Sunday, August 17, 2025
முகப்பு பதிவு பக்கம் 187

அரியலூர் மாணவி தற்கொலை : மதக்கலவரம் நடத்தத் துடிக்கும் பாஜக || காணொலி

ரியலூர் கிறித்துவ பள்ளியில் படித்த மாணவியின் தற்கொலை விவகாரத்தை மதமாற்ற விவகாரமாக சித்தரித்து தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் இந்த விவகாரத்தில் பொய்களைப் பரப்பி, எடிட் செய்யப்பட்ட வாக்குமூலக் காணொலி மூலம் ஒரு மதக் கலவரத்தை தூண்ட முயற்சித்திருக்கிறது பாஜக.

அந்த மாணவி பேசிய முழுக் காணொலியும் வெளியான பின்னர்தான் மதமாற்றம் என்னும் பெயரில் கலவரம் செய்ய பாஜக செய்த முயற்சிகள் அம்பலமாகின. ஆனால் அதற்கு முன்னரே இது பற்றிய பொய்யான செய்தியை இந்திய அளவில் சமூக ஊடகங்களின் மூலம் பரப்பி ஒரு கருத்துருவாக்கத்தை செய்திருக்கிறது பாஜக கும்பல்.

தமிழகத்தில் மதக் கலவரத்தைத் தூண்ட முயற்சிக்கும் ஆர்.எஸ்.எஸ். – பாஜக சங்க பரிவாரக் கும்பலின் திட்டத்தை அம்பலப்படுத்தி பேசியிருக்கிறார், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் துணைவேந்தன். பாருங்கள் ! பகிருங்கள் !

 

“கொழுத்த பணக்காரர்கள் வாழும் ஏழைநாடு – முட்டுச் சந்தில் இந்தியா”

பாரிசில் உள்ள உலக ஏற்றத்தாழ்வுகள் ஆய்வகம்1 உலகளாவிய ஏற்றத்தாழ்வுகளைக் குறித்த புள்ளிவிவரங்களுக்கு முதன்மையான ஊற்றாகத் திகழ்கிறது. உலக நாடுகளின் பல்வேறு அமைப்புகள், நிறுவனங்கள் ஆகியவற்றில் கிடைக்கும் தரவுகளைக் கவனமாகத் தொகுத்துத் தருகிறது அந்த ஆய்வகம்.
உலகம், நாடு, நாட்டுக்குள் வெவ்வேறு பகுதிகள் ஆகிய பல்வேறு மட்டங்களில் வருமானம், சொத்து ஆகிய இரண்டு வகையான ஏற்றத்தாழ்வுகளைப் பற்றிய தகவல்கள் அந்த ஆய்வகத்தின் மூலம் நமக்குக் கிடைக்கின்றன.
அண்மைக் காலத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் பெருமளவு உயர்ந்திருப்பதை நம்மில் பலர் ஏற்கெனவே அறிவோம். இருப்பினும் அண்மையில் வெளியான உலக ஏற்றத்தாழ்வு அறிக்கை-2022 2 பல புதிய வெளிச்சங்களைப் பாய்ச்சியுள்ளது.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மேற்கத்திய வல்லரசுகளின் ஆளுகையில் உலகின் பெரும்பகுதி இருந்தபோது உலகில் நிலவிய ஏற்றத்தாழ்வுகளுக்கு ஒப்பான அளவு இப்போது மீண்டும் ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்றன என்பதை மேற்படி அறிக்கை காட்டுகிறது. இந்த நிலைமை சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன் தொடங்கிற்று; கொரோனாப் பெருந்தொற்றுக் காலத்தில் வெகுவேகமாக வளர்ந்தது.
படிக்க :
இந்து தேசியவாதம் : இந்தியாவில் அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வு!
மோடியின் அடுத்த சாதனை : மிக அதிக ஏற்றத்தாழ்வு கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா !
வருமானம், சொத்து ஆகிய இரண்டிலும் நிலவும் ஏற்றத்தாழ்வுகள், அவற்றின் வளர்ச்சி ஆகியவற்றைப் பொருத்தவரை இந்தியா மிக மோசமான நிலையில் உள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் இந்திய அரசு வெளியிடும் தரவுகளின் தரம் மிகமோசமாக உள்ளது; ஆகவே அண்மைக் காலத்தில் ஏற்றத்தாழ்வுகள் எப்படி மாறியுள்ளன என்பதைக் கணிப்பது சிக்கலான செயலாக உள்ளது; இருப்பினும், ஏற்றத்தாழ்வுகள் மிகமோசமாக இருப்பதால் அவை நன்கு புலப்படுகின்றன.
இக்கட்டான தகவல்கள், புள்ளிவிவரங்கள் ஆகியவற்றை மறைக்க இந்திய அரசு முனைகிறது; தரவுகளை முறைகேடான வகையில் மாற்றத் தலைப்படுகிறது. 2017-18 ஆண்டுக்கான தேசிய நுகர்வோர் செலவுகள் குறித்த அளவையின்3 முடிவுகளை வெளியிட அரசு மறுக்கிறது.
முறைசார் தொழில்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கை உண்மை நிலையை விட அதிகமாக இருப்பதைப் போலக் காட்டுவதற்கென அது தொடர்பான இயல் வரையறைகளைத் (definitions) தன் வசதிக்கேற்ப மாற்றிக்கொள்கிறது.
அரசின் இப்படிப்பட்ட முயற்சிகளையும் மீறிச் சில பொருளாதாரப் போக்குகள் தவிர்க்க முடியாமல் வெளிப்படுகின்றன: 2020-இல் இந்திய மக்களில் [பொருளாதாரத்தில்] கீழ் நிலையில் உள்ள பாதிப் பேரின் வருமானம் நாட்டின் மொத்த வருமானத்தில் வெறும் 13 விழுக்காடாக வீழ்ச்சி அடைந்தது; நாட்டின் மொத்த வருமானத்தில் 57 விழுக்காடு மேல் நிலையில் உள்ள பத்து விழுக்காட்டினருக்குக் கிடைத்தது. மேல்நிலையிலுள்ள ஒரு விழுக்காட்டினர் [கொழுத்த பணக்காரர்கள்] மட்டும் நாட்டின் மொத்த வருமானத்தில் 22 விழுக்காட்டினைக் கைப்பற்றிக்கொண்டனர்.
சொத்துப் பங்கீடு [மேற்கண்ட] வருமானப் பங்கீட்டை விட மோசமாக உள்ளது. உலகளவில் கடந்த சில பத்தாண்டுகளில் நிலைமை மோசமாகியுள்ளதை நாம் ஏற்கெனவே அறிவோம்: உலகச் சொத்து வளர்ச்சியில் ஏறக்குறைய நாற்பது விழுக்காட்டினை மேல்நிலையிலுள்ள ஒரு விழுக்காட்டினர் கைப்பற்றிக் கொண்டார்கள்.
1995 – 2001 காலக்கட்டத்தில் உலகளவில் முதல் 52 பணக்காரர்களின் சொத்து ஆண்டுதோறும் சுமார் பத்து விழுக்காடு உயர்ந்தது. அந்த 52 பேரில் இந்தியாவின் முகேஷ் அம்பானி, கௌதம் அதானி ஆகியோரும் உள்ளனர்.
சொத்து ஏற்றத்தாழ்வு இந்தியாவில் [உலக அளவை விட] இன்னும் கடுமையாக உள்ளது: கீழ்நிலையிலுள்ள பாதி இந்தியர்களின் மொத்தச் சொத்து வெறும் ஆறு விழுக்காடாகவும் மேல்நிலையிலுள்ள ஒரு விழுக்காட்டினரின் சொத்து நாட்டின் மொத்தச் சொத்தில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமாகவும் உள்ளன. நாட்டின் மொத்தச் சொத்தில் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கு மேல்நிலையிலுள்ள பத்து விழுக்காட்டு இந்தியரிடம் சேர்ந்துள்ளது.
பெருந்தொற்று உலகை முடக்கியுள்ள கடந்த இரண்டு ஆண்டுகள் உலகின் கொழுத்த பணக்காரர்களுக்கு மிக மகிழ்ச்சியான காலமாக இருக்கிறது. ஏற்றத்தாழ்வுகளைக் குறித்து ஆக்ச்பாம்4 என்ற தொண்டு நிறுவனம் அண்மையில் வெளியிட்ட அறிக்கை இதைக் காட்டுகிறது.
உலகளவில் மேல்நிலையிலுள்ள பத்துப் பணக்காரர்களின் சொத்து இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. மீதி 99 விழுக்காட்டு மக்களின் நிலைமை மோசமாகியுள்ளது. மிக, மிக அதிகமாகச் சொத்துச் சேர்த்தவர்களில் கௌதம் அதானி முன்னணியில் உள்ளார்: பெருந்தொற்றுக் காலத்தில் அவருடைய சொத்து எட்டு மடங்கு உயர்ந்தது!
இந்தியாவின் துறைமுகங்களை நிர்வகித்தல், அனல் மின்னுற்பத்தி, மின் பகிர்மானச் சந்தையைக் கட்டுப்படுத்துதல், எரிவளி வழங்கல், தனியார் வானூர்தி நிலையங்கள் உள்ளிட்ட பல முனைகளில் அதானியின் நிறுவனங்கள் மிகப் பெரியவையாக வளர்ந்துள்ளன. அதானிக்கு அரசுடன் உள்ள தொடர்புகள் இதற்கு உறுதுணையாக விளங்குகின்றன.
மேற்கண்ட கட்டுமானங்கள் அவற்றின் முதன்மை காரணமாக ஒரு காலத்தில் பொதுத் துறையாகப் பாதுகாக்கப்பட்டவை என்பதை நாம் நினைவுகூர வேண்டும்.
தனிச் சொத்து உயர உயர பொதுச் சொத்துகள் அருகுகின்றன. பொதுச் சொத்துகளின் இயக்கத்தில் கிடைக்கும் வருமானத்தை மக்கள் நலனுக்குச் செலவிட விரும்பும் அரசுகளுக்கு இது கசப்பான நிலைமை.
இந்தியாவைப் பொருத்தவரை, நாட்டின் வருமானத்தில் தனியார் பங்கு 1980-இல் 290 விழுக்காடாக இருந்தது; 2020-இல் அது 555 விழுக்காடாக உயர்ந்துவிட்டது. உலகளவில் வரலாறு கண்டிராத வேகங்களில் இதுவும் ஒன்று!
வேறு பல குறியீடுகளிலும் இந்தியாவில் ஏற்றத்தாழ்வுகள் மோசமாகி வருகின்றன. இந்தியத் தொழிலாளர்களின் மொத்த வருமானத்தில் பெண்களின் பங்கு 18 விழுக்காடாக உள்ளது; உலகச் சராசரி இதைவிட ஏறக்குறைய இரண்டு மடங்கு.
நாட்டின் பொருளாதாரத்தில் பெண்களின் பங்கு முதன்மையானது; இருப்பினும் இந்தியப் பெண்களின் நிலைமை மிகமோசமாக இருப்பதை அறிந்தவர்களுக்கு மேற்கண்ட புள்ளிவிவரம் வியப்பளிக்காது.
இயற்கைச் சூழலைக் கெடுக்கும் செயற்பாடுகளிலும் கடுமையான ஏற்றத்தாழ்வு நிலவுகிறது. சூழல் கேட்டினை அளக்கும் குறியீடுகளில் ஒன்று கரிய வெளியீடு (carbon emissions). இந்தியர்கள் ஒவ்வொருவரும் சராசரியாக ஆண்டுக்கு 2,200 கிலோ கரியத்தை வெளியிடுகிறோம்.
ஆனால், மக்கள் தொகையும் ஏற்றத்தாழ்வுகளும் மிகுந்த இந்தியாவில் இத்தகைய சராசரிகள் உண்மையை மறைக்கின்றன: பொருளாதாரத்தில் கீழ்நிலையிலுள்ள பாதி இந்தியர்கள் ஒவ்வொருவரும் சராசரியாக ஆண்டுக்கு 1,000 கிலோ கரியத்தை வெளியிடுகின்றனர்.
மேல்நிலையிலுள்ள ஒரு விழுக்காட்டினர் ஒவ்வொருவரும் ஆண்டுக்கு 32,000 கிலோ கரிய வெளியீட்டுக்குக் காரணிகளாக உள்ளார்கள்; இது அமெரிக்க மக்களில் கீழ்நிலையிலுள்ள பாதிப் பேருடைய வெளியீட்டை விட மூன்று மடங்கும். ஐரோப்பியரில் கீழ்நிலையிலுள்ள பாதிப் பேருடைய கரிய வெளியீட்டை விட ஆறு மடங்கும் அதிகம்!
படிக்க :
கொரோனாவிலும் குறையாத இலாபம் ! அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வு !
சாதியப் படிநிலையை ஏற்றுக்கொள் : பிரக்யா சிங் முதல் சிறைச்சாலை வரை !
இந்தியத் திட்டக் கொள்கைகளை வகுப்போர் கரிய ஏற்றத்தாழ்வுகளைக் குறித்துப் பேசுவதில்லை. இந்தியாவில் மட்டுமின்றி உலகளவிலும் ஏற்றத்தாழ்வுகள் மக்களைக் கொல்வதோடு நில்லாமல் இயற்கையையும் அழித்தொழிக்கின்றன.
ஏற்றத்தாழ்வுகள் பல முனைகளில் நிலவுகின்றன: பாலினப் பாகுபாடுகள் (பெண்களுடைய நிலைமை மிக மோசமாக இருத்தல்), சாதி – மதப் பாகுபாடுகள் போன்றவை வறுமையின் கொடுமைகளை மேலும் மோசமாக்குகின்றன.
அரசின் திட்டக் கொள்கை வடிவமைப்பில் முறைசாராத் தொழிலாளர்களுக்கு எந்தப் பங்கும் இருப்பதில்லை. வறுமையில் உழலும் பல கோடிப் பேர் வாழும் நம் நாட்டில் ஒரு சிறு பிரிவினர் பெருஞ் செல்வந்தர்களாக உள்ளார்கள். ஏற்றத்தாழ்வுகள் மிகுந்த இத்தகைய நாடுகள் உண்மையான வளர்ச்சி அடைவதில்லை என்பதை வரலாறு காட்டுகிறது.
ஆகவே, உண்மையான வளர்ச்சி வேண்டுமெனில் அரசின் திட்டக் கொள்கைகளில் மிகப் பெரிய மாற்றங்கள் தேவை.
மொழிபெயர்ப்பாளர் குறிப்புகள்:
1. Paris-based World Inequality Lab
2. World Inequality Report 2022
3. national consumer expenditure survey
4. Oxfam

கட்டுரையாளர் : ஜெயதி கோஷ் (மேம்பாட்டுக்கான பொருளாதார வல்லுநர்)
தமிழாக்கம் : இராமகிருட்டிணன்
மூலக் கட்டுரை : தி வயர்

அனைத்து நீதிமன்றங்களிலும் மீண்டும் நேரடி விசாரணை நடத்த வேண்டும் || மக்கள் அதிகாரம்

மிழ்நாட்டில் கடந்த 03-01-2022 முதல்  நீதிமன்றங்களுக்குள் வழக்கறிஞர்களும், வழக்காடிகளும் செல்வதற்கு தடை விதித்தும், உயர் நீதிமன்றங்களிலும்,  கீழமை நீதிமன்றங்களிலும் காணொலி மூலம் மட்டுமே  வழக்கு விசாரணை  நடைபெறும் என்றும், வழக்கறிஞர் சங்கங்கள், வழக்கறிஞர் சங்க நூலகங்கள், நீதிமன்ற வளாகங்களில் செயல்படும் கேன்டீன்களும் மூடப்படும் என்றும், குறிப்பிட்டு 02-01-2022-ம் தேதி இரவில் திடீரென்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது, சென்னை உயர் நீதிமன்றம்.
கொரோனா முதல் அலையின்போது அரசு ஊரடங்கு அறிவிப்பதற்கு முன்பே நீதிமன்றங்களை முடக்கி, அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பிய பின்பும் நீதிமன்றங்களை முழுமையாக செயல்பட விடாமல் தொடர்ந்து முடக்கி வைத்துவிட்டு, கடந்த இருமாதங்களாக மட்டுமே கீழமை நீதிமன்றங்களை இயல்பாக செயல்பட அனுமதித்தது சென்னை உயர்நீதிமன்றம். ஆனாலும் காணொலி விசாரணை, நேரடி விசாரணை என்று இரு வடிவத்திலும் உயர்நீதி மன்றத்தில்  விசாரணை நடை பெற்று வந்தது. வழக்கறிஞர் சங்கங்களின் கோரிக்கைகள், அழுத்தங்கள், போராட்டங்களின் பின்பே இயல்பு நிலைக்கு வந்தடைந்துள்ளது நீதிமன்றங்களும், நீதிமன்ற வழாகங்களும்.
முடக்கப்பட்ட காலகட்டத்தில் வழக்காடிகள், வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் எழுத்தர்கள், நீதிமன்றத்தின் இயக்கத்தை சார்ந்து தொழில் புரிபவர்கள் ஆகியோர்  அனுபவித்த துன்பங்கள் சொல்லிமாளாது.
தற்பொழுதும் நீதிமன்றங்களை முடக்கி வைப்பதற்கான முடிவை எடுப்பதற்கு முன்பு அரசிடமோ, வழக்கறிஞர் சங்கங்களிடமோ கலந்து ஆலோசித்ததாக தனது அறிவிப்பில் சென்னை உயர் நீதிமன்றம் குறிப்பிடவில்லை.
படிக்க :
இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித் தொகை ! வழக்கறிஞர்கள் கோரிக்கை வெற்றி !
வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மீதான நடவடிக்கையை கைவிடு ! வழக்கறிஞர்கள் போராட்டம்
நீண்ட  கால இடைவெளிக்கு பின்பு மீண்டும் நீதிமன்றங்கள் முழுமையாகச் செயல்படத் துவங்கியதும் வழக்காடிகளும், வழக்கறிஞர்களும், வழக்கறிஞர் எழுத்தர்களும் நிம்மதிப் பெருமூச்சு விட்ட நிலையில், அடுத்த ஒரு மாதத்தில் மீண்டும் முடக்கப்பட்டுள்ளது. (காணொலி விசாரணை என்பது நடைமுறையில் கீழமை நீதிமன்றங்களை முழுமையாக முடக்கி வைப்பதுதான்)
நீதிமன்றங்களை முடக்கி வைக்கும் அளவிற்கு  நீதிமன்றங்களில் ஆபத்தான சூழல் நிலவுகின்றது என்பதை எந்தத் தரவுகளின் அடிப்படையில் உயர்நீதிமன்றம் வந்தடைந்துள்ளது என்பதை தனது அறிவிப்பில் குறிப்பிடவில்லை. ஆனால் நீதிமன்றத்திற்கு வெளியில் ஒரு சில சிறிய கட்டுப்பாடுகளுடன் தமிழகமே இயல்பாக  இயங்கி வருகின்றது.
தமிழகத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். ஆனாலும் நீதிமன்றங்கள் திறப்பதைப் பற்றி உயர்நீதிமன்றம் வாய் திறக்கவில்லை.
காணொலி விசாரணை என்பது எந்த வகையிலும் சாத்தியம் இல்லை என்பதை கடந்த ஒன்றரை ஆண்டு கால நடைமுறை நிரூபித்து விட்டது.  அதன்பின்பும் காணொலி விசாரணை என்று அறிவித்திருப்பது கீழமை நீதிமன்றங்கள் நடை பெற்றுவரும் முறை என்ன என்பதை அறிந்து கொள்ளாததாலா? அல்லது மக்களை பற்றிய அக்கறை துளியளவும் இல்லாமல்  ஆணவத்தினாலா?
மக்கள் வரி பணத்தில் மக்களுக்காக  உருவாக்கப்பட்ட நீதி மன்றங்களுக்குள்  மக்கள் நுளைய எத்தனை எளிதாக தடை விதிக்கிறார்கள் நீதிபதிகள்!
ஏற்கனவே தமிழக உயர் நீதிமன்றங்களில் பொதுமக்கள் செல்வதற்காக தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீதிபதி பணியிடங்கள் காலியாக இருப்பது, தேவைக்கு ஏற்ப நீதிமன்றங்களின் எண்ணிக்கை குறைவு, நீதிபதிகள் விரும்பினால் மட்டுமே விசாரணை நடத்துவது, நீதிபதிகள் விடுப்பு, பணியில் இருக்கும் நீதிபதிகளில் பலரும் தாங்கள் பெற்றுக்கொள்ளும் ஊதியத்திற்கும், சலுகைகளுக்கும் உண்மையாக வேலை செய்யாமல் ஏமாற்றி வருவது, பள்ளிக்கூடங்களை விட கூடுதலான விடுமுறை நாட்கள்,  சட்டங்களின் சந்து பொந்துக்குள் வழக்கறிஞர்கள் நுழைந்து  வாய்தா வாங்குவது போன்றவற்றால் குறித்த நேரத்தில் வழக்காடிகளுக்கு நிவாரணமும், நியாயமும் கிடைக்காது என்பதை நீதிபதிகள் நன்கு தெரிந்து வைத்துள்ளதால், தற்போதைய முடக்கத்தால் கூடுதலாக வழக்காடிகள் எதுவும் இழக்கப்போவதில்லை என்ற முடிவிற்க்கு நீதிபதிகள் வந்திருக்கக்கூடும்.
ஆனால் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்துவதால் மட்டுமே நீதிமன்றங்கள் நடத்த முடியாமல், வழக்குகள் தேங்கிவிட்டதாகவும், வழக்காடிகள் துன்பம் அடைவதாகவும் தொடர்ந்து பொய் பரப்பி வருகின்றனர் நீதிபதிகள். ஜனநாயகத்தை பற்றி வகுப்பெடுக்கும் நீதிபதிகள் நீதிமன்றங்களில் பணி புரியும் ஊழியர்களை மாண்புடன் நடத்துவதில்லை என்பது தனிக்கதை.
ஊழல்,  அதிகார முறைகேடுகள்  நிறைந்த இந்த நீதிமன்றங்களில் பல ஆண்டுகள்  விடாப்பிடியான சட்டப்போராட்டத்தின் மூலம் தங்கள் வழக்குகளில் இறுதி கட்டத்திற்கு வந்தடைந்த வழக்காடிகளின் நிலை,  நீதிமன்றங்கள் மூலம் மாதா மாதம் பராமரிப்பு பெற்று வரும் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் நிலை, இழப்பீடு வழக்கில் இறுதி நிலையில் இருக்கும் வழக்குகள் இன்னும் ஏராளம்.  இந்த முடக்கத்தால் முடங்கிக் கிடப்பது பற்றி  நீதிபதிகள் என்ன கருதுகிறார்கள்?
வழக்கறிஞர்களை ஒடுக்க நினைப்பதும், ஒரு சில வழக்கறிஞர்கள் செய்யும் தவறை காரணம் காட்டி ஒட்டு மொத்த வழக்கறிஞர்களையும் குற்றவாளிகளாக சித்தரிப்பதும், வழக்காடிகளை அடிமைகளாகவே நடத்த நினைப்பதும்,
அரசு இயந்திரத்தை தன் சொந்த நலனுக்கு எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பவற்றை பற்றியே எந்த நேரமும் சிந்திப்பதாக இருக்கும்  நீதிபதிகளுக்கு மக்கள் படும் துயரம் கண்ணில் தென்பட வாய்ப்பில்லை.
கீழமை நீதிமன்றங்களை பொறுத்தவரை  காணொளி விசாரணை என்பதால் நீதி மன்றங்களில் நீதிபதிகளுக்கும், நீதிமன்ற ஊழியர்களுக்கும் பொதுவாக நாள் முழுவதும் வேலை இருக்காது. இந்த நீதிமன்ற முடக்கமானது கீழமை நீதிமன்றத்தை பொறுத்தவரை  நீதிபதிகளுக்கும், நீதிமன்ற ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கிடைத்திருக்கும்  ஓய்வு என்றே கூறவேண்டும். ஓய்வுடன் கூடிய, ஊதியம் கிடைப்பதால் தான்  வழக்காடிகள் நிலை  பற்றியும், வருமானமின்றி தவிக்கும் வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் எழுத்தர்கள்  பற்றியும் நினைப்பதற்கு நேரமில்லாமல்  தங்களுக்கு நோய்தொற்று ஏற்பட்டுவிடுமோ என்று மட்டுமே நீதிபதிகளால் சிந்திக்க தோன்றுகின்றது. நீதிபதிகளிடம் நெருக்கமாக  இருப்பவர்கள் நீதிமன்ற ஊழியர்கள். வழக்கறிஞர்களும், வழக்காடிகளும் எப்பொழுதுமே நீதிபதிகளை
இடைவெளியுடன் அணுகும் நிலையில் தான் நீதிமன்ற கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
பல பத்தாயிரத்தில் ஆரம்பித்து பல லட்சங்களைக் கட்டணமாகப் பெறும்,  சாமானியர்களால் நெருங்க இயலாத வழக்கறிஞர்களால் இந்த சூழலால் எழுந்துள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இயலும். ஆனால் சில ஆயிரங்கள் கட்டணமாக பெறும் ஏழை, நடுத்தர மக்கள் எளிதில் அணுகக்கூடிய வழக்கறிஞர்களால் இந்த சூழலால் எழுந்துள்ள பொருளாதார நெருக்கடியை தாங்கிப்பிடிப்பது கடும் சவாலானது.
மேலும்  உயர் நீதிமன்றங்களிலோ, கீழமை நீதிமன்றங்களிலோ அன்றாடம் நீதிமன்ற அலுவலங்களுக்குள் சென்று, எந்த சூழலிலும் பணி  செய்ய மனமின்றி பணிபுரிந்து வரும் நீதிமன்ற ஊழியர்களுடன் போராடி பணி புரிந்து (நகல் எடுப்பது, வழக்குகளை எண்ணிடுவதற்காக பார்வையிட வைப்பது உள்ளிட்ட) அதன் மூலம் தினமும் நூறு, இருநூறு, ஐநூறு என்று  வருமானம் ஈட்டி வரும் இளம் வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் எழுத்தர்கள் இன்று வருமானமின்றி தவித்து வருகின்றனர்.  இளம் வழக்கறிஞராக தொழிலை துவங்கி இன்று நீதிபதிகளாக பணிபுரிந்து வரும் ஆகப்பெரும்பாலான நீதிபதிகளுக்கு ஆரம்ப காலத்தில் அந்த நாளின் டீயையும், ஒரு வேளை உணவையும் உத்தரவாதப்படுத்தியதும் மேல் குறிப்பிட்டுள்ள இந்தப் பணிதான்.
ஏழை, நடுத்தர மக்களுக்கு கட்டுப்படியாகக் கூடிய கட்டணம் பெற்றுக்கொண்டு வழக்கு நடத்தக்கூடிய வழக்கறிஞர்கள் இந்த நெருக்கடியை சமாளிக்க இயலாமல் வழக்கறிஞர் தொழிலை கைவிட்டுவிட்டால் அதனால் ஏழை, நடுத்தர வழக்காடிகள் நீதிமன்ற படி ஏற முடியுமா?
வழக்கறிஞர் தொழில்செய்து கொண்டே வழக்கறிஞர்களால் வேறு தொழில் செய்ய தடை உள்ளது. இந்த கொரோனா பெருந்தொற்றை காரணம் காட்டி நீதிமன்ற வளாகங்களை, நீதிமன்றங்களைக் கைப்பற்றி வைத்துக்கொள்ள முயலுகின்றனர், நீதிபதிகள். நீதிமன்றங்களில் தாங்கள்தான் மன்னர்கள் என்பதை வழக்கறிஞர்களின் எதிர்ப்பு குறைவாக இருக்கும் நீதிமன்ற வளாகங்களில்  நடைமுறைபடுத்தி வருகின்றனர் நீதிபதிகள்.
பொதுவாகவே நீதிபதிகளுக்கு எதிராக பொதுமக்களோ, அரசியல் கட்சிகளோ தங்கள் எதிர்ப்பை நேரடியாக தெரிவிப்பது இல்லை.
பெரும்பாலான அரசியல் கட்சிகளின் கைகளில் கறை படிந்துள்ளதாலும் நீதிபதிகளின் தயவு அவர்களுக்கு  தேவைபடுவதாலும், அரசாங்கம் பல சந்தர்ப்பங்களில் மக்கள் எதிர்ப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள, மக்கள் விரோத திட்டங்களை நீதிமன்ற உத்தரவுகள் மூலம் நிறைவேற்றிக் கொள்வதாலும் அரசும், அரசியல் கட்சிகளும் நீதிமன்றத்தை பற்றி வாய் திறப்பதில்லை.
நீதிமன்றத்தை விமர்சிக்கும் தனிநபர்கள் நீதிமன்ற அவமதிப்பு என்று மிரட்டி அச்சுறுத்தப்படுகின்றனர். நீதிபதிகளை எதிர்த்து தைரியமாக போராடுவது வழக்கறிஞர் சங்கங்கள் மட்டுமே, வழக்கறிஞர்கள் போராடுவதாலேயே நீதி பரிபாலனம் கெட்டுவிட்டதாக நீண்டகாலமாக மிகப்பெரிய பொய்யை பிரச்சாரம் செய்துவருகின்றனர் நீதிபதிகள்.
வழக்கறிஞர்களாலேயே நீதி பரிபாலனம் கெட்டுவிட்டதாக கூறிவரும் நீதிபதிகள் சக நீதிபதிகள் செய்யும் ஊழல், லஞ்சம், பாலியல் குற்றங்கள் பற்றி வாய்திறப்பதில்லை.   இந்தியவிலேயே முதல் முறையாக தமிழக வழக்கறிஞர்கள் சுமார் 500 பேர் மதுரையில் ஒன்று கூடி பேரணி நடத்தி மதுரை உயர்நீதி மன்ற வாசலில் ஊழல் செய்த நீதிபதிகள் பெயர்களை வெளியிட்டு, ஊழல் நீதிபதிகள் மீது தமிழக ஆளுனரிடம் புகார் கொடுத்த வரலாறு தமிழக வழக்கறிஞர்களுக்கு உண்டு.
இந்த வரலாற்று நிகழ்விற்கு முன்னணியாக இருந்த  வழக்கறிஞர்களை குறிவைத்து இந்திய வழக்கறிஞர் குழுமத்தையும், தமிழக வழக்கறிஞர் குழுமத்தையும் கைப்பாவையாக பயன்படுத்தி சதி செய்து அவர்கள் வழக்கறிஞர் தொழில் செய்ய தடை விதித்து  நீதிபதிகள் ‘சிஸ்டத்தை’ காப்பாற்றியதை எப்படி மறக்க முடியும்?
வழக்கறிஞர் குழுமத்தை தங்கள் கைப்பாவையாக பயன்படுத்தி சட்டத் திருத்தத்தின் மூலம் வழக்கறிஞர்களை தங்கள் நேரடி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர  நீதிபதிகள்  எடுத்த முயற்சி நீண்ட போராட்டத்திற்கு பின்பு முறியடிக்கப்பட்டது.
இன்றும் வழக்கறிஞர் குழுமத்தை பயன்படுத்தி தவறு செய்யும் வழக்கறிஞர்களை தண்டிப்பது என்ற பெயரில் வழக்கறிஞர் சங்கங்களை அச்சுறுத்தும் வேலையை தொடர்ந்து செய்து வருகின்றனர், உயர்நீதிமன்ற நீதிபதிகள்.
கிடைக்கும் சந்தர்ப்பத்தில் எல்லாம் வழக்கறிஞர்களை சமூக விரோதிகளாக சித்தரிக்கும் நீதிபதிகளுக்கு குறிப்பாக உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு, வழக்கறிஞர்களை தங்கள் கட்டிப்பாட்டிற்குள் வைத்து ரசிப்பதற்க்கு கிடைத்த ஒரு அரிய சந்தர்ப்பம் கொரோனா. இந்த சந்தர்ப்பத்தை அவ்வளவு எளிதாக விட்டுக்கொடுத்து விடுவார்களா என்ன?
நீதிமன்றம் அத்தியாவசியமாக இயங்க வேண்டிய ஒன்று என்பதை நீதிபதிகள் உணர வேண்டுமானால் பொதுமக்கள் ஏனைய அரசு அதிகாரிகளுக்கு எதிராக பேசுவது, போராடுவது போல நீதிமன்றங்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு என்ற பூச்சாண்டிகளுக்கெல்லாம் அஞ்சாமல் வெளிப்படையாக பேசவேண்டும், போராட வேண்டும்.
அரசையும், அரசு அதிகாரிகளையும், ஆட்சியாளர்களையும் எதிர்த்து பேசும் போதும், போராடும் போதும் எதிர்த்து பேசுபவர்கள் மீதும், போராடுபவர்கள் மீதும் வழக்கு தொடுக்கப்படுவதில்லையா? சிறையில் அடைக்கப்படுவதில்லையா?
படிக்க :
13 வழக்கறிஞர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய் !
வழக்கறிஞர் போராட்டத்துக்கு ஆதரவாக மதுரை PRPC !
இந்த அடக்குமுறைகளுக்கெல்லாம் அஞ்சாமல்தானே தினமும் நூற்றுக்கணக்கான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன?
நீதிமன்றங்கள் மக்களுக்கானது, நீதிபதிகளுக்கானது அல்ல என்பதை !
நீதிபதிகள் மக்களுக்கு பதில் சொல்ல கடமைபட்டவர்கள் என்பதை !
லஞ்சம், பாலியல் புகார் உள்ளிட்ட, நீதிபதிகள் மீது சுமத்தப்படும் அனைத்து குற்றச்சாட்டுகள் மீதும் விசாரணை நடைபெறும் முறை, விசாரணையின் முடிவுகள் வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும் என்பதை!
நீதிமன்றத்தில், வழக்காடிகளை நீதிபதிகள் அடிமைகளாக நடத்தக்கூடாது, ஒருமையில் பேசக்கூடாது என்பதை!
நீதிபதிகள் மன்னர்களுமல்ல.. மக்கள் அடிமைகளுமல்ல என்பதை!
– நீதிபதிகளுக்கு அவ்வப்போது மக்கள் உணர்த்தத் தவறியதன் விளைவு இன்று நீதிமன்றத்தை தங்கள் விருப்பம்போல் அடைத்து வைக்கலாம், முடக்கி வைக்கலாம் என்ற நிலைக்கு வந்தடைந்திருக்கிறார்கள் நீதிபதிகள்!
சுதந்திரமான நீதித்துறை என்பதற்காக மக்களிடமிருந்து அன்னியப்படுத்தப்பட்ட நீதிமன்றங்களால் மக்களுக்கு விசுவாசமாக செயல்பட முடிகின்றதா? இது  சர்வாதிகாரம் இல்லையா? இந்த, நீதிமன்ற நடவடிக்கையில் ஜனநாயகத்தின் கூறுகள் கண்ணில் தென்படுகின்றதா?
எனவே உடனடியாக நீதிமன்றத்தை திறக்க போராடுவோம், அதன் வழியாக நீதிமன்ற சர்வாதிகாரத்திற்க்கு எதிராக தொடர்ந்து போராடுவோம்.
மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்.

மக்கள் அதிகாரம் தஞ்சை மண்டலத்தின் முதல் மாநாடு வெற்றிகரமாக நிறைவேறியது!

PP Letter head25.01.2022
பத்திரிகைச் செய்தி
க்கள் அதிகாரம் தஞ்சை மண்டலத்தின் திருவாரூர், வேதாரண்யம் கிளை முதல் மாநாடு வெற்றிகரமாக நிறைவேறியது!
வேதாரண்யம் கிளை:
25.01.2022 அன்று தோழர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் வேதாரண்யம் கிளை மாநாடு வெற்றிகரமாக நடந்தேறியது.
தேர்தல் அலுவலராக நிகழ்ச்சியை நெறிப்படுத்திய தோழர் தங்க. சண்முகசுந்தரம் முன்னிலையில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கிளையின் செயலாளராக தோழர் கிருஷ்ணமூர்த்தி, இணைச் செயலாளராக தோழர் வெங்கடேசன், பொருளாளராக தோழர் ராஜேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கிளை சார்பாக செயலாளர் தோழர் கிருஷ்ணமூர்த்தி ஏற்புரையும், உறுதிமொழியும் ஏற்றுக்கொண்டார்.

This slideshow requires JavaScript.

திருவாரூர் கிளை:
25.01.2022 அன்று, தோழர் தங்க.சண்முக சுந்தரம் தலைமையில் திருவாரூர் கிளை மாநாடு வெற்றிகரமாக நிறைவேறியது.
தேர்தல் அலுவலராக பங்கேற்ற தோழர் சாந்தகுமார் நெறிப்படுத்தலின் அடிப்படையில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கிளையின் செயலாளராக தோழர் தங்க. சண்முகசுந்தரம், இணைச் செயலாளராக தோழர் ஆசாத், பொருளாளராக தோழர் முரளி தேர்ந்தெடுக்கப்பட்டனர். கிளை சார்பாக செயலாளர் தோழர் தங்க. சண்முகசுந்தரம் ஏற்புரையும், உறுதிமொழியும் ஏற்றுக்கொண்டார்.
♦ காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்!
♦ பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை அமைப்போம்!
♦ புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தி முடிப்போம்!
ஆகிய முழக்கங்களின் அடிப்படையில் நிர்வாகிகள் மற்றும் அனைத்து உறுப்பினர்களும் முழக்கமிட்டு, மக்கள் அதிகார கிளைகளை பல கிராமங்களில் கட்டியமைக்கவும், இலட்சகணக்கான மக்களைத் திரட்டவும், உழைக்கும் மக்களின் விடுதலையை சாதிக்கவும் உறுதிமொழி ஏற்றனர்.
தோழமையுடன்,

கிளைச் செயலாளர்கள்,
தோழர் தங்க. சண்முகசுந்தரம்,
தோழர் கிருஷ்ணமூர்த்தி,
மக்கள் அதிகாரம்,
தஞ்சை மண்டலம்.

இந்தியக் குடியரசா ? இந்துராஷ்டிரக் குடியரசா ? || கருத்துப்படம்

ந்தியக் குடியரசா ? இந்துராஷ்டிரக் குடியரசா ? என்று சந்தேகம் எழும் அளவிற்கு இந்துத்துவ அடையாளங்களைக் கொண்டு குடியரசுதின அலங்கார ஊர்தி அணிவகுப்பை நடத்தியுள்ளது ஒன்றிய மோடி அரசு.

வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், பார்ப்பனக் கொடுங்கோன்மைக்கு எதிராகவும் சளையாமல் போரிட்ட போராளிகளின் அணிவகுப்பு வாகனத்தை புறக்கணித்துவிட்டு, சாமியார்கள் மற்றும் புராணக் கட்டுக்கதைகளை பிரதானப் படுத்தக்கூடிய அலங்கார ஊர்திகளை அனுமதித்துள்ளது காவி – கார்ப்பரேட் பாசிச மோடி அரசு

கருத்துப்படம்: வேலன்

வ.உ.சிதம்பரனாரும் மன்னிப்புக் கடித மாமேதை சாவர்க்கர் வாரிசுகளும் | மு இக்பால் அகமது

வ.உ.சிதம்பரனாரும் மன்னிப்புக் கடித மாமேதை சாவர்க்கர் வாரிசுகளும்
வ.உ.சி வாழ்ந்த காலம் 1872 முதல் 1936 வரை; இறக்கும்போது அவர் வயது 64.
இந்தியாவின் இயல்பான, சுயமான வளர்ச்சிக்கான சுதேசிக் கொள்கைக்காக முன்னோடிச் செயல்பாட்டை ஒரு மக்கள் போராட்டமாக முன்னெடுத்துச் செல்வதற்கான அடித்தளத்தை 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், காங்கிரஸ் பேரியக்கம் தமிழகத்தில் கால் ஊன்றாத 1900-களின் தொடக்கத்திலேயே இட்டவர், விதை ஊன்றியவர், அன்றைக்கு யாராலும் கற்பனை செய்தும் இயலாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பொருளாதார அடித்தளத்தை அசைத்துக் காட்டியவர், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கு பொருளாதார தளத்தில் பெரும் சவாலாக விளங்கி அச்சுறுத்தியவர் வ.உ.சி.
வ.உ.சி கப்பல் போக்குவரத்தை தொடங்கியது முற்றிலும் அரசியல் காரணங்களுக்காகவே, வணிகக் காரணங்களுக்காக அல்ல. அவர் அன்றைய நாளில் புகழ்பெற்ற வழக்கறிஞர், வருவாய்க்கு குறைவில்லை. வருவாயில் பெரும்பகுதியை பிறர்க்கு தானமாக கொடுத்த வள்ளல், எளிய மக்களிடம் கட்டணம் பெறாமல் அவர்களின் வழக்குகளுக்கு வாதாடிய பெருந்தகை. காசுபணம் அவருக்கு ஒரு பொருட்டாக இருந்தது இல்லை.
வழக்கறிஞர் ஆன அவர், உயர்ந்த அந்தஸ்து பொருந்திய இரண்டாம் நிலை ப்ளீடர் பதவியை துச்சமாக மதித்து வெளியேறினார்.
படிக்க :
ஆதார் அபாயம் : காங்கிரஸ் பிஜேபி கள்ளக் கூட்டணியும் இடதுசாரிகள் செய்யத் தவறியதும் || மு. இக்பால் அகமது
மாப்பிளா கிளர்ச்சியைக் கண்டு காவிக்கும்பல் அஞ்சுவது ஏன் ? || மு இக்பால் அகமது தொடர்
1906 அக்டோபர் 4 அன்று கப்பல் வாங்கப்பட்டது, 16 அன்று சுதேசி ஸ்டீமர் கம்பெனி பதிவு செய்யப்பட்டது. அப்போது அவர் வயது 34 மட்டுமே!
அவருக்கு முன் சுமார் 20 கப்பல் கம்பெனிகள் இயங்கத்தான் செய்தன. ஆனால் அவை அனைத்தும் வணிக நோக்கில் ஆனவை. அரசியல் சார்பு இல்லாதவை. இந்த கம்பெனிகள் அனைத்தையும் பிரிட்டிஷ் இந்தியா ஸ்டீம் நேவிகேசன் கம்பெனி ஒழித்துக்கட்டியது.
சுதேசி கப்பல் கம்பெனியின் இலட்சியங்கள் : தற்சார்பு, சுயதொழில் வளர்ச்சி, அந்நிய பொருட்களையும் வணிகத்தையும் புறக்கணிப்பது ஆகிய இலக்குகளை அடைவது ஆகியவை மட்டுமே.
1906 அக்டோபர் 4 அன்று  விவேகபானுவில் அவர் எழுதினார் : “நமது சுதேசத்தை அந்நிய நாட்டார் கைப்பற்றிக் கொண்டதற்கு எதுவாக இருந்ததும், நமது சுதேசத்து பொருட்களை எல்லாம் அந்நிய நாட்டார் கொண்டுபோவதற்கு ஏதுவாக இருந்ததும், நமக்கு மிக்க லாபத்தை தரக்கூடிய கைத்தொழில் வியாபாரங்களை எல்லாம் அந்நிய நாடுகளுக்கு கொண்டுபோவதற்கு ஏதுவாக இருந்ததும், அந்நிய நாட்டார் நம் தேசத்தின் மீது பிரவேசித்து நாம் நீடித்த நாளாக கைக்கொண்டு இருந்த கப்பல் தொழிலை நம்மிடம் இருந்து கைப்பற்றிக் கொண்டது ஒன்றே ஆதலால், நாம் அதி சீக்கிரமாகவும் அத்தியாவசியமாகவும் கைக்கொள்ளதக்கதும் கைக்கொள்ள வேண்டுவதும் ஆன தொழில் கப்பல்கள் நடத்துவது மட்டுமே என்பது நம் எல்லோருக்கும் தெளிவாகத் தெரிந்ததே…”
அன்றைய நிலையில் 2 கப்பல்கள், 2 லாஞ்சுகள், வேலைக்கு மூலதனம் ஆகிய மூலதன செலவு மட்டும் ஐந்து லட்சம் ரூபாய். கம்பெனியின் ஒரு பங்கு ரூபாய் 25 வீதம் 40,000 பங்குகள் விற்பனை செய்யப்பட்டன.
எஸ்.எஸ். லாவோ கப்பல் 1907 ஜூன் 11 அன்றும், எஸ்.எஸ். காலியா 1907 மே 16 அன்றும் தூத்துக்குடிக்கு வந்து சேர்ந்தன.
கப்பல்கள் வந்து சேர்ந்த பின் தூத்துக்குடியில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் “சுதேசிக் கப்பல் நிறுவனத்தை தொடங்கிவிட்டோம், பிரிட்டிஷ் கப்பல் நிறுவனத்துக்கு நட்டம் ஏற்படத் தொடங்கிவிட்டது. …அடுத்து பருத்தி வணிகம், அதை நாம் கைப்பற்றுவது மிக எளிது…” என்று தனது அடுத்த திட்டத்தையும் அறிவித்துள்ளார் வ.உ.சி!
பிரிட்டிஷாரின் ஒரே கொள்கை இந்தியாவில் உள்நாட்டு செல்வங்களை கொள்ளை அடிப்பதும் இலாபத்தை கடல் கடந்து பிரிட்டனுக்கு கொண்டு செல்வதும் என இருந்தபோது, அதே இலாபத்துக்கு வ.உ.சி.யால் பேராபத்து விளைகின்றது, அவரை அகற்றாமல் தமது காலனியாதிக்க வணிகத்தை ஓரடியும் நகர்த்த முடியாது என்ற மிகப்பெரிய எச்சரிக்கை உணர்வுதான் அவருக்கும் சுதேசிக் கப்பல் கம்பெனிக்கும் பிரிட்டிஷ் நிர்வாகத்தால் கொடுக்கப்பட்ட அனைத்துவிதமான கொடுமைகள், தடங்கலுக்கும், பின் தொடர்ந்த சிறைக்கொடுமைகளுக்கும் காரணம்.
1908-இல் அவர் பேசினார் : “அயல்நாட்டவரால் நடத்தப்படுகின்ற நிர்வாகம் சுதேசிகளின் பயன்கருதிச் செயல்படும் என எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது. நீண்ட காலத்திற்கு அரசாங்கம் ஆங்கிலேயர்களின் கைகளில் இருந்தால், இந்நாடு கட்டாயமாகப் பாதிக்கப்படும். இந்தியா ஒவ்வொரு ஆண்டும் மேலும் மேலும் ஏழையாகிக் கொண்டிருக்கின்றது. அதன் உண்மையான வளங்களை மீட்பதற்கு மூன்று வழிகள் உள்ளன : 1. சுதேசியம் 2. புறக்கணிப்பு 3. தொழிற்சாலை”.
அன்றைய திருநெல்வேலி கலெக்டர் எம்.எம். வின்ச், வ.உ.சி.யின் இப்பேச்சை “பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் மானப்பிரச்சினை” என்று பதிவு செய்தார்.
1908 பிப்ரவரி 27 கோரல் மில் தொழிலாளர் போராட்டம் தொடங்குகிறது. மார்ச் 6 அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் முழு வேலைநிறுத்தம் நடந்தது. மக்களிடம் இருந்து திரட்டிய நிதி, தன் சொந்த பணம், மனைவி மீனாட்சியம்மாளின் நகையை அடகு வைத்து கிடைத்த பணம், கடனாக பெற்ற பணம் ஆகியவற்றை கொண்டு தொழிலாளர்கள் குடும்பத்துக்கு உணவு அளித்தவர் வ.உ.சி.
அன்றைக்கு ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டு கப்பல் கம்பெனியை மூடிவிடுமாறு வ.உ.சி.க்கு ஆசை வார்த்தை காட்டியுள்ளார்கள் பிரிட்டிஷ்காரர்கள்.
அவரது கம்பெனியின் கூட்டாளிகள் பலர் பிரிட்டிஷ் நிர்வாகத்தின் ஆசை வார்த்தைகளுக்கு அடிமைப்பட்டு விலைபோனது, பிரிட்டிஷ் நிர்வாகம் தன் மிருகபல அதிகாரத்தைப் பயன்படுத்தி சுதேசி கப்பல் கம்பெனிக்கு நட்டத்தை விளைவித்தது. கடன், ஊழியர்கள் செய்த ஊழல் ஆகியவை ஒன்றிணைந்து வ.உ.சி தொடங்கிய சுதேசி கப்பல் நிறுவனத்தை ஒழித்தன.
கொண்ட கொள்கையில் உறுதியும் நாட்டின் நலன் குறித்தே சிந்தித்தும் வந்த வ.உ.சி., தன்  வாழ்நாளில் 57 மாதங்கள், 22 நாட்கள் கொடுஞ்சிறையில் வாழ்ந்தார். அது கம்பீரம் மிக்க வீர வரலாறு.
40 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டவர், இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர் வ.உ.சி மட்டுமே. “மிக ஆபத்தான மனிதன்” என்று பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தன் ஆவணங்களில் இவரை குறித்து வைத்தது.
***
இவை யாவும் நடந்த காலம், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி தென்ஆப்பிரிக்காவில் வக்கீல் தொழில் செய்துகொண்டு இருந்த காலம் என்பதை புரிந்து கொண்டால்தான் வ.உ.சி.யின் சிந்தனை முதிர்ச்சி, துணிச்சல், முன்னெடுப்பு, போராட்ட குணம் ஆகியவற்றை புரிந்துகொள்ள முடியும். 1915-ம் ஆண்டுதான் காந்தி இந்தியாவுக்கு திரும்புகின்றார். அதற்கு முன்பாகவே 12.3.1908 முதல் 24.12.1912 வரை 57 மாதங்கள், 22 நாட்கள், அதாவது நான்கே முக்கால் வருடங்கள் பிரிட்டிஷாரின் சிறையில் கற்பனைக்கு எட்டாத கொடுமைகளை அனுபவித்தார். முப்பத்து ஐந்தரை வயதில் சிறைக்கு சென்றவர் நாற்பதேகால் வயதில் விடுதலை ஆகின்றார்.
வ.உ.சி.யின் சிறை வாழ்க்கை:
பாளையங்கோட்டை சிறையில் 3 மாதங்கள் விசாரணைக்கைதியாக
கோயம்புத்தூர் சிறையில் 30 மாதங்கள் : கடுங்காவல் / நாடுகடத்தல் தண்டனைக் கைதியாக 9.7.1908 முதல் 12.12.1910 வரை.
கேரளா கண்ணனூர் சிறையில் 24 மாதங்கள், 22 நாட்கள் கடுங்காவல் / தண்டனைக் கைதியாக. இங்கிருந்துதான் விடுதலை ஆனார்.
தனது 35-வது வயதில் சிறை செல்கின்றார், 40-வது வயதில் வெளியே வருகின்றார்.
(தகவல்கள் உதவி : கப்பலோட்டிய கதை, குருசாமி மயில்வாகனன், நீந்தும் மீன்கள் வெளியீடு)
***
வ.உ.சி அவர்களின் வாழ்க்கையை ஒப்பீடு செய்தால்
காங்கிரஸ் கட்சி நிறுவப்பட்டது 1885இல்.
வ உ சி கப்பல் போக்குவரத்தை தொடங்கியது 1907இல்.
காந்தி அப்போது தென் ஆப்பிரிக்காவில் இருந்தார். 1915இல்தான் இந்தியாவுக்கு வருகின்றார். 1921இல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆகின்றார்.
ஜவஹர்லால் நேரு பிறப்பு 1889. 1905-07 காலகட்டத்தில் அவர் இங்கிலாந்தில் படித்துக்கொண்டு இருந்தார். 1912இல் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆக பதிவு செய்கின்றார். 1912இல்தான் முதல்முறையாக பாட்னாவில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொள்கின்றார்.
ராஜாஜி பிறப்பு 1878. 1906இல் அவர் வயது 28. 1906இல் காங்கிரஸ் கட்சியில் இணைகின்றார், கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் கட்சி மாநாட்டில் பிரதிநிதியாக கலந்துகொள்கின்றார்.
வல்லபாய் படேல் : 1911இல் 36 வயது இவருக்கு. லண்டன் சென்று படிக்கின்றார். திரும்பி வந்து அஹமதாபாத்தில் வக்கீல் தொழில்தான் செய்து கொண்டு இருந்தார். ன்ற காந்தியை இவர் முதல் முறையாக சந்தித்தது 1917இல் தான்.
டாக்டர் ராஜேந்திர பிரசாத்: 1905,6, 7 காலகட்டத்தில் அவர் படித்துக்கொண்டு இருந்தார்.
சுபாஷ் சந்திர போஸ்: பிறப்பு 1897. 1906இல் படித்துக்கொண்டு இருந்தார்.
காமராஜர் பிறந்தது1903இல்.
டாக்டர் ராதாகிருஷ்ணன் (1888-1975): 1906இல் கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்தார்.
பிற்காலத்தில் இந்தியாவின் ஜனாதிபதி ஆன ஆர் வெங்கட்ராமன் பிறந்ததது 1910இல்.
***
படிக்க :
நாஜி படையை கலங்கடித்த சோவியத் வீரர் டேவிட் டஷ்மான் மறைவு || மு இக்பால் அகமது
கொரோனா பெருந்தொற்று : முதலாம் அலையும் பாடமும் || இக்பால் அகமது
கோழைகள், துரோகிகளின் வரலாறு என்ன சொல்கின்றது?
காந்தியடிகளின் கொலையில் ஈடுபட்ட வலதுசாரி இந்துத்துவா தீவிரவாதிகளான நாதுராம் கோட்சே உள்ளிட்டவர்களின் சித்தாந்த தந்தை தாமோதர் சாவர்க்கர்.
அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட பின் அங்கிருந்து கொண்டு, “மாட்சிமைதங்கிய பிரிட்டிஷ் மகாராணி தன்னை விடுதலை செய்தால் சகல அரசியல் செயல்பாடுகளில் இருந்தும் தான் விலகி விடுவதாகவும், தன்னைப்போல ஒரு விசுவாசமான ஒரு ஊழியனை பார்க்க முடியாது என்ற அளவுக்கு தான் நடந்து கொள்ள ஆயத்தமாக இருப்பதாகவும்” பிரிட்டிஷ் அரசிக்கு மன்னிப்பு கடிதங்களை எழுதிக்கொண்டு மண்டியிட்டு கிடந்த கேவலமிகு வரலாறுதான் சாவர்க்கரின் வரலாறு.
1942 வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்ட தேசபக்திமிக்க வீரர்கள் இரண்டு பேரை நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் முன்பு வாக்குமூலம் அளித்து காட்டிக்கொடுத்த அவமானமிக்க வரலாற்றுக்கு சொந்தமானவர் அடல் பிகாரி வாஜ்பேய்.
ஏகாதிபத்தியங்களுக்கும் கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கும் கைக்கூலிகளாக, அடிமையாக வாழ்வதே ஆனந்தம் என்று முடிவு செய்த கோழைகளுக்கும், இல்லாத ரயில் நிலையத்தில் டீ ஆற்றிக்கொண்டு இருந்ததாகவும், டிஜிட்டல் கேமரா இல்லாத காலத்தில் டிஜிட்டல் காமிராவில் படம் எடுத்ததாகவும், இமெயில் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் இமெயில் அனுப்பியதாகவும் அள்ளிவிடும் அண்டப்புளுகர்களுக்கும், தன்னிகரில்லா விடுதலை போரராட்ட வீரரும் சுதேசிப் பொருளாதாரத்தின் முக்கியத்துவம் உணர்ந்து தன் சொத்துக்களை இழந்து கப்பல் கம்பெனியை நிறுவியவரும் வேறு எவரும் சந்தித்திடாத வெஞ்சிறைக் கொடுமைகளை அனுபவித்த தியாகியும் ஆன வ.உ.சி.யின், அவரைப் போன்ற பல ஆயிரம் தியாகிகளின் வீர வரலாறும் அருமை பெருமைகளும் தெரியாது. கற்பூர வாசனை தெரிந்தாலும் தெரியாமல் போனாலும் கழுதைகளால் ஆகப்போவது என்ன?
உதவிய நூல்:  கப்பலோட்டிய கதை (குருசாமி மயில்வாகனன்)
***

முகநூலில் : மு இக்பால் அகமது
disclaimer

மக்கள் அதிகாரம் கோவை மண்டலத்தின் முதல் மாநாடு வெற்றிகரமாக நிறைவேறியது!

PP Letter head24.01.2022
முதலாவது கோவை மண்டல மாநாடு தோழர் ராஜன் தலைமையில்
வெற்றிகரமாக நடைபெற்றது.
பத்திரிகை செய்தி
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
முதலாவது கோவை மண்டல மாநாடு 24.01.2022 அன்று வெற்றிகரமாக நிறைவேறியது. கோவை  மண்டலத்தில் முறைப்படி தேர்தல் நடைப்பெற்று நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி  மண்டல குழுவிற்கான தேர்தல், தேர்தல் அலுவலர்களான தோழர்கள் முருகானந்தம், கின்சன் ஆகியோர் முன்னிலையில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

This slideshow requires JavaScript.

கோவை மண்டலத்திற்கு ஐந்து பேர் செயற்குழுவுக்கு தேர்வு செய்யப்பட்டனர். கோவை மண்டலச் செயலாளராக தோழர் சங்கர், மண்டல இணை செயலாளர் தோழர் குமார், மண்டலப் பொருளாராக தோழர் மகேஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கோவை கிளைக் தேர்தல் நடைபெற்றது. தோழர் ராஜன் கிளைச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். உடுமலை பகுதி செயலாளராக தோழர் குமார் தேர்வு செய்யப்பட்டார். மேற்கண்ட இரண்டு கிளைகளிலும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
♦ காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்!
♦ பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசமைப்போம்!
♦ புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தி முடிப்போம்!
ஆகிய முழக்கங்களின் அடிப்படையில் செயல்படுவோம் என உறுதியேற்றனர்.
தோழமையுடன்,

தோழர் சங்கர்
மண்டல செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
கோவை மண்டலம்.
94889 02202.

மக்கள் அதிகாரம் தருமபுரி மண்டலத்தின் முதல் மாநாடு வெற்றிகரமாக நிறைவேறியது !

PP Letter headபத்திரிகை செய்தி
25.01.2022
மக்கள் அதிகாரம் தருமபுரி மண்டலத்தின் முதல் மாநாடு வெற்றிகரமாக இனிதே நடந்தேறியது. 25.01.2022 காலை 10 மணிக்கு மக்கள் அதிகாரம் மண்டல மாநாடு பென்னாகரத்தில் தோழர் ராமலிங்கம் தலைமையில் மண்டல மாநாடு நடைப்பெற்றது.
தருமபுரி மண்டல தேர்தலில் தோழர் கோபிநாத் மண்டல செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். தோழர் ராஜா மண்டல இணைச் செயலாளராகவும். தோழர் செல்வராசு மண்டல பொருளாளராகவும், தோழர் பகத், தோழர் சரவணன் ஆகியோர் மண்டலக் குழு உறுப்பினர்களாகவும் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.
மண்டலத் தேர்தலுக்கு முன், பென்னாகரம் வட்டார தேர்தல் நடைப்பெற்றது. பென்னாகரம் வட்டார செயலாளராக தோழர் அருண், இணைச் செயலாளர் தோழர் சிவா, பொருளாளராக தோழர் சத்தியநாதன் மற்றும் வட்டாரக் குழு தோழர்களாக தோழர் வெங்கடேசன், தோழர் ராஜா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
அஞ்செட்டி வட்டாரக் குழு தேர்தலும் கடந்த 19.01.2022-ம் தேதி நடைப்பெற்றது. வட்டார செயலாளராக தோழர் ராமு, இணைச் செயலாளர் தோழர் சரவணன், பொருளாளர் தோழர் சென்னப்பன், செ. குழு தோழர்களாக தோழர் துரை, தோழர் ரமேஷ் ஆகியோர்  தேர்வு செய்யப்பட்டனர்.
தருமபுரி மண்டல மாநாட்டிற்கு முன்னதாக 10-க்கும் மேற்பட்ட கிளைகளில் மாநாடு நடத்தப்பட்டு, கிளை நிர்வாகிகள் தேர்தல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு மண்டல மாநாடு இறுதியாக வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இதில் அனைத்துக் கிளை நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
காவி – கார்ப்பரேட் பாசிசத்தை சமரசமில்லாமல் மோதி வீழ்த்துவோம் என நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
மாநாட்டு வாழ்த்துரையாக தோழர் சங்கர் பு.ஜ.தொ.மு மாநில ஒருங்கிணைப்பு குழு, அவர்களும், தோழர் ரவிசந்திரன் மக்கள் அதிகாரம் அவர்களும் கலந்துக் கொண்டு வாழ்த்திப் பேசினர். இறுதியாக தோழர் செல்வராசு அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.
தோழமையுடன்,

தோழர் கோபிநாத்
மண்டல செயலாளர்,
மக்கள் அதிகாரம்.
தருமபுரி மண்டலம்
9790138614

பிபின் ராவத்தை விமர்சித்த வழக்கு : முதல் தகவல் அறிக்கையை இரத்து செய்தது உயர்நீதிமன்றம் !

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உயிரிழந்ததை அடுத்து, “பாசிஸ்டுகளின் கைக்கூலி சர்வாதிகாரி பிபினுக்காக கண்ணீர் சிந்துவது அவமானம்! எதிரிகள் நம்மை கண்டு பயப்படுவது போல மக்களும் நம்மை கண்டு பயப்பட வேண்டும்! பிபின் ராவத் பொன் மொழிகள் என்று தலைப்பிட்டு மீம் வடிவிலான படத்தை முக நூலில் பதிவிட்டதற்காக மக்கள் அதிகாரம் அமைப்பை சார்ந்த வழக்கறிஞர் சிவராஜ பூபதி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாக்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியை சார்ந்த வழக்கறிஞர் பால்ராஜ் ஆகியோர் மீது கன்னியாகுமரி மாவட்ட பாஜக தலைவர், நாகர்கோவில் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் இரண்டு வழக்கறிஞர்களின் மீதும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு, 153, 504, 505(2) ஆகிய பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
இரு சமூகப் பிரிவினருக்கிடையே மோதலைத் தூண்டுவது, பொது அமைதியைக் கெடுக்கும் வகையிலான நடவடிக்கையில் ஈடுபடுவது என்பதுதான் இந்தப் பிரிவுகளின் உள்ளடக்கம்.
படிக்க :
பிபின் ராவத்தை விமர்சித்த செயற்பாட்டாளர்களுக்கு முன்பிணை !
பாஜக-வுக்கு முட்டுக் கொடுக்கும் இராணுவத் தளபதி பிபின் ராவத் !
இந்திய அரசியல் அமைப்பு சட்டம் ஷரத்து 19(1)(a) உறுதி செய்துள்ள கருத்து சுதந்திரத்தின் அடிப்படையிலேயே இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 153, 504, 505(2) குறிப்பிடும் கூறுகளுக்குள் வழக்குப் பதிவில் குறிப்பிட்டுள்ள கருத்து பொருந்தாது என்றும் குறிப்பிட்டு முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சிவராஜ பூபதியால் மனு தாக்கல் செய்யப்பட்டது.
06-01-2022 அன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் பதிவுக்கு வருத்தம் தெரிவிக்க நீதிபதி திரு.G.R.சுவாமிநாதன் அவர்களால் அறிவுறுத்தப்பட்டு வழக்கு 21-01-2022ம் தேதிக்கு மாற்றப்பட்டது.
“இராணுவத்தை கண்டு மக்கள் பயப்பட வேண்டும்”, காஷ்மீரில் இராணுவ ஜீப்பின் முன்னர் இளைஞரை கட்டி வைத்து வீதிகளில் அழைத்து சென்ற இராணுவத்தின் அடாவடியை ஆதரித்து பேசியது, காஷ்மீர் மக்கள் ராணுவத்தை நோக்கி துப்பாக்கியால் சுட வேண்டும் என்று பேசியது, (அப்பொழுதுதான் ராணுவத்தால் திருப்பி சுட முடியும் என்ற கருத்தில்) , CAA சட்டத்திற்கு எதிராக போராடும் மக்களுக்கு எதிராக பேசியது என்று மக்களுக்கு எதிராவே பேசிவந்துள்ளார் பிபின் ராவத்.
மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெற்று வந்த ஒருவர் சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக பேசி வந்த இராணுவ அதிகாரி. அவர் உயிர் இழந்துவிட்டதாலேயே, அவர் உயிரோடு இருந்த காலங்களில் அவர் தெரிவித்த மக்கள் விரோத கருத்துக்கள் புனிதத்தன்மை பெற்றுவிடுமா?
அவர் உயிரிழந்ததும் அவரை புனிதராக சித்தரித்து பிரச்சாரம் செய்யப்படுவதை,
இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வாழ்ந்துவரும் காஷ்மீர் மக்ககளின் நிலையிலிருந்தும், CAA சட்டத்தால், அகதிகளாக மாற்றப்படுவோம் என்ற அடிப்படையில் போராடும் மக்களின் நிலையிருந்தும் சிந்திக்கும்
நாட்டுப்பற்றாளர்களால் எப்படி அமைதியாக இருந்து ரசிக்க முடியும்? என்பதையும், இந்திய அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள கருத்து சுதந்திரத்தை மனுதாரருக்கு உறுதி செய்யும் கடமை நீதிமன்றத்திற்கு உள்ளது என்பதையும் கருத்தில் கொண்டு, இந்த பதிவில் மன்னிப்பு கேட்கும் அளவு தவறான கருத்து இல்லை என்பதாலும் மன்னிப்பு கேட்க இயலாது என்ற நிலைப்பாடு, மனுதாரருக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் திரு.பிரபு ராஜதுரை அவர்களால் நீதிபதியிடம் எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் மாரிதாசின் மீது பதியப்பட்ட வழக்கை இரத்து செய்த உத்தரவு இந்த வழக்கிற்கும் அப்படியே பொருந்தும் என்றும் மூத்த வழக்கறிஞர் வாதிட்டார்.
வழக்கு விசாரணையின்போது நீதிபதி திரு.G.R.சுவாமிநாதன் அவர்கள், உயிரிழந்த ஒருவரை பற்றி விமர்சித்திருப்பது அடிப்படை நாகரிகமற்ற செயல் என்றும், அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்து சுதந்திரம் இதை பாதுகாக்காது, ஆனால் வழக்கு பதியப்பட்ட சட்டப்பிரிவுகள் குறிப்பிடும் வரையறைக்குள் இந்த பதிவு வராது என்று தெரிவித்தார்.
மாரிதாஸ் வழக்கை விசாரிக்கும் போது “திமுக ஆட்சியில் தமிழகம் இன்னொரு காஷ்மீராக மாறுகிறதா” என்ற மாரிதாஸின் கருத்தையோ மாரிதாசையோ இவ்வாறு விமர்சித்து இதே நீதிபதி நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்ததாக எந்த ஊடகத்திலும் செய்தி வெளிவரவில்லை. மேலும் மாரிதாசின் பதிவு அரசியலமைப்பு சட்டம் ஷரத்து19(1)(a) குறிப்பிட்டுள்ள வரையறைக்கு உட்பட்டது என்று மாரிதாஸ் வழக்கில் தன்னுடைய தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
புகார் கொடுத்த பாஜக மாவட்ட தலைவர் சார்பாக முன்நிலையான வழக்கறிஞர் தனது வாதத்தில், சிவராஜபூபதி போல் பலர் வழக்கறிஞர் என்பதை கேடயமாக பயன்படுத்தி ‘பாரத் நேசனுக்கு’ எதிராக செயல்படுகிறார்கள். இவரைப் பற்றி விசாரித்து நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்துகிறேன் என்று நீதிபதியிடம் கூறினார். பாஜகவினரை பொறுத்தவரை நாட்டுப்பற்று என்பது இந்து மத சனாதன தர்மத்தின் மீதான பற்று மட்டுமேயொழிய இந்து மக்கள் மீதான பற்று கூடக் கிடையாது.
வ.உ.சி. உருவம் பதிந்த வாகனத்தை குடியரசு தின அணி வகுப்பிலிருந்து நீக்கியவர்கள் நமது தேசப்பற்றை பற்றி விசாரித்து கண்டறியப் போகிறார்களாம்.
படிக்க :
சங்க பரிவாரத்தின் அடுத்தக்கட்ட பாசிச நடவடிக்கை : ஆட்சிப் பணி விதிகள் திருத்தம்
ஒடிசா : ஜிண்டாலுக்கு எதிராகத் திரண்டெழும் கிராம மக்கள் !
நாட்டு விடுதலைக்காக போராடிய வ.உ.சி.யும் வழக்கறிஞர் என்பதும், வெள்ளையனுக்கு போட்டியாக அவர்களது தொழிலை அழிக்க நினைத்து தனது சுதேசி கப்பல் கம்பெனிக்காக தன் சொத்து முழுவதையும் இழந்தது தான் தேசப்பற்று என்பது – இந்திய அரசுக்கு சொந்தமான உள்நாட்டு நிறுவனங்களை வெளிநாட்டு முதலாளிகளுக்கு எழுதிக்கொடுக்கும் மோடியின் பக்தர்களுக்கு எப்படி தெரியும்!, இரண்டில் எது தேசப்பற்று என்று?
இறுதியாக இந்த முதல் தகவல் அறிக்கையையும் ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு பதியப்பட்ட செய்தி அறிந்தது முதல் மண்டியிடாமல் வழக்கு இரத்தானது வரை தோழர்கள், மூத்த வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், சக வழக்கறிஞர்கள், இளம் வழக்கறிஞர்கள், நண்பர்கள், உறவினர்கள் என பலரும் வழக்கை எதிர்கொள்ள துணை நின்றது, மேன்மேலும் களத்தில் பணியாற்ற நமக்கு மிகுந்த உற்சாகமூட்டுவதாகவும், காவி-கார்பரேட் மயமான அரசையும், பாசிச பாஜகவையும் களத்தில் எதிர் கொள்வதில் நாங்கள் தனித்து இல்லை என்பதை உணர்த்துவதற்கான மற்றுமொரு தருணமாகவும், சரியான அரசியல் திசையில், அமைப்பாக செயல்படுவதாலேயே இது சாத்தியமாயிற்று என்பதை உணர்த்தும் வாய்ப்பாகவும் அமைந்துள்ளது.
மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்.

ஒடிசா : ஜிண்டாலுக்கு எதிராகத் திரண்டெழும் கிராம மக்கள் !

ஒடிசா : ஜிண்டாலுக்கு எதிராகத் திரண்டெழும் கிராம மக்கள் !
அடக்கி ஒடுக்கத் துடிக்கும் ஒடிசா அரசு !
ஒடிசா மாநிலம் ஜகத்சிங்பூர் மாவட்டத்திலுள்ள திங்கியா மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்கள் மீண்டுமொரு போராட்டக்களமாக மாறியுள்ளது. திங்கியா மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருக்கும் குழந்தைகள் முதல் தள்ளாடும் வயதானவர்கள் வரை அனைவரும் இப்போராட்டத்தில் ஒன்றிணைந்துள்ளனர்.
ஜிண்டால் நிறுவனமும் மக்கள் போரட்டமும்
கனிமவளக் கொள்ளை நிறுவனமான ஜிண்டால் உத்கல் ஸ்டீல் (JUSL –JSW UTKAL STEEL LTD), கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ. 65,000 கோடி மதிப்பிலான ஒருங்கிணைந்த எஃகு  தொழிற்சாலையை நிறுவ அரசுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. ஏற்கெனவே போஸ்கோ நிறுவனத்திற்காகக் கைப்பற்றப்பட்டு (மக்களின் கடும் போராட்டத்தால் போஸ்கோ விரட்டியடிக்கப்பட்டது) மக்களிடம் ஒப்படைக்காமல் வைத்திருந்த சுமார் 1000 ஏக்கர் நிலத்தை அப்படியே ஆலை அமைப்பதற்கு ஜிண்டாலுக்குக் கொடுத்தது அரசு. மேலும் தற்போது கூடுதலாக விவசாய நிலங்களையும் கையகப்படுத்தி வருகிறது அரசு. தங்களுடைய எதிரி முன்பைவிட சாதுரியமான முறையில் மேலும் பலமுடன் வருவதை சரியாகக் கணித்த மக்கள்  கிளர்ந்தெழுந்து போரடிவருகிறார்கள்.
திங்கியாவை சுற்றியுள்ள கிராமங்களைத் தங்களது இலாப வேட்டைக்காகப் பயன்படுத்த ஜிண்டால் நிறுவனம் மிகப்பெரிய திட்டத்தை வகுத்துள்ளது. ஒரு வருடத்திற்கு சுமார் 13.2 மில்லியன் டன் மதிப்புள்ள எஃகை பிரித்தெடுக்க 900 மெகா வாட் மின்கலம் (power plant) அமைக்கவும், மேலும் ஒரு வருடத்திற்கு 10 டன் அளவு சிமெண்ட் தாயரிப்பதற்கான அரைத்தல் மற்றும் கலக்கும் தொழிற்சாலைகளை (mixing and grinding) உருவாக்கவும் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.
இதன்படி ஒரு வருடத்திற்கு 30 மில்லியன் இரும்பு தாது எடுக்கப்படும். அந்த இரும்பு தாதானது நீர் மற்றும் பல கனிமங்களுடன் கலந்து கிடைக்கும் என்பதனால் அதைப் பிரித்தெடுப்பதற்காக டீ ஸ்மைலிங் ஆலையை (de-sliming plant) கியோஞ்சர் மாவட்டத்தில் அமைக்க திட்டமிட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் ஒரு வருடத்திற்கு 52 டன் மதிப்புள்ள பொருள்களைக் கையாளுவதற்கு ஜெட்டீஸ் (jetties) எனப்படும் தரை ஜடாதாரி ஆற்றில் அமையவிருக்கிறது.
12000 ஏக்கருக்கும் அதிகமான விவாசய நிலங்களும், நீர்வள ஆதாரங்களான ஆறுகளையும், வனப்பகுதியையும் அரசின் உதவியுடன் ஆக்கிரமித்து வருகிறது நாசகர  ஜிண்டால். இவற்றுக்கெல்லாம் எதிராகப் போரடுவதனால் அக்கிராம மக்கள் அரசின் பலவிதமான துன்புறுத்தல்களைச் சந்தித்து வருகிறார்கள்.
ஜிண்டால் பிரதிரோத் சங்கராம் சமிதி
இதற்கு முன்னர் இப்பகுதி மக்கள், போஸ்கோவிற்கு எதிராகப் போரடியபோது போஸ்கோ பிரதிரோத் சங்கராம் சமிதி என்ற கூட்டமைப்பை உருவாக்கிப் போராடினர். அதனைத் தற்போது ஜிண்டால் பிரதிரோத் சங்கராம் சமிதி என பெயர் மாற்றம் செய்து ஜிண்டாலுக்கு எதிராகப் போராடிவருகிறார்கள் அக்கிராம மக்கள். இந்த அமைப்பிற்குத் தலைவராக தேபேந்திர ஸ்வைன் (debendra swain) இருந்து வருகிறார். கூட்டமைப்பின் தலைவரான ஸ்வைனை கைது செய்ய வருகிறபோது போரட்டம் தீவிரமடைந்தது. திசம்பர் 4, நள்ளிரவு நேரத்தில் போலீஸ்படை அராஜகமாக ஸ்வைனுடைய வீட்டுக் கதவை உடைத்து உள்ளே சென்றது. அப்பொழுது ஸ்வைன் அங்கு இல்லாததனால் வீட்டிலிருந்த ஸ்வைனின் மாமா மற்றும் அவரது மகள் லில்லியைக் கைது செய்துள்ளனர்.

மேலும், ஸ்வைனிற்கு எதிராக ஒழுங்குமுறை நடவடிக்கை எடுத்துப் பஞ்சாயத்து உறுப்பினர் பதவியிலிருந்து அவரை நீக்கியுள்ளது பஞ்சாயத்து துறை. போராடும் மக்களின் மீதும் போரட்டத்தை முன்னின்று நடத்துபவர்களின் மீதும் பல்வேறு ஒடுக்குமுறைகளை நிகழ்த்தியுள்ளன ஒடிசா அரசும் போலீசும். போராடும் மக்களின் ஒற்றுமையைச் சீர்க்குலைக்கவும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் எவ்வித இடையூறும் வராமல் இருக்க ஒன்றிணைந்த கிராமத்தைத் தனித்தனியான மூன்று கிராமங்களாகப் பிரிக்கும் சூழ்ச்சியில் இறங்கியது ஒடிசா அரசு.
திங்கியா, மாகால, பாட்டன என்று மூன்று புதிய கிராமங்களை உருவாக்கியதற்கு எதிராகவும் அத்துமீறித் தங்களது தோட்டத்தைப் போலீஸ்படை அழிப்பதில் இருந்து தங்களையும் தமது இயற்கை ஆதாரங்களைத் தற்காத்துக் கொள்ளவும் சாலையை மறித்து மூங்கிலால் தடுப்புகளை உருவாக்கி, போலீஸ், அரசு அதிகாரிகள், ஜிண்டால் ஊழியர்கள் என எவரும் உள்ளே வர அனுமதிக்கவில்லை அக்கிராம மக்கள்.
ஜிண்டாலுடன் ஒப்பந்தம் போடப்பட்ட பின் சில மாதங்களாகவே அக்கிராமத்தைச் சுற்றிப் போலீஸ்படை குவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திசம்பர் 10-ம் தேதி கூடுதலாக மூன்று படைப்பிரிவுகளை ஜகத்சிங்பூரின் எஸ்.பி அகிலேஸ்வர் சிங் தலைமையில் உருவாக்கியது.  இதைக்குறித்து எஸ்.பி சிங் கூறுவது, கடந்த திசம்பர் 4-ம் தேதி பாட்னாவில் வசிக்கும் பிரபாத் ராவுட் என்பவரது வீட்டில் 2 வெடிகுண்டுகள் போடப்பட்டதாகப் புகார் ஒன்றை அவர் எங்களுக்கு அளித்தார். இது குறித்து விசாரிக்கச் சென்றபோது போலீசாரை அந்த கிராம மக்கள் கற்களை எறிந்து அடித்துள்ளார்கள் என்றும் இதனால் எதிர்பாராத விபரீதங்கள் நடைபெறாமல் இருக்க போலீஸ்படையானது அங்குக் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் குண்டு வெடித்ததற்கான எந்தவொரு தடயமும் அங்கு இருப்பதாக தெரியவில்லை. வீட்டுக்கு அருகில் உள்ளவர்களும் கூட குண்டு வெடித்ததுபோல் எந்தவித சத்தமும் எங்களுக்குக் கேட்கவில்லை என்றே கூறுகிறார்கள். மேலும் குண்டு எறிந்தவர்களின் மீது எந்தவித கைது நடவடிக்கையும் இல்லாமல் அதைப்பற்றி துளிகூட பொருட்படுத்தாமலும் இருப்பது, போலீஸ்படை இந்தப் போலியான புகாரின் அடிப்படையில் கிராமத்தினுள் நுழைவதற்கும் அப்பாவி மக்களின் மீது பழிப்போட்டுப் போராட்டங்களை நசுக்க நடந்தேறும் சதியாகவே இவை இருப்பது கண்கூடு.
கடந்த 2 மாதத்தில் போலீஸ்துறை போராடுபவர்கள் மீது புதியதாக 11 வழக்குகளைப் போட்டுள்ளதாக சரிதா பார்பண்டா (sarita barpanda) என்ற சட்ட ஆர்வலர் குறிப்பிடுகிறார். மேலும் உச்சநீதிமன்றம் கடந்த வாரத்தில் போராடிக்கொண்டிருக்கும் மக்களின் மீது போடப்பட்ட வழக்குகளில் 104 ஆண்களுக்கும், 20 பெண்களுக்கும் முன் ஜாமீன் வழங்கியுள்ளது. முன்பு போஸ்கோவிற்கு எதிராகப் போராடும் மக்களின் மீது ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகளைப் போட்டுத் துன்புறுத்தியது ஒடிசா அரசு. அப்படிப் போடப்பட்ட வழக்குகளில் பல பிணையில்லாத வழக்குகளாக இன்றும் நிலவையிலுள்ளன.
இது மட்டுமல்லாமல் திங்கியா கிராமத்தில் உள்ள தங்களது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த சஷ்மிதா மாலிக் மற்றும் அவரது 11 வயது மகளைச் சிறுமி என்றும் பாராமல் கைது செய்துள்ளது. திசம்பர் 20 அன்று, 100-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை மாகால என்ற பகுதியில் வெறித்தனமாக அடித்துத் தாக்கியுள்ளது போலீஸ் படை. மேலும் அங்கிருக்கும் வெற்றிலைத் தோட்டங்களையும் அழிக்க முற்பட்டுள்ளது.
ஜனவரி 14-ம் தேதி, பெரும்பாலான பெண்கள் மற்றும் குழந்தைகள் என 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களது நிலங்களை அத்துமீறிக் கைப்பற்ற துடிக்கும் போலீசுக்கு எதிராக ஒன்றிணைந்தனர். போலீஸ்துறையோ இவர்களின் மீது கொடூரமான வன்முறையை நிகழ்த்தியது. இதில் 40-க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயம் அடைந்தனர். இதில் 8 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 11 பேரும் அடக்கம். காயமடைந்த குழந்தைகள், பெரியவர்கள் உள்ளிட்ட அனைவரும் எந்தவித மருத்துவ உதவியுமில்லாமல் அவதிப்பட்டுள்ளனர்.
ஜிண்டால் நிறுவனத்திடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு போலீஸ் எங்களை நிலங்களைவிட்டு மிக மோசமாகவும் வலுக்கட்டாயமாகவும் அடித்து வெளியேற்றுகிறது என்று ஏழு வயது குழந்தையான சுபாஸ்மிதா சட்டபத்தி (subhasmita satapathy) இன் ஆற்றுபடுத்த முடியாத அழுகையைப் பார்த்த மக்கள்  பின்வாங்காமல் போராடி வருகிறார்கள். நாங்கள் ஒருபோதும் எங்கள் நிலங்களைத் தொழிற்சாலை அமைப்பதற்காக விட்டுக் கொடுக்கமாட்டோம். எங்களின் கண்முன்னே இக்காடும் கடலும் நாசமாகிவிடாமல் வருங்கால பிள்ளைகளுக்காக இவ்வளங்களை பாதுகாத்து வைக்கும் பொறுப்பு எங்களிடமுள்ளது என உணர்ச்சி ததும்ப பேசி வருகின்றனர் அம்மக்கள்.
படிக்க :
♦ ஜிண்டால்-ஜி நியூஸ்: ஊழல் மோதல்!
♦ சட்டீஸ்கர் : கார்ப்பரேட் கொள்ளைக்காக 22 துணை ராணுவப்படையினரை பலி கொடுத்த அரசு !
வெகுநாட்களாக வெற்றிலைத் தோட்டமாக உருவாக்கி வளர்த்த நிலங்களைக் காட்டுப்பகுதி எனக்கூறிப் பட்டா வழங்காத ஒடிசா அரசுதான் ஜிண்டால் என்ற கார்ப்பரேட்டுக்கு மட்டும் வனப்பகுதியை அப்படியே வாரிக் கொடுத்திருக்கிறது.
ஏற்கனவே ஜகத்சிங்பூரின் பிராதிப் பகுதியில் இந்திய எண்ணெய் நிறுவனத்தால் அமைக்கப்பட்ட எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையால் சுற்றியுள்ள எங்கள் பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்நிறுவனம் இங்கு அமைந்தால் அழிவு நிச்சயம் எனக் கூறி அக்கிராம மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
தங்களது கிராமத்தையும் வயல்வெளிகளையும் காடுகளையும் கடலையும் நாசமாக்கவே கொண்டுவரப்பட்டுள்ள ஜிண்டால் உத்கல் ஸ்டீல் (JUSL – JSW UTKAL STEEL LTD) என்ற ஒருங்கிணைந்த எஃகு தொழிற்சாலை நிறுவனத்தை விரட்டியடிக்க, ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தையும் எதிர்த்துப் மிகப்பெரும் போரட்டத்தை அவர்கள் கையிலெடுத்துள்ளனர். அம்மக்களுக்கு இப்படிப்பட்ட போரட்டங்கள் ஒன்றும் புதியதல்ல.
போஸ்கோ நிறுவனமும் மக்கள் போராட்டமும்
2005-ம் ஆண்டு தென்கொரியா நாட்டைச் சேர்ந்த போஸ்கா என்ற நிறுவனம் 52,000 கோடி முதலீட்டில் பிரம்மாண்டமான இரும்பு ஆலை ஒன்றை நிறுவ ஒடிசா அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைப் போட்டது. இந்த ஒப்பந்தம் தனியார்மயம், தாராளமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கையின் மிகப் பெரிய வெற்றியாக ஒடிசா அரசு மற்றும் அந்நிறுவனத்தால் பீற்றிக் கொள்ளப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் ரூ.52,000 கோடி முதலீடு, இரும்புச் சுரங்கம், எஃகு ஆலை, இரும்பு ஏற்றுமதிக்கான துறைமுகம், உள்ளூர் மக்களுக்கான வேலைவாய்ப்பு என ஒட்டுமொத்தமாக அம்மாநிலத்தின் ‘வளர்ச்சி’க்காகவே இத்திட்டம் கொண்டுவரப்பட்டிருப்பதாக அரசு தரப்பில் பெருமையாகக் கூறப்பட்டது. அதன்படி ஆலை அமைப்பதற்கென 4004 ஏக்கர் நிலம், அடிக்கட்டுமான வசதி மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் குடியிருப்புக்கான நகரத்தை உருவாக்க 2000 ஏக்கர் நிலம், இரும்பு சுரங்கம் அமைப்பதற்கு 6177 ஏக்கர் நிலமென மொத்தம் 12000 ஏக்கர் நிலம் ஜகத்சிங்பூரில் கையகப்படுத்த திட்டம் போடப்பட்டது.
போஸ்கோ ஆலை அமைவதற்காகப் பலிகொடுக்கப்படவிருந்த கிராமங்கள், ஜகத்சிங்பூர் மாவட்டக் கடலோரத்தை ஒட்டியுள்ள கிராமங்கள் மற்றும் விவாசய நிலங்கள் குறிப்பாக திங்கியா, கோவிந்தபூர், கடகுஜங்கா, நுவாகாவ் போன்றவை ஆகும். இக்கிராமங்கள் விவசாயம் செய்வதற்கு ஏதுவாகப் பிரத்தியேகமான நில அமைப்பையும் அதற்கு ஏற்றாற்போல்  விவசாயமும் செழிப்புடன் நடைபெற்றுவரும் பகுதிகளாகும். முக்கியமாக இங்கு வெற்றிலை மற்றும் திராட்சை, முந்திரித் தோட்டங்கள் அதிக அளவில் உள்ளன. அதோடு நெல் மற்றும் பல காய்கறி வகைகளும் பயிரிடப்பட்டு வருகிறன்றன. குறிப்பாக வெற்றிலை மற்றும் முந்திரி பயிரிடுவதன் மூலம் ஆண்டுக்கு ரூ.50 கோடிக்கு வர்த்தகமும் நடைபெற்று வருகிறது.
இப்பகுதியின் செழிப்பிற்கு அங்குள்ள நீர்வளம் முக்கியக் காரணமாக இருக்கிறது. இதற்கு ஆதாரமாக அங்குள்ள மாகநதி, கதாஜோடி, தேவி, ஜடாதாரி போன்ற ஆறுகள்  காணப்படுகின்றன. இவைமட்டுமல்லாமல் பத்துக்கும் மேற்பட்ட காட்டாறுகள், நீரோடைகள், அருவிகளுடன் இலட்சக்கணக்கான மரங்களைக் கொண்ட காட்டுப் பகுதிகளுடன் முற்றிலும் இயற்கை வளத்துடன் அமைந்துள்ள பகுதியாக இவை உள்ளன. இவ்வளவு செழிப்புடன் இருக்கும் கிராமங்களைத் தனது இலாப வெறிக்காக நாசமாக்கவுள்ளது இந்நிறுவனம்.
ஆலை அமையவிருந்த பகுதியில் ஏழு கிராமங்களைச் சேர்ந்த விவசாயத்தைச் சார்ந்துள்ள 22,000 குடும்பங்களும், ஆலையின் தேவைக்காக உருவாக்கப்பட இருக்கும் துறைமுகம் அமையவிருந்த சுந்தர்கர் மாவட்டம் கந்ததர் பகுதியில் வாழ்ந்துவரும் பழங்குடியினக் குடும்பங்களும் இதனால் பாதிக்கப்படும் ஆபாயங்கள் இருந்தன.
படிக்க :
சிறப்புக் கட்டுரை : சேலம் உருக்காலையை விழுங்கும் ஜிண்டால் !
ஜிண்டால் – நிலக்கரிக்கு லஞ்சம் இரும்புக்கு தடிக்கம்பா ?
அந்நிறுவனம் வன உரிமை சட்டத்தை மீறி அங்குள்ள காட்டுப்பகுதிகளைக் கையகப்படுத்தியதோடு அல்லாமல், ஆலைக்கு முறையான ஒப்புதல் பெறுவதற்கு முன்பே அங்குள்ள ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டி வீழ்த்தியது. இத்தகைய சட்ட மீறல்களுக்குத் துணையாக நின்றது அம்மாநில அரசு.
இப்பகாசுர நிறுவனத்திடமிருந்து தங்களுடைய வாழ்வாதாரங்களான நிலத்தையும், வனப்பகுதிகளையும் காப்பாற்றுவதற்காக அக்கிராம மக்கள் ஒன்றிணைந்து, தீரமிக்கப் போராட்டத்தைத் தொடங்கினார்கள். ஒட்டுமொத்த கிராமமுமே பெரியவர்கள் சிறுவர்கள் என்று பாராமல் ஒன்றாக இணைந்து போரடினார்கள். போஸ்கோவுக்கு ஆதரவாக நின்று ஒடிசா அரசு தமது சொந்த மக்களின் மீது பல்வேறு கடுமையான ஒடுக்குமுறைகளை ஏவியது. பலரது இன்னுயிர்கள் இந்த அரசவேட்டையில் பலியாயின. இவற்றிற்கெல்லாம் அஞ்சாமல் தொடர்ந்து தங்கள் கிராமமும், இயற்கை வளங்களும் இக்கொடியவர்களிடம் சிக்கி நாசமாகிவிடக் கூடாதென்பதைத் தெளிவாக உணர்ந்த அம்மக்கள் போஸ்கோ பிரதிரோத் சங்க்ராம் சமிதி என்ற போஸ்கோ நிறுவனத்திற்கு எதிரான கூட்டமைப்பினை உருவாக்கித் தொடர்ந்து போராடியதன் விளைவாகச் சரியாகப் பத்து ஆண்டுகள் கழித்து 2015-ல் நாசகர போஸ்கோ நிறுவனத்துடனான ஒப்பந்தம் கைவிடப்பட்டது. இது பத்தாண்டுகளாக சளைக்காமல் நடந்த  மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றி. ஒருமதயானையை சிற்றெறும்பு வீழ்த்திய மாபெரும் கதை.
பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட்டுகளுக்காக நாட்டின் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரத்தைச் சிதைத்து, இயற்கை வளங்களையும் சுற்றுச்சூழலையும் நாசமாக்கும் இத்தகைய தேசவிரோத, மக்கள்விரோத செயலுக்குப் பெயர்தான் வளர்ச்சியாம். முன்னேற்றமாம்.
போஸ்கோ, ஜிண்டால் ஆலைகள் மட்டுமல்ல எட்டுவழிச்சாலை, ஹைட்ரோ கார்பன், அணு உலை, நியூட்ரினோ ஆய்வுக்கூடம் போன்ற தமிழகத்தையே நாசமாக்கத் துடிக்கும் திட்டங்களும் இதே வளர்ச்சி முன்னேற்றம் என்ற பெயரில்தான் கொண்டுவரப்படுகின்றன. ஒட்டுமொத்த நாட்டையும் சுடுகாடாக்கும் இந்த மறுகாலனியாகத் திட்டங்களை கார்ப்பரேட் பாசிசத்தின் தாக்குதல்கள் என்று ஒருங்கிணைந்த முறையில் புரிந்துகொண்டு முறியடிக்கக் களமிறங்க வேண்டும்.

மா.கார்க்கி
செய்தி ஆதாரங்கள் : Countercurrents, Indiatoday, The Wire,
Vinavu, Gaonconnection, Frontline

கும்பாபிஷேகத்துக்கு வராத கொரோனா – கறிக்கடைக்கு மட்டும் வருமா ?

சிவாச்சாரியர்களுக்கு ‘வராத’ கொரோனா தொற்று – கருத்துப்படம்

 

கருத்துப்படம் : மு. துரை

Hindu fanatic goons go berserk in Tripura ! Need An Anti-Fascist People’s Front and Protests!

In 2014, the BJP said it would create employment for 2 crore people a year. And with this rhetoric, it seized power. Similarly, in Tripura during the 2018 assembly elections, the BJP promised to create employment for 50,000 people a year and to implement the 7th Pay Commission’s recommendations. With these empty promises, it defeated the Communist Party of India (Marxist) by a small margin and seized power in the state.
Soon after winning the elections, the fascist Hindutva mob demolished the statue of Comrade Lenin in Belonia and proclaimed its arrogance. After assuming power, the BJP forgot its poll promises. As a result, dissidency increased against the BJP government and there are sporadic protests. The Hindutva fascist mob has been continuously attacking the CPM party cadres not only to divert the attention of the people from the government’s failure but also to eliminate the communists from the political arena, which is one of their main agenda.
The BJP held an event in Ambassa, Dhalai district, where the BJP Chief Minister Biplab spoke hysterically to his party cadres that the communists should be uprooted from Tripura by 2023. The aim of the Hindutva fascists is to seize power by strategically opposing China and Bangladesh, attacking minorities in the name of infiltration of Bangladeshi Muslims, hatred against Christians in the northeast and instilling jingoism and religious fanaticism among the people. A statement by a former RSS pracharak and Tripura election in-charge Sunil Deodhar proves this: “Northeastern states are an area of importance to the RSS to fulfill the dream of Hindurashtra”.
Read :
Sri Lanka reeling under debt : Western imperialists desperate to dominate by intensifying the crisis!
National Monetization Pipeline (NMP): An arrangement for re-colonization and plunder
In order to condemn the rampant unemployment and expose the BJP’s jumla of creating 50,000 jobs a year, the Democratic Youth Federation of India (DYFI) planned to organise a rally with the slogan ‘Where is my job?’ by obtaining proper permission. However, the police finally refused permission for the rally and BJP goons attacked those who tried to march against the ban.
In Tripura, 20 of the total 60 assembly seats are mostly populated by tribals. Because of the failure of the BJP to deliver on its poll promises, there has been discontent and hated among the people. This culminated in the defeat of the BJP and its allies in the Tripura Tribal Areas Autonomous District Council (TTAADC) elections held on April 2021.  As the party is alienated from the people, the hindu fanatic mob has decided that violence and terrorism are the only way to win the upcoming 2023 Assembly elections.
Since March 2018 to June 2021, 662 Leftist’s party offices, 204 offices of Leftist mass organisations, 3363 houses of CPI(M) members and supporters, 659 shops have either been gutted, ransacked or looted and 1500 livelihood centres such as fish ponds, rubber trees and so on have been destroyed by the Hindutva goons. On September 8 this year, the Sangh Parivar goons unleashed violence on CPM party cadres and set ablaze 42 CPI(M) party offices, 67 houses and shops of CPI(M) supporters and Desharkatha media house.
The RSS-BJP thugs has set fire not only to CPM party offices but also attacked offices of other political parties and the offices of various newspapers and electronic media. Vehicles have been set ablaze. Such atrocities have taken place not only in Agartala, but in many other cities also. The state police were just bystanders during such a violent rampage. According to the CPI(M) Central Committee’s statement, the CRPF guards, stationed at the State office in Agartala, were mysteriously withdrawn an hour before the mob attack.
These attacks are not going to stop there. This fascist mob, which holds power, will not stop until it exterminates all the left thinkers, rationalists and minorities as a whole. These hindu-fanatic fascist terrorist gangs can never be eradicated through elections.
The RSS is a semi-secret deadly fascist organisation that doesn’t believe in the electoral system. It is a movement that has been ideologically trained from grass-root level to the top and has been systematically mobilized with a number of trainings, including arms training. Therefore, brahmanical fascism can only be brought down by an organisation or a coalition of various organisations capable of defeating the hindu-fanatic fascist organisation outside the electoral politics.
But the CPM’s handling of the issue, with no plans to confront the saffron fascist thugs, exposes its inability. The CPM General Secretary Sitaram Yechury bluntly refers to these attacks as “an attack on opposition, an attack on democracy” and the party is holding token rallies in the state capital Agartala and symbolic protests in other states against this murderous attack.
The CPM didn’t mobilize the masses against the fascist forces and made no attempt to impede the growth of the Sangh Parivar organisations not only during these ongoing attacks, but also during the CPM’s four-year term before the 2018 Tripura Assembly elections, when the Modi regime assumed power (i.e., between 2014 and 2018).
The CPM is considering the saffron-fascist forces as just another electoral political party and handles them with a democratic approach. Because of this approach, the RSS started to take root fast even during CPM’s regime. After BJP’s loss in the 2013 Assembly elections, the RSS worked among a wide range of people through various organisations and the number of Shakhas rose from 60 in 2014 to 265 in 2018.
Read :
New Democracy || Puthiya Jananayagam in English || Magazine
Uttar Pradesh : No ‘viable alternative’ within Hindurashtra !
A good example in support of this fact is that in the 2018 elections, a large number of civil servants and their family members belonging to the CPM voted for the BJP. The CPM failed to create an understanding on the Hindutva fascist RSS-BJP not only among the people, but also among its own party members. A local RSS activist says “ordinary people do not know who Marx is, they have never studied Das Kapital”. This indicates CPM’s weakness.
Thus, the CPM had made the people helpless without a plan to defeat the fascist forces on the ground and the reason for this is the party’s treacherous revisionist parliamentary path. This is not the first time in history that we’re facing fascism. History has seen it before, when Hitler came to power in Germany. Hitler massacred the Communists before massacring the Jews and he was able to seize power through the treachery of the revisionist Communists there.
Therefore, the murderous attack on the CPM cadres must be seen from this background and dimension. We need to raise awareness among the people against Hindutva fascist terrorism and defeat these fascist thugs by actively and systematically fighting on the ground. For this, it is imperative for the revolutionary organisations, democratic forces and working class people in Tripura to come together to build an Anti-fascist People’s Front and fight!
Appu

மக்கள் அதிகாரம் – முதலாவது கடலூர் மண்டல மாநாடு வெற்றிகரமாக நிறைவேறியது !

PP Letter head20.01.2022
பத்திரிக்கை செய்தி
முதலாவது கடலூர் மண்டல மாநாடு வெற்றிகரமாக நிறைவேறியது!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
முதலாவது கடலூர் மண்டல மாநாடு 20.1.2022 அன்று வெற்றிகரமாக நிறைவேறியது. கடலூர் மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து கிளைகளிலும் முறைப்படி தேர்தல் நடைபெற்று நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி மண்டலக் குழுவிற்கான தேர்தல், தேர்தல் அலுவலர்களான தோழர்கள் அமிர்தா, கோபிநாத் ஆகியோர் முன்னிலையில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர் மண்டலத்திற்கு ஐந்துபேர் செயற்குழுவுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
கடலூர் மண்டலச் செயலாளராக தோழர் முருகாநந்தம், இணைச் செயலராக தோழர் அசோக்குமார், மண்டலப் பொருளாளராக தோழர் சக்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
விருதாச்சலம் கிளை செயலாளராக தோழர் அசோக்குமார், விஜயமாநகரம் கிளைச் செயலாளராக தோழர் தனசேகர், கடலூர் கிளைச் செயலாளராக தோழர் சக்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளும், உறுப்பினர்களும்,
“காவி-கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்!
பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசமைப்போம்!
புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தி முடிப்போம்!”
ஆகிய முழக்கங்களின் அடிப்படையில் செயல்படுவோம் என உறுதியேற்றனர்.
தோழமையுடன்
தோழர் முருகாந்தம்
கடலூர் மண்டல செயலர்
மக்கள் அதிகாரம்
தொடர்புக்கு : 97912 86994

National Monetization Pipeline (NMP): An arrangement for re-colonization and plunder

On August 23, 2021, Nirmala Sitharaman, the union finance minister launched the National Monetization Pipeline (NMP) project on the recommendations of NITI-AYOG, an agency established to plan and implement the re-colonization process combining Liberalization-Privatization-Globalization (LPG) policies. The BJP government claimed that by way of selling away vital public assets at an amount of Rs Six Trillion (Rs Six lakh crore) will be mobilized and the same will be deployed to create the national infrastructure that will take India on the path of faster growth.
Accordingly, the BJP government plans to lease out 26,700 km long highways, 90 passenger trains, 400 railway stations, 741km long train tracks, 21 airports, 40 harbors, 160 coal mines, 3,930 km long pipelines of public sector units (PSU), stadiums in Delhi and Bangalore cities, 14,197 telecommunication towers of telecom PSUs companies, and food grain storage warehouses to corporate companies. The lease will be for a period of 25 years done in 4 phases and expects to mobilize around Rs Six Trillion.
The true value of these public assets is several times higher than the Modi Government’s estimates of Rs Six Trillion. P.Chidambaram, former minister of finance in the Manmohan Singh government claimed the government can earn this amount of Rs Six Trillion within 4 years i.e. Rs 1.5 Trillion per year from the highly-valued PSUs of the Navaratna alone. Thus anyone can understand the dubious nature of the Modi government’s projections to deliberately sell off the highly valued profitable PSUs to the selected corporates.
Read :
Sri Lanka reeling under debt : Western imperialists desperate to dominate by intensifying the crisis!
Uttar Pradesh : No ‘viable alternative’ within Hindurashtra !
These assets may probably be sold away at throw-away prices to corporates like Ambani and Adani. This is what lead Rahul Gandhi, the leader of the Congress party to claim Modi is selling away the assets created in 70 years of independence in 7 years just to benefit his friends. He also added that privatization took place during the Congress rule too, but Modi’s privatization is to sell off the public assets used by millions of people every day and that engages millions of workers. Rahul acknowledges the fact that Congress is not against privatization and what it did was minimal, but what Modi is involved in a maximalist privatization. At best Rahul Gandhi differs only in the quantum of privatization. Not only Rahul, but most of the opposition parties, the bourgeois media, and other political analysts also criticize the NMP only to this extent. But the NMP is no doubt an arrangement to push the country into an extreme re-colonization. It is a leap forward in the process of restructuring the entire nation to facilitate corporate plunder.
At the same time, new farm laws aim to drive the peasants out of their lands and hand it over to the corporates. Similarly, driving fishermen from the country’s coastline to hand over the coast to build harbors, parks, luxury hotels, sagarmala projects are planned through the newly enacted amended Marine Fishery Regulation Act (MFRA). In addition, Gas Authority of India Limited (GAIL) pipelines, methane gas exploration in delta regions of Tamil Nadu, eight-lane road projects named Bhartamala that expect to carry the minerals from one end to another region of the country are all designed to plunder the nation. The newly enacted labour laws that legitimize the slave labor contracts deprive the available meager rights of the labour. All these together, the NMP becomes an important milestone in the re-colonization process.
What is National Monetization Plan (NMP)?
The NMP is an integral part of the National Infrastructure Pipeline (NIP). Nirmala had already made it clear in the Union Budget of 2021-22 that both these plans are linked to each other. In order to understand these ‘pipelines,’ we may take the example of the human heart. The heart is divided into two halves as right and left, and together they perform different but essential functions. The right side absorbs the oxygen-depleted blood and sends it to the lungs where it gets loaded with oxygen. The left absorbs the oxygenated blood and sends it back to the body again. In the process, the two sides perform different jobs in the oxygenation process. Similarly to facilitate the corporate plunder both the NMP and NIP operate in unison to restructure a re-colonized country. The estimated Rs 111 Trillion mobilized by selling away these public assets through NMP will be spent on creating new infrastructure under the NIP. Accordingly, this Rs Six Trillion is just the beginning.
New milestone in looting by re-colonization
Where and how the Modi government is going to mobilize such a large sum is the moot question. They contemplate three sets of actions.
Firstly, they are creating a financial framework to accelerate the process of mobilizing infrastructure financing through a Development Finance Institution (DFI). In that regard, a new law came into force in March 2021 to promote a new bank in the name of the National Bank for Financing Infrastructure and Development (NBIFD). The government has announced that this bank will have a share capital of one Trillion.
Secondly, they want to create a momentum in the monetization of existing assets. This amounts to the subsequent sale of assets and projects in a continuation of the first monetization plan. In this way, they are planning to fund future infrastructure projects through the money thus mobilized. The question arises as to what other infrastructure they are going to spend on by selling away the existing ones created over the last seventy years and more. Sagarmala, Bharatmaala, smart city, GAIL, methane explorations, loans to corporates for starting new plants are some of the future infrastructure to be created in the name of “national development” facilitating corporate plunder. This is the ‘New India’ that Modi dreamed!
Thirdly, they want to increase the capital expenditure of the Union and the State governments through the budget. This means most of the budget funds will be earmarked to fund giant corporate companies to start their business. In that sense, the nature of the government budget will be changed in its entirety. The welfare schemes shall no longer remain with the government but funding the corporates through people’s money will take that place. This is the “AtmaNirbharta” budget for the new India!
This is a continuous process of re-colonization. When this trend is completed, the national resources such as the roads, public transports, electricity, agriculture, forests, mountains, sea coasts, etc., would come under the dominance of corporates. The government may only have the police and military under it’s control. This is what we call a milestone of re-colonization.
Corporate plunder lurking behind ‘growth’!
While indulging in this exercise of NMP, Modi clique repeats the same bogus claims of ‘national development’ and ‘employment generation’. The goods and services tax (GST) that was brought by the Modi government with similar claims has pushed the country to the brink of bankruptcy and increased unemployment. Modi continues to carry on with this fraudulent campaign in the goebbelsian style.
First of all, what have been the credentials of those who gets these infrastructure or public funds. Tycoons like Vijay Mallya, Nirav Modi, and industries such as Videocon and CAIRN and many corporate bosses have committed frauds, defrauded bank interests, taken away public properties with false claims and details, and finally cheated the government by colluding with bank officials. Aside from this, the Modi government announced in Mid-September that it would write off Rs Two Trillion bad debts that corporate bosses have borrowed from public sector banks. A new bank in the name of National Asset Reconstructing Company Limited (NARCL) will be formed to repay the debts of the corporates by the bank. Ever since the Modi government came into power, the bad debts of the corporate companies rose to Rs 18.28 Trillion. Of this, about Rs Six Trillion was written off by the Modi government. It is for sure that, through this dubious bank i.e. NARCL all the corporate bosses will escape without repaying. This is what the Modi clique portrays as national development.
Plunder by Enron, a model !
It is well known that, in 1992, the US corporation Enron proposed to establish a power project in Maharashtra with a capital of USD 3 Billion in the name of Dabol power corporation. Enron’s fraud is well known. It happened in the initial stages of the Liberalization-Privatization-Globalization era. The project cost was deliberately spiked up, lands were illegally occupied, water resources depleted, but the company and produced not even a single unit of electricity, but it used the police to attack the local people. Enron was a prelude to a corrupt and fascist rule that is to come. The Maharashtra State Electricity Board (MSEB) that was operating in profit until this time incurred a loss of Rs.16.81 Billion in 1999 and 2000. The government bought power from the company at a price that is several times higher. When Enron was declared bankrupt, the scandal got exposed that public money was used by the company, and the state government paid for electricity that it did not even produce. Enron is a model in the act of plundering through privatization. In the end, the result is an environmental catastrophe, the devastation of people’s livelihood, inflation, and an increase in repression. Most corporate companies follow the same route
Will the employment opportunities increase?
The argument by Modi clique that the employment opportunities will increase through the national monetization scheme is dubious and fraudulent. Modi government’s actions in the past and present have not realized in any such increase. Now, there are 225 public sectors units in the country. In 1960-61, around 7 million persons were employed directly and indirectly. In addition, millions of workers received employment on a contract basis through allied units. In 1997, there were 20 million persons engaged in PSUs and related units. As of 31 March 2017, the number has fallen to 11.3million, which is a reduction of 44% from the peak. Similarly, employment in the private sector has shrunk from 7.55 million in 1983, to 1.64 million between 1994 and 2000.
Recruitments in the public sector have been completely paralyzed, especially since the liberalization–globalization era. Further, public sector employment has plummeted due to losses in business, lay-offs, and privatization. On the other hand, the modern slavery system of contract employment that guarantees no job security has completely devastated the employees. Petty jobs created through casual labour engagement, contract labour, and even the gig workers such as Zomato and Swiggy are counted as employed in India. The data by the government is totally rigged and even with that, the unemployment has risen to 7% in September with approximately 270 Million people.
When the NIP comes in full-force the workers will be forced into modern slavery and thrown into an irreversible hell. On the other side, millions of people would be pushed into unemployment, hunger, and made to live in modern slums without basic amenities. The saffron-corporate fascist’s new Hindurashtra is to divide the country into two camps by taking the poor and unemployed people into slums and the highly paid into smart cities.
Read :
New Democracy || Puthiya Jananayagam in English || Magazine
Amma Tasmac Song – English Sub Title
There is no doubt that when the NMP and NIP become full-fledged, the people’s livelihood will be pushed to the bottom and over 70% of the population will be made useless, portrayed as enemies of development and an obstacle to national progress. When COVID-19 struck, a national tragedy of millions of workers were driven home by barefoot. Similarly, the peasants are fighting on the streets for more than 10 months to repeal the farm laws (Now the laws repealed by the Modi government). They have been shown as second-class citizens of the country. Despite skyrocketing prices of petrol, diesel and cooking gas the ordinary people are unable to resist this. Life becomes harder by the day for the vast majority. The aim of the saffron-corporate fascist Modi clique is to aggravate this pitiable situation.
Congress and BJP incorporate service
Sachin Pilot, a Congress leader taunted that any government exists to protect the property of the people but the Modi’s government is here to sell them. According to him, Congress dis-invested only the loss-making PSUs but the BJP sells away all the profit-making ones. He agrees that both Congress and BJP are here to sell away the public properties. PSUs became loss-making because both the Congress and the BJP are involved to conspire and cripple them. When he spoke during the thirtieth anniversary of liberalization in India, P.Chidambaram argued that the concessions to corporates are a necessity. At the same time, Congress pretends to oppose the plan and it is a comedy that they announced hoisting black flag protests to Modi government’s NMP and NIP plans.
The Brahminical media including the ‘Tamil-Hindu’ and ‘Dinamani’ that never fails to preach patriotism published this treasonous news about the announcement of NPI as a box news item. Other media had totally blacked out.
A great plunder is going on in front of our eyes. This is not only an economic project but also a political attack through oppressive statutes, and surveillance mechanisms by the saffron-corporate fascist regime. The immediate task before us today is to take these facts to the people and ignite the minds of the working class for their political power and economic welfare.
Velmurugan

மக்கள் அதிகாரம் – முதலாவது மதுரை மண்டல மாநாடு வெற்றிகரமாக நிறைவேறியது!

PP Letter head
பத்திரிகை செய்தி
முதலாவது மதுரை மண்டல மாநாடு வெற்றிகரமாக நிறைவேறியது !
அன்பார்ந்த உழைக்கும் மக்களே !
முதலாவது மதுரை மண்டல மாநாடு 19.1.2022 அன்று வெற்றிகரமாக நிறைவேறியது. மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து கிளைகளிலும் முறைப்படி தேர்தல் நடைப்பெற்று நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி மண்டல குழுவிற்கான தேர்தல் , தேர்தல் அலுவலர்களான தோழர்கள் வெற்றிவேல் செழியன், சாந்தகுமார் ஆகியோர் முன்னிலையில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மண்டலத்திற்கு ஐந்துபேர் செயற்குழுவுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
மதுரை மண்டலச் செயலாளராக தோழர் குருசாமி, மண்டலப் பொருளாளராக தோழர் பரமன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
போடி கிளைச் செயலாளராக AT கணேசன், ராஜபாளையம் கிளைச் செயலாளராக தோழர் முருகன், திருமங்கலம் கிளைச் செயலாளராக தோழர் பரமன், உசிலை கருக்கட்டான்பட்டி கிளைச் செயலாளராக தோழர் ஆண்டவர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளும், உறுப்பினர்களும்
காவி-கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம் !
பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசமைப்போம் !
புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தி முடிப்போம் !
ஆகிய முழக்கங்களின் அடிப்படையில் செயல்படுவோம் என உறுதியேற்றனர்.
தோழமையுடன்
தோழர் குருசாமி
மதுரை மண்டல செயலர்
மக்கள் அதிகாரம்
78268 47268