Tuesday, June 30, 2026
முகப்பு பதிவு பக்கம் 300

ஒரு மாயத் தோற்றம் மக்கள் மனத்தை வலுவாகக் கவர்ந்து கொண்டது ஏன் ?

1
நா. வானமாமலை

இந்திய நாத்திகமும் மார்க்சியத் தத்துவமும் | நா. வானமாமலை – பாகம் – 06

முதல் பாகம்

நாத்திகம் பற்றி மார்க்சீயவாதிகளின் விமர்சனம்

ண்டைய இந்திய நாத்திகம், பண்டைய கிரேக்க நாத்திகம், தற்கால ஐரோப்பிய நாத்திகம் ஆகியவற்றின் தத்துவக் குறைபாடுகளை மார்க்சீயம்தான் போக்கி முழுமையாக்குகிறது.

“பண்டைக் கால நாத்திகத்தின் முக்கியமான பலவீனம் என்ன?” என்ற கேள்வியிலிருந்து நமது வாதத்தைத் தொடங்குவோம். நமது தத்துவவாதிகள் மிகத் திறமையான தர்க்கவாதங்களை கடவுள் ஒரு மாயை, மன விகாரம் என்று நிரூபிக்க உருவாக்கியுள்ளார்கள். இவ்வாறு கடவுளைப் படைக்கப் பிழையாக தருக்க முறைகளைக் கடவுள் நம்பிக்கையுடைய தத்துவவாதிகள் பயன்படுத்தியுள்ளார்கள். இந்திய நாத்திகவாதிகளது தருக்கத் தாக்குதல்களின் பின்னும் கடவுள் பிழைத்திருக்கிறாரே! மேலும் மேலும் பக்தர்கள் கடவுளை நம்புகிறார்களே! இது ஏன் என்று இந்திய நாத்திகர்கள் சிந்திக்கவில்லை. ஒரு மாயத் தோற்றம், மக்கள் மனத்தை இவ்வளவு வலுவாகக் கவர்ந்து கொண்டது ஏன்?

ஃபயர்பாக்.

கடவுள் என்ற கருத்தின் ஊற்றுக்கண் வேறோரிடத்தில் இருக்கிறது. இவ்வூற்றுக் கண்ணை நமது பண்டைய நாத்திகர்கள் அறிந்து கொள்ளவில்லை. மார்க்ஸ் தான் கடவுள் என்ற கருத்தும், வேறு எல்லாக் கருத்துக்களும் எவ்வாறு தோன்றின என்று விளக்கினார்.

ஃபயர்பாக் என்ற தத்துவவாதியின் பொருள்முதல் வாதம், ஹெகல் என்ற ஆன்மீகவாதியின் கொள்கைகளுக்கு எதிர்ப்பொலியாக ஒலித்தது. ஃபயர்பாக்கின் பொருள்முதல் வாத உள்ளடக்கத்தை மார்க்ஸ் பெரிதும் போற்றினார். ஆனால் பிரபஞ்சத்தின் வளர்ச்சியை பொருள்முதல்வாத அடிப்படையில் அவர் விளக்கவில்லை. பொருள் முதல்வாத அடிப்படையில் ஃபயர்பாக் உலக இருப்பையும், மனித மனத்தின் உள்ளடக்கத்தையும் ஆராய்ந்தார்.

மார்க்ஸ் ஃபயர்பாக்கை பின்வருமாறு விமர்சிக்கிறார்:

“ஃபயர்பாக் மதத்தினால் அந்நியவயமாகி இவ்வுலகு இரண்டாக; பொய்யான மத உலகாகவும், உண்மையானப் புற உலகாகவும் பிரிகிறது. அவருடைய தத்துவ முயற்சியெல்லாம் இப்பொய்யுலகை, உண்மையான உலகிற்குக் கொண்டு வருவதாகவே இருந்தது. இப்படிச் செய்யும் பொழுது மிக முக்கியமான தத்துவ முயற்சியை அவர் ஒதுக்கி விட்டார். உண்மை உலகின் முரண்பாடுகள் தீர்வு காணப்படாத பொழுது, அவை விண்ணில் ஒரு தனி உலகை அமைத்துக் கொள்கின்றன. உலகிலுள்ள முரண்பாடுகள் – தீர்வு பெறாதவரை, அவற்றில் இருந்து தோன்றி விண்ணில் இருப்பதாகக் கருதப்படும் மாயத் தோற்றங்கள் கலையாது. உலகக் குடும்பமே தெய்வக் குடும்பத்தின் அடிப்படை என்பதைக் கண்டு கொண்டால் இவ்வுலக வாழ்க்கை முரண்பாடுகளை ஆராய்ந்து நடைமுறையால் புரட்சிகரமாக மாற்ற முடியும்.”

ஃபயர்பாக் பற்றிய விமர்சன எழுத்துக்களில் மார்க்ஸ் கூறிய கருத்தை, எங்கல்சோடு சேர்ந்து மேலும் விளக்கினார்:

ஹெகல்.

“மனிதர்களுடைய செயலூக்கமான நடைமுறைச் செயல்களோடு, அவர்களுடைய எண்ணங்கள், சிந்தனைப் படைப்புகள், உணர்வு என்ற மூளையின் படைப்புகள் தொடர்பு கொண்டவையாக இருக்கின்றன. இவை நடைமுறைச் செயல்களால் தொடர்பு கொள்ளுகிற மனிதர்களின் உறவுகளின் விளைவேயாகும். உண்மையான வாழ்க்கையின் நிஜமான அல்லது வக்கிரமான பிரதிபலிப்புக்களே எல்லாச்சிந்தனைகளும் என்று நாம் அறிதல் வேண்டும். இவை பொருளுற்பத்தி என்ற மனிதர் செயல்களில் இருந்துதான் தோன்றுகின்றன. மனிதனது உற்பத்தி சக்திகள் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் எந்த அளவு வளர்ச்சியடைந்திருக்கின்றனவோ, அதற்கேற்ப சமூக உற்பத்தி உறவுகளின் பிரதிபலிப்புகளாகச் சிந்தனைகள் தோன்றுகின்றன. மூளையில் தோன்றுகிற தெளிவற்ற எண்ணங்கள் கூட, வாழ்க்கையில் இருந்து பிரிந்து சுதந்திரமாக இருப்புக் கொள்ளவில்லை. இவைகூட சமூக இருப்பின் அடிப்படையில் தோன்றிய மேற்கோப்புகள் தாம். இவ்வடிப்படை புலனறிவுக்குப் புலப்படுபவையே. இவ்வாறாக ஒழுக்கம், மதம், அப்பாலைத் தத்துவங்கள் முதலிய கருத்துக் கட்டமைப்புகளாகிய (Idealogy) உணர்வுருவங்கள் (Forms of Consciousness) சுதந்திரமானவையல்ல. அவை பொருளுற்பத்தி என்னும் மனிதர் செயலான அடிப்படையின் மீது எழுப்பப்பட்டவையே. பொருளுற்பத்தி வரலாற்றில் இருந்து பிரித்து உணர்வுருவங்களின் சரித்திரத்தை அறிய முடியாது. மனிதர்கள் உற்பத்திச் சக்திகளை வளர்த்துக் கொண்டு, உற்பத்தி அமைப்புகளையும், சமூக அமைப்புகளையும் மாற்றுகிறபோது அவ்வடிப்படையின்மீது எழுப்பப்பட்டிருக்கும் மேற்கோப்பு உருவங்களும் மாறுகின்றன.” “உணர்வு வாழ்க்கையைத் தீர்மானிப்பதில்லை; வாழ்க்கைதான் உணர்வைத் தீர்மானிக்கிறது” என்பது மார்க்ஸின் புகழ்பெற்ற வாசகம்.

இவ்வுலக நோக்குத்தான் மார்க்ஸிய வரலாற்றுப் பார்வையின் அடிப்படை. ஒவ்வொரு சமுதாய அமைப்பின் உற்பத்தி முறைதான் நமது வரலாற்று ஆராய்ச்சியின் துவக்கப்புள்ளி. ஒவ்வொரு உற்பத்தி முறையிலும் மனிதர்கள் எவ்வித உறவு கொள்ளுகிறார்கள் என்பது உற்பத்திமுறை அமைப்பைப் பொறுத்தது. உற்பத்தி முறையின் தொடர்ச்சியான மாறுதல்கள், இவற்றால் மாறுகிற மனிதர் உறவுகள், அவற்றின் தொடர்ச்சியான போக்குகள் இவற்றை வரலாறு விளக்கவேண்டும். இவற்றில் மனப்படைப்புகள், பொருளாதார அடிப்படையிலிருந்து விலகிச் செல்வதை அறிகிற விமர்சனம் செய்வது போதாது. விமர்சனம் மட்டுமல்ல, உற்பத்தி சக்திகள் வளரும் வகையில் உற்பத்தி உறவுகள் மாற்றப்பட வேண்டும். அடிப்படையானதும், மிகவும் முக்கியமானதுமான சமூக மாறுதல் புரட்சியாகும். உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியும், அவ்வளர்ச்சிக்கேற்ப, சமூக அமைப்பு மாற்றப்படுவதுவே வரலாற்றின் இயக்கு சக்தியாகும். உற்பத்திச் சக்திகளின் பெருக்கத்தை விளக்கும் வரலாறே, தத்துவம், மதம் முதலிய எண்ணக் கட்டமைப்புகளின் வரலாற்றுக்கும் அடிப்படையாகும்.

கார்ல் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ்

மார்க்ஸ், எங்கல்ஸ் ஆகிய இருவரும் மேற்கூறிய கருத்துக்களை 1845-46 இல் உருவாக்கினர். அதன் பின்னர் நூறாண்டுகளில் தொல்பொருள் ஆய்வும், மானிட ஆய்வும் பெரிதும் வளர்ச்சி பெற்றுள்ளன. இவையாவும், இக்கருத்துக்களை செழுமைப்படுத்துகின்றன.

மார்க்ஸ் மதத்தைச் சிந்தனையில் இருந்து அகற்றத் தர்க்கத்தைக் கையாளவில்லை. சிந்தனை நிலையில் மதக் கருத்துக்களை நமது பண்டைய நாத்திகர்கள் எதிர்த்தது போல், மார்க்ஸ் செய்யவில்லை. மார்க்ஸ், ’மனிதன் மதத்தைப் படைத்தான்’ என்று போதித்தார். மனிதனது உட்கிடையான தன்மை, தெய்வீகமானது என்ற கருத்தை அவர் எதிர்த்தார். கடவுள் நம்பிக்கை, அதைத் தோற்றுவித்த சமூக அடிப்படை மாறும்போது மறையும் என்று கூறினார். வரலாற்றுப் படிமுறை வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் தனது புறவய வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளவே மனிதன் மதத்தைப் படைத்தான், தனது ஆற்றலால் விளைச்சலை அதிகப்படுத்த முடியவில்லை. மழை பெய்யச் செய்ய முடியவில்லை, வேட்டை விலங்குகளைக் கொல்லமுடியவில்லை, போரில் வெற்றி பெற முடியவில்லை என்று உணர்ந்த மனிதன், மந்திர தந்திரங்களையும், கடவுள்களையும் தனது ஆற்றலை மிகுவித்துக் கொள்ளப் படைத்தான், இக்கருத்துக்கள் மனித வரலாற்றில், மனிதன் தனது புறவய வாழ்க்கையில் தனது ஆற்றல் குறைவை உணரும் போது, இயலாமையை உணரும்போது, தன்னைவிட அதிகமான சக்தி படைத்த தெய்வங்களைத் தனது கற்பனையால் படைத்து அவற்றிடம் தனது தேவைகளைப் பூர்த்தி செய்து வைக்க கோரிக்கை விடுத்தான்.

இவ்வாறு மனிதன் மதத்தைப் படைத்தான். மனிதன் உலகத்திற்கு வெளியே வாழும் விலங்கு அல்ல. தற்காலப் பரிணாமவாதம் மனிதனது தோற்ற மூலத்தை விளக்குகிறது. மிகவும் சிக்கலான இயற்கை மாற்றங்களுக்குப் பின்னர், இம்மாற்றங்களின் விளைவாக மனிதன் தோன்றினான். பிற விலங்குகளைப் போல அவனும் இயற்கையின் ஒரு பகுதிதான். மனிதன் தோன்றிய பின் விலங்குகளுக்கும் இயற்கைக்கும் இடையே உள்ள உறவு தன்மை மாற்றம் அடைந்தது. விலங்குகள் இயற்கையோடு இசைந்து போகின்றன. இயற்கையின் வலிமைக்கு இணங்கித் தங்களது உறுப்புக்களை மாற்றிக் கொள்ளுகின்றன. இயற்கையோடு அவற்றின் உறவு, செயலூக்கமற்றது (Passive) தான். இயற்கையளிக்கும் காய்கனிகளை அவை உண்கின்றன. உணவைத் தேடிப் பெற்றுக் கொள்பவையாக (food gatherers) அவை இருக்கின்றன. செயலூக்கத்தோடு உணவை உற்பத்தி செய்வதில்லை. குளிர்தாங்க உரோமத்தை இயற்கை சில விலங்குகளுக்கு அளித்துள்ளது. இயற்கையை அவை தங்கள் வாழ்க்கையால் மாற்றிய போதிலும், அம்மாற்றங்கள் அவற்றின் உணர்வில் பதிவதில்லை. அவை பற்றி அவை சிந்திப்பதில்லை. மனிதனது தோற்றம் ஒரு விலங்குதான் என்றாலும், பிற பிராணிகளைப் போல இயற்கையோடு அவன் கொண்டுள்ள தொடர்பு செயலூக்கமற்றதல்ல. தனது உயிரியல் உறுப்புகள் (கை, கால், வாய், பல் முதலியன) இயற்கையில் ஏற்படுத்தும் மாறுதல்களை அவன் உணருகிறான். தனக்குத் தேவையான மாறுதல்களை இயற்கையில் ஏற்படுத்துவதோடு அவற்றை நெறிப்படுத்தவும் மனிதனால் முடியும். இப்பொழுதுதான் அறிபவன், அறியப்படுவது (Subject, Object) என்ற கருத்துக்களுக்குப் பொருளான உண்மைகள் தோன்றுகின்றன.

இந்த மாற்றத்திற்குக் காரணம் என்ன? மனிதன் தனது, உயிரியல் கருவிகளைப் (Biological equipment) பயன்படுத்துகிறான். முக்கியமான உறுப்புகளின் மூளை, கைகள், பேச்சுறுப்புகள் இவற்றைச் செயல்படுத்துகிறான். இவற்றைச் செயல்படுத்தும் போது விளையும் ஆற்றல் தான் உழைப்பு. இந்தச் செயல்பாட்டில் இயற்கையும் மனிதனும் பங்கு, பற்றுகின்றனர். ஆனால் மனிதன் உழைப்பு என்னும் ஆற்றலால் இயற்கை மீது தனது செயலைத் துவக்கி, இயற்கையை கட்டுப்படுத்தி, தனக்கும் இயற்கைக்கும் உள்ள உறவை உணர்வுப் பூர்வமாக நெறிப்படுத்துகிறான்.

மின்னல் மின்னும் போதும், மழை பெய்யும் பொழுதும், சில ரசாயன மாற்றங்கள் நிகழ்கின்றன. இவை இயற்கை நிகழ்ச்சிகள். விலங்குகளும், மனிதனும் அஞ்சியோடுகின்றன. ஆனால் மனிதன் இந்நிகழ்ச்சிகள் நடைபெறும் போது என்ன மாற்றங்கள் உண்டாகின்றன என்று சிந்திக்கிறான். அவன் இயற்கையோடு தொடர்பு கொண்டதால் அவன் மூளையில் படைத்துக் கொண்ட ரசாயன அறிவைப் பயன்படுத்துகிறான். காற்றில் ஆக்ஸிஜன், நைட்ரஜன் என்ற வாயுக்கள் உள்ளன. மின்னல் வெளிப்படும் பொழுது மின்னாற்றல் பாய்ச்சல் (discharge) வாயுக்களின் ஊடே செல்லுகிறது. இதனால் இவ்விரண்டு வாயுக்களும் கூடுகின்றன. மழைத் தண்ணீரில் இக்கூட்டுப் பொருள் (நைட்ரிக் ஆக்ஸைடு) கரைந்து ஒரு அமிலம் ஆகிறது. இது பூமியினுட் செல்லுகிறது. பூமியினுள் உலோகத் தாதுப் பொருள்கள் உள்ளன. அவற்றோடு இவ்வமிலம் எதிர்வினை செய்து உரப்பொருள்கள் இயற்கையில் கிடைக்கின்றன.

படிக்க :
ஜே.என்.யூ தாக்குதல் : குஜராத் முதல் தமிழ்நாடு வரை போராட்டங்கள் !
CAA ஆதரவு – பாஜக ட்ரோல் படையின் தரம் தாழ்ந்த ‘மிஸ்டுகால் புரட்சி’ !

இயற்கை நிகழ்ச்சிகளைக் கவனித்த மனிதன், முன் இயற்கையில் தலையிட்டுக் கிடைத்த அனுபவம், அனுபவத்தில் இருந்து முன் கிடைத்திருக்கும் கொள்கையறிவு இவற்றைப் பயன்படுத்தி இயற்கைப் போக்கில் தலையிடுகிறான்; காற்றிலுள்ள வாயுக்களைச் சேரவைக்கும் அளவு வெப்பத்தை மின் ஆற்றலால் உண்டாக்குகிறான். ‘மின் ஆற்றல் ஆர்க்’ என்ற ‘மின் வெப்பக் கருவியின் கரித்துண்டுகள் ஜூவாலிக்கும் போது காற்றை உட்செலுத்துகிறான். வாயுக்கள் கூடி நைட்ரிக் ஆக்ஸைடு உண்டாகிறது. இதனை நீரில் கரைக்கிறான். இந்த அமிலத்தை அம்மோனியா வாயுவோடு சேர்க்கிறான். இது கூட ‘ஹைட்ரஜன், நைட்ரஜன்’ ஆகிய இரு வாயுக்கள் கூடிக் கிடைத்த கூட்டுப் பொருளே. இது கூட இயற்கையில் தலையிட்டுக் கட்டுப்படுத்தித் தனக்குத் தேவையான பொருளாக மனிதன் செய்து கொண்டதே.

மேற்கூறிய, “இயற்கைமீது தனது செயலைத் துவக்கி, இயற்கையைக் கட்டுப்படுத்தி, தனக்கும் இயற்கைக்கும் உள்ள உறவை உணர்வுப் பூர்வமாக நெறிப்படுத்துகிறான்” என்ற எங்கல்ஸின் வாசகத்துக்கு இது மிக நல்ல உதாரணம்.

இவ்வாறு இயற்கையை மாற்றும் பொழுது மனிதனும் மாறுகிறான். பொருள்களின் யாந்திரிக, ரசாயன, பௌதீக இயல்புகளை அறிந்து அவற்றைத் தனது தேவைக்கேற்ற பண்புகளாக மனிதன் மாற்றிக் கொள்கிறான். இவ்வாறு மனிதனது அறிவு அவனது கை, கால், மூளைபோல அவனது உறுப்புகளில் ஒன்றாக ஆகிவிடுகிறது. இதனால் முன்னிலும் அதிகமான ஆற்றல் பெற்றவனாக மனிதன் ஆகிறான்.

இது குறித்து கார்டன் சைல்டு என்ற தொல்பொருள் பேராய்வாளர் கீழ்வருமாறு கூறுகிறார். “இயற்கையையும், இயற்கையோடு போராட மனிதன் புனைந்து கொண்ட கருவித் தொகுதிகளையும், மனிதனது உடல்புற உறுப்புக்கள் (Extra Corporeal Organs)” என்று அவர் அழைக்கிறார். இவை ஆரம்பத்தில் மிக எளிய கருவிகளாக இருந்தன. ஒரு முறிந்த மரக்கிளை, கூர்மையாக்கப்பட்ட கல் இவை போன்றவை தாம் மனிதன் பயன்படுத்திய “பண்டைக் கருவி.” கருவிகளைச் செய்யும் ஆற்றல் மூளையின் திறத்தால் மனிதனிடம் வளர்ச்சியடைந்தன. இச்சிறு கருவியைச் செய்த மனிதன், தனது உழைப்பால், இன்று விண்கலங்களை கோடிக்கணக்கான மைல்களுக்கு அப்பால் அனுப்புகிறான். அவை கோடிக் கணக்கான மைல்களுக்கு அப்பாலுள்ள விண்கோளங்களை படம் பிடித்து உடனே சில ஒளிக்கதிர்கள் மூலம் உலகிற்கு அனுப்புகின்றன. இவ்வளவு தூரத்தில் உள்ள கோளங்களின் படங்கள், மனிதன் அவற்றைக் கண்ட மறுநாளே தினசரிகளில் வெளியாகின்றன. இன்று மனிதன் தனது உடலுழைப்பாலும், மூளை உழைப்பாலும், இயற்கையாற்றல்களில் பல கூறுகளை தனது தேவைகளுக்காக வென்றுள்ளான்.

இவ்வாறு இயற்கையோடு போராட கருவிகளைச் செய்து உற்பத்திச்சக்திகளை முன்னேற்றிய மனிதன், விஞ்ஞானத்தை வளர்த்தான். பொருள் உற்பத்தியில் முன்னேறிய மனிதன் தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாத போது பல நம்பிக்கைகளையும் படைத்தான். அவனது உற்பத்தி அமைப்பு முறையின் வளர்ச்சியின் ஒரு கட்டத்தில் சில நம்பிக்கைகள் தோன்றின..

(தொடரும்)

« முந்தைய பாகம் ……………………………………………………………………. அடுத்த பாகம் »

இந்திய நாத்திகமும்
மார்க்சீயத் தத்துவமும்

நா. வானமாமலை
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

ஜே.என்.யூ தாக்குதல் : குஜராத் முதல் தமிழ்நாடு வரை போராட்டங்கள் !

0

புது தில்லியில் உள்ள ஜே.என்.யூ வளாகத்தில் மாணவர் மீதான தாக்குதலை கண்டித்து இந்தியா முழுதும் 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் திங்கள்கிழமை (06.01.2020) மாலை அகமதாபாத்திலுள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்திற்கு (ஐ.ஐ.எம்.ஏ) வெளியே அமைதியான போராட்டத்தை நடத்தினர்.

ஐ.ஐ.எம்.ஏ (IIMA), சி.இ.பி.டி (CEPT) பல்கலைக்கழகம், அகமதாபாத் பல்கலைக்கழகம், தேசிய ஃபேஷன் தொழில்நுட்ப நிறுவனம், தேசிய வடிவமைப்பு நிறுவனம் மற்றும் குஜராத் வித்யாபித் உள்ளிட்ட பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள் இதில் பங்கேற்றனர்.

மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து ஜே.என்.யூ. வாயிலில் மாணவர்கள் நடத்திய போராட்டம். (கோப்புப் படம்)

“மாணவர்களை கொடூரமாக நடத்துவதற்கு எதிரானவர்கள் நாங்கள். மக்கள் சுதந்திரமாக பேச அனுமதிக்கப்படுவதில்லை என்ற செய்தியை தெரிவிக்கவே நாங்கள் இன்று வாயில் துணியைக் கட்டியுள்ளோம். கேள்வி கேட்டாலே மாணவர்கள் முத்திரை குத்தப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட குடிமக்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய ஒன்று கூடினார்கள்” என்று அகமதாபாத் பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர் சர்தாக் பாகி கூறினார்.

ஜே.என்.யூ மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த போராட்டத்தில் கலந்து கொண்ட வட்கம் சட்டமன்ற உறுப்பினரான ஜிக்னேஷ் மேவானி கோரினார்.

“குற்றவாளிகளுக்கு முழுமையான சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என்பதை இந்த தாக்குதல் நிரூபித்துள்ளது. காவல்துறையும் அரசாங்கமும் தங்களுக்கு சொந்தமானது என்பது அவர்களுக்கு தெரியும். இந்த குற்றவாளிகளை உள்துறை அமைச்சர் அமித் ஷா அனுப்பியுள்ளார் என்று நான் நம்புகிறேன். ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஏபிவிபி தவிர வேறு யாராலும் இதுபோன்ற செயல்களைச் செய்ய முடியாது” என்று மேவானி கூறினார்.

“ஜே.என்.யூவில் இரத்தம் வழிகிறது”, “பார்ப்பனிய பயங்கரவாதத்தை நிறுத்து”, “ஜே.என்.யுவைக் காப்பாற்றுங்கள்”, “ஜே.என்.யூ-வுடன் நிற்கிறோம் – பாசிசத்தை எதிர்கிறோம்”, “வளாகங்களை போர் மண்டலங்களாக ஆக்குவதை நிறுத்து” மற்றும் “மாணவர்களைக் காப்பாற்று-ஜனநாயகத்தை காப்பாற்று” போன்ற முழக்கப் பதாகைகளை வைத்திருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை சுற்றி ஏராளமான காவல்துறையினர் இருந்தனர்.

மகாத்மா காந்தி நிறுவிய குஜராத் வித்யாபித்தின் சில மாணவர்கள் காதியில் நெய்த அசோக சக்கரத்தை எதிர்ப்பின் அடையாளமாக காட்டினார்கள். சமீபத்தில் கான்பூரிலுள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் (IIT) சர்ச்சையின் மையமாக இருந்த ஃபைஸ் அகமது ஃபைஸின் புகழ்பெற்ற ‘ஹம் தேக்கேங்கே’ கவிதையை மற்ற ஆர்பாட்டக்காரார்கள் முழக்கமிட்டனர்.

“தற்போதைய அரசாங்கம் அதன் கொள்கைகளுடன் உடன்படாத மக்களை விரும்பவில்லை என்பதையே ஜே.என்.யூ மாணவர்கள் மீதான தாக்குதல் காட்டுகிறது. ஆனால், ஜே.என்.யூ மாணவர்களுக்கு ஆதரவு முழு நாடும் இருப்பதை சொல்ல நாங்கள் அனைவரும் விரும்புகிறோம். இது இந்த நாட்டின் ஆன்மா மீதான தாக்குதல். நாங்கள் இந்த நாட்டின் எதிர்காலம். நாங்கள் ஏன் எதிரிகளைப் போல நடத்தப்படுகிறோம்? ” என்று மாணவ போராட்டக்காரர்கள் கேட்டனர்.

படிக்க :
ஜே.என்.யூ மாணவர்களுக்கு ஆதரவாக பாலிவுட் நடிகர் தீபிகா படுகோன் !
♦ ஜே.என்.யூ : மக்கள் பல்கலைகழகம் என்ற பெருங்கனவு ! | பாகம் – 1

போராட்டம் நடைபெற்றபோது, ஏபிவிபியுடன் தொடர்புடைய சிலர் சாலையின் எதிர் பக்கத்தில் கூடி ஜே.என்.யூ தாக்குதல் ‘இடதுசாரி’மாணவர்களால் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டதாகக் கூறும் “இடதுசாரிகள் ஜே.என்.யூவை தாக்குகிறார்கள்” மற்றும் “ஜே.என்.யூவில் சிவப்பு பயங்கரவாதம்” போன்ற செய்திகளைக் கொண்ட பதாகைகளை காட்டினார்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நான்கு ஏபிவிபி உறுப்பினர்களை போலீசார் தடுத்து வைத்ததாக போலீஸ் கண்காணிப்பாளார் எச்.எம். வியாஸ் கூறினார்.

“இங்கு போராட்டம் நடத்த இவர்களிடம் அனுமதி இல்லை. ஒரு முன்னெச்சரிக்கைக்காகவே இவர்களை தடுத்து வைத்தோம்.” என்று வியாஸ் கூறினார்.

ஜே,என்.யூ. மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து சென்னைப் பல்கலைக் கழக மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்.

ஞாயிற்றுக்கிழமை இரவில், கட்டைகள் மற்றும் கம்பிகளுடன் முகமூடி அணிந்த கும்பல் ஒன்று ஜே.என்.யூ வளாகத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களைத் தாக்கி சொத்துக்களை சேதப்படுத்தியது. ஜே.என்.யூ மாணவர் சங்கத் தலைவர் ஆயி கோஷ் உட்பட 28 பேர் காயமடைந்தனர்.

டெல்லியில், செயின்ட் ஸ்டீபன் கல்லூரியின் (St Stephen’s College) மாணவர்களும் ஆசிரியர்களும் திங்களன்று ஜே.என்.யூ, ஜாமியா மில்லியா இஸ்லாமியா மற்றும் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் நடந்த வன்முறைகளை குறித்து கவலை தெரிவித்தனர்.

குடியுரிமைச் சட்டத்திருத்தத்திற்கு ஒரு “நீண்டகால” எதிர்ப்பிற்கு திட்டமிட அவர்கள் அங்கு கூடினார்கள்.

நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் இருந்து பதிவான வன்முறை சம்பவங்களை கண்டித்து, தற்போதைய பாஜக தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக மாணவர் இயக்கத்திற்கு இந்த கூட்டம் அழைப்பு விடுத்தது.

ஜே.என்.யூ-வில் நடந்த வன்முறைக்கு எதிராக தமிழகத்தின் சில பகுதிகளிலும் மாணவர்கள் மற்றும் தொழிலாளர் சங்கங்கள் திங்கள்கிழமை போராட்டங்களை நடத்தினர். சென்னைப் பல்கலைக்கழக மாணவர்களில் ஒரு பகுதியினர் பாதாகைகளுடன், குடியுரிமை சட்டத்திருத்தம் மற்றும் குடிமக்களின் தேசிய பதிவு ஆகியவற்றிற்கும் எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

படிக்க :
ஜே.என்.யூ தாக்குதலைக் கண்டிக்கும் உலகளாவிய அறிவுத்துறையினர் !
♦ காஷ்மீர் – பண்டிட் குடும்பத்தை காப்பாற்றிய சுபைதா பேஹம் !

மாணவர்களின் ஆர்பாட்டத்திற்கு திமுக எம்.பி. கனிமொழி ஆதரவை வழங்கியதுடன், “மாணவர்கள் மீதான தாக்குதல் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் போன்றது. இது தொடரக்கூடாது” என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

மாலை நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த வன்முறையை எதிர்த்து வள்ளுவர் கோட்டம் அருகே மத்திய மாணவர் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர் சங்கத்தின் கூட்டமைப்புடன் பல மாணவர் நல அமைப்புகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சுமார் 200 பேர் இதில் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.

“எழுத்தாணிகள் லத்திக்கள் அல்ல” மற்றும் “நாங்கள் ஜே.என்.யூவுடன் இருக்கிறோம்” என்று பலரும் பதாகைகளை வைத்திருந்தனர். ஏராளமான போலீசாரும் அங்கு நிறுத்தப்பட்டனர்.

ஏபிவிபி மற்றும் அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ இரண்டையும் தடை செய்ய கோரி தஞ்சாவூரில் உள்ள அரசு கல்லூரியின் மாணவர்களும் போராட்டம் நடத்தினார்கள்.


சுகுமார்
நன்றி : த வயர். 

இராமர் கோவில் : மூலக்கதை ஆர்.எஸ்.எஸ்.  திரைக்கதை தொல்லியல் துறை !

மசூதிக்கு அடியில் கோயில் : மூலக்கதை ஆர்.எஸ்.எஸ்.  திரைக்கதை தொல்லியல் துறை !

லகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் பாபர் மசூதிக்கு அடியில் நடத்தப்பட்ட அகழாய்வின் அடிப்படையில் தொல்லியல் துறை அளித்த அறிக்கையைச் சார்ந்துதான் தற்போதைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.

2003-ல் தொல்லியல் துறை அளித்த இந்த அறிக்கையும், அதன் அடிப்படையில் அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பும் ஏன் தவறானவை என்று சன்னி வக்ஃபு வாரியத்தின் சார்பில் ஆய்வை மேற்கொண்ட சுப்ரியா வர்மா, ஜெயா மேனன் ஆகிய இரு தொல்லியல் ஆய்வாளர்கள் எகனாமிக் அண்டு பொலிடிக்கல் வீக்லி இதழில் 2010-ம் ஆண்டு ஒரு கட்டுரை எழுதியிருக்கின்றனர்.

1861-இல் முதன்முதலாக அகழ்வாய்வு நடத்திய அன்றைய தொல்லியல் துறையின் இயக்குநர் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம்.

மசூதிக்கு அடியில் கோயில் இருந்தது என்ற முன்முடிவுடன் தொல்லியல் துறையின் ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது என்ற போதிலும், பல தொல்லியல் ஆய்வாளர்கள் அதனை அம்பலப்படுத்தாமைக்குக் காரணம் உள்ளது. இந்தியர்களோ, வெளிநாட்டவரோ இந்தியாவில் எந்த இடத்தில் அகழாய்வு நடத்த வேண்டும் என்றாலும், அதற்குத் தொல்லியல் துறையின் அனுமதி வேண்டும் என்ற காரணத்தினால்தான் பலரும் அமைதி காக்கின்றனர் என்று இவர்கள் கூறுகிறார்கள்.

“மசூதிக்கு அடியில் கோயில் இருந்தது என்று கூறுவதற்கு முக்கியமாக 3 சான்றுகளைக் காட்டுகிறது தொல்லியல் துறை. முதலாவதாக மேற்குப் பகுதியில் உள்ள ஒரு சுவர். மேற்குப் பகுதி சுவரைப் பார்த்துத்தான் இசுலாமியர்கள் நமாஸ் செய்வார்கள். கோயிலின் கட்டமைப்போ முற்றிலும் வேறுவிதமானது. இரண்டாவதாக, 50 தூண்களின் அடிப்பாகங்கள் காட்டப்படுகின்றன. இவை செட்டப் செய்து திணிக்கப்பட்ட ஆதாரங்கள் என்பதை நிரூபித்துப் பல புகார்களை நாங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறோம்” என்கிறார் வர்மா. மூன்றாவதாகக் கட்டுமான சிதிலங்கள். இவை மசூதி இடிக்கப்பட்டபின் அங்கே போடப்பட்டவை.

1861-ல் பாபர் மசூதி அருகே முதன்முதலாக அகழ்வாய்வு நடத்தியவர் அன்றைய தொல்லியல் துறையின் இயக்குநர் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம். புத்தமதத் தூண்களும், ஒரு புத்த விகாரையும் இருந்தன என்றுதான் அகழ்வாய்வு நடத்திய அவர் கூறுகிறார். அந்த வட்டாரத்தில் சில கோயில்கள் இருந்தன என்று அப்பகுதி மக்கள் கூறுவதாக அவர் பதிவு செய்திருக்கிறாரேயன்றி, அகழாய்வுச் சான்றுகள் எதுவும் கிடைத்ததாகக் குறிப்பிடவில்லை.

1969-ல் பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல்துறை சார்பில் மசூதிக்கு அருகே அகழாய்வு நடத்தப்பட்டது. பண்டைக்காலத்திலும் மத்திய காலத்திலும் அந்தப் பகுதியில் மக்கள் குடியிருப்புகள் இருந்திருக்கின்றன என்றுதான் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. தற்போது நீதிமன்றம் ஆதாரமாக எடுத்துக்கொண்டிருக்கும் அகழாய்வில் மனித எலும்புக்கூடுகளும் எலும்புகளும் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்தத் தடயங்களையே வெளியிடாமல் மறைத்திருக்கின்றனர்.

படிக்க:
காஷ்மீர் – பண்டிட் குடும்பத்தை காப்பாற்றிய சுபைதா பேஹம் !
குடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் ! புதிய கலாச்சாரம் ஜனவரி 2020 வெளியீடு

“மசூதிக்கு அடியில் கோயில் இருந்ததாக அறிக்கையின் எந்த இடத்திலும் விவாதிக்கப்படவில்லை. கடைசிப் பத்தியில், வெறும் மூன்று வரிகளில் கோயில் இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. அவர்கள் காட்டுகின்ற அதே சான்றுகளின் அடிப்படையில் பாபர் மசூதிக்கு அடியில் சிறிய மசூதிகள்தான் இருந்தன என்பதை நாங்கள் நிறுவியிருக்கிறோம்” என்கிறார்கள் சுப்ரியா வர்மா, ஜெயா மேனன் ஆகிய இரு தொல்லியல் ஆய்வாளர்கள்.

புதிய ஜனநாயகம், டிசம்பர் 2019

மின்னூல் :

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

ஃபாஸ்டேக் : அதிவிரைவு டிஜிட்டல் கொள்ளை !

ந்தியாவில் குறுக்கும் நெடுக்குமாக 55 லட்சம் கி.மீ. சாலைகள் ஓடுகின்றன. இதில் தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் 1 லட்சத்து 30 ஆயிரம் கி.மீ. தற்போதைய கணக்குப்படி நாளொன்றுக்கு 24 கி.மீ நீளமுள்ள சாலைகள் புதிதாக போடப்படுகின்றன. இந்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு அடுத்து, பெரும் தொகையை விழுங்கும் துறை இதுதான். இப்படி இருந்தும் இந்தியா முழுக்க உள்ள 531 சுங்கச்சாவடிகள் மூலம் ஆண்டொன்றுக்கு 73 ஆயிரம் கோடி டோல்கேட் கட்டணமாக அரசு வசூலிக்கிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை தேசிய நெடுஞ்சாலை, நீளத்தில் 7-வது இடத்திலும் டோல்கேட் வசூல் தொகையில் 4-வது இடத்திலும் உள்ளது. உதாரணம் மகாராட்டிர மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலையின் நீளம் 15,456 கி.மீ. ஆனால் அதன் டோல்கேட் எண்ணிக்கை 45. வருமானம் 2,700 கோடி. தமிழ்நாட்டின் தேசிய நெடுஞ்சாலை நீளம் 5,381 கி.மீ. அதன் டோல்கேட் எண்ணிக்கை 46. வருமானம் 2,400 கோடி. இது தேசிய நெடுஞ்சாலைத் துறையின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம்.

போரூர் சுங்கச்சாவடி

தமிழ்நாட்டின் தேசிய நெடுஞ்சாலைத் துறையில் நடக்கும் பகற்கொள்ளை, நாற்புறத்தையும் சுற்றி தொழிற்முறைத் திருடர்களினால் நடக்கும் செயின் பறிப்புக்கு நிகரானது. 21 கி.மீ இடைவெளியில் 3 டோல்கேட்டுக்கு கப்பம் கட்டும் மதுரை – ஊத்தங்குடி – கப்பலூர் ஒரு உதாரணம்.

தேசிய நெடுஞ்சாலை ஆணைய விதிமுறையின்படி, டோல்கேட் மையங்களுக்கு இடையே குறைந்தபட்சம் 60 – 75 கி.மீ இடைவெளி இருக்க வேண்டும். டோல் அமைந்துள்ள 6 கி.மீ சுற்றளவுக்குள் வசிப்பவர்களுக்கு கட்டண விதிவிலக்கு அளிக்க வேண்டும். இன்னும் டோல்கேட்டில் கட்டணம் செலுத்தும் வாகனங்களுக்கு பல்வேறு பாதுகாப்பு மேம்பாட்டு வசதிகளைச் செய்து தரவேண்டும். இந்த விதியெல்லாம் அதன் கட்டண ஒப்புகை ரசீது பின்புறமே அச்சிடப்பட்டுள்ளது. இதன் எல்லா விதிகளும் அந்த டோல்கேட் வாசலிலேயே அகால மரணமடைந்து பல மாமாங்கம் ஆகிவிட்டது.

பேப்பரில் மட்டும் இருக்கும் சலுகைகள்.

52 கி.மீ பயணத்திற்கு இலகுரக வாகனங்களுக்கு ரூ.60, இலகு ரக சரக்கு வாகனங்கள் மற்றும் சிற்றுந்துகளுக்கு ரூ.95, கனரக வாகனங்களுக்கு ரூ.195, பெரிய கனரக வாகனங்களுக்கு ரூ.305 என்று கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. இதில் கொடுமை என்னவென்றால் அரசு புள்ளிவிவரப்படி ஆண்டுக்கு வாகனங்களின் எண்ணிக்கை சராசரியாக 10 சதவீதம் கூடிக்கொண்டே போகின்றது. இதன்படி டோல்கேட் வருமானமும் பொங்கி வழிகிறது.

படிக்க:
♦ வண்ணக் குடைகள் சாயம்போன வாழ்க்கை ! – படக்கட்டுரை
♦ பேராசிரியர் ஆடம் ஸ்மித் | பொருளாதாரம் கற்போம் – 50

இந்தியா முழுவதும் 70% டோல்கேட் மையங்கள் கார்ப்பரேட்டுகளுக்கு சொந்தமாகிவிட்டன. L&T, ரிலையன்ஸ், பி.வி.ஆர் நிறுவனங்கள் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் அனைத்தையும் ஒப்பந்தத்தின் மூலம் கட்டுப்படுத்துகின்றன. இவர்கள் காட்டும் ‘வருமானமான காந்தி கணக்குதான்’ இந்திய புள்ளிவிவரங்களாக ஆண்டுதோறும் பட்ஜெட்டை அலங்கரிக்கின்றது.

தற்போதைய கணக்குப்படி இந்திய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு இருக்கும் கடன் 1.88 லட்சம் கோடி ரூபாய். இதற்கான வட்டி மட்டும் ஆண்டுக்கு ரூ. 14,000 கோடி. ஆக, மக்களிடம் சாலையில் வசூலிக்கும் கட்டணக்கொள்ளையை உலக வங்கி மொத்தமாக சந்துமுனையில் இருந்து பறித்துக்கொள்கிறது. மறுபுறம், தேசிய நெடுஞ்சாலைகளோ எவ்வித பராமரிப்பும் வசதியுமின்றி பயணிக்கும் சாலை, மரணிக்கும் சாலையாக வாய்பிளந்து கிடக்கிறது.

ஃபாஸ்டேக் அட்டை வாங்க காத்திருக்கும் வாகன ஓட்டிகள்.

மாட்டை இரண்டு முறை தோலுரிப்பதுபோல சாலைகளில் எவ்வித வசதிகளும் செய்யாமலே மீண்டுமொருமுறை பகற்கொள்ளையை அரங்கேற்றி நெடுஞ்சாலை ஆணையத்தைக் கட்டுப்படுத்துகிறது பி.ஜே.பி அரசு.

ஃபாஸ்டேக் அதிவிரைவு பயணம், அதிக பாதுகாப்பு என்ற பெயரில் மக்களது மேல் பாக்கெட், கீழ்பாக்கெட் என்று அனைத்தையும் கைவிட்டு துழாவுகின்றது. தேசிய நெடுஞ்சாலைகளில் 4 சக்கர வாகனங்கள் ஓட்டும் அனைவரும் டிசம்பர் 15-க்குள் ஃபாஸ்டேக் டோல்கேட் அனுமதி அட்டையை வாங்கி தங்கள் வங்கிக் கணக்குடன் அதை இணைத்துக் கொள்ள வேண்டும். அவ்வட்டையுடன் வரும் வண்டிகள் மட்டுமே இனி, ஃபாஸ்டேக் ட்ராக்குகளில் அனுமதிக்கப்படும். இல்லையானால் அபராதமாக 2 மடங்குக் கட்டணத்துடன் ஒதுக்கப்பட்ட சாதாரண கட்டண ட்ராக்கில் மட்டுமே செல்ல வேண்டும் என்ற உத்தரவும் அமுலுக்கு வந்துவிட்டது.

இந்த அறிவிப்பின் கெடுபிடி நெருங்க நெருங்க சென்னையின் எல்லா டோல்கேட்டுகளிலும் ஃபாஸ்டேக் அட்டை வாங்க கூட்டம் அலைமோதுகிறது. சென்னை – போரூர் சாலையில் இருக்கும் டோல்கேட்டை நாம் கடந்த போது, அங்குக் காத்திருந்த வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களை அனுகினோம். அவர்களது மனக்குமுறலை கேளுங்கள்.

***

ஷியாம், IT ஊழியர்

இருக்குற ஓட்ட ஒடசலான பழைய ரோட்டத்தான் புதுசா ஃபாஸ்டேக்குன்னு பேர மாத்துறாங்க. – ஷியாம், ஐடி ஊழியர்.

“என் வீடு தாம்பரம்; ஆபீஸ் அம்பத்தூர். டெய்லி இந்த டோல்கேட்டை கிராஸ்பண்ணிதான் போகணும். என் டிராவல் டைம், அப் அன்ட் டவுன் 2 மணி நேரம். பீக் அவர்ஸ்ல பல தடவ டோல்கேட்டிலேயே டைம் வேஸ்ட்டாயிடும். இனிமேல் அது குறையுமுன்னு சொல்றாங்க. அத நம்ப முடியல. நம்மல ஏமாத்துறாங்கன்னு தெரியுது. இருக்குற ஓட்ட ஒடசலான பழைய ரோட்டத்தான் புதுசா ஃபாஸ்டேக்குன்னு பேர மாத்துறாங்க.

இந்த ரூட்டுல 15 வருசமா வண்டி ஓட்டுறேன். இதுவரைக்கும் டோல்கேட்டுல வசூலித்த பணத்த வெள்ளை அறிக்கையா அரசு வெளியிடுமா? கொள்ளை அடிக்கிறாங்க. ஒரே வழி இந்த டோல்கேட்டை மொத்தமா இடிச்சுத் தள்ளுறதுதான்.

இப்ப இவங்களோட PAY-TM காரனும் சேர்ந்துட்டான். இனி அவன்தான் நமக்கு பணம் கட்டுவான். அவனுக்கு நாம முன்கூட்டியே ஒரு பஃபர் அமவுண்ட் (நிரந்தர வைப்பு) ரூ.150-ம் ப்ராசசிங்க் சார்ஜ் ரூ.50-ம்னு மொத்தம் ரூ. 200 கட்டணம். இது பேங்க் அக்கவுன்ட்ல இருக்குற மினிமம் பேலன்ஸ் மாதிரி. அத உபயோகப்படுத்த முடியாது. நாம போகவர தனியா ரிசார்ஜ் பன்னணும். இது கொடுமை” என்றார்.

“தெரிந்தே ஏன் இப்படி ஏமாறுகிறீர்கள்?” என்றோம்.

அவர் எரிச்சலுடன், “வேறு வழி? இனி தினமும் டிராஃபிக் ஜாம் ஆகி சண்ட சச்சரவு இருக்காது. பணம் கொடுத்து ரசீது வாங்குற தொல்லை இல்லை” என்றார்.

படிக்க:
♦ தோழர் ஸ்டாலின் நூலின் 15 தொகுதிகள் வெளியீடு ! – முன்பதிவு
♦ காஷ்மீர் – பண்டிட் குடும்பத்தை காப்பாற்றிய சுபைதா பேஹம் !

***

திலீப், ஓட்டுநர் ( புகைப்படம் தவிர்த்தார் )

நான் லோக்கல்லதான் வண்டி ஓட்டுறேன். இருந்தாலும் மாதம் 1 அல்லது 2 தடவ காஞ்சிபுரம் பக்கத்துல இருக்குற சொந்த ஊருக்குப் போவேன். அதுக்குத்தான் இப்ப க்யூவில நிக்கிறேன்.

எப்போதோ ஒருமுறை ஊருக்குப் போக, இந்தச் தண்டச்செலவு தேவையான்னு கேப்பீங்க. இந்த அட்டய வாங்கலன்னா அபராதம் கட்டணும்பாங்க. அப்புறம் ஆர்டினரி டிராக்குனு அலக்கழிப்பாங்க. குடும்பத்தோட செல்லும்போது எரிச்சல் சண்டை வரும். அது தேவையா? என்றார்.

***

பாலு, வியாபாரம் ( புகைப்படம் தவிர்த்தார் )

நான் செங்கல்பட்டு தாண்டி அச்சிறுப்பாக்கத்தில் இருக்கேன். எனக்கு சென்னையில்தான் வேலை. ஒவ்வொரு முறையும் எல்லா டோல்கேட்டையும் தாண்டி வர்ற வரைக்கும் ஒரே சண்டை சச்சரவுதான். டோல்கேட்ட கடக்கும்போது, நான் முன்னே, நீ முன்னேன்னு சண்டை வரும். வேணுமுன்னே பக்கத்துல வண்டிய கொண்டுவந்து முட்டுவானுங்க. நெரிசலில் வண்டிய இன்ஞ் இன்சா நகர்த்த வேண்டியிருக்கும். இந்த அட்டை வாங்கின பிறகு இந்த அரிபரி இருக்காது, ஹாயா போகலாமுன்னு சொல்றாங்க என்றார்.

***

கிருஷ்ணமூர்த்தி, தனியார் நிறுவன இயக்குநர்

ஃபாஸ்டேக் ஒட்டப்பட்டு செங்கல்பட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி, தடா டோல்கேட்டை கடந்ததாக வந்த மேசேஜை பார்த்து அதிர்ந்தே போனார், எனது நண்பர். – கிருஷ்ணமூர்த்தி

எனக்கு அம்பத்தூர்ல கம்பெனி. வேலூர், வாலாஜா, ஆம்பூர்னு அடிக்கடி போக வேண்டி வரும். இந்த கார்டை இப்ப அவசியமாக்கிட்டாங்க. இதனால எந்த மாற்றமும் வராதுன்னு தெரியுது. இருக்குற ரோட்ட சீர்பண்ண மாட்டேங்குறாங்க. கேட்டா போலீச வரவழைச்சு உதைப்பாங்க. ஏற்கெனவே 2 தடவை வேலூர் டோல்கேட்டுல ஸ்ட்ரைக் பண்ணி போலீசுகிட்டே அடிவாங்குனோம். இவங்கல்லாம் கூட்டுக்களவாணிங்க. இந்த கார்டுனால எவ்வளவு ப்ராடு நடக்குமுன்னு தெரியல.

என்னோட ஃபிரெண்ட் லாரி ஓனர். செங்கல்பட்டுக்காரர். 6 மாதம் முன்னாடியே அவரது சரக்கு லாரிக்கு ஃபாஸ்டேக் கார்ட வாங்கி அக்கவுண்ட்ல இணைச்சிட்டாரு. திடீர்னு அவரது போனுக்கு ஒரு மெஸ்சேஜ். ஆந்திரா தடா டோல்கேட்ட அவரது சரக்கு லாரி சில நிமிடங்களுக்கு முன் கடந்ததாகவும் அதற்கான கட்டணமாக ரூ.350 – அக்கவுண்ட்டிலிருந்து கழிக்கப்பட்டதாகவும் இருந்தது. அந்த மெஸ்சேஜை பார்த்து பதறிப் போயிருக்கிறார். காரணம் அவரது கண் முன்னே அவரது வீட்டிலேயே அந்த லாரி நின்றுகொண்டிருந்தது. இந்தக் கட்டணத் திருட்டை கையும் களவுமாக நிரூபிக்க வேண்டும் என்று அவர் உசாரானார். உடனே தன் வீட்டின் பக்கத்தில் இருக்கும் டோல்கேட்டில், தானே லாரியை ஓட்டிச் சென்று உள்நுழைந்து ரசீது வாங்கிக் கொண்டார். இதே நேரத்தில் தடாவில் எப்படி எனது வண்டி கடக்க முடியும்? என்று அவர்களை கோர்ட்டுக்கு இழுத்து ஒரு வழி பண்ணினார். இது மாதிரி ஆயிரம் கூத்துக்கள் இனி நடக்கும் என்றார்.

படிக்க:
♦ ஜனவரி 8 – பொது வேலை நிறுத்தம் : தமிழகமெங்கும் பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் !
♦ சரக்கு வாகனத் தொழிலை பஞ்சராக்கிய  ஜி.எஸ்.டி ! – படக்கட்டுரை

***

சபரி, டிராவல்ஸ் ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்

டோல்கேட் கட்டணம் என்ற பெயரில் கூட்டுக் கொள்ளை அடிக்கிறாங்க. டோல்கேட் எடுத்து நடத்துற முதலாளிங்க, ஏலம் விட்ட அதிகாரிங்க, அரசியல்வாதிங்க இவங்களோட இங்கிருக்கிற போலீசும் இதுல கூட்டு. கலெக்சன்ல கவர்ன்மென்டுக்கு பாதிதான் கணக்கு காட்டுறாங்க. இன்னும் 4 டிராக் ரோட்டுல 6 டிராக் கட்டணத்த வசூல் பண்றாங்க. திடீர்னு வேல்முருகன், சீமான் போன்றவங்க டோல்கேட்டுக்கு எதிரா சவுண்ட் விட்டு இப்ப கப்சிப்னு அடங்கிட்டாங்க. ஏன்னா, இந்த கூட்டுதான்.

டோல்கேட்ட ஏலம் எடுத்தவன், எல்லாருக்கும் சகட்டுமேனிக்கு இறைக்கிறான். எங்கள மாதிரி அன்றாடங்காய்ச்சிங்கதான் கடைசி வரைக்கும் சாலை வரி, சும்மா இருக்குற வரின்னு கட்டிட்டு வண்டி ஓட்டியே சாகுறோம் என்றார்.

***

டோல்கேட்டிற்கு கப்பம் கட்டிய நிலையிலும் போலீசாரால் மடக்கப்படும் சரக்கு வண்டிகள்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

தமிழ் தெரியாத வட இந்தியர்களால் நிரப்பப்பட்ட டோல்கேட் பூத்துகள். கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் இதுதான் நிலைமை.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

மேலும் படங்களுக்கு :

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

வினவு புகைப்படச் செய்தியாளர்கள்

தோழர் ஸ்டாலின் நூலின் 15 தொகுதிகள் வெளியீடு ! – முன்பதிவு

தோழர் ஸ்டாலின்…

ரஷ்யாவை குறுகிய காலத்தில் எல்லா தளங்களிலும் வலுவான நாடாக்கி காட்டியவர், வறிய நாடுகளின் குழந்தைகள் அறிவைப் பெற பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக மிட்டாய் வாங்கும் காசில் புத்தகங்கள் கிடைக்க செய்தவர், அவர்கள் மொழியிலேயே கிடைக்கச் செய்தவர்.

உலகை ஹிட்லரின் கொடுங்கோல் ஆட்சியில் இருந்து காத்தவர், அதன் காரணமாக ரஷ்யா லட்சக்கணக்கான வீரர்களையும் மக்களையும் இழந்தது, அதில் ஸ்டாலினின் மகனும் அடக்கம்.

அந்தக் கொடிய இரண்டாம் உலகப்போர் காலத்தில்தான் ரஷ்யாவை நிஜமான வல்லரசாக மாற்றிக்காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலாளித்துவத்தால் உலகில் அதிகம் எதிர்ப் பிரச்சாரம் செய்யப்பட்ட தலைவர், அதிகம் வாசிப்பு இல்லாத கம்யூனிஸ்ட்களே நம்பும் அளவுக்கு இருந்தன அத்தகைய பிரச்சாரங்கள்.

அப்படி முதலாளித்துவத்துக்கு சிம்ம சொப்பனமாய்த் திகழ்ந்த தோழர் ஸ்டாலினின் நூல்களின் தொகுப்பு அலைகள் பதிப்பகத்தால் வெளியிடப்பட இருக்கிறது, பதிப்புக்கு ஆதரவளியுங்கள், ஸ்டாலினை வாசியுங்கள்.

அவரை உலகம் புரிந்துகொள்ள வேண்டியது முன்னெப்போதையும்விட இன்று அவசியமாகிறது.

படிக்க :
♦ சென்னை புத்தகக் காட்சியில் புதுப் பொலிவுடன் கீழைக்காற்று !
♦ நூல் அறிமுகம் : கூலி உழைப்பும் மூலதனமும் | மனிதன் உருவானதில் உழைப்பின் பாத்திரம்

முகநூலில் – வில்லவன் ராமதாஸ்

காஷ்மீர் – பண்டிட் குடும்பத்தை காப்பாற்றிய சுபைதா பேஹம் !

ள் நடமாட்டம் இல்லாத அந்த சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார் அந்தப் பெண். அருகிலேயே அவளது கணவர். தூக்க முடியாமல் ஒரு பெரிய மூட்டையை தூக்கி தோளில் சுமந்தபடி, அந்தப் பெண்ணுக்கு துணையாக வந்து கொண்டிருந்தார்.

இவர்கள் இருவரைத் தவிர அந்த சாலையில் ஒரு ஈ, காக்கா கூட இல்லை .

காரணம் ஊரடங்கு உத்தரவு. கடைகள் எல்லாம் அடைக்கப்பட்டு விட்டன; போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டு விட்டது. வீட்டிலிருந்து யாராவது தெருவுக்கு வந்தால் விரட்டி அடித்தார்கள் போலீஸ்காரர்கள். காஷ்மீர் தலைநகரமான ஸ்ரீநகரில் கடந்த சில காலம் முன் நடந்தது இது. ( 2016 ஜூன் )

மாதிரிப் படம்

பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒரு முக்கியமான தலைவர் கொல்லப்பட்டிருந்தார். அதைத் தொடர்ந்து கலவரம் வெடித்தது. இந்துக்களும் முஸ்லிம்களும் மோதிக் கொண்டார்கள். உடனே போடப்பட்டது ஊரடங்கு உத்தரவு.

சந்தேகப்படும்படி யாராவது கண்ணில் பட்டால் உடனே சுட்டுத் தள்ள உத்தரவு !
ஆனாலும் அந்த கணவனும் மனைவியும், ஆள் அரவமற்ற சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்கள்.

தடுத்தி நிறுத்தினார்கள் போலீஸ்காரர்கள்: “யார் நீங்கள் ? எங்கே போகிறீர்கள் ?”

அந்தப் பெண் பதில் சொன்னார் : “ஜவகர் நகருக்கு ?”

“ஜவகர் நகருக்கா ? உங்கள் வீடு அங்கேயா இருக்கிறது ?”

“இல்லை. இங்கே ஸ்ரீநகரில்தான் இருக்கிறோம். ஒரு முக்கியமான வேலையாக ஜவகர் நகருக்கு போகிறோம்.”

“முக்கியமான வேலையா ? இந்த நெருக்கடியான நேரத்திலா ? அதுவும் நீங்கள் போகும் ஜவகர் நகர் கலவர பூமி. இந்த நேரத்தில் அங்கு போக உங்களுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது ? அது இருக்கட்டும். இங்கிருந்து ஜவகர் நகர் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது தெரியுமா?”

அந்த கணவன் சொன்னார் : “தெரியும். பல கிலோ மீட்டர்கள் போக வேண்டும்.”

“பஸ் ஆட்டோ எதுவும் ஓடவில்லை. எப்படி நடந்து போவீர்கள் அவ்வளவு தூரம் ? அதுவும் இவ்வளவு பெரிய மூட்டையை தூக்கிக் கொண்டு…”

“போய் விடுவோம்.” கணவனும் மனைவியும் சேர்ந்தே சொன்னார்கள்.

படிக்க:
♦ காஷ்மீரிகளின் நம்பிக்கையும் இந்தியாவின் துரோகமும் !
♦ குடியுரிமை வழங்கு, இல்லையெனில் எங்களைக் கொன்று விடு – இலங்கைத் தமிழ் அகதிகள் !

இவர்கள் பிடிவாதத்தை கண்டு கோபம் கொண்டார் அந்த போலீஸ்காரர் : “சந்தேகப்படும்படி யாராவது சாலையில் போனால் கண்டவுடன் சுடச் சொல்லி எங்களுக்கு உத்தரவு. அது தெரியுமா உங்களுக்கு ?”

“தெரியும்.”

“அது மட்டும் அல்ல. இந்துக்களும் முஸ்லிம்களும் அங்கங்கே மோதிக் கொண்டிருக்கிறார்கள். அந்த கலவரக்காரர்கள் கண்ணில் பட்டால் உங்கள் கதையையே முடித்து விடுவார்கள்.”

அந்தப் பெண் உறுதியாக சொன்னார் : “அதுவும் தெரியும். ஆனாலும் நாங்கள் போய் விடுவோம். போய்த்தான் ஆக வேண்டும். மிக மிக முக்கியமான வேலை.”

அந்தப் பெண் நடக்க ஆரம்பித்தார். கணவனும் மூட்டையை தூக்கி தோளில் வைத்துக் கொண்டு மனைவியை பின் தொடர்ந்தார் .

இடையில் பல இடங்களில் போலீஸ் அவர்களை மறித்தது. மீண்டும் மீண்டும் எச்சரித்தது. அதையும் மீறி அந்த கணவனும் மனைவியும் வெறிச்சோடிய அந்த சாலைகளில் பகல் முழுவதும் நடந்தார்கள் ; பல கிலோ மீட்டர் தூரத்தை கடந்தார்கள். ஒரு வழியாக ஜவஹர் நகரை அடைந்தார்கள்.

எல்லா வீடுகளின் கதவுகளும் இறுக்கமாக மூடப்பட்டிருந்தன. இந்த தம்பதிகள் தேடி வந்தது பண்டிட்ஜி வீடு. அது அடுத்த தெருவில்தான் இருக்கிறது. தெருவை நெருங்கினார்கள்.

அதற்கு முன் ஒரு கடுமையான குரல் அவர்களை அதட்டியது : “நில்லுங்கள்.”

திரும்பிப் பார்த்தார்கள். காவல்துறை அதிகாரியுடன் சேர்ந்து ஒரு பெரிய போலீஸ் பட்டாளமே அங்கு நின்றது.

“உங்களை கைது செய்யப் போகிறோம்.”

“எதற்காக ?”

“உங்கள் தோளில் இருக்கும் பெரிய மூட்டைக்குள் என்ன ஆயுதங்களை வைத்திருக்கிறீர்கள் ? அதை கீழே இறக்குங்கள் .”

இறக்கினார்கள். போலீஸ்காரர்கள் அதை எச்சரிக்கையுடன் திறந்து பார்த்தார்கள். திகைத்துப் போனார்கள். எல்லாமே உணவுப் பொருட்கள்.

“யாருக்கு இதை கொண்டு போகிறீர்கள் ?”

அந்தப் பெண் சொன்னார் :

“இந்த ஜவகர் நகரில் இருக்கும் பண்டிட் வீட்டுக்கு ! ஏன் என்பதையும் நீங்கள் கேட்காமலேயே சொல்லி விடுகிறேன்.”

நடந்ததை அப்படியே போலீசுக்கு எடுத்துச் சொன்னார் அந்தப் பெண்.

அதிகாலையிலேயே ஒரு போன் வந்தது ஸ்ரீநகரில் இருக்கும் இந்தப் பெண்ணுக்கு !

பேசியவர் ஜவகர் நகரில் இருக்கும் பண்டிட்டின் மனைவி. இருவரும் நெருங்கிய தோழிகள். ஒரே ஸ்கூலில்தான் டீச்சராக வேலை செய்கிறார்கள். அது சரி, போனில் பண்டிட்டின் மனைவி என்னதான் சொன்னார் ?

இதோ, அந்த பரிதாப கதை :

“ஹலோ, இங்கே ஜவகர் நகரில் நிலைமை ரொம்பவும் மோசமாக இருக்கிறது . கடைகள் அடைக்கப்பட்டு பலநாட்களாகி விட்டன. வெளியில் செல்ல முடியவில்லை. வீட்டிலும் உணவுப் பொருட்கள் எதுவுமே இல்லை. பாட்டியம்மா வேறு படுத்த படுக்கையாக இருக்கிறார்கள். தொலைபேசி வேறு வேலை செய்யவில்லை. இப்போதுதான் இணைப்பு கிடைத்திருக்கிறது. நான்கு நாட்களாக நாங்கள் யாரும் எதுவும் சாப்பிடவில்லை. உயிரை கையில் பிடித்தபடி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இன்றும் பட்டினியாகத்தான் இருக்க வேண்டும் போல தெரிகிறது. நாளை நாங்கள் உயிரோடு இருப்பது கூட சந்தேகமாக…” பேசிக் கொண்டிருக்கும்போதே போன் கட் ஆகி விட்டது.

சுபைதா பேஹம் – பண்டிட் குடும்பத்தாருடன்.

பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக தொலை தொடர்பு இணைப்புகள் மீண்டும் துண்டிக்கப்பட்டு விட்டன. இனி அவர்களோடு பேசுவது இயலாத காரியம். இங்கே ஸ்ரீநகரில் இந்தப் பெண்ணும், அவரது கணவரும் தவித்தார்கள்; துடித்தார்கள். “நான்கு நாட்களாக பட்டினியா ? அந்த பண்டிட்டின் குடும்பத்துக்கு எப்படிஉதவுவது ?”

ஒரு நொடி கூட யோசித்து நேரத்தை கடத்தாமல் உடனே ஜவகர் நகருக்கு புறப்பட்டு விட்டார்கள் கணவனும் மனைவியும்.

வீட்டில் இருந்த கோதுமை, அரிசி, பருப்பு, காய்கறிகள், மசாலா பொருட்கள். எல்லாவற்றையும் பெரிய மூட்டையாக கட்டி தன் கணவரின் தலையில் வைத்தார் அந்தப் பெண். பஸ், ஆட்டோ எதுவும் இல்லாததால், பல கிலோ மீட்டர்கள் நடந்தே வந்து… “இப்போது ஜவகர் நகருக்கு வந்திருக்கிறோம்” இப்படி போலீஸ்காரர்களிடம் பொறுமையாக சொல்லி முடித்தார் அந்தப் பெண்.

படிக்க:
♦ காஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை!
♦ ஆர்.எஸ்.எஸ்-க்கு வலுசேர்க்கும் இசுலாமிய அமைப்புகளின் கவனத்திற்கு !

கலங்கி விட்டார் அந்த காவல்துறை அதிகாரி : “ஒரு நட்புக்காக உயிரை பணயம் வைத்து பல கிலோமீட்டர்கள் நடந்தே வந்திருக்கிறீர்கள். அதுவும் இந்த மூட்டையை சுமந்து கொண்டு ! பாராட்டுகிறேன் அம்மா. சரி, உங்கள் குடும்ப நண்பர் பண்டிட் வீடு எங்கே இருக்கிறது ?”

“அடுத்த தெருவில்தான்.”

“வாருங்கள். நானே பத்திரமாக வீடு வரை வருகிறேன்.”

அந்த காவல்துறை அதிகாரியே சென்று பண்டிட் வீட்டு கதவை தட்டினார் .
கதவு மெல்ல திறந்தது. உள்ளே இருந்து வந்த பண்டிட்டும் அவரது மனைவியும் , இந்த தம்பதிகளை பார்த்தவுடன் ஆச்சரியத்தில், “ அட கடவுளே, இது என்ன ? இவ்வளவு தூரம் எப்படி வந்தீர்கள் ? முதலில் உள்ளே வாருங்கள்.”

தோழிகள் இருவரும் கட்டித் தழுவிக் கொண்டார்கள் ; கண்ணீர் வடித்தார்கள்.

வாசலில் நின்ற காவல்துறை அதிகாரி கூட தன் கண்களை துடைத்துக் கொண்டார் : “சரியம்மா, முதலில் சாப்பாடு தயார் செய்து சாப்பிடுங்கள். நான் வருகிறேன்.”

“நன்றி சார்.”

“பை தி பை, நான் உங்கள் பெயரை தெரிந்து கொள்ளலாமா மேடம் ?”

அந்த ஸ்ரீநகர் பெண் சிரித்தபடி சொன்னார் : “சுபைதா பேகம்.”

ஆம். இந்து முஸ்லிம் கலவரம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த அந்த நேரத்தில், பசியால் துடித்துக் கொண்டிருந்த பண்டிட் என்ற ஒரு இந்து மனிதரின் குடும்பத்துக்கு, பல கிலோமீட்டர் தூரம் நடந்து கடந்து, தேடிச் சென்று உணவு கொடுத்தது சுபைதா பேகம் என்ற ஒரு முஸ்லிம் குடும்பம்தான் !

இது கதையல்ல. ‘இந்தியா டுடே’யில் வந்த செய்தி. இப்படிப்பட்ட மனித நேயம், மத நல்லிணக்கம் கொண்ட மனிதர்கள் இருக்கும்வரை, அந்த ஆண்டவனே வந்தால் கூட இந்தியாவில் மதப் பிரிவினையை உருவாக்க முடியாது.

வாழ்த்துக்கள்
எங்கள் இனிய சகோதரி
சுபைதா பேகம் அவர்களே !

நன்றி : John Durai Asir Chelliah ஃபேஸ்புக் பதிவிலிருந்து…

செய்தி ஆதாரம் : இந்தியா டுடே

disclaimer

ஜனவரி 8 – பொது வேலை நிறுத்தம் : தமிழகமெங்கும் பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் !

ஜனவரி 8 2020, வேலை நிறுத்தத்தை அரசியல் போராட்டமாக முன்னெடுப்போம் ! – புதுச்சேரியில் தொழிற்பேட்டைப் பிரச்சாரம்

மோடி அரசின் ஆறாண்டு கால ஆட்சியில் நீம் (NEEM), FTE திட்டங்களை அமல்படுத்தி தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை, பணி நிரந்தர உரிமைகளை ஒழித்துக் கட்டியும், தற்போது; தொழிலாளர் சட்டத் திருத்தங்களை அமல்படுத்தி வருவதன் மூலமும் ஒட்டுமொத்த தொழிலாளர் சட்டங்களையும் ஒழித்து கார்ப்பரேட்டுக்களுக்கு அடிமைச் சேவகம் செய்து வருகிறது.

பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, வறுமை, பசி, பட்டினிச் சாவுகள் என மக்கள் கொத்து கொத்தாக மடிகின்றனர். மறுபுறம், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள், தலித் – இஸ்லாமியர் மீதான கும்பல் படுகொலைகள் என சமூகமே அமைதியற்று உள்ளது.

‘மயான அமைதி’யை நிலைநாட்டுவதற்காக, ஊபா, என்.ஐ.ஏ. என ஆள்தூக்கி பாசிச சட்டங்களையும், குடி உரிமையைப் பறிக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் வரை மக்கள் எதிர்ப்பையும் மீறி, ஜனநாயக விரோதமான முறையில் மக்கள் மீது திணித்து வருகிறது.

இவைகளை எதிர்த்து நாடெங்கிலும் பல்வேறு வகைகளில் நடத்தப்படும் மாணவர் – தொழிலாளர் – வணிகர் உள்ளிட்ட உழைக்கும் மக்களின் போராட்டங்களை கார்ப்பரேட் காவி பாசிசத்திற்கு எதிரான போராட்டமாக மாற்றும் வகையில், ஜனவரி 8 அகில இந்திய நிறுத்தத்தை அரசியல் எழுச்சிக்கான போராட்டமாக முன்னெடுக்க வேண்டியுள்ளது. அதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் புதுச்சேரி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக, முக்கிய தொழிற்பேட்டையான திருபுவனை தொழிற்பேட்டை முழுவதும் வேலை நிறுத்தத்தை வலியுறுத்தி; தொழிலாளர்களை அணிதிரட்டும் வகையிலும்; அனைத்து நிறுவன தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கு கொள்ள வைக்கும் வகையிலும், தொழிற்பேட்டையில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

தொழிற்பேட்டையில் வேலை நிறுத்தத்தை அமல்படுத்தக் கூடாது என்ற அடிப்படையில் நிறுவனங்களை இயக்க ஆலை நிர்வாகங்கள் முயற்சி செய்தன. ஆனால், நாம் வேலை நிறுத்தத்தை வலியுறுத்தி ஏற்கனவே பல்வேறு ஆலைத் தொழிற்சங்கத்தினரிடமும், சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யூ.சி, ஏ.ஐ.சி.சி.டி.யூ. தொழிற்சங்கங்களை ஒருங்கிணைத்தும் பேசியிருந்தோம். இதனால் பெரும்பாலான நிறுவனங்கள் செயல்படவில்லை. சில நிறுவனங்கள், தொழிலாளர்களை காலை 06.00 மணிக்கே வேன்களில் அழைத்து வந்து திருட்டுத்தனமாக இயக்கினர்.

இதற்கு முன்னர், இது போன்ற வேலை நிறுத்தங்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் அனைத்து நிறுவனங்களையும் வெளிப்படையாகவும், பகிரங்கமாகவும் அனைத்து ஷிப்டுகளையும் முழு அளவில் இயக்கி வந்தனர். ஆனால், சென்ற 2018 வருடம் இதே நாளில் நடந்த வேலை நிறுத்தத்தில் பல நிறுவனங்கள், யாருக்கும் தெரியாமல் தொழிலாளர்களை அழைத்து வந்தும், கேட்டில் இன்று விடுமுறை என அறிவிப்புப் பலகையை வைத்தும் ஆலைகளை இயக்கியது.

ஆனால், இந்த வருடம் பல்வேறு மாற்றுக் கட்சி தொழிற்சங்கங்களை ஒருங்கிணைத்துப் பேசி, இந்த வேலை நிறுத்தத்தின் அவசியத்தை விளக்கும் வகையில் அரங்கக் கூட்டம் நடத்தியதன் விளைவாகவும், இந்தப் பகுதியில் வேலை நிறுத்தத்தைப் பற்றி பிற சங்கங்களையும் பேச வைத்ததன் விளைவாகவும் ஏற்பட்ட நெருக்கடிகளின் காரணமாக பெரும்பான்மையான நிறுவனங்கள் இயங்கவில்லை.

எனினும், ஒரு சில ஆலைகளில் தொழிலாளர்களை திருட்டுத்தனமாக அடைத்து வைத்து இயக்குவதைக் கண்டிக்கின்ற வகையிலும், இந்த வேலை நிறுத்தத்தில் தொழிலாளர்கள் கலந்து கொள்ள வேண்டிய அவசியத்தை விளக்கும் வகையிலும் திருபுவனை தொழிற்பேட்டைப் பகுதியில் பேரணியாகச் சென்று பிரச்சாரம் மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

அதன் அடிப்படையில் நமது பு.ஜ.தொ.மு. தலைவர் தோழர் சரவணன் தலைமையில், திருபுவனை அலுவலக வாயிலிலிருந்து பேரணி துவங்கியது. பிரைட் நிறுவனத்தின் வாயிலில் முழக்கமிட்டு பிரச்சாரம் செய்ய ஆரம்பித்த சில நிமிடங்களில் அந்தப் பகுதி போலிசு வந்தது. அனுமதி வாங்கவில்லை என்றும், தொழிற்பேட்டைக்கு வெளியில் அமைதியான முறையில் பேசிவிட்டு கலையுமாறு பேசியது போலிசு.

இன்று அகில இந்திய வேலை நிறுத்தம் எனவும், தொழிலாளர் மத்தியில் பேச அனுமதி தேவை இல்லை எனவும், நாங்கள் மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு இல்லாத வகையில் அமைதியான முறையில் பிரச்சாரம் செய்வதாகச் சொன்னோம். எனினும், தனக்கு மேலிடத்திலிருந்து அழுத்தம் வந்து கொண்டிருப்பதாகச் சொல்லி உடனடியாகக் கலையுமாறும், இல்லையெனில் கைது செய்வதாகவும் மிரட்டியது. தொழிலாளர்களிடம் நேரடியாகச் சென்று உங்கள் சங்கம் சொல்வதைக் கேட்டு அவர்கள் பின்னால் போக வேண்டாம் எனவும், மீறிப் போனால் பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டி வரும் எனவும் மிரட்டிப் பார்த்தது.

தொழிலாளர்கள் அதைப் பொருட்படுத்தாமல், அடுத்த பிரச்சாரத்திற்கு நகர்ந்தனர். தொடர்ச்சியாக, பிப்டிக் தொழிற்பேட்டை நுழைவாயிலில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. அதற்குள் வழியில் வந்த ஒரு தனியார் பள்ளியின் பேருந்தை மடக்கி வைத்துக் கொண்டு உடனடியாக கைது செய்வதாக அறிவித்து நம்மை, தொழிற்பேட்டை உள்ளே செல்ல விடாமல் தடுத்து அங்கேயே கைது செய்தது போலிசு.

கைது செய்து மண்டபத்தில் அடைத்த பிறகு, தொழிலாளர்களை ஒருங்கிணைத்து இந்தப் போராட்டத்தின் நோக்கத்தையும், அவசியத்தையும் விளக்கிப் பேசப்பட்டது. இதற்கிடையில், திருபுவனை அருகிலுள்ள மதகடிப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்ட ஏ.ஐ.டியூசி, விசிக, ஐ.என்.டி.யூ.சி. உள்ளிட்ட தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்களையும் அதே மண்டபத்திற்குக் கொண்டு வந்தது போலீசு.

நமது புரட்சிகர பாடல்களுடன், பிற கட்சியினரின் உரைகள் நிகழ்த்தப்பட்டன. இதற்கிடையில் போலிசின் வழக்கமான நடைமுறைகளை முடித்தவுடன், அனைவரையும் விடுவிப்பதாக முறையாக அறிவிக்காமல், அங்கு வெளியில் நின்றிருந்த தோழர்களிடம் அறிவித்து, கூட்டத்தை கலைக்க முற்பட்டது. நாம் இதை உணர்ந்து, போலிசின் நரித்தனத்தை அம்பலப்படுத்திப் பேசி முறையாக தோழர்கள் மத்தியில் அறிவித்து போராட்டம் முடிக்கப்பட்டது. இப்போராட்டத்தின் ஆரம்பத்திலிருந்தே, நம்மை தொழிற்பேட்டையிலிருந்து அப்புறப்படுத்தி பிரச்சாரத்தை முடக்கிவிட வேண்டும் என்பதையே போலிசு குறியாகக் கொண்டிருந்தது. எனினும், தொடர்ச்சியாகப் போராடி பிரச்சாரங்களை கொண்டு சென்றதன் விளைவாக தொழிலாளர் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்பத்த முடிந்தது.

இது இந்தப் பகுதியில் நடத்தும் போராட்டங்களின் அடுத்த கட்ட வளர்ச்சியாக மாறி உள்ளது. இதன் மூலம் அரசு பாசிசமயமாகி வரும் இன்றைய அரசியல் கால கட்டத்தில், தொழிற்சங்க கூட்டமைப்புக்களை உருவாக்க வேண்டும்.

மேலும், மக்கள் போராட்டங்களை அரசியல் அதிகாரத்திற்கான எழுச்சிகளாக வளர்க்க வேண்டியதும் இன்றைய உடனடி அரசியல் கடமையாகும்.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
புதுச்சேரி, தொடர்புக்கு: 95977 89801.

***

தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் !

“ஜனவரி 8, 2020 வேலைநிறுத்தத்தை அரசியல் போராட்டமாக முன்னெடுப்போம்!” என்கிற முழக்கத்தின் கீழ் தமிழகம் முழுவதும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டது.

திருவள்ளூர் (மேற்கு )

திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் ஆவடி மாநகராட்சி அருகில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் திருவள்ளூர் மேற்கு மாவட்டத் தலைவர் தோழர் சரவணன் தலைமை உரையாற்றினார், மாநில குழு உறுப்பினர் தோழர் முகிலன் கண்டன உரையாற்றினார்

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

திருவள்ளூர் (கிழக்கு)

திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தில் கும்முடிப்பூண்டி தபால் நிலையம் எதிரில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் தோழர் விகேந்தர் தலைமை தாங்கினார். மாநில இணைச்செயலாளர் தோழர் சுதேஷ்குமார் கண்டன உரையாற்றினார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

கோவை

கோவை மாவட்டத்தில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் தோழர் தேவராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் தோழர் சி.சரவணகுமார், கொவை மண்டல தேசிய பஞ்சாலை தொழிலாளர் சங்க இணைச்செயலாளர் தோழர் ஜெகநாதன், கோவை மாவட்ட பொறுப்பாளர் தோழர் லோகநாதன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

வேலூர்

வேலூர் மாவட்டத்தில், மாவட்ட செயலாளர் தோழர் சுந்தர் தலைமையில் மாநில தலைவர் தோழர் அ.முகுந்தன் கண்டன உரையாற்றினார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

ஓசூர்

ஓசூர் மாவட்ட ரயில் நிலையம் அருகில் மாவட்ட செயலாளர் தோழர் சங்கர் தலைமையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் தோழர் பரசுராமன் கண்டன உரையாற்றினார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்த இந்த நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை அதன் உண்மையான உள்ளடகத்தில் இருந்து அரசியல் போராட்டமாக முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி நடத்தியுள்ள இந்த ஆர்ப்பாட்டங்கள் தொழிலாளர் மத்தியில் புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளது.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
தமிழ்நாடு – புதுவை

குடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் ! புதிய கலாச்சாரம் ஜனவரி 2020 வெளியீடு

மோடி அரசு டிசம்பர், 2019-ல் கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஒட்டுமொத்த இந்தியாவுமே கிளர்ந்தெழுந்துள்ளது. இச் சட்டத்தை முசுலீம் மக்கள் மட்டுமே எதிர்ப்பார்கள், இரும்புக்கரம் கொண்டு அடக்கிவிடலாம் என மனப்பால் குடித்துக் கொண்டிருந்த சங்க பரிவாரத்தின் கனவில் மண்ணள்ளிப் போட்டது இந்த மக்கள் எழுச்சி.

“தற்போதைய குடியுரிமை திருத்தச் சட்டத்தாலும், தேசிய குடிமக்கள் பதி வேடு திட்டத்தாலும், சட்டவிரோதமாகக் குடியேறிய முசுலீம்களுக்குத்தான் பிரச்சினை, இந்திய முசுலீம்களுக்குப் பிரச்சினை இல்லை’ என சங்க பரி வாரத்தினர் கூறிவருகின்றனர். ஆனால் உண்மையில் இவை இந்தியாவைச் சேர்ந்த பெரும்பான்மை இந்துக்களையும் பாதிக்கக் கூடியவை என்பதை நிரூபித்திருக்கிறது அசாம்.

அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் அடிப்படையில் குடி யுரிமை அற்றவர்களாக்கப்பட்ட 19 லட்சம் பேரில் சுமார் 12 லட்சம் பேர் இந்துக்கள் என்பதும் அதிலும் பெரும்பான்மையினர் இந்திய வம்சாவளி யைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவரை அசாமில் மட் டும் நடைமுறைப்படுத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்தப் போவதாக அறிவித்திருக்கிறார் அமித்ஷா.

தற்போது இந்தியா எங்கும் மக்களின் கடும் எதிர்ப்பைச் சந்தித்த பின்னர், “தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை இந்தியா முழுவதும் அமல்படுத் துவது குறித்து எதுவும் முடிவு செய்யப்படவில்லை என பொய்யுரைத்தார் மோடி: குடியுரிமை திருத்தச் சட்டத்தில் மாற்றம் செய்யத் தயாராக இருப்ப தாக அறிவித்தார் அமித்ஷா .

இந்த அறிவிப்புகள் தற்போதைக்கு பிரச்சினையைத் தள்ளிப் போடுவதற் காகவே வெளியிடப்பட்டிருக்கின்றன என்பது சங்க பரிவாரத்தின் ‘நேர்மை’ குறித்த வரலாற்றைப் புரட்டிப் பார்த்தாலே தெரிந்துவிடும்.

தனிப் பெரும்பான்மையுடன் இரண்டாவது முறையாக ஆட்சியில் அமர்ந் ததும், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து பறிப்பு, பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மோசடியான தீர்ப்பு, தேசிய குடிமக்கள் பதிவேடு. குடியுரிமை திருத்தச் சட் டம் ஆகியவற்றின் மூலம் இந்தியாவை சட்டப் பூர்வமாகவே இந்து ராஷ்டிர மாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது பாஜக.

ஆதார் தொடங்கி தற்போதைய குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் இனி வரவிருக்கும் மரபணு அடையாள மசோதா வரையில் அனைத்தும் நம்மை பார்ப்பனிய ஒடுக்குமுறை மற்றும் ஏகாதிபத்திய சுரண்டலின் கீழ் இருத்தி வைக்கவும் அவற்றுக்கு எதிராகத் திரண்டெழாத வகையில் நம்மைக் கண் காணிக்கவுமே கொண்டுவரப்பட்டிருக்கின்றன என்பதைத் தரவுகளோடு அம்பலப்படுத்துகிறது இந்த நூல்.

தோழமையுடன்,
புதிய கலாச்சாரம்.

***

குடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் ! – புதிய கலாச்சாரம் ஜனவரி – 2020 நூலை வாங்குவதற்கு ‘Add to cart’ பட்டனை அழுத்தவும் ! உள்ளூரில் அச்சு நூல் மற்றும் மின்னூல் வாங்குவதற்கான பட்டன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் உள்ளவர்கள் அச்சுநூல் வாங்குவதற்கான வசதி விரைவில் ஏற்படுத்தப்படும் .

அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

அச்சுநூல் அல்லது மின்னூல் வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

மின்னிதழுக்கான பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

அச்சுநூலுக்கான பணம் அனுப்பிய பிறகு தாங்கள் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக இதழ் அனுப்பி வைக்கப்படும்.

“ குடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் ! ” நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
  • குடியுரிமைச் சட்டத் திருத்தம்: இந்து ராஷ்டிரத்தை நோக்கிய அடுத்த பாய்ச்சல்!
  • தேசிய குடிமக்கள் பதிவேடு: ஒரு கேடான வழிமுறை!
  • ஆதார் அடையாள அட்டை: மக்களை உளவு பார்க்கும் ஏற்பாடா?
  • அமித் ஷாவின் குடியுரிமை மசோதா இந்து ராஷ்டிரத்துக்கானது!
  • குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை திரும்பப்பெறு!
  • தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விடுபட்டவர்களின் உயிரி மாதிரிகள் சேகரிப்பு!
  • முஸ்லீம்களை மட்டுமல்ல இந்துக்களையும் செல்லாக்காசாக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்!
  • ஆதார் கண்காணிப்பு: மக்களை அச்சுறுத்தும் சர்வாதிகார அரசு அகண்ட பாரத கனவும் 40 இலட்சம் அசாமிய அகதிகளும்!
  • ஆதார்: மாட்டுக்குச் சூடு! குடிமகனுக்கு டிஜிட்டல் கோடு !!
  • ‘அறிவிக்கப்படாத அவசரநிலை’: மாணவர்கள் மீது காவி போலீசின் தாக்குதல்!
  • அசாம் – தேசிய குடிமக்கள் பட்டியல் குறிப்புகள்: முஸ்லீம்களுக்கு எதிரான சதி!
  • சமூக வலைத்தள கணக்குகளுக்கும் ஆதார்! மோடியின் அடுத்த அடி!
  • அசாம்: 51 உயிரைக் காவு வாங்கிய தேசிய குடிமக்கள் பதிவு!
  • அசாமைப் போல் கர்நாடகத்திலும் குடியேறிகள் தடுப்பு முகாம்!
  • இந்த முறை உங்களால் எங்களைத் தடுக்க முடியாது!
  • குடியுரிமை சட்டத் திருத்தம்: ஹிட்லரின் இன அழிப்புத் திட்டம்!
  • நாட்டு மக்களை கண்காணிக்க வரும் மரபணு அடையாள மசோதா!

பக்கங்கள் : 80
விலை ரூ. 30.00

ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400
ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)

இணையம் மூலமாக ஆண்டுச் சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு) $27


Payumoney மூலம்(உள்நாடு) ரூ.400

 

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டுச் சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். நேரடியாக சந்தா அனுப்புவோர் கண்ணையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நெட் பேங்கிங் மூலமாகவும் அனுப்பலாம்.

வங்கி விவரங்கள் :
KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

தொலைபேசி:
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்:
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

Price range: ₹1,500.00 through ₹6,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

____________

புதிய கலாச்சாரத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

 

தை முதலே தமிழ்ப் புத்தாண்டு : வி.இ.குகநாதன்

மிழர்களின் புத்தாண்டு தையிலா அல்லது சித்திரையிலா என்ற ஒரு வழக்காடல் நீண்ட காலமாகவே நடைபெற்று வருகின்றது. அது தொடர்பான ஒரு பார்வையாகவே இக் கட்டுரை அமைகின்றது.

முதலில் தமிழர்களிடம்  ஆண்டு  என்றொரு  காலக்கணிப்பு முறை இருந்ததா?  எனப் பார்ப்போம். ‘யாண்டு’ என்ற பழந்தமிழ்ச் சொல்லே மருவி ஆண்டு என வழங்கலாயிற்று. யாண்டு என்ற சொல்லானது தொல்காப்பியத்தின் முதற்பொருளான நிலம், பொழுது ஆகிய இரண்டையும் குறிக்கும். ‘யாண்டு’ என்ற சொல் இடம்பெற்ற சில பாடல்களைப் பார்ப்போம்.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.” (குறள் 4)

இப்போது காலத்தைத் தெளிவாகக் குறிக்கும் யாண்டு என்ற சொல் இடம்பெற்ற சங்ககாலப் பாடலைப் பார்ப்போம்.

பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன
நீர் உறை மகன்றிற் புணர்ச்சி போலப்’ (குறு:57:1)

இப் பாடலில் ‘யாண்டு கழிந்தன்ன’ என்பது ‘அக்காலம் பல யாண்டுகள் கடந்தாற் போன்ற’ என்ற பொருளில் இடம்பெறுகின்றது. இந்த ஆண்டு தற்போதைய நாட்காட்டி ஆண்டு போன்றது (365.2425 days) என நான் கூறவரவில்லை, ஏனெனில் தற்போதைய நாட்காட்டி ஆண்டு (Gregorian calendar) நடைமுறைக்கு வந்தது சில நூற்றாண்டுகளிற்கு முன்புதான்.

ஏதோ ஒரு வகையான காலப்பகுதியினை யாண்டு எனச் சங்க காலத் தமிழர்கள் அழைத்துள்ளனர் என்பதுதான் இங்கு தெளிவாகின்றது. எனவே தமிழர்களிற்கு என ஒரு ஆண்டுக் கணிப்பு இருந்திருந்திருப்பின், அந்த ஆண்டிற்கு ஒரு தொடக்கமும் இருந்திருக்கும்.

யாண்டின் தொடக்கமாக தை மாதமே இருந்துள்ளது என்பதற்கு நேரடித் தரவுகள் சங்ககாலப் பாடல்களில் காணமுடியவில்லை என்றபோதும், அதற்கான இரு சான்றுகளை உய்த்துணரலாம்.

முதலாவதாக : தை மாதமளவிற்கு வேறு எந்தவொரு மாதமும் சங்ககாலப் பாடல்களில் சிறப்புப்படுத்தப்படவில்லை. (தை மாதச் சிறப்பின் 10% அளவிற்கு கூட வேறு எந்த மாதமும் சிறப்புப் பெறவில்லை). “தைத்திங்கள் தண்கயம் படியும்” (நற்றிணை 80) , “தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” (குறுந்தொகை 196) என்பன உட்படப் பல சங்க காலப்பாடல்கள் தையினைச் சிறப்பித்துக் கூறுகின்றன.

இரண்டாவதாக : தை என்ற சொல்லிற்குச் சேர்த்தல் என்ற பொருளும் உண்டு (இரண்டு துணிகளை இணைத்து தைத்தல்). இங்கு ‘தை’ என்பது இரண்டு யாண்டுகளை (காலப்பகுதிகளை) இணைக்கின்றது. இவ்விரு காரணங்களையும் அடிப்படையாகக் கொண்டே தை மாதமே ஆண்டின் தொடக்கமாகவிருந்திருக்கும் என உய்த்தறியலாம்.

இதனைவிட, தை மாதமே ஆண்டின் தொடக்கமாகக் கொள்ள இயற்கைசார்ந்த இரு காரணங்களும் உண்டு. அவையாவன வருமாறு.

  1. அறுவடைக்காலம் : செல்வ வளம்பொருந்திய காலமே புத்தாண்டாகக் கொண்டாடப் பொருத்தமாகவிருந்திருக்க முடியும். (இன்று பலர் உழவுத்தொழிலில் தங்கியிராத நிலையில், இதன் எச்சமாகவே பொங்கல் மிகைப்பணம் (Bonus) அரசால் வழங்கப்படுகின்றது. அன்று அந்த வாய்ப்பு இல்லாமையால், அறுவடைக்காலமே பொருத்தமானதாகும்).
  2. காலநிலை: தை மாதத்தின் தண்மை (குளிர்மை) பல பாடல்களில் குறிப்பிடப்படுகின்றது. இவ்வாறான ஒரு மகிழ்ச்சியான காலப்பகுதியே யாண்டின் தொடக்கமாகக் கொள்ளப் பொருத்தமானதாகும். (மாறாக தாயகத்தில் சித்திரையில் கொளுத்தும் வெயிலே சுட்டெரிக்கும் காலப்பகுதி பொருத்தமானதாகக் காணப்படமாட்டாது.)

படிக்க :
இந்திய நாத்திகமும் மார்க்சியத் தத்துவமும் | நா. வானமாமலை – புதிய தொடர்
♦ ‘தை’ரியமாகச் சொல் நீ தமிழறிஞன் தானா?

மேலும் எளிய மக்களின் வழக்காற்று மொழிகளிலும் கூட பழைய வரலாற்று எச்சங்களைக் காணலாம். அந்த வகையில், “தை பிறந்தால் வழி பிறக்கும் , “தீய்ந்த தீபாவளி வந்தாலென்ன? காய்ந்த கார்த்திகை வந்தாலென்ன? மகா ராசன் பொங்கல் வரவேண்டும்” என்பன போன்ற சொல்லடைகளும் தை மாதத்தின் முதன்மையினைக் காட்டுகின்றன.

அண்மையில் இராமநாதபுரம் கீழக்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றும் சில நூற்றாண்டுகளிற்கு முன்னர்வரைத் தையே புத்தாண்டாகக் கருதப்பட்டதனைக் காட்டுகின்றது. வரலாற்று தொல்லியல் ஆய்வாளர் விஜயராமு 300 ஆண்டுகளுக்கு முன்பு வரை தை மாதமே தமிழ் ஆண்டின் முதல் மாதமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கலாம் என்பதற்குச் சான்றாக இந்த பழங்கால கல்வெட்டு உள்ளது என்கின்றார் (சான்று – தினத்தந்தி 03-01-2019).

சித்திரை மாதக் கணிப்பீடு :

சித்திரைப் புத்தாண்டு கணிப்பீட்டு முறையானது சாலிவாகணன் என்ற அரசனால் (சிலர் கனிஷ்கன் என்கின்றனர்) கி.பி 78-ம் ஆண்டளவில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது எனக் கூறப்படுகிறது. இவ்வாறு அக் காலத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்ட போதும், மக்களிடம் அந்தப் புத்தாண்டு வரவேற்புப் பெற்றிருக்கவில்லை என்பதனையே மேற்கூறிய கல்வெட்டுச் சான்றும், நாம் ஏற்கனவே பார்த்த வழக்காற்றுச் சான்றுகளும் காட்டுகின்றன.

கடந்த இரு நூற்றாண்டுகளிலேயே மதப் புராணங்கள் மூலம் சித்திரை, புத்தாண்டாக எளிய மக்களிடம் திணிக்கப்பட்டுள்ளது. இதற்காகக் கூறப்பட்ட புராணக்கதை வேடிக்கையானது. அபிதான சிந்தாமணி என்ற நூலில் 1392-ஆம் பக்கத்தில் கீழ்வருமாறு குறிப்பிடப்படுகின்றது.

ஒருமுறை நாரதமுனிவர், ‘கடவுள்’ கிருஷ்ணனை “நீங்கள் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு பெண்ணையாவது தரக்கூடாதா?” என்று கேட்டாராம். அதற்குக் கிருஷ்ணன், “என்னுடன் இல்லாமல்  வீட்டில் தனியாய் இருக்கும் பெண்ணை நீ எடுத்துக்கொள்” என்றாராம். இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தார். ஆனால் எங்கும் கிருஷ்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால், நாரதர் மீண்டும் கிருஷ்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மோகம் கொண்டு அவரை நோக்கி “நான் உங்களிடமே பெண்ணாக இருந்து உடலுறவு கொள்ள விரும்புகிறேன்” என்றார்.

கிருஷ்ணன் நாரதரை “யமுனையில் குளித்தால் பெண்ணாய் மாறுவாய்” எனச் சொல்ல, நாரதர் அவ்வாறே செய்து, ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினாராம். பின் ‘கடவுள்’ கிருஷ்ணனுடன் அறுபது வருடம் உடலுறவு கொண்டு, அறுபது மகன்களைப் பெற்றார். அவர்கள் பிரபவ தொடங்கி அட்சய முடிய என பெயர் பெற்றார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வருடமாகும் வரம் பெற்றார்கள். இதுதான் அந்தப் புராணக்கதை.  இதில் மேலும் வேடிக்கை என்னவென்றால் இவ் அறுபது ஆண்டுகளில் 15 ஆண்டுகள் சூத்திர ஆண்டுகளாம் (ஆண்டுகளில் கூட வர்ணப் பிரிவினை).

வேறு சிலர் வியாழனை அடிப்படையாகக்கொண்ட 60 ஆண்டுக் கணிப்பீட்டு முறையினையே, பிற்காலத்தில் புராணம் ஆக்கிவிட்டார்கள் எனக் கூறுவதுமுண்டு. இராசியினை அடிப்படையாகக் கொண்டு சோதிட விளக்கம் கூறுவோரும் உண்டு.

இன்னொரு சாரார் தொல்காப்பியப் பாடல் ஒன்றினை அடிப்படையாகக் கொண்டு ஆவணியினை புத்தாண்டாகக் கருதுவோருமுண்டு (இன்றும் சிங்க மாதமே (ஆவணி) மலையாளப் புத்தாண்டு : கொல்லமாண்டு). இத்தகைய குழப்பங்களைத் தீர்ப்பதற்காக 1935 -ம் ஆண்டில் தமிழறிஞர்கள் இணைந்து ஒரு தீர்வு கண்டிருந்தார்கள்.

படிக்க :
ஜே.என்.யூ : ஏ.பி.வி.பி. குண்டர்கள் வெறியாட்டம் ! கொலைவெறி தாக்குதல்கள் !
♦ சென்னை புத்தகக் காட்சியில் புதுப் பொலிவுடன் கீழைக்காற்று !

குழப்பத்திற்கான அறிஞர்களின் தீர்வு :

இக் குழப்பத்திற்கு தீர்வு காணும்பொருட்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 1935 -இல் மறைமலை அடிகளார் தலைமையில் பல அறிஞர்கள் ஒன்றுகூடி தை முதலே தமிழ்ப் புத்தாண்டு என முடிவு செய்திருந்தனர். பின்பு அதேபோன்று திருவள்ளுவரின் பிறப்பினை அடிப்படையாகக் கொண்டு ஆங்கில ஆண்டுடன் 31 ஆண்டுகளைக்கூட்டி திருவள்ளுவர் ஆண்டு தமிழாண்டாகக் கொள்வது எனவும் அறிவித்திருந்தார்கள். இவ்வாறு  முடிவு செய்தவர்களில் தலையான தமிழ் அறிஞர்கள் பலர் இருந்தார்கள். அவர்களில் சிலர் வருமாறு.

  • தமிழ்க்கடல் மறைமலை அடிகள்,
  • தமிழ்த் தென்றல் திரு.வி. கலியாணசுந்தரனார்,
  • தமிழ்க்காவலர் கா. சுப்பிரமணியபிள்ளை,
  • சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை,
  • நாவலர் நா.மு. வேங்கடசாமி நாட்டார்,
  • நாவலர் சோமசுந்தர பாரதியார்,
  • முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம்,
  • பேராசிரியர் சா. நமச்சிவாயனார்,
  • உ.வே. சாமிநாத ஐயர்

தமிழில் புலமையும் காதலும் கொண்ட இந்த தமிழறிஞர்கள் சமய வேறுபாடுகளையும் கொள்கை மாறுபாடுகளையும் மறந்துவிட்டு; ஆரியக் கலப்பையும் வடமொழிக் குறுக்கீட்டையும் உதறிவிட்டுத் தமிழ் ஒன்றையே முதன்மைப்படுத்தி முறையான ஆய்வியல் பார்வையோடு ‘தை முதலே தமிழ்ப் புத்தாண்டு’ எனும் அறிவிப்பை வெளியிட்டனர்.

இங்கு டாக்டர் மு.வ கூறுகின்றார் “முற் காலத்தில் வருடப் பிறப்பு, சித்திரை முதல் நாளாக இருந்ததில்லை. தை முதல்நாள் தான் வருடப் பிறப்பாகப் பெரியோர்கள் கொண்டாடினார்கள்” ( சான்று – 1988 கோலாலம்பூர் பொங்கல் மலர், மு.வ. கட்டுரை மீள் பதிப்பு ). இறையன்பர்களான மறைமலை அடிகள், திரு. விக, உ.வே.சா போன்றோர் முதல் இறை மறுப்பாளரான பெரியார் ஈ.வெ.ரா வரை தமிழின் பெயரில் ஒன்றுபட்ட வேளை அது.

தமிழ்நாடு அரசு, இதனை ஏற்றுக் கொண்டு 1972 முதல் அரசுப் பயன்பாட்டிலும் ஆவணங்களிலும் திருவள்ளுவர் ஆண்டினை நடைமுறைப்படுத்தி வருகிறது.  இருந்தபோதிலும், 2006-2011 இடைப்பட்ட கலைஞர் ஆட்சியிலேயே ‘தை முதல் தமிழ்ப் புத்தாண்டு’ ஆக அதிகாரபூர்வமாகக் கடைப்பிடிக்கப்பட்டது. மீண்டும் ஜெயலலிதா ஆட்சியில் தமிழர்கள் தமது புத்தாண்டு மரபினைத் தொலைத்துவிட்டார்கள். அக் காலப்பகுதியில் ஈழத்திலும் தைமுதலே புத்தாண்டாக விடுதலைப்புலிகளால் தமது அதிகாரத்திற்குட்பட்ட பகுதியில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டது. இங்கும் வரலாற்று  இன்னலாக புலிகளின் அழிவிற்குப் பிறகு அந்த முயற்சி தொடரப்படவில்லை.

அறிவியல் பொருத்தப்பாடு :

அரசியல், தமிழறிஞர்களின் அறிவிப்பு என்பன எல்லாம் போகட்டும், அறிவியல்ரீதியாக எந்தப் புத்தாண்டு பொருத்தம் எனப் பார்ப்போமா!

முதலாவதாக திருவள்ளுவர் ஆண்டானது எண்களில் வருவதனால் சிறப்பானது, மறுபுறத்தில் சித்திரைக் கணிப்பீடானது ஒரே பெயர்களில் 60 ஆண்டுகளிற்கொரு முறை மறுபடியும் மீள வருவதனால் குழப்பகரமானவை. எடுத்துக் காட்டாக சுக்கில ஆண்டு என்றால், எந்தச் சுக்கில ஆண்டைக் கருதுவீர்கள். மேலும் இப்பெயர்கள் எதுவுமே தமிழில் இல்லாதிருப்பதுடன் அவற்றின் கருத்துக்கள் ஆபாசமானவை அல்லது எதிர்மறையானவை. (சுக்கில-விந்து, துன்மதி-கெட்டபுத்தி).

இரண்டாவதாக ஒருவரின் (திருவள்ளுவரின்) வாழ்க்கைக் காலத்தினை அடிப்படையாகக்கொண்ட கணிப்பீடானது அனைத்துலக நடைமுறைகளுடன் ஒத்துப்போகின்றது. மறுபுறத்தில் சித்திரைக் கணிப்பீட்டிற்கான நாம் ஏற்கனவே பார்த்த புராணக்கதையினை மதநம்பிக்கையாளரில் பெரும்பாலானோரே நம்பமாட்டார்கள். அதேபோன்று சித்திரைக்கணிப்பீட்டிற்குச் சொல்லப்படும் இராசிக்கணிப்பும் அறிவியலிற்கு முரணான புவிமையக் கொள்கையினை அடிப்படையாகக்கொண்டது.

படிக்க :
இங்கிலாந்துத் தேர்தலில் தடம் பதித்த இந்துத்துவா : வி.இ.குகநாதன்
♦ சுற்றுலாப் பயணிகளை கவரும் ஸ்டாலின் பிறந்த வீடு ! | கலையரசன்

மூன்றாவதாக, தைக் கொண்டாட்டமானது சங்க இலக்கியங்களினடிப்படையில் வரலாற்றுத் தொன்மையானதாகக் காணப்பட, மறபுறத்தில் சித்திரை ஆண்டுப் பிறப்பானது இடைக்காலத்தில் வெளியாரின் திணிப்பால் உள்நுழைக்கப்பட்டதாகக் காணப்படுகிறது.

நான்காவதாக தைத்திருநாளானது மதசார்பற்றதாகக் காணப்படுவதால் எல்லாத் தமிழரும் கொண்டாடக்கூடியதாகவிருக்க, மறுபுறத்தில் சித்திரையானது இந்துக்களிற்கு மட்டுமே அதுவும் பார்ப்பன ஆதிக்கத்தினை ஏற்றுக்கொண்டவரிற்கே பொருத்தமானதாகக்  காணப்படுகின்றது.

இறுதியாக தைத்திருநாளானது தமிழரின் வாழ்க்கையுடன் இணைந்தும், உழவுத்தொழிலுடன் தொடர்பானதாகவும் காணப்படுகிறது.

முடிவுரை:

இதுகாறும் இலக்கியச் சான்றுகள், மக்களின் வழக்காற்றுச் சான்றுகள், கல்வெட்டுச் சான்று, அறிஞர்களின் முடிவு, அறிவியற் பொருத்தப்பாடு என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு தை முதலே தமிழ்ப் புத்தாண்டு எனப் பார்த்தோம்.

யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்,  கிரிகேரியன் நாட்காட்டி (Gregorian calendar) சனவரி 15 ம் திகதியினைக் காட்டும், அந்த நாளே திருவள்ளுவர் ஆண்டு 2051 (2020+31) ஆகும் நாளன்றே (தை முதலே) தமிழ்ப் புத்தாண்டாகும்.

முடிவாக  தைத்திருநாள், தைப்பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு (தை) என்பன அனைத்தும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்த ஆயிரமாயிரமாண்டு தமிழர் மத சார்பற்ற பண்பாட்டு நிகழ்வுகளே. பாவேந்தரின் பாடலுடன் இக் கட்டுரையினை முடிப்பதே சிறப்பானதாக அமையும்.

நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் , கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!”

-பாவேந்தர் பாரதிதாசன்

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

வி.இ.  குகநாதன்

ஆர்.எஸ்.எஸ்-க்கு வலுசேர்க்கும் இசுலாமிய அமைப்புகளின் கவனத்திற்கு !

ந்தவொரு விசயத்திலும் தட்டையான விமர்சனங்களை நான் வெளிப்படுத்தியது கிடையாது. தடித்த விமர்சனங்களை அதிகம் விரும்பியதும் இல்லை. ஆனால் முஸ்லிம் ஜமாத்துகளின் போராட்டங்கள், சிலவற்றைப் பேச வைக்கிறது என்பதால் இந்தப் பதிவை மிகமிகச் சுருக்கமாக எழுதுகிறேன். மிகப்பெரும் அபாயத்தை எதிர்கொண்டுள்ள காலத்தில் இதையெல்லாம் எழுதவேண்டுமா என்று சிலர் நினைக்கலாம். ஆனால் முஸ்லிம்களின் போராட்ட அணுகுமுறைகள் அபாயத்தை மேலும் மேலும் அதிகரிக்கவே உதவும் என்பதால், இந்த விமர்சனப் பதிவைத் தவிர்க்க முடியாத ஒன்றாகவே கருதுகிறேன்.

பொதுவாக ஆர்.எஸ்.எஸ். எதை விரும்புகிறதோ, அதை அவர்களைவிடவும் வெகுசிறப்பாகச் செய்து தருவதில் முஸ்லிம்கள் அவ்வளவு முனைப்பு காட்டுகிறார்கள். பொதுசிவில் சட்டத்தில் முஸ்லிம் வெறுப்பு அரசியலின் சாரம் நிறைந்து இருக்கிறது என்றாலும், அது முஸ்லிம்களை மட்டுமே சீண்டிப் பார்க்கிற ஒன்றல்ல. ஆனால் முஸ்லிம் இயக்கங்களும், ஜமாத்துகளும் அதை “எல்லாத் தரப்பினருக்குமான” பிரச்சனை என்கிற வடிவத்திற்குள் செல்லவிடாமல், அவர்களின் தனியுடைமையாக தகவமைத்துக்கொண்டார்கள். அதே கதைதான் #CAA #NRC எதிர்ப்பிலும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

சென்னையில் இசுலாமிய அமைப்புகள் நடத்திய CAA எதிர்ப்புப் பேரணி. (கோப்புப் படம்)

“இன்குலாப்” முழக்கத்தைப் பொதுச்சமூகம் ஓங்கி ஒலிக்க, முஸ்லிம்களோ “நாரே தக்பீர், அல்லாஹு அக்பர்” என்கிற கூக்குரல்களை எழுப்புகின்றனர். மதச்சார்பற்ற தலைவர்களை மேடைகளில் வைத்துக்கொண்டு, கிராத் ஓதி (குரான் வசனங்கள்) போராட்டத்தைத் தொடங்குகிற போக்கு நிலவுகிறது. “பிர்அவ்னையே பார்த்த கூட்டம்; பத்ருப் போரைக் கண்ட சமூகம்; 800 ஆண்டுகாலம் இந்தியாவை ஆண்ட மக்கள்” என்கிற உணர்ச்சி பிழம்புகள் முஸ்லிம் ஜமாத்துகள் ஒருங்கிணைக்கும் கூட்டங்களில் கொடி கட்டிப் பறக்கின்றன. இதுபோன்ற மூடத்தனங்களை அல்லது மடத்தனங்களை வெளிப்படையாகக் கண்டிக்காமல் கடந்து செல்ல முடியவில்லை.

“இந்து மதத்தை விமர்சிக்கிற நீங்கள் இஸ்லாத்தையும் கிறிஸ்துவத்தையும் ஏன் விமர்சிப்பதில்லை?” என்கிற கேள்விகளை எழுப்பி, முற்போக்கு ஜனநாயக சக்திகளை இந்துக்களுக்கு எதிரானவர்களாக நிறுத்தும் சங்கிகளின் பிரச்சாரங்களை எல்லோருமே நன்கு அறிவோம். இதன்விளைவாக ஜனநாயகத் தலைவர்கள் களத்தில் நிறையவே இடர்களையும், பின்னடைவுகளையும் எதிர்கொள்கிறார்கள். போதாக்குறைக்கு அவர்களை மேடையில் வைத்துக்கொண்டு “நாரே தக்பீர்” என்று முஸ்லிம்கள் முழங்குவதானது, மதச்சார்பற்றத் தலைவர்களை எவ்வளவு சங்கடப்படுத்தும் என்றோ, சங்கிகளின் பிரச்சாரத்திற்கு அது எவ்வளவு வலுசேர்க்கும் என்றோ கொஞ்சம்கூட சிந்திக்க மட்டீர்களா?

இவை ஒருபுறமிருக்கட்டும்…

பொது இடத்தில் நடத்துகிற பொதுவான போராட்டத்தில், மதம் சார்ந்த கோசத்தை முன்வைப்பது சரியான வழிமுறையா? “ஓம் காளி; ஜெய் காளி” என சங்கிகள் கத்துவதற்கும், உங்களின் செயலுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றுதான் சொல்லத்தோன்றுகிறது. மேலும் பிர்அவ்ன் வரலாற்றைக்கூறி, “இந்த மோடி அமித்ஷாவுக்கா அஞ்சப் போகிறோம்” என்கிற வீராவேசக் கேள்விகளினால், எதை சாதிக்கப்போகிறீர்கள் தலைவர்களே?

படிக்க :
மோகன் பகவத்தின் இந்தியாவில் எல்லோருமே இந்து தான் : காஞ்சா அய்லய்யா
♦ CAA ஆதரவு – பாஜக ட்ரோல் படையின் தரம் தாழ்ந்த ‘மிஸ்டுகால் புரட்சி’ !

அறிவுப்பூர்வமான தளங்களில் சமூகத்தை வழிநடத்த வேண்டிய காலத்தில், வெற்று உணர்ச்சிகளைப் பேசிக் கைத்தட்டு வாங்குவது ஒன்றே என்.ஆர்.சி.யைத் தடைசெய்துவிடுமா என்ன? இதில் “இந்த ஆலிமின் வீரத்தைப் பாருங்கள், மாஷா அல்லாஹ்” ரகங்களில் பரவுகிற வீடியோக்களெல்லாம் எரிச்சலைத்தான் தருகின்றன. இவற்றை மற்ற சமூக மக்கள் சகித்துக்கொள்வார்கள் என்று நினைக்கிறீர்களா? இந்துமயப்படுத்தும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் வேள்விக்கு நீங்கள்தான் நெய் ஊற்றுகிறீர்கள்.

போராட்டத்தின் ஒரு பக்கம் இப்படியாக நீண்டுகொண்டிருக்க, மற்றொருபுறம் காறித்துப்புகிற விசயமொன்றை நேற்றுத் திருப்பூரில் கண்டேன். குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்புப் போராட்டம் ஒன்று அங்கு நடப்பதை அறிந்து, அதைக் காண்பதற்காகச் சென்றேன். அதிலும் ஸோ கால்டு ‘ஆண்ட பரம்பரை’ வசனங்கள் வழிந்து ஓடின. சரி இவர்கள் இப்படித்தானே என உச்சுக்கொட்டிவிட்டு வந்துவிட்டேன். வெளியே வந்த பிறகுதான் மேடையில் பிரதான முஸ்லிம் இயக்கங்கள் சில தவிர்க்கப்பட்டதைக் கேள்விப்பட்டேன். என்ன விசயமென்று கேட்டபோது, “இது ஷாபி ஜமாத் நடத்துகிற போராட்டம்” என்று சொன்னார்கள். அதைக்கேட்டதும் அவ்வளவு ஆத்திரம் பெருக்கெடுத்தது.

முதலில் இந்தப் போராட்டங்களை ஜமாத்துகள் நடத்துவதே அறிவற்ற போக்குதான். இதில் “அந்த ஜமாத், இந்த ஜமாத்” என்கிற பாகுபாட்டோடு நடத்துவதையெல்லாம், எந்த ரகத்தில் சேர்ப்பது? ஜனநாயகச் சக்திகளையும் சங்கடத்திற்குள்ளாக்கி, வெகுமக்களை வெறுப்பேற்றி, போதாக்குறைக்கு ஜமாத் பிரிவுகளை முதன்மைப்படுத்தி நடத்துகிற உங்களின் போராட்டங்களை “மயிரென்று” சொன்னாலும், அது மயிருக்குத்தான் இழுக்கு.

ஒன்றை நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள், நீங்கள் நடத்துகிற இந்த வகைப் போராட்டங்களை ஆர்.எஸ்.எஸ். மத்திய அரசு ஒரு பொருட்டாகவே கருதப்போவதில்லை. ஏன் எடப்பாடி அரசுகூட நமட்டுச் சிரிப்பைக் கொட்டும்படிதான் உள்ளது உங்களின் போராட்ட லட்சணங்கள்!

நன்றி : பழனி ஷஹான்
ஃபேஸ்புக் பதிவிலிருந்து…

disclaimer

சுற்றுலாப் பயணிகளை கவரும் ஸ்டாலின் பிறந்த வீடு ! | கலையரசன்

0

ஜோர்ஜியா பயணக் கதை – இரண்டாம் பாகம்

முதல் பாகம்

கலையரசன்

ஸ்டாலின் பிறந்த காலத்தில் ஜோர்ஜியா என்ற தேசம் இருக்கவில்லை. பெரும்பாலான ஜோர்ஜியர்களுக்கும் தேசிய இன உணர்வு இருக்கவில்லை. கருங்கடலுக்கும், கஸ்பியன் கடலுக்கும் இடைப்பட்ட நிலப்பகுதியை காவ்காசாஸ் பிரதேசம் என்று அழைப்பார்கள். அங்குள்ளவர்கள் பெரும்பாலும் மலை வாழ் மக்கள். இன்றைக்கும் பல்வேறு மொழிகளை பேசுகிறவர்கள். ஜோர்ஜிய மொழியுடன் தொடர்புடைய மிங்கேறிலியன், ஸ்வான் ஆகிய மொழிகள் இன்று அழிந்து வருகின்றன. தற்போது நாற்பதாயிரம், அல்லது எண்பதாயிரம் பேர் தான் அந்த மொழிகளைப் பேசுகிறார்கள். ஜோர்ஜியாவின் மொத்த மக்கட்தொகை நான்கு மில்லியன் கூட இல்லை.

ஜோர்ஜியாவில் ஸ்டாலின் பிறந்த கோரி (Gori) எனும் சிறு நகருக்கு அருகில், ஒசெத்தியர் எனும் ஈரானிய மொழி ஒன்றைப் பேசும் சிறுபான்மை இன மக்கள் வாழும் பிரதேசம் உள்ளது. தொண்ணூறுகளில் ஜோர்ஜியா தனியான சுதந்திர நாடானாதும், ஒசெத்தியர் தமக்கென தனிநாடு கோரினார்கள். ஆனால் அது சாத்தியப் படவில்லை. 2008 ஆம் ஆண்டு அங்கு பெரியதொரு யுத்தம் நடந்தது. ஜோர்ஜிய இராணுவத்தின் படையெடுப்பை எதிர்த்து நிற்க முடியாத ஒசேத்திய கெரில்லாப் படையினர் ரஷ்யாவை உதவிக்கு அழைத்தார்கள்.

அந்த நேரம் ஜோர்ஜியாவை ஆண்ட சாகாஷ்விலி தனது மேற்கத்திய சார்பு அரசியல் நிலைப்பாடு காரணமாக ரஷ்யாவை பகைத்திருந்தார். ரஷ்யாவும் இது தான் சாட்டு என்று “ஒசேத்திய சிறுபான்மை இன மக்களை பாதுகாப்பதற்காக” இராணுவத்தை அனுப்பியது. ஜோர்ஜிய இராணுவத்தை ஓட ஓட அடித்து விரட்டிய ரஷ்யப் படைகள், கோரி வரை வந்து விட்டன. அப்போது கோரியை விட்டு ஜோர்ஜியர்கள் வெளியேறியதும், நகர மத்தியில் ரஷ்யப் படையினர் நின்றதும் சர்வதேச ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக பேசப் பட்டன.

உண்மையில் அன்று ரஷ்யப் படையினர் தமது பலத்தைக் காட்டுவதற்காகவே கோரியை கைப்பற்றி இருந்தனர். சில நாட்களின் பின்னர் தாமாக வெளியேறி ஒசேத்திய தனிநாட்டு எல்லையோடு நின்று விட்டனர். இந்த நிலைமை இப்போதும் தொடர்கிறது. ஆனால், முன்பிருந்த பதற்றம் தணிந்து சமாதானம் நிலவுகிறது. அப்போது தொலைக்காட்சிகளில் கோரி நகர சபைக் கட்டிடமும், அதற்கு முன்னால் நின்ற துப்பாக்கி ஏந்திய ரஷ்யப் படையினரையும் காட்டினார்கள். அப்போது அங்கே ஒரு பிரமாண்டமான ஸ்டாலின் உருவச் சிலை இருந்தது.

கோரி நகர மத்தியில் இருந்த ஸ்டாலின் சிலை, 2010-ம் ஆண்டு “சோவியத் நீக்கம்” என்ற பெயரில் அகற்றப்பட்டது. பகலில் செய்தால் ஊர் மக்கள் எதிர்ப்பார்கள் என்ற பயத்தில், இரவோடிரவாக வந்து சிலையை பெயர்த்து எடுத்துச் சென்று நகருக்கு வெளியே வீசி விட்டனர். தற்போது பொது மக்களின் வேண்டுகோளை ஏற்று சிலையை மீண்டும் கொண்டு வர திட்டமிடுகின்றனர். இது தொடர்பாக நகரசபையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் அனேகமாக அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

படிக்க:
உலகப் போலீசின் உள்ளத்தை வெளிப்படுத்தும் 3 திரைப்படங்கள்!
♦ ஜனவரி 8 – பொது வேலை நிறுத்தத்தை ஆதரிப்போம் !

ஜோர்ஜியா வரும் சுற்றுலாப் பயணிகளில் குறைந்தது அரைவாசியாவது ஸ்டாலின் மியூசியம் பார்க்க வருகிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. இன்றைக்கும் ரஷ்யாவில் இருந்து பெருந்தொகை சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அதை விட போலந்து, (தென்) கொரியா, ஈரான் போன்ற நாடுகளில் இருந்தும் பெருமளவு சுற்றுலாப் பயணிகள் ஸ்டாலின் மியூசியம் பார்க்க வருவதாக அங்கு வேலை செய்யும் ஊழியர் தெரிவித்தார். நான் அங்கே சென்றிருந்த நேரத்திலும், ரஷ்யர்கள், ஈரானியர்கள் ஒரு பெரிய குழுவாக வந்து பார்வையிட்டனர்.

பத்து வருடங்களுக்கு முன்னர், கோரி சுற்றுலாத் துறை பெரிதாக வளர்ச்சி அடையவில்லை. தற்போது நிறைய புதிய ஹோட்டேல்கள் கட்டப்பட்டுள்ளன. நான் தங்கிருந்த ஹோட்டல் கட்டி ஒரு வருடம் தானாகிறது என்றார்கள். கோடை காலத்தில் எல்லா அறைகளும் நிரம்பி விடுமாம். நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட அறை வாடகை ஐம்பது லாரிகள். ஸ்டாலின் மியூசியத்தில் இருந்து இருநூறு மீட்டர் தூரத்தில் இருந்தது. ஸ்டாலின் நினைவுச் சின்னங்கள் உட்பட, தற்போது அங்கே எல்லாம் வணிகமயமாகிவிட்டது. வழமையாக பொருளாதாரத்தில் பின்தங்கி இருந்த கோரி நகருக்கு ஸ்டாலின் மியூசியத்தால் பெருமளவு வருமானம் கிடைக்கிறது எனலாம்.

ஸ்டாலின் பிறந்த வீட்டின் முன்புறத் தோற்றம்.

1937-ம் ஆண்டு, அதாவது சோவியத் யூனியனில் ஸ்டாலின் ஆட்சியில் இருந்த காலத்தில், அவரது பிறந்த வீடு மியூசியமாக்கப்பட்டது. அதைச் சுற்றி தூண்களை எழுப்பி, மேலே கொங்கிரீட் கூரை போடப் பட்டது. இந்த நினைவுச்சின்னம் இப்போதும் பேணிப் பாதுக்கப்பட்டு வருகின்றது. ஸ்டாலின் பிறந்த வீட்டுக்குப் பின்னால் ஒரு சிறிய ஸ்டாலினின் சிலையும் மியூசியக் கட்டிடமும் அமைந்துள்ளன.

ஐம்பதுகளின் தொடக்கத்தில் தான் தற்போதுள்ள நூதனசாலைக் கட்டிடம் கட்டிமுடிக்கப் பட்டது. அப்போது ஸ்டாலின் மறைந்து, குருஷேவ் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. “ஸ்டாலினிச எதிர்ப்பாளர்” குருஷேவ் அங்கு ஒரு நூதனசாலை வருவதை விரும்பி இருக்கவில்லை. இருப்பினும் உள்ளூர் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும், மக்களும் விட்டுக் கொடுக்கவில்லை. அப்போது திறக்கப்பட்ட மியூசியம் இப்போதும் இயங்கிக் கொண்டிருக்கிறது.

ஸ்டாலின் மியூசியம் மிக அழகாக வடிவமைக்கப் பட்டிருக்கிறது. ஒரு மாடிக் கட்டிடத்தின் மேல் பகுதியில் தான் மியூசியம் உள்ளது. அதற்கு செல்லும் படிக்கட்டின் நடுவிலும் மார்பிளால் செய்யப் பட்ட ஸ்டாலின் சிலை உள்ளது. உள் நுழைந்தவுடன் வாயில் அருகில் சிறு வயது ஸ்டாலின், மற்றும் அவரது தாய், தந்தையின் புகைப்படங்கள் உள்ளன. அதற்கு அருகில் அவர் பள்ளிக்கூடத்தில் படித்த புத்தகங்கள் ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப் பட்டுள்ளன. மேலே கற்பித்த ஆசிரியர்களின் படங்கள் உள்ளன. ஸ்டாலின் சிறு வயதில் எழுதிய கவிதைகளும் பெரிதாக்கி காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.

ஒரு கிறிஸ்தவ பாதிரியாக வேலை செய்வதற்கு படித்துக் கொண்டிருந்த ஸ்டாலின், அரசியல் ஈடுபாடு காரணமாக கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதற்குப் பின்னர் அவர் புரட்சிகர சமூக ஜனநாயகக் கட்சியின் போல்ஷெவிக் பிரிவில் இயங்கிய காலங்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. நகர்ப்புற தொழிலாளர்களின் கூட்டங்கள், மேதின ஊர்வலம் போன்றவற்றை ஒழுங்கமைத்து நடத்திய ஸ்டாலினின் ஓவியங்கள் வைக்கப் பட்டுள்ளன.

அடுத்த பகுதியில் இரண்டாம் உலகப்போர் காலத்தில் எடுத்த படங்கள், மற்றும் ஸ்டாலின் எழுதிய நூல்களின் தொகுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இறுதியாக இன்னொரு பகுதியில் உலகம் முழுவதிலும் இருந்து ஸ்டாலினுக்கு கிடைத்த அன்பளிப்புகள், பரிசுப் பொருட்கள் உள்ளன. திரும்பி வரும் வழியில், மாடியில் இருந்து கீழிறங்கும் போது, படிகளில் வலது பக்கத்தில் ஸ்டாலின் கிரெம்ளினில் பயன்படுத்திய அலுவலக மேசை, நாற்காலிகள் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன.

மேலும் வெளியே மியூசியக் கட்டிடத்திற்கு அருகில் ஸ்டாலின் தனது அலுவலகமாக பயன்படுத்திய ரயில் பெட்டி உள்ளது. ரஷ்யப் புரட்சியின் ஆரம்ப காலங்களில் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்தது. அப்போது புரட்சியை நடத்திய தலைவர்கள் இது போன்ற ரயில் பெட்டிகளை தமது அலுவலகமாக வைத்திருந்தனர். அதாவது விடுதலைப் போருக்கு தலைமை தாங்கவும், போர் முனைக்கு சென்று செம்படையினரை ஊக்குவிக்கவும், அன்றைய தலைவர்கள் ரயில்களை பயன்படுத்தினார்கள்.

கோரி நகரில் இன்னொரு மியூசியமும் ஆர்வத்தை தூண்டியது. ஜோர்ஜிய இன மக்களின் பூர்வீகம் தொடர்பான தொல்லியல் கண்டுபிடிப்புகளை காட்சிக்கு வைத்துள்ள நூதனசாலை அது. நுழைவுக் கட்டணம் மூன்று லாரிகள். மேலதிகமாக ஐந்து லாரிகள் கொடுத்தால் ஒரு ஆங்கிலம் பேசும் வழிகாட்டி கிடைப்பார். அது மிகவும் பிரயோசனமாக இருந்தது. அங்கிருந்த பொருட்கள் பற்றிய விளக்கத்தில் ஆங்கிலத்திலும் குறிப்புகள் இருந்த போதிலும், வழிகாட்டி மூலம் அதிக விளக்கம் கிடைத்தது.

படிக்க:
சுபாவ வாதம் : விஞ்ஞானச் சிந்தனையின் துவக்கம் !
♦ சென்னை புத்தகக் காட்சியில் புதுப் பொலிவுடன் கீழைக்காற்று !

சுமார் ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த ஆதிகால மனிதர்களின் நாகரிகம் தொடர்பாக கண்டெடுத்த அகழ்வாராய்ச்சிப் பொருட்கள் அங்கே உள்ளன. அந்தக் காலத்திலேயே தானியம் அரைப்பதற்காக பயன்படுத்திய அம்மிக் குழவி அங்கே காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தது. நமது நாட்டில் உள்ள அதே மாதிரியான அம்மிக் குழவி தான். கல் கொஞ்சம் வளைந்திருக்கும். உலகின் எங்கோ ஒரு மூலையில் வாழ்ந்த மக்கள் ஒரே மாதிரியான உபகரணங்களை பாவித்துள்ளமை மிகப் பெரிய ஆச்சரியம்.

ஆதி கால மக்கள் களிமண்ணால் கட்டப் பட்ட வீடொன்றில் வாழ்ந்துள்ளனர். கூரையும் களிமண்ணால் செய்யப்பட்டது. கூரை நடுவில் புகை போவதற்கான ஓட்டை இருந்தது. வீட்டுக்கு நடுவில் அடுப்பு மாதிரி கட்டி இருந்தனர். அதில் எந்த நேரம் நெருப்புத் தணல் இருந்து கொண்டிருக்கும். அதை அடுப்பு மாதிரி சமைப்பதற்கும் பயன்படுத்தலாம். அதே நேரம், குளிரை தாக்குப் பிடிக்க வெப்பம் தருவதற்கும் பயன்பட்டது. இது போன்ற வீடுகள் ஸ்கண்டிநேவிய நாடுகளிலும் இருந்துள்ளன. தற்போதும் மத்திய ஆசியாவில் வாழும் நாடோடி மக்கள் இது போன்ற வீடுகளை அமைக்கும் கலையை அறிந்து வைத்திருக்கின்றனர்.

ஆதி கால மனிதர்கள் பிற்காலத்தில் வளர்ச்சி அடைந்ததும், வெண்கலம், இரும்பால் செய்த கருவிகளை வேட்டையாட பயன்படுத்தினார்கள். அப்போது பயன்படுத்திய ஈட்டிகள், கத்திகள் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப் பட்டுள்ளன. அப்போது பயன்பாட்டில் இருந்த மான் வடிவில் செய்யப்பட்ட வைன் குடிக்கும் கிண்ணம், ஒரு சில மாற்றங்களுடன் இன்றைய காலத்திலும் பயன்பாட்டில் உள்ளது. அன்றிருந்த ஆதி கால மக்களும் மலை வாழ் மக்கள் தான். வேட்டையாடுவோராக, கால்நடைகள் மேய்ப்பவர்களாக இருந்துள்ளனர். குளிர் நேரத்தில் வெப்பம் தரும் மேலாடை ஒன்றை அணிந்து கொண்டார்கள். அது ஆட்டுத் தோலால் செய்யப் பட்டது. அந்த மணத்திற்கு பாம்புகளும் கிட்ட நெருங்காதாம்.

மியூசியத்தின் இறுதிப் பகுதியில் ஜோர்ஜிய மொழியின் தோற்றம், கிறிஸ்தவ மதத்தின் வருகை போன்ற விபரங்கள் உள்ளன. ஜோர்ஜியாவில் இன்றைக்கும் கிறிஸ்தவ மதத்தலைவர் பாவிக்கும் தொப்பியின் பெயர் “மித்ரா”. தற்செயலாக, மித்ரா என்பது ஈரான், இந்தியாவில் வேதகால ஆரியர்கள் வழிபட்ட ஒரு கடவுளின் பெயர். அநேகமாக ஒரு காலத்தில் அந்தப் பிரதேசத்திலும் மித்ரா வழிபாடு இருந்திருக்கலாம்.

அந்த மியூசியத்தில் வரவேற்பளராக இருந்த பெண், தன்னுடைய பெயர் “தமிழ்” என்றும், அது பற்றித் தெரியுமா என்றும் கேட்டார். மிகுந்த ஆச்சரியத்துடன் நானும் ஒரு தமிழர் தான், உங்களுக்கு அந்த மொழி பற்றிய விபரங்கள் தெரியுமா என்று கேட்டேன். அவர் அது பற்றி ஏற்கனவே அறிந்து வைத்திருந்தார். ஜோர்ஜியாவில் நிறையப் பெண்களுக்கு தமிழ் என்று பெயர் இருக்கிறதா என்று நான் கேட்டேன். பெருமளவில் இல்லையென்றாலும், சில பெண்களுக்கு தமிழ் என்ற பெயர் இருப்பதாக பதில் அளித்தார். அங்கிருந்து விடை பெறும் முன்னர் “தமிழும், தமிழும் சந்தித்துக் கொண்ட தருணத்தை” செல்பி எடுத்துக் கொண்டேன்.

ஜோர்ஜிய மொழியின் பூர்வீகம் எதுவென்பது யாருக்கும் தெரியாது. தாங்கள் ஆயிரமாயிரம் வருட காலமாக அந்தப் பிராந்தியத்தில் வாழ்வதாக ஜோர்ஜியர்கள் சொல்லிக் கொள்வார்கள். அவர்களது மொழியின் எழுத்து வடிவம் ஆச்சரியப் படத் தக்கவாறு தென்னிந்திய மொழிகளின் வரி வடிவத்தை ஒத்திருக்கிறது. பெருமளவு வளைவுகளும், சுழிகளும் கொண்ட எழுத்துக்கள். பண்டைய ஜோர்ஜிய எழுத்துக்கள் இதிலிருந்து வித்தியாசமாக இருக்கும். அதிலும் ஓர் அதிசயம் என்னவென்றால் இந்தியாவின் பிராமி எழுத்துக்கள் போலுள்ளன. ஜோர்ஜிய மொழி எழுத்துக்கள் அரேமிய அல்லது, கிரேக்க மொழிகளை பின்பற்றி உருவாக்கப் பட்டிருக்கலாம் என மொழியியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அந்தக் கோட்பாடு கூட தவறாக இருக்கலாம்.

உலகில் இன்னமும் அறிந்து கொள்ளப்படாத பல அதிசயங்களை ஜோர்ஜியா கொண்டுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. அங்கிருந்து திரும்பும் பொழுது ஒரு ஜோர்ஜிய மொழி திரைப்பட டிவிடி வாங்கிக் கொண்டு வந்தேன். “தேதே” (அம்மா) என்ற பெயரிடப் பட்ட படம், நவீன நாகரிகம் ஊடுருவி இருக்காத மலை வாழ் மக்களின் வாழ்க்கை முறை பற்றிப் பேசுகின்றது. குளிர்காலத்தில் பனி மூடிய பாதைகளில் வாகனங்கள் செல்ல முடியாது. ஒரு கிராமத்தில் இருந்து இன்னொரு கிராமத்திற்கு குதிரைகளில் தான் செல்ல வேண்டும்.

அந்தப் படத்தில் காட்சிக்கு காட்சி எவ்வாறு பழைய சம்பிரதாயங்கள் தனி மனித வாழ்வைப் பாதிக்கின்றன என்பதை சிறப்பாக காட்டி இருந்தார்கள். அந்த சமுதாயத்தில் இன்னமும் பெண்களுக்கென்று தெரிவுகள் இருக்க முடியாது. குடும்பத்தில் பெரியவர்கள் சிறுவயதில் நிச்சயர்தார்த்தம் செய்த ஆணை தான் திருமணம் செய்ய வேண்டும். ஓர் ஆண் ஒரு இளம் பெண்ணை கடத்திச் சென்று விட்டால், அவள் அவனோடு தான் காலம் முழுவதும் வாழ வேண்டும். இல்லாவிட்டால் இரு குடும்பங்களுக்கும் இடையில் பகை மூண்டு இரத்தக்களரி ஏற்படும். அதை விட சாமிப் படத்தின் மீது சத்தியம் செய்வது, நோயை குணப்படுத்துவதற்கு முன்னோர்களின் ஆவிகளை துணைக்கு அழைப்பது எனப் பல சம்பிரதாயங்கள் இன்னமும் பின்பற்றப் படுகின்றன. இந்தப் படத்தைப் பார்க்கும் பொழுது ஜோர்ஜியர்களின் கலாச்சாரம், கீழைத்தேய மரபுகளை கொண்டுள்ளமை தெரிய வந்தது.

ஜோர்ஜியா பயணம் முடித்து வந்ததும், பல நண்பர்கள் பாதுகாப்பு தொடர்பான கேள்விகளை எழுப்பினார்கள். நான் ஏற்கனவே ஐரோப்பாவின் மேற்கிலும், கிழக்கிலும் பல நாடுகளுக்கு பயணம் செய்திருப்பதால் வித்தியாசங்களை உணர முடிந்தது. எல்லா நாடுகளிலும் பெரும் நகரங்களில் திருட்டுக்கள் நடப்பதுண்டு. ஆனால் கிராமங்கள் பாதுகாப்பானவை. நான் பார்த்த அளவில் பெரும்பாலான ஜோர்ஜியர்கள் நேர்மையாக நடந்து கொள்கிறார்கள். யாரும் எம்மை வெளிநாட்டவர் தானே என்று ஏமாற்ற நினைக்கவில்லை.

இன்னொரு முக்கியமான விடயம். “எங்களிடம் பணம் இருக்கிறது” என்று ஆடம்பரம் காட்டுவோரை தான் திருடர்கள் குறிவைக்கிறார்கள். “ரோமாபுரியில் ஒரு ரோமனாக இருக்க வேண்டும்” என்று சொல்வது மாதிரி, எந்த நாட்டுக்கு சென்றாலும் உள்ளூர் மக்களில் ஒருவராக மாறிவிட வேண்டும். அவர்களது நடை, உடை, பாவனைகளை மேலெழுந்த வாரியாக அவதானித்து விட்டு, நாமும் அப்படியே நடந்து கொண்டால் எந்தப் பிரச்சினையும் வராது. சுருக்கமாக, எங்கிருந்தாலும் மிகவும் எளிமையாக வாழ வேண்டும்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றை அழுத்தவும் )

(முற்றும்)

கலையரசன்

கலையரசன் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர். வரலாறு, அரசியல், பண்பாடு ஆகியன குறித்து மார்க்சிய நோக்கில் கலையகம் தளத்தில் தொடர்ந்து எழுதி வருபவர். வெகுசன ஊடகப் பிரச்சாரத்தின் விளைவாக முதலாளித்துவக் கண்ணோட்டத்திற்கு தம்மையறியாமல் ஆட்பட்டிருக்கும் வாசகர்களை மீட்பதில் இவருடைய எழுத்தின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது.

பிரான்சில் ஆடம் ஸ்மித் | பொருளாதாரம் கற்போம் – 51

0

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் – பாகம் 51

பிரான்சில் ஆடம் ஸ்மித்

அ.அனிக்கின்

நாம் மேலே வர்ணித்திருக்கும் சம்பவங்களுக்கு ஐம்பது வருடங்களுக்குப் பிறகு ஜான் படிஸ்ட் ஸேய் 1765-1766ம் வருடங்களில் ஸ்மித் பாரிசில் தங்கியிருந்த காலத்தைப் பற்றி வயோதிகரான டுபோன்னிடம் கேட்டார். ஸ்மித் டாக்டர் கெனேயின் “மாடியறை மன்றத்துக்குப்” போவதுண்டு; ஆனால் அவர் அங்கே அமைதியாகவே உட்கார்ந்திருப்பார், பிஸியோகிராட்டுகளின் கூட்டங்களில் எதுவும் பேச மாட்டார்; எனவே நாடுகளின் செல்வம் என்ற புத்தகத்தை எதிர்காலத்தில் எழுதிப் பிரபலமடையப் போகின்ற ஆசிரியர் இவர்தான் என்று யாரும் சந்தேகித்திருக்கக்கூட முடியாது என்று அவர் பதிலளித்தார்.

மொரெல்லே என்ற அறிஞரும் எழுத்தாளரும் பாரிசில் ஸ்மித்துக்கு நண்பராக இருந்தார். அவர் தம்முடைய நினைவுக் குறிப்புகளில் பின் வருமாறு எழுதுகிறார்: “திரு. டியுர்கோ… ஸ்மித்தின் திறமையைப் பற்றி மிக உயர்ந்த அபிப்பிராயம் கொண்டிருந்தார். நாங்கள் அவரைப் பல தடவைகள் பார்த்தோம்; அவர் ஹெல்வெடியசுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். நாங்கள் வர்த்தகத் தத்துவம், வங்கித் துறை, தேசியக் கடன் ஆகியவை பற்றியும் அவர் எழுதத் திட்டமிட்டிருந்த மாபெரும் புத்தகத்தில் பல விஷயங்களைப் பற்றியும் பேசுவதுண்டு” (1)  ஸ்மித் எழுதிய கடிதங்களிலிருந்து அவர் கணிதவியல் அறிஞரும் தத்துவஞானியுமான ட-அலம்பேர், அறியாமை, மூட நம்பிக்கை ஆகியவற்றை எதிர்த்துப் போராடிவந்த மாவீரரான கோல்பாக் பிரபு ஆகியவர்களோடு நட்புக் கொண்டிருந்தார் என்று தெரிகிறது. ஸ்மித் வொல்டேரையும் ஜினீவாவின் புறநகர்ப் பகுதியில் அவருடைய பண்ணையில் சந்தித்தார்; அவரோடு சில முறை பேசி மகிழ்ந்தார். வொல்டேர் மிகச் சிறந்த பிரெஞ்சுக்காரர்களில் ஒருவர் என்று கருதினார்.

ஸ்மித் மிகவும் ஆரம்பத்திலேயே – அதாவது 1775-ம் வருடத்திலேயே – எடின்பரோ சஞ்சிகையில் ஒரு கட்டுரை எழுதினார்; அந்தக் கட்டுரையில் பிரெஞ்சுக் கலாச்சாரத்தைப் பற்றி ஸ்மித்தின் மிகச் சிறப்பான அறிவு வெளிப்பட்டது. அவர் ஜான் லோவின் கருத்துக்கள், நடவடிக்கைகளைப் பற்றி மிக விரிவாகத் தெரிந்துவைத்திருந்தார் என்பதை அவர் நிகழ்த்திய விரிவுரைகளிலிருந்து தெரிந்து கொள்ள முடியும்.

படிக்க :
ஜே.என்.யூ. மாணவர்கள் மீதான ஏ.பி.வி.பி. தக்குதல் – மதுரை வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் !
♦ ஜே.என்.யூ : ஒரு ஏபிவிபி ரவுடி கூட இன்னும் கைது செய்யப்படவில்லை !

அவர் பிரெஞ்சுக் கலைக்களஞ்சியத்தில் கெனேயின் கட்டுரைகளைப் படித்திருந்த போதிலும் பிஸியோகிராட்டுகளின் நூல்களைப் பற்றி லேசாக மட்டுமே அறிந்திருந்தார். இப்பொழுது பாரிசில் அவர்களுடைய கருத்துக்களை அவர்களோடு ஏற்பட்ட நேரடியான சந்திப்புக்களில் தெரிந்து கொண்டார், ஏராளமான அளவில் வெளிவரத் தொடங்கியிருந்த பிஸியோகிராட்டிய பிரசுரங்களின் மூலமாகவும் அறிந்து கொண்டார்.

ஸ்மித் சரியான நேரத்தில்தான் பிரான்சுக்குச் சென்றார் என்று கூடச் சொல்லலாம். ஒரு பக்கத்தில் அவர் ஏற்கெனவே போதிய அளவுக்கு முதிர்ச்சியடைந்த புலமை உடையவராகவும் சுயமாகவே முடிவு செய்த கருத்துக்களைக் கொண்டவராகவும் இருந்தார். மறுபக்கத்தில் அவருடைய பொருளாதார முறை இன்னும் முழுமையாக வளர்ச்சி அடையவில்லையாதலால் அவர் கெனே, டியுர்கோவின் கருத்துக்களை ஈர்த்துக் கொள்ள முடிந்தது.

ஆடம் ஸ்மித்

ஸ்மித் பிஸியோகிராட்டுகளையும் குறிப்பாக டியுர்கோவையும் எந்த அளவுக்குச் சார்ந்திருந்தார் என்ற பிரச்சினையைப் பற்றி தனி சரித்திரமே இருக்கிறது. முதலாளித்துவ சமூகத்தின் உள்ளமைப்பை பிஸியோகிராட்டுகளைக் காட்டிலும் ஸ்மித் இன்னும் ஆழமாக ஊடுருவிப் பார்த்தார். ஆங்கில மரபையொட்டி அவர் உழைப்பளவை மதிப்புத் தத்துவத்தை ஆதாரமாக வைத்துத் தன்னுடைய பொருளாதாரத் தத்துவத்தை அமைத்தார்; ஆனால் பிஸியோ கிராட்டுகளிடம் மதிப்புத் தத்துவம் என்பதே இல்லை. எனவே, அவர்களோடு ஒப்பு நோக்கில் ஸ்மித் மிக முக்கியமான முன்னேற்றத்தைச் செய்வதற்கு இது உதவியது. விவசாய உழைப்பு மட்டும் மதிப்பை உருவாக்கவில்லை, எல்லா விதமான பயனுள்ள உழைப்புமே மதிப்பை உருவாக்குகிறது என்று ஸ்மித் நிரூபித்தார். முதலாளித்துவ சமூகத்தின் வர்க்க அடுக்கமைவைப் பற்றி பிஸியோகிராட்டுகளைக் காட்டிலும் ஸ்மித் அதிகத் தெளிவான கருத்துக் கொண்டிருந்தார்.

அதே சமயத்தில் சில துறைகளில் ஸ்மித்தைக் காட்டிலும் பிஸியோகிராட்டுகள் அதிக முன்னேற்றமடைந்திருந்தார்கள். இது குறிப்பாக முதலாளித்துவப் புனருற்பத்தியின் இயந்திர நுட்பம் பற்றி கெனே வெளியிட்ட மிகச் சிறப்பான கருத்துக்களுக்குப் பொருந்துவதாகும். முதலாளிகள் தங்களுடைய நுகர்வை விலக்கிக் கொள்வதன் மூலம், தவிர்த்தலின் மூலம், சுய இழப்பின் மூலமாகவே மூலதனத் திரட்டல் சாத்தியம் என்ற நம்பிக்கையில் ஸ்மித் பிஸியோகிராட்டுகளைப் பின்பற்றினார். அவ்வாறு கருதுவதற்கு அவர்களுக்காவது ஒரு தர்க்க அடிப்படை இருந்தது. ஏனென்றால் தொழில்துறை உழைப்பு “மலட்டுத் தனமானது”, “ஒன்றும் இல்லாமலேயே” முதலாளிகள் மூலதனத் திரட்டலைச் செய்வதாக அவர்கள் கருதினார்கள்.

ஸ்மித்துக்கு இந்த வகையான நியாயமும் கிடையாது. பயனுள்ள உழைப்பின் எல்லா வகைகளுமே சமமானவை, பொருளாதார ரீதியில் சமமான மதிப்புடையவை என்ற கருத்துரையில் அவர் முரண்பாடுகளோடு தான் எழுதுகிறார். மதிப்பை உருவாக்குவதை ஆதாரமாகக் கொண்டு பார்க்கும் பொழுது விவசாய உழைப்பு முன்னுரிமை கொண்டிருக்கிறது, ஏனென்றால் இங்கே “இயற்கை மனிதனோடு சேர்ந்து பாடுபடுகிறது” என்ற கருத்தை அவர் இன்னும் தன்னுடைய மனதிலிருந்து தெளிவாக அகற்ற முடியவில்லை.

படிக்க :
இந்தியாவின் ஆன்மாவுக்கான போராட்டத்தை பற்ற வைத்த புதிய குடியுரிமை சட்டம் !
♦ சுபாவ வாதம் : விஞ்ஞானச் சிந்தனையின் துவக்கம் !

பிஸியோகிராட்டுகளின்பால் அவருடைய அணுகுமுறை வாணிப ஊக்கக் கொள்கையினரிடம் அவர் கடைப்பிடித்த அணுகுமுறையிலிருந்து முற்றிலும் வேறுவிதமாக இருந்தது. அவர் வாணிப ஊக்கக் கொள்கையினரைத் தன்னுடைய சித்தாந்த எதிரிகளாகக் கருதினார். அறிவுத் துறையைச் சேர்ந்தவர் என்ற முறையில் அவர் பொதுவாக நிதானத்தைக் கடைப்பிடித்த போதிலும், அவர்களை மிகவும் கூர்மையாக (சில சமயங்களில் மிக அதிகமாகவே) விமர்சனம் செய்தார். பொதுவான வகையில் சொல்வதென்றால், பிஸியோகிராட்டுகளை ஒரே இலட்சியத்துக்காக ஆனால் வேறு வழிகளில் பாடுபடுகின்ற தோழர்கள், நண்பர்கள் என்றே அவர் கருதினார். “இந்த முறையில் எவ்வளவு குறைகள் இருந்தபோதிலும், அரசியல் பொருளாதாரத்தைப் பற்றி இதுவரையிலும் எழுதப்பட்டிருக்கின்றவற்றில் உண்மைக்கு மிகவும் நெருங்கி வருவது இதுவே” (2) என்பது தன்னுடைய முடிவு என்று நாடுகளின் செல்வத்தில் எழுதினார். அது “உலகத்தின் எந்தப் பகுதியிலும் எப்படிப்பட்ட தீமையும் செய்யவில்லை, ஒருபோதும் அவ்வாறு செய்யாது” என்று வேறொரு பகுதியில் எழுதினார்.

கடைசியாகச் சொல்லியிருப்பதை வேடிக்கையாகச் சொன்னதாகவும் எடுத்துக் கொள்ளலாம். ஆடம் ஸ்மித் மிக நுட்பமான நகைச்சுவையைக் கையாள்கிறார், அதே சமயத்தில் தீவிரமாக சிந்தனை செய்வதைப் போல முகபாவத்தை வைத்துக்கொள்கிறார். அவர் வாழ்க்கையிலும் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும். ஒரு நாள் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் அதிகாரபூர்வமான விருந்து நிகழ்ச்சியின் போது அவருக்குப் பக்கத்தில் லண்டனைச் சேர்ந்த ஒருவர் உட்கார்ந்தார். பார்த்தவுடனேயே அவ்வளவு கெட்டிக்காரர் அல்ல என்று தோன்றக் கூடிய ஒரு நபரிடம் எல்லோரும் அதிகமான மரியாதை காட்டுவது ஏன் என்று அவர் ஸ்மித்திடம் ஆச்சரியத்தோடு கேட்டார்.

“அவர் கெட்டிக்காரர் அல்ல என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் எங்கள் பல்கலைக்கழகத்திலிருக்கும் ஒரே பிரபு அவர்தான்” என்று ஸ்மித் பதிலளித்தார். அவர் கேலியாகப் பேசுகிறாரா இல்லையா என்பதைப் பக்கத்தில் இருந்தவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

அவருடைய புத்தகத்தில் நேரடியாகவோ அல்லது மறை முகமாகவோ பிஸியோகிராட்டுகளோடு தொடர்புடைய கருத்துக்களிலும் அதிகமான எண்ணிக்கையுள்ள பல்வேறு காட்சிப் பதிவுகளிலும் (இவற்றில் தனிப்பட்டவையும் உள்ளன) பிரான்ஸ் குறிப்பிடப்படுகிறது. இந்தக் குறிப்புகள் பொதுவாக விமர்சன ரீதியில் அமைந்திருக்கின்றன. நிலப் பிரபுத்துவ சர்வாதிகார அமைப்பைக் கொண்ட பிரான்ஸ், முதலாளித்துவ வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகின்ற வகையில் விலங்குகள் மாட்டப்பட்டுள்ள பிரான்ஸ், இன்றைக்கிருக்கின்ற அமைப்புக்களுக்கும் இலட்சிய வடிவமான “இயற்கையான அமைப்புக்கும்” இடையே உள்ள முரண் பாட்டுக்குச் சிறந்த உதாரணம் என்று ஸ்மித் கருதினார். இங்கிலாந்தில் எல்லாமே மிகவும் சிறப்பாக இருப்பதாகச் சொல்ல முடியாது, ஆனால் அந்த நாட்டிலுள்ள அமைப்பு தனி நபர் சுதந்திரத்தையும் கருத்துச் சுதந்திரத்தையும் இவற்றைக் காட்டிலும் முக்கியமான எந்தத் தொழிலிலும் ஈடுபடுவதற்குரிய சுதந்திரத்தையும் அனுமதித்தது; எனவே “இயற்கையான அமைப்புக்கு” அது மிகவும் அதிகமான அளவுக்கு நெருங்கி வந்தது.

ஸ்மித் பிரான்சில் மூன்று வருடங்கள் இருந்தார். அவருடைய சொந்த வாழ்க்கையில் அதன் முக்கியத்துவம் என்ன?

முதலாவதாக, அவருடைய பொருளாயத நிலையில் அதிகமான அபிவிருத்தி ஏற்பட்டது. பக்லூ கோமகனின் பெற்றோர்களிடம் செய்து கொண்ட உடன்பாட்டின்படி அவருக்கு வருடத்துக்கு முந்நூறு பவுன் ஊதியம் கிடைக்கும்; இப்பணம் பிரான்சில் இருந்த மூன்று வருடங்களுக்கு மட்டுமல்லாமல், அவருடைய வாழ்க்கை முழுவதும் ஓய்வூதியமாகக் கிடைக்கும். இந்த ஏற்பாட்டின் பலனாக அவர் அடுத்த பத்து வருடங்களில் தன் கவனம் முழுவதையும் புத்தகம் எழுதுவதில் செலவிட முடிந்தது; அதற்குப் பிறகு அவர் கிளாஸ்கோ பல்கலைக்கழக வேலைக்குத் திரும்பவில்லை.

இரண்டாவதாக, அவருடைய சமகாலத்தவர்கள் அவருடைய குணத்தில் மாற்றத்தைக் கண்டார்கள்; அவர் இப்பொழுது அதிகமான திறமையும் சுறுசுறுப்பும் கட்டுப்பாடும் உடையவராக இருந்தார், தன்னுடைய மேலதிகாரிகள் உள்பட வெவ்வேறு விதமான நபர்களிடம் பழகும் பொழுது ஒரு வகையான திறமையைக் கூட அவர் இப்பொழுது பெற்றிருந்தார். எனினும் மற்றவர்களோடு பழகும் பொழுது அவசியமான நிதானத்தை அவர் கடைசிவரையிலும் அடையவில்லை. அவருடைய நண்பர்களில் பலருக்கும் அவர் ஓரளவு விசித்திரமானவராக, ஞாபக மறதியுள்ள பேராசிரியராகவே இருந்தார். அவர் புகழ் பெருகிய பொழுது அவருடைய ஞாபக மறதியைப் பற்றிய கதைகளும் வேகமாக அதிகரித்தன, சாதாரண மனிதர்களுக்கு இந்தக் கதைகள் அவருடைய புகழின் ஒரு பகுதியாக இருந்தன.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

 (1) A. Morellet, Mémoires sur le dix-huitième siècle et sur la révolution française, t. I, Paris, 1822, p. 244.

 (2) A. Smith, The Wealth of Nations, Vol. III, London, 1924, p. 172.

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

CAA ஆதரவு – பாஜக ட்ரோல் படையின் தரம் தாழ்ந்த ‘மிஸ்டுகால் புரட்சி’ !

2

திக்கத்தில் இருப்பவர்களுக்கு புரோக்கர் வேலை பார்த்த வரலாறே சங்கபரிவாரத்தின் 100 ஆண்டுகால வரலாறு. – இதுதான் தெரிந்த கதையாயிற்றே.. இப்போது அவர்களே ஆதிக்கத்தில் நேரடியாக அமர்ந்திருக்கிறார்களே என்று நினைக்கலாம். ஆனால் காட்டிக் கொடுக்கும் புத்தி என்றும் விலகாது என்பதற்கு சமீபத்திய சான்றுதான் சி.ஏ.ஏ சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாக பாஜக எடுத்து நடத்தியுள்ள “மிஸ்டு கால்” இயக்கம்.

கடந்த 2014-ம் ஆண்டில் பாஜக-வின் உறுப்பினர் சேர்க்கையை நடத்துவதற்கு மிஸ்டு கால் இயக்கத்தை முதன்முதலில் தொடங்கியது. அப்படி நோகாமல் மிஸ்டுகால் கொடுத்தவர்களின் எண்ணிக்கையைக் கணக்கில் காட்டியே உலகிலேயே அதிக உறுப்பினர் சேர்க்கையைக் கொண்ட கட்சி பாஜக என வெற்று அலப்பறை செய்து கொண்டிருந்தது நினைவிருக்கலாம்.

மோடி – அமித்ஷா கும்பலைத் தொடர்ந்து அவர்களைப் போலவே வாயில் வடைசுடுவதில் கில்லாடியான ஜக்கி வாசுதேவ், மரங்களை நடவும், காவிரியை இணைக்கவும் ‘மிஸ்டுகால் புரட்சி’யைத் தொடங்கி வைத்தார். இப்படி பயணித்த ‘மிஸ்டுகால் புரட்சி’யின் வரலாற்றுக்கே ஒரு பெரும் ‘புரட்சியை’ சமீபத்தில் நிகழ்த்திக் காட்டியிருக்கிறது பாஜக.

சங்க பரிவாரக் கும்பலின் நெடுநாள் செயல்திட்டமான இந்துராஷ்டிரத்தைச் சட்டரீதியாக நடைமுறைப்படுத்தும் வகையிலான குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் இயற்றியது பாஜக. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் கடுமையான போராட்டங்கள் தொடங்கின. அன்று தொடங்கிய இப்போராட்டங்கள் இன்றுவரை நாடுமுழுவதும் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.

படிக்க :
ஜனவரி 8 – பொது வேலை நிறுத்தத்தை ஆதரிப்போம் !
♦ குடியுரிமை திருத்தச் சட்டம் : உத்தர பிரதேசத்தில் போலீசு நடத்திய படுகொலைகள் !

இந்நிலையில் இச்சட்டத்திற்கு நாடு முழுவதும் பெருவாரியான மக்களின் மத்தியில் ஆதரவு இருப்பதாகக் காட்டிக் கொள்ள ஒரு ‘மிஸ்டுகால் புரட்சி’ இயக்கத்தைத் தொடங்கியது பாஜக. அதாவது போராட்டம், ஆர்ப்பாட்டம், பரபரப்பு ஏதுமில்லாமல் வீட்டிலிருந்தபடியே நோகாமல் நோம்பு கும்பிடும் வகையில் மிஸ்டுகால் கொடுத்து குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு உங்கள் ஆதரவைத் தெரிவிக்கலாம் என்று அறிவித்தது பாஜக.

இதனை கடந்த ஜனவரி 3, 2020 அன்று அமித்ஷா தமது சமூக வலைத்தள கணக்குகளில் அறிமுகப்படுத்தி துவங்கிவைத்தார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு உங்கள் ஆதரவைத் தெரிவிக்க 88662-88662 என்ற எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுக்குமாறு அழைப்பு விடுத்தார்.

ஜனவரி 3, 2020 அன்று விடுக்கப்பட்ட இந்த அழைப்பிற்கு யாரும் செவிமடுக்கவில்லை போலத் தெரிகிறது. அப்படியே விட்டால் மானம் போய்விடும் என்று நினைத்த சங்க பரிவாரக் கும்பல், தனது ட்ரால் படையை மிஸ்டுகாலுக்கு ஆள் பிடிக்க களத்தில் இறக்கி விட்டது. மிஸ்டுகாலுக்கே ஆள்பிடிக்க வேண்டிய தமது இழிநிலையை எண்ணி ட்ரால்படைகள் கண்ணீர் சிந்தியிருக்குமோ இல்லையோ அமித்ஷா ஜி மனதிற்குள்ளாவது சிறிது கண்ணீர் சிந்தியிருப்பார்.

சமூக வலைத்தளங்களில் அடுத்தவர்களை இழிவுபடுத்தவும், மிரட்டவும், மேலிருந்து தரப்படும் குறுந்தகவல்களை அதே எழுத்துப் பிழையோடு ஈயடித்தான் காபி செய்து நிலைத் தகவல் பதிவிடுவதற்கு மட்டுமே பழக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த சங்கி ட்ரால் படையிடம் போய், மிஸ்டுகால் கொடுக்க ஆள் பிடிக்கச் சொன்னால் என்ன செய்வார்கள் பாவம் ?

ஒரு பிரிவு ட்ரால் கூட்டம், பணரீதியாக ஊரை ஏய்க்கத் தொடங்கியது. மிஸ்டு கால் கொடுக்க வேண்டிய எண்ணைப் பதிவிட்டு, இந்த எண்ணிற்கு அழைப்புவிடுத்தால் ஆறுமாதத்திற்கு நெட்பிளிக்ஸ் சேனல் சந்தாவுக்கான இலவச இணைப்பு கிடைக்கும் என்று விளம்பரப் படுத்தத் தொடங்கியது.

இது வைரலாகப் பரவியதைக் கண்டு மிரண்டு போன நெட்பிளிக்ஸ் நிர்வாகம் பதறிப் போய் உடனடியாக தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் இத்தகவல்களை மறுத்து, அவை தவறான தகவல்கள் என விளக்கமளித்தது. பாவம் எத்தனை பேர் இதனை நம்பி அழைப்பு விடுத்து ஏமாந்து போய், நெட்பிளிக்ஸ் கஸ்டமர் கேர் எண்ணிற்கு அழைத்து காய்ச்சி எடுத்தார்களோ தெரியவில்லை.

இன்னொரு ட்ரால் கூட்டம், மோடி அரசின் மிகப்பெரும் சாதனையான வேலைவாய்ப்பின்மையையும் தமக்குச் சாதகமாக பயன்படுத்தி ஆள் பிடிக்க இறங்கியிருந்தது. புதிய வேலை வாய்ப்புகள் இருப்பதாகவும் ஆர்வமுள்ளவர்கள் உடனடியாகத் தொடர்புகொள்ளுமாறு குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்க அமித்ஷா ஜி அறிமுகப்படுத்திய எண்ணைப் பதிவிட்டிருந்தது. ஏற்கெனவே வேலையின்றித் தவிக்கும் இளந்தலைமுறையை இதற்கு மேல் அவமானப்படுத்த வேறு எந்தக் கட்சியாலும் முடியாது.

படிக்க :
கேரளாவில் முசுலீம் மாணவர்கள் குடியரசு தினத்தை புறக்கணித்தனரா ? சங்கிகளின் ட்ரோல் அம்பலம் !
♦ ஜே.என்.யூ : ஒரு ஏபிவிபி ரவுடி கூட இன்னும் கைது செய்யப்படவில்லை !

பெண்களின் பெயர்களைக் கொண்ட மற்றொரு பாஜக ட்ரால் கும்பல், தனது அலைபேசியை தொலைத்து விட்டதாகவும், தனது எண்ணிற்கு அழைப்பு விடுத்து கண்டுபிடிக்க உதவுமாறும் பதிவிட்டிருந்தது. சரி யாரோ பெண்பிள்ளை கைபேசியைத் தொலைத்துவிட்டது; உதவி செய்யலாம் என அழைப்பு விட்டவர்களின் அழைப்புகளும் குடியுரிமைச் சட்டத்திற்கு ஆதரவான அழைப்புக்களாக பதிவு செய்யப்பட்டிருக்கும்.

கூலிக்கு மாறடிக்கும் ட்ரோல்கள் மேற்கண்டவாறு தவறான தகவல்கள் மூலம் மிஸ்டுகால் புரட்சிக்கு ஆள்பிடித்துக் கொண்டிருக்க, உண்மையான ஆர்.எஸ்.எஸ். ரத்தம் ஊறியிருக்கும் கணிசமான ட்ரோல்கள் பெண்களைப் பண்டமாக்கி தங்களது ஆள்பிடிக்கும் கடமையைச் செய்துவந்தனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

பெண்களின் பெயர் கொண்ட ஐடியிலிருந்து, “நான் உங்கள் அழைப்புக்காக காத்திருக்கிறேன். அழையுங்கள் 8866288662.” ; “இன்று மிகவும் போர் அடிக்கிறது. எனது எண்ணை என் பின் தொடர்வாளர்களுக்கு பகிர விரும்புகிறேன் – அழையுங்கள் 8866288662” என்பது போன்ற வாசகங்களைப் பதிவிட்டு ஆள்பிடிக்கத் தொடங்கினர்.

இன்னொரு ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தி நேரடியாக ‘மாமா’ வேலையையே செய்யத் தொடங்கியிருந்தார். “உங்கள் ஊரில் 69 சூடான பெண்கள் உங்களோடு பாலியல் உறவு வைக்கக் காத்திருக்கிறார்கள். அழையுங்கள் 8866288662”. என்று பதிவிட்டிருக்கிறார்.

சரி இதையெல்லாம் வைத்து ஒரே நாளில் பல கோடி மிஸ்டுகால்களைப் பெற்று சி.ஏ.ஏ. சட்டத்திற்கு அமித்ஷா ஆதரவு திரட்டியிருப்பார் என்று பார்த்தால், அமித்ஷா வெளியிட்டிருக்கும் அறிக்கையின் படியே வெரும் 52 லட்சம் பேர்தான் மிஸ்டுகால் கொடுத்திருக்கிறார்களாம்.

ஆள்பிடிக்க மெனக்கெட்ட சங்கிகள் தான் பாவம் ! பாஜக-விற்கு ட்ராலாக வாக்கப்பட்ட பாவத்திற்காக இணையத்தில் ‘மாமா’ வேலை வரை பார்த்தும் ஒன்றும் பலனில்லாமல் போய்விட்டதே ! வருத்தம் இருக்காதா பின்னே !


நந்தன்
நன்றி : தி வயர்

 

ஜே.என்.யூ. மாணவர்கள் மீதான ஏ.பி.வி.பி. தக்குதல் – மதுரை வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் !

போராட்டத் தீ பரவட்டும் ! மதுரை வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் !

  • டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் மீது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. நடத்திய ஆயுதத் தாக்குதல் – மனித சமூக அறிவின் மீதான தாக்குதல்!
  • தாக்கிய குண்டர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்!
  • குடியுரிமை திருத்தச் சட்டத்தால் நாட்டையே வன்முறைக் களமாக்கிய மோடி-அமித் சா அமைச்சரவையே பதவி விலகு!

மேற்கண்ட முழக்கங்களை வலியுறுத்தி 06.01.2020 அன்று மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன், பார் கவுன்சில் உறுப்பினர் பா.அசோக் , வழக்கறிஞர் முத்து அமுதநாதன், வழக்கறிஞர் வின்சென்ட் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

தங்களது உரையில் ஜே.என்.யூ மீதான தாக்குதலுக்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்ததுடன், வழக்கறிஞர்கள் மாணவர்களின் போராட்ட உரிமைக்காக, அரசியல் சட்டத்தை காப்பதற்காக களத்தில் நிற்போம் என்றனர்.

மேலும், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் – மாணவர்கள் மீது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. நடத்திய ஆயுதத் தாக்குதல் நாட்டையே அதிர்ச்சியில் உறையச் செய்துள்ளது.

மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலை நிர்வாகமும், உள்துறை அமைச்சர் அமித்சாவின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி காவல்துறையும், ஏ.பி.வி.பி. -யின் தாக்குதலுக்குத் துணை நின்றுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டுவந்த மோடி அரசுக்கு எதிராக நாடே ஒன்றுதிரண்டு போராடுகிறது. இப்போராட்டங்களில் முன்னணியில் இருப்போர் இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக் கழக மாணவர்கள்தான். மோடி அரசின் பாசிச திட்டங்களை அறிவுப்பூர்வமாக அம்பலப்படுத்திப் போராடுவோர் பல்கலைக் கழக மாணவர்களும்-பேராசிரியர்களும்தான்.

இதனால்தான் டெல்லி ஜாமியா, அலிகார், ஜவகர்லால் நேரு, ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக் கழகம் மற்றும் நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி. -க்கள் மோடி அரசால் குறிவைக்கப்பட்டு தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றன.

ஜெர்மனி – இத்தாலியில் நடந்த பாசிச ஆட்சியில் முதலில் அரசுத் துறைகள், நீதிமன்றங்களை கைப்பற்றிய பாசிஸ்ட்டுகள், அடுத்து குறிவைத்தது உயர்கல்வி நிலையங்களைத்தான். மோடி ஆட்சியிலும் அதுதான் நடக்கிறது. கல்வி நிலையங்களின் மீதான தாக்குதல் என்பது மனித நாகரீகம் மீதான தாக்குதலே!

நாட்டின் சொத்தே அறிவுசார் பிரிவினரும், உழைக்கும் மக்களும்தான். இந்த இரண்டு பிரிவுகளும் நாட்டில் பாதுகாப்பாக இல்லை. பல்கலைக்கழகம், கல்லூரி விடுதிகளில்கூட நமது பிள்ளைகள் பாதுகாப்பாக இல்லையெனில், வேறு எங்கு பாதுகாப்பாக இருக்க முடியும்? யாருக்கு பாதுகாப்பு இருக்க முடியும்?

படிக்க:
பீகார் : தேசியக் கொடி ஏந்தியவரை கொடூரமாகக் கொன்ற காவி குண்டர்கள் !
♦ ICU-வில் இந்திய ஜனநாயகம் ! குடந்தை ம.உ.பா.மையம் கருத்தரங்கம் !

மத, இன அடிப்படையிலான குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு என்று நாட்டைப் பிளக்கும் அரசியல் சட்ட விரோதக் கொள்கைகளை அமல்படுத்திய மோடி அரசைப் புரிந்து கொண்ட மக்கள், மாணவர்கள் – இளைஞர்கள் தீவிரமாகப் போராடுகிறார்கள். வரலாறு காணாத போராட்டத்தால் பயந்துபோன மோடி அரசு, துப்பாக்கிச் சூடு, கொலை, ஆயுதத் தாக்குதல் என்ற உத்திகளை கையில் எடுக்கிறது.

மோடி அரசு அனைத்துத் துறைகளிலும் தோற்றுப் போன, பெரும்பான்மை இந்து மக்களுக்கு எதிரான அரசு. இந்த அரசு தொடர்ந்தால் இட ஒதுக்கீடு போகும்; குலத் தொழில் வரும்; பொருளாதாரம் நாசமாகும்; அரசியல் சட்டம் அழிக்கப்படும்.

மோடி அரசு எத்தனை வன்முறையை ஏவினாலும், அரசியல் சட்டத்தை, நாட்டைக் காக்கப் போராடும் இந்திய மக்கள் அஞ்ச மாட்டோம். ஒரு அடி கூடப் பின்வாங்க மாட்டோம்; தொடர்ந்து முன்னேறுவோம். நாட்டு மக்களின் அனைத்து உரிமைப் போராட்டங்களுக்கும் வழக்கறிஞர்கள் துணைநிற்போம். மாணவர்களின் போராடும் உரிமை அடிப்படை உரிமை. போராடும் உரிமை பறிக்கப்பட்டால், அனைத்து உரிமைகளும் பறிபோகும்.

எனவே, டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் மீதான ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க-வின் மாணவர் அமைப்பு ஏ.பி.வி.பி. நடத்திய ஆயுதத் தாக்குதலை மதுரை வழக்கறிஞர்கள் வன்மையாக கண்டிக்கிறோம்!

போராடும் மாணவர்களுக்கு, மக்களுக்கு துணைநிற்கிறோம்! மோடி அமித்சா பதவி விலகும்வரை போராட்டத்தைத் தொடர்வோம்! என்று மதுரை வழக்கறிஞர்கள் உறுதி எடுத்தனர்.

மூத்த வழக்கறிஞர் ஜகாங்கீர் பாஷா, AILU, SDPI, VCK, CPCL உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். வழக்கறிஞர்கள் திரு கனகவேல், திரு ராஜேந்திரன் ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கான  உரிய ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மதுரை வழக்கறிஞர்கள்.

சுபாவ வாதம் : விஞ்ஞானச் சிந்தனையின் துவக்கம் !

0
நா. வானமாமலை

இந்திய நாத்திகமும் மார்க்சியத் தத்துவமும் | நா. வானமாமலை – பாகம் – 05

முதல் பாகம்

ஈஸ்வர வாதமும் இயற்கை வாதமும்

வேத காலத்திற்கு பின் பொருள் முதல்வாதச் சார்புடைய மூன்று கொள்கைகள் உருவாகின. வேதயக்ஞங்களை எதிர்த்தவர்கள், ஐம்பூதக் கொள்கை, பிரக்ருதி கொள்கை, சுபாவவாதம் ஆகியவற்றை முன் வைத்தனர். உலக இயக்கத்திற்கு பூதங்களின் செயல்களே காரணம் என்றும், உலக இயக்கத்தை விளக்க கடவுளின் தலையீடு தேவையில்லை என்றும் கூறியவர்கள் லோகாயதர்கள். இவர்கள் முரணற்ற நாத்திகர்கள். ‘பிரக்ருதி’ என்ற மூலப் பொருளின் பரிணாம மாற்றமே பிரபஞ்சத்தின் உருவாக்கத்திற்குக் காரணம் என்று சாங்கியவாதிகளின் கடைப்பிடி. அவர்கள் கடவுளின் செயலை மறுத்தார்கள், இவர்களது பண்டைக்கால தத்துவம் நிரீச்சுவர சாங்கியம் என்று எதிரிகளால் அழைக்கப்பட்டது (நிரீச்சுவர = கடவுள் இல்லாத). இதனோடு சுபாவவாதம் என்றதோர் கொள்கையும் உருவாயிற்று. இதனைப் பல தத்துவவாதிகள் ஏற்றுக் கொண்டனர். பொருள்களின் குணங்களால் (சுபாவம்) உலக மாறுதல்கள் அனைத்தும் நிகழ்கின்றன என்பது சுபாவவாதத்தின் உள்ளடக்கம். இந்தக் கொள்கை, ஆரம்பத்தில் எந்தத் தத்துவத்தோடும் சார்புடையதாக இருக்கவில்லை. பின்னர் பொருள்முதல்வாத தத்துவங்களான லோகாயதம், சாங்கியம் இவற்றின் பகுதிகளாக இக்கொள்கை பொருந்தி விட்டது. கடவுளை மறுக்க இக்கொள்கையைப் பண்டையப் பொருள்முதல்வாதிகள் பயன்படுத்தினார்கள்.

‘சுபாவம்’ என்னும் கொள்கைதான் பண்டையத் தத்துவ வரலாற்றில் மத நம்பிக்கையையும், விஞ்ஞான ஆராய்ச்சியையும் பிரிக்கிற எல்லைக்கோடாகக் காணப்படுகிறது. இவை முரண்பட்டு, முரண்பாடுகள் வளர்ச்சியடைந்து தற்காலத்தில் விஞ்ஞானம், மத நம்பிக்கையும் ஒன்றையொன்று எதிர்த்து நிற்கின்றன. இதனை பெட்ராண்டு ரஸ்ஸல் என்னும் சிந்தனையாளர் நிலைத்த போராட்டம் (Pitched battle) என்று வருணிக்கிறார்.

மதங்களின் மிக முக்கியமான நம்பிக்கை, “இப் பிரபஞ்சத்திற்கு வெளியே உள்ள இயற்கைக்கு அதீதமான சக்தி ஒன்றுதான் இவ்வுலகைப் படைத்தது” என்பதே. அச்சக்தியைத்தான் ‘கடவுள்’ என்று பக்திமான்கள் அழைக்கிறார்கள். இக்கடவுளை நம்பிக்கையால் மட்டுமே அறிய முடியும் என்று மதவாதிகள் கூறுகிறார்கள். சில தீர்க்கதரிசிகள் மூலம் கடவுள் தனது நீதியை வெளிப்படுத்துவார். இந்தியாவில் கடவுளே அவதாரம் எடுத்து தமது நீதியை நிலை நாட்டுவார் என்று நம்புகிறார்கள்.

பைபிளில் வருங்காலத்தில் நிகழப்போகும் நிகழ்ச்சிகளை தேவ தூதர்கள் புனிதர் ஜானுக்கு வெளிப்படுத்தியதாக “வெளிப்படுத்தின விசேஷம்” (Revelation)(1) என்று ஓர் அத்தியாயம் உள்ளது. அதில் தேவ தூதர்கள் நடத்தப் போகிற சம்பவங்களை திவ்ய வாசகனான யோவானுக்கு அறிவிக்கிறார்கள். சைவத்தில் அடியார்களுக்குச் சிவபெருமான் காட்சி கொடுத்தோ அல்லது கனவில் தோன்றியோ தம் விருப்பங்களைத் தெரியப்படுத்துவார் (பெரிய புராணம்). தற்காலக் கிராமத் தெய்வங்கள் கூட ஆராதனை கொண்டு ஆடுபவர்கள் மூலமாக தம் விருப்பங்களைத் தெரியப்படுத்துவதாக நம்பிக்கையுள்ளது. இவர்களுக்கு சாமியாடி, கோமரம் என்ற பெயர்கள் உண்டு. இது போலவே பகவதி மனம் தெரிந்து சொல்லுகிற பூசாரிக்கு ‘வெளிச்சப்பாடு’ என்று பெயர்.

J.G. ஃப்ரேஸர்

இவர்களை J.G. ஃப்ரேஸர் என்னும் பண்பாட்டு மானிடவியல் அறிஞர் (Temporary Gods) ‘தாற்காலிகக கடவுளர்’ என்று அழைப்பர். சாதாரண மனிதர்களாக வாழும் இவர்கள், ஊட்டு, கொடை, விழா நேரங்களில் சாமியேறப் பெற்றவர்களாக தங்கள் தன்மையை இழக்கிறார்கள். இவையாவும் நம்பிக்கையே. சாமியாடிகள் தங்கள் உடலில் சிறிது நேரம் சாமி புகுந்து கொள்வதாக எண்ணுகிறார்கள். பக்திமான்கள் அதனை நம்புகிறார்கள்.

வைஷ்ணவ ஆழ்வார்கள், குருமார்களுடைய செயல்களைத் திருமால், கனவில் தோன்றி வழிப்படுத்துவதாக அவர்களுடைய ‘வரலாறு’ போன்ற புராணக் கதையான ‘குரு பரம்பரை’ கூறும். பக்தியின் ஆற்றலால், வழிபாட்டுக்குரிய தெய்வங்களோடு நேரில் பேசுகிற சாமியார்கள் மீது பெருமதிப்பு வைக்கும் நாடு இது. இவ்வாறு பேசுவது, கனவு காண்பது, காட்சிகள் இவையாவும் கடவுளர்களின் பிரியத்துக்குரியவர்களுக்கே நிகழும். வேறு யாருக்கும் தெரியாது. கடவுள் வெளிப்படுத்திய நிலையான உண்மைகளே, சமய நூல்களில் காணப்படுகின்றன என்று மதச்சார்பாளர்கள் நம்புகிறார்கள். மத ஸ்தாபகர்களுக்கு எல்லாம் இப்படியொரு வாழ்க்கை நிகழ்ச்சியுண்டு என்று அவ்வம்மதவாதிகள் நம்புகிறார்கள். இதனை ஆகமம், நூல் என்று சமயக் கணக்கர் வாதங்களைக் கேட்ட காதையில் மணிமேகலை கூறுகிறது.

விஞ்ஞானத்தின் அடிப்படைக் கருதுகோள் இந்த நம்பிக்கைகளுக்கு விரோதமானது. அதன் முக்கியமான சிந்தனைகள் வருமாறு:

இவ்வுலகம் அடிப்படையில் பொருளால் ஆனது. பொருள்களிலேயே உள்ளார்ந்து இருக்கும் நியதிகளால் பொருள்-இயக்கம் தோன்றுகிறது, ‘அவனன்றி ஓரணுவும் அசையாது’ என்ற கடவுளை நம்புவோரின் கூற்றை அணுக்கள் தங்களுடைய சக்தியாலேயே அசைகின்றன, அவனது தலையீடு “அவசியமில்லை” என நவீன அணுவியல் நிரூபிக்கிறது.

படிக்க :
கடவுள் இருட்டு ! அறிவியல் வெளிச்சம் ! – நூல் அறிமுகம்
♦ சென்னை புத்தகக் காட்சியில் புதுப் பொலிவுடன் கீழைக்காற்று !

பலிகளாலும், காணிக்கைகளாலும், ஜபங்களாலும், பிரார்த்தனைகளாலும் மாற்ற முடியாத விஞ்ஞான விதிகளுக்குட்பட்டு பிரபஞ்ச இயக்கம் நிகழ்கிறது. இதனால் மனிதன் விஞ்ஞான விதிகளின் கையில் ஒரு பந்து போல எவ்வித சுதந்திரமும் அற்றவன் என்பது பொருளல்ல. “விஞ்ஞான விதிகளை மனிதன் அறிய முடியும்; அறிந்து அவ்வறிவால் பொருள்களின் இயக்கத்தை நெறிப்படுத்த இயலும்” என்று விஞ்ஞானம் வெளிப்படுத்தியுள்ளது. இன்று எத்தனை சக்திகள் மனிதன் விஞ்ஞான விதிகளை அறிந்ததால் அவனுக்குப் பணிபுரிகின்றன?

ரசாயன விஞ்ஞானத்தை மனிதன் படைத்திருக்கும் காரணத்தால், விவசாயத்திற்குத் தேவையான ரசாயன உரங்கள், பூச்சி கொல்லிகள், நமது உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கக் கூடிய பல மருந்துப் பொருள்களையும், நோயைக் குணப்படுத்தக்கூடிய பல ஒளஷதிகளையும், இயற்கையில் இருந்து படைத்துள்ளான். அறுவை வைத்தியம் எவ்வளவு முன்னேற்றமடைந்துள்ளது என்று இன்று சொல்ல வேண்டியதில்லை. இதற்குக் காரணம் உயிரியல் விதிகளையும், உயிர் ரசாயன விதிகளையும், வேறு விஞ்ஞானப் பிரிவுகளின் விதிகளையும் மனிதன் அறிந்து பயன்படுத்துவது தான்.

விறகைத் துளைத்துத் தீயை உண்டாக்கிய மனிதன், குளிர் காயத் தீயின் உஷ்ணத்தைப் பயன்படுத்தினான். இன்று பிரம்மாண்டமாக வளர்ச்சி பெற்றுள்ள உற்பத்தித் தொழில்களுக்கு வெப்பம் அளிக்க நிலக்கரியைப் பூமியின் அடியில் இருந்து தரைமட்டத்திற்குக் கொண்டு வருகிறான். பாறை எண்ணெயைத் தரையின் அடிப்பாகத்தில் இருந்து மேலே கொண்டு வருகிறான். நிலக்கரியும் பாறை எண்ணெயும் இருப்பது மனிதனுக்கு எப்படித் தெரியும்? இவை இருக்கும் இடங்களில் உள்ள பிசாசுகள், தம்மை ஆராதிக்கும் சாமியாடிகளுக்கு வந்து காட்சி கொடுத்துச் சொல்லிச் சென்றனவா? தரையியல் (Geology) தரையியல் ரசாயனம் (Geo chemistry) ஆகிய விஞ்ஞானங்களின் வளர்ச்சியே நிலக்கரி, உலோகங்கள், மண்ணெண்ணெய் முதலியன எத்தன்மையுடைய பாறைகளில் காணப்படும் என்ற விதிகளைத் தோற்றுவித்தன. இவ்விஞ்ஞான அறிவைப் பயன்படுத்தி மனிதன் பூமியின் உட்குடலைத் தோண்டித் தனக்குத் தேவையான பொருள்களைப் பெறுகிறான். ஃபிஸிக்ஸ் (பௌதீகம்-இயற்பியல்) என்னும் விஞ்ஞானத்தின் விதிகளை அறிந்து இப்பொருள்கள் இருக்கும் இடத்தையும், அளவையும் தெளிவாக அறியலாம்.

வெடி அதிர்வுகளே, அண்மைக் காலத்தில் உலோக தாதுக்கள், நிலக்கரி, மண்ணெண்ணெய் போன்ற பொருள்களின் இருப்பிடத்தை அறியப் பயன்பட்டது. தற்போது பல வகைக் கதிர்களின் (Rays) பிரதிபலிப்பினால் பூமியினடியில் உள்ள பொருள்களை அறிய முடிகிறது. ஓரிரு உதாரணங்களே நான் கொடுத்துள்ளேன். விஞ்ஞான- தொழில் நுணுக்கப் புரட்சிக் காலத்தில் ஆயிரக் கணக்கான சான்றுகளை அடுக்கிக்கூற முடியும். மனிதன், இயற்கை விதிகளை அறிந்து கொள்வதால், இயற்கையை தனது நலனுக்கேற்ற வகையில் பயன்படுத்திக் கொள்ளுகிறான் என்ற உண்மையை விளக்கப் பல நூற்றுக் கணக்கான நூல்களே வெளிவந்துள்ளன.

இவ்விஞ்ஞானிகள் இயற்கையை அறியப் பயன்படுத்தும், அறிதல் முறை, நேர்காணல், சோதனை, தொடர் சிந்தனை, கருதுகோள் அமைப்பு, பின்னும் நிரூபணச் சோதனை ஆகிய சிந்தனைப் பகுதிகள் அடங்கிய விஞ்ஞான ஆய்வு முறையாகும். இங்கு நம்பிக்கைகள், கடவுளைக் கண்டவர்கள் கூறியது, ஆப்த வாக்கு (பெரியோர் கூற்று) என்பதற்கெல்லாம் இடம் இல்லை.

இவ்விரண்டு போக்குகளுக்கும் பண்டைக்கால முதலே போராட்டங்கள் நிகழ்ந்துள்ளன. இந்தியத் தத்துவ சிந்தனையில் ‘கடவுட் கொள்கை’ ‘சுபாவக் கொள்கை’ இரண்டிற்கும் நடைபெற்றுள்ள போராட்டங்களை இங்கு காண்போம்.

சுபாவவாதம், விஞ்ஞானத்திற்கு அடிப்படைக் கருதுகோள். இது ஈஸ்வர வாதத்தின் ஒவ்வொரு வளர்ச்சி நிலையிலும் முரண்பட்டு மோதிக் கொள்ளுகிறது. இதனை இந்திய தத்துவ வரலாற்றில் ஈஸ்வர வாதத்திற்கும் சுபாவ வாதத்திற்கும் இடையே நடைபெற்ற போராட்டமாகக் காணலாம். ஸ்வேதாஸ்வதார உபநிஷதம் என்னும் நூலில் சுபாவவாதத்தை எதிர்க்கும் வாதங்கள் உள்ளன. இவ்வுபநிஷதம் ‘பானையைக் கண்டதும் செய்பவன் உண்டென்று யூகிப்பது போல, உலகத்தை அறிந்ததும், இதைப் படைத்தவன் உண்டென்று அறிய வேண்டும்’ என்று படைப்பாளியான கடவுள் உண்டென்று கூறுகிறது.

இவ்வாறு வாதிப்பதற்கு, அவர் காலத்தில் இக்கூற்றை மறுத்த சுபாவவாதம் என்னும் கருத்தை மறுக்க வேண்டியதாயிற்று. இதன் தர்க்க உருவம், இயக்கத்திற்கு இயற்கைச் சக்திகள் காரணமா, அல்லது இயற்கைக்கு அதீதமான சக்திகள் காரணமா என்ற வாதமாக இருந்தது.

நடுக் காலத்தில் சுபாவவாதத்தை, ‘நிகழ்ச்சிகளுக்குக் காரணம் கிடையாது’ என்ற பொருளில் தத்துவவாதிகள் பொருள் கொண்டார்கள். அல்லது காரணம் மட்டுமே உண்மை விளைவு மாயை என்று சில தத்துவங்கள் கூறின. காரணம் அல்லது விளைவு உண்மையல்ல என்று வேறு தத்துவங்கள் கூறின. இதனை உபநிஷதங்கள் ‘யதிருச்சா’ (யதேச்சை) என்ற பெயரால் அழைக்கின்றன. காரணமின்றித் தாமாகவே நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அல்லது எந்த நிகழ்ச்சிக்கும் காரணம் காண இயலாது என்று யதிருச்சாவாதிகள் வாதித்தனர். இங்கும் கடவுளின் தலையீடு இன்றியே உலக நிகழ்ச்சிகள் நிகழ்கின்றன என்ற கருத்து உள்ளது.

சமணத் துறவி (மாதிரிப் படம்)

இவ்விரண்டு கொள்கைகளும் நேர்முரணானவை. சுபாவவாதத்தை இயற்கை வாதம் என்றழைக்கலாம். இயற்கை நிகழ்ச்சிகளுக்குக் காரணம் உண்டு. அவற்றை மனிதர் அறிலாம். இக்காரணங்கள் இயற்கையில் உள்ளார்ந்து உள்ளன. ஒரு நிகழ்ச்சிக்குக் காரணம் கடவுள் என்று நம்பினால் அறிவு ஸ்தம்பித்துப் போய்விடும். பொருள்களின் இயற்கையே அவற்றின் மாறுதல்களுக்குக் காரணம். இது சுபாவவாதம். யதிருச்சவாதம் என்பது உலகில் நடைபெறும் நிகழ்ச்சிகளனைத்தும் தான்தோன்றியாக நிகழ்கின்றன. இயற்கையிலோ, இயற்கைக்கு வெளியிலோ ஒரு நிகழ்ச்சிக்குக் காரணத்தைத் தேடுவது அவசியமில்லை என்று வாதிப்பதுதான் யதேச்சை வாதம். இரண்டும் கடவுள் அல்லது தேவர்களின் தலையீட்டை எதிர்க்கின்றன. இரண்டும் நாத்திகச் சிந்தனை உடையவை. ஆயினும் நேர் எதிர் சிந்தனைப் போக்குடையவை.

இவ்விரண்டின் வேறுபாட்டை மிகத் தெளிவாக குணரத்னா கூறுகிறார் (இவர் நடுக்கால ஜைன தத்துவவாதி).

இயற்கைவாதிகள் (சுபாவவாதிகள்) கீழ் வருமாறு கூறுகிறார்கள் : பொருள்களின் மாற்றங்கள் அவற்றில் உள்ளார்ந்திருக்கும் தன்மைகளால் (சுபாவம்) நிகழுகின்றன. ஒவ்வொன்றும் உருப்பெறுவது சுபாவம் என்னும் இயற்கைப் போக்கின் செயல்பாட்டினாலேயே. உதாரணமாக களிமண், சட்டியாக மாறுகிறது. துணியாக மாறுவதில்லை. நூலிழையில் இருந்து துணி உண்டாகிறது. சட்டி உண்டாவதில்லை. ஒழுங்கான இந்நிகழ்ச்சிகளுக்கு சுபாவமே காரணமாகும். உலகில் நிகழும் எல்லா மாற்றங்களும் சுபாவத்தினால் நிகழ்கின்றன என்று அறியலாம். அதனால் பின் வருமாறு கூறப்பட்டுள்ளது:

முள்ளைக் கூர்மையாக்கியவர் யார்?
விலங்குகளிலும், பறவைகளிலும் பற்பல வேறுபாடுகள் இருப்பது எதனால்?
பாவம் என்பதால் இவை அவ்வாறுள்ளன. யாரும் முள்ளைக் கூர்மையாக்கவோ, விலங்கு பறவைகளை வேறுபட்ட தன்மைகளோடு படைக்கவோ இல்லை.
இலந்தை மரத்தின் முட்கள் கூர்மையாக இருக்கின்றன. சில முட்கள் நேராகவும், சில முட்கள் கோணலாகவும் உள்ளன.
ஆனால் பழம் உருண்டையாக இருக்கிறது.
இவற்றையெல்லாம் யார் அத்தன்மை உடையதாகச் செய்தார்கள்.

ஒவ்வொரு பொருளின் உருவாக்கத்திற்கும் காரணம் சுபாவமே என்ற முடிவு தவிர்க்க முடியாதது.

படிக்க :
ஜே.என்.யூ : ஒரு ஏபிவிபி ரவுடி கூட இன்னும் கைது செய்யப்படவில்லை !
♦ நூல் அறிமுகம் : கூலி உழைப்பும் மூலதனமும் | மனிதன் உருவானதில் உழைப்பின் பாத்திரம்

குணரத்னா, யத்ரிச்சா வாதத்தை விளக்கிப் பின்வருமாறு கூறுகிறார்:

நிகழ்ச்சிகள் காரணமின்றி நடைபெறும் என்று யதேச்சை வாதிகள் கூறுகிறார்கள். காரண காரியத் தொடர்ச்சியெதுவும் இன்றி உலக நிகழ்ச்சிகள் நடைபெறுவதாகவும், நிகழ்ச்சிகள் யதேச்சையாக நிகழ்வதாகக் கூறுபவர்கள் யதேச்சை வாதிகள். உலக நிகழ்ச்சிகள் அனைத்தும் காக்கை உட்காரப் பனம்பழம் விழுவது போல நடக்கின்றன. தற்கால இந்தியத் தத்துவவாதிகள் சுபாவவாதத்தை ‘இயற்கைவாதம்’ என்றும், யதேச்சை வாதத்தை ‘விபத்து வாதமென்றும் அழைக்கிறார்கள். இவ்விரு வாதங்களும் காரணம் பற்றிய கருத்தில் வேறுபடுகின்றன. ஆனால் கடவுளுக்கு உலக நிகழ்ச்சிகளில் எவ்விதத் தலையீடும் இல்லை என்றே கூறுகின்றன.

சாந்தராஷிதர் என்ற பௌத்தரும், குணரத்னா என்ற ஜைனரும் சுபாவ வாதத்தையும், விபத்து வாதத்தையும் எதிர்த்து வாதாடினார்கள். அவர்களின் வாதங்களின் பரபக்க வாதமாக இவை இரண்டும் இருந்தன. இவ்வெதிரிகளின் வாதங்களில் இருந்து சுபாவவாதம், விபத்துவாதம் இரண்டின் தத்துவ உள்ளடக்கத்தை அறிந்து கொள்கிறோம்.

இக்கொள்கைகளில் சுபாவவாதத்தை பிரஹாஸ்ப தீயர்கள் என்ற லோகாயவாதிகள் தங்கள் வாதங்களுக்குத் துணைக் கொண்டார்கள். அவர்கள் கூறியதாவது:

தீயின் தன்மை சுடுதல்.
நீரின் தன்மை குளிர்ச்சி.
காற்று இரண்டும் இல்லாதது.
இவ்வேறுபாடுகளை உண்டாக்கியது யார்?
அவற்றின் சுபாவத்தால் அவை அவ்வாறிருக்கின்றன.

சாங்கியர்களும் சுபாவவாதச் சார்புடையவர்களே. தற்கால இந்தியத் தத்துவவாதியான கோபிநாத கவிராஜ் கூறுவதாவது: “ ‘நிமித்த காரணம்’ என்று உலகப் பரிணாம இயக்கத்திற்குக் கடவுளைக் காரணமாக்காமல் பொருள் தனது இயற்கையால் தான் பரிணாம மாற்றம் அடைகிறது என்று கூறுவதால் சாங்கியவாதிகள் சுபாவவாதிகளே.”

ஈஸ்வர வாதத்திற்கும், சுபாவ வாதத்திற்கும் நடைபெற்ற தத்துவப் போராட்டம், மிகப் பண்டைக் காலத்தில் மதத்திற்கும், விஞ்ஞானத்திற்கும் நிகழ்ந்த போராட்டமாகும். முதன் முதல் சுபாவவாதம் எந்தத் தத்துவப் போக்கோடும் தொடர்பு கொள்ளாமல் சுதந்திரமான கருத்தாக இருந்தது. பொருள்முதல்வாதிகள், தங்கள் கொள்கைகளை வலுப்படுத்திக்கொள்ள இக்கொள்கையைத் தங்கள் தத்துவ உள்ளடக்கத்தோடு இணைத்துக் கொண்டார்கள். சுபாவ வாதம் என்பது நாத்திகம் மட்டுமன்று, பொருள்கள் மாற்றம் அடைவதற்குக் காரணம் அவற்றின் சுபாவமே என்ற விஞ்ஞான கருத்தும் அதில் உள்ளது. இதுவே விஞ்ஞானச் சிந்தனையின் துவக்கம் என்று கூறலாம்.

(தொடரும்)

அடிக்குறிப்பு:

(1) II யோவான-பக். 333, இந்திய வேதாகமச் சங்க வெளியீடு பரிசுத்த வேதாகமம்.

« முந்தைய பாகம் ……………………………………………………………………. அடுத்த பாகம் »

இந்திய நாத்திகமும்
மார்க்சீயத் தத்துவமும்

நா. வானமாமலை
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்