Tuesday, June 16, 2026
முகப்பு பதிவு பக்கம் 264

தொடர் கதையாகும் நீட் மரணங்கள் ! மதுரை ஆர்ப்பாட்டம் !

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மதுரையில், நீட் எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.

கடந்த 12.09.2020 அன்று ஜோதி ஸ்ரீ, ஆதித்யா, மோத்திலால் என 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட நிலையில் இந்த கொரோனா நெருக்கடியிலும்
நீட் தேர்வை திட்டமிட்டபடி மத்திய, மாநில அரசும் நடத்துகிறது‌. இதைக் கண்டித்தும் இனிமேலும் நீட் மரணங்கள் நடக்கக்கூடாது நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும், என்றும் நீட் எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.

இதில் திராவிடர் விடுதலைக் கழகம், பெரியார் விடுதலை கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, மே17, திராவிடர் கழகம், புரட்சிகர இளைஞர் முன்னணி, மக்கள் கலை – இலக்கியக் கழகம், மக்கள் அதிகாரம், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், போன்ற அனைத்து முற்போக்கு இயக்கங்களும் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் மரணமடைந்த மாணவர்களுக்கு நீதி வேண்டும் என்றும் முழக்கம் எழுப்பப்பட்டது. இந்தப் போராட்டத்தை தடுப்பதற்கு வந்த போலீசாரோடு, வாக்குவாதம் ஏற்பட்ட சூழலில் தோழர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

தகவல்:
நீட் எதிர்ப்பு கூட்டமைப்பு,
மதுரை.

தருமபுரி : தோழர்கள் அப்பு பாலன் நினைவேந்தல் !

செப்டம்பர் 12, 2020 தியாகிகள் தினத்தை முன்னிட்டு தருமபுரி நாயக்கன்கொட்டாய் பகுதியில் உள்ள அப்பு, பாலன் சிலைகளுக்கு மாலை அணிவித்து கொடியேற்றி, நினைவேந்தல் கடைபிடிக்கப்பட்டது.

வசந்தத்தின் இடி முழக்கமாக 1967-ம் ஆண்டு இந்தியா முழுவதும் நக்சல்பாரி அரசியல் எழுச்சி பெற்று ஆளும் வர்க்கத்தை அலறச் செய்த சமயத்தில் தமிழகத்தின் நக்சல்பாரி அரசியலைக் கட்டியமைத்தவர்கள் தோழர்கள் அப்புவும் பாலனும் தான்.

தோழர் அப்பு ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலும் பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் கோவைப் பகுதியின் தொழிற்சங்கத் தலைவராகத் திகழ்ந்தார். நக்சல்பாரி இயக்கம் உருவான போது, தமிழகத்தில் நக்சல்பாரி இயத்திற்குத் தலைமை ஏற்றவர். 1970-ம் ஆண்டு அவரைக் கைது செய்த போலீசால் படுகொலை செய்யப்பட்டார்.

தோழர் பாலன், மார்க்சிய லெனினிய இயக்கத்தை தமிழகத்தில் வீச்சாக எடுத்துச் சென்றவர். தர்மபுரி பகுதியில் மக்களை ஒடுக்கிவந்த நிலக் கிழார்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர். 1980-ம் ஆண்டு பாசிச எம்.ஜி.ஆர்.-ன் ஆட்சியில் தமிழக போலீசால் கைது செய்யப்பட்டு செப்டம்பர் 12 அன்று தோழர் பாலனும் படுகொலை செய்யப்பட்டார்.

தோழர்கள் அப்பு, பாலன்

ஆளும்வர்க்கத்தை அச்சத்திற்குள்ளாக்கும் அளவிற்கு மக்கள் செல்வாக்கு கொண்ட நக்சல்பாரி தலைவர்களின் நினைவுநாள் தியாகியர் தினமாக நினைவுகூரப்படுகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் 12-ம் தேதியன்று தர்மபுரி நாயக்கன் கொட்டாய் பகுதியில் உள்ள தோழர்கள் அப்பு, பாலன் சிலைக்கு மாலை அணிவித்து நினைவேந்தல் கடைபிடிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நக்சல்பாரி தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. மக்கள் அதிகாரம் தோழர்கள் பாடியை பாடல் வரிகளின் ஒரு பகுதி..

… சாதிக் கொடுமை பண்ணைக் கொடுமை தலை விரித்தாடிடும்
தருமபுரி வட ஆற்காடு வயல்வெளியும் கிராமமும்..
எங்கள் அப்பு பாலன் பெயரைச் சொன்னால் போதும்..
ஆளும் வர்க்கத்தின் குலை நடுங்கிப் போகும்…

ஆல மரங்கள் சாய்ந்ததடா ..
அழுத கண்கள் சொல்லி மாளதடா..

கோடானுகோடி மக்களுக்காக குருதி சிந்திய தோழர்களே !
வர்க்கப் போராட்ட பாதையிலே மீண்டும் புதைந்திட்ட வித்துக்களே !
வீர வணக்கங்களே ! வீர வணக்கங்களே !

இதில் திரளாக கலந்துகொண்ட மக்கள் அதிகாரம், மக்கள் ஜனநாயக இளைஞர் முன்னணி, இனங்களின் இறையாண்மைக்கான மாணவர் இயக்கம், இ. பொ. க(மாலெ) விடுதலை, இ.பொ.க. (மாலெ), தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி போன்ற அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள், மக்கள் என பலரும் திரளாகக் கலந்துகொண்டனர்.

தகவல்:
மக்கள் அதிகாரம்,
தருமபுரி மண்டலம்.

நீதித்துறையை விமர்சிக்க அனைத்து குடிமக்களுக்கும் உரிமை உண்டு !

3

பேச்சு, கருத்துச் சுதந்திரத்துடன் பெரும் மதிப்பை கொண்டவர்களிடையே உற்சாகமான உணர்வு காணப்படுகிறது. இது நமது நாட்டின் ஜனநாயக வரலாற்றில் ‘பிரசாந்த் பூஷண் தருணம்’ என்று அழைக்கப்படுவதால் உந்தப்பட்டதாகும்.

பூஷனுக்கு எதிரான குற்றவியல் அவமதிப்பு குற்றச்சாட்டை உச்சநீதிமன்றத்தால் நியாயப்படுத்த முடியவில்லை என குடிமக்கள் கருதுகின்றனர்.

‘மக்களின் ஆட்சியை, மக்களுக்காக மக்களால்’ நிறுவுவதற்கான அரசியலமைப்பை ‘மக்களாகிய நாம், நமக்குக் கொடுத்தோம்’ என்பதை பெருமையுடன் நினைவு கூர்கிறோம் என்ற உணர்வு இருக்கிறது.

சிறிது நேரம் இடைநிறுத்தி, இந்த காவியப் போருக்கு அப்பாற்பட்ட அடிப்படைகளைப் பார்ப்போம். சிலர் இதை கோலியாத்துக்கு (பெரும் அரக்கனுக்கு) எதிரான டேவிட்டின் (தீரமிகு சிறுவனின்) போர் என்று அழைக்கிறார்கள்.

நான் மரியாதையுடன் அதில் உடன்படவில்லை. பிரஷாந்த் சட்டத் துறையில் ஒரு டேவிட் ஆவார், அவர் நீதிமன்றங்களில் பல போர்களில் தனது உயரத்தையும் சிறப்பையும் நிலைநாட்டியுள்ளார். அவரது பெயர் நாடு முழுவதும் நன்கு அறியப்பட்டதாகும். பேச்சு சுதந்திரத்திற்கான தடை மீது அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால் இது அனைத்து குடிமக்களுக்கும் நேரடியாக அதிகாரமாக மொழிபெயர்க்கப்படாது.

நீதிமன்றங்களின் திருப்தியற்ற செயல்பாடுகள் குறித்து தங்கள் கருத்துக்களைக் கூறும் குடிமக்கள் மீது, நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் முடக்க வைக்கும் என்பதை நம்மில் பலர் சரியாக சுட்டிக்காட்டியுள்ளோம்.

பல நாடுகளில், நீதிமன்றங்கள் விமர்சனங்களை முன்னேற்றத்துக்குரியதாக எடுத்துக்கொள்கின்றன; குற்றவியல் அவமதிப்பு அதிகாரங்களை அரிதாகவே பயன்படுத்துகின்றன. 2016-17 ஆம் ஆண்டில், உயர் நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றமும் சேர்ந்து 169 வழக்குகளை விசாரித்தன். இங்கிலாந்தில், கடந்த நூற்றாண்டில் ‘நீதிமன்றத்தை அவதூறு செய்வது’ தொடர்பாக ஒரே ஒரு வழக்கு மட்டுமே இருந்தது.

படிக்க:
கட்டுக்கோப்பான கட்சியா ? கதம்பக்கூட்டா ? | ஜே. வி. ஸ்டாலின்
பிரசாந்த் பூஷனையும், டிவிட்டரையும் மிரட்டும் உச்சநீதிமன்றம் !

பிரிவு 2 (சி) குற்றவியல் அவமதிப்பை இவ்வாறு வரையறுக்கிறது :

“(சி) குற்றவியல் அவமதிப்பு என்பது எந்தவொரு விஷயத்தையும் வெளியிடுவது (சொற்களால், பேசப்பட்ட அல்லது எழுதப்பட்ட, அல்லது சமிக்ஞைகளால், அல்லது புலப்படும் பிரதிநிதித்துவத்தால், அல்லது வேறுவிதமாக) அல்லது வேறு எந்த செயலையும் செய்வது.

(i) எந்தவொரு நீதிமன்றத்தின் அதிகாரத்தையும் அவதூறு செய்வது அல்லது அவதூறு செய்ய முனைவது, அல்லது குறைப்பது அல்லது குறைக்க முனைவது; அல்லது

(ii) எந்தவொரு நீதித்துறை நடவடிக்கைகளின் சரியான போக்கில் தப்பெண்ணங்கள் உருவாக்குவது, அல்லது தலையிட முனைவது; அல்லது

(iii) வேறு எந்த வகையிலும் நீதியின் நிர்வாகத்தில் தலையிடுவது அல்லது தலையிட முனைவது, அல்லது தடுப்பது அல்லது தடுக்க முனைவது ”

அவமதிப்பு சட்டத்தின் பிரிவு 2 (சி) 2018 ஆம் ஆண்டில் “நீதிமன்றத்தின் அவமதிப்பு என நீதிமன்றத்தின் தீர்ப்புகள் / தீர்ப்பை வேண்டுமென்றே கீழ்ப்படியாமை” என்பதற்கு மட்டுமே கட்டுப்படுத்த வேண்டுமா என இந்திய அரசு, சட்ட ஆணையத்திற்கு ஒரு குறிப்பை வெளியிட்டது என்பது சுவாரஸ்யமானது. துரதிர்ஷ்டவசமாக அதன் அறிக்கை எண் 274 இல் இவ்வாறு கூறி இந்த ஆலோசனையுடன் உடன்படவில்லை:

“மேலும், அவமதிப்பு கூறுகளுக்கு எதிராக தொடர்ந்து தடுப்பு தேவைப்படுவதால்,‘உத்தரவுகளை வேண்டுமென்றே கீழ்ப்படியாமை / நீதிமன்றத்தின் தீர்ப்பை ’மட்டுமே உள்ளடக்குவதற்கான அவமதிப்பு வரம்பைக் குறைப்பது விரும்பத்தகாததாகத் தெரிகிறது. விதி வரம்பில் மிகவும் குறுகிவிட்டால், பாதிப்பிலும் தாக்கம் குறையும். அவமதிப்பு சட்டத்தில் இத்தகைய மாற்றம் நீதிமன்றங்கள், அவற்றின் அதிகாரம் மற்றும் செயல்பாடுகள் மீதான மரியாதை அல்லது பயத்தை குறைக்கக்கூடும்; மேலும், இது நீதிமன்றங்களை வேண்டுமென்றே மறுப்பது, அவதூறு செய்வது போன்ற நிகழ்வுகளில் விரும்பத்தகாத அதிகரிப்புக்கு வழிவகுக்கும் வாய்ப்பும் உள்ளது.”

நிந்தனை என்பதை கடவுள் அல்லது மதத்தை அவமதிப்பதை காட்டுவதாக அனைத்து அகராதிகளும் அங்கீகரிக்கின்றன.

இப்போது மூன்று இணை அரசு ஊழியர்களை ஒரு உதாரணமாகப் பார்ப்போம், குடிமக்களுக்கான தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதற்காக அவர்களுக்குத் தேவையான மரியாதை மற்றும் பாதுகாப்பின் கொள்கையை சோதிப்போம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், காவல்துறை மற்றும் நீதிபதிகளை வைத்து இந்தக் கொள்கைகளை சோதிப்போம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மிக உயர்ந்த நியாயத்தன்மையைக் கொண்டுள்ளனர், ஏனெனில் அவர்கள் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் குடிமக்களின் நேரடி ஒப்புதலுக்கு உட்படுவார்கள். குடிமக்களிடமிருந்து மரியாதைக்குரிய கட்டளையை அவர்கள் கொண்டிருக்க வேண்டும் என்று வாதிடலாம், அது இல்லாமல் அவர்கள் வடிவமைக்கும் சட்டங்கள் மதிக்கப்படாது. அவை கொள்கைகளை வடிவமைக்கின்றன, இந்த கொள்கைகள் தற்போதைய மற்றும் எதிர்கால தலைமுறையினருக்கு அரசியல் மற்றும் நிதி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அவர்கள் கற்பனை செய்யக்கூடிய ஒவ்வொரு இடத்திலும் நேரத்திலும் மக்களை நேரடியாக எதிர்கொள்ள வேண்டும், மேலும் அவர்களுக்கு சிறப்பு சலுகைகள் அல்லது விமர்சனங்களுக்கு எதிரான பாதுகாப்பு வழங்கப்படாவிட்டால், அவர்களால் அவர்களின் செயல்பாடுகளை நிறைவேற்ற முடியாது.

சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய ஒரு காவலரை இப்போது சித்தரிப்போம். அவர் மீண்டும் குடிமக்களை எதிர்கொள்கிறார் – கோபமடைந்த அல்லது மோசமான கும்பல்களும் கூட – சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து அழுக்குகள் மற்றும் கொடூரங்களுக்கிடையில் செயல்பட வேண்டும். குடிமக்கள் அவரை மதிக்கவில்லை என்றால் – அல்லது அவர் ஊழல் நிறைந்தவர் மற்றும் அவரே ஒரு குற்றவாளி என்று நம்பினால் – அவர் தனது சட்ட நடைமுறையாக்கல் செயல்பாட்டை பொதுமக்களுக்கு வழங்க முடியுமா?

மறுபுறம், ஒரு நீதிபதி ஒரு மூடிய மற்றும் பாதுகாக்கப்பட்ட சூழலில் அமர்ந்து சட்டத்தை நிலைநிறுத்துவதாகக் கூறப்படும் நீதியை வழங்குகிறார். அவர் மிகவும் பாதுகாப்பாகவும் பாதுகாப்பான சூழலிலும் இருக்கிறார்; வசதியாக ஒரு நாற்காலியில் உட்கார்ந்து தனது செயல்பாடுகளை தனது சொந்த வேகத்தில் செய்கிறார்.

ஆனாலும்கூட, பிரபுக்களுக்கு குற்றவியல் அவமதிப்பு விதிகளின் கதகதப்பான பாதுகாப்பு தேவை என்று வாதிடப்படுகிறது.

சட்ட ஆணைய அறிக்கையை புறக்கணிக்கவும், சட்ட ஆணையத்திற்கு அதன் குறிப்பின்படி சட்டத்தை திருத்தவும் அரசாங்கத்தை நிர்பந்திக்க, குடிமக்கள் இந்த மாபெரும் பிரசாந்த் பூஷண் தருணத்தைப் பயன்படுத்த வேண்டும். இந்த வாய்ப்பை நாம் இழந்தால், சாதாரண குடிமக்களின் பேச்சு சுதந்திரம் தடைசெய்யப்படும்.

சாமானியர்களுக்காகப் பேசும்போது, பிரஷாந்த் பூஷண் போன்ற ஒரு சட்ட ஜாம்பவானுக்கு மட்டுமே நீதித்துறையை விமர்சிக்கும் உரிமை இருக்கும் சூழ்நிலையை நாம் அறியாமல் உருவாக்கியிருப்போம். இது ஜனநாயகத்திற்கான அவரது துணிச்சலான, தைரியமான நிலைப்பாட்டின் பொருத்தமான விளைவாக இருக்காது. குடிமக்களின் உரிமைகளை மேம்படுத்த இந்த தருணத்தை நாம் கைப்பற்ற வேண்டும்.


கட்டுரையாளர் : சைலேஷ் காந்தி, முன்னாள் மத்திய தகவல் ஆணையர்.

மொழிபெயர்ப்பு :  கலைமதி
நன்றி: த வயர்.

நூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்

சீனப் புரட்சி இன்னும் தொடர்கிறதா?

பதில்: “இல்லை ” என்பதே.

ஒவ்வொரு புரட்சிக்கும் ஒரு எதிர்ப்புரட்சி உண்டு, அந்த நேரத்தில் அதனை இடதுசாரியிடமிருந்து வலதுசாரி கைப்பற்றுகிறது. புதிய கண்டுபிடிப்பாளர்கள், பழமைவாதிகளிடம் தோற்கிறார்கள், புரட்சி மறுநிர்மாணத்துக்கு வழி விடுகிறது. சீனாவில் எதிர்ப்புரட்சி 1978-ல் பதினோறாவது மத்தியக் குழுவின் மூன்றாவது கட்டத்தில் நிகழ்ந்தது. அதில் டெங் சியாவோ பிங்கும் லியூ கோஷ்டியில் தப்பித்த மற்றவர்களும் ஆதிக்கம் செலுத்திக் கொள்கைகளை மாற்றி “சீர்திருத்தத்தைத்” துவங்கினர். இது உழைக்கும் வர்க்க அதிகாரத்திலிருந்து முதலாளித்துவ அதிகாரத்துக்கும், உழைக்கும் வர்க்க அரசியலிலிருந்து முதலாளித்துவ அரசியலுக்கும், சோசலிசப் பாதையிலிருந்து முதலாளித்துவப் பாதைக்கும் மாறுவதை அடையாளப்படுத்தியது. அந்தக் கட்டத்தில் சீனா தனது வண்ணத்தை மாற்றிக் கொண்டது. அப்போதிலிருந்து புதிய தலைவர்கள் சீன மக்கள் முப்பது ஆண்டுகளாக கடும் முயற்சியால் கட்டிய சோசலிசக் கட்டுமானத்தையும், சோசலிசப் பொருளாதார அடிப்படையையும் கலைக்கத் துவங்கினார்கள்.

ஆனால், கம்யூனிஸ்ட் கட்சி இன்னும் அதிகாரத்தில்தானே இருந்ததென நீங்கள் கேட்கலாம்.

உண்மைதான். ஆனால் 1949-ல் சோசலிசத்தைக் கட்டுவதற்காக முன்வந்த அதே கட்சியல்ல அது. மேலும் குறிப்பாகக் கூறினால், 1949-ல் சோசலிசத்தைக் கட்ட முன்வந்த அதே தலைவர்களால் கட்சி தலைமை தாங்கப்படவில்லை.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் ஒரே தலைமையுடன் இருந்ததில்லை. ஜனநாயகப் புரட்சியானது அனைத்து முற்போக்கு சக்திகளையும் இணைத்தது – ஏராளமான விவசாயிகளையும், தொழிலாளர்களையும் இணைத்தது மட்டுமல்ல, பல தேசிய முதலாளிகள் (கோமின்டாங்கில் ஆதிக்கம் செலுத்திய அதிகாரிகளுடனோ, நிலப்பிரபுக்களுடனோ தொடர்பற்ற முதலாளிகள்) பெரும்பாலான அறிவுஜீவிகள், பூர்ஷ்வாக்கள் பக்கம் அதிகம் சாய்ந்தோரையும் கூட இணைத்தது. இந்தக் குழுக்களும், வர்க்கங்களும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக அணி திரண்டனர். அவர்களில் பலர் தனி நபர்கள் என்ற முறையில் கட்சியில் இணைந்தனர். தீவிரமான நிலையிலிருந்த தேசப்போரைத் தொடர்ந்த உள்நாட்டுப் போர்க் காலத்தில், சீனாவிலிருந்து ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பாளர்களை விரட்டவும், கிராமப்புறத்தில் நிலப்பிரபுக்களிடமிருந்து நிலங்களைக் கைப்பற்றவுமான கேள்விகளில் மாவோவால் ஒரு ஒத்தக் கருத்தை எட்ட முடிந்தது. ஆனால் பணிகள் வெற்றி பெற்றதும், ஒத்தக் கருத்தானது அந்த வெற்றி தகரும் வாய்ப்பை உருவாக்கியது.

எங்கு வழி தவறியது என்பதைப் புரிந்து கொள்ள சிறிது வரலாற்றைப் பார்க்க வேண்டியுள்ளது.

மாவோ சீனப் புரட்சியின் முதல் கட்டத்தை ஐரோப்பாவில் நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தை ஒழித்து பல்வேறு தேசிய பூர்ஷ்வாக்களின் அதிகாரத்தைக் கொண்டு வந்த பழைய ஜனநாய்கப் புரட்சிகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக புதிய ஜனநாயகம் என்றழைத்தார். இருபதாம் நூற்றாண்டில் ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்காவின் குறைவான வளர்ச்சி பெற்ற நாடுகள் ஏகாதிபத்திய சக்திகளால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு ஜனநாயகமோ, சோசலிசமோ, முதலாளித்துவமோ, பாட்டாளி வர்க்கமோ, எந்தப் புரட்சியையும் சகித்துக் கொள்ளாததால் ‘புதிய’ என்பது தேவையென மாவோ கூறினார். சீனாவின் தேசிய முதலாளிகள் ஏகாதிபத்திய விரோதிகளாக இருந்தாலும், மிகவும் பலவீனமாகவும், ஊசலாட்டக்காரர்களாகவும், மக்கள் எழுச்சிமீது பயம் கொண்டவர்களாகவும் இருந்ததை வரலாறு காட்டுகிறது. அந்நிய ஆக்கிரமிப்பை எதிர்க்கும் வலுவுடைய விவசாயிகளுக்கு ஆயுதமளிப்பதைப் பற்றிச் சொல்லவே வேண்டாம், அது மக்களைத் திரட்டக்கூட பயந்தது.

எனவே, உள்ளீடாக புரட்சிகரத் தலைமை தவறுதலாக தானாகவே கம்யூனிஸ்ட் கட்சியிடம் எழுந்தது. சர்வதேச அளவில் அப்போது சோசலிசத்தைக் கட்ட முயன்ற சோவியத் யூனியன் மற்றும் உலகத் தொழிலாளர் இயக்கத்தின் இடதுசாரிப் பிரிவு ஆகியவற்றின் ஆதரவை மட்டுமே பெற்றது. இந்த இணைப்புடன், சீனாவில் ஏகாதிபத்தியத் தலையீட்டைத் தகர்த்தெறிவதும், உள்நாட்டு நிலப்பிரபுத்துவத்தைக் தூக்கியெறிவதும் முதலாளித்துவத்துக்கு வழிவகுக்கவே செய்யாது. வெற்றியுடன் பாட்டாளி வர்க்கம்தான் அதிகாரத்துக்கு வருமே தவிர முதலாளித்துவமல்ல. கம்யூனிஸ்ட் தலைமையின் கீழ் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் முற்போக்கு அறிவுஜீவிகளின் கூட்டுடன் சோசலிசத்தைத்தான் கட்டுவார்கள், முதலாளித்துவத்தையல்ல. மேலும் இத்தகைய ஒரு எதிர்காலம்தான் வெற்றிக்குத் தேவையான கோடிக்கணக்கானோரின் தியாகத்தை ஊக்குவிக்கும். ஒரு முதலாளிக்குப் பதில் இன்னொருவரையும், நிலப்பிரபுக்களுக்குப் பதில் முதலாளிகளையும் அமர்த்தும் நோக்கத்துடனான எந்த நீண்ட போராட்டத்திலும் சீன மக்கள் தம்மை ஈடுபடுத்திக்கொள்ள மாட்டார்கள்.

நிகழ்ச்சிகள் நிகழத் துவங்கியதும், ஏறத்தாழ அனைத்து கம்யூனிஸ்டுகளும் இந்தக் கொள்கைக்கு உதட்டளவில் சேவை செய்தாலும், லியூ ஷாவோ -சியையும், டெங் சியாவோ பிங்கையும் சுற்றியிருந்த பெரிய மூத்த தலைவர்கள் பலரும் அதனுடன் உண்மையில் ஒத்துப் போகவில்லை. இந்தக் குழுவினர் நீண்டகால “புதிய ஜனநாயகக்” கலப்புப் பொருளாதாரத்தை ஆதரித்தனர். அப்போது அரசு, கூட்டுறவு, கூட்டு முயற்சிகளுடன் சேர்ந்து தனியார் முதலாளித்துவத்தின் வேகமான வளர்ச்சியை ஊக்கப்படுத்த அனைத்தும் செய்யப்படும். அதே சமயம் விவசாயிகள் தாம் புதிதாகப் பெற்ற தனியார் நிலத்தில் தமது கலப்பைகளுடன் தனி உழவர்களாக அமர்ந்து விடுவார்கள். ஒவ்வொருவருமே அவர்களது இலாபத்துக்கும், நஷ்டத்துக்கும் பொறுப்பாவர்.

படிக்க:
பாட்டாளி வர்க்கமும் பாட்டாளி வர்க்கக் கட்சியும் ! | ஜே. வி. ஸ்டாலின்
விடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் ! | படக்கட்டுரை

“எப்பொழுது ஒவ்வொரு விவசாயியிடமும் ஒரு கழுதை, ஒரு வண்டி, ஒரு கலப்பை இருக்குமோ அப்போதுதான் சோசலிசம் பற்றி பேசும் காலமாக இருக்கும்” என்று லியூ ஷாவோ-சி கூறினார்.

இவ்வாறாக கட்சி இரு கோஷ்டிகளாக, ஒவ்வொன்றும் தனது நிகழ்ச்சி நிரலுடன், உடைந்தது. நிகழ்வுப் போக்கில் எந்தக் கோஷ்டி, எந்த நிகழ்ச்சி நிரல் வெற்றி பெறுமென்பதை நிர்ணயிக்க நீண்ட போர் துவங்கியது. அனைத்து முனைகளிலும் சோசலிச மாற்றங்களை எதிர்கொண்ட முதலாளித்துவ சக்திகள் எதிர்த்தன, இழுத்தடித்தன, கொள்கையைத் திரித்தன, விஷயங்கள் நடப்பதைத் தாமதப்படுத்த முயற்சிகளை திசை திருப்பின. இது வேலை செய்யவில்லை என்றாலும், அவர்கள் கூட்டுமுறைகளையும், மக்கள் இயக்கங்களையும் வெறித்தனமான எல்லைகளுக்கு இட்டுச் சென்றனர். அவற்றை மிகவும் அவமதித்து பலவீனப்படுத்தி அவை உள்ளிருந்தே ஆபத்தை எதிர்நோக்குமாறு செய்தனர். ஒரு தொடர் வடிவமான வலதுசாரித் தடையுடன் மாறி மாறி வந்த இடது தீவிரவாதத் தகர்ப்பும் புதிய உற்பத்தி உறவுகளையோ, எந்தப் புதிய சமூக வடிவமைப்பையோ, அல்லது எந்தப் புதிய கோட்பாட்டையோ உறுதிப்படுத்த – சோசலிசத்தைக் கட்டுபவர்களுக்கு மிகவும் கஷ்டமான நிலையை உண்டாக்கியது. 1949க்குப் பிறகு முப்பதாண்டுகளுக்கு சோசலிசத்தை உருவாக்கவும், வளர்த்தெடுக்கவும், உறுதிப்படுத்தவும் முயன்றவர்கள் பெரும்பாலான சமயங்களில் அதனைத் தடுக்கவும், காட்டிக் கொடுக்கவும், தகர்க்கவும் முயன்ற முதலாளித்துவ மாற்றை முன் வைத்தவர்களின் கடுமையான எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருந்தது.

இந்தக் காலம் முழுவதும் சோசலிசத்தைக் கட்டியவர்கள் செய்த பல தவறுகளை எதிர்ப்பாளர்கள் கையிலெடுத்துக் கொண்டு அவர்களை சங்கடப்படுத்தவும் வியப்பிலாழ்த்தவும் செய்தனர். இங்கு வலியுறுத்திக் கூறப்பட வேண்டியது என்னவென்றால், மாவோவுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் எந்த நேரத்திலும் எளிதாக முயற்சிகள் எடுக்கவும், அவற்றை ஆழப்படுத்தி உறுதிப்படுத்தவும், தவறுகளிலிருந்து கற்கவும், முன்னேறவும் சுதந்திரம் கிடைக்கவில்லை. ஒவ்வொரு அடியிலும் அவர்கள் பழக்கவழக்கம், பாரம்பரியம் ஆகியவற்றின் தடையை மட்டுமல்ல, பெரிய, வலுவான கட்சிக் கோஷ்டியின் உறுதியான எதிர்ப்பையும் சமாளிக்க வேண்டியிருந்தது. “வர்க்கப் போராட்டத்தை எப்போதும் மறக்காதீர்கள்” என்பது மாவோவின் வெற்றுக் கோஷமல்ல. அடிப்படைக் கொள்கை மீது சமூக வர்க்கங்களின் கடுமையான மோதல் இந்தக் காலகட்டம் முழுவதும் பரவியிருந்தது. இன்று வரை அந்தப் போராட்டம் தொடர்கிறது.

மாவோ உயிரோடு இருந்தவரை சோசலிச சக்திகளும், சோசலிச முயற்சியும்தான் பெரும்பாலான சமயங்களில் மேலோங்கியிருந்தன. மாவோவின் இறப்புக்குப் பிறகு ஊழிக்காலம் ஏற்பட்டது. சக்திகளின் சமன்பாடு எதிர்ப்பாளர்கள் பக்கம் சாய்ந்தது. டெங் ஒரு இராணுவக் கலகத்தை நிகழ்த்தி மாவோவின் வாரிசான ஹுவா குவாஃபெங்கைக் கவிழ்த்தார். பிறகு பெரும் பின்னேற்றத்துக்குத் தலைமை தாங்கினார். (பக்கம் : 161 – 165)

நூல் : சீனா: ஒரு முடிவுறாத போர்
ஆசிரியர் : வில்லியம் ஹின்டன்

வெளியீடு : அலைகள் வெளியீட்டகம்
5/1எ. இரண்டாவது தெரு, நடேசன் நகர், இராமாபுரம், சென்னை – 600 089.
கைபேசி: 9841775112

பக்கங்கள்: 212
விலை: ரூ. 150.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

கட்டுக்கோப்பான கட்சியா ? கதம்பக்கூட்டா ? | ஜே. வி. ஸ்டாலின்

பாட்டாளி வர்க்கமும் பாட்டாளி வர்க்கக் கட்சியும் ! – பாகம் 2

முந்தைய பாகத்துக்கு >>

னிப்பட்ட காற்றடைத்த பைகளின் கதம்பக்கூட்டாக இல்லாமல் நமது கட்சியானது தலைவர்களின் அமைப்பாக செயல்பட்டு, தனது மையக்குழு மூலமாகப் பாட்டாளி வர்க்கப் படையை முன்னோக்கி வழிநடத்துமானால் மேலே சொன்ன அனைத்தையும் விளக்கத் தேவையில்லை.

அடுத்ததாக உள்ளதையும் குறித்துக் கொள்ள வேண்டும். இதுநாள் வரை நமது கட்சியானது தன் மீது அனுதாபம் கொண்டுள்ள யாரையும் எடுத்துக்கொள்ள அணியமாக உள்ள ஒரு விருந்தோம்பல் தன்மை வாய்ந்தத் தந்தைவழி ஆதிக்கக் குடும்பத்தை ஒத்திருந்தது. ஆனால் தற்போது நமது கட்சியோ தனது தந்தைவழி ஆதிக்கக் கூறைத் தூக்கியெறிந்து, ஒரு மையப்படுத்தப்பட்ட அமைப்பாகவும், அனைத்து அம்சங்களிலும் ஒரு கோட்டையாகவும் மாறியுள்ளது. இக்கோட்டையின் கதவுகள் மதிப்பானவர்கள் யாரோ அவர்களுக்கு மட்டுமே திறக்கப்படுகிறது என்பது நமக்கு முக்கியக்துவம் வாய்ந்ததாகும்.

பாட்டாளி வர்க்கத்தின், வர்க்க உணர்வை “தொழிற்சங்கவாதம்”, தேசியவாதம், மதவாதம் மற்றும் இதுபோன்றவற்றால் கறைப்படுத்த எதேச்சதிகாரம் முயற்சித்த போது மற்றொரு புறம் தாராளவாத அறிவுஜீவிகள் பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் சுதந்திரத்தை ஒழித்துக்கட்டி தமது பாதுகாப்புக்கு உட்பட்ட நிலைக்கு அவர்களைக் கொண்டுவர தொடர்ந்து முயற்சித்தனர். – அச்சமயத்தில் நாம் நமது கட்சியானது ஒரு கோட்டையைப் போல, சோதிக்கப் பட்டவர்களுக்கு மட்டும்தான் தனது கதவைத் திறந்து ஏற்றுக் கொள்ளும் தன்மையுடன் திகழ்ந்தது என்பதை எப்போதும் மறக்காமல் நினைவிற்கொண்டு மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

நாம் கட்சி உறுப்பினராவதற்கு இன்றியமையாத இரண்டு நிபந்தனைகளை (கட்சித்திட்டத்தை ஏற்பது மற்றும் கட்சி அமைப்பு ஒன்றில் செயல்படுவது) உறுதிப்படுத்துகிறோம். இதனுடன் மூன்றாவது நிபந்தனையாக அத்தகைய கட்சி உறுப்பினர் கட்சிக்கு நிதி ஆதரவு வழங்க வேண்டும் என்பதைச் சேர்த்துக் கொண்டால், பின்பு கட்சி உறுப்பினர் என்ற பட்டத்துக்கான உரிமையை ஒருவருக்குக் கொடுக்கும் அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ததாகிவிடும்.

எனவே, ரசிய சமூக-ஜனநாயகத் தொழிலாளர் கட்சியின் ஓர் உறுப்பினர் என்பவர் இக்கட்சியின் திட்டத்தை ஏற்றுக் கொள்பவராகவும், கட்சிக்கு நிதி ஆதரவு வழங்குபவராகவும், கட்சி அமைப்பு ஒன்றில் செயல்படுபவராகவும் இருக்க வேண்டும். தோழர் லெனின்(1) எழுதிய கட்சி விதிகளின் முதல் பத்தி இவ்வாறாக வகுக்கப்பட்டுள்ளது.

தோழர் லெனினுடன் மார்ட்டோவ்.

நமது கட்சியானது ஒரு மையப்படுத்தப்பட்ட அமைப்பேயன்றி, தனிநபர்களின் கதம்பக்கூட்டு அல்ல என்ற கொள்கையில் இருந்து இச்சூத்திரம் முழுமையாக முகிழ்த்துள்ளதை நீங்கள் காணலாம். இதில்தான் இச்சூத்திரத்தின் தலை சிறந்தத் தன்மை உள்ளது.

ஆனால் சில தோழர்களோ லெனினின் இச்சூத்திரம் ‘குறுகியதாகவும்’, ‘வசதியற்றதாகவும்’ உள்ளதென்றுச் சொல்லி நிராகரிக்கின்றனர். பின்பு அவர்கள் தாம் முன்மொழியும் சூத்திரம் குறுகியதாகவும் இல்லாமல், வசதியற்றதாகவும் இல்லாமல் சரியானதாக இருக்கும் என்றும் நம்பிக் கொள்ளச் சொல்கின்றனர். நாம் இங்கு ‘மார்ட்டோவ்’(2) அவர்களின் சூத்திரத்தை குறிப்பிடுகிறோம். அதை தற்போது பகுத்தாய்வோம்.

“இரசிய சமூக-ஜனநாயகத் தொழிலாளர் கட்சியின் உறுப்பினர் என்பவர் அதன் திட்டத்தை ஏற்பவராகவும், கட்சிக்கு நிதி ஆதரவு வழங்குபவராகவும், அதன் அமைப்புகள் ஒன்றின் வழிகாட்டுதலின்கீழ் கட்சிக்கு முறையாகத் தனிப்பட்ட உதவி வழங்குபவராகவும் இருக்க வேண்டும்” என்பதே மார்ட்டோவ் அவர்களின் சூத்திரமாகும். இச்சூத்திரமானது கட்சி உறுப்பினராக இருப்பதற்கான மூன்றாவது அத்தியாவசியமான நிபந்தனையாக இருக்கும், கட்சி உறுப்பினர்கள் கட்சி அமைப்புகள் ஒன்றில் செயல்படவேண்டும் என்பதைத் தவிர்த்துவிட்டு இருப்பதையும் நீங்கள் காணலாம்.

தெளிவானதாகவும் இன்றியமையாததாகவும் உள்ள இந்நிபந்தனையை மார்ட்டோவ் மேம்போக்கானதாகக் கருதுகிறார் என்று தோன்றுகிறது. அவர் தனது சூத்திரத்தில், “கட்சி அமைப்புகள் ஒன்றின் வழிகாட்டுதலின் கீழாகத் தனிப்பட்ட உதவி” என்று தெளிவற்றதாகவும் இரண்டகமாகவும் பொருள்தரும் சொற்களைப் போட்டுள்ளார். எந்த கட்சி அமைப்பிலும் இல்லாமலே ஒருவர் கட்சி உறுப்பினராக இருக்க முடியும், (நிச்சயமாகவே ஓர் அருமையான ‘கட்சிதான்’ ) மேலும் கட்சியின் விருப்பத்துக்குப் பணிந்து நடக்க வேண்டும் என்ற எண்ணமும் இன்றி (நிச்சயமாகவே அருமையான “கட்சிக் கட்டுப்பாடுதான்” ) இருக்கலாம் எனத் தோன்றுகிறது. சரிதான். இவ்வாறு கட்சி அமைப்பு எதிலும் இல்லாத நபர்களை, அதிலும் கட்சிக் கட்டுப்பாட்டுக்குப் பணிந்து செல்லும் கட்டுப்பாடு பற்றிய சிந்தனையே இல்லாத நபர்களை கட்சியால் எவ்வாறு “முறையாக” இயக்க முடியும்?

படிக்க:
தேசிய கல்விக் கொள்கை – 2020 : என்னவாகும் உயர்கல்வி ? | இணைய வழிக் கூட்டம்
தொழில்துறைப் புரட்சி | பொருளாதாரம் கற்போம் – 62

மார்ட்டோவ் சூத்திரத்தின் அடிப்படையிலான கட்சி விதிகளின் முதலாவது பத்தியை இதே கேள்விதான் நொறுக்கித்தள்ளுகிறது. லெனினது சூத்திரமோ இதே கேள்விக்கு சிறந்த முறையில் விடையளிக்கிறது. கட்சி உறுப்பினராக ஒருவர் வரவேண்டுமெனில் மூன்றாவதாக தவிர்க்க முடியாத நிபந்தனையாக அவர் கட்சி அமைப்பு ஒன்றில் செயல்பட வேண்டும் என்று தெளிவாகவும் தனிச்சிறப்பான பாணியிலும் வரையறுக்கிறார்.

தெளிவற்றதாகவும் பொருளற்றச் சூத்திரமாகவும் உள்ள “கட்சி அமைப்புகள் ஒன்றின் வழிகாட்டுதல் கீழ் தனிப்பட்ட உதவி” என்ற மார்ட்டோவின் சூத்திரத்தை நாம் அனைவரும் தூக்கியெறிய வேண்டும். இந்நிபந்தனை நீக்கப்பட்ட பின்பு, மார்ட்டோவில் இரு நிபந்தனைகள் மட்டுமே எஞ்சியுள்ளன (திட்டத்தை ஏற்பது மற்றும் நிதி ஆதரவு). ஆனால் ஒவ்வொரு வெற்றுவாய் வீரரும் கட்சித் திட்டத்தை ஏற்றுக் கொண்டு நிதி ஆதரவு வழங்க முடியும் என்பதால் இந்நிபந்தனைகள் தாமே முற்றுமுழுதாக மதிப்பற்றவையாக உள்ளன. ஆனால் அது ஒருவருக்கு சாதாரணமாகக் கட்சி உறுப்பினர் தகுதியை வழங்கிவிடாது.

நாம் இதை ஒரு ‘வசதியான’ சூத்திரம் என்றே சொல்ல வேண்டும்!

கட்சித் திட்டத்தை வெறுமனே ஏற்றுக் கொண்டு உண்மையான கட்சி உறுப்பினர்களால் சும்மா இருக்க முடியாது, ஆனால் அவர்கள் தாம் ஏற்றுக் கொண்ட திட்டத்தை அமல்படுத்தத் தவிர்க்காமல் தீவிர முயற்சியெடுக்க வேண்டும் என்றே நாங்கள் சொல்கிறோம். நீங்கள் மிகவும் கெடுபிடியானவர்களாக உள்ளீர்கள், ஏனெனில் ஒரு கட்சி உறுப்பினர் தான் ஏற்றுக் கொண்ட கட்சித் திட்டத்தை அமல்படுத்துவது ஒன்றும் அவசியமானதல்ல என்றும் அவர் கட்சிக்கு நிதி ஆதரவு வழங்க விருப்பமாக உள்ளதைப் போன்று ஏதோ ஒன்றை செய்கிறார் என்றும் மார்ட்டோவ் விடை அளிக்கிறார். மார்ட்டோவ் சில ‘சமூக-ஜனநாயகவாத’ காற்றடைத்தப் பைகளுக்குப் பரிவு காட்டி, கட்சியின் கதவுகளை அவர்களுக்காக மூட விரும்பாமல் உள்ளதாகக் தோன்றுகிறது.

மேலும் திட்டத்தை அமல்படுத்த வேண்டுமென்றால் போராட்டம் என்பது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது எனும்போது ஒற்றுமையின்றி போராடுவது சாத்தியமற்றது என்கிறோம். எனவே, ஒவ்வொரு வருங்கால உறுப்பினரும் கட்சி அமைப்பு ஒன்றில் இணைந்து, கட்சியின் நோக்கங்களுடன் தனது நோக்கத்தை ஒன்று கலக்க வேண்டும். இவ்வாறு கட்சியுடன் ஒத்திசைவான முறையில் செயல்பட்டுப் போராடும் பாட்டாளி வர்க்கப்படையை வழிநடத்த வேண்டும். அதாவது, ஒவ்வொரு வருங்கால உறுப்பினரும் ஒரு மையப்படுத்தப்பட்டக் கட்சியின் நன்குக் கட்டியமைக்கப்பட்ட படைப்பிரிவில் தன்னை அமைப்பாக்கிக் கொள்ள வேண்டும். இதற்கு மார்ட்டோவ் இவ்வாறு விடையளிக்கிறார்: நன்கு கட்டியமைக்கபட்ட படைப்பிரிவில் கட்சி உறுப்பினர்கள் அமைப்பாவது மிக அத்தியாவசியமானது இல்லை; தனித்தனியே போராடுவதே போதுமானது.

நாங்கள் கேட்கிறோம், அப்படியென்றால் நமது கட்சி என்பது என்ன? திடீரென்று தோன்றும் தனிநபர்களின் கதம்பக் கூட்டா அல்லது தலைவர்களைக் கொண்ட கட்டுக்கோப்பான அமைப்பா? ஒருவேளை அது தலைவர்களின் அமைப்பாக இருந்தால், அதைச் சாராதவரையும், மேலும், அதன் விளைவாக, அதன் கட்டுப்பாட்டுக்குப் பணிந்து செயல்படுவது தனது கட்டுப்பாடான கடமை என்ற அக்கறையில்லாதவரையும் எவ்வாறு அதன் உறுப்பினராகக் கருத முடியும்? கட்சி என்பது ஒரு அமைப்பு அல்ல, அல்லது அதைவிட, அக்கட்சி என்பது ஓர் அமைப்பாக்கப்படாத அமைப்பு (நிச்சயமாகவே! நேர்த்தியான “மத்தியத்துவம்”) என்று மார்ட்டோவ் விடையளிக்கிறார்!

( தொடரும் )

அடிக்குறிப்புகள் :

(1) லெனின், புரட்சிகர சமூக-ஜனநாயகத்தின் தலைசிறந்த கோட்பாட்டாளரும், நடைமுறைத் தலைவரும் ஆவார்.
(2) மார்ட்டோவ் ‘இஸ்க்ரா’ பத்திரிக்கை ஆசிரியர்களில் ஒருவர்.

***

நூல் : ஜே. வி. ஸ்டாலின் படைப்புகள், தொகுதி ஒன்று
வெளியீடு : அலைகள் வெளியீட்டகம்.
விலை : ரூ. 450/-
கிடைக்குமிடம் :
5/1 ஏ, இரண்டாவது தெரு,
நடேசன் நகர், இராமாபுரம்,
சென்னை – 600 089.
தொடர்பு : 98417 75112.

தேசிய கல்விக் கொள்கை – 2020 : என்னவாகும் உயர்கல்வி ? | இணைய வழிக் கூட்டம்

தேசிய கல்விக் கொள்கை – 2020 : என்னவாகும் உயர்கல்வி ? | இணைய வழிக் கூட்டம்

நாள் : 12.09.2020, சனிக்கிழமை மாலை 4:00 மணி.
Zoom Meeting ID : 853 3799 7969

தலைமை :
பேராசிரியர் வீ. அரசு
மேனாள் தமிழ்த்துறைத் தலைவர்,
ஒருங்கிணைப்பாளர், CCCE, சென்னை.

சிறப்புரை :
திரு. சசிகாந்த் செந்தில்
முன்னாள் IAS அதிகாரி.

தகவல் :
பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு, சென்னை.
(Coordination Committee for Common Education)
தொடர்புக்கு : 94443 80211 | 94431 59058

பாட்டாளி வர்க்கமும் பாட்டாளி வர்க்கக் கட்சியும் ! | ஜே. வி. ஸ்டாலின்

பாட்டாளி வர்க்கமும் பாட்டாளி வர்க்கக் கட்சியும் !
(கட்சி விதிகளைப் பற்றிய முதல் பத்திக்கு உரியவை)

‘பிரிக்க முடியாத ஒரே ரசியா’ என்று மக்கள் துணிச்சலாகப் பறைசாற்றிய காலம் போய்விட்டது. நீண்டகாலத்துக்கு முன்பே ரசியாவானது பாட்டாளிகளும் முதலாளிகளும் என்று இரு எதிரெதிரான வர்க்கங்களாகப் பிளவுபட்டு விட்டதால் ‘பிரிக்கமுடியாத ஒரே ரசியா’ என்று ஒன்றுமில்லை என்பது ஒரு குழந்தைக்குக்கூட தெரியும். தற்போது இந்த இரு வர்க்கங்களுக்கு இடையிலான போராட்டத்தை அச்சாகக் கொண்டே நமது சமகால வாழ்வு சுழல்கிறது என்பது ஒன்றும் யாருக்கும் தெரியாத ரகசியமும் இல்லை.

இருந்தபோதிலும், நம்மால் சமீப காலம் வரை இவை அனைத்தையும் காண்பது கடினமானதாக இருந்தது. தனிப்பட்ட குழுக்கள் மட்டும், நாட்டின் பல பாகங்களிலும் உள்ள தனிப்பட்ட நகரங்களில் போராடியதால், நாம் இதுவரை போராட்ட அரங்கில் தனிப்பட்ட குழுக்களை மட்டும் சந்தித்தோம். எனவேதான் நம்மால் சமீப காலம் வரை இக்காரணத்தினால் இதைக் காண்பது கடினமாக உள்ளது. மேலும் வர்க்கங்களாகப் பாட்டாளிகளும் முதலாளிகளும் உள்ளதை அவ்வளவு எளிதாக உற்றுப்பார்த்து அறிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் தற்போதோ நகரங்களும் கிராமங்களும், பாட்டாளிகளின் பல்வேறு குழுக்களும் கைகோர்த்து உள்ளார்கள், கூட்டுப் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் வேலை நிறுத்தங்களும் வெடித்து வெளிப்பட்டுள்ளதோடு – நமக்கு முன்பாக இரு ரசியாக்களின், – முதலாளித்துவ ரசியாவுக்கும் பாட்டாளிகளின் ரசியாவுக்கும் இடையிலான போராட்டத்தின் சிறப்பான காட்சி வெளிப்பட்டுள்ளது. போராட்ட அரங்கில் இரு பெரிய இராணுவங்களும் – முதலாளிகளின் இராணுவமும், பாட்டாளிகளின் இராணுவங்களும் – நுழைந்து இருக்கின்றன, நமது சமூக வாழ்வு முழுவதையும் இந்த இரு இராணுவங்களுக்கும் இடையிலான போராட்டம் தழுவியுள்ளது.

தலைவர்களின்றி ஒரு இராணுவம் செயல்பட முடியாது என்ற காரணத்தாலும், ஒவ்வொரு இராணுவத்துக்கும் ஒரு முன்னணிப்படை அதன் முன்பு அணிவகுத்துச் சென்று அதன் பாதையை ஒளியூட்ட வேண்டும் என்ற காரணத்தாலும், இந்த இரு இராணுவங்களுக்கும் ஏற்புடைய தலைவர்களின் குழுக்கள், அதாவது வழக்கமாக அழைக்கப்படும் வகையில் ஏற்புடைய கட்சிகள் தோன்ற வேண்டும் என்பதில் ஐயத்துக்கிடமில்லை.

படிக்க:
தோழர் மாவோ சிந்தனைகளை நெஞ்சில் ஏந்துவோம் ! தாராளவாதத்தை வீழ்த்துவோம் !
சீர்திருத்தவாதத் தலைவர்களை அம்பலப்படுத்துவது எப்படி ?

இவ்வாறு படத்தில் பின்வருமாறு காட்சி வெளிப்படுகிறது; ஒரு புறத்தில் முதலாளிகளின் இராணுவம் தாராளவாதக் கட்சி தலைமையில் உள்ளது; மறுபுறத்தில் சமூக-ஜனநாயகக் கட்சிய தலைமை தாங்கப்படும் பாட்டாளிகளின் இராணுவம் உள்ளது. ஒவ்வொரு இராணுவமும் தனது வர்க்கப் போராட்டத்தில் சொந்தக் கட்சியால் வழிநடத்தப்படுகிறது. (1)

இவை அனைத்தையும் நாம் பாட்டாளி வர்க்கத்தையும். பாட்டாளி வர்க்கக் கட்சியையும் ஒப்பிடும் தேவைக்காக குறிப்பிடுகிறோம். இவ்வாறு கட்சியின் பொதுவான தனிச்சிறப்புகளை விரிவாகத் தெளிவுபடுத்துகிறோம்.

மேலே சொன்னதில் இருந்து பாட்டாளி வர்க்கக் கட்சியானது தலைவர்களின் போராட்டக்குழுவாக இருப்பது போதிய அளவிற்கு தெளிவாயிருக்கும். தலைவர்களின் போராட்டக்குழுவாக விளங்கும் பாட்டாளி வர்க்கக் கட்சியானது முதலாவதாக, முக்கியத்துவம் வாய்ந்த வகையில் பாட்டாளி வர்க்கத்தினரைவிட உறுப்பினர் எண்ணிக்கையில் மிகவும் குறைவானது, இரண்டாவதாக, பாட்டாளி வர்க்கத்தைவிட அனுபவத்திலும், புரிதலிலும் மேம்பட்டு இருக்க வேண்டும், மூன்றாவதாக, அது ஒரு கட்டுக்கோப்பான அமைப்பாக இருக்க வேண்டும்.

முதலாளித்துவ அமைப்புமுறை நிலவும் வரை, தவிர்க்க முடியாதவாறு மக்களிடம் வறுமையும், பின்தங்கிய நிலையும் நிலைபெற்று, பாட்டாளிவர்க்கம் முழுதும் தேவைப்படும் அளவிற்கு வர்க்க உணர்வு பெற முடியாது என்பது எமது கருத்தாகும். எனவே இதன் விளைவாக வர்க்க உணர்வு பெற்ற தலைவர்களின் குழு பாட்டாளி வர்க்கப் படைக்கு சோசலிச உணர்ச்சிப் பெறுவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது தெட்டத்தெளிவாக விளங்கும் என்பதால் இதற்கு சான்று தேவையில்லை என்பது எமது கருத்தாகும். போராடும் பாட்டாளி வர்க்கத்தினருக்கு தலைமையளிக்க புறப்பட்டுள்ள ஒரு கட்சியானது தனி நபர்களின் கதம்பக்கூட்டாக இல்லாமல், மத்தியத்துவப்பட்ட அமைப்பாக கட்டுக்கோப்பாக இருப்பதன் வாயிலாக அதன் செயல்பாடுகள் ஒரு தனித் திட்டத்திற்கேற்ப இருக்க முடியும் என்பது தெளிவாகும். இவையே நமது கட்சியின் பொதுவான தோற்றம் குறித்த விளக்கமாகும்.

இவற்றை மனத்தில் பதித்துக் கொண்டு நாம் முக்கியமான பிரச்சனைக்கு செல்ல வேண்டும்: நாம் ஒரு கட்சி உறுப்பினர் என்று யாரை அழைக்க முடியும்? இப்பிரச்சனையைத் துல்லியமாகக் கையாளும் வகையில் கட்சி விதிகளின் முதல் பத்தி உள்ளதே, அதுதான் தற்போதைய கட்டுரையின் பொருளாகும். எனவே, இதில் உள்ள கருத்து வேறுபாட்டினைப் பற்றி ஆராய்வோம்.

இரசிய சமூக-ஜனநாயகத் தொழிலாளர் கட்சியின் உறுப்பினர் என்று நாம் பின்பு யாரை அழைக்க முடியும் – அதாவது கட்சி உறுப்பினரின் கடமைகள் என்ன?

நமது கட்சி ஒரு சமூக – ஜனநாயகக் கட்சியாகும். அவ்வாறெனில் இதற்கு என்று ஒரு சொந்தத் திட்டம் (இயக்கத்தின் உடனடியான மற்றும் இறுதியான இலக்குகள்) அதன் சொந்த செயலுத்திகள் (போராட்ட முறைகள்) மற்றும் அதன் சொந்த அமைப்புக் கொள்கை (அமைப்பு வடிவம்) ஆகியவை இருக்கும் என்பதே இதன் பொருளாகும். திட்டத்தில் ஒற்றுமை, செயலுத்தி ரீதியான பார்வையிலும் அமைப்பு ரீதியான பார்வையிலும் உள்ள ஒற்றுமை ஆகியனவற்றின் அடிப்படையில்தான் நமது கட்சி கட்டியமைக்கப்பட்டிருக்கிறது. நமது கட்சி உறுப்பினர்களை ஒரே மத்தியத்துவப்பட்டக் கட்சியில் ஒன்றுபடுத்துவதற்குத் திட்டம், செயலுத்தி மற்றும் அமைப்பு குறித்த பார்வை ஆகியவற்றால் மட்டுமே முடியும்.

படிக்க:
தொழில்துறைப் புரட்சி | பொருளாதாரம் கற்போம் – 62
லெனினும் கம்யூனிஸ்ட் அகிலமும் !

ஒருவேளை இவற்றில் ஒற்றுமை குலைந்தால், கட்சி சிதறும். எனவே கட்சியின் திட்டம், செயலுத்தி மற்றும் அமைப்பு விதிகளை ஏற்கும் ஒருவரை மட்டுமே கட்சி உறுப்பினர் என்று சொல்லமுடியும். இவற்றைப் போதிய அளவிற்கு கற்று முழுமையாக ஏற்பவரே கட்சியின் அணிகளில் இருக்க முடியும், இவ்வாறு இதன் மூலம் பாட்டாளி வர்க்கப் படைத் தலைவர்களின் அணிவரிசையிலும் இருக்க முடியும்.

ஆனால் ஒரு கட்சி உறுப்பினர் வெறுமனே கட்சியின் திட்டம், செயலுத்திகள் மற்றும் அமைப்பு விதிகளை ஏற்பது மட்டும் போதுமானதா? இவ்வாறான ஒரு நபரை பாட்டாளி வர்க்கப் படையின் ஒரு உண்மையான தலைவர் என்று கருத முடியுமா? நிச்சயமாக இல்லை ! முதலில் கட்சியின் திட்டம், செயலுத்திகள் மற்றும் அமைப்பு உடனடியாக ஏற்றுக் கொள்ளும் காற்றடைத்தப் பைகளைப் போன்ற ஏராளமான நபர்கள் இவ்வுலகில் உள்ளனர் என்பதையும் ஆனால் அவர்களால் காற்றடைத்தப் பைகளாக இருப்பதை தவிர வேறொன்றும் செய்ய முடியாதவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் ஒவ்வொருவரும் அறிந்துள்ளனர். ஒரு கட்சி உறுப்பினர் (அதாவது பாட்டாளி வர்க்கப் படைத் தலைவர்) என்று ஒரு காற்றடைத்தப் பையை அழைப்பதே கட்சியின் புனிதத் தன்மையை கெடுக்கும் சொல்லாகும்! மேலும், நமது கட்சி ஒன்றும் தத்துவப் பள்ளியோ அல்லது மதப்பிரிவோ அல்ல. நமது கட்சி போரிடும் கட்சியாக இருக்கிறதல்லவா? எனவே அது அவ்வாறு உள்ளபோது சொல்லளவில் கட்சியின் திட்டம், செயலுத்திகள் மற்றும் அமைப்ப விதிகளை ஏற்பதில் இருந்து அது நிறைவுறாது என்பது தெளிவாகிறதில்லையா? மேலும் அது தனது உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்ட கண்ணோட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று ஐயத்துக்கு இடமின்றி கோரிக்கை வைக்கும் இல்லையா? எனவே, யாரெல்லாம் நமது கட்சியின் உறுப்பினராக வேண்டும் என்று விரும்புகிறார்களோ அவர்கள் நமது கட்சியின் திட்டம், செயலுத்திகள் மற்றும் அமைப்பு விதிகளை வெறுமனே ஏற்பதை விடுத்து அவற்றை உருப்படியான விளைவு ஏற்படுத்தும் வகையில் அமல்படுத்தத் தொடங்க வேண்டும்.

ஒரு கட்சி உறுப்பினர் கட்சியின் கொள்கைகளை அமல்படுத்துவது என்பதன் பொருள் என்ன? கட்சியின் கொள்கைகளை அவர் எப்போது அமல்படுத்த முடியும்? அவர் ஒட்டுமொத்த கட்சியுடன் அணிவகுத்துச் செல்லும்போது, பாட்டாளி வர்க்கப் படையின் தலைமையில் அவர் போரிடும் போது மட்டுமே அமல்படுத்த முடியும். தனிமையில் உள்ள சிதறுண்ட தனிநபர்களைக்கொண்டு இப்போராட்டத்தை நடத்த முடியுமா? நிச்சயமாக முடியாது! மாறாக, மக்கள் முதலில் ஒன்றுபட்ட அமைப்பான பின்பே களத்திற்குச் செல்கிறார்கள். ஒருவேளை இவ்வாறு நடைபெறாவிடில் அனைத்துப் போராட்டமும் பயனற்றதாகும். ஒரு கட்டுக்கோப்பான அமைப்பில் கட்சி உறுப்பினர்கள் ஒன்றுபடும்போது மட்டுமே அவர்களால் போரிடமுடியும், கட்சியின் கொள்கைகளை அமல்படுத்த முடியும் என்பது தெளிவாகிறது. கட்சி உறுப்பினர்கள் ஒன்றுபடும் அமைப்பானது எந்தளவிற்குக் கட்டுக்கோப்பாக உள்ளதோ, அந்தளவிற்கு அவர்களால் சிறப்பாகப் போரிடமுடியும், மற்றும் இதன் விளைவாக அவர்களால் கட்சியின் திட்டம், செயலுத்திகள் அமைப்புக் கொள்கைகளை மேலும் அதிகமாக அமல்படுத்த முடியும். தனிநபர்களின் கதம்பத் திரள் அல்ல அது ஒரு தலைவர்களின் அமைப்பு என்று நமது கட்சியை எந்தக் காரணமுமின்றி சாதாரணமாக சொல்லப் படவில்லை. மேலும், கட்சியானது தலைவர்களின் அமைப்பாக இருப்பதால் இவ்வமைப்பில் செயல்படுபவர்கள்தான் இக்கட்சியின், இவ்வமைப்பின் உறுப்பினர்களாகக் கருதப்பட முடியும் என்பதோடு இவர்கள் விருப்பங்களைக் கட்சியின் விருப்பங்களோடு இணைப்பதைத் தமது கடமையாகக் கருதவேண்டும் என்பது ஐயத்துக்கிடமில்லாததாகும். மேலும், கட்சி உறுப்பினர்களாகக் கருதப்படுபவர் கட்சியுடன் இசைவாகச் செயல்படவேண்டும் என்பதும் ஐயத்துக்கிடமற்ற உண்மையாகும்.

எனவே, ஒருவர் கட்சி உறுப்பினராக வரவேண்டுமாயின் கட்சித் திட்டம், செயலுத்திகள் மற்றும் அமைப்புக் கொள்கைகளை அமல்படுத்த வேண்டும்; கட்சியின் கொள்கைகளை அமல்படுத்த வேண்டுமாயின் ஒருவர் அதற்காகப் போராட வேண்டும். மேலும் இக்கொள்கைகளுக்காகப் போராடுவதற்கு ஒருவர் கட்சி அமைப்பில் கட்சியுடன் ஒத்திசைந்து வேலை செய்ய வேண்டும். ஒருவர் கட்சி உறுப்பினராக ஆவதற்கு கட்சி அமைப்புகள் ஏதாவது ஒன்றில் இணைந்து செயல்படவேண்டும் என்பது தெளிவாகிறது.(2) கட்சியின் அமைப்புகள் ஒன்றில் நாம் இணையும் போதுதான், நாம் கட்சியின் நலன்களுடன் நமது சொந்த நலன்களை இணைத்தவர்களாவோம். இதன் விளைவாக நாம் பாட்டாளி வர்க்கப் படையின் உண்மையான தலைவர்களாகவும் ஆகிறோம்.

( தொடரும் )

அடிக்குறிப்புகள் :

(1) ரசியாவில் உள்ள இதரக் கட்சிகளை நாம் இங்கு குறிப்பிடவில்லை . ஏனெனில் நாம் விவாதத்தில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும் கேள்விகளில் அவற்றைத் தொடர்புப்படுத்த தேவை எழவில்லை.

(2) எப்படி ஒவ்வொரு சிக்கலான உயிரியும் கணக்கற்ற எளிய உயிரிகளால் உருவாகியிருக்கிறதோ, அதைப் போன்றுதான் சிக்கலானதும், பொதுவானதுமாக உள்ள அமைப்பான நமது கட்சியும் எண்ணற்ற மாவட்ட மற்றும் உள்ளூர் அமைப்புகளால் கட்சி அமைப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. அவை யாவும் கட்சிப் போராட்டம் அல்லது மையக்குழுவின் ஒப்புதலைப் பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. நீங்கள் பார்த்தவாறு குழுக்களை மட்டும் கட்சி அமைப்புகள் என்று சொல்வதில்லை. இவ்வமைப்புகளின் செயல்பாடுகளுக்கு ஒரு தனித் திட்டத்திற்கேற்ப வழிகாட்டி இயக்குவதற்கு ஒரு மையக்குழு உள்ளது. இதன் மூலமாக இந்த உள்ளூர் கட்சி அமைப்புகள் யாவும் ஒரே, பெரிய மையப்படுத்தப்பட்ட அமைப்பாக உருவாகிறன்றன.

***

நூல் : ஜே. வி. ஸ்டாலின் படைப்புகள், தொகுதி ஒன்று
வெளியீடு : அலைகள் வெளியீட்டகம்.
விலை : ரூ. 450/-
கிடைக்குமிடம் :
5/1 ஏ, இரண்டாவது தெரு,
நடேசன் நகர், இராமாபுரம்,
சென்னை – 600 089.
தொடர்பு : 98417 75112.

நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய் ! புதிய கல்விக் கொள்கையை திரும்பப்பெறு !! கடலூர் பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம்

1

டலூரில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக மஞ்சக்குப்பம் கார் ஸ்டண்ட் அருகில் 09.09.2020 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்

  • நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும்!
  • பல்கலைக்கழக மற்றும் கல்லூரிகளில் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய வேண்டும்!
  • புதிய கல்விக் கொள்கையை திரும்பப்பெற வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி கண்டன முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு புமாஇமு உறுப்பினர் தோழர் பூங்குழலி தலைமை தாங்கினார். பொது நல இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் வெண்புறா குமார் துவக்கவுரையாற்றினார். புமாஇமு உறுப்பினர் தோழர் வெங்கடேசன் மற்றும் புமாஇமு மாவட்ட செயலாளர் தோழர் மணியரசன் ஆகியோர் கண்டன உரையாற்றினார். இறுதியாக புமாஇமு தோழர் பால்ராஜ் நன்றியுரையாற்றினார்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தோழர் பூங்குழலி தனது தலைமயுரையில், “மருத்துவம் படிப்பதற்கு ஐந்து ஆண்டுகள் ஏற்கனவே இருக்கிறது இதில் வகுப்பு, தேர்வு என்ற அடிப்படையில் இல்லாமல் இறுதி ஆண்டு பயிற்சி எடுத்த பிறகு ஒருவர் மருத்துவர் ஆக முடியும் இவ்வாறு இருக்கையில் பள்ளி படிப்பை வைத்து ஒரு தகுதி தேர்வு என்பது மருத்துவரை எப்படி உருவாக்க முடியும்? இந்த தேர்வு என்பதே எழை எளிய மாணவர்களின் மருத்துவ கல்வியை பறிக்கின்ற செயல் அனிதா முதல் கரீஷ்மா வரை பல்வேறு எழை மாணவர்களை படுகொலை செய்து வருகிறது. இப்படி பட்ட நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். ஏழை எளிய மாணவர்களின் கல்விக் கனவை பறித்து காசு உள்ளவனுக்கு கல்வி என்று மனுதர்ம கொள்கையை கொண்டு வரும் புதிய கல்வி கொள்கையை ரத்து செய்யவேண்டும். கொரோனா பெரும் தொற்று அதிகமாகும் காலத்தில் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வை நடத்த கூடாது” என்ற அடிப்படையில் தலைமை உரை பேசினார்.

அவரைத் தொடர்ந்து தோழர் வெண்புறா குமார் பேசுகையில், “தமிழகத்தை அழிக்கின்ற வகையில் மோடி அரசு பல்வேறு திட்டங்களை அமுல் படுத்தி வருகின்றது. இதற்கு இங்கு இருக்கும் சில கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகிறது. புதிய கல்வி கொள்கையில் 3,5,8 பொது தேர்வு என்பது மாணவர்களின் கல்வியை பாதிக்கிறது. நமது உரிமைகளை மீட்க சின்ன சின்ன போராட்டங்கள் என்பது தீர்வு ஆகாது. ஜல்லிக்கட்டு போன்ற போராட்டம் தான் தீர்வு! அது போன்ற போராட்டத்தை கட்டியமைக்க வேண்டும்.” என்று கண்டன உரையாற்றினார்.

படிக்க:
விடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் ! | படக்கட்டுரை
தோழர் மாவோ சிந்தனைகளை நெஞ்சில் ஏந்துவோம் ! தாராளவாதத்தை வீழ்த்துவோம் !

அதற்கடுத்தபடியாக தோழர் வெங்கடேசன் பேசுகையில், “இந்தியா என்பது பல்வேறு தேசிய இனங்களையும், பல மொழி பேசும் மக்களையும் கொண்ட ஒரு நாடு. இங்கு ஒரே தேசியம் என்று சொல்வது அராஜக போக்கு. இப்படி இருக்கும் போது இதில் ஒரே கல்வி கொள்கை, ஒரே மொழி என்று சொல்வது ஒரு பாசிச போக்கு! இந்த கல்விக் கொள்கையில் அறிவியலின் பெயரில் புராண இதிகாச குப்பைகளும், அறிவியலுக்கு எதிரான கதைகளும் திணிக்கப்படுகிறது. இதை முறியடிக்க நாம் ஒன்றிணைத்து போராட வேண்டும்.” என்று பேசினார்.

தோழர் மணியரசன் தனது கண்டன உரையில், “கொரோனா பெரும் நோய் தொற்று இருக்கும் போது இறுதி ஆண்டு தேர்வை ரத்து செய்ய வேண்டும். மருத்துவ கல்வியை பறிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். ஏழை எளிய மாணவர்களின் கல்வியை பறிக்கும் புதிய கல்வி கொள்கையை ரத்து செய்யவேண்டும்” என்ற அடிப்படையில் பேசினார்.

இறுதியாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு தோழர் பால்ராஜ் நன்றி கூறி நிகழ்ச்சியை முடித்துவைத்தார்.

தகவல்:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
கடலூர் மாவட்டம்
தொடர்புக்கு : 97888 08110.

விடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் ! | படக்கட்டுரை

0

பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்து லெபனான் விடுபட்ட நாளின் 100-வது ஆண்டுவிழாவைக் கொண்டாடும் விதமாகவும், மக்கள் மீது அக்கறையற்ற லெபனான் அரசாளும் வர்க்கத்தினரை எதிர்க்கும் விதமாகவும் கடந்த செப்டெம்பர் 1-ம் தேதி லெபனான் தலைநகர் பெய்ரட்டில் உள்ள நாடாளுமன்றத்தின் முன்னால் போராட்டம் நடத்த லெபனான் மக்கள் ஒன்றுகூடினர்.

கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி, பெய்ரட் துறைமுகத்தில் பல ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் தேக்கி வைக்கப்பட்ட அமோனியம் நைட்ரேட் வெடித்துச் சிதறியதில் 190 பேர் பலியாகினர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். 3 லட்சத்திற்கும் அதிகமானோர் வீடிழந்தனர்.

இது மக்களின் பாதுகாப்பைப் பற்றி கண்டுகொள்ளாத அரசியல்வாதிகளால் தான் நிகழ்த்தப்பட்டது எனக் குற்றம்சாட்டி லெபனான் மக்கள் போராடி வருகின்றனர். இப்போராட்டத்தின் ஒரு கட்டமாகத்தான் நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டம். ஒரு நுழைவாயில் வழியாக நாடாளுமன்ற வளாகத்தினுள் நுழைந்த போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்புகை குண்டு வீசி கலைத்தது போலீசு. போராட்டக்காரர்கள் மீது தாக்குதலும் தொடுத்தது. மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த இராணுவ வாகனத்தையும் உதவிக்கு அழைத்தது போலீசு.

லெபனான் உருவாகி 100-ம் ஆண்டைக் குறிக்கும் விதமாகவும், அரசாளும் பிரிவினருக்கு எதிராக போராடவும், தியாகிகள் சதுக்கத்தில் திரண்ட நூற்றுக்கணக்கான மக்கள் !

போலீசின் இந்த நடவடிக்கைகளை செயல்பாட்டாளர்கள் கடுமையாகக் கண்டித்துள்ளனர். போராட்டக்காரர்கள், மக்களை நிந்தித்த தலைவர்கள் இல்லாத ஒரு புதிய லெபனானிற்கு அறைகூவல் விடுத்தும், பிரெஞ்சிலிருந்து விடுதலை பெற்ற 100-ம் ஆண்டு விழாவை ஒட்டி அங்கு வருகை புரிந்த பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மேக்ரானிடம், தற்போதைய லெபனான் அரசுடன் ஒத்துழைக்கக் கூடாது என வலியுறுத்தியும் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

விபத்து நடந்த பெய்ரட் துறைமுகத்திற்கு அருகில் உள்ள தியாகிகள் சதுக்கத்தில், போராட்டக்காரர்கள் தங்களது கோரிக்கைகளை மேடையேறி முன் வைத்தனர். மதச் சார்பற்ற அரசு, பலன் தரத்தக்க பொருளாதாரம் ஆகியவையே அவர்களது முக்கியக் கோரிக்கைகளாகும்.

லெபனான் கொடிகளை ஏந்தி, ஊழல் அரசியல்வாதிகளை கண்டித்துக் கொண்டே, பழைய தோல்வியடைந்த அரசியல் அதிகாரப் பகிர்வு முறைக்கு முடிவு கட்டி புதிய மதச்சார்பற்ற அரசு உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்

“ (விடுதலைக்குப் பின்னான) இந்த முதல் நூற்றாண்டு, போர்கள், அந்நிய ஆக்கிரமிப்பு, வறுமை, ஊழல், இடப்பெயர்வு, பிரிவினைவாத பிளவுகள் மற்றும் தற்போதைய துறைமுக வெடிவிபத்து ஆகியவற்றால் நிறைந்துள்ளது. இந்த அமைப்பை அவசரமாக சரி செய்ய வேண்டியது இருக்கிறது” என்று தெரிவிக்கிறார் 21 வயது துறைமுகப் பணியாளர் ஓமர்.

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டக்காரர்கள், பெய்ரட்டின் பாராளுமன்ற சதுக்கத்திற்கு அருகில் நடத்திய போராட்டத்தில் முழக்கமிடுகின்றனர்.

போராட்டத்தின் போது பாதுகாப்புப் படையினரை எதிர்கொள்ளும் போராட்டக்காரர்கள் !

ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்து 190 பேர் மரணமடைந்து, 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வீடற்றவர்களானதற்குக் காரணமான பெய்ரட் துறைமுக வெடிப்பு சம்பவத்திற்குப் பின்னர் இரண்டாவது முறையாக பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மேக்ரோனின் லெபனான் வருகையும் இந்தப் போராட்டங்களோடு தற்செயலாக ஒரே சமயத்தில் நிகழ்ந்துள்ளது.

லெபனானின் வெகுவாகப் பாதுகாக்கப்பட்ட பாராளுமன்ற வளாகத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள எஃகு சுற்றுச் சுவற்றின் மிது உலோக சட்டகங்களைப் பயன்படுத்தி ஏறும் போராட்டக்காரர்கள்.

பெய்ரட் போராட்டத்தில் பாதுகாப்புப் படையினரால் வீசப்பட்ட கண்ணீர்ப் புகை குண்டுகளை பாட்மிட்டன் மட்டையால் திருப்பியடிக்கும் போராட்டக்காரர்.

பாராளுமன்ற சதுக்கத்துக்கு அருகே அரசாங்கத்திற்கெதிரான போராட்டக்காரர்களுடன் கலவர தடுப்பு போலீசு, மோதலில் ஈடுபட்டுள்ளது.

ஒரு போராட்டக்காரர் கலவர தடுப்புப் போலீசின் மீது கற்களை வீசுகிறார்

கூட்டத்தை சமாளிக்க ஒரு இராணுவ வாகனம் வரவழைக்கப்பட்டது.

தமிழாக்கம் : நந்தன்

நன்றி :
அல்ஜசீரா

தொழில்துறைப் புரட்சி | பொருளாதாரம் கற்போம் – 62

0

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் – பாகம் 62

தொழில்துறைப் புரட்சி

அ.அனிக்கின்

ங்கிலாந்து சுமார் கால் நூற்றாண்டுக் காலம் யுத்தத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருந்தது. முதலில் ஜாக்கொபின் வாதிகளோடும் பிறகு ஜெனரல் போனபார்ட்டோடும் கடைசியாக சக்கரவர்த்தி நெப்போலியனோடும் போர் புரிந்தது. 1815ம் வருடத்தின் கோடை காலத்தில் வாட்டர் லோவில் அடைந்த வெற்றியோடு போர் முடிவுக்கு வந்தது. வெற்றியின் பலன்களை அனுபவிக்கின்ற வாய்ப்பு இங்கிலாந்துக்கு இப்பொழுது கிடைத்தது. இங்கிலாந்தின் வர்த்தகத்தை ஒடுக்குவதற்கு நெப்போலியன் தயாரித்த ஐரோப்பாக் கண்டத்தை முற்றுகையிடும் திட்டம் வீழ்ச்சியடைந்தது. அந்தக் காலத்தில் உலகத்திலேயே மிகச் சிறப்பான, பல விதமான பொருள்களை இங்கிலாந்து தயாரித்து வந்தது. அந்தச் சரக்குகளுக்கு ஐரோப்பியச் சந்தைகள் திறந்துவிடப்பட்டன.

யுத்தம் இங்கிலாந்தின் கடற்கரைகளுக்கு வெகு தூரத்துக்கு அப்பால் ஐரோப்பாக் கண்டத்தில், குடியேற்ற நாடுகளில், கடலில் நடைபெற்றது. இங்கிலாந்து பணக்கார நாடாக வளர்வதை அந்த யுத்தம் தடுக்கவில்லை, மாறாக அதற்கு உதவி செய்தது. பதினெட்டாம் நூற்றாண்டின் கடைசி மூன்றாம் பகுதியும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் மூன்றாம் பகுதியும் இங்கிலாந்தின் தொழில் துறைப் புரட்சிக் காலமாகும். முதலாளித்துவம் பட்டறைத் தொழில் கட்டத்தைக் கடந்து இயந்திரத் தொழில் துறை கட்டத்திற்குள் நுழைந்து கொண்டிருந்தது. குடிசைப் பட்டறைகளுக்குப் பதிலாக நூற்றுக்கணக்கானவர்கள் வேலை செய்கின்ற தொழிற்சாலைகள் ஏற்பட்டன.

இருள் அடர்ந்த, அழுக்குப் பிடித்த ஆலை நகரங்கள் தோன்ற ஆரம்பித்தன : மான்செஸ்டர், பர்மிங்காம், கிளாஸ்கோ…. பருத்தித் தொழில் இந்தத் தொழில் துறைப் புரட்சியின் முக்கியமான மையமாயிற்று. அந்தத் தொழிலுக்குத் தேவையான இயந்திரங்களையும் எரிபொருள்களையும் உற்பத்தி செய்கின்ற துணைத் தொழில்கள் வளர்ச்சி அடைந்தன. நிலக்கரி, இரும்பு ஆகியவற்றின்யுகம் ஆரம்பமாயிற்று. நீராவி உந்து சக்தி பிரதான தோற்றுவாயாயிற்று. 1822ம் வருடத்தில் ரிக் கார்டோ நீராவிப் படகில் ஐரோப்பாவுக்குப் பிரயாணம் செய்தார்; அவர் மரணமடைந்து இரண்டு வருடங்களுக்குப் பிறகு நீராவியைப் பயன்படுத்தும் முதல் ரயில் வண்டி ஏற்பட்டது.

இங்கிலாந்தின் கிராமப்புறங்கள் மாறிக் கொண்டிருந்தன. சொந்த நிலத்தில் அல்லது குத்தகை நிலத்தில் இருந்த சுதந்திரமான, சிறு அளவு விவசாய நிலவுடைமைகள் மறைந்து கொண்டிருந்தன; பெரிய பண்ணைகளும் முதலாளித்துவக் குத்தகை விவசாயிகளின் நிலங்களும் ஏற்பட்டுக்கொண்டிருந்தன. விவசாயத் தொழிலாளி வர்க்கம் உருவாகிக் கொண்டிருந்தது; சுரங்கம், கப்பல் துறை, கட்டிடத் தொழில், ஆலைத் தொழிலாளர்களின் அணியில் அவர்களும் கலந்தனர்.

இங்கிலாந்தில் செல்வம் குவிந்தது; ஆனால் இந்தச் செல்வத்தோடு வினியோகத் துறையில் ஏற்றத்தாழ்வும் ஏற்பட்டது. வர்க்க வேறுபாடுகள் அதிகக் கூர்மையடைந்தன, தீவிரமான முனைப்போடு வெளிப்பட்டன. அது தொழிலாளர்களுக்கு அருவருக்கத்தக்க குரூரத் தன்மையைக் கொண்ட உலகமாக இருந்தது. 1842ம் வருடத்தில் இளைஞரான எங்கெல்ஸ் இங்கிலாந்துக்கு முதன்முறையாக வந்தபொழுது அவருக்குத் தடுமாற்றத்தை ஏற்படுத்திய உலகம் இதுதான். ஒரு நாள் வேலை என்பது பன்னிரண்டு முதல் பதிமூன்று மணி நேர வேலையாக இருந்தது, சில சமயங்களில் இன்னும் அதிகமாகவும் இருக்கும். தொழிலாளர்கள் பட்டினி கிடக்காமல் சாப்பிடக் கூடிய அளவுக்கே குறைவான ஊதியம் பெற்றார்கள். வேலை இல்லாத பொழுது அல்லது நோய் வாய்ப்பட்டால் தொழிலாளியும் அவருடைய குடும்பமும் பட்டினி கிடக்க வேண்டும். தொழிற்சாலைகளின் உடைமையாளர்கள் இயந்திரங்களைப் பயன்படுத்தியபடியால் அவற்றில் குறிப்பாகப் பஞ்சாலைத் தொழிலில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் மிகவும் மலிவான உழைப்பை உபயோகித்துக் கொள்ள முடிந்தது.

படிக்க:
தோழர் மாவோ சிந்தனைகளை நெஞ்சில் ஏந்துவோம் ! தாராளவாதத்தை வீழ்த்துவோம் !
நூல் அறிமுகம் : அராஜகவாதமா ? சோசலிசமா ? | தோழர் ஸ்டாலின்

தொழிலாளர்கள் ஒன்று கூடுவது அல்லது எவ்விதத்திலும் சங்கம் அமைப்பது சட்டப்படி தடை செய்யப்பட்டது, அவ்வாறு செய்வது கலகம் செய்வதாகும் என்று கருதப்பட்டது. இத்தகைய பயங்கரமான நிலைமைகளுக்கு எதிராகத் தொழிலாளர்களின் ஏமாற்றமும் கோபமும் தாமாகவே பொங்கி வெடித்தன; இவை தான் அவர்கள் நடத்திய முதல் ஆர்ப்பாட்டங்கள். இயந்திரங்களே தங்களுடைய துன்பங்களுக்கெல்லாம் காரணம் என்று வெகுளித்தனமாக நம்பிய லுட்டைட்டுகள் அவற்றை உடைத்து நொறுக்கினார்கள். 1811-12ம் வருடங்களில் அவர்களுடைய இயக்கம் கணிசமான அளவுக்கு அதிகரித்தது. இந்தக் கடைகெட்ட மக்களுக்கு ஆதரவாகக் கவிஞர் பைரன் பிரபுக்கள் சபையில் தனிக்குரல் எழுப்பினார். லுட்டைட்டுகளின் நட வடிக்கைகளை ரிக்கார்டோ அங்கீகரிக்க முடியாது என்பது உண்மையே. எனினும் அவர் தொழிலாளர்களின் சங்கங்களுக்குச் சட்டரீதியான அங்கீகாரம் அளிக்க வேண்டுமென்று போராடினார்.

இயந்திரங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படக் கூடிய சமூக விளைவுகளைப் பற்றி முதல் தடவையாகக் கருத்துச் செறிவோடு ஆராய்ந்து எழுதியவர் அவரே. 1819ம் வருடத்தில் பீட்டர் ஸ்பீல்டில் நடைபெற்ற மான்செஸ்டர் தொழிலாளர்களின் பிரம்மாண்டமான ஆர்ப் பாட்டத்தின் போது அவர்கள் மீது துருப்புகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்தன. சமகாலத்தவர்கள் இந்தப் படு கொலையைப் பற்றி (வாட்டர்லோ வெற்றியைக் கேலி செய்து) ”பீட்டர்லோ வெற்றி” என்று வேடிக்கையாகக் கூறினார்கள்.

எனினும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முதலாளி வர்க்கத்துக்கும் தொழிலாளி வர்க்கத்துக்கும் ஏற்பட்டிருந்த வர்க்க முரண்பாடு சமூகத்தின் முக்கியமான மோதலாக, எல்லா சமூக உறவுகளையும் சித்தாந்தத்தையும் நிர்ணயிக்கின்ற மோதலாக இன்னும் உருவாகவில்லை. முதலாளி வர்க்கம் முன்னேற்றமடைந்து கொண்டிருக்கும் வர்க்கமாக இன்னும் இருந்தது; பொதுவாக, அதனுடைய நலன்கள் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியின் நலன்களோடு பொருந்தியிருந்தன. தொழிலாளி வர்க்கம் இன்னும் பலவீனமாகவும் சிதறிப்போன நிலையிலும் இருந்தது. சமூக உறவுகள் மற்றும் அரசியலில் அது புறப்பொருளாக இருந்ததே தவிர அகப் பொருளாக இருக்கவில்லை.

முதலாளிகளின் நலன்களுக்கு நிலவுடைமையாளர்களின் அத்து மீறல்கள் அதிகமான அச்சத்தைக் கொடுத்தன. தானிய விலை அதிகரிப்பின் மூலம் அவர்களுக்குக் கிடைத்து வந்த நிலக்குத்தகைப் பணம் அதிகரித்தது; யுத்தத்துக்குப் பிறகு அவர்கள் நாடாளுமன்றத்தில் டோரிக் கட்சிக்கு இருந்த பெரும்பான்மையைப் பயன்படுத்தி தானியச் சட்டங்களை நிறைவேற்றுமாறு செய்தனர். இவற்றின் மூலம் அந்நிய நாட்டிலிருந்து இங்கிலாந்துக்குள் தானியத்தை இறக்குமதி செய்வது கட்டுப்படுத்தப்பட்டது; அதனால் ரொட்டியை அதிகமான விலைக்கு விற்பனை செய்ய முடிந்தது. இது தொழிலதிபர்களுக்குப் பாதகமாக இருந்தது. ஏனென்றால் தங்களுடைய தொழிலாளர்கள் பட்டினி கிடக்காமலிருக்க வேண்டும் என்பதற்காக அதிகமான ஊதியம் கொடுக்க வேண்டிய கட்டாயமான நிலை அவர்களுக்கு ஏற்பட்டது. தானியச் சட்டங்களைச் சுற்றி நடைபெற்ற போராட்டம் 19ம் நூற்றாண்டின் முதற்பாதி முழுவதிலும் ஆங்கில அரசியல் வாழ்க்கையின் முக்கியமான பகுதியாக இருந்தது; அது பொருளியலாளர்களின் தத்துவ நிலைகளையும் பெரிய அளவுக்கு நிர்ணயித்தது. இந்தப் போராட்டத்தில் நிலவுடைமையாளர்களின் நலன்களைத் தொழில்துறை முதலாளி வர்க்கம் மற்றும் தொழிலாளி வர்க்கத்தின் கூட்டு நலன்கள் குறிப்பிட்ட அளவுக்கு எதிர்த்து நின்றன.

இந்த வரலாற்றுப் பின்னணியில் தான் ரிக்கார்டோவின் போதனை வளர்ச்சியடைந்தது. மூலச் சிறப்புடைய ஆங்கில மரபு அதன் உச்ச நிலையை எட்டியது. அடிப்படையான சமூக பொருளாதாரப் பிரச்சினைகளை, குறிப்பாக மூலதனத்துக்கும் உழைப்புக்கும் இடையே உள்ள உறவுகளை ரிக்கார்டோ நடுநிலையோடும் விஞ்ஞான யதார்த்தத்தோடும் ஆராய்ச்சி செய்ய முடிந்தது எப்படி என்பதை இந்தப் பின்னணி ஓரளவுக்கு விளக்குகிறது. ரிக்கார்டோ என்ற அறிஞருடைய ஆளுமையும் இதில் முக்கியமான பங்கு வகித்தது இயற்கையானதே.

(தொடரும்…)

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

தோழர் மாவோ சிந்தனைகளை நெஞ்சில் ஏந்துவோம் ! தாராளவாதத்தை வீழ்த்துவோம் !

செப்டெம்பர் 9, 2020 – தோழர் மாவோவின் 44-வது நினைவு தினம் இன்று. மார்க்சியத்தின் அடிப்படைகளை இறுகப் பற்றிக் கொண்டு ஜனநாயக மத்தியத்துவம், விமர்சனம் – சுயவிமர்சனம் ஆகிய பெரும் ஆயுதங்களைக் கொண்டு இடது, வலது சந்தர்ப்பவாதங்களுக்கு எதிராகப் போராடி புரட்சியை சாதிக்கவல்ல எஃகுறுதிமிக்க ஒரு கட்சியைக் கட்டியமைத்தார் லெனின். விளைவு – ரசியாவில் சோசலிசப் புரட்சி நடந்தது.

உலகின் முதல் சோசலிச நாடான ரசியா, தோழர் ஸ்டாலினின் தலைமையில் ஏகாதிபத்தியங்களின் நேரடியான மற்றும் மறைமுக தாக்குதல்களை ஒருபக்கம் எதிர்கொண்டு, மறுபுறத்தில் கட்சிக்குள் எழுந்த திருத்தல்வாத, வலது சந்தர்ப்பவாத  சித்தாந்தங்களையும் எதிர்கொண்டு அவற்றுக்கு எதிராகப் போராடியது.  இந்தப் போராட்டங்களின் அனுபவங்களையும், மார்க்சிய லெனினிய சிந்தனைகளையும் வரித்துக் கொண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சியை போல்ஷ்விக் மயமாகக் கட்டியமைத்தார் தோழர் மாவோ.

சீனாவின் சமூகப் பொருளாதார அரசியல் பின்னணியில், சீன மக்களின் பண்பாட்டு நிலைமைகளைக் கருத்தில் கொண்டு கட்சி ஸ்தாபனத்தில் வரும் பிரச்சினைகள், கட்சிக்குள் நிலவும் தவறான போக்குகள், ஊழியர்களுக்கும்  தலைவர்களுக்கும் இடையிலான சிக்கல்கள் ஆகியவற்றை பகுத்தாய்ந்து அவற்றைக் கலைவதற்கான வழிமுறைகளை தோழர் மாவோ முன் வைத்தார்.

கட்சியில் நிகழும் பிளவுகள், குழப்பங்கள் உள்ளிட்ட எதுவும் ஒரிரு நாட்களில் தோன்றிவிடுவதில்லை. அவை வலது இடது சந்தர்ப்பவாதப் போக்கு மெது மெதுவாக  கட்சிக்குள் வேரூன்றி வளர்ந்து, ஒரு சமயத்தில் வெடிக்கும்போதுதான் கட்சியில் பிளவுகளும் குழப்பங்களும் விளைகின்றன. அதனைத் தவிர்ப்பதற்கு இருக்கும் ஒரே வழிமுறை எப்போதும் கறாராக தாராளவாதத்திற்கு எதிராக போர் தொடுப்பதும், விமர்சன சுயவிமர்சன முறையைப் பின்பற்றுவதும்தான்!

மேல்கமிட்டியோ, கீழ் கமிட்டியோ எதுவாக இருந்தாலும், மார்க்சிய லெனினிய கண்ணோட்டத்தில் இருந்து தோழர்களின் திசைவிலகலைக் கண்டதும், அதனோடு எக்காரணம் கொண்டும் சமரசம் மேற்கொள்ளாமல், அதற்கு எதிராகக் கடுமையான போராட்டத்தை நடத்த வேண்டும் என்பதை பின்வரும் கட்டுரையில் விவரிக்கிறார் தோழர் மாவோ !

தாராளவாதத்திற்கு எதிராக அணிதிரண்டு அதனை எதிர்த்து முறியடிப்போம் !
தோழர் மாவோவின் சிந்தனையை எங்கும் எப்போதும்  உயர்த்திப்பிடிப்போம் !!

– வினவு

***

தாராளவாதத்தை எதிர்த்துப் போரிடுக !

நாம் ஊக்கமான சித்தாந்தப் போராட்டத்துக்காக நிற்கிறோம். காரணம், அது கட்சிக்குள்ளும் புரட்சிகர ஸ்தாபனங்களுக்குள்ளும் ஐக்கியத்தை உருவாக்கவும் அவற்றைப் போராடத் தகுதியுள்ளவைகளாக்கவுமான ஆயுதமாக மாற்றவும் உதவுகிறது. ஒவ்வொரு கம்யூனிஸ்டும், புரட்சிவாதியும் இந்த ஆயுதத்தைக் கையில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் தாராளவாதம், சித்தாந்தப் போராட்டத்தை மறுத்து, கோட்பாடற்ற சமாதானத்துக்காக நிற்கிறது. இதன் விளைவாக உலுத்துப் போன பண்பற்ற மனோபாவம் தோன்றி, கட்சியிலும் புரட்சிகர ஸ்தாபனங்களிலும் உள்ள சில அமைப்புகளையும் தனி நபர்களையும் அரசியல் ரீதியில் சீரழிக்கிறது.

தாராளவாதம், பல்வேறு வழிகளில் வெளிப்படுகின்றது. ஒருவர் தவறிழைத்துவிட்டார் என்பது தெளிவாகத் தெரிந்தும், நீண்டகாலம் பழகியவர், சக ஊரவர், சக மாணவர், நெருங்கிய நண்பர், அன்பிற்குரியவர், பழைய சக ஊழியர் அல்லது பழைய கீழ்ப்பணியாளர் என்ற காரணத்தால் அவருடன் கோட்பாடு ரீதியில் வாதிடுவதற்கு மாறாக, சமாதானத்துக்காகவும் நட்புக்காகவும் விஷயங்களை நழுவவிடுவது அல்லது, சுற்றிலும் நெருக்கம் நீடிக்க வேண்டி முழுமையான தீர்வு காண்பதற்கு பதில் லேசாகத் தொட்டுவிடுவது இதன் விளைவாக ஸ்தாபனத்துக்கும் தனி நபருக்கும் தீங்கு விளைவிக்கப்படுகின்றது. இது தாராளவாதத்தின் முதலாவது வகை.

ஸ்தாபனத்துக்குத் தனது யோசனைகளை ஊக்கமாக முன் வைப்பதற்குப் பதிலாக முதுகுக்குப் பின் பொறுப்பற்ற விமர்சனத்தில் ஈடுபடுவது நபர்களது முகங்களுக்கும் முன் ஒன்றும் சொல்லாமல், அவர்களது முதுகுகளுக்குப் பின் வம்பளப்பது, கூட்டத்தில் ஒன்றும் பேசாமல் அது முடிந்த பின் வம்பளப்பது, கூட்டு வாழ்வுக் கோட்பாடுகளைச் சற்றும் பொருட்படுத்தாமல், தனது சொந்த விருப்பப்படி நடப்பது – இது இரண்டாவது வகை.

படிக்க:
நூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்
லெனின் முன் வைத்த புதுப்பாணியிலான கட்சி !

தன்னைப் பாதிக்காத விஷயங்களை அலமாரியில் வைத்துவிடுவது தெளிவாகத் தவறானவை என்று தெரிந்தவை பற்றி, இயன்ற அளவு சொற்பமாகப் பேசுவது, தன்னைப் பாதுகாத்துக் கொள்ள தனது குறைபாடுகளைக் கண்டு விமர்சிப்பார்களே என்று அதிலிருந்து தப்புவதற்காகவும் எச்சரிக்கையாக இருந்துவிடுவது – இது மூன்றாவது வகை

கட்டளைகளுக்குப் (முடிவுகளுக்கு) பணிந்து ஒழுகாமல் தனது சொந்தக் கருத்துகளுக்கு எல்லாவற்றுக்கும் மேலான இடத்தைத் தருவது; ஸ்தாபனத்திலிருந்து விசேஷ சலுகை கோருவது; ஆனால் அதன் கட்டுப்பாட்டை நிராகரிப்பது – இது நாலாவது வகை.

ஐக்கியத்துக்காக அல்லது முன்னேற்றத்துக்காக அல்லது வேலையைச் சிறப்பாகச் செய்வதற்காக, தவறான கருத்துக்களை எதிர்த்துப் போராட்டங்களிலும் விவாதங்களிலும் ஈடுபடுவது என்பதற்குப் பதிலாக தனிநபர் தாக்குதல் தொடுப்பது; சண்டை சச்சரவுகள் செய்வது; சொந்தக் குரோதங்களைக் கொட்டித் தீர்ப்பது; அல்லது பழி வாங்குவது – இது ஐந்தாவது வகை.

தவறான கருத்துக்களைக் கேட்டதும் அவற்றை மறுத்துரைப்பதில்லை. எதிர்ப் புரட்சிவாதிகளது கூற்றுகளைக் கேட்டாலும் அதனைக் கட்சிக்குத் தெரிவிப்பதில்லை; மாறாக ஒன்றும் நடக்காதது போல அவற்றை அமைதியாகக் கேட்டு சகித்துக் கொள்வது இது ஆறாவது வகை.

மக்கள் மத்தியில் இருந்தும் கிளர்ச்சிப் பிரச்சாரம் செய்யாமல் இருப்பது அல்லது சொற்பொழிவுகள் ஆற்றாமல் இருப்பது – அவர்கள் மத்தியில் பரிசீலனைகளும் விசாரணைகளும் நடத்தாமல் இருப்பது – மக்களிடம் பாராமுகமாகவும், அவர்களது இன்ப துன்பங்களில் கவலை இல்லாமலும், தான் ஒரு கம்யூனிஸ்ட் என்பதை மறந்து கம்யூனிஸ்ட் அல்லாதவரைப் போல் நடந்து கொள்வது – இது ஏழாவது வகை.

மக்களின் நலன்களுக்கு ஒருவர் தீங்கு விளைவிக்கக் கண்டும், ஆத்திரமடையாமல் அவருக்கு அறிவுரை கூறாமல் அல்லது அவரைத் தடுக்காமல் அல்லது அவருடன் நியாயம் கூறி வாதிடாமல், தொடர்ந்து அப்படிச் செய்ய அவரை அனுமதிப்பது – இது எட்டாவது வகை.

வரையறையான திட்டமில்லாமல், திசையில்லாமல் அரைமனதுடன் வேலை செய்வது, அக்கறையின்றி ஏனோ தானோ என்று வேலை செய்வது, ‘பூசாரியாக இருக்கும் வரை மணியடித்துக் கொண்டிருப்போம்’ என்று செயல்படுவது – இது ஒன்பதாவது வகை.

புரட்சிக்குத் தான் பெரும் சேவை செய்வதாகக் கருதிக் கொண்டு, தான் பெரும் அனுபவசாலி என்று பெருமைப்பட்டுக் கொள்வது, பெரிய பணிகளுக்குத் தகுதியில்லாமல் இருந்து கொண்டே சிறிய பணிகளை அவமதிப்பது – வேலையில் அசட்டையாகவும், படிப்பில் அக்கறையில்லாமலும் இருப்பது – இது பத்தாவது வகை.

தனது சொந்தத் தவறுகளை அறிந்திருந்தும், அவற்றைத் திருத்த எவ்வித முயற்சியும் செய்யாமல் தன்னைப் பொறுத்துத் தாராளவாதத்தை மேற்கொள்ளுதல் – இது பதினோராவது வகை.

நாம் மேலும் கூறிக்கொண்டே போகலாம். ஆனால், இந்தப் பதினொன்றுமே பிரதானமானவை. இவை அனைத்தும் தாராளவாதத்தின் வெளிப்பாடுகள்.

புரட்சிகர அமைப்புகளில் தாராளவாதம் என்பது பெருந்தீங்கு விளைவிக்கும் அது ஒற்றுமையை அரித்துத் தின்னும்; ஒருமைப்பாட்டுக்கு குழி பறிக்கும்; வேலையில் ஊக்கமின்மையை ஏற்படுத்தும்; வேற்றுமையை விதைக்கும். இது புரட்சிகர அணிகளில் உள்ள கட்டுக்கோப்பான ஸ்தாபன அமைப்பையும், கண்டிப்பான கட்டுப்பாட்டையும் அழித்துவிடும்; கொள்கைகள் முழுமையாக அமல் நடத்தப்படுவதைத் தடுக்கும்; கட்சியின் தலைமையில் உள்ள மக்களிடமிருந்து கட்சி ஸ்தாபனங்களைப் பிரித்துவிடும். இது மிகவும் தீமையான ஒரு போக்காகும்.

படிக்க:
♦ மாமேதை லெனின் : அறிவாளிகளின் அந்தரங்கம் || லெனின் – தலைவர்! தோழர்! மனிதர்!
♦ சீர்திருத்தவாதத் தலைவர்களை அம்பலப்படுத்துவது எப்படி ?

தாராளவாதம் என்பது குட்டி பூர்ஷ்வா வர்க்கத்தின் சுயநல உணர்விலிருந்து தோன்றுகிறது. அது தனிநபர் நலன்களை முதலாவது இடத்திலும், புரட்சியின் நலன்களை இரண்டாவது இடத்திலும் வைக்கின்றது. இதனால் சிந்தாந்த ரீதியிலும், அரசியல் ரீதியிலும், ஸ்தாபன ரீதியிலும் தாராளவாதம் தோன்றுகிறது.

தாராளவாதிகள் மார்க்சியக் கோட்பாடுகளைப் பொதுப்படையான வறட்டுச் சூத்திரங்களாகக் கருதுகின்றனர். அவர்கள் மார்க்சியத்தை அங்கீகரிக்கின்றனர்; ஆனால் அதனை அனுஷ்டிக்க அல்லது முழுமையாக அனுஷ்டிக்கத் தயாராக இல்லை; தங்களது தாராளவாதத்துக்குப் பதிலாக அதன் இடத்தில் மார்க்சியத்தை வைக்க அவர்கள் தயாராக இல்லை.

அந்த நபர்களிடம் மார்க்சியமும் இருக்கிறது; அதே வேளையில் தாராளவாதமும் இருக்கிறது. அவர்கள் மார்க்சியம் பேசுகின்றனர்; ஆனால் தாராளவாதத்தை அனுஷ்டிக்கின்றனர். பிறருக்கு மார்க்சியத்தையும் தங்களுக்கு தாராளவாதத்தையும் பிரயோகிக்கின்றனர். அவர்கள் இரண்டு விதமான சரக்குகளையும் இருப்பில் வைத்துக் கொண்டு இரண்டுக்கும் உபயோகம் காண்கின்றனர். இப்படித்தான் சில நபர்களின் மூளைகள் வேலை செய்கின்றன.

தாராளவாதம் என்பது சந்தர்ப்பவாதத்தின் ஒரு வெளிப்பாடு, மார்க்சியத்திற்கு அது அடிப்படையில் முரண்பாடானது. இது ஊக்கமற்ற (செயலற்ற) தன்மை உடையது. யதார்த்தத்தில் எதிரிக்கு உதவும் விளைவு கொண்டது. எனவேதான் அது நம் மத்தியில் இருப்பதை எதிரி வரவேற்கிறான். அதன் இயல்பு இப்படி இருப்பதால் புரட்சி அணிகளில் அதற்கு இடமே இருக்கக்கூடாது. செயலூக்கமற்ற தாராளவாதத்தை வெல்ல மார்க்சியத்தின் செயலூக்கமுள்ள உணர்வையும் உபயோகிக்க வேண்டும். ஒரு கம்யூனிஸ்ட் ஒளிவு மறைவில்லாது பேசுபவராக, விசுவாசமுள்ளவராக செயலூக்கம் உள்ளவராக இருக்க வேண்டும். புரட்சியின் நலன்களைத் தனது சொந்த உயிரைவிட மேலானதாகக் கருத வேண்டும். தனது தனிநபர் நலன்களைப் புரட்சியின் நலன்களுக்கு உட்படுத்த வேண்டும்.

எங்கும், எப்போதும் அவர் சரியான கோட்பாடுகளின் வழி ஒழுகி எல்லாத் தவறான கருத்துகளுக்கும் செயல்களுக்கும் எதிராகச் சலியாத போராட்டம் நடத்த வேண்டும். இவ்வாறு கட்சியின் கூட்டு வாழ்வை ஸ்திரப்படுத்தி, கட்சிக்கும் பொது மக்களுக்கும் இடையில் உள்ள தொடர்புகளைப் பலப்படுத்த வேண்டும். அவர் எந்த ஒரு தனிநபரைக் காட்டிலும் கட்சியிலும் மக்களிடத்திலும் கூடுதலான அக்கறையும், தன்னைவிடப் பிறர் மீது கூடுதலான அக்கறையும் செலுத்த வேண்டும். இப்படிச் செய்தால்தான் அவர் ஒரு கம்யூனிஸ்ட் என்று கருதப்பட முடியும்.

விசுவாசமான, நேர்மையான, செயலூக்கம் உள்ள உறுதியான கம்யூனிஸ்டுகள் அனைவரும் ஒன்றுபட்டு நின்று, நம்மிடையேயுள்ள சிலரது காட்டு தாராளவாதப் போக்குகளை எதிர்த்து (திருத்தி) அவர்களைச் சரியான திசையில் இட்டுச் செல்ல வேண்டும். சித்தாந்த முனையில் உள்ள நமது கடமைகளில் இதுவும் ஒன்றாகும்.

000

நூல் : தலைமை தாங்கும் வழிமுறைகள் – மாசேதுங்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
விலை : ரூ. 10
கிடைக்குமிடம் :
பாரதி புத்தகாலயம்,
421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை
சென்னை-018
தொடர்பு : 044- 24332424, 24332924

நூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்

குறுங்குழு வாதம் பற்றி

கட்சியின் வேலை முறையினைச் சீர் செய்க” என்பதிலிருந்து (மாவோவின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள், தொகுதி 3)

“குறுங்குழுவாத சிக்கல் குறித்து இப்போது பேசுவோம்.”

ருபது ஆண்டுகளாக உருக்காக வார்க்கப்பட்ட நம் கட்சியில் குறுங்குழு வாதம் ஆதிக்கம் செலுத்துவது என்பது இனிமேல் இல்லை . கட்சியின் உள் மற்றும் வெளி உறவுகளில் குறுங்குழு வாதத்தின் மிச்ச சொச்சங்கள் இன்றும் காணக்கிடக்கின்றன. கட்சியின் உள்ளே நிலவும் குறுங்குழுவாதப் போக்குகளானவை கட்சித் தோழர்களை விலக்கி வைத்து ஒற்றுமைக்கும் இணைவுக்கும் தடையாக உள்ளது. கட்சியின் வெளி உறவில் நிலவும் குறுங்குழுவாதப் போக்குகளானவை, கட்சியை வெகுமக்களோடு இணைக்கும் – கட்சியின் வேலைக்குத் தடையாக உள்ளது. இதனை வேரறுப்பதன் மூலம்தான், நமது கட்சித் தோழர்களிடையே இணைப்பை ஏற்படுத்துவது, மக்களை ஒன்றுபடுத்துவது என்ற தன் மாபெரும் கடமையில் தடையற்ற முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும்.

“உட்கட்சியில் நிலவும் குறுங்குழுவாத மிச்ச சொச்சங்கள் என்ன? பின்வருவன அவைகளில் முக்கியமானவை:

“முதலில் “சுதந்திர” நிலையை வலியுறுத்துவது. சில தோழர்கள் முழுமையைப் புறக்கணித்து, பகுதி நலனைக் கவனத்தில் எடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் எப்போதுமே தங்கள் பொறுப்பில் உள்ள வேலைகளுக்குத் தேவையற்ற முக்கியத்துவம் கொடுக்கின்றனர். தமது சொந்தப் பகுதிநலன்களுக்கு, முழு நலன்களையும் எப்போதும் அடிபணிய வைக்கின்றனர். அவர்கள் கட்சியின் ஜனநாயக மத்தியத்துவத்தைப் புரிந்து கொள்ளவில்லை. கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஜன நாயகம் மட்டுமல்ல, அதைக்காட்டிலும் மத்தியத்துவம் அவசியமென்பதை அறிந்து கொள்ளவில்லை. சிறுபான்மையினர் பெரும்பான்மையினருக்கும் , கீழ்மட்டம் மேல்மட்டத்திற்கும், பகுதி முழுமைக்கும், அனைத்து ஊழியர்கள் மத்தியக் குழுவுக்கும் கட்டுப்பட்டு நடக்கும் ஜனநாயக மத்தியத்துவ அமைப்பை மறந்து விட்டார்கள். காங்-குவாட்டா மையக்குழுவில் தனது “சுதந்திர” நிலையை வலியுறுத்துவதன் மூலம் கட்சிக்குத் தனது துரோகத்தனத்தை உறுதிப்படுத்திக் கொண்டு கோமிங்டாங் ஏஜண்டாக மாறினர். இப்போது நாம் விவாதித்து வரும் குறுங்குழுவாதம் அபாயகரமான ஒன்றாக இல்லாதபோதும், இதற்கு எதிராகக் கவனம் செலுத்தப்பட வேண்டும். முழுமையின் நலன்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கட்சித் தோழர்களை ஊக்கப்படுத்த வேண்டும். ஒவ்வொரு கட்சி ஊழியரும், ஒவ்வொரு அறிவிப்பும், ஒவ்வொரு நடவடிக்கையும் கட்சியின் முழு நலன் என்ற நோக்கில் இருந்து தொடர வேண்டும். இந்தக் கொள்கையை மீறுவது என்பது முற்றிலும் அனுமதிக்க முடியாத ஒன்று.

இந்த வகையான சுதந்திர நிலையை வலியுறுத்துபவர்கள், தனக்கு முதலிடம் என்ற கொள்கையில் பற்றுக்கொண்டு கட்சி, தனி நபர் உறவு குறித்துச் சிக்கலில் பொதுவாகத் தவறிழைக்கிறார்கள். பேச்சளவில் கட்சிக்கு மரியாதை கொடுத்துப் பேசிய போதிலும் நடைமுறையில் தன்னை முதன்மைபடுத்தி, கட்சியை இரண்டாம் நிலைக்குத் தள்ளுகிறார்கள். இவர்களின் நோக்கம் என்ன? இவர்கள் புகழ், நல்ல அந்தஸ்து, பிரபல்யம் என்ற நோக்கத்திற்காக உள்ளனர். ஒரு வேலைப் பிரிவின் பொறுப்பு அவர்களுக்கு வைக்கப்படும் போதெல்லாம் தங்கள் “சுதந்திர” நிலை குறித்து வலியுறுத்துகிறார் கள். இந்த நோக்கத்தில் சில நபர்களை உள்ளுக்குள் இழுக்கிறார்கள். மற்றவர்களை வெளியில் தள்ளுகிறார்கள். தற்பெருமை, முகஸ்துதி செய்து கவர்வது பேன்றவற்றைத் தோழர்களிடையே செய்கிறார்கள். இதன் மூலம் முதலாளித்துவக் கட்சியின் கொச்சை நடைமுறைகளை கம்யூனிஸ்டுக் கட்சிக்குள் இறக்குமதி செய்கிறார்கள். அவர்களின் பொறுப்பற்ற தன்மைதான் அவர்களை வருத்தும் நிலைக்கு உள்ளாக்குகிறது. நாம் நேர்மையோடு செயல்பட வேண்டும் என நம்புகிறேன். ஏனெனில் நேர்மையான செயல் இல்லாமல் உலகின் எந்த ஒன்றுடனும் இணைவது என்பது முழுக்க முழுக்கச் சாத்திய மில்லை.

“நேர்மையான நபர்கள் யார்? மார்க்ஸ், ஏங்கெல்ஸ், இலெனின், ஸ்டாலின் ஆகியோர் நேர்மையானவர்கள். அறிவியலாளர்கள் நேர்மையானவர்கள். நேர்மையற்ற நபர்கள் யார்? ட்ராட்ஸ்கி, புகாரின், சென் டீயு-சீ, சாங் கோ-டா இவர்கள் முழுக்க முழுக்க நேர்மையற்ற நபர்கள். குழு அல்லது தனிநபர் அடிப்படையில் “சுதந்திர” நிலையை வலியுறுத்துபவர்கள் கூட நேர்மையற்ற நபர்கள்தான். தந்திரமான நபர்களும் தங்களை மதிப்பு மிக்கவர்களாக, புத்திசாலிகளாக அலங்காரப்படுத்திக் கொண்டு தங்கள் வேலைகளில் அறிவியல் அணுகுமுறை கொண்டிராத அனைத்து நபர்களும், உண்மையில் ரொம்பவும் அயோக்கியர்கள். அவர்கள் எந்த நன்மைக்கும் உதவுவதில்லை . நமது கட்சிப் பள்ளியில் உள்ள மாணவர்கள் இந்தச் சிக்கலில் கவனம் செலுத்த வேண்டும். நாம் ஒரு மையப்படுத்தப்பட்ட ஒற்றுமையான கட்சியைக் கட்டியமைத்து, கொள்கையற்ற குழுச் சண்டைகள் அனைத்தையும் முழுமையாகத் துடைத்தெறிய வேண்டும். தனிநபர்வாதத்தையும், சந்தர்ப்பவாதத்தையும் எதிர்ப்பதன் மூலம் நமது கட்சி முழுவதையும் ஒரு பொது இலட்சியத்திற்காக நடைபோட, போரிடத் தயார்படுத்த வேண்டும். (பக்கம் 30-32)

நூல் : நமது படிப்பை சீர்செய்வோம்
ஆசிரியர் : மா சே துங்

வெளியீடு : புது மலர்

பக்கங்கள்: 64
விலை: ரூ. 25.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

எல்கார் பரிஷத் வழக்கு : மாவோயிஸ்ட் பட்டம் கட்டி செயல்பாட்டாளர்களை முடக்கும் பா.ஜ.க!

1

ல்கார் பரிஷத் வழக்கு விவகாரத்தில் தேசிய புலனாய்வு முகமை (NIA) கபீர் கலா மஞ்ச் என்ற புரட்சிகர கலைக் குழுவினைச் சேர்ந்த இருவரைக் கைது செய்துள்ளது. மேலும் விசாரணைக்கு நேரில் மும்பைக்கு வந்து ஆஜராகக் கூறி இரண்டு பேராசிரியர்கள் மற்றும் ஒரு பத்திரிகையாளர் என மூவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து செயல்பட்டு வரும் கபீர் கலா மஞ்ச் என்ற புரட்சிகர கலைக்குழுவைச் சேர்ந்த கோர்கே மற்றும் கைச்சோர் ஆகிய இருவரை நேற்று (07-09-2020) கைது செய்திருக்கிறது என்.ஐ.ஏ. ஒரு வாரத்திற்கு முன்னரே விசாரணைக்காக அவர்களை அழைத்த என்.ஐ.ஏ அதிகாரிகள், விசாரணையின் போது ”தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாகவும் அந்த தவறுக்காக மன்னிக்குமாறும்” கோரிக்கை எழுதிக் கொடுக்குமாறும்  வலியுறுத்தியதாக அவர்கள் இருவரும் கடந்த செப்டெம்பர் 5-ம் தேதியன்று ஒரு காணொளி பதிவு வெளியிட்டுள்ளனர்.

என்.ஐ.ஏ.-வின் இந்த மிரட்டலுக்கு அஞ்சவில்லை என்றும், மன்னிப்புக் கேட்க தாம் சாவர்க்கரின் வாரிசுகள் இல்லை – அம்பேத்கரின் பிள்ளைகள் என்றும் அதில் கூறியுள்ளனர். போலி ஒப்புதல் கொடுக்க மறுத்ததன் காரணமாக, தாம் கைது செய்யப்படலாம் என்றும் தெரிவித்திருக்கின்றனர். அதே போல நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆங்கிலம் மற்றும் அந்நிய மொழிகள் பல்கலைக்கழகத்தில் (EFLU) பணிபுரியும் பேராசிரியர் சத்திய நாராயணா, கொல்கத்தாவில் இருக்கும் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தின் உதவிப் பேராசிரியரான பார்த்தசாரதி ரே மற்றும் ‘தி இந்து’ பத்திரிகையைச் சேர்ந்த பத்திரிகையாளர் கே.வி.குர்மநாத் ஆகியோருக்கும் எல்கார் பரிஷத் மாநாடு தொடர்பான விசாரணைக்காக மும்பைக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது என்.ஐ.ஏ.

தற்போது விசாரணைக்காக சம்மன் அனுப்பப்பட்டுள்ளவர்களில் சத்யநாராயணாவும், குர்மநாத்தும் எல்கார் பரிஷத் வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள, செயற்பாட்டாளர் வரவர ராவின் மருமகன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

படிக்க:
எல்கார் பரிஷத் முதல் டெல்லி கலவரம் வரை : அறிவுத்துறையினரைக் குறிவைக்கும் மோடி அரசு !
பீமா கொரேகான் : டெல்லி பல்கலை பேராசிரியர் வீட்டில் போலீசு அடாவடி சோதனை !

ஜனவரி 2018-ல் துவங்கப்பட்ட இந்த வழக்கில் இதுவரை அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்கும் பல்வேறு சமூக செயற்பாட்டாளர்களையும் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. இவர்களில் பெரும்பாலானோருக்கும் எல்கர் பரிஷத் மாநாட்டுக்கும் சம்பந்தமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆகஸ்ட் 2018-ல் வரவர ராவின் மருமகன்களான சத்யநாராயணா மற்றும் குர்மாநாத் ஆகியோரின் வீடுகளில் அப்போது வழக்கை நடத்தி வந்த புனே போலீசு தேடுதல் நடத்தியது. அந்த தேடுதலில் அவரது வீட்டை கபளீகரம் செய்தது மட்டுமின்றி அவரது ஆய்வு மற்றும் வெளியிடக் காத்திருக்கும் புதிய நூல் உள்ளிட்டவற்றின் தரவுகளைக் கொண்ட கணிணியைக் கைப்பற்றிச் சென்றது போலீசு. தேடுதலுக்கு வந்த போலீசு, சத்யநாராயணாவை தலித் என்று அடையாளப்படுத்தி பேசியதோடு, அவரது துணைவி பாவனாவிடம் “நீங்கள் ஒரு பிராமணர், உங்கள் கணவர் ஒரு தலித், நீங்கள் ஏன் பாரம்பரியத்தை கடைபிடிப்பதில்லை? திருமணமான பெண்கள் அணியும் பாரம்பரிய அணிகலன்களை ஏன் அணிவதில்லை?” என்றெல்லாம் கேள்வி கேட்டிருக்கிறது. குர்மநாத்தின் வீட்டிலும் இத்தையை தேடுதலும் கைப்பற்றல்களும் அரங்கேறின.

பார்த்தசாரதி ரே, சத்யநாராயணன் மற்றும் கே.வி. குமார்நாத். (இடமிருந்து வலமாக)

கொரோனா சூழலில் மும்பைக்கு இவர்களை வரவழைத்துள்ளது என்.ஐ.ஏ. இது ஒரு துன்புறுத்தல் வழிமுறை என்கிறார் பார்த்தசாரதி ரே. இவர் குடிமையியல் உரிமைச் செயற்பாட்டாளர். மேலும் அவர் இடதுசாரி பத்திரிகையான “சன்ஹதி”-யின் நிறுவனர்களில் ஒருவர். உயிரி தொழில்நுட்பப் பேராசிரியரான ரே, கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்ய உலக சுகாதார நிறுவனத்துடன் கைகோர்த்திருக்கும் அறிவியலாளர் குழுமத்தைச் சேர்ந்தவர். மேற்குவங்கத்திலிருக்கும் நாடியா மாவட்டத்தில் கொரோனா தடுப்பு வசதிகள் மேற்கொள்ளும் வேலைகளில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தகது.

பார்த்தசாரதிக்கு ஏற்கெனவே தொலைபேசி மூலம் விசாரணைக்கு என்.ஐ.ஏ விடுத்த அழைப்பை முறையான சம்மன் அனுப்பாத காரணத்தால் நிராகரித்திருந்த சூழலில் தற்போது சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த ஆண்டு பல்வேறு பத்திரிகையாளர்கள், சமூகச் செயற்பாட்டளர்களின் கணிணியில் ‘மால்வேர்’ எனப்படும் ஒற்று பார்க்கும் செயலிகள் மூலம் வேவு பார்க்கப்படுவதை அம்னெஸ்டி இண்டர்நேசனல் அமைப்பு வெளிக் கொண்டுவந்தது. அப்படி வேவு பார்க்கப்பட்ட செயற்பாட்டாளர்களில் பார்த்தசாரதி ரே-வும் ஒருவர்.

“எல்கார் பரிஷத் வழக்கு குறித்து பத்திரிகையில் வாசிக்கும் முன்பு வரை அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. என்னை துன்புறுத்துவதற்காகவே போடப்பட்ட வழக்கு இது” என்கிறார் பார்த்தசாரதி ரே

சாட்சிகளாக விசாரிப்பதற்காகவே அழைப்பதாக மூவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டிருந்தாலும், அப்படி சாட்சிகளாக விசாரிக்க அழைக்கப்பட்ட டெல்லி பல்கலைப் பேராசிரியர் ஹனிபாபு பின்னர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எல்கார் பரிஷத் வழக்கில் இதுவரை 14 பேர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். 9 பேர் புனே போலீசாலும், இந்த ஆண்டு என்.ஐ.ஏ இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட பின்னர் மேலும் 5 பேர் என்.ஐ.ஏ.-வாலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முதல்சுற்று கைதுகள் கடந்த ஜூலை 2018-ம் ஆண்டில் துவங்கியது. அந்த சமயத்தில் மும்பையைச் சேர்ந்த தலித் செயற்பாட்டாளர் சுதிர் தவாலே, நாக்பூரைச் சேர்ந்த ஊபா சட்ட நிபுணரும் வழக்கறிஞருமான சுரேந்திரா காட்லிங், இடப்பெயர்வு பிரச்சினைகளுக்காக போராடும் செயற்பாட்டாளரான மஹேஷ் ரவுத், நாக்பூர் பல்கலைக்கழகப் பேராசிரியர் சோமா சென், சிறைக் கைதிகள் உரிமைச் செயற்பாட்டாளரான ரோனா வில்சன் ஆகியோரைக் கைது செய்தது புனே போலீசு.

அடுத்தகட்டமாக ஆகஸ்ட் 2018-ல் வழக்கறிஞர் அருண் ஃபெரைரா, வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், புரட்சிகர எழுத்தாளர் வரவர ராவ் மற்றும் வெர்னான் கன்சால்வேஸ் ஆகியோரை புனே போலீசு கைது செய்தது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கல்வியாளர் ஆனந்த் தெல்டும்டே மற்றும் பத்திரிகையாளர் கவுதம் நவ்லகா ஆகியோரையும் ஜூலை மாதத்தில் ஹானிபாபுவையும் கைது செய்தது என்.ஐ.ஏ. அதன் பின்னர் நேற்று கபீர் கலா மஞ்சை சேர்ந்த இருவரை கைது செய்திருக்கிறது.

இந்த வழக்கில் முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த புனே போலீசு, கைது செய்யபட்டவர்கள் அனைவருக்கும் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுடன் தொடர்பு இருப்பதாகவும், அவர்களது உதவியைப் பெற்றுதான் எல்கார் பரிஷத் மாநாட்டை ஏற்பாடு செய்ததாகவும் குற்றப் பத்திரிகையில் குறிப்பிட்டிருந்தது.

2019 பிப்ரவரியில் கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த புனே போலீசு அதில் மாவோயிஸ்ட் தலைவர் கணபதிதான் எல்கர் பரிஷத் மாநாட்டை ஏற்பாடு செய்ததில் முக்கியப் பங்காற்றியவர் எனக் குற்றம்சாட்டியிருந்தது. அடுத்ததாக தாக்கல் செய்யவிருக்கும் கூடுதல் குற்றப்பத்திரிகையில் வரவர ராவ் மற்றும் கவுதம் நவல்காவையும் இணைத்து தாக்கல் செய்யவுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் நடந்த எல்கார் பரிஷத் மாநாட்டை வைத்துக் கொண்டு அனைத்து சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஜனநாயகவாதிகளையும் மாவோயிஸ்ட் முத்திரை குத்தி முடக்கப் பார்க்கிறது பாஜக-வின் அடியாளான என்.ஐ.ஏ.. மேலும் அறிவுத்துறையைச் சேர்ந்தவர்களை மிரட்டும் விதமாக விசாரணைக்கு அழைப்பதையும், தமக்கு அடிபணியாத அறிவுத் துறையினரை மாவோயிஸ்ட் என முத்திரை குத்தி சிறையிலடைப்பதையும் நடைமுறைத் தந்திரமாக கையாண்டு வருகிறது என்.ஐ.ஏ. !

நந்தன்

செய்தி ஆதாரம் :

லெனினும் கம்யூனிஸ்ட் அகிலமும் !

மார்க்சிய மூல நூல்களுக்கு வாசகர் வழிகாட்டி – மாரிஸ் கார்ன்ஃபோர்த்
பாகம் 5

ஈ. கம்யூனிஸ்ட் அகிலம்

லெனினும் கம்யூனிஸ்ட் அகிலமும்

பிப்ரவரி புரட்சிக்குப் பின் ரசியா திரும்பிய லெனின் ஏப்ரல் 1917-ல் வெளியிட்ட “நமது புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள்” என்ற பிரசுரத்தில் சர்வதேச இயக்கத்தில் நிலவிய மூன்று வகைப் போக்குகளை இனம் பிரித்துக் காட்டினார். அவ்வகைப் போக்குகள் கொண்டவர்களாக இவர்கள் உலகப் போரில் தங்கள் பக்க ஏகாதிபத்தியங்களுடன் கை கோர்த்துக் கொண்டனர். நடுநிலைவாதிகள் மேற்படி நபர்களுடன் ஒத்துப்போனவர்கள். மூன்றாவதாக, மெய்யான சர்வதேசியவாதிகள், இவர்கள் ஏகாதிபத்தியப் போரை முழுமூச்சாக எதிர்த்தனர். லெனின், மூன்றாவது பிரிவினர், இரண்டாம் அகிலத்திலிருந்து வெளியேறி புதிய அகிலத்தை தோற்றுவித்து, சந்தர்ப்பவாதத்திலிருந்து முற்றிலும் துண்டித்துக் கொண்டு, பாட்டாளி வர்க்கத்தை புரட்சிகர மார்க்சிய அடிப்படையில் ஒன்றிணைக்க வேண்டுமென அறை கூவினார்.

கம்யூனிஸ்ட் அகிலத்தின் முதல் பேரவை 1919 வசந்தத்தில் நடந்தது. அதன் முடிவில் “மூன்றாம் அகிலமும் வரலாற்றில் அதன் இடமும்” என்ற பிரசுரத்தை வெளியிட்ட லெனின், முதல் அகிலம் சர்வதேசிய அளவில் சோசலிசத்திற்காகப் பாட்டாளி வர்க்கம் போராட வேண்டியதற்கான அடிப்படைகளைத் தந்தது; இரண்டாவது அகிலம் இந்த இயக்கத்தை பல்வேறு நாடுகளுக்கு விரிவுபடுத்தியது; மூன்றாம் அகிலம் தன்னிலிருந்து சந்தர்ப்பவாதத்தை வெளியேற்றி, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் அவசியத்தை அங்கீகரித்ததன் மூலம் புதிய சகாப்தத்தைத் தோற்றுவித்து உள்ளது என்று சுட்டிக் காட்டினார்.

கம்யூனிஸ்ட் அகிலத்திற்கான லெனினது பங்களிப்புகள் அனைத்திலும் சந்தர்ப்பவாதத்தையும், குட்டி முதலாளித்துவ இடதுசாரிப்போக்கையும் அது மக்களிடமிருந்து கம்யூனிஸ்டுகளைத் தனிமைப்பட்டுப் போகச் செய்வதாகையால் எதிர்த்துப் போராட வேண்டியதை வலியுறுத்துகிறார். (பார்க்க: லெனின் இடதுசாரிக் கம்யூனிசம் ஒரு இளம் பருவக் கோளாறு)

மூன்றாம் அகிலத்தின் பணிகள் (1919 ஜூலை) என்ற பிரசுரத்தில் மிக முக்கியத் தேவைகளாக கீழ்க்கண்டவற்றைச் சுட்டிக் காட்டுகிறார்:

  1. சீர்திருத்தத்துக்கும் புரட்சிக்கும் இடையிலான வேறுபாட்டை திட்டவட்டமாக விளக்குதல். அதே வேளையில் சீர்திருத்தங்கள், முதலாளித்துவ நாடாளுமன்றங்களில் பங்கேற்பது ஆகியவற்றை நிராகரிக்காது இருப்பது.
  2. சட்டபூர்வ – சட்ட விரோத வேலைகளை இணைப்பது.
  3. தொழிலாளர் இயக்கத்திலிருந்து சந்தர்ப்பவாதிகளை வெளியேற்றப் பணிபுரிவது.
  4. காலனிய விடுதலைக்கான புரட்சிப் போராட்டங்களுக்காகத் துணை புரிவது.
  5. புரட்சிகர முழக்கங்களினால் எதிர்புரட்சிகரச் செயல்களை மூடி மறைக்க முயல்பவர்களை அம்பலப்படுத்துவது.

கம்யூனிஸ்ட் அகிலத்தின் இரண்டாவது பேரவையின் (1920) போது லெனின் “கம்யூனிஸ்ட் அகிலத்தின் இரண்டாவது பேரவையின் அடிப்படை கடமைகள்” பற்றிய படிவத்தைத் தயாரித்தார்.

அதில் சோசலிசத்தில் வெற்றிக்கான தேவைகளாக

  1. சுரண்டுபவர்களைத் தூக்கியெறிவது, ஒடுக்குவது;
  2. கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைமைக்குத் தொழிலாளர்களை வென்றெடுப்பது; தொழிலாளி வர்க்கத்தின் வாழ்விலிருந்து கட்சியைத் தனியாகப் பிரிக்க முடியாத அளவுக்கு மாற்றுவது;
  3. ஊசலாட்டப் பிரிவுகளை நடுநிலைப்படுத்துவது – ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றார்.

மேலும், கம்யூனிஸ்டுகள் இந்த நிலைமைகளைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தங்கள் பிரதான எதிரிகள் சந்தர்ப்பவாதிகள்தான் என்பதை உணர வேண்டும் என வலியுறுத்துகிறார்.

படிக்க:
இரண்டாம் அகிலத்தின் சந்தர்ப்பவாதத்துக்கெதிரான போராட்டம் !
பாட்டாளி வர்க்கக் கட்சி குறித்து மார்க்ஸ் – எங்கெல்ஸ்

இரண்டாவது பேரவையில் “சர்வதேசிய நிலைமைகளும், கம்யூனிஸ்ட் அகிலத்தின் அடிப்படைப் பணிகளும்” என்ற அறிக்கையில் போருக்குப் பிந்திய அரசியல், பொருளாதார நிலைமைகளை விரிவாக ஆராய்கிறார்.

இதே காங்கிரசில் “கம்யூனிஸ்ட் அகிலத்தில் இணைவதற்கான நிபந்தனைகளை” லெனின் வரையறுத்தார். இந்த உரையில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கும் சீர்திருத்தவாதக் கோட்பாடான அதிகாரத்தை வெல்வது என்பதற்குமிடையிலான வேறுபாடுகளை விளக்கினார்.

இதைப் போன்றே “விவசாயப் பிரச்சினை பற்றிய ஆய்வுகள்”, “தேசிய, காலனிய பிரச்சினை பற்றிய ஆய்வுகள்” ஆகியவற்றையும் படைத்தளித்தார். இதில் முன்னது விவசாயி வர்க்கத்துடனான கூட்டினை விளக்குகிறது.

“கம்யூனிஸ்ட் கட்சியின் பாத்திரம்” என்ற உரையில் பிரிட்டிஷ் பிரதிநிதிகளான டானர், மெக் க்லேன் (Tanner, Mc Claine) ஆகியோருக்கு பதிலளிக்கையில் உணர்வுபூர்வமான புரட்சிகரச் சிறுபான்மை மக்களை வழிநடத்தும் வண்ணம் கட்சியைக் கட்ட வேண்டும் என்றார். மேலும் பிரிட்டிஷ் பொதுவுடைமைக் கட்சியை தொழிலாளர் கட்சியுடன் இணைப்பது பற்றிய பிரச்சினையையும் அவர்களுக்கு விளக்கினார்.

இதே சமயத்தில் எழுதிய “சுதந்திரம் பற்றிய போலிப் பேச்சுகள்” என்ற கட்டுரையிலும் சந்தர்ப்பவாதத்தை நிராகரிக்க வேண்டியது பற்றிக் கூறுகிறார். “கம்யூனிஸ்ட் அகிலத்தின் போர்த்தந்திரங்களை ஆதரித்து” என்ற உரையிலும் (1921) கட்சி மக்களின் மனங்களை வெல்ல வேண்டும். அதாவது, பெரும்பான்மை தொழிலாளி வர்க்கத்தை வெல்லவேண்டும். இந்தப் பெரும்பான்மை வெல்லப்படாவிடில் சோசலிசத்தின் வெற்றி சாத்தியமில்லை எனக் குறிப்பிடுகிறார்.

இக்கருத்தையே “ஜெர்மன் கம்யூனிஸ்டுகளுக்கு எழுதிய கடிதத்”திலும் திரும்பக் கூறுகிறார்.

(முற்றும்)

நூல் : மார்க்சிய மூல நூல்களுக்கு வாசகர் வழிகாட்டி
ஆசிரியர் :
மாரிஸ் கார்ன்ஃபோர்த்

வெளியீடு : கீழைக்காற்று.
பக்கங்கள் : 272
விலை : ரூ. 150.00

இரண்டாம் அகிலத்தின் சந்தர்ப்பவாதத்துக்கெதிரான போராட்டம் !

மார்க்சிய மூல நூல்களுக்கு வாசகர் வழிகாட்டி – மாரிஸ் கார்ன்ஃபோர்த்
பாகம் 4

இ. இரண்டாம் அகிலத்தின் சந்தர்ப்பவாதத்துக்கெதிரான போராட்டம்

லெனின்: தொழிலாளி வர்க்க இயக்கத்தில் சந்தர்ப்பவாதமும் அதன் வேர்களும் என்பது பற்றி

லெனின் தொழிலாளி வர்க்க இயக்கத்தில் சந்தர்ப்பவாதத்தின் இயல்புகள் மற்றும் அதன் காரணங்கள் பற்றிய தனது அடிப்படை ஆய்வை “ஏகாதிபத்தியம்: முதலாளித்துவத்தின் உச்சகட்ட வளர்ச்சி” என்னும் நூலில் தொகுப்பாகவும், பல்வேறு சிறு பிரசுரங்களிலும் தருகிறார்.

“வரலாற்றில் காரல் மார்க்சின் போதனைகளுக்கு விதிக்கப்பட்ட வருங்காலம்” என்னும் நூலில் (1913) லெனின் தொழிலாளி வர்க்க இயக்கம் இதுவரை மூன்று கட்டங்களைக் கடந்து வந்துள்ளது என்று காட்டினார். முதற்கட்டம் புரட்சிகர எழுச்சிகளின் காலம், 1848 புரட்சிகளில் இருந்து 1871 பாரீஸ் கம்யூன் வரையிலானது, இந்தக் காலப் பகுதியிலேயே பல சுதந்திர தொழிலாளி வர்க்கக் கட்சிகள் முதன் முதலில் தோன்றின. இரண்டாம் கட்டம் 1905 ரஷ்யப் புரட்சி வரையிலானது. “அமைதியான” வளர்ச்சி நிலவிய காலம். இக்காலகட்டத்தில் தொழிலாளி வர்க்க கட்சிகள் வலிமையுற்று, தங்கள் சொந்தக் கட்சி இதழ்களை நடத்தியும், முதலாளியப் பாராளுமன்றத்தை பயன்படுத்தக் கற்றும் உள்ளன. ஆனால் இக்கட்டத்திலேயே சந்தர்ப்பவாதம் “சமூக அமைதி” எனப் பேசிக்கொண்டு, வர்க்கப் போராட்டத்தை நிராகரித்து இயக்கத்துக்குள் புகுந்தது. கடைசிப் பகுதியாக 1905-க்குப் பிற்பட்ட காலம், புதிய பிரச்சினைகள் முளைத்துள்ள இக்கட்டத்தில் சந்தர்ப்பவாதத்தை கட்சியிலிருந்து துரத்தியடித்து புரட்சிகர மார்க்சியத்தின் வெற்றியைப் பாதுகாக்க வேண்டி இருந்தது.

இந்நூலுக்கு முன்பே மார்க்சியமும் திருத்தல்வாதமும் (1908) என்ற நூலில் திருத்தல்வாதத்தை லெனின் ஆய்கிறார். தங்களை மார்க்சியவாதிகள் என்றழைத்துக் கொண்டே மார்க்சிய அடிப்படைகளைத் திருத்துகின்ற சந்தர்ப்பவாதிகளின் தத்துவமே திருத்தல்வாதம். திருத்தல்வாதிகள் இயக்க இயல் பொருள்முதல்வாதத்துக்குப் பதிலாக முதலாளித்துவ தத்துவத்தின் “மிகப் புதிய விஷயங்களை” சார்ந்திருப்பதைக் காட்டினார். குறிப்பாக முதலாளித்துவ அரசியல் பொருளாதாரவாதிகளின் நவீன தத்துவங்களைக் கையிலெடுத்துக் கொண்டு மார்க்சியத்தைத் “திருத்த” குறிப்பாக மார்க்சின் “மதிப்பு” பற்றிய கோட்பாட்டை, முதலாளித்துவ நெருக்கடிகளின் தவிர்க்க இயலாத தன்மையைத் திருத்த முயன்றனர். ஜனநாயகமும் பொதுமக்கள் வாக்குரிமையும் வர்க்கப் போராட்டத்தின் அடிப்படைகளை அகற்றி விட்டன என்று அவர்கள் உறுதியாகச் சொன்னார்கள்.

திருத்தல்வாதம் சோசலிச லட்சியங்களைக் கைவிட்டு “பாட்டாளி வர்க்க அடிப்படை நலன்களை கற்பனையான அல்லது நிஜமான பொருளாதார நலன்களுக்காக தியாகம் செய்துவிடும்” அளவுக்கு சரிந்தது. பாட்டாளி வர்க்க இயக்கத்தில் இது குட்டி முதலாளித்துவ போக்கைப் பிரதிபலித்தது.

“ஐரோப்பிய தொழிலாளர் இயக்கத்தில் கருத்து வேற்றுமைகள்” (1910) என்னும் நூலில் தொழிலாளி வர்க்க இயக்கத்தில் புலப்படும் மார்க்சிய – விரோதப் போக்குகள் தற்செயலானவை அல்ல, மாறாக, அனைத்து முதலாளித்துவ நாடுகளின் பொருளாதார வளர்ச்சியின் தன்மையைப் பொறுத்தது என்று குறிப்பிடுகிறார். ருஷ்ய சமூக ஜனநாயகவாத இயக்கத்தில் சீர்த்திருத்தவாதக் கருத்துக்களின் தாக்கத்தை முதலாளித்துவப் பிரச்சாரத்துடன் தொடர்புபடுத்துகிறார் லெனின். சோசலிசத்திற்கு எதிராக நேரடியாகப் போராடாமல் முதலாளித்துவம் சீரான, துண்டு துண்டுச் சீர்திருத்தங்களை முன்வைக்கக் கற்றுக் கொண்டு உள்ளது எனக் கூறுகின்றனர். இது முதலாளித்துவத்திற்கு ஒட்டுப் போட முனைவது ஆகும்; அவர்கள் அத்தகைய பிரச்சாரத்தைப் பயன்படுத்தி பாட்டாளி வர்க்கத்தைப் பிளவுபடுத்தி வலுவிழக்கச் செய்ய முயலுகிறார்கள்; முதலாளிவர்க்க ஆட்சியை தக்கவைக்கப் பார்க்கிறார்கள். இப்பிரச்சாரம் சீர்திருத்தவாத சித்தாந்தங்கள் வாயிலாக தொழிலாளி வர்க்க இயக்கத்தில் வெளிப்பட ஆரம்பித்து விட்டது – புரட்சிக்குப் பதிலாக சீர்திருத்தங்களை அது முன் வைக்கிறது. (இக் கட்டுரை, ருஷ்யத் தொழிலாளர்கள் ஒருபோதும் புரட்சிப் பாதையை எக்காரணம் முன்னிட்டும் தேர்ந்தெடுக்கக் கூடவே கூடாது என்று பிரச்சாரம் செய்த சீர்திருத்தவாத சோசலிஸ்டுகளைப் பற்றிய பெருந்திரளான விவரங்களுடன் கூடிய வாதத்தை உள்ளடக்கியதாகும்.)

ஏகாதிபத்தியமும் சோசலிசத்தில் பிளவும் (1916) என்ற நூலில் தொழிலாளர் வர்க்க இயக்கத்தில் சந்தர்ப்பவாதம் நிலவுவதற்கும் அதன் வலிமைக்கும் அடிப்படைக் காரணங்களைத் தொகுத்து லெனின் உரைக்கிறார். ஏகாதிபத்தியத்தின் உயர்விகித லாபங்கள் தொழிலாளி வர்க்கத்தின் மேல்தட்டுக்கு லஞ்சம் அளிக்கவும், ஊழல்படுத்தவும் பயன்படுத்துகின்றன. இதன் விளைவாகப் பூர்ஷ்வா தொழிலாளர் கட்சி எல்லா ஏகாதிபத்திய நாடுகளிலும் தலை எடுத்தது.

படிக்க:
மதுரை – கரூர் : நீட் தேர்வை ரத்து செய் ! அண்ணா பல்கலைக் கழக கட்டணக் கொள்ளைக்கு முடிவுகட்டு !! பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம்
பாட்டாளி வர்க்கக் கட்சி குறித்து மார்க்ஸ் – எங்கெல்ஸ்

குறிப்பாக பிரிட்டனை ஆய்கின்ற லெனின், அங்கு சந்தர்ப்பவாதம், முறையான ஏகாதிபத்தியம் தோன்றுவதற்குப் பல பத்தாண்டுகளின் முன்பே பிறந்து விட்டதாகக் கூறுகிறார். தொழில்துறையில் தனியாதிக்கமும் (Industrial Monopoly) ஏகாதிபத்தியத்துக்கு முந்தைய முதலாளித்துவ வளர்ச்சியிலேயே அது பிடித்திருந்த செழிப்பான காலனிய நாடுகளும் அவர்களுக்கு உயர் லாபங்களைத் தோற்றுவித்தன. இது ஏகாதிபத்தியத் தோற்றத்தின் முன்பே நிகழ்ந்த போதும் தன்னுள் சில ஏகாதிபத்திய இயல்புகளைக் கொண்டிருந்தது.

இதே கருத்தை லெனின் தனது “இரண்டாம் அகிலத்தின் வீழ்ச்சி” (1915) என்னும் கட்டுரையிலும் கையாள்கிறார். இதில் சந்தர்ப்பவாதம் என்றால் என்ன என்று வரையறுக்கிறார். அதாவது “சிறுபான்மையினரின் தற்காலிக நலன்களின் பொருட்டு பெருந்திரளான தொழிலாளர்களின் நலன்களை தியாகம் செய்து விடுவது” எனப் பொருளாகும். வேறு விதமாகச் சொல்வதானால் “தொழிலாளி வர்க்கத்தின் ஒரு பிரிவு பெருந்திரளான தொழிலாளி வர்க்கத்திற்கு எதிராக கூட்டு சேர்வது” ஆகும்.

முதலாளிகள் தொழிலாளிகளுக்கிடையில் ஒரு பிரிவுக்கு மட்டும் சலுகை அளிப்பதன் மூலம் அவர்களுக்கிடையில் தகுதிபெற்ற தொழிலாளர் “தட்டு” ஒன்றை ஏற்படுத்த முடிகிறது என்பதால் சந்தர்ப்பவாதம் தோன்றவும் வலிமையடையவும் வாய்ப்புகள் உள்ளன. மேலும் “பழக்கங்களின் வலிமை, ஒப்பீட்டளவில் அமைதியான வளர்ச்சிப் போக்குக்குப் பழகிப் போவது, தேசியத் தன்னியல்புப் போக்கு (Prejudice) கூரிய பிளவுகளுக்கு அஞ்சுவது, நம்பிக்கையின்மை முதலியவற்றால் சந்தர்ப்பவாதம் வலிமையடைகிறது என்கிறார் லெனின்.

இரண்டாம் அகிலத்தின் தலைவர்களின் சந்தர்ப்பவாதம் 1914-இல் அவர்கள் தத்தம் ஏகாதிபத்தியங்களோடு கைகோர்த்துக் கொள்வதாக முடிந்தது. ஏகாதிபத்தியப் போருக்குத் துணைபோன அவர்களது வாதங்களைக் கிழிக்கிறார் லெனின். சந்தர்ப்பவாதத் தலைவர்களைப் பொறுத்தவரையில் “சொல்லில் சோசலிசம் நடைமுறையில் பூர்ஷ்வாக்களோடு ஒவ்வொரு முக்கியப் பிரச்சினையிலும் கைகோர்த்து கட்சியிலிருந்து வெளித்தள்ளப்பட வேண்டிய நபர்கள் இவர்கள்” என்று தனது கட்டுரையை லெனின் முடிக்கிறார்.19

லெனின்: போரைப் பற்றி

பாட்டாளி வர்க்கத்தின், போர் குறித்த நிலைப்பாடு பற்றிய அடிப்படைப் போதனைகள் லெனினால் முதல் உலகப்போரின் போது வகுத்தளிக்கப்பட்டன. அவ்வடிப்படைக் கோட்பாடுகள் போல்ஷ்விக் கட்சி வரலாறு அத்தியாயம் 6-ஆம் பிரிவில் தொகுக்கப்பட்டுள்ளன.

லெனின்: சோசலிசமும் போரும் (1915) என்னும் தமது நூலில் நியாயமான நியாயமற்ற 20 போர்களுக்கிடையிலான வேறுபாட்டை வரையறுக்கிறார். தொழிலாளி வர்க்கம் நியாயமற்ற ஏகாதிபத்தியப் போர் மீது எவ்வகை நிலைப்பாட்டை வைத்திருக்க வேண்டும் என்பது பற்றிய மார்க்சியப் போதனைகளின் தொகுப்பாக இந்நூல் உள்ளது.

லெனின் 1914-இல் எழுந்த போர் இரண்டு ஏகாதிபத்திய முகாம்களுக்கிடையிலான நியாயமற்ற போர் என்று காட்டுகிறார். இத்தகைய போர்களில் அந்த அந்த நாடுகளின் தொழிலாளி வர்க்கங்கள் தத்தம் ஏகாதிபத்தியங்களை எதிர்க்க வேண்டும். “ஏகாதிபத்தியப் போரை உள்நாட்டுப் போராக” மாற்ற முயல வேண்டும்.

லெனின் – ஏகாதிபத்திய யுத்தங்கள் மூளும்போதும் நியாயமான சமாதானம் ஏகாதிபத்திய அரசுகளைத் தூக்கியெறியாமல் எட்டக் கூடியது அல்ல என்று காட்டுவதன் மூலம், சமாதானவாதிகளும், தாராளவாதிகளும் போர்களின் போது பரப்பும் “சமாதானம்” பற்றிய அரூபமான (Abstract) முழக்கம் போலித்தனமான ஏமாற்று வேலை என்று நிறுவுகிறார்.

இரண்டாம் அகிலத்தின் “சோசலிஸ்டுகள்’’ போருக்காதரவு அளித்தது சோசலிசத்தையே நேரடியாகக் காட்டிக் கொடுத்தது ஆகும் என்கிறார் லெனின். அவர்களின் கொள்கையை குறிக்க சமூகவெறி (Social Chavunism) என்ற சொல்லை உருவாக்கினார். சமூக வெறி என்பது நியாயமற்ற போரில் தங்கள் தாய் நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்று கூறிய சோசலிஸ்டுகள் என்று தம்மை அழைத்துக் கொள்பவர்களின் வாதம். சந்தர்ப்பவாதம், சமூக வெறி (Social Chavunism) இரண்டுடனும் சர்வதேசிய அளவில் தொடர்புகளை முறித்துக் கொண்டு மூன்றாம் அகிலம் புரட்சிகர அடிப்படையில் தொடங்கப்பட வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.

ஏகாதிபத்தியப் போர் பற்றிய மார்க்சியப் பார்வையை மீண்டும் போர் பற்றி 1917 மே மாதம் தனது பேச்சில் விளக்குகிறார். மீண்டும் நியாயமான, நியாயமற்ற போர்களுக்கிடையிலான வேறுபாட்டை யுணர்த்தி விட்டு, “நாம் எப்பொழுதும் எவ்வர்க்கம் போரை எந்த நோக்கத்திற்காக நடத்துகிறது என்று பார்க்க வேண்டும்” என விளக்குகிறார்.

மற்ற கட்டுரைகளில் உலகப் போரை ஒட்டி யெழுந்த சில சிறப்பான பிரச்சினைகளை ஆய்கிறார்.

“ஐக்கிய ஐரோப்பிய நாடுகள் என்ற முழக்கம்” (1915) என்ற நூலில் தொழிலாளர்கள் இப்படிப்பட்ட முழக்கத்தை ஆதரிக்க முடியாது என்கிறார். ஏகாதிபத்திய சக்திகள் அதிகாரத்தில் உள்ள வரை “ஐக்கிய ஐரோப்பிய நாடுகள் என்பது காலனிகளை, கொள்ளைகளைப் பகிர்ந்து கொள்ள ஒரு ஒப்பந்தமே, சோசலிசத்தை கூட்டாக நசுக்கும் ஒரு முகாந்திரமே” என்கிறார்.

சோசலிசம் அதன் வளர்ச்சிப் போக்கில் “உலக ஐக்கிய நாடுகளை” உருவாக்கும். ஆனால் இது இன்றைய நடைமுறைக் குறிக்கோள் அல்ல என்கிறார். சோசலிசத்தின் வெற்றி பல்வேறு நாடுகளிலோ அல்லது ஒரே ஒரு நாட்டிலோ சாத்தியமானதுதான். (இதன் காரணம் முதலாளித்துவத்தின் ஏற்றத்தாழ்வான வளர்ச்சிதான்)21 இந்த நாடு அல்லது நாடுகள் பிற முதலாளித்துவ நாடுகள் சூழ்ந்திருக்கும் போதும் நீண்ட காலம் சோசலிசத்தின் மையங்களாக விளங்கவும் முடியும்.

படிக்க:
லெனின் முன் வைத்த புதுப்பாணியிலான கட்சி !
கொரோனா தளர்வுகள் : பொருளாதாரம் எப்போது சீரடையும் ! | பொருளாதார அறிஞர் ஜெ. ஜெயரஞ்சன் காணொளி

லெனின், தொழிலாளர்களும் சமாதானவாதமும் (பாசிபிசமும்) என்ற நூலில் முழுமையான ஆயுத ஒழிப்பு என்னும் பாசிபிச முழக்கத்தை அம்பலப்படுத்துகிறார். முதலாளித்துவச் சூழலில் அது சாத்தியமற்றது. எனவே அதற்காக பிரச்சாரம் செய்வது உண்மையில் மெய்யான புரட்சிகரப் போராட்டங்களுக்கும் ஏகாதிபத்தியங்களுக்குமிடையிலான பிரச்சினைகளிலிருந்து நழுவுவதற்கானது.

நசுக்கப்படுகிறவர்கள் சமாதானவாதிகள் ஆக முடியாது. மாறாக ஆயுதங்களைக் கையாளவும், அவற்றை நசுக்குபவர்களுக்கெதிராகத் திருப்பவும் தயாராக தொழிலாளி வர்க்கம் இருக்க வேண்டும். ஆயுதங்களைப் பயன்படுத்தாது நசுக்கப்படுவதற்கும் சம்மதிப்பவர்கள் அடிமைகளாக நடத்தப்பட தகுதியானவர்கள்தான். நாம் பாசிபிஸ்டுகளாக இருக்க முடியாது. ஏனெனில் நாம் நியாயமான போர்கள் இருப்பதை ஏற்கிறோம். நசுக்கப்படுபவர்கள் நசுக்குகிறவர்களுக்கு எதிராக நடத்துவதே நியாயமான போர்களாகும்.

இதே கருத்தை 1916-ல் எழுதிய “பாட்டாளி வர்க்கப் புரட்சியின் போர்த்திட்டம்” என்னும் நூலில் கையாள்கிறார். இதன் முதல் பகுதியில் சோசலிஸ்டுகள் எல்லாப் போர்களுக்கும் எதிரானவர்கள் அல்ல. அவர்கள் அப்படி இருக்கவும் முடியாது என்று விளக்குகிறார். ஏனெனில் நசுக்கப்பட்டவர்கள் விடுதலைக்காகப் போராடுகிறார்கள். உள்நாட்டுப் போர்கள் நடக்கின்றன; சோசலிசத்தைக் கட்டியமைத்த பின் ஏகாதிபத்தியத் தாக்குதலுக்கெதிரே தற்பாதுகாப்புக்காகப் போராடி ஆக வேண்டி வரலாம். நசுக்கப்படுபவர்கள் விடுதலைக்காகப் போராடத் தயாராக இருக்க வேண்டும். சோசலிச நாட்டின் மக்கள் தங்கள் தாய்நாட்டைக் காக்கப் போர் நடத்த போராடவே வேண்டும்.

இந்த நூலின் பிற்பகுதிகளில் லெனின் ராணுவப் பயிற்சி, ஆயுதங்கள் மற்றும் அவற்றைப் பயன்படுத்துவது பற்றிய பாட்டாளி வர்க்க நிலைப்பாடுகளை எடுத்துரைக்கிறார்.

லெனின்: பிரிட்டிஷ் தொழிலாளர் இயக்கம் பற்றி

லெனினும் பிரிட்டனும் என்ற நூலில் லெனின் பிரிட்டிஷ் தொழிலாளர் இயக்கம் பற்றித் தமது பல்வேறு படைப்புகளில் குறிப்பிட்டவற்றை உள்ளடக்கி உள்ளது. அந்நூலில் லெனின் காட்டுபவை:

மார்க்சும் எங்கெல்சும் பிரிட்டனின் சுதந்திரமான தொழிலாளி வர்க்க இயக்கத்தினைக் கட்டியமைப்பதன் முக்கியத்துவத்தை எப்படி வலியுறுத்தி வந்தனர் 24 என்பதைக் குறிப்பிடுகின்றார். அவர்களின் அணுகுமுறை, மார்க்சியம், சோசலிசத்தையும் வெகுஜன தொழிலாளர் இயக்கத்தையும் ஒன்றிணைத்த தத்துவம் என்ற கோட்பாட்டிற்கு உதாரணமாகத் திகழ்கிறது. மார்க்சும் எங்கெல்சும் பழைய சமூக ஜனநாயகவாதக் கூட்டமைப்பு (Social Democratic Federation) என்னும் அமைப்பு பிரிட்டனில் கையாண்ட குறுங்குழுவாதப் போக்கை, தன்னை வெகுஜன இயக்கத்திலிருந்தே தனிமைப்படுத்திக் கொண்டு இருந்த போதும் வரட்டுத்தனமான “தனித்தன்மை”யைப் பற்றி பேசியதை வன்மையாகக் கண்டனம் செய்தனர்.

சோசலிஸ்டுகள் “தங்கள் குறுகிய குறுங்குழுவாதப் போக்கினைத் தூக்கியெறிந்து தொழிலாளர் இயக்கத்தில் இணைய வேண்டும்” என்று மார்க்சும் எங்கெல்சும் வலியுறுத்தினர். அதேசமயம் தொழிலாளர் இயக்கத்தில் சந்தர்ப்பவாதத்தை எதிர்த்துப் போராட வேண்டியதன் அவசியத்தையும் இயக்கத்திற்கு புரட்சிகரத் தத்துவம் ஒன்றின் அவசியத்தையும் வலியுறுத்தினார்கள்.

கொள்கை ஒன்றுக்குப் போராட வேண்டியது எவ்வளவு முக்கியமானது என்பதை லெனின் வலியுறுத்துகிறார். தொழிலாளர் கட்சியின் தொடக்கமே “ஒருவகையில் உண்மையில் உணர்வுள்ள பாட்டாளி வர்க்க நிறுவனங்கள் வர்க்கக் கொள்கைக்கும், சோசலிசத் தொழிலாளர் கட்சி நோக்கியும் எடுத்து வைத்திருக்கும் முதல் கட்டம் ஆகும்” எனக் குறிப்பிடுகிறார். ஆனால் 1918-ல் தொழிலாளர் கட்சி பற்றிக் குறிப்பிட்டபோது “இது தொழிலாளர்களை உள்ளடக்கி உள்ளபோதும் எதிர்ப்புரட்சிக்காரர்களால் தலைமை தாங்கப்படுகிறது” என்று கூறுகிறார்.

பிரிட்டனில் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றினைக் கட்ட வேண்டிய தேவையையும் அது தொழிலாளர் கட்சியோடு உறவு கோர வேண்டியதையும் காட்டுகிறார்.25

(தொடரும்)

குறிப்புகள்

  1. பார்க்க, லெனின், மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்க கூறுகளும்.
  2. பார்க்க, லெனின், நமது புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் பாத்திரம்.
  3. பார்க்க, மார்க்சு, பிரான்சில் உள்நாட்டுப் போர்.
  4. பார்க்க, லெனின், ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம்.
  5. பார்க்க, ஸ்டாலின், லெனினியத்தின் அடிப்படைகள், முதல் அமெரிக்கத் தொழிலாளர் பிரதிநிதிகளுக்கு அளித்த பேட்டி.
  6. பார்க்க, லெனின், நமது புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள், ஏப்ரல் மாநாடு.
  7. பார்க்க, எங்கெல்சு, பிரிட்டிஷ் தொழிலாளர் இயக்கம், மற்றும் மார்க்சு – எங்கெல்சு கடிதங்கள்.
  8. பார்க்க, லெனின், பொதுவுடைமைக் கட்சியின் பாத்திரம்.

நூல் : மார்க்சிய மூல நூல்களுக்கு வாசகர் வழிகாட்டி
ஆசிரியர் :
மாரிஸ் கார்ன்ஃபோர்த்

வெளியீடு : கீழைக்காற்று.
பக்கங்கள் : 272
விலை : ரூ. 150.00