Monday, June 22, 2026
முகப்பு பதிவு பக்கம் 308

சமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ் : மக்களவையில் சு.வெங்கடேசன் வாதம் !

க்களவையில் சமஸ்கிருதப் பல்கலைக்கழகங்களின் மசோதா இன்று (12.12.2019) தாக்கல் செய்யப்பட்டது. இதன் விவாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. சு.வெங்கடேசன், சமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ் என வாதிட்டார்.

இதுகுறித்து மதுரை தொகுதி எம்.பி.யான சு.வெங்கடேசன் இன்று பேசியதாவது :

”இந்த மசோதாவை முன்மொழிகிற பொழுது அமைச்சர் முன்வைத்த கருத்து கடும் அதிர்ச்சியை உருவாக்கியது, இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியாக சமஸ்கிருதத்தையும் உலக அறிவினுடைய ஆதாரமாக சமஸ்கிருதத்தையும் அவர் முன்வைத்தார்.

இதற்கு என்ன அறிவியல் ஆதாரம் இருக்கிறது என்ற கேள்வியை நான் இங்கே எழுப்ப விரும்புகிறேன். நாடாளுமன்றத்தில் அமைச்சர் அறிவியல் பூர்வமான ஆதாரங்களோடு முன்வைக்க வேண்டும் என்பதை மக்கள் விரும்புவார்கள்.

இது அடிப்படையில் ஆதாரமற்ற கருத்து, மட்டுமல்ல. நான் இங்கே சில புள்ளிவிவரங்களையும் எடுத்து வைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

சமஸ்கிருதத்தினுடைய முதல் கல்வெட்டு ராஜஸ்தானத்தினுடைய அத்திப்பாராவிலும் குஜராத்தில் இருக்கிற ஜுனாகடிலும் கிடைத்துள்ளது. அந்த கல்வெட்டின் காலம் கிபி ஒன்றாம் நூற்றாண்டு. ஆனால், தமிழ் மொழியில் முதல் கல்வெட்டு மதுரையில் மாங்குளத்திலும், தேனியில் புலிமான்கோம்பையிலும் கிடைத்திருக்கிறது.‌ இந்தக் கல்வெட்டின் காலம் கிமு ஆறாம் நூற்றாண்டு.

சமஸ்கிருத கல்வெட்டு கிடைத்ததற்கு 700 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்க் கல்வெட்டு கிடைத்திருக்கிறது. சொல்லுங்கள் எது மூத்த மொழி. உங்களை விட 700 ஆண்டு வயதானவர்கள் நாங்கள்.

படிக்க:
கீழடி : ஆரிய – சமஸ்கிருத – பார்ப்பனப் புரட்டுகள் தவிடுபொடி !
♦ தேசிய இன அடையாளங்களை அழிக்கும் மோடி அரசின் சமஸ்கிருதத் திணிப்பு

தமிழ் மொழி மூத்ததா? சமஸ்கிருத மொழி மூத்ததா? என்ற கேள்வியை எழுத்துபூர்வமாக அறிவியல் கண்டுபிடிப்புகளிள் இருந்து நாங்கள் கேட்க விரும்புகிறோம்.

அதே போல இங்கே மிக முக்கியமாக குறிப்பிட்டுள்ளார்கள் இதுவரை இந்தியாவிலே கிமு 6-ம் நூற்றாண்டில் தொடங்கி 18-ம் நூற்றாண்டு வரை 60,000 தமிழ் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.

ஆனால், சமஸ்கிருதக் கல்வெட்டுக்களின் எண்ணிக்கை வெறும் 4000 மட்டும் தான் என்பதை இந்த அவையிலே எடுத்துச் சொல்ல கடமைப்பட்டுருக்கிறேன்.

தமிழ் தேவபாஷை அல்ல

இங்கே மீண்டும் மீண்டும் பலர் சொல்கிறார்கள் சமஸ்கிருதம் தேவ பாஷை என்று, அது அவர்களின் நம்பிக்கை. நான் அதை குறுக்கிடவில்லை, ஆனால் மிக முக்கியமாக இங்கே நாங்கள் சொல்லுவது தமிழ் தேவபாஷை அல்ல.

சமஸ்கிருதத்தில் பெண் புலவர் இல்லை

இது மக்களின் மொழி என்பதுதான் எங்களின் பெருமை. ஏன் தெரியுமா? இரண்டாயிரம் வருடத்திற்கு முன்பு சமஸ்கிருதத்திலே இவ்வளவு இலக்கியங்கள் இருக்கின்றது. ஒரு பெண்ணாவது சமஸ்கிருதப் புலவராக உதயமாகி இருக்கிறாரா?

40 பெண் தமிழ்ப் புலவர்கள்

ஒரு பெண் எழுத்தாளர் கூட கிடையாது. ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட தமிழ் இலக்கியத்தில் ஒருவரல்ல, இருவரல்ல நாற்பதுக்கும் மேற்பட்ட பெண் புலவர்களைக் கொண்ட ஒரே உலக மொழி தமிழ்.

சமஸ்கிருதம் புழங்கு மொழி அல்ல

எனவே தான் தமிழை மக்களின் மொழி என்று இங்கே சொல்கிறோம். அதே போல மிக முக்கியமாக மீண்டும் மீண்டும் சமஸ்கிருதம், எந்தக் காலத்திலும் மக்களின் புழங்கு மொழியாக இருந்ததில்லை.

சமஸ்கிருதம் ஒரு சடங்கியல் மொழி

அது சடங்கியல் மொழி. ஆனால் தமிழ் அப்படியல்ல. எல்லாக் காலத்திலும் மூவாயிரம் ஆண்டுகளாக மக்களின் மொழியாக இருக்கிறது. இன்றைக்கும் இலங்கையில், சிங்கப்பூரில், மலேசியாவில், மொரீசியஸில், கனடாவில் அரசினுடைய அரசு மொழியாக இருக்கிறது.

தமிழர்களுடைய மொழி தமிழ்

தமிழ் தேவபாஷை என்று நாங்கள் சொல்லவில்லை. பூவுலகம் முழுக்க இருக்கிற பல நாடுகளில் இருக்கிற 10 கோடி தமிழர்களுடைய பாஷை என்று நான் இங்கே சொல்ல விரும்புகிறேன்.

புதிய மைல்கல்லாக கீழடி

அதே போல தமிழினுடைய பெருமை அது ஒரு சமயச் சார்பற்ற மொழி. இன்றைக்குக் கீழடியினுடைய ஆய்வு முடிவுகள் இந்திய தொல்லியல் வரலாற்றில் புதிய மைல்கல்லை உருவாக்கியுள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் எழுத்துகள்

கீழடியில் 16,000 பொருட்கள் கிடைத்துள்ளன. அதில் ஒரு பொருள் கூட பெரும் மதங்களும், மத நிறுவனம் சார்ந்த பொருள் கிடையாது. ஆனால் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் எழுத்துகள் கிடைத்துள்ளன.

செழித்தோங்கிய மொழி தமிழ்

கிமு ஆறாம் நூற்றாண்டில் பெரும் மதங்களும் பெரும் மதங்களுடைய கடவுள்களும் உருவாவதற்கு முன்பே செழித்தோங்கிய மொழியாக தமிழ் இருந்தது.

சமஸ்கிருதத்திற்கும் தமிழுக்கும் போட்டி

அதே போல நம்முடைய நாடாளுமன்ற அமைச்சர் தலையிட்டு ‌இந்த விவாதத்தை சமஸ்கிருதத்திற்கும் தமிழிற்கும் நடக்கின்ற ஒரு போட்டியாக, யுத்தமாக மாற்றாதீர்கள் என்று சொன்னார். நிச்சயம் நாங்கள் அப்படி மாற்ற விரும்பவில்லை.

படிக்க:
ஆறு வயதுக் குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் !
♦ குஜராத் கலவரம் : பரிசுத்தமானவர் மோடி – நானாவதி கமிஷன் அறிக்கை !

சமஸ்கிருதத்தை எதிர்க்கும் தமிழ்க் குரல்

எங்களை விட 700 வருடம் இளைய ஒரு மொழிக்கு எதிராக நாங்கள் ஏன் சண்டை போடப்போகிறோம் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால் சமஸ்கிருதம் தான் இந்திய பண்பாட்டின், அறிவின் அடையாளமாக, நீங்கள் மீண்டும் மீண்டும் முன்வைத்தால் அதை எதிர்க்கிற முதல் குரல் தமிழகத்தின் குரலாக இருக்கும்.

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் 4

இன்றைக்கு மத்திய அரசின் நிதி நிலையின் கீழ் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களாக நான்கு இருக்கிறது. இந்த நான்கையும் மத்திய அரசினுடைய பல்கலைக்கழகங்களாக மாற்றுவோம் என்று நீங்கள் சொன்னீர்கள்.

பிரச்சினை காந்தியா? தமிழா?

ஆனால் இன்றைக்கு மூன்று சமஸ்கிருதப் பல்கலைக்கழகங்களை மட்டும் மாற்றிவிட்டு தமிழகத்திலே இருக்கிற காந்திகிராம பல்கலைக்கழகத்தை கைவிட்டு விட்டீர்கள். உங்களின் பிரச்சினை காந்தியா அல்லது தமிழா என்பதை இந்த அவையிலே நாங்கள் கேட்க விரும்புகிறோம்.

இயக்குனர் இல்லாத செம்மொழி நிறுவனம்

காந்தி கிராம பல்கலைக்கழகத்தை உடனடியாக மத்திய பல்கலைக்கழகமாக மாற்ற வேண்டும். இன்றைக்கு உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், உலக செம்மொழி நிறுவனம் பல ஆண்டுகளாக இயக்குனர் போடவில்லை. 150 இடங்கள் காலியாக உள்ளன.

நிதி கொடுக்க மறுப்பு

மொழி சார்ந்த பல பல்கலைக்கழகங்களுக்கு நீங்கள் நிதி கொடுக்க மறுக்கிறீர்கள். அது, மைசூரிலே இயங்கிக் கொண்டிருக்கிற இந்திய மொழிகளினுடைய ஆய்வு நிறுவனம்.

ஒரு மொழியை தூக்கிப் பிடிப்பவது தவறு

இந்த நிறுவனத்தை போன்று அனைத்து இந்திய மொழிகளினுடைய ஆய்வுக்கு, வளர்ச்சிக்குத்தான் ஒரு முக்கியத்துவம் தர வேண்டுமே ஒழிய, ஒரு மொழியை மட்டும் தூக்கிப் பிடிப்பது தவறு. அந்த மொழியையே இந்தியாவினுடைய அடையாளமாக மாற்றுவதுடன் அதை மனிதனுக்கு அப்பாற்பட்ட தேவபாஷை என்ற ஒரு புனிதத் தன்மையை கொடுப்பதும் ஒரு மதச்சார்பற்ற அரசுக்கு நல்லதல்ல.

அனைத்து மொழிகளும் இந்திய அடையாளம்

“இந்திய அடையாளம் அனைத்து மொழிகளிலும் இருக்கிறது அதை உயர்த்திப் பிடிப்போம்”.

இவ்வாறு சு.வெங்கடேசன் தெரிவித்தார்.

நன்றி : Saravana Kanth
ஃபேஸ்புக் பதிவிலிருந்து…

disclaimer

நூல் அறிமுகம் : இந்து மத உருவாக்கம் – காலனியமும் தேசியவாதமும்

ந்தியாவில் மதம் குறித்த புதிய அக்கறைகள் காலனிய ஆட்சிக்காலத்திலிருந்து தீவிரப்பட்டன. மதம் குறித்த அந்தப் புதிய அக்கறைகள் உண்மையில் இந்தியர்களால் உருவாக்கப்பட்டவை அல்ல. இந்திய மக்கள் அப்படியொன்றும் மதம் சம்பந்தமாக குறிப்பான அக்கறைகள் கொண்டவர்கள் அல்ல. இந்தியர்களில் 70 – 80 சதவீதத்திற்கு மேலான மக்கள் மிக எளிய, சாதாரணமான மத நம்பிக்கைகளைக் கொண்டவர்கள். அந்த நம்பிக்கைகளும் ஊருக்கு ஊர், இடத்துக்கு இடம், கூட்டத்துக்கு கூட்டம் வேறுபடக்கூடியவை. ஒரு சிறு குத்துக்கல், ஆண்டுக்கு ஒருமுறை பந்தல் போட்டு, ஆடு கோழி பலியிட்டு அல்லது பொங்கல் வைத்து, ஏதோ ஒரு பழைய நம்பிக்கையோடு, இரண்டு நாட்கள் கூடி இருந்து திருவிழா கொண்டாடிவிட்டு, அதோடு அவரவர் வேலையைப் பார்த்துக்கொண்டு போகவேண்டியது, இப்படித்தான் இந்தியர்களின் மத நம்பிக்கைகள் காலம் காலமாக இருந்து வந்துள்ளன. இப்படிப்பட்ட நம்பிக்கைகளுக்கு பத்து ஊர் சனங்களைக் கூட்டி அல்லது தமிழ்நாட்டு அளவில், இந்திய அளவில் ஒரு பெயர்வைக்கவேண்டும் என்று கூட யாரும் நினைத்தது கிடையாது.

மாறாக, நம்மை ஆளவந்த ஆங்கிலேயர்களுக்கு இந்தியர்களின் மதம் குறித்து பல கேள்விகள் எழுந்தன. இந்தியர்களின் மதம் யாது? அவர்களின் புனித நூல் எது? பாவம், புண்ணியம் பற்றிய அவர்களின் கருத்துக்கள் என்ன? இந்திய மக்களின் கடவுளர்கள் யாவர்? இந்த மக்களின் வழிபாட்டு முறை யாது? அதன் இறையியல் யாது? போன்ற கேள்விகள். இந்தக் கேள்விகளுக்கெல்லாம் அவர்களுக்கு உடனடியாகப் பதில் கிடைக்கவில்லை. காரணம் அவர்கள் கேட்ட கேள்விகளெல்லாம் அவர்களின் சொந்த மதம் குறித்தவை. காலனிய ஆட்சியாளர்கள் பெரும்பாலும் கிறித்தவ மதத்தைச் சார்ந்தவர்கள். ஐரோப்பாவில் குறிப்பிட்ட அக்காலத்தில் கத்தோலிக்கம் ஓரம் கட்டப்பட்டு, புரோட்டஸ்டன்ட் கிறித்தவம் நிலைகொண்டிருந்தது. அவர்களுக்குக் கிறித்தவ மதத்தைப் பற்றி நன்கு தெரியும். பிரச்சினை இங்குதான் ஆரம்பிக்கிறது. காலனிய ஆட்சிக்காலத்தில் இந்தியர்களின் மதம் பற்றி ஐரோப்பியர்கள் குறிப்பிட்ட சில கேள்விகளை எழுப்பினார்கள், ஆனால் அந்தக் கேள்விகளே ஐரோப்பியக் கேள்விகளாக இருந்தன. அல்லது அந்தக் கேள்விகள் கிறித்தவக் கேள்விகளாக இருந்தன.

இந்தியர்களின் தன்னிச்சையான மதநம்பிக்கைகளும் பல்வேறுவிதமான வழிபாட்டு முறைகளும் அந்த ஐரோப்பியக் கேள்விகளுக்குள், கிறித்தவ கேள்விகளுக்குள் அடங்க மறுத்தன. அடங்க மறுத்தால் விட்டு விடுவதா, என்ன? இந்தியர்களின் மதநம்பிக்கைகள் குறித்த தகவல்களையெல்லாம் திரட்டி அவற்றை ஐரோப்பியர்கள் ”ஒழுங்குபடுத்த ஆரம்பித்தனர். யாரிடமிருந்து தகவல்களைத் திரட்டினார்கள்? எந்தத் தகவல்களைச் சேகரித்தார்கள்? எப்படி ஒழுங்குபடுத்தினார்கள்? தகவல்களை ஒழுங்குபடுத்துதல் என்றால் என்ன? பிரச்சினை இப்போது பெரிதாகி விட்டது.

கடந்த 20-30 ஆண்டுகளாக இந்து மத உருவாக்கம் குறித்த மறுபரிசீலனைகள் தீவிரப்பட்டு வருகின்றன. காலனி ஆட்சிக் காலத்தில் காலனி ஆட்சியின் நிர்வாகத் தேவைகளுக்காக, ஐரோப்பியர்களால், கிறித்தவ மதத்தின் சாயையில் உருவாக்கப்பட்ட ஒரு மதமே இந்து மதம் என்ற கருத்து இப்போது வலுவடைந்து வருகிறது. அது புறத்தே இருந்து உட்செலுத்தப்பட்ட கருத்தாக்கமே தவிர சொந்த அடிப்படைகளிலிருந்தே சுயமாக உருவான பெயர் அல்ல என்று இப்போது எழுதுகிறார்கள். இந்து மதம் என்ற சொல், அதன் பயன்பாடு ஆய்வாளர்களிடம் மட்டுமே உள்ளது என்று சிலர் கருதுகிறார்கள்.  (நூலிலிருந்து பக்.4-5)

படிக்க :
நீரவ் மோடி – பஞ்சாப் தேசிய வங்கி மோசடியின் பரிமாணம் ரூ. 25,000 கோடி !
குஜராத் கலவரம் : பரிசுத்தமானவர் மோடி – நானாவதி கமிஷன் அறிக்கை !

… இந்து மதம் குறித்த மேற்குறித்த விவாதங்கள் மிக இயல்பாகவே இந்து மதம் குறித்த சில புதிய புரிதல்களுக்கு இட்டுச் செல்கின்றன. இந்து மதம் என்பது ஒரு காலனியக் கட்டுமானம் என்ற கருத்து வலுப்பட்டு வருகிறது. காலனிய காலத்துக்கு முன்னால் இத்தனை ஒருங்கிணைந்த வடிவில், தத்துவார்த்த ‘பந்தா’க்களோடு இந்து மதம் எப்போதுமே அதன் வரலாற்றில் வழக்கில் இருந்தது கிடையாது என்பதை இப்போது ஆய்வாளர்கள் ஒத்துக்கொண்டு வருகிறார்கள். இன்றைய இந்து மதத்திற்கு முந்தியகால வரலாற்றோடு தொடர்புகள் இல்லாமலில்லை. ஆயின் அவை ஒற்றைப்படையானவை அல்ல, அவை பலதரப்பட்டவை. அது வேதங்களோடும் வேதாந்தத்தோடும் மட்டும் தொடர்பு கொண்டதல்ல. அது சிந்து வெளியோடும் தொடர்பு கொண்டது ; அது பக்தியோடும் புராணங்களோடும் தொடர்பு கொண்டது; அது தாந்திரிகத்தோடும் தொடர்பு கொண்டது.

இன்றைய இந்து மதம் என்ற கட்டுமானம் காலனிய மற்றும் இந்திய தேசிய அரசியல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது என்பதும் தெளிவாகிவருகிறது. இந்து மதம் என்ற காலனிய ஒற்றை வடிவத்தில் மத அடிப்படைகளை விட அரசியல் அதிகார அடிப்படைகளே அதிகமாக அமைந்துள்ளன என்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது. மட்டுமின்றி, நாட்டு விடுதலைக்குப் பிறகு, சமீபகாலங்களில் அது மிகவும் பிற்போக்குத்தன்மை கொண்ட பாசிச வடிவத்தை ஈட்டிவருகிறது என்பதையும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.  (நூலிலிருந்து பக்.12-13)

இந்த நாட்டின் வரலாற்றில் உருவாகி வந்துள்ள எல்லா ஏற்றத்தாழ்வுகளும், குறிப்பாக சாதி அமைப்பும் ஆண்/ பெண் ஏற்றத்தாழ்வுகளும், இந்து மதத்தினுள் கலந்து புரண்டு கிடக்கின்றன. அந்த ஏற்றத்தாழ்வுகளுக்கு அது அங்கீகாரம் வழங்குகிறது, இன்னொரு புறம் அவற்றுக்கு எதிரான எதிர்ப்புகளையும் பதிவு செய்கிறது. பெருவிரல் துண்டிக்கப்பட்ட ஏகலைவன், ராமனால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்புகன், அரக்கு மாளிகையில் எரித்துக் கொல்லப்பட்ட பழங்குடிப் பெண்ணும் அவளது ஐந்து பிள்ளைகளும் என்பது போன்ற பல கதைகள் அதன் புராணங்களில் புதைந்து கிடக்கின்றன. பிராமணர்களுக்கு அது முதன்மையான இடம் வழங்குகிறது என்பது ஒருபக்கத்தில் உண்மைதான், ஆனால் பிரம்மனுக்கு இந்தியாவில் கோயில் கிடையாது, பிராமணனைக் கொன்ற பிரம்மஹத்தி தோஷம் பலரைப் பீடித்திருக்கிறது, சிவன், ராமன், பரசுராமன், இந்திரன், இன்னும் பலருக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டு. பெண்களின் மீது விதிக்கப்பட்டிருந்த கடுமையான கட்டுப்பாடுகள் பற்றி இந்து மத நூல்களில் ஏராளமாக வாசிக்கலாம், உண்மைதான். ஆயின் சத்யவதி, அம்பா, அம்பிகா, அம்பாலிகா, குந்தி, மாதுரி போன்ற பல பெண்களை அங்கு சந்திக்கவும் முடியும். இந்து மதத்தை நான் தலித்துகள், பழங்குடிகள், பெண்கள் ஆகியோரின் நோக்கிலிருந்து வாசித்து ஒரு மாற்றுவரலாற்றை எழுதுவேன் என்கிறார் வெண்டி டொனிகர். (நூலிலிருந்து பக்.14)

நூல் : இந்து மத உருவாக்கம் (காலனியமும் தேசியவாதமும்)
ஆசிரியர் : ந.முத்துமோகன்

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை – 600 098.
தொலைபேசி எண் : 044 – 2624 1288 | 2625 1968 | 2625 8410
மின்னஞ்சல் : info@ncbh.in

பக்கங்கள்: 16
விலை: ரூ 10.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : noolulagam

ஆறு வயதுக் குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் !

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 6 | பாகம் – 14

ஆறு வயதுக் குழந்தைகளின் நாளைய தினம் பற்றிய சிந்தனைகள்

னது பழைய, விசுவாசம் மிக்க மேசையே, வணக்கம்! அன்றாடம் குழந்தைகளை விட்டுப் பிரிந்ததும், அன்றைய தினம் நடந்ததைப் பற்றி எண்ணிப் பார்க்கவும் அடுத்த நாளைத் திட்டமிடவும் உன்னிடம் விரைந்து வந்தேன். உன் மேல் நோட்டுப் புத்தகங்கள், படங்களைப் பரப்பி வைத்து அவற்றில் மூழ்கினேன், சின்னஞ் சிறு பள்ளி மாணவர்களுக்கான பயிற்சிகளை உருவாக்கினேன், இவர்களுடன் எம்மாதிரியான பேச்சுகள் வரும் என்று கற்பனையில் பார்த்தேன், மொத்தத்தில் அடுத்த நாளுக்கான பாடத் திட்டத்தைத் தீட்டினேன்.

ஒரு ஆற்றில் குச்சி அடித்துச் செல்லப்படுவதைப் போல் ஒரு நாள் ஆசிரியரை இட்டுச் சென்றால் அது ஆசிரியருக்கு ஏற்ற நாளாகாது; ஒரு ஆற்றில் ஒருவன் இலக்கை நோக்கி படகை ஓட்டுவது போல் ஆசிரியர் நாளைத் திட்டமிட்டுச் செலவிட்டால் தான் ஆசிரியருக்கேற்ற நாளாகும். இங்கே ஆற்றை வாழ்க்கையோடு ஒப்பிடலாம்.

எனது ஆறு வயதுக் குழந்தைகளின் குழந்தைப் பருவத்தைப் பற்றி நான் யோசித்துப் பார்த்தேன். அவர்களை டெஸ்கில் உட்கார வைத்ததன் மூலம் நான் அவர்களின் குழந்தைப் பருவத்தைப் பிடுங்கியதாகப் பல சமயங்களில் எனக்குப் பட்டது. ஆசிரியர்களும் குழந்தை வளர்ப்பாளர்களும் பெற்றோர்களும், குழந்தைகளுக்கு படிக்கவும் எழுதவும் கணக்குப் போடவும் சொல்லித் தருவதற்காகக் குழந்தைகளை எங்கே உட்கார வைத்தாலும் இந்த சின்னஞ் சிறியவர்களிடம் குழந்தைப் பருவத்தைப் பிடுங்கியதாக எனக்குத் தோன்றியது.

எனது சிந்தனைகளில் எனது சக ஆசிரியை நத்தாலியா மிஹைலவ்னா கார்ச்சாவுலியை நினைத்துப் பார்த்தேன்.

இருபது வருடங்களுக்கு முன் இவர் ஜார்ஜியாவில் முதன் முதலாக ஆறு வயதுக் குழந்தைகளுக்குப் படிப்பும் ஆரம்பக் கணிதமும் நர்சரிப் பள்ளிகளில் சொல்லித் தர துவங்கிய போது இவருக்கு வயது எழுபதைக் கடந்திருந்தது. ஒரு முறை அவர் வகுப்பில் அமர்ந்து குழந்தைகளைக் கவனித்துக் கொண்டிருந்த போது நத்தாலியா மிஹைலவ்னா திடீரென என் காதில் மெதுவாகக் கூறினார்: “இக்குழந்தைகள் நிறைய சாதிப்பார்கள். ஆறு வயதுக் குழந்தைகளுக்கு உண்மையான குழந்தைப் பருவத்தைத் தர இவர்களுக்கு படிப்பு சொல்லித் தர வேண்டும்!”

அப்போது இந்தச் சொற்கள் முரணுரையாகத் தோன்றின. “குழந்தைகளின் குழந்தைப் பருவத்தில் ஒரு வருடத்தை ஏன் பிடுங்க வேண்டும்? எதற்கு அவசரம்?” என்று ஒரு சில விஞ்ஞானிகள் கூறினர். உண்மையான குழந்தைப் பருவத்தை இவர்களுக்கு அளிப்பதற்காகப் படிப்பு சொல்லித் தர வேண்டும் என்றார் ஆசிரியை.

இதற்குப் பின் பல்லாண்டுகள் உருண்டோடி விட்டன, பல விஷயங்கள் நடந்து விட்டன. ஒரு வருடம் முன்னதாக குழந்தைகளுக்குப் படிப்பு சொல்லித் தர வேண்டுமா இல்லையா என்று யாரும் விவாதிப்பதில்லை. ஆறு வயதுக் குழந்தைகளின் படை பள்ளியை நோக்கிப் பாய்கிறது; இவர்களில் ஒரு பகுதியினர் ஏற்கெனவே பள்ளியில் நுழைந்து, மிகச் சிறந்த வகுப்பறைகளில் அமர்ந்து, ”படிப்பு சொல்லித் தாருங்கள்” என்று அன்பான, அறிவுக் கூர்மையுள்ள ஆசிரியர்களிடம் கோரினர்; இன்னொரு பகுதியினர் நர்சரிப் பள்ளிகளில் தமது சிறு மேசைகளின் முன் அமர்ந்து கொண்டு குழந்தை வளர்ப்பாளர்களிடம் நல்ல உணவைக் கேட்பதோடு, ”படிப்பு சொல்லித் தாருங்கள்” என்றும் கேட்கின்றனர்; மூன்றாவது பகுதியினர் சாக்லேட்டுகள், விளையாட்டு சாமான்களோடு கூடப் புத்தகங்கள், அரிச்சுவடிகள், ஸ்கேல்கள் முதலியவற்றையும் வாங்கித் தருமாறு தம் பெற்றோர்களிடம் நச்சரிக்கின்றனர்; இன்னுமொரு பகுதியினரோ ஒருவருக்கொருவர் தெரிந்ததைப் பகிர்ந்து கொள்வதன் மூலமும் தொலைக்காட்சிப் பெட்டிகளில் வரும் எழுத்துகளையும் கடைகள், பத்திரிகைகள், சஞ்சிகைகளில் உள்ள எழுத்துகளையும் படிப்பதன் மூலமும் தம் அறிவுத் தாகத்தை தீர்த்துக் கொள்வதென முடிவு செய்துள்ளனர்.

இன்றுள்ள குழந்தைகள் எப்படிப்பட்டவர்கள் பார்த்தீர்களா! இந்த ஆறு வயதுக் குழந்தைகள் யார்?

இவர்களுக்கு குழந்தைகளாக இருக்கப் பிடிக்க வில்லையா! இயற்கையன்னை இவர்களுடைய வயதிற்கு உரித்தான குணங்களை மாற்றி விட்டாளா என்ன!

இல்லை, இயற்கை ஒன்றையும் மாற்றவில்லை.

படிக்க:
கறி சாப்பிடாதே ! கோவை மாணவர்களிடம் சங்கிகள் விசமப் பிரச்சாரம் !
அம்பேத்கர் பவுத்தரானது | ஈரான் – அமெரிக்கா சண்டை | ரசிய பொருளாதாரம் | கேள்வி – பதில் !

இவர்கள் 80-ம் ஆண்டுகளின் புலப்பாடுகளைப் பிரதிபலிக்கின்றனர். இவர்கள் தம் குழந்தைப் பருவத்தை விட்டுப் பிரிய விரும்பவில்லை, மாறாக புத்திசாலித்தனமான குழந்தைப் பருவத்தைப் பெற முயலுகின்றனர். எனது முதிய ஆசிரியையின் வார்த்தைகளின் பொருள் அனேகமாக இதுவாகத்தான் இருக்க வேண்டும். புதிய புதிய தலைமுறைகளைச் சேர்ந்த ஆறு வயதுக் குழந்தைகளுக்குப் படிப்பு சொல்லித் தரவும் அவர்களை வளர்க்கவும் நான் துவங்கிய பின் இதை மேன்மேலும் அதிகமாக உணர்ந்தேன்.

குழந்தைப் பருவம் என்றால் என்ன? சந்தோஷமான, உற்சாகமான குழந்தைப் பருவம் என்றால் என்ன? “குழந்தைகளின் குழந்தைப் பருவத்தைப் பாதுகாக்க வேண்டும்” என்ற அறைகூவலை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும்? எனது ஆசிரியர் மனசாட்சியை சாந்தப்படுத்தி, ஊக்குவிக்க இக்கேள்விகளுக்குப் பதில்களைப் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது.

ஆறு வயதுக் குழந்தைகளைக் கவனித்த போது ஒன்று தெரிந்தது. குழந்தைப் பருவம் என்பது வெறும் குறிப்பிட்ட வயதுப் பருவம் மட்டுமல்ல. இப்பருவத்தில் இவர்களுக்கு விளையாட, குதிக்க, ஓடியாடப் பெரும் விருப்பமிருக்கும், இவர்கள் கவலையற்று, பல நேரங்களில் பொறுப்பற்றுத் திரிவார்கள் – என்பதெல்லாம் ஒருபுறம். ஆனால் உண்மையான குழந்தைப் பருவம் என்பது பெரியவர்களாகும் ஒரு நிகழ்ச்சிப் போக்காகும்; இதில் மனித வாழ்க்கை ஒரு குணாம்ச மட்டத்திலிருந்து வேறொரு உயர் மட்டத்திற்கு மாறுகிறது. குழந்தை தானாகவே இதைப் பற்றி யோசிப்பதில்லை. ஆனால் அவனுடைய வளர்ந்து வரும் சக்திகள் அவனை இத்திசையில் உந்தித் தள்ளுகின்றன. இச்சக்திகளால் பெரியவர்களாக்கும் நிகழ்ச்சிப் போக்கை முழுமையாக்க முடியாது. குழந்தைகளின் மீது அக்கறையுள்ள, பெரியவர்களாக வேண்டிய அறிவுத் தீனியையும் அனுபவத்தையும் தரவல்ல பெரியவர்களின் உதவி இக்குழந்தைகளுக்கு வேண்டும்.

குழந்தைகள் வாழ்க்கையின் மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தின் மூல ஊற்று அவர்கள் இவ்வாறு பெரியவர்களாவதில் தான் உள்ளதென்று எனக்குத் தோன்றுகிறது. பரிசுகள், உலாவுதல் மூலம் மட்டும் குழந்தைகளுக்கு சந்தோஷம் தரலாமென சில நேரங்களில் நாம் நினைப்பது தவறாகும். 80-ம் ஆண்டுகளின் ஆறு வயதுக் குழந்தையை இப்படிப்பட்ட அதிசயங்களால் மட்டும் சந்தோஷப்படுத்த முடியாது என்பது எனக்குத் தெட்டத் தெளிவாகி வருகிறது. கதைகளைப் படிக்க அவனுக்குச் சொல்லிக் கொடு, யதார்த்தத்தை அறியும் வழிகளைச் சொல்லிக் கொடு, அவன் தனது எதிர்காலத்தோடு கலந்து பழகுவது குறித்து மகிழ்வான் என்று அனுபவம் காட்டுகிறது. பெரியவனாகும் பாதையில் இவன் பெரியவர்களின் உதவியோடு எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் அவனுக்கு மகிழ்ச்சிகரமான மலர்ச்செண்டாகும்.

இவ்வாறாக நான் ஒரு “முதுமொழிக்கு” வந்தேன். ஒருவேளை அதை நியதியாகக் கருதலாம்.

குழந்தையின் வளர்ந்து வரும் சக்திகளுக்கேற்ப இவன் பெரியவனாக உதவுவது என்றால் இவனுடைய குழந்தைப் பருவத்தை மகிழ்ச்சிகரமானதாக, கவர்ச்சிகரமானதாக, உணர்ச்சிகள் நிறைந்ததாக ஆக்குவது என்று பொருள். மாறாக, குழந்தையின் குழந்தைப் பருவத்தைப் பறிக்கக் கூடாது என்ற மாயையான தர்க்கத்தைக் காட்டி குழந்தைக்கு முழு சுதந்திரம் அளித்து, பெரியவனாகும் இயக்கப் போக்கின் வேகத்தைக் குறைப்பது என்றால் குழந்தைப் பருவ மகிழ்ச்சிகளை அனுபவிக்கும் உண்மையான உணர்வை அவனிடமிருந்து பிரிப்பது என்றாகும்.

இவற்றிற்கெல்லாம் ஒரு விளக்கம் தரலாம்: குழந்தையின் இயல்பு மாறவில்லை, சூழ்நிலை மாறியுள்ளது, குழந்தையின் இயல்பு மீது தாக்கம் செலுத்தும் நமது வாழ்க்கை மாறியுள்ளது, நவீன வாழ்க்கையின் புதிய சூழ்நிலைகளில் குழந்தை வளருகிறான். இந்த மாற்றங்களின் ஒரு வெளிப் பாடாகத்தான் ஆறு வயதுக் குழந்தைகளுக்குப் படிக்கவும் எழுதவும் கணக்குப் போடவும் கற்றுக் கொள்ள வேண்டுமென விருப்பம் தோன்றியது. அதாவது இவர்கள் பெரியவர்களாக, மனித நடவடிக்கையின் அதிக சிக்கலான வடிவங்களை கிரகிக்க விரும்புகின்றனர்.

ஆறு வயதுக் குழந்தைகள் படிக்க ஆசைப்படுகின்றனர். இவர்களைத் தயாரிப்பு வகுப்பிற்கு அனுப்பும் பெரியவர்களாகிய நாம், இவர்களுக்கு பள்ளியில், கல்வியில் சலிப்பு ஏற்படாதவாறு கவனித்துக் கொள்ள வேண்டும். ஓராண்டு பூர்வாங்கத் தயாரிப்பு வகுப்பிற்குப் பின் பள்ளி வாழ்க்கையை இவர்கள் எப்படி அணுகுவார்கள், படிப்பை எப்படிப் பார்ப்பார்கள் என்பதெல்லாம் வீண் கேள்விகள் அல்ல, இவைதான் முக்கிய சாரமாகும்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

சீமான் பேச்சை அவர் தொண்டர்கள் நம்ப காரணம் என்ன ? | கேள்வி – பதில் !

கேள்வி : சீமான் பேச்சு பொய்யானதாய் இருக்கு, ஆனால் அவர் தொண்டர்கள் அப்படியே நம்புகின்றனர் என்ன காரணம்?

பால்ராஜ்

ன்புள்ள பால்ராஜ்,

ரஜினிக்கு தமிழகத்தில் எத்தனை மாவட்டங்கள் இருக்கின்றன, என்னென்ன நதிகள் ஓடுகின்றன, எந்தெந்த தொழில்கள் தமிழகத்தில் இருக்கின்றன, தமிழக மக்களின் வேலை வாய்ப்பு என்ன, விவசாயிகளின் பிரச்சினை என்ன, என்ன.. என்ன… என்பது கடுகளவு கூடத் தெரியாது. ஆனால் 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு முதலமைச்சராக ஆவேன், அதிசயம் அற்புதம் நடக்கும் என்கிறார்.

அவரது வீட்டுக்கு வெளியே 24 மணிநேரமும் தொலைக்காட்சிகள் காத்திருக்கின்றன. அவர் வெளியே வரும் போதெல்லாம் உளறும் ‘அரிய’ கருத்துக்கள், செய்தி தொலைக்காட்சிகளில் ஒரு வார மாலை நேர விவாதத்தை எடுத்துக் கொள்கின்றன. இதற்கு மேல் குறிப்பிடத்தகுந்த அளவில் மக்கள் ரஜினியை, “ஏதாச்சும் செய்வார், ஊழல் செய்யாத நல்ல மனுஷன்” என்று நம்புகிறார்கள். இந்த நம்பிக்கையை திராவிட இயக்கத்தின் தோல்வி, இரண்டு கட்சிகளுக்கு புதிய மாற்று, ஆன்மீக அரசியல் அது இது என பார்ப்பனிய ஊடகங்களும் – ‘அறிவாளிகளும்’ ரஜினியை பிராண்டிங் செய்கின்றனர்.

அதே போன்று கமல். நான் இடதும் இல்லை, வலதும் இல்லை நடு சென்டர் என்று… எல்லாவற்றிலும் உளறுவதே இவரது வாடிக்கை. இவருக்கும் நகர்ப்புறங்களில் மூன்று சதவீத வாக்குகள் கிடைத்திருக்கின்றன. தற்போது உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மாட்டோம், இத்தேர்தல் இரண்டு பெரிய கட்சிகள் நடத்தும் நாடகம் என்று ஏதோ தியாகம் செய்வது போல பிதற்றுகிறார் கமல்.

பாராளுமன்றத் தேர்தலில் ஊர் ஊராய் சுற்றி வந்து பேசியதில் ஒன்றையும் பிடுங்க முடியவில்லை எனும் போது உள்ளாட்சி தேர்தலுக்காக கிராமம் கிராமமாக சுற்ற ஒரு ‘கேரவன் சொகுசு’ நடிகர் தயாராக இருப்பாரா? அவரைப் பொறுத்தவரை ஜெயா போல நோகாமல் நொங்கெடுப்பதற்கு மட்டுமே தயார்.

விட்டால் ஐ.நா. சபை செயலராக அவரைத் தெரிவு செய்தால், அதற்கு தான் மட்டுமே தகுதியானவன் என்று அற்பத்தனமாக நம்புகிறவர் இந்த ‘நம்மவர்’. கமலையும் கூட “ஏதாச்சும் நல்லது செய்வார், ஊழல் செய்யாத உத்தமர்” என்று சிலர் நம்புகின்றனர். அதையும் பார்ப்பன ஊடகங்கள் – அறிஞர்கள் அடங்கிய வலைப்பின்னல் பாஜக-வின் நலன் கருதி பிரமோஷன் கொடுக்கின்றனர்.

படிக்க:
சீமான் சிங்கள ராணுவத்தின் தலையை உருவாமல் இட்லியை உருட்டியது ஏன் ? ஒரு சட்னிக் கதை !
♦ உள்ளாட்சித் தேர்தல் : பாஜக முகத்தில் கரியைப் பூசிய காஷ்மீர் !

இப்படி இருக்கும் போது சீமானை அவரது தொண்டர்கள் நம்புவதில் ஆச்சரியமில்லை. கமல், ரஜினி போல இல்லாமல் சீமான் எல்லாத் தேர்தல்களிலும் நிற்கிறார். ஊர் ஊராக சுற்றுகிறார். வந்தேறிகளை விரட்டி தமிழகத்தை காக்க நான் முதலமைச்சராக மாறவேண்டும் என்று முழங்குகிறார். கூடவே சப்பாத்தி முதல் வெள்ளைச் சீனி வரை எப்படி இந்திக்காரன் நம்மை கெடுத்து விட்டான் என்று உடல் நலம், மண் வளம், காட்டு வளம், மலை வளம், சூழல் வளம், பண்பாட்டு வளம் என்று ஒவ்வொரு வளத்திற்கும் பெரிய கதை, வரலாறு, புராணத்தை வைத்து அடித்து விடுகிறார். பேசும் போது கையை தூக்கியும், புஜங்களை உயர்த்தியும், கண்களை உருட்டியும், குரலை தெறிக்கச் செய்தும் பேசுகிறார். இவ்வளவு உழைப்பு போடுபவரை சாமானியர்கள் அந்த உழைப்பைப் பார்த்தாவது நம்பாமல் இருப்பார்களா என்ன?

என்ன, ரஜினி, கமல் போன்று ஊடக ஆதரவோ, பார்ப்பனிய அறிஞர்களின் ஆசியோ சீமானுக்கு இல்லை. அதே நேரம் முற்றிலும் இல்லை என்றும் சொல்லிவிட முடியாது. திராவிட இயக்கத்தை கொச்சைப்படுத்த குறிப்பாக தி.மு.க.விற்கு எதிராக சீமானை கொம்பு சீவி விட இவர்கள் ஆதரிக்கின்றனர். நாம் தமிழர் தம்பிகளோ தமிழனம் ஆண்ட இனமாக ஆட்சியில் இல்லை என்பதே அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரே காரணம் என்று நம்புகின்றனர். அவர்களில் பலர் சீமானைப் போலவே பேசுகின்றனர். உடல் மொழியிலும் காட்டுகின்றனர்.

மக்களில் அரசியலற்றவர்கள், அவ்வப்போது வரும் பிரச்சினைகளுக்கேற்ப அரசியல் பேசுபவர்கள், முன்னணியாக அடிப்படை அரசியலை புரிந்து கொள்பவர்கள் என்று மூன்று வகையினர் இருக்கின்றனர். தோராயமாக இதில் முதல் வகையினர் 70%, இரண்டாவது வகையினர் 20%, மூன்றாவது வகையினர் 10% இருக்கக் கூடும். முதல் வகையினர்தான் சினிமாவில் ஏழைகளின் தோழனாக மேக்கப் போட்ட ராமாவரம் தோட்டத்து எம்ஜிஆரை சாகும் வரை முதலமைச்சராக அழகு பார்த்தார்கள். அதே போன்று ஜெயாவையும் மதித்தார்கள். தனது காலத்தில் அனைத்து தொழிலாளர் போராட்டத்தையும் ஒடுக்கி, அமைச்சர்கள் ஆதரவாளர்கள் பலரை இன்றைய சுயநிதிக் கல்லூரி நடத்துமளவு புறம்போக்கு நிலங்களை அள்ளிக் கொடுத்து ஒரு கோமாளி பாசிஸ்டைப் போன்று நடந்து கொண்ட எம்ஜிஆரை இந்த ஊர் நம்பும் போது ரஜினியை ஏன் நம்பாது?

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போதும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் போதும் முன்னர் கண்ட பத்துசதவீத மக்களின் அரசியல் வெகுமக்களின் பேசுபொருளாக இருந்தது. ஆனால் அதன் ஆயுள் குறைவு. அதனால்தான் அத்திவரதர் எனும் ஒரு புரட்டு, புராண லீலையிலும் இலட்சக்கணக்கான தமிழக மக்கள் கலந்து கொண்டனர். தமிழக மக்களை அரசியலற்ற வகையினராக இருக்கச் செய்வதில் இங்கிருக்கும் ஊடகங்கள், சினிமா, சீரியல்கள், இவைகளுக்கான நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகள், தன்னார்வக் குழுக்கள், நடுத்தர வர்க்க அறிஞர்கள் போன்று பல காரணங்கள் இருக்கின்றன.

இவையே அதிமுக, பாஜக, ரஜினி, கமல் போன்ற கட்சிகளுக்கு பலம். அரசியலற்ற முறையில் அரசியல் பேசுவது, பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி, பாபர் மசூதி தீர்ப்பு போன்றவற்றை ஆதரித்துக் கொண்டே தம்மை தேசபக்தர்கள் என்று நம்பச் சொல்வது போன்றவற்றை செய்கிறார்கள். திமுக, சிபிஎம் போன்ற கட்சிகள் ஓரளவு அரசியல் பேசினாலும் அரசியலற்ற மக்களை பிரச்சாரம் செய்து மாற்றுவதற்கு பதில் சில நேரங்களில் அவர்களும் அதிமுக-பாஜகவோடு போட்டி போடுகிறார்கள். (அயோத்தி தீர்ப்பை வரவேற்றது ஒரு சான்று.)

படிக்க:
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 16-ம் ஆண்டு விழா கருத்தரங்கம் !
♦ விஜயகாந்த் – தே.மு.தி.க: “எங்கே செல்லும் இந்தப் பாதை?”

இந்தச் சூழ்நிலையில் இந்திய அளவிலான பொருளாதார நெருக்கடி தமிழகத்தையும் பாதித்திருக்கிறது. எட்டுமணிநேரம் ஆட்டோ ஒட்டிய ஓட்டுநர் தற்போது பதினைந்து மணி நேரம் ஓட்டினால்தான் வீட்டிற்கு படியளக்க முடிகிறது. ஐ.டி துறையிலோ வேலை நீக்கம் என்பது கணினி திரைக்கு வெளியே எப்போதும் காத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஒரு தொழிலாளியோ, ஒரு ஐ.டி ஊழியரோ தெலுங்கர்கள்தான் தமிழக வேலை வாய்ப்பை பிடுங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று சீமான் பேசினால் அதை நம்புவதற்கான முகாந்திரம் இருக்கிறது. இத்தகைய இனவாதம் பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்வு இல்லை என்றாலும் மக்கள் தமது பிரச்சினைகளுக்கு தொட்டத்தறியத்தக்க எதிரிகளை காட்டினால் நம்புகின்றனர். எனவே சீமான் தனது இனவாத அரசியலை மேலும் மேலும் உணர்ச்சிகரமாக முன்வைக்க முன்வைக்க அது சிறிதளவான மக்களை பற்றுவதும், தொண்டர்கள் அதை தீவிரமான இலட்சியவாதமாக ஏற்பதும் நடக்கிறது.

விஜயகாந்த அரசியலுக்கு வந்த போது அவரும் இரண்டு திராவிட கட்சிகளை திட்டி ஊர் ஊராக சுற்றி வந்தார். தனித்து போட்டியிட்டார். எட்டு அல்லது பத்து சதவீத வாக்குகளைக் கைப்பற்றினார். அப்போது அரசியல் அரங்கில் அவருக்கான செல்வாக்கு அதிகரித்து பின்னர் கூட்டணியில் சேர்ந்தார். எதிர்க்கட்சி தலைவராகவும் உயர்ந்தார். பின்னர் தனது தனித்துவத்தை இழந்து சென்ற தேர்தலில் தேர்தலுக்கு முந்தைய நாள் வரை அனைத்து கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அம்பலப்பட்டு போனார்.

அவரது ஆரம்பகால அரசியலில் அப்போது வந்து சேர்ந்த பண்ருட்டி ராமச்சந்திரன், விஜயகாந்துடன் சுற்றுப்பயணம் சென்ற போது, ஆங்காங்கே திரண்டு நிற்கும் மக்களைப் பார்த்து எம்ஜஆருக்கு பிறகு இப்படி எல்லா இடங்களிலும் பெருங்கூட்டம் கூடி நிற்பது உங்களுக்குத்தான் என்று விஜயகாந்திடமே சொன்னாராம். (ஆனந்த விகடனில் வந்த செய்தி) அப்போது விஜயகாந்த் என்ன ஒரு மிதப்பில் இருந்திருப்பார்? இப்போது அவர் அனாதை  போல அரசியலில் ஓரங்கட்டுப்பட்டு விட்டதையும் அதையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

இன்றைக்கு ரஜினிக்கு என்ன தெரியும் – தெரியாதோ, அதேதான் விஜயகாந்திற்கு அன்று தெரியும் – தெரியாது. திரைப்படங்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகளை பந்தாடி, நேர்மையான போலீஸ்காரனாக போராடி, நேர்மையான அதிகாரியாக பணியாற்றி, அதிகார வர்க்கத்தை கேள்வி கேட்கும் மக்கள் போராளியாக… இப்படியாக நடித்து உருவான விஜயகாந்தின் இமேஜை மக்கள் அப்போது நம்பினார்கள். அதாவது அரசியலற்ற பிரிவினரான அந்த 70% மக்களில் சிலர் இவர் நல்லவர், வல்லவர், நாட்டிற்கு ஏதாச்சும் செய்வார், ஊழல் செய்யாதவர் என்று வாக்களித்தார்கள்.

வாக்கு வங்கி அரசியல் முற்றிலும் அம்பலப்பட்டுப் போன நிலையில் இருக்கும்  பழைய பெருச்சாளிகளை மக்கள் முற்றிலும் நம்ப முடியாமல் வேறு வழியின்றி அவர்களுக்கு வாக்களிக்கிறார்கள். இதில் புதிய முதலைகள் வரும் போது அவர்களுக்கும் கொஞ்சம் வாக்களிப்போம் என்று யோசிக்கிறார்கள். இந்தப் பின்னணியில்தான் சீமானின் அரசியல் வாழ்க்கை துவங்குகிறது. அதே நேரம் அவர் முன்வைக்கும் மாற்று அரசியலின் அடிப்படை இனவாதத்தில் இருந்தாலும் அந்த மாற்று திட்டங்களை இன்றைய அரசியல் அமைப்பின் தோல்வியைக் கண்டு நொந்து போன சிலர் ஏற்கவும் செய்கின்றனர். ஏனெனில் இன்றைய அரசியல் கட்டமைப்பையும் அதன் தோல்வியையும் ஒரு சமூக அமைப்பு என்றில்லாமல் சில தனிநபர்கள் – கட்சிகளின் தோல்வி என அவர்கள் அரசியலற்ற முறையில் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

படிக்க:
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாஜக தான் நம்பர் 1 !
♦ வெளிநாடு வாழ் இந்தியர்களின் பொருளாதார பங்களிப்பு | உலகத் தமிழர்கள் ஒருங்கிணைப்பு | கேள்வி – பதில் !

ஜெயா, கருணாநிதி மறைவிற்கு பிறகு தான் ஒரு ரவுண்டு வரலாம் என்று மனப்பால் குடித்த சீமானுக்கு இன்று கமல், ரஜினி என்று இரண்டு பால்பவுடர் பால்கள் வெறுப்பேற்றுகின்றன. எனவே சீமானை இன்னும் எத்தனை நாளைக்கு அவரது தொண்டர்கள் நம்புவார்கள் என்பதும் கூட மனப்பால்தான்.

அரசியலற்ற மக்களின் பெரும்பான்மையை வைத்து நாம் சோர்ந்து போகலாமா? தேவையில்லை. இன்றைக்கு இணையத்தில் அரசியலற்ற பிரிவினரை விட அரசியலை குறிப்பாக பேசும் முற்போக்கு பிரிவினர் அதிகரித்து வருகின்றனர். அதனால்தான் கோபேக் மோடி என்ற முழக்கம் இங்கே இணையத்தில் தொடர்ந்து வெற்றி பெறுகிறது. இணையத்தில் இருக்கும் இந்த முற்போக்கு விழிப்புணர்வு மெய்யுலகிலும் பரவவேண்டும். பரவும். அப்போது ரஜினி, கமல், விஜயகாந்துகளுக்கு இடமில்லை என்பதோடு உணர்ச்சிகரமாக இனவாத அரசியலை முன்வைக்கும் சீமானும் திண்டாட வேண்டியிருக்கும்.

அதாவது அரசியல்படுத்தப்பட்ட மக்களிடமிருந்து பிற்போக்காய் அனைத்தையும் நம்பும் தொண்டர் கூட்டம் கிடைப்பது கடினம். ஆனால் வரும் தேர்தலில் இத்தகைய சிரமங்கள் ஏதுமின்றி அவர் ஒரு ஓரமாய் பேசும் நிலைமையே இப்போதைய அரசியல் சூழலின் யதார்த்தம்.

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

உள்ளாட்சித் தேர்தல் : பாஜக முகத்தில் கரியைப் பூசிய காஷ்மீர் !

டந்த ஆகஸ்டு 5-ம் தேதி அரசியல் சாசனத்தின் 370-வது சட்டப் பிரிவின் படி காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து அக்டோபரில் உள்ளாட்சி மன்றங்களுக்குத் தேர்தல் நடத்தப்பட்டது.

எங்கும் இல்லாத அளவிற்கு இந்த தேர்தல் நான்கு கட்டங்களாக நடத்தப்பட்டுள்ளது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது முதல் அனைத்து எதிர்கட்சித் தலைவர்களும் சிறையில் இருக்கின்றனர். பிரதான கட்சிகளான மாநில கட்சிகள் அனைத்தும் தேர்தலைப் புறக்கணித்துவிட்டன. இதுவரை வரலாற்றிலேயே இல்லாத நிலைமை இது. அரசியல் கட்சி தலைவர்கள், அவர்களுக்கு வாதாடும் வழக்கறிஞர்கள், வியாபாரிகள், ‘பிரிவினைவாதிகள்’ என ஆயிரக்கணக்கானோர் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஆள் இல்லாத விளையாட்டு மைதானத்தில் தானே பந்துவீசி தானே பேட்டிங் செய்து ஸ்கோரைத் தட்டிவிடலாம் என கணக்கு போட்டது ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பல்.

Kashmir-Poll
துப்பாக்கி முனையில் ஓட்டு போடும் காஷ்மீரிகள். இதுவா ஜனநாயகம்…?

370 சட்டப் பிரிவின் படியான சிறப்பு அந்தஸ்த்தை நீக்கியதால் கிடைக்கும் ‘நன்மைகள்’ குறித்து இரண்டு மாதங்களாக காஷ்மீர் முழுவதும் பிரச்சாரம் செய்துள்ளது பா.ஜ.க. பா.ஜ.க.வின் ‘தொண்டர்கள்’ 24X7 என தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருந்தனர். செல்வாக்கில்லாத காங்கிரசு கட்சி மட்டும் கடைசி நேரத்தில் தேர்தலில் போட்டி இடப் போவதாக அறிவித்தது. இருப்பினும், செல்வாக்குள்ள மாநிலக் கட்சிகள் தேர்தலைப் புறக்கணிப்பதால் சுயேட்சைகளுக்கும் பி.ஜே.பி.-க்குமான தேர்தலாக இது மாறியது. தனது கட்சியில் கீழ்மட்டத்தில் இருக்கும் ரௌடிகள், குண்டர்கள், பண்டாரம் பரதேசிகளுக்கெல்லாம் கொள்ளையடிப்பதற்கு இந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலை ஒரு நல்வாய்ப்பாகக் கருதியது.

ஆனால், “ஆயிரம் வசதிகள் இருந்தும் நோ பீஸ் ஆஃப் மைண்ட்” என்பது போல இத் தேர்தலில் பா.ஜ.க.வின் நிலை மோசமாகிவிட்டது. மொத்தமுள்ள 307 பஞ்சாயத்து தொகுதிகளில் 217 இடங்களில் சுயேட்சைகள் வெற்றி பெற்றனர். ஏறக்குறைய ஒரு மாத காலம் முழுவதும் பா.ஜ.க. மட்டுமே பெரும் பலத்துடன் பிரச்சாரம் செய்த பொழுதும் 100 இடங்களில் கூட வெற்றி பெற முடியவில்லை. 81 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது பா.ஜ.க.

குப்வாரா, பாண்டிபோரா, காண்டர்பால், ஸ்ரீநகர், குலகம் ஆகிய மாவட்டங்களில் ஒரு இடத்தில் கூட பா.ஜ.க. வெற்றி பெறவில்லை. பாரமுல்லா மாவட்டத்தில் பா.ஜ.க. ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது.

படிக்க:
காஷ்மீர் : இதன் பெயர்தான் இயல்பு நிலையாம் !
♦ ஜார்கண்ட் – சோட்டா நாக்பூர் : இந்தியாவின் மற்றுமொரு ஜம்மு – காஷ்மீர் ! | பகுதி 1

காஷ்மீரில் பா.ஜ.க.-விற்கு கிடைத்த ஒரே ‘வெற்றி’ ஷோபியன் மாவட்டம்தான். அங்குதான் எட்டு இடங்களையும் பா.ஜ.க. வென்றது. ஆனால், அதில் ஆறு இடங்களில் எதிர்த்து யாரும் போட்டி இடவில்லை என்பதையும் இங்கு சொல்லியாக வேண்டும்.

மற்றொருபுறம், இதுவரை இல்லாத வகையில் 98.3% வாக்குப் பதிவு நடந்ததாக மோடி அரசும், அதன் ஊதுகுழல்களான ஊடகங்களும் கூறுகின்றன. சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்பட்டது முதல் மக்கள் போராட்டங்களில் இறங்கியுள்ளனர்; பல எதிர்கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்துள்ளன. ஆனாலும் இதுவரை இல்லாத அளவிற்கு இந்தியாவிலேயே எங்கும் இல்லாத அளவிற்கு 98.3% வாக்குப்பதிவு நடந்துள்ளதாக மோடி அரசு சொல்கிறது.

யாரையும் போட்டியிட விடாது தடுத்துவிட்டு, அதை ‘போட்டி’ என்கிறது பாஜக.

மோடி அரசு சொல்வது போல இது உண்மையாக இருந்தால் அதன் பொருள் என்ன? அதாவது, மாநிலக் கட்சிகள் அனைத்தும் தேர்தலைப் புறக்கணித்த நிலையில், தனிப்பெரும் கட்சியாக பா.ஜ.க. மட்டும் போட்டி இட்டு, இராணுவத்தின் கட்டுப்பாட்டில் மக்களை நிறுத்தி நடத்தப்பட்ட தேர்தலில் கூட மக்கள் பா.ஜ.க-வை வெற்றி பெறச் செய்யவில்லை, சுயேட்சையைத்தான் தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த மக்கள் தீர்ப்பு என்பது, பா.ஜ.க. முகத்தில் காஷ்மீர் மக்கள் காறி உமிழ்ந்திருப்பதையே காட்டுகிறது.

ஆனால், பா.ஜ.க. சொல்வது போல அங்கு தேர்தலில் 98.3% வாக்குப் பதிவு நடக்கவில்லை என்பதற்கு பல நிகழ்வுகளைச் சொல்ல முடியும். உள்ளாட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட பல வேட்பாளர்கள் தொகுதி பக்கமே செல்லவில்லை. பாதுகாப்பு கருதி ஸ்ரீநகரில் ஓட்டல்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். வேட்பாளர் ஊருக்குள்ளே போய் ஓட்டு கேட்கவேமுடியாது என்ற நிலைமை பல இடங்களில் நிலவியது. இதுமட்டுமின்றி, காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள 137 வட்டாரங்களில் 19,582 இடங்களுக்கு 7,528 இடங்களில் மட்டும் தான் தேர்தல் நடந்துள்ளது. மீதமுள்ள 12,054 (61.5%) இடங்களுக்கு யாருமே வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதுதான் எதார்த்த கள நிலைமை. இந்த நிலைமை இருந்தபோதிலும் மக்கள் 98.3% மக்கள் வாக்களித்ததாக பா.ஜ.க. சொல்வது எவ்வளவு பெரிய பொய்!

பொய்களின் மூலம் பாசிசம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள எத்தனிக்கிறது. ஏனெனில், அதனிடம் உண்மை இல்லை. உண்மை அதனிடம் இருக்கவும் முடியாது. காஷ்மீரை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டதாகவும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்திவிட்டதாகவும் பா.ஜ.க. தான் செல்வாக்காக இருக்கும் மாநிலங்களில் ஒரு பொய்யைப் பரப்பலாம். உண்மை அதற்கு நேரெதிரானது, அது அதற்குரிய வினையை ஆற்றியே தீரும். அது மோடியாலோ அவர்களை இயக்கும் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன பாசிஸ்டுகளாலோ அந்த உண்மையை மறைத்துவிட முடியாது.

படிக்க:
காஷ்மீர் : கல்லறைகள் பொய் சொல்லாது !
♦ குடியுரிமை திருத்தச் சட்டத்தை அசாம் எதிர்ப்பது ஏன் ?

இவ்வளவு பேர் சுயேட்சைகள் எப்படி வெற்றி பெற்றார்கள் என்ற கேள்விக்கு விடை தேட ஒரு சம்பவத்தை மட்டும் பார்ப்போம். குப்வாரா மாவட்டத்தில் உள்ள வட்டார வளர்ச்சி கவுன்சிலுக்கான தேர்தலில் ஷாடிகாம் கிராமத்தில் இருந்து 41 வயதுடைய நசீமா பானோ போட்டியிட்டார். அவரது ஒரே கோரிக்கை, பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் (PSA) கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கின்ற தனது கணவரை விடுதலை செய்ய வேண்டும் என்பதே. இதுபோல நூற்றுக்கணக்கானோர் இந்தத் தேர்தலில் போட்டியிட்டனர். சுயேட்சைகள் அதிக அளவில் வெற்றிபெற்றதற்கான காரணமும் இதுதான்!

***

ரோடு போடுதல், பள்ளிக்கூடம் கட்டுதல், தெருவிளக்குக் கம்பம் அமைத்தல், உயர்மட்ட நீர்த்தேக்கத் தொட்டி அமைத்தல், பாலம் கட்டுதல் போன்றவற்றில் காண்ட்ராக்ட் எடுத்து கமிசன் பார்ப்பது, டூவீலர் ஸ்டாண்ட், காய்கறி சந்தை போன்றவற்றில் வரும் வருவாயில் கமிசன் அடித்தல், நூறுநாள் வேலைத்திட்டம், மருத்துவ முகாம், விழிப்புணர்வு முகாம் போன்றவற்றிற்கு அரசு ஒதுக்கும் தொகையில் கமிசன் அடித்தல் என பலவகைகளில், உள்ளூர் அளவில் இருக்கும் பண முதலைகள், ரௌடிகள், ஆதிக்க சக்திகள், மாஃபியாக்கள், மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடிப்பதற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுதான் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்.

அதிகாரப் பரவலாக்கல், வேர்மட்ட ஜனநாயகம், பஞ்சாயத்து ராஜ் என்று பல அலங்காரச் சொற்களால் மறைக்கப்படும் இந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் வெற்றி என்பது சாதி பலம், பண பலம், குண்டர் பலம் ஆகியவைதான் தீர்மானிக்கின்றன. பல கட்சிகள் இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் போது, அது ஏதோ ஜனநாயகத் திருவிழா என்ற ஒரு பொய்யை தொடர்ந்து நிலைநாட்ட முடிகிறது. ஆனால், ஜம்மு காஷ்மீர் போன்ற இந்திய அரசின் ஆக்கிரமிப்பில் உள்ள இராணுவ ஆட்சி நடக்கும் பகுதிகளில் இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் என்பது ஜனநாயகத் திருவிழா என்று யாரும் சொல்வதில்லை. மாறாக, இவற்றை மக்கள் புறக்கணித்தே வந்துள்ளனர். இதுதான் வரலாறு.

இருப்பினும் தற்போது ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்ட உள்ளாட்சி மன்றத் தேர்தல் இதற்கு விதிவிலக்கில்லை என்றாலும், இது பா.ஜ.க.வால், பா.ஜ.க.வின் கீழ்மட்ட குண்டர்களுக்காக மோடி அரசு நடத்திய தேர்தல் என்பதுதான் முக்கியமானது. என்ன ஒரு வித்தியாசம் என்றால், இதில் வெற்றி கிடைத்தது காஷ்மீர் மக்களுக்குத்தான்.

யாழினி

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அசாம் எதிர்ப்பது ஏன் ?

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேச நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளான இஸ்லாமியரல்லாதவர்கள் இந்தியாவில் குடியேறியிருந்தால், அவர்களை இந்தியக் குடிமக்களாக அங்கீகரிக்க இந்தச் சட்டம் வகை செய்கிறது.

இந்தச் சட்டம் மதரீதியில் மக்களைப் பிளவுபடுத்துகிறது, பிற அண்டை நாடுகளான இலங்கை, பர்மா ஆகியவற்றில் துன்புறுத்தலுக்கு உள்ளானவர்களைப் பற்றி சட்டம் ஏதும் சொல்லவில்லை என்ற காரணத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் இந்தச் சட்டத்தை எதிர்க்கின்றன.

ஆனால், அசாமில் இந்தச் சட்டத்தை எதிர்ப்பதற்கான காரணமே வேறு..

1971-ல் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போர், வங்கதேச விடுதலை போர் ஆகியவற்றின்போது, ஒரு கோடிக்கும் அதிகமான வங்கதேச மக்கள் இந்தியாவின் அசாம், மேற்கு வங்கம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் குடியேறினர். காலப்போக்கில் அவர்களுக்கு இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் வாக்குரிமை உள்ளிட்ட பல்வேறு உரிமைகள் வழங்கப்பட்டன.

இந்தக் குடியேறிகளால் தங்களது வேலைவாய்ப்பு, அரசியல், கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட உரிமைகள் பாதிக்கப்படுவதாக கூறி அசாமை பூர்விகமாக கொண்டவர்கள், பல்வேறு இயக்கங்களின் கீழ் பல வருடங்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து, 1971-ம் ஆண்டு மார்ச் 24-ம் தேதிக்கு முன்னதாக அசாமுக்கு வந்தவர்களுக்கு மட்டும் இந்திய குடியுரிமை அளிக்க முடிவு செய்து, 1951-ம் ஆண்டு வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று, அதன் இறுதிப் பட்டியலும் சில மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது.

படிக்க:
குடியுரிமை சட்ட திருத்தம் : ஹிட்லரின் இன அழிப்புத் திட்டம் !
♦ மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 16-ம் ஆண்டு விழா கருத்தரங்கம் !

இதையடுத்து, சட்டவிரோதமான முறையில் அசாமில் குடியேறிய வங்கதேசத்தவர்கள் வெளியேறுவார்கள் என்று அம்மாநிலத்தவர்கள் நினைத்திருந்தார்கள்.

இந்த நிலையில்தான் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவின் மூலம் வங்கதேசத்திலிருந்து குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை கிடைத்துவிடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால்தான், அம்மாநிலத்தில் மீண்டும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

ஆக, பொதுவாக எதிர்க் கட்சிகள் காட்டும் எதிர்ப்பு என்பது குடியுரிமை வழங்குவதில் மதரீதியில் பாகுபாடு காட்டக்கூடாது என்பதற்காக. அசாமில் நிலவும் எதிர்ப்பு என்பது, யாருக்கும் குடியுரிமை கொடுக்கக்கூடாது என்பதற்காக.

இது முக்கியமான வேறுபாடு.

நன்றி : முரளிதரன் காசி விஸ்வநாதன்
ஃபேஸ்புக் பதிவிலிருந்து…

disclaimer

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 16-ம் ஆண்டு விழா கருத்தரங்கம் !

மதுரை கருத்தரங்கம்

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 16-ம் ஆண்டு விழா கருத்தரங்கம் !

நாள் : 22.12.2019, ஞாயிறு, காலை 10.30 மணி.
இடம் : நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் அரங்கம். (சோகோ அறக்கட்டளை), கே.கே. நகர், மதுரை.

தலைமை :

பேராசிரியர் அ. சீநிவாசன்
தலைவர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரைக் கிளை.

கருத்தரங்க தலைப்பு :

அயோத்தி – காஷ்மீர் – சபரிமலை – தேசிய குடிமக்கள் பதிவேடு
பறிக்கப்படும் மனித உரிமைகள் தகர்க்கப்படும் அரசியல் சட்டம்.

கருத்தாளர்கள் :

வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன்
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்.

திரு ஆளூர் ஷாநவாஸ்
மாநில துணைப் பொதுச்செயலாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி.

தோழர் தியாகு
பொதுச் செயலாளர், தமிழ் தேசிய விடுதலை இயக்கம்.

நன்றியுரை :

திரு ம. லயனல் அந்தோணி ராஜ்
செயலாளர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரை.

நூலரங்கம் :

கீழைக்காற்று வெளியீட்டகம், சென்னை

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
மதுரை மாவட்டக் கிளை.
தொடர்புக்கு : 73393 26807.

*****

Vinavu LIVE : தொழில்நுட்ப பிரச்சினை இல்லாத பட்சத்தில் இந்த நிகழ்வு மதுரையிலிருந்து நேரலையாக ஒளிபரப்பப்படும் – இணைந்திருங்கள்

பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சுதந்திரம், நீதி, சமத்துவம், மதச்சார்பின்மை மீதான மிகப்பெரிய தாக்குதல்.

1992, டிச.6-பாபர் மசூதி இடிப்பு “தேசிய அவமானம்” என்றது உச்சநீதிமன்றம். நவ.9, 2019 தீர்ப்போ மனித குலத்திற்கே அவமானம்! ஆக்கிரமிக்கப்பட்ட ஓர் “அசையாச் சொத்து” தொடர்பான சிவில் வழக்கை – இந்து-முசுலீம் பிரச்சினையாகக் கருதி, அகழாய்வு செய்து, அரசியல் சட்ட அமர்வு விசாரித்ததே அப்பட்டமான அரசியல் சட்ட விரோதம்!

1858-லிருந்து 1885 வரை பாபர் மசூதியின் வெளிப்பகுதி ஆக்கிரமிப்பிற்கு எதிராக 8 வழக்குகள் நடந்து தீர்ப்பு பாபர் மசூதி நிர்வாகத்திற்கு ஆதரவாக வந்துள்ளது. 1934-ல் பாபர் மசூதியின் டூம்கள் சேதப்படுத்தப்பட்டதை, சரிசெய்தது வெள்ளை அரசு. பாபர் காலத்திலிருந்து, வெள்ளை அரசுவரை மசூதிக்கு மானியம் வழங்கப்பட்டது.

1949, டிச.16-வரை பாபர் மசூதியில் தொழுகை நடத்தப்பட்டது; டிச.22-ல் சட்டவிரோதமாக சிலைகள் உள்ளே வைக்கப்பட்டது என்பதை ஏற்கும் நீதிமன்றம் இசுலாமியர்களிடம் தொடர்ந்து அனுபவம் இருந்ததற்கான ஆதாரம் இல்லை என்கிறது!

பிரிட்டிஷ் ஆட்சிவரையிலான பிரச்சினைகளை மட்டுமே இந்திய நீதிமன்றங்கள் விசாரிக்க முடியும் என்று சொல்லும் உச்சநீதிமன்றம், 1528-1858 வரை முசுலீம்கள் தொழுகை நடத்தியதற்கு ஆதாரம் கேட்பதேன்? 12-ம் நூற்றாண்டு ராமர் கோயிலை இடித்துவிட்டு பாபர் மசூதி கட்டப்பட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை ; 12-16 நூற்றாண்டுகள் (400 ஆண்டுகள்) வரலாறே இல்லை என்று சொல்லும் உச்சநீதிமன்றம், கோயிலை இடித்துவிட்டுத்தான் பாபர் மசூதி கட்டினார் என்று சொல்லி நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோரைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ் – விஎச்பி – பாஜக கூட்டத்தைக் கண்டிக்காததுடன், டிச.6, 1992 மசூதி இடிப்பு வழக்கு குறித்து எந்த உத்தரவும் பிறப்பிக்காதது ஏன்?

பாபர் மசூதி பிரச்சனை இந்து-முசுலீம் பிரச்சினை அல்ல. பெரும்பான்மை இந்துக்கள் – பாபர் மசூதி இருக்கும் இடத்தில் ராமர் பிறந்தார் என நம்பவும் இல்லை. தென்னகம், வட கிழக்கு மாநிலங்களில் இராமனுக்கு கோயிலே இல்லை. 17-ம் நூற்றாண்டுவரை உத்தரப் பிரதேசத்திலேயே ராமனுக்குக் கோயில் இல்லை. இந்த நாட்டின் இந்துக்களும் இசுலாமியர்களும் அமைதியாக வாழவே விரும்புகின்றனர். கலவரம் – வன்முறை செய்வதை தனது தொழிலாகக் கொண்டிருக்கும் பாஜக – ஆர்.எஸ்.எஸ்-தான் பாபர் மசூதி பிரச்சனையை உருவாக்கி நாட்டை மதரீதியாக பிளவுபடுத்தியது. மசூதியை திட்டமிட்டு இடித்தது.

மசூதி இருந்திருந்தால், அகழாய்வு நடந்திருக்குமா? மசூதியை இடித்து கோயில் கட்டு, என நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியுமா? வழக்கு நடக்கும் போது, வழக்குச் சொத்து இடிக்கப்படுகிறது! எந்த நடவடிக்கையும் இல்லை ! வரலாற்றுக் குற்றத்தை சரிசெய்ய உச்சநீதிமன்றத்திற்கு வழங்கப்பட்ட வாய்ப்பு வீணடிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பால் தோற்றது இசுலாமியர்கள் அல்ல! நாட்டின் அரசியல் சட்டம், சமத்துவம், மதச்சார்பிமை, உலக அரங்கில் இந்திய மதிப்பு! சாட்சியத்தை நிராகரித்து, நம்பிக்கையின் அடிப்படையிலான பாபர் மசூதி தீர்ப்பு இந்திய நீதித்துறை வரலாற்றில் கறுப்பு நாளே!

படிக்க:
Revoke Citizenship Amendment Act, 2019 ! People’s Right Protection Centre – Press Release
♦ குடியுரிமை மசோதா : இந்தியா மீது பொருளாதாரத் தடை கோரும் அமெரிக்க கூட்டாட்சி அமைப்பு !

அயோத்தி வழக்கின் தீர்ப்பை எல்லோரும் ஏற்றே தீர வேண்டும் எனப் பேசும் பாஜக – ஆர்.எஸ்.எஸ் சபரிமலை பிரச்சனையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை காலில் போட்டு மிதிக்கிறது. முத்தலாக் பிரச்சனையில் இசுலாமியப் பெண்களின் உரிமை பேசும் பாஜக, சபரிமலை செல்லும் இந்துப் பெண்களை அடித்து விரட்டுகிறது. சபரிமலையில் பெண்களை அனுமதிக்காதது தீண்டாமை என்று சொன்ன உச்சநீதிமன்றமோ மவுனம் காக்கிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் உலகில் வேறெங்கும் இல்லாதவகையில் 75 லட்சம் காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமைகள் துப்பாக்கி முனையில் பறிக்கப்பட்டது. ஜம்முகாஷ்மீர் மாநிலம் துண்டாடப்பட்டு, காஷ்மீர் மக்களின் அரசியல் சட்டம் தூக்கி எறியப்பட்டது. காஷ்மீர் இந்திய அரசோடு இணைந்த போது வழங்கப்பட்ட வாக்குறுதி அப்பட்டமாக மீறப்பட்டது.

காஷ்மீர் மக்கள், அரசு, சட்டப்பேரவை, அரசியல் அமைப்பு அவை எல்லாம் மத்திய அரசின் கவர்னருக்குச் சமம் என்ற அரசியல் சட்ட மோசடி அரங்கேற்றப்பட்டது. கடந்த 5 மாதங்களாக காஷ்மீர் மக்கள் திறந்த வெளி சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த அநீதிக்கும் உச்சநீதிமன்றம் வாய்திறக்க மறுக்கிறது.

பொருளாதாரம் பாதாளத்தில் சரிந்து, விலைவாசி உயர்ந்து, மக்கள் வேலையிழந்து, வாழ்விழந்து தவிக்கும்போது தேசிய குடிமக்கள் பதிவேடு என்று சொல்லி ஒரே இரவில் 20 லட்சம் அசாம் மக்களை “சட்டவிரோதக் குடியேறிகளாக்கி” நாட்டை விட்டு வெளியேறக் கெடு விதிக்கிறது மோடி அரசு. இப்பாசிசச் சட்டம் இசுலாமியர்கள், தமிழர்களைக் குறிவைத்து நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படுகிறது.

பாகிஸ்தான், பங்களாதேஷ், பர்மா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த இந்துக்கள் 6 ஆண்டுகள் இந்தியாவில் குடியிருந்தால் போதும் இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்கிறது பாஜகவின் புதிய குடியுரிமைச் சட்டம். 40, 50 ஆண்டுகள் இந்தியாவில் குடியிருக்கும் இசுலாமியர்கள், ஈழத்தமிழர்களுக்கு இச்சட்டம் பொருந்தாதாம்! எத்தனை பெரிய அயோக்கியத்தனம்? மத, இன அடிப்படையில் பிரிவினை செய்யக் கூடாது என்கிறது இந்திய அரசியல் சட்டம்! ஆனால் பாஜக மீறுகிறது, உச்சநீதிமன்றம் வேடிக்கை பார்க்கிறது.

மாற்றுக் கருத்து சொல்லும் அறிவுத்துறையினர், போராடும் மக்கள், அரசியல் சட்டத்தின் ஆட்சி கோருவோரை, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில், தேசிய புலனாய்வு முகமை மூலம் பல ஆண்டுகள் சிறையில் அடைக்கிறது மோடி – அமித்ஷா அரசு. பார்ப்பனீயத்தை எதிர்த்தால் கவுரி லங்கேஷ், கல்புர்க்கி போல சுட்டுத் தள்ளுகிறது. பேச்சுரிமை, கருத்துரிமை முற்றிலும் மறுக்கப்படுகிறது. பாஜக-வின் பாசிசம் ஒட்டு மொத்த சமூகத்தையும் இருள் போல் சூழ்கிறது.

எனினும் வீழ்த்த முடியாத சக்தி அல்ல பாஜக. வரலாறு மாபெரும் சர்வாதிகாரிகளை குப்பைத் தொட்டியில் தூக்கி எறிந்துள்ளது. நாட்டின் பெரும்பான்மை மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இல்லை. மகாராஷ்டிரத்தில் மண்ணைக் கவ்வினார் மாவீரர் அமித்ஷா.

சனாதனத்தை வீழ்த்தி, சட்டத்தின் ஆட்சியை உருவாக்கும் சமரை பெரியாரின் சமத்துவ மண்ணான தமிழகத்தில் இருந்து தொடங்குவோம்! சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், மத நல்லிணக்கம், மதச்சார்பின்மை காப்போம்!

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
மதுரை மாவட்டக் கிளை.

சோவியத் யூனியனின் வீரன் விருதுபெற்ற உண்மை மனிதன் !

உண்மை மனிதனின் கதை | ஆசிரியரின் பின்னுரை – 03

“நம்பிக்கைத் துரோகம் செய்து சோவியத் யூனியன் மீது நீங்கள் படையெடுத்தீர்கள். அதன் விளைவாக ஜெர்மனி முறியடிக்கப்பட்டுப் படுதோல்வி அடைந்தது. இவ்வாறு செய்ததன் மூலம் நீங்கள் மிகப் பெரிய குற்றம் இழைத்து விட்டீர்கள் என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?” என்று கோயெரிங்கிடம் கேட்டார் சோவியத் தரப்பு வழக்குரைஞர் ரொமான் ருதேன்கோ.

“இது குற்றம் அல்ல, அழிவு விளைவிக்கும் தவறு” என்று விழிகளைக் கடுப்புடன் தாழ்த்திக் கொண்டு கம்மிய குரலில் விடையிறுத்தான் கோயெரிங்க். ”ஒன்று மட்டும் நான் ஒப்புக் கொள்ள முடியும்: நாங்கள் ஆய்ந்தோய்ந்து பாராமல் காரியம் செய்துவிட்டோம். ஏனெனில் எத்தனையோ விஷயங்களை நாங்கள் அறியாதிருந்தோம், பலவற்றை அனுமானிக்கவே இயலாதிருந்தோம் என்பது போர் நடக்கையில் எங்களுக்கு விளங்கிற்று. முதன்மையாக சோவியத் ருஷ்யர்களை நாங்கள் அறியவும் இல்லை. அவர்கள் எங்களுக்குப் புதிராக இருந்தார்கள், இருக்கிறார்கள். சோவியத் நாட்டின் உண்மையான போர் ஆற்றலை மிக மிகச் சிறந்த உளவுநிறுவனம் கூடக் கண்டறிய முடியாது. நான் குறிப்பிடுவது பீரங்கிகள், விமானங்கள், டாங்கிகள் ஆகியவற்றின் எண்ணிக்கையை அல்ல. இதை நாங்கள் கிட்டத்தட்டச் சரியாக அறிந்திருந்தோம். இயந்திரத் தொழிலின் திறனையும் இயங்கு ஆற்றலையும் நான் குறிப்பிடவில்லை. நான் கூறுவது மனிதர்களைப் பற்றி. ருஷ்ய மனிதன் வெளி நாட்டினருக்கு எப்போதுமே விளங்காத புதிராக இருந்து வந்திருக்கிறான். நெப்போலியனும் ருஷ்யனை புரிந்து கொள்ளவில்லை. நெப்போலியன் செய்த தவற்றையே திரும்பச் செய்தோம், அவ்வளவுதான்.”

“விளங்காப் புதிரான ருஷ்ய மனிதனை”, “சோவியத் நாட்டின் உண்மையான போர் ஆற்றலைப்” பற்றி கோயெரிங் வேறு வழியின்றி வெளிப்படையாக கூறியதை நாங்கள் பெருமையுடன் செவிமடுத்தோம். எவனது திறமையும் மேதையும் தியாகமும் வீரமும் போர் நாட்களில் உலகம் அனைத்தையும் பிரமிக்கச் செய்தனவோ, அந்தச் சோவியத் மனிதன் இந்த கோயெரிங்க் போன்ற பேர்வழிகளுக்கு நாசம் விளைவிக்கும் புதிராக இருந்தான், இருந்து வருகிறான் என்பதை நம்ப முடிந்தது. ஜெர்மானியர் “ஆளும் வர்க்கத்தினர்” என்ற ”அவலச் சித்தாந்தத்தைக்” கண்டுபிடித்தவர்கள், சோஷலிச நாட்டில் பிறந்து வளர்ந்த மனிதனின் ஆன்மாவையும் ஆற்றலையும் புரிந்து கொள்வது எங்கே? அப்போது நான் சட்டென அலெக்ஸேய் மாரெஸ்யோவை நினைவு கூர்ந்தேன்.

ஓக் பலகை முகப்பிட்ட இந்த ஆடம்பரமற்ற ஹாலில் அவனது பாதி மறந்துவிட்ட உருவம் பளிச்சென, இடைவிடாது என் முன் ஒளிர்ந்தது. கெய்த்தலின் தரைப் படையையும் கோயெரிங்கின் விமானப் படையையும் தகர்த்து நொறுக்கி, ரேடரின் போர்க்கப்பல்களைக் கடலின் அடித்தரையில் புதைத்து, தங்கள் விறல்மிக்க அடிகளால் ஹிட்லரின் கொள்ளைக்கார அரசைத் தூள் தூளாக்கிய கோடானுகோடி சாதாரண சோவியத் மக்களில் ஒருவனைப் பற்றிய கதையை இங்கேயே, நாசிசத்தின் வளர்ப்புப் பண்ணையாக விளங்கிய இந்த நியூரம்பெர்க் நகரிலேயே எழுதிவிட எனக்கு ஆசை உண்டாயிற்று.

மஞ்சள் அட்டை போட்ட நோட்டுப் புத்தகங்களை (இவற்றில் ஒன்றின் மேல் “மூன்றாவது ஸ்குவாட்ரனின் போர்ப் பறப்புகள் பற்றிய நாட்குறிப்பு” என்ற தலைப்பு மெரேஸ்யெவின் கைப்பட எழுதப்பட்டிருந்தது) நியூரம்பெர்க் நகருக்கும் நான் உடன் கொண்டு வந்திருந்தேன் . விசாரணைமன்ற அமர்விலிருந்து திரும்பியதும் பழைய குறிப்புக்களைப் படித்துத் தெளிவுபடுத்திக் கொள்வதில் முனைந்தேன். அலெக்ஸேய் மெரேஸ்யெவின் கதையை அவனுடைய தோழர்களிடமிருந்து கேட்டு அறிந்தவற்றையும் அவனது சொற்களையும் ஆதாரமாகக் கொண்டு எழுத முயன்றேன்.

எத்தனையோ விவரங்களை உரிய காலத்தில் குறித்து வைத்துக் கொள்ள எனக்கு இயலவில்லை. இந்த நான்கு ஆண்டுகளில் எத்தனையோ விஷயங்களை அலெக்ஸேய் மெரேஸ்யெவ் அப்போது சொல்லாமல் விட்டுவிட்டான். அரைகுறை விவரங்களை ஊகித்து இட்டு நிரப்ப நேர்ந்தது. அன்று இரவு அலெக்ஸேய் தன் நண்பகளைப் பற்றி எவ்வளவோ கனிவுடனும் விளக்கமாகவும் விவரித்தான். ஆனால் அவர்களது உருவச் சித்திரங்கள் காலப்போக்கில் நினைவிலிருந்து அழிந்து விட்டன. இவற்றைப் புதிதாக தீட்டவேண்டியிருந்தது. மெய் விவரங்களைக் கண்டிப்பாகப் பின்பற்ற இங்கே எனக்கு வாய்ப்பு இல்லாமையால் நான் கதாநாயகனின் குலப் பெயரைச் சிறிது மாற்றினேன். அவனுக்கு வழித்துணையாக இருந்தவர்களுக்கு, அருஞ்செயலை நிறைவேற்றும் கடினமான பாதையில் அவனுக்கு உதவி செய்தவர்களுக்குப் புதுப் பெயர்கள் இட்டேன். இந்த நவீனத்தில் தங்களை கண்டுகொண்டால் அவர்கள் என்மேல் மனத்தாங்கல் கொள்ளாதிருப்பார்களாக.

நவீனத்துக்கு “உண்மை மனிதனின் கதை” என்று பெயரிட்டேன். ஏனெனில் அலெக்ஸேய் மெரேஸ்யெவ் தான் உண்மையான சோவியத் மனிதன். எவனை கெர்மன் கோயெரிங்க் ஒருபோதும் புரிந்து கொள்ளவில்லையோ, வரலாற்றின் படிப்பினை மறந்து விடும் போக்குள்ளவர்கள், நெப்போலியனும் ஹிட்லரும் போன வழியில் செல்ல இப்போதுங்கூட இரகசியமாக ஆசைப்படுவர்கள் அனைவரும் எவனை இன்றளவும் புரிந்து கொள்ளவில்லையோ, அந்த சோவியத் மனிதனே அலெக்ஸேய் மெரேஸ்யெவ்.

படிக்க :
அம்பேத்கர் பவுத்தரானது | ஈரான் – அமெரிக்கா சண்டை | ரசிய பொருளாதாரம் | கேள்வி – பதில் !
மேட்டுப்பாளையம் : இது தீண்டாமைச் சுவர் இல்லை என்றால் வேறு எதுதான் தீண்டாமைச் சுவர் ?

இவ்வாறு பிறந்தது இந்த “உண்மை மனிதனின் கதை.” புத்தகம் எழுதப்பட்டு அச்சிடத் தயாரானதும், அது வெளியாவதற்க்கு முன் கதாநாயகனுக்கு அதைப் படித்துக் காட்ட எனக்கு விருப்பம் உண்டாயிற்று. ஆனால் முடிவற்ற போர்முனைப் பாதைகளின் சிடுக்குப் பின்னலில் எங்கோ அவன் காண முடியாதவாறு மறைந்து விட்டான். எங்கள் இருவருக்கும் பரிச்சயமான விமானி நண்பர்களிடமும் அதிகாரபூர்வமான வட்டாரங்களிலும் விசாரித்துப் பார்த்தேன். அப்படியும் அலெக்ஸேய் மெரேஸ்யெவைத் தேடிக் காண எனக்கு உதவ அவர்களால் முடியவில்லை .

நவீனம் சஞ்சிகையில் வெளியாகிவிட்டது. அப்போது ஒரு நாள் காலை என் வீட்டு டெலிபோன் மணி அடித்தது.

“நான் உங்களை சந்திக்க விரும்புகிறேன்” என்றது கரகரத்த ஆண்மைக் குரல். அது பழக்கமானது போலிருந்தது, ஆனால் யாருடையது என்பது நினைவில்லை.

“பேசுவது யாரோ?”

“மேஜர் அலெக்ஸேய் மெரேஸ்யெவ்.”

சில மணி நேரத்துக்குப் பின் அவன் என் வீட்டுக்கு வந்தான். முன் போலவே குதூகலமும் சுறுசுறுப்பும் செயலார்வமும் அவனிடம் பொங்கின. ஒரு சிறிது சாய்ந்தாடும் கரடி நடை நடந்தான். நான்கு போர்க்கால ஆண்டுகள் அவனிடம் அநேகமாக ஒரு மாறுதலையும் விளைவிக்கவில்லை.

“நேற்று நான் வீட்டில் உட்கார்ந்து ஏதோ படித்துக் கொண்டிருந்தேன். வானொலி முழங்கிக் கொண்டிருந்தது. ஆனால் என்ன ஒலிபரப்பப்படுகின்றது என்று கவனிக்காமலே நான் படிப்பில் ஆழ்ந்திருந்தேன். திடீரென்று அம்மா கிளர்ச்சி பொங்க ஓடிவந்து வானொலிப் பெட்டியைக் காட்டி, “கேள் மகனே, உன்னைப் பற்றியது தான் இந்த நிகழ்ச்சி” என்றாள். நான் உற்றுக் கேட்டேன். உண்மைதான். இந்த நிகழ்ச்சி என்னைப் பற்றியதே. எனக்கு நேர்ந்தது எல்லாம் விரிக்கப்பட்டது. நான் வியப்படைந்தேன், என்னைப் பற்றி இதை யார் எழுதியிருக்க முடியும் என்று. இதைப் பற்றி நான் யாருக்குமே சொன்னதில்லையே என்று நினைத்தேன். சட்டென்று நினைவு வந்தது நாம் அர்யோல் நகருக்கு அருகே சந்தித்ததும், நிலவறையில் இரவு முழுவதும் உங்களை உறங்கவிடாமல் நான் பேசிக் கொண்டிருந்ததும்… இது எப்போதோ, அநேகமாக ஐந்து ஆண்டுகளுக்கு முன் நடந்ததாயிற்றே என்று எண்ணினேன். நவீனத்தின் ஒரு பகுதி படிக்கப்பட்டு, இயற்றியவர் பெயர் கூறப்பட்டதும் உங்களைத் தேடி காண்பது என்று தீர்மானித்தேன்……”

இவ்வாறு அவன் மளமளவென்று விவரித்தான். ஓரளவு கூச்சமுள்ள, மலர்ந்த புன்னகை, மெரேஸ்யெவுக்கு இயல்பான அதே புன்னகை அவன் முகத்தில் தவழ்ந்தது.

நெடுங்காலமாக ஒருவரையொருவர் காணாத இராணுவத்தினர் மறுபடி சந்திக்கும் போது பேசிக் கொள்வது போலவே நாங்கள் போர்களைப் பற்றியும் அதிகாரிகளைப் பற்றியும் இருவருக்கும் பழக்கமான இராணுவ அதிகாரிகள் பற்றியும் வெகு நேரம் உரையாடினோம். அலெக்ஸேய் மெரேஸ்யெவ் தன்னைப் பற்றி முன்போலவே விருப்பமின்றி விவரித்தான். அவன் இன்னும் நிறைய வெற்றிகரமாகப் போர் புரிந்தான் என்பதைத் தெரிந்து கொண்டேன். 1943 முதல் 1945 வரை நடந்த தாக்குப் போர் நடவடிக்கைகளில் அவன் தன் ரெஜிமென்டுடன் பங்காற்றினான். எங்கள் முந்திய சந்திப்புக்குப் பிறகு அவன் அர்யோல் அருகே மூன்று பகை விமானங்களை வீழ்த்தினான். அப்புறம் பால்டிக் பிரதேசப் போரில் பங்கு கொண்டு இன்னும் இரண்டு பகை விமானங்களைச் சுட்டுத் தள்ளினான். சுருங்கச் சொன்னால், அவன் தன் கால்களின் இழப்புக்கு ஈடாகப் பகைவர்களிடம் வட்டியும் முதலுமாக கணக்குத் தீர்த்துக் கொண்டான். அரசாங்கம் அவனுக்கு “சோவியத் யூனியனின் வீரன்” என்ற பட்டம் அளித்து கௌரவித்தது.

அலெக்ஸேய் மெரேஸ்யெவ் தன் குடும்ப விஷயங்களையும் சொன்னான். இந்த அம்சத்தில் நவீனத்தை இன்பியலாக முடிக்க வாய்த்தது குறித்து மகிழ்கிறேன்.

போர் முடிந்த பிறகு அவன் காதலித்த மங்கையை மணந்து கொண்டான். அவர்களுக்கு வீக்தர் என்ற ஒரு மகன் இருக்கிறான். மெரேஸ்யெவின் முதிய தாய் கமீஷினிலிருந்து மகனிடம் வந்து இப்போது மகனையும் மருமகளையும் கண்டு ஆனந்தித்துக் கொண்டு, பேரன் வீக்தரைச் சீராட்டியவாறு வாழ்ந்து வருகிறாள்.

இவ்வாறு, உண்மையான சோவியத் மனிதன் மெரேஸ்யெவின் வரலாற்றை, அயல் நாட்டில் எழுதிய இந்த நவீனத்தை வாழ்க்கையே தொடர்ந்து எழுதிவிட்டது.

மாஸ்கோ , நவம்பர் 28, 1950.

* முற்றும் *

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

குடியுரிமை சட்ட திருத்தம் : ஹிட்லரின் இன அழிப்புத் திட்டம் !

7

நாம் அனைவரும் வரலாற்றை முழுவதுமாக அறிந்தவர்கள் அல்ல. நம்முடைய மறதி அல்லது அறியாமை ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு மேலும் அதிக பலத்தைக் கொடுக்கிறது. ஹிட்லரை நாம் அறிவோம். அவருடைய இனவெறி நமக்கு மறந்துவிட்டது அல்லது இனவெறி எப்படிப்பட்டது என்பதை நாம் அறியவில்லை. தமிழ் தேசியம் என்னும் பெயரில் ஹிட்லரைக் கொண்டாடும் ஒரு கும்பல் உருவாகியிருக்கிறது. அது ஒரு சிறிய கும்பல்தான் என்றாலும், அது பெரிய பேரழிவு திட்டத்துடன் களமிறங்கியுள்ள இந்து தேசியம் என்ற இனவெறி – மதவெறி திட்டத்துக்கு நம்மை தயார்படுத்துவதாக உள்ளது. பாசிச அரசு அல்லது மதவெறி அரசு என உண்மையை எழுதுவது பலருக்கு உவப்பாக இல்லை. ஆனபோதும் வரலாற்றின் குறிப்புகளோடு பாசிசத்தின் நடைமுறையாக்கலில் நாம் எந்த இடத்தில் நிற்கிறோம் என நேர்மையாக பரிசோதித்துக் கொள்வோம்.

பாராமுகம் பார்ப்போம் – மு.வி.நந்தினி
நாசி கட்சியின் (தேசிய சோசலிச ஜெர்மன் தொழிலாளர் கட்சி என்பதன் சுருக்கமே ‘நாசி’) தலைவரான அடால்ஃப் ஹிட்லர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவிக்கு வந்தவர். நாசி கட்சிக்கு சித்தாந்த பின்புலம் கொடுத்தது ‘துலே சமூகம்’ என்ற ரகசிய அமைப்பு. அதாவது தாங்களே ஆரிய இனத்தின் தூய வாரிசுகள் என அறிவித்துக் கொண்டவர்கள் இவர்கள். கிரேக்க புராண கதையில் வரும் துலே என்ற பிராந்தியத்தில் புனையப்பட்ட ‘ஹைபர்போரியா’ என்ற தலைநகரில் வாழ்ந்த ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்களின் வாரிசுகள் என நாசிக்கள் பரப்பினார்கள். தொடக்கத்தில் ரகசிய அமைப்பாக இருந்தது. பரப்புரை, பத்திரிகை போன்றவற்றின் துணையுடன் ஜெர்மானியர் ஏகபோக ஆதரவு பெற்றது. துலே அமைப்பால் வளர்க்கப்பட்டவர் ஹிட்லர். அதன் பின்னணியிலேயே ஸ்வஸ்திக் முத்திரையை நாசி கட்சியின் கொடியாக அவர் வரைந்தார்.

படிக்க :
♦ அரவிந்தன் நீலகண்டன் : ஹிட்லர் காதலை போற்றலாமா ?
♦ ஒரு தேசியத் தலைவரின் தோற்றம் – இது ஒரு ஜெர்மன் கதை !

1920-களில் ஜெர்மனியில் மார்க்சிஸ்டுகள் மக்கள் செல்வாக்குடன் இருந்தனர். ஹிட்லரின் எதிரிகளாக மார்க்சியர்களும் யூதர்களுமே இருந்தார்கள். அவர்கள் குறித்து அவதூறான அனல் தெறிக்கும் பேச்சுக்கள் மூலம் மக்களை கவர்ந்தார் ஹிட்லர். தனக்காக கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் செல்வாக்கைக் காட்டி, கட்சியில் இருந்த மூத்தவர்களை பின்னுக்குத்தள்ளி முன்னேறினார். கட்சியில் சேர்ந்த பத்தாண்டுகளில் அக்கட்சியின் தலைவரானார்.

ஹிட்லர் தலைமையிலான நாசி கட்சி, தீவிர தேசியவாதத்தை கொள்கையாக அறிவித்தது. தனது அனைத்து கொள்கை அறிக்கையிலும் யூதர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை மீண்டும் மீண்டும் கொண்டு வந்து உறுதியுடன் நின்றது. அடுத்த பத்தாண்டுகளில் நாசி கட்சி படிப்படியாக தேர்தலின் மூலமாக முக்கியமான கட்சியாக வளர்ந்தது. பல்வேறு தகிடுதத்தங்களைச் செய்து 1933-ம் ஆண்டு ஜெர்மன் அதிபராக ஆனார் ஹிட்லர். இதெல்லாம் நடந்தது பெரும்பான்மை மக்களின் ஆதரவுடனே என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதுவரைக்குமான வரலாறுகூட நமக்கு இந்தியாவில் பதவியில் அமர்ந்திருக்கும் கட்சியை/பதவியில் அமர்ந்திருப்பவரை நினைவூட்டுவதாக இருக்கலாம். பதவியில் அமர்ந்த பிறகு, யூதர்களுக்கு எதிராக ஹிட்லர் செய்தவை, சரியாக இந்தியாவில் முசுலீம்களுக்கு என்ன நடந்துக்கொண்டிருக்கிறதை என்பதை அப்படியே காட்டுகின்றன.

அதுவரை ஜெர்மானிய மக்களை பொதுவாகப் பார்த்த அரசியலமைப்பை மாற்றும் அதிகாரம், நாடாளுமன்றத்தில் இருந்த அதிகார பலத்தால் ஹிட்லருக்கு கிடைத்தது. யூதர்களின் மத சடங்கு அடிப்படையிலான விலங்குகளை பலியிடும் சடங்குக்கு பல மாநிலங்களில் தடைவிதிக்கப்பட்டது. ஜெர்மானியர் தூய ரத்தத்தை காக்க, யூதர்களுக்கும் ஜெர்மானியர்களுக்கு இனக்கலப்பு அதாவது திருமணம் செய்துகொள்வது தடை செய்யப்பட்டது. மருத்துவர், ஆசிரியர், வழக்கறிஞர் உள்ளிட்ட பணிகளுக்கு யூதர்கள் வருவது தடை செய்யப்பட்டது. பள்ளிகளில் அனைவரும் படிக்கக்கூடாது என்பதற்காக சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. பள்ளிகளில் தூய இனவாதத்தை போதிக்கும் பாடங்கள் கொண்டுவரப்பட்டன.

உச்சமாக 1933-ம் ஆண்டு குடியுரிமை மற்றும் இயற்கைமயமாக்கல் சட்டம் என்ற பெயரில் யூதர்களை ஜெர்மன் சமூகத்திலிருந்து நீக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டது. எடுத்த எடுப்பிலேயே ஒன்றரை லட்சம் யூதர்களுக்கு குடியுரிமை ரத்து செய்யப்பட்டது. யூதர்கள் விவசாயம் செய்வதைத் தடுக்கவும் சட்டம் கொண்டுவரப்பட்டது. நடிக்கவும் கலாச்சாரம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபடவும்கூட யூதர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

அதன்பின், ‘நூரெம்பர்க் சட்டங்கள்’ என்ற பெயரில் யூதர்களை முற்றிலுமாக அழிக்கும் சட்டங்களை 1935-ம் ஆண்டு கொண்டுவந்தார் ஹிட்லர். இதில் குடியுரிமை சட்டம் முக்கியமானது. ஜெர்மன் ரத்த முறையினர் மட்டுமே குடியுரிமை உள்ளவர்கள். யூதர்களுக்கு முற்றிலுமாக குடியுரிமை மறுக்கப்பட்டது. அவர்கள் சொந்த நாட்டிலேயே ‘வெளிநாட்டினர்’ என அழைக்கப்பட்டனர்.

இனியும் ஹிட்லரின் வரலாறு நமக்குத் தேவையில்லை. இந்திய யதார்த்ததுக்கு வருவோம். இங்கே என்ன நடக்கிறது? மதத்தின் பெயரால், முசுலீம்கள் மாட்டிறைச்சி உண்கிறார்கள் என்பதற்காகவே பல மாநிலங்களில் மாட்டிறைச்சி தடை செய்யப்பட்டது. மாட்டிறைச்சியின் பெயரால் முசுலீம்களுக்கு எதிராக நடந்த வன்முறைகள், முசுலீம் சமூகத்தை அச்சுறுத்தின; நடுங்க வைத்தன. தூண்டப்பட்ட கும்பலால் நடந்த படுகொலைகளுக்கு ஒன்றுக்குக்கூட நீதி கிடைக்கவில்லை. லவ் ஜிகாத் என்ற பெயரில் புனைகதை கட்டி, முசுலீம் ஆண்கள் இந்து பெண்களை கவர்ந்து திருமணம் செய்து மதமாற்றம் செய்வதாக பரப்பப்பட்டது. இந்தியாவின் ஒரு பகுதியான அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு செயலாக்கம் என்ற பெயரில் லட்சக்கணக்கான முசுலீம் மக்களுக்கு குடியுரிமை ரத்து செய்யப்பட்டது. முசுலீம்களுக்கு முழு உரிமை உள்ளது என்றபோதும், பெரும்பான்மை இந்து மனப்பான்மையின் அடிப்படையில் நாட்டின் உச்சநீதிமன்றமே பாபர் மசூதி உள்ள இடத்தில் கோயில் கட்டலாம் என தீர்ப்பு எழுதியது.

இப்போது முசுலீம்களை இரண்டாம்தர குடிமக்களாக மாற்றும் குடியுரிமை சட்ட திருத்தத்தைக் கொண்டுவந்துள்ளது ஆளும் இந்துத்துவ அரசு. இச்சட்டப்படி பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த இந்து, கிறித்தவர், பார்சி, ஜெயின், புத்த மதங்களைச் சேர்ந்தவர்கள், டிச.31, 2014-க்குள் வந்து இந்தியாவில் குடியமர்ந்திருந்தால், அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும். இச்சட்டம் பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த இசுலாமிய மக்களுக்குப் பொருந்தாது. இலங்கையிருந்து வந்த ஈழத் தமிழர்கள், மியான்மரிலிருந்து வந்த ரோகிங்கியா முசுலீம்களுக்கும் பொருந்தாது.

குடியுரிமை சட்ட திருத்ததின் தொடர்ச்சியாக தேசிய அளவில் குடியுரிமை பதிவேடு செயலாக்கவிருக்கிறது அரசு. அசாமில் கொண்டு வரப்பட்ட குடியுரிமை பதிவேடு 20 லட்சம் மக்களை சட்டவிரோத குடியேறிகள் என்றது. இவர்களில் 12 லட்சம் மக்கள் இந்துக்கள். நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் குடியிரிமை திருத்தச் சட்டம் சான்றாவணங்கள் இல்லாத அனைத்து மக்களையும் சட்டவிரோத குடியேறிகள் என வகைப்படுத்தி வதை முகாம்களில் அடைக்கும். முசுலீம் மக்களோடு, வர்ணாசிரமத்தின் படிநிலைப்படி சூத்திரர்கள், தீண்டத்தகாதவர்களுமே இதனால் பாதிக்கப்படக்கூடியவர்கள்.

ஒருவர் பெயர் குடியுரிமை பதிவேட்டில் இல்லாவிட்டால், சம்மந்தப்பட்டவர்தான் இந்தியக் குடிமகன் என தன்னை, குடியுரிமைத் தீர்ப்பாயம் சென்று நிரூபிக்க வேண்டும். இந்தியாவில் சாலை ஓரங்களில், நாடோடிகளாக, வெள்ளம், இயற்கைப் பேரிடர்களில் பாதிக்கப் பட்டவர்களாக, எவ்வித ஆவணங்களும் அற்ற பலகோடி மக்கள் உள்ளனர். இவர்கள் பிறந்த சான்றிதழ், படிப்புச் சான்றிதழ், வங்கி கணக்கிற்கு எங்கே போவார்கள்? ஆக, ஒடுக்கப்பட்ட அம்மக்களும் குடியுரிமையை இழப்பார்கள்.

பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த இந்துக்கள் அங்கு சிறுபான்மையினர் என்றால் இலங்கையில் இந்து-தமிழ் மக்களும், மியான்மர்-ரோகிங்கியா முசுலீம் மக்களும் சிறுபான்மையினர்தான். இவர்களுக்கு குடியுரிமை மறுக்கப்படுவது ஆளும் அரசின் இனவாத நோக்கத்தைக் காட்டுகிறது.

படிக்க :
♦ குடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 : தமிழன் என்றால் எங்களுக்கு எதிரியே – பாசிச பாஜக !
♦ அஸ்ஸாம் : குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்தால் தேசதுரோக வழக்கு, கொலை மிரட்டல் !

“ஒரு கணம் அரசியலையும், சட்டப்படியான கேள்விகளையும் ஒதுக்கி விடுங்கள். மில்லியன்கணக்கான ஏழை மக்களுக்கு நீங்கள் இரக்கமில்லாமல் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை சிந்தியுங்கள். எந்தவொரு முடிவும் இருப்பதாகத் தெரியாத ஒரு பேரழிவை அரசு எவ்வாறு உருவாக்க முடியும்?” முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும் மனித உரிமை செயல்பட்டாளருமான ஹர்ஸ் மந்தர் குடியுரிமை சட்ட திருத்த மசோதா குறித்து எழுப்பிய கேள்வி இது.

பற்றி எரிந்துக்கொண்டிருக்கும் விசயங்களாக மக்கள் தொகை பெருக்கமும் அதற்கேற்றபோல அடிப்படைவசதிகள் இல்லாதது, ஏழ்மை நிலை, வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதார மந்தநிலை போன்ற பல விசயங்கள் இருக்கும்போது ஹர்ஸ் மந்தர் கேட்பதுபோல குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு போன்றவை என்ன நோக்கத்திற்காக, எந்த முடிவுக்காக கொண்டு வரப்படுகின்றன? ‘வளர்ச்சி…வளர்ச்சி..வளர்ச்சி…’ என ஓயாமல் முழங்கிய பாஜக சொல்லும் வளர்ச்சி யாருடையது? யாருக்கானது? 30, 40 ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்து வந்தாலும் குடியுரிமை இல்லை. ஆனால், அமெரிக்கா உள்பட உலகெங்கும் உள்ள நாடுகளில் குடிபெயர்கிறவர்கள் இந்தியர்கள்தான் முதல் இடத்தில் இருக்கின்றனர். சமகால நிதர்சனத்தோடு ஆட்சியாளர்கள் உருவாக்கிய முரண்பாடு இது. 72 ஆண்டு காலம் சகோதர – சகோதரிகளாகப் பழகிய மக்களை மதத்தின் பெயரால் பிரிப்பது மதவெறி அன்றி வேறென்ன?

அரசியலமைப்பு தத்துவத்தை புதைத்துவிட்ட ஆளும் அரசு, மதவாத தத்துவத்தை கையிலெடுத்துள்ளது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. நாம் வரலாற்றிலிருந்து கொஞ்சமேனும் பாடம் கற்கவேண்டியுள்ளது. மேலும் ஒரு இன அழிப்பை நாம் அனுமதித்தால், வரலாறு நம்மை மன்னிக்காது என்பதை பெரும்பான்மை சமூகம் உணர வேண்டும்.

மு.வி.நந்தினி

மு.வி.நந்தினி கடந்த 14 ஆண்டுகளாக தமிழின் பல இதழ்களில் பத்திரிகையாளராக பணியாற்றியிருக்கிறார். தற்போது டைம்ஸ் தமிழ் டாட் காம் இணையதளத்தின் ஆசிரியராக இருக்கிறார். சுற்றுச்சூழல், சமூகம், இந்துத்துவ அரசியல், பெண்ணியம் சார்ந்து எழுதிவருகிறார். வினவு கருத்தாடல் பகுதியில் பாரமுகம் பார்ப்போம் எனும் தலைப்பில் எழுதுகிறார்.

disclaimer

ஜார்கண்ட் – சோட்டா நாக்பூர் : இந்தியாவின் மற்றுமொரு ஜம்மு – காஷ்மீர் ! | பகுதி 1

ஜார்கண்ட் – சோட்டா நாக்பூர் : இந்தியாவின் மற்றுமொரு ஜம்மு – காஷ்மீர் ! | பகுதி 1

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள முண்டாரி மொழி பேசும் முண்டா பழங்குடி மக்கள் இன்றும் நம்மோடு வாழுகின்ற வட இந்தியத் திராவிடர்கள். கி.பி 250 முதல் 575 வரை தமிழகத்தை ஆண்ட களப்பிரர் ஆட்சிக்காலத்தின் போதே முண்டா பழங்குடி மக்கள் சோட்டா நாக்பூர் பகுதியில் வாழ்ந்ததாக “களப்பிரர் ஆட்சியில் தமிழகம்” என்ற நூலை எழுதிய மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் குறிப்பிடுகிறார்.

இவர்களுடைய வரலாறு சுமார் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. வட கிழக்கு இந்தியாவில் குறிப்பாக ஜார்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களிலும் அண்டை நாடான வங்காள தேசத்திலும் பெரும் எண்ணிக்கையில் வாழ்கின்றனர். பல்வேறு உட்பிரிவுகளைக் கொண்ட இப்பழங்குடியினரின் மக்கள் தொகை சுமார் 22 இலட்சம்.

இராவணன் மற்றும் மகிசாசுரன் ஆகியோரை பேயாக சித்தரித்து அவர்களது உருவ பொம்மைகளை எரிப்பதை நிறுத்த வேண்டும் என இந்துக்களுக்கு இவர்கள் இன்றும்கூட உத்தரவு பிறப்பித்து வருவது, அவர்கள் திராவிட முன்னோடிகள்தான் என்பதை பறைசாற்றுகிறது. அதே போல இராமாயணம், பகவத் கீதை மற்றும் மகாபாரதத்திற்கு எதிராகப் பேசியும் வருகின்றனர்.

இந்திய அரசு வெளியிட்டுள்ள அஞ்சல் தலையில் பிர்சா முண்டா.

இவர்களது வாழ்வாதாரம் காடுகளையும், மலைகளையும் அடிப்படையாகக் கொண்டது. பழங்குடி மக்களின் விடுதலைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடிய பிர்சா முண்டா என்கிற பழங்குடித் தலைவரை ஆங்கிலேய அரசாங்கம் 1900 -ஆம் ஆண்டு கைது செய்து சிறையிலடைத்தது. தனது 24 வயதில் சிறையிலேயே அவர் மாண்டு போனார். அவரது போராட்டத்தின் விளைவாக பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க கொண்டு வரப்பட்டதுதான் “சோட்டாநாக்பூர் நிலக் குத்தகைச் சட்டம் 1908”. இன்றுவரை அவர்களது வாழ்வாதாரத்தை பாதுகாப்பதில் இச்சட்டம் மிக முக்கியப் பங்காற்றி வருகிறது. இச்சட்டம் கொண்டுவரக் காரணமாக இருந்ததால்தான் அம்மக்கள், இன்றும் பிர்சா முண்டாவை கடவுளாக வழிபட்டு வருகின்றனர்.

81 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஜார்கண்ட் மாநில சட்டப் பேரவைத் தேர்தல் நவம்பர் 30 -இல் தொடங்கி டிசம்பர் 20 வரை ஐந்து கட்டங்களாக தற்போது நடைபெற்று வருகிறது. ஒரு சிறிய மாநிலத்தில் ஒரே நாளில் நடத்த வேண்டியத் தேர்தலை ஐந்து கட்டங்களாக நடத்த வேண்டிய அவசியம் என்ன? என்கிற கேள்வி எழுவது இயல்புதான். மாவோயிஸ்ட் பிரச்சனை  மட்டுமல்ல தங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாத்துக்கொள்ள முண்டா பழங்குடி மக்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளதும் ஒரு முக்கியக் காரணம்.

இந்த மக்களின் போராட்டமும் அவர்கள் மீது பா.ஜ.க அரசு கட்டவிழ்த்து விட்டிருக்கும் அடக்கு முறைகளும் இந்தியாவில் ஜனநாயகம் நிலவுகிறதா என்கிற கேள்வியை எழுப்பி உள்ளது. இந்தக் கேள்விக்கான விடை தேடும் முயற்சியில் சுப்ரியா சர்மா தலைமையிலான ஸ்க்ரால் இணைய பத்திரிக்கையாளர் குழு ஜார்கண்ட் மாநிலத்திற்குச் சென்று, “மோடியின் ஆட்சியில் இந்திய ஜனநாயகம் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள்?” என்ற தலைப்பில் வெளியிட்ட செய்தித் தொகுப்பை தமிழாக்கம் செய்து இங்கு உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம். படியுங்கள்…

படிக்க:
ராவணனை எரிக்காதே – ஓங்கி ஒலிக்கும் அசுரர்களின் குரல் !
♦ டியுர்கோவின் வீழ்ச்சி : பிஸியோகிராட்டுகளுக்கு பேரிடி ! | பொருளாதாரம் கற்போம் – 47

பகுதி 1

மோடியின் ஆட்சியில் இந்திய ஜனநாயகம் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

நாடு ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு சில ஆண்டுகளில் வடிவமைக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பு, இந்தியாவை ஒரு ஜனநாயகம் பூத்துக் குலுங்கும் நாடாகக் காட்டிக் கொண்டது. சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் மூலம் பெரும்பான்மையினரின் ஆட்சி இங்கு நடக்கும்; இந்த ஜனநாயகம் விட்டுக் கொடுக்கும் தன்மையிலானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகள், சிறுபான்மையினர் மற்றும் சமூக ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கான பாதுகாப்பு, வரலாற்று மற்றும் கலாச்சார ரீதியாக வேறுபட்ட பிராந்தியங்களுக்கான ஒப்பீட்டளவிலான சுயாட்சி, இவை அனைத்தும் ஒரு சுதந்திரமான நீதித்துறையால் பாதுகாக்கப்படும்; பத்திரிக்கைத் துறை அதற்கு ஏற்ப துணை நிற்கும் என நம்பப்பட்டது.

ஆனால், கடந்த எழுபதாண்டுகளில், இந்திய ஜனநாயகம் விட்டுக் கொடுக்கும் தன்மையுடன் செயல்படவில்லை. 1970 -களில், இந்திரா காந்தி அரசாங்கம் அவசரநிலையை அறிவித்து மக்களின் சிவில் உரிமைகளை நசுக்கியது. மாநிலங்கள் மற்றும் குடிமக்களின் உரிமைகளை பறிப்பதற்கு இது வழிவகுத்ததாக அரசியல் – வரலாற்றாசிரியர்கள் கருதினர். இத்தகைய அதிகாரங்கள் இதற்கு முந்தி இருந்த அரசாங்கங்களால் தவறாகப் பயன்படுத்தப்பட்டன.

இன்று நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அடிப்படை கட்டமைப்பை அப்படியே வைத்துக் கொண்டு,​​ ஜனநாயகத்தை ஒன்றுமில்லாததாக்கி வருகிறது என பலரும் விமர்சிக்கின்றனர். மோடி இரண்டாவது முறையாக வெற்றிபெற்ற இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அரசியலமைப்பு அந்தஸ்தை ஒருதலைப்பட்சமாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்பதற்கும் அதீத நடவடிக்கை எடுத்தது.

மோடி அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை இந்தியா இந்துக்களின் தேசம் என்கிற; இந்தியாவை மாற்றியமைப்பதற்கான ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் கருத்தியலுக்கு வழிவகை செய்கிறது என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். மேலும் முஸ்லிம் பெரும்பான்மையாக வாழும் மாநிலங்களில் வழங்கப்பட்டுள்ள உரிமைகள் அனைத்தும் அவர்களை திருப்திப்படுத்துவதற்கானவை எனப் பார்க்கிறது மோடி அரசாங்கம்.

பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எதிர்க்கட்சிகள் பலவீனமாக இருப்பதால், அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கையை எதிர்கொள்ளத் தவறி விட்டன. பிரதான செய்தி ஊடகங்கள் பெரும்பாலும் மோடியின் தேசியவாதக் கண்ணாடியை அணிந்து கொண்டுவிட்டன. முக்கிய தனியார் தொலைக்காட்சி ஊடகங்கள் அரசாங்க பிரச்சார சேனல்களாக செயல்படுகின்றன.

காஷ்மீரின் அரசியல் செயல்பாடுகள் முடக்கப்பட்டு, மொபைல் தகவல் தொடர்புகள் முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், உச்சநீதிமன்றம் கூட விலகி நின்று வேடிக்கைப் பார்க்கிறது. இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஏழு மில்லியன் மக்கள் வெளி உலகத்தோடு உள்ள தொடர்பை இழந்து நிற்கின்றனர்.

படிக்க:
50 லட்சம் பேரின் வேலையைப் பறித்த மோடியின் பணமதிப்பழிப்பு !
♦ பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு : நம்பிக்கையின் ஆட்சி !

பெரும்பான்மைவாதம் ஜனநாயகத்தை பலவீனப்படுத்துகிறதா?

பிரதமர் மோடி தலைமையில் இந்தியா காஷ்மீரில் எடுத்துள்ள நடவடிக்கை, அதன் பிறகு அங்கு நடைபெறும் மாற்றங்கள் இந்துப் பெரும்பான்மை வாதத்தை நியாயப்படுத்தும் வகையில் இருப்பதாக ஜனநாயகத்தை நேசிப்போர் கருதுகின்றனர். இந்து தேசியவாத திட்டத்திற்கான மக்களின் ஆதரவு, 25 ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சிக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொடுத்துள்ளதோடு; இந்திய மாநிலங்கள் பலவற்றில் பா.ஜ.க பெற்றுள்ள செல்வாக்கு என்பது, அடிப்படையில் இந்தியக் குடியரசை மாற்றியமைப்பதற்கான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக உள்ளது என அவர்கள் கருதுகின்றனர்.

மோடி அரசாங்கம் அரசியல் எதிரிகளையும், சுதந்திரமான ஊடகவியலாளர்களையும் அச்சுறுத்துவதாகவும், தேர்தல் ஆணையம் போன்ற தன்னாட்சி நிறுவனங்களை பலவீனப்படுத்துவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். உலகெங்கிலும் உள்ள ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தைக் கண்காணிக்கும் அமெரிக்காவில் உள்ள ஒரு அமைப்பு, இந்த ஆண்டு இந்தியாவிற்கான சுதந்திர மதிப்பெண்ணில் இரண்டு புள்ளிகளைக் குறைத்துள்ளது.

அதில் ஒன்று பசு வதை தொடர்பாக இஸ்லாமியர்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைத் தாக்குதல்கள்; மற்றொன்று ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறை மற்றும் துன்புறுத்தல்கள். ஆனால் இதுபோன்ற விமர்சனங்கள் நரேந்திர மோடியின் பிரபலத்தை பாதிக்கவில்லை. உண்மையில், அத்தகைய விமர்சனங்களை திறமையாகப் பயன்படுத்தி தன்னை ஒரு வெகுமக்கள் தலைரவராக நிலைநிறுத்திக் கொண்டுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.

2014 பிரச்சாரத்தில், அவர் குஜராத் மாநிலத்தை மாற்றியமைத்த ஒரு திறமையான நிர்வாகியாக காட்டப்பட்டு, அதே போன்ற பொருளாதார லாபங்களை இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் கொண்டு வர முடியும் என்று ஊடகவியலாளர்களால் முன்வைக்கப்பட்டார். அதேசமயம், ஒரு சாதாரண, பின்தங்கிய சாதிப் பின்னணியில் இருந்து அவர் எழுந்த கதை, ஊழல் மோசடிகளால் சூழப்பட்டுள்ள பரம்பரைத் தலைமை கொண்ட காங்கிரசுக்கு அவரை ஒரு மாற்று என்று முன்வைவைத்தவர்கள்கூட மோடியின் கண்காணிப்பில் நடந்த முஸ்லீம் எதிர்ப்பு வன்முறையை குறைத்து மதிப்பிட்டனர்.

ஆனால் மோடி அரசாங்கத்தின் முதல் ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் பொருளாதார நலன்கள் எதுவும் மக்களுக்குக் கிடைக்கவில்லை. மாறாக  வேலையின்மை உயர்ந்தது, முதலீடுகள் மூச்சுத் திணறின. பசுப் பாதுகாப்பு, மாட்டிறைச்சி, முத்தலாக் பற்றிய சமூகப் பிரச்சனைகளால் மக்களின் பொருளாதார நலன்கள்  ஒரேயடியாக மூழ்கடிக்கப்பட்டன.

2019 தேர்தலில் தேசியவாதம், சமூக நலன் மற்றும் மோடி வழிபாடு என்பதில் மட்டுமே பா.ஜ.க அதிக கவனம் செலுத்தியது. சமூகத்தைப் பிளவுபடுத்தி பெரும்பான்மை இந்துச் சமூகத்தை தன்பக்கம் ஈர்ப்பதற்கு எடுத்த முயற்சி, ஊடகங்களிடையே பிளவை ஏற்படுத்தி தனக்கு ஆதரவாக செயல்பட வைத்தது மற்றும் கருத்தியல் ரீதியாக மோடியை எதிர்கொள்வதில் தோல்வி அடைந்த எதிர்கட்சிகள் ஆகிய காரணங்களால் 2014 தேர்தலில் பெற்ற வெற்றியைவிட 2019 இல் இரண்டாவது முறையாக பெரிய வெற்றியை பா.ஜ.கவால் பெற முடிந்தது.

படிக்க:
சிறுபொறி… பெருங்காட்டுத்தீ !
♦ ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு – மரணங்கள்

தற்போது நாம் தெரிந்து கொள்ள விரும்புவது என்ன?

ஐந்து மாதங்களுக்குப் பிறகு, ஜனநாயகத்தை நேசிப்போர் இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலம் குறித்து அச்சத்துடன் உள்ளனர். ஆனால் பெரும்பாலான இந்தியர்கள் இந்த அச்சத்தைப் பகிர்ந்து கொள்கிறார்களா? அல்லது ஜனநாயகம் குறித்த முற்றிலும் மாறுபட்ட வேறு கருத்து ஏதேனும் அவர்களுக்கு இருக்கிறதா? உலகளவில், மோடி போன்ற பிரபலமான தலைவர்களின் வளர்ச்சி மற்றும் பெரும்பான்மைவாதம் பேசுவோரின் அரசாங்கங்களின் எழுச்சி குறித்து ஜனநாயகத்தை நேசிப்போர் பரிசீலிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதன் இந்தியத் தன்மை குறித்து நாம் என்ன செய்யப் போகிறோம்?

தேர்தல்கள் நெருங்க இருக்கும் மாநிலங்களுக்குச் சென்று இந்திய ஜனநாயகம் குறித்த பதில்களைத் தேட முயற்சிக்கிறோம். சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள ஜார்கண்டில் இதற்கான விடையைத் தேட முயன்றபோது கிடைத்த விவரங்கள் இதோ.

(தொடரும்)

தொடரின் அடுத்த பாகங்களுக்கு :


கட்டுரையாளர் : சுப்ரியா சர்மா
தமிழாக்கம் :
ஊரான்
நன்றி : ஸ்க்ரால்.

வெளிநாடு வாழ் இந்தியர்களின் பொருளாதார பங்களிப்பு | உலகத் தமிழர்கள் ஒருங்கிணைப்பு | கேள்வி – பதில் !

கேள்வி : பல்வேறு நாடுகளில் வாழும் இந்தியர்கள் தங்கள் குடும்பத்திற்கு அந்தந்த நாட்டின் பணத்தை அனுப்புகிறார்கள். அவற்றின் இந்திய பண மதிப்பின் அளவுகொண்டு அந்த பணம் இந்திய பணமாக மாற்றப்பட்டு தத்தம் குடும்பங்களை சென்றடைகிறது. இந்த பணப் பரிமாற்றம் மூலம் இந்திய அரசிற்கு எவ்வாறு அந்நிய செலவாணி அல்லது டாலர் கிட்டுகிறது? அதாவது இந்தியா இதனால் எவ்வாறு பயனடைகிறது?

S.S.கார்த்திகேயன்

ன்புள்ள கார்த்திகேயன்,

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாங்கள் வேலை செய்யும் நாட்டின் செலவாணியில் ஊதியம் பெறுகிறார்கள். பிறகு அதை வங்கிகள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட செலவாணி மாற்றும் வணிகர்கள் மூலம் இந்தியாவிற்கு அனுப்புகிறார்கள். அப்படி அனுப்பும் போது அந்தப் பணம் அந்தந்த நாட்டின் செலவாணிக்குரிய டாலர் மதிப்பில் மாற்றப்பட்டு டாலராக இந்தியாவிற்கு வந்து சேர்கிறது. அந்த டாலரை வைத்துக் கொண்டு அதற்கேற்ற அன்றைய இந்திய ரூபாய் மதிப்பில் மாற்றப்பட்டு பணம் அனுப்புவோரின் குடும்பத்திற்கு போய்ச் சேருகிறது. இப்படித்தான் ரிசர்வ் வங்கியின் இருப்பில் டாலர் மற்றும் யூரோ அந்நியச் செலவாணியாக இருப்பில் சேர்கிறது.

அதே போன்று வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வோர், கல்வி படிக்கப் போகும் மாணவர்கள், மருத்துவ சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகள் ஆகியோர் போகும் போது இந்திய ரூபாயை அளித்து அதற்குரிய டாலரை பெற்றுக் கொண்டு செல்கிறார்கள். அப்போது டாலர் இருப்பு ரிசர்வ் வங்கியில் குறையும். அதே போன்று இறக்குமதிக்கான தொகை அனுப்பும் போதும் டாலர் இருப்பு குறையும். ஏற்றுமதி செய்யும் போது பெறப்படும் தொகை டாலராக இருப்பில் அதிகரிக்கும். இதன்றி வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர், வெளிநாட்டினர், அந்நிய நிதி நிறுவனங்கள் இங்கே முதலீடு செய்வதற்கும், அசையாச் சொத்துக்களை வாங்குவதற்கும் ரிசர்வ் வங்கி நிறைய விதிமுறைகளையும் ஏற்பாடுகளையும் வைத்திருக்கிறது.

2017-ம் ஆண்டின் கணக்கின்படி வெளிநாட்டில் இருந்து, அதிக பணம் பெற்ற நாடுகளில், 6,900 கோடி டாலருடன், இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. இந்திய மதிப்பில் இது 4 லட்சத்து, 55 ஆயிரத்து, 400 கோடி ரூபாய் ஆகும். அவ்வகையில் வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியர்களால் இந்திய ரிசர்வ் வங்கியின் அந்நியச் செலவாணி இருப்பு கணிசமாக உயர்ந்திருக்கிறது. அந்நியச் செலவாணி எவ்வளவுக்கு எவ்வளவு அதிகம் இருக்கிறதோ அந்த அளவு அந்த நாடு செல்வ மதிப்பில் உயர்ந்து நிற்கிறது. ஆனாலும் ஒட்டு மொத்த இந்திய பொருளாதார வளர்ச்சியின்மையை பார்க்கும் போது இந்த அந்நியச் செலவாணி இருப்பால் பெரிய பலனில்லை.

இன்றைக்கு இந்தியாவில் இருந்து பணிக்காக புலம் பெயர்ந்தோர் அதிகம் இருக்கும் போது மற்ற நாடுகளை விட தாயகத்திற்கு அதிக பணம் அனுப்பும் நாடாகவும் இந்தியா இருக்கிறது. தற்போது உலக பொருளாதார நெருக்கடி அதிகரித்து வரும் வேளையில் வெளிநாட்டு வேலைகளும், ஊதியமும் குறைந்து இந்தத்தொகை உள்நாட்டிற்கு வரும் அளவு குறையவும் வாய்ப்பிருக்கிறது. அதே நேரம் மேற்குலகிற்கும், வளைகுடாவிற்கும் பணியாட்கள் பெரும் எண்ணிக்கையில் தேவைப்படுவதால் இந்த தொகை அவ்வளவு சீக்கிரம் குறையவும் செய்யாது. ஆக இந்திய அரசு தனது சொந்த மக்களுக்கு வாழ்வளிக்காத நிலையில் வெளிநாட்டில் வேலை செய்யும் மக்கள் தமது நாட்டின் அன்னியச் செலவாணி இருப்பை கூட்டி வருகிறார்கள்.

நன்றி!

♦ ♦ ♦

கேள்வி : தமிழகம் மற்றும் இலங்கையை தாண்டி பல உலக நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்பது தாங்கள் அறிந்ததே. ஆனால் என்னுடைய கேள்வி பல நாடுகளில் வாழும் தமிழர்களை இணைத்து இணைப்பு பாலமாக இருக்க வேண்டிய கடமை தமிழ்நாட்டுடையதே…. இருந்தும் இதுவரை இந்நாள் முதலவரோ, முன்னாள் முதல்வர்களோ ஏன முயற்சிக்கவில்லை….?

ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் இருக்கை அமைக்க ஆர்வம் காட்டும் நம் அரசு ஏன் உலகத்தமிழர்களை ஒன்றிணைக்க இதுவரை முயற்சிக்கவில்லை… தொடர்பே இல்லாமல் இருப்பதால் பல நாடுகளில் தமிழை எழுதவும் பேசவும் மறந்து தமிழரின் அடையாளங்களை இழந்து வருகிறார்கள்.. மொரீசியஸ், கயானா, பர்மா, ரீயூனியன், செசெலஸ், பிஜி போன்ற நாடுகளில் தமிழர்கள் பெருமளவு வாழ்ந்தும் தமிழ் நாட்டுடனும் தமிழுடனும் தொடர்பே இல்லாமல் இருக்கிறார்கள்..

சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் கூட தமிழக தொழிலாளர்கள், வேறு நாட்டு பிரஜைகளாக தமிழர் என்ற உணர்வு இல்லாதவர்களாக இருக்கிறார்கள்… மத்திய அரசு நடத்தும் பிரேவேசி மாநாடு (வெளிநாடு வாழ் இந்தியர்களின் மாநாடு) போல் வெளிநாடு வாழ் தமிழர்களின் மாநாடு ஏன் ஆண்டுதோறும் தமிழக அரசின் மூலம் நடத்த கூடாது… உலக தமிழர்களை ஒன்றிணைக்க என்ன வழி ?

சுதாகர் சௌந்திரம்

ன்புள்ள சுதாகர் சௌந்திரம்,

கெடு வாய்ப்பாக சன் டிவி-யின் சீரியல்களும், விஜய் டி.வி-யின் பிக்பாஸ், சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகள்தான் உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கின்றன. இந்த ஒன்றிணைதலில் தமிழுக்கு இடமில்லை. தமிழ் பண்பாட்டிற்கும், மொழிக்கும் கூட இடமில்லை. ஆங்கிலம் கலந்த தமிழில் மேட்டுக்குடி பாங்கு மட்டுமே மின்னுகிறது. இந்நிகழ்ச்சிகளின் நுகர்வுக் கலாச்சார அடையாளத்தைப் பார்த்தால் அது எந்த நாட்டிற்கும் பொருந்தும். அது தமிழுக்கு மட்டுமே உரியது அல்ல.

மாதிரிப் படம்

நீங்கள் சொல்வது போல தமிழ்நாடுதான் உலகத் தமிழர்களை ஒருங்கிணைப்பதில் முன்னணிப் பாத்திரம் ஆற்ற வேண்டும். இன்று தமிழ் மக்கள் இல்லாத இடமே இல்லை. ஆனால் தமிழ் நாட்டில் அ.தி.மு.க., தி.மு.க., ஆளும் கட்சிகளாய் இருக்கும் போது நடத்தப்பட்ட உலகத் தமிழ் மாநாடுகள் அக்கட்சிகளின் செல்வாக்கை தெரிவிக்கும் வண்ணமாய் மட்டுமே நடத்தப்பட்டன.

மற்ற நாடுகளில் உள்ள அரசு நிர்வாகங்களில் பங்கேற்கும் தமிழ் பிரதிநிதிகள் பெயருக்கு பங்கேற்பார்கள். மற்றபடி இன்றைக்கிருக்கும் எடப்பாடி அரசு போன்ற அடிமைகள், உள்நாட்டிலேயே தமிழ் மக்களுக்கு செல்லாக் காசாக திகழும் போது இவர்கள் எப்படி உலகளாவிய அளவில் தமிழ் மக்களை இணைக்க முடியும்?

தேசிய குடியுரிமை திருத்த மசோதாவில் ஈழத்தமிழர்கள் குடியுரிமை பெற முடியாது என்பதை அறிந்தும் அதிமுக அரசு அந்த மசோதா திருத்தத்தை ஆதரிக்கிறது. தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் இலங்கைத் தமிழ் மக்கள் அகதிகளாய் வாழ்கிறார்கள். இப்படி உள்நாட்டிலேயே தமிழ் மக்களுக்கு வஞ்சகம் புரிகிறது அதிமுக அரசு.

படிக்க:
ஜே.என்.யூ : மக்கள் பல்கலைகழகம் என்ற பெருங்கனவு ! | பாகம் – 1
♦ வெளிநாடு வேலை | ஓ.பி.ஆர் பற்றி | ஆர்.எஸ்.எஸ். முசுலீம் வெறுப்பு ஏன் ? | கேள்வி – பதில் !

ஆனால் முள்ளி வாய்க்கால் இனப்படுகொலையின் போதும், ஜல்லிக்கட்டு போராட்டம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் போதும் உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் தமது தோழமையை வெளிப்படுத்தினார்கள். போராட்டம் நடக்காத நாடே இல்லை எனுமளவுக்கு உலக நாடுகளில் தமிழ் மக்களின் போராட்டங்கள் நடந்தன. இன்றைக்கு இணையம் இருக்கிறது. இணையத்தின் மூலம் இந்த ஒன்றிணைதல் ஓரளவுக்கு நடக்கிறது. எனினும் போராட்டத்தின் மூலம் இணையும் தமிழ் மக்களை தொடர்ந்து நீங்கள் சொல்லும் ஆலோசனைகளை கணக்கில் கொண்டும் இணைப்பது, ஒன்றிணைப்பது குறித்து இணையத்தில் இருக்கும் முற்போக்கு தமிழ் நண்பர்கள் ஆலோசிக்க வேண்டும். அரசு செய்ய முடியாத இணைப்பை நாம் செய்ய வாய்ப்பிருக்கிறது.

பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வரை தஞ்சையில் தமிழ் மக்கள் இசை விழா எனும் நிகழ்வை மக்கள் கலை இலக்கியக் கழகம் நடத்தி வந்தது. தற்போது அதை உலகத் தமிழ் மக்கள் இசை விழாவாக நடத்த வேண்டிய தேவை இருக்கிறது. தோழர்கள் அது குறித்து ஆலோசிக்க வேண்டும்.

மற்றபடி உலகில் வாழும் தமிழ் மக்களுக்கு தமிழ் மொழியை சொல்லிக் கொடுப்பது, தமிழின் வரலாறு, தமிழர்கள் சென்ற நாடுகள், அந்த புலம் பெயர்ந்த வரலாறு அனைத்தையும் சொல்லிக் கொடுக்க வேண்டும். இவையெல்லாம் தன்னார்வலர்களால் மட்டும் செய்து விடமுடியாது. தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் ஓரளவு முயற்சிக்கலாம். இப்போதைக்கு இணையத்தில் அந்த ஒன்றிணைவுக்கான முதல் கட்ட நகர்வை முன்னெடுப்போம்.

நன்றி!

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

ஜே.என்.யூ : மக்கள் பல்கலைகழகம் என்ற பெருங்கனவு ! | பாகம் – 1

சிரமத்திற்கு மன்னிக்கவும்; இது ஒரு புரட்சி !

வகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களின் கல்விக் கட்டண உயர்வுக்கான போராட்டம் 40 நாட்களைக் கடந்த நிலையில், ‘சிரமத்திற்கு மன்னிக்கவும்; இது ஒரு புரட்சி′  என்ற வாசகங்களைத் தாங்கிய சுவரொட்டிகள் பல்கலைக்கழக வளாகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பரவி வியாபித்து வருகின்றன. உண்மையில் இது ஒரு புரட்சிதான்.

கல்வியை வியபாரமாக, சந்தையில் வாங்கும் பொருளெனக் கருதி பொதுக்கல்வியின் உண்மையான சமூகப் பங்களிப்பை, தேவையை உள்வாங்காதிருக்கும் நம்மில் பலருக்கு இது ஒரு தேவையற்ற சச்சரவாக, மக்களின் வரிப்பணத்தை விரயம் செய்யும் செயல்பாடாகத் தோன்றினால் ஆச்சரியம் இல்லை. ஆனால் சமூக மாற்றம், முன்னேற்றம், பண்பட்ட சமூக வாழ்வு போன்றவற்றை வென்றெடுப்பதற்கு ஒரு தரமான, அனைவரையும் உள்ளடக்கிய, எல்லோருக்கும் எளிதாகக் கிடைக்கக்கூடிய, குறைந்த செலவிலான, ஒரு பொதுக் கல்விமுறையை உறுதிப்படுத்த ஆதாரத் தளமாக இருக்கின்றது என்று கருதுவோர்க்கு இப்போராட்டத்தின் தேவையும் தீவிரமும் எளிதில் விளங்கும்.

கருத்துச் சுதந்திரத்திற்கான வெளி வேகமாகச் சுருங்கி, தனிநபர்களும், சமூக சிந்தைகொண்ட ஊடகங்களும், அரசு நிறுவனங்களும், தன்னாட்சி அமைப்புகளும் அடக்குமுறையாலும், பயத்தின் கோரப் பிடியிலும் சிக்குண்டு கசங்கிய காகிதமாய் உருமாறி வலுவிழந்திருக்கும் இன்றையக் காலக்கட்டத்தில் ஜே.என்.யூ மாணவர்கள் அவர்களது புரட்சியின் ஊடாக ஒரு நம்பிக்கையின் வெளிச்சத்தைக் கொண்டுவந்து நாம் கடக்க வேண்டிய பாதைக்கு வழிகாட்டுகின்றார்கள்.

புரட்சியின் வெவ்வேறு வடிவங்கள் :

மாணவர்களின் கலைத்துவம் வாய்ந்த இந்தப் புரட்சியின் வெவ்வேறு நிலைகளை, வடிவங்களை, பற்றிப் பேசுவதற்கு முன்னால் ஒருசில விடயங்களைத் தெளிவுப் படுத்தவேண்டும். ஒன்று இந்த போராட்டம் வெறும் கல்விக் கட்டண உயர்வு, விடுதி விதிகளிள் மாற்றம் இவற்றிற்கு எதிர்பாகத் திடீரென எழுந்த போராட்டம் அன்று.

மாறாக, கடந்த 50 ஆண்டுகளாக ஜே.என்.யு உள்வாங்கிச் செயல்பட்ட சில மதிப்புகள், சனநாயக விழுமியங்கள், நடைமுறைகள் இவற்றுக்கு எதிராக அவற்றை அழித்தொழிக்க விரும்பும் சில ஆதிக்க சக்திகள் மேற்கொண்ட அத்துமீறிய வன்முறைக்கும் அடக்குமுறைக்கும் எதிராகத் திரண்டெழுந்த போராட்டம்.

மற்றொன்று, இதுவெறும் ஜேஎன்யு மாணவர்கள் தங்கள் கல்வி உரிமைக்காகப் போராடும் போராட்டம் அன்று. மாறாக, உயர்கல்வியை கனவாய்க் கொண்டிருக்கும் அனைத்து இந்தியப் பொதுக் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குமானது. கல்விக் கட்டண உயர்வால் உயர்கல்வி வாய்ப்பை இழந்திருக்கும் அல்லது இழக்கப் போகும் ஒவ்வொரு இந்திய மாணவர்களுக்குமானது. மேலும், கல்வி நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படுதலுக்கு எதிராகவும், புதிய கல்வி கொள்கைகளை நடைமுறைப்படுத்தி சமூகத்தில் ஒடுக்கப்பட்டோருக்கு, நலிவடைந்தோருக்கு இருந்த சிறிதளவிலான வாய்ப்பையும் அழித்தொழிக்க விழையும் முயற்சிகளுக்கு எதிரானது.

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர் போராட்டம் என்பது ஒரு புதிய செய்தி அல்ல. இங்கு மாணவர்கள் போராட்டம் அவ்வப்போது வெடித்து அடங்கும். இன்றும் இப்பல்கலைக்கழகத்தின் முதல் தலைமுறை மாணவர்களைச் சந்திக்க நேர்ந்தால், 1970 -களில் இந்திராகாந்தி அரசு நெருக்கடி நிலையைப் பிரகடணப்படுத்தியப்போது, மக்களாட்சியை மீட்டெடுக்கும் பொருட்டு இப்பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த போராட்டத்தின் விளைவாக பல்கலைக்கழகம் பல மாதங்கள் மூடப்பட்டதும் போராடிய மாணவர்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டது பற்றியும் நெகிழ்ந்து பேசுவார்கள்.

இந்திராகாந்தி, மொராஜி தேசாய், மன்மோகன்சிங் போன்ற இந்தியப் பிரதமர்கள் ஜேஎன்யூ மாணவர் போராட்டங்களை நேரில் எதிர்கொண்டவர்கள். மொரார்ஜி தேசாய் காலத்தில் இப்பல்கலைக்கழகத்தை மூடுவதற்கான பரிந்துரையும் பரிசீலிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. 1970 அவசரகாலநிலை போராட்டங்களுக்குப் பிறகு குறிப்பிடும்படியான போராட்டம் என்றால் அது கடந்த 40 நாட்களாக நடைபெறும் கல்விக் கட்டண உயர்வுக்கு எதிரான மணவர்களின் சனநாயகப் புரட்சிதான்.

படிக்க:
ஜே.என்.யூ : பேரணி சென்ற மாணவர்கள் மீது “காக்கிச்சட்டை அணிந்த குண்டர்கள்” தாக்குதல் !
♦ என்கவுண்டருக்கு எதிராகப் பேசினால் சுடச் சொல்லும் வக்கிரம் !

தொடக்கத்தில் பல்கலைக்கழக வளாகத்திற்குள் வெவ்வேறு வடிவங்களில் தம் எதிர்ப்பைத் தெரிவித்த மாணவர்கள் போராட்டம், பல்கலைக்கழக நிர்வாகம் பேச்சுவார்த்தையில் ஈடுபடாது, போராடிய மாணவர்களுக்கு வெவ்வேறு வகைகளில் நெருக்கடியை ஏற்படுத்தியபோது, வளாகத்திற்கு வெளியே எடுத்துச் செல்லப்பட்டது. காவல் துறையின் அடக்குமுறையின்போதும், கார்ப்பரேட் ஊடகங்கள் போரட்டத்தின் நோக்கத்தைத் திரித்து மாணவர்களின் கோபத்தை தூண்டியபோதும், பல ஆயிரம் மாணவர்கள் எவ்வித வன்முறையும் இன்றி, அமைதியாய், தனக்கே உரித்தான கலைநயம் மிகுந்த கோசங்களுடனும், வாசகங்கள் தாங்கிய அட்டைகளுடனும் தில்லி சாலைகளில் நடந்து சென்றது மக்களின் கவனத்தைக் கவர்ந்திழுத்தது. மாணவர்களுக்கு ஆதரவான, எதிர்ப்பான விவாதங்கள் பொதுமக்கள் மத்தியிலும் ஊடகங்களிலும் தொடர்ந்து  நிகழ்ந்தன.

ஜே.என்.யூ சுவர்களும் கூட அரசியல் பேசும்

இதுபோல், பல்கலைக்கழக வளாகத்திற்கு உள்ளும் ஒரு தேர்ந்த சனநாயக நெறியிலான போராட்டங்களையே முன்வைத்தனர். கேலிச் சித்திரங்களை வைத்தல், கவிதை வாசிப்பு, பாடல், புத்தகம் வாசித்தல், அறிவுஜீவிகளையும் களப்பணியாளர்களையும் கொண்ட பொதுக்கூட்டங்கள், ‘சுதந்திர சதுக்கத்தை′ மாணவர்கள் தங்களின் போராட்டக் களமாக பயன்படுத்துவதற்கு எதிரான தடையை மீறுதல், பல்கலைக் கழகக் கல்விக்குழு, நிர்வாகக்குழு கூட்டங்கள் நடைபெறும் காலங்களில் இக்குழுக்களின் உறுப்பினர்களுக்குத் தம் கோரிக்கையை எடுத்துச் செல்லும் வகையில் போராடுதல் மற்றும் தொலைக்காட்சி விவாதங்களில் பங்குபெறுதல், பத்திரிகைகளில் எழுதுதல் என வெவ்வேறு வடிவங்களில் தம் உணர்வை வெளிப்படுத்தினர்.

முக்கியமாக, போராட்டங்களில் பெரிதாக ஆர்வம் காட்டாத அறிவியல் துறை மாணவர்கள், சமூக அறிவியல் மற்றும் மொழியியல் துறையைச் சார்ந்த மாணவர்களுடன் இணைந்து இப்போராட்டங்களில் பங்குகொண்டது கவனிக்க வேண்டியதாக இருந்தது. வகுப்பறைகளைவிட, புரட்சியின்போதே சமூகத்தையும் அரசியலையும், அரசின் அதுபோன்று ஊடகங்களின் வன்முறையைப் பற்றியுமான புரிதல் மாணவர்களுக்கு எளிதாகச் சென்றடைவதைக் காணக்கூடியதாக இருந்தது.

மக்கள் பல்கலைக் கழகம் என்ற பெருங்கனவு !

வேறு எந்தப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இல்லாத அக்கறை, கொதிப்பு, போராட்ட உணர்வு எதற்காக ஜேஎன்யு மாணவர்களுக்கு மட்டும் ஏற்படவேண்டும்? ஆங்கில கார்ப்பரேட் ஊடகங்கள் இதைப்பற்றி விவாதித்தன. அரசின் கைக்கூலியாக மாறிப்போன பல்வேறு தொலைக்காட்சிகள் ஜே.என்.யு.-வை தேசத்துரோகிகளின் இருப்பிடமாகச் சித்தரித்ததுடன், எதிர்ப்புச் சிந்தனை என்பது ஜேஎன்யுவின் டிஎன்ஏ-வில் ஊறிக்கிடப்பது என்றும் இவர்கள் எதையும் எதிர்த்தே பழக்கப்பட்டவர்கள் என்றும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டை போடுபவர்கள் என்றும் வெவ்வேறு தவறான திரிக்கப்பட்ட கருத்துக்களை மக்கள் மத்தியில் கொண்டுசெல்ல பெரும்பாடுபட்டன.

உண்மையில், சனநாயக நெறிகளை வென்றெடுக்கவேண்டும் என்ற இந்தச் சிந்தனை, போராட்ட உணர்வு ஜேஎன்யு சமூகத்தினருக்கு எவ்வாறு இயல்பாக இருக்கின்றது என்ற கேள்வி ஒவ்வொருவருக்கும் எழக்கூடியதுதான்.  எங்கிருந்து வருகின்றது இது? இந்தப் பல்கலைக்கழகத்தை நிறுவ நினைத்தவர்களின் எதிர்பார்ப்புகள் என்ன?  இதற்கான பதில்கள் ஜேஎன்யு மசோதா இந்தியப் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டப்போது இதில் ஈடுபட்டோர் முன்வைத்த வாதங்களை வாசித்தால் தெரியவரும்.

படிக்க:
குடியுரிமை சட்ட திருத்த மசோதா : பரவும் போராட்டம் – கொதிப்பில் வடகிழக்கு !
♦ JNU மாணவர் போராட்டம் : தோழர் மருதையன் கட்டுரை

கல்வியறிவு பெற்றோரும், சமூகச் சிந்தனை உடைய அரசியல்வாதிகளும் அதிகளவில் இடம்பெற்றிருந்த அப்போதைய பாராளுமன்றம், ஜேஎன்யு ஒரு பிரசித்தமான, தனித்துவம் வாய்ந்த பல்கலைக்கழகமாக வளரவேண்டும் என்றே எதிர்பார்த்தது. புதிய சிந்தனைகளை வென்றெடுக்கும் வெளியாக, அனைத்துத் தரப்பு மக்களையும் அவர்களது கருத்துக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தளமாக இருக்கவேண்டும் என எதிர்பார்த்தது.

சுதந்திரமான, நேர்மையான, அறிவியல் பூர்வமான சிந்தனைக்கு ஏதுவாக அரசின் தீவிர கட்டுப்பாட்டில் கண்காணிப்பில் இருந்து விடுபட்டு, போதுமான தன்னாட்சி உரிமைகளுடன் இப்பல்கலைக்கழகம் இருக்க வேண்டும் எனப் பரிந்துரைத்தது. சுருக்கமாக அப்போதைய அரசியல் தலைவர்களின் எதிர்பார்ப்பை இவ்வாதங்களில் பங்குகொண்ட எம்.சி. சாக்ளா, ‘இது முற்றிலும் மாறுபட்டுப் புதியவகைப் பல்கலைக்கழகமாக இருக்கும்’ என்று சுட்டிக்காட்டினார்.

‘மாணவர்கள் தம் கேள்விகளை, விசாரணைகளை முன்வைப்பதற்கு ஏதுவானதாகவும், ஒவ்வொரு மரபையும் ஒவ்வொரு கோட்பாட்டையும் கேள்விக்குட்படுத்திப் புதிய கண்டுபிடிப்புகளை நோக்கிய நீள்பயணத்தைத் தொடங்க ஏதுவாகவும் சுதந்திரமான சூழ்நிலையைக் கட்டாயம் கொண்டிருக்க வேண்டும்.’ மேலும், ‘ஒரு பல்கலைக்கழகம் வாழ்க்கை அனுபவத்தையும் அதுபோன்று வாழ்விற்கான வாய்ப்பையும் வழங்க வேண்டும். இதைத்தான் நாம் இத்தகைய பல்கலைக்கழகத்திடமிருந்து எதிர்பார்க்கிறோம்’ என்றும் குறிப்பிட்டார்.

எனவே அப்போதைய பாராளுமன்றவாதிகளுக்கு ஜேஎன்யு ஏனைய பல்கலைக் கழகங்கள் போல் இல்லாமல் தனித்துவத்துடன் கூடிய நிறுவனமாக இருக்கவேண்டும் என்பதே பெருங்கனவாக இருந்தது. இதற்குப்பிறகு தொடங்கப்பட்ட பல்வேறு மத்தியப் பல்கலைக் கழகங்கள் ஜேஎன்யுவை முன்மாதிரியாகக் கொண்டு செயல்படவேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

இயங்குமுறை, அதிகாரப் பரவலாக்கம் மாணவப் பிரதிநிதித்துவம் :

ஜேஎன்யு-வுக்கான தனிப்பட்ட சட்டவிதிகள் (JNU ordinance) இத்தகைய எதிர்பார்ப்புகளை உள்வாங்கியே எழுதப்பட்டன. இவ்விதிகள் ஏனைய பல்கலைக் கழகங்களுக்குப் பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைக்கின்ற நெறிமுறைகளைவிடச் சற்று வேறுபட்டவை. எழுதப்பட்ட விதிகளை தவிர்த்து, கடந்த 50 வருட செயல்பாட்டில்  வெவ்வேறு வழக்கங்கள், மரபுகள், வழக்காறுகள் நடைமுறைக்கு வந்து ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

எனவே ஜேஎன்யுவின் அமைப்பு மற்றும் இயங்குமுறை  இத்தகைய விதிகள், நெறிமுறைகள் மற்றும் ஏற்றுக் கொள்ளப்பட்ட சனநாயக மரபுகளை அடிப்படையாகக் கொண்டவை.  இதனுடைய மாணவர் சேர்க்கை முறை மிகவும் வெளிப்படையானது. இட ஒதுக்கீட்டு விதிகளை முழுமையாகக் கடைபிடிப்பதுடன், ஆங்கிலம் தெரியாத மாணவர்கள் தங்கள் தாய் மொழிகளில் நுழைவுத் தேர்வு எழுத வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆங்கிலத்திலும், ஹிந்தி த‍விர்த்து தமிழ், பெங்காலி, மலையாளம் இன்னும் பிற மொழிகளிலும் நுழைவுத்தேர்வு எழுதுவோரை அவ்வப்போது காணமுடியும்.

ஜே.என்.யூ மாணவர் தேர்தல் கமிட்டி.

பெண்களுக்கு மற்றும் மிகவும் பின்தங்கிய பிராந்தியங்களிலிருந்து விண்ணப்பிப்போருக்கு ஊக்கப் புள்ளிகள் வழங்கப்பட்டன. அனைத்துப் பால், மொழி, சமூக மற்றும் பிராந்தியப் பிரிவினைகளிலிருந்து திறமையான மாணவர்களின் வருகை ஜேஎன்யு மாண்புகளுக்கு அடிப்படையாக நின்று வலுச்சேர்த்தது. ஒவ்வொருவரும் தன் கருத்தைத் தைரியமாகக் கூச்சமின்றித் தனக்குத் தெரிந்த மொழியில் பேசுவதற்கு ஏதுவாக இருந்த எளிமையான சூழல் ஒருவர் மற்றொருவரிடம் இருந்து கற்றுக்கொள்ளவும், ஒரு ஒருக்கிணைந்த கூட்டு வாழ்விற்கு தேவையான வாழ்வியில் நெறிகளைக் ஏற்றுக்கொள்ளவும் வழிவகுத்தது.

சமூகவேறுபாடுகளைக் களைவதற்கான விழைவுகள் போன்று பால் வேறுபாடுகளைக் குறைத்து, பாலியல் வன்முறையற்ற சமூகத்திற்கான முன்மாதரியும் இங்கு வரையப்பட்டது. ஆண்-பெண் இருபால் மாணவர்களும் ஒரே விடுதிகளில் தங்கவைக்கப்பட்டு வன்முறையற்று சரிசமமாக இணைந்து வாழ்வதற்கான பரிசோதனையை மேற்கொண்டதை இதற்குச் சான்றாகக் குறிப்பிடலாம். இதுபோன்ற சுதந்திரமான இணைந்த வாழ்வியல் நெறிகளை ஊக்குவித்த அதேவேளையில் பால் சார்ந்த வன்முறைகளைத் தடுப்பதற்காகக் கடுமையான விதிமுறைகளும் வகுக்கப்பட்டன.

1999-ம் ஆண்டு விசாகா நெறிமுறைகளின் வழிகாட்டுதலின்படி GSCASH (Gender Sensitization Committee Against sexual harassment)  அமைப்பு உருவாக்கப்பட்ட பால் நெறிகளை மீறும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஏனைய பல்கலைக்கழகப் பணியாளர்களுக்கு முறையான விசாரணை மேற்கொண்டு கடுமையான தண்டனை (பொதுவாகப் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கம்) வழங்கப்பட்டது. இது பொதுவாக பெண்கள் சுதந்திரமாகச் செயலாற்றுவதற்கும், கல்வி கற்பதற்கும் உதவியது.

படிக்க:
ஜே.என்.யூ : விடுதி கட்டண உயர்வைக் கண்டித்து தேர்வு புறக்கணிப்பு !
♦ Revoke Citizenship Amendment Act, 2019 ! People’s Right Protection Centre – Press Release

இதுபோன்ற எத்தனையோ தனித்துவம் மிகுந்த நடைமுறைகளைப் பற்றி பேசிக்கொண்டே செல்லலாம். மற்ற எல்லாவற்றையும்விட,  ஜேஎன்யு மாணவர் அமைப்பு தேர்தல் மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றிக் குறிப்பிட்டே ஆகவேண்டும். ஒரு சனநாயகத் தேர்தல் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு இது முன்மாதிரியாக உள்ளது.  இது மாணவர்களை மட்டுமே கொண்ட ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்தல் குழுவால், எந்தவிதப் பணம் மற்றும் வன்முறையின் ஊடுருவலும் இன்றி, 15 நாட்களுக்கு வெவ்வெறு தளங்களில், நிலைகளில் நடைபெறும் விவாதங்களின் அடிப்படையில், மறைமுக வாக்கெடுப்பு மூலம் நடைபெறுவது.  இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ பிரதிநிதிகளுக்குப் பல்கலைக்கழக நிர்வாகத்தில், குறிப்பாகக் கொள்கைகளை வகுக்கும் குழுக்களில் போதுமான பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டு, மாணவர் உட்பட அனைத்துத் தரப்பினரின் ஒப்புதலுடனே ஜேஎன்யு கொள்கை முடிவுகள் உருவக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுவது வழக்கம். பொதுவாகக் கல்வி, கல்விக் கட்டணம், விடுதி நெறிகள், கட்டணம் போன்றவற்றை நிர்ணயிப்பதில் மாணவர்கள் தங்கள் தரப்புக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்குத் தேவையான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன.

விரைவில் அடுத்த பகுதி : வலதுசாரிகளின் பிடியில் நிர்வாகம்

(தொடரும்)

சௌ. குணசேகரன்

(ஆசிரியர் பற்றி : ஜவகர்லால்நேரு பல்கலைக்கழகத்தில், வரலாற்று ஆய்வுகளுக்கான மையத்தில் துணைப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்)

என்கவுண்டருக்கு எதிராகப் பேசினால் சுடச் சொல்லும் வக்கிரம் !

ன்கவுண்டருக்கு எதிராகப் பேசினால் மனித உரிமை செயற்பாட்டாளர்களையும் சுட்டுக் கொல்லவேண்டும் என சில வெட்டி ஜந்துகள் கூச்சலிடுகின்றன.

பழங்குடிப் பெண் அத்தியூர் விஜயாவை 6 போலீசார் கூட்டு வன்புணர்வு செய்த வழக்கில் 13 ஆண்டுகள் போராடி தண்டனை பெற்றுத் தந்தவர்கள் கல்யாணி உள்ளிட்ட மனித உரிமையாளர்கள்தான். தன்னலமற்று, அஞ்சாமல் வாதாடியவர் திமுக வழக்குரைஞர் எம்.ஆர்.ஷெரீப். (6 பேரையும் உயர்நீதிமன்றம் விடுவித்தது வேறு)

வாச்சாத்தியில் அரசு இயந்திரம் கும்பலாக வந்து வன்புணர்வு செய்த அதிரவைக்கும் நிகழ்வில் போராடியவர்கள் கம்யூனிஸ்டுகளும், மனித உரிமையாளர்களும் தான்.

அண்ணாமலை நகர் பத்மினி போலீஸ் நிலையத்தில் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் போராடியவர்கள் கே.பாலகிருஷ்ணன் போன்ற கம்யூனிஸ்டுகளும், மனித உரிமையாளர்களும்தான்.

படிக்க:
குடியுரிமை சட்ட திருத்த மசோதா : பரவும் போராட்டம் – கொதிப்பில் வடகிழக்கு !
♦ கொங்கு பயங்கரவாதி யுவராஜை என்கவுண்டர் செய்யலாமா ?

இந்த பட்டியல் நீளமானது. ஏதிலிகளுக்கு, எளியவர்களுக்கு, விளிம்பு நிலையில் இருப்பவர்களுக்கு வன்புணர்வு நடந்தாலும், எது நடந்தாலும் இவர்களே கதி.

இவர்கள் இனிய வாழ்வை தொலைத்து சட்டத்தீர்வை கோரியே போராடினர். சுட்டுக்கொல்ல வேண்டியல்ல. பரந்துபட்ட மக்களின், பெண்களின் பாதுகாப்பை சட்ட வாழ்வே உறுதி செய்யும் என இவர்கள் ஆய்ந்து, அறிந்து நம்புகின்றனர்.

நூற்றுக் கணக்கான என்கவுண்டர்களை நிகழ்த்தியுள்ள உ.பி போலீசாரின் துப்பக்கிகள் உன்னாவ் குற்றவாளிகளுக்கு எதிராக வெடிக்குமா ?

மற்றவர்கள் பாதுகாப்புக்காக வாழ்வை இழந்தும் இவர்கள் போராடுகிறார்கள்.

அடுத்தவர்களுக்காக விரல் நகத்தைக்கூட இழக்கக் தயாராக இல்லாத, ஒருமுறைகூட வீதியில் நின்று கை உயர்த்தாத நீதிமான்கள் வன்புணர்வு சந்தேக நபர்களுக்கு மட்டுமல்ல, எண்ணற்ற வன்புணர்வு வழக்குகளில் நீதிக்காக போராடிய இந்த மனித உரிமையாளர்களை சுடவேண்டும் என அரசமரத் தீர்ப்புகளை வழங்குகிறார்கள்.

நூற்றுக்கணக்கான ‘என்கவுண்டர்’ எனப்படும் போலீஸ் கொலைகள் நடந்த உ.பி.தான், அங்குள்ள ‘உன்னாவ்’தான் இந்தியாவின் வன்புணர்வு சம்பவங்களின் தலைமையகமாக உள்ளது என்பதையும் அவர்கள் கவனிக்கத் தவறுகிறார்கள்.

ஆனால் மனித உரிமையாளர்களை (இவர்களில் பலவகை உண்டு. இவர்களோடு உடன்பட, மாறுபட பல உண்டு) சுடவேண்டும் என்போர் உ.பி. உன்னாவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களையும் சுடவேண்டும் என்று கோரி நான் பார்க்கவில்லை.

நான் அப்படி கோரவில்லை என்பது வேறு.

நன்றி : AD Bala
ஃபேஸ்புக் பதிவிலிருந்து…

disclaimer

Revoke Citizenship Amendment Act, 2019 ! People’s Right Protection Centre – Press Release

People’s Right Protection Centre

Press Release

09.12.2019

Citizenship Amendment Bill, 2019 and National register of Citizens are against Article. 14, 21 and 15(1) of Indian Constitution and secular, anti-racial principles of our Country!

The planned exclusion of Srilankan Thamizhs and Muslims is an act of snatching away of human rights and a move against the entire human society!

Revoke Citizenship Amendment Act, 2019 and National Citizen’s Register!
Grant citizenship to all the people who take asylum of India irrespective of religion, race, caste, place of birth….etc !

***

On 09.12.2019 the Citizenship Amendment Act, 2019 has been put forward and passed by the BJP Government in Parliament. As per this Act, Indian Citizenship will be granted to the Hindus, Christians, Parsis, Jains, and Buddhists from Pakistan, Bangladesh, and Afghanistan settled in India before 31st December 2014.

Advocate S.Vanchinathan at Press meet.

The law does not apply to the Muslims from Pakistan, Bangladesh, and Afghanistan as well as Srilankan Thamizhs from Sri Lanka and Rohingya Muslims from Myanmar.
Citizenship Amendment Bill, 2019-Anti-Constitutional Law

1. Article 5 – 11 of the Indian Constitution deals with citizenship. As per Government of India Act, 1935 the people of British India origin should be granted with Indian Citizenship. Accordingly, Pakistan, Bangladesh were part of British India. Hence who came to India before and after partition ought to have been granted with Indian Citizenship. .

2. From the combined reading of Articles- 14,15, 21,25 and 26 of the Indian Constitution even the foreigner should not be discriminated based on religion, race, caste and sex. Further the amendment is clearly against the “human dignity” and the principal of “Constitutional Morality”- both are enshrined under Article 21 of the Indian Constitution.

3. The present Law enforced by RSS – BJP – Modi – Amit shah government divides Muslims on the basis of religion and Eezham Thamizhs on racial basis.The move is diametrically opposite to the “Secular Fabric Of Our Indian Constitution” which is prohibited under the judgment made law held in “Kesavanatha Bharathi and S.R.Bommai cases by the Apex Court.

4. Citizenship is basic right of all other rights. If a person does not granted with citizenship he cannot avail any other right. Hence it is clear that the people who are denied citizenship right will not have right to freedom of expression, right against exploitation and other valuable rights under part III of the Constitution. They cannot avail for government schemes, employment, education and bank access. Totally crores of people will be announced as illegal immigrants and they will be incarcerated in concentration camps as done to Jews in Germany and to the black African slaves in the United States. They will be left isolated without any right as marked people and will be subjected to the strict surveillance of the state.

5. The Citizenship Record framed in Assam declared two million people as illegal immigrants. Nearly 9-12 lakh people among them are Hindus. Hence the Indian Citizenship Act which is extended to the whole of our country will classify the people who do not have documents to prove their citizenship as illegal immigrants and will shift the to concentration camps.

6. As per this Act if a person’s name is not found in the Citizenship Registry it is his duty to prove himself by approaching the Citizenship Tribunal. In our Country people who have been residing on roadsides, nomads, people affected by floods and other natural calamities are definitely living without documents or lost their documents. Where will they go for their certificates of birth, education and for bank accounts?

7. If Hindus in Pakistan, Bangladesh, and Afghanistan are minorities of those countries then Hindu-Thamizh People from Srilanka and Rohingya Muslims from Myanmar are also minorities of India. Why Citizenship is denied to them?

8. This act of discrimination of people on the basis of religion, place of birth and race is not a reasonable classification and nothing but the Anti-Muslim and Anti-Thamizh politics of RSS – BJP government. It is aimed at Hindu vote bank. People from all corners and all the political parties should reject this Act.

9. The entire exercise of the NATIONAL REGISTER OF CITIZENS is highly expensive and needs at-least Rs.1,50,000 crores and this will put an additional economical burden to the people of India who already suffered lot under the economic crisis

10. The enforcement of this enactment will disrupt India’s global reputation. India will be considered as a barbaric country which turned down from the state of civilisation.
Totally it is a destruction of our secular Constitution and our nation.

Advocate S.Vanchinathan
State Co-ordinator
People’s Right Protection Centre
Mobile : 9865348163 / Email : vanchiadv@gmail.com

டியுர்கோவின் வீழ்ச்சி : பிஸியோகிராட்டுகளுக்கு பேரிடி ! | பொருளாதாரம் கற்போம் – 47

0

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் – பாகம் 47

டியுர்கோ – அமைச்சர்

அ.அனிக்கின்

புர்போன் அரசர்கள் பிற்கால சந்ததியினருக்குச் சில பிரபலமான பொன்மொழிகளை விட்டுச் சென்றிருக்கின்றனர். “பாரிஸ் ஒரு பெரும் சொத்து” என்ற சொற்றொடரை நான்காம் ஹென்ரி சொன்னதாக ஒரு கதை சொல்லப்படுவதுண்டு. “நானே அரசு” என்று பதினான்காம் லுயீ சொன்ன பொழுது அவர் வரம்பில்லாத முடியாட்சியை ரத்தினச் சுருக்கமாக எடுத்துக் கூறினார். பதினைந்தாம் லுயீ அதைப் போலவே பிரபலமான, “எனக்குப் பிறகு ஊழிப் பெருவெள்ளம் பொங்கட்டும்” என்ற பொன் மொழியைச் சொன்னார். பதினாறாம் லுயீ ஒரு பொன் மொழியைக் கூட விட்டுச் செல்லவில்லை; சீக்கிரத்திலேயே அவர் சிரச்சேதம் செய்யப்பட்டது அதற்குக் காரணமாக இருக்கலாம், ஒருவேளை அவர் முட்டாளாக இருந்தது கூடக் காரணமாகலாம். மிராபோ (பிஸியோகிராட்டுகள் குழுவைச் சேர்ந்த பிரபுவின் மகன்) கேலியாகச் சொன்னது போல, பதினாறாம் லுயீயின் குடும்பத்திலிருந்த ஒரே ஒரு ஆண் மகன் அவர் மனைவியான மேரி அன்டுவனேட்தான்.

பதினைந்தாம் லுயீ 1774-ம் வருடம் மே மாதத்தில் அம்மை நோயினால் மரணமடைந்தார். அவருடைய ஆட்சிக் காலத்தின் கடைசி வருடங்களில் ஏற்பட்ட நிதித்துறை நெருக்கடியும் குரூரமான அடக்குமுறையும் குறிப்பிடத்தக்கவையாகும். சர்வாதிகாரியான அரசர் மரணமடைந்ததும்அவருக்குப் பிறகு ஒரு கொடுங்கோலர் ஆட்சி பீடத்திலேறினாலும் கூட- மிதவாதப் போக்குகள் வழக்கமாகத் தொடரும். பழைய அரசரின் மரணச் செய்தியைக் கேட்டதும் பிரான்ஸ் நாடு முழுவதுமே நிம்மதியைக் காட்டிப் பெருமூச்சு விட்டது. அவருடைய வாரிசுக்கு இருபது வயதாகியிருந்தது; அவர் கடுமையில்லாதவர், நெகிழ்ச்சியான சுபாவமுடையவர். ஆகவே இனி ”அறிவுயுகம்” தோன்றும், நம்முடைய கருத்துக்கள் நடைமுறைக்கு வரும் என்று தத்துவஞானிகள் நம்பினார்கள்.

டியுர்கோ முதலில் கடற்படை அமைச்சராகவும் அதற்குச் சில வாரங்களுக்குப் பிறகு நிதித் துறையின் பொதுப் பொறுப்பாளராகவும் மிகவும் உயர்ந்த பதவிகளுக்கு நியமிக்கப்பட்ட பொழுது இந்த நம்பிக்கைகள் வேரூன்றின. டியுர்கோ நாட்டின் உள்விவகாரங்கள் அத்தனைக்குமே நிர்வாகப் பொறுப்பை வகித்தார்.

பதினாறாம் லுயீ

டியுர்கோ தற்செயலாகவே அமைச்சரானார் என்று வழக்கமாகச் சொல்வதுண்டு. அவருடைய நண்பரான அபே ட விரி, மொரெபா சீமாட்டியிடம் சொன்னார்; அந்தச் சீமாட்டி தன் கணவனை வற்புறுத்தினாள்; அவள் கணவர் அரசருக்கு மிக நெருக்கமாக இருந்தார்; இதரவை. இவற்றில் ஓரளவுக்குத்தான் உண்மை உண்டு. அரண்மனைச் சூழ்ச்சியின் விளைவாகவே டியுர்கோவுக்கு அமைச்சர் பதவி கிடைத்தது. அரசவையைச் சேர்ந்தவர்களில் சூழ்ச்சி மிக்கவரான மொரெபா டியுர்கோவின் நேர்மையும் செல்வாக்கும் பிரபலமடைந்திருந்த படியால் அவற்றைத் தன்னுடைய சொந்த நோக்கங்களுக்கு உபயோகித்துக்கொள்ள விரும்பினார். அவருடைய கருத்துக்கள், திட்டங்களைப் பற்றி அவருக்குச் சிறிதும் அக்கறை இல்லை.

ஆனால் இதுதான் முழுக்கதை என்று சொல்ல முடியாது. மாற்றம் அவசியம் என்பதை இதற்கு முன்பு எந்தக் காலத்திலும் இல்லாத அளவுக்கு பிரான்ஸ் முழுவதுமே உணர்ந்தது. இதை உச்சியில் உட்கார்ந்து கொண்டிருந்த நிலப்பிரபுத்துவ மேன்மக்களும் கூடப் புரிந்து கொண்டார்கள். அரசவையிலிருந்த கும்பலோடு சம்பந்தமில்லாத, பொதுப் பணத்தை ஏப்பமிட்டதாகக் கெட்ட பெயர் வாங்காத ஒரு புது மனிதர் தேவைப்பட்டார். அந்த மனிதரைக் கண்டுபிடித்தார்கள் அவர்தான் டியுர்கோ, பிரான்சின் நிதி, பொருளாதாரத் துறைகளில் யுகக்கணக்காகக் குவிந்திருந்த குப்பைகளை அகற்றுகின்ற பெரும் பொறுப்பை மேற்கொண்ட பொழுது அது சுலபமான வேலை என்று டியுர்கோ நினைக்கவில்லை. அவர் விரும்பியே அந்தப் பொறுப்பை மேற்கொண்டார்; சிறிதும் தளர்ச்சியடையாமல் அந்தப் பணியைச் செய்தார். துணிச்சலான முதலாளித்துவச் சீர்திருத்தங்களைச் செய்கின்ற பாதையை அவர் பின்பற்றினார். மனிதனுடைய பகுத்தறிவு, முன்னேற்றம் என்ற கோணத்தில் பார்க்கும் பொழுது அவை அவசியமானவை என்று டியுர்கோ கருதினார்.

“பழைய ஆட்சியை ஒழித்த அறிவுத்துறையின் வீர புருஷர்களில் அவர் ஒருவர்”(1)  என்று மார்க்ஸ் டியுர்கோவைப் பற்றி எழுதினார்.

படிக்க:
நவீன வேதியியலின் கதை | பாகம் 02
♦ திராவிடம் | திமுக – அதிமுக | பஞ்சமி நிலம் | பாபர் மசூதி தீர்ப்பு | கேள்வி – பதில் !

அமைச்சர் என்ற முறையில் டியுர்கோ செய்தது என்ன? அவர் குறைந்த காலத்துக்கே பதவியிலிருந்தார், அந்தக் குறைவான காலத்திலும் ஏராளமான நெருக்கடிகள் அவருக்கு ஏற்பட்டன என்பதை நினைத்துப் பார்க்கும் பொழுது அவர் நம்ப முடியாத அளவுக்கு அதிகமானவற்றைச் செய்தார் என்று சொல்ல வேண்டும். ஆனால் நெடுந்தொலைவு நோக்கில் இறுதி முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் மிகக் குறைவாகவே சாதித்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.

அவருடைய தோல்விக்கே புரட்சிகரமான முக்கியத்துவம் இருந்தது. டியர்கோவைப் போன்ற ஒருவரால் கூட சீர்திருத்தங்களைச் செய்ய முடியவில்லை என்றால், இனிமேல் யாரும் சீர்திருத்தங்களைச் செய்ய முடியாது, புரட்சியால் தான் அது முடியும் என்ற முடிவுக்குத்தான் வர வேண்டும். எனவே டியுர்கோவின் சீர்திருத்தங்களிலிருந்து 1789-ம் வருடத்தில் பாஸ்டிலி கோட்டை தகர்க்கப் பட்டதற்கும் 1792-ம் வருடத்தில் டியுல்லரீ அரண்மனை முற்றுகையிடப்பட்டதற்கும் ஒரு நேர்கோட்டைக் காண முடியும்.

பிரான்சின் நிதி நிலைமையில் ஒழுங்கை ஏற்படுத்துவதை டியுர்கோ மிகவும் அவசரமான வேலையாகக் கருதி அதை முதலில் எடுத்துக் கொண்டார். அவருடைய நீண்ட காலத் திட்டத்தில் நிலவுடைமையிலிருந்து கிடைக்கின்ற வருமானத்துக்கு வரி விதிப்பது, வரிவேட்டையை ஒழிப்பது போன்ற தீவிரமான சீர்திருத்தங்கள் இடம் பெற்றிருந்தன. தன்னுடைய திட்டத்தைப் பொதுவான முறையில் எல்லோருக்கும் அறிவிக்க வேண்டுமென்று அவர் அவசரப்படவில்லை. ஏனென்றால் சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் அதற்கு எதிராக என்ன செய்வார்கள் என்பது அவருக்குத் தெரியும். அப்போதைக்கென்று தனிப்பட்ட சில சீர்திருத்தங்களைச் செய்வதில் அவர் அதிகமாகப் பாடுபட்டார்.

டியுர்கோ

வரிவிதிப்பு முறையிலிருந்த அப்பட்டமான கோளாறுகளையும் அநீதிகளையும் அகற்றுவதற்கும் தொழில்துறை, வர்த்தகம் ஆகியவற்றின் மீது விதிக்கப் பட்டிருந்த வரிச்சுமையைக் குறைப்பதற்கும் வரிவேட்டைக்காரர்கள் மீது அதிகமான நிர்ப்பந்தத்தைக் கொண்டு வருவதற்கும் அவர் பாடுபட்டார். மறுபக்கத்தில் வரவு செலவுத் திட்டத்தில் அரண்மனைச் செலவுகள் பிரதான இனமாக இருந்த காரணத்தால் அந்தச் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கு முயற்சித்தார். அதன் விளைவாக, ஊதாரிச் செலவுகளைச் செய்து கொண்டிருந்த மேரி அன்டு வனேட்டின் சபலம், ஆத்திரம் ஆகியவற்றோடு அவர் வெகு சீக்கிரத்தில் மோதிக் கொள்ள நேர்ந்தது.

அவருடைய முயற்சிகளின் பலனாக வரவு செலவுத் திட்டத்திலும் அரசுக் கடன் வசதிகளிலும் இலேசான அபிவிருத்தி ஏற்பட்டது. ஆனால் அமைச்சரின் எதிரிகள் வேகமாகப் பெருகிக் கொண்டிருந்தனர், அவர்கள் அதிகமான சுறுசுறுப்போடு வேலை செய்யத் தொடங்கினார்கள்.

டியுர்கோ செய்த பொருளாதார சீர்திருத்தங்களில் தானியம், மாவு வியாபாரத்தில் வர்த்தக சுதந்திரத்தை ஏற்படுத்தியதும் இதற்கு முன்பிருந்த ஒரு அமைச்சரின் உதவியோடு சில சூழ்ச்சிக்காரர்கள் ஏற்படுத்திக் கொண்ட ஏகபோகத்தை ஒழித்ததும் முக்கியமாகும். இந்த சீர்திருத்தம் அடிப்படையில் முற்போக்கானதுதான்; எனினும் அதன் காரணமாகப் பெரும் நெருக்கடிகள் அவருக்கு ஏற்பட்டன. 1774-ம் வருடத்தில் அறுவடை மோசமாக இருந்தது . அதனைத் தொடர்ந்து வந்த வசந்த காலத்தின் போது தானிய விலை கணிசமாக அதிகரித்தது. சில நகரங்களில், குறிப்பாக பாரிசில் பொதுமக்கள் கலகம் செய்தார்கள்.

இந்தக் கலகங்களைப் பெருமளவுக்கு டியுர்கோவின் எதிரிகள் தூண்டினர், திட்டமிட்டு நடத்தினர் என்று நிரூபிக்க முடியாவிட்டாலும் அவ்வாறு நம்புவதற்குப் போதிய காரணங்கள் உண்டு. அவருடைய பதவிக்கு ஆபத்தை ஏற்படுத்துவது அவர்களுடைய நோக்கம். அமைச்சர் கலகங்களை உறுதியாக அடக்கினார். தங்களுடைய சொந்த நலன்கள் யாவை என்பது மக்களுக்குத் தெரியவில்லை, இந்த நலன்களை வேறு விதமான வழியில் தான் அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும் என்று அவர் கருதியிருக்கக் கூடும். இவைகளையெல்லாம் டியர்கோவின் எதிரிகள் அவருக்கு விரோதமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். இப்பொழுது மொரெபா அவருடைய எதிரிகளோடு இரகசியமாகச் சேர்ந்திருந்தார்; நாளாக ஆக அவர் டியுர்கோவைக் கண்டு அதிகமாக அஞ்சினார், அதிகமாகப் பொறாமைப்பட்டார்.

எனினும் டியுர்கோ சிறிது கூடத் தயங்காமல் காரியங்களைத் தொடர்ந்தார். 1776-ம் வருடத் தொடக்கத்தில் அவருடைய பிரபலமான ஆறு ஆணைகளுக்கு அரசருடைய ஒப்புதலைப் பெற்றார்; இதற்கு முன்பு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எல்லாவற்றையும் விட இவை நிலப்பிரபுத்துவத்தின் அஸ்திவாரத்தைத் தகர்த்தன. அவற்றில் விவசாயிகள் கட்டாயமாகச் சாலை அமைக்கும் முறையை ஒழித்ததும், தனிச் சலுகைகளைக் கொண்ட நிறுவனங்களான வர்த்தக, கைவினைஞர்கள் சங்கங்களை ஒழித்ததும் முக்கியமான இரு நடவடிக்கைகளாகும்.

படிக்க:
பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு | ராஜு – கருணானந்தன் – முத்துகிருஷ்ணன் உரை | காணொளி
♦ சிந்தனையாளர் டியுர்கோ | பொருளாதாரம் கற்போம் – 46

இரண்டாவது ஆணை தொழில் துறை மற்றும் முதலாளித்துவத் தொழில் அதிபர்களின் வேகமான வளர்ச்சிக்கு மிகவும் அவசியமென்று டியுர்கோ கருதினார்; அது நியாயமானதே. இந்த ஆணைகளுக்குக் கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டது; அந்த எதிர்ப்பின் மையமாகப் பாரிஸ் நாடாளுமன்றம் இருந்தது. இவற்றைப் பதிவு செய்வதற்கு நாடாளுமன்றம் ஒத்துக் கொண்டால்தான் அவை சட்டமாக முடியும். இந்தப் போராட்டம் இரண்டு மாதங்களுக்கு மேல் நடைபெற்றது. மார்ச் மாதம் 12-ம் தேதியில் டியுர்கோ அவற்றைப் பதிவு செய்வதில் வெற்றி பெற்றார்; அந்த ஆணைகள் சட்டமாயின.

அது மாபெரும் முயற்சிக்குப் பிறகு கிடைத்த சிறு வெற்றியே. பழைய ஆட்சிமுறைக்கு ஆதரவான சக்திகள், அரசவைக் கும்பல், திருச்சபையின் மேல்தட்டினர், பிரபுக்கள், நீதித் துறையினர், தொழில் நிறுவன முதலாளிகள் அனைவரும் சீர்திருத்தங்களில் குறியாக இருந்த அமைச்சருக்கு எதிராகத் திரண்டெழுந்தனர்.

டியுர்கோ கொண்டுவந்த சீர்திருத்தங்களின் ஜனநாயகத் தன்மையை மக்கள் ஓரளவுக்குப் புரிந்து கொண்டனர். எல்லோராலும் வெறுக்கப்பட்ட கூலி இல்லாமல் சாலை அமைக்கும் கட்டாய முறையிலிருந்து விடுதலையடைந்த விவசாயிகள் அதிகமாக மகிழ்ச்சியடைந்தனர், ஆனால் அவர்களுக்கு டியுர்கோவின் பெயர் கூட அநேகமாகத் தெரியாது. பாரிஸ் நகரத்தில் எழுதப் படிக்கத் தெரிந்த கைவினைஞர்களும் கைத்தொழிற் பயிற்சியாளர்களும் ஆனந்தமடைந்தனர்; டியுர்கோவைப் புகழ்ந்து பாட்டுக்களை எழுதினார்கள். ஆனால் மக்கள் வெகு தூரம் கீழேயிருந்தார்கள், எதிரிகளோ டியர்கோவுக்குப் பக்கத்திலேயே இருந்தார்கள்.

டியுர்கோவை ஆத்திரமாகக் கண்டனம் செய்த பிரசுரங்களும் ஏளனம் செய்த பாடல்களும் கேலிச் சித்திரங்களும் வெள்ளம் போல வெளிவந்தன, அவற்றில் பாரிஸ் நகரமே மூழ்கியது. டியர்கோவை ஆதரித்துக் கைவினைஞர்கள் எழுதிய உற்சாகமான பாடல்களையும் பிஸியோகிராட்டுகள் எழுதிய செய்முறைக் கட்டுரைகளையும் இந்த வெள்ளம் அடித்துக் கொண்டு போனது. நையாண்டிப் பாடல்களை எழுதியவர்கள் டியர்கோவைச் சில சமயங்களில் பிரான்சின் கெடுதலான மேதை என்றும் சில சமயங்களில் என்ன செய்வதென்று புரியாத, செய்முறை அனுபவமில்லாத தத்துவஞானி என்றும் சில சமயங்களில் “பொருளியலாளர்கள் குழுவின்” கைகளில் அகப்பட்ட பொம்மை என்றும் சித்தரித்தார்கள். டியுர்கோ நேர்மையானவர், எத்தகைய ஊழலும் செய்யாதவர் என்பவற்றை மட்டுமே அவர்கள் சந்தேகிக்கவில்லை. ஆனால் யாரும் அவற்றை ஒருக்காலும் சந்தேகிக்க மாட்டார்கள்.

மேரி அன்டுவனேட்

இந்த எதிர்ப்பு இயக்கம் முழுவதையும் அரண்மனைக் கும்பல் பண உதவி செய்து நடத்தியது. மற்ற அமைச்சர்களும் டியுர்கோவுக்கு எதிராகச் சதிகள் செய்தார்கள். அவரை பாஸ்டிலி சிறைக்கு அனுப்ப வேண்டும் என்று அரசி லுயீயிடம் வெறிகொண்டு கத்தினாள். அரசரின் சகோதரர் டியுர்கோவைப் பற்றி மோசமான அவதூறுகளைப் பரப்பியவர்களில் ஒருவர்.

இத்தகைய கொந்தளிப்புக்கு நடுவே டியுர்கோ தன்னந் தனியாக நின்றார்; உறுதியோடும் கௌரவத்தோடும் நின்றார். உண்மையான மாண்பும் அவலத் தன்மையும் சூழ்ந்து புகழோடு நின்றார்.

இனி அவர் வீழ்ச்சியடைவது தவிர்க்க முடியாததாகும். கடைசியில் பதினாறாம் லுயீ எல்லாத் திசைகளிலுமிருந்தும் வந்த வற்புறுத்தலை ஒத்துக் கொள்ள நேர்ந்தது. டியர் கோவை பதவியிலிருந்து விடுவித்திருப்பதை அவரிடம் நேரில் சொல்ல அரசருக்குத் துணிச்சல் கிடையாது. அந்த உத்தரவை அரண்மனை ஊழியர் மூலம் டியுர்கோவுக்குக் கொடுத்தனுப்பினார். 1776-ம் வருடம் மே மாதம் 12-ம் தேதியன்று இந்த சம்பவம் நடைபெற்றது. டியுர்கோ தொடங்கிய பல நடவடிக்கைகள் குறிப்பாக முன்னர் கூறப்பட்ட ஆணைகள்- சீக்கிரத்திலேயே முழுமையாகவோ, பகுதியாகவோ ரத்துச் செய்யப்பட்டன.

இதன் பிறகு அநேகமாக எல்லாக் காரியங்களுமே பழைய மாதிரியில் நடைபெற்றன. டியுர்கோவின் ஆதரவாளர்களும் அவரால் அரசாங்க வேலைகளுக்கு வந்த உதவியாளர்களும் அவரோடு சேர்த்து ஓய்வு கொடுக்கப்பட்டார்கள்; சிலர் பாரிசை விட்டே போக நேர்ந்தது. பிஸியோகிராட்டுகள், கலைக்களஞ்சியவாதிகளின் நம்பிக்கைகள் அழிந்தன.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

 (1)  K. Marx, F. Engels, Werke, Bd. 15, Berlin, 1969, S. 375.

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983