Tuesday, May 6, 2025
முகப்பு பதிவு பக்கம் 741

சத்தீஸ்கர்:கழிப்பறைக் காகிதமானது சட்டத்தின் ஆட்சி!

2

சத்தீஸ்கர்ஒரு மாநிலத்தின் சட்டம்ஒழுங்கைக் கட்டுப்படுத்தும் பொறுப்பும் அதிகாரமும் அம்மாநிலத்தின் உள்துறை அமைச்சரைச் சார்ந்ததாகும்.  இவரது உத்தரவை உயர் போலீசு அதிகாரிகள்கூட அலட்சியப்படுத்த முடியாது என்கிறது சட்டம்.  ஆனால்,  முடியும் எனப் புலம்புகிறார் சத்தீஸ்கர் மாநில உள்துறை அமைச்சர் நன்கிராம் கன்வர். கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர்,  தனது அமைச்சகத்தின் கீழ் வரும் போலீசு துறை  தனது உத்தரவுகளை மதிப்பதில்லை என மூக்கைச் சிந்தினார்.

சத்தீஸ்கரின் கோர்பா மாவட்டத்தில் நடைபெறும் விபச்சாரக் குற்றங்கள் குறித்து மிலன்தாஸ் என்பவர், கடந்த பிப்ரவரி மாதம் போலீசிடம் முறையிட்டுள்ளார்.  போலீசோ குற்றவாளிகளைப் பிடிப்பதை விட்டு விட்டு, மிலன் தாஸைத் தாக்கியதுடன் அல்லாமல், சிறுமியான அவரது மகளையும் மானபங்கப்படுத்தியது. இது குறித்த வழக்கை கோர்பா மாவட்ட போலீசார் பதிவு செய்ய மறுத்ததால், மிலன்தாஸ் உள்துறை அமைச்சரிடம் முறையிட, அமைச்சரும் வழக்கை உடனே பதியச் சொல்லி கோர்பா மாவட்ட போலீசு கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டிருக்கிறார். தனது இவ்வுத்தரவை போலீசார்  அலட்சியப்படுத்திவிட்டதாக அமைச்சர் தற்பொழுது குற்றஞ்சுமத்தி வருகிறார்.

‘‘என்னுடைய பேச்சைத்தான் போலீசு கேட்பதில்லை, சட்டம் சொல்வதையாவது கேட்கலாமே” என்று அமைச்சர் பத்திரிகையாளர்களைக் கூட்டிப் புலம்பிக் கொண்டிருந்த பொழுது, மாவட்ட போலீசு கண்காணிப்பாளரோ, அவ்வாறான  உத்தரவு எதுவும் தனக்கு வழங்கப்படவில்லை என மறுத்தார். இதற்குப் பதிலடியாக அமைச்சர், “பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலமே இது போன்ற வழக்குகளை பதிவு செய்யப் போதுமானது” எனும் உச்ச நீதிமன்ற தீர்ப்பைச் சுட்டிக் காட்டினார். அமைச்சர் சுட்டிக் காட்டியுள்ள உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலாவது போலீசு வழக்கு பதிவு செய்ததா என்றால், அதற்கும் பெப்பே காட்டிவிட்டது.

2010இல் சத்தீஸ்கரில் உருவாக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு உள்துறை அமைச்சர் கன்வரின் அனுமதியின்றிதான் அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படை ரியல் எஸ்டேட் விவகாரங்களில் கட்டைப்பஞ்சாயத்து செய்து பணம் பிடுங்கும் சட்டவிரோத அமைப்பு என்று அமைச்சரே குற்றஞ்சாட்டுகிறார்.  இப்படைப் பிரிவைக் கலைக்கச் சொல்லி உயர் போலீசு அதிகாரிகளுக்கு அமைச்சர் இட்ட உத்தரவோ கேட்பாரின்றிக் கிடக்கிறது.

மாவோயிஸ்டுகளையும் பழங்குடியினரையும் வேட்டையாடுவதற்காகவே சத்தீஸ்கர் மாநில அரசு சட்டவிரோதமாக ‘கோயா கமோண்டோ’ என்ற குண்டர் படையைக் கட்டி நடத்தி வந்தது.  இந்தக் குண்டர் படையின் தலைவனான  கர்டாம் சூர்யா என்பவன் மீது பல்வேறு கொலை, வன்புணர்ச்சி குற்றச்சாட்டுகள் உள்ளன. நவம்பர் 2006இல் 3 பழங்குடியினப் பெண்களை வன்புணர்ச்சி செய்த வழக்கில் இவனுக்குப் பிடிவாரண்டு பிறப்பித்தது நீதிமன்றம்.  ஆனால், அம்மாநில அரசோ கர்டாம் சூர்யாவைத் தேடிப் பிடிக்க முடியவில்லை என  நீதிமன்றத்தில் புளுகி வருகிறது.

சிறப்பு காவல் அதிகாரிகள் என்ற பெயரில் பழங்குடியின இளைஞர்களை நக்சல்பாரிகளுக்கு எதிரான போரில் ஈடுபடுத்துவது சட்டவிரோதம் என்று கூறி, சல்வாஜூடும் போன்ற அமைப்புகளைக் கலைக்க உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். அம்மாநில அரசோ, புதிய விதிகளை உருவாக்கி,  கோயா கமாண்டோவின் பெயரை மட்டும் சிறப்பு துணைப் படை என்று மாற்றி, அக்குண்டர் படையை இன்றும் நடத்தி வருகிறது. தேடப்படும் கிரிமினல் குற்றவாளியான கர்டாம் சூர்யா அப்புதிய அமைப்பில்தான் செயல்பட்டு வருகிறான்.  இந்த உண்மைகளெல்லாம் ஊருக்கே தெரிந்திருந்தபோதும், நீதிமன்றமோ அரசின் பதிலைக் கேட்டுக்கொண்டு அமைதி காத்து வருகிறது.  அம்மாநில நக்சல் ஒழிப்பு பிரிவின் கூடுதல் உதவி ஜெனரல், நீதிமன்றம் வழங்கிய பிடிவாரண்டே நக்சல்பாரிகளின் திட்டமிட்ட சதி என எகத்தளமாகக் கூறி வருகிறார்.  அது மட்டுமா, இக்கிரிமினலை ‘சத்தீஸ்கரின் நாயகன்’ என்று தலையில் வைத்துக் கொண்டாடுகிறது, அம்மாநில போலீசு. ‘கொடூரமான, வக்கிரமான  முறைகளின் மூலம் பயத்தை விதைப்பதால்தான் அவன் சத்தீஸ்கரின் நாயகன்’ என இந்த அநியாயத்திற்கு விளக்கம் வேறு அளித்து வருகிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் போலீசாரின் கேள்விக்கிடமற்ற காட்டு ராஜ்ஜியம்தான் நடக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு அம்மாநிலத்தைக் கூறு போட்டு விற்பதற்கு எதிராகப் போராடும் பழங்குடியின மக்கள் மீது பாய்வதற்காகவே கட்டவிழ்த்துவிடப்பட்ட போலீசு, இப்பொழுது செக்கு எது சிவன் எது என்ற வேறுபாடின்றி, அனைத்துச் சட்டபூர்வ அமைப்புகள் மீதும் விழுந்து பிடுங்கி வருகிறது. இதனைத் தடுக்க இயலாதது போல உள்துறை அமைச்சரும் அரசும் நாடகமாடுகிறார்கள். நீதித்துறை உள்ளிட்ட அனைவரும் இந்நாடகத்தின் கூட்டாளிகளாக உள்ளனர்.

இங்கு மட்டுமல்ல; நாடு முழுவதும் சட்டத்தின் ஆட்சி இப்படித்தான் சந்தி சிரிக்கிறது. ஒடிஸ்ஸாவில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் ஜினா ஹிகாகாவை விடுவிப்பதற்காக, சிறையிலுள்ள மாவோயிஸ்டுகளையும் பழங்குடியினரையும் விடுவிப்பது என்ற அரசின் முடிவிற்குக் கட்டுப்பட மறுக்கிறது, போலீசு.

சத்தீஸ்கர்இப்படி, முகத்தில் காரி உமிழாத குறையாக உச்ச நீதிமன்றம் முதல் உள்துறை அமைச்சர் வரை தனக்கு மேலேயுள்ள சட்டபூர்வமான அனைத்து அமைப்புகளையும் துச்சமாய்க் கருதி இகழ்கிறது, போலீசு.  ஆனால், சட்டத்தின் ஆட்சியைத் தூக்கிப் பிடிப்பவர்கள் எவருமே இவற்றைக் கண்டும் காணாதது போல நடந்து கொள்கிறார்கள். சேது சமுத்திரத் திட்டத்தை ஆதரித்து தி.மு.க. அரசு வேலை நிறுத்தம் செய்தது என்ற பத்திரிகை செய்தியின் அடிப்படையில் வழக்கைத் தானே விசாரித்து, தி.மு.க. அரசிற்கு மிரட்டல் விடுத்த நீதிமன்றமோ சத்தீஸ்கரில் நீதிமன்ற உத்தரவுகள் செயல்படுத்தப்படாதது பற்றிக் கள்ள மவுனம் சாதிக்கின்றது. எதிர்கட்சியினரோ, சட்டத்தின் ஆட்சியையே கேலிக் கூத்தாக்கியுள்ள போலீசையோ, நாடகமாடும் அமைச்சரையோ அம்பலப்படுத்திக் குரலேதும் எழுப்ப மறுக்கிறார்கள்.   ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்று எனச் சொல்லிக் கொள்ளும் ஊடகங்களோ இந்தப் பிரச்சினையை ஏறெடுத்துப் பார்க்கவும் விரும்பவில்லை.

பன்னாட்டு நிறுவனங்களுக்கு நாட்டைக் கூறு போட்டு விற்பதில்தான் இவர்களின் நலன்கள் பின்னிப் பிணைந்துள்ளன. அதனால்தான் சொல்லி வைத்தாற்போல இவர்கள் அனைவரும் இவ்விசயங்களில் ஒரேவிதமாக நடிக்கிறார்கள். நமது உரிமைகளுக்காகச் சட்ட ரீதியாகப் போராடி வெற்றி பெற முடியும் என்பது போன்ற மாயைகளைத் தெளிய வைக்கின்றது போலீசின் காட்டு ராஜ்ஜியம். சட்டம், அரசியல் சாசனம் என்பவையெல்லாம் மக்களை ஒடுக்குவதற்காகவும், நாடாளுமன்ற பன்றித் தொழுவ அக்கப்போருக்குமானதேயன்றி வேறல்ல. தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்க அமைப்பாக இருந்தாலும் சரி, சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரவர்க்க அமைப்பாக இருந்தாலும் சரி இவர்கள் ஆளும் வர்க்க நலனையொட்டித்தான் செயல்படுகிறார்களேயொழிய, சட்டப் புத்தகம் இவ்வமைப்புகளை வழிநடத்துவதில்லை.

அறவழியில் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக மணிப்பூரின் ஐரோம் சர்மிளா நடத்தி வரும் உண்ணாவிரதப் போர், அரசை ஓர் அங்குலம்கூட அசைக்கவில்லை. அரசியல் அமைப்புச் சட்டம் பழங்குடியினருக்கு வழங்கியிருக்கும் உரிமைகளை வலியுறுத்தி வழக்குகள் பதிவு செய்ததற்காக காந்தியவாதி ஹிமன்சுகுமார் தண்டிக்கப்பட்டார்; அவரது ஆசிரமம் போலீசாரால் பட்டப் பகலில் இடித்து நொறுக்கப்பட்டது. சத்தீஸ்கரில் நிலவும் அரசு பயங்கரவாதத்தை அம்பலப்படுத்திய ‘குற்றத்திற்காக’ பினாயக் சென் ஆயுள் தண்டனைக்குள்ளானார். சட்டத்தை  அமல்படுத்தக் கோரிப் போராடுபவர்களுக்கு, இதுதான் கதி என ஓட்டுக்கட்சிகள், நீதிமன்றம், போலீசு என அனைவரும் ஒன்று கூடிக் கெக்கலி கொட்டுகிறார்கள்

_________________________________________
– புதிய ஜனநாயகம், மே-2012
__________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

_______________________________________

_______________________________________

_______________________________________

THE AXE (2005): வேலை வேண்டுமா? கொலை செய்!

2
வேலை-வாய்ப்பு
கொலை செய்வதின் குற்ற உணர்வை குடும்பம் ரத்து செய்கிறது

’சரியான விரலை சரியான கட்டையின் மீது வைக்கும் போது இனிமையான இசை எழும்’ என்றார் மாவோ. பொதுவாக ஆங்கிலப் படங்களில் இந்த இனிமையான இசையைக் கேட்பது அரிது. உலகம் முழுவதும் மக்கள் தம் எதிரியை அடையாளம் கண்டு திரளாக “ஆக்கிரமிப்பு (Occupy)” போராட்டங்களைச் செய்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் இனியும் முதலாளிகளை மனிதகுலக் காவலர்களாகக் காட்ட முடியாது என்பதாலோ என்னவோ, திரைப்படப் படைப்பாளிகள் மக்கள் நோக்கில் உண்மையான பிரச்சினைகளை நோக்கி நகரத் துவங்கியிருக்கிறார்கள். அத்தகைய முயற்சிகளில் ஒன்றுதான் பிரெஞ்சுப் படமான ‘தி ஆக்ஸ்‘.

டிரைலர்

படத்தின் கதையைப் பார்த்து விடுவோம்.

காகிதத் தொழிற்துறையில் நிபுணரும், சிறந்த மேலாளருமான புருனொ டவர்ட் பிரான்சில் வாழும் ஒரு உயர் நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்தவன். அவன் பணி புரியும் நிறுவனத்தில் ஆட்குறைப்பு காரணமாக வேலையை இழக்கிறான். இருப்பினும் இந்த வேலை இழப்பு அவனிடையே பெரிய அதிர்ச்சி எதையும் ஏற்படுத்தவில்லை. காரணம், அவனுக்கு 18 மாதச் சம்பளம் இழப்பீடாகக் கிடைக்கிறது. மேலும் தன்னைப் போன்ற திறமையான மேலாளர் பொறுப்பை வகித்தவன் இன்னொரு வேலையை எளிதாகப் பெற்று விடலாம் என்றும் மகிழ்ச்சியாக வெளியேறுகிறான்.

ஆனால், சற்றுக் காலம் கழித்து சுடும் எதார்த்தம் கன்னத்தில் அறைகின்றது. இரண்டு ஆண்டுகளாகியும் வேறு வேலை கிடைக்கவில்லை. சேமிப்புத் தொகை கரையத் துவங்குகின்றது. மனைவி சிறு சிறு வேலைகளில் சம்பாதிக்கும் குறைந்த பணத்தில் வாழும் வாழ்க்கை கடினமாகின்றது. இணையம் முதல் தொலைக்காட்சி கேபிள் வரை அனைத்து வசதிகளும் அந்தக் குடும்பத்தை விட்டு விலகுகின்றன. உணவைக் கூடச் சிக்கனமாக சமைக்க வேண்டிய மோசமான நிலைமையைத் தன் மனைவி, பிள்ளைகளுடன் எதிர்கொள்ள முடியாமல் தவிக்கிறான் டவர்ட். இடையில் பள்ளியில் படிக்கும் மகன் திருட்டு வழக்கில் சிக்குகிறான். மனைவியோ மண விலக்கு செய்யும் முடிவுக்கு வருகிறாள். எல்லாம் சேர்ந்து டவர்டின் மனநிலையைக் கொதிநிலையாக மாற்றுகின்றன.

வேலை கிடைக்க வேண்டுமானால் தனக்கு போட்டியாக இருப்பவர்களைக் கொலை செய்தால் தான் சாத்தியமென இறுதியாக முடிவுக்கு வருகிறான் டவர்ட். ஒரு போலி நிறுவனத்தின் பெயரில் காகிதத் தொழிற்சாலை மேலாளருக்கான வேலை விளம்பரம் ஒன்றைக் கொடுக்கிறான். அந்தப் போலி நிறுவனத்திற்கு வேலை கேட்டு வரும் பல்வேறு சுயவிபரப் பட்டியல்களைச் சரி பார்த்து தனக்குப் போட்டியாக இருக்கக் கூடிய திறமை மிக்க காகித மேலாளர்களை மாத்திரம் தேர்ந்தெடுத்து கொலை செய்ய வேண்டும். இவர்கள் அனைவரையும் கொலை செய்த பிறகு, இறுதியாக பிரான்ஸ் நாட்டின் பிரபல காகிதத் தொழிற்சாலையான ஆர்கிடியாவின் காகிதத் துறை மேலாளரைக் கொலை செய்ய வேண்டும். இதுதான் திட்டம்.

கொலை செய்ய திட்டமிட்டவரின் நிழற்படத்தை முதல் நாள் கணிப்பொறியில் அச்செடுத்து, அவர்களின் இடத்திற்குச் செல்கிறான் டவர்ட். ஆரம்பத்தில் கொலை செய்யத் தடுமாறும் டவர்ட் இறுதியில் குழப்பம் ஏதுமில்லாமல் கொல்கிறான். இப்படி ஒவ்வொருவராகக் கொல்லப்படுகிறார்கள். கடைசியில் கொலை செய்யப் போகும் நபரான ஜான் உடன் சாதாரணமாகப் பேசுகையில் அவர் காகிதத் துறையில் இருந்து வெளியேற வேண்டும் என்ற திட்டத்தில் இருப்பதைக் கண்டு அவரையும், வேறு வேலை கிடைத்து விட்டதால் இன்னொருவரையும் கொலை செய்யாமல் விடுகின்றான்.

இந்நேரத்தில் தொடர் கொலைகளைத் துப்பறியும் காவல்துறையினர் டவர்ட் வீட்டிற்கு வருகிறார்கள். காகிதத் தொழிலில் உள்ள மேலாண்மைத் துறை நபர்களைக் கொலை செய்தது ஜான் தான் என்றும், அவன் தற்கொலை செய்து கொண்டான் என்றும் சொல்கிறார்கள். கொலைப்பழி ஜான் மீது விழுந்ததில் மகிழ்ச்சி அடையும் டவர்ட், ஆர்கிடியா நிறுவனத்தின் மேலாளரையும் கொன்று விட, அந்த இடத்திற்கான நேர்முகத்தில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுகிறான். மீண்டும் வசதி நிறைந்த நடுத்தர வாழ்விற்கு திரும்பும் டவர்ட், ஒரு நாள் காகிதத் தொழிற்சாலை மேலாண்மை அதிகாரியாகப் பணியாற்றும் பெண் ஒருவரைச் சந்திக்கிறான். அந்தப் பெண் டவர்ட் செய்தது போலவே அவனுடைய சுயவிபரப்பட்டியலுடன் வந்திருக்கிறாள். ‘போட்டியாளர்கள் கொல்லப்படுவது தொடர்ந்து கொண்டே இருக்கும்‘ என்று படம் முடிவடைகின்றது.

வேலை-வாய்ப்புசமீப ஆண்டுகளாக உலகப் பொருளாதாரம் அதாவது முதலாளித்துவத்தால் ஆட்டுவிக்கப்படும் பொருளாதாரம் அமெரிக்கா தொட்டு கிரீஸ் வரை பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து வருவதை அறிவோம். இரட்டை இலக்கத்தில் அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம், ஆட்குறைப்பு, நிறுவனங்கள் மட்டுமல்ல நாடுகளுமே திவால் ஆவது என்ற போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. முடங்க வாய்ப்பில்லாத மூலதனமும், இலாபவெறி பிடித்து அலையும் நிறுவனங்களின் சூதாட்டப் பொருளாதாரமும் தர்க்கபூர்வமான இலக்கை அடைந்திருப்பதன் அறிகுறிதான் இந்த நெருக்கடி.

எனினும் இது அமெரிக்கா போன்ற ஒரு சில வல்லரசு நாடுகளோடு முடிந்து விடும் விடயமல்ல. முழு உலகையே சங்கிலியாகப் பிணைத்திருக்கும் முதலாளித்துவப் பொருளாதரத்தின் பிடியிலிருந்து எந்த நாடும், எந்தத் தனி நபரும் தப்பித்துக்கொள்ள முடியாது.

”உலகமயம், தனியார்மயம், தாராளமயம் எனும் மூன்று மந்திரச் சொற்கள் முழு உலகையும் மாற்றி விடும்” என்று பேசியவர்கள் கூட இன்று வெட்கப்பட்டு வாயடைத்துக் கொள்ளும் நிலை. இம்மூன்று மயத்திற்காகவும் எல்லா நாடுகளின் அரசுகளையும், கொள்கைகளையும் கூட அவர்கள் மாற்றியிருக்கிறார்கள். அப்படித்தான் தொழிற்சங்க உரிமை பறிப்பு, கேள்வி இன்றி செய்யப்படும் ஆட்குறைப்பு, அதிக நேரம் வேலை, உரிமைகள் பறிப்பு என்று பல தொழிலாளர் விரோதக் கொள்கைகள் அமல்படுத்தப்படுகின்றன. இவற்றையெல்லாம் எதிர்த்து பல நாடுகளின் தொழிலாளர்கள் இன்று வரை போராடுகிறார்கள்.

ஆனால் அந்தப் போராட்டத்தின் சாயலை வேலையிழந்த கதையின் நாயகன் டவர்டிடம் காண முடியவில்லையே, ஏன்?

இந்தப் படத்தில், வேலை போகும் காட்சியில் டவர்டும், அவன் மேலாளரும் ஒரு அறையில் நின்றபடி பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் பின்னால் பல தொழிலாளர்கள் ஆட்குறைப்பிற்கு எதிராகப் போராடிக் கொண்டிருப்பார்கள். தன் 18 மாதச் சம்பளத்துடன் டவர்ட் அவர்களை எளிதாகக் கடந்து விடுகிறான். அவனைப் போன்று நிறுவனங்களின் மேலாளராகப் பணிபுரிபவர்களுக்கு போராட்டம், வேலை நிறுத்தம், முற்றுகை எல்லாம் ஆகாது. அவையெல்லாம் அநாகரீக உலகின் பொறுக்கித்தனங்கள் என்பதுதான் இந்த அதிகார வர்க்கத்தின் பால பாடம். சொல்லப் போனால் போராடும் தொழிலாளர்களை சதி செய்தோ, அடக்குமுறை செய்தோ ஒடுக்குவதுதான் இவர்களுடைய வேலை.

ஆனால் தனக்கும் வேலை இல்லை என்ற போதும் கூட அவன் இதைப் புரிந்து கொள்ளவில்லை. குறைந்தபட்சம் வேலையில்லை என்று வெளியேற்றிய நிறுவனத்தின் மேல் கூட கிஞ்சித்தும் கோபம் வரவில்லை. அதே நேரம் அவன் நினைத்தது போல வேலை கிடைப்பது எளிதல்ல என்று எதார்த்தம் உணர்த்திய போதுதான் அவனுக்கு கோபமும், ஆத்திரமும் வருகின்றது. அதுவும் கூட அவன் பயிற்றுவிக்கப்பட்ட மனநிலையைப் பெரிதும் மீறாமல்தான் வருகிறது. அதாவது தனது போட்டியாளர்களை ஒழிக்க வேண்டுமென்ற முதலாளித்துவத்தின் அரிச்சுவடியை வைத்து டவர்டும் அத்தகைய பாசிசத் தீர்வை நோக்கிப் பயணிக்கிறான். இதனால் அவனை ஒரு தேர்ந்த கொலைகாரனாகக் கருதி விட இயலாது.

முதல் காட்சியில் துப்பாக்கியுடன் தான் கொலை செய்ய வேண்டிய நபரை காரில் பின் தொடரும் டவர்ட், ஒரு கட்டத்தில் அந்த நபரைத் தவற விடுகிறான். வெறுப்புடன் அந்த நபரைத் தேடியவாறு அந்த இரவில் சாலையில் தன் வண்டியில் அலைய, ஒரு சாலையின் திருப்பத்தில் எதிர்பாராத விதமாக அந்த நபரே இவன் காரில் மோதிக் கிழே விழுகிறார். மெதுவாக, மனக் குழப்பத்துடன் அவர் மேலே காரை ஏற்றி விட்டு வேகமாக விடுதிக்குத் திரும்பி விடுகிறான். தன் அறையில் மிகவும் படப்படப்பாக நுழையும் டவர்ட், குழம்பியும், பயந்தும் போகிறான்; கைகள் நடுங்கின்றன, வாந்தியெடுக்கிறான். குற்ற உணர்ச்சி மேலிட தன் நிலமையை எண்ணி அழுகிறான்.

முதலாளித்துவ நாடுகளில் இருக்கும் நடுத்தர வர்க்கத்திற்கு ஒப்பீட்டளவில் ஒரு ’அமைதியான’, வசதியான வாழ்க்கை உண்டுதான். ஆனால் அந்த வாழ்வை அவர்கள் போட்டி நிறைந்த உலகில் தனியாக ஏதாவது செய்துதான் அடைய முடியும். அப்படிப் பிறக்கும் தனிநபர்வாதம், பின்பு பொருட்களை நுகரும் நுகர்வு கலாச்சாரத்தில் தனது ஆளுமையை வடித்துக் கொள்ளும் போது இவர்கள், வாழ்க்கைப் பிரச்சினைகளை எதிர்கொள்வது கூட தனிநபராகத்தான். அந்த வகையில் சமூக ஒழுங்கு, கட்டுப்பாடு, நேர்மை எதுவும் இந்த ஆளுமையில் இல்லை.

அதன்படி டவர்டும் தனக்கு ஏற்பட்ட பிரச்சினைக்கு எப்படித் தீர்வு காண முடியும் எனும் போது, அது சமூக ரீதியாக இருப்பதைக் கவனமாக நீக்கும்போது, இப்படித்தான் தனிநபர் வன்முறை பாதையைத் தேர்ந்து கொள்கிறது. போட்டி போட்டு சௌகரியமான வாழ்க்கையை அமைத்துக் கொள்வது போல, போட்டியை அழித்துத் தனது இடத்தைத் தக்கவைக்க நினைக்கும் டவர்டின் மனநிலை முதலாளித்துவ சமூகத்தின் இயக்கத்திற்கு முரண்படாத ஒன்று என்பதுதான் உண்மை.

ஒரு நடுத்தர வர்க்க மனிதனாகத் தெரியும் டவர்ட் தன் தவறுகளை நியாயப்படுத்த மனைவி, மக்கள் மேலிருக்கும் அன்பைக் குறிப்பிடுவதன் மூலம் தன்னைத் தேற்றிக் கொள்கிறான். குடும்பத்தின் மீதான அன்பைத் தக்கவைக்க வேலை வேண்டும். வேலை வேண்டுமென்றால் போட்டியாளர்களை அதாவது மற்ற குடும்பங்களை அழிக்க வேண்டும். முதலாளித்துவ சந்தையின் நியாயங்களை குடும்பத்திற்கும் டவர்டால் பொருத்த முடிகிறது.

வேலை-வாய்ப்பு
கொலை செய்வதின் குற்ற உணர்வை குடும்பம் ரத்து செய்கிறது

ஒருவனைக் கொலை செய்ய பின்தொடரும் போது அவன் ஒரு இரவு நேர உணவு விடுதிக்குள் நுழைகிறான். அங்கு அவன் கொலை செய்ய வேண்டிய நபர் ஒரு சர்வராகப் பணியாற்றுவதைப் பார்க்கிறான். அவர் இவனைப் போல் துப்பாக்கி எடுத்துக்கொண்டு திரியவில்லை. வேலை செய்து பிழைக்கிறார். ஆனால் அவர் மனதும் மெல்ல துப்பாக்கியை நோக்கி நகர்வதை அவர்கள் உரையாடல் காட்டுகின்றது.

அதே போல் அவரைப் பார்த்தும் டவர்ட் ’தன் தகுதிக்கு’ குறைவான வேலை செய்ய விரும்பவில்லை. கொலையை விட சர்வர் வேலை செய்து பிழைக்க வேண்டுமா என்பதுதான் அவனுக்கு எரிச்சலைக் கொடுக்கிறது. முதல் கொலையில் அவனிடம் இருக்கும் பயம், குற்றவுணர்வு  விலகி முழுமனதுடன் பிறகு வரும் கொலைகளைத் திட்டமிட்டு முடிக்கின்றான். கொலை முடிந்து தப்பித்தவுடன் குதூகலிக்கிறான். ஒவ்வொரு கொலைக்குப் பின்னும் தன் குடும்பத்தினரைப் பார்க்கும் போது முதலில் மனத் தடுமாற்றம் அடையும் டவர்ட் மெல்ல தான் வேலையை நெருங்கி வருவதைச் சொல்லி அந்தக் குற்றவுணர்ச்சியிலிருந்து வெளி வந்து விடுகிறான். அவர்கள் மகிழ்ச்சிக்காக தான் செய்வது சரி என்ற வாதம் அவன் மனச்சாட்சியைக் கேள்வி கேட்க விடாமல் வீழ்த்துகின்றது.

அமெரிக்காவில் தனது குடும்பத்தினருடன் அன்போடு விடுமுறையைச் செலவிடும் ஒரு அமெரிக்க வீரன் பணி நிமித்தமாக ஈராக் வந்து எந்த இரக்க உணர்ச்சியுமின்றி அப்பாவி ஈராக் மக்களைக் கொலை செய்வதற்கும், டவர்டின் வாழ்க்கைக்கும் என்ன வேறுபாடு?

ஒட்டு மொத்த சமுதாயத்தின் ஒரு அலகுதான் குடும்பம், அதன் விளைவுதான் ஒரு தனிமனிதன் எனும் போது, இங்கே டவர்ட் முதலாளித்துவ சமூகத்தின் குறியீடாக இருக்கிறான். சமூகம் கார்ப்பரேட் மயமாவது என்பது வெளியே அலங்காரங்களும், உள்ளே அழுக்கும் கொண்ட ஒரு சுரண்டல் அமைப்பு. இலாப வெறியும், சக நிறுவனங்களை மூர்க்கமாக அழிக்க நினைக்கும் முனைப்பும் ஒரு முதலாளிக்கு அடிப்படை எனும் போது அந்தப் பண்பு சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் வேறு வேறு பரிமாணங்களில் இருந்தே தீரும். அதற்கு சாட்சிதான் டவர்ட்.

இதற்கு முன் இதே பிரான்சை மையமாகக் கொண்டு ஒரு தொடர் கொலை திரைப்படம் வெளி வந்திருக்கிறது. அதை இயக்கி ,தொடர் கொலைகாரனாக நடித்தவர் சார்லி சாப்ளின். அந்தப் படம் தான் ‘மோன்ஸர் வெர்டாக்ஸ்‘. அந்தப் படத்தில் பணக்கார விதவைகளைக் கொன்று அவர்கள் பணத்தில் தன் குடும்பத்தைக் காப்பாற்றி தன் கடன்களை அடைப்பார் சாப்ளின். அவரைக் கொடும் குற்றவாளியாக கோர்ட்டில் நிறுத்தும் போது அவர் தன் தரப்பாகச் சொல்வார்,

“ஆம்! எனக்கு மூளை இருந்தது. அதை வைத்து நான் நேர்மையாகவே வாழ்ந்தேன். ஆனால் ஒரு நாள் இந்த சமூகத்திற்கு என் மூளையும், நேர்மையும் தேவையற்றதாகி விட்டது. என்னைக் கொலைகாரன், வெறியன் என்கிறீர்கள்; சரிதான். ஆனால் இந்த உலகில் தன் தேவை என்று கூறிக் கொண்டு கொலைக் கருவிகளையும், ஆயுதங்களையும் உருவாக்கும் நாடுகளை விட நான் சிறியவன். அந்த நாடுகள் போரில் கொன்ற பெண்களையும், குழந்தைகளையும் கணக்கிலெடுக்கும் போது நான் செய்த கொலைகள் சிறியவை. அவர்கள் அதையெல்லாம் விஞ்ஞானப்பூர்வமாகச் செய்தார்கள். நான் அவர்கள் முன்னால் நிற்க தகுதியில்லாத அற்பன். ஆனால் இறுதியாக ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். என் இடத்தில் உங்களை நான் ஒரு நாள் பார்ப்பேன்”

பார்க்கிறோம் என்பதற்கு டவர்டின் கதையே போதுமானது. இந்தக் கதை ஒரு கற்பனை என்றாலும் இதன் களமும், கருவும் உண்மை என்பதை மறுக்க முடியாது. அந்த வகையில் முதலாளித்துவ சமூகம் இருக்கும் வரையிலும், அதன் பொருளாதாரம் நீடிக்கும் வரையிலும் நாடுகளுக்கிடையில் மட்டுமல்ல, மனிதர்களுக்கிடையிலும் வன்முறைகள் ஓயாது.

____________________________________________

– புதிய கலாச்சாரம், மே – 2012

____________________________________________

 

தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம்: இன்னுமொரு அரசு பயங்கரவாத அமைப்பு!

2
தேசிய-பயங்கரவாதத்-தடுப்பு-மையம்

தேசிய-பயங்கரவாதத்-தடுப்பு-மையம்
தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் என்ற புதிய அமைப்பை மார்ச் 1 முதல் அமலுக்குக் கொண்டு வரப் போவதாகவும் இவ்வமைப்பு மத்திய உளவுப் பிரிவின் கீழ் இயங்குமென்றும் கடந்த பிப்ரவரியில் மைய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது.  “தீவிரவாதம் தொடர்பான வழக்குகளில், சம்மந்தப்பட்ட மாநில அரசின் சம்மதம் இன்றியே இம்மையம் குற்றவாளிகளின் இருப்பிடங்களைச் சோதனையிட முடியும்; அவர்களின் சொத்துக்கள் மற்றும் அவர்கள் வசமுள்ள ஆவணங்களைக் கைப்பற்ற முடியும்; மேலும், அவர்களைக் கைது செய்யவும் முடியும்” என்றவாறு பல அதிகாரங்களைக் கொண்ட அமைப்பாக இம்மையத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளது, மைய அரசு.  சுருக்கமாகச் சொன்னால், இந்த மையம் ஒரே சமயத்தில் உளவுப் பிரிவாகவும் போலீசாகவும் இரட்டைக் கதாநாயகர்கள் போலச் செயல்படும்.  மேலும், மாநில போலீசார் தாங்கள் சேகரிக்கும் உளவுத் தகவல்களை இந்த மையத்தோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்திய அரசியல் சாசனப்படி, குற்றவாளிகளைக் கைது செய்வது, அவர்கள் மீது வழக்குப் பதிவது, வழக்கை நடத்துவது ஆகியவை மாநில அரசின், போலீசின் அதிகாரமாகும்.  மாநில அரசின் சம்மதத்தோடு அல்லது நீதிமன்ற உத்தரவு இருந்தால் மட்டுமே, மையப் புலனாய்வுத் துறை எந்தவொரு வழக்கையும் விசாரிக்க முடியும்.  மாநில அரசின் கைகளில் மட்டுமே இருந்துவரும் இந்த அதிகாரத்தில் பங்கு போட்டுக் கொள்ளத் தற்பொழுது கிளம்பியுள்ளது, மைய அரசு.  இதன் காரணமாகத்தான், இந்த அறிவிப்பு வெளிவந்தவுடனேயே, “இது மாநிலங்களின் அதிகாரத்தைப் பறிக்கும் நடவடிக்கை; சமஷ்டி அமைப்பு முறைக்கும், அரசியல் சாசனத்துக்கும் விரோதமானது” எனக் கூறி, இம்மையம் அமைக்கப்படுவதற்கு எதிராக பா.ஜ.க.வும், அதனின் கூட்டணிக் கட்சிகளும், அ.தி.மு.க.வும், போலி கம்யூனிஸ்டுகளும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  காங்கிரசு கூட்டணியில், கட்டுச் சோற்றுப் பெருச்சாளியாக இருந்து வரும் மம்தாவும் எதிர்ப்பு தெரிவித்தார்.  இதனையடுத்து, இம்மையம் அமைப்பது தொடர்பாக மே முதல் வாரத்தில் முதலமைச்சர்கள் மாநாட்டைக் கூட்டப் போவதாக மைய அரசு அறிவித்திருக்கிறது.

மாநில அரசுகளின் அதிகாரத்தின் கீழ் இருந்துவந்த கல்வித்துறை போன்றவற்றை பொதுப்பட்டியலின் கீழ் கொண்டுவந்து, மாநில அரசுகளின் பல நியாயமான உரிமைகளை ஏற்கெனவே  பறித்திருக்கிறது, மைய அரசு.  அதனையெல்லாம் கொள்கைரீதியாகவே ஏற்றுக்கொண்டுள்ள பா.ஜ.க., ஜெயா கும்பல்,  மாநில உரிமையினைக் கருத்திற்கொண்டே போலீசுக்குரிய அதிகாரங்களோடு தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் அமைப்பதை எதிர்ப்பதாகக் கூறுவது, நகைப்புக்குரிய நாடகமாகும்.  மக்களின் சகல நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஆதார் அடையாளத் திட்டத்தை எதிர்க்காத இக்கும்பல், இப்பிரச்சினையில்  மக்களின் உரிமைக்காக நிற்பதைப் போல பீற்றிக் கொள்வது வெற்று அரசியல் ஸ்டண்ட் தவிர வேறொன்றுமில்லை.  அவர்கள் பீற்றிக் கொள்வது போல ஒவ்வொரு மாநில அரசும், போலீசும் அந்தந்த மாநில மக்களின் நலன்களைப் பாதுகாக்கும் கடமையினையா ஆற்றிவருகின்றன?

தேசிய-பயங்கரவாதத்-தடுப்பு-மையம்தீவிரவாதத்தை ஒழிப்பது, சட்டம்  ஒழுங்கைப் பாதுகாப்பது என்ற பெயரில் ஒவ்வொரு மாநில போலீசும் எந்தளவிற்கு ஆளும் கட்சியின் அடியாளாகச் செயல்பட்டு வருகிறது என்பதும், ஆளும் கட்சியின் ஆசிர்வாதத்தோடு போலி மோதல் கொலைகள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகிறது என்பதும் ஊரறிந்த உண்மை.  தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையத்தை போலீசுக்கு உரிய அதிகாரங்களோடு அமைப்பதன் மூலம் மாநில ஆளும் கட்சிகளுக்குப் போட்டியாக மைய அரசும் களத்தில் குதிக்கத் தயாராகி வருகிறது என்பதுதான் இதன் பின்னுள்ள உண்மை.  தனது ஏரியாவில் ஒரு புதிய தாதா நுழைவதை பழைய தாதா விரும்புவதில்லைதானே.  இம்மையத்திற்கு எதிராக பா.ஜ.க., ஜெயா, நவீன் பட்நாயக், மம்தா ஆகியோர் போடும் கூச்சல்களை, இந்த தாதாக்களின் அதிகாரப் போட்டியோடு மட்டும்தான் ஒப்பிட முடியும்.

தீவிரவாதத்தை ஒழிப்பது என்ற பெயரில் காங்கிரசு கூட்டணி அரசு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் என்ற கருப்புச் சட்டத்தை இயற்றியிருக்கிறது.  மாநில அரசின் அனுமதிக்கெல்லாம் காத்திராமல், இந்தியா வெங்கிலும் விசாரணை நடத்தக்கூடிய தேசியப் புலனாய்வு ஏஜென்சியை உருவாக்கியிருக்கிறது.  இந்த அதிகாரக் குவிப்பின் தொடர்ச்சியாகத்தான், உளவுப் பிரிவுக்கு போலீசுக்குரிய அதிகாரங்களைக் கொடுக்கும் அபாயகரமான தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.  இந்த விசயத்தில் அரசு பாசிசமயமாவதும், மக்கள் அனைவரும் சந்தேகத்திற்குரிய குற்றவாளிகளைப் போலக் கண்காணிக்கப்படுவதும்தான் மையமான பிரச்சினை.  ஆனால், எதிர்த்தரப்போ தமது அரசியல் ஸ்டண்ட் மூலம் இந்த மையமான பிரச்சினையிலிருந்து மக்களின் கவனத்தைச் சிதறடிக்க முயலுகிறார்கள்.  ஊடகங்களும் எதிர்த்தரப்பு அடிக்கும் ஸ்டண்டையே ஊதிப் பெருக்கி, உண்மையை மக்களின் கண்களிலிருந்து மறைத்துவிட முயலுகிறார்கள்.

தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டிருப்பதோடு, அச்சட்டத்தின்படியே இம்மையத்திற்கு வரம்பற்ற அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன.  இச்சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் என்பது பொடாவின் மறு அவதாரமாகும்.  இந்திய மக்களின் கடும் எதிர்ப்பு மற்றும் போராட்டத்தின் காரணமாக பொடா சட்டத்தைக் கைகழுவிய காங்கிரசு கும்பல், ஏற்கெனவே அமலில் இருந்துவந்த சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களைச் செய்து, காலாவதியாகிப் போன அக்கருப்புச் சட்டத்தைக் கொல்லைப்புற வழியில் கொண்டுவந்தது.

2008 நவம்பரில் மும்பய் நகர் மீது முசுலீம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலையடுத்து, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்திற்குப் பல்வேறு திருத்தங்களை முன்மொழிந்தது, காங்கிரசு கூட்டணி அரசு.  இத்திருத்தங்களோடு இச்சட்டம் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு முன்வைக்கப்பட்டபொழுது, வெறும் 50 உறுப்பினர்கள்தான் நாடாளுமன்ற மக்களவையில் இருந்தனர்;  இத்திருத்தங்களின் அவசியம் குறித்து, பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் உரையாற்றத் தொடங்கியபொழுது உறுப்பினர்களின் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்து, பின்னர் படிப்படியாக 47 எனக் குறைந்தது.  இச்சட்டம் நிறைவேற்றப்பட்ட இலட்சணம் இதுதான்.  போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட எதிர்த்தரப்பு இப்பொழுதுகூட இக்கருப்புச் சட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுக்காமல், இச்சட்டம் மக்களின் ஜனநாயக மற்றும் சிவில் உரிமைகளைக் காலில் போட்டு மிதிப்பதற்கு எதிராகக் குரல் கொடுக்காமல்,  மாநில அரசின், போலீசின் உரிமைகளில் தலையிடாதவாறு தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையத்தை உருவாக்க வேண்டும் என்றுதான் கோருகிறார்கள்.

ஆனால், மைய அரசோ, “மைய உளவுத் துறை தரும் தகவல்களை, எதிர்க்கட்சிகளின் தலைமையில் உள்ள மாநில அரசுகள் தமது அரசியல் நோக்கங்களை முன்னிறுத்தி நடைமுறைப்படுத்தத் தயங்குவதால்,  தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவதற்குத் தாம் எடுத்து வரும் முயற்சிகள் எதிர்பார்த்த பலன்களை அளிக்கவில்லை.  அதனால்தான், போலீசின் அதிகாரங்களையும் தன்னகத்தே கொண்ட அமைப்பாகத் தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையத்தை அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதாக’’க் கூறிவருகிறது.

மைய அரசின் கீழுள்ள உளவுத் துறையும் சி.பி.ஐ.யும் மாநிலப் போலீசைவிடத் திறமைசாலிகளைப் போலவும், இலஞ்சம், ஊழல், அதிகாரத் துஷ்பிரயோகங்களில் ஈடுபடாத, அரசியல் குறுக்கீடு எதுவுமில்லாமல் பணியாற்றும் நேர்மையாளர்கள் போலவும் நகர்ப்புறத்து படித்த நடுத்தர வர்க்கம் எண்ணிக் கொண்டுள்ளது.  ஆனால், மாநில போலீசைப் போலவே, மைய அரசின் உளவுத் துறையும் சி.பி.ஐ.யும் அரசியல் எதிரிகளை வேவு பார்க்கவும் பழி வாங்கவும் பயன்படுத்தப்பட்டு வருவதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன.  2008 நவம்பரில் மும்பய் நகர் மீது முசுலீம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை, மைய அரசின் உளவுத் துறையால் முன்கூட்டியே உளவறிந்து சொல்ல முடியவில்லை என்பதிலிருந்தே அதனின் திறமையைப் புரிந்துகொண்டுவிடலாம்.

காலனிய ஆட்சியின்பொழுது, சுதந்திரத்திற்காகப் போராடுபவர்களைப் பற்றி உளவறிவதற்காகப் பயன்படுத்தப்பட்ட உளவுத் துறை,  அதன் அரசியல் எஜமானர்களுக்குத்தான் கட்டுப்பட்டதேயொழிய, நாடாளுமன்றத்தில்கூட அதனின் செயல்பாடுகள் பற்றி யாரும் கேள்வி எழுப்ப முடியாது.  இப்படிபட்ட இரகசியமான அதிகாரவர்க்க அமைப்பிற்கு போலீசுக்குரிய அதிகாரங்களை அளிப்பது அபாயகரமானதுதான் என்றாலும், இதனை மாநில அரசின் உரிமைகளைப் பறிப்பதாகச் சுருக்கிப் பார்க்க முடியாது.  மன்மோகன் சிங்கும், ப.சிதம்பரமும் இடதுசாரி பயங்கரவாதம்தான் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது எனத் திரும்பத்திரும்பக் கூறிவரும் பின்னணியில்தான் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தையும், அதன் அடிப்படையில் உருவாக்கப்படும் தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையத்தையும் பார்க்க வேண்டும்.

தேசிய-பயங்கரவாதத்-தடுப்பு-மையம்

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் தீவிரவாதம், பயங்கரவாதம் குறித்து தெளிவான வரையறைகள் முன்வைக்கப்படவில்லை.  மாறாக, நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டைக் காப்பது என்ற பெயரில், யாரையும், எந்தவொரு அமைப்பையும் தீவிரவாதிகள் என முத்திரை குத்துமளவிற்குத் தொளதொளப்பாக வரையறுக்கப்பட்டுள்ளது.  இந்த வரையறையை வைத்துக் கொண்டு, அரசின் ‘வளர்ச்சி’த் திட்டங்களை எதிர்ப்பவர்களைக்கூடத் தீவிரவாதிகளாக முத்திரை குத்தமுடியும்.  ஆயுத மோதல்கள், குண்டு வெடிப்புகள் போன்ற தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்திருக்கும் பகுதியில்தான் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும் என்ற கட்டுப்பாடும் கிடையாது.  இதன்பொருள், அரசை, சட்டபூர்வமான ஜனநாயக வழியில் எதிர்த்துப் போராடுபவர்களைக் கூட இச்சட்டத்தின் கீழ் கைது செய்யமுடியும் என்பதுதான்.

இப்படிக் கைது செய்யப்படுபவர்களை, அவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாமலேயே 180 நாட்கள் வரையிலும் போலீசு காவலில் வைத்திருக்க முடியும்.  இது, கொட்டடிச் சித்திரவதைக்கும், அதன் மூலம் பொய்யான வாக்குமூலம் வாங்குவதற்கும் போலீசிற்கு அளிக்கப்பட்டுள்ள சட்டபூர்வ சுதந்திரமாகும்.

இச்சட்டத்தின் கீழ் ஒருவரைக் கைது செய்வதற்கு அவர் தீவிரவாத அமைப்பின் உறுப்பினராக இருந்தார்; தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்ற நிரூபிக்க வேண்டிய அவசியமெல்லாம் அரசிற்குக் கிடையாது.  அவர் தீவிரவாத அமைப்போடு தொடர்பு வைத்திருந்தார், அதற்காக நிதி வசூல் செய்து கொடுத்தார் என்ற உப்புசப்பில்லாத காரணங்களை முன்வைத்தே கைது செய்ய முடியும்; இதே காரணங்களைக் கூறி, சட்டபூர்வமான முறையில் செயல்பட்டுவரும் சங்கங்கள், அமைப்புகளைக்கூட அரசால் தடை செய்ய முடியும்.  இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் ஒருவர் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படும் முன்பே, அவரது சொத்துக்களை அரசால் பறிமுதல் செய்ய முடியும்.

தேசிய-பயங்கரவாதத்-தடுப்பு-மையம்தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் அமைக்கப்படுவதை எதிர்ப்பதில் முன்னணியில் உள்ள குஜராத், ஒரிசா, பஞ்சாப், மேற்கு வங்க மாநில முதல்வர்கள்தான் இந்த அரசு பயங்கரவாதச் சட்டத்தை ஏவி, மக்கள் போராட்டங்களை ஒடுக்குவதிலும் முன்னணியில் உள்ளனர்.  அம்மாநிலங்களில் கடந்த நான்காண்டுகளாக அமல்படுத்தப்பட்டு வரும் இச்சட்டம் பிடித்துப் போட்டுள்ள ‘தீவிரவாதிகள்’ யார்யாரென்று பார்ப்போமா?

அரியானா மாநிலத்தில் மேல்சாதி ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடிய தாழ்த்தப்பட்டோரும், பஞ்சாபில் அரசின் நாசகார விவசாயக் கொள்கைகளுக்கு எதிராகப் போராடிய விவசாய சங்கத்தைச் சேர்ந்தவர்களும் தீவிரவாதிகளாக முத்திரை குத்தப்பட்டு இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.  மாவோயிஸ்டுகளின் செயல்பாடுகளே இல்லாத குஜராத்தில் மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் எனக் குற்றஞ்சுமத்திப் பலரைக் கைது செய்துள்ள மோடி அரசு, அவர்கள் இன்னென்ன குற்றங்களைச் செய்துள்ளனர் என்பதைக்கூட  இதுநாள்வரை பதிவு செய்ய மறுத்துவருகிறது.

மேற்கு வங்கத்தில் சி.பி.எம். குண்டர்களுக்கும், பயங்கரவாத போலீசுக்கும் துணை இராணுவப் படைகளுக்கும் எதிராகப் போராடிய போலீசு அடக்குமுறைகளுக்கு எதிரான சங்கம், வனவாசி சேத்னா ஆஷ்ரம், மதாங்கினி மஹிலா சமிதி உள்ளிட்ட பல சமூக  அமைப்புகளும் மாவோயிஸ்ட் ஆதரவு அமைப்புகள் எனக் குற்றஞ்சுமத்தப்பட்டு, அவற்றின் உறுப்பினர்கள் பலர் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.  மார்க்சிஸ்டுகளைத் தோற்கடித்து ஆட்சியைப் பிடித்த மம்தா, இந்த வழக்குகளில் ஒன்றைக்கூடத் திரும்பப் பெறவில்லை.  ஒரிசா மாநிலத்தில் 2008  ஆம் ஆண்டில் இந்தச் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை இரண்டாக இருந்தது.  இந்த எண்ணிக்கை 2009  இல் 18 ஆகவும், 2010  இல் 94 ஆகவும் அதிகரித்திருக்கிறது.

கூடங்குளம் அணுஉலையை எதிர்த்து இடிந்தகரை பகுதி மக்கள் அமைதியான, சட்டபூர்வமான முறையில் நடத்தி வரும் போராட்டத்தில், நக்சலைட்டுகள் ஊடுருவி விட்டதாக ஜெயா அரசு பீதி கிளப்பியதையும்,  போராட்டக்காரர்கள் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதையும், அவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வருவதாக மைய அரசு அவதூறு செய்ததையும் இந்தப் பின்னணியிலிருந்துதான் பார்க்க வேண்டும்.  அரசுக்கு எதிராகப் போராடுபவர்கள் அனைவரையும் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துபவர்களாகவும் தீவிரவாதிகளாகவும் அரசு முத்திரை குத்துகிறது என்பதைத்தான் இந்த வழக்குகள் எடுத்துக் காட்டுகின்றன.

தேசிய-பயங்கரவாதத்-தடுப்பு-மையம்அமெரிக்காவில் நடந்த இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பின், அந்நாட்டு அரசு “பேட்ரியாட்” சட்டம் என்றொரு கருப்புச் சட்டத்தை இயற்றியதோடு, தேசியப் பயங்கரவாதத் தடுப்பு மையத்தையும் உருவாக்கியது.  மும்பய் தாக்குதலுக்குப் பின், இந்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், தேசியப் புலனாய்வு ஏஜென்சி, தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் என்ற இவையனைத்தும் அமெரிக்காவை மாதிரியாகக் கொண்டுதான் உருவாக்கப்பட்டுள்ளன.  இப்படி அமெரிக்காவை காப்பியடித்து அடக்குமுறை சட்டங்களையும் அமைப்புகளையும் கொண்டுவருவது ஒருபுறமிருக்க, உள்நாட்டுப் பாதுகாப்பு விசயத்திலும் அமெரிக்கா நேரடியாகத் தலையீடு செய்யும் வண்ணம் தாராளமாக நடந்துகொள்ளத் தொடங்கியிருக்கிறது, இந்திய அரசு.  வாஜ்பாயி பிரதமராக இருந்தபொழுது, அமெரிக்காவின் எஃப்.பி.ஐ., இந்தியாவில் செயல்பட அனுமதித்தார்.  இந்த ஒத்துழைப்பு மன்மோகன் காலத்தில் இரு நாட்டு இராணுவங்களும் ஒன்றாக இணைந்து இந்தியாவிற்குள்ளேயே தீவிரவாத எதிர்ப்பு பயிற்சியை மேற்கொள்வது என்ற அளவில் வளர்ந்து வருகிறது.

அடுத்த மூன்று நான்கு ஆண்டுகளில் இந்தியா தனது உள்நாட்டுப் பாதுகாப்பிற்காக 1,000 கோடி டாலர் பெறுமானமுள்ள ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை வாங்கும் என்பதால், அதன் உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்து அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களும், இந்தியத் தரகு முதலாளிகளும் நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு அலைகின்றனர்.  இந்த வர்த்தக நோக்கம் ஒருபுறமிருக்க, உள்நாட்டு பாதுகாப்பில் தனியார் நிறுவனங்களையும் அனுமதிக்க வேண்டும் என்றும் இவர்கள் கோரி வருகின்றனர்.  இது, ஒரிசாவிலும், சத்தீஸ்கரிலும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராகப் போராடும் மக்களைத் தாக்கிவரும் குண்டர் படைகளைச் சட்டபூர்வமாக்கும் கோரிக்கை தவிர வேறில்லை.  இவற்றையெல்லாம் சேர்த்துப் பார்த்தால் ஒன்றைப் புரிந்து கொள்ளலாம்.  இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பு என்பது இந்திய மக்களின் நலன் சார்ந்தது அல்ல என்பதுதான் அது.

_________________________________________

– புதிய ஜனநாயகம், மே-2012

__________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

‘தை’ரியமாகச் சொல் நீ தமிழறிஞன் தானா?

31

தமிழ்ப்-புத்தாண்டு

கைபர் மற்றும் போலன் கணவாய் வழியாக நடந்த ஆரிய படையெடுப்பு என்பது பழைய செய்தி. ஒரு கையெழுத்தின் மூலமாகவே, தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு எனும் முந்தைய தி.மு.க. அரசின் அரசாணையை கோபுரச் சின்னத்தால் ஒரு குத்து குத்தி கிழித்தெறிந்து விட்டது பார்ப்பனப் பேய். கருணாநிதியின் குறுகிய சுயநல நோக்கில் தமிழ்ப் புத்தாண்டு மாதத்தை மாற்றி விட்டதாகவும் ஒரு ஆணவ அறிக்கை விட்டது அந்தக் கொள்ளிவாய். ஆமாம் ஆமாம் என்று தலையாட்டவும் சில தமிழறிஞர்கள்.

கருணாநிதி போலித்தனமாகவே இருந்து விட்டுப் போகட்டும். அதற்காக அவர் சோறைத் தின்றால் நாம் வேறொன்றைத் தின்ன வேண்டுமா? கருணாநிதி கனிமொழி ஆண்டு என்றா மாற்றினார், திருவள்ளுவர் ஆண்டு என்றுதானே பேசினார்! திருவள்ளுவர் என்ன தி.மு.க.வா? என்று பார்ப்பனத் திமிரை எதிர்த்துப் பேச ஆளின்றி, மத உணர்வு மீட்கப்பட்டதில் பார்ப்பனக் கெடுப்பும், சைவக் கடுப்பும் சேர்ந்து கூத்தாடுகின்றது.

சித்திரைதான் ஆண்டுத் துவக்கம் என்று நெடுநல்வாடையிலே உள்ளது, சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் சொல்லியிருக்கிறார், நக்கீரர் சொல்லியிருக்கிறார், பல்லாவரம் பஸ் ஸ்டாண்டில் ஒரு பார்ப்பன ஆவி சொன்னது என்று ஒரு கும்பல் ஆதாரங்களை அடுக்க, இல்லை இல்லை குறுந்தொகை, கலித்தொகை, நற்றிணை, புறநானூறு இவைகளிலெல்லாம் தைத்திங்கள் மரபு பற்றி குறிப்பு உள்ளது என தை மாதத்தைத் தமிழ்ப்புத்தாண்டுத் தொடக்கமாக கொள்வோரின் ஆதாரம் முன்வைக்கப்படுகின்றன.

தமிழ்ப்-புத்தாண்டுபஞ்சாங்கம் பார்த்து வேட்புமனுத் தாக்கல் செய்து, பஞ்சாங்கம் பார்த்து பதவி ஏற்று, பஞ்சாங்கம் பார்த்து வாய்தா வாங்கும் ஜெ உள்ளிட்ட பார்ப்பனக் கும்பலும், அடிவருடிகளும் முன்னிறுத்தும் சித்திரையின் சிறப்புதான் என்ன? மேழம், அதாவது மேஷ ராசியில் சூரியன் நுழைவதுதான் சித்திரை, ஆண்டுப் பிறப்பு என்றும், பிரபவ முதல் அட்சய வரையிலான 60 ஆண்டுகளும் நாரதனும் கிருஷ்ணனும் கூடிப் பிறந்தவை என்றும் ஆபாச, புராண அடிப்படையில் அமையப் பெற்ற பார்ப்பன இந்து மதம் ஆண்டுக்கணக்கை முன்வைக்கின்றது.

இதற்கு மாறாக பனிக்காலம் முடிவில் வெயில் துவங்கும் விவசாய உழைப்புக்கேற்ற  தை மாதத்தை பருவ அடிப்படையில் தமிழ்ப்புத்தாண்டின் தொடக்கமாக கருதும் மரபை தங்கள் பஞ்சாங்கப்படி செல்லாது எனக் கூறுவதற்கு பார்ப்பனக் கும்பலுக்கு எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை. ஆடு, மாடு ஓட்டி வந்த ஆரிய இனத்துக்கு ஆட்டின் (மேஷம்) மீதான காதலும், அறுபது ஆண்டுகள் பிறந்த விதத்தில் பெருமையாகவும் இருந்தால் அவர்கள் குடுமியைத் தட்டிக் கொள்ளட்டும். அதற்காக ஆரியப் பார்ப்பனக் குப்பையை அடுத்தவர் தலையில் கொண்டு வந்து கொட்டி, ’இதுதான் தமிழ்ப் புத்தாண்டு! இவைதான் தமிழர் ஆண்டுகள்’ என்று திணிப்பதையும், தமிழினத்தின் உரிமையை மறுப்பதையும் நாம் அயோக்கியத்தனம், ஆதிக்கம் என்பதால் எதிர்க்க வேண்டும்.

தமிழினம் உள்ளிட்ட எந்தவொரு இனத்திலும் தோன்றிய காலந்தொட்டு பண்பாட்டு அம்சங்கள் சில தொடர்வதும், சில மருவித் திரிந்து மாறுநிலை கொள்வதும், சமூக வரலாற்றுச் சூழலுக்கேற்ப ஒன்றிலிருந்து ஒன்று எனப் புதிய பண்பாட்டு அடையாளங்கள் தோன்றுவதும் நடப்பதுதான். அந்த அடிப்படையில் தமிழினம் தனது பண்பாட்டு அடையாளங்களுடன் திருவள்ளுவர் ஆண்டு என்று ஒரு ஆண்டுக் கணக்கை முன்வைத்தால் திருவள்ளுவர் பிறந்த தேதி தெரியுமா? என நக்கலடிக்கிறார்கள் பார்ப்பனக் கும்பலும், அவர்களது பங்காளிகளும்.

இந்தக் கும்பல்தான் ராமன் பிறந்த இடம் இதுதான் என்றும், கடலுக்கடியில் ஒரு மணல் திட்டைக் காட்டி இது ராமர் பாலம் என்றும், ’இதற்கு அறிவியல் ஆதாரம் எல்லாம் காட்ட முடியாது, இது இந்துக்களின் நம்பிக்கை’ என்றும் தனது அயோக்கியத்தனத்தை அடம்பிடித்து சாதிக்கின்றது. தமிழ்ப் புத்தாண்டு தையா? சித்திரையா? என்ற பிரச்சினையில் நாம் பார்க்க வேண்டியது பார்ப்பன ஆதிக்கமா? இல்லை தமிழின உரிமையா? என்பதாகும். ஏனெனில் வரலாற்றிலும் சரி, தற்காலத்திலும் சரி தமிழினப் பண்பாட்டு அடையாளங்களைப் பார்ப்பன மத ஆதிக்கத்திற்கு கீழ்ப்பணிய வைக்க கட்டுக்கதை கட்டுவதும், தமிழினப் பண்பாட்டு அடையாளங்களைத் தாக்கி அழிப்பதும் ஆரிய மேலாதிக்கத்தின் தொடர் நடவடிக்கையாக உள்ளது.

இசுலாமோ, சமணமோ தங்களுக்கான மத (காலண்டர்) ஆண்டுகளை தமிழாண்டுகள் என்றோ, தமிழ்ப் புத்தாண்டு என்றோ சொல்வது கிடையாது. அவர்களுடைய மத ஆண்டுகளாகவே கடைபிடிக்கிறார்கள். அது போல பார்ப்பனக் கும்பல் சித்திரையை தங்களது மத ஆண்டாக போயஸ் கார்டனில் பொங்கல் வைத்து ஓ.பன்னீர் கிடா வெட்ட, சரத்குமார் கரகாட்டம் ஆட கொண்டாடிக் கொள்வது அவர்களது உரிமை. ஆனால் அனைத்துத் தமிழர்களுக்கும் தமிழ்ப்புத்தாண்டு என மத அடையாளத்தை முன்னிறுத்துவதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

தமிழினம் மட்டுமல்ல எந்த ஒரு இனத்துக்கும் வரலாற்று வழியில் சிதைக்கப்பட்ட, அழிக்கப்பட்ட சிறப்பான தமது பண்பாட்டுக் கூறுகளை முன்னிறுத்திப் பேணிக்காக்கும் ஜனநாயக உரிமை உண்டு. அந்த வகையில் மத அடிப்படையில் அல்லாமல், தமிழ் நிலத்தின் திணை மற்றும் சூழலியல் வாழ்வு அடிப்படையில் மொழி ரீதியாக முன்னிறுத்தப்படும் தை  அறுவடை மாதத்தை ஆண்டுத் துவக்கமாகக் கொள்வதில் என்ன தவறு? தமிழினம் தன்னிலத்தில் தமக்கான ஆண்டை தையிலே தொடங்கினால் மேஷத்திற்கு என்ன மோசம் வந்தது? போய் ஜெயலலிதாவின் பட்டியில் அமைச்சர்களோடு அதுவும் சேர்ந்து அடைய வேண்டியதுதானே! ’இல்லை இல்லை இது ரொம்ப நாள் பழக்க வழக்கம் மாற்றக் கூடாது’ என்று பார்ப்பது சரியா?

கணவன் இறந்து விட்டால் மனைவியும் உடன்கட்டை ஏறுவதுதான் பாரப்பனப் பழக்க வழக்கம்; சக மனிதன் மேல் சாதி  தீண்டாமை பார்ப்பது கூடத்தான் சமூகத்தில் பழக்க வழக்கம். அதற்காக இந்த அயோக்கியத்தனங்களை எப்படி ஆதரிக்க முடியாதோ, அதே போலத்தான் ஆரிய ஆண்டுப் பிறப்பையும், ஆண்டுக் கணக்கையும் தமிழ்ப்புத்தாண்டு என ஏற்க முடியாது. சித்திரை என்ற கணக்கின்படி பார்ப்பன மத ஆதிக்கம், வடமொழி ஆதிக்கம், ஆபாசக் கலாச்சாரம் ஆகியவைகளை அட்டியின்றி ஏற்பதை விட ஆண்டுத் துவக்கக் குறியீடாக தையை ஏற்பதில் தவறேயில்லை.

இப்படி ஏற்பதால் சித்திரையில் கிழிந்த தமிழன் வாழ்வை தை வந்து தைத்து விடும் என்று சொல்ல வரவில்லை. நோய் வந்து கிடப்பதால் ஒருவன் மானங்கெட்டு வாழ வேண்டுமா? என்றுதான் கேட்கிறேன். அரசியல், பொருளாதார இழிவுகளைப் போலவே பார்ப்பனப் பண்பாட்டு இழிவுகளையும் தொழிலாளி வர்க்கம் அனுமதிக்க முடியாது… அனுமதிக்கக் கூடாது என்றுதான் சொல்கிறோம். இடது, வலதுகள் போல ’எங்கே மேய்ந்தால் என்ன? வயிறு ரொம்பினால் போதும்’ என்று வாழ முடியாது. சூடு சொரணையுள்ள தொழிலாளி வர்க்கத்தால்தான் சொந்த விடுதலையைச் சாதிக்க முடியும் என்று கூறுகிறோம். அந்த வகையில் சித்திரை மாதத்து பத்தரை மாற்றுத் தங்கங்களாகக் காட்டிக் கொள்ளும் பார்ப்பன அடிவருடிகளையும் நாம் எதிர்கொண்டு முறியடிக்க வேண்டும்.

தமிழ்ப்-புத்தாண்டு

கி.ஆ.பெ. விசுவநாதன் சொன்னார், மறைமலையடிகள் சொன்னார், நா.மு. வேங்கடசாமி நாட்டார், மு.வரதராசன், பாரதிதாசன் சொன்னார் என்று விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில தமிழறிஞர்களைத் தவிர ”ஏன்? தமிழ்ப் பண்பாட்டுப்படி எங்களுக்கு  தைதான்… இப்ப என்னாங்குற… ?” என்று எதிர்த்து வாதாட இவ்வளவு பெரிய தமிழ் வரவு செலவு நாட்டில் ஒரு தமிழறிஞனையும் காணோம். மறைமலையடிகள் அல்ல திருவள்ளுவரே திரும்ப வந்து சொன்னாலும் பார்ப்பனக் கும்பல் ஏற்பதற்கில்லை. ஏனெனில் அவர்களின் நோக்கம் தையை தகர்ப்பது மட்டும் கிடையாது. தொடர்ச்சியாக தமிழ் வழிபாட்டுரிமை, கருவறையில் தமிழ் பாடும் உரிமை, கோட்டூர்புரம் அண்ணா நூலகம் அழிப்பு, கோட்டையில் உள்ள பாரதிதாசன் செம்மொழி நூலகம் தகர்ப்பு என தமிழின அடையாளங்களையே அழிப்பதுதான்.

இது ஏதோ கருணாநிதி கொண்டு வந்தார் என்பதற்காக ஜெயலலிதா மாற்றுகிறார் என்று கருதுவது தவறானது. நோக்கியா, ஹூண்டாய் போன்ற பன்னாட்டுக் கம்பெனிகளுடன் ஏற்படுத்திய அரசு ஒப்பந்தங்களை கருணாநிதி கொண்டு வந்தார் என்று ஜெயலலிதா எதையும் நீக்கவோ, மாற்றவோ இல்லை. பன்னாட்டுக் கம்பெனி விசயத்தில் பார்ப்பனக் கம்பெனியும், திராவிடக் கம்பெனியும் ஒரே கூட்டணிதான். மற்றபடி இது பச்சையான பார்ப்பன மேலாதிக்கம் என்பதற்கு  தையின் மீதான தாக்குதல் ஒரு வகை மாதிரி.

மாய்ந்து மாய்ந்து தமிழில் பாட்டெழுதி, தமிழில் பட்டிமன்ற கல்லா கட்டி (ஜெயலலிதாவின் சீலைப்பேன் கு. ஞானசம்பந்தனை விடுங்கள்), குடம் குடமாக தமிழ்த்தேனைக் குடித்து, ஜடம் ஜடமாக கல்விப்புலத்தில் கொட்டிக் கிடக்கும் தமிழறிஞன் ஒருவரும் தமிழ்ப் பண்பாட்டு அடையாளங்களின் மீதான இந்தத் தாக்குதலுக்கு எதிராக வாயே திறக்கவில்லை. தமிழைப் பேசிப் பிழைத்து, தமிழால் பதவியில் அமர்ந்து, தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், ’உலகத்துக்கே தமிழாராய்ச்சி’ இப்படி பல வசதியான நாற்காலிகளில் ஆறு கால்களுடன் ஊர்ந்து கிடக்கும் மூட்டைப் பூச்சிகள் மொழி, இன உரிமைக்காக முணுமுணுக்கக் கூட இல்லாமல் ‘பாவத்தின் சம்பளத்தை’ மட்டும் பரிசுத்தமாக எண்ணிக் கொண்டிருப்பது மகா அயோக்கியத்தனம்.

மற்றவர்களை விடவும் மொழி, பண்பாட்டு விசயங்களை ஆய்ந்து அலசி, நுண்மான் நுழைபுலம் வாய்ந்த பேரறிஞர் பெருமக்கள், சமூகத்தில் தன் மொழி, பண்பாடு சார்ந்து ஒரு பாதிப்பு நேர்கையில் தன் வயிறை மட்டும் தடவிக் கொண்டு வாழ்வது கேவலமாகப் படவில்லையா? உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த தாளமுத்து நடராசன் உடம்பில் மொழியுணர்ச்சி தீயாய்ப் பரவியது. ”உணர்ச்சியற்ற உங்களுக்கு உடம்பில் தோல் எதற்கு?” எனத் தமிழறிஞர்களைப் பார்த்து அவர்களின் உணர்ச்சி கேட்பது போல் தெரிகின்றது. அதனால்தான் பெரியார் ஒரு சந்தர்ப்பத்தில் “வள்ளுவரை மன்னிக்கலாம். மற்ற எந்தப் புலவனையும் மன்னிக்க முடியாது. படிப்படியாக ஆயுள் தண்டனை, தூக்குத்தண்டைனை வரையிலும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தன்மானமில்லாத தமிழ்ப் புலவர்கள்” என்று ஆவேசத்துடன் கூறினார்.

தமிழ்ப்-புத்தாண்டு-தைய.. தையா.. என்று பாட்டெழுதி பிழைப்பவர் முதல் தமிழாய்வு செய்து பெருவாழ்வு வாழும் கல்வித்துறை தமிழறிஞர்கள் வரை.. ’எவன்டா என் தை யில் கை வைத்தது!’ என்று முதுகெலும்போடு எழுந்து நின்று கேள்வி கேட்பார்கள் என்று வீதியைப் பார்த்தால், எல்லோர் வாயிலும் இலக்கணப் போலி சீல் வைத்துத் தொங்குகிறது. ’தமிழன் எங்கெல்லாம் போயிட்டான் தெரியுமா?!’ என்று சவடால் விடும் இந்தப் பேர்வழிகள் போயஸ் கார்டனைத் தாண்டி போக முடியாத மர்மம் என்ன..?! பெயரளவுக்கு ஒரு அறிக்கை விட்டால் கூட அந்த அம்மா ஒரு பெட்டி கேஸ் போடும் என்ற பயமா?… இல்லை தமிழ் செத்தால் பரவாயில்லை, தான் செத்தால் இருப்பதை அனுபவிக்க முடியுமா என்ற நயமா..? கல்வியா.. செல்வமா.. வீரமா.. என்று தமிழாய்ந்து விவாதித்து, கடைசியில் செல்வமே என சீல்பிடித்துப் போய் விட்டனர் தமிழறிஞர்கள்.

கவிப்பேரரசும், கோடம்பாக்கத்து குட்டி குட்டி சிற்றரசும், தமிழ்த்துறை தோறும் கோலோச்சும் தனியரசும் கொட்டிக் கிடக்கும் இந்த நாட்டில் தமிழ்ப் பண்பாட்டு உரிமை மீது தாக்குதல் தொடுக்கும் பார்ப்பன ஆதிக்கத்தைத் தட்டிக் கேட்க ஓர் ஆளில்லை என்பதோடு இந்தக் கேடுகெட்டத் தமிழறிஞர்கள் சாதாரண உழைக்கும் மக்களைப் பார்த்து, ’தமிழனுக்கு இன்னும் சொரணை வரல சார்… எல்லாம் கோழப்பசங்க..’ என்று பல சந்தர்ப்பங்களில் பேசுவது எவ்வளவு அயோக்கியத்தனம். ஜெயலலிதாவைப் பார்த்து… நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே… என்ற  நக்கீரன் அளவுக்கு வேண்டாம், தமிழைப் பிசைந்து தின்று வயிறு வளர்த்த கடமைக்காவது எச்சில் கையால் காக்காய் விரட்ட வீதிக்கு வரக் கூடாதா?

இதை விடக் கேவலம் பார்ப்பன அம்மா தமிழன் தலையில் வடகம் பிழிந்தால் காக்காய் விரட்ட அல்லவா இவர்களிடம் போட்டா போட்டி… உண்மையில் தமிழறிஞர்கள் ஜெயலலிதாவுக்கு பயந்தவர்கள் என்பதை விட, இன்றைய உலகமய சொகுசில் எந்தவிதத்திலும் தன் குடும்பத்திலோ, உணர்விலோ தமிழ் மொழி,  பண்பாடு அற்ற பிழைப்புவாதக் கும்பல் என்பதுதான் ஊரறிந்த உண்மை.

இருந்தாலும் நம் தமிழறிஞர்கள் நாம் சொல்லும் அளவுக்கு ஒன்றும் சும்மா கிடக்கவில்லை. ஜெயலலிதா ’சித்திரைதான் தமிழ்ப்புத்தாண்டு தொடக்கம்’ என உத்தரவு போட்டவுடன்,  பம்பரமாகச் சுழன்று சங்க இலக்கியங்களை அங்க அங்கமாகக் கழட்டி அதற்கு ஆதாரம் தேடிக் களைத்தே போய் விட்டார்கள். “அறம் செய விரும்பு” என்று பண்பாடு போற்றிய அவ்வையார் பெயரில் ஒரு விருதை “பணம் செய விரும்பு” என பள்ளிக்கூடம் கட்டிக் கொள்ளையடிக்கும் பத்மா சேஷாத்ரி திருமதி. ஒய்.ஜி.பி. க்கு கொடுத்தபோது, சொரணையோடு கைதட்டி சிவந்த கும்பலில் எத்தனை தமிழறிஞர்கள் பாருங்கள்… “நாயினும் கீழாய் தாழ்ந்து தாழ்ந்து நக்கிக் குடி! இதையே நல்லதென்று சொல்! பொட்டுப் பூச்சியே! புன்மைத் தேரையே!” என்ற பாரதிதாசனின் வரி ஏனோ ஞாபகத்திற்கு வந்து தொலைக்கின்றது.

___________________________________________

– புதிய கலாச்சாரம், மே – 2012

_________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

ஷாருக்கானுக்காக கொதித்தெழுந்த இந்தியா சையதை கைது செய்தது ஏன்?

45
சையத்-அகமது-காஸ்மி-2
காஸ்மியை விடுவிக்க நடந்த ஆர்பாட்டத்தில் அவர் மனைவி-மகன் (படம் தெஹெல்கா)
ஷாருக்-கான்
தேசிய அவமானம்

அரண்மனை பாதுஷாக்கள் அதே தோரணையோடு உப்பரிகையில் இருக்கலாம், அம்பாரியில் பவனி வரலாம். ஆனால் தெருவிலிறங்கி அப்படி நடக்க முடியுமா? ஒருவேளை அப்படியொரு அசந்தர்ப்பம் ஏற்பட்டு விட்டால் என்னவாகும்? செருப்பில் குத்திய சிறு கல்லுக்காக பூமியைத் தாங்கி நிற்கும் டெக்டோனிக் தகடுகளே மேலெழுந்து வந்து கூத்தாடி பாதுஷாவின் முன் பணிந்து மன்னிப்புக் கேட்டு விடுமா என்ன? கேட்பதற்கே வினோதமான நகைப்புக்கிடமான இது போன்ற கதைகள் சாத்தியமில்லாதது என்று நீங்கள் நினைத்தால், அந்த நினைப்பைக் கொஞ்சம் மாற்றிக் கொள்ளுங்கள்.

பாலிவுட்டின் பாதுஷா என்று போற்றப்படும் ஷாருக் கான் கடந்த மாதம் 12-ம் தேதி அமெரிக்கா சென்ற போது விமான நிலைய அதிகாரிகள் 2 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.  அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் Chubb Fellowship எனப்படும் சிறப்பு விருது ஒன்றைப் பெற அம்பானியின் மனைவி நீத்தா அம்பானியுடன் தனியார் விமானத்தில் சென்று இறங்கிய போது தான் அவருக்கு இந்த ‘அவமானம்’ நேர்ந்தது.

ஷாருக்கான் தடுத்து வைக்கப்பட்டுள்ளதைக் கேள்விப்பட்ட  பல்கலைக்கழக நிர்வாகிகள், உடனடியாக பாதுகப்புத் துறை மேலதிகாரிகளைத் தொடர்பு கொண்டு அவரை சீக்கிரம் விடுவிக்க வகை செய்துள்ளனர்.

ஷாருக்-கான்-3
நன்றி www.manjul.com

அடிமை நாட்டின் ராஜபார்ட்டுக்கு நேர்ந்த இந்த மாபெரும் அவமரியாதைக்காக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம் கிருஷ்ணாவே களத்திலிறங்கி கம்பு சுற்றியுள்ளார். நடந்த சம்பவம் இந்தியாவுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதி என்று குறிப்பிட்டவர், இனி இந்தியாவுக்குள் நுழையும் அமெரிக்கர்களுக்கு இதே விதமான ‘மரியாதை’ தான் காட்டப்படும் என்றோ, அமெரிக்காவுடனான பொருளாதார உறவுகளை இந்தியா மறுபரிசீலனைக்கு உட்படுத்தும் என்றோ அறிவித்து விடவில்லை. மாறாக அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் நிருபமா ராவை அழைத்து மேற்படி சம்பவத்தின் மூலம் இந்தியாவுக்கு நேர்ந்த அவமானத்தின் பரிமாணத்தை அமெரிக்க எஜமானர்கள் முன் பவ்வியமாக வைக்கும் படி கேட்டிருக்கிறார்.

இந்திய ஆளும் வர்க்கம் மயிலறகால் அடித்த அடியைத் தொடர்ந்து அமெரிக்க அதிகாரிகள் நடந்த சம்பவத்துக்காக ‘மன்னிப்பு’ கேட்டுள்ளனர். அந்த மன்னிப்பிலும் எந்த காரணத்துக்காக ஷாருக்கான் மேல் தாங்கள் சந்தேகப்பட்டோம் என்கிற விளக்கமோ இனிமேல் இவ்வாறு நடக்காது என்கிற உறுதிமொழிகளோ இல்லை. ஆனாலும் அடிக்கிற கை தானே அணைக்கும் என்று தங்களைத் தாங்களே தேற்றிக் கொண்டு விஷயத்தை ஆறப்போட்டு விட்டது இந்திய அரசும் அல்லக்கை ஊடகங்களும். செருப்பால் அடித்தாலும் மறக்காமல் கருப்பட்டியைக் கொடுத்து விட்டார்களல்லவா?

ஷாருக்கான் தடுத்து வைக்கப்பட்ட விவகாரத்தைப் பற்றி காட்டமாக எழுதிய இந்திய முதலாளித்துவ ஊடகங்கள் அனைத்தும், நடந்த சம்பவத்திற்கான அடிப்படையான காரணம் பற்றி மூச்சே விடவில்லை. ஷாருக்கான் போன்ற மாபெரும் அப்பாடக்கருக்கே இந்த நிலையா, இதைக் கேட்பாரில்லையா என்றெல்லாம் குரல்வளை கிழிய கூவிய ஊடகங்கள், இது இந்தியாவுக்கே நேர்ந்த அவமானமென்றும், அமெரிக்காவுக்கே இதே பிழைப்பாய்ப் போய் விட்டதென்றும் அங்கலாய்த்திருந்தன. ஆனால், மறந்தும் கூட மேற்படி கார்ப்பரேட் கூத்தாடி துரதிர்ஷ்டவசமாகவோ அசந்தர்ப்பமாகவோ ‘ஷாருக்கான்’ என்கிற முசுலீம் பெயரைத் தாங்கிக் கொண்டிருப்பதாலேயே தான் இந்த அவமானத்தைச் சந்திக்க நேர்ந்தது என்கிற கசப்பான உண்மையைப் பற்றி வாயே திறக்கவில்லை.

ஒருவேளை அப்படிச் சொல்ல நேர்ந்து விட்டால் தேவையில்லாமல் அமெரிக்காவின் முசுலீம் இனவிரோத பாஸிச அரசியல் பற்றியும், அதைத் தொடர்ந்து உலகெங்கும் முசுலீம்களை அமெரிக்கா எப்படி நடத்துகிறது – இசுலாமிய நாடுகளை எப்படிக் குத்திக் குதறுகிறது என்பதைப் பற்றியெல்லாம் வாசகர்களுக்கு நினைவூட்டியதைப் போலாகி விடுமல்லவா? இவர்களே இத்தகைய முசுலீம் வெறுப்பு அரசியலைத்தான் செய்து வருகிறார்கள். இது இந்துத்துவ பா.ஜ.கவிற்கும், ‘மதச்சார்பின்மை’ காங்கிரசுக்கும் வேறுபாடின்றி பொருந்தும். அதனால் இந்திய ஆளும் வர்க்கத்தின் ஊதுகுழலாய் விளங்கும் இந்த அல்லக்கைகளின் பார்ப்பன ஆன்மாவுக்கு தவறிக் கூட அப்படியெல்லாம் எழுதக் கைவராது என்பதே உண்மை. ஊதாங்குழலில் இருந்து சிம்பொனி இசையா பிறக்கும்?

ரத்த நாளங்களெங்கும் அடிமைத்தனமும் கோழைத்தனமும் பாயும் உணர்வுப்பூர்வமான அடிமைகளுக்கென்றே ஒரு விசேஷ குணம் இருக்கிறது – எந்தளவுக்கு எஜமானன் முன் மண்டியிட்டுக் குனிந்து குழைந்து போகிறார்களோ அந்தளவுக்கு தனக்குக் கீழ் இருப்பவர்கள் முன் விறைப்புக் காட்டுவார்கள். எடுப்பது பிச்சையென்றாலும் ராத்திரி பெண்டாட்டியைப் போட்டு அடிக்கும் பிச்சைக்காரர்களையும், செய்வது கூலி வேலையென்றாலும் ‘நாங்களெல்லாம் சத்திரிய பரம்பரை தெரியுமில்லே’ என்று தலித்துகளிடம் மீசை முறுக்கும் சாதி வெறி அற்பர்களையும் கொண்ட புண்ணிய பூமியாயிற்றே?

ஷாருக்-கான்
யேல் பல்கலையில் குத்தாட்டம் போடும் பாதுஷா – படம் www.thehindu.com

ஷாருக்கானுக்கு அமெரிக்காவில் நேர்ந்த அவமரியாதைக்குப் பொங்கிய இந்தியா, அமெரிக்க அதிகாரிகள் எந்த அடிப்படையில் அவரை இரண்டு மணி நேரங்கள் தடுத்து வைத்தார்களோ அதே  அடிப்படையில் ஒரு அப்பாவியைச் இங்கே சிறையில் தள்ளியிருக்கிறார்கள். இவர் ஷாருக்கானைப் போல் ஒரு கார்ப்பரேட் கூத்தாடியாக இல்லாத ஒரே பாவத்துக்காக பத்திரிகைகளும் பெரிதாக இதைப் பற்றி கண்டு கொள்ளவில்லை.

சையத்-அகமது-காஸ்மி
சையத்-அகமது-காஸ்மி

சையது அஹமது காஸ்மி ஒரு உருது பத்திரிகையாளர். மத்திய கிழக்கு நாடுகளின் அரசியலைப் பற்றி தொடர்ந்து எழுதி வருபவர். குறிப்பாக ஈரான், சிரியா போன்ற நாடுகளின் அரசியலைப் பற்றி தொடர்ந்து எழுதி வருபவர். இப்பிராந்திய அரசியல் பற்றி எழுதக் கூடிய மிகச் சில இந்திய (Political Analyst) அரசியல் ஆய்வாளர்களில் ஒருவர் . மார்ச் 6-ம் தேதி தூர்தர்ஷன் உருது சேனலின் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு திரும்பிய காஸ்மியை காலை 11:30 வாக்கில் போலீசார் கைது செய்கிறார்கள். பிப்ரவரி மாதம் இசுரேலிய தூதரக அதிகாரி ஒருவரின் மனைவியினுடைய கார் குண்டுவைத்துத் தகர்க்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆரம்பத்தில் வழக்கு சம்பந்தமான ஆவணங்களையோ கைது செய்தற்கான அடிப்படை ஆதாரங்கள் இன்னதென்றோ தெரிவிக்க காவல்துறை மறுத்துள்ளது. பின்னர் நீதிமன்றத்தில் காவல் துறை தாக்கல் செய்த ஆவணங்களை காஸ்மியின் வழக்கறிஞர்கள் பரிசீலித்த போது, அதில் நடந்த சம்பத்தோடு காஸ்மியைச் சம்பந்தப்படுத்தும் வகையிலான குறிப்பான ஆதாரங்கள் ஏதுமில்லை என்று தெரியவந்துள்ளது. ஈரானிய விவகாரங்கள் பற்றி தொடர்ந்து பத்திரிகைகளில் எழுதியும் பேசியும் வந்த காஸ்மிக்கு ஈரானியர்கள் சிலரோடு தொடர்பு ஏற்பட்டதாகவும், அதில் சிலர் சந்தேகத்துக்குரியவர்களென்றும், அவர்கள்தான் கார் குண்டு வெடிப்புக்காக காஸ்மி உதவி செய்ய வேண்டி அமெரிக்க டாலர்களைக் கொடுத்துள்ளார்களென்றும் கதையைக் கட்டி விடும் போலீசு,  இதற்கு ஆதாரமாக காஸ்மியின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட சில டாலர் நோட்டுகளைக் காட்டுகிறது – அந்த நோட்டுகளின் மொத்த மதிப்பு 1254 டாலர்கள் மட்டுமே.

மேலும் காஸ்மியின் வீட்டிலிருந்து ஸ்கூட்டி ஒன்றைக் கைப்பற்றியிருக்கும் போலீசு, இதில் சென்று தான் தீவிரவாதிகள் குண்டு வைத்தனர் என்றும் சொல்கிறது. மேலும், குண்டு வைத்தவர்களுக்கு காஸ்மி தனது வீட்டில் அடைக்கலம் கொடுத்திருக்கிறார் என்றும் சொல்கிறது. அதே போல் காஸ்மியின் செல்பேசியிலிருந்து சில ஈரானிய எண்களுக்கு பேசப்பட்டிருப்பதையும் போலீசு ஆதாரம் என்று காட்டுகிறது. இதில் போலீசார் குறிப்பிடும் அந்த ஸ்கூட்டி வண்டி, சுமார் இரண்டு வருடங்களாக பயன்படுத்தப்படாமல் காஸ்மியின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

அந்த ஓட்டை ஸ்கூட்டியை ஓட்டிப் போய் குண்டு வைத்து விட்டு தப்பிக்க வேண்டுமென்றால் அது இளைய தளபதி விஜயைத் தவிற இந்த பிரபஞ்சத்திலேயே வேறு யாராலும் முடியக் கூடிய காரியமல்ல. அதே போல் ஒரு பத்திரிகையாளர் என்கிற வகையிலும், அதிலும் மத்திய கிழக்கு நாடுகள் பற்றிய அரசியல் வல்லுனர் என்கிற வகையிலும், ஈரானிய செய்தி நிறுவனம் ஒன்றிற்காக வேலை பார்ப்பவர் என்கிற வகையிலும், காஸ்மியின் செல்பேசியிலிருந்து ஈரானிய எண்களுக்கு அழைப்புகள் செல்வதும் இயல்பானது தான். வெளிநாட்டு ஊடகங்களின் பிரதிநிதியாய் வேலை செய்பவர் ஆயிரம் அமெரிக்க டாலர் வைத்திருப்பதும் இயல்பானதுதான்.

ஆக, தீர்ப்பு இன்னதென்று முடிவு செய்து விட்டுத் தான் விசாரணையையே தொடங்கியிருக்கிறார்கள். தமிழ்நாட்டுப் போலீசு என்கவுண்டர்களுக்கு எழுதும் திரைக்கதையை விட மிக மொக்கையான கதையை எழுதியிருக்கிறார்கள். இது ஒன்றும் இந்தியாவின் காவல் துறைக்குப் புதிய விஷயமல்ல. நாண்டெட், சம்ஜௌதா, ஹைதரபாத் என்று எங்கே குண்டு வெடித்தாலும் விசாரணையை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே சில பத்து முசுலீம் இளைஞர்களைக் கைது செய்து, சித்திரவதை செய்வது காவல் துறையின் வாடிக்கையான நடவடிக்கை தான். அதே போல் இங்கே நடந்த பேர்பாதி குண்டு வெடிப்புகளைச் செய்ததே  ஆர்.எஸ்.எஸ் கும்பல் தானென்பது விசாரணையின் போக்கில் வேறு வழியின்றி வெளிப்பட்டு அம்பலமாவதும் நமக்குப் புதிதில்லை தான்.

சையத்-அகமது-காஸ்மி-2
காஸ்மியை விடுவிக்க நடந்த ஆர்பாட்டத்தில் அவர் மனைவி-மகன் (படம் தெஹெல்கா)

பிப்ரவரி மாதம் நடந்த குண்டு வெடிப்பைத் தொடர்ந்து எந்த விசாரணையோ முகாந்திரமோ இல்லாமல் குண்டு வெடிப்புக்குக் காரணம் ஈரான் தானென்று முதலில் இசுரேல் குற்றம் சுமத்துகிறது. ஈரானின் மேல் இசுரேலும், அமெரிக்காவும் பொருளாதாரத் தடை விதித்துள்ளதையும், ஈரானின் பெட்ரோலை எந்த நாடுகளும் இறக்குமதி செய்யக் கூடாது என்று அமெரிக்கா அடாவடித் தனம் செய்து வந்ததையும், அந்தச் சூழ்நிலையில் இந்தியா தனது மொத்த எண்ணைய் இறக்குமதியில் சுமார் 16 சதவீதம் அளவுக்கு ஈரானிடம் இருந்து கொள்முதல் செய்து வந்ததையும், இதை இந்தியா உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அமெரிக்காவும் இசுரேலும் அழுத்தம் கொடுத்து மிரட்டி வந்ததையும் பின்னணியில் கொண்டே மேற்படி குண்டு வெடிப்பையும் அதைத் தொடர்ந்து இசுரேல் கூறிய குற்றச்சாட்டையும் காண வேண்டும். ஆரம்பத்தில் இசுரேல், ஈரான் மேல் சுமத்திய குற்றச்சாட்டுக்கு அடிப்படையேதும் இல்லை என்று சொல்லி வந்த இந்தியா, அதன் பின் இசுரேல் கொடுத்த அழுத்தங்களின் அடிப்படையில் தான் தனது நிலையை மாற்றியிருக்கிறது.

ஷாருக் கானை அமெரிக்கா இரண்டு மணி நேரங்கள் தடுத்து வைத்ததன் அடிப்படை என்னவென்பதை இந்திய ஆளும் வர்க்கமோ அதன் அல்லக்கை ஊடகங்களோ பேசாமலிருப்பதன் காரணம் இவர்கள் பவிசாகப் போட்டுக் கொண்டு திரியும் ஜனநாயக முகமூடிகளுக்குப் பின் ஒளிந்து கொண்டிருக்கும் பார்ப்பன பாஸிச ஒரிஜினல் மூஞ்சிகளிகளின் யோக்கியதை தான் காரணம்.  ஷாருக்கான் ஒரு கார்ப்பரேட் கூத்தாடி என்பதாலோ முதலாளிகளின் அரசவைக் கோமாளி என்பதாலோ ஒரு சம்பிரதாயமான மன்னிப்பு அறிக்கையைப் பெற்றிருக்கிறார் – குவாண்டனாமோ பேயிலும், இந்தியச் சிறைகளிலும் முசுலீம் என்கிற ஒரே காரணத்துக்காக எந்தக் குற்றமும் செய்யாமல் வருடக்கணக்கில் வாடும் அப்பாவி முசுலீம்களின் நியாயம் யாரால் தீர்க்கப்படும்?

இதில் இந்திய ஊடகங்கள், நடுத்தர வர்க்கத்தின் சென்டிமெண்டை பெற்ற ஷாருக்கானும் கூட தான் முசுலீம் என்பதற்காக தடுக்கப்பட்டதை கண்டிக்கவில்லை. ஆக முசுலீம் மக்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் பயங்கரவாத அவதூறை ஆதரித்துக் கொண்டுதான் இத்தகைய ‘முன்னுதாரணமான’ முசுலீம்கள் பிசினெஸ் செய்யமுடியும். இதைத்தான் அவர் நடித்த “மை நேம் ஈஸ் கான்” படத்தின் கதையும் கூறுகிறது. அதாவது ‘பயங்கரவாத’ முசுலீம்களை பிடித்துக் கொடுத்தபடிதான் தனது மீதான பயங்கரவாதத்தை அமெரிக்க ஜனதிபதி வரை சென்று அகற்றப் போராடுவார். பகவத் கீதை படிக்கும் ‘முசுலீமாக’ இருப்பதால்தான் அப்துல் கலாமை குடியரசுத் தலைவராக பாரதிய ஜனதா ஆக்கியது.

நாட்டில் பெரும்பான்மையான முசுலீம் மக்கள் இத்தகைய பாசிச அடக்குமுறைகளை எதிர்கொண்டபடிதான் வாழ்கின்றனர். அவர்கள் மீது கரிசனம் கொள்ளக்கூடாது என்போர்தான் ஷாருக்கானுக்கு நேர்ந்த அவமானத்தை அகற்ற துடிக்கின்றனர். அதுவும் அவர் ஒரு முசுலீம் என்ற அடையாளத்தை மறைத்து விட்டு……

_____________________________________________________

– தமிழரசன்

________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

வறுமைக்கோடு வரையறை: ஏழைகளை ஒழித்துக்கட்ட ஓர் எளிய வழி!

9

வறுமைக்கோடு

கடந்த மார்ச் 19ஆம் தேதியன்று மத்திய அரசின் திட்டக் கமிசன் புதிய வறுமைக்கோடு குறித்த மதிப்பீட்டை வெளியிட்டுள்ளது. உணவிற்கான உரிமை குறித்த வழக்கொன்றில் உச்சநீதிமன்றம், வறுமைக்கோட்டை வரையறுக்குமாறு மத்திய அரசைக் கேட்டிருந்தது. மாதமொன்றுக்கு நகர்ப்புறங்களில் ரூ. 4824/க்கும், கிராமப்புறங்களில் ரூ.3905/க்கும் குறைவான வருமானம் கொண்ட 5 பேர் அடங்கிய குடும்பங்களெல்லாம் வறுமைக்கோட்டுக்குள் வருவனவாகும் என்று  இது தொடர்பாகத் திட்ட கமிசன் தாக்கல் செய்த உறுதியளிப்பு மனு குறிப்பிட்டுள்ளது. அதாவது, ஒரு மனிதன் நாளொன்றுக்கு நகரத்தில் ரூ.32/க்கும், கிராமப்புறத்தில் ரூ.26/க்கும் அதிகமாக சம்பாதித்தால், அவன் வறுமைக்கோட்டுக்கு மேலானவன் என்கிறது, திட்டக்கமிசன்.

“முந்தைய வெள்ளிக்கிழமை மதிய உணவைச் சாப்பிட்டுவிட்டு, பிறகு இரு நாட்கள் உணவில்லாமல்,  பற்றி எரியும் வயிறுடன் பள்ளிக்கு வரும் சோர்வடைந்த  குழந்தைகளுக்கு எப்படி பாடம் நடத்துவது” என்கிறார்கள் மும்பை மற்றும் தானாவின் புறநகர்ப் பகுதிகளின் பள்ளி ஆசிரியர்கள். திங்கட்கிழமை தரப்படும் மதிய உணவை இரு மடங்காக்கித் தரவேண்டும் என்கிறார்கள், அப்பகுதிகளின் தாய்மார்கள். இப்படி  ஏழைகளும் பசித்த வயிறுகளும் நிறைந்த நாட்டில், நாளொன்றுக்கு ரூ.32/க்கு மேல் சம்பாதிக்கும் ஒருவரை ஏழை அல்ல என்று திட்ட கமிசன் சொல்வது கொடூரமான வக்கிரம்.

திட்ட கமிசனின் துணைத் தலைவர் மாண்டேக்சிங் அலுவாலியா,  “2004 ஆம் ஆண்டில் மக்கள் தொகையில் 37.2 சதவீதம் பேர் வறுமையில் இருந்தார்கள். 200910 இல் இது 30 சதவீதமாகக் குறைந்துவிட்டது. முந்தைய காலத்தைவிட கடந்த ஐந்தாண்டு காலத்தில் 7.3 சதவீத அளவுக்கு  இரட்டிப்பு வேகத்தில் வறுமை குறைந்து வருகிறது” எனக்கூறியிருக்கிறார்.

மேட்டுக்குடி உலகில் வாழும் உலகவங்கியின் வளர்ப்புப் பிராணியான அலுவாலியாவுக்கு மக்களைப் பற்றியோ, வறுமையைப் பற்றியோ, பசியைப் பற்றியோ என்ன தெரியும்? அலுவாலியா  போன்ற மேட்டுக்குடி வர்க்கத்தைப் பொறுத்தவரை மக்கள் என்பவர்கள் அவர்களது புளித்த ஏப்பக் கூட்டம்தான். சாமானியர்களை அவர்கள் மக்களாகவே என்றுமே மதிப்பதில்லை. புழு, பூச்சிகளைப் போலத்தான் பார்க்கிறார்கள். அத்தகைய திமிரும் வக்கிரமும் நிறைந்த கண்ணோட்டம்தான் அலுவாலியா கும்பலின் வறுமை பற்றிய மதிப்பீட்டிலும் வெளிப்படுகிறது.

இன்றைய விலைவாசியில் இந்த ரூ.32/க்குள் ஒரு மனிதன் உயிர்வாழத்தான் முடியுமா? தனது குடும்பத்தைக் காப்பாற்றத்தான் முடியுமா? ஒருக்காலும் சாத்தியமே இல்லாத இந்த வரையறையைக் காட்டி வறுமை குறைந்துவிட்டது என்று புளுகுவதை ஏற்கத்தான் முடியுமா?

இதே காங்கிரசு கூட்டணி அரசின் தேசிய மாதிரிக் கணக்கீடு  துறை ரூ.20/க்கும் கீழாகத் தினசரி வருவாய் பெறுவோர் எண்ணிக்கை மட்டும் மொத்த மக்கள் தொகையில் 45 சதவீதமாகும் என்று புள்ளிவிவரப் பட்டியலிடுகிறது. அமைப்பு சாரா நிறுவனங்களுக்கான தேசிய கமிசனோ  77 % பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்வதாகக் கூறுகிறது. என்.சி.சக்சேனா தலைமையில் அரசு நியமித்த வறுமைக் கோட்டுக்கான நிபுணர் குழுவோ இதனை 50 சதவீதம் என்று சொல்கிறது. ஆனாலும், “வறுமை பற்றிய மதிப்பீட்டில் வேறுபாடுகள் இருந்தபோதிலும், நாட்டில் ஏற்றத்தாழ்வுகள் பெருகியிருந்த போதிலும், வறுமை குறைந்து விட்டது” என்று அடித்துச் சொல்கிறார் அலுவாலியா.

வறுமைக்கோடு குறித்த இந்த அளவுகோல் சரியானதா, ரூ.32/க்குள் ஒருவர் வாழ இயலுமா என்று ஊடகங்கள் காரசாரமான விவாதத்தை நடத்திக் கொண்டிருக்கின்றன. இந்த அற்பத் தொகைக்குள் ஒரு இந்தியக் குடிமகன் வாழ முடியுமா என்பதல்ல, எதற்காக இந்தப் புதிய வரையறை என்பதுதான் மையமான கேள்வி.

வறுமைக்கோடுஏழைகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டி  நலத் திட்டங்களை ஒழிப்பதுதான், அரசின் திட்டமாக உள்ளது.  குறிப்பாக, உணவு மானியத்தை படிப்படியாக ஒழித்துக் கட்டுவது, இறுதியில் ரேசன் முறையை தனியாருக்கும், உணவுக் கொள்முதலை பன்னாட்டு  உள்நாட்டு தரகு முதலாளிகளிடமும் ஒப்படைப்பது எனும் உலக வங்கி செயல்திட்டத்தின் ஒருபகுதிதான் இப்புதிய வறுமைக்கோடு வரையறை. மானியங்களை வெட்ட வேண்டுமானால் வறுமை குறைந்துள்ளதாகவும் வறியவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும்  புள்ளிவிவர ஆதாரம் காட்ட வேண்டியிருக்கிறது.  அதற்கேற்ப  புள்ளிவிவரப் புளுகுகளையும் தகிடுதத்தங்களையும் அலுவாலியா கும்பல் செய்து கொண்டிருக்கிறது.

உலகமயம்,தனியார்மயம்,தாராளமயம் கொண்டுவரப்பட்ட 1990களிலிருந்தே ஆட்சியாளர்கள் இதனைத்தான் படிப்படியாக செயல்படுத்தி வருகின்றனர். 199394இல் மன்மோகன்சிங்  நிதி அமைச்சராக இருந்தபோது, ஒரு மனிதன் உண்ணும் உணவின் கலோரி மதிப்பின்படி வறுமைக்கோட்டைக்  கணக்கிடும் முறையைக் கொண்டுவந்து, 198788 இல் 25.5% ஆக இருந்த வறுமை 199394 இல் 19% ஆகக் குறைந்ததாகச் சொன்னார்கள். 2000க்குப் பின் பல வண்ணங்களில் ரேசன் அட்டைகளைப் பிரித்து இதனைச் செயல்படுத்தினர். இந்த கலோரி கணக்கீடே அப்பட்டமான மோசடி வரையறையாகும். கணினிமயமான மேலை நாடுகளில் அலுவலகத்தில் இலகுவான வேலை செய்யத் தனிமனிதனுக்குத் தேவையான சக்தியின் மதிப்பை எடுத்துக்கொண்டு, அதனை அப்படியே இந்தியாவில் பொருத்தி,  நகர்ப்புற ஏழைக்கு 2100 கிலோ கலோரி என்றும் கிராமப்புற ஏழைகளுக்கு 2400 கிலோ கலோரி என்றும் வரையறுத்து, வறுமையை ‘வெளியேற்றி’னார்கள்.

பின்னர், கலோரி மதிப்பீட்டு முறை சரியில்லை என்று கூறி டெண்டுல்கர் கமிட்டியை நிறுவி, சுகாதாரம், கல்வி, உட்கொள்ளும் உணவின் அளவு ஆகியவற்றின் அடிப்படையில்  ஏழ்மையைக் கணக்கிடுவதாகக் கூறினர். முடிவாக நாளொன்றுக்கு ரூ. 32/ என வறுமையை வரையறுக்க, 30 ஆயிரம் குடும்பங்களில் சர்வே எடுக்கப்பட்டதாம். 300 கேள்விகள் கேட்கப்பட்டனவாம். வாட்டும் வறுமையை விட 300 கேள்விகளுக்குப் பதில் சொல்லியே ஏழைகள் களைத்திருப்பார்கள் எனப் பத்திரிகையாளர் சாய்நாத் இக்கேலிக்கூத்தை வேதனையுடன் குறிப்பிடுகிறார். கடுமையான எதிர்ப்புகள் வந்ததால், டெண்டுல்கர் குழுவின் அறிக்கையை ஒதுக்கிவிட்டு இப்போது புதிய அளவுகோலின்படி வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளோரைக் கணக்கிட புதிய ஆய்வுக் குழுவையும் ஏற்படுத்தியுள்ளனர்.

ஈராக் மீதான படையெடுப்பை முன்கூட்டியே முடிவு செய்த ஜார்ஜ் புஷ், அதற்கு முன் பேரழிவு ஆயுதங்களைத் தேடுவதாகச் சொன்னார். தூக்கிலேற்றுவது என்பதை முன்னரே முடிவு செய்துவிட்டுத்தான் சதாம் உசேன் மீதான விசாரணையைத் தொடங்கியது, அமெரிக்கா. அதேபோல மானியங்களைச் சுருக்கி ஏழைகளை ஒழிப்பது என்பதை முடிவு செய்துவிட்டு, அதற்கு முகாந்திரம் தேடிக் கொள்வதற்காகவே வக்கிரமான முறையில் வறுமைக்கோட்டை வரைகிறது, மன்மோகன் சிங்  மாண்டேக்சிங் அலுவாலியா கும்பல்.

_________________________________________

– புதிய ஜனநாயகம், மே-2012

__________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

மான்சாண்டோவுக்கு மாமா வேலை பார்க்கும் டைம்ஸ் ஆஃப் இந்தியா !

10

பருத்தி மற்றும் செய்தித்தாள் மூலம் தங்க குவிப்பு – பி.சாய்நாத்

ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு முன்னர் மான்சான்டோ விதைகள் இந்தியாவுக்கு வந்தபோதே உலகமயமாக்கல்-ஏகாதிபத்தியங்களை எதிர்க்கும் புரட்சிகர அமைப்புகள், இந்த விதைகள் நமது நிலங்களை மலடாக்கிவிடும், எல்லா தானிய வகைகளிலும் மறுசுழற்சி விவசாய முறை முற்றிலும் அழிவதுடன், ஒவ்வொரு முறை விதைகள் தேவைப்படும் போதும் நாம் பிறரிடம் கையேந்த வேண்டியிருக்கும் என்கிற அபாயத்தை விரிவாக எடுத்து சொல்லின.  புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் போன்ற இதழ்களில் இவை குறித்து பல கட்டுரைகள் வந்தன.  ஆனாலும் இவற்றையெல்லாம் மீறி ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகளின் ஆதரவுடன், பன்னாட்டு நிறுவனமான மஹிகோ மான்சான்டோ பயோடெக் இந்தியா என்ற பெயரில் உருவான பன்னாட்டு நிறுவனம் பி.டி.பருத்தி விதைகளை இந்திய விவசாயிகளின் தலையில் கட்டியது.  அதற்கு எந்த அளவுக்கு ஊடகங்கள் பொய் விளம்பரங்கள் செய்து ஏமாற்றியது என்பதை விரிவாகத் தோலுரித்துக் காட்டியிருக்கிறார் பத்திரிகையாளர் திரு பி.சாய்நாத்.

“இந்த 2 கிராமங்களிலிருந்து ஒருவர் கூட தற்கொலை செய்து கொள்ளவில்லை”

மான்சாண்டோவுக்கு மாமா வேலை பார்க்கும் TOI
செய்தியா – விளம்பரமா – டைம்ஸ் ஆப் இந்தியா மோசடி

மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளைப் பயன்படுத்துவது தொடர்பாக இந்தியா முழுவதும் சர்ச்சை பொங்கி எழுந்து கொண்டிருக்கிற நேரத்தில், ஒரு செய்தித்தாள் அதையே தொழில்நுட்ப வெற்றி என ஆதாரப்பூர்வமான புகைப்படங்களுடன் கட்டுரை எழுதியிருந்தது. இங்கு தற்கொலைகள் என்பதே இல்லை.  மக்கள் விவசாயத்தால் நல்ல முன்னேற்றம் கண்டு வருகின்றனர். வழக்கமாகப் பயிரிடப்படும் பருத்தியிலிருந்து மரபணு மாற்றப்பட்ட பி.டி.பருத்தி விதை முறைக்கு மாறியதால் இந்த இரண்டு (பாம்பிரஜா, அன்டார்காவூன்) கிராமங்களில் கடந்த மூன்று – நான்கு ஆண்டுகளாக சமூக, பொருளாதார மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது”

இதை உறுதிப்படுத்தி நம்பிக்கையூட்டும் விதத்தில் அதே செய்தித்தாளில், அதே செய்திக்கட்டுரை வரிக்கு வரி மாறாமல் (டைம்ஸ் ஆப் இந்தியா, ஆக 28, 2011) வெளியிடப்பட்டது.  அந்த கிராமங்களைச் சேர்ந்தவர்கள் வேறுவிதமான கதைகளைச் சொல்லக் காத்திருக்கிறார்கள் என்பது பற்றி எந்தக் கவலையுமின்றி மேற்படி செய்தி வெளியிடப்பட்டது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் பாம்பிரஜா வந்திருந்த நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களிடம், “எங்கள் கிராமத்தில் 14 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்” எனப் போராடும் விவசாயிகள் கூட்டம் தெரிவித்த போது வந்தவர்கள் அதிர்ந்து போயினர். “இங்கு மரபணு மாற்ற (பி,டி) விதைகள் வந்தபின் தான்  பெரும்பான்மையான தற்கொலைகள்  நிகழ்ந்துள்ளன” என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.  தி இந்து நாளிதழ் தரப்பில் சரிபார்த்ததில் 2003 முதல் 2009 வரை 9 பேர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர் என்பது தெரிய வந்தது. இப்பிரச்சினை தொடர்பான ஆர்வலர் குழுக்கள் அதன் பின் இன்னும் 5 தற்கொலைகள் நடந்துள்ளன என்கின்றனர்.  எல்லாமே 2002 க்கு பின்னர், அதாவது டைம்ஸ் ஆப் இந்தியா விவசாயிகள் பி.டி. விதை விவசாயத்திற்கு மாறிவிட்டனர் எனத் தெரிவித்த பிறகு இவை நடைபெற்றுள்ளன.

விவசாயத்தில் மறுமலர்ச்சியா?

அதிர்ச்சியில் உறைந்து கவனித்துக் கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம், கோபத்துடன் விவசாயிகள் ‘அய்யா, இங்கு பல விளைநிலங்கள் தரிசாகி விட்டன, பலர் விவசாயத்தின் மீது நம்பிக்கை இழந்து விட்டனர், நஷ்டம் சற்று குறைவாக இருக்கட்டுமே என பலர் மாற்றுப்பயிராக சோயா பீன்ஸ் விதைத்துள்ளனர்’ என்று தெரிவித்தனர்.

மஹிகோ மான்சான்டோ மரபணு மாற்றப்பட்ட பி.டி. பருத்தியை காரணம் காட்டி இந்த கிராமங்களிலிருந்து நில உரிமையாளராக இருந்த விவசாயிகள் உட்பட பலர் புலம் பெயர்ந்து சென்று விட்டனர். நாங்கள் பாம்பிரஜா கிராமத்திற்கு கடந்த செப்டம்பரில் சென்றிருந்த போது சுரேஷ் ராம்தாஸ் பாண்ட்ரே என்பவர் “விவசாயம் செத்துக் கொண்டிருக்கிறது என்பதால் பலர் வெளியேறி விட்டனர்” எனத் தனது கணிப்பை தெரிவித்தார்.  அரசாங்கம் ஆகஸ்ட் 2011 இல் நாடாளுமன்றத்தில் இந்திய உயிர் தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணையம் (பிஆர்ஏஐ) அறிமுகப்படுத்திய மசோதா தோல்வியடைந்தவுடன், பிணம் உயிர்பெற்று எழுவது போல பி.டி. விவசாய முறையைப் பாராட்டி, புகழந்து பேசும் 2008 ஆம் ஆண்டின் டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி பிரசுரமானது.  மசோதாவை பட்டியலிடுவதில் ஏற்பட்ட தோல்வி என்பது விவசாய-உயிரியியல் தொழிலின் எதிர்கால லாபத்தைப் பாதிக்கும் அம்சமாகும்.  அதன் காரணமாக விரைவில் மீண்டும் அதைக் கொண்டு வர வேண்டும் என்பதற்கான தரகுப் பணி துவங்கியது. “பி.டி.பருத்தி மூலம் தங்கம் அறுவடை” என்கிற தலைப்பிட்டு ஆகஸ்டு 2008 இல் டைம்ஸ் ஆப் இந்தியா செய்தித்தாளில் முழுப்பக்க செய்தி வெளியானதைத் தொடர்ந்து, அடுத்த நாளிலிருந்து டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் சில செய்தித்தாள்களில் மஹிகோ-மான்சான்டோ பயோடெக் (இந்தியா) லிட் நிறுவனத்திலிருந்து தொடர்ச்சியாக விளம்பரம் வரத் துவங்கியது. இந்த விளம்பரங்கள் ஆகஸ்டு 29, 30, 31, செப் 1 மற்றும் 3 ஆகிய தேதிகளில் பிரசுரமானது. அதற்கான மசோதா  இறுதியாக மழைக்கால மற்றும் குளிர்கால கூட்டத்தொடர் இரண்டிலும் விவாதத்திற்கு பட்டியலிடப்பட்டிருந்த போதிலும் அறிமுகப்படுத்தவோ, நிறைவேற்றப்படவோ இல்லை. நாடாளுமன்றம் பி.டி. பருத்தியை தவிர்த்த வேறு பிரச்சினைகளில் சிக்குண்டதால், செய்தித்தாளை வைத்து சிலருக்கு தங்க அறுவடை நடந்தது.

இத்தகைய தொடர் விளம்பரங்கள் நாடாளுமன்ற நிலைக்குழுவின்  முடிவை மாற்றவில்லை என்பதுடன், மரபணு மாற்றங்கள் செய்யப்பட்ட உணவுப் பயிர்களை அனுமதிப்பது தொடர்பாக ஆழமாகப் பரிசீலிக்க வேண்டிய நிலைமையைத் தோற்றுவித்தது.  பல்வேறு கட்சிகளிலிருந்து வந்திருந்த நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் விதர்பா மாவட்டத்தில் ஏற்பட்ட கடுமையான துன்பம், விவசாய தற்கொலைகள் போன்ற தகவல்களால் அதிர்ச்சியடைந்து அந்தப் பகுதிகளைப் பார்வையிட முடிவு செய்தனர்.

அறிவார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பாபுதேப் ஆச்சார்யா தலைமையிலான குழுவின் தெளிவான இலக்கு என்பது மஹிகோ-மான்சான்டோவின் அதிசய மாதிரி கிராமம் என்று சொல்லப்பட்ட பாம்பிரஜா என்பதாக இருந்தது. மற்றொன்று மாரேகான்-சோனாபுர்டி ஆகும்.  ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்தக் கிராமத்திலும் தங்கத்தைப் பார்க்கவில்லை. விவசாயப் புரட்சி – அதிசயம் என்று சொல்லப்பட்டது தகர்ந்து, மேலும் அரசின் தோல்வியாக போனதாலேயே துன்பம் நேரிட்டது.

இந்தியாவில் பி.டி.பருத்தி அறிமுகப்படுத்தி 10 ஆண்டுகள் நிறைவான 2012 இல் மீண்டும் இந்தப் பிரச்சினை (டைம்ஸ் ஆப் இந்தியாவில் சொல்லியிருப்பது போல்) பொறி பறக்கும் விவாதப் பொருளாகியது.  கடந்த ஆண்டு ஆக 28 செய்தித்தாளில் தோன்றிய “பி.டி.பருத்தி மூலம் தங்கம் அறுவடை” என்பது “ஒரு நுகர்வோர் தொடர்பிற்கான முன்முயற்சி” எனத் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டது.  வேறு வார்த்தைகளில் சொல்வதானால் விளம்பரத்திற்காகப் பணம் கொடுத்து செய்தியாக்கப்பட்டது எனலாம். எனினும் அந்தச் செய்தியில் உள்ள விபரங்கள் எல்லாம் டைம்ஸ் ஆப் இந்தியாவின் தொழில்முறை செய்தியாளர்கள், புகைப்படக்காரர்களால் தயாரிக்கப்பட்டதே.  இன்னும் குறிப்பாக விளம்பரமாக மாறிய அந்தக் கதை ஏற்கெனவே வார்த்தைக்கு வார்த்தை மாறாமல் டைம்ஸ் ஆப் இந்தியா நாக்பூர் பதிப்பில் 31 ஆக 2008 இல் வெளியான ஒன்றாகும்.  பிரசுரமானதே மீண்டும் பிரசுரமானது கண்டுபிடிக்கப்பட்டு கடுமையான விமர்சனத்திற்குள்ளாகியது.  ஆக 28, 2011 இல் வெளியான செய்தியிலேயே அது சரிபார்க்கப்படாத செய்தியின் மறுபதிப்பு என்பது லேசாக ஒப்புக் கொள்ளப்பட்டிருந்தது.  இருப்பினும் 2008 இல் வெளியான செய்தியில் விளம்பரம் எனச் சொல்லப்படவில்லை.  ஆனால் இருமுறை பிரசுரமானதிலும் ஒப்புக்கொள்ளப்பட்டிருந்த ஒரு விச‌யம் யாதெனில், யாவாட்மால் கிராமத்தைப் பார்வையிடுவதற்கான பயண ஏற்பாடுகள் மஹிகோ-மான்சான்டோ பயோடெக் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டது என்பதாகும்.  அந்த நிறுவனம் ‘2008 இல் வெளியானது டைம்ஸ் ஆப் இந்தியாவின் செய்தித் தொகுப்பாகும்’ என்றது.  2008 இல் வெளியான செய்தித் தொகுப்பு என்பது ஆசிரியர் குழும அதிகார வரம்பிற்குட்பட்டு செய்தியாளர்கள் குறிப்பிட்ட கிராமங்களில் சென்று சேகரித்த அறிக்கைகள் ஆகும்.  நாங்கள் செய்தியாளர்கள் அங்கு சென்று வருவதற்கான பயண ஏற்பாடுகளை மட்டும் செய்தோம் என்கிறார், கடந்த வாரம் தி இந்து நாளிதழிடம் பேசிய மஹிகோ-மான்சான்டோ நிறுவன செய்தித் தொடர்பாளர்.  2011 செய்தி என்பது, வணிக நோக்கத்தில் 2008 இல் வெளியான செய்தியையே திருத்தங்கள் மேற்கொள்ளாமல் வெளியிட்டதே ஆகும்.

2008 முழுப்பக்கச் செய்தி நாக்பூர் பதிப்பில் வெளியானது.  2011 இல் “சந்தைப்படுத்தும் சிறப்பிதழாக” வெளியான செய்தி அந்தச் செய்தித்தாளின் பல மாவட்ட வெளியீடுகளில் (அதன் இணைய தளத்தில் சிறப்புச் செய்திப் பகுதியில் சொடுக்கினால் பார்வையிடலாம்)  வெளியானது.  ஆனால் நாக்பூர் பதிப்பில் மட்டும் வெளியாகவில்லை.  நாக்பூர் பதிப்பில் வெளியாகியிருந்தால் கண்டிப்பாக அது பெரும் வியப்பை ஏற்படுத்தியிருக்கும்.

விவசாயி-தற்கொலை-3
மருத்ராவ் தோகே என்ற இந்த விவசாயி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக தனது மனைவியின் தாலியை (மங்களசூத்ரா) அடகு வைப்பதற்காக கவலையுடன் பார்த்துக் கொண்டிருக்கும் காட்சி – படம் நன்றி thehindu.com

ஒரே முழுப்பக்கச் செய்தி மூன்று ஆண்டுகளுக்குள் இரண்டு முறை பிரசுரமாகியுள்ளது.  முதல் முறை செய்தியாக, 2 வது முறை விளம்பரமாக. முதல் முறை வெளியானது அந்தச் செய்தி ஊடகத்தில் பணிபுரியும் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்களால் வெளியிடப்பட்டது.  2 வது முறை புதையுண்ட பிணத்தைத் தோண்டியெடுத்து, பிரேதப் பரிசோதனை செய்வது போல் அதன் விளம்பரப் பிரிவால் வெளியிடப்பட்டது.  முதல் முறை செய்தி சேகரிப்பிற்கான பயணம் மஹிகோ-மான்சான்டோ நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. 2 வது முறை மஹிகோ-மான்சான்டோ நிறுவனத்தின் விளம்பரத்திற்காக வெளியிடப்பட்டது.  முதல் முறை வெளியானது அவலம்.  2 வது முறை வெளியானது கேலிக்கூத்து.

மஹிகோ நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தாங்கள் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதாகத் தெரிவிக்கிறார். நாங்கள் 2 வது முறை வெளியிடச் சொல்லும் போது தெளிவாக “இது அக் 31, 2008 நாக்பூர் பதிப்பில் வெளியான செய்தியின் மறுபதிப்பு” என மூலச் செய்தி மற்றும் தேதிக்கான பகுதியில் குறிப்பிட வலியுறுத்தினோம் என்கிறார்.  ஆனால் அவரின் மின்னஞ்சல் வழியாக எழுதிய பதிலில் அந்த விளம்பரப்படுத்தும் செய்தி வெளியான சூழ்நிலைமை பற்றி எழுப்பிய தி இந்து வின் கேள்விக்கு பதில் தெரிவிக்கப்படவில்லை.  விவசாயத்தில் பருத்தி விதைகள் மற்றும்  தாவர உயிர்தொழில்நுட்பத்தின் பங்கு பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 2011 இல் குறுகிய கால தகவல் தொடர்பு முன்முயற்சியாக இது செய்யப்பட்டது என அவர் சொல்கிறார்.  ஆனால் இந்திய உயிர்தொழில்நுட்ப ஒழுங்கு முறை ஆணையத்தின் மசோதா நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட நேரத்தில் இதை வெளியிட்டதன் நோக்கம் என்ன என்ற தி இந்துவின் கேள்விக்கு விடையளிக்கப்படவில்லை.

ஆனால் நடைபெற்றது அதைவிட அதீதமானது. டைம்ஸ் செய்தியுடன் வெளியிடப்பட்டிருந்த விவசாய அதிசயம் குறித்த புகைப்படங்கள் அந்த பி.டி.பருத்தி விதைக்கப்பட்ட பாம்பிரஜா மற்றும் அன்டார்காவுன் கிராமங்களில் எடுக்கப்படவில்லை.  அதில் தோன்றுபவர்கள் பாம்பிரஜா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்ற போதிலும், அந்தப் படங்கள் பாம்பிரஜாவில் எடுக்கப்பட்டதல்ல என்கிறார் அந்தக் கிராமத்தை சேர்ந்த பாபன்ராவ் காபந்தே.

போலித் தோற்ற அதிசயம்

டைம்ஸ் ஆப் இந்தியா கதையில் சிறப்பான கல்வியறிவு பெற்றிருந்த விவசாயியாகக் குறிப்பிடப்படும் நந்து ரவுத் ஒரு ஆயுள் காப்பீட்டுக் கழக முகவரும் ஆவார்.  அவருடைய வருவாய் பி.டி.பருத்தி விதை காரணமாக எதிர்பாரா விதத்திற்கு உயர்ந்ததாகச் சொல்லப்பட்டது.  “நான் கடந்த ஆண்டு ரூ. 2 லட்சம் சம்பாதித்தேன்”  கடந்த செப்டம்பரில் அவர் என்னிடம் இவ்வாறு தெரிவித்தார்.  “ஏறக்குறைய ரூ. 1.6 லட்சம் நான் விற்ற எல்ஐசி பாலிசிகளால் கிடைத்தது” என்றார்.  அதாவது சுருக்கமாகச் சொன்னால் அவர் விவசாயத்தில் சம்பாதித்ததைப் போல் நான்கு பங்கு ஆயுள் காப்பீடு முகவர் பணியில் சம்பாதித்துள்ளார்.  அவரின் 4 பேர்கள் அடங்கிய குடும்பத்திடம் 7 1/2 ஏக்கர் நிலம் இருந்தது.

ஆனால் டைம்ஸ் ஆப் இந்தியா விவரித்த கதையில் “பூச்சிக் கொல்லி மருந்து உபயோகிக்காமல் இருந்ததன் வழியாக அந்த விவசாயி ஒரு ஏக்கருக்கு ரூ. 20,000 வரை அதிகமாக சேமித்ததாக (அழுத்தம் கட்டுரையாளரால் சேர்க்கப்பட்டது) விவரிக்கிறது”.  அவர் 4 ஏக்கரில் பருத்தி பயிர் செய்திருந்ததால் அவரது சேமிப்பு “பூச்சி மருந்தில்”  ரூ. 80,000 என்கிறது கணக்கு.  ஆனால் பாம்பிரஜாவிலுள்ள விவசாயிகள் மிகுந்த கோபத்துடன், ஏக்கருக்கு ரூ. 20,000 அல்லது அதற்கு மேல் சம்பாதித்த யாரேனும் ஒருவரை இங்கே சுட்டிக் காண்பியுங்கள் பார்ப்போம் என்கின்றனர்.  கிராம வாரியாக ஆய்வு மேற்கொண்ட போது திரு. ரவுத் ஒப்பமிட்டுக் கொடுத்த புள்ளி விபரம் (தி இந்துவின் வசமுள்ளது) அவரின் வருவாய் குறித்து வேறு வித்தியாசமான கதையை தெரிவிக்கிறது.

விவசாயி-தற்கொலை-4
படம் நன்றி thehindu.com

மத்திய அரசின் விவசாய அமைச்சர் தெரிவிக்கும் புள்ளி விபரங்கள் ‘பி.டி. அதிசயம்’ என்பதற்குப் பதிலாக அதன் மீது ஏளனத்தை உமிழ்கின்றனர் பாம்பிரஜா மற்றும் மாரேகவுன் விவசாயிகள்.  இந்திய நாடாளுமன்றத்தில் 2011 டிசம்பர் 19 அன்று அமைச்சர் சரத்பவார், விதர்பாவில் ஒரு ஹெக்டேருக்கு சராசரியாக 1.2 குவிண்டால் பஞ்சு கிடைக்கிறது என்றார்.  அதிர்ச்சியுறும் வகையில் அது மிகக்குறைந்த அளவே. அதை இரண்டு பங்காகக் கணக்கிட்டால் கூட குறைவுதான்.  விவசாயிகள் சுத்தம் செய்யப்படாத நிலையில்தான் பருத்தியை விற்கின்றனர்.  நூறு கிலோ அறுவடை என்றால் அதில் 35 கிலோ பஞ்சும் 65 கிலோ பருத்தி விதையும் கிடைக்கும். (அதிலும் கூட இழையாடும் போது மேலும் 2 கிலோ இழப்பு ஏற்படும்).  மேலும் திரு. பவார் தெரிவிக்கும் விபரத்தின்படி பார்த்தால் ஒரு ஏக்கருக்கு 3.5 குவிண்டால் விதையுடன் கூடிய பஞ்சா?  அல்லது வெறும் 1.4 குவிண்டால்தானா?.  திரு. பவார் மேலும் தெரிவிக்கையில் விவசாயிகள் ஒரு குவிண்டாலுக்கு ரூ. 4200 வீதத்தில் அதிகமான விலையையே பெறுகின்றனர் என்கிறார்.  அவருக்கு ஏற்புடையதல்ல என்ற போதிலும், விவசாயம் செய்ய ஆகும் செலவினத்திற்கு அருகாமையில் அவர் சொல்லும் தொகை இருப்பதால்தான் அங்கு மோசமான சூழல் வளர்ந்துள்ளதாகக் கருதுகிறேன்.  திரு. பவார் தெரிவிக்கும் புள்ளி விபரங்கள் சரியென்றால் நந்து ரவுத்தின் மொத்த வருவாய் ஒரு ஏக்கருக்கு ரூ. 5900 ஐத் தாண்டியிருக்க வேண்டும்.  ஆனால் 1 1/2 பாக்கெட் விதை மட்டும் ரூ. 1400 என்பதைக் கழித்துப் பார்த்தால், ஏறக்குறைய அவருக்கு மீதம் ஏதுவுமேயில்லை.  ஆனால் டைம்ஸ் ஆப் இந்தியா அந்த விவசாயியின் வருவாய் ஏக்கருக்கு ரூ. 20000 க்கு மேல் என்கிறது.

மேற்சொன்ன செய்தியில் உள்ள மிகைப்படுத்தலைப் பற்றி கேட்டபோது மஹிகோ-மான்சான்டோ நிறுவன செய்தி தொடர்பாளர்- “எங்கள் நிறுவனத்தின் ஊழியர் சொன்னதாக பத்திரிகையில் செய்தியாக வந்ததை நாங்கள் வழிமொழிகிறோம்” என்றார்.   முழுப்பக்க விளம்பரமாக மாறிய அந்தச் செய்தியில் அவர் குறிப்பிட்ட ஒரு சிறு பத்தியில் எங்குமே ஏக்கருக்கு ரூ. 20000 க்கு மேல் என்றோ, வேறு தொகை குறிப்பிட்டோ புள்ளி விபரம் ஏதுமில்லை.  வெறும் “பி.டி.பருத்தியால் விவசாயிக்கு வருவாய் உயர்வு” என்றும், பல ஏக்கர் பரப்பளவுள்ள நிலங்களில் அந்த பருத்தி பயிரிடப்பட்டுள்ளதைப் பற்றி மட்டுமே பேசும் விதத்தில் அது இருந்தது.  ஆனால் ஏக்கருக்கு எவ்வளவு மகசூல் என்பது பற்றி அதில் குறிப்பிடப்படவில்லை.  மேலும் அந்த இரு கிராமங்களிலும் ஒருவர் கூட தற்கொலை செய்து கொள்ளவில்லை என்ற வகையில் எதுவும் அவர் குறிப்பிடும் செய்திக் குறிப்பில் இல்லை.  எனவே மான்சான்டோ நிறுவனம் மிகக் கவனமாக டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவிக்கும் செய்திகளை உறுதிப்படுத்தாமல் நழுவியதோடு, அவர்களின் சந்தைப்படுத்தும் முக்கியக் குறிப்புகளில் மட்டுமே கவனமாக இருந்துள்ளனர்.

இந்தச் செய்தியைப் பற்றி மஹிகோ-மான்சான்டோ உயிர்தொழில்நுட்ப இந்தியா நிறுவனச் செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கையில், “செய்தியாளர்கள் மேற்கண்ட கிராம விவசாயிகளிடம் நேரடியாக பேட்டிகள் எடுத்து, அவர்களின் அனுபவங்களைக் கேட்டறிந்து, விவசாயிகள் குறிப்பிட்டு சொன்னவற்றையே செய்தியாக்கியுள்ளனர்” என்றார்.

‘விளம்பரமாக மாறிய கதை’ மீண்டும் தோன்றிய போதும் நந்து ரவுத், போல்கார்டு II விதையின் மூலம் ஏக்கருக்கு 20 குவிண்டால் மகசூல் பெற்றுள்ளார் என்கிறது.  அதாவது விவசாய அமைச்சர் தெரிவிக்கும் 1.4 குவிண்டால் என்பதைப் போல் 14 பங்கு அதிகம்.  அதாவது பருத்திக்கு 2 முதல் 3 முறை நீா்ப்பாய்ச்சுவது தேவைப்படும் நிலையில், மழை குறைந்த மாவட்டமான விதர்பாவில் மகசூல் குறைந்து விட்டது என வருத்தப்படுகிறார் திரு. பவார்.  ஆனால் அதே சமயம், தேசியவாத காங்கிரசு – காங்கிரசு கூட்டணி ஆளும் மகாராஷ்டிராவின் ஏறக்குறைய பெரும்பாலான மழைக் குறைவுப் பகுதிகளில் தண்ணீர் மிகவும் தேவைப்படும் இந்த பி.டி.பருத்தி விதையை ஊக்குவித்தது எவ்வாறு என்ற கேள்வி எழும் போது திரு பவார் அமைதி காக்கின்றார்.  ஏழு ஆண்டுகளுக்கு முன்பாக மழை குறைந்த பகுதிக்கு பொருந்தி வராத இந்த பி.டி. விதைகளை மகாராஷ்டிரா அரசு விதைக் கழகம் அதன் மாநில விவசாய ஆணையர் மூலமாக விநியோகித்தது.  டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியின்படி பார்த்தால், நந்து ரவுத் பணத்தில் உருளுகின்றார்.  அமைச்சரின் கூற்றுப்படி பார்த்தால் அந்த விவசாயி தண்ணீருக்குள் விழுந்த போதிலும், மூழ்காமல் மிதக்கிறார்.

2011 இல் ஒரே வாரத்தில் சரமாரியாக வெளியான மஹிகோ-மான்சான்டோ பயோடெக் விளம்பரங்கள் வேறு தீயை பற்ற வைத்தது.  இந்திய விவசாயிகள் மிகுந்த பணப்பலன்கள் பெறுகிறார்கள் என்ற வகையில் தோன்றிய ஒரு விளம்பரத்தின் (டெல்லியிலிருந்து வெளியாகும் வேறு ஒரு செய்தித்தாளிலும் வந்திருந்தது) மீது இந்திய விளம்பரத் தரக்கட்டுப்பாட்டுக் குழுமத்தின் முன்வைக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து, இந்திய விளம்பர தரக்கட்டுப்பாட்டுக் குழுமம்  “புகாருக்குள்ளான விளம்பரத்தில் வைக்கப்பட்ட வாதம் மெய்ப்பிக்கப்படவில்லை” என்ற முடிவிற்கே வந்தது.  மான்சான்டோ நிறுவனச் செய்தி தொடர்பாளர், விளம்பர தரக்கட்டுப்பாட்டு குழுமம் முன் வைக்கப்பட்ட குறிப்புகளை தொடர்ந்து விளம்பரம் திருத்தியமைக்கப்பட்டு விட்டது என்றார்.  மஹிகோ-மான்சான்டோ நிறுவனம் விளம்பரத்தை திருத்தியமைத்ததை விளம்பர தரக்கட்டுப்பாட்டு குழுமம் ஒப்புக்கொண்டது.

மார்ச் மாதத்தில் நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் அந்த கிராமத்தை விட்டு வெளியேறிய பின் நாங்கள் மீண்டும் திரு. நந்துவை சந்தித்த போது, “இன்று என்னைக் கேட்டால், நீர்வளம் குறைந்த இந்த கிராமங்களில் மரபணு மாற்ற (பி.டி) விதைகளைப் பயன்படுத்தாதீர்கள் என்பேன், நிலைமை தற்போது மிக மோசம்” என்றார்.  நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன் அவர் (நந்து) ஏன் ஒரு வார்த்தை கூட தெரிவிக்கவில்லையென்றால், தாம் மிகவும் தாமதமாக வந்ததாகத் தெரிவித்தார்.

“நாங்கள் வட்டிக்கு கடன் கொடுப்பவர்களை ஒதுக்கி விட்டோம், இனி எங்கள் எவருக்கும் அவர்கள் தேவையில்லை” டைம்ஸ் ஆப் இந்தியா விளம்பரமாக மாறிய செய்தியில் மாங்கூ சவான் என்ற விவசாயி இவ்வாறு தெரிவித்ததாகக் கூறப்பட்டுள்ளது.  அதாவது பி.டி. விதையினால் அன்டார்காவுன் கிராமத்தில் ஏற்பட்ட செழிப்பினால் இந்த நிலை ஏற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.  பாம்பிரஜாவில் உள்ள 365 விவசாய வீடுகள் மற்றும் அன்டார்காவுனில் உள்ள ஏறக்குறைய 150 வீடுகளில் ‘விதர்பா ஜன் அந்தோலன் சமிதி’ (விஜாஸ்) மேற்கொண்ட ஆய்வுக் கணக்கெடுப்பில் ஏறக்குறைய வங்கிக் கணக்குள்ள அனைத்து விவசாயிகளும் கடன் கட்ட முடியாமல் போவதாகவும், ஏறக்குறைய 60 சதவீத விவசாயிகள் கந்து வட்டிக்கு கடன் கொடுக்கும் தனியாரிடம் மாட்டிக் கொண்டுள்ளதாகவும் தெரிகின்றது என்கிறார் விஜாஸ்-ன் தலைவர் கிஷோர் திவாரி.

மகாராஷ்டிரா அரசு நிலைக்குழு (பாராளுமன்ற) உறுப்பினர்களை மாதிரி கிராமம் என்று சொல்லப்பட்ட பாம்பிரஜா கிராமத்திற்குள் வர விடாமல் திசைதிருப்ப மிகக் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டது.  இருப்பினும் குழுவின் தலைமை உறுப்பினர் பாசுதேப் ஆச்சார்யா மற்றும் அவரின் சக உறுப்பினர்கள் குறிப்பிட்ட கிராமத்தை பார்வையிட வேண்டும் என்ற தமது நிலையில் உறுதியாக இருந்தனர். நாடாளுமன்ற உறுப்பனர்கள் வருகையால் ஊக்கம் பெற்ற மக்கள் அந்த இரு கிராமங்களிலும் தங்கள் எண்ணங்களை வார்த்தைகளாக இதயத்திலிருந்து வெளிப்படையாக தெரிவித்தனர்.  தேசிய குற்றப்பதிவு ஆணையப் பதிவுகள் தெரிவிக்கின்றபடி, மகாராஷ்டிராவின் பதிவுகளில் மிக மோசமாக 1995  இல் இருந்து 2010 வரை 50000 விவசாய தற்கொலைகள் நடைபெற்றுள்ளது.  அதிலும் அந்த மாநிலத்தில் விதர்பா மாவட்டம் அத்தகைய இறப்புகளில் முன்னிலை வகிக்கிறது. இன்னமும் மிகப்பெரிய, அரசின் கொள்கை சார்ந்த பிரச்சினைகள் விவசாய நெருக்கடிக்கு இட்டுச் செல்கின்றன என்கின்றனர் இங்குள்ள விவசாயிகள்.

பி.டி.பருத்தியின் வரவால் விவசாய தற்கொலை பிரச்சினை குறைந்தது என எந்த விவசாயியும் தெரிவிக்கவில்லை.  அதே சமயம் அவர்கள் அதிசயம், செலவு குறைப்பு, சேமிப்பு என்பனவற்றில் உள்ள போலித் தோற்றங்களை கருத்துக்களாக வெளிப்படுத்தினர்.  அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசியல் மேற்கொள்ள செய்தியானது.  ஆனால் பணம் கொடுத்து போடப்பட்ட செய்தி பற்றியோ, சந்தைப்படுத்தும் வியாபார தந்திரம் என்பது பற்றியோ எந்தப் பேச்சும் இதுவரை இல்லை.

________________________________________________

நன்றி- தி இந்து (10 மே 2012)

தமிழில்- சித்ரகுப்தன்.

_________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

“மின்சாரம் தனியார்மயமானதே தமிழகம் இருள்மயமானதற்குக் காரணம்!”

14

மின்சாரம் தனியார்மயமானதே தமிழகம் இருள்மயமானதற்குக் காரணம்

“மின்சாரம் தனியார்மயமானதே தமிழகம் இருள்மயமானதற்குக் காரணம்!”

தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் தொடர்பிரச்சார இயக்கம்.

மின்சாரம் தனியார்மயமானதே தமிழகம் இருள்மயமானதற்குக் காரணம்பேருந்துக் கட்டண உயர்வு, பால்விலை உயர்வு என அடுத்தடுத்து மக்கள் மீது தாக்குதலைத் தொடுத்துவிட்டு, போதாக்குறைக்கு தற்பொழுது மின்கட்டண உயர்வு என்ற இடியையும் மக்கள் மீது இறக்கியிருக்கிறது, பாசிச ஜெயா அரசு.

இந்த மின்கட்டண உயர்வென்பது,  டாடா, அம்பானி, அடானி, அப்போலோ போன்ற கார்ப்பரேட் மின் உற்பத்தி நிறுவனங்கள் மின்சாரத்துக்கு என்ன விலை கேட்கிறார்களோ, அதனை மக்களிடமிருந்து வசூலித்துக் கொடுப்பதற்கான ஏற்பாடே என்பதை விளக்கியும், “மின்சாரம் தனியார்மயமானதே, தமிழகம் இருள்மயமானதற்குக் காரணம். மின்வெட்டில்லா தமிழகம் வேண்டும்; ஆபத்தான அணுஉலை வேண்டாம்” என்ற முழக்கத்தினை முன்வைத்தும்,  ம.க.இ.க; வி.வி.மு; பு.மா.இ.மு; பு.ஜ.தொ.மு; பெ.வி.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் தமிழகமெங்கும் தொடர் பிரச்சார இயக்கங்களை நடத்தி வருகின்றன.

சென்னையில், 04.04.2012 அன்று ம.க.இ.க; பு.மா.இ.மு; பு.ஜ.தொ.மு; பெ.வி.மு. மற்றும் ம.உ.பா.மையம் ஆகிய அமைப்புகளின் சார்பில் சைதை பனகல் மாளிகை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  போக்குவரத்து நெரிசல் மிகுந்த பிரதான சாலையை மறித்தும், ஜெவின் கொடும்பாவியை எரித்தும் தோழர்கள் தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.

திருச்சியில்,  10.04.2012 அன்று, ம.க.இ.க; பு.மா.இ.மு; பு.ஜ.தொ.மு. ஆகிய அமைப்புகள் சேர்ந்து மேலசிந்தாமணி அண்ணாசிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தின.  ஆர்ப்பாட்டத்தில், மக்கள் மீது தொடுக்கப்பட்டிருக்கும் மறுகாலனியத் தாக்குதலை அம்பலப்படுத்தி முன்னணியாளர்கள் கண்டன உரையாற்றினர்.

திருச்சி  துவாக்குடியில், 17.04.2012 அன்று பு.ஜ.தொ.மு. (தமிழ்நாடு) சார்பில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாத புதிய ஜனநாயகம் இதழில் மின்சாரம் தனியார்மயமாக்கம் குறித்து வெளியான கட்டுரைகளை விளக்கி அறைக்கூட்டமொன்றை நடத்தினர்.

ஓசூரில் 09.04.2012 அன்று பு.ஜ.தொ.மு. அமைப்பின் சார்பாக, தொழிலாளர்கள் நிறைந்த பகுதியான தர்கா பேருந்து நிறுத்தம் அருகே திரளான தொழிலாளர்களது பங்கேற்புடன் தெருமுனைக்கூட்டத்தை நடத்தினர்.

நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கம் சார்பில் 15.04.2012 அன்று  கோத்தகிரியில்  பொதுக்கூட்டம் மற்றும் ம.க.இ.க. மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சி நடைபெற்றது. பொதுக்கூட்டத்தையும் இப்பகுதியெங்கும் நடத்திய தோழர்களது பிரச்சாரத்தையும் பகுதிவாழ் உழைக்கும் மக்கள் வரவேற்று ஆதரவளித்தனர்.

கரூரில், 09.04.2012 அன்று பு.மா.இ.மு.வின் சார்பில் உழவர் சந்தை அருகில், ம.க.இ.க. மையக் கலைக்குழுவினரின் புரட்சிகர கலைநிகழ்ச்சியுடன் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சிறுதொழில், பட்டறை, விசைத்தறிகள் நிறைந்த இப்பகுதியில், மின்சாரம் தனியார்மயமானதே மின்வெட்டிற்கான காரணம் என்பதை விளக்கி, இத்தனியார்மயத்தை ஒழித்துகட்ட நாம் ஓரணிசேர வேண்டுமென்று இப்பொதுக்கூட்டத்தின் வாயிலாக சிறப்புரையாற்றிய தோழர்கள் அறைகூவல் விடுத்தனர்.

கடலூரில், 14.04.2012 அன்று பு.மா.இ.மு.வின் சார்பில் டவுன் ஹாலில் கருத்தரங்கம் நடைபெற்றது.  பு.ஜ.தொ.மு. வின் மாநிலப் பொதுச்செயலர் தோழர் சுப.தங்கராசு. சிறப்புரையாற்றினார்,

தருமபுரியில், 13.04.2012 அன்று வி.வி.மு. சார்பில் இராஜகோபால் பூங்கா அருகில் பொதுக்கூட்டம் மற்றும் ம.க.இ.க. மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சி நடைபெற்றது. போலீசின் ஒருமாத கால இழுத்தடிப்பால் நீதிமன்ற முறையீட்டுக்குப் பின்னரே இப்பொதுக்கூட்ட அனுமதியைப் பெற முடிந்தது. மின்வெட்டு, மின்சாரம் தனியார்மயமாக்கத்தின் விளைவுகளை பு.மா.இ.மு.வின் மாநில அமைப்பாளர் தோழர் த.கணேசன் அவர்களும்; முல்லைப்பெரியாறு அணையை மீட்க நாம் செய்ய வேண்டிய பணிகள் குறித்து பு.ஜ.தொ.மு.வைச் சேர்ந்த தோழர் நாகராசு அவர்களும் சிறப்புரையாற்றினர்.

இந்த ஊர்கள் தவிர, இப்புரட்சிகர அமைப்புகள் செயல்படும் பகுதிகள் அனைத்திலும் பல்வேறு வடிவங்களில் பிரச்சார இயக்கத்தை தொடர்ந்து  மேற்கொண்டு, மறுகாலனியாக்கத் தாக்குதலுக்கு எதிராகப் போராட மக்களை அணிதிரட்டி வருகின்றன

_________________________________________

– புதிய ஜனநாயகம், மே-2012

__________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

குடி, கூத்து, ரேப்: இதுதாண்டா ஐ.பி.எல்!

10

ஐபிஎல்

என்னதான் பன்றிக்கு பவுடர் போட்டு சிங்காரித்து வளர்த்தாலும் அது நரகலைக் கண்டால் நாலு கால் பாய்ச்சலில் பாயத் தானே செய்யும்? இந்த ஆவலாதிப் பாய்ச்சலைத் தான் சமீபமாகாலமாக ஐ.பி.எல் மெகா சீரியலில் மக்கள் கண்டுகளித்து வருகிறார்கள். எந்த வடிவம் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்தும் என்று ஐ.பி.எல் முதலாளிகளும் முதலாளித்துவ ஊடகங்களும் ஓதி வந்ததோ அதே வடிவம் தனது சிங்காரங்களைக் கலைத்தெறிந்து விட்டு அம்மணக்கட்டையாக நிற்பது தான் இதன் சிறப்பு.

கடந்த பதினான்காம் தேதி இந்தியா டி.வி என்கிற தனியார் தொலைக்காட்சி நடத்திய இரகசிய  விசாரணையை பகிரங்கமாக வெளியிடுகிறது. இரகசிய கேமராவில் பதிவான காட்சிகளில்  நான்கு ஐ.பி.எல் வீரர்கள் லஞ்சம் பெற்றுக் கொண்டு மோசமாக விளையாட முன்வந்தது (ஸ்பாட் பிக்சிங்) அம்பலமானது. எந்தக் கூச்சமும் இன்றி, நோ பால் போட இன்ன ரேட், வைடு பால் போட் இன்ன ரேட் என்று சாவகாசமாக இந்த வீரர்கள் பேரம் பேசியதை நாடே பார்த்தது. விசாரணையை நடத்திய இந்தியா டி.வி, பிரச்சினை இது போன்ற ஒரு சில கருப்பு ஆடுகள் தான் என்பது போலவும், பிற சீனியர் வீரர்கள் காசு வாங்காத யோக்கியர்கள் என்றும் சொல்லி நெருப்பின் மேல் வைக்கோலைப் பரப்பி அமுக்கப் பார்த்தாலும் புகை இன்னும் அடங்கிய பாடில்லை.

இந்த ஐ.பி.எல் சீசனில் மட்டும் சுமார் 5000 கோடி ரூபாய்கள் அளவுக்கு சூதாட்டம் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படி சூதாட்டத்தில் புழங்கும் பணத்தின் அளவு தான் இந்திய அளவில் தரகு முதலாளிகளின் நாவில் எச்சிலூற வைத்துள்ளது. போட்டியில் ஒரு அணி தோற்கலாம்; ஆனால், அதன் உரிமையாளருக்குத் தோல்வியே கிடையாது என்பது தான் ஐ.பி.எல்லின் ஆதார விதி. இதனால் தான் தனது விமானக் கம்பெனி நட்டத்தில் மூழ்கிக் கிடப்பதாக வங்கிகளின் வாசலில் தட்டேந்தி நிற்கும் சாராய மல்லையா, ஆயிரக்கணக்கான கோடிகளை ஐ.பி.எல்லில் கொட்டுவதற்கும் வீரர்களை அதிக விலை கொடுத்து வாங்குவதற்கும் தயங்குவதில்லை.

இந்த ஸ்பாட் பிக்சிங் மேட்டரை ஆங்கில ஊடகங்கள் மென்று முழுங்குவதற்குள் அடுத்த பிடி அவலை அள்ளி அவர்கள் வாயில் திணிக்கிறார் பாலிவுட் பாட்ஷா ஷாரூக்கான். கடந்த பதினாறாம் தேதி தனது அணி ஆடிய மேட்ச் ஒன்றைக் காண மும்பை வான்ஹடே மைதானத்துக்கு தனது பிள்ளைகளோடு வந்த ஷாருக்கான், மேட்சின் முடிவில் தனது அணி வென்றதை அடுத்து கொஞ்சம் சோம பானத்தை உள்ளே விடுகிறார். பண போதையோடும் புகழ் போதையோடும் அதிகார போதையோடும் சாராய போதையும் சேர்ந்தது கிறுக்குப் பிடித்த குரங்கு கள்ளைக் குடித்த கதையானது. மேட்ச் முடிந்த பின் மைதானத்துக்குள் தனது நண்பர்களோடு சென்று கொண்டாடலாம் என்று உள்ளே நுழைய முற்பட்டவரை மைதானத்தின் காவலர் வழிமறிக்கிறார்.

அமெரிக்க காவலர்கள் வழிமறித்துத் தடுத்தால் பம்மிப் பதுங்கும் இந்த சூரப்புலி, வான்ஹடே மைதானத்தின் நோஞ்சான் காவலரிடம் பாய்ந்து பிடுங்குகிறது. கேமாராக்களின் வெளிச்சத்தில் அந்தக் காவலரிடம் மல்லுக்கு நிற்கும் அந்தக் காட்சிகளை நீங்கள் அவசியம் காண வேண்டும். பண பலம், அதிகார பலம் போதாதற்கு மும்பை தாதா உலகத்தோடு  தொடர்பு என்று ஷாருக்கானுக்கு இருக்கும் அத்தனை பின்புலத்துக்கும் அஞ்சாமல் அந்த காவலர் துணிச்சலாக விசில் அடித்து வாசலைக் காட்டுகிறார். அமெரிக்காவில் பணிந்து குழைந்து ‘வீரம்’ காட்டிய பாலிவுட்டின் பாதுஷாவுக்கு பாடம் நடத்தி வழியனுப்பியுள்ளார் அந்தக் காவலர்.

மேற்படி குழாயடிச் சண்டை ஊடகங்களில் நாறிக் கொண்டிருந்தாலும் கொஞ்சமும் கூச்சமின்றி தனது செயலை நியாயப்படுத்திப் பேசிக் கொண்டிருக்கிறார் ஷாருக்கான். இந்த சம்பவம் பரவலான கவனத்தைப் பெற்றதையடுத்து ஷாரூக் மேல் நடவடிக்கை எடுத்திருக்கும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், அடுத்து ஐந்தாண்டுகளுக்கு அவர் மும்பை வான்ஹடே மைதனத்துக்குள் நுழைய தடைவிதித்துள்ளது. குடித்து விட்டு பச்சையாக ரவுடித் தனத்தில் ஈடுபட்ட ஷாருக்கான் ஐ.பி.எல் அணியை நடத்தும் உரிமையை திரும்பப் பெறத் துப்பில்லாமல் ஐந்தாண்டுத் தடையென்று மயிலறகால் தடவிக் கொடுத்துள்ளனர்.

ஷாருக்-கான்
அமெரிக்க காவலர்கள் வழிமறித்துத் தடுத்தால் பம்மிப் பதுங்கும் இந்த சூரப்புலி, வான்ஹடே மைதானத்தின் நோஞ்சான் காவலரிடம் பாய்ந்து பிடுங்குகிறது

ஷாருக் விவகாரம் அடங்கும் முன் அடுத்தடுத்த அசிங்கங்கள் ஒவ்வொன்றாக மேலெழுந்து வந்து கொண்டே இருக்கின்றன. 18ம் தேதி லூக் போமெர்ஸ்பாக் என்கிற ஆஸ்திரேலிய ஐ.பி.எல் ‘வீரர்’ சித்தார்த் மல்லையா (சாராய மல்லையா மகன்) நடத்திய குடிவெறிப் பார்ட்டியில் கலந்து கொள்ள வந்த அமெரிக்கப் பெண் சோகல் ஹமீதை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற விவகாரம் வெடித்தது. அடுத்து இரண்டே நாளில், மும்பை ஜூஹூ பீச் அருகே ஒரு ஹோட்டலில் நடந்த ரேவ் பார்ட்டி எனப்படும் போதை மருந்துப் பார்ட்டியை ரெய்டு செய்த போலீசார், இரண்டு ஐ.பி.எல் ‘வீரர்களை’ கைது செய்துள்ளது. மேலும் பார்ட்டி நடந்த இடத்திலிருந்து கெண்ணாபீஸ், கொக்கெய்ன் போன்ற அதி வீரியமுள்ள போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

லூக் அமெரிக்கப் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற விவகாரத்தில் கருத்துத் தெரிவித்துள்ள சாராய மல்லையாவின் ஸ்ரேஷ்ட்ட புத்திரன் சித்தார்த் மல்லையா, பாதிக்கப்பட்ட பெண்ணின் நடத்தை சரியில்லையென்றும், சம்பவம் நடந்த நாளில் அந்தப் பெண் தன்னிடம் ஓவராக இழைந்ததாகவும் டிவிட்டரில் எழுதியிருக்கிறார். பாலியல் கொடூரர்கள் வழக்கமாக தங்கள் செயலுக்கு நியாயம் கற்பிக்க கடைபிடிக்கும் அதே உத்தியைத் தான் சித்தார்த்தும் கையாண்டிருக்கிறார். ஒரு வாதத்திற்கு அதை ‘உண்மை’ என்றே வைத்துக் கொண்டாலும் விருப்பமில்லாத பெண்ணை கட்டாயப்படுத்து உரிமை உனக்கு எங்கே இருந்து வந்தது என்று கேட்கத் துப்பில்லாத ஊடகங்கள், அவரிடம் போய் ‘எதாவது விளக்குங்களேன்’ என்று வழிந்திருக்கின்றன. ஊடகங்களின் உண்மையான யோக்கியதையை நன்கு அறிந்து வைத்திருக்கும் சித்தார்த் மல்லையா, மூஞ்சியில் காறி உமிழ்வதைப் போல் நறுக்கென்று காரின் கதவை அடைத்து விட்டுச் சென்றுள்ளார்.

அளவற்ற பணம், புகழ் போதை, அதிகாரத் திமிர் மற்றும் மேட்டுக்குடி கொழுப்பு என்கிற கலவையான ராஜபோதையில்  உருண்டு புரண்டு திளைக்கும் தரகு முதலாளிகளும் அவர்கள் வீட்டுச் செல்லக் குட்டிகளும் உண்மையில் தங்கள் சொந்த வாழ்வில் பின்பற்றும் அறம் என்னவென்பதை இந்த ஐ.பி.எல் அசிங்கங்கள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. சித்தார்த் மல்லையாவுக்கு சற்றும் சளைக்காத சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதலாளி இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசனின் வாரிசு கடந்த சில வாரங்களுக்கு முன் தான் மும்பையில் இரவு நேரம் கெட்ட நேரத்தில் சரக்கு சப்ளை செய்யவில்லை என்று ஒரு ஹோட்டலில் தகராறு செய்து, தட்டிக் கேட்க வந்த போலீசாரையும் தாக்கியதாக செய்திகள் வெளியானது.

ஐ.பி.எல் என்பதே விளையாட்டு என்கிற அந்தஸ்த்தை இழந்து வெறும் முதலாளிகளின் மூணு சீட்டு என்பதாக சுருங்கிப் போய் விட்ட நிலையில், அதன் தர்க்கப்பூர்வமான விளைவுகள் மட்டும் வேறெப்படி இருக்கும்? ஊரில் கிராமத்தில் சந்து பொந்துகளில் குத்தவைத்து மூணு சீட்டு ஆடும் லும்பன்கள் வாயில் சுவர்முட்டியும், நாட்டுச் சாராயமும் வழிகிறதென்றால், ஐ.பி.எல் வீரர்கள் கொகெய்னை உறிஞ்சுகிறார்கள். என்ன இருந்தாலும் சர்வதேசத் தரமல்லவா?

மனமகிழ் மன்ற சீட்டாட்டக் கிளப்பின் புகை மண்டிய மூடிய அறைக்கும் திறந்தவெளி ஐ.பி.எல் மைதானத்துக்கும் ஐந்து வித்தியாசங்களைத் தோற்றத்தில் கண்டு பிடிக்க முடிந்தாலும் சாராம்சத்தில் ஒன்று தான். மேலே விவரிக்கப்பட்ட சம்பவங்களனைத்தும் இரண்டு நாட்கள் இடைவெளியில் தொடர்ந்து நடந்தவைகள். இது இத்தோடு ஓயப்போவதில்லை – ஐ.பி.எல் இருக்கும் வரை இது போன்ற கேலிக் கூத்துகள் தொடர்ந்து நடக்கத் தான் போகிறது. இப்படிப்பட்ட கீழ்த்தரமான டிராமாக்களை அரங்கேற்றுவதற்கு இந்தப் போட்டிகளை நடத்துபவர்களின் பணக் கொழுப்பும் அதிகாரத் திமிரையும் தாண்டி வேறு தேவைகளும் காரணங்களும் இருக்கின்றன.

கடந்த ஆண்டு தொலைக்காட்சி நேயர்கள் ரேட்டிங்கை விட இந்தாண்டு ஐ.பி.எல் போட்டிகள் துவக்கத்திலேயே 18.7% சரிந்திருந்த்து. 9 அணிகள் விளையாடும் இந்த சீசனில், லீக் ஆட்டங்களையும் இறுதியாட்டத்தையும் சேர்த்து மொத்த ஆட்டங்களின் எண்ணிக்கை 76. என்னதான் பாரின் சரக்கு என்றாலும், ஓவராகப் போனால் வாந்தியில் தானே முடிந்தாக வேண்டும்? சலிப்புற்ற தொலைக்காட்சி பார்வையாளர்களை இழுத்துப் பிடிக்க வழக்கமான கிரிக்கெட் போதையைத் தாண்டி வேறு கிளுகிளுப்புகளும் தேவைப் படுகிறது.  விறுவிறுப்பு – மேலும் விறுவிறுப்பு – மேலும் மேலும் விறுவிறுப்பு என்கிற இந்த நச்சுச் சுழற்சியில் அவர்கள் விரும்பியே தான் மாட்டிக் கொண்டுள்ளனர்.

வெறும் மாமியார் மருமகள் சண்டை என்றால் எத்தனை வருடங்கள் தான் பார்ப்பார்கள்; ஒரு கள்ளக் காதல், ஒரு கொலை என்று இருந்தால் தானே ஆட்டம் களை கட்டும்? அந்த கிளுகிளு ஊறுகாய்கள் தான் இது போன்ற பொறுக்கித்தனங்களை ஊடகங்கள் மேலும் மேலும் சுவை சொட்டச் சொட்ட நமக்கு வழங்குவது.

ஊடங்கள் ஐ.பி.எல்லில் நடக்கும் கூத்துகளை கடைவிரிப்பது அதை ஒழித்துக் கட்டுவதற்காக இல்லை. தங்களுக்கு கோடிக்கணக்கில் விளம்பரங்கள் மூலம் படியளக்கும் பொன் முட்டையிடும் வாத்தை அத்தனை சீக்கிரம் கொன்று விட முதலாளித்துவ ஊடகங்களும் முட்டாள்கள் அல்ல. தொய்வாகப் போய்க் கொண்டிருந்த திரைக்கதையின் நடுவே ஒரு கற்பழிப்புக் காட்சியை வைப்பதன் மூலம் ரசிகர்களை சீட்டின் நுனிக்கு இழுத்து வரும் அதே பழைய கோடம்பாக்கத்து உத்தி இது. அதனால் தான், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடக்கும் அத்தனையையும் கண்டும் காணாததும் போல் கடந்து செல்கிறது.

ஆப்ரிக்க சப்சஹாரா பாலைவனங்களில் வாழும் குழந்தைகளை விட அதிகளவில் சத்துக்குறைவால் வாடும் நோஞ்சான் குழந்தைகளைக் கொண்டுள்ள ஒரு நாட்டில், நாலில் ஒருவர் மூன்று வேளை சோறில்லாமல் பட்டினியில் வாடும் வறியவர்களைக் கொண்டுள்ள ஒரு நாட்டில் இப்படிப் பட்ட ஆடம்பரக் கூத்துகளை எந்த வெட்கமும் இன்றி நடத்த வேண்டுமென்றால் அதற்கு ஹிட்லரின் இதயமும், அம்பானியின் மூளையும், மன்மோகனின் ஆன்மாவும், மல்லையாவின் உடலையும் கொண்டு பிறந்த ஒரு கலவையான விஷஜந்துவால் தான் முடியும்.

ஐ.பி.எல்லின் வண்ணமயமான காட்சிகளைக் கண்டு மகிழும் ரசிகர்கள் அவர்களை வைத்து நடத்தப்படும் இந்த நாடகத்தை எப்போது உணரப் போகிறார்கள்? முழுமையான மேட்டுக்குடி கேளிக்கையாள மாறி விட்ட இந்த ஆட்டத்தில் இன்னும்  கொலை மட்டும்தான் நடக்கவில்லை. அது நடந்தாலும் ஆச்சரியமில்லை.!

__________________________________________

– தமிழரசன்

__________________________________________

ஆதாரங்கள்:

__________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

பாசிச ஜெயாவின் பிராண்ட் இமேஜுக்கு 25 கோடி வெட்டி செலவு!

15

நிலைக் கண்ணாடியில் முகம் பார்த்து மணிக்கணக்கில் இன்பம் காணுவது விடலைப்பருவத்தின் உளவியில். சற்று வயதானதும் இது நமக்கே தெரியாமல் மாறிவிடுகிறது. ஆனால் பாசிஸ்டுகள் மட்டும் எத்தனை வயதானாலும் தங்களது முகத்தை கட்டவுட்டிலோ, ஹோர்டிங்கிலோ, ஊடகங்களிலோ எப்போதும் பார்த்து மகிழ்வார்கள். இதில் உலக அளவில் சாதனை படைத்தவர் ஜெயலலிதா.

90களின் ஆரம்பத்தில் இவர் ஆட்சியைப் படித்ததும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஓவியர்கள் காட்டிலும் மழை! அம்மா வீட்டை விட்டு இறங்கினாலும், கோட்டைக்கு வந்தாலும், கோவிலுக்கு சென்றாலும், மழைக்கு ஒதுங்கினாலும் எங்கெங்கு காணினும் கட்டவுட்தான். மேள தாள வரவேற்பு, பழங்கள்-காய்கறிகள் வரவேற்பு வளைவுகள், சிவப்பு கார்ப்பட் வரவேற்பு என்று அ.தி.மு.க அடிமைகள் புதுசு புதுசாக வெளுத்து வாங்கினார்கள். இதன் நீட்சியாகத்தான் காலில் விழுவதிலும் சாதனை படைத்தார்கள்.

இத்தகைய மரபின் சொந்தக்காரி இன்றும் அடங்கி விடவில்லை. கடந்த மே 16 ( 16.5.12) அன்று ஜெயாவின் ஓராண்டு ஆட்சி நிறைவை ஒட்டி ” நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனை” என்று ஒரு விளம்பர படையெடுப்பு இந்தியா முழுவதும் நடைபெற்றது. டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஹிந்துஸ்தான் டைம்ஸ், எகனாமிக் டைம்ஸ், ஏசியன் ஏஜ், இந்தியன் எக்ஸ்பிரஸ், ஹிந்து பிசினெஸ் லைன், மின்ட், பிசினெஸ் ஸ்டாண்டர்டு, தி ஸ்டேட்ஸ்மென், தி டெலிகிராப் மற்றும் தி ஹிந்து, அனைத்து தமிழ் பத்திரிகைகள் என சகல ஊடகங்களிலும் ஆறு பக்க விளம்பரம் பேய்மழை போல வெளிவந்தது. இதில் பல ஆங்கிலத் தினசரிகளுக்கு தமிழ்நாட்டில் பதிப்பே கிடையாது.

இதன் ஒட்டு மொத்த செலவு தோராயமாக 25 கோடி ரூபாய் இருக்கும் என்கிறார்கள். ஒரு நிறுவனம் ஒரே நாளில் விளம்பரத்திற்க்காக அதிக பட்சம் செலவழித்திருப்பதில் இதுதான் சாதனை என்கிறார்கள். இதற்கு முன்னர் வோடோஃபோன் நிறுவனம் தனது சாம்ராஜ்ஜியத்தை துவக்கிய தினத்தன்று அதிக பட்சம் பத்து கோடி ரூபாயை ஒரே நாளில் செலவழித்ததுதான் ரிக்கார்டாம். அந்த வகையில் இது ஒரு ரிக்கார்டு பிரேக்! அம்மாவின் ஆட்சி மட்டுமல்ல விளம்பரமும் சாதனைதான் என்று ஒரு விளம்பரம் கொடுத்து விட்டால் போயிற்று! இந்த விளம்பர யுத்தம் ஒரு நாளோடு முடிந்துவிடவில்லை. அதன் பிறகும் எல்லா தினசரிகளிலும் ஒரு பக்க விளம்பரங்கள் இதுவரை வந்தபடிதான் இருக்கின்றன. இதன் கணக்கு தனி! எப்படியும் பல கோடிகள் இரைக்கப்பட்டிருக்கும்.

ஜெயலலிதா-விளம்பரம்

தங்கம், ஆடு-மாடு, லேப்டாப், சைக்கிள், காப்பீடு, அரிசி என்று அம்மாவின் கருணை உள்ளத்தால் நடத்தப்படும் பொருட்களின் சாதனைகளை விளம்பரங்கள் பேசின. ஆனால் இந்த திட்டங்களினால் ஆதாயம் அடையும் மக்கள் எவரும் இத்தகைய ஆங்கில விளம்பரங்களை பார்க்கப் போவதில்லை. தமிழிலும் கூட இத்தகைய அரசு விளம்பரங்களை யாரும் படிக்கப் போவதில்லை. ஆனாலும் ஆங்கிலம் படித்த இந்திய நடுத்தர மற்றும் மேட்டுக்குடி வர்க்கத்திடம் தனது இமேஜ் செல்வாக்கோடு இருக்க வேண்டும் என்று  ஜெயலலிதா கருதுகிறார். இனம் இனத்தோடுதான் சேருமென்றாலும் ஆங்கில தினசரிகளில் வரும் அரசு விளம்பரங்களைக் கூட யாரும் சீண்டுவதில்லை என்று விளம்பர நிறுவன ஆட்கள் கூறுகின்றனர்.

ஒருவேளை ஜெயலலிதா தன்னைப்பற்றி ஊடகங்களில் பெரிய அளவில் அடிபட வேண்டுமென்று நினைத்தால் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தியிருக்காலமென்றும் அவர்கள் கூறுகின்றனர். ஆனால் தமிழக நிருபர்கள் போல பயந்து பணிந்து நடக்கும் கூட்டங்களையே அம்மா அடிக்கடி நடத்துவதில்லை. இந்திய நிருபர்கள் என்றால் அவர்கள் பில்கேட்ஸ் முன்னாடிதான் பணிவோடு பேசுவார்களே அன்றி லல்லு, முலாயம் என்றால் குதறி விடுவார்கள். அந்த அளவு அமெரிக்க அடிமைகள் என்றாலும் கான்வென்டு கல்வி புகழ் ஜெயலலிதா ஆங்கிலம் நன்கு பேசினாலும் ஓரிரு நிருபர்கள் எடக்கு மடக்காக கேட்டு விட்டால் என்ன செய்வது? இதற்காக அவர்கள் ஓ. பன்னீர் செல்வத்த்திடமா பயிற்சி எடுக்க அனுப்ப முடியும்?

கரண் தபாருடனான விவாத நிகழ்ச்சியில் மோடி, ஜெயா எனும் இரண்டு பாசிஸ்ட்டுகள் மட்டும் வெளிநடப்பு செய்ததையும், கோபத்தில் பொங்கியதையும் கேள்விப்பட்டிருப்பீர்கள். தற்போது அப்பாதையில் மம்தா பானர்ஜியும் சிஎன்என் ஐபிஎன்னின் நிகழ்ச்சி ஒன்றில் வெளிநடப்பு செய்திருக்கிறார். கேள்வி கேட்ட மாணவியையும் மாவோயிஸ்டு என்று முத்திரை குத்தியிருக்கிறார். மம்தாவுக்கே இவ்வளவு அகந்தை இருக்குமென்றால் அது ஜெயாவிடம் எத்தனை மடங்கு அதிகமிருக்கும்? அந்த வகையில் ஜெயா இப்படி இந்திய அளவு செய்தியாளர் கூட்டத்தை நடத்தி செய்தில் அடிபடுவது எல்லாம் சாத்தியமில்லை. பாசிசக் கடவுள்கள் எவரும் அடிமைகள் அல்லாத கூட்டத்தை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. தங்கள் நிழலைக்கூட கண்டு அஞ்சும் இவர்கள் எந்த வகையிலும் வரும் மயிலிறகு எதிர்ப்பைக் கூட விரும்புவதில்லை.

2014 இல் நடைபெற வேண்டிய பாராளுமன்றத் தேர்தல்களில் ஒரு குயின் மேக்கராக இருந்து முடிந்தால் பிரதமர் பதவியையும் அடைய வேண்டும் என்ற இலட்சிய தாகத்தில் இருக்கும் ஜெயலலிதாவுக்கு குட்டியூண்டு தமிழ்நாடு எல்லாம் போதாது. இடையில் சொத்து குவிப்பு வழக்கு வேறு முடியாத கெட்ட கனவாய் நீண்டு கொண்டே போகிறது. இருந்தும் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு சங்மாவை ஆதரிக்க வேண்டுமென்று அவர் ஒரு அதிரடியை துவங்கியிருக்கிறார்.  ஆகவேதான் இப்படியாவது ஒரு விளம்பர யுத்தத்தை நடத்தி தனது இமேஜை வென்றெடுக்க அவர் நினைத்திருக்கலாம்.

மக்களைப் பொறுத்தவரை மின்வெட்டு-மின்கட்டண உயர்வு தொடங்கி, விலைவாசி உயர்வு, பேருந்து கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சமச்சீர் கல்வியை ஒத்துக் கொள்ளாத திமிர், தலைமைச் செயலக மாற்றம், நூலக மாற்றம், மக்கள் நலப்பணியாளர் நீக்கம் என்று பாசிச ஜெயாவின் அடக்குமுறை ஆட்சியை அல்லும் பகலும் அனுபவித்தே வருகின்றனர். அவர்களையெல்லாம் இந்த விளம்பர பந்தாக்கள் ஒன்றும் செய்து விடாது.

எனினும் தொடர்ந்து தனது முகத்தை காண்பித்தால் பயந்து கொண்டாவது மக்கள் தன்னை ஆதரிப்பார்கள், தமிழ் நாளேடுகள் போன்று ஆங்கில நாளேடுகளும் பணிவார்கள் என்று அவர் கருதக்கூடும். இப்படித்தான் பாசிஸ்டுகளான இந்திரா காந்தி, ராஜிவ் காந்தியின் பிறந்த, இறந்த தினத்தென்று இந்திய அரசு தோராயமாக 30 கோடி ரூபாயை  விளம்பரத்திற்கென்று செலவழிக்கிறதாம். அப்படிப் பார்த்தால் இதுதான் ரிக்கார்டு.

ஆக மொத்தம் பாசிஸ்டுகளின் இமேஜ் கூட இப்படி மக்களின் வரிப்பணத்தில்தான் வம்படியாக கட்டியமைக்கப்படுகிறது. ஆனாலும் பாசிஸ்டுகள் தங்கள் முகத்தை வெளியில் காண்பித்தால் ஆபத்து என்று ஒரு காலம் வரும். அது வரை மக்கள் இத்தகைய பிடாரிகளின் முகத்தை சகித்துக் கொள்ளத்தான் வேண்டுமோ?

_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

_____________________________________________________________________________

_____________________________________________________________________________

_____________________________________________________________________________

_____________________________________________________________________________

_____________________________________________________________________________

_____________________________________________________________________________

_____________________________________________________________________________

_____________________________________________________________________________

_____________________________________________________________________________

திண்டுக்கல் காகித ஆலைத் தொழிலாளர் போராட்டம்!

3

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், விளாம்பட்டியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் தனலட்சுமி, சர்வலட்சுமி, விஜயலட்சுமி ஆகிய 3 காகித ஆலைகளின் தொழிலாளர்கள் தங்களது உரிமைகளுக்காகவும், கடந்த 7 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கூலி உயர்வுக்காகவும் 10.4.12 முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளர் இணை ஆணையர்  அழைத்தும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள முதலாளி மறுத்து விட்டார். மாறாக எந்த முடிவும் எடுக்க அதிகாரமற்ற ஆலையின் நிர்வாகிகளைப் பேச்சுவார்த்தைக்கு அனுப்பி வைத்துள்ளார். முதலாளியின் கைபேசி எண்ணைக் கேட்ட இணை ஆணையருக்குத் அதனைத் தர மறுத்து விட்டனர் நிர்வாகத் தரப்பினர்.

முன்னர் நடந்த பேச்சுவார்த்தையின் போது தொழிலாளர்கள் மது அருந்தி விட்டு வந்து தங்களை மிரட்டியதாகப் பொய்ப்புகார் கூறி, அதனால் தற்போது பேச்சுவார்த்தைக்கு வர முடியாது என்று தட்டிக்கழிக்கிறது முதலாளி தரப்பு.  தொழிற்சங்கங்கள் மூலம் அறிவிப்பு செய்து அனுமதி பெற்று நடத்துகின்ற வேலை நிறுத்தத்தை சட்ட விரோதமானது என்றும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார் முதலாளி.

முப்பது ஆண்டுகளாக வேலை செய்து வரும் அனுபவம் வாய்ந்த தொழிலாளர்களுக்கே சம்பளம் ரூ.7500 க்குள்தான். 150 க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குறைந்த கூலி மாத்திரம்தான்; எந்தச் சலுகையும் கிடையாது. தலா 500 பேர் வரை வேலை செய்யும் இந்த ஆலைகளில் தொழிலாளர்களுக்கு உணவக வசதி கூட கிடையாது.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயர்வு தரப்பட வேண்டும் என்ற தற்போதைய ஒப்பந்தத்தை மதிக்காமல், கடந்த 7 ஆண்டுகளாக சம்பள உயர்வு தராமல் இழுத்தடித்து வரும் முதலாளி தரப்பு, அதற்குக் காரணம் ஆலை மேம்பட்ட தொழில் நுட்பத்தால் மாத்திரமே இயங்குவதாகவும், தொழிலாளர் உழைப்பால் அல்ல என்றும் கூறி வருகின்றது. ஆரம்பத்தில் ஒரு ஆலை என்பதிலிருந்து இன்றைக்கு 7 ஆலைகளாக மாறியுள்ளதற்கு தொழிலாளர்களது உழைப்பு காரணமல்ல என்று கூசாமல் பேசுகிறார் அம்முதலாளி.

அண்மையில் நெல்லை மாவட்டத்தில் தொடங்கியுள்ள புதிய ஆலைக்கு இங்கிருந்து  போன தொழிலாளர்களுக்கு ரூ 15 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது. கேட்டால் அது வேறு, இது வேறு என்று சொல்கிறார்கள். கிராமப்புற விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களைக் குறைந்த சம்பளத்துக்கு அமர்த்தி, அவர்களது உழைப்பை ஒட்டச் சுரண்டி, பல கோடிகளைக் குவித்துள்ளார் இம்முதலாளி. மாறாக இன்று தொழிலாளர்களெல்லாம் குடும்பமாகி, எல்லாப் பொருட்களும் ஒன்றுக்கு பத்து மடங்கு விலை உயர்ந்து நிற்கும் விஷச் சூழலில் வாழக் கூட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இதுவரை இப்பகுதியில் உள்ள 3 ஆலைகளின் தொழிலாளர்களும், தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தியதே இல்லை. ஆனால் இம்முறை அனைத்துத் தொழிலாளர்களும், சங்கங்களும் ஒருமித்து ஒற்றுமையாகப் போராடுகிறார்கள் என்றால், அதற்கு காரணம் எல்லா தொழிலாளர்களும் ஒரே மாதிரியான வாழ்க்கை நெருக்கடியைச் சந்திப்பது தான். ‘மூத்த தொழிலாளர்களுக்கு ரூ 5 ஆயிரம் சம்பள உயர்வு, 3 ஆண்டுக்கு ஒருமுறை ஊதிய உயர்வுக்கான ஒப்பந்தம், முன் தேதியிட்டு ஊதிய உயர்வு’ ஆகிய முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்துப் போராடும் தொழிலாளர்களுக்கு பேச்சுவார்த்தையின் போது ‘ஊதிய உயர்வில் ரூ. 1000 க்கு மேல் சல்லிக்காசு கூட தர முடியாது’ என்று நிர்வாகம் சண்டித்தனம் செய்து வருகின்றது.

தொழிலாளர்களது அழைப்பின் பேரில் 26.4.12 அன்று ஆலை வாயிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மதுரை மாவட்ட மனித உரிமைப் பாதுகாப்பு மையச் செயலாளர் தோழர் லயனல் அந்தோணிராஜ் கலந்து கொண்டு உரையாற்றினார். நூற்றுக்கணக்கில் திரளாகத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். தொழிலாளர்களின் போராட்டத்துக்கு எல்லா வகையிலும் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் ஒத்துழைப்பு நல்கும் என்று உறுதியளிக்கப்பட்டது. தொடர்ச்சியான இப்போராட்டம் தொழிலாளர்களிடையே வர்க்க ஒற்றுமையையும், புதிய நம்பிக்கையை தோற்றுவித்துள்ளது.

_______________________________________________

– மனித உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரை

________________________________________________

வினவுடன் இணையுங்கள்

டீனேஜ் பெண்ணின் கர்ப்பம் முதலில் கடைக்காரனுக்கு தெரிந்ததெப்படி?

16

தனியார் துப்பறியும் நிறுவனங்களைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்தியாவில் இருக்கும் மேட்டுக்குடியினர் தமது வாரிசுகளின் மண உறவு, கள்ள உறவு குறித்த உண்மைகளைக் கண்டுபிடிப்பதற்கு இவர்களைப் பயன்படுத்துகிறார்கள். அமெரிக்காவில் அதற்கும் மேலே போய் ’ஒரு மனிதன் என்ன பொருள் வாங்குகிறான்’ என்று கண்டுபிடிப்பதற்குக் கூட ஆள் வைத்து அறிந்து கொள்கிறார்கள். அதாவது எல்லா பேரங்காடிகளையும் நடத்தும் நிறுவனங்களுக்கு இத்தகைய புலனாய்வுப் புலிகள்தான் முக்கியமானவர்கள்.

அமெரிக்காவில் இருக்கும் டார்கெட் எனும் சங்கிலித்தொடர் பல்பொருள் அங்காடியில் நுழையும் அந்த மனிதர் கடையின் மேலாளரைப் பார்த்து ”என் மகள் இப்பொழுது ஹைஸ்கூல் தான் படிக்கிறாள். அவளுக்கு ஏன் கர்ப்பமுற்றோர்களுக்கு உதவும் பொருட்கள் மீதான சலுகைக் கூப்பன்களை அஞ்சலில் அனுப்பியுள்ளீர்கள்?” என்று கோபமாகக் கேட்கிறார். மேலாளர் ”ஏதாவது தவறு நடந்திருக்கலாம்” என மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

இரண்டு நாள் கழித்து அதே நபர் மீண்டும் கடைக்குள் வருகிறார். கடையின் மேலாளரிடம் சென்று தன் மகள் உண்மையில் கர்ப்பமுற்றிருப்பதாகவும், ஒரு வழியாக அவள் காதலன் திருமணத்திற்கு சம்மதித்து விட்டதாகவும் கூறி, அவளுக்குச் சில பொருட்களை வாங்க வந்திருக்கிறேன் என்கிறார். மீண்டும் அவர் வீட்டிற்கு டார்கெட்டிலிருந்து கூப்பன்கள் வரத் துவங்குகின்றது.

மேலே நீங்கள் படித்தது ஒரு உண்மைச் செய்தி. மகள் கர்ப்பமுற்றாள் என்பது அப்பனுக்கும் தெரியாது, ஆண்டவனுக்கும் தெரியாது எனும் போது ஒரு கடைக்காரனுக்கு மட்டும் தெரிந்தது எப்படி? இது வெறும் மாயவித்தை அல்லது எதேச்சையானது என்றால் அடிக்க வந்து விடுவார்கள் டார்கெட் நிறுவன மார்கெட்டிங் பிரிவினர். இப்படித் தங்கள் வாடிக்கையாளர்கள் வீட்டில் யாராவது கர்ப்பமாக இருக்கிறார்களா என்பதைக் கண்டுபிடிக்க பல இலட்சம் ரூபாய்களை மாதச் சம்பளமாகக் கொடுத்து தேர்ந்த புள்ளியியல் நிபுணர்களையும், உளவியல் மருத்துவர்களையும் புலனாய்வுப் பணிக்கு அமர்த்தியிருக்கிறது டார்கெட்.

கர்ப்பமானவர்களை ஏன் பல்பொருள் அங்காடி மார்கெட்டிங் பிரிவு கண்டுபிடிக்க வேண்டும்? ஒருவர் கர்ப்பமாக இருக்கிறார் என்று எப்படிக் கண்டுபிடிப்பார்கள்? இதைப் புரிந்து கொள்ள நாம் இன்னொரு நபரைச் சந்திக்க வேண்டும். அவர் ரிச்சர்டு.

ரிச்சர்டு ஒரு சாதாரண அரசு ஊழியர். ஆனால் சேமிப்பைப் பெரிதும் விரும்புபவர். தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்க மாட்டார். கடன் அட்டையைக் கச்சிதமாகப் பயன்படுத்துவார். தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்பதால் போதுமான அளவு சேமிப்பில் பணம் வைத்திருந்தார். அந்த நாளும் வந்தது; அவர் மனைவி கருவுற்றார். சில நாட்கள் கழித்து டார்கெட் அங்காடியில் இருந்து கருவுற்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பொருட்கள் மீதான சலுகைக் கூப்பன்கள் அவருக்கு அஞ்சலில் வந்தன. சரி சலுகையில்தானே என்று கவரப்பட்டு கருவில் இருக்கும் குழந்தைக்காகவும், தன் மனைவியின் உடல் நலத்திற்காகவும் சில பொருட்களை வாங்கினார்.

சில நாட்கள் கழித்து பிற உபயோகிக்கும் பொருட்கள் மீதும் சலுகைக் கூப்பன்கள் வர ஆரம்பித்தன. முதலில் 50% கழிவு என வந்த கூப்பன்கள் மெல்ல 30, 20, 15 சதவீதம் எனக் குறையத் தொடங்கின. இதை ரிச்சர்டு கவனித்தாலும், விலை குறைகிறது இலாபம் தானே என்று பார்த்தார். இன்னொரு பக்கம் அவர் மனைவி பல பொருட்கள் உபயோகமற்றிருப்பதாகவும் சுட்டிக் காட்டினார். ரிச்சர்டு காதில் எதனையும் வாங்கவில்லை. தாம் எவ்வளவு புத்திசாலித்தனமாக மலிவு விலையில் பொருட்களை வாங்குகிறோம் என்பதில் அவர் அசாத்திய மேதை போல நினைத்திருந்தார்.

மெல்ல ரிச்சர்டு அந்தக் கடையில் உறுப்பினர் ஆனார். அவர் அந்தக் கடையில் எது வாங்கினாலும் 5 சதவிகிதக் கழிவு என்றனர். ரிச்சர்டு அலுவலகம் விட்டும் வரும் வழியில் அந்தக் கடைக்குச் சென்று ஏதாவது வாங்க ஆரம்பித்தார். அலுவலக நெருக்கடி, மன உளைச்சல், வீட்டில் சண்டை, நேரம் கடத்த வேண்டும் என்றாலும் அவர் டார்கெட்டில் நுழைந்து கடையைச் சுற்றி வர ஆரம்பித்தார். அது அவர் மனதை ஆசுவாசப்படுத்தியது. டார்கெட் உள்ளே நுழைந்தாலே ஒரு டாலருக்காவது ஏதாவது வாங்கி விடுவார். கடன் அட்டையில் கடன் அதிகமாகி விட்டது. இப்பொழுது ரிச்சர்டு மனதளவில் அந்தக் கடைக்கு ஒரு அடிமையாகி விட்டார்.

அத்தியாவசியத்திற்கும், தேவைக்கும் வாங்கியது போய் கடைக்குள் நுழைந்து ஏதாவது வாங்கியே ஆக வேண்டுமென்ற அப்ளூயன்சா (Affluenza – நுகர்வுக் கலாச்சார மன நோய்) நோய்க்கு ஆளானார். இது ஏதோ ஒரு ரிச்சர்டுக்கு உள்ள நோய் என்று நினைத்து விடாதீர்கள். முழு அமெரிக்காவுக்கும் உள்ள நோய். இந்தியாவிலும் நடுத்தர வர்க்கத்திடம் பரவி வரும் நோயும் இதுவே.

இந்த நோயை ’தேர்ந்த விஞ்ஞானம்’ என்கிறார்கள் டார்கெட் நிறுவனத்தினர். ஆனால் நாமோ இதைப் ’பகற்கொள்ளை, பொறுக்கித்தனம்’ என்கிறோம்.

நுகர்வு-கலாச்சாரம்-1

தனியார் பலர் நுழைந்தால் ஏற்படும் அவர்களுக்குள்ளான போட்டியினால் பொருட்கள் விலை குறையும் என்பது முதலாளித்துவ ஆதரவாளர்களின் வாதம். ஆனால் முதலாளித்துவமோ விலையைக் குறைத்து விற்று நட்டத்தை (குறைவான இலாபத்தை) ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. அதனால், அதே விலைக்கு அனைத்தையும் வாங்கிக் குவிக்க வேண்டும் என்ற  மனநிலையை வாடிக்கையாளர்களின் மத்தியில் உருவாக்குவது தான் அந்நிறுவனங்கள் இலாபத்தைக் குறையாமல் பெறுவதற்கான ஒரே வழி. குடிப்பழக்கம், புகைப் பழக்கம் மாதிரி வாங்கும் பழக்கம் என்பதை மக்களிடம் உருவாக்க வேண்டும். இதைத்தான் டார்கெட் உள்பட பல நிறுவனங்கள் செய்கின்றன.

உலக அளவில் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் கணித வல்லுநர்களையும், புள்ளியியல்  நிபுனர்களையும் புலனாய்வுப் பணியில் அமர்த்தியிருப்பதன் இரகசியம் இதுதான். இவர்களின் வேலை, வாடிக்கையாளரை வேவு பார்த்து அவர்கள் என்ன வாங்குகிறார்கள், அவர்களை எப்படி வாங்க வைக்கலாம் என்று ஆய்வு செய்து, கடையில் எதையாவது வாங்கியே தீர வேண்டும் என்பதை வாடிக்கையாளர்களுக்கு ஒரு பழக்கமாகவே மாற்ற வேண்டும்.

புதிதாக முளைத்திருக்கும் இந்தத் துறை, வாடிக்கையாளரின் கடன் அட்டை, வங்கிக் கணக்கு, செல்பேசி எண், முகவரி இவற்றை வைத்து தொடர்ந்து என்ன வாங்குகிறார்கள் என்று வேவு பார்க்கும். அவர்கள் பணத்தை உபயோகித்தால் நிறுவனமே முன் வந்து அவர்களுக்கு உறுப்பினர் அட்டை கொடுக்கும். அதை உபயோகித்தால் தள்ளுபடி கிடைக்கும் என்பார்கள். ஆனால் உண்மையில் வாடிக்கையாளர்களை வேவு பார்க்கத்தான் உறுப்பினர் அட்டையைப் பயன்படுத்துகிறார்கள். நீங்கள் ஒரு குறிப்பிட்ட பொருளை வாங்கினால், அதைச் சார்ந்த பிற பொருட்களின் மேல் தள்ளுபடி என போலி கூப்பன்கள் மூலம் உண்மை விலைக்கு தேவையற்ற பொருட்களை வாங்க வைக்க முயற்சிப்பார்கள்.

இன்னொரு பக்கம் அவர்களின் முக்கிய கண்டுபிடிப்பு, குழந்தை பிறக்கப் போகும் வீட்டில் வாங்கும் பழக்கம் அதிகரிக்கும் என்பது. அதனால் மருத்துவமனை முதல் குழந்தைகள் பிறப்பு தகவல் மையம் வரை உள்ள தகவல்களைச் சேகரித்து, அந்தப் பெற்றொர்களுக்குப் போலியான தள்ளுபடி கூப்பன்களை அனுப்பி அவர்களை பொருட்கள் வாங்க வைப்பார்கள்.

குழந்தை பிறக்கும் வரை ஏன் காத்திருக்க வேண்டும், பெண்கள் வாங்கும் பொருட்களை ஆராய்ந்தாலே கர்ப்பிணிகள் குறிபிட்ட பொருட்களை வாங்குவார்கள் என்று தெரியும். ஒரு பெண் குறிப்பிட்ட ஒரு மாதத்தில் கிருமி நாசினி சோப், பஞ்சு, சில லோஷன்களை வாங்குகிறார்; அவரே 2 மாதம் கழித்து கிருமி நாசினி, இரும்புச் சத்து மாத்திரைகளை வாங்கினால் அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்று கணிக்கிறார்கள். கணிப்பு 90 சதவிகிதம் சரியாகவே இருக்கின்றது. அவ்வளவுதான், அவர்களைக் கண்காணித்து, தங்கள் வளையத்துக்குள் கொண்டு வந்து, மெல்ல வாங்கும் பழக்கத்திற்கு அடிமையாக்கி விடுவார்கள்.

தேவைக்குப் பொருட்கள் என்பதை ஒழித்து, நோக்கமற்று வாங்குவதையே பழக்கமாக உருவாக்க அந்த நிறுவனம் மனநல நிபுணர்களை வேலைக்கமர்த்தவும் தயங்கவில்லை. இன்னொரு புறம் விலைவாசி ஏறி விட்டிருக்கும் இந்த நாட்களில் தள்ளுபடி கூப்பனை உபயோகிக்க வேண்டும் என்று எந்த மனமும் சொல்லும். கட்டுப்படியாகாத விலை என்பதன் மறுபக்கம்தான் இந்தத் தள்ளுபடி மயக்கத்தைத் தோற்றுவிக்கும் கூப்பன்கள். ஆக விலை உயர்வினால் மட்டும் மக்கள் அவதிப்படவில்லை. விலை குறைவு போல தோற்றமளிக்கும் இந்த தள்ளுபடி போதையாலும் துன்பப்படுகிறார்கள்.

உங்களைத் திட்டமிட்டு அடிமையாக்குவது, அதைக் கலாச்சாரமாகத் திணிப்பது இன்றைய தனியார்மயத்தின் அடிப்படை விதி. நீங்கள் வாங்கியே ஆக வேண்டும். பணத்தை சேமிப்பதை விட அதைச் செலவழிக்க வேண்டும். மக்களைச் செலவழிக்கும் எந்திரங்களாக மாற்றி ரத்தத்தை உறிஞ்சுவதுதான் முதலாளிகளின் இன்றைய நிலை.

அமெரிக்க அரசு யார் தீவிரவாதிகள் என்பதற்காக மக்களை உளவு பார்க்கின்றது. அமெரிக்க முதலாளிகள் யார் கையில் பணம் இருக்கிறது என்று உளவு பார்க்கிறார்கள்.

____________________________________________

– புதிய கலாச்சாரம், மே – 2012

____________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

பதனி டோலா படுகொலை தீர்ப்பு: நீதிமன்றத்தின் நாட்டாமைத்தனம்!

3

பதனி-டோலா‘‘தாழ்த்தப்பட்டோரின் உரிமைகளை நிலைநாட்டுவது, பாதுகாப்பது ஆகியவை குறித்து மாநில உள்துறை அமைச்சர்கள் மாநாடைக் கூட்டப் போவதாக” மைய அரசு டாம்பீகமாக அறிவித்த இரண்டாவது நாளே, அதனின் முகத்தில் சாணியை அடித்தாற்போன்றதொரு தீர்ப்பை பீகார் மாநில உயர் நீதிமன்றம் அளித்திருக்கிறது.  பீகாரிலுள்ள பதனி டோலா கிராமத்தில் 16 ஆண்டுகளுக்கு முன்பு தாழ்த்தப்பட்ட சாதி மற்றும் முசுலீம் மதத்தைச் சேர்ந்த 21 பேரை, ரன்வீர் சேனா என்ற ஆதிக்க சாதி நிலப்பிரபுக்களின் குண்டர் படை படுகொலை செய்த வழக்கில், கீழமை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட 23 குற்றவாளிகளையும் விடுதலை செய்து அளித்த தீர்ப்புதான் அது.

பதனி டோலாவில் நடந்த படுகொலை தமிழகத்தில் கீழ்வெண்மணியில் நடந்த படுகொலைக்கு இணையானது.  அப்பகுதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட கூலி விவசாயிகள், தங்களுக்கு வழங்கப்படும் கூலியை முப்பது ரூபாயாக உயர்த்திக் கொடுக்க வேண்டும் எனக் கோரி, சி.பி.ஐ. (எம்.எல்.)  லிபரேஷன் என்ற கட்சியின் தலைமையில் அணிதிரண்டு போராடி வந்தனர்.  கூலி விவசாயிகள் சங்கமாக அணிதிரண்டு தமது ஆதிக்கத்தை எதிர்த்து நிற்பதையும் கூலிஉயர்வு கேட்பதையும் பொறுத்துக்கொள்ள முடியாத ஆதிக்க சாதிகளான ராஜ்புத் மற்றும் பூமிகார் சாதிகளைச் சேர்ந்த நிலப்பிரபுக்கள், தாழ்த்தப்பட்ட கூலிவிவசாயிகளுக்குப் பாடம் கற்றுக் கொடுக்க நடத்திய படுகொலைதான் பதனி டோலா படுகொலை.

ரன்வீர் சேனா ஜூலை 21, 1996 அன்று நடத்திய அத்தாக்குதலின்பொழுது, நய்முதீன் என்பவரின் மூன்று மாதப் பெண் குழந்தை மேலே தூக்கியெறியப்பட்டு, கொடுவாளால் பந்தாடப்பட்டுக் கொல்லப்பட்டது.  இப்பச்சிளங்குழந்தையின் மரணம் ஒன்றே அப்படுகொலை எந்தளவிற்கு காட்டுமிராண்டித்தனமான முறையில் நடத்தப்பட்டது என்பதை எடுத்துக்காட்டும்.  ஏறத்தாழ மூன்று மணி நேரம் நடத்தப்பட்ட அத்தாக்குதலில் இறந்துபோன 21 பேரில், 20 பேர் பெண்களும், சிறுவர்களும், குழந்தைகளும்தான்.

இப்படுகொலை நாடெங்கும் அம்பலமாகி, பலத்த கண்டனங்களையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியதால், படுகொலை நடந்த மறுநாளே பாதிக்கப்பட்டோரிடமிருந்து வாக்குமூலம் பெற்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டிய கட்டாயம், அப்பொழுது ஆட்சியிலிருந்த லல்லு அர”க்கு ஏற்பட்டது.  ஆனாலும், கீழமை நீதிமன்றத்தில் இவ்வழக்கின் தீர்ப்பு பதினான்கு ஆண்டுகள் கழித்துதான் வந்தது.  இவ்வழக்கில் 63 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தாலும்,  கீழமை நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருந்தபொழுதே, நான்கு பேர் இறந்து போனார்கள்; ஐந்து பேர் பாட்னா உயர் நீதிமன்றத்தால் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்; ஒருவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். மீதிப் பேரில், 30 பேரை வழக்கிலிருந்து விடுதலை செய்த கீழமை நீதிமன்றம், 3 பேருக்குத் தூக்கு தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து மே, 2010  இல் தீர்ப்பளித்தது.  பாட்னா உயர் நீதிமன்றம் தற்பொழுது இத்தீர்ப்பை தள்ளுபடி செய்து, 23 குற்றவாளிகளையும் நிரபராதிகள் என அறிவித்து விடுதலை செய்துவிட்டது.

ரன்பீர்-சேனா-பதனி-டோலா
படுகொலைக்கு காரணமான ரன்வீர் சேனா, ஆதிக்க சாதியின் கொலைப்படை

பாட்னா உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த நவ்நீதி பிரசாத் சிங், அஷ்வாணி குமார் சிங் என்ற இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு மன்றம் வழங்கிய இத்தீர்ப்பில் அதிகாரவர்க்கத்திற்கேயுரிய குதர்க்கப் புத்தியும், ஆதிக்க சாதி மனோபாவமும் பின்னிப்பிணைந்து வெளிப்பட்டுள்ளது.  இவ்வழக்கில் படுகொலையிலிருந்து தப்பிப் பிழைத்தோர்தான் முக்கிய சாட்சியங்கள்.  சாதி மற்றும் வர்க்கப் படிநிலையில் அடிமட்டத்தைச் சேர்ந்த அவர்களது சாட்சியங்களை நம்ப முடியாது என ஒதுக்கித் தள்ளியதோடு, அவர்களைப் பொய்யர்கள், கட்டுக்கதை சொல்பவர்கள், நம்பத்தகாதவர்கள் என ஆதிக்க சாதிக் கொழுப்பெடுத்து அவமதித்துள்ளனர், நீதிபதிகள்.

‘‘ரன்வீர் சேனா பதனி டோலாவில் வசிக்கும் அனைவரையும் கொல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு வந்ததாகக் கூறும்பொழுது, அவர்கள் தங்களை மட்டும் எப்படி உயிரோடு தப்பவிட்டிருப்பார்கள்?  நீங்கள் புதர்களுக்கு அருகே மறைந்துகொண்டு சம்பவத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தபொழுதே, ரன்வீன் சேனா தங்களைத் தேடி வந்து கொன்று போட்டிருக்காதா?” எனக் குதர்க்கமாகக் கேள்விகளை எழுப்பி, சம்பவத்தைப் பார்த்த நேரடி சாட்சியங்களைப் பொய் சாட்சியங்கள் என ஒதுக்கித் தள்ளியுள்ளனர், நீதிபதிகள்.

பதனி-டோலாஇந்த ஏழைகளின் சாட்சியங்களுக்கு உள்நோக்கம் கற்பித்து ஒதுக்கித் தள்ளிய நீதிபதிகள், ஆதிக்க சாதியைச் சேர்ந்த 23 குற்றவாளிகளையும் அப்பாவிகள் எனத் தமது தீர்ப்பில் குறிப்பிட்டு உருகியுள்ளனர்.  மேலும், இக்குற்றவாளிகளுள் மூன்று பேர் சம்பவம் நடந்தபொழுது சிறுவர்களாக இருந்தனர் என்றும், அவர்கள் தேவையில்லாமல் தண்டனை அனுபவித்துள்ளனர் என்றும் குறிப்பிட்டு, தீர்ப்பிலேயே வருத்தம் தெரிவித்துள்ளனர் நீதிபதிகள்.  மனுகூட இப்படிப்பட்ட தீர்ப்பை எழுதக் கூச்சப்பட்டிருப்பான்.  ஆதிக்க சாதி பாசத்தால் இத்தீர்ப்பு எழுதப்பட்டுள்ளது என்பது பச்சையாகத் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகவே, போலீசு நடத்திய புலன் விசாரணையில் உள்ள ஓட்டைகளையும் பட்டியலிட்டு, குற்றவாளிகளை விடுதலை செய்துள்ளனர், நீதிபதிகள்.

பாட்னா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக நிதிஷ்குமார் அரசு அறிவித்த மறுநிமிடமே, அவரது அமைச்சரவையைச் சேர்ந்த கிரிராஜ் சிங், “பதனி டோலாவை இதோடு கிள்ளி எறிந்துவிட வேண்டும்; இப்பிரச்சினையை மேலும் மேலும் விவாதத்திற்கு உள்ளாக்குவது, நிலைமையை மோசமடையச் செய்யும்” என எச்சரித்தார்.  இந்த எச்சரிக்கையை நிதிஷ்குமாரின் நல்லாட்சியில் ஒட்டிக்கொண்டுள்ள ஆதிக்க சாதிவெறி பிடித்த ஏதோவொரு அமைச்சரின் குரலாக ஒதுக்கித் தள்ளிவிடமுடியாது.

ரன்வீர் சேனாவிற்கும் ஓட்டுக்கட்சிகளுக்கும் இடையேயுள்ள தொடர்பை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த அமிர் தாஸ் விசாரணை கமிசனை, நிதிஷ்குமார், தான் முதலமைச்சராகப் பதவியேற்றவுடனேயே கலைத்து உத்தரவிட்டார்.  இத்தீர்ப்பு வெளிவருவதற்கு ஏறத்தாழ ஒரு வருடம் முன்பாக, ரன்வீர் சேனாவின் தலைவனும் பதனி டோலா படுகொலையைத் தலைமை தாங்கி நடத்தியவனுமான பிரம்மேஷ்வர் சிங்கிற்குப் பிணை வழங்குவது தொடர்பான வழக்கில், பிணையை மறுத்து வாதாடாமல், அவனை மேளதாளத்தோடு வழியனுப்பி வைத்தது, நிதிஷ்குமார் அரசு.

பதனி-டோலாஅவரது அரசு பெயரளவிற்கான நிலச் சீர்திருத்த நடவடிக்கைகளைக்கூட எடுக்க மறுத்து, ஆதிக்க சாதி நிலப்பிரபுக்களுக்குச் சாதகமாகவே நடந்து வருகிறது.  ஆதிக்க சாதி நிலப்பிரபுக்களுக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் இடையேயான நிலப்பிரச்சினையொன்றில், அமாவ்ஸி என்ற பகுதியில் நடந்த அடிதடி  கொலை வழக்கில் குற்றஞ்சுமத்தப்பட்ட 14 தாழ்த்தப்பட்டோரில் 10 பேருக்குத் தூக்கு தண்டனையும், 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.  பாட்னா உயர் நீதிமன்றம் பதனி டோலா வழக்கில் ஆதிக்க சாதிவெறியர்களுக்கு விடுதலை வழங்கிய அதேநேரத்தில் நிலத்திற்காகப் போராடிய தாழ்த்தப்பட்டோருக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  இத்தீர்ப்பு சாதிவெறியின் அடிப்படையில் வழங்கப்படவில்லை, சட்டப்படியே அளிக்கப்பட்டுள்ளது எனக் காட்டிக் கொள்வதற்காகவே, அத்தாழ்த்தப்பட்டோர் அனைவரும் மாவோயிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் எனச் சாட்சியங்கள் சோடிக்கப்பட்டன.

இந்தப் பின்னணியிலிருந்து பார்த்தோமானால், பாட்னா உயர் நீதிமன்றத் தீர்ப்பு, ஆதிக்க சாதி மனோபாவம் கொண்ட ஏதோ இரண்டு நீதிபதிகளின் உள்ளக்கிடக்கையல்ல என்பதையும் நிதிஷ்குமாரின் நல்லாட்சி என்பது ஆதிக்க சாதிக் கும்பலின் விசுவாச ஆட்சி என்பதையும் புரிந்துகொள்ளலாம்.  அவரது ஆட்சியைப் புகழ்ந்து தள்ளிவரும் தேசியப் பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும்கூட இத்தீர்ப்பு குறித்து அடக்கியே வாசிக்கின்றன.  ஜெஸிகா லால் கொலை வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதைக் கண்டித்து வானத்துக்கும் பூமிக்குமாக சாமியாடிய ஊடகங்களின் மனசாட்சி, இந்தப் பிரச்சினையில் ஊமையாக இருப்பதேன் என்ற கேள்வியை எழுப்பிப் பாருங்கள், அவைகளின் ஆதிக்க சாதிவெறிப் பாசமும் அம்பலப்பட்டுப் போகும்.

_________________________________________

– புதிய ஜனநாயகம், மே-2012

__________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

இளமையின் கீதம் – சீனத் திரைப்படம், வீடியோ!

5
இளமையின்-கீதம்

இளமையின்-கீதம்

யாங் மோ
யாங் மோ

சீனப் புரட்சியின் பின்னணியில் ஒரு பிற்போக்கான குடும்பத்தை சேர்ந்த டாவொசிங் எனும் பெண் புரட்சியில் பங்கெடுக்கும் உணர்வுப்பூர்வமான புதினத்தை ‘இளமையின் கீதம்’ என்ற பெயரில் யாங் மோ எழுதினார். இப்புதினத்தைப் பற்றி ஏற்கெனவே புதிய கலச்சாரத்தில் ஒரு அறிமுகக் கட்டுரை வந்திருக்கிறது. இப்புதினம் சீனாவில் திரைப்படமாக எடுக்கபட்டிருக்கிறது. அந்தத் திரைப்படத்தின் பகிர்வே இப்பதிவு. இந்தப் படத்திற்கு யாங்மோ கச்சிதமான திரைக்கதையையும் எழுதியிருக்கிறார். புதினத்தின் மையக்கருத்தை சிதைக்காமல் டாவொசிங்கின் பாத்திரத்தை திரையில் உயிருடன் உலவ விட்டிருக்கிறார்கள். வடிவம் உள்ளடக்கம் என அனைத்திலும் சிறப்பானதொரு திரைப்படம்.

கதை:

மிகப் பிற்போக்கான சீனக் குடும்பத்தை சேர்ந்தவர் டாவொசிங் எனும் பெண். அவள் அம்மா சீன கோமிங்டாங் கட்சியில் போலிசாக பணிபுரியும் ஒருவருக்கு அவளை மணமுடிக்க முயற்சி செய்கிறார். அந்தத் திருமணத்தில் இருந்து தப்பிக்கும் டாவோசிங் தன் உறவினரைத் தேடி வேறு ஊருக்கு வருகிறாள். உறவினர் அந்த ஊரை விட்டே சென்று விட்ட நேரத்தில் கடலில் விழுந்து தற்கொலை செய்துகொள்ள முயற்சிக்கிறாள். அவளை அந்த ஊரைச் சேர்ந்த யுயுவாங் காப்பாற்றுகிறான். அவன் ஒரு பல்கலைக்கழக மாணவன்.

யுயுவாங்கிற்கும், டாவொசிங்கிற்கும் காதல் மலர்கிறது. யுவாங் படிப்பதற்கு நகரம் செல்ல டாவொசிங் அந்த ஊரிலேயே ஆசிரியராகப் பணிபுரிகிறாள்.

அந்த காலகட்டத்தில் ஜப்பான் சீனா மீது ஆக்கிரமிப்புப் போர் தொடுக்கிறது. அடிமையாக வாழ விருப்பமில்லாத டாவோ ‘சீனா எதிர்த்துப் போரிட வேண்டும், ஜப்பானை வீழ்த்த வேண்டும்’ என்று நினைக்கிறாள். அதைத் தன் மாணவர்களுக்கு பாடமாகவும் நடத்துகிறாள். ஆனால் ‘அரசியலை எல்லாம் மாணவர்களுக்கும் சொல்லிக் கொடுக்கக் கூடாது’ என்று தலைமையாசிரியரிடமிருந்து கணடனம் வர கோபமாக வேலையை விட்டு விட்டு, நகரத்தை நோக்கி செல்கிறாள். வழியில் சீன கம்யூனிஸ்ட் தோழர்கள் ‘ஜப்பானை எதிர்த்துப் போரிட வேண்டும். நாட்டிற்கு புரட்சி வேண்டும்’ என்று முழக்கமிடுவதைக் கண்டு மகிழ்கிறாள். நகரத்திற்கு செல்லும் டாவோ யுயுவாங்கைச் சந்தித்து அவனுடன் ஒன்றாக வாழ்கிறாள்.

ஒரு நாள் இரவு புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது நண்பர்கள் மத்தியில் சீன நாட்டின் அடிமைத்தனத்தைப் பற்றி கொந்தளிப்பான பேச்சு வருகின்றது. அந்த நேரத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவரான தோழர் லுஷூவை டாவொசிங் சந்திக்கிறாள். லுஷூ மாவோ, சூடே தலைமையிலான சிவப்பு ராணுவம் வீரத்துடன் சண்டையிட்டு ஜப்பானை வீழ்த்தி வருவதாகவும், விரைவில் அமெரிக்க அடிவருடி சாங்கேஷேக்கை விரட்டிவிட்டு சீனா ஒரு புரட்சிகரப் பாதையில் நடைபோடும் என்றும் கூறுகிறார். இதைக் கேட்டு டாவொசிங் மகிழ்ச்சி கொள்கிறாள். தானும் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர வேண்டும் என விருப்பம் தெரிவிக்கிறாள். லுஷூ அவளை மார்க்ஸியம் பயிலச் சொல்கிறார்.

மார்க்ஸியத்தை படிக்க ஆரம்பிக்கிறாள் டாவோ. மார்ச் எட்டாம் தேதி நடக்கும் மகளிர் தினக்  கூட்டத்தின் போது போலிசு கலகம் விளைவித்து கம்யூனிஸ்டுகளைக் கைது செய்ய முயல்கிறது. கைதிலிருந்து முக்கிய கம்யூனிஸ்டுகள் தப்பித்தாலும். டயூ மாட்டிக் கொள்கிறான். மாட்டியவன் போலிசின் ஆட்காட்டியாகி விடுகிறான்.

லுஷு தலைமறைவாக இருக்கும் போது டாவொவை சந்தித்து ஒரு பொட்டலத்தைக் கொடுக்கிறார். அதை மறைத்து வைக்குமாறும், ஒரு வேளை மூன்று வாரங்களில் தான் வரவில்லை என்றாள் அதை எரித்து விடுமாறும் சொல்லுகிறார்.

டாவொசிங்கின் இந்த கம்யூனிச நட்பு யுயுவாங்கிற்கு பிடிக்கவில்லை. ஆனால் டாவொசிங் ‘வீட்டில் சுயநலமாய் வாழ்வதை விட நாட்டிற்காகப் போராட வேண்டும்’ என்கிறாள். கருத்து வேறுபாடு முற்றி இருவரும் பிரிகிறார்கள். மறுபுறம் லூஷு கைது செய்யப்படுகிறார்.

சிறையில் லுஷு சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்படுகிறார். மறுபுறம் அனைத்து தோழர்களும் தலைமறைவாகி விட, என்ன செய்வதென்று தெரியாத அவள் தோழர் லுஷூ கொடுத்த பொட்டலத்தைப் பிரிக்கிறாள். அதில் சிவப்பு வண்ணத்தில் எழுதிய முழக்கங்கள் இருக்கின்றன. இரவோடு இரவாக வீதி வீதியாகப் போய் அதை ஒட்டிவிட்டு வருகிறாள். அந்த நகரம் முழுவதும் பரபரப்படைகிறது. போலிசார் உஷார்ப்படுத்தப் படுகிறார்கள். விளைவு டாவோ போலிசு கண்காணிப்பில் வருகிறாள். அவள் யாரைத் திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்று முதலில் வீட்டைவிட்டு வந்தாளோ அவரே அவளைக் கண்காணிக்கும் போலிசு படையின் தலைவர்.

அங்கிருந்து தந்திரமாகத் தப்பி வேறு ஒரு கிராமத்திற்கு போய் அங்கே ஆசிரியராக அமர்கிறாள். அங்கு பழைய தோழர்களைச் சந்திக்கிறாள். அந்த கிராமத்தில் நடக்கும் கூலி விவசாயிகளின் போராட்டத்தில் பங்கெடுத்து அதனை வெற்றிகரமாக முன்னெடுத்து நடத்துகிறார்கள்.

அங்கிருந்து பெய்ஜிங் போகிறாள். ஆனால் பெய்ஜிங்கில் போலிசாரால் கைது செய்யப்படுகிறாள். சிறையில் முன்னர் சந்தித்த தோழர் சிங் எனும் பெண்மணியை மீண்டும் சந்திக்கிறாள். இருவரும் ஒரே சிறையில் அவதிப்படுகிறார்கள். கொடுமைகள், சித்திரவதைகள் எதற்கும் சிங் அஞ்சாததைக் கண்டு ஆச்சரியமடைகிறாள். அப்பொழுது சிங் ஒரு கம்யூனிஸ்ட் தோழரின் கதையைச் சொல்கிறாள். அந்தத் தோழர் கைது செய்யப்பட்டு சிறைக்கு வருகிறார். ஆனால் சிறையில் வழக்கம் போல் காலை எழுந்து உடற்பயிற்சி செய்கிறார்; மற்றவர்களுக்கு கம்யூனிசம் கற்றுக் கொடுக்கிறார்; காவலர்களுடன் நட்பாகப் பழகுகிறார்; மகிழ்ச்சியாக சிறை வேலைகளைச் செய்கிறார்.

அவருக்குத் தூக்குத்தண்டனை உறுதியாகிறது; ஆனால் அவர் வாழ்க்கையில் ஒரு சிறு மாற்றமுமில்லை. அதே உற்சாகத்துடன் தினமும் சிறையில் கழிக்கிறார். தண்டனை நாள் அன்று அனைவருக்கும் கைகுலுக்கி விடைபெற்று மைதானத்திற்குள் நுழையும் விளையாட்டு வீரனைப் போல மகிழ்ச்சியாகச் செல்கிறார்.

அவர் தோழர் சிங்கின் கணவர். அவரைப் பார்த்து வியப்படைந்த அனைத்துத் தோழர்களுக்கு சொல்லுவது ஒன்றேதான், ‘நான் மற்றவர்கள் மாதிரி வாழ்க்கையை வெட்டியாக வாழவில்லை, ஒரு கம்யூனிஸ்டாக அனைவருக்கும் பயனுள்ள வாழ்க்கையை நான் வாழ்கிறேன். சிறை, சமவெளி எங்கும் கம்யூனிஸ்டின் வாழ்க்கை மக்களுடன் உறவாடுவது தான்; அதை நான் செய்கிறேன், எனக்கு மரணத்தைப் பற்றி பயமில்லை’ என்கிறார். அந்தத் தோழரின் கதையை கேட்டு டாவோ உற்சாகம் அடைகிறாள். தன் சிறைப் பொழுதுகளையும் உபயோகமாகக் கழிக்கிறாள்.

மீண்டும்  பீஜிங் வருகிறாள். அங்கு சிவப்பு ராணுவமும், சீன கொமிண்டாங் அரசும் ஒருங்கிணைந்து முன்னனி ராணுவப்படையை ஜப்பானுக்கு எதிராக கட்டுகிறது. இறுதியில் இவ்வளவு போராட்டங்களுக்கு பின், சீன கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினராகிறாள். வாழ்வின் மிகவும் மகிழ்ச்சியான நாள் அதுதான் என்பதைப் புரிந்து கொள்கிறாள் டவோசிங்.

டாவொசிங் கட்சி உறுப்பினர் உறுதிமொழியேற்க, சர்வதேசிய கீதம் முழங்குகிறது. டாவோசிங் போராட்டங்களில் பங்கெடுக்கும் காட்சியுடன் படம் முடிவடைகிறது.

______________________________________________________

– ஆதவன்

________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

இந்திய நடுத்தர வர்க்கம் வீட்டுப் பணியாளர்களை கேவலமாகவும் கொடூரமாகவும் நடத்துவதற்கு காரணம் என்ன?

3
இந்திய-வீட்டுப்-பணியாளர்கள்
மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் புறநகர் ரயில் நிலையம் ஒன்றில் வீட்டு வேலைக்கு போவதற்கு பெண்கள் காத்திருக்கிறார்கள்

மீட்கப்பட்ட வீட்டு உதவியாளர்களுக்கு செவிலியராக வேலை செய்த தனது ஒன்பது ஆண்டு கால அனுபவத்தில் மோசமானவற்றை எல்லாம் பார்த்து விட்டதாக கே மாரியம்மா நினைத்திருந்தார். 2010 இல் அவரும் உடன் பணி புரிபவர்களும் மேற்கு தில்லியில் இருக்கும் வீடு ஒன்றிலிருந்து சங்கீதா என்ற 17 வயது பெண்ணை மீட்பதற்கு போன போது அவர் தனது நினைப்பை மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. சங்கீதா உடல் முழுவதும் கடிக்கப்பட்ட காயங்களுடன் காணப்பட்டார். “நாங்கள் கடும்  அதிர்ச்சியடைந்தோம். நாங்கள் பார்த்துக் கொண்டிருப்பது ஒரு விலங்கையா அல்லது மனிதப் பிறவியையா என்று சந்தேகமாக இருந்தது” என்று நினைவு கூர்கிறார் மாரியம்மா. மாரியம்மா, வீட்டு உதவியாளர்களின் உரிமைகளுக்காகப் போராடும் நிர்மலா நிகேதன் என்ற குழுவில் வேலை செய்கிறார்.

முதலில் சங்கீதாவின் எஜமானர்கள், அவள் தன்னைத்தானே கடித்துக் கொண்டதாகச் சொல்லிப் பார்த்தார்கள். ஆனால் கழுத்தில் எப்படி காயங்கள் ஏற்பட்டன என்பதற்கு விளக்கம் இல்லை. அதன் பிறகு அவர்கள் கதையை மாற்றிக் கொண்டு –  வீட்டு எஜமானி மனநிலை சரியில்லாதவர் என்று சொன்னார்கள். “ஆனால் நாங்கள் அதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் ஏன் தனது குழந்தைகளைக் கடிக்காமல் வீட்டு உதவியாளரை மட்டும் கடிக்க வேண்டும்’ என்று மாரியம்மா வாதிட்டார். பின்னர் பிரச்சினை நீதிமன்றத்துக்கு வெளியில் தீர்த்துக் கொள்ளப்பட்டது. அந்தப் பெண்ணின் குடும்பத்துக்கு 50,000 ரூபாய் கொடுக்கப்பட்டது, அவர் அஸ்ஸாமில் இருக்கும் தனது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தான் பார்த்த மோசமான கொடூரங்களைப் பற்றிப் பேசுவதற்கு மாரியம்மா தயாராக இருக்கலாம். ஆனால் தில்லியின் வீட்டு வேலை செய்பவர்கள் மன்றத்தின் தன்னார்வலர்களுக்கு அது அவ்வளவு எளிதாக இல்லை. அவர்களின் அனுபவம், சென்ற ஆண்டு பிப்ரவரியில் எஜமானி தனது காலணியின் கூர்மையான அடிப்பகுதியை முதுகில் உதைத்ததை எதிர் கொண்ட வீணாவாக இருக்கலாம், அல்லது வேலைக்கு வைத்திருந்த நர்சினால் மார்பில் சூடு போடப்பட்ட ஜார்கண்டை சேர்ந்த 15 வயது சோபனாவாக இருக்கலாம் அல்லது ஒரு அரசு அதிகாரியின் வீட்டிலிருந்து மீட்கப்பட்ட அந்தரங்க உறுப்புகள் பல முறை உருளைக் கட்டையால் தாக்கப்பட்டிருந்த மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சிறுமி ஹசீனாவாக இருக்கலாம்.

“இந்தியாவில் 9 கோடி வீட்டு வேலை செய்பவர்கள் இருப்பதாக அதிகாரபூர்வமாக மதிப்பிடப்பட்டுள்ளது. புது தில்லியில் இருக்கும் சுமார் 2,300 ஏஜன்சிகளில் 269 மட்டுமே பதிவு செய்யப்பட்டவை”

இப்போது நாட்டின் தலைநகரில் நிலைமை மோசமாக இருப்பதாகத் தோன்றுகிறது. (சென்ற மாதம் விடுமுறைக்கு சென்ற தம்பதியர் அவர்களது வீட்டில் வேலை செய்யும் 13 வயது ஜார்கண்ட் சிறுமியை மிகவும் சொற்பமான உணவுப் பொருட்களுடன் வீட்டில் பூட்டி வைத்து விட்டுப் போன செய்தி வெளியானது). ஆனால், உண்மையில் நாடு முழுவதும் குறிப்பாக வட இந்தியாவில் (பட்டியலைப் பார்க்கவும்) வீட்டு உதவியாளர்கள் துன்புறுத்தப்படுவது அதிகரித்துக் கொண்டே போகிறது.

உடல்ரீதியாக வன்முறைக்குள்ளானவர்கள்

1. 2004 கல்கத்தாவின் கோல்பார்க் ஹோம்சில் உதவியாளராக வேலை செய்த 14 வயது சிறுமி தூக்குப் போட்டுக் கொண்டிருந்தாள். பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டுகள் இருந்தும் போலிசு அதைத் தற்கொலை வழக்காகப் பதிவு செய்தது.

2. ஜூன் 2009 நடிகர் ஷைனி அஹூஜா அவனது வீட்டு உதவியாளரைப் பாலியல் வன்முறைக்குட்படுத்தியதாக கைது செய்யப்பட்டார். ஏப்ரல் 2011 இல் பிணை வழங்கப்பட்டது.

3. ஆகஸ்ட் 2009  நடிகர் ஊர்வசி தனோர்கரிடம் வேலை செய்யும் 10 வயது சிறுவன் கைகளில் தீக்காயங்களுடனும், உடல் முழுவதும் கீறல்களுடனும் மீட்கப்பட்டார்.

4. செப்டம்பர் 2011  ஆந்திரப் பிரதேசத்தின் கர்நூலில் 12 வயது சிறுமி எஜமானரின் வீட்டில் எரிந்து கருகிய நிலையில் கண்டுபிடிக்கப் பட்டாள். பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டன.

5. டிசம்பர் 2011, 15000 ரூபாய் கடனைத் திருப்பித் தராத தனது வீட்டு உதவியாளரை எரித்ததாக உறுதி செய்யப்பட்டு சென்னையைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

6. மார்ச் 2012, ஒரு இந்திய வீட்டு உதவியாளர் நியூயார்க் நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு பெற்றார். அவரது முன்னாள் எஜமானர்கள் நீனா மல்ஹோத்ரா என்ற ஒரு ஐ.எப்.எஸ் அதிகாரியும் அவரது கணவரும் கொடுமைப்படுத்தியதாகவும், அடிமை போல நடத்தியதாகவும் குற்றஞ்சாட்டிய அவருக்கு 1.5 மில்லியன் டாலர் நிவாரணம் வழங்கப்பட்டது.

7. மார்ச் 2012 தில்லியின் துவாரகாவிலிருந்து 13 வயது சிறுமி மீட்கப்பட்டாள். அவரது எஜமானர்கள் மருத்துவர்கள் சஞ்சய், சுனிதா வர்மா தம்பதியினர் தாய்லாந்துக்கு விடுமுறைக்குப் போகும்போது அவளை வீட்டில் பூட்டி வைத்து விட்டுப் போனார்கள். அவள் உடல் முழுவதும் கிள்ளியது உள்ளிட்ட காயங்களுடன் காணப்பட்டாள். அவள் இரண்டு சப்பாத்தியும், உப்பும் கொண்ட உணவில் உயிர் பிழைத்திருந்திருக்கிறாள்.

8. ஏப்ரல் 2012 பீகாரைச் சேர்ந்த பதின்ம வயது வீட்டுத் தொழிலாளரை எஜமானர்களின் மகன்கள் நதீமாலும் பர்தீனாலும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பாலியல் வன்முறைக்குட்படுத்தியதாகவும், உடல்ரீதியாக துன்புறுத்தியதாகவும் தகவல் வெளி வந்தது. அந்தச் சிறுமியின் கைகளில் சூட்டுக் காயங்கள் இருந்தன. பர்தீன் கைது செய்யப்பட்டான்.

இந்த அப்பட்டமான கொடூரம் எங்கிருந்து உருவானது? நகரங்களில் வசிக்கும் பணக்காரர்களின் வீடுகளில் வேலை செய்வதற்கு சந்தையில் தொழிலாளர்கள் நிறையக் கிடைப்பதும், அவர்கள் சுரண்டப்படுவதற்கு எதிரான கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல் இருப்பதும்தான் காரணமா? மோசமான, கிட்டத்தட்ட இல்லவே இல்லாத குற்ற நிரூபண விகிதம், பணம் இருந்தால் எல்லாவற்றையும் சரிக்கட்டி விடலாம் என்ற நிலைமை இவைதான் நகரத்தில் வசிப்பவர்கள் மத்தியில் இந்தக் கொடூர குணத்தை வளர்த்திருக்கிறதா? (இரண்டாவதாகச் சொன்னதுதான் சரி என்று தோன்றுகிறது. முன்பு குறிப்பிட்ட மருத்துவ தம்பதியினர் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கும் போதே அவர்கள் பிரச்சனையை சுமுகமாகத் தீர்த்துக் கொள்ள 75,000 ரூபாய் கொடுப்பதாகப் பகிரங்கமாக அறிவித்தனர்).

புதிய பணக்காரர்கள் ஆகியிருக்கும், ஏழைகளை மனிதர்களாகவே மதிக்காத நடுத்தர வர்க்கத்திற்கு இது சிறப்பாகப் பொருந்துகிறது. உண்மையில் “ஒருவரை வேலைக்கு அமர்த்துவதன் மூலம் ஏதோ சமூக சேவை செய்வதாகப் பலர் நினைக்கிறார்கள். ஏழைகளுக்கு உணவு அளிப்பதாக அவர்கள் எண்ணுகிறார்கள். இத்தகையவர்கள் மத்தியில் நிறைய தார்மீக ஆவேசமும், கோபமும் இருக்கிறது” என்று பல பெண்களை மீட்பதற்கு உதவி செய்த சமூக ஆர்வலர் ரிஷி காந்த் சொல்கிறார். “’ஏன் அவர்களை அழைத்துக் கொண்டு போகிறீர்கள்..  குறைந்த பட்சம் இங்கு அவர்களுக்கு சாப்பாடு போடுகிறோம்’ என்று சில வீடுகளில் எஜமானர்கள் எங்களிடம் கேட்கிறார்கள்…..” “இந்தக் குழந்தைகளுக்கு மாதம் 1,000 ரூபாய் சம்பளம் வழங்கி, பழைய உடைகளையும், மீந்து போன உணவையும் கொடுப்பதை பெரிய உதவி செய்வதாக நினைத்துக் கொள்கிறார்கள்” என்கிறார் இன்னொரு ஆர்வலர் ராகேஷ் செங்கர்.

 

இந்திய-வீட்டுப்-பணியாளர்கள்
நமிதா ஹல்தார். நமிதா வேலை செய்யும் பத்துப் பன்னிரெண்டு வீடுகளில் எந்த வீட்டிலும் கழிவறையைப் பயன்படுத்த அவருக்கு அனுமதி இல்லை என்பது இந்தியாவின் வளரும் நடுத்தர வர்க்கத்தைப் பற்றி என்ன சொல்கிறது? இருந்தும் அவர் தன்னை அதிர்ஷ்டக்காரராகவே கருதிக்கொள்ள வேண்டும். இன்னும் பலருக்கு அவமதிப்புகள் உடல் ரீதியான கொடுமைகள் வரை நீள்கின்றன.

சமீபத்தில் வெளியான நிகழ்வுகளையும், அது பற்றிய கொதிப்புகளையும் (குறைந்தபட்சம் ஊடகங்களில்) தொடர்ந்து இந்த உறவை நவீன எஜமானருக்கும் அடிமைக்குமான உறவாகப் பலர் சித்தரிக்கிறார்கள். இது மிகச் சிறிய பரிமாற்றங்களில் கூட பிரதிபலிக்கின்றது. உதாரணமாக கொல்கத்தாவின் நமீதா ஹல்தார் பல வீடுகளில் வேலை பார்த்தாலும் ஒரு வீட்டில் கூட கழிவறையைப் பயன்படுத்த அவருக்கு அனுமதி இல்லை. “அவர்களை மனிதர்களாக நடத்துவதற்கு நமக்குத் தோன்றாததற்குக் காரணம் நமது ஆழ் மனதில் அவர்களை மனிதர்களை விடத் தாழ்ந்தவர்களாகப் பார்க்கிறோம் என்பதுதான். பணம் கொடுப்பதாலேயே கடைசி பைசா வரை தமது பணத்தின் மதிப்பைக் கறந்து விட வேண்டும் என்று வேலைக்கு வைப்பவர்கள் நினைக்கிறார்கள்” என்று கொல்கத்தாவைச் சேர்ந்த பரிசித்தி அமைப்பின் காகுலி தேப் சொல்கிறார்.

நாடு முழுவதிலும் இருக்கும் 9 கோடி வீட்டு உதவியாளர்களில் பெரும்பகுதியினர் வறிய பகுதிகளான ஜார்கண்ட், மேற்கு வங்கம், சத்திஸ்கர் போன்ற மாநிலங்களிருந்து வருகின்றனர். நகர்ப்புற வீடுகளைத் தூய்மையாக வைத்திருக்கவும், நகர வாசிகளின் அவசர வாழ்க்கையை வசதியாக்கவும் இந்தத் தொழிலாளர்களில் பலர் பெரு நகரங்களுக்குக் கடத்திச் செல்லப்படுகின்றனர்.

மேற்கு வங்காளத்தில் மட்டும் 2010 ஆம் ஆண்டும் 2011 ஆ ம் ஆண்டும் 8,000 சிறுமிகள் தொலைந்து போனதாகப் பதிவாகியிருக்கின்றது. வேறு புகல் இல்லாத பழங்குடிப் பகுதியைச் சேர்ந்த சிறுமிகளுக்குத்தான் தேவை அதிகமாக இருப்பதாகச் சொல்கிறார் சஞ்சய் கே. மிஷ்ரா. அவர் மீட்கப்பட்ட வீட்டு உதவியாளர்களுக்கு மறு வாழ்வு அளிக்கும் பணியைச் செய்து வருகிறார். “அவர்கள் எளிமையானவர்களாகவும், அப்பாவிகளாகவும் இருக்கிறார்கள். குறிப்பாக எந்த ஆதரவும் இல்லாதவர்கள். அதனால் நடக்கும் கொடுமைகள் பெரும்பாலும் பதிவாகாமலேயே போய் விடுகின்றன”. சிறுமிகளை ஏஜென்சிகள் எங்கு கொண்டு செல்கின்றன என்ற விபரம் பெற்றோர்களுக்குத் தெரிவதில்லை. அவர்கள் படிப்பறிவு இல்லாதவர்களாக இருப்பதால் எல்லா வகையான சுரண்டலுக்கும் ஆளாகிறார்கள்.

இந்தப் பெரிய சந்தையில் தெளிவற்ற அடையாளத்துடன் கொழுக்கும் பல ‘ஆள் சேர்ப்பு ஏஜென்சிகள்’ செயல்படுகின்றன (தில்லியில் மட்டும் சுமார் 2,300). எஜமானர்கள் வேலைக்கு ஆள் தேட இந்த ஏஜென்சிகளுக்கு பணம் கொடுப்பதோடு, பெரும்பாலும் மாதச் சம்பளத்தையும் தொழிலாளருக்குக் கொடுக்காமல் ஏஜென்சியிடம் கொடுக்கின்றனர்.

குழந்தைத் தொழிலாளரைப் பயன்படுத்துவதைப் பற்றிய உறுத்தல் இருந்தாலும் பலர் இன்றும் அதை கண்டு கொள்ளாமல் இருக்க விரும்புகிறார்கள். கொல்கத்தாவில் கரியாகாத் பகுதியில் ஒரு சிறு நிறுவனத்தை நடத்தும் முகுல் தாஸ் “வீட்டு வேலை செய்யும் சிறுமிகள்” கூடுதல் பணிவுடன் இருக்கிறார்கள் என்கிறார். அவரது வீட்டில் கடைசியாக வேலை செய்த 8 வயது ஷெபாலி கழுவுவது, பெருக்குவது, சமைப்பது என்று எல்லா வேலைகளையும் செய்து விட்டு, தரையில் படுத்து உறங்கி விடுவாள். அது நிச்சயமாக லாபகரமான ஒப்பந்தம்தான். சென்ற ஆண்டு தில்லியின் நடுத்தர வர்க்க வீடுகளிலிருந்து 116 ‘தொழிலாளர்கள்’ மீட்கப்பட்டனர். அவர்களில் நான்கு பேர் மட்டுமே 18 வயதுக்கு அதிகமானவர்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் நடத்தப்பட்ட சர்வேயில் 5-14 வயதுடைய சிறுமிகள் கிட்டத்தட்ட 60,000 பேர் வீட்டுத் தொழிலாளர்களாக இருப்பது தெரிய வந்தது.

இந்திய-வீட்டுப்-பணியாளர்கள்
18 வயதே ஆகும் சாந்தினி. அமிர்தசரஸில் எஜமானரின் மாமனாரால் திரும்பத் திரும்ப பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டாள். அவளுக்கு உதவி செய்வதாக அழைத்துப் போன ஒரு ஆளால் தில்லியில் மீண்டும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாள். அவள் செய்த பல ஆண்டு வேலைக்கு ஒரு பைசா கூட சம்பளமாக கொடுக்கப்படவில்லை

இந்தியா முழுவதிலும் 1.26 கோடி சிறுவர்கள் வீட்டு உதவியாளர்களாக வேலை செய்கிறார்கள். அவர்களில் 86% சிறுமிகள், 25% பேர் குழந்தை தொழிலாளர் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள 14 வயதை விட குறைவானவர்கள்.

‘குறைந்த பட்சம் இந்த குழந்தைகளுக்கு உணவும் உடையும் கிடைக்கிறது. விபச்சார விடுதியில் போய்ச் சேராமல் போனது அவர்கள் அதிர்ஷ்டம்’ என்ற வழக்கமான நியாயப்படுத்தல் நடுத்தர வர்க்கத்தினரிடையே இருக்கின்றது.  ஆனால், அவர்கள் எஜமானர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட மாட்டார்கள் என்று எந்த உத்தரவாதமும் இல்லை. இப்போது 18 வயதாகும் சாந்தினி அமிர்தசரஸில் எஜமானரின் மாமனாரால் திரும்ப திரும்ப பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டாள். அவளுக்கு உதவி செய்வதாக அழைத்துப் போன ஆளால் தில்லியில் மீண்டும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாள். தனது துன்பங்களை நினைவு கூரும் அவள், தனது வீட்டுக்கு உதவி கேட்டு அழைக்கக் கூட முடியவில்லை என்கிறாள். “அவர்கள் வெளியில் போகும் வீட்டுத் தொலைபேசியை பூட்டி விட்டுதான் போவார்கள். என்னைச் செருப்பால் அடிப்பார்கள். நான் செய்த அத்தனை வேலைகளுக்கும் ஒரு பைசா கூட சம்பளமாக கிடைக்கவில்லை” என்கிறாள் அவள். அவளது பிரச்சனையைப் பற்றி விபரம் சேகரிக்க வந்த தில்லி பத்திரிகையாளர் மாதுரி சிங் இப்போது அவளை வேலைக்கு வைத்திருக்கிறார். நடுத்தர வர்க்கத்தினர் இந்தச் சிறுமிகளைச் சுரண்டுவதற்கு காரணம் அவர்களுக்கு குரல் கொடுக்க யாரும் இல்லாமல் இருப்பதே ஆகும் என்று அவர் கருதுகிறார். “அதிகார மட்டங்களில் தங்களது சொல்தான் எடுபடும் என்று எஜமானர்களுக்குத் தெரியும். இந்தத் தொழிலாளர்களின் பேச்சு எடுபடாது.”

கொடுமை என்னவென்றால் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பாதுகாக்கும் பொறுப்பில் இருப்பவர்கள் கூட வீட்டு உதவியாளர்களைத் துன்புறுத்துவதில் சளைத்தவர்கள் இல்லை. தேசிய வீட்டுத் தொழிலாளர்கள் இயக்கத்தின் ஆந்திரப் பிரிவு தலைவர் அத்தகைய ஒரு நிகழ்வைக் குறிப்பிடுகிறார். ஹைதரபாத்தில் உள்ள ஓய்வு பெற்ற டிஐஜியின் வீட்டில் இரண்டு குழந்தைகள் கொடுமைப்படுத்தப்பட்டனர். 14 வயதும் 15 வயதுமான அந்தச் சிறுமிகள் ஓய்வு பெற்ற போலீஸ்காரரின் பேரக்குழந்தையைப் பார்த்துக் கொள்ள அமர்த்தப்பட்டிருந்தார்கள். ஒருமுறை அந்தக் குழந்தை நீச்சல் குளத்துக்கு அருகில் போய் விட்டதைத் தொடர்ந்து, தண்டிக்கும் விதமாக அந்தச் சிறுமிகளைக் கழுத்தளவு தண்ணீரீல் இரவு முழுவதும் நீச்சல் குளத்தில் நிற்க வைத்தார் டிஐஜி. “அந்தக் குழந்தைகள் வீட்டிலிருந்து தப்பித்து போன போது, அந்தச் சிறுமிகள் நகைகளைத் திருடி விட்டதாக அவர் போலி வழக்கு பதிவு செய்தார். விசாரணையின் போது அந்தச் சிறுமிகள் சித்திரவதை செய்யப்பட்டது தெரிய வந்தது.”

 

இந்திய-வீட்டுப்-பணியாளர்கள்
ராஞ்சிக்கு அருகில் இருக்கும் கிராமத்தைச் சேர்ந்த மணிரூபா என்ற சிறுமி தில்லியில் பல கொடுமைகளை அனுபவித்தாள். பின்னர் ஒரு தன்னார்வக் குழுவால் மீட்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டாள்

வீட்டுத் தொழிலாளர் சந்தையின் மிகப்பெரிய பிரச்சினை ஏஜென்சிகள் தொழிலாளர்கள் குறித்த விபரங்களைப் பதிவு செய்யாமல் இருப்பது. அதன் மூலம் சுரண்டல் எளிதாகி விடுகின்றது. “ஒவ்வொரு ஏஜென்சியும் தான் சேர்த்து விடும் வீட்டு உதவியாளர்கள் பற்றிய முழு விபரங்களையும் பதிவு செய்திருக்க வேண்டும். வாங்கி வீட்டில் வைத்துக் கொள்வதற்கு, அவள் ஒரு ஆட்டுக் குட்டியோ அல்லது அலங்கார பொருளோ அல்ல. நீங்கள் அப்படி ஒருவரை வேலைக்கு வைத்துக் கொண்டால் அது ஏதாவது ஒரு இடத்தில் ஏன் பதிவு செய்யப்படக் கூடாது” என்று கேட்கிறார் அமைப்பு சாரா துறைகளின் தொழிலாளர்களுக்கான தேசிய போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுபாஷ் பட்நாகர்.

வீட்டுத் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வரைவுச் சட்டம் 2008 லேயே தயாராக இருந்தாலும் அது இன்னமும் தேசிய பெண்கள் ஆணையத்தில் (NCW) தேங்கிக் கிடக்கிறது. “அது சட்டமாக மாறுவதற்கு இன்னும் நீண்ட  காலம் ஆகும். அதிகார மையங்களில் இருக்கும் பலர் வீட்டு உதவியாளர்களை நம்பி இருக்கிறார்கள். அவர்களில் சிலர் குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை” என்கிறார் தில்லி குழந்தைகள் நல வாழ்வு குழுவின் முன்னாள் தலைவர் பாரதி ஷர்மா.

இது போலவே, மாநிலங்களிலும் சட்டங்கள் சிக்கல்களில் மாட்டிக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாடு வீட்டுத் தொழிலாளர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கிளாரா, 2007 இல் திமுக அமைச்சரிடம் குறைந்தபட்ச ஊதியமாக மணிக்கு 30 ரூபாய் நிர்ணயிக்கும்படி வலியுறுத்தியதாகச் சொல்கிறார். ஆனால் முடிவு தள்ளிப் போடப்பட்டு விட்டது. “சென்ற ஆண்டு தொடக்கத்தில்,  தேர்தல்கள் வரும் நேரத்தில் வேலைக்கு வைப்பவர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருக்க முடிவு தள்ளிப்போடப்பட்டதாக அமைச்சர் என்னிடம் சொன்னார்”. மார்ச்சில் தொழிலாளர் துறைச் செயலரைச் சந்தித்த தொழிற்சங்கப் பிரதிநிதிகளிடம் “விசயம் பரிசீலனையில் இருப்பதாக” சொல்லப்பட்டது. சட்டம் இயற்றுவதற்கு அதற்கே உரிய காலம் பிடிக்கலாம், ஆனால், சுதந்திர இந்தியாவில் நடுத்தர வர்க்க வீடுகளில் சமத்துவமின்மையும், அடக்குமுறையும் நிலவுவதற்கு இது ஒரு காரணமாக இருக்கக் கூடாது.

(தனிநபர் நலன்களை பாதுகாக்க பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன)

____________________________________________________________________________________________

கட்டுரை – படங்கள் – அவுட்லுக், ஆங்கில வார இதழ் ((தேபாஷி தாஸ்குப்தா, தோலா மித்ரா, புஷ்பா ஐயங்கார், மாதவி டாடா, சந்திரானி பானர்ஜி, அம்பா பத்ரா பாக்ஷி)

தமிழாக்கம்: அப்துல்.

__________________________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: