; அதைக் கண்டு நீ ஏமாறுகிறாய்! உன் வாழ்வை வளைத்து விட்ட அவளுக்கு நீ அடிவருடுகிறாய். உன் அறிவை அழிக்கும் அணைப்பிலே நீ ஆனந்தம் காண்கிறாய்! உன் பண்பினைப் பாழாக்கிய பார்வையை , நீ பாகு என்று பகருகிறாய்! அந்த மேனியின் பளபளப்பு, வெறும் மேல் பூச்சு! அந்தப் புன்னகை முகத்தாளின் மனம், ஓர் எரிமலை! அவள் ஓர் நடமாடும் நாசம்! உனக்கு வேண்டாமப்பா அவளிடம் பாசம்! உன்னைக் கெடுத்திடுமே அந்தக் காசம்! – என்று வெளி வேஷத்தால் வயோதிகத்தை மறைத்துக் கொண்டு, வஞ்சனையுடன் பேசும் வித்தையால் தனது வஞ்சகத்தை வெளிக்குத் தெரியவொட்டாமல் செய்து, நகைமுகங்காட்டி நாசத்தை ஊட்டிடும் நாரியிடம் நேசங்கொண்டு விவேகமிழந்து, காமப் பரவசனாகியுள்ள தன் தோழனுக்குக் கருத்துக் கெடாதவன் கனிவுடன் புத்தி கூறுகிறான்!

”அனங்கன் அம்பாலே அடிபட்டேன்! அவனிடமே சென்று, அதற்கு மருந்து கண்டேன்!” என்று கூறி, காமுகனாகிவிட்ட அவன், “போடா உலகமறியாத உன்மத்தா நீ என்னடா கண்டாய்? அந்த எழிலுடையாளின் இன்சொல்லின் சுவையையும், மதுரகீதத்தின் மாண்பையும், மஞ்சமேவிக் கொஞ்சிடும் பஞ்சபாண வித்தைத் திறத்தையும், அனுபவமில்லாத அபாக்கியசாலி நீ! நான் பெறும் இன்பத்தைத் துன்பமென்று கூறுகிறாய்; நிலவை நெருப்பென நவில்கிறாய்; தென்றலைத் தேள்கடி என்று கூறுகிறாய்; கனியைக் கைப்பு என்றுரைக்கிறாய்; காதலைக் கானல் என்று சொல்லுகிறாய்; உல்லாசத்தை உற்பாதமென்று உரைக்கிறாய்; முல்லையை முள்ளென மொழிகிறாய்; மூடனே, போ! போ! நான் பெற்ற இன்பம் நீ பெறுமுன்னம், நான் கொண்ட அறிவு உனக்கெப்படி பிறக்கும்?” என்று கரையும் காகத்தைக் கடிந்துரைத்து விட்டுக் காலை மலர்ந்ததே, என் களிப்பும் உலர்ந்ததே! என்று கவலைப்படுகிறான்! அவனுடைய வெறி அப்படி இருக்கிறது! குடி கெடுப்பவளை, அவன் கொடியிடையாள் என்று நம்புகிறான். அவனைத் தடுக்க முயலும் நண்பனை நையாண்டி செய்கிறான்.

படிக்க:
இராஜஸ்தான் : வெள்ளைகாரனிடம் மண்டியிட்ட ‘வீர’ சாவர்க்கர் வெறும் சாவர்க்கரானார் !
வரலாறு காணாத வறட்சி – ஆயிரக்கணக்கான கிராமங்கள் காலியாகின்றன !

ஆனால், சித்த வைத்தியர் செந்தூரம் கொடுத்து அலுத்து , பஸ்பத்தைக் கொடுத்துப் பயந்து, கஷாயம் காய்ச்சிக் கொடுத்தும் பயனில்லாதது கண்டு கவலை கொண்டு, ‘கடுகு துவரையாகி, துவரை அவரையாகி, அவரை சுரை போலாகி விட்டதே, ஐயோ! நான் என்ன செய்வேன்? கட்டு மாத்திரையால் முடியாது. கத்தியே இனித்துணை’ என்று கூறும்போதுதான், காமுகன் கலங்கி நடுங்கி, கைகூப்பிக் கதறி, ‘கத்தியா” என்று கேட்டுக் கூவி ‘கனிவுடன் அன்று நீ சொன்னாயே நண்பா, கசடன் நான் கேட்டேனில்லையே! கண்டவர் ஏசும் நிலைபெற்றேனே! கள்ளியின் கூட்டுறவால் கெட்டேனே!’ என்று (புத்தி கூறிய) நண்பனைக் கட்டித் தழுவி அழுவான்.

தமிழர் என்ற இன உணர்ச்சியுள்ளவர்கள் இந்த ஆதாரங்களையும் இவைபோன்ற வேறு ஆதாரங்களையும் தமிழ் மாணவர்கட்குத் தெரியச் செய்ய வேண்டும்… விழிப்புப் பரவவும், எழுச்சி அதிகரிக்கவும், ஆதி நாட்களிலிருந்து இதுவரை ஆரியம் செய்த அட்டூழியத்தை வாலிபர்கள் உணரவும் செய்ய வேண்டும்.

அது போலத்தான் ஆரியம் தனது சூதான சொரூபத்தை மறைக்கச் சாஸ்திரப் போர்வை தரித்துக்கொண்டு வஞ்சகத்தை வேஷத்தால் வெளிக்குத் தெரியவொட்டாது தடுத்து, நாசத்தை நம் இனத்துக்கு நகை முகத்துடன் ஊட்டுகிறது! அந்த நஞ்சினை உண்ணாதீர் என்று கூறும் சுயமரியாதைக்காரர்களை, ஆரிய மாயையிலே சொக்கி அறிவிழந்து கிடக்கும் அன்பர்கள் ஏசுகின்றனர்! ஏளனம் பேசுகின்றனர்! ஆரியத்தால் அழிவு உண்டாகும் அந்தச் சமயத்திலே, சு.ம. காரன் சொன்னது சரியாகத்தானே போச்சு! அன்று அவனை நையாண்டி செய்தோம்! இதோ இன்று ஆரியத்தின் காரியத்தைக் கண்டோமே!’ என்று ஒரு நாள் கூறித்தான் தீர வேண்டும்.

தமிழ் மாணவர்கள் மனதில் பதிய வேண்டிய சரித ஆதாரங்கள் கீழே தரப்பட்டுள்ளன. தமிழர் என்ற இன உணர்ச்சியுள்ளவர்கள் இந்த ஆதாரங்களையும் இவைபோன்ற வேறு ஆதாரங்களையும் தமிழ் மாணவர்கட்குத் தெரியச் செய்ய வேண்டும். இன்றைய கல்வி நிலையங்களிலே பெரும்பாலும்  ஆரியரே சூத்திரதாரிகளாக இருப்பதால், உண்மை மறைகிறது. இப்போதுதான், தமிழ் மாணவரிடையே விழிப்பு ஏற்படுகிறது. விழிப்புப் பரவவும், எழுச்சி அதிகரிக்கவும், ஆதி நாட்களிலிருந்து இதுவரை ஆரியம் செய்த அட்டூழியத்தை வாலிபர்கள் உணரவும் செய்ய வேண்டும்.

(தொடரும்)

அண்ணாவின் ஆரிய மாயை
பக்கங்கள் : 64
விலை : ரூ. 40.00
வெளியீடு : திராவிடர் கழகம்
நூல் கிடைக்குமிடம் : கீழைக்காற்று வெளியீட்டகம்.

ஆரிய மாயை என்னும் இந்நூல் கா.ந. அண்ணாதுரை (அண்ணா) எழுதிய சிறு நூலாகும். அண்ணாவின் படைப்புகளில் மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய சில நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலில் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை பற்றியும், பார்ப்பனர்களின் சிறுமதி குறித்தும் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து அம்பலப்படுத்தியிருக்கிறார். இக்காரணங்களுக்காக, அவருக்கு ரூபாய் 700 அபராதம் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் சென்னை மாநில அரசால் அண்ணாவுக்கு அளிக்கப்பட்டது.

முந்தைய பகுதிகள் : அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை

வெட்டிவிட வேண்டியதுதான் – இல்லையெனில் மண்டையைப் போட்டுவிடுவாய் !

உண்மை மனிதனின் கதை | இரண்டாம் பாகம் | அத்தியாயம் – 5

முடிவில் அந்த நாளும் வந்து விட்டது. தமது தினப்படிப் பார்வையீட்டின் போது வஸிலிய் வஸீலியெவிச், அலெக்ஸேயின் கறுத்த, ஸ்பரிசத்தை உணராத பாதங்களை நெடு நேரம் தொட்டுத் தடவிப் பார்த்துவிட்டு, சட்டென நிமிர்ந்து அவனை விழி பொருந்த நோக்கி, “வெட்டிவிட வேண்டியதுதான்!” என்றார். வெளிறிப்போன அலெக்ஸேய் எதுவும் பதில் சொல்வதற்குள்ளேயே அவர் முன்கோபம் தொனிக்க, “வெட்டிவிட வேண்டியதுதான் – மறு பேச்சே கூடாது, கேட்டாயா? இல்லாவிட்டால் மண்டையைப் போட்டுவிடுவாய்! புரிந்து கொண்டாயா?” என்றார்.

தமது துணையாளர்களைத் திரும்பிப் பார்க்காமலே அறையை விட்டு வெளியே போய்விட்டார் தலைமை மருத்துவர். வார்டில் ஏக்கம் செறிந்த மௌனம் குடிகொண்டது. அலெக்ஸேய் உணர்வற்றுக் கல்லாய்ச் சமைந்த முகத்துடன் விழிகளைத் திறந்தவாறு கிடந்தான். தனது ஊரின் நொண்டிப் படகோட்டியின் நீலம் பாரித்த, அலங்கோலமான வெட்டுக் கால்கள் அவன் முன்னே மூடுபனியில் போல மங்கலாகக் காட்சி தந்தன. படகோட்டி உடைகளைக் களைந்துவிட்டுக் குரங்கு போலக் கைகளை ஊன்றி ஈர மணலில் தத்தித் தவழ்ந்து நீரை நோக்கிச் செல்வதை அலெக்ஸேய் மீண்டும் கண்டான்.

“அலெக்ஸேய்” என்று மெள்ள அழைத்தார் கமிஸார்.

“என்ன?” என்று எங்கோ தொலைவிலிருந்து கேட்பது போன்ற ஈனக்குரலில் சொன்னான் அலெக்ஸேய்.

“இப்படிச் செய்யாமல் தீராது, தம்பி.”

படகோட்டி அல்ல, தானே வெட்டுண்ட கால்களுடன் ஊர்வது போலவும் தன்னுடைய காதலி, ஓல்கா, பல் வண்ண உடைக் காற்றில் பறக்க, ஒயிலும் ஒளியும் எழிலும் சுடர்விட மணலில் நின்று கொண்டு, உதட்டைக் கடித்தவாறு தன்னை வேதனையுடன் நோக்குவது போலவும் அந்தக் கணத்தில் அலெக்ஸேய்க்குத் தோன்றியது. இப்படித்தான் நேரும்! அவன் தலையணையில் முகத்தைப் புதைத்துக் கொண்டு உடல் முழுவதும் அதிர்ந்து குலுங்க, ஓசையின்றிப் பொங்கிப் பொங்கி அழுதான். எல்லோருக்கும் பயங்கரமாக இருந்தது. ஸ்தெபான் இவானவிச் தொண்டையைக் கனைத்துக் கொண்டு கட்டிலிலிருந்து இறங்கி நீளங்கியை மாட்டிக் கொண்டு அறைச் செருப்புகள் சடசடக்க, கட்டிலின் பின்புறத்தைக் கைகளால் தாங்கலாகப் பிடித்துக் கொண்டு அலெக்ஸேயிடம் சென்றார். ஆனால் கமிஸார் வேண்டாம் என்று சைகை செய்து அவரைத் தடுத்துவிட்டார் – அழட்டும், குறுக்கிடாதேயும் என்பது போல.

உண்மையாகவே அலெக்ஸேய்க்குச் சுமை இறங்கியது போல் இருந்தது. விரைவில் அவன் நிம்மதி அடைந்தான். தன்னை நெடுங்காலமாக வதைக்கும் பிரச்சினைக்கு முடிவில் தீர்வு கண்டதும் மனிதனுக்கு எப்போதும் ஏற்படுவது போன்ற ஆறுதலைக்கூட அவன் உணர்ந்தான். மாலையில் மருத்துவமனை ஊழியர்கள் அறுவை அறைக்கு அவனை இட்டுச் செல்லும் வரை அவன் பேசாதிருந்தான். கண்களைக் கூசச் செய்யும்படி ஒளிர்ந்த வெண்மையான அறையிலும் அவன் ஒரு வார்த்தை பேசவில்லை. முழு மயக்கமருந்து கொடுப்பதற்கு அவனுடைய இருதய நிலை இடந்தரவில்லை என்றும் ஓரிட உணர்வுநீக்க ஊசி போட்டு அறுவை செய்ய வேண்டியிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டபோது கூட அவன் வெறுமே தலையசைக்க மட்டுமே செய்தான். அறுவை நடந்தபோது அவன் கத்தவோ முனகவோ இல்லை. சிக்கலற்ற இந்த அறுவையை வஸீலிய் வஸீலியெவிச் தாமே செய்தார். தமது வழக்கத்துக்கிணங்க அப்போது அவர் நர்சுகள் மீதும் துணை மருத்துவர்கள் மீதும் சள்ளுப் புள்ளென்று விழுந்தார். நோயாளி அறுவையின் போதே மரித்துவிட்டானா என்று பார்க்கும்படி அவர் தமது துணைவனிடம் பலமுறை கூறினார்.

எலும்பு அறுக்கப்பட்டபோது மிகக் கொடிய வேதனை உண்டாயிற்று. ஆனால், துன்பத்தைத் தாங்கிக் கொள்ள அலெக்ஸேய் பழகியிருந்தான். வெள்ளை நீளங்கிகளும் சல்லாத் துணி முகத்திரைகளும் அணிந்த இந்த மனிதர்கள் தன் கால்களுக்கருகே என்ன செய்கிறார்கள் என்பது அவனுக்கு சரியாக விளங்கவில்லை.

வார்டில்தான் அவன் உணர்வுக்கு வந்தான். அங்கே அவன் முதலில் கண்டது அறைத் தாதி க்ளாவ்தியா மிஹாய்லவ்னாவின் கவலை தோய்ந்த முகம். விந்தை என்னவெனில் அவனுக்கு ஒன்றுமே நினைவு இல்லை. இனிமையும் பரிவும் உள்ள இந்த வெண்முடி மாதின் முகத்தில் இத்தகைய கிளர்ச்சியும் கேள்விக்குறியும் காணப்படுவது ஏன் என்று அவன் வியந்தான். அவன் கண் விழித்ததைக் கண்டதும் அவள் முகம் சுடர் விட்டது. போர்வைக்கு அடியில் அவன் கையை மெதுவாக அழுத்தினாள்.

“நீங்கள் அருமையானவர்!“ என்று பாராட்டிவிட்டு அப்போதே நாடிப்பிடித்துப் பார்த்தாள்.

“இவள் என்ன இப்படி?” என்று எண்ணினான் அலெக்ஸேய். கால்கள் முன்னை விட மேலே எங்கோ வலிப்பதை அவன் உணர்ந்தான். வலியும் முன்போலக் காந்தி எரியும், சுண்டி இழுக்கும் வேதனையாக இல்லை. கணைக்காலுக்கு மேல் கால்கள் கயிறுகளால் இறுகக் கட்டியிருப்பது போன்று ஊமையான, துடிப்பற்ற வலியாக இருந்தது. போர்வை மடிப்புகளைக் கொண்டு தன் உடல் நீளம் குறைந்துவிட்டதை அவன் திடீரெனக் கவனித்தான். வெள்ளை அறையின் கண்கூசும் பளிச்சிடலும், வஸீலிய் வஸீலியெவிச்சின் உக்கிரமான சிடுசிடுப்பும், எனாமல் வாளியில் மந்தமான மோதல் ஒலியும் சட்டென அவன் நினைவுக்கு வந்தன. “ஆகிவிட்டதா அதற்குள்” என்று உற்சாகமின்றி வியந்தான். புன்னகை செய்ய முயன்றவாறு மருத்துவத் தாதியிடம், “நான் குட்டை ஆகிவிட்டேன் போலிருக்கிறது” என்றான்.

படிக்க:
“அவர்கள் யாரை அழிக்க நினைக்கிறார்கள்” : காவிகளை எதிர்த்த கிரிஷ் கர்னாட் !
மனம் ஓட ஓடத் துரத்துகிறது என்றால் , நாம் ஏன் ஓட வேண்டும் ?

புன்னகை நன்றாக வாய்க்கவில்லை. வேதனையால் முகஞ்சுளிப்பது போன்று இருந்தது. க்ளாவ்தியா மிஹாய்லவ்னா பரிவுடன் அவன் தலைமயிரைக் கோதிவிட்டாள்.

“பரவாயில்லை, பரவாயில்லை. அன்பரே. இனி உமக்கு லேசாயிருக்கும்.”

“ஆமாம், லேசுதான். எத்தனை கிலோகிராம்?”

“வேண்டாம், அன்பரே, வேண்டாம். நீர் அருமையான ஆள். மற்றவர்கள் கத்துவார்கள். மற்றவர்களை வாரினால் இறுக்கிக் கட்டுவதோடு பிடித்துக்கொள்ளவும் வேண்டியிருக்கும். நீரோ முணுக்கென்று கூட வாய் திறக்கவில்லை….. அட யுத்தம், பாழும் யுத்தம்!”

அப்பொழுது வார்டின் மாலை அரை இருளில் கமிஸாரின் கோபக்குரல் ஒலித்தது:

“நீங்கள் என்ன, அங்கே இறுதிச் சடங்கு தொடங்கி விட்டீர்கள்? இதோ இந்தக் கடிதங்களை அவனிடம் கொடுங்கள், அம்மா. இவன் அதிர்ஷ்டமே அதிர்ஷ்டம். எனக்குக் கூடப் பொறாமையாக இருக்கிறது. அவனுக்கு எத்தனை கடிதங்கள் !”

கமிஸார் ஒரு கட்டுக் கடிதங்களை அலெக்ஸேய்க்குக் கொடுக்கச் சொன்னார். இவை அவனுடைய ரெஜிமெண்டிலிருந்து வந்திருந்தன. வெவ்வேறு தேதிகள் இட்ட கடிதங்கள் அவை. ஆனால் எதனாலோ ஒரே மொத்தமாக வந்திருந்தன. வெட்டி எடுக்கப்பட்ட கால்களுடன் படுத்தவாறு இப்போது அலெக்ஸேய் நட்பு நிறைந்த இந்தக் கடிதங்களை ஒன்றன் பின் ஒன்றாகப் படித்தான். தொலைவிலுள்ள, உழைப்பும் அசெளகரியங்களும் அபாயங்களும் நிறைந்த, அடக்க முடியாமல் தன்பால் ஈர்க்கும் வாழ்க்கை பற்றி விவரித்தன இவை.

கடிதங்களில் ஒரேயடியாக ஈடுபட்டு விட்டதால் தேதிகளில் இருந்த வேறுபாட்டை அலெக்ஸேய் கவனிக்கவில்லை. கமிஸார் மருத்துவத்தாதியை நோக்கிக் கண் சிமிட்டி தன் பக்கம் சுட்டியதையும் அவன் காணவில்லை. கமிஸார் அவளிடம், “உங்களுடைய இந்த லூமினால்கள், வெரோனால்கள், எல்லாவற்றையும் விட என்னுடைய மருந்து எவ்வளவோ மேலானது” என்று தணிவாகக் கிசுகிசுத்தார். அலெக்ஸேய்க்கு வந்த கடிதங்களில் ஒரு பகுதியைக் கமிஸார் முன்யோசனையுடன் மறைத்து வைத்திருந்தார் – அவன் வாழ்வில் மிகப் பயங்கரமான இந்த நாளில், அவனது விமான நிலையத்திலிருந்து வந்த நட்பார்ந்த வாழ்த்துக்களையும் செய்திகளையும் கொடுத்து இந்தப் பெருந்தாக்கின் கடுமையைக் குறைக்கும் நோக்கத்துடன். ஆனால், இந்த விஷயம் அலெக்ஸேய்க்கு ஒருபோதும் தெரியவில்லை. கமிஸார் அனுபவம் முதிர்ந்த படைவீரர். கவனமில்லாமல் அவசரமாகக் கிறுக்கப்பட்ட இந்தக் காகிதத் துண்டுகளின் பேராற்றலை அவர் அறிந்திருந்தார். போர் முனையில் இவை மருந்துகளையும் தின்பண்டங்களையும் விடச் சில வேளைகளில் அதிக முக்கியமானவையாக இருக்கின்றன என்பது அவருக்குத் தெரியும்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

இராஜஸ்தான் : வெள்ளைகாரனிடம் மண்டியிட்ட ‘வீர’ சாவர்க்கர் வெறும் சாவர்க்கரானார் !

2

ந்தமான் சிறையிலிருந்து தன்னை விடுவிக்குமாறு ஆங்கிலேயர்களில் கால்களில் மண்டியிட்டு, கடிதங்களாக எழுதித் தள்ளிய தொடைநடுங்கி சாவர்க்கரை, ‘வீர சாவர்க்கர்’ ஆக்கி இந்துத்துவ கும்பல் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. பாஜக தான் ஆட்சிக்கு வரும் மாநிலங்களில் எல்லாம் சாவர்க்கர் உள்ளிட்ட இந்துத்துவாக்களின் வரலாறுகளை பாடநூல்களில் திணிப்பதை திட்டமிட்டுச் செய்து வருகிறது.

ஆட்சிகள் மாறினாலும் இந்தத் திணிப்புகள் பெரும்பாலும் மாற்றப்படாது. ஆனால், இராஜஸ்தானில் அண்மையில் ஆட்சியமைத்த காங்கிரஸ் தலைமையிலான அரசு, முந்தைய பாஜக அரசில் செய்யப்பட்ட திணிப்புகளை பாடப்புத்தகங்களிலிருந்து நீக்கியுள்ளது. மாட்டரசியலில் பாஜக -வின் கருத்தோடு ஒத்துப்போகும் காங்கிரஸ், துணிச்சலாக இந்த முடிவை எடுத்துள்ளது.

ஆறு மாதத்துக்கு முன் அசோக் கெய்லாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு அமைந்தவுடன் பள்ளிப் பாடப் புத்தகங்களில் பல்வேறு மாற்றங்களைச் செய்துள்ளது. வரலாற்றுத் தகவல்கள், தலைவர்களைப் பற்றிய தகவல்கள் என முந்தைய பாஜக அரசு திணித்த பலவற்றை பாடநூல்களிலிருந்து நீக்கியுள்ளது காங்கிரஸ் அரசு.

இராஜஸ்தான் மேனிலை கல்வி வாரியத்துக்காக, இராஜஸ்தான் மாநில பாடநூல் கழகம் வெளியிட்ட புதிய நூல்கள் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன. அரசியல் நோக்கத்தோடு வரலாற்றை சிதைக்கும் பகுதிகள் பாடநூல்களில் இடம்பெற்றிருந்த நிலையில், அதை சீரமைக்க பிப்ரவரி மாதம் பாடநூல் திறனாய்வு கமிட்டி அமைக்கப்பட்டது. அந்தக் கமிட்டி கொடுத்த பரிந்துரைகளின்படி மாற்றப்பட்ட புதிய நூல்கள் தற்போது, மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

12-ம் வகுப்பு வரலாறு பாடநூலில் சாவர்க்கர்

பழைய நூலில் : விடுதலை இயக்கம் என்ற பகுதியின் கீழ் இருந்த சாவர்க்கர் பற்றிய குறிப்பில் அந்தப் பெயருக்கு முன்னாள் ‘வீர’ என்ற அடைமொழி தரப்பட்டிருந்தது. இந்திய சுதந்திர இயக்க காலக்கட்டத்தில் சாவர்க்கரின் பங்கு குறித்து அந்தப் பகுதியில் விவரிக்கப்பட்டிருந்தது.

புதிய நூலில் : சாவர்க்கர், ‘விநாயக் தாமோதர் சாவர்க்கர்’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறார். பிரிட்டிஷாரின் ஆட்சிக்காலத்தில் அந்தமானின் செல்லுலார் சிறையில் அடைக்கப்பட்ட சாவர்க்கர் அங்கே எத்தகைய சித்ரவதைகளை அனுபவித்தார் என அந்தப் பகுதி விவரிக்கிறது.

மேலும், நவம்பர் 11, 1911-ம் ஆண்டு எழுதப்பட்ட இரண்டாவது மன்னிப்புக் கடிதத்தில் தன்னை போர்ச்சுகலின் மகன் என அவர் அழைத்துக்கொண்டதும் அதில் எழுதப்பட்டுள்ளது. முக்கியமாக, பிரிட்டிஷாருக்கு சாவர்க்கர் நான்கு மன்னிப்பு கடிதங்கள் எழுதியதையும் அந்தப் பகுதி கூறுகிறது.

“தன்னுடைய விடுதலைக்குப் பின், சாவர்க்கர் இந்தியாவை ‘இந்து நாடாக’ மாற்ற பணியாற்றியதாகவும் இந்துக்கள் ஆயுதம் வைத்துக்கொள்ளவும் அழைப்பு விடுத்தார். 1942-ல் நடந்த வெள்ளையனே வெளியேறு இயக்கத்தையும் 1946-ம் ஆண்டில் பாகிஸ்தான் உருவாக்கத்தையும் சாவர்க்கர் எதிர்த்தார். ஜனவரி 30, 1948-ம் ஆண்டு காந்தி படுகொலைக்கு பின், அவருடைய கொலையில் சதி திட்டம் தீட்டியது, கோட்சேவுக்கு உதவியது உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழ் கைதாகி, பின்பு விடுவிக்கப்பட்டார்” போன்ற தகவல்கள் பாடநூலில் சேர்க்கப்பட்டுள்ளன.

படிக்க:
♦ இந்திய சாதி ஒடுக்குமுறை வரலாற்றை பாடநூல்களிலிருந்து நீக்கும் மோடி அரசு !
♦ கஜினி முகமது : கல்வெட்டு உண்மைகள் ! பாடநூல் புரட்டுகள் !

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் ஹால்திகாட்டி போர்

பழைய நூலில் : மொகலாய மன்னர் அக்பரால், மகாரானா பிரதாப்பை பிடிக்கவோ, கொல்லவோ, முழு ராஜாங்கத்தையும் கைப்பற்றவோ முடியவில்லை என்றும்; ஹால்திகாட்டி போர் மகாரானா பிரதாப்புக்கு சாதகமாக முடிந்ததாகவும்; மொகலாய படை அவர்களைக் கண்டு பயந்து நடுங்கியதாகவும் எழுதப்பட்டிருந்தது.

புதிய நூலில் : ஹால்திகாட்டி போர், மகாரானா பிரதாப்பின் குதிரை இறந்துவிட்ட நிலையில், பிரதாப் போர்க்களத்தை விட்டுச் செல்வதில் முடிகிறது. அக்பருக்கும் பிரதாப்புக்கும் நடந்த போர், மதரீதியிலான போர் அல்ல என்றும், அது இரண்டு அரசியல் சக்திகளுக்கிடையேயான போர் என்றும் கூறுகிறது. போர் முடிவு குறித்து தெரிவிக்கப்படாத நிலையில், அடுத்தடுத்த ஆண்டுகளில் அக்பருக்கு எதிரான பிரதாப்பின் கொரில்லாப் போரை மட்டும் குறிப்பிட்டிருக்கிறது.

12-ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடத்தில் பணமதிப்பழிப்பு

பழைய நூலில் : பயங்கரவாதம், அரசியலை குற்றமயமாக்குதல் மற்றும் ஊழல், இந்திய வெளியுறவுக் கொள்ளையின் பண்புகள் குறித்த பகுதியில் பணமதிப்பிழப்பு என்பது ‘கறுப்புப் பண பிரச்சாரம்’ என குறிக்கப்பட்டிருந்தது.

இந்தப் பகுதியில் ஊழல் மற்றும் வெளியுறவு கொள்கையில் பணமதிப்பிழப்பின் தாக்கம் குறித்து விவாதிக்கப்பட்டிருந்தது.

புதிய நூலில் : பணமதிப்பிழப்பு குறித்த அனைத்து தகவல்களும் நீக்கப்பட்டுள்ளன.

 

12-ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடத்தில் அமைப்புகளும் அவற்றின் அரசியலும்

பழைய நூலில் : ‘சாதியமும் மதவாதமும்’ என்ற தலைப்பில் முசுலீம் அமைப்புகளான ஜமாத் இ இசுலாம், சிமி போன்றவை மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தன.

புதிய நூலில் : முந்தைய முசுலீம் அமைப்புகளின் பெயர்களோடு இந்து மகாசபையின் பெயரும் சேர்க்கப்பட்டு, இந்த அமைப்புகள் சுயலாபத்துக்காக பிரித்தாளும் சித்தாந்தங்களை பிரச்சாரங்களைச் செய்வதாக எழுதப்பட்டுள்ளது.

12-ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடத்தில் ஜிகாத்

பழைய நூலில் : அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா, நேபாளத்துடன் இந்தியாவின் உறவு குறித்த பகுதியில் ஜிகாத் அல்லது இந்தியாவுக்கு எதிரான கொள்கைகள் இந்திய-பாக் உறவை பாதிப்பதாக எழுதப்பட்டிருந்தது.

புதிய நூலில் : ஜிகாத் என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது.

படிக்க:
♦ வரலாற்றைக் காவிமயமாக்கும் பாஜக
♦ காஷ்மீர் : பொது பாதுகாப்புச் சட்டத்தின் அத்துமீறல்கள் | அம்னெஸ்டி அறிக்கைக்கு தடை !

12-ம் வகுப்பு வரலாறு பாடத்தில் அலாவுதின் கில்ஜியின் சித்தூர் தாக்குதல்

பழைய நூலில் : முசுலீம் தாக்குதல்கள் – குறிக்கோளும் தாக்கமும் என்ற தலைப்பில் கில்ஜி சித்தூரை தாக்கியது குறித்து எழுதப்பட்டிருந்தது. அதில், சில வரலாற்றாசிரியர்களின் கருத்துப்படி, சித்தூரின் மேவாரான ரத்தன் சிங்கின் அழகான மனைவி பத்மினிக்காகவே கில்ஜி தாக்குதல் நடத்தியிருக்கிறார். மாலிக் முகமது ஜயாசியின் இலக்கியமான ‘பத்மாவத்’ கில்ஜியின் தாக்குதலுக்கு பத்மினியே காரணம் எனவும் எழுதப்பட்டடிருந்தது.

புதிய நூலில் : பத்மாவத் சொல்லும் காரணத்தை சொல்லியுள்ளது. ஆனால், கே.எஸ். லால், கனூர் கோ மற்றும் ஹபீப் ஆகியோர் உண்மைகளையும் நடந்தவற்றையும் பார்க்கும்போது பத்மாவதி காரணமில்லை என்கிறார்கள் எனவும் ஜயாசி எழுதிய பத்வாத்-இல் சொல்வதுபோல கில்ஜி, சித்தூரை எட்டு ஆண்டுகள் முற்றுகையிட்டிருந்தார் என சொல்வதற்கு எந்த வரலாற்று ஆதாரமும் இல்லை என்றும் திருத்தி எழுதப்பட்டுள்ளது.

பாஜக அரசு செய்த ஆர்.எஸ்.எஸ். சித்தாந்த திணிப்பை, காங்கிரஸ் அரசு நீக்கியிருப்பதைக் கண்டு அம்மாநில பாஜகவினர் துள்ளி குதிக்கின்றனர்.  ஆனால், ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத் திணிப்பை முற்றிலுமாக நீக்குவோம் என்கிறது அம்மாநில அரசு. இதைப் பாடநூல்களோடு நிறுத்திவிடாமல் மற்ற அனைத்து வகையிலும் செயல்படுத்தினால் மட்டுமே முழுமையான பலன் கிடைக்கும். அதற்குரிய துணிவு காங்கிரசிடம் உள்ளதா?


கலைமதி
நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்

மாரடைப்பு பற்றிய கேள்வி பதில்கள் ! – பாகம் 1 | மருத்துவர் BRJ கண்ணன்

ணக்கம். இந்த ஒளிப்பதிவில் மாரடைப்பு பற்றிய சந்தேகங்களுக்கு, கேள்வி பதில்கள் மூலம் நாங்கள் விடை அளிக்க முயற்சிக்கிறோம்.

கேள்வி 1 : எனது உறவினர் ஒருவர் தனக்கு நெஞ்சுவலி இருப்பதாகக் கூறுகிறார். அவர் உடனடியாக செய்ய வேண்டியது என்ன?

விடை : இது பொதுவாகவே எல்லோரும் எழுப்பக்கூடிய கேள்விதான். முதலில் நாம் இது இருதய வலியாக இருக்க வாய்ப்புகள் உண்டா என பார்க்க வேண்டும்.
அவருக்கு புகைப் பழக்கம், நீரிழிவு நோய், இரத்தக் கொதிப்பு,  உடல் பருமன் முதலிய பிரச்சினைகள் இருந்தால், இது இருதய வலியாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அதைப்போல் வலியானது வந்தவுடன் போய்விடுகிறது என்றால் நாம் அதை பெரிதுபடுத்தத் தேவையில்லை. அதுவே தொடர்ந்து 15-20 நிமிடத்திற்கு மேல் வலியானது நீடிக்கிறது என்றால்? இதுவும் இருதய வலியாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

நாம் என்ன செய்யவேண்டும் என்றால் முதலில் பாதிக்கப்பட்டோரை சாந்தப்படுத்த வேண்டும். காரணம் அவர்கள் அதிகமாக பதட்டம் அடைவார்கள். அடுத்ததாக ஆஸ்பிரின் என்ற ஒரு மாத்திரை. இது டிஸ்பிரின் முதலிய பல பெயர்களில் கிடைக்கிறது.  இந்த மாத்திரையை 300 அல்லது 400 கிராம் தண்ணீரில் கலந்து அவரை குடிக்க வைக்க வேண்டும். மாரடைப்பினால் வரும் இறப்பானது இந்த மாத்திரையின் பலனால் மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளது என்பது அறிவியல்பூர்வமான உண்மை.  இதைத் தவிர வேறு ஏதும் பெரிதாக நம்மால் செய்ய இயலாது.

அவரை விரைவாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஈ.சி.ஜி எடுத்து என்ன பிரச்சினை என்று பார்ப்பதுதான் அடுத்த கட்டம். இதைவிடுத்து கஷாயம் அல்லது வேறு ஏதாவது கொடுத்து வீட்டிலேயே இருக்க வைப்பது மிகவும் தவறான செயல். எப்போது, இது மாரடைப்புக்கான வலி என நமக்கு சந்தேகம் ஏற்படுகிறதோ, அப்போதே பாதிக்கப்பட்டோரை சாந்தப்படுத்தி, இந்த மாத்திரையை நீரில் கலந்து கொடுப்பதே சரியான ஒன்று.

கேள்வி 2 :    குடல்புண் உள்ளவர்களுக்கு, அதற்குண்டான மாத்திரைகள் இருக்கும் அவர்கள் அதை எந்நேரமும் கையில் வைத்திருப்பார்கள். ஆனால் இந்த ஆஸ்பிரின் மாத்திரையை யாரும் கையில் வைத்து இருப்பதில்லை. இது நாம் கவனிக்கத்தக்க ஒன்று. குடல்புண் உள்ளவருக்கு நெஞ்சுவலி ஏற்படுகிறது, அது அசிடிட்டியினால் உண்டாகக்கூடிய வலி என்றால், நாம் தவறி ஆஸ்பிரின் மாத்திரை உண்பதினால் குடல் புண்ணானது அதிகம் அடைய வாய்ப்பு உள்ளது என கருதுகிறீர்களா?

விடை : இல்லை. ஆஸ்பிரின் மாத்திரை, உயிரை காப்பாற்றக் கூடிய ஒன்று, நாம் ஒரு மாத்திரை எடுப்பதனால் குடல்புண் உள்ளவர்களுக்கு எந்தவித பாதிப்பும் பெரிய அளவில் நேர்ந்துவிடாது. அதுவே அந்த நெஞ்சு வலியானது அசிடிட்டியில்லாமல் மாரடைப்புக்கான நெஞ்சு வலியாக இருந்தால், இந்த ஆஸ்பிரினின் பங்கானது விலைமதிப்பற்றது. எனவே எந்த வகையான வலியாக இருந்தாலும் நாம் மருத்துவமனைக்கு சென்று தெளிவுபடுத்திக் கொள்ளப் போகிறோம். அதற்கு முன் இந்த ஆஸ்பிரின் மாத்திரை எடுத்துக்கொள்வது எந்தவித பக்க விளைவையும் ஏற்படுத்தாது.

இந்த மாத்திரைகள் மட்டுமல்லாது க்ளோடிங்கோஸ், ஸ்டேட்டின் போன்ற பிற மாத்திரைகளும் உள்ளன. இவற்றையெல்லாம், வீட்டிலேயே பயன்படுத்த வேண்டும் என கண்டிப்பு கிடையாது. நாம் மருத்துவமனைக்குச் சென்றாலும் மருத்துவர்கள் இவற்றையே வழங்குவார்கள்.

மற்றொருபுறம் இந்த மாத்திரைகளை சாப்பிடுவதன் மூலம் மாரடைப்பை தள்ளிப் போடலாம் என சிலர் கூறுகிறார்கள். இது தவறு, தள்ளிப்போட முடியாது. நாம் திரும்பத் திரும்ப வலியுறுத்துவது இதைத்தான், மாரடைப்பு என சந்தேகம் வந்தாலே மருத்துவமனைக்கு விரைவாகச் செல்ல வேண்டும்.

கேள்வி 3 : மாரடைப்பு எனத் தெரிந்தால் ஏன் விரைவாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்?

விடை : Time is muscle. இதன் பொருள் நாம், எவ்வளவு விரைவாக மருத்துவமனைக்குச் செல்கிறோமோ அவ்வளவு விரைவாக நமக்கு மருந்துகள் வழங்குவார்கள். இதன் மூலம் பெரிய அளவிலான தசைகள் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும். நான் முந்தைய வீடியோக்களில் கூறியபடி எவ்வளவு விரைவாக ரத்தக்குழாய் அடைப்பை நீக்குகிறோமோ, அவ்வளவு தசைகள் தப்பிக்கும் இதைத்தான் time is muscle எனக் கூறுகிறார்கள்.

இதற்காகத்தான் வலியுறுத்துகிறோம், வலி ஏற்பட்டவுடன் விரைவாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று.

கேள்வி 4 : நெஞ்சு வலியானது இல்லாமலேயே மாரடைப்பால் பாதிக்கப்பட்ட பல பேரை நாம் பார்க்கிறோம். அதை பற்றி விளக்க முடியுமா ?

விடை : இதை சைலன்ட் அட்டாக் என கூறுவார்கள். நாம் முந்தைய வீடியோக்களில் பார்த்தது போல், சில பேர் கையில் லேசாக வியர்த்தது என்பார்கள், சில பேர் முதுகு லேசாக வலிக்கிறது என்பார்கள் இப்படி பல காரணங்களை கூறுவார்கள். சில பேர் மூச்சு சரியாகிவிடமுடியவில்லை என்று மருத்துவமனைக்குச் செல்வார்கள்.

ஆனால் மருத்துவர் ஈசிஜி எடுத்த பின்பு உங்களுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு மாரடைப்பானது வந்துள்ளது என்பர். இருதயத்தில் இருந்து வரும் வலியை   ஏற்படுத்தும் நரம்பு மாரடைப்பு வரும்போது பாதிக்கப்பட்டால், அந்த நபருக்கு வலியை உணர முடியாது. இது யாருக்குப் பொதுவாக இருக்கும் என்றால் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்குத்தான். நீரிழிவு நோய் இல்லாதவர்களுக்கும் இது நேரிடலாம். ஆனால் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு தான் இது அதிகம் நேரிட வாய்ப்பு உள்ளது.

இந்த வகை மாரடைப்பானது சிறிய அளவிலும் இருக்கலாம், அல்லது பெரிய அளவிலும் இருந்து உயிரைப் பறிக்கக் கூடிய ஒன்றாகவும் போகலாம்.  எனவே மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்யும்போது மருத்துவர் உங்களுக்கு ஏற்கெனவே முதல் அட்டாக் வந்து இருக்கிறது என்று கூறினால், அதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்; இல்லை என மறுதலிக்கக் கூடாது. காரணம் பிரச்சினை உள்ளது என நாம் கண்டறிந்தால்தான் அதை நாம் முறியடிக்க முயற்சிப்போம்.

படிக்க :
♦ உற்சாகமாய் இருந்தால் உடற்பயிற்சி செய்யலாம் ! உடற்பயிற்சி செய்தால் உற்சாகம் பிறக்கும் !
♦ மாரடைப்பு என்றால் என்ன ? உடனடியாக செய்யவேண்டியது என்ன ? | மருத்துவர் BRJ கண்ணன்

கேள்வி 5 :  ஒருவர் நெஞ்சு வலியோடு வருகிறார். அவருக்கு மாத்திரை மருந்து கொடுத்ததுமே இயல்பு நிலைக்கு திரும்புகிறார். அவருக்கு நாம் ஆஞ்சியோகிராம் பண்ண வேண்டுமா ?

விடை : மாரடைப்புக்கான காரணங்களை துல்லியமாக கண்டுபிடிக்க கூடிய ஒன்றுதான் ஆஞ்சியோகிராம். அதை நாம் பரிசோதிப்பதின் மூலம் மாரடைப்புக்கான காரணங்களை கண்டுபிடித்து அவற்றைக் களைய முடியும்.  ஆஞ்சியோகிராம் என்பது ஒரு பரிசோதனை, அது ஆபரேஷன் கிடையாது.

பரிசோதனை செய்ய நாம் ஏன் அச்சப்பட வேண்டும்? ஒருவர் நெஞ்சுவலி என வருகிறார். அவருக்கு மருந்து, மாத்திரைகள் கொடுத்த பின்பு இயல்பு நிலைக்கு திரும்புகிறார். ஆனால், அதற்கான ரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்பு நீங்கியதா, இல்லையா என நாம் ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்தால் தான் கண்டுபிடிக்க முடியும். மருந்து மாத்திரைக்குப் பின் சிலருக்கு நெஞ்சு வலி குறையும், அவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்புவார்கள். ஆனால் ரத்தக்குழாயில் அடைப்பு 100% அப்படியே இருக்கும்.

எனவேதான், நாம் ஆஞ்சியோகிராம் பரிசோதனை  நெஞ்சுவலி ஏற்பட்டு சில மணி நேரத்திற்குள் எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். அதேபோல் ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்தாலே ஆஞ்சியோபிளாஸ்டி ஆபரேஷன் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. ஏனென்றால், ஆஞ்சியோகிராம் மூலம் நாம் பரிசோதித்த பின் அவருக்கு வெறும் 30%தான் அடைப்பு இருக்கிறது என்றால் ஆஞ்சியோபிளாஸ்டிரி ஆப்பரேஷனை தவிர்க்கலாம். நாம் என்ன செய்யவேண்டும் என்று ஆஞ்சியோகிராம் பரிசோதனை மூலம் தெரியவரும் அவ்வளவே.

கேள்வி 6 : சரி இப்போது இரண்டு நபர்கள் வருகிறார்கள். ஒருவருக்கு ஒரு ரத்த குழாயில் 100% அடைப்பு எப்போதும் உள்ளது. மற்றொருவருக்கு ஒரு ரத்த குழாயில் 100% மற்ற இரத்தக் குழாய்களில் 60, 80 சதவீதம் அடைப்பு உள்ளது. இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?

விடை : முதலாவதாக நாங்கள் நூறு சதவீதம் அடைப்பு உள்ளவற்றிற்குத்தான் முக்கியத்துவம் தருவோம். அதை எப்படியாவது நீக்க முயற்சிப்போம். 60 – 80 சதவீதம் உள்ள அடைப்பை பிறகுதான் பரிசீலிப்போம்.

கேள்வி 7 : இப்போது மாரடைப்பு வந்து குணமாகிய பலபேர் எழுப்பக்கூடிய கேள்வி ”நான் வெயிட் தூக்கலாமா?” இதற்கு என்ன பதில் ?

விடை : எப்போதும், உடலில் அடிபட்டால் நாம் சிறிது காலம் அந்த  பாகத்துக்கு ஓய்வு கொடுப்போம். அதேபோல் மாரடைப்பானது இருதயத்திற்கு அடிபட்டுள்ளது. அப்படி என்றால் நாம் இருதயத்துக்கு ஒரு சில வாரங்கள் ஓய்வு கொடுக்கவேண்டும் இயல்பான வேலைகளை நாம் செய்யலாம்.

வாரம் ஒருமுறை பரிசோதனை செய்யும்போது மருத்துவர்கள் அறிவுரை வழங்குவார்கள். சிலருக்கு இருதயமானது சிகிச்சைக்கு பிறகு நன்றாக இயங்கும். அப்படி இருப்பவர்களுக்கு, அப்போதே நீங்கள் ஓடலாம், உடற்பயிற்சி செய்யலாம் என அறிவுரை வழங்கவோம். இன்னும் சிலருக்கு இதயம் சரியாக இயங்காமல் இருக்கும் எனவே அவர்கள் தகுந்த சிகிச்சை மேற்கொண்டு, பிறகுதான் உடற்பயிற்சி போன்றவற்றில் ஈடுபட வேண்டும். எனவே மாரடைப்பு வந்தால் இனிமேல் உடற்பயிற்சி செய்யக்கூடாது எனும் வாதம் தவறானது. அவரவர்க்கு இருக்கும் நிலைமையைப் பொறுத்து இந்த விடையானது மாறுபடும். பொதுவாக மாரடைப்பிற்குப்பின் உடற்பயிற்சி மேற்கொள்ள கூடாது எனும் வாதம் தவறானது.

உதாரணத்திற்கு ஒருவர் மாடிப்படி ஏறுகிறார் என்றால்? ஒரு மாடி ஏறிய பின் அவருக்கு மூச்சடைப்பு பெரிதாக இல்லை என்றால், அவர் இரண்டாவது மாடிப்படியும் ஏறலாம். அதுவே முதலாவது மாடி ஏறிய பின் மூச்சடைப்பு ஏற்படுகிறது என்றால்,  அவர்  மாடிப்படி ஏறுவதை தவிர்க்க வேண்டும். இப்படி தங்களுக்கு ஏற்றாற்போல் உடற் பயிற்சியை தாங்களே சீரமைத்துக் கொள்ள முடியும். ஒருவருக்கு உடற்பயிற்சி மேற்கொள்ள கூடாது என அறிவுரை வழங்கப்பட்டால். சில வாரம் மாத்திரை மருந்துகள் எடுத்தபின் அவரால் மூன்று மாடிக்கு மேல் ஏற முடியும்.

என்னிடம் வரும் இருதய நோயாளிகள் சிலர் ஜிம்க்கும் செல்ல நான் அனுமதிப்பது உண்டு. இதற்கான காரணம் என்னவென்றால் இருதயத்தில் ஒரு சிறிய அளவிலான தசைகள் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்றாலும். மீதி உள்ள தசைகள் வலுவாக வைத்துக் கொள்ளவும், அவை வலுப்பெறுவதால் அவருக்கு உடல்ரீதியான பிரச்சினைகள் மேலும் ஏற்படாமல் இருக்கும். எனவே மாரடைப்பால் பாதிக்கப்பட்டவராக இருந்தாலும் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அவரது உடல் எதுவரை ஒத்துழைக்கிறதோ, அதுவரையில் உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது. பொதுவாக எடை தூக்கக்கூடாது, உடற்பயிற்சி மேற்கொள்ள கூடாது என்னும் வாதம் தவறானது.

கேள்வி 8 : ஆஞ்சியோபிளாஸ்டி மேற்கொண்டவர்கள் உடற்பயிற்சி செய்வது கட்டாயமாகும். ஏனென்றால், உடலின் மற்ற பாகங்களை செயல் இழக்காமல் வைக்க இந்தப் பயிற்சியானது பெரிதும் உதவும். இப்போது நான் முன்னரே கேள்வி எழுப்பியபடி எனது உறவினர் ஒருவர் மருத்துவமனைக்கு வந்து விட்டார். இவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி மேற்கொள்ள வேண்டுமா அல்லது பைபாஸ் மேற்கொள்ள வேண்டுமா என எப்படி முடிவு எடுப்பது.

விடை : இப்போது, இரத்தக் குழாயின் இரு முனைகளிலும் அடைப்பு உள்ளது. ரத்தம் சீராக செல்ல முடியவில்லை. இப்போது நாம் பாதையை கடக்க முயல்கிறோம், ஆனால் இரு பக்கங்களிலும் குப்பையானது தேங்கி நிற்கிறது என்றால். நாம் என்ன செய்வோம் குப்பைகளை இருபுறமும் அகற்ற விரும்புவோம்.  அதேபோல் ரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்பு ஏற்பட்டு அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி மூலம் சிறிய பாதையில் டியூபை செலுத்தி பலூன்போல் ஊதி இருபுறம் இருக்கும் கொழுப்புகளையும் ரத்தம் பாய ஏற்றவாறு ஒதுக்குவோம்.

ஆனால், ஒதுக்கப்பட்ட கொழுப்புகளானது, மீண்டும் அடைப்பை ஏற்படுத்த முயற்சிக்கும். பலபேர் கூறுவது போல் அது ஒன்றும் சுவற்றில் இருக்கும் அழுக்கு கிடையாது சுரண்டி எடுப்பதற்கு. இந்த கொழுப்புகளானது பல செல்களால் உண்டாகி கெமிக்கல்களால், சேர்ந்து இருக்கக்கூடிய ஒரு கலவையான அமைப்பு. எனவே இந்த கொழுப்புகளானது இஞ்சிச் சாறு குடிப்பதாலும் மற்றவற்றினாலும்  கரையாது. இந்த கொழுப்புகளானது நாம் பலூனை வைத்து ஊதி ஒதுக்கிய பின்பு சிறிது நேரத்திற்குள்ளாகவே மீண்டும் இணைய வல்லது. எனவே அவை மீண்டும் இணைய முடியாதவாறு நடுவில் ஒரு ஸ்டெண்ட் வைத்து அந்த கொழுப்புகளை தடுத்து விடுவோம்.

இந்த ஸ்டென்ட், கோபால்ட் குரோமியம் என்ற தனிமத்தால் உருவாகி இருக்கும் ஒரு கம்பி. இதை வைத்துத்தான் நாம் இந்த கொழுப்புகளை இணையவிடாமல் தடுப்போம். இதற்குள் ஒரு ட்யூபை செலுத்தி ரத்தத்தை அதற்குள் சீராக செல்லும்படி செய்து விடுவோம். இதற்குப் பெயர்தான் ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் ஸ்டெண்ட்.

அப்படி என்றால் பைபாஸ் என்றால் என்ன? அதையும் பார்ப்போம்.

நாம் முன்னர் கூறிய உதாரணத்திற்கே வருவோம், நாம் பாதையை கடக்க வேண்டும் இருபுறமும் அடைப்பு உள்ளது. இந்தமுறை பாறாங்கற்கள் ஆக உள்ளது. நம்மால் அவற்றை ஒதுக்க முடியாது. இந்த முறை நாம் என்ன செய்வோம், அந்தப் பாதையை கடக்க முடியாது என்பதால். மாற்றுப் பாதையை தயார் செய்வோம். அதே போல்தான் இங்கும் இந்த கொழுப்புகளை கரைக்க முடியாது என்பதால், வேறு ஒரு பாதையில் ரத்தத்தை இயங்க செய்வோம்.  அதற்குப் பெயர்தான் பைபாஸ்.

பைபாஸ் என்பது ஆங்கில வார்த்தை, ஒருவர் மதுரையில் இருந்து திண்டுக்கல் செல்ல வேண்டும் என்றால் பேருந்து நிலையத்தை அடையாமல் பைபாஸ் வழியாகவே செல்ல முயற்சிப்போம் அல்லவா அதே போல்தான் இங்கும். இருபுறமும் உள்ள கொழுப்பானது, ஒதுக்க முடியாதவாறு அடர்த்தியாக உள்ளது என்றால் என்ன செய்வது ?

நாம், தமணியை எடுத்து மேற்புறத்தில் வைத்து விடுவோம், தமனியின் கீழ் பகுதியின் முனையை, கொழுப்பு அடைந்த கீழ்ப்புறத்தில் தைத்துவிடுவோம். ரத்தமானது இந்த தமனியின் வழியாக சீராக செல்லும். நமக்கு கொழுப்புகள் அடைப்பட்ட  இடத்தைத் தாண்டி இரத்தமானது செல்ல வேண்டும் அவ்வளவே அதற்கு இந்த தமனி உதவும். இதற்குப் பெயர்தான் பைபாஸ் சர்ஜரி.

எனவே இரு புறமும் அடைபட்டுள்ள கொழுப்புகளை ஒதுக்கி வைத்து ரத்தத்தை சீராக செல்ல வைப்பது ஆஞ்சியோபிளாஸ்டி. அதேபோல், தமனிய கொழுப்பு அடைபட்ட தமனிகளின் வெளிப்புறத்தில் தைத்து ரத்தத்தை அதன் வழியாக செல்ல வைப்பது பைபாஸ் சர்ஜரி.

இதற்கு பல காரணிகளை முதன்மையாக வைத்து எந்த வகையான சர்ஜரி சிறந்தது என முடிவுகளை எடுப்போம்.  சில பேருக்கு 4 அடைப்புகள் இருக்கும். ஆனால், அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி ஸ்டென்ட் வைத்து சரி பண்ணலாம் என முடிவு எடுப்போம். நான்கு ஸ்டெண்ட்கள் வைத்து சரி செய்த ஆட்களும் உள்ளார்கள். ஆனால் சில பேருக்கு இரண்டு அடைப்புதான் இருக்கும் அவர்களை பைபாஸ் சர்ஜரி மேற்கொள்ள வலியுறுத்துவோம்.

ஆஞ்சியோ பிளாஸ்டி அல்லது பைபாஸ் சர்ஜரி இரண்டில் எது நோயாளிக்கு சிறந்தது, விளைவுகளை சிறப்பாக தருவது என்பதைப் பொறுத்தே சிகிச்சையை மேற்கொள்வோம். ஆனால் மக்கள் இதை ஒப்பீடு செய்கிறார்கள். அவர்களுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி பரிந்துரைத்துவிட்டு எனக்கு  பைபாஸ் சர்ஜரி  மேற்கொள்ள சொல்கிறார்கள். அவருக்கு நான்கு அடைப்பு இருந்தது எனக்கு இரண்டு அடைப்பு தான் உள்ளது.  என மக்கள் ஒப்பீடு செய்கிறார்கள். இது தவறு.

மூன்று நபர்கள் நெஞ்சுவலியால் வருகிறார்கள் என்றால், மூன்று பேருக்கும் நிலைமையைப் பொறுத்து சிகிச்சை மாறுபடும் ஒருவருக்கு மருந்து மாத்திரையே போதுமானதாக இருக்கலாம். ஒருவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி செய்து நான்கு நாட்கள் கழித்து வீட்டுக்கு அனுப்புவேன். மற்றொருவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி செய்து ஒரு சில வாரங்கள் கழித்து பைபாஸ் சர்ஜரியும் மேற்கொள்ளக் கூறுவேன். நெஞ்சு வலியை பொறுத்தது மட்டுமன்றி, அந்த இருதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லக்கூடிய தமனியைப் பொருத்தும் இது மாறுபடும்.

மாரடைப்பு என ஒருவர் வருகிறார் என்றால். அந்த நேரத்தில் ரத்தக் கட்டியை கரைப்பதற்கு உண்டான injection அதற்கடுத்து ஆஞ்சியோபிளாஸ்டிதான் சரியான தீர்வு. அந்த அமர்வில் உடல்நிலை மோசமாக உள்ள தருணத்தில் பைபாஸ் சர்ஜரி  தீர்வு கிடையாது. இப்படி உடனடியாக நாம் மேற்கொள்ள வேண்டியது இந்த ஆஞ்சியோபிளாஸ்டி தான்.

இதற்குப் பிறகு இரண்டு அல்லது மூன்று அடைப்பு உள்ளது என்றால் பிறகு நாம் பைபாஸ் அல்லது ஆஞ்சியோபிளாஸ்டியே தொடரலாமா என முடிவு எடுக்கலாம். ஆனால்,  உடனடியாக நாம் முதல் சிகிச்சை வழங்க வேண்டியது  ஆஞ்சியோபிளாஸ்டிதான்.

நன்றி: மருத்துவர் BRJ கண்ணன்,
இதயத்துறை மருத்துவர், (Senior Interventional Cardiology)
வடமலையான் மருத்துவமனை, மதுரை.

பாசிசத்தைத் தங்களது கோட்பாடாக ஏற்றுக் கொண்ட முதலாளிகள் !

பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் | விரிவுரை – 2 | பாகம் – 10

டோக்ளியாட்டி

கியோலிட்டி தமது திட்டத்தை 1921-ம் ஆண்டிலும் 1922-ம் ஆண்டின் தொடக்கத்திலும் செயல்படுத்த முனைந்து ஈடுபட்டார். ஆளும் வர்க்கங்களைச் சேர்ந்த பழைய சக்திகளுக்கும் யுத்தப் பிற்காலத்தில் தோன்றிய சோஷலிஸ்டுக் கட்சி, பாப்புலர் கட்சி ஆகிய இரண்டு பெரிய கட்சிகளுக்கும் இடையே சட்டமன்ற ஒத்துழைப்பை ஏற்படுத்தும் அரசியல் திட்டம் அவருடைய திட்டம். ஆனால் அதே சமயம் ஏற்கெனவே நாம் குறிப்பிட்டது போன்று, கியோலிட்டியின் திட்டம் பாசிஸ்டு இயக்கத்தின் ஆதரவையும் சார்ந்து நின்றது; பாட்டாளி வர்க்கத்தின் கொத்தளங்களைத் தகர்த்தெறியும் ஓர் ஆயுதந்தாங்கிய இயக்கமாக அதனைக் கருதிற்று.

கியோலிட்டி – முசோலினி – துராத்தி அரசாங்கம் உருவாவதுதான் இன்றைய முக்கிய தேவை என்று டூரினைச் சேர்ந்த லாஸ்டாம்பா4 எனும் பிரபல ஏடு வலியுறுத்திற்று. இந்தக் கோரிக்கையின் மறுபதிப்புதான் கியோலிட்டியின் கோட்பாடு எனலாம்.

இச்சமயம் என்ன நடைபெற்று வந்தது? ஓர் ஆயுதந்தாங்கிய போராட்டமின்றி இப்போதைய நிலைமையிலிருந்து மீள்வது அசாத்தியம் என்று இத்தாலியப் பூர்ஷுவா வர்க்கத்தின் மிகவும் உறுதியான பகுதியினர் மென்மேலும் உணர்ந்து வந்தனர். தொழிற்சாலைகளைக் கைப்பற்றிக் கொண்ட பிறகு அவர்கள் பாசிசத்தைத் தழுவினர். பிறகு இதுவே கியோலிட்டி திட்டத்தின் அரசியல், சமூக அடித்தளமாயிற்று. நிலைமையைச் சமாளிக்க இத்தகைய வழிதான் சரியானது என அவர் கருதினார்.

இந்தக் காலகட்டத்தில் பாசிஸ்டுக் கட்சி என்ன செய்து கொண்டிருந்தது? பூர்ஷுவா வர்க்கத்திற்குள் ஏற்பட்ட அதே மாற்றங்கள் பாசிஸ்டுக் கட்சிக்குள்ளும் ஏற்பட்டதை நீங்கள் காணலாம். பாஸ்சி டி கம்பாட்டிமென்டோ-வின் 1919-ம் ஆண்டுத் திட்டம் ஒதுக்கி வைக்கப்பட்டது; பாசிசம் ஓர் அரசியல் கட்சியாக நாடாளுமன்றத்தில் பிரவேசித்தது; நாடாளுமன்றத்தில் முசோலினி பேசும்போது, சோஷலிஸ்டுகளுடன் கூட்டு சேர்ந்து ஓர் அரசாங்கம் அமைக்கும் சாத்தியக்கூறைக் குறிப்பிட்டார்.

பூர்ஷுவா வர்க்கத்தைச் சேர்ந்த தீர்மானமானப் பகுதியினர் வகுத்துத்தரும் பாதையைப் பின்பற்றியேதான் பாசிசம் தனது கொள்கையை உருவாக்கிக் கொள்கிறது. பூர்ஷுவா வர்க்கத்தைச் சேர்ந்த இந்தப் பகுதியினர்தான் எப்போதுமே முடிவெடுக்கிறார்கள் என்பதை நீங்கள் பார்க்கலாம். வடிவம் மாறலாம், ஆனால் உள்ளுறை சாரம் ஒன்றாகவே இருக்கிறது.

கியோவான்னி கியோலிட்டி (Giovanni Giolitti)

இத்தகைய நிலைமையின் அரசியல் வெளிப்பாடு அமைதி உடன்பாட்டில்5 பிரதிபலிக்கக் காணலாம். சோஷலிஸ்டுகளுடன் அமைதி உடன்பாடு செய்து கொள்வது அவசியம் என்று முசோலினி பாசிஸ்டுக் கட்சியில் போராடினர். சோஷலிஸ்டுக் கட்சியிலிருந்து கம்யூனிஸ்டுகள் வெளியேறிய6 நிலைமையில் சோஷலிஸ்டுகள் வலதுசாரிப் பிரிவினரின் நிர்ப்பந்தம் காரணமாக உடன்பாட்டை ஏற்றுக் கொண்டனர். உடன்பாட்டில் முசோலினி கையொப்பமிட்டார். சோஷலிஸ்டு இயக்கத்தைச் சேர்ந்த மிகப் பிரபலமான தலைவர்களது கையொப்பங்களையும் உடன்பாட்டில் காணலாம்.

ஆயினும் கியோலிட்டியின் திட்டம் உட்பட இத்திட்டங்கள் யாவும் படுதோல்வியடைந்தன. இது ஏன்? ஏனென்றால் எந்த வெகுஜன சக்திகள் தலையிட்டு நிட்டியின் திட்டத்தைத் தகர்த்தெறிந்தனவோ அதே சக்திகள் இப்போதும் தலையிட்டன. கியோலிட்டியின் திட்டத்திற்கு எதிராக, பாசிசத்தின் தாக்குதலுக்கு எதிராக அவர்கள் எதிர்த்தாக்குதல் தொடுத்தனர். இதன் விளைவாக இப்போது நாம் ஆர்டிட்டி டெல் பாப்பலோ7வைப் பெற்றிருக்கிறோம். ஆர்டிட்டி டெல் பாப்பலோ அடிப்படையான அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்தத் தொண்டர் படையினர் கியோலிட்டியின் திட்டத்தை நிர்மூலமாக்கிய சக்திகளில் ஒன்றாகத் திகழ்ந்தனர்.

அமைதி உடன்பாடு அற்பாயுசில் முடிந்தது. கிராமப்புற பூர்ஷுவா வர்க்கமும், கனரகத் தொழில்துறையும், நிதி மூலதனமும் ஒன்று சேர்ந்து இதனைக் குழி தோண்டிப் புதைக்கப் பாடுபட்டன. முசோலினியைவிட விடாக்கண்டர்களும், அரசியலில் சிறிதும் வளைந்து கொடுக்காதவர்களுமான தேசியவாதிகள் பாட்டாளி வர்க்க அமைப்புகளை ஒழித்துக்கட்டியே தீருவது என்று கச்சைக் கட்டிக் கொண்டுக் கிளம்பினர்.

படிக்க:
காஷ்மீர் : பொது பாதுகாப்புச் சட்டத்தின் அத்துமீறல்கள் | அம்னெஸ்டி அறிக்கைக்கு தடை !
♦ கார்ப்பரேட் – காவி பாசிசம் ! மோடி ஆட்சியின் ஐந்தாண்டு தொகுப்பு ! அச்சுநூலை ஆன்லைனில் வாங்கலாம்

எனவே, இந்த உடன்பாடு ஒன்றுக்கும் உதவாத செல்லாக்காசு ஆயிற்று. சோஷலிஸ்டுக் கட்சியைச் சேர்ந்த வலதுசாரியினரால் அரசாங்கத்தில் சேர முடியவில்லை. ஏனென்றால் அவ்வாறு சேர்ந்தால் அவர்கள் தனிமைப்பட்டுப் போகும் அபாயம் இருந்தது. பொது தொழிலாளர்களின் சம்மேளனத்தைச் சேர்ந்த லட்சோப லட்சக்கணக்கான தொழிலாளர்களிடமிருந்து அவர்கள் துண்டிக்கப்பட்டு விடுவார்கள்; தொடர்பற்றுப் போய்விடுவார்கள். தொழிலாளர்கள் அவர்களைக் கைவிட்டு விடுவார்கள். அரசாங்கத்தில் அவர்கள் தங்களை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்த முடியும். இறுதியில், துராத்தி குய்ரினால் அரண்மனைக்குச்8 சென்றபோது அவர் ஒரு வெறும் நிழலாக மட்டுமே இருந்தார். அவர் யாரையும், எதையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை; எந்த சக்தியையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை; கையாலாகாத் தனத்தைத்தான் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

இந்தத் திட்டமும் தோல்வியடைந்துவிடவே ஒரே ஒரு வழிதான் எஞ்சியிருந்தது. அதுதான் ரோம் மீது படையெடுப்பு. இந்தப் படையெடுப்பும் பூர்ஷுவா வர்க்கத்தின் ஒரு பகுதியினரது எதிர்ப்புக்கு இடையே நடைபெற்றது என்றும், கூட்டத்தின்மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யத் தளபதிகள் தயாராக இருந்தனர் என்றும் கூறப்படுவதெல்லாம் சுத்த முட்டாள்தனம். அவை உண்மைக்கு மாறானவை.

முசோலினி

பூர்ஷுவா வர்க்கத்திற்குள் ஒரு பெரிய போராட்டம் நடைபெற்றது என்பதும் கியோலிட்டி மீண்டும் பதவிக்கு வருவதைப் பலர் எதிர்த்தனர் என்பதும் உண்மை; ஆனால் பூர்ஷுவா வர்க்கத்தின் பல்வேறு பகுதியினரிடையே நடைபெற்ற இந்தப் போராட்டம் வெகுஜனங்களின் போராட்டத்தையே பிரதிபலித்தது.

பூர்ஷுவா வர்க்கத்தின் தீர்மானமானப் பகுதியினர் வங்கிகள், பெரிய தொழில்கள், ராணுவத்தினர் – இவர்கள் அனைவரும் ரோம் படையெடுப்பில் பாசிசத்துடன் நெருக்கி ஒத்துழைத்தனர். முடியாட்சியும்கூட இதே நிலையை மேற்கொண்டது. அரசவை பாசிசத்தைப் பற்றி விவாதித்து ஒரு முடிவுக்கு வந்துவிட்டதே இதற்குக் காரணம். அதுமட்டுமல்ல, கத்தோலிக்க திருச்சபையும் பச்சைக் கொடி காட்டிவிட்டது. இவ்வாறு பூர்ஷுவா வர்க்கத்தின் தீர்மானமான பகுதியினரிடையே கருத்தொற்றுமை ஏற்பட்டது. அவர்கள் பாசிசத்தைத் தங்களது கோட்பாடாக ஏற்றுக் கொண்டனர்.

இச்சமயம் பாசிஸ்டுக் கட்சிக்குள்ளேயே பல முக்கியமான மாற்றங்கள் ஏற்பட்டன. குடியரசுப் பிரச்சினையை ஒழித்துக்கட்டியது, இவற்றில் மிக முக்கியமானது என்பதில் ஐயமில்லை. ரோம் படையெடுப்பு நடைபெறுவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னர்தான் முசோலினி தமது யுடைன்9 சொற்பொழிவில் குடியரசுக் கோட்பாட்டைத் தலைமுழுகினார். இதற்குப் பின்னர் அன்றைய இத்தாலிய நிலைமையில், பாசிஸ்டுக் கட்சி தன்னை ஆளும் கட்சியாகச் சித்தரித்துக் கொள்ள ஆரம்பித்தது.

இதற்கிடையே பாட்டாளி வர்க்க நிலைகள் மீது மிகக் கடுமையான தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. பாட்டாளி வர்க்கத்தின் கொத்தளங்களான எமிலியாவும் துஸ்கேனியும் சுட்டெரிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டன. சோஷலிஸ்டுகளின் ஆதிக்கத்திலிருந்த நகரங்களும் ஊர்களும் மூர்க்கமாகத் தாக்கப்பட்டன; டிரென்ட் பிராந்தியத்தில் தேசிய சிறுபான்மையினரின் புரட்சி இயக்கம் முற்றிலுமாகத் துடைத்தெறியப்பட்டது. டிரய்ஸ் டேயில் விவரிக்கவொண்ணா வெறியாட்டம் கட்டவிழ்த்துவிடப்பட்டது. இவ்வாறு இத்தாலியப் பாட்டாளி வர்க்க இயக்கத்தின் வலுமிக்க நிலைகள் எல்லாம் நிர்மூலமாக்கப்பட்டன. பூர்ஷுவா வர்க்கத்துக்கு இதைத் தவிர வேறு வழியில்லை. ஸ்தாபன ரீதியாக ஒருங்குதிரண்ட எந்த ஒரு பூர்ஷுவா சக்தியும் இதைத்தவிர வேறு எவ்வகையான திட்டத்தையும் மேற்கொண்டிருக்க முடியாது.

(தொடரும்)

பின்குறிப்புகள் :

4. லா ஸ்டாம்பா – லிபரல் போக்கு கொண்ட தேசிய அளவில் செல்வாக்குள்ள செய்தித்தாள்.

5. 1921 ஆகஸ்டு 3 ஆம் தேதி பாசிஸ்டுகளும் சோஷலிஸ்டுகளும் “அமைதி உடன்பாட்டில்” கையெழுத்திட்டனர். முசோலினியைப் பின்பற்றுபவர்களிடமிருந்து பலமான எதிர்ப்பு வந்தபோதிலும் பல்வேறு சிக்கலான செயல்திற காரணங்களுக்காக இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவதை முசோலினி வற்புறுத்தினார். இதனால் பாசிஸ்டுகளிடையே பிளவு ஏற்பட்டு பாஸ்சி டி காம்பாட்டிமென்டோ நிர்வாகக்குழுவிலிருந்து ராஜினாமா செய்யும்படி முசோலினி நிர்ப்பந்திக்கப்பட்டார். இரண்டு நாட்களுக்குப்பின், பாசிஸ்டுத் தீவிரவாதிகள் பொலோக்னாவில் தங்கள் நடவடிக்கையை ஒருங்கிணைக்கக் கூடினர். சிறிது காலம் கழித்து, இந்த ஒப்பந்தம் அதன் நோக்கத்தை நிறைவேற்றிவிட்டது என்று கருதி, அவரது தன்மைக்கேற்ப முசோலினி தன்  நிலையை மாற்றிக் கொண்டார். பாசிஸ்டுகளின் ரோம் காங்கிரஸில் விட்டுக் கொடுக்காத பண்புடையவர் பக்கம் அதிகாரபூர்வமாக முசோலினி இழுத்துக் கொள்ளப்பட்டார். ஒப்பந்தம் செல்லாது என்று நவம்பர் 15-ல் காங்கிரஸ் அறிவித்தது.

6. 1921 ஜனவரி 15 முதல் 21 வரை லிவோர்னோவில் நடந்த இத்தாலிய சோஷலிஸ்டுக் கட்சியின் 27வது காங்கிரஸில் கம்யூனிஸ்டுக் குழுவின் உறுப்பினர்கள் இத்தாலிய கம்யூனிஸ்டுக் கட்சியை ஸ்தாபிப்பதற்காக வெளிநடப்புச் செய்தனர்.

7. இத்தாலிய ராணுவத்தில் இருந்த தொண்டர் படை கம்மாண்டோக்கள் ஆர்டிட்டி என்று அழைக்கப்பட்டனர். முன்பு ஆர்டிட்டியில் இருந்தவர்கள் பாசிஸ்டு பலாத்காரத்தை எதிர்ப்பதற்காக 1921 ஜூலை மாதத்தில் ஒரு குழுவாகச் சேர்ந்தனர். ஆர்டிட்டி டெல் பாப்பலோ என்ற பெயரில் அழைத்துக் கொண்ட இந்தக் குழு போர் குணம் படைத்த கம்யூனிஸ்டுகள், சோஷலிஸ்டுகள், அராஜகவாதிகள் ஆகியவர்களை தன்பால் ஈர்த்து, முதலில் சிறிதாக இருந்த குழு தொழிலாளி வர்க்கத்தின் பெரும் எண்ணிக்கை கொண்ட பலமான தற்காப்பு ஸ்தாபனமாக வளர்ந்தது. எனினும், இந்த வளர்ச்சி கட்சிகளுக்கு அப்பால் நடைபெற்றது.

ஆர்டிட்டி டெல் பாப்பலோ (Arditi del popolo) -வின் கொடி. (ஃபாசிச குறியீடாக உள்ள கோடரியை குறுக்காக மற்றொரு கோடரி பிளப்பது போன்ற வகையில் அமைக்கப்பட்டுள்ள இலச்சினை)

பாசிஸ்டுகளோடு அமைதி உடன்பாடு பற்றி தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த சோஷலிஸ்டுக் கட்சியிடமிருந்து மட்டுமன்றி கம்யூனிஸ்டுக் கட்சியிடமிருந்தும் இந்த அமைப்புக்கு எதிர்ப்பு வந்தது. கம்யூனிஸ்டுத் தொழிலாளர்கள் அதனுடைய சொந்த செம்படையில்தான் சேரவேண்டும் என்ற இடதுசாரி செக்டேரியன் போக்கை இத்தாலியக் கம்யூனிஸ்டுக் கட்சி மேற்கொண்டது. கீழ்மட்டத்திலிருந்து உண்மையில் பாசிசத்திற்கும் எதிராக வளர்ந்து வந்த இந்த இயக்கத்தை சோஷலிஸ்டுகளும் கம்யூனிஸ்டுகளும் காட்டிய பகை தகர்த்தது; இதில் அக்கறையுடன் சேர்ந்த சோஷலிஸ்டு, கம்யூனிஸ்டு அணியினரில் பெரும்பாலோர் அதிலிருந்து விலகினர். பலமான அரசியல் தலைமை இல்லாததால், இந்த அமைப்பு விரைவிலேயே தேய்ந்து போயிற்று. சில நகரங்களில் மட்டும் ஸ்தலமட்டத்தில் இது நீடித்து செயல்பட்டது.

8. பிரதம மந்திரி லியூகி பாக்டாவின் சர்க்கார் 1922, ஜூலை 19 ஆம் தேதி கவிழ்ந்தது. அரசாங்க நெருக்கடி உச்சகட்டத்தில் இருக்கும்போது, பாசிஸ்டு சக்திகள் ரேவென்னாவை நாசம் செய்து கொண்டிருந்தபோது, சோஷலிஸ்டுக் கட்சியின் நாடாளுமன்றக் குழு சட்டம் ஒழுங்கையும் அடிப்படை ஜனநாயக உரிமைகளையும் மீண்டும் ஏற்படுத்தக் கூடிய ஒரு சர்க்காருக்கு சோஷலிஸ்டுக் கட்சி ஆதரவு கொடுக்கும் என்று ஜூலை 22-ம் தேதி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அடுத்த நாள் குய்ரினால் அரண்மனைக்குச் சென்று இத்தீர்மானத்தை அரசர் 3-வது விக்டர் எமானுவேலிடம் சமர்ப்பிக்க பில்ப்போ துராத்தி சென்றார். ஆனால், நிலைமை தீர்க்கப்படாமல் இருந்தது. பாக்டா கடைசியில் ஒரு இரண்டாவது மந்திரி சபையை அமைத்தார். 3 மாதத்திற்குபின் ரோம் மீது படையெடுப்பினால் அந்த மந்திரி சபையின் காலம் முடிவுற்றது.

9. 1922 செப்டம்பர் 20 ஆம் தேதி யுடைனில் முசோலினி ஆற்றிய பிரசங்கம், பாசிஸ்டு இயக்கம் குடியரசுக்கு சாதகமானது, மன்னராட்சிக்கு எதிரானது என்ற கூற்றின் கடைசி அடிச்சுவட்டையும் அதிகாரரீதியாக அகற்றியது.

பால்மிரோ டோக்ளியாட்டி
ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள்
தமிழில் : ரா. ரங்கசாமி
பக்கங்கள் : 233
விலை : ரூ. 50.00
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

முந்தைய பகுதிகள் : பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் !

தளர்ந்த வயதிலும் தளராமல் உழைக்கும் டோக்கியோவின் வயோதிகர்கள் ! – படக்கட்டுரை

0

டோக்கியோ மேற்கு புறநகர் பகுதியான ஹிகாஷிமுராயமா, மதுபான விடுதி நடத்தி வருகிறார் 80 வயதான இந்தப் பெண். உணவுகள் பரிமாறுவது நிறுத்தப்பட்டாலும், பானங்கள் இன்னமும் வழிந்தோடியபடியே இருக்கின்றன.

***

தனது சொந்த நகரமான க்யூஷு-விலிருந்து 14 வயதில் நெரிமா நகரத்துக்கு ரயிலேறிவந்த இந்த மதுபான விடுதியின் உரிமையாளருக்கு வயது 83. ஃபிரெஞ்சு சமையல் கலைஞராக சப்போரா மற்றும் டோக்கியோவில் பணியாற்றிய இவர், 39 வருடங்களுக்கு முன் இந்த மதுபான விடுதியைத் திறந்தார். கடந்த ஆண்டு இதய பிரச்சினைகள் காரணமாக சில மாதங்கள் இந்த விடுதி மூடப்பட்டிருந்தது. மீண்டும் திரும்பிய இவர், வாரத்தின் ஆறு நாட்களை இங்கேயே கழிக்கிறார்.

***

அறுபது ஆண்டுகளுக்கு முன் தன்னுடைய கணவருடன் இணைந்து இந்த மதுபான விடுதியைத் தொடங்கினார் தற்போது 93 வயதாகும் இந்த மூதாட்டி. இப்போது தனியாக இருக்கும் இவர், பல இரவுகளில் விடுதியைத் திறந்து வைத்திருக்கிறார். டோக்கியோவிலிருந்து மேற்கில் இருக்கும் ஒகுடாமாவில் புதிதாக கட்டப்பட்ட அணைக்காக வசிப்பிடங்களிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்தபோது, இவர் குடும்பத்திலிருந்து பிரிந்து அங்கேயே இருந்துவிட்டார். வாடிக்கையாளர் வரும்வரை வானொலியைக் கேட்டுக்கொண்டிருக்கும் இவர், யார் வந்தாலும் புன்னகையோடு பறிமாறக் காத்திருக்கிறார்.

***

சுஷி சமையல் கலைஞரான இவர், 60 ஆண்டுகளுக்கு முன்பு அடாச்சி நகரத்தில் உணவகத்தைத் தொடங்கினார். அவருடைய மகன் பெரும்பாலான பணிகளைக் கவனித்துக்கொண்டாலும், உணவு தயாரிப்பிலும் பானங்களை பறிமாறுவதிலும் இன்னமும் இவர் உதவிக் கொண்டிருக்கிறார்.

***

நகானோ-வின் அமைதியான பகுதியில் 1935-ம் ஆண்டு இந்த மீன் விற்பனையகம் தொடங்கப்பட்டது. தன்னுடைய குடும்பத் தொழிலை இப்போதும் நடத்தி வருகிறார் இவர்.

***

பாரம்பரியமாக காலணிகளை உருவாக்கும் இந்தக் கடை, அசாகுசா-வில் 1930-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொடங்கியவரின் கொள்ளுப் பேரன் இவர். ஆனால், இவர்தான் இந்தப் பணியை செய்யப்போகும் இறுதி நபர். இவர் ஓய்வுபெற்றால், இந்தத் தொழிலும் இவரோடு நின்றுவிடும்.

***

அகிமோனே பழைய மீன் சந்தை அருகே உள்ள, இந்த சிறிய காஃபி கடை வாரத்தின் இரண்டு நாட்கள் மட்டுமே திறந்திருக்கும். அதுவும் காலை 7 மணியிருந்து 9 மணிவரை மட்டுமேயான இரண்டு மணி நேரம் மட்டும்தான். ஆனால், 90 வயதான இதன் உரிமையாளர் இதுவே போதுமென சொல்கிறார்.

***

மற்றொரு காஃபி கடையின் இந்த உரிமையாளர், தன்னுடைய 80-களில் இருக்கிறார்.  அனைத்து நாட்களிலும் தன்னுடைய கஃபே-வை திறந்து வைத்திருக்கிறார். இந்தக் கடை இரண்டு அடுக்குகளால் ஆனது. தனியாக இதை நடத்துகிற இவர், நாள் முழுவதும் இரண்டு அடுக்குகளுக்கும் படிக்கட்டுகளில் ஏறி இறங்குகிறார்.

***

பழைய டோக்கியோவின் கடைத்தெருவான மினோவா-வில் பாரம்பரிய வழிமுறைகளில் ஜப்பானிய காய்கறிகளை வைத்து ஊறுகாய் தயாரிப்பதை தினமும் செய்கிறார் இவர்.

***

92 வயதான இந்தப் பெண், தன்னுடைய குழந்தைகளுக்கான இனிப்பு மற்றும் பொம்மைக் கடையை ஹிகிபுனே-வில் வைத்திருக்கிறார். ஐம்பதாண்டுகளாக இந்தக் கடையை நடத்திவருகிறார் இவர். இது தன்னை இளமையாக உணர வைப்பதாக கூறும் இவர், கணவரை அருகே வைத்திருப்பது அப்போதும் இப்போதும் உதவிக் கொண்டிருப்பதாக சொல்கிறார்.

***

நெரிமா நகரத்தில் 40 ஆண்டுகளாக தன்னுடைய சிறிய மதுபான விடுதியை நடத்தி வருகிற இவருக்கு வயது 82.

***

அகிஹாபாராவில் உள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் விற்கும் இந்தப் பகுதி வெகுவாக மாறிவிட்டது. ஆனால், உண்மையில் சிறிய கடையான இந்தக் கடை மட்டும் மாறவே இல்லை.

***

தொழிலில் ஐம்பது ஆண்டுகளாக உள்ள இந்த உரிமையாளரின் வயது 74. வாரத்தின் ஆறு நாட்களும் நாளின் எட்டு மணி நேரமும் கடை திறந்திருக்கும். அத்தனை பொழுதையும் சிரித்தபடியே கழிக்கிறார் இவர்!

***

கொமகோமில் உள்ள இந்தக் கடை மூடப்பட்டாலும், அதன் உரிமையாளர் தள்ளுவண்டியில் இறைச்சி உணவகத்தை நடத்திவருகிறார்.

***

வயதான ஜப்பானிய மக்கள் பணியாற்றுவதை உற்சாகமாகச் செய்தாலும், யுனோவில் உள்ள இந்த மனிதர், அவ்வளவு மகிழ்ச்சியாக காட்சியளிக்கவில்லை.

***

இடாபாஷியில் உள்ள தன்னுடைய சிறிய உணவகத்தில் கடந்த 46 வருடமாக வாரத்தின் ஆறு நாட்களும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார் இவர். தன்னால் முடிந்தால் இன்னும் 46 ஆண்டுகள் இப்படியே பணி செய்வேன் என்கிறார்.

***

அகிஹாபாராவில் உள்ள பொருட்களால் நிறைக்கப்பட்ட மற்றுமொரு சிறிய கடை.

***

சில ஆண்டுகளுக்கு முன்பு கிராமப்பகுதிகளிலிருந்து தங்களுடைய பொருட்களை டோக்கியோவுக்கு பயணித்து வந்து விற்கும் பெண்களை காண்பது பொதுவாகக் காணக் கூடிய காட்சியாக இருந்தது. இப்போது அது அரிதாகிவிட்டது என்றாலும், யுனோவிலிருந்து பயணிக்கும் இந்த பெண், அப்படிப்பட்டவர்களில் இறுதியானவராக இருப்பார்.


கலைமதி
நன்றி : தி கார்டியன்

மோடியின் புதிய இந்தியாவில் 18 ஆண்டுகள் காணாத வாகன உற்பத்தி வீழ்ச்சி !

2

மோட்டார் வாகன உற்பத்தி கடந்த 2018 மே மாதத்தை ஒப்பிடும் போது இந்த வருடம், மே மாதத்தில் 20.55% குறைந்திருக்கிறது. பொதுவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி, கடன் வர்த்தக சரிவு, வரி – காப்பீடு ஒழுங்கு முறைகளில் மாற்றம் காரணமாக வாகன உற்பத்தித் துறை சரிந்திருக்கிறது.

இந்திய வாகன உற்பத்தியாளர் சங்கம் ( Society of Indian Automobile Manufacturers (SIAM) ) வெளியிட்டிருக்கும் அறிக்கையின் படி, தொழிற்சாலைகளிலிருந்து முகவர்களுக்கு விற்பனை செய்யப்படும் வாகனங்கள் பெரும் சரிவை சந்தித்திருக்கின்றன. இதில் இலகுரக வணிக வாகனங்கள் மட்டும் ஒரு விதி விலக்கு.

“பொருளாதார வளர்ச்சியின்மை காரணமாகவே இந்த சரிவு நடக்கிறது. கடந்த வருடத்தில் கேரளா வெள்ளத்தில் தத்தளித்த போதே இந்த விற்பனை குறைவு ஆரம்பித்துவிட்டது. மேலும் எரிபொருள் விலை உயர்வும் இந்த நெருக்கடியை தந்திருக்கிறது…” என்கிறார் வாகன உற்பத்தியாளர் சங்கத்தின் இயக்குநர் மாத்தூர்.

சென்ற 2018 அக்டோபர் மாதத்தின் பண்டிகை (தீபாவளி போன்ற) காரணமாக வாகன விற்பனை கொஞ்சம் உயர்ந்திருந்தாலும், அதற்கடுத்த மாதங்களிலிருந்து தற்போதைய மே மாதம் வரை வாகன விற்பனை பெரிதும் குறைந்திருக்கிறது.

மே 2018-ம் ஆண்டில் பயணிகள் வாகனங்கள் 3,01,238 யூனிட்டுகள் விற்பனை ஆனது என்றால் 2019 மே மாதத்தில் விற்பனை 2,39,347 யுனிட்டுகளே விற்பனையாகி இருக்கின்றன. இந்த அளவு விற்பனை சரிந்திருப்பது என்பது கடந்த செப்டம்பர் 2001-ம் ஆண்டில் நடந்தது. அப்போதும் விற்பனை 21.91% அளவுக்கு குறைந்திருந்தது. தற்போது பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கு விற்பனை குறைந்திருக்கிறது.

விற்காத வாகனங்களால் முகவர்களின் சுமை கூடியிருக்கிறது. வங்கிகளும், நிதி நிறுவனங்களும் கடன் கொடுக்க மறுப்பதால், அவர்களால் கொள்முதலும் செய்ய இயலவில்லை.

படிக்க:
♦ இந்தியா எதிர்கொள்ளவிருக்கும் வேலையின்மை நெருக்கடி !
♦ கார்கள் : வளர்ச்சியின் அறிகுறியா ? முதலாளித்துவ அழிவின் குறியா ?

வங்கியல்லாத நிதி நிறுவனங்களில் நடந்துவரும் தொடர் நெருக்கடியாலும், வங்கிகளும் எளிதில் கடன் கொடுக்க மறுப்பதாலும் பொதுவில் கடன் பெறுவது சிரமமாகிறது.

“பல்வேறு போக்குகள் இந்த நெருக்கடிக்குக் காரணமாக இருக்கின்றன. கார்களை வாங்கும் விருப்பம் மக்களிடையே குறைந்திருக்கிறது. அதற்குக் காரணம் நிதி நிறுவனங்களின் நெருக்கடி. 7 இலட்சம் ரூபாய் வரை விற்கப்படும் அறிமுக வாகனங்களின் விற்பனை அதனால் பெரிதும் சரிந்திருக்கிறது.” என்கிறார் டிலோட்டி நிறுவனத்தைச் சேர்ந்த குஷால் சிங்.

“கடந்த இரண்டு மூன்று வருடங்களாக ஊரகப் பகுதிகளில்தான் வாகன விற்பனை அதிகம் நடந்தன. விவசாயத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவும், விவசாயத்தில் இருந்து வரும் வருமானம் குறைந்து விட்டதாலும் கடந்த இரு வருடங்களாக வாகன விற்பனை பாதித்திருக்கிறது. கடந்த எட்டு மாதங்களாக நிலைமை இன்னும் மோசம்” என்கிறார் வாகன முகவர்களின் கூட்டமைப்பு துணைத் தலைவரான வின்கேஷ் குலாட்டி(Vinkesh Gulati).

‘பாரத்ஸ்டேஜ் ஆறு’ எனப்படும் வாகன ஒழுங்கு, 2020-ம் ஆண்டிலிருந்து அமல்படுத்த இருப்பதால் வாகன உற்பத்தியாளர்கள் தற்போது உற்பத்தி செய்யும் வாகனங்களில் அப்டேட் செய்வதில்லை என்பது ஒரு துணைக் காரணமாகும்.

அதே போன்று புதிய காப்பீட்டு கொள்கைகளும் காரணமாக இருக்கின்றன. உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படி கார்களுக்கு மூன்று வருடங்களும், இருசக்கர வாகனங்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு சேர்த்தும் காப்பீடு கட்டணம் கட்ட வேண்டும். இதனால் கடையில் விற்கப்டும் வாகனங்களின் விலை 7 முதல் 8% வரை உயர்ந்திருக்கிறது.

ஒட்டு மொத்தமாக அனைத்து வாகன உற்பத்தியாளர்களும் தமது உற்பத்தியை குறைத்து வருகின்றனர். இந்த வாகன உற்பத்திக் குறைவு, மற்றும் விற்பனைத் தேக்கத்தினால் பாதிக்கப்படுபவர்கள் ஒப்பந்தத் தொழிலாளிகள்தான். வாகன தொழிலில் இருக்கும் தொழிலாளிகளில் பாதிக்கும் மேற்பட்டோர் ஒப்பந்த தொழிலாளிகள்தான். அவர்கள் அனைவரும் அல்லது கணிசமானோர் வேலையிழப்பர்.

மாருதி, மகேந்திரா போன்ற பெரிய நிறுவனங்கள் உற்பத்தியை குறைக்கவோ, நிறுத்தவோ செய்யும் போது தொழிலாளிகள் ஆயிரக்கணக்கில் வேலை இழப்பர். வருகின்ற பட்ஜெட்டில் புதிய அரசு ஏதாவது பார்த்து ஆவண செய்ய வேண்டும் என வாகன முகவர் சங்கத்தினர் கோருகின்றனர்.

28%-ஆக இருக்கும் ஜி.எஸ்.டி வரியை 18%-ஆகக் குறைப்பது, பழைய கார்களை அழிப்பதை கொள்கையளவில் கொண்டு வருவது, இதனால் மக்கள் பழைய கார்களை அழித்து விட்டு புதிய கார்களை வாங்க இயலுமென்றும் அச்சங்கத்தினர் கூறுகிறார்கள். இப்படித்தான் அமெரிக்காவில் கார் விற்பனையை செய்கிறார்கள். செல்போன்களில் பழையதை கடாசி விட்டு புதியது வாங்குவது போல கார்களையும் மாற்ற வேண்டுமாம்.

மாருதி கார் நிறுவனம் தனது உற்பத்தியை 18% குறைத்துள்ளது. இதை பங்குச் சந்தைக்கு அனுப்பிய கடிதத்திலும் குறிப்பிட்டுள்ளது. மாருதி நிறுவனத் தயாரிப்புகளில் அதிகம் விற்பனையாகும் சிறிய ரகக் கார்களான ஆல்டோ, ஸ்விப்ட், டிசையர் போன்றவற்றின் உற்பத்தி 42% வரை குறைத்துள்தாகவும் மாருதி தெரிவித்துள்ளது.

மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவனமோ 13 நாட்களுக்கு உற்பத்தியை முற்றிலும் நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. இருசக்கர வாகன விற்பனையும் கணிசமாக சரிந்திருப்பதாக முகவர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

படிக்க:
♦ ரத்தன் டாடா + நரேந்திர மோடியின் கனவுக்கார் நானோவின் மரணம் !
♦ 100 நாட்களுக்குள் 46 அரசு நிறுவனங்களை ஒழித்துக்கட்டத் துடிக்கும் மோடி அரசு !

மொத்தத்தில் ஐந்தில் ஒரு பங்கு வாகன உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இலட்சக்கணக்கான ஒப்பந்த தொழிலாளிகள் வேலை இழக்கப் போகின்றனர். வாகன உற்பத்தியாளர்களை சார்ந்து பிழைக்கும் ஆயிரக்கணக்கான சிறு, நடுத்தர நிறுவனங்களும் பாதிக்கப்படும். அங்கும் வேலையிழப்பு கணிசமாக இருக்கும். மோடி அரசு பதவி ஏற்றபிறகு இப்படித்தான் புதிய இந்தியா ஆரம்பித்திருக்கிறது.

முதலாளித்துவ நெருக்கடி என்றால் என்ன என்பதற்கு இந்த வாகன விற்பனை தேக்கம் ஒரு நல்ல சான்றாகும். சந்தைக்காக உற்பத்தி செய்யப்படும் வாகனங்கள்; வாங்க ஆள் இல்லாமல் தேங்குகின்றன. உடனே நிறுவனங்கள் உற்பத்தியைக் குறைக்கின்றன. தொழிலாளிகள் வேலையிழப்பர்.

இதற்கு முன்னாடி கார்கள் விற்பனை கன ஜோராக நடந்ததா என்றால் அப்படியும் இல்லை. நடுத்தர வர்க்கத்தின் நுகர்வு மோகத்தை கூட்டி விட்டு கடன் ஏற்பாடு செய்து, அவர்களது எதிர்கால வருமானத்தை இலக்கு வைத்து இன்னும் பல்வேறு முறைகளில் விற்பனை செய்தார்கள். தற்போது அவை எல்லாம் முட்டுச் சந்துக்குள் வந்து விட்டன. விவசாய வீழ்ச்சி, இதுவரை இல்லாத வேலையில்லாத் திண்டாட்டம் போன்றவை இந்த நெருக்கடியோடு தொடர்புடையவையாக இருக்கின்றன. முதலாளித்துவம் சமூகத்தை அழிக்கும் விசச் சூழல் இப்படித்தான் சங்கிலித் தொடர் போன்று பல அழிவுகளை ஏற்படுத்துகிறது.


மதன்
செய்தி ஆதாரம் : ஹிந்துஸ்தான் டைம்ஸ், தி இந்து

மீம் போட்டா ஜெயிலு ! பாம் போட்ட பார்லிமெண்ட் ! – கருத்துப்படம்

பாகிஸ்தான் சாலையில் விராட் கோலியின் ரசிகன் !

பாகிஸ்தான் வீரரை அடையாளப்படுத்தி – ஒருவன் இந்திய சாலைகளில் நடமாடியிருந்தால் அவன் விசாரணையின்றியே கொல்லப்பட்டிருப்பான் !

கருத்துப்படம் : வேலன்

♦ ♦ ♦

இந்துக்களின் சாவைப்பத்தி நம்ம நாட்டுல இந்துக்களே கவலைப்படறதில்ல !

ஆமாமா… ஆண்டி ஜி… !

காந்தி – ரயில் விபத்து
கவுரி லங்கேஷ் – பன்றிக் காய்ச்சல்
ஹேமந்த் கர்காரே – ஃபுட் பாய்சன்
கோவிந்த் பன்சாரே – ஸ்ட்ரோக்
தபோல்கர் – நீரிழிவு
நீதிபதி லோயா – பல் வலி

கருத்துப்படம் : வேலன்

♦ ♦ ♦

மீம் போட்டா ஜெயிலு ! பாம் போட்டா பார்லிமெண்ட் ! – இதுதான் இந்தியா !

 

கருத்துப்படம் : வேலன்

♦ ♦ ♦

பதன்கோட் நீதிமன்றம் வெளியிட்ட எதிர்கால பாஜக MP-க்கள் !

கருத்துப்படம் : வேலன்


இதையும் பாருங்க…

பாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்குவழி ஏதுமில்லை | காணொளி

வரலாறு காணாத வறட்சி – ஆயிரக்கணக்கான கிராமங்கள் காலியாகின்றன !

0

ரலாறு காணாத வெப்பத்தினால் நூற்றுக்கணக்கான கிராமங்களிலிருந்து மக்கள் குடிநீரைத் தேடி வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். சமீப வாரங்களாக இந்தியா முழுவதும் கடும் வெப்பம் நிலவி வருகிறது.

கடந்த வாரம் திங்களன்று (3.6.2019) தலைநகரம் புது தில்லி ஜூன் மாதத்திலேயே அதிகமான வெப்பமாக 48 டிகிரி செல்சியசை கண்டது. ராஜஸ்தான் மாநிலத்தின் சாரு நகரில் வெட்பம் 50.8 டிகிரியைத் தொட்டது. இது பூமியிலேயே அதிக வெப்பம் நிலவும் பகுதிகளில் ஒன்றாகும்.

மேலும் தெற்கே சென்றால், வணிகத் தலைநகராம் மும்பையிலிருந்து 250 கி.மீட்டர் தொலைவில் உள்ள கிராமங்கள் அனைத்தும் வறட்சியால் வெறிச்சோடிக் கிடக்கின்றன. ஒரு மதிப்பீட்டின் படி 90% மக்கள் இங்கிருந்து வெளியேறியிருக்கிறார்கள். வயதானவர்கள், கால்நடைகளை தவிர்த்து விட்டு, இந்த இடப்பெயர்வு நடந்து வருகிறது. மாராட்டிய மாநிலத்தின் பீட் பகுதிக்கு அருகே இருக்கும் ஹத்கார்வாடி கிராமத்திலிருந்து ஏறக்குறைய அனைத்து மக்களும் காலி செய்து வெளியேறி விட்டார்கள்.

அடிபம்பு குழாய்களும், கிணறுகளும் 45 -டிகிரி செல்சியசஸ் வெப்பத்தில் வறண்டு போய்விட்டன. அரசு அதிகாரிகளது மதிப்பீட்டின்படி 1972-ம் ஆண்டில் ஏற்பட்ட பஞ்சத்தில் இரண்டரை கோடி மக்கள் பாதிக்கப்பட்டார்கள். தற்போதைய வறட்சி அதையும் தாண்டிவிட்டது என்கிறார்கள்.  2018 டிசம்பர் முதல் 2019 மே மாதம் வரை ஹத்கர்வாடி கிராமத்தின் 10 -15 குடும்பங்கள் தவிர 2000-த்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேறி இருக்கின்றனர்.

கர்நாடகா மாநிலத்தின் 80% மாவட்டங்களும், மராட்டிய மாநிலத்தின் 72% மாவட்டங்களும் வறட்சி மற்றும் வெள்ளாமை தோல்வியை சந்தித்திருக்கின்றன. இந்த இருமாநிலங்களின் 80 இலட்சம் மக்களும் வாழ்வதற்கே பெரும் சிரமத்தை எதிர் கொள்கிறார்கள். இரு மாநிலங்களுக்கும் பொதுவான நீராதார பகுதிகளில் முரண்பாடு ஏற்பட்டிருக்கிறது.

படிக்க:
♦ முதலாளிகளால் உருவாக்கப்பட்ட மராட்டிய தண்ணீர் பஞ்சம்!
♦ மனம் ஓட ஓடத் துரத்துகிறது என்றால் , நாம் ஏன் ஓட வேண்டும் ?

நீர் பற்றாக்குறையினால் மராட்டிய கிராமங்களில் விவசாயம் சார்ந்த வாழ்க்கை அழிந்து வருகிறது. பயிர்கள் கருக, கால்நடைகளோ பட்டினி கிடப்பதோடு, குடிப்பதற்கே நீரின்றி தவித்து வருகின்றன. இப்பகுதியின் முக்கிய பயிர்களான சோளம், சோயா, பருத்தி, ஆரஞ்சு, நிலக்கடலை ஆகியவை கடும் பாதிப்பை அடைந்து வருகின்றன. உலகில் எல் நினோ விளைவாக சூழலியல் கடுமையாக பாதிக்கப்பட்டு, வழமையான தட்பவெட்ப நிலையும் மாறி வருகிறது. ஏற்கனவே வறட்சியாக இருக்கும் இந்தியா இந்த மாற்றத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.

வறட்சியால் இறந்து போன ஆடுகள் அருகில் விவசாயி – படம் : நன்றி – கார்டியன்.

பல மதிப்பீடுகளின்படி மராட்டிய மாநிலமே வறட்சியினால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. சமீபத்திய ஆண்டுகளில் வரும் இந்த தொடர் வறட்சியினால் ஏறக்குறைய 4,700 விவசாயிகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் தற்கொலை செய்திருக்கின்றனர். அதில் கடந்த ஆண்டு மட்டும் 947 பேர் இறந்து போயிருக்கின்றனர்.

மராட்டிய மாநிலத்தின் பீட் நகரத்தில் குடிநீர் காலியாகி, உடைகளை துவைக்கவும், குளியல் – கழிப்பறை தேவைகளுக்குமான நீர் கூட இல்லை. தேவையான நீரைக் குடிக்காததினால் வரும் வெப்ப நோய்களாலும், மாசடைந்த நீரைக் குடிப்பதனால் வரும் வயிற்றுப் பிரச்சினைகளாலும் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வருகின்றன.

நகரத்தின் வசதி வாய்ந்த நடுத்தர வர்க்கம் ஆயிரம் லிட்டர் நீரை சுமார் 265 ரூபாய்களுக்கு தனியார் நீர் வணிகர்களிடமிருந்து பெற்று வருகின்றனர். கூடவே மருத்துவமனைகளுக்கு வரும் கூட்டமும் அதிகரித்து வருகிறது. சேறு கலந்த நிரை குடிப்பதற்கு மாடுகளே மறுத்து வருகின்றன. இந்த சேறு கலந்த நீர் வறண்டு போன அணைகள், குளங்களில் கொஞ்சம் இருக்கின்றன.

பீட் நகர அரசு மருத்துவமனையின் மருத்துவர் சந்தீப் தேஷ்முக், “கடந்த ஒன்றரை மாதமாக வயிற்றுப் போக்கு மற்றும் வயிற்று உபாதைகள் காரணமாக வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 50% அதிகரித்து வருகிறது. மாசடைந்த நீரை குடிப்பதாலேயே இந்த பிரச்சினைகள் வருகின்றன, கொதிக்க வைத்த குடிநீரை அருந்துமாறு மக்களுக்கு அறிவுறுத்துகிறோம் என்கிறார் அவர்.

மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையான 22 இலட்சம் பேரில் 2,40,000 மக்கள் பீட் நகரத்தில் வசிக்கின்றனர். இம்மக்களின் அதிகாலைத் துவக்கமே குடிநீரைத் தேடி அலைவதில் துவங்குகிறது. எந்த ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீர் கிடைக்கும், எந்த பக்கத்து வீட்டுக்காரரிடம் தண்ணீர் இருக்கிறது என்று மக்கள் அலைந்து வருகிறார்கள்.

படிக்க:
♦ சென்னைக்குத் தேவைப்படும் தண்ணீருக்காக பாலைவனமாக்கப்படும் கிராமங்கள் !
♦ சென்னை மழைக்கு எல் நினோ மட்டும்தான் காரணமா ?

“தங்களது குடும்பத்தினர் கழிப்பறைகளை பயன்படுத்துவதில்லை, அதற்காக நீரை செலவழிப்பது என்பது ஆடம்பரமாகி விட்டது. பெண்கள் இருட்டும் வரை காந்திருந்து திறந்த வெளியில் மலம் கழிக்கிறோம். விலை கொடுத்து வாங்கும் தண்ணீரில் 5 முதல் 10 லிட்டரை நீரை கழிப்பறைக்காக செலவழிக்க முடியாத நிலையில் இருக்கிறோம்” என்று சிவாஜிநகரில் வசிக்கும் உஷா ஜாதவ் தெரிவிக்கிறார்.

மே மாத இறுதிக்குள் 43% இந்தியா வறட்சியை அனுபவிக்கப் போகிறது. அதற்கு பருவமழை பெய்யாதது முக்கியக் காரணமாகும். 2017-ம் ஆண்டு நீங்கலாக 2015-ம் ஆண்டிலிருந்தே வறட்சி இந்தியாவில் அதிகரித்து வருகிறது.

மராட்டிய மாநிலத்தின் 20,000 கிராமங்களில் குடிநீர் பிரச்சினை கடுமையாகி வருகிறது. அங்கே 35 பெரிய அணைகளில் நீரில்லை. 1000 சிறு அணைகளில் நீர் இருப்பு 8%-ற்கும் குறைவாகவே இருக்கிறது. அணைகளுக்கு நீரைத் தரும் ஆறுகள் அனைத்தும் வறண்டு போய் பாளம் பாளமாய் வெடித்து இருக்கின்றன.

மஹராஷ்டிர மாநிலம், தானே மாவட்டத்தில் வறண்டு போன கிணற்றில் நீர் ஊற்றும் அவலநிலை.

இந்தியாவின் 40% நீர்த் தேவையை நிலத்தடி நீரே அளிக்கின்றன. அவையும் அதிகமாக உறிஞ்சப்படுவதால் வறண்டு போய் வருகின்றன. இதை நிதி ஆயோக் தனது 2018-ம் ஆண்டு அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. மேலும் தில்லி, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் நகரங்களை உள்ளிட்ட 21 நகரங்கள் 2020-ம் ஆண்டிற்குள் நிலத்தடி நீரை முற்றிலும் இழக்கப் போகின்றன. இந்தியாவின் 40% -த்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகைக்கு 2030-ம் ஆண்டிற்குள் குடிநீர் இல்லாத நிலை ஏற்படப் போகிறது.

தென்மேற்கு பருவக்காற்றுதான் இந்தியாவின் 80% மழை நீரை அளிக்கிறது. இந்த ஆண்டு அப்பருவக் காற்று தாமதமாவதாலும், வழக்கமான அளவை விட குறைவாகவே மழை பெய்வதாலும் பாதிக்கப்பட்ட மாராட்டிய மாநிலத்தின் வறட்சி தொடரப் போகிறது.

மராட்டியம் உள்ளிட்ட இந்தி பேசும் மாநிலங்களில் பாஜக பெரு வெற்றி அடைந்திருக்கிறது. மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாத பிரதமர் மோடி, நாடு விட்டு நாடு பறந்து கொண்டிருக்கிறார். மத்திய அமைச்சர்களோ இந்துத்துவ அஜண்டாவில் கவனம் செலுத்தி வருகிறார்கள். மராட்டியத்திலும் மத்திய அரசிலும் பாஜகவே ஆட்சி செய்கிறது. கேட்டால் மழை இல்லை அதனால் வறட்சி என்ன செய்ய முடியும் என்று பாஜக-வினர் கூறலாம். மழை பெய்து விட்டாலும் அவற்றை தேக்குவதற்கு இங்கே வசதிகள் ஏதுமில்லை. எட்டு வழிச்சாலைகளிலும், புல்லட் ரயிலிலும் இலட்சம் கோடி ரூபாய்களை முதலீடு செய்யும் அரசு, அடிப்படைத் தேவையான குடிநீரை அளிக்க எந்த ஏற்பாட்டையும் செய்வதில்லை.

மோடி அரசின் ஸ்வச் பாரத்தை கடைபிடித்து கழிப்பறையில் போனால் நீர் காலியாகி விடும் என்று, மக்கள் மீண்டும் திறந்த வழி கழிப்பறைகளை நோக்கி போகிறார்கள். சென்னையில் இன்னும் ஓரிரு வருடங்களில் நிலத்தடி நீர் காலியாகி விடும் என்றால் பிரச்சினையின் அபாய நிலைமையை நாம் புரிந்து கொள்ளலாம்.

வறண்டு போன வாழ்க்கையை மீட்க நாம் இந்த அரசுகளோடு சண்டையிட வேண்டும். போராட்டமில்லாமல் குடிநீர் நம்மைத் தேடி வராது என்ற நிலையையும் அடைந்து விட்டோம்.


மதன்
நன்றி : த கார்டியன்