Tuesday, June 10, 2025
முகப்பு பதிவு பக்கம் 763

கிங்பிஷர் ஏர்லைன்ஸ் திவால்:மல்லையா போதைக்கு இந்தியா ஊறுகாயா?

55

கிங் பிஷர் ஏர்லைன்ஸ்: மல்லையா போதைக்கு இந்தியா ஊறுகாயா?
சாராய சாம்ராட் விஜய் மல்லையாவுக்கு அனேகமாக இந்நேரம் போதை தெளிந்திருக்க வேண்டும். அவரது விமான கம்பெனி காற்றில் கரைந்த கற்பூரமாய் ஆவியாகிக் கொண்டிருப்பதைப் பார்த்து மிரண்டு போயிருக்கும் மல்லையா யாரிடம் போய் அழுவார்? கழுதை கெட்டால் குட்டிச் சுவர் தானே.. அதனால் தான் மன்மோகனிடம் கேட்கிறார் – ‘மச்சி ஒரு கோட்டரு சொல்லேன்’. பொதுத்துறை நிறுவனங்களின் கையாலாகாத்தனத்தால் அல்லலுறும் மக்களின் நலனுக்காகவே தனியார்மயத்தை இந்தியாவுக்கு இழுத்து வந்து அறிமுகம் செய்வித்த மன்மோகன் சிங்கோ வெட்கமில்லாமல் மல்லையாவிடம் சொல்கிறார் – ‘உங்கள் கோரிக்கையை அரசு பரிவுடன் பரிசீலிக்கும்’ என்று.

கடந்தவாரம் திடீரென்று சொல்லாமல் கொள்ளாமல் தனது விமான சேவையில் 50% அளவுக்கு ரத்து செய்தது மல்லையாவின் கிங்பிஷர் விமான நிறுவனம். அந்நிறுவனத்தைச் சேர்ந்த சுமார் 100 பைலட்டுகள் பலமாதங்களாக சம்பளம் தராமல் இழுத்தடிக்கப்பட்டதால் திடீரென்று வேலையை இராஜினாமா செய்து விட்டார்கள் என்றும், எரிபொருள் நிறுவனங்கள் தொடங்கி விமான நிலைய வாடகை வரை திரும்பிய பக்கமெல்லாம் கடன் வைத்திருப்பதாகவும் இதனால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ‘கைல காசு வாய்ல தோசை’ (cash-and-carry) என்கிற முடிவுக்கு வந்து விட்டதாலும் தான் மல்லையாவின் கிங்பிஷர் நிறுவனத்தால் விமானங்களை இயக்க முடியாமல் போனது என்று  செய்திகள் வெளியாகின.

2003-ம் ஆண்டு மல்லையாவால் நிறுவப்பட்ட கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம், 2005-ம் ஆண்டு வாக்கில் தனது விமான சேவையைத் துவக்குகிறது. அன்றிலிருந்து இன்றைய தேதி வரையில் அந்நிறுவனம் தொடர்ச்சியாக நட்டக்கணக்கு தான் காட்டி வருகிறது. கிங்பிஷர் நிறுவனத்தின் மொத்தக் கடன் சுமார்  7000 கோடி ரூபாய்கள். இந்தக் கடன்கள் அனைத்துக்கும் அரசுத்துறை வங்கிகளும் சில தனியார் வங்கிகளும் உத்திரவாதப் பத்திரங்கள் அளித்திருக்கின்றது.

தற்போது ஒட்டுமொத்தமாக மட்டையாகிக் கிடக்கும் தனது மீன்கொத்திப் பறவையை மீண்டும் பறக்கவிட அரசின் உதவியை நாடியுள்ளார் மல்லையா. அவர் அரசாங்கத்தை அணுகியிருப்பதைக் கண்ட அவரது போட்டித் தரகு முதலாளிகள், ஆளுக்கொரு ஈயச்சட்டியைத்  தூக்கிக் கொண்டு வரிசை கட்ட ஆரம்பிக்கவே, ராகுல் பஜாஜ் உள்ளிட்ட தரகுமுதலாளிகள் அரண்டு போய் ‘கிங்பிஷர் விமான நிறுவனத்திற்கு பெயில் அவுட் கொடுக்கக் கூடாது’ என்று அலறுகிறார்கள். மல்லையாவோ, ‘நாங்கள் பெயில் அவுட் செய்யும்படி கேட்டதுமில்லை கேட்கப்போவதுமில்லை’ என்று சவடால் அடித்திருக்கிறார். இது ஒரு அண்டப் புளுகு.

மக்களை ஏமாற்றுவதிலும் அதற்கு அரசை உடந்தையாக்கிக் கொள்வதிலும் மல்லையாவுக்கு ஒரு பெரிய வரலாறே இருக்கிறது. தொண்ணூறுகளின் இறுதியில் மெக்டவல் க்ரெஸ்ட் பைனான்ஸ் என்கிற ஒரு பிளேடு கம்பேனியைத் துவக்கும் மல்லையா, நிரந்தர வைப்பு நிதிகளுக்கு பொதுத்துறை வங்கிகள் தருவதை விட அதிகமான வட்டியைத் தருவதாக வாக்களிக்கிறார். இதை நம்பிய அப்பாவி மக்கள் தங்களது பணத்தை இவரது நிறுவனத்தில் முதலீடு செய்கிறார்கள். இப்படி மக்களிடமிருந்து வசூலித்த முதலீட்டை தனது தாய் நிறுவனமான யுனைட்டெட் ப்ரூவரீஸுக்கு மாற்றிக் கொண்ட மல்லையா, மெக்டவல் க்ரெஸ்ட் நிறுவனத்தின் பெயரை மெக்டவல் ஃபின்லீஸ் என்று மாற்றி விட்டு மஞ்சக் கடுதாசி கொடுத்து மக்களுக்கு பட்டை நாமத்தை சாற்றியிருக்கிறார்.

இது தொடர்பான வழக்கு இன்றும் நடந்து வருகிறது. பல்வேறு மட்டங்களில் உள்ள அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளைக் கைக்குள் போட்டுக் கொண்டு இந்த வழக்குகளை இழுத்தடித்து நீர்த்துப் போகச் செய்தும் விட்டார். அன்றைக்கு மெக்டவல் க்ரெஸ்ட் நிறுவனத்தின் நிதியை யுனைட்டெட் ப்ரூவரீஸுக்கு கள்ளத்தனமாக மாற்றிக் கொள்ளவும், அதற்கு நட்டக் கணக்கெழுதி நிறுவனத்தின் பெயரை மாற்றி மஞ்சக்கடுதாசி கொடுக்கவும் அரசு விதிகளையும் சட்டங்களையும் தளர்த்தியும் வளைத்தும் மல்லையாவுக்கு உதவியது ஆளும்வர்க்கம் தான். மெக்டவல் க்ரெஸ்ட் நட்டமடைந்து விட்டதாகவும் அதற்கு அரசு கைகொடுத்து (பெயில் அவுட்) உதவ வேண்டுமென்றும் மல்லையா வைத்த கோரிக்கையை அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது. இன்றுவரை மெக்டவல் க்ரஸ்டில் மக்கள் போட்ட முதலீடுகள் போன திசை இன்னதென்று தெரிந்தும் அரசு மௌனமாகவே இருந்து வருகிறது.

அடுத்து, தற்போதைய பிரச்சினையைப் பொருத்தமட்டில், கிங்பிஷர் என்றில்லாமல் தனியார் விமான நிறுவனங்கள் அனைத்துக்கும் 2004-ம் ஆண்டிலிருந்தே பல்வேறு வகையான சலுகைகளை அரசு அள்ளிக் கொடுத்துள்ளது. உள்நாட்டில் வருமானம் கொழிக்கும் வழித்தடங்கள் அனைத்தும் தனியார் நிறுவனங்களுக்குத் தாரைவார்த்துக் கொடுத்த மன்மோகன் அரசு திட்டமிட்டே பொதுத் துறை நிறுவனமான இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை படுகுழிக்குள் தள்ளியது. அதுவும் போக, ஏர் இந்தியாவின் சக்திக்கும் மீறி 111 விமானங்களை அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து வாங்கும் ஒரு ஒப்பந்தத்தைப் போட்டதன் மூலமும், ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் இணைப்பின் மூலமும் இந்நிறுவனங்களை 20,000 கோடி ரூபாய் நட்டத்திலும் 46,000 கோடி ரூபாய் கடனிலும் சிக்கவைத்துள்ளனர்.

சந்தையில் தமக்குப் போட்டியாக இருந்த பொதுத்துறை நிறுவனங்களின் காலை ஒடிக்கச் செய்து விட்டு தான் தனியார் விமான நிறுவனங்கள் போட்டிக் களத்துக்கே வந்தன. இத்தனை சலுகைகளையும் மீறித்தான் கிங்பிஷர், ஜெட்ஏர்வேய்ஸ் உள்ளிட்ட தனியார் விமான நிறுவனங்கள் நட்டக்கணக்குக் காட்டுகின்றன. தற்போது பொதுத்துறை நிறுவனங்களின் காலை ஒடித்தால் மட்டும் போதாது, தலையில் பெரும் பாரத்தையும் தூக்கி வையுங்களேன் என்று மல்லையா கேட்கிறார். அதாவது, ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் தமது டிக்கெட் விலைகளை உயர்த்த வேண்டுமாம். ஆக, ஏற்கனவே குழிக்குள் தள்ளி விட்டது மட்டும் போதாது, கூடவே மண்ணைப் போட்டு நிரவி விடுங்கள் என்பதே மல்லையாவின் கோரிக்கை.

இது ஒருபுறமிருக்க, கடந்த  மார்ச் மாதம் கிங்பிஷர் நிறுவனத்திற்கு கடனளித்த 13 வங்கிகள் அதன் 23.21% பங்குகளை வாங்கியுள்ளன. தனது 7000 கோடி கடனில் 750 கோடிகளை பங்குகளாக மாற்றி வங்கிகளின் தலையில் கட்டியுள்ளார் மல்லையா. அந்த சமயத்தில் கிங்பிஷர் நிறுவனப் பங்கு ஒன்றின் விலை 64.48 ரூபாய்களாக இருந்தது. தற்போது அதன் பங்கு மதிப்பு 19.65 ரூபாய்களாக வீழ்ந்திருக்கும் நிலையில் ஏற்கனவே தனது நட்டத்தை மக்கள் மேல் சுமத்தி விட்டார் மல்லையா. பெயில் அவுட் என்பது ஆறு மாதங்களுக்கு முன்பே ஆரம்பித்து விட்டது என்பதே உண்மை. துவங்கிய நாள் முதலாக நட்டத்திலேயே இயங்கிக் கொண்டிருப்பதாக சொல்லும் ஒரு நிறுவனத்தின் பங்குகளில் நூற்றுக்கணக்கான கோடி மக்கள் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

இந்திய விமானப் போக்குவரத்தின் 83% தனியார் விமானக் கம்பெனிகளின் ஆதிக்கத்தில் தான் உள்ளன. பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவோ வெறும் 17% சந்தைக்குள் முடக்கப்பட்டுள்ளது. ஆக, எரிபொருள் கடன், வருமான வரியும் கட்டவில்லை, விமானநிலைய வாடகையில் கடன், விமானத்தில் தண்ணீர் சப்ளையில் இருந்து சாப்பாடு சப்ளை வரை செய்யும் அனைவரிடமும் கடன் என்று திரும்பிய பக்கமெல்லாம் கடனையும் வைத்துக் கொண்டு – அரசின் உதவியோடு பெரும் சதவீதத்திலான சந்தையையும் கைப்பற்றிக் கொண்டிருக்கும் நிலையிலும் கூட இந்தத் தனியார் விமான நிறுவனங்களால் லாபம் ஈட்ட முடியவில்லை என்பது தான் இவர்களின் யோக்கியதை.

இந்திய மக்கள் தொகையில் விமானச் சேவையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அரை சதவீதத்திற்கும் குறைவு. இந்த சிறிய மக்கள் பிரிவினருக்கான சின்னஞ்சிறு சந்தையை விழுங்க தனியார் விமான நிறுவனங்களுக்கிடையே நடந்த நாய்ச்சண்டைகள் இன்றைக்கு அவர்கள் ஒரு முட்டுச் சந்துக்குள் சிக்கிக் கொண்டு விழிக்கும் நிலைக்கு ஆளாக ஒரு காரணம். அமித உற்பத்தியும் அதற்கான சந்தையைக் கைப்பற்ற நடக்கும் குத்துப்பிடி சண்டைகளுமே முதலாளித்துவ சந்தை விதி. இந்த விதிகளையும் அதிலிருக்கும் சவால்களையும் முதலாளிகள் அறிந்தேயிருக்கிறார்கள். அதையும் மீறி இந்த சொற்ப சந்தையையும் கபளீகரம் செய்து தானே தனியாய்த் தின்ன வேண்டும் என்கிற பேராசை தான் நட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் போதும் புதிய விமானங்கள் வாங்க ஆயிரக்கணக்கான கோடிகளுக்கு ஒப்பந்தம் போட வைக்கிறது.

இன்னொரு பக்கம், மல்லையாவின் ஊதாரித்தனம் ஊரறிந்த இரகசியம். கடந்த மாதத்தில் மட்டுமே சரக்குப் பார்ட்டிகளில் கலந்து கொள்ள மூன்று முறை அமெரிக்காவுக்குத் தனி விமானத்தில் பறந்துள்ளார். ஒவ்வொரு முறையும் 70 லட்சங்களுக்குக் குறையாமல் செலவு செய்தும் உள்ளார். 89 மில்லியன் டாலர் (சுமார் 450 கோடி ரூயாய்) மதிப்பிலான சொகுசுக் கப்பலில் உலகத்தைச் சுற்றி வருவதும், அழகான மாடல்களை அம்மணமாய் நிற்க வைத்து காலண்டர்கள் வெளியிடுவதுமாக உல்லாசப் பிரியராக உலகத்தை வலம் வந்த மல்லையா துடிப்பான இந்தியாவின் குறியீடாகக் கருதப்பட்டவர். மேல் நடுத்தரவர்க்க யுப்பிகளின் கனவுக் கண்ணனாகவும், பணக்கார இந்தியர்களின் கொண்டாட்டப் பெருமிதமாகவும் கருதப்பட்ட மல்லையா, தனது விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பிய கடனையே திருப்பிச் செலுத்த முடியாமல் தவிக்கிறார் என்பது போல முதலாளித்துவப் பத்திரிகைகள் சோக கீதம் வாசிக்கின்றன.

உண்மையில் மல்லையாவின் சீமாச்சாராய தொழிலே சில ஆயிரம் கோடி சொத்து மதிப்புடையது. அரசாங்கங்களே குடியை கோவிலாக வளர்த்து வரும் நிலையில் மல்லையா இதில் சுருட்டும் லாபம் பல மடங்காகும். இது போக ஐ.பி.எல் பெங்களூரூ அணியினை ஏலமெடுத்து அதையும் இலாபகரமான தொழிலாக நடத்துவதையும் நீங்கள் அறிவீர்கள். மல்லையாவின் அம்மண அழகிகள் காலண்டர்களே பல கோடி செலவில் எடுக்கப்பட்டு பெரும் விளம்பரங்களுடன் விநியோகிக்கப்படுகின்றன. இத்தகைய கஸ்மாலத்துக்கு இந்திய மக்கள் பணத்தை கொடுத்து நட்டத்தை சரி செய்ய நினைப்பது அயோக்கியத்தனமில்லையா?

முதலாளித்துவம் அம்மணக்கட்டையாய் நின்று கொண்டிருக்கும் நிலையில் முதலாளித்துவப் பத்திரிகைகளோ ‘அதோ பாருங்கள் நம் மாமன்னர் ஜொலிக்கும் தங்க உடையணிந்து நகர்வலம் வருகிறார்’ என்று கதையளக்கின்றன. அரசு உதவினால் மல்லையா தப்பிவிடுவார் என்று நம்பிக்கையூட்டுகின்றன. மல்லையாவின் ஊதாரித்தனமும் அவரது விமான நிறுவனத்தின் கையாலாகாத்தனமும் பல்லிளித்துக் கொண்டிருக்கும் நிலையில் சிவில் போக்குவரத்துத் துறைக்கு முன்னறிவிக்காமல் விமானங்கள் ரத்து செய்ததற்கும், பயணிகளைத் தவிக்க விட்டதற்கும், தனது நட்டத்தை வங்கிகளின் தலையில் சுமத்தியதற்கும் மல்லையாவைக் கைது செய்து சிறையிலடைக்க வேண்டும் என்று இப்பத்திரிகைகள் கோரவில்லை.

இந்தச் சிக்கலில் இருந்து மல்லையாவை அரசு எவ்வாறு கைதூக்கி விடலாம் என்கிற ஆலோசனைகளைத் சொல்லிக் கொண்டுள்ளன. தனியார் விமானக் கம்பெனிகளில் அந்நிய நேரடி முதலீட்டை ஊக்குவிப்பது, வரியைக் குறைப்பது, விமானங்களுக்கான எரிபொருள் விலையைக் குறைப்பது, விமான நிலைய வாடகையைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகளை அரசு உடனடியாக எடுத்து இத்துறையைக் காப்பாற்ற வேண்டுமென்று முதலாளித்துவ ஊடகங்கள் எழுதுகின்றன.

சுமார் 5 கோடி குடும்பங்களை வாழ வைக்கும் சில்லறை வணிகத்தில் பன்னாட்டுக் நிறுவனங்களை நுழைய விட்டதன் மூலம் அழிவுக்குள்ளாகியிருக்கும் அக்குடும்பங்களைக் காப்பாற்ற வேண்டுமென்றோ, மறுகாலனியாக்கப் பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாய் அழிவின் விளிம்பில் ஊசலாடிக் கொண்டிருக்கும் விவசாயத்தையோ சிறு தொழில்களையோ காப்பாற்ற வேண்டுமென்றோ இந்தப் பத்திரிகைகள் இதுவரை கோரியதுமில்லை;  இவை குறித்துக் கவலைப்பட்டதுமில்லை. இப்போது ஒரு ஊதாரியின் நட்டத்தை மக்களின் தலையில் எவ்வாறு கட்டலாம் என்று பாடம் நடத்திக் கொண்டிருக்கின்றன. மன்மோகன் சிங்கோ ‘அரசு பரிவோடு பரிசீலிக்கும்’ என்கிறார். இது யாருக்கான அரசு என்பதில் இதற்கு மேலும் உங்களுக்குச் சந்தேகம் இருக்கிறதா?

_________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

மாதம் இரண்டு லாக்அப் கொலை: “பச்சை”யான போலீசு ஆட்சி!

மாதம் இரண்டு லாக்அப் கொலை : பச்சை யான போலீசு ஆட்சி !

கடந்த செப்டம்பர் மாத இறுதியில் ஒரு திருட்டு வழக்கு சம்பந்தமாக சென்னை  விருகம்பாக்கம் போலீசாரால் பிடித்துச் செல்லப்பட்ட முத்து என்பவர் போலீசாரால் மிருகத்தனமாக அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.  இக்கொட்டடிக் கொலை தொடர்பாக மூன்று போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளபொழுதிலும், “”முத்து நெஞ்சு வலியால்தான் இறந்து போனதாக” உயர் போலீசு அதிகாரிகள் கூறி வருகின்றனர்.

இது அப்பட்டமான பொய் என்பதற்குப் பல நேரடியான சாட்சியங்கள் உள்ளன.  சென்னை போலீசார் முத்துவைக் கைது செய்து, இத்திருட்டு சம்பந்தமாக விசாரணை செய்வதற்காக முத்துவின் சொந்த ஊரான கடலூருக்கு அவரை அழைத்துவந்தபொழுதே, “”அவரது தலையிலிருந்து இரத்தம் வழிந்துகொண்டிருந்ததாக”க் கூறுகிறார், அம்பிகா என்ற பெண்.  முத்து இரத்தம் வடிந்த நிலையிலேயே கடலூருக்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்டதை முத்துவின் பெற்றோர்களும் உறுதி செய்துள்ளனர்.  வழக்குரைஞரும் முத்துவின் உறவினருமான நாகசுந்தரம் என்பவரும், “”முத்துவின் தலையிலும் காதுகளுக்குக் கீழேயும் காயங்கள் இருந்ததையும், அவரது மூக்கிலிருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்ததையும் அவரது கையின் புஜப்பகுதி வீங்கிப் போயிருந்ததோடு, உடலெங்கும் காயங்கள் இருந்ததையும் தான் பார்த்ததாக”ப் பத்திரிக்கையாளர்களிடம் கூறியிருக்கிறார்.

மாதம் இரண்டு லாக்அப் கொலை : பச்சை யான போலீசு ஆட்சி !இவர்களையெல்லாம்விட மிகவும் நம்பத்தகுந்த சாட்சியம் ஒன்று உள்ளது.  “”மயக்கமாக வருவதாகவும், நெஞ்சு வலிப்பதாகவும்” முத்து கூறியவுடனேயே, அவரை வடபழனியிலுள்ள சூர்யா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாக போலீசார் கூறியுள்ளனர்.  அம்மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரியான எஸ். ஆனந்தகுமார், “”முத்துவை இறந்துபோன நிலையில்தான் போலீசார் தூக்கி வந்ததாகவும், அவரது தலையிலும் புஜப் பகுதியிலும் கடுமையான காயங்கள் இருந்ததை எமது மருத்துவர்கள் பார்த்ததாகவும்” டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழிடம் கூறியிருக்கிறார்.

25 பவுன் நகை, 12,000 ரொக்கப் பணத்தைத் திருடியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட முத்துவைக் கைது செய்து, ஓரிரு நாளிலேயே அவரைக் கொன்று “உடனடி நீதியை’ வழங்கியிருக்கிறது, ஜெயாவின் போலீசு.  அதேசமயம், தான் முதல்வராக இருந்த சமயத்தில் 66 கோடி ரூபாய் பொதுப் பணத்தைச் சுருட்டியிருக்கிறார் எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஜெயாவை ஒரேயொருமுறை சாட்சிக் கூண்டில் ஏற்றி விசாரிப்பதற்குள்ளாகவே பதினைந்து ஆண்டுகள் ஓடிவிட்டன; முத்துவை இரத்தம் சொட்டச்சொட்ட  கடலூருக்கு இழுத்துச் சென்று விசாரணை நடத்தியிருக்கிறது, தமிழக போலீசு.  ஆனால், 66 கோடி ரூபாய் பணத்தைச் சுருட்டிய ஜெயாவோ சாட்சிக் கூண்டில் ஒரு குற்றவாளியைப் போல ஏற்றி நிறுத்தப்பட்டு விசாரிக்கப்படவில்லை.  ஜெயா, அரசு மரியாதை  பாதுகாப்போடு, நீதிபதிக்கு எதிரே ஃபேனுக்கு அடியில் உட்கார்ந்துகொண்டு, நீதிபதியின் கேள்விகளுக்கு அலுங்காமல் குலுங்காமல் பதில் அளித்திருக்கிறார்.  முத்து திருட்டுப் பட்டத்தோடு இறந்து போய்விட்டார்.  ஜெயாவோ முதல்வர் என்ற பந்தாவோடு வலம் வருகிறார்.

· · ·

மாதம் இரண்டு லாக்அப் கொலை : பச்சை யான போலீசு ஆட்சி !முத்துவின் அகால மரணம், ஜெயா மூன்றாவது முறையாகப் பதவியேற்ற பின், மிகவும் குறுகிய காலத்திற்குள் நடந்துள்ள எட்டாவது கொட்டடிக் கொலையாகும்.  அ.தி.மு.க. அரசு பதவியேற்ற பதினைந்தாவது நாளிலேயே, ஜூன் 2 அன்று மார்க்கண்டேயன் என்பவர் மதுரை  ஊமச்சிக்குளம் போலீசு நிலையத்தில் கொல்லப்பட்டார். இத்துணைக்கும் மார்க்கண்டேயன் மீது எந்தவொரு வழக்கோ புகாரோ கிடையாது. தனது பெண் கடத்திச் செல்லப்பட்டதாகப் புகார் கொடுக்கப் போனவர், பிணமாக வீடு திரும்பினார்.

மார்க்கண்டேயன் கொல்லப்பட்ட அடுத்த பதினாறாவது நாளில், ஜூன் 18 அன்று  பழனிக்குமார் என்பவர் காரைக்குடி வடக்கு போலீசு நிலையத்திலும்; ஜூலை 3 அன்று சரசுவதி என்பவர் சென்னை ஆர்.கே. நகர் போலீசு நிலையத்திலும்; ஜூலை 7 அன்று சின்னப்பா என்பவர் புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் போலீசு நிலையத்திலும்; ஆகஸ்ட் 11 அன்று சலீம் என்பவர் கோபி போலீசு நிலையத்திலும்; ஆகஸ்ட் 30 அன்று ரமேஷ் என்பவர் பல்லடம் மகளிர் போலீசு நிலையத்திலும்; செப்டம்பர் 3 அன்று குப்புசாமி என்பவர் பெரியநாயக்கன்பாளையம் போலீசு நிலையத்திலும் இறந்து போயுள்ளனர்.  ஜெயா பதவியேற்ற பின், சராசரியாக பதினைந்து நாளுக்கு ஒருவரை போலீசு கொட்டடியில் வைத்துக் கொன்றிருப்பதை இப்பட்டியல் அம்பலப்படுத்துகிறது.

இக்கொட்டடிக் கொலைகள், பரமக்குடி மற்றும் மதுரையில் தாழ்த்தப்பட்டோர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு, கோவை துடியலூர் போலீசு நிலையத்தில் ஆனந்தீஸ்வரன் என்ற வழக்குரைஞர் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டது — என இச்சம்பவங்கள் அனைத்தும் ஜெயாவின் ஆட்சி என்றாலே போலீசு ஆட்சிதான் என்பதை மீண்டும் நிரூபிக்கின்றன.  முந்தைய அவரது ஆட்சிகளில் நடந்த சிதம்பரம் பத்மினி பாலியல் வன்முறை மற்றும் பத்மினியின் கணவர் கொட்டடிக் கொலை வழக்கு, கொடியங்குளம் தாழ்த்தப்பட்டோர் மீதான தாக்குதல், வாச்சாத்தி வழக்கு போன்ற பல்வேறு அரசு பயங்கரவாத வழக்குகளில் குற்றமிழைத்த கிரிமினல் போலீசாரைக் காப்பாற்ற அவரது ஆட்சி முயன்றதைப் போலவே இப்பொழுதும் அ.தி.மு.க. அரசு நடந்துகொள்கிறது.

பரமக்குடியில் ஆதிக்க சாதிவெறியோடு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டை வெளிப்படையாகவே ஆதிரித்துச் சட்டசபையில் உரையாற்றினார், ஜெயா.  கோவை துடியலூர் வழக்கில் வழக்குரைஞரைத் தாக்கிய போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாலும், அவர்களுள் யாரும் அக்கொலைவெறித் தாக்குதலுக்காகக் கைது செய்யப்படவில்லை.  அக்காக்கிச் சட்டைக் குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி கோவை பகுதி வழக்குரைஞர்கள் மாவட்ட போலீசு கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய பிறகும், ஜெயா அரசும், போலீசும் அக்குற்றவாளிகளைச் சிறைக்கு அனுப்பாமல் வெளியே வைத்துக் காப்பதில்தான் குறியாக இருந்து வருகின்றன.  சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர் சங்கர சுப்புவின் மகன் சதீஷ்குமார் கொலை வழக்கு விசாரணையை முடக்குவதிலும் குற்றவாளிகளைக் காப்பாற்றுவதிலும் தமிழக போலீசு உயர் அதிகாரிகள் மும்மரம் காட்டி வருவதும் தற்பொழுது அம்பலமாகியுள்ளது.

மாதம் இரண்டு லாக்அப் கொலை : பச்சை யான போலீசு ஆட்சி !இக்கொலையில் கண்ணன், ரியாசுதீன் என்ற இரு போலீசு ஆய்வாளர்களுக்குத் தொடர்பிருப்பதாக சங்கர சுப்பு குற்றம் சாட்டியிருப்பதால், இக்கொலை வழக்கைத் தமிழக போலீசார் விசாரணை செய்தால் உண்மை வெளியே வராது என ஒப்புக்கொண்டு, வழக்கு விசாரணையை மையப் புலனாய்வுத் துறையிடம் உயர் நீதிமன்றம் ஒப்படைத்தது.  ஆனாலும், சி.பி.ஐ., தனது விசாரணையைத் தொடங்கி நான்கு மாதங்கள் முடிந்த பிறகும் விசாரணையில் ஒரு சிறிதளவு முன்னேற்றம்கூட எட்டப்படவில்லை.

“”தனது மகனின் கொலைக் குக் காரணமான கண்ணன், ரியாசுதீன் என்ற இரு போலீசு ஆய்வாளர்களையும்; இக்கொலை நடந்தபொழுது திருமங்கலம் போலீசு நிலைய ஆய்வாளராக நியமிக்கப்பட்ட சுரேஷ்பாபு தடயங்களை அழித்துக் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயன்றதையும் சி.பி.ஐ. அதிகாரிகள் முறையாக விசாரிக்க முயலவில்லை; வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ. இணை இயக்குநர் அசோக்குமாருக்கு நெருக்கமான ஐ.பி.எஸ். அதிகாரிகள் தமிழ்நாட்டில் உள்ளனர்.  இதில் ஒரு அதிகாரிக்கு வலது, இடதுமாக இருப்பவர்கள்தான் நான் குற்றஞ்சாட்டும் காவல் ஆய்வாளர்கள்.  எனவே, இந்த வழக்கை நீர்த்துப் போகச் செய்ய அதிகாரி அசோக்குமார் எல்லா வேலைகளையும் செய்தார்.  அதனால்தான் புலனாய்வில் தொய்வு ஏற்பட்டது.” என வெளிப்படையாகவே குற்றஞ்சுமத்தியிருக்கிறார், வழக்குரைஞர் சங்கர சுப்பு.

சி.பி.ஐ விசாரணை குறித்து சென்னை உயர்நீதி மன்றமும் தனது அதிருப்தியைத் தெரிவித்திருப்பதோடு, “”விசாரணையில் முன்னேற்றம் இல்லாதது குறித்து சி.பி.ஐ. இயக்குநர் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும்.  அதற்கு வசதியான தேதியை சி.பி.ஐ. வழக்குரைஞர் கேட்டுத் தெரிவிக்க வேண்டும்” என உத்தரவிட்டிருந்தது.  இந்நிலையில் இவ்வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்தும் முகமாகச் சிறப்பு விசாரணைக் குழுவை சி.பி.ஐ. இயக்குநர் அமைக்க உள்ளதாகவும், சி.பி.ஐ. கூடுதல் இயக்குநர் சலீம் அலி இந்தச் சிறப்பு விசாரணைக் குழுவுக்குத் தலைமையேற்க இருப்பதாகவும் சி.பி.ஐ. உயர் நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து, வழக்கு விசாரணை நவம்பர் இரண்டாவது வாரத்திற்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதுவொருபுறமிருக்க, இக்கொலை வழக்கில் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் போலீஸ் ஆய்வாளர்களில் ஒருவர்கூடப் பணியிடை நீக்கம் செய்யப்படவில்லை.  குறிப்பாக, தடயங்களை மறைக்கவும், இக்கொலையைத் தற்கொலை எனக் காட்டவும் முயன்ற போலீசு ஆய்வாளர் சுரேஷ் பாபு, தான் விரும்பிய இடத்திற்கு மாறுதல் வாங்கிக் கொண்டு செல்லும் அளவிற்கு போலீசு அதிகாரிகள் குற்றவாளிகளுக்குப் பாதுகாப்பு கொடுப்பதாக வழக்குரைஞர் சங்கர சுப்பு கூறியிருக்கிறார்.  உண்மை இவ்வாறிருக்க, தமிழக போலீசோ, வழக்குரைஞர் சங்கர சுப்பு விசாரணைக்கு ஒழுங்காக ஒத்துழைப்பதில்லை; அவருக்கும் இறந்துபோன அவரது மகன் சதீஷ்குமாருக்கும் இடையே சொத்துத் தகராறு இருந்து வந்தது; மன உளைச்சலால்தான் சதீஷ்குமார் தற்கொலை செய்து கொண்டார் எனத் திட்டமிட்டு அவதூறுகளைப் பரப்பி வருகிறது.

· · ·

ஜெயா எதிர்க்கட்சித் தலைவியாக இருந்த காலத்தில்கூட போலீசின் அட்டூழியங்களுக்கு எதிராக “”சவுண்டு” விட்டதில்லை.  சட்டம்  ஒழுங்கைப் பாதுகாப்பது என்ற பெயரில் போலீசின் வரம்பற்ற அதிகாரங்களுக்கும், அதனின் சட்ட விரோதக் கொள்ளைக்கும் அட்டூழியங்களுக்கும் வக்காலத்து வாங்குவதில் மற்ற அரசியல்வாதிகளைவிட முன்னணியில் நிற்கும் ஜெயா, “”போலீசின் சட்டவிரோத அட்டூழியங்களுக்காகக்கூட அதனைத் தண்டித்துவிடக் கூடாது; அப்படித் தண்டித்தால், போலீசின் செயல்திறன் குறைந்து போகும்” என்ற பாசிச சிந்தனையைக் கொண்டவர்.  அ.தி.மு.க.வின் கடந்த (200106)  ஆட்சியின்பொழுது, கஜானா காலியாகிவிட்டதெனக் கூறி, மற்ற துறைகளைச் சேர்ந்த அரசு ஊழியர்களின் உரிமைகளையும் சலுகைகளையும் வெட்டிய ஜெயா, போலீசு துறைக்கு சலுகைகளையும் படிகளையும் உயர்த்தி வாரியிறைத்தார்.  கருணாநிதியைவிட, தான்தான் போலீசு துறையை நவீனமயமாக்கவும், போலீசாருக்கு வேண்டிய சலுகைகளை அளிக்கவும் பாடுபடுவதாகத் திரும்பத் திரும்பக் கூறி, போலீசின் விசுவாசத்தைத் தன் பக்கம் தக்கவைத்துக் கொள்ளும் கில்லாடி அவர்.

இந்த ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் குறித்த விவாதத்தின்பொழுது, போலீசு துறை மானியம் குறித்துப் பேசிய ஜெயா, தமிழக போலீசை நவீனப்படுத்தப் போவதாகக் கூறி, அதற்குக் கொம்பு சீவி விட்டார்.  இதற்கு அடுத்த இரண்டொரு நாட்களில்தான் பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது என்பது தற்செயலானதல்ல.  அத்துப்பாக்கிச் சூட்டை நடத்திய போலீசு அதிகாரிகளின் மீது வழக்குப் பதிவு செய்யவும், இத்துப்பாக்கிச் சூடு குறித்து நியாயமாக விசாரணை நடத்தவும் மறுத்துவருவதன் மூலம், தான் போலீசின் ஆள் என நிரூபித்திருக்கிறார்.  வீரப்பனைத் தேடுவது என்ற பெயரில் பாலியல் வன்முறைக் கொடுமைகளையும், போலி மோதல் படுகொலைகளையும் நடத்திய கிரிமினல் போலீசாரைத் தண்டிக்காததோடு, அவர்களுக்குப் பதவி உயர்வுகளையும், பணம், வீட்டு மனை  என சன்மானங்களையும் வாரி வழங்கியவர்தான், ஜெயா.  அவரது ஆட்சியில் போலீசார் மீது பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டபொழுது, அப்பெண்கள் பணத்திற்கு ஆசைப்பட்டு போலீசு மீது பழிபோடுவதாகக் கூறி, போலீசுக்கு வக்காலத்து வாங்கிய வக்கிரப் பேர்வழி அவர்.

அதனால்தான் தி.மு.க. ஆட்சியைவிட, பார்ப்பன  பாசிஸ்டான ஜெயாவின் ஆட்சியைத் தமது சொந்த ஆட்சியாகவே தமிழக போலீசு கருதிக் கொண்டுத் தலைகால் புரியாமல் ஆட்டம் போடுகிறது; துப்பாக்கிச் சூடு, கொட்டடிக் கொலை போன்ற அரசு பயங்கரவாத அட்டூழியங்களை எவ்விதத் தயக்கமும் இன்றி நடத்தத் துணிகிறது.

_________________________________________________

– புதிய ஜனநாயகம், நவம்பர் – 2011

_________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

ஜோசப் கண் மருத்துவமனையை கூண்டிலேற்றி HRPC சாதனை!

ஜோசப் கண் மருத்துவமனையை கூண்டிலேற்றி HRPC சாதனை!

2008-ஆம் வருடம்  பெரம்பலுர் ஜோசப் கண் மருத்துவமனை, விழுப்புரம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு மையம் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாமில் விழுப்புரம் மாவட்டம், நைனார் பாளையம், கடுவனுர் கிராமத்தை சேர்ந்த 66 பேர் தேர்வு செய்யப்பட்டு கண் புரை அறுவை சிகிச்சை செய்ததில் அனைவருக்கும் கண் பார்வை முழுமையாக பறிபோனது .மருத்துவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த செய்தியை சொல்லாமல் சொட்டு முருந்தும், வெள்ளை மாத்திரையும் கொடுத்து அனுப்பிவிட்டனர்.விஷயம் வெளியே தெரிந்தவுடன் தமிழுக அரசு அவசரமாக மருத்துவ  விசாரணை  குழு அமைத்து இழப்பீடாக தலா 1 லட்சம் கொடுத்து பிரச்சினையை சுமுகமாக மூடி விட்டது. அன்றைக்கு சுகாதார அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்.

மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் பல கிராமங்களுக்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து  உ்ணமைகள திரட்டி  மருத்துவர்கள் மீது வழக்கு பதிவுசெய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதிய இழப்ீடு ஜோப் மருத்துவமனை நிர்வாகம் தர வேண்டும் என தமிழக அரசுக்கு உரிய ஆதாரங்களுடன் புகார் மனு அனுப்பினோம். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாதிக்கப்பட்ட ஏழைகளை வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அரசின் செவிட்டு காதுகளுக்கு உரைக்க வில்லை.

சென்னை உயர்நீதிமன்றத்தில் மனித உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.ராஜீ சார்பில் பொது நல வழக்கு தாக்கல் செய்தோம். வழக்கறிஞர் சத்தியச்சந்திரன் ஆரம்பம் முதல் இந்த வழக்கை நடத்தி வருகிறார். முதலில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மற்றொரு கண்ணை சிகிச்சை அளிக்க உயர் மட்ட மருத்துவர்கள் குழு அமைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்திரவிட்டது. இரத்த அழுத்தம் உள்ளது, சர்க்கரை உள்ளது, பல் வலி இருக்கிறது, தலை ஆடுகிறது என பல பேர் கண்புரை சிகிச்சை செய்வதற்கு மருத்துவ ரீதியாக தகுதியற்று திருப்பி அனுப்பட்டார்கள். எழும்பூர் கண் மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பிறகு நீண்ட நாள் வழக்கு விசாரணைக்கு வராமல் இருந்த நிலையில் ஒரு கண் முழுவதும் பறிக்கப்பட்ட நிலையில் மற்றொரு கண் மங்கலான நிலையில் ஊட்டச்சத்து இல்லாமல் வயிரை மட்டுமே நிரப்பிய ஏழைகளின் முழு உருவ புகைப்படத்துடன் தலைமை நீதியரசருக்கு, “நடைபிணமாக வாழும் நாங்கள் பிணமாவதற்குள் வழக்கின் தீர்ப்பை தெரிந்து கொள்ள வேண்டும், எனவே எங்கள் வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும்” என மனு அனுப்பினோம். மக்கள் மன்றத்திலும் தொடர்ந்து போராடினோம்.

வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டு தலைமை நீதியரசர் சி.பி.ஜ க்கு மாற்றி  உத்திரவிட்டார். இந்த மனுவை ‌விசா‌ரி‌த்து தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் ‌பிற‌ப்‌பி‌த்த உத்தர‌வி‌ல்,

“பார்வை குறைபாட்டை கட்டுப்படுத்தும் தேசிய திட்டத்தின் கீழ் மத்திய அரசு தரும் நிதியுதவியுடன் இந்தத்திட்டம் மாவட்ட வாரியாக மாவட்ட கண்பார்வை குறைபாடு கட்டுப்பாட்டு சங்கம் மூலம் நடத்தப்படுகிறது. இந்த திட்டத்துக்காக 2008-09-ஆம் ஆண்டுக்காக ரூ.23.25 கோடியை தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கியது. திட்டத்தை செயல்படுத்த ஜோசப் கண் மருத்துவமனைக்கு பெரம்பலூர் மாவட்ட ஆ‌ட்‌சிய‌ர் அனுமதி அளித்துள்ளார். மத்திய அரசு ஒதுக்கிய ரூ.23.25 கோடியில் இருந்து, இந்த முகாமுக்கான செலவுக்காக மட்டும் ஜோசப் மரு‌த்துவமனைக்கு ரூ.1.15 கோடி தரப்பட்டு உள்ளது. இதை பார்க்கும்போது மிகுந்த அதிர்ச்சி ஏற்படுகிறது. இந்த தொகை எப்படியெல்லாம் செலவிடப்படுகிறது என்பதை எப்படி அரசு கண்காணிக்கிறது?  என்பதும் தெரியவில்லை.”

“இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட சில ஆவணங்களை பார்க்கும்போது, மாநில அரசு அதிகாரிகள் பலர், ஜோசப் மரு‌த்துவமனைக்கு இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் அனுமதி அளிக்கப்படுவதில் காரணமாக இருந்திருக்கின்றனர் என்பது தெரிகிறது. எனவே இலவச கண் முகாம் என்ற போர்வையில் இந்தப் பணத்தை சிலர் தவறான வழியில் கையாண்டிருக்கலாம் என்பதில் முகாந்திரம் உள்ளது.”

“மேலும் கண்புரை அறுவை சிகிச்சை செய்வதற்கு ஜோசப் மரு‌த்துவமனை தகுதியானதல்ல என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அப்படி இருக்கும்போது, பெரம்பலூர், அரியலூர் பகுதிகளிலும் முகாம் நடத்துவதற்கு இந்த மரு‌த்துவமனைக்கு பெரம்பலூர் மாவட்ட ஆ‌ட்‌சிய‌ர் எந்த சூழ்நிலையின் கீழ் அனுமதி அளித்தார்? என்பது புரியாத புதிராக உள்ளது.”

“எனவே ஆவணங்களையும் குற்ற முகாந்திரத்தையும் பார்க்கும்போது, இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரணைக்கு ஒப்படைப்பதே நல்லது என்று முடிவு செய்கிறோம். 65 பேருக்கு கண் பார்வை போனதற்கு மரு‌த்துவ‌ர்கள், அதிகாரிகளை பொறுப்பாளிகளாக்க வேண்டும். அந்த பொறுப்பாளிகள் மீது குற்ற வழக்கை சி.பி.ஐ. பதிவு செய்ய வேண்டும்.”

“மத்திய அரசு ஒதுக்கிய தொகையில் பெரும்பகுதி இந்த மரு‌த்துவமனைக்கு எந்த சூழலில் வழங்கப்பட்டது என்பதையும், அந்த பணம் எப்படியெல்லாம் செலவிடப்பட்டது என்பதையும் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்.” இதுதான் நீதிபதிகள் பிறப்பித்த உத்திரவு.

இந்த உத்திரவை எதிர்த்து ஜோசப் கண் மருத்துவமனை மருத்துவர்கள் உச்சநீதிமன்றம் போனார்கள். அங்கு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

நேற்று 15-11-11  மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. சி.பி.ஐ.தரப்பில் ஜோசப் மருத்துவமனை இயக்குனர் டாக்டர். நெல்சன் ஜேசுதாசன், துணை இயக்குனர் கே.அவ்வை, தலைமை நிர்வாகி.ஜே.கிறிஸ்டோபர் மற்றும் மருத்துவர்கள் அசோக், சௌஜன்யா, தென்றன், பொன்னுதுறை,ஆகியோர் மீது 37 r/w 325 இ.த.ச.படி (கொடுங்காயம் விளைவித்தல் ) குற்றப்பத்திரிக்கை திருச்சி தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என நீதிமன்றத்தில் அறிவித்தனர். தலைமை நீதியரசர் 66 பேர் கண் பார்வை பறி போனதற்கான குற்றம் நடந்துள்ளது. அதற்கான சாட்சிய முகாந்திரம் உள்ளதால் இடைக்கால நிவாரணமாக தலா ஒரு லட்சம் இழப்பீடு தரவேண்டும் என உத்திரவிட்டுள்ளார் (மொத்தம் 66 லட்சம்). இறுதி விசாரனணயின்போது இழப்பீடு எவ்வளவு என்பதை முடிவு செய்யலாம் என்று கூறி வழக்கை ஒத்தி வைத்துள்ளனர்.

இந்திய மருத்துவ துறை வரலாற்றில்  தவறாக சிகிச்சை அளித்ததற்காக மருத்துவர்கள் மற்றும் கார்ப்பரேட் மருத்துவமனை மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருப்பது இதுவே முதல் முறையாகும். தவறான சிகிச்சை அளித்த பின்பும்  விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், (தலைவர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு மையம்) அரசு மருத்துவர் , ஜோசப் மருத்துவமனைக்கு அதற்கான தொகையை கொடுத்துள்ளனர். சி.பி.ஐ., மருத்துவர் பிரபு மற்றும் ஆட்சியர் பழனிச்சாமி ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துறைத்துள்ளது.

ஏழைகளுக்கும் இதுபோல் அரிதாக சில நீதிகள் கிடைப்பதுண்டு. வழக்கு என்பது டைப்படித்த காகிதம் அல்ல அதற்கு உயிர், உணர்வு, அரசியல், போரட்டம், என பல பரிமாணங்கள் உண்டு என்பதை உலகுக்கு உணர்த்தினோம். உணர்த்துவோம்.  முழுமையான நீதி கிடைக்கும் வரை போராடுவோம்.

_______________________________________________________________

–          மனித உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு

__________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

ஏட்டையாவோடு ரேட்டு பேச புரட்சித்தலைவி வழங்கும் பிளாஸ்டிக் நாற்காலி!

13

“மாநிலத்தில் 43 புதிய திட்டங்கள் – முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பு”  இது நேற்றைய (15.11.2011) தினமணியின் தலைப்பு செய்தி. பக்கத்தை திருப்பினால், மூணாவது பக்கத்தில் காவல் துறைக்கு 34 புதிய திட்டங்கள் என்று இருந்தது. அம்மாவின் ராசி நெம்பர் 7 ஆக மாறிவிட்டது போலிருக்கிறது. 0 ஆக மாறாதவரை கவலை இல்லை. அது கிடக்கட்டும். திட்டங்களுக்கு வருவோம்.

அண்ணா நூலகத்தை மூடுவது, மக்கள் நலப்பணியாளர் நீக்கம் போன்ற திட்டங்களை இப்பத்தானே அம்மா அறிவிச்சாங்க, அதுக்குள்ள புதுசா 43 திட்டமா? இதே வேகத்தில் போனால் அடுத்த சில நாட்களிலேயே அன்புச் சகோதரர் மோடியின் குஜராத்தை அம்மா விஞ்சிவிடுவார் போலிருக்கிறதே என்று பயந்தபடியே தினமணி வெளியிட்டிருந்த திட்டங்களின் விவரத்தைப் பார்த்தேன்.

“பெரியகுளம் – கொடை ரோடு சாலையை விரிவுபடுத்துவது குறித்து ஆராயப்படும்.

“காரமடை வழியாக உதகைக்குப் புதிய வழித்தடம் குறித்த சாத்தியக்கூறுகள் ஆராயப்படும்.

“கனரக வாகனங்கள் செல்வதற்கு ஏற்ற வகையில் சாலைகள் அமைப்பது தொடர்பாக அந்த மாவட்டத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

இதுக்குப் பேரெல்லாம் திட்டமாய்யா? இதை திட்டம்னு எழுதிக்கொடுத்திருக்கானே அவனெல்லாம் ஐஏஎஸ் ஆப்பீ..சரா என்று நாம் நினைக்கலாம். ஆப்பீசர் பிரச்சினை ஆப்பீசருக்குத்தான் தெரியும். கலெக்டர்கள் மாநாடு முடிஞ்சு எல்லாரும் கிளம்பற நேரத்தில “என்ன பண்ணுவீங்களோ தெரியாது. கூட்டுனா 7 வர மாதிரி அறிவிப்பு வெளியிடணும்”னு ஜோசியர் கிட்டேர்ந்து உத்தரவு வந்திருக்கும். சரி சீக்கிரம் திட்டத்தை தயார் பண்ணுங்கப்பான்னு உத்தரவு போட்டிருப்பார் தலைமைச் செயலர்.

அரை மணி நேரத்தில் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் தலா 100 புதிய திட்டங்களை தரவேண்டும் என்று திட்ட இலக்கு தீர்மானித்திருப்பார்கள். “கலெக்டர் ஆபீசுக்கு ஒட்டடை அடிப்பது, தாலுகா ஆபீசுக்கு சுண்ணாம்பு அடிப்பது, டவாலியின் மீசைக்கு டை அடிப்பது” உள்ளிட்ட நூற்றுக்கணக்கான திட்டங்கள் மாவட்டம் தோறும் வந்து குவிந்திருக்கும். எல்லாமே நல்ல நல்ல திட்டங்களாக இருந்தாலும், திட்டங்களை ஆயிரக்கணக்கில் அறிவித்தால் மக்கள் ஞாபகம் வைத்துக் கொள்ள மிகவும் கஷ்டப்படுவார்கள் என்பதுடன், அவற்றை வெளியிடுவதற்கு பேப்பர் செலவும் ரொம்ப அதிகமாகும் என்பதை தினமணி ஆசிரியர் எடுத்துச் சொல்லியிருப்பார். எனவே எல்லாவற்றையும் வடிகட்டி 43 திட்டங்களை மட்டும் வெளியிட்டிருப்பார்கள்.

அடுத்தது காவல்துறை. காவல் துறைக்காக முதல்வர் அறிவித்திருக்கும் 34 புதிய திட்டங்களில் முதல் திட்டம் இது.

“பெண்கள் உள்ளிட்ட குற்றஞ்சாட்டப்பட பலரும் காவல் நிலையங்களுக்கு வரும் போது அவர்கள் அமர்வதற்கு வசதி இல்லை. எனவே, ஆயிரத்து 492 காவல் நிலையங்களுக்கு ரூ.1 கோடி செலவில் தலா 10 பிளாஸ்டிக் இருக்கைகள் வழங்கப்படும். இது, நாட்டிலேயே முதல் முறையாக செயல்படுத்தப்படும் திட்டமாகும்.”

போலீசு ஸ்டேசனுக்கு மக்கள் போனால் உட்கார வைப்பதில்லை என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அது ஏன் என்று நாம் யாராவது சிந்தித்திருக்கிறோமா? புரட்சித்தலைவி சிந்தித்திருக்கிறார். போலீசு அதிகாரிகள் விரும்பினாலும், அப்படி ஒரு மரியாதையை குடிமக்களுக்கு அவர்களால் வழங்க முடியவில்லையே ஏன், என்று ஆழ்ந்து சிந்தித்திருக்கிறார். தேவையான நாற்காலிகள் ஸ்டேசனில் இல்லாததுதான் இதற்குக் காரணம் என்ற உண்மையை இந்தியாவிலேயே முதலாவதாக புரட்சித்தலைவிதான் கண்டு பிடித்திருக்கிறார். கண்டு பிடித்ததோடு மட்டுமின்றி, நாற்காலிகளை வழங்கும் திட்டத்தையும் உடனே அறிவித்து விட்டார். இந்திய துணைக்கண்டத்தில் போலீசு நிலையத்திலேயே நாற்காலி போட்ட முதல் மாநிலம் தமிழகம்தான் என்பது மட்டுமல்ல, உலகத்திலேயே போலீசு ஸ்டேசனில் பிளாஸ்டிக் நாற்காலி போடப்பட்டிருப்பது தமிழகத்தில் மட்டும்தான் என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

புரட்சித் தலைவி வழங்கும் பிளாஸ்டிக் நாற்காலிகளை, எஸ்.ஐ இன் மேசைக்கு எதிரில் போடுவார்களா, அல்லது லாக் அப்புக்கு உள்ளே போடுவார்களா என்பது தெரியவில்லை.

எப்படியானாலும் இந்த நாற்காலி திட்டம் ஒரு பல நோக்குத் திட்டம் என்பதை மறுக்க முடியாது. வாரம் இரண்டு லாக் அப் கொலைகள் என்று இந்தியாவிலேயே முதல் இடத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது தமிழகம். குற்றம் சாட்டப்பட்டவர்களை உட்கார வைத்து விசாரிப்பதற்கு மட்டுமின்றி, தேவைப்பட்டால் அவர்களைத் தூக்கித் தொங்க விடுவதற்கும் இந்த நாற்காலிகள் போலீசு அதிகாரிகளுக்குப் பயன்படும்.

போலீசுக்கு அறிவிக்கப்பட்டுள்ள மேலும் இரு திட்டங்களும் இங்கே குறிப்பிடத்தக்கவை.

“சாலை விபத்துகளில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்துக்கான நிவாரண நிதி ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்படும். மேலும், கடுமையான காயம் அடைந்தவர்களுக்கு நிவாரண நிதி ரூ.30 ஆயிரமாக அதிகரிக்கப்படும்”.

“விபசாரத்தில் இருந்து மீட்கப்படுவோரின் வாழ்வாதரம் மேம்படவும், நிவாரணம் பெறவும் ரூ.10 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படும்”

இவற்றை காவல்துறைக்கான புதிய திட்டமாக குறிப்பிட்டிருப்பது ஏன் என்று வாசகர்கள் குழம்பக்கூடும். விபத்தில் உயிரிழப்போரும் விபச்சாரத்திலிருந்து மீட்கப்படுவோரும் காவல்துறையினர் என்ற பொருளில் இத்திட்டத்தை நிச்சயம் அறிவித்திருக்க மாட்டார்கள். மேற்படி தொகைகளை முழுமையாகவோ, பகுதியாவோ விழுங்க விருப்பவர்கள் காவல்துறையினர்தான் என்பதனால் இவற்றையும் காவல்துறைக்கான நலத்திட்டப் பட்டியலில் எதார்த்தமாக சேர்த்துவிட்டார்கள் போலிருக்கிறது.

இருப்பினும் “லஞ்சத்தை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது” என்று போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார் முதல்வர். ஆகவே, இனி காவல் நிலையத்துக்கு செல்லும் குடிமக்கள், உள்ளே நுழைந்தவுடன் முதல்வரின் பிளாஸ்டிக் நாற்காலி எங்கே என்று கேட்டு அதில் படையப்பா ஸ்டைலில் அமர்வதுடன், லஞ்சம் கேட்டால் முதல்வரின் மேற்படி வசனத்தைப் பேசிக் காட்டுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

__________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தினமணிதான் இந்துமுன்னணி! – வைத்தி மாமாவின் ஒப்புதல் வாக்குமூலம்!!

19
தினமணிதான் இந்துமுன்னணி! - வைத்தி மாமாவின் ஒப்புதல் வாக்குமூலம்!!

தினமணிதான் இந்துமுன்னணி! - வைத்தி மாமாவின் ஒப்புதல் வாக்குமூலம்!!

தினமலர் மக்கள் விரோத பார்ப்பனியப் பத்திரிகை, தினமும் மலத்தை தள்ளுகிற பத்திரிகை என்பது ஊரறிந்த ஒன்று. ஆனால் தினமணி என்றால் நடுநிலைமையான பத்திரிகை என்று பல மிடில் கிளாஸ் மாதவன்கள் கருதுகிறார்கள். அது உண்மையல்ல என்பதற்கு சமீபத்திய சான்று.

புரட்சித் தலைவியின் புகழ் பாடுவதில் தினமணி ஆசிரியர் வைத்தி (வைத்தியலிங்கம்) மாமாதான் தமிழ் ஊடகங்களிலேயே டாப்பு. அண்ணா நினைவு நூற்றாண்டு நூலகத்தை பாசிச ஜெயா மூட உத்திரவிட்ட போது அதை மயிலிறகால் வருடியவாறு செல்லமாக கண்டிப்பது போலக் காட்டிக் கொண்டு பின்னர் அந்த நூலகம் கட்டியதில் மாபெரும் ஊழல் நடந்திருப்பதாக பாசிச ஜெயாவே யோசிக்காத கோணத்திலெல்லாம் எடுத்துக் கொடுத்து நத்திப் பிழைப்பதில் இந்த மாமா பலே கில்லாடி. அப்பேற்பட்ட வைத்தி மாமா 12.11.2011 தினமணி தலையங்கத்தில் “ஏனிந்த பயம்” என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

மாலத்தீவில் மன்மோகன் சிங்கும், பாக் பிரதமர் கிலானியும் சமீபத்தில் சந்தித்து “புதிய உறவு, புதிய இணக்கம்” என்பது போல டெம்பிளேட் டைப் ராஜதந்திர வார்த்தைகளை உதிர்த்தார்கள். இதெல்லாம் மூன்று மாதத்திற்கு ஒரு முறை நடக்கும் சடங்கு சந்திப்புகள். இதைப் போய் புதிய அத்தியாயம் என்றெல்லாம் பாராட்டுகிறார் வைத்தி மாமா. தொட்டதுக்கெல்லாம் பாக்கை கரித்து கொட்டும் இந்துமதவெறியர்களின் கோயபல்சான தினமணி இப்படி எழுதியிருப்பது ஆச்சிரியமாயிருக்கிறதே என்று சிலர் நினைக்கலாம். இல்லை அதன் பிறகு வருகிறது மேட்டர்.

பாகிஸ்தான் அமைச்சர் ரஹ்மான் மாலிக் ” கசாப் குற்றவாளிதான், நீங்கள் தூக்கில் போடலாம்” என்று பேசியிருப்பதை குறிப்படுகிறார் வைத்தி. இது உண்மையிலேயே பேசப்பட்ட வார்த்தையா, இல்லை வெறும் நடிப்பா என்று எகத்தாளம் வேறு. இருந்தும் பாக்குடன் ஒத்து வாழ்வதுதான் சாலச்சிறந்தது என்று சாணக்கியத்தனமான பாசங்கு வேறு. இதே போல் சம்ஜூத்தா விரைவு வண்டி குண்டு வெடிப்பிற்கு காரணாமான குற்றவாளிகளை தூக்கில் போடுமாறு வைத்தி மாமா கோரவில்லை. என்ன இருந்தாலும் பாகிஸ்தானியின் உயிருக்கு மதிப்பில்லை அல்லவா?

பாகிஸ்தானை பகடி செய்தவாறே இந்தியா பாக் உறவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் மாமா பிறகு நைசாக தனது மதவெறியை சொருகுகிறார். அதாவது கடந்த ஒரு மாதத்தில் பாக்கில் உள்ள சிறுபான்மை மக்களான இந்துக்களை தாக்கி மூன்று சம்பவங்கள் நடந்திருக்கின்றனவாம். முதலாவதாக சிந்து மாகாணத்தில் உள்ள சிக்கர்பூர் அருகே இந்து மதத்தைச் சேர்ந்த நான்கு மருத்துவர்கள் ஒரே நாளில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனராம்.

இதற்கு அமெரிக்காவே கண்டனம் தெரிவித்தாலும் இந்தியா கண்டனம் தெரிவிக்காமல் மௌனமாக இருக்கிறதாம். கேட்டால், “இறந்தவர்கள் இந்தியர்கள் அல்ல; பாகிஸ்தானியர்கள். பாகிஸ்தானில் யாரோ பாகிஸ்தானியர் சுட்டு இறந்ததற்கு நாம் என்ன செய்ய முடியும்?” என்கிற பதிலை முன்வைக்கிறதாம் இந்திய வெளிவிவகாரத் துறை. இதற்காக இந்தியாவை ஆவேசமாகக் கண்டிக்கிறார் வைத்தி மாமா.

பாக்கில் கொல்லப்பட்ட நான்கு மருத்துவர்களுக்காக இந்தியா கண்டிக்கவில்லை என்பதை தந்திரமாக மதச்சாயம் பூசி மடைமாற்றுகிறார் வைத்தி மாமா. முதலில் பாக்கில் சிறுபான்மை இந்துக்களை விட பெரும்பான்மை முசுலீம் மக்கள்தான் அன்றாடம் மசூதியில், கடைத்தெருவில், லாகூரில், கராச்சியில், எல்லைப்புற மாகாணங்களில் பல பத்துக் கணக்கில் கொல்லப்படுகின்றனர். அமெரிக்காவின் கைப்பிள்ளையாய் காலம் கழித்து, பழமைவாதிகளை வளர்த்து விட்ட திருப்பணிக்கு பாகிஸ்தான் விலைமதிப்பற்ற மக்கள் உயிரை பயங்கரவாதத்திற்கு பலி கொடுத்து வருகிறது. இது தனிக் கதை.

ஆனால் இதை ஒட்டு மொத்த சூழ்நிலையில் வைத்துப் பார்க்காமல் நைசாக நான்று இந்து மருத்துவர்கள் மட்டும் கொல்லப்பட்டதாக காட்ட வேண்டிய அவசியம் என்ன? இதுதான் பார்ப்பனிய நரித்தந்திரம். கண்டிப்பதாக இருந்தால் இந்திய அரசு, பாக்கில் கொல்லப்படும் அனைத்து மக்களுக்காவும் பேசுவதாகத்தானே கோர வேண்டும்? மனித உயிரில் முசுலீம் உயிரை விட இந்து உயிர் உசத்தி என்பதுதான் வைத்தி மாமாவின் கருத்து.

இதன் மூலம் மறைமுகமாக இந்தியா ஒரு இந்து நாடு, உலகில் இந்துக்கள் எங்கே கொல்ப்பட்டலும் சீறி எழவேண்டிய நாடு என்பதாக வாசக மனதில் நஞ்சை தடவுகிறார்.

இது கூடப்பரவாயில்லை, இதற்கு அனுபந்தமாக வைத்தி கூறியிருப்பது கவனிக்கத் தக்கது. அதன்படி, “இந்தியாவில் ஏதாவது ஒரு இஸ்லாமியரை நிலத்தகராறில் ஒரு இந்து தாக்கியதாக இருந்தாலும் கூட அதை மத ரதீயான தாக்குதலாக பாகிஸ்தான் வர்ணிக்கும் போது, நியாயமான ஒன்றுக்குக்கூட நாம் கண்டனம் தெரிவிக்க பயப்படுகிறோமே, ஏன்?” என்று நரித்தனமாக கேட்கிறார் வைத்தி.

இதன் மூலம் இந்தியாவில் இசுலாமியர்கள் யாரும் சல்லிசாக கொல்லப்படவில்லை என்பதோடு அதை பாகிஸ்தான்தான் மிகைப்படுத்துவதாக உறுமுகிறார் நமது வைத்தி. வட இந்தியாவில் இசுலாமிய மக்கள் கொல்லப்படாத நகரங்களோ, கலவரங்களோ இருக்கிறதா? இசுலாமிய மக்கள் காக்கை குருவிகள் போல கொல்லப்படும் இந்தியாவில் அப்படி ஒன்று இல்லை என்பதாக சித்தரிப்பதற்கு எத்தனை வன்மம் வேண்டும்?

இந்திய அரசு எந்த இந்தியர்களுக்காக கவலைப்படுகிறது? வளைகுடாவிலும், மலேசியாவிலும் ஏழை இந்தியர்கள், தாக்கப்படும்போது கண்டித்திருக்கிறதா? இல்லை வைத்தி உள்ளிட்ட ஊடக முதலாளிகள்தான் அதற்காக இந்திய அரசைக் கண்டித்திருக்கின்றனரா? தாக்கப்பட்ட ஏழை இந்தியர்களில் ‘இந்துக்கள்’ இல்லையா? ஆஸ்திரேலியாவில் தாக்கப்பட்ட பணக்கார இந்துக்களுக்கு குரல் கொடுக்கும் வைத்தி வைகையறாக்கள் இப்போது பாகிஸ்தான் இந்துக்களுக்காக குரல் கொடுப்பது பச்சையான முதலைக் கண்ணீரில்லையா? அதுவும் இசுலாமிய வெறுப்பை வளர்த்து இந்து ராஷ்டிரம் அமைக்க முயலும் இந்துமதவெறியர்களின் நலனுக்கான ‘கண்ணீர்’ எனும் போது வைத்தியின் மாமாவின் சகுனி வேலையை புரிந்து கொள்ளலாம்.

பாகிஸ்தான் குறித்து தினமணியின் அடுத்த கவலையைப் பார்க்கலாம். அமெரிக்க அரசின் ஆய்வுக்குழு ஒன்று தனது அறிக்கையில், பாகிஸ்தான் பள்ளிப் பாடநூல்களில், இந்து மதம், கிறிஸ்தவ மதம் இரண்டையும் பற்றித் தவறான, மத துவேஷத்தை ஏற்படுத்துகிற தகவல்கள் இருப்பதாக தெரிவித்திருக்கிறதாம். பாகிஸ்தானில் 2 விழுக்காடு இந்துக்கள், 1 விழுக்காடு கிறிஸ்துவர்கள், அதே அளவு சீக்கியர்கள் வசித்தாலும், பாகிஸ்தானின் வளர்ச்சிக்கும் கலாசாரத்துக்கும் இவர்களது பங்களிப்பு பற்றி பாடநூல்களில் ஒன்றுமே குறிப்பிடப்படவில்லை என்றும் அந்த அறிக்கை சொல்கிறதாம்.

முசுலீம்களை அழித்து விட்டு இந்து ராஷ்டிரத்தை தோற்றுவிப்பதற்கு கூட இந்துமதவெறியர்களுக்கு அமெரிக்காவின் உதவி தேவைப்படுகிறது போலும். இந்தியாவில் கிறித்தவ மிஷனரிகள் மதமாற்றம் செய்கிறார்கள், பண்பாட்டை சிதைக்கிறார்கள் என்று கூப்பாடு போடுபவர்கள், அமெரிக்கா என்றதும் அது கிறித்தவ அமெரிக்கதான் என்றாலும் அடக்கி வாசிப்பதன் காரணம் ஏகாதிபத்திய விசுவாசிகளாக இருப்பதுதான். விசுவ இந்து பரிஷத் தலைவர் பாபர் மசூதி இடித்த சமயத்தில் பில் கிளிண்டனை முசுலீம்களை ஒழிக்க வந்த கிருஷ்ண பரமாத்மா என்று வாழ்த்தி எழுதிய கடிதம் அதற்கோர் ஆதாரம்.

முதலில் வரலாறு, பண்பாடு குறித்த நேர்மை எதுவும் அமெரிக்காவில் இல்லை. இரண்டாம் உலகப்போரில் சோவியத் யூனியனின் பங்கை முழுவதும் இருட்டடிப்பு செய்துதான் அங்கு கற்றுக் கொடுக்கிறார்கள். ஹாலிவுட் படமாகவும் எடுக்கிறார்கள். உலகப்போர் தொடர்பான அருங்காட்சியகத்தில் கூட ரசியா என்ற பெயரைக்கூட பார்க்க முடியாது. இப்பேற்பட்ட உலகரவுடியிடம்தான் வைத்தி மாமா தனக்கான ஆதரவை கண்டெடுக்கிறார்.

பாகிஸ்தானின் இந்து மத துவேஷத்திற்கு வைத்தி மாமா காட்டும் ஆதாரம் என்ன? அங்குள்ள பாடநூல்களில் “கடவுள் மறுப்பை ஏற்றுக் கொள்கிற மதம் இந்து மதம்” என்று தவறாக இருக்கிறதாம். இது குறித்து அங்குள்ள இந்துச் சிறுபான்மையினர் குரல் கொடுக்க முடியவில்லையாம். என்னதான் பாரதப்பண்பாட்டை காக்க வைத்தி மாமா சீன் போட முயன்றாலும் இந்து மதத்தின் ‘பேசிக் நாலட்ச்’ கூட தெரியாத அசட்டு மாமாவாக இருக்கிறாரே?

வேதத்தை ஏற்றுக் கொண்டு கடவுளை மட்டும் ஏற்காதவன் நாஸ்திகன்; வேதத்தையும், கடவுளையும் ஏற்றுக்கொள்பவன் ஆஸ்திகன். வேதத்தையும், கடவுளையும் ஒருசேர ஏற்காதவர்கள்தான் சாருவாகனர்கள் போன்றோர். நாம் நடைமுறையில் பயன்படுத்தும் நாத்திகம் என்ற சொல்லும் அப்படி இரண்டையும் மறுப்பவர்களைக் குறிக்கின்றன என்றாலும் பார்ப்பனிய இந்து மதத்தின் அளவு கோலின் படி நாஸ்திகன் என்றால் மேலே சொன்ன பொருள்தான். அதன்படி பாகிஸ்தானின் பாட நூல்கள் குறிப்பிட்டிருப்பது சரிதான். பாய்கள் இந்துமதத்தை சரியாக புரிந்து வைத்திருக்கும்போது, அம்பிகள் இப்படி அசட்டு பிசட்டு அம்மாஞ்சிகளாய் இருக்கிறார்களே?

வைத்தி மாமா தமிழகச் சூழலில் வளர்ந்தவர் என்பதால் இந்துமதவெறியர்கள் கட்டோடு வெறுக்கும் பெரியார், திரவிட இயக்கங்களின் நாத்திகம் என்ற சொல் அவரையும் வதைத்திருக்கும். அந்த வெறுப்பை பாகிஸ்தானுக்கும் நாடு கடத்துகிறார். எனினும் இந்த முட்டாள்தனத்தை வெறும் அறியாமை என்று பார்ப்பதை விட அவரது சகுனியாட்டத்தின் பரிமாணமாகவே புரிந்து கொள்ள வேண்டும். அதனால்தான் இந்த பாடநூல் விவகாரத்தை அமெரிக்கா கண்டிக்கும்போது இந்து மதத்தின் தாயகமான இந்தியா கண்டிக்கவில்லை என்று சகுனி வருத்தப்படுகிறார்.

அந்தப்படிக்கு இந்துமதத்தின் தாயகமான இந்தியாவில் இந்து மதத்தை விமரிசிக்கும் அம்பேத்கார்,பெரியார், கம்யூனிஸ்ட்டுகளை ஏன் நாடு கடத்தவில்லை என்றும் அவரது கேள்வியை நாம் புரிந்து கொள்ளலாம்.

பாகிஸ்தானில் இந்துக்கள் மீதான மூன்றாவது தாக்குதலாக வைத்தி மாமா குறிப்பிடுவதை பார்க்கலாம்.

“பெஷாவர் நகருக்கு அருகே கோரக்நாத் கோயில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு தீபாவளி தினத்தன்று திறக்கப்பட்டு, நூற்றுக்கணக்கில் இந்துக்கள் கூடி வழிபட்டனர். ஆனால், அன்றைய தினமே பூட்டிச் சாவியை நீதிமன்றத்திடம் ஒப்படைத்துவிட்டார்கள். இக்கோயில் யாருக்குச் சொந்தம் என்பதில் சீக்கியர்-இந்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில் அரசு தலையிட்டு பூட்டி விட்டது. சரி, புதிய கோயிலைக் கட்டிக்கொள்ளலாம் என்றால் அதுபற்றி நினைத்துப் பார்க்கவும் முடியாத நிலைமை.”

உப்பு பெறாத விசயங்களைக்கூட எப்படி லென்ஸ் வைத்து தேடி ஊதிப்பெருக்குகிறார்கள்? இதில் பாகிஸ்தான் அரசு என்ன தவறு செய்தது? ஒரு கோவிலை இரண்டு தரப்பினர் தங்களுக்கு சொந்தம் என்று அடித்துக் கொள்ளும் போது எந்த அரசும் இதைத்தானே செய்திருக்க முடியும்? கோவிலுக்கு சொந்தம் யார் என்று தீர்ப்பு வரும் வரைக்கும் இதுதானே நியதி?

சீக்கிய மதம் இந்து மதத்தின் உட்பிரிவுதான் என்று ஆர்.எஸ்.எஸ் அம்பிகள் தமது ஷாகாக்களில் பெருமையுடன் பீற்றித்திரிவார்கள். ஆனால் அதை மறுத்து சில ஆண்டுகளுக்கு முன்னர் சீக்கியர்கள் போராடிய போது ஆர்.எஸ்.எஸ் தனது பெருமையை வாபஸ் வாங்கிக் கொண்டு மன்னிப்பு கேட்டது. இருப்பினும் புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம் அனைத்தும் இந்து மதத்தின் கிளைகள் என்பதுதான் அவர்களது பெரியண்ணன் சிந்தனை. குறிப்பிட்ட இந்த சம்பவத்தில் இது இந்துக் கோவில் என்றுதான் வைத்தி வாதிடுகிறாரே ஒழிய உரிமையில் போட்டி போடும் சீக்கியரை அவர் இந்துவாக கருதவில்லை.

கணக்கு காட்ட மட்டும் சீக்கியர்கள் இந்துக்கள் என்பதுதான் அவர்களது செயல்தந்திரம். போகட்டும். நீதிமன்றத் தாவா பிரச்சினையில் இருக்கும் ஒரு சொத்து விவகாரத்தைக்கூட பாகிஸ்தானில் இந்துக்கள் தாக்கப்படுகிறார்கள் என்று பூதாகரமாக காட்டுவது எத்தனை அயோக்கியத்தனம்? இது தினமணி மட்டுமல்ல, இந்தியாவின் கார்ப்பரேட் ஊடகங்கள் அனைத்தும் பரப்பி வரும் விசமப் பிரச்சாரம்தான்.

இந்த மூன்று விசயங்களையும் குறிப்பிட்டு பாகிஸ்தானில் இந்துக்கள் அல்லும் பகலும் தாக்கப்படுவதாக வைத்தி மாமா புனைந்திருக்கும் கதைகளின் யோக்கியதை இதுதான். இறுதியில் வைத்தி மாமா இந்தியா ஒரு இந்து தேசமாக இருந்தாலும் அப்படி அறிவித்துக் கொள்ளாமல் மதசார்பற்ற நாடு என்று அறிவித்துக் கொண்ட நாடு என்பதால் நம்மைப் போன்று பாகிஸ்தான் எனும் மதச்சார்பு உள்ள நாடை ஒப்பிடக்கூடாது என்கிறார். இது பெருந்தன்மை என்று வேறு பில்டப் கொடுக்கிறார்.

கடைசியில்,”  இந்தியா மதச்சார்பற்ற நாடு என்கிற ஒரே காரணத்துக்காக, இதுபற்றி எல்லாம் நாம் பேசக் கூடாது, கேள்வி எழுப்பக்கூடாது என்பதை இந்தியாவில் வாழும் இஸ்லாமிய சகோதரனேகூட ஏற்றுக்கொள்ள மாட்டான். நமது மத்திய அரசு மட்டும்தான் மௌனம் சாதிக்கும். இதற்குப் பெயர் முதுகெலும்பு இல்லாமையே தவிர, மதச்சார்பின்மை அல்ல!” என்று சாபம் கொடுக்கிறார்.

இதில் நாம் பேசக்கூடாது என்பதை இசுலாமிய சகோதரன் கூட ஏற்றக் கொள்ளமாட்டான் என்ற வாக்கியத்தை உற்று நோக்குங்கள். அந்த நாமில் இசுலாமிய மக்கள் இல்லை. எனில் அந்த நாம் யார்? இந்துக்கள்தானே? அதன்படி நாமென்றாலும், இந்தியா என்றாலும் இந்துக்களைத்தான் குறிக்கிறது என்பதை வைத்தி மாமா ஒப்புக்கொள்கிறார். இப்படி பச்சையாக இந்து நாடாக இருக்கும் போது மதச்சார்பற்ற எனும் நாகரிகப்பட்டம் எதற்கு வைத்தி சார்?

முதலில் இந்து மதம் என்பது ஒரு மதமில்லை. அது சாதிகளை கட்டுக்கொப்பாக வைத்து நடத்தும் ஒரு கிரிமினல் நிறுவனம். மேலும், “இந்துக்கள்” என்ற பதத்தில் இந்தியாவில் உள்ள பெரும்பான்மை உழைக்கும் மக்களான சூத்திர – பஞ்சமர்கள் வரமாட்டார்கள். மீதியிருக்கும் சிறுபான்மை ‘மேல்’சாதியினர்தான் இந்துக்கள். இந்த இந்துக்களை எதிர்த்து சூத்திர பஞ்சம உழைக்கும் மக்கள்  நடத்திய போராட்டத்தின் பலனாகத்தான் இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருக்கிறது. பார்ப்பனிய எதிர்ப்பு போராட்டத்தில் வந்த உரிமையை இந்துக்களின் பெருந்தன்மை என்று பேசுவதற்கு காரணம் முசுலீமை எதிர்க்க சூத்திர பஞ்சம மக்களை இணைத்து கணக்கு காட்டும் தந்திரம்தான்.

ஆக, வைத்தி என்னதான் துள்ளிக்குதித்தாலும் இந்தியாவில் ‘இந்துக்கள்’ என்போர் சிறுபான்மைதான். இந்த சிறுபான்மைதான் இன்றுவரை இந்தியாவை ஆள்கிறது. அந்தச் செருக்கில்தான் பாகிஸ்தான் வரை சென்று வைத்தி மாமா லென்சை வைத்து செய்திகளை ஊதிப்பெருக்கி துவேஷத்தை வளர்க்க முடிகிறது. தினமணிதான் இந்து முன்னணி என்பதை இப்போதாவது ஒத்துக் கொள்கிறீர்களா?

___________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

பிஞ்சுக் குமரிகள்!

பிஞ்சுக் குமரிகள்!

பி.பி.சி. செய்திப்படம்: “சாயம் பூசப்பட்ட குழந்தைகள்!”

”சிவகாசி மழலையர் வாழ்வைப் பறிக்கும் பட்டாசுகளைக் கொளுத்தாதீர்கள்” என விழாக் காலங்களில் தன்னார்வக் குழுக்கள் ஊர்வலம் நடத்துகின்றன. நகரத்துக் குப்பைகளில் மக்காச் சோளத்தைப் பொறுக்கும் ஆப்பிரிக்க  எலும்புக் குழந்தைகளைக் காண்பித்து ஐ.நா.யுனிசெஃப் நிறுவனம் இவர்களின் பசியைத் தணிக்க நன்கொடை திரட்டுகிறது. நமது நாட்டு ஏழைக் குழந்தைகளைப் பற்றி இவர்கள் அடையும் கவலைகள் ஒருபுறமிருக்கட்டும். மத்தாப்பூ தயாரிக்கும் ஏழ்மையோ, மக்காச் சோளம் பொறுக்கும் அவலமோ இல்லாத இவர்களுடைய அமெரிக்கக் குழந்தைகளைப் பற்றி நாம் கவலைப்படுவோம்!

அமெரிக்காவின் அட்லாண்டா நகரத்தில் சிறுமிகளுக்காக நடத்தப்படும் அழகிப் போட்டி ஒன்றைப் பற்றி, செய்திப் படமொன்றை பி.பி.சி. ஒளிபரப்பியது. ஜேன் ட்ரேஸ்  தாயரித்திருக்கும் இக்குறும் படத்தின் பெயர் ‘பெயின்ட்ட பேபீஸ்’ (Painted Babies: சாயம் பூசப்பட்ட குழந்தைகள்)

பிஞ்சுக் குமரிகள்!

பாடிக் கொண்டே, சுறுசுறுப்பாய் மூன்று சக்கர சைக்கிளை ஓட்டும் ஆசியா ஒரு ஐந்து வயதுச் சிறுமி. அட்லாண்டாவில், சதர்ன் சார்ம் நிறுவனம் நடத்தும் அழகிப் போட்டிக்குப் பயிற்சி எடுக்கும் அவளுக்கு இப்படி விளையாடுவதற்கான நேரம் கிடைத்ததே அரிது.

அவள் மட்டுமல்ல மொத்தக் குடும்பமும் போட்டிக்கான ஆயத்தங்களில் மூழ்கியிருக்கிறது. சிறுமியின் பாட்டி மேரி பழைய பத்திரிகைகளில் அழகுக் குறிப்புகளைச் சேகரிக்க, தாய் கிம்மான்சூர் (முன்னாள் விளம்பர நடிகை) ஆடை ஆபரணங்களைச் சரிபார்க்க, இருவருக்கும் தந்தை ஃபூ மான்சூர் உதவி செய்கிறார். தேர்வுக்குக் கண் விழித்துப் படிக்கும் குழந்தைகளுக்கு, கண் விழித்து ஹார்லிக்ஸ் கொடுக்கும் நம்மூர் பெற்றோரை விட இக்குடும்பத்தின் ‘தியாகம்’ அளப்பரியது.

அன்னநடைக்கான பயிற்சி, முகபாவனை, சிரிப்பு, பாட்டு என ஆசியாவின் ஒரு நாள் என்பதே பல பயிற்சிகளின் அட்டவணை! ஊன், உறக்கம் மறந்து மகளுக்காக அம்மா படும் அவஸ்தையை என்னவெனபது? சாப்பாட்டு மேசையிலும் மகளுக்குப் பாட்டுப் பயற்சியை நடத்தும் கிம் மான்சூரின் கண்களில் தெரியும் அந்த லட்சிய வெறி, நமக்குத் திகிலுட்டுகிறது. சிறுமி ஆசியாவிடம் பேட்டியாளர் கேட்கிறார், ”நீ எதற்காகப் போட்டியில் கலந்து கொள்கிறாய், எதிர்காலத் திட்டம் என்ன?”. “நிறைய பணம் வேணும், கார் வேணும், பங்களா வேணும், இன்னும் நிறைய நிறைய பணம், அவ்வளவுதான்” ஒரு ஹாலிவுட் நடிகையைப் போல வேகமாகப பேசி முகமசைத்துக் கை விரிக்கிறாள் அந்தச் சிறுமி.

***

ப்ரூக், ஆசியாவுடன் போட்டி போடும் மற்றொரு சிறுமி, ஏற்கெனவே உள்ளூர்ப் போட்டியில் நான்கு இலட்சம் ரூபாய் வென்றவள், தேசியப் போட்டிக்குத் தயாராகிறாள். பாட்டி பாம் ப்ரட்வெல் நடத்தும் அழகு நிலையத்திலேயே பேத்தியும் அமெரிக்க பார்பி பொம்மையைப் போல மெருகேற்றப்படுகிறாள். மகளுக்குத் தெற்றுப் பல். அதனால் பல்லைக் காட்டாமலேயே இளிப்பதற்கு தாய் பயிற்சி கொடுக்கிறாள். பாடல் பயிற்சிக்காக மட்டும் வாரம் ஒரு முறை 500கி.மீ. தொலைவில் உள்ள பாடல் ஆசிரியையிடம் பயிற்சி எடுக்கிறாள் ப்ரூக்.

போட்டிக்கு இரண்டு வாரங்களே இருக்கும் நிலையில் தினசரி மூன்று முறை சகல பயிற்சிகளையும் செய்கிறாள். பதிவு செய்த வீடியோ காசட் மூலம் திருத்தங்கள் செய்யப்படுகிறது. வெளியே தோட்டத்தில் நீர் பாய்ச்சும் ப்ரூக்ன் தந்தை, தனது சேமிப்புப் பணத்தை மகளின் கல்விக்காகச் செலவிட விரும்புகிறார். போட்டிக்கான உடையை மட்டும் 40,000 ரூபாயில் தயாரித்திருக்கும் தாய், சேமிப்பை அழகுப் போட்டிகளுக்காகச் செலவிட விரும்புகிறார். பாட்டி, அம்மாவுடன் அட்லாண்டாவை நோக்கி விமானத்தில் பறக்கிறாள் ப்ரூக்.

இப்படிக் கனவுகளோடும், குழந்தைகளோடும் அட்லாண்டாவில் வந்திறங்கும் தாய்மார்கள் பல விடுதிகளில் தங்குகின்றனர். வந்திருக்கும் பல அம்மாக்கள் போட்டி நடக்கும் மூன்று நாட்களிலும் பதட்டத்தோடு இருக்கின்றனர். போட்டி தவிர்த்த நேரங்களில் அழுகை, கோபம், விளையாட்டு, சாக்லேட் என்று குழந்தைகள் குழந்தைகளாக இருக்கின்றனர். ஒரு குழந்தைக்கு 15,000 ரூபாய் வசூலிக்கும் முகப்பூச்சுக் கலைஞர். போட்டிகளுக்கு மதிப்பெண் போடும் அலங்காரக் கிழவிகள், சிறுமிகளை இளம் பெண்களாகவே நடத்தி நிகழ்ச்சிகளைத் தொகுத்துரைக்கும் பாடகர் டிம் வெட்மர், போட்டியை நடத்தும் சதர்ன் சார்ம் நிறுவனத்தின் தலைவி. . . மொத்தத்தில் போட்டி தீவிரமடைகிறது.

ஆடை, அலங்காரத்தோடு, தோற்றத்தை மதிப்பிடும் அழகுப் பிரிவு, ‘ஆண்களின் கனவுக் கன்னி’ எனும் பாடலுக்கேற்ப அபிநயம் பிடிக்கும் ‘கனவுக் கன்னி’  பிரிவு, பாடல் பிரிவு, நீச்சல் உடை –நாகரீக உடை அணிவகுப்பு… அனைத்துப் போட்டிகளிலும் மேடையில் சிறுமிகள் செய்வதை, கீழே உள்ள தாய்மார்கள் கூடவே செய்து காட்டுகிறார்கள். ஆ…ஊ என கத்தி உற்சாகப்படுத்துகிறார்கள். பாடி முடித்து, ‘நன்றி சீமான்களே, சீமாட்டிகளே’ என்று பெரியவர்களின் தோரணையில் பேசி புன்னகைக்கிறாள் ப்ரூக். கௌபாய் உடையில் நடக்கச் சிரமப்படுகிறாள் ஆசியா.

கேள்விகளுக்கு ஒற்றை வார்த்தையில் திருத்தமாகப் பதிலளிக்கும் ப்ரூக் போட்டி இடைவெளியில் கோபமாக இருக்கிறாள். சரளமாய்ப் பேசும் ஆசியா, வெறுத்துப்போன அன்றாட அழகுப் பயிற்சி அட்டவணையை மாற்றுமாறு தாயிடம் முனகுகிறாள். ஒரு வழியாய் போட்டி முடிந்து, 95-ம் ஆண்டின் பேரரசி யாரென அறிவிக்கும் தருணமும் வருகிறது.

தாய்மார்கள் பதட்டத்தின் உச்சியில் நகத்தைக் கடித்து, கைளைப் பிசைந்து, கண்களை மூடுகின்றனர். முதல் மூன்று இடங்களுக்கான தகுதியை ஆசியாவும், ப்ரூக்யும் அடைகிறார்கள். முடிவில் ப்ரூக் பேரழகியாக அறிவிக்கப்படுகிறாள். ஆசியாவுக்கு மூன்றாவது இடம் கிடைக்கிறது. பேரழகியின் தாய் ஆனந்தத்தில் கதறுகிறார். ஆசியாவின் தாய் அதிர்ச்சியில் கண்கள் பனிக்கிறார். வென்றவர்களும், தோற்றவர்களும் மீண்டும் அடுத்த ஆண்டு போட்டிக்கு வருவோம் என்கின்றனர். கவர்ச்சியான எதிர்காலக் கனவுகளோடு, அடுத்த ஆண்டு மட்டுமல்ல வாழ்க்கை முழுதும் குழந்தைகளாய், தாய்களாய், பாட்டிகளாய் இறப்புவரை அவர்கள் வருவார்கள், வந்து கொண்டேயிருப்பார்கள்.

__________

‘அமெரிக்கத் தரம்’ இல்லையென்றலும், இந்தியக் கான்வென்டு பள்ளிகளில் மேற்கின் வார்ப்பில் நிறையவே அழகிப் போட்டிகள் நடக்கின்றன. இன்னும் இந்தி,தமிழ்ச் சினிமாக்களின் கொச்சை நடனங்கள் பள்ளி ஆண்டு விழாக்களை ஆக்கிரமிப்பு செய்து வருகின்றன. ஏறக்குறைய அவிழ்த்துப் போட்டு தொப்புள் டான்ஸ் ஆடும் தமது குழந்தைகளை, அனைத்துப் பெற்றோர்களும் மெச்சிக் கொள்கின்றனர். இவர்களுடைய உலகிலிருந்துதான் குழந்தைகள் பற்றிய கவலையும் விதவிதமாக வெளிப்படுகின்றது.

பாராளுமன்றம், பத்திரிக்கை, தொலைக்காட்சி, திரையுலகம், கல்வி நிறுவனங்கள் கவலைப்படும் இந்தியக் குழந்தைகளின் பிரச்சினைகள் பல. போலியோ சொட்டு மருந்து, சிவகாசி தொழிலாளர்கள், குழந்தை விபச்ச்சாரம்… என்று நீளுகிறது. மேலும் பீகாரின் நக்சல்பாரிக் கட்சி, ஈழத்து விடுதலைப் புலிகள் முதல் உலக நாடுகளின் பல்வேறு போராளிக் குழுக்கள் வரை-சிறுவர்களை போரில் ஈடுபடுத்திக் கொலை வெறியை வளர்க்கின்றனர் என்பதும் ஒரு முக்கியக் கவலை.

முதலில் ஒன்றைப் புரிந்து கொள்வோம். தீக்குச்சியை அடுக்கிப் பீடி சுற்றி, துப்பாக்கியை ஏந்துவதற்குக் காரணம், அக்குழந்தைகளின் பெற்றோரோ, குறிப்பிட்ட சமூகமோ அல்ல. பொருளியலிலும், அரசியலிலும் அச்சமூகப் பிரிவினரை ஆதிக்கம் செய்கின்ற சக்திகளே அந்த குழந்தைளின் வாழ்க்கையைப் பறித்தவர்கள். உலகின் பெரும்பான்மை நாடுகளும், மக்களும் ஏழ்மையில் உழன்று கொண்டிருக்கும்போது, அம்மக்களின் குழந்தைகள் மட்டும் வயிறார உண்டு, கல்வி கற்பது எப்படி முடியும்? அடிமைத்தனத்தில் உழலும் ஒரு சமூகத்தின் குழந்தைகள் மட்டும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியுமா? கட்டுண்டு கிடக்கும் மனிதர்களைப் பற்றிக் கவலைப்படாதவர்கள், குழந்தைகளுக்காக மட்டும் கண்ணீர் விடுவது அயோக்கியத்தனம்.

சிவகாசிக் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய குறும்படம் ஒன்றில் ”பள்ளிக்குச் செல்லும் வயதில், பட்டாசுத்  தொழிலுக்குச் செல்வது சரியா?” என்று ஒரு சிறுவனிடம் பேட்டியாளர் கேட்கிறார். ”பட்டாசு செய்வதால்தான் ஒரு வேளையாவது பசியாற முடிகிறது” என்று  பதிலளிக்கிறான் அச்சிறுவன். ஆசியாவைப் போன்ற சிறுமிகளோ, ”நிறையப் பணம் வேணும்” என்பதற்காக அழகுப் போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.

மேலும், ”நிறையப் பணம் வேணும் ” என்ற வெறிதான் பின்னாளில் கிரிமினல்களை உருவாக்குகின்றது. பணம் குவிக்க எப்படியும் வாழலாம், என்ன வேலையும் செய்யலாம், எதையும் அவிழ்க்கலாம் என்பது அழகுப் போட்டிச் சிறுமிகள் கற்கும் அடிப்படைப் பாடம். ஆனால் துப்பாக்கி ஏந்தும் ஈழத்துச் சிறுவனுக்கு அமைதிப் படையின் ஆறாத வடுக்கள் காரணமாக இருக்கலாம். தன் மக்களைக் கொன்று குவிக்கும் ரன்வீர் சேனாவின் கொடுமை கண்டு ஒரு பீகார் சிறுவன் அரிவாளைத் தூக்கலாம்.

சிறுவயதானாலும், தன் மக்களின் அவலம் கண்டு ஆயுதம் தூக்கும் இவர்களிடம் கொலைவெறி வருவதில்லை; அடிமைத்தனத்தை எதிர்த்துப் போராடும் விடுதலை உணர்வும் சமூகப் பற்றுமே ததும்பி நிற்கும்.

ஆனால் செலவழிக்கப் பணம் திருடும் மேட்டுக்குடிச் சிறுவர்கள்தான் கொடூரமான கொலைகளைச் செய்கிறார்கள். இலட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும், பரிசுத் தொகை கொண்டிருக்கும் பெரிய – சிறிய அழகுப் போட்டிகளில் வென்றவர் – தோற்றவர் மனநிலையும், குறுக்கு வழியில் முன்னேறத் துடிக்கும் ஒரு கிரிமினலின் மனநிலையும் ஒன்றுதான்.

தெருமுனையில் வித்தை காட்டும் கழைக்கூத்தாடி, தனது மகளுக்குப் பெண்கள் அணிவது போல மார்புக் கச்சையை அணிவித்து வேடிக்கை காட்டுகிறான். எவருக்கும் முதல் பார்வையிலேயே ஏனென்று விளக்காமலேயே இக்காட்சி  கொடூரமாக இருக்கும். சிறுமியைக் கவர்ச்சிக் கன்னியாக உருவகப்படுத்தும் கழைக் கூத்தாடி, தனது வயிற்றுப்பாட்டிற்காக அப்படிச் செய்கிறான்; அவளை வைத்துக் கோடம்பாக்கத்தையே ஒரு கலக்குக் கலக்கி கோடீசுவரனாக மாற வேண்டும் என்பதற்காக அல்ல.

அந்தச் சிறுமிக்கும், ஆண்களை வீழ்த்தி, பிரபல நடிகையாக ஒரு சுற்று வரவேண்டும் என்ற கனவெல்லாம் கிடையாது. இரவு ஒருவாய்க் கஞ்சி கிடைத்தால் பெரிய விசயம். ஆனால் தனது குழந்தைகள் மேடையில் ஆடை அவிழ்ப்பதையும், ஆபாசச் சினிமா நடனங்கள் ஆடுவதையும் கண்டு நடுத்தரவர்க்கம் பெருமிதம் கொள்கிறது. காரணம் ஐஸ்வர்யாராய்க் கனவுதான்.

பருவம் அடைந்த பெண்கள் ஒரு ஆணைக் கவருவதற்கான நடை, உடை, முகபாவனை, உடல் அளவு, காதல் குறித்த பொது விதிகள் அழகிப் போட்டிக்கான அடிப்படை விதிகள்; சிறுமிகளுக்கான போட்டியும் இதற்கு விதிவிலக்கல்ல- ‘ஆண்களைக் கவரும் கனவுக் கன்னி’ எற்ற ஒரு பாடலுக்கு ஆசியாவும், ப்ரூக்கும் முகபாவனை செய்கிறார்கள் .

ஏற்கெனவே இந்தியச் சமூகம் பெண் குழந்தைகளுக்கு நாணத்தையும், செப்பு வைத்துச் சமைப்பதையும், சிறுவயதிலேயே சேலை கட்டுவதிலிருந்து சமைப்பது வரை அனைத்து அடிமைத்தனங்களையும் நுணுக்கமாகக் கற்றுக் கொடுத்து வருகிறது. இப்போது மேற்கிலிருந்து வேறு வடிவில் அழகு, கவர்ச்சி, வியாபாரம், ஆதாயம் அனைத்தும் சுதந்திரமாய் வந்திருக்கிறது. தனது குழந்தையை சமூகத்திற்குப் பொறுப்புள்ள குடிமகனாய் வளர்க்க விரும்பும் பெற்றவர்கள் சிந்திக்கட்டும்.

_________________________________________________________

–    புதிய கலாச்சாரம், மே – 1999
__________________________________________________

தினமலர் பொறுக்கி அந்துமணி இரமேஷை தூக்கில் போடுவது அநீதி!

133

தினமலர் பொறுக்கி அந்துமணி இரமேஷை தூக்கில் போடுவது அநீதி!

13.11.2011 தினமலரில் அதன் சிறப்பு நிருபர் பெயரில் எழுதப்பட்ட “செந்தமிழர்கள் கொந்தளிக்காதது ஏன்?” என்றொரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறார்கள். அதை நீங்களே ஒரு முறை படித்துவிட்டு வாருங்கள், விரும்பாதவர்களுக்கு அதன் சுருக்கம் இங்கே:

அதில் 23 வயது சவுமியா எனும் அழகான கேரளப் பெண்ணை ஓடும் ரயிலில் வன்புணர்ச்சி செய்து கீழே தள்ளிக் கொன்ற கோவிந்தசாமி என்ற குற்றவாளிக்கு நீதிமன்றத்தில் மரண தண்டனை கொடுக்கப்பட்டிருக்கும் விவரத்தை தருகிறார்கள். பின்னர் அந்த கோவிந்தசாமி விருத்தாசலத்தைச் சேர்ந்த பச்சைத் தமிழன், மாற்றுத்திறனாளி, தாழ்த்தப்பட்டவர் என்பதால் அவர் மீதான மரண தண்டனையை எதிர்த்து நாம் குரல் கொடுக்க வேண்டுமல்லவா என்பதை போற்றுவது போல இழிவுபடுத்தும் வஞ்சப் புகழ்ச்சி பாணியில் எழுதியிருக்கிறார்கள்.

தினமலரின் நோக்கம் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூவர் மீதான தூக்கை எதிர்த்து தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பை இங்கே பொதுப்புத்தியில் ஒரு சென்டிமெண்டான விசயத்தை வைத்து இழிவுபடுத்துவதுதான். மரணதண்டனை வேண்டாமென்று கோருபவர்கள் இத்தகைய கொடூரமான காமப் பொறுக்கியை காப்பாற்ற குரல் கொடுப்பார்களா என்று கேட்பதன் மூலம் அந்த அழகான கேரளப் பெண்ணின் அனுதாபத்தை வைத்து ராஜீவ் கொலை வழக்கில் சிக்க வைக்கப்பட்டிருக்கும் மூவரை வில்லனாக்குவதுதான் தினமலரின் நோக்கம்.

அதே நேரம் கூடுதலாக தமிழன், மாற்றுத் திறனாளி, தலித் என்ற விவரங்களின் மூலம் தினமலரின் பார்ப்பன விழுமியங்களை நிலைநிறுத்துவது ஒரு போனஸ் நோக்கம். அதிலும் அந்த கோவிந்தசாமி தாழ்த்தப்பட்டவர் என்பதால் வயிற்றுப்பிழைப்புக்காக சிறு திருட்டுகள் செய்து இப்படி உணர்ச்சிவசப்பட்டு ஒரு தவறை செய்து விட்டார், அவரைக் காப்பாற்றுங்கள் என்று நயவஞ்சமாக எழுதுகிறார்கள். அதே போல இந்துத்வ இந்திய உணர்வுக்கு சேதாரம் ஏற்படக்கூடாது என்பதற்காக தமிழுணவர்வை குறி வைத்து தாக்குகிறார்கள்.

என்ன எழுதி என்ன பயன்? தினமலர் உருவாக்கி வைத்திருக்கும் பிற்போக்கான வாசகர் வட்டம் இந்த வஞ்சப் புகழ்ச்சி இகழ்ச்சியை புரிந்து கொள்ளாமல் தினமலர் இப்படி எழுதலாமா என்று கோபப்படுகிறது. அவர்களெல்லாம் கோவை என்கவுண்டர் மேனியாவில் மனதைப் பறி கொடுத்தவர்கள் அல்லவா, அதனால் இளம் பெண் கற்பழிப்பைத் தாண்டி மற்ற விவரங்களின் மறை பொருளை புரிந்து கொள்ள முடியாத துரதிர்ஷடசாலிகள். இருந்தாலும் ஆர்.எஸ்.எஸ் அம்பிகள் தினமலர் கட்டுரைக்கு அருஞ்சொற்பொருளை எழுதி வாசகர் கடிதத்தில் புலம்பும் அப்பாவித் தமிழர்களுக்கு தேறுதல் சொல்லி வருவதோடு தினமலருக்கு வாழ்த்தையும் தெரிவிக்கிறார்கள்.

மூவர் தூக்கை வெறும் மனிதாபிமான நோக்கில் பேசிய பலரும், அதன் அரசியல் முக்கியத்துவத்தை பேசினால் பிரச்சினை என்று வெறும் சென்டிமெண்டாக மட்டும் மக்களிடம் கொண்டு போனவர்களும், தினமலரின் இந்த சாணக்கிய நரித்தந்திரத்தை எதிர் கொள்ள முடியாமல் திணறுகிறார்கள். எனினும் அவர்களின் தவறு தினமலரின் வக்கிரத்தோடு ஒப்பிட முடியாத ஒன்று.

முதலில் ராஜிவ் கொலை என்பது ஆயிரக்கணக்கான ஈழத்தமிழரின் வாழ்வுரிமை போராட்டத்தோடு சம்பந்தப்பட்ட ஒன்று. அமைதிப்படையை அனுப்பி ஈழத்தமிழர்களை கொன்று குவித்த இந்திய அரசின் போர்க்குற்றத்தோடு தொடர்புடைய ஒன்று. ராஜிவ் கொலை வழக்கை வெறும் கிரிமினல் வழக்காக விசாரிக்காமல், அமைதிப்படை அனுப்பிய காலத்திலிருந்து தொடர்புடைய அரசியல் வழக்காக விசாரித்தால் பல உண்மைகள் வெளியே வரும். அதன்படி பார்த்தால் ராஜீவ் கொலை வழக்கில் குற்றமிழைக்காத மூவர் மட்டுமல்ல, அந்தக் கொலையை செய்தவர்களும் குற்றமற்றவர்கள் என்று ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியும். அதாவது அமைதிப்படை அட்டூழியத்தின் எதிர்விளைவுதான் ராஜவ் கொலை.

இதுவும் ஒரு பெட்டி கிரிமினலின் குற்றமும் ஒன்றா? ஆம் என்கிறது தினமலர். நாமும் அதை மறுக்காமல் தினமலர் பாணியில் வேறு சில குற்றங்களை ஆராய்ந்து பார்ப்போம்.

தினமலர் வாரமலரில் எழுதிப் புகழ்பெற்றவர் அந்துமணி எனும் இரமேஷ். இவர் தினமலர் சென்னை பதிப்பின் உரிமையாளரும் கூட. ராமசுப்பையரின் வழியில் வந்த பார்ப்பன உத்தமர். இவருக்கு இருக்கும் அதிகார செல்வாக்கை வைத்துப் பார்த்தால் இவர் நூற்றுக்கணக்கான பெண்களை சீரழித்திருக்க வேண்டும். அப்படி இல்லாமல் உணர்ச்சி வசப்பட்டு சில பெண்களோடு மட்டும் கொஞ்சம் விளையாடி இருக்கிறார். அதில் ஒரு பெண், தினமலர் அலுவலகத்தில் வேலை செய்தவர் போலீசில் புகார் கொடுக்கிறார். இதை பாலியல் வக்கிரம் என்று மட்டும் புரிந்து கொள்ளாதீர்கள். அந்துமணிக்கு சினிமா, மேன்மக்கள், பணக்காரர்கள், அரசியல்வாதிகள், முதலாளிகள் என்று பரந்துபட்ட தொடர்பு, வாய்ப்புகள் இருந்தும் அவர் எப்போதும் எல்லை மீறியவரில்லை.

ஏதோ போதாத காலம், கீழ் பணியாற்றும் பெண்ணிடம் கொஞ்சம் ‘லைட்டாக’ வரம்பு மீறிவிட்டார். பின்னர் புகார் கொடுத்த அந்தப் பெண்ணை மனநோயாளியாக ஆக்கி அலுவலகத்தை விட்டு துரத்தி, போலீசு உலகை கொஞ்சம் கவனித்து அந்த புகாரை குப்பைக் கூடைக்கு வீசி எறிந்து விட்டார். அவர் நினைத்திருந்தால் அந்தப் பெண்ணை கூலிக்கு ஆள் அமர்த்தி கொலையே செய்திருக்கலாம். அப்படி செய்யாதது ஏன் என்பதில்தான் அவரது ஜீனின் மாட்சிமை அடங்கியிருக்கிறது. பார்பனர்கள் எப்போதும் யாரையும் நேரடியாக கொலை செய்து பழக்கமில்லை. அதெல்லாம் மாட்டுக்கறி சாப்பிடும் காட்டு மிராண்டிகளான ‘கீழ்சாதி’ பயல்கள் செய்வது. அந்துமணி இரமேஷ் அய்யரை அப்படி எடை போட்டு விடாதீர்கள்.

இதற்கு மேல் அந்துமணியை கைது செய்து அந்த பாலியல் வன்புணர்ச்சிக்கான வழக்கில் விசாரித்து அவருக்கு தூக்குதண்டனை வாங்கித்தரவேண்டும் என்று யாராவது கிளம்பினால் அது தருமத்தின்படியும், மனு தர்மத்தின்படியும், பார்ப்பன நெறிப்படியும் அநீதியானதாகும். மேலும் உலகை ஆளும் ஒரு பார்ப்பனனை அப்படி தூக்கில் போட்டால் இந்தியாவே இயற்கை சீற்றத்தால் அழியுமென்பது உறுதி. ஆகவே யாரும் அந்த புண்ணியவானுக்கு தீங்கிழைக்காமல் இருங்கள் என்று கேட்டுக் கொள்கிறோம்.

தினமலர் பொறுக்கி அந்துமணி இரமேஷை தூக்கில் போடுவது அநீதி!ஏற்கனவே காஞ்சி பெரியவாள் ஜெயேந்திர சரஸ்வதிக்கு அப்படி ஒரு அபகீர்த்தி நிகழ்ந்ததனால்தான் சுனாமி ஏற்பட்டு ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்தார்கள். பெரியவாள் துறவறத்தோடு, பார்ப்பன தர்மத்தையும், இந்து மதத்தையும் அல்லும் பகலும் பாடுபட்டு காப்பாற்றும் திருப்பணியை செய்து வந்தவர். தொடர்ச்சியாக அந்த வேலைகளில் ஏற்பட்ட களைப்பு காரணமாக சில பல பார்ப்பன மாமிகளின் மேல் கை வைத்து விட்டார். அதுவும் கூட வன்புணர்ச்சி என்று முடிவு செய்துவிடக்கூடாது. அதெல்லாம் பெரியவாளுக்காக சில பக்தர்கள் ஒப்புதலுடன் மேற்கொண்ட பரிகாரங்கள்.

அனுராதா ரமணன் மட்டும் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு பெரியவாளின் செய்கையில் குற்றம் கண்டுபிடித்து பொதுவெளியிலும் அம்பலப்படுத்தினார். அவர் புராணக்கதைகள் எதையும் படித்ததில்லை போலும். ஆனானப்பட்ட இந்திரனும், விசுவாமித்திரனும் கூட இப்படி சில தருணங்களில் சஞ்சலப்பட்டவர்கள்தான். அதையெல்லாம் பரப்பிரம்மத்தின் ஆகிருதி விளையாட்டு என்று கொள்வதை விடுத்து இகலோக மனிதப்பதர்களின் நோக்கில் ஆய்வு செய்வது தவறு.

இதையெல்லாம் புரிந்து கொள்ளாத குசும்புப் பார்ப்பான் சங்கரராமன் தொட்டதுக்கெல்லாம் மொட்டைக்கடிதாசி போட்டு பெரியாவளை இம்சித்து வந்தான். பெரியவாளும் எத்தனை நாள் இந்தக் கொசுக்கடியை சமாளிப்பது? அவாளுக்கும் சமயத்தில் கோபம் வருமோ இல்லியோ? பக்தரான அப்புவையும், ரவி சுப்ரமணியனையும் கூப்பிட்டு சங்கர ராமனை போட்டுத் தள்ளுமாறு உத்திரவிட்டார். அவர்களும் பெரியவாளின் கொசுக்கடியை கோவில் வளாக்கத்திலையே அரிவாளால் அழித்து விட்டார்கள். தெய்வம் நின்று கொல்லுமென்பது பெரியவாளின் விசயத்தில் உண்மையானது.

இது பொறுக்காத சில ஜென்மங்கள் பெரியவாளை கைது செய்து சிறையில் அடைத்து துன்புறுத்தியது அக்கிரமம். ஆனாலும் பெரியவாள் சஞ்சலப்படாமல் தொடர்ந்து போராடி எல்லா சாட்சிகளையும் விலைக்கு வாங்கி, பிறகு நீதிபதிக்கே ரேட் பேசி வழக்கை நீர்த்துப் போகச் செய்து விட்டார். இதெல்லாம் நீதிமன்றங்களில் சகஜம் என்பது ஒரு போண்டா வக்கீலுக்கு கூட தெரியும்.

தற்போது இந்த வழக்கை மறு விசராணை செய்து குற்றத்தை நீருபித்து பெரியவாளை தூக்கில் தொங்கவிட வேண்டும் என்று சிலர் பேசுவது சரியா? பூலோக இந்துக்களின் சர்வலோக குருவை இப்படி ஒரு கொசுக்கடி அழிப்பிற்காக தூக்கில் தொங்க விடுவது சரியா? நேர்மையுள்ள இந்துக்கள் சிந்திக்கட்டும். ஒரு வேளை சில தமிழ் – திராவிட – கம்யூனிஸ்ட் வெறியர்கள் அப்படி பெரியவாளை தூக்கில் போடுவதற்கு காரணமாக இருந்தால் இந்தியா அழிவது உறுதி.

விருத்தாசலம் கோவிந்தசாமி வயிற்றுப்பாட்டுக்காக திருடியதும், நம்மவா முதல்வர் புரட்சித் தலைவி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததும் ஒன்றா? சில அம்மாஞ்சிகள் அப்படிக் கேட்கிறார்கள். கோவிந்தசாமி திருடி, கற்பழித்ததற்கு தூக்கா, முழு தமிழகத்தையும் மொட்டையடித்த ஜெயாவுக்கு வாய்தாவா என்று கேட்பது மாபெரும் அநீதி.

புரட்சித் தலைவி தன்னை பாப்பாத்தி என்று சட்டசபையிலேயே துணிவாக அறிவித்த வீராங்கனை. இது வரை தமிழகம் கண்டமுதல்வர்களில் ஒரே ஒரு  இந்து முதல்வர் இவர்தான் என்று வீரத்துறவி இந்து முன்னணி இராம கோபாலனால் பாராட்டப்பட்ட தாய். அவருக்கென்று குடும்பமோ, குட்டியோ எதுவும் கிடையாது. அவர் சொத்து சேர்ப்பது யாருக்காக? தமிழகத்தில் உள்ள எல்லாக் கோவில்கள்களிலும் பூஜை, புனஸ்காரங்கள், யாகங்கள், குடமுழுக்கு செய்து இந்து தருமத்தை காப்பாற்றுவதற்காகவே அப்படி சொத்து சேர்க்கிறார். அதுவும் பெரிய பெரிய முதலாளிகள் தமிழகத்தில் தொழில் துவங்கி கைமாத்தாக வைக்கும் தட்சிணையைப் போய் அப்படி சொத்து சேர்ப்பு, திருட்டு, ஊழல் என்று சொல்வது யாருக்கு அடுக்கும்?

மல்லையாவின் மெக்டோவல் தமிழகத்தில் பெருக்கெடுத்து ஓடுவதனால்தானே சூத்திர, பஞ்சம, சண்டாளப் பயல்களுக்கு இலவச லாப்டாப்பெல்லாம் கொடுக்க முடிகிறது? அதற்கு காணிக்கையாக மல்லையா புண்ணியவான் சில போல கோடிகளை அம்மாவுக்கு கொடுத்தால் என்ன தப்பு?

பெங்களூரூ சொத்து குவிப்பு வழக்கிற்காக அம்மா எத்தனை நெடிய போராட்டம் நடத்த வேண்டியிருந்தது? இல்லையென்றால் அந்த கோவிந்தராசனை சட்டுப்புட்டென்று தூக்கில் போட தீர்ப்பளித்த மாதிரி ஓரிரு வருடங்களில் வழக்கை முடித்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

ஆக பார்ப்பன அறம் தழைத்தோங்க, பூலோகம் செழித்திருக்க அந்துமணி இரமேஷ், காஞ்சிப் பெரியவாள், புரட்சித் தலைவி போன்ற ஆன்றோரை காப்பாற்றுவது மானமுள்ள ஒவ்வொரு இந்துவின் கடமை என்பதை இங்கே வலியுறுத்துகிறோம்.

வந்தே மாதரம்!

பாரத் மாதாகி ஜெய்!!

இந்து தர்மம் ஓங்குக!!!

பதிவர்களை அழவைத்த ‘தல’யின் மட்டன் பிரியாணி ‘மனிதாபிமானம்!’

48

தொலைக்காட்சித் தொடர்களை விடாது பார்த்து தமிழகத்துப் பெண்கள் அழுவாச்சிகளாக மாறிவிட்டார்கள் என்பதாய் சலித்துக் கொள்வார்கள் நமது ‘அறிஞர்’ பெருமக்கள். அவர்களில் நமது பதிவுலகப் பிரபலங்களும் அடக்கம். ‘பா’ வரிசைப்படங்கள் காலத்திலிருந்து சன் டிவியின் பிரைம் டைம் சித்தி வரை இந்த அழுகை சென்டிமெண்ட் வசூலை அள்ளுகிறது என்றும் அவர்கள் ‘ஆய்வு’ செய்வது வழக்கம். இதில் உண்மையில்லாமல் இல்லை. ஆனால் உண்மையை பேசுபவர்கள் அந்த உண்மைக்கு பொருத்தமாக இருக்கிறார்களா என்பது நம் எளிய கேள்வி.

அதை கூகிள் பஸ்ஸில் போட்ட ஒரு பதிவு மூலம் உரைத்துப் பார்க்கும் வசதியை கிழக்கு பதிப்பகம் அதிபர் பத்ரி நமக்கு இலவசமாகவே வழங்கியிருக்கிறார்.

புதிய தலைமுறை தொலைக்காட்சி நிகழ்ச்சிக்குப் போன பத்ரிக்கு ஒரு மேக்கப்மேன் அலங்காரம் செய்கிறார். அவரிடம் உரையாடுகிறார் பத்ரி. நிரந்தரமில்லாத வருமானத்தையும் வாழ்க்கையையும் கொண்ட சினிமா உலகை விட்டு விலகி வந்தவர் அந்த முகப்பூச்சுக் கலைஞர். ரஜினி, கமல், விக்ரம், அஜித் என பல பிரபலங்களிடம் வேலை பார்த்திருக்கிறார். அந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் போது குறிப்பாக அஜித்தை மட்டும் மனதாரப் பாராட்டுகிறார். என்ன காரணம்?

பின்னி மில் ஆலையில் ஷூட்டிங் நடக்கும் போது தூசி படிந்த தொழிலாளியிடம் சுத்தமான தனது கையால் கை குலுக்கியது, புரடக்ஷன் சாப்பாடு சரியில்லை எனத் தெரிந்து தொழிலாளர்களுக்கு தானே வீட்டிலிருந்து பொருட்கள் கொண்டு வந்து தன் கைப்பட மட்டன் பிரியாணி செய்து போட்டது (அரிசி ஒரு கிலோ ரூ. 190), அதையும் புரடக்ஷன் ஆட்கள் லவட்டிக்கொள்வதை கேள்விப்பட்டு, அடுத்த நாள் முதல் அனைவரும் ஒரு சேர அமர்ந்து சாப்பிட ஏற்பாடு செய்தது, ஷூட்டிங் முடியும் வரை அஜித்தே எல்லா நாட்களுக்கும் மட்டன் பிரியாணி செய்து போட்டது, பின்னர் ஹைதராபாத் செல்லும் போது சமையலுக்கு வசதி இல்லை என்பதால் ஒரு பிரபல ஓட்டலிலிருந்து பிரியாணி ஏற்பாடு செய்து தினமும் அளித்தது, தீபாவளி, பொங்கலுக்கு கால் பவுனில் மோதிரம் போட்டது, 3000 ரூபாய்க்கு பட்டாசு, ரொக்கமாக ரூ.500 என எல்லா தொழிலாளிகளுக்கும் கொடுத்தது, உடல் சுகவீனம் என்றால் தேவைக்கேற்ப உதவி செய்வது, எல்லா தொழிலாளிகளையும் அண்ணே என்று மரியாதையுடன் விளிப்பது……….

மனிதனை மதிப்பதில் மற்ற நடிகர்கள் மோசமில்லை என்றாலும் அஜித் போல இல்லை என்று அந்த முகப்பூச்சுக் கலைஞர் பாராட்டுப் பத்திரம் தருகிறார். இவையனைத்தும் விளம்பரமின்றி தற்செயலாக நடந்திருப்பதாக வேறு தெரிகிறது என்கிறார்கள் சிலர்.

போதாதா? நமது பதிவுலக பெருமக்கள் அதிலும் மனிதாபிமானத்தை வறண்ட பாலையில் இருக்கும் சோலையாக வழிபடுபவர்கள் தாங்களும் சளைத்தவர்களில்லை என்று தலயை போற்றும் வழிபாட்டில் உண்டு இல்லை என்று பின்னி எடுத்து விட்டார்கள்.

பத்ரியின் இந்த பதிவை 42 பதிவர்கள் லைக்கியிருக்க, 21 பதிவர்கள் பகிர்ந்து பாராட்டியிருக்கிறார்கள். பத்ரியின் வலைப்பதிவிலும் தனது உணர்ச்சிகளை பதிவு செய்திருக்கின்றனர். கருவளையத்தை வெள்ளையாக்கும் முயற்சியில் அந்த மூகப்பூச்சுக் கலைஞர் ஈடுபடும் போது பேசிய உரையாடல் இந்த அளவுக்கு வரவேற்பு பெறும் என்று ”தோற்கடிக்க முடியாதவன்” என இப்பதிவுக்கு பெயரிட்ட பத்ரிக்கு தெரியாமல் இருந்திருக்காது. ஆனாலும் இதற்காகவே தன்னை சினிமா ப்ரியன், தலயின் ரசிகன் என்று அஜித்தின் இரசிகர்கள் நம்புவது உண்மையில்லையென சற்று வெட்கத்துடன் என்றாலும் வெளிப்படையாகவே மறுக்கிறார் பத்ரி. என்ன இருந்தாலும் இரசிகர்கள் எனப்படுவோர் பெஞ்ச் டிக்கெட் வர்க்கம்தானே? ஒரு சினிமா நடிகனின் இரசிகன் என்ற அடையாளத்தை நமது அறிஞர் பெருமக்கள் மலிவாகவே கருதுவதை தவறு என்று சொல்ல முடியாதில்லையா?

திரையில் காட்டும் வித்தைகளை வைத்து ஒரு நடிகனை ஒரு இரசிகன் வழிபடுகிறான் என்றால் திரைக்கு வெளியே அந்த நடிகனின் நல்லனவற்றை வியந்தோதும் திருப்பணியை இதே அறிஞர் பெருமக்கள்தான் செய்கிறார்கள் என்றால் அது முரணில்லையா? வெளிப்படையான இரசிகர்களை விட மர்மத்தோடு மறைந்திருந்து பார்த்து இரசித்து அதை மனிதாபிமான காக்டெயிலில் கலந்து பொது வெளியில் முன்வைக்கும் போது இவர்களும் இரசிகர்கள் என்று அழைத்தால் என்ன குடிமுழுகிப் போகும்?

அஜித் வெறுமனே பிரியாணி போட்டார் என்றால் பத்ரி அதை புறந்தள்ளியிருப்பார். ஆனால் வீட்டிலிருந்தே பொருட்களை கொண்டு வந்து தன் கைப்படவே சமைத்து, படப்பிடிப்பு நாட்கள் முழுவதற்கும் பிரியாணி போட்டார் என்பதில்தான் பத்ரி அடித்து செல்லப்பட்ட இரகசியம் புதைந்திருக்கிறது.

தமிழக ‘அறிவுலகமே’ வியந்து போற்றும் ஒரு பதிப்பகத்தை நடத்தும் ஒரு அறிஞரே தலயின் மனிதாபிமான வெள்ளத்தில் முக்குளிக்கும் போது மற்ற பதிவர்கள் எம்மாத்திரம்? அவர்களெல்லாம் பதிவர்கள், பத்திரிகையாளர்கள், பிறகு எழுத்தாளர்கள், இறுதியில் சினிமா என்று நீண்ட ஏணிப்படியில் இன்பமான இம்சையூட்டும் கனவுடன் ஏறிக் கொண்டிருப்பவர்கள். தலயைப் போல ஒரு வள்ளலை சந்தித்தால் அவர்களும் மூச்சுவாங்கும் ஏணியை தாண்டி முடித்து மாடி வீட்டில் செட்டிலாகிவிடலாம் அல்லவா?

mutton_biryani 700 pix

எது மனிதாபிமானம்? தொழிலாளர்களுக்கு செய்ய வேண்டிய உதவி எது? தான தருமத்துக்கு அளவு கோல் என்ன?

இதற்கு நாம் மெனக்கெட வேண்டிய அவசியமில்லை. பத்ரியின் பதிவிலேயே பதில் இருக்கிறது. அந்த முகப்பூச்சுக் கலைஞர் சினிமாவை தலைமுழுகி தொலைகாட்சி வேலைக்கு ஏன் வந்தார்?

“சினிமால ஹீரோ, கேமராமேன், டைரெக்டர் இப்படி கொஞ்சம் பேருக்கு மட்டும்தான் சார் பணம். மத்தவங்களுக்கு, தினசரி பேட்டா இல்லாட்டி வாழ்க்கை ஓடாது சார். அதுவும் பேட்டாகூடக் கட்டாயமாக் கிடைக்கும்னு சொல்லமுடியாது. குடும்பம்னு வந்தாச்சு சார், இனிமேயும் சினிமால லோல்பட முடியாதுன்னு விட்டுட்டேன்.”

இந்த வரிகளை கட்டுடைத்தோ, உற்றுப் பார்த்தோ, உட்கார்ந்து யோசித்தாலோ இல்லை போகிற போக்கில் பார்த்தால் கூட மேற்கண்ட கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

ஆனால் இந்த வரிகளை பத்ரியும் சரி, பத்ரி போட்ட பதிவால் மனிதாபிமான ஆட்டம் போட்டவர்களுக்கும் சரி ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. புறங்கையால் தள்ளிவிட்டு நேரே பிரியாணி மேட்டருக்கு போய்விட்டார்கள்.

முப்பது வருடங்கள் சினிமா உலகில் கை வலிக்க மேக்கப் போட்ட அந்த கலைஞனுக்கு அல்லது தொழிலாளிக்கு நிர்ணயிக்கப்பட்ட தினசரி பேட்டா கூட உத்திரவாதமில்லை. இவ்வளவிற்கும் அவர் பிரபலமான அனைத்து தமிழ் ஹீரோக்களுக்கும் வேலை செய்திருக்கிறார். இறுதியில் இங்கே நீடித்தால் குடும்பத்தை பராமரிக்க முடியாது என்று தொலைக்காட்சிக்கு மாறிவிட்டார். எனில் அவர் இத்தனை வருடங்கள் ஆற்றிய பணிக்கு என்ன பயன்? என்னதான் பலன்?

இதை ஒரு ஹீரோவாவது ஒரு பேச்சுக்காகவாவது கண்டித்திருப்பார்களா? அல்லது ஒரு அறிக்கைதான் விட்டிருப்பார்களா?

சிநேகா, பிரசன்னா காதல் திருமணமாக நடக்கப் போகிறது என்பதை தினமணியின் வைத்தி மாமா முதல், தினமலரின் அந்துமணி மாமா வரை தலைப்புச் செய்திகளில் கொண்டாடுவதை கண்டிருப்பீர்கள். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தமது ஊதியம் அதாவது தினசரி பேட்டா உயர்த்தப்படாத நிலையில் போராடப் போவதாக பெப்சி அதாவது தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம் அறிவித்திருந்ததை எத்தனை பேர் அறிவீர்கள்?

கோடி கோடியாக சுருட்டும் எந்த ஹீரோவாவது தங்களது கெட்டுப் போகும் உடலை, திரையில் பிரிஜ்ஜில் வைத்த ஃபிரஷ்ஷான தக்காளி போல காட்டுவதற்கு, தங்களது உடலை வதைக்கும் லைட்மேனுக்கோ, சண்டை நடிகர்களுக்கோ, துணை நடிகர்களுக்கோ, முகப்பூச்சு கலைஞர்களுக்கோ குரல் கொடுத்தார்களா? தொழிலாளர்களின் சம்பளத்தை நியாயமாக உயர்த்தாமல் நான் நடிக்கமாட்டேன் என்று தலயோ, தளபதியோ, உலக நாயகனோ, சூப்பரோ பேசினார்களா? இல்லை அவர்கள் ஏன் பேசவில்லை என்று பதிவுலகம்தான் துள்ளிக் குதித்ததா? சினிமாத் தொழிலாளர்களின் துயரத்தை நேரில் அறிந்த அண்ணன் உண்மைத்தமிழன் கூட, புவனேஸ்வரியின் ஒரு கோடி ரூபாய் வராக் கடன் குறித்து கவலைப்படுபவர், தொழிலாளிகளுக்காக ஒரு நீண்ட பதிவு வேண்டாம், ஒரு  குறும்பதிவு கூட போடவில்லையே?

அடுத்த நாள் மலமாக சிதறப்போகும் ஒரு மட்டன் பிரியாணிக்கு இத்தனை ஆர்ப்பாட்டமா? கூச்சமாக இல்லை? ஷூட்டிங்கில் தல போட்ட பிரியாணியை முழுங்கி விட்டு வீட்டில் தனது குடும்பத்தினர் கஞ்சி குடிப்பதற்கு பேட்டா வந்தால்தான் முடியும் என்ற நிலையில் எந்த தொழிலாளி அந்த மணமணக்கும் பிரியாணியை மகிழ்ச்சியுடன் முழுங்க முடியும்?

களை பறிக்கும் பெண் விவசாயத் தொழிலாளிக்கோ, இல்லை நாற்று நடும் ஆண் தொழிலாளிக்கோ அன்றாடக் கூலியை ஒரு சிறுவிவசாயி அன்றே கொடுத்து விடுகிறார். அவரும் அவருக்கு முடிந்தபடி தேநீர், வடை, சாப்பாடு என்று தொழிலாளிகளுக்கு அளிக்கிறார். ஆனால் ஒரு சிறு விவசாயிக்கு இருக்கும் நேர்மை கூட கோடிகளில் புரளும் இந்த சினிமா கயவாளிகளுக்கு இல்லையே?

அன்றாடம் உழைத்தாலும் அதற்கென்ற கூலி வராது என்ற நிலைதானே அந்த முகப்பூச்சுக் கலைஞரை, சினிமா உலகை விட்டே வெளியேறச் செய்திருக்கிறது. அந்த சினிமா உலகில் சில கோடிகளை சம்பளமாக வாங்கும் அஜித் இல்லையா? அவரும் அதற்கு காரணமில்லையா? கேட்டால் அதற்கு அவர் என்ன செய்வார், அதெல்லாம் தயாரிப்பாளரது பிரச்சினை என்று நமது புத்திசாலி பதிவர்கள் கேட்பார்கள். அதையும் பார்த்து விடுவோம்.

“ஒரு திரைப்படத்தின் தயாரிப்புச் செலவில் கதாநாயகன், நாயகி மற்றும் முன்னணி நட்சத்திரங்களின் சம்பளம் சுமார் 30 சதவீதம்; இயக்குநருக்கு 10 சதவீதம்; தயாரிப்பு செலவு 50 சதவீதம்; தொழிலாளிகளின் அனைவரின் சம்பளம் 10 சதவீதம் – இதுதான் உத்தேசமாக தமிழ் சினிமா ஒன்றின் தயாரிப்புச் செலவு என்று கூறப்படுகிறது.”

“கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நட்சத்திரங்களும், நட்சத்திர இயக்குநர்களும் தங்கள் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளத் தயாராக இல்லை; கங்காருவை முத்தமிடுவதற்காக ஆஸ்திரேலேயாவிற்கும், ரங்க ராட்டினம் சுற்றுவதற்காக அமெரிக்காவுக்கும் ‘அவுட்டோர்’ சென்று காசை அழிப்பதை நிறுத்த இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் தயாராக இல்லை.”

இருந்தாலும் தயாரிப்புச் செலவை குறைக்க வேண்டும், வெட்டியாக செலவழித்த பணத்திற்கு இலாபம் பார்க்க வேண்டும். என்ன செய்கிறார்கள்? இலாபத்திற்கு இரசிகர்கள் தலையில் கை வைக்கிறார்கள். ரிலீசாகும் புதிய படத்தின் டிக்கெட்டிற்கு என்ன விலை வேண்டுமானாலும் வைக்கலாம் என்று அரசு என்றோ அறிவித்து விட்டது. இதற்கு மேலும் முதல் ஒரு வாரத்திற்கு திரையரங்க உரிமையாளர்களே பிளாக்கில் ஆள் வைத்து 500, 1000 என்று விற்பனை செய்கிறார்கள். இதன்படிதான் மங்காத்தாவோ, ஏழாம் அறிவோ, எந்திரனோ முதல் பத்து நாட்களில் கணிசமாக இலாபத்தை எடுத்து விடுகின்றது.

ஒரு வேளை எனது படம் அரசு நிர்ணயித்த கட்டணத்தில்தான் ஓட வேண்டும் என்று அஜித் அறிவித்து அமல்படுத்தினார் என்றால் மங்காத்தா தமிழகம் முழுவதும் உள்ள எல்லா திரையரங்குகளிலும் நூறுநாட்கள் ஓடினாலும் போட்ட காசை எடுக்க முடியாது. அதன்படி தலயின் வருமானம் என்பது இரசிகர்களை பிக்பாக்கட் அடித்து சம்பாதித்ததுதான். அது ஒரு இரத்தப் பணம். அந்தப் பணத்தில்தான் அவர் தனது படங்களில் வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு பிரியாணி செய்து போடுகிறார். இந்த பிரியாணி அவரே கைப்பட செய்திருந்தாலும் அதன் செலவு என்னவோ அவர் வழிப்பறி செய்ததுதான்.

இனி தயாரிப்புச் செலவை குறைக்க வேண்டுமென்றால் இந்தக் கயவாளிகள் தொழிலாளிகளின் தலையில் கை வைக்கிறார்கள். இன்று தமிழ் சினிமாவில் வேலை செய்யும் தொழிலாளிக்கு ஒரு கொத்தனார் அல்லது பெயிண்டரின் சம்பளம் கூடக் கிடையாது. அப்படியே ஒரு சினிமாவிற்கு வேலை செய்யச் சென்றாலும் அந்த பேட்டா கிடைக்கும் என்ற நிச்சயம் கிடையாது. ஆக திரைப்படத் தயாரிப்பின் பத்து சதவீதம்தான் தொழிலாளிகளுக்குச் செல்கிறது என்றாலும் அதைக்கூட தருவதற்கு இந்த முதலைகளுக்கு மனமில்லை. ஆனால் இந்த முதலைகளுக்காக கண்ணீர் வடிப்பதற்கு பதிவுலகில் பஞ்சமில்லை.

எனில் நமது மனிதாபிமானம் எதன்பால் இருக்க வேண்டும்? பேட்டா  கூலி குறித்தா, மட்டன் பிரியாணி குறித்தா?

தமிழ் சினிமா நட்சத்திரங்களின் வள்ளல் கதைகள் குறித்து எம்.ஜி.ஆர் தொட்டு விஜயகாந்த் வரை ஏராளமுண்டு. ராமாவரம் தோட்டத்தில் புரட்சித் தலைவர் போடாத விருந்தா, சாப்பிடாத ஆட்களா? விஜயகாந்த் கொடுக்காத அயர்னிங் மிஷினா, மூன்று சக்கர வண்டியா? இல்லை அகரம் பவுண்டேஷனுக்கு அழைத்தால் ஸ்விட்சுடு ஆஃப் (ஆதாரம் அண்ணன் உண்மைத் தமிழன்) என்று வந்தாலும் சூர்யாவின் வள்ளல்தனத்தை வியக்காத பதிவர்களா? எழுதாத பத்திரிகையாளர்களா? யாரிடம் கதை விடுகிறீர்கள்?

கோடிகளில் புரளும் நட்சத்திரங்கள் சில ஆயிரங்களை விட்டெறிவதை, அவர்களது கைகளுக்குத் தெரியாத தருமம், விளம்பர நோக்கமற்ற உதவி என்று ஆயிரத்தெட்டு முறை இந்தக்கதைகளை கேட்டிருந்தாலும், இன்று ஏதோ அஜித் மட்டும் விளம்பரமில்லாமல் பிரியாணி செய்து போடுகிறார் என்று குதூகலிக்கிறார்களே? ஒரு மொக்கை மனிதாபிமானத்தை பாராட்டும் கருத்து கூட அப்படியே அட்சரம் மாறாமல் அதே தரமான மொக்கையுடன் இருப்பதை என்னவென்று சொல்ல?

சினிமாவில் சம்பாதிப்பது என்பது ஒரு சூதாட்டத்தில் ஜாக்பாட் அடிப்பதற்கு ஒப்பானது. அதில் இழந்தவர்கள் இருப்பது போல சுருட்டியவர்களும் இருக்கிறார்கள். ஒவ்வொரு காலகட்டத்தைப் பொறுத்து இந்தச் சுருட்டலை தயாரிப்பாளர்களோ இல்லை அவர்களால் திட்டமிட்டு உருவாக்கப்படும் நட்சத்திரங்களோ, விநியோகஸ்தர்களோ, திரையரங்க உரிமையாளர்களோ, பைனான்சு கொடுக்கும் சேட்டுக்களோ அள்ளிக் கொள்கிறார்கள். அள்ளிய கோடிகளில் சில ஆயிரங்களை கிள்ளி எறிவதுதான் இந்த விளம்பரமற்ற வள்ளல் குணத்திற்கு சான்றாக வியந்தோதப்படுகிறது.

இதன் மறுபக்க நாணயமாகத்தான் சினிமா தொழிலாளர்கள் வர்க்க உணர்வற்ற அடிமைகளாக காலம் தள்ளுகிறார்கள். முதலில் அவர்களை தொழிலாளர்கள் என்று வழமையான பொருளில் அழைக்க முடியாது. அது ஒரு உதிரியான வேலை, உத்திரவாதமற்ற ஊதியம், கம்பெனிகளைப் பொறுத்து நல்ல சாப்பாடு இல்லையென்றால் மோசமான சாப்பாடு, என்று உதிரிப்பாட்டாளி வர்க்கத்திற்குரிய நிலைமைகளே அவர்களின் பணிச்சூழலில் நிலவுகின்றன. அவர்களை ஒரு தொழிலாளி வர்க்கம் என்ற முறையில் அணிதிரட்டுவதும், உணரவைப்பதும், அமைப்பாக்குவதும் சிரமம்.

1950களுக்கு பிறகு ஒளிப்பதிவாளர் நிமாய் கோஷ், இசையமைப்பாளர் எம்.பி சீனிவாசன் போன்ற தலைவர்கள் அவர்களை அமைப்பாக்கி போராடினார்கள். அப்போது அவர்களை ஒழிப்பதற்கு ஏவி.எம் முதலான முதலாளிகள் துடித்ததும் வரலாறு. அந்த வகையில் குறைந்த பட்ச உரிமைகளையாவது பெற்றுத்தரும் அமைப்பாகத்தான் பெப்சி உருவெடுத்தது. அதுவும் இப்போது அம்மா, அய்யா ஆட்களின் தயவில் ஏதாவது கிடைக்காதா என்ற அவல நிலையில் காலம் தள்ளுகிறது.

1997-ஆம் ஆண்டு அவர்களது ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்ற பிரச்சினை வந்த போது பெப்சி தொழிலாளிகள் வேலை நிறுத்தம் செய்தார்கள். முதலாளி, தொழிலாளி பிரச்சினையை படைப்பாளிகள் என்ற போர்வைக்குள் நின்று கொண்டு திசைதிருப்பும் வேலையை முதலாளிகளான பாலச்சந்தர், பாரதிராஜா போன்றோர் செய்தனர். அப்போது ம.க.இ.க சார்பாக இதில் தலையிட்டு படைப்பாளி முகமூடியில் இருக்கும் முதலாளிகளை தோலுரித்து தீவிர பிரச்சாரம் செய்தோம். பெப்சி தலைவர்களை சந்தித்து ஆதரவை தெரிவித்தோம். அவர்களும் உண்மையான சினிமா உலகையும், அதில் அல்லல்படும் தொழிலாளர்களின் கதைகளையும் விரிவாக எடுத்துச் சொன்னார்கள்.

அதே ஆண்டு ஆகஸ்டு 6-ம் தேதி சென்னை கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் எதிரே தொழிலாளர்களை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்காக கோடம்பாக்கம், வடபழனி பகுதிகளில் உள்ள சினிமா தொழிலாளர் குடியிருப்புகளில் விரிவான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. அந்தக் கூட்டத்திற்கு கிட்டத்தட்ட 5000த்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வந்தனர். கூட்டத்தில் தோழர்கள் பேசும் போதும், கலைக்குழுத் தோழர்கள் பாடும் போதும் விசில் சத்தம் அலை அலையாய் வந்தது இப்போதும் நினைவில் நிற்கிறது.

படைப்பாளிகளான முதலாளிகளின் யோக்கியதையை தோலுரித்து ரூ.2 விலையில் ஒரு சிறு வெளியீடு கொண்டு வந்து கிட்டத்தட்ட 10,000 பிரதிகள் தொழிலாளிகளிடம் விற்பனை செய்யப்பட்டன (வினவிலும் விரைவில் வெளியிடுகிறோம்). கூட்டம் முடிந்ததும் துணை நடிகைகள், ஏனைய தொழிலாளர்கள், பெப்சி நிர்வாகிகள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்ததும் நினைவுக்கு வருகிறது. அதற்கு அடுத்தபடியாக அவர்களே நடத்திய கூட்டங்களிலெல்லாம் எமது கருத்துக்கள் அவர்களது கருத்துக்களாக உணர்ந்து பேசப்பட்டன.

எனினும் இதற்கு மேல் இந்தத் தொழிலாளர்களை அமைப்பாக்குவதும், போராடவைப்பதும் சாத்தியமில்லை. ஏற்கனவே குறிப்பிட்டபடி நிலையில்லாத சூழலில் காலம் தள்ளும் அவர்களை ஒரு தொழிற்சாலை தொழிலாளி போல உணரவைப்பது கடினமான ஒன்று.

இந்தப் பின்னணியில்தான்  தமக்கு பேட்டா வழங்காத சூழலை எதிர்த்து பேச முடியாத அந்த தொழிலாளி தனக்கு மட்டன் பிரியாணி போட்ட தலயின் மனிதாபிமானத்தை பாராட்டுவதை கணக்கில் கொள்ளவேண்டும். இது போராட இயலாத ஒரு அடிமையின் அவல நிலை.

வர்க்கம் என்ற முறையில் அணிதிரண்டு சினிமா முதலாளிகளை எதிர்கொள்வதற்கு நிமாய்கோஷ், சீனிவாசன் போன்ற தலைவர்கள் இன்று இல்லை. இருப்பவர்களெல்லாம் அ.தி.மு.க, தி.மு.கவின் பினாமிகளாகவும், குறிப்பிட்ட அளவு முதலாளிகளாகவும் இருக்கிறார்கள். இது போக அரசிடம் வீடுகட்ட இடம் வாங்குவது, இதர சலுகைகள் வாங்குவது என்பதாகத்தான் அவர்களது சிந்தனை இருக்கிறது. நம்மைச் சுரண்டும் முதலாளிகளிடம் போராடிப் பெறுவது தமது உரிமை என்ற சிந்தனை அங்கே இல்லை.

இதனால் இவர்களை கைவிட வேண்டுமென்று பொருளில்லை. ஆனால் அவர்களாகவே இந்தச் சுரண்டலை உணராத வரை, நாம் வெளியிலிருந்து என்னதான் உதவி செய்தாலும் அதனால் பெரிய பலனில்லை. அதே நேரம் திட்டவட்டமான பணிச்சூழல், ஊதியம், என்ற நிலைமை வரும்போது அங்கே நிச்சயம் உணர்வு பெற்ற தொழிலாளிகளும், தொழிலாளிகளின் தலைவர்களும் உருவாவார்கள்.

ஏவி.ஏம் கம்பெனியில் சைவச்சாப்பாடு நன்றாக இருக்கும், கவிதாலாயா கம்பெனியில் பால்பாயாசம் சுவையாக இருக்கும், படப்படிப்பு முடிந்த பிறகு ரஜினி எல்லோருக்கும் சட்டை எடுத்துக் கொடுத்தார், கமலஹாசன் பேன்ட் வாங்கிக் கொடுத்தார், அஜித் பீஸ் உள்ள மட்டன் பிரியாணி போட்டார் என்று தொழிலாளிகள் பேசுவது ஏனென்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் சினிமா உலகில் தொழிலாளிகள் உணர்வற்று அடிமைகளாக இருப்பதற்கு இத்தகைய சினிமாக் கம்பெனி கலாச்சாரங்கள் காரணமென்பதையும் நாம் அறியவேண்டும். பிரியாணியைத் தூக்கி எறிந்து பேட்டாவிற்காக போராடும் நிலை வரும்போது அவர்களது இந்த சீரழிவு கலாச்சாரம் அழியும்.

ஆனால் தொழிலாளிகள் கூட என்றாவது ஒரு நாள் திருந்துவார்கள். ஆனானப்பட்ட நுகர்வு கலாச்சாரத்தில் மூழ்கிக் குளித்த அமெரிக்க மக்களே திருந்தவில்லையா என்ன? அதே நேரம் பத்ரியோ இல்லை பதிவர்களோ இந்த மட்டன் பிரியாணி மனிதாபிமானத்திலிருந்து திருந்துவார்கள் என்பதற்கு உத்திரவாதம் இருக்கிறதா? தெரியவில்லை!

பத்ரிக்கு முக அலங்காரம் செய்த அந்த தொழிலாளி சினிமா உலகை விட்டு துரத்தப்பட்ட நிகழ்வு எதுவும் நமது பதிவர்களுக்கு துயரமாக தெரியவில்லை. ஆனால் அந்தத் துயரத்திற்கு காரணமான உலகைச் சேர்ந்த ஒரு நடிகன் பிரியாணி போட்டது மட்டும் மாபெரும் மனிதாபிமானமாகத் தெரிகிறது என்றால் “நாம் என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம்?”. (தத்துவ உபயம்: தமிழ்ப் பதிவர்கள்).

ஈமு கோழி வளர்ப்பு : கவர்ச்சிகரமான மோசடி!

ஈமு கோழி வளர்ப்பு: கவர்ச்சிகரமான மோசடி! நான்கு ஆண்டுகளுக்கு முன் சேலம் மாவட்டம், வெள்ளையனூர் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் என்ற விவசாயி, தன் குடும்பத் தேவைக்காக இரண்டரை ஏக்கர் நிலத்தில் இரண்டு ஏக்கரை எட்டு லட்ச ரூபாய்க்கு விற்றார். மகள்களின் திருமணச் செலவும் மகனின் படிப்புச் செலவும் போக கையில் சுமார் 2 லட்ச ரூபாய் இருந்தது. இந்தத் தொகையைக் கொண்டு அரை ஏக்கர் நிலத்தில் ஏதேனும் தொழில் செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் இருந்தார்.

இந்நேரத்தில் பத்திரிக்கைகளில் ஈமு கோழியைப் பற்றிய விளம்பரம் வந்திருந்தது. ஈமு கோழிக் குஞ்சுகளை வாங்கி வளர்த்து முட்டை உற்பத்தி செய்து கொடுத்தால், முட்டை ஒன்றை 2000 ரூபாய்க்கு வாங்கிக் கொள்கிறோம் என்று அந்த விளம்பரத்தில் அறிவிக்கப்பட்டிருந்து. அந்த விளம்பரத்தைப் பற்றி  அக்கம் பக்கத்தில் விசாரித்து நம்பிக்கை பெற்ற மாணிக்கம்,  2 லட்ச ரூபாயை ஈமு கோழி வளர்ப்பில்  முதலீடு செய்தார். ஈமு கோழிகளும் வளர்ந்தன. முட்டையும் இட்டன. ஆனால், இப்பொழுது 1000 ரூபாய்க்குக்கூட முட்டை வாங்க ஆளில்லை; வெளியிலும் விற்க முடியவில்லை. ஈமுவுக்குத் தீவனம் போட்டே ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் கடனாளியாகியிருக்கிறார். இன்று இவரைப்போல நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஈமு கோழிப் பண்ணை அமைத்துக் கடனாளியாகி நிற்கிறார்கள்.

விவசாயத்தில் இடுபொருட்களின் கிடுகிடு விலை உயர்வு, ஆட்கள் பற்றாக்குறை, நிச்சயமற்ற பருவ காலங்கள், விவசாயப் பொருட்களுக்கு சந்தையில் நிச்சயமற்ற விலை, இவற்றால் தொடர் நட்டம் முதலானவற்றின் காரணமாக விவசாயிகள் நொடிந்து போயுள்ளனர். விவசாயம் செய்வது தற்கொலைக்குச் சமம் என்று கருதிப் பலரும் மாற்றுத் தொழிலைத் தேட நிர்பந்திக்கப்படுகின்றனர். இப்படி நடுத்தர  சிறு விவசாயிகள் மற்றும் கிராமப்புற இளைஞர்களுக்கான வாழ்வாதாரங்கள் பிடுங்கப்பட்ட பின்னணியில், ஈமு பண்ணை முதலாளிகள் இந்தச் சூழலைப் பயன்படுத்தி விவசாயிகளை ஏய்த்துக் கொள்ளையிடக் கிளம்பியுள்ளனர். தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை சுசி பார்ம்ஸ் முதற்கொண்டு இருபதுக்கும் மேற்பட்ட ஈமு நிறுவனங்கள் அதிரடித் திட்டங்களை அறிவித்து விளம்பரம் செய்து வருகின்றன. “”ஒன்றரை முதல் இரண்டு லட்ச ரூபாய் முதலீடு செய்தால், உங்கள் நிலத்தில் எங்கள் நிறுவனத்தின் செலவில் கோழிகளுக்கான கொட்டகை போட்டு அதில் ஆறு குஞ்சுகள் விடப்படும்; அதற்கான தீவனமும் வழங்கப்படும்; ஈமு கோழி வளர்ப்புக்கு  மாதக் கூலியாய் ரூ. 6000 முதல் 9000  வரை கொடுக்கப்படும்” என்றும், “”கோழிகளுக்கு இரண்டு வயதாகி முட்டையிடும் தருவாயில் கோழியை எடுத்துக்கொண்டு, முதலீட்டுப் பணத்தைத் திருப்பித் தருவோம்” என்றும் இந்நிறுவனங்கள் கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்து வருகின்றன.

மறுபக்கம், விவசாயிகளோ இரண்டு லட்ச ரூபாயை விவசாயத்திலோ அல்லது வங்கியிலோ போடுவதற்குப் பதிலாக இத்திட்டத்தில் முதலீடு செய்தால் கூடுதலாக வருவாய் கிடைக்கும்  என்ற எண்ணத்துடன், இத்தகைய ஈமு கோழிப் பண்ணை நிறுவனங்களின் வாயிலில் வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.  இது மாற்றுத் தொழிலாகவும்,  விவசாயிகள் காலங்காலமாக செய்து வரும் கால்நடை வளர்ப்பை ஒத்ததாக இருப்பதாலும்  இத்தொழிலை விவசாயிகள் பெருத்த நம்பிக்கையுடன் பார்க்கின்றனர்.  தமிழகத்தில் ஈரோடு, திருச்சி, பல்லடம், புதுக்கோட்டை, வாலாஜாபாத், கொடைக்கானல் முதலான பகுதிகளில் இத்தகைய ஈமு வளர்ப்புப் பண்ணைகள் அதிகரித்து வருகின்றன. தமிழகம் மட்டுமின்றி, புதுச்சேரி, ஆந்திரா, கோவா, மகாராஷ்டிரா, ஒரிசா, ம.பி. முதலான மாநிலங்களிலும் ஈமு கோழிப்பண்ணைகள் விரிவடைந்து வருகின்றன.

உண்மை நிலவரம் என்னவென்றால், ஈமுவின் தாயகமான ஆஸ்திரேலியாவில் 1987ஆம் ஆண்டில்தான் வணிகரீதியான ஈமு பண்ணைகள் ஆரம்பிக்கப்பட்டன. அங்குள்ள  ஈமு பண்ணைகள் ஒவ்வொன்றிலும் ஆயிரக்கணக்கான கோழிகள் இருந்தன. இப்படிப் பல ஆண்டுகளாக இத்தொழில் இருக்கும் அந்நாட்டில் ஈமு கோழியின் இறைச்சிக்கான நவீன தொழிற்சாலைகளோ, பதப்படுத்தும் நிறுவனங்களோ இல்லை.  ஆஸ்திரேலியாவின் உள்ளூர்ச் சந்தையிலே  மதிப்பிழந்த பொருளாக ஈமு மாறிவிட்டதால்,  1996இல் ஆஸ்திரேலியப் பண்ணைகளில் 2 லட்சமாக இருந்த ஈமு கோழிகளின் எண்ணிக்கை  2005இல் 18,600  ஆகக் குறைந்துவிட்டது.  ஆனால், இங்குள்ள நிறுவனங்களோ உள்ளூர் சந்தை விரிவடைகிறது; ஏற்றுமதி செய்கிறோம் எனக் கூசாமல் புளுகி, விவசாயிகளை ஏய்த்து வருகின்றன.

ஈமு கோழி வளர்ப்பு : கவர்ச்சிகரமான மோசடி !   ஐந்தாண்டுகளுக்கு முன் 3 மாத வயது கொண்ட ஒரு ஜோடி குஞ்சை 15,000 முதல் 20,000 ரூபாய் வரை இந்நிறுவனங்கள் விவசாயிகளிடம் விற்றன.  குஞ்சுகள் வளர்ச்சி அடைந்து முட்டை இடும்பொழுது முட்டையை ரூ.1500 முதல் 2000 வரை கொள்முதல் செய்ய உத்திரவாதம் கொடுத்தன. ஆனால் இப்போது ரூ. 1000க்குக்கூட முட்டையை வாங்க மறுக்கின்றன. மேலும், கொள்முதல் என்பதே அரிதாகத்தான் நடக்கிறது. இந்நிறுவனங்கள் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்த முட்டையிலிருந்து குஞ்சு உற்பத்தி செய்து மீண்டும் புதிதாக வரும் விவசாயிகளிடம் விற்கின்றன. முட்டை கொள்முதல்  குஞ்சு உற்பத்தி  விநியோகம்  முட்டை கொள்முதல் என்ற சுழற்சிதான் தொடர்ந்து நடந்தேறி வருகிறது. ஈமு கறி ஏற்றுமதி என்பது நடப்பதில்லை. ஈமு கோழித் தீவன நிறுவனங்களோ, கறியை வெட்டிப் பதப்படுத்தும் நிறுவனங்களோ, தோலை உரித்துப் பதப்படுத்தும் நிறுவனங்களோ, கறியிலிருந்து எண்ணெய் எடுக்கும் நிறுவனங்களோ இந்தியாவில் இல்லை. கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் ஈமு கோழியின் உடற்கூற்றியல், மருத்துவம், நோய்கள்  பற்றிய எந்தப் பாடமும் இல்லை.

“”நன்கு வளர்ச்சியடைந்த ஈமு கோழி 5-6 அடி உயரமும் 50 முதல் 60 கிலோ வரை எடையும் கொண்டதாக இருக்கும். அதில் குறைந்தபட்சம் 35 கிலோ கறி தேறும். சுவைமிக்க ஈமு கறி விலை ஒரு கிலோ ஏறத்தாழ ரூ. 450 ஆகும். ஈமு கோழிகள் கொழுப்பு கொலஸ்ட்ரால் இல்லாதது; ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், ஆஸ்த்துமா உள்ளவர்கள் தாராளமாக இதன் இறைச்சியை உண்ணலாம். இக்கோழியின் தோல் சாயமிடுவதற்குப் பயன்படுகின்றன. இதன் இறகுகள் பிரஷ் தயாரிக்கப் பயன்படுகின்றன. முட்டை ஓடுகள் அலங்கார வேலைகளுக்குப் பயன்படுகிறது. ஈமு கோழியின் எண்ணெய் மருத்துவத்துக்குப் பயன்படுகிறது. கோழிக்கறி, ஆட்டுக்கறிக்கு இணையாக ஈமு கோழிக்கறி இனி இந்தியாவில் செல்வாக்கு பெறும்” என்று ஈமு பண்ணை நிறுவனங்களும் ஊடகங்களும் ஆரூடம் கூறுகின்றன. ஆனால், ஈமுவின் இறைச்சியை மிகவும் சொற்பமானவர்களே சாப்பிடுகிறார்கள். அப்படிச் சாப்பிடுபவர்கள் கூடச் சோதனை அடிப்படையில்தான் சாப்பிடுகிறார்களே தவிர, ஈமு கோழி இறைச்சியை ருசிப்பதற்காக அல்ல.

அப்படியென்றால் ஈமு கோழிப்பண்ணை நிறுவனங்கள் எப்படித் தொழில் நடத்த முடிகிறது என்ற கேள்வி எழலாம்.  இத்திட்டத்தில் ஆரம்பத்தில் சேரும் விவசாயிகளுக்கு , அடுத்தடுத்து வந்துசேரும் விவசாயிகளின் முதலீட்டு பணத்திலிருந்து எடுத்துக் கொடுக்கப்படுகிறது. “”எனக்கு முறையாகப் பணம் கிடைத்துவிட்டது” என்று ஆரம்பத்தில் இத்திட்டத்தில் சேரும் விவசாயி தெரிவிப்பதால், மற்றவர்களும் நம்பிக்கை பெற்று பணத்தைக் கட்டுகிறார்கள். இது சங்கிலி போல் தொடர்கிறது. முன்னால் வந்தவனுக்கு பின்னால் வந்தவனின் முதலீட்டுப் பணத்திலிருந்து கொடுக்கப்படுகிறது. விவசாயிகள்  அனைவரும் இக்கோழியை வளர்த்து முட்டைகளை விற்கின்றனர். முட்டை வியாபாரம் மட்டும்தான் நடக்கிறதே தவிர, கறி வியாபாரம் எதுவும்நடப்பதில்லை.

ஈமு வளர்ப்புக்கு நிலமும் நேரமுமில்லாதவர்களுக்கு,  நிறுவனங்களே முதலீடு செய்பவரின் சார்பாக ஒரு இடத்தில் பண்ணையை அமைத்து கோழிகளைப் பராமரிக்கும் திட்டத்தை வைத்துள்ளன. இத்திட்டத்திலும் கணிசமானவர்கள் இணைந்துள்ளார்கள். முதலீடு செய்தவர்கள் அவ்வப்பொழுது தங்கள் பண்ணையைப் பார்வையிட்டு வரலாம். இப்படி முதலீடு செய்தவர்கள் பார்வையிடச் செல்லும் பொழுது, ஒரே பண்ணையை திருப்பித் திருப்பி முதலீட்டாளர்களுக்கு காட்டி, “”இதுதான் உங்கள் பண்ணை” என்று முதலீட்டாளர்களை இந்நிறுவனங்கள் ஏமாற்றுகின்றன. இப்படி ஈமு வளர்ப்பைக் கொண்டு, விவசாயிகளை ஏய்த்தும் பல மோசடித் திட்டங்களின் மூலமாகவும் இந்நிறுவனங்கள் பல கோடிகளைச் சுருட்டியுள்ளன.

இன்றைய சந்தை நிலவரப்படி வளர்ச்சியடைந்த ஈமுவின் இறக்கை முதல் நகங்கள் வரை அனைத்தையும் விற்றாலும் கூட, அதனின் மொத்த மதிப்பு ரூ.25,000/ ஐக்கூடத் தாண்டாது. ஆகையால் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நிற்கும் பொழுது முட்டை கொள்முதலும் நிறுத்தப்பட்டு, கம்பெனியும் காணாமல் போய்விடும். முதலீட்டு பணமும்  திரும்பி வராது. இந்த மோசடியில் ஈமு வெறும் கண்கட்டு வித்தையாக மட்டும் பயன்படுகிறது.

இப்படிப்பட்ட மோசடிகள் தினந்தோறும் நடந்து வருகின்றன. ஏற்கெனவே அனுபவ் தேக்கு மர வளர்ப்புத் திட்டம், சந்தன மரம் வளர்த்தல், கண்வலி கிழங்கு விவசாயம், முயல் வளர்ப்பு, மருந்துநறுமணச் செடிகள் வளர்ப்பு முதலான மோசடித் திட்டங்கள் மூலம் தமிழகத்தில் விவசாயிகள் ஏ#க்கப்பட்ட கதை யாவரும் அறிந்தது. இதேபோல கோல்ட் குயிஸ்ட், டேட்டா என்டரி, இரிடியம் சுரங்கம் தோண்டுதல் , திருப்பூர் பாசி நிறுவன மோசடி, ஸ்பீக் ஆசியா ஆன் லைன், மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் லாட்டரி பரிசு, மல்டி லெவல் மார்க்கெட்டிங் முதலானவை நகர்புறத்தின் படித்த மேட்டுக்குடி மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை ஏய்ப்பதற்கான மோசடி திட்டங்களாகும். இப்படிப் புதுப்புது உத்திகளில் ஆண்டுதோறும் மோசடிகள் வந்த வண்ணம் இருக்கின்றன.  இவ்வகையான திட்டங்களுக்கு முன்னோடி, அமெரிக்காவைச் சேர்ந்த போன்சி என்ற மோசடிப்பேர்வழித்தழானழ்.  இவன் 1930களில் அமெரிக்கா பெரும் பொருளாதார மந்தத்தில் சிக்கி இருந்தபோது, அங்கு ஈமு வளர்ப்பை ஒத்த பல மோசடிகளை மேற்கொண்டு பல நூறு கோடி டாலர்களைச் சுருட்டிய பின்னர் பிடிபட்டான். ஆகையால், இவ்வகை மோசடிகள் “”போன்சி திட்டம்” என்றழைக்கப்படுக்கின்றன.

உலகமயமாக்கலின் விளைவாக மக்களின் வேலை வாய்ப்புகள், வாழ்வாதாரங்கள் பிடுங்கப்படுகின்றன. அதேநேரத்தில் மக்களை நுகர்வு வெறியில் இழுத்து, உழைப்பின் மேலிருந்த மதிப்பீடுகள் ஒழிக்கப்பட்டு, சம்பாதிப்பதற்கான நெறிமுறைகள் உடைக்கப் படுவதும் நடந்து வருகிறது. இந்தச் சூழல் ஈமு வளர்ப்பு போன்ற போன்சி திட்டங்களுக்கு உரமாக அமைகிறது. ஆகையால், விவசாயிகளும் உழைக்கும் மக்களும் உலகமயமாக்கலுக்கு எதிராக நின்று, இழந்து வரும் வேலைவாய்ப்புகளையும் வாழ்வாதாரங்களையும் மீட்க, மோசடியை மூதலனமாகக் கொண்டுள்ள ஈமு கோழி வளர்ப்பு போன்ற திட்டங்களை எதிர்த்துப்  போராட முன்வரவேண்டும்.

________________________________________________

– புதிய ஜனநாயகம், நவம்பர் – 2011

_________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

சங்கப் பரிவாரம் வழங்கும் “”இதுதான்டா ராமாயணம்!”

சங்கப் பரிவாரம் வழங்கும் இதுதான்டா ராமாயணம் !

“”வரலாறு  சொல்லித்தர வாரியாரு வருவாரு”  இது, இந்து மதவெறிக் கும்பல் அதிகாரத்தில் இருந்தால் கல்வித்துறையில் என்ன நடக்கும் என்பதை நையாண்டி செய்யும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பாடல் வரி.  இந்த நையாண்டி வெறும் கற்பனையல்ல, உண்மை என்பதை அண்மையில் டெல்லியிலுள்ள மத்தியப் பல்கலைக்கழகமான டெல்லிப் பல்கலைக்கழகத்தில் நடந்துவரும் சம்பவங்கள் நிரூபித்து வருகின்றன.

அப்பல்கலைக்கழகத்திலுள்ள வரலாற்றுத் துறை இளங்கலை பட்டப்படிப்பில், “” முன்னூறு விதமான இராமாயணக் கதைகள் இந்தியா, தெற்காசியா, கிழக்காசியாவைச் சேர்ந்த மக்கள் மத்தியில் பன்னெடுங்காலமாகப் புழக்கத்தில் இருந்து வருகின்றன” என்பதனை வரலாற்று ஆதாரங்களோடு நிரூபிக்கும் ஏ.கே. இராமானுஜன் என்ற வரலாற்றாசிரியர் எழுதிய “”முன்னூறு இராமாயணங்கள்:ஐந்து உதாரணங்களும் மொழிபெர்ப்புப் பற்றிய மூன்று கருதுகோள்களும்” என்ற கட்டுரை பாடமாக வைக்கப்பட்டிருந்தது.  “”இக்கட்டுரை மதத் துவேஷத்தோடு எழுதப்பட்டிருக்கிறது” என்ற பச்சை பொய்யைத் திரும்பத்திரும்பக் கூறி, இக்கட்டுரையைப் பாடத்திட்டத்திலிருந்து நீக்க வேண்டுமென இந்து மதவெறி பாசிசக் கும்பலைச் சேர்ந்த மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்தி பரிஷத்தும், அப்பாசிசக் கும்பலுக்கு ஆதரவான ஆசிரியர் சங்கங்களும் டெல்லிப் பல்கலைக்கழகத்தை மிரட்டி வந்தன.

அகில பாரதிய வித்யார்தி பரிஷத்தைச் சேர்ந்த கும்பல் 2008 ஆம் ஆண்டு இக்கட்டுரையை எதிர்ப்பது என்ற பெயரில் டெல்லிப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை கட்டிடத்திற்குள் நுழைந்து ரவுடித்தனத்தில் இறங்கியதோடு, அப்பொழுது வரலாற்றுத் துறை தலைவராக இருந்த பேராசிரியர் எஸ்.இசட்.ஹெச். ஜாப்ஃரியைத் தாக்கவும் முனைந்தது.  இக்கட்டுரையைப் பாடத்திட்டத்திலிருந்து நீக்க வேண்டும் எனக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கை உச்ச  நீதிமன்றம் தனது விசாரணையின் கீழ் கொண்டு வந்து, “”நான்கு வரலாற்று அறிஞர்களைக் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டு, அக்குழு இக்கட்டுரை பற்றி கருத்துத் தெரிவிக்க வேண்டும்; அதன் அடிப்படையில் டெல்லிப் பல்கலைக்கழகம் அக்கட்டுரையைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவது பற்றி முடிவெடுக்க வேண்டும்” என உத்தரவிட்டிருந்தது.

நான்கு பேர் கொண்ட அக்குழுவின் மூன்று உறுப்பினர்கள், “”அக்கட்டுரை வரலாற்றுக் கண்ணோட்டத்தோடும், மதிநுட்பத்தோடும் எழுதப்பட்டிருப்பதால் அதனை நீக்கத் தேவையில்லை” எனக் கருத்துத் தெரிவித்தனர்.  ஆனாலும், டெல்லிப் பல்கலைக்கழகத்தின் கல்விக் குழு இப்பெரும்பான்மை கருத்தை ஒதுக்கித் தள்ளிவிட்டு, அக்கட்டுரையைப் பாடத்திட்டத்திலிருந்து நீக்கி ஆர்.எஸ்.எஸ். கும்பலின் விருப்பத்தை நிறைவேற்றியிருக்கிறது.  டெல்லிப் பல்கலைக்கழகத்தின் இக்காவித்தனமான முடிவை எதிர்த்து, அப்பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை ஆசிரியர்களும், மாணவர்களும் போராடத் தொடங்கியுள்ளனர்.  அப்போராட்டத்திற்குப் பல்வேறு இடதுசாரி இயக்கங்கள் மட்டுமின்றி, ஜனநாயக உணர்வுமிக்க வரலாற்று அறிஞர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சங்கப் பரிவாரம் வழங்கும் இதுதான்டா ராமாயணம் !அகில பாரதிய வித்யார்தி பரிஷத் கும்பலைச் சேர்ந்த ஒருவன், “”நான் டி.வி.யில் ராமாயணம் பார்த்திருக்கிறேன்.  அதைத் தவிர வேறு எந்த ராமாயணத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாது” என்ற “ஆழ்ந்த’ கருத்தை இப்பிரச்சினை தொடர்பாக முன்வைத்திருக்கிறான். இதனை ஒரு முட்டாளின் கருத்தாக ஒதுக்கித் தள்ளமுடியாது.  ஆர்.எஸ்.எஸ். கும்பலின் கொள்கையே புராணக் கட்டுக்கதைகளை இந்தியாவின் வரலாறாகத் திணிப்பதுதான்.

இப்புராணக் கதைகளையும், அதன் கதைமாந்தர்களையும் யாரும் விமர்சனரீதியாகப் பார்க்கக்கூடாது என ஆர்.எஸ்.எஸ். கட்டளை போடுவதும், “மதச்சார்பற்ற’ காங்கிரசு கூட்டணி அரசின் கட்டுப்பாட்டிலுள்ள டெல்லிப் பல்கலைக்கழகம் அப்””ஃபத்வா”விற்குப்  பணிந்து போவதும் சகிக்கமுடியாத வெட்கக்கேடு.  சமச்சீர் கல்வி தரமற்றது எனக் கூப்பாடு போட்டுவரும் கும்பலைச் சேர்ந்த ஒரு “அறிவாளி’கூட, இந்த வெட்கக்கேட்டை எதிர்த்து இதுவரை வாய் திறக்கவில்லை என்பதும் தற்செயலானதல்ல.

____________________________________________

புதிய ஜனநாயகம், நவம்பர் 2011

____________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

மூவர் தூக்கு: கிழிந்தது அம்மாவின் கருணைமுகம்!

மரண தண்டனை விதிக்கப்பட்டு, 21 ஆண்டுகளாகக் கொடுஞ்சிறையில் வைத்து வதைக்கப்படும் பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன்

தமக்கு விதிக்கப்பட்டிருந்த மரணதண்டனைக்கு எதிராக முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு அக்டோபர் 28ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் வழக்குரைஞர் மூவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்யவேண்டுமென்றும்,  தூக்குத் தண்டனையை நிறைவேற்றவேண்டுமென்றும் வாதாடினார். இது அனைவரும் எதிர்பார்த்ததுதான்.

ஆனால் “”தமிழக மக்களின் உணர்வுகளுக்கும் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் கருத்துகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் மூவரின் கருணை மனுக்களை மறுபரிசீலனை செய்து அவர்களின் மரணதண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கவேண்டும்” என்று ஒரு தீர்மானத்தை ஆகஸ்டு 30ஆம் தேதியன்று தமிழக சட்டமன்றத்தில் முன்மொழிந்த ஜெயலலிவின் அரசு, தற்போது அதற்கு நேர் எதிராகப் பேசியிருக்கிறது. “”கருணையை நியாயப்படுத்தக்கூடிய சூழ்நிலைகள் எதுவும் தோன்றிவிடவில்லை” என்று கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் கருணை மனுவை நிராகரிப்பதற்கு ஆளுநர் கூறிய வார்த்தைகளை அப்படியே வழிமொழிந்திருக்கிறது. எந்தத் தமிழ் மக்களின் பெயரால் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்  பட்டதோ, “”அந்த மக்களின் உணர்வு குறித்து கருத்து எதுவும் கூற விரும்பவில்லை” என்று அலட்சியமாகச் சொல்லியிருக்கிறது தமிழக அரசின் மனு.

ஜெயலலிதாவின் சட்டமன்றத் தீர்மானத்தின் பின்புலத்தில் இருந்திருக்கக் கூடிய காரணிகளை விளக்கி, “”இது அமைச்சரவை முடிவல்ல… இது இடுக்கண் களைவதற்காக நீண்ட கரமல்ல… இது அரசியல் ஆதாயத்தை ஜேப்படி செய்வதற்காகவே நீண்டிருக்கும் கரம். அதிலும் கொஞ்சம் வேண்டா வெறுப்பாகவே நீட்டப்பட்டிருக்கும் கரம். இலங்கைக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிக்குமாறு மத்திய அரசைக் கோருகின்ற தீர்மானத்தைப் போல, இது இன்னொரு தீர்மானம். அவ்வளவே” என்றும், இதுவும் கூட மக்கள் போராட்டம் தோற்றுவித்த நிர்ப்பந்தத்தின் விளைவு  என்றும் புதிய ஜனநாயகம் செப்டம்பர் இதழில் குறிப்பிட்டோம்.

ஆனால் மூவர் தூக்கினை எதிர்த்துப் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த தமிழ் உணர்வாளர்கள் எனப்படுவோர் ஜெயலலிதாவைப் பாராட்டினார்கள்; அம்மாவையும் “தம்பி’யையும் அக்கம்பக்கமாகப் போட்டு சுவரொட்டி அடித்து பாராட்டு விழா நடத்தினார்கள். சட்டமன்றத் தீர்மானத்துக்குப் பழிவாங்கத்தான் பெங்களூரு வழக்கு முடுக்கி விடப்படுகிறது என்பன போன்ற அரிய கண்டுபிடிப்புகளை வெளியிட்டார்கள். ஆட்சிக்கு அரணாக இருப்போம் என்று சத்தியம் செய்தார்கள். நாப்புண்ணாகிப் புழுத்து நாறுமளவுக்கு அம்மாவின் புகழ் பாடினார்கள். இப்போது?

“முன்னுக்குப் பின் முரண்’, “அதிர்ச்சி’, “துரோகம்’ என்றெல்லாம் சொல்லிக்கொண்டே, “”சட்டப்பிரிவு 161இன் கீழ் கருணை மனுவை அங்கீகரிப்பதற்கு மாநில அரசுக்கு அதிகாரமிருக்கிறது” என்று ஜெயலலிதாவுக்கு ஆலோசனையும் கூறுகிறார்கள். அரசியல் சட்டப்படி அதிகாரம் இருக்கிறதா, இல்லையா என்பதா இப்போது பிரச்சினை? அரசியல் சட்டமாவது, வெங்காயமாவது? காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்சினைகளில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை மீறும் அதிகாரம் அரசியல் சட்டத்தின்படி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதென்று தெளிந்ததனால்தான் கர்நாடக, கேரள அரசுகள் தீர்ப்பை மீறி செயல்படுகிறார்களா? கருணை மனுவை அமைச்சரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப முடியாமல் சட்டம்தான் ஜெயலலிதாவின் கைகளைக் கட்டிப்போட்டிருக்கிறதா?

தற்போது தமது கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து மூவரும் தொடுத்துள்ள வழக்கில், தீர்ப்பு வழங்கப்போவது உயர் நீதிமன்றம்தான். மாநில அரசு தெரிவிப்பது வெறும் கருத்து மட்டுமே. எனினும், மனுவைக் கருணையுடன் பரிசீலிக்குமாறு கருத்து தெரிவிப்பதற்குக் கூட ஜெ. அரசு தயாராக இல்லை. தற்போது நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் மனுவில் கூறப்பட்டுள்ளதுதான் ஜெயலலிதாவின் உண்மையான கருத்து. இந்தக் கருத்துக்கு மாறாக, சட்டமன்றத்தில் அன்று நிறைவேற்றிய தீர்மானம்தான் முரண். அந்த வகையில் “பின்னதற்கு முன்னது முரண்’ என்பதே உண்மை. 20 ஆண்டுகளாக புலி எதிர்ப்பு, தீவிரவாத எதிர்ப்பு என்பதையே தனது அரசியலாகக் கொண்டு, தமிழ்தமிழின உரிமை என்று பேசுவோரையெல்லாம் ஒடுக்கிவரும் ஒரு பாசிஸ்டு, திடீரென்று சட்டமன்றத்தில் அப்படியொரு தீர்மானம் நிறைவேற்றியதுதான் அதிர்ச்சிக்குரியதேயன்றி, தற்போது உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் மனு அல்ல. இந்த சட்டமன்றத் தீர்மானமாக இருக்கட்டும், சென்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது ஈழம் வாங்கித் தருவதாக அம்மா தந்த வாக்குறுதியாக இருக்கட்டும், இவையனைத்துமே “சும்மா’ என்பதை சு.சாமியும் “சோ’வுமே தெளிவுபடுத்தியிருக்கின்றனர்.

மூவர் தூக்கு: கிழிந்தது அம்மாவின் கருணைமுகம்!
அம்மாவின் கருணைக்கு நன்றி தெரிவித்து நாம் தமிழர் இயக்கம் நடத்திய பொதுக்கூட்டத்தில் சீமான் உள்ளிட்டோர்

“ஜெயலலிதாவே தமிழினத்தின் மீட்பர்’  என்று உடுக்கடித்துத் தமிழக மக்களை நம்பவைத்ததும், சட்டமன்றத் தீர்மானம் நிறைவேற்றியவுடனே விழா எடுத்து புகழ்பாடியதும் தமிழின உணர்வாளர்கள் எனப்படுவோர்தான். இப்படியெல்லாம் தமிழ் மக்களை நம்பவைத்த பூசாரிகள் என்ற முறையில்தான், நெடுமாறன், சீமான், வைகோ, பெரியார் தி.க உள்ளிட்டோர், இப்போது ஜெ அரசின் கருத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்தவர்கள் போல முகத்தை வைத்துக் கொள்கிறார்களேயன்றி, ஜெயலலிதா ஒரு பார்ப்பன பாசிஸ்டு என்பது பூசாரிகள் அறியாத உண்மையல்ல. “கேழ்வரகில் நெய் வடியும்’ என்று தெரிந்தேதான் இவர்கள் பொய்ப்பிரச்சாரம் செய்தார்கள். கேட்டால், “”ஜெயலலிதாவைப் பற்றி எங்களுக்கும் தெரியும். சும்மா கொள்கை பேசிக்கொண்டிருந்தால் மூன்று உயிர்களைக் காப்பாற்ற முடியாது” என்று ஏகடியம் பேசுவார்கள். விமரிசிப்பவர்களை காரியத்தைக் கெடுப்பவர்கள் என்று ஏசுவார்கள்.

ஜெயலலிதாவை அண்டியும், ஒண்டியும் அரசியல் நடத்தி, அதையே மாவீரமென்று சித்தரித்து வாய்ப்பந்தல் போட்டு, தமிழ் சினிமாவின் குத்தாட்டத்துக்கு இணையான ரசிக அனுபவத்தை வழங்கும் மேடைக் கச்சேரிகளை நடத்தி வந்தவர்களுக்கு அரசியல் பேசும் வாய்ப்பை அம்மா வழங்கியிருக்கிறார். மனிதாபிமானம், மரண தண்டனை ஒழிப்பு போன்ற அரசியலற்ற சொற்றொடர்களுக்குள் ஒளிந்து கொண்டு அம்மாவின் கருணைக்கு மன்றாடி இனிப் பயனில்லை. மூவரின் மரண தண்டனையை ரத்து செய்வதற்கான அரசியல் நியாயத்தை இனி பேசலாம். இனியாவது பேசுவார்களா என்று பார்க்கலாம்.

_________________________________________________

– புதிய ஜனநாயகம், நவம்பர் – 2011

_________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

அண்ணா நூலகத்தை மூடத்துடிக்கும் பாசிச ஜெயாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!

அண்ணா நூலகத்தை இடம் மாற்றும் ‘ஜெயா’வின் பார்ப்பன பாசிச நடவடிக்கைக்கு எதிராக பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் – 120 பேர் கைது!

நவம்பர் புரட்சி தினத்தை ஏழாம் தேதி கொண்டாடிய கையோடு எட்டாம் தேதி போராட்டத்திற்கு தயாரானார்கள் தோழர்கள்.

கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை இடமாற்றம் என்ற பெயரில் முடக்க  முயலும் பாசிச ஜெயாவின் செயலைக் கண்டித்து புரட்சிகர மாணவர் இளைஞர்முன்னணி சார்பில் 09.11.11 அன்று காலை 10.30 மணியளவில் பனகல் மாளிகை அருகில் திடீர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோட்டூர்புரம் அண்ணா நூலகம் இடமாற்றம் செய்யப்படுவதாகவும் அங்கு குழந்தைகளுக்கான உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட உள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு மருத்துவமனைகள் பராமரிப்பின்றி பாழடைந்து, சீரழிந்து போன சூழலில் அதை மேம்படுத்த எவ்வித முயற்சியும் எடுக்கப்படுவதில்லை. இந்நிலையில் இந்த அறிவிப்பு ஒரு பச்சையான ஏமாற்று.

சமச்சீர் பொதுப்பாடத்திட்டம் மற்றும் தாய்மொழிக் கல்வியினை தடுக்க தனியார் பள்ளி முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் பார்ப்பன பாசிஸ்டான ஜெயலலிதா அதன் தொடர்ச்சியாகவே தரமான நூலகத்தை முடக்குகிறார்.  அதற்கு எதிராக உழைக்கும் மக்கள் அனைவரும் போராட வேண்டிய அவசியம் உள்ளது. இதனை வலியுறுத்தும் விதமாக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி பனகல் மாளிகை அருகே 8.11.2011 அன்று காலையில் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

இதற்கு பு.மா.இ.முவின் சென்னைக்கிளை இணைச்செயலர் தோழர்.நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். இதில் மாணவர்கள், இளைஞர்கள், பெற்றோர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அனைவரும் கைது செய்யப்பட்டனர். இங்கே அதன் புகைப்படங்களையும், வீடியோவையும் இணைத்திருக்கிறோம்.

 

___________________________________________________________________

– புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, சென்னை

____________________________________________________________________

தண்ணீர்க் கொள்ளையை தடுத்து நிறுத்திய மக்கள் போராட்டம்!!

மக்கள் திரள் போராட்டம் என்பது பகுதியளவிலும் நடைபெறக் கூடியது. பகுதி மக்களை ஒன்று திரட்டி அவர்களது இருப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விஷயங்களை தடுத்து நிறுத்த முடியும் என்பதை விருத்தாசலம் பகுதி மனித உரிமை பாதுகாப்பு மையம் சமீபத்தில் நிரூபித்திருக்கிறது.

விருத்தாசலம் எம்.ஆர்.கே.நகர் ஆலடி ரோடு குடியிருப்பு பகுதியில் ‘விருதை மினரல்ஸ்‘ என்ற பெயரில் ஒரு கம்பெனியை நிறுவி, போர் போட்டு தண்ணீர் உறிஞ்சி விற்க சிலர் முயன்றனர்.

இதனை தடுத்து நிறுத்த குடியிறுப்பு பகுதி முழுவதும் தண்ணீர் கொள்ளையைப்பற்றி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. வீடு வீடாகச் சென்று புகார் மனு வாங்கி மாவட்ட ஆட்சியர் உள்பட அனைத்து அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டது. தண்ணீர் கம்பெனி முதலாளிக்கு ஆதரவாக சமரசம் பேச முயன்றவர்களை திருப்பி அனுப்பப்பட்டார்கள்.

ஆனாலும் மக்கள் போராட்டத்தை அலட்சியம் செய்துவிட்டு தண்ணீர் கம்பெனிக்கான தொடக்க விழாவுக்கு நாள் குறிக்கப்பட்டது. துவக்க விழா அன்று மக்களை திரட்டி முற்றுகை போராட்டத்தையும், சாலை மறியலையும் ‘மனித உரிமை பாதுகாப்பு மையம்’ நடத்தியது. பதறியடித்து ஓடி வந்த அதிகாரிகள், ‘உரிய அனுமதி பெறாமல் திறக்கக் கூடாது’ என தண்ணீர் கம்பெனி முதலாளிக்கு வலியுறித்தினர்.

இதனையடுத்து ‘விடுதலை சிறுத்தைகள்’ கட்சியின் மாவட்ட செயலாளர் படை பரிவாரங்களுடன் வந்து, ‘நம்ம பையன்தான் அந்த தண்ணீ கம்பெனியை லீசுக்கு எடுத்து நடத்த போறான். உங்களுக்கு என்ன பிரச்சினை ஏன் தடுக்கீறிர்கள்?’ என கேட்டபோது, ‘தண்ணீர் எடுத்து விற்பதற்காக குடியிருப்பு பகுதியில் போர் போடுவதை அனுமதிக்க முடியாது…’ என்று தீர்மானமாக கூறிவிட்டு அதன் அரசியலும் விளக்கப்பட்டது. இதற்கு அவர், ‘இங்க மட்டும் போராட்டம் பண்ணி என்ன பயன்? மூவ்மெண்ட் பெரிசா வரணும்’ என்றார். ‘நீங்களும் பெரிய மூவ்மெண்ட் தானே… போராடலாமே?’ என்று கேட்டதற்கு ‘மக்கள் கொடுத்தா வாங்கிக்குவாங்க… எங்க போராடப் போறாங்க?’ என்றார். உடனே அவருக்கு சிங்கூர், நந்திகிராமில் நடத்த மக்கள் போராட்டத்தின் அனுபவம் விளக்கப்பட்டது.

‘வெளிநாட்டுல நடக்கிறத பத்தி பேசாதீங்க. நம்ம நாட்ல நடந்தா சொல்லுங்க…’ என்றவரிடம், நந்திகிராம், சிங்கூர் இந்தியாவில் இருப்பதை விளக்கிவிட்டு, ‘யார் தண்ணீர் கம்பெனி ஆரம்பித்தாலும் தடுப்போம். நீங்கள் மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக எங்களுடன் வரவேண்டும்’ என்று புரிய வைத்தப் பிறகு ‘சரி’ என கிளம்பி விட்டார்.

இடையில் மீண்டும் அதிகாரிகளையும், கட்சிக்காரர்களையும் சரிகட்டி, ஒருசில துறையில் மோசடியாக அனுமதி பெற்று கம்பெனியை திறக்க முயன்றனர். அனுமதி வழங்கிய நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. உடனே நகராட்சி ஆணையர், ‘நாங்கள் அனுமதி கொடுக்க வில்லை’ என எழுத்துப் பூர்வமாக கடிதம் கொடுத்தார். ‘தண்ணீர் கம்பெனிக்கு விருத்தாசலம் நகரத்தில் எங்கும் அனுமதி கொடுக்க கூடாது’ என்பதை வலியுறித்தி போராட்டம் தொடர்ந்தது.

இந்நிலையில் 12.10.2011 அன்று மதியம் 3.30 மணியளவில் மினி டெம்போவில் 100க்கும் மேற்பட்ட தண்ணீர் கேன்களில் வெவ்வேறு லேபிளில் தண்ணீரை எடுத்துச் செல்ல முயன்றனர். மக்களின் துணையுடன், வண்டி மறிக்கப்பட்டது. நகரின் மையப்பகுதியில் சென்று ‘தண்ணீயை கொள்ளையடிக்கிறார்கள்… வாங்க வாங்க’ என எழுப்பிய அறைகூவலுக்கு நல்ல பலன் கிடைத்தது.

மக்கள் வண்டியில் ஏறி வாட்டர் கேன்களை கீழே தள்ளி, ஒவ்வொன்றையும் போட்டு உடைத்தனர். போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ‘தண்ணீ கம்பெனிக்கு  சீல் வைக்காமல் இங்கிருந்து போக மாட்டோம்…’ என மக்கள் ஒன்றிணைந்தார்கள்.

‘நாங்கள் பூட்டுகிறோம். அதிகாரிகள் தேர்தல் வேலையாக உள்ளார்கள்…’ என காவல்துறையினர் சொன்னதை மக்கள் ஏற்கவில்லை. ‘கம்பெனியை பூட்டாமல் இங்கிருந்து அகல மாட்டோம்…’ என கம்பெனியின் உள்ளே மக்கள் செல்ல முயன்றனர்.

உடனே காவல் துறை துணை ஆய்வாளர், தானே முன்வந்து இரண்டு கேட்டையும் பூட்டினார். தாசில்தார் வந்து, ‘எனக்கு சீல் வைக்கும் அதிகாரம் கிடையாது. உங்கள் கோரிக்கையை கண்டிப்பாக மாவட்ட ஆட்சியருக்கும் உரிய அதிகாரிக்கும் அனுப்பி நடவடிக்கை எடுக்கிறேன்…’ என உறுதியளித்தார்.

‘போராடும் மக்கள் சார்பில் இங்கே மீண்டும் தண்ணீர் எடுத்தால் அனுமதிக்க மாட்டோம். இன்றைக்கு தண்ணீர் கேனை உடைத்தோம். நாளை தண்ணீர் கம்பெனியை உடைப்போம்’ என்ற முடிவை அதிகாரிகள் முன்னிலையில் மனித உரிமை பாதுகாப்பு மையம் அறிவித்தது. தாசில்தார் அந்த சூழலுக்கு செல்லாமல் உரிய நடவடிக்கை எடுப்போம் என்று கூறிவிட்டு சென்றார்.

__________________________________________________________

 – மனித உரிமை பாதுகாப்பு மையம், விருத்தாசலம்.

___________________________________________________________

ஹனில் டியூப் தொழிற்சங்கக்கிளைத் தலைவர் மீது கொலை முயற்சி!

ஹனில் டியூப் தொழிற்சங்கக்கிளைத் தலைவர் மீது கொலை முயற்சி!

பு.ஜ.தொ.மு.வின் கண்டன ஆர்ப்பாட்டம்.

ஹனில் டியூப் தொழிற்சங்கக்கிளைத் தலைவர் மீது கொலை முயற்சி!பன்னாட்டு ஏகபோக ஹூண்டாய் நிறுவனத்துக்கு உதிரிப்பாகங்களைத் தயாரித்துக் கொடுக்கும் பல நிறுவனங்களில் ஒன்றான ஹனில் டியூப் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் நிலவும் கொத்தடிமைத்தனம், அடக்குமுறை  அச்சுறுத்தலுக்கு எதிராக நிரந்தரத் தொழிலாளர்களும் தற்காலிகத் தொழிலாளர்களும், ஒப்பந்தத் தொழிலாளர்களுடன் இணைந்து,   பு.ஜ.தொ.மு. தலைமையிலான கிளைச் சங்கத்தைக் கட்டியமைத்ததுள்ளனர்.  இத்தொழிற்சங்கத்தை முடக்கி அழிக்கத் துடித்த நிர்வாகம், கூலிப்படைத் தலைவனான விஜயபிரசாத் என்ற மனிதவள மேம்பாட்டு அதிகாரியை வேலைக்கு அமர்த்தியது.

இவனும் அய்யாரப்பன் என்ற அதிகாரியும் கூட்டுச் சேர்ந்து தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்கிவிடுவதாக மிரட்டுவது, தொழிலாளர் குடும்பத்தினரை அச்சுறுத்துவது, சங்கத்திலிருந்து விலகுவதாக எழுதித் தருமாறு நிர்பந்திப்பது, மறுத்தால் அத்தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்குவது என அடக்குமுறைகளை ஏவி வருகின்றனர். ஆனால் இந்த அடக்குமுறைகளால் தொழிற்சங்கத்தையோ தொழிலாளர் வர்க்க ஒற்றுமையையோ இந்த கும்பலால் வீழ்த்த முடியவில்லை. அடுத்த கட்டமாக, சங்கத்தின் கிளைத் தலைவர் தோழர் ஞானவேலுவை கூலிப்படையினரை ஏவி  அடையாளம் தெரியாத வகையில் லாரியை ஏற்றிக் கொல்ல இந்த அதிகாரிகள் முயற்சித்துள்ளனர். இந்த விபத்து குறித்து விஜயபிரசாத் காட்டிய அக்கறையும் துடிதுடிப்பும் அவனது ஏற்பாடாகவே இந்த ‘விபத்து’ நடந்துள்ளது என்பதை நிரூபித்துள்ளது.

முதலாளித்துவ பயங்கரத்தால் ஹனில் டியூப் நிறுவனத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் எதிர்கொண்டுள்ள இந்த அபாயம், தனிப்பட்ட பிரச்சினை அல்ல;  கோடானுகோடி தொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினை என்பதை விளக்கியும், இவ்வட்டாரமெங்கும் தொழிலாளர்கள் இத்தகைய முதலாளித்துவப் பயங்கரத்துக்கு எதிராக ஓரணியில் திரள வேண்டிய அவசியத்தை விளக்கியும், கொலை முயற்சியில் ஈடுபட்ட மனிதவள அதிகாரி விஜயபிரசாத்தைக் கைது செய்யக் கோரியும், நிர்வாகத்தின் அடக்குமுறையை எதிர்த்தும் தொழிற்சங்க உரிமைகளை நிலைநாட்ட போராட அறைகூவியும் பூந்தமல்லி முதலாக சுங்குவார் சத்திரம் வரை பரவலாக சுவரொட்டிப் பிரச்சாரம்  ஆலைவாயிற் கூட்டங்கள் மூலம் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்ட காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பு.ஜ.தொ.மு; அதன் தொடர்ச்சியாக 23.9.2011 அன்று மாலை திருப்பெரும்புதூரில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் தோழர் ஜெயராமன் தலைமையில்  இணைப்பு சங்கங்கள்  கிளைச் சங்கங்களின் தோழர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு முழக்கமிட்ட  இந்த ஆர்ப்பாட்டம், கொத்தடிமைகளாக உழலும் தொழிலாளர்கள் மத்தியில் புதிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

_______________________________________________________

– புதிய ஜனநாயகம், அக்டோபர் – 2011

_______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

வால்வோ தொழிலாளர்களின் போராட்டம்: தொழிலாளர் வர்க்கம் கற்கவேண்டியது என்ன?

ஆகஸ்டு 2-ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்ற வால்வோ தொழிலாளர்களின் போராட்டம் ஏன் என்பது குறித்து சி.ஜ.டி.யு தலைமையில் செயல்படும் வால்வோ பஸ்ஸஸ் தொழிலாளர் சங்கம் வெளியிட்டுள்ள துண்டுப்பிரசுரத்தின் உள்ளடக்கம்:

பொதுமக்களின் வரிப்பணம் யாருடைய வளர்ச்சிக்கு….? பன்னாட்டுக் கம்பெனிகளின் உண்மை நிலை என்ன? “வால்வோ”- தொழிலாளர்களின் நியாயமான போராட்டத்தை நாம் ஏன் ஆதரிக்கவேண்டும்?

அன்பார்ந்த பொதுமக்களே!

இன்று எங்குப் பார்த்தாலும் கண்ணுக்கு கவர்ச்சிகரமான, சொகுசான வால்வோ பேருந்துகள் நகரெங்கும் ஓடிக்கொண்டிருக்கின்றன. இவை நகரின் தோற்றத்தையே மாற்றியிருக்கின்றன. ‘நகர்ப்புற மேம்பாட்டு வளர்ச்சி திட்டம்’ என்ற பெயரில் நமது மத்திய-மாநில அரசுகள் பெங்களூர் மாநகர போக்குவரத்துக் கழகம்(BMTC) மற்றும் கர்நாடக மாநில சாலைப்போக்குவரத்துக் கழகம் (KSRTC) ஆகிய இரு அரசுத்துறைப் போக்குவரத்துக் கழகங்களுடன் இணைந்து இந்த வால்வோப் பேருந்துகளை மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு வாங்குகின்றன.

இந்தப் பேருந்துகள் கண்ணைக் கவரும் வண்ணம், வடிவமைப்பு, இருக்கை வசதிகள் மற்றும் குளிர்சாதன வசதி என அனைவரையும் ஈர்க்கும் விதத்தில் வலம் வந்த போதிலும் இவற்றை உற்பத்தி செய்திடும் தொழிலாளர்களின் நிலைமையோ வெள்ளைக்காரன் ஆட்சிக்காலத்தில் நாம் அடிமைகளாய் அனுபவித்தக் கொடுமைகளை நினைவுப்படுத்துகின்றன.

இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் மொத்தமாக பணத்தை செலுத்தி வாங்குகின்றன. ஒரு நகரப் பேருந்தின் விலை ரூ 80 லட்சமும், தொலைதூரப் பயணப் பேருந்தின் விலை ரூ85 லட்சத்திலிருந்து ரூ1 கோடிக்கும் மேல் நிர்ணயிக்கப்படுகிறது ஆயினும் இத்தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களின் நிலமையோ மிகவும் மோசமாக உள்ளது.

இந்த நவீன யுகத்தில் அநேக தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் உழைக்கும் எந்திரங்களாக, எந்திரத்தின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டு வருகிறார்கள். இதற்கு வால்வோ-வும் விதிவிலக்கல்ல.

இங்கு தொழிலாளர்கள் வியர்வை சிந்தி அழகான சொகுசுப் பேருந்துகளை உற்பத்தி செய்து கொடுக்கிறார்கள் ஆனால், அதற்கு வால்வோ நிறுவனம் கொடுக்கும் பரிசோ இடைக்கால மற்றும் நிரந்திர வேலைநீக்கம்.

கர்நாடக மாநிலம் பெங்களூர் மாநகரத்துக்கு அருகாமையில் உள்ள ஒசக்கோட்டா வட்டத்தில் கவர்ச்சிகரமான சொகுசுப் பேருந்துகளை தயாரிக்கும் சுவீடன் நாட்டைச்சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான வால்வோ பஸ்ஸஸ் பிரைவேட் லிட் என்ற கனரக வாகன உற்பத்தி தொழிற்சாலை இயங்கிவருகிறது.

இந்த ஆலையில் தொழிலாளர்கள் தங்களை சங்கமாக திரட்டிக்கொண்டு போராடியப் போராட்டத்தின் விளைவாக நிரந்தரமாக்கப்பட்ட 400- நிரந்தரத்தொழிலாளர்கள், 450 -ஒப்பந்தத்தொழிலாளர்கள், 150-பயிற்ச்சியாளர்கள் என ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 01-4-2010 முதல் நடைமுறைக்கு வரும்விதத்தில் 3- ஆண்டிற்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொழிற்சங்கத்துடன் செய்துக்கொண்டது இவ்வாலை நிர்வாகம். ஆனால் செய்து கொண்ட ஒப்பந்தத்தை நிர்வாகம் கொஞ்சமும் மதிக்காமல் மீறியே வருகிறது. அங்கிகாரம் பெற்ற தொழிற்சங்கம் இருந்தும் நிர்வாகம் தொழிலாளர்களை நாள்தோறும் துன்புறுத்தி வருகிறது. தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஜனநாயக முறைப்படி பேச்சுவார்த்தை நடத்துவது கிடையாது. நிர்வாகம் தொழிலாளர்கள் மீது செலுத்துகின்ற சட்டவிரோத அடக்குமுறைகளில் சிலவற்றை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கிறோம்.

1.             3 வருடத்திற்கும் மேலாக பயிற்சி மற்றும் தகுதிக்கான் பருவம் முடிந்த போதிலும் கூட தொழிலாளர்கள் நிரந்தரமாக்கப்படுவதில்லை.

2.             கடந்த 1 ஆண்டுகளாக தலைவர், பொதுச்செயலாளர்  மற்றும் ஒரு சங்க உறுப்பினர், ஒரு தொழிலாளர் என மொத்தம் 4- தொழிலாளர்களை பொய்க் காரணம் காட்டி தற்காலிக வேலைநீக்கம் செய்துள்ளனர்.

3.             1-1/2 –ஆண்டுகளாக இரண்டு சிப்டுகளில் வேலைசெய்து உற்பத்தியை பல மடங்கு உயர்த்தியும் கூட அந்த தொழிலாளர்களுக்கு பேருந்துப் போக்குவரத்து வசதியை நிர்வாகம் செய்து தரவில்லை.

4.             செயல்பட்டுக்கொண்டிருக்கும் சங்கத்தை முடமாக்கும் முயற்சியில், கருங்காலிகளை உருவாக்க தொழிலாளர்களிடம் நிர்வாக அதிகாரிகள் மூலம் ஆசைக்காட்டி தூதுவிடுகிறது ஆலை நிர்வாகம்.

5.             நிர்வாகம் தொழிலாளர்களின் மேல் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி, அவர்களை இரவிலும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மன உளச்சலை ஏற்படுத்திவருகிறது.

6.             காமராவினால் தொழிற்சாலையில் உள்ள எல்லாப் பகுதிகளையும் கண்காணிக்கும் ஆலை நிர்வாகம் தொழிலாளர்கள் மீதான குற்றச்சாட்டுகளைக் காண்பிக்க மறுக்கிறது.

மேற்கண்ட நிர்வாகத்தின் அடாவடிப் போக்குகளை எல்லாம் நிறுத்திவிட வலியுறுத்தி, தொழிலாளர்கள் ஒருங்கிணைந்து பல போராட்டங்களை கடந்த 1-1/2 ஆண்டுகளாக நடத்தியும் அதற்கான தீர்வு காணாத நிர்வாகம் தொழிலாளர்களை கிரிமினல்களாக சித்தரித்து முத்திரைக்குத்தி, இழிவுப்படுத்தி அவர்களை அமைதியாய் பணிசெய்யவிடாமல் மன உளச்சலுக்குள்ளாக்கி வருகிறது ஆலை நிர்வாகம்.

இந்தப் பரிதாபமான சூழலில் இந்த ஆலைக்கு நிலம் கொடுத்தவர்கள் நிலையோ மேலும் பரிதாபமானது. தயை கூர்ந்து கீழே படியுங்கள் !

மத்திய அரசாலும், Jn Nurm project என்ற பெயரில் மாநில அரசாலும் அரசு மற்றும் கழகத்தால் பெருமளவில் வாங்கப்படுவதால், வரி செலுத்துவோர் மற்றும் பொதுமக்களின் வரிப்பணம் மூலம் அரசு இவர்களுக்கு பெரும் சந்தையை ஏற்படுத்திக் கொடுக்கிறது.

ஆயினும் தொழிலாளர்களின் பிரச்சனைகளைப் பொறுத்த வரையில் நிர்வாகத்தின் கருத்தை ஒத்த தனது அறிவார்ந்த வாதத்தை அரசு முன்வைக்கிறது. மேலும், தொழிலாளர் சட்டங்கள் மீறப்படுவது பற்றி எந்த நடவடிக்கையும் அது எடுக்கவில்லை. பொதுமக்கள் இதைப் புரிந்து கொள்கின்றனர். முன்னால் போக்குவரத்து மற்றும் உள்துறை அமைச்சர்களின் ஸ்வீடன் பயணத்திற்கு வால்வோ நிர்வாகமே பணம் வழங்கியது.

எனவே, பன்னாட்டு நிறுவனங்களின் சித்திரவதைக்கு எதிராகவும், அரசின் அலட்சியப்போக்குக்கு எதிராகவும் திரண்டெழுவோம் என்ற அடிப்படையில் ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தொழிற்சங்கம் இந்த பிரச்சனையை தீர்த்திட அரசு தலையிட வேண்டுகிறது. நாங்கள் மக்களை இதில் தலையிட்டு தொழிலாளர்கள் நல்ல வேலைச்சூழலில் பணியாற்ற ஏற்பாடு செய்ய வேண்டுகிறோம்.

வரி செலுத்துவோரின் பணம் நியாயமாய் பயண்படுத்தப்பட வேண்டும். தொழிலாளிகளின் மேல் சுரண்டலும் ஒடுக்குமுறையும் நிறுத்தப்பட வேண்டும்.

தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக!

_________________________________________________________________

இந்த விவாகாரத்தில் உயர்நீதி மன்ற தீர்ப்பிலிருந்து எடுக்கப்பட்ட குறிப்பு

நீதிபதி சைலேந்திரகுமார், பகுதிவாழ் மக்களுக்கும் ஆலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்குவது பற்றிய தகவல்களை நில எடுப்பு தாவா இந்த அமர்வின் முன் விசாரணைக்கு வந்த போது கேட்டுள்ளார். 12 நபர்கள் முறையான பணியிலும், 7-நபர்கள் ஒப்பந்த பணியிலும் அமர்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பகுதி வாழ் மக்களுக்கு பணியாற்றுவதற்கான திறன்கள் இல்லாமையால், அவர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை என நிர்வாகத் தரப்பில் கூறப்பட்டது. வெளியிலிருந்து வந்த நபர்கள் குளிர்சாதன அறையில் பணியாற்றிட, நிலம் கொடுத்தவர்களுக்கு துப்புரவுத் தொழிலாளி பணி வழங்கப்பட்டது பற்றி நீதிபதி சைலேந்திரகுமார், நாம் மீண்டும் ஆங்கிலேய ஆட்சிக்கு திரும்புகிறோமா? என அதிருப்தி தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் மலிவான சம்பளத்தில் தொழிலாளர்கள் கிடைப்பதால் மேலை நாடுகள் இலாபநோக்குடன் இந்தியாவில் பணத்தை முதலீடு செய்வதாகவும், இதற்கு நேரடி அன்னிய முதலீடு என முத்திரை குத்தப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவிக்கிறார்.

பணக்கார இந்தியர்கள் வெளி நாடுகளில் முதலீடு செய்ய தகுதியுடையவர்களாய் இருந்தும் அதற்கான வாய்ப்பு அங்கு அளிக்கப்படுவதில்லை. ஆனால் இந்தியாவில் முதலீடு செய்யவும், தொழிலாளர்களை சித்திரவதை செய்யவும் நாம் மேலைநாட்டினரை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறோம்.

_________________________________________________________________

தங்களுடைய சங்க நிர்வாகிகள் நான்கு பேரை மீண்டும் பணிக்கமர்த்துவது என்ற கோரிக்கைககாக இந்தப் போராட்டம் துவங்கப்பட்டது. ஆலைவாயிலில் தர்ணா, உண்ணாவிரதம்,ஹொசகோட்டா நகரில்ஆர்ப்பாட்டம், சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயிகள் பொதுமக்களிடம் பிரச்சாரம் என்ற அளவில் இந்தப் போராட்டம 2-1/2 மாதங்கள் நடத்தப்பட்டது. இதன் இறுதியில் 4-பேரை வேலையில் மீண்டும் சேர்க்க நிர்வாகம் அடாவடித்தனமாக மறுத்துவிட்டது. குறிப்பாக இந்த 2-1/2 மாதங்களில் நிர்வாகம் ஒப்பந்தத் தொழிலாளர்களைக் கொண்டு உற்பத்தியை போட்டுள்ளது. இதனால் நிர்வாகத்தின் உற்பத்தி இலக்கு சிறிய அளவில்கூட பாதிக்கவில்லை என்பதை வெளித்தோற்றத்திற்கு தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் என்று பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் என்பது, ஒரு போராட்டத்திற்குரிய குறைந்தப்பட்ச வரையறையைக் கூட நிறைவேற்றவில்லை. நிர்வாகம் தொழிலாளர்கள் கோரிக்கைக்கு பணிந்து வராமல் போனதற்கு இது மிக முக்கியமான காரணமாக உள்ளது.

இந்த நிலையில் சங்கத்தலைமை, வேலைநீக்கம் செய்யப்பட்ட சங்க நிர்வாகிகளை வேலைக்கமர்த்தும் கோரிக்கையை கைவிட்டு வேலைநிறுத்தத்தை வாபஸ் வாங்கிக் கொண்டது. நீதிமன்றத்தில் வழக்காடி நீதிமன்றத்தின் மூலம் மீண்டும் வேலைக்கமர்த்துவதுதான் தீர்வு என்றால், 2-1/2 மாத வேலை நிறுத்தமே வீண் வேலை என்ற கருத்து விதைக்கப்பட்டுள்ளது.இதனால்  பன்னாட்டுக் கம்பெனி நிர்வாகத்திற்கு எதிரான போராட்டங்கள் மீது அவநம்பிக்கை தற்சமயம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டம் நடைபெறும் காலங்களில், இந்தப் போராட்டத்தை ஆதரித்து பு.ஜ.தொ.மு தோழர்கள் போராட்டத்தை வளர்த்தெடுக்கவேண்டிய அவசியத்தை உணர்த்திப் பேசினர். குறிப்பாக, மாருதி தொழிலாளர் போராட்ட அனுபவங்களையும், ஓசூர்-கமாஸ் வெக்ட்ரா போராட்ட அனுபவங்களையும் விளக்கினர். ஒரு ஆலையில் மட்டுமோ அல்லது அந்த ஆலையின் கிளைத் தொழிலாளர்களைச் சேர்த்துக் கொண்டோ மட்டும் போராடினால் போதாது ; அந்த வட்டாரம் முழுவதுமான தொழிலாளர் வர்க்கத்தை ஓரணியில் திரட்டி உறுதியுடன் போராடினால் மட்டுமே இன்றைய உலகமயச் சூழலில் முதலாளித்துவ அடக்குமுறைகளை முறியடிக்கமுடியும் என்பது விளக்கப்பட்டது. இது மாருதி தொழிலாளர்கள் வெற்றிபெற்றதற்கு அடிப்படையாக இருந்ததையும் எடுத்துச் சொல்லி உணர்த்தப்பட்டது.

அந்தவகையில் ஆலையை நிர்பந்திக்கும் வண்ணம் தேசிய நெடுஞ்சாலை மறியல், அருகில் உள்ள கிராம மக்களை இணைத்துக் கொண்டு போராட்டம், பெங்களூர் நகரில் உள்ள பிற தொழிற்சாலைகளில் உள்ள தோழிலாளர்களை ஒன்றிணைத்து போராட்டம். என்று போராட்டத்தை வளர்த்தெடுக்க வேண்டும். அதன் மூலம் தங்களது உரிமைகளை வென்றிடவேண்டும் என்று அவர்களுக்கு உணர்த்தப்பட்டது. குறைந்தப்பட்சம் சி.ஜ.டி.யு தனது தலைமையில் செயல்படும் பெங்களூர் நகர ஆலைத் தொழிலாளர்கள் எல்லோரையும் இணைத்தாவது போராடவேண்டும் என பேசப்பட்டது.

ஆனால், இவ்வாலைக்கு தலைமை தாங்கும் சி.ஜ.டி.யு தலைமையோ, தொழிலாளர்கள் மூலம் முன்வைக்கப்பட்ட இந்தப் போராட்ட வடிவத்தை நிராகரித்தது. காந்தியின் வழியில்தான் போராடுவோம் என்று கூறியது. புதிய போராட்ட முறைகளை முன்வைக்கும் தொழிலாளர்களிடம், யாரோ சொல்வதைக் கேட்டு சங்கத்தை உடைத்துவிடாதீர்கள் என்று பீதியூட்டியது. இரண்டு மாத காலமாகியும் கோரிக்கை வெற்றியடையவில்லையே என்ற தொழிலாளர்களின் நியாயமான கோபம் அடுத்தக் கட்ட உயர்ந்த வடிவத்திற்குப் போராட்டத்தை வளர்த்தெடுக்க கோருவதையும், தயங்கினால் தங்கள் கைமீறிப் போய்விடும் என்றஞ்சியே சி.ஜ.டி.யு தலைமை வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட்டுவிட்டது. நீதிமன்றத்தின் மூலம் என்று பேசி தனது துரோகத்தை நிலைநாட்டியுள்ளது.

பெங்களூர் நகரில் பன்னாட்டுக் கம்பெனிகள் குவிந்திருப்பதும் அவற்றில் உள்ள தொழிலாளர்கள் தங்களையும் மீறி உரிமைகளுக்காக போராடுவதும் தொடர்ந்து நடந்துவருகின்ற ஒரு பிரச்சனையாக உள்ளது. இவற்றில் ஒரு சில மட்டுமே மீடியாக்களில் வெளிவருகின்றன. பலவும் மூடி மறைக்கவும் அமுக்கவும் படுகின்றன.

இதற்கு முன்பு 2006 ஜனவரியில் சங்க நிர்வாகிகள் மூன்று பேர் வேலைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து அவர்களை மீண்டும் பணியில் அமர்த்தக்கோரி டொயாட்டோ கிர்லாஸ்கர் தொழிலாளர்கள் 1550-க்கும் மேற்பட்டவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டனர். பல சுற்று தொழிலாளர் அதிகாரிகள் முன்பு பேச்சுவார்த்தை நடத்தி ஏற்காத சூழலில் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, டொயோட்டோ நிர்வாகம் ஆலைமூடல் அறிவித்தது. இந்நிலையில் மாநில அரசு தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை சட்டவிரோதம் என்று அறிவித்து தடைசெய்வதாக தெரிவித்தது.

இதனை எதிர்த்து சி.ஜ.டி.யு தலைமை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. கர்நாடக உயர்நீதி மன்றமோ தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற கொள்கையின் ஒளியில் அவசர சேவைகள் சட்டம் (essencial services act) கொண்டுவந்துள்ளது என்று கூறி அவசரப் பொருட்கள் சட்டத்தின்கீழ் வேலைநிறுத்தப் போராட்டம் தடை செய்யப்பட்டதை ஆதரித்து தீர்ப்பு வழங்கியது. இதன் பின்னர் சி.ஜ.டி.யு தலைமையோ போராட்டத்தை கைவிட்டது. நீதிமன்றத்தின் மூலம் மூவரை பணியில் அமர்த்துவது என்று கூறி தொழிலாளர்களின் வர்க்க உணர்வை காயடிக்கும் பணியில் இறங்கியது.

பன்னாட்டுக் கம்பெனிகளின் வேட்டைக்காடாக இந்தியா மாற்றப்பட்டுவருகிறது. அதில் பெங்களூர் போன்ற பெரு நகரங்கள் அவற்றின் முதன்மை இலக்காக உள்ளன. நாளும் பெருகிவரும் பன்னாட்டுக் கம்பெனிகள் தொழிலாளர் உரிமைகள், சட்டங்கள் எவற்றையும் மதிப்பதில்லை. மிகக் கொடியமுறையில் அவர்களை துன்புறுத்தி வருகின்றன.

நிர்வாகத்தின் அடக்குமுறைகளை எதிர்கொள்ள இயலாமல், தொடர்ந்து தனிப்பட்ட முறையில் எதிர்த்துப் போராடும் தொழிலாளர்கள் வெற்றி பெறமுடியாமலும், தொடர்ந்து அடக்குமுறைகளை சகித்துக் கொள்ள இயலாமலும் தற்கொலை செய்துக் கொள்கின்றனர். இது பெங்களூரில் அண்மைக்காலத்தில் அதிகரித்து வந்துள்ளது. மற்றொருபுறம் சங்கமாகத் திரண்டு நிர்வாகத்தின் அடக்குமுறைகளை எதிர்த்து போராடுபவர்கள் சி.ஜ.டி.யு போன்ற துரோகத் தலைமைகளாலும் சட்டவாதம் பேசுகின்ற தலைமைகளாலும் வழிநடத்தப்படுகின்றனர்.

வர்க்க ஒற்றுமையுடன் பல மொழி பேசுகின்ற தொழிலாளர்கள், தங்களது ஆலை நிர்வாகத்தின் அடக்குமுறைகளை எதிர்த்து உறுதியுடன் நின்றாலும் மேற்கண்ட போக்கினால் பெற்றி பெற இயலவில்லை. குறிப்பாக பெங்களூருவில் பன்னாட்டுக் கம்பெனிகளில் தொழிலாளர்கள் நடத்தும் போராட்டங்கள் தோடர்ந்து தோல்வியை சந்திப்பது என்பது தொழிலாளர்கள் மத்தியில் அவநம்பிக்கையை விதைப்பதுடன் எதிர்காலத்தில், இதுபோன்ற போராட்டங்களில் ஈடுபடாமல் ஒதுங்கும் மனப்போக்கை விதைக்கும். இந்த நிலைமையிலிருந்து  தொழிலாளர்கள் தங்களை ஒரு மாற்று சங்கமாக, புரட்சிகர தொழிற்சங்கத்தில் தங்களைத் திரட்டிக்கொண்டு போராடவேண்டியது அவசர அவசியப் பணியாக தொழிலாளர்கள் முன்நிற்கிறது.

______________________________________________________

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, ஓசூர்

________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்