Monday, August 4, 2025
முகப்பு பதிவு பக்கம் 375

கஜா புயல் : விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் கிடைப்பதில் ஆயிரத்தெட்டு சிக்கல்கள் !

இந்த மரங்களை அப்புறப்படுத்த சில ஆயிரங்கள் செலவாகும்.

“மழை விட்டாலும் தூவானம் விடவில்லை” என்பதாக டெல்டா மாவட்டங்களில் கஜா புயலின் பாதிப்புகள் தொடர்கிறது. ஒரு தலைமுறை மக்கள் , பல தலைமுறை மக்கள் வாழ்வதற்கு உருவாக்கிய விவசாயத்தை ஆணி வேர்வரை அடியோடு சாய்த்து விட்டது கஜா புயல். இந்நிலையில் அரசு அறிவித்த அரைகுறை நிவாரணத்தை பெறுவதில் மக்களுக்கு ஆயிரத்தெட்டு சிக்கல்.

இது தொடர்பாக பலரிடம் பேசிய போது உண்மை நிலவரம் நமது கற்பனைக்கும் அப்பாற்பட்டது என்பது புரிந்தது. புயல் பாதித்த மாவட்ட பகுதிகளின் சேதத்தை கணக்கெடுக்கும் வேளாண்மைத்துறை அரசு அலுவலர் ஒருவரிடம் பேசினோம்.

கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு அரசு நிவாரணம் சரியான முறையில் மக்களுக்கு வந்து சேரலன்னு மக்கள் போராட்டம் பண்றாங்களே, என்னதான் நடக்குது?

“புயல் பாதித்த மாவட்டங்களில் பட்டியலிட மனம் ஒப்பாத வகையில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. உயிர் முதல் உடமை வரை பறிகொடுத்த மக்களுக்கு நாம் என்ன செய்து இழப்பை ஈடுகட்டிவிட முடியும். சமன்படுத்த முடியாத நிலையை பார்க்கும் போது போகும் இடமெல்லாம் ஒரு விவசாயியாக கண்கலங்கி நிற்கிறேன்.

பாதிப்பு பட்டியலில் விவசாயம் பெரும்பகுதி. அந்த விளைநிலத்தில் விஸ்வரூபமாக பாதித்தது என்றால் தென்னைதான் அதிகம். கடலோர விவசாய பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால் மாற்று விவசாயமாக தென்னை உருவாயிற்று. ஆனால், பல வருடமாக தென்னை விவசாயம் செய்து வரும் நிலங்களை பயிர் விவசாய நிலமாகவே அரசு பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

அது எப்படிங்க ஐயா, பல வருசமா செய்யும் விவசாயத்த பதிவு பண்ணாம இருக்க முடியும். அப்படின்னா பயிர் காப்பீடு திட்டத்துக்கு எந்த அடிப்படையில நஷ்டஈடு குடுப்பீங்க.?

ஒரு விவசாயப் பகுதியில் விவசாயம் செய்யப்பட்ட நிலத்தில் பொதுவான பாதிப்புகள் பெருவாரியாக ஏற்பட்டால் பாதித்த நிலத்தையும் அதன் அளவீட்டையும் வருவாய்த்துறையை சேர்ந்த வி.ஏ.ஓ அதிகாரி கணக்கெடுக்க வேண்டும். அந்தக் கணக்கெடுப்பு பகுதிக்குள் உட்பட்ட நிலத்தில் எத்தனை சதவீதம் பாதித்தது என்பதன் அளவீட்டை வேளாண்துறை அதிகாரி நாங்கள் சொல்ல வேண்டும். இதனடிப்படையில் நிவாரணம் வழங்கப்படும்.

நஞ்சை, புஞ்சை, தரிசு என நிலத்தின் வகையும் அதன் பயிர் வகை பற்றிய கணக்கும் வருவாய்த்துறை அதிகாரி வி.ஏ.ஓ-வின் அடங்கல் பதிவேட்டில் தான் இருக்கும். வாய்தா வரி வசூலிக்கும் போது நிலத்தின் பயிர் வகையினை மாற்றம் செய்திருக்க வேண்டும். ஆனால், பல இடத்தில் வேண்டுமென்றே பதிவு செய்யப்படாமல் இருக்கிறது.

படிக்க:
கஜா புயல் பாதித்த பகுதிகளைத் தாக்கும் நுண்கடன் நிறுவனங்கள் !
மோடியை கலாய்க்கும் ஹிந்து விரோதிகள் மீது எச்.ராஜா புகார்

பணப்பயிரை விட வருடத்திற்கு இருமுறை செய்யப்படும் பயிர் விவசாயத்தில் பாதிப்பு சேதம் அதிகம். நெல் போன்ற பயிர் விவசாயத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டால் வறட்சி வந்துவிடும். பருவகாலத்தில் ஏற்படும் அதிக மழையால் வெள்ளம் வந்துவிடும். இப்படி எந்த வகையில் பயிர் சேதம் ஏற்பட்டாலும் நிவாரணம் கிடைக்கும் என்பதால் மாற்று விவசாயத்தை பதிவு செய்யாமல் இருந்துள்ளனர்.

விவசாயிங்க நிவாரணத்துக்காக மாற்று விவசாய முறையை பதிவு பண்ணாமல் இருந்துருக்காங்கன்னு சொல்றீங்களா?

விவசாயிங்கள குத்தம் சொல்ல முடியாது. அவங்களுக்கு அரசு அறிவிக்கும் திட்டம் மட்டும் தான் தெரியும். அதில் உள்ள ஓட்டைகள் அதிகாரிகளுக்கு மட்டும் தான் தெரியும். பயிர் விவசாயம் பணப் பயிர் விவசாயமாக மாற்றப் படாமல் இருந்தால் வருடத்துக்கு ஓரிரு முறை வருமானம் வரலாம் என்பது அதிகாரிகள் மூலமாகத்தான் விவசாயிகளுக்கு போகும். விவசாயிக்கு என்ன தோணும்? முறையா வர்ற நிவாரணத்தையே முழுசா குடுக்க மாட்டாய்ங்க… சரி வந்த வரைக்கும் இலாபம் என இருக்க தோணும். இந்த வகையில் சில பெரும் விவசாயிகள் நடுத்தர விவசாயிகளுக்கு பலன் கிடைக்கும் சலுகையை வந்தவரை இலாபமென தெரிந்தே பதிவு செய்யாமல் இருந்துள்ளனர்.

ஆனால், வீட்டு அருகில் மட்டும் குறைவான எண்ணிக்கையில் மரம் வைத்திருந்தவர்களும் புஞ்சை நிலமான கட்டுமனை பகுதியில் மட்டும் மரம் வைத்துள்ளவர்களும் அரசு பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என்ற விபரம் தெரியாமல் இருந்துள்ளனர். இப்போது மரம் விழுந்து அதற்கு நிவாரணம் தருகிறார்கள் என்ற பிறகுதான் அதற்கான வழிமுறையே அவர்களுக்கு தெரிய வருகிறது.

விவசாய முறையை பதிவு பண்ணாத அல்லது கணக்கில் வராத பாதிப்புகள் எவ்வளவு இருக்கும்.?

இன்னும் சரியான கணக்கு வெளிவரவில்லை. இருபது முப்பது வருடம் தென்னை, மா, தேக்கு, என பணப்பயிர் விவசாயம் செய்த நிலங்கள் மூன்றில் ஒரு பங்கு கணக்கில் வரவில்லை. இது போக வரப்பில் உள்ள தென்னை, வீட்டு மனைகளில் உள்ள தென்னை, நத்தம் பொறம்போக்கு என சொல்லப்படும் தரிசு நிலத்தை அனுபவம் செய்து வளர்த்த தென்னை என எதுவுமே பதிவேட்டில் இல்லை.

இது போல் பல இடங்களில் கணக்கில் வராத மரங்கள் சாய்ந்துவிட்ட நிலையில் நிவாரண கணக்கெடுப்பில் பல சிக்கல் வருகிறது. வெளிய சொன்னா வெட்கக்கேடு, வேளாண்துறை, வருவாய்த்துறைன்னு ரெண்டு துறை இருந்துகொண்டு என்ன செஞ்சிங்கன்னு கேப்பாங்க. புயல் வந்துட்டு போயி ரெண்டு மாசம் முடிஞ்சுருச்சி கணக்க சரிகட்ட முடியாம எங்க துறையை சேந்தவங்க மண்ட காஞ்சு நிக்கிறோம். இப்போது ஏற்பட்டிருக்கும் இழப்பை எதனடிப்படையில் சரிசெய்வது என்று குழம்புகிறது அரசு நிர்வாகம்.

பத்து இருபது வருசமா தென்னை இருந்த நிலத்தை பயிர் நிலம் பாதித்ததுன்னு வருவாய்த்துறையும் இத்தன சதவீதம் பாதித்ததுன்னு வேளான்துறையும் கணக்கு எழுதிட்டு இப்ப குழப்பமா இருக்குதுன்னா எப்படி?

எப்படி இந்த தவறு நடந்துச்சுன்னு கேக்கிறீங்க புரியுது. எந்த துறைய சேந்த அதிகாரியக் கேட்டாலும் எனக்கு முன்ன இருந்தவரு பாத்த கணக்கதான் சார் நான் பாக்கிறேன்னு ஈசியா சொல்வாங்க. அதுக்கு மேல உள்ள போயி கேக்க முடியாது. ஏன்னா அதிகாரிகளுக்கு அந்தந்த ஊரு அரசியல் புள்ளிங்க தர்ர அழுத்தம் அப்படி. இப்ப எங்க துறைய பாத்தீங்கன்னா இத்தன சதவீதம் பாதித்த விவசாயத்துக்குதான் காப்பீட்டு தொகை தர வேண்டும் என்பது விதி. குறைவான பாதிப்பையும் நிவாரணத்துக்கு பரிந்துரைக்க வேண்டி கட்டாயப்படுத்துவாங்க. இதே போலதான் விவசாய திட்டத்தில் கிடைக்கும் நலனை பெறுவதற்காக இப்படியான தவறுகள் நடக்கிறது.

இந்த புயலை பொருத்தவரை வருவாய்த்துறை செய்த வேலையை (நில அளவீடு விவசாய முறை கணக்கெடுப்பு) வேளாண்துறையை செய்ய சொல்லிட்டாங்க. வருவாய்துறைக்கு (வி.ஏ.ஓவுக்கு) கால்நடை துறையை மாத்தி குடுத்துருக்காங்க. துறைகளை மாத்தி மாத்தி குடுத்ததனால் வசூல் வேட்டையில் துண்டு விழுந்துவிடும் என்பது அதிகாரிகளின் மனக்கவலை. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இருப்பதை இழந்துவிட்டு எதிர்காலம் என்னவென்று தெரியாமல் நிற்கும் விவசாயியை விட நிவாரணம் வருவதில் அதிகாரிகளுக்குதான் சந்தோசம்.” என்று முடித்தார் அந்த அலுவலர்.

ரசு துறையில் நடக்கும் ஊழலை ஒரு அரசு அலுவலரே வாக்குமூலமாக ஒப்புக்கொண்டார் என சொல்லலாம். இவர் பகிர்ந்து கொண்டதில் நிலம் வைத்துள்ள விவசாயிகளின் பாதிப்பும் அதற்காக அரசு கொடுக்கப்படும் நிவாரணத்தில் ஏற்படும் நிர்வாக பிரச்சனைகளும்தான் நிறைந்திருந்தது.  ஆனால், நிலமற்ற ஒரு கூலி விவசாயி எந்த சிட்டா அடங்கலை காண்பித்து வருவாய்துறை அடங்கலுக்குள் தன் கணக்கை கொண்டுவர முடியும்?

நாற்பது ஆண்டுகள் பின்னோக்கி போய்விட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை எந்த நிவாரணமும் ஈடு செய்து விட முடியாது. புயல் பாதித்த பகுதியில் விழுந்த மரத்தை வாங்குவதற்கு ஆள் இல்லை. ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமாக கொண்டு போட போக்குவரத்துக்கு செலவு செய்ய முடியவில்லை. பிணத்தைப் புதைப்பது போல் குழிதோண்டி புதைக்கிறார்கள் விவசாயிகள். ஆனால், அந்த பரிதாபத்தை தாண்டி அவர்களுக்கு நிலம் என்ற ஒரு உடமை இருக்கிறது. அதை வைத்திருப்பதால் மகிழ்ச்சியை விட சோகமே அவர்களிடம் நிறைந்திருக்கிறது.

அரசு நிவாரண கணக்கில் வராத ஒரு பிரிவு இருக்கிறது. விவசாயக் கூலிகள். இவர்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்ட விவசாய பிரிவினர். எதை ஆதாரமாகக் காட்டி இவர்கள் இழப்பீடு வாங்க முடியும். குத்தகைக்கும் கூலிக்கும் விவசாயம் பார்த்த இவர்கள் எதை முதலீடாக போட்டு முன்னுக்கு வர முடியும். அடுத்த நாள் சாப்பாட்டுக்கு கூலி வேலையை நம்பியிருந்தவர்கள் யாரிடம் போய் வேலை கேட்பார்கள். சூறையாடப்பட்ட விவசாய பூமியில் கூலி விவசாயிகள்தான் அகதிகளாக அவதிப்படுகிறார்கள்.

பட்டுக்கோட்டை கரிக்காடு கிராமத்தை சேர்ந்த கூலி விவசாயி மாரிமுத்து பெற்ற மகனை விற்றுள்ளார். புயலில் தன் குடிசை பாத்திரம் அனைத்தையும் இழந்துள்ளார். ஒரு மாத காலம் பசியும் பட்டினியுமாக மனைவி நான்கு குழந்தைகளுடன் வறுமைக்குள்ளானதால் இப்படி செய்ததாக கூறுகிறார்.

புயல் பாதித்த பகுதிகளில் அவசியம் கருதி அரசு அல்லாத தனிமனிதர்கள் அமைப்புகள் என மனிதநேயம் உள்ளவர்கள் உரிய நேரத்தில் அடிப்படை உதவிகளை அனைத்து மக்களுக்கும் செய்தனர். அரசை எதிர்பார்த்து காத்திருக்கும் கட்டாயத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கு நிர்வாக குளறுபடிகளை எடுத்துக் கூறி பட்டை நாமம் போட இருக்கிறது, அரசு. கஜா புயலின் பாதிப்புகளை பதிவு செய்வதற்கே முடியாத போது நம் விவசாயிகளை எப்படிக் காப்பாற்ற முடியும்? மனிதாபிமானத்தோடு உதவி செய்த அனைவரும் மனிதாபிமானமற்று இருக்கும் இந்த அரசை எதிர்த்து போராட வேண்டும். உண்மையில் இதுதான் நமது விவசாயிகளுக்கு செய்ய வேண்டிய அவசரமான உதவி!

– வினவு செய்தியாளர்.


 

தொடரும், மக்கள் அதிகாரம் அமைப்புத் தோழர்களின் நிவாரணப் பணிகள் !

ஜா புயலால் பாதிக்கப்பட்ட வேதாரண்யம் வட்டம் நாகை மாவட்டம் தாணிக்கோட்டகம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு அப்பகுதி மக்கள் அதிகார தோழர்களும் இளைஞர்களும் ஆசிரியர்களும் இணைந்து மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் – எழுதுபொருட்கள் வழங்கினர்.

தகவல்: மக்கள் அதிகாரம், வேதாரண்யம்.

இதையா விசாரணை என்கிறீர்கள் ? இவர்களா தீர்ப்புக் கூறப் போகிறார்கள் ?

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 54

மாக்சிம் கார்க்கி
சிஸோவ் பெஞ்சில் உட்கார்ந்தவாறே ஏதோ வாய்க்குள் முனகிக்கொண்டான்.

“என்ன விஷயம்?” என்று கேட்டாள் தாய்.

“ஒன்றும் பிரமாதமில்லை. ஜனங்கள் முட்டாள்கள்….” மணி அடித்தது.

“அமைதி, ஒழுங்கு!”

எல்லோரும் மீண்டும் ஒருமுறை எழுந்து நின்றார்கள். நீதிபதிகள் ஒவ்வொருவராக வந்து தத்தம் ஆசனங்களில் அமர்ந்துகொண்டார்கள். கைதிகளையும் அவர்கள் இடத்துக்குக் கொண்டுவந்து சேர்த்தார்கள்.

“கவனி!” என்று ரகசியமாகக் கூறினான் சிஸோவ். ”அரசாங்க வக்கீல் பேசப் போகிறார்.”

தாய் தன் உடம்பு முழுவதையும் முன்னால் தள்ளிக் குனிந்து கொண்டு, ஏதோ ஒரு பயங்கரத்தைப் புதிதாக எதிர்பார்ப்பதுபோல் ஆர்வத்தோடு கவனித்தாள்.

அரசாங்க வக்கீல் நீதிபதிகளுக்கு ஒரு பக்கமாக எழுந்து நின்று மேஜை மீது ஒரு கையை ஊன்றியவாறு அவர்களைப் பார்த்துத் திரும்பினார். ஒரு பெருமூச்சோடும், வலது கையின் வீச்சோடும் அவர் பேசத் தொடங்கினார். அவரது பேச்சின் ஆரம்பத்தைத் தாயால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவரது குரல் கனத்து மெதுவாக, ஆனால் ஒழுங்கற்று, சமயங்களில் துரிதமாகவும் சமயங்களில் மந்தமாகவும் ஒலித்தது. சிறிது நேரத்துக்கு அவரது பேச்சு மெதுவாகவும் ஆயாசத்தோடும், சிரமத்தோடும் ஒலித்தது. திடீரென்று அந்தப் பேச்சு கும்மென்று இரைந்தெழுந்து சர்க்கரைக் கட்டியை மொய்க்கும் ஈக்கூட்டத்தைப்போல் ரீங்காரித்து விம்மியது. அந்தப் பேச்சில் எந்தக் கெடுதியும் இருப்பதாகத் தாய்க்குத் தோன்றவில்லை. அந்த வார்த்தைகள் பனியைப் போலக் குளிர்ந்தும், சாம்பலைப் போலக் கறுத்தும், கவிந்து குவிந்து மூடும் தூசியைப் போல் அந்த அறையில் கொஞ்சங் கொஞ்சமாக விழுந்து நிரம்பிக் கொண்டிருந்தன. வார்த்தை அலங்காரமும், உணர்ச்சியின் வறட்சியும் கொண்ட அந்தப் பேச்சு பாவெலையும் அவனது தோழர்களையும் கொஞ்சம் கூடத் தொட்டதாகத் தெரியவில்லை. எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. அவர்கள் தம் பாட்டுக்கு உட்கார்ந்து அமைதியாகவும், நிதானமாகவும் தமக்குள் பேசிக்கொண்டார்கள்; புன்னகை புரிந்தார்கள்; பொங்கி வரும் சிரிப்பை மறைப்பதற்காக முகத்தைச் சுழித்துக்கொண்டார்கள்.

”அவன் பொய் சொல்கிறான்!” என்றான் சிஸோல்.

அவள் அதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை. அவள் அரசாங்க வக்கீலின் பேச்சையே கேட்டுக்கொண்டிருந்தாள்; அவர் எல்லாக் கைதிகளையுமே பாரபட்சமில்லாமல் சகட்டுமேனிக்குக் குற்றம் சாட்டிப் பேசுவதை அவள் உணர்ந்தறிந்தாள். பாவெலைப் பற்றிப் பேசிய பின் பியோதரைப் பற்றியும் பேசினார். பியோதரைப் பற்றிய பேச்சை முடிக்கப்போகும் தருணத்தில், புகினைப் பற்றிய பேச்சைத் தொடங்கினார். இப்படியாக அவர்கள் அனைவரையும் ஒரே கோணிச் சாக்குக்குள் பிடித்துத் தள்ளி மூட்டை கட்டுவதுபோல் இருந்தது அவரது பேச்சு. ஆனால் அந்தப் பேச்சின் வெளி அர்த்தத்தைக் கண்டு அவளுக்குத் திருப்தி ஏற்படவில்லை. அந்த மேலோட்டமான அர்த்தபாவம் அவளைத் தொடவும் இல்லை; கலக்கமுறச் செய்யவும் இல்லை. அவள் இன்னும் ஏதோ ஒரு பெரிய பயங்கரத்தை எதிர்பார்த்தாள், அந்தப் பயங்கரத்தை அந்த வார்த்தைகளின் உள்ளர்த்தத்திலும், அரசாங்க வக்கீலின் முகத்திலும், கண்களிலும், குரலிலும், லாவகமாக வீசி விளாசும் அவரது வெள்ளைக் கரத்திலும் துருவித் துருவித் தேடிக்கொண்டிருந்தாள். இருந்தாலும் அதில் ஏதோ பயங்கரமிருப்பதாகத் தோன்றியது. அதை அவள் உணர்ந்தாள். எனினும் அதை அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை; அதை உருவாக்கிக் காண முடியவில்லை. அவளது இதயம் எப்படித்தான் எச்சரித்த போதிலும் அவளால் அதை இனம் காணமுடியவில்லை.

அவள் நீதிபதிகளைப் பார்த்தாள். அந்தப் பேச்சைக் கேட்டு அவர்கள் அலுத்துப் போய்விட்டார்கள் என்பது சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெளிவாகத் தெரிந்தது. அவர்களது உயிரற்ற சாம்பல் நிற, மஞ்சள் மூஞ்சிகளில் எந்தவித உணர்ச்சியுமே பிரதிபலிக்கவில்லை. அரசாங்க வக்கீலின் பேச்சு கண்ணுக்குத் தெரியாத ஒரு பனி மூட்டத்தைப் பரப்பியது. அந்தப் பனிமூட்டம் நீதிபதிகளின் மீது அடர்ந்து கவிந்தது. அலுப்போடும் வேண்டா வெறுப்போடும் காத்திருக்கும்படி, அவர்களை நிர்ப்பந்தித்தது. பிரதம நீதிபதி தமது ஆசனத்திலேயே உறைந்து போய்விட்டார். இடையிடையே எப்போதாவது மட்டும் அவரது கண்ணாடிக்குள்ளாகத் தெரியும் கரும்புள்ளிக் கண்கள் உணர்ச்சியற்று அகல விரிந்து மூடின.

இந்த மாதிரியான உயிரற்ற வெறுப்புணர்ச்சியையும், உணர்ச்சியற்ற பற்றின்மையையும் கண்டு தனக்குள் தானே கேட்டுக்கொண்டாள்.

“இவர்களா தீர்ப்புக் கூறப் போகிறார்கள்?”

இந்தக் கேள்வி அவளது இதயத்தை குன்றிக் குறுகச் செய்தது. அவளது இதயத்திலிருந்த பய பீதியைப் பிதுக்கி வெளித்தள்ளி, வேதனை தரும் அவமான உணர்ச்சியைக் குடி புகுத்தியது.

அரசாங்க வக்கீலின் பேச்சு எதிர்பாராதவிதமாகத் திடீரென நின்றுவிட்டது. அவர் விருட்டென இரண்டடி முன்னால் வந்து நீதிபதிகளுக்கு வணக்கம் செலுத்தினார்; தமது கைகளைத் தேய்த்துக் கொடுத்துக்கொண்டே உட்கார்ந்தார். பிரபுவம்சத் தலைவர் அவரைப் பார்த்துத் தலையை ஆட்டி, கண்களை உருட்டி விழித்தார். நகர மேயர் அவரோடு கை குலுக்குவதற்காகத் தம் கரத்தை நீட்டினார்; ஜில்லா அதிகாரி தமது தொந்தியையே பார்த்தார்; லேசாகப் புன்னகை புரிந்து கொண்டார்.

ஆனால் நீதிபதிகளோ இந்தப் பேச்சினால் எந்தவிதத்திலும் மகிழ்வுற்றதாகத் தெரியவில்லை. அவர்கள் அசையாது உட்கார்ந்திருந்தார்கள்.

அந்தக் கிழ நீதிபதி தம் முகத்துக்கு நேராக ஒரு காகிதத்தை உயர்த்திப் பிடித்துப் பார்த்தவாறே பேசினார். “இப்பொழுது பெதசெயெவ், மார்க்கவ், சகாரவ் மூவர் தரப்பு வக்கீலும் பேசலாம்.”

நிகலாயின் வீட்டில் தாய் பார்த்திருந்த அந்த வக்கீல் எழுந்து நின்றார். சுமூகமான தோற்றம் கொண்ட பரந்த முகமும், சிவந்த புருவங்களுக்குக் கீழாகத் துருத்தி நின்று, இரு கத்தி முனைகளைப் போல் பளபளத்து. கத்திரியைப்போல் எதையும் வெட்டித் தள்ளி நோக்கும் சிறு கண்களும் கொண்டிருந்தார் அவர். அவர் உரத்த குரலில் தெளிவாக நிதானமாகப் பேசினார். எனினும் அவரது பேச்சையும் தாயால் உணர்ந்து புரிந்துகொள்ள முடியவில்லை.

”அவர் சொன்னது புரிகிறதா?” என்று அவள் காதில் ரகசியமாகக் கேட்டான் சிஸோவ். “புரிகிறதா? அந்தக் கைதிகளெல்லாம் மிகவும் மனமுடைந்து போய் நினைவிழந்து போனதாகக் கூறுகிறார். பியோதரைத்தான் சொல்லுகிறாரோ?”

அவளது மனத்தில் நிரம்பியிருந்த அதிருப்தி உணர்ச்சியால் அவளால் பதில் கூடக் கூற முடியவில்லை. அவளது அவமான உணர்ச்சி விரிந்து பெருகி, இதயத்தையே ஒரு பெரும் பாரத்தோடு அழுத்திக் கொண்டிருந்தது. தான் ஏன் நியாயத்தை எதிர்பார்த்தாள் என்பது பெலகேயாவுக்கு அப்போதுதான் தெளிவாயிற்று. தன்னுடைய மகனது சத்தியத்தை, அந்த நீதிபதிகளின் நியாய சத்தியத்துக்கு எதிராக நேர்மையோடு துல்லியமாக எடை போடுவதைக் காண முடியும் என்று அவள் எதிர்பார்த்தாள். அந்த நீதிபதிகள் அவன் இப்படிச் செய்வதற்குரிய காரண காரியங்களைப் பற்றி, அவனது சிந்தனைகளையும் செயல்களையும் கூர்ந்து கவனித்து அவனைச் சரமாரியாக, இடைவிடாது, கேள்விகள் கேட்பார்கள் என்று அவள் எதிர்பார்த்தாள். அவன் கூறுவதைக் கேட்டு, அதன் உண்மையை அவர்களும் கண்டறிந்து, உற்சாகத்தோடு உரத்த குரலில் “இவன் சொல்வதுதான் உண்மை!” என்று நியாயபூர்வமாகச் சொல்லிவிடுவார்கள்!” என்றும் எதிர்பார்த்தாள்.

அந்த அறை முழுவதும் ஒரு புத்துணர்ச்சி பரவிக் கலகலத்தது. குத்தலான வார்த்தைகளால் அந்த வக்கீல் அந்த நீதிபதிகளின் தடித்த உணர்ச்சிகளைக் கிளறிவிட்டபோது, ஜனக் கூட்டத்திடையே ஓர் ஆக்கிரமிப்புச் சக்தி கட்டிழந்து பரவுவதுபோல் தோன்றியது.

ஆனால் அவள் எதிர்பார்த்தது எதுவுமே நடக்கவில்லை விசாரணைக்காகக் கொண்டுவந்து நிறுத்தப்பட்டிருக்கும் அந்தக் கைதிகளுக்கும் அந்த நீதிபதிகளின் கண்ணோட்டத்துக்கும் வெகுதூரம் என்றே தோன்றியது. மேலும் அந்த நீதிபதிகளை அந்தக் கைதிகள் ஒரு பொருட்டாக மதித்ததாகவும் தோன்றவில்லை. ஆயாசத்தினால், தாய்க்கு அந்த விசாரணையிலேயே அக்கறையற்று அலுத்துப் போய்விட்டது. அங்கு ஒலிக்கும் பேச்சுக்களைக் கேட்காமல் அவள் தனக்குத்தானே கூறிக்கொண்டாள்:

“இதையா விசாரணை என்கிறீர்கள்?”

“அவர்களுக்கு வேணும்!” என்று அதை ஆமோதித்து ரகசியமாகக் கூறினான் சிஸோவ்.

இப்போது வேறொரு வக்கீல் பேசிக்கொண்டிருந்தார். அவர் ஏளனபாவத்தோடு துடிப்பாகத் தோன்றும் வெளுத்த முகம் கொண்ட குட்டை ஆசாமி. அவரது பேச்சில் நீதிபதிகள் அடிக்கடி குறுக்கிட்டுப் பேசினார்கள்.

அரசாங்க வக்கீல் கோபத்தோடு துள்ளி எழுந்து, ஏதோ ஒரு நியாய ஒழுங்கைச் சுட்டிக் காட்டினார். உடனே அந்த ஆட்சேபணையைக் கிழ நீதிபதி ஏற்றுக்கொண்டார். பிரதிவாதித் தரப்பு வக்கீல் அவர் கூறியதைத் தலைவணங்கி மரியாதையோடு கேட்டுக்கொண்டு, தமது பேச்சை மேலும் தொடங்கினார்.

”விடாதே. அடி முடி காணும் வரையிலும் விடாதே!” என்று சொன்னான் சிஸோவ்.

அந்த அறை முழுவதும் ஒரு புத்துணர்ச்சி பரவிக் கலகலத்தது. குத்தலான வார்த்தைகளால் அந்த வக்கீல் அந்த நீதிபதிகளின் தடித்த உணர்ச்சிகளைக் கிளறிவிட்டபோது, ஜனக் கூட்டத்திடையே ஓர் ஆக்கிரமிப்புச் சக்தி கட்டிழந்து பரவுவதுபோல் தோன்றியது. நீதிபதிகள் ஒருவருக்கொருவர் நெருங்கிக்கொண்டு, அந்த வக்கீலின் வாசகத்தால் தமக்கு ஏற்படும் வேதனை உணர்ச்சியைத் தாங்கிக்கொண்டு உம்மென்று முறைத்துக்கொண்டிருந்தார்கள்.

பாவெல் எழுந்திருந்தான். திடீரென அந்த அறை முழுவதிலும் அமைதி நிலவியது. தாய் தன் உடம்பை முன்னால் தள்ளிக்கொண்டு பார்த்தாள். பாவெல் மிகுந்த அமைதியோடு பேசத் தொடங்கினான்.

படிக்க:
ரஜினி படம் குறித்து வாய் திறக்க மாட்டேன் ! அம்பலப்பட்ட எச். ராஜா ! மரணமாஸ் ஆடியோ !
என்னுடைய நம்பிக்கை நொறுங்கிய நிலையில் இருக்கிறேன் : ஆனந்த் தெல்தும்ப்டே கடிதம்

”கட்சியின் அங்கத்தினன் என்ற முறையில், நான் என் கட்சியின் தீர்ப்பைத்தான் அங்கீகரிக்கிறேன். எனவே என் குற்றமின்மையைப் பற்றி எதுவுமே பேசத் தயாராயில்லை. ஆனால், என் தோழர்களின் வேண்டுகோளுக்காக, என்னைப்போலவே தங்கள் சார்பிலும் வாதாட மறுத்துவிட்ட தோழர்களின் வேண்டுகோளுக்காக, நீங்கள் புரிந்துகொள்ளாத சில விஷயங்களை நான் விளக்கிச் சொல்ல முயல்கிறேன். சோஷல் – டெமாக்ரஸி என்ற பெயரால் எங்கள் இயக்கம் ஆட்சி அதிகாரத்துக்கு எதிராகக் கிளர்ச்சி செய்கிறது என அரசாங்க வக்கீல் குறிப்பிட்டார். நாங்கள் அனைவருமே ஜார் அரசனைக் கவிழ்க்க முயலும் கூட்டத்தார் என்றே அவர் எங்களைப் பற்றி எப்போதும் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். ஆனால் உங்களுக்கு நான் ஒரு விஷயத்தைத் தெளிவாக்கிவிட வேண்டும். மன்னராட்சி ஒன்றே ஒன்று மட்டும்தான் நமது நாட்டினைப் பிணைத்துக் கட்டியிருக்கும் விலங்கு என்று நாங்கள் கருதவில்லை. ஆனால், அதுதான் முதல் விலங்கு; அதுதான் நம் கைக்கு விரைவில் எட்டக்கூடிய விலங்கு; அந்த விலங்கைத் தறித்து மக்களை விடுவிக்க வேண்டியது எங்கள் கடமை.”

அவனது உறுதிவாய்ந்த குரலின் ஓங்காரத்தால் அந்த அறையின் அமைதி மேலும் அழுத்தமாகத் தோன்றியது. அந்த அறையின் சுவர்களே பின்வாங்கி விசாலம் அடைவது போலத் தோன்றியது. உயர்ந்ததொரு இடத்துக்குச் சென்றுவிட்டவனைப்போல் பாவெல் காட்சி அளித்தான்.

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

 

கல்வி – வேலை வாய்ப்பு : விவாதத்தை திசைதிருப்பும் ஊடகங்கள் !

அருண் கார்த்திக்
மீபத்தில் பொது பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு என்று சொல்லி அதற்கான சட்டம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டபொழுது அதை ஒட்டி பல விவாதங்கள் நடந்தன. பாராளுமன்றத்திலும், சமூக வலைதளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் விவாதங்கள் நடந்தன. இந்த விவாதங்களில், இட ஒதுக்கீடு என்பது சமூக நீதிக்காக கொண்டுவரப்பட்டது; 8 லட்சம் வருமானம் என்பது நகைப்புக்குரியது; இந்த நடவடிக்கை எந்தவித ஒரு கள ஆய்வும் செய்யாமல் எடுக்கப்பட்டுள்ளது; இந்த நடவடிக்கை தேர்தலுக்காக பிஜேபி-யால் கொண்டுவரப்பட்டது என்பன போன்ற பல அலைவரிசைகளில் விவாதங்கள் நடந்தன.

இவை அனைத்தும் முக்கியமான விவாதங்களே. ஆனால், இந்த 10% நடவடிக்கையை பற்றி விவாதிக்க துவங்கும் முன் இதுவரை அரசு பணிகள் எவ்வாறு நிரப்பப்பட்டு வந்துள்ளன என்பது பற்றி நாம் புரிந்துகொள்வது அவசியம்.

இருக்கும் வேலைகள் எவ்வாறு நிரப்பப்படுகின்றன, நிரப்பப்படுகின்றனவா, என்பது எல்லாம் தெரிந்தால்தான் அந்த வேலைகளில் இட ஒதுக்கீடு பற்றி நாம் பேச முடியும்.

NDTV-இந்தி செய்தி சேனலில் ‘Prime Time with Ravish Kumar’ என்ற ஒரு நிகழ்ச்சி உண்டு. ரவீஷ் குமார் என்னும் செய்தியாளர் / தொகுப்பாளர்  நடத்தும் நிகழ்ச்சி. வட மாநிலங்களில் அரசு பணிகளை நிரப்பும் தேர்வாணையங்கள் பற்றி ‘Job series’, கல்லூரிகள் இயங்கும் விதம் பற்றி ‘college series’, வங்கிகளில் வேலைசெய்பவர்கள் பற்றி ‘bank series’, என்று தொடர் நிகழ்ச்சிகளை நடத்தினார். இவை அனைத்தும் போலி விவாதங்களை தவிர்த்து உண்மையான கள நிலவரத்தைப் பற்றி பேசின.

இந்த நிகழ்ச்சியில் வந்த தகவல்கள் அனைத்தும் மிக முக்கியமானவை, நாம் தெரிந்துகொள்ளவேண்டியவை. இந்த 10% விவாதத்துக்கு சம்மந்தமானவையும் கூட.

மேலும்,  முன்னுரையை நீட்டிக்காமல், 19 டிசம்பர் 2018 அன்று ரவீஷ் குமார் நிகழ்ச்சியில் வந்த சில தகவல்களை மட்டும் கீழே தருகிறேன். இதில் இருந்து 10% பற்றி நமது புரிதலை நாம் ஏற்படுத்திக்கொள்ள முடியும். (19 டிசம்பர் அன்று ஒளிபரப்பான நிகழ்ச்சி மேலே கூறிய எந்த வகையான தொடரும் அல்ல, இது அவர் வழக்கமாக தினமும் நடத்தும் பொதுவான நிகழ்ச்சி).

(கீழே உள்ள தகவல்களும் பல கருத்துகளும் ரவீஷ் சொல்பவை, என்னுடையவை சிலதே)

♠ ♠ ♠ 

மண்ணின் மைந்தர்களுக்கு முன்னுரிமை:

2018-ல் முதல்வர் பதவியேற்ற கமல்நாத் மத்திய பிரதேசத்தில் உள்ள வேலைகளை உத்தர பிரதேசம், பீகார் மாநில இளைஞர்கள் எடுத்துக்கொள்கிறார்கள் என்றும், அதை சரி செய்ய 80% வேலைகளை மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்களுக்கே வழங்க வழிசெய்ய உள்ளதாகவும் கூறினார். பல பாஜக தலைவர்கள் இதை கண்டித்தனர். டிவிக்களில் இதை பற்றி சூடுபறக்கும் விவாதங்கள் நடந்தன. டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அரசியல்வாதிகள், உ.பி. பீகார் இளைஞர்களுக்காக மிகவும் கோவப்பட்டார்கள். உ.பி., பீகார் இளைஞர்களா இல்லை மத்திய பிரதேச இளைஞர்களா, யார் முக்கியம் என்கிற தொனியில் விவாதங்கள் நடந்தன.

கமல்நாத்.

கமல்நாத் போலவே, ‘உத்தரபிரதேசத்தில் உள்ள வேலைகளில் 90% அம்மாநில இளைஞர்களுக்கே கிடைக்கும்படி வழிவகைகள் செய்யப்படும்’ என்று 2017 உத்தர பிரதேச தேர்தல் அறிக்கையில் பாஜக வாக்குறுதி அளித்தது. இந்த நடவடிக்கை பாஜக உத்தர பிரதேசத்தில் ஆட்சி அமைத்து 90 நாட்களில் மேற்கொள்ளப்படும் என்றும், ஆட்சி அமைத்து 90 நாட்களில் ஏற்கனவே காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்பும் பணிகள் துவங்கப்படும் என்றும், தேர்தலுக்கு முன் நடந்த கூட்டம் ஒன்றில் அமித்ஷா தெரிவித்தார்.

இப்படி மாறி மாறி உத்திரவாதங்கள் தருவது ஒரு பக்கம் என்றால் உண்மையில் களத்தில் நடப்பது முற்றிலும் வேறு மாதிரி உள்ளது.

நிரப்பப்படாத ஆசிரியர் பணியிடங்கள் :

உத்தர பிரதேசத்தில், 12,460 முதல் நிலை பள்ளி ஆசிரியர் பணிகளுக்கான விளம்பரம் வெளியாகி மார்ச் 2016-ல் கவுன்சிலிங்கும் முடிந்துவிட்டது. 30 மார்ச் 2017-ல் அவர்களுக்கு நியமன உத்தரவு கிடைக்கவேண்டியது. ஆனால் அதற்குள் மார்ச் 2017-ல் அகிலேஷ் யாதவ் ஆட்சி போய் ஆதித்யநாத் ஆட்சிக்கு வந்துவிட்டார். புதிதாக பதவி ஏற்ற ஆதித்யநாத் இந்த தேர்வையே மறு பரிசீலனை செய்வதாக கூறி நியமனங்களை நிறுத்திவைத்தார். மறு பரிசீலனை என்று சொல்லி ஒரு வருடம் ஆன பிறகும் எதுவும் நடக்கவில்லை.

இந்த ஒரு ஆண்டில் ஆசிரியர் பதவிக்கு தேர்வானவர்கள் முதல் அமைச்சர், துணை முதல்வர், அமைச்சர்கள் என்று பலரையும் சந்தித்து தங்களது நிலைமையை தெரிவித்தும் எதுவும் நடக்கவில்லை. மார்ச் 2018-ல் உத்தர பிரதேச பாஜக அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். அமைச்சரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இருந்தாலும், 90 நாட்களில் இடங்கள் நிரப்பப்படும் என்ற பாஜக -வின் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. நீதி மன்றத்தின் அறிவுறுத்தலுக்கு பின் சிலருக்கு, சுமார் 1000 பேருக்கு, நியமன உத்தரவு கிடைத்தது. ஆனால், டிசம்பர் 2018 வரை பல்லாயிரம் பேருக்கு தேர்வு நடந்து முடிவுகள் வெளிவந்த பிறகும் நியமன உத்தரவுகள் வழங்கப்படவில்லை.

இவ்வாறு தேர்வு நடந்து கவுன்சிலிங்கும் முடிந்து 2 ஆண்டுகள் ஆகியும், சுமார் 11000 பேருக்கு நியமனங்கள் நடக்காதது பற்றி எந்த அரசியல் தலைவரும் அறிக்கை வெளியிட்டது போலவோ அல்லது போராட்டம் நடத்தியது போலவோ தெரியவில்லை. தேர்தல் சமயங்களில் மக்களின் கவனத்தை திருப்பவே இவ்வாறு வேலைவாய்ப்பில் அக்கறை உள்ளவர்கள் போல நாடகமாடுகின்றனர். இந்து – முஸ்லீம், உ.பி. – பீகார் போன்ற இருமைகளில் விவாதங்கள் நடக்கும்படியும் பார்த்துக்கொள்கின்றனர். இவ்வாறு விவாதங்களை நடக்க வைத்து களத்தில் இருக்கும் உண்மை நிலவரம் பற்றி எந்த பேச்சும் நடக்காதவண்ணம் பார்த்துக்கொள்கின்றனர்.

உ.பி.யில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாடு.

அனைத்து மாநில அரசுகளும் முதலீட்டாளர்கள் மாநாடு என்ற பெயரில் வருடா வருடம் மாநாடு நடத்தி முதலாளிகளுக்கு பல சலுகைகளை வழங்குகின்றன. இந்த மாநாடுகளில் பல கோடிகளுக்கு முதலீடு செய்ய ஒப்பந்தம் ஆகி உள்ளதாகவும் அதன் மூலம் பல ஆயிரம் வேலை வாய்ப்புகள் கிடைக்கப்போவதாகவும் அறிக்கைகள் வெளியாகின்றன. உண்மையில் எவ்வளவு முதலீடுகள் வந்தன, எவ்வளவு வேலைவாய்ப்புகள் கிடைத்தன என்பன போன்ற தகவல்கள் வெளியிடப்படுவது இல்லை.

இவ்வாறு நடந்த ஒரு முதலீட்டாளர் மாநாட்டில், குஜராத்தில் உருவாகும் வேலை வாய்ப்புகளில் 90% குஜராத் மக்களுக்கு தான் வழங்க வேண்டும் என்று முதல்வர் விஜய் ரூபாணி உத்தரவிட்டார். இதே போல் உத்தரவுகளை கர்நாடகா, இமாச்சல பிரதேசம் போன்ற அரசுகளும் கடை பிடிக்கின்றன. இதில் காங்கிரஸ் பாஜக, இரண்டு அரசுகளும் அடக்கம்.

பணமதிப்பழிப்பின் தாக்கம்:

ஆனால், எந்த அரசும் இவ்வாறான விதிகளின் மூலம் மாநில இளைஞர்கள் எவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது என்ற தகவலை வெளியிடுவது இல்லை. எந்த தகவலும் இல்லாவிட்டாலும் ஒவ்வொருமுறையும் இந்த விதிகள் புதிதாக அறிவிக்கப்படும்பொழுதோ அல்லது மாற்றப்படும்பொழுதோ இந்து-முஸ்லீம், உபி-பீகார், மகாராஷ்டிரா-இந்திவாலா என்பன போன்ற டிவி விவாதங்களில் உணர்ச்சி பொங்க கட்சிகளை சேர்ந்தவர்கள் பேசுகின்றனர். அவர்கள் நோக்கம் உணர்வுகளை தூண்டி ஓட்டுகளை வாங்குவதே தவிர வேலை கிடைப்பது அல்ல. டிவியில் நடக்கும் விவாதங்களை மட்டும் பார்த்தால் நமக்கு உண்மை என்னவென்று தெரியாது. செய்திகளை தெரிந்துகொள்கிறோம் என்கிற மாயையில் மட்டுமே வாழ்ந்து கொண்டிருப்போம்.

2-3 நாட்களுக்கு முன்பு ஒரு செய்தி வெளியானது. பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு வணிகர்கள், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களில் 35 இலட்சம் வேலைகள் காணாமல் போய்விட்டன என்று அனைத்திந்திய உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 34 ஆயிரம் உற்பத்தியாளர்களிடம் நடத்திய கணக்கெடுப்பின் அடிப்படையில் அறியப்பட்ட தகவல் இது. அதாவது, பண மதிப்பு நடவடிக்கைக்கு பிறகு நாடு முழுவதும் 35 இலட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். ஒவ்வொருவரும் ஒரு குடும்பத்தை சேர்ந்தவராக இருந்து, ஒவ்வொரு குடும்பத்திலும் 3 உறுப்பினர்கள் என்று வைத்துக்கொண்டால் சுமார் 1 கோடி பேருக்கு அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை எதாவது டிவி விவாதங்களில் இதை பற்றி பேசி உள்ளார்களா? உபி-பீகார் விவாதம், இந்து-முஸ்லீம் விவாதம் போன்ற விவாதங்கள் மூலம் மக்களின் உணர்வுகளை தூண்ட மட்டுமே டிவி விவாதங்கள் பயன்படுத்தப் படுகின்றன. எந்த ஒரு தலைவரும், காங்கிரஸ் பாஜக யாரும், இதைப் பற்றி பேசவில்லை.

தனியார் வேலைவாய்ப்புகளை விட்டுவிடுவோம், பல ஆயிரக்கணக்கான அரசு வேலை வாய்ப்புகளின் நிலைமையும் மேலே கூறிய வேலைகளின் நிலைமை தான்.

உஜ்வல் தாஸ் என்பவர் 17 டிசம்பர் அன்று இறந்துவிட்டார். போலீஸ் தடியடியில் காயங்கள் ஏற்பட்டு சிகிச்சை பலன் இல்லாமல் இறந்துவிட்டார். 16 டிசம்பர் அன்று ஜார்கண்டில் உள்ள ஜும்கா என்ற இடத்தில மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சரின் வீட்டுக்கு வெளியில் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த கஞ்சன் தாஸ் என்பவரும் இறந்து போனார்.

கஞ்சன் கடந்த 10 ஆண்டுகளாக ஜார்கண்டில் தற்காலிக ஆசிரியராக இருந்தார். இறப்பதற்கு முந்தய நாள் போராட்டம் தொடரவேண்டும் என்பதற்காக தன்னுடைய சகாக்களுக்காக கஞ்சன் அரிசி வாங்கிவந்திருந்தார். உஜ்வல் மற்றும் கஞ்சன் போலவே பகதூர் தாக்குர், ஜீத்தன் காத்துன் ஆகியோரும் இதே சமயத்தில் மரணமடைந்தனர். இவர்கள் அனைவரும் 15 நவம்பர் அன்று நடந்த போலீஸ் தடியடியில் அடி வாங்கியவர்கள்.

இந்த தற்காலிக ஆசிரியர்கள் கடந்த 10, 15 ஆண்டுகளாக ஆசிரியப் பணி புரிந்து வருகின்றனர். அவர்களுடைய வேலை நிரந்தரம் ஆக வேண்டும், நல்ல ஊதியம் கிடைக்க வேண்டும் என்பதுதான் அவர்களுடைய எதிர்பார்ப்பு. அதற்காகதான் போராட்டம். ஜார்கண்டில் மட்டும் சுமார் 68,000 தற்காலிக ஆசிரியர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் 10, 15 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகின்றனர். வேலையை நிரந்தரம் ஆக்கக்கோரி பல வருடங்களாக பல முறை பல போராட்டங்களை நடத்திவிட்டார்கள்!

இவர்களை பற்றி எந்த டிவி விவாதங்களும் பேசுவது இல்லை, யாரும் உணர்ச்சிவசப்படுவதும் இல்லை. எந்த அரசியல்வாதியும் இதைப் பற்றி பேசுவது இல்லை. எதிர்க்கட்சியாக இருக்கும்போது பேசுகின்றனர், ஆட்சி கிடைத்ததும் பேசுவதை நிறுத்திவிடுகின்றனர். ஆட்சி கிடைப்பதற்காக பேசுகிறார்களோ?

அகிலேஷ் யாதவ்.

மேலே கூறிய தகவல்தான். 2016-ல் அகிலேஷ் யாதவ் முதல்வராக இருந்த பொழுது 12,640 முதல்நிலை (primary) ஆசிரியர் பணிகளுக்கான தேர்வு நடத்தி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், அதன் பின்பு ஆட்சிக்கு வந்த ஆதித்யநாத் அரசு இந்த தேர்வு ஒழுங்காக நடைபெறவில்லை என்று கூறி முடிவுகள் செல்லாது என்று அறிவித்துவிட்டு, 2016-இல் அகிலேஷ் யாதவ் ஆட்சியில் 12,640 முதல்நிலை ஆசிரியர்களை தேர்வு செய்ததை செல்லாது என்று அதற்குப் பின் 2018-ல் ஆட்சிக்கு வந்த ஆதித்யநாத் அரசு சொன்னது; தேர்வு ஒழுங்காக நடைபெறவில்லை என்பதுதான் காரணமாக கூறப்பட்டது. இப்படி சொன்ன ஆதித்யநாத் அரசு, 2018-ல் சுமார் 70 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்காக  புதிதாக தேர்வு நடத்தியது. 2018 செப்டம்பர் மாதம் உ.பி.-யில் ஒரு போராட்டம் நடந்தது. போராட்டம் நடத்தியவர்கள் ஆதித்யநாத் அரசாங்கம் நடத்திய முதல்நிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு எழுதியவர்கள்.

முன்பு நடந்த தேர்வு ஒழுங்காக நடைபெறவில்லை என்று கூறி புதிதாக ஆதித்யநாத் அரசு நடத்திய தேர்வு எவ்வாறு இருந்தது என்று பார்ப்போம்.

தேர்வு எழுதியவர்களில் ஒருவரான அங்கித் வர்மா 122 மதிப்பெண் எடுத்தும் பெயில் ஆக்கப்பட்டார். தேர்வு முடிவுகள் வந்தபொழுது அங்கித் வெறும் 22 மதிப்பெண்களே பெற்றிருந்ததாக முடிவுகள் கூறியது. முடிவுகள் வந்தவுடன் விடைத்தாள் நகலை பெற 2000 ரூபாய்க்கு காசோலை எடுத்து விண்ணப்பித்தார். எந்த பதிலும் வராததால் நீதிமன்றத்தை நாடி நகலை பெற்ற பொழுதுதான் அவருடைய மதிப்பெண் 122 என்று மாறியது. தேர்வு எழுதிய 68000 பேரில் அங்கித் முதல் மதிப்பெண் பெற்றிருந்தார். இதே தேர்வில், தேர்வே எழுதாத சிலருக்கு வேலை கொடுக்கப்பட்டுள்ளது.

அதே போல, குறித்த நேரத்தில் நியமனங்கள் நடைபெறவில்லை. தேர்வான அனைவருக்கும் இன்னும் நியமன ஆணை வழங்கப்படவில்லை. தேர்வானவர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

கொஞ்சம் தகவல்களை திரட்டிப் பார்த்தால் பீகாரில் 2016, 2017 ஆண்டுகளில் நடந்த தேர்வுகளுக்கே இன்னும் முடிவுகள் வெளியாகவில்லை; நியமனங்களும் நடைபெறவில்லை என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம்.

மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் 80% பற்றி பேசியபொழுது மோடியின் மந்திரி சபையைச் சேர்ந்த கிரிராஜ் சிங் என்பவர் கமல்நாத்தை கண்டித்தார். இந்தியா என்பது பல மாநிலங்கள் கூட்டாட்சி செய்யும் ஒரே நாடா இல்லையா என்ற கேள்விக்கு கமல்நாத் பதிலளிக்க வேண்டும் என்று கிரிராஜ் சிங் கூறினார். அது மட்டுமல்லாமல், காங்கிரஸ் முதல்வர் ஒருவர் இவ்வாறு தெரிவித்ததற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உ.பி. பீகார் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கிரிராஜ் கூறினார்.

கிரிராஜ் கமல்நாத்திடம் கூட்டாட்சி பற்றி கேள்வி கேட்பார், ஆனால் உ.பி. தேர்தலின் பொழுது அவர் இருக்கும் பாஜக, கமல்நாத் தந்த அதே வாக்குறுதியை தரும்பொழுது கூட்டாட்சி பற்றி அவருக்கு எந்த கேள்வியும் இருக்காது. கமல்நாத்தும் ஆட்சியில் இல்லாமல் இருந்தால் பாஜகவை கேள்வி கேட்டு இருப்பார். ஆனால், இப்போது கேட்க மாட்டார்.

இவர்கள் அனைவரும் இதுபோன்ற கேள்விகளை மட்டுமே கேட்டு மக்களின் உணர்வுகளைத் தூண்டி, மக்கள் மத்தியில் பகையை வளர்த்து ஓட்டுக்களை வாங்க வேண்டும் என்று மட்டுமே நினைக்கின்றனர். மக்களுக்கு வேலை கிடைப்பது பற்றி இவர்களுக்கு கவலை இல்லை!

நீதிமன்றங்களும் சளைத்தவை அல்ல:

உ.பி., பீகார் இருக்கட்டும். ரிசர்வ் வங்கி (RBI) நடத்தும் தேர்வு பற்றி பார்ப்போம். 623 உதவியாளர் பணிகளை நிரப்பும் தேர்வுக்கான அறிவிப்பு அக்டோபர் 2017-ல் வெளி வந்தது. அறிவிப்பு வெளியாகி மார்ச் 2018-க்குள் தேர்வு மற்றும் மற்ற நடைமுறைகள் அனைத்தும் நடந்து முடிந்துவிட்டன. ஆனால், இந்த 623-ல் ஒருவருக்கு கூட இன்னமும் நியமனம் நடைபெறவில்லை. எந்த பிரச்சினையிலும் சிக்காத பதவிகளுக்கும்கூட இன்னும் நியமனம் நடைபெறவில்லை. மும்பை பகுதியில் உள்ள 261 பணியிடங்கள் சம்மந்தமாக ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கின் காரணமாக அனைத்து நியமனங்களும் சிக்கலில் உள்ளன. இந்த வழக்கின் அடுத்த வாய்தா எப்பொழுது தெரியுமா? 25 செப்டம்பர் 2019-ல்!! இந்த ஆட்டத்தில் நீதிமன்றங்களின் பங்கும் இல்லாமல் இல்லை, நீதி அரசர்களும் சளைத்தவர்களும் இல்லை.

ஒரு மாணவர் ரவீஷ் குமாருக்கு கொடுத்துள்ள தகவல் பின்வருமாறு. அலகாபாத் உயர்நீதிமன்ற பணிக்கான தேர்வெழுதி அதில் தேர்ச்சி பெற்று 6 மாதங்களாக காத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் இன்னும் நியமனம் நடைபெறவில்லை. நம்பிக்கை இழந்துவிட்டதாக மாணவர் தெரிவிக்கிறார். பல இளைஞர்களின் நிலை இது தான்!!

ரயில்வே வேலைக்கான அறிவிப்பு வந்தபொழுது 2 1/2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக பெருமையாக சொன்னார்கள். ஆரம்பத்தில் ரூ.500-க்கு விண்ணப்பங்கள் விற்கப்பட்டன. பின்னர் ரூ.400-ஐ திருப்பி தந்துவிடுவோம் என்று ரயில்வே மந்திரி தெரிவித்தார். இந்த தேர்வு எழுதும் மாணவர்களுக்கான தேர்வு மையங்கள் 2500 கிமீ தொலைவில் வேறு மாநிலங்களில் ஒதுக்கப்பட்டிருப்பது தேர்வு நுழைவுச்சீட்டு வந்தபொழுதுதான் மாணவர்களுக்கு தெரிந்தது. இந்த மாணவர்களில் பெரும்பாலானோருக்கு 2-3 நாட்கள் பயணம் செய்து விடுதிகளில் தங்கி தேர்வு எழுதும் அளவுக்கு வசதி இல்லை. இதனாலேயே பலர் தேர்வு எழுத முடியவில்லை.

ரயில்வே தேர்வு எழுதும் இந்த மாணவர்களும் உ.பி. பீகாரை சேர்ந்தவர்கள்தான். இவர்களுக்காக கிரிராஜ் சிங்கோ அல்லது கமல்நாத்தோ அல்லது அமித்ஷாவோ பேசுவதில்லை!

நாம் செய்ய வேண்டியது என்ன ?

இதில் தமிழகத்தை சேர்ந்த நாம் புரிந்துகொள்ள வேண்டிய செய்தியும் உள்ளது. தேர்வுகளை நடத்துவதில் மத்திய அரசும் பாஜகவும் எந்த பாகுபாடும் காட்டுவதில்லை. நீட் எவ்வாறு நடத்துகிறார்களோ அதே போல் தான் ரயில்வே தேர்வுகளையும் நடத்துகிறார்கள். இது புரியாவிட்டால் பாஜக தமிழர்களுக்கு மட்டும் எதிராக நடந்துகொண்டு வட மாநிலத்தவருக்கு நல்லது செய்வது போல தெரியும். ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் எதிரானவர்கள்தான் இவர்கள்.

தனியார் துறையிலும் சரி, அரசு துறையிலும் சரி, வேலைவாய்ப்புகள் இல்லை. இருக்கும் அரசு வேலைவாய்ப்புகளையும் அரசு சரியாக நிரப்புவது இல்லை!

வேலை வாய்ப்புகள் இல்லாததை மறைக்கத்தான் இந்து-முஸ்லீம் விவாதங்கள், உ.பி.-பீகார் விவாதங்கள் போன்றவற்றை ஆளும் வர்க்கம் கிளப்பிக்கொண்டே இருக்கிறது. இந்த விவாதங்களின் மூலம் மக்களின் உணர்வுகளை தூண்டி சரியான கேள்விகளை கேட்பதில் இருந்து தடுக்கப்படுகின்றனர்.

படிக்க:
வியாபம் ஊழல்: பார்ப்பன கிரிமினல்தனம்! பகுதி – 3
வேலை வாய்ப்பின்மைக்கு சமூகரீதியிலான தீர்வுதான் தேவை !

இந்த தகவல்களின் மூலம் நாம் புரிந்துகொள்ளக் கூடியது என்ன. பாஜக (அல்லது காங்கிரஸ்) கட்டமைக்கும் விவாதங்களில் நாம் சிக்கிக்கொள்ளக் கூடாது. தனியார்மயத்தின் காரணமாக, ஒன்று, அரசு நிறுவனங்களே தனியார்மயம் ஆகின்றன; அல்லது, அரசு நிறுவனங்களில் இருக்கும் வேலைகளும் ஒப்பந்த வேலைகளாக மாற்றப்பட்டுவிட்டன. ஜனாதிபதி அலுவலகத்தில் உள்ள துப்புரவு தொழிலாளர்கள் கூட ஒப்பந்தக் கூலிகளாகவே இருப்பார்கள். இவை எல்லாம் போக, மீதம் இருக்கும் வேலைகளை அரசுகள் எவ்வாறு நிரப்புகின்றன என்று மேலே உள்ள தகவல்கள் காட்டுகின்றன.

நிலைமை இவ்வாறு இருக்க பாஜக அரசு, எங்கும் இல்லவே இல்லாத அரசு வேலைகளில் 10% இட ஒதுக்கீடு தருவதாக கூறுகிறது. நாமும் அதை பற்றியே பேசிக்கொண்டு இருக்கிறோம். நாம் எதைப் பற்றி விவாதிக்க வேண்டும் என்பதை பாஜகவால் கட்டுப்படுத்த முடிகிறது.

ஆகவே, நாம் அரசிடம் கேட்க வேண்டியது இட ஒதுக்கீடு மட்டுமல்ல. இருக்கும் வேலை வாய்ப்புகளை சரியாக நிரப்ப வேண்டும், அரசு அலுவலகங்களில் இருக்கும் வேலைகளை நிரந்தர வேலைகளாக்க வேண்டும்; தனியார்மய கொள்கைகளை தவிர்த்து அத்தியாவசிய சேவைகளில் அரசே நேரடியாக ஈடுபட வேண்டும். இதை விடுத்து பாஜக புருடா விடும் 10% பற்றி பேசிக்கொண்டு இருந்தால் அவர்கள் விரித்த வலையில் தான் விழ வேண்டும்.

பி.கு.: NDTV இந்தி செய்தி சேனலில் ‘Prime Time with Ravish Kumar’ என்ற ஒரு நிகழ்ச்சி உண்டு. இந்த ரவீஷ் குமார் இந்தி செய்தி பார்ப்பவர்கள் மத்தியில் பிரபலமானவர். மக்களுக்காகத்தான் பத்திரிக்கை, பத்திரிக்கையாளர்கள், என்ற கருத்தை உடைய மக்கள் பத்திரிக்கையாளர். மற்ற எந்த பத்திரிக்கைகளும், செய்தி சேனல்களும் கவனிக்காத மக்கள் பிரச்சனைகளையும் போராட்டங்களையும் பதிவு செய்து Prime Time நிகழ்ச்சியில் பேசுபவர். உண்மையான மக்கள் வாழ்க்கைக்கு தேவையான உண்மைகளை பேசுவதால் ஆளும் வர்க்கத்துக்கு இவரை பிடிப்பது இல்லை, கொலை மிரட்டல்களும் வந்தவண்ணம் உள்ளன.

அருண் கார்த்திக்

என்னுடைய நம்பிக்கை நொறுங்கிய நிலையில் இருக்கிறேன் : ஆனந்த் தெல்தும்ப்டே கடிதம்

0

எழுத்தாளரும் சமூக செயல்பாட்டாளருமான ஆனந்த் தெல்தும்ப்டே மீது 2018 ஜனவரி மாதம் பீமா கோரேகானில் வன்முறையை தூண்டியதாக மகாராஷ்டிர அரசு புனையப்பட்ட குற்றச்சாட்டில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்தது. இதிலிருந்து தன்னை விடுவிக்கக்கோரி ஆனந்த் தெல்தும்ப்டே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். கடந்த திங்கள்கிழமை தெல்தும்ப்டே-வின் மனுவை நிராகரித்தது நீதிமன்றம். நான்கு வாரங்களுக்கு அவரை கைது செய்ய தடையும் விதித்தது. இந்நிலையில் தான் கைதாகும் சூழலே அதிகமாக உள்ளது என தெரிவிக்கும் தெல்தும்ப்டே, தனக்கு ஆதரவளிக்கும்படி பொதுமக்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். கடிதத்தின் தமிழாக்கம் இங்கே…

“புனே காவல்துறையால் தாக்கல் செய்யப்பட்ட என்மீதான பொய்யான முதல் தகவல் அறிக்கையை தள்ளுபடி செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு ஜனவரி 14-ஆம் தேதி நிராகரிக்கப்பட்டது. இதுபற்றி ஊடகங்கள் வாயிலாக நீங்கள் அறிந்திருப்பீர்கள்.  நல்லவேளையாக, பிணை பெறும் பொருட்டு எனக்கு நான்கு வார கால அவகாசமும் நீதிமன்றம் அளித்திருக்கிறது.

காவல்துறை சொன்ன குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் புனையப்பட்டவை என நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுவிடும் என  இதுவரை உறுதியாக நம்பிக்கொண்டிருந்தேன்.  அதனால் உங்களிடம் பேச வேண்டிய தேவையிருக்காது என கருதினேன்.

ஆனால், இப்போது என்னுடைய நம்பிக்கை முற்றிலும் நொறுங்கியிருக்கிற நிலையில் புனே நீதிமன்றத்திலிருந்து உச்சநீதிமன்றம் வரை பிணையை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.  உடனடி கைதிலிருந்து என்னைக் காப்பாற்ற, பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மக்களிடமிருந்து ஆதரவு பிரச்சாரத்தை கட்டமைக்கும் தேவை எழுந்துள்ளது.

சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் கைதானால் பல ஆண்டுகள் சிறைவாசத்தை அனுபவிக்க நேரிடும் என்பதை நம்மில் பலர் அறிந்திருக்க முடியாது. கொடுஞ்செயல்கள் புரிந்த குற்றவாளிகூட ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் தண்டனை பெற்று தப்பிவிட முடியும். ஆனால்,  அரசியல்வாதிகளுக்காக  வேலை செய்யும் காவல்துறை, அப்பாவிகளுக்கு எதிராக தங்களிடம் வலுவான ஆதாரம் இருப்பதாகக் கூறினால், அந்த நபர் ஆண்டு கணக்கில் சிறையில் இருக்க நேரிடும்.

என்னைப் பொறுத்தவரை இந்தக் கைது என்பது கடுமையான சிறை வாழ்க்கை மட்டுமல்ல, அது என்னுடைய உடலில் ஒரு பகுதியாகிவிட்ட லேப் டாப் – இடமிருந்து என்னை பிரித்து வைக்கும், என்னுடைய வாழ்வின் பகுதியாக உள்ள நூலகத்திடமிருந்து என்னை பிரித்துவிடும்.  பதிப்பகத்தாரிடம் தருவதாக ஒப்புக்கொண்ட பாதி முடிக்கப்படாத நூலின் பிரதிகள், முடிக்கப்படாமல் வெவ்வேறு கட்டங்களில் உள்ள என்னுடைய ஆய்வுத்தாள்கள், என் தொழில்முறை நற்பெயரை  நம்பி தங்களுடைய எதிர்காலத்தை பணயம் வைத்திருக்கும் மாணவர்கள், என்னுடைய கல்வி நிறுவனம் (கோவா இன்ஸ்ட்டியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட்) என்னை நம்பி பல வசதிகளை செய்துகொடுத்திருக்கிறது. சமீபத்தில் என்னை நிர்வாகக்குழுவில் சேர்த்துள்ளது, மேலும் எண்ணற்ற நண்பர்கள் மற்றும் என்னுடைய குடும்பத்திடமிருந்தும் இந்த கைது என்னை பிரித்துவிடும். பாபாசாகேப் அம்பேத்கரின் பேத்தியான என்னுடைய மனைவி, கடந்த ஆகஸ்டு மாதத்திலிருந்து, எனக்கு நடந்துகொண்டிருப்பவற்றை அறிந்து மிகுந்த துயருற்றிருக்கிறார்.

ஏழ்மையிலும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வருகிற நான், அறிவார்ந்த சாதனைகள் மூலம் இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களில் தேர்ச்சி பெற்றேன்.  என்னை சூழ்ந்துள்ள சமூக முரண்பாடுகளை கண்டுகொள்ளாமல் இருந்திருந்தால் மிகப்பெரிய கல்வி நிறுவனமான அகமதாபாத் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் படித்த எனக்கு, ஆடம்பரமான வாழ்க்கை எளிதாகவே கிடைத்திருக்கும்.

இருப்பினும்,  மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான உணர்வுடன், குடும்பத்தை இயக்குவதற்கான பொருளீட்டினால் போதும் என முடிவு செய்து, என்னுடைய நேரத்தை அறிவார்ந்த பங்களிப்பு செய்வதற்கு ஒதுக்கினேன். இந்த உலகத்தை சற்றே மேம்படுத்த என்னால் சாத்தியமானது இதுதான்.  இந்த உள்ளுணர்வின் காரணமாக, என்னுடைய பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் நான் இயல்பாக ஜனநாயக உரிமைகள் பாதுகாப்புக் குழு போன்ற அமைப்புகளில் சேர்ந்து இயங்கத் தொடங்கினேன். இப்போது இந்த இயக்கத்தின் பொது செயலாளராகவும் உள்ளேன்.  கல்வி உரிமைகளுக்கான அனைத்திந்திய மன்றத்தின் தலைமை உறுப்பினராகவும் உள்ளேன். என்னுடைய எழுத்துக்களிலோ அல்லது சுயநலமற்ற செயல்பாடுகளிலோ கடுகளவும் சட்டவிரோத நடவடிக்கை இருந்ததில்லை.

அதுபோல, என்னுடைய முழு கல்வி பணியிலும் நாற்பதாண்டு கால பெருநிறுவன பணியிலும் சிறு களங்கமும் இல்லாமல் நேர்மைக்கான உயர்ந்த முன்னுதாரணமாக இருந்திருக்கிறேன். எனவே, எந்த நாட்டுக்காக என்னுடைய தொழில்முறை வாழ்க்கை முழுவதும் உழைத்தேனோ அதே நாட்டின் அரசு இயந்திரம் எனக்கு எதிராகத் திரும்பும் என்று மோசமான கனவிலும்கூட நான் நினைத்து பார்த்ததில்லை.

பீமா கோரேகான் நிகழ்வு.

இந்த நாட்டை சமத்துவமற்ற உலகமாக மாற்றிக்கொண்டிருக்கும் திருடர்களையும் கொள்ளையர்களையும் பாதுகாக்கும் அரசு இயந்திரம், அப்பாவி மக்களை குற்றவாளிகளாக்கி பழிவாங்குகிறது என்பது மட்டுமல்ல, டிசம்பர் 31, 2017-ஆம் ஆண்டு புனேயில் நடந்த எல்கர் பரிஷத் நிகழ்வை குற்றப்பின்னணி உடையதாகவும் மாற்றிவிட்டது. இதன் மூலம் மாற்றுக்குரலை ஒலிக்கும் குறிப்பிட்ட மனித உரிமை பாதுகாவலர்கள், அறிவு ஜீவிகள் மற்றும் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த முன்னணியாளர்களை சிறையில் அடைக்கப்பார்க்கிறது. இது முன்னெப்போதும் இல்லாத வெளிப்படையாக மேற்கொண்டிருக்கும் அதிகார துஷ்பிரயோகம் ஆகும்.

சுதந்திரத்துக்குப் பிறகான இந்தியாவில், ஜனநாயகத்தின் அத்தனை கண்ணியத்தையும் பின் தள்ளிவிட்டு அரசை விமர்சிப்பவர்கள் மீது பழிவாங்கும் நோக்கத்தோடு சுமத்தப்படும் மிக மோசமான சதி குற்றச்சாட்டு இதுவாகத்தான் இருக்கும்.

மிக மோசமான சதி

உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பி.பீ. சாவந்த் மற்றும் மும்பை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி பீ.ஜி. கோல்சே பட்டேல்  ஆகியோர்  1818-ஆம் ஆண்டு பீமா கோரேகானில் நடந்த ஆங்கிலோ – மராத்தா போரின் 200-வது ஆண்டை நினைவு கூறும்வகையில் தற்போது நடந்துகொண்டிருக்கும் பாஜக ஆட்சியின் மத மற்றும் சாதி ரீதியிலான கொள்கைகளை எதிர்க்க மக்களைத் திரட்டும் யோசனையை முன்வைத்தனர். அவர்கள் செயல்பாட்டாளர்களையும் முற்போக்கு அறிவுஜீவிகளையும் இந்த யோசனையை திட்டமிட்டு செய்ய அழைத்தனர்.

எனக்கும் ஒருவரின் மூலம் சாவந்த் அழைப்பு விடுத்தார், கோல்சே பட்டேலும் பிறகு அழைத்தார்.  கல்விப் பணிகள் இருந்தமையால் அந்தக் கூட்டத்துக்குச் செல்ல முடியவில்லை என வருத்தம் தெரிவித்திருந்தேன். ஆனால், நிகழ்வின் இணை ஒருங்கிணைப்பாளராக இருக்க அழைத்திருந்த அவருடைய அழைப்பை ஏற்றுக்கொண்டேன்.  எல்கர் பரிஷத் தொடர்பான வாட்ஸப் துண்டுபிரசுரத்தை பார்க்கும் வரை என்ன நடக்கிறது என்பது எனக்குத் தெரியாது.

பேஷ்வாக்களின் அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்த  மகர் வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவிடத்தில் அவர்களின் தியாகத்தை நினைவுகூற நான் ஆதரவாக இருந்தேன். அதே நேரத்தில், பேஷ்வாக்களின் பார்ப்பனிய அடக்குமுறைக்கு எதிராக பீமா கோரேகானில் போரிட்ட மகர் வீரர்களின் வெற்றியாக எல்கர் பரிஷத் காட்டப்பட்டதில் எனக்கு சங்கடம் இருந்தது.

வரலாற்றை இப்படி சிதைத்து படிப்பது, தலித்துகளை அடையாள அரசியலுக்குள் தள்ளி, பரந்துபட்ட மக்களுடன் அவர்களை ஒன்றிணைப்பதை மேலும் கடினமாக்கும் என நான் கருதினேன்.  இதையொட்டி த வயரில் நான் எழுதிய கட்டுரை தலித்துகளிடையே கோபத்தை உண்டாக்கியது. அதன் பிறகு, இந்த முழு விவகாரத்தையும் நான் மீண்டும் சிந்தித்து என்னுடைய முடிவில் ஒரு உண்மையான அறிவுஜீவிக்குரிய தன்மையுடன் நின்றேன்.

தற்செயலாக, இந்தக் கட்டுரை, அதற்கு பதிலளிக்கிறது. யாரோ ஒருவருக்காக தலித்துகளை தூண்டிவிடுகிறேன் என்ற குற்றச்சாட்டை மறுப்பதாக என்னுடைய கருத்தை மறுபரிசீலனை செய்திருக்கிறேன். ஆனால், பகுத்தறிவு முதன்மையாக இல்லாத இடத்தில், இத்தகைய பகுப்பாய்வுகள் அரசு அல்லது போலிசுடனான  இடைவெளிகளை குறைக்க உதவாது.

தலித்துகளுடன் முன்னெப்போதும் ஒன்றிணைந்திராத மராத்தா அமைப்புகள் உள்பட 250-க்கும் மேற்பட்ட அமைப்புகள் இந்த நிகழ்வில் பங்கெடுத்தன.

மராத்தா பேரணி.

2014-ஆம் ஆண்டு பார்ப்பன முதலமைச்சரின் கீழ், பாஜக – சிவ சேனா இணைந்து மாநிலத்தில் அரசு அமைத்தபின், மராத்தாக்கள் தங்களுடைய அதிருப்தியை வெவ்வேறு விதங்களில் காட்டத் தொடங்கினர். மராத்தாக்கள் மிகப்பெரும் பேரணிகளை நடத்தினர்.  அப்படிப்பட்ட பேரணி ஒன்றில் விரும்பத்தகாத நிகழ்வொன்று நடந்தது. 2016-ஆம் ஆண்டு கோர்பாடி என்ற இடத்தில் நடந்த பேரணியில் மராத்தி சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். சிறுமியை வன்கொடுமை செய்தவர்களில் ஒரு தலித்தும் இருந்தார். நிர்வாகம் உடனடியாக செயல்பட்டது. பாதிக்கப்பட்டவருக்கான சட்டரீதியான நீதி, பட்டியல் இன மற்றும் பழங்குடியினருக்கான எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதில் வந்து முடிந்தது.

இதுபோன்ற பெருந்திரளான மக்கள் திரட்டல் மூலம்,  இடஒதுக்கீடு கேட்க மராத்தாக்கள் பயன்படுத்திக்கொண்டார்கள். தலித்துகளுடன் ஒன்றிணைந்தால்தான் பார்ப்பன அரசை அகற்ற முடியும் என மராத்தாக்கள் புரிந்துகொள்ள தொடங்கினார்கள். இது மராத்தாக்களின் இளைஞர் அமைப்புகள், எல்கர் பரிஷத் நிகழ்வில் பங்கேற்றபோது ‘பேஷ்வாக்களை புதையுங்கள்’ என்னும் முழக்கத்தில் எதிரொலித்தது.

இது வெறும் குறியீட்டு முழக்கமாக இருந்தாலும் பாஜகவின் வளைக்குள் விழும் அபாயத்தை உண்டாக்கியது.  கருத்தரங்கை ஏற்பாடு செய்தவர்களும் மராத்தாக்களாக இருந்தனர். அரசு அதிகாரத்தில் தீவிர பற்றுதலுடன் இருந்த பாஜகவுக்கு அது பயத்தை கொடுத்தது.  மிலிந்த் எக்போடேயின் சமஸ்தா ஹிந்துத்துவா அகாடி மற்றும் சாம்பாஜி பிடேயின் சிவ் சக்ரபதி ப்ராசிஸ்தான் ஆகியவற்றில் உள்ள தன்னுடைய ஏஜெண்டுகள் மூலம் தலித்துகள் மற்றும் மராத்தாக்களுக்கிடையே பிரச்சினையை உண்டாக்க திட்டமிட்டது பாஜக.  சிவாஜியின் மகனான சம்போஜி மகராஜின் சமாதி, பீமா கொரேகானிலிருந்து 4 கி.மீ. தள்ளியிருக்கிறது. இதை வைத்து ஒரு சர்ச்சையை உருவாக்கினார்கள்.

மொகலாய சக்ரவர்த்தி அவுரங்க சீப், சம்பாஜியை கொன்று துண்டுத்துண்டாக உடலை வெட்டி போட்டதாகவும்  கோவிந்த மகர் என்பவர் உடலின் பாகங்களை எடுத்து, சம்போஜிக்கு மரியாதைக்குரிய இறுதிச் சடங்கை செய்ததாகவும் 300 ஆண்டு கால பிரபலமான வரலாறு சொல்கிறது. தன்னுடைய நிலத்தில் சம்போஜிக்கு நினைவிடம் எழுப்பினார் கோவிந்த மகர். அவர் இறந்த பின் சம்போஜிக்கு அருகிலேயே அவருக்கும் நினைவிடம் எழுப்பியுள்ளது அவருடைய குடும்பம்.

சூரத்தில் நடைபெற்ற சிவாஜி ஜெயந்தி விழாவில்…

மேலே சொன்ன இரண்டு சதிகாரர்களும் ஒரு புனைகதையை சொன்னார்கள். அதாவது சம்போஜிக்கு நினைவிடம் கட்டியது ‘சிவாலே’ என்ற மாரத்தி குடும்பம், கோவிந்த் மகர் அல்ல என்பதே அந்தக் கதை. இது மராத்தாக்களை தலித்துகளுக்கு எதிராக திருப்பியது.  இந்தப் பிரச்சினையை பயன்படுத்தி மராத்தாக்களை வாடு படாட்ரூக் என்ற இடத்தில், 2018 ஜனவரி 1-ஆம் தேதி பீமா கொரேகானில் கூட இருந்த தலித்துகளுக்கு எதிராகத் தூண்டிவிட பார்த்தார்கள். இதற்கான ஏற்பாடுகள் சுற்றுப்புற கிராமங்களில் வெளிப்படையாக தெரிந்தது. ஆனால், நிர்வாகம் தெரியாதுபோல் நடந்துகொண்டது.

2017, டிசம்பர் 29-ஆம் தேதி, கோவிந்த மகரின் சமாதியும் அங்கிருந்த தகவல் பலகையும் சேதப்படுத்தப்பட்டிருந்ததை தலித்துகள் கண்டார்கள். இது முன்பே திட்டமிட்டதுபோல சமூகங்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால், சதிகாரர்களின் துரதிருஷ்டம் காரணமாக, அடுத்த நாள் கிராமத்தினர் ஒன்றாக இணைந்தனர்.

திட்டமிட்டதுபோல, 2017 டிசம்பர் 31-ஆம் தேதி ஷானிவர்வாடா என்ற இடத்தில் எல்கர் பரிஷத் நிகழ்வு தொடங்கியது. இந்த மாநாட்டின் முடிவில், குழுமியிருந்த மக்கள் பாஜகவுக்கு எப்போதும் வாக்களிக்க மாட்டோம் என்றும் இந்தியாவின் அரசியலமைப்பை காப்போம் என்றும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.  மாநாட்டின் அத்தனை நிகழ்வும் காவல்துறையாலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களாலும் வீடியோ பதிவு செய்யப்பட்டது.

படிக்க:
மோடியை கலாய்க்கும் ஹிந்து விரோதிகள் மீது எச்.ராஜா புகார்
ஆனந்த் தெல்தும்ப்டேவுக்கு எதிரான பொய் வழக்கை ரத்து செய் ! ஊபா உள்ளிட்ட கருப்புச் சட்டங்களை ரத்து செய் !

மாநாட்டில் வேறு எதுவும் நடக்கவில்லை. மாநாட்டின் அனைத்து பிரதிநிதிகளும் அமைதியாக கலைந்து சென்றனர். என்னுடைய நெருங்கிய நண்பரின் மகனின் திருமணத்துக்காக டிசம்பர் 31-ஆம் தேதி காலை 10.55 மணிக்கு புனே சென்றேன்.

புனேயில் ஸ்ரேயால் ஹோட்டலில் தங்கியிருந்து, திருமணத்துக்குச் சென்றோம். அடுத்த நாள் இரவு 12.40 மணிக்கு ஹோட்டலிலிருந்து வெளியேறி கோவா சென்றோம்.  புனேவுக்கு வந்த காரணத்தால் என்னுடைய மனைவி அங்கிருந்த உறவினர்கள் சுஜாத் அம்பேத்கர் மற்றும் அஞ்சலி அம்பேத்கரை காண விரும்பினார். செல்லும் வழியில் கார் டயரை மாற்றுவதற்காக 5-10 நிமிடங்கள் அலைந்திருபோம்.

அதிருஷ்டவசமாக, எல்கர் பரிஷத் நிகழ்வில் முழுநேரமும் இல்லை என்பதற்கு என்னிடம் போதுமான ஆதாரங்கள் உள்ளன. புனேவுக்கு வந்த பிறகு, நான் முழுநேரமும் மாநாட்டில் இருந்திருக்க முடியும். ஆனால், மாநாட்டின் பொருளில் எனக்கு உவப்பில்லை என்பதோடு பணிக்கு திரும்ப வேண்டிய கட்டாயம் இருந்ததால், நான் கிளம்பிவிட்டேன்.

பீமா கொரேகான் வெற்றித் தூண்.

2018, ஜனவரி 1-ஆம் தேதி, பீமா கொரேகானின் தலித்துகள் ஒன்று கூடிய போது, இந்துத்துவ அடியாட்கள்  திட்டமிட்டதுபோல கூடினார்கள்.  பீமா கொரேகான் நினைவிடத்துக்குச் செல்லும் தெருவில் உள்ள வீடுகளின் மாடிகளில் ஏறி கற்களால் தாக்கத் தொடங்கினார்கள், மக்களை அடிக்கத் தொடங்கினார்கள்; கடைகளை எரித்தார்கள். போதிய காவலர்கள் இல்லாத நிலையில் நடப்பதை  இருந்த சில காவலர்கள் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். இந்துத்துவ குண்டர்களின் தாக்குதலுக்கு அரசு நிர்வாகமும் உடந்தையாக இருப்பது தெளிவாகத் தெரிந்தது. இந்தப் பகுதியில் சில குழப்பங்கள் நடந்துவருவதை பொதுமக்களும் அறிந்திருந்தனர்.

2017 டிசம்பர் 29-ஆம் தேதி சம்பாஜியின் சமாதியில் நடந்த நிகழ்வுகள் இந்த வதந்திகளை உறுதிபடுத்தின. ஆனால், நிர்வாகம் அதைக் கண்டுகொள்ளாமல் கலவரங்களை நிகழ்த்தி பார்த்தது.  அப்போது எடுக்கப்பட்டு வாட்ஸப்பில் வெளியான வீடியோக்களில் காவி கொடி பிடித்தவர்கள் எக்போடே மற்றும் பிண்டே-இன் பெயர்களைச் சொல்லி முழக்கங்கள் எழுப்பியதையும் தலித்துகளை அடித்து விரட்டுவதையும் காட்டின.  பல தலித்துகள் காயமுற்றனர், அவர்களுடைய வாகனங்கள் சேதமாக்கப்பட்டன; கடைகள் எரித்து சாம்பலாக்கப்பட்டன; இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார்.

எல்கர் பரிஷத்தின் போது என்ன நடந்தது என்பது பற்றி எனக்கு முழுமையாக எதுவும் தெரியவில்லை.  தாக்குதல் நடந்த ஜனவரி 1-ஆம் தேதி மதியம் வரை எனக்கு எதுவும் தெரியாது. அதன்பிறகு, த வயரின் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் இமெயில் வழியாக தெளிவாக சொன்னபிறகுதான் அங்கு நடந்ததை அறிந்தேன்.  அதன்பிறகு ஜனவரி 2-ஆம் தேதி இணையதளத்தில் கட்டுரை எழுதினேன்.

போலீசின் கை

2018 ஜனவரி 2-ஆம் தேதி, பகுஜன் ரிபப்ளிக் சோசியலிஸ்ட் பார்டி என்ற கட்சியின் உறுப்பினரும் சமூக செயல்பாட்டாளருமான அனிதா ரவீந்திர சால்வே,  முந்தைய தினம் நடத்தப்பட்ட தலித்துகள் மீதான தாக்குதலுக்கு எக்போடே மற்றும் பீடே என்ற இரண்டு கயவர்கள்தான் காரணம் என சிக்ராபூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  ஜனவரி 3-ஆம் தேதி பிரகாஷ் அம்பேத்கர், மகாராஷ்டிராவில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தார். ஜனவரி 4-ஆம் தேதி எந்தவித வேண்டத்தகாத சம்பவங்களும் நிகழாமல் முழு அடைப்பு நடந்தது. அதன்பிறகு, வன்முறையில் ஈடுபட்டதாக தலித் இளைஞர்களை போலீசு கைது செய்யத் தொடங்கியது.

பீமா கொரேகான் : இலட்சக்கணக்கில் திரண்டு வந்த மக்கள் கூட்டம்

2018 ஜனவரி 8-ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ்ஸைச் சேர்ந்தவரும் சம்பாஜி பீடேவின் அடியாளுமான துஷார் தம்காடே, கபீர் கலா மஞ்ச் அமைப்பைச் சேர்ந்த செயல்பாட்டாளர்கள் மீது எல்கர் பரிசாத் நிகழ்வை ஏற்பாடு செய்ததற்காக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தார்.  எல்கர் பரிசத்தில் பேசப்பட்ட  சர்ச்சைக்குரிய பேச்சுக்களே ஜனவரி 1-ஆம் தேதி வன்முறையை தூண்டின என அதில் குற்றம்சாட்டியிருந்தார். அபத்தமான குற்றச்சாட்டுக்கு அதுவே முகாந்திரமாக அமைந்தது.

முதலாவதாக, எல்கர் பரிசத்தில் என்ன பேசப்பட்டது என்பதற்கு போலீசாரே சாட்சியாக இருந்தனர், அவர்களே எடுத்த வீடியோவில் அதை சரிபார்த்திருக்கலாம். அதில் உண்மையாகவே சர்ச்சைக்குரிய பேச்சுக்கள் இருந்திருந்தால், அவர்களாகவே பேசியவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருக்கலாம். யாரோ ஒரு நபர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் வரை காத்திருக்க வேண்டிய தேவையே இல்லை.

அடுத்து, எல்கர் பரிசத்தில் ஆத்திரமூட்டும் படியான பேச்சு தலித்துக்களுக்காக மட்டுமே பேசப்பட்டதாக வைத்துக்கொண்டால், அவர்கள் அடிவாங்கியிருக்க மாட்டார்கள்.  இந்த கலவரத்தில் ஒரு இளைஞர் தன் உயிரை இழந்தார்; அது ஒரு தலித் உயிர். ஆனாலும்கூட, காவலர்கள் திட்டமிட்ட திரைக்கதை செயல்படுத்த முனைந்தார்கள்.

அவர்கள் பெயர்களை வைத்துக்கொண்டு வீடுகளில் சோதனையிட்டார்கள். எல்கர் பரிசத்தின் ஒருங்கிணைப்பாளர்களான நீதிபதி கோல்சே பட்டேல் மற்றும் நீதிபதி பி.பீ.சாவந்த் ஆகியோர் வெளிப்படையாக இந்த நிகழ்வுக்கு எந்தவித நிதியுதவியும் தேவையில்லை என அறிவித்தபோதும் கூட, எல்கார் பரிசத் நிகழ்வுக்கு மாவோயிஸ்டுகள் நிதியுதவி செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக மறைமுகமாக சொல்லத் தொடங்கினார்கள்.

இதுநாள் வரை, இந்த நிகழ்வை மாவோயிஸ்டுகளின் மிகப் பெரும் சதித்திட்டமாகச் சொல்லி  இந்த பொய்யை நம்பும்படி நீதிமன்றத்திடம் சொல்லி வருகிறார்கள். நிகழ்ச்சி ஏற்பாடு செய்த இரண்டு நீதிபதிகளையும் விசாரிக்கவில்லை.  குற்றப்பத்திரிகையில் நீதிபதி சாவந்த் கூறியதாக ஒரு அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறார்கள், அதை அவர் பகிரங்கமாக மறுத்துவிட்டார்.  இத்தகைய கடுமையான குற்றமும்கூட நீதிமன்றங்களால் புறக்கணிக்கப்படுகிறது.

மாவோயிஸ்டுகள் நிதியளிக்கிறார்கள் என்கிற கோட்பாட்டை சாக்காகச் சொல்லி, புனே காவல்துறை, நாக்பூர், மும்பை மற்றும் டெல்லி காவல்துறையுடன் இணைந்து ஐந்து செயல்பாட்டாளர்களின் வீடுகளில் 2018 ஜூன் 6-ஆம் தேதி சோதனை நடத்தி, கைதும் செய்தது. அவர்களுக்கும் எல்கர் பரிசத்துக்கும் எந்த வழியிலும் தொடர்பே இல்லை.

இந்த கைதுகளுக்குப் பின், காவல்துறை கதைகளை புனைய ஆரம்பித்தது. பீமா கொரேகான் நினைவிடத்தில் நடந்த வன்முறைக்கு இந்த ஐந்து நபர்களே காரணம் என்பதில் தொடங்கி, நக்சல் செயல்பாட்டுக்கு அவர்கள் உதவுகிறார்கள், பிரதமர் நரேந்திர மோடியை ‘ராஜீவ் காந்தி மாதிரியான’ படுகொலை செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள் என்பதுவரை பலகதைகளை போலீசு சொல்லிக்கொண்டிருக்கிறது. வாதாடுவதற்கு எந்தவித வாய்ப்பும் அளிக்காத, குற்றம்சாட்டப்பட்டவரை பல ஆண்டுகள் சிறையில் அடைக்கக்கூடிய கொடூரமான, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தை செயல்படுத்த போலீசால் இந்தக் கதைகள் அனைத்தும்  பயன்படுத்தப்பட்டன.

பொதுவாக, இதுபோன்ற சோதனைகளில் பாதிக்கப்பட்டவர்களின் எலக்ட்ரானிக் பொருட்களை கையகப்படுத்தி, அதன் மூலம் தங்களுக்கு என்ன வேண்டுமோ அதை போலீசார் சொல்லிக் கொள்வார்கள். ஆனால், இந்த சோதனைகள் விசித்திரமாக இருந்தன. டெல்லி, நாக்பூர், மும்பையில் சோதனை செய்யும் போலீசார் புனேவிலிருந்து இரண்டு சாட்சிகளை கையோடு அழைத்து வந்தது, சோதனைக்கான செயல்முறையே கேலி செய்வதாக இருந்தது.  அந்த வீட்டில் இருப்பவர்களை ஒரு அறையில் அடைத்து வைத்துவிட்டு, இன்னொரு அறையிலிருந்து சீல் இடப்பட்ட கைப்பற்றப்பட்ட பொருட்களை கொண்டு வந்தார்கள்.

வெர்னோம் கொன்சாவே -இன் வீட்டை சோதனையிட்டபோது, அவருடைய மனைவி சூசன் ஆபிரஹாம், வழக்கறிஞராக இருப்பவர், இந்த சோதனை முறைகளை கண்கூடாக பார்த்திருக்கிறார்கள். போலீசாரே கம்யூட்டர் உள்ளிட்ட உபகரணங்களோடு வந்ததாக அவர் தெரிவிக்கிறார். தங்களுடைய சோதனையை வீடியோ பதிவு செய்திருப்பதாக நீதிமன்றத்தில் போலீசாரே தெரிவிக்கின்றனர், அதையும் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

எலக்ட்ரானிக் சாதனங்களில் தொலைவிலிருந்து இயக்கி மாற்றமுடியும், சில நொடிகளில் எண்ணற்ற கோப்புகளை ஏற்ற முடியும் என்பதை நீதிபதிகள் கருத்தில் கொள்ளவே இல்லை. எலக்ட்ரானிக் சாதனங்களின் உண்மைத்தன்மையை வீடியோ பதிவு மூலம் நிரூபிக்க முடியாது. தகவல் தொடர்பு துறையில் எனக்கு நிபுணத்துவம் உள்ளது என்பதால் நானே இதை மோசடி என நிறுவ முடியும்.

எலக்ட்ரானிக் சாதனங்களின் உண்மைத்தன்மையை நிரூபிக்க நீண்ட காலம் ஆகும். வழக்கு விசாரணை என்ற நீதிமன்றம் சொன்னாலும் வழக்கு விசாரணை நடக்கும் பல வருடங்களில் அப்பாவி நபர்களும் அவர்களுடைய குடும்பமும் முற்றிலுமாக அழிக்கப்பட்டிருக்கும்.

கவுதம் நவ்லகா கைது செய்யப்பட்டபோது…

கைதான ஒருவரின் கம்யூட்டரிலிருந்து மாவோயிஸ்டுகள் எழுதிய கடிதங்களை கைப்பற்றி இருப்பதாக (இமெயில்கள் அல்ல; ஏனெனில் மெயில்கள் ஏற்கத்தக்கவை அல்ல) போலீசு கூறுகிறது. உண்மையான பெயர்கள், அவர்களுடைய தொலைபேசி எண்கள் என பல வினோதங்கள், கைப்பற்றதாக சொல்லப்பட்டு அளிக்கப்பட்ட கடிதங்கங்களில் உள்ளன.

இந்தக் கடிதங்கள் முற்றிலும் போலீசால் புனையப்பட்டவை என கடிதத்தின் வார்த்தை பிரயோகங்கள் சொல்கின்றன.  அதன் அடிப்படையில், மாவோயிஸ்டுகள் ஒரு அரசாங்க அமைப்பை நடத்துகின்றனர், அந்த அமைப்பு தங்களுடைய திட்டங்கள் குறித்து விளக்கமாக எழுதுகிறது. அதோடு,  தங்கள் கடிதங்களை பெறுபவர்களிடம் ரசீதுகளை பெற்று தணிக்கைக்காக ஆவணப்படுத்தவும் செய்கின்றது. அவர்கள் தங்களுடைய ரகசியத்துக்காக பெயர் பெற்றவர்கள், மனிதர்களை மட்டுமே தொடர்புக்கு பயன்படுத்துகிறவர்கள், செய்திகளை படித்த பிறகு அவற்றை அழிக்க வலியுறுத்துகிறவர்கள்.  அப்படிப்பட்ட அமைப்பு அவர்களுடைய நிர்வாகிகளுடன் கடிதங்கள் வழியாக தொடர்பு கொள்ள முடியாது.

பொது தளத்துக்கு வந்த இந்தக் கடிதங்களை ஏராளமான மக்கள் அலசி ஆராய்ந்து இவற்றின் போலித்தன்மையை தோலுரித்துவிட்டனர். இதுபோன்ற அமைப்புகளை படித்து வரும் மோதல் மேலாண்மை கல்வி நிறுவனத்தின் (Institute of Conflict Management) செயல் இயக்குனராக உள்ள அஜய் சகானி என்ற நிபுணர், இந்தக் கடிதங்கள் போலியானவை என சொல்லிவிட்டார்.

ரோமிலா தாப்பர் உள்ளிட்ட அறிவுஜீவிகள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகளில் மாற்றுக்கருத்து சொன்ன ஒரே ஒரு நீதிபதியான சந்திர சூட், போலீசின் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட கடிதங்களை ஏற்றுக்கொள்ள மறுத்ததோடு இந்த முழு வழக்கையும் சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க வேண்டும் என்றார். ஆனால், வினோதமான சட்டத்தின் செயல்முறை இந்த சர்ச்சைக்குரிய ஆதாரத்தை நகர்த்த போதுமானதாக இல்லை. அதே நேரத்தில் அப்பாவி மக்களின் வாழ்க்கையை தியாகம் செய்ய இந்த சட்டத்தின் செயல்முறை தயாராகிவிட்டது. உண்மையில் இது தண்டனையைக் காட்டிலும் மோசமானது.

இந்தக் கடிதங்களில் மாவோயிஸ்டு திட்டங்களின் கூட்டாளிகளாக ராகுல் காந்தி, பிரகாஷ் அம்பேத்கர், திக்விஜய் சிங் போன்றோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.  இந்தத் தலைவர்களை மோசமான முறையில் சித்தரிக்க அரசியல் நோக்கத்தோடு இது செய்யப்பட்டிருக்கிறது என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.  போலீசோ, நீதிமன்றமோ இந்த பிரபலங்களிடம் என்ன நடந்தது என்பது குறித்து சோதிக்கவும் விரும்பவில்லை, கேட்கவும் இல்லை.

எனக்கெதிரான வினோத குற்றச்சாட்டுகள்!

ஆறு செயல்பாட்டாளர்களுடன் சேர்த்து, (அதில் ஐந்து பேர் ஆகஸ்டு 28-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்) என் வீட்டையும் புனே போலீசு சோதனை செய்தது. நாங்கள் இல்லாதபோது, கல்வி நிறுவனத்தில் இருந்த பாதுகாவலரிடம் மாற்று சாவியைப் பெற்று வாரண்ட் ஏதும் இல்லாமல் என்னுடைய வீட்டை அவர்கள் திறந்துள்ளனர்.

என் வீட்டின் உள்புறத்தை வீடியோவில் பதிவு செய்து, பிறகு பூட்டிவிட்டதாக போலீசு தகவலில் எழுதப்பட்டுள்ளது.

அப்போது நாங்கள் மும்பையில் இருந்தோம். டிவி சேனல்கள் எங்கள் வீட்டைத் திறந்து சோதனையிட்டதை முக்கிய செய்தியாக அறிவித்தன. அப்போதுதான் எங்களுக்கு இந்த விசயம் தெரிய வந்தது. என்னுடைய மனைவி உடனடியாக விமானம் மூலம் சென்றார், பிகோலிம் காவல் நிலையத்தில் புகார் அளித்து, போலீசு ஏதேனும் கேட்க வேண்டுமெனில் எங்களுடைய தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளச் சொல்லி எண்களை அளித்துவிட்டு வந்தார்.

ஆகஸ்டு 31-ஆம் தேதி ஏடிஜிபி பர்மேந்தர் சிங், மேலும் சிலருடன் புனேயில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது என்னுடைய தொடர்பு இருப்பதாகக்கூறி அதற்கு ஆதாரமாக ஒரு கடிதத்தையும் வெளியிட்டார். அந்தக் கடிதம் மாவோயிஸ்ட் என சொல்லப்படுபவரால் எழுதப்பட்டது, அவரை என்னை ‘காம். ஆனந்த்’ என விளித்து 2018-ஆம் ஆண்டு நடந்த பாரீஸ் கருத்தரங்கு குறித்து பேசுகிறார், அது உண்மை போலவே உள்ளது. கல்வி தொடர்பான அந்தக் கருத்தரங்கில் உலகெங்கிலும் உள்ள மற்ற கல்வியாளர்களைப் போல கலந்துகொண்டேன். கருத்தரங்கை பாரீசில் உள்ள அமெரிக்க பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்தது.

மாவோயிஸ்டுகள் இந்த பல்கலைக்கழகத்துக்கு பணம் கொடுத்து என்னை கருத்தரங்கில் பேச அழைத்திருந்தார்கள் என கடிதம் விவரிப்பது நகைப்புக்குரியது.  அதோடு, அவர்கள் ‘காம். எடினே பாலிபர்’ என்ற மதிப்பிற்குரிய பிரெஞ்சு மார்க்சிய ஆய்வாளருடன் சந்திப்பை ஏற்பாடு செய்ததாகவும் அப்போது அவர் என்னையும் ‘காம். அனுபமா ராவ் மற்றும் சைலஜா பேய்க்’ (பர்னார்டு கல்லூரி மற்றும் சின்சினாடி பல்கலைக்கழக பேராசிரியர்கள்) ஆகியோரையும் நேர்காணல் செய்வார் எனவும் அவர்கள் தாங்கள் பணியாற்றும் கல்லூரிகளில் என்னை பேச அழைப்பார் எனவும் கடிதம் சொல்கிறது.

என்டிடிவி-யிலிருந்து இந்தக் கடிதத்தைப் பெற்று பாலிபருக்கும் இந்த கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் லிசா லிங்கனுக்கும் இமெயிலில் அனுப்பி வைத்தேன். அவர்கள் இந்தக் கதையைப் படித்து அதிர்ச்சியானார்கள்; எனக்கு பதில் எழுதினார்கள். பாலிமர் கண்டனக் கடிதத்தை அனுப்பியதோடு, பிரெஞ்சு தூதரகத்துக்கும் இதுகுறித்து எழுதினார். லிங்கன் எப்படி இந்த கருத்தரங்குக்கு என்னை அழைத்தார் என்பது குறித்து விளக்கினார்.

உறுதியான ஆதாரங்களின் அடிப்படையில் பரம்ஜித் சிங் மீது அவதூறு வழக்கு தொடுக்க முடிவு செய்தேன். செயல்முறையின் பகுதியாக மகாராஷ்டிர அரசுக்கு செப்டம்பர் 5-ஆம் தேதி கடிதம் எழுதி,  அனுமதியும் கேட்டேன். இதுநாள் வரை அதுகுறித்து ஒரு பதிலும் இல்லை.

படிக்க:
மோடியைக் கொல்ல சதியாம் !
பா.ஜ.க. மோடி அரசின் பாசிச அடக்குமுறைகள் | மக்கள் அதிகாரம் கண்டனம்

அதேவேளையில், என்மீது எந்த வழக்கும் இல்லாதபட்சத்தில், என்னுடைய கடிதம் அவர்களுக்கு குற்றவுணர்வை ஏற்படுத்தியிருக்கலாம். எனவே, முதல் தகவல் அறிக்கையில் உள்ள என்னுடைய பெயரை நீக்குமாறு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன். நீதிமன்ற அமர்வு என் மீதுள்ள குற்றச்சாட்டுகளின் பட்டியலை சமர்பிக்கச் சொல்லி போலீசுக்கு உத்தரவிட்டது. போலீசு தாக்கல் செய்த அஃபிடவிட்டில் என்மீது ஐந்து குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டிருந்தன, ஐந்து நீண்ட கடிதங்களும் (மேலே விவரித்த ஒன்றும் அதில் அடங்கும்) சமர்பிக்கப்பட்டன. நாங்கள் அவர்களின் குற்றச்சாட்டுக்களை மறுத்தோம், கடிதங்கள் உண்மையென்று கொண்டால்கூடாமல் அதை வைத்து வழக்கு தொடுக்க முடியாது. அந்த நான்கு கடிதங்களும் இவைதான்…

முதல் கடிதம் யாரோ ஒருவர் யாருக்கோ எழுதியது. அதில் ஏதோ ஒரு ஆனந்த், அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தை ஒருங்கிணைக்கும் பொறுப்பை எடுத்துக்கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2015-ஆம் ஆண்டு சென்னை ஐஐடி நிர்வாகம் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தை அங்கீகரிக்க மறுத்தது செய்தியானது. நான் அப்போது கரக்பூரில் உள்ள ஐஐடி மேலாண்மை பள்ளியில் பேராசிரியராக பணியாற்றினேன். சென்னையிலிருந்து அது 2000 கிமீ தள்ளி இருக்கிறது. மாணவர்களை ஒருங்கிணைக்கும் தேவை இருந்திருந்தால் வெகு தூரத்தில் உள்ள ஐஐடி-யைக் காட்டிலும்  என்னுடைய ஐஐடியிலேயே செய்திருப்பேன்.  இதுகுறித்து அறிந்த அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தின் நிறுவன உறுப்பினர், எனக்கும் அந்த அமைப்பு நிறுவப்பட்டதற்கும் அதனுடைய செயல்பாடுகளுக்கும் தொடர்பே இல்லை என கடிதம் எழுதினார்.

மாவோயிஸ்டுகள் எழுதியதாக கூறப்படும் கடிதம்

இரண்டாவது கடிதம், மீண்டும் யாரோ ஒருவர் யாருக்கோ எழுதிய கடிதத்தில் ஏதோ ஒரு ஆனந்த், அனுராத கண்டி மெமோரியல் கமிட்டியை சந்திப்பதை ’சிறந்த பரிந்துரை’யாக சொல்கிறார் என்கிறார். அந்த ஆனந்த் நானே என்று வைத்துக்கொண்டாலும், இன்னும் சில மதிப்பிற்குரிய நபர்களுடன் நானும் அந்த அறக்கட்டளையின் உறுப்பினராக இருக்கிறேன். அது பத்தாண்டுகளாக செயல்பட்டு வரும் பதிவு பெற்ற அமைப்பு, அதற்கு நிரந்த கணக்கு எண்ணும் வங்கி கணக்கும் உண்டு.  சமீர் அமீன் மற்றும் ஏஞ்சலா டேவிஸ் போன்ற முக்கியமான ஆய்வாளர்களின் ஆய்வுரைகளை இந்த அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து பத்திரிகை செய்திகளும் பரவலாக வந்துளது. இந்த அறக்கட்டளை அல்லது கமிட்டியின் கூட்டத்துக்கோ, ஆய்வுரைகளை கேட்கவோ என்னால் சமீப ஆண்டுகளில் போக முடியவில்லை. ஏனெனில் கடந்த பத்தாண்டுகளாக ஐஐடி கரக்பூரிலும் அதற்கடுத்து கோவாவிலும் என நான் தொலைவில் வசிக்கிறேன்.

மூன்றாவது கடிதத்தில், மீண்டும் யாரோ ஒருவர் யாருக்கோ எழுதிய கடிதத்தில் ஏதோ ஒரு ஆனந்த், 2018 ஏப்ரல் மாதம் கட்சிரோலியில் நடந்த என்கவுண்டர் குறித்து உண்மை அறியும் குழுவுக்கு பொறுப்பேற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அது நானாகவே எடுத்துக்கொண்டாலும் ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு கமிட்டியின் பொது செயலாளராக இருக்கும் என்னால், மனித உரிமை மீறல் நடந்திருக்கும் வழக்குகளில் உண்மை அறியும் குழு அமைக்க முடியும். ஆனால்,  இந்த குழுவை நான் அமைக்கவோ, பங்கேற்கவோ இல்லை என்பதே உண்மை. மகாராஷ்டிராவிலிருந்து தள்ளியிருந்தாலும் கடைசியாக பொது செயலாளராக இருந்த பி.ஏ. செபாஸ்டியனின் விருப்பத்தின் பேரில் நான் பொது செயலாளர் ஆனேன். உறுப்பினர்களும் அதை வலியுறுத்த அந்தப் பதவியில் தொடர்கிறேன்.

நான்காவது… ஒரு குறிப்பு, யாரோ ஒருவருடைய கணினியிலிருந்து கைப்பற்றப்பட்டது. அதில் சுரேந்தர் என்பவர் மிலிந்த் மூலமாக எனக்கு ரூ. 90 ஆயிரம் கொடுத்ததாக சொல்லப்பட்டிருக்கிறது. கற்பனை திறன் குறைந்த, அபத்தமான குற்றச்சாட்டு இது.  ஒவ்வொரு மாதமும் அந்த அளவிலான பணத்தை வருடக்கணக்கில் வரியாக செலுத்தும் நான் பணம் பெறுகிறேன் என சொல்வது அபத்தமாக உள்ளது. அதோடு, இத்தகைய குறிப்பு சட்டத்தின் முன் ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படாது.

போலீசு அஃபிடவிட்டில் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் பதிலுக்கு பதில் மறுத்துவிட்டேன். ஆனால், இறுதியாக போலீசு ‘முத்திரை’ வைக்கப்பட்ட உறைகளில் நீதிபதிகளிடம் எதையோ அளித்தது. நீதிமன்றம் என்னுடைய மனுவை நிராகரித்தது. நான் அளித்த எந்த விளக்கத்தையும் ஏற்கவில்லை, என்னுடைய தனிப்பட்ட மதிப்பு மரியாதை எதையும் அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை. போலீசு சொன்னதற்கும் என்னுடைய சுயவிவரத்துக்கும் தொடர்பிருக்கிறதா என்பதையும் பார்க்கவில்லை.

என்னுடையது வினோதமான வழக்கு எனக் கருதி, நான் உச்சநீதிமன்றத்தை அணுகினேன். ஆனால், நீதிமன்றம், இந்த நிலையில் போலீசின் புலனாய்வில் தலையிட முடியாது எனக் கருதியது. கைதிலிருந்து தப்பிக்க பிணை பெறும்படி எனக்கு அறிவுறுத்தியது.

இப்போது இந்த வழக்கு மிக முக்கியமான கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறது. என்னுடைய அப்பாவித்தனமான நம்பிக்கைகள் அனைத்தும் உடைந்து போயுள்ளன. நான் உடனடியாக கைது செய்யப்படலாம் என்பது துயரத்தைத் தருகிறது. என்னை போன்ற குற்றச்சாட்டில் ஏற்கனவே ஒன்பது பேர் சிறையில் இருக்கிறார்கள். சட்ட நடைமுறைகளால் அவர்கள் துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள்.  என்னைப் போல அல்லாமல், அவர்கள் உங்களிடம் உதவி கேட்கும் வாய்ப்பைப் பெறவில்லை. நீங்கள் எனக்கு ஆதரவாக என்னுடன் நிற்பது எனக்கு மட்டுமல்ல, என்னுடைய குடும்பத்துக்கும் ஆற்றலை அளிக்கும். அதோடு, இந்தியாவில் தங்களுக்கு எதிராக குரல் எழுப்பும் மக்களை சித்திரவதை செய்யும் பாசிச ஆட்சியாளர்களுக்கு செய்தியைச்  சொல்லும்.

எனவே, தயவுசெய்து கையெழுத்து இயக்கத்தை ஒருங்கிணையுங்கள், அறிக்கைகளை வெளிவிடுங்கள், கட்டுரைகள் எழுதுங்கள் …  உங்களால் முடிந்த ஏதேனும் ஒரு வழிமுறையில் இந்த படுமோசமான செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் எனக்கு ஆதரவளிக்கும் வகையிலும் பொதுமக்களின் சீற்றத்தை வெளிப்படுத்துங்கள்.”


ஆங்கில மூலம்: scroll
தமிழாக்கம்: அனிதா

மோடியை கலாய்க்கும் ஹிந்து விரோதிகள் மீது எச்.ராஜா புகார்

சென்னை லயோலா கல்லூரியும், மாற்று ஊடக மையமும் இணைந்து ”வீதி விருது வழங்கும் விழா” என்கிற நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளது. கடந்த ஜனவரி 19 மற்றும் 20-ம் தேதிகளில் இதன் ஆறாம் ஆண்டு விழா சென்னை லயோலா கல்லூரியில் நடத்தப்பட்டது. விழாவின் ஒரு பகுதியாக ஓவியக் கண்காட்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் “கருத்துரிமை ஓவியங்கள்” எனும் தலைப்பில் சில ஓவியங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

இந்தக் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த ஓவியங்கள் இந்துக்களின் மனதைப் புண்படுத்துவதாகவும், இதற்காக லயோலா கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் சார்பில் காவல் துறையினரிடம் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று (ஜனவரி 21ம் தேதி) காலை 11:30 மணிக்கு காவல் துறையில் தான் ஒரு புகார் அளிக்கவிருப்பதாகவும், இதற்கு இந்து உணர்வாளர்கள் மற்றும் தேசபக்தர்கள் காவல்துறை அலுவலகத்திற்கு திரளாக திரண்டு வர வேண்டும் எனவும் பா.ஜ.கவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா டிவிட்டரில் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து பாரதிய ஜனதாவின் மாநிலத் தலைவர் தமிழிசை செய்தியாளர்களிடம் பேசும் போது லயோலாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தி உள்ளார். பாரதிய ஜனதாவின் செய்தித் தொடர்பாளரான இழிபுகழ் நாராயணன் தரப்பில் இருந்தும் புகார் ஒன்று அளிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. சங்கி கும்பலோடு (சொல்வதெல்லாம் உண்மை புகழ்) லஷ்மி ராமகிருஷ்ணன், (குத்துவிளக்கு குத்துப் பாட்டு புகழ்) நடிகை கஸ்தூரி உள்ளிட்ட மாமிகளும் கைகோர்த்து லயோலா கல்லூரிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கம்பு சுற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழக இந்துத்துவ கும்பலின் சார்பாக கூலிக்கு அமர்த்தப்பட்ட இணையப் பொறுக்கிகள் சிலர் #loyolacollage, #BanAntiHinduLoyola எனும் ஹேஷ்டேகின் கீழ் களமிறக்கி விடப்பட்டுள்ளனர். ”லயோலா கல்லூரியைத் தடை செய்ய வேண்டும்” “லயோலா கல்லூரியை மத்திய அரசின் யு.ஜி.சி தனது கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும்” “லயோலா கல்லூரி தமிழகத்தின் ஜே.என்.யூ” என்பதில் துவங்கி “லயோலா கல்லூரி நக்சல்களின் புகலிடம்” என்பது வரை விதவிதமாக வெறுப்புப் பிரச்சாரத்தைக் கையிலெடுத்துள்ளது இந்துத்துவாவின் இணைய கூலி கும்பல்.

இந்தப் பிரச்சாரத்திற்கு தமிழகத்தின் பொதுவான முற்போக்காளர்களும், பெரியாரிய மற்றும் திமுக ஆதரவு செயல்பாட்டாளர்களும் சமூக வலைத்தளத்தில் தன்னிச்சையான முறையில் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த விவகாரத்தை சங்கிகள் சமூக வலைத்தளத்தில் கிளப்பி சில மணி நேரங்களே ஆகியுள்ள நிலையில் வெகுவிரைவில் அவர்களுக்கான பதிலடிகள் மேலும் கூர்மையடையும் என்பதை எதிர் பார்க்கலாம்.

பாஜகவின் தேசியச் செயலர் அறைகூவல் விடுத்ததும், ‘ஹிந்து’ உணர்வோடு ’திரளாகக்’ கலந்து கொண்ட ‘ஹிந்துக்கள்’ – மொத்தம் ஏஏஏஏஏழு பேர்

குறிப்பாக சங்கிகள் வைக்கும் குற்றச்சாட்டில் ஒன்று மேற்படி ஓவியங்கள் இந்து மதத்தை புண்படுத்துவதாக உள்ளது என்பதாகும். ஆனால், அவர்களே எடுத்துப் போடும் படங்களில் எந்த குறிப்பிட்ட கடவுளின் படங்குளும் இடம் பெறவில்லை என்பதை முதற்கட்டமாக இதற்கு எதிர்வினையாற்றுகிறவர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும் சூலாயுதம், உடுக்கை உள்ளிட்ட சில குறியீடுகள் உள்ளன என்றாலும், அவை எதுவும் இந்து மதத்திற்கே உரியனவாக காப்புரிமை பெறப்பட்ட குறியீடுகள் அல்ல என்பதும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

அடுத்ததாக வரையப்பட்டுள்ள ஓவியங்கள் மோடி மற்றும் மத்திய அரசுக்கு எதிராக இருக்கின்றன என்பது சங்கிகளின் ஆதங்கம். இதன் மூலம் அவர்கள் சொல்ல வருவது என்னவென்றால், மோடியோ மத்திய அரசோ விமர்சனத்திற்கெல்லாம் அப்பாற்பட்ட கடவுள்கள் என்பது தான். மோடியை விமர்சிப்பது இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தும் என்றால் மோடி தான் இந்து மதமா? தங்களுடைய இந்த சிந்தனையே ”இந்து மத உணர்வை” புண்படுத்தக் கூடியது என்பதை புரிந்து கொள்ளும் அளவுக்கு கூட சங்கிகளின் இணையக் கூலிப் படையினருக்கு மூளையில்லை என்பதை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தினமலரின் பொறுப்பான பணி – ஒவ்வொரு ஓவியங்களும் என்னென்ன சேதியைச் சொல்கின்றன என்பதை தமது பார்ப்பனக் குசும்போடு விவரித்திருக்கிறது.

கேரளாவுக்கு ஒரு சபரிமலை விவகாரம் போல் தமிழகத்திலும் வாகாக ஏதாவது ஒரு பிரச்சினையைக் கிளப்பி மதக் கலவரங்களைத் தூண்ட வேண்டும் என்கிற முனைப்பில் வெறியோடு செயல்பட்டு வருகிறது இந்துத்துவ கும்பல். ஒரு பக்கம் தமிழகத்தில் பெரிய கலவரங்களைத் தூண்டும் அளவுக்கான ஆள்பலம் தங்களிடம் இல்லை என்பதை உணர்ந்திருப்பதால் இதைப் போல் பகுதியளவில் சிறு சிறு பிரச்சினைகளைக் கிளப்ப திட்டமிட்டுள்ளனர் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. எனவேதான் லயோலா விவகாரத்தை நேரடியாக ”கிறிஸ்தவ சதி” என்று திரும்பத் திரும்ப நிறுவ முயற்சிக்கின்றனர்.

சங்கிகளின் இரவல் மனதை ’புண்படுத்திய’ அந்த ஓவியங்கள் தோழர் முகிலனால் வரையப்பட்டவை. அவை அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்பட்டவைதான். அவை ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட வரலாற்றுப் பின்னணியும், காரணங்களும், நியாயங்களும் உள்ளன. அவை வெளியான போது இணைய வாசகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டும், பகிரப்பட்டும் இருந்தன.

ரங்கராஜ் பாண்டே முதல் இதர இந்துத்துவ அறிஞர்கள் கல்லூரி கல்லூரியாக சுற்றி மோடிக்கும், பார்ப்பனியத்திற்கும் பஜனை பாடினாலும் லயோலா கல்லூரி மாணவர்கள் மோடி கும்பலை எதிர்க்கும் தமிழக மக்கள் உணர்வை வீரத்துடன் வெளிப்படுத்தியிருக்கின்றனர். எனவே  கல்லூரிகளில் இருக்கும் இத்தகைய இந்துத்துவ எதிர்ப்பு உணர்வை கட்டோடு தடை செய்வதே ஆர்.எஸ்.எஸ் கும்பலின் நோக்கம். அதற்காகத்தான் லயோலாவை குறி வைத்து இவர்கள் கிளம்பியிருக்கிறார்கள்.

மோடியை வரைவது குற்றமென்றால் அந்த குற்றத்தை நாம் ஆயிரம் முறை செய்வோம். சங்கிகள் பொறுமும் வகையில் சந்து பொந்துகளிலெல்லாம் மோடியின் கேலிச்சித்தரங்களை வரைந்து தள்ளுவோம். பார்ப்பன பாசிசத்திற்கு பாடை கட்டும் வரை தமிழகம் ஓயப் போவதில்லை.

கண்காட்சியில் இடம்பெற்ற ஓவியங்களில் சில …

நானும் பாதிக்கப்பட்டேன் என்று பெண்கள் ஆணாதிக்கக் கிரிமினல்களின் மீது குற்றச்சாட்டு வைக்கையில், பாய்ந்து வரும் கார்ப்பரேட், பன்னாட்டு நிறுவனங்களால் பாதிக்கப்பட்ட பாரதமாதா #MeToo சொல்வதில் இந்துத்துவ கும்பலுக்கு என்ன பிரச்சினை ? இந்துத்துவக் கிரிமினல்களுக்கு பெண்களை ஒடுக்கித் தானே பழக்கம். பாரத மாதாவாகவே இருந்தாலும், #MeToo என்று சொன்னால் கோவம் வராதா என்ன ?

அரியலூர் நந்தினியைக் கொன்ற மணிகண்டனும் ராஜசேகரும், அரியலூரின்  இந்து முன்னணி பொறுப்பாளர்கள். ராஜசேகரின் ரவுடிப் படையிலும் இந்து முன்னணியிலும் முக்கிய தளபதியாக செயல்பட்டதே மணிகண்டனுக்கு அத்தனை கொடூரமாக நந்தினியை கொல்லும் வெறியை வழங்கியுள்ளது. (மேலும்)

காஷ்மீரில் 8 வயது சிறுமி ஆசிஃபா-வைக் கடத்தி கோவிலில் அடைத்து வைத்துக் கொன்றவனைப் பாதுகாத்த பாஜக (மேலும்)

படுகொலை செய்யப்படும் முற்போக்கு ஜனநாயக சக்திகள் !

இளம் இதயங்கள்தான் உண்மையைச் சட்டென்று எட்டிப்பிடித்துக் கொள்கின்றன …

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 53 (தொடர்ச்சி பாகம் 2)

மாக்சிம் கார்க்கி
”இதுதான் அதிசயம்!” என்று தன் தாடியைப் பிடித்துக் கொண்டும், தரைமீது பார்வையை ஊன்றிப் பதித்துக்கொண்டும் பேசத் தொடங்கினான் சமோய்லின் தந்தை. ”இவர்களை, இந்தப் பயல்களைப் பார்க்கும்போது, இவர்கள் இந்த மாதிரியான சங்கடத்துக்குள் போய் மாட்டிக்கொண்டதையெண்ணி நம்மால் அனுதாபப்படாமலிருக்க முடியவில்லை. உடனே திடீரென்று நமக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. ஒருவேளை இந்தப் பயல்கள் சொல்வதுதான் சரியான உண்மையோ என்று நினைக்கத் தோன்றுகிறது! அதிலும் நாளுக்கு நாள் தொழிற்சாலையில் இவர்கள் கூட்டம் பெருத்து வருவதைக் கண்டால் . இப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது. போலீசாரோ அவர்களைப் பிடித்துக்கொண்டு போன வண்ணமாயிருக்கிறார்கள்; அவர்களோ ஆற்று மீன்களைப் போல் பெருகிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களிடம்தான் சக்தி இருக்கிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.”

“ஸ்திபான் பெத்ரோவின் இந்த விவரத்தைப் புரிந்து கொள்வது நம் போன்றவர்களுக்கு முடியாத காரியம்!” என்றான் சிஸோவ்.

”ஆமாம், சிரமமானதுதான்” என்று ஆமோதித்தான் சமோய்லாவின் தந்தை.

“போக்கிரிகள் – இவர்களுக்குத்தான் எவ்வளவு சக்தி’’ என்று பலத்துச் சிணுங்கிக்கொண்டே கூறினாள் அவனது மனைவி.

பிறகு அவள் தாயின் பக்கம் திரும்பி, தனது தொள தொளத்த அகன்ற முகத்தில் புன்னகை அரும்பப் பேசினாள்.

“நீலவ்னா, என் மீது கோபம் கொள்ளாதே. கொஞ்ச நேரத்துக்கு முன்னால் நான் தான் உன் மகனைக் குறைகூறினேன். ஆனால், யார் குற்றம் அதிகம் என்று எவர் கூறமுடியும்? எங்கள் கிரிகோரியைப் பற்றிப் போலீஸ்காரர்களும், உளவாளிகளும் என்ன சொன்னார்கள் பார்த்தாயா? அவனும் இந்த விவகாரத்தில் தன்னாலானதைச் செய்திருக்கிறான், செந்தலைப் பிசாசு”

தனது உணர்ச்சியை அவள் உணர்ந்து கொள்ளாவிட்டாலும் அவள் தன் மகனை எண்ணிப் பெருமை கொள்வதாகவே தோன்றியது. எனினும் தாய் அவள் கூறியதைக் கேட்டு மெச்சிக்கொண்டாள். அன்பான புன்னகை ததும்ப உள்ளத்திலிருந்து பிறந்த வார்த்தைகளோடு பதில் சொன்னாள் தாய்.

“இளம் இதயங்கள்தான் உண்மையைச் சட்டென்று எட்டிப்பிடித்துக்கொள்கின்றன…”

ஜனங்கள் வராந்தாவில் நடமாடினார்கள். கூட்டம் கூட்டமாகக் கூடி நின்று உள்ளடங்கிப்போன குரல்களோடும் ஆர்வத்தோடும் பேசிக்கொண்டிருந்தார்கள். யாருமே தன்னந்தனியாய் ஒதுங்கி நிற்கவில்லை. எல்லோரது முகங்களிலுமே, பேசவேண்டும். கேள்வி கேட்கவேண்டும், பதில் தெரிய வேண்டும் என்ற ஆசையுணர்ச்சிகள் பிரதிபலித்தன. சுவர்களுக்கு இடையேயுள்ள நடைபாதைகளில் அவர்கள் ஓரிடத்திலும் கால் தரிக்காமல் முன்னும் பின்னும் காற்றினால் அலைக்கழிக்கப்பட்ட மாதிரி நடமாடினார்கள்; எதையோ தேடித் திரிவது போலவும் அதைக் கண்டுபிடித்துவிட்டால், நிம்மதியாக இருக்கலாம் என்று எண்ணி உறுதியோடும் பலத்தோடும் பரபரத்துத் திரிவதைப் போலவுமே அவர்கள் காணப்பட்டார்கள்.

புகினின் மூத்த சகோதரன் – புகினைப் போலவே, நிறமற்ற அந்த நெட்டைச் சகோதரன் – தன் கைகளை ஆட்டிக்கொண்டும் எதையோ நிரூபணம் செய்யப் போகிறவன் மாதிரி நாலா திசைகளிலும் திரும்பிப் பார்த்துக்கொண்டும் வந்து சேர்ந்தான்.

“அந்த கிளெபானவ் — அவன் தான் அந்த ஜில்லா அதிகாரி – அவனுக்கு இங்கு என்ன வேலை…”

”கான்ஸ்தந்தீன்! உன் வாயைக் கொஞ்சம் மூடு!” என்று அவனது தந்தையான ஒரு குட்டைக் கிழவன் அங்குமிங்கும் ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொண்டே எச்சரிக்கை செய்தான்.

‘முடியாது. என்னால் முடியாது. போன வருஷம் அவன் ஒரு குமாஸ்தாவின் மனைவியை அடைவதற்காக, அந்த குமாஸ்தாவையே கொன்று தீர்த்துவிட்டான் என்று ஊரில் பேசிக்கொள்கிறார்கள். இப்போது இவன் அவளோடுதான் வாழ்கிறான். இதைப் பற்றி நீ என்ன சொல்கிறாய்? மேலும் இவன் ஒரு பெரிய திருட்டுப் பயல் என்பதும் எல்லோருக்கும் தெரியும்…”

“ஐயோ! நீ நன்றாயிருப்பாய், கொஞ்சம் பேசாமல் இரேன். கான்ஸ்தந்தீன்…”

“ரொம்ப சரி” என்றான் சமோய்லவின் தந்தை, “ரொம்ப சரி. இந்த விசாரணை நேர்மையானது என்று சொல்லவே முடியாது……..”

மூத்த புகின் இந்தக் குரலைக் கேட்டான். அவன் தன்னோடு பலரையும் சேர்த்திழுத்துக்கொண்டு முன்னேறி வந்தான். அவனது முகம் சிவந்து போயிருந்தது. அவன் தன் கைகளை ஆட்டிக்கொண்டு சத்தமிட்டான்.

“கொலையானாலும் திருட்டானாலும் குற்றவாளிகளைப் பொது மக்களின் ஜூரிகளைக் கொண்டு விசாரிக்கிறார்கள். அந்த ஜூரிகளில் விவசாயிகளும், நகர மாந்தர்களும், தொழிலாளர்களும் உண்டு. ஆனால், ஜனங்கள் அதிகாரிகளுக்கு எதிராகப் போராடினால் மட்டும், அவர்களை விசாரிப்பது பொது மக்களின் ஜூரிகளல்ல, அதிகாரிகளே அவர்களைப் பிடித்து விசாரிக்கிறார்கள்! இதை என்ன சொல்கிறாய்? நீ என்னை அவமானப்படுத்தினாய் என்று வைத்துக் கொள். நான் உன் தாடையில் ஓங்கியறைகிறேன். அப்புறம் நீ என்மீது தீர்ப்புக் கூறுகிறாய்; நீ என்ன கூறுவாய்? என்னைத்தான் குற்றவாளி என்பாய். ஆனால் முதன்முதலில் தவறு செய்தது யார்? நீதான். அது போல…”

நரைத்த தலையும் கொக்கி மூக்கும் கொண்ட ஒரு காவலாளி மார்பகலத்துக்குப் பற்பல மெடல்களை மாட்டிக்கொண்டு அங்கு வந்து சேர்ந்தான். அவன் ஜனக்கூட்டத்தைக் கலைந்து போகச் செய்தான். புகினின் சகோதரனைப் பார்த்து விரலால் சுட்டிக்காட்டிப் பத்திரம் என்றான்.

“கூச்சலை நிறுத்து. இது ஒன்றும் கள்ளுக்கடை இல்லை!” என்றான் அவன்.

”அது சரிதான், பெரியவரே, எனக்குத் தெரியும், ஆனால் நான் உங்களை அடித்துவிட்டு, பிறகு நானே நீதிபதியாகவும் மாறினால், அதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்…?”

“உன்னை இங்கிருந்து கல்தா கொடுத்து வெளியில் தள்ளத்தான் நான் நினைக்கிறேன். தெரிந்ததா?” என்று கடுமையாகச் சொன்னான் அந்தக் காவலாளி.

“என்னை வெளியே தள்ளப் போகிறாயா? எதற்காக?”

”இந்தமாதிரிக் காட்டுக் கூச்சல் போடுவதற்காக! உன்னைத் தெருவில் கொண்டுபோய்த் தள்ளிவிடுவேன்!”

மூத்த புகின் தன்னைச் சுற்றியுள்ளவர்கள் அனைவரையும் பார்த்தான். பிறகு தணிந்த குரலில் சொன்னான்:

”அவர்கள் விரும்புவதெல்லாம் ஒரே ஒரு விஷயம்தான். ஜனங்கள் வாயைப் பொத்திக்கொண்டு சும்மா இருக்க வேண்டும்!”

“ஆமாம், நீ என்ன நினைத்தாய்?’ என்று அந்தக் கிழவன் கரகரத்த குரலில் கேட்டான்.

மூத்த புகின் தோள்களைக் குலுக்கிவிட்டுக் கொண்டு மிகவும் மெதுவாகப் பேசத் தொடங்கினான்.

”விசாரணையைப் பார்க்க எல்லா ஜனங்களையும் ஏன் அனுமதிக்கவில்லை? உறவினர்களை மட்டும் ஏன் அனுமதிக்க வேண்டும்? உங்கள் விசாரணை நேர்மையானதாக இருந்தால், எல்லோரும் தான் அதைக் கேட்டுவிட்டுப் போகட்டுமே. எதற்காகப் பயப்படுவதாம்?”

“விசாரணை நேர்மையானதல்ல. அதில் சந்தேகமே இல்லை” என்று உரத்த குரலில் ஆமோதித்தான் சமோய்லவின் தந்தை.

இந்த விசாரணையே சட்ட விரோதமானது என்பதைப் பற்றி நிகலாய் இவான்விச் விவரித்துச் சொன்ன விஷயங்களை இவனுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று தாய் திரும்பினாள். ஆனால், அவன் சொன்ன விஷயங்களை அவள் பரிபூரணமாகப் புரிந்து கொள்ளவுமில்லை. மேலும் சில வார்த்தைகளும் அவளுக்கு மறந்து போய்விட்டன. எனவே அதை ஞாபகப்படுத்திப் பார்க்க முயன்று கொண்டே அவள் ஒரு பக்கமாக ஒதுங்கினாள். அந்தக் சமயத்தில் வெளிர் மீசை கொண்ட ஓர் இளைஞன் தன்னைக் கவனித்துக்கொண்டிருப்பதை அவள் கண்டு கொண்டாள். அவன் தன் வலது கையை கால்சராய்ப் பைக்குள் செலுத்தியிருந்தான். எனவே, அவனது இடது தோள் வலது தோளைவிடத் தணிந்திருப்பது போலத் தோன்றியது. இந்தத் தோற்றத்தை அவள் எங்கோ ஏற்கெனவே கண்ட மாதிரி இருந்தது. ஆனால் அவனோ திடீரென்று தன் முகத்தைத் திருப்பி நின்று கொண்டான், நினைவலைகளால் சூழப்பட்டிருந்த அவள், அவனை மறந்துவிட்டாள்.

ஒரு நிமிஷம் கழித்து அவள் காதில் ஒரு கேள்விக் குரல் விழுந்தது. “அவளா?” “ஆமாம்” என்று ஆர்வத்தோடு ஒலித்தது பதில்.

அவள் சுற்றுமுற்றும் பார்த்தாள். தோளைத் தூக்கிக்கொண்டு நின்ற அந்த இளைஞன் இப்போது பக்கவாட்டில் நின்றான், கரிய தாடியும், குட்டைக் கோட்டும், முழங்கால் வரை உயர்ந்த பூக்களும் கொண்ட இன்னொரு மனிதனோடு அவன் பேசிக்கொண்டிருந்தான்.

மீண்டும் அவள் தன் நினைவைத் தேடித் திரிந்தாள். அதனால் அவள் மனம் குழம்பியதுதான் மிச்சம். ஒன்றும் அவள் நினைவில் தட்டுப்படவில்லை. தனது மகனது கொள்கையை அந்த ஜனங்களுக்கு விளக்கி எடுத்துக் கூற வேண்டும் என்ற கட்டுப்படுத்த முடியாத பேராவல் அவள் மனத்தில் நிறைந்து பொங்கியது. அதைப் பற்றி இந்த ஜனங்களிடம் சொன்னால் இவர்கள் என்ன சொல்லுவார்கள், அதன் மூலம் அந்த விசாரணையின் முடிவு எப்படியிருக்கும் என்பதைத் தீர்மானிக்கலாம் என்று யோசித்தாள் அவள்.

படிக்க:
தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? ஸ்டெர்லைட்டின் ஆட்சியா? | மக்கள் அதிகாரம்
ஆனந்த் தெல்தும்ப்டேவுக்கு எதிரான பொய் வழக்கை ரத்து செய் ! ஊபா உள்ளிட்ட கருப்புச் சட்டங்களை ரத்து செய் !

“இதுதான் விசாரணை நடத்துகிற ஒழுங்கோ?” என்று அமைதியாகவும் ஜாக்கிரதையாகவும் சிஸோவை நோக்கிப் பேச்சைத் தொடங்கினாள் தாய். ”யார் என்ன என்ன செய்தார்கள் என்பதை அறிவதில் தான் இவர்கள் நேரத்தைப் போக்குகிறார்களே தவிர, ஏன் அப்படிச் செய்தார்கள் என்பதை அறிய விரும்பவில்லை. இவர்கள் எல்லாம் கிழட்டு ஆசாமிகள், இளைஞர்களை இளைஞர்களைக் கொண்டுதான் விசாரிக்க வேண்டும்.”

“ஆமாம்” என்றான் சிஸோவ், ‘இந்த விவகாரத்தை நாமெல்லாம் புரிந்து கொள்வது சிரமம்தான் – படுசிரமம்!” அவன் ஏதோ யோசித்தவாறே தலையை ஆட்டினான்.

காவலாளி நீதிமன்றத்தின் வாயிற் கதவைத் திறந்து விட்டுவிட்டு, வாய்விட்டுக் கத்தினான்.

“உறவினர்களே! உங்கள் அனுமதிச் சீட்டுக்களைக் காட்டுங்கள்!”

“சீட்டுக்கள்!” என்று யாரோ குத்தலாகச் சொன்னார்கள். ”இதென்ன சர்க்கஸ் காட்சியா?”

ஜனங்களிடம் ஓர் உள்ளடங்கிய எரிச்சல் குணம் லேசாக வெளித்தோன்றியது. அவர்கள் மிகுந்த இரைச்சலோடு பேசினார்கள் , அரட்டையடித்து காவலாளிகளோடு விவாதம் செய்து கொண்டிருந்தார்கள்.

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

 

தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? ஸ்டெர்லைட்டின் ஆட்சியா? | மக்கள் அதிகாரம்

பத்திரிகைச் செய்தி

 18.01.2019

 தமிழகத்தில் நடப்பது  சட்டத்தின் ஆட்சியா?  ஸ்டெர்லைட்டின் ஆட்சியா?

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிவரும் முன்னணியாளர்களை போலீசு குறிவைத்து கைது செய்வதும், அவர்களின் குடியிருப்புப் பகுதிக்கும் கல்லூரிகளுக்கும் சென்று மிரட்டல் விடுப்பதும், பின் தொடர்ந்து கண்காணிப்பதும், அச்சுறுத்துவதும், பொய் வழக்குப் போடுவதும் தொடர்ந்து வருகிறது.

நேற்று மதியம், பண்டாரம்பட்டி கிராமத்தை சேர்ந்த, அனைத்துக்கல்லூரி மாணவர் சங்கக் கூட்டமைப்பின் தலைவர் சந்தோஷ் என்பவர், சீருடை அணியாத போலீசால் கடத்தப்பட்டு மாலை வரை எங்கிருக்கிறார்? என தெரியாத நிலையில்,  போலீசைக் கண்டித்து கிராம மக்கள்  உள்ளூரிலேயே அமர்ந்து போராடினர்.  இந்தச் செய்தி சமூக ஊடகங்களில் பரவியதும் இரவோடு இரவாக பொய் வழக்கில் சந்தோஷ் கைது செய்யப்பட்டு பாளையம் கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

நேற்றைய (17-01-2019) போராட்டத்தில் முன்னணியாக கலந்து கொண்ட மைக்கேல் என்ற இளைஞரையும், சட்ட ஆலோசகர் அரிராகவன் என்பவரையும் இன்று (18-01-2019) அதிகாலையில் கைது செய்து  சிறையிலடைத்தனர்.

இவர்களின் கைதுக்கான காரணமாக போலீசார் சொல்வது, ”ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட வேண்டும்” என்று பிரசுரம் கொடுக்க  தூண்டினார்கள், உதவினார்கள் என்பதுதான்.  தூத்துக்குடி போலீசாரின் இந்த செயலை மக்கள் அதிகாரம்  வன்மையாகக் கண்டிக்கிறது. கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்.

தமிழகத்தில்  கார்ப்பரேட் ஸ்டெர்லைட் ஆட்சிதான் நடக்கிறது. ”தூத்துக்குடியில்  மருத்துவமனை, கல்வி நிறுவனம், குடிநீர், வேலை வாய்ப்பு மகளிர் சுய உதவி குழுவிற்கு  கடன் வசதி அனைத்தையும் செய்து தருகிறோம். ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் ஏற்பாடு செய்து முதல் பக்கத்தில் தினசரி நாளிதழ்களில் விளம்பரம்  கொடுத்துள்ளது.  ஆலையை மீண்டும் திறக்கக் கோரி சென்னைக்கு மக்களை அழைத்து வந்து ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.

இதை எதிர்த்து பிரச்சாரம் செய்ய மக்களுக்கும் கட்சி இயக்கங்களுக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் ஸ்டெர்லைட்டின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் போலீசார் அனுமதி அளிக்கின்றனர். எதிர்த்துப் பேசினால் கடுமையாக ஒடுக்குகின்றனர். ஸ்டெர்லைட்டின் கூலிப்படையாகத்தான்  தூத்துக்குடி போலீசும் மாவட்ட நிர்வாகமும் செயல்படுகிறது என குற்றம் சாட்டுகிறோம்.

திருவைகுண்டத்தில் கடந்த டிசம்பர் 19-ம் தேதி “ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்கக்கூடாது, 14 பேர் உயிர்த்தியாகம் வீண்போகலாமா?” என பிரசுரம் கொடுத்த மக்கள் அதிகாரம் அமைப்பினர் மூவரை திருவைகுண்டம் போலீசு கைது செய்து சிறையிலடைத்தது. 15 நாட்களுக்குப் பின்னர்  பிணை கிடைத்தது.  ஒருமாதம் தினமும் போலீசு நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை பிணையில் வெளியே வந்தனர். பிரசுரம் கொடுத்தது குற்றம் என்று எந்த சட்டம் சொல்கிறது? இந்தப் பிரசுரத்தைக் கொடுக்க தூண்டியதாகதான் ஒப்புதல் வாக்கு மூலத்தில் பெயரை சேர்த்து இன்றைக்கு மைக்கேல், சந்தோஷ், அரிராகவனும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.  தமிழகத்தில் போலீசு ஆட்சிதான் நடக்கிறது.

“14 பேரை சுட்டுக்கொன்ற பிறகும்  ஆலையை திறப்பேன்” என்கிறது ஸ்டெர்லைட். “14 பேரை சுட்டுக்கொன்ற பிறகும் போராட வருகிறீர்களா?” என்று மக்கள் மீது அடக்குமுறை செலுத்துகிறது  போலீசு. இத்தகைய கொடூரமான அடக்குமுறைகளுக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும்.

இது  தூத்துக்குடி பிரச்சினை மட்டுமல்ல, கார்ப்பரேட் அரசியலுக்கு எதிரான போராட்டம். மக்களின், நாட்டின்  இறையாண்மையை காக்கின்ற, இயற்கை வளங்களை சூறையாடுகின்ற  மக்களின் வாழ்வாதாரங்களை சூறையாடுகின்ற கார்ப்பரேட்டுக்கு எதிரான போராட்டம். எடப்பாடி அரசு ஸ்டெர்லைட்டை  திறப்பதற்கான எல்லா வகையான ஏற்பாடுகளையும் செய்துவருகிறது. அதற்கு முன்னோட்டமாகத்தான் இந்த கைது நடவடிக்கைகள்.

தொடர்ச்சியாக மக்களுக்கு எதிராகவும் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகவும் செயல்படும் தூத்துக்குடி எஸ்பி, கலெக்டர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக அவர்களை அங்கிருந்து மாற்ற வேண்டும்.  குறிப்பாக தூத்துக்குடி எஸ்பி முரளி ரம்பா அவர்கள் கோடநாடு கொலைகளை, எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக விபத்து, தற்கொலை என வழக்கை முடித்து வைத்துள்ளார் என்ற குற்றச்சாட்டு  ஆதாரங்களுடன் வலுத்து வருகிறது.  எனவே அவர் மீது விசாரணை நடத்த வேண்டும்.

ஸ்டெர்லைட்டை திறக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்ய கார்ப்பரேட்டுக்கு உரிமை இருக்கிறதெனில், ஸ்டெர்லைட்டை  மூட வேண்டும் எனப் போராட அனைவருக்கும் உரிமை உள்ளது. உயிர்த்தியாகம் செய்து போராடி வரும்  தூத்துக்குடி மக்களோடு அனைவரும் இணைய வேண்டும் என அழைக்கிறோம்.

நன்றி!

இப்படிக்கு
வழக்கறிஞர் சி.ராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்.

தில்லி அப்பளம் திங்கத்தான் சென்னை புத்தகக் காட்சியா ?

புத்தகத் திருவிழாவில் கூட்டமில்லை. அப்பளம்தான் அதிகம் விற்பனையாகிறது. இப்படி எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் வாசகர்களை திட்டிக்கொண்டிருக்கிறார்கள். “ஆமான்டா அப்பளம்தான்டா அதிகமா விக்கும். ஏன்னா அந்த அப்பளத்தைவிட….” என்று வாசகர்கள் திருப்பி திட்டுவதில்லை. அவர்கள் அத்தனை சாதுவானவர்கள். எழுத்தாளன் மீதிருக்கிற கோபத்தில் அம்பிகையே அபிராமியே என அப்பளத்தை வாங்கி கோபமாக இரண்டு கடிகடித்துவிட்டு கிளம்பிவிடுகிறார்கள். இப்படிப்பட்ட வாயில்லா வாசகர்கள்தான் தமிழ்நாட்டின் மிகப்பெரிய சாபம். என்றைக்கு தமிழ்வாசகன் அவன் காசு கொடுத்து வாங்கிய நூலை படித்து கடுப்பாகும்போது எழுத்தாளனை திரும்பத் தாக்கத்தொடங்குகிறானோ அன்றைக்குதான் தமிழ் எழுத்துலகம் வாழும். அதெல்லாம் நடக்க இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆகும்.

சரி ஏன் புத்தகத் திருவிழாவில் கூட்டமேயில்லை… ஒரு சின்ன கணக்குப்போட்டுப்பார்த்துவிடுவோம்.

முதலில் எங்கு பார்த்தாலும் நிறைந்திருக்கிற சங்கரமடம் தொடங்கி மருத்துவர் சாமிகள், ஓஷோ வரைக்குமான சாமியார் மங்குனிகளின் கடைகள். நாம் நுழைந்திருப்பது புத்தகத் திருவிழாவா அல்லது ஆன்மிகக் கண்காட்சியா என்கிற அளவுக்கு குழப்பம் வரும். கண்ட சாமியார்களையும் உள்ளே விட்டு எல்லோரும் ஆளுக்கு நான்கைந்து கடைகளை ஆட்டையை போட்டுக்கொண்டு கொட்டையும் குடுமியுமாக சந்தனம் மணக்க மணக்க உட்கார்ந்திருக்கிறார்கள். அதிலும் இஸ்கானுக்குள் நுழைந்தால் பகவத்கீதையை தலையில் கட்டாமல் விடமாட்டார்கள். இன்னொருபக்கம் இஸ்லாமிய நூல்கள் விற்கிற கடைகள். இதிலேயே 15% திருவிழா முடிந்துவிட்டது. நல்ல வேளையாக அல்லேலுயா ஆட்களை அனுமதிப்பதில்லை. 25% ஆகிவிடும்.

அடுத்து வெவ்வேறு பெரிய பதிப்பகங்கள் ஆளாளுக்கு ப்ராக்ஸியாக கடைகளை பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். ஒரே பதிப்பகமே ரமேஷ் பப்ளிஷர் என நான்குகடை, சுரேஷ் பப்ளிஷர் என ஐந்து கடை, ராமேசுரேஷ் டிஸ்ட்ரிபூட்டர்ஸ் என பத்து கடை என கண்டமேனிக்கி ஆக்கிரமித்து வைத்திருக்கிறார்கள். எங்கு சுற்றினாலும் ஒரே மாதிரியான நூல்களையே திரும்ப திரும்ப பார்க்கும் போது வாசகனுக்கு எவ்வளவு அலுப்பும் எரிச்சலும் வரும்… இப்படிப்பட்ட ப்ராக்ஸி கடைகளிலேயே போய்விட்டது 30 % !

அடுத்து ஒரே மாதிரியான புத்தகங்கள் விற்கிற ஜிகே கடைகள். இங்கெல்லாம் பொன்னியின் செல்வன், சத்திய சோதனை, தெனாலி ராமன் கதைகள், பீர்பால், சாண்டில்யன்… இப்படிப்பட்ட நூல்களை மட்டுமே விற்பார்கள். இங்கெல்லாம் ஆண்டுதோறும் ஒரு புதிய நூலைக்கூட போடமாட்டார்கள். வருடாவருடம் அதே செட்டு… அதே நூல்கள். ஒரு புதுமையும் இருக்காது. எழுத்தாளனுக்கு ராயல்டி கொடுக்கிற பிரச்னைகள் இல்லாமல் நாட்டுடமை ஆக்கப்பட்ட நூல்களை மட்டுமே பதிப்பித்து விற்கிற குரூப்கள் இவர்கள். இது ஒட்டுமொத்தமாக பார்த்தால் ஒரு 15% தேறும்.

அடுத்து ஆங்கில நூல்கள் விற்பவர்கள். பென்குயின் தவிர பெரிய ஆங்கில பதிப்பகங்கள் சென்னை புத்தகத்திருவிழாவில் ஏனோ கால்வைப்பதில்லை. பெரும்பாலும் டூபாக்கூர் புக்ஸ் கம்பெனிகள்தான் களம்காண்கின்றன. எங்காவது பழைய கண்டெயினரில் பழைய நூலகத்தில் கழித்துக்கட்டின நூல்களை மொத்தமாக அள்ளிக்கொண்டு வந்து எது எடுத்தாலும் 100 வகையில் விற்பார்கள். அதில் பத்து சதவீதம் கூட தேறுகிற நூல்களே இருக்காது. எல்லாமே 10 ரூபாய் கூட மதிப்பில்லாத நூல்களாக இருக்கும். இவ்வகை கடைகள் 5%

அடுத்து ப்ரமோஷன் கடைகள். தங்களுடைய பொருள்களை விற்பதற்காக, அல்லது பிரபலப்படுத்துவதற்காக வைக்கப்பட்டிருக்கிற கடைகள். இங்கெல்லாம் நமக்கு ஒரு மண்ணாங்கட்டியும் கிடைக்காது. புத்தகத்திருவிழாவுக்கும் இவர்களுக்கும் ஒரு சம்பந்தமும் இருக்காது. இருந்தாலும் பத்து கடைகளை மொத்தமாக போட்டு… உள்ளே பத்து பேர் சேர் போட்டு உட்கார்ந்துகொண்டு நம்மை உள்ளே அழைத்து பலூனை கொடுத்து மண்டையை கழுவி எதாவது எஜூகேஷனல் சாப்ட்வேரை தலையில் கட்டுவார்கள். இதுமாதிரி கடைகள் ஒரு 5%

மீதி இருக்கிற 25% கடைகளில் நல்ல நூல்கள் கிடைக்கும் என நினைத்துவிடாதீர்கள். அதில் முக்கால்வாசி கடைகளில் புக்பேருக்கென்றே அவசரஅவசரமாக சரியாக எடிட் செய்யப்படாமல், பிழைகள் பார்க்காமல், சரியான ஆய்வுகளோ உழைப்போ இல்லாமல் அவசரகதியில் எழுதப்பட்ட நூல்களால் நிரம்பியிருக்கும். 200 ரூபாய் கொடுத்து ஒரு வாசகன் புத்தகம் வாங்குகிறான், அவனுடைய பணத்துக்கு மதிப்புக்கொடுத்து அவனை கொஞ்சமாவது மனதில் வைத்து எழுதப்பட்ட நூல்கள் இவைகளில் சொற்பமாகத்தான் தேரும். அது எது எனக் கண்டுபிடித்து சொல்லவும் நம்மிடம் ஆட்கள் இல்லை. ஃபேஸ்புக்கில் தேடினாலும் கிடைக்காது. முகநூல் ஹிட் என சில நூல்கள் உண்டு… அது நன்றாக இருக்கிறதா இல்லையா என்பது தெரிவதற்கு முன்பே மட்டையடி அடித்து நம் தலையில் கட்டிவிடுவார்கள். இப்படிப்பட்ட குழப்பத்தில் இந்த 25% கடைகளில் எதையோ ஒன்றை எடுத்துவந்து பத்து பக்கம் படித்துவிட்டு அப்படியே போட்டுவிடுவோம்.

இப்படி ஒட்டுமொத்த புத்தகத்திருவிழாவில் என்னதான் இருக்கிறது என்பது கடைசிவரை உள்ளே சென்று திரும்புகிற வாசகனுக்கு மர்மமாகவே இருந்துவிடுகிறது. ஆண்டுதோறும் இதே செட்அப்தான், ஒரு புதுமையோ மாற்றமோ இருக்காது. அதே லிச்சி ஜூஸ், அதே புதிய கவிஞர்கள் படை, அதே காலச்சுவடு கிளாஸிக்ஸ், அதே காமிக்ஸ் கடை, அதே மேடை, அதே சுகிசிவம், அதே மனிதர்கள்…

படிக்க:
மோடி அரசுக்கு ஆப்பு ! ரஃபேல் விமானங்களின் விலையை வெளியிட்ட பிரான்சு அரசு !
ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க சதி : முன்னணியாளர்கள் சட்ட விரோத கைது !

உலகிலேயே பாவப்பட்ட வாசகன் தமிழ் நூல்கள் வாசிக்கிறவன்தான். டாஸ்மாக் கடைகள் எப்படி எவ்வித ஒழுங்கும் இல்லாமல் பராமரிக்கப்படுகின்றனவோ, அவன்மீது எந்த பச்சாதாபமும் இல்லாமல் மொக்கையான சரக்குகளையும் அதிக விலைக்கு தலையில் கட்டி, மோசமான சூழலில் குடிக்க விட்டிருக்கிறார்களோ அப்படித்தான் புத்தகத்திருவிழாவும் தமிழ்வாசகனை நடத்துகிறது.

உலகெங்கிலும் நடக்கிற புத்தகத்திருவிழாக்களின் வீடியோக்களை யூடியூபில் தேடிப்பாருங்கள்… எப்படியெல்லாம் புதுமைகள் பண்ணுகிறார்கள். ஆங்கில நூல்களை வாங்கிப்பாருங்கள், அட்டை தொடங்கி கன்டென்ட் வரை எத்தனை உழைப்பு. ஒரு ஒரு ரூபாய்க்கும் மதிப்பு மிக்க நூல்களை போடுகிறார்கள்.

நம் புத்தகத் திருவிழா கடைகளில் கிரியேட்டிவிட்டி என்பது துளிகூட இருக்காது. போகட்டும் வசதிகளாவது இருக்கிறதா? கடையில் இருப்பவர்களுக்கும் நூல்கள் பற்றி ஒரு மண்ணும் தெரியாது. அங்கே ஒரு நூலை எடுத்து விவரித்து பரிந்துரை செய்யவும் பக்காவான ஆளில்லை. நல்ல நூல்களும் இல்லை. புதிதாக வருகிற சில நூல்களும் வாசகன் மீதான அக்கறையோடு எழுதப்படுவதில்லை…

இதையெல்லாம் தாண்டியும் இத்தனை கூட்டங்கள் வருடந்தோறும் வருவதும் நூல்கள் வாங்குவதும் கூட அதிசயிக்கதக்க அதிசயம்தான்… பதிப்பாளர்களும் எழுத்தாளர்களும் அந்த பாவப்பட்டவர்களுக்கு ரத்தினக்கம்பளமல்லவா விரிக்க வேண்டும்… அவனை பார்க்கிங்கில் அடித்து விரட்டிக்கொண்டிருக்கிறீர்கள்… யாசகனைப்போல!

முகநூலில்:Athisha Vino(அதிஷா)

அம்மா அரிசியில் பொங்கினாள் – அப்பன் சாராயத்தில் பொங்கினான் – மகன் புதுப்பட ரிலீசில் பொங்கினான் !

யிரோடு இருப்பதால்
வாழ்கிறோம்
என்று நீங்கள்
நம்புவது போல

பொங்கல் வைப்பதால்
மகிழ்ச்சியோடு இருக்கிறோம்
என்று,
தயவுசெய்து யாரும்
தப்புக் கணக்கு போட வேண்டாம்.

அன்று
வயல் வெடித்தபோதும்
பொங்கினோம்.
இன்று
புயல் அடித்தபோதும்
பொங்கினோம்.

இழந்ததை நினைத்து
பொங்கினோம்
இப்படியாக வாழ்ந்தோம்
எனும் நினைவுகளையாவது
இழக்காதிருக்க
பொங்கினோம்.

மற்றபடி
அந்த உலை
எங்கள் கண்ணீரில்
கொதித்தது,
மனதில் வெந்தது.
எங்கள்
இன்னலில் வளர்ந்ததால்
கன்னலும்
இனிக்க மறந்தது.

வீட்டுக்குள்
உழைப்பின் உணர்வற்று
கலை இழந்த
கலப்பைகள்.

வாசலில்
பொலிவான
பொங்கல் வாழ்த்து
கோலங்கள்.

பாதச்சேறு படாமல்
மூலையில்
வாடிநிற்கும்
மாடுகள்.
அதன் பார்வைக்கு
பதில் சொல்ல முடியாமல்
வெட்கி தலைகுனியும்
குடும்பங்கள்.

விவசாயம்
எனும் தாய்மையை
காக்க மறந்தவர்கள்
பொங்கல் வாழ்த்து
சொல்லுகிறார்கள்.

விவசாயி
எனும் வர்க்கத்தையே
அழித்தவர்கள்
பொங்கல் பரிசு
தருகிறார்கள்.

பொங்கல் விற்பனை..
பொங்கல் தள்ளுபடி..
பொங்கல் ரிலீஸ்..
பொங்கல் இ.எம்.ஐ….
எங்களை விளம்பரமாக்கி
யார் யாரோ வாழ்கிறார்கள்
எங்களைத் தவிர.

நமக்கு
பொங்கல் பரிசு
கரும்புத் துண்டும்
கைப் பையும்
ஆயிரமும்.

கார்ப்பரேட்டுகளுக்கு
பொங்கல் பரிசு
நமது விளை நிலமும்
மொத்த தமிழகமும்.

அம்மா
அரிசியில் பொங்கினாள்,
அப்பன்
சாராயத்தில் பொங்கினான்,
மகன்
புதுப்பட ரிலீசில்
பொங்கினான்.

ரேசனில் பொங்கியது
ஆயிரம்.
டாஸ்மாக்கில் பொங்கியது
பல்லாயிரம்.

கழனியெங்கும்
கார்ப்பரேட் பொங்குகிறது.
ரஜினி வந்து
கிழித்தது என்ன?
‘தல’ வந்து
தைத்தது என்ன?

ஓய்வெடுக்க வேண்டிய முதிய வயதில் முதுகெலும்பு ஒடிந்து போன மகன், மருமகள், நான்கு பேரக் குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பைச் சுமக்கும் கூலி விவசாயி வேலு

பொட்டல்
சுடுகாடாகும்
காவிரிப் பாசனம்.
கட் – அவுட்டுக்கு
என்னடா பாலாபிசேகம்!
விவசாயிகளுக்காக
பொங்காமல்
வேறென்ன பொங்கல்!

இந்தப் பொங்கலுக்கு
உங்கள் சிறப்பு தள்ளுபடி
விவசாயம் – விவசாயி.

நிலம்
நழுவுகிறது
வேர்
அறுபடுகிறது.
ஊர்
சிதைகிறது.
ஆறு
பாதி புதைத்த
பிணமாக கிடக்கிறது,
கழுத்தை நெறித்தது
போதுமா?
கத்திப் பார்க்கலாம்…
பொங்கலோ! பொங்கல்!

துரை. சண்முகம்


படிக்க:
விவசாயியை வாழவிடு – மக்கள் அதிகாரம் மாநாட்டுத் தீர்மானங்கள் !!
விவசாய நெருக்கடி : கடன் தள்ளுபடி தீர்வாகுமா ?

ஊரே காஞ்சிருச்சி உயிர் மூச்சு ஓய்ஞ்சிருச்சு – மகஇக பாடல்

எங்களுக்கு நீதி வழங்கும்படி உங்களுக்கு மக்கள் உரிமை வழங்கியிருக்கிறார்களா ?

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 53 (தொடர்ச்சி)

மாக்சிம் கார்க்கி
“அவர்கள் சொல்வதைக் கேள்” என்று சிஸோவ் ரகசியமாகச் சொன்னான்.

“பியோதர் மாசின், பதில் சொல்லுங்கள்…” ”முடியாது. சொல்லமாட்டேன்” என்று துள்ளிக்கொண்டு கூறினான் பியோதர். அவனது முகம் சிவந்து போய்விட்டது. கண்கள் பிரகாசமடைந்தன: என்ன காரணத்தினாலோ அவன் தன் கைகளைப் பின்புறமாகக் கட்டிக் கொண்டிருந்தான்.

சிஸோவ் மூச்சடைத்துப் போனான். தாயின் கண்கள் வியப்பினால் அகலவிரிந்தன.

”எனக்காக வக்காலத்துப் பேச நான் வக்கீலை அமர்த்தவும் இல்லை: நான் எதுவும் சொல்லவும் மறுக்கிறேன். இந்த விசாரணையே சட்ட விரோதமானது என நான் மதிக்கிறேன். நீங்களெல்லாம் யார்? எங்களுக்கு நீதி வழங்கும்படி உங்களுக்கு மக்கள் உரிமை வழங்கியிருக்கிறார்களா? இல்லை. அவர்கள் உங்களுக்கு உரிமை தரவில்லை. உங்களது அதிகாரத்தையே நான் ஏற்றுக்கொள்ள மறுக்கிறேன்!”

அவன் உட்கார்ந்தான், தனது கன்றிச் சிவந்த முகத்தை அந்திரேயின் தோளுக்குப் பின்னால் மறைத்துக்கொண்டான்.

அந்தக் கொழுத்த நீதிபதி பிரதம நீதிபதியை நோக்கித் தலையை அசைத்து, காதில் ஏதோ ரகசியமாகச் சொன்னார். வெளுத்த முகம் கொண்ட நீதிபதி தம் கண்களைத் திறந்து, கைதிகளைக் கடைக்கண்ணால் பார்த்துவிட்டு, முன்னாலுள்ள காகிதத்தில் ஏதோ குறித்துக்கொண்டார். ஜில்லா அதிகாரி தலையை அசைத்தார், தமது காலை நீட்டி தொந்தியைத் தொடைமீது சாய்த்து, அதைக் கைகளால் மூடிக்கொண்டார். தனது தலையைத் திருப்பாமலே, அந்தக் கிழ நீதிபதி தமது உடம்பு முழுவதையுமே திருப்பி, அந்த வெளுத்தமுக நீதிபதியைப் பார்த்து அவரிடம் ஏதோ ரகசியம் பேசினார். அந்த உபநீதிபதி அவர் கூறியதை வணங்கிய தலையோடு காதில் வாங்கிக் கொண்டார். பிரபு வம்சத் தலைவர் அரசாங்க வக்கீலிடம் என்னவோ சொன்னார்; அதை நகர மேயரும் தம் கன்னத்தைத் தடவிக் கொடுத்தவாறே கேட்டார். மீண்டும் அந்தப் பிரதம நீதிபதி மங்கிய குரலில் பேசத் தொடங்கினார்.

”அவன் அவர்களை வெட்டிப் பேசினான் பார்த்தாயா?” என்று தாயை நோக்கி வியப்போடு கூறினான் கிஸோவ். “அவன்தான் இவர்கள் எல்லோரிலும் கெட்டிக்காரன்’

அவன் சொன்னதைப் புரிந்துக்கொள்ளாமலேயே புன்னகை புரிந்தாள் தாய். அங்கு நடக்கும் சகல காரியங்களும், அவர்களையெல்லாம் கூண்டோடு நசுக்கித் தள்ளும் மகா பயங்கரத்துக்கான, வேண்டாத வீண் அறிகுறிகளே என்று அவள் கருதினாள். ஆனால், பாவெலும் அந்திரேயும் பேசிய பேச்சுக்கள் நீதிமன்றத்தில் பேசுவது போல் இல்லாமல், தொழிலாளர் குடியிருப்பில், தமது சிறிய வீட்டுக்குள் பேசிய பேச்சுப்போல் பயமற்றும் பலத்தோடும் ஒலித்தன. பியோதரின் உணர்ச்சிவசமான உத்வேகப் பேச்சைக் கேட்டு அவள் பரபரப்படைந்தாள். அந்த விசாரணையில் ஏதோ ஒரு துணிந்த காரிய சாதனை நடைபெறுவது போல் தோன்றியது. தனக்குப் பின்னாலுள்ள ஜனங்களைப் பார்த்தபோது, அவ்வித உணர்ச்சி தனக்கு மட்டுமே ஏற்படவில்லை. அவர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது என்பதையும் கண்டுகொண்டாள் தாய்.

”உங்கள் அபிப்பிராயம் என்ன?’ என்று அந்தக் கிழ நீதிபதி கேட்டார்.

அந்த வழுக்கைத் தலை அரசாங்க வக்கீல் எழுந்து நின்றார். ஒரு கையை மேஜை மீது ஊன்றியவாறே படபடவென்று புள்ளிவிவரங்களை அடுக்கிப் பேசத் தொடங்கிவிட்டார். அவரது பேச்சில் எவ்விதப் பயங்கரமும் இல்லை .

அதே சமயத்தில் ஏதோ ஒரு வறண்ட குத்தலான பயபீதி உணர்ச்சி தாயின் உள்ளத்திலே புகுந்து உறுத்தியது. கையை உயர்த்திக் காட்டாமல், வஞ்சம் கூறிக் கத்தாமல், ஆனால் அதே சமயத்தில் கண்ணுக்குத் தெரியாமல், புலனுக்கும் வசப்படாமல், குமுறி வளர்ந்து வரும் ஒரு வெம்பகை உணர்ச்சி அந்த நீதிமன்ற சூழ்நிலையிலே தொனித்துக் கொண்டிருப்பதை அவள் உணர்ந்தறிந்தாள். அந்தக் கொடும் பகை நீதிபதிகளின் முன்னிலையிலேயே வட்டமிட்டு அவர்களுக்கு வெளியில் நடைபெறும் காரியங்கள் எதுவும் அவர்கள் மனத்துக்குள் புகுந்துவிடாதபடி, அவர்கள் உள்ளத்தைக் கவர்ந்து சூழ்ந்து காப்பி மூடிக்கொண்டிருப்பது போல் தோன்றியது. அவள் அந்த நீதிபதிகளைப் பார்த்தாள்; அவர்களது பார்வையிலிருந்து அவளால் எதுவும் அறிந்துகொள்ள முடியவில்லை. அவள் எதிர்பார்த்தது போல், அவர்கள் பாவெலின் மீதோ பியோதர் மீதோ கோபம் கொள்ளவில்லை. அவர்களை அவமானப்படுத்திப் பேசவில்லை. தாங்கள் கேட்ட கேள்விகளுக்கே அவர்கள் எந்த முக்கியத்துவமும் அளித்ததாகவும் தெரியவில்லை. அவர்களது குரல் விருப்பற்ற குரலாக ஒலித்தது. நமது கேள்விகளுக்குக் கிடைத்த பதில்களையும் அவர்கள் வேண்டா வெறுப்பாகத்தான் கேட்டுத் தீர்த்தார்கள். அவர்கள் எதைப்பற்றியும் கவலை கொள்ளாதவர்கள் போலவும் எல்லா விஷயத்தையும் ஏற்கெனவே தெரிந்து வைத்திருந்தவர்கள் போலவும் காணப்பட்டார்கள்.

இப்போது அவர்கள் முன்னால் ஒரு போலீஸ்காரன் வந்தான். ஆழ்ந்த குரலில் சொன்னான்:

“பாவெல் விலாசவ்தான் இவர்களில் பிரதம கிளர்ச்சிக்காரன் என்று சொல்லப்படுகிறது…”

“நயோத்காவைப் பற்றி என்ன?” என்று அந்த கொழுத்த நீதிபதி சோம்பலுடன் கேட்டார்.

“அவனும்…” ஒரு வக்கீல் எழுந்திருந்தார். ”நான் ஒரு வார்த்தை சொல்லலாமா?” என்று கேட்டார்.

“ஏதாவது மறுத்துக் கூறவேண்டுமா?” என்று பிரதம நீதிபதி கேட்டார்.

அத்தனை நீதிபதிகளும் ஏதோ நோய்வாய்ப்பட்டுத் துன்புறுவது போல் தாய்க்குத் தோன்றியது. அவர்களது பேச்சிலும் நடத்தையிலும் ஏதோ ஒரு சீக்கான அலுப்புணர்ச்சி பிரதிபலிப்பதுபோல் தோன்றியது. முகங்களும் அந்த அலுப்பையும் ஆயாசத்தையுமே பிரதிபலித்தன. அவர்களது உத்தியோக உடைகள், நீதிமன்றம், அரசியல் போலீஸ்காரர்கள், வக்கீல்கள், நாற்காலிகளில் உட்கார்ந்து கேள்வி கேட்பது, அதற்கு வரும் பதில்களைக் கேட்டுக் கொண்டிருக்கும்படியான தேவை – எல்லாவற்றையுமே அவர்கள் ஒரு நிர்ப்பந்தவசமான தொல்லையாகத்தான் கருதினார்கள் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது.

தாய்க்கு ஏற்கெனவே அறிமுகமாயிருந்த அந்த மஞ்சள் மூஞ்சி அதிகாரி அவர்களுக்கு முன்னால் வந்து நின்றான்; பாவெலைப்பற்றியும் அந்திரேயைப்பற்றியும் தனக்குத் தெரிந்த விஷயங்கள் அனைத்தையும் உரத்தக் குரலில் நீட்டி நீட்டிப் பேசினான்.

”உனக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!” என்று தனக்குள் நினைத்துக்கொண்டாள் தாய்.

கைதிக்கூண்டுகளுக்குப் பின்னால் இருப்பவர்களை, அவர்களைப் பற்றிய பயமும் இல்லாமல், அவர்கள் மீது அனுதாபமும் இல்லாமல் ஏறிட்டுப் பார்த்தாள் தாய். அவர்கள் மீது அவள் அனுதாபம் கொள்ள முடியாது. அவள் மனதில் அவர்கள் வியப்புணர்ச்சியைத்தான் உண்டாக்கினார்கள். அவர்களைக் கண்ட மாத்திரத்தில் அவளது உள்ளத்தில் ஓர் அன்புணர்ச்சி அலை பாய்ந்து சிலிர்த்துப் பரவியது. அந்த வியப்புணர்ச்சியோ அமைதியாயிருந்தது. அந்தப் பரவச ஆனந்தம் தெளிவோடிருந்தது. சுவருக்கு எதிராக அவர்கள் உறுதியோடும் இளமையோடும் உட்கார்ந்திருந்தார்கள். சாட்சிகளின் கிளிப்பிள்ளைப் பேச்சையும், நீதிபதிகளையும், சர்க்கார் வக்கீலோடு மற்ற வக்கீல்கள் பேசும் விவாதப் பேச்சுக்களையும், அவர்கள் கவனித்ததாகவே தெரியவில்லை, இடையிடையே அவர்களில் யாராவது ஒருவன் வெறுப்பாக சிரித்துக்கொண்டே, தனது தோழர்களைப் பார்த்து ஏதாவது கிண்டலாகச் சொல்வான். அந்தத் தோழர்களின் முகங்களும் அந்தக் கிண்டலைப் பிரதிபலித்துப் புன்னகை புரிந்தன. குற்றவாளிகளின் தரப்பில் பேசிக்கொண்டிருந்த வக்கீல் ஒருவரோடு, பாவெலும் அந்திரேயும் இடையிடையே ஏதேதோ மெதுவாகப் பேசினார்கள். அந்த வக்கீலை முந்தின நாள் இரவு நிகலாயின் வீட்டில் தாய் பார்த்திருந்தாள்.

மற்றவர்களை விட உணர்ச்சிக்கு ஆளாகி நிலைகொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்த மாசின் அவர்களது பேச்சைக் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தான். சமயங்களில் சமோய்லவ் இவான் கூஸெவைப் பார்த்து ஏதாவது பேசுவான். அதற்குப் பதிலாக இவான் தன் தோழனை முழங்கையால் இடித்துக் கொண்டே பொங்கி வரும் சிரிப்பை அடக்க முயலுவான். அந்த முயற்சியில் அவனது முகம் சிவந்து கன்னங்கள் கன்றிப் போகும்; உடனே அவன் தலையைக் கவிழ்த்துக் கொள்வான்; இருமுறை அவன் வாய்விட்டே சிரித்துவிட்டான். பிறகு, அவன் தன் சிரிப்பையெல்லாம் உள்ளடக்கிக் கொண்டு, தன்னைக் கட்டுப்படுத்த முயன்றவாறு உட்கார்ந்திருந்தான். அந்தக் கைதிகள் ஒவ்வொருவரிடமும் இளமை பொங்கிப் பிரவாகித்தது. நுரைத்துப் பொங்கும் அந்தப் பிரவாகத்தைத் தடுக்க முயலும் சகல முயற்சிகளையும் அந்த இளமை இலாவகமாக எதிர்த்து ஒதுக்கியது.

“சிஸோவ் தாயின் முழங்கையை லேசாகத் தொட்டான். அவள் திரும்பினாள். மகிழ்ச்சியும், ஓரளவு பதைபதைப்பும் பிரதிபலிக்கும் அவனது முகத்தை அவள் கண்டாள்.

‘நமது இளவட்டங்கள் எவ்வளவு தைரியசாலிகளாகிவிட்டார்கள் என்று பார்” என்று மெதுவாகக் கூறினான் அவன். “பெரிய சீமான்கள்!”

நீதிமன்றத்தில் சாட்சிகள் உணர்ச்சியற்ற குரலில் அவசர அவசரமாகவும், நீதிபதிகளோ விருப்பமின்றியும் அக்கறையின்றியும் பேசிக்கொண்டேயிருந்தார்கள், அந்தக் கொழுத்த நீதிபதி தமது தடித்த கரத்தால் வாயை மூடிக்கொண்டு கொட்டாவி விட்டார். சிவந்த மீசை கொண்ட நீதிபதியின் முகம் மேலும் வெளுப்புற்றுப் போயிற்று. இடையிடையே அவர் தமது நெற்றிப் பொருத்துகளைக் கை விரலால் அழுத்திப் பிடித்துவிட்டவாறே, முகட்டை நோக்கி நிமிர்ந்து சிரமத்தோடு வெறுமனே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். இடையிடையே எப்போதாவது அரசாங்க வக்கீல் பென்சிலை எடுத்து எதையாவது குறித்துக் கொள்வார். அதன் பிறகு, அவர் ஊமைக் குரலில் அந்த பிரபுவம்சத் தலைவரோடு தமது பேச்சைத் தொடங்குவார். அவரோ நரைத்த தாடியை நீவிக் கொடுத்தவாறு தமது அழகான பெரிய கண்களை உருட்டி விழிப்பார்; கழுத்தைக் கம்பீரமாக அசைத்துக்கொண்டே புன்னகை செய்வார். நகர மேயர் கால்மேல் கால் போட்டு, முழங்காலின் மீது கை விரல்களால் தாளம் போட்டுக்கொண்டு அந்தத் தாளத்தையே கவனித்துக்கொண்டிருந்தார். முழங்காலின் மீது தொந்தியைச் சரித்துத் தாங்கிக்கொண்டிருந்த அந்த ஜில்லா அதிகாரி அதை இருகையாலும் அன்போடு வாரித் தழுவிக்கொண்டிருந்தார். அவர் ஒருவர்தான் அந்த நச்சுப்பிடித்த சாட்சிகளின் முனகலையெல்லாம் காது கொடுத்துக் கேட்டுக்கொண்டிருப்பது போலத் தோன்றியது. அந்தக் கிழ நீதிபதியோ, காற்றடிக்காத திசையில் ஆடாது அசையாது நிற்கும் காற்றாடியைப்போல், இம்மிகூட அசையாது தமது நாற்காலிக்குள்ளேயே புதைந்து கிடந்தார். சுற்றுச்சூழ இருந்த ஜனங்கள் ஆயாசத்தால் அலுத்து மரத்துப்போகும் வரை இவையனைத்தும் நீடித்தன.

“நான் அறிவிக்கிறேன்…” என்று கூறிக்கொண்டே அந்தக் கிழவர் எழுந்து நின்றார். இந்த வார்த்தைகளுக்குப் பின் வந்த வார்த்தைகள் அவரது உதடுகளுக்குள்ளாகவே மடிந்து உள்வாங்கிப் போய்விட்டன.

நீதிமன்றம் முழுவதிலும் பெருமூச்சுக்களும், அமைதியான வியப்புக் கேள்விகளும், இருமலும், காலைத் தேய்க்கும் சப்தமுமே நிறைந்து ஒலித்தன. கைதிகளை வெளியே கொண்டுபோனார்கள். அவர்கள், தமது நண்பர்களையும் உறவினர்களையும் பார்த்துத் தலையை ஆட்டிக்கொண்டே புன்னகை புரிந்தார்கள். இவான்கூஸெவ் யாரையோ துணிந்து வாய்விட்டுக் கூப்பிட்டுவிட்டான்:

‘இகோர், தைரியத்தை இழக்காதே!”

தாயும் சிலோவும் நீதிமன்றத்துக்கு வெளியேயுள்ள வராந்தாவுக்கு வந்தார்கள்.

”பக்கத்துக் கடையிலே போய் ஒரு கப் தேநீர் சாப்பிடலாமா?” என்று சிஸோவ் அன்போடு கேட்டான். “இன்னும் நமக்கு ஒன்றரை மணி நேர அவகாசம் இருக்கிறது.”

“எனக்கு இப்போது தேநீர் தேவையில்லை.”

‘எனக்கும்தான் தேவை இல்லை. அந்தப் பையன்களைப் பற்றி நீ என்ன நினைக்கின்றாய்? இவ்வுலகத்திலேயே அவர்கள் மட்டும்தான் இருப்பது போலல்லவா, அவர்கள் உட்கார்ந்திருந்தார்கள்? மற்றவர்களெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை. அந்த பியோதரைப் பார்!”

படிக்க:
ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க சதி : முன்னணியாளர்கள் சட்ட விரோத கைது !
பார்ப்பனிய ஆணாதிக்கம் தான் பாஜக-வின் இந்திய தனித்துவம் !

சமோய்லவின் தந்தை அவர்கள் அருகில், தொப்பியைக் கையில் பிடித்தவாறே வந்து சேர்ந்தான்.

”என் கிரிகோரியைப் பார்த்தீர்களா?” என்று கசந்த புன்னகையோடு கூறினான் அவன், “அவன் எதிர்வாதம் செய்யவும் மறுத்துவிட்டான்; அவர்களோடு பேசவே அவன் விரும்பவில்லை. முதன்முதல் அவனுக்குத்தான் இந்த யோசனை எட்டியிருக்கிறது. பெலகேயா, உன் மகனோ வக்கீல்களை வைத்து நடத்திப் பார்ப்பதற்குச் சம்மதித்திருக்கிறான். இவனோ எதற்கும் முண்டியதில்லை. அதன் பிறகு நாலுபேர் இவனைப்போலவே மறுத்துவிட்டார்கள்.”

அவனது மனைவி அவனுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்தாள். கண்ணில் பொங்கும் கண்ணீரை அடக்க எண்ணி அவள் கண்ணை மூடி மூடி விழித்தாள், கைக்குட்டையால் நாசியைத் துடைத்துவிட்டுக் கொண்டாள்.

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

 

மோடியின் பிம்பத்தை ஊதிப் பெருக்கும் கார்ப்பரேட் மீடியாக்கள் !

0

மீப காலங்களில் புதிய பிம்பங்கள் தோன்றுவது அதிகரித்து வருகிறது. கவலை வேண்டாம், உடைபடும் பிம்பங்களின் எண்ணிக்கையும் அதிகரித்தவாறே உள்ளன. முன்பொரு காலத்தில் (ஓராண்டுக்கு முன்பு வரை) சினிமா பார்க்கச் செல்பவர்கள் யூ-டியூப் விமர்சகர்களிடம் ஒரு வார்த்தை கேட்டு விட்டுச் செல்வோம் என நினைத்தார்கள்.

இதை பயன்படுத்திக் கொண்டு சினிமா கார்ப்பரேட்டுகளிடம் டீலிங் பேசுவதில் இருந்து விமர்சனங்களுக்கு இடையே ஆணுறை விற்பது வரை முன்னேறினார் பிரசாந்த் என்ற பாண்டா. மற்றவர்களும் இதற்குச் சளைக்கவில்லை. விளைவு? அவர்களின் “சினிமா விமர்சன” வீடியோக்களின் மறுமொழிப் பக்கங்களில் மக்கள் கழுவி ஊற்றிக் கொண்டிருக்கின்றனர்.

ஊடக நெறியாளர்களும், விவாதங்களில் போர்த்திக் கொண்டிருந்த “நடுநிலை” ஆடைகளைக் களைந்து அம்மணமாக நிற்கத் துவங்கியுள்ளனர். நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சனவரி 14-ம் தேதி ஒரு கருத்துக் கணிப்பு நடத்தியது. அதன் கேள்வியையும் தெரிவுகளையும் பாருங்கள்:

கேள்வி : அதிமுக + பாஜக + பாமக + தேமுதிக இணைந்து நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்தால்?

தெரிவு 1 : திமுக-காங் கூட்டணி வீழும்
தெரிவு 2 : பாஜக இல்லாவிட்டால் வெல்லும்
தெரிவு 3 : கடுமையான போட்டி உருவாகும்
தெரிவு 4 : வெற்ற பெற முடியாது.

மேற்கண்ட தெரிவுகளை மேலோட்டமாக பார்த்தாலே தெரியும். இரண்டு தெரிவுகளில் அதிமுகவுடன் சேர்த்து பா.ஜகவுக்கு சொம்பு தூக்குவதாகவும் ஒன்று தனிச்சிறப்பாக அதிமுகவுக்கு சொம்பு தூக்குவதாகவும் உள்ளன. கடைசியில் உள்ள ஒரே ஒரு தெரிவு மட்டும் பொத்தாம் பொதுவாக எதிர்கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த “பொத்தாம் பொதுவான” தெரிவின் கீழ் தினகரன், திமுக, நா.த.க உள்ளிட்ட கட்சிகள் வருகின்றன. ஒரு சம்பிரதாயத்திற்காக கூட குறிப்பான எதிர்கட்சிகளுக்கு எந்த வாய்ப்பும் ஒதுக்கப்படவில்லை.

கொடநாடு விவகாரம் நாற்றமடிக்கத் துவங்கியுள்ள நிலையில் நியூஸ்7, நியூஸ்18, புதிய தலைமுறை, தந்தி டிவி உள்ளிட்ட ‘நடுநிலை’ செய்திச் சேனல்கள் ஒரு வித ஆழ்ந்த மோனநிலைக்குச் சென்றுள்ளன. அச்சு ஊடகங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. தமிழகத்தின் நிலை இதுவென்றால் அகில இந்திய அளவில் ஊடகங்கள் மோடி சேவகத்தில் ஒரு புதிய வெறியுடன் களமாடி வருவதை அம்பலப்படுத்துகின்றது ஸ்க்ரோல் இணையதளத்தில் வெளியாகியுள்ள இந்தக் கட்டுரை

கடந்த இருபதாண்டு காலத்தில் நடந்த தேர்தல்களை ”லோக்நீதி – வளரும் சமூகங்களுக்கான ஆய்வு மையம்” (Lokniti-Centre for the Study of Developing Societies) என்கிற அமைப்பு ஆய்வு செய்துள்ளது. இதன் படி செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள் மற்றும் வானொலியின் மூலம் செய்திகளை அறிந்து கொள்ளும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. இதில் தொலைக்காட்சியே செய்திகளை அறிந்து கொள்வதற்கான முதன்மை ஆதாரம். சுமார் 46 சதவீதம் பேர் தொலைக்காட்சியின் மூலமும், 26 சதவீதம் பேர் செய்தித்தாள்களின் மூலமும் செய்திகளை அறிந்து கொள்கின்றனர். இணையத்தின் மூலம் செய்திகளை அறிந்து கொளவது இன்னமும் வளரும் நிலையில்தான் உள்ளது.

பெவ் ஆய்வு மையம் (Pew Global Attitudes) 2017-ம் ஆண்டு நடத்திய மற்றொரு ஆய்வு சுமார் 16 சதவீத இந்தியர்கள் இணையத்தின் வழியே செய்திகளை அறிந்து கொள்வதாக தெரிவிக்கின்றது. இதில் பெரும்பான்மையாக படித்த இளைஞர்களும், வசதி படைத்தவர்களும் குறிப்பாக ஆண்களுமே இருப்பதாக அந்த ஆய்வு முன்வைக்கின்றது.

லோக்நிதி அமைப்பு 306 பாராளுமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த சுமார் 20 ஆயிரம் பேரிடம் கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது. இதன் முடிவுகளை கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் பெர்க்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அரசியல் துறையினர் ஆய்வு செய்துள்ளனர். இதன்படி கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் பாரதிய ஜனதா 31.1 சதவீத வாக்குகளைப் பெற்றது. இதில் ஊடகங்களின் மூலம் செய்திகளை அறிந்து கொள்வோரில் சுமார் 39 சதவீதம் பேர் பா.ஜ.கவுக்கு வாக்களித்துள்ளனர். அதே வேளை ஊடக வெளிச்சத்தில் இல்லாதவர்களில் 27 சதவீதம் பேர் பா.ஜ.கவுக்கு வாக்களித்துள்ளனர்.

மேலும் ஊடகச் செய்திகளை அதிகம் நுகர்வோர் மத்தியில் பா.ஜ.க முன்வைத்த குஜராத் மாடல் சிறப்பாக எடுபட்டுள்ளது. இதில் குறிப்பாக இணையத்தின் வழியே செய்திகளை நுகர்ந்தவர்களிடையே பாரதிய ஜனதாவுக்கு மிக அதிக செல்வாக்கு இருந்தது தெரிய வந்துள்ளது. பாரதிய ஜனதாவின் முதன்மை ஓட்டு வங்கியான நகர்ப்புற மேட்டுக்குடியினர் மற்றும் ஆதிக்கச் சாதியினர் மிக அதிக சதவீதத்தில் செய்திகளை நுகர்பவர்களாக இருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் ஆங்கில செய்திச் சேனல்களை விட பிராந்திய செய்திச் சேனல்களுக்கு சுமார் 100 மடங்கு அதிக பார்வையாளர்கள் இருப்பதும் இந்த ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

கடந்த பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்கள் உச்சத்தில் இருந்த சமயத்தில் பிற அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களோடு ஒப்பிடும் போது நரேந்திர மோடிக்கு நான்கில் மூன்று பங்கு அளவுக்கு கவரேஜ் கிடைத்துள்ளது. கடந்த தேர்தலுக்குப் பிந்தைய காலத்தில் (மோடியின் ஆட்சிக் காலத்தில்) இந்தப் போக்கு அதிகரித்துள்ளது. மேலும் செய்திகளின் மூலம் அரசியல் ரீதியிலான கருத்துருவாக்கம் செய்யும் போக்கும் பிற நாடுகளை விட இந்தியாவில் அதிகரித்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

இந்தப் புள்ளி விவரங்களின் மூலம் தெரிய வருவது என்ன?

மோடி என்கிற இரட்சகரை கூலிப் பிரச்சாரங்களின் மூலம் நிலைநாட்டியதோடு கடந்த ஐந்தாண்டுகளில் அவரது ஆட்சியின் அனைத்து தவறுகளுக்கும் முட்டுக் கொடுக்கும் வேலையைச் செய்துள்ளன ஊடகங்கள். குறிப்பாக இந்துத்துவாவின் ஆதரவுப் பிரிவினரான ’உயர்’சாதியினர், மேல் நடுத்தர வர்க்கப் பிரிவினரின் மூளைகளில் மேலும் மேலும் காவி நஞ்சை செலுத்தி அவர்களை வீரிய ஒட்டுரக இந்துத்துவ பைத்தியங்களாக உருவாக்குவதில் ஊடகங்களின் பங்கு கணிசமானது. எனவேதான் நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தல்களில் பாரதிய ஜனதா ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை என்றாலும் தமிழிசை சொல்வது போல் ஒரு ”வெற்றிகரமான தோல்வி” எனும் நிலையை தக்க வைத்துக் கொண்டுள்ளது – அதன் வாக்கு சதவீதம் கணிசமாக வீழ்ச்சியடையாமல் பாதுகாத்துள்ளது.

படிக்க:
மீடியாவை மிரட்டும் மோடி !
நாட்டை விற்கும் மோடி – கழனியை அழிக்கும் ஜக்கி – பேச மறுக்கும் ஊடகம்

இந்துத்துவத்தின் அரசியல் தோல்வி என்பதை தேர்தல் அரசியலின் வரம்புக்குள் மட்டும் நின்று பரிசீலிப்பதில் இருக்கும் சிக்கலை இதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. பார்ப்பனிய இந்துத்துவ அரசியல் செயல்படுவதற்கும் நிலைத்து நிற்பதற்கான ஒரு செயற்களத்தை (Ecosystem) உருவாக்குவதற்கு அகில இந்திய அளவில் ஊடகங்கள் துணை புரிந்துள்ளன. அதைக் கீழிருந்து நிலைநாட்டுவதில் இந்துத்துவ கும்பல் குறிப்பிடத்தகுந்த வெற்றியை ஈட்டியுள்ளன. இதன் மூலம் பரந்துபட்ட நடுத்தர வர்க்க மக்கள் பார்ப்பன பொதுபுத்தியின் அடிப்படையில் சிந்திக்க பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் அரசியலின் வரம்பைத் தாண்டி இந்த விச சூழலை அறிவுத்தளத்திலும் களத்திலும் ஒரே நேரத்தில் எதிர்கொண்டு போராடி வீழ்த்த வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.


சாக்கியன்
ஆதாரம்: scroll

பார்ப்பனிய ஆணாதிக்கம் தான் பாஜக-வின் இந்திய தனித்துவம் !

அரசியல் சட்ட ஒழுக்கமும் இந்திய தனித்துவமும் !

”மண உறவை மீறிய பாலுறவு தண்டனைக்குரிய குற்றமல்ல என்று ஆக்கப்பட்டுவிட்டால், குடும்பம் என்ற நிறுவனமே நொறுங்கிவிடும். இது ஒழுக்கக் கேட்டுக்கு வழிவகுக்கும்.  இந்தியப் பண்பாட்டின்படி திருமணம் என்பது புனிதமானது. அந்த புனிதத்தன்மையைப் பாதுகாக்கும் பொருட்டும், தனித்துவம் வாய்ந்த இந்திய சமூகக் கட்டமைப்பையும் அதன் பண்பாட்டையும் பாதுகாக்கும் பொருட்டும்தான் மக்கள் பிரதிநிதிகள் இந்த சட்டத்தை உருவாக்கியிருக்கிறார்கள். எனவே எக்காரணம் கொண்டும் இ.த.ச. 497-ஐ ரத்து செய்யக்கூடாது” என்று உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டது மோடி அரசு.

திருமணமும் குடும்பமும் இந்தியாவில் மட்டும் நிலவும் பண்பாடுகள் அல்ல. பெண்ணின் காதலையும் பாலியல் உரிமையையும் கட்டுப்படுத்துகின்ற ஆணாதிக்கமும் உலகெங்கும் நிலவுவதுதான்.  மண உறவை மீறிய பாலுறவை குற்றமாகக் கருதும் ஆணாதிக்கச் சட்டங்களும் உலகம் முழுவதும் இருந்திருக்கின்றன. அப்படியானால், இதில் இந்திய சமூக கட்டமைப்புக்கே உரிய தனித்துவம் என்று மோடி அரசால் வலியுறுத்தப்படுவது எது என்பதுதான் நாம் கவனிக்க வேண்டிய கேள்வி.

ஆணாதிக்கத்துடன் இணைந்திருக்கும் சாதிய அகமண உறவு என்கிற, பார்ப்பனிய தந்தைவழி ஆதிக்கம்தான் பா.ஜ.க. அரசின் கவலைக்குரிய இந்திய தனித்துவம்’’.

”தனது கணவன் அல்லாத வேறொரு ஆணுடன் ஒரு பெண்  உறவு வைத்துக் கொள்வதற்கு, அவளுடைய கணவன் நேரடியாக ஒப்புதல் தெரிவிக்கவேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. சாடைமாடையான ஒப்புதலை அளித்திருந்தால் கூட, அந்த உறவு தண்டிக்கத்தக்க குற்றமல்ல” என்று கூறுகிறது இ.த.ச. 497. ( if there is consent or connivance of the husband of a woman who has committed adultery, no offence can be established.)

”பிள்ளை இல்லாமல்  குலம் நசிவதாக இருந்தால் அப்போது அந்தப் பெண்ணானவள் தன் கணவன் மற்றும் மாமனாரின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு தன் மைத்துனன் அல்லது தன் கணவனுக்கு ஏழு தலை முறைக்கு உட்பட்ட பங்காளி இவர்களோடு மேற் சொல்கிறபடி புணர்ந்து குலத்திற்குத் தக்கதான ஒரு பிள்ளையை பெற்றுக் கொள்ளலாம்” என்கிறது மனுநீதி.

தன்னுடைய மனைவி யாரேனும் ஒரு தீண்டாச் சாதிக்காரனுடன் சேர்ந்து விட்டால் என்ன செய்வது? என்பதுதான் மாதொருபாகன் நாவலில் பெண்ணுடைய கணவன் வெளிப்படுத்தும் கவலை.

ஆர்.எஸ்.எஸ். முன்னாள் தலைவர் மறைந்த எம்.எஸ்.கோல்வால்கர்.

”எந்த வர்க்கத்தைச் (சாதியையும் மொ-ர்) சேர்ந்த திருமணமான பெண்ணாக இருந்தாலும், அவளுடைய முதல் பிள்ளைக்கு ஒரு நம்பூதிரிதான் அப்பனாக இருக்க வேண்டும். அதற்குப் பின்னர்தான் அவளுடைய கணவனின் மூலம் அவள் மற்ற பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற  விதி இருந்தது… இதனை ஒழுக்கக்கேடு என்று கூற முடியாது” என்கிறார்  கோல்வால்கர், (ஆர்கனைசர், ஜனவரி-2,1961, பக்கம்-5)

மதம், சாதி, ஆணாதிக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒழுக்கம், மரபு என்பவைதான் பா.ஜ.க. அரசின் கவலைக்குரிய “இந்திய தனித்துவம்’’. இவற்றுக்கு  எதிராக, தனிநபரின் உரிமை, கவுரவம், அந்தரங்கம், சமத்துவம் ஆகியவற்றை முதன்மைப்படுத்தும் அரசியல் சட்ட ஒழுக்கத்தை (constitutional morality)  இத்தீர்ப்பு முன்நிறுத்துவதால், சமூக ஒழுங்கு குலைந்துவிடும் என்பதுதான் மோடி அரசு நீதிமன்றத்தில் வெளிப்படுத்திய குமுறல்.

♦ ♦ ♦

”திருமணம் என்பது ஒரு ஒப்பந்தமாக இருந்தாலும் சரி, மதப்புனிதம் சார்ந்த நடவடிக்கையாக இருந்தாலும் சரி, அது ஒரு பெண் தன் உடல் மீது கொண்டிருக்கும் அதிகாரத்தைப் பறிக்க முடியாது” என்பதுதான் இ.த.ச. 497 ஐ ரத்து செய்கின்ற இந்தத் தீர்ப்பின் மையக்கருத்து.

ஆனால், வல்லுறவு குற்றம் தொடர்பான இ.த.ச பிரிவு 375,  ”மனைவியின் வயது 15-க்கு குறைவாக இல்லாதவரை, அந்தப் பெண்ணுடன் கணவன் கொள்ளும் பாலுறவை வல்லுறவு என்று கருதமுடியாது” என்று கூறுகிறது. தற்போது உச்ச நீதிமன்றம் இ.த.ச. 497 குறித்து வழங்கியிருக்கும் தீர்ப்பை இ.த.ச. பிரிவு 375 மறுதலிக்கிறது.

சமீபத்தில் டில்லி உயர்நீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கில், ”மண உறவில் நிகழும் வல்லுறவு தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டால், திருமணம் என்ற நிறுவனமே தகர்ந்து விடும் என்றும், இத்தகைய சட்டம் ஆண்களைத் துன்புறுத்துவதற்கான கருவியாக மாறிவிடும் என்றும்” வாதிட்டது மோடி அரசு.

படிக்க:
தேர்தல் ஜுரம் : கன்னையா குமார் , உமர் காலித் மீது 3 ஆண்டுகளுக்குப் பின் குற்றப்பத்திரிகை தாக்கல் !
விவசாய நெருக்கடி : கடன் தள்ளுபடி தீர்வாகுமா ?

”மண உறவில் மனைவியின் மீது கணவன் நிகழ்த்தும் வல்லுறவு’’ (Marital Rape) நேபாளம் உள்ளிட்ட பல நாடுகளில் தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டிருக்கிறது. எனினும் புகழ்மிக்க பாரதப் பண்பாட்டின்படி’’, திருமணம் என்பது வல்லுறவு கொள்வதற்கு ஆணுக்கு வழங்கப்படும் அனுமதிச்சீட்டு.  வல்லுறவுக்கான பரிகாரமாகவும், தண்டனையாகவும் கூட திருமணம் பரிந்துரைக்கப்படுவதை நாம் பார்க்கிறோம்.  திரைப்படங்களும் மரத்தடி பஞ்சாயத்துகளும் மட்டுமல்ல, உயர் நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றங்களுமே இதைச் செய்கின்றன.

பெண்ணுக்கு தன் உடல் மீது உள்ள உரிமையை உத்திரவாதம் செய்யும் தீர்ப்பை செப். 27-ம் தேதியன்று வழங்கியது உச்ச நீதிமன்றம். அத்தகைய உரிமை ஒரு தலித் பெண்ணுக்கு கிடையாது என்று நிலைநாட்ட அக்டோபர் மாதம், சிறுமி ராஜலட்சுமி கொல்லப்பட்டாள். நந்தீஷும் சுவாதியும் நவம்பர் மாதம் கொல்லப்பட்டனர். இவை சாதி வெறியர்கள் எழுதிய தீர்ப்புகள். அமல்படுத்த முடியாத தீர்ப்புகளை நீதிமன்றங்கள் வழங்கக் கூடாது” என்று அமித்ஷா சொன்னது சபரிமலை தீர்ப்புக்கு மட்டும் பொருந்துவது அல்ல.

ஆணாதிக்கத்துக்கும் சாதி ஆதிக்கத்துக்கும் எதிரான போராட்டம் கீழிருந்து நடக்காத வரையில் மேலிருந்து வழங்கப்படும் தீர்ப்புகள் ஏட்டுச்சுரைக்காயாக மட்டுமே இருக்கும்.

அஜித்

புதிய ஜனநாயகம், ஜனவரி 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

 

இட ஒதுக்கீடு : சலுகையா ? அடக்குமுறைக்கு எதிராக போராடி பெற்ற உரிமையா ?

முன்குறிப்பு:- சிலருக்கு இந்த பதிவை படித்த பின்னர் வயிறு, நெஞ்சு என்று சகலமும் எரியும். அதனால் இப்பதிவை தவிர்க்கவும்.

ன்று (ஜன-15) காலை எங்கள் அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு இரண்டு பிராமணர்கள் வந்தார்கள். இருவருக்கும் ஐம்பது வயதிருக்கும் . வெள்ளை வேட்டி நெற்றி நிறைய திருநீறு , தலையில் குடுமியுடன் இருந்தார்கள். ஒவ்வொரு வீட்டு வாசல் முன்பும் நின்று ஏதோ மந்திரங்கள் சொன்னார்கள். அதற்கு அந்த வீட்டில் இருந்தவர்கள் காசு கொடுத்தார்கள். எனக்கு வியப்பாக இருந்தது. எங்கள் வீட்டு முன்பும் நின்று மந்திரங்கள் சொன்னார்கள். நான் அவர்களையே பார்த்துக் கொண்டு நின்றேன். வீட்டுக்குள்ளிருந்து அம்மா வந்து அவர்களிடம் காசு கொடுத்தார்கள். பொதுவாக கூர்க்கா, போஸ்ட்மேன்கள், குப்பை சேகரிப்பவர்கள் எங்கள் பகுதிக்கு பொங்கல் இனாம் வாங்க வருவார்கள். வருடம் முழுக்க அவர்கள் செய்யும் சேவைக்கு நாங்கள் தரும் ஊக்கத்தொகை அது. ஆனால் எந்த வேலையும் செய்யாமல் யாருன்னே தெரியாத இரண்டு பேர் இப்படி வந்து காசு வாங்கிக்கொண்டு போவது வியப்பாக இருந்தது. சற்று தாமதமாகத்தான் தெரிந்தது. இது ஒருவித பிச்சை என்று.

சென்னை மாநகரில் ஒவ்வொரு நாளும் எண்ணற்ற பிச்சைக்காரர்களை சந்திக்கிறேன். ஆனால் இது எனக்கு புதிதாகவும், விநோதமாகவும் இருந்தது. பிச்சைக்காரர்கள் என்றால் நாம் அவர்களிடம் சற்று இரக்கமாகவோ, பரிதாபமாகவோத்தான் காசு போடுவோம். ஒருசிலர் அருவருப்பாக பார்த்து துரத்துவதுமுண்டு. ஆனால், முதல்முறையாக ஒரு சமூகம் பிச்சைக்காரர்களை மரியாதையாகவும், கவுரமாகவும் நடத்துவதை இன்று காலையில்தான் எங்கள் தெருவில் பார்த்தேன். அந்த இரண்டு பேருக்கும் உடலில் எந்த குறையும் இல்லை. திடமாகவே இருந்தார்கள். உடல் குறையுள்ளவர்கள் கூட சுயமரியாதையுடன் ஏதாவது ஒரு வேலை செய்யும் இந்த காலத்தில் வெறும் இரண்டு மந்திரங்கள் மட்டுமே சொல்லி தெருமுழுக்க பிச்சை எடுத்துக்கொண்டு போவது என்ன நியாயம்? எனது அம்மாவிடம் சொன்னபோது வாயில் அடிச்சுக்கஅது பிச்சை இல்லை. தருமம். யாசகம் கேட்டு வரும் பிராமணர்களை துரத்துவது பஞ்சமாபாவம் என்று சொன்னார்கள். எனக்கு ஒன்று புரிந்தது. பிச்சை எடுத்தாலும் கூட அதுக்கு ஒரு பிறப்பு வேண்டும். இதுவே வேறு ஜாதி ஆள் ஒருத்தர் இப்படி கவுரவப்பிச்சை கேட்டு வந்திருந்தால் கண்டிப்பாக எங்கள் தெரு ஆட்கள் அடித்து விரட்டியிருப்பார்கள். வீட்டுக்கு வெளியே வரிசையாக துணிகள் காயவைத்திருந்தோம். காற்றில் பறந்த அந்த துணிகள் மேல் உரசிவிடாமல் கவனமாக சென்றார்கள். பொதுவாக பிராமணர்கள் ஜலம், காசில் மட்டும் தீட்டு பார்க்க மாட்டார்கள் என்று எங்கேயோ படித்தது நினைவுக்கு வந்தது.

படிக்க:
உச்ச நீதிமன்றத்தில் மூன்று குமாரசாமிகள் | சிறப்புக் கட்டுரை
தாழ்த்தப்பட்ட மக்கள் வேண்டுவது சீர்த்திருத்தமா? புரட்சியா?

பிராமணர்கள் மேல் எனக்கு உள்ள வெறுப்புதான் இந்த பதிவு என்று நினைக்க வேண்டாம். சென்னையில் உள்ள பிரபலமான அபிராமி மால்-ஐ இம்மாத இறுதியில் மூடப்போகிறார்கள். அதன் உரிமையாளர் செட்டியார். அவர் அண்மையில் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அபிராமி மால்-ஐ இடித்துவிட்டு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்போவதாகவும் அங்கு சைவ உணவு உண்பவர்களுக்கு மட்டுமே வீடு விற்கப்போவதாகவும் அறிவிப்பு செய்கிறார். செட்டியார்கள் அசைவ உணவு பழக்கம் உள்ளவர்கள். எப்படி இந்த முடிவு என்று யோசித்துக்கொண்டிருந்தேன். அந்தப்பகுதியில் (புரசைவாக்கம்) ஜெயின் சமூக மக்கள் அதிகம் என்று நினைக்கிறேன். அவர்கள் பொதுவாக கூடிவாழ்வார்கள். அநேகமாக அவர்கள் வாங்குவார்கள் என்று நினைத்துதான் இதை யோசித்திருக்கலாம்.

பத்தில் எட்டு வீடுகளை ஜெயின்கள் வாங்கினால் கூட மிச்சம் இரண்டு வீட்டில் சைவ உணவு உண்பவர்களை வைத்துவிட்டால் பிரச்சினை எதுவுமில்லை என்று அவர் யோசித்திருக்கலாம்.

சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு வேண்டாம் என்ற பிரச்சாரம்.

ஜெயின் சமூகம் என்றதும் இன்னொரு விஷயத்தையும் இங்கு குறிப்பிடத் தோன்றுகிறது. ஜெயின்களில் ஏழைகள் குறைவு. அப்படி இருந்தாலும் மற்ற ஜெயின்கள் அவர்களுக்கு உதவி செய்து மேலே தூக்கிவிடுவார்கள். கிட்டத்தட்ட செட்டியார்களும் இப்படித்தான். இப்படி இந்தியாவில் ஆயிரம் சமூகங்கள் உள்ளன. எல்லா சமூக ஏழைகளும், பிச்சைக்காரர்களும் ஒரேமாதிரி இருப்பதில்லை. உலகத்தில் இரண்டே வர்க்கம்தான். பணம், பணம் இல்லாதவன் என்று உறுதியாக நம்புபவன் நான். ஆனால் அதிலும் பிரிவுகள் உள்ளன. எல்லா ஜாதி ஏழைகளுக்கும் சிறப்பு கவுரவம் கிடைப்பதில்லை.

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு தரவேண்டும் என்ற கோரிக்கை இப்போது மெல்ல மெல்ல ஒலிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று ஒரு நண்பர் ஊரறிந்த சிந்தனையாளர். எழுத்தாளர் அனந்தகிருஷ்ணன் (முன்பு நடந்த ஒரு பஞ்சாயத்தில் என்னை பிளாக் செய்துள்ளார் மடையர். இல்லாவிட்டால் அங்கேயே பதிலடி தந்திருப்பேன்) எழுதிய பதிவொன்றின் ஸ்க்ரீன் ஷாட்டை கொண்டுவந்தார். அயோக்கியத்தனத்தின் உச்சக்கட்டம் அந்த பதிவு. பதிவின் சாராம்சம். இடஒதுக்கீட்டை பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கொண்டுவரவேண்டும். முதல் பத்தாண்டுகளுக்கு பிராமணர்களுக்கு விதிவிலக்கு தரவேண்டும். பிறகு மெல்ல சமத்துவம் (!?) வந்தபிறகு அந்த இடஒதுக்கீடை பொருளாதாரத்தில் பின்தங்கிய பிராமணர்களுக்கும் தரவேண்டும். தனக்கு ஒரு கண்போனாலும் பரவாயில்லை எதிரிக்கு இரண்டு கண் போகணும் என்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்? ஆனால் இவர்களுக்கு கண்போகாது. பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்டால் தன்னோட இலைக்கும் வந்துவிடும் இல்லையா?

இடஒதுக்கீட்டில் படித்து முன்னேறி ஐடி நிறுவனங்களில் வேலைபார்க்கும் இளைஞர்களிடம் கூட இந்த தவறான புரிதல் உள்ளது. இடஒதுக்கீடு என்பது பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்பதற்காக கொடுக்கப்பட்டது இல்லை. அது சமூகத்தில் பின்தங்கியவர்கள் என்பதற்காக கொடுக்கப்பட்டது. அது சலுகை இல்லை. பல நூறாண்டு கால அடக்குமுறைக்கு எதிராக போராடி பெற்ற உரிமை. அப்படி என்றால் ஏழைகள் அப்படியே ஏழைகளாக இருக்கவேண்டுமா? அப்படி இல்லை. ஆனால் கண்டிப்பாக எல்லா ஜாதி ஏழைகளும் ஒன்றில்லை. எல்லா ஏழைகளையும் நாம் பிச்சைக்காரர்கள் போல நடத்துவதில்லை என்ற கசப்பான உண்மையையும் புரிந்து கொள்ள வேண்டும்.

முகநூலில்: Vinayaga Murugan

ஓசூர் : விளைநிலங்களில் புகுந்த காட்டு யானைகள் – பரிதவிக்கும் விவசாயிகள்

சூருக்கு அருகில் சானமாவை அடுத்துள்ள பீர்ஜேப்பள்ளி என்கிற கிராமத்தில் கடந்த ஜனவரி-13 அன்று காலை வனப்பகுதியிலிருந்து ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளின் தாக்குதலில் பலத்தக் காயங்களுடன் உயிர்த்தப்பியிருக்கிறான் லோகேஷ் என்ற சிறுவன். அக்கிராம மக்கள் மேற்கண்ட துணிச்சலான நடவடிக்கையின் காரணமாக உயிர்த்தப்பிய லோகேஷ், ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறான்.

இந்த சம்பவம் என்றில்லை, சமீபகாலமாக தொடர்ச்சியாக இது போன்று காட்டு யானைகளின் தாக்குதல்களை எதிர்கொண்டு வருவதாகவும், வனத்துறையின் சார்பில் எவ்வித பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதில்லை என்று குற்றஞ்சாட்டியும் ஓசூர் – தர்மபுரி சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள். கோரிக்கையை பரிசீலிக்கிறோம், விரைவில் ஏற்பாடு செய்கிறோம், என்று பொதுவான வாக்குறுதிகளைக்கூறி வழக்கம்போல கூட்டத்தை கலைத்தது போலீசும் வனத்துறையும்.

விவசாயி வெங்கடேஷ்.

‘’ஒரு மாதத்திற்கு முன் நம்ம பக்கத்து ஊரை சேர்ந்த விவசாயி 55 வயதுடைய செல்வப்பா என்பவரை அவரது வீட்டிற்கே வந்து வீட்டு வாசலில் வைத்தே யானை மிதித்து கொன்றுப்போட்டு விட்டது. அந்த சம்பவம் நடந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் மீண்டும் ஒருமுறை யானைகள் வந்து ஒரு ஐந்து பேரை தூக்கி வீசிப்போட்டது. ரெண்டு நாளைக்கு முன்ன கூட, பக்கத்து ஊரில் வயசு பையன் ஒருத்தனை யானை மிதிச்சி மீண்டு வந்திருக்கான். இப்பவெல்லாம் தினம்தோறும் யானைகள் தொந்தரவு அதிகமாகிவிட்டது.’’ என்கிறார், சானமாவு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வெங்கடேஷ்.

‘’ஐந்து வருடங்களுக்கு முன் காட்டுப்பன்றி, மான்கள் மற்றும் ஓரிரு யானைகள் என்ற வகையில் வந்து தொந்தரவு செய்து எங்களது விவசாயத்தை நாசம் செய்து வந்தது. அதிலிருந்து ஓரளவிற்கு தப்பிக்க ராவும்பகலுமாக காவல் காத்துக் கொண்டோம். இப்பெல்லாம் கடந்த மூன்று நான்கு வருடங்களாக அவ்வாறு தனியே வருவதில்லை. கூட்டம் கூட்டமாகவே வருகிறது. ஊரே திரண்டு வந்து விரட்ட வேண்டியதாகிறது.

வனத்துறையினரிடம் ஆயிரம் முறை முறையிட்டும் அவர்கள் யாரும் காதில் போட்டுக் கொள்வதில்லை… ஆயிரம் முறை மனுக் கொடுத்தும் ஒரு பிரயோசனமும் இல்லை… நாங்கதான் மக்கள் எல்லாம் இளைஞர்கள் எல்லாம் திரண்டுவந்து இந்த யானைகளை விரட்டி வருகிறோம்.

சிறிய அளவில்கூட விவசாயம் செய்யமுடியல. கிணத்துல தண்ணியெல்லாம் இருந்தும் எங்களால் பயிர் செய்யமுடியல. நாங்களே சாப்பிடக்கூட விவசாயம் செய்துக்கொள்ள முடியவில்லை.‘’ என்கின்றனர், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள்.

விவசாயி சங்கரப்பா.

‘’முன்பு கடலைக்காய், பீன்ஸ், கேரட், சவ்சவ், கோசு, நெல், ராகி, சோளம், தக்காளி என பயிர்செய்துவந்த நாங்கள் இப்போது வேறுவழியின்றி கீரைவகைகளை மட்டுமே பயிர் செய்துவருகிறோம். அதையும் விட்டுவைப்பதில்லை மிதித்து துவைத்து நாசம் செய்துவிடுகிறது’’ என கண்ணீர் வடிக்கிறார், மற்றொரு விவசாயியான சங்கரப்பா.

மேலும், ‘’மக்கள் திரண்டு இதுமாதிரி போராடினால்தான் அப்போதைக்கு ஒரு இரண்டுபேரை வனத்துறையினர் என்று சொல்லி கார்டுகளை நியமிக்கிறார்கள். அந்த இருவரையும் நாங்கள்தான் பராமரிக்கவேண்டும். அவர்களிடம் ஒரு துப்பாக்கிப் போன்ற நவீன ஆயுதங்களோ எதுவும் தரப்படுவதில்லை. பாவம் அவர்களையே நாங்கதான் எங்க மக்களில் ஒருவராக பாதுகாக்கிறோம்.’’ என்கின்றனர்.

‘’கால்நடைகளை மேய்ச்சலுக்காக வனப் பகுதிக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது வனத்துறை. விவசாயமும் பண்ணாம, ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கும் ஓட்டிப்போகவும் முடியாமல் வீட்டுக்குள்ளயே முடங்கியிருக்க முடியுமா?’’ என்று கேள்வியெழுப்புகின்றனர், இக்கிராம மக்கள்.

‘’ஊருக்குள் இருந்த நிலங்களை மூன்று ஆண்டுகளுக்கு முன் விற்றுவிட்டுதான் என் மகள்கள் நான்கு பேரை நான் கட்டிக்கொடுத்துவிட்டு, இப்ப இந்த ரோட்டோரம் ஒரு வீடு வாங்கி வந்து குடியேறியிருக்கிறேன். எல்லோரும் என்னைப்போல செய்யமுடியுமா? நிறையபேர் இந்த நிலம் – வீட்டோடவே எங்களது உயிர் போகட்டும் என்று இருக்கிறார்கள்’’ என்கிறார், விவசாயி வெங்கடேஷ்.

‘’எனக்குத் தெரிந்து இந்தப் பகுதிகளில் நிறைய  கிரானைட் கம்பெனிகள் புதிது புதிதாக முளைத்திருக்கின்றன. ஆளுயரத் தடுப்புச் சுவர்களையும் எழுப்பியிருக்கின்றனர். சூழலியல் மாறுபாடுகள் ஒருபுறமிருக்க, யானைகளின் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதும்; தொடர்ந்து வனங்களின் அடர்த்திக் குறைந்து வருவதும் பிரதான காரணங்களாக இருக்கின்றன.’’ என்கிறார், அப்பகுதியைச் சேர்ந்த தோழர் ஒருவர்.

படிக்க:
உச்ச நீதிமன்றத்தில் மூன்று குமாரசாமிகள் | சிறப்புக் கட்டுரை
வினவு தளத்தில் 2018-ம் ஆண்டில் வாசகர்களால் அதிகம் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் !

‘’யானைகளுக்குத் தேவையான குடிநீர் குட்டைகள் உணவு கிடைக்க தேவையான நடவடிக்கைகள் வனத்துறை சார்பில் எடுக்க வேண்டும். யானைகள் செல்லும் வகையில் இயற்கை மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வனப்பகுதியைச் சுற்றி கல்சுவர், கம்பி வலை அமைக்க வேண்டும். போதுமான அனுபவமும் பயிற்சியும் பெற்ற வனக்காவலர்களை கண்காணிப்பில் ஈடுபடுத்த வேண்டும்.’’ என்ற கோரிக்கைகளை முன்வைக்கின்றனர், அக்கிராம மக்கள்.

இயற்கையாக வாழ முடியாத போதே யானைகள் குடியிருப்பு பகுதிகள், விவசாய நிலங்களை நோக்கி வருகின்றன. நாட்டு மக்களையே வாழ விடாத இந்த அரசு, காட்டு யானைகளை மட்டும் வாழ வைத்துவிடுமா என்ன?

தகவல் :
புதிய ஜனநாயகம் செய்தியாளர், ஒசூர்.

இங்கு கைதிகளும் இல்லை நீதிபதிகளும் இல்லை !

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 53

மாக்சிம் கார்க்கி
வளது பயம் ஒரு துர்நாற்றம் போல் அவளது தொண்டையில் கமறியெழுந்து அவளைத் திணறச் செய்தது. விசாரணை தினத்தன்று. தனது இதயத்தை அழுத்திக்கொண்டிருக்கும் அந்தப் பெரும் மனப்பாரத்தைச் சுமந்துகொண்டுதான் தாய் நீதிமன்றத்துக்குச் சென்றாள்.

தெருவெல்லாம் சுற்று வட்டாரத் தொழிலாளர் குடியிருப்பிலிருந்து வந்தது. அவளுக்கு அறிமுகமான பல தொழிலாளர்கள் அவளை வரவேற்றார்கள். அவள் வாய்திறந்து எதுவும் பேசாமல் அவர்களுக்குத் தலை வணங்கிக் கொண்டே அந்த ஜனக்கூட்டத்தைக் கடந்து சென்றாள் நீதி மன்றத்திலும் அதற்கு வெளியேயுள்ள நடை வழிகளிலும் விசாரணைக்கைதிகளின் உறவினர்கள் கூடிக் குழுமி, தணிந்த குரலில் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பேசிக்கொள்ளும் பேச்சு தாய்க்கு அபரிமிதமாகப்பட்டது, அவளுக்கு அது புரியவில்லை . எல்லோரும் ஒரே மாதிரியான சோகத்துக்கு ஆளாகி நின்றார்கள். தாயும் இதை அறிந்திருந்தாள்; அதனால் அவளுக்கு மனப்பாரம்தான் அதிகமாயிற்று.

“என் பக்கத்திலே உட்கார்” என்று ஒரு பெஞ்சில் ஒதுங்கி இடம் கொடுத்துக்கொண்டே கூறினான் சிஸோவ்.

அவள் பணிவோடு உட்கார்ந்து, தன் உடுப்பைச் சரியாக இழுத்து விட்டுக்கொண்டு சுற்றுமுற்றும் பார்த்தாள். அவளது கண்முன்னால் பச்சை, சிவப்புப் புள்ளிகளும், கோடுகளும், மஞ்சள் நாடாக்களும் நடனமிட்டன.

”எங்கள் கிரிகோரியை உன் மகன்தான் இதில் இழுத்து விட்டுவிட்டான்” என்று அவளுக்கு அடுத்தாற்போல் இருந்த ஒரு பெண் முனகினாள்.

”வாயை மூடு, நதால்யா!” என்று கோபத்தோடு சொன்னான் சிஸோவ்.

தாய் அந்தப் பெண்ணைப் பார்த்தாள். அவள் தான் சமோய்லவின் தாய். அவளை அடுத்து அவள் கணவன் உட்கார்ந்திருந்தான். சுமூகமான தோற்றமும், மெலிந்த முகமும், வளர்ந்து பெருகிய சிவந்த தாடியும் வழுக்கைத் தலையுமாகக் காட்சியளித்த அவன் தன் கண்களை நெரித்து ஏறிட்டுப் பார்த்தான்; உள்ளுக்குள் பட்டுக்கொண்டிருந்த சிரமத்தால் அவனது தாடி நடுநடுங்கிக்கொண்டிருந்தது.

வெளிப்புறத்திலிருந்து பனி படிந்துள்ள உயர்ந்த ஜன்னல்களின் வழியாக, மங்கிய ஒளி மயக்கம், நீதி மன்றத்துக்குள்ளே பரவி ஒளி செய்தது. ஜன்னல்களுக்கு மத்தியில் அலங்காரமான முலாம் சட்டத்தில் அமைந்த ஜார் அரசனின் சித்திரம் தொங்கிக்கொண்டிருந்தது. அதன் இருபுறத்தையும் கருஞ்சிவப்பான ஜன்னல் திரைகள் மடிமடியாகத் தொங்கி மறைத்துக்கொண்டிருந்தன. அந்தச் சித்திரத்துக்கு முன்னால் பச்சைத் துணியால் மூடப்பட்டிருந்த ஒரு பெரிய மேஜை அந்த ஹாலின் அகலம் முழுவதையுமே வியாபித்துக்கொண்டிருந்தது. கைதிக் கூண்டுகளுக்குப் பின்னால், வலதுபுறச் சுவரையொட்டி இரண்டு மரப்பெஞ்சுகள் போடப்பட்டிருந்தன. இடது புறத்தில், கருஞ்சிவப்பு, துணிவைத்துத் தைக்கப்பட்ட கைநாற்காலிகள் இரு வரிசையாகப் போடப்பட்டிருந்தன. தங்க நிறப் பித்தான்களைக் கொண்ட பச்சை உடுப்புக்கள் அணிந்த கோர்ட்டுச் சேவகர்கள் வாய் பேசாது முன்னும் பின்னால் வந்து போய்க்கொண்டிருந்தார்கள். அந்த மப்பும் மந்தாரமும் நிறைந்த சூழ்நிலையில் உள்ளடங்கி ஒலிக்கும் பேச்சுகளும், பற்பல மருந்துகளின் கார நெடியும் கலந்து நிறைந்தன. இவையெல்லாம் – இந்த வர்ண பேதங்கள், பிரகாசம், குரல்கள், நெடி எல்லாம் – கண்ணையும் காதையும் உறுத்தின; சுவாசத்தோடு இதயத்தில் புகுந்து அர்த்தம் ஒன்றுமற்ற பய வேதனையை நிரப்பின.

திடீரென யாரோ உரத்தக் குரலில் பேசினார்கள். தாய் திடுக்கிட்டாள். எல்லோரும் எழுந்து நிற்பதைக் கண்டு அவளும் சிஸோவின் கையைப் பற்றிப் பிடித்தவாறே எழுந்து நின்றாள்.

இடதுபுறமாக இருந்த ஒரு பெரிய கதவு திறந்தது மூக்குக்கண்ணாடி அணிந்த ஒரு வயதான மனிதர் ஆடியசைந்து கொண்டு உள்ளே வந்தார். அவரது சாம்பல் நிறக் கன்னங்களில் மெல்லிய வெள்ளையான கிருதாக்கள் அசைந்து கொடுத்தன. மழுங்கச் செய்யப்பட்ட அவரது மேலுதடு பற்களேயற்ற வாய் ஈறுக்குள் மடிந்து போயிருந்தது. அவரது மோவாயும் தாடையும் அவரது உத்தியோக உடுப்பின் உயர்ந்த காலர்மீது சாய்ந்து கழுத்தே இல்லாதது போல் தோற்றமளித்துக்கொண்டிருந்தது. கொழுத்துத் திரண்ட நெட்டையான வெள்ளை மூஞ்சி இளைஞன் ஒருவன் கை கொடுத்து அவரை மேலேற்றிவிட்டான். அவர்களுக்குப் பின்னால் தங்க நிறக்கரை வைத்துத் தைத்த உத்தியோக உடைகளோடு மூன்று பேர் வந்தார்கள், சாதாரண உடையணிந்து மூன்று பேர் வந்தார்கள்.

அந்த நீண்ட மேஜை முன்னால் அவர்கள் உட்கார்ந்து முடிப்பதற்கே வெகு நேரம் பிடித்தது. அவர்கள் தங்கள் இருக்கைகளில் அமர்ந்தவுடன் மழுங்கச் சவரம் செய்து வழவழப்போடு விளங்கும் சோம்பல் முகமுள்ள ஒரு மனிதன் அந்த வயோதிகரின் பக்கம் குனிந்து தனது தடித்த உதடுகளை என்னவோ போல அசைத்துக்கொண்டு, ரகசியமாக ஏதோ சொல்லத் தொடங்கினான். அந்தக் கிழவர் நிமிர்ந்து அவன் கூறுவதை அசையாமல் கேட்டார். அவரது கண்ணாடிக்குப் பின்னால், இரு சிறு புள்ளிகள் மாதிரி தோன்றும் உணர்ச்சியற்ற கண்களைத் தாய் கண்டாள்.

அந்த மேஜையின் ஓரமாகக் கிடந்த எழுதும் சாய்வு மேஜைக்கு அருகே ஒரு நெட்டையான வழுக்கைத் தலை ஆசாமி நின்று கொண்டிருந்தான்; அவன் தொண்டையைக் கனைத்துச் சீர்படுத்திக்கொண்டே தஸ்தாவேஜுக்களைப் புரட்டிக் கொண்டிருந்தான்.

அந்தக் கிழவர் முன்புறமாகக் குனிந்து பேசத்தொடங்கினார். எடுத்த எடுப்பில் அவரது பேச்சு தெளிவாக ஒலித்தது; அப்புறம் அந்தப் பேச்சு அவரது மெல்லிய உதடுகளுக்குள்ளாக மடிந்து உள்வாங்கிப் போய்விட்டது.

”விசாரணை தொடங்குகிறேன் …. அவர்களைக் கொண்டு வாருங்கள்…”

”பார்’ என்று தாயை முழங்கையால் இடித்து நிமிர்ந்து நின்றவாறே மெதுவாகச் சொன்னான் சிஸோவ்.

கைதிக் கூண்டுக்குப் பின்புறமுள்ள கதவு திறந்தது. பளபளக்கும் வாளைத் தோளில் சாத்தியவாறே ஒரு சிப்பாய் வந்தான், அவனைத் தொடர்ந்து பாவெல், அந்திரேய், பியோதர் மாசின் கூஸெவ் சகோதரர்கள். சமோய்லவ், புகின், சோமவ் முதலியோரும். தாய்க்கு அறிமுகமில்லாத ஐந்து இளைஞர்களும் வந்து சேர்ந்தார்கள். பாவெல் அவளைப் பார்த்துப் புன்னகை புரிந்தான். அந்திரேய் பல்லைக் காட்டி, தலையை ஆட்டினான். அவர்களது புன்னகையும், உற்சாகம் நிறைந்த முகங்களும், அசைவுகளும் அந்த நீதிமன்றத்தின் உம்மணா மூஞ்சிச் சூழ்நிலையை மாற்றி அதைத் தளரச் செய்தது. உத்தியோக உடுப்புகளின் பொன்னொளி ஜாலம் மங்கிப் போயிற்று. தைரியம் மீண்டும் தாயிடம் குடிபுகுந்தது. அந்தக் கைதிகள் தம்மோடு கொணர்ந்த அமைதியான தன்னம்பிக்கையும் ஜீவ சக்தியும் அவளுக்கு வலுவூட்டின. அவளுக்குப் பின்னுள்ள பெஞ்சிகளில், இத்தனை நேரமும் சோர்ந்து அசந்து போய் நின்ற மக்கள். தங்களுக்குள் குசுகுசுத்துப் பேசத் தொடங்கினார்கள்.

“அவர்கள் பயப்படவே இல்லை!” என்று சிஸோவ் ரகசியமாகச் சொன்னான். சமோய்லவின் தாயோ உள்ளுக்குள்ளாகப் பொருமத் தொடங்கினாள்.

‘அமைதி” என்று ஒரு கடுமையான குரல் ஒலித்தது.

“முதலிலேயே நான் உங்களை எச்சரித்து விட வேண்டும்…” என்று சொன்னார் அந்தக் கிழவர்.

முன்னாலுள்ள பெஞ்சியின் மீது பாவெலும் அந்திரேயும் ஒருவர் பக்கம் ஒருவராக உட்கார்ந்திருந்தார்கள். அவர்களோடு மாசின், சமோய்லவ். கூஸெவ் சகோதரர்கள் முதலியோரும் உட்கார்ந்திருந்தார்கள். அந்திரேய் தன் தாடியை எடுத்துவிட்டிருந்தான், ஆனால் மீசையை மட்டும் வளரவிட்டிருந்தான். அந்த மீசை வளர்ந்து படிந்து அவனது உருண்டை முகத்தைப் பூனை முகம் மாதிரி காட்டிக்கொண்டிருந்தது. அவனது முகத்தில் ஏதோ ஒரு புதுமை இருந்தது. கூர்மையும் குத்தலும் நிறைந்த பாவம் அவனது முகத்தில் தோன்றியது. கண்களில் ஏதோ ஒரு கருமை தென்பட்டது. மாசினுடைய மேலுதட்டில் இரு கரிய கோடுகள் காணப்பட்டன. அவனது முகம் உப்பி உருண்டு கொண்டிருந்தது. சமோய்லவின் சுருட்டைத் தலை எப்போதும் போலவே இருந்தது. இவான் கூஸெவ் பல்லைக் காட்டிச் சிரித்தான்.

”ஆ பியோதர் பியோதர் என்று தலையைக் குனிந்து கொண்டே முணுமுணுத்தான் கிஸோவ்.

அந்தக் கிழவர் தமது உத்தியோக உடுப்பின் காலருக்குள் அசையாமல் புதைந்து கிடந்த தலையைக் கொஞ்சம் கூட அசைக்காமல், நிமிர்ந்தும் பார்க்காமல் கைதிகளைப் பார்த்து ஏதேதோ கேள்வி கேட்டார், அந்தத் தெளிவற்ற கேள்விக் குரலைத் தாயும் கேட்டுக்கொண்டிருந்தாள். அந்தக் கேள்விகளுக்கு, தன் மகன் கூறிய அமைதியான சுருக்கமான பதில்களையும் அவள் கேட்டாள். பிரதம நீதிபதியும் அவரது சகாக்களும் தன் மகன் விஷயத்தில் குரூரமாகவும் கொடுமையாகவும் நடந்து கொள்ள முடியாது என்று அவளுக்குத் தோன்றியது. அந்த நீண்ட மேஜைக்கு எதிரே இருந்தவர்களின் முகத்தைப் பார்த்து விசாரணையின் முடிவை அவள் ஊகிக்க முயன்றாள்; அவளது ஊகத்தால், அவளது இதயத்தினுள்ளே ஒரு நம்பிக்கை வளர்ச்சி பெற்று ஓங்குவதை அவள் உணர்ந்தாள்.

ஒரு வெள்ளை முக ஆசாமி ஒரு தஸ்தாவேஜை உணர்ச்சியற்று ஒரே குரலில் வாசித்தான். மந்திரத்தால் கட்டுப்பட்டவர்கள் மாதிரி அதைக் கேட்ட ஜனங்கள் ஆடாது அசையாது உட்கார்ந்திருந்தார்கள். விசாரணைக்காக நிற்பவர்களைப் பார்த்து, நாலு வக்கீல்கள் உணர்ச்சியோடும் அமைதியோடும் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களது அசைவுகள் பலமாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தன. அவர்கள் பெரிய கரும் பறவைகளைப்போல் தோன்றினார்கள்.

“நான் யாரையும் கொலை செய்யவில்லை; எதையும் திருடவில்லை. ஆனால் ஒருவரையொருவர் திருடவும், கொலை செய்யவும் தூண்டிவிடும் இந்த வாழ்க்கை அமைப்புத்தான் நான் எதிர்க்கிறேன்…”

அந்தக் கிழ நீதிபதிக்கு அருகில் இருந்த நாற்காலியில் ஒரு கொழுத்த உப நீதிபதி உட்கார்ந்திருந்தார். அவரது சிறு கண்கள் கொழுத்த சதைப் பகுதிக்குள் புதைந்து போயிருந்தன. இன்னொரு கைப் பக்கத்தில் கூனிய தோள்களும் வெளுத்த முகமும், சிவந்த மீசையும் கொண்ட இன்னொரு உப நீதிபதி உட்கார்ந்திருந்தார். அவர் தமது தலையைச் சோர்வோடு நாற்காலியின் பின்புறம் சாய்த்து கண்களைப் பாதி மூடியவாறே சிந்தனையில் ஈடுபட்டிருந்தார். அரசாங்க வக்கீலும் களைப்புணர்ச்சியோடும் எரிச்சலோடும் இருப்பதாகத் தோன்றியது. நீதிபதிகளுக்குப் பின்னால் மூன்று முக்கிய பிரமுகர்கள் உட்கார்ந்திருந்தார்கள், ஒருவர் நகரத்து மேயர் – அவர் கனத்துத் தடித்த ஆசாமி; அவர் தமது கன்னத்தைத் தடவிக்கொடுத்தவாறு உட்கார்ந்திருந்தார். மற்றொருவர் பிரபு வம்சத் தலைவர் –  நரைத்த தலையும் சிவந்த கன்னமும் நீண்ட தாடியும், கவர்ச்சிகரமான விசாலமான கண்களும் கொண்டவர் அவர். அடுத்தாற்போல் ஜில்லா அதிகாரி இருந்தார். பெரிய தொந்தியுள்ள ஆசாமி அவர். தொந்தி விழுந்திருப்பது அவருக்கு மனச்சங்கடத்தை உண்டு பண்ணியது போல் தோன்றியது. ஏனெனில் அவர் தமது கோட்டினால் அந்தத் தொந்தியை எவ்வளவோ மறைக்க முயன்றும், முடியவில்லை .

“இங்கு கைதிகளும் இல்லை . நீதிபதிகளும் இல்லை !” என்று பாவெலின் உறுதியான குரல் ஒலித்தது. ”பிடிபட்டவர்களும் பிடித்தவர்களும்தான் இருக்கிறார்கள்.”

எல்லோரும் அமைதியானார்கள். சில விநாடிகள் வரையிலும் கரகரவென்று எழுதிச் செல்லும் பேனாவின் சத்தத்தையும், அவளது இதயத் துடிப்பையும் தவிர வேறு எதையுமே தாய் கேட்கவில்லை.

பிரதம நீதிபதியும் அடுத்தாற்போல் என்ன நடக்கப்போகிறது என்பதையே கவனித்துக் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருப்பதுபோல் தோன்றியது. அவரது உதவி நீதிபதிகளும் நிலையிழந்து அசைந்து கொடுத்தார்கள். முடிவாக அவர் சொன்னார் “ஹம்… அந்திரேய், நஹோத்கா நீங்கள் குற்றவாளி என்று ஒத்துக்கொள்கிறீர்களா?”

படிக்க:
உச்ச நீதிமன்றத்தில் மூன்று குமாரசாமிகள் | சிறப்புக் கட்டுரை
தூத்துக்குடி : ஸ்டெர்லைட் எதிர்ப்பு பொங்கல் | புகைப்படங்கள்

அந்திரேய் மெதுவாக எழுந்தான்; நிமிர்ந்து நின்றான். மீசையை இழுத்துவிட்டான், தன் புருவங்களுக்குக் கீழாக, அந்தக் கிழ நீதிபதியைப் பார்த்தான்.

“நான் எப்படி என் குற்றத்தைக் கூற முடியும்?” என்று நிதானமாக இனிமையாக தோள்களை உலுப்பிக் கொண்டே கூறினான் அந்திரேய். “நான் யாரையும் கொலை செய்யவில்லை; எதையும் திருடவில்லை. ஆனால் ஒருவரையொருவர் திருடவும், கொலை செய்யவும் தூண்டிவிடும் இந்த வாழ்க்கை அமைப்புத்தான் நான் எதிர்க்கிறேன்…”

” சுருக்கமாகப் பதில் சொல்க” என்று அந்தக் கிழவர் சிரமப்பட்டுச் சொன்னார்.

தனக்குப் பின்னால் உள்ள பெஞ்சிகளிலுள்ளவர்கள் பரபரத்துக் கொண்டிருப்பதைத் தாயால் உணர்ந்துகொள்ள முடிந்தது. ஜனங்கள் குசுகுசுத்து ரகசியம் பேசினார்கள், அங்குமிங்கும் அசைந்தார்கள். அந்த வெள்ளை மூஞ்சி ஆசாமியின் பேச்சினால் தம் மீது படர்ந்துவிட்ட தூசி தும்புகளைத் துடைத்துவிடுவது போலவும் நடந்துகொண்டார்கள்.

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்