Monday, June 22, 2026
முகப்பு பதிவு பக்கம் 309

வெளிநாடு வேலை | ஓ.பி.ஆர் பற்றி | ஆர்.எஸ்.எஸ். முசுலீம் வெறுப்பு ஏன் ? | கேள்வி – பதில் !

கேள்வி : உள்நாட்டில் வேலையில்லை வெளிநாடு சென்றால் கடனை அடைக்கலாம், பொருளாதார ரீதியாக முன்னேறலாம் என்ற கருத்தை எப்படி பார்ப்பது, அப்படி சென்றால் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படுமா?

கவின்

ன்புள்ள கவின்,

நமது மக்களில் கணிசமானோர் வெளிநாடுகளில் வேலை பார்க்கிறார்கள். ஒவ்வொரு மாவட்டங்களிலிருந்தும் தனிச்சிறப்பாக வளைகுடா நாடுகள், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அதிகமும் உடலுழைப்பு வேலைகளில் ஈடுபடுகிறார்கள். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் குறிப்பிட்ட அளவில் மூளை உழைப்பு வேலைகளில் ஈடுபடுகிறார்கள்.

உலகளாவிய பொருளதார நெருக்கடி காரணமாக இந்நாடுகளில் வேலை வாய்ப்புகள் அருகி வருகின்றன. உடலுழைப்பு சார்ந்த வேலைகளில் ஈடுபடுவோர் சுமார் ரூ. 25,000 முதல் 50,000 வரை ஊதியம் பெறுகிறார்கள். இவர்களுக்கான பணிச்சுமை அதிகம், வாழ்வோ! ஒரு சிறையைப் போன்று இருக்கிறது. குவைத், துபாய் போன்ற நாடுகளில் ரியல் எஸ்டேட் துறை வீழ்ச்சி காரணமாக பெரும் எண்ணிக்கையிலான கட்டுமான தொழிலாளிகள் வேலை இழந்திருக்கின்றனர்.

வளைகுடாவில் வீட்டு வேலைக்கு செல்லும் பெண்கள் சொற்ப ஊதியம் பெறுவதோடு ஆயுள் தண்டனைக் கைதி போல வாழ்கிறார்கள். வளைகுடா நாடுகளின் செல்பேசி ஆப்-களில் ஆன்லைன் அடிமை விற்பனை புகைப்படம் போட்டே விற்கப்படுகிறது. இது குறித்து பிபிசி ஒரு ஆவணப்படத்தில் அம்பலப்படுத்தியிருக்கிறது.

சிங்கப்பூரில் பணிபுரியும் வீட்டு வேலை செய்யும் பெண்களின் வாழ்க்கையும் குறைந்த ஊதியத்தில் காலத்தை ஓட்டுவதாக இருக்கிறது. இரண்டு முதல் நான்கு இலட்ச ரூபாய் வரை கடன் வாங்கி வெளிநாடு வேலைகளுக்கு செல்லும் தொழிலாளிகள் பல்லைக் கடித்து விட்டு நான்கைந்து ஆண்டுகள் பணிபுரிந்தால் கடனை அடைத்து விட்டு ஓரிரு இலட்ச ரூபாயை மட்டும் சேமிக்கிறார்கள். இத்தகைய வேலைகளும் இப்போது அருகி வருகின்றது. பலர் திரும்பியிருக்கின்றனர். அதே நேரம் வெளிநாட்டில் ஒரு சொர்க்கம் காத்துக் கொண்டிருக்கிறது என்பதான மாயை காரணமாக திரும்புவோருக்கு இணையாக நாட்டை விட்டு வெளியோருவோரின் எண்ணிக்கையும் இருக்கிறது.

இறுதியில் வெளிநாட்டுக்கு வேலைகளுக்கு ஆள் எடுக்கும் தரகர் நிறுவனங்களே அதிகம் சம்பாதிக்கின்றனர். பலர் திரும்பி இங்கே ஏதாவது ஒரு வேலை பார்த்து மிச்சமிருக்கும் வாழ்க்கையை ஓட்டலாம் என்று எண்ணுமளவு வெளிநாட்டு வேலை அச்சுறுத்துகிறது. தஞ்சை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிப்படைந்தோரில் பலர் வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர். சிறுகச் சேர்த்த பணத்தை வைத்து தென்னந்தோப்பு போட்டு, வீடு கட்டி பின் அனைத்தையும் இழந்து தற்போது திரும்பவும் முதலிலிருந்து வாழ்க்கையை ஆரம்பிக்கும் அவலத்தில் இருக்கிறார்கள்.

மேற்குலகில் மூளை உழைப்பு வேலைகளுக்காக செல்வோரின் நிலைமை இவ்வளவு மோசமில்லை என்றாலும் அந்த வாய்ப்பு கிடைப்பது தற்போது கடினமாகி வருகிறது.

எனவே  முதலாளித்துவ நெருக்கடி சூழ்ந்திருக்கும் இந்தக் காலத்தில் கடன் வாங்கி வெளிநாட்டிற்கு சென்று வேலை செய்வது அவ்வளவு சிறப்பான யோசனை அல்ல!

♦ ♦ ♦

கேள்வி: “மோடியின் மண்ணான இந்தியாவிலிருந்து வந்திருக்கிறேன் ” என்று ஓபிஎஸ் புதல்வர் கூறியது பற்றி ….?

எஸ். செல்வராஜன்.

ப்புதல்வர் தனது எம்.பி லெட்டர் பேடிலேயே மோடியின் படத்தை பிள்ளையார் சுழி போல போட்டிருக்கிறார். டயரைத் தொழுது அமைச்சாரன ஜந்துவின் வாரிசு, அப்பாவின் டயர் இமேஜுக்கு குறைவில்லாமல் அடிமைத்தனத்தை அம்மணமாக காட்டுவதில் சக்கை போடு போடுகிறார்.

எள்ளுக்கு ஏழு உழவு , கொள்ளுக்கு ஓர் உழவு, ஓ.பி.எஸ் குடும்பத்திற்கு ஒரு டயர் உழவு!

♦ ♦ ♦

கேள்வி : இஸ்லாமியர்களை, ஆர்.எஸ்.எஸ். காரர்கள் அழிக்க நினைப்பதற்கான காரணம் என்ன?

பிரகாஷ்

ன்புள்ள பிரகாஷ்,

பொதுவில் பாசிசக் கட்சிகள் அனைத்தும் தமக்கென நேர்மறையான கொள்கைகளை கொண்டிருப்பதில்லை. எதிர்மறையான கொள்கைகள், கற்பனையான வில்லன்களை உருவாக்கியே அவர்கள் மக்களை திரட்டுகிறார்கள். ஜெர்மனியிலும், ஐரோப்பாவிலும் யூதவெறுப்பை கிளப்பியே ஹிட்லர் ஜெர்மானியர்களின் தேசபக்தியை கிளப்பி விட்டார். அதே போன்று ஆங்கிலேயர்களின் ஆசியுடன் துவங்கப்பட்டு செயல்படும் ஆர்.எஸ்.எஸ்-ம் இந்துக்களை திரட்ட முசுலீம்கள் எனும் கற்பனையான எதிரிகளை கட்டமைத்து அதற்கு விதவிதமான புனைவுகளை உருவாக்கி மக்களிடம் பிரச்சாரம் செய்கிறது.

அதனால்தான் 1925-ம் ஆண்டில் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் துவங்கப்பட்டு செயல்படுவதற்கு ஆங்கிலேயர்கள் அனுமதி அளித்தார்கள். பதிலுக்கு சங்க பரிவாரத்தினரும் சுதந்திரப் போராட்டத்திற்கு நாமம் போட்டுவிட்டு முசுலீம் எதிர்ப்பு கலவரத்தில் ஈடுபட்டு தமது விசுவாசத்தை நிறுவினார்கள். ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி ஒருபுறம் என்றால் இன்னொரு புறம் இந்து உயர் சாதியினர் விரும்பியே இந்த முஸ்லீம் வெறுப்பை மேற்கொண்டார்கள்.

ஆர்.எஸ்.எஸ்-இன் இரண்டாம் தலைவரான கோல்வால்கரின் உரைகளை ‘ஞானகங்கை” என்றொரு நூலாக தொகுத்திருக்கிறார்கள். அதில் இரண்டாம் பாகத்தில் பக்கம் 159-ல் உள்நாட்டு அபாயங்கள் என்ற தலைப்பில் முதல் அபாயமாக முஸ்லீம்களை குறிப்பிடுகிறார் கோல்வால்கர். பாகிஸ்தான் பிரிந்து போன பிறகும் அந்தக் கோரிக்கையை ஆதரித்த முசுலீம்கள் பலர் இங்கேயே தங்கி பாகிஸ்தான் ஆதரவு சதி வேலையை செய்வதாக அவர் பேசுகிறார். ஒவ்வொரு மசூதியும் ஒரு குட்டி பாகிஸ்தான் போன்று செயல்படுகிறது, அங்கே ஆயுதங்களை பதுக்கியிருக்கிறார்கள், இந்துக்களை கொல்வதற்கு திட்டம் போடுகிறார்கள், மசூதி முன்னே இந்துக்கள் ஊர்வலம் போக முடியாது, வடகிழக்கில் வங்கதேச முசுலீம்கள் ஊடுறுவி இரண்டு மடங்காக பெருகி விட்டனர் என்று தனது துவேசத்தை விலாவாரியாக அடுக்குகிறார் கோல்வால்கர். இதற்கு ஆதரவாக காங்கிரசு ஆட்சியாளர்கள் வேலை செய்வதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

அதுதான் இன்று தேசிய குடிமக்கள் பதிவேடாக முசுலீம்களை அகதிகளாக்கும் அமித்ஷாவின் திட்டமாக பாராளுமன்றத்தில் நிறைவேறியிருக்கிறது. சங்க பரிவாரங்கள் தனது முசுலீம் துவேச பிரச்சாரத்திற்கு வரலாறு, அரசியல், புராணம், மத நம்பிக்கைகள், பண்பாட்டு விசயங்கள் என்று பல்துறைகளிலும் பல்வேறு கதைகளை கிளப்பி விட்டிருக்கிறார்கள். அதற்கு கணிசமான இந்துக்களும் பலியாகி இருக்கிறார்கள்.

முசுலீம்கள் மட்டும் மாட்டுக்கறி சாப்பிடுவார்கள், அதனால் அவர்களது உடலில் ஒருவித நாற்றம் வரும், அதை மறைப்பதற்கு செண்ட் அடிப்பார்கள், நாம் வேட்டி கட்டினால் அவர்கள் லுங்கி உடுத்துவார்கள், நாம் தாடி எடுத்தால் அவர்கள் தாடி வைப்பார்கள், குல்லா போடுவார்கள், கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியினை பாக் அணி வென்றால் பட்டாசு வெடிப்பார்கள், பாகிஸ்தான் கொடியை அவ்வப்போது தமது குடியிருப்புகளில் ஏற்றுவார்கள் என்று இந்த விசமப் பிரச்சாரத்திற்கு முடிவே இல்லை.

முஸ்லீம் கடைகளில் வாங்கக் கூடாது, முஸ்லீம்களுக்கு வீடு வாடகைக்கு கொடுக்க கூடாது என்று அவர்களை ஒதுக்க வேண்டியும் பிரச்சாரம் செய்கிறார்கள். வரலாற்றை பொறுத்த அளவில் முகலாயர் ஆட்சியில் இங்கே வாள் கொண்டு இஸ்லாம் நிலை நாட்டப்பட்டது, இந்துக்கள் கொல்லப்பட்டு, கோவில்கள் இடிக்கப்பட்டன என்று அடித்து விடுகிறார்கள். சொல்லப் போனால் இந்து மன்னர்களால் இடிக்கப்பட்ட கோவில்களை விட முஸ்லீம் மன்னர்கள் இடித்த கோவில்கள் உண்மையில் குறைவு.

ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்பும், ஆர்.எஸ்.எஸ் வளர்ச்சிக்கு முன்பும் இத்தகைய இஸ்லாமிய துவேச வெறுப்பு இந்திய துணைக் கண்டத்தில் இல்லை. தற்போது தொட்டதுக்கெல்லாம் முஸ்லீம்களை குற்றம் சொல்லி, பயங்கரவாதம், காஷ்மீர் சிறப்புச் சலுகை, கோமாதவைக் கொல்கிறார்கள், வங்கதேச அகதிகள் பெருத்து விட்டார்கள் என்று ஒவ்வொன்றிலும் சட்டப்படியே அடக்குமுறையை ஏவிவிடுகிறார்கள்.

எனவே இந்துத்துவத்தின் வாழ்வும் இருப்புமே இஸ்லாமிய வெறுப்பில்தான் கட்டியமைக்கப்பட்டிருக்கிறது. அதை பிடுங்கி விட்டால் அங்கே உருப்படியாக ஏதுமில்லை. கோல்வால்கர் தனது உள்நாட்டு அபாயம் என்ற தலைப்பில் முஸ்லீம்களுக்கு அடுத்தபடியாக கிறிஸ்தவர்கள், கம்யூனிஸ்டுகளையும் இதே போன்று குறிப்பிடுகிறார்.

இப்படி கற்பனையாக எதிரிகளை உருவாக்கி அவர்களைப் பற்றிய கட்டுக்கதைகளை பிரச்சாரம் செய்து பாசிசம் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது. பொருளாதாரப் பிரச்சினைகளும், நெருக்கடிகளும் அதிகரிக்கும் காலத்தில் மக்களின் போராட்ட உணர்வை திசை திருப்பவும், மழுங்கடிக்கவும் இந்த உத்தி முதலாளிகளுக்கு பயன்படுவதால் அவர்களில் பலர் பாசிசத்தை ஆதரிக்கிறார்கள். அதனால்தான் அம்பானி, அதானி முதல் பலர் சங்க பரிவாரத்தின் புரவலர்களாக இருக்கின்றனர். அப்படித்தான் பாஜகவும் தனது தேர்தல் நிதியாக நூற்றுகணக்கான கோடி ரூபாயை திரட்ட முடிகிறது.

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

குடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 : தமிழன் என்றால் எங்களுக்கு எதிரியே – பாசிச பாஜக !

1

“எனது மாநிலத்தையும் மக்களையும் எடப்பாடி பழனிச்சாமி பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்பதற்கு நான் மிக மோசமாக வெட்கப்படுகிறேன். என்ன விலை கொடுத்தாவது அதிகாரத்தை தக்க வைக்க வேண்டும் என்பதற்காக குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ஆதரிப்பதில் அவரது சுயரூபம் வெளிப்பட்டு விட்டது. இதற்கு ஒரு நாள் பதில் சொல்ல வேண்டியிருக்கும். அதுவரை இந்த தற்காலிக அதிகாரத்தை அனுபவித்துக் கொள்ளுங்கள்.

ஜெயலலிதா இந்த சட்ட திருத்தத்தை நிச்சயம் ஆதரித்திருக்க மாட்டார். அதிமுக தனது அறவிழுமியங்களை ஜெயலலிதா இல்லாத நிலையில் நொறுக்கி விட்டது” – இவ்வாறாக ட்விட்டரில் கொந்தளித்துள்ளார் சமூக செயல்பாட்டாளரும், ட்விட்டர் கருத்துரையாளரும் நடிகருமான சித்தார்த்.

இவர் இயக்குநர் ‘ஷங்கர்’ இயக்கிய “பாய்ஸ்” உட்பட சில திரைப்படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பத்திரிகையாளர் ஆர்.கே ராதாகிருஷ்ணன், தொலைக்காட்சி கருத்துரையாளர் சுமந்த்ராமன், உள்ளிட்ட வேறு சிலரும் கூட “அம்மா இல்லாத நிலையில் அதிமுக ஆட்டுக்குட்டிகள் வழி தவறிப் போனதை” நினைத்து வருந்திக் கொண்டுள்ளனர்.

நிற்க.

எல்லைப் புற நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத மதப் பிரிவினருக்குக் குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்யும், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் தாக்கல் செய்தார்.

நேற்று (09/12/2019) நள்ளிரவு இந்த மசோதா பெருவாரியான உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேறியது. காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சி, சிபிஎம், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் எதிர்த்து வாக்களித்தன.

படிக்க:
தேசியக் குடிமக்கள் பதிவேடு : ஒரு கேடான வழிமுறை !
♦ முசுலீம்களை மட்டும் விலக்கும் குடியுரிமை திருத்த மசோதா: அறிவியலாளர்கள் கூட்டறிக்கை !

இந்தியக் குடியுரிமைச் சட்டத்தின் (1955) படி, 11 ஆண்டுகளுக்கும் மேல் இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் குடியுரிமை கோர முடியும். ஏற்கெனவே இருந்த இந்த சட்டத்தில் தான் தற்போது திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கொண்டு வந்துள்ள திருத்தம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானை சேர்ந்த முசுலீம் அல்லாதவர்கள் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்கிறது. இவர்கள் கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன் குடியேறியிருந்தால் இந்தியக் குடியுரிமை பெற்றுக் கொள்ளவும் இந்த சட்ட திருத்தம் வகை செய்கின்றது.

மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்குவது, ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை மறுப்பது என்பதை சட்டமாக்கியதன் மூலம் இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்கிற கருத்தாக்கத்தை குப்பைத் தொட்டியில் எரிந்துள்ளது பாரதிய ஜனதா. மதத்தின் அடிப்படையில் மக்களை பிரித்துப் பார்க்கலாம், பாரபட்சம் காட்டலாம் என்பதற்கு ஒரு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த சட்ட திருத்தத்திற்கு இந்துத்துவ கும்பல் வேறு வகையாக விளக்கம் அளிக்கிறது. அதாவது, அண்டை நாடுகளில் உள்ள சிறுபான்மையினர் ஒடுக்கப்படும் போது அவர்கள் வாழ்க்கை தேடி இந்தியா வருகின்றனர். இவர்களுக்கான ஒரு பாதுகாப்பு தான் இந்த சட்ட திருத்தம் என்பதே அதை ஆதரிக்க கூடியவர்கள் முன்வைக்கும் வாதம் – அதாவது சிறுபான்மையினரின் உரிமையை இவர்கள் பாதுகாக்கிறார்களாம்.

சரி, அப்படியெனில் இலங்கையில் சிறுபான்மையாக இருக்கும் தமிழர்கள் ஏன் இவ்வாறு குடியுரிமை பெறுவதில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர்? மத அடிப்படையிலும், மொழி அடிப்படையிலும் சிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்கள் சிங்களப் பேரினவாத அரசுகள் தொடர்ந்து கட்டவிழ்த்து விட்ட இன ஒடுக்குமுறை மற்றும் போரின் விளைவாக அங்கிருந்து தப்பி தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 62 ஆயிரம் ஈழத் தமிழ் அகதிகள் இருப்பதாக ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இவர்கள் பல பத்தாண்டுகளாக தமிழகத்தில் வாழ்ந்து வருகின்றனர்; இவர்களில் பலர் இந்திய குடியுரிமை பெற்றுள்ளனர் – பலர் குடியுரிமை பெற முயற்சித்தும் வருகின்றனர்.

இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள சட்ட திருத்தமும், தேசிய குடிமக்கள் பதிவேடும் (என்.ஆா்.சி) ஈழத் தமிழர்கள் இந்தியக் குடியுரிமையை தடுப்பதோடு ஏற்கனவே குடியுரிமை பெற்றிருந்தால் அதை ரத்து செய்து விடுகின்றது.

“ஈழத் தமிழர்கள் அந்நியர்களே” பாஜக-வின் பச்சை துரோகம்.

இந்த சட்டதிருத்தம் சிறுபான்மையினருக்கு எதிரானது என்கிற புரிதலில் பலர் எதிர்த்து வருகின்றனர் – ஆனால், சிறுபான்மையிருக்கு மட்டுமல்ல, தமிழர்களுக்குமே எதிரானது என்பதே உண்மை.

தமிழர்கள் இந்துக்களாக இருந்தாலும் அந்நியர்களே என்பது தான் இந்துத்துவா கொள்கை. அதைத் தான் இந்த சட்ட திருத்தத்தில் இருந்து ஈழத் தமிழர்களை விலக்கி இருப்பது நிரூபிக்கிறது. பிரதமர் தனது வெளிநாட்டுப் பயணத்தின் போது “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்கிற பழந்தமிழ் பாடல் ஒன்றை மேற்கோள் காட்டினார் என்று சில நாட்களுக்கு முன் தமிழ்நாட்டு காவிகள் புல்லரித்துக் கொண்டிருந்தது நமக்கு மறந்திருக்காது. பாரதிய ஜனதாவுக்கு தமிழர்களின் மேல் உள்ள பாசமும், “கசாப்புக் கடைக்காரனுக்கு ஆட்டின் மீது இருக்கும் பாசமும்” வேறு வேறானது அல்ல.

***

ந்த சட்ட திருத்தத்தை அதிமுக ஆதரித்திருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. எடப்பாடி பழனிச்சாமி பாரதிய ஜனதாவின் தயவில் காலம் தள்ளும் ஒரு அடிமை என்பது புதிய செய்தி அல்ல. பழனிச்சாமி – பன்னீர் ஜோடியின் அடிமை அரசாங்கம் ஒரு முழு இந்துத்துவ ஆட்சியினால் ஏற்படும் பாதிப்புகளை விட பல மடங்கு அதிக பாதிப்புகளை தமிழ்நாட்டிற்கு ஏற்படுத்தி வருகின்றனர்.

மோடியின் திட்டங்களை பிற பாஜக ஆளும் மாநிலங்கள் அமல்படுத்துவதற்கு முன் முண்டியடித்து அமல்படுத்துவதில் எடப்பாடி பழனிச்சாமியின் அரசு மும்முரம் காட்டி வருவது அனைவரும் அறிந்தது தான். எனவே இதில் நமக்கு எந்த ஆச்சர்யமும் இல்லை.

படிக்க:
குடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை திரும்பப்பெறு !
♦ அசாம் – தேசிய குடிமக்கள் பட்டியல் குறிப்புகள் : முசுலீம்களுக்கு எதிரான சதி !

ஆனால், சமூக ஊடக பிரபலங்களுக்கு ‘ஏ1 ஜெயலலிதா’ மீது உள்ள விசுவாசம் தான் நம்மை ஆச்சர்யப்படுத்துகின்றது. பாபர் மசூதியை இடிக்க ஆள் அனுப்பியது, அன்றைய நிலையில் பாஜகவே தயங்கிய மதமாற்றத் தடைச் சட்டம் நிறைவேற்றியது, கோயில்களில் பலி கொடுப்பதை தடுக்க சட்டம் கொண்டு வந்தது என, மோடியே மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் இந்துத்துவ கொள்கைகளை முன்னெடுத்தவர் என்பதை இந்த “அறிவுஜீவிகள்” எப்படி மறந்தார்கள் என்பது தான் நமக்கு புரிபடவில்லை.

கோப்புப் படம்

அடுத்ததாக, தமிழர்களுக்காகவே கட்சி நடத்தி வருவதாக (குறிப்பாக ஈழத் தமிழர்களுக்காக) மேடை தோரும் சண்டமாருதம் செய்து வரும் சீமான் குடியுரிமை சட்ட திருத்த மசோதா குறித்து இது வரை (டிசம்பர் 10, நேரம் நண்பகல் 12 வரை) வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப பாசறை ஏற்கனவே திட்டமிட்டு நடத்திய “மனித உரிமை தின விழிப்புணர்வு” கூட்டம் நடந்து கொண்டிருந்த போது இந்த சட்ட திருத்த மசோதா குறித்து சமூக வலைத்தளங்களில் விவாதம் நடந்து வந்ததால் மிக மென்மையான வார்த்தைகளில் ஒரு கண்டன தீர்மானத்தை நிறைவேற்றி தங்களது கடமையை முடித்து கொண்டது அந்த கட்சி. வழக்கமாக சீமானின் வாயிலிருந்து பாயும் தோட்டாக்களோ, போராட்ட அறிவிப்போ இந்த முறை காணவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

***

ழத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியாது என்று சட்டம் போட்டுள்ளது பாரதிய ஜனதா – அதை ஆதரித்துள்ளது எடப்பாடி பழனிச்சாமியின் அரசு. பாரதிய ஜனதா என்பது சிறுபான்மையினருக்கு – குறிப்பாக முசுலீம்களுக்கு – மாத்திரமே எதிரான கட்சி என்றும், அக்கட்சியால் நமக்கு ஒன்றும் பாதிப்பில்லை என்றும் தங்களை இந்துக்களாக கருதிக் கொள்ளும் தமிழர்கள் நினைத்தால் அதை விட பெரிய இளிச்சவாயத்தனம் வேறில்லை. “நீ இந்துவாக இருந்தாலும், தமிழன் என்றால் எங்களுக்கு அந்நியனே” என்று அறிவித்துள்ளது பாஜக.

வசதிகளுக்காக போராடிய காலம் போய், வாழ்வதற்கே போராட வேண்டிய ஒரு காலத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறோம். இனிமேலும் போராடுவது என்பது நம் முன் உள்ள பல விருப்பத் தேர்வுகளில் ஒன்றல்ல – அது மட்டுமே பிழைத்துக் கிடக்க நம் முன் உள்ள ஒரே வழி.

– சாக்கியன்

நூல் அறிமுகம் : தமிழக பள்ளிக் கல்வி | ச.சீ.இராசகோபாலன்

ந்நூல் பல்வேறு சமயங்களில் பல தினத்தாள்களில் வெளியிடப்பட்ட எனது (ச.சீ.இராசகோபாலன்) கட்டுரைகளின் தொகுப்பே.

பதினைந்து ஆண்டுகட்கு முன் கி.பி.2000-க்குள் அனைவருக்கும் தொடக்கக் கல்வி என்ற சர்வதேச இலக்கை எய்திட தமிழ்நாடு அரசிற்காக யுனிசெப் ஆதரவுடன் ஒரு செயல் திட்டம் வகுக்கும் பணியில் ஈடுபடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மிகச்சீரிய முறையில் தயாரிக்கப்பட்ட அவ்வறிக்கையைச் செயல்படுத்த அரசும், கல்வித்துறையும் முனையவில்லை. குறித்த காலத்தில் இலக்கையும் அடையாதது வியப்பில்லை. அரசியலுறுதியும், மக்கள் கிளர்ச்சியும் இல்லையென்றால், அனைவர்க்கும் கல்வி என்பது கனவாகவே இருக்குமென்று கருதிய பொழுது, தினமணியின் அந்நாள் ஆசிரியர் திரு. இராம.சம்பந்தம் அவர்கள் என்னைக் கட்டுரைகள் வாயிலாக மக்களிடம் செய்தி எடுத்துக்கூறுமாறு தூண்டினார். அதுவே எனது ஆக்கப்பணிக்குத் தொடக்கம்.

பின்னர், மனித உரிமை, குழந்தைகள் உரிமை, குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு போன்ற பணிகளில் ஈடுபட்டு வரும் பல்வேறு தொண்டு நிறுவனங்களின் நிகழ்ச்சிகளில் பங்கேற்றதும், குழந்தை உரிமை மீறல், பெண்களுக்கு எதிரான வன்முறை போன்றவற்றிற்கான பொது விசாரணைகளில் ஒருவராகப் பணியாற்றியதும் எனக்கு ஒரு புதுமையான அனுபவமாக அமைந்தது. நாற்பதாண்டு ஆசிரியப்பணியில் அறிந்திராத பல உண்மைகளும் அறிந்து அதிர்ச்சியுற்றேன். கும்பகோணம் பள்ளித் தீ விபத்திற்கு அரசு பொறுப்பேற்காதது கண்டு வெகுண்டேன். கல்வி மற்றும் பள்ளிய முறைகளில் மனிதநேயத் தன்மை இல்லாது ஒரு இயந்திரத்தனமான செயல்பாடு இருப்பதும், ஏழை எளிய மாணவரிடம் எவ்வித பரிவும் இல்லாமல் இருப்பதும் கண்டு அவற்றை மக்களிடம் தெரிவிக்கும் முறையில் கட்டுரைகள் எழுதினேன். அவற்றில் சில மட்டும் இச்சிறு நூலில் இடம் பெறுகின்றன. (நூலாசிரியர் அறிமுகத்திலிருந்து…)

பள்ளிகள் கல்விக்கூடங்களாக மாறிட …

… தற்பொழுது மாணவர் எதிர்கொள்ளும் மன அழுத்தம் அளவிடற்கரியது. படிப்பு, படிப்பு என்றும் தேர்வு தேர்வென்றும் அவர்கள் வாழ்க்கை கழிகிறது. நுழைவுத் தேர்வை எதிர்கொள்ளப் பயிற்சி வகுப்புகள், ஆயத்த வழிகாட்டிகள், மாதிரித் தேர்வுகள் முதலியன தமிழ்நாட்டில் பல கோடி வணிகமாகப் பெருகியுள்ளது. பிற மாநிலங்களிலும் இதே நிலைதான். காலை 5 மணிக்கு எழுந்து தனிப்பயிற்சி வகுப்புகள் ஒன்று மாறி மற்றொன்று என இரண்டு மூன்று இடங்களுக்குச் சென்று களைத்துப் பள்ளிவரும் மாணவர் வகுப்பில் கண்திறந்தும் மனம் உறங்கிய நிலையில் பாடத்தில் கவனம் செலுத்த இயலாத நிலையில் உள்ளனர். வசதியற்ற ஏழை மாணவர்க்கு எவ்வித தனிப்பயிற்சியும் கிடையாது. தமது சொந்த முயற்சியிலேயே மற்றவரோடு போட்டி போடுவது ஒரு போராட்டமே.

மாணவரது ஆர்வம், தனித்திறன்கள் ஆகியவை கருத்தில் கொள்ளப்படாது பெற்றோர் விருப்பம் அவர்கள் மீது திணிக்கப்படுகின்றது. மாணவர்கள் தமது திறன்களையும், ஆசைகளையும் வளர்க்க இயலாமல் போவதோடு தாம் சேர்ந்த படிப்பிற்கு ஆற்றலாலும், மனப்பான்மையாலும் அன்னியமாக இருப்பதால் மனச்சோர்விற்கு உட்படுகின்றனர். பல சமயங்களில் தற்கொலைவரை செல்கின்றனர். ஐந்து வருடப் படிப்பை ஏழு ஆண்டானாலும், முடிக்க இயலாமல் திணறுகின்றனர்.

… தேர்வையே குறிக்கோளாகக் கொண்டுள்ளதால், கல்வியின் உன்னத நோக்கங்கள் துறக்கப்படுகின்றன. உலகைப் பற்றிய அறிவும், வாழும் திறன்களும், சமூகத்தில் ஒரு நல்ல உறுப்பினராக இருக்கத் தேவையான கூடி வாழும் திறனும் வளர்க்கப்படுவதில்லை. சிந்திக்கும் திறன், வினா எழுப்பும் ஆற்றல், விசாரித்தறிதல் போன்றவை வளர்ந்திட வகுப்பறை முறைகள் உதவுவதில்லை. பகுத்தாய்ந்து முடிவெடுக்கும் ஆற்றல், பிரச்சினைகளை உணர்ச்சிபூர்வமாக அல்லாது அறிவார்ந்த நிலையில் அணுகும் திறன் இல்லாது மாணவர் கற்கின்றனர். மனிதநேயம், நல்ல பழக்கவழக்கங்கள், நிறை மனப்பான்மைகள் வளர்க்கப்பட, பள்ளி நடைமுறைகள் உதவுவதில்லை.

படிக்க:
குடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை திரும்பப்பெறு !
வெங்காய விலை ஏற்றம் | பெண்கள் மீதான வன்முறை – தடுப்பது எப்படி ? | கேள்வி – பதில் !

தாமாகக் கற்கும் ஆற்றல் பெறாத காரணத்தால் வளர்ந்துவரும் தொழில்நுட்பச் சமுதாயத்தில் அறிவாலும் ஆற்றலாலும் தம்மைத் தொடர்ந்து புதுப்பித்துக்கொள்ள அறியாதவராக மாணவர்கள் உள்ளனர். மேலும் மாணவரிடம் உள்ள பன்முகத்திறன்கள் பற்றி கவலைப்படாது. நுண்கலை, இசை, விளையாட்டு, இலக்கியம் போன்றவற்றில் திறனுள்ள மாணவர் அவற்றை வளர்த்துக்கொள்ள பள்ளிகள் பெரும்பாலும் தவறுகின்றன. ஓய்வு நேரத்தைச் சமுதாயத்திற்குப் பயனுள்ள வகையில் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதும் பள்ளிகளில் கற்பிக்கப்படுவதில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக கைகளையும், உடல் உழைப்பையும் கொண்டு படைப்புச் செயலில் ஈடுபடுத்திக் கொள்ள இயலாது உள்ள இக்கல்வி முறையை மாற்றி அமைக்கவேண்டும். (நூலிலிருந்து பக்.39-40)

ரஷ்யாவில் கல்வி !

ச.சீ.இராசகோபாலன்

… சோவியத் ஒன்றியத்தில் பள்ளிகளுக்குச் சென்று குழந்தைகளையும், ஆசிரியர்களையும் கண்டேன். எனது நல்வாய்ப்பு, பள்ளிகளில் சேர்க்கை நாளன்று ஒரு சிறு கிராமத்திலிருந்தேன். புதிதாகச் சேர்க்க வேண்டிய குழந்தைகளின் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. பள்ளியில் பயிலும் குழந்தைகள் பேண்டு வாத்தியத்தோடு வீடு வீடாகச் சென்று புதிதாகச் சேர இருக்கும் குழந்தைகளை அழைக்கிறார்கள். அக்குழந்தைகளும் இவர்களோடு சேர்ந்துகொள்ள வாத்திய முழக்கத்தோடு பள்ளிவந்து சேர்கின்றனர். இந்நடைமுறை பத்து, பதினைந்து நாட்களுக்கு நடைபெறும் என்றும், புதிய குழந்தைகள் பள்ளியை ஏற்கும் வரையில் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என்பதையும் அறிந்தேன். தாயார் பள்ளி செல்ல அடம்பிடிக்கும் தனது குழந்தையை அடித்துக் கொண்டே பள்ளிக்கு இழுத்துவரும் நமது ஊர்க் காட்சியிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பள்ளிச் சேர்க்கை முறை மிகவும் இனிமையானது.

மழலையர் கல்வி 4 ஆண்டுகளுக்குக் குறையாமல் அளிக்கப்படுகிறது. பெற்றோரை இழந்த குழந்தைகளுக்குத் தனி இல்லம் அமைக்கப்பெற்று, நாடே அவர்களை வளர்க்கும் பொறுப்பை ஏற்கிறது. தண்டனைகளில்லாத பள்ளிகளாக அங்கு இயங்குகின்றன. குழந்தைகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஆடிப்பாடிக் கல்வி கற்கின்றனர். (நூலிலிருந்து பக்.62)

நூல் : தமிழக பள்ளிக் கல்வி
ஆசிரியர் : ச.சீ.இராசகோபாலன்

வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
எண்:7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
தொலைபேசி எண்: 044 – 2433 2424, 2433 2924.
மின்னஞ்சல்: thamizhbooks@.com

பக்கங்கள்: 64
விலை: ரூ 40.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : commonfolks | panuval |noolulagam

போலீசின் புனைகதை ஒருவரிடம் ஏற்படுத்திய மாற்றம் !

1998-ம் வருடம் டிசம்பர் மாதத்தின் ஒருநாள் அதிகாலையில் எங்கள் வீட்டுத் தொலைபேசியில் ஒரு அழைப்பு வந்தது. காலை பதினோரு மணிக்குள் மதுரை தெற்கு வாசல் காவல் நிலையத்திற்குச் சென்று தலைமைக் காவலர் ஒருவரைப் பார்க்க வேண்டும் என்ற தகவல் அந்த அழைப்பின் மூலம் தெரிவிக்கப்பட்டது.

என் நண்பன் ஒருவன் டிசம்பர் 6 -ஐ ஒட்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகக் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும், அவனது கடைச் சாவியை என்னிடம் கொடுக்கச் சொல்லி அவன் சொன்னதாகவும் அவர் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட அவனுக்கும் எனக்கும் பொதுவான நண்பர் ஒருவருக்கு உடனே தொலைபேசியில் அழைத்தேன். “எனக்கும் அழைப்பு வந்தது” என்றார் அவர்.

நான் டிப்ளமா படித்து முடிந்திருந்த சமயம் அது. எனவே இயல்பாகவே எழுந்த பதட்டத்துடன் தெற்கு வாசல் காவல் நிலையத்திற்குச் சென்றோம். “ஒண்ணும் இல்லப்பா, சாதாரண அரஸ்ட்டுதான், நாலு நாள் கழிச்சு வீட்டுக்கு வந்துருவான் உங்க ஃபிரண்டு” என்று சொன்னபடியே அவனது கடைச் சாவியை எங்களிடம் ஒப்படைத்தார் அந்தக் காவலர்.

பிறகு, அவனது வீட்டிற்குத் தகவல் சொல்லிவிட்டு, அவனுக்கு நான்கு நாட்களுக்குத் தேவையான உடைகள், ஐநூறு ரூபாய் பணம், இரண்டு பீடிக் கட்டுகள் வாங்கித் தரச் சொன்னார். அவர் சொன்னதை அப்படியே செய்தோம். பிறகு இரண்டு நாட்கள் கழித்து, மதுரை மத்திய சிறையில் மனு போட்டு அவனைப் பார்க்கவும் செய்தோம். “ஒரு பிரச்சனையும் இல்லை, நன்றாக இருக்கிறேன்” என்றான் அவன். நான்கு நாட்கள் அல்ல, எட்டு நாட்கள் கழித்து எந்த வழக்கும் இல்லாமல் வெளியே வரவும் செய்தான். பீடிக்கட்டும், ஐநூறு ரூபாய் பணமும் அவன் கேட்கவும் இல்லையாம், அவை அவன் கைகளுக்குப் போய்ச் சேரவுமில்லையாம். அந்த ஐநூறைப் புரட்டித் தந்த அவன் அம்மா, சில வீடுகளில் வீட்டு வேலை பார்த்து சம்பாதித்த பணம் அது.

உண்மையில் நடந்தது இதுதான்… டிசம்பர் நான்காம் தேதி இரவு, கடை வேலைகளை முடித்துவிட்டு, நண்பர்களுடன் தெற்கு வாசல் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் பரோட்டா சாப்பிடப் போனவன் அவன். போனவர்களை வழியில் நிறுத்தி, அவர்களது பெயர்களை மட்டும் விசாரித்திருக்கிறார்கள். இவனது பெயர் இஸ்லாமியப் பெயர் என்பதால் preventive arrest -ல் தூக்கி உள்ளே வைத்துவிட்டார்கள். அவன் உள்ளே இருந்த எட்டு நாட்களுக்குள் மதுரை ஹாஜிமார் தெருவில் கிட்டத்தட்ட அனைத்து மத்திய வயது ஆண்களும் உள்ளே தூக்கி வைக்கப்பட்டார்கள் என்பதையும் அறிந்து கொண்டேன்.

படிக்க:
இஷ்ரத் ஜஹான் போலி மோதல் கொலை : மோடியின் கூட்டாளி முர்முவுக்கு கவர்னர் பதவி !
♦ குற்றமும் தண்டனையும் : உடனடி தீர்ப்பு கோரும் மனசாட்சிகளுக்கு ஒரு கேள்வி !

ஆனால், அவன் மேல் பதியப்பட்ட வழக்கு என்ன தெரியுமா? “டிசம்பர் நான்காம் தேதி இரவு, மதுரை ஆல்பர்ட் விக்டர் பாலத்திற்குக் கீழே, இருட்டிற்குள் சில பேர் கூடி நின்று ‘இந்தியா ஒழிக’ என்று கோஷமிட்டுக் கொண்டிருந்தனர், மதுரை நகரில் டிசம்பர் ஆறாம்தேதி பல்வேறு வகையிலான கலவரங்களை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் சதித் திட்டமிட்டுக் கொண்டிருந்த போது, அந்த வழியாக ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவல் துறையினரைப் பார்த்தவுடன் அவர்கள் கலைந்து ஓடத் துவங்கினர், காவல் துறையினர் வைகை ஆற்றுக்குள் இறங்கி, ஓடிச் சென்று அவர்களை விரட்டிப் பிடித்துக் கைது செய்தனர்” என்பதுதான் அந்த வழக்கின் சாரம்.

உண்மைக்கும் இதற்கும் மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம் என்று அவனுக்கும் தெரியும், அவனோடு கைது செய்யப்பட்டவர்களுக்கும் தெரியும், எங்களுக்கும் தெரியும், அவனைக் கைது செய்த காவலர்களுக்கும் தெரியும், நீதி வழங்கிய நீதியரசர்களுக்கும் தெரியும். யாரும் ஒரு கேள்வியும் கேட்கவில்லை, கேட்க முடியாது, கேட்கப்போவதுவுமில்லை என்பதுதான் நடைமுறை எதார்த்தம்.

காவல் துறையினரின் விசாரணை, முதல் தகவல் அறிக்கை, முக்கியமாக காவல் துறை ‘விசாரணையில்’ குற்றவாளிகள் தரும் ‘ஒப்புதல் வாக்குமூலம்’ போன்றவற்றின் உண்மை நிலை இதுதான். அதனால்தான் காவல் துறையின் விசாரணையில் குற்றவாளிகள் கொடுத்த வாக்கு மூலங்களை நீதி மன்றங்களே நம்புவதில்லை.

இந்த லட்சணத்தில் காவல் துறையினரிடம் ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்தாலே ஒருவர் குற்றவாளிதான் என்று நம்புபவர்களை என்ன சொல்ல? ஒரு நண்பர் எழுதியிருந்தது போலவே, என்னைத் தூக்கிப்போய் நாலு மிதி மிதித்தால், “காந்தியையே கோட்சே சுடவில்லை, நான்தான் சுட்டேன்” என்று கூடச் சொல்லுவேன்.

மேலே சொன்ன இந்த மொத்த சம்பவத்தின் விளைவு என்று நான் அறிந்து கொண்டது ஒன்றே ஒன்றுதான். பள்ளி வாசல் பக்கத்திலேயே கடை நடத்தினாலும் அதுவரை வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையில் கூட பெரிதாக ஆர்வம் காட்டாமலிருந்த என் நண்பன், அதன் பிறகு இஸ்லாமியக் கோட்பாடுகளைத் தீவிரமாகக் கடைப்பிடிக்கும், அதீத மத நம்பிக்கையுள்ள ஒருவனாக மாறிப் போனான்.

நன்றி : Elangovan Muthiah
ஃபேஸ்புக் பதிவிலிருந்து…

disclaimer

இருளில் பேச்சுலர் பேரடைஸ் ! படக்கட்டுரை

சென்னையில் வேலை தேடியும், படிக்க வருவோரும், தனி வீடு கட்டுப்படியாகாத இளைஞர்களுக்கும் கடைசி புகலிடம் மேன்சன். தெருவுக்குத் தெரு மேன்சன்களாக நிரம்பி வழியும் இடம் சென்னை திருவல்லிக்கேணி.

மெரினா கடற்கரையிலிருந்து கூப்பிடும் தூரத்திலிருக்கும் இந்த இடத்திற்கு ஏராளமான முகங்கள் உண்டு – அரிதான பழைய புத்தகங்கள் விற்கும் சாலையோரக் கடைகள்; வாய்க்கு ருசியாக மூலைக்கு மூலை மாட்டுக்கறி பிரியாணி விற்கும் சிறு கடைகள்; சென்னைக்கு பெருமை சேர்க்கும் தொன்மைவாய்ந்த அரசு கல்வி நிறுவனங்கள்; புத்தகப் பதிப்பகங்கள். இவற்றுக்கு மத்தியில் “பேச்சுலர் பேரடைஸ்” என்று செல்லமாக அழைக்கப்படும் மேன்சன்கள்.

திருவல்லிக்கேணி மேன்சன்களில் தாங்கள் வாழ்ந்த வாழ்க்கையை பலர் கதைகளாக எழுதியிருக்கின்றனர். சிலர் அதை வைத்து எழுத்தாளர் என்ற பெயரையும் பெற்றுள்ளனர். இத்தனை சிறப்பு வாய்ந்த மேன்சன்களின் இப்போதைய நிலவரத்தை அறிய ஆர்வமானோம்.

மேன்சன் பகுதிகளின் இதயமான திருவல்லிக்கேணி பெரிய தெருவை அடைந்தோம்.

இந்து, கெல்லட் என்ற நூறாண்டு பழமை வாய்ந்த பள்ளிகளுக்கு மத்தியில் இருக்கும் இந்த மேன்சன்களில் பல வணிக வளாகங்களாக உருமாறியிருந்தன. சில பழைய கட்டிடங்களாக மிஞ்சியிருந்தன. சில சொத்து வழக்கில் மூடப்பட்டு கிடந்தன. திறந்திருந்த சில மேன்சன்கள் கைவிடப்பட்ட பேய்ப் பங்களாக்களாகக் கும்மிருட்டில் காட்சியளித்தன.

அங்கே நுழைந்ததும் வெளித் தாழ்வாரத்தை அடுத்து ஒடுங்கியிருந்த மேசையின் பின்னால் தலை கவிழ்த்தபடி ஒரு இளைஞர் இருந்தார். எங்களை அழையா விருந்தாளியாக நோட்டமிட்டார். அவரிடம் நாம் பழைய மேன்சன்களின் புகழ் பாடிவிட்டு, இப்போது நிலைமை எப்படி இருக்கிறது என்று கேட்டோம்.

அவர் நம்மை ஏற இறங்க பார்த்துவிட்டு, நீண்ட நேரம் மவுனமாக இருந்தார். திடீரென நம்மை வெறித்துப் பார்த்து மெல்லிய குரலில், உடைந்த வார்த்தைகளை உதிர்த்தார்.

கமலக்கண்ணன், மேன்சன் மேலாளர்.

“நானே இந்த மேன்சனில்தான் தங்கியிருக்கேன். வேலை தேடிட்டிருக்கேன். திருநெல்வேலி சொந்த ஊர். ரெண்டு வருசம் ஆயிடுச்சு. வேலை எதுவும் கிடைக்கல. ஊருக்குப் போனாலும் அங்கும் ஒன்னுமில்ல. அதனால வாடகை கொடுக்க முடியாம, இங்கேயே பார்ட் டைமா இந்த வேலைய பார்க்கிறேன். பகல்ல வேலை தேடுறதுதான் வேலை. மீதி நேரம் இங்கே ரிசப்சன்ல உக்கார்ந்திருப்பேன்.

மாசம் ஒரு கட்டிலுக்கு (ரூம் இல்லை) 2,300 ரூபாய் வாடகை. லெட்டின் பாத்ரூம் எல்லாம் காமன். (ஒரு மாடிக்கு 2 பாத் ரூம், 2 லெட்டின் – காலையில கியூவுல நிக்கணும்).

வீட்டிலிருந்து மாதம் 6 ஆயிரம் ரூபா அனுப்புறாங்க. என்னோட எல்லா செலவும் அதுலதான். 3 வேள சாப்பாடு. வெளியில் வேலை தேட போய் வர பஸ் செலவு, உடம்பு சரியில்லன்னா மாத்திரை செலவு; டீ, துணி துவைக்கிற, குளிக்கிற சோப்புன்னு 2 வருசமா இப்படித்தான் என் வாழ்க்கை போகுது. வீட்டுலயும் இதுக்கு மேல பணத்த எதிர்பார்க்க முடியாது. கூடப் பொறந்த அண்ணனும் இதேமாதிரி மேன்சன்ல தங்கி டி.என்.பி.எஸ்சி படிச்சி வேலைக்கு போயிட்டான். அவன்தான் எனக்கு பணம் அனுப்புறான். இதுல வாடகை மிச்சப்படுத்தத்தான் இங்கே வேலை செய்யிறேன்.

படிக்க:
கலங்கி நிற்கும் கார் அழகுபடுத்தும் கலைஞர்கள் !
♦ குடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை திரும்பப்பெறு !

இந்த மேன்சன்ல மத்தவங்க வாழ்க்கையும் என்னை மாதிரிதான். எங்கே போறதுன்னே தெரியாம ஓடிகிட்டிருக்காங்க. சில பேரு பல வருசமா சி.ஏ. படிக்கிறேன், டி.என்.பி.எஸ்சி எழுதுறேன். குரூப் எக்சாம் படிக்கிறேன்னு தங்கியிருக்காங்க. இப்படி நாலஞ்சி வருசமா வேலையே இல்லாம தங்கியிருக்கவங்க அதிகம் என்றார்.

நாம், “தினமும் ஓட்டல் சாப்பாடு, ஒரே அறை வாழ்க்கை போரடிக்கவில்லையா” என்றோம்.

அதற்கு அவர், அதான் பக்கத்துல பெரிய பீச் இருக்கே, அங்கே போவோம். நெறைய நேரம் அங்கேதான் கழிப்போம். நிஜ வீடு எங்களுக்கு பீச்தான் என்றார் சிரித்துக்கொண்டே.

மேன்சன் உட்புறம்.

***

ரகுமான், திருச்சி பொன்மலை.

மேன்சனிலிருந்து வெளியே சென்று கொண்டிருந்த 45 வயது மதிக்கத்தக்க ரகுமானிடம் பேச்சு கொடுத்தோம்.

“என்னது, மேன்சன் வாழ்க்கையா? ஊருல இருக்க முடியுமா, அதான் இங்கே வந்தோம். இப்போ இங்கே இருக்க முடியாது எங்கே ஓடுறதுன்னு தெரியாது முழிக்கிறோம்.

மாசம் சம்பளம் வாங்குற வேலை கிடைக்கல. தினக்கூலியா போகலாமுன்னு பார்த்தா அதுக்கும் வழியில்ல. வீட்டுக்கு வெள்ளை அடிக்கிற வேலையிலிருந்து கலவை கலக்குற பெரியாள் வேலை வரைக்கும் வடநாட்டுக்காரன் வந்து பூந்துட்டான். 200 ரூபா கொடுத்தா போதுமுன்னு கியூவில நிக்கிறான். இனி கூலி வேலைக்கு போகனுமுன்னா கூட வெளிநாட்டுக்குத்தான் போகணும்” என்றார்.

***

காளி, விடுதி காப்பாளர்.

இந்த மேன்சன்ல 3 வருசமா வாட்ச்மேன் வேலை செய்யிறேன். இது சாதாரண ஆளுங்க தங்குற மேன்சன் இல்ல. பணம் இருக்குறவுங்க தங்குறது. ஒரு ரூமுக்கு 2 கட்டில். கட்டில் ஒன்னுக்கு மாத வாடகை 4,500 ரூபாய். எல்லா ரூமும் அட்டாச்டு பாத் ரூம். நிரந்தரமா வேலை செய்யிறவுங்கதான் இங்கே அதிகம்.

புதுசா அரசு வேலை கெடச்சவுங்க, வக்கீல் வேலை பாக்குறவுங்க, வெளியிலிருந்து வர்ற அரசியல்வாதிங்க, தனியார் ஆஸ்பத்திரிக்கு வர்ற நோயாளிங்க என பலதரப்பட்ட பேரு இங்கே தங்கியிருக்காங்க.

சொந்தமா சமையல் செஞ்சி சாப்பிடுறதுக்கும் இங்கே வசதி உண்டு. கேஸ் அடுப்பு, பாத்திரங்கள் எல்லாம் வாடகைக்கு கிடைக்கும். பக்கத்து மெஸ்ல கேரியர் சாப்பாடு வாங்கி சாப்பிடுறவங்களும் இங்கே இருக்காங்க.

படிக்க:
தெலுங்கானா : போலீசின் புனையப்பட்ட கதையில் உருவான என்கவுண்டர்கள் !
♦ வெங்காய விலை ஏற்றம் | பெண்கள் மீதான வன்முறை – தடுப்பது எப்படி ? | கேள்வி – பதில் !

***

நாம் மேன்சனிலிருந்து வெளியேறும் நேரம் ஒருவர் அவசரமாக தனது டூ வீலரை வெளியே இழுத்துக் கொண்டிருந்தார். ஒயிட் & ஒயிட்டில் எடப்பாடி படம் பாக்கெட்டில் மின்ன கைப்பேசியில் சத்தமாக யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார். நாம் அவரிடம் நெருங்கி, உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும். போன் பேசிவிட்டு வாருங்கள், ப்ளீஸ் என்றோம். அவர் பேசி முடித்துவிட்டு நம்மிடம் வந்தார்.

தேவேந்திரன், வழக்கறிஞர்.

“சும்மா வந்துட்டாங்க ஊருலேருந்து கிளம்பி. நம்மகிட்ட ஆளுமை இருக்கு. அதனால அதிகாரம் பண்றோம். அவங்க வெறுங்கையில முழம் போட்டா முடியுமா” என்றார். கோபமாக இருந்த அவரிடம், நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு அவரது மேன்சன் வாழ்க்கை பற்றி கேட்டோம்.

“ஆளும் கட்சியிலிருந்து வக்கீல் தொழில் செய்யும் நீங்கள், இந்த வயதிலும் மேன்சனில் தங்கியிருப்பது அதிசயமாக இருக்கிறது. அதற்குக் காரணம் என்ன? மேன்சன் மீது அவ்வளவு காதலா” என்றோம்.

அதற்கு அவர் நம்மிடம் பட்டாசு மாதிரி வெடித்தார்.

“அதிகாரம் சும்மா கிடைக்காது. ஆளுமை இருக்கணும். அதுக்கு திறமை வேணும். திறமை சும்மா வராது. அதுக்கு அதிகாரம் இருக்குறவுங்க நம்மை சுத்தி இருக்கணும். அதிகாரம் இல்லாத இடத்தில இருந்தா உனக்கு ஆளுமை எப்படி வரும்? அது வேஸ்ட். இங்கே இருந்தா ஆளும் கட்சிக்காரங்கள பார்க்க பெரிய அதிகாரிங்க வருவான். இந்த மேன்சன் எல்லாம் அதிகார மையம். அவங்ககிட்ட பழகி அவங்கள நாம படிக்கணும். அப்பதான் நாம அதிகாரத்துல உக்கார்றது எப்படின்னு தெரியும்.

எடப்பாடி எடத்துல நான் நிக்கணும். அதுக்குத்தான் நான் இங்கே இருக்கேன்” என்றார் சீரியசாக.

நாமும் சீரியசாக, “இது எடப்பாடிக்குத் தெரியுமா? அவர் படத்த பாக்கெட்டுல வச்சிகிட்டு அவருக்கே குழி தோண்டுறீங்களே! இது சரியா?” என்றதும், அதற்கு அவர், “ஆளுமை இருந்தாத்தான் அதிகாரம் வரும்” என்று ஒரே போடாகப் போட்டார். பின் அவரே தொடர்ந்தார்.

“அம்மாகிட்டே இருந்து சின்னம்மா, சின்னம்மாகிட்டே இருந்து ஓபிஎஸ், ஓபிஎஸ்கிட்டேயிருந்து இபிஎஸ், இபிஎஸ் கிட்டேயிருந்து என்கிட்டே வராதா? வர வைப்பேன். அதுக்குத்தான் நிக்காம ஓடிகிட்டே இருக்கேன். மொதல்ல இந்த ஃபோன ஒழிக்கிறேன். நம்ம ஃபோன்லேயே நம்மகிட்ட ஆப்பு வைக்கிறாங்க. ஓசியிலயே கன்சல்ட் பண்ணிட்டு ஓடிடுறாங்க. பணமே வர மாட்டேங்குது. இனி, எவன் பேசினாலும் என்னோட பேங்க் அக்கவுண்ட்ல கன்சல்ட் பீஸ் போட்டாத்தான் போன்லேயே பேசுவேன். எனக்கு பீஸ் கட்டுன பில்ல, எனக்கு வாட்ஸ் அப்பில.. அனுப்பணும். அப்பத்தான் நம்பரையே எடுப்பேன். இப்படி இல்லேன்னா நம்ம வாழ்க்கை மேன்சன்லயே போயிடும். கடைசியில டூவீலரை ஓட்டியே செத்துடுவேன் போலிருக்கு. இதுக்கா தஞ்சாவூர் ஒரத்தநாட்டிலிருந்து வந்திருக்கேன்” என்று சீறினார்.

நான் செக்ரட்ரியேட்டுக்கு அவசரமாகப் போகணும்னு வண்டியை ஸ்டார்ட் செய்தார். நாமும் தற்கால மேன்சன்கள் உருவாக்கிய ‘அரசியல்வாதியைப் பார்த்த மகிழ்ச்சியில்’ திரும்பினோம்.

– வினவு புகைப்படச் செய்தியாளர்கள்

எனக்கு விடுமுறையில் செல்ல விருப்பமில்லை ! ஏன்தான் விடுமுறையைக் கண்டுபிடித்தார்களோ !

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 6 | பாகம் – 13

எனக்கு 114 கடிதங்கள் வரும்

நான்காவது பாடவேளையின் கடைசி நிமிடங்கள். கோடை விடுமுறையை எப்படி கழிக்க வேண்டும் என்பது குறித்துக் குழந்தைகளுடன் ஏற்கெனவே பேசியாகி விட்டது.

புத்தகங்களை வாசிக்க வேண்டும்! வெளியில் விளையாட வேண்டும்! பொறுமை, வீரப் பயிற்சிகள் செய்ய வேண்டும்! கணிதத்தை கவனத்திலிருந்து நழுவ விடக்கூடாது! பெரியவர்களுக்கு உதவ வேண்டும்! உங்கள் கருத்துக்களைப் பற்றி எழுதுவீர்கள் என்று நம்புகிறேன். கோடையில் சேகரித்து, காய வைத்த இலைகள், மலர்கள் மற்றும் சுவாரசியமான விஷயங்களைப் பள்ளிக்கு விடுமுறைக்குப் பின் கொண்டு வாருங்கள்!

கோச்சா: “விடுமுறையில் நீங்கள் என்ன செய்வீர்கள்?”

“உங்களுடனான சந்திப்பிற்குத் தயாராவேன்.”

நாத்தோ: “எப்படி?”

ஏக்கா : “ஏன்?”

“வேறென்ன செய்வது? அடுத்த கல்வியாண்டில் நாம் என்ன செய்ய வேண்டுமென நான் திட்டமிட வேண்டும் அல்லவா?”

நீக்கா: “இது பெரிய வேலையா?”

“ஆம், பெரிய வேலை.”

கீயா: “நீங்கள் ஓய்வெடுக்காவிடில் களைப்பேற்படுமே!”

“நானும் ஓய்வெடுப்பேன்.”

மாக்தா: “எனக்கு விடுமுறையில் செல்ல விருப்பமில்லை! ஏன் தான் விடுமுறையைக் கண்டுபிடித்தார்களோ!”

“உங்கள் உடல் நலத்திற்கு, வளர்ச்சிக்கு இவை அவசியம். விடுமுறை என்றால் ஒரு வேலையும் இல்லையென்று பொருளாகாது. நீங்கள் 3 மாதங்கள் 10 நாட்கள் ஓய்வு எடுப்பீர்கள்.”

இலிக்கோ: “அதாவது 100 நாட்கள்!”

“ஆமாம், இலிக்கோ, நீ சொல்வது சரி.”

சூரிக்கோ: “ஓ, நான் 100 நாட்களில் மிகவும் சலித்துப் போவேனே!”

“எனக்கும் நீங்கள் இல்லாமல் கடினமாக இருக்கும். நீங்கள் எங்கே இருக்கின்றீர்கள், எப்படி ஓய்வெடுக்கின்றீர்கள், என்ன படிக்கின்றீர்கள் என்று கூட எனக்குத் தெரியாது.”

கியோர்கி: “நாங்கள் உங்களுக்குக் கடிதங்களை எழுதுவோம்.”

“அப்படியா? இது எனக்குத் தோன்றவில்லையே! நீங்கள் ஒவ்வொருவரும் எனக்கு தலா 3 கடிதங்களை எழுதினால்…”

இலிக்கோ: “உங்களுக்கு 114 கடிதங்கள் வரும்! அதாவது அன்றாடம் கடிதம் வரும், சில சமயங்களில் இரண்டு கடிதங்கள் கூட வரும்”.

“எவ்வளவு நல்லது! 114 கடிதங்கள்!”

மாயா: “உங்களுக்குக் கடினமாக இருக்காது!”

“அப்போது எனக்குக் கடினமாக இருக்காது! நீங்கள் எங்கே இருக்கின்றீர்கள், என்ன செய்கின்றீர்கள் என்றெல்லாம் எனக்குத் தெரியும்.”

லேலா: “எங்களுக்கு உங்கள் விலாசம் தெரியாதே!”

“ஒவ்வொருவரும் ஒரு தாள் எடுத்துக் கொள்ளுங்கள். இதோ சொல்கிறேன். எழுதிக் கொள்ளுங்கள்.”

குழந்தைகள் எழுதுகின்றனர். இனிய மின்சார மணி ஒலிக்கிறது. எங்களுடைய கடைசி 680-வது பாடவேளை முடிந்தது. நான் வகுப்புக் குழந்தைகளைப் பார்த்து பேசுகிறேன். “குழந்தைகளே, எழுந்திருங்கள்!”

படிக்க :
திரைமறைவு தரகு வேலை செய்யும் துக்ளக் குருமூர்த்தியைக் கைது செய் ! வழக்கறிஞர்கள் புகார்
மார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு !

எல்லோரையும் பார்க்கிறேன். கம்பீரமான குரலில், உணர்ச்சி ததும்பச் சொல்கிறேன்:

“நீங்கள் முதல் வகுப்பை வெற்றிகரமாக முடித்தது குறித்து வாழ்த்துகள், பாராட்டுதல்கள்!”

“நன்றி!” என்று மகிழ்ச்சியாக, சந்தோஷமாக, ஒருமித்த குரலில் பதில் வருகிறது.

வரிசைகளின் ஊடாகச் சென்று ஒவ்வொருவர் கையையும் குலுக்குகிறேன், முகத்தையும் கண்களையும் உற்றுப் பார்க்கிறேன். ஒவ்வொருவரையும் ஏதோ முதன் முதலாகப் பார்ப்பது போல் பார்க்கிறேன். இவர்கள் எல்லோரும் எப்படி வளர்ந்து விட்டனர்!…..170-வது பள்ளி நாள் தொடருகிறது.

பெற்றோர்களும் விருந்தினர்களும் வந்தனர். ஏராளமானவர்கள் – கிட்டத்தட்ட 80 பேர்கள் – வந்தனர். இவர்களை எங்கே உட்கார வைப்பது? எல்லோரும் தம் கரங்களில் அழகிய அழைப்பிதழையும் நிகழ்ச்சி நிரலையும் வைத்துள்ளனர். இவற்றைக் குழந்தைகளே தயாரித்து யாருக்கு விருப்பமோ அவர்களுக்கு அனுப்பினர். வகுப்பறையில் இல்லாமல் பள்ளியின் விழா அரங்கில் தான் நிகழ்ச்சியை நடத்த வேண்டும்.

பெற்றோர்களும் விருந்தினர்களும் எங்கள் கண்காட்சிகளை – குழந்தைகளின் செப்டெம்பர், மே மாத வேலைகளையும் புகைப்படங்கள், சின்னஞ்சிறு நூல்கள், சொந்த படைப்புகள், ஆல்பம் ஆகியவற்றை – சுற்றிப் பார்க்கின்றனர். குழந்தைகள் விளக்கம் தருகின்றனர்.

அம்மாமார்களுக்கு எவ்வளவு சந்தோஷம்! அப்பாக்களுக்கு என்ன பெருமிதம்! பாட்டிமார்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி! விருந்தினர்களுக்கு என்ன வியப்பு!

தம் குழந்தைகளின் டெஸ்குகளிலிருந்து பெற்றோர்கள் ரகசிய பாக்கெட்டுகளை எடுக்கின்றனர். ஆவலுடன், எச்சரிக்கையாக இவற்றைத் திறக்கின்றனர். ஒவ்வொரு தாளையும் கவனமாகப் பார்க்கின்றனர். நான் அவர்களின் முகங்களைப் பார்க்கிறேன். எல்லாம் புரிகின்றதா? இன்னும் விளக்கங்கள் தேவையா?

“மதிப்புள்ள பெற்றோர்களே!” என்று எல்லோருக்கும் கேட்கும்படி கூறுகிறேன். இன்று பெற்றோர் கூட்டம் நடத்த வேண்டிய அவசியமில்லையென எண்ணுகிறேன். நாம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டோம் என்று நினைக்கிறேன். ஆனால் உங்களில் யாருக்காவது என்னுடன் பேச வேண்டிய அவசியம் இருந்தால் இவ்வாரம் உங்களுக்கு வசதியான நேரத்தில் வாருங்கள்! எங்கள் வகுப்பில் நான் இருப்பேன். இப்போது பள்ளிக் கலை அரங்கிற்குப் போகலாம், வாருங்கள், அங்கு இசை நாடகம் நடக்கும்.”

குழந்தைகள் மேடையில் சின்னஞ் சிறு நாற்காலிகளில் தத்தம் இசைக் கருவிகளுடன் அமர்ந்திருக்கின்றனர்.

இசை முழங்க, குழந்தைகள் பாடுகின்றனர்…

கலை நிகழ்ச்சிக்குப் பின் நாங்கள் முற்றத்திற்கு இறங்கி வந்து புகைப்படமெடுத்துக் கொண்டோம்.

ஒவ்வொருவரும் என்னிடம் வந்து விடைபெறுகின்றனர்.

ஏல்லாவும் விடைபெறுகிறாள். ஆனால் திரும்பி வருகிறாள்.

“நான் மோசமாக நடந்ததற்கு மன்னியுங்கள்! திரும்பி வந்ததும் நான் இப்படியெல்லாம் நடக்க மாட்டேன்! நான் உறுதி கூறுகிறேன்! பிடிவாதக்காரியாக இல்லாமல் இருக்க இந்த 100 நாட்களும் நான் பயிற்சி செய்வேன்!” என்று வெட்கப்பட்டுக் கொண்டே கூறுகிறாள். “ஏல்லா, நான் நிச்சயமாக உன்னை நம்புகிறேன்!” – குழந்தைகள் போய் விட்டனர். அவர்கள் தம்முடன் என்ன எடுத்துச் சென்றனர்?

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

குடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை திரும்பப்பெறு !

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

நாள்: 09.12.2019

பத்திரிகை செய்தி

♦ குடியுரிமை திருத்தச் சட்டம்,2019(CITIZENSHIP AMENDMENT BILL,2019) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு(NATIONAL REGISTER OF CITIZENS) அரசியல் சட்டம் பிரிவு 15(1)& 14- மற்றும் மத,இனச் சார்பின்மைக்கு எதிரானது!

♦ ஈழத் தமிழர்கள் மற்றும் இசுலாமிய மக்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவது மனித குல விரோத,மனித உரிமை பறிப்பு நடவடிக்கை!

♦ குடியுரிமை திருத்தச் சட்டம்,2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை திரும்பப்பெறு! இந்தியாவை நாடி வந்த அனைத்து மக்களுக்கும் குடியுரிமை வழங்கு!

இன்று 09.12.2019-ல் நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம், 2019 பாஜக அரசால் முன்வைக்கப்பட்டுள்ளது. இச்சட்டப்படி பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த இந்து, கிறித்தவர், பார்சி, ஜெயின், புத்த மதங்களைச் சேர்ந்தவர்கள், டிச.31, 2014-க்குள் வந்து குடியமர்ந்திருந்தால், அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும்.

இச்சட்டம் பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த இசுலாமிய மக்களுக்குப் பொருந்தாது. மேலும் இலங்கையிருந்து வந்த ஈழத் தமிழர்கள், மியான்மரிலிருந்து வந்த ரோகிங்கியா முசுலீம்களுக்குப் பொருந்தாது.

பத்திரிகையாளர் சந்திப்பில் வழக்கறிஞர் சே. வாஞ்சிநாதன்.

குடியுரிமை திருத்தச் சட்டம், 2019 – அரசியல் சட்ட விரோதமானது

1. இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவுகள் 5 – 11 குடியுரிமை தொடர்பாகப் பேசுகிறது. இதன்படி பிரிட்டிஷ் இந்தியாவின் மக்களுக்கு, இந்திய அரசுச் சட்டம், 1935-ன்படி குடியுரிமை வழங்க வேண்டும். பாகிஸ்தான், வங்காளதேசம் பிரிட்டிஷ் இந்தியாவின் அங்கங்கள்தான். எனவே பிரிவினையின் போதும், பின்பும் வந்த மக்களுக்கு பிரிட்டிஷ் இந்தியா குடியுரிமை பெற்றவர்கள் என்று கருதியே குடியுரிமை வழங்க வேண்டும்.

2. இந்திய அரசியல் சட்டம் பிரிவு 15- மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடம் அடிப்படையில் எவரையும் அரசு பாகுபடுத்தக் கூடாது என்கிறது. ஆனால் ஆர்.எஸ்.எஸ் – பாஜக – மோடி – அமித்சா அரசின் சட்டம் இசுலாமியர்களை மத அடிப்படையிலும், ஈழத் தமிழர்களை இன அடிப்படையிலும் பிரிவினை செய்கிறது. எனவே அரசியல் சட்டப்படி புதிய குடியுரிமைச் சட்டம் செல்லாது.

3. குடியுரிமை என்பது அனைத்து உரிமைகளின் தாய் உரிமை போன்றது. குடியுரிமை இல்லையேல் எந்த உரிமையும் பெறமுடியாது. எனவே குடியுரிமை மறுக்கப்படும் மக்களுக்கு கருத்துரிமை, வழிபாட்டுரிமை, சுரண்டலுக்கெதிரான உரிமை, அரசுத் திட்டங்கள், வேலை வாய்ப்பு, குழந்தைகள் படிப்பு, வங்கிக் கணக்கு என எந்த உரிமையும் இருக்காது. மொத்தத்தில் நாடு முழுவதும் பல கோடி மக்கள் சட்டவிரோத குடியேறிகளாக அறிவிக்கப்பட்டு ஜெர்மனியில் யூத, அமெரிக்காவில் கறுப்பின ஆப்ரிக்க அடிமை மக்கள் போல வதை முகாம்களில் அடைக்கப்படுவர். இவர்கள் சூடு வைக்கப்பட்ட அடிமைகள் போல, அடையாளம் இடப்பட்ட மக்களாக, எவ்வித உரிமையும் அற்றவர்களாக, அரசின் மூர்க்கமான கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படுவர்.

4. அசாமில் கொண்டு வரப்பட்ட குடியுரிமை பதிவேடு 20 லட்சம் மக்களை சட்டவிரோத குடியேறிகள் என்றது. இவர்களில் 12 லட்சம் மக்கள் இந்துக்கள். எனவே நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் குடியிரிமை திருத்தச் சட்டம் சான்றாவணங்கள் இல்லாத அனைத்து மக்களையும் சட்டவிரோத குடியேறிகள் என வகைப்படுத்தி வதை முகாம்களில் அடைக்கும்.

படிக்க:
முசுலீம்களை மட்டும் விலக்கும் குடியுரிமை திருத்த மசோதா: அறிவியலாளர்கள் கூட்டறிக்கை !
♦ தேசியக் குடிமக்கள் பதிவேடு : ஒரு கேடான வழிமுறை !

5. ஒருவர் பெயர் குடியுரிமை பதிவேட்டில் இல்லாவிட்டால், சம்மந்தப்பட்டவர்தான் இந்தியக் குடிமகன் என தன்னை, குடியுரிமைத் தீர்ப்பாயம் சென்று நிரூபிக்க வேண்டும். இந்தியாவில் சாலை ஓரங்களில், நாடோடிகளாக, வெள்ளம், இயற்கைப் பேரிடர்களில் பாதிக்கப் பட்டவர்களாக, எவ்வித ஆவணங்களும் அற்ற பலகோடி மக்கள் உள்ளனர். இவர்கள் பிறந்த சான்றிதழ், படிப்புச் சான்றிதழ், வங்கி கணக்கிற்கு எங்கே போவார்கள்?

6. பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த இந்துக்கள் அங்கு சிறுபான்மையினர் என்றால் இலங்கையில் இந்து-தமிழ் மக்களும், மியான்மர்-ரோகிங்கியா முசுலீம் மக்களும் சிறுபான்மையினர்தான். இவர்களுக்கு குடியுரிமை மறுக்கப்படுவதேன்?

7. மக்களை மத, இன அடிப்படையில் பாகுபடுத்தும் ஆர்.எஸ்.எஸ் – பாஜக அரசின் இந்த நடவடிக்கை இசுலாமிய – தமிழர் விரோத வெறுப்பரசியலே. இந்து ஓட்டு வங்கியை மையமாகக் கொண்டது. அதிமுக இதைக் கடுமையாக எதிர்க்க வேண்டும். புதிய சட்டத்தை அனைத்துக் கட்சிகள், மக்கள் நிராகரிக்க வேண்டும்.

8. புதிய சட்டம் அமலாவது உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பை சீர்குலைக்கும். நாகரீக நாடு என்ற நிலை மாறி காட்டுமிராண்டி நாடாக கருதப்படும். மொத்தத்தில் இந்நடவடிக்கை இந்தியாவின் மதச் சார்பற்ற அரசியல் சட்டத்தை, இந்தியாவை அழிப்பதே.

சே.வாஞ்சிநாதன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்.

தெலுங்கானா : போலீசின் புனையப்பட்ட கதையில் உருவான என்கவுண்டர்கள் !

0

தெலுங்கானா காவல்துறையின் புனையப்பட்ட திரைக்கதையில் உருவான முந்தைய என்கவுண்டர்கள்

ஹைதராபாத் கால்நடை மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் நான்கு சந்தேக நபர்களையும் தெலுங்கானா போலீசார் வெள்ளிக்கிழமை (06-12-2019) அதிகாலை, ‘என்கவுண்டரில்’ சுட்டுக் கொன்ற செய்தி, நாடு முழுவதும் பரபரப்புக்குள்ளானது. “குற்றம் புனரமைப்பு” விசாரணைக்காக சந்தேக நபர்களான அரீஃப், சிவா, நவீன் மற்றும் சென்னகேஷவுலு ஆகியோரை காவல்துறையினர் குற்ற சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்றதாக செய்திகள் தெரிவித்தன. அப்போது அவர்கள் “காவல்துறையைத் தாக்கிவிட்டு தப்பிக்க” முயன்றதாகவும்  “தற்காப்புக்காக” காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் சொல்லப்பட்டது.

பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட பிரியங்கா.

கழுகுப் பார்வை கொண்ட பலருக்கு, இந்த ‘என்கவுண்டர்’ முந்தைய இரண்டு சம்பவங்களுடன் முற்றிலும் ஒத்திருந்தது: ஒன்று பத்தாண்டுகளுக்கு முன்பு ஒருங்கிணைந்த  ஆந்திர மாநிலத்தில் நடத்தப்பட்டது; இரண்டாவது 2015-ம் ஆண்டு தெலுங்கானா உருவானதும் நடத்தப்பட்டது.

2008 டிசம்பரில், வாரங்கலில் இரண்டு பொறியியல் மாணவர்கள் மீது ஆசிட் வீசியதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரை ஆந்திர அரசு போலீசார் சுட்டுக் கொன்றனர். பொதுமக்கள் கோபத்தைத் தணிப்பதற்காக நடத்தப்பட்ட ஒரு மோதலில் மூன்று பேரும் கொல்லப்பட்டனர் என்று அப்போது பரவலாக நம்பப்பட்டது. தற்போதைய கால்நடை மருத்துவர் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கைக் கையாளும் சைபராபாத் காவல்துறைத் தலைவர் வி.சி. சஜ்ஜனர்,  குற்றம் சாட்டப்பட்ட இந்த மூன்று பேரும் கொல்லப்பட்டபோது வாரங்கலில் காவல்துறை கண்காணிப்பாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

காவல்துறை தரப்பில்  குற்றம் சாட்டப்பட்டவர்களை குற்றச் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு அழைத்துச் சென்று ஆதாரங்களை சேகரித்துக்கொண்டிருந்தபோது பெட்ரோல் குண்டுகளால் தாக்க முயன்றபோது, தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது.

ஏறக்குறைய ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, ஏப்ரல் 2015-ல், தெலுங்கானா மாநிலம் உருவான பின்னர், தல்க்ரீக் கல்பா-இ-இஸ்லாம் (டிஜிஐ) உறுப்பினரான விகாருதீன் அகமது மற்றும் நான்கு பேரை நல்கொண்டா மாவட்டத்தில் நடந்த ஒரு ‘என்கவுண்டரில்’ போலீசார் கொன்றனர். அதிகாரப்பூர்வ அறிக்கை என்னவென்றால், வாரங்கல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதிகளான ஐந்து பேரையும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ஹைதராபாத்திற்கு அழைத்துச் செல்லப்படும்போது, காவல்துறையினரை தாக்கி, ஆயுதங்களை பறிக்க முயன்றதாகக்கூறி, என்கவுண்டர் செய்யப்பட்டனர். காவல்துறையினர் கொல்லப்பட்டது உள்ளிட்ட பயங்கரவாத வழக்குகளில் கைதிகள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

படிக்க :
♦ ஹைதராபாத் போலி என்கவுண்டர் சரியா தவறா ? கருத்துக் கணிப்பு
♦ ஹைதராபாத் என்கவுண்டர் : எங்கள் பெயரில் கொட்டடிக் கொலைகள் கூடாது | AIPWA கண்டனம் !

சிறுநீர் கழிக்க வாகனத்தை நிறுத்துமாறு விகாருதீன் கேட்டுக் கொண்டதாகவும் ஐந்து கைதிகள்  ஒரு போலீசைத் “தாக்கி” ஆயுதத்தை பறித்தபோது  மற்ற போலீஸ்காரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி அவர்களைக் கொன்றதாகவும் சொல்லப்பட்டது.

என்கவுன்டர் காட்சியின் புகைப்படங்கள் ஆண்கள் கைவிலங்கு மற்றும் சங்கிலியால் கட்டப்பட்ட்டிருந்ததைக் காட்டின. மேலும் விகாருதீனின் தந்தை, இப்படிப்பட்ட நிலையில்போலீசாரிடமிருந்து ஆயுதத்தை அவர்கள் எப்படி பறித்திருக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார். எழுத்தாளர் வரவர ராவும் இந்தக் கொலை குறித்து கேள்வி எழுப்பினார், இது “முன் திட்டமிடப்பட்டதாகும்” என்று கூறினார்.  இந்த சம்பவம் நடந்த சில நாட்களுக்கு முன், இரண்டு சிமி செயற்பாட்டாளர்கள் இரண்டு போலீஸ்காரர்களை சுட்டுக் கொன்றதாகக் கூறப்படும் ஒரு சம்பவத்திற்கு பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்த  ‘என்கவுண்டர்’ என அறிக்கைகள் தெரிவித்தன.

மாவோயிஸ்டுகள் மற்றும் நக்சலைட்டுகள் என கூறப்படுபவர்களின் என்கவுண்டர்கள்:

தெலுங்கானா உருவான ஒரு வருடம் கழித்து, நக்சல் மற்றும் மாவோயிஸ்ட் குழுக்களின் உறுப்பினர்களைக் கையாள்வதற்கு விரைவாக அடுத்தடுத்து நடத்தப்பட்ட இரண்டு ‘என்கவுண்டர்கள்’, அரசு கடைப்பிடித்துவரும் அணுகுமுறையைக் காட்டியது.

ஜூன் 2015-ல், தெலுங்கானா-சத்தீஸ்கர் எல்லைக்கு அருகே 19 வயது விவேக் கோடமகுண்ட்லா மற்றும் இரண்டு பெண் மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.

விவேக்கின் தந்தை, தனது மகனை என்கவுன்டருக்கு முன்பு காவல்துறையினரால் பிடித்து, சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகக் கூறினார். மாவோயிஸ்ட் தியாகிகள் பெற்றோர் சங்கம் என்று அழைக்கப்படும் ஒரு குழுவின் உறுப்பினர், மூவரும் “போலி என்கவுண்டரில்” கொல்லப்பட்டதாகக் கூறினார். “அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டனர், அவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பு அவர்களின் கைகள் முறுக்கப்பட்டன, மேலும் அவர்களுக்கு எலும்பு முறிவுகள் ஏற்பட்டன. மாவோயிஸ்டாக இருந்தாலும் ஒரு சிறுவனை சித்திரவதை செய்ய வேண்டிய அவசியம் என்ன? ” என்று ஒரு உறுப்பினர் கேட்டார்.

வரவர ராவ்

சில மாதங்களுக்குப் பிறகு, 2015 செப்டம்பரில், மாவோயிஸ்டுகள் எனக் கூறப்படும் ஸ்ருதி என்ற மஹிதா (23) மற்றும் வித்யாசாகர் ரெட்டி என்ற சாகர் (32) ஆகியோர் ஒரு மோதலில் கொல்லப்பட்டனர். மாவோயிஸ்ட்  அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட வரவர ராவ், என்கவுண்டரை ‘போலி’ எனக்கூறியதோடு, காவல்துறையினர் “கொடூரமாக சித்திரவதை செய்து” இருவரையும் கொலை செய்ததாக குற்றம் சாட்டினார்.

இது மாவோயிஸ்டுகள் எதிர்காலத்தில் நடத்தப்படவிருக்கும் ‘போலி என்கவுண்டர்களுக்கான’ வார்ப்புருவாக மாறும் என கொல்லப்பட்டவர்களின் குடும்பங்கள் தெரிவித்தன. காவல்துறையினர் முதலில் அவர்களைக் கைது செய்து, கொல்லப்படும் இடத்திற்கு அழைத்துச் செல்வதற்கு முன்பு அவர்கள் சித்ரவதை செய்தது என அவர்கள் கூறினர்.

பழங்குடிகள் மற்றும் லம்பாதாக்களின் கொலைகள்:

டிசம்பர் 2017-ல், தெலுங்கானாவில் உள்ள பத்ராத்ரி கோத்தகுடெம் மாவட்டத்தில் எட்டு ‘நக்சலைட்டுகள்’ போலீசாரால் கொல்லப்பட்டனர், அவர்கள் அனைவரும் பட்டியல் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். இந்த வழக்கிலும், நக்சலைட்டுகள்  சுட்டதற்கு திருப்பிச் சுட்டதாக போலீசு கூறியது. அதை தொடர்புடைய குடும்பங்கள் மறுத்தன.

கொல்லப்பட்டவர்களின் உடல்களை பரிசோதித்தபோது புல்லட் துளைகள் எதுவும் இல்லை என சில குடும்பங்கள் கூறியதாக என்று தி வயரின் சுகன்ய சாந்தாவின் கள செய்தி அறிக்கை சொன்னது. உடல்கள் மற்றும் முகங்கள் தாடைகள் உட்பட பல இடங்களில் வாயு செலுத்தப்பட்டதும் பல இடங்கள் உடைக்கப்பட்டிருந்ததையும் அந்த அறிக்கை பதிவு செய்திருந்தது. எட்டு பேரை காவல்துறையினர் சித்திரவதை செய்து கொலை செய்ததாகவும் அவர்கள் குடும்பத்தினர் கூறினர்.

மற்றொரு போலி என்கவுண்டரின் மிக சமீபத்திய வழக்கில், அதே போன்ற புனைவே வெளிப்படுகிறது. இந்த ஆண்டு ஜூலை மாதம், தெலுங்கானா காவல்துறை, சிபிஐ (எம்.எல்) புதிய ஜனநாயகத்தின் ஆயுதமேந்திய எதிர்ப்பு பிரிவின் “பகுதி தளபதி” என்று கூறப்படும் பழங்குடியான லிங்கண்ணாவைக் கொன்றது. லிங்கண்ணா உண்மையில் பழங்குடி மக்களின் பிரச்சினைகளுக்காக போராடிய ஒரு செயல்பாட்டாளர் என அவரது மகன் ஹரி அந்த சமயத்தில் தி நியூஸ் மினிட்டிடம் கூறியிருந்தார்.

படிக்க :
♦ சத்தீஸ்கர் : பெண்களின் மார்பில் மின்சாரம் பாய்ச்சும் அரசு பயங்கரவாதம் !
♦ சத்தீஸ்கர் தாக்குதல் குறித்து மாவோயிஸ்டுகள் அறிக்கை !

இந்த சம்பவத்திலும், சத்தீஸ்கர் எல்லையில் உள்ள காட்டில் லிங்கண்ணாவையும் மற்ற ஏழு மாவோயிஸ்டுகளையும் சுற்றி வளைத்ததாக போலீசார் கூறினர். பதிலடி கொடுக்கும் துப்பாக்கிச் சூட்டில் அவர்கள் கொல்லப்பட்டனர் என்றும் போலீசார் கூறினர். காவல்துறையின் கூற்றுக்களை மனித உரிமை அமைப்புகள் சந்தேகித்தன. லிங்கண்ணாவின் உடலில் அவர் கொல்லப்படுவதற்கு முன்னர் சித்திரவதை செய்யப்பட்டதற்கான தெளிவான அறிகுறிகள் இருந்ததாகவும் அவர்கள் கூறினார்.

மாவோயிஸ்டாக இருந்து போலீசு உளவாளியாக மாறிய நயீம் கொலை:

இவற்றில் மிகுந்த பரபரப்பான ‘என்கவுண்டர்’ என்பது 2016-ம் ஆண்டு ஆகஸ்டில் மாவோயிஸ்டாக இருந்து போலீசு உளவாளியாக மாறிய முகமது நயீமுதீன் கொல்லப்பட்டதுதான். 1993-ல் ஐ.பி.எஸ் அதிகாரி கே.எஸ். வியாஸைக் கொன்ற கும்பலில் இருந்த  நயீம், அதே ஆண்டில் கைது செய்யப்பட்டார்.

2000-ம் ஆண்டில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பின்னர், நயீம் காவல்துறையினருக்கு ஒரு தகவலாளியாக ஆனார். அவருடைய முன்னாள் தோழர்கள் பலரைக் கொல்ல அவர்களுக்கு உதவினார். (அவர் மிரட்டி பணம் பறித்ததில் ஈடுபட்டதால் மக்கள் போர் குழுவிலிருந்து வெளியேற்றப்பட்டார்). பின்னர்  அவர் ரவுடியாக மாறினார். அவர் மீது பல கொலை மற்றும் மிரட்டல் வழக்குகள் இருந்தன.  அவர் சுட்டுக் கொல்லப்பட்டபோது, அவர் மீது 20 கொலை உள்ளிட்ட 100 கிரிமினல் வழக்குகள் இருந்தன.

அவர் கொல்லப்பட்ட பின்னர், பல அரசியல்வாதிகள் பற்றிய “பல ரகசியங்களை” அறிந்திருந்ததால் கொல்லப்பட்டார் என்று கூறப்பட்டது. அவர்களில் சிலருக்கு நிலத்தை அபகரிக்க நயீம் உதவியதாகக் கூறப்படுகிறது. சோஹ்ராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கில் காணாமல் போன ஒரு இணைப்பு அவர் என்று ஒரு காங்கிரஸ் தலைவர் கூறியிருந்தார். குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஒரு சிறப்பு புலனாய்வு பிரிவு உருவாக்கப்பட்டாலும், அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

மக்களின் தூண்டப்பட்ட உணர்ச்சிகளின் பேரிலும் அரசியல்வாதிகளுக்காகவும் தன்னுடைய சுய வன்மத்தை தணித்துக்கொள்ளவும் கொலைவெறியாட்டத்தை நடத்தியிருக்கிறது தெலுங்கானா போலீசு.


செய்திக் கட்டுரை: அம்ரித்.
தமிழாக்கம் : அனிதா
நன்றி: தி வயர்.

வெங்காய விலை ஏற்றம் | பெண்கள் மீதான வன்முறை – தடுப்பது எப்படி ? | கேள்வி – பதில் !

கேள்வி : //வெங்காய விலை ஏற்றத்திற்கு காரணம் என்ன? இது போன்ற நிலைமைகளில் அரசின் பங்கு என்னவாக இருக்க வேண்டும்?//

இளம்பரிதி

ன்புள்ள இளம்பரிதி,

இன்றைய நிலையில் இந்தியாவெங்கும் உள்ள நகரங்களில் வெங்காயத்தின் சராசரி விலை ஒரு கிலோவுக்கு ரூ.100-ஐ தாண்டி விட்டது. சில நகரங்களில் 150, 200 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன. தமிழக நிலவரப்படி மக்கள் ரூ100 முதல் 150 ரூபாய் வரை வெங்காயத்தை வாங்க வேண்டிய நிலை இருக்கிறது. பல உணவகங்களில் வெங்காயம் இல்லாமலோ; குறைத்தோ உணவு வகைகள் தயாரிக்கப்படுகின்றன. ஆம்லேட்டுக்கான வெங்காயத்தில் கூட அதற்குப்பதில் முட்டைக்கோசு இடம்பெற ஆரம்பித்திருக்கிறது. அன்றாட உணவிலும், சமையலிலும் வெங்காயம் என்பது இந்திய மக்களின் அத்தியாவசிய காய் ஆகும். வட இந்தியாவில் வெங்காயமும், உருளைக் கிழங்கும் ஒவ்வொரு வேளை சமையலிலும் இடம் பெறுகின்றன.

வெங்காயம் அதிகம் விளையும் மகாராஷ்டிரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களில் வழமைக்கும் அதிகமாய் மழை பொழிந்திருக்கிறது. இதனால் காரிஃப் பருவ வெங்காய அறுவடை பாதிக்கப்பட்டு விளைச்சல் குறைந்திருக்கிறது. ஈரம் இல்லாத தரமான வெங்காயத்தின் சாகுபடி குறைவாக இருப்பதால் சந்தையின் தேவைக்கு ஏற்ப வெங்காயங்கள் அனுப்பப்படுவதில்லை.

இந்த நிலைமையில் அரசாங்கங்கள் என்ன செய்ய வேண்டும்?

முதலில் இந்தியாவில் வெங்காய உற்பத்தி, சேமிப்பு, விநியோகத்திற்கான மையப்படுத்தப்பட்ட திட்டம் இல்லை. இதன் முதல் பாதிப்பு விவசாயிகளுக்குத்தான். வெங்காயம் விலை உயர்ந்தாலும் அவர்களுக்கு போதிய விலை கிடைப்பதில்லை. இரண்டாவது பாதிப்பு மக்களுக்கு; வருடத்தில் சில மாதங்களாவது இத்தகைய வெங்காய விலை உயர்வை சந்திக்க வேண்டிய துயரம் அவர்களுக்கு!

மையப்படுத்தப்பட்ட திட்டம் என்றால் என்ன?

இந்தியாவிற்கு அன்றாடம் எவ்வளவு வெங்காயம் தேவைப்படுகிறது? மாதம், காலாண்டிற்கு எத்தனை டன் தேவைப்படுகிறது என புள்ளிவிவரங்களை வைத்து ஆய்வு செய்து இலக்கு நிர்ணயிக்க வேண்டும். அடுத்து நாடு முழுவதும் எங்கே அதிகம் விளைகிறது, எங்கே குறைவாக விளைகிறது அவற்றின் குறைந்தபட்ச தூர விநியோகம் எப்படி சாத்தியம் என்பதை திட்டமிடவேண்டும். தேவைப்பட்டால் கூடுதல் சாகுபடிக்கும் திட்டமிடவேண்டும்.

அடுத்து வருடந்தோறும் மழை பெய்யும் மாதங்களில் வெங்காயத்தை காப்பாற்ற என்ன செய்வது என ஆராய வேண்டும். முன்கூட்டியே மழை பொழிவையோ அதன் சராசரியையோ குறைந்தபட்சமாவது கணித்துக் கொண்டு சாகுபடி நாட்களை திட்டமிட வேண்டும். மேலும் நாடெங்கும் பிராந்திய அளவில் வெங்காயத்தை சேமிக்கும் கிட்டங்கிகளை அமைத்து அவற்றில் குறைந்த பட்ச இருப்பை ஆண்டு முழுவதும் பராமரிக்க வேண்டும்.

மழை பொழிந்து வெங்காய வரத்து குறையும் நாட்களை ஈடு செய்யும் விதத்தில் இந்த சேமிப்பு இருக்க வேண்டும்.

படிக்க:
வெங்காயம் சாப்பிட்டால் பார்ப்பனர்கள் செத்துப் போவார்களா ? மனுஸ்மிருதி என்ன சொல்கிறது ?
♦ பூண்டு திண்ணா புத்தி மழுங்குமா ? கண்ணாடியை திருப்புனா ஆட்டோ ஓடுமா ?

விவசாயிகளுக்கும், வாங்கும் மக்களுக்கும் விலை ஒரு சீராக இருக்கும் வண்ணம் இந்த மையத்திட்டமிடலை உருவாக்கிட வேண்டும். இதைத் தாண்டி வெங்காயம் பற்றாக்குறை ஏற்படும் போது வெளிநாடுகளில் இறக்குமதி செய்வதற்கான திட்டமும், அதிகம் உற்பத்தியாகும் போது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டமும் இருக்க வேண்டும். ஏற்றுமதியே செய்ய முடியவில்லை என்றால் உபரி வெங்காய இருப்பிலிருந்து கூழ், ஊறுகாய் வகைகள், வேதியல் மற்றும் மருந்துப் பொருட்கள் தயாரிக்கும் திட்டமும் இருக்க வேண்டும். இப்படி சுழற்சி முறையில் அனைத்தையும் ஒருங்கிணைத்து திட்டமிடும் போது நிச்சயம் வெங்காயத்தின் விலையையும், அளிப்பையும் ஒரு கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

இன்றை அரசாங்கங்களோ விவசாயத்தை தலை முழுகி, விவசாயிகளை கண்டு கொள்ளாமல் தரகு முதலாளிகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கான பொருளாதார திட்டமிடலை மட்டும் செய்கிறது. மெட்ரோ ரயில்கள், புல்லட் ரயில்கள், எட்டு வழிச்சாலைகள், பிறகு தனியார் மயம், தாராளமயம் என்று விவசாயத்தை நலிவடையச் செய்யும் பாதையில் பயணிக்கும் அரசாங்கம் எப்படி வெங்காயத்தை மக்களுக்கு அளிக்க முடியும்? அதனால்தான் “நான் வெங்காயம் சாப்பிடாத குடும்பத்தைச் சேர்ந்தவள்” என்று மறைமுகமாக வெங்காய விலை உயர்வு தனக்கு ஒரு பிரச்சினை இல்லை என்று ஒரு நிதியமைச்சரால் பேச முடிகிறது!

நன்றி!

♦ ♦ ♦

கேள்வி : //தொடரும் பெண்கள் மீதான பாலியல் வன்முறை..எப்படித்தான் தடுப்பது?//

சி. நெப்போலியன்.

ன்புள்ள நெப்போலியன்,

நமது நாட்டில் சமூகரீதியான அளவான குடிப்பழக்கம் இல்லை. குடிவெறியும், அதற்கு அடிமையாகும் வண்ணமும் மதுக்கடைகள் அரசால் நடத்தப்பட்டு மக்கள் போதைக்கு அடிமையாகிறார்கள். அன்றாட வருமானத்தில் பாதியை டாஸ்மாக்கில் கொட்டுகிறார்கள். பாலியல் வன்முறை மட்டுமல்ல பல்வேறு குடும்ப வன்முறைகளுக்கும் டாஸ்மாக் கடைகள் காரணமாக இருக்கின்றன. எனவே இவை தயவு தாட்சண்யமின்றி மூடப்பட வேண்டும்.

ஆபாச இணைய தளங்கள் ஆண்ட்ராய்டு காலத்தில் அனைவரும் பார்க்க கூடிய விதத்தில் இருக்கின்றது. இவற்றை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும். அதே நேரம் இது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமில்லாமலும் இருக்கிறது. அதன் பொருட்டு ஆபாசப் படங்கள் குறித்தும் அது ஏற்படுத்தும் உளவியல் பாதிப்பும், யதார்த்தமான காமத்தை அதீதமான காமவெறியாக மாற்றும் அதன் பரிணாமங்களை மக்களுக்கு விளக்கும் வண்ணம் சுகாதாரத் துறை வெகு மக்களுக்கான கவுன்சிலிங், பிரச்சாரம் செய்ய வேண்டும். நமது தளத்தில் ஒரு ஆபாசப்பட நடிகையின் பார்வையில் அப்படங்கள் எப்படி கொடூரமாக எடுக்கப்படுகின்றன, அது பார்ப்போரிடையே என்ன வகையான மாயையை, நோயை உருவாக்குகின்றன என்ற ஒரு தொடர் இருக்கிறது. அத்தகைய கட்டுரைகள், வீடியோக்கள் சமூக ஆர்வலர்களால் அதிகம் படைக்கப்பட வேண்டும்.

பார்ப்பனிய சமூக வழக்கத்தில் இருக்கும் இந்தியாவில் ஒரு பெண்ணை உடமையாக பார்க்கும் நடத்தை பொதுவில் ஆண்களின் ஆளுமையின் ஒரு அங்கமாக இருக்கிறது. இதுவே காதலிகளை கொலை செய்வது, ஆசீட் வீசுவது, எரிப்பது போன்ற கொடூரங்களை நடப்பதற்கான அடிப்படையாக இருக்கிறது. இதற்கு தோதாக காதல் என்பதே ஒரு ஆண் ஒரு பெண்ணை அடிமைப்படுத்தும் க(கொ)லையென சினிமாக்கள் போதிக்கின்றன.

எனவே காதல், பாலியல், பெண் உடல், ஆண் – பெண் சமத்துவம் போன்ற தலைப்புகளில் பள்ளி இறுதி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கட்டாய பாடமாகவோ, கவுன்சிலிங்காகவோ நடத்தப்பட வேண்டும். பெண்ணை இழிவு படுத்தும் இலக்கியங்கள், சினிமாக்கள், ஊடக செய்திகள், ஊடக நெறிமுறைகள் அனைத்தும் சமூக ஆர்வலர்களால் அவ்வப்போது அம்பலப்படுத்தப்பட வேண்டும்.

பள்ளி கல்லூரி மாணவர்களிடையேயும், இளைஞர்களிடையேயும் விதவிதமான போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இந்தப் போதைப் பொருட்களை தடை செய்வதோடு அதை விற்போரின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது குறித்தும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் வகுப்புகள் கட்டாயமக்கப்பட வேண்டும். போதைக்கு அடிமையாகும் இளைஞர்கள் வன்முறை செய்வதில் எந்த எல்லைக்கும் செல்ல வாய்ப்பிருக்கிறது.

படிக்க:
உங்களுக்குள் ஒரு பாலியல் குற்றவாளி ! – புதிய கலாச்சாரம் ஆகஸ்ட் 2016
♦ போர்னோகிராஃபி : ஆபாசப் படங்களின் இருண்ட பக்கம்

பெண் மாணவர்கள், இளைய பெண்கள் அனைவருக்கும் தற்காப்புப் பயிற்சிகளை பள்ளி கல்லூரி காலத்தில் கட்டாயமான உடற்பயிற்சியாக மாற்ற வேண்டும். ஒரு பெண் தன்னை சிந்தனை ரீதியாகவும், உடல் ரீதியாகவும் காத்துக் கொள்ளும் வண்ணம் களப்பயிற்சிகளும், கருத்து ரீதியான கவுன்சிலிங்குகளும் கட்டாயம் நடத்தப்பட வேண்டும்.

பாலியல் வழக்குகளை பத்தோடு பதினொன்றாய் எடுக்கும், உண்மையில் எடுக்காமல் அலைக்கழிக்கும் போலீசுக்கு கவுன்சிலிங் வகுப்புகள் நடத்தப்படுவதோடு, அவர்கள் கடமையில் தவறும் பட்சத்தில் கடும் நடவடிக்கைகள், தண்டனைகள் அளிக்கப்படும் வண்ணம் காவல் துறை மாற்றப்பட வேண்டும். காவல் துறையிலேயே பெண் காவலர்களுக்கு இழைக்கப்படும் பாலியல் கொடுமைகள் எண்ணிலடங்காது. இதற்கும் கடுமையான சட்டமும், துறை ரீதியான கண்காணிப்பும் ஏற்படுத்தப்பட வேண்டும். மேலும் ஒரு வார்டு அளவில் அந்த பகுதியின் காவல் துறை குறித்த புகார்கள், குறைகள், ஆலோசனைகள் மற்றும் விமர்சனங்கள் அப்பகுதி மக்கள் தெரிவிக்கும் வண்ணம் மாதக் கூட்டங்கள் நடத்தப்பட்டு அதில் காத்திரமான விசயங்களுக்கு காவல் துறை மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பொதுவில் மக்களுக்கு காவல் துறை மீது ஒரு பயம் இருந்தால்தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் என்று பலரும் கருதுகிறார்கள். இல்லை, மக்கள் மீது காவல்துறைக்கு பயம் இருந்தால்தான் சட்டம் ஒழுங்கு சரியாக பயணிக்கும்.

பாலியல் வழக்குகள் குறித்த சட்டங்கள், நீதிமன்றங்கள், வழக்கறிஞர்கள் அடங்கிய நீதித்துறையின் செயல்பாட்டை துரிதமாகவம், மக்கள் நம்பும் விதமாகவும் செயல்படும் வண்ணம் மாற்றியமைக்கப்பட வேண்டும்.

பெண்கள் பணி செய்யும் இடத்தில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல்களை கண்காணித்து கடுமையான நடவடிக்கை எடுக்கும் வண்ணம், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் ஏற்கனவே ஏட்டில் இருக்கும் விசாகா கமிட்டியின் கட்டமைப்பையையும், அதிகாரத்தையும் அதிகமாக்கி அதை உருப்படியான கமிட்டியாக மாற்ற வேண்டும்.

இறுதியாக நாளொன்றுக்கு பதினைந்து மணிநேரம் வேலை பார்த்தே ஆகவேண்டும் என்ற மறுகாலனியாக்க வாழ்க்கையை மாற்ற வேண்டும். எட்டு மணி நேரம் வேலை, எட்டுமணி நேரம் ஓய்வு, எட்டு மணி நேரம் சமூகப் பொழுது போக்கு என்பது அனைவருக்கும் கிடைக்கும் வண்ணம் நடைமுறைப்படுத்த வேண்டும். ஏனெனில் இத்தகைய கடுமுழைப்பு தொழிலாளிகள்தான் தமது வேலை நிமித்தம் இயல்பாக போதை, மது போன்றவற்றை நாட வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.

இவை அனைத்தையும் செய்ய முடிந்தால் பாலியல் வன்முறைகளை தடுக்கும் வழிகளை சமூகம் கண்டறியும்.

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

குற்றமும் தண்டனையும் : உடனடி தீர்ப்பு கோரும் மனசாட்சிகளுக்கு ஒரு கேள்வி !

குற்றமும் தண்டனையும்

ரு விஷயத்தை யோசித்துப்பாருங்கள். தி. நகர் ரங்கநாதன் தெருவில் ஒரு குண்டு வெடிப்பு நடக்கிறது. தமிழகமே அதிர்ந்து போய் கோபத்தில் துடிக்கிறது. மீடியா துடிப்புடன் போலீஸ் கமிஷனரை மொய்க்கிறது. இரண்டு நாள் அங்கே தேடுகிறோம், இங்கே தேடுகிறோம் என்று பேட்டி கொடுக்கிறார். மூன்றாம் நாள் பிரெஸ் மீட் வைத்து இரண்டு கைதிகளை மீடியா முன் நிறுத்துகிறார்கள். ‘இவன் அகில் அஹமத், அவன் முகமது குர்ஷித். இவர்கள் ராயப்பேட்டையில் வசிக்கிறார்கள். அகில் ஒரு பைக் மெக்கானிக், முகமது ஒரு ஹார்டுவேர் கடையில் வேலை செய்கிறான். இவர்கள் இருவர்தான் லஸ்கர் உதவியுடன் இந்த செயலை செய்தவர்கள்,’ என்று அறிவிக்கிறார்கள்.

இப்போது உங்கள் மனதில் என்ன ஓடும்? அப்பாடா, கதை முடிந்தது. குற்றவாளிகள், அதாவது தீவிரவாதிகள், சிக்கி விட்டார்கள். அடுத்ததாக அவர்களை நடுத்தெருவில் தூக்கில் போடு… அல்லது துப்பாக்கியில் சுட்டு தள்ளு என்றெல்லாம் கூச்சல்கள் ஆரம்பிக்கும். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆஜராகும் வழக்கறிஞர்களுக்கு பெரும் எதிர்ப்புகள் உருவாகும்.

ஆனால் ஒரு நிமிடம் யோசித்துப்பாருங்கள். இந்த அகில் குர்ஷித் இருவரும் உண்மையிலேயே அந்த சம்பவத்தில் ஈடுபட்டிருந்தவர்களா? என்ற கேள்வியை யாருமே கேட்க மாட்டோம். மீடியா மற்றும் அரசாங்க அழுத்தம் தாங்காமல் போலீசே இரண்டு பேரை ‘பிடித்து’ வந்து இவன்தான் குற்றவாளி என்று காட்ட மாட்டார்கள் என்று என்ன நிச்சயம், என்ற கேள்வியை யாராவது யோசித்திருப்போமா?

அது எப்படி யாரையோ பிடித்து தீவிரவாதி என்று காட்ட முடியும், என்று கேட்கலாம். யாரையோ காட்ட முடியாது. ஆனால் மொக்கை குற்றங்களுக்கு மாட்டியவர்கள் அல்லது வேறு ஒரு குற்றத்தில் நிரூபணம் ஆகாதவர்கள் என்று யாரையாவது பார்த்து மாட்டி விடலாம்.

ஷாஹித் ஆஸ்மி வழக்கு இந்த விஷயத்தில் முக்கியமானது. மும்பையை சேர்ந்த ஆஸ்மி பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீரில் 13 வயதில் தீவிரவாதம் கற்க போனவன், அங்கே கற்றுக்கொடுக்கப்பட்ட விஷயங்களை தாள முடியாமல் 14 வயதில் அங்கிருந்து ஓடி வந்து விட்டான். அதற்குப் பின் மும்பை குண்டு வெடிப்பில் அவனையும் ஒரு குற்றவாளியாக போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்தது. ஏழு ஆண்டுகள் திஹார் ஜெயிலில் கழித்தான். பின்னர் குற்றம் நிரூபணமாகாமல் விடுதலை ஆன ஆஸ்மி, சட்டக்கல்லூரி சேர்ந்து படித்து தன்னைப்போலவே தீவிரவாத குற்றங்களில் கைதான அப்பாவிகளுக்காக ஆஜராக துவங்கினார். 2008 மும்பை தாக்குதலில் கைதான ஃபஹீம் அன்சாரிக்காக ஆஜராகும் பொழுது, ‘தீவிரவாதத்துக்கு ஆதரவு கொடுக்கிறார்’ என்று குற்றம் சாட்டப்பட்டு, வெறியர்களால் சுடப்பட்டு தன் அலுவலக வாசலிலேயே இறந்தார். ஆனால் ஃபஹீம் அன்சாரி எந்தக்குற்றமும் நிரூபணமாகாமல் பின்னர் விடுதலை ஆனான்.

அதாவது என்ன சொல்ல வருகிறேன்? கையில் கிடைத்தவர்களை கண்டமேனிக்கு கைது செய்வது பரவலாகவே இங்கே நடக்கிறது. குறிப்பாக அதிக சமூக அழுத்தம் கொண்ட வழக்குகளில் இது நிறையவே நடக்க சாத்தியக்கூறு இருக்கிறது.

படிக்க:
ஹைதராபாத் என்கவுண்டர் : எங்கள் பெயரில் கொட்டடிக் கொலைகள் கூடாது | AIPWA கண்டனம் !
♦ ஹைதராபாத் போலி என்கவுண்டர் – தமிழ் ஃபேஸ்புக் கண்டனம்

தில்லியின் ஆருஷி வழக்கு நமக்கெல்லாம் நினைவிருக்கும். இளவயதான பள்ளி மாணவி ஆருஷி தன் படுக்கை அறையிலேயே கழுத்து அறுபட்டு இறந்த செய்தி தில்லியையே உலுக்கியது. இதற்கு முன் எப்போதும் இல்லாத மீடியா வெளிச்சம் இந்த வழக்கின் மேல் விழவே, போலீஸ் மீது பெரும் அழுத்தம் சேர்ந்தது. அவர்கள் வீட்டிலேயே தங்கி வேலை பார்த்து வந்த ஹேம்ராஜ் என்ற நடுத்தர வயது வேலையாள்தான் குற்றவாளி என்று அறிவித்தார்கள். ஹேம்ராஜுக்கும் ஆருஷிக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது என்றும் போலீஸ் சொன்னது. வசதியாக கொலை நடந்த தினத்தில் இருந்து ஹேம்ராஜ் காணவில்லை. எனவே அவன்தான் கொன்று போட்டு ஓடிப்போய் விட்டான் என்று அறிவிக்க முடிந்தது. ஆனால் என்ன அசௌகரியம்; இரண்டு நாள் கழித்து ஹேம்ராஜின் அழுகிய சடலம் ஆருஷி வீட்டின் மொட்டை மாடியிலேயே கிடைத்தது. ஆருஷி கொலையுண்ட அதே நாள் ஹேம்ராஜும் கொல்லப்பட்டு இருக்கிறான்! இப்போது வழக்கின் திசை மாறியது. போலீஸ் மேல் மேலும் அழுத்தம் சேர்ந்து கொண்டது. அடுத்து யார் கிடைப்பார்கள் என்று பார்த்தார்கள். ஆருஷியின் அம்மா, அப்பா சேர்ந்துதான் கொன்று போட்டிருக்கிறார்கள் என்று போலீஸ் அறிவித்தது. அவர்கள் இருவரையும் கைது செய்தார்கள். ஆருஷி-ஹேம்ராஜ் தொடர்பு தெரிய வந்து, அதைப் பொறுக்க இயலாமல் குடி போதையில் அப்பா கொன்று விட்டிருக்கிறார்; என்று கேஸை மூடியது போலீஸ். பற்பல ஆண்டுகள் அம்மா அப்பா இருவரும் சிறைவாசம் செய்து, பின்னர் வழக்கு சுப்ரீம் கோர்ட் வரை சென்று இருவர் மேலும் வழக்குக்கு முகாந்திரமே இல்லை என்று கேஸ் தள்ளுபடி ஆனது. இருவரும் விடுதலை ஆனார்கள்.

எஸ்.ஏ.ஆர். ஜீலானி

2001 பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் கைதாகிய எஸ்.ஏ.ஆர். ஜீலானி தில்லி பல்கலைக்கழகத்தில் ஒரு பேராசிரியர். சிறைவாசம் அனுபவித்து தூக்கு தண்டனை வரை போனார். ஆனால் சுப்ரீம் கோர்ட்டில் ஆதாரம் ஏதுமின்றி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விடுதலை ஆனார்.

நான் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் போதும் என்று நினைக்கிறேன். இந்தியாவில் குற்ற வழக்குகளுக்கு conviction rate, அதாவது குற்றம் நிரூபணமாகும் சதவிகிதம் 46 சதம். இதன் அர்த்தம் என்னவென்றால் நூறு பேர் மேல் போலீஸ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செயகிறார்கள் என்றால் அதில் 54 பேர் கண்டிப்பாக நிரபராதிகள்தான். அவர்கள் எப்படி நிரபராதிகள் ஆவார்கள்? ஏமாற்றி, சாட்சிகளை திரித்து வெளியே வருபவர்களாகவும் கூட இருக்கலாம் அல்லவா என்று நாம் கேட்கலாம். சரி, வெளியே வருபவர்களில் பாதி பேர் இப்படி வழக்கை திரித்து வெளியே வருபவர்கள் என்றே கூட வைத்துக்கொண்டாலும் 27 சதவிகிதம் பேர் முழுக்க முழுக்க நிரபராதிகள். குற்றவியல் ஆய்வின் கடைசி அறிக்கையின் படி இந்தியாவில் மூன்று லட்சம் கைதிகள் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் வாடுகிறார்கள். இவர்களை undertrials என்று சொல்வார்கள். மேலே சொன்ன நமது குறைக்கப்பட்ட கணக்கின்படி பார்த்தாலும் கூட தற்போது மொத்தம் 81,000 நிரபராதிகள் சிறையில் வாடிக்கொண்டு இருக்கிறார்கள்.

அதாவது நாம் சொல்வது என்ன? கீழ் கோர்ட், நடு கோர்ட், மேல் கோர்ட் என்று போகிறவர்கள் கணக்கே இவ்வளவு என்றால் சும்மா கைதாகி வெறுமனே எஃப்.ஐ.ஆர். போடப்படுகிறவர்களில் எத்தனை அப்பாவிகள் இருப்பார்கள் என்பதை உங்கள் கணக்கிற்கே விட்டு விடுகிறேன்.

அது ஒரு புறம் இருக்க, நம் போலீஸ் லாக்கப்பில் குற்றத்தை ‘ஒப்புக்கொள்ளும்’ நிர்பந்தம் நிறைய பேருக்கு ஏற்பட்டு விடுகிறது. நாமே பார்த்திருப்போம். இந்த ‘பாத்ரூமில் வழுக்கி’ விழும் விஷயம் நிறைய நடக்கிறது. அடிதாங்காமல் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிறைய வழக்குகள் பார்த்திருக்கிறோம். லாக்கப் அடி போல அர்த்தமற்ற, வீணான புலனாய்வு உலகிலேயே கிடையாது. என்னையே நாலு முறை சும்மா கன்னத்தில் அறைந்தாலே நியூயார்க் இரட்டை கோபுரத்தை தகர்க்க சதி செய்ததே நான்தான், பின் லேடன் அல்ல என்று வாக்குமூலம் கொடுத்து விடுவேன். அந்த அளவுக்கு பலவீனமான விஷயம் அது.

படிக்க:
போலீசு ராச்சியத்தின் கீழ் தமிழகம் !
♦ மதுரவாயில் போலீசு மாமூல் வெறிக்கு தண்டனை !

ஆனால் சினிமாவில் போலீஸ் ஹீரோ லாக்கப்பில் அடிப்பதை பார்த்து விசில் அடிக்கும் லெவலில்தான் நாமெல்லாம் இருக்கிறோம். போலீஸ் சித்ரவதை புலன்விசாரணையை துரிதப்படுத்தவோ அல்லது குற்றங்களை குறைக்கவோ உதவுவதாக எந்த புள்ளி விபரமும் உலகில் இதுவரை இல்லை. சொல்லப் போனால் பஞ்சத்துக்கு பிக் பாக்கெட் அடித்தவர்களை தொழில் முறை குற்றவாளிகளாக உருமாற்றம் செய்யவே இந்த சித்ரவதைகள் உதவுகின்றன. அதுவுமின்றி மெக்சிகோ நாட்டை வைத்து ஸ்டேன்ஃபோர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஒரு ஆய்வில் லாக்கப் சித்ரவதைகள் ஒட்டு மொத்தமாக ஜனநாயகத்தை பலவீனப்படுத்துகின்றன என்று வாதிடுகின்றது.

இதெல்லாம் ஒரு புறம் இருக்க, நாம் பார்த்தோம் என்றால் மேற்சொன்ன விஷயங்கள் எல்லாவற்றிலும் பாதிக்கப்படுவது யார் என்றால் பரம ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட சாதி / இனத்தவர்தான். பணக்காரர்களோ அல்லது மேட்டுக்குடி சாதியினரோ இல்லை.

உதாரணத்துக்கு தி. நகர் குண்டு வெடிப்பை எடுத்துக்கொள்வோம். மூன்றாம் நாள் போலீஸ் இரண்டு பேரை கைது செய்து முன் நிறுத்துகிறது: ஒருவன் பெயர் ராமசேஷன், இரண்டாமவன் சடகோபன். ராமசேஷன் இன்போசிஸ்சில் வேலை செய்கிறான். சடகோபன் ஒரு ஆடிட்டர்.

டிவியில் இந்த செய்தியைப் பார்த்து உங்கள் ரியாக்சன் எப்படி இருக்கும்? கமிஷனரைப் பார்த்து ‘இதெல்லாம் நம்பற மாதிரியா சார் இருக்கு?’ என்பீர்கள் அல்லவா? ஆனால் யோசித்துப் பாருங்கள் இந்த இரண்டு பெயர்களை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் ஆக்குவது எது? அந்தக் கைதிகளின் சாதியா? அல்லது அவர்களின் வேலையா? படிப்பா?

பிராமணர்கள் நிறைய கொலைகளில் ஈடுபட்டு இருந்திருக்கிறார்கள். சமீபத்தில் உ.பி.-யில் நடந்த உன்னாவ் வன்புணர்வு சம்பவத்தில் அந்தப்பெண்ணை எரித்துப் போட்டதாக கைதானவர்கள் எல்லாருமே பிராமணர்கள்தான். இந்தியாவின் முதல் அரசியல் கொலையை செய்து காட்டியது ஒரு பிராமணன்தான்.

ஆனால் போலீசுக்கு தெரியும், ஆடிட்டர் சடகோபனை உங்கள் முன் நிறுத்த முடியாது என்று. எனவே அகில் அகமதுவை நிறுத்துகிறார்கள். இந்தியா முழுக்க ஆதிவாசிகள், தலித்துகள் முஸ்லிம்கள் மற்றும் பரம ஏழைகள் மட்டுமே இந்த போலீஸ் அட்டூழியத்துக்கு ஆளாகிறார்கள். யோசித்துப்பாருங்கள்: சிதம்பரம், அமித் ஷா போன்றோர் எல்லாம் சிறையில் இருந்திருக்கிறார்கள். இவர்கள் மேல் போலீஸ் சுண்டு விரல் கூட வைத்திருக்காது. சொல்லப்போனால் அமித் ஷா சம்பந்தப்பட்டிருந்த இர்ஷத் ஜஹான் என்கவுண்டர் ஒரு போலி என்பதும் அந்தப்பெண் தீவிரவாதி இல்லை என்பதும் சந்தேகமற நிரூபணமான ஒன்று. ஆனால் அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அமித் ஷா எந்த வழக்கும் இன்றி இப்போது உள்துறை அமைச்சராக இருக்கிறார்.

ஆனால் படிப்பறிவு குறைவான ஏழைகள், ஒடுக்கப்பட்ட சாதி மதத்தை சேர்ந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இந்தியாவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நிரூபணத்துக்கு காத்திருக்கும் கைதிகளில் 30 சதவிகிதம் பேர் எழுத்தறிவற்றவர்கள். Undertrials எனப்படும் இந்த கைதிகளில் 55 சதவிகிதம் பேர் தலித், ஆதிவாசி மற்றும் முஸ்லிம்கள். இவர்கள் எந்த சட்டஅறிவும் பண வசதியுமின்றி தொடர்ந்து சிறையில் வாடுகிறார்கள்.

அப்படி இருந்தும் இவர்களின் சராசரி conviction rate வெறும் 15% மட்டுமே அதாவது தற்போது சிறையில் வாடும் undertrial முஸ்லிம், தலித் ஆதிவாசிகளில் கிட்டத்தட்ட 85 சதவிகிதம் பேர் நிரபராதிகள்.

படிக்க:
இஷ்ரத் ஜஹான் போலி மோதல் கொலை : மோடியின் கூட்டாளி முர்முவுக்கு கவர்னர் பதவி !
♦ சாலையோர வணிகர்கள் மீது ஏவப்படும் அரச பயங்கரவாதம்

மொத்தத்தில் சொல்ல வந்தது இதுதான் :

♦ போலீஸ் ஒருவரை கைது செய்து விட்டார்கள் என்பதாலேயே அவர்கள் குற்றம் புரிந்தவர் என்று ஆகி விட மாட்டார்கள்.

♦ லாக்கப் சித்திரவதைகளை, என்கவுன்டர்களை ஆதரிப்பது ஒரு சமூகமாக நம்மை பின்னுக்கு தள்ளவே செய்யும். ஒரு கோப எதிர்வினையில் ‘அவனை நடுத்தெருவில தூக்குல போடு,’ என்று கூச்சலிடலாம். அது புரிந்து கொள்ளத்தக்கதே. ஆனால் உண்மையிலேயே அப்படி நடுத்தெருவில் தூக்கிலிட துவங்கும் பொழுது, ஒரு சமூகமாக நாம் ஆயிரம் வருடம் பின்னே போகிறோம்.

♦ கண்ணுக்குக் கண் என்ற ஹமுராபி நீதி முறை 5000 வருடத்துக்கு முந்தைய சமூகங்களுக்கு சரியாக இருக்கலாம். 21-ம் நூற்றாண்டில் நவீன சமூகமாக கட்டமைக்க விரும்புபவர்களுக்கு சரியா என்று யோசித்துக் கொள்ளலாம்.

இன்றைக்கும் கூட நடுத்தெருவில் தூக்கில் போடும், கல்லடித்து சாவடிக்கும் தேசங்கள் இருக்கின்றன. சமூகப்பொருளாதார ரீதியாக அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று கொஞ்சம் பாருங்கள். அதே சமயம் ஒரு சீரியல் கில்லர் சைக்கோவுக்கும் கூட சட்டரீதியான பாதுகாப்பு கொடுத்து, அவன் மேல் ஒரு சுண்டு விரல் படாமல் வழக்கை நடத்தி முடித்து தண்டனை கொடுக்கும் தேசங்கள் இருக்கின்றன. அந்த தேசங்கள் சமூகப்பொருளாதார ரீதியாக எங்கே இருக்கின்றன என்று பாருங்கள்.

பின்னர், நாம் எந்த நாடுகளின் வரிசையில் சேர வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

நன்றி : Sridhar Subramaniam
ஃபேஸ்புக் பதிவிலிருந்து…

disclaimer

சொந்த நிலத்தை ஏழை தலித் மக்களுக்கு வழங்கிய தோழர் பழனிசாமி !

க்கன் சக்கிலியனுக்கு 1935 -ல், பிரிட்டிஷ் அரசு வழங்கிய 2.8 ஏக்கர் நிலத்திற்கு, வரிகட்டச் சொல்லி நோட்டீஸ் ஒன்று வந்து சேர்ந்திருந்தது. நோட்டீசைப் படித்த, பேரன் பழனிசாமிக்கு ‌அதிர்ச்சியாக இருந்தது. இந்த நோட்டீஸ் வரும்வரை பழனிசாமிக்கு இப்படி ஒரு நிலமிருப்பதே தெரியாது.

வரிகட்டுவதற்கு நிலம் தொடர்பான ஆவணங்களை தேடியெடுக்க ஆரம்பித்த பழனிசாமிக்கு போதும்.. போதும் என்றாகிவிட்டது. இறுதியில் பல்வேறு தோழமைகளின் உதவியுடன் ஆவணங்களை தேடி சேகரித்தார்.

மேட்டுப்பாளையம் நகர எல்லைக்குள் இருக்கும் அந்த நிலம் சுமார் 2.8 ஏக்கர் பரப்புடையது. அதன் விலைமதிப்பு சுமார் 5 கோடிக்கு மேல் தேறும்.

இந்த நிலவிசயத்தை அறிந்த புரோக்கர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள், பழனிசாமியை லாட்ஜ்க்கு அழைத்து, ஒரு பெட்டியை திறந்த காட்டி- “இந்த பணக்கட்டுகள் முழுவதையும் எடுத்துக்கொள்‌. கையெழுத்துப்போட்டுக்கொடு” எனக் கேட்டனர்.

அவர் இறங்கிவரவில்லை; இன்னொரு பெட்டியையும் எடுத்துக் கொடுத்தனர், அப்போதும் இறங்கிவரவில்லை. எதற்கும் அசையாத போது, மிரட்டத் தொடங்கினார்கள். பழனிசாமி சிரித்துக்கொண்டே படியிறங்கி வந்துவிட்டார்.

ஆவணங்கள் முழுமையாக சேகரித்த பழனிசாமி தலித் என்ற காரணத்திற்காக வழங்கப்பட்ட அந்த நிலம், தலித் மக்களுக்கே சேர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரத்தில் தலித் மக்கள் வாழ்கின்ற பகுதிகளுக்கு குழுவாகச் சென்றார்.

வீடோ, நிலமோ இல்லாதவர்களாகப் பார்த்துப் பார்த்து தேர்வுசெய்து 105 பேர்களை பட்டியலிட்டார். ஒரு விடுமுறைநாளில் பட்டியலில் இருப்பவர்களையெல்லாம் அழைத்துவந்து ஒரு குடும்பத்திற்கு (1.1/2 ) ஒன்றரை செண்ட் ‌வீதம் 2.8 ஏக்கர் நிலத்தையும் பிரித்துக் கொடுத்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் அவர்கள் தோழர் பழனிசாமி மற்றும் அவரது துணைவியார் வெண்ணிலா ஆகியோருக்கு பாராட்டு தெரிவிதார்.

அந்த நிலத்திலிருந்து தனக்கென ஒரு செண்டைகூட எடுத்துக்கொள்ளவில்லை சிலர் வற்புறுத்தியபோது இப்போது நான் குடியிருக்கும் 1 1/4 செண்டே போதுமானது நிலமில்லாதவர்களுக்குத்தான் நிலம் என்று புன்னகையோடு கடந்துபோனார்.

எனக்கும் ஒரு செண்ட் நிலம் வேண்டும் ,நான் பழனிச்சாமியின் பேசவேண்டும் என்று அவரது சகோதரி என்னிடம் கேட்டார், பழனிசாமியிடம் பேசினேன். ஒரு விதவை என்ற முறையில் உதவலாம் என்றேன்.

“நான் குடியிருக்கும் இடத்தில் ஒரு பங்கான 1.1/4 செண்ட் சகோதரி பெயரில்தான் இருக்கிறது அதுபோதுமானது. சகோதரி என்பதற்காக, நிலத்தை கொடுக்கமுடியாது “நிலம் இல்லாதவர்களுக்கு தான் இடம் என்ற கொள்கையிலிருந்து மாற முடியாது’’” என்று சொல்லிவிட்டார்.

படிக்க:
மகிழ்ச்சியின் தருணங்கள் !!
♦ தடுமாற்றங்களுக்கு அப்பாற்பட்டவர்களா கம்யூனிஸ்டுகள் ?

இது, முரட்டுக் கொள்கை. கொள்கையில் நெகிழ்வுத் தன்மை வேண்டும் என வாதாடினேன் ஆனால் தோற்றுப்போனேன். நிலம் கொடுத்ததோடு நின்றுவிடவில்லை குடிசைகூடபோடமுடியாத நிலையில் பலர் அந்த பட்டியலில் இருந்தனர் அவர்களுக்கு குடிசைபோட சிறு சிறு உதவிகளையும் சேர்த்தே செய்தார்.

அதன் பிறகு நிலத்தில் பல்வேறு சிக்கல்கள் எழுந்தது. நிலத்தை அரசே எடுக்கவைத்தார் அந்த நிலத்தில் அதே 105 தலித் குடும்பங்களுக்கு பட்டாவும் பெற்றுக் கொடுத்தார் யு.ஆர்.பழனிசாமி!

யு.ஆர். பழனிசாமி தற்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மேட்டுப்பாளையம் நகர செயலாளராக பொறுப்பு வகித்துவருகிறார்

நன்றி : Vvellingiri Vvgiri
ஃபேஸ்புக் பதிவிலிருந்து…

disclaimer

கோவை பாரதியார் பல்கலை : முழுநேர ஆய்வு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் !

0

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் முழுநேர ஆய்வு மாணவர்கள் கண்டன கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் !

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் கடந்த சிண்டிகேட் கூட்டத்தில் Category – B என்ற பெயரிலும் Regular mode (முழுநேரம்) என்ற பிரிவுகளின் இரண்டு முனைவர்பட்ட ஆய்வாளர்களுக்கும் ஒரே மாதிரியான சான்றிதழ் வழங்கலாம் என்று முடிவெடுத்து ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளது. இதனை கண்டித்து 5.12.2019 அன்று பல்கலைக்கழக முழுநேர முனைவர்பட்ட ஆய்வு மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாரதியார் பல்கலைக்கழகம் பல்வேறு துறைகளுக்கு முனைவர் பட்டம் வழங்குகிறது. அதன் பெயரில் Category – B என்ற தொலைத்தூரக்கல்வி முறையை 2008-ல் உருவாக்கி, அதன் பெயரிலும் முனைவர் ஆய்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பாரதியார் பல்கலைக்கழகத்தில் மற்றும் பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளிலோ நிரந்தர பணியில் இல்லாத ஆசிரியர்கள் நாட்டின் எங்கோ ஓர் இடத்தில் உள்ள மாணவர்களுக்கு வழிகாட்டி முனைவர்பட்ட ஆய்வினை நடத்தலாம்.

பல்கலைக்கழக முழுநேர முனைவர்பட்ட ஆய்விற்கு வழங்கும் சான்றிதழையே அவர்களுக்கும் வழங்கிக் கொண்டிருந்தது. இந்த முறை 2009 UGC விதிமுறைகளுக்கு எதிரானது. கூடுதலாக இந்த சான்றிதழ் நாட்டின் உயர்கல்வியின் தரத்தினை சீர்குலைக்கும் வகையிலும் மற்றும் முழுநேர ஆய்வு மாணவர்களின் வேலைவாய்ப்பினை கேள்விக் குறியாக்கியுள்ளது என்றும் 2015-ல் முழுநேர ஆய்வு மாணவர்களின் போராட்டத்தின் விளைவாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்படி அந்த தொலைத்தூரக்கல்வி சான்றிதழில் “Under External mode” என்று குறிப்பிட்டு வேறுபடுத்தி காட்டியது.

படிக்க:
கலங்கி நிற்கும் கார் அழகுபடுத்தும் கலைஞர்கள் !
ஹைதராபாத் என்கவுண்டர் : எங்கள் பெயரில் கொட்டடிக் கொலைகள் கூடாது | AIPWA கண்டனம் !

ஆனால், தற்போது சிண்டிகேட் கமிட்டி மீண்டும் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்ட Category – B என்ற பிரிவில் 2015-க்கு முன் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் “Under External mode” என்ற குறியீட்டை நீக்கி முனைவர்பட்ட ஆய்வாளர்களுக்கும், Category – B யில் பட்டம் பெற்றவர்களுக்கும் ஒரே மாதிரியான சான்றிதழ் வழங்க முடிவெடுத்து அதனை ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த முடிவானது தற்போதுள்ள முனைவர்பட்ட ஆய்வு மாணவர்களை சீற்றத்திற்கு ஆளாக்கியுள்ளது.

இதனால் மாணவர்கள் துணைவேந்தரை சந்தித்து கடிதத்தின் வாயிலாக 300-க்கும் மேற்பட்டோர் தங்களது எதிர்ப்பினை தெரிவிக்கும் வகையில் 05.12.2019 அன்று கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
கோவை.

கலங்கி நிற்கும் கார் அழகுபடுத்தும் கலைஞர்கள் !

சென்னை மாநகரத்தின் குறியீடான எல்.ஐ.சி கட்டிடத்தின் பின்புறத்தில் உள்ளதுதான் ஜி.பி ரோடு. இது 4 மற்றும் 2 சக்கர வாகனங்களை மெருகூட்டி அழகுபடுத்தும் கடைகள் நிறைந்த பகுதி.

சுமார் 1 கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இப்பகுதியில் சிறியதும் பெரியதுமான 2500-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. தென்னிந்தியாவின் டெட்ராய்டு என்று அழைக்கப்படும் சென்னை, ஒரகடம், படப்பையைச் சுற்றி உற்பத்திச் செய்யப்படும் அனைத்து ரக கார்களும் பியூட்டி பார்லருக்கு படையெடுக்கும் புதுமணத் தம்பதிகள் போல, தங்களை அலங்கரித்துக் கொண்டு சாலைப் பயணத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றன.

நாம் அந்தச் சாலையில் நுழைந்தபோது, காரின் கலரைப் போலவே தங்களின் முடிகளை கலர்  அடித்துக்கொண்டு போகும் வரும் கார்களை கைபோட்டு மடக்கி, “இங்கே வாங்க சார்” என்று கார்களை இழுத்துக் கொண்டிருந்தனர், மெக்கானிக் மற்றும் கார் மேக்கப் வித்தை தெரிந்த அந்த இளைஞர்கள்.

காதர் என்ற இளைஞர் மாருதி இன்டிகா காரின் டேஷ் போர்டில் ஸ்பீக்கர் செட்டும் புது வைபரும் மாட்டிக் கொண்டிருந்தார். அவரிடம் பேச்சுக் கொடுத்தோம்.

காதர்

“காலையிலிருந்து வேலையே இல்லாமல் இப்பதான் சின்ன வேலை வந்திருக்கு. இந்த நேரத்துல வந்துட்டீங்களே. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, என் ஃபிரெண்டுகிட்டே ஒப்படைச்சிட்டு வர்றேன். இந்த வேலைய செஞ்சிகிட்டே ஒங்ககிட்ட பேச முடியாது” என்று சென்றவர், சிறிது நேரத்தில் சிரித்த முகத்துடன் நம்முன் ஆஜரானார்.

“சார் நான் 10-வதுதான் படிச்சிருக்கேன். ஆட்டோ மொபைல் பத்தி நான் என்ன சொல்ல போறேன். இந்த எடத்துக்கு 15 வயசுல வேலைக்கு வந்தேன். எனக்கு இப்போ 30 வயசாகுது. 20 கடைகள் இருந்த இந்த ரோட்டுல இப்ப 2000 கடைகளுக்குமேல வந்துருச்சி. டெய்லி இங்கே 300 பேருக்கு மேல வேலைக்கு வர்றாங்க. அதுக்கு மேல 500 பசங்க சீசனுக்கு மட்டும் வந்து போறாங்க.

மழைக்காலமுன்னா வைபர், பல்ப், மிதியடி மாட்டுறதுன்னு புதுசா வேலை வரும். வெயில் காலமுன்னா கண்ணாடிக்கு சன் ஸ்கிரீன் ஒட்டுறது, ஏசி ரிப்பேர் பண்றதுன்னு சில வேலை வரும். மத்தபடி வருசம் ஃபுல்லா சின்ன சின்ன ரிப்பேர்னு வண்டிங்க வரும். பவர் லாக் வேலை செய்யல, ஸ்டீரியோ நாய்ஸ் வருது, டோர் கிரிப் இல்ல – திடீர்னு ஜாம் ஆகுதுன்னு வருவாங்க.

படிக்க:
உரலில் தலைய விட்ட கதைதான் டெய்லர் கடைகளோட நிலைமை !
♦ சுடிதார் தைக்கணுமா மேடம் ? நாள் முழுக்க ஒலிக்கும் குரல்கள் !

இங்கே பேசிக் மாடல் காருங்கதான் நெறைய வரும். மிட் ரேஞ்ச், பிரிமியம் காருங்க கொஞ்சம்தான் வரும். டாப் என்ட் காருங்கள்லாம் இந்த மார்கெட்டுக்கு வராது. அதெல்லாம் பல கோடி ரூபாய் வெலை. சின்ன ஸ்பேர் மாத்தனுமுன்னாலும் ஒரிஜினல்தான் போடுவாங்க. அங்கதான் சர்வீசும் பண்ணுவாங்க.

மெர்சிடிஸ், பென்ஸ், வால்வோ, பி.எம்.டபிள்யூ, லெக்சஸ், டெஸ்லா, இன்பினிடி, ஆடி, லேன்ட்ரோவர், ஜாகுவார்… இப்படி 50 லட்சம் முதல் 1 1/2 கோடி ரூபாய் உள்ள காருங்கல்லாம் நாங்க சாலையில பார்ப்பதோடு சரி. இங்கே வருவதெல்லாம் 5 லட்சம் முதல் 20 லட்சம் வரை உள்ள வண்டிகள் மட்டுமே.

பிலாலுதீன்

பவர் ஸ்டியரிங்க், பார்க்கிங் சென்சார், ஏர் பேக், ஆன்டி பிரேக் கிட், அல்லாய் வீல், சன் ரூப், மூன் ரூப், ரியல் ஏசி, ரிமோட் ட்ரங்க் ஓப்பனர், ரிமோட் ஃபியூல் லிட் ஓப்பனர் என்று கோடி ரூபாய் விலையுள்ள காரில் உள்ள வசதிகளை நாங்கள் 10 லட்சம் விலையுள்ள பிரிமியம் கார்களுக்கு செய்து கொடுப்போம். அவரவர் வசதியைப் பொருத்து, எக்ஸ்ட்ராவா 2 லட்சத்திலிருந்து 5 லட்சம் வரை செலவு செய்து அவங்களுக்கு விருப்பமான டாப் என்ட் கார் வசதிகளை உருவாக்கிக் கொடுப்போம். வேலையைப் பொருத்து 1 வாரம் முதல் 1 மாதம் நேரம் புடிக்கும்.

பணக்கார கல்லூரி மாணவர்கள், தங்கள் கார்களை ஸ்போர்ட்ஸ் கார்களாக மாற்றித்தரச் சொல்லி வருவார்கள். அதையும் செய்வோம். ஆல்ஃபா ரோமியோ, மார்கன் ரோட் ஸ்டாரிலிருந்து பெர்ராரி வரை… கொடுக்கும் பணத்துக்குத் தகுந்த மாதிரி ஆல்டர் செய்வோம்.

நிறைய பேர் பேசிக் மாடல்களில் பிரிமியம் வசதிகளை செய்துதரச் சொல்லிக் கேட்பார்கள். குறைந்தது 50 ரூபாயிலிருந்து 2 லட்சம் வரை செலவு செய்து அவர்கள் விருப்பப்படி மாட்டிக் கொடுப்போம்.

சாலைக்குள் நுழையும் கார்களை, தங்கள் விசிட்டிங் கார்டுகளை காண்பித்து, அன்போடு வழிமறித்து அழைத்துச் செல்லும் ‘மார்கெட்டிங் ரெப்ரெசன்டேட்டிவ்’. ஒரு கார் கிடைத்துவிட்டால், அப்போது அவர்கள் காரை அழகுபடுத்தும் கலைஞர்கள்.

ரொனால்ட் கியூட், மாருதி பிராங்கோ, ஆல்டோ, செல்ரியோ, ஹூண்டாய் டன்ரோ. இதை ரெனால்ட் கேப்டன், போர்ட் குகா, ஹோண்டா பியார், டயோட்டா குவாலிஸ், மகிந்த்ரா XUV இந்த கார்களில் உள்ள வசதிகளைக் காட்டி அதே மாதிரி கேட்பார்கள். சிலர் ஸ்டியரிங், டேஷ் போர்ட், பவர் டோர், லெக் ரூம், ஸ்டீரியோ, ஊஃபர் இவற்றில் வெரைட்டி கேட்பார்கள். 4 லட்ச ரூபாய் காரை 10 லட்சம் ரூபாய் காராக மாற்ற அதிகபட்சம் 1 லட்சம் செலவு செய்வார்கள். காரணம் கேட்டா, என் பையன் விரும்புறான், பொண்ணு விரும்புறா, என்ன செய்யிறது; செலவோடு செலவா இதையும் செய்ய வேண்டியிருக்கு என்பார்கள்.

இங்கே வரும் வாடிக்கையாளர்களில் கரைவேட்டிக் கட்டிய அரசியல்வாதிகள்தான் அதிகம். அதை விட்டா கொஞ்சம் பிசினஸ் மேன், சில உயரதிகாரிகள் வருவார்கள்” என்றார்.

கார் உரிமையாளர்.

நாம் அவரிடம் “IT ஊழியர்கள் வரமாட்டார்களா, அவர்கள்தான் அதிகம் சம்பாதிக்கிறார்களே” என்றோம்.

அதற்கு அவர், “அதெல்லாம் 5 வருசத்துக்கும் முன்னே, இப்போ புதுசா யாரும் வர்றதில்ல. அப்படியே வந்தாலும் இன்டிகேட்டர், வைபர், சீட் கவர் மாத்துறதுனு சிம்பிளா முடிச்சிட்டுப் போவாங்க. ஏன் சார்… புது கார் வாங்கலியான்னு கேட்டா, அதற்கு ஒரு சிரி சிரிப்பாங்க.

இப்படி வர்றவங்க வேலை ரொம்ப குறைஞ்சி போச்சு. சில நாளு காலை டீ, பன்னு சாப்பிடக்கூட வேலை வராது. இருந்தாலும் இந்த வேலைய விட்டு எங்கேயும் போக முடியாது. எங்களுக்கு வேற வேலை எதுவும் தெரியாது” என்றார்.

***

டிரைவர் ராமன், தாம்பரம்

கார் ஓட்டுநர் ராமன்

கால் டாக்சி டிரைவராத்தான் இந்த வண்டியை ஓட்டுறேன். 4 மணி நேரம் ஓட்டுனா 350 ரூபா கூலி கொடுப்பாங்க. எக்ஸ்ட்ரா ஹவருக்கு 70 ரூபா. அதுல சில பேருதான் சாப்பாடு, டீன்னு வாங்கிக் கொடுப்பாங்க. கால் டிரைவருன்னா திடீர் டிரைவர்தானே, நாமதான் எல்லாம் பாத்துக்கணும், அவங்க பொறுப்பு இல்ல.

டூர் சவாரி, கோயில் குளம், திருவிழா, வீட்டு விசேசம் இப்படி ஏதாவது சவாரி வந்தா கொஞ்சம் எக்ஸ்ட்ரா பணம் பார்ப்போம். மத்தபடி லோக்கல்ல ஓட்டுனா வரவுக்கும் செலவுக்கும்தான் சரியா இருக்கும். என்ன பண்றது.

***

எங்கப்பா அஜித் ரசிகர், அதான் அஜித் பேர வச்சிட்டாரு. அப்பா, அண்ணா எல்லோரும் இந்தத் தெருவுலதான் இதே வேலை செய்யிறோம்.

அஜீத்

நான் 10 வயசுலேயே இந்த வேலைக்கு வந்துட்டேன். சரியா படிக்கல. ஆனா, வேலைய நல்லா கத்துகிட்டேன். இப்போ வேலை எதுவும் இல்ல. முன்ன தினமும் 3 வண்டி வேலை பார்ப்பேன். ஒரு நாளைக்கு 1500 கூட கெடைக்கும். இன்னைக்கு காலையிலேயே வந்தேன், பகல் 12 மணியாகுது. இந்த ஒரு வேலைதான் வந்தது. 300 ரூபா கெடைக்கும். ஃபுல் சீட் கவர் மாத்தணும், சாயாங்காலம் ஆயிடும். அடுத்த வேலை எப்ப வருமுன்னு தெரியாது.

எலக்ட்ரிக், டிங்கரிங், பெயிண்டிங்க் எல்லா வேலையும் தெரியும், எனக்கே இதுதான் நிலைமை.

***

கார் கண்ணாடிகளுக்கு சன் கன்ட்ரோல் பிலிம் ஒட்டும் தொழிலாளி.
சன் கன்ட்ரோல் பிலிம் ஒட்டும் தொழிலாளியின் தற்காலிக நடைபாதைக் கடை.
எட்டு, பத்து வருடங்களுக்கு முன்பு, கூட்ட நெரிசலில் திணறிய ஜி.பி சாலை தற்போது வெறிச்சோடிக் கிடக்கிறது.

மேலும் படங்கள் :

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

– வினவு புகைப்படச் செய்தியாளர்கள்

இந்த மனிதனின் வியப்பூட்டும் வாழ்க்கைக் கதை என்னை ஒரேயடியாக ஆட்கொண்டு விட்டது

உண்மை மனிதனின் கதை | ஆசிரியரின் பின்னுரை – 02

னால் அவனது பொய்க் கால்களில் இராணுவப் பாங்கான பூட்சுகள் லாவகமாக அணிவிக்கப்பட்டுத் தரையில் கிடந்தன. அவற்றின் கீழ் முனைகள் படுக்கைக்கு அடியிலிருந்து துருத்திக் கொண்டிருந்தன. அங்கே ஒளிர்ந்திருக்கும் ஒரு மனிதனுடைய கால்கள் போல் காணப்பட்டன அவை. அந்தக் கணத்தில் என்னுடைய பார்வை குழப்பமடைந்ததாகத் தென்பட்டது போலும். ஏனெனில் விமானி என்னைப் பார்த்து, தந்திரமும் மனநிறைவும் ததும்பும் புன்னகையுடன் கேட்டான்:

“நீங்கள் இதை முன்பு கவனிக்கவில்லையா என்ன?”

“இப்படி இருக்கும் என்ற எண்ணமே எனக்கு உண்டாகவில்லை.”

“ரொம்ப நல்லது! இதற்காக நன்றி! உங்களுக்கு ஒருவரும் இதைப் பற்றிச் சொல்லாததுதான் எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. எங்கள் ரெஜிமென்டில் எத்தனை தேர்ந்த விமானிகள் இருக்கிறார்களோ அத்தனை தம்பட்டமடிப்போரும் இருக்கிறார்கள். ஒரு புதிய ஆளிடம், அதுவும் “பிராவ்தா” செய்தித் தாளிலிருந்து வந்திருப்பவரிடம் இத்தகைய அபூர்வத்தைப் பற்றிப் பெருமையடித்துக் கொள்ளாமல் எப்படி விட்டுவிட்டார்கள்?”

“ஆனால் இது கண்டறியாத சேதியாயிற்றே. கால்கள் இல்லாமல் சண்டை விமானத்தைச் செலுத்துவதும் போரிடுவதும் நம்பவே முடியாத அருஞ்செயல் அல்லவா! விமானப் படை வரலாறு இம்மாதிரி நிகழ்ச்சியை இதுவரை அறிந்ததே இல்லையே.”

விமானி களிப்புடன் சீழ்க்கை அடித்தான்.

“விமானப் படை வரலாறு ஒன்றாவது! அது எத்தனையோ விஷயங்களை அறியவில்லை, இந்தப் போரில் சோவியத் விமானிகளிடமிருந்து தெரிந்து கொண்டது. தவிர இதிலே என்ன நலம் இருக்கிறது? மெய்யாகச் சொல்லுகிறேன், நம்புங்கள்: இந்தப் பொய்க்கால்களோடு இன்றி நிஜக் கால்களுடன் எனக்கு விமானம் ஓட்டுவதே எனக்கு எவ்வளவோ அதிக மனநிறைவு அளித்திருக்கும். ஆனால் என்ன செய்வது? நிலைமைகள் அப்படி வந்து சேர்ந்துகொண்டனவே” என்று விமானி பெருமூச்சு விட்டான். “ஆனால் ஒன்று. சரியாகச் சொல்வதானால் இத்தகைய உதாரணங்களை விமானப்படை வரலாறு முன்பே அறிந்திருக்கிறது” என்றான்.

விமானி கைபெட்டிக்குள் தேடி ஏதோ ஒரு பத்திரிக்கைத் துணுக்கை அதற்குள்ளிருந்து எடுத்தான். அது ஒரேடியாக நைந்து மடிப்புகளில் விட்டுப் போய் ஸெல்லோ பேன் காகிதத்தில் ஜாக்கிரதையாக ஒட்டப்பட்டிருந்தது. ஒரு பாதம் இல்லாமல் விமானம் ஓட்டிய ஒரு விமானியைப் பற்றி அதில் வருணிக்கப்பட்டிருந்தது.

“என்னவாயினும் அந்த விமானியின் ஒரு கால்தான் ஊனமாயிருந்ததே. தவிர அவன் ஓட்டியது சண்டை விமானம் அல்ல, ஏதோ பழங்கால ‘பர்மான்’ விமானம் தானே.”

“ஆனால் நான் சோவியத் விமானி என்பதை மறந்து விட்டீர்களே. நான் பெருமையடித்துக் கொள்கிறேன் என்று நினைக்காதீர்கள். இவை என் சொற்கள் அல்ல. இவற்றை ஒரு காலத்தில் என்னிடம் சொன்னவர் நல்ல, உண்மையான மனிதர்” (’உண்மையான’ என்ற சொல்லை அவன் சிறப்பாக அழுத்தினான்). “அவர் இப்போது காலமாகி விட்டார்.”

விமானியின் துடியான அகன்ற முகத்தில் அன்பு கனிந்த சோகம் பரவியது. விழிகள் பரிவுடன் தெளிந்த ஒளி வீசின. முகம் திடீரெனப் பத்து வயசு அதிக இளமை அடைந்து, சிறுவனது போல ஆயிற்று. ஒரு நிமிடம் முன்பு நடுவயதினனாகத் தோற்றமளித்த அவனுக்கு உண்மையில் வயது இருபத்திரண்டு, இருபத்து மூன்றுக்கு மேல் இராது என நான் உணர்ந்தேன்.

“என்ன, எப்பொழுது, எங்கே என்று யாரேனும் கேட்கத் தொடங்கும் போது சாதாரணமாக என்னால் சகிக்க முடிவதில்லை….. ஆனால் இப்போது எல்லாம் சட்டென நினைவுக்கு வந்துவிட்டன… நீங்கள் இங்கே வெளி ஆள். நாளையே நாம் பிரிந்திடுவோம், அப்புறம் சந்திப்பது சந்தேகந்தான்…. என் கால்கள் பற்றிய கதையைச் சொல்லுகிறேன், கேட்கிறீர்களா?” என்றான் விமானி.

அவன் படுக்கையில் உட்கார்ந்து, கம்பளியை மோவாய் வரை இழுத்துப் போர்த்துக் கொண்டு கதை சொல்லலானான். உடனிருப்பவனை அறவே மறந்து தனக்குத்தானே பேசிக் கொள்பவன் போலச் சொல்லிக் கொண்டு போனான் அவன். எனினும் சுவையாக, விளக்கமாக விவரித்தான். அவனுக்கு நுண் மதியும் தெளிவான நினைவாற்றலும் நல்ல, பெரிய இருதயமும் இருப்பதை உணர முடிந்தது. நான் கேட்பது முக்கியமானது, அபூர்வமானது, அப்புறம் இதை மறுபடி ஒருபோதும் தெரிந்து கொள்ள முடியாது என்பதைச் சட்டெனப் புரிந்து கொண்டேன்.

“மூன்றாவது ஸ்குவாட்ரனின் போர்ப்பறப்புகள் பற்றிய நாட்குறிப்பு” என்ற தலைப்புடன் மேஜைமேல் கிடந்தது ஒரு நோட்டுப் பத்தகம். அதை எடுத்துக் கொண்டு விமானியின் கதையை அதில் குறித்துக் கொள்ளலானேன்.

இந்த மனிதனின் வியப்பூட்டும் வாழ்க்கைக் கதை என்னை ஒரேயடியாக ஆட்கொண்டுவிட்டது. எனவே முடிந்தவரை விரிவாகவே அதைக் குறித்துக் கொள்ள முயன்றேன். ஒரு நோட்டுப் புத்தகத்தை எழுதி முடித்த பின் இன்னொரு நோட்டுப் புத்தகத்தைத் தேடி எடுத்து அதையும் எழுதி நிறைத்தேன். நிலவறையின் குறுகிய வாயிலுக்கு வெளியே வானம் வெளுக்கத் தொடங்கியதை நான் கவனிக்கவே இல்லை. “ரிஹ்த்கோபென்” விமான டிவிஷனைச் சேர்ந்த மூன்று ஜெர்மன் விமானங்களை வீழ்த்திய பின், தான் முழு மதிப்புள்ள விமானி என மீண்டும் உணர்ந்த நாள் வரை தன் கதையைச் சொல்லி முடித்தான் அலெக்ஸேய் மெரேஸ்யெவ்.

“அட, நாம் வேகுநேரம் அரட்டையடித்துக் கொண்டிருந்து விட்டோம். எனக்கு நாளைக்குக் காலையிலிருந்து பறப்பு நடத்தியாக வேண்டும்” என்று ஒரு வாக்கியத்தை அரைகுறையாக நிறுத்திவிட்டு அவன் கூறினான். “பேசித் துளைத்துவிட்டேன் அல்லவா நான் உங்களை! மன்னித்துக் கொள்ளுங்கள். இப்போது உறங்குவோம்” என்றான்.

”ஓல்கா விஷயம் என்ன ஆயிற்று? அவள் உங்களுக்கு என்ன பதில் எழுதினாள்?” என்று கேட்டுவிட்டு உடனே நினைவுபடுத்திக் கொண்டு “ஆனால் இந்தக் கேள்வி உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம் அப்படியானால் பதில் சொல்ல வேண்டாம்” என்றேன். “பிடிக்காதிருப்பானேன்?” என்று அவன் புன்னகை செய்தான். “ஓல்காவும் நானும் பெரிய விசித்திர பேர்வழிகள். கேளுங்கள். அவளுக்கு ஆரம்பத்திலிருந்தே எல்லாம் தெரிந்திருக்கிறது. என் நண்பன் அந்திரெய் தெக்தியாரென்கோ உடனேயே அவளுக்கு எழுதிவிட்டானாம் – முதலில் விபத்தைப் பற்றியும் அப்புறம் என் கால்கள் வெட்டி அகற்றப்பட்டதைப் பற்றியும். நான் இதை எதனாலோ மறைக்கிறேன் என்பதைக் கண்டு இதைப் பற்றிச் சொல்வது எனக்குக் கஷ்டமாயிருக்கிறது என்று புரிந்து கொண்டாள். ஆகவே ஒன்றும் அறியாதவள் போல நடித்து வந்தாள். இப்படியாக நாங்கள் ஒருவரை ஒருவர் ஏமாற்றி வந்திருக்கிறோம், எதற்காகவோ தெரியவில்லை. அவளைப் பார்க்க விரும்புகிறீர்களா?”

விளக்குத் திரியைப் பெரிதாக்கி, அதைப் படுக்கைத் தலைமாட்டில் தொங்கிய நிழல் படங்களின் பக்கத்தில் கொண்டு போனான். அவற்றில் ஒரு படம் தேர்ச்சியற்ற போழுது போக்குப் படப்பிடிப்பாளனால் எடுக்கப்பட்டது. அது அனேகமாக முழுவதும் மங்கித் தேய்ந்து போயிருந்தது. கோடைகாலப் புல் தரையில் பூக்கள் நடுவே கவலையின்றி முறுவலித்துக் கொண்டிருந்த பெண்ணின் வடிவத்தை அந்தப் படத்தில் காண்பது கடினமாக இருந்தது. இன்னொரு படத்தில் ஜூனியர் லெப்டினன்ட் எஞ்சினீயரின் சீருடை அணிந்து அதே மங்கை காணப்பட்டாள். அவளுடைய அறிவு படர்ந்த மெலிந்த முகத்தில் ஒரு முனைப்பாடும் கண்டிப்பும் தென்பட்டன. அவள் மிகச் சிறியவளாக இருந்தமையால் இராணுவச் சீருடை அணிந்த அழகிய பதினாறு வயதுப் பையன் போல் காணப்பட்டாள். ஒரே வித்தியாசம் என்னவென்றால், இந்தப் பையனின் கண்களில் களைப்பும் பிள்ளைத்தனத்துக்கும் மாறாக கூர்ந்த பார்வையும் இருந்ததுதான்.

”உங்களுக்கு இவளைப் பிடித்திருக்கிறதா?” –

“ஆமாம்” என்று மனப் பூர்வமாகச் சொன்னேன்.

“எனக்குந்தான்” என்று நல்லியல்புடன் புன்னகை செய்தான் விமானி.

“ஸ்த்ருச்கோவோ? இப்போது எங்கே இருக்கிறான் அவன்?”

“எனக்குத் தெரியாது. போன குளிர் காலத்தில் விலீக்கியெ லூக்கி என்னும் இடத்திலிருந்து அவனுடைய கடிதம் கிடைத்தது.

“டாங்கி வீரன்……. அவன் பெயர் என்ன?..”

“கிரிகோரிய் க்வோஸ்தியேவா? அவன் இப்போது மேஜர். ப்ரோஹவ்க்கா என்னும் இடத்திற்கு அருகே நடந்த புகழ்பெற்ற போரிலும் அப்புறம் இங்கே, கூர்ஸ்க்ப் பிரதேசத்தில் டாங்கிப் படைகளை பிளந்து ஊடுருவவும் நடவடிக்கைகளிலும் அவன் கலந்து கொண்டான். அக்கம் பக்கத்தில் போரிடுகிறோம், ஆனால் ஒருவரையொருவர் சந்திக்கவில்லை. அவன் டாங்கி ரெஜிமெண்ட் கமாண்டர். இப்போது ஏனோ பேசாதிருக்கிறான். அதனால் பரவாயில்லை. கட்டாயம் சந்திப்போம், உயிரோடிருப்போம். நாம் வாழ வேண்டாமா, ஊம்?…. நல்லது, தூங்குவோம், தூங்குவோம். விடிந்துவிட்டது.”

விளக்கை ஊதி அணைத்தான். அரையிருள் சூழ்ந்தது. மங்கிய புலல்போதின் வெளிச்சம் அதைக் கொஞ்சங் கொஞ்சமாகக் குறைக்க தொடங்கிற்று. கொசுக்கள் ரீங்காரம் செய்தன. இந்த அருமையான காட்டு இருப்பிடத்தில் இருந்த ஒரே அசௌகரியம் கொசுக்கள் தாம்.

“உங்களைப் பற்றிப் ‘பிராவ்தா’வில் எழுத மிகவும் விரும்புகிறேன்” என்றேன்.

“அதற்கென்ன , எழுதுங்களேன்” என்று விசேஷ உற்சாகமின்றி இசைந்தான் விமானி. நிமிட நேரத்திற்கெல்லாம் தூக்கக் குரலில் சொன்னான்: “அல்லது ஒரு வேளை வேண்டாமோ? ஹிட்லரின் பிரசார மந்திரி கோயபல்ஸ் கையில் கிடைக்கும், அவன் பிரமாதமாகக் கதை அளக்கத் தொடங்கி விடுவான் – ருஷ்யப் படைகளில் கால்களற்றவர்கள் கூடப் போராடுகிறார்கள், அப்படி இப்படி என்று…… பாசிஸ்டுகள் இப்படிப் கயிறு திரிப்பதில் படு சூரர்கள் ஆயிற்றே.”

மறு நொடியிலேயே அவன் ரசமாய்க் குறட்டை விடத் தொடங்கிவிட்டான். எனக்கோ தூக்கம் வரவில்லை. எதிர்பாராத இந்தச் சுயசரிதை தனது எளிமையாலும் மாண்பாலும் என்னைப் பரவசப்படுத்திவிட்டது. இதன் கதாநாயகன் தானே அருகில் படுத்துறங்கினான், பனித்துளிகள் படிந்தப் பொய்க்கால்கள் புலரத் தொடங்கியிருந்த பகலின் வெள்ளொளியில் துலக்கமாகத் தென்பட்டவாறு தரையில் கிடந்தன. இல்லாவிட்டால் நான் கேட்பது எல்லாம் நல்ல கட்டுக்கதை என எனக்குத் தோன்றியிருக்கும்……..

அதன் பிறகு நான் அலெக்ஸேய் மெரேஸ்யெவைச் சந்திக்கவில்லை. ஆனால் அர்யோல் நகருக்கு அருகிலேயே இந்த விமானியின் அசாதாரணமான கதையை நான் குறித்துக் கொண்டிருந்த இரண்டு நோட்டுப் புத்தகங்களை போர்க் காலத்தில் செல்ல நேர்ந்த இடங்களுக்கெல்லாம் உடன் கொண்டு சென்றேன். சண்டை நடந்து கொண்டிருக்கையிலும், பின்னர் நாஜிகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் சுற்றித் திரிந்த போதும் அவனைப் பற்றி ஒரு கட்டுரை எழுத நான் எத்தனையோ தடவை முயன்றேன். ஆனால் ஒவ்வொரு முறையும் நான் எழுதியது அவனுடைய வாழ்க்கையின் வண்ணமற்ற வெறும் நிழலாகவே எனக்குப்பட்டது. எனவே அப்புறம் பார்க்கலாம் என்று இருந்து விட்டேன்.

படிக்க :
மேட்டுப்பாளையம் : இது தீண்டாமைச் சுவர் இல்லை என்றால் வேறு எதுதான் தீண்டாமைச் சுவர் ?
திரைமறைவு தரகு வேலை செய்யும் துக்ளக் குருமூர்த்தியைக் கைது செய் ! வழக்கறிஞர்கள் புகார்

கடைசியாக நியூரம்பெர்கில் நடந்த சர்வதேச இராணுவ விசாரணை மன்றத்தின் அமர்வுகளில் நான் உடனிருந்தேன். கெர்மன் கோயெரிங்கின் விசாரணை முடிவை நெருங்கிக் கொண்டிருந்தது. “ஜெர்மனியின் இரண்டாவது நாஜி” கோயெரிங் எழுத்து மூலமான சாட்சியங்களின் கனத்தைத் தாள மாட்டாமல் பேசத் தொடங்கினான். சோவியத் வழக்குரைஞரின் கேள்விகள் அவனைத் திக்கு முக்காட வைத்தன. அதுவரை தோல்வியை அறியாத பாசிச அரக்கச் சைனியம், சோவியத் நாட்டின் எல்லையற்ற அகல் பரப்பில் சோவியத் சைனியத்தின் தாக்குதல்களால் எப்படிக் கொஞ்சங் கொஞ்சமாகக் கரைந்து தகர்ந்து சிதறிப் போயிற்று என்பதை அவன் விருப்பமின்றியே, பற்களைக் கடித்துக் கொண்டு விசாரணை மன்றத்துக்கு விவரித்தான். தனது கட்சியை நியாயப்படுத்துவதற்காக கோயெரிங்க் மங்கியவிழிகளை வானை நோக்கி நிமிர்ந்து விழிகளை வானை நோக்கி நிமிர்ந்து, “ஆண்டவன் சித்தம் அவ்வாறு இருந்தது” என்றான்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

வெங்காயம் சாப்பிட்டால் பார்ப்பனர்கள் செத்துப் போவார்களா ? மனுஸ்மிருதி என்ன சொல்கிறது ?

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு நானும் எனது நண்பரும் திருச்சியில் இருந்த போது இரவு சிற்றுண்டிக்காக ஒரே உணவகத்திற்குச் (வீட்டு மெஸ்) செல்வது வழக்கம். ”என்னங்க தினமும் சாம்பாரில் கத்தரிக்காயை போடுகிறீர்கள்? வேறு காய்கறியே கிடையாதா?” என்று கேட்ட போது ”கத்தரிக்காய் இல்லாமல் எப்படி சாம்பார் வைக்க முடியும்?” என எதிர் கேள்வி போட்டார். அது போல வெங்காயம் இல்லாமல் சமையலா என்பதுதான் இன்று நமது இல்லத்தரசிகளின் கேள்வி.

திருச்சி ஓட்டல்களில் பரங்கியோ, பூசணியோ இல்லாத சாம்பாரைப் பார்ப்பது அரிது. கத்தரிக்காயை கரப்பான் என்கின்றனர் ஒரு சாரார். ஆனால் அது சர்வரோக நிவாரணி என்கின்றனர் மற்றொரு சாரார். அது கரப்பானோ இல்லை சர்வரோக நிவாரணியோ, எதுவாக இருந்தால் நமக்கென்ன? ருசிக்கிறதா, உடலுக்கு ஒத்துக் கொள்கிறதா, அணைகட்டி அமுக்குவதுதான் நமக்குத் தெரிந்த உண்மை.

திருச்சியின் மற்றுமொரு சுவாரசியமான உணவு வெங்காய சமோசா. சமோசா என்றாலே உள்ளே உருளைக் கிழங்கு இருக்கும். ஆனால் திருச்சி சமோசாவை உரித்துப் பார்த்தால் வெங்காயம் மட்டுமே இருக்கும். மாலை நேரங்களில் சந்துக்கு சந்து தள்ளுவண்டிகளில் இந்த மொறு மொறு வெங்காய சமோசா சக்கை போடு போடும். ருசி இல்லாமல் சக்கை போடு போட முடியுமா என்ன?

பக்கோடா வகையறாக்களிலேயே ஆகச் சிறந்தது எது என்றால் அது வெங்காய பக்கோடாதான். நீளவாக்கில் உதிரி உதிரியாக வெங்காயத்தை நறுக்கி மாவில் தோய்த்து எண்ணெய்யில் போட்டு மொறு மொறு என வறுத்து எடுத்தால் அடுத்த நொடியே அனைத்தும் காலியாகும். இதுதான் வெங்காய பக்கோடாவின் சிறப்பு. மோடி சொன்னது போல ஒரு வேளை பட்டதாரிகள் பக்கோடா போட்டால் அதில் கண்டிப்பாக வெங்காய பக்கோடா இருந்தால் நீங்கள் மோடியைக் காப்பாற்ற முடியும்.

பூண்டுக் குழம்பையும், பூண்டு ஊறுகாயையும் சுவைத்தவர்களுக்குத் தெரியும் அவற்றை நினைத்தாலே பாவ்லோவின் கட்டுப்படுத்தப்படாத அனிச்சைச் செயலாய் நாவில் எச்சில் ஊறும் என்பது. வெங்காய தயிர் பச்சடி மட்டும் இருந்தால் போதும் ஒரு கிலோ பிரியாணியும் கண் இமைக்கும் நேரத்தில் காணாமல் போகும்.

இரத்தக் கொழுப்பை சீராக வைத்துக் கொள்ளவும், இதயம் என்றும் பழுதின்றி இயங்கவும், பூண்டு மற்றும் வெங்காயம் மிகவும் அவசியம்; பூண்டையும் வெங்காயத்தையும் ஒதுக்காமல் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள், இதயம் சம்மந்தப்பட்ட பிரச்னைகளுக்கு குட் பை சொல்லுங்கள் என்கின்றனர் அன்றைய சித்தர்கள் முதல் இன்றைய அலோபதி மருத்துவர்கள் வரை.

மூக்கிலிருந்து பொலபொலவென எரிச்சலோடு நீர் கொட்டுகிறதா? அடிக்கடி சளி தும்மல் பிரச்சனையா? அல்லியம் சிபா மூன்று உருண்டைகளை வாயில் போட்டுப்பாருங்கள். சற்று நேரத்தில் இவை எல்லாம் காணாமல் போகும். கையில் கைக்குட்டையும் தேவைப்படாது. அல்லியம் சிபா வெங்காயச் சாற்றிலிருந்து தயாரிக்கப்படும் ஹோமியோபதி மருந்து.

இப்படி உலகமே கொண்டாடும் வெங்காயத்தை “நான் வெங்காயம் சாப்பிடுவதில்லை; அதனால் விலை உயர்வு ஒரு பொருட்டே இல்லை. நான் பூண்டு, வெங்காயம் சாப்பிடாத குடும்பத்திலிருந்து வந்தவள்“ என்கிறார் நிர்மலா சீதாராமன்.

உடல் ஏற்றுக் கொள்கிறதா, ருசி பிடிக்கிறதா என்பதைப் பொருத்து ஒரு பொருளை ஒருவர் விரும்பி உண்பதும், வெறுத்து ஒதுக்குவதும் அவரவரவர் தனிப்பட்ட உரிமை. அதில் தலையிட வேறு யாருக்கும் அதிகாரம் கிடையாது. இதைத்தான் சாப்பிட வேண்டும்; இதைச் சாப்பிடக் கூடாது என யாரும் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது.

ஆனால், “நானோ எனது குடும்பமோ வெங்காயம் சாப்பிடுவதில்லை” என்று நிர்மலா சீதாராமன்  சொல்வதன் பொருள் என்ன? வெங்காயம் சாப்பிடுபவன் இழிவானவன். சாப்பிடாத நாங்கள் உயர்வானவர்கள். அதனால்தான் அவரது பேச்சில் ஆணவம் தொனிக்கிறது. தான் விரும்பாத ஒரு பொருளை மற்றொருவர் சாப்பிடும் போது அவரை ஏளமாகப் பார்க்கும் பார்ப்பனியப் பார்வையின் வெளிப்பாடு இது.

தனிப்பட்ட முறையில் அவருக்கு வெங்காயத்தின் ருசி பிடிக்கவில்லை, உடலுக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்றால் அவரது கூற்றை ஏற்கலாம். ஏன் அவரது குடும்பமே பூண்டு, வெங்காயத்தை சாப்பிடுவதில்லை? அந்தக் குடும்பத்தில் ஒருவருக்குக்கூடவா பூண்டு, வெங்காய ருசி பிடிக்கவில்லை அல்லது உடலுக்கு ஒத்துக் கொள்ளவில்லை?

“இதுவரை வெங்காயத்தின் ருசியையே பார்த்ததில்லை, வெங்காயம் பயன்படுத்தாத எனக்கு அதன் விலையைப் பற்றி எப்படித் தெரியும்?” என நிர்மலாவுக்கு ஆதரவாக ஜால்ரா அடித்துள்ளார் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஷ்வினி சௌபே. நிர்மலா சீதாராமன் ஒரு பார்ப்பனர் என்பது ஊரறிந்த ஒன்று. கன்யாகுப்ஜ பார்ப்பனர்களில் பத்து பிரிவுகள் உண்டு. அதில் ஒரு பிரிவுதான் சௌபே பார்ப்பனர்கள். இந்த இருவரின் கூற்றிலிருந்து தெரிவது என்ன? பார்ப்பனர்கள் வெங்காயம், பூண்டு சாப்பிடுவதில்லை என்பதுதான்.

நிர்மலாவின் ஆணவப் பேச்சுக்கு நெட்டிசன்கள் அவரைத் திட்டித் தீர்க்கின்றனர். ஆனால் இது பற்றி நிர்மலா கவலைப்படப் போவதில்லை. காரணம் அவர் ஒரு சனாதனி. சனாதன தர்மத்தை கடைபிடிப்பவர்கள் வெங்காயம் பூண்டு சாப்பிடக் கூடாது என்கிறது பார்ப்பன இந்து மத சாஸ்திரங்கள்.

படிக்க:
நிர்மலா சீதாராமன் வெங்காயம் சாப்பிட மாட்டாராம் ! இதுல என்ன பெருமை … எருமை ?
ஹைதராபாத் என்கவுண்டர் : எங்கள் பெயரில் கொட்டடிக் கொலைகள் கூடாது | AIPWA கண்டனம் !

வெங்காயம், பூண்டு தவிர்க்கப்பட வேண்டிய உணவுகள் என சிவ புராணம் (7.10.12) கூறுகிறது. தர்ம நெறிகளைக் கடைபிடிப்பவர்கள் வெங்காயம், பூண்டைத் தவிர்க்க வேண்டும் என பத்ம புராணம் (4.56), ஹரி பக்தி விலாஸம் (8.158) ஆகிய வேத சாஸ்திரங்கள் தெளிவாக உரைக்கின்றன. வெங்காயம், பூண்டு உண்பவர்கள் பரிகாரம் மேற்கொள்ள வேண்டும் என்று கருட புராணம் (1.96.72) கூறுகிறது.

மீறி சாப்பிட்டால் என்னவாகும்? வேதம் ஓதாத பார்ப்பானும், ஆசாரத்தை கைவிடும் பார்ப்பானும், பூஜை காரியங்களை கைவிடும் பார்ப்பானும், சாப்பிடத்தகாததை சாப்பிடும் பார்ப்பானும் செத்துத் தொலைவார்கள் என்கிறது பார்ப்பன இந்து மதத்தின் சட்ட நூலான மனு தரும சாஸ்திரம். (மனு:5-4)

வெங்காயம், பூண்டு இவைகளைப் பார்ப்பனர்கள் சாப்பிடக் கூடாது. மீறி சாப்பிட்டால், சாப்பிட்ட உடனே கெட்ட சாதி ஆகிவிடுகிறார்கள். (out caste). (மனு: 5-5, 6). அதாவது வெங்காயம், பூண்டு சாப்பிடும் பார்ப்பனர்கள், பார்ப்பனத் தன்மையை இழந்து விடுகிறார்கள். பார்ப்பனத் தன்மையை இழப்பதும் செத்துப் போவதும் ஒன்றுதானே! இரண்டாயிரம் ஆண்டுகள் ஆனாலும் அவர்கள் தங்களது தருமத்தை அதாவது பார்ப்பனியத்தைக் காப்பதில் தெளிவாகத்தான் இருக்கின்றனர். அதனால்தான் வெங்காய விலை அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே இல்லை.

ஊரான்