Tuesday, July 8, 2025
முகப்பு பதிவு பக்கம் 408

விலங்குத் தன்மை மனிதனுக்குரியதாகிறது மனிதத் தன்மை விலங்காகிறது !

மார்க்ஸ் பிறந்தார் – 19
(கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)

8. முழுமையான மனிதாபிமானமே கம்யூனிசம் – 2

மார்க்ஸ் புரட்சிகரப் பாட்டாளி வர்க்க இயக்கத்துக்கு உறுதியான ஆதரவளிக்கும் நிலைக்கு மாறியதன் விளைவாக அவர் முதலாளிவர்க்க ஜனநாயகவாதிகளுடன், முதலாவதாகவும் முதன்மையாகவும் அர்னோல்டு ரூகேயுடன் முறித்துக் கொள்ள நேரிட்டது.

ரூகே எவ்வளவுதான் தீவிரவாதத்தைப் பேசினாலும் அவர் சுதந்திரத்தைப் பற்றிக் கனவு காண்கின்ற, ஆனால் அதற்குச் சிறிது கூட தியாகம் செய்ய விரும்பாத அற்பவாதியாகவே இருந்தார். Deutsch-Französische Jahrbücher இன் விற்பனையின் மூலம் கணிசமான வருமானம் கிடைக்குமென்று அவர் எதிர்பார்த்தார். இந்த நம்பிக்கைகள் தகர்ந்த பொழுது அவர் மனச்சோர்வுக்கு ஆளானார். கடைக்காரனைப் போல எல்லாவற்றின் மீதும் சந்தேகங் கொண்டார். வெளியீட்டுத் துறையில் மார்க்சின் ஒவ்வொரு முன்முயற்சியும் தன்னுடைய பணத்தைத் திருடுவதற்குச் செய்யப்படும் முயற்சி என்று ஓயாமல் சந்தேகப்பட்டார்.

அர்னோல்டு ரூகே

மார்க்ஸ் “பண விவகாரங்களில் மிகவும் அலட்சியமாக இருப்பார்” (மேரிங்); எனவே ரூகே அதைப் பயன்படுத்திக் கொள்வதற்குத் தயங்கவில்லை. மார்க்ஸ் மிகவும் வறுமையான நிலையில் இருந்தார்; அவர் குடும்பம் வளர்ச்சியடைந்து கொண்டிருந்தது (1844 மே மாதத்தில் அவருக்குப் பெண்குழந்தை பிறந்திருந்தது); ஆனால் ரூகே அந்த Jahrbucher இன் பிரதிகளை மட்டுமே அவருக்கு ஊதியமாகக் கொடுத்தார்.

எனினும் முக்கியமான விஷயம் என்னவென்றால் மார்க்சின் கம்யூனிசத்தின் விளைவாக ரூகேயிடம் அற்பவாதியின் பீதி தோன்றியது.

Jahrbücher -இன் ஆசிரியப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட மார்க்ஸ் தன்னுடைய விஞ்ஞான ஆராய்ச்சிகளில் அதிகமான தீவிரத்துடன் ஈடுபட்டார். முக்கியமான விஷயம் நிறைவேற்றப்பட்டு விட்டதாகத் தோன்றியது-புதிய உலகக் கண்ணோட்டத்தின் அடிப்படைகள் விரித்துரைக்கப்பட்டிருந்தன. ஆனால் மார்க்சுக்கு இது ஆரம்பம் மட்டுமே. அவர் மனிதகுலத்தின் மொத்தக் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் மறுவிளக்கம் செய்கின்ற புதிய நோக்கைத் தேடிக் கொண்டிருந்தார்.

படிக்க :
♦ மார்க்சியத்தின் வரலாற்று வளர்ச்சி – நூல் அறிமுகம்

அவர் ஏராளமாகப் படித்தார்; புதிய திட்டங்கள் ஒவ்வொன்றாக அவருடைய மூளையில் உதித்தன. முதலில் சட்டம் பற்றிய ஹெகலியத் தத்துவஞானத்தைப் பற்றித் தன்னுடைய பூர்த்தியடையாத கையெழுத்துப் பிரதிக்குத் திரும்புவதற்கு அவர் விரும்பினார்; அதைக் கம்யூனிஸ்ட் நோக்கிலிருந்து இப்பொழுது திருத்தி எழுதுவதற்கு விரும்பினார். பிறகு அவர் பிரெஞ்சுப் புரட்சியின் வரலாற்றில் மூழ்கிவிட்டார்; கன்வென்ட்டின் வரலாற்றை எழுத வேண்டுமென்று மிகவும் விரும்பினார். கடைசியில் அவர் கற்பனாவாத சோஷலிஸ்டுகள் மற்றும் அரசியல் பொருளியலாளர்களைப் பற்றிய விமர்சனத்துக்குத் திரும்பினார்.

அவருடைய சிந்தனை மிகக் கூர்மையாக இயங்கியபடியால் அப்பொழுது எழுதப்பட்டதை அது உடனடியாக விஞ்சிவிடும். தான் செய்த வேலையைப் பற்றி அவர் ஒருபோதும் திருப்தி அடைந்ததில்லை; அவர் எவ்வளவு அதிகமாகக் கற்றாரோ, அவ்வளவுக்கு அறிவுக் கடல் எல்லையற்றதாகத் தோன்றியது. அவர் எத்தனை பிரச்சினைகளைத் தன்னுடைய அறிவில் தீர்த்தாரோ, அந்த அளவுக்கு அதிகமான பிரச்சினைகள் அவருக்கு முன்னால் தோன்றின.

கையெழுத்துப் பிரதிகள் பூர்த்தியாகாமல் நின்றுவிட்டன, அவருடைய சிந்தனை புதிய கருத்துக்களைப் பிரசவித்துக் கொண்டு மேலும் முன்னோக்கிச் சென்றது. ஒரு பிரச்சினையின் நுட்பமான அம்சங்கள் அனைத்தையும் முழுமையாக ஆராய்ச்சி செய்வதற்கு முன்னால் தான் எழுதிய எதையுமே வெளியிடாதபடி சுய-விமர்சனம் என்ற பிசாசு மார்க்சைத் தடுத்தது.

“அவருடைய சிந்தனை மிகக் கூர்மையாக இயங்கியபடியால் அப்பொழுது எழுதப்பட்டதை அது உடனடியாக விஞ்சிவிடும்.”

மார்க்சின் ஆராய்ச்சிகளில் இந்தக் காலகட்டத்தை அர்னோல்டு ரூகே பின்வருமாறு வர்ணிக்கிறார்: “அவர் ஏராளமாகப் படிக்கிறார், அசாதாரணமான தீவிரத்துடன் பாடுபடுகிறார், அவரிடம் விமர்சனத் திறமை இருக்கிறது, ஆனால் அது சமயங்களில் வேண்டுமென்றே சீர்குலைந்த இயக்கவியலாக மாறிவிடுகிறது; அவர் எதையும் முடிப்பதில்லை, ஒன்றை விட்டு இன்னொன்றுக்குத் தாவிவிடுகிறார், மறுபடியும் முடிவில்லாத புத்தகக் கடலில் மூழ்கிப் போய்விடுகிறார்.”(1)

இப்படி அசாதாரணமான தீவிரத்தைக் கொண்ட விஞ்ஞான ஆராய்ச்சியும் தன்னுடைய சாதனையைப் பற்றித் தொடர்ச்சியான அதிருப்தியும் மார்க்சிடம் மனச் சோர்வை ஏற்படுத்தின. ஆனால் அதைப் பற்றி அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இன்னும் அதிகமாகப் பாடுபடுவது, தொடர்ச்சியாகச் சில இரவுகளில் தூக்கமில்லாமற் படிப்பது என்ற ஒரு தீர்வு மட்டுமே அவருக்குத் தெரியும். “மார்க்ஸ், குறிப்பாக தன் உடல்நிலை சீர்குலைகின்ற வரை அவர் பாடுபடும் பொழுது, மூன்று அல்லது நான்கு இரவுகள் சேர்ந்தாற்போலத் தூங்காதிருக்கின்ற பொழுது அதிகமான எரிச்சலும் கோபமும் உள்ளவராக இருக்கிறார்”(2) என்று ரூகே எழுதினார்.

இந்த ஆராய்ச்சிகளின் முக்கியமான விளைவு ஒரு பெரிய பூர்த்தியடையாத நூலாகும். அது 1844ம் வருடத்தின் பொருளாதார மற்றும் தத்துவஞானக் கையேடுகள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது.

இப்புத்தகத்தில் மார்க்சியம் தோன்றிய “பிரசவ வேதனையின்” சுவடுகள் இன்னும் காணப்படுகின்றன. ஹெகல் மற்றும் ஃபாயர் பாஹிடமிருந்து அவர் கடன் வாங்கிய சொற்பிரயோகத்தில் இதைக் குறிப்பாகக் காண முடியும். ஆனால் பழைய தத்துவஞானக் கருத்தமைப்புகளின் மக்கிப்போன ஓட்டிலிருந்து சமூகத்தைப் பற்றி அடிப்படையான புதிய கருத்தின் முளைகள், உலகம் இதுவரை அறிந்திராத புதிய உலகக் கண்ணோட்டத்துக்கு அணுகுமுறையின் முளைகள் வெடித்துக் கிளம்பின.

படிக்க :
சிறப்புக்கட்டுரை : மூலதனத்தின் வரலாறும் வரலாற்றில் மூலதனமும்

இதில் முதல் தடவையாக சமூகத்தைப் பற்றிய பகுப்பாய்வுக்குப் பொருளாதார, தத்துவஞான மற்றும் சமூக-அரசியல் அணுகுமுறைகள் பரந்த அளவில் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கின்றன. இங்கே மனிதன் மொத்த ஆராய்ச்சியின் மையமாக இருக்கிறான்; இயற்கை, சமூகம் ஆகிய இரண்டுடனும் அவனுடைய சிக்கலான உறவுகளின் மொத்தப் பல்தொகுதியுடன் தோன்றுகிறான். உண்மையான, முரணில்லாத மனிதாபிமானம் என்ற நோக்கில் முதலாளித்துவச் சமூகத்திலுள்ள மனிதத் தன்மைக்குப் புறம்பான நிலைமைகளை ஆசிரியர் தத்ரூபமாக எழுதியிருக்கிறார். இதில் அரசியல் போராட்டக்காரருடைய ஆத்திரமும் வெறியும் மாபெரும் சிந்தனையாளருடைய முதிர்ந்த ஆராய்ச்சியுடன் இணைந்திருக்கின்றன.

இதில் ஸ்தூலமான யதார்த்தத்தைப் பற்றி மெய்யான அணுகுமுறை சமூக வளர்ச்சியின் தொலைவிலுள்ள காட்சிகளைப் பற்றிய பார்வையுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. இப்புத்தகம் மிகவும் ஆழமான பிரச்சினைகளை எழுப்புகிறது;அவற்றின் முக்கியத்துவம் பல நூற்றாண்டுகள் வரை நீடிக்கும்.

1844-ம் வருடத்தின் பொருளாதார மற்றும் தத்துவஞானக் கையேடுகள் என்ற நூலின் மீது எல்லா நாடுகளையும் சேர்ந்த தத்துவஞானிகள், பொருளியலாளர்கள், சமூகவியலாளர்கள் இப்பொழுது குறையாத அக்கறை காட்டுவது ஏன் என்பதை இது விளக்குகிறது.

1844 பொருளாதார மற்றும் தத்துவஞானக் கையேடு

கையேடுகளைப் பற்றி அதிக விவரமான வர்ணனை அல்லது மிகவும் புறநிலையான பொருள் விளக்கம் கூட அவற்றின் சிறப்புமிக்க கருத்து வளத்தை எடுத்துக்காட்டாது. ஒரு தலைப்பட்சமான கருத்துக்கள், வறட்டுக் கோட்பாட்டுத் திட்டங்களின் குறுகிய தன்மை ஆகிய தடைகளை நொறுக்கித் தள்ளுகின்ற, இயற்கையைப் பற்றிய விளக்கத்தில் மட்டுமல்லாமல் சமூக வளர்ச்சியைப் பற்றிய விளக்கத்திலும் கருத்துமுதல்வாதத்தின் கடைசி விலங்குகளை அகற்றுகின்ற தத்துவச் சிந்தனையின் துணிவுடைமையை, விரிந்த பரப்பை, கலையழகை முழுமையாக அனுபவிப்பதற்கு இப்புத்தகத்தை ஒருவர் படித்தால் (பல முறைகள்!) மட்டுமே முடியும்.

மனிதகுலத்தின் மொத்த வரலாற்றுக்கும் விளக்கத்தைப் பொருளாயத உறவுகளில் தேட வேண்டும்- இம்முடிவுக்கு மார்க்ஸ் ஏற்கெனவே வந்து விட்டார் – என்ற கருத்திலிருந்து மார்க்ஸ் இப்புத்தகத்தைத் தொடங்குகிறார். அதை அவர் பின்வருமாறு வகுத்தளிக்கிறார்: “… தனிச் சொத்துடைமையின் இயக்கத்தில் இன்னும் துல்லியமாகக் கூறுவதென்றால் பொருளாதாரத்தில், மொத்தப் புரட்சிகர இயக்கமும் தன்னுடைய அனுபவ ரீதியான மற்றும் தத்துவஞான அடிப்படையைக் காண்கிறது.”(3)

மனிதனின் உற்பத்தி வாழ்க்கை, அவனுடைய உழைப்பு – இதுதான் சமூக முன்னேற்றத்தின் முக்கியமான விசை. மனிதனுடைய உழைப்பு வெவ்வேறு சமூக நிலைமைகளில் வெவ்வேறு வடிவங்களை அடைகிறது. கடைசியில் “மொத்தமாக மக்கள் தொகையினரிடம் இரண்டு வர்க்கங்கள் – தொழிலாளி வர்க்கம், முதலாளி வர்க்கம் – மட்டுமே எஞ்சுகின்றன.(4)

ஃபாயர்பாஹின் சூக்குமமான மனிதனுடைய இடத்தில் மார்க்ஸ் பாட்டாளியை வைக்கிறார். ஃபாயர்பாஹின் ஒரு மனிதன் மற்றொரு மனிதனிடம் கொண்டிருக்கின்ற உறவுகளின் இடத்தில் மார்க்ஸ் தொழிலாளிக்கும் முதலாளிக்கும் வாழ்கின்ற உழைப்புக்கும் திரட்டப்பட்ட உழைப்புக்கும் (மூலதனம்) உள்ள உறவுகளை வைக்கிறார்.

எல்லாமே விற்பனை செய்யப்படுகின்ற, வாங்கப்படுகின்ற உலகத்தில், பணம் தலைமையான, தனிமுதலான சக்தியைக் கொண்டிருக்கின்ற உலகத்தில் தொழிலாளி ஒரு பண்டமாகத்தான் இருக்கிறான். அவனிடம் மூலதனமோ அல்லது வரமோ கிடையாது. அவன் உழைக்கின்ற சக்தியை மட்டுமே வைத்திருக்கிறான்; உழைப்பு சமூகத்தின் அனைத்துச் செல்வத்தையும் உற்பத்தி செய்கிறது.

முதலாளித்துவச் சமூகத்தின் இந்த உண்மையையே மார்க்ஸ் தன்னுடைய ஆராய்ச்சியின் தொடக்க நிலையாக வைக்கிறார்.

தொழிலாளி பொருளாயதச் செல்வத்தைப் படைக்கிறான்; ஆனால் அது அவனுக்குச் சொந்தமாக இருக்கவில்லை. மேலும் இச்செல்வம் தொழிலாளியிடமிருந்து அந்நியமாக்கப்படுவது மட்டுமின்றி மூலதனம் என்ற முறையில் தொழிலாளியை ஆட்சி புரிகின்ற அந்நியச் சக்தியாக தொழிலாளிக்கு எதிரிடையாக வைக்கப்படுகிறது. மார்க்ஸ் இந்த உண்மையை உழைப்பு அந்நியமாக்கப்படுதல் என்கிறார்.

தொழிலாளியின் உழைப்பு அதிகரிக்கின்ற பொழுது அவனால் படைக்கப்படுகின்ற செல்வங்களின் உலகமும் அதிகரிக்கிறது; ஆனால் தொழிலாளியின் மீது இந்தச் செல்வத்தின் ஆட்சியும் அதிகரிக்கிறது. முதலாளி முன்னிலும் அதிகமான சக்தியைப் பெறுகிறான், தொழிலாளி முன்னைக் காட்டிலும் ஏழையாகிறான்; அவனுடைய உரிமைகள் முன்னிலும் அதிகமாகப் பறிக்கப்படுகின்றன.

படிக்க :
மனிதனை நாயாகப் பயிற்றுவிக்கிறது முதலாளித்துவம் ! தோழர் மருதையன்

தொழிலாளி தன்னால் படைக்கப்பட்ட உழைப்புப் பொருளின் அடிமையாகிறான். அவனுடைய உழைப்பின் திரட்டு மூலதனத்தின், பணவியல் செல்வத்தின் வடிவத்தை அடைகிறது. அது தொழிலாளியை வேலைக்கு வைத்துக் கொள்கிறது, அவன் ஜீவிக்கின்ற சாதனத்தைத் தருகிறது, அவனுடைய வாழ்கின்ற உழைப்பையும் அவன் வாழ்க்கையையுமே பயன்படுத்துகிறது.

தொழிலாளியின் உழைப்பு அற்புதமான பொருள்களைப் படைக்கிறது; ஆனால் அது தொழிலாளியின் வறுமையையும் உற்பத்தி செய்கிறது. அது அரண்மனைகளைப் படைக்கிறது, ஆனால் தொழிலாளிகளுக்குச் சேரிகளை உற்பத்தி செய்கிறது. அது அழகைப் படைக்கிறது; ஆனால் தொழிலாளியை அவலட்சணமாக்குகிறது. அது மனிதர்களின் உழைப்புக்குப் பதிலாக இயந்திரங்களைக் கொண்டு வருகிறது; ஆனால் தொழிலாளர்களையே இயந்திரங்களாக மாற்றி விடுகிறது. அவன் செய்கின்ற உழைப்பு எவ்வளவு நுட்பமாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவன் மூளை அழிகிறது.

இந்தத் தலைகீழான உலகத்தில் பொருள்கள் அவற்றைப் படைத்தவனை ஆட்சி செய்கின்றன; அங்கே மக்களுக்கு இடையிலான உறவுகள் பொருள்களுக்கு இடையிலான உறவுகளின் வடிவத்தில் தோன்றுகின்றன. இந்த உலகத்தை மார்க்ஸ் மூலதனத்திலும் அதற்குப் பூர்வாங்கமாக எழுதிய சில நூல்களிலும் பிற்காலத்தில் விரிவாக ஆராய்ந்தார். பொருளாதார மற்றும் தத்துவஞானக் கையேடுகளில் தோன்றிய பிம்பம் இவற்றில் இன்னும் அதிகத் தத்ரூபமான, கொடுமைமிக்க உருவரைகளைப் பெறுகிறது.

நாம் கையேடுகளுக்குத் திரும்பி மார்க்சினுடைய வாதத்தைப் பின்தொடர்வோம். தொழிலாளியின் உழைப்பின் பலன்களை அவனிட மிருந்து அந்நியப்படுத்துவது இந்தப் பிரச்சினையின் ஒரே ஒரு அம்சம் மட்டுமே. மற்றொரு அம்சமும் இதே அளவுக்கு முக்கியமானதே. தொழிலாளியின் நடவடிக்கையின் ஜீவனோபாய நிகழ்வுப் போக்கே அந்நியப்படுத்தப்பட்ட தன்மையைக் கொண்டிருக்கிறது; அது அவனுடைய மனித சாராம்சத்தின் சுய அந்நியமாதலாகும்.

இதன் பொருள் என்ன? தொழிலாளி தன்னுடைய சுதந்திரமான விருப்பத்தின் பேரில் உழைக்கவில்லை, அவனுடைய உழைப்பு சுய நடவடிக்கை அல்ல; அது பலவந்தப்படுகின்ற, கட்டாய உழைப்பு; அந்த நிகழ்வுப் போக்கின் போது தொழிலாளி முதலாளியின் உடைமையாக இருக்கிறான்.

இந்தப் பலவந்தமான உழைப்பில் தொழிலாளி தன்னுடைய உடல் மற்றும் மனோ சக்தியைச் சுதந்திரமாக வளர்க்கவில்லை; அவன் உடல் ஓடாகத் தேய்கிறது, அவன் தன் உடலைக் கெடுத்து அறிவை அழித்துக் கொள்கிறான். உழைப்பின் மூலமாக அவன் ஒரு உண்மையான மனிதத் தேவையை, படைக்க வேண்டும் என்ற தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதுதான் தர்க்கம். ஆனல் அவனுக்கு உழைப்பு மிகவும் சாதாரணமான அவசியங்களைப் பூர்த்தி செய்வதற்குச் சாதனமாக இருக்கிறது. மக்கள் உழைப்பை ஒரு சாபக்கேடாகக் கருதுவதிலும் அருவருப்புடன் அதைச் செய்வதிலும் பிளேக் நோயைக் கண்டு ஓடுவதைப் போல அதிலிருந்து தப்பியோடுவதிலும் உழைப்பு அந்நியமாகியிருக்கின்ற தன்மையை மிகவும் தெளிவாகக் காணலாம்.

உழைப்பு மிகவும் மனிதத் தன்மை கொண்ட தேவையாகும். ஆனால் அந்த உழைப்பின் நிகழ்வுப் போக்கில் தொழிலாளி தன்னை ஒரு மனித ஜீவனாக உணர்வதில்லை. இங்கே அவன் பலவந்தம் செய்யப்பட்ட பிராணியாக, உயிருள்ள இயந்திரமாக மட்டுமே இயங்குகிறான். இதற்கு மாறான முறையில் உழைப்புக்கு வெளியே தான், அவனுடைய சாதாரணமான, அடிப்படையில் மிருகச் செயல்களை நிறைவேற்றுகின்ற பொழுது-உணவருந்துதல், மதுவருந்துதல், உடலின்ப நடவடிக்கை, உறக்கம், இதரவை-தொழிலாளி தன்னைச் சுதந்திரமாக இயங்குகின்ற மனிதப் பிறவியாக உணர்கிறான். “எது மிருகத் தன்மையோ அது மனிதனுக்கு உரியதாகிறது எது மனிதத் தன்மை உடையதோ அது மிருகமாக ஆகிறது.”(5)

இப்படி உழைப்பின் நிகழ்வுப் போக்கில் தொழிலாளியின் சுய அந்நியமாதல் நடைபெறுகிறது. இதன் நேரடியான விளைவே மனிதன் மனிதனிடமிருந்து அந்நியமாதல், தொழிலாளி மற்றும் முதலாளியின் எதிரிடையான நிலைகள்.

அந்நியமாதல் மற்றும் உழைப்பு சுய அந்நியமாதல் பிரச்சினை குறித்து மார்க்சின் பகுப்பாய்வு பொருளாதார யதார்த்தத்தைப் பற்றிக் கடுமையான விமர்சனம் என்று எதிர்மறையான அம்சத்தில் மட்டுமே வழக்கமாகப் பாராட்டப்படுகிறது. ஆனால் இந்த விமர்சனத்தில், இருக்கின்ற நிலைமையைப் பற்றி மார்க்சினுடைய மதிப்பீட்டை, உண்மையான மனித உழைப்பும் மனித உறவுகளும் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி, அதாவது கம்யூனிஸ்ட் சமூகத்தைப் பற்றி அவருடைய கருத்துக்குப் பின்னால் உள்ள ஆக்க முறையான கொள்கை களை ஒருவர் தெளிவாகக் காண முடியும்.

உழைப்பு தனிமனிதனுடைய சுய அந்நியமாதலாக இல்லாமல், சுய உறுதிப்படுத்தலாக இருக்க வேண்டும். அது வாழ்க்கை நடத்துகின்ற சாதனமாக இல்லாமல், வாழ்க்கையின் சாராம்சமாக, மனிதன் தன்னுடைய திறமைகளை முழுமையாகவும் அகல்விரிவாகவும் வளர்த்துக் கொள்ளக் கூடிய நிகழ்வுப் போக்காக இருக்க வேண்டும். வெளியிலிருந்து வருகின்ற நிர்ப்பந்தம் உழைப்புக்குத் தூண்டுதலாக இருக்கக் கூடாது. படைக்க வேண்டும் என்ற ஆழமான உள்முனைப்பு உழைப்புக்குத் தூண்டுதலாக இருக்க வேண்டும்.

1844-ம் வருடத்தின் பொருளாதார மற்றும் தத்துவஞானக் கையேடுகளே மிகவும் ஒட்டியிருக்கின்ற பொருளியலாளர்களிடமிருந்து பெறப்பட்ட குறிப்பேடுகளில் அந்நியப்படுத்தப்பட்ட மனிதனின் உலகம் மனிதனுடைய உண்மையான சமூக சாரம்சத்தின், அவனுடைய “உண்மையான இனப்பொது வாழ்க்கையின்”(6) கேலிச்சித்திரம் என்று மார்க்ஸ் வர்ணிக்கிறார்.

மனிதாபிமான அடிப்படையில் அமைக்கப்பட்டிருக்கின்ற உலகத்தில், அதாவது ஒரு கம்யூனிஸ்ட் சமூகத்தில் இந்த உண்மையான வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை இளம் மார்க்ஸ் குறிப்பேடுகளின் பின்வரும் பகுதியில் சித்திரிக்கிறார்:

“மக்கள் என்ற முறையில் நாம் உற்பத்தி செய்திருக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம்: ஒவ்வொருவரும் தன்னுடைய உற்பத்தி நிகழ்வுப் போக்கில் தன்னையும் பிறிதொருவரையும் இரட்டிப்பாக உறுதிப்படுத்தியிருக்கிறார். இச்சந்தர்ப்பத்தில் நான்

1) …..அந்த நடவடிக்கையின் போது தனிப்பட்ட வாழ்க்கை வெளிப்பாட்டையும் உற்பத்திப் பொருளைப் பார்க்கும் பொழுது தனிப்பட்ட மகிழ்ச்சியையும் அடைந்திருக்கிறேன்.

2) என்னுடைய உற்பத்திப் பொருளை நீங்கள் உபயோகிக்கின்ற அல்லது ரசிக்கின்ற பொழுது மற்றொரு மனித உயிருக்கு அவசியமான ஒரு பொருளைப் படைத்திருக்கிறேன் என்ற சாதனையைப் பற்றி நேரடியான மகிழ்ச்சியை நானும் அடைகிறேன்;

3) உங்களுக்கும் மனித இனத்துக்கும் இடையில் நான் இடையீட்டாளராக இருந்திருக்கிறேன், உங்களுடைய இருத்தலின் தொடர்ச்சியாக, உங்களின் அவசியமான பகுதியாக நீங்கள் என்னை அறிந்திருக்கிறீர்கள், அப்படியே உணர்வீர்கள்…

4) என்னுடைய வாழ்க்கையின் தனிப்பட்ட வெளிப்பாட்டில் உங்களுடைய வாழ்க்கை வெளிப்பாட்டை நான் நேரடியாகப் படைத்திருக்கிறேன், ஆகவே என்னுடைய தனிப்பட்ட நடவடிக்கையில் எனது உண்மையான இருத்தலை, என்னுடைய மனித, என்னுடைய சமூக சாராம்சத்தை நான் நேரடியாக உறுதிப்படுத்தியிருக்கிறேன், கைவரப் பெற்றிருக்கிறேன்.

“என்னுடைய உழைப்பு வாழ்க்கையின் சுதந்திரமான வெளிப்பாடாக, ஆகவே வாழ்க்கையை அனுபவித்து மகிழ்வதாக இருக்கும். தனிச் சொத்துடைமைக்கு நடுவில் அது வாழ்க்கையை அந்நியப்படுத்தலே, ஏனென்றால் நான் வாழ்வதற்காக, வாழ்க்கைச் சாதனத்தைப் பெறுவதற்காக உழைக்கிறேன். என்னுடைய உழைப்பு வாழ்க்கை அல்ல.”(7)

குறிப்புகள்:

(1) Auguste Cornu, Karl Marx und Friedrich Engels. Leben und Werk, Bd. 2, S. 19.
(2) Ibid.
(3) Marx, Engels, Collected Works, Vol. 3, p. 297.
(4) Ibid., p. 266.
(5) Ibid., p. 275.
(6) Marx/Engels, Gesamtausgabe, Erste Abteilung, Bd. 3, S. 536.
(7) Ibid., S. 546-47. 284.

– தொடரும்

நூல் : மார்க்ஸ் பிறந்தார்
நூல் ஆசிரியர் : ஹென்ரி வோல்கவ்
தமிழில் : நா. தர்மராஜன், எம். ஏ.
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், 1986 -ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது.

நூல் கிடைக்குமிடம் :

கீழைக்காற்று,
(கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
கடையின் புதிய முகவரி கீழே)
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம், 
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, 
நெற்குன்றம், சென்னை – 600 107.
(வெங்காய மண்டி பேருந்து நிறுத்தம் அருகில்)
பேச – (தற்காலிகமாக) : 99623 90277

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்,
சென்னை.

முந்தைய பாகங்கள்:

  1. மார்க்சின் வாழ்க்கை வழி மார்க்சியம் கற்போம் !
  2. அற்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பிறந்தார் புரட்சியாளர் மார்க்ஸ்
  3. ஜெர்மனியின் ரைன் பிரதேசத்தில் மார்க்ஸ் தோன்றியது தற்செயலானதா ?
  4. பள்ளியில் சுமாரான மாணவராக இருந்தார் கார்ல் மார்க்ஸ் – ஏன் ?
  5. எல்லாவற்றையும் சந்தேகப்படு என்பது மார்க்சுக்குப் பிடித்தமான மூதுரை
  6. சுயவிமர்சனத்தில் இரக்கமற்றவர் கார்ல் மார்க்ஸ்
  7. மார்க்சும் ஏங்கெல்சும் முதலில் எழுதியவை கவிதை நூல்கள் – ஏன் ?
  8. கடவுள் மீது போர் தொடுத்த கார்ல் மார்க்ஸ் !
  9. மதத்தின் மூல வேர்கள் பூமியில் இருக்கின்றன – கார்ல் மார்க்ஸ்
  10. பண்படுத்துவது கலை – பாதை காட்டுவது தத்துவஞானம்
  11. தத்துவஞானத்தை புரிந்து கொள்ள பக்தர்களால் முடியாது !
  12. ஒரு மெய்யான தத்துவஞானியை சந்திக்கத் தயாரா ?
  13. கார்ல் மார்க்ஸ் : ஆய்வின் முடிவுக்கும் அஞ்சாதே ! ஆள்வோரின் ஆட்சிக்கும் அஞ்சாதே !
  14. கார்ல் மார்க்ஸ் : ஊடகங்களின் ஆன்மீகத் தணிக்கையை கட்டுப்படுத்தும் பொருளாதாரத் தணிக்கை !
  15. சுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை – மார்க்ஸ்
  16. எல்லாத் தத்துவஞானத்துக்கும் அப்பால் சுதந்திரமாக இருக்கிறது இயற்கை !
  17. துன்பம் பற்றிய உங்கள் கருத்து என்ன ? கீழ்ப்படிதல் என்கிறார் கார்ல் மார்க்ஸ் !
  18. கார்ல் மார்க்ஸை மார்க்சியவாதியாக்கிய நகரம் பாரீஸ்

வேதவேள்விகளும் பல மனைவிகளும் – புறநானூறு | பொ.வேல்சாமி

0

நண்பர்களே….

எழுத்தாளர்
பொ. வேல்சாமி
புறநானூறு 166 ம் பாடல், வேள்வி செய்யக்கூடிய பார்ப்பனருக்குரிய தவிர்க்க முடியாத தகுதிகளில் ஒன்றாக பல மனைவிமார்களுடன் வாழ வேண்டும் என்று கூறுகிறது. இந்நூலின் பதிப்பாசிரியரான .வே.சாமிநாத அய்யர் எழுதியுள்ள ஆய்வுக்குறிப்பில் வேள்வியைச் செய்ய கூடிய பார்ப்பனர் குறைந்தபட்சம் மூன்று பெண்களையாவது திருமணம் செய்ய வேண்டும் என்று கூறுகின்றார். தமிழக வரலாற்றில் மிகப் பழங்காலத்திலிருந்து இன்றுவரை எல்லா வகையான சாதியினரும் இந்தக் கொள்கையை தவறாது பின்பற்றி வந்துள்ளனர். இக்கொள்கைக்கு மட்டும் எவரும் சாதிவேறுபாட்டைக் கணக்கில் கொள்வதில்லை. 18,19 ம் நூற்றாண்டுகளில் அரசர்கள் 200, 300 மனைவிகளை வைத்திருந்த அரிய பதிவுகளுடன் அரசர்களுக்கு கீழிருந்த அதிகாரிகள் தகுதிக்கேற்ற மனைவிகளை கொண்டிருந்த தகவல்களும் நமக்கு கிடைக்கின்றன. தமிழர்களின் நீண்ட நெடிய பண்பாட்டு வரலாற்றில் இந்த விசயத்தை மட்டும் என்றுமே இவர்கள் கைவிடவில்லை என்பதை தொல்காப்பியம் தொடங்கி இன்றைய அரசியல்வாதிகள் வரை இந்த தமிழ் மரபை நடைமுறைபடுத்தி வருவதை நாம் கண்குளிர காண்கிறோம்.

குறிப்பு:
1840 – 50 களில் ஆங்கிலேயர்கள் தஞ்சை மாவட்டத்தின் நிர்வாகத்தை நேரடியாக எடுத்துக் கொண்டனர். அதனால் அரசர்களின் நூற்றுக்கணக்கான மனைவிமார்களுக்கு உதவி பணம் வழங்குவதற்கு ஒரு தனி தாசில்தாரை நியமித்தனர். இந்தக் காலகட்டத்தில் பணியில் இருந்த தாசில்தாரின் பெயர் நடராஜபிள்ளை என்பது குறிப்பிடத்தக்கது.

பொ.வேல்சாமி: தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.
எழுதிய நூல்கள்:

  • பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
  • கோவில் நிலம் சாதி
  • பொய்யும் வழுவும்

ஆலை நடத்துறாங்களா ? ஸ்கூல் நடத்துறாங்களா ? யமஹா தொழிலாளர் போராட்டம்

ஆள் அரவமற்ற பகுதிக்குள் தனித் தனித் தீவுகளாய் எழும்பி நிற்கும் ஆலை வளாகங்களுக்கிடையே… சாலையோரம் அமர்ந்து கொண்டு தொண்டை தண்ணீர் வற்ற முழக்கமிட்டுக் கொண்டிருந்தார்கள் அந்தத் தொழிலாளர்கள்.

”மெஷின் மாதிரி ஒன்னுக்குக்கூட போகாம வேலை செய்யனும். சம்பளம்னு நீயா பார்த்து போடுறத வாய மூடிட்டு வாங்கிட்டு போகனும். டிப்ளமோ படிச்சவன ஹவுஸ்கீப்பிங் வேலை பண்ணச் சொல்றதையும் சகிச்சி செய்யனும். சம்பளம் உயர்த்திக்கொடு, போனஸ் கொடு, சட்டப்படியான உரிமைகளை கொடுன்னு சங்கமா சேர்ந்து கேட்டா பழிவாங்குவியா? நாங்கள்லாம் என்ன உன்னோட அடிமைகளா?” கோபம் கொப்பளிக்க கேள்வியெழுப்புகிறார்கள் அந்தத் தொழிலாளர்கள்.

சங்கம் தொடங்கியதற்காக இரண்டு தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக பத்து நாட்களுக்கும் மேலாக உறுதியோடு போராட்டத்தைத் தொடரும், இந்தியா யமஹா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தொழிலாளர்கள் இவர்கள்.

ஜப்பானை தலைமையிடமாகக் கொண்ட யமஹா மோட்டார் கம்பெனியின் துணை நிறுவனம்தான் இந்தியா யமஹா மோட்டார்ஸ். உலகெங்கும் பல கிளைகளை பரப்பியிருக்கும் இந்நிறுவனம், இந்தியாவில் உ.பி.யில் சூரஜ்பூர், ஹரியானவில் பாரிதாபாத் மற்றும் தமிழகத்தில் காஞ்சிபுரம் என மூன்று இடங்களில் பிரதான உற்பத்தி ஆலையை நிறுவியிருக்கிறது.

காஞ்சிபுரம், ஒரகடம் சிப்காட் பகுதியில் 150 கோடி முதலீட்டில் 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஆலையில் யமஹா நிறுவனத்தின் 6 பைக் மாடல்கள் தயாரிக்கப்படுகிறது. இந்த நிறுவனத்திற்கு உதிரிபாகங்களை தயாரித்து வழங்கும் பத்துக்கும் மேற்பட்ட சப்ளையர்ஸ் நிறுவனங்களும் இதே பகுதியில் அமைந்துள்ளன. இவை அனைத்தும் பன்னாட்டு நிறுவனங்கள்.

தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கப் போவதாகக்கூறி, அரசின் பல்வேறு சலுகைகளைப் பெற்று தொடங்கப்பட்ட இந்த ஆலையில் பணியாற்றும் 4,500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுள் நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கை வெறும் 807. எஞ்சியுள்ளவர்கள் ஒப்பந்த மற்றும் பயிற்சித் தொழிலாளர்கள்.

வேலையைக் கற்றுக்கொண்டு திறம்பட செய்வதை பொறுத்து, இரண்டு ஆண்டுகளில் பணிநிரந்தரம் செய்து விடுவோம் என்று வாக்குறுதியளித்துதான் தொழிலாளர்களை வேலைக்கு சேர்த்திருக்கிறது, யமஹா. மூன்றரை ஆண்டுகள் ஓடிவிட்டது. வாக்குறுதியளித்தபடி பணிநிரந்தரம் செய்யவில்லை. சம்பளமும் உயர்த்திக் கொடுக்கவில்லை. ஆண்டுக்கு ரூ700 சம்பளம் உயர்த்தப்படுவதே பெரிய விசயம் என்கிறார்கள் தொழிலாளர்கள். நிரந்தரத் தொழிலாளியின் சம்பளம் குறைந்தபட்சம் 12,500; அதிகபட்சம் 18,000. ஒப்பந்த மற்றும் பயிற்சித் தொழிலாளர்களின் சம்பளமோ 8,000 – லிருந்து 10,000க்குள்தான்.

நிறுவனத்தோடு முரண்பட்டுக் கொள்ளாமல், பணிநிரந்தரமாகும்வரை பல்லைக் கடித்துக்கொண்டு ஓட்டிவிடலாம் என்றுதான், நினைத்திருக்கிறார்கள். அவ்வாறும் மூன்றரை ஆண்டுகாலம் சகித்தும் பார்த்து விட்டார்கள். ஆலை தொடங்கப்பட்டபோது முதல் நூறு தொழிலாளர்களுள் ஒருவராக வேலையில் சேர்ந்தவருக்கே இன்னும் பணி நிரந்தரமாகவில்லை.

பணிநிரந்தரம் குறித்த கேட்டதற்கு, ”எனக்கு முன்னாடி இருந்தவங்க என்ன சொல்லி வேலைக்கு சேர்த்தாங்கன்னுலாம் எனக்குத் தெரியாது. கம்பெனி விதிப்படி 15 வருசம். உனக்காக வேணுன்னா ஆஃபர் தாரேன். 12 வருசத்துக்குள்ள உன்னோட பெர்ஃபாமென்ஸ் பார்த்து கன்பார்ம் பன்றேன்” என்று திமிராக பதிலளித்திருக்கிறது, யமஹா நிர்வாகம்.

இதற்கேற்ப தொழிலாளர்களை லெவல்-1, லெவல்-2 என்று வகைப்படுத்தியிருப்பதோடு மட்டுமின்றி, ஒவ்வொரு லெவலிலும் கேஸ்-1, கேஸ்-2 என்று உட்பிரிவுகளை உருவாக்கி அடுத்த லெவலுக்கு உயர்ந்து செல்லும் காலத்தின் அளவை தந்திரமாகக் கூட்டியிருக்கிறது. ”எனக்கு இப்பவே 30 வயசாகுது, இன்னும் 12 வருசம் கழிச்சி 42 வயசுல கன்பார்ம் ஆகி என் லைஃப்ல எப்போ செட்டிலாகிறது?” என்று கேள்வியெழுப்புகிறார், ஒரு தொழிலாளி.

”பால் விலையும் பெட்ரோல் விலையும் இன்ன தேதியில இன்ன விலை ஏத்தப் போறோம்னு சொல்லிட்டா ஏத்துறாங்க? ஆனா, எங்களுக்கு, அடுத்த வருசம் ஜனவரி மாசம் என்ன சம்பளம்னு இப்பவே சொல்லிட்டாங்க. இப்ப வாங்குற சம்பளத்தவிட 700 அதிகம். அதுதான் என்னோட அடுத்த வருசம் முழுசுக்கும் சம்பளம்” என்கிறார், மற்றொரு தொழிலாளி.

பணிநிரந்தரம், சம்பள உயர்வு, போனஸ் பற்றிய பிரச்சினைகள் ஒருபக்கம் இருந்தாலும் மிக முக்கியமாக ஆலையில் தாங்கள் மிகவும் கேவலமான முறையில் நடத்தப்படுவதாகக் குமுறுகிறார்கள் இந்தத் தொழிலாளர்கள்.

படிக்க:
♦ மாருதி முதல் ஹூண்டாய் வரை…ஒடுக்கப்படும் தொழிலாளர்கள்!
♦ மாருதி சுசுகி: முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு எதிரான தொழிலாளி வர்க்கத்தின் போர்!

”ஆலை நடத்துறாங்களா, இல்ல ஸ்கூல் நடத்துறாங்களானு தெரியல. எதுக்கெடுத்தாலும் அப்பாவ கூட்டிட்டுவா… அம்மாவ கூட்டிட்டுவா.. இனிமே இதுமாதிரி நடக்காதுனு லெட்டர் எழுதி கொடு… ஒரு தொழிலாளிக்கு அம்மா மட்டும்தான். அவங்களும் ஹார்ட் பேசன்ட். அடுத்த மாசம் ஆபரேசன் பன்ற நிலையில இருக்கிறவங்க. உடம்பு முடியாதவங்க சார் கூட்டிட்டு வரமுடியாதுனு எவ்ளோ கெஞ்சுறான். கொஞ்சம்கூட இரக்கமே இல்லாம, ஆம்புலன்ஸ அனுப்புறேன் அள்ளிப்போட்டுட்டுவா அப்டின்றார் ஒரு ஹெச்.ஆர். அதிகாரி… இதவிடக் கொடுமை. பையன் மெட்ராஸ்ல பெரிய கம்பெனில வேலையில இருக்கானு பெருமையா நினைச்சிட்டிருந்த வயசான அப்பா ஒருத்தர், தன்னோட பையன் முன்னாடியே ஹெச்.ஆர். அதிகாரி கால்ல விழுந்து கெஞ்சுறார்… அப்படி என்னயா தப்பு பன்னிட்டோம் நாங்க?” என்று கேள்வியெழுப்புகிறார்கள் இந்தத் தொழிலாளர்கள்.

”எங்க அசெம்ப்ளி டிபார்ட்மெண்ட்ல 800 பேர் வேலை செய்றோம். இருக்கிறது ஒரு கேண்டீன். அதுலயும் ஒரே கவுண்டர்தான். 800 பேரும் வரிசையா நிப்பான். கையெல்லாம் கிரீசா இருக்கும். சோப்பாயிலைத் தேடி கையை கழுவிட்டு அந்த வரிசையில நின்னு சாப்பாட்ட வாங்கிட்டு உட்காந்தா சைரன் அடிக்கும். இன்னும் 5 நிமிசம்தான் இருக்குன்றதுக்கான சைரன். 5 நிமிசத்துல அவசரம் அவசரமா சாப்டு ஓடிப்போயிரலாம்னா… கம்பெனி வளாகத்துல ஓடக்கூடாதுனு ஒரு ரூல் இருக்கு. இப்போ நான் என்னா பன்றது? ஓடுனாலும் ஏன் ஓடுனேனு லெட்டர் எழுதி கொடுக்கனும். நடந்து போனா லேட் ஆகும். ஏன் லேட்னு லெட்டர் எழுதி கொடுக்கனும்.”

தமக்கு நேர்ந்த அவமானங்களை, தாம் சந்தித்தத் துயரங்களை விவரிக்கும் இவர்கள் அனைவரும் இளம் தொழிலாளர்கள். அதிகபட்ச வயது 30 இருக்கலாம். ஆலை நிர்வாகத்திற்கு எதிரான தொழிற்சங்கப் போராட்டங்களை நேரில் கண்டிராதவர்கள். துண்டறிக்கைகளை கையில் வைத்துக்கொண்டு செங்கொடியேந்தி கோஷம் போட்டுக் கொண்டிருந்தவர்களை, கம்பெனி பேருந்தின் கண்ணாடி வழியே கண்டும் காணாததுமாய் கடந்து போனவர்கள்.

தமது சொந்த அனுபவத்திலிருந்து குறைந்தபட்சம் சங்கமாக அணிதிரள வேண்டுமென்ற உந்துதலோடு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் வழிகாட்டலில் இந்தியா யமஹா மோட்டார்ஸ் தொழிற்சங்கமாக அணி திரண்டார்கள்.

சம்பள உயர்வு, போனஸ், சட்டப்படியான உரிமைகள் சிலவற்றைப் பட்டியலிட்டு யமஹா நிர்வாகம் தங்களுடன் பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டு வரவேண்டுமென்று தொழிலாளர் நலத்துறையிடம் தொழிற்தாவா எழுப்புகிறார்கள். தொழிலாளர் நலத்துறையும் செப்-20 அன்று பேச்சுவார்த்தைக்கு வருமாறு இருதரப்பையும் அழைக்கிறது. பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் பொருட்டு தங்கள் இருவருக்கும் இரண்டு மணிநேரம் அனுமதி வழங்குமாறு யமஹா நிறுவன அதிகாரிகளிடம் கோருகிறார்கள் சங்க முன்னணியாளர்களான பிரகாஷ் மற்றும் ராஜபாண்டியன் ஆகியோர். அனுமதி மறுக்கப்படுகிறது. விடுமுறைக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு செல்கிறார்கள். பேச்சுவார்த்தைக்கு நிர்வாகத் தரப்பில் எவரும் வரவில்லை. மறுநாள் அவ்விரு தொழிலாளர்களையும் டிஸ்மிஸ் செய்துவிட்டதாகக்கூறி, ஆலைக்குள் விடமறுத்து தகராறு செய்கிறது, யமஹா. கனன்று கொண்டிருந்த தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட அவ்விரு தொழிலாளர்களுக்கு ஆதரவாக அங்கேயே அமர்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்துகிறார்கள்.

ஆறு நாட்களாக நடைபெற்ற இப்போராட்டத்தை உடைக்க தொழிலாளர்கள் கழிவறையைப் பயன்படுத்த அனுமதி மறுப்பது; உணவு தர மறுப்பது என்பது தொடங்கி சங்க முன்னணியாளர்களின் வீடுகளுக்குச் சென்று அடியாட்களை வைத்து மிரட்டுவது வரையில் பல்வேறு முயற்சிகளை செய்து பார்த்தும் தோல்வியுற்றது.

இறுதியாக, நீதிமன்ற ஆணையைக் காட்டி போலீசை வைத்து தொழிலாளர்களை வெளியேற்ற முயற்சித்தது. ஆலையிலிருந்து வெளியேற மறுத்து அங்கிருந்த டவரில் ஏறிப் போராட்டத்தைத் தொடர்ந்தார்கள்.

சி.ஐ.டி.யு. தொழிற்சங்க முன்னணியாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஆலை கேட்டிலிருந்து 200 மீட்டருக்கு அப்பால், கொளுத்தும் வெயிலில் சாமியானா பந்தல் அமைத்து உறுதிகுலையாமல் அமர்ந்திருக்கிருக்கிறார்கள் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்.

யமஹா தொழிலாளர்களுக்கு ஆதரவாக ராயல் என்பீல்டு தொழிலாளர்களின் போராட்டம்.

யமஹா தொழிலாளர்களின் இந்தப் போராட்டம், சக தொழிலாளர்கள் மத்தியில் ஒரு சலனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உணவு சமைத்து எடுத்துவந்து கொடுத்திருக்கிறார்கள் பிற ஆலையில் பணிபுரியும் சக தொழிலாளர்கள். ரெனால்டு நிசான் ஆலைத்தொழிலாளர்கள் ரூ. 25,000 நிதியுதவியும் வழங்கியிருக்கின்றனர். யமஹா தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக போர்டு, நிசான், ஹூண்டாய் கார் தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களும், எம்.எஸ்.ஐ., அப்பல்லோ டயர்ஸ், ஜே.கே.டயர்ஸ், ராயல் என்பீல்டு நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களும் போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள்.

தோழர் முத்துக்குமார், காஞ்சிபுரம் மாவட்ட செயலர், சி.ஐ.டி.யு.

ஆலையிலிருந்து வெளியேற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாகக்கூறி, நீதிமன்ற ஆணையைக் காட்டி, ”எங்களுக்கும் ஈகோ இருக்கும்ல” என்று எகத்தாளமாகப் பேசினாராம், ஒரு ஹெச்.ஆர். அதிகாரி. தொழிலாளர்களோ, ஆலையை கடந்து ஒன்றுபட்டு நிற்பதன்மூலம் பன்னாட்டு நிறுவனங்களின் ஆணவத்தை சற்றேனும் அசைத்திருக்கின்றனர்.

”தொழிலாளர்களை ஆலையிலிருந்து வெளியேற்றச் சொல்லி ஒருதலைபட்சமாக ஆணையிட்டது தவறு என்று நீதிமன்றத்தில் முறையிட்டோம். கேட்டிலிருந்து 200 மீட்டர் தள்ளி போராட்டத்தை நடத்திக்கொள்ளுங்கள் என்றுதானே உத்தரவிட்டோம். வெளியேற்ற சொல்லவில்லையே என்று புது வியாக்யானம் கொடுத்தது நீதிமன்றம். இவ்வளவுக்குப் பிறகும், பேச்சுவார்த்தைக்கு உடன்பட மறுக்கிறது, யமஹா நிர்வாகம்.

கம்பெனியிலிருந்து பேருக்கு ஒருத்தர் மட்டும் வர்றாரு. அவரும், கம்பெனியில கேட்டு சொல்றேனு ஒரே பதிலைத்தான் சொல்றாரு. லேபர் ஆபிசிலிருந்து கம்பெனிக்கு போன் போட்டா போன எடுக்க மாட்டேங்குறாங்க. நாங்க என்ன சார் பன்னமுடியும்னு லேபர் ஆபிசரே கையை விரிக்கிறாரு. இந்த இலட்சணத்துலதான் இருக்கு” என்கிறார், சி.ஐ.டி.யு.வின் காஞ்சிபுரம் மாவட்ட செயலர் தோழர் முத்துக்குமார்.

”பரந்து விரிந்து கிடக்கும் சிப்காட் பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை வளைத்துப் போட்டு தொழில் செய்யும் யமஹா போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் தனி சாம்ராஜ்யமே நடத்தி வருகின்றன. இந்திய அரசின் சட்டங்களுக்கு நாங்கள் கட்டுப்படத்தேவையில்லை என்றுத் திமிராக நடந்து வருகின்றன. பண்ணையடிமைகளைவிட மிகக் கீழான நிலையில்தான் தங்கள் ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்களை நடத்திவருகின்றன. இத்தகையப் பன்னாட்டு நிறுவனங்களின் ஆண்டைத்தனத்திற்கு எதிரானப் போராட்டங்களுள் ஒன்றுதான் யமஹா தொழிலாளர்களின் போராட்டம்.” என்கிறார், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் காஞ்சிபுரம் மாவட்ட செயலர் தோழர் ஆ.கா.சிவா.

படிக்க:
சென்னை ஒரகடம் : கழிப்பறைக்கு ஸ்வைப் கார்டு போடும் அமெரிக்க சான்மினா
சென்னை திருப்பெரும்புதூர் : பு.ஜ.தொ.மு முற்றுகை

மேலும் ”இங்கு மட்டுமில்லை, சிறீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் சிறப்புப் பொருளாதார மண்டலங்களிலும், இருங்காட்டுக் கோட்டை, சிறீபெரும்புதூர் மாம்பாக்கம், மறைமலைநகர் போன்ற சிப்காட் வளாகங்களிலும் இதுதான் நிலைமை. 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வந்த தொழிலாளர்களை வீதியில் வீசியெறிந்துவிட்டு, அமெரிக்க நிறுவனமான ஹனிவெல் ஆலையை மூடிவிட்டது.

தோழர் ஆ.கா.சிவா, காஞ்சிபுரம் மாவட்ட செயலர், பு.ஜ.தொ.மு.

11 ஆண்டுகளாக இயங்கிவந்த தென்கொரிய நிறுவனமான டோங்சான் (DONGSAN) கடந்த மார்ச் முதல் ஆலையை மூடிவிட்டது. சட்டவிரோத ஆலை மூடலுக்கு எதிராக தொழிலாளர்கள் போட்ட வழக்கை பத்து மாதங்களுக்கும் மேலாக கிடப்பில் போட்டு வைத்திருக்கும் நீதிமன்றம் ஆலையிலுள்ள இயந்திரங்களை போலீசு பாதுகாப்போடு எடுத்து செல்ல உத்திரவிட்டிருக்கிறது. தனித்தனி ஆலையில் நடைபெறும் இத்தகையப் போராட்டங்களை ஒன்றிணைக்க வேண்டிய தேவை இன்று எழுந்திருக்கிறது. தனித்தனி ஆலைக்கு ஒரு சங்கம் அமைத்து போராட்டத்தைத் தொடர்வது என்பதைவிட, அந்தந்த சிப்காட் வளாகங்களுக்கென்று ஒருங்கிணைந்த ஒரு சங்கத்தை கட்டியமைக்க வேண்டியிருக்கிறது.” என்கிறார், அவர்.

தொழிற்பழகுநராக உள்ளே நுழையும் மாணவர்களையும் உற்பத்தியில் ஈடுபடுத்திக்கொள்ளலாம் என்கிறது மோடி கொண்டுவந்திருக்கும் NEEM திட்டம். காண்டிராக்டு முறையில் நேரடியாக ஆலை நிர்வாகமே தொழிலாளர்களை பணியிலமர்த்திக்கொள்ளலாம். இவர்களுக்கு சட்டப்படியான இ.எஸ்.ஐ., பி.எஃப்., மட்டுமல்ல விபத்துக்கான இழப்பீடுக்கூட கொடுக்கத் தேவையில்லை என்கிறது FTE திட்டம்.

மண்ணூர் சிப்காட்டில் உள்ள ஹுண்டாய் சப்ளையர் தென்கொரிய நிறுவனமான எம்.எஸ்.ஐ.யில் NEEM திட்டம் நான்கு மாதங்களுக்கு முன்பே அமலுக்கு வந்துவிட்டது. இதே சிப்காட்டில் அமைந்துள்ள என்பீல்டு ஆலையில் 1000 மாணவர்களை NEEM திட்டத்தின்கீழ் உள்ளே நுழைக்கும் முயற்சி நடந்துகொண்டிருக்கிறது. இதற்காக, புரோபசனரி காலம் முடிந்து பணிநிரந்தரத்திற்காகக் காத்திருக்கும் ஆயிரக்கணக்கானத் தொழிலாளர்களை ஆட்குறைப்பு என்ற பெயரில் வெளியேற்றும் தருணத்திற்காகக் காத்திருக்கிறது.

ஓட்டுக் கட்சி அரசியல் விவாதங்களிலேயே மலிவான பரபரப்பை உருவாக்கி காலம் தள்ளும் ஊடகங்களின் மத்தியில், பிக் பாஸில் ரித்விகா வென்றதையே உருகி உருகி பேசும் ’அறிஞர்கள்’ மத்தியில், புதிய பைக் வாங்குவதற்கு ‘ஆராய்ச்சி’ செய்து அப்பாக்களிடம் மல்லுக் கட்டும் இளைஞர்கள் காலத்தில், நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்ன?

யமஹா தொழிலாளிகள் போராட்டம் நடத்தும் களத்திற்கு செல்வோம்!
அங்கே நமது நுகர்பொருள் கலாச்சாரத்தின் நட்சத்திர பொருட்களை தயார் செய்யும் பன்னாட்டு நிறுவனங்களின் இன்னொரு முகத்தை அறிந்து கொள்வோம்.
யமஹா தொழிலாளிகளின் போராட்டத்தை ஆதரிப்போம்!

மலர்களே … மலர்களே … இது என்ன கனவா – ஒரு விவசாயி பாட முடியுமா ?

கோயம்பேடு : பூ விவசாயியின் வாழ்க்கையில் நறுமணம் வீசாத பூ சந்தை!

சென்னை கோயம்பேடு, வணிக உலகின் ஒரு சிறுநகரம். 295 ஏக்கரில் 2,800 காய்கறி கடைகள், 1,500 பழக்கடைகள், 446 பூக்கடைகள், சில்லரை வியாபரிகள் உள்ளிட்டு மொத்தம் 15 ஆயிரம் வணிகர்கள், ஐம்பதாயிரம் கூலித்தொழிலாளிகள் என்று அனைவரையும் உள்ளடக்கி சுழன்று கொண்டிருக்கிறது அந்த நகரம்.

சென்னை முழுவதும் வாழக்கூடிய சுமார் எண்பது லட்சம் மக்களின் அன்றாடத் தேவைகளை சில்லரை வியாபரிகள், அண்ணாச்சி கடைகள் மூலம் பூர்த்தி செய்வதற்காகவே இருபத்தி நான்கு மணி நேரமும் இயங்கிக்கொண்டிருக்கிறது.

கோயம்பேட்டின் மேற்கு பகுதி தொடங்கி கிழக்கு பகுதி வரை காய்கறிகள், பழங்கள், பூ மார்க்கெட் என தனிதனியாக பிரிக்கப்பட்டு பரபரப்பாக இயங்கி வருகின்றது. காய், பழங்களை ஒரு வாரம் வரை வைத்து விற்பனை செய்யலாம். ஆனால் பூ எப்படி சாத்தியமாகும்?  ஒருநாள் தாக்குப் பிடிப்பதே கடினம். அதிகபட்சம் இரண்டு நாள். அதற்குள் விற்றாக வேண்டும். இல்லையெனில் அடுத்த நாள் குப்பைக்குத்தான் செல்ல வேண்டும்.

அதனால்தான் என்னவோ, பூ மார்க்கெட்டில் உள்ளே நுழைந்ததும் நம்மிடம் விற்று விட துடிக்கிறார்கள் வியாபரிகள். ஆளுக்கொரு திசையில் இருந்து அழைக்கிறது பல குரல்கள். “வாங்கண்ணா..வாங்க.. இப்ப கட்ன மாலைதான்” என்று அவசரமாக அழைக்கும் சிறு வணிகர்கள் ஒருபக்கம்…

“வாங்கய்யா..வாங்க…மொழம் முப்பது ரூபா தான்” என்று கட்டி முடிக்கப்பட்ட பூக்களை கையில் வைத்துகொண்டு அழைக்கும் தாய்மார்களின் குரல்கள் மறுபக்கத்திலிருந்து நம்மை நோக்கி அழைக்கின்றன. அதிகாலை காற்றில் கலந்து வரும் மரிக்கொழுந்து, செண்டுப் பூக்களின் வாசத்தை விட இந்தக் குரல்களின் கவன ஈர்ப்பு அதிகம்.

சந்தையின் நீரூற்று ஒன்றின் அருகே நின்று பார்த்தால் பெண்கள் ஆங்காங்கே அமர்ந்து பூக்களை கட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு கூடையை கையில் வைத்துக் கொண்டு “இந்த பன்னீர்ரோஸ் எவ்ளோ, அரளி, சம்மங்கி எவ்ளோ” என்று விசாரித்துக் கொண்டே இருக்கிறார்கள் பூ வாங்க வந்த பெண்கள். அவர்களுக்கு பதிலளித்துகொண்டே எடைபேடும் தொழிலாளிகள்.

அதிகாலை 3 மணிக்கு திறக்கப்படும் பூ மார்க்கெட்டுக்கு தமிழகம் முழுவதும் இருந்து பூவை கொண்டு வரும் விவசாயிகள், விற்பனை செய்யும் கமிஷன் ஏஜெண்டுகள், பாதையோர பூ வியாபரிகள், நிமிரக்கூட நேரமின்றி பம்பரமாய் சுழலும் தொழிலாளிகள் என்று “கிளைகள் தெரியாத மரங்களாக” பூத்துக்கிடக்கின்றன இந்த பூ மார்க்கெட்.

அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த  “கட் பிளவர்ஸ்” (வெட்டு மலர்கள்) கடையை  அணுகியதும்.. “சார்.. இது வியாபார நேரம் கொஞ்ச நேரம் கழிச்சி வாங்களேன்..ப்ளீஸ்” என்று நம்மை நாகரீகமாக திருப்பியனுப்பினார்.

“கட் பிளவர்ஸ்” (வெட்டு மலர்கள்)

சற்று தொலைவில் மலைபோல் கொட்டிக்கிடந்த சாமந்திப் பூவின் அருகே அமர்ந்திருந்த பூ வியாபாரி பெருமாளிடம் பேசினோம். ஆர்வமாக பேசத்தொடங்கினார்.

“சென்னைக்கு 1989-ல வந்தேன். முப்பது வருஷம் ஆகப்போவுது.  இந்த தொழில்தான் எனக்கு சோறு போடுது..

பூ வியாபாரி பெருமாள்

பூ மார்க்கெட்ல மட்டும் ஆயிரத்துக்கும் மேல வியாபரிங்க இருக்காங்க. அதுல ஐநூரு வியாபரிங்களுக்கு மார்கெட்டுல கடை இருக்கு. ஒவ்வொரு கடையும் இருநூறு சதுர அடிக்கு கீழதான்.. ஆனா வாடகை நாற்பதாயிரத்துக்கு குறைவில்ல. அட்வான்ஸ் பல லட்சம்.

இதுல ஒரே கடைய இரண்டு பேரும் பங்கிட்டுக்குவோம். எவ்ளோ இட நெருக்கடியா இருந்தாலும் அதுக்குள்ளேதான் லோடு எல்லாத்தையும் எறக்கி வக்கனும். இல்லனா ரெய்டு வரும்போது புடிச்சிடுவாங்க” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே ரெய்டு வருவதாக வந்த செய்தியை கேட்டு மார்க்கெட்டே சிறிது நேரம் பரபரப்பானது. எல்லோரும் பூக்களை எடுத்துக் கொண்டு மறைவான இடத்தை நோக்கி ஓடினார்கள். அந்த பரபரப்பு ஓய்ந்த பின்பு…மீண்டும் தொடங்கினார்…பெருமாள்.

“தோ..இப்ப பார்த்திங்கள்ல.. இப்படித்தான் அப்பபப்ப நடக்கும்..”என்று சொல்லிவிட்டு…..  “இந்த மார்க்கெட்டுல செண்டு மல்லி, கொய்மலர் ரோஜா சாதா, இதர ரோஜா, மல்லி, முல்லை, ஜாதிப் பூ, அரளி, சம்மங்கி, பட்டுப் பூ, மேரி கோல்ட், துளசி, மருகு, மரிக்கொழுந்துன்னு எல்லாம் வருது. கட் ஃபிளவர்ஸ்னு சொல்லக்கூடிய அழகு பூக்களும் வருது. இது எல்லாத்துக்கும் ஒரு சீசன் இருக்கு.

தமிழ்நாடு மட்டுமில்ல ஆந்திரா, கர்நாடகான்னு அண்டை மாநிலத்துல இருந்தும் வரும். மார்க்கெட்ல இருக்க ஒவ்வொரு வியாபாரிக்கும் பூ வந்து கொடுக்கிற விவசாயிங்க முப்பதுல இருந்து ஐம்பது பேர்கள நிரந்தரமா வச்சிருப்போம். ஒவ்வொருத்தருக்கும் குறைந்தது ஐந்து லட்ச ரூபா அட்வான்ஸ் கொடுத்துட்டு அவங்க பூ மகசூலை வாங்கிக்குவோம். விளஞ்ச பிறகு லாரி, வேன், கவர்ன்மெண்ட் பஸ்ஸு மூலமா தினமும் மார்க்கெட்டுக்கு கொண்டுவந்திடுவாங்க. இது வருஷம் ஃபுல்லா நடக்கும்.

“ஆந்திரா கடப்பாவுல இருந்து சாமந்தி பூ மே மாசம் கடைசியில வரும். அது முடிஞ்சா ஒசூர், கிருஷ்ணகிரி ராயக்கோட்டையில இருந்து சாமந்தி செப்டம்பர், அக்டோபர், நவம்பர்னு மூணு மாசம் தொடர்ச்சியா வரும்.

மல்லிப்பூ பிப்ரவரியில இருந்து கெடக்க ஆரம்பிச்சிடும். அது ஒரு ஆறு மாசத்துக்கு தடையில்லாம வந்துகிட்டே இருக்கும். சம்பங்கி கடலூர், திண்டிவனம், திருவண்ணாமலையில இருந்து வரும். முல்லை, ஜாதிப்பூ வேலூர்ல இருந்து வந்திடும்.

திண்டுக்கல், மணப்பாறையிலருந்து கனகாம்பரம், அரளி. எப்ரல் மாசத்துல இருந்து ஒரு ஆறு மாசம் வரும். மரிக்கொழுந்து வருஷம் முழுக்க வரும். சமயத்துல ஆந்திராவுல இருந்தும் வரும். ஓசூர், கர்நாடகாவுல இருந்து ரோஜா வரும்”

பூ வகையில பல நூறு இருந்தாலும் வருஷம் பூரா வியாபாரம் ஆவுறது ஒரு பத்து பூ தான். அதுக்கான மார்க்கெட் வருஷம் முழுக்க இருக்கும். அது கூட குறைய இருக்கும்.

பண்டிகை காலம், விசேச நேரத்துல  கணிசமா வியாபரம் ஆகும்.  ஒரு கூடை சாமந்தி இருபத்தி ஐந்து கிலோ இருக்கும். அது நூத்தி ஐம்பது ரூபாவுக்கும் போகும். அதைத் தாண்டியும் விக்கும். சமயத்துல வெறும் நாற்பது ரூபாவுக்கும் போகும். மழை , வெய்யிலு பூ தரத்தை பாதிக்கும். மார்க்கெட் ரேட்டு அதுக்கேத்த மாதிரி மாறும். இப்படி ஏத்த எறக்கமா இருக்கதால லாப-நஷ்டத்தை கணக்கு பாக்குறதுல சிரமம் இருக்கும்.

நாங்க அட்வான்ஸ் கொடுக்கிறதால எங்ககிட்ட வந்து கொடுக்கிறாங்க. நாங்க அவங்களோட மகசூலை வித்து தந்தா நூத்தி ஐம்பது ரூபா கமிஷன். ஒரு கூடைக்கு போக்குவரத்து செலவு, நூத்தி ஐம்பதுல இருந்து இருநூறு ஆகும். தூக்கு கூலி முப்பது, கூடைக்கான காசு இருபது… இது எல்லாத்தையும் கழிச்சிக்குனு தான் விவசாயிங்களுக்கு நாங்க கணக்கு கொடுப்போம்.

இதுல பெட்ரோல் விலை ஏறுனா போக்குவரத்து செலவு இருநூத்தி ஐம்பதா மாறும். அது அந்த சம்சாரிங்க தலையில தான் விடியும். எங்களுக்கு அது பாதிப்பு இல்ல. அதால மார்க்கெட் கூடகுறைய ஆவுறதும் எங்களால கணிக்க முடியாது. மார்கெட்டும் நிரந்தரமா இருக்க மாதிரி தான் தெரியுது.

“இந்தமாதிரி பெட்ரோல்-டீசல் திடீர் விலை உயர்வால பாதிக்கிறது விவசாயிங்க மட்டும்தான். அவங்களுக்கு தான் எல்லா விலையேற்றமும் தலையில விழுது. அதனால கடனை அவங்க ஏத்திகிட்டே போவாங்க. மகசூல்லயும் அவங்க பணம் பார்க்க முடியாது. அவங்களுக்கு எப்பவும் விடிவே கிடையாது” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே பூ வாங்க வந்த பெண்மனி ஒருவர் குறுக்கிட அவரை கவனிக்க கடை ஊழியர் ஒருவரை நியமித்துவிட்டு தொடர்ந்தார். அவரிடம் கேட்டோம்.

பெட்ரோல்டீசல் விலையுயர்வு, மழையினால ஏற்படுற அழிவு இதெல்லாம் விவிசாயி தலையில விழுந்திடுதுஅதையும் மீறி ஒரு விவசாயியால லாபம் பார்க்க முடியுமா? சில பத்திரிக்கைகள் மகசூல் அமோகம்விவசாயிகள் இரட்டிப்பு மகிழ்ச்சின்னு எழுதுறாங்களேஅது?

சரிதான். வாழ்ந்தவங்களும் இருக்காங்க… அது ரொம்ப கம்மிதான். மழையின்னா அழிவு. வெய்யிலுன்னா விளைச்சல் அதிகம். அதேசமயம் வரத்து அதிகமாகும் போது விலை குறையத்தானே செய்யும். அட்வான்ஸ் பணம் பல லட்சம் வாங்கிப்பாங்க. அதுமட்டுமில்லாத இவங்களோட குடும்ப செலவு, காது குத்தி, கல்யாணம் எல்லாத்துக்கும் குறுக்குல ஏராளமா எங்க கிட்ட கடன் வாங்கிடுவாங்க.

மகசூல் தவறிட்டா கொடுத்த கடன் இரண்டு வருஷத்துக்கு மேலயும் இழுக்கும். இப்ப சமீபத்துல நெறைய விவசாயிங்க நொடிஞ்சி போயிட்டாங்க. பல பேர் கடனை கொடுக்க முடியாம வீடு வாசல் இழந்து காணாம போயிட்டாங்க… சிலபேர் தொழிலையே மாத்திக்கிறாங்க.

படிக்க :
♦ பூக்காரம்மா….!
♦ பூக்காயம்…

கம்பனி வேலைக்கு, வீட்டோட ஆடு மாடு வளக்கிறதுன்னு போயிடுறாங்க.… சிலபேர் எப்படி பொழக்கிறதுன்னு தெரியாம முழிக்கிறாங்க. நாங்களும் கொடுத்த கடன வாங்க முடியாமலே போயிடும். இதுதான் விவசாயிங்களோட நெலம..  இதுல பெட்ரோல்-டீசல் விலையேற்றம் எதுவானாலும் விவசாயிக்குதான் பெரிய பாதிப்பு” என்றார்.

மார்கெட்டுக்கு சாமந்திப் பூ கொண்டு வந்திருந்த கிருஷ்ணகிரி-ஓசூர் விவசாயிகள் ராமப்பா, பி.ஆர்.எஸ். செல்வம் சோகம் தட்டிய முகத்துடன் அமர்ந்திருந்தனர். அவர்களிடம் கேட்டபோது…..

கிருஷ்ணகிரி-ஓசூர் விவசாயிகள் ராமப்பா, பி.ஆர்.எஸ். செல்வம்

“நாங்க இன்னா சொல்லுறது… காலையில நாலு மணிக்கு வூட்டுல இருந்து கிளம்பினேன். தோ.. இன்னும் உக்காந்துனு இருக்கேன். இன்னிக்கு சாயங்காலம் முழுக்க இங்கயே தான் கெடக்கனும். இதெல்லாம் வித்தா தான் காசு கையில கெடக்கும். இதுதான் எங்க பொழப்பு…” என்று விரக்தியாவே பேசினார்கள்.

விவசாயி ராமப்பாவிற்கு ஐந்து ஏக்கர் நிலம். “அதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை” என்கிறார் அவர்.

“இப்ப இரண்டு ஏக்கர் மட்டும் தான் பயிரு வக்கிற மாதிரி இருக்குது. அதுவும் முழுசா  எந்த பயிரும் வக்க முடியாது. தானியம் எதுவும் வெளச்சல் இல்ல. பணப்பயிர் போட்டா எதாவது கிடைக்குமேன்னு பூ போடுறோம். எங்க ஊர் பக்கம் எல்லாம் பூமியில தண்ணியே இல்ல. மழையும் இல்ல. கிணறும் வறண்டு கிடக்கு… பிறகு எப்படி பயிர் வக்க முடியும்….

கடன வாங்கி ஆயிரம் அடி போர் போட்டாலும் தண்ணி கிடைக்கிறது இல்ல. அதுக்கு ஒன்னரை லட்சம் தண்டமா செலவு பன்றதா இருக்கு. எதையும் நம்ப முடியல. ஏதோ இத்தன நாள் கஷ்டப்பட்டு பசங்கள படிக்க வச்சேன். அவனுங்களுக்கும் வேலை கிடைக்காம வீட்டுலதான் இருக்காங்க. நிரந்தரமா ஒரு வருமானம் வரும்னு பார்த்தா ஒன்னும் இல்ல.

சரி வேற எங்கயாவது வேலைக்கு போகலாம்னாலும் ஒரு வேலையும் இல்ல. வாட்ச்மேன் வேலையத்த தவிர… இந்த காலத்துல படிச்சவங்களுக்கே நிரந்தமா வேலை இல்ல. எப்ப வேலைய விட்டு அனுப்புறானுங்கன்னே தெரியல. எப்படி வாழறது சொல்லுங்க…” என்று இறுகிய முகத்துடன் கேள்வியெழுப்புகிறார்.

“எல்லாம் விதியேன்னு நொந்து காலையில நானு லாரியில இந்த பூவ ஏத்திகிட்டு வண்டியிலயே வந்துட்டேன். இதை எல்லாம் பஸ்சுல போட்டு வந்தா கை செலவு கூட மிஞ்சாது. சாப்பட்டுக்கே இருநூறு ரூபா போயிடும்.  நாலு கூடை தான் வெளஞ்சது, ஒரு கூடை இருபத்தி அஞ்சி கிலோ வரும்.   120 ரூபா ரேட்டு போறதா சொன்னங்க.  இன்னும் ரெண்டு நாள் கழிச்சி கொண்டு வந்தா இந்த வெலயும் போகாது. இல்ல கூடவும் போவும்.

“எங்களுக்கு பக்கமா பெங்களுரு மார்கெட்டு இருக்கு.. அங்க போனா சுத்தமா அழிய வேண்டியதுதான். ஒரு நாளைக்கு ஒரு ரேட்டு போடுவான். அதை நம்பி கொண்டு போக முடியல.

அதே மாதிரி நம்ம பூவுன்னா மதிக்க மாட்றானுங்க. கர்நாடகா மண்ணுல வெளையிற பூ நல்லா இருக்கும். அருமையான மண்ணு. ரோஸ் நல்ல விளைச்சல்.  அதனால நம்ம பூவ மதிக்கிறதே இல்ல.

அதனால தான் எப்பேற்பட்டாவது இந்த மார்கெட்டுக்கு வந்துடுறேன்… இதுவும் இல்லனா என்னமாதிரி விவசாயிங்க எல்லாம் தூக்கு மாட்டிக்கினு தான் சாவனும்…” என்று சொல்லிவிட்டு மேற்கொண்டு பேச முடியாமல் முகத்தை திருப்பி கொண்டார் விவசாயி ராமப்பா.

பூ வியாபரத்தை “அழியும் பொருள்; அழியா தொழில்” என்பார்கள்… அது பொய்யாகும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது விவசாயிகளின் அழிவில்!

-வினவு புகைப்படச் செய்தியாளர்

சிவனடியார்கள் போர்வையில் பேராசிரியர் நல்லூர் சரவணன் மீது தாக்குதல் தொடுக்கும் இந்துத்துவம் !

1

சிவனடியார்கள் என்ற போர்வையில் சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் நல்லூர் சரவணன் மீது தொடர் தாக்குதல் தொடுக்கும் இந்துத்துவ – சாதிய கூட்டணியின் சதித் திட்டத்தை முறியடிப்போம்!

றிவார்ந்த தமிழ் சமூகமே!

தமிழகத்தின் அறிவுசார் புலத்தில் ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக பாரிய பங்களிப்பை செலுத்தி வரும் கல்விநிலையம் சென்னைப் பல்கலைக்கழகம். இதன் அறிவியல் பூர்வமான செயல்பாடுகளை ஒழித்துக்கட்டி, புராணக் கட்டுக் கதைகளை, மூடநம்பிக்கையை புகுத்த சிவனடியார்கள் என்ற போர்வையில் காவிக் கும்பல் உள்ளே நுழைய முயற்சித்துள்ளது. ஆனால் விரல்விட்டு எண்ணக்கூடிய மாணவர்களின் போர்க்குணமிக்க போராட்டத்தால் இம்முயற்சி தற்காலிகமாக முறியடிக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்கலை : இந்துத்துவ பாசிஸ்டுகளோடு APSC மாணவர்கள் நேருக்கு நேர் ! (கோப்புப்படம்)

சைவ சித்தாந்தப் பெருமன்றத்தால் வெளியிடப்பட்டமாணிக்கவாசகர் காலமும் கருத்தும்   என்ற நூலின் ஆசிரியர் பிரபலமான தொல்பொருள் ஆய்வாளர் ஆர். பத்மாவதி. இதன் பதிப்பாசிரியர் சென்னைப் பல்கலைக்கழக சைவ சித்தாந்த துறைத்தலைவரும் சைவ சித்தாந்தப் பெருமன்றத்தின் தலைவருமான பேராசிரியர் நல்லூர் சரவணன்.  இந்நூல் மாணிக்கவாசகர் குறித்தும் சைவப் பற்றாளரான பாண்டிய மன்னன் வரகுணபாண்டியன் மீதும் பார்ப்பனிய சக்திகள் பல நூற்றாண்டுகளாக சுமத்தி வந்த அவதூறைத் துடைக்கும் விதமாக ஆதாரபூர்வமான தகவல்களுடன் வெளியாகியிருக்கிறது.

சிவநெறியாளரான வரகுணபாண்டியன், அமைச்சரான மாணிக்கவாசகரிடம் குதிரை வாங்கக் கொடுத்த அரசு நிதியை கையாடல் செய்து சிவனுக்கு கோயில் கட்டியதாகவும், அப்படி கட்டியதற்காக சிவபக்தரான மன்னனே சிவனடியாரான மாணிக்கவாசகரை தண்டித்ததாகவும் திருவிளையாடல் கட்டுக்கதையும், ஸ்தலபுராணங்களும் அவதூறு செய்கிறது. இதற்கு நரி-பரி எனும் கட்டுக்கதையை பல நூற்றாண்டுகளாகப் பரப்பி வந்தனர். இதன் பின்னால் மாணிக்கவாசகர், பாண்டிய மன்னன் ஆகியோருக்கெதிரான பார்ப்பன சூழ்ச்சி ஒளிந்துள்ளது.  ஆனால் இந்தக் கட்டுக்கதை உருவான வரலாற்றுப் பின்னணியை கல்வெட்டு ஆதாரங்கள், பக்தி இலக்கிய காலப் பாடல்கள், கோயில் வரலாறு, பிற சைவர்களின் ஆய்வுகள் ஆகியவற்றின் துணைகொண்டு ஆய்வுசெய்து, அவை கூறும் உண்மை வேறாக உள்ளதை ஆதாரபூர்வமாக நிறுவி, சமயக்குரவர் மாணிக்க வாசகரையும் சிவ பக்தர் வரகுணபாண்டியனையும் வரலாற்றுப் பழியிலிருந்து விடுவித்துள்ளது இந்நூல்.

மேலும் திருவிளையாடல் புராணத்தில் வரும் நரி-பரி கதை என்பது கட்டுக்கதை என்றும் உண்மையில் சைவ சித்தாந்தில் நரி என்பது அந்த கால புறச்சமயங்களான லோகாயுதவாதம், சங்கரரின் மாயாவாதம் போன்றவற்றை பின்பற்றுபவர்களைக் குறிப்பதாகவும், பரி (குதிரை) என்பது சைவத்தைப் பின்பற்றுபவர்களைக் குறிப்பிடுவதையும் ஆதாரபூர்வமாக நிறுவியுள்ளார் ஆசிரியர்.  இங்கு தான் இந்துத்துவ சக்திகளுக்கு பிரச்சனை வருகிறது. ஆதிசங்கரரின் பார்ப்பனிய தத்துவமான மாயாவாதத்தை எதிர்த்தவர் சமயக் குரவர் மாணிக்க வாசகர் என்ற கருத்தை பார்ப்பனிய சக்திகளால் சீரணிக்க முடியவில்லை.

ஏற்கனவே, சைவத்தை பார்ப்பனிய நீக்கம் செய்து, தமிழ் மதம் தான் சைவம் என நிலைநாட்டுவதற்காக கடந்த பல பத்தாண்டுகளாக உழைத்து வருபவர் பேரா. நல்லூர் சரவணன். ”வரலாற்றை மறுத்து சைவ சித்தாந்தத்தை படிப்பது என்பது அறிவியல் அணுகுமுறைக்கு ஏற்புடையது அல்ல. இன்றைய தலைமுறை அறிவியலை புறம் தள்ளி வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் ஆய்வு செய்தால் தொடர்ந்து தத்துவம் என்பதை_’சடங்காகவே’ அமைத்து விடுவர்” என்பது பேரா. நல்லூர் சரவணனின் கொள்கை.

இதை சீரணிக்க முடியாத பார்ப்பனியக் கும்பலும் இடதுசாரி, முற்போக்கு, தலித் ஆதரவு போர்வையில் வலம் வரும் சிண்டிக்கேட் உறுப்பினராக இருக்கும் இன்னொரு துறைத்தலைவரும் இணைந்து பேரா. நல்லூர் சரவணனை துறைத்தலைவர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு சென்னைப் பல்கலைக்கழக சமஸ்கிருதத் துறையில் துணை பேராசிரியராக இருந்த எந்த தகுதியுமற்ற ஒருவரை சைவ சித்தாந்தத் துறையின் தலைவராக நியமித்தனர்.  இந்நியமனத்திற்கெதிராக, பேரா. நல்லூர் சரவணன் நீதிமன்றத்திற்கு சென்று மீண்டும் முறைப்படி துறைத் தலைவரானார்.  இதை சகித்துக் கொள்ள முடியாத அந்த துறைத்தலைவர் ஊடகங்களில் பணிபுரியும் தனது முன்னாள் மாணவர்கள் மூலம் பேரா. நல்லூர் சரவணனை அவதூறு செய்து பத்திரிகைகளில் செய்தி வெளியிட வைத்தார்.

மறைமலையடிகளால் நூறு ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட சைவசித்தாந்த பெருமன்றத்திலும், சென்னைப் பல்கலைக்கழக சைவ சித்தாந்தத் துறையிலும் இதுவரை அதிகாரம் படைத்த பதவிகளை குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்களே அனுபவித்து வந்தனர். இந்நிலையில் பிற சாதியை சேர்ந்த பார்ப்பனிய எதிர்ப்பு சிந்தனை கொண்ட சைவரான பேரா. நல்லூர் சரவணன் தலைவரானதை சகித்துக் கொள்ள முடியாமல் அவரை எப்படியாவது பதவிநீக்கம்  செய்யத் துடித்த சாதியாதிக்கக் கும்பல் கடைசியில் சரணடைந்த இடம் இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத்.  இதற்கு மூளையாக செயல்பட்டவர் தான் அந்த இன்னொரு துறைத்தலைவர் ஆவார். பேரா. சரவணனைப் பழிவாங்க அவர்களுக்கு கிடைத்த ஆயுதம் தான் ’மாணிக்க வாசகர் காலமும் கருத்தும்’ நூல்.

பேராசிரியர் நல்லூர் சரவணன்.

காக்காய் உட்கார பனம் பழம் விழுந்த கதையாக இந்த நூல் வெளியிடப்பட்டதும் தங்கள் சதித்திட்டங்களை நிறைவேற்ற இவர்களுக்கு தருணம் கிடைத்தது. கடந்த இரண்டு மாதங்களாக பேரா. சரவணனுக்கும், ஆர். பத்மாவதிக்கும் எதிராக காவிக் கும்பல் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது.  மயிலாடுதுறை காவல் நிலையத்தில் இருவர் மீதும் வழக்குத் தொடத்தும் அடங்காத இந்துத்துவக் காலிகள், கவர்னரிடம் பேரா. சரவணனை நீக்கக் கோரி மனு அளித்துள்ளனர்.  ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்கான கவர்னர், இந்த விவகாரம் குறித்து பேரா. சரவணனை விசாரித்து நடவடிக்கை எடுக்க பதிவாளரைப் பணித்துள்ளார். அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதனிடையேதான் சுயசாதி நலனுக்காக சற்றும் கூச்சமின்றி பார்ப்பனிய-இந்துத்துவ சக்திகளோடு திரை மறைவுப் பேரங்களை நடத்தி இந்துத்துவ சக்திகள் பல்கலைக்கழக வளாகத்துள் நுழைந்து அதன் மாண்பை சீர்குலைக்க ஒத்தாசை செய்துக் கொடுத்துள்ளார் அந்த இன்னொரு துறைத்தலைவர். சிண்டிக்கேட் மீட்டிங் நடக்கும் நாளில் சிவனடியார்கள் என்ற போர்வையில் பல்கலைக்கழகத்திற்குள் நூற்றுக்கும் மேற்பட்ட இந்துத்துவக் காலிகள் சங்கு ஊதிக் கொண்டே சிண்டிக்கேட் மீட்டிங்கில் இருந்த துணை வேந்தரிடம் பேரா. சரவணனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நுழைய முயன்றதைதான் கிட்டத்தட்ட 5 மணி நேரம் வெறும் 15 மாணவர்கள் தைரியமாக தடுத்து நிறுத்தியுள்ளனர்.  சிண்டிக்கேட் உறுப்பினரான அந்த துறைத்தலைவர் அன்றி யார் மீட்டிங் நடக்கும் தகவலை காவிக் கும்பல்களுக்கு தெரிவித்திருக்க முடியும்?  ஒரு பேராசிரியர் ஒரு நூலைப் பதிப்பித்ததற்காக பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்து இவ்வளவு அக்கிரமங்களை செய்யத் துணிகிறார்கள் என்றால் இதற்கு ஒத்தாசை செய்தவர்கள் கொடுத்த தைரியம் தான் காரணம்.

படிக்க:
♦ சென்னை பல்கலை : இந்துத்துவ பாசிஸ்டுகளோடு APSC மாணவர்கள் நேருக்கு நேர் !
♦ காஞ்சி மடத்தின் வரலாறு : பொய்யிலே பிறந்தது

சுய சாதி நலன்களைப் பேணும் இது போன்ற பேராசிரியர்கள் தான் இன்று மாநிலப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் பெரும்பாலானவற்றின் சாபம்.  இம்மாதியானவர்களின் சாதி சார்பு சிந்தனையும் ஒருங்கிணைவும் முற்போக்கு சிந்தனை கொண்ட மாணவர்கள், பிற சாதி மாணவர்கள் ஆகியோரை பழிவாங்கவும், நிர்வாகத்தில் இலாபி செய்வது, ’பெட்டி பாலிட்டிக்ஸ்’ செய்வது  போன்றவற்றால் பிற ஆசிரியர்களை ஓரங்கட்டி நமைச்சல் கொடுக்கவும் உபயோகப்படுத்துகின்றனர். இதன் நீட்சி தான் இன்று அந்த துறைத்தலைவரை இந்துத்துவக் கும்பலுடன் கைகோர்க்க செய்துள்ளது. சுயசாதி நலன்களுக்கான இந்த பெட்டி பாலிட்டிக்ஸ், உள்ளிருந்தே கொல்லும் வியாதி. இதை உடனடியாக வேரறுக்கவில்லையென்றால் ஒட்டு மொத்த அறிவுத்துறையையும் அழுகச் செய்யும் வல்லமை கொண்டது.

தொல்பொருள் ஆய்வாளர் ஆர். பத்மாவதி

மாணிக்கவாசகர் காலமும் கருத்தும் என்ற நூல் தொல்பொருள் ஆய்வில் புலமை பெற்ற ஆர். பத்மாவதியால் ஆதாரபூர்வமாக நிறுவப்பட்ட தரவுகளைக் கொண்ட ஆய்வுநூல். அது பார்ப்பனிய சக்திகளை பயமுறுத்துகிறது. வரலாற்றை புராணக் கட்டுக்கதைகள், மூடநம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதத்துடிப்பவர்கள் இவர்கள். எனவே அந்நூல் வெளிவரக் காரணமாக இருந்த பேரா. சரவணனை வேட்டையாடுகிறார்கள்.

இன்று அவர்கள் வென்றால் நாளைக்கு ஒவ்வொரு ஆய்வாளர்களின் ஆய்வும் இந்த சக்திகளின் தணிக்கைக்கு உட்படுத்தப் பட்ட பின்னர் தான் வெளியிடப்பட வேண்டும் என்ற நிலை ஏற்படும். சுதந்திரமான அறிவியல் பூர்வமான ஆய்வு இல்லாமல் ஒழிக்கப்படும் ஆபத்து நூற்றுக்கணக்கில் நம் வாசற்படியில் சங்கு ஊதிக் கொண்டு நிற்கிறது. அதைத் தடுத்து நிறுத்திய அந்த பதினைந்து மாணவர்களுடன் ஒட்டு மொத்த தமிழ் சமூகமும் கை கோர்த்தால் மட்டுமே இதை முறியடிக்க முடியும். இல்லையென்றால் தமிழ் மண்ணிலும் கவுரி லங்கேஷ், கல்புர்கி, பன்சாரேக்களின் இரத்தம் சிந்தப்படும்.

தமிழக அரசே! காவல் துறையே!

• சைவ சித்தாந்த துறைத்தலைவர் பேரா. நல்லூர் சரவணன் மீது சிவனடியார்கள் என்ற போர்வையில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி, மிரட்டும் காவிக் கும்பலை கைது செய்!

• அறிவியலுக்கு புறம்பாக மூட நம்பிக்கையை பரப்புரை செய்ய பேராசிரியர்களையும் துணைவேந்தரையும் பல்கலைக்கழகங்களுக்குள் நுழைந்து மிரட்டும் இந்து மக்கள் கட்சியை தடை செய்!

பல்கலைக்கழக நிர்வாகமே!

• சுயசாதியினரின் பதவி நலன்களுக்காக அதிகார துஷ்பிரயோகம் செய்து பல்கலைக்கழகத்திற்குள் சீர்குலைவை ஏற்படுத்த விழையும் பேராசிரியர்களை அடையாளம் கண்டு வேரறு! அவர்களின் பதவிகளை பறித்திடு!

• இந்துத்துவ-சாதிய சக்திகளின் தலையீடின்றி அறிவியல் பூர்வமான ஆய்வுகளை மேற்கொள்ளும் பேராசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் உரிய பாதுகாப்பை வழங்கு! அவர்களின் ஆய்வுகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்கு!

• பேராசிரியர்களின் ஆய்வு சுதந்திரத்திற்குள் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரக் கவர்னரின் தலையீட்டை அனுமதியாதே!

பேராசிரியர்களே! மாணவர்களே!

•  இந்துத்துவ – சாதிய கூட்டணியின் ஜனநாயகவிரோத அறிவியல்-விரோத நடவடிக்கைகளை முறியடிக்க பேரா. நல்லூர் சரவணனுக்கு ஆதரவாக அணிதிரள்வீர்!

• சுயசாதி பதவி நலனுக்காக மதவாதிகளுடன் திரைமறைவுப் பேரம் நடத்தி பல்கலைக்கழகத்தின் மாண்பைக் குலைக்கும் ‘பெட்டி பாலிட்டிக்ஸ் பேராசிரியர்களை’ இனங்கண்டு தனிமைப்படுத்துவோம்!


தமிழ்நாடு.
நெ.7, மாதா கோவில் தெரு, நொளம்பூர், சென்னை – 95, 9445112675

இந்திய ஆங்கிலேயர்கள் : இந்தியாவில் வளரும் புதிய சாதி !

ந்தியாவில் பிறந்து, ஆங்கிலத்திலேயே பேசும், ஆங்கிலத்திலேயே சிந்திக்கும் ஒரு பிரிவினரைப் பற்றி Scroll.in தளத்தில் வெளியான கட்டுரையின் மொழிபெயர்ப்பு.  இந்தக் கட்டுரையாளர் அவர்களை இந்திய ஆங்கிலேயர்கள் (ஆங்கிலோ இந்தியர்களைப் போன்று) என்று அழைக்கிறார்.

கட்டுரையாளர் சொல்வது போல மேட்டுக்குடி சாதியான இந்தப் பிரிவு குடும்பங்களின் எண்ணிக்கை 4 லட்சம்  என்று எடுத்துக் கொண்டால் இந்தியாவின் 26 கோடி குடும்பங்களில் இவர்கள் 0.15% மட்டுமே உள்ளனர்.

இவர்கள் அதிகாரவர்க்க மேட்டுக்குடி (ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், வெளியுறவுத் துறை அதிகாரிகள், நீதிபதிகள்) அல்லது வெளிநாட்டு இந்தியர் அல்லது மேட்டுக்குடி மருத்துவர், வழக்கறிஞர் குடும்பங்களிலிருந்து தோன்றுகின்றனர். பிற பிரிவினரும் தங்களது குழந்தைகளை இந்த அந்தஸ்துக்கு வளர்ப்பதை ஒரு கனவாக கொண்டிருக்கின்றனர்

இந்தப் பிரிவினர் அதிகார வர்க்கத்தில் இணைந்து சேவை செய்ய பயிற்றுவிக்கப்படுகின்றனர் (சர்வதேச பள்ளி, வெளிநாட்டு கல்லூரிகளில் படிப்பு) – ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியம் போல வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் ஏகாதிபத்திய நிறுவனங்களிலும், அரசு பதவிகளிலும் வேலை செய்யத் தயாரிக்கப்படுகின்றனர். அல்லது கார்ப்பரேட் நிறுவனங்களில், நிதி நிறுவனங்களில் பந்தய மூலதனத்துக்கு பணிவிடை செய்கின்றனர்.

ஊழல், சுரண்டல், கொள்ளை என்ற சுவடே தெரியாமல் தெளிவான முகத்துடன், வசதியான பங்களாக்களில், சொகுசு கார்களில் வாழ்வதை கனவாக வைத்து அதை அடைகின்றனர்.

சசிதாரூர் போன்ற ஒரு சிலர் கட்சிகளில் சேர்ந்து தலைவர்கள் ஆகின்றனர். இன்னும் கணிசமான பிரிவினர், தமக்குக் கிடைத்த கல்வி அறிவு மூலம் இந்திய சமூகத்தின் உண்மையான பிரச்சனைகளை புரிந்து கொண்டு அவற்றுக்கு எதிராக போராடுவதற்காக தம்மை புரட்சிகர அணிகளில் இணைத்துக் கொள்கின்றனர். சமூக, அரசியல் விடுதலைக்காக போராடுகின்றனர்.

*****

இந்திய ஆங்கிலேயர்கள் : இந்தியாவின் புத்தம் புதிய வேகமாக வளரும் சாதி – சஜித் பய்

ந்தியாவில் ஒரு செல்வாக்கு மிகுந்த மக்கள் தொகை மற்றும் உளவியல் பிரிவு உருவாகி வருகிறது. அது செல்வம் படைத்ததாகவும், நகர்ப்புறத்தைச் சார்ந்ததாகவும், உயர்கல்வி கற்றதாகவும் உள்ளது.

2012 – 2013-ம் ஆண்டிலிருந்து என்னுடை மகள்கள் எங்கள் தாய்மொழியான கொங்கணியில் பேசுவதை நிறுத்தி விட்டார்கள். அவள் ஆங்கிலத்தில் அதிகமாக பேச ஆரம்பித்ததற்கு மும்பையில் இருக்கும் அவளது பள்ளியில் ஆசிரியை வீட்டில் ஆங்கிலத்தில் பேசும்படி ஊக்குவித்ததோ, அல்லது வேறு ஏதோ தூண்டுதலாகவும் இருக்கலாம். இதில் கவலையளிக்கும் விஷயம் என்னவெனில், எங்கள் வீட்டை ஆங்கிலம் ஆக்கிரமித்துக் கொண்டு விட்டது. இப்போது, நாங்கள் அரிதாகவே கொங்கணியில் பேசிக் கொள்கிறோம்.

நாங்கள் விதிவிலக்கானவர்களல்ல. எங்களைப் போன்று வசதி படைத்த, நகர்ப்புற இந்தியாவின் மேட்டுக்குடி குடியிருப்புகளில் வாழும் பல குடும்பங்களில், தாய்மொழி அல்லாமல், ஆங்கிலமே பிரதான பேச்சு மொழியாக இருக்கிறது. அவர்களுக்கு, தாய்மொழியில் பேசுவதைக் காட்டிலும், ஆங்கிலம் மிகச் சரளமாக வருகிறது.

சிக்கலான எண்ணங்களைக் கூட ஆங்கிலத்தில் வெளிப்படுத்துவது சுலபமாக உள்ளது. நகர்ப்புறத்தில் வாழும், அதிகம் படித்த, பெரும்பாலும் சாதி, மத வேறுபாடுகளை பொருட்படுத்தாமல் திருமணம் செய்து கொண்டவர்களின் குடும்பங்கள் இந்த வகையில் வருகின்றன. இவர்களை இந்திய ஆங்கிலேயர்கள் என்று அழைக்கலாம்.

நமக்கு பரவலாக தெரியும் பழைய வகை ஆங்கிலோ இந்தியர்கள் ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொண்டவர்கள், பெரும்பாலும் கிறித்துவ மதத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், இந்த புதிய இந்திய ஆங்கிலேயர்களில் இந்துக்கள் பெரும்பான்மையாக, பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்களும் உள்ளனர். இவர்கள், மும்பை, தில்லி, சென்னை, பூனே, ஹைதராபாத், கொல்கத்தா போன்ற பெரு நகரங்களிலும், சிறிய அளவுகளில் மலைப் பிரதேச நகரங்களிலும், கோவாவிலும் வசிக்கின்றனர்.

குர்கான், தெற்கு டெல்லியின் சில பகுதிகள், தெற்கு மும்பை, பாந்த்ரா முதல் அந்தேரி வரையிலான புறநகர் பகுதிகள், பெங்களூருவின் இந்திரா நகர், கோரமங்கலா, புறவழிச் சாலையின் வேலியிடப்பட்ட குடியிருப்புகள் ஆகியவற்றில் இவர்கள் அதிகமாக காணப்படுவார்கள்.

பொருளாதார ரீதியாக மேல்தட்டு 1%-ஐ சேர்ந்த இவர்கள் மேற்கத்திய நடுத்தர வர்க்கத்தைப் போல் செலவு செய்ய வல்லவர்கள். தங்களது பிள்ளைகளை ஆர்யன், கபீர், கைரா, ஷானயா, தியா என்ற சர்வதேசிய யோகா பெயர்களைக் கொண்ட சர்வதேசப் பள்ளிகளில் படிக்க வைக்கிறார்கள்.

ஒட்டு மொத்த மக்கள் தொகையில், தோராயமாக, 4 லட்சம் இந்திய ஆங்கிலேயர் குடும்பங்கள் இருப்பதாக நான் மதிப்பிடுகிறேன். துல்லியமான புள்ளிவிவரங்கள் கிடைக்கா விட்டாலும், 2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கீட்டின் படி 2.26 லட்சம் குடும்பங்கள் மட்டுமே ஆங்கிலத்தை தங்கள் பேச்சு மொழியாகக் கொண்டுள்ளன.

கடந்த பத்து ஆண்டுகளில் தோன்றிய இந்த வர்க்கம், அடுத்து வரும் 5 முதல் 7 ஆண்டுகளில், எண்ணிக்கையில் இரு மடங்காக உயரும். இதன் விளைவாக ஆங்கிலக் கல்விக்கான தேவை அதிகரித்து, மேற்கத்திய நாகரிகமும், கலாச்சாரமும் வளரும், [மொழிபெயர்ப்பாளர் குறிப்பு : இப்படி இந்துக்களே பெரும்பான்மையாக இருக்கும் இந்த வர்க்கம் அதிகரித்தால், கலாச்சாரக் காவலர்களான சங்கிகள் என்ன செய்வார்கள்!!!] சாதி கடந்த கலப்புத் திருமணங்கள் அதிகரிக்கும்.

இந்திய ஆங்கிலேயர் குடும்பங்களின் வளர்ச்சி, நம் சமூகத்தின் மீதும், தொழில்/ நிர்வாகம் மீதும் பாரிய விளைவுகளை உண்டாக்கும்.

சமூக ரீதியில், நடக்கும் கலப்புத் திருமணங்கள், இரு உயர்சாதி குடும்பங்கங்களுக்கு இடையிலானதாக அமையலாம். அல்லது வரலாற்று ரீதியில், கீழ் சாதியாக இருப்பினும், ஆதிக்க சாதியினராக இருப்பினும், அங்கும் இந்தக் கலப்பு நடக்கும். அந்தப் புது வர்க்கத்துக்குள் சேர்ந்து கொண்டதும் இவர்களது சாதிய அடையாளம் மாறிவிடுகிறது. எவ்வித சாதி, மத சடங்குகளையும் பின்பற்றாமல் சாதி அடையாளங்களை துறந்து இச்சமூகம் வாழ்கிறது.

இப்பிரிவினரில் சைவப் பழக்கமுள்ளவர்கள், தங்களது இணையின், அசைவப் பழக்கத்தை அங்கீகரிக்கிறார்கள். பொதுவாக, இக்குடும்பங்களில், சைவ உணவு பழக்கம் ஒரு அறமாக பின்பற்றப்படுகிறது, அதற்கு எந்த மத அடையாளமும் அவர்கள் கற்பித்துக்கொள்வதில்லை. சாதிய அடையாளங்களைத் துறந்து வாழும் இவர்களுக்கு, அவர்களது மந்தையில் ஒரு புது ஆட்டை சேர்த்துக்கொள்வதற்கு ஆங்கிலப் புலமை மட்டுமே காரணியாக விளங்குகிறது. மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள், போதுமான ஆங்கில அறிவும், மேற்கத்திய கலாச்சாரம் பற்றியும் அறிந்திருந்தால் இவர்களோடு ஐக்கியப்பட்டு விடலாம். ஏனெனில், இந்த புதிய சாதிப் பிரிவு பிறப்பின் அடிப்படையில் மனிதர்களைப் பிரிப்பதில்லை.

இந்த வகுப்பினர், பாரம்பரிய முறைகளையோ, மத விழுமியங்களையோ கடைபிடிப்பதில்லை. அவர்களது ஆன்மீகத் தேடலுக்கு, ஸ்ரீ ஸ்ரீ ரவி ஷங்கர், ஜக்கி வாசுதேவ் போன்றோரை நாடிப் போகின்றனர். இந்தப் பிரிவினர் அதிகரிக்க அதிகரிக்க, இவர்களை போன்ற சாமியார்களும் அதிகரிக்கும் அவசியம் தோன்றும். இவர்கள் இந்து குருக்களிடம் மட்டும் அடைக்கலம் தேடுவதில்லை, சோகா கக்காய் போன்ற பிற மத குருக்களையும் பின்பற்றுகிறார்கள்.

இந்த இன மக்கள் வளர்ச்சியின் கூடவே, பல்வேறு வணிகங்களும் வளர்கின்றன. குறிப்பாக ஊடகம் மற்றும் கல்வித்துறை வளர்ந்து இவர்களது வருமானத்தை சுருட்டிக்கொள்கிறது. கடந்த 10 ஆண்டுகளில், இந்த இன மக்களுக்காகவே பிரத்யேகமான கல்விமுறைகள் உருவாக்கப்பட்டன. 90களில் இது போன்ற பள்ளிகள் தொடங்கப்பட்டு மிகுந்த வரவேற்பைப் பெற்றன. கடந்த தலைமுறை பெற்றோர்கள் முண்டியடித்து முன்னேறிய நிலையை போலன்றி, இந்தத் தலைமுறை பிள்ளைகள் மிகவும் சாதுவான, பன்முகத் திறமைகள் வாய்க்கப்பெற்ற பிள்ளைகளாக உருவாக்கப்பட்டனர். கல்லூரிப் படிப்புக்கு வெளிநாடு சென்று விடுவதற்கு இது போதுமானதாக இருந்தது.

பட்டப்படிப்புக்கு இந்தியாவில் தங்கி விடுவோர், அதிகம் போட்டியில்லாத, நேஷனல் சட்டக் கல்லூரி, சிருஷ்டி டிசைன் இன்ஸ்டிட்யூட், சிம்பயாஸிஸ் சர்வதேச கல்லூரி, மணிபால் பல்கலைக் கழகம் போன்ற கல்வி நிறுவனங்களில் சேர்கின்றனர். காலப் போக்கில் இங்கும் போட்டி அதிகரித்தவுடன், ஷிவ் நாடார், ஓபி ஜிண்டால், பி.எம்.எல், முஞ்சல் போன்ற கார்ப்பரேட்டுகள் தொடங்கி நடத்தும் கல்வி நிறுவனங்கள் பிரபலமாகின. கடுமையான போட்டி நிலவும் நுழைவுத் தேர்வுகள் ஏதுமின்றி, சர்வதேச முறைகளைக் கொண்டு மதிப்பீடு செய்து இடம் வழங்கப்படுகிறது. போட்டிகள் அதிகமற்ற, முழுமையான, ஆளுமைகளாக உருவாக இந்த வகை கல்விமுறை உதவுகிறது.

கல்வி, ஊடகம் ஆகிய துறைகளைப் போல், இயற்கை/ ஆரோக்கிய உணவு வகைகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் போன்ற பிற வணிகங்கள் இந்த இன மக்களைக் குறி வைக்கின்றன. ஆனால், 25 லட்சம் முதல் 30 லட்சம் பேர் கொண்ட இந்த பிரிவினரைக் குறி வைத்து துவங்கி நடத்தப்படும் தொழில்கள், ஒரு குறிப்பிட்ட அளவிற்குப் பிறகு தேங்கி விடுகின்றன.

தங்களை ஒத்த பிற நடுத்தர மக்களைக் காட்டிலும் கூடுதல் விலை கொடுத்து இப்பொருட்களை வாங்குவது ஒரு அந்தஸ்தைத் தருவதாக இவர்களால் பார்க்கப்படுகிறது. இந்தப் பொருட்களைப் பயன்படுத்துவது தங்களுக்குப் பிரத்யேக அடையாளத்தைத் தருவதாகக் கருதிக்கொள்கின்றனர்.

தேர்தல் அரசியல், அரசின் கொள்கை முடிவுகள் ஆகியவற்றின் மீது ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு இந்தப் பிரிவினர் இன்னும் வளரவில்லை. சட்ட அணுகுமுறை, என்.ஜி.ஓ பாணி போராட்டத்தில் ஈடுபடுவது, ஊடக கவனத்தை ஈர்ப்பது போன்ற செயல்கள் தான் இவர்கள் தேர்வு செய்யும் பாதை.

தேர்தல அரசியலில் பங்கெடுக்காவிட்டாலும், இவர்கள் ஐ.ஏ.எஸ் ஆகவும், பிற அதிகார வர்க்கங்களிலும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். நிதி ஆயோக், அடல் இன்னோவேஷன் மிஷன் போன்ற நிறுவனங்களில் உட்புகுந்து ஆதிக்கம் செய்கின்றனர்.

வெளி மாநிலத்தில் வசிக்கும் இவ்வின மக்கள், கோவாவில் முதலீடு செய்து வீடு வாங்குகின்றனர். அங்கு நிலவும் மேற்கத்திய கலாச்சாரம், உணவு விடுதிகள், கடற்கரை, அவ்வின மக்கள் அதிகம் வசிப்பது ஆகிய காரணங்கள், இவர்களை கோவாவை நோக்கி இட்டுச் செல்கின்றன. பணி ஓய்வுக்குப் பிறகு கோவாவில் குடியேறுவதும் அதிகரித்துள்ளது. அடுத்தபடியாக, மேகாலயாவிலும் இந்த இன மக்கள் குடியேற்றம் நடக்கிறது. எனினும், இப்பகுதி, நகர்ப்புறத்திலிருந்து வெகு தொலைவில் இருப்பதால், உயர்குடி இந்திய ஆங்கிலேயர்கள் இங்கு சென்று குடியேறுவது அரிது.

குர்கான், மும்பையின் சில பகுதிகள், பெங்களூரின் சில பகுதிகளில் வசிக்கும் இவர்கள், தேர்தல் அரசியலில் பெரும் பங்கு ஆற்றாவிட்டாலும், கொள்கை முடிவுகளை எடுக்கும் இடத்தில் ஆக்கிரமித்திருப்பதால், தேர்தல் அரசியலில் பங்கெடுக்காமல் இருப்பது பற்றி இவர்கள் அதிகம் கவலை கொள்வதில்லை.

எண்ணிக்கையில் அதிகம் இல்லாத இந்த இன மக்கள், மிகவும் பிரபலமானவர்களாக இருப்பது ஒரு முரண். இருப்பினும் இவர்களது எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து, இவர்கள் ஒரு தனிப்பெரும் வர்க்கமாக, சாதியாக உருவாகி, தங்களுக்கென பிரத்யேகத் தேவைகள், நடத்தை, கவலைகள், விருப்பங்களைக் கொண்டுள்ளனர்.

இவர்கள் தங்களை ஒரு தனி சாதியாக அடையாளப் படுத்திக் கொள்ளாவிடினும், அவர்களுக்குள் மட்டும் திருமணங்கள் செய்து கொள்வது, ஆங்கிலம் பேசும் திறனையும், மற்ற இந்திய ஆங்கிலேய ஆங்லியன் மக்களுடன் பழக முடிவதையும் நிபந்தனையாக கொண்டுள்ளது.

இவை நால்வர்ண சாதியினருக்கு அதிகம் வாய்க்கப் பெற்றிருந்தாலும், வரலாற்று ரீதியாக, கீழ் சாதியாகக் கருதப்பட்டோரும், கலப்பு மணங்களின் மூலம், தங்களது சாதி அடையாளங்களிலிருந்து, இந்த புதிய அடையாளத்தை வரித்துக் கொண்டு “நம்மில்” ஒருவராக அவர்களால் ஆக முடிகிறது.

இந்த இனம் எண்ணிக்கையில் அதிகரித்து, பரிணமித்து, இந்த இந்தியக் குடியரசை எவ்வாறு மாற்றியமைக்கப் போகிறது என்பது மிகுந்த ஆவலுக்குரிய நிகழ்வாக உள்ளது!

தமிழாக்கம் : பிரியா
மூலக்கட்டுரை Indo-Anglians: The newest and fastest-growing caste in India
நன்றி : new-democrats

மாணவர்கள் இளைஞர்களிடம் பகத்சிங் 111-வது பிறந்தநாள் விழா !

1
  • ” மாணவர்கள் – இளைஞர்களை சீரழிக்கும் குட்கா போதைக் கலாச்சாரத்தை துடைத்தெறிவோம்.
  • விவசாயம், கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பை ஒழித்து நாட்டையே கார்ப்பரேட்டுகளுக்கு அடிமையாக்கும் மோடி அரசின் அநீதிக்கெதிராக பகத்சிங் வழியில் மாணவர் சங்கமாக ஒன்றிணைவோம் ! ”

என்ற உறுதியேற்பு நிகழ்வாக, ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி தோழர் பகத்சிங் பிறந்தநாளை கடைபிடித்தனர், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியினர்.

* சென்னையில் மதுரவாயல் ரேஷன் கடை பேருந்து நிறுத்தம் அருகில் 29.9.2018  அன்று காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்நிகழ்வில், இசை சமர் பறை இசைக்குழுவின் தப்பாட்டம் நிகழ்த்தப்பட்டது. மதுரவாயல் பிள்ளையார் கோவில் பகுதி செயலாளர் தோழர் செந்தில் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை மாநகர செயலாளர் தோழர் சாரதி கொடியேற்றி, உரையாற்றினார். இறுதியில் இனிப்பு வழங்கினர்.

இதனைத்தொடர்ந்து, அன்று மாலை மதுரவாயல் இ.பி. அலுவலகம் அருகில் தெருமுனைக்கூட்டம் 6.30 மணியளவில் இசை சமர் பறை இசைக்குழுவின் தப்பாட்டத்துடன் தொடங்கியது. போதையில் கலாச்சாரத்தில் சீரழிக்கப்படும் இளம் தலைமுறை என்ற தலைப்பில் நாடகம் நடத்தப்பட்டது. ம.க.இ.க பாடல்களைத் தோழர்கள் பாடினர். இக்கூட்டத்தில் பகுதி மக்கள் பலரும் கலந்துக்கொண்டனர்.

* சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடலூர் மாவட்ட பு.மா.இ.மு. சார்பாக ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி பகத்சிங்கின் 111-வது பிறந்தநாளை முன்னிட்டு மாணவ மாணவிகளிடம் பகத்சிங்கை பற்றியும், அவருடைய தியாகத்தை பற்றியும் மாணவர்களிடம் எடுத்துரைத்தனர்.

* விருத்தாசலம் பகுதி, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் சார்பில், விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி மணவர்கள் மத்தியில் பகத்சிங் படத்தை ஏந்தி, அவர் வழியில் பயணிக்க உறுதியேற்று பிறந்த நாள் விழாவைக் கொண்டாடினர்.

* குடந்தையில், தோழர் பகத்சிங் பிறந்தநாளை முன்னிட்டு, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் சார்பில், குடந்தை அரசினர் கலை கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கும் இனிப்பு வழங்கி பகத்சிங் பிறந்தநாளைக் கொண்டாடினர். பகத்சிங்கின் தியாகத்தையும், விடுதலைப் போராட்டத்தில் அவரது பங்களிப்பையும் கூறி, இன்றைய சூழலில் நமக்கு ஏன் பகத்சிங் தேவைப்படுகிறார் என்பதை மாணவர்களிடையே விளக்கி உரையாற்றினர்.

படிக்க:
♦ ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நினைவை நெஞ்சில் ஏந்துவோம் !
பகத்சிங் – புதிய சிந்தனையின் பிறப்பு

தகவல்:

தமிழ்நாடு.

மோடியின் ‘துல்லியத் தாக்குதல்’ தினக் கண்காட்சி | கேலிச்சித்திரம்

செய்தி: துல்லியத் தாக்குதல் நினைவு தினம்: ஜோத்பூரில் இராணுவ கண்காட்சியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. உண்மையில் அந்தக் கண்காட்சியில் இடம்பெற வேண்டிய காட்சிகள் எவை?

மோடியின் ‘துல்லியத் தாக்குதல்’ தினக் கண்காட்சி

கருத்துப்படம்: வேலன்

படிக்க:
♦  தேசிய கீதம் போட்டாச்சு எழுந்து நில்லுடா ! – ம.க.இ.க. புதிய பாடல் !
♦  பெண் கல்வி : பாகிஸ்தான் மாதாவிடம் தோற்ற பாரத மாதா !

இணையுங்கள்:

ஆந்திராவுக்குப் போன கார்ப்பரேட் முதலாளிகள் : காரணமென்ன ?

ஆந்திராவுக்குப் போன கார்ப்பரேட் முதலாளிகள் : காரணமென்ன? – அ.தி.மு.க-வின் ஊழலா, முதலாளிகளின் இலாபவெறியா?

மிழகத்திற்கு புதிதாக முதலீடு செய்ய வந்த கார்ப்பரேட்டுகள், தமிழகத்தின் கமிஷன் கலாச்சாரத்திற்கு தாக்குப் பிடிக்க முடியாமல், ஆந்திராவுக்கு சென்று விட்டதாகவும் இதனால் பல்லாயிரம் வேலை வாய்ப்புகள் தமிழகத்திற்கு இல்லாமல் போய் விட்டதாகவும் தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.

தினமலர் பொறுக்கி அந்துமணி இரமேஷை தூக்கில் போடுவது அநீதி!தான் பார்க்கும் பார்ப்பன மாமா வேலைக்கு மேலும் ‘ஊக்கத்தொகை’ பெற கோப்ரா போஸ்ட்டிடம் பேரம் பேசிய ஆதிமூலத்துக்கு சொந்தமானது இந்த தினமலர். அதாவது முதலாளிகளிடம் லஞ்சம் வாங்கி அவர்களுக்கு ஏற்றபடி செய்தி வெளியிட்டு சேவை செய்வதில் முதல் இடத்தில் இருக்கும் தினமலர்தான் லஞ்ச ஊழல் பற்றி புலம்புகிறது.

மேலும், எடப்பாடி அ.தி.மு.க அரசு தினமலரின் ஆதர்ச முதலமைச்சரான பார்ப்பன ஜெயலலிதா தலைமையில் கட்டியமைக்கப்பட்ட கொள்ளைக் கூட்டம்தான் என்பதை மறைத்து விட்டு, ‘தமிழகத்தை திராவிட கட்சிகள் சீரழித்து விட்டன’ திராவிட இயக்கத்தின் மீது ஒட்டு மொத்தமான அவதூறை வாரி இறைக்கிறது, தினமலர்.

இனிமேல் விஷயத்துக்கு வருவோம். ஒரு வெவரமும் தெரியாத வெள்ளேந்திகளான கார்ப்பரேட்டுகளை தமிழ்நாட்டின் அ.தி.மு.க பொறுக்கிகள் சுரண்டுவது போல பில்ட்- அப் கொடுக்கிறது பார்ப்பன ஊழல் பத்திரிகை தினமலர்.

உண்மையில் ‘கறி உள்ள பக்கம் தான் கத்தி சாயும்’, என்ற வகையில் தனக்கு எங்கு லாபம் கிடைக்குமோ அங்கு தான் தன் கடையை விரிக்கின்றன கார்ப்பரேட்டுகள்.

கார்ப்பரேட்டுகளின் உற்ற நண்பர் சந்திரபாபு நாயுடு (கோப்புப் படம்)

“போதுமான லாபம் கிடைத்தால் மூலதனம் மிகவும் துணிவு பெறுகிறது. இலாபம் சுமார் 10 சதவீதம் கிடைக்குமென்றால், எங்கு முதலீடு செய்யப்படுகிறது என்பது பொருட்டில்லை; 20 சதவீதம் லாபம் உறுதியாக கிடைக்குமென்றால் அதற்கு பித்தம் தலைக்கேறி விடும்; 50 சதவீதம் கிடைக்குமென்றால் வெளிப்படையாக அடாவடி செய்யும்; 100 சதவீதம் கிடைக்குமென்றால் எல்லா மனித நியதிகள் மீதும் ஏறி மிதிக்க தயாராகி விடும்; 300 சதவீதம் கிடைக்குமென்றால் குறுகுறுப்பே இல்லாமல் எந்தக் குற்றமும் செய்யும்; அதன் உடைமையாளர் தூக்கிலிடப்படும் அபாயம் இருந்தாலும் கூட எந்த நச்சுப் பரீட்சையிலும் துணிந்து இறங்கும். குழப்பத்தாலும், பூசலாலும் இலாபம் கிடைக்குமென்றால், இரண்டையுமே தடையின்றி ஊக்குவிக்கும்”

இது மூலதனத்தின் இயல்பை பற்றியும், அதன் ஆள் உருவமான முதலாளிகள் பற்றியும் டி.ஜே. டன்னிங் என்பவர் 19-ம் நூற்றாண்டில் எழுதியது.

எனவே, முதலீடு தமிழ்நாட்டில் போடப்படுகிறதா, ஆந்திராவுக்கு போகிறதா என்பதை தீர்மானிப்பது லஞ்சம் கொடுப்பது தொடர்பான முதலாளியின் விருப்பு வெறுப்பு இல்லை. லஞ்சம் கொடுப்பது என்ன கொலை செய்யவும் கார்ப்பரேட்டுகள் தயங்க மாட்டார்கள் என்பதை ஸ்டெர்லைட் போராட்டத்தில் நாம் பார்த்து விட்டோம்.

கொலை செய்யவும் கார்ப்பரேட்டுகள் தயங்க மாட்டார்கள் என்பதன் நிரூபணம் தான் ஸ்டெர்லைட் தூத்துக்குடி மாடல்.

அரசுக்கு லஞ்சம் கொடுப்பது முதலாளித்துவத்தின் மரபணுவிலேயே உள்ளது. முதலாளித்துவத்தின் பிறப்பிடமான இங்கிலாந்தின் கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகள் இந்தியாவில் வாங்கி குவித்த லஞ்சங்கள் கல்வெட்டில் செதுக்கப்பட்டுள்ள வரலாறு. அது ஒரு புறம் இருக்க கிழக்கிந்திய கம்பெனியின் ஏகபோக சாசனத்தை புதுப்பிப்பதற்கு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை அரசுக்கு பெருமளவு லஞ்சத்தை அள்ளிக் கொடுத்திருக்கிறது அக்கம்பெனி. இவ்வாறு, தனது பிறப்பிலேயே ஊழலில் திளைத்து, வளர்ந்ததுதான் முதலாளித்துவம்.

அதிக லாப வீதத்தைத் தேடி ஓடும் ஓட்டத்தில், குறைவான கூலியில் அதிக நேரம் வேலை வாங்கி தொழிலாளர்களை சுரண்டுவதற்கான வசதி, ஓசியில் அல்லது மிகக் குறைந்த வாடகையில் நிலம், நீர், மின்சாரம், கழிவுகளை சுத்திகரிக்காமல் கேட்பார் இன்றி கொட்டி நிலத்தையும், நீரையும் நஞ்சாக்கும் சுதந்திரம் என்ற கொலை வெறி பார்வைதான் கார்ப்பரேட்டுகளின் முதலீட்டு இலக்கை தீர்மானிக்கிறது.

ஆனால், முதலாளிகளின் நிர்வாகக் குழுவான இந்த அரசும், தினமலர் போன்ற பாடபத்திர ஓணாண்டி புலவர்களும் “முதலாளிகள் முதலீடு செய்வார்கள், பல கோடி பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும்” என்று பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால், “2009-10ல் 5,000 தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியிருக்கும் பெரிய நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் காண்டிராக்ட் தொழிலாளர்கள். பொதுத்துறை நிறுவனங்களில் 50% தொழிலாளர்களும், நவீன பன்னாட்டு நிறுவனங்கள் உட்பட தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களில் 70% தொழிலாளர்களும் ஒப்பந்தத் தொழிலாளர்கள்” என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஒப்பந்த தொழிலாளர்களின் உழைப்பு எப்படி சுரண்டப்படுகிறது என்று சொல்லி தெரியவேண்டியதில்லை. இவர்களுக்கு பணி பாதுகாப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்பது கூடுதலான ‘சலுகை’.

♦ படிக்க:
முதலாளிகளின் மூலதனம் எங்கிருந்து வந்தது?

எனவே, முதலாளிகளைப் பொறுத்தவரை நினைத்த நேரத்தில் ஆள் எடுத்து வேண்டாத நேரத்தில் தூக்கி எறிவதற்கான சுதந்திரம்; நாட்டின் வளங்களை வரைமுறையற்று கொள்ளையடிக்க சுதந்திரம்; சுற்றுச் சூழலை சீரழிக்க சுதந்திரம் வேண்டும். இவற்றுக்கெல்லாம் வசதி செய்து கொடுக்கும் விசுவாசமான, திறமையான அரசு வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் பிறகுதான் லஞ்ச ஊழலில் இருந்து சுதந்திரம் என்பது வருகிறது, அதுவும் கொடுக்கும் கமிஷனை மிச்சப்படுத்தி லாபத்தை அதிகப்படுத்துவது என்ற நோக்கத்தில்தானே தவிர, ஏதோ லஞ்சத்துக்கு
எதிரான அறச்சீற்றத்தினால் அல்ல.

முதலாளிகள் அரசியல்வாதிகளுக்கு கொடுக்கும் லஞ்சம் கூட அவர்களது சொந்த மூலதனத்தில் இருந்து வருவதில்லை, மக்களின் வரிப்பணத்தை கொள்ளை அடித்து அதில் ஒரு பகுதியைத்தான் லஞ்சமாக வாரி வழங்குகின்றனர். உதாரணமாக, 2013-ல் டாடாவின் நானோ கார் தயாரிப்பு தொழிற்சாலை மேற்கு வங்கத்தில் இருந்து விவசாயிகளின் போராட்டத்தால் விரட்டி அடிக்கப்பட்ட போது, அது ஏன் ஏற்கனவே வாகன உற்பத்தி துறை வலுவாக இருந்த தமிழ்நாட்டிற்கோ இல்லை மராட்டியத்திற்கோ வராமல் குஜராத்திற்கு சென்றது? அங்குதான் இருக்கிறது சூட்சுமம், டாடாவின் மீது தனக்கிருந்த காதலின் பால் ஒரு சிறிய பரிசாய் கிட்டத்தட்ட 33 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சலுகைகளை வழங்கினார் அப்போதைய குஜராத் முதல்வர் மோடி. அதில் ஒன்று 20 ஆண்டுகளுக்கு வரியில்லா கடன். டாடாவுக்கு கொடுக்கப்பட்ட இவ்வாறான சலுகைகள் லஞ்சத்துக்கு சமமானது தானே?

♦ படிக்க:
நானோ கார் : மலிவின் பயங்கரம் !

டாடாவுக்கு கொடுக்கப்பட்டதை லஞ்சம் என்று ஏன் சொல்கிறோம்? தொழிற்சாலை ஆரம்பித்து 10 ஆண்டுகளுக்குள் நானோ கார் உற்பத்தியை முழுவதுமாக நிறுத்தி விட்டிருக்கிறது டாடா. அத்தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்புகள் என்ன ஆயின என்பதற்கு மோடியும் பதில் சொல்லப் போவதில்லை, டாடாவும் விளக்கம் சொல்லப் போவதில்லை. முறைகேடாக சலுகைகளைப் பெறுவது, அதற்கு கவுரவமாக பெயர் சூட்டிக் கொள்வது, சட்டபூர்வமாக்கிக் கொள்வது. இதுதான் கார்ப்பரேட் முதலாளித்துவத்தின் நடைமுறை.

தமிழ்நாட்டை இந்தியாவின் டெட்ராய்ட் என்று சொல்லுகிறது, தினமலர். அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரம் ஒரு காலத்தில் கார் உற்பத்திக்கு பெயர் போன இடம். ஆனால், தமது லாபத்தை பெருக்குவதற்காக டெட்ராய்ட்டை கைவிட்டு விட்டு லஞ்ச ஊழல் நிறைந்த இந்தியா போன்ற நாடுகளை நோக்கி படையெடுத்தனர் கார் கம்பெனி முதலாளிகள். இன்றைய டெட்ராயிடின் நிலையோ காய்ந்து காயலான் கடை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அந்நகரமே திவாலாகி திருவோடு ஏந்தி நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இப்போதோ தமிழ்நாட்டை இந்தியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கிறார்கள், முதலாளிகளின் அடிவருடிகள்.

♦ படிக்க:
முதலாளித்துவத்தின் சாதனை – டெட்ராய்ட் நகரம் திவால் !

ஒருவேளை டெட்ராய்ட்டின் நிலை தமிழ்நாட்டிற்கு வருவதற்கு முன்பு முதலாளிகள் வேறு இடம் தேடி போகிறார்களே என்று தினமலர் வருத்தப்படுகிறதோ என்னவோ? கவலைப்பட வேண்டாம், முதலாளிகள் எங்கு போனாலும் மொட்டை அடிப்பதில் வல்லவர்கள்தான்.

ஒரு பகுதி தொழிலாளிகளை இன்னொரு பகுதி தொழிலாளிகளுக்கு எதிராக நிறுத்துவது, ஒரு பகுதியை சுரண்டி தரிசு நிலமாக்கி விட்டு இன்னொரு பகுதிக்கு நகர்ந்து விடுவது என்ற ஊதாரி முதலாளித்துவ நிறுவனங்களுக்கு செக் வைப்பது தொழிலாளி வர்க்கத்தால் மட்டுமே ஆகக் கூடியது. தொழிலாளி வர்க்கம் தனது சர்வதேச ஐக்கியத்தின் மூலம்தான் முதலாளித்துவ சுரண்டலுக்கும் அதையே சாதனையாக்கி துதிபாடும் ஊடக ஊதுகுழல்களுக்கும் முடிவு கட்ட முடியும்.

– ராஜதுரை
புதிய தொழிலாளி, ஆகஸ்ட் 2018
நன்றி : new-democrats

அரசாங்கம் மக்களுக்கா ? ஸ்டெர்லைட்டுக்கா ? காணொளி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை விவரிக்கிறார்கள் ஸ்டெர்லைட் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள்.

ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க அனுமதி கொடுக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் சமீபத்தில் ஆய்வுக்குழு ஒன்றை அமர்த்தியது. அக்குழு தூத்துக்குடிக்குச் சென்று ஆய்வு நடத்தியது. அங்கு ஆய்வுக்குழுவினரிடம் தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட்டை  மூட வேண்டும் என மனு அளித்தனர். அதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்புக் கூட்டமைப்பினர் சென்னையில் 27.09.2018 அன்று சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினர். அப்போது எடுக்கப்பட்ட காணொளி இது.

”ஸ்டெர்லைட் ஆலையினால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் சீர்கேடு மற்றும் மக்கள் பாதிப்பு குறித்து மாநில அரசு எவ்வித அக்கறையும் எடுத்துக் கொள்ளவில்லை. வெறும் கண்துடைப்புக்காக ஆலையை மூடியிருக்கிறது மாநில அரசு” என்கின்றனர் இம்மக்கள்.

படிப்படியாக தண்ணீரின் தன்மை மாறியிருப்பதையும், தங்களது குழந்தைகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளையும் விவரிக்கின்றனர். ஸ்டெர்லைட் நிர்வாகமோ அங்கு பணிபுரியும் நபர்களுக்குப் பணம் வழங்கி ஸ்டெர்லைட்டினால் எவ்விதப் பாதிப்பும் இல்லை எனக் கூற வைக்கிறது.

”கடந்த மே 22 அன்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட, படுகாயத்திற்குள்ளாக்கப்பட்ட, கைது செய்யப்பட்டவர்களின் தியாகத்திற்கு பதில் என்ன ?” எனக் கேட்கின்றனர் இம்மக்கள்.

சுற்றுவட்டாரப் பகுதி மக்களை பணம் கொடுத்து எப்படியாவது வாயை அடைக்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது ஸ்டெர்லைட். பெண்கள் சிலரை பணிக்கமர்த்தி சுற்றுவட்டாரக் கிராமங்களுக்குச் சென்று மகளிர் சுய உதவிக் குழுவினரைச் சந்தித்து ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக ஆள் பிடிக்கும் வேலையிலும் ஈடுபட்டிருக்கிறது.

அப்பகுதி மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் அமைத்துத் தருவதாகவும் வாக்களித்திருக்கிறது. இவனே தண்ணீரையும் மாசுபடுத்துவான், இவனே எங்களுக்கு மருத்துவக் குழுவையும் அமைத்து வைத்தியம் பார்ப்பானா ? எனக் கொதிக்கின்றனர் இப்பகுதி மக்கள்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடும் நடவடிக்கைகளில் எங்களை ஏமாற்ற நினைக்கிறது இந்த அரசு. நாங்கள் இறுதி வரையில் – ஸ்டெர்லைட்டை மூடும் வரையில் போராடுவோம். இந்த அரசாங்கம் மக்களுக்காக இருக்கிறதா ? இல்லை, ஸ்டெர்லைட்டுக்காக இருக்கிறதா ? என வினவுகின்றனர் இம்மக்கள்.

தூத்துக்குடி மக்களின் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள காணொளியைப் பாருங்கள் பகிருங்கள் !

தந்தைப் பெரியார் வாழ்க்கை வரலாறு நூல் தரவிறக்கம் செய்யலாம்

2

நண்பர்களே…

பொ. வேல்சாமி
தந்தைப் பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை கவிஞர் கருணானந்தம் 1979 இல் சிறப்பாக எழுதியுள்ளார். 903 பக்கங்கள் கொண்ட இந்நூலை உங்களில் பலர் அறிந்திருப்பீர்கள். இந்நூலை தரவிறக்கம் செய்து கொள்ள பெரியார் பிறந்த தினமான (17-09-18) இன்று இணைப்பைத் தந்துள்ளேன்.

 

கோப்பை தரவிறக்க இங்கே சொடுக்கி, Free Download பட்டனை அழுத்தவும் : தந்தைப் பெரியார் வாழ்க்கை வரலாறு

1926 இல் நோட்டு கொடுத்து ஓட்டு வாங்கும் பட்டியலைப் பாருங்கள்
– தந்தைப் பெரியார்.

நண்பர்களே….

“ஓட்டு”க்கு ரூபாய் நோட்டை மக்கள் மானமற்று வாங்குவது நேற்றைக்கு இன்றைக்கும் நடந்ததாகப் பலர் கருதுகின்றனர். ஆனால் 1926 ஆண்டு குடியரசு இதழ் தொகுதி 3, பக்.322 இல் சித்திரகுப்தன் என்ற பெயரில் பெரியார் கொடுத்துள்ள தகவல்கள் நம் புருவத்தை உயர்த்தவைக்கிறது. ஆங்கிலேயர் காலத்தில் நடத்தப்பட்ட தேர்தலில் அன்றைய காங்கிரஸ் கட்சிகாரர்கள் இந்த தொகைகளை ஓட்டுக்காக வழங்கியுள்ளார்கள். இந்த தகவல்கள் காந்திக்கும் தெரியும்.

பொ.வேல்சாமி: தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.
எழுதிய நூல்கள்:

  • பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
  • கோவில் நிலம் சாதி
  • பொய்யும் வழுவும்

நூல் அறிமுகம் : கேளாத செவிகள் கேட்கட்டும்

”புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை – விதைக்கப்படுகிறார்கள்” என்று காலங்காலமாக சொல்லிக் கொண்டிருந்தால் மட்டும் போதுமா? விதைக்கப்பட்ட அந்த புரட்சியாளர்களின் வேர்களைப் பற்றிக் கொண்டு, இன்றைய காலகட்டத்தின் அநீதிகளை எதிர்த்துப் போராடும் புதிய புரட்சியாளர்கள் தானாகவே உருவாகி விடுவார்களா? நிச்சயம் உருவாக முடியாது. இங்கே அப்புரட்சியாளர்களோடு அவர்களது கொள்கைகளும் சேர்த்துப் புதைக்கப்பட்டிருக்கையில் அது எப்படி நடக்கும்! புதைக்கப்பட்ட – மறைக்கப்பட்ட அவர்களது கொள்கைகள், கருத்துக்களின் சாரத்தை உட்கொண்டு ஜீரணிக்கும் ஒரு தலைமுறையில் இருந்து மட்டுமே அத்தகைய புதிய புரட்சியாளர்கள் உருவாகி வரமுடியும். (நூலிலிருந்து பக்-9)

பகத்சிங் தூக்கிலடப்பட்டு ஏறத்தாழ 55 ஆண்டுகள் முடிந்த பின்னரே முதன் முதலாக பகத்சிங்கின் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் நூலாக வெளிவந்தது. (நூலிலிருந்து பக்-11)

பகத்சிங்கைப் பற்றி, அவரது கொள்கைகள் பற்றி அவர் வழிநடப்பது பற்றி ஏன் இத்தனை குழப்பங்கள் – தவறான அபிப்ராயங்கள்? காரணம், பகத்சிங்கின் தியாகம் தெரிந்த அளவிற்கு அவரது மார்க்சிய கொள்கையின் ஆழம் சாதாரண மக்களுக்குத் தெரியாமல் இருப்பதுதான். மக்களின் இந்த அறியாமையை பயன்படுத்தி, ஆளும் வர்க்கங்கள் பகத்சிங்கைப் பற்றிய தவறான கருத்துக்களை பரப்பி வருவது ஒருபுறம் இருக்க பகத்சிங்கின் தியாகத்தைப் போற்றுபவர்களும் தங்கள் பங்கிற்கு தவறான அபிப்ராயங்களை உருவாக்கி வருகின்றனர்.

இவற்றிற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டுமானால் உண்மையில் பகத்சிங்கின் கொள்கைகள்தான் என்ன என்பதை உழைக்கும் மக்கள் உணருமாறு செய்ய வேண்டும். அதன் மூலம் அவர்கள் பகத்சிங்கைப் பற்றிய தங்களது சொந்த அபிப்ராயங்களை தாங்களே உருவாக்கிக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும். (நூலிலிருந்து பக்-22)

எனவே, பகத்சிங்கின் எழுத்துக்களை மொழிபெயர்க்கும் போது கருத்துச் சிதைவிற்கோ, தவறான பொருள் கொள்வதற்கோ வாய்ப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் தனிக்கவனம் எடுத்துக் கொண்டோம். (பக்-23) – முன்னுரையில் த.சிவக்குமார்.

பகத்சிங் சாதிக்க முயற்சித்த புரட்சி பற்றிய அவரது சொந்த புரிதல் என்னவாக இருந்தது என்பதை தெளிவாக்கிக் கொள்ளும் பொருட்டு, அவரது படைப்புகள், அவரது பல்வேறு அறிக்கைகள் மற்றும் எழுத்துக்களை ஆராய்ந்துப் பார்த்தால், பகத்சிங்கை அவரது சமகாலத்தில் இருந்த மற்ற புரட்சியாளர்களோடு ஒன்றாகக் கருதுவதற்கு எவருக்கும் எந்த வாய்ப்பும் இல்லை. மற்ற புரட்சியாளர்கள் ஆயுதப் போராட்டத்தின் மூலம் இந்திய விடுதலையை சாதிக்க வேண்டும் என்ற உணர்ச்சி வேகத்தால் உணர்ச்சிப் பூர்வமாக தூண்டப்பட்டிருந்தனர்; அதற்குத் தேவைப்படும் எந்த தியாகங்களையும் துன்பங்களையும் தாங்கிக் கொள்வதற்கும் அவர்கள் தயாராக இருந்தனர்.

இவற்றைத் தவிர, அவ்விடுதலையைச் சாதிப்பதற்கு தொழிலாளி வர்க்கத்தின் மீதோ பரந்துபட்ட மக்களின் மீதோ அவர்கள் எவரும் பத்தியை சிறிதளவும் நம்பிக்கை வைக்கவில்லை. ஆனால் பகத்சிங்கின் நிலைமை முற்றிலும் வேறாக இருந்தது. அவர், தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகர உள்ளடக்கத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கை கொண்டவராக இருந்தார். அத்துடன் தொழிலாளி வர்க்கத்தால் மட்டுமே புரட்சியை வெற்றிகரமாக நிறைவேற்ற முடியும் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டவராகவும் இருந்தார். பகத்சிங்கின் இந்த அம்சம்தான் பகத்சிங் ஓர் கம்யூனிஸ்டாக இருந்தார் என்ற முடிவுக்கு பலரையும் வரச்செய்தது. (நூலிலிருந்து பக்-31,32)

” புரட்சி என்பது, இரத்த வெறிகொண்ட மோதலாகத்தான் இருக்க வேண்டுமென்ற கட்டாயமில்லை. தனிமனிதர்கள் வஞ்சம் தீர்த்துக் கொள்வதற்கும் அதில் இடமில்லை. அது வெடி குண்டுகள், துப்பாக்கிகள் மீதான வழிபாடல்ல. ‘புரட்சி’ என்பதன் மூலம், வெளிப்படையான அநீதியை அடிப்படையாகக் கொண்ட இந்த சமூக அமைப்பு மாற்றப்பட வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம்.

விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய சில ஒட்டுண்ணிகளால் இந்திய உழைக்கும் மக்களும் அவர்தம் இயற்கை வளங்களும் சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கும்வரை இந்தப் போர் தொடரும்; தொடர வேண்டும். அவ்வொட்டுண்ணிகள் கலப்பற்ற பிரிட்டிஷ் முதலாளிகளாக இருக்கலாம் அல்லது பிரிட்டிஷ் முதலாளிகள் மற்றும் இந்திய முதலாளிகளின் கலப்பாக இருக்கலாம். அவர்கள் தங்களது நயவஞ்சகமான சுரண்டலை பிரிட்டிஷ் மற்றும் இந்தியக் கலப்பு அரசு இயந்திரத்தைக் கொண்டோ கலப்பற்ற இந்திய அரசு இயந்திரத்தைக் கொண்டோ நடத்தி வரலாம்… இந்தப்போர் தொடர்ந்தே தீரும்… அது ஒரு புதிய உத்வேகத்துடனும் பின்வாங்காத உறுதியுடனும் சோஷலிசக் குடியரசு நிறுவப்படும் வரையிலும் ஓயாது தொடுக்கப்பட்டுக் கொண்டேயிருக்கும்… இந்தப் போர் எங்களோடு தொடங்கவுமில்லை; எங்கள் வாழ்நாளோடு முடியப் போவதுமில்லை. வரலாற்று நிகழ்வுப் போக்குகளினதும் இன்று நிலவும் சூழ்நிலைகளினதும் தவிர்க்க முடியாத விளைவே இப்போர்.” – பகத்சிங்.

அப்படியே இன்றைய சூழலோடுப் பொருந்திப் போகக்கூடிய, பகத்சிங்கின் தீர்க்க தரிசனமான வரிகள் சிந்திக்கத் தூண்டுகின்றன. நூலின் வழியே பகத்சிங்கோடு உரையாடி பாருங்கள், உண்மை புரியும்.

நூல்: கேளாத செவிகள் கேட்கட்டும்…
(தியாகி பகத்சிங் கடிதங்கள், கட்டுரைகள் மற்றும் பிற ஆவணங்கள்)
தொகுப்பும், தமிழும்: த. சிவக்குமார்

வெளியீடு: நெம்புகோல் பதிப்பகம்,
3/112, திலகர் தெரு, பேங்க் காலனி,
நாராயணபுரம், மதுரை – 625014.
பேச: 93441 23114.
பக்கங்கள்: 384
விலை: ரூ150.00

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு:
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி: 99623 90277

தம்பி தங்கைகளே ! உங்களுக்கு தோழர் பகத்சிங்கை தெரியுமா ? காணொளி

ன்று (செப்டெம்பர் 28, 2018) பகத்சிங்கின் 111-வது பிறந்தநாள். பகத்சிங்கைப் பற்றி இக்காலகட்டத்தில் பேச வேண்டிய அவசியம் என்ன?

ஊர்பக்கங்களில் கோவில் திருவிழாக்களில் உற்சவமூர்த்தி வீதி உலா வருவதற்கு முன்னர், முள் பொறுக்கி சாமியை வீதி உலா அழைத்துச் செல்வர். அதாவது உற்சவ மூர்த்தி வருவதற்கு முன், இந்தச் சாமி வந்து வழியை சரிபடுத்திக் கொடுக்கும். அதே போல ஏகாதிபத்தியங்கள் இந்த நாட்டை ஒட்டச் சுரண்டுவதற்கேற்ப வழிப்பாதையை சரி படுத்திக் கொடுக்கவே முள்பொறுக்கிச் சாமியாக பாஜக – ஆர்.எஸ்.எஸ். கும்பல் தற்போது மக்களை ஒடுக்கி வருகிறது.

தற்போது நிலவும் இத்தகைய ஒடுக்குமுறைக்கு நிகராக அன்று இருந்த காலனிய காலகட்டத்தில் வாழ்ந்தவர்தான் பகத்சிங். பகத்சிங் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் சுரண்டலுக்கு எதிராக எழுப்பிய எதிர்ப்புக் குரலைப் போன்றே இன்றும் இந்த அரசின் ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் எதிராக இளைஞர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். வளர்ச்சி என்ற பெயரில் எதிர்ப்புக் குரல்களை நசுக்கும் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறது மோடி அரசு.

இந்த சூழல்தான் பகத்சிங்கை அவசியப்படுத்துகிறது. அவரைப் பற்றி இதுவரை நமக்கு என்ன சொல்லித் தரப்பட்டிருக்கிறது ?

பகத்சிங் நாடாளுமன்றத்தில் குண்டு போட்டது மட்டும்தான் முக்கியமான நடவடிக்கையா? அவர் ஒரு துடிப்புள்ள இளைஞர் என்பது மட்டும்தானா அவரது சிறப்பு? அதைத்தாண்டி இச்சமூகத்திற்கு பகத்சிங்கின் பங்களிப்பு என்ன?

பகத்சிங் ஒரு தியாகி. அவரது தியாகத்திற்குப் பின்னணியில் இருக்கும் நோக்கம் என்ன? அவரது நோக்கம் ஏகாதிபத்தியத்தை ஒழிப்பதும், சோசலிச சமதர்ம சமூகத்தை ஏற்படுத்துவதுமே ஆகும். அதற்காக தனது வாழ்வை முழுமையாக அர்ப்பணித்தவர் பகத்சிங். அவரது சித்தாந்தமும் உணர்வும் என்னவாக இருந்தது?

பகத்சிங் தனது உயிருக்காக வாழவில்லை. அவர் தனது உணர்வுக்காக வாழ்ந்தவர். அவர் மரணிப்பதற்கு முன்பு கூட, இந்த நாட்டிற்குத் தாம் சரியாகத்தான் செயல்பட்டிருக்கிறோமா என்பதை பரிசீலித்தவர்.

உண்மையான தியாகம் என்பது என்ன ? உயிரை இழப்பது மட்டுமா ? இல்லை சமூகத்திற்காக வாழ்வை அர்ப்பணிப்பதா?

பகத்சிங் எதற்காக, என்ன நோக்கத்திற்காக வாழ்ந்தாரோ அதிலிருந்துதான் பகத்சிங்கின் வாழ்வை, அவரது தியாகத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பகத்சிங்கை அத்தகையதொரு சீரிய பார்வையில் நமக்கு அறியத் தருகிறார் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர் துரை. சண்முகம்

பாருங்கள் ! பகிருங்கள் !

மோடி கேர் காப்பீடு : பல் பிடுங்குவதற்கு கூட உதவாது !

ந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 23-09-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று “உலகின் மிகப்பெரிய அளவிலான” காப்பீட்டுத் திட்டம் ஒன்றை அறிவித்தார். அதன் பெயர் ”பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா”.

மோடி ஏற்கனவே அறிவித்திருந்த ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இரண்டு மருத்துவத் திட்டங்கள் வருகின்றன. அதில் ஒன்றுதான் இந்த ’பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா’தான்.

பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனாஇத்திட்டம் குறித்தும் அதற்கான நிதி ஒதுக்கீடு குறித்தும் நடப்பாண்டு நிதிநிலை அறிக்கையிலேயே குறிப்பிட்டிருந்தது மோடி அரசு. அமெரிக்காவின் “ஒபாமா கேர்” என்ற மருத்துவக்காப்பீட்டுத் திட்டத்தோடு இதனை ஒப்பிட்டு அப்போது இத்திட்டத்தை மோடி ஆதரவு ஊடகங்கள், ’மோடி கேர்’ திட்டம் என்று செல்லப் பெயரிட்டு அழைத்தன.

இத்திட்டத்தின்படி பொருளாதார ரீதியில் பின்தங்கிய சுமார் 10 கோடி குடும்பங்களுக்கு தலா ரூ. 5 இலட்சம் வரை காப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார் மோடி.

உலகில் எந்த நாடும் செய்திராத அளவிலான அரசு நிதியளிக்கும் மிகப்பெரிய காப்பீட்டுத் திட்டம் இது என்றும் கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய நாடுகளின் மக்கள் தொகையை விட அதிகமான அளவிலான மக்களுக்கு இத்திட்டம் பயனளிக்கும் என்றும் கூறியுள்ளார் மோடி.

ஆனால் உலகின் மிகப்பெரிய திட்டம் என்று மோடியால் அறிவிக்கப்பட்ட இத்திட்டத்திற்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டிருக்கும் தொகை வெறும் ரூ.2000 கோடி மட்டுமேயாகும்.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் வரும் மற்றொரு திட்டம், நாடு முழுவதும் 1,50,000 சுகாதாரம் மற்றும் உடல்நல மையங்களை உருவாக்குவது. இத்திட்டத்திற்காக நடப்பாண்டு நிதிநிலை அறிக்கையில் ரூ.1200 கோடியை ஒதுக்கியது மோடி அரசு. அதாவது ஒரு மையத்துக்கு ரூ. 80,000 மட்டுமே ஒதுக்கியுள்ளது. இந்த 80,000 ரூபாயை வைத்துக் கொண்டு பழைய சுகாதார மையங்களுக்கு பெயிண்ட் அடித்து புதுப்பிக்க முடியுமே அன்றி கண்டிப்பாக புதிய மையங்களை உருவாக்க முடியாது. ஆயுஷ்மான் பாரத்தின் திட்டத்தின் கீழ் வரும் இத்திட்டமும் ஒரு ஜூம்ளா-தான் என்பதை இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டிருக்கும் நிதியை வைத்தே சொல்லாமல் சொல்லியிருக்கிறது மோடி அரசு.

ஆயுஷ்மான் பாரத்தின் கீழ் வரும் மற்றொரு திட்டமான இந்த புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு நடப்பாண்டு நிதிநிலையறிக்கையில் ஒதுக்கப்பட்ட தொகை ரூ.2000 கோடி ஆகும். இத்திட்டம்தான் 50 கோடி இந்தியர்கள் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார் மோடி.

இத்திட்டத்திற்கு ரூ.11,000 கோடி ஒதுக்கவிருப்பதாக நடப்பாண்டு  நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது மத்திய அரசு. ஒரு சிறிய கணக்கு ஒன்றை போட்டுப் பார்ப்போம். இத்திட்டத்தின் கீழ் 10 கோடி குடும்பங்கள் தலா ரூ.5,00,000 வரையிலான மருத்துவக் காப்பீட்டுத்தொகையாக பெறமுடியும். இத்தொகையில் 1% (ரூ.5000) தொகையை மட்டுமே 10 கோடி குடும்பங்கள் கோரிப் பெறுகின்றனர் என்று வைத்துக் கொண்டாலுமே குறைந்தபட்சம் ரூ. 50,000 கோடி நிதி ஒதுக்க வேண்டும்.

நாம் எடுத்துக் கொண்ட 1% என்பது மிகச் சிறியது. நடைமுறையில் இதை விட அதிகமான தொகையே காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கோரப்படும்.

இவர்கள் ஒதுக்குவதாக கூறியுள்ள தொகையைக் கொண்டு கணக்கிடுவோம். 10 கோடி குடும்பங்கள் பயனடையவிருக்கின்றனர் எனில் ஒரு குடும்பத்திற்கு ஒரு ஆண்டிற்கு வழங்கப்படக் கூடிய தொகை வெறும் ரூ.1100 ஆகும். எனில் நடைமுறையில் இப்புதிய காப்பீட்டுத் திட்டத்தின்படி ஒரு குடும்பத்தில் ஒரு நபர் ஆண்டுக்கு ஒருமுறை பல் பிடுங்க மட்டுமே இந்த பணம் போதுமானதே ஒழிய எவ்விதத்திலும் இது மக்களை நோயிலிருந்து காக்கப் போவது இல்லை.

மோடியின் அறிவிப்புப் படி சரியாக 50 கோடி பயனர்களுக்கு இந்த தொகையை பிரித்துப் போட்டால், நபர் ஒன்றுக்கு ஆண்டுக்கு ரூ.220 மட்டுமே இன்சுரன்ஸ் தொகையாக வழங்கப்படும். இந்தத் தொகையும் கூட அந்த ரூ.10,000 கோடியை மோடி அரசு ஒதுக்கினால்தான்.

மோடி அரசு சுகாதாரத் துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்த வரலாறையும் சிறிது பார்க்கலாம். நடப்பாண்டு நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்ட போது ”கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சுகாதாரத் துறைக்கு 11.8% அதிக நிதி ஒதுக்கீடு மேற்கொண்டிருப்பதாக பெருமை பீற்றியது மோடி அரசு. ஆனால் சிறிது நுணுக்கமாக கணக்கிட்டால் மோடி அரசின் பித்தலாட்டம் அம்பலப்படும்.

மோடிகடந்த 2017-2018 –ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் பொது சுகாதாரத்துக்கு ரூ.48,878 கோடி ஒதுக்கிய பிறகு மறுமதிப்பீட்டு நிதிநிலை அறிக்கையில் பொது சுகாதாரத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.53,294 கோடியாகும். நடப்பாண்டு நிதிநிலை அறிக்கையில் சுகாதாரத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.54,600 கோடியாகும். இத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வெறும் 2.7% மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது.

“உலகின் மிகப்பெரிய அளவிலான” காப்பீட்டுத்திட்டம் என்பதும் மிகப்பெரிய கட்டுக்கதையே. ஒதுக்கப்படும் நிதியை வைத்துப் பார்த்தாலும் கூட உலகிலேயே மிகப்பெரிய திட்டம் எனக் கூற முடியாது. ஏனெனில் பல்வேறு நாடுகள் இதனை விட அதிகமாக செலவிடுகின்றன. உலக நாடுகள் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி)  பொது சுகாதாரத்திற்கு ஒதுக்கும் நிதி அளவின், சராசரி 5.99% ஆகும். ஆனால் இந்தியா வெறும் 1.2% மட்டுமே ஒதுக்குகிறது.

கணக்கில் முன் பின் இருந்தாலும் இந்த காப்பீட்டுத்திட்டம் நல்லதுதானே என்றும் பலர் கருதலாம். ஏற்கனவே 1 இலட்சத்திற்கும் குறைவாக இருந்த காப்பீட்டுத்தொகை தற்போது 5 இலட்சமாக உயர்த்தப்பட்டிருப்பதும் நல்லதுதானே என்றும் பலர் கருதலாம். அது நல்லதுதான். ஆனால் யாருக்கு நல்லது என்பதுதான் கேள்வி.

இந்தியா முழுவதும் அரசு சுகாதார மையங்கள், மருத்துவமனைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஏழை மக்கள் அடிப்படை சுகாதார வசதிகள் கூட இன்றி நோயால் பலியாகிக் கொண்டிருக்கின்றனர். இதனைப் போக்கவே இத்தகைய காப்பீட்டுத் திட்டங்களைக் கொண்டு வந்திருப்பதாகவும், இதன் மூலம் மக்கள் தனியார் மருத்துவமனைகளிலும் இனி மருத்துவம் எடுத்துக் கொள்ளலாம் என்று மோடி உட்பட அனைத்து தனியார்மயதாசர்கள் கூறிவருகின்றனர்.

உண்மையிலேயே இவர்கள் அரசு மருத்துவமனை போதுமான அளவில் இல்லை என வருத்தப்படுபவர்களாக இருந்தால் 1,50,000 மருத்துவமனைகளைக் கட்ட வெறும் தலா ரூ.80,000 –ஐ ஒதுக்கியிருப்பார்களா?

ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களான கலைஞர் காப்பீட்டுத்திட்டம், அம்மா காப்பீட்டுத் திட்டம், மத்திய அரசின் ராஸ்டிரிய ஸ்வஸ்த்ய பிமா யோஜனா” போன்றவற்றின் கீழ் மக்களின் வரிப்பணத்திலிருந்து பெரும் தொகையை சுருட்டிக் கொண்டு போவது யார்?

ஒரு சிறிய அறுவை சிகிச்சை என்று எடுத்துக் கொண்டால், அதனை அரசு மருத்துவமனையில் எவ்வித கூடுதல் கட்டணமின்றியும் செய்து கொள்ள முடியும். இதையே காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் செய்யும் போது, புதிய புதிய மருந்துகள், தேவையற்ற கூடுதல் மருந்துகள், உபகரணங்கள் என அவற்றிற்கு தனியாக பணம் பிடுங்கி வெளியே அனுப்புவதுதான் வாடிக்கை.

அரசு மருத்துவமனைகளுக்கான அடிப்படை வசதிகளைக் கைவிட்டு விட்டு காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் முதலாளிகளுக்கு பணம் ஒதுக்குகிறார் மோடி

கூடுதலாக உங்களது காப்பீட்டின் கீழ் எவ்வளவு பணம், காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து பெற்றுக் கொள்ள முடியுமோ அவ்வளவு நாட்கள் உங்களை மருத்துவமனையில் இருத்தி வைத்திருப்பது, ஒரு வேளை உங்களது மருத்துவக் காப்பீட்டின் பணம் குறைவாக இருந்தால் 4 நாட்கள் மருத்துவமனையில் இருக்க வைப்பதற்குப் பதிலாக 2 நாட்களில் கிளப்பி விடுவதும் நடைமுறையில் நாம் அன்றாடம் காணும் நிகழ்வுகளாக இருக்கின்றன.

ஏற்கனவே அரசு மருத்துவமனைகளுக்கு போதுமான நிதி ஒதுக்காமல், அங்குள்ள சிறப்புப் பிரிவுகளை தனியார்வசம் ஒப்படைக்கும் வேலைகளை சத்தமின்றி செய்து வருகின்றன மத்திய மாநில அரசுகள். அரசு மருத்துவமனைகள் நோயாளிகளின் காப்பீட்டு அட்டையின் அடிப்படையில் கிடைக்கும் தொகையைக் கொண்டு தங்களைத் தாங்களே பராமரித்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.

இது மருத்துவ சேவையிலிருந்து அரசு தமது கையைக் கழுவிக் கொள்ளும் நிகழ்ச்சிப் போக்கின் ஒரு பகுதியே. இப்போது அதனைத் தீவிரப்படுத்தவே இத்தகைய காப்பீட்டுத் தொகை உயர்வை அறிவித்து கொள்ளைப் புற வழியே அரசு மருத்துவமனைகளுக்கு மூடுவிழாவை நடத்துகிறது மோடி அரசு.

கடந்த 2017-ம் ஆண்டு அத்தியாவசிய மருந்துகளுக்கான விலையை கட்டுப்படுத்தி, மருந்து மாஃபியாக்களின் கொள்ளையைக் கட்டுப்படுத்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் தலைவர் ஸ்ரீநிவாசனை அப்பதவியிலிருந்து மோடி அரசு வெளியேற்றியது நினைவிருக்கலாம்.

அடுத்ததாக அப்பதவிக்கு வந்த பூபேந்திர சிங், ’ஸ்டெண்ட்’ என்னும் மருத்துவ உபகரணத்திற்கான விலையைக் கட்டுப்படுத்தி உத்தரவிட்டார். இது பல வெளிநாட்டு ஸ்டெண்ட் உற்பத்தி நிறுவனங்களுக்குக் குடைச்சலைக் கொடுத்தது. இதன் காரணமாக அப்பதவியிலிருந்து பூபேந்திர சிங் அவர்கள், மோடி அரசால் தூக்கியெறியப்பட்டார்.

இவ்விரு சம்பவங்களிலிருந்துமே மோடி அரசு யார் நலனுக்காக ஒவ்வொரு திட்டத்தையும் செயல்படுத்துகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொருவருக்கு ரூ.5,00,000 மருத்துவக் காப்பீட்டுப் பணம் என்ற மோடியின் இந்த அறிவிப்பை, கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது மோடி அறிவித்த ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ.15,00,000 போடுவதாக மோடி கூறிய வாக்குறுதியோடு ஒப்பிட்டுக் கொள்ளுங்கள். மோடியின் உண்மை முகத்தை புரிந்து கொள்ள முடியும்.

மணஉறவுக்கு வெளியே நிகழும் பாலுறவு குற்றமல்ல ! – தீர்ப்பின் சமூக விளைவுகள்

ண வாழ்க்கையில் இருப்போர் அதற்கு வெளியே பாலுறவு வைத்திருந்தால் அதில் தொடர்புடைய ஆணை தண்டிக்க சட்டப்பிரிவு 497 வழி செய்கிறது. ஆணை மட்டும் தண்டிப்பதோடு, பெண்ணை ஆணின் உடமையாகக் கருதி விலக்கு கொடுத்து அவளை ஒரு பண்டமாக கருதும் இச்சட்டம் தவறு; பாலின பாகுபாட்டைக் காட்டுகிறது என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து இன்று (27.09.2018) தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

தனது மனைவியின் மணவாழ்க்கைக்கு வெளியேயான உறவால் பாதிக்கப்பட்ட கணவர் அவரது மனைவியுடன் உறவில் இருந்த ஆணுக்கு எதிராக வழக்கு தொடுக்கிறார் என்று வையுங்கள். இந்திய தண்டனைச் சட்டம் 497-இன் படி அவருக்கு 5 ஆண்டுகள் தண்டனை வழங்க முடியும். பெண்ணுக்கு தண்டனை இல்லை.

இத்தாலி வாழ் ஜோசப் ஷைன் எனும் வெளிநாடு வாழ் இந்தியர் 2017-ஆம் ஆண்டில் மேற்கண்ட சட்டத்திற்கு எதிராக பொதுநல வழக்கு தொடர்ந்தார். இச்சட்டத்தை இருபாலானாருக்கும் பொதுவாக மாற்றவேண்டும் என்பது அவரது கோரிக்கை.

உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் மத்திய அரசும் தனது வாதங்களை பதிவு செய்திருக்கிறது. அதன்படி இச்சட்டத்தில் மாற்றங்கள் செய்தால் சமூகத்தில் மோசமான விளைவுகள் ஏற்படும், சட்டமே நீர்த்து போகும், கலாச்சாரம் பாழ்படும் என்று வாதிட்டது. சலவைத் தொழிலாளி சொன்னார் என சீதையை தீக்குளிக்கச் செய்து கொன்ற இராமனின் பெயரால் கட்சி நடத்துபவர்கள்தான் உண்மையில் இன்றைய  இந்தியாவில் மக்களின் சமத்துவ கலாச்சாரத்தை கொன்று வருகிறார்கள். லவ் ஜிகாத் பெயரிலும், ஆணவக் கொலை பெயரிலும் இவர்கள் அனைத்து மாநிலங்களிலும் இளைஞர்களை கொன்று வருகிறார்கள்.

கி.பி 1860-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இச்சட்டம் 157 ஆண்டுகள் பழமையானது. இதன்படி குற்றம் நிரூபிக்கப்பட்ட ஆணுக்கு 5 ஆண்டு சிறையும், சில நேரம் அபராதமும் கூட விதிக்கப்படலாம். எனினும் திருமணமான ஆண் திருமணமாகாத வயது வந்த பெண்ணுடனோ, கணவன் இறந்து போன கைம்பெண்ணுடனோ உறவு கொண்டால் இச்சட்டம் அதை குற்றமாக கருதாது.

ஆங்கிலேயர் கால சட்டங்களில் இருந்தே இத்தகைய மணவாழ்க்கை குறித்து மட்டுமல்ல, என்.எஸ்.ஏ. போன்ற அடக்குமுறைச் சட்டங்களும் இருக்கின்றன. கருத்துரிமையை பறிக்கும் இச்சட்டங்களெல்லாம் நீதிமன்றத்தின் பார்வைக்கு வராது.

இதிலும் கூட பாலின சமத்துவம் என்ற விவாதம் எத்தகையது? பாலியல் உறவிலோ, இல்லை திருமண ஒப்பந்தங்களிலோ ஆணாதிக்க சமூகத்தில் பாதுகாப்பு இல்லை என்பதற்காகவே கூடுதல் உரிமைகள் பெண்களுக்கு தரப்பட்டுள்ளன. ஆனால் நமது அரசு அமைப்பில் அத்தகைய உரிமைகளை ஒரு பெண்ணால் முற்றிலும் சுதந்திரமாக பயன்படுத்த முடியாத நிலையில் பல்வேறு சட்டங்கள் வெறும் ஏட்டளவிலேயே உள்ளன.

குடும்ப வன்முறை சட்டத்தின்படி ஒரு பெண் அளிக்கும் புகாரால் ஆண்கள் முகாந்திரம் இல்லாமலேயே பாதிக்கப்படுவதாக பொதுவில் பலரும் கருதுகிறார்கள். ஆனால் முகாந்திரம் இருந்தாலும் ஒரு பெண், கணவன் – வீட்டினரை எதிர்த்து புகார் கொடுக்க முடியாமல் இருப்பதே அதிகம். அதனால்தான் இன்றும் கூட இங்கே வரதட்சணை அமலில் இருப்பதோடு அதன் பெயரில் பெண்கள் கொலை செய்யப்படுவதும் அதிகம் நடக்கிறது.

பாலியல் உறவு மீறல் குறித்த பழைய சட்டம் 497-ன் படி ஒரு பெண்ணை அவளது கணவன் ஒரு சொத்தாக பார்ப்பதால்தான் வழக்கு தொடுக்க முடிகிறது என்று சொல்கிறார்கள். இது வழக்கிற்கு மட்டுமல்ல, திருமணம் செய்யாத பெண், கைம்பெண்களுக்கும் கூட பொருந்தும். அவர்கள் யாருக்கும் ‘சொத்தல்ல’ என்பதால்தான் மேற்கண்ட சட்டம் அவர்களோடு உறவு கொள்வதை குற்றமாக பார்க்கவில்லை.

பார்ப்பனிய ஆதிக்க சாதியினர் பலரும் கிராமங்களில் இன்றளவிலும் கைம்பெண்களோடு உறவு வைத்திருப்பதை மறைமுகமாக செய்கின்றனர். மாறாக அதே பெண்களை மறுமணம் செய்வதை அதே ஆதிக்க சாதியினர் விரும்புவதில்லை என்பதோடு தடையும் செய்கிறார்கள். தமிழகத்தில் இன்றும் கூட பல ஆதிக்க சாதியினர் கிராமங்களில் கைம்பெண்கள் திருமணத்திற்கு சமூக ரீதியான தடை அமலில் இருக்கிறது. மீறினால் அந்த பெண்ணை விபச்சாரி என்று தூற்றுவது முதல், கொலை செய்வது வரை பல்வேறு கொடுமைகள் செய்யப்படுகின்றன.

அறுத்துக் கட்டும் வழக்கமும் கூட சில ஆதிக்க சாதியினரிடம் இருந்த, இருக்கின்ற ஒரு ஜனநாயக நடைமுறைதான். ஆனாலும் அங்கும் கூட ஒரு பெண்ணுக்கு சொத்துரிமை, பொருளாதார உரிமை இல்லை என்பதால் அவையும் அவளது சுதந்திர வாழ்க்கைத் தெரிவிற்கு உதவுவதில்லை.

தற்போதைய சமூக நடைமுறையில் மண வாழ்க்கைக்கு வெளியே ஆன உறவு என்பது பல நெருடல்களையும், கொலைகளையும், தற்கொலைகளையும், வன்முறைகளையும், குழந்தைகளை தவிக்க விடும் அவலநிலையுமாக தொடர்கிறது. இப்போது வந்த தீர்ப்பின் படி மேற்கண்ட வெளி உறவினால் தற்கொலை நடக்காத பட்சத்தில் அதில் ஈடுபடும் ஆணை தண்டிக்கத் தேவையில்லை என்று தீர்ப்பளித்திருக்கிறார்கள்.

ஆனால், அதில் ஈடுபடும் பெண்ணுக்கோ அவளது கணவன் – குழந்தைகளுக்கோ ஏற்படும் பிரச்சினைகளுக்கு என்ன பதில்? இந்த பிரச்சினைக்கு தீர்வுதான் என்ன?

இன்றைக்கு ஒரு பெண் தனது வாழ்க்கைத் துணைவரை சுதந்திரமாக தெரிவு செய்வதற்காக உரிமை சமூகத்தில் இல்லை. அவள் காதலித்தாலும் கூட அது அவளது பாதுகாப்பு, பொருளாதார நிச்சயமின்மை காரணமாக சில சமரசங்களோடுதான் இருக்கும். வேலைக்கு போனாலும் கூட சம்பளமோ, வங்கி அட்டைகளோ கணவனது பிடிக்கு சென்றுவிடும் போது மண வாழ்க்கைக்கு வெளியே விடுங்கள், மண வாழ்க்கையின் உள்ளே ஏற்படும் சிக்கல்களுக்குக் கூட அவளுக்கு விடுதலையோ தீர்வோ இருப்பதில்லை.

அடுத்து இந்திய சமூகத்தில் பார்ப்பனியம் பயிற்றுவித்திருக்கும் நடைமுறையால் இங்கே விவாகங்கள் மட்டுமல்ல விவாகரத்தும் கூட சுதந்திரமாக நடப்பதில்லை. குறிப்பாக ஒரு பெண்ணுக்கு அதில் முடிவெடுப்பது என்பது மறு ஜென்மம் எடுப்பது போல. பல விசயங்களையும் கணக்கில் கொண்டே அவள் முடிவு எடுக்க முடியாமல் தனது ஆயுள் தண்டனை வாழ்க்கையை தொடர்கிறார்கள். சில நேரம் ஆண்களுக்கும் கூட இது பிரச்சினைதான்.

ஆணவக் கொலை அதிகம் நடக்கும் நாட்டில் சாதி வெறியர்களைக் கூட இன்னும் தண்டிக்க முடியாத நிலையில் நமது பெண்கள் வாழ்க்கை குறித்து எப்படி முடிவெடுக்க முடியும்? சாதிவெறி, மதவெறியர்களைத் தனிமைப்படுத்தி அவர்களை முடக்கினால்தான் பெண்களின் முதல் படி விடுதலையை நோக்கி வைக்க முடியும்.

அடுத்து சமூகத்தில் பாலியல் சமத்துவமும், ஜனநாயகமும் வரவேண்டுமென்றால் அது பொருளாதார சமத்துவத்தோடும் தொடர்புடையதாக இருக்கிறது. திருமணம், கற்பு, ஒரு தாரமணம் போன்றவை கூட ஒழுக்கத்தின் பெயரில் உலா வந்தாலும் அவற்றின் அடிப்படையே சொத்துரிமையை இரத்தவழியில் மாற்றிக் கொடுப்பது மட்டுமே.

மணவாழ்க்கைக்கு வெளியே இருக்கும் உறவினால் ‘கலாச்சாரம்’ சீரழிவதாக பலரும் கருதுகிறார்கள். உண்மையில் மண வாழ்க்கையில் அதே கலாச்சாரம் – ஜனநாயகம் இல்லை என்பதே அவர்கள் கருதும் சீரழிவிற்கான அடிப்படை! காதலிலும், திருமண வாழ்விலும் எப்போது ஜனநாயகமும், பாலின சமத்துவமும் வருகிறதோ அன்றுதான் வெளி உறவுகள் நடக்காது அல்லது நடப்பதற்கான அடிப்படை இருக்காது என்பதோடு, காதலும் உண்மையாக பரஸ்பரம் இருக்க முடியும்.

ஆகவே, இன்று உச்சநீதிமன்றம் மேற்கண்ட 497 பிரிவை ரத்து செய்திருப்பது சமூக முன்னேற்றத்தில் ஒரு சிறு முன் நகர்வு என்பதைத் தாண்டி இங்கே சட்டப்படியும், சமூகப்படியும் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. குன்றத்தூர் அபிராமி முதல், ‘கள்ளக்காதல்’ என்று கிசுகிசு ரசனையோடு ஊடகங்கள் வெளியிடும் அன்றாட செய்திகளும் அந்தக் கடமையை நினைவுபடுத்துகின்றன.