Monday, June 29, 2026
முகப்பு பதிவு பக்கம் 336

கேள்வி பதில் : சீமானின் அரசியலை மதிப்பிடும் அளவுகோள்கள் எவை ?

seeman-Naam-tamilar-NTK

கேள்வி: //சீமான் அரசியலை எந்தெந்த அளவு கோள்களை கொண்டு மதிப்பிடுவது? அல்லது சீமான் அரசியலை பகுப்பாயவும்.//

– ராஜேந்திரன்

ன்புள்ள ராஜேந்திரன்,

ஏற்கனவே நீங்கள் “நாம் தமிழர்” பற்றிக் கேட்டிருந்தீர்கள். அப்போது நாம்தமிழர் கட்சி குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள், உங்களது சந்தேகம் என்ன என்று கேட்டிருந்தோம். அதற்கு நீங்கள் இப்போதும் பதிலளிக்கவில்லை. கேள்வி பதில் பகுதி பொருளுள்ள வகையில் அமைய வேண்டுமென்றால் உங்களைப் போன்ற நண்பர்கள் உண்மையிலேயே கேள்விகள், சந்தேகங்கள் கேட்டால் பதிலளிக்க பயனுள்ளதாக அமையும். பரவாயில்லை, இப்போது பதிலளிக்கிறோம்.

நாம் தமிழர் கட்சியை தன்னுடைய தனிப்பட்ட சொத்தாக சீமான் கருதுகிறார். நேர்காணல்களில் கட்சியையும் அவரையும் தொடர்புபடுத்தி ஏகப்பட்ட ‘நான்கள்’ வருகின்றன. அதனால்தான் பேரா. அருணனோடு நடந்த விவாதத்தில் சவால் விடும்போது சவாலில் தோற்றுவிட்டால் என் கட்சியை கலைத்து விடுவேன் என்றார். ஆகையால் நாம் தமிழர் கட்சியின் வாழ்வும் இருப்பும் சாவும் சீமானின் கையில்தான் இருக்கிறது. நாம் தமிழரின் நிரந்தரத் தலைவரும், தேர்தலில் வென்றால் ஒரே முதல்வரும் சீமான்தான். இது வாரிசு அரசியலுக்கு இணையான அரசியல்தான். கூட்டுத்துவம் இல்லாமல் ஒரு நபரை மட்டும் மையப்படுத்தி ஒரு கட்சி அல்லது இயக்கம் வளர்வது கடினம். அப்படியே வளர்ந்தாலும் அந்த வளர்ச்சியின் காலம் மிகவும் வரம்பிற்குட்பட்டது. இது முதல் விசயம்.

seemanவந்தேறிகள் ஆளக்கூடாது, தமிழன்தான் ஆளவேண்டும் என்று அனைத்து பிரச்சினைகளுக்கும் இனவாத அரசியலை முன்வைத்து உணர்ச்சியாக பேசுகிறார். யார் வந்தேறி, யார் தமிழன் என்ற கேள்வி தமிழ்ச் சாதிகள்தான் அதாவது ஆதிக்க சாதிகள்தான் தமிழர்கள் என்று வருகிறது. அந்த வகையில் அவருடைய தமிழ் தேசிய அரசியலில் சாதியம் கலந்திருக்கிறது. தமிழனுக்கு பொற்கால வரலாறு உண்டு, இன்று தமிழன் ஏமாந்து விட்டான், தமிழினத்தை மீட்க வேண்டும் என்பதையெல்லாம் நா புடைக்க, நரம்பு மிடுக்க அவர் பேசுகிறார். மேலோட்டமான அரசியல் புரிதலில் இருக்கும் மக்கள் பிரிவினரை இந்த உணர்ச்சிமயமான முழக்கம் ஆரம்பத்தில் ஈர்க்கும். மராட்டிய மாநிலத்தில் இப்படித்தான் “மதராசிகளை விரட்ட வேண்டும்” என்று பால் தாக்கரே பேசி தனது சிவசேனாவை வலுப்படுத்தினார். இன்று அந்த முழக்கம் அங்கேயே எடுபடுவதில்லை. சிவசேனாவும் பாஜக-வின் இளைய பங்காளியாக தேய்ந்து போனது. இது இரண்டாவது விசயம்.

சீமான் தனது மாற்று அரசியலாக தேர்தல் அரசியலையே முன்வைக்கிறார். தேர்தலில் வெற்றி பெற்று தான் கூறும் மாற்று அரசியல் தீர்வுகளை அமல்படுத்துவேன் எனக் கூறுகிறார். அதன்படி நாம்தமிழர் கட்சி இந்திய பாராளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மையாக வெற்றிபெற வாய்ப்பில்லை. தமிழகத்தில் மட்டும் வெற்றி பெற வாய்ப்பிருப்பதாக வைப்போம். அப்போதும் அவரால் அவர் கூறியவற்றை செய்ய வாய்ப்பேதுமில்லை. கார்கள் எனப்படும் மகிழுந்து தயாரிப்பை நிறுத்துவேன், அதனால் சுற்றுச்சூழல் மாசடைகிறது, ஏராளமான நீர் விரயமாகிறது என்கிறார். மகிழுந்து தேவைப்படுவோருக்கு வெளிநாட்டில் அதாவது ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வேன் என்று கூறுகிறார்.

படிக்க:
காஷ்மீர் வெளிமாநில தொழிலாளர்கள் முதல் பீகார் குழந்தைத் தொழிலாளர்கள் வரை !
♦ தாக்கரேவின் தமிழ் அவதாரம் சீமான் !

இப்படி அனைத்திற்கும் ஒரு மாற்றைக் கூறி தமிழகத்தின் பஞ்ச பூதங்களையும் காப்பாற்றி சிங்கப்பூர் போல மாற்றுவேன் என்கிறார். கார் தயாரிப்பை நிறுத்தி இறக்குமதி செய்வது என்பது தேர்தல் அரசியலில் நடக்கிற காரியமா? இவை மத்திய அரசுடன் சம்பந்தப்பட்டதோடு சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற முறையில் தனியார்மயம், தாராளமயத்தின் அடிப்படையில் தமிழகத்தில் கார் உற்பத்தி நடைபெறுகிறது. இதை எப்படி சீமானால் நிறுத்த முடியும்? பேச்சுக்கு நிறுத்துவதாகக் கொண்டால் ஒரு நீதிமன்ற உத்திரவு போதும் அதை செல்லாது என்று மாற்ற. மேலும் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் போன்ற கொள்கைகளை ஏற்றுக் கொள்பவர்தான் தேர்தல் அரசியலில் நிற்கவே முடியும். இன்று கல்வி, சுகாதாரம் தனியார்மயமாக்கப்பட்டிருக்கிறது. விரைவுப் பேருந்துகள் வழிதடத்தில் ஆம்னி பேருந்துகள் தனியார்மயமாகி கொள்ளையடித்து வருகின்றன. சீமான் இவற்றை அரசுடைமையாக்க முடியுமா? நிச்சயம் முடியாது. அதனால்தான் தனியார் கல்வியின் தரத்துக்கு ஏற்ப அரசு கல்வியை மாற்றுகிறேன் என்று தற்காப்பாக பேசுகிறார். அந்த தரத்திற்குரிய காசுக்கு எங்கே போவார்?

எனவே தேர்தல் அரசியலில் சீமான் கூறும் எதையும் அமல்படுத்த முடியவே முடியாது. அது போகாத ஊருக்குரிய அரசியலே அன்றி வேறல்ல. இந்த அமைப்பு முறையே இன்றைய சமூக அரசியல் பொருளாதார சீரழிவுகளுக்கு காரணம் எனும் போது அந்த அமைப்பு முறைக்குள்ளேயே தீர்வு தேடுவது அடிப்படையிலேயே தவறானது. இது மூன்றாவது விசயம்.

சீமான்ஜெயலலிதா உயிருடன் இருந்த போதும், மோடியின் முதல் ஐந்தாண்டு ஆட்சியின் போதும் சீமான் இவர்களை கடுமையாக விமரிசிக்கவில்லை. அடக்கி வாசித்தார்.  நாம்தமிழர் கட்சி திராவிட இயக்கத்தையே முதன்மையான எதிரியாக கருதுவதால் திமுக, திக போன்றவற்றை எதிர்ப்பது போல அதிமுக, பாஜக-வை எதிர்ப்பதில்லை. இதனால் பலநேரம் நாம் தமிழர் கட்சி தமிழ் ஆர்.எஸ்.எஸ் போன்றே காட்சி தருகிறது. இனவாதம் இயற்கையாகவே மதவாதம், சாதியவாதத்தோடு தொடர்புடையது என்பதற்கு இது ஒரு சான்று. இது நான்காவது விசயம்.

சென்ற 2019 பாராளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஏறக்குறைய மூன்று சதவீதம் வாக்கு கிடைத்திருப்பது எப்படி? மக்கள் தேர்தல் அரங்கில் எப்போதும் புதியவர்கள், புதிய கட்சிகளுக்கு ஆதரவு தருகிறார்கள். திமுக, அதிமுகவின் அரசியலால் ஏமாற்றமடைந்து புதிய சக்திகள் என்ற முறையில் அப்படி ஆதரவு தருகிறார்கள். ஏற்கெனவே ஆரம்பத்தில் விஜயகாந்த் கட்சிக்கு அப்படி மக்கள் ஆதரவு தந்தார்கள். இன்று தேமுதிகவே திமுக – அதிமுக போல பழைய கட்சியாக மாறிவிட்டது. சென்ற  தேர்தலில் நாம் தமிழருக்கு இணையாக கமல்ஹாசனது கட்சிக்கும் மக்கள் வாக்களித்தார்கள். அதுவும் புதிய கட்சி என்ற முறையில்தான். நாளை ரஜினி நின்றாலும் அப்படி ஓரளவு பிரிவு மக்கள் வாக்களிப்பார்கள். இருப்பினும் இந்த தேர்தல் முறை யாரையும் தின்று செரித்துவிட்டு சந்தர்ப்பவாதிகளாக மாற்றும் என்பதால் புதிய கட்சிகளின் மீதான மக்களின் புதிய மோகம் தற்காலிகமாக ஓரிரு தேர்தலோடு முடிந்து விடும் ஒன்று. ஆதலால் இந்த புதிய கட்சிகள் இறுதியில் திமுக, அதிமுகவோடு கூட்டணி அமைத்து தமது அரசியல் இருப்பை உறுதி செய்கிறார்கள். நாம் தமிழரும் அப்படி கூட்டணி அரசியல் இன்றி தனிக்கடை போட்டு ரொம்ப நாள் ஓட்ட முடியாது. இது ஐந்தாவது விசயம்.

நாம் தமிழர் கட்சியை புரிந்து கொள்ள இந்த அளவுகோல்கள் போதுமா?

நன்றி!

♦ ♦ ♦

(கேள்வி பதில் பகுதிக்கு நிறைய கேள்விகளை நண்பர்கள் கேட்கிறார்கள். மகிழ்ச்சி. கூடுமானவரை உடனுக்குடன் பதிலளிக்க முயல்கிறோம். சில கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு கூடுதலான நேரம் தேவைப்படுகிறது. கொஞ்சம் காத்திருங்கள்.)

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

அன்புள்ள கர்ப்பிணித் தாய்மார்களே | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா 

pregnancy-Slider

ர்ப்பிணித்தாயாக இருக்கும் ஒரு சகோதரி, கர்ப்பிணியாக இருக்கும் ஒரு பெண் தன்னை எவ்வாறு பிரசவத்திற்கு தயார் செய்து கொள்ள வேண்டும் என்பது குறித்த கட்டுரை ஒன்று வரையுமாறு கேட்டுக்கொண்டார்.

கர்ப்பிணிகள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சில முக்கிய விசயங்களை இந்த கட்டுரையில் விளக்குகிறேன்…

***

ர்ப்பமடைந்தது முதல் பிரசவம் வரை உள்ள இந்த பத்து மாத கால இடைவெளியை ஆரம்பம் முதல் குழந்தை பிறக்கும் வரை காண்போம்.

புதிதாக திருமணம் ஆனவர்கள் குழந்தைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தால், தாயாகப் போகும் பெண் Pre conceptional folic acid எடுக்க வேண்டும். வயிற்றில் கரு உருவாவதற்கு முன்பே எடுக்கப்படும் இந்த மாத்திரை உருவாகும் குழந்தைக்கு மூளை சார்ந்த குறைபாடுகள் ஏற்படாமல் பாதுகாக்கும்

மேலும், குழந்தைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கும் ஒரு பெண் தனக்கு வரும் சிறு சளி இருமல் காய்ச்சலுக்கு மருத்துவரை அணுகும் போது கட்டாயம் “நாங்கள் குழந்தைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்” என்று மருத்துவரிடம் கூற வேண்டும். கர்ப்பபையில் குழந்தை இருந்தால் சில மருந்துகள் தவிர்க்கப்பட வேண்டும். அதை மருத்துவர் தவிர்க்க இது உதவும்.

pregnancy_testsதிருமணமான பெண் தனது மாதவிடாய் நிற்கும் நாட்களை கட்டாயம் குறித்து வைத்து இருக்க வேண்டும். மருத்துவர் Last menstrual period எப்போது என்று கேட்டால் சட்டென கூற உதவும். மாதவிடாய் தள்ளிப்போனால் கடைசி மாதவிடாய் நிகழ்ந்து நாற்பது நாட்கள் கழியும் போது சிறுநீர் மூலம் கர்ப்பமானதற்கான பரிசோதனையை செய்து பாருங்கள்.

கர்ப்பமாகி இருப்பது யூரின் கார்ட் மூலம் தெரிந்து விட்டாலும், கர்ப்பம் எங்கே நிகழ்ந்திருக்கிறது ? என்பது இன்னும் உறுதி ஆகவில்லை.

அதாவது நிகழும் கர்ப்பங்களில் பெரும்பான்மை கர்ப்பபை எனும் uterus -இல் நிகழும். எனினும் சிறிய அளவு கர்ப்பங்கள், சினைக்குழாய் எனும் fallopian tube இல் நிகழலாம். சிலருக்கு Blighted ovum எனும் கரு சிதைந்த நிலையில் கூட யூரின் கார்ட் டெஸ்ட் பாசிடிவாக வரும்.

ஆகவே வெளியே கர்ப்பமாக இருப்பதை அறிவிக்கும் முன்பு பொறுமை காத்துக்கொள்ளுங்கள். உங்கள் கர்ப்பம் கருப்பையில் தான் நடந்திருக்கிறது என்பதை உறுதி செய்ய ஒரு முக்கிய பரிசோதனை இருக்கிறது ?

அது என்ன?

படிக்க:
கர்ப்ப கால நீரிழிவு நோயை தடுப்பது எப்படி | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா
♦ நம் குழந்தைகளுக்கு ஏற்ற நல்ல உணவுமுறை எது ?

***

ர்ப்ப பையில் கரு தங்கிய ஐந்து முதல் ஆறு வாரத்திற்குள் இதயத்துடிப்பு தொடங்கும். தசையால் ஆன இதயம் தன் இசையை தொடங்கி அந்த கரு சிசுவாகி பின் சேயாகி பேதையாகி பின் பெதும்பையாகி மங்கையாகி மடந்தை நிலை கண்டு அரிவை தெரிவைக்கு பின் பேரிளம்பெண்ணாகி இறக்கும் வரை அந்த இசையை இசைத்துக்கொண்டே இருக்கும்.

ஒரு குழந்தை கர்ப்பையில் தான் உருவாகி இருக்கிறது என்பதை அறிய சரியான சோதனை “அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்” மட்டுமே. ஆகவே ஸ்கேன் செய்ய சரியான நேரம் கடைசி மாதவிலக்கான தேதியில் இருந்து ஐம்பது நாட்கள் சென்ற பின் அதாவது ஏழு வாரங்கள் கழித்து எடுத்தால், குழந்தை கர்ப்பபையில் இருப்பதையும், குழந்தைக்கு இதயத்துடிப்பு வந்து விட்டதையும் சேர்த்தே அறியலாம்.

இதை “Early pregnancy scan” என்கிறோம்

இந்த ஸ்கேன் செய்வதன் நோக்கம் மூன்று:

1 . கரு கர்ப்பபையில் இருக்கிறதா என்பதை உறுதி செய்தாயிற்று.
2. இதயத்துடிப்பை கண்டாயிற்று ( சிசு உயிரோடு இருக்கிறது ).
3. பெண் சொல்லும் தேதியும் குழந்தையின் வளர்ச்சியும் ஒத்துப்போகிறதா? முரணாகிறதா? என்பதை சரிபார்க்க உதவுகிறது.

சில நேரங்களில் பீரியட்ஸ் ரெகுலராக வராத பெண்களுக்கு எப்போது குழந்தை ஜனித்தது என்று தெரியாது. அவர்களுக்கு இந்த முதல் ஸ்கேன் உதவும்.

சரி.. இப்போது நீங்கள் ஒரு குழந்தைக்கு தாயாகப்போகிறீர்கள் என்பது உறுதி ஆகிவிட்டது. வாழ்த்துகள் அம்மா…👏

woman holding sonogram over pregnant belly

உலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிரின் அடிப்படை வாழ்வியில் இயற்கை நியதி இன்னொரு உயிரை நமது சாயலில் நமது மரபணுவை ஏந்தி இவ்வுலகில் விட்டுச்செல்வதே.

“நாம் வாழ்ந்த வாழ்வுக்கு சான்று இன்னொரு உயிர்” தானே.

இனி நீங்கள் எக்ஸ் ரே, சிடி ஸ்கேன் போன்றவை எடுப்பதில் இருந்து தவிர்க்கப்பட வேண்டியவர்கள். மேலும் விமான / ரயில் நிலைய / இன்னும் பாதுகாப்பு கருதி வைக்கப்படும் மெட்டல் டிடெக்டர் கருவிகள் அனைத்திலும் இருந்தும் விலகி இருக்க வேண்டும்.

படிக்க:
குழந்தையின்மை சிகிச்சையும் பார்ட்னர்ஷிப்பும் ! | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா
♦ y choromosome* உடன் ஒட்டி வரும் சலுகைகள் – அன்னா

நிச்சயம் தாங்கள் உண்ணும் ஒவ்வொரு மருந்து மாத்திரையையும் மருத்துவர் அறிவுரை இன்றி எடுப்பது தவறு. கரடுமுரடான சாலைகள் , குண்டும் குழியுமான சந்துகளில் இருசக்கர வாகனங்களில் வேகமாக செல்வது தவிர்க்கப்பட வேண்டும்.

இதற்கு முன் கர்ப்பங்களில் அபார்சன் ஆனவர்கள் / குழந்தைக்கு முயற்சி செய்து நீண்ட நாட்கள் கழித்து குழந்தை தங்கியவர்கள் உடலுறவை தவிர்ப்பது கூட அறிவுறுத்தப்படும்.

அடுத்து என்ன ?

நேராக மகப்பேறு மருத்துவரை சந்திக்க வேண்டியது தான்.

கர்ப்பத்தின் ஆரம்பத்தில் :

  • பெண்ணின் உயரம்
  • எடை
  • அடிப்படை ரத்தப்பரிசோதனை
  • ரத்த வகை மற்றும் பிரிவு
  • ரத்த சர்க்கரை அளவு
    சிறுநீர் பரிசோதனை
  • எச்.ஐ வி மற்றும் ஹெபாடைடிஸ் வைரஸ்கள் சோதனை

கணவருக்கும் வைரஸ் பரிசோதனை எடுக்கப்படும். உங்களுக்கென பிரத்யேக தாய் சேய் நல அட்டை உருவாக்கப்படும்.

picme-tamil-naduதமிழக அரசு கர்ப்பமாகும் ஒவ்வொரு தாயும் கட்டாயம் கர்ப்பத்தை பதிவு செய்ய ஆணையிட்டிருக்கிறது. ஒவ்வொரு கர்ப்பிணியின் முழுவிபரமும் PICME (pregnancy infant cohort monitoring and evaluation) எனும் மென்பொருள் மூலம் பதிந்து ஒரு பிரத்யேக எண் கொடுக்கப்படுகிறது.

அந்த எண் மூலம் தமிழகத்தின் எந்த மூளை முடுக்கில் நீங்கள் சென்று அட்மிட் ஆனாலும் உங்கள் முழு கர்ப்ப கால விபரங்களையும் எடுக்க முடியும்.

கர்ப்ப காலத்தின் முதல் மூன்று மாதங்களில் ஃபோலிக் அமில மாத்திரை வழங்கப்படும். குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு அந்த மாத்திரையை எடுக்க வேண்டும்.

இரண்டாவது மாதத்தின் இறுதியில் ஒரு முக்கிய பிரச்சனையை அனைத்து கர்ப்பிணிகளும் சந்தித்து ஆக வேண்டும்.

ஆம் அதே தான்…

“கர்ப்பகால குமட்டல்/ வாந்தி”

***

90-களின் கடைசி வரை கூட தமிழ் சினிமாவில் இந்த காட்சி தவறாமல் இடம்பெறும்…

ஒரு திருமணமான பெண் திடீரென வாயில் கையை வைத்து மூடிக்கொண்டு வீட்டின் முற்றத்துக்கு ஓடி வாந்தி எடுப்பார். உடனே அடுத்த சீன் வைத்தியர் வந்து நாடி பிடித்துப் பார்த்து பெண்ணின் கணவருக்கு வாழ்த்துகள் சொல்வார்.

திருமணமாகாத பெண் இதே மாதிரி வாந்தி எடுத்தால் அந்த சீனில் அவளது தாய் “என் வயித்துல புளிய கரைக்கிறியேடி.. இது பித்த வாந்தியா.. மசக்கை வாந்தியாடி.. இடிய எறக்கிப்புட்டாளே” என்பது போல மிக மிக முற்போக்குத்தனமான சீன்கள் எல்லாம் இருக்கும் .

அதாவது ஒரு பெண் கர்ப்பிணியாகிவிட்டதை ஒருகாலத்தில் அவள் காலையில் வாந்தி எடுப்பதை வைத்தே தெரிந்து கொண்டனர் நம் முன்னோர்.

படிக்க:
பெண்களைக் காப்பாற்றுவது மரபு வழிப் பிரசவமா ? நவீன மருத்துவமா ?
♦ கேள்வி பதில் : தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்ன ?

நாம் யூரின் பீட்டா HCG டெஸ்ட் மூலம் எளிதாக கண்டுபிடித்து விடுகிறோம். வைத்தியர் வந்து நாடி பிடித்து பார்ப்பது என்பது கர்ப்பிணிகளுக்கு நாடித்துடிப்பு சிறிது அதிகமாகி இருக்கும். இதை Tachycardia என்போம்.

கர்ப்பிணிகளுக்கு கரு உண்டான ஒன்றரை மாதம் முதல் மூன்று மாதம் வரை
அதிகமான அளவு குமட்டல் வாந்தி வரும். இது பொதுவாக காலை வேளைகளில் தான் அதிகம் இருக்கும். இதை “Morning sickness” என்கிறார்கள்
அதாவது காலை நேரத்தில் வரும் நோவு என்று பொருள்.

Pregnancy-vomitingகுமட்டல் அதிகம் வந்தால் உள்ளே இருப்பது ஆண் குழந்தை, குழந்தைக்கு மண்டையில் முடி அதிகம் இருந்தால் அதிகம் வாந்தி வரும் என்று சில கட்டுக்கதைகள் உலாவந்தாலும்.

உண்மையாக ஏன் இப்படி கர்ப்ப காலத்தில் வாந்தி வருகிறது என்று ஆராய்ச்சி செய்ததில், கர்ப்பிணிகளுக்கு நுகர்தல் திறன் பன்மடங்கு அதிகமாகிறது அதனால் சாதாரண வாசனைகள் கூட மூளையில் உள்ள கீமோரிசப்டார் ட்ரிகர் சோன் எனும் இடத்தை தூண்டி குமட்டல் வாந்தி யை வரவழைக்கிறது.

பொதுவாக இந்த வாந்தி குமட்டல் எல்லாம் ஒரு கட்டுக்குள் இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு இந்த பிரச்சனை எல்லை மீறிப்போகும்.

  • எப்போதும் வாந்தி எடுத்துக்கொண்டே இருப்பார்கள்.
  • உண்பது பருகுவது கூட நோயை உண்டாக்கும்.
  • நீரிழப்பு மிக அதிகமாக ஏற்பட்டு அடிக்கடி மருத்துவமனையை நாடுவார்கள்.

இதை ” Hyper emesis gravidarum” என்கிறோம். கர்ப்ப காலத்தில் வரும் அதீத வாந்தி எடுக்கும் தன்மை.

நான் முன் சொன்ன காலை நோவுக்கு பெரிய சிகிச்சை தேவையில்லை. வாந்தியை தூண்டாமல் செய்ய சில எளிதான விசயங்கள் செய்தால் போதும்

1. காலை சீக்கிரம் விழிப்பது. விழித்தவுடன் சிறிதளவு உணவு உண்பது. காலை நேர குமட்டலை குறைக்கும்.

2. இரவு கடைசி உணவு ரொம்ப காரமாக, மசாலா அதிகம் இருப்பதாக இல்லாமல் இருப்பது நல்லது.

3. இரவு நடுவில் விழித்தால் வாழைப்பழமேனும் எடுப்பது நல்லது. வயிறு முழு பட்டினியாகவும் இருக்கக்கூடாது. முழுதும் நிரம்பியும் விடக்கூடாது.

4. உப்பு சேர்த்த உணவுகளை அதிகம் நா கேட்கும். உப்பு சேர்த்த உணவுகள் வாந்தியை குறைக்கும்.

5. இஞ்சி / எலுமிச்சை கலந்த சாறு குடிக்கலாம்.

6. இந்த காலங்களில் டயட் எடுக்கிறேன் என்றெல்லாம் இருக்கக்கூடாது. இருக்கவும் முடியாது. நா எதை மறுக்க கட்டளையிடுகிறதோ அதை மறுக்க வேண்டும். நா எதை கேட்கிறதோ அதை எடுக்கவும்.

7. அதீத இனிப்பு சுவை / அதீத காரம் வேண்டாம்

இதுபோன்ற வீட்டு மருத்துவங்கள் வேலைசெய்யாமல் போனால் இருக்கவே இருக்கிறது இதற்கென கர்ப்ப காலத்தில் எடுக்க வேண்டிய சிறந்த மருந்து. அதை மருத்துவர் பரிந்துரையில் எடுக்கலாம். (மருத்துவர் பரிந்துரை இன்றி அந்த மருந்தை எடுக்க வாய்ப்புள்ளதால் பெயரை தவிர்த்து விட்டேன்)

விட்டமின் பி6 எனும் பைரிடாக்சின் சத்து அதிகமாகும் போது வாந்தி குமட்டல் குறைகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. விட்டமின் பி காம்ப்ளக்ஸ் குடும்பத்தில் அதுவும் ஒன்று. நம் உடலால் அதை உற்பத்தி செய்ய இயலாது. மீன், மாமிசம், ஈரல், பச்சைக்காய்கறிகள், முட்டைகள் போன்றவற்றில் இந்த விட்டமின் இருக்கிறது.

கட்டுக்கடங்காத வாந்தி குமட்டல் இருந்தால் உடனே மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதி பெற்று ரத்த நாளம் மூலம் திரவம் ஏற்றுதல் சிகிச்சையை பெற வேண்டும்.

மிக அதிக வாந்தி நோய் இருப்பவர்கள் முதல் மூன்று மாதத்திற்கேனும் உணவு தயாரிப்பில் இருந்து விடுப்பு எடுத்துக்கொள்வது நல்லது. உணவு தயாரிக்கும் போது வரும் வாசனைகள் குமட்டலை தூண்டி வாந்தியை அதிகமாக்கும்

மூன்றாவது மாதத்தில் செய்ய வேண்டிய முக்கிய பரிசோதனை ஒன்றைப்பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்.

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

கேள்வி பதில் : தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்ன ?

கேள்வி : // பொருளாதார நெருக்கடி பத்தி சொல்லுங்க, விலைவாசி உயர்வு ஏன் அதிகமாகுது, சந்தையில ஆட்டோமொபைல் ஏன் விக்க மாட்டேங்குது அதப்பத்தி கொஞ்சம் எளிமையாக விளக்குங்க! //

– தீபக்

ன்புள்ள தீபக்,

இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு முக்கியமான காரணம் மிகை உற்பத்தியும் அதை வாங்குவதற்கு இயலாத மக்களும்தான். இந்திய மக்கள் தொகை 100 கோடியில் இருந்து 110 கோடி வரை இருப்பதாக வைத்துக் கொள்வோம். இதில் முதலாளிகள் உற்பத்தி செய்யும் பெரும்பான்மை பொருட்கள் மற்றும் சேவையை நுகரும் சந்தை என்பது ஏறக்குறைய 10 கோடி மக்களுக்குள் அடங்கிவிடும். இந்த பத்து கோடி மக்கள் தான் கார்கள், விலை உயர்ந்த இருசக்கர வாகனங்கள், நவீன தொலைக்காட்சிகள், புதிய குளிர்சாதனப் பெட்டிகள், குளிர்சாதன கருவிகள், இலட்ச ரூபாய் செல்பேசிகள் இன்னபிற பொருட்களை நுகரும் சந்தையாக இருக்கிறார்கள். கூடவே வீட்டு மனைகள், அடுக்கக வீடுகளை வாங்கும் ரியல் எஸ்டேட் சந்தையும் இவர்களை நம்பித்தான் இருக்கிறது. இவர்களுக்கு அடுத்தபடியான விலையில் இருக்கும் பொருட்களை நுகரும் சந்தை இன்னுமொரு பத்து கோடிப் பேர் இருக்கலாம். இவர்கள்தான் பார்லே ஜி போன்ற விலை குறைந்த பிஸ்கெட்டுகளை வாங்கும் பிரிவினர்.

ஆக மொத்தம் இந்த இருபது கோடி மக்களை நம்பித்தான் இந்திய முதலாளிகள் பொருட்களை உற்பத்தி செய்து, சேவைத்துறை சேவைகளையும் அளிக்கின்றனர். மாதத்திற்கு சில இலட்சம் கார்களும், இருசக்கர வாகனங்களும் இப்போதும் விற்றுக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் முந்தைய ஆண்டுகள், காலாண்டுகளை விட மிகக் குறைவாக விற்கிறது. மேலே சொன்ன அந்த பத்துக் கோடியில் பெரும்பான்மையினர் கடைசி பத்து ஆண்டுகளில் தங்களுக்குத் தேவையான நுகர்பொருட்களை வாங்கி விட்டார்கள். அந்த வாங்குதல் பூர்த்தி அடைய அடைய இங்கே புதிய விற்பனை தள்ளாடுகிறது. இதில் ஓலா, உபர் போன்ற நிறுவனங்கள் ஓட்டுநர்களின் தலையில் புதிய கார்களை கட்டி கொத்தடிமைகளாக நடத்தினாலும் கார் சந்தை தேங்கித்தான் நிற்கிறது.

கார்களுக்கான இ.எம்.ஐ-யை குறைத்து வைத்தாலும், புதிய கார்கள் புதிய வசதிகளோடு வருவதால் பழைய கார்களை மாற்றிவிட்டு வாங்கலாம் என பல உத்திகளை கார் நிறுவனங்கள் செய்தாலும் விற்பனை கூடுவதாக இல்லை.

அதே போன்று இந்த பிரிவினர் வாங்கிய காலிமனைகள், புதிய வீடுகளும் ரியல் எஸ்டேட் சந்தையின் தேக்கத்தால் தேக்கமடைந்து நிற்கிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ரியல் எஸ்டேட் சந்தை மெல்ல மெல்ல சரிய ஆரம்பித்து தற்போது முட்டுச் சந்தில் நிற்கிறது. புதியவர்கள் யாரும் வாங்காததால் பழைய மனைகளும், வீடுகளும் வாங்குவார் இல்லாமல் வெறுமனே நிற்கின்றன. இப்போது வாங்கிப் போட்டால் பின்னர் பல மடங்கு விலை உயர்ந்து இலாபம் வரும் என நினைத்த நடுத்தர வர்க்கம் தற்போதைய தேக்கத்தினால் ஏமாற்றமடைந்து புதிய மனைகளை, வீடுகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுவதில்லை. வாங்கிப் போட்டவர்களும் விற்பனை இல்லாமல் திகைத்து நிற்கின்றனர். தமிழகத்திலேயே சில இலட்சம் புதிய வீடுகள் வாங்குவார் இல்லாமல் காலியாக இருக்கின்றன.

படிக்க:
தோழர் கோபாட் காந்தி பத்தாண்டுகள் பழைய வழக்கில் கைது !
♦ இன்சுலின் எனும் அரு மருந்து ! | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

அதே போன்று கடைசி பத்து பதினைந்து ஆண்டுகளில் வங்கிகளில் இருக்கும் சேமிப்புக்கான வட்டி விகிதம் வெகுவாக குறைந்திருக்கிறது. வங்கிகள் தரும் கடன்களுக்கான வட்டியும் அதிகரித்திருக்கிறது. இதனால் கடன் வாங்கி கார்களையோ, வீடுகளையோ வாங்குவது சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்வதாக நடுத்தர வர்க்கம் நினைக்கிறது. பொதுத்துறை வங்கிகளும் சில இலட்சம் கோடி வராக் கடனால் புதிய கடன்களை பெருவாரியானவர்களுக்கு கொடுப்பதாக இல்லை. வங்கிகளில் மக்கள் போடும் சேமிப்பும் குறைந்து போனது.

இது போக சிறு, குறு தொழில்களும் நசிந்து போயிருக்கின்றது. பணமதிப்பழிப்பின் போது இந்நிறுவனங்கள் ரொக்க சுழற்சி இல்லாமல் பாதிக்கப்பட்டு பல மூடப்பட்டு பல்லாயிரம் பேர் வேலை இழந்தனர். இந்த வேலையிழப்பை ஜி.எஸ்.டி வரி அதிகமாக்கியது. சாதாரண பாதையோரத்தில் விற்பனையாகும் பொருட்கள் கூட ஜி.எஸ்.டி ஸ்லாட்டில்  0%, 5%, 12%, 18% மற்றும் 28% என்ற பிரிவுகளில் மாட்டிக் கொண்டு விலைவாசி உயர்ந்தது. இதனால்தான் பார்லேஜி எனப்படும் ஐந்து ரூபாய் மலிவு விலை பிஸ்கெட் பாக்கெட்டில் பிஸ்கெட்டுகளை குறைத்து விற்றார்கள். அந்த நுகர்வும் குறைந்து போனதால் அந்த நிறுவனம் ஆட்குறைப்பை செய்யப் போவதாக அறிவித்திருக்கிறது.

GSTசிறு, குறு நிறுவனங்களும், சிறு வணிகர்களும்தான் இந்தியாவில் அதிக வேலைவாய்ப்பை அளிக்கும் பிரிவினராவர். அவர்களை கேட்பார் கேள்வியின்றி ஜி.எஸ்.டி சூறையாடியது. வரிப்பிடித்தம் திரும்பும் நாள்கள் அதிகமானதால் வணிகர்கள் ரொக்க சுழற்சி இன்றி திண்டாடினர். இதற்கு முன்னர் மறைமுக வரியாக செலுத்திக் கொண்டிருந்த நுகர்வோர் எனப்படும் பொது மக்கள் இப்போது ஜி.எஸ்.டி வரியாக கூடுதலாக செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது. பிஸ்கெட், பேஸ்ட், சோப், நாப்கின், செல்பேசி கட்டணங்கள் என ஒன்று விடாமல் ஜி.எஸ்.டியால் விலை உயர்ந்தது. போதாக்குறைக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வும் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை அதிகரித்தது. வேலைவாய்ப்பின்மை, ஜி.எஸ்.டி- இவை எல்லாம் ஒன்று சேர்ந்து மக்களின் நுகர்வை வெகுவாகக் குறைத்து விட்டது.

மேலும் மேற்சொன்ன நிகழ்ச்சிப் போக்கில் பல இலட்சம் பேர் வேலை இழந்து போனதும் முக்கியமானது. வேலை இழப்பு அதிகமாக அதிகமாக மக்களின் வாங்கும் சக்தியும் குறைந்து நுகர்வும் வெகுவாக குறைந்து போயிருக்கிறது.

ஒரு எளிய சான்றுடன் இதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யலாம். நூறு பேர் கொண்ட ஒரு ஊரில் முப்பது குடும்பங்கள் உள்ளன. இந்த முப்பது குடும்பங்களில் வாங்கும் சக்தி கொண்டவை பத்து குடும்பங்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்த பத்து குடும்பங்களைக் கொண்ட சந்தையில் சோப், பேஸ்ட், கார் கம்பெனி தலா ஐந்து நிறுவனங்கள் உள்ளதாக வைத்துக் கொண்டால், இந்த ஐந்து கம்பெனிகளும் இந்த பத்து குடும்பத்தை மனதில் வைத்து உற்பத்தியை அதிகரிக்கின்றன. ஐந்து  பேரும் தலா பத்து பொருட்களை உற்பத்தி செய்யும் போது விற்பனை முப்பது போக இருபது தேங்கிப் போகிறது. இந்த தேக்கத்தால் ஆட்குறைப்பு செய்கிறார்கள். அதனால் இன்னும் விற்பனை குறைகிறது.

படிக்க:
தீபாவளி இனிக்காது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள் !
♦ கேள்வி பதில் : பா. ரஞ்சித் – தமிழ் அமைப்புகள் – வலது, இடது கம்யூனிஸ்ட்டுகள் !

இப்போது என்ன செய்யலாம்? வம்படியாக கார்களை தலையில் கட்ட வேண்டும். பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இருக்கும் கார்கள், இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தக் கூடாது என்று சொல்லலாம். அரசு நிறுவனங்கள் அனைத்தும் பழைய கார்களை விடுவித்து விட்டு புதிய கார்களை வாங்க வேண்டும் என்று முடிவு செய்யலாம். பணக்காரர்களுக்கும், முதலாளிகளுக்கும் வரி குறைப்பு செய்யலாம். இருப்பினும் இந்த முயற்சிகள் பெரும்பான்மை மக்களின் வாழ்வியலை எந்த விதத்திலும் மாற்ற முடியாது. இறுதியில் போராடும் மக்களை அடக்குமுறை கொண்டு ஒடுக்குவதே அரசு, ஆளும் வர்க்கங்களின் புகலிடமாக இருக்கிறது.

அமெரிக்காவில் 2008-ம் ஆண்டு துவங்கிய உலகளாவிய பொருளாதார கட்டமைப்பு நெருக்கடியின் தாக்கம் அதிகரித்து அடுத்த நெருக்கடிக்கு உலகம் தயாராக வேண்டும் என முதலாளித்துவ அறிஞர்களே நாளிதழ்களின் நடுப்பக்கத்தில் தொடர்ந்து எழுதி வருகின்றனர். அந்த நெருக்கடி ஒரு வருடத்திலா, ஆறுமாதங்களிலா என்பதில்தான் வேறுபாடு இருக்கிறதே அன்றி நெருக்கடி வந்தே தீருமென்பதில் அவர்களிடம் மாற்றுக் கருத்தில்லை. அதை எதிர்கொள்ள முதலாளித்துவ உலகம் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர்கள் சொன்னாலும் அதற்கு வாய்ப்பே இல்லை என்பதால்தான் இந்த நெருக்கடியே முற்றுகிறது. அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் முடிவில்லாமல் தொடரும் வர்த்தகப் போர் அதற்கு ஒரு சான்று.

இந்த நிலைமைகளும் இந்தியாவின் பொருளாதார நெருக்கடியை அதிகரிக்கச் செய்கின்றன. இந்தியாவின் முதலாளிகள் பலர் தமது நிறுவனத்தின் மதிப்பைக் காட்டிலும் கடன்களை கணிசமாக வைத்திருக்கின்றனர். அனில் அம்பானி திவால் என்றால் முகேஷ் அம்பானி சவுதி அராம்கோ நிறுவனத்திற்கு பங்குகளை விற்று முதலீட்டை வாங்குகிறார். டாடா, அதானி உள்ளிட்ட நிறுவனங்களும் சர்வதேச நிதி நிறுவனங்களிடமும், உள்ளூர் பொதுத்துறை வங்கிகளிடமும் கணிசமான கடன்களை வாங்கியிருக்கின்றனர். பங்குச் சந்தை சூதாட்டம், ஊக வாணிபத்தின் மூலம் இவர்களது நிறுவனங்களின் சொத்து காட்டப்பட்டாலும் உண்மையில் அவர்களும் நெருக்கடியில் உள்ளனர். இதையெல்லாம் தாண்டி அவர்களது தனிப்பட்ட சொத்துக்கள் மட்டும் நாள்தோறும் அதிகரித்து வருகின்றது.

இப்படி ஒரு சில முதலாளிகளது சொத்து அதிகம் சேர்வதும், பெரும்பான்மை மக்களோ வேலை இழப்பு, விலைவாசி உயர்வு காரணமாக வாங்கும் சக்தியை இழந்து, வருமானத்தை இழந்தும் நமது சமூகம் ஒரு முரண்பாட்டில் போய்க் கொண்டிருக்கிறது.

இந்த முரண்பாட்டை மக்களது போராட்டங்கள் தீர்க்குமா, முதலாளிகளின் பாசிச ஒடுக்குமுறைகள் மறுக்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

♦ ♦ ♦

(கேள்வி பதில் பகுதிக்கு நிறைய கேள்விகளை நண்பர்கள் கேட்கிறார்கள். மகிழ்ச்சி. கூடுமானவரை உடனுக்குடன் பதிலளிக்க முயல்கிறோம். சில கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு கூடுதலான நேரம் தேவைப்படுகிறது. கொஞ்சம் காத்திருங்கள்.)

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

முழுக்க தனியார்மயமாகும் சென்னை மெட்ரோ ரயில் சேவை ! ஆதாயம் யாருக்கு ?

தொழிலாளர்களின் பலத்த எதிர்ப்புகளுக்கிடையே, மெட்ரோ ரயில்நிலைய கட்டுப்பாட்டாளர்கள் பொறுப்பும் இனி தனியார்வசம் ஒப்படைக்கப்படுவதாக அறிவித்திருக்கிறது, சி.எம்.ஆர்.எல். நிர்வாகம். நிர்வாகத்தின் இத்தகைய முயற்சி தொழிலாளர்களின் நிரந்தர வேலைக்கான வாய்ப்பை பறித்திருப்பதோடு, அன்றாடம் பயணிக்கும் ஆயிரக்கணக்கான பயணிகளின் பாதுகாப்பையும் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. இதனை எதிர்த்து கேள்விகேட்கும் தொழிலாளர்களையும், தொழிற்சங்கத்தையும் தொடர்ந்து பழிவாங்கும் வேலையைச் செய்துவருகிறது, சி.எம்.ஆர்.எல். நிர்வாகம்.

கடந்த ஏப்ரல்-27, 2019-ல் தொழிற்சங்கம் அமைத்ததற்காக பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் 8 பேருக்கு உடனடியாக எந்தவித நிபந்தனையுமின்றி பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை மெட்ரோ தொழிலாளர்கள் நடத்தினர். அப்போதே, சி.எம்.ஆர்.எல். நிர்வாகத்தைப் படிப்படியாக தனியார்மயமாக்க மேற்கொள்ளப்படும் சதிகளையும் இதனை எதிர்க்கும் தொழிற்சங்கத்தையும் தொழிற்சங்க நிர்வாகிகளையும் பழிவாங்குவதையும் ஆதரங்களோடு அம்பலப்படுத்தியிருந்தனர்.

சங்கம் தொடங்கியதற்காக, 8 தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதோடு, இதனைக் கண்டித்து, சட்ட விதிகளின்படியே வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் 9 பேரையும் தற்காலிக பணியிடைநீக்கம் செய்தது சி.எம்.ஆர்.எல். நிர்வாகம். இன்றுவரையில் அவர்களுக்கு பணிவழங்காமல், தொழிலாளர்கள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து, மெட்ரோ ரயில் இயக்குபவர், டிக்கெட் வழங்குபவர், நிலைய பரிசோதகர், பாதுகாப்புப் பணிகளில் என படிப்படியாக  தனியார் ஒப்பந்தப் பணியாளர்களைப் புகுத்தியது சி.எம்.ஆர்.எல். நிர்வாகம்.

இந்நிலையில்தான், சி.எம்.ஆர்.எல்-ல் இருந்துவரும் ஒரே நிரந்தரப்பணியான முக்கியப் பொறுப்பான நிலைய கட்டுப்பாட்டாளர் (Station Controller) பணியையும் பறித்து, அதற்கு பதிலாக Station Incharge என்ற பெயரில் எந்தவித பயிற்சி, அனுபவம் இல்லாத தனியார் ஒப்பந்த ஊழியர்களை நியமித்திருக்கிறது நிர்வாகம்.

மாதம் 28,000 சம்பளத்துக்கு நிரந்தரப் பணியாளர்கள் பணியில் சேர தயாராக இருக்கும்போது, ரூ.68,000-க்கு ஒப்பந்த பணியாளர்களை பணியிலமர்த்த துடிப்பது யாருக்காக? என்று கேள்வியெழுப்புகிறார்கள் மெட்ரோ தொழிலாளர்கள். இது தொடர்பாக, சென்னை மெட்ரோ இரயில் லிமிடெட் எம்ப்ளாயீஸ் யூனியன் சார்பில் கீழ்க்காணும் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.

எச்சரிக்கை : முழுவதும் தனியார்மயமாகும் மெட்ரோ இரயில் நிலையங்கள்!!

சென்னை மெட்ரோ இரயில் நிலையங்களில் இதுவரை இருந்த CMRL-ன் ஒரே ஒரு நிரந்தர பணியாளர் ஆகிய நிலைய கட்டுப்பாட்டாளர் (Station Controller) இனி இருக்க மாட்டார்கள் என நிர்வாகம் அறிவிப்பு…!

அதற்கு பதிலாக Station Incharge என்ற பெயரில் எந்தவித பயிற்சி, அனுபவம் இல்லாத தனியார் ஒப்பந்த ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் நமக்கு என்ன பாதகம்? என்று நினைக்கும் மெட்ரோவாசிகளே…!

♦ மெட்ரோ நிலையங்களிலோ அல்லது மெட்ரோ இரயிலோ நீங்கள் பயணம் செய்யும் போது, மெட்ரோ ரயில் பழுதாகி உங்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உங்களை காப்பாற்ற திறம்பட செயல்படுவதற்கென டெல்லி, பெங்களூர் மெட்ரோக்களில் சிறப்பு பயிற்சி பெற்று, இதுநாள் வரை எவ்வித அசம்பாவிதமும் நடைபெறா வண்ணம் பாதுகாத்து சேவை செய்த நிரந்தர ஊழியர்கள் இனி இல்லை..! (சென்னை வெள்ளத்தின் போது சிறப்பாக மெட்ரோவை இயக்கியவர்கள் இந்த நிரந்தர ஊழியர்களே)

♦ முன்னர் பலத்த எதிர்ப்புகளுக்கு இடையில் இரயில் ஒட்டுநர் பணிகளை தனியாருக்கு தாரை வார்த்த போது, பயிற்சியற்ற அத்தகைய ஒட்டுநர்களால் இரயில்கள் பழுதாகி நின்று மக்கள் பாதித்த போதெல்லாம், நிரந்தர ஊழியர்களாகிய இந்த நிலைய கட்டுப்பாட்டாளர்கள் தான் மக்களை காப்பாற்றினார்கள். இனி யார் காப்பாற்றுவார்கள்?

♦ மக்களை ஏமாற்றிட நினைக்கும் மெட்ரோ நிர்வாகம் தனியார் ஊழியர்களுக்கு நிரந்தர ஊழியரைப் போல் சீருடை கொடுத்து தில்லு முல்லு செய்துள்ளது. (மக்களே!!! சீருடையின் மேல் கைகளில் தனியார் நிறுவன பெயர் உள்ளதை கவனியுங்கள்)

மெட்ரோ தொழிலாளர்கள் போராட்டம். (கோப்புப் படம்)

♦ இந்தியாவில் எந்த மெட்ரோவிலும் நடக்காத வகையில், நிரந்தர பணிகளில் இவ்வாறு முறையற்ற தனியார் ஊழியர்களை ஈடுபடுத்தி பாதுகாப்பை கேள்வி குறியாக்கிடும் சென்னை மெட்ரோ நிர்வாகமே… தமிழர்கள் உயிர் என்ன சோதனை எலிகளா?

♦ உங்களின் வரிப்பணத்தை கொண்டு செயல்படுத்தப்படும் சென்னை மெட்ரோவில், அதிகாரிகளின் பினாமி பெயரில் செயல்படும் குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களுக்கு இந்த Station Incharge பணியை கொடுத்துள்ளனர். இதற்கென மெட்ரோ நிர்வாகம் நபர் ஒன்றிக்கு செலவிடும் தொகை சுமார் ரூ. 65,000. இது நிரந்தர ஊழியர்களின் மாத சம்பளத்தை போல இருமடங்கு..!

அந்த குறிப்பிட்ட தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பெறுவதோ ரூ. 18,000/- மீதம் அதிகாரிகளின் பாக்கெட்டிலா? இந்த தனியார்மயமாக்கலால் யாருக்கு லாபம்?

சில கேள்விகள் உங்களுக்காக..

1. இந்த பணிக்கு முறையாக டெண்டர் விடப்பட்டதா?

2. போதிய எண்ணிக்கையில் பயிற்சி பெற்ற நிரந்தர ஊழியர்கள் இருக்கையில் ஏன்‌ இந்த ஒப்பந்த ஊழியர்கள்?

3. டிக்கெட் கொடுப்பதும் அதை சரி பார்ப்பதும் ஒரே தனியார் நிறுவன ஊழியர்கள் என்றால் ஊழல் நடக்காதா? (மண்ணடி மெட்ரோ பார்க்கிங் தனியார் ஊழியரின் 2 இலட்சம் ரூபாய் ஊழலை கண்டுபிடித்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்த நிரந்தர ஊழியர் இப்போது அந்த பணியிலேயே இல்லை என்பது எத்தனை பேருக்கு தெரியும்)

4. தமிழக இளைஞர்களின்‌ நிரந்தர‌ வேலைவாய்ப்பு மற்றும் இட ஒதுக்கீடு எங்கே? இலட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் நிலையில், கொத்தடிமைகள் போல் நம் பிள்ளைகளை தனியார் ஒப்பந்த முறையில் வேலைக்கு அமர்த்தும் செயலை அரசு நிறுவனமே செய்யலாமா?

5.சென்னை மெட்ரோ நிர்வாகம் இதே பணிக்கு கடந்த 2016 ஆண்டு 41 காலி பணியிட அறிவிப்பு செய்து தேர்வு செய்யப்பட்ட  நிரந்தர ஆட்களை நியமிக்காமல் இப்படியான ஒரு அவசர தனியார்மயத்திற்கான அவசியம் என்ன?

6.ஊழலுக்கு துணை போகும் நிர்வாக அதிகாரிகளின் மேல் Vigilance நடவடிக்கை எடுக்காமல் இருக்க என்ன காரணம்? தமிழக அரசின் தலையீடா?

படிக்க:
சென்னை மெட்ரோ : பணிப்பாதுகாப்பு இல்லை ! பயணம் மட்டும் பாதுகாப்பாக இருக்குமா ?
சென்னை மெட்ரோ : நவீன ரயிலை இயக்கும் தொழிலாளிகளின் அவல நிலை !

மக்களே, சென்னைவாசிகளே சிந்தியுங்கள்…!

♦ இந்த மெட்ரோவிற்காக…

உங்கள் நிலங்களை இழந்தீர்கள்; பூங்காக்களை இழந்தீர்கள்; அதிக கட்டணக்கொள்ளையால் பணத்தை இழக்கிறீர்கள்; உங்கள் மகனோ மகளோ பெற வேண்டிய அரசு வேலையை இழக்கிறீர்கள்; இதுவரை அனுபவித்த விபத்தில்லா மெட்ரோ பயணத்தை இழந்து உயிரையும் உடைமைகளையும் இழப்பதற்கு முன்பு விழித்திடுங்கள்…!

மெட்ரோ நம் சொத்து…! தனியார்வசமாக்கி நாசமாக்க விடமாட்டோம்!!

#savechennaimetro

தகவல் : புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
தொகுப்பு : வினவு செய்தியாளர்.

காஷ்மீர் வெளிமாநில தொழிலாளர்கள் முதல் பீகார் குழந்தைத் தொழிலாளர்கள் வரை !

0
Chennai_LabourStatue_Slider

டந்த வாரத்தில் உலகம் முழுமைக்கும் நடந்த தொழிலாளர் தொடர்பான விசயங்களின் தொகுப்பு இங்கே…

♠ ♠ ♠ 

ஜம்மு காஷ்மீர் : பதட்டம் தொடர்வதால் வெளிமாநில தொழிலாளர்கள் வெளியேற்றம் !

த்திய அரசின் 370-வது பிரிவை நீக்கும் முடிவால், கடந்த 27 நாட்களுக்கும் மேலாக முடங்கிக் கிடக்கிறது ஜம்மு காஷ்மீர். தகவல் தொடர்புகள் மற்றும் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக காஷ்மீரின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு பணியாற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கென சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.

Jammu Kashmirஅல் ஜசீரா வெளியிட்ட செய்தி அங்கிருக்கும் தொழிலாளர்கள் வேலை இல்லாமல் தவிப்பதோடு, பயத்தோடு வாழ்வதாக சொல்கிறது. தினக்கூலிகளாக உள்ள தொழிலாளர்களை வெளியேற்ற எந்தவித நோட்டீசும் வழங்கப்படவில்லை. வெளிமாநிலங்களிலிருந்து வந்திருக்கும் இந்தத் தொழிலாளர்களுக்கு எதிராக வன்முறைகள் எதுவும் நிகழவில்லை.

காஷ்மீரிகளிடமும் வெளிமாநிலங்களிலிருந்து வந்திருக்கும் தொழிலாளர்களிடமும் பரஸ்பர பதட்டம் நிலவுகிறது. 370 பிரிவு நீக்கப்பட்டதற்கு பின், வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தான் இங்கே நிலம் வாங்கக்கூடும் என்பதே பதட்டத்தின் பின்னால் உள்ள காரணம்.

இந்த நிலையில் ஊர் திரும்பிக்கொண்டிருக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை ஹிந்துஸ்தான் டைம்ஸ் பதிவு செய்துள்ளது. சி.என்.பி.சி டிவி18 வெளியிட்ட செய்தி காஷ்மீரில் உள்ள தொழிலாளர்களில் 80% பேர் வெளியாட்கள்தான் என்கிறது. கட்டுப்பாடுகளால் முடங்கிப் போயுள்ள வளர்ச்சிப் பணிகள், கட்டடப் பணிகள், குறைந்துள்ள வர்த்தகம் காரணமாக வெளிமாநில தொழிலாளர்கள் வெளியேறிக் கொண்டிருப்பதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது.

♠ ♠ ♠ 

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி ஆந்திராவில் ஆஷா பணியாளர்கள் போராட்டம் :

ந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி அங்கீகரிக்கப்பட்ட சுகாதார பணியாளர்கள் விஜயவாடாவில் உள்ள லெனின் மையத்தில் பெருந்திரளான போராட்டம் நடந்தினர். சிபிஐடி தொழிற்சங்கம் இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்தது.

Jagan-Mohan-Reddy“தேர்தலுக்கு முன்பு பாத யாத்திரையின்போது, எங்களுடைய சம்பளத்தை ரூ. 3 ஆயிரத்திலிருந்து ரூ. 10 ஆயிரமாக உயர்த்தித் தருவதாக ஜெகன் வாக்குறுதி அளித்திருந்தார். முதலமைச்சராக பதவியேற்றபின், சம்பள உயர்வை அறிவித்தார். ஆனாலும் எங்களுக்கு சம்பளம் உயர்த்தி வழங்கப்படவில்லை” என தொழிலாளர் சங்கத்தின் தலைவர் பி. மணி தெரிவித்துள்ளார். மேலும் கடந்த நான்கு மாதங்களாக மதிப்பூதியமும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆந்திர மாநிலத்தில் கிட்டத்தட்ட 45 ஆயிரம் ஆஷா தொழிலாளர்கள் உள்ளனர்.

முதன்மையான சுகாதார பணியாளர்களாக இந்தியாவின் கிராமங்கள் முழுமைக்கும் அரசின் திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருப்பவர்கள் ஆஷா பணியாளர்கள். ஊதியத்தை உயர்த்தி வழங்கக் கோரியும் தொடர்ச்சியாக ஊதியம் வழங்கக் கோரியும் தங்களை நிரந்தர அரசு ஊழியர்களாக அங்கீகரிக்கக் கோரியும் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். பல மாநிலங்களில் அவர்கள் ஊழியர்களாக அங்கீகரிக்கப்படவில்லை. குறிப்பிட்ட பணிகளைக் கொடுத்து அதற்கேற்ப ஊதியம் வழங்கப்படுவது நடைமுறையாக உள்ளது. அங்கன்வாடி மற்றும் ஆஷா பணியாளர்கள் ‘பராமரிப்பு தொழிலாளர்கள்’ அல்லது ‘திட்ட தொழிலாளர்கள்’ என அவர்கள் தரம் குறைத்து அழைக்கப்பட்டு குறைந்த ஊதியத்துக்கு பணியாற்ற வைக்கப்படுகிறார்கள்.

படிக்க:
இன்றைய காலகட்டத்தில் புற்றுநோய் அதிகரிப்பதன் காரணம் என்ன ?
♦ காஷ்மீரியத் செய்தி இணையதள ஆசிரியர் எங்கே ?

♠ ♠ ♠ 

பிகார், ஜார்க்கண்டில் மைக்கா சுரங்கங்களில் பணியாற்ற 5 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் கல்வியை கைவிடுகிறார்கள் !

தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (National Commission for Protection of Child Rights – NCPCR) வெளியிட்ட புள்ளி விவரத்தில் ஆறு வயது முதல் 14 வயது வரையான 5 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் கல்வியை கைவிட்டு பீகார் மற்றும் ஜார்க்கண்டில் உள்ள மைக்கா சுரங்கங்களில் பணியாற்றுவதாக தெரிய வந்துள்ளது.

“மைக்கா சுரங்கப் பகுதிகளில் உள்ள சில பிரிவு குழந்தைகள் தங்களுடைய வாய்ப்புகளை நழுவவிட்டுள்ளனர். தங்களுடைய குடும்ப வருமானத்துக்கு உதவ அவர்கள் குழந்தை தொழிலாளர்களாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்” என அறிக்கை கூறுகிறது. மேலும், இந்த குழந்தைகள் வளர்ச்சி சிக்கல்களை எதிர்கொள்ளக்கூடும் எனவும் அவற்றின் உரிமைகள் மீறப்பட வாய்ப்பிருப்பதாகவும் அறிக்கை கூறுகிறது.

Mica-miningபீகார் மற்றும் ஜார்க்கண்டில் உள்ள மைக்கா சுரங்கங்கள் உள்ள பகுதிகளான கொடெர்மா, கிரித், ராஜாவ்லி பகுதிகளில் இந்த ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது.

“கொடெர்மாவில் 93 சதவீதமும் நவடாவில் 92 சதவீதமும் கிரித்தின் 86 சதவீதமும் சிறார்கள் பணி தொடர்பான முறையான பயிற்சியைப் பெற்றிருக்கவில்லை” என அறிக்கை சொல்கிறது. இளம் சிறார்களுக்கும் பெண்களுக்கும் பணி சார்ந்த தொழிற்கல்வி படிப்புகளை வழங்க வேண்டும் எனவும் அறிக்கை பரிந்துரைக்கிறது.

இந்தப் பகுதியில் வாழும் குடும்பங்களுக்கு மைக்கா துண்டுகளை சேகரிப்பதே முதன்மையான வாழ்வாதாரமாக உள்ளது. தங்களுடைய குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதைக் காட்டிலும் மைக்கா துண்டுகளை சேகரிப்பதும் அவற்றை விற்பதையும் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது என அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார்.

♠ ♠ ♠ 

காஸியாபாத்தில் கழிவுநீரை சுத்திகரித்தபோது ஐந்து தொழிலாளர்கள் மரணம் !

காஸியாபாத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பில் ஈடுபட்டிருந்த துப்புரவு தொழிலாளர்கள் ஐவர் நச்சு வாயு தாக்கி இறந்துள்ளனர். தனியார் ஒப்பந்தக்காரர்கள் சுத்திகரிப்பில் ஈடுபட்டிருந்த ஐவருக்கும், போதிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்கவில்லை என இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. உயிரிழந்த அனைவரும் பீகாரைச் சேர்ந்தவர்கள்.

“ஒரு மணியளவில் முதலில் ஒருவர் சாக்கடைக்குள் இறங்கியிருக்கிறார். அவர் வெளியே வராத நிலையில் நால்வர் ஒருவர் பின் ஒருவராக உள்ளே இறங்கியிருக்கின்றனர். ஐவரும் வெளிவரவில்லை. அதன்பின் ஒருவர் உள்ள இறங்கியபோது, ஐவரும் மயங்கிய நிலையில் இருந்தது தெரியவந்தது” என இந்தியா டுடே செய்தி கூறுகிறது.

இந்தச் சம்பவம் ஊடகங்களில் பெரும் செய்தியான பின், உ.பி. முதலமைச்சர் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சத்தை நிவாரணமாக அளிப்பதாக அறிவித்துள்ளார். இந்த விபத்துக்குக் காரணமான ஒப்பந்தக்காரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விசாரணை நடந்துவருவதாகவும் அரசு தரப்பில் கூறியுள்ளனர்.

2019-ம் ஆண்டில் முதல் ஆறு மாதங்களில் மட்டும் குறைந்தது 50 பேர் கழிவுநீர் சுத்திகரிப்பின் போது இறந்துள்ளதாக National Commission for Safai Karamcharis தெரிவித்துள்ளது. உபகரணங்கள் இல்லாமல் கழிவுநீர் சுத்திகரிப்புப் பணிகளில் ஈடுபடுவது 2013-ம் ஆண்டு முதலே தடை செய்யப்பட்டிருந்தாலும் 2013 முதல் 2018 வரை இந்தப் பணியில் ஈடுபடும் மரணங்கள் மூன்று மடங்காக அதிகரித்திருப்பதாக ‘தி வயர்’ இணையதளம் மேற்கொண்ட ஆர்.டி.ஐ. விசாரணையில் தெரியவந்துள்ளது.

படிக்க:
தலித்துகளின் உயிர்ப் பலி கேட்கும் சுவச்சு பாரத் !
♦ தொழிலாளர் வாழ்க்கை : ஒரு பருந்துப் பார்வை !

♠ ♠ ♠ 

போர்த்தளவாட தொழிற்சாலை பணியாளர்கள் வேலை நிறுத்ததை திரும்பப் பெற்றனர்:

41 பாதுகாப்பு உற்பத்தி தொழிற்சாலைகளில் பணியாற்றும் 82 ஆயிரத்துக்கும் அதிகமான பொது பணியாளர்கள் ஆகஸ்டு 20-ம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்ய இருந்ததை திரும்பப் பெற்றுக் கொண்டனர். தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அரசு வாக்குறுதி அளித்ததை அடுத்து வேலை நிறுத்தம் கைவிடப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு உற்பத்தி தனியார்மயமாக்கப்படும் நிலையில் தங்களுடைய உரிமைகள் பறிபோகும் என தொழிலாளர்கள் கவலையுற்றிருக்கிறார்கள்.

♠ ♠ ♠ 

விரிவுபடுத்தப்பட்ட தொழிலாளர் திட்டத்தை வெளியிட்டார் பெர்னி சாண்டர்ஸ் :

“பெர்னி சாண்டர்ஸ் அமெரிக்க தொழிலாளர் சட்டத்தை அடிப்படையில் மாற்றியமைக்க விரும்புகிறார். தொழிலாளர்களின் உரிமைகளை விரிவுபடுத்துவதற்கும் ஒழுங்குபடுத்தி, வேலைநிறுத்தம் செய்வதற்கும் துறைசார்ந்து பேரம் பேசுவதற்கும் ஒரு புதிய அமைப்பை நிறுவுவதன் மூலமும் அதை செய்ய நினைக்கிறார்” என ப்ளூம்பர்க் செய்தி வெளியிட்டுள்ளது.

Berniesandersஊதியம், சிறப்பு பயன்கள், பணிச் சூழல் ஆகியவற்றில் தொழிலாளர்களின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் ‘பணியிடத்தில் ஜனநாயக திட்டம்’ என்ற பெயரில் தனது இணையதளத்தில் பெர்னி சாண்டர்ஸ் அந்தத் திட்டத்தை வெளியிட்டுள்ளார்.

“நாங்கள் தொழிற்சங்க இயக்கத்தை புத்துயிர் பெறச் செய்யாவிட்டால், இந்த நாட்டின் நடுத்தர வர்க்கம் வளர வாய்ப்பில்லை. மில்லியன்கணக்கான தொழிலாளர்களுக்கு விரும்பியதைச் செய்ய வாய்ப்பளிக்க வேண்டும், அவர்கள் தொழிற்சங்கங்களில் சேர அனுமதிக்கப்பட வேண்டும்” என பெர்னி ஒரு நேர்க்காணலில் தெரிவித்துள்ளார்.

– அனிதா

தொழிலாளர் தொடர்பான மேலதிக செய்திகளை வாசிக்க :
♦ The Life of Labour: Migrant Workers in Kashmir Leave, 5 Die in Ghaziabad Sewer

கால்கள் அற்றவன் நடனம் கற்றுக்கொடுக்கச் சொல்கிறான் !

உண்மை மனிதனின் கதை | மூன்றாம் பாகம் | அத்தியாயம் – 03

தெள்ளத் தெளிந்த ஆகஸ்டு மாத நண்பகல். அமைதி கொலுவீற்றிருந்தது. இயற்கையில் எல்லாம் மெருகேற்றப்பட்டுப் பளிச்சிட்டன. ஆயினும் இந்தத் தளதளப்பு வாடிவிடும் என்ற உள்ளார்ந்த துயரத்தை இன்னும் புலப்படாத எவையோ அறிகுறிகளால் வெதுவெதுப்பான காற்றில் இப்போதே உணர முடிந்தது. புதர்களுக்கு இடையே வளைந்து நெளிந்து சென்ற ஓடை போன்ற சிற்றாற்றின் சிறு மணற்கரையில் அந்த நண்பகலில் வெயில் காய்ந்து கொண்டிருந்தார்கள் சில விமானிகள்.

வெக்கையினால் சோர்ந்து அவர்கள் உறங்கி வழிந்தார்கள். களைப்பறியாத புர்நாஸியான்கூட, காயத்துக்குப் பின் சரியாகப் பொருந்தாத தனது ஊனமுற்ற காலைக் கதகதப்பான மணலில் புதைத்த வண்ணம் மெளனமாயிருந்தான். வெளியார் பார்வையில் படாமல் சாம்பல் நிறக் கொட்டை மர இலைகளின் மறைவில் அவர்கள் படுத்திருந்தார்கள். ஆனால் புல்லில் நீண்டு சென்றிருந்த ஒற்றையடிப் பாதை அவர்களுக்குத் தெரிந்தது. தனது காலுடன் சீராடிக் கொண்டிருந்த புர்நாஸின் தன்னை வியப்பில் ஆழ்த்திய ஒரு காட்சியை அந்தப் பாதையில் கண்ணுற்றான்.

ஆரோக்கிய நிலையத்துக்கு முந்திய நாள் வந்த இளைஞன் கோடிட்ட பைஜாமாக் காற்சட்டையும் பூட்சுகளும் அணிந்து சட்டை போடாமல் திறந்த மேனியாகச் சோலையிலிருந்து வெளிப்பட்டான். சுற்றும் முற்றும் கண்ணோட்டினான். எவரும் பார்வையில் படவில்லை. திடீரென அவன் முழங்கைகளை விலாக்களில் சேர்த்துப் பொருத்தியவாறு விந்தையாகத் துள்ளி ஓடத் தலைப்பட்டான். ஓர் இருநூறு மீட்டர்கள் ஓடிய பின், மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்ட, நடக்கத் தொடங்கினான். சற்று இளைப்பாறிய பிறகு மறுபடி ஓடினான். ஓட ஓட விரட்டப்பட்ட குதிரையின் விலா போன்று அவனுடைய மேனி பளபளத்தது. புர்நாஸின் ஒன்றும் பேசாமல் தன் தோழர்களுக்கு ஓடுபவனைச் சுட்டிக் காட்டினான். புதர் மறைவிலிருந்து அவர்கள் அவனைக் கவனிக்கலாயினர். சிக்கலற்ற இந்த உடற்பயிற்சியால் புதியவனுக்கு மூச்சு திணறிற்று, அவன் முகம் வலியினால் சுளித்தது. சில வேளைகளில் அவன் முனகினான், எனினும் மேலும் மேலும் ஓடிய வண்ண மாயிருந்தான்.

“யார் இந்த சர்கஸ்காரன்? மூளை புரண்டவனா?” என்று விளங்காமல் வினவினான் புர்நாஸியான்.

தூக்கத்திலிருந்து அப்போதுதான் விழித்துக்கொண்ட மேஜர் ஸ்த்ருச்கோவ் விளக்கினான்:

“அவனுக்குக் கால்கள் இல்லை. பொய்க்கால்களில் பயிற்சி செய்கிறான். சண்டை விமானப்படைக்குத் திரும்ப விரும்புகிறான்.”

இதைக் கேட்டதும், சோர்ந்திருந்த அந்த ஆட்களுக்குக் குளிர் நீரை மேலே கொட்டியது போல் இருந்தது. அவர்கள் துள்ளி எழுந்தார்கள், ஏக காலத்தில் பேச ஆரம்பித்தார்கள். விந்தையான நடையைத் தவிர வேறு எதையும் தாங்கள் எவனிடம் காணவில்லையோ அந்த இளைஞன் கால்கள் இல்லாதவன் என்ற சேதி எல்லோரையும் பெரு வியப்பில் ஆழ்த்தியது. கால்கள் இல்லாமல் சண்டை விமானத்தை ஓட்டுவது என்ற அவனது எண்ணம் அசட்டுத்தனமாக, நம்ப முடியாததாக, துடுக்கானதாகக்கூட அவர்களுக்குப் பட்டது. கை விரல்கள் இரண்டை இழந்ததற்காக, நரம்புக் கோளாறுக்காக, அல்லது தட்டைப் பாதங்களுக்காக, இவை போன்ற அற்ப விஷயங்களுக்காக ஆட்கள் விமானப்படையிலிருந்து விலக்கப்பட்ட நிகழ்ச்சிகளை அவர்கள் நினைவுபடுத்திக் கொண்டார்கள். விமானிகளின் உடல்நலம் எப்போதுமே, போர்க்களத்தில் கூடக் கடினமான நிபந்தனைகளின் படி பரிசோதிக்கப்பட்டது. இந்த நிபந்தனைகள் மற்ற பிரிவினரிடம் கோரப்பட்ட நிபந்தனைகளுடன் ஒப்பிடுகையில் அளவிட முடியாதபடி கடினமாயிருந்தன. தவிர, சண்டை விமானம் போன்ற நுட்பமான, துல்லியமான இயந்திரத்தைப் பொய்க்கால்களைக் கொண்டு இயக்குவது சற்றும் இயலாததாகத் தோன்றியது.

மெரேஸ்யெவின் எண்ணம் ஈடேறாது என்பதில் எல்லோரும் ஒத்த கருத்து கொண்டிருந்தார்கள்.

“உன் நண்பன் ஒன்று கடைத்தேற வகையற்ற மூடன் அல்லது மாபெரும் மனிதன். நடுத்தர நிலை அவனுக்குக் கிடையாது” என்று விவாதத்தை முடித்தான் புர்நாஸியான்.

சண்டை விமானம் ஓட்டுவதற்கு ஆசைப்படும் கால்களற்ற மனிதன் ஒருவன் ஆரோக்கிய நிலையத்தில் தங்கியிருக்கும் செய்தி கணப்போதில் எல்லா அறைகளுக்கும் பரவிவிட்டது. மதியச் சாப்பாட்டு வேளைக்குள் அலெக்ஸேய் எல்லோருடைய கவனத்துக்கும் நடுநாயகமாக விளங்கினான். ஆனால் இந்த விஷயத்தை அவன் கவனிக்கவில்லை போலத் தோன்றியது. சாப்பாட்டு மேஜையில் அக்கம் பக்கத்தவர்களுடன் அவன் கலகலவென்று சிரித்துப் பேசினான், ஆர்வத்துடன் நிறையச் சாப்பிட்டான், வனப்பு வாய்ந்த பரிசாராகிகளுக்கு வழக்கப்படி கணக்காகப் பாராட்டுரைகள் பகர்ந்தான், தோழர்களுடன் பூங்காவில் உலாவினான், மரப்பந்து ஆடக் கற்றுக்கொண்டான், வாலிபால் கூட விளையாடினான். இவற்றை எல்லாம் கண்டு, கேட்டவர்கள் விரைவற்ற துள்ளுநடை தவிர வேறு எதுவும் அசாதாரணமானது அவனிடம் இருப்பதாக நினைக்கவில்லை. அவன் மிக மிகச் சாதாரணமான ஆள். ஜனங்கள் எடுத்த எடுப்பிலேயே அவனுக்குப் பழக்கமாகிவிட்டார்கள், அவன் மீது கவனம் செலுத்துவதை நிறுத்தி விட்டார்கள்.

பொய்க்கால்களைத் தன் விருப்பத்துக்குக் கீழ்படிய வைத்துவிட்டான் அவன்.
புதிதாகக் கற்றுத் தேர்ந்த
ஒவ்வொரு ஜதிவரிசையும்
அவனுக்கு மிகுந்த
மகிழ்ச்சி அளித்தது.
ஒவ்வொரு பதிய அடிவைப்பும் சிறுவன் போன்று
அவனுக்குக் களிப்பூட்டியது.

ஆரோக்கிய நிலையத்துக்கு வந்த இரண்டாம் நாள் பிற்பகலில் அலெக்ஸேய், அலுவலகத்தில் ஸீனாவிடம் போனான். சடங்கு பாராட்டாமல் மேஜையருகே உட்கார்ந்து, அவள் தனது வாக்குறுதியை எப்போது நிறைவேற்றப் போகிறாள் என்று கேட்டான்.

“எந்த வாக்குறுதி?” என்று விற் புருவங்களை உயர நிமிர்த்தி வினவினாள் ஸீனா.

“எனக்கு நடனமாடக் கற்றுத்தருவதாக நீங்கள் வாக்குறுதி அளித்தீர்கள்.”

“ஆனால்…” என்று மறுதலிக்கப் பார்த்தாள் அவள்.

“நீங்கள் கற்பிப்பதில் பெருத்த திறமைசாலி என்று சொன்னார்கள். கால்கள் இல்லாதவர்கள் உங்களிடம் நடனம் ஆடுவார்களாம், மாறாக, சாதாரணமானவர்கள் கார்களை மட்டுமல்ல, இதயத்தையே பறிகொடுத்து விடுவார்களாம், பேத்யாவைப் போல. எப்போது தொடங்குவோம்? வீணாக நோத்தைக் கழிக்க வேண்டாம், சொல்லுங்கள்.”

இந்தப் புது ஆள் நிச்சயமாக அவளுக்குப் பிடித்து விட்டான். கால்கள் அற்றவன், நடனம் கற்றுக்கொடுக்கச் சொல்கிறான்! ஏன் கற்றுக் கொடுக்கக் கூடாது?

ஸீனாவின் வாழ்க்கையில் நடனம் முக்கியமான பெரிய இடத்தைப் பெற்றிருந்தது. நடனத்தில் அவளுக்கு விருப்பம், நடனமாடுவதில் உண்மையான தேர்ச்சி பெற்றிருந்த அவள். விஷயத்தை வளர்ப்பானேன்? அவள் இசைந்து விட்டாள். இதற்கு அவள் கடுமையான நிபந்தனைகள் விதித்தாள்: அவன் கீழ்ப்படிவுடன் பாடுபட்டுக் கற்க வேண்டும்; அவள் மேல் காதல் கொண்டுவிடாமலிருக்க முயல வேண்டும். ஏனெனில் காதல் கற்பிப்பதற்கு இடைஞ்சலாக இருக்கும். முக்கியமானது என்னவென்றால், மற்ற இளைஞர்கள் அவளை நடனமாட அழைக்கும் போது அவன் பொறாமைப்படக் கூடாது, ஏனெனில் ஒருவனோடு மட்டுமே நடனமாடினால் விரைவிலேயே அவள் தகுதியற்றவளாகக் கருதப்பட்டு விடலாம், மொத்ததில் இது சலிப்பூட்டுவது.

மெரேஸ்யெவ் இந்த நிபந்தனைகளை மறுப்பின்றி ஏற்றுக் கொண்டான். ஸீனா தனது தீக்கொழுந்துக் கூந்தலைச் சிலுப்பிச் சரிப்படுத்திக் கொண்டு, வடிவமைந்த சிறு கால்களை லாவகமாக அசைத்தவாறு அலுவலகத்திலேயே முதல் நடன அடிவைப்பை அவனுக்குக் காட்டினாள். ஒரு காலத்தில் மெரேஸ்யெவ் “ருஷ்ய” நடனத்தையும் பழைய நடனங்களையும் நன்றாக ஆடியதுண்டு. நெருப்பணைக்கும் பழைய வாத்தியக் குழு கமிஷின் நகரப் பூங்காவில் வாசிக்கும் இசைகளுக்கு ஏற்ப அவன் ஆடுவான். லயஞானம் அவனுக்கு இருந்தது. எனவே விரைவில் இந்தக் களிமிக்க கலையில் தேர்ச்சி பெற்றுவிட்டான். இப்போது அவனுக்கு ஏற்பட்ட சிரமம் எல்லாம், மீள் விசையும் துடிப்பும் கொண்ட உயிருள்ள கால்களால் அல்ல, வார்களால் முழங்கால்களுடன் அணைக்கப்பட்டிருந்த தோல் சாதனங்களின் உதவியால் லாவகமாகவும் பல திருப்பங்களுடனும் பயிற்சி செய்ய வெண்டியிருந்ததுதான். முழங்கால்களின் அசைவால், கனத்த, பாங்கற்ற பொய்க்கால்களை உயிர்த்து இயங்கச் செய்வதற்கு அமானுடப் பிரயாசையும் தசைகளின் இறுக்கமும் சித்தவுறுதியும் தேவைப்பட்டன.

பொய்க்கால்களைத் தன் விருப்பத்துக்குக் கீழ்படிய வைத்துவிட்டான் அவன். புதிதாகக் கற்றுத் தேர்ந்த ஒவ்வொரு ஜதிவரிசையும் அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. ஒவ்வொரு பதிய அடிவைப்பும் சிறுவன் போன்று அவனுக்குக் களிப்பூட்டியது. அதைக் கற்றுத் தேர்ந்ததும் அவன் தன் ஆசிரியையைத் தூக்கித் தட்டாமாலை சுற்றத் தொடங்குவான். தன்மீதே தான் அடைந்த வெற்றிக்காக பெருமைபடுவான். சிக்கலான, வெவ்வேறு தன்மைகள் கொண்ட இந்தக் குதிப்புகள் அவனுக்கு எவ்வளவு வலி உண்டாக்கின, இந்தக் கலையைப் பயில்வதற்கு அவன் எத்தகைய விலை செலுத்த வேண்டியிருந்தது என்பதை யாருமே, முக்கியமாக அவனுடைய ஆசிரியை ஊகிக்கவே முடியவில்லை. சில வேளைகளில் அவன் முகத்து வியர்வையுடன் கட்டுக் கடங்காது மல்கிய கண்ணீரையும் அலட்சியமான கைவீச்சுடன் புன்னகை செய்தவாறு துடைத்துக் கொண்டதை ஒருவரும் கவனிக்கவில்லை.

படிக்க:
காஷ்மீர் : ‘இது எமெர்ஜன்சி அல்ல’ – ஐ.ஏ.எஸ் அதிகாரி பதவி விலகல் !
கேள்வி பதில் : தேவேந்திர குல வேளாளர் – பட்டியல் வெளியேற்ற கோரிக்கை !

ஒரு தடவை அவன் ஒரேயடியாகக் களைத்துச் சோர்ந்து, அதே சமயம் குதூகலம் பொங்க அறைக்குள் தத்திக் குதித்து வந்தான். அங்கே மேஜர் ஸ்த்ருச்கோவ் ஜன்னல் அருகே ஏதோ எண்ணத்தில் ஆழ்ந்தவராக நின்று கொண்டிருந்தார். வெளியே கோடைப் பகல் மெதுவாக முடிந்து கொண்டிருந்தது. கதிரவனின் கடைசிக் கிரணங்கள் மரமுடிகளுள் ஊடாக மஞ்சள் பொறிகளைச் சிதறின.

“நடனமாடக் கற்றுக்கொள்கிறேன்!” என்று மேஜரிடம் வெற்றிக் குரலில் அறிவித்தான் மெரேஸ்யேவ். மேஜர் ஒன்றும் பேசவில்லை. மெரேஸ்யெவ் அப்பாடாவென்று பொய்க் கால்களைக் கழற்றி வைத்துவிட்டு, வார்களின் இறுக்கத்தால் இரத்தங்கட்டிப் போயிருந்த கால்களை நகங்களால் அழுத்திப் பறண்டியவாறே, “கற்றுத் தேர்ந்துவிடுவேன், கட்டாயமாக!” என்று பிடிவாதத்துடன் மொழிந்தான்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

தமிழகம் – புதுச்சேரியை நாசமாக்கவரும் பேரழிவுத் திட்டங்கள் | புதுவை பொதுக்கூட்டம் !

ஹைட்ரோகார்பன் – எட்டுவழிச்சாலை – அணுக்கழிவு

தமிழகம் – புதுச்சேரியை நாசமாக்கவரும் பேரழிவுத் திட்டங்கள்

புதுச்சேரி – தமிழகத்தை நாசமாக்காதே! விளக்கப் பொதுக்கூட்டம் !
புரட்சிகர கலைநிகழ்ச்சி

நாள் : 01-09-2019, மாலை 05.00 மணி
இடம் : மதகடிப்பட்டு பேருந்து நிறுத்தம், புதுச்சேரி

தலைமை :
தோழர். E.K.சங்கர், மக்கள் அதிகாரம், புதுச்சேரி.

கருத்துரை :
தோழர். தீனா, அமைப்பாளர், பெரியார் சிந்தனையாளர் இயக்கம், புதுச்சேரி.
தோழர். முருகானந்தம், தலைவர், மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம், புதுச்சேரி.
தோழர். திருநாவுக்கரசு, மாநில துணைச் செயலாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி, புதுச்சேரி.
தோழர். காளியப்பன், தலைமைக்குழு உறுப்பினர், மக்கள் அதிகாரம், தமிழ்நாடு.

***

அன்பார்ந்த உழைக்கும் மக்களே,

இன்று தமிழகம் பெருமுதலாளிகளின் வேட்டைக்காடாக மாற்றப்பட்டுவிட்டது. நீரழித்து, நிலமழித்து, காடு, மலை, கழனியழித்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு படையலிட்டு வருகிறது மோடி – எடப்பாடி கும்பல். ஹைட்ரோகார்பன், எட்டுவழிச்சாலை அணுக்கழிவு மட்டுமல்லாது, கூடங்குளம் அணு உலை, ஸ்டெர்லைட் நச்சு ஆலை, கெயில் குழாய் பதிப்பு, நியூட்ரினோ, பெட்ரோ – கெமிக்கல் மண்டலம் என தமிழகத்தின் ஒவ்வொரு ஏக்கர் நிலப்பரப்பும் முதலாளிகளின் லாபவெறிக்காக கபளீகரம் செய்யப்படுகிறது.

இந்த நாசகார பேரழிவு திட்டங்களை, அந்தந்தப் பகுதி மக்கள் தங்களது சொந்த பாதிப்பிலிருந்து வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள போராடி வருகின்றனர். அதனால் அவை தனித்தனியான போராட்டங்களாக அந்தந்தப் பகுதிகளுக்குள் சுருங்கி நிற்கிறது. ஆனால், அந்தப் பேரழிவுத் திட்டங்கள் பாரத்மாலா, சாகர்மாலா என்ற பெருந்திட்டத்தின் சங்கிலிப் பிணைப்பாக நீண்டுள்ளது.

ஆனால், மக்கள் ஒருங்கிணையாத வகையில் சாதி, மத உணர்வுகள் தூண்டப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ். – இந்துமதவெறி அமைப்புகள், முஸ்லீம்கள், கிறித்தவர்கள் தான் மக்களின் எதிர்களாக காட்டுகின்றனர். சாதிவெறி அமைப்புகள் சொந்தசாதிப் பெருமையைப் பேசி, மற்ற மக்களை எதிர்களாக்குகின்றனர்.

மேலும், இவை கடலோரத்தில் அல்லது காவிரி டெல்டாவில், விவசாய நிலங்களில் என தனக்கு தொடர்பில்லாத பகுதியில் செயல்படுத்தப்படும் திட்டம். எனவே, எனக்கு பாதிப்பில்லை என்று ஒதுங்கி நிற்க முடியாது. இதோ புதுச்சேரியில் நமது காலுக்கடியில் ஹைட்ரோகார்பன் வந்துவிட்டது. வழுதாவூர், பக்கிரிப்பாளையம் பகுதியில் ஹைட்ரோகார்பன் கிணறுக்கான ஆய்வுப்பணி நடந்துள்ளது. மருதூர், கரிக்கலாம்பாக்கம், பாகூர் பகுதிகளிலும் அதற்கான இடம் தேர்வு செய்வதற்கான அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளது. காலுக்கடியில் பூமி நழுவிக் கொண்டிருக்கிறது. நாம் போராட்ட களத்திற்கு வரவேண்டிய நேரம், போராட்டங்களை ஒருங்கிணைக்க வேண்டிய நேரம் இது.

படிக்க :
♦ ஹைட்ரோ கார்பன் : தமிழகத்தைச் சுடுகாடாக்க மீண்டும் நுழைகிறது வேதாந்தா!
♦ ஸ்டெர்லைட்டை எவ்வாறு மூடுவது ? பதிலளிக்கிறார் மக்கள் அதிகாரம் ராஜு !

கூடங்குளம் அணு உலையை எதிர்த்து மக்கள் 500 நாட்களுக்கும் மேலாக ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என அமைதியான முறையில் தங்களது பகுதியில் போராடினார்கள். ஆனால், ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில், ஆலைப் பகுதியைத் தாண்டி வீதிக்கு வந்தார்கள் மக்கள், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மொத்த தமிழகமே வீதிக்கு வந்து ஒரே குரலில் முழங்கியது. இவை தான் அரசை நிர்ப்பந்தித்து பின்வாங்க வைத்தது. ஓரளவு வெற்றியும் கிட்டியது.

இவை தற்காலிகமானவையே, ஸ்டெர்லைட், எட்டுவழிச்சாலை திட்டங்களைச் செயல்பத்துவதற்கான அனைத்து வேலைகளையும் அரசும், நீதிமன்றமும் செய்துவருகிறது. இந்த அரசுக் கட்டமைப்பு மக்களுக்கானது அல்ல, கார்ப்பரேட்டுக்களுக்கானது என மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகி வருகிறது.

எனவே, நமது போராட்டங்கள் பேரழிவுத் திட்டங்களுக்கு எதிராக மட்டுமின்றி, அவை மீண்டும் இந்த மண்ணில் செயல்படுத்தாமல் நிரந்தரமாக தடுப்பதற்கு அரசுக் கட்டமைப்பை எதிர்த்த போராட்டமாகவும் மாற வேண்டும்.

இவற்றை விளக்கும் வகையில் தான் புதுச்சேரி மக்கள் அதிகாரம் சார்பில் நடக்கும் விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள உங்களை அறைகூவி அழைக்கிறோம்.

அனைவரும் வாரீர் !


மக்கள் அதிகாரம், புதுச்சேரி.
தொடர்புக்கு: 87542 05589

கேள்வி பதில் : விவேகானந்தர், இராமகிருஷ்ணரை எப்படிப் பார்ப்பது ?

கேள்வி : //பரமஹம்ச யோகானந்தரின் “ஒரு யோகியின் சுய சரிதை” படித்திருக்கிறீர்களா? அதில் வரும் அத்வைத நிலை, மரணித்தவர் உயிருடன் எழுவது, மரணித்தவரின் மறுபிறவி, பாபாவுடன் சந்திப்பு, முற்பிறவி ஞாபகம் தோன்றுதல், உணவே உட்கொள்ளாத மகான் போன்ற பல விசயங்களுக்கு அறிவியல்பூர்வமான விமர்சனங்கள் தேவைப்படுகிறது.

அதேபோல் விவேகானந்தர் இந்து மதத்தின் முற்போக்காளராக அறியப்படுகிறார்.

நான் இவ்விருவரையும் பின்பற்றவில்லை என்றாலும் இவர்களது புத்தகங்கள் என்னை பெரிதும் பாதித்தவை. இவர்களைப் பற்றி மற்றும் இவர்களைப் போன்றோர்களின் கருத்துக்கள் பற்றி தெளிவான விமர்சனங்கள் அவசியமாகிறது.

ஏதாவது புத்தகங்கள் வெளியிடப்பட்டிருந்தாலும் சிபாரிசு செய்யலாம். நன்றி!//

– S.கார்த்திகேயன்

ன்புள்ள கார்த்திகேயன்

Hallucination என்ற ஆங்கில வார்த்தையின் பொருள் இல்லாதவை இருப்பது போல மனச்சமநிலை இழந்தோருக்கு புலனுணர்வு வழியாகவும், சிந்தனையிலும் தோன்றுவது. தொலைக்காட்சியில் ஏதாவது ஒரு சானலில் பேசப்படும் வார்த்தைகளில் ஓரிரண்டு ஒலிமாறி வேறு ஒன்றாக கேட்டு புதிய மாய யதார்த்தத்தை தோற்றுவிக்கும். வேறு எதையோ நினைவுபடுத்தும். அது போல புதிய மனிதக் குரல்களும் அப்படி ஒலிக்கும். நமது சாமியார்களுக்கு தோன்றும் மந்திர விசயங்கள் அனைத்தும் இப்படித்தான் உருவாகின்றன. இவை எதுவும் உண்மையல்ல, யதார்த்தமல்ல என்றாலும் பாதிக்கப்பட்ட மனிதர்கள் அப்படி நம்புகிறார்கள். அவர்களிடம் என்ன சொல்லியும் அதை புரிய வைப்பது கடினம். இந்த இடத்தில் மனநல மருத்துவர் மூலம் சிகிச்சை எடுப்பதே சரியானது.

vivekanda-ramakrishna paramahamsaபுறநிலையில் இருக்கும் ஓரிரு விசயங்கள் குறிப்பிட்ட சமூக சூழல் காரணமாக அகநிலையில் நுணுக்கி நுணுக்கி நீண்ட நேரம் சிந்திக்கும் போது இத்தகைய கற்பிதங்கள் போகப் போகத் தோன்றுகின்றன. அது கலைஞனாக இருந்தால் ஒரு கவிதை தோன்றும். மனநிலை பாதிப்படைந்திருந்தால் கடவுள் பேசுவது போலத் தோன்றும். கவிஞன் கவிதை எழுதிய பிறகு சமநிலை அடைந்து விடுகிறான். மனநிலை பாதிப்படைந்தோரோ அப்படி உடனே சமநிலை அடைந்து விடுவதில்லை. இராமகிருஷண் பரமஹம்சரிடம் இந்த இரண்டும் இருக்கின்றன. அதனால்தான் நீதி உபதேசங்களை கதைகள் வழியாக உபதேசிக்கிறார். கூடவே இத்தகைய மாய கற்பிதங்களையும் உண்மையெனக் கூறுகிறார்.

இது shutter island எனும் ஹாலிவுட் உளவியல் த்ரில்லர் படம் போன்றது. மனநலம் பாதிக்கப்பட்டோரைக் கொண்ட தீவில் நிகழும் கொலையை விசாரிப்பதற்கு டிகாப்ரியோ ஒரு போலீஸ் அதிகாரியாக வருகிறார். அங்கே நிகழும் மர்ம சம்பவங்கள் அந்த தீவின் புதிரை அதிகப்படுத்துகின்றன. இறுதிக் காட்சியில் டிகாப்ரியோ பார்வையில் சொல்லப்படும் அனைத்தும் அவரது கற்பிதங்களே, அவரே அங்கு சிகிச்சை பெறும் ஒரு மனிதர் என்பதும் தெரிய வருகிறது. ஆனால் படத்தை பார்க்கும் போது அத்தனையும் தத்ரூபமாக உண்மையென நமக்குத் தோன்றுகிறது. ஏனெனினல் அங்கே மாயை பல்வேறு தர்க்க ஆதாரங்களோடும் நம்பகத் தன்மையோடும் நமக்கு முன்வைக்கப்படுகிறது.

நமது முந்தைய சாமியார்கள் பலரும் இந்த நிலையில் இருந்திருக்கின்றனர். முற்றிப் போய் இருப்பவர்கள் பேசா நிலை அடைந்து சித்தன் போக்கு சிவன் போக்கென வாழ்ந்து மடிகின்றனர். தனது சீடர்களோடு உரையாடி கொஞ்சம் யதார்த்த உலகோடு தொடர்புடையவர்கள் பாதி நேரம் சமநிலையிலும் மீதி நேரம் மாய நிலையிலும் மாறி மாறி இருக்கின்றனர். இந்த இரண்டும் அவர்களது யதார்த்தமாகி விடுகிறது.

படிக்க:
கேள்வி பதில் : வரலாற்றில் கல்விக்கு முக்கியத்துவம் மறுக்கப்பட்டது ஏன் ?
♦ கார்ப்பரேட் சாமியார்கள் : இந்துத்துவத்தின் புரோக்கர்கள் !

இறைவன் சொல்லக் கேட்டுத்தான் குர்-ஆன் எழுதப்பட்டது, பெந்தகோஸ்தே வழிபாட்டில் பேசப்படும் அன்னியபாஷை அனைத்தும் இத்தகைய கற்பிதங்களே. ராமகிருஷண் பரமஹம்சர் பட்டியலிடும் அத்வைத நிலைகளும் அவ்வாறானதே. அவரைப் போன்றவர்களுக்கு சிகிச்சை அளிக்க அந்தக் காலத்தில் வாய்ப்புகள் இல்லை. இன்று இருக்கிறது. அதனால்தான் இன்றைய சாமியார்கள் (சாயிபாபா, பிரேமானந்தா போன்றோர் விதிவிலக்கு) இத்தகைய மந்திர தந்திரங்களை குறைத்துக் கொண்டு கார்ப்பரேட் சாமியார்களாக வலம் வருகின்றனர். கல்லாவையும் கட்டுகின்றனர்.

இராமகிருஷ்ண பரமஹம்சர்  இடைவிடாத முயற்சியால் காளியை தரிசித்தார், ஆறு மாத காலம் சமாதி நிலையில் இருந்து புத்தர், மகாவீரர், குருநானக்கை தரிசித்தார் என்பனவும் கற்பிதங்களே! தரிசித்தவர்களைப் பற்றி செவிவழிக் கதைகளை கேட்டு அதை எண்ணி எண்ணி அகநிலையில் தோயும் போது அப்படி அவர்கள் கற்பனையில் ‘தரிசனம்’ தருகிறார்கள். இராமகிருஷ்ணரின் உபதேசங்கள் இந்திய புராணங்கள், இந்து மத தத்துவங்களை எளிமையாக சொல்கிறது என்றால் விவேகானந்தர் இன்னும் கொஞ்சம் நவீன மொழியில் எடுத்து வைக்கிறார். இருவரும் இந்தியாவை பார்ப்பனியத்தின் பொற்கால மரபைக் கொண்ட ஒரு நாடாக கருதி அதையே வெளிநாட்டினருக்கும் உள்நாட்டினருக்கும் தத்துவமாய் எடுத்துரைத்தனர். முதன்மையாக பார்ப்பன இந்துமதத்தின் ஆன்மா வருணாசிரமம், சாதியில்தான் உறைந்து கிடக்கிறது என்பதை மறுத்து கர்ம வாழ்வில் இருந்து கடைத்தேறும் மதமாக இந்துமதத்தை முன்வைத்தனர்.

அதனால்தான் விவேகானந்தர் “சக்கிலியர்களின் குடிசைகளில் இருந்து புதிய இந்தியா எழட்டும்” என்றாரே ஒழிய சக்கிலியர்களின் சாதி தீண்டாமையை ஒழிப்போம் என்று சொல்லவில்லை. அனைத்து மதங்களும் உண்மையை எடுத்துரைக்கின்றன, நதிகள் பலவாயினும் சேருமிடம் கடல்தான் என்பதாக மற்ற மதங்களை அங்கீகரித்தாலும் மற்ற மதங்களில் பிறப்பில் உயர்வு தாழ்வு இல்லை; இந்து மதத்தில் அது இருக்கிறது எனும் உண்மையான முக்கியமான வேறுபாட்டை புறந்தள்ளினர். அவர்களது காலத்து இந்து மத சீர்திருத்த முன்னோடிகள் பலருக்கும் இது பொருந்தும். ஆங்கிலவழிக் கல்வியினால் நவீன உலகை கொஞ்சம் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப இந்து மதத்தின் கொடிய – சதி, குழந்தை மணம், விதவை கோலம் – ஆகியவற்றை சீர்திருத்தும் போக்கில் நேர்மறையாக இந்தியாவின் ஞான மரபு பற்றி இவர்கள் பெருமை கொண்டார்கள்.

சிகாகோ நகரில் நடந்த சர்வமத மாநாட்டிற்கு இராமநாதபுரம் சேதுபதி மன்னர் காசில்தான் விவேகானந்தர் சென்றார். கமுதி ஆலய நுழைவுப் போராட்டத்தை எதிர்த்த பாஸ்கர சேதுபதிதான் இந்துமதத்தின் அருமை பெருமைகளை பேசுவதற்காக விவேகானந்தருக்கு பொருளுதவி செய்தார்.

“நாடார்களுக்கு தீண்டாமை காரணமாக ஆலய நுழைவு மறுக்கப்பட்ட அதே காலகட்டத்தில் திரு. பாஸ்கர சேதுபதி இந்து மதத்தின் அருமைப் பெருமைகளை அயல்நாடுகளில் வியந்துரைக்க விவேகானந்தரின் சிகாகோ பயணத்திற்குப் பொருளுதவி செய்தார். 1893-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் நடந்த அனைத்துலக சமய மாநாட்டில் விவேகானந்தர், சகோதரர்களே, சகோதரிகளே, எனத் தனது உரையைத் தொடங்கி இந்து மதத்தின் மேன்மைகள் குறித்து பேசிய அதே காலகட்டத்தில் இந்து சனாதன தர்மங்களின் அடிப்படைத் தேவையான தீண்டாமையின் பொருட்டு, இந்துக் கோயில்களுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த தங்களை இந்துக்களாக கருதிய உள்ளூர் நாடார் சகோதர சகோதரிகள் இந்துக் கோயிலுக்குள் தங்களை அனுமதிக்கும்படி திரு. பாஸ்கர் சேதுபதியிடம் கெஞ்சிக் கொண்டிருந்தனர்.”

♦ தீண்டாமை வேண்டி வழக்கு போட்ட பாஸ்கர சேதுபதியின் காசில் அமெரிக்கா சென்ற விவேகானந்தர் !

சாதாரண இந்துக்களிடையே ராமகிருஷ்ணரும், விவேகானந்தரும் இந்தியா முழுவதும் கொண்டு சேர்க்கப்பட்டிருக்கின்றனர். காரணம் என்ன? எழுத்தாளர் காஞ்சா அய்லயா பதிலளிக்கிறார்.

“ராம் மோகன் ராய், தாகூர், விவேகானந்தர் குறித்து நாட்டின் அனைத்து பகுதியினரும் அறிவர். வங்காள மாணவர்களுடன் உங்களுக்கு மகாத்மா புலே, பெரியார் பற்றி தெரியுமா எனக் கேட்டால். அந்தப் பெயர் கூட அவர்களுக்கு பரிட்சயமானதில்லை என்பது தெரியவரும்.” என்கிறார் அய்லய்யா.

பார்ப்பனிய வருணாசிரமத்தை எதிர்த்த பெரியோர்களின் பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டதற்கும், பார்ப்பனிய மீட்சிக்காக பாடுபட்டோரை சந்தைப்படுத்துவதும் வேறு வேறு அல்ல.

♦ வங்காளிகள் சாதியத்தை புரிந்து கொள்ளாதது ஏன் ? காஞ்சா அய்லய்யா

விவேகானந்தர், புகைப்படத்தில் காவி தலைப்பாகையுடன் கம்பீரமாக திகழும் படிமத்தை இந்துமத அமைப்புகளும், ஆர்.எஸ்.எஸ்-ஸும் இந்திய மக்களிடையே வலுவந்தமாகக் கொண்டு சென்றன. விவேகானந்தரின் தேசியம்தான் தங்களது தேசியம் என்று ஆர்.எஸ்.எஸ் தனது நூல்களில் பிரகடனப்படுத்துகிறது. இந்தியா ஒரு நாடு அல்ல பல்வேறு தேசிய இனங்களின் நாடு என்று மார்க்சியர்களும், மற்றவர்களும் கூறுவதற்கு மாறாக அவர்கள் இந்தியா ஒரே படித்தான பண்பாட்டினைக் கொண்ட நாடு என்று கூறும் விவேகானந்தரை முன்வைக்கின்றனர்.

இந்திய மனநிலையில் துறவு, காவி, கடவுள், பக்தி, கர்மம், யோகம் அனைத்தும் நமது ஆழ்மனதில் படியும் வகையில் இங்கே சமூக அமைப்பும் அதன் இயக்கமும் இருக்கிறது. குறைந்தபட்சமாக படித்த நடுத்தர வர்க்கத்திடம் இது அதிகமாய் இருக்கிறது. அதற்கு அப்பாற்பட்ட மக்களிடத்தில் அப்படி இல்லை. அந்த நடுத்தர வர்க்கத்து மத உணர்வின்பால் எழும் குற்ற உணர்வை மட்டுப்படுத்தும் நீதி போதனைகளாக இராமகிருஷணர், விவேகானந்தரின் உபதேசங்கள் செல்வாக்கோடு இருக்கின்றன. அப்படி கொண்டு செல்லவும் படுகின்றன. சென்னை புத்தகக் காட்சியில் எடைக்கு எடை கடைக்கு கடை ஆன்மீக நிலையங்களும் புத்தகங்களும் இருப்பது ஒரு தற்காலிக சான்று. ஆண்ட்ராய்டு தலைமுறைக்கு முன்புதான் இந்த நடுத்தர வர்க்க ஆன்மீக நாட்டம் அதிகம் என்றாலும் இன்று ஆண்ட்ராய்டு காலத்தில் அத்தி வரதருக்கு திரண்ட கூட்டத்தை பார்க்கும்போது இன்றும் அந்த சூழல் சமூகத்தில் தொடர்வதை அவதானிக்கலாம். இவற்றை கடந்து உலகை உள்ளதுபடி பார்க்கும் போது அந்த உபதேசங்களின் பொருத்தப்பாடின்மையை நாம் அறிந்து கொண்டு நிஜ உலகோடு உரையாட வழி பிறக்கும்.

நன்றி!

♦ ♦ ♦

(கேள்வி பதில் பகுதிக்கு நிறைய கேள்விகளை நண்பர்கள் கேட்கிறார்கள். மகிழ்ச்சி. கூடுமானவரை உடனுக்குடன் பதிலளிக்க முயல்கிறோம். சில கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு கூடுதலான நேரம் தேவைப்படுகிறது. கொஞ்சம் காத்திருங்கள்.)

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

இன்றைய காலகட்டத்தில் புற்றுநோய் அதிகரிப்பதன் காரணம் என்ன ?

1
cancer-india-slider

“இதற்கு காரணம் காற்று மாசுபாடு, அப்புறம் இந்த பீசா பர்க்கர் போன்ற உங்களுடைய மேற்கத்திய உணவுமுறையும் தான்” என்று என்னுடைய பதிலுக்குக் கூட காத்திராமல் என்னுடைய மாமா கூறினார். தன்னைச் சுற்றி இருப்பவர்கள் அனைவருக்கும் புற்றுநோய் ஏன் வருகிறது என்று அவர் என்னிடம் கேட்டிருந்தார் அவர். “தீர்வு ஏதாவது கண்டறிந்து உள்ளீர்களா?” என்று என்னிடம் கேட்டுவிட்டுத்தான் மேற்கண்ட பதிலையும் சொன்னார்.

நான் அவரை குறை சொல்லவில்லை. அவரது சகோதரி – என்னுடைய அம்மா கடைசி கீமோதெரபி சிகிச்சையை சமீபத்தில்தான் முடித்திருந்தார். எனவே இக்கேள்விகளைக் கேட்பதற்கான அவரது வாய்ப்பு இது.

இந்தியாவில் நாங்கள் வளரும் போது மலேரியா, டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்களையும் இதய அடைப்பு பற்றியும் தெரிந்து வைத்திருந்தோம். புற்றுநோய் என்பது ஒருசிலருக்கு வரும் மர்மமான நோயாகத்தான் இருந்தது.

cancer1990-களில் போலியோ போன்ற நோய்கள் பெரும் மரணங்களை ஏற்படுத்தி நம்மை கவலையடையச் செய்தன. இந்தியாவின் சுகாதார கொள்கைகளும் அந்நோய்களுக்கு கவனம் செலுத்தி சரியாக உருவாக்கப்பட்டிருந்தன. நான் கல்லூரியில் படிக்கும்போது எப்போதோ என்னுடைய உறவினரோ அல்லது குடும்பத்திற்கு தெரிந்தவரோ, ஒருவருக்கு புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் கடந்த பத்தாண்டுகளில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகரித்து கொண்டே இருப்பது போல தெரிகிறது. பிறகு, போன ஆண்டின் கடைசியில் ஒருநாள் என்னுடைய அம்மாவிற்கும் கருப்பை புற்றுநோய் இருப்பதாக ஒரு அதிர்ச்சியான செய்தி எனக்கு வந்தது.

நான் அவரை சந்தித்த நேரத்தில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து வெள்ளம் போல கேள்விகள் வந்தன. அமெரிக்காவின் தேசிய புற்றுநோய் நிறுவனத்தில் ஆராய்சியாளராக அப்போது நான் இருந்தேன். என்னுடைய மாமா மட்டுமல்ல, அமெரிக்காவிலும் கூட பலருக்கும் தங்களுக்கு நெருக்கமானவர்கள் புற்றுநோயோடு போராடிக் கொண்ருப்பது தெரியும்.

படிக்க:
♦ களைக் கொல்லி மருந்து கேட்டால் புற்று நோயைத் தரும் மான்சாண்டோ !
♦ முற்பிறவி பாவம்தான் கேன்சருக்கு காரணமாம் ! சொல்வது பாஜக சுகாதார அமைச்சர்

இது உண்மையா? முன்பை விட இப்போது புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்து கொள்பவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் அதிகமா? அல்லது சிறப்பான மருத்துவ முறை மற்றும் செலவு செய்யும் திறன் மேம்பட்டதால் இது சாத்தியமானதா?

இந்தியா போன்ற ஒரு வளரும் நாட்டில் புற்றுநோய் வளர்ச்சியை அளவிட அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகளை ஒப்பிடுவதுதான் சரியான தொடக்கப்புள்ளி. மூன்றில் ஒரு அமெரிக்கர் தன்னுடைய வாழ்நாளில் புற்று நோய்க்காக சிகிச்சையளிக்கப்படுகிறார் என்று 2015-ல் ஆராய்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்தியாவில் இந்த அளவு மிகவும் குறைவு. 120 கோடி மக்களில் ஒரு பத்து இலட்சம் மக்கள் புற்றுநோயால் பாதிப்படைகின்றனர்.

எனினும், 1990-க்கும் 2016-க்கும் இடையில், இரு நாடுகளின் தகவல்களை பார்ப்போம். இந்தியாவில் இறப்புக்கான காரணங்களின் பட்டியலில் புற்றுநோய் மூன்று இடங்கள் முன்னேறி இருப்பதை நீங்கள் காண்பீர்கள், ஆனால் அமெரிக்க பட்டியலில் அது இல்லை. இந்த அளவில் மட்டும் நம்முடைய உள்ளணர்வு சரியானது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரிக்கத்தான் செய்கிறது.

ஆனால் இதுவே முழுமையான சித்திரமல்ல. பெருகி வரும் புற்றுநோய் பாதிப்புகளுக்கும் இறப்புகளுக்கும் என்னுடைய மாமா சொல்வது போல மேற்கத்திய உணவு அல்ல பெரிய காரணம். உண்மையில் இறைச்சியை விட புகை பிடிப்பது உள்ளிட்ட வாழ்க்கை முறைகளால் தான் இந்தியாவில் அதிக புற்றுநோய் ஏற்படுகிறது. மேலும் வாழ்நாள் அதிகரிப்புடன் அதற்கு தொடர்பிருப்பதை நாம் ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும்.

அடிப்படையில் வயதாக ஆக ஏற்படும் மரபணு சார்ந்த ஒரு நோய்தான் புற்றுநோய். நம்முடைய வாழ்நாளில் திசுக்கள் மற்றும் உறுப்புகளில் தொடர்ந்து செல்கள் நிரப்பப்படுகிறது. செல்கள் மீண்டும் மீண்டும் பிளவுபடுவதால் இது சாத்தியமாகிறது. ஒவ்வொறு முறையும் செல்கள் பிளவுற்று டி.என்.ஏ நகல்களை உருவாக்குகின்றன. இச்சமயத்தில் மரபணுவில் தவறு ஏற்பட வாய்ப்புள்ளது. இதை மரபணு பிறழ்வு (mutation) என்றழைக்கிறார்கள்.

இப்பிறழ்வுகள் பெரும்பாலும் பாதிப்பில்லாதவை மற்றும் பல்வேறு உயிரியல் வழிமுறைகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன. ஆனால் சில நேரங்களில், இந்த மரபணு பிறழ்வானது கட்டுப்பாடில்லாமல் செல்களை தொடர்ந்து பிளவுபடுத்துகிறது. இவை தான் புற்றுநோய் செல்கள் ஆகின்றன. இவை நம்முடைய உறுப்புகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக ஆகின்றன. உறுப்புக்குக் கிடைக்கும் அனைத்து சத்துக்களையும் இந்த செல்களால் எடுத்துக்கொள்ள முடியும், உறுப்புகளின் இயல்பான செயல்பாட்டை குறுக்கிட்டு முடக்க முடியும். மேலும் உடலின் மற்ற பகுதிகளுக்கும் இது பரவுகிறது. இந்த சுயநல புற்றுநோய் செல்கள் ஒருபோதும் மரிக்க விரும்புவதில்லை என்பதுதான் புற்றுநோயின் முரண்சோகம்.

படிக்க:
♦ நூல் அறிமுகம் : கீதையின் மறுபக்கம்
♦ குழந்தைகள் தமது திறமைகளால் உலகை வியப்பில் ஆழ்த்துவார்கள் !

உயிரினங்கள் அதிக காலம் வாழும் போது, வயது ஆக ஆக, நம்முடைய செல்களில் சிலவற்றில் மரபணு பிறழ்வினால் புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. தோராயமாக 37 டிரில்லியன் செல்கள் நம்முடைய உடலில் இருக்கின்றன. இத்துடன் வயதாக ஆக புற்றுநோய் வருவதற்கான நிகழ்தகவு அதிகரிக்கிறது. இது ஒன்றும் வியக்கும்படியானதோ அல்லது புதிய கண்டுபிடிப்போ அல்ல . 1950-களிலிருந்து இது நமக்கு தெரியும். ஆயினும் விளைவுகளை இப்போதுதான் நாம் எதிர்கொள்கிறோம்.

1990 மற்றும் 2016-க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் 50 (வயது) க்கும் கடைசியிலிருந்து 70 (வயது)க்கும் நடுப்பகுதி வரை நம்முடைய வாழ்நாள் அதிகரித்துள்ளது. இது தொடர்ந்து அதிகரிக்கிறது. தொற்று நோய்களை தடுக்க நாம் எடுத்த கடுமையான முயற்சிகள், சிறந்த குழந்தை பராமரிப்பு, சிறப்பான சுகாதார வசதி மற்றும் போலியோவிற்கு எதிரான வெற்றிகரமான செயல்பாடுகள் இதற்கு முதன்மையான காரணம்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

புற்றுநோய் ஆய்வு மற்றும் அதற்கான மருத்துவத்திற்காக இப்பொது அதிகமாக செலவு செய்யாவிட்டால் அடுத்த பத்தாண்டுகளில் அது அதிகரிப்பதை நாம் தொடர்ந்து பார்க்க நேரிடும். புற்றுநோயை கண்டறிவதிலும் அதற்கான மருத்துவத்திலும் நாம் முன்னேறாவிட்டால் இதே போக்குதான் தொடரும்.

எதிர்காலத்தில் ஒரு பெறிய அளவிலான செலவை தவிர்க்க விரும்பினால், புற்றுநோய் வருவதற்கு முன்பே கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டும். மேற்கத்திய நாடுகளில் புற்றுநோய் பாதிப்புகளில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்புகளிலிருந்து தப்பியவர்கள் எண்ணிக்கை 20 விழுக்காடாக உயர்ந்துள்ளது. புற்றுநோயை கண்டறிதலிலும் அதற்கான மருத்துவத்திலும் அடைந்த மிகப்பெரிய முன்னேற்றத்தினால் இது சாத்தியமானது.

சீனாவைப் போலவே இந்தியாவும் புற்றுநோய் மருத்துவத்திற்காக முன்கூட்டியே முதலீடு செய்வதன் மூலமும், HPV போன்ற தடுக்கப்படக் கூடிய புற்றுநோய்களுக்கு தடுப்பூசி போடுவதன் மூலமும், முன்கூட்டியே புற்றுநோய் கண்டுபிடிப்பிற்கான முதலீடு செய்வதன் மூலமும் வரக்கூடிய பத்தாண்டுகளில் ஏராளமான உயிர்களை காப்பாற்ற முடியும். இந்தியாவில் புற்றுநோய் மருத்துவத்திற்கான செலவு அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், இதன் மூலம் இந்திய மக்களின் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வரிப்பணத்தையும் மிச்சப்படுத்த முடியும்.

என்னுடைய அம்மாவுக்கு மிகவும் அரிதான முதற்கட்ட கருப்பை புற்றுநோய் இருந்தது. ஆனால் இது தொடக்கத்திலேயே கண்டறியப்பட்டதால் இதற்கு மருத்துவம் பார்க்க முடிந்தது. அறுவை சிகிச்சை மற்றும் கீமோதெரப்பிக்கு பிறகு ஓராண்டாக அவர் நலமாய் உள்ளார். தனியார் மருத்துவம் பார்க்கும் அளவிற்கு எங்களுக்கு வசதி இருந்தது. ஆனால் பெரும்பாலானவர்களுக்கு இது சாத்தியமில்லாதது.

நமது சட்டைப் பையிலிருந்து பணத்தை ஆட்டையைப் போடும் அரசாங்கம், புற்று நோயைத் தடுக்கவா பணத்தைச் செலவழிக்கப் போகிறது?


தமிழாக்கம் :
சுகுமார்
நன்றி : தி வயர் 

கேள்வி பதில் : வரலாற்றில் கல்விக்கு முக்கியத்துவம் மறுக்கப்பட்டது ஏன் ?

education-Slider

கேள்வி : //உலகப் பொதுமறை என்று அழைக்கப்படும் திருக்குறளில் பிச்சை புகினும் கற்கை நன்றே என்று இருக்கிறது. ஆனால் ஒரு காலகட்டத்தில் கல்விக்கு முக்கியத்துவம் மறுக்கப்பட்டது. ஆனால் திருவள்ளுவர் ஆண்டுக்குப் பின்னரே? அது எப்படி?//

– சண்முகவேல்

ன்புள்ள சண்முகவேல்,

“கற்கை நன்றே; கற்கை நன்றே;
பிச்சை புகினும் கற்கை நன்றே”

என்ற பாடல் வரி திருக்குறளில் இல்லை. வெற்றிவேற்கை எனும் நூலில் இருக்கிறது. இதை “நறுந்தொகை” – நல்ல பாடல்களின் தொகுப்பு – என்றும் அழைக்கிறார்கள். காலம் தோராயமாக பதினொராம் நூற்றாண்டு. ஒருவன் செல்வம் இல்லாதவனாக மிகவும் ஏழ்மை நிலையை அடைந்து பிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்டாலும், அந்த நிலையிலும் கல்வி கற்க வேண்டும் என கல்வியின் முக்கியத்துவத்தை இந்த வரிகள் உணர்த்துகின்றன.

educationதிருக்குறளிலும் கல்லாமை குறித்தும், கற்பதின் அருமை பற்றியும் நிறைய குறள்கள் உள்ளன. குறளின் காலம் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் திருக்குறள் வருகிறது.

சங்க காலத்தில் இனக்குழு வாழ்க்கை முடிந்து சிற்றரசர்கள் தோன்றி சமூகம் வர்க்கங்களாய் பிரிய ஆரம்பித்தது. வர்க்க சமூகத்தின் வாழ்வியல் சிக்கல்களுக்கு நீதி புகட்டும் வகையில் சங்க கால இலக்கியங்கள் தோன்றின. அப்போது சாதி பார்ப்பனமயமாக்கப்படவில்லை என்றாலும் வேலைப் பிரிவினை என்ற அளவில் இருந்தது. அதன்படி ஆளும் வர்க்கங்களுக்கே கல்வி கற்கும் வாய்ப்பு இருந்தது. இதர பிரிவு மக்களுக்கு இல்லை.

களப்பிரர் ஆட்சிக்கு பின்னர் பல்லவர் காலம், பிற்கால சோழர் காலம் துவங்கி திருமலை நாயக்கர் காலம் வரை தமிழகத்தில் சாதிகள் வருணாசிரம வகைப்பாட்டில் பார்ப்பனமயமாக்கப்பட்டன. அப்போது பார்ப்பன, ஷத்ரிய, வைசிய சமூகத்தினருக்கு மட்டுமே கல்வி புகட்டப்பட்டது. இதர பெரும்பான்மையினரான சூத்திர, பஞ்சம மக்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. எனவே இங்கு கல்வியின் முக்கியத்துவம் என்பது யாருக்கு கற்க முடியும் என்பதோடு சேர்ந்தே இருக்கிறது.

வெள்ளையர் காலத்தில்தான் பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு கல்வி கற்கும் வாய்ப்பு திறந்து விடப்படுகிறது. அந்த வகையில் 19, 20-ம் நூற்றாண்டுகளில்தான் தமிழகத்தின் ஆகப்பெரும்பான்மையான மக்கள் முதல் தலைமுறையாக கல்வி கற்கின்றனர்.

நன்றி!

♦ ♦ ♦

(கேள்வி பதில் பகுதிக்கு நிறைய கேள்விகளை நண்பர்கள் கேட்கிறார்கள். மகிழ்ச்சி. கூடுமானவரை உடனுக்குடன் பதிலளிக்க முயல்கிறோம். சில கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு கூடுதலான நேரம் தேவைப்படுகிறது. கொஞ்சம் காத்திருங்கள்.)

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

நூல் அறிமுகம் : கீதையின் மறுபக்கம்

புராண, இதிகாசங்களை நாட்டில் வெகுவாகப் பரப்பியதன் மூலமே, மக்களின் மூளைக்கு விலங்கிட்டனர் – பண்பாட்டுப் படையெடுப்பாளர்களான ஆரியர்கள்.

பாரதம், இராமாயணம் போன்ற இதிகாசங்கள்தான் சனாதனத்தின் மூலதனம் ஆகும். வர்ணாசிரம தர்ம சமூகத்தின் குலதர்மத்தினைப் பிரச்சாரம் செய்ய கற்பனைகளைக்கூட, ‘கடவுள் அருளியது’, ‘பகவான் பகர்ந்தது’ என்று படித்த – படிக்காத இருசாரரான பாமர மக்களிடையே பரப்பி வருகின்றனர்.

அந்த வரிசையில் வேறு எந்த நூலையும் விட அதிகமான பிரச்சார வசதி பெற்று, மிகப்பெரிய அளவில் மக்களிடையே உலகம் முழுவதும் விளம்பரப்படுத்தப்பட்ட நூல் ‘பகவத்கீதை’யாகும்.

அது கற்பனைதான் என்று ஏற்றுக்கொள்ளும் மிகப்பெரிய தலைவர்கள், சிந்தனையாளர்கள்கூட, அதற்காக வேறு முறையில் வாதாடி, மக்கள் மனதில் நிலைக்க வைக்கும் தவறினை நீடித்துச் செய்து வருவது அறிவு விடுதலை அடைவதற்கும், சமத்துவ சமுதாயம் அமைவதற்கும் மிகப்பெரும் முட்டுக்கட்டையாகும்.

இந்நாட்டின் அறிஞர்கள் என்பவர்கள் கீதையில் இரண்டு சுலோகம் தெரிந்ததுபோல் காட்டிக்கொண்டால் தங்களுக்கு ‘அறிவு ஜீவி’ முத்திரை கிடைத்து, பக்திப் பரவச வேடத்தினால் பல்வேறு பயன் அடைய முடியும் என்று கருதி, அதனைக் கட்டுப்பாடாய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றனர் தொன்று தொட்டு இன்றுவரை!

…  “பைத்தியம் பிடித்தவனுக்கு மேலும் கள்ளையும் ஊற்றிவிட்டால் எப்படி இருக்கும்?” என்ற ஓர் அழகான உவமையை, தந்தை பெரியார் அவர்கள், பல கூட்டங்களில் பேசும்போது கூறியதைக் கேட்டிருக்கிறேன்.

நானும் அப்பேச்சினைக் கேட்ட மக்களைப்போல் அவ்வப்போது கைதட்டிச் சுவைத்ததுண்டு. அதற்கு முழுப் பொருள் அனுபவத்தோடு அறிந்த நிலை – உணர்ந்த நிலை – எப்போது ஏற்பட்டது என்றால், இந்தப் ‘பகவத் கீதை’யை ஆய்வுக் கண்ணோட்டத்தோடு ஆழ்ந்து படித்தபோதுதான் ஏற்பட்டது!

கிரேக்கத்து ஏதென்சில் வாழ்ந்த சாக்ரட்டீசின் சீடர் பிளாட்டோ. மாறி வந்த யுகத்தில் வாழ்ந்த தத்துவ ஞானி பிளாட்டோ. அவர் ஒரு விசித்திரமான கருத்தினை வெளியிட்டார்.

எகிப்து நாட்டு தேவ அரசர் (மக்கள் அவரை அன்று அப்படி நம்பினர்) தேமுஸ் என்பவர் கருத்துகளை எழுத்துகள் மூலம் வெளியிடும் தோத் என்பவரைப் பார்த்து, ”எதனையும் எழுதி வெளியிடும் இந்த புதிய கண்டுபிடிப்பால் கற்றறிந்தோரின் ஞானத்திற்கு ஊறு ஏற்படும். எப்படியெனில், மூளை ஏற்கெனவே அறிந்ததை மறந்துவிடக் கூடும். எதையும் வாயால் சொல்ல, காதால் கேட்டு, மூளையில் நினைவுமூலம் பத்திரப்படுத்திக் கொள்ளும் முறைக்கு அது விடை கொடுத்தனுப்பிவிடும்” என்றார்.

எனவேதான் நேருக்கு நேர் இருவர் உரையாடல் (Dialogue) முறைக்கே முன்னுரிமை அவர்கள் (சாக்ரடீஸ், பிளாட்டோ) காலத்தில் தரப்பட்டது. எழுதி, கருத்துகளைப் பரப்பும் (Writing) முறைக்கு இரண்டாவது இடமே!

எழுத்து மூலம் வேதமோ, உபநிஷத்துகளோ மற்றும் இராமாயணம், பாரதம் போன்ற இதிகாசங்களோ முதலில் உருவாக்கப்படவில்லை என்பது அறிஞர்கள் ஆய்வு, செவி வழிச் செய்தியாக – பேச்சு வழக்கில் நிலவிய பிறகுதான் அவைகள் எழுத்து உருவத்தினைப் பிற்காலத்தில் கண்டன. இடைச்செருகல், திரிபுகளுக்கு அதனால் ஏராளமான வாய்ப்பு உண்டல்லவா?

படிக்க:
நயவஞ்சகன் இராமன் – டாக்டர் அம்பேத்கர்
இந்து மதம் : ஏகாதிபத்திய சந்தையை உறுதிப்படுத்த உருவாக்கப்பட்ட ஓர் கட்டமைப்பு !

… கீதை பாரதத்தில் இடைச்செருகல் என்பது பல அறிஞர்களின் முடிவு என்றாலும், செவி வழியாக மக்கள் கேட்டு, பாரம்பரியமாகச் சொல்லி பரப்பி வந்த கதைகளையே பிறகு எழுதியதாகக் கூறி, எழுத்துமுறை தோன்றிய பின் வெளியிட்டனர். அப்படி வெளியிடுகையில், பழைய காலப்பேச்சு வழக்கு – உரையாடல் போலவும் அமைத்தனர்.

கீதையையும் அதே பாணியைப் பின்பற்றி அர்ச்சுனன் கேள்விக்குக் கண்ணன் பதில் கூறியதாகவே உரையாடல் முறையைப் பின்பற்றி – எழுத்து வடிவங்களைக் கொண்டு பின் பாரதத்தில் சேர்த்திருக்கக் கூடும்!

புத்தரின் பிரச்சாரத்தினால் மூச்சுத் திணறி அழியும் நிலையில் இருந்த வர்ணாசிரமவாதிகள், இப்படி ஒரு முயற்சியை அந்தக் காலகட்டத்தில் தான் பயன்படுத்தியிருக்கக்கூடும்.

… இதன்மூலம் நாம் புரிந்து கொள்ள வேண்டிய செய்தி, எழுத்து முறை மூலம் கருத்துப் பரப்புதல் ஏற்பட்ட கால கட்டத்தில்தான் கீதை பிறந்திருக்க முடியும் என்பதேயாகும்.

இந்த நூலை ஒரு புதினத்தைப் படிப்பதுபோல் படித்து முடித்து விட எண்ணாதீர்கள். ஒரு புதுமையை ஆய்வது போன்று, பொறுத்து, அசை போட்டுப் படித்துச் செரிமானம் செய்ய முயற்சியுங்கள்! (நூலின் முன்னுரையிலிருந்து…)

கீதை, மிகப்பெரிய ஒரு ராஜதந்திரியை அடையாளம் காட்டி உலகுக்கு தந்த நூல் என்று சில ஆய்வாளர்கள் – கீதை வியாபாரிகள் கூறுகிறார்களே, அக்கூற்று எவ்வளவு தூரம் உண்மையானது என்பதை நடுநிலைக் கண்ணோட்டத்தோடு துல்லியமாக எடைபோட்டுப் பார்க்க வேண்டாமா?

அதையும் இந்த அத்தியாயத்தில் ஆராய்வோம்.

வங்காளத்தின் பிரபல நாவலாசிரியரும், எழுத்தாளருமான பங்கிம் சந்திர சட்டர்ஜி (இவர் ஒரு வங்காளப் பார்ப்பனர்) தேச பக்தியால் உந்தப்பட்ட எழுத்தாளர் என்று நாட்டோருக்கு அறிமுகம் ஆனவர். வாழ்வின் துவக்கத்தில் ஒரு பகுத்தறிவாளர் என்று தன்னைச் சொல்லிக்கொண்டு பிறகு மதவாதக் கருத்துக்களுக்கு அவரது பிற்கால வாழ்க்கையில் சாய்ந்தவர் இவர்.

இவருக்கு கிருஷ்ணனின் தெய்வாம்சத்தில் அபார நம்பிக்கை! இவர் ‘கிருஷ்ண சரிதா’ என்று வங்காள மொழியில் எழுதிய ஒரு நூலில்- இது ஒரு கடவுள் அவதாரத்தின் வரலாறு அல்ல; ஒரு ராஜதந்திரியின் கதை என்று கூறியுள்ளார்!

தேச பக்தர்கள் என்ற பார்ப்பனர்கள், தேசபக்தி பெயரில் ஆரிய மதவாத பக்தியைப் பரப்ப கிருஷ்ணனை – சீதையை மிகச் சிறந்த கருவியாக  – அரிய பெரிய வாய்ப்பாகவே கருதினார்கள்; பயன்படுத்தினார்கள். பாலகங்காதர  திலகர் ‘கீதா ரகசியம்’ என்று எழுதியதும் இந்த அடிப்படையில்தான்!

முன்னே பார்த்து அடியெடுத்து வைத்து நாட்டை அழைத்துச் செல்வதற்குப் பதில், இந்த இதிகாசங்களைக் காட்டியதனால் பின்னே திரும்பிப் பிற்போக்குத்தனத்தினைத்தான் அவர்கள் தெரிந்தோ, தெரியாமலோ, விரும்பியோ, விரும்பாமலோ வளர்த்தார்கள் என்றுகூடப் பொத்தாம் பொதுவில் கூற முடியாதபடி , தெரிந்தே, வேண்டுமென்று இதனைச் செய்தனர் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

இராமனை, கிருஷ்ணனை வைத்து நவீன இந்தியாவை, புதிய தேசிய எழுச்சியை உருவாக்கிவிடலாம் என்ற ஒரு தப்புக்கணக்கினைப் போட்டுச் செயலாற்ற முனைந்தனர்! காந்தியாரின் இராமராஜ்யமும், பாரதிய ஜனதாவின் இராம இராஜ்யமும் – இராமஜென்மபூமி – அனுமன் வழிபாடும் இவைகள் எல்லாம் இந்த அடிப்படையில்தான்!

நீங்கள் கூறும் இராமன் யார் என்று காந்தியாரிடம் கேட்ட போது, எனது இராமன், தசரத குமாரன் இராமன் அல்ல; கடவுள் இராமன் என்றார்! இது அவரது குழப்பத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஒரு கூற்றாகும். ( நூலிலிருந்து பக். 166-167)

கிருஷ்ணனுக்கு அடுத்தபடியாக இரண்டாவதாக முக்கியத்துவம் பெற்ற பலராமன், கிருஷ்ணனின் சொந்தப் பிள்ளைகளாக பிரதியும்னா (pradyumna), சம்பா ஆகிய இருவரும் இரண்டு அணிகளிலும் சேராமல் நடுநிலை வகித்தனர். சொந்தப் பிள்ளைகளையோ அல்லது தனக்கு அடுத்து துவாரகையில் முக்கியத்துவம் பெற்ற இரண்டாவது தலைமை பலராமனையோக் கூடத் தன்வசம் இழுக்க இயலாதவன் எப்படி எல்லோரையும் ஒன்றாக்கிய மிகப்பெரிய ராஜதந்திரியாவார்? (நூலிலிருந்து பக்.171-172)

… கீதையிலுள்ள முரண்பாடுகள் ஒன்றா இரண்டா? கீதையின் தொடக்க அத்தியாயங்களில் கிருஷ்ணன் அதிகம் வலியுறுத்திக் கூறுவது கர்மத்தைப்பற்றித்தான். மனிதன் எதையும் சீர்தூக்கிப் பார்த்துச் சிந்தித்துத் தானாகவே ஒரு முடிவுக்கு வந்து தன்னுடைய சொந்தக் கருத்தின் வழிச் செயல்படுவதே கர்மயோகம் எனப்படும், ஞானயோகத்தைவிட இந்தக் கர்ம யோகமே மிக உயர்ந்ததாகச் சொல்லப்படுகிறது.

இப்படிக் கர்மயோகத்தை வலியுறுத்தும் கண்ணபிரான் பின்னால் பதினொன்றாவது அத்தியாயம் 32-ஆவது சுலோகத்தில் “மக்களையெல்லாம் அழிப்பவன் நானே! நான் தான் மிகப்பெரிய காலனாவேன். இதோ எதிரில் இருப்பவர்களையெல்லாம் அழிப்பதற்காகவே வந்துள்ளேன். நீ இல்லையென்றாலும், நீ போரிடாவிட்டாலும் எதிர்ப்படையிலிருக்கும் அத்தனை வீரர்களும் அழிவது திண்ணம், எனவே அர்ச்சுனா எழுந்திரு! வெற்றிகொள்! பகைவரை வென்று பெரிய நாட்டினை அனு பவி! முன்னமேயே நான் அவர்களைக் கொன்றுவிட்டேன். எனவே அர்ச்சுனா! அவர்களை அழித்தவன் என்று பெயரளவில் காரியகர்த்தாவாக முன்னே இருக்க நீ வா!

துரோணர், பீஷ்மர், ஜயத்ரதன், கர்ணன், பிற வீரர்கள் முதலியோர் எப்போதோ என்னால் கொல்லப்பட்டு விட்டார்கள், நீ இப்போது அவர்களை அழிப்பாயாக அஞ்சாதே! என்று கிருஷ்ணன் கூறுகிறான்.

33-வது சுலோகத்தில் தங்கள் சொந்தச் செயல்களாலேயே, தீயவர்கள் அழிகின்றனர். அவர்களை அழித்தவன் என்று ஒருவனைக் கூறுவது ஏதோ பெயரளவுக்குத்தான். எனவே கொன்றவனைப் பழிசாராது; அவனைப் பழிப்பதும் தவறென்றும் கூறப்படுள்ளது.

பிறகு 18-வது அத்தியாயம் 59-வது சுலோகத்தில் ”நான் என்ற உனது நினைப்பு உன்னைப் போரிடக் கூடாது என்று தடுக்கிறது. ஆனால் இயற்கை (பிரகிருதி) உன்னைப் போரிடுவதற்குக் கட்டாயப்படுத்தும். அஞ்ஞானத்தினால் நீ எதைச் செய்யக் கூடாதென்று கருதுகிறாயோ அதைச் செய்தே தீருவாய்! அது உனது கடமையாகும், அதிலிருந்து தப்ப வழியேயில்லை. நீ எப்படி நடக்க வேண்டுமென்பது முன்பே முடிவு செய்யப்பட்ட ஒன்றாகும். அர்ச்சுனா! ஒவ்வொருவர் மனதிலும் இருக்கும் ஈசன் மக்களைத் தனது மாயையினால் தன்னிச்சைப்படி இயங்கச் செய்கிறான்” என்கின்றான்.

படிக்க:
சாதி பற்றிய காந்தியின் வாதங்கள் பைத்தியக்காரத்தனமானவை | அம்பேத்கர்
பகவத் கீதையை தடை செய் !

மூன்றாவது அத்தியாயம் 33-வது சுலோகத்திலும் பின்வருமாறு சொல்லப்படுகிறது ”ஆத்மா தனித்து இயங்கினாலுங்கூட, நாம் உலக விவகாரங்களைப் பார்க்கும்போது, நம்முடைய செயல்கள், மிகத் தொன்மையான காலத்திலிருந்தே நடைபெறுகின்றன என்பதையும் ஆத்மா இவைகளை எவ்விதத்திலும் கட்டுப்படுத்த முடியாதென்பதையும் அறிவோம். படைக்கப்பட்ட எந்த உயிரும் எவ்வளவு உறுதியோடிருப்பினும் தங்களிச்சைப்படிச் செயல்பட முடியாது. இவ்வுலகில் நடக்கும் எல்லாச் செயல்களும் இறைவன் எப்படி விரும்புகிறானோ அப்படியே நடைபெறுகின்றன. அவனின்றி அணுவும், அசையாது.”

கீதையிலே உண்மைக்கு இடமில்லை

மேலே சொன்ன கருத்துக்கள் உண்மையானால் கர்மயோகம் என்ற பேச்சுக்கே இடமில்லையே! மனிதன் அதன்படி நடக்க வேண்டுமென்ற பிரச்னையே எழாதே! கவுரவர்களுடன் போரிட்டு அவர்களைக் கொல்வதற்கு இசையும்படிச் செய்வதற் காக அர்ச்சுனனைக் கிருஷ்ணன் வேண்டிக் கொள்ள வேண்டிய அவசியமே இருந்திருக்காதே! எல்லாம் இறைவனால் முன்பே முடிவு செய்யப்பட்டபடிதான் நடக்குமென்றால் கர்மயோகம் என்ற கோட்பாடு எப்படி உண்மையாகும்? கர்மயோகமும் இறைவன் விதித்தபடிதான் நடக்குமென்ற கருத்தும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாகவல்லவா இருக்கின்றன? அப்படியானால் இவற்றிலே எதுதான் உண்மை ? ஒருக்கால் கீதையிலே உண்மைக்கே இடமில்லையோ! (நூலிலிருந்து பக்.211-212)

நூல் : கீதையின் மறுபக்கம்
ஆசிரியர் : கி.வீரமணி

வெளியீடு : திராவிடர் கழக வெளியீடு,
50, ஈ.வெ.கி. சம்பத் சாலை, சென்னை – 600 007.
தொலைபேசி எண் : 044 – 2661 8161; 8428 455 455

பக்கங்கள்: 384
விலை: ரூ 150.00 / ரூ 300.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : panuval | periyarbooks

குழந்தைகள் தமது திறமைகளால் உலகை வியப்பில் ஆழ்த்துவார்கள் !

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 4 | பாகம் – 04

குழந்தை – எல்லையற்ற திறமையின் மாடல்

ன்று ஒரு அதிசயம் நடக்கப் போகிறது. ஒருவேளை “அதிசயம்” என்பது மிகைப்படுத்தி சொல்லப்பட்டதோ? அதிசயங்கள் சாதாரணமாக நடப்பதில்லை, அதுவும் கல்வி போதிப்பதிலும் குழந்தை வளர்ப்பிலும் இது நடப்பதில்லையோ! ஆனால் 84-வது பள்ளி நாளாகிய இன்று நடக்கப் போவதை வேறு எப்படிச் சொல்வது?

இன்று என்ன நடக்கப் போகிறது தெரியுமா? “எனக்கு எது மகிழ்ச்சி தருகிறது? எது வருத்தமளிக்கிறது?” எனும் தலைப்பில் எழுதும்படி அவர்களுக்குச் சொல்லப் போகிறேன். அவர்கள் தமது வாழ்வின் முதல் கட்டுரையை எழுதுவார்கள். என் வகுப்புக் குழந்தைகளில் பலர் எல்லா எழுத்துகளையும் படித்து முடிப்பதற்கு நீண்ட நாட்களுக்கு முன்னரே கவிதைகள், கதைகளைப் படிக்க ஆரம்பித்ததும் தங்கள் மனதில் தோன்றியதை எழுதத் துவங்கியதும் எனக்குத் தெரியுமென்ற போதிலும் வியப்புடனும் சந்தோஷத்துடனும்தான் இவர்களின் முதல் கட்டுரைகளைப் படிப்பேன்.

யாருக்கெல்லாம் இக்கட்டுரைகளைக் காண்பிப்பேனோ அவர்களில் பெரும்பாலோர் ஆறு வயதுக் குழந்தைகளால் இப்படி எழுத முடியாது என்பார்கள். இந்த வயதுக் குழந்தைகளிடம் இப்படிப்பட்ட திறமைகள் இருப்பதை நம்ப மாட்டார்கள், இவற்றை எழுதியது குழந்தைகள்தானா என்று சந்தேகப்படுவார்கள்.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன் நான் முதன்முதலில் இந்த அதிசயத்தைச் சந்தித்த போது இப்படி நடந்தது. அப்போது நான் மகிழ்ச்சியோடு, உணர்ச்சி வசப்பட்டு எனது அன்றைய குழந்தைகள் எழுதியதைக் காட்ட விஞ்ஞானிகளிடம் ஓடினேன் (அக்குழந்தைகள் இன்று வளர்ந்து பெரியவர்களாகிப் படிக்கின்றனர், உழைக்கின்றனர்).

“இன்று இவர்கள் என்ன எழுதியிருக்கின்றார்கள் பார்த்தீர்களா!”

குழந்தைகளின் இந்த முதல் கட்டுரைகளைப் படிக்கத் தொடங்கினேன்.

திடீரென யாரோ என்னைத் தடுத்து நிறுத்தினார்.

“போதும்!” என்று எரிச்சலோடு யாரோ சொன்னார்கள்.

வயது முதிர்ந்த, செல்வாக்குள்ள, எல்லோர் மரியாதைக்கும் உரிய ஒரு பழைய ஆசிரியை சொல்கிறார்:

“என் அன்பு சக ஆசிரியர்களே! ஏன் ஒருவரையொருவர் நாம் ஏமாற்றிக் கொள்ள வேண்டும்! அதுவும் ஆசிரியர் ஆலோசனைக் கவுன்சில் கூட்டத்தில்! ஆறு வயதுக் குழந்தைகள் எப்போதாவது இப்படி எழுதியிருக்கின்றார்களா!”

மற்ற விஞ்ஞானிகள் ஏளனமாக புன்னகைத்தபடி, அந்த முதிய ஆசிரியைச் சொல்வதை ஒப்புக் கொள்ளும் முகமாகத் தலையை ஆட்டியபடி ஏதோ நான் அவர்களை ஏமாற்றுவது போல் என்னைப் பார்த்தனர். “இது எப்படி நடந்தது? விளக்கிச் சொல்” என்று யாருமே என்னைக் கேட்கவில்லை.

படிக்க:
பெஹ்லு கானை கொன்றவர்களை விடுவித்தது நீதிமன்றம் !
மூடப்படும் அரசுப் பள்ளிகள் – யார் காரணம் ?

ஆம், அறுபதாம் ஆண்டுகளின் மத்தியில் விஞ்ஞானிகளிடையே இப்படி நடந்தது! “குழந்தையால் இதைக் கிரகிக்க முடியாது…”

“குழந்தைகளுடைய வயதுரீதியான சிறப்பியல்புகள்….. மட்டுப்பாடுகள்…”

“குழந்தைகளுக்கு இது புரியாது. இதை அவர்களால் கிரகிக்க முடியாது…”

சில விஞ்ஞானிகள், கல்வி முறையியலர்கள், ஆசிரியர்களிடமிருந்து நான் அடிக்கடி இப்படிப்பட்ட கருத்துகளைக் கேட்கிறேன்.

நிச்சயமாக, குழந்தைகளால் எல்லாவற்றையும் கிரகிக்கவும் புரிந்து கொள்ளவும் செய்யவும் முடியாது.

உதாரணமாக, பிறந்தவுடன் எழுந்து நின்று பேச அவர்களால் முடியாது. அவர்களால் தாமாகவே உணவு சாப்பிட்டு அம்மாவை இந்த வேலையிலிருந்து விடுவிக்க முடியாது. தேவையான திறமைகள் வரும் வரை விஞ்ஞானங்களைப் பயில முடியாது. தேவையான அறிவும் அனுபவமும் கிட்டும்வரை நகரங்கள், பாலங்கள், தொழிற்சாலைகளைக் கட்ட முடியாது, சாலைகளைப் போட முடியாது, விவசாயம் செய்ய முடியாது. சமூக அனுபவம் கிட்டும் வரை நம்முடைய பல அக்கறைகளைப் புரிந்து கொள்ள இயலாது.

குழந்தைகளின் வயது, அனுபவமின்மையால் வரும் மட்டுப்பாடுகள் உண்மையிலேயே நிறைய உள்ளன. ஆனால் மேற்கூறிய படி குழந்தைகளால் முடியாது என்று ஆணித்தரமாகச் சொல்வதில் குழந்தைகளைப் பற்றிய பழமையில் ஊறிப்போன கருத்து உள்ளது என்று எனக்குத் தோன்றுகிறது. “முடியாது.” ஏன்? நீண்டகாலமாக இப்படி இருந்தது, நேற்று இப்படி இருந்தது, அதனால் இன்றும் நாளையும் நாளை மறுநாளும் இப்படித்தான் இருக்க வேண்டுமா? அப்படியெனில் 21-வது நூற்றாண்டுக் குழந்தைகளின் சிந்தனைகளிலும் இதே வயதுக் கட்டுப்பாடுகள்தான் வெளிப்படுமா? அப்படியென்றால் ஆசிரியரியல், கல்வி போதிக்கும் முறை, ஆசிரியரின் படைப்பாற்றல் ஆகியவற்றிற்கு என்ன விலை?

“குழந்தைகளால் முடியாது” என்று சொல்லும்போது இதில் குழந்தைகளின் பாதுகாப்பின்மையையும் பலவீனத்தையும் காப்பாற்ற வேண்டுமே என்பதை விட இவர்களைத் தமது உண்மையான திறமைகளிலிருந்து வேலியிட்டுத் தடுக்க வேண்டும் எனும் எண்ணம்தான் மிகுந்திருப்பதாக எனக்குப்படுகிறது. அனேகமாக “குழந்தைகளால் முடியாது” எனும் கூற்றில் குழந்தைகளின் வளரும் திறமைகளின் மட்டுப்பாட்டை விட அவர்களைப் பற்றிய நமது கருத்துகளின் மட்டுப்பாடே அடங்கியிருப்பதாக நான் எண்ணுகிறேன்.

நமது 20-ம் நூற்றாண்டின் சிறப்பியல்புகள் யாவை? பல்வேறு விஞ்ஞான சாதனைகள் ஒரு புறமிருக்க, குழந்தைகளுடைய மனநிலையின் கிட்டத்தட்ட எல்லையற்ற திறமைகளும் உள்ளாற்றல்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத் தக்கவையாகும். 30 ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட இன்று ஆசிரியரின் வசம் பெரும் எதிர்கால வாய்ப்புள்ள, ஆழ்ந்த வளர்ச்சிப் போக்குகள் உள்ளன. குழந்தைகளின் சக்தி (நல்ல ஆக்கபூர்வமான கல்வி, குழந்தை வளர்ப்புப் போக்கில் இது வளர்ந்து வலுப்பெறும்) மீதுள்ள நம்பிக்கை நவீன சோவியத் ஆசிரியரின் பிரதான அம்சமாகும். ஒரு சில வயது மட்டுப்பாடுகள் பற்றிய பழைய கருத்துகள் நம் கண்களிலேயே தகர்ந்து விழுகின்றன. எதிர்காலத்தில் குழந்தைகள் தமது திறமைகளால் உலகைப் பன்முறை வியப்பில் ஆழ்த்துவார்கள், குழந்தை மனதைப் பற்றிய விஞ்ஞானிகள், ஆசிரியர்களின் கருத்துகளைப் பன்முறை தகர்ப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நல்ல, ஆக்கபூர்வமான ஆசிரியரின் கவனத்தின் கீழ் இருந்தால் குழந்தைகளின் திறமைகளுக்கு எல்லைகளே கிடையாது. எனவே கீழ்வரும் “முதுமொழியை” நான் பின்பற்றுகிறேன், இது சிறு குழந்தைகளின் மனதையும் இதயத்தையும் நாடிச் செல்லும் போது எனக்குக் கைகொடுக்கிறது:

குழந்தைகளின் ஆழ்ந்த உள்ளாற்றல்களை வெளிப்படுத்தி, வளர்க்கவல்ல கல்வி போதிக்கும் முறை எவ்வளவுக்கெவ்வளவு செயல்முனைப்போடு புதுப்பிக்கப்படுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அது மனிதாபிமானம் மிக்கதாய், எதிர்கால நம்பிக்கையுள்ளதாய், மகிழ்ச்சிகரமானதாய் மாறும்.

இன்றைய அதிசயத்தின் வேர் இந்த “முதுமொழியில்” தான் உள்ளது.

நான் இந்தக் கட்டுரைகளை யாருக்கெல்லாம் காட்டுகிறேனோ அவர்கள் இவற்றை நம்பாமல் இருக்கட்டும், இவற்றை அப்பா, அம்மாக்கள் எழுதினார்கள் என்று கூறட்டும். இதனால் என் குழந்தைகளின் வெற்றி மங்காது. இவர்களுடைய திறமைகளின் மீதும், புதிய மனிதனை உருவாக்குவதில் ஆசிரியரியலின் வாய்ப்புகள் மீதும் எனக்குள்ள உறுதி இருமடங்கு அதிகமாகும்.

எனது சின்னஞ்சிறு மாணவமணிகள் முதன்முதலாக வாழ்க்கையில் தமது உணர்வுகளின், இன்ப துன்பங்களின் ஆழத்திற்குள், சென்று, “நான்” என்பதினுள் மூழ்கும் அந்த நிமிடத்தின் மகிழ்ச்சியையும் உணர்ச்சிப் பெருக்கையும் நான் உணருகிறேன். ஒரு வேளை சாஷா அல்லது வாசிக்கோ பதினைந்து ஆண்டுகளுக்கு முன் அதே வயதிலிருந்த நூக்ரீ எழுதியதைப் போல எழுதலாம்: ”பலவற்றைக் கண்டு மகிழ்கிறேன். உதாரணமாக, நேற்று நானும் அப்பாவும் பாட்டி வீட்டிற்குச் சென்றிருந்த போது அவருடைய அலமாரியை ரிப்பேர் செய்து தந்தோம். ‘உங்களுடன் இருக்கும்போது எவ்வளவு நன்றாக உள்ளது’ என்றார் பாட்டி. எனது யோசனையற்ற நடவடிக்கைகளால் மற்றவர்களுக்கு வருத்த மேற்படச் செய்யும் போதும் அல்லது எதற்கு என்று எனக்குத் தெரியாதபோது என்னைத் தண்டிக்கையிலும் வருத்தப்படுகிறேன்…”

படிக்க:
உங்களுக்குத் தேவை அறிவியல்பூர்வமான கல்வியா – அய்யர்களை குஷிப்படுத்தும் கல்வியா ?
செயற்கை நுண்ணறிவு : அறிவியல் உலகில் அறம் சார்ந்த கேள்விகள் !

முதன்முதலாக தன்னைத்தானே நன்கு உணர்வதை நான் விண்வெளிவலவர் முதன்முதலாக திறந்த விண்வெளியில் வருவதுடன் ஒப்பிடுகிறேன். தனது உணர்வுகள், எண்ணங்கள், உறவுகளை எழுத்து வடிவில் வடிப்பதன் மூலம் குழந்தை தன் மனநிலையை அறிந்துணருமாறு செய்ய நான் மேன்மேலும் பாடுபடுவேன். எனது சின்னஞ்சிறு மாணவமணிகள் தம் நடவடிக்கைகள், உற்றார் உறவினர் மீதான நேசம், தம் எதிர்காலம் ஆகியவற்றைப் பற்றி, மக்களுக்கு எப்படி மகிழ்ச்சியை வழங்குவது, தீமையை எதிர்த்து எப்படிப் போராடுவது என்பதைப் பற்றி மேன்மேலும் அதிகம் சிந்திப்பார்கள்.

மற்றவர்கள் மத்தியில் தன்னைத் தானே பார்த்துக் கொள்ளக் குழந்தைக்குச் சொல்லித் தருவது, சுயவளர்ப்பிற்கு, சுயகல்விக்கு, சுயமாகத் தன் நிலையை முடிவு செய்வதற்குப் பாடுபடுவது-எழுதுவதன் மூலம் சிந்திக்கும் திறமையை, தன்னுடன் தானே உரையாடும் திறமையைக் குழந்தைகளிடம் வளர்க்கும்போது நான் முன்வைக்கும் லட்சியம் இதுதான். எழுத்துகள்-மனதின் மெழுகுவர்த்தி. தன் ஆன்மிக வாழ்வுக் கிடங்கினுள் குழந்தை அடியெடுத்து வைக்கும்போது இதை எப்படிப் பயன்படுத்துவதென சொல்லித் தரவேண்டும். எனது பணியில் இது குழந்தைகள் மத்தியில் தனிப்பட்ட குண நலன்களை வளர்க்கும் முறையாக, அவர்கள் தமது ஆன்மிக உலகைத் தாமே கண்டறிய உதவும் முறையாக மாறும்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

இன்சுலின் எனும் அரு மருந்து ! | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

என்னை பாதித்த ஒரு புகைப்படம் :

diabetes

முதல் படத்தில் நாம் பார்ப்பது டைப் ஒன்று டயாபடிஸ் எனும் கொடிய உயிர் குடிக்கும் நோயால் பாதிக்கப்பட்ட தனது இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருந்த ஒரு சிறுவன்

இரண்டாவது படத்தில் அவனது உயிர்காக்கும் அந்த மருந்து கிடைத்தவுடன் அவன் மீண்டும் பெற்ற வாழ்க்கை

ஆம்… அந்த உயிர்காக்கும் அமிர்தம் இன்சுலின் தான். நாள்தோறும் உலகின் பல கோடி மக்களின் உயிரைக்காப்பாற்றி வரும் இன்சுலின் பிறந்த கதை விந்தையானது.

Dr. பாண்டிங் எனும் அறுவை சிகிச்சை நிபுணர், அறிவியல் ஆராய்ச்சியில் பண்டிதம் கிடையாது. கார்போஹைட்ரேட் என்றால் பெரிதாக தெரியாது. அவர் ஒரு அறிவியல் ஆராய்ச்சியை படிக்கிறார்.

“கணையம் வெட்டி எடுக்கப்பட்ட நாய்களில் நீரிழிவு ஏற்படுவது குறித்த ஆராய்ச்சி கட்டுரை அது..” கணையம் முழுவதும் நீக்கப்பட்ட நாய்களில் நீரிழிவு நோய் ஏற்பட்டது, அதுவே கணையத்தில் இருந்து வரும் குழாயை (pancreatic duct) மட்டும் அடைத்தால் நீரிழிவு ஏற்படவில்லை.

படிக்க:
டியர் மிடில்கிளாஸ், மூழ்கும் கப்பலில் பாதுகாப்பான இடம் எதுவும் கிடையாது !
♦ தற்கொலை தேசமா நம் இந்தியா ? | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

இதைப்படித்ததும் அவருக்கு ஒரு யோசனை வருகிறது, அந்த ஒரு யோசனைதான் பலரது வாழ்க்கையில் விளக்கேற்ற இருக்கிறது என்பது அவருக்கு அப்போது தெரியாது.

நாயின் கணையத்தில் இருந்து குழாயை அடைத்து விட்டால் கணையம் முழுவதுமாய் இறந்து விடுகிறது. இருப்பினும் டயாபடிஸில் இருந்து தடுக்கும் ஏதோ ஒன்றை அந்த நாயின் மீதி இருக்கும் கணையம் சுரக்கிறது என்று அறிந்தார்.

banting and best
மருத்துவர் பாண்டிங் (கண்ணாடி அணிந்திருப்பவர்) மற்றும் பெஸ்ட்.

இந்த அறிவியல் ஆய்வுக்காக டொரண்ட்டோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த மெக்லியாய்ட் துணையை நாடுகிறார். அவரும் தனது ஆய்வகத்தில் ஒரு பகுதியையும், துணைக்கு Dr. பெஸ்ட் எனும் மருத்துவரையும் தருகிறார்.

பல நாள் ஆய்வுக்கு பிறகு நாயின் மிச்ச கணையத்தின் Islet of langerhans எனும் பகுதியில் இருந்து அந்த திரவத்தை எடுத்தனர். அதை கணையம் முழுவதும் நீக்கப்பட்டு நீரிழிவு உண்டாக்கப்பட்ட நாய்க்கு ஊசியாக செலுத்தினர்.

அந்த நாய்க்கு உடனடியாக ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவுகள் குறைவதை கண்டனர். பின்பு அந்த திரவத்தை தூய்மை படுத்தி மனிதர்களுக்கு பயன்படுத்தி வெற்றி கண்டனர்.

அந்த உயிர் காக்கும் திரவம் தான் “இன்சுலின்” இந்த கண்டுபிடிப்புக்காக 1923-க்கான நோபல் பரிசு Dr. பாண்டிங் மற்றும் Dr. மெக்லியாய்ட் இருவருக்கும் வழங்கப்பட்டது.

இன்சுலின் கண்டறிந்து பாண்டிங் அதற்கான காப்புரிமையை மக்கள் அனைவரும் எளிதாக பெறுவதற்காக இலவசமாக அளித்தார். வரலாற்றில் நிலைத்தார்…

மீண்டும் ஒரு முறை அந்த புகைப்படத்தை பாருங்கள்.. ஒரு மனிதனின் சுயநலமின்மை எப்படி உலகை மாற்ற முடியும் என்று புரியும்.

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

அம்பேத்கர் சிலை உடைப்பு : குடந்தை கல்லூரி மாணவர்கள் போராட்டம் !

0

வேதாரண்யத்தில் வெட்டரிவாள், சுத்தியலுடன் அம்பேத்கர் சிலையை ஆதிக்க சாதிவெறி கும்பல் சிதைத்ததைக் கண்டித்து குடந்தை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் மற்றும் குடந்தை சங்கரா கலைக்கல்லூரி மாணவர்களும் ஆகஸ்ட் 28, 29 ஆகிய தேதிகளில் போராட்டம் நடத்தினர்.

வேதாரண்யம் சிலை உடைப்பின்போது வேடிக்கைப் பார்த்த போலீசார், சாதிய வன்மத்தோடு திட்டமிட்ட வகையில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலைக் கண்டித்து ஜனநாயக சக்திகள் குரல் கொடுப்பதைக்கூட சகிக்க முடியாமல் ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி மறுத்து வருகின்றனர். தமிழகம் சாதிவெறியர்களின் கூடாரமாவதை அனுமதிக்க மாட்டோம் என்ற சூளுரையோடு தடையை மீறி தன்னெழுச்சியான போராட்டங்கள் பலவும் நடைபெற்று வருகின்றன.

கடலூர் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி, மதுரை சட்டக்கல்லூரி உள்ளிட்ட இடங்களில் மாணவர்கள் கண்டன போராட்டங்களை நடத்தியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி மற்றும் சங்கரா கலைக் கல்லூரி மாணவர்கள் கடந்த ஆக-27, 28 ஆகிய தேதிகளில் வகுப்புப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி நுழைவாயில் அருகே திரண்ட மாணவர்கள் அம்பேத்கர் சிலையை உடைத்த பொறுக்கிகளை கைது செய்ய கோரியும், சாதிவெறிக்கும்பலுக்குத் துணைபோகும் போலீசாரைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.

இசுலாமியர்களை இரண்டாந்தர குடிமக்களாகக் கருதி கடப்பாறையும் கையுமாக சென்று பாபர் மசூதியை இடித்துத்தள்ளிய சங்பரிவார் கும்பலுக்கும், வேதாரண்யத்தில் சுத்தியலோடு சென்று அம்பேத்கர் சிலையை சிதைத்ததோடு, அதை விசிலடித்து ரசித்து கொண்டாடிய சாதிவெறிக்கும்பலுக்கும் பெரிய வேறுபாடு ஏதும் இருக்கிறதா என்ன?

 வினவு செய்தியாளர்.

தமிழகத்தை நாசமாக்காதே ! ஆகஸ்ட் 30 விழுப்புரம் கருத்தரங்கம் !

அணுக்கழிவு – ஹைட்ரோ கார்பன் – எட்டுவழிச்சாலை :

தமிழகத்தை நாசமாக்காதே !

கருத்தரங்கம்
நாள் : ஆகஸ்டு – 30, வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 4.30 மணி
இடம்: கலைஞர் அறிவாலயம், விழுப்புரம்

உரையாற்றுவோர்:

தோழர் இளங்கீரன்,
தலைவர்,
காவிரி டெல்டா விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு,
சிதம்பரம்.

தோழர் தமிழ்குமரன்,
வழக்கறிஞர், சங்கராபுரம்.

தோழர் ரவி கார்த்திகேயன்,
ஒருங்கிணைப்பாளர், மருதம்,
விழுப்புரம்.

தோழர் ஞானவேல்,
அமைப்பாளர்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
விழுப்புரம்.

சிறப்புரை :

வழக்கறிஞர் தோழர் ராஜூ,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.

தோழர் அய்யநாதன்,
பத்திரிகையாளர், சென்னை.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
விழுப்புரம் மண்டலம்,
தொடர்புக்கு : 94865 97801


இதையும் பாருங்க :

பசுமை எங்கும் அழிகிறதே ! இனி பாலைவனமோ தமிழகமே | Kovan Song