இலக்கியம் கற்றுக்கொள்ள இலக்கிய நூல்கள் மட்டும் போதுமா ? || பாவெல் சக்தி
அவர் கூறியதை கொஞ்சம் விரிவுபடுத்தினால், அவர்கள் கலை கலைக்காக என்ற போக்குடையவர்களாக மட்டுமல்ல, கலை இலக்கியம் யாவும் மக்களுக்காக என்ற கோட்பாட்டின் எதிரிகளாவும் இருக்கின்றனர் என்பதையும் நாம் காணமுடியும்.
1. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை
நூல் விமர்சனம் : ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள் || ஸ்டீபன் ஹாக்கிங் || ராஜசங்கீதன்
புத்தகச் சந்தை என்பதால் மீண்டும் ஒரு புத்தகத் தொடர் : வாசிப்பில் முதல் புத்தகம், ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள். ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய புத்தகத்தின் மொழிபெயர்ப்பு.
பிரபஞ்ச உருவாக்கம், உலகம் தோன்றியது, மனித இனத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும், ஏலியன்கள் உண்மையா முதலிய அறிவியல் விஷயங்களை உங்களுக்கு நெருக்கமான ஒருவர் சிக்கலற்ற வார்த்தைகளில் சொன்னால் எப்படி இருக்கும்? அறிவியலே அலாதி என்றால் அதை எளிமையாகச் சொல்வது பேரலாதிதான். ஸ்டீபன் ஹாக்கிங் அந்த ரகத்தைச் சேர்ந்தவர்.
‘என்னை ஒரு சிறு பழக்கொட்டையின் ஓட்டுக்குள் அடைத்து வைத்தாலும், பிரபஞ்ச வெளியின் சக்கரவர்த்தியாகவே என்னை நான் கருதிக் கொள்ளுவேன்’ என்ற ஷேக்ஸ்பியரின் சொல்லாடலைக் கொண்டு மனிதனின் பண்பை விளக்கத் தொடங்குகிறார்.
படிக்க :
♦ நூல் விமர்சனம் : வண்ணத்துப்பூச்சிகளின் விடுதி || நக்கீரன்
♦ நூல் அறிமுகம் : மதரிங் எ முஸ்லிம் || MOTHERING A MUSLIM – NAZIA ERUM || இ.பா. சிந்தன்
‘ஒளிக்கற்றையின் மேலமர்ந்து பயணிக்கும் கனவை’க் கொண்ட ஐன்ஸ்டீனைக் கொண்டு காலத்தை விளக்குகிறார். ஹாக்கிங்தான் ஜாலி பேர்வழி என்றால் ஐன்ஸ்டீன் எப்படியானவர் தெரியுமா?
‘ஒளியைவிட வேகமாகப் பயணித்த
ஒய்யாரப் பெண்ணொருத்தி இருந்தாள்
ஓரிடத்திற்குப் புறப்பட்டாள் இன்று
ஒயிலாய் அங்குச் சென்றடைந்தாள் நேற்று’
எனக் காலப்பயணத்தை விளக்கக் கவிதை சொல்லி இருக்கிறார் ஐன்ஸ்டீன்.
மனித குலத்துக்கு பெரும் பிரச்சினையாக காலநிலை மாற்றம் இருக்கும் என்கிறார் ஹாக்கிங். செயற்கை நுண்ணறிவு (AI) பெரும் சவாலாக மனித குல எதிர்காலத்துக்கு இருக்கும் எனவும் கணிக்கிறார். செயற்கை நுண்ணறிவு என்றதும் டெர்மினேட்டர் பட அளவுக்கு யோசிக்க வேண்டாம். இப்போதே மனித உழைப்புக்கு பதிலாக automation-க்கு நிறுவனங்கள் நகர்ந்து நம் பொருளாதாரம் கேள்விக்குறி ஆவது ஒரு வகை செயற்கை நுண்ணறிவு ஆதிக்கம்தான்.
ஹைலைட்டாக கடவுளையும் காலத்தையும் (Time) வைத்து ஒரு விஷயம் சொல்கிறார். ‘பெருவெடிப்பிலிருந்துதான் (Big Bang) காலம் (Time) உருவானது. எனவே பெருவெடிப்புக்கு முன் எதுவும் இருந்திருக்காது’ என சொல்லிவிட்டு கடவுள் பற்றிய கேள்விக்கு நம்மூர் சுஜாதா பாணியில் ஒரு கூட்டு வைக்கிறார் மனுஷன்:
“பெருவெடிப்புக்கு முன் கடவுளுக்கான வாய்ப்பே இல்லை. ஏனெனில் அப்போது பிரபஞ்சத்தை உருவாக்கக் கடவுளுக்கு நேரம் (Time) இருந்திருக்காது!”
சரி, இன்றைய தலைமுறை பற்றி என்ன சொல்கிறார் ஹாக்கிங்?
மனிதப் பரிணாம வளர்ச்சிக்கு தகவல்தான் அடிப்படை. குகை ஓவியம் தொடங்கி, மொழி உருவாகி, எழுத்து ஆகி, ஏடாகி, இலக்கியமாகி, வரலாறாகிதான் இன்று வரை மொத்த மனித குலத்தையும் கட்டி கட்டுக்கோப்பாக சமூகம் ஆக்கி வைத்திருக்கிறது. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தகவல், அதன் முக்கியத்துவத்தை இழந்தால் மனிதப் பரிணாமத்துக்கு என்ன ஆகும்?
படிக்க :
♦ மனித குல சேவையில் கியூப மருத்துவ அறிவியல் !
♦ கொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்
அதுதான் தற்போதைய தலைமுறையில் நேர்வதாக சொல்கிறார் ஹாக்கிங். தொழில்நுட்ப வளர்ச்சியாலும் சமூக தளங்கள் மற்றும் லாபவெறியாலும் எந்த காலத்திலும் இல்லாத அளவுக்கு இன்று தகவல் நிறைந்து கிடக்கிறது. சொல்லப் போனால் மொத்த மனித இனமும் இதுவரை எழுதியவற்றைத் தாண்டி இந்த ஒரு தலைமுறை தகவல்களை எழுதியிருக்கிறது. இவை எல்லாவற்றையும் அவசியம் பாராமல் நுகரும் இன்றையத் தலைமுறையினனுக்கு தகவலின் முக்கியத்துவம் குறைந்து படைப்பாற்றல் தக்கையாகி மனிதப் பரிணாம உருவாக்கத்துக்கு காரணமாக இருந்தப் போக்கு தலைகீழாய்த் திரும்பிவிடுமோ என்ற ஐயத்தை உருவாக்குகிறார் ஹாக்கிங். நமக்கும் இருக்கும் அதே ஐயம்.
என்னவொரு சிக்கல் என்றால், நாம் ரசிக்கும் விஞ்ஞானி என்றாலும் சோவியத்தை காரணமின்றி விமர்சிக்கும்போதுதான் கொண்டை படாரென தெரிந்து விடுகிறது. மேலும் interstellar-ல் நாசூக்காக சொல்லப்பட்ட ‘பூமியை கைவிட்டு வேறுலகுக்கு சென்று தப்பிக்க வேண்டும்’ என்கிற விஷயத்தை, பட்டவர்த்தனமாக விண்வெளியை colonize செய்ய வேண்டுமென காலனியாதிக்கத்துக்கு நியாயம் வேறு கற்பிக்கிறார்.
மேற்குறிப்பிட்ட conditions applyகளுடன் படிக்க வேண்டிய புத்தகம் இது. கருந்துளைகளும் குவாண்டம்களும் ஏலியன்களும் காலமும் ஆடும் விஞ்ஞானக் களியாட்டத்தை எளிமையாக விளக்கும் நூல். படித்து விடுங்கள்.
வெளியீடு : மஞ்சுள் பதிப்பகம்
விலை : ரூ. 325
முகநூலில் : ராஜசங்கீதன்
புலிகள் காப்பகம் எனும் பெயரில் முடக்கப்படும் பர்கூர் மலைப்பகுதி மக்கள் !
சிறை பிடிக்கப்பட்டதுபோல் நகர முடியாமல் முடங்கிக் கிடக்கிறது 85 பழங்குடி மற்றும் 120-க்கும் மேற்பட்ட வனக்குடி கிராமங்கள். நீதிமன்றத்தின் உத்தரவால் கிட்டத்தட்ட 1 இலட்சம் மக்களின் வாழ்க்கை ஸ்தம்பித்து போய்விட்டது. வாழ்க்கை பறிபோய்க் கொண்டிருப்பதை தடுக்க கிட்டத்தட்ட ஒரு மாத காலமாகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள் மக்கள். அவர்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டியத் தமிழ்ச்சமூகம் தூங்கிகொண்டிருக்கிறது.
சத்தியமங்கலம் வழியாக பெங்களூரு செல்லும் திம்மம் சாலையை வன விலங்குகள் பாதிக்கப்படுகின்றன என்று சொல்லி மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரைக்கும் வாகனங்கள் செல்லக்கூடாதென முடக்கியதால்தான் இவ்வளவு விபரீதமும். இந்த வழியை பயன்படுத்திதான் மேலே சொன்ன நூற்றுக்கணக்கான கிராம மக்கள் தங்களுடைய காய்கறிகள் மற்றும் மலர் உள்ளிட்ட விளைபொருட்களை மேட்டுப்பாளையம் சந்தைக்கு கொண்டுவர வேண்டும். கோவையின் இயந்திர பாகங்களும் உற்பத்தியும் கூட இப்பாதையில்தான் கருநாடகத்திற்கு சென்றாக வேண்டும். பழங்குடி மற்றும் வனக்குடி மக்கள் அனைவரும் மருத்துவம் பார்ப்பது முதல் நிர்வாக தேவைகளுக்காக இவ்வழியில்தான் சத்தியமங்கலம் வந்தாக வேண்டும். எதைப்பற்றியும் கவலையில்லாமல், மாற்று பாதையும் இல்லாமல் முடக்கியிருக்கிறது அரசாங்கம்.
படிக்க :
♦ ஜம்புக்கல் மலையை மணல் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாப்போம் !
♦ பறி போகும் பாரியின் பறம்பு மலை : வி.இ.குகநாதன்
இனிமேல் அம்மக்களுக்கு இரவில் உடல்நலக்கேடு வரக்கூடாது; இரவில் காவல்துறை உள்ளிட்டவைகளின் அவசியம் ஏற்படக்கூடாது; வெளியூர்களில் வசிக்கும் அவர்களது பிள்ளைகளுக்கு, உறவுகளுக்கு எந்த அவசரமும் இரவில் உருவாகிடக் கூடாது. எல்லாம் பகலிலே ஆட்சியாளர்கள் அனுமதிக்கும் நேரத்திலேதான் நடக்க வேண்டும்.
பகலிலே நடந்தால் மட்டும் என்ன பிடுங்க முடியும்? மாலை முதல் அடுத்த நாள் காலை வரை முடக்கப்பட்ட வாகனங்கள் பன்னாரி செக்போஸ்டிலிருந்து இந்த பக்கம் பல கிலோமீட்டருக்கு அணிவகுத்து நிற்கும். அதுபோல் அந்தப் பக்கம் காரப்பள்ளம் செக்போஸ்டிலிருந்து பல கிலோமீட்டருக்கு வாகனங்கள் காத்துநிற்கும். பயண நேரம் தொடங்கியதும் ஒன்றையொன்று முந்தி செல்ல எதிரும் புதிருமாக வாகனங்கள் எத்தனிக்கும். அந்த போராட்டத்தில் போக்குவரத்து ஸ்தம்பிக்கும். 27 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட அந்த தரமற்ற சாலையில் இயல்பாகவே வாகனங்கள் பழுதாகும். அப்படி ஆகிவிட்டால் அதோகதிதான். அதற்கு மேல் எதுவும் நகராது. உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவரை ஒரு அங்குலம் கூட நகர்த்த முடியாது. இப்படித்தான் முட்டாள்த்தனமான உத்தரவால் இப்போது இரவும் பகலும் போக்குவரத்து முடக்கப்பட்டு இலட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக ஆக்கப்பட்டுள்ளது.
ஏன் பாதையை அடைத்து மக்களின் வாழ்க்கையை பறிக்கிறார்கள்? இது புலிகள் காப்பகம் அமைந்துள்ளப் பகுதி. புலிகள் காப்பகத்தில் மக்கள் வாழக்கூடாது என்பது அரசின் கொள்கை. அப்படி வெளியேற்றுவதற்கு அவர்கள் சொல்லும் பல காரணங்களில் ஒன்றுதான், கடந்த பத்தாண்டுகளில் அதாவது 3650 நாட்களில் வாகன விபத்தால் 152 மயில் உள்ளிட்ட வன விலங்குகள் உயிரிழந்துள்ளனவாம்! அதாவது 24 நாட்களுக்கு ஒரு விலங்கு விபத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
இந்த கணக்கின் அபத்தங்களை எல்லாம் பார்ப்பதற்கு முன்னால், இந்த பிரச்சனையில் மக்களோடு நிற்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி ஊழியரான தோழர் மோகன்குமார், “மனிதரற்ற காடுகள் மற்றும் புலிகள் காப்பகம்” என்னும் ஏமாற்றை குறித்து கூறுவதை கேட்டுப்பாருங்கள் ஆளும்வர்க்கத்தின் மோசடி உங்களுக்கு எளிதாக விளங்கும்.
அவர் சொல்கிறார், “உலக அளவில் புலிகளின் எண்ணிக்கை வெறும் 4 ஆயிரம் மட்டுமே. அதில் 70% (2967 என்று ஒரு கணக்கு சொல்கிறது) புலிகள் இந்தியாவில்தான் உள்ளன. அமேசான் உள்ளிட்ட உலகில் செழித்த காடுகள் பலவற்றில் புலிகளே கிடையாது. ஆகையால் புலிகள் அழிந்துவிட்டால் காடுகள் அழிந்துவிடும் என்பது மிகப்பெரிய பொய். அடுத்த விசயம் என்னவென்றால், புலிகள் காப்பகம் வந்ததனால் புலிகள் உருவாகவில்லை, ஏற்கனவே காலாகாலமாக புலிகள் வாழும் இடத்தைதான் புலிகள் காப்பகமாக அறிவித்தார்கள். புலிகள் செழிப்பாக வாழ்ந்த இடங்கள் அனைத்திலும் அவர்களோடு மனிதர்களும் சேர்ந்தே வாழ்ந்துகொண்டிருந்தார்கள். இருவருக்கும் தங்களது இருத்தலை ஒழுங்குபடுத்தும் அறிவு அவர்களது நீண்டகால வாழ்க்கை அனுபவத்திலிருக்கிறது. ஆகையால் புலிகளால் மனிதர்களும் அழியவில்லை; மனிதர்களால் புலிகளும் அழியவில்லை.
எனவே, இந்த “மனிதரற்ற காடுகள் மற்றும் புலிகள் காப்பகம்” என்பது காட்டின் மூலமாக கொள்ளையடிப்பவர்களின், கொள்ளையடிக்க நினைப்பவர்களின் புனைகதை. அதை ஏதோ பெரிய சங்கதியாக தூக்கித்திரிகிறார்கள் காசுக்கு மாரடிக்கும் என்.ஜி.ஓ-க்கள். இந்த களவாணிகள்தான் பழங்குடி மற்றும் வணக்குடிகளின் வாழ்க்கையை அழிக்கிறார்கள்”.
தோழர் சொல்வது உண்மைதான் என்பதை நிரூபிக்கிறார்கள் இரண்டு வழக்குரைஞர்கள். அவர்கள்தான் “வாகனங்களால் வனவிலங்குகளின் உயிர் போகிறது” என்று பொய் புள்ளி விபரங்களை காட்டி போக்குவரத்தை முடக்க காரணமாக இருந்தவர்கள். இரண்டு கைக்கூலிகள் மக்களின் வாழ்க்கையோடு விளையாடுகிறார்கள். மக்களுக்கான இயக்கங்களும் சமூக அக்கறையுடைய நாமும் என்ன செய்யப்போகிறோம்? என்கிற கேள்வியோடு உங்களை இந்த பதிவில் இணைக்கிறேன். இலட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கைக்கு குரல்கொடுங்கள். விருப்பமில்லாதவர்கள் விடுவித்துக் கொள்ளுங்கள். தொடர்ந்து பேசுவேன்.
முகநூலில் : திருப்பூர் குணா
நூல் விமர்சனம் : வண்ணத்துப்பூச்சிகளின் விடுதி || நக்கீரன்
எழுத்தாளர் நக்கீரன் எழுதிய “வண்ணத்துப்பூச்சிகளின் விடுதி” நூல் குறித்த விமர்சனம்
“அவ்வகைப் பெண்கள் (பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள்) மீது சமூகம் கொண்டிருக்கும் ஒவ்வாமை அன்று எனக்கும் இருந்தது என்பதை ஒப்புக் கொள்ளவே வேண்டும். அவர்களது ‘பச்சையான’ உரையாடல் அருவருப்பாகவே இருந்தது. இந்தக் குறுநாவலில் இடம்பெறும் பூட்டிய அறைநிகழ்வுகள் அனைத்தும் அங்கு ஒட்டுக் கேட்டவையே. ஆனால், நாளடைவில் அதுமட்டுமே அவர்களது பேசுபொருளாக இல்லை என்பதை உணர்ந்தேன்.
பாலியல் தொழிலுக்கும் பங்குச்சந்தைக்கும் தொடர்புண்டு. பரத்தமைக்கு முகம் சுளிக்கும் சமூகம் அவற்றை உருவாக்கும் காரணிகளுள் ஒன்றான இராணுவமயமாக்கலுக்கும், உலகமயமாக்கலுக்கும் மரியாதை தருகிறது. பண்பாட்டுச் சீரழிவு என்னும் பழைய திரையை விரிப்பதன் மூலம் பின்னுள்ள பொருளாதாரச் சீரழிவின் பங்கை மறைக்கிறது. இந்தக் குறுநாவலில் இடம்பெறும் பெண்களின் வாழ்க்கை அவர்கள் அறியாத அரசியலால் கொத்திக் குதறப்பட்டதாகும். உலகக் கண்களுக்கு மறைக்கப்பட்ட குருதிவாடை வீசும் அந்த அரசியல் வரலாற்றின் ஓர் அசிங்கமான பக்கத்தை இந்நூல் புரட்டிக் காட்டுகிறது. அதுவே, இதே பொருண்மையில் எழுதப்பட்ட பிற கதைகளிடமிருந்து இதை வேறுபடுத்துகிறது என்று துணிந்து கூறுவேன். அந்த அரசியலைக் கற்றுக் கொடுத்த பெண்களுக்கு நன்றி.
மேற்கண்ட இரண்டு பாராக்களும் நாவலாசிரியரின் முன்னுரையில் இருந்து நாம் எடுத்தாண்டவை.
படிக்க :
♦ நூல் அறிமுகம் : வியட்நாமில் பிரெஞ்சுப் படைகளின் சரணாகதி
♦ நூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ். இந்தியாவிற்கு அச்சுறுத்தல் || ஆர்.எஸ்.எஸ். எனும் டிரோஜன் குதிரை
இந்த நாவல் குறித்த அவரது மேற்கண்ட கருத்துக்கள் நூறு சதவிகிதம் சரியானவை என்பது நாவலை வாசித்து முடிக்கும்போது நம் மனதில் தோன்றும். பாலியல் தொழிலாளிகள் பற்றி நம்மை பீடித்திருக்கும் ஒவ்வாமை அர்த்தமற்றது, இழிவானது முட்டாள்தனமானது என்பதை இந்த நாவல் உணர்வுப்பூர்வமாக முன்வைக்கிறது. நாவலில் பாலியல் தொழிலாளர்களிடையே நடக்கும் ’பச்சையான உரையாடல்கள்’ எந்த விதத்திலும் ஆபாசத்தை உருவாக்கவில்லை. உண்மையில் அவர்களது வலிகளையும், துயரங்களையும், வேறு வழியின்றி அந்தச் சூழலை அவர்கள் பகடிகளாக்கிக் கொள்வதையும் நம் கண்முன்னே விரித்துச் செல்கிறது.
இந்தோனேசியாவை கதைக்களமாக கொண்ட இந்த நாவலின் பிரதான கதாபாத்திரமான நீலம், அக்கா, ரைனா, பஞ்சசீலா உட்பட நாவலின் கதாபாத்திரங்களாக வரும் பெண்கள் எப்படி நிர்ப்பந்தமாக பாலியல் தொழிலுக்குத் தள்ளப்பட்டனர் என்பதை அரசியல், சமூக வரலாற்றுக் காரணிகளோடு நாவல் முன்வைக்கிறது.
நீலம் குடும்பத்தின் வறுமை காரணமாக ‘கவின் காண்ட்ராக்ட்’ எனும் ஒப்பந்தத் திருமண அடிப்படையில் ஒரு வெள்ளைக்காரனுக்கு விற்கப்படுகிறாள். அது ஒரு சட்டப்பூர்வமான நடைமுறையாக இருந்திருக்கிறது. அயல்நாட்டினர் உள்ளூர்ப் பெண்களை ஒரு தவணைக்காலம் அதாவது மூன்று மாதம் வரையில் ஒப்பந்த திருமணம் செய்து கொள்ள முடியும். அதாவது அவர்களின் காமவெறிக்கு இந்தோனேசியப் பெண்களை இரையாக்கிக் கொள்ள முடியும். இந்தப் போக்கின் தொடர்ச்சியில் அவள் வேறு வழி எதுவுமின்றி பாலியல் தொழிலாளியாக மாறுகிறாள்.
அக்காவின் கதையோ இந்தோனேசியாவின் இரத்தம் படிந்த அரசியல் வரலாற்றின் சாரத்தை கூறிச் செல்கிறது. பாசிச கொலைகாரன் ஜெனரல் சுகர்த்தோவின் ஆட்சியில் கம்யூனிஸ்டுகள், தொழிலாளர்கள், மாணவர்கள், உழவர்கள், அரசு அலுவலர்கள் லட்சக்கணக்கானோர் கொத்துக் கொத்தாக கொல்லப்படுகின்றனர். அவ்வாறு கொல்லப்பட்டவர்களில் அக்காவின் அப்பாவும் ஒருவர்.
தொழிற்சங்கவாதியான அவர் இராணுவத்தின் அங்கீகாரம் பெற்ற கூலிப்படையால் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்படுகிறார். அக்காவின் அம்மாவையும், இன்னும் பல பெண்களையும் இராணுவம் பாலியல் வல்லுறவு செய்கிறது. அதன் பிறகு இந்தோனேசிய ரப்பர் தோட்டங்களின் உரிமையாளரான அமெரிக்க ’குட்இயர்’ டயர் நிறுவனத்தில் கொத்தடிமைகளாக்கப்படுகின்றனர். இந்த கொடுமையின் ஒரு கட்டத்தில் அக்காவின் அம்மா இறந்து போகிறார். தன் தம்பி தங்கைகளை காப்பாற்ற வேண்டுமானால் அக்காதான் உழைத்தாக வேண்டும். கம்யூனிஸ்ட் தொடர்புடையவர் என்ற முத்திரை எந்த வேலையையும் கிடைக்கச் செய்யாது எனும்போது பாலியல் தொழிலில் தள்ளப்படுகிறார்.
ரைனா தனது கொடூரமான குடும்ப சூழல் காரணமாக பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படுகிறார். இன்றைய குடும்ப அமைப்பை காறித் துப்புகிறது அவரது வாழ்க்கை.
பஞ்சசீலாவின் கதாபாத்திரமோ அவளின் பஞ்சசீலா குடும்ப பெருமையும், சத்திரிய வீரப் பெருமையும் எந்த விதத்திலும் அவளது வாழ்க்கைக்கு உதவவில்லை என்பதை அவளுக்கு புரிய வைக்கிறது. அறியாத வயதில் அவளுக்கு ஊட்டப்பட்ட கம்யூனிச வெறுப்பு எவ்வளவு தவறானது என்பதை பஞ்சசீலாவுக்கு நிதர்சனமான வாழ்க்கை ஆழமாக உணர்த்துகிறது.
படிக்க :
♦ ஆவணப்படம் : விபச்சாரத்திற்கு விற்கப்படும் கென்யக் குழந்தைகள்
♦ கொத்தடிமைத்தனம், விபச்சாரம்: தனியார்மயத்தின் பேரபாயங்கள் !
‘பெமூடா பஞ்சசீலா’ என்கிற தீவிர வலதுசாரி இயக்கம் இராணுவத்தோடு இணைந்து கம்யூனிஸ்டுகளை படுகொலை செய்ததில் முக்கியப் பங்காற்றியுள்ளது என்பதை நாவலினூடே ஆசிரியர் கூறிச் செல்லும்போது கண்டிப்பாக நமக்கு ஆர்.எஸ்.எஸ் நினைவுக்கு வந்தே தீரும்.
நீலத்தின் காதலன் நாவலின் இறுதிப் பகுதியில் இப்படிப் பேசுகிறான். ”நம்ம வாழ்க்கை நம்ம கையிலே இல்லைன்னு சொல்றேன். அதை, ஏதோ பத்து நாட்டுலே இருக்குற ஏதோ பத்து பேரு முடிவு பண்றாங்க. நான் படிக்கணுமா, வேண்டாமா? படிச்சா எதைப் படிக்கணும்? படிப்பை முடிச்சா எந்த வேலைக்குப் போகணும்? இதெல்லாம் ஏற்கனவே எழுதுன சினிமா ஸ்கிரிப்ட் மாதிரி. அதுலே, நாமெல்லாம் நமக்குக் கொடுத்த வேசத்தை நடிச்சிக்கிட்டு இருக்கோம். எனக்கு டிரைவர் வேசம்னா, அவளுக்கு விடுதி வேசம். இந்த வேசம் வெட்கம்னா அதைப் போடச் சொன்னவங்களும் வெட்கம் கெட்டவங்கதானே?
ஒரு அவலமான சோகத்தோடு நாவல் முடிவடைகிறது.
இந்த ஏகாதிபத்திய முதலாளித்துவ சமூக அமைப்பின் அசிங்கமான, கொடூரமான, சகிக்க முடியாத தன்மையை பாலியல் தொழிலாளிகளின் வாழ்வினூடே நாவல் ஆழமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் பதியச் செய்கிறது. பாசிச இருள் சூழ்ந்து வரும் இன்றைய சூழலில் இந்த நாவலில் நாம் எடுத்துக் கொள்ள ஏராளமான விசயங்கள் இருக்கின்றன. நாவல் சோகமாக முடிந்திருக்கலாம். ஆனால், வரலாற்றை நாம் அப்படி விட்டு விடக் கூடாது என்பதே அது சொல்லும் செய்தி.
வண்ணத்துப் பூச்சிகளின் விடுதி : குறுநாவல்
ஆசிரியர்: நக்கீரன்
வெளியீடு :
காடோடி பதிப்பகம்,
6, விகேஎன் நகர்,
நன்னிலம் – 610105,
திருவாரூர் மாவட்டம்.
தொடர்புக்கு : 8072730977
விலை : ரூ. 70

நூல் விமர்சனம் :
இனியன்
எழுத்தும் எழுத்து ஜனநாயகமும் || மு. இக்பால் அகமது
1982, 83இல் இருந்து சென்னை புத்தக கண்காட்சியை பார்த்து வருகின்றேன், நூல்களை வாங்கி வருகின்றேன். அப்போது அண்ணா சாலை காயிதே மில்லத் பெண்கள் கல்லூரி மைதானத்தில் நடந்தது.
40 அல்லது 50 பதிப்பாளர்கள் மட்டுமே அரங்கு அமைப்பார்கள். அன்னம், அகரம், வானதி, தமிழ்ப்புத்தகாலயம், நர்மதா, காவ்யா, அலைகள், என் சி பி எச், சவ்த் விஷன், க்ரியா, தென்னிந்திய சைவ சித்தாந்த கழகம், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், நேஷனல் புக் ட்ரஸ்ட், சாகித்ய அகாடமி, சாளரம் ஆகிய தமிழ்ப் பதிப்பாளர்கள், தி ஹிந்து, ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டி பிரஸ், ஹிக்கின்போதாம் போன்ற ஆங்கில நிறுவனங்களின் ஸ்டால்கள், வழக்கம்போல வெளியே பிளாட்பாரத்தில் பழைய நூல்கள் என அன்றைய மதிப்பில் 400, 500 ரூபாய்க்கு வாங்கினால் பெரிய விசயம்.
படிக்க :
♦ குழந்தைகளிடம் வாசிப்பு பழக்கத்தை உண்டாக்குவது எப்படி ?
♦ நூல் அறிமுகம் || 1974 : மாநில சுயாட்சி || ஆழி செந்தில்நாதன்
குறிப்பிட வேண்டியது இன்னொன்று. 70, 80, ஏன், 90களின் தொடக்கம் வரையும் கூட தமிழில் எழுத்தாளர்கள் என்றால் மீண்டும் மீண்டும் அசோகமித்திரன், தி ஜா, லா ச ரா, சாண்டில்யன், நாபா, பாலகுமாரன், கோவி மணிசேகரன், அமுதா கணேசன், பி டி சாமி, சுஜாதா, புஷ்பா தங்கதுரை, தமிழ் வாணன், ராஜேந்திர குமார், ரா கி ரங்கராஜன், ஜ ரா சுந்தரேசன், மகரிஷி, சு சமுத்திரம், பிரபஞ்சன், வண்ண நிலவன், லட்சுமி, சிவசங்கரி, இந்துமதி, தமிழின் முன்னோடி எழுத்துக்காரர்கள் ஆன பாரதி, பாரதிதாசன், புதுமைப்பித்தன், கு அ, கி ரா, சி சு செ, அகிலன் … இவர்கள் இல்லாமல் வேறு தமிழ் எழுத்தாளர்கள் இன்னும் பலர் அல்லது சிலர், அவ்வளவே.
ஆங்கில நூல்கள் எனில் மவுண்ட்ரோட்டில் இருந்த ஹிக்கின்போதாம் மட்டுமே, எனக்கு தெரிந்து. அன்றைய (இப்போதும்) தி ஹிந்து நாளிதழில் ஞாயிறு வெளியாகும் ஆங்கில நூல்களின் விமர்சனம், மதிப்புரை ஆகியவற்றை வாசித்து விட்டு பெருமூச்சு விட முடியுமே தவிர வாங்குவது என்பது கனவுக்கும் அப்பாற்பட்ட பெருங்கனவு. சமூக அமைப்பில் அடித்தட்டு குடும்பத்தில் இருந்து வந்தவன் நான். என் போன்றோருக்கு ஆங்கில நூல்களை வாசிப்பதில் ஆர்வம் இருக்கும், நூல்களை வாங்கும் வசதி இருக்காது.
காலம் மாறும். மாறியது. காலம் எழுத்தாளர்களுக்கு மட்டுமே சொந்தமானது அல்லவே! 90களுக்கு பின் எழுத்திலும் வாசிப்பிலும் மாற்றம் நிகழ்ந்தது. மேலே நான் குறிப்பிட்டுள்ள மூத்த எழுத்தாளர்கள் மீது இப்போதும் எனக்கு மரியாதை மரியாதை உள்ளது, மாற்றமில்லை. ஆனால் இவர்களில் பலரது எழுத்துக்களை இப்போது வாசிக்கும்போது சலிப்பு ஏற்படுவதை நான் மறைக்க விரும்பவில்லை. ஓரளவுக்கு மேல் பக்கங்கள் நகர்வதில்லை. இதுதான் கால வெள்ளம் என்பது. காலநதி ஓடுகின்றது, ஓடிக்கொண்டே இருக்கின்றது, வெள்ளத்தில் பல அடித்து செல்லப்படுவதும், பல கரை ஒதுங்குவதும், பல நீரின் அடியில் மூழ்கி ஜலசமாதி அடைவதும், பல வெள்ளத்தை எதிர்கொண்டு நிற்பதும்…. இதுதான் ஓட்டம், உயிரோட்டம். இது வெறும் எழுத்தோடு தொடர்புடையது மட்டுமே அல்ல. சமூக, அரசியல் தளத்தில் ஏற்படும் நிகழ்வுகளும் மாற்றங்களும் அறிவுசார் தளத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தும், விதிவிலக்கல்ல.
புதிய எழுத்துகளும் புதிய எழுத்தாளர்களும் புதிய வடிவங்களும் தமிழ் இலக்கிய உலகில் 90களில் காண நேர்ந்தவை. 20, 30 எழுத்தாளர்கள், 40, 50 பதிப்பாளர்கள் என்ற நிலை மாறத்தொடங்கியது. இப்போது 40 வருடங்களுக்கு பிறகு 600க்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள்! எழுத்திலும் பல வகை! பல்வேறு புதிய தளங்கள்! 20, 30 பேர் எழுதுவார்கள், 4 கோடி தமிழர்கள் வாசிப்பார்கள் என்ற நிலை மாறி, தெருவுக்கு இரண்டு பேர் எழுதுகின்றார்கள் என்றால் எழுதட்டுமே! வாசிக்கிறவன் வாசித்துவிட்டு போகட்டுமே! தகுதியுள்ளது நிலைக்கும், அல்லவை தள்ளப்படும், அவ்வளவுதான்!
ஒரு புகைப்படம் எடுக்க ஸ்டுடியோ செல்வதே அப்போது திருவிழாதானே! படம் ‘கழுவப்பட்டு’ பிரிண்ட் போடப்பட்டு கைக்கு வர 10 நாள் ஆகும்! இப்போது எல்லோரும் புகைப்படக் கலைஞர்தானே?!
ஒரே ஒரு கதையோ கட்டுரையோ எழுதி தபாலில் ரிட்டர்ன் ஆவதற்கான அஞ்சல் தலையோடு அனுப்பிவிட்டு, இரண்டு மாசம் தூங்காமல் இருந்தால் வருந்துகின்றோம், தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் என்று ஒரு நாள் தபால் வரும்! முகநூலும் ப்ளாக் எனப்படும் வலைப்பூவும் இந்த தடையை உடைக்கவில்லையா? கருத்து ஜனநாயகம் என்பது எவருடைய அங்கீகாரத்திற்காகவும் காத்திருப்பது அல்லவே? கருத்தை வெளிப்படுத்துவதில் இந்த மின்னணு யுகம் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி இருப்பது உண்மைதானே? ஒருவரின் கருத்தை இன்னொருவர் ஏற்பதும் தள்ளுவதும் ஜனநாயகம் என்பதை ஒப்புக்கொள்கின்றேன்.
ஆனால் எவரோ ஓரு பத்திரிகை ஆசிரியர் அல்லது பதிப்பாளரின் கருணை வேண்டி காத்திருக்கும் சர்வாதிகார அணுகுமுறையில் இந்த மின்னணு யுகம் உடைப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மைதானே?
படிக்க :
♦ நூல் அறிமுகம் : மதரிங் எ முஸ்லிம் || MOTHERING A MUSLIM – NAZIA ERUM || இ.பா. சிந்தன்
♦ நூல் விமர்சனம் : நான் நிகழ்த்திய மோதல் கொலை | ராமச்சந்திரன் நாயர் | எஸ்.காமராஜ்
புத்தக விற்பனையும் அவ்வாறே. அமேஸானும் பிளிப்கார்ட்டும் சோப்பும் சீப்பும் மட்டுமே விற்கவில்லை, உலகின் எந்த மூலையிலும் எவர் எழுதுவதையும் என்னால் வாங்கிவிட முடியும். இதற்கு முன் இது பெருங்கனவு மட்டுமேதானே, நான் தொடக்கத்தில் சொன்னதைப்போல? எனக்கு இது மடை திறந்த அல்ல, மடை உடைத்த வெள்ளம்! அறிவுப்பரவல் என்றுதான் இதை நான் மதிப்பிடுவேன். கொள்வது கொள்க, தள்ளுவது தள்ளுக, அவ்வளவுதான்.
அச்சிலும் அவ்வாறே! சுய பதிப்பு எனப்படும் self publishing முறை இன்றைக்கு பல்லாயிரம் எழுத்தாளர்களை உருவாக்கி உள்ளது. மீண்டும் சொல்கின்றேன், எழுதுவது என்பது ஒருவரின் உரிமை மட்டுமே அல்லவே? ஜனநாயகம் இல்லையா? இங்கே யார் எதில் monopoly என்ற உரிமையை தக்க வைத்துக்கொள்ள முடியும்? அல்லது யாருடைய உத்தரவுக்கு யார் காத்திருப்பது?
எழுதுவோம்! வாசிப்போம்! எழுத்து, வாசிப்பு, இரண்டிலும் ஜனநாயகம் வேண்டும்.
காலம் சரியானவற்றை ஏற்கும்.
மு இக்பால் அகமது
இந்திய சுயசார்பு அறிவியல் / தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் : எதார்த்தமும் வாய்ஜாலங்களும் || குறுந்தொடர்
இந்திய சுயசார்பு அறிவியல்/தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள்: எதார்த்தமும் வாய்ஜாலங்களும்
பாகம் – 1
பிரதமர் மோடி, கடந்த சில வருடங்களாக புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் பல நிகழ்ச்சிகளில் பேசி வருகிறார். குறிப்பாக, இந்த ஆண்டு துவக்கத்தில் ஒடிசா மாநிலத்தில் உள்ள சம்பல்பூரில் புதிதாக கட்டப்படவுள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தின் (IIM) அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “கண்டுபிடிப்புகளில் புதுமை (innovation), நேர்மை, மற்றும் அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்குதல் முதலானவை தான் சுயசார்பு இந்தியாவை உருவாக்க உதவுபவையாகும்” [1] என்று கூறினார். இதன் உள்ளார்ந்த அர்த்தத்தில் நமக்கு மாற்றுக்கருத்து இல்லையெனினும், இதை நடைமுறைபடுத்த ஆளும் பாஜக அரசு என்னென்ன முயற்சிகள் எடுத்துள்ளது என்பதை பரிசீலித்தால் பிரதமரின் பேச்சுக்கள் வெறும் வெற்று சவடால்கள் என்பது எளிதில் புலப்படும்.
இதுமட்டுமல்ல, இதே போல் பல தருணங்களில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்றும், சுயசார்பு இந்தியாவை (ஆத்மநிர்பார்) கட்டியெழுப்ப வேண்டும் என்றும் மோடி பேசியுள்ளார். தேசியக் கல்விக்கொள்கையை(NEP) ஆதரிக்கும் பாஜக ஆதரவாளர்கள், பேராசிரியர்கள், முதலாளிகள் உள்ளிட்ட பலர், NEP ஆராய்ச்சியையும், கண்டுபிடிப்புகளையும் ஊக்கப்படுத்துவதை உள்ளடக்கமாக கொண்டுள்ளதாகவும் NEP-ன் முடிவுகளை ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்தினால் 5 ட்ரிலியன் பொருளாதாரத்தை நாம் எட்ட முடியும் என்றும் கதையளக்கின்றனர்.
இது போன்ற ‘மங்கிபாத்’ சவடால்கள், நிலாவில் பாட்டி வடை சுட்ட கதைகள் மோடியின் ஆதரவாளர்களை திருப்தியடைய செய்யலாமே ஒழிய, பல ஆண்டுகள் உழைப்பையும், பணத்தையும் செலவிட்டு கல்வி பெற்று எப்படியேனும் சமூகத்தில் முன்னேறி விடலாம் என்று கனவுகளோடு காத்திருக்கும் (முதல் தலைமுறை) பட்டதாரிகளுக்கும் சமூக-பொருளாதார நிலைமைகளில் பின்தங்கிய பிரிவினருக்கும் இது போன்ற சவடால்களால் எந்தப் பயனும் இருக்கப்போவதில்லை.
படிக்க :
♦ சுயசார்பு இந்தியா : மோடியின் மற்றொரு பித்தலாட்டம் !
♦ மறுகாலனியாக்கமும் சுயசார்பு பொருளாதார மாயமும் !
கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலிருந்தும் வெளிவரும் மாணவர்கள் இனி தொழில் முனைவோர்களாக ஆகப்போகிறார்கள் என்று துணைவேந்தர்கள் பேசுகின்றனர். ஆராய்ச்சியில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் கூட்டு, NIRF மற்றும் QS தரவரிசையில் முன்னிலை என்று தனியார் கல்லூரிகள் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்கின்றனர்.
மத்திய அமைச்சரோ, ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வளர்வதற்கு ஏற்ற சூழல் இந்தியாவில் உள்ளது, ஏராளமான அந்நிய முதலீடு வருகிறது, Global innovation index-ல் இந்தியா முன்னேறியுள்ளது என்று பேசுகிறார். முதலாளிகளோ green energy, electrical vehicle, Robotics/Automation ஆகிய வளர்ந்து வரும் துறைகளில் பல ஆயிரம் கோடி முதலீடு செய்யப்போகிறோம் என்கின்றனர். இவர்களின் பேச்சுகளை கேட்டும் ஒரு கல்லூரி மாணவருக்கு, இன்னும் ஒருசில வருடங்களில் இந்தியா அறிவியல்/தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளில் முன்னணியான நாடாக வளர்ந்துவிடும் என்ற தோற்றத்தை என்ற பிம்பத்தையே ஏற்படுத்தும். ஆனால் உண்மையோ இவர்கள் பேசுவதற்கு நேரெதிராக உள்ளது.
இந்தியாவினுடைய சுயசார்பு தொழில்நுட்பத்தின் தற்போதைய நிலையின் குறுக்குவெட்டு தோற்றத்தை வெளிச்சமிட்டுக் காட்ட இரண்டு உதாரணங்களை(துவக்கநிலை நிறுவனங்கள் (startups) மற்றும் ஐந்தாம் தலைமுறை தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் (5G technology)) மட்டும் இம்முதல் பாகத்தில் தருகிறோம்.
துவக்கநிலை நிறுவனங்கள் குறித்து
சமீபகாலமாக துவக்கநிலை நிறுவனங்கள் (startups) குறித்து பலரும் பேசக் கேட்டிருப்போம். தொலைக்காட்சி விவாதங்கள், வணிக பத்திரிக்கைகள், மற்றும் பல்கலைக்கழக கருத்தரங்களில் பல நேரங்களில் முக்கியத்துவம் கொடுத்து விவாதிக்கப்படுவதும் துவக்கநிலை நிறுவனங்கள் பற்றியதாக தான் இருக்கிறது. 2021 ஆம் ஆண்டு சுதந்திர தின நிகழ்ச்சியின் போது பேசிய பிரதமர் மோடி, “துவக்கநிலை நிறுவனங்களின் சந்தை மதிப்பு பல ஆயிரம் கோடிகளை எட்டியுள்ளது. அவைகள் நம் நாட்டின் புது வகையான நிதி திரட்டும் அமைப்புகள். அவைகள் தங்களுக்கே உரித்தான பாணியில் தங்களுக்கான திட்டங்களை தாங்களே வகுத்து முன்னேறுகின்றன. இனி வரும் பத்து ஆண்டுகளில் துவக்கநிலை நிறுவனங்களுக்கு ஏற்ற சிறந்த சூழலை இந்தியா ஏற்படுத்தி கொடுக்க பாடுபடும்” [2].
மேலும், Startup India திட்டத்தின் ஆறாம் ஆண்டு துவக்கவிழாவில் பேசிய மோடி “இந்திய வளர்ச்சிக்கான முதுகெலும்பே துவக்கநிலை தொழில்கள்தான்” என்றும் பேசினார். ஆனால் துவக்கநிலை தொழில்களின் தற்போதைய நிலை குறித்து ஒரு வரியில் சொல்ல வேண்டுமானால்: நம்மிடம் ஏகப்பட்ட செயலிகள் (startup apps) உள்ளன, அனால் இந்திய ஒன்றியத்திற்கென்று சுயசார்பு தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வித்திடும்படியான புதிய கண்டுபிடிப்புகள் என்று சொல்லிக்கொள்ள எதுவுமே இல்லை.
எதார்த்தத்தில், இந்த செயலிகள் பலகோடி குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக இருந்து வந்த இந்திய சில்லறை வர்த்தக சந்தையை (மருந்து விற்பனை, உணவு விற்பனை, தங்கும் விடுதிகள், வீட்டு உபயோக பொருட்கள், அழகு சாதன பொருட்கள், மளிகை பொருட்கள்) வெளிநாட்டு நிதி நிறுவனங்களினால் வளர்க்கப்படும் ஒரு சில துவக்கநிலை நிறுவனங்களின் கீழ் கொண்டு செல்வதற்காக உருவாக்கப்பட்டவை.
இவற்றில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் கூட ஏகாதிபத்திய நாடுகளின் தயவுகளிலிருந்து கிடைப்பவை தான். துவக்கநிலை தொழில்கள் மூலம் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான அந்நிய முதலீடுகள் (2021 ஆம் ஆண்டில் மட்டும் 28 பில்லியன் டாலர், இந்திய மதிப்பில் சுமார் இரண்டு லட்சம் கோடி ருபாய்) இந்தியாவிற்குள் வந்தது உண்மைதான் [3], ஆனால் அதன் நோக்கம் இந்தியாவில் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதோ, அக்கண்டுபிடிப்புகளை கொண்டு மக்களுக்கு பயனுள்ள பொருட்களை உற்பத்தி செய்து சந்தைப்படுத்துவதோ அல்ல. மாறாக, மிக குறுகிய காலத்தில் மிக அதிக லாபத்தை பங்குச் சந்தையிலிருந்து ஈட்டுவதும், இந்திய சில்லறை வர்த்தக சந்தையை தனது கட்டுப்பாட்டின் கீழ் ஒழுங்கமைப்பதும் தான்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் ஒரு நாடு பெற்றிருக்கும் அறிவுசார் பலமே அந்நாட்டு மக்களின் வாழ்க்கை தரத்தை நிர்ணயம் செய்கிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் தானியங்கி கார்களை ஆய்வுசெய்து நடைமுறைக்கு கொண்டுவருகிறார்கள், திறன் கைபேசியின் ஐந்தாம் தலைமுறை தொழில்நுட்பம் குறித்து ஆய்வு செய்கிறார்கள். ஆனால் இந்தியாவிலோ சேவை துறையிலிலுள்ள பழைய தொழில்களை செயலிகள் மூலம் புதிய வடிவத்தில் செய்கிறார்கள்.
உதாரணமாக, நாம் அனைவரும் ஓட்டலுக்கு சென்று உணவு உண்டோம், ஆனால் இப்போது சுவிக்கி, சொமோட்டோ போன்ற செயலிகள் மூலம் உணவை வீட்டிலிருந்தே ஆர்டர் செய்து உண்ணுகிறோம். உண்மையில், இந்திய ஒன்றியம் தனது மனிதவளத்தை இது போன்ற செயலிகளை உருவாக்க செலவளிக்க வேண்டுமா அல்லது இந்தியாவிற்கான் சுயசார்பு தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் செலவுசெய்ய வேண்டுமா?
இந்தியாவில் 5G தொழில்நுட்பம்
5G தொழில்நுட்பம் என்பது தகவல் தொழில்நுட்ப வரலாற்றில் ஏற்பட்ட ஐந்தாம் தலைமுறை (5th generation) தொழில்நுட்ப வளர்ச்சி ஆகும். இதை சுருக்கமாக 5G தொழில்நுட்பம் என்று அழைக்கப்படுகிறது. இது தற்போது நாம் கைப்பேசிகளில் பயன்படுத்தப்படும் 4G தொழில்நுட்பத்தை காட்டிலும் மேம்படுத்தப்பட்ட ஓர் தொழில்நுட்பமாகும். உதாரணத்திற்கு, 4G தொழில்நுட்பத்தால் அதிகபட்சமாக ஒரு நொடிக்கு 100 கோடி (1GB) தகவல்-துணுக்குகள் (byte) வரை பரிவர்த்தனை செய்ய முடியும்.
ஆனால், 5G தொழில்நுட்பத்தால் ஒரு நொடியில் அதிகபட்சமாக 2000 கோடி (20 GB) தகவல்-துணுக்குகள் (byte) வரை பரிவர்த்தனை செய்ய இயலும் அளவுக்கு ஆற்றல் கொண்டது. இந்த தொழில்நுட்பத்தை இதுவரை 65 நாடுகளின் சேர்ந்த 1,662 நகரங்களில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த 65 நாடுகளில் அதிகபட்சமாக சீனாவில் மட்டும் 376 நகரங்களில் 5G தொழில்நுட்பம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதையடுத்து அமெரிக்காவில் 284 நகரங்களிலும், பிலிபைன்ஸ் நாட்டில் 95 நகரங்களிலும் 5G சேவை மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது [4]. ஆனால் 140 கோடி மக்கள் வாழும் இந்திய ஒன்றியத்தில் இதுவரை 5G தொழில்நுட்பம் மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை!
இந்திய தொலைத்தொடர்புத் துறையில் ஏகபோகமாக வளர்ந்துள்ள Jio, Airtel ம் 5G அலைவரிசைக்கு தேவையான தொழில் நுட்பத்தை சொந்தமாக வைத்துள்ளனரா? இதற்கான ஆராய்ச்சிக்கு ஒதுக்கிய தொகை எவ்வளவு? இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களான IIT மற்றும் IISc ன் பங்களிப்பு என்ன?
சுயசார்பு 5G தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்திய தொழில்நுட்ப கழகங்களின் பங்களிப்பு
இந்தியாவில் 23 இந்திய தொழில்நுட்ப கழகங்கள் (IIT) உள்ளன. சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன் மனிதவள மேம்பாட்டு துறை (MHRD) நாடாளுமன்றத்தில் குறிப்பிட்ட புள்ளிவிவரத்தின்படி, இந்தியாவில் உயர்கல்வி பயிலும் மாணவர்களில் 1.18% மாணவர்கள் மட்டுமே ஐஐடிக்களில் பயிலுகின்றனர். ஒட்டுமொத்த உயல்கல்விக்கு ஒன்றிய அரசு செலவு செய்யும் தொகையில் 26.96% தொகையை இந்த சிறு விழுக்காடு (1.18%) மாணவர்களுக்கு மட்டுமே செலவு செய்கின்றது [5].
130 கோடி மக்கள் வாழும் இந்திய ஒன்றியத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்களில் வெறும் ஒரு விழுக்காட்டிற்கு சற்று அதிகமான மாணவர்கள் மட்டுமே பயிலும் ஐஐடிக்களுக்கு செலவு செய்யும் தொகையானது இந்தியாவில் உயர்கல்வி பயிலும் ஒட்டுமொத்த மாணவர்களுக்கு செலவு செய்யும் தொகையில் கால் பங்கிற்கும் அதிகமாக இந்திய அரசு செலவு செய்கிறது எனும் பட்சத்தில் இந்திய தொழில்நுட்ப வளர்ச்சியில் அவைகளின் பங்கு என்ன என்பது சமூக அக்கறையுள்ள ஒவ்வொருவரின் தவிர்க்கமுடியாத கேள்வியாகிறது. இந்த கேள்விக்கான பதிலை ஆராய்ந்து பார்த்தால் இந்தியாவின் சுயசார்பு தொழில்நுட்ப வளர்ச்சியின் எதிர்காலத்தை குறித்து வருத்தமே மிஞ்சுகிறது!
23 ஐஐடிக்களில் ஐஐடி சென்னை, ஐஐடி ஐதராபாத் மற்றும் ஐஐடி கான்பூர் ஆகிய மூன்று ஐஐடிக்கள் சேர்ந்து “5G சோதனை மேடை” (5G test bed) என்ற முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளனர் [6]. இந்த முன்னெடுப்புக்கான நிதியை 2018 ஆம் ஆண்டு ஒதுக்கீடு செய்தார் அன்றைய தொலைத்தொடர்பு அமைச்சர் மனோஜ் சின்ஹா [7]. மேலோட்டமாக பார்த்தால் இது சிறந்த முன்னெடுப்பு தான் என்று தோன்றலாம்.
ஆனால் பிற நாடுகளை சாராமல் முழுக்க முழுக்க இந்திய மனிதவளத்தை கொண்டு இந்திய ஒன்றியத்துக்கே உரித்தான தொழில்நுட்பங்களை வளர்த்தெடுக்க வேண்டும், அவற்றை எளிய மக்களும் பயன்படுத்தும் வண்ணம் மக்கள் மயப்படுத்த வேண்டும் என்ற தொலைநோக்கு திட்டத்தை அடிப்படையாக கொண்டு உருவானதல்ல இந்த முன்னெடுப்பு. உலக அளவில் 5G தொழில்நுட்பத்தின் வளர்ச்சிப்போக்கை பார்த்தோமானால் இந்த தொழில்நுட்பம் குறித்து 2012-ம் ஆண்டிலேயே ஐக்கிய நாடுகள் அவையின் துணை நிறுவனமான சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் (International Telecommunication Union (ITU)) திட்டங்களை வகுத்துள்ளது [8].
இந்த திட்டங்களின் அடிப்படையில் இங்கிலாந்து அரசு அதன் நாட்டிலுள்ள கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான சர்ரே பல்கலைக்கழகத்திற்கு (University of Surrey) நிதி ஒதுக்கீடு செய்து 5G தொழில்நுட்பத்தை உருவாக்க ஊக்குவித்தது [9]. இதே போன்று அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், சீனா போன்ற நாடுகள் தங்களுக்கான முன்னெடுப்புகளை துவங்கின. அனால் 2012-களில் 5G குறித்த எந்த விவாதங்களும் இந்திய அரசாலும், இந்திய தொழில்நுட்பக் கழகங்களாலும் முன்னெடுக்கப்படாமல் இருந்தது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் 5G தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து உலகம் முழுக்க சந்தைப்படுத்த தயாராக இருக்கும் தருணத்தில் இந்திய அரசும், இந்திய தொழில்நுட்ப கழகங்களும் 5G தொழில்நுட்பம் குறித்து கவலை கொள்ளுகின்றன! அப்படியானால் இந்திய தொழில்நுட்ப கழகங்களின் இந்த முன்னெடுப்பு வெறும் கண்துடைப்பு இல்லையா? 2012-இல் விவாதத்திற்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொழில்நுட்பம் குறித்து 6 ஆண்டுகளுக்கு பிறகு நமது 23 ஐஐடிக்களில் வெறும் 3 ஐஐடிக்கள் தான் கவலை கொள்கின்றன என்றால் பெரும் நிதியை விழுங்கி ஏப்பம் விடும் இந்த இந்திய தொழில்நுட்ப கழகங்களின் இருப்பிற்கான தேவை தான் என்ன?
5G தொழில்நுட்பமும் தனியார் தொழில்நுட்ப நிறுவனங்களும்
5G தொழில்நுட்பம் குறித்து இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் கவலை கொள்ளவில்லை என்பது ஒரு புறமிருக்க, இந்த தொழில்நுட்பங்களை வளர்த்தெடுத்து சந்தைப்படுத்தும் முனைப்பும் இந்திய முதலாளி வர்க்கத்திடம் இல்லை. அப்படியான முனைப்பு இருந்திருந்திருக்குமானால் 5G தொழில்நுட்பம் குறித்து சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் (ITU) விவாதிக்க துவங்கிய காலத்திலேயே இந்திய முதலாளிகளும் அரசும் அதற்குரிய ஆய்வுக்கான முயற்சிகளில் இறங்கியிருப்பார்கள்.
ஆனால் இந்திய முதலாளிகளுக்கோ இந்தியாவிற்கான சுயசார்பு தொழில்நுட்பங்களை வளர்த்தெடுத்து சந்தைப்படுத்தவேண்டும் என்ற நோக்கங்கள் எதுவும் கிடையாது. ஏகாதிபத்திய நலன்களுக்கு ஊழியம் செய்வது, அதன் மூலம் தங்கள் லாபத்தை பெருக்கிக்கொள்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். தற்போது 5G தொழில்நுட்பத்தினை சீனாவிடமிருந்து வாங்குவதா அல்லது அமெரிக்காவிடமிருந்து வாங்குவதா ஆலோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதே போன்று, மின்சார வாகனங்கள் குறித்து முன்னேறிய நாடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நேரங்களில் இந்திய அரசும் ஆளும்வர்க்கமும் உயர்கல்வி நிறுவனங்களும் அமைதியாக இருந்தார்கள். ஆனால் ஏகாதிபத்திய நாடுகள் தங்களின் மின்சார வாகன தொழில்நுட்பத்தை சந்தைப்படுத்தி வருகின்ற தற்போதைய சூழலில் இந்திய ஒன்றிய அரசும், முதலாளிகளும், தொழில்நுட்ப கழகங்களும் தங்கள் கனவு நிலையிலிருந்து விழித்துக்கொண்டு இத்தொழில்நுட்பங்களைக் குறித்து பேசிவருகின்றனர்.
படிக்க :
♦ 6ஜி தொழில்நுட்பம் : உலக மேலாதிக்கத்திற்கான தொழில்நுட்ப போட்டி !
♦ பி.எஸ்.என்.எல் (BSNL) – எம்.டி.என்.எல் (MTNL) வீழ்த்தப்பட்டது எப்படி ?
உற்பத்தி துறையில் சமகாலத்தில் பரவலாக பேசப்படும் சூரிய மின்சாரம், மின்வாகனங்கள் மற்றும் அவற்றுக்கான மின்கல (battery) உற்பத்தி, ஐந்தாம் தலைமுறை (5G) தொலைத்தொடர்பு தொழில்நுட்பம், திறன்-கைபேசிகள் (smart phones) உற்பத்தி, குறை-கடத்திகள் (semiconductor) சார்ந்த உற்பத்தி, மருந்துகளுக்கான மூல பொருட்கள் தயாரிப்பு, நான்காவது தொழில்புரட்சிக்கான செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மற்றும் பல்பொருள் இணையம் (Internet of Things) ஆகிய துறைகளுக்கு தேவையான இந்திய ஒன்றியத்திற்கே உரித்தான சுயசார்பு தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள், மற்றும் அவை சார்ந்த துவக்கநிலை தொழில்களில் இந்திய ஆளும்வர்க்கம் செய்துள்ள முயற்ச்சிகள் என்ன?
உண்மையில், இதற்கான பதில் மிகவும் கவலையளிக்கக் கூடியதாகவே உள்ளது. ஏனெனில், இந்தியா தனக்கான அறிவியல்/தொழில்நுட்பங்களை உருவாக்கிக் கொள்ள போதுமான மனிதவளத்தை பெற்றிருந்தாலும் தனக்கான அறிவியல்/தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு ஏகாதிபத்திய நாடுகளையே நம்பியுள்ளது.
எதார்த்தம் இவ்வளவு கேலி கூத்தாக இருக்கும் பட்சத்தில் மோடி தனது உரைகளில் Make in India, சுயசார்பு இந்தியா போன்ற சவடால்களை அள்ளி வீசுகிறார். 5G அலைக்கற்றையோ, சூரியஒளி மின் உற்பத்தியோ (solar), மின்சார வாகன உற்பத்தியோ அல்லது துவக்க-நிலைத் தொழில்களோ, இவற்றுக்கான தொழில்நுட்பங்கள் மற்றும் தேவையான நிதி ஆகியவற்றுக்கு ஏகாதிபத்திய நாடுகளை இந்திய ஆளும்வர்க்கம் சார்ந்துள்ளது. இதனை அடுத்தக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
தொடரும்
நாஞ்சில் திராவிடன் ராஜன் (CCCE)
ஆதாரம் :
[1] Innovation, integrity, inclusion will help to build atmanirbhar bharat
[2] Startups are the new wealth creators || Modi calls startups backbone of new india
[3] vc investments jump 4 times to hit record 28.8 billion in 2021
[4] 5g-services-have-reached-1-662-cities-worldwide
[5] IITs IIMs NITs have just 3% of total students but get 50% of government funds
[6] 5G Testbed at IIT Hyderabad
[7] Financial-grant-approved-for-5g-test-bed-project-by-iits-iisc
[8] 5G – Fifth generation mobile technologies
[9] Surrey university 5G research centre plans unveiled
ஓட்டுப் போட ஹிஜாபை நீக்க வேண்டுமாம் ! சரி.. பூணூலை ?? || கருத்துப்படம்
சமூக விரோத தீட்சிதர் கும்பலிடமிருந்து தில்லை நடராஜர் கோவிலை மீட்டெடுப்போம் !
“இந்துக்களே வாருங்கள்…” என்று அழைக்கும் பார்ப்பனிய ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல் ஜெயசீலா விவகாரத்தில் கள்ள மவுனம் சாதிப்பது ஏன் ? பார்ப்பனிய சனாதனமே இந்துத்துவத்தின் நியதி ! அதுவே ஆர்.எஸ்.எஸ்.-ன் இந்து ராஷ்டிரக் கனவு!
ஓட்டுப் போட ஹிஜாபை நீக்க வேண்டுமாம் ! சரி.. பூணூலை ??
தேசிய பங்குச் சந்தையைக் கட்டுப்படுத்திய இமயமலை சித்தபுருசன் !
உலகை ஆட்டிப் படைக்கும் முதலாளித்துவமே மண்டியிடும் ஒரே இடம் பங்குச் சந்தை தான். அந்தப் “பங்குச் சந்தையின் அடித்தளத்தையே உலுக்கிய” முறைகேடு ஒன்று சமீபத்தில் இந்தியாவில் அம்பலமாகியிருக்கிறது.
இந்தியாவில் இரண்டு மிகப்பெரிய பங்குச் சந்தைகள் இருக்கின்றன. அவை மும்பை பங்குச் சந்தை (BSE) மற்றும் தேசிய பங்குச் சந்தை (NSE). இதில் மும்பையின் தலால் வீதியில் அமைந்திருக்கும் மும்பை பங்குச் சந்தை தான் நாட்டிலேயே பழமையான பங்குச் சந்தை.
1992-ம் ஆண்டு ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கிய ஹர்சத் மேத்தா பங்குச் சந்தை மோசடி நடைபெற்றது, இந்த மும்பை பங்குச் சந்தையில் தான். அதன் தொடர்ச்சியாக பங்குச் சந்தையில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்ற கோரிக்கை வலுப்படத் துவங்கிய சமயத்தில் உருவாக்கப்பட்டதுதான் தேசிய பங்குச் சந்தை (NSE). கணிணிமயப் படுத்தப்பட்ட சேவைகளை அறிமுகப்படுத்தி படிப்படியாக உலக அளவில் கவனிக்கப்படத்தக்க பங்குச் சந்தையாக உருவெடுத்தது இந்நிறுவனம்.
தேசிய பங்குச் சந்தையில் அன்றாடம் நடைபெறும் வர்த்தகம், இந்தியப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒரு நாள் செயல்பாடு முடங்கினாலே, இந்தியப் பொருளாதாரத்தையே சீர்குலைத்துவிடும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தேசிய பங்குச் சந்தையை ஒரு இமயமலைச் சாமியார் கட்டுப்படுத்தினார் என்று சொன்னால் அதனை நம்ப முடிகிறதா? யார் அந்த இமயமலைச் சாமியார்?
இந்த விவகாரம் எப்படி அம்பலமானது என்பதன் ஊடாக இந்தச் சாமியாரைப் பற்றி பார்க்கலாம்.
படிக்க :
♦ திவால் நிலையில் வோடஃபோன் – ஐடியா : பங்குகளை வாங்கும் மோடி அரசு !
♦ 40000 ஆண்டுகளாக இந்தியர்களின் மரபணு மாறவில்லையாம் – மோகன் பகவத்தின் அண்டப் புளுகு
தேசிய பங்குச் சந்தை, மும்பை பங்குச் சந்தை உள்ளிட்ட நாட்டின் அனைத்து பங்குச் சந்தைகளையும் உள்நாட்டு வெளிநாட்டு மூலதனங்களையும் கண்காணிக்கும் அமைப்பான செபி (SEBI) நிறுவனத்திற்கு வந்த புகார்களின் அடிப்படையில் ஆனந்த் சுப்பிரமணியன் என்ற ஒரு அதிகாரிக்கு தேசிய பங்குச் சந்தை நிறுவனத்தில் பணியமர்த்தியது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளது. செபியின் வழிகாட்டுதல்களை மீறி, தேசிய பங்குச் சந்தை நிறுவனத்தின் ஆலோசனை அதிகாரியாக ஆனந்துக்கு பணி நியமன ஆணை வழங்கியது மற்றும் பாரதூரமான அளவிற்கு சம்பள உயர்வு அளித்ததற்கு விளக்கம் கேட்டு விசாரணையை துவங்குகிறது செபி.
நாட்டின் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் இடத்தில் பங்குச் சந்தை நிறுவனங்கள் இருப்பதால், செபியின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு தான் பணி நியமனம் முதல் சம்பள உயர்வு வரை அனைத்தும் செய்யப்பட வேண்டும்.
ஆனால், அந்த நியமன வழிமுறைகளை மீறி தேசிய பங்குச் சந்தை நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சித்ரா ராமகிருஷ்ணன், ஆனந்த் சுப்பிரமணியனுக்கு தனிச் சலுகை வழங்கி பணி நியமனம் முதல், பதவி உயர்வு, சம்பள உயர்வு வரை கொடுத்துள்ளார்.
கடந்த 2013-ம் ஆண்டு, தேசிய பங்குச் சந்தை நிறுவனத்தின் மூன்றாவது தலைமைச் செயல் அதிகாரியாக சித்ரா ராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்ட அதே காலகட்டத்தில்தான் ஆனந்த் சுப்ரமணியன் எனும் ஒரு அதிகாரி தேசிய பங்குச் சந்தையின் ஆலோசகராக நியமிக்கப்படுகிறார்.
ஆண்டுக்கு வெறும் ரூ.15 இலட்சம் சம்பளத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய ஆனந்த் சுப்பிரமணியன், கிட்டத்தட்ட 1000% ஊதிய உயர்வுடன் ஆண்டுக்கு ரூ.1.68 கோடி சம்பளத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
சித்ரா ராமகிருஷ்ணன் தலைமைச் செயலதிகாரியாக தொடர்ந்த காலகட்டத்தில் ஆனந்த் சுப்பிரமணியனின் சம்பளம் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 2 கோடி, 2.3 கோடி என படிப்படியாக அதிகரித்து 2016-ம் ஆண்டு தேசிய பங்குச் சந்தை நிறுவனத்தில் இருந்து ஆனந்த் சுப்பிரமணியன் வெளியேற்றப்படும்போது அவருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் ஆண்டுக்கு ரூ.4 கோடி.
மேலும், ஏப்ரல் 2013 அன்று நியமிக்கப்பட்ட ஆனந்த் சுப்பிரமணியனுக்கு ஏப்ரல் 2015-ல் மொத்த தேசிய பங்குச் சந்தை நிறுவனத்தின் குழும செயல்பாட்டு அதிகாரியாக பதவி உயர்வு வழங்கப்படுகிறது.
இப்படி அதிகமான சம்பளமும், பதவி உயர்வும் ஏன் கொடுக்கப்பட்டது என்பது குறித்த விசாரணையோடு, மற்றொரு புகார் தொடர்பான விசாரணையும் கடந்த 2018-ம் ஆண்டு முடுக்கிவிடப்படுகிறது.
அதாவது தேசிய பங்குச் சந்தையில் பங்குகளை வர்த்தகம் செய்யும் தரகர்கள் இணையம் மூலமாக, தேசிய பங்குச் சந்தையின் விற்பனைப் புள்ளிகள் குறித்த விவரத்தைப் பெறுவதற்கான இணைப்பை எடுப்பதில், சில தரகர்களுக்கு மட்டும் விற்பனைப் புள்ளி வேகமாகப் போய்ச் சேரும் வகையில் தில்லுமுல்லுகள் நடப்பதாகவும், அதற்கு தேசிய பங்குச் சந்தையின் உள்ளிருக்கும் அதிகாரிகள் சிலர் உடந்தை என்பதையும் கடந்த 2015-ம் ஆண்டு அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவர் மூன்று எழுத்துப் பூர்வமான புகார்களை மறைமுகமாக செபிக்கு அனுப்பியிருந்தார்.
அந்த விசாரணையையும் சேர்த்து கடந்த 2018-ம் ஆண்டு சித்ரா ராமகிருஷ்ணனின் கடிதப் பரிமாற்றங்கள் உள்ளிட்ட அனைத்தையும் விசாரித்த செபிக்கு அதிர்ச்சியே பதிலாகக் கிடைத்தது.
தனது பதவிக் காலகட்டத்தில் தனது அதிகாரத்துக்கு உட்பட்ட முடிவுகள் எடுப்பதற்கான விவகாரங்களில், குறிப்பாக, பங்குச் சந்தை நிதி தொடர்பான விவகாரங்கள், தேசிய பங்குச் சந்தை நிறுவனத்தின் கட்டமைப்பு தொடர்பான விவகாரங்கள், பணி நியமன விவகாரங்கள் ஆகியவை குறித்து மின்னஞ்சல் மூலம் ஒரு ஆசாமியிடம் கருத்து கேட்டு முடிவு எடுத்திருக்கிறார் சித்ரா ராமகிருஷ்ணன்.
“ரிக்யஜூர்சாம” என்ற பெயரிலான (rigyajursama@outlook.com) ஒரு மின்னஞ்சல் முகவரிக்கு இரகசிய விவரங்களை எல்லாம் அனுப்பி கருத்து கேட்டிருக்கிறார். அந்த மின்னஞ்சல் முகவரியிலிருந்து வந்த உத்தரவுகளை எல்லாம் செயல்படுத்தியிருக்கிறார். அந்த அடிப்படையில் தான் ஆனந்த் சுப்பிரமணியத்திற்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு, கூடுதல் சலுகைகள் ஆகியவற்றை வழங்கியுள்ளார். இந்த கடிதப் பரிமாற்றம் 2014-ம் ஆண்டிலிருந்து 2016-ம் ஆண்டு சித்ரா ராமகிருஷ்ணன் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறும் வரையில் தொடர்ந்திருக்கிறது.
இதைத்தான் செபி நிறுவனம், “பங்குச் சந்தையின் அடித்தளத்தையே உலுக்கிய செயல்” என்று அதிர்ச்சி தெரிவித்திருந்தது. இது குறித்து கடந்த 2018-ம் ஆண்டிலேயே சித்ரா ராமகிருஷ்ணனிடம் விளக்கம் கேட்டது.
அந்த கேள்விகளுக்கு சித்ரா ராமகிருஷ்ணன் அளித்த பதில்களைப் படித்தால் இவரை நம்பியா தேசத்தின் பொருளாதாரத்தை தீர்மானிக்கக் கூடிய ஒரு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பு கொடுக்கப்பட்டது என ஆச்சரியம் ஏற்படும் அளவிற்கு அந்தப் பதில்கள் இருந்தன.
தேசிய பங்குச் சந்தை நிறுவனத்தின் விவகாரங்களை வெளியில் இருப்பவர்களுடன் பகிர்ந்து கொண்டது நிறுவன மற்றும் செபியின் விதிமுறைக்கு எதிரானது என்பது குறித்து செபி கேள்வி எழுப்பியுள்ளது. அதற்குப் பதிலளித்துள்ள சித்ரா ராமகிருஷ்ணன், தலைமையில் இருப்பவர்கள் முடிவெடுப்பதற்கு முன்னர், தங்களது பயிற்சியாளர்களிடமோ, ஆதர்ச நாயகர்களிடமோ கலந்தாலோசிப்பது வழக்கமானதுதான் என்று கூறியிருக்கிறார். மேலும், இயற்கையாகவே ஆன்மிக ரீதியாக இருப்பதால் நிறுவனத்தின் இரகசியம் மற்றும் மதிப்பினை விட்டுக்கொடுப்பது என்ற கேள்விக்கே இடமில்லை என்று கூறியிருக்கிறார்.
இங்கு இயற்கையாகவே ஆன்மிக ரீதியில் இருப்பதாக அவர் குறிப்பிடுவது அந்த ரிக்யஜூர்சாம என்ற மின்னஞ்சல் முகவரியிலிருந்து தமக்கு வழிகாட்டும் அந்த இமயமலை சித்த புருஷர் / யோகியின் அருள்வாக்கைத் தான்.
அந்த நபரின் இருப்பிடம் குறித்து செபி எழுப்பியுள்ள கேள்விக்கு பதிலளித்துள்ள சித்ரா ராமகிருஷ்ணன், இமயமலை முழுவதும் எங்கும் நிறைந்திருக்கும் அவருக்கு இருப்பிடம் என ஒன்று அவசியமில்லை என்று கூறியிருக்கிறார்.
சித்ரா ராமகிருஷ்ணனுக்கும் இமயமலை சாமியாருக்கும் இடையிலான மின்னஞ்சல் போக்குவரத்தில் ஆனந்த் சுப்பிரமணியத்துக்கும் நகல் இணைக்கப்பட்டிருந்தது.
இதனை ஆய்வு செய்ய, செபியின் வழிகாட்டுதலின் அடிப்படையில், எர்ன்ஸ்ட் அண்ட் யங் எனும் நிறுவனத்தை தேசிய பங்குச் சந்தை நிறுவனம் பணியமர்த்தியது. அந்நிறுவனத்தின் ஆய்வின் படி ரிக்யஜூர்சாம என்ற மின்னஞ்சலை இயக்கியது ஆனந்த் சுப்பிரமணியன் தான் என்று தெரிவித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
தேசிய பங்குச் சந்தையின் தலைமைப் பொறுப்பு மற்றும் அதன் முக்கியப் பொறுப்புகளில் இருந்து செய்யப்படும் சிறு சிறு தகிடுதத்தங்கள் கூட, முதலீடு செய்யும் பல இலட்சம் நடுத்தர வர்க்கத்தினரின் பேரிழப்பிற்கு வழிவகுக்கக் கூடியவையே.
1980-களின் இறுதியில் செபி நிறுவனத்தின் நிறுவன அமைப்பு விதிகளை உருவாக்கும் கமிட்டியில் இடம்பெற்று, தேசிய பங்குச் சந்தை நிறுவனத்தின் நிறுவனர்களின் ஒருவராக இருந்து அதன் தலைமைச் செயலதிகாரியாக வெற்றிகரமாக செயல்பட்ட ஒரு பெண், ஏதோ ஒரு சாமியாரின் அருள்வாக்கை“முட்டாள்தனமாக” நம்பி இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவாரா என்ற கேள்விதான் மற்றெல்லாவற்றையும் விட விஞ்சி நிற்கிறது.
படிக்க :
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் : நுனி முதல் அடி வரை கிரிமினல் மயம் !
புருடா மன்னன் – Cloudy மோடி | காணொளி
சித்ரா இராமக்கிருஷ்ணன், ஆனந்த் சுப்பிரமணியன் ஆகிய இருவரும் இணைந்து நடத்திய நாடகமாகவே இது தெரிகிறது. 2018-ம் ஆண்டு வெளியான இந்த விசயங்கள் அனைத்துமே சுமார் மூன்றாண்டுகளுக்கும் மேலாக கமுக்கமாக மூடி மறைக்கப்பட்டுள்ளன. செபி நிறுவனம், தேசிய பங்குச் சந்தை நிறுவனம் ஆகியவற்றோடு, சி.பி.ஐ.-யும் சேர்ந்து சித்ரா ராமகிருஷ்ணன், ஆனந்த் சுப்பிரமணியன் உள்ளிட்ட இந்தக் கூட்டுக் களவானிகளைப் பாதுகாத்து வந்துள்ளது.
சித்ரா ராமகிருஷ்ணன் பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதைத் தவிர இதனை மூடி மறைக்க வேறு ஒரு நல்ல காரணம் இருப்பதாகத் தெரியவில்லை. பார்ப்பனக் கும்பலின் களவானித்தனங்கள் என்றுமே நீர்த்துப் போகச் செய்யப்படுவதுதானே காலங்காலமாக இந்தியா கண்டுவந்துள்ள நியதி.
இந்த முறைகேடுகளிலிருந்து எப்படி தப்பிப்பது என்ற உத்தியையும் மிகச் சரியாகவே, இந்திய அரசியல் மற்றும் நீதித்துறையின் நடைமுறையில் இருந்து கற்றுத் தேர்ந்திருக்கிறார் சித்ரா ராமகிருஷ்ணன். 2018-ம் ஆண்டில் செபியின் விசாரணைக்கு அவர் அளித்துள்ள பதிலே அதற்குச் சாட்சி.
நிறுவனத்தின் கட்டுப்பாட்டு விதிகளுக்கு முரணாக அந்நியர் ஒருவரின் மின்னஞ்சலுக்கு அலுவலக விவகாரங்களைப் பகிர்ந்தது பற்றி கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள சித்ரா ராமகிருஷ்ணன், “இயற்கையாகவே ஆன்மிகரீதியாக இருப்பதால் நிறுவனத்தின் இரகசியம் மற்றும் மதிப்பினை விட்டுக்கொடுப்பது என்ற கேள்விக்கே இடமில்லை” என்று கூறியிருக்கிறார்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில், மசூதிக்கு நடுவே நள்ளிரவில் “தானாகத் தோன்றிய” ஒரு சிலை தொடுத்த வழக்கை ஏற்றுக் கொண்டு மசூதி இடிப்புக்கு வித்திட்ட நீதிமன்றம், முதலாளித்துவத்தின் சித்தத்திற்கு அப்பாற்பட்ட பங்குச் சந்தையை கட்டுப்படுத்தும் “இயற்கையான ஆன்மிக ரீதியான” சக்திதான் தன்னிடம் பேசியதாக சித்ரா ராமகிருஷ்ணன் ஏன் கருதியிருக்கக் கூடாது என்ற வாதத்தையும் ஏற்றுக் கொள்ளாமலா போகும்?

சரண்
செய்தி ஆதாரம் : அவுட்லுக் இந்தியா
இலங்கை : கொரோனா பிணவறைகளின் துயரக் கதைகள் | நதீஷா அத்துகோரல | ரிஷான்
கொரோனா எமது வாழ்க்கைக்குக் கற்றுத் தந்துள்ள பாடங்கள் அநேகம். மருத்துவமனைக் கட்டில்களில் ஒக்ஸிஜன் குழாய்கள் மூலம் உயிரைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கும் மனிதர்களைப் போலவே நாளுக்கு நாள் மூச்சு நின்று போன மனிதர்களால் பிணவறைகளும் நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றன.
இந்தியாவில் கண்ட அளவுக்கு பெருமளவான கொரோனா சடலக் குவியல்கள் இலங்கையில் இல்லாவிட்டாலும், இங்கும் ஒரு நாளைக்கு மயானத்துக்குக் கொண்டு செல்லப்படும் சடலங்களின் எண்ணிக்கை முந்நூறைக் கடந்திருக்கிறது.
இரவுகளில் அனைத்து வைத்தியசாலைகளிலிருந்தும் சவப்பெட்டி ஊர்வலங்கள் எவ்வித இறுதிச் சடங்குச் சோடனைகளோ, நில விரிப்புகளோ, தோரணங்களோ, மலர் வடங்களோ எதுவுமில்லாமல்தான் மயானங்களை நோக்கிச் செல்கின்றன. அது மாத்திரமல்லாமல் அநேகமான சடலங்கள் உறவினர் நண்பர்களோ, தமது அன்புக்குரியவர்களோ இறுதியாக முகத்தைக் கூடப் பார்க்காத நிலையில்தான் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.
எவ்வித இறுதி மரியாதைகளோ, இறுதி முத்தங்களோ இல்லாமல் படுக்கையிலேயே பொலிதீன் உறைக்குள் உங்கள் இறுதி யாத்திரை நிகழக் கூடும் என்பதை கொரோனா ஒவ்வொருவருக்கும் இந்தக் கணத்தில் கற்றுத் தந்திருக்கிறது. இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்தக் கணத்திலும் கூட இலங்கையில் மிகவும் நெருக்கடி மிகுந்த இடமாக இருப்பது மருத்துவமனைகளிலிருக்கும் கொரோனா சிகிச்சையறைகளும், பிணவறைகளும், மயானங்களும்தான்.
படிக்க :
♦ இலங்கை : மலையேறிச் சென்று பெண்கள் மேற்கொள்ளும் மருத்துவம் !!
♦ பசில் ராஜபக்சேக்கு அமைச்சர் பதவி : ராஜபக்சே குடும்பத்தின் பிடியில் இலங்கை || ரிஷான் ஷெரிஃப்
ஒரு வறிய ஏழையையும், அரண்மனைச் செல்வந்தனையும் ஒரே நேரத்தில் பாரபட்சமே பாராமல் கொரோனா அரக்கன் எப்போது வேண்டுமானாலும் மரணம் நோக்கி அழைத்துச் செல்லலாம்.
பொலிதீன் உறையில் நிகழும் இறுதி யாத்திரைகளைக் கண்டு ஒரு பிணவறையின் முன்னால் எத்தனை ஆயிரம் பேர் தினந்தோறும் அழுது புலம்புகிறார்கள். காலி, கராப்பிடிய நகரத்தின் பிணவறையின் முன்னால் நான் கண்ணுற்ற சடலங்களின் ஊர்வலம் ஒரு கணம் மனதைத் துணுக்குறச் செய்தது. அப்போது மாலை நேரம், சரியாக ஐந்து மணி முப்பது நிமிடங்கள்.
“இன்று மாத்திரம் கொரோனா சடலங்கள் இருபத்தைந்து. செய்தியறிக்கைகளில் கொரோனா மரணங்களின் அளவு குறைந்திருப்பதாகச் சொன்னாலும், உண்மையில் மரணங்களில் பெரிதாக எவ்விதக் குறைவும் இல்லை. அனைத்தும் அரசாங்கத்தின் நடிப்பு. உண்மையில் எவ்வளவு பெரிய ராஜாவாக இருந்தாலும் அவர்களது இறுதி யாத்திரை இங்கிருந்துதான்” என்று பிணவறை ஊழியர் ஒருவர் சொல்லிக் கொண்டே போனார்.
ஏழை, பணக்காரன் என்ற பேதமேதுமற்று, அந்தப் பிணவறையின் முன்னால் மக்கள் அழுது புலம்பும் விதம், தரையில் அமர்ந்திருந்து நிலத்தில் புரண்டழும் விதம் ஆகியவை மனித வாழ்க்கை எவ்வளவு கையறு நிலைக்குள்ளாகியிருக்கிறது என்பதை உணர்த்துகிறது. இலங்கையின் எந்தவொரு பிணவறைக்கு முன்னால் நீங்கள் போனாலும் அந்த வேதனையை, அந்தக் கையறு நிலையை உங்களுக்கும் உணர்த்தும்.
பணம் படைத்தவர்கள், இல்லாதவர்கள், பிரபலமானவர்கள், உயர் குலத்தவர்கள், தாழ் குலத்தவர்கள் என்ற பேதமேதுமற்று அனைத்து சடலங்களையும் ஒன்று போலவே பொலிதீன் உறையில் பொதிந்து சீல் செய்து பிணவறையின் குளிர்ந்த அறையிலிருந்து வெளியே கொண்டு வரும் போது உயிரோடிருப்பவர்கள் எவ்வளவுதான் அழுது புலம்பினாலும் கடைசியில் இவ்வளவுதானா என்று உங்களுக்குத் தோன்றும். அவ்வாறானதோர் சூழலை நெருங்கும்போது மனதில் தோன்றும் உணர்வுகளைக் குறித்து புதிதாக விவரிக்கத் தேவையில்லை. அந்தச் சூழலில் கேட்கக் கூடிய ஒரே ஓசை அழுகையும், ஒப்பாரிகளும் மாத்திரம்தான்.
அங்கு புன்னகை பூத்த முகங்களைக் காணவே முடியாது. பிணவறையின் விறாந்தைகளில் தள்ளுவண்டிகளின் மீது அமைதியாகக் கைகளைக் கோர்த்தவாறு படுத்திருப்பவர்களின் வாழ்நாளில் எவ்வளவு பந்தங்கள் இருந்திருக்கும்? அவர்கள் எவ்வளவு நண்பர்கள், சொந்தங்களுடன் பழகியிருப்பார்கள்? எவ்வளவு கனவுகள், எதிர்பார்ப்புகள், இலக்குகள் அவர்களுக்கு இருந்திருக்கும்? தமது துணையின், அம்மாவின், அப்பாவின், பிள்ளையின், உறவினர், நண்பர்களின் முகங்களைக் கூட இறுதியாகப் பார்க்க முடியாமல் இறுதிப் பயணத்தைப் போக நேர்ந்த எத்தனை பேர் அந்தப் பொலிதீன் உறைகளுக்குள் இருக்கக் கூடும்?
“எனது கணவருக்கு மரணிக்கும் அளவிற்கு எவ்வித வியாதியும் இருக்கவில்லை. இப்போதுதான் அவருக்கு முப்பத்தொன்பது வயதாகிறது. அவர் பணி புரிந்து வந்த இடத்திலிருந்து அவருக்குக் கொரோனா தொற்றியதைக் கேள்விப்பட்டதும் எனக்கும், குழந்தைக்கும், அம்மாவுக்கும் தொற்றி விடுமோ என்று பயந்து மிகவும் அழுதார். நாங்கள் பாதுகாப்பாக இருந்த போதிலும் எம்மையும் கொரோனா தொற்றியது. இன்றோடு எமக்குக் குணமடைந்து ஒரு மாதத்துக்கும் மேலாகிறது.
அம்மா மிகவும் வயதானவர். அவருக்கு சுவாசிக்கச் சிரமமானதும் கராப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதித்தோம். அவசர சிகிச்சைப் பிரிவில் கட்டில் இல்லாததால் அம்மாவின் உயிர் தள்ளுவண்டியிலேயே பிரிந்தது. அம்மாவின் மரணம் குறித்து அப்போது கணவரிடம் நாங்கள் தெரிவிக்கவில்லை. அப்போது அவர் தீவிர சிகிச்சையில் இருந்தார். ஒன்பது நாட்கள் அவ்வாறு இருந்த பிறகுதான் கணவருக்குக்குக் குணமானது.
அம்மாவின் மரணம் குறித்து கணவர் வீடு திரும்பிய பிறகுதான் அவரிடம் கூறினோம். ‘அம்மாவின் பேரில் மூன்றாம் மாத அன்னதான நிகழ்வைச் சிறப்பாகச் செய்ய வேண்டும்’ என்று அவர் கூறினார். வீடு திரும்பி பதினைந்து நாட்களின் பின்னர் கணவருக்கு இருமல் ஏற்பட்டது. இருமலுடன் மீண்டும் சுவாசிக்கச் சிரமப்பட்டார். கராப்பிட்டிய மருத்துவமனைக்குக் கூட்டி வந்த போது ‘ஆஸ்துமாவினால் வந்திருக்கும்’ என்றார்கள். நேற்று மாலை நேரமும் என்னோடு நன்றாகக் கதைத்துக் கொண்டிருந்தார். ‘இன்னும் இரண்டு நாட்களில் வீட்டுக்குத் திரும்பி விடலாம்’ என்றும் கூறினார்.
இரவு வேளையில் மருத்துவமனையிலிருந்து என்னை அழைத்து கோவிட் நியூமோனியாவின் காரணமாக கணவர் இறந்து விட்டதாகக் கூறினார்கள். என்னால் நம்பவே முடியவில்லை. கொரோனா குணமாகி வீட்டுக்கு வந்தவருக்கு என்ன நேர்ந்தது? ஒரே ஒரு தடவை எனக்கு கணவரின் முகத்தைப் பார்க்க அனுமதித்தார்கள். குழந்தைக்கு இப்போதுதான் இரண்டு வயது. அதனால் மருத்துவமனைக்குக் கூட்டிக் கொண்டு வர வேண்டாம் என்றார்கள்.
அம்மா காலமாகி இருபது நாட்களில் எனது கணவரும் இறந்து விட்டார். அழுவதற்கு இப்போது என்னிடம் கண்ணீர் கூட இல்லை. இவ்வாறானதொரு துயரம் வேறு எந்தப் பெண்ணுக்கும் நேரக் கூடாது. உங்களைக் கும்பிட்டுக் கேட்டுக் கொள்கிறேன். கொரோனாவிடமிருந்து பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள். நான் மீண்டும் ஒரு தடவையாவது எனக்கு என்னுடைய கணவரின் முகத்தைப் பார்த்துக் கொள்ளக் கிடைக்குமா என்றுதான் இப்போது இங்கு காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று ஒரு பெண்மணி அழுது புலம்பினார். அவர் இந்தப் பிணவறையில் நான் சந்திக்க நேர்ந்த ஒரு இளம்பெண். அவரது அழுகை ஓலம் பிணவறை முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருந்தது.
அதே கராப்பிட்டிய மருத்துவனையின் பிணவறை ஊழியர் ஒருவர் தனது அனுபவத்தை என்னிடம் இவ்வாறு தெரிவித்தார்.
“இரவாகும்போது எனது மொத்த உடலும் வலிக்கும். கொரோனா சடலங்களைத் தள்ளுவண்டியில் நானேதான் தூக்கி வைக்க வேண்டியிருக்கும். கொரோனா சடலங்களைத் தொட்டுத் தூக்கக் கூட யாரும் அருகில் வருவதில்லை. நோய் தொற்றி விடும் என்ற பயம்தான் காரணம். ஒரு நாளைக்குக் குறைந்தது இருபது, இருபத்தைந்து கொரோனா சடலங்கள் தவறாமல் இங்கு வரும். ஒரு நாள் நாற்பது சடலங்கள் வந்தன.
நான் இங்கு பிணங்களை அறுப்பதைச் செய்து வருகிறேன். அன்று மாத்திரம் நான் தனியாக இருபத்தைந்து சடலங்களை அறுக்க நேர்ந்தது. எப்படியும் குறைந்தது ஒரு நாளைக்கு பத்து, பன்னிரண்டு சடலங்களை நான் அறுக்க வேண்டியிருக்கும். கோவிட் நியூமோனியாவினால் மரணிக்கும் இளம் வயதுடையவர்களின் சடலங்களைக் கட்டாயமாக அறுத்துப் பார்க்க வேண்டியிருக்கும். நான் ஒவ்வொரு சடலத்தை அறுக்கும் முன்பும் கடவுளுக்கு பூ வைத்து பூஜை செய்து, விளக்கேற்றி விட்டுத்தான் அறுக்கிறேன்.
கடந்த பதினான்கு வருடங்களாக நான் பிணவறையில் பிணங்களை அறுக்கும் வேலையைச் செய்து வருகிறேன். எனது வறுமையின் காரணமாக இந்த பிணம் அறுக்கும் வேலையைச் செய்கிறேனே ஒழிய விருப்பத்தோடு நான் இதைச் செய்வதில்லை. இது மிகவும் சாபம் பிடித்த தொழில்.
நான் கொரோனா சடலங்களை அறுப்பதனால் எனது குழந்தைகளின் முகங்களைப் பார்த்தே ஐந்து மாதங்களாகின்றன. வீட்டுக்குப் போகவேயில்லை. என்னைக் காணும்போது நெருங்கிய நண்பர்கள் கூட பின்னால் நகர்ந்து போய் விடுகிறார்கள். நண்பர்கள், உறவினர்கள் கூட என்னைத் தள்ளியே வைத்திருக்கிறார்கள். அவற்றை யோசித்துப் பார்க்கும்போது மிகுந்த கவலை தோன்றுகிறது.
எனது தொழிலில் மிகவும் மோசமான காலத்தை இப்போது கடந்து கொண்டிருக்கிறேன். இதுவரையில் கொரோனா தொற்றி மரணித்த ஆறு குழந்தைகளை நான் அறுத்திருக்கிறேன். எத்தனை வருட கால அனுபவம் இருந்த போதிலும், ஒரு குழந்தையொன்றின் சடலத்தைக் கைகளில் ஏந்தியதும் எனது கை கால்கள் வலுவிழந்து போய் விடுகின்றன. மிகுந்த மன உளைச்சலை உணர்வேன்.
நான்கு நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றி மரணித்த இருபத்தெட்டு வயதான நிறைமாத கர்ப்பிணித் தாய் ஒருவரின் சடலத்தை இங்கு கொண்டு வந்தார்கள். பிரசவம் நிகழ்ந்திருக்கவில்லை. அந்தத் தாயின் வயிற்றுக்குள் பூரண வளர்ச்சியடைந்த குழந்தை இருந்தது. அதைக் கையில் எடுத்த பிறகு வேறு இடத்தில் வைக்க எனக்கு மனம் இடமளிக்கவில்லை. அந்தக் குழந்தையைத் தாயின் கால்களிரண்டின் அருகிலேயே வைத்திருந்தேன்.
அந்தச் சடலத்தைப் பொறுப்பேற்க ஒரு இளைஞர் வந்தார். அவரைக் கட்டுப்படுத்த என்னால் முடியவேயில்லை. சடலத்தைக் காண்பித்ததும் என்னையும் தள்ளிக் கொண்டு போய் கால்களருகே வைக்கப்பட்டிருந்த குழந்தையைக் கையிலேந்தி அரவணைத்து முத்தமிட்டுக் கொண்டேயிருந்தார். ‘கிருமியிருக்கும், முத்தமிடாதீர்கள்’ என்று நான் கத்தினேன். அவர் அந்தச் சடலங்களிரண்டையும் பார்த்து அழுது புலம்பியதைக் கண்டு நான் செய்வதறியாது நின்று கொண்டிருந்தேன். எனது கண்களிலிருந்தும் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
வேறு வியாதிகள் தொற்றி மரணிப்பதைக் காட்டிலும் இவ்வாறான திடீர் மரணங்கள் மிகுந்த கவலையைத் தருபவை. வீட்டிலிருந்து பத்திரமாக பிரசவத்துக்காக வந்த பெண் கடைசியில் பிணவறையில் துணிப்பொதி போல கிடைக்கிறார். அந்த இளைஞர் என்னிடம் ஒரு வேண்டுகோளை முன்வைத்தார். அப்போது சடலத்தைப் பெட்டியிலிட்டு ஆணியடிக்கும் வேலை மாத்திரமே மீதமிருந்தது. திருமணத்தின் போது தனது மனைவி கட்டியிருந்த சேலையை அந்தச் சடலத்துக்கு அனுவிக்க முடியுமா என்று கேட்டார்.
நான் அதையும் செய்து கொடுத்தேன். அந்தச் சடலத்துக்கு ஆடையணிவித்து, குழந்தைக்கும் அழகான ஆடையொன்றை அணிவித்தேன். நான் ஆடையணிவித்து முடிக்கும்வரை அந்த இளைஞர் அழுது கொண்டே தனது மனைவியின் தலையைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தார். இங்கிருப்பவை கொரோனா மரணங்கள் என்பதால் யாரையும் உள்ளே நுழைய நாங்கள் அனுமதிப்பதில்லை. ஆனாலும், அவருக்கு அனுமதியளிக்காதிருக்க எனது மனம் அன்று இடமளிக்கவில்லை.
அதன் பிறகு வந்த இரண்டு நாட்கள் எனக்கு உறக்கம் வரவேயில்லை. இப்போதும் எனக்கு அந்தச் சம்பவம் நினைவுக்கு வந்து கொண்டேயிருக்கிறது. தொடக்கத்தில் கொரோனா தொற்றிய முதியவர்களது சடலங்களே நிறைய வந்தன. இப்போது இளைஞர்களது சடலங்கள் நிறைய வருகின்றன. சில நாட்கள் இந்தப் பிணவறையில் சடலங்கள் கொசுக்களைப் போல நிறைந்திருக்கும்.
குடும்பத்தவர்கள் இந்த இடத்தில் அழுது புலம்புவத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. சிலர் சடலத்தைப் பார்த்து விட்டு இந்த இடத்திலேயே மாரடைப்பு வந்து நெஞ்சைப் பிடித்துக் கொண்டு உயிரிழந்திருக்கிறார்கள். மிக அண்மையிலும் அவ்வாறானதோர் சம்பவம் நடந்தது. கொரோனா தாக்கி மரணித்த கணவனைப் பார்க்க மனைவியும், மகளும் வந்திருந்தார்கள். கணவனின் முகத்தைப் பார்த்ததுமே மனைவி நெஞ்சைப் பிடித்துக் கொண்டு விழுந்து விட்டார். திடீர் மாரடைப்பால் அந்தத் தாய் மரணமடைந்திருந்தார். மகளுக்குப் பத்து வயது.

இவற்றையெல்லாம் காணும் அளவிற்கு நான் போன ஜென்மத்தில் நிறைய பாவம் செய்திருக்கக் கூடும் என்று நினைக்கிறேன். பத்தே வயதான அந்தச் சிறுமி தனது அம்மாவினதும், அப்பாவினதும் சடலங்களுக்கு முன்னால் எந்தளவு துயரங்களைத் தாங்கிக் கொண்டிருந்திருக்கக் கூடும்? இவற்றையெல்லாம் கண்டு கண்டே இரவில் தூக்கம் வருவதேயில்லை. பசியை நான் உணர்வதேயில்லை. எனது வறுமையின் காரணமாகத்தான் இவற்றையெல்லாம் பொறுத்துக் கொண்டு இந்தத் தொழிலைச் செய்து வருகிறேன்” என்றார்.
மற்றுமொரு பிணவறை ஊழியர் தனது அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார்.
“பெரும்பாலான நாட்களில் இரவாகும்போது என்னைக் காய்ச்சல் பீடித்தது போல உணர்வேன். இந்தச் சடலங்களைத் தூக்கித் தூக்கியே தாங்க முடியாத அளவு உடல் வலியெடுக்கும். கொரோனா சடலங்கள் என்று பார்க்காமல் அந்தச் சடலங்களையும் குளிப்பாட்டித் தூய்மையாக்கித்தான் பிணப்பெட்டியில் நாங்கள் இடுவோம். சில சடலங்கள் பல நாட்களாக இங்கேயே கிடப்பதால் அவற்றின் தோல் தனியாகக் கழன்று வந்த சந்தர்ப்பங்களும் இருக்கின்றன. இங்கு குளிர்பதன வசதியும் குறைவாகவே இருக்கிறது. சில சடலங்களை யாருமே உரிமை கோர மாட்டார்கள்.
அண்மையில் பாடசாலைக்குப் போகும் சிறுமியின் சடலமொன்று வந்தது. கொரோனா தாக்கி மரணமடைந்த சடலம் அது. அதன் தாய் அவளது குழந்தைப் பராயத்திலேயே மரணித்து விட்டிருந்தார். தந்தைதான் கைக்குழந்தையிலிருந்தே அவளை வளர்த்து வந்திருக்கிறார். அந்தச் சடலத்தை அறுக்க நேர்ந்தது. அறுத்துப் பார்த்து, குளிப்பாட்டித் தூய்மையாக்கி, பெட்டியில் இட முன்பு தூர இருந்தே பிள்ளையைப் பார்த்து விட்டுப் போய் விடுமாறு தந்தையிடம் கூறியதும் அவர் சடலத்தைப் பார்த்து நிலத்தில் விழுந்து புரண்டு ஓலமிட்டு அழுதார். பொலிதீன் உறையால் சடலத்தை மூட முற்பட்ட போது ஓடி வந்து சடலத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டு ஒப்பாரி வைத்து அழுதார்.
படிக்க :
♦ கடன் சுமைக் கடலில் தத்தளிக்கும் இலங்கை ! தீர்வு என்ன ?
♦ இலங்கை : இராணுவ போலீசு வன்முறைகளை எதிர்த்தல் !
அவர் அழுததைக் கண்டு எனக்கும் அழுகை வந்தது. எனக்கும் ஒரு மகள் இருக்கிறாள். அந்தத் தந்தையின் கவலையை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. கொரோனா சடலங்களின் அருகில் யாரையும் நெருங்க விட வேண்டாம் என்று எமக்கு உத்தரவிட்டிருக்கிறார்கள். இருந்தாலும் நான் அந்தத் தந்தைக்கு வேண்டிய மட்டும் தனது மகளின் அருகில் இருக்க இடமளித்தேன். அந்தத் தந்தை தனது மகளின் தலையைத் தடவித் தடவி என்னென்னவோ கூறிக் கொண்டிருந்தார். நான் அந்தச் சடலத்தைப் பெட்டியிலிட்டு ஆணியடிக்க முற்பட்ட வேளையில், திரும்பவும் அவர் ஓடி வந்து என்னிடம் அவரது புகைப்படமொன்றைத் தந்தார்.
“என்னுடைய மகள் ஒருநாளும் தனியாகத் தூங்கியதில்லை ஐயா. அம்மா காலமானதிலிருந்து நான் இவளைத் தனியாகத்தான் வளர்த்து வந்தேன். இருந்தாலும் இந்த நோயிடமிருந்து இவளை என்னால் பாதுகாக்க முடியாமல் போய் விட்டது. நான் சாகும்வரை இந்த வேதனையை அனுபவித்துக் கொண்டேயிருப்பேன். நான் சாகும்வரைக்கும் அவளுடைய தனிமையைப் போக்க இவற்றை அவளின் நெஞ்சின் மீது வைத்து மூடுங்கள்” என்று கூறி என்னிடம் அவரது புகைப்படம் ஒன்றையும், கரடி பொம்மையொன்றையும் ஒப்படைத்தார். இது எனது இந்தத் தொழில் வாழ்க்கையில் மறக்கவே முடியாத, எனக்கு அடிக்கடி நினைவுக்கு வரும் சம்பவமாகும்.
நான் எவ்வளவுதான் சடலங்களை அறுத்திருந்த போதிலும், இங்கு அனுபவிக்க நேரும் சில சம்பவங்களை என்னால் தாங்கிக் கொள்ள முடியாத வேளைகளில் ஒரு ஓரமாகப் போய் அழுது தீர்த்த சந்தர்ப்பங்கள் நிறைய உண்டு. இந்தளவு துயரங்களைத் தாங்கிக் கொண்டுதான் நாங்கள் இவையனைத்தையும் செய்து வருகிறோம். தொழிலொன்று இல்லாமல் வாழ முடியாது என்பதனால்தான் உண்மையிலேயே இந்தத் தொழிலைச் செய்து வருகிறேன். தமது சொந்தங்களை கொரோனா அரக்கன் பறித்துக் கொள்ளாதவரைக்கும் இந்த நோயின் பயங்கரத்தையும், அந்த வலியையும் எமது மக்கள் உணர்வதேயில்லை” என்றார்.
(கட்டுரையாளர் குறிப்பு :- நதீஷா அத்துகோரல, இலங்கையைச் சேர்ந்த பெண் ஊடகவியலாளரான நதீஷா அத்துகோரல, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பட்டதாரி ஆவார். கொழும்பு நகரத்தைக் குறித்து ஆய்வு செய்து நூலொன்றை எழுதி வருகிறார்.)
கட்டுரையாளர் : நதீஷா அத்துகோரல
புகைப்படங்கள் : திரு. லஹிரு ஹர்ஷன
தமிழில் : எம். ரிஷான் ஷெரீப்
‘பாதுகாப்பு குறைபாடு’ கூச்சலுக்கு பின்னே பஞ்சாபை ஒடுக்கத் துடிக்கும் சதிகார நோக்கம்!
கடந்த ஜனவரி 5-ம் தேதியன்று பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரில் நடைபெற இருந்த பா.ஜ.க. தேர்தல் பிரச்சாரப் பேரணியில் கலந்துகொள்ள வந்த பிரதமர் மோடியின் கார், விவசாயிகளின் போராட்டத்தால் மோகா – ஃபெரோஸ்பூர் தேசிய நெடுஞ்சாலையில் தடுத்து நிறுத்தப்பட்டது. இந்த செய்தி வெளியானவுடனேயே காவி கும்பல்களும் ஜால்ரா ஊடகங்களும் “பிரதமரின் பாதுகாப்பில் குறைபாடு”, “பிரதமர் உயிருக்கு ஆபத்து” என்று ஒன்றுமில்லாத நிகழ்வை ஊதிப் பெருக்கின.
உ.பி. முதல்வர் ரவுடி சாமியார் யோகி, “பாதுகாப்பு குறைபாடு என்பது பிரதமரைக் கொல்ல திட்டமிட்ட சதி” என்று பொங்கினார். மத்தியப் பிரதேசம், அசாம் மாநில முதல்வர்கள் உட்பட நாடு முழுவதும் பா.ஜ.க.வினர் மோடியின் ஆயுள் நீடிக்க வேண்டி சிறப்பு பூஜைகள் செய்ததன் மூலம் தாங்கள் கட்டமைத்துக் கொண்டிருந்த திரைக்கதைக்கு சுவை சேர்த்தனர்.
70,000 நபர்கள் கலந்துகொள்வதாக இருந்த பா.ஜ.க.வின் தேர்தல் கூட்டத்தில் வெறும் 500 நபர்களே வந்திருந்த காரணத்தால்தான் மோடி தனது நிகழ்ச்சியை இரத்துசெய்துவிட்டு கிளம்பினார். தனக்கு நேர்ந்த அவமானத்தை மறைப்பதற்காகவே “பாதுகாப்பு குறைபாடு” என்று நாடகமாடுகிறார் என்று ஆரம்பத்தில் மோடியை விமர்சித்தார் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி. பா.ஜ.க.வினரின் ஆர்ப்பாட்டங்கள், அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் அனைத்திலும் இந்நிகழ்வை ஊதிப்பெருக்கி நடந்த விவாதங்கள் என ஒருசுற்று முடிந்த பின்பு அதே சரண்ஜித் சிங் பாதுகாப்பு குறைபாட்டுக்கு பொறுப்பேற்று வருத்தம் தெரிவித்தார். அந்த அளவிற்கு இந்த நாடகத்தின் வீச்சு இருந்தது.
படிக்க :
♦ மோடியின் உயிருக்கு பாதுகாப்பில்லையா? 5 மாநில தேர்தல்களுக்கான இன்னொரு நாடகம் !
♦ காலி நாற்காலிகளுக்கு பயந்தோடிய மோடி : விசாரிக்க கமிட்டி போட்ட உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றமோ இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட பஞ்சாப் மற்றும் ஒன்றிய அரசின் இரு விசாரணைக் குழுக்களையும் களைத்துவிட்டு ‘நடுநிலையாக’ தானே ஓய்வு பெற்ற நீதிபதி இந்து மல்ஹோத்ரா தலைமையில் ஒரு விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டது.
மோடிக்கு மகுடி வாசித்த ஊடகங்களும்!
காலிஸ்தானிகளாக்கப்பட்ட பஞ்சாப் விவசாயிகளும்!
புல்வாமா தாக்குதலை ஒட்டிய தேசவெறிப் பிரச்சாரம்; பீமாகொரேகான் நிகழ்ச்சியை ஒட்டி கிளப்பிவிடப்பட்ட “மோடியைக் கொல்ல மாவோயிஸ்டுகள் சதி” என்ற பிரச்சாரம் ஆகியவை போன்று தற்போதைய பஞ்சாப் விசயத்திலும் மைய ஊடகங்கள் அனைத்தும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பாசிஸ்டுகள், மக்களிடையே எதை கருத்துருவாக்கம் செய்யும் திட்டத்துடன் களமிறங்கினார்களோ அதை சிரமேற்கொண்டு செய்து தந்திருக்கின்றன.
“அணு ஆயுத அரசின் தலைவரான பிரதமர் மோடி சாலையில் 15 நிமிடங்கள் காத்திருப்பதும் பாதுகாப்பு ஊழியர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைப்பதும் மிகப்பெரும் தவறு நடந்திருக்கிறது என்பதையேக் காட்டுகிறது… ஏற்கெனவே இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகிய பிரதமர்களை கொன்றது போல் மீண்டும் ஒரு தவறு நடக்கக் கூடாது” என்று பீதியை உருவாக்குகிறது, தி பிரிண்ட் ஆங்கில இணையப் பத்திரிகை.
“இந்திய ஜனநாயக நிறுவனத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த அலுவலகங்களில் பிரதமர் அலுவலகமும் ஒன்று. பிரதமர் அலுவலகம் அச்சுறுத்தலுக்குள்ளாவது என்பது இந்திய நாடே அச்சுறுத்தலுக்குள்ளாவதாகும். யார் பிரதமராக இருக்கிறார் என்பதெல்லாம் ஒருபொருட்டல்ல” என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு.

“தேசத்தில் மிக அதிகமாக பாதுகாப்பு வழங்கப்பட வேண்டிய பொறுப்பான பதவி பிரதமருடையது. அது தேசத்தின் பாதுகாப்பு தொடர்பானது… பிரச்சாரத்தைத் தடுக்கும் அமைப்புகளை சட்டரீதியாக அடக்குவதும் ஒடுக்குவதும் அகற்றுவதும் மாநில அரசின் கடமை” என்று தலையங்கம் எழுதியது தினமணி.
“நன்கு குறிபார்த்து சுடுபவராலோ, ஆளில்லா டிரான் மூலமோ, கையெறி ஏவுகணை (Grenade-launcher) அல்லது நாட்டு வெடிகுண்டு மூலமோ பிரதமரின் கார் எளிதில் தாக்குதலுக்கு உள்ளாகக் கூடிய வாய்ப்பிருந்திருக்கிறது…” என்றும் “இந்தியப் பிரதமர் ஒரு தனிமனிதல்ல, நாட்டின் மிக முக்கியத்துவம் வாய்ந்த சட்டப்பூர்வ அலுவலகம் மற்றும் நிறுவனம். அதேபோல் அவரது பாதுகாப்பு என்பது தனிநபரின் பாதுகாப்பல்ல நிறுவனத்தின் பாதுகாப்பு, தேசத்தின் பாதுகாப்பு” என்று விசயத்தை தேசவெறிக்கு மடைமாற்றியது இந்தியா டுடே.
மொத்தத்தில், மக்கள் விரோத மோடிக்கு எதிரான சொந்த நாட்டு மக்களின் போராட்டத்தை, “பாதுகாப்பு குறைபாடு”, “பிரதமரைக் கொல்ல சதி” “மீண்டும் 1984 – (இந்திரா கொல்லப்பட்ட ஆண்டு)” என்று கூவியதன் மூலம் போராடிய பஞ்சாப் விவசாயிகள் அனைவரையும் “தீவிரவாதிகள்” என மறைபொருளில் பிரச்சாரம் செய்தன ஊடகங்கள்.
இவையன்றி, மோடியின் பயணத்தில் நடந்த பாதுகாப்பு குறைபாட்டுக்கு “நீதிக்கான சீக்கியர்கள்” என்ற காலிஸ்தான் ஆதரவு அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக ஒரு செய்தியும் பரப்பப்பட்டது. இதுதொடர்பாக வெளிநாட்டிலிருந்து அந்த அமைப்பின் தலைவர் பேசியதாக ஒரு காணொலி சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது.
மோடி சென்றதோ தேர்தல் பிரச்சாரத்திற்கு; பயணித்த பாதையில் மறியல் செய்தவர்களோ விவசாயிகள்; அதுவும் முன்னறிவித்து செய்யப்பட்ட போராட்டம் – நடந்தது இதுதான். இவ்வாறிருக்க ஏதோ தீவிரவாதத் தாக்குதல் தொடுக்கப்பட்டதைப் போல இதற்கு ‘பொறுப்பேற்கிறேன்’ என காலிஸ்தான் ஆதரவு அமைப்பின் தலைவர் பேசுவதாக காணொலி ஒன்று புறப்படுகிறது எனில், இதன் பின்னணியில் யாரோ ஒரு திருவிளையாடலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள் என்று நமக்கு தோன்றுகிறது.
‘பாதுகாப்பு குறைபாடு’ எனும் நாடகம்
ஃபெரோஸ்பூரில் நடைபெறவிருந்த பேரணியில் கலந்து கொள்வதற்காக சென்ற மோடியின் பயணத் திட்டமென்பது பதிண்டா விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஃபெரோஸ்பூர் செல்வதாகும். ஆனால் வானிலை சரியில்லாததால் ஹெலிகாப்டர் பயணம் இரத்துசெய்யப்பட்டது. திடீரென்று பயணத் திட்டம் மாற்றப்பட்டு சாலை வழியாக பதிண்டாவிலிருந்து ஃபெரோஸ்பூர் வரை கிட்டத்தட்ட 100 கி.மீ காரில் பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

ஆனால், ஃபெரோஸ்பூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகளின் போராட்டம் நடைபெற்றதால் பியரினா என்ற கிராமத்தில் மோடி சென்ற கார் தடுத்து நிறுத்தப்பட்டதோடு, 15-20 நிமிடங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 70,000 நபர்கள் கலந்து கொள்வதாக இருந்த கூட்டத்தில் வெறும் 700 நபர்களே கலந்து கொண்டதால் மோடியின் தேர்தல் பேரணியும் இரத்து செய்யப்பட்டது.
“என்னை உயிருடன் திருப்பியனுப்பியதற்காக உங்கள் முதல்வருக்கு நன்றி சொல்லுங்கள்” என்று தான் திரும்பிச் செல்லும்முன் பஞ்சாப் விமான நிலைய அதிகாரிகளிடம் வசனமொழி பேசினார் மோடி. இதுதான் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வின் பிரச்சாரத் திட்டத்திற்கு கொடியசைப்பாக அமைந்தது.
பஞ்சாபிற்கு மோடி வரும் நாளில், எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்வோம் – என்று முன்பே அறிவித்திருந்தது விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா. போராட்டம் நடைபெற்ற இடத்திலிருந்து 1 கி.மீ தொலைவிற்கு முன்பே மோடியின் கார் தடுத்து நிறுத்தப்பட்டுவிட்டது.
மோடியின் காரை சுற்றி சிறப்பு பாதுகாப்பு குழுவினர் இயந்திர துப்பாக்கிகளுடன் நின்றிருப்பதும் காருக்கு அருகாமையில் “நரேந்திர மோடி வாழ்க” என்ற பதாகைகளுடன் பா.ஜ.க.வினர்தான் குழுவாக நின்று முழக்கமிட்டார்கள் என்பதும் சமூக ஊடகங்களில் வெளியான காணொலியில் தெளிவாகத் தெரிகிறது. எனவே போராடிய விவசாயிகளால் மோடிக்கு பாதுகாப்பு குறைபாடு என்பது வடிகட்டிய பொய்யாகும்.
மேலும் மோடியின் பயணத்தில் இடையூறு ஏற்படுவது, அதாவது பா.ஜ.க.வினரின் மொழியில் சொன்னால் ‘பாதுகாப்பு குறைபாடு’ ஏற்படுவதென்பது முதன்முறையல்ல. இதற்கு முன்னர் 2019-ம் ஆண்டு, மேற்கு வங்க மாநிலம் அசோக் நகரில் நடைபெற்ற பேரணியில் பாதுகாப்பு வளையத்தை உடைத்துக் கொண்டு மக்கள் மோடியை நெருங்கினர். 2018-ம் ஆண்டு, சிறப்பு பாதுகாப்பு குழுவையும் மீறி ஆள்மாறாட்டப் பேர்வழி ஒருவர் மோடி இருந்த மேடைக்கே சென்றிருக்கிறார். 2017-ம் ஆண்டு, நொய்டாவில் போலீஸ் பாதுகாவலர்களே மோடி சென்ற காரை போக்குவரத்து நெரிசலில் சிக்கும்படி செய்திருக்கின்றனர். அப்போதெல்லாம் ‘பாதுகாப்பு குறைபாடு’ என்று கூச்சலிடாத ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பரிவாரங்கள் தற்போது மட்டும் “மோடியின் உயிருக்கு பாதுகாப்பில்லை” என்று கூச்சலெழுப்புவதை சாதாரண விசயமாக நாம் கடந்து சென்றுவிட முடியாது.
ஐந்து மாநிலத் தேர்தலுக்கான நாடகமா, அடக்குமுறைக்கான சாதனமா!
பா.ஜ.க.வை, மோடியைப் பற்றித் தெரிந்த பல்வேறு முற்போக்காளர்களும் முற்போக்கு -லிபரல் ஊடகங்களும், 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது புல்வாமா தாக்குதலை வைத்து ‘தேசபக்தி’ அலையை எழுப்பி ஓட்டு அறுவடை செய்துகொண்ட உத்தியைப் போன்றதுதான் தற்போதைய ‘பாதுகாப்பு குறைபாடு’ நாடகமும்; இதன் மூலம் தன் மீது ஒரு அனுதாப அலையை உருவாக்கி ஓட்டு அறுவடை செய்யப் பார்க்கிறார் மோடி என்கின்றனர்.
ஆட்சியதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. எந்த அளவிற்கும் இறங்கி வேலை பார்ப்பார்கள் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் பஞ்சாப் விசயத்தையொட்டி காவி கும்பல் செய்துவரும் பிரச்சாரம் என்பது தேர்தலுக்கு அப்பாற்பட்டு ஒரு நோக்கத்தைக் கொண்டுள்ளது என்ற உண்மையை, சில விசயங்களை தொடர்புப்படுத்திப் பார்ப்பதன் மூலம் நம்மால் விளங்கிக் கொள்ள முடியும்.
முதலாவதாக, தலைகீழே நின்று தண்ணீர் குடித்தாலும் நடைபெறவிருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றிபெறப் போவதில்லை. இது பா.ஜ.க.வினருக்கும் நன்கு தெரியும். ஏனெனில் மோடி அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் பஞ்சாப் மக்களை மோடி எதிர்ப்பு – பா.ஜ.க. எதிர்ப்பு அரசியலுடன் ஐக்கியப்படுத்தியிருக்கிறது. பஞ்சாபில் உள்ள சிறு குழந்தை கூட மோடி என்றால், இழிசொல்லால் வசைபாடும்.
தற்போது மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டிருந்தாலும் அவை பஞ்சாப் விவசாயிகளை சமாதானப் படுத்திவிடவில்லை. சமாதானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும் மோடி அரசு அச்சட்டங்களை திரும்பப் பெறவில்லை. விவசாயிகளுடன் போராட்டத்தை தற்காலிகமாக கலைத்துவிடவும்; தங்களது இந்து முனைவாக்கத்தைக் கடந்து, “விவசாயிகள்” என்ற வர்க்க ஒற்றுமை, இப்போராட்டத்தின் விளைவாக பஞ்சாபைத் தாண்டி மேலும் விரிவடைந்து விடக் கூடாது என்பதற்காகவும்தான் மூன்று வேளாண் சட்டங்களை இரத்து செய்தது மோடி அரசு. குறிப்பாக உத்தரப் பிரதேசத் தேர்தலை மனதில் வைத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அது.
கார்ப்பரேட் தாசனான மோடிக்கு வேளாண் சட்டங்களை நிரந்தரமாக திரும்பப் பெறும் நோக்கம் எதுவும் இல்லை. அதனை சட்டங்களைத் திரும்பப் பெற்ற அன்று மோடி ஆற்றிய உரையிலேயே காணலாம். “நாட்டின் பெரும்பான்மை விவசாயிகளுக்கு நன்மை செய்யும் வேளாண் சட்டங்களை ஒரு சிறுபிரிவினருக்கு புரியவைக்க முடியவில்லை என்பதற்காக திரும்பப் பெறுகிறேன், என்னை மன்னித்து விடுங்கள்” என்றார்.
அதைத் தொடர்ந்து சமீபத்தில், “சிலருக்கு பிடிக்காத காரணத்தால்தான் வேளாண் சட்டங்கள் பின்வாங்கப்பட்டுள்ளன. பா.ஜ.க. அரசு ஓரடி பின்னோக்கிச் சென்றுள்ளது. ஆனால் விவசாயிகளின் நலன் கருதி மீண்டும் முன்னோக்கிச் செல்லும்” என்று பேசினார் வேளாண் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர். ஆக, மீண்டும் இச்சட்டங்களை கொண்டுவருவதற்கான உகந்த சூழ்நிலையை எதிர்நோக்கி ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. காத்திருக்கிறது.
அத்தகைய சூழ்நிலையை உருவாக்க வேண்டுமானால் பஞ்சாபை அடக்கி ஒடுக்குவது முன்நிபந்தனையாகிறது. ஏனெனில், மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா விவசாயிகள் மட்டும் போராடவில்லை. அவர்களைப் போல வீச்சு இல்லாவிட்டாலும் நாட்டின் பிற பகுதி விவசாய அமைப்புகளையும் போராட வைத்தார்கள்.
அனைத்து மாநில மக்களிடத்திலும் தங்கள் போராட்டத்தின் நியாய உணர்வை அங்கீகரிக்க – ஆதிரிக்கச் செய்தார்கள். மூன்று வேளாண் சட்டங்களுக்குள் பொதிந்திருக்கும் கார்ப்பரேட் இலாப வெறியை தங்களின் போராட்ட முறைகளின் மூலம் நாடு முழுவதும் உள்ள மக்களிடம் குறிப்பிட்ட அளவிற்கு கொண்டு சேர்த்திருக்கிறார்கள்.
சுருக்கமாகவும் சரியாகவும் பஞ்சாப் விவசாயிகளின் போராட்டத்தை மதிப்பிட வேண்டுமானால், “இந்திய விவசாயத் துறையை கார்ப்பரேட்மயமாக்கும் மோடி அரசின் மறுகாலனியத் திட்டத்திற்கெதிரான போராட்டத்திற்கு என்ஜினாக செயல்பட்டார்கள்” என்று சொல்லலாம். நாட்டின் மற்ற மாநிலங்களில் ஏற்கெனவே தனியார் கொள்முதல்தான் ஆதிக்கம் செலுத்தும் நிலையில் உள்ளது. இந்நிலையில் பெருமளவு அரசுக் கொள்முதலை சார்ந்திருப்பது பஞ்சாப், அரியானா போன்ற மாநிலங்கள் மட்டுமே. வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களுக்கு இம்மாநிலங்கள் முன்னணிப் பாத்திரம் வகிப்பதற்கான காரணம் இதுதான்.
இதை நம்மைவிட காவி பாசிஸ்டுகள் நன்கு மதிப்பிட்டுள்ளார்கள். எனவே பற்றி எரியும் பஞ்சாபை பயங்கரவாத – பிரிவினைவாத பீதியூட்டி அடக்கி ஒடுக்குவதன் மூலம் வேளாண் துறையை கார்ப்பரேட்மயமாக்குவதற்கு எதிரான நாடுதழுவிய கொதிப்பை அடக்கிவிடலாம் என்ற திட்டத்துடன் காய்நகர்த்தி வருகிறார்கள். அதற்கான நியாயவாதங்களை உருவாக்கும் முயற்சிதான் “மோடியின் உயிருக்கு பாதுகாப்பில்லை” என்ற பிரச்சார இயக்கம்.
படிக்க :
♦ குறுஞ்செய்திகள் : புல்லிபாய், டெக் ஃபாக் செயலி விவகாரம் – கூடுதல் தகவல்கள்
♦ மோடி இப்போது சரியான பாதையில் செல்கிறார் : பல்டியடித்த சத்யபால் மாலிக்
இத்துடன் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் எல்லைப் பாதுகாப்புப் படையின் அதிகார வரம்பை 15 கிலோ மீட்டரிலிருந்து 50 கிலோ மீட்டராக அதிகரித்த நடவடிக்கையையும் சேர்த்துப் பார்த்தால் விசயத்தைப் புரிந்துகொள்ள முடியும். பஞ்சாபை பொறுத்தவரை கிட்டத்தட்ட பாதி மாநிலம் இந்த விரிவாக்க நடவடிக்கையின் மூலம் எல்லைப் பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடுகிறது. இதுதொடர்பாக, அப்போதே டிசம்பர் 2021 புதிய ஜனநாயகம் இதழில், “எல்லைப் பாதுகாப்பு படைவிரிவாக்கம்: தேசப் பாதுகாப்பு என்ற பெயரில் அரங்கேறும் இராணுவ சர்வாதிகாரம்” என்ற தலைப்பில் எழுதியிருந்தோம்.
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வினர் பஞ்சாபை பற்றி மேற்கொண்டுவரும் பிரச்சாரம் என்பது வெறுமனே தேர்தலுக்காக அனுதாபம் தேடும், ஓட்டுப் பொறுக்கும் முயற்சியல்ல. அது ஒரு சதிகார நோக்கம் கொண்டது. இது புல்வாமா மாதிரி அல்ல; பீமாகொரேகான் மாதிரி. அதன் நோக்கம் அடக்குமுறையே. “பாகிஸ்தான் அருகிலுள்ள மாநிலம்”, “காலிஸ்தான் பிரிவினைவாதிகள் நிறைந்த மாநிலம்” என பிரச்சாரம் செய்வது, பஞ்சாபின் மீது தான் கட்டவிழ்த்துவிடத் துடிக்கும் அடக்குமுறைக்கு மக்களிடையே நியாயவாதம் தேடும் முயற்சிதான்.
தற்போது, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வின் “சதி நாடகம்” முற்போக்கு – ஜனநாயக சக்திகளால் மக்களிடையே புஸ்பானமாக்கப் பட்டுவிட்டது. ஆனால், இப்பிரச்சாரம் அடக்குமுறைக்கான சாதனம் என்ற வகையில் புரிந்துகொள்ளப்படவில்லை. இவ்வாறு புரிந்துகொள்ளப்படுவது அவசியம். ஏனெனில் பஞ்சாப் மீது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. நகர்த்தும் காய்கள் அடுத்தடுத்து இதை நோக்கித்தான் செல்லும்.
செவ்வந்தி
நூல் அறிமுகம் : மதரிங் எ முஸ்லிம் || MOTHERING A MUSLIM – NAZIA ERUM || இ.பா. சிந்தன்
நசியா எரம் எழுதிய MOTHERING A MUSLIM – நூல் குறித்து தோழர் இ.பா. சிந்தன் சமூக வலைத்தளத்தில் ஆற்றிய உரையை மையப்படுத்தி :
எந்த ஒரு இனப்படுகொலையும் ஒரு சில வெறியர்களால் மட்டுமே சாத்தியமாகி விடுவதில்லை. பெரும்பான்மை மக்களின் மனதில் வெறியைப் புகுத்தி, அவர்களை வைத்தே நடத்த முடிந்தால்தான் எந்தவொரு இனப்படுகொலையும் சாத்தியப்படும். ஹிட்லர் காலத்தில் துவங்கி இன்றுவரையில் அதுதான் உலகெங்கிலும் நடந்து வந்திருக்கிறது.
இன்னமும் நம்முடைய குழந்தைகளுக்கு அரசியல் வேண்டாம் என்றும், ஒழுங்காகப் படித்து மதிப்பெண் வாங்கினாலே போதும் என்று நாம் சொல்லிக் கொண்டிருந்தால், இன்னொரு பக்கத்தில் அவர்களை இனப்படுகொலைக்குத் தயாராக்கிக் கொண்டிருக்கிறது இன்னொரு கும்பல்.
படிக்க :
♦ ஹிஜாப் : பாஜக – ஆர்.எஸ்.எஸ்.-இன் மதக் கலவரத் திட்டம் || மக்கள் அதிகாரம்
♦ கர்நாடகா : கல்லூரியில் ஹிஜாப் அணியவும், உருது மொழி பேசவும் தடை !
இந்தியாவில் ஒரு இசுலாமியக் குழந்தையை வளர்ப்பதில் உள்ள சிக்கல்கள் குறித்து ஒரு தாயாக நசியா எரம் எழுதிய “Mothering A Muslim” நூல் குறித்து முகநூலில் தோழர் இ.பா. சிந்தனின் நூல் திறனாய்வு உரையாற்றியுள்ளார்.
உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டுள்ள இந்த முக்கியமான நூலைப் பற்றி இ.பா. சிந்தன் உணர்வுப்பூர்வமான ஒரு உரையைத் தந்துள்ளார்.
18 வயதுக்குட்பட்ட 40 கோடி குழந்தைகளின் உலகத்தைப் பற்றி நாம் பெரிதும் யோசிப்பதில்லை. ஆனால் அந்த உலகத்தில் பாசிச மதவெறி நஞ்சு அவர்கள் படிக்கும் பள்ளிகளிலும், குடும்பங்களிலும் எப்படி அணுஅணுவாக வளர்த்தெடுக்கப்படுகிறது என்பதை இந்த நூலைப் பற்றிய திறனாய்வில் குறிப்பிடுகிறார்.
முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக அந்த பிஞ்சுக் குழந்தைகள் மதவெறி நஞ்சூட்டப்பட்ட மற்ற குழந்தைகளால் அவமானப்படுத்தப்படுகின்றனர். புறக்கணிக்கப்படுகின்றனர். தாக்கப்படுகின்றனர்.
85% முஸ்லீம் குழந்தைகள் தன் மதம் சார்ந்த காரணத்திற்காகவே ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். ஏ பாக்கிஸ்தானி, ஏ டெரரிஸ்ட், பாக்கிஸ்தானுக்குப் போ இந்த வார்த்தைகளெல்லாம் சர்வசாதாரணமாக பள்ளிகளில் புழங்குகிறது என்கிறார் நூலாசிரியர். சீக்கியர்களை அவமானப்படுத்த எப்படி சர்தார்ஜி ஜோக்ஸ் பயன்படுத்தப்பட்டதோ, தற்போது முஸ்லீம் ஜோக்ஸ் என்பது பள்ளிகளில் பிரபலம்.
ரைக்கா, ஒமர், சையது, ரஃபத், சமைரா, சாய்ரா இந்த குழந்தைகளின் அனுபவங்கள் எல்லாம் நம்மை அச்சம் கொள்ள வைக்கின்றன. இவற்றை நாம் இயல்பாக கடந்து சென்று விட முடியாது.
உங்கப்பா தலிபானில் இருக்கிறாரா?
உங்க அப்பா அம்மாவுக்கு வெடிகுண்டு செய்யத் தெரியுமா?
அவங்க கிட்ட பிரச்சினை வச்சுக்காத, உங்க மீது பாம் போட்டிருவான்.
இவையெல்லாம் ஜோக் என்ற பெயரில் பள்ளிகளில் (குறிப்பாக டெல்லி) ஆசிரியர்களும் மாணவர்களும் முஸ்லீம் குழந்தைகள் மீது இயல்பாக ஏவும் வன்முறைகள்.
நூலாசிரியர் குறிப்பாக குறிப்பிடுவது என்னவென்றால், பி.ஜே.பி 2014-ல் ஆட்சியைப் பிடித்ததில் இருந்துதான் இந்த அளவுக்கு மதவெறி குழந்தைகள் மத்தியிலும் சமூகமயமாக்கப்பட்டுள்ளது என்பதுதான்.
அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி சமூகத்தின் எல்லாத் தளங்களிலும் பாசிசம் எப்படிப் பற்றிப் படர்ந்திருக்கிறது என்பதையும், சமூகம் அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருப்பதை நாம் உணராமல் இருப்பதையும் இந்த நூல் உணர்த்துகிறது. நம் நெஞ்சை உலுக்கும் இந்த உரையை அவசியம் கேளுங்கள்! வாய்ப்புள்ளவர்கள் இந்த ஆங்கில நூலை வாங்கிப் படியுங்கள் !

இனியன்
மக்கள் அதிகாரம் முதலாவது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!
28.01.2022
மக்கள் அதிகாரம் முதலாவது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!