Saturday, June 21, 2025
முகப்பு பதிவு பக்கம் 140

அருணாச்சல பிரதேசத்தில் புறக்கணிக்கப்படும் சக்மா பழங்குடிகள்!

0

தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் (NCRB) தரவுகளின் படி, வடகிழக்கு இந்தியாவானது கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்தாவது ஆள் கடத்தலின் மையமாக விளங்கி வருகிறது. 2015-ல், இந்தியாவின் ஒட்டுமொத்த ஆள் கடத்தல் வழக்குகளில் அசாமின் பங்கு மட்டும் 22 சதவீதம். தற்போது வரை அசாமில் இந்த நிலைமையே நீடித்து வருகிறது.

ஆள் கடத்தல் அங்கு இவ்வளவு அதிகமாக இருப்பதற்கான காரணம் வேலைவாய்ப்பின்மையே. வேலைதேடும் இளம்பெண்களையும் இளைஞர்களையும் வேலை வாங்கித் தருவதாகக்கூறி ஏமாற்றி, பாலியல் தொழிலிலும் வீட்டு வேலை மற்றும் கட்டுமான தொழில்களிலும் அடிமைகளாக ஈடுபடுத்துகின்றனர்.

வடகிழக்கு மாநிலங்களைப் பொறுத்தவரை அருணாச்சலப்பிரதேசம் பொருளாதார ரீதியாக மேம்பட்ட மாநிலமாக இருக்கிறது. அதனால் அங்கு வீட்டு வேலை மற்றும் கட்டுமானத் தொழிலுக்கான வேலையாட்கள் அதிகம் தேவைப்படுகிறார்கள். இதன் காரணமாக அசாமிலிருந்து அருணாச்சலப்பிரதேசத்திற்கு அதிகமான அளவில் ஆள் கடத்தல் நடைபெறுகிறது.

கடந்த எட்டு ஆண்டுகளில் (2014-ல் இருந்து) பதிவு செய்யப்பட்டிருக்கும் அதிக அளவிலான ஆள் கடத்தல் வழக்குகள் உண்மையை பிரதிபலிக்கவில்லை. பெரும்பாலான வழக்குகள் ஆட்களை காணவில்லை என்ற அடிப்படையிலேயே பதிவு செய்யப்படுகிறது; ஆள் கடத்தல் என்ற பிரிவில் அல்ல. ஆனால், அவர்கள் நிரந்தரமாக காணாமல் போகிறார்கள் என்பதே கள யதார்த்தமாக உள்ளது.

படிக்க: ஒடிசா : சட்டவிரோதமாக நிலத்தை கையகப்படுத்தும் டால்மியா! பழங்குடி மக்கள் போராட்டம்!

அசாமில் சக்மா (Chakma) என்ற பழங்குடி இனத்தை சேர்ந்தவர்களே அதிக அளவில் அருணாச்சலப்பிரதேசத்துக்கு கடத்தப்படுகிறார்கள்; குறிப்பாக அம்மாநிலத்தின் தலைநகரான இட்டாநகருக்கு (Itanagar) கடத்தப்படுகிறார்கள். சக்மா சமூகத்தைச் சேர்ந்த மாணவர் தலைவர்களைக் கேட்டபோது, ஏராளமான குழந்தைகள் கடத்தப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

சக்மா சமூக மக்களுக்கு அசாமில் குடியுரிமை இல்லாமல் இருப்பதாலும், அவர்கள் அங்கு மிகவும் பின்தங்கிய சமூகமாக இருப்பதாலும் பெரும்பாலான புகார்கள் பதிவு செய்யப்படுவதே இல்லை.

சமீபத்தில் பேசிய அருணாச்சலப்பிரதேச முதல்வர் பேமா காண்டு (Pema Khandu), தனது மாநிலத்தைச் சேர்ந்த சக்மா அகதிகளை இந்தியாவின் மற்ற பாகங்களுக்கு இடம் மாற்றுவது குறித்துப் பேசினார். இது அம்மக்களிடையே பெரிய கோபத்தை ஏற்படுத்தியது.

வளமான கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்ட ஒரு பெளத்த இனக்குழுவான சக்மாக்கள், சிட்டகாங் மலைப்பகுதிகளிலிருந்து திரிபுரா மற்றும் மிசோரம் வழியாக 1964-இல் இந்தியாவுக்குள் நுழைந்தனர். அப்போதைய கிழக்கு பாகிஸ்தான் அரசாங்கம் கர்னாபுலி (Karnaphuli) ஆற்றின் மீது கப்தாய் அணையை (Kaptai Dam) அமைத்ததால் அவர்கள் இடம்பெயர்ந்தனர். பிரிவினைக்குப் பிறகு இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையின் காரணமாக இந்த சமூகம் அப்போதைய பாகிஸ்தான் அதிகாரிகளால் மத ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டது.

1964 ஆம் ஆண்டில், கப்தாய் அணை கட்டியதன் காரணமாக இடம்பெயர்ந்த சக்மா அகதிகள் இந்தியாவுக்குள் நுழைந்தபோது, இந்திய அரசாங்கம் அவர்களில் ஒரு குழுவை அப்போதைய வடகிழக்கு எல்லைப்புற முகமையின் (North East Frontier Agency – NEFA) திராப் பள்ளத்தாக்கில் (Tirap valley) குடியமர்த்தியது; அந்த NEFA-தான் இன்றைய அருணாச்சலப்பிரதேசம்.

1987 ஆம் ஆண்டில் அருணாச்சலப்பிரதேசம் மாநில அந்தஸ்தைப் பெற்றதிலிருந்தே உள்ளூர் பழங்குடிகளால் சக்மா மக்கள் தொடர்ச்சியாக துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்கள்.

1972-இல் இந்திய அரசாங்கம் சக்மா மக்களுக்கு குடியுரிமை வழங்குவதாக முடிவெடுத்தது. உச்சநீதிமன்றமும் 2015-இல் அம்மக்களுக்கு குடிமக்களுக்கான உரிமைகளை வழங்குமாறு அம்மாநில அரசிற்கு உத்தரவிட்டது. ஆனால் அம்மாநில அரசோ அனைத்து உத்தரவுகளையும் குப்பைத் தொட்டியில் போட்டது.

இந்தியாவில் சக்மா மக்களுக்கு எந்த உரிமையும் இல்லாததால், கடத்தப்பட்ட சக்மா குழந்தைகளைப் பற்றிய எந்த ஆவணங்களும் போலீசுத்துறையிடம் இல்லை. சங்லாங் (Changlang), நம்சாய் (Namsai) மற்றும் பப்பும் பரே (Papum Pare) ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான சக்மா குழந்தைகள் கடத்தப்பட்டிருக்கிறார்கள்.

சாங்லாங் மாவட்டத்தின் தியான் வட்டத்தில் (Diyon Circle) உள்ள ஆரண்யப்பூர் (Aranyapur), உதய்பூர் (Udaipur), தர்மாபூர் (Dharmapur), முடோய் டுவீப் (Mudoi Dweep) மற்றும் தும்பனி (Dumpani) ஆகிய கிராமங்களில் கிட்டத்தட்ட ஒவ்வொரு குடும்பமும் ஆள் கடத்தலுக்கு குழந்தைகளை இழந்துள்ளன. இந்தக் குழந்தைகளில் சிலர் இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டு அடிமைத்தனம் மற்றும் மிருகத்தனமான துன்புறுத்தல்களிலிருந்து மீட்கப்பட்டாலும், பலர் காணாமல் போனவாரே உள்ளனர்.

படிக்க: ஒடிசா : ஜிண்டால் எஃகு ஆலைக்கு எதிராக போராடும் பழங்குடி மக்கள் – அடக்குமுறைகளை ஏவும் பாசிச அரசு !

சுமார் ஒரு ஆண்டிற்கு முன்பு, நம்பர் 2 ஜோதிபூர் கிராமத்தைச் (No. 2 Jyotipur village) சேர்ந்த 13 வயதான ரிது சக்மா (Ritu Chakma) நம்சாய்க்கு (Namsai) சென்றார். அவர் ஒரு நல்ல வாழ்க்கையைப் பெறுவார் என்று அவரது பெற்றோருக்கு உறுதியளிக்கப்பட்டது. ஆனால், ஒரு அறியப்படாத இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அப்பெண் குழந்தை, ஒவ்வொரு இரவும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டது. அடையாளம் தெரியாத நபர் அளித்த புகாரைத் தொடர்ந்து போலீசு மற்றும் குழந்தைகள் நல மையத்தால் மீட்கப்பட்ட அவர் இப்போது வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.

அந்தப் பெண் குழந்தையின் தந்தையான அருண் குமார் சக்மா, நிலமற்ற ஒரு கூலித் தொழிலாளி. அவருக்கு ஆறு குழந்தைகள் இருப்பதால் தினக்கூலியை மட்டும் வைத்து குடும்பம் நடத்த இயலவில்லை. தனக்குத் தெரிந்த ஒரு நபரின் மூலமே தன் மகளை நம்சாய்க்கு வேலைக்கு அனுப்பி இருக்கிறார். இப்படி நடக்கும் என்று அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

குடியுரிமை இல்லாததால் அருண் குமார் சக்மாவுக்கும் அவரது குடும்பத்துக்கும் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் ரேசன் கிடையாது; அரசின் மருத்துவக் காப்பீடு (Atal Amrit Abhiyan), பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் போன்ற எந்த திட்டத்தையும் பயன்படுத்திக் கொள்ளவும் இயலாது.

சக்மா மக்கள் குடியிருக்கும் கிராமங்கள் இன்னும் மின்சார வசதியோ குடிநீர் வசதியோ கூட இல்லாமல்தான் இருக்கின்றன. அவர்களுக்கு ஓட்டுரிமையும் இல்லை. ஆரண்யப்பூர் கிராமத்தில் 200 வீடுகளுக்கு ஒரு கிணறு மட்டுமே உள்ளது. அங்குள்ள பெண்கள் தண்ணீருக்காக தினமும் ஐந்து முதல் பத்து கிலோமீட்டர் வரை நடக்க வேண்டி உள்ளது. 1994-இல் பரவிய மலேரியா கொள்ளை நோய், அப்பகுதி மக்களை சராசரியாக வீட்டிற்கு ஒருவர் என்ற அளவில் கொன்றொழித்தது. அரசாங்கம் அவர்கள்மீது எந்த அளவிற்கு அக்கறை காட்டுகிறது என்பதற்கு இது ஒரு துலக்கமான சான்று.

குடியுரிமை இல்லாததாலும் இருப்பிடச் சான்றிதழ் இல்லாததாலும் சக்மா மக்கள், வேலை வாங்கித் தருவதாக கூறி ஆள் கடத்தலில் ஈடுபடும் கடத்தல்காரர்களை நம்புவதைத் தவிர வேறுவழியில்லை. அரசாங்கத்திற்கோ அவர்களைக் கண்டு கொள்ள நேரமும் இல்லை. அம்மக்களுக்கு வாக்குரிமையும் இல்லை. ‘ஜனநாயக’ இந்தியாவின் தனிச்சிறப்பிற்கு புறக்கணிக்கப்பட்ட சக்மா பழங்குடி மக்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு!


பொம்மி

பட்டினியின் பிடியில் ஆஸ்திரேலியா !

0

பட்டினியில் உழலும் ஆஸ்திரேலியா:
20 லட்சம் குடும்பங்களும் 13 லட்சம் குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்!

ஃபுட்பேங்க் (Foodbank) என்ற தொண்டு நிறுவனம் தனது வருடாந்திர பசி அறிக்கையை (Hunger Report) கடந்த அக்டோபரில் வெளியிட்டது. இந்த அறிக்கையில் உள்ள புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியூட்டுவனவாக உள்ளன. கடந்த 12 மாதங்களில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உணவிற்காக செலவழிக்க பணம் இல்லாததால் கடும் பட்டினியில் இருப்பதாகவும், பல நாட்கள் ஒரு வேளை உணவையே தவிர்ப்பதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது; அதிலும் குறிப்பாக 13 லட்சம் குழந்தைகள் கடுமையான உணவு பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜூலை 11 முதல் 28 வரை, 18 வயதைக் கடந்த 4,024 ஆஸ்திரேலியர்களிடம் இணையவழியில் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. கடந்த ஆண்டில் (2021-ல்) 17 சதவீத குடும்பங்கள் கடுமையான உணவு பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டிருந்தன; ஆனால் அது தற்போது (2022-ல்) 21 சதவீதமாக அதிகரித்துள்ளது.

குழந்தைகளைக் கொண்டுள்ள குடும்பங்களின் நிலைமையோ இன்னும் படுமோசமாக இருக்கிறது. குழந்தைகளை உடைய 32 சதவீத குடும்பங்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளன. இது தேசிய சராசரியான 21 சதவீதத்தை விட அதிகம்.

இதுகுறித்துப் பேட்டியளித்த ஃபுட்பேங்க் ஆஸ்திரேலியாவின் தலைமை நிர்வாக அதிகாரி பிரியன்னா கேசி (Brianna Casey) “அதிகரித்த உணவு மற்றும் மளிகைச் செலவுகள், அதிகரித்த எரிசக்தி செலவுகள் – மின்சாரம், பெட்ரோல் அல்லது வாகனத்திற்கான எரிபொருள் – மற்றும் அதிகரித்த வீட்டுச் செலவுகள் அனைத்தும் வாழ்க்கைச் செலவுகளை அதிகரிப்பதில் பங்காற்றுகின்றன. துரதிருஷ்டவசமாக, நிலைமை இன்னும் மோசமடைந்து வருவதாகத் தெரிகிறது” என்று கூறினார்.

படிக்க: உலக பட்டினிக் குறியீடு 2022 | 121 நாடுகளில் இந்தியா 107-வது இடம்!

அரசு திட்டங்களின் கீழ் வீட்டு வாடகை மற்றும் குழந்தை பராமரிப்பு ஆகியவற்றிற்கு வழங்கப்பட்டும் நிதி தனக்கு கொஞ்சம் கூட பற்றவில்லை என்று கூறுகிறார் சார்லோட் என்ற பெண்மணி. இரண்டு பேர் கொண்ட தனது சிறிய வீட்டிற்கே 850 டாலர் மின் கட்டணம் வருவதாக அவர் கூறுகிறார். ஃபோன் பில், மளிகை போன்ற மற்ற செலவினங்களும் கூடியிருப்பதாக அவர் மேலும் கூறுகிறார்.

ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியகத்தின் (Australian Bureau of Statistics – ABS) சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, பழங்கள் மற்றும் காய்கறிகள் கடந்த 12 மாதங்களில் (செப்டம்பர் காலாண்டு வரை) 16.2 சதவீத வருடாந்திர விலை உயர்வை சந்தித்திருக்கின்றன. அதே நேரத்தில், இறைச்சி மற்றும் கடல் உணவுகள் 7.3 சதவீதமும், ரொட்டிகள் மற்றும் தானியங்கள் 10 சதவீதமும், பால் பொருட்கள் 12.1 சதவீதமும் விலை ஏற்றம் கண்டுள்ளன. வீட்டு உபயோகப் பொருட்கள் 11.9 சதவீதமும், வீட்டுவசதி 10.5 சதவீதமும் அதிகரித்துள்ளது.

அங்குள்ள ஆஸ்திரேலிய அரசாங்கமோ இயற்கை சீற்றங்கள் மீது பழிபோட்டுத் தப்பித்துக் கொள்ள நினைக்கிறது. இந்தியாவின்‌ மோடி அரசாங்கம் எப்படி அனைத்துப் பிரச்சனைகளுக்கும் கொரோனாவை காரணம் காட்டியதோ, அதுபோலவே ஆஸ்திரேலியா உட்பட அனைத்து உலக நாடுகளும் கொரோனாவையே காரணம் காட்டுகின்றன.

படிக்க: நாட்டில் பட்டினிச் சாவே இல்லையாம் ! மோடி அரசின் பொய்யுரைகள் !

ஆஸ்திரேலியாவின் இந்த நிலைமைக்குக் காரணம் அங்கு மாறி மாறி ஆட்சி புரியும் தொழிலாளர் கட்சி (Australian Labor Party) மற்றும் லிபரல் கட்சிகளின் (Liberal Party of Australia) ஏகாதிபத்திய அடிவருடித்தனம்தான். பிரிட்டன் மற்றும் அமெரிக்காவிற்கு அடியாளாக செயல்பட்டுவரும் ஆஸ்திரேலியா (AUKUS முத்தரப்பு பாதுகாப்பு உடன்படிக்கை), தீவிரமாக நவதாராளவாத கொள்கைகளையும் அமல்படுத்தி வருகிறது. இந்தக் கொள்கைகளால் ஏற்படும் பாதிப்புகளைத்தான் கொரோனா விரைவுபடுத்தி இருக்கிறது என்பதே எதார்த்த உண்மை.


பொம்மி

தமிழ்நாடு: கிறிஸ்துவர்கள் மீது திட்டமிட்ட தாக்குதல் நடத்தும் காவிக் குண்டர்கள்!

மிழ்நாட்டின் தேர்தல் களம் என்று பார்க்கையில் பாரதிய ஜனதா கட்சிக்கு சொல்லிக்கொள்ளும்படி ஆதரவு இல்லை. ஆனால் அதன் இந்துத்துவா சித்தாந்தம் ‘திராவிட மரபு’ கொண்ட தமிழ்நாட்டில் ஆழமாக வேரூன்றி வளர்ந்து வருகிறது என்பதே நிதர்சனமான உண்மை. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கிறிஸ்துவ நிறுவனங்களின் கூட்டமைப்பு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தது. மோடி அதிகாரத்திற்கு வந்த 2014-ம் ஆண்டிலிருந்து கிறிஸ்துவர்களுக்கு எதிரான வெறுப்புக் குற்றங்கள் பெருமளவு அதிகரித்துள்ளது என்று அம்மனு கூறுகிறது.

2019 ஆம் ஆண்டில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக அதிகளவு தாக்குதல்கள் நடத்தப்பட்ட மாநிலங்களில் உத்தர பிரதேசத்திற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு உள்ளது. இதனை பொதுநல வழக்கு தாக்கல் செய்த நிறுவனங்களில் ஒன்றான ஐக்கிய கிறிஸ்தவ மன்றம் (United Christian Forum) இப்புள்ளி விவரங்களைத் தொகுத்துக் கொடுத்துள்ளது. அந்த அட்டவணையில் உள்ள மாநிலங்கள் அனைத்தும் பாஜக ஆளும் மாநிலங்களாகும் அல்லது அதன் இந்துத்துவா சித்தாந்தம் உறுதியாக வேரூன்றியுள்ள மாநிலங்களாகும். ஆனால், இவ்விரு வகையினங்களில் வராத மாநிலமாக கருதப்படும் தமிழ்நாடு இப்பட்டிலியில் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

இதுவரை 227 தாக்குதல் சம்பவங்கள் 2014-22 க்கு இடைப்பட்ட ஆண்டில் மட்டும் நிகழ்ந்துள்ளன. பாதிரியார்களும் தேவாலயங்களும் இந்துத்துவ குண்டர்களால் குறிவைத்து தாக்கப்படுகின்றன. மேலும் ஐக்கிய கிறிஸ்தவ மன்றம் 2015 ஆம் ஆண்டு முதல் ஒரு கட்டணம் இல்லா உதவி எண்ணை தொடங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டபூர்வ உதவிகளைச் செய்து வருகிறது. அந்நிறுவனம் தான், காவி குண்டர்களால் மத நம்பிக்கையாளர்கள் தாக்கப்படுவது, பிரார்த்தனைகளை சீர்குலைப்பது, பாதிரியார்கள் மற்றும் அவரது குடும்பங்களை துன்புறுத்துவது, தேவாலயங்களை நாசமாக்குவது போன்ற பல்வேறு சம்பவங்களின் அடிப்படையில் இந்தப் பட்டியலைத் தொகுத்துக் கொடுத்துள்ளது.

படிக்க: அதிகரித்துவரும் கிறிஸ்தவ சிறுபான்மையினரின் மீதான காவி குண்டர்களின் தாக்குதல்கள்!

இதில் பாதி (117) சம்பவங்கள் கொங்கு பகுதிகளில் தான் நிகழ்ந்துள்ளன; குறிப்பாக கோவை, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், திருப்பூர், மதுரையில் சில பகுதிகள். இதில் குறிப்பான விசயம் என்னவென்றால் இப்பகுதிகளில்தான், தேவர் மற்றும் கவுண்டர் போன்ற சாதிகள் ஆதிக்க சாதியாகவும், தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடக்கும் பகுதிகளாகவும் உள்ளன.

தி நியூஸ் மினிட் (The News Minute) குழு இக்குற்றச்சாட்டுகள் குறித்து களத்தில் இறங்கி விசாரிக்க முடிவு செய்தது. அதில், “எங்களால்(TNM)  மாநிலத்தின் உள்பகுதிகளில்  கிறிஸ்தவ எதிர்ப்பு மனநிலையை உறுதியாக உணர முடியவில்லை, ஆனால் மிஷனரிகளுக்கு விரோதமாக காவல்துறை வழக்கு பதிவு செய்வதை நாங்கள் கண்டுபிடித்தோம்”.

இதனைத் தொடர்ந்து நாங்கள் ஒரு பாதிரியாரை சந்தித்துக் கேட்டபொழுது அவர் கூறியது, “நாங்கள் மதமாற்றம் செய்வதாகக் கூறி பிரார்த்தனை நடத்தும் வாடகை வீட்டில் இருந்து உரிமையாளரால் வெளியேற்றப்பட்டோம். இதனைத் தொடர்ந்து காவி குண்டர்கள் எங்களை கடுமையாகத் தாக்கினார்கள். அதில் இந்து முன்னணி தான் முதன்மையாக இருந்தது”.

மேலும், இங்கு கலவரங்கள் ஒரே வடிவில் தான் நடக்கிறது என்றும் கூறினார். உதாரணமாக, மதமாற்றம் நடப்பதாகக் கூறி அண்டை வீட்டில் வசிப்பவர்களை காவிகள் தூண்டி விடுவது அதன் பிறகு தேவாலயங்கள், பிரார்த்தனைக் கூடங்கள் மற்றும் பாதிரியார்களை தாக்குவது; இதன் பிறகு போலீசு தலையிட்டு வன்முறைகளைத் தடுக்கப் போவதாகக் கூறி இடத்தின் உரிமையாளரைக் கட்டாயப்படுத்தி எங்களை வெளியேற்றுவது.

இதன் பிறகு நாங்கள் தமிழகத்தின் இந்துத்துவ சோதனைச் சாலையும் இந்து முன்னணியின் கோட்டையுமாகிய கோவைக்குச் சென்றோம்.ஏனென்றால், ஐக்கிய கிறிஸ்தவ மன்றத்தின் அறிக்கையின் படி கிறிஸ்தவர்களுக்கு எதிராக கோயம்புத்தூரில் தான் 42 குற்றங்கள் நடந்துள்ளது.

இந்து முன்னணி

ஆர்.எஸ்.எஸ் ஊழியரான ராமகோபாலானால் இந்து முன்னணி 1980-களில் தொடங்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் மூலம் 1990-களில் பெருமளவு இந்து முன்னணி வளர்ந்தது. இதற்கு உறுதுணையாக அப்போதைய ஜெயலலிதா அரசு மறைமுகமாக ஆதரவை வழங்கியது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களின் ஒருங்கிணைப்பாளர் வேண்டுமென்றே ஊர்வலங்களை முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் செலுத்துவார். ஆதலால்  ஊர்வலங்கள் பெரும்பாலும் கலவரங்களில் முடிந்துவிடும். ஆனால் இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில்  இருந்து இந்து முன்னணி கிறிஸ்துவர்கள் பக்கம் தனது பார்வைத் திருப்பியுள்ளது என்று உயர்மட்ட போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகிறார் என்று நியூஸ் மினிட் பதிவு செய்துள்ளது.

இந்து முன்னணி ஊழியர்கள் மிகவும் பயிற்சி பெற்றவர்கள் என்று போலீஸ் கூறுகிறது. “நீங்கள் இவர்களை கலவரம் நடக்கும் போது அரிதாகவே பார்க்க முடியும். இவர்கள் கலவரங்களில் தலைமை பாத்திரம் வகிப்பதில்லை. அவர்களுடைய பங்கு கலவரங்களை அமைதியாக இருந்து தூண்டி விடுவது மட்டுமே” என்று கோயம்புத்தூர் உயர் அதிகாரி ஒருவர் கூறுகிறார்.

இந்து முன்னணி அமைப்பின் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் நடராஜன், “கோவையில்  கிறிஸ்தவர்களை மட்டும் கண்காணிக்க  ஒவ்வொரு தெருவிலும் ஒரு நபரை நியமித்துள்ளோம். மேலும் 100 வார்டுகளிலும் ஒரு இந்து முன்னணியின் உறுப்பினர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்து இல்லாத நபர் எந்த வார்டில் இருக்கிறார் என்பதும் தெரியும் அவர் மதமாற்றத்தில் ஈடுபடுகிறாரா அல்லது சாதாரண வாழ்க்கை வாழ்கிறாரா என்பதும் எங்களுக்கு உடனடியாக தெரிந்துவிடும்” என்று கூறிகிறார்.

(இதன்பிறகு தி நியூஸ் மினிட் குழு கோவிந்தராஜ் நடராஜனை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேட்டி எடுத்தது. அப்போது கிறிஸ்தவர்களுக்கு எதிராக அணி திரட்டுவது தொடர்பாக ஒரு ஆங்கில செய்தி நிறுவனம் வந்திருப்பதை கண்டு இந்து முன்னணி உறுப்பினர்கள் சந்தேகத்துடனும் பதற்றத்துடனும் காணப்பட்டார்கள். ஆனால் கோவிந்தராஜ்   கிறிஸ்தவர்களுக்கு எதிராக இந்து முன்னணி பிரச்சாரம் செய்வதை பேசுவதற்காக ஆர்வமாக இருந்தார் என்று அந்த ஊடகம் பதிவு செய்துள்ளது).

கோவிந்தராஜ் அளித்த பேட்டியில், “இப்பகுதி முழுவதும் கவுண்டர் சாதியால் நிரம்பியது, உங்களால் இங்கே சாதி பாகுபாட்டை பார்க்க முடியாது. சில வருடங்களுக்கு முன்பு இரண்டு அல்லது மூன்று  கிறிஸ்தவ குடும்பங்கள்தான் இங்கு இருந்தன. ஆனால் தற்போது 40 குடும்பங்கள் கிறிஸ்துவத்தை நம்புகின்றனர்”. கடந்த சில வருடங்களாக மதமாற்றம் அதிக அளவில் நடந்துள்ளதாகவும் திமுக ஆட்சியில் அது உச்சத்திற்கு சென்று விட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.

“இந்து முன்னணி தலைவர்கள் கலவரங்களில் ஈடுபடுவதில்லை. கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் சாமானிய இந்துக்கள் ஆற்றும் உடனடி எதிர்வினைகளே. இந்துக்களுக்கும் மதமாற்றம் செய்பவர்களுக்கும் ஏற்படும் பதற்றத்தை நம்மால் தடுக்க  முடியாது. பாதிரியார்கள் இந்துக் கடவுள்களை அவமதிப்பதை சாதாரண இந்துக்களால் எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்” என்றும் அவர் கேள்வி எழுப்புகிறார்.

“நாங்கள் இந்து மதத்தைப் பற்றியும் பாரம்பரிய வழிபாடு முறைகளைப் பற்றியும் மக்களுக்குக் கற்றுக் கொடுக்கிறோம். நாங்கள் எங்களுடைய மதத்தின் நன்மைகளை தொகுத்து, துண்டறிக்கைகளாக தலித்துகளிடம் கொண்டு செல்கிறோம். இதன் மூலம் அவர்கள் விழிப்புணர்வு பெற்று பாதிரியார்களிடம் கேள்வி கேட்கின்றனர். மேலும் இந்து கடவுள்களை அவமதிப்பதற்கு எதிராக அவர்கள் பொருத்தமான பதில்களை கொடுக்கின்றனர்” என்றும் அவர் கூறுகிறார்.

இதன் பிறகு நியூஸ் மினிட் குழு இந்து முன்னணியின் கோவை பொதுச் செயலாளர் ஜெய்சங்கரை சந்தித்தது.

ஜெய் சங்கர் அளித்த பேட்டியில், “இந்து முன்னணிக்கும் கத்தோலிக்க மற்றும் புரோட்டஸ்டன்ட் பிரிவினருக்கும் எவ்வித பிரச்சனையும் கிடையாது. நாங்கள்  குறிப்பாக சுவிசேஷகர்கள் பெந்தெகொஸ்தே பிரிவினரைத்தான் கண்காணித்து வருகிறோம். இதனை நிரூபிக்கும் விதமாக ஜெய்சங்கர் அவருடைய ப்ரொடஸ்டன் கிறிஸ்துவ நண்பரான ஸ்டாலினை பேட்டியின்போது அழைத்து வந்தார். “இவன் என்னுடைய நண்பன் ஸ்டாலின். இவன்  கிறிஸ்தவன் தான். ஆனால் நாங்கள் சிறு வயதிலிருந்தே நண்பர்கள். இவன் என்னை கிறிஸ்துமஸுக்கு அழைப்பான், நான் இவனை பொங்கல் மற்றும் தீபாவளிக்கு அழைப்பேன்” என்று கூறினார். ஸ்டாலினும் இக்கூற்றை உற்சாகமாக ஏற்றுக் கொண்டு சுவிசேஷகர்களைக் கடுமையாக விமர்சித்தார்.

இதனைத் தொடர்ந்து நாங்கள் இந்து முன்னணியின் மாநில செயற்குழு உறுப்பினர் சதீஷை சந்தித்தோம். இவர் 25 ஆண்டு காலமாக இவ்வமைப்பில் வேலை செய்து வருகிறார்.

சதீஷ் கூறியது, “இம்மாநிலத்தில் 70-களின் இறுதியிலும் 80-களின் தொடக்கத்திலும் மதமாற்றம் என்பது உச்சத்திற்கு சென்று விட்டது. இந்து முன்னணி வந்த பிறகு இவ்விகிதங்கள் சரிய தொடங்கியது. இந்துக்களுக்கு ஒரு தூணாக இந்து முன்னணி தான் விளங்குகிறது”.

மேலும் அவர் கூறுகையில், “தூண்டுதலின் பெயரால்தான் மதமாற்றம் நடப்பதாக அவர் குற்றம் சாட்டுகிறார். இந்து நூலான மகாபாரதம் ராமாயணம் படிக்காத இந்துக்கள், மதம் மாறிய பிறகு முழு பைபிளையும் படித்து விடுகின்றார்கள். பணம் எவ்வாறு வேலை செய்கிறது என்று பாருங்கள்” என்று வருத்தப்படுகிறார்.

இந்து முன்னணி கவனித்து வரும் பகுதிகளை அவர் பட்டியலிட்டார். தலித்கள் மற்றும் ஆதிவாசிகள் அதிகம் வாழும் இடங்களான பேரூர், ஆலந்துறை, தொண்டாமுத்தூர், ஆனைகட்டி, புலிக்குளம், சிவானந்தா காலனி, சரவணம்பட்டி, அறிவொளி நகர், மைல்கல், செட்டிபாளையம், கலைஞர் நகர் மற்றும் சமத்துவபுரம்.

இதன்பிறகு நாங்கள் கோவை வழக்கறிஞர் ரா.முருகவேளிடம் பேட்டி எடுத்தோம். அவர் கூறியது, “அதிமுக ஆட்சியில் தான் மத நல்லிணக்கம் பெருமளவு சீரழிந்து போனது. எடப்பாடி பழனிச்சாமி பெயரில் கோவையில் பாஜகவின் ஆட்சி செய்து வந்தது. பல விஷயங்கள் மாறியும் மோசமடைந்து போய்விட்டது”.

“சுவிசேஷகர்கள் தெருக்களில் நற்செய்தி வாசகங்களை பிரச்சாரம் செய்வதையெல்லாம் முன்னால் எளிதாக பார்க்க முடியும். இந்து கோவில்களின் ரதங்கள் எவ்வித எதிர்ப்பும் இல்லாமல்  கிறிஸ்தவ தெருக்களில் செல்லும். ஆனால் மதமோதல்கள் அதிகமாகிவிட்ட இந்நிலையில் அந்நிகழ்வுகள் அனைத்தும் அரிதாகி விட்டது. தற்போது போலீசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் மத மோதல்களை உருவாக்க இந்துத்துவ குண்டர்கள் வலுக்கட்டாயமாக ஊர்வலங்களை  கிறிஸ்தவ குடியிருப்புகளுக்குள் செலுத்துகின்றனர்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

படிக்க: கோவை இந்து முன்னணி கலவரம் – விரிவான ரிப்போர்ட்

அரசு என்ன செய்கிறது?

கிறிஸ்தவ நிறுவனங்கள் அளித்த இத்தகவல்கள் அனைத்தும் அரைவேக்காடு என்றும் ஊடகங்களில் திணிக்கப்பட்டது என்றும் ஒன்றிய உள்துறை அமைச்சகம்  கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் தாக்க செய்த இந்த வாக்குமூலத்திற்கு உள்துறை அமைச்சகம் இவ்வாறு பதிலளித்துள்ளது: “இதுபோன்ற ஏமாற்று மனுக்களை வைத்துப் பார்க்கும் பொழுது இதன் பின்னால் மறைமுக நிகழ்ச்சி நிரல் இருக்குமோ என்று சந்தேகம் தோன்றுகிறது. மேலும் நாட்டின் அமைதித் தன்மையையும் பாதுகாப்பையும் கெடுக்க அந்நிய தலையீடுகள் இருக்குமோ என்றும் கேள்வி எழுகிறது”.

மாநிலத்தின் குற்ற புள்ளி விவரங்களைப் பார்க்கும் பொழுது மறுக்கமுடியாத உண்மைகள்  வெட்ட வெளிச்சமாகியுள்ளது. அதில்  கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடக்கும் தாக்குதல்கள் அரிதாகவே வெறுப்பு குற்றங்களாகவும் மத மோதல்களாகவும் பதிவு செய்யப்படுகிறது என்பதே அந்த உண்மை. முருகவேளின் கூற்றுப்படி தாக்கினவர்களுக்கும் தாக்கப்பட்டவர்களுக்கும் இடையில் சமரசம் செய்து வைத்து தரகு வேலையை போலீசு செய்து வருகிறது. வழக்குகளை பதிவு செய்யும்போது போலீசால்  வழக்குகள் குறைத்துக் காட்டப்படுகிறது.

சில சந்தர்ப்பங்களில் அவர்கள் இந்திய தண்டனைச் சட்டத்தில் உள்ள மத வன்முறை சம்பந்தமான பிரிவில் வழக்குகளை பதிவு செய்வதில்லை. குறிப்பாக, 295 (வழிப்பாட்டை தலத்தை அசுத்தல் செய்தல்), 295A (மத உணர்வுகளை சீர்குலைத்தல்), 296 (மதக் கூட்டத்தை தொந்தரவு செய்தல்), 153 (கலகம் செய்வதற்கு தூண்டிவிடுதல்) மற்றும் 153A (மதம் சம்பந்தமாக விரோத உணர்ச்சிகளை தூண்டிவிடுதல்) போன்றவற்றில் வழக்குப்பதிவு செய்வதில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும் முன்னாள் அரசு வழக்கறிஞருமாக இருந்த ஒருவர் கூறுகிறார்.

இக்குற்றச்சாட்டை டெல்டா பகுதிகளில் பாதிக்கப்பட்ட  கிறிஸ்தவர்களுக்கு சட்டபூர்வ உதவிகளை செய்து வரும் ஒரு வழக்கறிஞரும் ஏற்றுக்கொள்கிறார். இவர் கூறும்போது, “திட்டமிடப்பட்ட மத மோதல் குற்றங்களை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யும்போது மதக்கலவரங்கள் சார்ந்த சட்டத்தில் பதிவு செய்யாமல் தனிநபர்களுக்கு இடையில் நடக்கும் மோதலாகப் பதிவு செய்கின்றனர். இது போன்ற நடவடிக்கைகள் திராவிட கட்சிகளுக்கு மதசார்பற்ற மாநிலமாக காட்டுவதற்கும் உதவுகிறது”.

புதிய பக்தர்களை தேடும் சுவிஷேகர்களுக்கு இந்த வன்முறைகள் அனைத்தும் தொழில்சார்ந்த அச்சுறுத்தலாக உள்ளது.ஆனால் சிலர் இந்த துன்புறுத்தல்களை வரவேற்கின்றனர். தங்களின் விசுவாசத்தை நிரூபிக்க இது உதவுகிறது.சுவிஷேகர்கள் பிரார்த்தனைகள் நடத்தவும் புதிய தேவாலயங்கள் கட்டவும் மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து அனுமதி வாங்குவது என்பது பெரிய பிரச்சனையாக உள்ளது.

புதிய இடங்களில் பிரார்த்தனைகள் நடத்த மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று தமிழ்நாட்டின் கட்டிட சட்டங்கள் கூறுகின்றன. இந்த அனுமதிகள் அரிதாகவே வழங்கப்படுகின்றன.

நாங்கள் சட்ட ஆய்வாளர் ஒருவரின் உதவியுடன் உயர்நீதிமன்ற இணைய தளத்திற்கு சென்றோம். அரசியலமைப்பின் சட்டம் 25-28 பிரிவின் கீழ் மத சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையை வலியுறுத்தி  கிறிஸ்தவ அமைப்புகளால் குறைந்தது 100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று நாங்கள் கண்டறிந்தோம்.

இந்த வழக்குகள், கிறிஸ்துவர்களால் மாநிலத்தின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் பதிவு செய்யப்பட்டுள்ளன. “ஒரு மத சிறுபான்மையினர் தனது வழிபாட்டிற்கு அனுமதி பெறுவதற்காக உயர்நீதிமன்றம் வரை செல்ல வேண்டும் என்பது, மத சிறுபான்மை சமூகம் வெறித்தனமான கும்பல்களால் துன்புறுத்தபப்படுவதைக் காட்டிலும்  அதிகார வர்க்கத்தால் அதிகமாக துன்புறுத்துகிறது என்பதைக் காட்டுகிறது”.

சட்ட ஆய்வாளரின் உதவியுடன், கடந்த ஐந்து ஆண்டுகளில் நீதிமன்றங்களால் தீர்க்கப்பட்ட 45 வழக்குகளின் பட்டியலை நாங்கள் தொகுத்தோம். 45 பேரில் 10 பேர் மட்டுமே  கிறிஸ்தவ மனுதாரர்களுக்கு ஆதரவாக இருந்தனர்.  திண்டுக்கல்லில் உள்ள பிலீவர்ஸ் சர்ச் தொடர்பான வழக்கில், மனுதாரர்களுக்கு 12 வாரங்களுக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை 2020 பிப்ரவரியில் மாவட்ட காவல்துறை ஆணையர்க்கு உத்தரவிட்டது.  நீதிமன்றம் உத்தரவிட்டும் காவல்துறை ஆணையர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தேவாலயத்தின் விளம்பரதாரர்கள் தி நியூஸ் மினிட்-யிடம் கூறினர்.

மற்றொரு வழக்கில், வாணியம்பாடி நகருக்கு வெளியே உள்ள ஒரு கிராமத்தில் உள்ள தனது சொந்த நிலத்தில் பாழடைந்த இடத்தில் ஒரு தேவாலயத்தை பாதிரியார் ஆமோஸ் கட்டினார். இந்துத்துவாதிகளின் தொடர்பில் உள்ள ஒருவர், மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்து, கட்டடத்தை இடிக்கக் கோரினார்.  ஆனால், காவல்துறை ஆணையர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் பிறகு இந்துத்துவாதிகள்  உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தபிறகு இவ்வழக்கு மீண்டும் காவல்துறை ஆணையரிடம் வந்தது. இந்த வழக்கில் உத்தரவு வரும்வரை பாதிரியார் பிரார்த்தனை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது.

ஒரு கிராமத்தில் உள்ள  கிறிஸ்தவ சமூகத்துடன் தொடர்புடைய ஒருவர் கூறும்போது, “இங்கு 3 கோவில்கள் தனி நபர்களிடம் உள்ளது. அவர்கள் வழிபாடு நடத்த எந்த அனுமதியும் வாங்குவதில்லை. இதனைப் பார்க்கும் போது அனுமதி வாங்கும் சட்டங்கள் அனைத்தும் சிறுபான்மையினர்களுக்காக மட்டும் தான் என்று தோன்றுகிறது” என்று ஆதங்கத்தை வெளிபடுத்தினர்.

இவற்றை மொத்தமாக தொகுத்துப் பார்க்கும்போது, தமிழ்நாட்டில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை தொடர்ந்து அதிகரித்து வருவதையும், இந்து முன்னணி போன்ற இந்துத்துவ கும்பல்கள் மதக் கலவரங்களை தூண்டி நடத்துவதையும், காவல்துறை அவற்றை மத மோதல்கள் என்று வழக்குப்பதிவு செய்யாமல் இருப்பதையும் காணமுடிகிறது. தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ்-இன் இந்துத்துவா சித்தாந்தம் வேரூன்றி செழித்து வளரத் துவங்கியுள்ளதையே இது காட்டுகிறது.


ஹைதர்
நன்றி : தி நியூஸ் மினிட்

ஆதார் எண் இணைக்கும் பணி ஆசிரியருக்கு தேவையா? | ஆசிரியர் உமா மகேஸ்வரி | வீடியோ

தார் கார்டை வாக்காளர் அடையாள அட்டையில் இணைக்கும் வேலையில் ஆசிரியர்கள் ஈடுபடுவது அவர்களுக்கு பெரும் பணிச்சுமையாக இருக்கிறது. தினமும் நான்கு வகுப்புகளுக்கு பாடம் எடுக்கவேண்டி இருக்கிறது. இதனால் மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பதற்கு முன் தயாரிப்பு செய்யமுடியாமல் போகிறது. மாலையில் வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்கும் வேலைக்கு போகும்போது அங்கு இருக்கக்கூடிய மக்கள் வேலைக்கு போய்விடுவார்கள். மக்களின் பங்களா வீடுகள் முன்பு நின்று, வீட்டுல யாருங்க? நாங்க BLO வந்து இருக்கோம், கொஞ்சம் வெளியில வாங்க என்றும், ஒவ்வொரு வீட்டு கேட்டு [gate] முன்பும் நின்று குரல் கொடுத்தாலும் வீட்டு ஓனர்கள் எட்டிப் பார்ப்பதில்லை.

மாலை நான்கு மணியிலிருந்து ஏழு மணி வரை பகுதியில் வேலை செய்வோம். இப்படியாக இரவு ஒரு மணி வரை இந்த பணியை செய்ய வேண்டிய சூழல் இருக்கிறது. இதற்கு மத்தியில் கற்பித்தல் பணிக்கான திட்டமிடுதல், வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் பார்க்க வேண்டும். வார இறுதியில் ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் என்று கல்வித் துறையில் அறிவிப்புகள் வந்தாலும் அதற்கு முழுமையாக வழிகாட்டலும் இல்லை.

ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் பணியில் ஆசிரியர் தேவையா? என்பது பற்றியும் அதில் ஆசிரியர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் பற்றியும் அரசுப் பள்ளி ஆசிரியர் உமா மகேஸ்வரி கீழ்க்கண்ட காணொலியில் விளக்குகிறார்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

கிஃப்ட் ஐஎஃப்எஸ்சி: உயர் கல்வியை ஏகாதிபத்தியங்களின் சந்தையாக்கும் திட்டம்!

0

த்திய அரசு அக்டோபர் 12 ஆம் தேதி சர்வதேச நிதி சேவைகள் மைய ஆணைய (சர்வதேச கிளை வளாகங்கள் மற்றும் வெளிநாட்டு கல்வி மையங்களை அமைத்தல் மற்றும் இயக்குதல்) ஒழுங்குமுறைகள், 2022 என்ற தலைப்பில்  இந்திய அரசிதழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

இந்த அறிவிப்பின்படி சர்வதேச கிளை வளாகங்கள் (International Branch Campuses – IBCs) மற்றும் வெளிநாட்டு கல்வி மையங்கள் (Offshore Education Centres – OECs) குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் உள்ள Gujarat International Finance-Tec City-யில் (GIFT City) அமைக்கப்பட உள்ளன.

இதன்படி, வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் கிஃப்ட் சர்வதேச நிதி சேவைகள் மையத்தில் (GIFT International Financial Services Centre) தங்கள் சர்வதேச கிளை வளாகங்களை (IBCs) அமைத்துக் கொள்ளலாம். மேலும், வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் அல்லாத கல்வி நிறுவனங்கள் வெளிநாட்டு கல்வி மையங்களை (OECs) கிஃப்ட் சிட்டியில் அமைத்துக் கொள்ளலாம். இதன்மூலம் உலகத் தரத்திலான கல்வியை அளிக்கப் போகிறார்களாம்.

இந்தியாவில் வளாகத்தை (IBC) அமைக்க விரும்பும் வெளிநாட்டு பல்கலைக்கழகம் நிதி நிலைப்புத்தன்மை கொண்டதாகவும் QS உலகப் பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் (QS World Universities ranking) முதல் 500 இடங்களுக்குள்ளும் இருக்க வேண்டும். ஆனால் வேடிக்கையாக, இவ்விதிமுறைகளின்படி, OEC-களை அமைக்கும் நிறுவனம் பல்கலைக்கழகமாக இருக்க வேண்டிய அவசியமில்லை; பெயரளவிற்கு ஏதாவது ஒரு கல்வி நிறுவனமாக இருந்தாலே போதுமானது.

படிக்க: உயர்சிறப்பு கல்வி நிறுவனம் : உலகத்தரம் என்ற கனவும் தீவிர தனியார்மயமாக்கலுக்கான திட்டமும் !

இந்த வளாகங்கள் நிதி மேலாண்மை, ஃபின்டெக் (fintech), அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகியவற்றிலும் ஆராய்ச்சி திட்டங்களை வழங்கிக் கொள்ளலாம். மேலும், இந்த வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் நாடுகளில் என்னென்ன பாடத்திட்டங்களை வழங்குகின்றனவோ அதையேதான் இங்கும் வழங்க வேண்டும்.

பொதுவாக ஒரு வெளிநாட்டு பல்கலைக்கழகம் இந்தியாவில் தனது வளாகத்தை அமைக்க முற்பட்டால், சில முன் நிபந்தனைகளுக்கு உட்பட்டே அதை செய்ய முடியும். குறிப்பாக கட்டணம் மற்றும் நிர்வாகக் கட்டுப்பாடு, இடஒதுக்கீட்டுக் கொள்கையை அமல்படுத்துதல் போன்றவற்றுடன் லாப நோக்கற்ற நிறுவனமாகவும் (not-for-profit entity) அது இருக்க வேண்டும் என்பது முன்நிபந்தனை.

ஆனால் தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், லாபம் ஏதாவது இருப்பின் அதனைத் தங்கள் சொந்த நாடுகளுக்கு அனுப்பிக் கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும், தங்களுக்கு விருப்பமான கல்விக் கட்டணத்தை அவர்களே நிர்ணயித்துக் கொள்ளும் சுதந்திரத்தையும் வழங்கி இருக்கிறார்கள். பல்கலைக்கழக மானியக் குழு (University Grants Commission – UGC) மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (All India Council for Technical Education – AICTE) ஆகியவற்றின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்க வேண்டியதும் இல்லை; குஜராத்தின் காந்திநகரை தலைமை இடமாகக் கொண்ட சர்வதேச நிதி சேவைகள் மைய ஆணையம் (International Financial Services Centres Authority – IFSCA) தான் இவற்றைக் கட்டுப்படுத்தும்.

ஏற்கனவே இந்தியாவில் உள்ள IIT, IIM, IISER போன்ற உயர்கல்வி நிறுவனங்களே பார்ப்பன-உயர் சாதியை சேர்ந்தவர்கள் மற்றும் மேட்டுக்குடியினரின் ஆதிக்கத்திற்கான ஒன்றாக உள்ளது. அவை தொடர்ந்து நமது பிள்ளைகளை புறக்கணித்து வரும் கொலைநிலங்கலாக இருக்கின்றன. எந்தவித கட்டுப்பாடும் அற்ற IFSC மூலம் அமைக்கப்படும் வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு யாருக்காக சேவை செய்யும் என்பதைச் சொல்லவே தேவையில்லை.

படிக்க: புதிய கல்வி கொள்கை (NEP 2020): பகட்டாரவாரத்தின் உச்சம் !

சர்வதேச நிதி சேவைகள் மையம் (IFSC) என்பது சிறப்பு பொருளாதார மண்டல சட்டம், 2005-இன்கீழ் (Special Economic Zone Act, 2005) அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு பொருளாதார மண்டலம் (SEZ) என்பது தனியார்மய-தாராளமய-உலகமய கொள்கையின் கீழ் அமைக்கப்பட்ட ஏகாதிபத்தியத்தின் குட்டி காலனியாகும். கல்வித்துறையை ஏகாதிபத்திய சுரண்டலுக்கு முழுமையாக அர்ப்பணிக்கும் நடவடிக்கைகளின் அடுத்தகட்ட நகர்வே இந்த கிஃப்ட் சிட்டி!


பொம்மி

புதிய ஜனநாயகம் – நவம்பர் 2022 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகத்தின் நவம்பர் – 2022 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..

சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.240
இரண்டாண்டு சந்தா – ரூ.480
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,200

புதிய ஜனநாயகம் – நவம்பர் 2022 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் !

தொலைபேசி : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

அச்சு இதழ் விலை : ரூ.20 + தபால் செலவு ரூ. 5 : மொத்தம் ரூ.25
G-Pay மூலம் பணம் செலுத்த : 94446 32561

வங்கி மூலம் செலுத்த :
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444.

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் :

♦ தலையங்கம் : தூத்துக்குடி தியாகிகள் புகழ் ஓங்குக! கார்ப்பரேட் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் வெல்க!

♦ கார்ப்பரேட் கொள்ளை எதிர்ப்பையும் உள்ளடக்கையதே பாசிச எதிர்ப்பு!

♦ இலவச எதிர்ப்பும் சமூக நலத்திட்ட ஒழிப்பும்!

♦ மீண்டும் முட்டுச்சந்தில் ஏகாதிபத்திய முதலாளித்துவம்! இது உலகப் பாட்டாளிகள் முன்கை எடுக்கும் தருணம்!

♦ சமூக ஊடகங்களின் மீது பாசிச ஒடுக்குமுறையை ஏவும் ஆண்டை நீதிபதிகள்!

♦ அதானி: உலகப் பணக்காரன் அல்ல; உலகப் பாட்டாளி வர்க்கத்தின் எதிரி!

♦ பார்ப்பன – பனியாக்கள் பிடியில் இந்திய ஊடகங்கள்!

♦ கட்டாய வாக்களிப்பு: போலி ஜனநாயகத்தின் இறுதி எல்லையில் பாசிசம்!

♦ ஈரான் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்: மதவாத கும்பலுக்கு எதிரான ஜனநாயகப் போர்!

♦ சாதி – தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக சாதி – தீண்டாமை ஒழிப்பு புரட்சிகர மணவிழாக்கள் நடந்த 25ஆம் ஆண்டை நினைவு கூர்வோம்!

♦ ஐ.டி.ஊழியர்களை மிரட்டும் மூன்லைட்டிங்!

நவம்பர் 7 – ஆவணப்படம் – விரைவில்…

போராட்டங்கள் எழுச்சிகளாக உயரட்டும்!

நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.; அம்பானி-அதானி; பாசிச கும்பலுக்கு எதிரான போராட்டங்கள் வளர்ந்து வருகின்றன. தமிழகத்திலும் கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, பரந்தூர், புதுச்சேரி, கோவை என பல பகுதிகளில் விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், மாணவர்கள், செவிலியர்கள், பேராசிரியர்கள் என அனைத்துத் தரப்பினரும் போராடி வருகின்றனர். பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.இன் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழக பாசிச எதிர்ப்பு சக்திகள் போராடி வருகின்றனர். பாசிச ஆட்சியதிகாரத்திற்கு எதிராகப் போராடுகின்ற அனைவரும் ஒன்றிணைந்து பாசிச எதிர்ப்புக் கூட்டமைப்புகள், பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணிகளை அமைத்துப் போராடுவது காலத்தின் கட்டாயமாகும். பாசிசத்தை முறியடிக்கும் இலக்கில் இந்தப் போராட்டங்களை மக்கள் எழுச்சிகளாக வளர்த்தெடுப்பது அவசியமாகும்.

நவம்பர் புரட்சியை மீண்டும் இவ்வுலகம் எதிர்நோக்கி இருக்கிறது என்பதை உலகம் முழுவதும் நடைபெரும் பல்வேறு போராட்டங்கள் நமக்கு உணர்த்துகின்றன. அதனை உணர்த்தும் வகையில் ஆவணப்படம் வெளியிவரயிருக்கிறது. அதன் டீசர் வீடியோவை தற்போது வெளியிடுகிறோம்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

 

’வல்லரசு இந்தியா’ யாருக்காக?

பிரிட்டனை பின்னுக்குத் தள்ளிவிட்டு, இந்தியா உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக வளர்ந்துள்ளதாக ப்ளூம்பெர்க் நிறுவனம் கடந்த மாதம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் புள்ளிவிவரங்கள் அடிப்படையில், கடந்த ஆண்டின் இறுதி காலாண்டில் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளதாக ப்ளூம்பெர்க் அறிக்கை தெரிவிக்கிறது.

பத்தாண்டுகளுக்கு முன்பு 11வது இடத்திலிருந்த இந்தியா, இன்று 5ஆம் இடத்திற்கு முன்னேறியிருக்கிறது. மேலும் இந்த ஆண்டின் முதல் காலாண்டில், பிரிட்டனின் ஜி.டி.பி 816 பில்லியன் டாலராக இருந்த நிலையில், இந்தியாவின் ஜி.டி.பி மதிப்பு 854.7 பில்லியன் டாலராக உயர்ந்திருப்பதை ப்ளூம்பெர்க் அறிக்கை கோடிட்டுக் காட்டுகிறது.

இந்த அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து, அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய உலக பொருளாதார வல்லரசுகளுக்கு அடுத்த படியாக இந்தியா திகழ்வதாக பா.ஜ.க.வினர் பெருமை பொங்கி வருகிறார்கள்.

“நம்மை ஆண்டவர்கள், நமக்குப் பின்னால் இருக்கிறார்கள்” என்று இந்தியா பிரிட்டனை முந்திச் சென்றது குறித்து டுவீட் செய்திருக்கிறார் பா.ஜ.க.வின் தேசிய செய்தித் தொடர்பாளரான சம்பித் பத்ரா.

“காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற 75வது அமுதப் பெருவிழா ஆண்டில், இந்தியா பிரிட்டனை விஞ்சி உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது. இந்த முன்னேற்றம் சாதாரணமான சாதனையல்ல. இதற்காக ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட வேண்டும்” – என்று குஜராத்தின் சூரத் நகரில் நடைபெற்ற கூட்டமொன்றில் பேசினார் மோடி.

மோடி, பா.ஜ.க.வினர் மட்டுமல்ல, அனில் அகர்வால், உதய் கோட்டக், ஆனந்த் மகிந்திரா உள்ளிட்ட இந்திய தரகு முதலாளிகளும் இச்செய்தியை ஒட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.

“பிரிட்டனைப் பின்னுக்குத் தள்ளி ஐந்தாவது பொருளாதாரமாக இந்தியா வளர்ந்தது என்பது நமது இந்தியாவின் வேகமான வளர்ச்சியில் ஒரு மைல்கல். இன்னும் சில ஆண்டுகளில் மூன்றாவது இடத்தில் இருப்போம்” என்று ட்வீட் செய்திருக்கிறார் அனில் அகர்வால்.

***

படிக்க: இந்தியாவைக் காப்பாற்றுவதற்கான போரை தொடங்க வேண்டும் | அருந்ததி ராய் | மணிவேல்

பெருமளவில் அந்நிய முதலீடுகளை ஈர்த்தல், ஏற்றுமதி அதிகரிப்பு, பெரும் பொருளாதார நிலைத்தன்மை (Macro economic stability), தனிநபர் நுகர்வு அதிகரிப்பு ஆகியவற்றில் பிரிட்டனை இந்தியா பின்னுக்குத் தள்ளியுள்ளது. இக்கூறுகளே இந்தியா 5வது பெரும் பொருளாதாரமாக முன்னுக்கு வரக் காரணம் எனக் கூறப்படுகிறது.

கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட உலகப் பொருளாதார வீழ்ச்சி, அதனைத் தொடர்ந்து ரஷ்யா-உக்ரைன் போர் ஏற்படுத்தியுள்ள நெருக்கடி ஆகியவற்றைக் கடந்து இந்தியா இச்சாதனையைப் படைத்துள்ளதாக ஆளும் வர்க்க ஊடகங்கள் சிலிர்கின்றன. பொருளாதாரத்தை மோடி அரசு மிகத் திறமையாக கையாண்டுள்ளதாகவும், இந்த அரசின் பொருளாதார சீர்திருத்தங்களே இந்தியாவை வளர்ச்சியை நோக்கி நெட்டித் தள்ளியுள்ளதாகவும் அவை கூறுகின்றன.

பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி, வங்கிகள் இணைப்பு, பொதுத்துறைகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் தேசிய பணமாக்கல் திட்டம், புதிய திவால் சட்டம், தொழிலாளர் சட்டத் திருத்தம் மற்றும் ரியல் எஸ்டேட் முறைப்படுத்துதல் சட்டம் உள்ளிட்ட பொருளாதார சீரமைப்புகளால் இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்திருப்பதாக ‘மோடினாமிக்ஸ்’ (Modinomics) அறிஞர்கள் கூறுகிறார்கள்.

மேலும், மோடி அரசின் பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்ந்தால், 2014ல் மோடி கூறியதைப் போல 5 டிரில்லியன் பொருளாதார வளர்ச்சி வெகுதூரமில்லை என்றும் அவர்கள் வியக்கிறார்கள்.

ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு உறுப்பினரான ஆஷிமா கோயல், மென்மேலும் பொருளாதாரம் வளர்ச்சியை நோக்கி நகர தனியார்மயக் கொள்கைகளை தீவிரமாக அமலாக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்.

இதே வளர்ச்சி வீதம் தொடர்ந்தால், இன்னும் சில ஆண்டுகளில் ஜப்பானையும், ஜெர்மனியையும் பின்னுக்குத்தள்ளி இந்தியா 3வது இடத்திற்கு முன்னேறும் என்கிறார், நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் அரவிந்த் பனஹாரியா.

***

ஒரு நாட்டின் வளர்ச்சியை எதை வைத்து நாம் தீர்மானிப்பது. அந்நாட்டின் ஆகப் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரம் எந்த அளவிற்கு உயர்ந்துள்ளதோ, அதை வைத்துத்தான் மதிப்பிட முடியும். அதை நீக்கிவிட்டு பார்க்கும் எந்த புள்ளிவிவரங்களும் நம்மை ஏமாற்றுபவையே.

மோடி அரசால் கொண்டுவரப்பட்ட பணமதிப்பழிப்பும், ஜி.எஸ்.டி வரி விதிப்பும் இந்திய வேலைவாய்ப்பில் பெரும்பங்காற்றுகிற சிறுகுறு தொழில்களை பெருமளவில் அழித்துவிட்டது. பல சிறுகுறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. வேலைநாட்களும், தொழிலாளர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டிருக்கின்றன. குற்றுயிரும் குலையுயிருமாக இத்தொழில் நிறுவனங்கள் போராடி வருகின்றன. ஒரு காலத்தில் திருப்பூர் சென்றால் பிழைத்துக் கொள்ளலாம் என்ற நிலைமை ஜி.எஸ்.டி வரி விதிப்பிற்கு பிறகு தலைகீழாக மாறியிருக்கிறது.

கடந்த ஜூன் மாத கணக்கின்படி, புதிதாக 4 மில்லியன் உழைப்புச் சக்தி நாட்டில் உருவாகியிருக்கிறது. ஆனால், ஜூலையில் 397 மில்லியனாக இருந்த வேலைவாய்ப்பு எண்ணிக்கை 2 மில்லியன்கள் குறைந்து 394.6 மில்லியனாக இருக்கிறது. அந்நிய முதலீடுகள் அதிகரித்து தொழில் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது என்று கூறுகிறார்கள். ஆனால் இந்தியாவில் நாளுக்கு நாள் வேலையில்லா திண்டாட்டம் பெருகிவருகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதக் கணக்கீட்டின்படி, இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 8.3 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது. 12 மாதங்களில் இதுவே அதிகபட்சமாகும். குறிப்பாக, 15 முதல் 24 வயதுக்குட்பட்ட இளம் வயதினர் மத்தியில் வேலையில்லா திண்டாட்டம் 34 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது.

வேலையில்லா திண்டாட்டத்திற்கு போட்டியாக பணவீக்கமும், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவும் உயர்ந்திருக்கின்றன. கடந்த ஜூலையில் பணவீக்கம் 7.7 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. இதனால், காய்கறிகளின் விலை 10.90 சதவிகிதமாகவும், பருப்பு வகைகளின் விலை 6.09 சதவிகிதமாகவும், எண்ணெய் மற்றும் கொழுப்பு வகைகளின் விலை 7.52 சதவிகிதமாகவும் அதிகரித்திருக்கிறது. எனவே எண்ணெய், அரிசி, கோதுமை, பருப்புகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விலை பலமடங்கு உயர்ந்திருக்கிறது.

வேலையின்மையும், விலைவாசி உயர்வும் இந்தியாவின் உழைக்கும் மக்களை வறுமைப் படுகுழிக்குள் தள்ளியிருக்கிறது. உலக வறுமை கடிகாரம் (World Poverty Clock) என்ற அமைப்பு ஜூலை மாதம் வெளியிட்ட அறிக்கையின்படி, உலகளவில் அதீத வறுமை நாடான நைஜீரியாவை பின்னுக்குத் தள்ளியிருக்கிறது இந்தியா. 2021-ஆம் ஆண்டின் உலக பட்டினிக் குறியீட்டில் 116 நாடுகளில், இந்தியா 101- வது இடத்தில் இருக்கிறது.

உலக ஏற்றத்தாழ்வு அறிக்கை 2022-ன் படி, உலகளவில் அதீத ஏற்றத்தாழ்வு கொண்ட நாடாக இந்தியா வளர்ச்சியடைந்திருக்கிறது. பெரும் பணக்காரர்களைக் கொண்ட ஏழை நாடு என்று இந்தியாவைக் குறிப்பிடுகிறது இந்த அறிக்கை. இந்திய நாட்டின் வருமானத்தில் 57 சதவிகித மதிப்புள்ள சொத்து வெறும் 10 சதவிகித பணக்காரர்களிடம்  இருக்கிறது என்றும், அதிலும் இந்த சொத்தில் 22 சதவிகித சொத்து மதிப்பை வெறும் 1 சதவிகித பணக்காரர்கள் வைத்திருக்கிறார்கள் என்றும் அந்த அறிக்கை அம்பலப்படுத்தியது.

இந்திய மக்கள் தொகையில் 1 சதவிகிதமான சிறு கும்பல் உல்லாசமாக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்க, 50 சதவிகித மக்களோ தங்கள் வாழ்க்கையை நிலைநிறுத்திக் கொள்ள போராடிக் கொண்டிருக்கின்றனர் என்கிறது மேற்படி அறிக்கை.

அம்பானியின் மனைவி 3 லட்சம் மதிப்புள்ள டீ குடிக்கிற நாட்டில்தான், போதிய ஊட்டச்சத்து கிடைக்காத காரணத்தால், பிறந்த ஒரு ஆண்டிற்குள் ஆயிரத்தில் 20 குழந்தைகள் பலியாகின்றன. ஒரு நாளைக்கு ரூ.1612 கோடிகள் சம்பாதிக்கும் அதானி வாழ்கிற நாட்டில்தான் ஒரு நாளைக்கு ரூ.178 (2022-ன் குறைந்தபட்ச சம்பளம்) சம்பாதிக்கிற கோடிக்கணக்கான மக்கள் வாழ்கின்றனர். நெஞ்சை வாட்டுகிற இந்த அவலநிலையே இந்தியாவின் உண்மை முகம்.

***

படிக்க: இந்தியா: காலநிலை பேரழிவு-வறுமையால் பாதிக்கப்படும் 222 மில்லியன் குழந்தைகள் !

இந்திய உழைக்கும் மக்களைப் பட்டினிக்கும், வேலையில்லா திண்டாட்டத்திற்கும் தள்ளிய மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகள் அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட்டுகளை கொழுத்து பருக்க வைத்துள்ளது. உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் 3 இடங்களுக்குள் போட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறார் அதானி.

சுரங்கங்கள், துறைமுகங்கள், எரிவாயு, அனல் மற்றும் சூரிய மின்சாரம் உற்பத்தி உள்ளிட்டவற்றை அதானிக்குத் தாரை வார்த்துவருகிறது மோடி அரசு. ஏர் இந்தியாவை டாடாவிற்கு கொடுத்திருக்கிறது. பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்-க்கு 4ஜி சேவையைக் கூட வழங்காத மோடி அரசு, முகேஷ் அம்பானிக்கு 5ஜி சேவையை வழங்கி தொலைத் தொடர்பு துறையில் ஏகபோகமாக்கியிருக்கிறது.

மோடியின் வெளிநாட்டு பயணம் என்பதே, அம்பானிக்கும் அதானிக்கும் சர்வதேச அளவில் ‘தொழில் ஏற்பாடு’ செய்துகொடுப்பதாக இருக்கிறது. மோடியின் தலையீட்டால்தான் இலங்கையில் காற்றாலை மற்றும் சூரிய மின்சாரம் தயாரிப்பதற்கான ஒப்பந்தம் அதானி நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டது. இதுகுறித்து புதிய ஜனநாயகம் இதழில் எழுதியிக்கிறோம்.

அதானியின் உள்நாட்டு – வெளிநாட்டு முதலீடுகள் எதையும் தன் சொந்த பணத்தில் செய்யவில்லை, மாறாக பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கியே பல துறைகளிலும் முதலீடு செய்திருக்கிறார். ஆஸ்திரேலியாவில் அதானி வாங்கிய சுரங்கத்திற்கு 7,500 கோடி, பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ கொடுத்திருக்கிறது.

அதானி இதுவரை வைத்துள்ள கடன் மதிப்பு மட்டும் 30 பில்லியன் டாலருக்கும் அதிகம் என்கிறது 2015-ல் வெளிவந்த கடன் நிறுவன (House of Dept) அறிக்கை. அம்பானிக்கும் பொதுத்துறை வங்கிகள் எண்ணற்ற கடன்களை வாரிவழங்கியிருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கிய கடன்களில், 9 இலட்சத்து 92 ஆயிரம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.

மோடியின் பொருளாதாரக் கொள்கைகள் அம்பானி-அதானி வகையறா கார்ப்பரேட் முதலாளிகளை உலக முதலாளிகளோடு போட்டிபோடும் அளவிற்கு பேணி வளர்த்துள்ளது. அதற்காக நாட்டிலுள்ள கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் வாழ்க்கையை நரகத்தில் தள்ளியுள்ளது. ‘பிரிட்டனை பின்னுக்கு தள்ளி இந்தியா வல்லரசாகிவிட்டது’ என்ற செய்திக்கு 99 சதவிகித உழைக்கும் மக்களாகிய நாம் தேச பக்தியால் சிலிர்க்க முடியுமா என்ன, இங்கு தேசம் என்பதே பாசிஸ்டுகளின் பொருளில் அம்பானியும் அதானியும் அல்லவா!


அப்பு

பாகிஸ்தான் பொருளாதார, சூழலியல் நெருக்கடி: மனித குலத்தின் எதிரி ஏகபோக மூலதனம்!

ண்டை நாடான பாகிஸ்தானில் வரலாறு காணாத அளவு கனமழை பெய்து, வெள்ளம் புரண்டோடுகிறது. தெற்காசியாவிலேயே மிக மோசமான வெள்ளம் என்று கூறப்படுகிறது. மொத்த நிலப்பரப்பில் மூன்று ஒரு பங்கு நிலப்பகுதி நீரில் மூழ்கியுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலையானது, காண்போரின் மனதை உலுக்குகிறது. மூன்று வேளை சாப்பாட்டிற்கு வழியில்லாமல், தங்குவதற்கு வீடில்லாமல், தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு முறையான மருத்துவ வசதி இல்லாமல் மக்கள் படும் துன்பங்களை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.

பெருவெள்ளம் மற்றும் கனமழையில் 555 குழந்தைகள் உட்பட 1500-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 12 ஆயிரத்து 860 பேர் படுகாயமடைந்துள்ளனர். வெள்ளம் காரணமாக 5 லட்சத்து 46 ஆயிரத்து 288 பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 1.6 கோடி குழந்தைகள் உட்பட 3.3 கோடி மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 லட்சத்து 98 ஆயிரத்து 407 கால்நடைகள் பலியாகியுள்ளது.

படிக்க : இந்தியா: காலநிலை பேரழிவு-வறுமையால் பாதிக்கப்படும் 222 மில்லியன் குழந்தைகள் !

மேலும் 17 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள், 22 ஆயிரம் பள்ளிகள், 240க்கும் மேற்பட்ட பாலங்கள் மற்றும் 12 ஆயிரத்து 716 கிலோ மீட்டர் சாலைகள் சேதமடைந்துள்ளன. பல ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டரெஸ், “உலகம் முழுவதும் ஏற்பட்ட பல இயற்கைப் பேரிடர்களைப் பார்வையிட்டுள்ளேன். ஆனால் பாகிஸ்தானில் ஏற்பட்ட பாதிப்பைப் போன்று இதுவரை வேறு எங்கும் பார்த்ததில்லை” எனக் கூறியுள்ளார்.

வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளிலிருந்து வெளியேறிய மக்கள், திறந்தவெளிகளில் துணி மற்றும் பிளாஸ்டிக் பைகளால் குடில்களை அமைத்துக்கொண்டு வசிக்கின்றனர். உணவு, குடி தண்ணீர் மற்றும் சுகாதாரப் பொருட்களுக்காக காத்துக் கிடக்க வேண்டிய அவலநிலை. கழிவறைகள் இல்லாத நிலையில் குடியிருப்புகளுக்கு அருகிலேயே மலம்-சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை. இதனால் தொற்று நோய்கள் வேகமாக பரவுகின்றன. சிந்துவில் மட்டும் 1 லட்சத்து 34 ஆயிரம் பேர் வயிற்றுப் போக்காலும், 44 ஆயிரம் பேர் டெங்குவாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளே இல்லை என்ற அவலநிலை நிலவுகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், சிறிய மருத்துவமனைகள் என 1,460 மருத்துவமனைகள் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்படாமல் இருக்கும் மருத்துவமனைகளிலும் மருந்துகள் இல்லை.

கர்ப்பிணிகளின் நிலையோ நரக வேதனையானது. செப்டம்பர் மாதத்தில் மட்டும் 73 ஆயிரம் கர்ப்பிணிகள் குழந்தை பேறுக்காக மருத்துவமனைகளை நாடுவார்கள் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கர்ப்பிணிகள் பலரும் வெள்ளத்தால் மருத்துவமனைக்கு வரமுடியாமல் சாலைகளிலும், வாகனங்களிலும் குழந்தை பெற்றுக்கொள்ளும் கொடுமையான சூழல்.

***

ஏற்கெனவே பணவீக்கம், விலைவாசி உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு ஆகியவற்றின் விளைவாக பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த மக்களை, பெருவெள்ளமானது மிகக் கடுமையாக பாதித்துள்ளது. மக்கள் வாழவே வழியில்லாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். அந்நாட்டு அரசு மக்களை முற்றிலுமாக கைகழுவி விட்டது. 14 மாவட்டங்களில், கடுமையான வெள்ளம் பாதித்த 38 இடங்களில் இருக்கும் மக்கள், தங்களுக்கு அடிப்படை வசதிகளைக் கூட அரசு செய்துதரவில்லை எனக் கூறுகின்றனர். வெள்ள பாதிப்பிற்கு முன் பொருளாதார நெருக்கடி, விலையேற்றம் ஆகியவற்றுக்கு எதிராக போராடிய மக்கள், தற்போது வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அரசை வலியுறுத்தி போராடி வருகின்றனர்.

பாகிஸ்தானில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தின் விளைவாக கடுமையான வெப்ப அலை, பணிப்பாறை உருகுதல், கனமழை, பெருவெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்கள் இயல்புநிலையாகி வருகின்றன. காலநிலை மாற்றத்தால் ஐரோப்பாவில் ஏற்பட்ட பாதிப்புகளைப் பற்றி செப்டம்பர் மாத புதிய ஜனநாயகத்தில் எழுதியிருந்தோம்.

படிக்க : விழிஞ்சம் துறைமுகத்திட்டம்: தீவிரமடையும் அதானிக்கு எதிரான கேரள மீனவ மக்களின் போராட்டம் !

சூழலியல் நெருக்கடி காலட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இப்பேரிடர்கள் அனைத்தும் லாபவெறிக்காக இயற்கையை வரன்முறையின்றி சுரண்டும் முதலாளித்துவ ஏகாதிபத்திய உற்பத்தி முறையின் விளைவே. ஏகாதிபத்தியத்திற்கும் உழைக்கும் மக்களுக்குமான முரண்பாடு தீவிரமடைந்ததன் விளைவாக, இன்று மொத்த மனிதகுலத்திற்கும் இயற்கைக்குமான முரண்பாடு முன்னிலைக்கு வந்துகொண்டிருக்கிறது. அதன் ஒருபகுதியாகத்தான், பாகிஸ்தான் மக்கள் பெருவெள்ளத்தை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் மறுபக்கம், இழவு வீட்டில் பாட்டிசைப்பதைப் போல, பாகிஸ்தான் அரசு கிரிக்கெட் விளையாட்டை நடத்திக் கொண்டிருக்கிறது. ஏகபோக மூலதனத்திற்கு சேவை செய்கிற பாகிஸ்தானின் அடிமை அரசு, நெருக்கடி மிகுந்த சூழலிலும் மக்களை கை கழுவுகிறது. இனியும் அதைச் சுமந்துகொண்டு பாகிஸ்தான் மக்கள் ஏன் வாழவேண்டும். உழைக்கும் மக்கள் அரசியல் அதிகாரத்தை தம் கையிலெடுக்கப் போராடுவதே, விடிவை நோக்கிய பாதையாகும்.

சிவராமன்

தமிழகத்தில் காலூன்ற துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி | தோழர் அமிர்தா வீடியோ

ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி.யின் கருத்துக்கள் வெறும் இந்துராஷ்டிரத்தை அமைப்பது மட்டுமல்ல… கார்ப்பரேட் நலன்களும் அதனுள் அடங்கி இருக்கிறது. தொழிலாளர் உரிமைக்காக போராடினால் அவர்களை ஒடுக்குகிறார்கள். குஜராத்தில் முதலாளிகள் தொழிற்சாலைகளை தொடங்கலாம் ஏன் என்றால் அங்கு தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களை தொடங்க முடியாது என கட்டுப்பாடு போட்டுள்ளார்கள். தொழிலாளர் உரிமைகள் நசுக்கப்பட்டு 44 சட்டங்கள் 4 தொகுப்புகளாக குறைக்கப்படுகிறது. இந்த 44 சட்டங்கள் என்பது பல்வேறு ஆண்டுகளில் போராட்டம் நடத்தியதன் மூலமாக தொழிலாளர்கள் பெற்ற உரிமைகள் அது.

ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி.யின் நோக்கம் மக்களுக்கு அறியப்பட்ட பிரபலமானவர்களை தனக்கானவர்கள் என்று மாற்ற முயற்சிக்கிறது. குறிப்பாக இளையராஜா போன்றவர்களை பதவி கொடுப்பதன் மூலமாகவோ, ஏதோ ஒரு வகையிலோ அவர்களை தன்வயப்படுத்தி கொள்வதன் மூலம் ஆட்சியதிகாரத்தை பிடிக்க முயல்கிறது சங் பரிவாரம்.

தமிழகத்தில் காலூன்ற துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி.யையும், கார்ப்பரேட் நல திமுக அரசையும் தமிழ்க்குரல் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அம்பலப்படுத்துகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொருளாளர் தோழர் அமிர்தா அவர்கள்….

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | இளங் கம்யூனிஸ்டுகள் சங்கம்

ளங் கம்யூனிஸ்டுகள் துணிவுமிக்க முன்னணி இளைஞர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். மக்கள் நலனுக்காக, ஆபத்து நிறைந்த வேலைக்கு அஞ்சா நெஞ்சர்களான மனிதர்களை அனுப்புவது கட்சிக்கு அவசியம் என்னும்போது முன்னே வருபவர்கள் யார்? எப்போதுமே இளங் கம்யூனிஸ்டுகள்தாம்.

புதிதாகச் சாலைகள் போட வேண்டும். இந்த அழைப்பை முதன் முதல் ஏற்பவர்கள் யார்? இளங்கம்யூனிஸ்டுகள். போர்முனை செல்லவும் இளங் கம்யூனிஸ்டுகள் தயங்குவது இல்லை.

உள்நாட்டுப் போரில் இளங் கம்யூனிஸ்டுகள் ஆயிரமாயிரம் அருஞ்செயல்கள் புரிந்தார்கள். சைபீரியாவிலும் உக்ரேய்னாவிலும் கிரைமியாவிலும் வோல்காப் பிரதேசத்திலும் கூர்ஸ்க் நகரின் அருகிலும் பெத்ரோகிராதின் நகர்ப்புறங்களிலும் புல்லும், பூச்செடிகளும் மண்டிய பல்லாயிரம் இளங் கம்யூனிஸ்ட் கல்லறைகள் உள்ளன. ஆயிரக்கணக்கான இளங் கம்யூனிஸ்ட் வீரர்களின் கல்லறைகள்….

லெனின் பென்சிலை வைத்தார். மேஜை மேலிருந்த காகிதம் நுண்ணிய வீச்சுள்ள வரிகளால் நிறைந்துவிட்டது. லெனின் தமது பேச்சின் திட்டத்தை அதில் குறித்திருந்தார்.

அன்று இளங் கம்யூனிஸ்டுகள் சங்கத்தின் மூன்றாவது காங்கிரஸில் அவர் பேசுவதாக இருந்தார். ருஷ்ய இளங் கம்யூனிஸ்டுகள் சங்கத்துக்கு இரண்டே வயதுதான் ஆகியிருந்தது. இளங் கம்யூனிஸ்டுகளைப் பற்றி எண்ண லெனினுக்கு இன்பம் உண்டாயிற்று. உற்சாகிகள், விடாப்பிடி உள்ளவர்கள்! தொழிலாளர்கள், ஏழைக் குடியானவர்களின் மக்கள். “நாங்கள் புரட்சி செய்தோம். ஆனால் கம்யூனிஸச் சமூகத்தைத் தேவையான விதத்தில் அமைத்து முடிக்க எங்களுக்கு வாய்ப்பது சந்தேகமே. இளந் தலைமுறையினர்தாம் அதைக் கட்டி முடிப்பார்கள்.” – இவ்வாறு எண்ணமிட்டார் லெனின்.

படிக்க : நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | தொழிலாளர்கள் மற்றும் படைவீரர்கள் பிரதிநிதிகளின் சோவியத்துகள் | தோழர் ஸ்டாலின்

இதற்குள் இளங் கம்யூனிஸ்ட் பிரதிநிதிகள் காங்கிரஸ் நடக்கும் இடத்தில் கூடினார்கள். தன்னார்வத் தொண்டில் ஈடுபட்டுவிட்டு நேரே அங்கே போனார்கள் அவர்கள். காலை முழுவதும் ரயில் நிலையங்களில் சரக்கு வண்டிகளிலிருந்து சாமான்களை இறக்கினார்கள், விறகைக் கிட்டங்கிகளில் அடுக்கி வைத்தார்கள், வீதிகளைத் துப்புரவு செய்தார்கள். மாஸ்கோ நகரை அழகு படுத்தினார்கள்.

1920 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந் தேதி குளிராக இருந்தது. வானம் மப்புப் போட்டிருந்தது. திடீரென காற்று வீசிற்று. மஞ்சள் பழுப்புகள் கிளைகளிலிருந்து படலம் படலமாக உதிர்ந்து காற்றில் சுழன்று சலசலக்கும் மழைபோலத் தரையில் விழுந்தன.

காலையின் குளுமையும், சலசலக்கும் இலைகளும், கைகள் காய்த்துப் போகும்படி செய்த ஒருமித்த வேலையும் இளங் கம்யூனிஸ்டுகளுக்கு மகிழ்வு ஊட்டியது. எல்லாவற்றையும் விட, இப்போது காங்கிரஸில் லெனின் பேசுவார் என்பது அவர்களுக்கு உவகை அளித்தது.

மாலயா திமீத்ரவ்கா வீதியில் 6 ஆம் நம்பர் வீட்டில் காங்கிரஸ் நடப்பதாக இருந்தது. இளங் கம்யூனிஸ்ட் பிரதிநிதிகள் ஓட்டமும் நடையுமாக அங்கே போய்ச் சேர்ந்தார்கள். இப்போது இந்தக் கட்டிடத்தில் லெனின் இளங் கம்யூனிஸ்டுகள் சங்க நாடக மன்றம் உள்ளது. அப்போது நாடக மன்றம் இருக்கவில்லை. அரங்கே இருக்கவில்லை. அரங்குக்குப் பதில் திரை அற்ற, வண்ணம் பூசாத மேடை மட்டுமே இருந்தது. மேடை மேல் நீண்ட மேஜையும் பேச்சாளர் பீடமும் அமைந்திருந்தன. சிவப்புத் துணிகளில் போஸ்டர்களும் கோஷங்களும் எழுதப்பட்டிருந்தன.

ஒரு போஸ்டரில் செம்படைவீரன் ஒருவன் விரலால் சுட்டியவாறு, ”நீ தன்னார்வத் தொண்டனாகப் படையில் சேர்ந்து விட்டாயா?” என்று கேட்பதுபோலப் படம் தீட்டப்பட்டிருந்தது.

பல இளங் கம்யூனிஸ்டுகள் போர்முனையிலிருந்து நேரே வந்திருந்தார்கள். பல்வேறு நகரங்களிலும் கிராமங்களிலுமிருந்து வந்திருந்த இந்த இளங் கம்யூனிஸ்டுகள் பள்ளி மாணவர்கள் அல்ல. சிலருக்கு எழுதப் படிக்கத் தெரியும், சிலருக்குத் தெரியாது. சிலரோ புத்தகத்தைத் தொட்டுக்கூடப் பார்த்தது கிடையாது. ஆனால் போர்முனைகளில் புரட்சி விரோதிகளின் கும்பல்களை இவர்கள் தயவு தாட்சணியம் இன்றித் தாக்கி நொறுக்கினார்கள். குலாக்குகள் பதுக்கி வைத்திருந்த தானியத்தை அஞ்சாமல் ஜப்தி செய்தார்கள் சோவியத் ஆட்சிக்காக எந்த ஆபத்தையும் மேற்கொள்ளத் தயாராய் இருந்தார்கள்.

இளங் கம்யூனிஸ்டுகளின் இதயங்கள் கிளர்ச்சிப் பெருக்கால் அடித்துக் கொண்டன. இதோ லெனின் வருவார். அவர் பேசசை கேட்கலாம்!

இராணுவ மேல்கோட்டுகளும் தோல் கோட்டுகளும் அணிந்து, தோளோடு தோள் இடிக்கும்படி நெருக்கமாகப் பெஞ்சுகளில் அமர்ந்து லெனின் வரவை ஆவலோடு எதிர்பார்த்திருந்தார்கள் அவர்கள். ஸ்வெர்திலோவ் அணிந்தது போன்ற கறுப்புத் தோல் கோட்டு அணிவது அந்தக் காலத்தில் இளங் கம்யூனிஸ்டுகளும் மிகவும் பிடித்திருந்தது. இராணுவ மேல்கோட்டும் – வியர்வையும் வெடி மருந்தும் கலந்த நெடி வீசும் மேல்கோட்டும் – செந்நட்சத்திரம் பொறித்த தொப்பியும்கூட நல்ல உடைதான்.

லெனின் என்ன சொல்லப் போகிறார் என்று ஊகித்தார்கள் பிரதிநிதிகள். போரைப் பற்றிப் பேசுவார் என்று எதிர்பார்த்தார்கள். போருக்கு, வீரச் செயல்களுக்கு, அருஞ்செயல்கள் ஆற்றுவதற்கு அழைப்பார் என்று நினைத்தார்கள். செஞ்சேனை புரட்சி விரோதி வெண்படையினரை விரட்டியடித்துவிட்டது, ஆயினும் உள்நாட்டுப் போர் இன்னும் முடியவில்லை.

”சோவியத் ஆட்சியைக் காத்திடவே”

என்ற பாட்டு அரங்கின் ஒரு மூலையிலிருந்து தொடங்கியது. பின்பு அரங்கமே பாட்டை எதிரொலித்தது.

”துணிவுடன் சென்றே போரிடுவோம்.
ஆவியும் உடலும் நல்கிடுவோம்
ஆட்சி இதை நிலைநாட்டிடவே!”

பின்பு அரங்கில் அமைதி நிலவியது. வழக்கமாகக் கூட்டங்களில் நடப்பது போலவே தலைமைக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. தலைமைக் குழுவுக்கான மேஜைமேல் சிவப்புத் துணி விரிக்கப்பட்டிருந்தது. தோழர்கள் இடங்களில் அமர்ந்தார்கள். மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவருடைய படங்களும் சுவற்றில் தொங்கின. இரு பெரியோரும் இளங் கம்யூனிஸ்டுகளை நோக்கினார்கள்.

“லெனின்!” என்ற முழக்கம் திடீரென்று எழுந்தது.

இளங் கம்யூனிஸ்டுகள் துள்ளி எழுந்திருந்தார்கள், கைகளைத் தட்டினார்கள். லெனின் மேல் இளங் கம்யூனிஸ்டுகளுக்கு “அளவில்லாத அன்பு, தன்னலமற்ற ஈடுபாடு.

கறுப்பு வெல்வெட் காலர் வைத்த மேல்கோட்டைக் கழற்றி நாற்காலி மேல் ஒழுங்காக மடித்துப் போட்டார் லெனின். தலைமைக் குழு தோழர்களுடன் கை குலுக்கி முகமன் கூறினார். அவருடைய ஒவ்வொரு கைகையும் புன்னகையும், அவர் செய்தவையும், அவற்றைச் செய்த தோரணையும், அவருடைஅ நடத்தை முழுவதுமே இளங் கம்யூனிஸ்டுகளுக்குப் பிடித்திருந்தது. அவர்களுக்கு அவர் நல்லவராக, அருமையானவராக, இனியவராகத் தோன்றினார். உள்ளக் கிளர்ச்சியாலும் அடக்க முடியாத மகிழ்ச்சியாலும் உற்சாகம் ஊற்றெடுக்க இந்த இளங் கம்யூனிஸ்டுகள் பலருடைய விழிகளில் கண்ணீர் துளிர்த்தது.

லெனின் மேடை விளிம்புக்கு வந்து, உள்கோட்டுப் பையிலிருந்து பைக் கடிகாரத்தை எடுத்துப் பார்த்தார். கை தட்டலை நிறுத்துங்கள், வேலை தொடங்குவோம் என்று சொல்வது போல் இருந்தது அந்தச் செய்கை.

இதனால் இளங் கம்யூனிஸ்டுகளின் மதிப்பில் அவர் இன்னும் உயர்ந்துவிட்டார்.

”நண்பர்களே, ஒரு நிமிடங்கூடத் தாமதிக்காமல் ஒருவர் பாக்கியின்றி எல்லோரும் போர்முனைக்குப் போங்கள்!” என்று அவர் சொல்லியிருந்தால் அவர்கள் எல்லோருமே மறு பேச்சின்றிப் போர்முனைக்குப் போயிருப்பார்கள்.

லெனின் சொன்னதோ வேறு. அதைக் கேட்டு இளங் கம்யூனிஸ்டுகள் முதலில் திகைத்தார்கள். வியப்பும் குழப்பமும் அடைந்தார்கள். ஆரம்பத்தில் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

லெனின் நிலைத்து நிற்காமல் மேடை ஓரமாக நடந்தவாறே பேசினார். தலைமைக் குழுவினரில் பெரியவர்கள் நாற்காலிகளில் உட்கார்ந்திருந்தார்கள். நாற்காலிகள் போதவில்லை. தலைமைக் குழுவைச் சேர்ந்த இளங் கம்யூனிஸ்டுகள் வெகு நேரம் யோசனை செய்யாமல் மேடைத் தரையிலேயே உட்கார்ந்து விட்டார்கள். லெனின் அவர்களுக்கு நடுவே ஜாக்கிரதையாக அடிவைத்து நடந்தார். நடந்தபடியே பேசினார்.

அவர் என்ன சொன்னார் தெரியுமா? தற்போது இளங் கம்யூனிஸ்டுகளின் கடமை கற்றுக் கொள்வதே என்றார்.

படிக்க : நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | லெனின் : பாட்டாளி வர்க்கப் புரட்சியின் தலைவர் | அ.லுனச்சார்ஸ்க்கிய்

இளங் கம்யூனிஸ்டுகள் வியந்தார்கள். ஆர்வத்துடன் உற்றுக் கேட்கும் இளைஞர்களின் முகங்களில் ஆச்சரியமும் குழப்பமும் தென்பட்டதை லெனின் கவனித்தார். தமது கருத்தை முடிந்தவரை புரியும் விதத்தில் விளக்க அவர் முயன்றார். விரைவில் நாம் உள்நாட்டுப் போரை முடித்து விடுவோம். எதிரிகளை விரட்டி விடுவோம். அப்புறம்? கட்டுமானம் தொடங்க வேண்டும். தொழிற் சாலைகளும் ஆலைகளும், டிராக்டர்களும், விமானங்களும், இயந்திரங்களும் நிறுவ வேண்டும். நாட்டை மின்சார மயம் ஆக்க வேண்டும். மின்சாரம் என்பது என்ன, அறிவீர்களா, இளங் கம்யூனிஸ்ட் தோழர்களே?

அறிய வேண்டும். நிறைய அறிய வேண்டும்!

படிப்பறிவு இல்லாமல் கம்யூனிஸச் சமுதாயத்தைக் கட்டி அமைப்பது நடவாது என்று இளங் கம்யூனிஸ்டுகளுக்கு விவரமாகவும், தெளிவாகவும் எடுத்துரைத்தார் லெனின்.

உழைக்க வேண்டும். அறிய வேண்டும். “தொழிலாளர்களுடனும், குடியானவர்களுடனும் சேர்ந்து உழைப்பதன் மூலமே ஒருவன் உண்மைக் கம்யூனிஸ்ட் ஆக முடியும்.” கம்யூனிஸத்தைக் கற்றுக் கொள்வது என்றால், பழைய சமூக அமைப்புக்கு எதிராகப் பாட்டாளி வர்க்கம் நடத்தும் போராட்டத்துடன் வாழ்க்கையின் ஒவ்வொரு செயலையும் இணைத்துக் கொள்வதும் புதிய, கம்யூனிஸச் சமுதாயத்தைக் கட்டி அமைப்பதுமே என்றார் லெனின்.

(லெனினுக்கு மரணமில்லை எனும் நூலிலிருந்து….)

புதிய மோட்டார் வாகன சட்டம்: ‘சட்டப்படியான’ வழிப்பறி! | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி!

28.10.2022

புதிய மோட்டார் வாகன சட்டம்: ‘சட்டப்படியான’ வழிப்பறி!

பத்திரிகை செய்தி!

ன்றிய அரசின் திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி, புதிய அபராத கட்டணங்களை வசூலிப்பதற்கான அரசாணையை தமிழக அரசு கடந்த 19 ஆம் தேதி வெளியிட்டது.

அதில் முதல் சாலை விதிமீறலுக்கான அபராத கட்டணம், அதே விதிமீறலை மீண்டும் செய்தால் அதற்கு கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெல்மெட் அணியாதவர்களுக்கு ரூ.100-லிருந்து ரூ.1000 அபராதம், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதற்கு ரூ.10,000 அபராதம் என அறிவித்துள்ளது. லைசென்சு இல்லாமல் வாகனங்களை ஓட்டினால் ரூ.500-லிருந்து ரூ.5000-ஆகவும், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தினால் ரூ.100-லிருந்து ரூ.500-ஆகவும் அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டினால் ஆயிரம் அபராதமும், இரண்டாவது அதேபோல் ஈடுபடுவோருக்கும் ரூ.10,000 அபராதமும் விதிக்கப்படும். மேலும் ஹெல்மெட் மட்டும் சீருடை அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ.1000, இராண்டாவது முறை ரூ.1500, மற்றவர்களை அச்சுறுத்தும் வகையில் பைக் ரேஸில் ஈடுபடுவதற்கு இரண்டாவது முறை ரூ.10,000-யும், சரக்குகளை ஏற்றிச் செல்வதற்கு இரண்டாவது முறை ரூ.1500-யும், மதுபோதையில் வாகனங்களை ஓட்டி செல்பவர்களுக்கும், பின்னால் அமர்ந்து செல்வோர்களுக்கும் தலா ரூ.10,000 அபராதம் விதிப்பு அமலுக்கு வந்ததுள்ளது.

படிக்க : கோவை கார் எரிவாயு உருளை வெடிப்பு வழக்கு | மக்கள் அதிகாரம் கண்டன அறிக்கை!

சென்னையில் ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளிடம் ரூ.1000 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறியதாக மக்கள் மீது நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பூந்தமல்லியில் இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு வந்த நபர் ஹெல்மெட் அணியவில்லை. அவரிடம் பணமில்லாத காரணத்தால் லிப்ட் கொடுத்த நபரிடம் ரூ.1000 வசூல் செய்துள்ளது போக்குவரத்து காவல்துறை. பின்னால் உட்கார்ந்து வரும் நபருக்கும் அபராதம் விதிப்பது அநியாயமானதாகும்.

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை ஒட்டி மூன்று நாட்களில் 708 கோடிக்கு டாஸ்மாக்கில் சாராயம் விற்பனை. ஆனால் குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் 10,000 அபராதம். காலையில் 6 மணிக்கே பாரை திறந்து வைத்து சாராயம் விற்க அனுமதிக்கிறது அரசு. டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்துவிட்டு தெருமுனையில் நின்று அபராதம் விதிப்பது கேலிக்கூத்தாகும்.

2019 ஆம் ஆண்டில் ஒன்றிய அரசு கொண்டவந்த புதிய மோட்டார் வாகன சட்டத்தை அப்போது எதிர்த்த திமுக, இன்று புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்த அரசாணை பிறப்பித்திருக்கிறது. ஆட்சிக்கு வருவதற்குமுன் மக்கள் நலனில் இருந்து பேசுவதும், ஆட்சிக்கு வந்தபின்பு மக்கள் நலனை அடகு வைப்பதும் அதிகாரத்தில் இருப்பவர்களின் வாடிக்கையாகிவிட்டது.

இப்படிப்பட்ட கடுமையான சட்டங்கள், மேலும் மேலும் போக்குவரத்து அதிகாரிகளின் கையில் அதிகாரத்தை குவித்து மக்களை கொள்ளை அடிக்கவே பயன்படும். ஏற்கனவே மக்களைவிட தங்களை மேலாக கருதி கொண்டு அதிகார திமிரோடு நடந்தும் கொள்ளும் அதிகாரிகளுக்கு இது ஒரு கூடுதல் வாய்ப்பாகவே அமையும்.

ஏற்கனவே இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு வேலை இழந்து கொஞ்சம் கொஞ்சமாக தேறிவரும் தமிழக மக்களுக்கு பேரிடியாய் இந்த சட்டம் வந்திருக்கிறது. பொது மக்களை பாதிக்கும் அடக்குமுறையை ஏவும், புதிய மோட்டார் வாகன சட்டத்தை தமிழக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டுமென மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தோழமையுடன்
தோழர் அமிர்தா,
மாநிலப் பொருளாளர்,
மக்கள் அதிகாரம்.
தமிழ்நாடு – புதுவை.
தொடர்புக்கு ;- 99623 66321.

கோவை கார் எரிவாயு உருளை வெடிப்பு வழக்கு | மக்கள் அதிகாரம் கண்டன அறிக்கை!

27.10.2022

கோவை கார் எரிவாயு உருளை வெடிப்பு வழக்கு!
தமிழ்நாடு அரசே! NIA பரிந்துரையை திரும்பப் பெறு!

அசம்பாவிதங்களை பயன்படுத்தி கோவையை மதக்கலவர பூமியாக்க துடிக்கும் அண்ணாமலை உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி.யினரை கைது செய்!

கண்டன அறிக்கை!

கடந்த 23 ஆம் தேதி அதிகாலை கோவை – உக்கடம், கோட்டைமேடு பகுதியில் கார் ஒன்றில் எரிவாயு உருளை வெடித்ததில், அதில் பயணித்த ஜமேஷ் முபின் என்ற இளைஞர் பலியானார்.

இதுதொடர்பான ஜமேஷ் முபின் வீட்டில் வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படும் மூலப் பொருட்கள் இருந்ததாகவும், அதற்கு உதவிய அவருடைய நண்பர்கள் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டதாகவும் போலீஸ் தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பான முழுவிசாரணை முடியும் முன் எந்த ஒரு முழுமையான கருத்தையும் சொல்ல முடியாது என்ற சூழ்நிலை உள்ளது. ஏனெனில், உண்மை முழுவதும் தெரிவதற்கு முன் தெரிவிக்கப்படும் எந்த ஒரு கருத்தும் திட்டமிட்டு மொத்த முஸ்லிம் மக்களையும் குற்றவாளியாக்குவதற்கே பயன்படும்.

படிக்க : ஒடிசா : சட்டவிரோதமாக நிலத்தை கையகப்படுத்தும் டால்மியா! பழங்குடி மக்கள் போராட்டம்!

தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கட்சிகள் பொறுப்புடன் நடந்து கொண்டிருக்கும் இச்சூழலில், இச்சம்பவத்தை பயன்படுத்திக் கொண்டு தமிழ்நாட்டில் மதக் கலவரத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்துவதற்கு இந்துமதவெறி பாசிச சக்திகள் தொடர்ச்சியாக –வழக்கம்போல- முயற்சி செய்கின்றன.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு பேட்டியளித்த பி.ஜே.பி.யின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டு போலீசின் உளவுப் பிரிவில் குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இருப்பதால் இவ்வழக்கு சரியாக நடக்காது என்றும், தமிழ்நாடு அரசுக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும் இவ்வழக்கு தொடர்பான புலன் விசாரணையில் போலீசுக்கு தெரியாத பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார்.

பில்கிஸ் பானுவை பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்ட விவகாரம் முதல் பெட்ரோல், எரிபொருள் சிலிண்டர் விலை உயர்வு, கள்ளக்குறிச்சி விவகாரம் வரை வாயை மூடிக்கொண்டு இருந்த அண்ணாமலை தற்போது சாக்குக் கிடைத்துவிட்டது என்று தமிழ்நாட்டில் மதக்கலவரம் ஏற்படுத்துவதற்கு அனைத்து தகிடுதத்தங்களையும் செய்து வருகிறார்.

வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் இவ்வழக்கை NIA-வுக்கு மாற்ற வேண்டும் என்று தொடர்ச்சியாக கூறிவந்தனர்.

இந்த நிலையில் நேற்றைய தினம்(ஆக.26) போலீஸ் உயரதிகாரிகள் மற்றும் தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட கூட்டத்தை கூட்டிய தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இவ்வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்ற பரிந்துரை செய்திருப்பதாகவும், இஸ்லாமிய மக்கள் அடர்த்தியாக வாழக்கூடிய குறிப்பிட்ட பகுதிகளில் மேலும் 3 போலீஸ் நிலையங்களை அமைக்கவும் தமிழ்நாட்டில் இதுபோன்ற அசம்பாவிதங்களை தவிர்க்க தமிழ்நாடு போலீசில் சிறப்புப்படை அமைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்துமதவெறி பாசிஸ்டு அமித்ஷாவின் கூலிப்படையாக செயல்படும் தேசிய புலனாய்வு முகமை, தான் விசாரணை செய்த பல்வேறு வழக்குகளின் மூலம் இஸ்லாமியர்களுக்கும் இஸ்லாமிய சமூகத்துக்கும் எதிராக செயல்பட்டு இருப்பதை நாம் அறிவோம். அப்படிப்பட்ட ஒரு அமைப்பிடம் இந்த வழக்கை அளித்தால் நேர்மையான முறையில் எந்த வகையிலும் விசாரணை நடத்துவதற்கான வாய்ப்பு இல்லை என்பதை மக்கள் அதிகாரம் தெரிவித்துக் கொள்கிறது.

படிக்க : கிருஷ்ணகிரி மாவட்டம் KATERRA  நிறுவனம் – தொழிலாளிகள் மீதான  கொடூரச் சுரண்டல் – தொழிலாளிகள் உள்ளிருப்புப் போராட்டம்!

இஸ்லாமிய மக்கள் அடர்த்தியாக வாழக்கூடிய பகுதிகளில் மூன்று போலீசு நிலையங்களை அமைப்பது, சிறப்பு காவல் படை அமைப்பதன் மூலமாக மட்டுமே பயங்கரவாத செயல்களை ஒழித்துவிட முடியாது. மேற்கண்ட நடவடிக்கைகள் மேலும் சிறுபான்மை மக்களை குற்றவாளியாக சித்தரிப்பதிலேயே கொண்டுபோய் முடியும்.

ஆகவே, தமிழ்நாட்டு முதலமைச்சர் இவ்வழக்கு தொடர்பாக நேற்றைய தினம்(ஆக.26) அறிவித்த நடவடிக்கைகளை திரும்பப்பெற வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.

மேலும் இவ்வழக்கை தமிழ்நாடு போலீஸ் விசாரிப்பதுடன் பிரச்சினையை பயன்படுத்தி தமிழ்நாட்டில் மதக்கலவரம் நடத்திடவும் துணிந்துள்ள அண்ணாமலை உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி பாசிஸ்டுகளை கைதுசெய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் மேலும் பி.ஜே.பி அறிவித்துள்ள பந்த்-ஐ மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்,
தோழர் சி.வெற்றிவேல்செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
தொடர்புக்கு ;- 99623 66321.

அழுகி நாறுது முதலாளித்துவம்! பிரிட்டன் இன்னொரு சாட்சி! | புஜதொமு

அழுகி நாறுது முதலாளித்துவம்! பிரிட்டன் இன்னொரு சாட்சி!

  • முதலாளித்துவம் கொழுத்து, “சூரியன் மறையாத சாம்ராஜ்ஜியம்” என பீற்றப்பட்ட பிரிட்டன் நாறிக் கொண்டிருக்கிறது.!
  • பொருளாதார நெருக்கடியால் ஒரே ஆண்டில் 3 பிரதமர்கள் மாற்றம்!
  • தற்போதைய பிரதமர் ரிசி சுனக்-க்கு முந்தைய பிரதமர் லிஸ் ட்ரஸ் ஆறே வாரங்களில் பதவியை விட்டு ஓடிப்போனார்!
  • இனி வரும் நாட்களில் மேலும் அழுகி நாறும்!
    இந்தியாவும் தப்ப முடியாது.

நன்றி : புதிய தொழிலாளி

கிருஷ்ணகிரி மாவட்டம் KATERRA  நிறுவனம் – தொழிலாளிகள் மீதான  கொடூரச் சுரண்டல் – தொழிலாளிகள் உள்ளிருப்புப் போராட்டம்!

கிருஷ்ணகிரியில் இருந்து ஒசூர் செல்லும் வழியில் சில கிலோமீட்டர்கள் தொலைவில் நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ளது குருபரபள்ளி எனும் பகுதி. இங்கு விநாயகபுரம் கிராமத்திற்கு அருகில்  குன்றுகள் சூழ்ந்த பகுதியில் அமைந்துள்ளது KATERRA எனும் தொழிற்சாலை. ரெடிமேட் வீடு கட்டுவதற்கான கட்டுமானப் பொருட்களை உற்பத்தி செய்யும் கம்பெனி இது. 600 க்கும் மேற்பட்டோர் இத்தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றனர். இதன் அருகில் உள்ள இன்னொரு கிராமம் கக்கன்புரம்.

அக்.19, 20, 21, 22 ஆகிய நான்கு நாட்களும் இத்தொழிற்சாலையில் பணிபுரியும் நிரந்தரத் தொழிலாளிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த மூன்று மாதமாக நிரந்தரத் தொழிலாளிகளுக்கு ஊதியம் தரப்படவில்லை. இதைத் தர வலியுறுத்தித்தான் தொழிலாளிகள் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

நிரந்தரத் தொழிலாளிக்கே இந்தக் கதியென்றால், மற்றவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. ஏன் இந்த அளவுக்கு நிலைமை மோசமானது என்பதைப் பற்றிப் புரிந்து கொள்ள இத்தொழிற்சாலை மற்றும் கக்கன்புரம் கிராமப் பகுதியின் கடந்தகாலத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

கிருஷ்ணகிரியில் உள்ள கே.ஆர்.பி அணை கட்டப்பட்டபோது அணை இருக்கும் இடத்திலிருந்து வெளியேற்றப்பட்ட உழைக்கும் மக்கள் தலா 3 ஏக்கர் விவசாய நிலம் கொடுத்து தற்போது வசிக்கும் கக்கன்புரத்தில் குடியமர்த்தப்பட்டனர். அப்போது காமராசர் ஆட்சியில் அமைச்சராக இருந்த கக்கன் இதனைத் தொடங்கி வைத்தார். அதனால் இப்பெயர் பெற்றது. அறுபது வருடங்களாக அந்நிலங்களில் விவசாயம் செய்தும், ஆடு மாடுகளை வளர்த்தும் அந்நிலத்தை நம்பி அப்பகுதி மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர்.

படிக்க : ஒடிசா : சட்டவிரோதமாக நிலத்தை கையகப்படுத்தும் டால்மியா! பழங்குடி மக்கள் போராட்டம்!

தனியார்மயக் கொள்கைகள் உழைக்கும் மக்கள் வாழ்க்கையை அன்றாடம் பிய்த்து எறிந்து கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் மக்களின் வறுமையை, நெருக்கடியை சாதகமாக்கிக் கொண்டு ரியல் எஸ்டேட் மாபியாக்கள் உழைக்கும் மக்களின் நிலங்களை ஏமாற்றியும், அதிகார வர்க்கத்தின் துணையோடும் அபகரித்து வருகின்றனர் என்பது நாம் அறிந்த ஒன்று.

அப்படித்தான் கக்கன்புரம் உழைக்கும்மக்களின் நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு அவர்களின் நிலங்களும் குறைவான விலைக்கு பறிக்கப்பட்டுள்ளது. அக்பர்பாய் எனும் ரியல்எஸ்டேட் புரோக்கர் ஏக்கர் ரூ.1.75 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை விலைகொடுத்து அப்பகுதி மக்களிடம் நிலம் வாங்கியுள்ளார். அதன்பிறகு ஃபைசல் என்னும் கேரள முதலாளியின் KEF INFRA எனும் கட்டுமானத் தொழில் நிறுவனத்திற்கு ஏக்கர் ரூ.36 லட்சம் என்று விற்றுள்ளார். இதில் முக்கியமான விசயம் என்னவென்றால் முன்புறம் உள்ளவர்களின் நிலங்களை முதலில் வாங்கி, பின்புறம் உள்ளவர்களின் நிலங்களின் பாதையை மறித்துள்ளனர். வேறுவழியின்றி பின்புறம் உள்ளவர்களும் தரவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். நிலத்தை சார்ந்து சுயமரியாதையோடு வாழ்ந்த கக்கன்புரம் மக்களின் வாழ்க்கை முதலாளிகளின் கொடூர சுரண்டலுக்காக சூறையாடப்பட்டது.   2015 ல் இருந்து KEF INFRA நிறுவனம் இப்பகுதியில் செயல்பட்டு வந்துள்ளது.

நிலங்களை விற்ற மக்களுக்கு KEF INFRA நிறுவனத்தில் குறிப்பிட்ட அளவில் நிரந்தரப்பணி கொடுத்துள்ளனர். ஆனால் வாக்குறுதி அடிப்படையில் எல்லோருக்கும் நிரந்தரப் பணி கொடுக்கப்படவில்லை. காண்ட்ராக்ட் தொழிலாளிக்கு ஆரம்ப ஊதியம் ரூ.13,000, நிரந்தர தொழிலாளிக்கு ரூ.15,000, 6 மாதத்தில் இன்க்ரீமெண்ட் ரூ.750, போனஸ் ரூ.7000 என கொடுக்கப்பட்டுள்ளது. அப்பொழுது 1500 பேர் வரை நிரந்தரமாக பணியாற்றியுள்ளனர். அதுபோக ஆயிரக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளிகள் பணியாற்றி வந்துள்ளனர்.

கக்கன்புரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கான ஆசிரியர் சம்பளம்,  பராமரிப்பு செலவை KEP INFRA நிறுவனம் ஏற்றுக் கொண்டு பராமரித்து வந்துள்ளது. KEP INFRA நிறுவனம் தங்களுக்கு ஓரளவு சலுகைகள் கொடுத்ததாகவும், பெரிய அளவில் பிரச்சினைகள் இல்லை எனவும் தொழிலாளிகள் கூறுகின்றனர். தொழிலாளிகளின் உழைப்புதான் முதலாளிகளுக்கு பெருத்த இலாபத்தை உருவாக்குகிறது. ஆனால் கடும் வாழ்வாதார நெருக்கடியில் உள்ள மக்களுக்கு சிறிதளவு சலுகைகள் கொடுப்பதே பெரிய விசயமாக உள்ளது.

2019 ல் KEP INFRA நிறுவனத்திற்கு நட்டம் ஏற்பட்டதால் அது KATERRA என்ற கார்ப்பரேட் நிறுவனத்திற்கு கைமாறியுள்ளது. அதன்பிறகு மொத்த நிலைமையும் தலைகீழாக மாறியதாக தொழிலாளிகள் கூறுகின்றனர்.

இன்க்ரீமெண்ட் நிறுத்தம், போனஸ் நிறுத்தம், தரமில்லாத உணவு, ஷூ உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் தருவதில்லை என எல்லா சலுகைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. முன்பு வெளிமாநிலத் தொழிலாளிகளுக்கு தங்குவதற்கு அறை வசதி ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கான செலவை சம்பளத்தில் சேர்த்து கொடுத்துள்ளனர். தற்போது அறைவசதி ரத்து செய்யப்பட்டு, அதற்கான பணம் சம்பளத்தில் வெட்டப்பட்டு விட்டது. அதேபோல் ஓவர்டைம் வேலைக்கு ஊதியம் மறுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஓவர்டைம் செய்ய கட்டாயப்படுத்துவது நடக்கிறது. பி.எஃப் பிடிப்பதில்லை, சம்பள பில் கொடுப்பதில்லை எனக் KATERRA நிறுவனத்தின் சட்டவிரோதமான செயற்பாடு கேட்பாரின்றி தொடர்ந்துள்ளது. நிரந்தரப்பணிக்கு வெறும் ரூ.17,000 மட்டுமே சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறது.

வேலையை விட்டு நின்றவர்களுக்கு ஒன்றரை வருடமாக செட்டில்மெண்ட் செய்யாமல் இழுத்தடித்து வருகின்றனர். சம்பளம் கொடுக்காததால் பாதிப்பேர் வேலையை விட்டு நின்றுள்ளனர்.

அதுமட்டுமல்ல, புதிதாக ஒப்பந்த  வேலைக்கு எடுப்பவர்களுக்கு  எந்த சலுகையும் இல்லை. 90 நாட்களுக்கு சம்பளம் இல்லை, ESI, PF இல்லை, சாப்பாடு, பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை, அலவன்ஸ் கிடையாது, சங்கம் சேரக்கூடாது என எவ்வளவு சுரண்டமுடியுமோ, ஒடுக்க முடியுமோ எல்லாவற்றையும் KATERRA நிறுவனம் செய்து வருவதாக கூறுகின்றனர்.

கேட்பதற்கே ஆத்திரம் வருகிற அளவுக்கு கொடுமைகள் நடந்தாலும் பொறுத்துக் கொண்டு போக வேண்டும் என்ற அளவுக்கு உள்ள மக்களின் வாழ்க்கை நெருக்கடியை முதலாளித்துவ ஓநாய்கள் எந்தளவுக்கு கேடாக பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பதற்கு இவையெல்லாம் கண்கூடான சான்று.

இதன் உச்சகட்டமாகத்தான் கடந்த 3 மாதங்களாக நிரந்தரத் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டுள்ளது. ஏன் என்று தொழிலாளிகள் கேட்டதற்கு விற்பனையான உற்பத்திப் பொருளுக்கு பணம் வரவில்லை என்று பொறுப்பற்ற முறையிலும், சட்ட விதிகளை மீறியும் பதில் கூறியுள்ளனர். முதலாளிகள் செய்த வேலைக்கு கூலியைத்தான் கொடுக்கிறார்கள். தங்களது இலாபத்தில் பங்கைக் கொடுப்பதில்லை. ஆனாலும் இப்படியொரு பதிலை முதலாளிகள் கூற முடிகிறதென்றால் தொழிலாளி வர்க்கத்தின் அவலநிலையையும், அரசியல் விழிப்புணர்வு இன்மையையும் கேடுகெட்ட முறையில் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதுதான் அர்த்தம். கேள்வி கேட்ட தொழிலாளிகளை தங்களது அகமதாபாத் பிரிவுக்கு மாற்றி விடுவோம் என்று நிர்வாகம் மிரட்டியுள்ளது.

இந்தச் சூழலில்தான் 3 மாத சம்பளத்தைத் தரக்கோரி உள்ளிருப்புப் போராட்டத்தை நிரந்தரத் தொழிலாளிகள் தொடங்கியுள்ளனர். தொழிலாளிகள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தும் விதத்தில், அவர்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதத்தில் STAFF களுக்கு மட்டும் சலுகை கொடுப்பது என்ற போக்கை நிர்வாகம் கடைப்பிடித்து வருகிறது. மேலும் தொழிலாளிகள் இங்கே வாழ்க்கை நெருக்கடிக்கு போராடிக் கொண்டிருக்கும் சூழலில் ஈவிரக்கமே இல்லாமல் கம்பெனி STAFF களுக்கு மட்டும் பெங்களூரில் தீபாவளி பார்ட்டி வைத்து தனது குரூர முகத்தை வெளிப்படுத்தியுள்ளது KATERRA நிர்வாகம்.

பத்துமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முன்னேற்றமும் இல்லை என்று தொழிலாளிகள் கூறுகின்றனர். சம்பளம் வரும், போய் வேலை செய்ங்க என்று திமிராக நிர்வாகம் கூறுவதாக தெரிவிக்கின்றனர்.

படிக்க : ஸ்விக்கி தொழிலாளர் போராட்டம் : நவீன பாட்டாளிகளே, முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிராக அமைப்பாய் திரள்வோம்!

மேலும் போராடும் தொழிலாளிகளை கலைக்கும் விதத்தில் ஒரு சிலருக்கு சலுகை காட்டி போராட்டத்தை நீர்த்துப் போக வைக்கும் வேலையையும் நிர்வாகம் செய்து வருகிறது. போராட்டம் நடக்கும்பொழுது குருபரபள்ளி போலீசு ஸ்டேசனில் இருந்து உதவி ஆய்வாளர் வந்துள்ளார். தீபாவளி முடிந்து புதன்கிழமை பார்த்துக் கொள்ளலாம் என்று பேசியுள்ளார். ஆனால் தொழிலாளிகள் ஒத்துக் கொள்ளவில்லை. உண்மையிலேயே தவறு செய்த முதலாளியின் மேல், KATERRA நிர்வாகத்தின் மேல் எக்காலத்திலும் போலீசு நடவடிக்கை எடுக்கப் போவதில்லை. எடுக்கவும் முடியாது. சட்டம் ஒழுங்கு என்று காரணம் காட்டி தொழிலாளிகளின் மீதுதான் நடவடிக்கை பாயும்.

இந்நிலையில் தீபாவளி வந்ததால் தொழிலாளிகள் சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம். இதனால் தற்காலிகமாக போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்டு மீண்டும் புதன்கிழமை (26.10.2022) தொடரலாம் என்று தொழிலாளிகள்  முடிவெடுத்தனர். அந்த வகையில் புதன்கிழமையும் போராட்டம் தொடர்கிறது. ஆனால் போராட்டத்தை நிறுத்துவதற்கு KATERRA நிர்வாகம் எல்லாவிதமான தடைகளையும் ஏற்படுத்தும். தொழிலாளர் நலத்துறையும், அதிகார வர்க்கமும் KATERRA நிர்வாகத்திற்கு நன்றி விசுவாசத்தோடு துணைசெய்யும்.

KATERRA நிறுவனத்தின் சகிக்கமுடியாத இவ்வளவு கொடுமைகளையும் மொத்த அதிகார வர்க்கமும் வேடிக்கை பார்த்து வருவதை விட பெரிய குற்றம் வேறு என்னவாக இருக்க முடியும்?

எந்த அளவுக்கு இப்போராட்டம் அடுத்தக் கட்டத்திற்கு செல்லும் என்பதை தொழிலாளிகளின் ஒற்றுமையும், அரசியல் விழிப்புணர்வும் மட்டுமே தீர்மானிக்கும்.

இது அந்த ஒரு நிறுவனத்தின் தொழிலாளி வர்க்கத்தின் பிரச்சினை மட்டுமல்ல, நாட்டின் ஒட்டுமொத்த தொழிலாளி வர்க்கத்தின் பிரச்சினை. தொழிலாளி வர்க்கத்தின் முதுகில் பாறை போல அழுத்திக்கொண்டு இருக்கும் முதலாளித்துவ தனியார்மய இலாபவெறிக் கொள்கையை உழைக்கும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி உணரவைப்பதும், அந்தப் புரிதலில் இருந்து தொழிலாளி வர்க்கம் தன்னை அமைப்பாக்கிக் கொள்வதன் மூலம்தான் அடுத்தக் கட்டத்திற்கு முன்னேற முடியும்.

வினவு செய்தியாளர் – கிருஷ்ணகிரி