Tuesday, July 8, 2025
முகப்பு பதிவு பக்கம் 410

இராஜஸ்தான் இலட்சுமியின் பீங்கான் அழகுப் பொருட்கள் !

சென்னை மாதவரம் தேசிய நெடுஞ்சாலை. சரக்கு போக்குவரத்து வாகனங்கள் எப்பொழுதும் அடர்த்தியாக சென்று கொண்டிருக்கும் ஒரு பரபரப்பான மாலை நேரம்.. மஞ்சள் வெயிலின் வெளிச்சத்தை இருட்டு விழுங்குவதற்கு இரண்டு மணி நேரமே இருந்தது… அந்தச் சாலையின் ஓரத்தில் பல்வேறு கடைகள் இருந்தாலும் பார்ப்பவர்களை வெகுவாக கவர்ந்திழுக்கும் விதமாக அமைந்திருந்தது ஒரு கடை.அலுமினிய தகடால் ஆன அஸ்பெஸ்டாஸ் சுவருக்கு முன் இரண்டு கழிகளை நட்டு அதன் மேல் தென்னங்கீற்றைப் போட்டு சுட்டெரிக்கும் வெய்யிலிலிருந்து தங்களை  தற்காத்துக்கொள்ள ஒரு குடிசை அமைத்திருந்தனர்.

நீண்ட வரிசையில் பீங்கானால் செய்யப்பட்டயானைகள், வீட்டு உபயோகப் பொருட்கள்அழகாக நேர்த்தியானமுறையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதில், ராஜஸ்தான் மாடல் குவளைகள் அதிகம் இடம் பிடித்திருந்தன. அதேபோல், பிளாஸ்டர் ஆப் பாரிஸ் கொண்டு அச்சு மூலம் செய்யப்பட்ட, கிருஷ்ணர், சரஸ்வதி உள்ளிட்ட சாமி சிலைகள் என அனைத்தும் கலைநயத்துடன் செய்து அடுக்கி வைத்திருந்தனர்.குடிசைக்குள், ஒல்லியான தேகம் கொண்ட ஒருவர் கண் திருஷ்டி பொம்மைக்கு வண்ணம் தீட்ட, அவருக்கருகில் ஐம்பது வயதைக் கடந்த பெண்மனி தூரிகையின் உதவியோடு உயிரற்ற ஆக்ரோஷமான அந்த திருஷ்டி பொம்மைக்கு உயிரூட்டிக் கொண்டிருந்தார். தூரிகையை பிடித்து அவர் சுழற்றும் லாவகத்திலிருந்தே அவருடைய திறமையை புரிந்து கொள்ள முடியும்.

அவருக்கு எதிரில் நான்கைந்து சிறுவர்கள், ”இந்த ஒரெயொரு முறை மட்டும் பிள்ளையார் சிலை செஞ்சிக் கொடுங்கக்கா” என்று கெஞ்சிக் கொண்டிருந்தனர். அவர்களை நிமிர்ந்துகூட பார்க்க நேரமில்லாமல், ”என்கிட்ட கேக்காதிங்கடா… போயிட்டு ஸ்டேசனுல அனுமதி வாங்கிட்டு வாங்கடா” என்று அச்சிறுவர்களை விரட்டினார். எவ்வளவோ அவர்கள் கேட்டும் தன்  நிலையில் உறுதியாக இருந்தார் அவர்.ஒரு வழியாக அச்சிறுவர்கள் சென்ற பிறகு…. பேசத் தொடங்கினார் லட்சுமி.

“என்னோட சொந்த ஊர் ராஜஸ்தான். எங்க அப்பா அம்மா காலத்துல இருந்து இந்த தொழில் தான் செஞ்சிட்டு இருக்கோம். இருபத்தி அஞ்சி வருஷத்துக்கு முன்னாடி தமிழ்நாட்டுக்கு வந்தோம். என்னோட கணவர், கணவரின் தம்பி’ன்னு குடும்பமே இந்த தொழிலை நம்பித்தான் இருக்கு.எனக்கு மூனு பசங்க இருக்காங்க… எல்லாம் ரெட்டேரியில இருக்க தனியார் பள்ளிக்கூடத்துல படிக்கிறாங்க.

லட்சுமி, வட இந்திய தொழிலாளி, கைவினைப் பொருட்கள் விற்பனை செய்பவர்.

என்னோட தங்கச்சி குடும்பம் ஆந்திராவுல இருக்கு. அவங்களும் இதே தொழிலைத்தான் செய்யுறாங்க. இப்ப அவளுக்கு டெலிவரி ஆகியிருக்கு. என்னோட கணவர் கொழந்தைய பார்க்க போயிருக்காரு.

இங்க வந்த புதுசுல இந்த கண்திருஸ்டி பொம்மை மட்டும் தான் செஞ்சிட்டு இருந்தோம். அப்புறம் போக போக கிருஷ்ணர், சரஸ்வதி, கொலு பொம்மைகள் வரைக்கும் நாங்களே செய்து விக்க ஆரம்பிச்சிட்டோம். இப்ப பீங்கான் பொருட்களை வாங்கிட்டு வந்து விக்கிறோம். இதெல்லாம் பாரீஸ் போயிட்டு வாங்கி வருவோம். முன்னாடி மாதிரி வியாபாரம் எதுவும் இல்ல.

மாசம் 30 பீஸ் செய்வோம். தயாரிப்பு செலவும் கூடிடுச்சி. இந்த திருஷ்டி பொம்மை மட்டும் வீட்டுக்கு வாங்கிட்டு போவாங்க. ஒரு பொம்மையோட வெல 150,200,350 ரூபா வரைக்கும் இருக்கு…. இதையே குறைச்சிதான் வாங்கிட்டு போவாங்க… கிருஷ்ணர் சிலை, சரஸ்வதி சிலை எல்லாம் 1000 ரூபா. ஆனா யாரும் அந்த விலைக்கு வாங்க மாட்டாங்க. 600 ரூபாய்க்கு கேட்டாலும் கொடுத்துவேன். இதை ஸ்டாக் பண்ணி வச்சி என்ன பண்றது?

இந்த வேகாத வெய்யிலுல வந்து வெந்துகிட்டிருக்கோம். காலையில பத்து மணிக்கு சாப்பிட்டா அதோட நைட்டு பத்து மணிக்கு தான் சாப்பிடுவோம். மதியம் கிடையாது. அதுவும் சப்பாத்தி மட்டும் தான்.  அரிசி சோறு சாப்பிடுறது எங்க கலாச்சாரத்துல இல்ல. அதனால இதுவரைக்கும் சாப்பிட்டதும் இல்ல. வருஷத்துக்கு ஒரு முறை ஊருக்கு போயிட்டு வருவோம்.

ஒவ்வொரு வருஷமும் விநாயகர் சதுர்த்திக்கு பிள்ளையார் செஞ்சி விப்போம்.. கொஞ்சம் வருமானம் இருந்துச்சி. ஆனா, இந்த வருஷம் மட்டும் செய்யல. போலிசு செய்யக்கூடதுன்னு சொல்லிட்டதால வருமானம் எல்லாம் போயிடுச்சி. அது மட்டும் தான் கொஞ்சம் கைகொடுத்துச்சி.  இப்ப அதுவும் இல்ல…” என்கிறார் சோகமாக.

இன்றைய நவீன யுகத்தில் கைவினைப் பொருட்களின் மீதான ஆர்வம் குறைந்ததற்கு முக்கிய காரணம், புதிய தொழில்நுட்பத்தின் மூலம் வார்க்கப் பட்ட அச்சுப்பொருட்கள் மிக எளிதாக கிடைக்கின்றன.வரை வீடுகளுக்கு அதேபோல் கலை ரசனை என்பது மேட்டுகுடியினர் வாழ்வியல் சார்ந்து இருப்பதால் சாலையோர வியாபாரிகள் பக்கம் அவர்கள் கவனம் திரும்புவது கிடையாது.

சாதாரன மக்கள் கலை சார்ந்த ரசனையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டிருப்பதால் இயல்பாகவே அவர்கள் இதனை வாங்குவது மிக்ககுறைவு என்பதால் இத்தொழிலை நம்பி வாழ்பவர்கள் மிக எளிதாக வீழ்ச்சியடைந்து விடுகிறார்கள் என்பதே நிதர்சனம்..!

– வினவு புகைப்படச் செய்தியாளர்.

பங்கு சந்தை 5 : லாபத்துக்கு படும் பாடு !

பந்தய மூலதனம் – 5

பங்குச் சந்தை குரங்குகளை வாங்கி விற்கும் சூதாட்டம் மட்டும்தானா?

நாம் ஏன் பங்குச்சந்தை பற்றி புரிந்துகொள்ள வேண்டும், நமக்கும் பங்குச் சந்தைக்கும் என்ன சம்பந்தம்? – கேள்விக்கு விடை தெரிய தொடர்ந்து படியுங்கள்.

ரி, பங்குச் சந்தையில் கோடிகளில் புரளுகிறது பந்தயப் பணம். அத்தனை லட்சம் கோடி பணமும் எதன் மேல் பந்தயம் வைக்கப்படுகிறது? ஒரு பொருளை (அல்லது சேவையை) செய்து விற்பதில், அல்லது வாங்கி விற்பதில் லாபம் சம்பாதிக்க வேண்டும் அல்லது அப்படி தொழில் செய்பவர்களுக்கு கடன் கொடுத்து வட்டி வசூலிப்பதன் மூலம் லாபம் சம்பாதிக்க வேண்டும்.

அதனை  பங்குதாரர்களுக்கு  ஈவுத் தொகையாக அல்லது போனஸ் பங்காக  அல்லது  பங்குகளை வாங்குவதன் மூலம்   பிரித்துக்  கொடுக்க வேண்டும். அதை எதிர்பார்த்து பங்கு விலை அதிகரிக்கும் என்று பந்தயம் கட்டப்படுகிறது

லாபம் எப்படி ஈட்டப்படுகிறது. அதற்கான ஒரு எளிய உதாரணத்தை பார்ப்போம்.

நாம் முன்பு பார்த்த நண்பர் பிரகாஷ் தான் வேலை பார்க்கும் கம்பெனியில் கிடைத்த ரூ 10 லட்சம் போனசை வைத்து பி.எஸ்.எஸ் (பிரகாஷ் சாஃப்ட்வேர் சொல்யூஷன்ஸ்) என்ற பெயரில் மென்பொருள் செய்து விற்கிறார். மன்னார் அண்ட் கம்பெனியின் புராஜக்ட் செய்து கொண்டிருக்கும் போது, ஒரு நாளைக்கு அவருக்கு ஒரு ஃபோன்,

“சார் நீங்கதான் பி.எஸ்.எஸ் கம்பெனி ஓனரா? மன்னார் அன்ட் கம்பெனிக்கு நீங்கதான சாஃப்ட்வேர் செஞ்சு கொடுத்தீங்க? எங்க கம்பெனிக்கும் இதே போல சாஃப்ட்வேர் வேணும். உடனடியாக எங்க ஓனரை வந்து பாருங்க”

“நீங்க யாரு சார்?”

“நான் செல்லமணி கம்பெனி மேனேஜர் மாசிலாமணி சார். எங்க ஓனர் ராமமூர்த்தி உங்கள உடனேயே பாக்கணும்னு சொல்லிட்டார், எப்ப வருவீங்கன்னு சீக்கிரம் சொல்லுங்க”

மன்னார் அன்ட் கம்பெனிக்கு போட்டி கம்பெனி செல்லமணி கம்பெனி. மன்னார் அன்ட் கம்பெனியில் என்ன நடக்கிறது என்று இவர்கள் மோப்பம் பிடித்து காப்பி அடிப்பார்கள். இவர்கள் செய்வதை அவர்கள் மோப்பம் பிடித்து அதே போல செய்வார்கள். சில டஜன் கம்பெனிகள் போட்டி போடும் தொழிலில் இப்படி எல்லாம் துடிப்பாக இருந்தால்தான் தாக்குப் பிடித்து முன்னேற முடியும் என்பதில் ராமமூர்த்தி தெளிவானவர். இப்போது புதுசா ஏதோ சாஃப்ட்வேர் பேச்சு அடிபடுகிறதே என்று ஆளைத் துரத்துகிறார்.

“சரிங்க, நான் அடுத்த திங்கள் கிழமை காலையில் 11 மணிக்கு வந்து பார்க்கிறேன்”.

ராமமூர்த்தி குடும்பம் பழைய காலத்தில் வெல்ல மண்டி நடத்தி பணம் சேர்த்தவர்கள். கரும்பு விவசாயிகள் கரும்புச் சாறை காய்ச்சி கொண்டு வரும் வெல்லத்தை வாங்கி விற்கும் மொத்தத் தொழில் செய்தவர்கள். 30 வருடங்களுக்கு முன்பு அது நலிந்து போவதை புரிந்து கொண்டு, அதில் சம்பாதித்த பணத்தை எதில் போட்டால் லாபம் அதிகம் என்று பார்த்து பிளாஸ்டிக் பொருள் செய்யும் கம்பெனி ஒன்றை ஆரம்பித்து நடத்துகிறார்கள். மூலதனம் லாபம் குறைவான துறையிலிருந்து லாபம் அதிகமான துறைக்கு நகர்ந்து கொண்டே இருக்கிறது.

திங்கள் கிழமை அன்று புதுப்பேட்டையில் ஒரு குறுகலான தெருவுக்குள் மாடியில் இருக்கும் ராமமூர்த்தியின் அலுவலகத்துக்குப் போகிறார் பிரகாஷ்.

பி.எஸ்.எஸ்-ன் மென்பொருள் என்னென்ன செய்யும், எப்படியெல்லாம் உதவியாக இருக்கும், அது பிசினசை எப்படி வளர்க்கும், லாபத்தை எப்படி அதிகப்படுத்தும் என்றெல்லாம் 15 நிமிடங்கள் பேசுவதற்கு தயாரித்துக் கொண்டு போகிறார். பி.எஸ்.எஸ் கம்பெனி பற்றிய விபரங்கள், மென்பொருளிலிருந்து எடுக்க முடியும் மாதிரி அறிக்கைகள், பயன்படுத்தப் போகும் தொழில்நுட்பம் பற்றி விபரங்கள் என்று பக்காவாக ஒரு டாகுமென்ட் செட் தயாரித்து எடுத்துக் கொண்டு போகிறார்.

குறுகலான ஒரு மாடிப்படி ஏறிப் போனால், முதல் மாடியில் ஒரு 1500 சதுர அடியில் குளிரூட்டப்பட்ட அலுவலகம். ராமமூர்த்தி, எம்.டி என்ற பெயர்பலகையுடன் ராமமூர்த்தியின் அறை. சிறிது நேரம் காத்திருந்த பிறகு உள்ளே போகச் சொல்கிறார்கள். கூடவே செல்லமணி கம்பெனியின் பொது மேலாளர் ஒருவரும், கணினி பிரிவின் இன்சார்ஜூம் இருக்கிறார்கள்.

“சார், சாப்ஃட்வேர்ல எனக்கு 15 வருசம் அனுபவம் இருக்கு. இப்பதான் புதுசா கம்பெனி ஆரம்பிச்சிருக்கோம். மன்னார் அண்ட் கம்பெனிக்கு பிளாஸ்டிக் பொருள் தொழில் சம்பந்தமான சாஃப்ட்வேர் நாங்கதான் செஞ்சு கொடுக்கிறோம். இதில அந்த விபரம் எல்லாம் இருக்கு சார்.”

“அப்படியாப்பா, உங்க கம்பெனில எத்தனை பேரு வேலை செய்றாங்க?”

“அதெல்லாம் கவலைப்படாதீங்க சார், நாலு பேரு இருக்காங்க சார், நானும் இப்போ உங்க புராஜக்ட்-க்காக வேலை செய்யப் போறேன். எல்லாம் கரெக்டா முடிச்சிருவோம்”.

“சரிப்பா, இதுல என்னென்ன வசதி இருக்குன்னு சொல்லு பார்க்கலாம்”. அடுத்த இரண்டு மணி நேரம் விவாதம் போனது. ராமமூர்த்தி டீம் கூடுதலாக சொன்ன பல தேவைகளை பிரகாஷ் குறித்துக் கொள்கிறார்.

“சரிப்பா, இதையெல்லாம் செய்றதுக்கு என்ன செலவாகும்? என்ன விலை சொல்றீங்க?”. விற்கப்படும் பொருள் தனக்கு பலனுள்ளது என்று உறுதி செய்து கொண்ட பிறகு அதற்கான விலையைப் பற்றி பேச ஆரம்பிக்கிறார்.

“சொல்றேன் சார், நீங்க நிறைய புதுசா சொல்லியிருக்கீங்க, அதை எல்லாம் கணக்கு போட்டு பார்த்துட்டு நான் உங்களுக்கு டீட்டெய்லா புரப்போசல் அனுப்புறேன் சார்” என்று புறப்படுகிறார் பிரகாஷ்.

“மன்னார் அன்ட் கம்பெனிக்கு கொடுத்ததை பார்த்து நான் கூப்பிட்ட மாதிரி, செல்லமணி கம்பெனில உங்க சாஃப்ட்வேர வாங்குறோம்னு தெரிஞ்சா இன்னும் பலபேரு வருவாங்க. உங்க பிசினஸ் நல்லா டெவலப் ஆகும்” என்று பிரகாஷை மோட்டிவேட் செய்து அனுப்புகிறார். செய்கிறார் ராமமூர்த்தி.

பிரகாஷ் மூளைக்குள் நிறைய கனவுகள். “ஒரு புராஜக்ட் செய்து முடிப்பதற்கு முன்னாலேயே ஆள் தேடி ஆர்டர் வருகிறது. நாம இன்னும் உஷாரா மார்க்கெட்ல இறங்கினா கம்பெனிய பெருசா ஆக்கிறலாம்” என்று யோசிக்கிறார்.

அடுத்த 2 நாட்கள் விபரமாக கணக்கு போட்டு திட்டம் தயாரிக்கிறார். எத்தனை வேலை நாட்கள், என்னென்ன வேலை என்று நுணுக்கமாக திட்டம் போடுகிறார். 20 வருட மென்பொருள் துறை அனுபவம் கைகொடுக்கிறது. அலுவலகத்தில் நான்கு பேருடன் தானும் இறங்கி வேலை செய்தால் சேர்த்து வேலைகளை முடிக்க 8 மாதங்கள் ஆகும் என்று முடிவு செய்கிறார்.

மாதச் செலவாக அலுவலக வாடகை, தொலைபேசி கட்டணம், மின் கட்டணம், போக்குவரத்து செலவு என்று ரூ 50,000. சம்பளச் செலவு 4 பேருக்கும் சேர்த்து ரூ 1 லட்சம், பிரகாஷுக்கு ரூ 1 லட்சம். எல்லாம் சேர்த்தால் மாதம் ரூ 2.5 லட்சம் வீதம் 8 மாதங்களுக்கு ரூ 20 லட்சம் செலவாகும்.

ஆனா, இதில் நிறைய ரிஸ்க் இருக்கிறது.

ஒரு வேளை செல்லமணி கம்பெனி சொன்ன தேவைகளை சரியாக புரிந்து கொள்ளாமல் இருந்திருந்தாலோ, புரிந்து கொண்டதை திட்டமிட்டதில் ஏதாவது இடைவெளி இருந்தால் வேலை இழுத்து விடும். இன்னொரு பக்கம் வேலை யாருக்காவது உடம்பு சரியில்லை, ஏதாவது அவசரமாக லீவு போட வேண்டி வந்தால் வேலை தாமதமாகும்.

வேலை அளவிலும் வேலை செய்யப் போகிறவர்களின் இருக்கும் நிச்சயமின்மையை கருத்தில் வைத்து கூடுதலாக 2 மாதங்கள் சேர்த்துக் கொள்கிறார். 10 மாதங்களுக்கு ரூ 25 லட்சம் செலவு, அதற்கு மேல் லாபத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். 20% லாபம் சேர்த்து ரூ 30 லட்சம் என்று விலை முடிவு செய்து ராமமூர்த்திக்கு அனுப்பி வைத்து விடுகிறார்.

ஏன் 20% லாபம்? ஏன் 30 லட்சம் விலை? அதிக விலை வைத்து அதிக லாபம் பார்க்கலாமே? ரூ 3 கோடிக்கு விற்க முடியாதா? ரூ 30 கோடிக்கு? அவ்வளவு லாபம் சம்பாதிக்கும் நிறுவனங்கள்தான் பங்குச் சந்தையில் சக்கை போடு போடுகின்றன. அவர்களும் பிரகாஷ் போல உப்பு, மிளகு, புளி கணக்கு போட்டுத்தான் விலை வைத்து விற்று லாபம் சம்பாதிக்கிறார்களா? விபரமாக வரும் பகுதிகளில் பார்ப்போம்.

(தொடரும்)
நன்றி : new-democrats

தொடரின் முந்தைய பாகங்கள்:
பங்குச் சந்தை என்றால் என்ன ? – பாகம் 1
பங்குச் சந்தை 2 : செலவழித்தால் பணம் – பெருக்கினால் மூலதனம் !
பங்குச் சந்தை 3 : பங்குகள் இலாபம் பார்ப்பது ஊகத்திலா, நிறுவனங்களின் உற்பத்தியிலா ?

திருச்சி ஆட்டோ ஓட்டுநர்கள் பாதுகாப்பு சங்கம் ஆர்ப்பாட்டம் : அனைவரும் வருக !

பெட்ரோல் அரசியல்:
கலங்கி நின்றுப் பயன் இல்லை!
கலகம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை !

ன்பார்ந்த ஓட்டுனர்களே, பொதுமக்களே

வாகன உற்பத்தியில் இந்தியா உலகின் 7-வது இடத்திலும் இரு சக்கர வாகன உற்பத்தியில் முதலிடத்திலும் உள்ளதாம்! உலகெங்கும் ஆண்டுக்கு 800 மில்லியன் வாகனங்களை உற்பத்தி செய்து குவிக்கிறார்கள் முதலாளிகள். அதில் இந்தியாவின் உற்பத்தி 40 மில்லியன். அதாவது ஆண்டுக்கு 4 கோடி வாகனங்கள். சராசரியாக இந்திய மக்கள் தொகையில் இரண்டு நபர்களுக்கு ஒரு வண்டி வீதம் நம் தலையில் கட்டி விட்டனர். இன்னும் பத்தாண்டுகளில் நம் நாட்டில் மக்கள் தொகையை விட வாகன உற்பத்தி அதிகமாக இருக்கும். உடனடியாக வாகன உற்பத்திக்கு கருத்தடை செய்வதே நாம் வாழும் உரிமைக்கு அடிப்படையான தேவை!

ஆனால், இத்தகைய உற்பத்தியே நாட்டின் வளர்ச்சி என ஆட்சியாளர்கள் தம்பட்டம் அடிக்கின்றனர். அதே நேரத்தில் வாகனங்களில் வெளியாகும் புகையால் மாசு ஏற்பட்டு விட்டது; காற்று கெட்டுப்போச்சு; மனுசங்க மூச்சு விட முடியலை என்ற குரல் அவ்வப்போது அரசாலேயே எழுப்பப் படுகிறது. டெல்லியில் காற்று மாசுபாட்டால் மக்கள் மூச்சுத்திணறி பெரும் துயரத்திற்கு ஆளாகி உள்ளனர், அம்மாநில அரசு வாகனங்களை ஒற்றைப்படை, இரட்டைப்படை என முறை வைத்து இயக்கச் சொன்ன கேலிகூத்தும் நடந்தது. உலகில் மாசு படிந்த முதல் இருபது பெரும் நகரங்களில் நாம் பத்து இடங்களை பிடித்துள்ளோம் என்பதே நாம் கண்ட வளர்ச்சியாகும். இத்தகைய வாகன சந்தையால் பயனடைந்து வருபவர்கள் யார்? பாதிப்புக்கு உள்ளாகி இருப்பவர்கள் யார்? உலகெங்கும் வாகன தொழிற்சாலைகள் இந்தியா போன்ற நாடுகளை நோக்கி படையெடுப்பது ஏன்? கார்ப்பரேட்டுகளின் லாபம். லாபவெறி மட்டுமே!

தொழில் செய்ய வரும் வாகன தொழிற்சாலைகளுக்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம், தடையில்லா தண்ணீர், மானிய விலையில் மின்சாரம், ஒப்பந்தக் கூலி அடிமைகள், வங்கிக் கடன்கள் இவை தொழிற்சாலை துவங்கும் முன் அரசு கொடுக்கும் ஊக்கத் தொகையாகும். அதன்பின் வாகன விற்பனையில் வரும் லாபம், வாகனம் ஓடும் சாலையில் டோல் வரி மூலம் லாபம், வாகன காப்பீடு என்ற பெயரில் கல்லா கட்டுகின்றனர். இதுவும் போதாதென்று இப்போது “வாகன சட்டத் திருத்தம் 2018” என்கிற பெயரில் பம்பர் பரிசு பெற உள்ளன. வாகன புதுப்பித்தல் (FC), பெயிண்டிங், பழுது நீக்கும் பட்டறைகள், உதிரி பாக விற்பனை, ஓட்டுநர் பயிற்சிப்பள்ளி, ஓட்டுனர் உரிமம் வழங்குவது உள்ளிட்ட போக்குவரத்து துறை சார்ந்த அனைத்தையும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைத்து சிறு பட்டரைகள், பயிற்சிப்பள்ளிகள் வரை சிறு முதலாளிகள், தொழிலாளர்கள் பல லட்சம் பேரை தெருவில் நிறுத்த திட்டம் தீட்டுகிறது மோடி அரசு.

திருச்சி ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கம் – கோப்புப்படம்.

இந்தக் கொடுமை போதாதென்று ஆன்லைன் கேப்ஸ் நிறுவனங்கள் ஓலா, உபேர், ஜியோ போன்றவர்களின் அட்டூழியம் வேறு! ஒருபுறம் சலுகை என மக்களை ஏய்ப்பது, மறுபுறம் ஆட்டோ கார் ஓட்டுனர்களை சவாரிக்காக நாள் முழுக்க காக்க வைப்பது, அபராதத் தொகை பிடித்தம் செய்வது என்று இந்த நிறுவனங்கள் பத்து சவாரி எடுப்பதற்குள் ஓட்டுனர்களை நாய் படாதபாடு படுத்தி வருவது பெருங்கொடுமை. இவை டாக்சி, ஆட்டோ வரிசையில் இருசக்கர வாகன சவாரியிலும் ஹோட்டல் உணவுகளை டோர் டெலிவரி செய்யும் சேவையிலும் இறங்கி விட்டன. ஆட்டோ, கார்களை தொடர்ந்து சரக்கு வாகனம், லாரி எனவிரிவுபடுத்த உள்ளன.

பெரும் முதலாளிகள் நம் ரத்தத்தை உறிஞ்சிய பிறகு நமது கார்ப்பரேட்டுகளின் அடிமை அரசு தம் பங்கிற்கு வசூல் வேட்டையை துவங்குகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் – டீசலில் கலால் வரி, சேவை வரி, வாட் வரி, கல்வி வரி, விற்பனை வரி எண்ணெய் நிறுவன லாபம், டீலர் லாபம் என 29 ரூபாய் பெட்ரோலை 85 ரூபாய் வரை உயர்த்தி நம்மை மூச்சு முட்ட வைக்கின்றன. சரி, இதோடு விட்டார்களா என்றால் அதுவும் இல்லை ஒவ்வொரு முச்சந்தியிலும், மூத்திர சந்திலும் நின்று லோக்கல் பிஸ்தாக்களான போலீசு, ஆர்டிஓ உள்ளிட்டோர் வாகனப் பரிசோதனை என்ற பெயரில் தமது கல்லாவை கட்டுவது, அவமானப்படுத்துவது, பொய் வழக்குப்போடுவது என்று கொடுமைப்படுத்துகின்றனர். நாட்டின் போக்குவரத்து மற்றும் மக்களின் சேவைத்துறையில் பெரும் பங்காற்றும் வாகன ஓட்டிகள் மற்றும் உரிமையாளர்களை நாயை விடக் கேவலமாக நடத்துவதை சகித்துக்கொண்டு வாழ்வது, பகுத்தறிவு கொண்ட மனித இனத்திற்கு இழிவானதாகும்.

ஒரு மாட்டை எத்தனை முறை தோலுரிப்பது? ஒரு நியாயம்- நீதி வேண்டாமா? கோடீஸ்வரன் பறக்குற விமானத்துக்கு தரும் முதல் தர பெட்ரோல் ரூ.65-க்கு தரப்படுகிறது. கும்பி கூழுக்கு அழும் போது கொண்டை பூ கேட்குது! என்பதைப் போல, நமக்கே எரிபொருள் இல்லாமல் சிக்கித் தவிக்கும் போது, அமெரிக்காவுக்கு லிட்டர் ரூ.34-க்கு மோடி அண்ணாச்சி ஏற்றுமதி செய்கிறார்.

இது பூனைகளுக்கான கோர்ட்; இங்கே எலிகளுக்கு நியாயம் கிடைக்காது என்பது போல, நடப்பது கார்ப்பரேட் முதலாளிகளின் ஆட்சி; இதில் உழைப்பாளி மக்களுக்கு நியாயம் கிடைக்காது என்பதையே நடக்கும் நிகழ்வுகள் நிரூபித்து வருகின்றன. இது ஆட்டோ டிரைவர்களுக்கான பிரச்சினை மட்டுமல்ல. கார், வேன், லாரிகள், பிற சரக்கு வாகனங்கள், சிறு பட்டறைகள், மெக்கானிக், ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி, பெயிண்டர் உள்ளிட்ட அனைத்து பிரிவினருக்குமான பிரச்சனை என்பதை உணர வேண்டும். இந்த பிரச்சினைகளிலிருந்து நாம் விடுபட வேண்டுமென்றால் அரசின் தவறான கொள்கைகளை முறியடிக்க வேண்டும். நம் கோரிக்கைகளை வென்றெடுக்க பணக்கார சங்கங்களை நம்பிப் பயனில்லை! அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் போன்றவை பரபரப்பாக போராட்டத்தை அறிவிப்பார்கள்; பிறகு பாதியிலேயே பின்வாங்கிவிடுவார்கள் இதுதான் இன்றைய சங்கங்களின் யோக்கியதை!

விவசாயிகளிடமிருந்து விளைநிலமும், மீனவனிடமிருந்து கடலும் பிடுங்கப்படுகின்றன. சிறு தொழில் முனைவோரிடமிருந்து தொழில்கள் பறிக்கப்படுகின்றன. தொழிலாளரிடமிருந்து தொழிற்சங்க உரிமை பறிக்கப்படுகிறது. வணிகம், மருத்துவம், கல்வி, உள்ளிட்ட அனைத்து துறைகளும் கார்ப்பரேட் வசமாகி வருகின்றன. எஞ்சியிருக்கும் மோட்டார் வாகன துறையிலும் மூக்கை நுழைத்து முழுமையாக ஆக்கிரமித்து வருகின்றனர். எதுவும் முடியாது, போராட்டத்திற்கு யாரும் வரமாட்டார்கள், எல்லாம் அவன் செயல் என விதியை நொந்து விழபோகிறோமா? அல்லது பகல் கொள்ளைக் காரர்களெல்லாம் ஓரணியில் நிற்கும் போது பாதிக்கப்பட்டோரெல்லாம் ஒன்று சேர்ந்து உரிமையைப் பெற போராடப் போகிறோமா? விரைவில் முடிவு செய்வோம். 28 அன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு அணிதிரள்வோம். வாரீர்!

  • கண்டன ஆர்ப்பாட்டம்,
  • 28.09.2018, மாலை 5.30மணி,
  • சிந்தாமணி அண்ணாசிலை, திருச்சி.

இவண்:
ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம்
பதிவு எண் : 1219 / TRI-TN/ 2000
இணைப்பு : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, தமிழ்நாடு.
தொடர்புக்கு :97916 92512

வரலாறு : ஷாஜகானை விஞ்சிய இந்து முஸ்லீம் காதலர்கள் !

ஷாஜகான் ஆட்சிக் காலத்தில், காஷ்மீரில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட இந்து முசுலீம் தம்பதிகள் மதம் மாறாமலேயே மணம் செய்துகொண்டு வாழ்ந்திருக்கின்றனர். அன்று அகிலா ஹாதியாவாக மாறவும் இல்லை. அத்தகைய திருமணங்கள் செல்லாது என்று கூற ஒரு உயர் நீதிமன்றமும் இல்லை.

ந்திய துணைக்கண்டத்தின் கணிசமான மக்கள் எப்படி இஸ்லாத்துக்கு மாறினார்கள் என்ற கேள்வியை சங்க பரிவாரத்தின் வரலாற்று ஆசிரியர்கள் யாரை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள். உடனே பளிச் என்று பதில் வரும். மத்தியகாலத்தைச் சேர்ந்த முசுலிம் மன்னர்களால் வாள் முனையில் மதம் மாற்றப்பட்டவர்கள் என்பார்கள். எளிமையான பதில். இல்லையா?

மத்திய காலத்திலோ அல்லது பாக் பிரிவினைக்கு முந்தைய காலத்திலோ புவியியல் ரீதியாக இந்தியாவின் எந்தப் பகுதியில் முசுலிம்கள் அதிகம் இருந்தார்கள் என்பதை பரிசீலித்துப் பாருங்கள். மேற்கே இன்றைய பாகிஸ்தான், கிழக்கே வங்கதேசம், வடக்கே காஷ்மீர், தெற்கே கேரளா ஆகிய பகுதிகள்தான் அவை. இப்பகுதிகள் முகலாய சாம்ராச்சியத்தின் மையப்பகுதிகள் அல்ல. விளிம்புப் பகுதிகள்.

இப்பகுதிகள் தொடர்ச்சியாக முகலாய சாம்ராச்சியத்தின் கீழ் இல்லை என்பதுடன், அவ்வாறு இருந்த காலங்களிலும், இப்பகுதிளின் மீது முகலாய அரசின் அதிகாரம் மிகவும் பலவீனமாகவே இருந்தது. கேரளத்தை பொருத்தவரை அது முகலாய அரசின் கீழ் என்றுமே இருந்ததில்லை. எனவே இந்தப்பகுதிகளில்தான் கட்டாய மதமாற்றம் நடைபெற்றதாக கூறுவது அபத்தமானது.

இன்றைய கிழக்கு பஞ்சாப், டெல்லி, உ.பி., பிகார் ஆகியவைதான் முகலாய அரசின் இதயப்பகுதிகள். இப்பகுதிகளில் மக்கட்தொகையில் 12 முதல் 15 விழுக்காடுதான் முசுலிம்கள். அதாவது முகலாய அரசு அதிகாரத்தின் மையப்பகுதியில், அதன் விளிம்புப் பகுதியைக் காட்டிலும் முசுலிம் மக்கட்தொகை குறைவாக இருக்கிறது.

1830 இல் இந்தியாவுக்கு வந்த பிஷப் ஹீபர், இந்தியாவில் ஆறில் ஒருவர் முசுலிம் என்கிறார். 1941 மக்கட்தொகை கணக்கெடுப்பு, பிரிட்டிஷ் இந்தியாவின் மக்கட்தொகையில் முசுலிம்கள் 24.7% என்று கூறுகிறது. இந்த கணக்கின்படி, இந்த இடைப்பட்ட 110 ஆண்டுகளில் அவர்களுடைய மக்கட்தொகை 50% அதிகரித்திருக்கிறது எனலாம்.

எனவே முசுலிம்களின் எண்ணிக்கைக்கு மதமாற்றம்தான் காரணம் என்று கூறுவதும், அது ஒரு சில தடவைகளில் பெரும் எண்ணிக்கையில் முகலாய அரசால் வாள்முனையில் நடத்தப்பட்டது என்பதற்கும் எவ்வித ஆதாரமும் இல்லை. இது பல நூற்றாண்டுகளில் நடந்த நீண்டதொரு நிகழ்வு. அரசு உள்ளிட்டு இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.

முகலாயர் ஆட்சி என்றாலே கோயில் இடிப்பு, மதமாற்றம் என்றுதான் சிலர் நம்புகிறார்கள். இதற்கு நேரெதிரான நிகழ்வுகளும் நடந்துள்ளன. முகலாயர் ஆட்சிக்காலத்தில் மசூதிகள் இடிக்கப்பட்டு கோயில்கள் கட்டப்பட்டிருக்கின்றன. முசுலிம்கள் இந்துக்களாகவும் மதம் மாறியிருக்கிறார்கள். இது குறித்து சங்கபரிவாரம் உவகை கொள்ளலாம்.

1540 இல் ஹுமாயூனிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றிய ஷெர்ஷா சில இந்து ஜமீன்தார்களை தண்டிக்க விரும்புகிறான். யார் அவர்கள்? அந்த ஜமீன்தார்கள் மசூதிகளை இடித்து அங்கே கோயில்களைக் கட்டியவர்கள் என்று கூறுகிறான் ஷெர்ஷா. இதே காலகட்டத்தில் குஜராத்தைச் சேர்ந்த காம்பே எனும் துறைமுக நகரில் பார்சிகளின் தூண்டுதலின் பேரில் இந்துக்கள் ஒரு மசூதிக்குத் தீ வைத்து, 80 முசுலிம்களைக் கொல்கிறார்கள். இதனை விசாரித்து உண்மைகளை அறிந்த அந்தப் பகுதியின் இந்து மன்னன், மீண்டும் மசூதியைக் கட்ட உத்தரவிடுகிறான்.

மசூதிகளை இடித்து அந்த இடத்தில் இந்துக்கள் கோயில்களைக் கட்டிக் கொள்கிறார்கள் என்று ஷேக் அகமது ஷிர்ஹிந்தி என்ற முசுலிம் மதகுரு அக்பர் காலத்தில் புகார் செய்கிறார். பஞ்சாபில் 7 மசூதிகளை சட்டவிரோதமாகவும் வன்முறையாகவும் கைப்பற்றிக் கொண்டவர்களிடமிருந்து அவற்றை ஷாஜகான் மீட்டதாக ஆவணங்கள் கூறுகின்றன.

அவுரங்கசீபின் அரசவையில் அதி உயர் அதிகாரத்தில் இருந்த ராஜபுத்திர பிரபுவான ஜோத்பூரின் ஜஸ்வந்த் சிங் , மசூதிகளை இடித்து அந்த இடத்தில் கோயில் கட்டியதை 1658 – 59 இல் அவுரங்கசீபே குறிப்பிடுகிறார். ஆனால் அதற்குப் பின் 20 ஆண்டுகள், அதாவது ஜஸ்வந்த் சிங் இறக்கும் வரை அவர் அவுரங்கசீபின் அரசவையில் பதவியில்தான் இருக்கிறார்.

அதே போல முகலாயர் ஆட்சிக்காலத்தின் முசுலிம்கள் இந்துக்களாக மதம் மாறிய நிகழ்வுகளுக்கும் ஆதாரங்கள் உள்ளன. இது பெரிய அளவில் நடந்து விடவில்லை. என்ற போதிலும் ஒருவேளை முகலாயப்பேரரசு என்பது ஒரு மதவாத அரசாக இருந்திருப்பின் இது நடந்திருக்குமா என்பதுதான் நாம் விடை காணவேண்டிய கேள்வி.

முகமது பின் அமிர் அலி பால்கி, என்ற மத்திய ஆசியப் பயணி ஜகாங்கீரின் ஆட்சிக்காலத்தில் இந்தியா வருகிறார். பனாரஸ் நகரில் இந்துப் பெண்களைக் காதலித்த 23 முசுலிம்கள், இஸ்லாத்திலிருந்து விலகி இந்துக்களாக மாறிவிட்டதைக் கண்டு அதிர்ச்சியடைகிறார்.

‘‘சிறிது நேரம் நான் அவர்களிடம் பேசிப்பார்த்தேன். ஏன் இப்படி வழி தவறிப் போனீர்கள் என்று நான் கேட்டபோது, அவர்கள் வானத்தை நோக்கி கையைக் காட்டிவிட்டு, பிறகு நெற்றியில் தமது விரல்களை வைத்துக் கொண்டார்கள். இப்படித்தான் நடக்கவேண்டும் என்பது விதி என்று அவர்கள் சொல்வதாக நான் புரிந்து கொண்டேன் என்று வருத்தத்துடன் பதிவு செய்கிறார் அலி பால்கி.

முகலாய சாம்ராச்சியம் உதிப்பதற்கு முன்னரே காஷ்மீரை ஆண்ட ஜெயின் அல் அபிதீன் என்ற மன்னன், இந்துவாக இருந்து முஸ்லிமாக மாறியவர்களை மீண்டும் இந்துக்களாக மாறுவதற்கு அனுமதித்தார். பின்னாளின் அக்பர் இதற்கென ஒரு சட்டமே இயற்றினார். ஒரு இந்து தனது விருப்பத்துக்கு விரோதமாக எந்த வயதில் மதமாற்றம் செய்யபட்டிருந்தாலும், அவர் தன்னுடைய முன்னோர்களின் மதத்திற்குத் திரும்பலாம் என்றது அக்பரின் சட்டம். 15, 16 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவரும், கவுடியா வைணவம் என்ற பிரிவைத் தோற்றுவித்தவருமான சைதன்ய மகாபிரபு, ஒரிசாவின் முகலாய கவர்னரை கர் வாப்ஸி செய்து வைணவராக்கினார்.

அதுமட்டுமல்ல, முன் எப்போதுமே இந்துவாக இருந்திராத பத்தான் முஸ்லீம்கள் பலரையும் மதம் மாற்றினார். இவர்கள் பட்டாணி வைணவர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

தபிஸ்தான் – இ – மசாஹிப் என்ற 17 ஆம் நூற்றாண்டின் பாரசீக நூல் சமூகத்தின் மேல் மட்டத்தில் பலர் இஸ்லாத்திலிருந்து இந்து மதத்திற்கு திரும்பியதைக் குறிப்பிடுகிறது. குறிப்பாக ஷாஜகானின் அரசவையில் இருந்த மிர்சா சாலி, மிர்சா ஹைதர் என்ற இரண்டு பிரபுக்கள் முதலில் இந்து மதத்திலிருந்து இஸ்லாமிற்கு மாறி, பின்னர் இஸ்லாத்திலிருந்து மீண்டும் இந்து மதத்துக்கு திரும்பியிருக்கின்றனர். இவர்கள் யாரும் எவ்வகையிலும் தண்டிக்கப்படவில்லை.

சமூகத்தின் கீழ் மட்டமும் இதற்கு விலக்கில்லை. காஷ்மீரின் பிம்பார் பகுதியில் முசுலிம் இளைஞர்கள் இந்து பெண்களை மணப்பதும், பிறகு அந்த இளைஞர்கள் இந்துவாக மதம் மாறுவதும் சகஜமாக நடப்பதை அறிந்த ஷாஜகான் அதைத் தடுக்க முயற்சிக்கிறான். ஆனால் அவனுடைய உத்தரவு எதுவும் வேலை செய்யவில்லை.
இது மட்டுமல்ல.

மதம் மாறாமல் அவரவர் மதத்தில் இருந்தபடியே இந்து – முஸ்லீம் ஆண்களும் பெண்களும் திருமணம் செய்து கொள்வதும், சுமார் 5000 தம்பதிகள் அவ்வாறு மதம் மாறாமலேயே கணவன் மனைவியாக வாழ்வதும் ஷாஜகானுக்குத் தெரியவருகிறது. மனைவி மரிக்கும் பட்சத்தில், அவள் கணவனின் மதம் எதுவோ அந்த முறைப்படி எரிக்கவோ, புதைக்கவோ பட்டிருக்கிறாள். இதை தடுப்பதற்கு ஷாஜகான் மேற்கொண்ட முயற்சிகளும் வெற்றி பெறவில்லை.

அதே போல சீக்கிய மதகுருவான, குரு ஹர்கோவிந்த் ஏராளமான பேரை இஸ்லாத்திலிருந்து மதம் மாற்றியிருக்கிறார். பஞ்சாபின் கிராத்பூர் மலைகளுக்கும் திபெத்துக்கும் இடையில் ஒரு முசுலிம் கூட மிச்சமில்லை என்று இந்த மதமாற்றத்தை மிகைப்படுத்தி விவரிக்கிறது தபிஸ்தான் என்ற பாரசீக நூல்.

ஆகவே, வரலாறு என்பதை எளிமைப்படுத்திப் புரிந்து கொள்ளக்கூடாது – எப்போதுமே.

– பேரா. ஹர்பன்ஸ் முக்யா, ஜே.என்.யு. வில் பணியாற்றும் வரலாற்றாசிரியர்.

ஜூலை, 28, 2018, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.

புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2018

மின்னூல்:
புதிய ஜனநாயகம்

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

Dr. Anand Teltumbde interview | Com. Maruthaiyan | Video

Dr. Anand Teltumbde, A renowned intellectual visited Chennai on 08-09-2018 for a Hall meet arranged by Makkal Athikaaram.

During his visit, Comrade Maruthaiyan – General Secretary of People’s Art and Literary Association (PALA) interviewed him on things happening around Bhima Koregoan uprising and the recent arrest of activists.

Here Dr.Anand Teltumbde explains,

  • Significance of Bhima Koregoan and why the Sangh Parivar afraid of it?
  • Do Bhima Koregoan have concealed Anti-Modi Message?
  • Is the recent arrest of activists, an attempt by Sangh Parivar to divert key issues?
  • Do Sanathan sanstha related with RSS? What are their activities?
  • Is the 2019 election, a Modi Vs People war? How should Left and Dalit parties face this?

Don’t miss it.

Observe and Share

– Vinavu Field Reporter

தெலுங்கானா பிரணய் : இந்தியாவை உலுக்கிய சாதிவெறிப் படுகொலை !

பிறக்கப் போகும் குழந்தை குறித்த இனிய கனவுகளுடன் பிரணய் தனது காதல் மனைவியுடன் மருத்துவமனை சென்றார். மாதாந்திர உடல்நலப் பரிசோதனையை முடித்துவிட்டு மருத்துவமனையிலிருந்து வெளிவந்த போது மனைவியின் கண்முன்னேயே வெட்டிச் சாய்க்கப்பட்டார் பிரணய்.

இச்சம்பவம் தெலுங்கானாவில் கடந்த செப்டம்பர் 14 அன்று பட்டப் பகலில் நடந்தது. மனைவியின் கண்முன்னேயே வெட்டி சாய்க்கப்படும் அளவுக்கு பிரணய் செய்த ’குற்ற’மென்ன?

சாதி மாறி திருமணம் செய்து கொண்டதுதான் அது. அம்ருத வர்ஷினி, ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஒரு பெண். அவரது கணவர் பிரணய் ஒடுக்கப்பட்ட தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். இருவரும் பால்யகால சிநேகிதர்கள். நெடுநாட்களாக காதலித்து வந்து கடந்த ஜனவரி மாதம் அம்ருதா வீட்டினரின் எதிர்ப்பையும் மீறி முறையாக திருமணம் செய்து கொண்டனர்.

பிரணய் மற்றும் அம்ருத வர்ஷினி.

இது அம்ருத வர்ஷினியின் வீட்டாருக்கு கடும் ஆத்திரத்தை ஊட்டியது. அம்ருதாவின் தந்தை மாருதி ராவ், பலமுறை உறவினர்கள் மூலம் பெண்ணிற்கு தூது விட்டு, பிரணயை விட்டு வந்து விடுமாறு வற்புறுத்தியிருக்கிறார்.

ஆனால் அம்ருதாவோ தமக்கு ஒரு குழந்தை பிறந்தால் தந்தையின் இந்த மனக் கசப்புகள் அனைத்தும் ஒழிந்துவிடும் என எண்ணியிருக்கிறார். பிரணாய் இறந்த பின்னர் பிபிசி இணையதள பத்திரிகையாளர்களிடம் பேசுகையில் “குழந்தை என்ற புது உறவு எங்கள் இருவருக்கும் இடையில் மலர்வது, என் பெற்றோரை சமாளிக்க உதவும் என்று நான் நம்பினேன்” என கூறியிருக்கிறார் அம்ருதா.

பல்வேறு வழிகளிலும் நைச்சியமாக தமது மகளை பிரணயிடமிருந்து பிரிக்க முயற்சித்தும் வெற்றி பெற முடியாத மாருதி ராவ், பிரணயைக் கொன்று விட்டால் தனது மகள் தன்னிடம் வந்து விடுவாள் என ஒரு கணக்கு போட்டார்.

அம்ருதாவின் தாயார் உட்பட அவரது உறவினர்களும் தம்பதியினர் இருக்குமிடம் மற்றும் அவர்களின் அன்றாட நடவடிக்கைகள் போன்றவற்றை அம்ருதாவிடம் நைச்சியமாகப் பேசி அதனை மாருதி ராவிற்கு தகவல் கொடுத்துக் கொண்டிருந்தனர். இது குறித்து அம்ருதா பிபிசியிடம் கூறுகையில், “பிரணய் இறந்த பிறகு என் வீட்டில் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்பே வரவில்லை. வழக்கமாக என் அம்மா என்னுடன் தொலைபேசியில் பேசுவார். அது என்னுடைய உடல்நலனை விசாரிப்பதற்காக என்று நினைத்தேன், ஆனால் சந்தர்ப்பம் பார்த்து எங்களை பிரிப்பதற்காக என்னிடமிருந்தே தகவலை கறந்தவழி அது என்பதை நான் தெரியாமல் இருந்திருக்கிறேன்” என்கிறார்.

கொல்லப்பட்ட பிணரய்.

செல்வாக்குமிக்க ரியல் எஸ்டேட் அதிபரான மாருதி ராவ், மிர்யாளகுடா நகர காங்கிரஸ் தலைவரான அப்துல் கரீமைத் தொடர்பு கொண்டு பிரணயைக் கொல்ல ஒரு கூலிப்படை கொலைகாரன் தேவை எனக் கேட்டிருக்கிறார். போலீசின் தகவலின் படி கரீம்தான், மாருதி ராவிற்கு அஸ்கர் அலி என்ற தொழில்முறைக் கொலைகாரனுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். யார் இந்த அஸ்கர் அலி?

குஜராத்தில் மோடிக்கு எதிராக குரல் கொடுத்ததால் கடந்த 2003-ம் ஆண்டு மார்ச் 26 அன்று சுட்டுக் கொல்லப்பட்ட குஜராத் அமைச்சர் ஹரேன் பாண்டியா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் அஸ்கர் அலி. இவரின் மேல் நல்கொண்டா மாவட்டத்தில் பல்வேறு வழக்குகள் உண்டு. அதன் பின்னர் சிறப்பு நீதிமன்றம் அஸ்கர் அலி உள்ளிட்டு 11 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. ஆனால் கடந்த ஆகஸ்ட் 29, 2011 அன்று உயர்நீதிமன்றம் இவரை இவ்வழக்கிலிருந்து விடுவித்தது.

போலீசு கொடுத்த தகவலின் படி, அஸ்கர் அலி, முகமது பரி என்ற தனது பால்ய நண்பனை மாருதி ராவிற்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். முகமது பரி தன்னுடன் சில ஆண்டுகளுக்கு முன்னர் சிறையில் பழக்கமான சுபாஷ் சர்மாவைத் தொடர்பு கொண்டு இந்த வேலையை அவரிடம் கொடுத்திருக்கிறார்.

இந்த கொலைக்கு ரூ.1 கோடி பேரம் பேசப்பட்டதாக போலீசு தரப்பில் கூறப்படுகிறது. மாருதி ராவ், முகமது பரியிடம் முன்பணமாக 16 இலட்ச ரூபாயை கடந்த ஆகஸ்ட் முதல் வாரத்தில் கொடுத்துள்ளார். பின்னர் கடந்த ஆகஸ்ட் முதல் வாரத்தில் சுபாஷ் சர்மா தனது முதல் கொலை முயற்சியை மேற்கொண்டிருக்கிறார். அம்ருதா பிரணயுடன் ஒரு அழகு நிலையத்திலிருந்து வெளிவரும் போது கொலை செய்யத் திட்டமிட்டிருந்திருக்கிறார். ஆனால் பிரணயின் நண்பர் ஒருவரும்  அவர்களுடன் இருந்த காரணத்தினால் யார் பிரணய் என்பதில் குழப்பம் ஏற்பட்டு கொலை முயற்சியை நிறுத்திவிட்டு சென்றிருக்கிறார் சர்மா.

கடந்த செப்டம்பர் 14 அன்று பிரணய் அம்ருதாவுடன் மருத்துவமனைக்கு செல்லவிருப்பதை தமது உறவினர்கள் மூலமாக அறிந்து கொண்ட மாருதி ராவ், தகவலை முகமது பரியிடம் தெரிவித்திருக்கிறார். இதனை சர்மாவிடம் பரி தெரிவிக்கிறார். செப்டம்பர் 14 அன்று மருத்துவமனைக்கு வெளியே பிரணயைக் கொன்று விட்டு பெங்களூரு தப்பிச் சென்று விட்டார் சுபாஷ். பின்னர் பீஹாருக்கு தப்பிச் சென்றிருக்கிறார்.

நடந்த சம்பவத்தை உடனிருந்து பார்த்த அம்ருதா, “மருத்துவமனையில் இருந்து நாங்கள் வெளியே வரும்போதும் பேசிக்கொண்டே வந்தோம். நான் ஏதோ ஒரு கேள்வி கேட்க, அதற்கு பதில் வரவில்லையே என்று பார்த்தால், பிரனாய் கீழே விழுந்து கிடந்தார், ஒருவன் அவருடைய தொண்டையை அறுத்துக் கொண்டிருந்தான்”  என்று தான் உறைந்து போன அந்த கணத்தைக் கூறுகிறார்.

”எனக்கு 21 வயதுதான் ஆகிறது, பிரணய்க்கு 24தான் ஆகிறது. எங்களது அழகிய வாழ்வு குறுகிய காலத்திலேயே கொடூரமாக சிதைக்கப்பட்டுவிட்டது.” என்று குமுறுகிறார் அம்ருதா. பிரணயின் மரணத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என ”Justice for Pranoy” (https://www.facebook.com/Amruthapranayperumalla/) ஒரு முகநூல் பக்கத்தையும் தொடங்கியுள்ளார்.

♠♠♠

பிரணாயின் கொலை நடந்து ஒரு வாரத்திற்குள்ளாகவே தெலுங்கானா மாநிலம் மற்றுமொரு சாதிவெறி ஆணவக் கொலையை சந்தித்திருக்கிறது.

கடந்த 19-09-2018 அன்று பட்டப்பகலில் ஆள்நடமாட்டம் மிக்க ஒரு கடைத்தெருவில் புதுமண ஜோடியின் மீது மற்றுமொரு கொலை வெறித்தாக்குதல் நடைபெற்றிருக்கிறது. இங்கு ஒரு சிறிய வித்தியாசம் என்னவெனில் இங்கு கூலிப்படை அமர்த்தப்படாமல் பெண்ணின் தந்தையே கையில் அரிவாள் எடுத்து தனது மகளின் கணவனை வெட்டியுள்ளார். தடுக்க முயன்ற தனது மகளையும் வெட்டியுள்ளார்.

ஹைதராபாத்தில் பொற்கொல்லர் தொழில் செய்யும் சாதிய பின்னணியைச் சேர்ந்தவர் மாதவி. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாதவியும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த சந்தீப்பும் காதலித்துள்ளனர். மாதவியின் குடும்பத்தினர் இவர்களது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.

இந்நிலையில் காதலர்கள் இருவரும் குடும்பத்தாரின் எதிர்ப்பையும் மீறி போலீசில் தஞ்சமடைந்திருக்கின்றனர். இருவீட்டாரையும் அழைத்துப் பேசியது போலீசு. பேச்சுவார்த்தையின் போதே மாதவியின் தாயார், சந்தீப்பின் குடும்பத்தினரை கடுமையாக சாதி ரீதியாக திட்டியுள்ளார்.

சந்தீப் உடன் மாதவி.

மாதவியின் தந்தை மனோகராச்சாரியால், இத்திருமணத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. திருமணத்தில் மாதவியின் குடும்பத்தார் பங்கேற்கவில்லை. சந்தீப், மாதவி திருமணம் முடிந்த பின்னர், இருவரும் சந்தீப்பின் வீட்டில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் மனோகராச்சாரி, சந்தீப் குடும்பத்தினரிடம் தொலைபேசியில் இணக்கமாகப் பேசியுள்ளார். தனது மகளிடமும் பேசிய மனோகராச்சாரி, இருவருக்கும் தாம் துணி எடுத்துத்தர விரும்புவதாகவும், அதனால் இருவரையும் நகரின் முக்கிய கடைத்தெரு பகுதிக்கு வருமாறும் கூறியிருக்கிறார்.

இதனை நம்பி இருவரும் அங்கு சென்றுள்ளனர். அதன்பிறகு அங்கு நடந்தவை அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளன.

சந்தீப்பும், மாதவியும் இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருக்கும் சூழலில் அங்கு வந்து வண்டியை நிறுத்திய மனோகராச்சாரி, தனது பையிலிருந்து அரிவாளை எடுத்துக் கொண்டே அவர்களது வாகனத்திற்கு அருகே சென்று சந்தீப்பை வெட்டத் தொடங்குகிறார். உடனடியாக பின் இருக்கையில் அமர்ந்திருந்த மாதவி தனது தந்தையை கீழே தள்ளி விடுகிறார்.

தனது கோபத்தை தனது மகளின் மீது திருப்புகிறார் மனோகராச்சாரி. மாதவியை சரமாரியாக வெட்டித் தள்ளுகிறார். உடனேயே ஒருவர் இதனைத் தடுக்க ஓடி வருகிறார். அவரை அரிவாளைக் காட்டி மிரட்டி விரட்டுகிறார் மனோகர். பின்னர் மற்றொரு இளைஞர் ஓடி வந்து மனோகரின் முதுகில் ஓங்கி உதைக்கிறார். எனினும் மீண்டும் வெட்டுகிறார் மனோகர். அந்த சி.சி.டி.வி. காணொளிக் காட்சி இவ்வாறு முடிவடைகிறது.

பெற்ற தந்தையால் வெட்டுப்பட்ட மாதவி.

வெட்டுப்பட்ட இருவரையும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர் கூடியிருந்த பொதுமக்கள். சந்தீப்புக்கும் மாதவிக்கும் விழுந்த அரிவாள் வெட்டில், அதிகமாக பாதிக்கப்பட்டது மாதவிதான். அவருக்கு தீவிர கண்காணிப்புப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

♠♠♠

பிரணாய் கொலைக்குப் பின்னர் இரண்டு நாட்களுக்கு அரசுத் தரப்பு இது குறித்து கண்டனமோ அறிக்கையோ எதுவும் அளிக்கவில்லை. இப்படுகொலை குறித்து எதிர்க்கட்சிகள் சட்டமன்றத்தில் குரல் எழுப்பிய பின்னர்தான் பாதிக்கப்பட்ட அம்ருதாவிற்கு 4 இலட்சம் நிவாரண நிதியும் அரசு வேலை வழங்குவதாக அறிவித்துள்ளது. இன்று வரையிலும் இச்சம்பவம் குறித்து தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் வாயைத் திறக்கவில்லை.

படுகாயத்துடன் சந்தீப்.

மாருதி ராவால் ஏற்பாடு செய்யப்பட்ட கூலிப்படை நிகழ்த்திய பிரணய் படுகொலையையும், மாதவி மற்றும் சந்தீப்பின் மீதான மனோகராச்சாரியின் நேரடி கொலை முயற்சியையும், அதீதப் பாசத்தால் செய்யப்பட்ட கொலைகள் என்பதாக சமூக வலைத்தளங்களில் சில பத்திரிகையாளர்கள் உள்ளிட்டு பலரும் விவாதித்து வருகின்றனர். தங்களை யோக்கியர்களாக காட்டிக்கொள்ள, ”கொலை தவறுதான், இருந்தாலும்… இங்கு ஒரு தகப்பனின் அதீத பாசம்தான் அவரது அறிவை மறைத்துவிட்டது என்று நாம் பார்க்கவேண்டும்” என்ற அடிப்படையில் பேசி வருகின்றனர்.

சாதியின் மீதும் போலி கவுரவத்தின் மீதுமான அந்தக் கிரிமினல்களின் அதீதப் பாசத்தை, பெற்ற மகளின் மீதான அதீதப் பாசமாக சித்தரிக்கின்றனர் இந்த ’யோக்கிய சிகாமணிகள்’.

பெற்ற மகளை உணர்ச்சியுள்ள ஒரு உயிராகப் பார்க்காமல் ஒரு அடிமையாகப் பார்ப்பவர்கள்தான் இத்தகைய கொலைகளைச் செய்யும் கிரிமினல்கள். பெண்ணின் உயிரும் உடலும்தான் இந்தியாவில் சாதி மற்றும் மதவெறியர்களின் இனத் தூய்மைக்கான புனிதச் சின்னமாகப் பராமரிக்கப்படுகிறது.

கொலை கார தந்தைகள் : மாருதி ராவ் மற்றும் மனோகராச்சாரி.

அந்தக் கொலைகாரக் கிரிமினல்களுக்கு இத்தகைய நெஞ்சு பதறும் கொடூரத்தை செய்யும் பலத்தை அளிப்பவர்கள்  “பாசமுள்ள தந்தை” என பட்டமளிக்கும் இந்த ’யோக்கியர்கள்’ தான். சாதிவெறியின் வன்முறை வடிவம் என்பதே மௌனமாக இருப்பதாக நம்பப்படும் சாதி செல்வாக்கு, ‘கௌரவத்தின’ அடிப்படையிலேயே உருவாகிறது.

உடுமலை சங்கர் கொலையில், தனது தந்தைக்கு வழங்கப்பட்ட மரணதண்டனை குறித்த கேள்விக்கு பதிலளித்த கவுசல்யா என்ன பதில் கூறினாரோ, அதையேதான் கொல்லப்பட்ட பிரணயின் மனைவி அம்ருதவர்ஷினி கூறியிருக்கிறார்.

“பிரணயின் கொலைக்கு சதித்திட்டம் தீட்டிய என் தந்தைக்கும் சித்தப்பாவுக்கும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தூக்குத் தண்டனை வழங்க வேண்டும்” என்கிறார் அம்ருதா.

இது வெறும் பழிவாங்கல் உணர்ச்சியிலிருந்து வந்ததல்ல என்பதை பின்வரும் வாசகங்களால் உணர்த்துகிறார் அம்ருதா.

“நாங்கள் எங்கள் குழந்தையை சாதிய அடையாளம் இல்லாமல் வளர்க்க கனவு கண்டிருந்தோம். சாதிய அடையாளமற்ற ஒரு சமூகத்திற்காக நான் பிரணாயின் சார்பாக போராடுவேன். பிரணாய் எனக்கு விட்டுச் சென்ற பரிசு என்னுள் வளர்ந்து கொண்டிருக்கிறது. என் குழந்தையையும் சாதியத்திற்கு எதிரான போராளியாக வளர்ப்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்” என்று கூறுகிறார் அம்ருத வர்ஷினி.

– வினவு செய்திப் பிரிவு

நூல் அறிமுகம் : கெளரி லங்கேஷ் – மரணத்துள் வாழ்ந்தவர்

ரு மாலை வேளையில் கெளரி லங்கேஷ் வீட்டருகே வைத்து அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.

இந்த கௌரி லங்கேஷ் யார்?

அவரால் ஆங்கிலத்திலும் கன்னடத்திலும் எழுதப்பட்டு தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட கட்டுரைகள் அவரை நமக்கு கொஞ்சம் கொஞ்சமாக அறிமுகப்படுத்திக் கொண்டே வருகின்றன.

2000 ஆம் ஆண்டுவரை ஆங்கிலம் மட்டுமே தெரிந்த பத்திரிக்கையாளராக தில்லியில் பிரபல ஊடகங்களில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றினார்.

கவிஞரும், எழுத்தாளருமான அவருடைய அப்பா ‘லங்கேஷ்’ என்ற  முற்போக்கு பத்திரிகையை தொடர்ந்து நடத்தி வந்தார்.

அவருடைய இறப்புக்கு பிறகு பத்திரிக்கையை நடத்துவதா வேண்டாமா என பரிசிலீத்த பொழுது பணிபுரியும் ஊழியர்கள் கொடுத்த உற்சாகத்தால் ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார் கெளரி லங்கேஷ்.  கன்னடம் கற்கிறார் மெல்ல மெல்ல முன்னேறி தலையங்கத்தை அவரே கன்னடத்தில் எழுதுகிறார்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கைகள் ஏழைகளின் சாவுக்கே வழிவகுத்தது. மோடியின் ஆட்சி துக்ளக் தர்பார் என சாடினார்.

பாபாபுடன் கிரி என்ற இடத்தை மீண்டும் ஒரு அயோத்தியாக மாற்ற முயன்ற காவி கும்பலை களத்தில் நின்று எதிர்த்தார்.

இன்னொரு குஜராத்தாக கர்நாடகத்தை மாற்றுவதற்கு இந்துத்துவ சக்திகள் குவிந்து வேலை செய்த பொழுது ஜனநாயக சக்திகளோடு அறிவுத் தளத்தில் மட்டுமல்ல களத்திலும் உறுதியாக நின்றார்.

“தான் ஒரு எழுத்தாளர் என்ற முறையில் உண்மையை எழுதுகிறேன் அது என்னுடைய கடமை” என்றார் அருந்ததிராய். இது கௌரி லங்கேஷ்க்கும் பொருந்தும். பத்திரிக்கையில் உண்மையை எழுதியதற்காக தொடர்ந்து பல வழக்குகளை எதிர்கொண்டார்.

கௌரி லங்கேஷ்க்கு இரண்டு தெரிவுகள் இருந்தது. ஒன்று வசதியான வாழ்க்கைப் பாதை. இன்னொன்று அநீதிக்கு எதிராக போராடும் கடினமான பாதை.  இரண்டாவதை துணிந்து தேர்ந்தெடுத்தார்.

அவர் செயல்பாடுகளைக் கவனிக்கிற பொழுது இந்துத்துவ பயங்கரவாத எதிர்ப்புப் போரில் ஒரு தளபதியாக நின்று போராடி இருக்கிறார்.

இந்துத்துவ பயங்கரவாத கும்பல் மிரட்டிப் பார்த்தார்கள். கௌரி லங்கேஷ் பணியவில்லை. இந்து சனாதனத்தை கருத்து தளத்தில் நிறுவ முடியாத கோழைகள், தங்களது ஸ்லீப்பர் செல்களை வைத்து சுட்டுக் கொன்றுவிட்டார்கள்.

“கௌரி மௌனமாகி விட்டாள்!
ஹா! ஹா!! என்ன வேடிக்கை!! சூரியகாந்தி விதைகளை போல்
அவள் திடீரென்று வெடித்துச் சிதறி அனைத்து இடங்களிலும் பரவினாள்.
இந்தியாவிலும்,
கடல்களையும்  தாண்டியும்…
தற்போது மௌனம் கோஷிக்கிறது… எதிரொலிக்கிறது….
“நாங்கள் எல்லோரும் கெளரி”
  – கெளரியின் சகோதரி எழுதிய கவிதையிலிருந்து…

புத்தகம் வாசியுங்கள். கௌரி நம்மிடமும் அழுத்தமாக ஒட்டிக் கொள்வார்.

நம்மில் பலரும் வேடிக்கைப்  பார்ப்பதால் தான் கல்புர்கி, பன்சாரே, கெளரி என பலரும் கொல்லப்படுகிறார்கள். இதை அழுத்தமாய் நினைவில் வைப்போம்.

  • அமிர்தா

நூல்: கௌரி லங்கேஷ்: மரணத்துள் வாழ்ந்தவர்
தொகுப்பு:  சந்தன் கௌடா
தமிழில்: பொன். தனசேகரன்

வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்,
669, கே. பி. சாலை, நாகர்கோவில் 629 001.
பேச: 91-4652-278525
மின்னஞ்சல்: nagercoil@kalachuvadu.com

பக்கங்கள்: 255
விலை: ரூ.150.00

இணையத்தில் வாங்க: பனுவல் | CommonFolks | நம்ம புக்ஸ்

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு:
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி: 99623 90277

கார்ல் மார்க்ஸை மார்க்சியவாதியாக்கிய நகரம் பாரீஸ்

மார்க்ஸ் பிறந்தார் – 18
(கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)

8. முழுமையான மனிதாபிமானமே கம்யூனிசம்

ரகத்தின் வாயிலில் பின்வருமாறு எழுதப்பட்டிருப்பதைப் போல, விஞ்ஞானத்தின் வாயிலிலும் இந்தக் கோரிக்கை வற்புறுத்தப்பட வேண்டும்: “இங்கே அவநம்பிக்கைகளை அகற்றிவிடுங்கள்; எல்லாவிதமான கோழைத்தனத்தையும் ஒழித்துவிடுங்கள்.” கார்ல் மார்க்ஸ்(1)

1840 -களில் பாரிஸ் நகரம் ஐரோப்பாவின் அரசியல் மற்றும் கலாச்சார மையமாக இருந்தது. போலந்து, இத்தாலி, ருஷ்யா, ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்த புரட்சிக்காரர்களும் அரசியல் அகதிகளும் அங்கே திரண்டிருந்தார்கள். ஜெர்மனியைப் போலன்றி அங்கே ஒவ்வொன்றும் புரட்சியை – சமீப காலத்திய மாபெரும் சம்பவங்கள், புதிய சமூக யுத்தங்களை எதிர்நோக்குதல் ஆகிய இரண்டையுமே-முனைப்புடன் நினைவுறுத்தியது.

பாரீஸ் நகரம் (மாதிரிப் படம்)

அக்காலத்திய பாரிஸ் நகரத்தைப் பற்றி இளம் எங்கெல்ஸ் பின்வருமாறு எழுதினார்: “பிரான்சில் மட்டுமே பாரிஸ் உண்டு – அது ஐரோப்பிய நாகரிகத்தின் மிகச் சிறந்த பரிணாமம், அங்கே ஐரோப்பிய வரலாற்றின் அனைத்து நரம்புகளும் ஒன்று சேர்கின்றன, அங்கே உலகம் முழுவதையும் நடுங்கச் செய்யக் கூடிய மின்சார அதிர்ச்சிகள் குறிப்பிட்ட இடைக்காலங்களில் வெளிவருகின்றன; வேறு மக்களைக் காட்டிலும் அந்த நகரத்தின் மக்கள் ஆனந்தமாக வாழ்கின்ற ஈடுபாட்டையும் வரலாற்று நடவடிக்கைக்குரிய உந்துதலையும் ஒருசேரப் பெற்றிருக்கிறார்கள், ஏதன்ஸ் நகரத்தின் மிகவும் பண்பட்ட சிற்றின்பப் பிரியரைப் போல எப்படி வாழ்வதென்றும் அதிகமான வீரமுடைய ஸ்பார்ட்டனைப் போல எப்படி மரணமடைவதென்றும் அவர்களுக்குத் தெரியும்.”(2)

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற உயர்ந்த இலட்சியங்களுக்குப் பதிலாக பணவேட்டையை இலட்சியமாக்கிவிட்ட முதலாளித்துவ அமைப்பின் மீது தீவிரமான அதிருப்தி பாரிசைப் போல வேறு எங்கும் இருக்கவில்லை.

முதலாளித்துவத்தை அகற்றப் போகின்ற சமூகத்தைத் தத்துவ ரீதியில் முன்னூகிக்கின்ற சமூகச் சிந்தனை பாரிசில் தோன்றியதும் தற்செயலானதல்ல. சான்-சிமோனுக்கும் ஃபூரியேயுக்கும் பிறகு கற்பனைச் சமூகங்களை வர்ணித்த காபே, டெஸமீ, பிளான்கி, புரூதோன், லெரூ ஆகியோர் முற்போக்கு அறிவுப் பகுதியினரிடமும் தொழிலாளர்கள் வட்டாரங்களிலும் சங்கங்களிலும் மாபெரும் செல்வாக்குப் பெற்றிருந்தார்கள். பிரான்சின் பாட்டாளி வர்க்கம் முதலாளி வர்க்கத்தை எதிர்த்து நிற்கக் கூடிய மாபெரும் சமூக சக்தியாக உருவாகிவிட்டது.

எதிர்கால வரலாற்று வளர்ச்சியைப் பற்றிப் பாரிசில் தோன்றிய காட்சித் தொடர் ஜெர்மனியுடன் சிறிதும் ஒப்பிட முடியாத அளவுக்குப் பரந்தகன்றும் நெடுநோக்குடையதாகவும் இருந்தது. எனவே மார்க்ஸ் பாரிசில்தான் மார்க்சியவாதி ஆனார் என்பதும் விஞ்ஞானக் கம்யூனிசத்தின் தீர்மானமான கருத்துக்கள் அங்கே தான் வகுத்துரைக்கப்பட்டன என்பதும் இயற்கையே.

புரட்சிகரமான தத்துவத்தைப் படைப்பதற்கு, உண்மையான போர் முழக்கத்தைக் கண்டுபிடிப்பதற்கு கடந்த காலத்தில் நடைபெற்ற வர்க்கப் போராட்டங்களின் அனுபவத்தைப் பொதுமைப்படுத்துவது அவசியம். மார்க்ஸ் ஜெர்மனியில், கிரைத்ஸ்னாக்கில் இந்த அனுபவத்தை ஆராய்வதற்குத் தொடங்கியிருந்தார்; ஆனால் இந்தக் கடமையை நிறைவேற்றுவதற்கு மிகச்சிறந்த நிலைமைகளை அவர் பாரிசில் கண்டார். அவர் முதலாளி வர்க்க வரலாற்றாசிரியர்களான தியெர்ரி, மின்யே, கிஸோ, தியேர், மற்றும் இதரர்களுடைய நூல்களைப் படித்தார். பிற்காலத்தில் மார்க்ஸ் எழுதியதைப் போல அவர்கள் தற்காலத்திய சமூகத்தில் வர்க்கங்களும் வர்க்கப் போராட்டமும் இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். அவர் மாண்டெஸ்கியே, மக்கியவேலி, ரூஸோ ஆகியோருடைய சமூகத் தத்துவங்களையும் படித்தார்.

மக்கியவேலி

எல்லா வரலாறுமே வர்க்கங்களின் போராட்டத்தின் வரலாறு என்றால் பின்வரும் கேள்விகள் தர்க்க ரீதியான முறையில் தோன்றுகின்றன: தற்காலத்திய நிலைமைகளில் புரட்சிகரமான சக்தியைக் கொண்டிருக்கின்ற வர்க்கம் எது? எதிர்காலம் எந்த வர்க்கத்துக்குச் சொந்தம்? அந்த எதிர்காலம் எவ்விதமாக இருக்கும்?

பிரெஞ்சுப் பொருள்முதல்வாதத்திலிருந்து நேரடியாகத் தோன்றிய பிரெஞ்சுக் கற்பனாவாத சோஷலிசம் மற்றும் கம்யூனிசத்தை விமர்சன ரீதியில் ஆராய்வதை நோக்கி மார்க்ஸ் மறுபடியும் திரும்பினார். முதலாளித்துவச் சமூகம் மனிதாபிமானக் கோட்பாடுகளுடன் பொருந்தவில்லை என்ற அடிப்படையான விமர்சனத்தை சான்-சிமோனும் ஃபூரியேயும் ஏற்கெனவே செய்திருந்தனர். அவர்கள் பாட்டாளி வர்க்கத்தைப் பற்றி எழுதினார்கள் என்ற போதிலும் அதை ஒடுக்கப்பட்டு, நலிந்து வாடுகின்ற பகுதியாக, ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருப்பவர்கள் இரக்கம் காட்டி உதவியளிக்க வேண்டிய பகுதியாகவே கண்டார்கள்.

ஹெகல் உலகம் முழுவதையும் தனிமுதலான ஆன்மாவின் வெளியீடு என்று கருதியதைப் போல கற்பனாவாதிகள் சோஷலிசம் மனித உறவுகளைப் பற்றிய தனிமுதலான உண்மையின் வெளியீடு என்று கருதினார்கள். ஹெகலின் தவறான தொடக்க நிலை தனிமுதலான ஆன்மா தன்னைப் புரிந்து கொள்கின்ற வறட்டுக் கோட்பாட்டுத்தனமான அமைப்பை ஏற்படுத்துவதற்கு இட்டுச் சென்றது; அது போல கற்பனாவாதிகளுக்கு – அவர்களில் மிகச் சிறந்தவர்களுக்கும் கூட (குறிப்பாக ஃபூரியேயுக்கு) – எல்லாமே சமூக வளர்ச்சிக்கு இலட்சிய ரீதியான திட்டங்களைத் தயாரிப்பதாக மட்டுமே இருந்தது, இத்திட்டங்களைப் புரிந்துகொண்டால் எல்லா முரண்பாடுகளும் தீர்ந்துவிடும்.

ஹெகலை முறியடிப்பதும் சமூகக் கற்பனாவாதத்தை வெல்வதும் இரண்டு இணைகரமான கடமைகளாக இருக்கவில்லை. அவை ஒரே கடமையே. மனித சமூகத்தின் வளர்ச்சியை நிர்ணயிக்கின்ற முக்கியமான காரணியைக் கண்டுபிடித்துவிட்டால் அக்கடமையை நிறைவேற்ற முடியும்.

எதார்த்தம் தன்னைத் தகவமைத்துக் கொள்ள வேண்டிய “முன்னரே தயாரிக்கப்பட்ட அமைப்பு”, “வறட்டுக் கோட்பாட்டுவாத சூக்குமமான கருத்தமைப்புகள்” ஆகியவற்றைத் தயாரிப்பது ஹெகலின் போதனையிலோ அல்லது கற்பனாவாத சோஷலிசத்திலோ ஒருபோதும் மார்க்சை ஈர்க்கவில்லை. மனிதகுலச் சிந்தனையின் மிகச் சிறந்த சாதனைகளான இவை இரண்டுமே உலகத்தை மாற்றத் தகுதியான கருவியாக இருக்கவில்லை.

ஆனால் இரண்டு போதனைகளுமே தம் எதிர்மறையையும் தமக்குள் கொண்டிருந்தன. ஹெகலிடம் சிந்தனையின் இயக்கவியல் முறை இந்த எதிர்மறையாகும். முதலாளித்துவ உடைமை உறவுகள், மனிதனை முடமாக்குகின்ற மனிதனுடைய சாராம்சத்துக்குப் பொருந்தியிராத உறவுகள் என்ற விமர்சனம் சமூகக் கற்பனாவாதிகளிடம் உள்ள எதிர்மறையாகும்.

முதலாளித்துவ பொருளியல் அறிஞர் ஆடம் ஸ்மித்

இந்த உறவுகளின் தன்மையைச் சட்ட ரீதியில் மட்டுமின்றி பொருளாதாரக் கோணத்திலும் தெளிவாகப் புரிந்து கொள்வதற்காக மார்க்ஸ் முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தை ஆழமாக ஆராய்ந்தார். ஆடம் ஸ்மித், ரிக்கார்டோ, மாக்கூலோஹ், ஜேம்ஸ் மில், ழான் படீஸ்ட் ஸேய், ஸ்கார்பெக், டெஸ்டூட் டெ டிரஸி, புவாகில்பேர் ஆகியோர் எழுதிய நூல்களை ஆராய்ச்சி செய்தார். இளைஞரான பிரெடெரிக் எங்கெல்ஸ் அரசியல் பொருளாதார விமர்சனத்தின் உருவரைகள் என்ற கட்டுரையை Deutsch-Französische Jahrbücher -இல் எழுதியிருந்தார். மார்க்ஸ் அதை மேதாவிலாசம் நிறைந்ததென்று கூறினார். அவர் அரசியல் பொருளாதாரத்தை ஆராய்வதற்கு இக்கட்டுரையும் தூண்டுதலாக இருந்திருக்க வேண்டும்.

மார்க்ஸ் பாரிசில் வசித்த பொழுது அரசியல் எதிர்த்தரப்பின் தலைவர்கள், புரட்சிகர ஜனநாயகவாதிகளும் சோஷலிஸ்டுகளுமான லுயீ பிளாங், பியேர் லெரூ, ஹென்ரிஹ் ஹேய்னெ, ஜொஸேப் புரூதோன் மற்றும் மிஹயீல் பக்கூனின் ஆகியோருடன் நட்புக் கொண்டு பழகினார்.

தத்துவ ரீதியான விமர்சனத்தை வர்க்கங்களின் உண்மையான போராட்டத்துடன் இணைக்க வேண்டும் என்று மார்க்ஸ் விரும்பினார். ஆகவே அவர் ஜெர்மானியக் கைவினைஞர்கள், பிரெஞ்சுத் தொழிலாளர்களுடைய புரட்சிகர வட்டாரங்களில் நெருங்கிப் பழகினார். பாரிஸ் கதவுகளில் ஒன்றின் அருகில், வின்சென் கோட்டைக்குப் பக்கத்தில் நடைபெற்ற புரட்சிகரத் தொழிலாளர்களின் கூட்டங்களில் மார்க்ஸ் கலந்து கொண்டதாகப் போலீஸ் இலாகா அறிக்கைகளில் எழுதப்பட்டிருக்கிறது.

தொழிலாளர்களுடன் மார்க்ஸ் (மாதிரிப் படம்)

எதற்காகப் போராட வேண்டும், எப்படிப் போராட வேண்டும் என்று அறிந்திருக்கின்ற உண்மையான அரசியல் போராட்டக்காரனின் உறுதியும் தெளிவும் மார்க்சிடம் இருப்பதைக் கண்ட புரட்சிகரத் தொழிலாளர்கள் அவர் மீது அதிகமான பற்றுதலைக் கொண்டார்கள். ஜெர்மானியத் தொழிலாளர்களின் அரசியல் சங்கத்தின் தலைவர்களில் ஒருவரான ஹேர்மன் ஏவெர்பேக் பின்வருமாறு எழுதினார். “கார்ல் மார்க்ஸ்… கோ. எஃப். லேஸ்ஸிங்கைப் போல குறிப்பிடத்தக்க மேதை என்பதில் சந்தேகமில்லை. அசாதாரணமான அறிவும் இரும்பு மனமும் கலங்காத மதிநுட்பமும் பரந்த ஞானமும் கொண்டிருக்கின்ற கார்ல் மார்க்ஸ் பொருளாதார, அரசியல், சட்டவியல் மற்றும் சமூகப் பிரச்சினைகளை ஆராய்வதற்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்.”(3)

மார்க்ஸ் தொழிலாளர்களுடைய வாழ்க்கையை நேரடியாகத் தெரிந்து கொண்டார்; புரட்சிகரத் தொழிலாளர்களின் தார்மிக சக்தி, அறிவு வேட்கை மற்றும் மானுடச் சிறப்பை அவர் மென்மேலும் அதிகமாகப் போற்றலானார். அவர் 1844 ஆகஸ்ட் 11ந் தேதியன்று லுட்விக் ஃபாயர்பாஹுக்குப் பின்வருமாறு எழுதினார்: “பிரெஞ்சுத் தொழிலாளர்களிடம் உள்ள பரிசுத்தமான புதுமையை, உழைப்பினால் உருக்குலைந்து போன இந்த மனிதர்களிடமிருந்து பீறிட்டுக் கிளம்புகின்ற மேன்மையை நீங்கள் அறிந்து கொள்வதற்கு அவர்களுடைய கூட்டங்களில் ஒன்றில் கலந்து கொள்ள வேண்டும். ஆங்கிலப் பாட்டாளி கூட மாபெரும் காலடிகளை முன்னால் எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார், ஆனால் பிரெஞ்சுத் தொழிலாளர்களுடைய கலாச்சாரப் பின்னணி அவரிடம் இல்லை. ஆனால் ஸ்விட்சர்லாந்து, லண்டன் மற்றும் பாரிசில் இருக்கின்ற ஜெர்மானியக் கைவினைஞர்களின் தத்துவ ரீதியான தகுதிகளை வலியுறுத்துவதற்கு நான் மறந்துவிடக் கூடாது. எனினும் ஜெர்மானியக் கைவினைஞர் இன்னும் அதிகமான அளவுக்குக் கைவினைஞராகத்தான் இருக்கிறார்.

“என்ன இருந்தாலும், வரலாறு நம்முடைய நாகரிகமடைந்த சமூகத்தின் இப்படிப்பட்ட “காட்டுமிராண்டிகளிடமிருந்து தான் மனித குலத்தை விடுதலை செய்யப் போகின்ற செய்முறைக் கூறைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது.”(4)

கற்பனாவாதிகள் பாட்டாளி வர்க்கத்தைத் தங்களுடைய உணர்ச்சிகரமான கொந்தளிப்புக்களுக்கு இலக்காகக் கருதினார்கள்; ஆனால் மார்க்ஸ் அதைப் புரட்சிகரமான நடவடிக்கைக்கு உரிய சக்தியாகக் கருதினார்.

தத்துவத்தையும் நடைமுறையையும், தத்துவஞானத்தையும் உலகத்தையும் இணைக்கின்ற சங்கிலி பாட்டாளி வர்க்கம்! மார்க்ஸ் சட்டம் பற்றிய ஹெகலியத் தத்துவஞானத்துக்கு விமர்சனம் முகவுரை என்ற கட்டுரையில் இக்கண்டுபிடிப்பை வெளியிட்டார். அக்கட்டுரை உருவத்திலும் உள்ளடக்கத்திலும் விஞ்ஞானக் கட்டுரைக்கு மிகச் சிறந்த உதாரணம் என்று கூறலாம். இக்கட்டுரையும் சிந்தனைப் போக்கில் இதை மிகவும் ஒட்டி வருகின்ற யூதப் பிரச்சினையைப் பற்றி என்ற கட்டுரையும் 1844ம் வருடத்தின் தொடக்கத்தில் Deutsch-Französische Jahrbicher என்ற சஞ்சிகையில் வெளியிடப்பட்டிருந்தன.

“ஒவ்வொரு ரகத்தையும் சேர்ந்த அடிமைத்தனத்தை நொறுக்காமல்” உண்மையான மனிதகுல விடுதலை என்பது சாத்தியமில்லை; மிக அதிகமாகப் பறிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட வர்க்கமாக இருப்பது பாட்டாளி வர்க்கமே என்று மார்க்ஸ் இக்கட்டுரைகளில் எழுதினார். சமூகத்தின் எல்லாத் துறைகளையும் விடுதலை செய்யாமல் பாட்டாளி வர்க்கம் தன்னை விடுதலை செய்து கொள்ள முடியாது.

மனிதகுல விடுதலையின் தலை தத்துவஞானம், அதன் இதயம் பாட்டாளி வர்க்கம்.(5)

மார்க்ஸ் முன்னோக்கி வைக்கின்ற முக்கியமான காலடியை இக்கட்டுரைகளில் பார்க்கிறோம். அவர் உண்மையான போர் முழக்கத்தையும் அதை நிறைவேற்றக் கூடிய தகுதியைக் கொண்ட, மனிதகுலத்தின் மனிதாபிமான இலட்சியங்களைச் சாதிக்கக் கூடிய தகுதியைக் கொண்ட “பொருளாயதச்” சக்தியையும் கண்டுவிட்டார். மார்க்சின் இந்தக் காலடி கருத்துமுதல்வாதத்திலிருந்து பொருள்முதல்வாதத்துக்கு, புரட்சிகரமான ஜனநாயகத்திலிருந்து கம்யூனிசத்துக்கு அவருடைய இறுதியான மாற்றம் என்று லெனின் வர்ணித்தார்.(6)

இருபத்தாறு வயதில் மார்க்ஸ் உலகத்தைப் பற்றிப் புதிய கண்ணோட்டத்தின் சிகரங்களை அடைந்துவிட்டார். ஒப்புவமையில்லாத தத்துவச் சிந்தனைக்குப் பிறகே இது சாத்தியமாயிற்று. தத்துவஞானம், சமூகச் சிந்தனை ஆகிய துறைகளில் ஐரோப்பியக் கலாச்சாரத்தின் மொத்தப் பாரம்பரியத்தையும் அவர் தன்வயப்படுத்திக் கொண்டு விமர்சன ரீதியில் திருத்தியமைத்தார்.

ஃபாலெஸ் முதல் ஃபாயர்பாஹ் மற்றும் மோஸஸ் ஹேஸ் முடிய ஒரு சுதந்திரமான தத்துவஞானியைக் கூட- அவர் எவ்வளவு சாதாரணமானவராக இருந்தாலும்-மார்க்ஸ் ஒதுக்கவில்லை. ஹெரடோடஸ் மற்றும் ப்ளுடார்க் முதல் கிஸோ மற்றும் தியேர் முடிய எல்லா வரலாற்றாசிரியர்களும் எழுதிய அடிப்படையான நூல்கள் அனைத்தையும் அவர் படித்தார். பிளாட்டோ முதல் லெரூ மற்றும் வைத்லிங் முடிய எல்லா சமூகக் கற்பனாவாதிகள் எழுதிய புத்தகங்களையும் படித்தார்.

ஆடம் ஸ்மித் முதல் பிரெடெரிக் எங்கெல்ஸ் முடிய முக்கியமான அரசியல் பொருளாதார நூல்கள் எல்லாவற்றையும் அவர் ஆராய்ந்தார். இறுதியாக மார்க்ஸ் இலக்கியச் செல்வத்தின் எல்லாத் துறைகளையும்-லுக்ரெத்சியஸ் காருசின் கவிதையிலிருந்து ஹென்ரிஹ் ஹேய்னெயின் கவிதை முடிய, எஷ்கிலசின் சோக நாடகங்களிலிருந்து ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் முடிய, பிளாட்டோவின் உரையாடல்களிலிருந்து பல்ஸாக்கின் வசனம் முடிய-ஆழ்ந்து படித்தார்.

ஆனால் இவ்வளவு அறிவுத் திரட்டு கூட ஒரு புதிய உலகக் கண்ணோட்டத்தை விரித்துரைப்பதற்குத் தன்னளவில் போதுமானதல்ல என்று தோன்றும். எல்லாக் காலங்களிலும் ஏட்டுப் புலமையாளர்கள் இருந்திருக்கிறார்கள். இவர்கள் உலகத்திலுள்ள எல்லா அறிவுத் திரட்டையும் அறிந்தவர்கள், ஆனால் சுயமாக ஒரு கருத்தைக் கூடச் சிந்திப்பதற்குத் தகுதியற்றவர்கள். மார்க்ஸ் மனிதகுல மேதாவிலாசத்தின் மாபெரும் சாதனைகளைத் தன்வயப்படுத்திக் கொண்டது மட்டுமல்லாமல், அவற்றை உண்மைக்கு அஞ்சாத படைப்புச் சிந்தனையின் கருவியாக, முறையாகச் செய்தார். அவர் உண்மையை ஓய்வில்லாமல் தேடினார்.

எல்லாவற்றிலும் முக்கியமானது என்னவென்றால் முதலில் மார்க்ஸ் ஜெர்மனியின் ஒடுக்கப்பட்ட விவசாயப் பெருந்திரளினரது கருத்தையும் பின்னர் எல்லாக் காலங்களிலும் புரட்சிகர வர்க்கங்களில் அதிகப் புரட்சிகரமான, சக்திமிக்க வர்க்கமாகிய பாட்டாளி வர்க்கத்தின் கருத்தையும் உணர்வு பூர்வமாக ஏற்றுக் கொண்டதே.

விஞ்ஞான சோஷலிசம் (அல்லது விஞ்ஞான கம்யூனிசம் – இரண்டும் ஒன்றுதான்) மனித குலத்தின் ஆன்மிகச் சாதனைகளின் பொதுமைப்படுத்தல் மற்றும் செய்முறை விளக்கம் என்பது மட்டுமின்றி, முதலாளித்துவச் சமூகத்திலுள்ள குறிப்பிட்ட பொருளாதார மற்றும் சமூக-அரசியல் போக்குகளின் வெளியீடாகவும் (கடைசியாக இக்காரணி தீர்மானமாக இருந்தது) தோன்றியது.

இந்த உண்மையை மனதில் கொண்டுதான் எங்கெல்ஸ் பின்வருமாறு எழுதினார்: “புதுமையான எல்லாத் தத்துவங்களையும் போலவே நவீன சோஷலிசத்தின் மூலவேர்கள் பொருளாயத உண்மைகளில் எவ்வளவு ஆழமாக வேரூன்றியிருந்தாலும் அது கைக்கு எட்டிய அறிவுத்துறையின் கையிருப்புச் சரக்குகளுடன் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டியிருந்தது.”

குறிப்புகள்:

(1)கார்ல் மார்க்ஸ், அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு கருத்துரை, முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, I982, பக்கம் 14.
(2) Marx, Engels, Collected Works, Vol. 7, Moscow, 1977, p. 512.
(3) Auguste Cornu, Karl Marx und Friedrich Engels. Leben und Werk, Bd. 2, S. 18.
(4) Marx, Engels, Collected Works, Vol. 3, p. 355.
(5) Ibid., p. 187.
(6) V. I. Lenin, Collected Works, Vol. 21, p. 80.

– தொடரும்

நூல் : மார்க்ஸ் பிறந்தார்
நூல் ஆசிரியர் : ஹென்ரி வோல்கவ்
தமிழில் : நா. தர்மராஜன், எம். ஏ.
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், 1986 -ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது.

நூல் கிடைக்குமிடம் :

கீழைக்காற்று,
(கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
கடையின் புதிய முகவரி கீழே)
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம், 
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, 
நெற்குன்றம், சென்னை – 600 107.
(வெங்காய மண்டி பேருந்து நிறுத்தம் அருகில்)
பேச – (தற்காலிகமாக) : 99623 90277

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்,
சென்னை.

முந்தைய பாகங்கள்:

  1. மார்க்சின் வாழ்க்கை வழி மார்க்சியம் கற்போம் !
  2. அற்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பிறந்தார் புரட்சியாளர் மார்க்ஸ்
  3. ஜெர்மனியின் ரைன் பிரதேசத்தில் மார்க்ஸ் தோன்றியது தற்செயலானதா ?
  4. பள்ளியில் சுமாரான மாணவராக இருந்தார் கார்ல் மார்க்ஸ் – ஏன் ?
  5. எல்லாவற்றையும் சந்தேகப்படு என்பது மார்க்சுக்குப் பிடித்தமான மூதுரை
  6. சுயவிமர்சனத்தில் இரக்கமற்றவர் கார்ல் மார்க்ஸ்
  7. மார்க்சும் ஏங்கெல்சும் முதலில் எழுதியவை கவிதை நூல்கள் – ஏன் ?
  8. கடவுள் மீது போர் தொடுத்த கார்ல் மார்க்ஸ் !
  9. மதத்தின் மூல வேர்கள் பூமியில் இருக்கின்றன – கார்ல் மார்க்ஸ்
  10. பண்படுத்துவது கலை – பாதை காட்டுவது தத்துவஞானம்
  11. தத்துவஞானத்தை புரிந்து கொள்ள பக்தர்களால் முடியாது !
  12. ஒரு மெய்யான தத்துவஞானியை சந்திக்கத் தயாரா ?
  13. கார்ல் மார்க்ஸ் : ஆய்வின் முடிவுக்கும் அஞ்சாதே ! ஆள்வோரின் ஆட்சிக்கும் அஞ்சாதே !
  14. கார்ல் மார்க்ஸ் : ஊடகங்களின் ஆன்மீகத் தணிக்கையை கட்டுப்படுத்தும் பொருளாதாரத் தணிக்கை !
  15. சுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை – மார்க்ஸ்
  16. எல்லாத் தத்துவஞானத்துக்கும் அப்பால் சுதந்திரமாக இருக்கிறது இயற்கை !
  17. துன்பம் பற்றிய உங்கள் கருத்து என்ன ? கீழ்ப்படிதல் என்கிறார் கார்ல் மார்க்ஸ் !

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சதி ! மக்கள் அதிகாரம் அறிக்கை

நாள்: 21.09.18

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சதி நடக்கிறது. அதற்கு எடப்பாடி அரசு மறைமுகமாக துணை நிற்கிறது. ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் 13 பேர் தங்கள் உயிரைத் தியாகம் செய்தபின், ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி அறிவித்தார். அரசு தலைமை வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது அரசின் கொள்கை முடிவுதான் என விளக்கமளித்தார். ஸ்டெர்லைட்டை மூட பலவீனமான ஒர் அரசாணையை போட்டுவிட்டு தற்போது பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு நடத்துகிறோம் என நாடகமாடுகிறது தமிழக அரசு. அப்போதே அரசாணை மட்டும் போதாது என்றும், கொள்கை முடிவு எடுத்து சட்டமாக இயற்ற வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உட்பட பல தரப்பினரும் வலியுறுத்தினர். ஆனால் எடப்பாடி அரசு ஏறெடுத்தும் பார்க்க வில்லை.

விதிமுறை மீறல், சுற்றுசூழல் மாசு, என்பது மட்டுமல்ல, ஸ்டெர்லைட்டால் நிரந்தர அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் போன்று தாமிர உருக்கு ஆலைகளுக்கு இனி தமிழகத்தில் அனுமதி கிடையாது என்ற கொள்கை முடிவு எடுத்து அதற்கான சட்டம் இயற்றுவதுதான்  ஸ்டெர்லைட்டை ஆலையை நிரந்தரமாக மூட ஒரே வழி. எவ்வாறு மராட்டிய மாநிலம், ரத்தினகிரியில் கொள்கை முடிவு எடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடினார்களோ அதே போல் தமிழகத்தில் மூட வேண்டும்.

தமிழக அரசாணைக்கு எதிராக ஸ்டெர்லைட் வேதாந்தா கம்பெனி, டெல்லி தேசிய பசுமைத்தீர்ப்பாயத்தில் வழக்கு தாக்கல் செய்து, நிர்வாகக் காரணங்களுக்காக ஆலையை திறக்கலாம் என உத்தரவை பெற்று, சீல்வைத்த ஆலையை மீண்டும் திறந்து விட்டது. மேலும் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் வல்லுனர் குழு மூலம் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்து திறக்க முடிவு எடுக்கலாம் என்ற உத்தரவைப் பெற்றதுடன் அதில் தமிழக நீதிபதி இடம் பெறக்கூடாது எனச் சொல்லி அதிலும் வெற்றி பெற்றுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய வருகிற 22 ம் தேதி முதல் 24 ம் தேதி வரை ஒரு குழு தமிழகம் வருகிறது.

ஏற்கனவே குமரெட்டியபபுரம் உட்பட அருகில் உள்ள கிராமங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் நிலத்தடி நீரில் ஆர்சனிக் என்ற கொடிய நச்சு, அளவுக்கு அதிகமாக உள்ளது என நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் நிலத்தடி நீர் கெட்டுவிட்டது என மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இந்நிலையில் மத்திய நீர்வளத்துறை ஆய்வு செய்து நிலத்தடி நீர் மாசுபட்டதற்கு ஸ்டெர்லைட் மட்டும் காரணமல்ல என சமீபத்தில் அறிக்கை அளித்து வேதாந்தாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட்டை மூடுவதில் உறுதியாக இருக்கிறோம் எனச் சொல்லும் தமிழக அரசு என்ன செய்யப்போகிறது.?

அரசு சீல் வைத்துள்ள நிலையில் ஸ்டெர்லைட் ஆலையால் எந்த பாதிப்பும் இல்லை என தினந்தோறும் நாளிதழ்களில் வேதாந்தா நிறுவனம் விளம்பரம் கொடுத்து வருகிறது. மேலும் பணத்தை வாரி இறைத்து விவசாய சங்கம் என்ற பெயரில் உள்ளவர்கள், லாரி உரிமையாளர்கள், ஆலைத் தொழிலாளர்கள், காண்டராக்டர்கள், ஆகியோரை வைத்து ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க  மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுக்க வைத்து மக்களை சாதி ரீதியாகப் பிளவுபடுத்துவதுடன் ஸ்டெர்லைட் ஆலைக்கு மக்களிடம் எதிர்ப்பு இல்லை என காட்ட முயல்கிறது. அதற்கு அரசும் துணை போகிறது ஆனால் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என துண்டு பிரசுரம் கொடுத்தால் கூட, கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள்.

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கூடாது என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு என்றால் ஏன் அதையே கொள்கை முடிவாக எடுக்க மறுக்கிறது?. ஆலையை மூட வேண்டும் என  மக்கள் கோருவதற்கும் போராடுவதற்கும் ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது?  பொய் வழக்கு போட்டு கைது செய்து ஏன் அச்சுறுத்துகிறது?.

மக்களிடையே பிளவை ஏற்படுத்தி மீண்டும் திறக்க முயலும் ஸ்டெர்லைட் ஆலையின் சதி வேலைகளை, பொய் பிரச்சாரங்களை புறக்கணிக்க வேண்டும். கட்சி வேறுபாடுகளை கடந்து அனைவரும் போராடும் தூத்துக்குடி மக்களுக்கு துணை நிற்க வேண்டும்.

இப்படிக்கு
வழக்கறிஞர் சி.ராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.

rajupp2019@gmail.com

உயர்கல்வி ஆணைய மசோதாவை முறியடிப்போம் – கரூரில் பு.மா.இ.மு. அரங்கக்கூட்டம்

0

”உயர்கல்வி ஆணைய மசோதாவை முறியடிப்போம்” என்ற தலைப்பில் கடந்த செப்-18, அன்று கரூர் – தாந்தோன்றிமலை பத்மசாலியர் மண்டபத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சார்பில் அரங்குகூட்டம் நடைபெற்றது.

நூற்றுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் மாற்றுகட்சியைச் சேர்ந்த ஜனநாயக சக்திகளின் பங்கேற்போடு நடைபெற்ற இந்த அரங்கக் கூட்டத்திற்கு தலைமையேற்று நடத்திய தோழர் சிவா, தனது உரையில் ”உயர்கல்வி ஆணைய மசோதாவை கொண்டு வந்து  ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கனவை கலைப்பதுதான் மோடி அரசின் நோக்கம் அடிப்படை கல்வியை கூட மாணவர்கள் கற்க கூடாது என்பதற்காகத்தான் இந்த யு.ஜி.சி கலைப்பு” என்பதை அம்பலப்படுத்தினார்.

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் கரூர் மாவட்ட அமைப்பாளர் தோழர் சுரேந்தர் பேசுகையில், ”உயர்கல்வி ஆணையம் வந்தால் காசு இருந்தால்தான் கல்வி இனிமேல் இலவச கல்வி கிடையாது குலகல்வி முறைக்கு மாணவர்களை தள்ளுவதுதான் இத்திட்டத்தின் நோக்கம் இதை தடுக்க ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் போராட்டத்தை மாணவர்கள் முன் எடுத்தது போல உயர்கல்வி ஆணைய மசோதாவிற்கு எதிராக வீதிக்கு வந்து போராட வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கரூர் மாவட்ட செயலாளர் தோழர் நிர்மல் தனது உரையில், ”கல்வி பிரச்சினையில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி உயர்கல்வி ஆணையத்துக்கு எதிராக மாணவர்களை திரட்டி இருப்பது வரவேற்க்கதக்கது. இந்த திட்டம் மாணவர்களின் படிப்பே இல்லாமல் ஆக்ககூடியது இத்திட்டத்திற்கு எதிராக மாணவர்கள் சிந்தித்து போராட வேண்டும்” என்றார்.

திராவிட மாணவர்கழகத்தின் மாநில துணைத்தலைவர் தோழர் அஜித்தன், தனது உரையில், ”வரலாற்றுரீதியாக தமிழர்கள் சாதி ரீதியாக மதம் ரீதியாக ஒடுக்கப்பட்டார்கள். இதை அம்பேத்கர் பெரியாரின் போராட்டங்கள் மூலமாக தமிழர்கள் கல்வியறிவு பெற்றனர். உயர்கல்வி ஆணைய மசோதாவை கொண்டுவந்து மீண்டும் பழைய மனுநீதி நிலைக்கும் பார்ப்பனிய சூழ்ச்சிக்கு தள்ளுகிறது மோடி அரசு” எனச் சாடினார்.

இறுதியாக, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாநில ஒருக்கிணைப்பாளர் தோழர் த.கணேசன், தனது கண்டன உரையில், ”10 வது ,11-வது, 12-வது பொதுத்தேர்வில் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அரசு பள்ளிகள் திறந்து 5 மாதங்கள் ஆகியும் பாடபுத்தகங்கள் கிடைக்கவில்லை ஆனால் தனியார் பள்ளியில் பாட புத்தகங்கள் கிடைத்து மாணவர்கள் படித்து வருகின்றனர். பிறந்த குழந்தைகளை இரண்டரை வயதிலே பெற்ற்றோர்கள் ப்ரி.கே.ஜி., எல்.கே.ஜி., யூ.கே.ஜி., என தனியார் பள்ளிகளில் சேர்ப்பதால் தனியார் பள்ளிகள் பெற்றோர்களிடம் உங்க பசங்களா நீங்க டாக்டர் ஆக்க போறிங்களா ? இல்ல  கலெக்டர் ஆக்க போறிங்களா ? என கேட்டு அதற்கு நாங்க தனியாக கோச்சிங் தர்றோம் என சொல்லி ஐம்பதாயிரம், ஒரு  இலட்சம் என கட்டணம் வாங்கறாங்க என பேசினார். கல்வி சீர்கேடுகள், பல்கலைகழக முறைகேடுகள் நிர்மலாதேவி போன்ற பாலியல் தொல்லைகள் இருப்பதை பற்றி பேசினார். உயர்கல்வித்துறை முழுக்க முழுக்க தனியாரிடம் கொண்டு போவதே உயர்கல்வி ஆணைய மசோதா என மாணவர்களுக்கு புரியும்படி எளிமையாகவும் பல உதாரணங்களுடனும் பேசினார்.

கூட்டத்தின் இடையே, ம.க.இ.க. கலைகுழு தோழர்கள் புரட்சிகர பாடல்களைப் பாடி மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.

இதற்கு முன்னதாக, கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு வாரமாக உயர்கல்வி ஆணைய மசோதாவிற்கு எதிரான பிரச்சார இயக்கத்தையும் நடத்தியிருந்தது பு.மா.இ.மு.

குறிப்பாக, கரூர் அரசுக்கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தேனீ, மதுரை, பழனி, திண்டுக்கல் என பல்வேறு மாவட்டங்களிலிருந்து இங்கு வந்து படிக்கின்றனர். தங்களின் கல்விச் செலவிற்காக, கேட்டரிங் சர்வீஸ், மளிகை கடை, டெக்ஸ்டைல்ஸ் என கிடைத்த வேலைக்கு பகுதி நேரமாக பணியாற்றிக்கொண்டே படிக்கின்றனர். சமீபத்தில் உயர்த்தப்பட்ட பேருந்துக் கட்டண உயர்வே தங்களைப் பெரிதும் பாதித்துள்ளதாக கருத்து தெரிவித்த இம்மாணவர்கள், ”உயர்கல்வி ஆணைய மசோதா அமலாகி, அரசு கல்லூரிகளை இழுத்து மூடும் நிலைமை ஏற்படும்போது எங்களால் நிச்சயம் படிக்கமுடியாது” என்றனர். மாணவர்களின் கருத்தை அக்கல்லூரி பேராசிரியர்களும் ஆதரித்ததோடு, மாணவர்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் இம்மசோதாவிற்கு எதிராகப் போராட வேண்டும் என்றும் ஆதரவளித்தனர்.

தகவல்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, கரூர்.

ஸ்வீடன் தேர்தல் முடிவு : மக்கள் நல அரசில் இருந்து பாசிசத்தை நோக்கி !

கொண்டாட்டத்தில் வலதுசாரி ஸ்வீடன் ஜனநாயகவாதி கட்சியினர்

ட ஐரோப்பிய நாடுகளான டென்மார்க், நார்வே, ஸ்வீடன், ஃபின்லாந்து ஆகியவை முன்னோடி முதலாளித்துவ நாடுகளாக முதலாளித்துவ ஆதரவாளர்களால் கொண்டாடப்படுபவை. முதலாளித்துவம் வளர்ந்து வளர்ந்து முதிர்ச்சியடையும்போது இந்த எதிர்காலத்தை ஒட்டு மொத்த உலகமும் அடைந்து விடும் என்று பசப்புவதற்கான அடிப்படைகள்.

இந்த நாடுகளில் முதலாளிகள் மீது அதிகபட்ச வரி விதிப்பு, வலுவான தொழிற்சங்கம், பணியிட உரிமைகள், உழைக்கும் மக்களுக்கு கல்வி, மருத்துவம், ஓய்வூதியம், வேலை இழப்பு நிவாரணம் என முதலாளித்துவம் கட்டுக்குள் வைக்கப்பட்டிருந்தது. இதற்கான காரணங்களில் முக்கியமான ஒன்று, சோசலிச ரசியாவின் அண்டை நாடுகளான இவற்றில் தொழிலாளர் வர்க்க இயக்கமும் சோசலிச கட்சிகளும் வலுவாக இருந்தது ஆகும்.

இந்த ‘முதலாளித்துவ கனவுலகத்தில்’ ஒரு முக்கியமான நாடான ஸ்வீடன். இந்த நாடுதான் இந்தியாவுக்கு போஃபர்ஸ் பீரங்கிகளை விற்ற நாடு என்பது நினைவிருக்கும். முன்னேறிய முதலாளித்துவ நாடுகளின் மக்கள் நலத் திட்டங்களுக்கும் பின்னால் மறைந்திருக்கும் நம் போன்ற நாடுகள் சுரண்டப்படுவதன் ஒரு வெளிப்பாடு அது.

கடந்த 30 ஆண்டுகளாக அமல்படுத்தப்பட்ட நவ தாராளவாத அரசியலின் கீழ் மக்கள் நல அரசு கைவிடப்பட்டு ஸ்வீடனின் நிலைமை என்னவாகிக் கொண்டிருக்கிறது? சமீபத்தில் நடந்து முடிந்த அந்நாட்டு தேர்தல் முடிவுகள் பற்றி மைக்கேல் ராபர்ட்ஸ் எழுதிய பதிவை படியுங்கள். 

அந்தப் பதிவில் ஸ்டீபன் ஹின்டனர் என்பவர் எழுதிய பின்னூட்டம் ஸ்வீடனில் நிலவிய பொருளாதார அமைப்பு பற்றிய சித்திரத்தைத் தருகிறது.

ஸ்டீபன் ஹின்டனர்

“நான் 1980-களில் ஸ்வீடனில் வசித்தேன். அப்போது சில அரசு நிறுவனங்களுடனும் அரசியல்வாதிகளுடனும் இணைந்து வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் “கௌரவமான வேலை வாய்ப்பு” என்பதை உண்மையிலேயே ஆதரித்தார்கள்.

இந்தியாவுக்கு ஸ்வீடன் சப்ளை செய்த போஃபர்ஸ் பீரங்கி

அந்தக் காலத்தில் தொழிலாளர்கள் தொடர்பான முத்தரப்பு அணுகுமுறை இருந்தது. அதன்படி தொழிலாளர் அமைச்சகம், கம்பெனிகளின் கூட்டமைப்பு, தொழிலாளர் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து செயல்பட்டனர்.

இந்த அணுகுமுறையின் நோக்கம் ஸ்வீடிஷ் பொருட்களை வாங்குவதற்கு போதுமான அளவு தொழிலாளர்கள் சம்பளம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்கு கல்வியும், மருத்துவ வசதியும், பொதுப் போக்குவரத்தும் கிடைக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் திறமையாக உழைக்கத் தயாராக இருப்பார்கள்.

இந்த முத்தரப்பு அணுகுமுறை மிக முற்போக்கான பணியிடச் சூழலை உருவாக்கியது. வேலை போனாலும் வாழ்வுக்கு அச்சுறுத்தல் இல்லை என்ற சமூக ரீதியான பாதுகாப்பு இருந்ததால் தொழிலாளர்கள் பணியிடத்தில் தமது படைப்புத் திறனை வெளிப்படுத்தவும், தவறு என்று பட்டதை வெளிப்படையாகவும் பேசவும் தயங்கவில்லை. இது ஸ்வீடனின் உற்பத்தித் திறனையும், உற்பத்தி தரத்தையும் மேம்படுத்தியது.

நல்ல சம்பளம் வாங்கும் தொழிலாளர்கள் தரமான பொருட்களை கோரியதால் உள்நாட்டுச் சந்தையில் தரமான பொருட்களை விற்க வேண்டியிருந்தது. எனவே ஸ்வீடனின் பொருட்கள் உயர்தரமானவையாக இருந்தன. அவை கௌரவமான பணிச் சூழலில், சுற்றுச் சூழலை பாதிக்காத வகையில் உற்பத்தி செய்யப்பட்டன.

கௌரவமான வேலை வாய்ப்புகளை வழங்கவும், திறமையான தொழிலாளர்கள் கிடைப்பதை உறுதி செய்யத் தேவையான நிதி திரட்டும் வகையிலும் அதே நேரம் முதலீடு செய்வதற்கு போதுமான உபரி மிஞ்சும் வகையிலும் முதலாளிகள் மீது வரி விதிக்கப்பட்டது.

ஸ்வீடனில் தொழிலாளர் கொள்கை தொழில்துறை கொள்கையின் பகுதியாக இருந்தது, சமூக கொள்கையின் பகுதியாக இல்லை. வேலை வாய்ப்பு பெறாதவர்களை பயிற்றுவித்து புதிய தேவைகளுக்கு ஏற்ப கற்பித்து வேலையில் அமர்த்துவது தொழில்துறையின் பொறுப்பாக பார்க்கப்பட்டது.

தொழிற்சங்கங்கள் எந்திர மயமாதலைக் கண்டு பயப்படவில்லை, ஏனென்றால், “எந்திரங்கள் கார் வாங்கப் போவதில்லை. [தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுத்தால்தான் கார் விற்கும்]” என்று தொழிலாளர் நலனை பாதுகாப்பதற்கு அரசு மேற்கொள்ள வேண்டிய பொருளாதார அணுகுமுறையை அவர்கள் வலியுறுத்தினார்கள்.

 

“கௌரவமான வேலை வாய்ப்பு” சமத்துவத்தை உருவாக்குகிறது. சமூக ஜனநாயகத்தை ஆதரிக்கும் பெண்கள் தாங்கள் வேலைக்குப் போனால் ஆண்களுக்கு நிகராக தம்மை நிலைநாட்டிக் கொள்ளலாம் என்று நம்பினார்கள்.
இது ஸ்வீடனின் மூன்றாவது பாதை என்று அழைக்கப்பட்டது.

இது எல்லாம் அந்தக் காலம். பின்னர் என்ன நடந்தது? உலகமயமாக்கம் அமல்படுத்தப்பட்டது. முதலாளிகளின் கூட்டமைப்பு முத்தரப்பு அணுகுமுறையை உடைத்து, ஸ்வீடனின் ‘மூன்றாவது பாதை’க்கு முடிவு கட்டியது. உற்பத்தியை வெளிநாடுகளுக்கு மாற்றுவது மலிவாக இருந்ததால் முதலாளிகள் தொழிற்சாலைகளை அங்கு இடம் பெயர்த்தனர். அதனால் ஸ்வீடனின் தொழிலாளர்கள் வருமானம் இழந்து, பொருட்களை வாங்கும் சக்தியை இழந்தது பற்றி முதலாளிகள் கவலைப்படவில்லை.

1994 – 95ல் ஸ்வீடன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தது கீழ் நோக்கிய சரிவை மேலும் துரிதப்படுத்தியது. மக்கள் நல அரசை ஒழித்துக் கட்டும் நோக்கத்தில் வலது சாரி அரசியல் களம் இறங்கியது. முதலாளித்துவ சமூகத்துக்கு நல்ல படித்த, நல்ல சம்பளம் வாங்கும், ஆரோக்கியமான தொழிலாளர்கள் தேவை இல்லை என்று அவர்கள் கருதுகின்றனர். அதையேதான் கடந்த 20 ஆண்டுகளில் அவர்கள் சாதித்திருக்கின்றனர். இன்று உளவியல் நோய்களுக்கான செலவினம் உடல்நல நோய்களுக்கான செலவுகளை விட அதிகரித்திருக்கிறது.

இந்தப் போக்குக்கு ஒரு உதாரணமாக அச்சுத் தொழிலை எடுத்துக் கொள்ளலாம். ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய உறுப்பு நாடுகள் ஒன்றியத்தின் நிதிஉதவியின் கீழ் தமது நாட்டில் அச்சகங்களை அமைத்தன. அங்கு நிலவிய குறைந்த கூலி, குறைந்த தொழிலாளர் நல செலவுகள் காரணமாக வேலை வாய்ப்புகள் அங்கு இடம் பெயர்ந்தன. ஸ்வீடனிலிருந்து வேலை வாய்ப்புகள் பறி போயின. அது கீழ் நோக்கிய வீழ்ச்சியை துரிதப்படுத்தியது.

அடுத்தடுத்த இடது, வலதுசாரி அரசுகளின் கீழ் உணவு பொருட்கள் இறக்குமதி அதிகரித்தது. அவற்றை உற்பத்தி செய்யும் நாடுகளில் ஸ்வீடனில் சிறைத்தண்டனைக்குரிய குற்றங்களாக கருதப்படும் முறைகள் பின்பற்றப்படுகின்றன. எனவே, அவை குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்பட்டு சந்தையில் மலிவான உணவுப் பொருட்கள் குவிகின்றன. ஸ்வீடன் விவசாயிகளின் வாழ்வாதாரம் பறி போகிறது. இது எல்லாம் சேர்ந்து அரசியல்வாதிகள் மீதான நம்பிக்கை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மோசமாக போனது, ஆச்சரியமில்லை.

ரயில்வே போன்ற அரசு நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்ட கட்டாயப்படுத்தப்பட்டன. அதை சாதிப்பதற்காக ரயில்வே மும்முரமான போக்குவரத்து வழித்தடங்களை தனியார் கார்ப்பரேட்டுகளுக்கு திறந்து விட்டது [தனியார் – பொதுத்துறை கூட்டு PPP என்ற பெயரில் நம் நாட்டிலும் இது அமல்படுத்தப்படுகிறது] . இதன் விளைவாக ரயில்வேயின் லாப வீதம் இன்னும் மோசமானது.

வலதுசாரி கட்சிகள், இனவாதிகளகவே இருந்தாலும், அவர்கள் இனவாத முழக்கங்களை முக்கியமாகமுன் வைப்பதில்லை.

ஸ்வீடனில் உள்ளூர் மக்களுடன் ஒன்றாக கலந்து விடுவது வெளிநாட்டவருக்கு உண்மையில் கஷ்டமான ஒன்று. அவ்வாறு ஒன்று கலக்காவிட்டால் உங்களுக்கு வேலை கிடைப்பது சிரமம். எனவே, கடும் பாதிப்புகளை எதிர்கொண்டு ஸ்வீடனுக்கு வந்து சேரும் புலம்பெயர் அகதிகள் ஸ்வீடனில் அன்னியர்களாகவே வாழ்கின்றனர். எனக்கு தனிப்பட்ட முறையில் அத்தகைய அகதிகள் சிலரை தெரியும், அவர்களுக்கு நான் உதவ முயற்சித்திருக்கிறேன். இது இனவாதத்துக்கு உரம் போடுகிறது.

சமூக சேவைகளுக்கும் புலம் பெயர்ந்தவர்களை ஐக்கியப்படுத்துவதற்கும் குறைந்த நிதி ஒதுக்கி விட்டு, பெருமளவு வேறுபட்ட கலாச்சாரங்களிலிருந்து வரும் மக்கள் ஸ்வீடிஷ் கலாச்சாரத்தில் கலந்து விடுவார்கள் என்று சமூக ஜனநாயகக் கட்சி எதிர்பார்ப்பது தவறு என்பதைத்தான் அதீத வலதுசாரி அரசியலின் வளர்ச்சி காட்டுகிறது.

சமூக ஜனநாயகக் கட்சியின் “நீ எனக்கு சொரிந்து விடு, நான் உனக்கு சொரிகிறேன்” என்ற முதலாளித்துவத்துக்கு சோப்பு போடும் கொள்கை தோற்றுப்போயிருக்கிறது. ஆனால் ஸ்வீடன் மக்கள் அதைத்தான் விரும்புவதாக எனக்குத் தோன்றுகிறது. “எங்கள் மக்களுக்கு பொருட்களை விற்க வேண்டுமானால், எங்கள் மக்களை தொழிலாளர்களாக பயன்படுத்துங்கள். அதற்கான விதிகள் இவை” என்று சமூக ஜனநாயகக் கட்சி முதலாளிகளுக்கு கடிவாளம் போட வேண்டும் என்று கோருகிறார்கள். அதாவது அரசியல்வாதிகள் மூலதனத்தை எதிர்த்து நிற்க வேண்டும் என்று கோருகிறார்கள் (அது சாத்தியமானால்)

‘முதலாளித்துவத்தை சீர்திருத்தி கட்டுக்குள் வைத்து விடலாம்’ என்ற சமூக ஜனநாயகக் கட்சியின் கொள்கையின்  [இது இந்த முதலாளித்துவ கட்டமைப்புக்குள்ளேயே சீர்திருத்தங்களை கொண்டு வந்து உழைக்கும் மக்களை விடுவித்து விடலாம் என்ற கொள்கையுடைய அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும்] விளைவே தீவிர வலதுசாரி அரசியல். அதாவது முதலாளித்துவத்தின் அவலநிலையின் வெளிப்பாடே வலதுசாரி அரசியல்.

முட்டுச் சந்தில் நிற்கும் ஸ்வீடன் – மைக்கேல் ராபர்ட்ஸ் 

முதலாளித்துவத்தை மக்கள் நல அமைப்பாக பராமரிப்பதற்கான முன்னுதாரணமாக தூக்கிப் பிடிக்கப்பட்டு, நீண்ட காலமாகவே கொண்டாடப்பட்டு வருகிறது, ஸ்வீடன். ‘கலப்புப் பொருளாதாரத்தின்’ மூலம் சமூக ஜனநாயக அரசு பெரும்பான்மை மக்களுக்கு கௌரவமான வேலைச் சூழலையும் வாழ்வையும் அமைத்துக் கொடுப்பதுதான் ஸ்வீடன் முதலான வடக்கு ஐரோப்பிய நாடுகளின் (நார்வே, டென்மார்க், ஃபின்லாந்து) சிறப்பு. ஸ்வீடனில் நடந்த 2018 பொதுத் தேர்தல் முதலாளித்துவம் பற்றிய இந்த தேவதைக் கதைக்கு முடிவு கட்டியிருக்கிறது.

செப்டம்பர் 9-ம் தேதி நடந்த தேர்தலில், ‘கலப்புப் பொருளாதாரத்தைத்’ தூக்கிப் பிடிப்பவர்களான சமூக ஜனநாயகவாதக் கட்சி 28%-க்கு சிறிது அதிக அளவு வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. தனிப்பெரும் கட்சியாக வந்தாலும், இது 1908-க்குப் பிறகு இந்தக் கட்சி தேர்தலில் பெற்ற மிகக் குறைவான வாக்கு சதவீதம் ஆகும். கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான முக்கியமான கட்சி “மிதவாதக் கட்சி” என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கட்சியும் வாக்குகளை இழந்து 19.7% பங்கை மட்டும் பெற்றிருக்கிறது.

பல பத்தாண்டுகளாக மாறி மாறி ஆட்சிக்கு வந்த இந்த இரண்டு கட்சிகளின் வாக்குகளை பிரித்துச் சென்றது ஸ்வீடன் ஜனநாயகவாதி கட்சி என்ற குடிபெயர்வோருக்கு எதிரான, நவீன நாஜியிசத்தை தனது கோட்பாடாகக் கொண்ட கட்சி. அதற்கு 17.7% வாக்குகள் கிடைத்தன. இந்தக் கட்சியின் பெயரில் இருப்பது ஜனநாயகம், நடைமுறையில் அது கடைப்பிடிப்பது நாஜியிசம்! [ஹிட்லரின் கட்சியின் பெயரும் தேசிய சோசலிசம் என்பதுதான்]

கார்ப்பரேட் லாப வீத வீழ்ச்சியும், அதைத் தொடர்ந்த அதிகரிப்பும்

வலதுசாரி சாய்வுடைய சிறிய கட்சிகளும், இடதுசாரி சாய்வுடைய சிறிய கட்சிகளும் கூட வலுப்பெற்றிருக்கின்றன. இடது சாரி கட்சியின் வாக்கு சதவீதம் 8%-க்கு உயர்ந்தது. இரண்டு பக்கமும் இல்லாமல் நடுவாந்திரமாக நிற்கும் பசுமைக் கட்சி நாடாளுமன்றத்தில் இடம் பிடிப்பதற்குத் தேவையான 4% வாக்குகளைக் கூட பெற முடியாத நிலைக்கு வந்து விட்டது.

தொகுத்துப் பார்க்கும்போது, இடது சாரி சமூக ஜனநாயகக் கூட்டணியும், வலது சாரி கார்ப்பரேட் ஆதரவு கூட்டணியும் கிட்டத்தட்ட சம வாக்கு சதவீதம் பெற்று (தலா 40% வாக்குகள்) சம பலத்தில் உள்ளன. இதன் விளைவாக தீவிர வலதுசாரி ஸ்வீடன் ஜனநாயகவாத கட்சி (நவீன நாஜிகள்) நாடாளுமன்றத்தின் முடிவுகளை தீர்மானிக்கும் சக்தியாக உருவாகியிருக்கின்றது. இதுதான் இப்போது ஸ்வீடனின் முற்போக்கு முதலாளித்துவம் சிக்கியிருக்கும் முட்டுச் சந்து.

கட்டுப்பாடற்ற சுதந்திரச் சந்தை முதலாளித்துவத்துக்கும், சர்வாதிகாரரீதியிலான திட்டமிட்ட சோசலிச பொருளாதாரத்துக்கும் நடுவில் ஒரு ‘மூன்றாவது வழியை’ ஸ்வீடன், பிரதிநிதித்துவப்படுத்துகிறது எப்போதுமே ஒரு மாயையாகத்தான் இருந்தது. இப்போதோ, 20-ம் நூற்றாண்டின் ஆரம்பதில் ஸ்வீடிஷ் உழைப்பாளர் இயக்கம் ஈட்டிய மகத்தான வெற்றிகள் ஒவ்வொன்றாக படிப்படியாக கைவிடப்பட்டு விட்டன.

உலகப் போருக்குப் பின் ஒரு சில குடும்பங்களுக்குச் சொந்தமான ஸ்வீடனின் எஞ்சினியரிங் மற்றும் உற்பத்தி நிறுவனங்களின் லாபத்தின் மீது உயர் வரி விதிப்பு செய்யப்பட்டு வந்தது. அது பொதுச் சேவைகளை வழங்குவதற்கு பயன்படுத்தப்பட்டது. இந்தக் கொள்கை இப்போது கைவிடப்பட்டு விட்டது. நிறுத்தப்பட்டு விட்டது. அதாவது, பிற முதலாளித்துவ நாடுகளைப் போலவே ஸ்வீடனிலும் 1990-களிலிருந்து புதிய தாராளவாதக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. சுதந்திரச் சந்தைகளை மீட்டெடுத்தல், பணக்காரர்களுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் வரிக் குறைப்பு, மக்கள்நலத் திட்டங்கள் வெட்டு, தொழிலாளர்களுக்கான நிஜக் கூலி குறைப்பு, அதிகரிக்கும் ஏற்றத் தாழ்வு ஆகியவை இந்தக் கொள்கைகளின் தாக்கமும், விளைவும் ஆகும்.

அதிகரிக்கும் ஏற்றத் தாழ்வுகள்

ஸ்வீடனில் ஏன் புதிய தாராளவாத கொள்கைகள் அமல்படுத்தப்பட்டன? இது ஒட்டு மொத்த உலக முதலாளித்துவத்தின் நெருக்கடி தோற்றுவித்த மாற்றம். பிற முதலாளித்துவ நாடுகளைப் போலவே, ஸ்வீடனிலும் மூலதனத்துக்கான லாபவீதம் 1960-களிலிருந்தே வீழ்ச்சியடைந்து வந்தது (ஸ்வீடனைப் பொறுத்தவரையில் அது 1990-கள் வரை தொடர்ந்தது). கடன் குமிழ் ஒன்று வெடித்ததையும், ஒரு பெரிய வங்கி நெருக்கடியையும் தொடர்ந்து ஸ்வீடனின் புகழ்பெற்ற உற்பத்தித் துறை ஒரு பெரும் சரிவை அடைந்தது. அதிலிருந்துதான், ஸ்வீடனின் பெரிய கட்சிகளான சமூக ஜனநாயகவாத கட்சியும், மிதவாதிகள் கட்சியும் மூலதனத்தின் லாபத்தை அதிகரிப்பதற்கான கொள்கைகளை உறுதியாக ஏற்றுக் கொண்டு அமல்படுத்த ஆரம்பித்தன. இது மக்கள் நல அரசையும், பொதுச் சேவைகளையும் பாதித்தது.

அமெரிக்காவையும், ஐக்கிய அரசையும் (பிரிட்டனும் வட அயர்லாந்தும் இணைந்த UK) ஒப்பிடும் போது ஸ்வீடனில் வருமான, சொத்து ஏற்றத் தாழ்வு குறைவாகத்தான் இருக்கிறது. ஆனால், இதுவே கணிசமான ஏற்றத் தாழ்வை கொண்டுள்ளது. 1990-களுக்குப் பிறகு அனைத்து முன்னேறிய முதலாளித்துவ நாடுகளை விட ஸ்வீடனில் ஏற்றத் தாழ்வு வெகு வேகமாக வளர்ந்து வருகிறது.

2012-ல் மேல்மட்ட 10% பணக்காரர்களின் சராசரி வருமானம் கீழ்மட்ட 10% பேரின் சராசரி வருமானத்தை விட 6.3 மடங்காக இருந்தது. இது 2007-ல் 5.75 ஆகவும், 1990-களில் 4 ஆகவும் இருந்தது. ஸ்வீடனின் மொத்த தேசிய வருவாயில் பணக்கார 1%-ன் பங்கு 1980-ல் 4%-லிருந்து 2012-ல் 7% ஆக உயர்ந்தது. முதலீடுகளின் மதிப்பு அதிகரிப்பையும் சேர்த்துக் கொண்டால் இந்தப் பிரிவினரின் பங்கு 9% ஆக இருந்தது.

பணக்காரர்களுக்கு வருமான வரி குறைப்பு

1979-ல் 87% ஆக இருந்த அதிகபட்ச வருமான வரி வீதம் 2013-ல் 57% ஆகக் குறைக்கப்பட்டது [இந்தியாவின் கார்ப்பரேட் வருமான வரி 30% ஆக உள்ளது, 25% ஆகக் குறைக்கப் போவதாக அருண் ஜெட்லி வாக்களித்திருக்கிறார்]. பெரும்பாலான பிற வட ஐரோப்பிய நாடுகளைப் போலவே (ஸ்வீடன், நார்வே, டென்மார்க், பின்லாந்து) ஸ்வீடனிலும் 1990-களில் செய்யப்பட்ட வரிச் சீர்திருத்தங்கள் பணக்கார குடும்பங்களின் வரிச் சுமையை குறைத்தன. மூலதனத்தின் மீதான வரியை குறைப்பது அல்லது சொத்து வரியை கைவிடுவது மூலம் இது செய்யப்பட்டது. அத நேரத்தில் உழைக்கும் மக்களுக்கு வழங்கப்படும் மக்கள்நல வசதிகள் வெட்டப்பட்டன.

ஸ்வீடன் பொதுச்சேவைகளை அரசு வழங்குவதற்கான முன் மாதிரி நாடாக ஸ்வீடன் இனிமேலும் இல்லை. அரசு பணம் கொடுத்து தனியார்துறை சேவை வழங்கும் முறைக்கு முன்னோடியாக ஸ்வீடன் மாறியிருக்கிறது.

சராசரி உண்மை வளர்ச்சி வீதம்

ஸ்வீடனின் உயர்நிலைப் பள்ளிகளில் மூன்றில் ஒரு பங்கு “சுயேச்சையான பள்ளிகள்” என்று அழைக்கப்படுபவை. அவற்றில் பெரும்பாலானவை லாப நோக்கமுடைய கம்பெனிகளால் நடத்தப்படுகின்றன. ஆரம்ப மருத்துவ வசதிகள் வழங்கும் 40% நிறுவனங்கள் தனியாருக்கு சொந்தமானவை. பொதுச் சேவைகளை அயலகப் பணி முறையில் வழங்குவது தரத்தை பாதித்திருக்கிறது. ஸ்வீடனின் பள்ளிகள் சர்வதேச வரிசைப்படுத்தல்களில் உலகின் மிகச்சிறந்த பள்ளிகள் என்ற இடத்திலிருந்து, “மிகவும் மோசமான பள்ளிகளில் ஒன்றாக” வீழ்ந்திருக்கின்றன.

ஸ்வீடனில் ஸ்வீடன் ஜனநாயகவாதிகளின் (நவ நாஜிகள்) வளர்ச்சி ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, டென்மார்க் மற்றும் பிற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் அத்தகைய கட்சிகளின் வளர்ச்சி ஐக்கிய அரசுகளில் பிரெக்சிட், அமெரிக்காவில் டிரம்ப் வடிவில் தோன்றியுள்ள பாப்புலிசம் போனவற்றின் வகையைச் சேர்ந்தது. [இந்தியாவில் பா.ஜ.கவின் வளர்ச்சி, துருக்கியில் எர்டோகனின் ஆதிக்கம் இவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்]

1960-களில் முதலாளித்துவத்தின் “பொற்காலம்” முடிவுக்கு வந்த பிறகு முதலாளித்துவ அரசுகள் பின்பற்றிய புதிய தாராளவாத கொள்கைகள் மக்களுக்கு நலவாழ்வை உறுதிப்படுத்த தவறியது உழைக்கும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி கோபத்தின் விளைவாக வலது சாரி அரசியல் வளர்ச்சி அடைகிறது. குறிப்பாக, 2008-ல் ஏற்பட்ட உலகளாவிய நிதித் துறை வீழ்ச்சி, அதைத் தொடர்ந்த பெரும் தேக்கம், பின்னர் ஏற்பட்ட நீண்ட மந்தம் ஆகியவற்றுக்குப் பிறகு வலதுசாரிகளின் பலம் மேலும் அதிகரித்திருக்கிறது.

புலம் பெயர்ந்தோர் எண்ணிக்கை

2008-க்குப் பிறகு ஸ்வீடனின் முதலாளித்துவம், பிற முதலாளித்துவ நாடுகளை விட சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. ஆனால், கடந்த சில பத்தாண்டுகளில், குறிப்பாக 2008-க்குப் பிறகு ஸ்வீடனிலும் பொருளாதார வளர்ச்சி வேகம் குன்றியிருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் ஒப்பிடும் போது ஸ்வீடனில் வேலையின்மை குறைவாக இருக்கலாம், ஆனால் அரசு வேலைத் திட்டங்களில் வைக்கப்பட்டிருப்பவர்களையும், உடல்நிலை சரியில்லாமல் இருப்பவர்களையும் இந்த வேலையில்லாதவர்கள் கணக்கில் அரசு சேர்ப்பதில்லை. பல வேலைகள் இப்போது “பணி பாதுகாப்பற்ற” குறை கூலி வேலைகளாக உள்ளன. குறிப்பாக சிறு நகரங்களில் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகள், பள்ளிகள், வீட்டு வசதி, ஓய்வூதியம், போக்குவரத்து ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்கீடு கடுமையாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில்தான் புலம் பெயர்ந்த உழைக்கும் மக்களின் பிரச்சனை ஊதிப் பெருக்கப்படுகிறது. சிரியா/ஈராக் பேரழிவுக்குப் பிறகு மத்திய கிழக்கிலிருந்து சுமார் 6 லட்சம் பேர் ஸ்வீடனுக்குள் புலம் பெயர்ந்து வந்திருக்கின்றனர். அவ்வாறு இடம் பெயர்ந்தவர்களில் பலர் திருமணமாகாத இளைஞர்கள். அவர்கள் மூலம் முதலாளித்துவ நிறுவனங்களும் அரசுத் துறைகளும் குறைந்த திறன் கோரும் வேலைகளுக்கு நிலவிய ஆள் பற்றாக்குறையை சமாளித்துக் கொண்டன. ஆனால், மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது ஸ்வீடனில் புலம் பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை வேறு எந்த ஐரோப்பிய நாட்டையும் விட அதிகமாக உள்ளது. இது ஏற்கனவே புதிய தாராளவாத நடவடிக்கைகளால் சீர்குலைவை எதிர்கொண்டிருக்கும் பொதுச் சேவைகள் மீது கூடுதல் சுமையை ஏற்றுகிறது.

வாடகை வீடுகளுக்கான காத்திருப்போர் எண்ணிக்கை

குறைந்த வட்டி வீத கடன்கள் மூலம் தூண்டப்பட்ட பெரும் வீட்டுக் குமிழி நடுத்தர, மேல்தட்டு வர்க்கங்களுக்கு ஆதாயம் அளித்தது. ஆனால் உழைக்கும் வர்க்கமும், புலம் பெயர் தொழிலாளர்களும் முறையான வீட்டு வசதியை பெறுவது போராட்டமாக உள்ளது (வரைபடம் : ஸ்டாக்ஹோமில் வாடகை வீட்டுக்கு காத்திருப்போர் பட்டியல்).

ஸ்வீடன் பிற ஐரோப்பிய நாடுகளை விட வேகமாக வளர்ந்து வருவது உண்மைதான், ஆனால் அது உலக வர்த்தகத்தின் வளர்ச்சியையும், ஐரோப்பாவில் பொருளாதார நடவடிக்கைகளின் வலிமையையும் சார்ந்துள்ளது. இந்த வலிமையான வளர்ச்சியும் 1980-களைப் போல கடனை அடிப்படையாகக் கொண்ட நுகர்வு குமிழியால் தூண்டப்பட்டது. புலம் பெயர் உழைப்பாளர்கள் சேர்க்கும் கூடுதல் மதிப்பு இந்த வளர்ச்சிக்கு ஒரு காரணமாக இருந்தது.

ஒருபுறம் வங்கித் துறை ஊதிப் பெருகி வரும் அதே நேரம், மறுபுறம் ஸ்டாக்ஹோம் உலகிலேயே இரண்டாவது அதிகம் ஊதிப் பெருக்கப்பட்ட வீட்டு சந்தையை கொண்டுள்ளது. ஸ்வீடனின் வங்கிகள் தற்போது வழங்கியிருக்கும் கடன் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட 4 மடங்காக உள்ளது. இது ஸ்விட்சர்லாந்துக்கு அடுத்த இடத்தில் உள்ளது. 1980-கள் மீண்டும் நினைவுக்கு வருகிறது.

நிஜ உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி ஆண்டுக்கு 3%-க்கும் அதிகமாக இருப்பது போல தோன்றுகிறது. ஆனால், புலம் பெயர் தொழிலாளர்களின் கூடுதல் தாக்கத்தை நீக்கி விட்டால் ஒரு நபருக்கான நிஜ உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி அதை விட மிகக் குறைவாகவே உள்ளது (2017-ல் 1%-க்கும் குறைவு). ஒரு நபருக்கான வளர்ச்சி 2026-ல் முடிவடையும் 10 ஆண்டுகளில் சராசரியாக 1% அளவில் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்வீடனின் சிறு நகரங்கள் குறை கூலி, மோசமான சேவைகள் ஆகியவற்றால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தன. அந்த நேரத்தில்தான் புதிய புலம் பெயர் தொழிலாளர்களின் படையெடுப்பு ஆரம்பித்தது. இது ஸ்வீடன் ஜனநாயகவாதிகளின் இனவாத, தேசியவாத முழக்கமான “ஸ்வீடன் ஸ்வீடர்களுக்கே” என்ற முழக்கத்தை வளர்ப்பதற்கான அடிப்படையாக இருந்தது. [தமிழ்நாட்டின் ‘வந்தேறி’ அரசியல், ஆர்.எஸ்.எஸ்/பா.ஜ.க-வின் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் ஆகியவற்றுக்கு இணையான முழக்கம் இது]

ஸ்வீடனின் சமூக ஜனநாயகக் கட்சி முதலாளித்துவத்துக்கும், புதிய தாராளவாத கொள்கைக்கும் தாம் அளித்த ஆதரவுக்கான விலையை கடந்த 20 ஆண்டுகளாக கொடுத்து வருகிறது. [நமது நாட்டிலும் 1990-களுக்குப் பிறகு மாற்றி மாற்றி புதிய தாராளவாதக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டதன் விளைவு வலதுசாரி பா.ஜ.கவின் வளர்ச்சி. இந்த முதலாளித்துவ கட்டமைப்புக்குள் வலதுசாரி அரசியலை எதிர்ப்பதற்கான தீர்வு இல்லை என்பது முகத்தில் அறையும் உண்மை]

முகப்புப் படம்: ஸ்வீடன் ஜனநாயகவாதி கட்சியினரின் கொண்டாட்டம் (கோப்புப் படம்)
மூலக்கட்டுரை  : Sweden in deadlock
நன்றி : new-democrats

பெரியாரின் தடியை எடு ! கேலிச்சித்திரம்

நன்றி: Rsyftn
கேலிச்சித்திரங்கள்: ஓவியர் முகிலன்.

வாஜ்பாய் ( 1924 – 2018 ) : நரி பரியான கதை !

1990-ல் நிலவிய அரசியல் சூழல்தான், வாஜ்பாயிக்கு மிதவாத முகமூடியை மாட்டி விடவேண்டிய கட்டாயத்தை ஆர்.எஸ்.எஸ். உருவாக்கியது.

‘‘எங்கெல்லாம் முசுலீம்கள் வசித்து வருகிறார்களோ, அங்கெல்லாம் அவர்கள் மற்றவர்களுடன் இணைந்து வாழ விரும்புவதில்லை; அவர்கள் மற்றவர்களுடன் ஒன்று கலக்க விரும்புவதில்லை; தமது கருத்துக்களை அமைதியான முறையில், வழியில் பிரச்சாரம் செய்வதில்லை; மாறாக, தமது கருத்துக்களை அச்சுறுத்தல் மற்றும் தீவிரவாத வழியில்தான் பரப்புகிறார்கள்.”

இந்த வரிகளைப் படித்த மாத்திரத்திலேயே, ஆர்.எஸ்.எஸ். பரிவாரத்தைத் தவிர வேறு யாராலும் இப்படிப்பட்ட முத்துக்களை உதிர்த்திருக்கவே முடியாது என்பதைப் பாமரன்கூடப் புரிந்துகொண்டு விடுவான்.

யார் இதனைச் சொல்லியிருப்பார்கள்?

எச்ச ராஜா..? பொன்னார், அர்ஜுன் சம்பத், பிரவீன் தொகாடியா, யோகி ஆதித்யநாத்?

விடை எதிர்பாராதது. பண்பட்ட மனிதர் என்றும், எல்லோருக்கும் நல்லவர் என்றும் அஞ்சலி செலுத்தப்பட்ட வாஜ்பாயிதான் இந்த முத்தை உதிர்த்தவர். வாஜ்பாயி இந்துத்துவா நஞ்சைக் கவிதை வடிவில் சொல்லக்கூடிய தந்திரப் பேர்வழி. ஆனால், வாஜ்பாயிக்கு இறுதி அஞ்சலி செலுத்திய முதலாளித்துவப் பத்திரிகைகளும், மதச்சார்பற்ற ஓட்டுக்கட்சிகளும் அவருக்கு மாட்டிவிடப்பட்ட மிதவாத முகமூடியைத்தான் உண்மை முகமாகக் காட்டின.

****

வாஜ்பாயி மூன்று முறை இந்தியாவின் பிரதமராக இருந்தார். 1996 நாடாளுமன்றத் தேர்தலில், தனிப்பெரும் கட்சி என்ற தகுதியில், வாஜ்பாயி பிரதமரானார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல், வெறும் 13 நாட்களில் வாஜ்பாயி அரசு பதவி விலகியது.

13 நாட்களே அப்பதவியில் இருந்தாலும், தனது ஆட்சி யாருக்கு சேவை செய்யும் என்பதைக் காட்டிவிட்டுத்தான் பதவி விலகினார்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டத்தில் இருந்த வாஜ்பாயி அரசிற்கு, எந்தவொரு கொள்கை முடிவை எடுக்கவும், புதிய திட்டங்கள்  ஒப்பந்தங்களுக்கு அனுமதி கொடுக்கவும் தார்மீக அடிப்படையும் கிடையாது. எனினும், தனது முதலீட்டிற்கு இலாப உத்திரவாதம் கோரிய அமெரிக்க என்ரான் நிறுவனத்துக்கு சாதகமாக உத்தரவு பிறப்பித்து விட்டு பதவி விலகிய நேர்மையாளர்தான் வாஜ்பாயி.

ஊழல், பொதுச் சொத்தைக் கொள்ளையடித்து வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்தது உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகளை ஜெயாவும், அவரது கட்சியும் எதிர்கொண்டுவந்த கட்டத்தில்தான், ஆர்.எஸ்.எஸ். அவரது ஆதரவைப் பெற்று வாஜ்பாயியை இரண்டாம் முறையாக பிரதமராக்கியது. இந்த ஆதரவுக்கு ஜெயா கேட்ட விலையை  தன் மீதான வழக்குகளை  நீர்த்துப் போகச் செய்வது, தி.மு.க. ஆட்சியைக் கலைப்பது ஆகியவற்றைச் செய்து கொடுக்க வாஜ்பாயி அரசு கொஞ்சம்கூடத் தயங்கவேயில்லை.

ஜெயா கும்பல் மீது நடந்துவந்த கிரிமனல் வழக்குகள் அனைத்தையும் நீர்த்துப் போகச் செய்வதற்கு ஏற்றவாறு சட்டத்துறை அமைச்சர் பதவி அ.தி.மு.க.விற்கு வழங்கப்பட்டது. அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, தமிழகத்தின் மைய அரசின் வழக்குரைஞர்களாக யார்யாரை நியமிக்க வேண்டும் என்பதை போயசு தோட்டத்தில் வைத்து முடிவு செய்து, அவர்களுக்கான நியமன உத்தரவுகளையும் போயசு தோட்டத்தில் வைத்தே வழங்கினார், ஜெயா.

ஜெயா மீது வருமான வரித்துறை போட்டிருந்த வழக்குகளைக் கவனித்து வந்த அதிகாரிகள் அனைவரையும் ஜெயாவின் விருப்பப்படித் தூக்கியடித்து, அந்த வழக்குகளை ஆட்டங்காண வைத்தது, வாஜ்பாயி அரசு.

இவை அனைத்திற்கு மேலாக, ஜெயா, சசி கும்பல் மீது தமிழக அரசு தொடுத்திருந்த நாற்பதுக்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரிப்பதற்கு, சென்னை உயர் நீதிமன்றத்தின் அனுமதியோடு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பதற்குத் தமிழக அரசிற்கு உரிமை கிடையாதென்றும், மைய அரசு மட்டுமே அத்தகைய நீதிமன்றங்களை அமைக்க முடியும் என வாதிட்டு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது, வாஜ்பாயி அரசு.

இந்த வழக்கில் தீர்ப்பு தமக்குச் சாதகமாக வராது எனப் புரிந்துகொண்டிருந்த பார்ப்பன பாசிஸ்டுகள், தீர்ப்பிற்கு முன்பே தன்னிச்சையாக அச்சிறப்பு நீதிமன்றங்கள் அனைத்தையும் கலைத்து, ஜெயா மீது போடப்பட்டிருந்த வழக்குகள் அனைத்தையும் மாவட்ட நீதிமன்றங்களுக்கு மாற்றினார்கள். மைய அரசின் இந்த அறிவிக்கை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் வைத்து பத்திரிகைகளுக்கு வழங்கப்பட்டது. எனினும், இந்த அதிகார அத்துமீறலை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து, சிறப்பு நீதிமன்றங்களுக்கு அனுமதி அளித்தது.

தமிழகத்தில் சட்டம் கெட்டுவிட்டது என்ற முகாந்திரத்தின் அடிப்படையில் தி.மு.க. ஆட்சியைக் கலைப்பது எனத் திட்டமிட்டிருந்த பார்ப்பன பாசிஸ்டுகள், அதற்கு அத்வானியின் கீழிருந்த உள்துறை அமைச்சகத்தைப் பயன்படுத்தினர். தி.மு.க. அரசை வேவு பார்ப்பதற்காகவே சிறப்பு அதிகாரிகள் பட்டாளத்தைத் தமிழகத்திற்கு அனுப்பி வைத்தார், அத்வானி.

எனினும், தி.மு.க. ஆட்சியைக் கலைக்கும் சதித் திட்டம் ஜெயலலிதா எதிர்பார்த்த வேகத்தில் நிறைவேறாமல் இழுத்துக்கொண்டே போனதால், போயசு தோட்டத்து மகாராணி வாஜ்பாயிக்குக் கொடுத்த ஆதரவைத் திரும்பப் பெற்றார். அதனையடுத்து நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வாஜ்பாயி அரசு தோற்றுப் போய், பதவி விலக நேர்ந்தது.

வாஜ்பாயியின் இரண்டாவது தவணை ஆட்சி ஊழல் மகாராணிக்கு ஜெ போட்டதென்றால், அவரது மூன்றாவது தவணை ஆட்சியில், இராணுவத் தளவாட பேர ஊழல், கார்கில் போரில் மரணமடைந்த சிப்பாய்களுக்குச் சவப்பெட்டி வாங்கியதில் ஊழல், பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் விற்பனை நிலையங்கள் ஒதுக்கீடு ஊழல், பால்கோ, வீ.எஸ்.என்.எல்., ஏர் இந்தியா நிறுவனத்திற்குச் சொந்தமான ஐந்து நட்சத்திர விடுதி ஆகியவற்றை அடிமாட்டு விலைக்கு விற்ற முறைகேடுகள் ஆகியவை அம்பலமாகி, அவை அனைத்தும் முறையான விசாரணையின்றிச் சட்டப்படியே அமுக்கப்பட்டன.

அலைக்கற்றைகளை ஏலத்தில் எடுத்த நிறுவனங்கள் கட்டண நிர்ணய முறைக்குப் பதிலாக வருவாய்ப் பகிர்வு முறைக்கு மாறிக் கொள்ள அனுமதி கொடுத்து, தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அரசுக்குச் செலுத்த வேண்டிய 8,000 கோடி ரூபாயை, அவர்களுக்கே மொய் விருந்தாகவும் படைத்தார் வாஜ்பாயி.

வாஜ்பாயியை பொக்ரான் நாயகனாகவும், கார்கில் போர் நாயகனாகவும் துதிபாடும் பத்திரிகைகள், அவரது ஆட்சியில் ஒரிசா, ம.பி., ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் பட்டினியோடு போரிட்டுத் தோற்றுச் சாக நேர்ந்த அவலத்தை மூடிமறைக்கின்றன. மைய அரசிடம் 6 கோடி டன் அளவிற்கு அரிசியும் கோதுமையும் கையிருப்பில் இருந்தபோதுதான் ஒரிசா பகுதியில் பழங்குடியின மக்கள் ஒருவேளை கஞ்சிக்கு வழியின்றி மாண்டு போனார்கள்.

மாண்டு போன பழங்குடியின மக்களின் வயிற்றுக்குள் மாங்கொட்டைகள் இருந்ததைக் காட்டி, அவர்கள் பட்டினி கிடந்து இறக்கவில்லை, மாங்கொட்டை நஞ்சாகிப் போனதால்தான் இறந்துபோனதாக வக்கிரமாக வாதாடியது, வாஜ்பாயி அரசு.

உலக வர்த்தகக் கழகத்தின் நிபந்தனைகளின்படி விவசாய விளைபொருட்களின் தாராள இறக்குமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டதால், ரப்பர், தேயிலை, மக்காச் சோளம் பயிரிட்டு வந்த இந்திய சிறு விவசாயிகள் போண்டியாகித் தற்கொலை சாவிற்குத் தள்ளப்பட்டனர்.

பொக்ரானில் நடத்தப்பட்ட அணுகுண்டு சோதனை ‘‘வெற்றியை பா.ஜ.க. வினர் அவரது சாதனையாக சித்தரிக்கின்றனர்.  அது உண்மையல்ல. இனி அணுகுண்டு சோதனைகளை நடத்த மாட்டோம் என ஐ.நா. மன்றத்தில் வாக்குறுதி அளித்ததோடு, அணுஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும் வாஜ்பாயி அரசு ஒத்துக் கொண்டது.

இதன் காரணமாக, இந்தியாவின் அணுஉலைகளைச் சோதனையிடும் உரிமை சர்வதேச அணுசக்தி கழகத்திற்கு அளிக்கப்பட்டது. மேலும், அணுகுண்டு சோதனைகளையடுத்து அமெரிக்காவுடன் நடத்தப்பட்ட இரகசியப் பேச்சுவார்த்தைகள், அடுத்துவந்த மன்மோகன் சிங் ஆட்சியில் முடிவடைந்து, இந்தியா மீது 123 ஒப்பந்தம் திணிக்கப்பட்டது.

400 கோடி ரூபாய் செலவில் இந்தியா ஒளிர்கிறது என்ற டாம்பீகப் பிரச்சாரத்தை முன்னெடுத்து, வாஜ்பாயி ஆட்சியைப் பொற்கால ஆட்சியாகக் காட்ட முயன்றது, பார்ப்பன  பாசிசக் கும்பல். 2004 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை மண்ணைக் கவ்வ வைத்து, அந்தப் பொய்ப் பிரச்சாரத்தை முறியடித்தனர் சாமானிய இந்திய மக்கள்.

*****

ந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் விஷத்தை வாஜ்பாயி எப்பொழுது கக்கினார் தெரியுமா? குஜராத்தில் முசுலீம் இனப் படுகொலை நடந்து முடிந்த அடுத்த மாதமே, ஏப்ரல் 2002 அந்த ரணத்தின் மீது உப்புத் தாளைத் தேய்ப்பது போல, பாதிக்கப்பட்ட முசுலீம்களின் மீதே அபாண்டமான பழியைச் சுமத்தினார், வாஜ்பாயி. இதற்காக அவரது கவிதை உள்ளம் வெட்கப்படவில்லை.

குஜராத் முசுலீம் படுகொலையை நாம் தனித்துப் பார்த்துவிட முடியாது. வாஜ்பாயி ஆட்சியின்போது நடந்த ஒரிசா கிறித்தவ பழங்குடியின மக்கள் மீதான தாக்குதல், அம்மாநிலத்தில் கிறித்தவ பாதிரியாரும் அவரது மகன்களும் இந்து மதவெறிக் கும்பலால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டது, குஜராத்திலும், ம.பி.யிலும், டெல்லியிலும் கிறித்தவ தேவாலயங்கள் தாக்கப்பட்டு, கன்னியாஸ்திரிகள் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டது ஆகிய சம்பவங்களின் தொடர்ச்சிதான் நரேந்திர மோடி தலைமையில் நடத்தப்பட்ட முசுலீம் இனப்படுகொலை.

ஒரிசாவில் கிறித்தவப் பழங்குடியினர் தாக்கப்பட்டு, கிறித்தவ மத போதகர் கிரஹாம் ஸ்டேயின்ஸும், அவரது இரு மகன்களும் பஜ்ரங் தள் குண்டர்களால் எரித்துக் கொல்லப்பட்டபோது, வாஜ்பாயி அந்தக் குற்றத்தைச் செய்த இந்துத்துவா கிரிமினல்களைக் கடுமையாகத் தண்டிக்கக் கோரவில்லை. மாறாக, மத மாற்றம் தொடர்பாக தேசிய விவாதம் நடத்த வேண்டும் எனக் கோரி, எரிகிற நெருப்பில் எண்ணெயை வார்த்தார்.

குஜராத் முசுலீம் படுகொலைக்கு முன்பாக நடந்த இந்த ஒவ்வொரு சம்பவமும், நடப்பது தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியல்ல, ஆர்.எஸ்.எஸ். ஆட்சிதான் என்பதை உணர்த்தின. இந்தப் பக்கபலத்தோடுதான் நரேந்திர மோடி குஜராத்தில் முசுலீம் இனப்படுகொலையை நடத்தி முடித்தார்.

ஒருபுறம், ‘‘இனி நான் எந்த முகத்தை வைத்துக்கொண்டு அயல்நாடுகளுக்குச் செல்வேன்?”, ‘‘மோடி ராஜ தர்மத்தை மதித்து நடக்க வேண்டும்” என்றெல்லாம் முதலைக் கண்ணீர் வடித்த அவர், இன்னொருபுறமோ முசுலீம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை மோடிக்கு இணையாகவே நியாயப்படுத்தவும் செய்தார்.

‘‘ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினையுண்டு” எனக் கூறி, குஜராத் படுகொலையை மோடி பச்சையாக நியாயப்படுத்தினார் என்றால், வாஜ்பாயி, ‘‘இதனைத் தொடங்கி வைத்தது யார்?”, ‘‘கோத்ரா சம்பவத்தை சிறுபான்மை சமூகத்தினர் ஏன் கண்டிக்கவில்லை?” என்றெல்லாம் நரித்தந்திரத்தோடு கேள்விகளை எழுப்பி, மொத்தப் பழியையும் முசுலீம்கள் மீதே தூக்கிப் போட்டார்.

குஜராத் படுகொலைகளையடுத்து மோடியைப் பதவி விலக வாஜ்பாயி கோரவில்லையா என அவரது துதிபாடிகள் வினவலாம். வாஜ்பாயி வெளிப்படையாக மோடியைப் பதவி விலகக் கோரவில்லை. எனினும், மோடியை நீக்குவதற்கு திரைமறைவில் எடுக்கப்பட்ட முயற்சிகள் பா.ஜ.க.வின் கோவா மாநாட்டில் முறியடிக்கப்பட்டது. மேலும், வாஜ்பாயியின் இந்த முயற்சியும்கூட அத்வானிக்கு எதிரான கோஷ்டிப் பூசலின் ஒரு பகுதியே தவிர, முசுலீம்களுக்கு நீதி கிடைப்பதற்காக வாஜ்பாயி இந்த முயற்சியில் இறங்கவில்லை.

பாபர் மசூதியை இடித்துத் தள்ளிய வழக்கில் சதிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்த அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகிய மூவரையும் அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தபோது, அதனை முற்றிலுமாக நிராகரித்து, அக்குற்றவாளிகளை ஆதரித்து நாடாளுமன்றத்திலேயே உரையாற்றினார், வாஜ்பாயி. கூட்டணி ஆட்சியில் பங்கு பெற்றிருந்த மதச்சார்பற்ற ஓட்டுக்கட்சிகளும் வாஜ்பாயிக்கு ஒத்து ஊதியதால், எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது.

இதனைவிடக் கேடாக, சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி அத்வானி, உமா பாரதி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட ஏழு பேர் மீது சுமத்தப்பட்டிருந்த சதிக் குற்றச்சாட்டிலிருந்து அவர்களை விடுவித்தது வாஜ்பாயி அரசு.

ஒட்டகத்தைக் கூடாரத்திற்குள் நுழைத்துவிடும் முயற்சியைப் போல, பாபர் மசூதி வளாகத்தை ஒட்டியிருந்த காலி மனையை விசுவ இந்து பரிசத்திடம் ஒப்படைக்கும் சதி வேலைகளைச் செய்துவந்த வாஜ்பாயி அரசு, இதற்காக சங்கராச்சாரி ஜெயேந்திரனை சமாதானத் தூதுவராகப் பயன்படுத்தி மூக்கறுபட்டது. எனினும், அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்டுவதற்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டிருந்த தூண்களுக்குப் பூசை நடத்துவதற்கு அனுமதித்து, அந்தப் பிரச்சினை அணையாமலேயே பார்த்துக் கொண்டது.

பாபர் மசூதியை இடித்துவிட்டு ராமர் கோவிலைக் கட்டுவது என்ற இந்துத்துவா திட்டத்தை வாஜ்பாயி என்றுமே கைகழுவியதில்லை. அத்வானி ரத யாத்திரை நடத்திய சமயத்திலும், அதற்கு முன்பாகவும் ‘‘இந்துக்கள்தான் அயோத்தியின் உண்மையான வாரிசுதாரர்கள் எனப் பேசி வந்த வாஜ்பாயி, பிரதமர் ஆன பிறகு, ‘‘முசுலீம்கள் பாபர் மசூதி வளாகத்தை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று நடுநிலையாளர் போலவும், ‘‘அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது நிறைவேறாத தேசிய அபிலாஷை என்று இந்து மதவெறியோடும் பேசி வந்தார்.

*****

தி.மு.க. தலைவர் கருணாநிதி வாஜ்பாயியை, ‘‘தவறான கட்சியில் இருக்கும் சரியான நபர் எனக் குறிப்பிட்டபொழுது, அதற்கு வாஜ்பாயி, ‘‘வேப்பமரம் ஒருபோதும் மாம்பழத்தைத் தராது” எனப் பதில் அளித்து, தான் என்றுமே ஆர்.எஸ்.எஸ். சுயம்சேவக்தான் என்பதைச் சொல்லாமல் சொன்னார்.

மேலும், 1996 -ம் ஆண்டு அளித்த நேர்காணலில், ‘‘தான் மிதவாதி, தனது கட்சி அப்படிப்பட்டதல்ல; தான் மதச்சார்பற்றவன், தனது கட்சி அப்படிப்பட்டதல்ல எனக் கூறப்படுவதெல்லாம், இடதுசாரிகளின் கோயபல்சு பாணி பிரச்சாரமாகும்” என விமர்சித்து, பச்சையாகவே தான் இந்துத்துவவாதிதான் எனப் பிரகடனப்படுத்தினார்.

ஆனாலும், வாஜ்பாயி மிதவாதியாகக் கட்டமைக்கப்பட்டதன் காரணமென்ன? இதற்கான பதில் வாஜ்பாயின் தனிப்பட்ட ஆளுமையில் அல்ல, 1990 நிலவிய அரசியல்  சூழ்நிலையில்தான் பொதிந்திருக்கிறது.

1980 பிற்பகுதியில் இருந்தே இந்திய அரசியல் அரங்கில் ஆர்.எஸ்.எஸ். – பாஜக ஒரு வலுவான சக்தியாக எழத் தொடங்கியது. மண்டல் கமிசன் அமலாக்கத்திற்கு எதிராக ராமன் கோவில் விவகாரத்தைக் கையில் எடுத்து ஆதிக்க சாதி இந்துக்களை அணிதிரட்டியதன் மூலம் பா.ஜ.க.வின் வளர்ச்சி சாத்தியமானது. 1989 -இல் 85, 1991 -இல் 120, 1996 -இல் 161, 1998 -இல் 180 எனக் கூட்டணி சேர்ந்து நாடாளுமன்ற இடங்களைக் கைப்பற்றினாலும், தனித்து ஆட்சியமைக்கும் அளவிற்கு பா.ஜ.க.வால் செல்வாக்குப் பெற முடியவில்லை.

இன்னொருபுறத்திலோ 1991-இல் உ.பி.யில் தனித்து ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க., பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு நடந்த 1993 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு வெற்றி பெற முடியவில்லை. 1996 சட்டமன்றத் தேர்தலில் தனது சித்தாந்தத்துக்கு நேர் எதிரான பகுஜன் சமாஜ் கட்சியுடன் சேர்ந்துதான் ஆட்சியமைக்க முடிந்தது. இந்த நிகழ்வுகள் இராமர் கோவில், முசுலீம் எதிர்ப்பு இந்து மதவெறி பிரச்சாரத்தை மட்டுமே நடத்தி ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பதை பா.ஜ.க.வுக்கு உணர்த்தின. எனவே, ஒரு பரந்த கூட்டணியை உருவாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்த ஆர்.எஸ்.எஸ்., 1996 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் மும்பையில் நடந்த பா.ஜ.க. பேரணியில் அத்வானியைக் கொண்டே, வாஜ்பாய்தான் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் என அறிவித்தது.

ரத யாத்திரையைத் தலைமை தாங்கி நடத்திய அத்வானி இந்துத் தீவிரவாதி என அறியப்பட்ட நிலையில், வாஜ்பாயியை முன்னிறுத்துவதைத் தவிர ஆர்.எஸ்.எஸ். -க்கு வேறு வாய்ப்பில்லை. மேலும், வாஜ்பாயி நீண்ட காலமாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வந்ததும் பல்வேறு கட்சித் தலைவர்களுடன் தொடர்பு கொண்டிருந்ததும் அவரைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதற்குச் சாதகமாக இருந்தன.

இதன் பிறகுதான் வாஜ்பாயிக்கு மிதவாத மூகமூடி மாட்டிவிடும் வேலைகள் தொடங்கின. வாஜ்பாயியை மிதவாதியாக முன்னிறுத்தும் தேவை ஆர்.எஸ்.எஸ். -க்கு  மட்டுமல்ல, காங்கிரசோடு கூட்டணி சேர முடியாத தெலுங்கு தேசம், திரிணாமூல் காங்கிரசு போன்ற மாநில கட்சிகளுக்கும் அவசியமாக இருந்தது. 1999 -இல் பா.ஜ.க.வின் கூட்டணியை முறித்துக்கொண்ட அ.தி.மு.க. காங்கிரசு பக்கம் சாய, தி.மு.க., பா.ஜ.க.வோடு கூட்டணி சேர்ந்து, பா.ஜ.க. தீண்டத்தகாத கட்சி அல்ல என அறிவித்தது.

இப்படி பித்தளையைத் தங்கமாக மாற்றும் ரசவாதத்தை ஆர்.எஸ்.எஸ். அதனை ஆதரிக்கும் பார்ப்பனக் கும்பலும் வாஜ்பாயியோடு மட்டும் நிறுத்திக் கொள்ளவில்லை. 2009 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்ட அத்வானி கருப்புப் பணத்திற்கு எதிரான ரத யாத்திரையை நடத்தினாரேயொழிய, ராமர் கோவிலைப் பற்றிப் பேசவில்லை. அதற்கு முன்னதாகவே, பாகிஸ்தானின் தந்தை என அறியப்படும் ஜின்னாவை மதச்சார்பற்றவர் என்றும், இந்து – முஸ்லீம் ஒற்றுமைக்குப் பாடுபட்டவர் என்றும் அஞ்சலி செலுத்தி, தன்னை மிதவாதியாகக் காட்டிக்கொண்டார்.

அத்வானி கருப்புப் பணத்திற்கு எதிரான போராளி என்ற முகமூடியை மாட்டிக் கொண்டபோது, நரேந்திர மோடி இந்து சாம்ராட்டாக முன்னிறுத்தப்பட்டார். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்கு வளர்ச்சியின் நாயகன் என்ற முகமூடி மாட்டப்பட்டவுடன், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்துக்களின் காவலன் ஆனார்.

வாஜ்பாயிக்கு மாட்டப்பட்ட முகமூடியை ஆர்.எஸ்.எஸ். சேர்ந்த கோவிந்தாச்சார்யாவே கிழித்தெறிந்தார். அத்வானிக்கு மாட்டப்பட்ட முகமூடி சாமானிய மக்களிடம் எடுபடாமலே கிழிந்து போய், ஓய்வெடுக்கப் போய்விட்டது. மோடி தனது முகமூடியை, தானே கிழித்துக் கொண்டிருக்கிறார்.

இன்னும் முகமூடிகளும், அதற்கு ஏற்ற முகங்களும் ஆர்.எஸ்.எஸ். கைவசம் இருப்பதை நாம் மறந்துவிடலாகாது.

-செல்வம்
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2018

மின்னூல்:
புதிய ஜனநாயகம்

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

வங்கிகளின் வாராக்கடன் : இடிதாங்கிகளா பொதுமக்கள் ?

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஏப்ரல் 2018 காலாண்டில் மட்டும் 4,876 கோடி ரூபாய் நட்டமடைந்திருக்கிறது. இதற்கு முந்தைய காலாண்டில் (ஜனவரி – மார்ச் 2018) அவ்வங்கி அடைந்த நட்டம் 7,718 கோடி ரூபாய். அதனை ஒப்பிடும்போது நட்டம் குறைந்திருக்கிறது என்று வேண்டுமானால் ஆறுதல் கொள்ளலாமேயொழிய, அவ்வங்கி நடப்பாண்டில் கடுமையான நிதி நெருக்கடியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதைத்தான் இப்புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

படிக்க :
♦ கார்ப்பரேட் வாராக்கடன் விவரங்கள் வெளியிட முடியாது – ரிசர்வ வங்கி
♦ கடன் வசூல் செய்ய வேண்டியது மாணவரிடமா ரிலையன்ஸிடமா ?

வழமை போலவே இந்த நட்டத்திற்கு முதன்மையான காரணம் வாராக் கடன்கள்தான். நடப்புக் காலாண்டில் மட்டும் வசூலாகாமல் நின்றுபோன கடன் தவணைத் தொகை 9,984 கோடி ரூபாய். இதன் காரணமாக, சந்தையில் தனது சொத்து மதிப்பு வீழ்ச்சியடைவதைத் தடுப்பதற்கு 7,718 கோடி ரூபாயை ஒதுக்க வேண்டிய தேவை ஏற்பட்டதால், இந்நட்டம் ஏற்பட்டதாக வங்கி நிர்வாகம் விளக்கம் அளித்திருக்கிறது.

கடன் தவணைகள் நிலுவையின்றி வசூலாகி, இந்தத் தொகையை ஒதுக்க வேண்டிய அவசியம் எழாமல் இருந்திருந்தால், அவ்வங்கி நடப்புக் காலாண்டில் 2,842 கோடி ரூபாய் இலாபம் அடைந்திருக்கக் கூடும். ஆனால், மோடி ஆட்சியில் வாராக் கடன் அதிகரித்துக்கொண்டே செல்வதும், அதனை ஈடுகட்ட பொதுத்துறை வங்கிகள் தமக்குக் கிடைக்கும் இலாபம் அனைத்தையும் ஒதுக்குவதும் பொருளாதார விதி போலவே மாறிவிட்டது.

குறிப்பாக, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் மொத்த வாராக்கடன் கடந்த ஜூன் மாதம் இறுதியில், அதற்கு முந்தைய காலாண்டைவிட 0.72 சதவீதம் அதிகரித்து 10.69 சதவீதத்தைத் தொட்டிருக்கிறது. இந்த அதிகரிப்பின் காரணமாக அவ்வங்கி வாராக் கடனை ஈடுகட்ட ஒதுக்கிய தொகையும் 8,928 கோடி ரூபாயிலிருந்து 19,228 கோடி ரூபாயாக அதிகரித்துவிட்டது.

நடப்புக் காலாண்டில் நிலுவையில் உள்ள வாராக் கடன் 9,984 கோடி ரூபாயில் 3,000 கோடி ரூபாய் கார்ப்பரேட் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையாகும். மகாராஷ்டிரா, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடன் தவணைகளைச் செலுத்தத் தவறியதாலும் வாராக் கடன் அதிகரித்திருப்பதாக வங்கி நிர்வாகம் விளக்கம் அளித்திருக்கிறது.

அவ்விரு மாநில விவசாயிகள் கடன் நிலுவையைச் செலுத்தாமல் இருப்பதற்கு, அம்மாநில அரசுகள் அறிவித்திருக்கும் விவசாயக் கடன் தள்ளுபடிதான் காரணம். தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயக் கடன் தொகையை அரசு வங்கிக்குச் செலுத்தியிருந்தால், வங்கியின் வாராக் கடன் நிலுவை குறைந்திருக்கும். எனவே, நடப்புக் காலாண்டில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவைக் கடனுக்குள் தள்ளிவிட்ட குற்றவாளிகள் கார்ப்பரேட்டுகளும், மத்திய, மாநில அரசுகளும்தான்.

வாராக் கடனை வசூலிப்பதற்கு புதுப்புது சட்டங்களை இயற்றியிருப்பதாக மோடி அரசு தம்பட்டம் அடித்துக் கொண்டாலும், அவற்றுக்கும் சோளக்காட்டு பொம்மைகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. மாறாக, வங்கி நிர்வாகங்கள் வாராக் கடனால் ஏற்படும் தமது நட்டத்தைச் சமாளிப்பதற்குப் பொதுமக்களைத்தான் பலியிடுகின்றன. குறிப்பாக, வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலிக்கப்படும் சேவைக் கட்டணங்கள் வங்கிகளுக்குப் பணங்காய்ச்சி மரமாகவே மாறிவிட்டது.

பொதுத் துறை வங்கிகள் கடந்த நான்காண்டுகளில் மட்டும் தமது வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலித்திருக்கும் சேவைக் கட்டணங்களின் மதிப்பு 3,324 கோடி ரூபாய். ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, தன்னிடமுள்ள சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச தொகையை வைத்திராத வாடிக்கையாளர்களிடமிருந்து மட்டும் 2017 – 18 நிதியாண்டின் முதல் எட்டு மாதங்களில் 1,771 கோடி ரூபாயைத் தண்டத் தொகையாக வசூலித்திருக்கிறது.

தரகு முதலாளிகள் பொதுத்துறை வங்கிகளைச் சட்டவிரோதமாக மொட்டையடிக்கிறார்கள் என்றால், வங்கி நிர்வாகங்களோ பொதுமக்களின் அற்ப சேமிப்பைச் சட்டபூர்வமாகக் கொள்ளையடிக்கின்றன.

புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2018

மின்னூல்:
புதிய ஜனநாயகம்

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

இந்த காலத்துல ஒரே தொழில் பார்த்தா பொழப்பு நாறிடும் !

பெட்ரோல் – டீசல் விலையுயர்வு : சென்னை கோயம்பேட்டிற்கு வந்த சிறுகடை உரிமையாளர்கள் கருத்து !

ண்ணாச்சி கடைன்னாலே நமக்கு எப்பவும் சொந்தகாரங்கள பாக்குறோம்ங்குற ஒரு நெனப்புதான். கடைக்கு பொருளு வாங்கப் போறோம்னா விலையக் கேட்டு, “இன்னா இம்மா வெல விக்கிற; பான வெல கேட்டா ஆனை வெல சொல்லுறியே”ன்னு சண்டையும் போட்டிருப்போம்.

கையில காசு இல்ல கணக்குல வச்சிக்கன்னு சொல்லியிருப்போம்… “இம்மாம் பொருளு வாங்கிருக்கனே கொஞ்சம் கொசுரு போட்டா கொறஞ்சியா போயிடுவா”ன்னு கொஞ்சம் அன்பாவும் கடிஞ்சிக்குவோம்.. இதையெல்லாம் காதுல வாங்கியும் வாங்காமலும் பம்பரமாய் சுழன்று கொண்டிருப்பார் அண்ணாச்சி.

கோயம்பேடு சந்தை ( படம் – வினவு புகைப்பட செய்தியாளர் )

அதிகாலை நான்கு மணிக்கு தொடங்கும் அவர்களுடைய வாழ்க்கை இரவு பன்னிரண்டு மணிக்குதான் முடியும். ஒரு நாளைக்கு மூன்று, நான்கு மணி நேரம் மட்டுமே தூக்கம். எழுந்ததும் கடைக்குத் தேவையான பொருட்களை வாங்க பழைய ‘ஸ்கூட்டர்’ டி.வி.எஸ் 50-களை எடுத்துக்கொண்டு கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வந்துவிடுவது சென்னையில் வழக்கம்.

அப்படி  கோயம்பேட்டில் இருக்கும் பெரியார் காய்கறி அங்காடிக்கு தினந்தோறும் வந்து செல்லும் சிறு வியாபாரிகள் மோடி அரசின் இந்த பெட்ரோல் விலையுயர்வை எப்படி சமாளிக்கிறார்கள்….

எம். ராகவன், திருமழிசை.

நூறு ரூபாய்க்கு பெட்ரோல் போட்டா இரண்டு தடவ வந்து போவேன். இப்ப இரண்டாவது தடவை வரதுக்கே இழுக்குது. காய்கறி வாங்கிட்டு போனா இரண்டு நாளைக்கு தாங்கும். ஆனா, கறிவேப்பிலை தாங்குமா? காய்கறி கடைக்கு பச்சயா இருந்தா தான் வருவாங்க. இதுக்குனாலும் இரண்டு நாளைக்கு ஒரு வாட்டி மார்க்கெட்டுக்கு வந்தாகனும். ஒரு முறை வந்தா மூவாயிரத்துக்கு சரக்கு போடுவோம். ஒரு கிலோ கோசு பதினைஞ்சி ரூபாய்க்கு வாங்குனா இருபதுக்கு விப்பேன். கேரட் பதினைஞ்சி ரூபாய்க்கு வாங்கி இருபதுக்கு விப்பேன். உருளை இருபதுக்கு வாங்கி இருபத்தஞ்சிக்கு விப்பேன். எல்லாம் அஞ்சி ரூபா லாபம் தான்.

இதுவே அழுகிப்போனா நமக்குதான் நஷ்டம். அதுக்கும் சேர்த்துதான் லாபத்துல எடுக்கணும்.  இப்ப பெட்ரோல் விலையும் கூட சேர்ந்திருக்கு. இதையும் ஜனங்க கிட்டதான் சேர்த்து வாங்கணும். வீட்டுல கடை இருக்கதால கொஞ்சம் சமாளிச்சிக்கலாம்.

இந்தக் கடை மட்டும் நமக்கு சோறு போடாது. இதை வச்சி பொழப்பு நடத்த முடியாது. கல்யாணத்துக்கு சமையல் வேலை  செய்வேன். அங்க போனா இரண்டாயிரம், மூவாயிரம் கிடைக்கும். இப்படித்தான் குடும்பத்த அட்ஜஸ் பண்ணி ஓட்டுறேன்.

இந்த காலத்துல ஒரே தொழில் பார்த்தா பொழப்பு நாறிடும். கையில இரண்டு மூணு தொழில் இருந்தாதான் குடும்பத்தை நடத்த முடியும். அதான உண்மை.  சின்னதா காய்கறி கடை மட்டும் வச்சி வாழ்க்கைய நடத்துறவங்க தண்டல் வாங்கியே அழிஞ்சிடுவாங்க.

அப்துல் ரகுமான், போரூர், காய்கறி கடை வியாபாரி.

போட்டோ எல்லாம் எதுக்கு? இப்ப போட்டோ எடுத்து இன்னா பண்ண போறிங்க. விலைவாசி எல்லாம் ஏறிடுச்சி. நீங்க சொன்ன எல்லாம் இறங்கிடுமா. நாம சொன்ன எவன் குறைக்க போறான். போராட்டம் பிரச்சனன்னு நம்மள இழுத்து விட்டுடுவானுங்க. இதோடதான் வாழணும். நான் போறேன். எனக்கு வேலை இருக்கு.

பழனிசாமி, காசிமேடு.

மார்க்கெட்டு உள்ள கடை இருக்கு. தினமும் இரண்டு தடவை ஓ.எம்.ஆர் ரோட்டுல இருக்க கேண்டின், ஓட்டலுக்கு காய்கறி போட்டுட்டு வருவேன். ஒவ்வொரு  கடைகாரங்களும் மூவாயிரம் ரூபாய்க்கு சரக்கு வாங்குவாங்க. இதுக்கு முன்னூறு ரூபா பெட்ரோல் ஆகும். இப்ப நானூறு ரூபா ஆகுது. இந்த செலவு எங்க கடை தலை மேலதான் விழும். நாங்க எதோ.. மார்க்கெட்டுல இருக்கதால பொழைக்கிறோம். சின்னக் கடை, தெருக்கடை எல்லாம் பிரச்சனை. பெட்ரோல் விலையேற்றம் எல்லாம் அவங்களுக்குதான் பெரிய பாதிப்பு.

காயத்ரி, வேளச்சேரி.

ஆமா, பெட்ரோல் விலைய ஏத்திட்டான்… எங்களை மாதிரி வியாபாரிங்க என்ன பண்றது? வாங்கி போட்டு அழறதுதான். அதோடதான் வியாபாரத்தை பார்த்துக்குனு இருக்குறோம். ஏற்கனவே ஜிஎஸ்டி, பணம் செல்லாது இதெல்லாம் பிரச்சனை. அதுலயே பாதி வியாபாரம் போயிடுச்சி. இப்ப மீதி வியாபாரம். பெட்ரோல் விலையேற்றத்துனால நெருக்கடிதான். ஒருநாளைக்கு ஐம்பது ரூபா நஷ்டம்னா நாம ஏத்துக்கலாம். தினமும் நஷ்டம்னா வாங்குறவங்க தலையிலதான் வைக்கணும்.. இதால வியாபாரம் பாதிக்கத்தான் செய்யும்.

சேகர், நெசப்பாக்கம்.

சொந்த ஊர் திருநெல்வேலி, ஏறக்குறைய இருபத்தி ஐந்து வருஷமா நானு மளிகை கடை வியாபாரம் பண்ணுறேன்.

இந்த மாதிரி அடிமேல் அடி இப்பதான் பாக்குறேன். காங்கிரசு பீரியட்ல நான் முப்பத்தி ரெண்டு ரூபாய்க்கு பெட்ரோல் போட்டேன். இப்ப எழுபத்தி எட்டுல வந்து நிக்குது. வியாபாரம் பல மடங்கு இப்ப இருக்கு. செலவுதான் அதிகமாவுது. மோடி ஏதோ வாய் ஜாலத்துல பிரதமரா வந்துட்டாரு. அவரு சொன்னதெல்லாம் நாங்க நம்புனோம். இப்ப எல்லோருக்கும் நஷ்டம்தான்.

பெரிசா நஷ்டம். நாங்க பொழக்கிறதே எங்களோட வியாபாரத் தந்திரத்தால்தான். கவர்மெண்ட் சப்போட்டு இல்ல. கடையில நாலு பொருளு வச்சிருந்தா அதை வாங்கின விலைக்கு ஐந்து பைசா கம்மியாவே கொடுப்போம். குறிப்பா பிராண்டட் அயிட்டம், எண்ணையில் கோல்டு வின்னர், அணில் சேமியா, இப்படி அதிகமா போறதுல லாபமே எடுக்காது. இதை வச்சி நாங்க பிராண்டு இல்லாத அயிட்டங்களை வித்தாதான் ஏதோ காசு கிடைக்கும். அதுலதான் ஐந்து ரூபா கிடைக்கும்.

மோடியை நம்பின ஜனங்க எல்லாம் மோசமா போயிட்டாங்க. அதை அவங்களே சொல்லுறாங்க.  நான் வியாபாரின்றதால நாலு மக்கள்கிட்ட பேசுவோம். ஒருத்தர் மோடியை முன்ன வாழ்த்துன மாதிரி வாழ்த்தல. நாம்ப மோசம் போயிட்டோம்னு அப்படி வெளிப்படையாவே சொல்லுறாங்க. ஏற்கனவே பழைய வியாபாரிங்கதான் இப்ப பொழைக்கிறாங்க. புதுசா கடை வச்சி எதுவும் பண்ண முடியாது.

அவங்க தண்டல் வாங்கி அழிய வேண்டியதுதான். என் கண்ணால் பார்த்திருக்கேன்… எவ்ளோ பேர் கடன் வாங்கிட்டு ஓடி போயிட்டாங்க.. நேத்து கூட பேப்பர்ல பார்த்திங்களா.? சாக்லேட் வியாபாரி கடன் தொல்லையால குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்கிட்டாங்க. இனி அதான் நிலமை. மோடிக்கு ஓட்டு போட்டு நாம ஆதரிக்கல.

ஆனா மோடி ஆட்சியில உட்கார வச்ச மத்த மாநிலத்துக்குகாறங்க தான் ரொம்பவும் பாதிக்கப்பட்டுட்டாங்க. அங்க வாழ முடியாம வடக்கே இருந்து வரவங்களே அதுக்கு சாட்சி.  அவங்கள இனிமேலும் மோடியால் வாய வச்சிக்கினு ஏமாத்த முடியாது. வர எலெக்சன்ல எல்லாம் தெரியப்போவுது பாருங்க.

பிரபாகரன், திருநின்றவூர்.

சொந்த ஊர் தூத்துக்குடி, இங்க வந்து கடை வச்சி இரண்டு வருஷம் ஆகுது. தினமும் நான் மளிகை பொருளு வாங்க மார்க்கெட்டுக்கு வருவேன். இங்க வந்து போக நாப்பத்தி எட்டு கிலோ மீட்டர். சரக்கை எல்லாம் மினி வண்டியில ஏத்தி அனுப்பிட்டேன். நான் சும்மா போகக் கூடாதுன்னு வண்டியில இந்த சரக்கை வச்சிருக்கேன்.

இது டபுள் செலவு..வேற இன்னா பன்றது. என்னோட கடை கொஞ்சம் மீடியமான கடைதான். ஊர்ல இருந்து ஆளுங்க கூட்டினு வந்து வேலை வாங்குறேன். அவங்க சாப்பாடு செலவு, கூலி ஐநூறு, சேர்த்து ஒரு ஆளுக்கு எட்டு நூறு ஆகுது. இந்த செலவை நாங்க ஜனங்க கிட்ட இருந்து வாங்கிப்போம்.

சாதாரண ஜனங்க வாழ்க்கைதான் கஷ்டம். அஞ்சாயிரம், ஆறாயிரத்துக்குள்ள குடும்பம் நடத்தியாவணும்னு பல பேர் இருக்காங்க. அவங்கதான் எங்க கஸ்டமர். இப்படியே விலையேறிட்டே போனா அவங்க கண்டிப்பா வாங்குற பொருளை குறைச்சிப்பாங்க. நாங்க எப்படியோ சமாளிக்கிறோம்.

சங்கத்துல இருந்து போராட்டம் பண்ண சொல்லுறாங்க நாங்களும் கடைய மூடுறோம். ஆனா விலை குறையிறதே இல்ல. இந்த கடையடைப்பால எங்க வருமானம்தான் போவுது. அன்னிக்கு கடை ஆளுக்கு சம்பளமும் தந்தாவணும். எவ்ளோ போராட்டம் பண்ணாலும் எந்த பலனுமில்லை. தீர்வு கிடைக்கிற மாதிரியான போராட்டத்தையும் பண்றதில்ல. இது அரசியல் கட்சிகாரனுங்களுக்கு தெரியாதா? அதால இவங்க மேலையும்  வெறுப்பா இருக்குது.

செந்தில், அரும்பாக்கம், சிவகாசி சொந்த ஊர்.

நான் அரும்பாக்கத்துல சின்ன மளிகை கடை வச்சிருக்கேன். அங்க ஒரு நாளைக்கு அஞ்சி மூட்டை அரிசி தேவைப்படும். அதை எடுத்துனு போக வருவேன். வாரத்துக்கு இரண்டு தடவை பெட்ரோல் போடுவேன். வந்து போக சரியா இருக்கும். இப்ப அதிக செலவுதான். அரிசி ஒரு ரூபா இரண்டு ரூபா லாபம் தான். ஆனா இதை சொல்லி விலை ஏத்த முடியாது. இதனால வர லாபத்துல நஷ்டம்தான் அடையுது. என்ன பண்றதுன்னு தெரியல.

நாம் சந்தித்த கடைக்காரர்கள் அனைவரும் பெட்ரோல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டதோடு, பொதுவில் விலைவாசி உயர்வினால் வியாபாரம் நன்கு நடக்கவில்லை என்பதையும் வேதனையோடு பேசுகிறார்கள். ஆனால் இதற்கு என்ன தீர்வு என்பதை பேசுவதில்லை. அப்படி பேசுவதற்கும் அவர்கள் வாழ்வில் இடமோ, நேரமோ, கருத்தோ இருப்பதில்லை. கடிவாளமிட்ட குதிரை போல வீடு – கடை – சந்தை என்று சுற்றி வருகிறார்கள். போராடுவதற்கும் அவர்கள் தயாராக இல்லை. அப்படி போராடுமளவு அவர்கள் அரசியலால் இணைக்கப்படவில்லை. மோடியை வெறுப்பதோடு எந்தக்கட்சியும் சரியில்லை எனும் பொதுக்கருத்தும் அவர்களிடம் வேரோடி இருக்கிறது. யாராவது தேவதூதன் வந்து இந்த பிரச்சினையை தீர்ப்பார்கள் என்ற நம்பிக்கையும் இல்லை. ஒருவகையில் தோல்வியையும், இழப்புக்களையும் ஏற்றுக் கொண்டே வாழ்வது எனும் ஓட்டத்தில் இருக்கிறார்கள். ஆனால் அந்த ஓட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு?

  • வினவு புகைப்படச் செய்தியாளர்கள்