Tuesday, July 8, 2025
முகப்பு பதிவு பக்கம் 409

தாய்மை அடையாளத்தை போருக்கான ஆயுதமாக மாற்றுவோம் ! பெண்கள் உரைகள் – படங்கள்

வன்முறையற்ற இந்தியாவை உருவாக்க: ஜனநாயகம் மற்றும் அமைதிக்கான பெண்களின் பரப்புரைப் பயணம்!

 நாடு முழுவதும் அதிகரித்து வரும் பெண்கள், சிறுமிகள், ஒடுக்கப்பட்ட- சிறுபான்மையினர், தலித்துகள், முற்போக்காளர்கள், எழுத்தாளர்கள், புரட்சிகர போராளிகள் என சமூகத்தின் அனைத்து தரப்பு மக்கள் மீதும் மோடி அரசு நிகழ்த்தி வரும் பாசிச தாக்குதல்களை அம்பலப்படுத்தி,  “வன்முறையற்ற இந்தியாவை உருவாக்க….. ஜனநாயகம் மற்றும் அமைதிக்கான பெண்களின் பரப்புரை பயணம்” இந்தியா முழுவதும் ஐந்து முனைகளிலிருந்து நடந்து வருகிறது.

தமிழகத்தில் செப்-22 கன்யாகுமரியில் தொடங்கி செப்-25 வரை சென்னையிலும், தொடர்ச்சியாக அக்டோபர் 13 வரை பயணித்து டெல்லியில் நிறைவுறுகிறது.  இதில் சிறப்பு என்னவென்றால் இந்தியா முழுவதும் உள்ள பெண்கள் அமைப்புகளை ஒருங்கிணைத்து நடத்தப்பட்டு வருகிறது என்பதே. அந்த அடிப்படையில் தமிழகத்தில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழ்நாடு பெண் பத்திரிகையாளர் சங்கம், பெண்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட இருபத்தி ஐந்து அமைப்புகள் இந்தக் கூட்டமைப்பில் பங்கெடுத்துள்ளன.

தமிழக பயணத்தின் இறுதி நாளான செப் 25-ம் தேதி சென்னை அடையாறில் உள்ள டி.என்.ராஜரத்தினம் ஆடிட்டோரியத்தில் அரங்கக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தின் முதல் நிகழ்ச்சி இந்துத்துவ வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட தோழர் கவுரி லங்கேஷிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பிறகு அவருக்காக உருவாக்கப்பட்ட பாடல் ஒலிபரப்புடன் இந்நிகழ்ச்சியை பேராசிரியர் கல்பனா தொகுத்து வழங்கினார்.

அவருடையை அறிமுகவுரையில், “பெண்களின்  இந்தப் பிரச்சார பயணம் வரலாற்று சிறப்பு மிகுந்த ஒரு பயணமாக அமைந்துள்ளது. இன்று நமது அரசியல் சாசனத்தின் கோட்பாடுகளை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ஜனநாயகத்தை காக்க, அமைதியை நிலைநாட்டுவதற்காக,  வன்முறை இல்லாத  ஒரு இந்தியாவை, சாதி வெறி, மதவெறி, வர்க்க ரீதியான வன்முறைகள் இல்லாத இந்தியாவை படைப்பதற்காக பெண்கள் நாடெங்கும் போர்க்களத்தில் இறங்கியிருக்கிறோம்.  இந்தியாவின் ஐந்து முனைகளில், தமிழ்நாடு,கேரளா,ஜம்மு காஷ்மீர், அசாம், டில்லியிலிருந்து  பெண்கள் மட்டுமே பங்கேற்கக் கூடிய இப்பிரச்சார பயணம்,  செப்டம்பர் 22-ம்தேதி தொடங்கி  அக்டோபர் 13 தேதி டெல்லியில் சங்கமிக்க உள்ளனர்.  நாடு தழுவிய இந்த இயக்கத்தில் சுமார் ஐநூறு இயக்கங்களும், பெண்களும் பங்கேற்க உள்ளனர்.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கல்பனா.

அடிப்படை உரிமைகளுக்காக போராட பெண்கள் களத்தில் இறங்கிவிட்டால் வெற்றி நிச்சயம் என்று நாம் எடுத்துக் கொள்ளலாம்.  இதை நான் எந்த அடிப்படையில்  சொல்லுகிறேன் என்றால், ‘இங்கிலாந்தின் க்ரீன்ஹாம் காமன் என்று சொல்லக்கூடிய பகுதியில் இங்கிலாந்து அரசு அணு ஆயுதங்களை குவித்தது. இது நடந்த பிறகு  1981 லிருந்து 2001  வரை கிட்டதட்ட  19 ஆண்டுகள் அந்த இடத்தில் பெண்கள் அமைதி முகம் அமைத்து குவிந்தனர்.  “இந்த அணு ஆயுதங்கள் எங்களுக்கு வேண்டாம். நமது நாட்டுக்கு தேவை இல்லை.  எங்களுக்கு தேவை அமைதி. வளர்ச்சி.  சமாதானம்.  நாங்கள் தான் எங்கள் உயிரை கொடுக்கின்றோம்.  எனவே எங்கள் குழந்தைகளுக்கு வருங்காலம் வேண்டுமென்றால் அணு  ஆயுதங்கள் இருக்கக் கூடாது” என்று சொல்லி க்ரீன்ஹாம் காமன்  என்னும் அந்த மிலிட்டரி பேஸில் கிட்டதட்ட 3,00,000 பெண்கள் சூழ்ந்து கைகோர்த்து இரவிலும் தங்கி போராடினார்கள்.

அடுத்து, 1977  அர்ஜண்டினாவில் ராணுவ சர்வாதிகார அரசு ஒன்று வந்த போது அந்நாட்டின் பல இளைஞர்கள் கடத்தப்பட்டு,கொலை செய்யப்பட்டு, பல சித்தரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர்.   அப்போது அந்த நாட்டின் சராசரி பெண்கள்  “பிரிடென்ஷியல் பேலஸ்” முன்னால் ஒவ்வொரு வாரமும் கூடினார்கள். 77 லிருந்து 83 வரை  “எங்கே எங்கள் குழந்தை” என்று கேள்வி எழுப்பினார்கள்.

(பிரச்சார பயணத்தில் ஈடுபட்ட 17 பெண்கள் உள்ளே முழக்கமிட்டவாறு வருகின்றனர்)

இதன் பிறகு தான் உலகிற்கு அந்த மனித உரிமை மீறல் தெரிந்தது. இந்த போராட்டம் தான் அரசு பதில் சொல்லும் கடமைக்கு ஆட்பட்டது. அவர்கள் ’தாய்’ என்னும் அடையாளத்தை முன்வைத்து,  அரசியல்படுத்தி ஒரு சர்வாதிகார அரசை வீழ்த்தினார்கள்.

அதேபோல் மணிப்பூர் மாநிலத்தில், தஞ்சம் மனோரமா 2004-ல் அஸ்ஸாம் ரைபிள்ஸ்… ராணுவத்தினரால் சிதைக்கப்பட்டு வன்புணர்ச்சி கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். அந்த சம்பவம் நடந்த ஒரு வாரத்தில் பன்னிரண்டு  பெண்கள்,  இந்திய ராணுவ அலுவலகம் முன்பு கூடி ”இந்திய ராணுவமே எங்களையும் கற்பழி” என்று போராட்டம் நடத்தினார்கள். அதன் பிறகே இந்த கொடுமை வெளி உலகுக்கு தெரிந்தது.

இந்திய இராணுவத்திற்கு எதிராக மணிப்பூர் பெண்கள் போராட்டம்

எனவே நமது முன்னோர்கள் நமக்கு வழிகாட்டியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு வீரவணக்கம் சொல்கிறோம். தாய்மை என்ற அடையாளத்தை போருக்கான ஆயுதமாக மாற்றியவர்கள் பெண்கள்.

‘தாய்மை தான் உன் அடையாளம் என்று இந்த சமூகம் பெண்களை பார்த்தது சொல்லும்போது  அந்த அடையாளத்தையே போருக்கான ஆயுதமாக  மாற்றியவர்கள் நம் பெண்கள்’ என்பதை மறந்து விடக்கூடாது.  உடலை வைத்துதான் உன்னை தாக்குவோம் என்று சொல்லும்போது தன் உடலையே  ஒரு போராயுதமாக மாற்றிய பெண்களை நாம் மறந்து விடக் கூடாது.

இந்த வீர ஆவேசத்துடன் அமைதிக்கான உரையாடல்களை நடத்துவோம். ஜனநாயகத்தை பாதுகாப்போம். வன்முறை இல்லாத இந்தியாவை படைப்போம்.  அரசியல் சாசனத்தின் அடிப்படை கோட்பாடுகளுக்காக போராடுவோம்” என்று சொல்லி அறிமுக உரையை முடித்தார்.

அதனைத்தொடர்ந்து “புத்தர் கலைக் குழுவினரின் பறையிசை நிகழ்ச்சி” நடைபெற்றது.

முனைவர் வசந்தி தேவி அவர்களின் தலைமையுரையில்  “இன்று நம்பிக்கைகள் எல்லாம் நசிந்து போய்க் கொண்டிருக்கின்ற ஒரு காலத்திலேயே  பெண்களுடைய எழுச்சி, இருள் சூழ்ந்த நேரத்திலேயே ஒரு ஒளிக்கற்றையாக இருக்கிறது. இந்தியா சந்தித்துக் கொண்டிருக்கின்ற அபாயத்திற்கு இந்த படைதான் முன்னிற்க வேண்டும்.

மத்தியிலே இருக்கும் அரசும்,  அதை  சார்ந்து இருக்கின்ற சித்தாந்தமும்,  இந்துத்துவ வெறித்தனங்களும் இன்றைக்கு நாட்டையே சூறையாடிக்கொண்டிருக்கின்றன.   இதிலிருந்து நாம் எப்படி இந்திய ஜனநாயகத்தை காப்பாற்ற போகின்றோம் என்ற மிகப்பெரிய கேள்வி நம் முன்னால் இருக்கிறது.

முனைவர் வசந்தி தேவி.

பாசிசத்தின் கொடிய பிடியில் இந்தியா இருக்கிறது.  எங்கு பார்த்தாலும் வன்முறை. ஒன்று அரசு பயங்கர வாதத்தின் வன்முறை. மற்றொன்று அதன் துணையோடு நடந்து கொண்டிருக்கின்ற கும்பல்களின் வன்முறை.  இதற்கு பலியாகின்றவர்கள் எல்லாம் நாட்டின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த மக்கள். தலித், முசுலீம் தான்.

பல ஆண்டுகள் போராட்டத்திகிற்கு பிறகு கிடைத்த அரசியல் சாசன உரிமைகள் எல்லாம் நசுக்கக்கப்பட்டு வருகின்றன.  பயங்கரமான கருப்பு சட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றனர். சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள்,  ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுபவர்கள் இவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டு நசுக்கப்படுகிறார்கள். இது தமிழ்நாட்டிலேயே மிக அதிகமாக நடக்கிறது. தமிழக அரசு மத்திய அரசின் கைப்பாவையாக இருக்கிறது. போலீசின் அராஜகம் நடந்து வருகிறது.

மத்தியிலேயே இருக்கும் அரசுக்கு ஆட்சியை பிடிக்க ஒரே வழி  வன்முறையை தூண்டுவது.  மக்களை பிரித்து ஆள்வது, எதிரெதிர் அணியை உருவாக்கி வருகிறது.

வியாபாரிகள், விவசாயிகள் எல்லாம் வீழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். பயங்கர பொருளாதார வீழ்ச்சி. அனைத்தும் கார்ப்பரேட் கையில் உள்ளது. ரஃபேல் ஊழலில் மிகப்பெரிய கொள்ளை நடந்து கொண்டிருக்கிறது. இதை எல்லாம் மாற்ற வேண்டும் என்றால் அணிதிரள வேண்டும். இந்த போராட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் உரையை முடித்துக் கொண்டார்.

தி.மு.க. மகளிரணி புரவலர் திரு.விஜயா தாயன்பன்

அடுத்ததாக தி.மு.க. மகளிரணி புரவலர் திரு.விஜயா தாயன்பன் அவர்கள் வாழ்த்துரையில்,  “இது பேச்சுக்கான இடமில்லை. உணர்வுக்கான சங்கமம் என்று உணர்ந்து கொண்டேன்.  இந்த நாட்டிலே எந்த சாரரும் நிம்மதி இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு ஏற்படுகின்ற கொடுமைகளை நாம் ஏராளமாக சொல்லிக்கொண்டே போகலாம். கதுவாவில் அந்த 8 வயது சிறுமிக்கு நடந்ததை நிச்சயமாக நாம் மறக்க முடியாது.  சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பிலே நடந்த வன்புணர்வை முடியாது.

பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் ஏற்படும் இந்த மோசமான நிலை அறவே ஒழிக்கப்பட வேண்டும். இன்று எந்த பேச்சு சுதந்திரமும் இல்லை, எழுத்து சுதந்திரமும், கருத்து சுதந்திரமும் இல்லை. நாம் அஞ்சலி செலுத்தியவர்களுக்கு எப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டதோ அதைப் போன்ற நிறைய பேச்சாளர்கள், எழுத்தாளர்களை ஒழிக்கும் ஆட்சிதான் மத்தியில் ஆகட்டும், மாநிலத்தில் ஆகட்டும் நடந்து கொண்டிருக்கிறது. இதனை மாற்றவேண்டுமென்றால் இந்த பயணம் வெற்றிகரமாக மாறவேண்டும். மத்தியில் ஆண்டு கொண்டிருக்கின்ற அரசு மாற்றப்பட வேண்டும், அகற்றப்பட வேண்டும். அதற்கான வழியை இந்த பயணம் ஏற்படுத்தும்” என்று முடித்தார்.

நிஷா சித்து.

அவரைத்தொடர்ந்து பிராச்சாரக் குழுவில் தலைமையேற்பவரில் ஒருவரான ராஜஸ்தானை சேர்ந்த நிஷா சித்து அவர்கள் பேசுகையில்,   “நாம் பல மொழி பேசுபவர்களாக இருந்தாலும் நம்முடைய ஒரே ஒரு நோக்கம் அமைதியான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதுதான். மாணவர்கள் உதவித்தொகை பற்றி கேட்டால் தேசத் துரோக வழக்கில் கைது செய்கிறார்கள். அக்லக், பெகுலுகான் அடித்துக் கொல்லப்படுகிறார்கள்.  மத்தியில் இருக்கும் ஆட்சி பொய் மேல் பொய் சொல்லி ஏமாற்றி வருகிறது. இனி இந்த ஆட்சியை ஒருபோதும் வர விட மாட்டோம். பெண்கள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்து விட்டது அதை தடுப்பதற்கு மோடி ஆட்சி எந்த காரணம் கொண்டும் வரவிடக்கூடாது. நமக்கு ஜியோவும் வேண்டாம்.. ராம்தேவின் எந்த பொருளும் தேவையில்லை. நமக்கு தேவை ஒரு அமைதியான இந்தியா” என்று  முடித்தார்.

அடுத்ததாக பேசிய இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் தமிழக ஒருங்கிணைப்பாளர் தோழர் பத்மாவதி அவர்கள் பேசியபோது, “ இன்றைக்கு இந்த நாட்டை சூறையாடிக்கொண்டிருக்கின்ற பல்வேறு பிரச்சனைகள். பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. பெண்களுக்கு என்றே உருவாக்கப்பட்ட சட்டங்கள் நம் கையில் வந்து சேருவதற்கே பல்வேறு போராட்டங்கள் நடத்த வேண்டிய காலகட்டத்தில் இருந்து கொண்டிருக்கின்றோம்.

தோழர் பத்மாவதி.

அந்த ஜனநாயகத்தை தேடித்தேடி அலைந்து அலைந்து அந்த கோவத்தின் உச்சம் ஒன்று திரண்டு இந்தியா முழுவதும் ஐநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் அமைப்பு இந்த பிரச்சார யாத்திரையை முன் வைத்திருக்கிரார்கள். வருங்காலத்தின் இந்த ஜனநாயக அமைப்பும், நாடும் அதிகாரமும் நமக்கானதாக மாற வேண்டும்.” என்று கூறி முடித்தார்.

அவரைத்தொடர்ந்து பிரச்சாரக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆன்னிராஜா பேசுகையில்,  “இந்தியாவில் இதற்கு முன்பு பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடந்துகொண்டு தான் இருக்கிறது. ஆனால் கடந்த காலத்தை காட்டிலும் தற்பொழுது அவை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. எங்கும் பாதுகாப்பு இல்லை. வீடு, பள்ளி, பஸ், கோவில், மசூதி, சர்ச் என எல்லா இடங்களிலும் பாதுகாப்பு இல்லாத நிலை.

அதுமட்டுமல்லாமல், எம்.எல்.ஏ பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக பா.ஜ.க மந்திரிகள் போராடுகிறார்கள். “பெண் குழந்தைகளை பாதுகாப்போம்- பெண் குழந்தைக்கு கல்வி கொடுப்போம்” என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் ஹரியானாவில் சி.பி.எஸ்.இ பாடத்தில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவியை கூட்டு வன்புணர்வு செய்கிறார்கள்.  அங்கு இருக்கக் கூடிய ஒரு எம்.எல்.ஏ “ இளைஞர்களுக்கு வேலை இல்லாததால்தான் அப்படி செய்கிறார்கள்” என்று சொல்கிறார்.

தோழர் ஆன்னிராஜா.

ஜார்கண்டில் மாட்டை எடுத்து சென்ற ஒரு இளைஞரை கோடாரியால் அவருடைய காலை வெட்டி கொலை செய்கிறார்கள். அந்த இளைஞரின் தாய் கொலை செய்தவனை பிடித்து நியாயம் கேட்கிறார். அப்பொழுது அவருடைய கையில் இருந்த கண்ணாடி வலையல் உடைந்து கொலையாளியின் கையை அறுத்து விடுகிறது… அதற்கு அந்த தாயின் மீது கொலை வழக்கு பதிவு செய்யும் கொடுமை நடக்கிறது.

சந்தோஷ் என்ற சிறுமி உணவில்லாமல் இறக்கிறார்.  ஒருபக்கம் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வருகிறது என்கிறார்கள். மற்றொரு புறம் பட்டினி சாவுகள் அதிகரித்து வருகிறது.  இப்படி ஒரு நிலை இருக்கும்போது எப்படி அமைதியாக இருக்க முடியும்? என்ற கேள்வியை முன்வைக்கிறார் ஆன்னிராஜா.

நம்ம குழு அஜிதா பாடல்.

தொடர்ந்து,  பெண்கள் விடுதலை முன்னணி அமைப்பின் நம்ம குழு பாடல்கள் சார்பாக, “பாரத மாதா நீயுமம்மா… பாத்து இருந்துக்க பத்திரமா… எட்டு வயசு குழந்தைய குதறும் வக்கிர தேசமம்மா… அஸ்வினி.. நந்தினி..ஆசிபா-ஹாசினி ரத்தம் கொதிக்குதம்மா…. இந்த சிசுவை மேய்ந்த சேவகர் எல்லாம் பசுவுக்கு காவலம்மா…” என்ற பாடல் அரங்கம் அதிர ஒலித்தன.

மஞ்சள் நாடகத்திலிருந்து ஒரு காட்சி.

அதனைத்தொடர்ந்து கட்டியக்காரி நாடகக் குழுவினரின்…  பள்ளி, கல்லூரிகளில் நடக்கும் சாதி தீண்டாமையை தோலுரிக்கும் விதமாக “ மஞ்சள்” நாடகத்தின் ஒரு பகுதியை அரங்கேற்றப்பட்டது.

இந்த நிகழ்விற்கு பிறகு பேசிய சமூக செயற்பாட்டாளர் தோழர் கீதா அவர்கள் ,  “ இந்து மதம் சாதியை, பெண்ணடிமைத்தனத்தை காப்பாற்றும் மதம். இங்கு இருக்கக் கூடிய எல்லா மூட நம்பிக்கைக்கும், ஏற்றத்தாழ்விற்கும் அரணமைத்துக் கொடுக்ககூடியது இந்து மதம்’ என்று 100 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பெரியாரும், பெரியாரை சார்ந்த இயக்கங்களும் தொடர்ந்து பேசிக்கொண்டுதான் வருகின்றன.

இந்து மதம் மிக மோசமான, வக்கிரமான எந்த வகையிலும் நம்முடைய உரிமைகளை மீட்டுத்தர முடியாத  குடும்ப வன்முறையையும் தடுக்க வக்கில்லாத ஒரு மதம்.

சமூக செயற்பாட்டாளர் தோழர் வ.கீதா.

நாம் அரசு வன்முறையைப் பற்றி பேசுகிறோம்… பெண்கள் மீதான வன்முறையைப் பற்றி பேசுகிறோம். ஆனால் குடும்ப வன்முறையைப் பற்றி  பேசுவது கிடையாது.  அண்மையில் ஹைதராபாத்தில் நடந்த சம்பவம் முதல் இளவரசன் கொலை வரை நமக்கு தெரியும்.  இதனை எல்லாம் யாரும் ஏவி விட்டு செய்வதில்லை. அதற்கு அடித்தளமிட்டுக் கொண்டிருக்கும்  சாதியும், குடும்ப வன்முறையும் தான் இதை சாத்தியப்படுத்துகின்றன.

இந்த நாட்டில் வக்கிரம் பிடித்த சாதியமைப்பும், குடும்ப அமைப்பையும் வைத்துக்கொண்டு வன்முறையற்ற இந்தியாவை எப்படி உருவாக்க முடியும?  இந்த இரண்டையும் கட்டிக் காக்கும் அரசு எத்தகைய கொடூரமானதாக இருக்கும்…. என பேசினார்.

அடுத்த நிகழ்வாக “மனிதி மற்றும் ஆக்ட் நாடகக் குழுவினரின் “பல்லக்கு தூக்கிகள்” வாழ்க்கை அவலத்தை சொல்லும் நாடகம் அரங்கேற்றப்பட்டது.

சட்டக்கல்லூரி மாணவி கோவை பிரியா.

நாடகத்தைத் தொடர்ந்து கோவை சட்டக் கல்லூரி மாணவி பிரியா, பேசுகையில்,  “குரங்கு கையில் பூமாலை கொடுத்தால் எப்படி இருக்குமோ அது மத்திய அரசு…  அறுக்கத் தெரியாதவன் கையில் ஐம்பத்து எட்டு அரிவா.. என்பார்கள் அது தமிழக அரசு… ஒரு ஆட்சிய நடத்தத் தெரியாதவன் கிட்ட கொடுத்தா கம்பராமயணத்த எழுதினவரு கூட சேக்கிழாரா மாறுவாரு…

இந்தியா என்பதே ஒரு வன்முறைதான். அரசியலமைப்பு சட்டத்தில் அது ஒன்றியம் என்றே அழைக்கப்படுகிறது. அதனை எல்லாம் ஒருங்கிணைத்து இந்தியா என்றார்கள். இந்தியா என்று அழைத்தால் இந்து-இந்தி- இந்தியா என்று அழைத்தாக வேண்டும் என்று நமக்கு பதிய வைக்கப்படுகிறது. எனவே  நாமே அதற்கு வழி வகுக்கக் கூடாது.  வன்முறை இருக்கிறதென்றால் அந்த வன்முறை யாரால் யாருக்காக நடத்தப்படுகிறது.. அம்பானி அதானி போன்றோருக்காக நடத்தப்படுகிறது. அதற்கு நாம் அமைதியாக இருக்க வேண்டும். இந்த அமைதி தான் அவர்களுக்கு பலமாகிறது. எனவே அந்த வன்முறையை நாம் ஒழிக்க வேண்டும்.

இந்துத்துவத்துக்கு எதிரா தீர்ப்பு கொடுத்த லோயா மர்ம மரணம். அமித்ஷாவுக்கு ஆதரவா தீர்ப்பு கொடுத்தா ஆளுநர் பதவி கிடைக்கும். இது நீதித்துறையில் இருக்கும் வன்முறை. ஆக வன்முறை என்பது எல்லா இடங்களிலும் நிலவி கிடக்கிறது. எனவே நம்முடைய பயணம் அமைதியானதாக இருக்கக் கூடாது. முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் என்பது போல் இந்த இந்துத்துவ வன்முறையை ஒழிக்க புரட்சி என்ற வன்முறையை கையில் எடுக்க வேண்டும்” என்றார்.

வழக்கறிஞர் அருள்மொழி.

தொடர்ந்து காளீஸ்வர குழுவின் கரகாட்டம் நடைபெற்று  முடிந்த பிறகு திராவிடர் கழகத்தின் தோழர் அருள்மொழி அவர்கள் பேசுகையில்,  “இந்தியாவ காப்பாத்தனும்னு இப்பதான் நாம் முடிவெடுத்திருக்கோம். அதுக்குள்ளவே அவங்க அவ்வளவு ஆட்டம் காட்டிடாங்க. இந்தியாவ யார்கிட்ட இருந்து காப்பாத்துறது? இதான் இங்க பிரச்சனை. அல்லது, எங்க முறையிட்டு காப்பத்துறது?

ஒரு வழக்கை விசாரிக்கும் நீதிபதி… இந்த நாட்டின் ஆளும் கட்சியின் தேசிய தலைவருக்கு சம்மன் அனுப்புகிறார். தண்டனை கொடுக்கவில்லை. வழக்கு விசாரணை முடியல. சம்மன் அனுப்பினார். சம்மன் அனுப்பினா என்ன பண்ணனும்.. கோர்ட்டுக்கு வரனும்… யார் வருவாங்க.. சாதாரண குடிமக்கள் வருவாங்க. இவங்க எல்லாம் அப்படி இல்ல. அவர் வர்ல.  வராததால் அந்த நீதிபதி கொஞ்சம் கடுமையா , நான் டிரையலை நடத்தி முடிக்க போறேன். நீங்க வர்லன்னா வாரண்ட் போட்டுடுவேன். இதை சொல்லுவதற்கு ஒரு நீதிபதிக்கு அதிகாரம் இருக்கு   என்று அவர் நம்பியது சட்டம். அப்படி நம்பியதற்கு அவர் மர்மமான முறையில் மரணம் அடைந்தது இந்த நாட்டின் நிலமை.

கொலை செய்வது, குண்டு வைப்பது. எத்தனை விதமான வன்முறையில்  நடவடிக்கையில் ஈடுபட்டது யார்? சாமியார் அசீமானந்தா. சாமியார் என்றால் சாதாரண  சாமியார் இல்லை. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முக்கிய அமைப்பான வனவாசி கல்யாண் என்ற அமைப்பின் தலைவர். பழங்குடி மக்களை தாய் மதம் திரும்புவது என்ற பெயரில் கர்வாப்சி செய்ய ஒவ்வொரு மாநிலத்திலும் செயல்படுவதற்கான அதிகாரம் பெற்ற அசீமானந்தா.. வெளிப்படையாக வாக்குமூலம், பேட்டிகள் கொடுத்தார். பத்திரிக்கைகளில் வந்தது.

மாலேகான் முதல் ஹைதராபாத் குண்டு வெடிப்பு வரை எப்படி திட்டமிடப் பட்டது. ரயில்ல வெடிச்சதே ஒரு குண்டு. அந்த ரயில்ல வெடிச்ச குண்டை வச்சி படமே எடுத்துட்டாங்க. இந்த கூட்டத்திற்கு பயிற்சியும் கொடுத்து, வெடிகுண்டுகள் வழங்கியது புரோகித் என்ற ராணுவ அதிகாரி. இது சம்பந்தபட்ட வழக்குகளை விசாரித்த நீதிபதி ஒருவர் கொஞ்சம் கடுமையா இருந்ததால அவருக்கு நடப்பது மரணம்.

இதனுடைய இன்னொரு குண்டு வெடிப்பு நடந்த ஹைதராபாத் வழக்குல அந்த அசீமானந்தா உட்பட அத்தனை பேரையும் விடுதலை செய்த நீதிபதி, ஒரு மணி நேரத்தில் பதவியை ராஜினாமா செய்கிறார்.  அந்த நீதிபதி ராஜேந்திரன் பாஜகவில் சேர்ந்து விட்டார். உலகில் இப்படி ஒரு வெட்கக்கேடானா ஜனநாயகமா இது? உலகத்துல எந்த நாட்டுலயாவது  நடக்குமா? ஒரு வழக்கை விசாரிக்கும் நீதிபதி மிக முக்கியாக குண்டு வெடிப்பு வழக்கில் இருக்கும் அத்தனை பேரையும் விடுதலை செய்கிறார் என்று சொன்னால் இதைவிட இந்த நாட்டில் ஜனநாயகப் படுகொலை நடப்பதற்கோ, பேசுவதற்கோ வேறு மிச்சம் இருக்கா?

கூட்டத்தில் பங்கேற்றவர்கள்.

இப்ப யார் யார் எல்லாம் ராணுவத்துல பதவியில இருப்பாங்கன்னு யோசிச்சி பாருங்க. ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ்ல பயிற்சி அளிக்கப்படவர்கள் தான் ராணுவத்தில் இருப்பார்கள். நம்ம ஊரில் ஒரு கலவரம் என்றால் ராணுவம் வரும். அப்ப என்ன நடக்கும்?

பாஜக கட்சியை சேர்ந்த சுஷ்மா சுவராஜிக்கே பாதுகாப்பு இல்லை.  ஒரு இந்து-முசுலிம் தம்பதியினருக்கு  பாஸ்போர்ட் மறுக்கப்படுகிறது. இதற்க்காக அந்தப் பெண் சுஸ்மாவிற்கு கடிதம் எழுதுகிறார். உடனடியாக பாஸ்போர்ட் மறுத்த அந்த அதிகாரி மாற்றப்படுகிறார். அனுமதி வழங்க உத்தரவிடுகிறார். இந்த சம்பவத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் சுஷ்மா போடுகிறார். அதை கண்டித்து ஒரு லட்சம் பேர் தாகாத முறையில் திட்டுகிறார்கள். இதை எந்த அமைச்சர்களும் கேட்கவில்லை என்று சுஷ்மா சொல்லும் போதுதான் ராஜ்நாத் சிங் இதனை கண்டிக்கிறேன் என்று அறிக்கை விடுகிறார்.

தன் சொந்தக் கட்சியில் உள்ள ஒரு பெண்ணுக்கு இதுதான் கதி என்றால்…. கவுரி லங்கேஷ் கொல்லப்பட்டத்தில் ஆச்சரியமில்லை. இப்படிபட்ட கொடூர மனம் படைத்த குற்றவாளிகளிடமிருந்து இந்த நாட்டை காப்பாற்றி, அமைதியான நாடாக, வன்முறையற்ற சமுதாயமாக பாதுகாப்பான ஒரு இடமாக மாறுவதற்கு யார் முன்வர முடியும்? இந்த உயிர்களை காக்க வேண்டும் என்று அக்கறை கொண்ட பெண்கள், ஆண்களுடைய போர்களால் அழிந்து போன பெண்கள், அந்த போர்களின் அழிவின் விளைவுகளை எல்லாம் தாங்குகின்ற பெண்கள்… அவர்கள் தான் இன்றைக்கு அறைகூவல் விடுக்கிறார்கள்” என்று முடித்தார்.

அமைப்புசாரா தொழிலாளர் தேசிய இயக்கத்தின் தோழர் கீதா

இறுதியாக உரையாற்றிய அமைப்புசாரா தொழிலாளர் தேசிய இயக்கத்தின் தோழர் கீதா அவர்கள் பேசுகையில்,  “கொத்தடிமை- குழந்தை தொழிலாளர்கள் அதிகம் உள்ள நாடு இந்தியா. இது சாதியத்தோடு பின்னிப் பிணைந்த ஒரு முறையாக உள்ளது.இது பெண்ணடிமைத்தனத்தோடு பிணைந்து விட்டது. இந்தக் கொடுமையைப் பார்க்கும்போது இது சுதந்திர நாடா என்ற கேள்வி எழுகிறது. தொழிலாளர்கள் சட்டத்தை திருத்தி தொழிலாளர்களை அடிமையாக்குகிறது இந்த அரசு.  வளர்ச்சி என்ற பெயரில் விவசாயத்தை அழித்து, நகரத்தில் குடிசையை அகற்றி வேலையில்லாதவர்களாக மாற்றுகிறார்கள்.  உழைக்கும் மக்களின் நிலம் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படுகிறது. எனவே இந்த வாழ்வாதாராம் பாதுகாக்க நிலம் உறுதி செய்யப்பட்டாக வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினார்.

இறுதியா அமைதிக்கான உரையாடல் சென்னை ஒருங்கிணைப்பாளர் தோழர் மஞ்சுளா அவர்களின் நன்றியுரைடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

ஸ்டெர்லைட் ஆய்வுக்குழு : மோடி எடப்பாடி அரசுகளின் நாடகம் | காணொளி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய வந்திருந்த தேசிய பசுமைத் தீர்ப்பாய ஆய்வுக் குழுவினர், 23-09-2018 அன்று தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக்கில் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தினர்.

இக்கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கு சுற்றுவட்டாரத்தை கிராம மக்கள் பெருந்திரளாக வந்திருந்தனர். ஆலையை மூட வேண்டுமென்ற கோரிக்கைகளோடு வந்திருந்த மக்கள் திரளில் வயதான மூதாட்டிகளையும் குழந்தைகளையும் கணிசமாக காணமுடிந்தது. தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கும் முழக்கத் தட்டிகளைப் பிடித்திருந்த அவர்கள் தொண்டை வற்றும் வரையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக முழக்கமிட்டபடியே இருந்தனர்.

அப்போது, சினிமா சூட்டிங்கிற்கு வந்து செல்வதைப் போல, மேட்டுக்குடி ’காஸ்டியூமில்’ ’இங்கிலீஷ்’ மட்டுமே பேசத் தெரிந்த கும்பலொன்று கூட்டத்திற்குள் புகுந்தது. கூடவே, அப்பாவி கிராம மக்கள் சிலரையும் கூட்டி வந்திருந்தது. கூடியிருந்த மக்களிடம் ”ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடினால், போலீசின் கண்காணிப்பிற்கு உள்ளாவீர்கள்” என்று நக்கலாகவும் திமிர்த்தனமாகவும் போதித்தது. அவர்களை மடக்கிப் பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்தனர், அங்கு திரண்டிருந்த மக்கள். போலீசு அவர்களை பாதுகாப்பாக மீட்டுச் சென்றது. 

ஸ்டெர்லைட் ஆலையால் காசு கொடுத்து கூட்டிவரப்பட்ட அக்கூட்டத்தினரிடம் இருந்தது, அனைத்தும் செட்டப் செய்யப்பட்ட கடிதங்கள். தூத்துக்குடி நகரின் பல்வேறு சிறு கம்பெனிகள் லெட்டர்பேடு நிறுவனங்கள் அனைத்தும், இக்கூட்டத்தில் பங்கேற்று தமது கருத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதியாக டி.வேல்சங்கர் என்பவரை நியமித்திருப்பதாக அறிவிக்கின்றன இக்கடிதங்கள். அக்கும்பலிடமிருந்து கைப்பற்றப்பட்ட கடிதங்களின் நகல்கள்தான் இவை.

பாஜக-விற்கு பதினைந்து கோடி ரூபாயை அதிகாரப்பூர்வ நன்கொடையாக கொடுத்திருக்கும் வேதாந்தா முதலாளிக்கு இதெல்லாம் கைவந்த கலை!

நால்வருணக் கோட்பாடு நல்லது என்கிறது சைவ சித்தாந்தம் !

2

பார்ப்பனர்கள் இவ்வுலகின் தேவர்கள் – சைவ சித்தாந்தம்
நால்வருணக் கோட்பாடு நன்மைப் பயப்பதே – சைவ சித்தாந்தம்

நண்பர்களே….

பொ. வேல்சாமி
20 -ஆம் நூற்றாண்டில் கூட தமிழ் அறிஞர்களில் பலரும் கடந்த காலங்களில் “சைவ சித்தாந்தம்தான்” தமிழர்களுடைய “தனிபெரும் தத்துவம்” என்று எழுதியும் பேசியும் வந்துள்ளனர், வருகின்றனர். இத்தகைய கூற்றுக்கள் என்னை பல ஆண்டுகளுக்கு முன்பே சைவ சித்தாந்தத்தைப் பயிலும்படி தூண்டியது. அப்படி பல வருடங்களாக சித்தாந்த நூல்களைப் படித்தேன். அப்பொழுது இவர்களுடைய கூற்றுக்கள் உண்மையானவைகள் அல்ல என்பதையும் அரசியல்அதிகாரம் சார்ந்த முழக்கங்கள் என்பதையும் அந்த நூல்களில் உள்ள பல செய்திகள் எனக்கு புலப்படுத்தின. அத்தகைய செய்திகளை நீங்களும் பார்க்க வேண்டும், சிந்திக்க வேண்டும் என்பதை தூண்டுவதற்காக அவற்றுள் ஒரு முக்கிய செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

சமஸ்கிருத நூல்களில் “பேரூரைகள்”(பாஷ்யங்கள்) பல உண்டு. ஆனால் தமிழ் நூல்களில் ஒரே ஒரு பேரூரைதான் காணப்படுகிறது. அதை எழுதியவர் 18 ம் நூற்றாண்டில் வாழ்ந்த “சிவஞான முனிவர்” என்பவர். இவர் தொல்காப்பியம் தொடங்கி தமிழ் இலக்கண நூல்கள் அனைத்திலும் சங்க இலக்கியங்களிலும் தமிழ் காப்பியங்களிலும் சைவ சித்தாந்த நூல்களிலும் வடமொழி இலக்கணத்திலும் இந்திய தத்துவ நூல்களிலும் தர்க்க நூல்களிலும் பெரும் புலமைப் படைத்தவராக உள்ளார் என்பதை அவர் எழுதியுள்ள நூல்கள் நமக்குப் புலப்படுத்துகின்றன. இத்தகைய பெரும் ஆற்றல் நிறைந்த சிவஞான முனிவர் எழுதிய “சிவஞானபோதப் பேரூரை”யில் உள்ள “சிறப்புப்பாயிரத்திற்கான” விளக்க உரை பகுதியில்,

“சூத்திரர் என்னும் பொதுப்பெயரே பற்றிச் சற்சூத்திரரையும் அசற்சூத்திரரோடு வைத்து எண்ணி இகழ்வர்; மனிதர் என்னும் பொதுப்பெயரே பற்றி மறையோரையும் அவ்வாறு சூத்திரரோடு வைத்து எண்ணி இகழ்வர் போலும் என்று ஒழிக.” என்று எழுதுகின்றார்.

இதே பகுதியில் இவர் நால்வருணக் கோட்பாட்டில் சூத்திரர்கள் கீழானவர்கள் என்பதையும் ஒத்துக்கொள்கிறார். அதே நேரத்தில் தானும் சூத்திரராக இருப்பதால் சூத்திரர்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கிறார்.
1.சற்சூத்திரர் 2.அசத்சூத்திரர்

அதாவது சற்சூத்திரர் என்பது தூய்மையான சூத்திரர். அசத்சூத்திரர் என்பது இழிவான சூத்திரர். இப்படி சொல்வதை அந்தக் காலத்திலேயே அறிவுள்ள சிலர் ஒப்புக் கொள்ள மறுத்துள்ளனர். அந்த மறுப்பாளர்களை நோக்கி இவர் கூறும் பதிலில் இவ்வுலகின் தேவர்களான பார்ப்பனர்கள் மனிதர்களாகிய உங்களை போன்றே வடிவத்தில் இருப்பதனால் பூதேவர்களான பார்ப்பனர்களையும் உங்களைப் போன்ற அற்ப மனிதர்கள் என்று கூறுவீர்களோ? என்று நகைத்து எழுதுகின்றார்.

பொ.வேல்சாமி: தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.
எழுதிய நூல்கள்:

  • பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
  • கோவில் நிலம் சாதி
  • பொய்யும் வழுவும்

பங்கு சந்தை 6 : லாபத்துக்கு முதலாளிகள் போடும் குட்டிகரணங்கள்

பந்தய மூலதனம் – 6

பங்குச் சந்தை குரங்குகளை வாங்கி விற்கும் சூதாட்டம் மட்டும்தானா?

நாம் ஏன் பங்குச்சந்தை பற்றி புரிந்துகொள்ள வேண்டும், நமக்கும் பங்குச் சந்தைக்கும் என்ன சம்பந்தம்? – கேள்விக்கு விடை தெரிய தொடர்ந்து படியுங்கள்.

திர்காலத்தில் தானும் வணிக பத்திரிகைகளில் பேசப்படும் தொழிலதிபராக ஆகி பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாக வளர்வதற்கு பிரகாஷ் என்ன பாடு படுகிறார் என்று பார்ப்போம். இது போல ஓடும் 1,00,000 பிரகாஷ்களில் ஒருவர் இன்ஃபோசிஸ் போல வளர்ந்தால் அதுவே பெரிய விஷயம்.

விலை ’ப்ரப்போசலை’ அனுப்பி 2 நாட்களுக்குப் பிறகு செல்லமணி கம்பெனிக்கு தொலைபேசினால் மாசிலாமணி. “என்ன சாரை பார்க்கணுமா? இல்ல சார், அவரு ரொம்ப பிசி. நேத்தைக்குத்தான் கோயம்புத்தூர் போய்ட்டு வந்தார். அடுத்த வாரம் ஜெர்மனிக்கு போகப் போறார். ஒரு ரெண்டு வாரம் கழிச்சு கூப்பிடுங்களேன்”

“இல்ல சார், போன வாரமே சாரை பார்த்து பேசி, விபரம் எல்லாம் அனுப்பிட்டேன். உடனேயே முடிவு பண்ணணும். நீங்க ஒரு தடவை ராமமூர்த்தி சார் கிட்ட கேட்டிருங்களேன். இல்ல அவர் நம்பர கொடுங்க நானே பேசிர்றேன்.”

“என்ன சார், சொன்ன கேக்க மாட்டீங்களா? சரி, சரி கேட்டுட்டு நானே லைன்ல வர்றேன்”.

அடுத்த நாள் போய்ப் பார்க்க, நேரம் வாங்கிக் கொள்கிறார்.

அடுத்த நாள் சந்திப்பில் ராமமூர்த்தி தயாராக இருக்கிறார். “என்னப்பா, நீங்க யூஸ் பண்ற சாஃப்ட்வேர்ல வேலை செய்ய நிறைய பேரு கிடைக்க மாட்டாங்களாமே?” “மன்னார் அண்ட் கம்பெனிக்கு வேலையை முடிச்சி கொடுத்துட்டீங்களா” என்று ஆரம்பித்து பல கேள்விகளை கேட்டு விட்டு இன்னும் சில புதிய தேவைகளையும் சொல்லி விட்டு, விலை பற்றி பேச ஆரம்பிக்கிறார்.

“என்னப்பா, 30 லட்சம் எல்லாம் இதுக்கு அதிகம்பா. நான் ஏதோ 2-3 லட்சம் இருக்கும், வாங்கி பார்க்கலாம்னு நினைச்சேன். நீ என்னடான்னா ஒரேயடியா 30 லட்சம்னு போட்டு அனுப்பியிருக்க” என்று ஒரு கொக்கியை போடுகிறார்.

“இல்ல சார், இதைச் செய்து முடிக்கிறதுக்கு 1 வருசம் ஆகிடும். எல்லா செலவையும் சேர்த்துதான் கணக்கு போட்டு சொல்லியிருக்கேன்.”

“எல்லாச் செலவையும் என்கிட்டையே வாங்கிடலாம்னு பார்க்கக் கூடாதுப்பா. முன்னேயே நான் சொன்னது போல எங்களுக்கு செஞ்சு கொடுத்தா பல பேர் வாங்க வருவாங்க. அப்படித்தான் யோசிக்கணும்”

ராமமூர்த்தியைப் பொறுத்தவரை செல்லமணி கம்பெனியின் ஆண்டு விற்பனை ரூ 100 கோடி. அதில் எல்லா செலவுகளும் போக சுமார் 10 கோடி லாபம் வருகிறது. இதில் தொழிலில் புதிதாக முதலீடு செய்வதற்கு வருசத்துக்கு ரூ 7-8 கோடி வரை ஒதுக்குவார்கள். தொழிற்சாலை எந்திரங்கள், வண்டிகள், கட்டிடங்கள் என்று முக்கியமான முதலீடுகள் போக மென்பொருளுக்கு என்ன கொடுக்க முடியும் என்ற ஒரு கணக்கு உண்டு. ஒரு மென்பொருளுக்கு 30 லட்சம் அந்த வகையில் பெரிய தொகைதான். இதுவரை இவ்வளவு முதலீடு மென்பொருளுக்கு செய்ததில்லை. இது ஒரு பக்கம்.

இன்னொரு பக்கம், இதே சாஃப்ட்வேரை இவ்வளவு செலவு பண்ணி நாமே செய்து கொள்ள முடியுமா என்றும் அவரது புத்தி குறுக்கே ஏர் ஓட்டுகிறது. அவரது தங்கச்சி பையன் ஒருத்தன் காலேஜில் கம்ப்யூட்டர் சைன்ஸ்தான் படிக்கிறான். அவனிடம் விபரம் கேட்டு ஆஃபிஸ்லேயே ஒரு இடம் கொடுத்து நான்கு சாஃப்ட்வேர் பையன்களை ஆளுக்கு 10,000- 12,000 சம்பளம் கொடுத்து வேலைக்கு வைத்து இதை செய்யலாம். ஆனால், பிரகாஷ் போல அனுபவம் வாய்ந்தவர்கள் இல்லாமல் செய்து முடிப்பது சிரமம். அப்படி ஒரு ஆளை வேலைக்கு எடுக்கப் போனால் லட்சக் கணக்கில் சம்பளம் கொடுக்க வேண்டியிருக்கும்.

இதுவே பி.எஸ்.எஸ்-க்கு போட்டியாக இன்னொரு நிறுவனம் விலை ’ப்ரப்போசல்’ கொடுத்திருந்தால் பேரம் பேசுவது ரணகளமாகத்தான் இருக்கும்.

இப்போது அப்படி போட்டிக்கு யாரும் இல்லை, இருந்தாலும் பிரகாஷ்-ஐ கொஞ்சம் மயக்கி எவ்வளவு செலவை குறைக்கலாம் என்று பார்க்க வேண்டும். ஒரு வருசம் ஆகும் என்று சொல்கிறார். அப்படின்னா 8 மாசம்தான் கணக்கு. கம்பெனில 4 பேருதான் வேலைக்கு வைச்சிருக்கிறார். மாசச் செலவு 2 லட்சம் வந்தாலும் 16 லட்சம்தான் செலவு ஆகும். கிட்டத்தட்ட ரெண்டு மடங்கு விலை சொல்லியிருக்கிறார் என்று மனக்கணக்கு போட்டுக் கொள்கிறார்.

அதாவது பிரகாஷ் 30 லட்சம் கேட்டதால் பேரம் பேசுகிறார். இதுவே 3 கோடி விலை சொல்லியிருந்தால், திரும்ப அழைத்திருக்கவே மாட்டார். 30 கோடி சொல்லியிருந்தால், காறி துப்பியிருப்பார். ஒரு கம்பெனி ஒரு பொருளை செய்து கொடுக்க முடிந்தால் அதனோடு போட்டி போட்டு அதே பொருளை செய்து விற்க பிறர் இருப்பது வரை செலவை விட பெரிய அளவு அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் சம்பாதித்து விட முடியாது.

ஒப்பந்தங்கள், லைசன்சுகள், தனித்திறமை இவற்றின் மூலம் போட்டிக்கு யாரும் வராதபடி தடுத்தால்தான் விலையை உயர்த்தி பல மடங்கு லாபம் சம்பாதிக்க முடியும். அப்படி லாபம் சம்பாதிக்கும் வகையில் பிராண்ட் ஏகபோகம், புதிய தொழில்நுட்பம், கனிம வளங்களுக்கான லைசன்ஸ் அல்லது அரசியல் தொடர்பு போன்றவற்றை வைத்திருக்கும் கம்பெனி மீதுதான் பங்குச் சந்தை பந்தயம் கட்டுவது நடைபெறும்.

அத்தகைய நிறுவனங்கள் பிரகாஷ் போன்ற சிறு முதலாளிகளிடமிருந்து அடி மாட்டு விலைக்கு சரக்குகளை வாங்குவதன் மூலமும் தமது ஏகபோக லாபத்தை அதிகரித்துக் கொள்ளும்.  ராமமூர்த்தியின் பேரம் எப்படி போகிறது என்று பார்ப்போம்.

“எல்லாம் புரியுதுப்பா, இப்போ எங்க பட்ஜெட்ல 5 லட்சத்துக்கு மேல போக முடியாது. கொஞ்சம் கணக்கு பார்த்து சரியா விலை சொல்லுப்பா”

“சரி சார், நீங்க இவ்வளவு சொல்றீங்களேன்னு நான் 25 லட்சத்துக்கு செய்றேன். எங்களுக்கு நஷ்டம்தான். ஆனா, நீங்க ராஜலட்சுமி கம்பெனிக்கும், வெற்றி என்டர்பிரைசஸ்க்கும் என்னை அறிமுகம் பண்ணி வெச்சிருங்க. அவங்க உங்க ஃபிரெண்ட்ஸ்னு கேள்விப்பட்டேன்.” – சரி லாபம் வேணாம், ஆகிற செலவு வந்தா போதும்னு விட்டுக் கொடுத்தாலும் 25 லட்சம் வேணும் – இது பிரகாஷ் கணக்கு. சம்பளம், அலுவலக வாடகை, நம்ம செலவு எல்லாம் சமாளிக்க இது போகும்.

“அது எப்படிப்பா உனக்கு நான் மார்க்கெட்டிங் பண்ண முடியும். சரி, நான் அவங்ககிட்ட ஒரு வார்த்த சொல்றேன். ஆனா 25 லட்சம்லாம் தர முடியாது. எங்க பார்ட்னர்கிட்ட பேசி பட்ஜெட்ட ரெண்டு மடங்காக்க பார்க்கிறேன். 10 லட்சம் வாங்கிக்கோ, பேசி முடிச்சிருவோம். 25 லட்சம்லாம் எங்கேயோ நிக்குது. நாங்க எல்லாம் சாதாரண ஆளுங்கப்பா, நீங்க வேலை பார்த்த கம்பெனியோட அமெரிக்கா, ஐரோப்பா கஸ்டமர் போல நினைச்சு விலை சொல்லாதீங்க”.

எதிர்பாராத ரிஸ்குக்கு ஒதுக்கின 2 மாதங்களை கழிச்சிட்டா கூட 20 லட்சம் வருது. கொஞ்சம் டைட்டா இழுத்து பிடிச்சி, பசங்களை உற்சாகப்படுத்தி, நாமளும் இறங்கி வேலை செஞ்சா முடிச்சிரலாம். இவரு சொல்ற மாதிரி இங்க புராஜக்ட முடிச்சா நிறைய ஆர்டர் கிடைக்கத்தான் செய்யும்.

“அவ்வளவு குறைச்சா எப்படி சார். நாங்க கொஞ்சம் கஷ்டப்பட்டு முயற்சி பண்ணினா 20 லட்சம் வரை குறைக்கலாம் சார், அதுக்கு மேல முடியாது.”

“சரிப்பா, நீ இவ்வளவு சொல்ற, புரியுது. ஒரேயடியா 12 லட்சத்துக்கு முடிச்சிறலாம். இதுக்கே என் பார்ட்னர் என்னை வறுத்து எடுத்துருவார். மன்னார் கம்பெனி ஓனர் ரெக்கமன்ட் பண்ணினார்னுதான் நான் இவ்வளவு இறங்கி வர்றேன். இதைச் செய்து முடி, இன்னும் அடுத்த ஆர்டர் கூட நம்ம கம்பெனியிலேயே கிடைக்கும், இன்னும் நிறைய இடங்கள்ள ஆர்டர் வாங்கலாம். இதில செய்ய முடியும்னா சொல்லு, இல்லைன்னா அப்புறமா பார்த்துக்கலாம். நம்ம பட்ஜெட் முடிஞ்சு போச்சு”

“கொஞ்சம் யோசிச்சுட்டு சொல்றேன் சார். நாளைக்கு உங்களுக்கு கன்ஃபர்ம் பண்றேன்” என்று விடைபெறுகிறார் பிரகாஷ்.

பிரகாஷூம் ஓலா வாடகை வண்டி சேவை நிறுவனம் போலவோ, இணைய விற்பனை நிறுவனம் ஃபிளிப்கார்ட் போலவோ, ஸ்விக்கி உணவு வழங்கல் சேவை நிறுவனம் போலவோ “நஷ்டமானாலும் பரவாயில்லை” என்று வாடிக்கையாளரை குளிப்பாட்டுவதற்கு என்ன தேவை? அது பிரகாஷிடம் உள்ளதா?

(தொடரும்)
நன்றி : new-democrats

தொடரின் முந்தைய பாகங்கள்:
பங்குச் சந்தை என்றால் என்ன ? – பாகம் 1
பங்குச் சந்தை 2 : செலவழித்தால் பணம் – பெருக்கினால் மூலதனம் !
பங்குச் சந்தை 3 : பங்குகள் இலாபம் பார்ப்பது ஊகத்திலா, நிறுவனங்களின் உற்பத்தியிலா ?
பங்குச் சந்தை 4 : மிசிசிப்பி கம்பெனி – உலகின் முதல் பொது பங்கு நிறுவனம்
பங்கு சந்தை 5 : லாபத்துக்கு படும் பாடு !

ஓட்டை விழுந்த வெண்ணெய்க் கட்டி | அ.முத்துலிங்கம்

ஓட்டை விழுந்த வெண்ணெய்க் கட்டி

ம்முறையும் பொஸ்டன் போனபோது வழக்கமான புத்தகக் கடைக்குள் நுழைந்தேன். பொஸ்டனில்தான் பிரபலமான Barnes and Noble புத்தகக் கடை உள்ளது. ரொறொன்ரோவில் பார்க்கமுடியாத புத்தகங்களையெல்லாம் அங்கே காணலாம். பின்னட்டைகளைப் படித்தபடியே ஒரு மணி நேரத்தை ஓட்டிவிடலாம். நான் நாலு புத்தகங்கள் வாங்கினேன். என்னுடைய தெரிவு புத்தகங்களின் பின்னட்டைகளை வாசித்தும், பத்திரிகை மதிப்பீடுகளைப் படித்தும் நண்பர்களின் பரிந்துரைகளை கணக்கிலெடுத்தும் முடிவு செய்யப்பட்டது.

எழுத்தாளர்
அ. முத்துலிங்கம்
வீட்டுக்கு வந்து புத்தகங்களை படிக்கத் தொடங்கினேன். முதல் மூன்று புத்தகங்களும் முப்பது பக்கங்களை தாண்டவில்லை. முப்பது பக்கங்கள் என்பது கூட்டுத் தொகை. எவ்வளவு முயன்றும் உள்ளே நுழைய முடியவில்லை. முன்னர் என்றால் காசு கொடுத்து வாங்கிவிட்டோமே என்று கல்வயலை உழுவதுபோல இடறி விழுந்து எழுந்து விழுந்து ஒருவாறு முடித்துவிட்டுத்தான் மறு வேலை பார்ப்பேன்.

இப்பொழுதெல்லாம் அப்படிச் செய்வதில்லை. நேரம் முக்கியமானது. புத்தகம் என்பது அறிவைக் கூட்டவேண்டும் அல்லது வாசிப்பு இன்பத்தைக் கூட்டவேண்டும் அல்லது சொல்வங்கியைக் கூட்டவேண்டும். விருப்பமில்லாத, ஈர்ப்பில்லாத ஒரு புத்தகத்தை எதற்காக இந்தப் பாடுபட்டு படித்து முடிக்கவேண்டும். என் மனைவி கேட்பதுபோல ஏதாவது பரீட்சை எழுதப் போகிறேனா? எனவே நிறுத்திவிட்டு இன்னொரு புத்தகத்தை தொடங்க வேண்டியதுதான்.

நாலாவது புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினேன். அது என்னைக் கைவிடவில்லை. நூலை நாவல் என்று சொன்னாலும் அது 13 தனித்தனி சிறுகதைகளைக் கொண்டது. அந்தப் பதின்மூன்று சிறுகதைகளும் ஒன்றையொன்று தொட்டும், பொருந்தியும் நிரப்பியும் ஒரு நாவல் வடிவத்தை கொடுத்தன. இதற்கு முன்னரும் ஆங்கிலத்தில் இப்படிச் சின்னச் சின்ன முயற்சிகள் நடந்திருக்கின்றன. ஆனால் இந்த நூல் இரண்டு இலக்குகளையும் எட்டியதுடன் முன்பு ஒருவரும் எட்டாத உயரத்தையும் அடைந்திருந்தது.

நான் நாவல் முடியும்வரை புத்தகத்தை கீழே வைக்கவில்லை. ஆங்கில புனைவு உலகத்தில் நிறைய பேசப்படும் ’கட்டுமானம் கட்டுமானம் கட்டுமானம்’ என்ன என்பதைக் கண்டேன். விறகு கடையில் விறகு நிறுத்து விற்பார்கள். மரக்கறிக் கடையில் மரக்கறி நிறுத்து விற்பார்கள். தங்கம் விற்கும் கடையில் தங்கம் நிறுத்து விற்பார்கள். ஆனால் தங்கம் விற்கும் தராசு மிகவும் நுண்ணியதாக இருக்கும். அப்படியான ஒரு தராசில் நாவலின் ஒவ்வொரு வசனமும் நிறுக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு சிறுகதையும் பூரணமான வடிவத்துடன் தனியாக நின்றது. அவை ஒன்றாகச் சேர்ந்தபோது இன்னொரு வடிவத்தை கொடுத்தன.

கண்ணுக்கு தெரியாத மெல்லிய இழை அங்கே ஓடியது. ஒவ்வொரு சிறுகதையும் முடிவுக்கு வரும்போது கயிற்றுப்பாலத்தில் ஆற்றைக் கடப்பதுபோல மனம் முடிவெடுக்கமுடியாமல் தள்ளாடும். கண்களை மூடிக்கொண்டு கதையின் முடிவை கற்பனையில் பூர்த்திசெய்து பார்ப்பேன். பின்னர் ஆசிரியரின் முடிவை வாசிப்பேன். ஒவ்வொரு தடவையும் ஆசிரியரின் முடிவு என் கற்பனையை தாண்டி இன்னும் ஓர் அடி முன்னால் போயிருக்கும். யாரோ தள்ளிவிட்டதுபோல உணர்வேன்.

ஆங்கிலத்தில் இந்த வகையை Novel in stories (சிறுகதைகளில் நாவல்) என்று சொல்கிறார்கள். Elizabeth Strout எழுதிய Olive Kitteridge என்ற நாவலுக்கு 2009ம் ஆண்டு புனைவு இலக்கியப் பிரிவில் புலிட்சர் பரிசு கிடைத்திருக்கிறது. இது அமெரிக்காவில் வருடா வருடம் கொடுக்கும் ஆகச் சிறந்த பரிசு. இங்கிலாந்தின் புக்கர் பரிசுக்கும் கனடாவின் கில்லர் பரிசுக்கும் நிகரானது. இந்தப் பரிசைத்தான் ஜும்பா லாஹிரிக்கும் 2000ம் ஆண்டு புனைவு இலக்கியத்துக்கு கொடுத்திருந்தார்கள்.

என்னுடைய நாவலான ’உண்மைகலந்த நாட்குறிப்புகள்’ உயிர்மை வெளியீடாக வெளிவந்த அதே காலப் பகுதியில்தான் ஒலிவ் கிற்றரிட்ஜ்  நாவலும்  வெளிவந்தது. என்னுடைய நாவல் 46 தனித்தனி சிறுகதைகளைக் கொண்டது. அவருடையது 13 சிறுகதைகளைக் கொண்டது. சமீபத்தில் என்னுடைய புத்தகம் நாவலா சிறுகதை தொகுப்பா என்ற விவாதம் நடந்தது.

நாவல் இலக்கியம் என்பதே தமிழுக்கு புதிது. ஆங்கிலேயரிடம் இருந்து நாம் அந்த வடிவத்தை பெற்றுக்கொண்டோம். ஆங்கிலத்தில் ரொபின்ஸன் குரூசோதான் முதல் முழுமையான நாவல் என்று ஆங்கில இலக்கியம் தெரிந்தவர்கள் சொல்வார்கள். அந்த வடிவம் இன்றுவரை எத்தனையோ மாற்றம் பெற்றுவிட்டது. இப்பொழுது Novel in stories வடிவம் வந்து அங்கீகாரமும் பெற்றுவிட்டது. இன்னும் பல புதிய வடிவங்களுக்கும் நாங்கள் தயாராக வேண்டும். என்னுடைய நாவலும் ஒலிவ் கிற்றறிட்ஜ் நாவலும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் வெளிவந்திருந்ததால் அந்த நாவலைப் பார்த்துத்தான் என்னுடைய நாவலை எழுதினேன் என்ற குற்றச்சாட்டில் இருந்து நான் தப்பிக்கொண்டேன்.

இந்தக் கட்டுரை எழுதக் காரணம் நேற்று எனக்கு வந்த ஒரு மின்கடிதம். இதற்கு முன்னர் என்னை தொடர்பு கொண்டிராத சித்திரலேகா என்ற வாசகி எழுதியிருந்தார். உங்களைப்பற்றி கிரிதரன் என்ற எழுத்தாளர் எழுதியதை படித்தீர்களா என்று கேட்டு அந்தக் கொழுவியையும் அனுப்பியிருந்தார்.

வழக்கமாக ஓர் ஆசிரியரை வர்ணிக்கும்போது இவர் கல்கியைப்போல எழுதுகிறார், ஹெமிங்வேயைப்போல எழுதுகிறார் என்றுதான் சொல்வார்கள். கிரிதரன் என்னுடைய எழுத்தை ஒரு போலிஷ் எழுத்தாளருடைய எழுத்துடன் ஒப்பிட்டிருந்தார். அவருடைய பெயர் Ryszard Kapuscinski ஆனால் நான் அவரைப்பற்றி கேள்விப்பட்டது கிடையாது. இதில் எனக்குப் பிடித்தது என்னவென்றால் அந்தப் போலிஷ் எழுத்தாளர் என்னைப்போல எழுதுகிறார் என்று சொல்லியிருந்ததுதான். அவரைப்போல நான் எழுதுகிறேன் என்று சொல்லவில்லை. இதைவிட வேறு என்ன புகழ்ச்சி வேண்டும்? எனக்கு ஏதோ பெரிய விருது கிடைத்ததுபோல இருந்தது.

நான் புத்தகக் கடையில் வரிசையில் நின்றபோது எனக்கு முன்னால் ஒருவர் நின்றிருந்தார். தோட்டத்து சப்பாத்தும் தோட்டத்து கையுறையும் தோட்டத்து தொப்பியும் அணிந்தபடி தோட்டத்திலிருந்து நேராக வந்தவர்போல காணப்பட்டார். அவருடைய கையிலும் ஒலிவ் கீற்றறிட்ஜ் நாவல் இருந்தது. தோட்டக்கலை பற்றிய புத்தகம் என்றால் வியப்படைந்திருக்கமாட்டேன். ’உங்கள் கையிலிருக்கும் புத்தகம் நல்லதுதானா?’ என்று கேட்டுவைத்தேன்.

அவர் ’நான் ஏற்கனவே படித்துவிட்டேன். என் மகளுடைய பிறந்த நாளுக்கு அவருக்கு பரிசளிக்கப் போகிறேன்’ என்றார். ’அப்படியென்றால் உங்களுக்கு நாவல் பிடித்திருக்கிறது’ என்றேன். அவர் சொன்ன பதிலை நான் எதிர்பார்க்கவில்லை. ’எல்லாவிதமான காதல் பற்றியும் புத்தகங்கள் வந்துவிட்டன. ஆனால் இரண்டு முதியவரின் காதலை அழகாகச் சொல்லும் புத்தகத்தை நான் படித்ததில்லை. இந்த நாவல் சொல்கிறது. என் மகளுக்கு இந்த அறிவு வேண்டும் என நினைக்கிறேன்’ என்றார்.

அவர் அப்படிச் சொன்னபோது எனக்கு ஒன்றும் புரியவில்லை. புத்தகத்தை படித்து முடிந்த பின்னர்தான் புரிந்தது.  இந்த நாவல் எல்லாவிதமான காதல்களையும் சொன்னது. இளையோரின் காதல், முதியவருக்கும் இளையவருக்குமான காதல்,  கணவருக்கு தெரியாமல் மனைவியின் காதல், மனைவிக்கு தெரியாமல் கணவரின் காதல், கணவருக்கும் மனைவிக்குமான காதல் அத்துடன் முதியோர் இருவருக்கிடையில் ஏற்படும் காதல். முதியோர் காதலை இவ்வளவு நுட்பமாகவும் உருக்கமாகவும் வேறு ஒருவர் வர்ணித்தது நினைவில் இல்லை.

முதிர்ந்த, சுருங்கிய, முடிச்சுகள் விழுந்த உடல்களுக்கு கூட காதல் அவசியமாக இருக்கிறது. ஓட்டை விழுந்த இரண்டு சுவிஸ் வெண்ணெய் கட்டிகள் ஒட்டுவதுபோல வாழ்க்கையின் இழப்புகள் ஏற்படுத்திய ஓட்டைகளுடன் அவர்கள் இணைந்துகொண்டார்கள் என்று நாவலாசிரியர் வர்ணிப்பார். பல வருடங்களுக்கு முன்னர் தொலைத்த பழைய நாணயத்தை கண்டெடுத்ததுபோன்ற ஒரு மகிழ்ச்சி கிடைக்கும்.

நன்றி :அ.முத்துலிங்கம்
எழுத்தாளர் முத்துலிங்கத்தின் இணைய தளம்

எழுத்தாளர் அறிமுகக் குறிப்பு:
இலங்கையில் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்ததன் பின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டட்ர்ட் மனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்தி செய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்தேன். 2000ம் ஆண்டில் ஓய்வு பெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.

அறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல்கள் என எழுதியிருக்கிறேன்.

(அ.முத்துலிங்கத்தின் தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகளை அவரது அனுமதியுடன் இங்கே வெளியிடுகிறோம்.)

ஆதார் உச்சநீதிமன்றத் தீர்ப்பு : கட்டாயமில்ல … ஆனா கட்டாயம்தான் !

மோடி அரசு இயற்றிய ஆதார் சட்டம் (2016), அரசியல் சாசனத்துக்கு எதிரானது எனக் கூறி உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்னிலையில் வந்தது. இவ்வழக்கின் விசாரணை கடந்த மே மாதம் 10-ம் தேதியோடு நிறைவடைந்தது. இவ்வழக்கின் தீர்ப்பு இன்று (26.09.2018) காலை 11 மணியளவில் வழங்கப்பட்டது.

நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கான்வில்கர், சிக்ரி, ஆகிய மூவரும் சேர்ந்து ஒன்றுபட்ட தீர்ப்பை வழங்கினர். நீதிபதி அசோக் பூசன் அம்மூவரின் தீர்ப்பையும் ஏற்றுக் கொண்டு கூடுதலாக சில கருத்துக்களையும் சேர்த்து தனித் தீர்ப்பில் கூறியுள்ளார். நீதிபதி சந்திரசூட் இந்நால்வரின் தீர்ப்புக்கும் மாறுபட்ட கருத்துக்களோடு தனது தனித் தீர்ப்பை வழங்கியுள்ளார்.

இத்தீர்ப்பின் சாரம் என்னவெனில், ஆதார் சட்டம் ஒரு சில பிரிவுகளை நீக்கிவிட்டால் அரசியல் சாசனத்திற்கு ஏற்ற சட்டமாகிவிடும். அரசு குடிமக்களின் மின்னணு அடையாளங்களை எடுப்பது தவறானதல்ல. தனியார் கையில் அதனை ஒப்படைக்கக் கூடாது. மற்றபடி அரசு ஆதார் சட்டத்தை தொடரந்து செயல்படுத்தலாம்.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, கான்வில்கர் மற்றும் சிக்ரி ஆகியோரின் ஒருமனதான தீர்ப்பு முதலில் ஆதார் சட்டத்திற்கும் அதனை செயல்படுத்திய விதம் குறித்தும் பின்வரும் புகழாரங்களைச் சூட்டுகிறது.

  • ஆதார் போலிகள் உருவாவதைத் தடுக்கிறது.
  • ஆதார் சேர்க்கை என்பது ஏமாற்ற முடியாதது.
  • இது விளிம்புநிலை சமூகத்தினருக்கு அதிகாரத்தைக் கொடுக்க வல்லது.
  • அடையாளங்காணுவதற்கான போதுமான பாதுகாப்பு கொண்ட பொறியமைவில் உச்சநீதிமன்றம் திருப்தியடைகிறது.

இதுதவிர இத்தீர்ப்பின் இதர விவகாரங்கள் பின்வருகின்றன

  • ஆதார் சட்டத்தின் பிரிவு 33(2) (தேசிய பாதுகாப்பு கருதி குடிமகனின் ஆதார் தகவல்களை குறிப்பிட்ட நிறுவனத்துக்கு தருவதற்கான அதிகாரம்), பிரிவு 57 (தனியார் நிறுவனங்களுக்கு ஆதார் தகவல்கள் தருவதற்கான விதிமுறை), பிரிவு 47 (பிறர் நீதிமன்றங்களில் முறையீடு செய்யக் கூடாது) ஆகியவை நீக்கப்படுகின்றன.
  • 5 ஆண்டுகளுக்கு தகவல்களை சேமிக்கலாம் என்ற வரைமுறை 6 மாதத்திற்கு மேல் தகவல்களை சேமிக்கக் கூடாது என மாற்றப்பட்டுள்ளது. .
  • குழந்தைகளை ஆதாரில் சேர்ப்பதற்கு பெற்றோர் அல்லது பாதுகாவலரின் அனுமதி தேவை. அதே போல 18 வயதுக்கு பிறகு அக்குழந்தை தனது தகவல்களை நீக்கக் கோரினால் உடனடியாக நீக்க வேண்டும். பள்ளியில் சேர்ப்பதற்கு ஆதார் தேவையில்லை.
  • குழந்தைகளுக்கான அரசு திட்டங்கள் எதற்கும் ஆதார் கேட்கப்படக்கூடாது.
  • தனியார் நிறுவனங்கள், தொலைபேசி நிறுவனங்கள், வங்கிகள், ஆதார் கேட்கக் கூடாது.
  • பான் கார்டுகளோடு ஆதாரை கட்டாயமாக இணைக்க வேண்டும்.
  • ஆதார் சட்டத்தின் கீழ் தனிநபர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம்.
  • நீதிமன்ற அனுமதி பெற்ற பின்னர்தான் ஆதார் குறித்த தகவல்களை ’தேச நலனுக்காக’ கூட வெளியிடமுடியும் (இதற்கு முன்னர் இணை இயக்குனரின் அனுமதி மட்டுமே போதுமானதாக இருந்தது)
  • இதுவரையில் தனி அடையாளங்களுக்கான ஆணையம் (UIDAI) மட்டுமே ஆதார் சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்க முடியும் என்ற நிலையை மாற்றி இனி தனி நபர்களும் வழக்கு தொடுக்கலாம் என்றும் கூறியுள்ளது,

மேலும் தனிமனிதர்களின் அந்தரங்க உரிமை குறித்து நீதிபதி சிக்ரி தனது தீர்ப்பில் குறிப்பிடுகையில், ”மனிதர்களின் கண்ணியம் குறித்த கருத்தோட்டம் அந்தரங்க உரிமை குறித்த தீர்ப்பில் பெருக்கிக் காட்டப்பட்டுள்ளது. பெரும்பான்மையினரின் நலன் அல்லது அந்தரங்க உரிமை குறித்த நியதிகளை ஏற்படுத்திய பின்னரே, இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவு குறித்து முடிவு செய்ய முடியும்” என்கிறார்.

இவற்றையெல்லாம் சொல்லிவிட்டு இறுதியில் “கல்வி நம்மை கைநாட்டிலிருந்து கையெழுத்துப் போட வைத்திருக்கிறது. ஆனால் தொழில்நுட்பம் நம்மை கையெழுத்திலிருந்து கைநாட்டிற்கு மாற்றியிருக்கிறது” என நடிகர் பார்த்திபன் பாணியிலான ’குண்டக்க மண்டக்க’ முத்துக்களையும் உதிர்த்துள்ளார் நீதிபதி சிக்ரி.

நீதிபதி சிக்ரி உள்ளிட்ட பெரும்பான்மை (3) நீதிபதிகளின் கருத்துக்களை அப்படியே ஏற்றுக் கொள்வதாக கூறியிருக்கும் நீதிபதி அசோக் பூசன் தமது தீர்ப்பில் கூடுதலாக “ஆதாருக்காக குடிமக்களின் உயிரியல் அடையாளங்களை எடுப்பது தனிநபர்களின் அந்தரங்க உரிமையைப் பறிப்பது ஆகாது. ஆதார் திட்டத்தின் வடிவமைப்பு கண்காணிப்பு வேலைகளுக்கு வசதி செய்துதருவதாக இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நால்வரின் தீர்ப்பிலிருந்து மாறுபட்ட தீர்ப்பை நீதிபதி சந்திரசூட் வழங்கியுள்ளார். தமது தீர்ப்பில் ”டிஜிட்டல் இந்தியா” மக்களின் அடையாளங்களை மூழ்கடித்துவிடக் கூடாது. தொழில்நுட்பம் சுதந்திரத்தின் எதிர்காலத்திற்கு எதிரானதாக இருக்கிறது.ஆதார் தகவல்களை தனியார் நிறுவனங்களுக்குத் தரக்கூடாது என்ற சிக்ரியின் தீர்ப்பை தாம் ஆமோதிப்பதாகவும், தொலை தொடர்பு நிறுவனங்கள் தங்களிடமுள்ள வாடிக்கையாளர்களின் ஆதார் தகவல்களை உடனடியாக நீக்கிவிட வேண்டும்என்றும் கூறியுள்ளார்.

ஆதார் சட்டத்தை பணச் சட்டமாக கொண்டு வந்திருக்கக்கூடாது என்று தனது கண்டனத்தைத் தெரிவித்தார் சந்திரசூட். “ஆளும் கட்சி ராஜ்ய சபாவில் போதிய பலமில்லாமல் இருக்கலாம். அதற்காக இச்சட்டத்தை பணச்சட்டமாக இயற்றியிருப்பது ஒரு தந்திரமான காரியம். இவ்வாறு ஜனநாயக நிறுவனங்களை உதாசீனப்படுத்துவதை ஏற்றுக் கொள்ளமுடியாது” என்றும் கூறியுள்ளார். இவர் மட்டுமே ஆதார் எனும் கண்காணிப்பு முறை  கொல்லைப்புற வாயிலாக கொண்டு வருவதை அம்பலப்படுத்தியிருக்கிறார். ஆனாலும் இது சிறுபான்மை தீர்ப்பு என்பதால் உண்மையை ஒருவர் எடுத்து வைத்திருக்கிறார் என்பதைத் தவிர வேறு முக்கியத்துவமில்லை.

ஆதார் என்பதே மக்களை தன் கண்காணிப்பிற்குள் வைப்பதற்கான தந்திரம் என்னும் போது, அதனை சட்டமாக்க தந்திரம் செய்த மோடி அரசைக் கண்டித்து என்ன பயன்?

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு சுமார் 1000 பக்கங்களுக்கும் மேலாக இருக்கும் என தகவல்கள் தெரிவிப்பதால், இதில் இன்னும் என்னென்ன ஓட்டைகள் இட்டுக் கட்டப்பட்டிருக்கின்றன என்பது தெரிய இன்னும் சில நாட்கள் பிடிக்கலாம்.

சிக்ரியின் தீர்ப்பில் ”ஆதார்” என்ற மக்கள் மீதான கண்காணிப்புப் பொறியை வெகு எளிதாக ”பெரும்பான்மையினரின் நலன்” என்ற போர்வையின் கீழ் கடந்து சென்றுவிட்டார். மேலும் வங்கிகளில் ஆதார் கேட்கக்கூடாது எனக் கூறிவிட்டு, ’பான்’ அட்டைகளுக்கு, பி.எஃப். போன்றவற்றிற்கு, நலத்திட்டங்களுக்கு ஆதார் அவசியம் என்று நீதிமன்றத் தீர்ப்பு கூறுகிறது.

பி.எஃப் தகவல் பதிவு செய்ய உங்கள் நிறுவனத்திற்கு நீங்கள் ஆதார் எண்ணைக் கொடுக்க வேண்டும். ’பான்’ அட்டை மூலம் ஆதார் எண் வங்கிக்கு இணைக்கப்படும். ஆக உங்கள் நிறுவனங்களும் உங்கள் வங்கியும் இனி உங்களைக் கட்டாயப்படுத்தி ஆதார் எண் கேட்கத் தேவையில்லை. உங்களுக்கு பி.எஃப் பணம் வேண்டுமெனில், உங்கள் வங்கியில் ரூ. 50,000க்கு மேல் பணப் பரிவர்த்தனை செய்ய வேண்டுமெனில் நீங்களே உங்கள் நிறுவனத்திடம் நேரடியாகவும், வங்கியிடம் மறைமுகமாகவும் உங்கள் ஆதார் எண்ணை கொடுக்க வேண்டும்.

இதற்கு மேல் மோடி அரசு இன்னின்ன துறைகள், தனியார் நிறுவனங்களுக்கு ஆதார் கட்டாயம் என சட்டம் கொண்டு வந்தும் இணைக்கலாம். இப்படி ஆதார் உருவாக்கிய அபாயங்கள் தொடரவும் இத்தீர்ப்பு வழிவகுத்திருக்கின்றது. மேலும் ஆதார் தகவல்கள் மலிவாக கசிய முடியும், வாங்க முடியும் என்பதை சில பத்திரிகையாளர்கள் சுலபமாக நிரூபித்திருக்கின்றனர். ஆனால் மத்திய அரசின் டிஜிட்டல் துறை ஆதார் தகவல்களை பத்திரமாக பாதுகாப்பதாக நற்சான்றிதழ் வழங்கியிருக்கிறது உச்சநீதிமன்றம்.

இந்தியாவில் ஆதார் திட்டம் என்பது உலக அளவில் ஒரு முன்னோடித் திட்டமாகும். உலக முதலாளித்துவத்தின் கீழ் மக்களை கண்காணித்து பொருளியல் ரீதியில் சுரண்டவும், அரசியல் ரீதியில் அச்சுறுத்தவும் இத்திட்டம் ஒரு பரிசோதனை என்ற பெயரிலும் வல்லரசு நாடுகளுக்கு பயன்படும்.

பெரும்பான்மை மக்களின் நலன் என்ற பெயரில், மக்களின் அந்தரங்க உரிமை பறிப்பு சமூக யதார்த்தமாக மாற்றப்பட்டுள்ளது என்பதுதான் இந்த தீர்ப்பின் அபாயகரமான பகுதி. பெரும்பான்மையினரின் மனசாட்சிக்காக அப்சல் குருவுக்குக் கொடுக்கப்பட்ட தூக்குத்தண்டனையைப் போன்றதொரு அபத்தத்தையே தமது தீர்ப்பில் அழுத்தமாக பதிவு செய்துள்ளது உச்சநீதிமன்றம். அன்று தூக்கில் தொங்கியது அப்சல் குரு. இன்று நமது உரிமைகள் தொங்கவிடப்பட்டிருக்கின்றன.

அரசை எதிர்த்தால் குற்றமாம் ! விழுப்புரம் பு.மா.இ.மு. தோழர்கள் 3 பேர் சிறை வைப்பு !

0
சிறை வாசலில் முழக்கமிடும் பு.மா.இ.மு தோழர்கள்

விழுப்புரம் மாவட்டம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் காலை, மாலை, என இரண்டு வேளைகளிலும் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

கல்லூரி நிர்வாக, இட ஒதுக்கீட்டை மாணவர்களிடம் விலைபேசி விற்று வந்தது. விருப்பமான துறையை மாற்றி தருவதாகவும் கூறி அதற்கென்றும் தனிரேட் போட்டு வசூலித்தது. பின்னர், சொன்னபடி துறையை மாற்றித் தராமல் அவர்களை ஏமாற்றியது. இத்தகைய ஊழல் – முறைகேடுகளை அம்பலபடுத்தியிருக்கிறது, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி.  கல்லூரியில் அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரி மாணவர்களை அணிதிரட்டி உள்ளிருப்புப் போராட்டங்களையும் நடத்தியிருக்கிறது.

பு.மா.இ.மு.வின் மீது வன்மத்திலிருந்த கல்லூரி நிர்வாகம், பழிவாங்கும் தருணத்திற்காக காத்திருந்தது. இந்நிலையில், கடந்த செப்-20 அன்று, சமூகத்தில் நிலவும் பண்பாடு, கலாச்சார சீரழிவு குறித்தும், ,3000 அரசு பள்ளிகள் மூடப்படுவது; உயர்கல்வி ஆணைய மசோதா; வணிகமயமாகும் கல்வி உள்ளிட்ட அபாயங்களை விளக்கி இக்கல்லூரி மாணவர்களிடம் உரையாற்றினர் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியைச் சேர்ந்த தோழர்கள். மேலும், மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் இப்பொதுப் பிரச்சினைகளுக்கு எதிராக மாணவர்கள் சங்கமாக அணிதிரண்டு போராட முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து சமூகப் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டுமென்ற விருப்பத்தோடு முன்வரும் மாணவர்களை உறுப்பினராக்கினர்.

கல்லூரி வளாகத்திற்கு வெளியே, ஓட்டுபோடும் உரிமையுள்ள கல்லூரி பயிலும் மாணவர்களிடம் சமூக யதார்த்தத்தை விளக்கிப் பேசுவதும்; ஒரு மாணவர் அமைப்பு மாணவர்களை சங்கமாக அணிதிரட்டுவதும் சட்டவிரோதம் என்று தடுத்தது கல்லூரி நிர்வாகம்.

நீட் அனிதா படுகொலை : விழுப்புரம் அண்ணா கலைக் கல்லூரி மாணவர் போராட்டம். (கோப்புப் படம்)

இந்தக் கல்வியாண்டில் தொடக்கத்தில் இதேக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்று இனிப்பு வழங்கிய போது ”அனுமதி இன்றி இனிப்பு வழங்கக்கூடாது” என சட்டம் பேசிய விழுப்புரம் போலீசு, இன்றும் சட்டம் குறித்து வகுப்பெடுத்தது. இப்போது மாணவர்களிடம் விநியோகித்த பிரசுரத்தில் அரசுக்கு எதிரான வாசகங்கள் இடம் பெற்றிருக்கிறது என்று கூறி, மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பு.மா.இ.மு.வைச் சேர்ந்த தோழர்கள் மோகன், மணிகண்டன், ஆகியோரைக் கைது செய்தது.

பகல் முழுவதும் போலீசு நிலையத்திலேயே சட்டவிரோதமான முறையில் அடைத்து வைத்திருந்த போலீசு பின்னர் இரவுக்கு மேல் நீதிபதியிடம் ஆஜர் படுத்தியது. விழுப்புரம் கிளைச்சிறையில் 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார் மாஜிஸ்டிரேட். சட்டவிரோதக் கைதைக் கண்டித்தும், அரசியல் கைதி என்பதால் சட்டையைக் கழட்ட மாட்டோமென்று சிறை வாசலிலே முழக்கமிட்டனர் தோழர்கள். இதனையடுத்து, அவர்களை விழுப்புரம் கிளைச்சிறையில் அடைக்க முடியாதென சிறை நிர்வாகம் மறுத்துவிட தோழர்களைக் கடலூர் சிறையில் அடைத்தது போலீசு.

மதக்கலவரத்தை தூண்டும் வகையிலும், உயர்நீதிமன்றத்தை “மயிர்” என்றும் பேசிய எச்(சை) ராஜாவிடமும், பெண் பத்திரிகையாளர்களை ஆபாசமாக பேசிய எஸ்.வி.சேகரிடமும் தன் அதிகாரத்தையும் வீரத்தையும் காட்ட துப்பில்லாத அரசும், போலீசும் கலாச்சார சீரழிவில் சிக்கி தவிக்கும் சமூகத்தையும், மாணவர்களையும் மீட்க போராடிய பு.மா.இ.மு தோழர்களை பொய்வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது.

பட்டாக்கத்திகளுடன் மாணவர்கள் அட்டகாசம் என்று ஒரு சில மாணவர்கள் செய்யும் தவறுகளை அனைத்து மாணவர்கள் செய்யும் தவறு போன்று ஊடகங்கள் சித்தரிக்கின்றன. இதையே சமூகத்தின் பொதுப்புத்தியாகவும் கட்டியமைக்கின்றனர். ஆனால் இங்கே மாணவர்களை நேர்வழிப்படுத்தும் பு.மா.இ.மு தோழர்களை ஏதோ சட்டவிரோத செயல் செய்யும் ரவுடிகள் போன்று கல்லூரி நிர்வாகமும், போலீசும், நீதிமன்றமும் நடத்துகிறது. ஆக மாணவர்கள் நேர்மறையாக அரசியல் படுத்தப்பட்டு எழுச்சி பெறுவதை இவர்கள் விரும்புவதில்லை. மாணவர்கள் குடி, போதை, இதர தவறுகளால் திசை திருப்பப்படுவதையே இவர்கள் ஆதரிக்கிறார்கள்.

இவர்களது சதித்திட்டத்தை முறியடித்து மாணவர் சமுதாயத்தை புடம் போடும் வேலையில் பு.மா.இ.மு. தொடர்ந்து பயணிக்கும். கைது சிறைகளுக்கு அஞ்சாமல் போராடும்.


விழுப்புரம்.

மக்கள் போராடி மூடிய விழுப்புரம் சாலாமேடு டாஸ்மாக் கடை மீண்டும் திறப்பு !

டந்த 2015 ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பா கல்லூரி மாணவர்கள், அருகாமையில் உள்ள டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கினார்கள். இதன் எழுச்சியாக தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்தது. அதன் ஒரு பகுதியாக விழுப்புரம் சாலாமேடு பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பகுதியில் உள்ள மக்கள் அதிகார தோழர்கள் கிராம மக்களை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு கடை தற்காலிகமாக 3 நாட்கள் மூடப்பட்டதுடன், மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் உள்ளிட்டு அப்பகுதியைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். பிறகு வழக்கம்போல் கடை திறக்கப்பட்டது.

(கோப்புப் படம்)

மீண்டும் 2017 ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராட்டம் வலுத்தது. பலவேறு இடங்களில் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டது. அப்போது மீண்டும் போராட்டத்தை தொடர்ந்த சாலாமேடு கிராம மக்கள், கடையை மூட கெடு விதித்திருந்தனர். குறிப்பிட்ட கெடுவுக்குள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், டாஸ்மாக் கடையை நாங்களே மூடுவோம் என எச்சரித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். டாஸ்மாக் கடையை மூடுவதற்குப் பதிலாக கடைக்குப் பாதுகாப்பாக நூற்றுக்கணக்கான போலீசை குவித்தது. போலீசின் அச்சுறுத்தலையும் மீறி, பள்ளி செல்லும் பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு குடும்பமாகத் திரண்டு டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராடினர் அப்பகுதி மக்கள். இப்பகுதி மக்களின் தொடர்ச்சியான மற்றும் உறுதியான போராட்டத்தைக் கண்டு பின்வாங்கிய தாசில்தார், அருகருகே இருந்த இரண்டு கடைகளை மூட உத்தரவிட்டார்.

(கோப்புப் படம்)

இந்நிலையில், ஓராண்டாக மூடப்பட்டிருந்த அந்தக் கடையை மீண்டும் திறக்க முயன்றது, அரசு. இதனையறிந்த அப்பகுதி மக்கள் மீண்டும் போராட்டத்தைத் தொடங்க ஆயத்தமாயினர். உளவுத்துறை போலீசு மூலம் இதனையறிந்த விழுப்புரம் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர், கடையை திறக்கப் போவதில்லை என சத்தியம் செய்யாத குறையாக உறுதியளித்திருந்ததோடு, போராட்டம் எதுவும் செய்துவிடாதீர்கள் என்று மக்கள் அதிகாரம் தோழர்களைப் பார்த்துக் கேட்டுக்கொண்டார்.

இன்னொருபுறம், போலீசின் தூண்டுதலின் பேரில் டாஸ்மாக் அருகில் மினி பார் நடத்திவந்தவரின் உறவினரான செங்குட்டுவன் என்ற ரவுடி கும்பலை ஏவிவிட்டு அவர் குடும்பத்தில் உள்ளர்வர்கள் டாஸ்மாக் கடையைத் திறக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினர். குட்கா, கஞ்சா,  டாஸ்மாக் என மக்களை போதைக்கு அடிமையாக்கியும், இளைஞர்களை சீரழித்தும், அவர்கள் பணத்தில் கொழுக்கும் அரசும், போலீசும், எப்படிப்பட்ட இழி செயலையும் செய்யும் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

இந்தக் கும்பல் நடத்திய போராட்டத்தை எதிர்த்து சாலமேடு பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்டோர் அக்கும்பலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் கடை திறந்தால் இங்கேயே தீ குளிப்போம் என எச்சரித்தும் சென்றனர். அன்று இரவே செங்குட்டுவனின் அண்ணனான குமரன் என்ற மற்றொரு ரவுடி, தீ குளிப்போம் என கூறிய பெண்களின் கணவர்களை மிரட்டி உள்ளார்.

இதற்கிடையில் மறுநாளே மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் போலீசின் பாதுகாப்போடு கடை திறக்கப்பட்டது. இதனால் ஆத்திரமுற்ற கிராம பெண்கள் 40-க்கும் மேற்பட்டோர் மீண்டும் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர். மக்கள் அதிகாரம் சார்பில் அச்சடிக்கப்பட்ட கண்டன சுவரொட்டிகளை அப்பகுதி மக்களே ஒட்டி அம்பலப்படுத்தினர். குடிகெடுக்கும் சாராயக் கடையை மூடக்கோரி சுவரொட்டி ஓட்டியதற்காக 3 இளைஞர்களை கைது செய்தது போலீசு. அவர்கள் மீது கொலை மிரட்டல், அரசு அதிகாரிகளைப் பணிசெய்யவிடாமல் தடுத்தல் போன்ற பொய்யானக் குற்றச்சாட்டில் சிறையில் அடைத்தது. பகுதி இளைஞர்களின் ஒத்துழைப்போடு, மக்கள் அதிகாரம் தோழர்கள் அவ்விளைஞர்களை பிணையில் வெளிக்கொண்டு வந்தனர். சாலாமேடு பகுதி மக்கள் கைது சிறைக்கு அஞ்சாமல் டாஸ்மாக் கடையை மூடும்வரை எங்களது போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.

தகவல்:

மக்கள் அதிகாரம், விழுப்புரம் மண்டலம்.

டீசல் விலை உயர்வு : வண்டிய விக்கிறதா உடைக்கிறதான்னே தெரியல !

மோடியின் இந்தியாவில் மக்களின் வாழ்க்கை அதல பாதளத்தை நோக்கி செல்வது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், மக்கள் இந்த நிலைய எப்படி சாமாளிக்கிறார்கள்?

விவசாயத்துல ’உழுதவன் கணக்கு பார்த்தா உழக்குகூட மிஞ்சாது’ன்னு சொல்லுவாங்க… இந்த ஒரு சொல்லே போதும் விவசாயிங்களோடா நிலையை புரிந்து கொள்ள… இப்ப விவசாயிங்களோட நிலைமைதான் போக்குவரத்து தொழிலுக்கும்.

அன்றாடம் விவசாயிகள் விளைவிக்கிற பொருட்களில் இருந்து முதலாளிகளோட உற்பத்தி பொருட்களை கொண்டு போய் சேர்க்கிற வரைக்கும் லாரிக்கு பெரும் பங்கு உண்டு. அந்த லாரி தொழில்தான் இப்பபோது பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கு. ஒவ்வொரு நாளும் உயரும் பெட்ரோல்-டீசல் விலையால கடுமையா பாதிக்கப்பட்டிருக்கு சரக்கு போக்குவரத்து தொழில்.

படம் – வினவு செய்தியாளர்

இந்த பாதிப்பு பத்தி கோயம்பேட்ல இருந்த ஈச்சர் 1110 வண்டியோட டிரைவரும், உரிமையாளருமான அய்யப்பனிடன் பேசிப்பார்த்தோம்…

“வாங்க சார்… எங்க கொறைய யாருகிட்ட சொல்லுறதுன்னுதான் இருந்தேன்….

டெய்லியும் வெல ஏறிட்டே இருக்கு சார். வண்டிய நம்பி எடுக்க முடியல… ஒவ்வொரு நாளும் தலையில கல்ல தூக்கி போட்டது போல இருக்கு. கோயம்பத்தூர்ல இருந்து பன்னிரெண்டாயிரத்துக்கு வாழைத் தார் ஏத்திகிட்டு வந்தேன். அதுல ஒன்பதாயிரம் டீசல் போட்டுட்டேன். வரும்போது போலிசுக்கு படி அறநூறுபா ஆயிடுச்சி. இது நிக்காம ஓட்டுறதால வந்தது. மாட்டியிருந்தா இரண்டாயிரபா கூட புடுங்கியிருப்பனுங்க, எப்படியோ வந்து சேர்ந்துட்டேன்.

இப்ப இந்த (கோயம்பேடு) மார்கெட்டுல இருந்து போறதுக்கு டிரிப்பு இல்லாம காத்துகிட்டு இருக்கேன். டிரிப்பு கெடக்கிறதுக்குள்ள கையில இருக்க காசு கரஞ்சிடும் போலிருக்கு.

அடுத்து என்ன செய்வேன்..? அய்யப்பனின் கவலை (படம் – வினவு செய்தியாளர்)

அடுத்து கேரளா போகனும்னு சொன்னாங்க. என்னன்னு இன்னும் உறுதியா தெரியல. லோடு வந்தா தான் தெரியும். அதுக்கு ஒரு நாள் ஆகுமா, இரண்டு நாள் ஆகுமான்னு தெரியல.  இதெல்லாம் நெனக்கும் போது வண்டிய வித்துடுலாம்னு இருக்கேன்.

ஆனா, வண்டிய விக்க மனசு இல்ல. வண்டிய ஒடச்சி தான் போடனும். அவ்ளோ வெறுப்புல இருக்கேன். வண்டிக்கு ஓனரா இருந்தே என்னால சமாளிக்க முடியல. வெறும் டிரைவருங்க பாடு சொல்லுறதுக்கே தகுதி இல்ல…

ஒரு மாசத்துக்கு பத்து லோடு வந்தா பெரிய விஷயம்..சார்.. அது அப் & டவுன் இருக்கனும். அப்பதான் பொழப்பு நடத்த முடியும்.

மாசம் வண்டிக்கு செலவும், வீட்டு செலவும் கணக்கு போட்டா தலை சுத்துது. ஈச்சர் 1110-இந்த வண்டியோட வெல ஏழு லட்சம்..சார்…

ஆறு வருஷத்துக்கு டியூவ். மாசம் 22,000 கட்டணும். ஆறு வருஷத்து கணக்கு பார்த்தா பத்து லட்சம் ஆவுது. வண்டி ஓடுதோ ஓடலையோ மாசத்துக்கு பத்து டிரிப்பு ஓட்டினாலும் பத்தாயிரத்துக்கு சர்வீஸ் பன்னணும். பராமரிப்பு இல்லனா லாங் ரூட்டு நம்பி ஓட்ட முடியாது. கியர் ஆயில், பிரேக் ஆயில், இஞ்சின் ஆயில், கிரவுன் ஆயில்,  இதுக்கு மட்டும் எட்டாயிரத்து ஐநூரு ஆகும் கூலியோட.

போய்ட்டு வர ஒவ்வொரு டிரிப்புக்கும் டயரை கழட்டி பவுடர் போடனும், கிரீஸ் அடிக்கனும். இதை செய்யலன்னா டயர் சூடாகி வெடிக்கும். போதாக்குறைக்கு ஹெட்லைட், வைப்பர், கிரீஸ் அடிக்கிறது இப்படி எதாவது ஒரு செலவு வந்துகிட்டே இருக்கும்.

படம் – வினவு செய்தியாளர்

இது இல்லாம வீட்டுக்கான செலவ பார்க்கணும். உண்மைய சொல்லனும்னா எனக்கு இரண்டு வீடு. ஒன்னு இந்த வண்டி; இன்னொன்னு பொண்டாட்டி புள்ளைங்க இருக்குற வாடகை வீடு.

சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் சார். இப்ப தொழிலுக்காக கோயம்பத்தூர் வந்துட்டேன். அங்க இருக்க வீட்டுக்கு வாடகை மாதம் 2000 . ஒரே ரூம்தான் சின்னதா இருக்கும். வெறும் சோறு ஆக்குறதுக்கும், துணி மாத்துறத்துக்கும் தான் அந்த இடம். புழங்குறது எல்லாம் வெளில சிமெண்டு ஓடு போட்ட வீட்டுல புழங்கிக்குவோம்.

ரெண்டு பசங்க கவர்மெண்டு ஸ்கூல்ல தான் படிக்குதுங்க. சின்னதா கணக்கு பர்த்தாக் கூட வாரத்துக்கு சோப்பு, சீப்பு, பவுடர் செலவு, குழந்தைங்க செலவு, கை செலவுன்னு நாலாயிரம் ஆகும். அது இல்லாத அரசி, மளிகை வாரத்துக்கு இரண்டாயிரம் ஐந்து பேருக்கு தேவை. எங்க அப்பா, அம்மாவும் எங்க கூடதான் இருக்காங்க, அவங்களுக்கான செலவுன்னு மொத்தமா மாசத்துக்கு 22,000 தேவைப்படும்.

என்னோட வருமானத்துல முக்கிய செலவு எதுவும் செய்ய முடியாது. எல்லாம் கடன் தான் வாங்கனும். அப்பா அம்மாவுக்கு உடம்பு சரியில்ல, சொந்த பந்தம் நிகழ்ச்சிக்கு போகனும் எல்லாத்துக்கும் கடன் தான்.

கல்யாணம் ஆகி ஏழு வருஷம் ஆகுது. திருச்செந்தூருக்கு, ஊட்டிக்கு கூட்டினு போறேன்னு பல தடவை சொல்லிட்டேன். இன்னும் எந்த ஊருக்கும் அதுங்கள கூட்டினு போக முடியல. இத சொல்லியே வீட்டுல சண்ட வரும்” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவருடைய செல்போன் அழைப்பு குறுக்கிட்டதால், பேசி முடித்து விட்டு மீண்டும் தொடங்கினார்.

“இது இல்லாத ஒரு நாளைக்கு வண்டியில உட்கார்ந்தா என்னோட செலவுக்கு  250 ரூபா வேணும். ஒரு வேளைக்கு 60 ரூபா இல்லாத எதுவும் சாப்பிட முடியாது. ரோட்டுல நிறுத்துற இடத்துல படுக்கனும்னா கொசு புடுங்கும். அதுக்கு கொசு வத்தி, பீடி, முழிப்பு வந்தா டீ குடிக்கிறதுன்னு நூறு ரூபா ஆகிடும்.

வாரத்துக்கு ஒரு வாட்டி தண்ணி அடிச்சா அது தனி செலவு. அது எப்படியும் 300 ரூபா ஆகும். எங்க கணக்கே அய்யாயிரம் இல்லாம போவாது. இந்த லட்சணத்துல, நாங்க பெட்ரோல் விலைய ஏத்தினா என்னா பன்றது?

யாரும் சரியில்ல…, கட்சி காரனும் சரியில்ல. அசோசியேசனும் சரியில்ல. டீசல் விலை கூடிடிச்சின்னு பார்டிகிட்ட சேர்த்து பணம் கேட்க முடியாது. லோடு ஆர்டர் கேன்சல் பன்னிடுவாங்க. எங்களுக்கும் பார்டிக்கும் இடையில வர்ற பிரச்சனைய சாமாளிக்க் முடியாம திண்டாடுறோம்.

போலிசு கெடுபிடி வேற. நம்ம வண்டி 7 டன் கொள்ளளவு புடிக்கும்.  எங்களுக்கும், பார்டிக்கும் நஷ்டம் வரக்கூடாதுன்னு நாங்க இரண்டு டன் அதிகமா ஏத்திகிட்டு போவோம். அதை போலிசுகாரனுங்க மோப்பம் புடிச்சி, கேசப் போட்டு அதுக்கு பல மடங்கு பணம் புடிங்கிக்குவானுங்க. சில நேரம் எல்லாம் சரியா இருந்தாலும் போலிசு சும்மா விட மாட்டனுங்க. நிறுத்தினதுக்கு ஐம்பது ரூபா கொடுன்னு சொல்லுவானுங்க. அதுக்கு பேரு எண்ட்ரி போடுறதாம். இந்த எண்ட்ரி எதுக்குன்னே இதுவரைக்கும் எங்களுக்கு தெரியல.

அப்புறம் சோதனைன்ற பேர்ல ஆர்.டி.ஓ வருவாரு. அவருகிட்ட மாட்டினோம்னா ஓவர் லோடுன்னு கேசு போடுவாரு. அதுக்கு 2500 ரூபா. கேசு போடாம விடறுதுக்கு 500 ரூபா கொடுத்தா போதும். இதுல யாருகிட்டயும் மாட்டாம ஓட்டுறது நம்ம சாமர்த்தியம்.

இந்த லட்சணத்துல உடம்புல ஆயிரத்தெட்டு நோயி. பாதி பேருக்கு நாற்பது வயசு ஆனாலே சரியா கண்ணு தெரியாது. ஸ்டியரிங் புடிச்சி இரண்டு கையும் கொடையும். தூக்கம் சோறு எதுவும் நேரத்துக்கு இல்ல. அல்சரு, கை கால் மூட்டு, உடம்பு வலி. இதோடதான் வாழ்க்கைய ஓட்டுறோம். எப்ப ஒழியும்னு தெரியல!

உடம்பும் போயி பணத்துக்கும் வழி இல்ல. இந்த வேலைக்கு எங்க குடும்பத்துல யாரும் வந்துடக் கூடாதுன்னு வேண்டுவோம். வண்டி எடுத்து வீடு போயி சேர்ந்தாதான் இந்த வாழ்க்க நிஜம்..” என்று சொல்லிவிட்டு விடை பெற்றார்.

வெள்ளை நிறம் மீதான இந்தியர்களின் ஆர்வத்தை மாற்றுவது எப்படி ?

கருப்பு – சிவப்பு – வெள்ளை – பழுப்பு :
இந்தியர்களின் வெள்ளை நிறத்தின் மீதான அதீத ஆர்வத்தை மாற்றுவது எப்படி?

ந்திய சமூகத்தைப் பொறுத்தவரையில் பாகுபாட்டின் ஊற்று பார்ப்பனீயமே. சாதி- மத – பாலின – நிற பாகுபாட்டின் குவிமையமாக பார்ப்பனியம் இருக்கிறது. சாதி – மத – பாலின பாகுபாடு சமூகத்தின் எதிர்ப்புக்கு ஆளாக்கப்பட்டு, சீர்திருத்தங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், நிற பாகுபாடு அனைத்து மட்டங்களிலும் வெட்கமற்ற பொது உளவியலாக மாறி நிற்கிறது. அதனை எதிர்த்து ஒன்றிரண்டு குரல்கள் அவ்வவ்போது ஒலித்து வருகின்றன. அந்த வகையில் முனா பீட்டியின் செயல்பாடு சிறு மாற்றத்தை துவக்கி வைத்திருக்கிறது. நிறத்தின் அடிப்படையை வைத்தே ஒருவரின் திறமையை மதிப்பிடுகிறது இந்திய சமூகம் என்கிறார் முனா பீட்டி. நிற பகுப்பாட்டுக்கு எதிரான செயல்பாட்டாளரான முனா, இந்தியர்களுக்கு ‘வெள்ளை’ நிறத்தின் மீதுள்ள அளவற்ற கவர்ச்சியையும் ‘கருப்பு’ நிறத்தின் மீதான அசூயையும் விவரிக்கிறார். பொருத்தமற்ற, பொருளற்ற நிறப்பாகுபாட்டை நாம் இன்னமும் கைவிடாமல் இருக்கிறோம் என்கிற கேள்வியை கேட்பதோடு, அதை கைவிடுவதற்கான சிறு முயற்சிகளை முன்வைக்கிறார்.

♦♦♦

ரபி மொழியில் ‘முனா’ என்கிற என்னுடைய பெயருக்கு ‘விருப்பம்’ அல்லது ‘ஆசை’ என பொருள். ஆனால், கடந்த பல வருடங்களாக ‘கருப்பு’ என பொருள்படும் பல பெயர்களில்தான் நான் அழைக்கப்பட்டிருக்கிறேன்.  ஏனென்றால் என்னுடைய தோல் அடர் நிறத்தில் இருந்தது.

என்னுடைய அப்பா அடர் நிறம் கொண்டவர். அம்மா வெளிர் நிறம் கொண்டவர். நான் அப்பாவின் நிறத்தை எடுத்துக்கொண்டேன். என்னுடைய தோலின் நிறம், வெள்ளையாகவும் இல்லை, கருப்பாகவும் இல்லை. அழகு சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் கருப்பு நிறமாக அடையாளப்படுத்தும் அடர் பழுப்பு நிறம் என்னுடையது.

சிறு வயதிலிருந்தே இது எனக்குப் பிடிக்கவில்லை. என்னுடைய நிறத்தின் காரணமாக நான் முழுமையடையவில்லை என நம்ப வைக்கப்பட்டிருந்தேன். என்னைச் சுற்றியிருந்தவர்கள் எப்போதும் என் நிறத்தை மற்றவர்கள் நிறத்துடன் ஒப்பிட்டபடியே இருந்தார்கள். அவர்களுடைய கருத்துகளிலிருந்தும் தீர்ப்புகளிலிருந்தும் என்னால் தப்பிக்கவே முடியவில்லை.

சொந்த குடும்பமும்கூட என்னுடைய தோற்றத்தைப் பற்றி நகைச்சுவை துணுக்குகளை சொன்னது. அதில் பிரபலமான ஒன்று: “அம்மா என்னை பிரசவிக்கும் நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. அதனால்தான் நான் கருப்பு நிறத்தில் பிறந்தேன்”.

பள்ளியில் என்னுடைய ஆசிரியர் ஒருமுறை, பல்லிளித்தப்படியே இப்படி கேட்டார், “நீ ஆப்பிரிக்காவிலிருந்து வந்திருக்கியா?”.

  • படிக்க: கருப்பாயி !

வளரும் பருவத்தில், வெளிர் நிறத்துக்கு மாறவேண்டும் என எனக்கு அழுத்தம் தரப்பட்டது. பல்வேறு வழிமுறைகள் எனக்குச் சொல்லித்தரப்பட்டன. வீட்டிலே செய்யக்கூடிய மஞ்சள், தயிர், கடலை மாவு பூசுவது முதல் கடைகளில் கிடைக்கும் காஸ்மெடிக் பொருட்கள் வரை என்னுடைய தோலில் பூசப்பட்டு என்னுடைய நிறத்தை அழகாக்க, அதாவது வெள்ளையாக்க முயற்சித்தார்கள்.

வளர் இளம் பருவம் முடியும் தருவாயில் என்னுடைய குடும்பத்தில் எனக்குப் பொருத்தமான வரன் தேடுவது குறித்து பேச்சு எழுந்தது. ஒருமுறை என்னுடைய உறவினர் வழியாக வந்த ஒரு திருமண அழைப்பை அப்பா நிராகரித்திருந்தார். அப்போது, அந்த உறவினர், “எப்படி வேண்டாமென்று சொல்லலாம்? உன் மகளின் லட்சணத்துக்கு இதைவிட நல்ல சம்பந்தம் வருமென்று நீ எந்த நம்பிக்கையில் இருக்கிறாய்? நீ அவளைப் பார்த்தியா? அவள் கருப்பு!” என்று பேசியது என் நினைவில் இருக்கிறது.

நான் எப்போதும் இந்த மனிதர்களின் கருத்துக்களுக்கோ என்னை வைத்து அவர்கள் சொல்லும் நகைச்சுவை துணுக்குகளுக்கோ எதிர்வினை ஆற்றியதில்லை. என்னுடைய பாதுகாப்பின்மை குறித்தோ ஆத்திரப்படுத்தும் எண்ணங்கள் குறித்தோ ஒருபோதும் எவரிடமும் பகிர்ந்ததில்லை. உணர்வற்றவளாக மாறி, வாயை மூடிக்கொண்டேன். புகைப்படங்கள் எடுக்கப்படுவதிலும் குடும்ப விழாக்களில் கலந்துகொள்வதிலும் எனக்கிருந்த அசவுகரியத்தால், எங்காவது தப்பிப்பிப் போய்விடலாம் என்றிருந்தது.

கடந்து போன ஆண்டுகளில் எனக்குள்ளே இந்த வலியை புதைத்து வைத்திருந்தேன்.  இப்போது திரும்பிப் பார்க்கும் போது, மிக ஆழமாக, பெரும்பாலான விஷயங்களை நினைவில் கொண்டுவருவது கடினமாக உள்ளது.

என்னுடைய உணர்வுகளை கையாள்வதற்குப் பதிலாக,  கடினமான நிதர்சனத்துடன் மவுனமாக வாழ பழகிக்கொண்டேன்.

என்னுடைய நிதர்சனம் எளிமையானது, இந்திய சமூகத்தில் என்னுடைய நிறத்தின் காரணமாக என்னுடைய மதிப்பும் குறைவானதே.

வெளிர் நிறம் இந்தியர்களை ஏன் ஆட்டிப்படைக்கிறது?

இந்தியர்களின் வெளிர் நிறத்தின் மீதான அளவற்ற கவர்ச்சி நன்கு அறியப்பட்டது; ஆழமாக வேரூன்றியும் இருக்கிறது. நிறத்தின் மீதான பாரபட்சம் அனைத்து இடங்களிலும் பரவியுள்ளது. மேலும் நாடு முழுவதும் வெளிப்படையாகவே செயல்படுத்தப்படுகிறது.

இந்திய சமூகம் நிறத்தின் அடிப்படையை வைத்தே ஒரு மனிதரை எடைபோடுகிறது. இந்திய கலாசாரத்தில் நல்லவையெல்லாம் ‘வெள்ளை’ நிறத்துடன் தொடர்புபடுத்தப்படுகிறது. கருப்பு நிறம் எதிர்மறையான விஷயங்களுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. சினிமாக்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் ஆகிய அனைத்தும் ‘வெள்ளையே அழகு’ என்கிற சிந்தனையை வளர்க்கின்றன.

இந்திய விளம்பர தர நிர்ணய ஆணையம், நிற பாகுப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் அடர் நிறத்தில் இருப்பவர்கள் தாழ்ந்த மனப்பான்மையுடன் இருப்பதாகக் காட்டும் விளம்பரங்களை 2014-ஆம் ஆண்டு தடை செய்தது. இது மாற்றத்தை நோக்கிய ஒரு அடி என சொன்னாலும், பெரிதாக இதனால் மாற்றத்தை உண்டாக்க முடியவில்லை.

நான்கு ஆண்டுகள் கழிந்தபிறகும்கூட, இந்திய ஊடகங்களும் விளம்பர துறையும் அடர் நிறத்தவர்கள் வெள்ளையாக இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும் என்கிற சிந்தனையை இன்னமும் சொல்லிக்கொண்டே இருக்கின்றன.

மேலும், அடர் நிறத்தில் இருக்கும் பெண்கள், இன்னும் மூர்க்கமாக வெள்ளையாக தெரிய முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். சிலர் வெள்ளை நிற பெண்களைப் போல காட்சியளிக்க மேக்கப்-ஐ பயன்படுத்தில் ‘வெள்ளை அடித்தது’போல காட்சியளிக்க விரும்புகிறார்கள். சிலர் வெளுக்கவைக்கும் ‘ப்ளீச்சிங்’ அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துகிறார்கள்.

எனக்குத் தெரிந்தவர்களில் என்னைவிட சற்று வெளிர் நிறத்தில் இருக்கும் பலர், அந்த நிறம் தங்களுக்குப் போதவில்லை என குறைபட்டுக் கொள்வதை அறிவேன்.

இன்று, நான் ஒரு தாய். ஒரு ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை எனக்குண்டு. என்னுடைய கணவரும் மகனும் வெளிர் நிறத்தவர்கள். என் மகள் என்னைப் போல அடர் நிறத்தவள்.

அவள் பிறந்தபோது, அவளுடைய நிறத்தின் காரணமாக தன்னை மதிப்பு குறைவானவளாக கருதவிடக்கூடாது என நாங்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டோம். சிறுவயதிலிருந்தே அவள் அழகானவள் என்றும் அவருடைய நிறம் அழகானது என்றும் சொன்னோம். ஒருவரின் தோற்றத்தை வைத்து அவரை மதிப்பிடக்கூடாது என சொல்லிக் கொடுத்தோம்.

ஆனால் நிதர்சனம்… அவள் மூன்று வயதாக இருக்கும்போது அவளுடன் படிக்கும் சிறுவன் அவளை விளையாட அழைத்திருக்கிறான்; அவள் தயங்கியிருக்கிறாள். நாங்கள் காரணத்தைக் கேட்டபோது, “அவன் பழுப்பு நிறத்தில் இருக்கிறான்” என்றாள்.

நான் அதிர்ச்சியானோம், எது அவளை இப்படி சிந்திக்க வைத்திருக்கிறது என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவளும்கூட பழுப்புதான் என நாங்கள் அவளுக்கு புரியவைக்க முயற்சித்தோம்.

அந்த சம்பவத்துக்குப் பிறகு, வெளியுலகத்திலிருந்து அவளை காப்பாற்றுவது முடியாது என புரிந்து கொண்டோம். வீட்டை விட்டு, வெளியே செல்ல ஆரம்பித்த பிறகு, பழுப்பு நிறத்தவர்கள் மதிப்பு குறைந்தவர்கள் என்கிற சமூகத்தின் பார்வையை அவள் தெரிந்து கொள்ள ஆரம்பித்தாள்.

உதாரணத்துக்கு, பள்ளியில் நடக்கு கலை நிகழ்ச்சிகளில் உயரத்தின் அடிப்படையில் வரிசையை அமைக்காமல்  நிறத்தின் அடிப்படையில் வெள்ளை நிற குழந்தைகள் முதல் வரிசையில் நிறுத்தப்பட்டார்கள்.  என் மகள் உள்பட அடர்நிற தோலுடைய குழந்தைகள், பின் வரிசையில் நிறுத்தப்பட்டார்கள். இது என் இதயத்தை நொறுக்கியது.

இந்த சம்பவத்துக்குப் பிறகு,  சமூகத்தின் கருத்து மாறும்வரை என் மகளும் இளம் வயதில் நான் நினைத்தது போல நிறத்தின் அடிப்படையிலேயே அனைத்து நிர்ணயிக்கப்படுகிறது என நினைப்பாள் என்பதை உணர்ந்தேன். எனவே, நான் இதை மாற்றும் பொருட்டு எதையாவது செய்ய முற்பட்டேன்.

எனக்கு பொருத்தமான என்னுடைய நிறம்!

என் மகளின் சிறப்பானதொரு எதிர்காலத்துக்கு உதவு வகையில்,  #ColourMeRight என்கிற பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறேன். இந்திய ஊடகங்கள் கருப்பு நிறத்தவர்களை தன்னம்பிக்கை குறைவானவர்களாக சித்தரிப்பதை நிறுத்தும் வகையிலும் என் மகளைப் போல உள்ள குழந்தைகளுக்கு கருப்பு நிற முன் மாதிரியானவர்கள் இருக்கிறார்கள் என சொல்லவும் இந்த பிரச்சாரத்தை முன்னெடுக்கிறேன்.

இந்தியாவில் போராடத்தக்க எத்தனையோ விஷயங்கள் உள்ளன; இதெல்லாம் அற்பமான விஷயம் என ஒருவர் நினைக்கலாம். ஆனால், பாரபட்சம் என்பது பாரபட்சம்தான். தோலின் நிறம் குறித்த மக்களின் பார்வையை மாற்றுவதன் மூலம், என் மகளைப் போன்ற லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு நல்லதொரு வாழ்க்கை உருவாக்கித்தர முடியும் என நம்புகிறேன்.

’கருப்பானவள்’ என இளம் வயதில் என்மீது திணிக்கப்பட்ட பாரபட்சத்தின் காரணமாக நான் இன்னமும் நம்பிக்கை குறைவானவளாகவே உணர்கிறேன். என் மகள் இதுபோன்றதை அனுபவிக்கக் கூடாது. என் மகளின் குணத்துக்காகவும் அவளுடைய தனிப்பட்ட திறமைகளுக்காகவும் அவளை மதிக்கும் ஒரு முற்போக்கு சமூகத்தில் அவள் வளர வேண்டும் என நினைக்கிறேன்.

change.org இணையதளத்தில் #ColourMeRight பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக தனிஷ்க் என்கிற நகை நிறுவனத்தின் விளம்பரத்தை முன்வைத்து தொடங்கினேன். ‘அனைத்து மணமகள்களுக்கான நகைகள்’ என்கிற வாசகங்களுடன் தோன்றிய தனிஷ்க் விளம்பரங்களில் வெள்ளை நிற பெண்கள் மட்டுமே மணமகள்களாக காட்டப்பட்டார்கள்.

கருப்பு நிற பெண்களை திருமணம் செய்வது குறித்து இந்தியாவில் ஒரு மூடநம்பிக்கை உள்ளது; ‘வெள்ளை நிற’ பெண்கள் தேவை என கேட்காத திருமண வரன் தேடும் விளம்பரங்களை காண முடியாது. இதன் காரணமாக வெள்ளை நிற பெண் மட்டுமே மணமகளாக இருக்க வேண்டும் என்கிற விளம்பரங்கள் வருகின்றன. நிச்சயம் அவை ஏற்றுக்கொள்ளக்கூடியவை அல்ல!

என்னுடைய கருத்தை பலர் ஏற்றுக் கொள்வது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. ஆயிரக்கணக்கானவர்களின் ஒப்பத்தை பெற்றபோது தனிஷ்க் நிறுவனம் என்னுடைய முறையீட்டுக்கு செவி சாய்த்தது. நாட்டின் பன்முகத்தன்மையை எதிரொலிக்கும் வகையில் விளம்பரங்களை எடுக்கவிருப்பதாக அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டது.

இது ஒரு சிறிய வெற்றியே, ஆனாலும் நம்பிக்கை அளிக்கிறது. நான் மட்டும் தனியாக இல்லை என்கிற உணர்வை இது அளித்தது. இந்தியாவில் உள்ள ஆண்கள்-பெண்கள் பலர் இந்த பிரச்சினையை சந்திப்பதும், அவர்கள் சமூகத்தின் எண்ணத்தில் மாற்றம் வேண்டும் என கருதுவதையும் அறிந்தேன்.

சமீபத்தில், அழகு சாதனப் பொருட்களை தயாரிக்கும் இந்தியாவின் பெரு நிறுவனமாக ‘லாக்மே’வுக்கு எதிராக ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்திருக்கிறேன்.

உள்ளாட்டு நிறுவனமான லாக்மே, கடந்த ஐம்பது ஆண்டுகளாக அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் முன்னணியில் இருக்கிறது. இந்திய பெண்களின் அழகு தொடர்பான ஆர்வங்களில் லாக்மே முதன்மை இடத்தில் இருக்கிறது.

ஆனால், அவர்களுடைய இணையதளத்தைப் பார்க்கும் போது அனைத்து பொருட்களுக்கும் ஒரே ஒரு நிறம் மட்டுமே முன்மாதிரியாக காட்டப்பட்டிருக்கிறது, அது வெள்ளை நிறம்!

லாக்மே ஃபேஷன் வீக் -இன் இந்த ஆண்டுக்கான பொருள் ‘பாரபட்சமற்ற அழகைக் கொண்டாடுதல்’ ‘எல்லைகளைக் கடந்த அழகு’ என்பதாகும். எனவே இந்நிறுவனம் அழகு சாதனப் பொருட்கள் அனைத்தையும் அனைவரையும் உள்ளடக்கியதே என தெரிந்து வைத்திருக்கிறது. இந்தியாவில் உள்ள வெள்ளை, கருப்பு உள்ளிட்ட அனைத்து நிறங்களுக்கும் ஏற்ற அழகு சாதனங்களை தாயாரிக்கக்கூடிய சாத்தியக்கூறுகளுடன் அந்நிறுவனம் உள்ளது.

என்னுடைய முறையீட்டின் மூலம், லாக்மே தன்னுடைய தவறை உணர்ந்து, சரியான திசையில் செல்லும் என நினைக்கிறேன். இந்திய சமூகத்தின் கருப்பு நிறத்தின் மீதான கருத்துருவாக்கத்தை லாக்மே போன்ற ஒரு பெரு நிறுவனத்தால் மாற்ற முடியும்.

நிற பாகுபாட்டுக்கு முற்றுப்புள்ளி

இந்திய பாகுபாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க நான் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கும். #ColourMeRight தவிர்க்க முடியாத, கடினமான, நீண்ட பயணம். என்னைப் போன்ற நிறபாகுபாட்டால் ஒடுக்கப்பட்ட எண்ணற்ற பெண்களுக்கு குரலாக இந்த பிரச்சாரத்தை முன்னெடுக்க விரும்புகிறேன். இது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும், எத்தனை பேரின் எண்ணங்களை மாற்றும் என எனக்குத் தெரியாது…ஆனால், என்னுடைய மகளின் வாழ்க்கையில் நான் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறேன் என்பது உண்மை.

ஒருமுறை அவள், அந்த சிறுவனின் பழுப்பு நிறத்துக்காக அவனுடன் விளையாட மறுத்தாள். அவள் சமீபத்தில் சொன்னாள், “நானும் உன்னைப் போல பழுப்பு. எனக்கு பழுப்பு பிடித்திருக்கிறது”

நன்றி : அல்ஜசீரா Colour me right: It’s time to end colourism in India
தமிழாக்கம் : கலைமதி

வங்காளிகள் சாதியத்தை புரிந்து கொள்ளாதது ஏன் ? காஞ்சா அய்லய்யா

எழுத்தாளர் காஞ்சா அய்லய்யா.

டதுசாரிகள் ஆட்சி புரிந்த வங்கத்தில் இந்துத்துவ சக்திகள் எப்படி வளர முடியும் என பலருக்கு கேள்வி இருக்கிறது. வங்கத்துக்கும் இந்துத்துவ சக்திகளுக்குமான பிணைப்பு இந்திய ‘தேசத்தின்’ உருவாக்கத்திலிருந்தே தொடங்கிவிட்டது. காலனிய ஆட்சியில் தேசியவாதத்தோடு தோன்றிய சீர்திருத்தவாதிகளில் அனேகம் பேர் நமது நாடு, நமது பண்பாடு, நமது சிறப்பு என்ற பெயரில் இன்றைய இந்துத்துவாவின் மென் வடிவத்தை முன்வைத்தனர்.

இவர்களில் சிலர் பார்ப்பனியத்தின் பிற்போக்கான நடவடிக்கைகளை எதிர்த்த போதும் பலர் தேசியம் என்ற பெயரில் அவற்றுக்கு ‘தத்துவ விளக்கமும்’ சொன்னார்கள். முக்கியமாக பார்ப்பனியத்தின் வருணாஸ்ரம – சாதி ரீதியான பிரிவினையையும், அதன் பௌதீக அடிப்படைகளையும் ஏற்றுக் கொண்டார்கள். சாதி ரீதியான ஏற்றத்தாழ்வில் சில சீர்திருத்தங்களை செய்யலாம் என்பது போக அவற்றை ஒழிக்க வேண்டும் என்று இவர்கள் போகவில்லை. இந்தியாவின் அறிவுப்பூர்வமான நடுத்தர வர்க்கம் முதலில் வங்கத்தில் தோன்றியது என்பதாலும் இந்தப் போக்கின் ஊற்றிடம் வங்கமாக இருந்தது. மும்பை, சென்னை போன்ற மாகாணங்கள் வங்கத்தின் பாதையிலேயே சென்றன.

அதே நேரம் இந்த பார்ப்பனிய சித்தாந்தத்திற்கு எதிரான கருத்துக்களும் இதே மாகாணங்களில் பின்னர் தோன்றின என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இங்கே திராவிட இயக்கம், மராட்டியத்தில் பூலே – அம்பேத்கர், வங்கத்தில் கம்யூனிஸ்டுகள் போன்றவர்கள் அப்படி வளர்ந்தார்கள். வங்கத்தில் இன்றும் சாதியக் கொடுமைகள் மற்ற மாநிலங்கள் போல நடப்பதில்லை. அதே நேரம் இன்று அங்கே பா.ஜ.க வளர்கிறது. சி.பி.எம் கூட அரசியல் அதிகாரத்தை தாண்டி பண்பாட்டு அளவில் பார்ப்பனியத்தை எதிர்த்து பிரச்சாரம் செய்ததில்லை.அதனுடைய விளைவாக இன்று வங்கத்தில் அவர்களால் பார்ப்பனியத்தின் அரசியல் கட்சியான பா.ஜ.கவை எதிர்கொள்ள முடியாத அளவுக்கு பலவீனமாக மாறிவிட்டனர்.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பேசிய எழுத்தாளர் காஞ்சா அய்லய்யா, அரசியல் இந்துத்துவ சக்திகள் வங்காளத்திலிருந்தே வந்தன என்கிற வரலாற்றுத் தகவலை சொல்லியிருக்கிறார். கொல்கத்தாவில் நடந்த ரிதுபர்ன கோஷ் நினைவு கருத்தரங்கில்  அய்லய்யா  ‘சாதி, பாலினம் மற்றும் ஜனநாயகம்’ என்ற தலைப்பில் பேசினார். வங்கத்தில் சி.பி.எம் கட்சியினர் ஏன் தோற்றுப் போனார்கள் என்பதாகவும் காஞ்ச அய்லய்யாவின் பேச்சை பரிசீலிக்கலாம்.

அந்த பேச்சிலிருந்து சில துளிகள்…

“ஆர்.எஸ்.எஸ். 1925-ஆம் ஆண்டு ஹெட்கேவர் உள்ளிட்ட மகாராஷ்டிர பார்ப்பன சிந்தனையாளர்களால் உருவாக்கப்பட்டது. ஆனால், அரசியல் இந்துத்துவ சக்திகள் வங்கத்திலிருந்தே வந்தன. பங்கிம்சந்திர சட்டோத்பாயா-வின் எழுத்துகள் முதல் ஷ்யாம் பிரசாத் முகர்ஜியின்  ஜனசங்கத்தின் (முந்தைய பா.ஜ.க.) துவக்கம் வரை வங்கத்திலிருந்தே தொடங்கியது.

ராம் மோகன் ராய், தாகூர், விவேகானந்தர் குறித்து நாட்டின் அனைத்து பகுதியினரும் அறிவர். வங்காள மாணவர்களுடன் உங்களுக்கு மகாத்மா புலே, பெரியார் பற்றி தெரியுமா எனக் கேட்டால். அந்தப் பெயர்கூட அவர்களுக்கு பரிட்சயமானதில்லை என்பது தெரியவரும்.

வங்காளத்தில் தேசியவாதத்தின் வருகை காலனித்துவ வரலாற்றில், நவீன வங்காளிக்கான அடையாளத்தை உருவாக்கிய முக்கியமான தருணம். அந்த தருணத்திலிருந்து வங்காள அறிவுஜீவிகள் சாதியத்தைப் பயன்படுத்தி இந்து மேலாதிக்கக் கருத்தியலை வளர்த்தெடுத்தார்கள்.

நான் புரிந்துகொண்டதிலிருந்து சொல்கிறேன், வங்காள அறிவுஜீவிகள், தேசியவாதத்தை கட்டமைத்ததில் அடிப்படையிலியே ஏதோ தவறு நிகழ்ந்திருக்கிறது. தேசம் குறித்த ஒட்டு மொத்த பிராந்திய புரிதல் வேறாக இருந்தது. உதாரணத்துக்கு பாம்பே மற்றும் மெட்ராஸ் மாகாணங்களில் இரண்டு விதமான உறுதியான கருத்தாக்கங்கள் உருவாகின. இப்போதைய ஆர்.எஸ்.எஸ். உருவானது. ஆனால், அதற்கு சமமாக சாதி எதிர்ப்பியக்கமும் உருவானது. ஆனால், வங்காளத்தில் அவர்களுடைய தாராளவாதத்துக்கு எதிராக, ரிக் வேதம் சொல்லும் நான்கு வர்ணங்களால் முறைப்படுத்தப்பட்ட சாதிய மரபின் தொடர்ச்சியை முன்வைத்தார்கள். வங்கத்தின் அருகே பவுத்தம் இருந்தபோது,  சாதிய உடைப்பை உருவாக்க வங்கம் தவறிவிட்டது.

சாதி, பாலினத்தின் மீது இது பெரும் தாக்கத்தை உண்டாக்கியது. இந்த இரண்டிலும் ஒன்று பிரதானமாக இருந்தது. அது ’தொழிலாளர்’ நகரங்களை உருவாக்கவும் கிராமங்களை மாற்றியமைக்கவும் பெண்களும் சூத்திரர்களும் முக்கியமான கருவிகள். பெண்கள் விவசாய உற்பத்தியில் முன்னோடிகளாக இருந்த காரணத்தாலேயே வேளாண் பணிகளில் பாலின பாகுபாடு மிகக் குறைவாகவே இருந்தது.

வங்கத்தில் சமஸ்கிருத அறிஞர்கள் செல்வாக்குடன் விளங்கினார்கள். விவேகானந்தரின் தாத்தா, ஒரு சமஸ்கிருத அறிஞர். என்னுடைய அப்பா, தாத்தாவை எடுத்துக் கொள்ளுங்கள், அவர்கள் செம்மறி ஆட்டை வளர்ப்பதிலும், வெள்ளாட்டை மேய்ப்பதிலும் ஈடுபட்டிருந்தார்கள். அவர்களுக்கு படிப்பதற்கான உதவித் தொகை அறிவிக்கப்பட்டிருந்தாலும் அது ஏட்டில்தான் இருந்தது.

எப்படி கம்யூனிஸ்டுகள் இந்த பிரச்சினைகளை இழந்தார்கள்? அவர்கள் அடையாள அரசியல் என்ற கருத்தை ஏற்கவில்லை. சாதி என்பதே இந்திய யதார்த்தம் என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. சாதி, வர்க்கத்தால் ஆளப்படுகிறது. மேலும் அவர்கள் பாலின சமத்துவத்தையும் புறக்கணித்தனர். முழு புரட்சி வரும் காலத்தில் அனைத்து சரியாகும் என அவர்கள் நம்பினார்கள். ஆனால், அது சரியல்ல…

அடையாளத்தின் பங்கு எப்படிப்பட்டது என அவர்கள் புரிந்து கொள்ளவும் அடையாளப்படுத்தவும் முயற்சித்திருக்க வேண்டும். சாதிய கட்டுமான குறித்தும் பாலின கட்டுமானம் குறித்தும் அவர்களுடைய செயல்திட்டத்தில் முக்கிய இடம் தந்திருக்க வேண்டும். இன்றைய வலது அமைப்புகள் செய்துகொண்டிருப்பதைக் காட்டிலும் அது (கம்யூனிஸ்டுகளின் திட்டம்) சமத்துவம் தொடர்பான பிரச்சினைகளை நோக்கி நாட்டை தள்ளியிருக்கும். இப்போதும்கூட இளைய வங்காளிகள் இந்த வேறுபாடுகளை இனம்காண முடியாதவர்களாக இருக்கிறார்கள்.

எழுத்தாளர் காஞ்சா அய்லய்யா.

ராம் மோகன் ராய், தாகூர், விவேகானந்தர் குறித்து நாட்டின் அனைத்து பகுதியினரும் அறிவர். வங்காள மாணவர்களுடன் உங்களுக்கு மகாத்மா புலே, பெரியார் பற்றி தெரியுமா எனக் கேட்டால். அந்தப் பெயர் கூட அவர்களுக்கு பரிட்சயமானதில்லை என்பது தெரியவரும்.” என்ற அய்லய்யா, இன்றைய வங்காளிகள் எதிர்கொண்டுள்ள வேறொரு பிரச்சினையை சுட்டிக்காட்டினார்.

“1931-க்குப் பிறகு 2021 ஆம் ஆண்டு முதன் முறையாக ஓ.பி.சி.- க்கள் குறித்த கணக்கெடுப்பு நடக்கவிருக்கிறது. ஓ.பி.சி. ஆதரவைப் பெற பா.ஜ.க. முயற்சிக்கும் என நினைக்கிறேன். பா.ஜ.க.வின் ஓ.பி.சி. அடையாள கட்டமைப்பை மமதா பானர்ஜியாலும் தடுக்க முடியாது என நினைக்கிறேன். பா.ஜ.க. ஓ.பி.சி., தலித் சாதி அடையாளத்தை ஒருங்கிணைத்து ஓ.பி.சி. முதலமைச்சர் வேட்பாளர்களை அறிவிக்குமானால், அவர்கள் ஆட்சிக்கு வர வாய்ப்பிருக்கிறது”

இறுதியாக , “வங்க அறிவுஜீவிகளுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். தயவுசெய்து வங்கத்தில் சாதி குறித்த உரையாடலை தொடங்குங்கள். வங்கத்தில், சாதி கண்டறியப்படாத புற்றுநோயாக உள்ளது!” என பேசி முடித்தார் அய்லய்யா.

மூலக் கட்டுரை: ‘Bengalis have no understanding of caste’
தமிழாக்கம்:

பிள்ளையார் சிலை பொறுப்பாளர் இந்து முன்னணி அய்யப்பன் நேர்காணல் !

Hindu-Munnani-vinayagar-07

தென்காசியில் 144 தடையுத்தரவு, கலவரச் சூழல், எச்ச ராஜாவின் விஷமத்தனமான பேச்சு என பல அடாவடிகளோடு நிறைவடைந்திருக்கிறது, விநாயகர் சதுர்த்தி. விழா என்ற பெயரில் சிலையை வைத்து அடாவடி செய்வது இந்துமுன்னணியின் வாடிக்கைதான் என்றபோதிலும், இந்தமுறை இவ்வளவு இரைச்சல் எங்கிருந்து வந்தது?

சென்னையில் காசி தியேட்டர் சிக்னலில் இருந்து எம்.ஜி.ஆர். நகர் நோக்கி செல்லும் சாலையில் பத்தடிக்கு ஒரு பிள்ளையார் என ஒரே தெருவில் எட்டுக்கும் மேற்பட்ட பிள்ளையாரை பார்க்க முடிந்தது. அவை எல்லாமே ஆறடிக்கு மேல் உள்ள பிரம்மாண்ட பிள்ளையார்கள். பந்தல் அமைப்பு, சீரியல் செட்டுகள், சவுண்டு சர்வீஸ், பொங்கல், பொரிகடலை சர்வீஸ் என்று ஏகப்பட்ட ஏற்பாடுகள். சங்க பரிவாரக் கும்பல் தமிழகத்தை இலக்கு வைத்திருப்பதையே இவை உணர்த்துகின்றன.

பொன்னாரும், எச்ச ராஜாவும், நிர்மலா சீதாராமன் வகையறாக்களைத் தூக்கி சாப்பிட்டுவிடும் அளவிற்கு அடிமட்டத் தொண்டர்களையும் வெறியூட்டி வைத்திருக்கிறார்கள். சமீபத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை செய்யும் தொழிலாளர்களை சந்திப்பதற்காக எர்ணாவூர் பகுதிக்குச் சென்றிருந்தோம். அங்கு இந்துமுன்னணி நிர்வாகி அய்யப்பனையும் சந்தித்தோம். அவரிடம் எந்த ஒரு பிரச்சினையைப் பற்றி நீங்கள் பேசினாலும் முடிவில் அல்லாவும் கிறிஸ்டினும் திராவிடமும்தான் அதுக்கு மூலக்காரணம் என்று முடிப்பார். அடிமட்ட தொண்டனிடமும் எவ்வாறு இந்துமதவெறியூட்டப்பட்டிருக்கிறது என்பதற்கு அய்யப்பன் ஒரு வகைமாதிரி.

அய்யப்பன்

விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் விதித்திருந்த உத்தரவுக்கேற்ப அரசு சில விதிமுறைகளை வகுத்து சொல்லியிருந்தது. இதனை ஏன் எதிர்க்கிறீர்கள்? என்றுதான் கேள்வியை ஆரம்பித்தோம். அடுத்தடுத்தக் கேள்விகளை நாம் கேட்கத் தேவையில்லாத அளவிற்கு அவரே சரவெடியாய் வெடித்துத் தீர்த்தார். இனி, அய்யப்பனின் வார்த்தைகளில்…

இந்து முன்னணியின் குடோன் வளாகம்.

”கழுத்தப் புடிக்கிற அளவுக்கு கட்டுப்பாடுகள் இருக்கக்கூடாது. எல்லாத்தையும் ஃபாலோ பன்றது முடியாது. ஒவ்வொருத்தனும் தடையில்லாச் சான்று வாங்கனும்னா சாத்தியமே இல்லை. களிமண்ணுலதான் சிலை செய்யனும்னு சொல்றது ஏத்துக்க முடியாது. அதைவிட, சாமிக்கு தடைன்னு ஒன்னு போடுறதே ஏத்துக்க முடியாதுல்ல.. இது இந்து தேசம். வழிபாடு சுதந்திரமா செய்யனும்.

எங்களோட நம்பிக்கை என்னன்னா, விநாயகர் இந்த அண்டத்துல இருக்கிற எல்லோருடைய கஷ்டத்தையும் ஏத்து கடல்ல போயி கரைப்பாரு. அதனாலதான் அஞ்சி நாள், பத்து நாள் வச்சி, வழிபட்டு கடல்ல கரைக்கறதுக்கா கொண்டு போறோம்.

இந்த கூத்தடிக்கிறது, கும்மாளமடிக்கிறது… அதும் இருக்கனும். திருவிழா. திருவீதிஉலாதான். விநாயகர் வீதி உலா வந்தா அத பார்க்குற மக்களுக்கு ஒரு சந்தோசம். ஒரு தீபாவளி வந்த மாதிரி, ஒரு பொங்கல் வந்தா மாதிரி, விநாயகர் சதுர்த்தியும் இந்துக்கள் மனசுல வந்து ஒரு பெரிய எதிர்பார்ப்ப உண்டாக்கியிருக்கு. இது பக்தி.

இது இந்து சமுதாயம். என் நம்பிக்கை. என் விநாயகர். மத்தவங்க சொல்றா மாதிரி வெளிநாட்டுலேர்ந்து வந்ததெல்லாம் கிடையாது. ஹரி ஓம்னு ஆரம்பிக்கிற அரிச்சுவடியே கணபதிக்கிட்டயிருந்துதான். அதுமாதிரி இதெல்லாம் எங்களுடைய மரபு.

என்னை எங்க அம்மா எங்க அப்பாவுக்குத்தான் பெத்தாங்கன்றது என்னோட நம்பிக்கை. எங்க அம்மா காட்டுனதால அப்பானு சொல்றேன். இத நானு ஆராய்ஞ்சிட்டு ஒக்காந்துட்டுருந்தேனு வச்சிக்கிங்களே… என் பிறப்பே தப்பாயிபோயிடும்.

திராவிட கட்சிகள், அதான் நிறைய இருக்காங்களே சீர்திருத்த வாதிகள் வெளிநாட்டுல இருந்து காச வாங்கிட்டு எலும்புத் துண்டுக்காக வேல செய்றவங்கெல்லாம் இருக்காங்க… அவங்களாம் சேர்ந்து ஒரு மாயையை கொண்டு வந்துட்டாங்க. திராவிட பாரம்பரியம்னு சொல்லி இந்துக்களை அப்படியே நசுக்கி வச்சிட்டாங்க.

தமிழ்நாட்டுலதான் இப்படி, மகாராஷ்டிராவில எல்லாம் தடையே கிடையாது. அங்கெல்லாம் சூடு சுரணையுள்ள இந்துக்கள் வாழ்றாங்க. ஒன்னுமில்லைங்க. இந்த இடத்துல ஒரு பிரச்சினை வந்துருச்சின்னு வச்சிக்கிங்களே… நான் போயி கேக்கிறேன். வாய் வார்த்தை ஆயிருச்சி. நீங்க அந்தப் பக்கம் ரோட கிராஸ் பண்ணி போறீங்க. நீங்க என்னா சொல்லிட்டு போவீங்க? அவரு இந்து முன்னணியில இருக்கிறாரு. ஏதோ பிரச்சினை போலருக்குனு போயிட்டே இருப்பீங்க. சொல்றவரு யாரு? கோவிந்தசாமியா இருப்பாரு, கந்தசாமியா இருப்பாரு.

இந்து போயி ஒரு கிறிஸ்டின் காரன அடிச்சானு இருக்கா. ஒரு முசுலீமை காரனை அடிச்சானு இருக்கா. அடிக்கவே மாட்டான். மனசாலயும் எந்தவிதத்திலும் துரோகம் செய்யக்கூடாதுனு நினைக்கிறவன் தமிழன்.

மத்த மாநிலத்துக் காரனுங்களுக்கெல்லாம் மனசாட்சினு ஒன்னு கிடையாது. முதல்ல அடி அப்புறம் பாத்துக்கலானு இருப்பாங்க. தமிழனுக்கு இரக்க குணம் எல்லாம் அதிகம்.

இல்லனா, 56 தேசத்தை ஆண்டவன். இன்னிக்கு ஒரு தேசத்தக்கூட ஆள நாதியில்லாம இருப்பானா? என்னா சொல்றீங்க. தமிழன் ஆண்டாங்க. வேற யாருமில்லை. தமிழன்தான் 56 தேசத்தை ஆண்டவன். ஆனா, தமிழனுக்கு தமிழ்நாட்டுலேயே சாமி கும்பிட 24 தடை. என்னா பன்றது?

பேசினா பேசிகிட்டே இருக்கலாம்ங்க… எந்தெந்த வகையில இந்துக்கள முடக்கி கைய கால முறிச்சி போடனுனு நினைக்கிறாங்க. அந்தளவுக்கு வேலை செஞ்சிகிட்டிருக்காங்க.

பாய் குல்லா போட்டுகிட்டு பைக்ல போறான். அவன விட்டுட்டான். நான் பின்னாடியே போறேன். என்ன புடிச்சான். குல்லா என்ன அல்லா கொடுத்த ஹெல்மெட்டா…? அவனுக்கு ஒரு கேசப் போடு, எனக்கு ஒரு கேசப் போடு! இல்ல தூக்குல கூட போயி போடுங்க. நான் தொங்கறதுக்கு ரெடியா இருக்கேன்னு சொல்லிட்டு நின்னுட்டேன். அவனப் புடிக்கிறதுக்கு உங்களுக்கு தைரியம் இல்லை. 7% இருக்கவங்க மேல இருக்கிற பயம், 83% மேல இல்லை.

ஆனா, இது ரொம்ப நாளைக்கு நீடிக்காது. 84 ல நடந்த மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் பிரச்சினைக்கு அப்புறம்… ஓரளவுக்கு கொஞ்சம் கொஞ்சமா இந்து முன்னணி ஆரம்பிச்சு… சூடு சொரணையோட இந்துக்கள் நிமிர்ந்து நிக்க வந்துட்டான்.

முன்னெல்லாம், தாழ்த்தப்பட்ட ஜாதிக்காரன் வந்து, ஜாதியை சொல்ல பயந்தான். மழுப்பி காலனிக்காரங்கனு சொன்னான். இன்னிக்கு, பறையன் அப்படின்னு தைரியமா சொல்றான். எந்த ஜாதியா இருந்தாலும் சரி, இந்து. நீ என் சகோதரன். அப்படினு சொல்ல வச்சது இந்து முன்னணி. இந்த ஒற்றுமை 80% வந்துருச்சி. இன்னும் 20% வந்துருச்சின்னா, அரசியல்வாதியிலருந்து அத்தனை பேருக்கும் ஒரு பாடம் இருக்கும்.

இனி, இந்துக்கள தொட்டா ஒரு பிரச்சினை பன்னுவாய்ங்க. அப்படின்ற ஒரு இது வந்துரும். வரும். இப்பயே வந்துருச்சி. எங்காளுங்கள வாரவழிபாடுக்கு வாங்கடான்னா.. மண்டைய சொறிவானுங்க. ஏன்னா, கவிச்சி சாப்பிட்டிருப்பான். கோயிலுக்குள்ள வரமாட்டான். ஆனா, டேய் ஒரு பிரச்சினைடான்னா… கட கடன்னு ஓடியாந்து எனக்கு முன்னாடி ஸ்டேசன்ல முற்றுகைப் பன்றதுக்கு நிப்பானுங்க. எவ்வளோ உணர்வு பாருங்க அவனுங்களுக்கு. எல்லாமே விநாயகரோட அருள்தான்.

தனியா நடந்து போனாலே, பிட் நோட்டிஸ் குடுக்குற கூட்டமாயி போச்சு. எவனாவது செருப்ப வீசிருவான். இங்க இருக்கிறவன்லாம் என்னா பன்னுவான், இவ்ளோ நாள் பக்தியா எடுத்துட்டு போற பிள்ளையார் மேல செருப்ப தூக்கி அடிச்சா என்னா ஆகும். கோபப்பட்டிருவாங்க. அப்புறம் சாமிகிட்ட முறையிடுவாங்க. அங்கேயே உக்காந்து போராட்டம், ஆர்ப்பாட்டம்னு பன்னிருவாங்க. ஸ்தம்பிக்க வச்சிருவாங்க சென்னையை… அதனால போலீச நிறைய கொண்டுவந்து குவிச்சி… அந்த மாதிரி யாரும் வராத அளவுக்குத் தடுக்குறாங்க.

நாம போலீசு கொடுத்த வழியிலதான் போகப் போறோம். பெரும்பான்மையா இருக்கிற நமக்கே மசூதி இருக்கு. சுடுகாடு (தர்காவைத்தான் திமிராக சுடுகாடு என்கிறார்.) இருக்கு. இந்தப் பக்கமா போங்கனு சொல்றாங்க. அப்போ, அந்த வழியா போகாதீங்க… போனா, அவங்க உங்களை அடிச்சிருவாங்கனுதானே சொல்றாங்க. தேடி வந்து பைக்கில வந்து கல்ல தூக்கி அடிச்சி சாமிய வந்து ஏதாவது பன்னிட்டு போயிட்டாங்கன்னா.. என்னா பன்றதுனு போலீசு காரங்களுக்கு ஒரு பயம்.

எங்களுக்கெல்லாம் வாழ்றதும் ஒன்னுதான் சாகறதும் ஒன்னுதான். சமுதாயத்துக்காக வேல செய்ய வந்திருக்கோம். இந்த மாதிரி எத்தனையோ பேரு உயிர விட்டவங்க இருக்காங்க. பால கங்காதர திலகரு. சுப்பிரமணிய சிவா., தேசத்துக்காண்டி விட்டவங்க. நாங்க தேசத்துக்காண்டி வேலை செய்றவங்க. அதனால எங்களுக்கெல்லாம் உயிர்மேல ஒரு நாட்டம் கிடையாது. போற உயிரு எப்ப வேணா போகட்டும். ஆனா, இந்த தேசத்துக்காண்டி போகனும்னு நினைக்கிறவன்.

அப்பொழுது அங்கு வந்த மூன்று சிறுவர்கள் மூனரை அடி, ஐந்தரை அடி அளவுகளில் பிள்ளையார் இருக்கா. எவ்வளவு விலை என்று விசாரித்தனர். அவர்களிடம் விலையை சொல்லிவிட்டு அவர்களுடைய ஏரியாவை விசாரித்தார். அந்த சிறுவர்கள், கொருக்குப்பேட்டை என்றனர். உடனே, டேய்.. அந்த ஏரியாவுல பால்ராஜ் தெரியுமாடா உங்களுக்கு. அவங்க கிட்ட கேளுங்க. அவங்கள கூட்டி வந்து வாங்கிட்டு போங்க. இல்லனா, சிந்தாதிரிப் பேட்டையில ஆபிசு இருக்கு. அங்க ரிஜிஸ்டர் பன்னிட்டு வந்து வாங்கிட்டு போங்க..டா… என சொல்லிவிட்டு கிளம்பினார். காவி கொடி கட்டிய வாகனங்களும் வந்த வண்ணம் இருந்தன!

பிள்ளையார் சிலைகளை பக்தர்களோ இல்லை இந்துக்களோ கர்ம சிரத்தையாக வாங்கி தெருவுக்கு தெரு வைத்து வழிபடுவது இல்லை. அனைத்தும் இந்து முன்னணியின் நேரடி ஏற்பாட்டால் வம்படியாக வைக்கப்படுகிறது. இந்த பிள்ளையார் சிலைகள் பெரும் பொருட்செலவுடன் தயாரிக்கப்படுவதால் இந்து முன்னணி பெரும் முதலாளிகள், பணக்காரர்கள் போன்றோரை புரவலர்களாக வைத்து செலவழிக்கிறது. மேலும் பகுதியிலுள்ள உதிரி இளைஞர்கள் இதை வைத்து வசூல் செய்வதற்கும், கெத்து காட்டுவதற்கும் பிள்ளையார் சிலை உதவி செய்வதால் தமிழகம் முழுவதும் இது விசமாய் பரவி வருகிறது.

பிள்ளையார் சிலை கிட்டங்கியின் பொறுப்பாளர் அய்யப்பன் பேசும் இந்து முன்னணி கருத்துக்களில் ஓரிரண்டை பேச ஆரம்பிக்கும் உதிரிப்பாட்டாளிகள் பின்பு கலவரம் வரும்போது அடியாட்படையாக பணியாற்றுகிறார்கள். அடுத்ததாக அய்யப்பன் பேசுவதில் இரண்டு விசயங்கள் இருக்கின்றன. தமிழர்கள்தான் இந்துக்கள் என்பதாகவும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு தோள் கொடுக்கும் சித்தாந்தமே இந்துத்துவம்தான் என்றும் கூறுகிறார். தமிழின அரசியலோ, தலித் அரசியலோ இரண்டையும் இந்துத்துவத்தின் நட்புச் சக்திகளாக மாற்றும் வேலையை ஆர்.எஸ்.எஸ் செய்து வருகிறது. மாறாக இரண்டுமே இந்துத்துவத்திற்கு எதிரானது என்பதை முன்னிறுத்தி முற்போக்காளர்கள் பிரச்சாரம் செய்கின்றனர். புதிய தமிழகம் கிருஷ்ணசாமி முதல் ராம் விலாஸ் பஸ்வான் வரை இந்துத்துவத்தின் தளபதிகளாக மாறும் நிலையில் நாம் இன்னமும் அதிகம் பணியாற்ற வேண்டும்.

குறிப்பு: இந்த நேர்காணலின் முதல் வடிவம் 11.00 மணி அளவில் திருத்தப்படாத நிலையில் வெளியிடப்பட்டது. திருத்திய வடிவத்தை 1.00 மணி அளவில் வெளியிடுகிறோம். இதில் அய்யப்பன் அளித்த நேர்காணல் அப்படியே அவரது வார்த்தைகளில் எந்த மாற்றமும் இல்லாமல் வெளியாகியிருக்கிறது. முன்னுரை, பின்னுரையில் சில கருத்துக்களை இணைத்திருக்கிறோம்.

ரஃபேல் ஊழல் : தேள் கொட்டிய நிலையில் சங்கிகள் !

பொய் சொல்வதில் சில சிக்கல்கள் இருக்கின்றன – முதலில், சொன்ன பொய்யை மறக்காமல் திரும்பத் திரும்ப ஒரே மாதிரியாகச் ஒரே வரிசையில் சொல்ல வேண்டும்; அடுத்து, அந்தப் பொய்யில் வரும் கதாபாத்திரங்கள் அத்தனை பேரும் ஒரே கதையை தேதி-இடம்-வரிசை மாறாமல் சொல்ல வேண்டும்; அடுத்து, நம்மையும் மீறி உண்மை வெளியாகி விட்டால் அதைப் பொய்யாக காட்டும் ’திறமை’ வேண்டும்.

இல்லையென்றால் குட்டு வெளிப்பட்டு விடும் – இப்போது ரஃபேல் விமான ஒப்பந்த விவகாரத்தில் நடந்து கொண்டிருப்பது அது தான்.

modi-ambani-rafale-jet-scamவிமான தயாரிப்பில் எந்த அனுபவமும் இல்லாத அனில் அம்பானியின் ரிலையன்சுக்கு தஸ்ஸால்ட் நிறுவனத்துடன் கூட்டுப் பங்கு கம்பெனி துவங்கவும், விமான உதிரிபாகங்கள் தயாரிக்கவும் ஏன் வாய்ப்பு வழங்கப்பட்டது? ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் கடனில் தத்தளிக்கும் அனில் அம்பானியை கடனில் இருந்து காப்பாற்றுப் பொருட்டே விமானத் தயாரிப்பில் நல்ல அனுபவம் வாய்ந்த பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிட்டெட்க்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதா?

மன்மோகன் சிங் காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி ஒரு  விமானத்தின் விலை தோராயமாக சுமார் 600 கோடி – இதே புதிய ஒப்பந்தத்தின் கீழ் ஒரு விமானத்தின் விலை தோராயமாக சுமார் 1,400 கோடி. 126 விமானங்கள் வாங்குவதற்காக போடப்பட்ட பழைய ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு 36 விமானங்கள் மட்டுமே வாங்குவதற்கான ஒப்பந்தத்தை மோடி இறுதி செய்த போது அவரோடு அனில் அம்பானி இருக்கிறார் – அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சரோ மீன் கடை ஒன்றைத் திறந்து வைத்துக் கொண்டிருக்கிறார்.

இவை சில அடிப்படையான கேள்விகள் மட்டும் தான்; இதே போல் எண்ணற்ற கேள்விகளை ரபேல் விமான ஒப்பந்தம் எழுப்புகின்றது. இந்தக் கேள்விகளுக்கு பல்வேறு சந்தர்பங்களில் பல்வேறு விளக்கங்களை பாரதிய ஜனதா முன்வைத்துள்ளது.

முதலில் இந்திய பொதுத்துறை நிறுவனத்திடம் ரஃபேல் விமானங்களை தயாரிக்க போதுமான தகுதி இல்லை என்றனர் – ஆனால், புதிய ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு சுமார் பத்தே பத்து நாட்கள் முன் (மார்ச் 28ல்) வெறும் ஐந்து லட்ச ரூபாய் ஆரம்ப முதலீடாகப் போட்டு துவங்கப்பட்ட ரிலையன்ஸ் நிறுவனத்தின் தகுதியை எவ்வாறு அளவிட்டனர் என்கிற கேள்விக்கு விடை இல்லை.

இத்தனைக்கும் ஹெச்.ஏ.எல் நிறுவனம் இந்திய அரசின் நவரத்தினா தகுதி பெற்ற நிறுவனங்களில் ஒன்று – நவரத்தினா நிறுவனத்தாலேயே முடியாதது அம்பானியால் எப்படி முடியும்?

அடுத்து, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு விமான ஒப்பந்தத்தை இறுதி செய்யாமல் காலதாமதம் செய்து வந்தது என்றும், விமானப்படை போர் விமானங்கள் இன்றி ஆபத்தான நிலையில் இருந்ததால் நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தாங்கள் 36 விமானங்களுக்கான ஒப்பந்தத்தை இறுதி செய்ததாகவும் சொன்னார்கள்.

ஆனால், 2015 ஏப்ரல் முதல் வாரத்தில் புதிய ஒப்பந்தத்தை மோடி அரசு இறுதி செய்ததற்கு சரியாக இரண்டு வாரங்களுக்கு முன் தஸ்ஸால்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் எரிக் ட்ரேப்பியெர் 126 விமானங்களுக்கான ஒப்பந்தம் 95 சதவீதம் முடிவடைந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் தஸ்ஸால்ட் நிறுவனத்துடன் கூட்டுப்பங்கு கம்பெனி துவங்கியதிலும் ஏராளமான முரண்பட்ட தகவல்கள் வெளிவந்து கொண்டே இருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஊடகங்களுக்குப் பேட்டியளித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், 36 விமானங்களைக் கொள்முதல் செய்ய தாங்கள் செய்து கொண்ட ஒப்பந்தம் அரசாங்களுக்கு இடையிலானது என்றும், தஸ்ஸால்ட்டுடன் ரிலையன்ஸ் கூட்டுப்பங்கு நிறுவனம் துவங்கியதில் இந்திய அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், முன்னாள் பிரான்சு அதிபதி பிரான்கோயிஸ் ஹாலந்தே இணையப்பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதற்கு நேர் முரணான கருத்தைத் தெரிவித்துள்ளார்.

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம், விமான ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன் ஹொலாந்தேவின் மனைவி நடித்த ப்ரென்ச்சு திரைப்படம் ஒன்றுக்கு நிதி உதவி அளித்திருந்தது. இதற்கு கைமாறாகவே (conflict of interest) ரிலையன்சு நிறுவனத்திற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டதாக ப்ரென்ச்சு ஊடகங்களில் அவ்வப்போது அடிப்பட்டு வந்ததையே நிருபர் ஹொலாந்தேவிடம் கேட்கிறார்.

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபன்ஸ் – டஸ்ஸால்ட் ஆகிய நிறுவனங்களின் கூட்டு நிறுவனம் தொடக்க விழா

கேள்விக்கு பதிலளித்த ஹொலாந்தே, இந்த விவகாரத்தில் (ரிலையன்ஸ் உள்ளே நுழைக்கப்பட்டதில்) தமக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்கிறார். மேலும், இந்தியத் தரப்பில் ஒப்பந்தத்தில் மாற்றம் செய்த போது (அதாவது 126 விமானங்களுக்கு பதில் 36 விமானங்கள் கொள்முதல் செய்வத்து என ஒப்பந்தம் மாற்றியமைக்கப்பட்ட போது) அவர்கள் தான் ரிலையன்ஸ் நிறுவனத்தை உள்ளே கொண்டு வந்தார்கள் என்றும், மற்றபடி தஸ்ஸால்ட் நிறுவனம் யாரைத் தெரிவு செய்வது எனத் தீர்மானிப்பதில் தன்னுடைய தலையீடு ஏதுமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஹொலாந்தேவின் பேட்டி இந்தியாவில் பெரும் சூறாவளியைக் கிளப்பி விட்டது. இது தெள்ளத் தெளிவான ஊழல் என்பதற்கு கிடைத்த ஆதாரம் என காங்கிரசு தரப்பில் செய்தியாளர் சந்திப்புகள் நடத்தப்பட்டன. பதிலடியாக இந்திய பாதுகாப்புத் துறை சார்பிலும், பிரான்சு அரசின் சார்பிலும், தஸ்ஸால்ட் நிறுவனத்தின் சார்பிலும் ”விளக்கங்கள்” அளிக்கப்பட்டன.

இந்திய தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கங்களில் ரிலையன்சை கூட்டுப் பங்கு நிறுவனமாக தெரிவு செய்தது தஸ்ஸால்ட்டின் முடிவு எனவும் இதில் இந்திய அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை எனவும் சொல்லப்பட்டத்து.

ஏறத்தாழ பிரான்சு அரசு மற்றும் தஸ்ஸால்ட் நிறுவனங்களின் விளக்கமும் இதே ரீதியில் தான் இருந்தன – எனினும், ஹொலாந்தேவின் கருத்து தவறானது என அவர்கள் மறுக்கவில்லை. அதாவது, ரிலையன்சை தஸ்ஸால்ட் நிறுவனத்திற்கு பா.ஜ.க அரசு தான் ’அறிமுகம்’ செய்து வைத்துள்ளது.

மோடி – ஹாலந்தே

ஏற்கனவே ரஃபேல் விமானங்கள் எதிர்பார்த்தபடி போனியாகாமல் இருக்கும் நிலையில் இந்திய அரசின் ஒப்பந்தம் என்பது தஸ்ஸால்ட் நிறுவனத்திற்கு கிடைத்த மாபெரும் வாய்ப்பு. அதைத் தவற விடக்கூடாது என்பதற்காகவே இந்திய அரசின் சார்பில் (அதிகாரப்பூர்வமான முறையிலோ, அதிகாரப்பூர்வமற்ற முறையிலோ) பரிந்துறை செய்யப்பட்ட ரிலையன்சை தஸ்ஸால்ட் கூட்டுப்பங்கு கம்பெனியாக சேர்த்துக் கொண்டுள்ளது.

ஏப்ரல் 2015, ஒப்பந்தத்தை இறுதி செய்ய பிரான்சு சென்ற மோடியுடன் சென்ற அனில் அம்பானி, தஸ்ஸால்ட் நிறுவனத்தின் தலைவர் எரிக் ட்ரேப்பியெருடன் நீண்ட விவாதங்கள் நடத்தினார் என பாதுகாப்பு துறைசார்ந்த பத்திரிகையாளர் அஜய் சுக்லா அப்போதே எழுதியுள்ளார். தெள்ளத் தெளிவாக இந்திய அரசின் சார்பில் (மோடி அரசு) தஸ்ஸால்ட் நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதன் பேரிலேயே அனில் அம்பானியை அவர்கள் சேர்த்துக் கொண்டுள்ளனர் என்பது தெரிகிறது. இதற்கிடையே தன்னுடைய பேட்டிக்குப் பிறகு வெளியான விளக்கங்களுக்கு பதிலளித்துள்ள ஹொலாந்தே, தான் முன்பு குறிப்பிட்ட கருத்தில் எந்த மாற்றமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், புதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் விமானத்தின் விலை தாறுமாறாக எகிறியிருப்பதற்கும் உரிய விளக்கங்கள் ஏதுமில்லை. துவக்கத்தில் இது அரசுகளுக்கிடையிலான ஒப்பந்தம் என்பதால் விலை விவரங்களைக் குறித்து வெளிப்படையாக அறிவிக்க முடியாது என்றது பா.ஜ.க அரசு. பின்னர் அவ்வாறு அறிவிப்பது தேசத்தின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்து விடும் என்றார்கள் – இவர்கள் இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே விமானத்தின் விலையை வெளியிட்டது தஸ்ஸால்ட் நிறுவனம்.

அதிகரித்த விலைக்கான காரணம் என்ன என்பதற்கும் ஏற்றுக் கொள்ளும்படியான எந்த விளக்கமும் அரசின் தரப்பில் இருந்து வரவில்லை. இது அனில் அம்பானிக்கு போடப்பட்ட கறிவிருந்து என்பதே ஒரே தர்க்கப்பூர்வமான விளக்கமாக இருக்கிறது.

விவகாரம் ஊடகங்களில் வெடித்த பின் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தைக் கொண்டு செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியது பா.ஜ.க. அப்போது, ரிலையன்ஸ் நிறுவனம் தஸ்ஸால்ட்டுடன் கொண்டுள்ள உறவானது 2012ம் ஆண்டில் இருந்தே நீடிக்கிறது என்றும் அப்போது பதவியில் இருந்தது காங்கிரசு தான் என்றும் ரவிசங்கர் பிரசாத் குறிப்பிட்டார்.

இது ஒரு பச்சைப் பொய். அதாவது, 2012ம் ஆண்டு தஸ்ஸால்ட்டுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் – 36 விமானங்களுக்கான ஒப்பந்தம் கையெழுத்தான பின் அந்த நிறுவனத்திடம் ஒப்பந்தம் போட்டுக் கொண்டது அனில் அம்பானியின் ரிலையன்ஸ்.

இவற்றில் முந்தையது புரிந்துணர்வு ஒப்பந்தம் எனும் நிலையிலேயே நீடித்து 2014ம் ஆண்டு காலாவதியாகியும் விட்டது; அதைத் தொடர்ந்து பாதுகாப்புத்துறை உற்பத்தியில் இருந்து முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் விலகிக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்களை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறது பா.ஜ.க.  அதீத தேச பக்தி இருப்பதாக சங்கிகளின் செய்யும் பம்மாத்துகளின் யோக்கியதை இது தான்.  கார்கில் போரில் இறந்த இராணுவ வீரர்களுக்கு வாங்கிய சவப்பெட்டியிலேயே ஊழல் செய்த பாரம்பரியம் கொண்ட கட்சி, விமானங்கள் வாங்கியலில் ஊழல் செய்திருக்கும் என்பதில் நமக்கு எந்த ஆச்சர்யமும் இல்லை. பக்தாள் தான் எப்படி முட்டுக் கொடுப்பது எனத் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் :

மியூசிக்கல்லி செயலி உருவாக்கும் ரசனை எத்தகையது ?

சுமார் இரண்டு மாதங்களுக்கு முன் நண்பர் ஒருவர் அந்தக் காணொளியை அனுப்பி வைத்திருந்தார். மட்டமான தரத்தில் எடுக்கப்பட்ட அந்தக் காணொளியின் பின்னணியில் ”ஆசைய காத்துல தூது விட்டு” என்கிற ஜானி திரைப்படத்தின் பாடல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. நடுத்தர வயதுப் பெண் ஒருவர், 38 வயது இருக்கலாம், 14 அல்லது 15 வயதுச் சிறுவன் ஒருவனை ஆபாசமாக கட்டிப்பிடித்து அந்தப் பாடலுக்கு ஆடிக் கொண்டிருந்தார். 15 வினாடிகள் ஓடியது அந்தக் காணொளி.

நண்பனை உடனே அழைத்து இது என்னடா கண்றாவி எனக் கேட்டேன். “இது தான் ஜி இப்போ ட்ரெண்டு” எனச் சிரித்தவர், மேற்படியான விசயங்கள்  ம்யூசிக்கலி என்கிற செல்போன் செயலியில் அதிகம் கிடைப்பதாகவும், பலர் இவ்வாறான டப்ஸ்மாஷ்களைச் செய்து பதிவேற்றிய இன்னபிற தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். வழக்கமான ‘கசமுசா’ சமாச்சாரங்கள் எனக் கருதி அப்போதைக்கு மறந்து விட்டேன். பின்னர் குன்றத்தூர் அபிராமி தலைப்புச் செய்திகளுக்கு வந்து சேர்ந்தார். அந்த சமயத்தில் வழக்கமான காலை நேர தேனீர்கடை உரையாடலின் போது “அந்த பொண்ணு பிரியாணிக்காரன் கூட சேர்ந்து டப்ஸ்மாஷ்லாம் பண்ணிருக்குங்க…” என்றார் நடைப்பயிற்சி நண்பர்.  அன்றே செல்போனில் மேற்படி செயலியை நிறுவி என்னதான் இருக்கிறதெனப் பார்க்கத் துவங்கினேன்.

♦♦♦

மியூசிக்கலி செயலியை இப்போது சீனாவைச் சேர்ந்த (அதே போன்ற செயலியைக் கொண்ட) நிறுவனம் ஒன்று கையகப்படுத்தி இணைத்து அதன் பெயரை டிக்டோக் (Tik Tok) என மாற்றியுள்ளனர். எனவே மேற்கொண்டு புதிய பெயரிலேயே குறிப்பிடுவோம்.

செயலியின் வடிவமும் பாவிக்கும் முறையும் மிக எளிமையானது. கணக்கு துவங்க தொலைபேசி எண் மட்டுமே கூட போதுமானது. 13 வயதுக்கு மேலிருப்பவர்கள் கணக்குத் துவங்கலாம், ஆனால் 18 வயதுக்கு கீழ் இருப்பவர்கள் பெற்றோரின் வழிகாட்டுதலுடன் செயலியைப் பயன்படுத்த வேண்டும் என்கிறது அதன் விதிமுறைகள். ஆனால், விதிமுறையை யாரும் வாசிப்பதில்லை என்பதோடு 18 வயதுக்கு கீழான பயனரின் அருகே யார் அமர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று கண்காணிக்கும் வசதியும் டிக்டோக்கிடம் இல்லை. எனவே விதிமுறை / கட்டுப்பாடுகள் எல்லாம் ’உலூலுவாய்க்கி’ என்று வைத்துக் கொள்வோம்.

கணக்கைத் துவங்கியதும் ”உங்களுக்காக” (for u) எனும் பகுதியின் கீழ் உங்களுக்கே உங்களுக்கென்று அந்த செயலி தெரிவு செய்யும் காணொளிகள் ஓடத் துவங்கும். நீங்களே யாரையாவது பின் தொடர்கிறீர்கள் என்றால், அவர்களது காணொளிகள் பின்தொடர்வோர் ”Following” எனும் தலைப்பின் கீழ் வரும். ஒவ்வொரு காணொளியும் முடிந்தவுடன் திரையை மேலே இழுத்தால் அடுத்தது வரும்; பக்கவாட்டில் இழுத்தால் அதே பயனரின் மற்ற காணொளிகளைப் பார்க்கலாம்.

செயலியின் உள்ளேயே பதிவாக்கப்படும் காணொளிகள் ஒவ்வொன்றும் 15 நொடிகள் தான். ஏற்கனவே பதிவாக்கப்பட்ட சற்றே நீண்ட காணொளிகளையும் பதிவேற்றம் செய்து கொள்ளலாம். பின்னணியில் பாடல், திரைப்பட வசனம், சொந்த வசனம், நகைச்சுவை வசனம் போன்றவை ஒலிக்க திரையில் அதற்கு வாயசைக்கலாம், நடன அசைவுகளையும் காட்டலாம். நண்பர்களோடு சேர்ந்து கொண்டு வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சி ஒன்றுக்கு (ஒரிஜினல் வசனத்திற்கு) நடித்துக் காட்டலாம்.

நீங்கள் பங்களிப்பாளராக இருக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை.  வெறுமனே செயலியை நிறுவி இருந்தாலே கூட உங்களுக்குப் ”பொருத்தமான” காணொளிகள் வந்து கொண்டிருக்கும். அநேகமாக இந்த செயலி உங்கள் புவி இலக்கை (Geo Location) அறிந்து கொள்ளும். நீங்கள் ஒரிசாவுக்கும், மும்பைக்கும் பயணம் சென்றால் அந்த மொழி காணொளிகளும் இடையிடையே வரும். மற்றபடி நீங்கள் எந்த மாதிரியான காணொலிகளுக்கு விருப்பம் தெரிவிக்கிறீர்களோ (ஹார்டின்) அதே விதமான காணொளிகள் தொடர்ந்து வரும். இவை வழக்கமாக சமூக வலைத்தளங்கள்  செயற்கை நுண்ணறித் திறன் கொண்டு செய்யும் மலிவான வித்தைகள் தாம்.

♦♦♦

முதல் விசயம் : இந்த செயலி மற்ற சமூக வலைத்தள செயலிகளைப் போல் நேரத்தைக் கொல்கிறது; அதோடு கைப்பேசியின் மின்கலத்தையும் (Battery) அநாயசியமாக தின்று தீர்க்கிறது. இதில் இரண்டாவது விசயம் குறித்து யாராது துறைசார் வல்லுநர்கள் ஆராய்ச்சி செய்ய வேண்டும். யுடியூப் போன்ற காணொளி செயலிகளைக் காட்டிலும் அதிகளவு மின்கல ஆற்றலை இச்செயலி கோருகின்றது. வெறுமனே காணொளிகளை மட்டும் காட்டுகின்றதா அல்லது பின்னணியில் வேறு வேலைகளையும் செய்கின்றதா எனத் தெரியவில்லை.

அடுத்து, பயனர்கள் தங்கள் ரசனைக்கு ஏற்ப பல்வேறு வகையான காணொளிகளை பதிவேற்றுகின்றனர். ஆனால், அந்த ”ரசனை” தான் கவனத்திற்குரியதாக இருக்கிறது. சிலர் மென் சோக இளையராஜா பாடல்களுக்கு குளோசப்பில் வாய், கண் முதலிய முகத்தின் பல்வேறு உறுப்புகளை சுழித்துக் கொணஷ்டை செய்கிறார்கள். சிலர் வடிவேலுவின் நையாண்டி வசனங்களுக்கு தங்களால் முடிந்த கொணஷ்டைகளையும் செய்கின்றனர் – இவையெல்லாம் பிரச்சினையில்லை. ஆதித்யா சானலில் இவை அதிகம் வரும். மியூசிக்கல் செயலியின் வெற்றியும் ஆதித்யா சானலோடு கூட பயணப்பட்டிருக்கும்.

ஆனால், மிகப் பலர் குத்துப்பாட்டுகளுக்கு அறைகுறை ஆடைகளோடு ஆபாச உடலசைவைக் காட்டுகின்றனர். ஹரஹரமகாதேவகியின் அருவெறுப்பான பாலியல் காமெடிகளுக்கு வாயசைப்பது, சினிமாவில் வரும் இரட்டை அர்த்த வசனங்களை (இணையுடனோ, இணை இல்லாமலோ) நடித்துக் காட்டுவது, ஆபாச பாடல் / வசனங்களுக்கு ஏற்ப ஏழெட்டு அடுக்கில் மேக்கப்புடன்  வருவது, பாலியல் தொழிலாளிகளைப் போல் கண் ஜாடை காட்டுவது… இப்படி ஒரு நீண்ட பட்டியல் இருக்கிறது.

அடுத்து, ரசிக மகாஜனங்களின் வழக்கமான அக்கப்போர். விஜய், அஜித் ரசிகர்கள் தங்கள் பங்குக்கு பைக்குகளில் சாகசம் செய்து எதிரணி ரசிகர்களுக்கு சவால் விடுவது. சில காணொளிகளில் வெட்டுவேன் குத்துவேன் ரக சவடால்களும் காணக்கிடைத்தது. ஒரு காணொளியில் பத்துப் பதினோரு வயது மதிக்கத்தக்க எலும்பும் தோலுமாய் மெலிந்திருந்த அஜித் ரசிகன் ஒருவன் கையில் நீண்ட அரிவாளை தூக்க முடியாமல் தூக்கிக் காட்டி.. “டேய் தல ஃபேன்டா.. அறுத்துப் போட்னு போய்னே இருப்பேண்டா” என இல்லாத மீசையைத் தடவியதை அவனது பெற்றோர் பார்த்திருக்க வேண்டும்; ஈன்ற பொழுதினும் பெரிதுவந்திருப்பர்.

ரசிகர்களைக் கூட வயதுக்கு வராத சிறுவர்களின் ஆர்வக் கோளாறுகள் என கடந்து போய் விடலாம்.. சாதி வெறியர்கள் தனி ரகம். “டேய் ____ நாயே சத்திரிய வன்னியன்டா.. எங்கள்ட்ட வாங்கித் தின்ன நாய்களா.. எங்களுக்கே மீசைய முறுக்கிக் காட்றீங்களாடா” என்கிறார் தீச்சட்டியில் பிறந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ’ஷத்திரியர்’(!?) ஒருவர். “எலேய் _____ பசங்களா ஆண்ட வமுசம்டா… அரிவாளத் தொட்டா ரத்தம் காணாம விட மாட்டோம்டா” என்கிறார் தெற்கத்திய ஆண்ட வம்சத்தில் பிறந்த பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இன்னொரு ‘ஷத்திரியர்’(!?). இதற்கு ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களும் பதிலடி கொடுக்கிறார்கள் – அதே சாக்கடைத் தரத்தில்.

இத்தனை ரணகளத்திற்கும் இடையில் திராவிட நிறம் கொண்ட பெண்களின் சுயகழிவிறக்க காணொலிகள்.. “அண்ணே.. நாங்கெல்லாம் தமிழ் பொண்ணுங்க. எங்க கலரே இது தாம்ணே. முழுசாப் பார்த்து லைக் போடுங்கண்ணே.. வீடியோவ தூக்கி விட்றாதீய”. குத்துப்பாட்டுக்களுக்கு திருநங்கைகள் சிலருடைய நடன முயற்சிகளும் இடையிடையே தலை காட்டுகின்றன. சில விடலைப் பையன்கள், பெண் பயனர்களின் காணொலியை ஒரு ஓரத்தில் ஓட விட்டு பதிலுக்கு சில அசைவுகளைச் செய்து காட்டுகின்றனர்; பொருந்தாக் காதலுக்கான அவர்களது இம்முயற்சிகள் எந்தளவுக்கு வெற்றியடைந்தன என்பது பற்றி நமக்கு தெரியாது.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் இந்த செயலி பெரும் குப்பைக் கிடங்கு.

♦♦♦

குப்பையை ஏன் கிளறியாக வேண்டியிருக்கிறது? 2018-ன் முதல் காலாண்டில் முகநூல் ட்விட்டர் உள்ளிட்ட மற்ற எல்லா சமூக வலைத்தளங்களைக் காட்டிலும் மிக அதிகமாக (45 மில்லியன்) தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது டௌயின் (Douyin). இந்த டௌயின் செயலி தான் பின்னர் ம்யூசிக்கலியை தன்னோடு இணைத்துக் கொண்டது. கடந்த 2017 நவம்பர் மாதம் 1 பில்லியன் டாலர் கொடுத்து ம்யூசிக்கலியை கையகப்படுத்திய டௌயின், சென்ற மாதம் இணைப்பு வேலையை முடித்து “டிக் டோக்” எனும் பெயரில் சேவையைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த மாத துவக்கத்தில் டௌயின் செயலிக்கு 500 மில்லியன் பயனர்களும், ம்யூசிக்கலிக்கு 100 மில்லியன் பயனர்களும் இருந்தனர். தற்போது சுமார் 65 கோடி பயனர்கள் இருப்பதாகவும், டிக்டோக் பிற சமூக வலைத்தளங்களின் வளர்ச்சியை விஞ்சி சென்று கொண்டிருப்பதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ம்யூசிக்கலியில் வரும் தமிழ்க் காணொளிகளின் முறைமையை (Pattern) அவதானித்துப் பார்த்ததில், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பெண்கள் கணிசமாகவும் அதில் பெரும்பாலும் நடுத்தர வயதை எட்டியவர்களும் இருப்பதை பார்க்க முடிகிறது. இந்தச் செயலியின் வடிவமைப்பே ஒரு குறிப்பிட்ட பயனர் எந்தவிதமான காணொளியைப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதாக இருக்கிறது. உதாரணமாக ஒரு சீசனில் “கட்டிப்புடி கட்டிப்புடிடா கண்ணாளா” எனும் பாடல் பிரபலம் ஆனால், பலரும் அந்தப் பாடலுக்கு நடன அசைவுகள் (இடுப்பசைவு) செய்து பதிவேற்றுகிறார்கள். இதில் யார் அதிகம் லைக் பெறுவது என்கிற போட்டியே யார் குறைந்த உடையுடனும் அதிக ஆபாசத்தோடும் காட்சியளிப்பது என்பதைத் தீர்மானிக்கிறது. இது சினிமா குத்துப் பாடல்களுக்கிடையே உள்ள போட்டி போன்றது.

முகநூல் உள்ளிட்ட பிற சமூக வலைத்தளங்களைப் போலவே டிக்டோக்கும் பயனர்கள் தம்மையே ஒருபண்டமாக கருதத் தூண்டுகின்றது (commodification of Self). ஆனால், மற்றவற்றில் முகம் காட்டும் அல்லது காட்சிப்படுத்தும் கட்டாயமில்லை. மேலும், முகநூல் ட்விட்டர் போன்ற சமூகவலைத் தளங்களில் அரைகுறையாகவாவது ”விவாதம்” என்கிற ஒன்று நடக்கிறது. அதற்கு கருத்து என்கிற ஒன்றைச் சொல்லியாக வேண்டும் – அது எத்தனை மொக்கையானதாக இருந்தாலும்.

டிக்டோக்கில் ”கருத்துக்கு” எந்த இடமும் இல்லை; இங்கே காட்சியே பிரதானம். அதிலும் சிந்திப்பதற்கோ, திறமையை வெளிக்காட்டும் தேவையோ அறவே இல்லை என்பதால் அபாயத்தில் அளவு அதிகரிக்கிறது. காட்சியின் மூலம் பின் தொடர்வோர் எண்ணிக்கையை எப்படி அதிகரிப்பது? விஞ்ஞான, அரசியல், ஆன்மீக விளக்கங்கள் அளிக்கலாம் தான் – ஆனால், பதினைந்து நொடியில் அது சாத்தியம் இல்லை. எனவே ஆபாசப் பாடல்களும், வசனங்களுமே அதிகபட்ச சாத்தியம். அதிலும், பாடலின் வரிகள் எந்தளவுக்கு பாலியல் தன்மை கொண்டிருக்கிறதோ அது தோற்றத்திலும் எதிரொலித்தாக வேண்டும்.

ஒன்றை ஒன்றை வளர்த்துக் கொள்ளும் இந்த அம்சங்கள் எங்கே இட்டுச் செல்கின்றன? ஆண்களுடைய விருப்பத்தின் அளவு எந்தளவுக்கு மேலே செல்கிறதோ அந்தளவுக்கு மேலாடையின் அளவை கீழே இறக்குகிறது. தோலின் நிறம் குறித்த தாழ்வு மனப்பான்மையை ஆடைக் குறைப்பின் மூலமும், ஆபாச அசைவுகளின் மூலமும் கிடைக்கும் பிரபலத்தின் மூலமும் பின் தொடர்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பதன் மூலமும் சமன்செய்து விடுகிறது. பிரபலமாவதற்கு ஆளுமையோ திறமையோ அவசியமல்ல – அழகும், ஆடைக்குறைப்புமே அவசியம். ஆண்களைப் பொருத்தவரை சாதிவெறி, ரசிக கும்பலின் சல்லித்தனங்கள். உலகளவில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் இந்தச் செயலியைப் பயன்படுத்துவோரில் பெண்களின் எண்ணிக்கையே அதிகம் எனத் தெரியவந்துள்ளது.

மேலை நாடுகளிலும் இதே பிரச்சினைகளுடன் தற்கொலையைத் தூண்டும் பதிவுகள் உள்ளிட்ட வேறு சிலவும் உள்ளன. அவையெல்லாம் விரைவில் ’தமிழ்ச் சூழலுக்கும்’ இறக்குமதியாகிவிடும் என எதிர்பார்க்கலாம். இவையனைத்தையும் விட முக்கியமானது – இதில் செலவழிக்கப்படும் நேரமும், இந்தச் செயலியால் வடிவமைக்கப்படும் சிந்தனைப்போக்கும்தான். நடுத்தர வயதை எட்டிய ஒரு பெண் “பட்டுக்கோட்டையிலே ங்கோத்தா பருப்பு விக்கையிலே” என்கிற பாட்டுக்கு ’நடனமாடுகிறார்’; பின்னூட்டத்தில் ஒரு விடலைப் பையன் “ஆண்டி அப்படியே உங்க பேக்கையும் ஆட்டிக் காட்டுங்க” என்கிறான். அதற்கு பதிலாக அந்தப் பெண்மணி ஸ்மைலி போடுகிறார்.

பொது வெளியில் ஒரு பெண்ணிடம் பேசக் கூசும் வார்த்தைகள் அநாயசியமாக புழங்குவது ஒருபக்கம் என்றால், அவ்வாறான வார்த்தைகளைப் பொது இடத்தில் கேட்டால் காட்டும் எதிர்வினைகளுக்கு நேர்மாறாகவே இங்கே எதிர்வினை காட்டுப்படுகிறது. (பெரும்பாலும்) தன்னுடைய பண்டம் விற்க வேண்டும் என்பதற்காக வாடிக்கையாளர் என்னதான் தரக்குறைவான வார்த்தைகள் சொன்னாலும் சகித்துக்கொண்டு சிரிக்கும் சிறுவணிகர்களைப்போல உருமாறி நிற்கிறார்கள். ஆண் ரசிகர்களைக் கவர பெண் பயனர்கள் கீழிறங்கிப்போவது அருவெறுப்பு என்றால் பெண்களை (ஆண்டிகளை) கவர ஆண் பயனர்கள் அடிக்கும் கூத்துகள் ஆபாசத்தின் உச்சம்.

ஒரு பக்கம் பெண்களை சந்தைப் பொருட்களாக உணரச் செய்வதோடு இன்னொரு பக்கம் ஆண்களை பெண்களை அடையத்துடிக்கும் வேட்டை நாய்களாக உணரச்செய்கிறது டிக்டோக். இறுதியில் ஃபோர்னோ எனப்படும் ஆபாச காணொளிகள் இங்கே ஜனரஞ்சகமாக ரசிக்கப்படுகிறது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நேரத்தில், பாலியல் உறவு காரணமாக குடும்பத்தில் ஏற்படும் வன்முறைகள் – கொலைகள் பெருகி வரும் காலத்தில் மியூசிக்கல் செயலியின் பெரு வெற்றி எதைக் காட்டுகிறது?

♦♦♦

தென்னிந்தியாவில் – குறிப்பாக தமிழகம் மற்றும் கேரளத்தில் – பெண்களுக்கு எதிராக பதிவாகும் குற்றங்களின் எண்ணிக்கை வடஇந்திய மாநிலங்களோடு ஒப்பிட்டால் குறைவு என்பதை பல்வேறு சந்தர்பங்களில் செய்திகளில் படித்திருப்போம். இது இம்மாநிலங்களில் கடந்த காலங்களில் ஜனநாயகத்திற்காகவும், சமநீதிக்காகவும் நடந்த அரசியல் போராட்டங்கள் கலாச்சார விழுமியங்களின் மீது செலுத்திய தாக்கம். கேரளாவில் பொதுவுடைமை இயக்கமும் தமிழகத்தில் பெரியாரின் செயல்பாடுகளும் பெண்களை ஜனநாயகப்பூர்வமாக நடத்த வேண்டும் என்கிற உணர்வை ஓரளவுக்கு ஏற்படுத்தி வைத்திருந்தது. எனினும், அடிப்படையில் பழைய நிலபிரபுத்துவ பிற்போக்கு கண்ணோட்டமே செல்வாக்கு செலுத்திவரும் ஒரு சமூகத்தில் கருத்தளவிலான பிரச்சாரங்களின் வலிமை என்னவென்பதை இந்த நவீன தொழில் நுட்பங்களின் பரவல் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.

பெண்களை வெறும் உடைமைகளாக பார்க்க பழக்கப்படுத்தியிருக்கும் பார்ப்பனியத்தின் புண்ணிய பூமியில் டிக்டோக் போன்ற சமூகவலைத்தள செயலிகள் சமூகத்தின் மீண்டும் சில நூற்றாண்டுகளுக்கு பின்னோக்கி இழுக்கின்றன.

– சாக்கியன்

மேலும் வாசிக்க :

தேசிய பசுமைத் தீர்ப்பாய ஆய்வுக்குழுவிடம் தூத்துக்குடி மக்கள் மனு !

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்காக 13 உயிர்களை சுட்டுக் கொன்றது தமிழக அரசு.  அதன் இரத்தக் கவிச்சி காயும் முன்பே, கொலைகார ஆலையை மீண்டும் திறக்க முயற்சிக்கிறது ஸ்டெர்லைட் நிர்வாகம்.

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி 23-09-2018 அன்று ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய வந்திருந்தனர் தேசிய பசுமைத் தீர்ப்பாய ஆய்வுக்குழுவினர். ஆலையை ஆய்வு செய்ததோடு, அருகாமை கிராமங்களிலுள்ள மக்களை சந்திக்க தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக்கில்  மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக ஏன் மூட வேண்டும் என்பதை விளக்கி எழுதப்பட்ட விரிவான கோரிக்கை மனுவை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மக்கள் பெருமளவில் திரண்டு வந்து கொடுத்தனர்.

அம்மனுவின் முழுவிவரம் பின்வருமாறு:

டந்த 1996-ஆம் ஆண்டு தூத்துக்குடியில் துவங்கப்பட்ட ஸ்டெர்லைட் நிறுவனத்தால் சிப்காட்டை சுற்றியுள்ள சுமார் 15 கிராம மக்களுக்கும், தூத்துக்குடி நகர் மக்களுக்கும் தொடர்ந்து புற்றுநோய், கர்ப்பப்பை சிதைவு, மலட்டுத்தன்மை, சிறுநீரகக் கோளாறு, தோல் நோய்கள், ஆஸ்துமா உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. பல லட்சம் மக்கள் ஸ்டெர்லைட்டால் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்படி பாதிப்புகளால் ஆயிரக்கணக்கானோர் இறந்து விட்டனர். எங்கள் கிராமங்களில் கடந்த சில ஆண்டுகளாக பிறக்கும் குழந்தைகள் பல்வேறு பாதிப்புகளுடன் பிறக்கின்றன. இதனால் எங்கள் சந்ததிகள் அழியும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் நிறுவனத்தால் எங்கள் கிராமங்களின் நிலத்தடி நீர் முற்றிலும் நாசமாகி விட்டது. விவசாயம் நலிவடைந்து விட்டது. இனியும் ஸ்டெர்லைட் நிறுவனம் சிப்காட்டில் செயல்பட்டால் நாங்கள் அனைவரும் ஊரைக் காலி செய்து, சொந்த நாட்டில் அகதிகளாக வாழும் சூழல் ஏற்படும். மேற்கண்ட சூழலில்தான் கடந்த பிப்ரவரி, 2018 முதல் மே, 22, 2018 வரை அமைதியான முறையில் நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம். ஆனால் ஸ்டெர்லைட்டும், காவல்துறையும் சேர்ந்து 13 பேரை சுட்டுக் கொன்றுவிட்டார்கள். நூற்றுக்கணக்கானோர் முடமாக்கப்பட்டார்கள். இதற்குப் பின்பும் ஸ்டெர்லைட்டைத் திறக்க முயல்வது அநீதியானது.

கடந்த 2010-ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் நிறுவனம் அரசுக்குச் செலுத்த வேண்டிய 738 கோடி ரூபாய் சுங்க வரியைக் கட்டாமல் ஏய்த்திருப்பது கண்டறியப்பட்டு ஸ்டெர்லைட் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நிர்வாகி வரதராஜன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அனுமதிக்கப்பட்ட அளவிற்கும் மேலாகக் கள்ளத்தனமான முறையில் தாமிரம், கந்தக அமிலம் ஆகியவற்றை ஸ்டெர்லைட் உற்பத்தி செய்து கள்ளச் சந்தையில் விற்றுவருகிறது. 1994-ஆம் ஆண்டு தொடங்கி 2004-ஆம் ஆண்டு வரை ஸ்டெர்லைட்டில் நடந்துள்ள வாயுக்கசிவு உள்ளிட்ட விபத்துக்களில் சிக்கி 13 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்; 139 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

2007-ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி இந்தியாவில் தாமிர உற்பத்தி 9.97 இலட்சம் டன்னாகும். இந்தியாவின் மொத்த தேவை ஆண்டிற்கு 4 இலட்சம் டன்கள்தான். ஏற்றுமதி நோக்கத்திற்காகவே உள்நாட்டுத் தேவையைவிட அதிகரித்த அளவில் தாமிர உற்பத்தி நடந்து வருகிறது. எனவே, ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிட்டால் இந்தியாவில் தாமிர தட்டுப்பாடு ஏற்படும் எனச் சொல்வதற்கு எந்தவொரு அடிப்படையும் கிடையாது. வெளிநாடுகளிலிருந்து மூலப் பொருளை இறக்குமதி செய்து, உற்பத்தி பொருளில் பெரும்பகுதி வெளிநாடுகளுக்கே ஏற்றுமதியாகும் தொழில் இங்கு இயங்க வேண்டிய அவசியம் என்ன? 2011-12ல் செய்த ரூ 19,051 கோடி மதிப்பிலான தாமிரப் பொருட்களின் விற்பனைக்கு ரூ 16,094 கோடி மதிப்புள்ள இறக்குமதி செய்யப்பட்ட தாமிர அடர் கரைசலை மூலப்பொருளாக பயன்படுத்தியிருக்கிறது ஸ்டெர்லைட். சுற்றுச் சூழலையும் மக்கள் உடல்நலனையும் பாதிக்கும் தொழிற்சாலைகளை வளரும் நாடுகளுக்கு இடம் மாற்றி அவற்றின் உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்து பயன்படுத்துவதுதான் அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, ஜப்பான் போன்ற நாடுகளின் சுற்றுச் சூழல் பாதுகாப்பு தந்திரமாக இருக்கிறது. பல பத்தாண்டுகள் முன்னேற்றம் காணாத, பாதுகாப்பற்ற தொழில் நுட்பங்களை பயன்படுத்தி நடத்தப்படும் உற்பத்தியில் வெளியாகும் கழிவுப் பொருட்களை சுத்திகரிக்க செலவழிக்காமல் வெளி விடுவதன் மூலம் ஏற்றுமதி பொருளின் விலை குறைவாக பராமரிக்கப்படுகிறது.

தாமிரம் உற்பத்தி செய்யப்படும்போது கந்தக டை ஆக்சைடுடன், நச்சு வாயுக்களும் வெளியாகின்றன. 1டன் தாமிரம் உற்பத்தி செய்யப்படும் பொழுது 2 கிலோ கந்தக டை ஆக்சைடு வெளியிடப்படுகிறது. காற்றில் கலக்கும் துகள்கள் காற்றை கடுமையாக மாசுபடுத்துகின்றன. தொழிற்சாலையிலிருந்து வெளியாகும் கழிவுநீரில் உள்ள காரீயம், காட்மியம், துத்தநாகம், ஆர்செனிக், பாதரசம் போன்ற உலோகங்கள் நீரை நேரடியாக நச்சுப்படுத்துகின்றன. ஒரு டன் தாமிரம் உற்பத்தி செய்யப்படும்போது, மூன்று டன் திடக்கழிவு வெளியிடப்படுகிறது. திடக்கழிவுகள் கொட்டப்படும் நிலங்கள் மீட்க முடியாதபடி பாழாகின்றன. கடந்த 21 வருடங்களாக எங்கள் மண். காற்று.நீர் அனைத்தும் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தால் மேற்கண்டவாறாக நாசம் செய்யப்பட்டுள்ளது.

எனவே, பணக்கார நாட்டு மக்கள் சுகாதாரமாய் வாழ தமிழகத்தின் ஏழை மக்கள் பலிகடா ஆக்கப்படுகிறோம். இனியும் இந்நிலை நீடிக்கக் கூடாது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் 1.8.1994 அன்று வழங்கிய அனுமதி கடிதத்தில் “சுற்றுச் சூழல் பாதுகாக்கப்பட வேண்டிய மன்னார் வளைகுடாவிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால்தான் தொழிற்சாலை அமைக்கப்பட வேண்டும், தொழிற்சாலையைச் சுற்றி 250 மீட்டருக்கு பசுமை வளையம் அமைக்கப்பட வேண்டும்” என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. ஆனால் 1997-ம் ஆண்டு இயங்க ஆரம்பித்த ஸ்டெர்லைட் ஆலை மன்னார் வளைகுடாவிலிருந்து 14 கிமீ தொலைவில் அமைக்கப்பட்டிருந்தது; ஆலையைச் சுற்றி பசுமை வளையமும் ஏற்படுத்தப்படவில்லை .

21.9.2004 முனைவர் தியாகராசன் தலைமையிலான குழு ஸ்டெர்லைட்டின் இயக்கத்தை ஆய்வு செய்து விதிமுறை மீறல்களை பட்டியலிட்டது. இரு உருளைவடிவ தாங்கு உலைகளையும், கழிவுகளை தூய்மை செய்யும் ஓர் உலையையும், ஒரு ஆனோடு உலையையும், ஒரு ஆக்சிஜன் பிரிவையும், ஒரு கந்தக அமிலப் பிரிவையும், ஒரு காஸ்டர் பிரிவையும், ஒரு கன்வெர்டரையும் எவ்வித அனுமதியும் பெறாமல் கட்டியுள்ளனர். இரண்டு பாஸ்பரஸ் அமில பிரிவுகளும், சுத்திகரிப்பு மற்றும் தொடர்ச்சியான காஸ்டர் ராட் உருவாக்கும் பிரிவும் கட்டப்பட்டு வருவதாகவும் அதற்கும் அனுமதி பெறவில்லை என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டது.

28.9.2010 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எலிப் தர்மராவ், பால்வசந்தகுமார் தலைமையிலான அமர்வு Writ Petitions No. 15501 to 15503 of 1996.

5769 of 19 7& 16861 of 1998 வழக்குகளில் “ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை நிரந்தரமாக மூட ஆணை” பிறப்பித்தது. மேற்படி தீர்ப்பில் “ஸ்டெர்லைட் ஆலை வந்தீவு கிராமத்திலிருந்து 6 கி.மீ. தொலைவிலும் கசுவார் கிராமத்திலிருந்து 7 கி.மீ. தொலைவிலும், கரைச்சல்லி, விளங்குசல்லி கிராமங்களிலிருந்து 15 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இந்த நான்கு கிராமங்களும் மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள 21 தீவுகளில் அடங்குபவை. இதனால் 1995-ல் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கொடுத்த அனுமதி கடிதத்தின் நிபந்தனைகளை ஸ்டெர்லைட் மீறியிருக்கிறது தெளிவாகிறது.”

“இந்த நான்கு தீவுகளையும் சேர்த்து 21 தீவுகளை கொண்டுள்ள மன்னார் வளைகுடா வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் பிரிவு 35(1)ன் கீழ் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த சட்டத்தின் பிரிவு 35(4)ன் கீழ் மன்னார் வளைகுடாவை ஒரு கடல்சார் தேசிய பூங்காவாகவும் அறிவிக்கலாம்” என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. “மன்னார் வளைகுடா சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டிய பகுதி என்பதில் சந்தேகமில்லை . எனவே இந்தப் பகுதியில் உயிர்வாழ் ஆதாரங்களை பாதுகாப்பதற்காக தொழிற்சாலைகளை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது. மத்திய அரசு அத்தகைய உத்தரவை பிறப்பித்ததும் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை சிப்காட் தொழில் வளாகத்திலிருந்து இடம் மாற்ற ஏற்பாடுகள் செய்ய வேண்டும்” என்று தீர்ப்பளித்திருந்தது உயர்நீதி மன்றம்.

கடந்த 2013-ல் CIVIL APPEAL Nos. 2776-2783 OF 2013ன் வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகளை ரத்து செய்த உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பின் பத்தி 42-ல்

“By this judgment, we have only set aside the directions of the High Court in the impugned common judgment and we make it clear that this judgment will not stand in the way of the TNPCB issuing directions to the appellant-company, including a direction for closure of the plant, for the protection of environment in accordance with law.” என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. எனவே தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட உச்சநீதிமன்றத் தீர்ப்பு தடையாக இல்லை.

ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து சிப்காட்டில் இயங்கினால், தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை , ஆரோக்கியம் பாதிக்கப்படும். மராட்டிய மாநிலம் இரத்தினகிரியில் ஸ்டெர்லைட்டின் தொழில் வளாகம் அமைக்கும் முயற்சி விவசாயிகளின் கடும் எதிர்ப்பு போராட்டங்களைத் தொடர்ந்து 1.5.1994-ல் அம்மாநில அரசால் தடை செய்யப்பட்டது. தமிழகத்திலும் தூத்துக்குடியிலும் ஏற்பட்ட பாதிப்புகளை தொடர்ந்து ஆலை மூடப்பட்டடுள்ளது. இந்திய அரசியல் சட்டத்தின் சரத்து 21-ன் படி மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டியது அரசின் அரசியல் சட்டக் கடமையாகும். ஸ்டெர்லைட் இயங்கினால் எங்களின் வாழ்வுரிமை பறிபோகும்.

ஆகவே, மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்து, சுற்றுச் சூழலை சீர்குலைத்து மக்களின் வாழ்வுரிமையை அழித்து தூத்துக்குடி மாவட்டத்தின் சட்டம் – ஒழுங்கு, பொது அமைதியை சீர்குலைத்துவரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உரிய பரிந்துரைகளை வழங்குமாறு வேண்டுகிறேன்.

– வினவு களச் செய்தியாளர்.