Sunday, July 6, 2025
முகப்பு பதிவு பக்கம் 412

கேரள வெள்ளத்திற்கு முல்லைப் பெரியாறு நீர் காரணமல்ல : மத்திய நீர் ஆணையம்

“கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டபோது தமிழ்நாடு நியாயமாக நடந்துகொண்டிருக்க வேண்டும். அணையின் நீரை முன்கூட்டியே திறந்துவிட்டிருக்க வேண்டும்” என்று கூறியவர்கள் எல்லாம் வரிசையாக வாருங்கள். கேரளாவில் ஏற்பட்ட மாபெரும் வெள்ளம் குறித்த மத்திய நீர் ஆணையத்தின் அறிக்கை வந்துவிட்டது. கேரளாவில் ஏற்பட்ட இந்த வெள்ளத்திற்கு அதீதமாகப் பெய்த பருவமழையே காரணமென்றும் அணைகளிலிருந்து திறந்தவிடப்பட்ட தண்ணீர், குறிப்பாக முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் காரணமல்லவென்றும் அந்த அறிக்கையில் தெளிவாக சொல்லப்பட்டுவிட்டது.

இந்த அறிக்கையில் முல்லைப் பெரியாறு அணை, இடுக்கி அணை, இரண்டின் நீர்பிடிப்புப் பகுதிகள், பெரியாறில் ஏற்பட்ட வெள்ளம் குறித்து இந்த அறிக்கையில் உள்ளவற்றின் சுருக்கம் இதுதான்.

1. கேரளாவில் ஆண்டு தோறும் பெய்யும் மழையின் அளவு 3000 மி.மீ. இதில் 90 சதவீதம் 6 மாத காலத்தில் பெய்கிறது. இந்த ஆண்டு ஜூன் 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 19ஆம் தேதிவரை மிகக் கடுமையான மழை அங்கே பெய்தது. இந்த காலகட்டத்தில் பெய்ய வேண்டிய மழை 1649.5 தான். ஆனால், 2346.6 மி.மீ அளவுக்கு மழை பெய்துவிட்டது. வழக்கமான அளவைவிட 42 சதவீதம் அதிகம். ஆகஸ்ட்டில் மட்டும் 164 சதவீதம் அதிகம் பெய்தது. ஆகஸட் 8-9 தேதிகளில் பெய்த மழையை அடுத்து எல்லா அணைகளும் தங்கள் முழுக் கொள்ளளவை எட்டத் தொடங்கியிருந்தன. இதற்குப் பிறகு 14ஆம் தேதி துவங்கி 19ஆம் தேதிவரை மீண்டும் கடுமையான மழை பெய்தது. இதனால், மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களில் 13ல் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. 1924க்குப் பிறகு ஆகஸ்ட் 15-17ல் அவ்வளவு மழை பெய்தது இப்போதுதான்.

2. ஆகஸ்ட் 15-17ல் ஏற்பட்ட மழை பீர்மேட்டை மையம் கொண்டு கேரளா முழுவதும் விளாசித் தள்ளியது. அணைகள் முழுமையாக நிரம்பியதால் மாநிலத்தில் உள்ள 35 அணைகள் திறக்கப்பட்டன. 26 ஆண்டுகளுக்குப் பிறகு முழுவதும் நிரம்பியதால், அதன் மதகுகளும் திறக்கப்பட்டன.

3. கேரளாவில் மொத்தம் 57 அணைகள் இருக்கின்றன. இதில் 4 அணைகள் தமிழகத்தால் இயக்கப்படுகின்றன. இந்த 57 அணைகளில் 7 அணைகள் மிகப் பெரியவை. கேரள அணைகளில் தேக்கப்படும் நீரில் 74 சதவீதம் இந்த அணைகளில்தான் தேக்கப்படுகின்றன. அவை, 1. இடுக்கி, 2. இடமலையாறு, 3. கல்லாடா, 4. காக்கி, 5. பரம்பிகுளம், 6. முல்லைப் பெரியாறு, 7. மலம்புழா.

4. இருநூற்றி நாற்பத்து நான்கு கிலோ மீட்டர் நீளத்திற்கு ஓடும் பெரியாறுதான் கேரளாவின் மிகப் பெரிய நதி. இதன் தண்ணீர் பாயும் பகுதிகளில் 98 சதவீதம் கேரளாவிலும் 2 சதவீதம் தமிழகத்திலும் உள்ளது. இந்த நதியின் குறுக்கில் கட்டப்பட்டுள்ள மூன்று பெரிய அணைகள் முல்லைப் பெரியாறு, இடமலையாறு, இடுக்கி ஆகியவை. முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்புப் பகுதியின் பரப்பு 237 ச.கி.மீ. இடுக்கிக்கும் முல்லைப் பெரியாறு அணைக்கும் இடையில் உள்ள நீர்பிடிப்புப் பகுதியின் பரப்பு 605 ச.கி.மீ.

5. ஆகஸ்ட் 15 லிருந்து 17 வரை மூன்று நாட்களில் முல்லைப் பெரியாறு நீர்ப் பிடிப்பு பகுதியில் பெய்த மழையின் அளவு மட்டும் 1147 மி.மீ. முல்லைப் பெரியாறு அணைக்கும் இடுக்கிக்கும் இடையில் உள்ள பரப்பில் பெய்த மழை 1445 மி.மீ.

6. இந்த பெரியாறு நீர்ப்பிடிப்புப் பகுதியில் நீலேஸ்வரம் என்ற இடத்தில் வெள்ளத்தைக் கண்காணிக்கும் தளம் இருக்கிறது. அதன் பெயர் Neeleshwaram G&D stie. அந்த அளவீட்டின்படி,. ஆகஸட் 15-17ல் நதியில் பாய்ந்த நீரின் அளவு 1.93 பில்லியன் கன அடி. ஆகஸ்ட் 15-17 காலகட்டத்தில் இடுக்கி அணைக்கு வந்த நீர், அதில் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறக்கப்பட்ட நீர், இடுக்கி அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட நீர் எவ்வளவு என்பதை வரைபடம் ஒன்றிலிருந்து தெரிந்துகொள்ளலாம். அதாவது இந்த மூன்று நாட்களில் இடுக்கி அணைக்கு வந்த நீரில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே முல்லைப் பெரியாறில் இருந்து வந்த நீர்.

7. இந்த அறிக்கையின் முக்கியப் பகுதி இங்கேதான் வருகிறது. அதாவது இடுக்கி அணைக்கு உச்சகட்டமாக நீர்வரத்து இருந்தபோது அணையிலிருந்து வினாடிக்கு 1500 மில்லியன் கன அடி நீர் திறக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் நீலேஸ்வரம் வெள்ள அளவீட்டு மையத்தில் ஓடிய வெள்ளத்தின் அளவு 8800 மில்லியன் கன அடி. இதில் அணையிலிருந்து திறக்கப்பட்ட நீரான 1500 மில்லியன் கன அடியைக் கழித்தாலும் 7300 மில்லியன் கன அடி நீர் ஆற்றில் ஓடியிருக்கும். அது மழை நீர். இடுக்கி அணை திறப்புக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. வெள்ளத்திற்கும் மிகப் பெரிய இடுக்கி அணை திறப்புக்கும் சம்பந்தமில்லையென்றால், அதில் மூன்றில் ஒரு பங்கு நீரை இடுக்கிக்குத் திறந்த முல்லைப் பெரியாறு அணைக்கு என்ன தொடர்பு இருக்க முடியும்? பெரியாற்று வெள்ளத்தில் இடுக்கி அணையின் பங்கு மிக மிகக் குறைவு என்பதுதான் இதன் அர்த்தம்.

8. ஆகஸ்ட் 1-19 வரை பெய்த மொத்த மழையான 758.6 மி.மீ மழையில் 15-17 ஆகிய மூன்று நாட்களில் மட்டும் 414 மி.மீ மழை பெய்திருக்கிறது. இதுதான் வெள்ளத்திற்குக் காரணம்.

படம் 2

9. புள்ளி விவரங்களை வைத்து நீங்களே ஒரு முடிவுக்கு வந்தால் போதுமா? அறிக்கையில் எங்காவது இதைச் சொல்லியிருக்கிறார்களா என்றால், ஆம் என்பதுதான் பதில். “கேரளாவில் உள்ள அணைகளால் வெள்ளம் ஏற்படவில்லை. அதே சமயம் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தவும் அவை உதவவில்லை. அணையின் நீர்மட்டத்தை குறைவாக வைத்திருந்தால், வெள்ளத்தைக் கட்டுப்படுத்தியிருக்கலாம் என்று சொல்ல முடியாது. குறைவாக வைத்திருந்தாலும் முதல் நாள் மழையிலேயே அவை நிறைந்து, திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்” என்கிறது ஆணையம். (பார்க்க படம் -2.)

ஹிமான்ஷு தாக்கூர் தன் கட்டுரையில் சொன்னபடி, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 147 அடியை எட்டியதாக ஒரு இடத்திலும் அறிக்கையில் சொல்லப்படவில்லை. இதைச் சுட்டிக்காட்டியதற்குத்தான் தமிழ்த் தேசியவாதிகளின் உளறல் என்றார்கள்.

நன்றி: Muralidharan Kasi Viswanathan

பங்குச் சந்தை 3 : பங்குகள் இலாபம் பார்ப்பது ஊகத்திலா, நிறுவனங்களின் உற்பத்தியிலா ?

பந்தய மூலதனம் – 3

பங்குச் சந்தை குரங்குகளை வாங்கி விற்கும் சூதாட்டம் மட்டும்தானா?

நாம் ஏன் பங்குச்சந்தை பற்றி புரிந்துகொள்ள வேண்டும் ,நமக்கும் பங்குச் சந்தைக்கும் என்ன சம்பந்தம்? – கேள்விக்கு விடை தெரிய தொடர்ந்து படியுங்கள்.

ம்ம அமித் பாய் தன்னுடைய 10 லட்சம் ரூபாயை என்ன செய்தார் என்று இப்போது பார்க்கலாம். புடவை வாங்கி விற்று சம்பாதிப்பதில் அவருக்கு ஆர்வம் இல்லை; வாடிக்கையாளரிடம் ஆர்டர் பிடித்து பொருள் செய்து கொடுத்து சிரமப்படுவதையும் அவர் விரும்பவில்லை; உற்பத்தி அல்லது வணிகம் செய்பவருக்கு கடன் கொடுத்து வட்டி வசூலிப்பதில் இறங்கவும் அவர் தயாராக இல்லை. நோகாமல் அடுத்தவர் தோள் மீது சவாரி செய்து பணத்தை பெருக்குவதற்கு என்ன வழி என்று பார்க்கிறார்.

இதை நமது எளிய உதாரணத்துடன் பொருத்தி பார்க்கலாம். இஷா 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்து ஒரு வருடத்தில் ரூ 2 லட்சம் லாபம் ஈட்டியுள்ளார். அடுத்த ஆண்டில் அருந்ததியிடமிருந்து 10 லட்ச ரூபாய் கடன் வாங்கி தொழிலை இன்னும் விரிவாக்கியிருக்கிறார். இந்த அடிப்படையில், தான் முதலீடு செய்த ரூ 10 லட்சத்தில் 10%-ஐ (ரூ 1 லட்சம் மதிப்பு) பங்குகளாக அமித்துக்கு விற்கிறார். அதற்கு ரூ 10 லட்சம் விலை வைக்கிறார்.

நியூயார்க் பங்குச் சந்தை

முந்தைய பகுதியில் குறிப்பிட்ட டி.சி.எஸ், விப்ரோ, எச்.சி.எல் போன்ற மென்பொருள் நிறுவனங்கள் தமது மூலதனத்தை சிறு பகுதிகளாக பிரித்து பங்குகளாக விற்றுள்ளன. ரெனால்ட் நிசான், டி.வி.எஸ், ஹீரோ, மாருதி போன்ற வாகன உற்பத்தி நிறுவனங்களும் அவ்வாறு பங்குகளை வெளியிடுகின்றன. பாரத ஸ்டேட் வங்கி, முத்தூட் ஃபைனான்ஸ் போன்ற வட்டிக்குக் கடன் கொடுக்கும் நிறுவனங்களும் தமது மூலதனத்தில் ஒரு பகுதியை பங்குகளாக விற்கின்றன.

“இஷா நல்ல திறமையாக வியாபாரம் செய்கிறார், இன்னும் ரூ 10 லட்சம் அவர் கையில் போனால் அவரது லாபம் அதிகரிக்கும், எனவே இந்த பங்குகளை வாங்கிக் கொள்ளலாம்” என்று அமித் தனது 10 லட்சத்தை இஷாவின் பங்குகளை வாங்க பயன்படுத்துகிறார்.

இனிமேல், இஷா நிறுவனத்தின் லாபத்தில் இருந்து ஒரு பகுதியை ஈவுத் தொகையாக அமித்துக்கு கொடுப்பார். அதை விட முக்கியமாக சுறுசுறுப்பாக வளரும் வியாபாரத்தைப் பார்க்கும் நரேன் என்பவர் இஷாவின் பங்குகளை வாங்க ஆர்வம் காட்டினால், அமித் தன் கைவசம் இருக்கும் பங்குகளை ரூ 15 லட்சத்துக்கு அவரிடம் விற்று விடுவார். அமித்துக்கு ரூ 5 லட்சம் லாபம்.

நிறுவன பங்குகளை வெளியிடுவது என்பது இப்படி எளிமையாக ஓரிரு முதலீட்டாளர்கள் மூலம் நடைபெறுவதில்லை என்பது உண்மைதான்.

டி.சி.எஸ் முதலான பெரிய நிறுவனங்கள் கோடிக்கணக்கான பங்குகளை வெளியிடுகின்றன. அதை வாங்குவதற்கு லட்சக்கணக்கான சிறிய, பெரிய முதலீட்டாளர்களும், நிதி நிறுவனங்களும் விண்ணப்பிக்கின்றனர். டி.சி.எஸ்-ன் கடந்த கால செயல்பாடுகள், ஆண்டு வருமானம், ஆண்டு லாபம், லாப வீதம், எதிர்கால சாத்தியங்கள், நிர்வாகக் குழுவின் திறமை, அது செயல்படும் சந்தையில் உள்ள வாய்ப்புகள் என்பதை எல்லாம் பார்ப்பார்கள்.

மும்பை பங்குச் சந்தை

அதன் அடிப்படையில் அந்நிறுவனத்தின் பங்குகளை கூடுதல் விலை கொடுத்து வாங்குவது வொர்த்-தான் என்று முடிவு செய்கிறார்கள். அதாவது ரூ 10-க்கான பங்குகளை ரூ 100 கொடுத்து வாங்கும் அளவுக்கு நிறுவனத்தின் எதிர்கால வருவாயும், லாபமும் இருக்கும் என்று தனது பணத்தை பந்தயம் கட்டுகிறார் முதலீட்டாளர்.

இவற்றைப் போன்ற நூற்றுக் கணக்கான நிறுவனங்களின் பங்குகள் அவற்றின் முக மதிப்பை விட (1000 ரூபாய் நோட்டின் முக மதிப்பு ரூ 1000) சில, பல மடங்கு அதிகமான விலையில் வெளியிடப்பட்டுள்ளன. முதல் முறை நிறுவனத்திடமிருந்து பங்குகளை வாங்கிய பிறகு பிற முதலீட்டாளர்களிடம் அவற்றை விற்கவோ, புதிய பங்குகளை வாங்கவோ பயன்படும் சந்தைதான் பங்குச் சந்தை.

இங்கும் குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்கு விலை எதிர்காலத்தில் ஏறுமா, இறங்குமா என்பதற்கான நூற்றுக்கணக்கான முதலீட்டாளர்களுக்கிடையேயான போட்டியின் மூலம் பங்கு விலை ஏறி இறங்குகிறது. இங்கும் வாங்குபவரின் முதலீடு என்பது நிறுவனத்தின் எதிர்கால செயல்பாடு மீது பந்தயம் கட்டுவதாகவே இருக்கிறது.

அமித் தனக்குக் கிடைத்த 10 லட்சம் ரூபாயை மும்பை பங்குச் சந்தையில் இது போன்ற பல்வேறு நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதில் செலவிட்டார். இந்த நிறுவனங்கள் ஒவ்வொன்றும் பிரகாஷ் போலவே, இஷா போலவோ, அருந்ததி போலவோ வியாபாரத்திலோ, உற்பத்தியிலோ, கடன் கொடுப்பதிலோ தமது பணத்தை போட்டு (அதாவது முதலீடு செய்து) லாபம் ஈட்டும் தொழிலில் உள்ளன.

அவர்கள் லாபம் ஈட்டுவார்கள் என்ற பந்தயம்தான் அமித்-ன் முதலீடு. நிறுவனம் லாபம் ஈட்டினால் மொத்த லாபத்தில் ஒரு பகுதி ஈவுத் தொகையாக முதலீட்டாளருக்குக் கிடைக்கும். அதை விட முக்கியமாக, இந்நிறுவனத்தின் செயல்பாடுகள் பிரமாதமாக இருக்கும் என்று இன்னும் பல பேர் அதன் மீது பந்தயம் கட்டி அதன் பங்குகளை வாங்க முன் வந்தால், பங்குச் சந்தையில் அதன் விலை ஏறும். அந்த நேரத்தில் கூடுதல் விலைக்கு கைவசம் வைத்திருக்கும் பங்குகளை விற்று லாபம் சம்பாதித்துக் கொள்ளலாம்.

இவ்வாறு அமித் வாங்கிய பங்குகளில் பலவற்றின் விலை ஏறிவிட ஒரு ஆண்டு இறுதியில் அவரது கைவசம் இருக்கும் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ 15 லட்சமாக உள்ளது. அதாவது பங்குகள் மீது அவர் கட்டிய பந்தயத்தில் அவர் வெற்றி பெற்றிருக்கிறார்.

இந்த 5 லட்சம் அதிகரித்தது பிரகாஷ் போலவோ, இஷா போலவோ, அருந்ததி போலவோ ஈட்டிய லாபத்தினால் அல்ல. தான் வாங்கிய பங்குகளுக்கு சொந்தக்கார ஹீரோ மோட்டார், ஹிந்துஸ்தான் யூனிலீவர் அல்லது இன்ஃபோசிஸ் ஈட்டிய லாபத்திலிருந்து கிடைத்த ஈவுத்தொகையாலும் இல்லை. இதில் பெரும்பகுதி அமித் போன்று இந்நிறுவனங்களின் எதிர்கால செயல்பாடு மீது பந்தயம் கட்டிய பிற முதலீட்டாளர்கள் அதிக விலை கொடுத்து பங்குகளை வாங்கியதன் விளைவு.

அவர்கள் அனைவரின் நம்பிக்கையும், கணிப்பும் இந்த நிறுவனங்கள் ஏதோ பொருளை உற்பத்தி செய்து விற்று, அல்லது வாங்கி விற்று அல்லது அப்படி விற்பவர்களுக்கு கடன் கொடுத்து லாபத்தை ஈட்டுவதன் மீது இருக்கின்றன.

உதாரணமாக, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பங்கு விலை அடிப்படையிலான டி.சி.எஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ 6.8 லட்சம் கோடியை ($10,000 கோடி) தாண்டியது. ஆனால், 2017-18-ம் ஆண்டில் அந்நிறுவனத்தின் மொத்த ஆண்டு வருவாயே ரூ 1.03 லட்சம் கோடி, அதன் லாபம் ரூ 25,000 கோடி. அதாவது அதன் பங்கு விலை லாபத்தை விட சுமார் 27 மடங்கு. லாப ஈவுத் தொகை அடிப்படையில் கணக்கிட்டால், பங்குகளை வாங்கியவருக்குக் கிடைக்கும் லாபம் ஆண்டுக்கு சுமார் 3% தான் (இது வங்கி ஃபிக்சட் டெப்பாசிட் வட்டி வீதத்தை விட குறைவு). ஆனால், பலரும் பங்குகளை வாங்குவது டி.சி.எஸ்-ன் பங்கு விலை தொடர்ந்து ஏறும், அதை எதிர்காலத்தில் அதிக விலைக்கு விற்று விடலாம் என்ற நம்பிக்கையில் கட்டும் பந்தயம்தான்.

இந்த பங்குச் சந்தை என்பது ஆயிரக்கணக்கான நிறுவனங்கள், லட்சக்கணக்கான நபர்கள், அரசுகள், வங்கிகள், கோடிக்கணக்கான மக்களோடு தொடர்புடையது. பல ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி வளர்ந்து வந்த வரலாற்றைக் கொண்டது. இவை அனைத்தையும் சுருக்கமாக எளிமையாக புரிந்து கொள்ள முயற்சிக்கும் போது கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும். இதை எளிதாக புரிந்து கொள்வதற்கு உலகிலேயே முதல் முறை பங்குகளை வெளியிட்ட நிறுவனம் ஒன்றின் தோற்றம், வளர்ச்சி, வீழ்ச்சி பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

மூலதனம் பற்றி சுருக்கமாக இன்னொரு முறை சொல்ல வேண்டுமானால், சங்கரின் பணம் செலவாகி விட்டது. பிரகாஷின் பணம் உற்பத்தி மூலதனமாகி பெருகியது, இஷாவின் பணம் வணிக மூலதனமாக பெருகியது, அருந்ததியின் பணம் வட்டி மூலதனமாக பெருகியது. அமித்-ன் பணமோ இது போன்ற நிறுவனங்களின் செயல்பாடு மீது பந்தயம் கட்டப்பட்டு பெருகியுள்ளது. இதை பந்தய மூலதனம் (speculative capital) என்று அழைக்கிறோம்.

என்னவாக இருந்தாலும் சரி, தன்னைத் தானே பெருக்கிக் கொள்ளும்படியான பணத்தைத்தான் மூலதனம் என்று அழைக்கிறோம். அந்த வகையில் உற்பத்தி மூலதனமும், வணிக மூலதனமும், வங்கி மூலதனமும், பந்தய மூலதனமும் வெவ்வேறு வழிகளில் பெருகினாலும் ஒரு பொதுவான தன்மையை, ஒன்றோடொன்று இணைப்புகளும் உறவுகளும் கொண்டுள்ளன.

(தொடரும்)
நன்றி : new-democrats

தொடரின் முந்தைய பாகங்கள்:
பங்குச் சந்தை என்றால் என்ன ? – பாகம் 1
பங்குச் சந்தை 2 : செலவழித்தால் பணம் – பெருக்கினால் மூலதனம் !

உ.பி காவி தர்பார் : 1200 போலி மோதல் கொலை – 160 பேர் NSA – வில் கைது ! சிறப்புக் கட்டுரை

ந்துத்துவ பாசிஸ்டுகளின் கையில் ஆட்சி அதிகாரம் கிடைக்கும்போது, சிறுபான்மையினருக்கு அது எத்தகைய கொடுங்கனவாக இருக்கும் என்பதற்கு மோடியின் குஜராத் மிகச் சிறந்த உதாரணம். மோடிக்கு போட்டியாக இப்போது களமிறங்கியிருக்கிறார் இந்துத்துவ சாமியார் ஆதித்யநாத். இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தின் முதலமைச்சரான ஆதித்யநாத்தின் ஆட்சி முசுலீம்களுக்கு கொடுங்கனவாக மாறிக்கொண்டிருக்கிறது.  ஆதித்யநாத் பதவியேற்ற ஓராண்டுக்குள் 160 பேர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த கைதுகள் குறித்த பின்னணியையும் கைதானவர்களின் சமூகச் சூழலையும் மிக விரிவாக பதிவு செய்திருக்கிறார் பத்திரிகையாளர் நேஹா தீட்சித். த வயர் இணையதளத்தில் வெளியான அவருடைய அறிக்கையின் சுருக்கப்பட்ட பதிவு இங்கே.

ஓராண்டில் 160 கைதுகள்:
உ.பி. யில் முசுலீம்களுக்கு எதிரான புதிய ஆயுதம் ‘தேசிய பாதுகாப்புச் சட்டம்’

த்தர பிரதேச மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவோம் எனக் கூறிக்கொண்டு ஆட்சியைப் பிடித்த ஆதித்யநாத், தான் பதவியேற்றதிலிருந்து ஒரே ஒரு மதக்கலவரம் கூட நிகழவில்லை என 2018 மார்ச் 4-ஆம் தேதி கூறினார். பத்து நாட்களுக்குப் பிறகு மத்திய உள்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் மதக்கலவரங்கள் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் உத்தரபிரதேசம் முதலிடத்தில் தொடர்வது தெரியவந்தது. 2017-ஆம் ஆண்டு மத வன்முறை தொடர்பான மோதல்களில் 44 பேர் இறந்துள்ளனர்; 450 பேர் காயமுற்றுள்ளனர் என அந்த அறிக்கை சொன்னது.  ஆதித்யநாத், சட்டம் ஒழுங்கு சரியில்லை என சொன்ன முந்தைய ஆட்சிக் காலத்தில் அதாவது மத வன்முறைகளால் 2016-ல் 29 மரணங்களும் 490 பேருக்கு காயமும் ஏற்பட்டதாக அறிக்கை சொல்கிறது. 2015-ஆம் ஆண்டு 22 மரணங்களும் 410 பேர் காயமுற்றதாகவும் மத்திய அரசின் புள்ளிவிவரம் சொன்னது. உ.பி-யின் புலாந்த்சாஹர் மற்றும் சஹாரன்பூரில் நடந்த மதக்கலவரத்துக்கு ஆதித்யநாத் தலைமையில் ஹிந்து யுவ வாஹினி மற்றும் உள்ளூர் பாஜகவினரே காரணமாக இருந்தது வெட்ட வெளிச்சமாக தெரிந்தது. ஆங்காங்கே கண்டனங்கள் எழுந்தனவேயன்றி எந்தவித சட்ட நடவடிக்கையும் இவர்களின்மேல் எடுக்கப்படவில்லை.

ஜனவரி 16, 2018-ஆம் ஆண்டு ஆதித்யநாத்தின் அரசு, சட்டம் – ஒழுங்கை காப்பாற்றும் பொருட்டு 160 பேர் தேசிய பாதுகாப்புச் சட்டதின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாக பத்திரிகை செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. பத்து மாதங்களில்  போலீசாரை ஏவி 1,200 என்கவுண்டர்களை நடத்திய பாசிஸ்ட் சாமியாரின் சாதனைக்கு அடுத்த சாதனையை சொன்னது மேற்கண்ட அறிக்கை. தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைதானவர்களில் பீம் ஆர்மியின் நிறுவனர் சந்திரசேகர் ஆசாத்தும் ஒருவர். 2017 மே மாதம் முதல் இவர் சிறையில் இருந்தார்.

பீம் சேனை என்ற அமைப்பின் நிறுவனரான சந்திர சேகர ஆசாத் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சஹரன்பூரில் தலித் மக்கள் மற்றும் தாக்கூர்களுக்கு இடையில் நடந்த மோதல் வழக்கில் ஆதித்யநாத் அரசால் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து கடந்த 2017, நவம்பரில அவருக்கு பிணை வழங்கியது அலகாபாத் உயர்நீதிமன்றம். உடனடியாக அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்து சிறையிலடைத்தது போலீசு. தற்போது அவ்வழக்கில் எவ்வித முகாந்திரமும் இல்லாத நிலையில் கடந்த 13.09.2018 அன்று அவர் மீதான தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்தது உ.பி அரசு. 14.09.2018 அன்று அவர் சிறையிலிருந்து வெளிவந்தார்.

வழக்கறிஞர் இல்லை; மேல் முறையீடு இல்லை; வாதங்கள் இல்லை… இதுதான் தேசிய பாதுகாப்புச் சட்டம். 1980, செப்டம்பர் 23-ஆம் தேதி நடைமுறைக்கு வந்த இந்த சட்டத்தின் நோக்கம், “சில வழக்குகளில் அல்லது சில விஷயங்களில் தொடர்புள்ளவர்களை முன்னெச்சரிக்கையாக கைது செய்யும் நடவடிக்கை” என சொல்லப்பட்டிருக்கிறது. ‘தேசத்தின் பாதுகாப்பு மற்றும் பொது அமைதி’யை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எந்த ஒரு நபரையும் இந்த சட்டத்தின் மூலம் கைது செய்ய முடியும். 12 மாதம் வரையிலும் இந்த சட்டத்தில் கைது செய்யப்படும் ஒரு நபரை தடுப்புக் காவலில் வைக்க முடியும். மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டாலோ அல்லது போலீசு கமிஷ்னராலோ உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கைது நடந்தாலும் மாநில அரசிடமே கைது குறித்த அறிக்கையை சமர்பிக்க வேண்டும்.

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள்.

இந்த சட்டத்தில் கைதாகிறவருக்கு, அவர் ஏன் கைது செய்யப்பட்டார் என்கிற தகவலை சொல்லாமல் 10 நாட்கள் வரைக்கும் வைத்திருக்கலாம். பொதுநலன் கருதி இந்தத் தகவலை சொல்லாமல் வைத்திருக்க அதிகாரம் தருகிறது இந்த சட்டம்! அதோடு, கைது குறித்து கைதானவர் யாரையும் கேள்வி கேட்க முடியாது என்பது சட்டத்தின் மற்றொரு ‘சிறப்பம்சம்’. இந்த சட்டத்தில் கைதாகி மூன்று மாதத்துக்கு மேல் சிறையில் உள்ளவர்களின் காவலை நீட்டிக்கலாமா வேண்டாமா என்பதை மூன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழு அல்லது அதற்கு இணையான உயர் நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட குழு முடிவு செய்யும். அவர்களின் முடிவுபடி கைதானவர்களின் காவல் 12 மாதம் வரை நீட்டிக்கப்பட முடியும்.

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள்.

இப்படியான ஆள் தூக்கி சட்டத்தில் கைதான 160 பேரில் 15 குடும்பங்களைச் சந்தித்திருக்கிறார் பத்திரிகையாளர் நேஹா தீட்சித். இந்த 15 பேரும் உத்தரபிரதேசத்தின் கிழக்குப் பகுதியான பூர்வாஞ்சலைச் சேர்ந்தவர்கள். மதக்கலவரம் பின்னணியில் இந்தக் கைதுகள் அரங்கேற்றப்பட்டிருக்கின்றன. ஹிந்து யுவ வாஹினி, ஹிந்து சமாஜ், அகில பாரதிய ஹிந்து மகாசபா போன்ற காவி பயங்கரவாத குழுக்களைச் சேர்ந்தவர்கள் இந்தக் கலவரங்களைத் தூண்டியவர்கள் என சொல்லப்பட்டபோதும், முசுலீம்கள் மட்டுமே சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் முதலில் பிணை வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், உடனடியாக அவர்கள் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 2014 நடந்த மக்களவை தேர்தலை முன்வைத்து ஆங்காங்கே சிறிய அளவிலான மதக்கலவரங்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டன. இப்போது நடக்கும் கைது சங்பரிவார், 2019 மக்களவை தேர்தலை எதிர்க்கொள்ள போட்டுள்ள திட்டத்தின் ஒரு பகுதி என்கிறார்கள் உள்ளூர்வாசிகள்.

திட்டமிட்டு நடத்தப்படும் மதக்கலவரங்கள்

உ.பி. காவல் நிலையங்களில் மதம் தொடர்பான வழிபாடுகள் நடத்தப்படுவது குறித்த ஊடக கேள்வி ஒன்றுக்கு முதலமைச்சர் ஆதித்யநாத், “சாலையில் நமாஸ் செய்வது தடுத்து நிறுத்தப்படாதபோது, காவல் நிலையங்களில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுவதை தடுத்து நிறுத்த எனக்கு உரிமை இல்லை” என்றார்.

சிவபக்தர்கள் என்கிற பெயரில் பெரும் ஒலியெழுப்பும் ஸ்பீக்கர்களை கட்டிக்கொண்டு வீதிவீதியாக ரவுடியிசம் செய்பவர்கள் குறித்து ஆதித்யநாத் இப்படி சொன்னார், “அவர்கள் சிவ யாத்திரை செய்கிறார்கள்; சவ யாத்திரை அல்ல”. அதாவது ஆதித்யநாத் என்ற இந்து சாமியாரின் ஆட்சியில் மத கொண்டாட்டங்கள் என்கிற ரவுடியிசம் சட்டத்துக்கு அப்பாற்பட்டது.

கான்பூரில் மன்சூரின் கூடார இருப்பிடம் கொழுத்தப்பட்டது.

கடந்த ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி முகரம் பண்டிகை வந்தது. இந்துக்களின் பண்டிகையில் ஒரு பகுதியான துர்கா சிலையை நீரில் கரைக்கும் சடங்கும் அந்த நாளில் வந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த நாளில் கலவரங்கள் ஏற்பட வாய்ப்புண்டு என உளவுத்துறையினர் எச்சரித்திருந்தனர். மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அக்டோபர் 1-ஆம் தேதி துர்கா சிலையை கரைக்க வேண்டாம், 2-ஆம் தேதியிலிருந்து 4-ஆம் தேதிக்குள் சிலைகளை கரைக்கலாம் என வேண்டுகோள் விடுத்திருந்தார். பாஜகவினரிடமிருந்து எதிர்ப்புகள் வந்தபோது, அங்கே பிரச்சினைகள் ஏதுவும் ஏற்படவில்லை. ஆனால், உ.பியின் முதலமைச்சர் பகிரங்கமாக விடுத்த அழைப்பின் காரணமாக வீதிகள் தோறும் கொண்டாட்டங்கள் நடந்தன. கான்பூர், பாலியா, பிலிபத், கோண்டா, அம்பேத்கர் நகர், சம்பால், அலகாபாத், கவுசாம்பி மற்றும் குஷிநகரில் அக்டோபர் 1-ஆம் தேதி இரண்டு மத பண்டிகைகளும் வந்த காரணத்தால் மதக்கலவரம் உருவாகும் சூழல் உண்டானது.

அக்டோபர் 1-ஆம் தேதி, கான்பூரில் இரண்டு பெரிய மத வன்முறைகள் நடந்தன. ராவத்புராவில் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் ராம் லீலா கமிட்டி ராமரின் திருமண விழாவினை கொண்டாடியது. இதே நாளில் முகரம் விழாவின் பகுதியான தாஜியாவும் வந்தது. வன்முறை ஏற்படக்கூடும் என உளவுத்துறை எச்சரித்தபோதும், அரசு கண்டு கொள்ளவில்லை. கல்வீச்சு சம்பவம் நடக்குமளவுக்கு அங்கே பிரச்சினை உருவானது. துப்பாக்கிச் சூடு நடந்தது; இரண்டு காவலர் உள்பட பலர் காயமடைந்தனர். ராம் லீலா கமிட்டியைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு, பிறகு விடுவிக்கப்பட்டனர்.

அதே நாளில் ஜுகி பரம் பூர்வா பகுதியில் நடந்த முகரம் ஊர்வலத்தை, ஹிந்து சமாஜ் பார்டியை சேர்ந்தவர்கள் துர்கா சிலையை கரைக்கும் ஊரவலம் நடப்பதாகக் கூறி நிறுத்தினர். இங்கேயும் துப்பாக்கிச்சூடும் கல்வீச்சு சம்பவங்களும் அரங்கேறின. இந்தச் சிறிய பகுதியில் முசுலீம்கள் ஒருபுறத்திலும் தலித்துகள் இன்னொருபுறத்திலும் வாழ்கிறார்கள். இந்த வன்முறையின்போது ஒரு போலீசு வாகனமும் தலித் பகுதியில் வசித்த ஒரே ஒரு முசுலீமின் வீடும் கடையும் கொளுத்தப்பட்டன. 57 பேரை போலீசு அப்போது கைது செய்தது. ஹக்கீம் கான், ஃபர்குன் சித்திக், முகமது சலிமை தவிர, மற்ற அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இவர்கள் மூவருக்கும் உள்ளூர் நீதிமன்றம் பிணை வழங்கியிருந்த நிலையில், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் மீண்டும் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சிறைக் கம்பிகளுக்குள் கடந்த பத்து மாதங்களாக அடைபட்டிருக்கும் இவர்களில் ஹக்கீமுக்கு மகள் பிறந்திருக்கிறாள்; ஃப்ரகுன்னின் மகள், கிரிமினலின் மகள் என்ற கேலிப்பேச்சுக்கு ஆளாகி பள்ளிக்குப் போக முடியாமல் இருக்கிறாள். சலிமின் குழந்தைகள், வாழ வழியின்றி உறவினர்கள் வீடுகளுக்கு மாறி மாறி சென்றுகொண்டிருக்கின்றனர்.

லோதேஷ்வர் கோவில் அழைக்கிறது… (புகைப்படம் நேஹா தீக்-ஷித்)

35 வயதான் ஹக்கீம் கான், சஹாரா குழுமத்தில் இன்சூரன்ஸ் ஏஜெண்டாக பணிபுரிந்தவர். மத அமைதி ஏற்படுத்தும் பல விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவராக இருந்திருக்கிறார் ஹக்கீம். அக்டோபர் 1-ஆம் தேதி கூட, இரண்டு தரப்புக்கும் அமைதி ஏற்படுத்தும் பொருட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார்.

“அவர் கோயில் திருவிழாக்களில் கலந்துகொள்வார். அனுமனுக்கு செவ்வாய் கிழமைகளில் அன்னதானம் செய்வார். கோயில் படிக்கட்டுகளை சுத்தம் செய்வார்” என்கிறார் ஹக்கீமின் வீட்டருகே வசிக்கும் ராம் பிரகாஷ்.

அக்டோபர் 2-ஆம் தேதி போலீசு ஹக்கீமை கைது செய்திருக்கிறது. “அவரை பெல்டால் அடித்து இழுத்துச் சென்றார்கள். ‘நீ இஸ்லாம் வாழ்க என அடிக்கடி சொல்வாய் இல்லையா?’ என ஒரு காவலர் அவரைக் கேட்டார்” என்கிறார் ஹக்கீமின் மூத்த சகோதரர் முகமது காசிம்.

ஃபர்குன் சித்திக் கைது செய்யப்பட்டதற்காக அவருடைய 12 வயது மகள் தன்னுடைய பள்ளியில் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகியிருக்கிறார். ‘கிரிமினலின் மகள்’ என அவளுடைய பள்ளி ஆசிரியர் அழைத்திருக்கிறார். அவளுடன் பயிலும் சக மாணவர்கள், ‘முசுலீம்கள் தீவிரவாதிகள்’ என எப்போதும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். தினசரி எதிர்கொள்ளும் இத்தகைய செயல்பாடுகளால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண், கல்வியாண்டின் மத்தியில் பள்ளிக்கு போவதை நிறுத்தியிருக்கிறார். கடந்த மாதம், வேறு பள்ளியில் சேர்ந்தபோதும் இதே விஷயங்கள் அவளை அச்சுறுத்தியிருக்கின்றன.

“அவர் நகராட்சியில் ஒப்பந்தக்காரராக பணியாற்றினார். வருமான வரி செலுத்தும் ஒருவர் திடீரென தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கைதாகி பத்து மாதங்கள் ஆகின்றன. நீங்களே சொல்லும் மதத்தை வைத்து ஒடுக்குவதன்றி இதன் பெயர் வேறன்ன?” என்கிறார் ஃபர்குனின் மனைவி சோபியா. அவர்களுடைய சேமிப்பெல்லாம் இந்த வழக்குக்காக கரைந்து வருவதாக சொல்கிறார் இவர்.

தலித் பகுதியில் இருந்த ஒரே முசுலீம். ஓலை குடிசை கடை சலீமுக்கு சொந்தமானது. அந்தக் கடையை ஒட்டியே அவருடைய வீடும் இருந்தது.  “நாங்கள் பல ஆண்டுகளாக இந்த இடத்தில்தான் வசிக்கிறோம். ஒருபோதும் யாருக்கும் அச்சுறுத்தலாக இருந்ததில்லை” என்கிறார் சலீமின் மனைவி ருகி.  வன்முறை அரங்கேறிய அந்த நாளில் முதலில் கடைக்கு தீ வைக்கப்பட்டிருக்கிறது, பிறகு வீட்டுக்கு வைத்திருக்கிறார்கள்.

“துர்கா சிலையை கரைக்கும் நிகழ்வில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்; அத்தனை பெரிய கூட்டத்தை இதுவரை கண்டதில்லை. அப்போது ஒருவர் கடையை அடித்து நொறுக்கினார். பிறகு கடைக்கும் வீட்டுக்கும் தீ வைத்தனர்” என்கிறார் ருகி. இவருடைய இரண்டு வயது மகள், வன்முறை வெறியாட்டத்தின்போது மயங்கி விழுந்திருக்கிறார். மூன்று மணி நேர போராட்டத்துக்கு பின் இவர்கள் உறவினர்களால் காப்பாற்றப்பட்டிருக்கின்றனர்.

“இந்த வன்முறையில் ஈடுபட்டவர்களில், அக்கம்பக்கத்தில் வசித்த இரண்டு மூன்று பேரும் உண்டு. போலிசுக்கு அழைத்து போனால் அவர்களை நான் அடையாளம் காட்டுவேன்” என்கிறார் சலீமின் 12 வயது மகன் பாப்பு.

பஹ்ரைச்சில் தனது மகள்களுடன் அகீலா. (படம்: நேகா தீக் ஷித்)

இந்துத்துவ கும்பலின் கும்பல் வன்முறையால் தன்னுடைய குடிசையையும் கடையையும் இழந்த முகமது சலீம், கைது செய்யப்பட்டிருக்கிறார்.  அவருடைய குடும்பம் வாழ வழியின்றி, உறவினர்களின் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளது. சொல்லப்போனால் தெருவுக்கு வந்திருக்கிறது. அதே நேரத்தில் கடை இருந்த இடத்திற்கு அருகே துர்கா தேவி கோயில் ஒன்று முளைத்திருக்கிறது.

மக்களவை, சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மை பெற்றபோதும் பாஜகவுக்கு உள்ளாட்சித் துறை தேர்தல் இறங்குமுகமாகவே இருந்தது. டிசம்பர் 2017-ல் நடந்த உள்ளாட்சித் துறை தேர்தலில் 29% வாக்குகளையே பாஜக பெற்றது.

முகரம் பண்டிகை முடிந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்த தேர்தல் நடைபெற்றது. ஹக்கீம் ஜுகி வார்டு பதவிக்கு போட்டியிட இருந்ததாகவும் அப்படி போட்டியிட்டிருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருப்பார். அவருக்கு இந்து, முசுலீம்களிடையே நற்பெயர் இருந்தது என்கிறார் ராம் பிரகாஷ்.  போலீசின் பாரபட்ச அணுகுமுறை காரணமாக ஹக்கீம் கைது செய்யப்பட்டிருப்பதாக சொல்லும் முகமது காசிம், வன்முறையை தூண்டிய ஹிந்து சமாஜ் பார்ட்டினரை ஏன் கைது செய்யவில்லை என கேட்கிறார். இரு மதத்தினர் மீதும் அன்பும் மரியாதையையும் கொண்டிருந்த ஒரு மனிதருக்கு கிடைக்கும் நீதி இதுதானா என்கிறார் காசிம்.

அகில் பாரதிய ஹிந்து மகாசபை தொடர்புடைய ஹிந்து சமாஜ் பார்டி மத உணர்வுகளை தூண்டுவதில் பெயர் பெற்றது. “சலீமின் கொட்டகையை கொளுத்தியதன் மூலம் அவர்கள் ஒரு செய்தியை சொல்கிறார்கள். ‘முசுலீம்களை வேரோடு அழிக்க வேண்டும்’. அடுத்த நாளே துர்கா கோயிலை அங்கே உருவாக்கியிருப்பது அவர்களுடைய வருமானவே மதவாதத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதை காட்டுகிறது. இந்துக்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் முசுலீம்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்பதைத்தான் அவர்கள் சொல்லிச் சென்றிருக்கிறார்கள்” என்கிறார் செயல்பாட்டாளரான ராஜுவ் யாதவ்.

முகரம் ஊர்வலத்தை வைத்து நடத்தப்படும் அரசியல் கான்பூருக்கு புதிதல்ல. ஒவ்வொரு வருடமும் போராட்டங்களும் பதட்டமும் இருந்துகொண்டே இருக்கிறது. முந்தைய நிகழ்வுகளுக்கும் இப்போது நடப்பவைகளுக்கும் என்ன வித்தியாசம் என்றால், முன்பு இந்து – முசுலீம் என்கிற பிரிவுகளுக்கிடையே பிரச்சினை இருந்தது. இப்போது தலித்துகளுக்கும் முசுலீம்களுக்குமான பிரச்சினையாக மாற்றப்பட்டிருக்கிறது. ஆச்சரியமளிக்காத வகையில் தலித் பாசி சாதியைச் சேர்ந்த பாஜக வேட்பாளர் ராகேஷ் குமார் பஸ்வான், ஜுகி வார்டு பதவியை வென்றார்.

மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சியமைத்த பிறகு 2015 ஆகஸ்டு மாதம், 2011-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மதவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள்  வெளியிடப்பட்டன. இந்த புள்ளிவிவரங்கள், இந்துத்துவ மதவெறி கும்பலால் தவறான பரப்புரைக்கு பயன்பட்டன. அதாவது இந்துக்கள் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் முசுலீம் ‘இஸ்லாம் ஜிகாதி’ என்ற பெயரில் எண்ணிக்கையை பெருக்குவதாகவும் பரப்புரை செய்தார்கள். ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி, பஜ்ரங் தள் போன்ற காவி அமைப்புகள் முசுலீம்களை இந்துக்களாக மாற்றும் ‘கர்வாப்ஸி’ இயக்கங்களை நடத்தினார்கள்.  மதமாற்றம் தடை செய்யப்படும் வரை ‘கர்வாப்ஸி’ தொடரும் என சாமியார் ஆதித்யநாத் பேசினார்.

பஹ்ரைச்சில் உள்ள காசிமியான் மஷருக்கு பயணிக்கத் தயாராகும் பக்தர்கள். (படம்: விபின் படேல் / யூ-டியூப்)

உ.பி-யில் தலித்துகள் அதிகம் உள்ள தொகுதிகளில் பக்ரீச் – உம் ஒன்று.  இந்த மக்களவை தொகுதி தலித்துகளாக ஒதுக்கப்பட்டுள்ளது. 2017-ஆம் ஆண்டு நடந்த சட்டப் பேரவை தேர்தல் பிரச்சாரத்தின்போது ஆர்.எஸ்.எஸ்.- பாஜக தலித் ஆளுமைகளை இந்துக்களாக்கும் முயற்சியில் இறங்கியது. சங்பரிவார் விநியோகித்த வெளியீடு ஒன்றின் தலைப்பு ‘பாட்சாவும் ராஜாவும்’. பக்ரீச் அருகே 11-ஆம் நூற்றாண்டில் சுல்க்தேவ் என்ற தலித் தலைவருக்கும் உபி-யை ஆக்கிரமிக்கும்பொருட்டு படையெடுத்த முசுலீம் அரசர் காசியா சயது சலமார் மசூத் என்பவருக்கும் போர் மூண்டதாகவும் அப்போது தன்னை பாதுகாக்கும் பொருட்டு பசுக்களை கவசமாக பயன்படுத்த முசுலீம் அரசன் முனைந்ததாகவும் போருக்கு முந்தைய இரவில் பசுக்களை சுல்க்தேவ் விடுவித்ததாகவும் அந்த வெளியீடு சொல்கிறது. பிறகு மசூத்தை கொல்ல சென்றதாகவும் தெரிவிக்கிறது. சில வரலாற்றாசிரியர்கள் மசூத்தை சுல்க்தேவ்வால் கொல்ல முடியவில்லை, மசூத் முன்னேறிச் செல்வதை தடுக்கவும் முடியவில்லை என்கிறார்கள்.

மசூத் இறந்த நாளில் நடக்கும் ஊர்ஸ் ஊர்வலத்துக்கு எதிராக போராடும்படியும் சுல்க்தேவை கொண்டாடும்படியும் அந்த வெளியீடு அறைகூவல் விடுத்திருந்தது. இந்த முயற்சிகள் தலித் – முசுலீம் ஒற்றுமையை குலைக்கவே செய்யப்படுகின்றன. 2017-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் இந்தப் பகுதியில் மொத்தமுள்ள ஏழு தொகுதிகளில் ஆறில் வென்றது பாஜக. சாவித்ரி பாய் புலே என்ற தலித் பெண், பாஜக-வின் மக்களவை உறுப்பினராக இந்தத் தொகுதியிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவரும் தன்னை சாமியார் என சொல்லிக்கொள்கிறார்.

இறைத்தூதுவர் முகமதுவின் பிறந்த நாளில் பாராவஃபட் என்ற விழா உபி-யில் முசுலீம்கள் மற்றும் இந்துக்களால் கொண்டாடப்படும் விழாவாக நடக்கும். சாமியார் உ.பி முதலமைச்சராக பதவியேற்றவுடன் இந்த பண்டிகை அரசு விடுமுறை நாள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது. நன்பாராவில் உள்ள குர்குட்டா என்ற கிராமத்தில் கடந்த டிசம்பர் 2 தேதி நடந்த பாராவஃபட் ஊர்வலத்தில்  300 பேர்  நுழைந்து கலவரம் ஏற்படுத்தியுள்ளனர். ஹிந்து சமாஜ் பார்டி மற்றும் பஜ்ரங் தள் காவி அமைப்புகளை சேர்ந்தவர்கள் இருபுறமும் கற்களால் தாக்கியுள்ளனர். இருதரப்பிலிருந்தும் மத முழக்கங்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன. இறுதியாக போலீசு வந்து 38 பேரை கைது செய்துள்ளது. சிம சுரக்‌ஷா பல் என்ற கலவரங்களை கட்டுப்படுத்தும் போலீசு குழு கிராமத்திலிருந்த ஆடு, கோழிகளை அள்ளிக்கொண்டு சென்றிருக்கிறது. அதில் சிலர் ஆடுகளை வெட்டி சமைத்து தரும்படி கேட்டிருக்கிறார்கள் என்கிறார் அந்த கிராமத்தைச் சேர்ந்த கன்னையா.

9 பேரின் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. அவர்களுக்கு பிணை வழங்கப்பட்ட நிலையில் ஐந்து பேர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். செங்கல் சூளையில் பணியாற்றிய முன்னா, மதராசாவில் ஆசிரியராக பணியாற்றிய மசூத் ரசா, ரிக்‌ஷா ஓட்டிக்கொண்டிருந்த நூர் ஹசன், ஹர்சாத் என்ற மாணவர் ஆகிய ஐவரும் கடந்த ஒன்பது மாதங்களாக சிறையில் இருக்கின்றனர். இவர்களை நம்பியிருந்த குடும்பம் இருந்த சேமிப்பை வழக்கு செலவுகளுக்காக தொலைத்துவிட்டு, நடுத்தெருவில் நிற்கிறது. ஹர்சாத் என்ற கல்லூரி மாணவர், தற்கொலை செய்துகொள்ளக்கூடிய மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தன் குடும்பத்தினரிடம் தெரிவித்திருக்கிறார்.  கேரளாவில் படித்துக்கொண்டிருந்த இவர் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்தபோது தே.ப.சட்டத்தில் கைதாகியிருக்கிறார்.

கான்பூரில், ஹக்கிமின் மனைவி மகள் மற்றும் தாயார். (படம்: நேஹா தீக்‌ஷித்.)

ஒவ்வொரு ஹோலி பண்டிகையின் போதும் பராபங்கி மாவட்டத்தில் உள்ள சுஃபி துறவியான ஹாஜி வாரிஸ் அலி ஷாவின் தேவா ஷரிப் பல வண்ணங்களுடன் ஒளிரும். 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த துறவியான அலி ஷா, மதங்களைக் கடந்து அன்பும் அரவணைப்பும் இருக்க வேண்டுமென வலியுறுத்தியவர். இந்து, முசுலீம், கிறித்துவ மற்றும் சீக்கியர்கள் இவருடைய பக்தர்களாக இருக்கிறார்கள். அனைவரிடத்திலும் ஒற்றுமை உணர்வை உருவாக்கும் வகையில் ஹோலி பண்டிகையை கொண்டாடும் வழக்கத்தை துவக்கி வைத்திருக்கிறார். இப்போதும் அது கடைபிடிக்கப்படுகிறது. ஆதித்யநாத் பதவியேற்ற ஒரு மாதத்துக்குப் பின், அவருடைய அமைச்சர் ராஜேந்திர பிரதாப் சிங், முந்தைய அரசு தேவா ஷரீப்புக்கு மின்சார வசதியை செய்துகொடுத்ததாகவும், ஆனால் இந்து கோயிலான லோதேஸ்வர் மகதேவ் கோயிலுக்கு அந்த வசதியை செய்யவில்லை எனவும் பேசினார்.

லோதேஸ்வர் மகதேவ் கோயில், இந்த சூஃபி கோயிலிருந்து ஒரு மணி நேர பயண தூரத்தில் கார்கா ஆற்றின் கரையோரம் ராம்நகர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. பாண்டவர்கள் சிவனுக்காக இந்த இடத்தில் யாகம் வளர்த்ததாக புராண கதை ஒன்று சொல்லப்படுகிறது. இந்த கோயிலுக்கு வெளியே பூஜை சாமான்கள் விற்கும் கடைகளை இந்து, முசுலீம்கள் நடத்துகின்றனர். வருடந்தோறும் நடக்கும் சிவராத்திரியும் மாட்டு சந்தையும்  புகழ்பெற்றவை. இந்து-முசுலீம் மக்கள் ஆர்வத்துடன் இந்த விழாக்களில் பங்கேற்பர். முந்தைய காலங்களில் இந்த கோயில் பூசாரிகள் மத ஒற்றுமையை பேணிக்காப்பதில் அக்கறையுடன் இருந்தனர்.

ஒவ்வொரு நான்கு வருடத்துக்கு ஒருமுறை கோயில் தலைமை பூசாரி பதவிக்கு ஏலம் நடக்கும். யார் அதிகம் ஏலத்தொகை தருகிறாரோ அவரே தலைமை பூசாரி. இந்த முறையே பெரும்பாலான வடமாநில கோயில்களில் பின்பற்றப்படுகிறது. கடந்த ஆண்டு நடந்த ஏலத்தில் மஹந் ஆதித்யநாத் திவாரி என்பவர், சாமியார் ஆதித்யநாத்தின் வழியை பின்பற்றுவதாக சொல்லிகொள்பவர் ரூ. 5 லட்சம் கொடுத்து தலைமை பூசாரியாகியுள்ளார். சிவா டிரேடர்ஸ் என்ற பெயரில் கோயில் வளாகத்துக்குள்ளேயே தனது வியாபாரத்தை தொடங்கிய குட்டி சாமியார் கோயிலை சுற்றிலும் இந்து கடவுளர்களுக்கு சிறு கோயில்களை கட்ட ஆரம்பித்திருக்கிறார்.

உள்ளாட்சித் துறை தேர்தல் பிரச்சாரத்தின்போது ஆதித்யநாத் பயன்படுத்திய அதே ‘மின்சார’ பிரச்சினையை குட்டி சாமியாரும் கிராம சபை தலைவர் பதவிக்கு போட்டியிட்டபோது பயன்படுத்துகிறார். கோயிலுக்கு பக்கத்தில் இருக்கும் மசூதி ஒலியெழுப்பிகளை தூக்கி எறிவோம் என பிரச்சாரம் செய்த இவர், ஜான் முகமது என்ற வேட்பாளரிடம் தோற்றார்.

அஷம்கரில், ஆசிஃபின் தந்தை இஃப்தெகார் அகமது.

ஆதித்யநாத் தொடங்கிய ஹிந்து யுவ வாஹினி என்ற குண்டர் படை சிவ் பகவான் சுக்லா என்பரின் தலைமையில் லட்டூ கோபால் சிலையை தூக்கிக் கொண்டு லோதேஸ்வர் கோயிலுக்கு ஆசி வாங்க 2018-ஆம் ஆண்டு மார்ச் 24 தேதி நூறு பேருக்கும் மேல் கூட்டத்தைச் சேர்த்து வந்திருக்கிறது. வழி முழுக்க இந்த குண்டர் படை கூச்சலிட்டபடி, கலர் பொடிகளை தூவி, பெண்களை பாலியல் சீண்டல் செய்துகொண்டு வந்திருக்கிறது. 13 வயதான ஷா ஃபகத் என்ற சிறுமியை சீண்டும்போது, உடன் வந்த சகோதரர் அதை தட்டிக்கேட்டுள்ளார். உடனே அங்கே இது பெரும் பிரச்சினையாகி, வன்முறையில் முடிந்திருக்கிறது.

அதே நேரத்தில் லட்டூ கோபால் சிலையை முசுலீம்கள் சேதப்படுத்தி தூக்கி எறிந்ததாக ஒரு வதந்தியை கிளப்பிவிட்டிருக்கிறார்கள். அருகாமை பகுதிகளில் இது பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சில வினாடிகள், இந்த பிரச்சினைக்கு மதச்சாயம் பூசப்பட்டு, உள்ளூர் போலீசும் வந்துவிட்டது.

அன்று மாலையில் ராம்நகர் போலீசு சிவ் பகவான் சுக்லாவின் புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கை ஒன்றை பதிகிறது. அதில் 40-க்கும் மேற்பட்ட முசுலீம்கள் சிலை ஊர்வலத்தில் புகுந்து அடித்ததாகவும், இந்து பெண்களின் நகைகளை கொள்ளையடித்ததாகவும் இந்த தாக்குதலில் 12 பேருக்கு காயம்பட்டதாகவும் சொல்லப்பட்டிருந்தது. ஷா ஃபகத் என்ற சிறுமி எதிர்கொண்ட பாலியல் சீண்டலை போலீசு கண்டுகொள்ளவில்லை. மாறாக, அடையாளம் தெரியாத 40 பேரின் புகார் கொடுத்ததன் அடிப்படையில் 12 பேரின் மீது எஃப்.ஐ.ஆர் பதியப்பட்டது. சாட்சியங்கள் அனைவரும் ஹிந்து யுவ வாஹினி குண்டர் படையைச் சேர்ந்தவர்கள்! ஐந்து நாட்களில் 12 பேருக்கும் பிணை கிடைத்தது. அதில் ஐவர் மீது தே.ப. சட்டம் பாய்ந்தது.

இவர்கள் ஐவரில் இருவர் கோயில் வளாகத்தில் கடை வைத்திருந்தவர்கள். ஒருவர் டெய்லர். மற்ற இருவர் கூரை வேய்பவர்களாகள். இவர்கள் எப்படி தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்க முடியும் என்கிற கேள்வியை இவர்களுடைய குடும்பங்கள் கேட்கின்றன. ஆதித்யநாத்தின் வழியில் குட்டி சாமியார், 200 ஆண்டுகள் பழமையான கோயிலுக்கு அருகே உள்ள மசூதிகளை இடிக்க திட்டமிடுவதாக உள்ளூர்வாசிகள் சொல்கிறார்கள்.

“உள்ளூர் தேர்தலில் பிரிவினையை உண்டாக்கி வெல்ல முயன்றார்கள். அது முடியாமல் குட்டி சாமியார் தோற்றார். முசுலீம்கள் மீது வீண் பழி சுமத்தி கைது செய்தார்கள். 2019 தேர்தலுக்காக மசூதியை இடிக்க நினைக்கிறார்கள். போலீசுக்கு இதெல்லாம் தெரியாமல் இருக்குமா? அல்லது நாங்கள்தான் அதிகமாக எதிர்பார்க்கிறோமா?” என வெறுமையுடன் பேசுகிறார் ஷகிலா.

இதேபோன்று உ.பி-யில் பல பகுதிகளிலும் ஆதித்யநாத் அரசின் ஆசிகளுடன் காவி கும்பல்கள் வன்முறையைத் தூண்டி அப்பாவி முசுலீம் இளைஞர்களை சிறைக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறது. இந்திரா காந்தி அரசால் 1980-களில் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய பாதுகாப்புச் சட்டம் கருப்பு மார்கெட் நடத்துகிறவர்களையும் கடத்தல்காரர்களையும் கைது செய்வதற்காக பயன்படுத்தப்படும் என்று சொன்னது. ஆனாலும் இந்த சட்டத்தின் கீழ் முதலில் கைது செய்யப்பட்டவர்கள் தொழிற்சங்கவாதிகள்தான்.  அவர்களுடைய செயல்பாடுகளுக்காக கைது செய்யப்படாமல் அரசை விமர்சித்தார்கள் என்பதற்காகவும் பொதுக்கூட்டத்தை நடத்தினார்கள் என்பதற்காகவும், அரசுக்கு ஒத்துழைப்பு தரமாட்டோம் என்றவர்கள் மீதும், நிலுவைத் தொகையை கேட்டவர்கள் மீதும் தே.பா.ச. பாய்ந்தது.

குட்டி சாமியார் – மஹந் ஆதித்யநாத் திவாரி.

தெற்காசிய மனித உரிமை ஆவண மையத்தைச் சேர்ந்த ரவி நாயர், “முன்னெரிச்சரிக்கை கைது சட்டத்தில் மிக மோசமானது. இதுபோன்ற சட்டங்களை பயன்படுத்தும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இது சர்வாதிகாரத்தால் பயன்படுத்தப்படும் சட்டம். ஜனநாயகத்தை பகுதி நேரமாக பாவிக்கும் நாடுகள்கூட ஒவ்வொரு ஆண்டும் இத்தகைய முன்னெச்சரிக்கை தடுப்பு சட்டங்கள் தேவையா என பரிசீலிக்கின்றன. ஆனால், இந்தியா அதை செய்வதில்லை” என்கிறார்.

“கைதானவர் மீது எந்தவித கிரிமினல் வழக்குகளும் இல்லாதபட்சத்தில் தே.பா.சட்டத்தில் கைதாகிறவருக்கு ஏன் கைது செய்தோம் என்கிற தகவல் அளிப்பதில்லை. இது ஒருவருக்குள்ள சுதந்திர வாழ்க்கைக்கான வாழும் உரிமையை தெளிவாக மறுப்பதாகும். இதுபோன்ற சட்டங்கள் முழுக்க முழுக்க அரசியல் ஆயுதமாகத்தான் பயன்படுத்தப்படும், நிச்சயம் சட்டமாக ஒரு பயனும் இல்லை” என்கிறார் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்.

கிழக்கு உ.பி-யில் நடந்தேறிய தேசிய பாதுகாப்புச் சட்ட கைதுகள் அனைத்தும் போலீசின் அதிகார துஷ்பிரயோகத்தையே காட்டுகிறது. ஹிந்து சமாஜ் பார்டி, ஹிந்து யுவ வாஹினி மற்றும் உள்ளூர்வாசிகளை சாட்சிகளாக வைத்தே அனைத்து கைதுகளையும் நடத்தியிருக்கிறது போலீசு. சாமியார் ஆதித்யநாத், பெரும் எண்ணிக்கையிலான முசுலீம்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என நிறுவ பார்ப்பதாக பல செயல்பாட்டாளர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

“இது மனுவாத நடைமுறையின் ஒரு பகுதி. முசுலீம்களையும் தலித்துகளையும் இந்து ராஷ்டிர செயல்திட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து தேசிய கட்சிகள் எப்போதும் சேர்த்துக்கொள்வதில்லை. 2019-ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தலுக்கு முன், தே.பா.சட்டம் குறிப்பிட்ட சிலரின் மேல் பாய்ந்து, அவர்கள்தான் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என காட்டுவார்கள். மதவாத அடிப்படையில் வாக்கு வங்கியை ஒருங்கிணைக்க இத்தகைய நடவடிக்கைகள் அவர்களுக்கு உதவும்” என்கிறார் செயல்பாட்டாளர் ராஜுவ் யாதவ்.

நன்றி: நேஹா தீட்சித், மற்றும் தி வயர்

தமிழாக்கம்: கலைமதி

செயற்பாட்டாளர் கைது : பா.ஜ.க.வின் வண்டு முருகனாய் வாதாடும் புனே போலீசு !

பீமா கோரேகான் வழக்கில் கடந்த ஜனவரி 1, 2018 அன்று புனேயில் நடைபெற்ற வன்முறை சம்பவம் குறித்து மராட்டிய போலீசு நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கைகளில் பெருமளவிலான முரண்பாடுகள் உள்ளன.

வரலாற்றாளர் ரொமீலா தாப்பர் உள்ளிட்ட 4 பிரமுகர்கள், கடந்த ஆகஸ்ட் 28 அன்று நடைபெற்ற கைது நடவடிக்கையை, ”போலீசின் அதிகார துஷ்பிரயோகம்” என்று குறிபிட்டு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். இதற்கு புனே நகரப் போலீசு, கடந்த செப்டம்பர் 3 அன்று தாக்கல் செய்த பதில் மனுவில் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 31 அன்று நடைபெற்ற எல்கார் பரிஷத் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள்தான் மறுநாள் பீமா கோரேகானில் ஏற்பட்ட வன்முறைக்குக் காரணம் என்று குறிப்பிட்டது.

இரண்டு ஓய்வு பெற்ற நீதிபதிகள் உள்ளிட்ட எல்கார் பரிஷத் மாநாட்டின் ஏற்பாட்டாளர்களோடு அம்பேத்கரிய அமைப்புகள் மற்றும் இடதுசாரி செயற்பாட்டாளர்களையும் ஒன்றிணைத்தது அந்த மாநாடு. போலீசோ, தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பினரும் சேர்ந்துதான் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளனர் என தனது பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் ஆறு மாதங்களுக்கு முன்னதாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மற்றொரு மனுவில், வன்முறை சம்பவங்களுக்கு முற்றிலும் வேறானதொரு காரணத்தைக் கூறியுள்ளது மராட்டிய போலீசு. புனே புறநகர் போலீசு கடந்த பிப்ரவரி 13-ம் தேதியன்று தாக்கல் செய்த மனுவில் ”சமஸ்தா ஹிந்து அகாடி” என்ற அமைப்பின் தலைவரான மிலிந்த் ஏக்போடேதான் ஜனவரி 1 நெருங்குவதற்கு முன்னாலிருந்தே வன்முறையைத் தூண்டும் விதமாக நோட்டீசுகள் கொடுத்து வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.

நீதிமன்ற விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட, ”சமஸ்தா ஹிந்து அகாடி” என்ற அமைப்பின் தலைவன் மிலிந்த் ஏக்போடே.

புனே நகரின் துணை மேயர் அளித்துள்ள அறிக்கையும், பீமா கோரேகான் மற்றும் அதனருகில் உள்ள ஒரு கிராமம் குறித்து அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ள வரலாறு தவறானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

”குற்றம்சாட்டப்பட்டுள்ள இந்த வழக்கில், விசாரணையின் போது, மிலிந்த் ஏக்போடே, இக் குற்றச் சதியில் உத்வேகமாகப் பங்கேற்றிருக்கிறார் என்பது அம்பலமாகி இருக்கிறது… ————- …மேலே கூறப்பட்ட குற்றங்களைச் செய்ய ஏக்போடே திட்டமிடுகையில்….. ——– …..சமூக ஒற்றுமை மற்றும் சட்ட ஒழுங்கை அபாய நிலைக்குத் தள்ளியுள்ளார். இதன் காரணமாக கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொது மற்றும் தனியார் உடைமைகள் சேதமடைந்திருக்கின்றன.” என்று போலீசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.

அவரது பிணை மனுவை எதிர்த்ததோடு, விசாரிப்பதற்காக அவரை போலீசு காவலில் எடுக்க வேண்டிய அவசியம் இருக்கிறது என்றும், இந்த வன்முறை, குற்றங்களோடு வேறெந்த இந்து தீவிரவாத அமைப்பு சம்பந்தப்பட்டுள்ளதா என கண்டுபிடிக்க வேண்டியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது போலீசு.

ஏக்போடே கடந்த மார்ச் 14 அன்று கைது செய்யப்பட்டார். மற்றும் அவரது முன்பிணை மனுவை நிராகரித்தது உச்சநீதிமன்றம். ஆனால் புனே செசன்ஸ் நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 4 அன்று பிணை பெற்று வெளியே வந்துவிட்டார் ஏக்போடே.

உச்சநீதிமன்றத்தில் முற்றிலும் முரணான இரண்டு மனுக்களை மராட்டிய போலீசு எவ்வாறு தாக்கல் செய்ய முடியும் என்பது புரியவில்லை.

மேலும், கடந்த ஜூலை மாதம் நீதி விசாரணைக் குழுவின் முன்னால் இந்த இரண்டு முரணான மனுக்களுக்கும் முரணான வேறொரு காரணத்தைக் கூறியுள்ளது மராட்டிய போலீசு. பீமா கோரேகானில் நடைபெற்ற இந்த வன்முறைச் சம்பவம் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற்றுவந்த சண்டைகளின் விளைவாகவே நிகழ்ந்தது எனக் கூறியுள்ளது. போலீசின் சார்பாக வாதிட்ட ஷிஷிர் ஹிரே, எந்த ஒரு அமைப்பையோ, எந்த ஒரு குழுவையோ வன்முறைக்கான காரணகர்த்தாவாக குற்றம்சாட்டும் நிலையில் தாங்கள் இல்லை என்றே கூறியிருக்கிறார்.

நீதி விசாரணைக்காக, கடந்த பிப்ரவரி மாதம் அரசால் நியமிக்கப்பட்ட இரு நபர் கமிசன், மே மாதம் முதல் ஜூலை மாதம் வரையில் சாட்சியங்கள் மனுத்தாக்கல் செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

மராட்டிய போலீசு சுமார் 10,000 பக்கங்கள் உள்ள 110 மனுக்களை தாக்கல் செய்தது. தாக்கல் செய்யப்பட்ட 490-க்கும் அதிகமான மனுக்களில் 10-க்கும் குறைவான மனுக்கள் மட்டுமே புனே அல்லது மும்பையைத் தவிர பிற இடங்களிலிருந்து வந்திருந்தன. மற்றவையனைத்தும் புனே மற்றும் மும்பையிலிருந்து வந்தவையே. இந்த விசாரணைக் கமிசன் தமது விசாரணையின் முதல் சுற்றை கடந்த வாரம் மும்பையில் தொடங்கியுள்ளது. ஸ்க்ரோல் இணையதளம் இந்த விசாரணையில் மொத்தம் மூன்று நாட்கள் பார்வையாளராகக் கலந்து கொண்டது.

முதல் நாளில் 44 வயதான மனிஷா கோப்கர் விசாரணையில் கலந்து கொண்டார். அவரும் அவருடன் சேர்ந்து ஒரு குழுவினரும் தானேவிலிருந்து ஒரு பேருந்தை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு பீமா கோரேகானிற்கு வந்ததை விவரித்தார். மனிஷா கோப்காரும் அவருடன் வந்தவர்களும் வாகன நிறுத்துமிடத்திலிருந்து நினைவிடத்திற்கு நடந்து செல்கையில், அங்கு வன்முறை நடப்பதாக சிலர் தெரிவித்ததால் திரும்பிவிட்டதாகவும் தெரிவித்தார்.

தாங்கள் ஒதுங்கியிருந்த கட்டிடத்தின் மாடியில் இருந்து பலரும் தங்கள் மீது கற்களை எரிந்தனர் என்றும், தனது மகளைக் காப்பாற்ற எத்தனித்த தமக்கும் காயம் ஏற்பட்டதையும் கோப்கார் குறிப்பிட்டுள்ளார். தமது வாகனத்திற்கு வந்து சேர்ந்ததும், தங்களை அம்பேத்கரியர்களாக அடையாளப்படுத்தும் நீலக் கொடியை தமது வாகனங்களிலிருந்து உடனடியாக நீக்கியதாகவும், அப்போது அங்குவந்த மஞ்சள் சட்டை அணிந்த நபர்கள் தங்களது வாகனத்தின் மீது கற்களை வீசியதாகவும் குறிப்பிட்டார்.

இரண்டாம் நாளில் அவரை அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஷிஷிர் ஹிரே கேள்வி கேட்கையில், தாம் ஜூலை மாதம் பேசியதை அப்படியே மாற்றிப் பேசினார். “இந்த வன்முறையை நிகழ்த்த காவி அல்லது நீலத்தைத் தவிர வேறு ஒரு மூன்றாவது சித்தாந்தம் இருக்க வாய்ப்பிருக்கிறதா?” என கோப்காரிடம் இருமுறை கேள்வி கேட்டார். இங்கு காவி என ஹிந்துத்துவாவை அவர் குறிப்பிடுகிறார்.

கோப்கார் பதிலளிக்கையில், இவையிரண்டையும் தவிர, அன்று வன்முறையில் ஈடுபடுவதற்கு மூன்றாம் சித்தாந்தத்திற்கும் வாய்ப்பிருக்கிறது என்றும் தான் என்ன பார்த்தேனோ அதுமட்டுமே தமக்குத் தெரியும் என்றும் கூறியுள்ளார்.

இவ்விசாரணையின் போது ஹிரே, ”மூன்றாம் சித்தாந்தமானது பல்வேறு குழுக்களுக்கு மத்தியில் அராஜகத்தை உருவாக்கக்கூடிய சித்தாந்தமாகும்” என்று கூறினார். ஆனால் அதனை மேலதிகமாக விளக்கவில்லை.

அவர் குறிப்பாக என்ன சொல்கிறார் என்பதையும், அவரது நிலைப்பாட்டின் மாற்றத்திற்கான காரணம் குறித்த விளக்கத்தையும் ஸ்க்ரோல் இணையதளம் கேட்கையில் அதற்கு பதிலளிக்க மறுத்துவிட்டார் ஹிரே.

”கோப்காரின் மனுவிலேயே நீலம் மற்றும் காவிக் கொடிகள் குறித்து குறிப்பிட்டுள்ளார். மூணாவது சித்தாந்தம் எது என்பதை உங்களது சிந்தனைக்கே விட்டு விடுகிறேன். ஏதேனும் மூன்றாம் சித்தாந்தம் ஒன்று இருக்கிறதா என அனைத்து வகையான வாய்ப்புகளையும் ஆராய்ந்து வருகிறோம். அனைத்து காரணங்களையும் விசாரணைக் கமிசனின் முன்னால் கொண்டுவந்து சேர்ப்பது எங்களது கடமை” என்று ஹிரே கூறினார்.

மேலும், “கமிசனின் முன்னால் வந்த சாட்சிகள் பீமா கோரேகான் வன்முறைக்கான காரணம் மற்றும் அதன் பின்விளைவுகள் குறித்த புனே புறநகர் போலீசின் விசாரணைக்குப் பொருத்தமான சாட்சிகளாவர். புனே நகர போலீசின் விசாரணை முற்றிலும் வேறானது. விசாரணைக் கமிசனுக்கு முன்னால் புனே புறநகர் போலீசு தமது அறிக்கையை அடுத்த மாதத்தில் சமர்ப்பிக்கும். புனே நகர போலீசு தமது அறிக்கையை எப்போது வழங்குவார்கள் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை” என்கிறார் ஹிரே.

இன்னும் சொல்லப்போனால், மோடியின் குருநாதர் சாம்பாஜி பீடே மீதான வழக்கை, திசை திருப்புவதோடு, மோடியின் மீதான ரஃபேல் ஊழல், சனாதன் சன்ஸ்தா கொலைக்கும்பல் கைது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளிலிருஎது காவிக் கும்பலை மீட்க, ரெட்டை நாக்கு என்ன ரெண்டாயிரம் நாக்குகளாகவும் பேசத் தயங்காது காவிமயமாகிப் போன போலீசு

நன்றி: scroll
தமிழாக்கம்: – வினவு செய்திப்பிரிவு.

மூலக் கட்டுரை: Many voices of Maharashtra police: Contradictory claims on Bhima Koregaon violence in SC and outside

ஐ.நா அறிக்கையில் இந்தியாவின் மனித உரிமை மீறல் ! கருத்துக் கணிப்பு

ஐ.நா.-வின் பொதுச் செயலர் ஆன்டானியோ ஐக்கிய நாடுகள் சபையின் ஒன்பதாவது ஆண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் மனிதநல ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் – செயற்பாட்டாளர்கள் கொல்லப்படுவது, கைது செய்யப்படுவது, பழிவாங்கப்படுவது ஆகிய குற்றங்கள் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அதிகரித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமைக் கமிஷனில் உறுப்பினர்களாக உள்ள 38  நாடுகளில் மேற்கண்ட மனித உரிமை மீறல் குற்றங்கள் நடப்பதாக அறிக்கை கூறுகிறது. இந்த நாடுகளில் உள்ள சட்டம், நீதி அமைப்பு, அரசியல், அரசு நிர்வாகம் ஆகியவை சமூக ஆர்வலர்களை பழிவாங்குவதற்கு தவறாக பயன்படுத்துவது அதிகரித்து வருவதாகவும் அறிக்கை கூறகிறது.

இத்தகைய மனித உரிமை மீறல் நடக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா போக, அல்ஜீரியா, பக்ரைன், சீனா, எகிப்து, ஈரான், ஈராக், ஜப்பான், மெக்சிகோ, மொராகோ, மியான்மர், பாகிஸ்தான், ருவண்டா, சவுதி அரேபியா, தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், உஸ்பகிஸ்தான், வெனிசுலா ஆகிய நாடுகள் உள்ளன.

குறிப்பாக சீனா மற்றும் இந்தியாவில் அரசு மற்றும் அமைப்புகளின் ஊழல்களை தட்டிக்கேட்கும் சமூக ஆர்வலர்கள் பழிவாங்கப்பட்டு கொல்லப்பட்டு வருகின்றனர் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்க முதலான வல்லரசு நாடுகளின் கையில் இருக்கும் ஐ.நா.வின் பாரபட்சமான போக்கிற்கு சான்றாக இப்பட்டியலில் மேலை நாடுகள் இல்லை. எனினும் இந்த விமர்சனத்தை இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் வைப்பது போன்று வலது சாரி வெறியர்கள் கூற முடியாது. ஏனெனில் பட்டியலில் இருக்கும் இந்தியா, சவுதி அரேபியா, ஜப்பான், பாகிஸ்தான் போன்றவை தீவிரமான அமெரிக்க அரசு ஆதரவு நாடுகள். அதிலும் இந்தியாவெல்லாம் தன்னை முற்று முழுதாக அமெரிக்க சேவைக்கு ஒப்படைத்துக் கொண்ட நாடு.

சீனா, வெனிசுலா போன்ற நாடுகள் கூட அமெரிக்காவின் அரசியலுக்கு ஏற்ப எதிர்க்கப்படுவதற்கு காரணம் இருக்கிறது. ஆனால் அமெரிக்காவின் அடியாளாக இருக்கும் இந்தியா ஏன் இப்பட்டியலில் இடம்பெறுகிறது?

ஏனென்றால் மோடி ஆட்சி ஏற்ற பிறகு இந்துமதவெறியர்கள் தங்களுக்கு பிடிக்காத சமூக ஆர்வலர்களைக் கொல்வது, கைது செய்வது மிகவும் அதிகரித்திருக்கிறது. கடைசியில் அறிவுத்துறையினரைக் கூட கைது செய்யும் போது அது உலக அளவில் கல்வி – அறிவுத் துறையினர் மூலம் பெரிதும் பேசப்படும் செய்தியாகிறது.

ஆகவே ஆர்.எஸ்.எஸ். மற்றும் அமெரிக்காவின் அடிமைகளாக இருக்கும்  பா.ஜ.க.-வினர், ஐ.நா. கூறியிருக்கும் இந்தக் குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டே ஆகவேண்டும்.

மக்களுக்காக பாடுபடும் சமூக ஆர்வலர்களை வதைக்கும் இந்திய அரசை ஐ.நா. அம்பலப்படுத்தியதற்கு இவர்களிடம் பதிலேதும் இல்லை!

கேள்வி:

இந்தியாவில் சமூக ஆர்வலர்கள் பழிவாங்கப்படுவதாக ஐ.நா. அறிக்கை கூறியிருப்பதற்கு என்ன காரணம்?

  • அதிகமாகும் ஒடுக்குமுறை
  • ’கிறித்தவ நாடு’களின் சதி

ட்விட்டரில் வாக்களிக்க:

யூடியூபில் வாக்களிக்க:

https://www.youtube.com/user/vinavu/community

ஃபேஸ்புக்கில் வாக்களிக்க:

  • வினவு செய்திப் பிரிவு

நூல் அறிமுகம் : அம்பேத்கரியர்கள் – நெருக்கடியும் சவால்களும்

ம்பேத்கரியர்களிடம் உள்ள முக்கிய குறைகளில் ஒன்று என அனுபவம் காட்டுவது என்னவென்றால், அவர்கள் கடந்தகாலத்தை நோக்கியவர்களாக உள்ளார்கள் என்பதுதான். அம்பேத்கரியர்களின் சொல்லாடல்களில் பெரும்பாலானவை கடந்தகாலத்தை நோக்கிய வையாகும். அவர்கள், சாதிகளின் மூலங்களையும் அவற்றின் கூறுகளையும் புரிந்து கொள்ள அம்பேத்கர் மேற்கொண்ட முயற்சிகளை தாங்களும் செய்ய விரும்புகிறார்கள்.  அதற்கான காரணம் எதுவாக இருந்தபோதிலும், சூத்திரர்கள் யார்? தலித்துகள் யார்? சாதி அமைப்பு தோன்றியது எவ்வாறு?, தலித்துகள் பௌத்தர்களாக இருந்தது எவ்வாறு?, இந்து வழிபாட்டுத் தலங்கள், முன்பு பௌத்த விகாரைகளாக இருந்தனவா? திருப்பதி, சபரிமலை, வித்தல் கோவில்கள் முன்பு என்னவாக இருந்தன ? காந்தியோ நேருவோ செய்தது என்ன? என்பன போன்ற கேள்விகளை எழுப்புவதில் அவர்கள் மகிழ்ச்சியடைவதாகத் தோன்றுகிறது.

தலித்துகளின் நிலை சரிந்துவருவதும், அவர்களிடையே நிலமற்றோர் எண்ணிக்கை அதிகரித்துவருவதும், கடந்த பத்தாண்டுகளில் பொதுத்துறை, அரசாங்க வேலைகள் கிடைப்பது தொடர்ந்து குறைந்து கொண்டே வந்து நிகர இட ஒதுக்கீடு என்பது பூஜ்ஜியமாக ஆகிவிட்டதும் அவர்களது அக்கறைக்குள்ளாவதில்லை.

முதலாளியம் உலகத்தை எவ்வாறு வடிவமைத்துள்ளது? உலகமயமாக்கலால் கொண்டு வரப்பட்ட மாற்றங்கள் என்ன? அந்த மாற்றங்கள் மூலம் நமக்கு ஏற்பட்டுள்ள நிலை என்ன? புவிசார் அரசியல் மாற்றங்களிலிருந்து நாம் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டுள்ளோமா? அமெரிக்காவிலோ, ஆப்பிரிக்காவிலோ உள்ள கறுப்பின மக்கள் சாதித்துள்ளவற்றோடு ஒப்பிடுகையில் நாம் சாதித்துள்ளவற்றின் அளவு என்ன? உலக முதலாளியம் மக்களின் ஆதார வளங்களைக் கொள்ளையடித்து வருவதற்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களில் நமக்கு ஒரு பாத்திரம் இருக்க வேண்டாமா? இன்னும் ஏராளமான கேள்விகள் உள்ளன. எனவே நமக்குள்ள சவால் என்பது தலித் அம்பேத்கரியர்களைக் கடந்த காலத்திலிருந்து நிகழ்காலத்துக்கு இழுத்து வந்து எதிர்காலத்தைப் பார்க்கும்படி அவர்களை உந்தித் தள்ளுவதுதான். அப்போதுதான் அவர்கள், சாதி – எதிர்ப்பு இயக்கம் தொடங்கி ஒரு நூற்றாண்டுக் காலத்திற்குப்பிறகு சாதி அமைப்பில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை அறிந்து கொள்வார்கள். பாம்பு அவர்களைக் கடந்து ஓடிவிட்டபிறகு தாங்கள் பாம்புத் தடத்தை அடித்து கொண்டிருந்ததை உணர்வார்கள். அவர்கள் எதிர்கொள்ளவேண்டியது நடப்புக்கால யதார்த்தம்தானேயன்றி, அதன் மீதுள்ள கடந்தகால அடையாளங்கள் அல்ல என்பதை உணர்வார்கள்.

அம்பேத்கரியர்கள் நிகழ்காலத்துக்கு வந்தவுடன், தமக்கு எதிரே உள்ள சவால்களை அவர்களாகவே பார்ப்பார்கள். உறங்கிக்கொண்டிருக்கும் இராட்சசனைப் பற்றிப் பழங்கதைகளில் சொல்லப்படுகிறதே, அவனைப் போன்றவர்கள் தலித் அம்பேத்கரியர்கள். அந்த இராட்சதனை தூக்கத்திலிருந்து எழுப்பினால், அவன் உலகத்தை அசைத்துக் குலுக்குவான். அம்பேத்கரியர்கள் மயக்கத்தில் ஆழ்ந்துள்ளனர், தவறான கருத்து நிலை மருந்துகள் அவர்களைத் தூக்கத்தில் ஆழ்த்தியுள்ளன என்று கருதுபவர்களில் நானும் ஒருவன். அவர்கள் தங்களது யதார்த்த நிலை, தங்களது சுற்றுச்சூழலின் யதார்த்த நிலை ஆகியவற்றைக் காண்பதற்கு தூக்கத்திலிருந்து விழித்தெழுவார்களேயானால், இந்தியாவின் இன்றைய நிலை இனி அப்படியே தொடர்ந்து இருக்காது.
ஆனந்த் டெல்டும்டே
(நூலில் பக்கம் 48, 49)

  • வினவு செய்திப் பிரிவு

நூல்: அம்பேத்கரியர்கள்
(நெருக்கடியும் சவால்களும்)
ஆசிரியர்: ஆனந்த் டெல்டும்டே
தமிழில்: எஸ்.வி.ராஜதுரை

வெளியீடு: விடியல் பதிப்பகம்,
88, இந்திரா கார்டன் 4 – வது வீதி, உப்பிலி பாளையம் – அஞ்சல், கோயம்புத்தூர் – 641 015.
பேச: 0422 – 2576772 ; 9443468758.
மின்னஞ்சல்: vidiyalpathippagam2010@gmail.com

பக்கங்கள்: 56
விலை: ரூ.35.00,
என்சிபிஹெச் வெளியீட்டில் விலை ரூ. 50.00

இணையத்தில் வாங்க: மெரினா புக்ஸ்| (இங்கு என்.சி.பி.ஹெச் வெளியீடாக விலை ரூ. 50ல் கிடைக்கிறது)

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு:
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி: 99623 90277

நீட் தேர்வின் வெற்றியும் தோற்கடிக்கப்பட்ட சமூக நீதியும் !

நீட் தேர்வின் வெற்றியும் தோற்கடிக்கப்பட்ட சமூக நீதியும் !

ழைகள், தாய்மொழியில் கல்வி கற்பவர்கள், தனியார் தனிப்பயிற்சி நிலையங்களில் சேருமளவிற்கு வசதியற்றவர்கள் இவர்களுக்கெல்லாம் மருத்துவராகும் ‘‘தகுதி” கிடையாது என்ற புதிய மனுநீதியை இந்திய சமூகத்தின் மீது உச்ச நீதிமன்றமும் நடுவண் மோடி அரசும் நீட் தேர்வின் வழியாகத் திணித்து வருகின்றன.

இந்த ஆண்டு நீட் தேர்வு நடத்தப்பட்ட விதமும், அத்தேர்வு முடிவுகளும் இந்த அநீதியை மீண்டும் வெட்ட வெளிச்சமாக்கியிருப்பதால், நீட் தேர்வை ஆதரிக்கும் கல்வியாளர்களால்கூட இந்தக் கசப்பான உண்மையை மறுக்க முடியவில்லை.

இந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் இந்திய அளவில் 12 இடத்தைப் பிடித்த சென்னை மாணவி கீர்த்தனா, இத்தேர்வை எதிர்கொள்வதற்காகத் தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக, அதாவது தனது மேனிலைப் பள்ளிப் பருவம் முழுவதும் தனிப் பயிற்சி எடுத்து வந்திருக்கிறார்.

இத்தேர்வில் முதலிடம் பிடித்த கல்பனா குமாரி என்ற பீகார் மாணவி, பள்ளிக்குச் செல்வதைக்கூடத் தவிர்த்துவிட்டு, டெல்லிக்குச் சென்று தனிப் பயிற்சி எடுத்திருக்கிறார். அம்மாணவி +2 பொதுத் தேர்வை எழுதுவதற்குப் போதிய வருகைப் பதிவு இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தபோது, நீட் தேர்வில் அவர் படைத்த ‘‘சாதனையைக்” காட்டி அக்குற்றச்சாட்டை ஒதுக்கித் தள்ளியது, பீகார் அரசு.

நீட் தேர்வில் முதல் நூறு இடங்களைப் பிடித்த மாணவர்களுள் 17 பேர் தங்களிடம் பயின்றவர்கள் என விளம்பரம் வெளியிட்டிருக்கிறது, சிறீ சைதன்யா தனியார் பயிற்சி மையம். முதல் 100 இடங்களைப் பிடித்த மாணவர்களுள் 53 பேர் தங்களிடம் பயின்றவர்கள் என விளம்பரம் வெளியிட்டிருக்கிறது, நாராயணா மெடிக்கல் அகாடமி.

இத்தகைய விளம்பரங்களில் கொடுக்கப்பட்டிருக்கும் புள்ளிவிவரங்களைக் கொண்டு பார்த்தால், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், தனியார் மருத்துவக் கல்லூரி அரசு ஒதுக்கீட்டு இடங்களிலும் சேர்ந்திருக்கும் மாணவர்களுள் தனிப் பயிற்சி எடுத்துக் கொள்ளாத மாணவர்களே இருக்க மாட்டார்கள் என்று கூறிவிட முடியும்.

அதேபொழுதில், பிளஸ் டூ தேர்வில் 1125 மதிப்பெண்கள் எடுத்திருந்தபோதும், தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிலுமளவுக்கு வசதியில்லாத குடும்பத்தைச் சேர்ந்த விழுப்புரம் மாவட்ட மாணவி பிரதீபா, நீட் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியால் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போனார்.

*****

சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின் கீழ் மட்டுமே நடத்தப்படும் நீட் தேர்வு அடிப்படையிலேயே ஒருதலைப்பட்சமானது என்பது ஒருபுறமிருக்க, அத்தேர்வுக்கான வினாத்தாள் தயாரிப்பிலும்கூட ஓரவஞ்சனை காட்டப்படுகிறது.

குறிப்பாக, இந்த ஆண்டு நீட் தேர்வு தமிழ் மொழி வினாத்தாளில் 49 கேள்விகள் தவறாக மொழிப்பெயர்க்கப்பட்டிருப்பதும் 60 இடங்களில் தவறான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருப்பதும் நீட் தேர்வு நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டிருப்பதை எடுத்துக்காட்டின.

நீட் தேர்வு முடிந்தவுடனேயே, தமிழ் வழி வினாத்தாளில் 49 தவறுகள் இருப்பதைக் கல்வியாளர்கள் பலரும் சுட்டிக் காட்டினர். அதற்குப் பதில் அளிக்காமல், அலட்சியமாகவும் மவுனமாகவும் இருந்து தமிழக மாணவர்களின் கழுத்தை அறுக்க முயன்றது சி.பி.எஸ்.இ.

தமிழ் வழியில் நீட் தேர்வை எழுதிய மாணவர்களின் நலன் கருதி சி.பி.எம். கட்சியைச் சேர்ந்த டி.கே.ரங்கராஜனால் தொடரப்பட்ட வழக்கை, சி.பி.எஸ்.இ., சட்டப்படியும் அணுகவில்லை, அறத்தின்படியும் அணுகவில்லை. மாறாக, இந்த வழக்கை சதிகளின் மூலம் முறியடிக்கவே முனைந்தது.

ஜூன் 4 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவித்திருந்தது, சி.பி.எஸ்.இ. அன்றுதான் இந்த வழக்கும் விசாரணைக்கு வரவிருந்தது. நீட் தேர்வு முடிவுகளை வெளியிடுவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் வழக்கில் கோரப்பட்டிருந்தது.

இந்த நிலையில் விசாரணை தொடங்குவதற்கு முன்பே, மதியம் 12.30 மணிக்கே நீட் தேர்வு முடிவுகளை உச்ச நீதிமன்றத்தின் அனுமதியோடு வெளியிட்டு, வழக்கைச் சீர்குலைக்க முயன்றது, சி.பி.எஸ்.இ.

மேலும், விசாரணையின்போது, ‘‘தேர்வு நடத்துவது மட்டும்தான் தனது பொறுப்பு, வினாத்தாட்களைச் சரி பார்ப்பது எல்லாம் தமது வேலையல்ல எனப் பொறுப்பின்றியும் திமிராகவும் வாதாடியது.

நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், மருத்துவக் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிடமாட்டோம் என்ற உத்தரவாதத்தைத் தமிழக அரசு உயர் நீதிமன்றத்திடம் அளித்திருந்தது. எனினும், அந்த உத்தரவாதத்தைக் காற்றில் பறக்கவிட்டு, தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு, முதல்கட்ட கலந்தாய்வையும் நடத்தி முடித்துத் தமிழ் வழியில் தேர்வு எழுதிய மாணவர்களுக்குத் துரோகமிழைத்தது, எடப்பாடி கும்பல்.

இவ்வழக்கு விசாரணையில் 49 கேள்விகள் தவறாக மொழிபெயர்க்கப்பட்டிருப்பது நிரூபிக்கப்பட்டு, ‘‘அக்கேள்விகளுக்குக் கருணை மதிப்பெண் வழங்க வேண்டும், கலந்தாய்வை நிறுத்திவைத்து புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டது மதுரை உயர் நீதிமன்றம்.

ஆனால், மேல்முறையீட்டில் இத்தீர்ப்பை அங்கீகரிக்க மறுத்துவிட்டதன் மூலம் ஏறத்தாழ 24,000 மேற்பட்ட தமிழக மாணவர்களின் நம்பிக்கையைக் கொடூரமாகச் சிதைத்தது, உச்ச நீதிமன்றம்.

‘‘நீட் தேர்வு வினாத்தாளில் மொழிமாற்ற பிரச்சினை ஏதேனும் ஏற்படும் பட்சத்தில், வினாத்தாளில் இருக்கும் ஆங்கில வினாக்களே இறுதியானது என்ற தேர்வு விதி இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது சி.பி.எஸ்.இ.

தாய்மொழி வழிக் கல்வி பயிலும் மாணவர்கள் ஆங்கிலத்தில் தரப்படும் வினாத்தாளைப் புரிந்துகொள்ள இயலாது என்பதால்தான், தத்தமது தாய்மொழியில் நீட் தேர்வை எழுத விருப்பம் தெரிவிக்கிறார்கள். தமிழ் வழி வினாத்தாளைப் பிழையின்றித் தயாரிப்பதைத் தட்டிக் கழித்திருக்கும் சி.பி.எஸ்.இ., தனது தவறை, குற்றத்தை மறைத்துக் கொள்ள, தேர்வு விதியைக் காட்டி தமிழக மாணவர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியிருக்கிறது. சி.பி.எஸ்.இ.யின் இந்த வாதமும், அதனை உச்ச நீதிமன்றம் அங்கீகரித்திருப்பதும் இயற்கை நீதிக்கு எதிரானது மட்டுமல்ல, குரூரமானதும்கூட.

மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு சமஸ்கிருதம் கற்றிருக்க வேண்டும் என்ற விதியை உருவாக்கி வைத்துக்கொண்டு, மருத்துவப் படிப்பில் பார்ப்பன சாதியினர் செலுத்தி வந்த ஆதிக்கம் நீதிக் கட்சி ஆட்சியில்தான் ரத்து செய்யப்பட்டது. இப்பொழுது சமஸ்கிருதத்தின் இடத்தில் ஆங்கிலத்தைக் கொண்டுவந்து நிறுத்தி, தமிழ் உள்ளிட்டுத் தாய்மொழியில் படிக்கும் மாணவர்களை மருத்துவப் படிப்பில் இருந்து ஒதுக்கி வைக்கிறார்கள்.

தமிழகத்தின் உயர் கல்வி புலத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தவுடனேயே, அதன் காரணமாக பார்ப்பன மற்றும் ஆதிக்க சாதி மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேருவது பாதிக்கப்படக் கூடாது எனப் பதட்டமடைந்த உச்ச நீதிமன்றம், 19 சதவீதக் கூடுதல் இடங்களை அரசு மருத்துவக் கல்லூரிகளில் உருவாக்கி, அந்த இடங்களில் கூடுதல் இட ஒதுக்கீடால் பாதிப்படையும் ஆதிக்க சாதி மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த உத்தரவை கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஒவ்வொரு ஆண்டும் புதுப்பித்து கடந்த ஆண்டு வரை நடைமுறைப்படுத்தியும் வந்தது. ஆதிக்க சாதியினருக்காக ஆண்டு தோறும் பொழியும் கருணையைத் தவறான வினாத்தாளினால் பாதிக்கப்பட்ட தமிழ் மாணவர்களுக்கு ஒரேயொருமுறைகூடக் காட்டத்தயாராக இல்லை உச்ச நீதிமன்றம்.

*****

ந்த ஆண்டிற்கான தமிழக மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த பன்னிரெண்டே மாணவர்களுக்குத்தான் இடம் கிடைத்திருக்கிறது.

நீட் தேர்வு வருவதற்கு முன்பும்கூட இந்த எண்ணிக்கை சொல்லிக்கொள்ளும்படி இல்லைதான். ஆனால், நீட் தேர்வு, அரசுப் பள்ளிகளில் படிக்கும் கீழ் நடுத்தர வர்க்க மற்றும் ஏழை மாணவர்களை மருத்துவப் படிப்பிலிருந்து ஒதுக்குவதைத் திட்டமிட்ட வகையில் நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கிறது.

இதுவொருபுறமிருக்க, இந்த ஆண்டிற்கான மருத்துவப் படிப்பு கலந்தாய்வுக்கு சி.பி.எஸ்.இ. பள்ளிகளும் தனியார் பயிற்சி மையங்களும் குவிந்திருக்கும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களிலிருந்து மட்டும் 5,646 மாணவ அழைக்கப்பட்டிருந்தனர்.

இது, கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் 21 சதவீதமாகும். இந்த எண்ணிக்கையோடு, சேலம், கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, வேலூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலிருந்து கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையையும் சேர்த்தால், அது 12,585 ஆகும்.

அதாவது, கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட மொத்த மாணவர்களுள் 50 சதவீத மாணவர்கள் இந்தப் பத்து நகர்ப்புற மாவட்டங்களிலிருந்து அழைக்கப்பட்டுள்ளனர்.

அதேபொழுதில், சிவகங்கை, இராமநாதபுரம், பெரம்பலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 10 பின்தங்கிய மாவட்டங்களிலிருந்து கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 3,019 தான். (12.11 சதவீதம்)

அரசுப் பள்ளி எதிர் சி.பி.எஸ்.இ. பள்ளி, தமிழ் வழி எதிர் ஆங்கில வழி, நகர்ப்புறம் எதிர் கிராமப்புறம் என்ற முரண்களை நீட் தேர்வு ஆழப்படுத்தியிருப்பதை மேற்சொன்ன புள்ளிவிவரங்கள் நிரூபிக்கின்றன.

‘‘தகுதியான மாணவர்கள் மட்டுமே மருத்துவக் கல்லூரிகளில் சேருவதை உத்தரவாதப்படுத்துவது, மருத்துவக் கல்வி வணிகமயமாவதைத் தடுப்பது” என்ற நோக்கங்களுக்காகத்தான் நீட் தேர்வைக் கட்டாயமாக்குவதாக உச்ச நீதிமன்றம் திரும்பத் திரும்ப வாதாடி வருகிறது.

ஆனால் அதில் கடுகளவும் உண்மையில்லை. கட்டணம் மற்றும் மாணவர் சேர்க்கை விடயங்களில் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்குச் சட்டபூர்வமாகவே அளிக்கப்பட்டிருக்கும் சலுகைகளும் உரிமைகளும் மருத்துவக் கல்வி வணிகமயமாவதைத் தீவிரமடையச் செய்திருக்கிறதேயொழிய, அதனை இம்மியளவுகூடத் தடுத்துவிடவில்லை.

*****

நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டபோது, ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்ச மதிப்பெண்கள் எடுத்தால்தான் தேர்ச்சி என்ற விதி இருந்தது. அதன் பின்னர் இந்த விதி, தனித்தனியாக அல்லாமல், அனைத்துப் பாடங்களிலும் சேர்த்து குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி என மாற்றியமைக்கப்பட்டது.

இப்புதிய விதியின்படி 2017 ஆம் ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் பொதுப் பிரிவினருக்கு 131, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினப் பிரிவினருக்கு 107 என நிர்ணயிக்கப்பட்டது. இந்தக் குறைந்தபட்ச மதிப்பெண்கள் 2018 -ஆம் ஆண்டில் முறையே 119, 96 எனக் குறைக்கப்பட்டது.

மேநிலைப் பள்ளி இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வில் தேர்ச்சி அடைவதற்குக் குறைந்தபட்சமாக 35 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என்றுள்ள நிலையில், மருத்துவக் கல்லூரிக்கான தகுதிகாண் தேர்வு எனப்படும் நீட் (2018) தேர்வில் குறைந்தபட்சமாக 13.3 சதவீதத்திலிருந்து 16.5 சதவீத மதிப்பெண்கள் வரை எடுத்தால் தேர்ச்சி என்பது நகைப்புக்குரியது.

தரத்தை நிலைநாட்டுவதற்காகத்தான் நீட் தேர்வு என்று முழங்கியவர்கள், தரத்தை மென்மேலும் குறைத்துக் கொண்டே செல்வது ஏன்? இங்கேதான் இருக்கிறது சூட்சுமம்.

இந்தியாவிலுள்ள மாநில அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த மருத்துவ இடங்கள் 66,620. இதில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்கள் 30,455. தனியார் கல்லூரிகளில் 36,165. இந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களின் எண்ணிக்கையோ 7,14,562.
அதாவது ஒரு இடத்துக்கு 11 மாணவர்கள். அரசு மருத்துவக் கல்லூரி இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான சேர்க்கைக்கு ஒரு இடத்திற்கு அதிகபட்சமாக மூன்று அல்லது நான்கு மாணவர்கள் என்ற விகித அடிப்படையில்தான் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுகின்றனர்.

பிறகு ஏன் தேர்ச்சி மதிப்பெண்களைக் குறைத்து அதிகமான மாணவர்களை வெற்றி பெற வைக்கிறது சி.பி.எஸ்.இ.?

இது, நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆள் பிடித்துக் கொடுப்பதற்கான ஏற்பாடாகும்.

நிர்வாக ஒதுக்கீடு இடங்களில் சேருவதற்கு நீட் தேர்வில் எத்துணை மதிப்பெண் கிடைத்திருக்கிறது என்பதைவிட, ஒவ்வொரு ஆண்டும் பல இலட்ச ரூபாய் கட்டணம் செலுத்தும் வசதியிருக்கிறதா என்பதுதான் உண்மையான தகுதியாகும். எனவே, வலை எந்தளவிற்கு விரிவாக விரிக்கப்படுகிறதோ, அந்தளவிற்குப் பணம் படைத்த மாணவர்கள் கிட்ட வாய்ப்புண்டு என்பதால்தான், நீட் தேர்வு தேர்ச்சி மதிப்பெண் குறைவாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

தனியாருக்கு ஆள் பிடித்து கொடுக்கும் புரோக்கர் வேலையைத்தான் மோடி அரசு செய்து வருகிறது. 2017 ஆம் ஆண்டில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள 5,000 மேற்பட்ட இடங்களை நிரப்புவதற்காக உச்ச நீதிமன்றத்தை அணுகிய மைய அரசு, மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடுவை நீட்டித்து வாங்கியதோடு, ஒரு இடத்திற்குப் பத்து மாணவர்கள் என்ற விகிதத்தில் கலந்தாய்வுக்கு மாணவர்களை அழைக்கவும் அனுமதி பெற்றுத் தந்தது.

இதன் விளைவாக, நீட் தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண்களை மட்டுமே எடுத்துத் தேர்ச்சி பெற்ற பணக்கார வீட்டுக் குலக்கொழுந்துகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் சேரும் வாய்ப்பு உருவாக்கிக் கொடுக்கப்பட்டது.

அந்த ஆண்டில் இந்தியாவெங்கிலுமுள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த 1,990 மாணவர்கள் நீட் தேர்வில் எடுத்த மதிப்பெண் 150 குறைவு. அவர்களுள் நானூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இயற்பியல், வேதியியல் பாட நீட் தேர்வில் 180 வெறும் 9 மதிப்பெண்களையே பெற்றிருப்பதும் 110 பேர் இந்த இரண்டு பாடங்களிலுமோ அல்லது ஏதாவது ஒன்றிலோ பூஜ்ஜியம் அல்லது அதற்குக் குறைவான மதிப்பெண்ணைப் பெற்றிருப்பதையும் முன்னணி ஆங்கில நாளிதழ் அம்பலப்படுத்தியிருக்கிறது.

இதன் பிறகும்கூடத் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீடு இடங்கள் கடந்த ஆண்டில் முழுமையாக நிரம்பவில்லை. இதனால் கர்நாடக மாநிலத்திலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள் தள்ளுபடி விலையில் இடங்களை நிரப்ப முயன்றதாகச் செய்திகள் வெளிவந்தன. அப்படிப்பட்ட துர்பாக்கிய நிலை 2018 -லும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே, நீட் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் முந்தைய ஆண்டைக் காட்டிலும் குறைவாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

*****

நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளுக்கு ஆள் பிடித்துவிடும் ஏஜெண்டாக மட்டுமின்றி, அப்பல்கலைக்கழகங்கள் கட்டணம் என்ற பெயரில் அடிக்கும் கொள்ளைக்கு செக்யூரிட்டியாகவும் உச்ச நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது.

நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டு கல்விக் கட்டணம் 18 இலட்ச ரூபாய் முதல் 22 இலட்ச ரூபாய் வரை வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அவ்வழக்கில் ஆண்டுக் கல்விக் கட்டணத்தை 13 இலட்ச ரூபாயாக நிர்ணயித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆண்டுக் கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்கக் குழுவொன்றை அமைக்க வேண்டும் என்றும், அந்தக் குழு 13 இலட்ச ரூபாய்க்கு மேல் கட்டணம் நிர்ணயித்தால், கூடுதல் கட்டணத்தை மாணவர்களிடமிருந்து வசூலித்துக் கொள்ளலாம் எனப் பல்கலைக்கழக நிர்வாகங்களுக்குச் சாதகமாகவே தீர்ப்பளித்தது.

கட்டண நிர்ணயக் குழு அமைக்கும் வரையிலும்கூடப் பொறுக்காத நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.

அந்நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உல்டாவாக மாற்றி, நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மாணவர்களிடம் 22 இலட்ச ரூபாய் வரை கட்டணம் வசூலித்துக் கொள்ள அனுமதித்துவிட்டு, கட்டண நிர்ணயக் குழு குறைவாகக் கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்தால், மீதிப் பணத்தை மாணவர்களிடம் நிர்வாகங்கள் திருப்பிச் செலுத்த வேண்டும் எனத் தீர்ப்பளித்தது. யானை வாய்க்குள் போன கரும்பு மீண்டு வந்ததாக வரலாறு உண்டா?

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 2.85 இலட்ச ரூபாய் முதல் நான்கு இலட்ச ரூபாய் வரை கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அக்கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.12.50 இலட்ச ரூபாய் வரை கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவை இரண்டுக்குமான சராசரியைக் கணக்கில் கொண்டால், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுக் கல்விக் கட்டணம் அதிகபட்சம் ஏழு இலட்ச ரூபாய்தான்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும் நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளுக்கும் பெயரைத் தவிர வேறு பெரிய வேறுபாடு இல்லை என்ற நிலையில், நிகர்நிலைப் பல்கலைக்கழக நிர்வாகங்கள் ஆண்டு கல்விக் கட்டணமாக 22 இலட்ச ரூபாய் வசூலித்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதித்திருப்பது கட்டணக் கொள்ளைக்கு வழங்கப்பட்டிருக்கும் சட்டபூர்வ அங்கீகாரம் தவிர வேறில்லை.

நீட் தேர்வுக்கான தனியார் பயிற்சி மையங்களில் குறைந்தபட்ச கட்டணம் முப்பது, நாற்பதாயிரம் முதல் அதிகபட்சமாக ஒரு இலட்ச ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த ஆண்டு நீட் தேர்வை எழுதிய 12,69,222 மாணவர்களுள் குறைந்தபட்சமாக சரிபாதிப் பேர் தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து தேர்வுக்குத் தயாராகியிருப்பார்கள் என எடுத்துக்கொண்டால்கூட, பல்லாயிரம் கோடி ரூபாய் இந்த வணிகத்தில் புரளுகிறது என்பது உறுதியாகிறது.

மதிப்பெண்களையோ, அறிவுத் திறனையோ அல்ல, பணத்தை முதன்மைத் தகுதியாகக் கொண்டுவந்து நிறுத்தியிருப்பதுதான் நீட் தேர்வின் ஒரே சாதனை!

-திப்பு
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2018

மின்னூல்:
புதிய ஜனநாயகம்

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

பங்குச் சந்தை 2 : செலவழித்தால் பணம் – பெருக்கினால் மூலதனம் !

பந்தய மூலதனம் – 2

பங்குச் சந்தை குரங்குகளை வாங்கி விற்கும் சூதாட்டம் மட்டும்தானா?

நாம் ஏன் பங்குச்சந்தை பற்றி புரிந்துகொள்ள வேண்டும் ,நமக்கும் பங்குச் சந்தைக்கும் என்ன சம்பந்தம்? – கேள்விக்கு விடை தெரிய தொடர்ந்து படியுங்கள்.

“1993-ல் இன்ஃபோசிஸ் தனது பங்குகளை வெளியிட்ட போது அதில் ரூ 10,000 முதலீடு செய்து பங்குகளை விற்காமல் வைத்திருந்தால் அவற்றின் மதிப்பு இன்றைக்கு ரூ 2 கோடி” என்பது போன்ற பங்குச் சந்தை பணத்தை பல மடங்காக்கும் மாயம் பற்றி படித்திருப்போம். அதே போல “1990-ல இந்த ஏரியால கிரவுண்ட் 2,000 ரூபான்னு 2 கிரவுண்ட் வாங்கி போட்டாரு, இன்னைக்கு அதன் மதிப்பு 10 கோடி” என்று சொல்வதையும் கேட்டிருப்போம்.

மும்பையின் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா, வாரன் பஃபெட்

பங்குச் சந்தையில் பணத்தை பன்மடங்காக்கும் வித்தை, அதில் அமெரிக்காவின் வாரன் பஃபெட், மும்பையின் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா செய்து கொண்டிருக்கும் மாயாஜாலம் இவற்றை எல்லாம் பற்றி பேசுவதற்கு முன்பு முதலீடு என்றால் என்ன, என்ன மூலதனம் என்றால் என்ன என்பதை ஒரு எளிய உதாரணம் மூலம் பார்க்கலாம்.

எல்&டி நிறுவனத்தில் வேலை செய்யும் அனுபவம் வாய்ந்த, மூத்த, நிரந்தர தொழிலாளர்கள் 5 பேருக்கு அந்நிறுவன முதலாளி ஆண்டு போனஸ் கொடுக்க முடிவு செய்கிறார். அமித், சங்கர், இஷா, பிரகாஷ், அருந்ததி என்ற இந்த இந்த 5 பேருக்கும் தலா ரூ 10 லட்சம் போனசாக கிடைக்கிறது.

சங்கர் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த முதல் தலைமுறை பட்டதாரி, கஷ்டப்பட்டு படித்து, முன்னேறி, 20 ஆண்டுகளாக சாஃப்ட்வேர் துறையில் உழைத்து உடல் தேய்ந்து வசதியான நிலையை அடைந்திருக்கிறார். இந்த வயதிலாவது வாழ்க்கையை அனுபவிப்போம் என்று கிடைத்த 10 லட்சத்தை வைத்து அப்பா, அம்மா, மாமனார், மாமியார், மனைவி, குழந்தைகளோடு ஒரு 10 நாள் ஐரோப்பிய டூர் போய் வருகிறார்.

இஷா லக்னோவில் இருக்கும் தனது நண்பர் மூலமாக புகழ் பெற்ற லக்னோ புடவைகளை வரவழைத்து சென்னையில் வீட்டுக்கு வீடு விற்பதற்கு அந்த 10 லட்சத்தை பயன்படுத்துகிறார். வாங்கிய விலை, போக்குவரத்து செலவு, விற்கப் போகும் விற்பனையாளர் சம்பளம் எல்லாம் போக ஒரு சுற்று விற்று முடித்ததும் (6 மாதம்) அவர் கையில் ரொக்கமும், புடவைகள் சரக்குமாக ரூ 10 லட்சத்துக்கு மேல் போக கூடுதலாக ரூ 1 லட்சம் நிற்கிறது.

பிரகாஷின் நீண்ட நாள் கனவு ஏதாவது உருவாக்கி விற்க வேண்டும் என்பது. அவர் ஒரு சிறு அலுவகத்தை வாடகைக்கு எடுத்து, 4 கணினிகள் வாங்கி, 2 சாஃப்ட்வேர் டெவலப்பர், 1 மார்க்கெட்டிங் எக்சிகியூட்டிவ், ஒரு பிசினஸ் நிர்வாகி நியமித்து தொழில் தொடங்குகிறார். ஒரு நிறுவனத்துக்கான மென்பொருள் செய்து கொடுக்கும் ஆர்டர் பிடித்து, அதைச் செய்து கொடுக்கிறார்கள். அதற்கு விலையாக ரூ 15 லட்சம் பெறுகிறார்கள். ஒரு வருட முடிவில் முன்பணம் கொடுத்த அலுவலகம், அறைக்கலன்கள், கணினிகள் மீந்திருக்க, சம்பள செலவு, மின்சார செலவு, போக்குவரத்து செலவு எல்லாம் போக போட்ட ரூ 10 லட்சத்துக்கு மேல் ரூ 2 லட்சம் லாபமாக பிரகாஷின் கையில் நிற்கிறது.

“1993-ல் இன்ஃபோசிஸ் தனது பங்குகளை வெளியிட்ட போது அதில் ரூ 10,000 முதலீடு செய்து பங்குகளை விற்காமல் வைத்திருந்தால் அவற்றின் மதிப்பு இன்றைக்கு ரூ 2 கோடி – இது உண்மையா?”

அருந்ததி கொஞ்சம் கெட்டியான ஆள். பணத்தை சேமிப்புக் கணக்கிலேயே வைத்திருந்து விட்டு, ஒரு கட்டத்தில் இஷாவின் வியாபாரத்தை விரிவுபடுத்த அந்தப் பணத்தை கொடுத்து விட்டார். ஒரு வருடத்துக்கு 10% வட்டி வீதம் ரூ 1 லட்சம் இஷா கொடுத்து விட வேண்டும்.

அமித் பற்றி பார்ப்பதற்கு முன்பு இந்த 4 பேர் கையில் அந்த 10 லட்சம் எப்படி பயன்பட்டிருக்கிறது என்று பார்ப்போம்.

சங்கர் அதை செலவழித்து முடித்து விட்டார். ஐரோப்பிய டூரோடு கையில் காசு காலி, அடுத்த மாதம் சம்பளம் வாங்கினால்தான் அடுத்த செலவு. இதை தினமும் கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தும் கட்டிட தொழிலாளிக்கு கிடைக்கும் சம்பளத்தோடோ, ஆலையில் வேலை செய்து மாதம் ரூ 10,000, 20,000 சம்பளம் வாங்கும் தொழிலாளியின் வருமானத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் தவறில்லை. பணம் கையில் வருகிறது, தேவைக்கு செலவழிக்கிறோம், அடுத்த செலவுக்கு மறுபடியும் வேலை செய்து சம்பாதிக்க வேண்டும்.

இஷா, லக்னோவில் வாங்கிய புடவைகளை வாங்கிய விலை + போக்குவரத்து செலவு + இதர செலவுகள் இவற்றுடன் கூடுதலாக சேர்த்து விலை வைத்து விற்று லாபம் சம்பாதித்திருக்கிறார். புடவைகள் விற்காமல் தேங்கி விட்டாலோ, சேதமடைந்து விட்டாலோ, வாடிக்கையாளரிடம் பணம் வரா விட்டாலோ பிரச்சனை; ரிஸ்க் நிறைய உண்டு. இதனுடன் மளிகைக் கடை நடத்தும் அண்ணாச்சியின் பிசினசை, கிரேஸ் சூப்பர் மார்க்கெட் கடைகளை அளவு, இன்னபிற காரணிகளை சேர்த்து ஒப்பிட்டு பார்க்கலாம். குறைந்த விலைக்கு வாங்கி, செலவுகள் போக அதிக விலைக்கு விற்று லாபம் ஈட்டுவது இதன் அடிப்படை.

பிரகாஷ் அலுவலகம், கணினிகள் என்று முதலீடு செய்து, மாதா மாதம் 4 பேருக்கு சம்பளம் கொடுத்து, ஒரு பொருளை (மென்பொருள்) உற்பத்தி செய்து விற்றிருக்கிறார். அதை விற்கும் போது சம்பள செலவு, மின் கட்டணம், அலுவலக வாடகை இவற்றோடு கணினியின் தேய்மான செலவையும் சேர்த்து கணக்கு போட்டு அதற்கு மேல் ஒரு விலை வைத்து பெற்றிருக்கிறார். அது அவருடைய முதலீட்டுக்குக் கிடைத்த லாபம். இதிலும் நிறைய பிரச்சனைகள் உண்டு, கணினியை பாதுகாத்து பராமரிக்க வேண்டும், மென்பொருள் தயாரிப்பை கண்காணித்து முறைப்படுத்த வேண்டும், அதன் தரம் சரியாக இல்லா விட்டால் பிரச்சனை, வாடிக்கையாளருக்கு திருப்தி இல்லை என்றால் பிரச்சனை, பணம் வராமல் போய் விடும் அபாயம் என்று பல ரிஸ்குகளுக்கு மத்தியில் போராடி லாபம் சம்பாதிக்கிறார். இதை 4 லட்சம் ஊழியர்கள் வேலை செய்யும் டி.சி.எஸ் நிறுவனத்துடனோ, இல்லை கார்களை உற்பத்தி செய்யும் ரெனால்ட் நிசான் நிறுவனத்துடனோ ஒப்பிட்டுக் கொள்ளலாம். அவற்றின் அளவு, சந்தை வலிமை, ஏகபோகம் ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் அவ்வளவுதான்.

அருந்ததிக்கும் லாபம் கிடைக்கிறது. அது வட்டி வடிவத்தில் கிடைக்கிறது. இஷாவின் வியாபாரத்தில் இஷா லாபத்தை எடுப்பதற்கு முன்பு அருந்ததிக்கு வட்டியை கொடுத்து விட வேண்டும். அருந்ததியின் பணம் முழுகுகிறது என்றால் அதற்கு முன்பே இஷாவும் முழுகியிருக்கிறார் என்று பொருள். தொழில் செய்வதற்கு வட்டிக்குக் கடன் கொடுக்கும் பாரத ஸ்டேட் வங்கியையோ, முத்தூட் ஃபைனான்சையோ இதனுடன் பொருத்தி பார்த்துக் கொள்ளலாம்.

  1. சங்கர் பணத்தை செலவுக்காக பயன்படுத்தினார், அத்தோடு அந்தப் பணத்தின் கதை முடிந்து விட்டது. இதை செலவு பணம் என்று முடித்து விடலாம்.
  2. இஷா பணத்தை பொருளாக மாற்றி விற்று பெருக்கியிருக்கிறார், இதை வணிக மூலதனம் என்று அழைப்போம்.
  3. பிரகாஷ் பணத்தை உற்பத்தி பொருட்களாகவும், சம்பளமாகவும் செலவழித்து புதிதாக ஒரு பொருளை உற்பத்தி செய்வித்து விற்று பெருக்கியிருக்கிறார். இதை உற்பத்தி மூலதனம் என்று சொல்வோம்.
  4. அருந்ததியோ பணத்தை வியாபாரத்தில் பெருக்கும் இஷாவிற்கு பணத்தை கொடுத்து அவரது லாபத்தில் ஒரு பகுதியை வட்டியாக பெற்றுக் கொண்டிருக்கிறார். இதை வங்கி மூலதனம் என்று வைத்துக் கொள்வோம்.

அதாவது மூலதனம் என்பது பெருகிச் செல்வது. வளர்ந்து கொண்டே போவது. அப்படி வளராததை மூலதனம் என்று அழைக்க மாட்டோம். இது எல்லாவற்றுக்கும் மேலாக, இது எல்லாவற்றிலிருந்தும் வேறுபட்டு செயல்படுவது பங்கு மூலதனம் அல்லது பந்தய மூலதனம். அது என்னவென்று அடுத்த பகுதியில் பார்ப்போம்.

(தொடரும்)
நன்றி : new-democrats

தொடரின் முந்தைய பாகம்:
பங்குச் சந்தை என்றால் என்ன ? – பாகம் 1

அவசர நிலை : ஆர்.எஸ்.எஸ். அன்றும் இன்றும்

அவசரநிலையை அறிவித்த இந்திராகாந்தி தலைமையிலான அமைச்சரவை.

‘‘இந்திய வரலாற்றில் அவசரநிலை என்பது ஒரு கரும்புள்ளி. நாம் இந்த நாளைக் கருப்பு நாளாக கடைப்பிடிக்க காரணம், காங்கிரஸ் செய்த பாவத்தை விமரிசிப்பதற்காக மட்டுமல்ல, அரசமைப்பு சட்டத்தையும் ஜனநாயகத்தையும் காப்பாற்றவேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத்தான் இதைக் கடைப்பிடிக்கிறோம். அந்த நாட்களில் இந்த நாடே ஒரு சிறையாக மாற்றப்பட்டுவிட்டது என்று அவசரநிலையின் 43 ஆண்டை ஒட்டி பா.ஜ.க.வின் கூட்டமொன்றில் பேசியிருக்கிறார் மோடி.

நெருக்கடி நிலை பற்றி ஒரு சிந்தனை என்று சோ எழுதிய கட்டுரையை 4.7.2018 துக்ளக்கில் மீள் பிரசுரம் செய்திருக்கிறார் குருமூர்த்தி. அக்கட்டுரை கீழ்க்கண்டவாறு முடிகிறது:

‘‘நாட்டுக்கு இன்று முதல் தேவை ஒழுங்கு முறையும் கட்டுப்பாடும். அவற்றைச் சாதிக்க நெருக்கடி நிலை அமல் ஆவது பெரிதும் உதவும் என்பது நாடு கண்ட அனுபவம். குடிமக்களுக்கு உரிமைகள்தான் உண்டே தவிர கடமைகள் எதுவும் கிடையாது என்ற ஜனநாயக விரோத சிந்தனையை மாற்ற எமர்ஜென்சியால்தான் முடியும் என்று நாம் கற்ற பாடத்தை இன்று நினைவுகூரத் தோன்றுகிறது.”

அவசர நிலை குறித்து மோடி பேசியிருப்பது உண்மையா, குருமூர்த்தி வழிமொழியும் சோவின் கருத்து உண்மையா? எது மோடி அரசின் கருத்து? அன்று அவசரநிலையை எதிர்த்தவர்கள் போலவும் ஜனநாயகத்துக்காகப் போராடியவர்களைப் போலவும் நடிக்கின்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரும் அவர்களது தலைமையும், உண்மையில் அன்றைக்கு இந்திராவிடம் சரணடைந்த கோழைகள். கள்ளத்தனமான இந்திராவுடன் கூட்டு வைத்துக் கொண்ட துரோகிகள் என்பதுதான் வரலாறு.

அவசரநிலையை அறிவித்த இந்திராகாந்தி தலைமையிலான அமைச்சரவை.

எனவே சோ வழிமொழிந்து குருமூர்த்தி கூறியிருப்பதுதான் ஆர்.எஸ்.எஸ். இன் கருத்து. ஜனநாயகம் என்ற கருத்தாக்கத்துக்கே ஆர்.எஸ்.எஸ். எதிரி என்பது மட்டுமல்ல, இந்தக் கோழைகள் கூட்டம் சுதந்திரத்தையோ ஜனநாயகத்தையோ எந்தக் காலத்திலும் விரும்பியதில்லை என்பதுதான் வரலாறு.

உண்மை இவ்வாறிருக்க, அவசரநிலைக்காலத்தில் ஒரு மாத காலம் வரை சிறை வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு மாதம் தோறும் 5000 ரூபாயும், ஒரு மாதத்துக்கு மேல் சிறை வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு மாதம் 10,000 ரூபாயும் ஓய்வூதியம் அளிக்கவிருப்பதாக மகாராட்டிர பா.ஜ.க. அரசு இந்த ஜுன் மாதம் அறிவித்திருக்கிறது.

அரசின் இந்த முடிவை எள்ளி நகையாடிய மகாராட்டிர காங்கிரஸ் தலைவர் அசோக் சவான், ‘‘அவசர நிலையை ஆதரித்தவர்களும் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்தவர்களுமான ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு ஓய்வூதியம் கொடுப்பது என்ன நியாயம்? என்று கேள்வி எழுப்பினார். பா.ஜ.க.வினர் யாரும் இதற்கு பதிலளிக்க முடியவில்லை.

‘‘அவசரநிலைக்காலத்தில் ஆர்.எஸ்.எஸ். செய்தது என்ன? என்பது குறித்து பல்வேறு ஆதாரங்களுடன் ஏ.ஜி.நூரானி எழுதியிருக்கும் கட்டுரையொன்று சமீபத்திய ஃபிரண்ட்லைன் இதழில் வெளிவந்துள்ளது. அதிலிருந்து சில பகுதிகளைப் பார்ப்போம்.

ஜூன் 25, 1975 அன்று அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. ஜுலை 15 அன்றே சிறையில் இருந்து தனது முதல் மன்னிப்பு கடிதத்தை அனுப்பி விட்டார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் பாலாசாகேப் தேவரஸ்.

‘‘இந்த அரசுக்கோ சமூகத்துக்கோ எதிராக ஆர்.எஸ்.எஸ். எதுவும் செய்ததில்லை. எங்கள் திட்டத்திலேயே அப்படி எதுவும் கிடையாது. அரசாங்கம் எங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மகாராட்டிர காங்கிரஸ் முதல்வர் எஸ்.பி.சவானிடம் அக்கடிதத்தில் மன்றாடினார் தேவரஸ்.
அடுத்தபடியாக ஆகஸ்டு 22 ஆம் தேதி இந்திராவுக்கு நேரடியாக கடிதம் எழுதினார் தேவரஸ்.

‘‘ஆகஸ்டு 15 ஆம் தேதி செங்கோட்டையிலிருந்து நீங்கள் ஆற்றிய உரையைக் கேட்டேன். இன்றைய சூழலுக்கு மிகவும் பொருத்தமானதாக இருந்தது உங்கள் உரை… இந்து சமூகத்தை ஒன்றுபடுத்துவதுதான் எங்கள் நோக்கம். எங்களை ஒரு மதவாத அமைப்பு என்று சிலர் கூறுகிறார்கள். அது ஆதாரமே இல்லாத குற்றச்சாட்டு. இந்துக்கள் அல்லாதவர்களுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். எதையும் பிரச்சாரம் செய்ததே கிடையாது. நாங்கள் முஸ்லீம் எதிர்ப்பாளர்கள் என்பதும் அடிப்படையிலேயே தவறு. இசுலாமுக்கோ, முகமது நபிக்கோ, கிறித்தவத்துக்கோ, ஏசு கிறிஸ்துவுக்கோ எதிராக நாங்கள் ஒரு வார்த்தை கூட தவறாகப் பேசியதில்லை”

ஆர்.எஸ்.எஸ். தடையை விலக்கிக்கொள்ளக் கோரி எழுதிய கடிதம்.

என்று போகிறது அந்தக் கடிதம். தேவரஸ் சொல்வது அனைத்தும் பச்சைப்பொய் என்பதற்கு கோல்வால்கரின் நூல்களிலேயே போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன.

தேவரஸின் கடிதம் ஆர்.எஸ்.எஸ். மீது விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்கி, தங்களையெல்லாம் விடுவிக்குமாறு கோருகிறதே ஒழிய, அவசர நிலைக்கு எதிராகவோ, மற்ற கைதிகளை விடுவிக்க கோரியோ அதில் ஒரு வரி கூட கிடையாது.

இந்தக் கடிதங்களையெல்லாம் இந்திரா கண்டுகொள்ளவே இல்லை. ஆகையினால் அன்று ‘கெவர்மென்ட் சாமியார் என்று கேலியாக அழைக்கப்பட்ட வினோபா பாவேக்கு கடிதம் எழுதுகிறார் தேவரஸ்.

‘‘ஆர்.எஸ்.எஸ். பற்றி பிரதமர் கொண்டிருக்கும் தவறான அபிப்ராயத்தை மாற்றுவதற்கு முயற்சிக்குமாறு உங்களை நான் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் இதைச் செய்தால் ஆர்.எஸ்.எஸ். மீதான தடை நீக்கப்படும். ஆர்.எஸ்.எஸ். இன் தொண்டர்கள் பிரதமரின் தலைமையில் நாட்டின் முன்னேற்றத்துக்குப் பாடுபடுவார்கள் என்கிறார் தேவரஸ். இந்தக் கடிதத்திலும் அவசரநிலையை அகற்றுவது பற்றியோ, ஜெயப்பிரகாஷ் நாராயண் போன்றோரை விடுவிப்பது பற்றியோ ஒரு வார்த்தை கூட தேவரஸ் எழுதவில்லை.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் தேவரஸ்.

ஆர்.எஸ்.எஸ். இன் பச்சைத் துரோகம் குறித்து மகாராட்டிர தொழிற்சங்கத் தலைவர் பாபா ஆதவ், செக்யூலர் டெமாக்ரசி (ஆகஸ்டு, 1977) இதழில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

‘‘எப்பாடுபட்டாவது மகாராட்டிர முதல்வர் சவானையும் இந்திராவையும் நேரில் பார்த்து விடவேண்டுமென்று ஆர்.எஸ்.எஸ். தலைமை அரும்பாடு பட்டது. எரவாடா மத்திய சிறைச்சாலையில் கைதிகள் மத்தியில் அரசாங்கமே மன்னிப்புக் கடிதம் ஒன்றை சுற்றுக்கு விட்ட மறுகணமே, ஆர்.எஸ்.எஸ். இன் பெரும்பான்மையான உறுப்பினர்கள் அந்த மன்னிப்புக் கடிதத்தில் கையெழுத்திட்டுக் கொடுப்பதை நான் என் கண்ணால் பார்த்தேன். இன்று இந்தக் கோழைகள்தான் மாபெரும் வீரர்களாக தம்மை சித்தரித்துக் கொள்கிறார்கள்.

‘‘அரசாங்க கடிதம் வரும்வரை கூட காத்திருக்காமல், எப்படியாவது வெளியே போனால் போதும் என்று தனித்தனியே இவர்கள் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தார்கள் என்று ராஷ்ட்ரீய சுயம் சேவக் சங் என்ற தனது நூலில் குறிப்பிடுகிறார் டி.ஆர்.கோயல்.
ஆர்.எஸ்.எஸ். இன் அதிகாரபூர்வ பத்திரிகையான பாஞ்சஜன்யா (ஏப். 4, 1976) சஞ்சய் காந்தியின் உரையை வெளியிட்டது. அதன் மராத்தி பத்திரிகையான தருண் பாரத், சஞ்சய் காந்தி சிறப்பிதழே கொண்டு வந்தது.

அவசரநிலையை எதிர்ப்பதற்கு ஜெயப்பிரகாஷ் நாராயண் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த லோக் சங்கர்ஷ் சமிதியில் அங்கம் வகித்துக் கொண்டே, இன்னொருபுறம் இரகசியமாக இந்திராவிடம் மண்டியிட்டதுதான் ஆர்.எஸ்.எஸ். இன் வரலாறு.

ஏ.ஜி.நூரானி ஆதாரமின்றி இதைக் கூறவில்லை. அக்டோபர் 18, 1977 அன்று மகாராட்டிர சட்ட மன்றத்தில் தேவரஸின் கடிதங்கள் வைக்கப்பட்டதாக அவர் கூறுகிறார்.

நூரானி மட்டுமல்ல, அவசர நிலைக்காலத்தில் மத்திய உளவுத்துறை இயக்குநராக இருந்த டி.வி.ராஜேஸ்வர், அவசரநிலைக்காலம் குறித்த தன்னுடைய நூலிலும், இந்தியா டுடே டி.வி.க்காக செப், 21, 2015 அன்று கரன் தபாருக்கு அளித்த பேட்டியிலும் இதை உறுதி செய்கிறார்.

‘‘பிரதமர் இல்லத்துடன் தேவரஸ் ரகசியமாக தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, அவசர நிலையின் மூலம் நாட்டில் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் நிலை நாட்டுவதற்கு எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகளுக்காக இந்திராவுக்குப் பாராட்டு தெரிவித்தார். இந்திராவை மட்டுமல்ல, சஞ்சய் காந்தியையும் அவர்கள் சந்திக்க விரும்பினர். சஞ்சயின் நடவடிக்கைகளை ஊக்குவித்தனர். அவசர நிலை முடிவுக்கு வந்து தேர்தல் அறிவிக்கப்பட்ட பின், ஒரு புறம் ஜனதா கட்சியில் இணைந்து கொண்ட ஜனசங் கட்சி, இந்திராவுக்கு எதிராக இருந்த அதே நேரத்தில், ஆர்.எஸ்.எஸ். இந்திராவுக்காக வேலை செய்தது என்று இந்தப் பேட்டியிலும் தனது நூலிலும் கூறுகிறார் ராஜேஸ்வர்.

இந்த உண்மைகள் எதையும் ஆர்.எஸ்.எஸ். காரர்களால் மறுக்கவோ மறைக்கவோ முடியவில்லை. தேவரஸ் இந்திராவிடம் மண்டியிடவில்லை என்றும் ஏ.ஜி.நூரானி போன்றவர்கள் இடதுசாரிகள் என்பதால் தங்கள் தலைவரை வேண்டுமென்றே அவதூறு செய்வதாகவும் ஆர்கனைசர் பத்திரிகை மழுப்பலாக சமாளிக்கிறது.

ஏ.ஜி.நூரனி (இடது) பாபா ஆதவ்.

நூரானி இருக்கட்டும், இன்றைய பா.ஜ.க. தளபதியான சு.சாமி அவசர நிலை அறிவிப்பின் 25 ஆண்டையொட்டி என்ன சொல்லியிருக்கிறார் என்பதைப் பார்ப்போம். பிப். 4, 2000 ஃபிரண்ட்லைன் இதழிலும், ஜூன், 13, 2000 இந்து நாளேட்டிலும் சுப்பிரமணியசாமி இரண்டு கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.

20 அம்சத்திட்டத்துக்கு வேலை செய்கிறேன் என்று தேவரஸ் இந்திராவுக்கு கடிதம் எழுதினார் என்றும், வாஜ்பாயியும் அவ்வாறே மன்னிப்பு கடிதம் கொடுத்தாரென்றும் அதில் குறிப்பிடுகிறார். அரசுக்கு எதிரான எந்தவித நடவடிக்கையிலும் ஈடுபடமாட்டேன் என்று இந்திராவுக்கு கடிதம் எழுதிக் கொடுத்ததன் விளைவாகத்தான் 20 மாத அவசர நிலைக்காலத்தின் பெரும்பகுதி நாட்களில் வாஜ்பாயி பரோலில் வெளியே இருந்ததாகவும் கூறுகிறார் சு.சாமி.

கூமி கபூர் என்ற பத்திரிகையாளர் (சு.சாமியின் மைத்துனி) சமீபத்தில் எழுதியிருக்கும் நூலிலும், அவசர நிலைக்காலத்தில் ஆர்.எஸ்.எஸ். இன் சரணாகதியை உறுதி செய்கிறார்.

அவசரநிலைக்காலத்தில் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் பலர் சிறை வைக்கப்பட்டது உண்மைதான். ஆனால் அது ஆளும் வர்க்கத்தின் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட முரண்பாட்டின் ஒரு விளைவு. அவ்வளவே. அவசர நிலைக்காலத்தில் புரட்சியாளர்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் ஒடுக்கப்பட்டதுடன் இது ஒப்பிடத்தக்கதல்ல.

சிறை வைக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். காரர்கள் ஏன் மன்னிப்புக் கேட்கவேண்டும்? ஏனென்றால் முதலாவதாக அவர்கள் கோழைகள். இரண்டாவதாக ஆர்.எஸ்.எஸ். ஒரு ஆளும் வர்க்க எடுபிடி அமைப்பு. தனது தன்மையிலேயே அது ஒரு ஜனநாயக விரோத பாசிச அமைப்பு. இந்திராவின் பாசிசம் தங்களை ஒடுக்கியது மட்டும்தான் அவர்களது பிரச்சினையேயன்றி, ஜனநாயகம் அவர்களுடைய கோரிக்கை அல்ல.

துக்ளக் தலையங்கத்தில் ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டை ஆதரித்து எழுதப்பட்ட சில வரிகளை சென்ற இதழில் மேற்கோள் காட்டியிருந்தோம். ‘‘நாட்டின் 99% மக்களுக்கு தமது உடம்பு குறித்த அச்சத்தை அரசு ஏற்படுத்த வேண்டும். அதுதான் தண்ட நீதி. அதுதான் நாட்டுக்குத் தேவை என்கிறது அந்த தலையங்கம்.

‘‘நாட்டில் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் நிலைநாட்டிய காரணத்தினால்தான் அவசரநிலையை ஆதரிப்பதாக அன்று தேவரஸ் இந்திராவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். துக்ளக் சோ அதைத்தான் கூறுகிறார். இன்று அவசர நிலையை நினைவுகூரும் குருமூர்த்தி, மீண்டும் அவசரநிலை வேண்டும் என்று சோ கருத்தை வழிமொழிகிறார்.

அன்றைய அவசர நிலைக்காலத்தை இன்றைய மோடி அரசோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இதனைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். அன்று ஊடகங்கள் ஒடுக்கப்பட்டன. இன்று பெரும்பாலானவை சரணடைந்து விட்டன. நீதித்துறையும் அவ்வாறே. மாநிலங்களின் உரிமை பறிப்பு, அதிகார மையப்படுத்துதல், எல்லா அரசு அதிகாரப் பதவிகளிலும் பார்ப்பன பாசிஸ்டுகள் அமர்த்தப்படுதல், அரசியல் எதிரிகள் தேசவிரோதி என்று குற்றம் சாட்டப்படுதல்… என ஒவ்வொரு அம்சத்திலும் அன்றைய காலத்தை இன்றைய நிலை விஞ்சிக்கொண்டிருக்கிறது. இந்த 43 ஆண்டுகளில் இந்திய அரசமைப்பின் எல்லா உறுப்புகளும் தமது பெயரளவிலான ஜனநாயகத் தன்மையையும் இழந்து, பாசிசத்துக்கு இணக்கமானவையாக மாறியிருக்கின்றன.

அன்று சிறை வைக்கப்பட்டிருந்த ஆர்.எஸ்.எஸ். பாசிஸ்டுகள் இன்று அதிகாரத்தில் இருக்கிறார்கள். சட்டபூர்வமான அதிகாரத்தில் இருப்பது மட்டுமல்ல, அரசியல் சட்டத்துக்கு அப்பாற்பட்ட ஆயுதம் தாங்கிய அதிகாரமாகவும் நிலைபெற்றிருக்கிறார்கள். அவசரநிலைக்காலத்தின் கைதிகளுக்கு மகாராட்டிர அரசு வழங்கவிருக்கும் ஓய்வூதியம் என்பது, இந்துத்துவ பாசிசத்தை சட்டபூர்வமாக்கும் நடவடிக்கையின் முதல்படி. மோடி அரசின் கீழ் அடுத்தபடியாக பசுக்குண்டர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்படலாம்.
– அஜித்

புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2018

மின்னூல்:
புதிய ஜனநாயகம்

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

சென்னை பாரீஸ் கார்னர் : இதோ பாக்குறியே இந்த ரோடு தான் எங்க வீடு !

சென்னை பாரீஸ் கார்னர்.. சென்னையின் பழமையான அடையாளங்களில் முக்கியமான ஒன்று…. பாரீஸ் என்றாலே விதவிதமான சந்தைகளைக் கொண்ட பஜார் தான். எப்பொழுதும் பரபரப்பாக இயங்கும் ஒவ்வொரு பஜாருக்கும் ஒரு குறிப்பிட்ட தொழில்… பாரிமுனையிலிருந்து வால்டாக்ஸ் சாலை வரை பரந்து விரிந்த சாம்ராஜ்யம்.

1788-ல் சென்னை வந்த இங்கிலாந்தின் தாமஸ் பாரி, வணிகராக உரிமம் பெற்று தொழிலை ஆரம்பித்தார். 1795ல் ‘தாமஸ் பாரி அண்ட் கோ’வாக உருவானது. 1819-ல் ஜான் வில்லியம் டேர் என்பவருடன் இணைய ‘பாரி அண்ட் டேர்’ நிறுவனமாக மாறியது.

1824ல் காலரா நோயால் பாதிக்கப்பட்டு பாரி மரணமடைகிறார். இவருடைய வணிக பங்குதாரர் டேர் தலைமையில் பாரி நிறுவனம் வளர ஆரம்பித்த பிறகு, ‘ஈஸ்ட் இந்தியா டிஸ்டில்லரி (EID) அண்ட் சுகர் ஃபேக்டரி’ உருவானது. 1939ல் டேர் ஹவுஸ், ‘ஆர்ட் டிகோ’ என்ற கட்டட பாணியில் உருவாக்கப்பட்டது. அன்று தாமஸ் நிறுவிய வணிகக் கட்டடம் இன்று, ‘ஈ.ஐ.டி.பாரி இந்தியா லிட்’ என அழைக்கப்படுகிறது.

அந்தக் கட்டடம் இருக்கும் வரிசையில், நூற்றுக்கணக்கான கடைகள், பல்லாயிரக்கனக்கான தொழிலாளர்கள், வீடற்ற – முகவரியற்ற மக்களுக்கு நிரந்தர முகவரியாக  இருக்கும் அந்த இடம் தான் பாரீஸ் கார்னர்.

சிக்னலில் போக்குவரத்து காவலர் இல்லததால் குறுக்கும் நெடுக்குமாக இரு சக்கர,  நான்கு சக்கர வாகனங்கள் நெருக்கடியில் புகையை கக்கியவாறே ஊர்ந்து சென்று கொண்டிருந்தன. சென்னை உயர்நீதி மன்றத்தின் ஆவின் கேட்  அருகே வழக்கறிஞர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தார்கள்.  ஆர்ப்பாட்டம் செய்தவர்களை மறைத்துக் கொண்டு பாதி சாலையில் சுற்றி நின்றிருந்தது போலிசு.

அந்த சாலையின் எதிர்திசையில் அமைந்துள்ள கடைவீதியின் கூட்ட நெரிசலில் தங்கள் உடல் பலத்தையும் மீறி மீன்பாடி வண்டிகளில் சரக்கு மூட்டைகளை வானுயர ஏற்றிக் கொண்டு நெரிசில் சிக்கி திணறிக் கொண்டிருந்தனர் தொழிலாளர்கள்…

சாலையோர நடைபாதையில் வயதான பாட்டி ஒருவர் பூக்களை கட்டிக்கொண்டிருந்தார். ஐம்பது வயதைக் கடந்த ஒருவர் வெறுமனே ஐந்து வாட்ச்களை மட்டும் விற்பனைக்கு வைத்து யாரேனும் வருவார்களா என்று காத்துக்கிடந்தார்.  சற்று தொலைவில் கும்பலாக அமர்ந்து பெண்கள் பூவை கட்டிக்கொண்டிருந்தனர்.

அவர்களுக்கு அருகிலும், படிகட்டுகளிலும் அமர்ந்து ஓட்டலில் இருந்து வாங்கி வந்திருந்த உணவை சமமாக பங்கிட்டு சாப்பிட்டு கொண்டிருந்தர். இவற்றை எல்லாம் பார்த்தும் பார்க்கததுமாக அவசர அவசரமாக கடக்க முயன்ற நாகரீக மனிதர்கள்..

அதே நடைபாதை ஓரம் ஒரு ஹாலில் கருத்தரங்கம் நடக்கவிருப்பதற்கான செய்தியை தெரிவிக்கும் வகையில் ஒரு பேனரை இரண்டு இளைஞர்கள் கட்டிக் கொண்டிருந்தர். அங்கிருந்த டீ மற்றும் பழரசக் கடைகளில் வழக்கறிஞர்களின் ஆக்கிரமித்திருந்தனர்.

ஆண்டர்சன் தெரு

ஆண்டர்சன் தெரு வந்தது… ஒருமணி நேர மழைக்கே தாக்குப்பிடிக்க முடியாத அளவிற்கு பலவீனமாக அந்த வீதி இருந்ததை தேங்கி நின்ற மழை நீர் காட்டிக்கொடுத்தது. அழுக்கு கலந்த நீரில் மிகவும் பாதுக்காப்பாக மக்கள் நடந்து சென்றனர்…. அந்தத் தெருவில் பெரும்பலும் ஸ்டேசனரி மற்றும் திருமண, சுப நிகழ்ச்சி கார்ட் கடைகள் தான் இருந்தன.

தெருவின் ஓரமாக நிருத்தப்பட்டிருந்த மீன்பாடி வண்டியின் மீது அமர்ந்திருந்தனர் தொழிளாலர்கள். மெல்ல சென்று அவர்களிடம் பேச்சு கொடுத்ததும், முதலில் நம்மிடம் பேச தயங்கினர். ஒரு சிலர் கூட்டத்தில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டு பகடை விளையாட போகிறோம் என்று நழுவி கொண்டனர்.

அந்த அமைதிய கலைக்க முன்வந்தார் சரவணன்…………”நான் ஒன்பதாவது வரைக்கும் படிச்சிருக்கேன். கார்பேசன் ஸ்கூலு… எனக்கு ஒரே ஒரு அக்கா மட்டும் தான் கீது…  எங்களுக்கு வீடு எதுவும் கெடையாது……நாங்க எல்லோருமே இங்க தான் தங்கினு கீறோம்..

“இங்க தான்னா?”

இதான் பாக்குரியே இந்த ரோடு தான் எங்க வீடு… பொறந்தது வளந்தது எல்லாமே இங்க தான்.. இந்த மீன் பாடி வண்டி தான் சொந்தம்…  லோடு வச்சிக்கினு மாடு மாதிரி மெரிக்கனும். அன்னன்னிக்கு ஒழச்சா தான் சோறு… மூனு வேளயும் ஒட்டல்ல தான் துன்னனும். வூடு இருந்தாதானே வூட்ல ஆக்க முடியும்… அதான் ஓட்டல்லு…

“ஞாயித்து கெழம மட்டும் தான்…. இங்கயே சோறு ஆக்குவோம்.. எப்படின்னு கேக்குறியா?

சரவணன்

தோ… இந்த இடத்துல கடையெல்லாம் மூடிட்ட பிறகு.. மூனு கல்ல மூட்டி தான் சோறு ஆக்குவோம். அப்ப மட்டும் கறி, மீனு….தான். இங்கயே துன்னுட்டு இந்த மீன்பாடி வண்டியில தான் புருசன், பொண்டாட்டி, கொழந்த எல்லோரும் படுத்துக்குவோம். இப்படி தான் நாங்க வாழறோம்…..

கல்யாணம் காச்சி எதுக்குமே துட்டு இருக்காது…. எங்கள நம்பி எவனும் கடனும் கொடுக்க மாட்டான்… மிஞ்சி போனா தண்டல் எடுப்போம். அதுவும் பத்தாயிரம் தான் எங்கள நம்பி கொடுப்பான்.. ஒரு நாளைக்கு எங்களால நூறு ரூபாதான் கட்ட முடியும்னு…அதுக்கு ஏத்த மாதிரி கொடுப்பானுங்க.

பசங்க எல்லாம் கவெர்மெண்ட் ஸ்கூல்ல் படிக்குதுங்க… எல்லாம் எட்டாவது, பத்தாவது அவ்ளோ தான் படிக்கும்.. இங்க எல்லோருக்கும்  அதிக பட்ச படிப்பே அதுதான்.

கொழந்த குட்டிக்கு பிரச்சனன்னா,,, கே.எம்.சி. இல்லனா ஸ்டான்லி ஆஸ்பித்திரிக்கு கூட்டினு போவோம்… கல்யாணம், காதுகுத்தின்னா சமுதாயக் கூடம்… ஒரு சிலருங்க மண்டபத்துல வைப்பாங்க… அவங்க வேலை செய்யுர ஓனருங்க கிட்ட பணம் வாங்கிப்பாங்க” என்று சொல்லி முடிப்பதற்குள் வேலை அவரை வலுக்கட்டாயமாக இழுத்ததால் அவசர அவசரமாக வண்டியில் இருந்து இறங்கி ஓடினார்.

அருகில்……ஆர்வமாக பகடை விளையாடிக்கொண்டிருந்த கூட்டத்தில் இருந்து சத்தம் அதிகரித்தது….அதனை பொருட்படுத்தாமல் ஸ்ரீதர் பேச ஆரம்பித்தார்.

”இதையெல்லாம் கெட்டு இன்னா பன்ன போறீங்க…?

ஸ்ரீதர்

எங்க கஸ்டத்தை சொன்னா இன்னும் கஷ்டம்தான்… அதனாலதான் யார்கிட்டயும்  சொல்லுறது இல்ல. சொன்னா…. எல்லாரும் அழ வேண்டியது தான்…. நாங்க யாரு… நாங்க எப்படி இங்க வந்தோம்…  எங்க பூர்வீகம் என்னன்னு எதுவுமே தெரியாது.. ஆனா காலம் காலமா இங்கயே தான் கெடக்குறோம்…

இங்க இருக்க யாருக்கும் வீடு கெடையாது… ஆனா ரேசன் கார்டுல இருந்து, ஆதார் கார்டு வரைக்கும் வச்சிருகோம்……ஒரு சிலருக்கு மட்டும் தீவுத்திடல்ல குடிசை இருக்கு… எங்களுக்கும்  அங்க இருக்கு.. அதுகூட எங்க ஆயா அந்த எடத்த புடிச்சி குடிசை போட்டுச்சி….. இல்லனா அதுகூட இருந்திருக்காது.

மழக்காலம் வந்தா பெரும்பாடு பாடு தான். சொல்லி மாளாது… புருசன் பொண்டாட்டி, குழந்தைங்க.. எல்லோரும்.. மூடிய கதவாண்ட (கடைகளின் ஷெட்டர்) போயிட்டு ஒண்டிக்குவோம்.. சாரல் அடிக்கும்.. அதையெல்லாம் அட்ஜெஸ் பன்னி படுத்துப்போம்.. காலையில எழுந்து திரும்ப வேலைக்கு போகனும்,…..!

எங்களுக்கு விளையாடனும்னு ஆசை இருக்கு. ஆனா, விளையாட எடமில்ல…. படம் பார்க்கனும்ன்னா, இங்க பக்கத்துல பாட்சா தியேடர் இருக்கு… இப்ப தான் இதுக்கு பேரு பாட்ஷா தியேட்டரு..  இதுக்கு முன்னாடி மினர்வான்னு இருந்துச்சி. டிக்கெட் ஏழு ரூபாவுல இருந்து இருபத்தி அஞ்சி ரூபா வரைக்கும் இருக்கு.. மாசத்துக்கு ஒரு நாள் குடும்பத்தோட போயிட்டு பார்ப்போம்.. ரொம்ப பழைய படம் தான் போடுவான்.. அதைத்தான் பாக்கனும்.. புதுப்படம் எதுவும் பாக்கற நெலம இல்ல… .

எங்களுக்கு எல்லா நாளும் வேலை கெடைக்காது….. வீட்டுல இருக்க பொம்பளங்க  பூ கட்டி விப்பாங்க. அதுல கெடக்கிற  காச வச்சி அன்னிய பொழுதை கழிப்போம்… அந்த நேரம் ஒரு நாளைக்கு குறைந்தது இருபது டீ குடிப்பொம். அதான் எங்க சாப்பாடே…..!

இதான் எங்க வாழ்க்கை…. அரசாங்கம் எத்தைனையோ முறை வந்து எங்க கிட்ட கணக்கெடுத்து போயிருக்கு வீடு கொடுக்கிறேன்னு.. ஒன்னும் நடந்தது இல்ல.. எங்களுக்கும் சொந்தமா வீடு கட்டி பொண்டாட்டி குழந்தைன்னு வாழனும்னு…   ஆசை தான்..

ஒரு நிமிசம் பொண்டாண்டியோட தனியா இருக்கனும்னு ஆசை தான்.. இந்த உணர்வுகளை எப்படி சொல்லுறதுன்னு தெரியல.. எவன் வருவான்… போவானு தான் தான் சிந்தனை இருக்கும்….. வேற என்ன சொல்லுறது சொல்லுங்க…?

எங்க பொழப்பு இப்படி இருக்குதேன்னு எவனும் எங்கள மதிக்க மாட்டனுங்க.. முக்கியமா போலிசை சொல்லனும்… ரோட்டுல கடை போட்டாலே அடிச்சி புடுங்கி வாரீக்கினு போயிடுவான்…

நாங்க… ரோட்டுல போறதா பார்த்தாலே அவனுக்கு கடுப்பாகியிம்.. கொஞ்சம் டிராபிக் ஆனாலும்..டேய்…ங்…த்தா… சீக்கிரம் எடுடான்னு” சொல்லுவான்..

இதுவே கார் காரன்னா கிட்ட போயிட்டு….. சார்..கொஞ்சம் வண்டிய எடுங்கன்னு சொல்லுவான்….. அதுவே கார் ஓட்டுறது எங்கள மாதிரி ஆளா இருந்தா எங்க கிட்ட சொல்லமாட்டங்க… ஓனர் கிட்ட போயிட்டு சொல்லுவாங்க… நாங்க….. கூலிங்க தானே.. அதான் இவனுங்கள சாருன்னு கூப்பிடனுமான்னு……கவுரவம் பார்ப்பானுங்க….” அவனுங்க கிட்ட நாம எதுவும் பேச முடியாது…..” என்று சொல்லிவிட்டு  அமைதியானார்.

-வினவு புகைப்படச் செய்தியாளர்

வாராக்கடன் பிரச்சனையில் யாருக்கு சாதகமாக இடைக்காலத் தடை ?

அருண் கார்த்திக்

வாராக்கடன் விவகாரத்தில் கடந்த செவ்வாய் (11 செப்டம்பர், 2018) அன்று இரண்டு முக்கியமான தீர்ப்புகளை வழங்கியது உச்ச நீதிமன்றம்.

மார்ச்சில் ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கை ஒன்று வந்தது. 2,000 கோடிக்கு அதிகமாக உள்ள கடன்களில், தவணை தேதி முடிந்து ஒரு நாள் கடன் தொகை கட்டாமல் இருந்தால் கூட அந்தக் கடன்களை அழுத்தத்தில் உள்ள கடன்கள் (stressed loans) என்று வகைப்படுத்தும்படி வங்கிகளுக்கு அந்த சுற்றறிக்கையின் மூலம் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.

இவ்வாறு வகைப்படுத்தி 180 நாட்களுக்குள், அந்த கடன்களுக்கு ஒரு தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கை கூறியது. அப்படி தீர்வு காண முடியவில்லை என்றால் அந்த கம்பெனியை வாராக்கடன் என்று அறிவித்து அதை ஏலத்தில் விடுவதற்கான பணிகளை துவங்க வேண்டும்.

இந்த சுற்றறிக்கையை எதிர்த்து தனியார் மின் உற்பத்தியாளர் கூட்டமைப்பு அலகாபாத் உயர்நீதி மன்றம் சென்றது,  சுற்றறிக்கைக்கு எதிராக தடை தர மறுத்துவிட்டது உயர்நீதி மன்றம்.

அதே போல், வாராக்கடன்களாக வகைப்படுத்தப்பட்ட நிறுவனங்களை ஏலம்  விடும் விவகாரத்திலும் ஒரு உத்தரவு வந்துள்ளது. எஸ்ஸார் ஸ்டீல் என்ற (வாராக்கடனாக வகைப்படுத்தப்பட்ட) நிறுவனத்தை ஏலத்தில் வாங்க ஆர்ஸலர்-மிட்டல் நிறுவனம் ஏலத்தில் பங்கு பெற்றது. ஆர்ஸலர் – மிட்டல் நிறுவனத்தின் துணை நிறுவனங்களான  KSS Patron – கே.எஸ்.எஸ். பேட்ரான் மற்றும் Uttam Galva Steel – உத்தம் கால்வா ஸ்டீல் ஆகிய இரு நிறுவனங்கள் கடனைத் திரும்ப செலுத்தாததால் வாராக்கடன்களாக வகைப்படுத்தப்பட்டு இருந்தன. தொடர்புடைய நிறுவனங்கள் வாராக்கடனாக இருப்பதால் ஆர்ஸலர் – மிட்டல் நிறுவனம் ஏலத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது. இதை எதிர்த்து வழக்கு தொடுத்தது ஆர்ஸலர் – மிட்டல்; அந்த இரண்டு நிறுவனங்களின் கடனை கட்டினால் ஏலத்தில் பங்கு பெறலாம் என்று தீர்ப்பு வந்தது. ஏலத்தில் பங்கு பெற்று வென்றால் கடனை கட்டுவதாக கூறியது ஆர்ஸலர் – மிட்டல். கடனைக் கட்ட செப்டம்பர் 11 (செவ்வாய்) கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

தனியார் மின் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தனர். அதைத் தொடர்ந்து, செவ்வாய் அன்று ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை விதித்தது உச்ச நீதிமன்றம். மேலும் இந்த வழக்கு விசாரணையை நவம்பர் 14-க்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்.

வழக்கு தொடுத்தது என்னமோ தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் தான். ஆனால் தீர்ப்பில், வழக்கம் போல இன்னொரு சரத்தையும் சேர்த்தது உச்ச நீதிமன்றம். பல்வேறு உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை இனி தானே விசாரிக்கப் போவதாக அறிவித்தது. அதாவது, வாராக்கடன் சம்மந்தமான, வாராக்கடன் என்று வகைப்படுத்தப்பட்டு ஏல நிலையில் உள்ள அனைத்து வழக்குகளையும் இனி உயர்நீதி மன்றங்கள் விசாரிக்க முடியாது. அவை அனைத்தையும் உச்ச நீதிமன்றமே விசாரிக்கும்.

பல்வேறு நிலையில் உள்ள வாராக்கடன் ஏலங்கள், இனிமேல் ஏலம் விடப்பட வேண்டிய வாராக்கடன்கள் எல்லாவற்றின் நிலைமையும் என்ன ஆகும் என்று தெரியாத ஒரு குழப்ப நிலை உருவாகி உள்ளது.  இதனால், ஏலம் என்று சொல்லி ஏதோ கொஞ்சமாவது பணத்தை வசூலித்து கொண்டு இருந்த முறையும் முழுவதும் ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு உயர்நீதி மன்றங்களில் உள்ள வழக்குகளைத் தானே விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் சொல்வது நமக்கு புதிய செய்தி அல்ல. முதல் முறை NEET – நீட் அமல்படுத்தப்பட்டு தேர்வு நடந்து பல குழப்பங்கள் நடந்ததால், பலர் உயர்நீதி மன்றங்களில் வழக்குகள் தொடுத்திருந்தனர். சில உயர்நீதிமன்றங்கள் மாணவர்களுக்கு சாதகமான தீர்ப்புகளையும் வழங்கி இருந்தன. அப்போது, வழக்கம் போல சி.பி.எஸ்.இ – CBSE உயர்நீதி மன்றங்களில் வழக்கை சந்திக்காமல் உச்சநீதிமன்றம் சென்றது. அப்போதும் இதே போல் தான் அனைத்து உயர்நீதி மன்றங்களிலும் உள்ள வழக்குகளை இனி தானே விசாரிக்கப்போவதாக அறிவித்தது உச்சநீதிமன்றம். வேறு வார்த்தைகளில், நீட் சம்மந்தமான வழக்குகளை இனி உயர்நீதிமன்றங்கள் விசாரிக்கக் கூடாது என்று உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.

நீட் வேண்டுமா வேண்டாமா என்ற வழக்கு இன்னும் நிலுவையில் தான் உள்ளது. நீட் விவகாரத்தை தொடர்ந்து கவனிப்பவர்களுக்கு இது தெரிந்த செய்தி தான். நீட் மூலம் தான் இனி மருத்துவ மாணவர் சேர்க்கை நடக்க வேண்டும் என்று அனைத்திந்திய மருத்துவக் கழகம் (ஆல் இந்திய மெடிக்கல் கவுன்சில்) சொன்னது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அல்தமஸ் கபீர் உச்சநீதிமன்ற அமர்வு, மெடிக்கல் கவுன்சில் உத்தரவை ரத்து செய்து, நீட் கட்டாயம் என்பதை நீக்கியது. பிறகு அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தின் வேறு ஒரு அமர்வால் மறுவிசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அந்த அமர்வு அல்டமஸ் கபீர் தீர்ப்பை ரத்து செய்து, நீட்-ஐ கட்டாயம் என்று ஒரு ‘இடைக்கால’ தீர்ப்பு வழங்கியது.

அதாவது, நீட் வழக்கு விசாரணை முடியும் வரை மெடிக்கல் கவுன்சில் உத்தரவு அமலில் இருக்கும், அதாவது நீட் தேர்வு கட்டாயம். இந்த இடைக்கால தீர்ப்பின் மூலமாக தான் இந்த இரண்டு வருடங்களாக நீட் நம் மீதி திணிக்கப்படுகிறது. நீட் வேண்டுமா வேண்டாமா என்ற மூல வழக்கு மட்டும் இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்னும் விசாரிக்கப்படாமல் உள்ளது.

இந்த வரலாறை பார்க்கும் பொழுது, இந்த ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கை செல்லுமா செல்லாதா என்ற வழக்கு எப்பொது விசாரிக்கப்படும் என்பதை நாம் கணக்கிடலாம்.

இதில் நாம் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். நீட் பிரச்னையில் வழக்கின் தீர்ப்பு வரும்வரை மெடிக்கல் கவுன்சிலின் நடைமுறை செல்லும், ஆனால் ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கை பிரச்னையில், வழக்கின் தீர்ப்பு வரும்வரை ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கை செல்லாது.

சட்டத்தின் முன் அனைவரும் ’சமம்’ என்பதை மட்டும் கூறிக்கொள்கிறேன்!

எஸ்ஸார் ஸ்டீல் நிறுவன ஏலத்தின் முதல் சுற்றில் ஆர்ஸலர் – மிட்டல் துணை நிறுவனங்கள் வாராக்கடன்களாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டது. இதை எதிர்த்து தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயத்துக்கு (NCLT) சென்றது ஆர்ஸலர் – மிட்டல். துணை நிறுவனங்கள் கட்ட வேண்டிய கடனான ரூ. 7 ஆயிரம் கோடியை கட்டிவிட்டு ஏலத்தில் பங்குபெறலாம் என்று சொன்னது NCLT. ஏலத்தில் பங்கு பெற்று வென்றால் கடனை கட்டுவதாகக் கூறி ஏலத்தில் பங்கு பெற அனுமதிக்கும்படி தேசிய நிறுவனங்கள் மேல்முறையீட்டு சட்டத் தீர்ப்பாயத்தில் (NCLAT) மேல் முறையீடு செய்தது ஆர்ஸலர் – மிட்டல் நிறுவனம். கடனை கட்டிவிட்டு ஏலத்தில் பங்குபெறலாம் என்று தீர்ப்பளித்தது NCLAT. கடனைத் திரும்ப செலுத்த கடைசி தேதி தான் 11 செப்டம்பர் (செவ்வாய்).

NCLAT-யின் உத்தரவை எதிர்த்து, மேலே கூறிய கோரிக்கையோடு உச்சநீதிமன்றம் சென்றது ஆர்ஸலர் – மிட்டல். செவ்வாயன்று இது ஒரு சாதாரண வழக்காகக் கூட உச்ச நீதிமன்றம் செல்லவில்லை. செவ்வாயன்று, இது ஒரு urgent hearing-ஆக (அவசர விசாரணைக்கு)  தான் உச்சநீதிமன்றம் முன் வந்தது. உச்சநீதிமன்றம், இந்த வழக்கை செப்டம்பர் 12 அன்று விசாரிப்பதாக கூறி, விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.

18 MLA-க்கள் தகுதிநீக்க வழக்கு போல இதுவும் ஒரு தகுதிநீக்க வழக்கு தான். சட்டம் மிகவும் தெளிவாக இருக்கிறது. வாராக்கடன் நிறுவனங்களுடன் தொடர்புள்ள நிறுவனமாக இருந்தால் ஏலத்தில் பங்கு பெற தகுதி இல்லை. அப்படி பங்கு பெற வேண்டும் என்றால் கடனை திருப்ப செலுத்திவிட்டு வரலாம். இது எளிய மக்களுக்கு கூட புரியக்கூடிய ஒரு வழிமுறை, நியாயம் என்று தோன்றக் கூடிய ஒன்று. இருந்தாலும் இதை விசாரித்து தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பு சொல்லும்.

எஸ்ஸார் ஸ்டீல் பற்றியும் ஆர்ஸலர் – மிட்டல் பற்றியும் நமக்கு இப்போது ஓரளவுக்கு தெரியும். ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை வழக்கில் உச்சநீதிமன்றம் சென்ற நிறுவனங்கள், அதாவது சுற்றறிக்கை தடை செய்யப்படாவிட்டால் வாராக்கடனாகக் கூடிய நிறுவனங்கள்,  எவை என்றும் நமக்கு தெரியவேண்டுமல்லவா. அந்த உத்தமர்கள் – GMR, எஸ்ஸார் பவர், ரத்தன் இந்தியா மற்றும் ஐடியல் எனர்ஜி.

குறிப்பு:

எஸ்ஸார் பவர்: எஸ்ஸார் ஸ்டீல் ஒரு ஸ்டீல் நிறுவனம். எஸ்ஸார் பவர், எஸ்ஸார் குழுமத்தை சேர்ந்த மின் உற்பத்தி நிறுவனம். எஸ்ஸார் குழுமத்தின் முதலாளி போல் இருப்பவர் ரவி ரூயா, இவர் 2G வழக்கில் விசாரிக்கப்பட்டவர்.

இவ்வாறு பல சம்பவங்கள் நடந்துகொண்டிருக்க நமக்கு முக்கியமான செய்தியாக சொல்லப்படுவது எது? ராகுல் என்ன செய்கிறார், ஸ்டாலின் அழகிரி சண்டை என்ன ஆகும், அ.தி.மு.க. அடுத்து என்ன சாதனை செய்யும், எந்த அமைச்சர் என்ன உளறினார், இதுவே தான்.

வங்கிகளின் பணம் பட்டப்பகலில் கடன் என்ற பெயரில் பெரும் முதலாளிகளால் கொள்ளையடிக்கப் படுகிறது. இந்த வங்கிகள் அனைத்தும் அரசு வங்கிகள், வங்கியில் உள்ள பணமும் மக்களின் பணம், வங்கி திவால் ஆனால் வங்கிகளுக்கு அரசு கொடுக்கப்போகும் பணமும் மக்கள் பணம். இருந்தாலும் இதை எல்லாம் பற்றி எந்த அரசியல்வாதியும் பேசுவதில்லை.

மற்ற கருத்து வேறுபாடுகளை தாண்டி, இவை அனைத்தும் சரி என்று அனைத்து அரசியல்வாதிகளும் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் போல தெரிகிறது! இதை எல்லாம் கேள்வி கேட்டால் அமைப்பையே கேள்விக்கு உட்படுத்துவது போல் ஆகிவிடும்  !

மூலம்:

– அருண் கார்த்திக்

பங்குச் சந்தை என்றால் என்ன ? பாகம் 1

பந்தய மூலதனம் – 1

பங்குச் சந்தை குரங்குகளை வாங்கி விற்கும் சூதாட்டம் மட்டும்தானா?

நாம் ஏன் பங்குச்சந்தை பற்றி புரிந்துகொள்ள வேண்டும் ,நமக்கும் பங்குச் சந்தைக்கும் என்ன சம்பந்தம்? – கேள்விக்கு விடை தெரிய தொடர்ந்து படியுங்கள்.

*****

ங்குச் சந்தை எப்படி செயல்படுகிறது என்பதைப் பற்றிய ஒரு கதையை ஃபேஸ்புக்கிலோ, வாட்ஸ் ஆப் ஃபார்வேர்ட் தகவலாகவோ படித்திருப்பீர்கள்.

“ஒரு ஊருக்கு அருகில் இருந்த காட்டில் நிறைய குரங்குகள் வசித்தன. அந்த ஊருக்கு தன் உதவியாளன் சுப்பிரமணியுடன் வந்து சேர்ந்த வெளியூர்காரன் ஏகாம்பரம் ஒரு தகவலை கசிய விட்டான். ஏகாம்பரம் தன் ஊரில் செய்யும் தொழிலுக்கு குரங்குகள் நிறைய தேவைப்படுகின்றன எனவும் ஒரு குரங்குக்கு ரூ 100 விலை கொடுத்து வாங்கிக் கொள்ள அவர் தயாராக இருப்பதாகவும் செய்தி பரவியது.

ஊர் மக்கள் பலர் குரங்கு பிடிக்கும் வேலையில் இறங்கி, ஒரு நாளைக்கு ஏழெட்டு குரங்குகளை கூட பிடித்து வந்து தலா ரூ 100 வீதம் சம்பாதித்தார்கள். தன்னிடம் வந்து சேரும் குரங்குகளை அடைத்து வைத்து பாதுகாத்தார் ஏகாம்பரம். “ஊருக்குப் போகும் போது மொத்தமாக எடுத்துச் செல்வார் என்றும் அவர்கள் ஊரில் இத்தகைய குரங்குகளுக்கு நல்ல டிமாண்ட்” என்றும் சுப்பிரமணி சிலரிடம் கிசுகிசுத்தான்.

ஒரு சில நாட்களில் காட்டில் எஞ்சியிருக்கும் குரங்குகளின் எண்ணிக்கை குறைந்தது. எனவே, ஏகாம்பரத்திடம் விற்பனைக்கு வரும் எண்ணிக்கையும் குறைந்தது. “ஒரு குரங்குக்கு ரூ 200 தருகிறேன்” என்று விலையை உயர்த்தினார் ஏகாம்பரம். இன்னும் அதிக முயற்சி எடுத்து இரவு பகல் பாராமல் குரங்கு வேட்டை நடத்தினார்கள், மக்கள். விலையை படிப்படியாக ஏற்றி ஏகாம்பரம் ஒரு குரங்குக்கு ரூ 500 தரும் நிலை வந்த போது காட்டில் குரங்குகளை பிடிப்பதே அரிதாகி போனது.

இதற்கிடையில் சுப்பிரமணி, ஒரு சிலரிடம் ரகசியமாக டீல் போட ஆரம்பித்தான். ரூ 500-க்கு விற்க குரங்குகளை தேடி தவிக்கும் அவர்களுக்கு தன் கட்டுப்பாட்டில் இருக்கும் குரங்குகளை (ஏகாம்பரத்திற்கு தெரியாமல்) ஒவ்வொன்றாக விற்க ஆரம்பித்தான். அவனது விலை ஒரு குரங்குக்கு ரூ 400. ரூ 400-க்கு வாங்கி ஏகாம்பரத்திடம் ரூ 500-க்கு விற்கலாமா என்ற ஆசையில் அவர்கள் அதை வாங்கி விற்க ஆரம்பித்தார்கள்.

அப்படி ஒரு சிறு எண்ணிக்கையிலான குரங்குகளை வாங்கிய பிறகு, ஏகாம்பரம், தன்னிடம் கைவசம் இருந்த பணம் தீர்ந்து விட்டதாகவும், இன்னும் அதிக எண்ணிக்கையில் குரங்குகளை வாங்குவதற்கு பணம் திரட்டிக் கொண்டு 10 நாட்களுக்குப் பிறகு வரப் போவதாகவும், அப்போது குரங்குகளை தலா ரூ 1000 விலைக்கு வாங்கப் போவதாகவும் என்று சொல்லி விட்டு பண்ணையை சுப்பிரமணி பொறுப்பில் விட்டு விட்டு போய் விட்டார்.

இதுதான் வாய்ப்பு என்று சுப்பிரமணி கைவசம் இருந்த எல்லா குரங்குகளையும் ரூ 700, ரூ 800 வீதத்துக்கு விற்று விட்டான். ஒரு குரங்குக்கு ரூ 300, ரூ 200 லாபம் பார்க்கலாம் என்ற ஆசையில் ஊர்க்காரர்கள் பக்கத்து வீட்டுக்காரர்களுக்குக் கூடத் தெரியாமல், நகை நட்டுகளைக் கூட விற்று ஆளுக்கு 10-12 குரங்குகளை வாங்கி மறைத்து வைத்துக் கொண்டார்கள்.

பங்குச் சந்தை – குரங்கு கதை

7-8 நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் சுப்பிரமணி இரவோடு இரவாக ஊரை விட்டு போய் விட்டான். அடுத்த நாள் குரங்கு வாங்க பேரம் பேச வந்தவர்களுக்கு ஆள் கிடைக்கவில்லை. குரங்கு பண்ணை பூட்டிக் கிடந்தது. சரி, வந்த வரை லாபம், கையில் இருக்கும் குரங்குகளை ரூ 1000 விலைக்கு விற்று லாபம் பார்த்துக் கொள்ளலாம் என்று ஏகாம்பரம் வருவதை எதிர்நோக்கி காத்திருந்தார்கள், ஊர் மக்கள்.

10 நாள் கழிந்த பிறகு ஏகாம்பரம் வரவில்லை, 15 நாட்களுக்குப் பிறகும் வரவில்லை, 20 நாட்கள் காத்திருந்தும் பலனில்லை. குரங்கு பண்ணையின் பூட்டை உடைத்து உள்ளே போய் பார்த்தால் குரங்குகளின் கழிவுகள் மட்டும்தான் மிஞ்சியிருந்தன. சும்மா கிடந்த குரங்குகளை எல்லாம் பிடித்து ஏகாம்பத்திடம் ரூ 100 முதல் ரூ 500 வரை விலைக்கு விற்ற ஊர்க்காரர்கள், பின்னர் அவற்றையே சுப்பிரமணியிடம் ரூ 700 முதல் ரூ 900 வரை விலை கொடுத்து வாங்கி வைத்திருக்கிறார்கள்.

இவ்வாறாக ஏகாம்பரமும், சுப்பிரமணியும் ஊர் மக்களின் சேமிப்புப் பணத்தை எல்லாம் அபேஸ் செய்து கொண்டு மாயமாகி விட்டார்கள்.”

இது கதை. பங்குச் சந்தை ஊக வணிகம் இப்படித்தான் செயல்படுகிறது, அப்பாவிகளின் சேமிப்பை சூறையாடி விடுகிறது என்பது கதையின் நீதியாக சொல்லப்பட்டது.

விலை ஏறும் என்று நம்பி பங்குகளை வாங்கி அவற்றின் விலை வீழ்ச்சி அடைந்தோ, அல்லது மதிப்பே இல்லாமல் போயோ தமது சேமிப்புகளை எல்லாம் இழந்தவர்களின் நிலையை இந்தக் கதை சொல்கிறது. ஆனால், பங்குச் சந்தை இது மட்டும் இல்லை, இந்த அளவில் மட்டும் இல்லை.

பங்குச் சந்தை முதலீடு என்பதை சேவல் சண்டையின் போது சுற்றி நின்று கொண்டு குறிப்பிட்ட சேவல் மீது பந்தயம் கட்டுவதோடு ஒப்பிடுவது இன்னும் பொருத்தமாக இருக்கும். பந்தயம் கட்டுபவர் சேவலை வளர்க்கவும் இல்லை, அதை சண்டைக்கு பதிவு செய்து இறக்கி விடவும் இல்லை. சுற்றி நின்று கொண்டு கைவசம் இருக்கும் பணத்தை எந்த சேவல் ஜெயிக்கும் என்று பந்தயம் கட்டுகிறார். ஜெயித்தால் காசு கூடுதலாகும், தோற்றால் காசை இழந்து விடுவார்.

ஜெயித்தால் காசு கூடுதலாகும், தோற்றால் காசை இழந்து விடுவார்.

குதிரை பந்தயத்தில் பணம் கட்டுவதையும் இதனோடு ஒப்பிடலாம். எந்தக் குதிரை வேகமானது, எந்த ஜாக்கி திறமையாக ஓட்டுவார், குதிரைகளின் கடந்த கால ரிக்கார்ட் என்ன, இந்த மைதானத்தில் குறிப்பிட்ட குதிரை எப்படி ஓடியிருக்கிறது என்று பல விபரங்களை சேகரித்து, பரிசீலித்து, நிபுணர்களின் கருத்துக்களை தெரிந்து கொண்டு ஒரு அல்லது பல குதிரைகளின் மீது பந்தயம் கட்டி சீட்டு வாங்கிக் கொள்கிறார்கள். பணம் கட்டிய குதிரை ஜெயித்தால் பணம் பல மடங்காகும். தோற்றுப் போனால், கட்டிய பணம் போச்சு.

ஆனால், “பங்குச் சந்தையை இப்படி கொச்சையாக பார்க்க வேண்டாம். பங்குச் சந்தையை இவ்வளவு எளிமையாக புரிந்து கொள்ள முடியாது, அது இன்னும் சிக்கலானது, இன்னும் ஆழமானது, நிஜ பொருளாதாரத்தோடு தொடர்புடையது.

உற்பத்தி, வியாபாரம், தொழில்நுட்பம் ஆகியவற்றின் வளர்ச்சியோடு தொடர்புடையது. பங்குச் சந்தையில் முதலீடு செய்ய திறமையும், அறிவும் வேண்டும். உலகின் மிகச்சிறந்த அறிவாளிகளில் பலர் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்கிறார்கள். இன்று பங்குச் சந்தைகள் உலகளாவியவையாக மாறி விட்டன.”

என்று நீங்கள் கருதினாலோ, எங்காவது படித்திருந்தாலோ, யாராவது சொல்லியிருந்தாலோ, அது நூற்றுக்கு நூறு உண்மை. சேவல் சண்டை போலவோ, குதிரை பந்தயம் போலவோ சும்மா பொழுது போக்கு இல்லை பங்குச் சந்தை. அது உலகெங்கிலும் கோடிக் கணக்கான மக்களின் வாழ்க்கையை தீர்மானிக்கக் கூடியதாக உள்ளது.

எப்படி என்று இன்னும் விபரமாக பார்க்கலாம்.

(தொடரும்)
நன்றி : new-democrats

மோடியைக் கொல்ல சதியா? | மருதையன் – ராஜு உரை | காணொளி

சென்னையில் கடந்த 08-09-2018 அன்று மக்கள் அதிகாரம் சார்பில் “அச்சுறுத்தும் பாசிசம் – செயல்வீரர்கள் மீது மோடி அரசின் தாக்குதல்” என்ற தலைப்பில் அரங்கக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தை மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு தலைமையேற்று நடத்தினார். இதில் தோழர் மருதையன் உரையாற்றினார்.

அவரது உரையில், “ உண்மையிலேயே மோடியைக் கொல்ல சதி இருக்கிறதா? உள்துறை அமைச்சகம் மோடியை பாதுகாக்க ஒரு தனி படை அமைத்து இருக்கிறது. அமைச்சர்கள் கூட அனுமதி இல்லாமல் மோடியை பார்க்க போக முடியாது. அந்த அளவிற்கு பாதுகாப்பு. தமிழிசையை பார்த்து ஒரு பெண் ”பாசிச பாஜக ஆட்சி ஒழிக” என்றால் உடனே கொலை செய்து விடுவார்கள் என்று கூவுகின்றனர். நாயை தெருவில் பார்த்தால் கடித்து விடுமோ என்று அஞ்சுவோம். அதுவே திருடனாக இருந்தால் பிடிபட்டு விடுவோமோ என்று அஞ்சுவான். அந்த 2-வது பயம்தான் இவர்களுக்கு. சோஃபியா முழக்கமிட்ட நேரத்திலே அதை வாங்கி பின் இருந்தவர்களும் முழக்கம் போட்டிருந்தால் நிலைமையே மாறி இருக்கும்.

உச்சநீதிமன்றம் இந்த 5 பேரை முதலில் 6 நாள் வீட்டுக் காவலில் வைத்தார்கள். முதலில் இவர்களுக்கும் பீமா கோரேகானில் நடந்த சம்பவத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை இவர்கள் மீது வழக்கும் இல்லை. ஆனால் இதை நீதிபதி கேட்டால் போலீசிடமிருந்து எந்த பதிலும் இல்லை.

காவல் நிலையத்திற்கு போனாலே எப்படி பொய் வழக்குகளை ஜோடிப்பது என்று தெரியும். அது போலத்தான் முற்போக்காள‌ர்கள் மீது பல பொய் வழக்குகளை இவர்கள் போட்டு உள்ளனர். பொய் வழக்குகள் போடப்பட்டு அவர்கள் ஒடுக்கப்படுகிறார்கள்.

மோடி ஆட்சிக்கு வந்த 4 ½ ஆண்டுகளில் விலைவாசி உயர்வு, சிறு தொழில்கள் அழிவு, கொலை ஆகியவையெல்லாம் முதலில் அதிர்ச்சியூட்டும் செய்திகளாக இருந்தன. பின்னர் அதுவே நமக்குப் பழகிவிட்டது. அவசர நிலை காலகட்ட நடைமுறைகள் அனைத்தும் நமக்கு பழக்கமாக்கப்படுகின்றன. தமிழிசையை அச்சுறுத்திய சோஃபியாவின் குரல், பகத் சிங் நாடாளுமன்றத்தில் குண்டு போட்டு முழங்கினானே, “கேளாத செவிகள் கேட்கட்டும்” என்று, அதே குரல்தான் இதுவும்.

இந்த பாசிச ஆட்சிக்கு முடிவுகட்ட உடனடியாக களத்தில் இறங்குவோம். இல்லையென்றால் நாம் 1000 ஆண்டு அடிமைத்தனத்திற்கு மீண்டும் செல்ல நேரிடும்” என்று கூறினார்.

**********

க்கூட்டத்தில் மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு உரையாற்றினார். அவர் பேசுகையில், “இந்தியா முழுவதும், பத்திரிகையாளர்கள் மற்றும் முற்போக்கு சிந்தனையாளர்கள் மீதான தாக்குதல்களும், ஒடுக்குமுறைகளும் அதிகரித்து வருகின்றன. கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற பீமா கோரெகான் சம்பவத்தைக் காரணமாக வைத்து, பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டே உள்ளிட்ட பல்வேறு பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்கள், சமூக செயற்பாட்டாளர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. மேலும் அவர்கள் மாவோயிஸ்டுகளுடன் தொடர்புடையவர்கள் என்றும், மோடியைக் கொல்ல சதி செய்தனர் என்றும் பொய்க்கதைகளை கட்டியுள்ளது.

மோடி ஆட்சியிலமர்ந்து இந்த நான்கு ஆண்டுகளில் கொண்டு வந்த மேக் இன் இந்தியா, சுவச்சு பாரத், பண மதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி, என அனைத்து திட்டங்களும் தோற்றுப்போய் விட்டன. இக்காலகட்டத்தில் ஆயிரக்கணக்கான‌ கூலிப்படைகளை ஆர்.எஸ்.எஸ் இறக்கி உள்ளது. இவர்கள் மூலம்தான் முற்போக்காளர்கள் மீதான் தாக்குதல்களும் கொலைகளும் நடைபெற்று வருகின்றன. கட்ந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் கொல்லப்பட்ட கெளரி லங்கேஷை கொல்ல பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியும், அதற்கு முன்னர் கொலை செய்யப்பட்ட தபோல்கரைக் கொல்ல பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியும் ஒன்றுதான் என கர்நாடக புலனாய்வு துறை கண்டுபிடித்துச் சொன்னது.

கொலை செய்த அமைப்பு சுதந்திரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் வட இந்தியா முழுவதும் செயற்பாட்டாளர்கள் ஒடுக்கப்படுகிறார்கள். இதை மக்கள் மத்தியில் நாம் கொண்டு செல்ல வேண்டும்.

உணர்வு பூர்வமாக போராடும் மக்களுக்கு மத்தியில் நாம் விசயங்களை அறிவியல்பூர்வமாக எடுத்துச் சொல்லும்போது போராட்டம் தீவிரமடைகிறது. தூத்துக்குடி போராட்டம் 99 நாள் நடந்த போராட்டம் 100-வது நாள் மட்டும் எப்படி கலவரமாகும் என்று கேள்வி கேட்கிறார்கள். 100-வது நாள் கலவரத்தை அரசுதான் திட்டமிட்டு செய்தது. தமிழிசையை பார்த்து பி.ஜே.பி பாசிச ஆட்சி ஒழிக என்று தூத்துகுடி சோஃபியா முழக்கமிட்டார். அது மிகப்பெரிய குற்றம் போல் கூவுகின்றனர். யார் அந்த தமிழிசை? என்ன நடக்கிறது தமிழகத்தில்? பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு, கருத்துரிமைக்கு தடை – இது போன்ற பாசிச ஆட்சி நடைபெறுவதைப் பொறுக்க முடியாமல்தான் விமர்சிக்கிறார். இது தவறா?

மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டத்திற்கு திருச்சியில் அனுமதி மறுத்துள்ளனர். காரணம் கேட்டால் உங்கள் மீது ஒவ்வோரு மாவட்டத்திலும் பல வழக்குகள் உள்ளன. மேலும் உங்களைக் குறித்து அலசி ஆராய்ந்ததில் பிரச்சனை ஏற்படும் என தெரிகிறது. எனவே உங்கள் கூட்டத்திற்கு அனுமது மறுக்கப்படுகிறது. அடக்குமுறை, பாசிசம், அச்சுறுத்தல் என்று  ஜனநாயகமே இல்லாமல் செய்கின்றனர். இதைதான் நாம் விவாதிக்க வேண்டும். அனைவரும் இதற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்.” என்று கூறினார்.

  • வினவு களச் செய்தியாளர்

சுயநிர்ணய உரிமை கோருவதே குற்றமா ? ஆழி செந்தில்நாதன்

திருவண்ணாமலையைச் சேர்ந்த திரு. கண்ணதாசன் என்பவர் தனிநாடு கேட்டு முகநூலில் எழுதினார் என்பதற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார். தமிழ்நாட்டு அரசும் அதன் காவல்துறையும் இன்னும் எந்த அளவுக்கெல்லாம் இறங்கப்போகிறார்கள் என்றுதெரியவில்லை.

ஒரு கருத்துரிமை என்கிற அளவில் தனிநாடு கேட்டு எழுதுவது பேசுவது குற்றமல்ல. இது குறித்து ஏற்கனவே பல முறை நீதிமன்றங்கள் கூறியிருக்கின்றன.

இந்தியாவில் எத்தனையோ மாநிலங்களில் எத்தனையோ தலைவர்கள், எழுத்தாளர்கள், அரசியல் செயல்பாட்டாளர்கள் தங்களுடைய இனத்துக்கு விடுதலை வேண்டும் என்று கூறியதுண்டு. எழுதுவதுண்டு.

தனிநாடு வேண்டும் எனக் கோருவது அரசியல்சாசனத்தின்படி குற்றம் என்றால், இந்தியாவில் இந்து ராஷ்ட்டிரம் அமைக்கவேண்டும் என்றோ இந்தியாவில் ராணுவ ஆட்சி வரவேண்டும் என்றோ இந்தியாவில் ஜனாதிபதி ஆட்சி வரவேண்டும் என்றோ கூறுவதுகூட அரசியல்சாசன ரீதியில் குற்றம்தான். இந்தியா என்பது இறையாண்மையுள்ள, ஜனநாயக, சோஷலிச, மதச்சார்பற்றக் குடியரசு. இந்த நாட்டில் ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்பு எந்த அடிப்படையில் இயங்கமுடியும்? அல்லது வேறு எந்த மதவாத அமைப்பாவது இயங்கமுடியுமா?

உலகில் எந்த ஜனநாயக நாட்டிலும் சுயநிர்ணய உரிமையைக் கோருவதே குற்றமாகக் கருதப்படுவதில்லை. அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மன் போன்ற நாடுகளில் இதுபோன்ற முழக்கங்கள் எழுகின்றன. அதற்கென கட்சிகள் இருக்கின்றன. அத்தகையக் கட்சிகள் தேர்தலில்கூட நின்று வெல்கின்றன, ஏன், ஸ்காட்லாந்து தேசியக் கட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து ஸ்காட்லாந்து பிரியவேண்டும் என்பது குறித்து வெகுசன கருத்தறியும் தேர்தல்களையேகூட நடத்தியிருக்கிறதே? அந்தக் கட்சியை தடைசெய்ததா பிரிட்டன்?

சுயநிர்ணய உரிமை என்பது ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் இயல்பான உரிமை (natural right). அதைத்தான் இந்திய அரசுமே ஏற்றுக்கொண்ட ஐநா அவையின் விதிமுறைகளும் கூறுகின்றன. சுயநிர்ணய உரிமை என்பது ஒரு கூட்டமைப்பிலிருந்து பிரிந்துசென்று தனி அரசு நடத்துவதற்கான உரிமை. ஒரு காலத்தில் ஜவஹர்லால் நேரு இத்தகைய உரிமையை இந்தியாவிலுள்ள மாகாணங்களுக்கும் சாம்ராஜ்யங்களுக்கும் தரவேண்டும் என்று பேசியவர்தான்.

சுயநிர்ணய உரிமை என்பது விவாகரத்து உரிமையைப் போன்றது என்பார்கள். திருமணமானவர்களுக்கு விவாகரத்து உரிமை இருக்கவேண்டும். அந்த உரிமை இருப்பதானாலேயே அவர்கள் விவாகரத்து செய்துவிடுவதில்லை. மாறாக, சேர்ந்து வாழமுடியாது என்கிற நிலைமையில்தான் விவாகரத்தைப் பற்றி யோசிப்பார்கள். உண்மையில் விவாகரத்து நடந்தால் அதன் பிறகு என்ன ஆகும் என்ற அச்சத்தில், தங்களுடைய போக்குகளை மாற்றிக்கொள்கிற தம்பதிகள் மிகவும் அதிகம்.

சுயநிர்ணய உரிமையின் எளிமையான வெளிப்பாடுதான் தனிநாடு கேட்பது. இணையத்தில் தேடிப்பாருங்கள். உலகில் நூற்றுக்கும் குறைவில்லாத அளவுக்கு தனிநாட்டுக் கோரிக்கைகள் உலவுகின்றன.

திராவிட நாடு கோரிக்கையை கைவிடாவிட்டால் திமுக தடைசெய்யப்படும் என்கிற நிலை ஏற்பட்டது. அப்போது அறிஞர் அண்ணா. 1963 இல் மாநிலங்களவையில் பேசியபோது அண்ணா இரண்டு கருத்துகளை முன்வைத்தார்.

சுயநிர்ணய உரிமை அல்லது தனிநாட்டு உரிமை வேண்டும் என்று பேசுவதையே தடைசெய்வது என்பது இந்தியா அரசியல்சாசனம் கூறும் அடிப்படை உரிமைகள் (fundamental rights) என்கிற கோட்பாட்டுக்கே விரோதமானது.

இதைப்பற்றி பேசினாலே அல்லது கோரினாலே இறையாண்மை கெடும் என்கிற வாதம் அடிப்படையிலேயே தவறானது. இந்திய அரசியல்சாசனத்தின் படி இந்தியாவின் அரசியல் இறையாண்மை என்பது இந்தியாவிலுள்ள மக்களிடமே தங்கியிருக்கிறது. அதன் சட்ட இறையாண்மை ஒன்றியத்துக்கும் மாநிலங்களுக்கும் பிரித்து அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இறையாண்மை தில்லியில் மட்டுமே குவிந்திருக்கவில்லை. (Why do you think that our demand endangers

Before answering that we should be very clear about what we mean by sovereignty. The preamble to the Constitution says that the political sovereignty rests with the people. Then legal sovereignty is divided between the Federal Union and the constituent units. Why don’t you take it that our scheme is to make the states still more effective sovereign units? Why don’t you take it in that light? Why do you think that the moment we demand Dravidastan, we are cutting at the root of sovereignty? Sovereignty does not reside entirely in one particular place. – ‘Carry On, But Remember!’ speech by Anna).

திராவிட நாடு கோரிக்கையை கைவிடுகிற முடிவுக்கு வருகிறார் அண்ணா. ஆனால் அதைப் பற்றி பேசுவதற்குக்கூடத் தடை என்பதை ஏற்க மறுக்கிறார். இறையாண்மை என்பதற்கான சரியான விளக்கத்தையும் அளிக்கிறார். இந்த அண்ணாவின் பெயரைத் தாங்கியிருக்கும் கட்சிதான் கண்ணதாசனைக் கைதுசெய்கிறது.

இன்று இந்தியாவில் இறையாண்மை, ஒற்றுமை குறித்து “கவலைக்கொண்டிருக்கிற” எல்லோருமே தனிநாடு கோரும் விஷயத்தை ஒரே விதமாக கைகொள்வதில்லை. சிலரைப் பொறுத்தவரை, தேர்தலில் பங்கேற்கும் கட்சிகள்தான் தனிநாடு கோருவது தவறு. மற்றபடி, ஜனநாயக நெறிமுறைகளுக்குட்பட்டு, ஆயுதம் ஏந்தியப் பாதைக்கு போகாத வரை, தனிநாடு பற்றி பேசுவதோ எழுதுவதோ பரப்புபரைசெய்வதோ பெரிய குற்றமல்ல என்றே நினைக்கிறார்கள். அதனால்தான், இந்தியாவில் குறைந்தது அந்தந்த தேசிய இனங்களில் நூற்றுக்கணக்கான சிறு அமைப்புகள், தனிநபர்கள் இது குறித்து பேசியும் எழுதியும் வருகின்றன. கல்வி மையங்களில்கூட இத்தகைய கருத்துகளை முன்வைப்பவர்கள் செயல்படுகிறார்கள். புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன, பத்திரிகைகள் வெளியிடப்படுகின்றன.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், காஷ்மீர் விடுதலைக்கு ஆதரவாக, ஆசாதி முழக்கம் எழுப்பபட்டது என்று கூறி வலதுசாரிகள் கொந்தளித்தது நினைவிலிருக்கும். அப்போது அது குறித்து கருத்துத்தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ, நான் ஆசாதி முழக்கத்தை ஏற்கவில்லை என்றாலும், அதைப் பற்றி பேசுவதே குற்றமல்ல என்றார். (Although I personally disapprove of the slogan for azadi, in my opinion the shouting of such slogans per se, is no crime. So many people in India often shout such slogans. In the past, the advocates of Khalistan did so, as did Nagas and Mizos. In Kashmir today, tens of thousands of people are raising this slogan. In Scotland, many people demand separation from Great Britain, and many people in the French-speaking province of Quebec demand freedom from the rest of Canada. In a democracy, people should be allowed to let out steam, and the government should learn to not over-react.- Markandey Katju, thewire.in, Aug 20, 2016). கட்ஜூ தன் கட்டுரையில் வேறு ஒரு தீர்ப்பையும் குறிப்பிட்டிருந்தார். அது அமெரிக்காவில் நடந்தது.

கம்யூனிஸ்ட்கள் என்றாலே நரவேட்டை ஆடும் அமெரிக்காவில்கூட, கம்யூனிசம் பற்றி பேசுவதே ராஜதுரோகம் என்று கருதப்பட்ட காலத்தில், அதுவும் பனிப்போர் காலத்தில், நீதியரசர் ஹார்லன் பின்வருமாறு ஒரு தீர்ப்பில் குறிப்பிட்டார்: “The mere teaching of communist theory, including the teaching of the moral propriety or even moral necessity for a resort to force and violence, is not the same as preparing a group for violent action and steeling it to such action. There must be some substantial direct or circumstantial evidence of a call to violence now or in the future which is both sufficiently strong and sufficiently pervasive to lend colour to the otherwise ambiguous theoretical material regarding communist party teaching.’ (NOTO vs. US (1961).

ஆக, விடுதலை என்றோ புரட்சி என்றோ பேசுவதும் எழுதுவதும் பரப்புரை செய்வதும் ஒரு ஜனநாயக நாட்டில் குற்றமாகாது. வன்முறை மூலம் ஆட்சியை அகற்றுவோம் என்று பேசுவது கூட குற்றமில்லை என்கிறார் ஹார்லன். அதற்காக உண்மையிலேயே வன்முறையில் இறங்கினால்தான் குற்றம் என்கிறார். ஆனால் அந்த நாட்டின் விடுதலையின்போது, மக்கள் ஆயுதமேந்தி போராடுவதுகூட உரிமைதான் என்று அமெரிக்க விடுதலையின் தலைமக்கள் பேசியிருக்கிறார்கள். Right to revolt பற்றியெல்லாம் நிறைய எழுதப்பட்டிருக்கிறது.

நம்மைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டின் இன்றைய நிலையில், இது தன்னாட்சி கோரும் காலமே தவிர தனியாட்சி கோரும் காலம் அல்ல என்றே நினைக்கிறோம். ஆனால் தனியாட்சி கோரும் கருத்துரிமையை, அமைப்பு நடத்தும் உரிமையை நாம் காப்பாற்றவே வேண்டும். கருத்துரிமை, கூட்டும்கூடும் உரிமை, சங்கம் வைத்துக்கொள்ளும் உரிமை போன்ற அடிப்படை உரிமைகளில் எந்த சமரசமும் செய்யமுடியாது. இல்லையென்றால் பாரதிதாசனையும் பெருஞ்சித்திரனாரையும்கூட குற்றவாளிகளாக ஏற்கவேண்டியிருக்கும். அவர்கள் சாகும்வரை விடுதலையைப் பாடினார்கள். பெரியார் கடைசிவரை விடுதலையைப் பேசினார்.

அதைப் போலவே “இந்தப் பிரிவினைவாதிகளை தூக்கில்போடுங்கள்” என்று ஒரு சங்கப் பரிவார நபர் எழுதுகிறார் என்றால் அவருக்கும் அப்படி எழுத உரிமை உண்டு என்றே நாம் கருதவேண்டும். இங்கே ஆர்.எஸ்.எஸ். சட்டபூர்வமாக செயல்படமுடியுமானால், தமிழ்நாடு விடுதலை கோரும் பல்வேறு அமைப்புகளும் சட்டப்படி செயல்பட முடியவேண்டும்.

பிரிவினைக்கு எதிராக பேசும் பா.ஜ.க., வட கிழக்கு மாநிலங்களில் பிரிவினை கோரும் பல இயக்கங்களோடு இப்போது கூட்டுவைத்திருக்கிறது. அசாமில் இவர்கள் செய்யும் என்ஆர்சி விவகாரங்கள் அனைத்துமே உல்ஃபா போன்ற ‘பிரிவினைவாத’ அமைப்புகள் முன்வைத்த கோரிக்கைகள்தான்.

தேர்தல் ஆவணத்தில்தான் காஷ்மீரின் மக்கள் மாநாட்டுக் கட்சியும் பஞ்சாபின் அகாலி தளமும் பிரிவினையைப் பேசவில்லை. ஆனால் காஷ்மீரியத்தையும் பஞ்சாபியத்தையும் அடிப்படையாகக் கொண்டு காஷ்மீர், பஞ்சாப் விடுதலை கோரும் அல்லது விடுதலைக்காக ஏங்கும் எத்தனையோ பேர் இந்தக் கட்சிகளில் இருக்கிறார்கள். தலைமைகள் அப்படி இல்லையென்றாலும், தொண்டர்களில் பலர் அதே விடுதலைக்கனவுகளோடு இருக்கிறார்கள். இது எல்லோருக்கும் தெரியும். அவர்களோடு பாரதிய ஜனதா கட்சி கூட்டுவைக்கவில்லையா? அப்போது இந்திய தேசிய ஒற்றுமை குலைந்து போய்விடவில்லையா? அப்படித்தானே அகாலிதளத்துக்கு எதிராக, தனிநாடு கோருபவர் எனத்தெரிந்தும் பிந்தரன்வாலேவுக்கு இரகசிய ஆதரவளித்து வளர்த்தார் இந்திரா காந்தி?

தனித்தமிழ்நாடு வேண்டும், அதில் சோஷலிச சமூகத்தை அமைக்கவேண்டும் என்றெல்லாம் கருதுவதும் எழுதுவதும் பரப்புரை செய்வதும் எந்த விதத்திலும் குற்றமல்ல, சட்டவிரோதமும் அல்ல.

அது சமூகத்தின் ஒரு பிரிவினரின் விழைவு. அதை இந்த அரசு ஏற்கமறுத்தால் எதிர்த்து பிரச்சாரம் செய்யலாம். அந்த விழைவை ஜனநாயக ரீதியில் வெளிப்படுத்துவது என்பதே தவறு என்று பாய்வது முட்டாள்தனம். பாசிசம்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஒரு முழக்கத்தைப் பார்த்தோம்: “மாடு வேண்டும், மாடு வேண்டும் இல்லையென்றால் நாடு வேண்டும்”. காவிரி பிரச்சினையின்போது இப்படி ஒரு முழக்கம் வந்தது: “தண்ணியக் கொடு, இல்லேன்னா தனியா விடு”. இதெல்லாம் யாரும் சொல்லிக்கொடுத்து வந்தது அல்ல. அப்படி வந்திருந்தாலும் இந்த முழக்கங்கள் லட்சக்கணக்கானவர்களிடம் பரவியவதற்கு யார் காரணம்? வேறு எப்போதையும்விட தமிழ்நாட்டில் இப்போது “பிரிவினைவாதம்” பரவியிருக்கிறது என்றால் அதற்கு யார் காரணம்? – தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மோடி அரசும் அதன் எடுபிடி அரசும்தான் காரணம்.

“நாங்கள் பிரிவினைக் கோரிக்கையைத்தான் கைவிட்டோம், ஆனால் பிரிவினைக்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன” என்றார் அண்ணா.

“இல்லை, இல்லை, அந்தக் காரணங்களை இப்போது நாங்கள் பல மடங்காக அதிகரித்திருக்கிறோம்” என்கிறது மோடி அரசு.

எது குற்றம்? யார் குற்றவாளி?

– ஆழி செந்தில்நாதன்   

குன்றத்தூர் அபிராமி : கலாச்சார நீதிபதிகளின் தற்குறித் தீர்ப்புகள்

10
வில்லவன்

குன்றத்தூர் அபிராமி எனும் இளம்பெண் தனது இரு குழந்தைகளைக் கொன்றுவிட்டு தன் காதலரோடு வாழும் நோக்கத்தோடு தப்பி ஓடிய செய்தி கடந்த 10 நாட்களாக சமூக ஊடகங்களில் பல வடிவங்களில் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அவருக்கு பிரியாணி பிடிக்கும் என்பது துவங்கி அவர் செய்த டப்ஸ்மாஷ் வீடியோக்கள் எல்லாமே கிரிமினல் கன்ஸ்பைரசி பட்டியலில் சேர்க்கப்பட்டாயிற்று. அவரது ஒப்பனைகளே அவர் தரத்தைக் காட்டுவதாக சொல்கிறார் ஒருவர். ’சும்மா இருந்தவளுக்கு வண்டி வாங்கிக் கொடுத்த ஊட்டுக்காரனை சொல்லணும்’ என்கிறார் இன்னொருவர். பலரது கருத்துக்களைப் பார்க்கையில் அவர்கள் ஒரு கொடூரமான கள்ளக்காதல் கொலைக்காக காத்திருந்தார்களோ என எண்ண வைக்கிறது. ஒரு தாய் தமது இரு பிள்ளைகளைக் கொன்றுவிட்டு தப்பிவிட்டார் எனும் செய்தி சீரணிக்க இயலாததாக இருந்தாலும் எனக்கு அதில் எந்தக் கலாச்சார அதிர்ச்சியும் ஏற்படவில்லை. மாறாக நமது மிகை எதிர்வினையின் மீது கொஞ்சம் சலிப்பும் பயமும் மேலிடுகிறது.

மனிதகுல வரலாற்றில் திருமணத்துக்கு வெளியேயான காதலும் பாலுறவும் எல்லா காலத்திலும் இருந்திருக்கிறது. ”கணவனே கண்கண்ட தெய்வம்” போன்ற அறிவுரைகள் ”விட்டுட்டு போயிடாதடீ” எனும் மன்றாடலாகவும் இருந்திருக்கக்கூடும். சில சமூகங்களில் மாதவிலக்கின்போது பெண்கள் வீட்டுக்கு வெளியே தனி குடிசையில் அமர வேண்டும் என்பது கட்டாயம். அது அவர்களது மாதவிலக்கை மற்றவர்கள் கண்காணிக்கும் ஒரு ஏற்பாடு. விதவைக்கு மொட்டையடிப்பதும், வெள்ளை சீலை உடுத்துவதும் அவர்களை தனித்து அடையாளப்படுத்தத்தான். அழகை குலைத்து வீட்டைவிட்டு ஓடாமல் காப்பாற்ற அல்லது ஓடினால் எளிதாக கண்டுபிடிக்கவும் இந்த ஏற்பாடு இருந்திருக்கலாம். அரசர்கள் போருக்கு செல்கையில் ராணிகளுக்கு பூட்டு போட்ட இரும்பு உள்ளாடை அணிவித்த கதைகள் உண்டு. சுரங்கம் தோண்டி இரகசியக் காதலரை சந்தித்த ராணி வடநாட்டில் இருந்திருக்கிறார். கள்ளக்காதல் எனும் பொருள்கொண்ட வார்த்தைகள் ஆங்கிலத்தில் இல்லை, அங்கே அதனை எக்ஸ்ட்ரா மெரைட்டல் அஃபேர் எனும் அதிர்ச்சியூட்டாத வார்த்தையால்தான் குறிப்பிடுகிறார்கள்.

குன்றத்தூர் அபிராமி, அவரது  குழந்தைகள்.

அம்மாவோ அப்பாவோ பிள்ளைகளைக் கொன்றுவிடும் செய்தியும் நமக்கு புதிதல்ல. பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. நடவடிக்கைகளுக்குப் பிறகு அவை வாரம் இரு முறையேனும் கேள்விப்படும் செய்தியாகிவிட்டது. வறுமை தாளாமல் குழந்தைகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்வோர், மனைவியோடு சண்டைபோட்டு அந்த ஆத்திரத்தில் பிள்ளைகளைக் கொன்ற அப்பாக்கள், காதலுக்கு இடையூறாக உள்ள குழந்தைகளைக் கொன்ற பெற்றோர்கள் அல்லது கணவனையோ மனைவியையோ கொன்றவர்கள் என எல்லா வகைமாதிரி குடும்பத்துக்குள்ளேயான கொலைகளும் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன. ஒரு காலத்தில் ரியல் எஸ்டேட் கொலைகள்தான் அதிகம் நடக்கும். இப்போது உறவுகளுக்குள் நடக்கும் கொலைகள் அந்த இடத்தை பிடித்துவிட்டன.

பிறகு ஏன் அபிராமி பற்றிய செய்தி பற்றியெரியும் பிரச்சினையானது?

அதன் பின்னிருக்கும் முக்கியமான காரணி, அபிராமியின் செயலில் உள்ள சுவாரஸ்யம். வெகுமக்கள் மனதில் இருக்கும் கலாச்சார நீதிபதியை அச்செய்தி உசுப்புகிறது. வறுமையில் பிள்ளைகளை கொன்றவள் கதையில் சுவாரஸ்யம் ஏதும் இல்லை. உங்கள் மன நீதிபதியால் அதற்கு ஒரு எளிய தீர்ப்பு சொல்ல முடியாது (அரசாங்கத்தை பகைத்துக்கொள்ள முடியாதில்லையா?) சில ஆண்டுகளுக்கு முன்பு தன் கணவர் தன்னை தேவையின்றி சந்தேகிப்பது பற்றி தோழி ஒருவர் சங்கடப்பட்டுக் கொண்டார். அவர் கணவர் இவரது சம்பளத்தை பெரிதும் நம்பியிருப்பவர்.

”சந்தேகப்பட்டு என்ன செய்கிறார்?” என்று கேட்டேன். ”அடிக்கவோ திட்டவோ மாட்டாரு. ஆனா யாருக்கோ சொல்ற மாதிரி பேஸ்புக்ல எனக்கு அட்வைஸ் பண்ணுவாரு. மத்த பொம்பளைங்கள திட்டுறமாதிரி என்னை குத்திக்காட்டுவார்” என்றார். (அவரது ஆடைத்தெரிவு ஏனைய ஊழியர்களுடன் சிரித்து பேசுவது மாதிரியான செயல்களை – “தேவடியாளுங்க அடுத்தவங்களை பார்க்க வைக்குற மாதிரி மேக்கப் போடுவாங்க, வேலைக்கு போற பொம்பளைங்க ஏன் அப்படி போகனும்?” இது அவரது வசனங்களின் ஒரு சாம்பிள்).

இந்த வகை வாட்சப்தாசர்கள், சமூகம் சமீபத்தில்தான் கெட்டழிந்துவிட்டது எனத் தீர்மானமாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தமது கருத்து சரி என நிரூபிக்கும் ஆதாரம் தேவைப்படுகிறது. அபிராமி செய்தி அவர்களது தீர்மானங்களை உரத்து சொல்ல ஒரு வாய்ப்பாக அமைகிறது.

பலரது கருத்துக்களைப் பார்க்கையில் அவர்கள் ஒரு கொடூரமான கள்ளக்காதல் கொலைக்காக காத்திருந்தார்களோ என எண்ண வைக்கிறது.

மேலும் நமக்கு தினசரி வாழ்வில் சுவாரஸ்யம் மிக்க பொழுதுபோக்குகள் குறைவாக இருக்கின்றன. ஒரு காலத்தில் டி.வி. சீரியல்கள் அதனை நிறைவேற்றின. அதில் கள்ளக்காதல், கொலை, கடத்தல் என எல்லாமே வந்தன (சித்தி தொடர் உச்சத்தில் இருந்த போது சீரியல் ஒளிபரப்பாகும் நேரத்தில் ரங்கநாதன் தெருவில் கூட்டம் கணிசமாக குறைந்திருக்கும்). பிறகு நெடுந்தொடர்கள் போரடிக்க ஆரம்பித்த வேளையில் சொல்வதெல்லாம் உண்மை வகையறா நிஜவாழ்வு கள்ளக்காதல், கொலை போன்றவை அவ்விடத்தை ஆக்கிரமித்தன. சும்மா கதை சொல்வது எத்தனை நாள் தாங்கும்? அடுத்து 10 பேரை ஒன்றாக அடைத்து அவர்களது பலவீனங்கள், சண்டைகளை ஒளிபரப்பி வாழ்வை சுவை மிக்கதாக்கினார்கள். ஆனால் அந்த பிக்பாஸும் இப்போது சலிப்புதட்டுவதாக தகவல்.

ஊடகங்களுக்கோ முக்கியமான அரசியல் சமூக பிரச்சினைகள் பொதுவிவாதமாகாமல் தடுக்க வேண்டிய நிர்பந்தம். ரஃபேல் ஊழலையும் பெட்ரோல் விலையேற்றத்தையும் பெரிதாக்கக்கூடாது. ஆனால் தொழில் ஓடியாக வேண்டும். ஆகவே அபிராமியின் செய்தி அவர்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பு. அதில் பொருந்தாக்காதல் எனும் கிளுகிளுப்பு இருக்கிறது.

நாம் பார்க்கும் பல விளம்பரங்கள் நம்மை பாலியல் ரீதியாக கிளர்ச்சியூட்டும்படி வடிவமைக்கப்பட்டவையே. இளைஞர்கள்/ மாணவர்கள் பலர் முதலில் சன்னி லியோனி போன்றோரது ஆபாச வீடியோக்களை பார்க்க ஆரம்பித்து அடுத்தகட்டமாக திருட்டுத்தனமான ஸ்கேண்டல் வீடியோக்களையே அதிகம் நாடுகிறார்கள். அது பாலியல் நாட்டத்தில் ஒரு திரில்லை கூடுதலாக சேர்க்கிறது. அதுதான் அபிராமி பற்றிய செய்திகளை பெரிதாக விற்பனையாகவல்ல சரக்காக மாற்றுகிறது. இந்த திரில்தான் திருமணத்துக்கு வெளியேயான காதலின் உடலுறவு நேரத்தை நீட்டிக்கிறது எனவும் அதுவே அந்த உறவின் மீது கூடுதல் போதையேற்படுத்துகிறது என ஒரு உளவியல் பார்வை இருக்கிறது.

காதல் வயப்படுதல் என்பது ஒரு மிதமான கோகைன் அடிமைத்தனத்துக்கு நிகரானது (குறிப்பு : மூளை பாகமான அமிக்டலாவுக்கு நல்ல – மீடியமான – கள்ளக் காதல் என்றெல்லாம் வகைப்படுத்தத் தெரியாது). கிளுகிளுப்பு, திரில், கடைசியில் ஒரு கலாச்சார பாடம் என பெருந்தொகையான மக்களை வசீகரிக்கும் அம்சங்கள் பல இருப்பதால் அபிராமி பாணி செய்திகள் என்பது காட்சி ஊடகங்களுக்கு ஒரு ஜாக்பாட். அதனால்தான் பல கோணங்களில் தக்க பிண்ணனி இசையோடு அச்செய்தியை இறக்குகிறார்கள்.

ஊடகங்களின் ‘எக்ஸ்ரே’ ரிப்போட்டுகள்.

ஆகவே இத்தகைய செய்திகளுக்கு அதிகம் அதிர்ச்சியடைந்து ஆற்றலை வீணாக்காதீர்கள் என்றே நான் பரிந்துரைப்பேன். இது தொடர்பாக நாம் கவனம் செலுத்த வேண்டும் என கருதினால், அதற்கான வேறு நியாமான காரணிகள் இருக்கின்றன.

சமூகம் முழுக்க மனிதர்கள் கடுமையான பதற்றத்தில் இருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. உணவு, காதல் – காமம் மற்றும் பதட்டம் (ஸ்ட்ரெஸ்) ஆகியவை நமது நடத்தை மற்றும் முடிவுகளின்மீது பெரும் செல்வாக்கு செலுத்தவல்லவை. பெரும்பான்மை குடும்பங்கள் போதுமான அளவு நேர்மறையான சமூகத் தொடர்புகள் அற்றதாக இருக்கின்றன (நமது சமூக ஊடக அடிமைத்தனத்துக்கு அதுவும் ஒரு காரணம்). அரசியல் காரணங்களால் எதிர்காலம் பாதுகாப்பற்றதாக மாறியிருக்கிறது. நவீனத்தை வலியுறுத்தும் விளம்பரங்கள் பழைய கலாச்சாரமே சிறந்தது எனும் வாட்சப் அறிவுரைகள் என முற்றிலும் வேறான இருதுருவ குழப்பங்கள் நம்மை அலைகழிக்கின்றன. இவை எல்லாமே நம் எல்லோரது இயல்பையும் கடுமையாக சிதைக்கின்றன.

தாங்க இயலாத ஆத்திரத்தில் அல்லது மன அழுத்தத்தில் தமது பிள்ளைகளை கடுமையாக அடித்துவிடுவதாக பல அம்மாக்கள் எங்களிடம் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். பெல்ட்டால் மகனை / மகளை அடிக்கும் அம்மா, மகனை சுடுதண்ணீரில் தள்ளிவிட முயன்ற அம்மா, நான்கு வயது மகளை சுவற்றில் தள்ளிவிட்டு பிறகு அதற்காக அழுத அம்மா என ஏராளமான உதாரணங்களை பார்த்திருக்கிறேன். அவர்கள் யாரும் கொடுமைக்காரி அம்மாக்கள் இல்லை. அது அவர்களை நெருக்கும் எண்ணற்ற பிரச்சினைகளின் ஒரு விளைவு. அதனை வெறுமனே அப்பெண்களின் நடத்தைப் பிரச்சினை என கருதினால் நம்மால் ஒரு குழந்தையைக்கூட அடி வாங்குவதில் இருந்து காப்பாற்ற முடியாது.

திடீரென எழுச்சி பெறும் பக்தி, அதீத சோதிட நம்பிக்கை, தற்கொலைகள், மனநல பிரச்சினைகள் என எழுதி மாளாத அளவுக்கு பிரச்சினைகள் இதனால் உருவாகின்றன. உறவுச்சிக்கல்கள் அந்தப் பட்டியலில் கடைசியாக வரும். ஆனால் அதன் நியூஸ் வேல்யூ ஏனையவற்றைவிட மிக அதிகம் (மனநலம் சார் தேடல்கள் கூகுளில் அதிகம் இருப்பதாக கேள்வி ஆனால் அதன் செய்தி முக்கியத்துவம் குறைவு). ஆகவே அத்தகைய செய்திகள் விரைவாகவும் முழு வீச்சோடும் நம்மை வந்தடைகின்றன. அவற்றை வெறும் கலாச்சார மதிப்பீடுகளைக்கொண்டு பார்ப்பதால் எந்த பலனும் வரப்போவதில்லை.

மேற்கத்திய கலாச்சாரம் நம்மை கெடுத்துவிட்டது என்பது பச்சை அயோக்கியத்தனம்.  புதிய தொழில்நுட்பங்கள் பொருந்தாக் காதலுக்கு கொஞ்சம் ஒத்தாசையாக இருக்கிறது என்பதை வேண்டுமானால் ஒத்துக்கொள்ளலாம். ஒருகாலத்தில் இருந்ததாக நம்பிக்கொண்டிருக்கிற ஒழுக்கமான கலாச்சாரம் இங்கே ஒருபோதும் இருந்ததில்லை. பெண்களை ஜாக்கெட்கூட அணியவிடாத கலாச்சாரம் இங்கே இருந்தது. லட்சக்கணக்கான விதவைகளை அனாதையாக காசியில் விட்டுவிட்டு வந்து  கூச்சமில்லாமல் வீட்டில் வம்சவிருத்தி செய்த கலாச்சாரம் இங்கிருந்தது. கணவன் செத்தால் மனைவிக்கு கஞ்சா கொடுத்து நெருப்பில் தள்ளிய கலாச்சாரம் இங்கிருந்தது. அவற்றோடு ஒப்பிடுகையில் சோ கால்டு கள்ளக்காதல் எல்லாம் கலாச்சார அதிர்ச்சிக்குள்ளாவதற்கான செய்தியே அல்ல.

கள்ளக்காதல் பற்றியல்ல பிள்ளைகள் கொல்லப்படுவது பற்றியே நான் கவலைப்படுகிறேன் என சொல்பவர்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டியது பெற்றோர்களுக்கு இருக்கும் கடுமையான மனஅழுத்தம் குறித்துத்தான். சிறார்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினை அதுதான். கடுமையான தண்டனைகள் தொடங்கி கூட்டுத் தற்கொலைகள் / கொலைகள் வரை அதன் தாக்கம் பிரம்மாண்டமானது. இந்தவகை மன அழுத்தம் ஒரு தனிநபர் பிரச்சினை அல்ல, அதில் சமூக – பொருளாதார -கலாச்சார – அரசியல் காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. அவற்றை சீர்செய்ய முயல்வதே ஒரு நாகரீக சமூகத்திற்கு அழகு. யார் கண்டது, அந்த செயல்பாடுகள் கலாச்சார காவலர்களின் கடைசி சமரசமான ஸீரோ கேஷுவாலிட்டி எனும் நிலையை கள்ளக்காதல்களிலும் கொண்டுவரக்கூடும்.

– வில்லவன்

அரசியல் விமர்சகர். வினவு தளத்தில் “வில்லவன் சொல்” எனும் தலைப்பில் பத்தி எழுதுகிறார்.