கொரோனா நோய்த்தொற்று, குறிப்பாக உழைக்கும் பெண்களை உயிரோடு வதைக்கிறது. குடும்பத்தின் மொத்த பாரத்தையும் தனியொருவராக தன்மீது சுமக்கிறார்கள். எப்போது இந்தப் பாரம் இறங்கும் என்று திசை தெரியாமல் கலங்கி நிற்கிறார்கள்.
***
சத்தியவாணி என்ற அமுலு, இளநீர் விற்பவர்.
வாங்க இளநீர் வேணுமா? என்று கத்தியை லாவகாமக பிடித்தார். நாம் வந்த விசயத்தை அவரிடம் சொன்னோம்.
ஏற்கெனவே சங்கத்துக்காரங்க வெவரமா கேட்டு எழுதிட்டுப் போனாங்க. ஆதார், ரேஷன், சங்கக் கார்டுன்னு எல்லாத்தயும் ஜெராக்ஸ் எடுத்துக் கொடுத்தேன். ஒன்னும் காணல. நீங்க எழுதி என்ன பண்ணப் போறீங்க? என்றார்.
ஒரு நாளைக்கு 4, 6 காய்தான் விக்குது. இப்ப பகல் 2 மணியாகுது. இதுவரைக்கும் 2 காய்தான் வியாபாரம் செஞ்சிருக்கேன் என்கிறார், சத்தியவாணி என்ற அமுலு, இளநீர் விற்பவர்.
தொழிலும் பண்ண முடியல, ஒன்னும் செய்ய முடியல. என்னையே எடுத்துக்குங்க. 15 ஆயிரம் ரூபாய்க்கு சரக்கு போட்டு உட்கார்ந்திருக்கேன். ஒரு நாளைக்கு 4, 6 காய்தான் விக்குது. இப்ப பகல் 2 மணியாகுது. இதுவரைக்கும் 2 காய்தான் வியாபாரம் செஞ்சிருக்கேன். சாயாந்திரம் வரைக்கும் உக்காந்து என்னத்த வியாபாரம் பண்றது, எத வீட்டுக்கு எடுத்துப் போறது. இத வச்சு மொத்த குடும்பமும் 3 வேளை எப்படி சாப்பிடுறது?
உழைச்சாலும் சரியான சோறு இல்ல, நாக்கு செத்துப்போயி பல மாசங்களாகுது. ரேசன் அரிசி மொச்சக்கொட்டை மாதிரி இருக்குது. இத சமைச்சமுன்னா நாலே நாள்ல சிலிண்டரு காலியாயிடுது. காரஞ்சாரமா கொழம்பிருந்தா ஒருவழியா சாப்பிட்டு முடிக்கலாம். ரசம் வச்சி சாப்பிட்டா நம்மளுக்கே எறங்க மாட்டேங்குது; குழந்தைங்க எப்படி சாப்பிடும்?
வகைதொகையா கறி சாப்பிடுறத விடுங்க, வாரத்துக்கு ஒரு நாள் மீன் கூட இப்ப வாங்க முடியல. சரி கருவாட்ட வச்சி ஓட்டலாமுன்னு பாத்தா தம்மாத்தூண்டு பாக்கெட் முப்பது ரூபா சொல்றான். ரெண்டு பாக்கெட் வாங்கினாத்தான் கருவாட்டு வாசனையே வருது.
ஒரு வாரம் ஆனா, விக்காத இளநீரின் கண்ணுல இருக்குற தொப்பி கழண்டுரும். அவ்வளவுதான் காய் அழுகிடும். அத குப்பையில போடனுமுன்னாலும்கூட வண்டிக்கு கூலி வச்சாகணும்.
வியாபாரம் இல்ல, வாங்கின சரக்கு அழுகிப் போகுது. இளநீரைப் பொறுத்தவரைக்கும் 5 நாளைக்கு மேல தாங்காது, தண்ணீ டேஸ்ட் இருக்காது. ஒரு வாரம் ஆனா, விக்காத இளநீரின் கண்ணுல இருக்குற தொப்பி கழண்டுரும். அவ்வளவுதான் காய் அழுகிடும். அத குப்பையில போடனுமுன்னாலும்கூட வண்டிக்கு கூலி வச்சாகணும். இந்த லட்சணத்துல கொரோனாவை நாங்க எங்கே கொல்றது. அதுக்கு முன்னே நாங்க போய் சேந்துடுவோம் போல என்றார்.
இயல்பாகவே நடக்க முடியாதவர். தாங்கித் தாங்கி நடந்து வீட்டுக்கும் வேலைக்கும் அல்லாடிக் கொண்டிருக்கிறார்.
என் வீட்டுக்காரருக்கு சுகர் இருந்தது. அதுக்குமேல குடிச்சிக் குடிச்சியே செத்துட்டாரு. அவருக்கும் செருப்பு தைக்கிறதுதான் தொழில். புள்ளைங்களுக்கு மூனு வயசாகும்போதே அம்போன்னு விட்டுட்டுப் போயிட்டாரு. நான் இதே எடத்துல உட்கார்ந்து செருப்பு தச்சுதான் அவங்கள கட்டிக்கொடுத்தேன். இந்தத் தொழில்கூட நான் விரும்பி வரல. அது ஒரு பெருங்கதை.
செல்வி (வயது 60), செருப்புத் தைக்கும் தொழிலாளி
என் வீட்டுக்காரரு ஒழுங்காவே வேலை செய்யிறதில்ல. வேலைக்கு வந்தாருன்னா, ஒரு நாளைக்கு நாலு தடவ எழுந்துப் போயிடுவாரு. அந்த நேரமெல்லாம் கடைய நான்தான் பாத்துக்குவேன். அப்போ வர்ற கஷ்டமரை சமாளிக்கிறது பெரும்பாடாயிடும். இப்படியே விட்டா குடும்பத்த காப்பாத்த முடியாதுன்னு, கொஞ்சம் கொஞ்சமா கூட இருந்து கவனிச்சேன். அப்படி கத்துகிட்டதுதான் இந்த வேலை. இப்ப கஞ்சி ஊத்துது.
சைதாப்பேட்டை மாட்டாஸ்பத்திரி காவா ஓரம் ஒரு குடிசையில இருக்கிறேன். ஆம்படியான் சரியில்லன்னு என்னோட பெரிய பொண்ணு கிருஷ்ணாயில் ஊத்திட்டு செத்துட்டா. அவளுக்கு பொறந்த 2 பேரப்பசங்க, என்னோட சின்னப் பையன், கல்யாணம் ஆகாத ஒரு பொண்ணு… இவ்வளவு பேரையும் வச்சு நான்தான் கஞ்சி ஊத்தணும்.
இதுவரைக்கும் கவுரவமாத்தான் தொழில் பண்ணி வந்தோம். இப்போ கொரோனா வந்து எங்கள பிச்சை எடுக்க வச்சிடுச்சு. 4 மாசமா ரோட்டுல போறவங்க கொடுக்குற சோறுதான் நாங்க சாப்பிடுறோம். வேலையே இல்லன்னாலும் தினமும் இங்கே வந்து உட்கார்ந்திடுவேன். சின்ன பேரன், எங்கூடவே வருவான். அவன பாக்குறவங்க, மனசு இறங்கி 5, 10ன்னு கொடுப்பாங்க. அத எடுத்துப்போனாத்தான் ஒருவேள சோறு எங்களுக்கு.
இதுவரைக்கும் கவுரவமாத்தான் தொழில் பண்ணி வந்தோம். இப்போ கொரோனா வந்து எங்கள பிச்சை எடுக்க வச்சிடுச்சு. 4 மாசமா ரோட்டுல போறவங்க கொடுக்குற சோறுதான் நாங்க சாப்பிடுறோம் என்கிறார் செல்வி.
லாக்டவுன் எடுத்ததுனால அதுவும் போச்சு. இப்ப யாரும் இங்கே சோறு போடுறதில்லை. ரோட்டுலயும் முன்னமாதிரி யாரும் நடக்குறதில்ல. பல மாதங்களாகுது நல்ல சாப்பாடு சாப்பிட்டு. வாய் காரஞ்சாரமா கேக்குது. ஆனா வீட்டுல ரசம் வக்கக்கூட ஒரு துரும்பு இல்ல. நேத்து நைட்கூட தண்ணி சோறுதான். சாப்பிட புடிக்கல. அதனால சரியான தூக்கமுமில்ல.
ஏற்கெனவே எனக்கு பிரஷரு வேற. ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில அட்டைபோட்டு மாசமானா மருந்து வாங்கி வருவேன். இப்ப பஸ் இல்ல, மருந்து சாப்பிட்டு பல மாசமாச்சு. இந்த உயிசுரு எப்ப போவுமுன்னு தெரியல. நான் போன பிறகு பேரப்புள்ளைங்க எங்கே போயி நிக்குமுன்னு வேதனையா இருக்கு. அதனால உயிர இழுத்துப் புடிச்சு வச்சிருக்கேன் என்று உடைந்து போயி பேசினார்.
நகராட்சி மருத்துவமனையின் பிரசவப் பிரிவு நுழைவு வாயில். அதன் அருகில் உள்ள சிறிய தரைக்கடை.
பிறந்த குழந்தைகளுக்கு, தாய்மார்களுக்குத் தேவையான அவரசத் துணிகளை தட்டுக்கடையில் வைத்து விற்கும் முஸ்லீம் மூதாட்டி. போட்டோவெல்லாம் எடுக்காதீங்க. போங்க என்று நம்மை எரிச்சலுடன் விரட்டினார்.
கொரோனாவுக்கு பயந்துகிட்டு வர்ற சனங்ககூட, இந்தக் கடைய சந்தேகமாவே பாக்குறாங்க. இதுலவேற போலீசு தொந்தரவு, இப்ப நீங்க… என்று இழுக்கிறார், துணி வியாபாரம் செய்யும் ஆயிஷா.
இப்பத்தான் போலீஸ்காரங்க வந்தாங்க, கொரோனா வந்துடப் போகுது, தூக்குத் தூக்குன்னு சொல்லி விரட்டுனாங்க. எவ்வளவு கெஞ்சினாலும் விடல. கொரோனாவே எங்களாலதான் வருதுங்குற மாதிரி அசிங்கப்படுத்துறாங்க. இப்படியே 4 மாசமாக பொழப்பு இல்ல. எதாவது வித்தாத்தான் கொழந்தைங்கள காப்பாத்த முடியும். இப்படியே பண்ணினா சாவுறத தவிர எங்களுக்கு வேற வழியில்லை.
முழுசா 500 ரூபா எடுத்துப் போயி பல மாதங்களாயிடுச்சு. பிரசவம் ஆகி வெளியே போறவுங்க பின்னால ஓடி கெஞ்சினாத்தான் ஏதோ பாவம் பாத்து ஒரு துண்டாவது வாங்குறாங்க. உள்ளே போறவுங்களும் அப்படித்தான்.
இந்தக் கொரோனாவுக்கு பயந்துகிட்டு வர்ற சனங்ககூட, இந்தக் கடைய சந்தேகமாவே பாக்குறாங்க. காலையிலேருந்து இன்னும் பச்சத் தண்ணிகூட குடிக்கல. கண்ணைக் கட்டுது. இதுலவேற போலீசு, இப்ப நீங்க… இப்படியே போனா நான் எப்பத்தான் வியாபாரம் பண்றது என்று சலித்துக்கொண்டார்.
அங்கம்மாள், உதிரிப் பொருட்கள் விற்பவர்
தெருவோரமாகக் கிடந்தார் வயதான மூதாட்டி அங்கம்மாள். அவர்தான் இந்தத் தரைக்கடைக்கு ஓனர். பிளாஸ்டிக், நைலான், ரப்பர் புஸ்கள். நாற்காலி, மேசை, ஸ்டூல், பெஞ்ச், கட்டில் என்று பல வீட்டு – அலுவலக சாமான்களின் கால்கள் தேயாமல் இருக்க, அடியில் போடும் புஸ்களை விற்று வருகிறார். பல வடிவங்களில், பல அளவுகளில் இறைந்து கிடந்தன. வண்ண வண்ண பிளாஸ்டிக் பாட்டில் மூடிகளும் குவிந்து கிடந்தன.
வியாபாரம் சுத்தமா இல்ல. அதான் ரோட்டுலயே சுருண்டு கிடக்கிறேன். யாராவது என்னை எழுப்பி கேட்டா, கேக்குறத கொடுப்பேன் என்கிறார் வயதான அங்கம்மாள்.
இதோட விலையே 5, 10, 20 ரூபாதான். வர்றவங்க அதுக்கும் கம்மியா கேக்குறாங்க, பேரம் பேசுறாங்க. 10 ரூபா பொருள் விக்கிறதுக்குல்ல பேரம் பேசியே தொண்ட தண்ணி வறண்டுபோகுது. இப்ப வியாபாரம் சுத்தமா இல்ல. அதான் ரோட்டுலயே சுருண்டு கிடக்கிறேன். யாராவது என்னை எழுப்பி கேட்டா, கேக்குறத கொடுப்பேன். உடம்பு படுத்துது, தெம்பு போயிடுச்சு. ரோட்டுல நின்னு வியாபாரம் பாக்க முடியல. இப்ப உங்களுக்கு என்ன வேணும். ஏதாவது எடுங்க, நீங்க கொடுக்குறத கொடுங்க என்று அவர் கேட்ட விதம் எவரையும் உலுக்கிவிடும்.
சிறு வியாபாரம் அழிந்து அதன் இறுதிக்கட்டம் நெருங்கிவிட்டதை உணர்த்தியது அந்தக் கோரச் சூழல்.
மேலும் படங்களுக்கு :
This slideshow requires JavaScript.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
உடுமலை சங்கர் ஆணவப் படுகொலை மேல்முறையீட்டு வழக்கில், அவ்வாணவக் கொலையின் முதன்மைக் குற்றவாளியும் சங்கரின் காதல் மனைவி கௌசல்யாவின் தந்தையுமான சின்னசாமிக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்கு தண்டனையையும் அவர் மீது சுமத்தப்பட்டிருந்த மற்றைய குற்றச்சாட்டுகளையும் ரத்து செய்து, அவரை விடுதலை செய்திருக்கும் சென்னை உயர்நீதி மன்றத் தீர்ப்பு சம்பிரதாயமான எதிர்ப்புகளைத் தாண்டி, வேறெந்த சலனத்தையும் தமிழகத்தில் ஏற்படுத்தவில்லை.
உயர்நீதி மன்றத் தீர்ப்பு எந்தளவிற்கு அநீதியானதோ, அந்தளவிற்கு தமிழகத்தின் மௌனமும் அநீதியானதுதான். சமூக நீதியைச் சாதித்துவிட்டதாகக் கூறிக்கொள்ளும் தமிழகத்திற்கு, அத்தகைய அருகதையுண்டா என்ற கேள்வியை முன்நிறுத்துகிறது, இந்த மௌனம்.
சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட சங்கர்-கௌசல்யா இணையர், மணக்கோலத்தில். (கோப்புப் படம்)
மற்றைய ஆணவப் படுகொலைகளைப் போல, சங்கர் படுகொலை கமுக்கமாக, காதும் காதும் வைத்தாற்போல நடக்கவில்லை. உடுமலைப்பேட்டை நகரின் முக்கிய கடைவீதியில், பகலில், பொதுமக்களின் கண்முன்னே சங்கர் வெட்டிக் கொல்லப்பட்டார். கூலிப்படையால் திரும்பத் திரும்ப வெட்டப்பட்டதால் ஏற்பட்ட 33 வெட்டுக்காயங்களால் துடிதுடித்து உயிரிழந்தார், சங்கர்.
சங்கரை மட்டுமல்ல, வீட்டை எதிர்த்து, சாதியை மறுத்து அவரைக் காதல் மணம் புரிந்துகொண்ட கௌசல்யாவையும் கொல்ல வேண்டும் என்பதும் இந்த ஆணவக் கொலையின் இலக்கு. கூலிப்படையால் வெட்டப்பட்ட கௌசல்யா நல்வாய்ப்பாக உயிர் பிழைத்துக்கொண்டார்.
சங்கர் படுகொலையும் கௌசல்யா மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலும் ஆதிக்க சாதி பயங்கரவாதத்தின் வெளிப்படையான எடுத்துக்காட்டு. சாதிக் கட்டுமானத்தை மீறித் திருமணம் செய்துகொள்ளத் துணிவோருக்கு விடுக்கப்பட்ட வெளிப்படையான எச்சரிக்கை, அச்சுறுத்தல். அதனால்தான் கீழமை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளின் தண்டனைகளை உறுதி செய்ய வேண்டும் என்பதோடு, விடுவிக்கப்பட்டவர்களையும் உயர்நீதி மன்றம் தண்டிக்க வேண்டுமெனத் தாழ்த்தப்பட்ட அமைப்பினர் மட்டுமின்றி, ஜனநாயக சக்திகள் அனைவரும் எதிர்பார்த்தனர்.
சங்கர் ஆணவப் படுகொலை வழக்கில் கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி, தாய் அன்னலெட்சுமி, தாய் மாமன் பாண்டித்துரை உள்ளிட்டு 11 பேர் மீது சதி, கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. திருப்பூர் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், கௌசல்யா உள்ளிட்டு 163 பேர் சாட்சியம் அளித்திருந்தனர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி அலமேலு நடராஜன் இந்த சாட்சியங்களின் அடிப்படையில் கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி உள்ளிட்ட ஆறு பேருக்குத் தூக்கு தண்டனையும்; 9- குற்றவாளி தன்ராஜுக்கு ஆயுள் தண்டனையும், 11- குற்றவாளி மணிகண்டனுக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனையும் அளித்த அதேசமயம், கௌசல்யாவின் தாய் அன்னலெட்சுமி, தாய் மாமன் பாண்டித்துரை, கூலிப் படையைச் சேர்ந்த பிரசன்னா ஆகிய மூவரையும் வழக்கிலிருந்து விடுவித்தார். விசாரணை நீதிமன்றத் தீர்ப்பு சங்கர் படுகொலைக்கு முழுமையான நீதியை வழங்கவில்லை என்றபோதும், பத்துக்கு ஒன்பது பழுதில்லை என்ற விதத்தில் அமைந்தது.
அரசுத் தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் கீழமை நீதிமன்றம் அளித்த தூக்கு தண்டனையை உறுதி செய்ய வேண்டும் என்பதோடு, விடுதலை செய்யப்பட்ட கௌசல்யாவின் தாய் உள்ளிட்ட மூவரையும் தண்டிக்க வேண்டும் எனக் கோரப்பட்டது.
இரத்த வெள்ளத்தில் சரிந்து கிடக்கும் சங்கர். (கோப்புப் படம்)
தண்டிக்கப்பட்டவர்கள் விடுதலை கோரி மேல்முறையீடு செய்திருந்தனர்.
இம்மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் அளித்திருக்கும் தீர்ப்போ விசாரணை நீதிமன்றத்தில் நிலைநாட்டப்பட்ட குறைந்த பட்ச நீதியைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டுவிட்டது. அத்தீர்ப்பு இவ்வழக்கில் சதிக் குற்றச்சாட்டை அரசுத் தரப்பு நிரூபிக்கவில்லை எனக் கூறி, முதன்மைக் குற்றவாளியான கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமியை விடுதலை செய்துவிட்டது. மேலும், விசாரணை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட கௌசல்யாவின் தாய் அன்னலெட்சுமி உள்ளிட்ட மூவரின் விடுதலையை உறுதி செய்திருக்கிறது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தன்ராஜும், ஐந்து ஆண்டு தண்டனை விதிக்கப்பட்ட மணிகண்டனும் விடுதலையாகியுள்ளனர்.
எஞ்சியிருந்த கூலிப்படையைச் சேர்ந்த ஐவரின் தூக்கு தண்டனை, அவர்கள் 25 ஆண்டு காலம் தண்டனைக் குறைப்பின்றிச் சிறையில் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.
சின்னச்சாமி சதி செய்யவில்லை எனில், சங்கர் எதற்காகப் படுகொலை செய்யப்பட்டார்? கூலிப்படையை ஏவிவிட்டது யார்? இந்தக் கேள்விகளுக்கு நீதிமன்றத் தீர்ப்பில் பதில் இல்லை. எய்தவர்களை விடுதலைசெய்துவிட்டு அம்புகளைத் தண்டித்திருக்கிறது, உயர்நீதி மன்றம்.
திருப்பூர் நீதிமன்றம் கௌசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு ஏதோ மேம்போக்காக விசாரணை நடத்தித் தூக்கு தண்டனை அளித்துவிடவில்லை. சங்கர் படுகொலை செய்யப்படுவதற்கு முதல் நாள் மார்ச் 12 (2016) அன்றும் அதற்கு மறுநாள் மார்ச் 14 அன்றும் கௌசல்யாவின் தாய் கூட்டு வங்கிக் கணக்கிலிருந்து ரூ.80,000/- பணம் எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் ரூ.50,000/ சங்கரைப் படுகொலை செய்த கூலிப்படைக் கும்பலிடமிருந்து கைப்பற்றப்பட்டிருக்கிறது.
சங்கரைப் படுகொலை செய்த கூலிப் படையினரோடு சின்னச்சாமி ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததைக் கண்ணால் பார்த்த இரண்டு பேர் விசாரணை நீதிமன்றத்தில் அது குறித்து சாட்சியம் அளித்தனர்.
இப்படுகொலையில் சம்பந்தப்பட்ட ஐந்தாவது குற்றவாளி மணிகண்டன் உள்ளிட்ட நான்கு குற்றவாளிகள் விடுதியில் தங்குவதற்கான ஏற்பாடுகளை சின்னச்சாமி செய்து கொடுத்திருக்கிறார். குறிப்பாக, மணிகண்டனும் சின்னச்சாமியும் ஒரே அறையில் தங்கியிருக்கிறார்கள். இது தொடர்பான சாட்சியத்தை குற்றவாளிகள் தங்கியிருந்த விடுதி உரிமையாளர் விசாரணை நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார்.
உயர்நீதி மன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட சின்னச்சாமி, தன்ராஜ், மணிகண்டன் ஆகியோரை சிறை வாசலுக்கே சென்று வரவேற்கும் ஆதிக்க சாதி சங்கத் தலைவர்கள்.
மேலும், சின்னச்சாமி கூலிப்படை கும்பலுடன் பலமுறை கைபேசி வழியாகப் பேசி வந்திருப்பதும் விசாரணை நீதிமன்றத்தில் சாட்சியமாக அளிக்கப்பட்டிருக்கிறது.
இப்படியான நேரடி மற்றும் சந்தர்ப்ப சாட்சியங்களின் அடிப்படையில்தான் கூட்டுச் சதி மற்றும் வன்கொடுமைக் கொலை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சின்னச்சாமிக்குத் தூக்கு தண்டனை விதித்தது விசாரணை நீதிமன்றம்.
இந்த சாட்சியங்கள் அனைத்திலும் ஓட்டைகளைக் கண்டுபிடித்து சின்னச்சாமியை சதிக் குற்றச்சாட்டிலிருந்தும் கொலைக் குற்றத்திலிருந்தும் விடுவித்திருக்கிறது உயர்நீதி மன்றம்.
சின்னச்சாமி சங்கரைக் கொலை செய்ய சதி செய்தார் என்ற குற்றச்சாட்டை நிரூபிக்க அரசு தரப்பில் அளிக்கப்பட்ட பல்வேறு சாட்சியங்களுள், பிப்ரவரி 6, 2016 தொடங்கி மார்ச் 6, 2016 வரையிலான இடைப்பட்ட நாட்களில் சின்னச்சாமி கூலிப்படையினரோடு கைபேசியில் உரையாடி வந்திருக்கிறார் என்ற சாட்சியத்தைத் தவிர, வேறு எந்தவொரு சாட்சியத்தையும் அரசு தரப்பால் நிரூபிக்க முடியவில்லை எனக் கூறுகிறது, உயர்நீதி மன்றத் தீர்ப்பு.
“சங்கர் படுகொலை செய்யப்பட்டபோது, அந்த இடத்தில் முதன்மைக் குற்றவாளியான சின்னச்சாமியும் இருந்தார் என்பதற்கான ஆதாரம் எதுவுமில்லை.”
“கூலிப்படையினர் தங்க சின்னச்சாமி தனியார் விடுதியில் அறை எடுத்துக் கொடுத்தார், அவர்களுள் ஒருவருடன் தங்கியிருந்தார் என்ற குற்றச்சாட்டை நிரூபிக்க அளிக்கப்பட்ட வாய்வழி மற்றும் ஆவண சாட்சியங்கள் போதுமானதாக இல்லை.”
சின்னச்சாமிதான் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுத்தார், சின்னச்சாமிதான் அந்தப் பணத்தைக் கூலிப்படையினரிடம் கொடுத்தார் என்பதை அரசு தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்காததால், அச்சாட்சியத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. குறிப்பாக, “ஏ.டி.எம். மெஷினிலிருந்து சின்னச்சாமி பணம் எடுத்ததற்கான சி.சி.டி.வி. காட்சிப் பதிவை அரசு தரப்பு சமர்ப்பிக்கவில்லை என்பதால், அரசு தரப்பின் குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது.”
“சின்னச்சாமி கூலிப்படையினருடன் சேர்ந்து சதி செய்து கொண்டிருந்ததைப் பார்த்ததாகக் கூறும் இரண்டு சாட்சியங்களும் சந்தேகத்திற்கிடமானவை.”
இவையெல்லாம் சதிக் குற்றச்சாட்டை மறுக்க நீதிமன்றம் கண்டுபிடித்துச் சொல்லியிருக்கும் காரணங்கள். குறிப்பாக, கொலை நடந்த இடத்தில் சின்னச்சாமி இல்லை; விடுதியில் கூலிப்படையினர் தங்கியிருந்ததற்கான ரசீது சின்னச்சாமி பெயரில் இல்லை; சின்னச்சாமி கூலிப்படையினருடன் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்ததாகக் கூறும் சாட்சியங்கள், சின்னச்சாமி கூலிப்படையினருடன் சங்கரைக் கொலைசெய்வது குறித்துத்தான் பேசிக் கொண்டிருந்தார் என்பதை நிரூபிக்கவில்லை என நீதிபதிகள் தீர்ப்பில் தர்க்கம் செய்திருக்கிறார்கள்.
இதன்படி பார்த்தால், சின்னச்சாமியும் அன்னலெட்சுமியும் அரிவாளைத் தூக்கிக்கொண்டு சங்கரைக் கொலைசெய்ய பாய்ந்திருந்தால்தான் நீதிபதிகளின் சட்டப் புத்தி அதனை ஆணவக் கொலை என ஏற்றுக்கொண்டிருக்கும் போலும்!
இரகசியமாகத் திட்டமிடப்படுவதுதான் சதி எனும்போது, சின்னச்சாமி சங்கரைக் கொலை செய்வது பற்றித்தான் கூலிப்படையினரோடு பேசினாரா எனக் கேள்வி எழுப்புகிறார்கள் நீதிபதிகள். பிறகென்ன, சின்னச்சாமியும் கூலிப்படையினரும் சாதி ஒழிப்புப் பற்றியா பேசியிருப்பார்கள்?
கூலிப்படையிடமிருந்து கைப்பற்றப்பட்ட ரூ.50,000/ சின்னச்சாமி தந்ததுதான் எனக் கூலிப்படையினரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த பிறகும், அதனைச் சாட்சியமாக ஏற்றுக் கொள்ள மறுத்திருக்கிறார்கள், நீதிபதிகள். இதற்கெல்லாம் கையெழுத்திடப்பட்ட ரசீதை அல்லது புகைப்பட ஆதாரத்தையா காட்ட முடியும்?
கூலிப்படை தங்க அறை எடுத்துக் கொடுத்தற்கான ரசீது சின்னச்சாமி பெயரில் இல்லையாம்! ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேட்டரி வாங்கித் தந்தார் என்ற குற்றச்சாட்டில் பேரறிவாளனுக்குத் தண்டனை கொடுத்த நீதிமன்றங்கள் ஒவ்வொன்றும், அதற்கான ரசீதை, அதுவும் பேரறிவாளன் பெயரில் உள்ள ரசீதைப் பார்த்த பிறகுதான் தண்டனை அளித்தனவா?
நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில், அக்குற்றத்தோடு அப்சல் குருவைத் தொடர்புபடுத்த போதுமான சாட்சியங்கள் இல்லை என்ற நிலையில், சட்டத்தைப் புறந்தள்ளி, இந்து சமூகத்தின் மனசாட்சியைத் திருப்திபடுத்துவதற்காகவே தூக்குத் தண்டனையை உறுதி செய்வதாகப் பச்சையாகக் கூறியது, உச்சநீதி மன்றம்.
சங்கர் படுகொலை வழக்கிலும் ஆதிக்க சாதிவெறியர் தண்டிக்கப்பட வேண்டும் எனத் தாழ்த்தப்பட்ட மக்களின், ஜனநாயக சக்திகளின் மனசாட்சி விரும்பியது. ஆனால், உயர்நீதி மன்றமோ ஆதிக்க சாதிவெறியர்களை விடுவிக்க சட்டத்தின் சந்துபொந்துகளைத் தேடி அலைந்திருக்கிறது.
இன்னொருபுறத்திலோ, குற்றம் சாட்டப்பட்டவர் குற்றத்திற்குப் பொருளாதார உதவி செய்வது குறித்துப் பேசும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகள் 8 மற்றும் 8 ஆகிய இரண்டையும் ஒதுக்கிவைத்துவிட்டு இத்தீர்ப்பை அளித்துள்ளனர், நீதிபதிகள். மேலும், 300 பக்கங்களுக்கு மேல் எழுதப்பட்ட இத்தீர்ப்பில் ஒரு இடத்தில்கூட இக்குற்றத்தைச் சாதி அடிப்படையில் அமைந்த ஆணவக் கொலை என நீதிபதிகள் பதிவு செய்யவில்லை.
இவை அனைத்தும் இத்தீர்ப்பின் நடுநிலை குறித்து சந்தேகத்தை எழுப்புகின்றன. சனாதனக் கருத்துக்களையும் ஆதிக்க சாதிவெறியர்களையும் ஆதரித்துப் பாதுகாக்கக்கூடிய இந்து மதவெறிக் கும்பல் ஆட்சியதிகாரத்தில் அமர்ந்திருக்கும் இவ்வேளையில் அளிக்கப்பட்டிருக்கும் இத்தீர்ப்பு, சாதிரீதியாகப் பிளவுண்டு கிடக்கும் இச்சமூகத்திற்குச் சொல்லும் செய்தி என்ன? சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி ஒரு சின்னச்சாமியை விடுதலை செய்திருக்கும் இத்தீர்ப்பு, அதன் வழியாக நூறு சின்னச்சாமிகள் உருவாகிட வழிவகுத்துக் கொடுத்துவிட்டது.
மேலும், ஆணவக் கொலைகள், தீண்டாமைக் குற்றங்களில் ஈடுபடும் ஆதிக்க சாதிவெறி பிடித்த குற்றவாளிகளைத் தண்டிக்க சட்டம், நீதிமன்றம் ஆகியவற்றை மட்டுமே நம்பியிருக்க முடியாது என்பதற்கும் இந்தத் தீர்ப்பு இன்னுமொரு உதாரணமாக அமைந்திருக்கிறது.
இந்நிலையில் இந்தச் சட்டவரம்புகளுக்கு அப்பால், சாதி மற்றும் தீண்டாமை ஒழிப்பிற்காகப் போராடக்கூடிய ஓர் அமைப்பை மக்கள் மத்தியிலிருந்து உருவாக்கி வளர்க்க வேண்டிய தேவையை இத்தீர்ப்பு சாதி, தீண்டாமையை எதிர்த்துப் போராடிவருபவர்களுக்கு மீண்டும் உணர்த்திச் சென்றிருக்கிறது.
கொரோனா ஊரடங்கைத் தொடர்ந்து கடந்த நான்கு மாதங்களாக பலரும் வேலையிழந்து தவித்து வருகின்றனர். இப்பிரச்சினையை தீர்க்க அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்ற அடிப்படையில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் 29.07.2020 அன்று விருத்தாச்சலத்தில் உள்ள சார் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
அதில் கிராமப்புறங்களில் வழங்கப்பட்டுவரும் 100 -நாள் வேலையை 300-நாட்களுக்கு வழங்க வேண்டும் மற்றும் அதற்கான கூலியை நாள் ஒன்றுக்கு 400 ரூபாய் என உயர்த்த வேண்டும் ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
This slideshow requires JavaScript.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் : மக்கள் அதிகாரம், விருத்தாச்சலம். தொடர்புக்கு : 97912 86994
பெரும்பான்மை மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்க வருகிறது ’இந்து ராஷ்டிரத்திற்கான’ கல்விக்கொள்கை – தமிழகம் கிளர்ந்தெழட்டும்!
நாடு முழுவதும் கடுமையாக எதிர்க்கப்பட்ட புதிய கல்விக்கொள்கைக்கு மோடி அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கார்ப்பரேட்டுகளின் அடிமை மோடி தலைமையிலான பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் கும்பல் மத்தியில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய 2014 இல் இருந்தே கல்விக் கொள்கையை மாற்ற தீவிரமாக முயற்சித்து வந்தார்கள்.
நாடு முழுவதும் கல்வியாளர்களாலும், மாணவர்கள் அமைப்புகளாலும் கடுமையாக எதிர்த்து போராட்டங்கள் நடத்தி வந்ததால் அவ்வப்போது பின்வாங்கி வந்தவர்கள் இப்போது கொரோனா – ஊரடங்கு, மற்றும் பள்ளி, கல்லூரி விடுமுறைகளால் மாணவர்கள் ஒருங்கிணைய முடியாத சூழலைப் பயன்படுத்திக் கொண்டு புதிய கல்விக்கொள்கையை நாட்டின் மீது திணிக்கிறார்கள்.
இது கல்வியை சர்வதேச சந்தையில் கடைவிரிக்கும் கார்ப்பரேட் நலனும், ‘சூத்திரனுக்கு கல்வி எதற்கு’ எனும் பார்ப்பனிய மேலாண்மையை நிறுவும் காவிகளின் நலனும் ஒன்றிணைந்த வீரிய ஒட்டுரக புதிய மனுநீதி! பெரும்பான்மை மக்களுக்கு கல்வி உரிமையை மறுக்கும் இந்த புதிய கல்விக் கொள்கையை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
இதுவரை இருந்து வந்த பள்ளிக்கல்வி அமைப்பு முறையை 5+3+3+4 என மாற்றியமைக்கப்படுகிறது. 3, 5, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு. பள்ளிக்கல்விக்கு நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் வகுக்கப்படுமாம். அனைத்துவிதமான உயர்கல்விக்கும், அதாவது கலை, அறிவியல் உள்ளிட்ட கல்லூரி, பல்கலைக்கழகங்களில் சேர அகில இந்திய அளவிலான பொது நுழைவுத்தேர்வு, கல்லூரிகளே இனி பட்டம் வழங்கும் என உயர்கல்வி நிறுவனங்களை தன்னாட்சி பெற்றதாக மாற்றுவது, எம்.ஃபில் படிப்பை ஒழித்துக் கட்டுவது, கல்வித் துறையில் மாநிலங்களின் அதிகாரத்தை பறித்து அனைத்தையும் மையப்படுத்துவது ஆகியவற்றை இப்புதியக் கல்விக்கொள்கை செய்யப் போகிறது.
ஏற்கனவே கல்வித்துறையில் தனியார்மயத்தை புகுத்தியதன் விளைவாக மாணவர்கள் கல்வி பெறுவதில் ஏற்றத் தாழ்வு அதிகரித்து வருகிறது. தனியார் கல்வி நிறுவனங்கள் எந்த வரைமுறையும் இன்றி பகற்கொள்ளையடிக்கிறார்கள், கல்விக் கட்டணம் கட்டமுடியாத பெற்றோர்களும், மாணவர்களும் அநியாயமாக தூக்கியெறியப்படுகிறார்கள். இதை எதையும் தடுக்க முடியாதபடி அரசின் சட்டங்களும், விதிமுறைகளும், அதிகாரிகளும், நீதிமன்றங்களும் தனியார் கல்விக் கொள்ளையர்களுக்கு துணையாக நிற்பது நாடறிந்த உண்மை. இந்நிலையில் கல்வித்துறையை முழுக்க தனியார்மயப் படுத்துவதென்றால் இனி ஏழைகளுக்கு கல்வி இல்லை என்பது நிச்சயம்.
தரத்தின் பெயரில் பணக்காரர்களுக்கும், பார்ப்பனர்களுக்கும் மட்டும் உயர்க் கல்வி, ஏழைகளுக்கு 10-ம் வகுப்புக்கு மேல் தொழிற்பயிற்சி. “சூத்திரர்களுக்கு கல்வி இல்லை. அவனவன் அப்பன் தொழிலைச் செய்ய வேண்டும்” என்ற ராஜாஜியின் குலக்கல்வி திட்டம் இந்த புதிய கல்விக் கொள்கை மூலம் மீண்டும் உயிர்ப்பெறப்போகிறது. மும்மொழி திட்டத்தின் பெயரில் இந்தி – சமஸ்கிருதம் திணிக்கப்படபோகிறது.
பாடப்புத்தகங்களில் பல்வேறு தேசிய இனங்களின் மொழி, பண்பாடு, கலாச்சாரம் அனைத்தும் ஒழிக்கப்படும். இந்திய வரலாற்றை இந்துத்துவ வரலாறாக திரிப்பது, சமஸ்கிருத பண்பாட்டை புகுத்துவது, தொன்மை – பாரம்பரியம் – பண்பாடு எனும் பெயரில் அறிவியலுக்கு புறம்பான வேதம் – புராணம் – இதிகாசம் போன்ற மூட நம்பிக்கைகளை, ஆபாசக் குப்பைகளை பாடத்திட்டமாக்குவதுதான் இவர்களின் நோக்கம். சமுதாய ஒப்படைப்பு என்ற பெயரில் பள்ளிக்கூடங்களை ஆர்.எஸ்.எஸ் கூடாரமாக்குவார்கள். உயர்க் கல்வியை மறுகட்டமைப்பு செய்வது என்ற பெயரில் யூ.ஜி.சி, எம்.சி.ஐ போன்ற உயர்க் கல்வி நிறுவனங்களை ஒழித்துக்கட்டிவிட்டு, உயர் கல்வி ஆணையம், உயர் கல்வி கட்டுப்பாட்டு ஆணையம் உருவாக்கி கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைத்துவிடுவார்கள்.
மொத்தத்தில், இந்திய கல்வியை சர்வதேசியமயமாக்குவது. கெயின், மூக்ஸ் போன்ற ஆன்லைன் படிப்புகள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை மாணவர்களுக்கு வரவைப்பது. அரசு கல்லூரி, பல்கலைக்கழகங்களை தனியார்மயமாக்கி சொந்த நாட்டு மாணவர்களின் கல்வி கற்கும் உரிமையை பறிப்பது. இதுதான் மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையின் நோக்கம். மாணவர்கள், ஆசிரியர் பெருமக்கள், பெற்றோர்கள், உழைக்கும் மக்கள் அனைவரும் களத்தில் இறங்குவோம். ஒட்டுமொத்த சமூகத்திற்கும் மாணவர் நலனுக்கும் எதிராக உள்ள மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்போம்!
தோழமையுடன் த.கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர்,
பு.மா.இ.மு, தமிழ்நாடு.
தகவல் : புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு.
பயங்கரவாதம், பயங்கரவாதிகள் குறித்து ஓட்டுக்கட்சிகள், குறிப்பாக, பா.ஜ.க., காங்கிரசும்; துக்ளக், தினமணி, தினமலர் உள்ளிட்ட தேசிய ஊடகங்களும் உருவாக்கியிருந்த கதையாடல்கள் அனைத்தையும் கலைத்துப் போட்டுவிட்டது சாத்தான்குளம் கொட்டடிக் கொலைகள். அரசு பயங்கரவாதம் எனக் கூறப்படுகின்ற போலிசு பயங்கரவாதத்தை மிஞ்சிய பயங்கரவாதம் வேறொன்றுமில்லை என்பதை ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரின் பரிதாபகரமான சாவு எடுத்துக்காட்டியிருக்கிறது.
ஜெயராஜ் கொட்டடிக் கொலைகள் போலிசு பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தியிருக்கும் அதேவேளையில், கரோனாவிற்கு எதிராக போலிசு துறையே உயிரைக் கொடுத்துப் போராடிவரும் வேளையில், அதற்குக் களங்கம் கற்பிப்பது போல இந்தச் சம்பவம் நடந்துவிட்டதென்று கூறி, இப்படுகொலையைச் சில போக்கிரி அதிகாரிகளின் தவறாகவும் விதிவிலக்கான ஒன்றாகவும் காட்டிவிடும் முயற்சியும் நடந்து வருகிறது.
இப்படுகொலை தொடர்பான ஆரம்பகட்ட விசாரணையைக் கண்காணித்துவரும் உயர்நீதி மன்ற நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அடங்கிய அமர்வும் கூட, “போலிசார் மன அழுத்தத்துடனேயே பணியாற்ற வேண்டியிருப்பதாகவும், கரோனா காலத்தில் அவர்களின் மன அழுத்தம் இன்னும் அதிகரித்திருப்பதாகவும், அத்தகைய மன அழுத்தம் இப்படிப்பட்ட அத்துமீறல்கள் நடந்துவிடுவதற்குக் காரணமாக அமைந்துவிடுகிறது” என்றும் கருத்துத் தெரிவித்திருக்கிறது.
இவ்வழக்கில் மட்டுமல்ல, எப்பொழுதெல்லாம் போலிசின் மனித உரிமை மீறல்கள் பொதுவெளியில் விவாதப் பொருளாகிறதோ, அப்பொழுதெல்லாம் போலிசின் பணிச் சுமை, மன அழுத்தங்கள், அவர்களின் இன்ன பிற சங்கடங்கள் குறித்தெல்லாம் பேசப்பட்டு, அத்துறை மீது பொதுமக்கள் மத்தியில் எழும் கோபத்தை மட்டுப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போலிசாருக்கு மனவளப் பயிற்சி கொடுத்தும், அத்துறையில் சீர்திருத்தங்களைச் செய்தும் போலிசைப் பொதுமக்களின் சேவகனாக, நண்பனாக மாற்றிவிட முடியும் என்ற நம்பிக்கைப் பொதுமக்கள் மத்தியில் விதைக்கப்படுகிறது.
***
போலிசு நிலையங்களில் நடந்திருக்கும் ஒவ்வொரு அக்கிரமும், அநீதியும் மன அழுத்தம் காரணமாக நடைபெறுவதில்லை; மாறாக, போலிசிற்கு வழங்கப்பட்டிருக்கும் தனிப்பட்ட அதிகாரங்கள் காரணமாகவும், அதனால் உருவாகும் திமிரின் காரணமாகவும், எத்தகைய மனிதத் தன்மையற்ற குற்றத்தைச் செய்தாலும் அதிலிருந்து உயர் அதிகாரிகளும், அரசும், ஏன் பல்வேறு சமயங்களில் நீதிமன்றமும்கூடத் தண்டனையிலிருந்து தம்மைக் காப்பாற்றிவிடுவார்கள் என போலிசின் மூளையில் பதிந்துவிட்ட தைரியம் காரணமாகவும்தான் நடைபெறுகின்றன என்பதை அவ்வழக்குகளை மேலோட்டமாகப் பார்த்தாலே யாரும் புரிந்துகொள்ள முடியும்.
ஜெயராஜ் கொட்டடிக் கொலை வழக்கை எடுத்துக் கொண்டால், ஊரடங்கு காலத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மேல் கடையைத் திறந்து வைத்திருந்தனர் என்பதுதான் அவர்கள் மீது வைக்கப்பட்டிருக்கும் பிரதான குற்றச்சாட்டு. எனினும், அவ்விருவரும் உடனடியாகப் பிணையில் வெளியே வந்துவிடக் கூடாது என்பதற்காகவே பிணையில் வெளிவரமுடியாத பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது மேலும் இரண்டு வழக்குகள் புனையப்படுகின்றன. தந்தையும் மகனும் அன்றிரவு முழுவதும் மிருகத்தனமாகச் சித்திரவதை செய்யப்பட்டதால் எழுந்த அலறல் போலிசு நிலையம் இருந்த தெரு முழுவதும் எதிரொலித்திருக்கிறது.
மறுநாள் காலையில் அவர்கள் இருவரும் குற்றவியல் நடுவரிடம் அழைத்துச் செல்லப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கும் உத்தரவு பெறப்படுகிறது. தொடர்ச்சியான உதிரப் போக்கின் காரணமாக எழுந்து நிற்கக்கூட முடியாத நிலையில் இருந்த இருவரும் நல்ல நிலையில் இருப்பதாக மருத்துவர் சான்று பெறப்படுகிறது. அவர்கள் இருவரையும் அருகிலுள்ள கிளைச் சிறைகளுக்குக் கொண்டு செல்லாமல், சாத்தான்குளத்திலிருந்து 100 கி.மீ. தொலைவிலுள்ள, தங்களுக்கு மிகவும் நெருக்கமான அதிகாரிகள் பணியாற்றும் கோவில்பட்டி சிறைக்கு சாத்தான்குளம் போலிசார் கொண்டு செல்கின்றனர். அச்சிறைச்சாலை அதிகாரிகளுக்கு மேலிடத்திலிருந்து உத்தரவு வரவே, அவர்கள் காயங்களைப் பதிவு செய்துகொண்டு ஜெயராஜையும், பென்னிக்ஸையும் சிறையில் அடைக்கின்றனர். சிறையில் அடைக்கப்பட்ட இரண்டாவது நாளில் பென்னிக்ஸும், ஜெயராஜும் அடுத்தடுத்து இறந்து போனார்கள்.
இத்தொடர் நிகழ்வுகள் அனைத்தும் மன அழுத்தம் காரணமாக நடைபெற்றிருப்பதாக யாராலும் சொல்ல இயலுமா? மாறாக, இவை அனைத்திலும் ஒரு சதி இழை ஊடும் பாவுமாகப் பின்னியிருப்பதை நிச்சயமாக யாரும் காண முடியும்.
ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரும் இறந்தவுடனேயே அவர்களைக் கொட்டடிக் கொலை செய்த போலிசாரைக் கைது செய்து தண்டிக்கக் கோரி சாத்தான்குளத்தில் தன்னெழுச்சியாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.
தந்தையையும் மகனையும் மிருகத்தனமானச் சித்திரவதை செய்த சாத்தான்குளம் போலிசாரை விட்டுவிடுவோம். சாத்தான்குளம் குற்றவியல் நடுவர் எந்த அழுத்தத்தின் காரணமாக அவர்கள் இருவரையும் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்? உதிரப் போக்கோடு வந்த அவர்களுக்கு உடல்தகுதிச் சான்றிதழ் கொடுத்த அரசு மருத்துவருக்கு என்ன அழுத்தம் இருந்தது?
இப்படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்துகொண்டிருந்தபோதே தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அருண்பால கோபாலன் கிஞ்சித்தும் மனச்சான்று இல்லாமல், “சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகன் இருவரும் நெஞ்சுவலி மற்றும் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துவிட்டதாக”க் கூறினாரே; இவை லாக்கப் படுகொலைகள்தான் என அம்பலமான பிறகும் போலிசு துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பென்னிக்ஸும், ஜெயராஜும் “மூச்சுத் திணறலாலும், உடல் நலக் குறைவாலும் இறந்து போனதாக” முதலைக் கண்ணீர் வடித்தாரே இவர்களின் பச்சைப் புளுகுக்கும் மன அழுத்தம்தான் காரணமா?
இப்படுகொலைகள் தொடர்பான சாட்சியங்கள் எதுவும் விசாரணையில் சிக்கிவிடக் கூடாது என்ற நோக்கில் சாத்தான்குளம் போலிசு நிலையத்தில் இருக்கும் சி.சி.டி.வி. கேமரா பதிவுகள் தினந்தோறும் அழிந்துவிடும்படி செட்டிங்ஸ் செய்யப்பட்டிருக்கின்றன.
அப்போலிசு நிலையத்திற்குச் சாட்சியங்களைச் சேகரிக்கச் சென்ற கோவில்பட்டி குற்றவியல் நடுவர் பாரதிதாசனை மிரட்டும் தொனியில் கூடுதல் மாவட்டக் கண்காணிப்பாளர் குமாரும், துணைக் கண்காணிப்பாளர் பிரதாபனும் நடந்துகொண்டுள்ளனர். காவலர் மகாராஜன் அந்நீதிபதியிடம், “உன்னால் ஒன்னும் புடுங்கமுடியாது” எனத் திமிராகக் கூறியிருக்கிறார். இவை அனைத்தும் போலிசின் கிரிமினல்தனத்தைக் காட்டுகிறதா அல்லது அவர்களின் மன அழுத்தத்தைக் காட்டுகிறதா?
சாத்தான்குளம் போலிசு நிலையத்தில் நடந்த மற்றொரு கொட்டடிச் சித்திரவதையில் பலியான மகேந்திரன்.
இன்றைய பணிச்சூழலில் யாருக்குத்தான் மன அழுத்தம் இல்லை? உண்மையில் போலிசிடம் காணப்படுவது மன அழுத்தம் அல்ல; அது பொதுமக்களைப் புழுக்களைவிடக் கேவலமாகக் கருதும் அதிகாரத் திமிரெடுத்த பாசிச மனப்பாங்கு. தன்னை எதிர்த்துக் கேள்வி கேட்பவர்களை, தனக்குக் கீழ்ப்படிந்து நடக்க மறுப்பவர்களை இந்த பாசிச மனப்பாங்கு கிஞ்சித்தும் சகித்துக் கொள்வதில்லை. அவர்களுக்கு ஏதாவது ஒருவிதத்தில் பாடம் புகட்டவே போலிசின் பொதுபுத்தி வேலை செய்கிறது.
“விலையுயர்ந்த செல்போனை இலவசமாகத் தரும்படி சாத்தான் குளம் போலிசார் ஜெயராஜிடம் கேட்டதற்கு, அவர் மறுத்திருக்கிறார். இதற்குப் பாடம் புகட்டுவதற்குத்தான் ஜெயராஜையும், பென்னிக்ஸையும் சித்திரவதை செய்து கொன்றுவிட்டதாக” ஜெயராஜின் மகள் குற்றஞ்சுமத்தியிருக்கிறார்.
இது உண்மையாகவே இருக்கக்கூடும். போலிசின் எச்சக்கலை புத்தி நாம் அறியாததா? தான் கேட்ட கைபேசியைத் தர மறுத்த ஜெயராஜை ஸ்டேஷனுக்குக் கூட்டிச் சென்று சித்திரவதை செய்வதற்கு போலிசார் உருவாக்கிய சாக்குதான், அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குப் பிறகும் கடையைத் திறந்துவைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டு.
“எனது தந்தையை ஏன் கூட்டி வந்தீர்கள் எனத் தைரியமாகக் கேட்டதற்கும், தன்னைத் தாக்க வந்த போலிசைத் தற்காப்புக்காகத் தடுக்க முயன்றதற்கும்” பென்னிக்ஸைச் சட்டவிரோதக் காவலில் வைத்து சித்திரவதை செய்திருக்கிறது, சாத்தான்குளம் போலிசு.
எல்லா போலிசாரும் இப்படி மிருகத்தனமாக நடந்து கொள்வதில்லை என வாதிடப்படுகிறது. உண்மையில், போலிசுத் துறையில் எத்துணை நல்லவர்கள் இருக்கிறார்கள், எத்துணை கெட்டவர்கள் இருக்கிறார்கள் என கணக்கெடுப்பதல்ல இந்தப் பிரச்சினை. சல்லடைப் போட்டுத் தேடினாலும் நல்லவர்களைக் கண்டுபிடிப்பது குதிரைக் கொம்பு என்ற கருத்தின் அடிப்படையில் ஜூனியர் விகடன் 08.07.2020 தேதியிட்ட இதழில் கட்டுரையொன்று வெளியாகியிருக்கிறது.
போலிசு நிலையத்தில் ஒரு கிரிமினல் குற்றம் நடந்துவிட்டால், அதற்குச் சட்டப்படியான நடவடிக்கை எடுக்காமல், போலிசு மந்திரி தொடங்கி கீழ்நிலை போலிசுக்காரன் வரை அனைவரும் அக்குற்றச் செயலை மூடிமறைக்கவும், குற்றமிழைத்த போலிசாரைத் தண்டனையிலிருந்து காப்பாற்றவும் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி வேலை செய்கிறார்களே, அதுதான் இங்கு விவாதத்திற்குரிய விடயம்.
***
ஜெயராஜ் கொலைகளைத் தொடர்ந்து போலிசு துறையைச் சீர்திருத்தப் பரிந்துரைக்கப்பட்ட உச்சநீதி மன்ற உத்தரவுகளை அமலுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுந்திருக்கிறது. இது மட்டுமின்றி, இந்திய போலிசு துறை இன்னமும் காலனிய காலச் சட்டத்தின்படி இயங்கி வருகிறதென்றும், அதனைக் கைவிட்டுப் புதிய காவல்துறை சட்டங்களை உருவாக்க வேண்டும் என்றும் மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்டோரால் கோரப்படுகிறது.
உச்சநீதி மன்றம் டி.கே.பாசு வழக்கில் வழங்கிய தீர்ப்பில் ஒருவரைக் கைது செய்யும்போது போலிசு கடைப்பிடிக்க வேண்டியவை குறித்துப் பல்வேறு கட்டளைகளைப் பிறப்பித்திருந்தது. குறிப்பாக, ஒருவர் தான் ஏன் கைது செய்யப்படுகிறோம் என்பது தொடங்கி அவர் கைது செய்யப்பட்டுக் காவலுக்கு அழைத்துச் செல்லப்படும் பட்சத்தில் அக்கைது குறித்து அவரது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் உடனடியாக போலிசார் தகவல் அளிக்க வேண்டும் என்பது வரை உச்சநீதி மன்றம் வழிகாட்டுதல் தந்திருந்தது.
காவல்துறை நிலை ஆணை எண்.722, அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெறக்கூடிய வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவரைக் கைது செய்யக்கூடாது எனக் கூறுகிறது. கொலை, கொள்ளை, வழிப்பறி, மானபங்கம் ஆகிய வழக்குகளில் மட்டுமே எதிரிகளைக் கைது செய்யலாம் எனத் தீர்ப்பு அளித்திருக்கிறது, உச்சநீதி மன்றம்.
“பிரகாஷ் சிங் எதிர் மைய அரசு” வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதி மன்றம், அத்தீர்ப்பில் ஒவ்வொரு மாநில அரசும் போலிசு துறையை நிர்வகிக்க புதியதொரு சட்டத்தை உருவாக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது. மேலும், அத்தீர்ப்பிலேயே போலிசின் நடத்தை குறித்து விசாரிப்பதற்குத் துறைசார்ந்த கமிட்டிகளை உருவாக்க வேண்டுமென்றும் சுட்டிக் காட்டியிருந்தது.
இத்தீர்ப்பு வெளிவந்து பத்தாண்டுகளுக்கு மேலான பிறகும் பெரும்பாலான மாநிலங்கள் புதிய சட்டத்தை உருவாக்கவில்லை. தமிழக அரசு 2013-இல் இயற்றிய போலிசு சீர்திருத்தச் சட்டம் பழைய கள்ளு புதிய மொந்தை என்ற பாணியிலேயே உருவாக்கப்பட்டதோடு, அதனையும் 2017-ஆம் ஆண்டு வரை நடைமுறைப்படுத்தாமல் கிடப்பிலேயே போட்டு வைத்திருந்தது.
மாநில அளவிலான துறை சார்ந்த விசாரணைக் குழுவை ஓய்வுபெற்ற உயர்நீதி மன்ற நீதிபதியின் தலைமையில் உருவாக்க வேண்டும் என்ற உச்சநீதி மன்றப் பரிந்துரையைக் கேலிப்பொருளாக்கும் விதத்தில், அக்குழுவை உள்துறைச் செயலரையும் போலிசு அதிகாரிகளையும் கொண்டு உருவாக்கியிருக்கிறது, தமிழக அரசு.
போலிசு நிலையத்திற்குள் நடைபெறும் நிகழ்வுகளைக் கண்காணிக்க சி.சி.டி.வி. கேமரா வைக்கப்பட வேண்டும் என்ற சீர்திருத்தம் எந்தக் கதிக்கு ஆளானது என்பதை சாத்தான்குளம் சம்பவம் அம்பலப்படுத்திவிட்டது.
ஒருவரைக் கைது செய்வது குறித்து உச்சநீதி மன்றம் அளித்த பரிந்துரைகளை எந்தவொரு போலிசுக்காரனும் கழிப்பறைக் காகிதம் அளவிற்குக்கூட மதிப்பதேயில்லை. இந்தத் தீர்ப்புகள், குடிமக்களுக்குரிய சட்டபூர்வ உரிமைகள் குறித்து போலிசிடம் வாதாடினால், “எங்கிட்டேயே சட்டம் பேசுறியா?” என்ற எகத்தாளம்தான் போலிசின் பதிலாக இருக்கிறது. ஆயுதம் ஏந்தவும், கைது செய்யவும், காவலில் வைக்கவும் போலிசிற்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிகாரமும், போலிசார் அனுபவித்துவரும் தனிச் சலுகைகளும் தம்மைச் சட்டத்திற்கு மேலானவர்களாகக் கருதிச் செயல்படும் மனோநிலையை அவர்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது.
ஒரு சாமானியன் மீது புகார் கொடுக்கப்பட்டால், உடனே அவரை போலிசு நிலையத்திற்கு இழுத்துவந்து காவலில் அடைத்துவிட்டுப் பிறகுதான் விசாரணையே நடத்துகிறார்கள். போலிசு குற்றமிழைத்தால், இந்த நடைமுறைகள் செல்லுபடியாவதில்லை.
சாத்தான்குளத்தில் நடந்தது கொட்டடிக் கொலைதான் என்பது அம்பலமான பிறகும்கூட குற்றமிழைத்த போலிசுக்காரர்கள் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்படவில்லை. அவர்கள் மீது கொலைவழக்குப் பதிவு செய்து, கைது செய்து, சிறையில் அடைக்க பத்து நாட்களுக்கு மேலாகிவிட்டது. இத்தாமதம் குறித்து கேள்வி எழுப்பினால், வழக்கைக் கண்காணிக்கும் உயர்நீதி மன்ற நீதிபதிகள், “மக்களின் கோபத்தையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு நீதிமன்றம் செயல்பட முடியாது” எனப் பதில் அளித்திருக்கிறார்கள்.
சாமானியனான அப்சல் குருவைத் தூக்கில் ஏற்ற சமூகத்தின் மனசாட்சியைத் திருப்திப்படுத்த வேண்டும் எனக் காரணம் சொன்ன நீதிமன்றம், போலிசுக்காரன் என்றால் தட்டைத் திருப்பிப் போடுகிறது.
சாத்தான்குளம் கொட்டடிக் கொலை தொடர்பாக முதற்கட்ட விசாரனை நடத்திய கோவில்பட்டி குற்றவியல் நடுவர்மன்ற நீதிபதி பாரதிதாசன் (இடது) மற்றும் அக்கொலை தொடர்பாக சாட்சியம் அளித்திருக்கும் காவலர் ரேவதி.
குற்றம் சுமத்தப்பட்டவரை விசாரித்து வாக்குமூலங்களைப் பெற சித்திரவதைகளைப் பயன்படுத்தக்கூடாது என உயர் போலிசு அதிகாரிகளும், நீதிமன்றங்களும் சொல்லிவந்தாலும், அது சம்பிரதாயமான அறிவுரை என்பதைத் தாண்டி, அதற்கு எந்தவொரு மதிப்பும் கிடையாது. மேலும், (ரத்து செய்யப்பட்ட) தடா, பொடா சட்டங்களின்படியும்; பெருநகர மாஃபியா கும்பலின் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்காக மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்கள் இயற்றியிருக்கும் சட்டங்களும் குற்றம் சுமத்தப்பட்டவர் போலிசு அதிகாரிகளிடம் அளிக்கும் வாக்குமூலங்களை நீதிமன்றங்கள் ஏற்றுக்கொள்வதை அனுமதிக்கின்றன. இது கொல்லைப்புற வழியாகக் கொட்டடிச் சித்திரவதைகளை அனுமதிப்பதற்கு ஒப்பானது.
கொட்டடிச் சித்திரவதைகளுக்கு எதிராக 1997-ஆம் ஆண்டில் ஐ.நா. சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் இந்தியா கையெழுத்திட்டிருந்தாலும், அதனை இந்திய அரசு இன்றுவரையிலும் சட்டமாக்க முன்வரவில்லை. இது தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அரசின் கொள்கை முடிவில் நாங்கள் தலையிட முடியாது எனக் கூறி நழுவிக் கொண்டது அந்நீதிமன்றம்.
போலிசு சீர்திருத்தங்கள் குறித்து இந்திய நீதித்துறை அக்கறை கொண்டிருப்பதாகக் காட்டிக்கொண்டாலும், மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் போலிசாரைத் தண்டிப்பதில் நீதித்துறை எப்பொழுதுமே நியாயமாக நடந்து கொள்வதில்லை என்பதற்குப் பல்வேறு உதாரணங்கள் உள்ளன. உச்சநீதி மன்றத்தால் கண்காணிக்கப்பட்ட வழக்குகளில் (சொராபுதின் மற்றும் இஷ்ரத் ஜஹான் போலி மோதல் கொலை வழக்குகள்) மட்டுமா குற்றமிழைத்த போலிசு அதிகாரிகள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்? பாதிக்கப்பட்டவர் இறுதிவரை போராடிய வழக்குகளில்கூட குற்றமிழைத்த போலிசு அதிகாரியை உச்சநீதி மன்றமே விடுவித்திருக்கிறது. (உ.ம். நல்லகாமன் வழக்கு)
“ஜெயராஜ் – பென்னிக்ஸ் இருவரும் போலிசின் சித்திரவதையால் ஏற்பட்ட காயங்களால்தான் உயிர் இழந்தார்கள் என அவர்களது உடற்கூராய்வு தெரிவிக்கவில்லையென்றால், கைது செய்யப்பட்டிருக்கும் போலிசாரைக் கொலைக் குற்றச்சாட்டின் கீழ் தண்டிக்க முடியாது” என எச்சரிக்கிறார், முன்னாள் சி.பி.ஐ. அதிகாரி ரகோத்தமன். இவையனைத்தும், சட்டமும் நீதிமன்றமும் தம் கடமையைச் செய்ய முடியும் என நம்பி நாம் அமைதியாக இருந்துவிட முடியாது, கூடாது என்பதைத்தான் உணர்த்துகின்றன.
***
நாய் வாலை நிமிர்த்திவிட முடியும் என்றால் இந்திய போலிசையும் சட்டங்களைப் போட்டுத் திருத்திவிடலாம் எனக் கூறலாம். ஆட்சியைப் பிடிக்கும் கட்சிகள் ஒவ்வொன்றுமே, போலிசைத் தமது ஏவல் நாயாகப் பயன்படுத்துவதால்தான், ஆளுங்கட்சிகள் போலிசை சீர்திருத்தும் சட்டங்களை இயற்றி அமல்படுத்த மறுக்கின்றன எனக் குற்றஞ்சுமத்தப்படுகிறது. இக்குற்றச்சாட்டு உண்மை என்றபோதும், அது இப்பிரச்சினையின் ஒரு பகுதிதான்.
சாதி, மத ரீதியாகவும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளாலும் பிளவுண்டு கிடக்கும் இந்திய சமூகத்தை போலிசு கண்காணிப்பின் வழியாகத்தான் அடக்கி ஆட்சி செய்ய முனைகின்றன, ஆளுங் கட்சிகள். அதனால்தான் குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்காகத் தெருவுக்கு வந்து பொதுமக்கள் நடத்தும் மிகச் சாதாரணமான போராட்டங்களைக்கூடச் சட்டம் – ஒழுங்கு பிரச்சினையாகச் சித்தரித்து, அதனைக் கலைப்பதற்கு போலிசு படை அனுப்பி வைக்கப்படுகிறது. பொதுமக்கள் மட்டுமல்ல, தொழிலாளர்களோ, விவசாயிகளோ தமது வாழ்வாதாரத்துக்காகச் சட்டப்படி நடத்தும் போராட்டங்களை எதிர்கொள்வதற்கும் போலிசுதான் முதலில் வருகிறதேயொழிய, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வருவதில்லை.
இரண்டாவதாக, இப்படி ஒவ்வொரு வர்க்கமும் தமது அடிப்படைத் தேவைகளுக்காகவோ, வாழ்வாதாரத்துக்காகவோ நடத்தும் போராட்டங்களை வளர்ச்சிக்கு எதிரானதாகவும், தேச விரோதமானதாகவும் சித்திரித்து, அவற்றை போலிசைக் கொண்டு மிருகத்தனமாக அடக்கி ஒடுக்கும் போக்கு சமீபகாலமாக மேலோங்கி வருகிறது. மேலும், இந்த அடக்குமுறையைச் சட்டபூர்வமாக நியாயப்படுத்திக் கொள்வதற்கு புதுப்புது அடக்குமுறைச் சட்டங்களோ, நிர்வாக நடைமுறைகளோ உருவாக்கப்பட்டு, அவற்றை அமல்படுத்தும் உரிமை போலிசு உள்ளிட்ட அதிகார வர்க்கத்திற்கு வழங்கப்படுகிறது.
போலிசையும், இராணுவத்தையும் நவீனப்படுத்த வேண்டும், அவற்றைப் பலப்படுத்த வேண்டும், மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் அவற்றின் நடவடிக்கைகளில் தலையீடு செய்வதை மட்டுப்படுத்த வேண்டும் எனக் கூறப்படுவதையெல்லாம் இந்தப் பின்னணியிலிருந்துதான் பார்க்க முடியும்.
அதாவது, இந்திய சமூகத்தை, அதன் இன்றைய சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்பை ஜனநாயகரீதியாக நிர்வகிக்க முடியாது. போலிசின் கண்காணிப்பு, அடக்குமுறைச் சட்டங்களின் வழியாகத்தான் நிர்வகிக்க முடியும் என்ற நிலைக்கு ஆளுங்கட்சிகள் வந்துவிட்டன. மேலும், இது அக்கட்சிகளின் தனிப்பட்ட விருப்பம் மட்டும் அல்ல. ஆளுங்கட்சிகளைப் பின்னிருந்து ஆட்டுவிக்கும் ஆளுங்கும்பலான இந்தியத் தரகு முதலாளிகளும் அவர்களின் எஜமானர்களான ஏகாதிபத்திய முதலாளித்துவ வர்க்கமும் இதைத்தான் விரும்புகின்றன.
தூத்துக்குடியில் பொதுமக்களின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடும் அடக்குமுறைகளும் ஆளும் அ.தி.மு.க.வின் நலனுக்காகவா நடத்தப்பட்டது? நிச்சயமாக இல்லை. அந்த அடக்குமுறைகளின் முதன்மையான நோக்கம் ஸ்டெர்லைட் முதலாளியின் நலன்களைக் காப்பாற்றுவதுதான். கடந்த இரண்டு மூன்று வருடங்களாக அம்மாவட்ட நிர்வாகமே, குறிப்பாக, போலிசுத் துறை ஸ்டெர்லைட்டின் சம்பளப் பட்டியலில் இருந்து வருவது எந்தளவிற்கு கார்ப்பரேட் அதிகாரம் மக்களின் மீது நிலைநாட்டப்பட்டிருக்கிறது என்பதையும், அதற்கு போலிசு அடியாட்படையாகச் செயல்படுவதையும் எடுத்துக் காட்டுகின்றன.
தூத்துக்குடி மட்டுமல்ல, அரியானா மாநிலம் மானேசரில் இயங்கும் சுசுகி கார் ஆலை நிர்வாகத்தை எதிர்த்துப் போராடிய தொழிலாளர்கள் மீது ஏவப்பட்ட அடக்குமுறைகளும், குற்றஞ்சுமத்தப்பட்ட தொழிலாளர்களைத் தூக்கில் ஏற்ற வேண்டும் என்று அம்மாநில பா.ஜ.க. அரசு வாதாடியதும் கார்ப்பரேட் அதிகாரத்தின் எடுத்துக்காட்டுதான்.
இந்த கார்ப்பரேட் அதிகாரத்தின் இன்னொரு பக்கமாக, அதனின் மிகவும் விசுவாசமான, நம்பகமான கூட்டாளியாக மோடியின் ஆட்சி விளங்குகிறது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டையும், எட்டுவழிச் சாலைத் திட்டத்தையும் ஆதரித்து பா.ஜ.க. கும்பல் வாதாடியதை எண்ணிப் பாருங்கள், காவிகளும், கார்ப்பரேட்டுகளும் ஈருடல் ஓர் உயிராகச் செயல்பட்டு, மக்களின் மீது அதிகாரம் செலுத்துவதைப் புரிந்துகொள்ளலாம்.
இத்தகைய அரசியல் சூழலில் போலிசைச் சீர்திருத்தும் சட்டங்களை இயற்றி நடைமுறைப்படுத்தக் கோருவது போகாதா ஊருக்கு வழி தேடுவதாகும். அப்படிப்பட்ட சட்டங்களின் மூலமாக போலிசைத் திருத்திவிட முடியும் என்ற நம்பிக்கையைப் பொதுமக்களின் மத்தியில் உருவாக்க முயலுவது அபாயகரமானதாகும்.
எனவே, கார்ப்பரேட்காவி பாசிசம் நாட்டைக் கவ்வி வரும் சூழலில், போலிசைச் சீர்திருத்த அல்ல, அவ்வமைப்பையே கலைக்கக் கோரும் கோரிக்கையை முன்வைத்துப் போராடுவதுதான் பொருத்தமானதாகும்.
இதுவொன்றும் மிகைப்படுத்தப்பட்ட கோரிக்கையல்ல. அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்டின் படுகொலையை அடுத்து நடைபெற்று வரும் போராட்டங்களில் போலிசு துறைக்கு ஒதுக்கப்படும் நிதியைக் குறைக்க வேண்டும், அவ்வமைப்பைக் கலைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அந்நாட்டுத் தெருக்களில் ஒலிக்கத் தொடங்கிவிட்டன. நாமும் அத்தகைய அதிகபட்ச ஜனநாயகக் கோரிக்கையை ஏன் எழுப்பக் கூடாது?
போலிசைக் கலைத்துவிட்டால் குற்றங்களைத் தடுப்பது எப்படி, அதற்கு மாற்று என்ன என்ற கேள்விகள் எழுவே கூடும். அதற்கான மாற்று அமைப்பை, மக்கள் தமது போராட்டங்களின் வழியாகத் தீர்மானிக்கட்டுமே!
திருச்சி லால்குடி சந்தைப்பேட்டை பகுதி பெண்களிடம் அடாவடித்தனமாக நுண் கடன் வசூல் செய்யும் பந்தன், கூபா, ஆசீர்வாதம், சங்கமம், ஐடிஎப்சி நிறுவன ஊழியர்களை கைது செய்து சிறையில் அடைக்கவும்; புகார் கொடுக்க சென்ற பெண்கள் மற்றும் பொதுநல அமைப்பினரை ஒருமையில் பேசிய, திருச்சி லால்குடி தாசில்தார் மற்றும் துணை தாசில்தார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கோரியும் 24.07.2020 அன்று காலை லால்குடி பேருந்து நிலையம் அருகே ரவுண்டானா பகுதியில் பெண்கள் இக்கோரிக்கை அச்சிடப்பட்ட சுவரொட்டிகளை ஒட்டினார்கள்.
இவர்களுக்கு ஆதரவாக மக்கள் அதிகாரம், ஜனநாயக சமூகநல கூட்டமைப்பு, மக்கள் உரிமை கூட்டணி, அமைப்பு சாரா தொழிலாளர் இயக்கம், மக்கள் கலை இலக்கியக் கழகம், பெரியார் திராவிடர் கழகம், தமிழ் புலிகள் கட்சி, போன்ற அமைப்பின் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் சென்று பெண்களுக்கு ஆதரவாக சுவரொட்டிகளை ஒட்டும்போது உடனிருந்தனர். இதை அந்த பகுதி மக்களிடம் ஒரு பிரச்சாரமாக செய்ய முற்பட்டபோது லால்குடி காவல் ஆய்வாளர் அழகிரி தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட போலீசார் “நீங்கள் சட்டவிரோதமாக கூடி உள்ளீர்கள், பத்து பேர் சேர்ந்து அடாவடி செய்கின்றீர்கள்.. உங்களை நான் கைது செய்கிறேன்.” என கூறினார்.
பெண்கள் மற்றும் பொதுநல அமைப்பினர் நாங்கள் கொடுத்த புகார் மனுவை ஏற்று நிறுவன ஊழியர்களை கைதுசெய்யவில்லை, தாசில்தார் நடவடிக்கை எடுக்க வேண்டிய இடத்தில் இருந்துகொண்டு கலெக்டர் உத்தரவை அமல்படுத்தாமல் அடாவடி செய்யும் நுண்கடன், சுய உதவி குழு நிறுவன ஊழியர்களுக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு கேள்வி கேட்ட பெண்களையும், பொதுநல அமைப்பினரையும் ஒருமையில் பேசுவது என அவர் தான் அடாவடியாக நடந்து கொண்டார்.
This slideshow requires JavaScript.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
அவர் மீது நடவடிக்கை இல்லை, ஆனால் எங்களுடைய கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் இந்த பிரச்சனைக்கு நாங்கள் போஸ்டர் ஒட்டுகிறோம். நாங்கள் கொடுத்த புகாருக்கு போலீசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது சரியல்ல என பேசினர். ஆனால் காவல்துறை சட்டரிதியாக நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என நம்மிடம் திருப்பி பேசியது. புகார் பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல் துறையே நான் ஒன்றும் செய்ய முடியாது ‘சட்டத்தின் படி’ பார்த்துக் கொள்ளுங்கள் என திமிராக பேசியது. அதுமட்டுமல்லாது பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் போராடக் கூடிய அமைப்பினர் ஆகியோரை மிரட்டும் தொனியில் போலிசு பேசியது.
இதைத் தொடர்ந்து பெண்கள் மற்றும் அமைப்பினர் போலிசாரை கேள்வி கேட்கத் தொடங்கினர். மேலும் பொதுநல அமைப்பினர் இந்த விவகாரத்தை சுற்றியிருந்த கடை வியாபாரிகள், பொதுமக்களிடம் விளக்கி பேசத்துவங்கினர். இதை பார்த்து பயந்து பின்வாங்கியது போலிசு.
பின்னர் மீண்டும் சுவரொட்டி ஒட்டும் போராட்டத்தை பெண்கள், பொதுநல அமைப்பினர் தொடங்கினர். லால்குடி ரவுண்டானா, கடைவீதி, தாசில்தார் அலுவலக வாயில் நீதிமன்றம் என பல இடங்களில் பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
போஸ்டரை படித்த மக்கள் : “இவங்களோட(நுண்கட நிறுவனங்கள்) தொல்ல தாங்க முடியல, நம்ம கிட்ட பணம் இருக்கிற மாதிரி கடனை கேட்டு டார்ச்சர் பண்றாங்க…” எனவும். “நெருக்கடி தரும் நபர்களுக்கு முடிவு கட்ட வேண்டும்.” எனவும் அப்பகுதி பெண்கள் கடைவீதியில் அவேசப்பட்டனர். சுவரொட்டியை படித்த பலரும் இது அநியாயம் என்று அதிகாரிகளின் நடவடிக்கைகளைக் கண்டித்தனர். லால்குடி தாசில்தார் போஸ்டர் ஓட்டுவதை நின்று கவனித்து படித்துவிட்டு எதுவும் தெரியாதது போல வாகனத்தில் ஏறி சென்றுவிட்டார்.
இந்நிகழ்ச்சி லால்குடி பகுதி கடைவீதியில் உள்ள வியாபாரிகளுக்கும் அங்கு வந்த பெண்கள் மத்தியிலும், இப்படிப்பட்ட அதிகாரிகளின் நடவடிக்கையை எதிர்த்தால் மட்டுமே பிரச்சினைக்கு வழி பிறக்கும் என்ற உணர்வை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட பெண்கள் எங்கள் தெருவிற்கு குழு வசூல் செய்யும் நபர்கள் வந்தால் நாங்கள் அவர்களை விரட்டி அடிப்போம் என்ற உறுதியுடனும் சென்றனர்.
போராடிய பெண்கள் மற்றும் அமைப்புக்கள், காவல்துறை நடவடிக்கை மற்றும் அதிகாரிகள் நடவடிக்கையை எதிர்த்து அடுத்த கட்ட போராட்டத்திற்கு நடவடிக்கைக்கு போராடுவது என ஆயத்தமாகி வருகின்றனர்.
This slideshow requires JavaScript.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
சமூக செயற்பாட்டாளர் தோழர். வரவரராவ் உள்ளிட்ட 11 சமூக ஆர்வலர்களையும் சிறையிலிருந்து உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி! திருச்சியில் உறையூர் குறத்தெரு பகுதியில் 20.07.2020 காலை 11 மணியளவில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தலைமையில் அனைத்து கட்சிகள் மற்றும் இயக்கங்களின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தை மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர். சரவணன். தலைமையேற்று நடத்தி வைத்தார்.
கண்டன உரையாற்றியவர்கள்:
தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் அய்யா ம.ப.சின்னதுரை
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பாராளுமன்ற தொகுதி செயலாளர் தோழர் தமிழாதன்
திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்ட செயலாளர்.தோழர். புதியவன் மற்றும் வழக்குறைஞர் தோழர். சந்துரு
ஜனநாயக சமூக நல கூட்டமைப்பின் மாவட்டச் செயலாளர்.தோழர். சம்சுதீன்
மக்கள் உரிமை மீட்பு இயக்கத்தின் நிறுவனத் தலைவர் தோழர். பஷீர்
மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாவட்ட செயலாளர் வழக்குறைஞர். தோழர். முருகானந்தம்
சமூக நீதிப் பேரவையின் மாவட்ட செயலாளர் தோழர். ரவிக்குமார்
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர். சுந்தர்ராஜ்
ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்டத் தலைவர் தோழர். மணலிதாஸ்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாவட்டச் செயலாளர் தோழர். பிரித்தீவ்
மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் தோழர். ராஜா
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கலைக்குழு தோழர். சத்யா
இறுதியாக மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்ட செயலாளர் தோழர். ஜீவா கண்டன உரையாற்றி ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்தார்.
மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர். பரமசிவம் நன்றியுரை கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய பா.ஜ.க அரசை கண்டித்தும் சிறையில் உயிருக்கு போராடும் தோழர்களை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப் பட்டது.
மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள், இயக்கங்கள்,அமைப்புகளை சேர்ந்தோர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
This slideshow requires JavaScript.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நாள்தோறும் புதிய உச்சத்தைத் தொடுகிறது. தொற்று பரவும் வேகத்தில் தப்பிக்க முடியாமல், உழைக்கும் மக்கள் வேரறுந்த மரமாக வாழ்க்கையை எதிர்கொள்ள முடியாமல் சாய்கிறாகள்.
வறுமையும் நோய்த் தொற்றும் ஒருசேர அவர்களை விரட்டுகிறது. இதை எப்படி எதிர்கொள்வது என்று தவிக்கிறார்கள். நோய்த் தொற்று நமக்கு வந்தாலும் பரவாயில்லை, பசியிலிருந்து குடும்பத்தைக் காப்பாற்ற பலவண்ண முகக்கவசங்களுடன் சாலைகளில் அலைகிறார்கள், இந்த முகமற்றவர்கள். வேலைதேடி புதிய இடம், புதிய தொழில் என்று தடுமாறுகிறார்கள். இவர்களை கைவிட்டுவிட்டது அரசு.
***
சென்னை சைதாப்பேட்டை மார்கெட் பகுதி நகராட்சி மருத்துவமனை அரசு அலுவலகங்கள் குவிந்துள்ள இடம். பேருந்து நிறுத்தம், ஆட்டோ ஸ்டான்ட் என்று அடுத்தடுத்து மக்கள் நெரிசல். அங்கு நடைபாதையை ஒட்டியுள்ள சுற்றுச்சுவர் கம்பியில் தோரணம் போல பல வண்ணங்களில் தொங்கும் முகக்கவசங்கள். இருபது ரூபாய், முப்பது ரூபாய் என்று விலை கூவி விற்றுக்கொண்டிருந்தார் பாபு.
நடுத்தர வயது. அங்குள்ள முகக்கவசங்கள் பற்றி விசாரித்து அவரிடம் பேச்சுகொடுத்தோம்.
கதவு, ஜன்னல், அலமாரின்னு கஸ்டமரோட டேஸ்ட்டுக்கு ஏற்ற மாதிரி வேலை செய்வேன். இப்ப வேலையில்ல, மாஸ்க் விற்க வந்துவிட்டேன் என்கிறார் கார்பென்டர் பாபு.
சார் நான் இந்தத் தொழிலுக்கு வந்து முழுசா 2 வாரம் கூட ஆகல. நான் ஒரு கார்பெண்டர். 20 வருசமா அதுதான் என்னோட தொழில். வீட்டு மர வேலைகளில் நான் ஸ்பெசலிஸ்ட். கதவு, ஜன்னல், அலமாரின்னு அவங்கவுங்க தேவைக்கு ஏற்ற மாதிரி வேலை செய்வேன். அந்தத் தொழில்தான் இவ்வளவு நாள் குடும்பத்துக்கு சோறு போட்டது. கொரோனா வந்தது, எல்லாம் தலைகீழா மாறிடுச்சு. என்ன மாதிரி வேலைக்காரங்கள, வீட்டுக்குள்ள சேர்க்குறதுக்கு கஸ்டமர் ரொம்பவே பயப்புடுறாங்க. கொரோனா தொற்று பயமா இருக்குன்னு வீட்டுக்கு வெளியேகூட நிற்க விடாமல் அனுப்பி விடுகிறார்கள்.
சோத்துக்கு வழி தேடி பெயின்டர் வேலை, பிளம்பர் வேலை செய்ய நினைத்தாலும் கூப்பிட ஆளில்லை. குழந்தைகளை வைத்துக்கொண்டு வெறுமனே வீட்டில் சும்மா இருக்க முடியுமா? பக்கத்தில இளநீர் விற்கும் கடை போட்டிருக்குற அக்கா ஏற்கெனவே பழக்கம். அவர்தான் இந்த யோசனையை எனக்குச் சொன்னாங்க. இப்போ 2 வாரமா இதுதான் பொழப்பு. தினமும் 100, 200 தேறுது. 5000 ரூபா முதல் போட்டிருக்கேன். ஒரு பீஸ் 10 ரூபாயிலிருந்து 30 ரூபா வரை விக்கிறேன். மண்டை ஓடு படம் போட்டது, சோட்டா பீம், ஏஞ்செல்ஸ் படம் போட்ட மாஸ்க்குகள்… இப்படி குழந்தைகளின் விருப்பத்திற்காக பல கலருல வாங்கி வச்சிருக்கேன். எப்படியோ குழந்தைகள் விளையாட்டாக மாட்டிக்கொண்டால்கூட போதுமென்று பெற்றோர்கள் வாங்கிக் கொடுக்கிறார்கள். புதுசா இதுவேற செலவு என்று கஷ்டத்துடன் பணத்தை எடுக்கிறார்கள்.
யாரிடமும் கையில் பணமில்லை. ஏதும் பெரிய வருமானம் இல்லையென்றாலும் 4 பேரை பார்க்கிறோம். மனசு பாரம் குறையுது. முகம் தெரியாத ஒருவருக்கொருவர் துன்பத்தைப் பகிர்ந்து கொள்ளும்போது, நம் வாழ்க்கை பரவாயில்லையே என்று நம்பிக்கை துளிர்க்கிறது. கொரோனா காலத்தில் இப்படித்தான் என் காலம் ஓடுகிறது.
மாஸ்க் வாங்க வந்தவர்போல் சொந்தக் கடையை விட்டு தள்ளி நின்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார் நியாஸ். நீங்கதான் ஓனரா என்றோம். ஓனர் மைலாப்பூர்ல இருக்காரு. இதே மாதிரி ஒரு கடையை அங்கே போட்டிருக்கிறார். சரக்கை தினமும் இங்கே என்னிடம் கொண்டுவந்து கொடுத்துவிடுவார். எனக்கு ஒரு நாளைக்கு 200 ரூபா சம்பளம் என்றார்.
கடைக்கும் தனக்கும் சம்பந்தமில்லாதவரைப் போல பிளாட்பாரத்தின் ஓரத்தில் உட்கார்ந்திருக்கிறார் டெய்லர் நியாஸ்.
ஏன் நீங்களாவே சொந்தமா கடை போடலாமே என்றோம்.
அய்யாயிரம்.. பத்தாயிரமுன்னு முதல் போட நம்மகிட்டே ஏது காசு. இதுல வேற தெரிஞ்சவுங்க பக்கத்துல இருக்கணும். அப்பத்தான் பஜார்ல ஓரமா நின்னு விற்க முடியும். நமக்கு யாரையும் தெரியாது. கையில பணமும் இல்லை. நான் இந்த வேலைக்கு வந்தே ரெண்டு நாளுதான் ஆகுது. என்னோட வேலையே வேற. எனக்கு டெய்லரிங் நல்லா தெரியும். ஜென்ட்ஸ் ஸ்பெசலிஸ்ட். பேன்ட், சட்டை என பீஸ் ரேட்டுக்கு போயி தச்சு கொடுப்பேன். கொரோனாவுக்கு முன்னாளேயே பல நாட்கள் வேலை இல்லை. கொரோனா மொத்தமா எங்க சோலிய முடிச்சிடுச்சு.
டெய்லர் தொழில்ல தினமும் 400 ரூபாயாவது சம்பாதிப்போம். அத வச்சு குடும்பம் ஓடுச்சு. கொரானாவுல பல மாதங்களா வேலை இல்லாம சும்மாதான் இருந்தேன். இப்பத்தான் இங்கேவந்து நிக்கிறேன். வேற வழி தெரியல. ஒரு நாளைக்கு 500 ரூபாய்க்குக்கூட விற்க மாட்டேங்குது. எனக்கு விற்கத் தெரியலன்னு ஓனர் திட்டுராறு. கஷ்டமா இருக்கு. இதோ பாருங்க, காலையிலிருந்து வெறும் 60 ரூபாதான் இதுவரை வித்திருக்கு என்று பாக்கெட்டைத் துழாவி எடுத்துக் காண்பித்தார்.
30 ரூபாய்க்கு பீப் பிரியாணி சாப்பிட்டேன். இப்ப இருக்குறது, வெறும் 60 ரூபாதான் என்று பாக்கெட்டைத் துலாவி எடுத்துக் காண்பிக்கிறார், நியாஸ்.
என் பொண்டாட்டி நிலைமைய புரிஞ்சிக்கிறா. இந்த கஷ்டமெல்லாம் குழந்தைகளுக்கு புரியுமா? பர்த்டே புது ட்ரெஸ் இல்லன்னு கோச்சுக்குதுங்க. இங்க சோறே பிரச்சினை. குழந்தைகளை காப்பாத்தவாவது எப்படியாவது வாழ்ந்தாகணுமேன்னு தோனுது. மாதம் 2,500 ரூபா வீட்டு வாடகை. மூனு மாதமா கொடுக்கல. ஒரு ரெண்டாயிரமாவது கொடுத்து ஓனர சமாளிக்கலாமுன்னு பாக்குறேன், முடியல. வீடு காலி பண்ணச் சொன்னா, குழந்தைகள அழைச்சிகிட்டு எங்கே போவேன் என்றார் துக்கம் தாளாமல்.
அப்பகுதியிலிருந்த சாலையோர முகக்கவச கடைகளிலேயே பளிச்சென்று பகட்டாக இருந்த கடை. பார்த்தவுடன் கவர்ந்தது.
எப்படி உங்க கடை மட்டும் தனித்துத் தெரிகிறது? முகக்கவசங்கள் எல்லாம் ப்ரஷாக மிடுக்காக இருக்கே எப்படி? என்றோம்.
இது தி.நகர் பாண்டியன் ஹோல்சேல் ஸ்டோர் போட்ட நேரடி கடை சார். இங்கே 40 ஆயிரத்துக்கு சரக்கு இருக்கு. தினமும் பழைய சரக்க எடுத்துட்டு ப்ரஷா சரக்கு போடுவோம் என்றார்.
பாண்டியன் ஸ்டோரில் என்ன வேலை செய்தீர்கள்? இங்கு எப்படி வந்தீர்கள்? என்றோம்.
தி.நகர் துணிக்கடையில் ப்ளோர் மேனேஜராக இருந்தேன். இப்போ, வியாபாரம் இல்லேன்னு முக்கால்வாசி பேரை தூக்கிட்டாங்க. என்ன மாதிரி பல வருசங்களா வேலை செஞ்சவுங்கள விடாம வச்சிருக்காங்க. சென்னை முழுவதும் இந்த மாதிரியான தெருவோரக் கடைகள், பத்துக்கும் மேல இருக்கு. இன்னும் பல கடைகளை தெறக்கப் போறாங்க.
தி.நகர் பாண்டியன் ஸ்டோர்ஸ்-இல் ப்ளோர் மேனேஜராக இருந்த விஜய், தற்போது சாலையோரக் கடையில் மாஸ்க் விற்பனை செய்து வருகிறார்.
மொத்த சரக்கையும் நம்பிக்கையின் பேரில பில் போட்டு எங்களுக்கு கொடுத்துடுவாங்க. வேலை முடிஞ்சு தினமும் ஸ்டோருக்கு போயி கணக்கு கொடுக்கணும். சாப்பாடு, தங்குற இடம் அவங்களோட ஏற்பாடு. ஒரு நாளைக்கு 3,000 ரூபாய்க்காவது வித்தாகணும். அதுக்கு மேல ஒவ்வொரு ஆயிரத்துக்கும் 100 ரூபா எக்ஸ்ட்ரா. எதுவும் விக்கலன்னாலும் தினக்கூலி 500 உண்டு.
ஒரு மாஸ்க் 40 ரூபாயிலிருந்து 140 ரூபாய் வரைக்கும் பல வெரைட்டி இருக்கு. நல்ல தரமா இருக்கும். நீங்களே பாருங்கள் என்றார்.
கடையில் ஏசி அறையில் மேனேஜர் வேலை பார்த்துவிட்டு வெயிலில் தூசியில் நிற்பது கஷ்டமா இல்லையா, கொரோனா பயம் போயிருச்சா என்றோம்.
மனசு பயப்படத்தான் செய்யுது. ஆனா, வயிறு பசி எடுக்காமலா இருக்குது? இந்த வேலையும் செய்ய மாட்டேன்னு வீட்டுக்குப் போனா எல்லோரும் பசியிலேயே செத்துடுவோம் சார் என்று வாடிக்கையாளர்களை கவணிக்க ஆரம்பித்தார்.
மேலும் படங்களுக்கு :
This slideshow requires JavaScript.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
உலகின் சில பெரும் பண முதலைகளின் ஆதாயத்திற்காக உலகின் சுற்றுச் சூழல் விலையாகக் கொடுக்கப்பட்டு, எதிர்கால மனித வாழ்வு கேள்விக்கு உள்ளாக்கப்படும் செயலானது; முன் எப்போதையும் விட இப்போது மிகையாக நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் திரும்பி வர முடியாத / மீளச் சரி செய்ய முடியாத நிலையினை, உலகு இன்னமும் விரல் விட்டு எண்ணக் கூடிய ஆண்டுகளில் அடைந்து விடும் என அறிஞர்கள் கணிப்பிடுகின்றார்கள்.
மேற் கூறியவை யாவும் சூழல் பற்றிய விழிப்புணர்வு ஒப்பீட்டு ரீதியில் கூடிய வளர்ந்த நாடுகளின் நிலையாகும். வளர்ந்து வரும் இந்தியா போன்ற நாடுகளில் நிலைமை இன்னமும் மோசமாகவேயுள்ளது. இந்த நிலைமை தமிழகத்திலும் தற்போதைய ஆட்சியில் மோசமாகவேயுள்ளது. தமிழகம் எங்கும் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வரும் மண் அகழ்வுகள், காடழிப்பு, விளை நிலங்கள் விளைச்சலிருந்து விலகுதல் என இப் பட்டியல் நீண்டு செல்லும். இந்த நிலையிலேயே சிவகங்கை மாவட்டத்திலுள்ள பறம்பு மலைப் (பிரான் மலை) பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கற் குவாரி நிறுவனம் ஒன்றின் செயற்பாடுகளானவை இன்னல் அளிக்கும் வகையில் அமைந்துள்ளன. ஏற்கனவே சட்டத்திற்குப் புறம்பான மண் அகழ்வுகள் பரவலாக நடைபெற்று வரும் இந்த மாவட்டத்தில், இப்போது இந்த மலை அழிப்புப் பற்றிய செய்திகள் வேறு வந்து கொண்டிருக்கின்றன.
ஏற்கனவே தமிழகத்தின் பெரும் பகுதி பாலை நிலங்களாக மாறி வருவதாக் கூறப்படுகின்றது. தமிழகச் சூழலில் இயற்கையான பாலை நிலங்களில்லை. முறைமையில் திரிந்தே பாலை நிலங்கள் தோன்றுகின்றன. தொல்காப்பியத்தில் கூறப்படாத பாலை சிலப்பதிகார காலத்திலேயே (சங்க மருவிய காலம்) சொல்லப்படுகின்றது.
அதாவது காட்டில் ஏற்படும் ஒரு காட்டுத் தீயினால் முல்லை நிலம் திரிந்தோ அல்லது மண் சரிவுகளால் குறிஞ்சி நிலம் திரிந்தோ பாலை நிலமாகும் எனப்படுகின்றது. இன்று மருத நிலங்களும் (பயிர்ச் செய்கை நிலங்களும்) பாலை ஆவது வேறு விடயம். இந்த வகையிலேயே கற் குவாரித் தொழிலிற்காக மலைப் பகுதி பாலை நிலங்களாக்கப் படுவதனையும் பார்க்க வேண்டியுள்ளது. இது தொடர்பாக ஏற்படும் சூழலியற் கேடுகள் ஒரு புறமிருக்க, இங்கு தமிழர்களின் தொன்மம் ஒன்று அழிவிற்கு உள்ளாவதும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.
‘ஈண்டு நின்றோர்க்கும் தோன்றும்…. நெடியோன் குன்று’ {புறம் 114} என்று புறநானூற்றில் பாடப்படும் மலை இந்த பறம்பு மலை தான் என்பது அறிஞர்களின் கருத்து. அதாவது தூரத்தில் நகர்ந்து சென்று, இங்கிருந்து பார்ப்போரிற்கும் தெரியும் ‘நெடியோன் குன்று’ என்பது இப் பாடலின் பொருளாகும். இதற்குச் சான்றாக இடைக் கால கோயில் கல்வெட்டுச் சான்றுகளும் (பாரிசுரம்) காணப்படுகின்றன.
இம்மலைக்குத் தெற்கே ‘கூத்துப் பாரிப் பொட்டல்’ என்றொரு இடமும் உண்டு. பாரி ‘முல்லைக் கொடிக்குத் தேர் கொடுத்த’ கதையினை/ உவமையினை நினைவுபடுத்தும் வகையில் இன்றும் இப் பகுதி மக்களிடையே பின்வரும் வழக்காறு உண்டு.
‘கொடி தளும்பினால் குடி தளும்பும்’
அதாவது இயற்கையினைப் பேணாமல், கொடி,செடிகள் அழிந்தால் குடிகளும் அழிந்து போகும் என்ற கருத்தினையே மேற்படி சொல்லடை குறிக்கின்றது. ‘பாரிவேட்டை’ என்ற பெயரில் இப் பகுதியில் ஒரு வகையான கூத்தும் நெடுங் காலமாகவே இடம் பெற்று வருகின்றது. ‘வேட்டையில் நடைபெற்றவற்றை மீள் திரும்பி, மீண்டும் செய்து பார்த்தபோதே கூத்துப் பிறந்தது’ என்ற பேரா.கைலாசபதியின் கருத்தினை, இப் பகுதி மக்களின் பாரி வேட்டைக் கூத்தானது மெய்ப்பிக்கின்றது. இத்தகைய தொன்மை வாய்ந்த பறம்பு மலைக்கே இன்று இடர் ஏற்பட்டுள்ளது. இதனை இப்போது ‘பிரான் மலை’ எனவும் அழைக்கின்றார்கள்.
பறம்புமலை > பிறம்பு மலை >பிரான்மலை.
‘பாரி முல்லைக்குத் தேர் கொடுத்தான்’ என்பதனை இயற்கை மீது அவன் கொண்ட காதலிற்கான ஒரு உவமையாகவே கொள்ள வேண்டும்.
`பூத் தலை அறாஅப் புனை கொடி முல்லை நாத் தழும்பு இருப்பப் பாடாதுஆயினும், ‘கறங்கு மணி நெடுந் தேர் கொள்க!`
{புறநானூறு 200}.
முல்லைச் செடியானது தான் படரக் கொம்பில்லை என்று நாவால் கேட்கவில்லை என்றாலும், குறிப்பால் அறிந்து தனது தேரினைக் கொடுத்தான் எனப் பாடப்படுகின்றது. இதனை ஒரு உவமையாகவே கொள்ள வேண்டும். முல்லை என்பது இயற்கையின் ஒரு குறியீடாகவும், தேர் என்பது அரச அதிகாரத்தின் ஒரு குறியீடாகவும் கொள்ளலாம். அதாவது அதிக வளர்ச்சியினூடாக தனது அரச அதிகாரத்தை இறுக்கி, அதற்காக இயற்கையினைக் காவு கொடுக்காமல்; இயற்கையுடன் இயல்பாக வாழ்ந்தவனே பாரி. இயற்கையினைப் பேணுவதற்காக, தனது ‘கறங்கு மணி நெடுந் தேர்’ {ஒலிக்கும் மணி- அக்கால சைரன் Siren – பூட்டப்பட்ட நெடுந்தேர்} என்ற பெரிய அரச அதிகாரத்தினைக் கைவிட்டவன் என்பதனையே புலவர் உவமையாக ‘முல்லைக்குத் தேர் கொடுத்தான்’ எனக் குறிப்பிடுகின்றார்.
இவ்வாறு இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு முன்னரே இயற்கையுடன் இயைந்து வாழ்ந்த ஒரு மன்னனின் நினைவாக உள்ள ஒரு மலையினை இன்று, சுற்றுச் சூழல் பற்றிய விழிப்புணர்வு கூடிய இவ் வேளையில், சிதைப்பதனை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்? இதற்காகப் போராட, கந்த சட்டிக் கவசத்திற்காகப் போராடிய யாரும் வரப் போவதில்லை. பாடல் பெற்ற கோயில் இருக்கின்றது என்றோ அல்லது ‘குன்று இருக்குமிடம் எல்லாம் குமரன் இருக்குமிடம்’ என்றோ எந்த மத அமைப்பும் போராடப் போவதில்லை. சூழலியல் ஆர்வலர்கள், சமூகப் பற்றாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் ஆகியோரிடம் தான் இந்த வரலாற்றுப் பொறுப்பு வந்து சேருகின்றது.
இது தொடர்பாக ஏற்கனவே பார்வையிடச் சென்ற சில தோழர்களை காவல்துறை தடுத்து நிறுத்தியுள்ளது. கொரோனா காலத்தில் கல்லுடைப்பிற்குத் தடை போடாத அரசு, அதனைப் பார்வையிடச் சென்ற தோழர்களை மட்டும் கொரோனாவினைக் காட்டித் தடுத்து நிறுத்துவது சரியானதல்ல. எனவே இது தொடர்பான போராட்டங்கள் தமிழ்நாடு தழுவிய நிலையில் முன்னெடுக்கப்பட வேண்டும்.
அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சிபெற்ற மாணவர் சங்கத்தலைவர் அரங்கநாதனை பார்ப்பனர்கள் மிரட்டல் !
பத்திரிக்கை செய்தி
நாள்: 26.07.2020
கருவறையில், தமிழ் நுழைந்தாலும், தமிழன் நுழைந்தாலும், பெண்கள் நுழைந்தாலும் தீட்டாகிவிடும் என பாரப்பனர்கள் இன்றுவரை நம்மை தடுத்து வருகிறார்கள்.
ரத்தம் சிந்தி தமிழர்கள் கட்டி அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில்
சாதி வேறுபாடின்றி தகுந்த பயிற்சி முடித்த அனைவரும் அர்ச்சகராகலாம் என கோரினால் பார்ப்பனர்கள் ஆத்திரம் அடைகிறார்கள்.
அனைத்து சாதியினரும் அரசு அலுவலகங்களில் பணிசெய்வது போன்று ஏன் கோவில்களில் பணி செய்ய முடியாது? பார்ப்பான் பிறப்பால் உயர்ந்தவன், மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற சாதி இழிவை எப்படி ஏற்க முடியும்.?
This slideshow requires JavaScript.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
மூடப்பட்ட அனைத்துசாதி அர்ச்சகர் பயிற்சி பள்ளியை மீண்டும் திறக்க வேண்டும் !
பெரிய கோவில்களிலும் பயிற்சி முடித்த மாணவர்களை பணியமர்த்த வேண்டும். என முகநூலில் வாட்ஸ அப் என சமூக ஊடங்கங்களில் நாங்கள் தொடர்ந்து பிரச்சாரம் செய்வதை பொறுக்க முடியாத சிலர் போனில் என்னை மிரட்டுகிறார்கள். கடந்த காலத்தில் ஆட்களை வைத்துத் தாக்கினார்கள்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஜுலை 24-ம் தேதி காலையில் 9597187410 என்ற எண்ணிலிருந்து தமிழ்நாடு அந்தணர் சங்கத்தில் இருந்து மாநிலத் தலைவர் பேசுவதாக ஒருவர் பேசினார். பிறகு ஒரு மணிநேரம் கழித்து பிராமணர் சங்கத்தில் இருந்து பேசுவதாக 7548815221 என்ற எண்ணிலிருந்து வேறு ஒருவர் பேசினார். பெயர் சொல்லவில்லை. “நீங்கள் ஆகம கோவில்களில் அர்ச்சகராக வரமுடியாது. ஆகமம் இல்லாத கோவில்களில் போகலாம். நீங்கள் என்ன செய்தாலும் நீங்க ஒரு மயிறும் புடுங்க முடியாது. ஒழுங்கா இருந்துக்கோ”.என மிரட்டினார்.
நேரடியாக பார்ப்பனர்களோ அல்லது அவர்கள் தூண்டுதலில் மற்றவர்கள் மிரட்டுவது, தாக்குதலில் ஈடுபடுவது இது முதல் முறை அல்ல. திருவண்ணாமலை அர்ச்சகர் பாடசாலையில் நாங்கள் படித்துக்கொண்டிருந்த பொழுது எங்களுக்கு ஆகமம் கற்றுக்கொடுத்த ஆசிரியரை தாக்கினார்கள். அர்ச்சகர் மாணவர்கள் சங்கம் வைத்து செயல்படுவதற்கு எதிராக என்னிடம் பேரம் பேசினார்கள் ஒத்து கொள்ளவில்லை என்பதால் தாக்கினார்கள்.
“கவனமாக அர்ச்சனை செய்யுங்கள்” என சொன்னதற்காக பெண் பக்தரை சிதம்பரம் தீட்சிதர் கன்னத்தில் அறைந்தான். தேவாரம்பாட சென்ற சிவனடியார் ஆறுமுகசாமியை தாக்கினார்கள். இன்று அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற கோரிக்கைகாக அர்ச்சக மாணவர்களின் பிரதிநிதியாக பத்திரிக்கை, தொலைகாட்சிகளில் பேசி வருகிறேன். ஆகையால் பார்ப்பனர்களால் எனக்கும் ஏதாவது நடக்கலாம்.
எனவே தமிழக மக்களின் கவனத்திற்கும், தமிழக அரசின் கவனத்திற்கும் பார்ப்பனர்களின் மிரட்டலை கவனத்தில் கொள்ளவேண்டும் என்பதற்காகவே இந்த பத்திரிக்கை செய்தியை வெளியிடுகிறோம்.
போலிசில் அளிக்கப்பட்ட புகார் மனு :
This slideshow requires JavaScript.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
வா.ரங்கநாதன், தலைவர் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம் – தமிழ்நாடு தொடர்புக்கு : 90474 00485
இவற்றையும் பாருங்கள்…
கண்கலங்கி நிற்கும் 204 அர்ச்சக மாணவர்கள்… கவனிக்குமா தமிழக அரசு | Samayam Tamil News
நான் ABVP – யிலிருந்து விலகியது ஏன் ? – ஏ.பி.வி.பி. முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெய் கோலியாவின் அனுபவம்.
சில சமயங்களில் இளமையின் ஆரம்ப நாட்களில் கிடைக்கப்பெறும் அரசியல் அனுபவத்திற்கு இரண்டு பக்கங்கள் உண்டு. ஒன்று, அதனுடன் வரக்கூடிய போராட்டங்களை உள்ளடக்கியிருந்தாலும், அதில் ஈடுபட ஈடுபட நீங்கள் பெருமைப்படத் தக்கதாக உங்களை நல்வழியில் இட்டுச்செல்லும். மற்றொன்று, முக்கிய நோக்கத்துடன், பெருமளவில் தன்னிலையிழக்கச் செய்யும் வகையிலான பாதை.
துரதிஷ்டவசமாக, இரண்டாவது பாதைதான் எனது வாழ்க்கையில் பொருந்தியது. ஆனால் எனது மனசாட்சியோ எந்தவொரு பொருளாயத பலனையும் எதிர்பாராமல், உண்மையின் பாதையில் செல்ல என்னை நெட்டி தள்ளியது.
2014 ஆம் ஆண்டு காவி அலை நரேந்திர மோடியை ஆட்சியில் அமர்த்தியது. இந்த புதிய ஆட்சி, ஆற்றல்மிக்க பல இளைஞர்களின் முழு ஆதரவையும் பெற்றது. ஏனென்றால், பாஜக கொடுத்த வாக்குறுதிகளான, கடந்த காலங்களில் நடந்து வந்த ஊழல், கறுப்புப் பணம் மற்றும் வறுமை பிரச்சினைகளை ஒழித்துக்கட்ட புதிய ஆட்சி ஏதாவது செய்யுமென பல இளைஞர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
அப்படி எதிர்பார்த்திருந்தவர்களுள் நானும் ஒருவன். எனது தேசத்திற்காக ஏதாவது செய்ய வேண்டுமென என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். இந்த அதிகாரத்துவத்தையும் அரசியல் கட்டமைப்பையும் மாற்றியமைக்க என்னால் முடிந்ததை சிறப்பாகச் செய்ய விரும்பினேன்.
அப்போதுதான் நான் ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) மற்றும் பாஜக.வின் வலதுசாரி மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) உடன் தொடர்பு கொண்டேன்.
ஏபிவிபி-யில் இணைந்து பணியாற்றத் தொடங்கியபோது எனக்கு வயது 18 – பி.எஸ்சி முதலாமாண்டு மாணவன். அப்போது ஆர்.எஸ்.எஸ்-ன் உள்ளூர் தலைவர்களையும், உறுப்பினர்களையும் தினசரி சந்திப்பேன். அமைப்பு வேலையில் என்னை மும்முரமாக ஈடுபடுத்திக் கொண்டேன். குறுகிய காலத்திலேயே, நான் தெற்கு மும்பை மாவட்டத் துணை செயலாளராக நியமிக்கப்பட்டேன். அதன்பிறகு, மாவட்டச் செயலாளர். பின், மாநில செயற்குழு உறுப்பினர். இதனிடையே, அந்த அமைப்பில் தொடர்புடைய பலருடன் நான் நல்ல நட்பு கொண்டிருந்தேன்.
அந்த நேரத்தில், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தல் – 2019 வந்தது. நான் எனது இரண்டு சகாக்களுடன் மும்பையில் இருந்து டெல்லிக்குப் புறப்பட்டேன். முதன்முதலில் இங்குதான் வெவ்வேறு சித்தாந்தங்களுடன் நேருக்கு நேர் மோதுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதே நேரத்தில், நான் சார்ந்த அமைப்பின் மறைவான காரியங்களையும் நன்கு புரிந்து கொள்வதற்குமான இடமாகவும் அமைந்தது.
தேர்தல்கள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதை நேருணர்ந்து கொள்வதற்காகவே, அமைப்பின் பிரதிநிதியாக ஜே.என்.யூ.வில் நான் தங்கியிருந்தேன். அங்கு சுமார் இரண்டு வார காலம் இருந்தேன். இந்த காலகட்டம்தான் நான் முடிவெடுக்கவிருந்த சமயத்தில் சற்றேறக்குறைய என்னை ஆதிக்கம் செய்தது.
அங்குதான் (ஜே.என்.யூ) இடதுசாரி சித்தாந்தங்களை நான் நன்கு கற்றுக் கொண்டேன். பல ஆண்டுகளாக எனது அமைப்பு செய்து வந்த தவறான நடவடிக்கைகளையும் அறிந்தேன். ஜே.என்.யூ மாணவர்கள் சிலரை சந்திக்கும் வாய்ப்பு பெற்றேன். அச்சந்திப்புகள் கண் திறப்பவையாக இருந்தன.
ஆனால், தேர்தல் முடிந்து ஜே.என்.யூ.வை விட்டு வெளியேறியதும் அந்தக் ‘கட்டத்தை’ நான் கருத்தில் கொள்ளவில்லை. மீண்டும் மும்பையில், அமைப்பு வேலைகளில் என்னை பரபரப்பாக்கிக் கொண்டேன்.
குடியுரிமைத் திருத்தச் சட்டமானது இந்திய முஸ்லீம்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று மீண்டும் மீண்டும் கூறப்பட்டாலும், சிஏஏ அமல்படுத்தப்பட்ட பின்னர், நிலைமை பழைய மாதிரி நீடிக்கவில்லை.
டிசம்பர் 19-ம் தேதி எனது தலைமையின்கீழ் சிஏஏ ஆதரவு பேரணி நடந்தது. ஆனாலும், எனது இதயத்தின் ஏதோ ஒரு மூலையில், விசயங்கள் ஒழுங்காக நடக்கவில்லை என்பதை மட்டும் உணர்ந்தேன்.
உங்கள் வாழ்க்கையில் உங்களது சொந்த மனசாட்சியே உங்களை வெறுக்கத் துவங்கும் நேரம் வரும். அந்த நேரம் எனக்கும் வந்தது.
முஸ்லீம் சகோதரத்துவத்துக்கு எதிரான மனிதத் தன்மையற்ற நடவடிக்கைகளும், சங் பரிவாரத்தின் மற்றொரு பிரச்சாரப் பிரிவாக செயல்படுவதைத் தாண்டி ஒரு முறையான மாணவர் குரலை உருவாக்குவதில் அமைப்பின் (ABVP) இயலாமையும் எனக்குள் மனமாற்றத்தை நிகழ்த்தியது.
பல நாட்கள் இரவு பகலாகத் தூக்கமின்றி எனது முடிவைப் பற்றி சிந்தித்த பிறகு, புத்தாண்டின் துவக்கத்தில், முறையான கடிதம் கூட கொடுக்காமல் அமைப்பிலிருந்து வெளியேறினேன். அந்த அமைப்பில் எதுவுமே முறையாக இல்லாத நிலையில் கடிதம் மட்டும் எதற்கு?
நான் ஏபிவிபி-யில் இருந்திருந்தால், அவர்கள் சொன்னதைப் போல அமைப்பின் தரப்பட்டியலில் உயர்ந்து, “பிரகாசமான எதிர்காலத்தைப்” பெற்றிருக்கலாம். ஆனால் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக மும்பை வீதிகளில் நின்று குரல் கொடுப்பதில்தான் எனது உண்மையான மகிழ்ச்சியைக் கண்டு கொண்டேன். நமது முஸ்லீம் சகோதரர்களுடன் சேர்ந்து முழக்கமிட்டும், புரட்சிகரப் பாடல்களையும் கவிதைகளையும் பாடியும் அவர்களுக்கு ஆதரவாக நிற்கிறேன்.
என்னை பொறுத்தவரையில், எனக்குள் ஒரு தலைகீழ் மாற்றம் (புரட்சி) உண்டாகிவிட்டது. வலதிலிருந்து இடது நோக்கிப் பயணிப்பது என்பது சில இலக்கியங்களைப் படிப்பதன் மூலம் மட்டுமே நடந்துவிடுவது இல்லை. ஒவ்வொரு இந்தியனுக்கான ஒற்றுமையுணர்வு நிறைந்திருக்கும் வீதிகளில் தான் அது அன்போடு சாத்தியமாகிறது.
ஏபிவிபியில் புதியவனாக உள்நுழைந்த என் வாழ்க்கையின் காலப்பகுதி இவ்வாறாக முடிவுக்கு வந்தது. புத்துணர்வு கொண்ட ஓர் இளைஞனாக இந்தப் பெரிய – பரந்த உலகில் நுழைகிறேன்.
இப்போது ஒரு பொறுப்புள்ள குடிமகனாக எனது பயணம் துவங்குகிறது.
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அறைகூவலை ஏற்று விவசாயிகளை ஒடுக்கும் கார்ப்பரேட் ஆதரவு மின்சார- வேளாண் அவசர திருத்தச் சட்டங்களை மத்திய அரசாங்கமே திரும்பப் பெறு! என்கிற முழக்கத்தை முன்வைத்து, போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.
அதனடிப்படையில் விவசாயிகள் விரோத சட்டங்களை எதிர்த்து, கையெழுத்து இயக்கமும் அதன் தொடர்ச்சியாக ஜூலை 27-2020 அன்று தமிழகம் முழுவதும் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம் மற்றும் பல்வேறு கட்சிகள், ஜனநாயக சக்திகள் இணைந்து மதுரை ஒத்தக்கடையில் ஜூலை 27 அன்று காலை 10.30 மணி அளவில் கருப்புக் கொடி ஏந்தி மனிதச் சுவர் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டம் மக்கள் அதிகாரம் மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் உறுப்பினர் தோழர் சரவணன் தலைமையில் நடந்தது. இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் தோழர் காளிதாஸ் ஆர்ப்பட்டத்தைத் தொடங்கி வைத்தார். மதிமுக மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் திரு மாரநாடு முன்னிலை வகித்தார். சி பி எம் -ன் கிழக்கு ஒன்றிய செயலாளர் தோழர் கலைச்செல்வன், ஆதித்தமிழர் கட்சியைச் சேர்ந்த தோழர் விடுதலைவீரன் ஆகியோர் பங்கேற்று கன்டன உரையாற்றினார்கள். திரு இளங்குமரன் (மதிமுக) நன்றியுரையாற்றி ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ எழுச்சி முழக்கத்தோடு ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஜனநாயக சக்திகள்..
This slideshow requires JavaScript.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் : மக்கள் அதிகாரம், மதுரை, யா. ஒத்தக்கடை. தொடர்புக்கு : 63832 43495.
உங்களில் யாருக்காவது Tamilnadu Young Thinkers Forum என்ற அமைப்புப் பற்றி தெரியுமா? தெரியவில்லை என்றால், தயவுசெய்து கூகுளில் தேடுங்கள். பல அதிர்ச்சிகரமான வலைப்பின்னல்களை அறிந்து கொள்ளலாம்.
இது ஆர்.எஸ்.எஸ்-ன் மறைமுக அமைப்பு. இப்போது யாரெல்லாம் வலதுசாரி அரசியல் கருத்துக்களை சமூக ஊடகங்களில் பரப்புகிறார்களோ.. மாரிதாஸ் முதல் பத்ரி சேஷாத்ரி வரை, ரங்கராஜ் முதல் ஷ்யாம் சேகர் வரை… இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் புள்ளி இதுதான். தமிழக வலது அரசியல் போக்குகளின் aggregator இந்த அமைப்பு. Young Thinkers Forum–> Swarajya –> RSS – என்று இந்த வலைப்பின்னல் போகிறது.
2016-ல் தமிழ்நாட்டில் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. அந்த தொடக்கவிழாவில் ஆர்.எஸ்.எஸ்-ஸின் தேசிய செயற்குழு உறுப்பினர் ராம் மாதவ், ஆர்.எஸ்.எஸ். இணைப் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோஸபலே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய ஹோஸபலே, ‘அறிவுத்துறையில் நமக்கான போர்வீரர்களை உருவாக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டார். இதைத்தான் இந்த அமைப்பு செய்து வருகிறது.
2017 நவம்பரில் இந்த அமைப்பு மைலாபூரில் Social media conclave ஒன்றை நடத்தியது. இதை தொடங்கி வைத்தவர் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். இவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் நீண்டகால தொடர்பு உள்ளவர் என்பதை இணைந்து புரிந்துகொள்ள வேண்டும். இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய விருந்தினர் பட்டியல் இன்னும் சுவாரஸ்யமானது.
This slideshow requires JavaScript.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தந்தி டி.வி.யின் அசோக வர்ஷினி, The news minute இணையதளத்தின் founder editor தன்யா ராஜேந்திரன், பாடகி சின்மயி, டி.வி.விவாதங்களில் கலந்துகொள்ளும் ஷ்யாம் சேகர், சுமந்த் சி.ராமன், பானு கோம்ஸ் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டு உரையாற்றினர்.
இதில் பேசிய, ’ஸ்வராஜ்யா’ இணையதளத்தின் ஆசிரியர் பிரசன்னா வெங்கடேசன் எந்த ஒளிவுமறைவும் இல்லாமல் வெளிப்படையாக பேசினார்.
“தமிழ் சமூக ஊடகத்தில் இடது சிந்தனை அதிகமாக உள்ளது. இது தொழிற்துறை வளர்ச்சிக்கு எதிரான போக்கை வளர்க்கிறது. நியூட்ரினோ, ஹைட்ரோஹார்பன் உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் எதிர்க்கும் போக்கு உள்ளது. ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றியின் உந்துதலால், தமிழ்நாட்டை ஒரு எதிர்ப்பு மாநிலமாக மாற்ற முயல்கின்றனர். ஒரு குறிப்பிட்ட சாதி இலக்கு வைத்து தாக்கப்படுகிறது. இந்து ஃபோபியா வளர்த்துவிடப்படுகிறது. இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும்’’ என்று தங்கள் நோக்கத்தை திட்டவட்டமாக குறிப்பிட்டார். சுருங்கச் சொன்னால் அறிவுத்துறையில் வலதுசாரி போக்கை வளர்த்தெடுப்பது இந்த அமைப்பின் ஒற்றை நோக்கம்.
இதன் செயல்பாடுகளை தேடிப் படித்தால் ஷ்யாம் சேகர், மாரிதாஸ், பத்ரி ஷேசாத்ரி, ரெங்கராஜ் (Ex. தந்தி டி.வி) போன்றவர்கள் இதன் பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருவதை அறிய முடிகிறது. இவர்கள் நடத்தும் கூட்டங்களில் பெரிய கூட்டம் இல்லை. 30 பேர், 50 பேர் வருகிறார்கள். இந்த Young Thinkers Forum-ன் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் பெரிய அளவுக்கு ஃபாலோயர்ஸ் இல்லை. இருப்பினும் பத்ரி, ஷியாம் சேகர் போன்றோர் இதன் நிகழ்ச்சிகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் தந்து கலந்துகொள்கிறார்கள்.
மாரிதாஸ் என்ற நபர், ‘நான் ஏன் நரேந்திர மோடியை ஆதரிக்கிறேன்?’ என்ற புத்தகத்தின் வழியேதான் இங்கு அறிமுகம் செய்யப்படுகிறார். அதற்கு முன்னால் இந்தப் பெயரை கூட யரும் கேள்விப்பட்டதில்லை. அந்தப் புத்தகத்தை தன்னுடைய கிழக்குப் பதிப்பகம் மூலம் வெளியிட்டவர் பத்ரி சேஷாத்ரி. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கி பேசியவர்களில் ஒருவர் கே.டி.ராகவன். புத்தகம் போடும் அஜண்டா பத்ரிக்கு… வாழ்த்திப் பேசும் டார்கெட் ராகவனுக்கு. வதந்தி பரப்பும் அஜண்டா மாரிதாஸுக்கு. ஆகவே, மாரிதாஸை மட்டுமல்ல.. இந்த லார்டு லபக்கு தாஸ்களையும் நாம் இணைத்து புரிந்துகொள்ள வேண்டும்.
மேலும், இந்த Young Thinkers Forum-மானது, இளையோர் நாடாளுமன்றம் என்ற பெயரில் பள்ளி மாணவர்களுக்குள் ஊடுருவிச் செல்வது, பட்ஜெட் கொள்கை விளக்க கூட்டங்கள், கல்விக்கொள்கை வரைவு அறிக்கை மீதான கூட்டம் என பரந்த வரையறையில் ஒரு கருத்துருவாக்க வேலையிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த ஆண்டு முதல் ‘அம்பேத்கர் – ராமானுஜச்சார்யா விருதுகள்’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் பல்வேறு பிரிவினருக்கு விருதுகளையும் வழங்கி வருகிறது. ’கக்கன் வாழ்நாள் சாதனையாளர் விருது’ என்ற பெயரில் மற்றொரு விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த Young Thinkers Forum-ஐ இந்தியா முழுவதும் நடத்தி வருவது ‘இந்தியா ஃபவுண்டேஷன்’ என்ற ஆர்.எஸ்.எஸ். சார்பு கொண்ட அமைப்பு. இந்த இந்தியா ஃபவுண்டேஷனின் ஆலோசகர்களாக செயல்பட்டு வருவோரில் முக்கியமானவர்கள் நிர்மலா சீத்தாராமன், ஆர்.எஸ்.எஸ். தேசியச் செயலாளர் ராம் மாதவ் உள்ளிட்டோர்.
இதைப்போலவே, ‘விவேகானந்தா இண்டர்நேஷனல் ஃபவுண்டேஷன்’ என்ற மற்றொரு Forum வழியேவும் இதேவேலையை செய்து வருகின்றனர். இதன் ஆலோசகர்களில் ஒருவர் குருமூர்த்தி. இந்த அமைப்பு வழியாகதான் 2011-ல் ‘ஊழலுக்கு எதிரான பொது மேடை’ என அன்னா ஹசாரே முன்னிருத்தப்பட்டார். அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளே வந்தார். சுப்ரமணியன் சாமி, கிரண்பேடி என்று பலர் அதில் அணிதிரண்டனர். ஊழல் மட்டுமே நாட்டின் முதனை பிரச்னை என்ற பிரசாரம் நாடு முழுவதும் முடுக்கிவிடப்பட்டு பா.ஜ.க. ஆட்சியையும் பிடித்தது.
தற்போது இவர்கள் தென்னிந்திய ஊடகங்களை, குறிப்பாக சமூக ஊடகத்தை manipulate செய்யும் வேலைத் திட்டத்துடன் களம் இறங்கியுள்ளனர். ஏனெனில் பாரம்பரிய ஊடகங்கள் ஏற்கெனவே அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. சமூக ஊடகம்தான் சவாலானதாக இருக்கிறது என்பதால் அதை குறி வைத்துள்ளனர்.
இதற்கான அடியாள்படையில் மாரிதாஸ், ரெங்கராஜ் போன்றோர் முன்னே நிற்பவர்கள் என்றால், பத்ரி சேஷாத்ரி, ஷ்யாம் சேகர், பானு கோம்ஸ் போன்றோர் பின்னால் நிற்கிறார்கள். மிகவும் ஒருங்கிணைக்கப்பட்ட வகையில் இவர்கள் செயல்படுகின்றனர். இப்போதே எச்சரிக்கை அடைந்து வினையாற்றவில்லை என்றால் எதிர்காலத்தில் விளைவுகள் மோசமாக இருக்கும்.
நாம் பெரியார் மண், பெரியார் மண் என்று வாய்ப்பேச்சில் மட்டும் சொல்லிக்கொண்டிருக்க, அவன் அந்த மண்ணுக்கும் கீழாக குழி பறித்துக் கொண்டிருக்கிறான். இதை முதலில் உணர வேண்டும்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டு கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில் இப்போதுதான் பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகளான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட பாஜக / ஆர்.எஸ்.எஸ். தலைவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம்.
இந்தியாவின் கருப்பு நாள் என்று அழைக்கப்படும், டிசம்பர் 6, 1992 அன்று சங்க பரிவார மதவெறி கும்பலால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக இரண்டு வழக்குகள் பதியப்பட்டன. குற்றத்தில் நேரடியாக ஈடுபட்ட ‘கரசேவகர்கள்’ மீது ஒரு வழக்கு மற்றும் சதித்திட்டம் தீட்டிய சங்க பரிவாரக் கும்பல் மீது மற்றொரு வழக்கு என இரண்டு வழக்காகப் பதியப்பட்டது.
சதி செய்த குற்றத்தின் கீழ் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களான, எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, கல்யாண் சிங், கிரிராஜ் சிங் கிஷோர், விஷ்ணு ஹரி தால்மியா, சாத்வி ரிதம்பரா, பால் தாக்கரே உள்ளிட்ட பல்வேறு ஆர்.எஸ்.எஸ் – பாஜக தலைவர்கள் மீது கரசேவகர்களைத் தூண்டும் விதத்தில் பேசியதாகவும், முழக்கமிட்டதாகவும், சதித் திட்டம் தீட்டியதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தற்போது சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவரும் இந்த வழக்கு, கடந்த 1993-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சி.பி.ஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்று வருகிறது.
“கரசேவை பஜனையும் கீர்த்தனை பாடுவதற்காகவும் அல்ல, ஸ்ரீராமனின் ஆலயத்தை அங்கு கட்டுவதையும் உள்ளடக்கியதுதான்” என மசூதி இடிப்பிற்கு முன்னர் அத்வானி வெறிகொண்டு திரும்பத் திரும்ப கூறியதை குறிப்பிட்டுக் காட்டுகிறது அந்த குற்றப் பத்திரிகை.
அதில் முரளி மனோகர் ஜோஷி குறித்துக் குறிப்பிடுகையில், “டிசம்பர் 1, 1992 அன்று அயோத்திக்கு செல்லும் வழியில் மதுராவில் பேசிய முரளி மனோகர் ஜோஷி, ராமர் கோவில் கட்டுவதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்று பேசியதோடு, டிசம்பர் 6, 1992 அன்று பாபர் மசூதி இடிப்பின் போது மேடையில் இருந்து கரசேவகர்களை உற்சாகப்படுத்திக் கொண்டும், தூண்டிவிடும்படியாக முழக்கமிட்டுக் கொண்டும் இருந்தார்” என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.
உமா பாரதி மீதான குற்றப் பத்திரிகையில், பாபர் மசூதி இடிக்கப்பட்ட டிசம்பர் 6, 1992 அன்று, “இன்னும் ஒரே அடி .. பாபர் மசூதி வீழ்ந்துவிடும்” என்றும், “ மசூதியை இடி, கோவிலைக் கட்டு, பாபரின் வாரிசுகள் பாகிஸ்தான் செல்லட்டும்” என்றும், “ஜெய் ஸ்ரீராம் என ஜின்னா சொல்லட்டும்” என்றும் முழக்கமிட்டு கர சேவகர்களை மசூதியை இடிக்கத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.
1993-ம் ஆண்டு தொடுக்கப்பட்ட இந்த வழக்கின் விசாரணை கீழமை நீதிமன்றங்களில் முடிந்து பின்னர் அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மேல் முறையீட்டுக்கு வந்தது. கடந்த 2010-ம் அண்டு அலகாபாத் உயர்நீதி மன்றத்தின் லக்னோ அமர்வு, அத்வானி மற்றும் பிறர் மீதான சதிக் குற்றச்சாட்டை ரத்து செய்து கீழமை நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை உறுதி செய்தது. 9 மாதங்களுக்குப் பின்னர் சி.பி.ஐ இதற்கு எதிராக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. அச்சமயத்தில் இந்த 9 மாத தாமதத்தைக் காரணம் காட்டி அத்வானி மற்றும் பிறர் மேல்முறையீட்டு மனுவை ரத்து செய்யக் கோரினர்.
இந்த வழக்கு நிலுவையில் நின்ற நிலையில் கடந்த ஏப்ரல் 19, 2019 அன்று அத்வானி மற்றும் பிறர் மீதான குற்றச்சதி வழக்கையும், கரசேவகர்கள் மீதான வழக்கையும் ஒன்றிணைத்து, லக்னோவில் ஒரு சிறப்பு சி.பி.ஐ நீதிமன்றத்தை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டது. மேலும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட 13 பேர் மீதான குற்றச்சாட்டை மீண்டும் வழக்கில் சேர்த்துக் கொண்டது.
சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம், கடந்த ஜூன் 4 முதல் வாக்குமூலங்களைப் பெறத் துவங்கியுள்ளது. பிரிவு 313-ன் படி சாட்சியங்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் நீதிபதி கேள்விகளைத் தொடுப்பார். அதற்கு அவர்கள் பதில் கொடுக்க வேண்டும்.
கடந்த 23-ம் தேதி முரளி மனோகர் ஜோஷி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார். வீடியோ கான்ஃபெரன்சிங் மூலம், சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ். கே. யாதவ் முன்னிலையில் வாக்குமூலம் அளித்த முரளி மனோகர் ஜோஷி, தனது வாக்குமூலத்தில், பாபர் மசூதி இடிக்கப்பட்ட சமயத்தில் இருந்த மத்திய அரசு, அரசியல் பழிதீர்க்கும் நோக்கோடு தன்னை இவ்வழக்கில் இணைத்திருக்கிறது என்று கூறியிருக்கிறார். அதே போல அரசு தரப்பில் வைக்கப்பட்டுள்ள சாட்சியங்களை பொய்யானவை என்றும் அரசியல் நோக்கங்களால் உந்தப்பட்டவை என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அந்த சமயத்தில் வெளியான வீடியோ மற்றும் செய்தித்தாள் புகைப்படங்கள் அனைத்தும் சித்தரிக்கப்பட்டவை என்றும் தெரிவித்துள்ளார் ஜோஷி.
இராமர் கோவில் கட்ட தயார் செய்யப்பட்ட கல்தூண்கள். (கோப்புப் படம்)
இந்த விவகாரத்தில் அத்வானி கடந்த 24-ம் தேதி வாக்குமூலம் அளித்தார். அதில் ஜோஷி முன்வைத்த அதே வாதத்தை வைத்துள்ளார் முன்வைத்துள்ளார். அதற்கு முன்னர், கடந்த 22-ம் தேதியே இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அரசு வழக்கறிஞர்கள் புடைசூழ அத்வானியை சந்தித்துவிட்டு வந்தார். ஒரு வழக்கில் விசாரிக்கப்பட இருக்கும் குற்றம்சாட்டப் பட்ட நபரை ஒரு உள்துறை அமைச்சர் அரசு வழக்கறிஞர்களோடு நேரில் சந்தித்துவிட்டு வருவது எந்த நாட்டிலும் இல்லாத வழக்கம். முரளி மனோகர் ஜோஷியைப் போல தம்மை எதிர்க்காமல் ஒதுங்கி நிற்கும் கிழட்டு நரி அத்வானி தன்னுடைய ஆள்தான் என்பதைக் காட்டி நீதிபதிக்கு ஒரு எச்சரிக்கை விட்டிருகிறார் அமித்ஷா.
எதிர்வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி, பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில், ராமன் கோவிலுக்கு பூமி பூஜை செய்து வைக்கவிருக்கிறார் மோடி. இந்த வழக்கில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றமோ அல்லது அதற்குப் பின்னர் ஒருவேளை மேல்முறையீடு செய்யப்பட்டால் உச்சநீதிமன்றமோ என்ன தீர்ப்பளிக்க முடியும் ? கடந்த நவம்பர் 2019-ல் பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கில் ராமர் கோவில் கட்டுவதற்கு அந்த நிலத்தை உச்சநீதிமன்றம் தாரை வார்த்து தீர்ப்பளித்திருக்கிறது. அதன்படி, ராமர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை இவ்வளவு நாள் ‘ஆக்கிரமிப்பு’ செய்திருந்த பாபர் மசூதியை அரசாங்கத்துக்கு செலவில்லாமல் இடித்துத் தரைமட்டமாக்கிய கர சேவகர்களுக்கும், அத்வானி உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ். சங்க பரிவாரக் கும்பலுக்கும் இடித்ததற்கான கூலியையும், அதற்காக இந்தியா முழுவதும் ர(த்)த யாத்திரை சென்று ஆட்களைத் திரட்டியதற்கான செலவையும் 28 ஆண்டுகளுக்கு 12% வட்டி கணக்கிட்டு பாக்கியில்லாம ‘செட்டில்’ பண்ணுமாறு நீதிமன்றம் தீர்ப்பளிக்கலாம் !
இது அபத்தமான வாதமாகத் தெரியலாம். இவ்விவகாரம் குறித்து அரசியல் புரோக்கர் சுப்ரமணியசாமி கடந்த 21-07-2020 அன்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “அயோத்தி பிரச்சினையில் அத்வானி, ஜோஷியை நீதிமன்றத்துக்கு இழுப்பதற்கு முன்னர், பிரதமர் அல்பத்தனமான (Silly) இந்த பாபர் மசூதி இடிப்பு வழக்கை மூட உத்தரவிட வேண்டும்” என்று பதிவிட்டிருக்கிறார். மேலும், “அதில் அவர்களுக்கு பங்கிருக்கிறது என்றால், அவர்கள் மசூதியை இடிக்கவில்லை; மாறாக, ஒரு செயல்படும் கோவிலை மறு கட்டுமானம் செய்திருக்கின்றனர்.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய ‘மனு’ நீதிமன்றங்களின் நிலை, சட்டமும் வேதமும் படித்த சுப்பிரமணியசாமிக்கு நம்மைவிட அதிகமாகத் தெரியுமல்லவா ?
தமிழ ஊடகங்களில் பணியாற்றும் பத்திரிகையாளர்களை குறிவைத்து பணி நீக்கம் செய்யும் முயற்சியில் பாஜக – ஆர்.எஸ்.எஸ் கும்பல் ஈடுபட்டு வருகிறது. அதனைக் கண்டிக்கும் விதமாக மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர் கோவன் பாடியுள்ள புதிய பாடல். பாருங்கள்… பகிருங்கள்… !