Sunday, November 9, 2025
முகப்பு பதிவு பக்கம் 350

மே – 22 தியாகிகளுக்காக கூடி அழ கூட உரிமையில்லை ! தொடரும் ஸ்டெர்லைட்  அடக்குமுறை !

அச்சுறுத்தும் போலீசு, தொடரும் ஸ்டெர்லைட்  அடக்குமுறை ! மே – 22 தியாகிகளுக்காக கூடி அழ கூட உரிமையில்லை !

டந்த ஓராண்டு காலமாக  ஒரு உலகளாவிய கார்ப்பரேட் நிறுவனத்தை  இயங்காமல் தடுத்து நிறுத்த முடியுமா? என பலரும் கேள்வி எழுப்பிய இடத்தில் தங்களின் வீரம் செரிந்த போராட்டத்தினால் ஸ்டெர்லைட்டை இயங்காமல் இன்று வரையிலும் தடுத்து   நிறுத்தியுள்ளனர் தூத்துக்குடி மக்கள்.

கடந்த 2018 மே 22-க்குப் பிறகு தூத்துக்குடி என்பது ஸ்டெர்லைட்டுக்கு எதிரான கருத்துக்களை யார் பேசினாலும், அவர்கள் காவல்துறையின் அடக்குமுறையைச் சந்தித்தாக வேண்டும் என்ற எழுதப்படாதச் சட்டம் தூத்துக்குடியில் இன்று வரை அமலில் உள்ளது.

ஒவ்வொரு நாளும் காவல்துறையின் அச்சுறுத்தலும், பொய்வழக்கும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. மே 22-ல் நிலம், நீர், காற்றை நஞ்சாக்கும் நாசகார ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என போராடியவர்களில் 15 அப்பாவி மக்களை ஸ்டெர்லைட் –  கைக்கூலியான காவல்துறை சுட்டு வீழ்த்தியது.

இந்நிலையில் மண்ணையும், மக்களையும் பாதுகாக்க தங்களின் இன்னுயிரை ஈந்த தியாகிகளுக்கு நினைவஞ்சலி செலுத்த தூத்துக்குடி மக்கள் சார்பாக, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கான வேலைகளை முன்னெடுத்து செய்துகொண்டிருந்தது.

படிக்க:
மே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகள் நினைவை நெஞ்சிலேந்துவோம் ! தூத்துக்குடி மக்கள் அறைகூவல் !
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத் தியாகிகள் முதலாமாண்டு நினைவேந்தல்

அதிலிருந்து ஒருபக்கம் ஸ்டெர்லைட்டிற்கு ஆதரவாக உள்ளவர்களுக்கு பணம் வாரியிறைக்கப்படுகிறது. மறுபக்கம் கூட்டமைப்பில் உள்ள முன்னணியாளர்கள், மக்கள் என அனைத்து தரப்பினரையும் ஸ்டெர்லைட் நிர்வாகம் தனது ஏவல்படையான போலீசை வைத்து பொய் வழக்கு போடுவது, நள்ளிரவில் ஒவ்வொரு முன்னணியாளர்களுக்கும் ஒரு போலீசை போட்டு கண்கானிப்பது, அவர்களின் வீடுகளுக்கு சென்று மிரட்டுவது என அச்சுறுத்திவருகிறது.

இழந்த சொந்தங்களுக்காக ஒரு நாள் கூடி அழ கூட உரிமையில்லாத நிலையை தூத்துக்குடியில் உருவாக்க எத்தணித்துக்கொண்டிருக்கிறது ஸ்டெர்லைட்டும், போலீசும்.

வீரத்தின் விளைநிலமான தூத்துக்குடி, ஸ்டெர்லைட்டின் நயவஞ்சகத்துக்கும், போலிசின் அடக்குமுறைக்கும் ஒருபோதும் அடிபனியாது!

அடக்குமுறையால் தூத்துக்குடி மக்களின் வீரத்தையும், போர்க்குணமிக்க போராட்ட உணர்வையும் தடுக்கலாம் என நினைக்கிறார்கள். ஆனால்,  ஒருபோதும் நடக்காது என நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கான வேலைகளை  கொண்டுசெல்வதில்  கூட்டமைப்பு நிர்வாகிகளும், மக்களும்  முன்பை விட உறுதியாகவும், உற்சாகமாகவும் தங்களை   ஈடுபடுத்திக்கொண்டுள்ளனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் : 
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு,
தூத்துக்குடி.


இதையும் பாருங்க …

தூத்துக்குடி : புதைந்தது உடலல்ல விதையான வீரமடா | ம.க.இ.க. பாடல்

ஐயோ அசைவையே காணோமே உயிரோடுதான் இருக்கிறானா ?

உண்மை மனிதனின் கதை | முதல் பாகம் | அத்தியாயம் – 14

டுத்த இரண்டு மூன்று நாட்கள் வெப்பம் மிகுந்த அடர்ந்த மூட்டம் சூழ்ந்திருந்தது. அப்போது நடந்தவற்றை அலெக்ஸேய் தெளிவின்றி மங்கலாகவே கண்டான். எதார்த்த நிகழ்ச்சிகளும் ஜன்னிக் கனவுகளும் ஒன்றோடொன்று கலந்து குழம்பின. உண்மைச் சம்பவங்களைக் கோவையாக வரிசைப்படுத்திக் கொள்வது வெகு நாட்கள் சென்ற பின்னரே அவனுக்கு இயன்றது.

அகதிக் கிராமம் நெடுங்கால பைன் மரக்காட்டில் வாழ்ந்தது. ஊசியிலைகளால் வேயப்பட்டு, இன்னும் முற்றும் உருகாத வெண்பனிப் போர்வை அணிந்திருந்த நிலவறை வீடுகளை முதல் பார்வையில் கண்டு கொள்வதே கடினமாயிருந்தது. அவற்றிலிருந்து வந்த புகை தரையிலிருந்து கிளம்புவது போல் தோற்றமளித்தது.

கிராமவாசிகள் மிகப் பெரும்பாலும் பெண்களும் குழந்தைகளும் ஒரு சில கிழவர்களுமே, எங்கிருந்தோ வந்த சோவியத் விமானி ஒருவனை காட்டிலிருந்து வண்டியில் மிஹாய்லா எடுத்துக் கொண்டு வருகிறார் என்ற தகவலை அறிந்ததும் அவர்கள் எல்லோரும் எதிர்கொள்ள விரைந்தார்கள். ஸ்லெட்ஜை இழுத்துக் கொண்டு மூவர் வருவது மரங்களின் ஊடாகத் தென்பட்டதும் பெண்கள், ஸ்லெட்ஜை சூழ்ந்து கொண்டார்கள். கால்களுக்கு இடையே புகுந்த சிறுவர் சிறுமியரை அடித்தும் நெட்டித் தள்ளியும் அப்பால் அகற்றியவாறு ஸ்லெட்ஜைச் சுவர் போலச் சூழ்ந்து கொண்டு, புலம்புவதும் முறையிடுவதும் அழுவதுமாக நடந்தார்கள். எல்லாருமே கந்தை ஆடைகளை அணிந்திருந்தார்கள். எல்லோருமே ஒரு மாதிரி வயது முதிர்ந்தவர்களாகக் காணப்பட்டார்கள். நிலவறை வீடுகளின் புகைக்கரி அவர்கள் முகங்களில் அப்பியிருந்தது. கண்களின் ஒளியைக் கொண்டும் பழுப்பு முகங்களில் வெண்மையாகத் துலங்கிய பற்களைக் கொண்டும்தான் இளநங்கையை முதியவளிலிருந்து இனம் பிரித்துக் கண்டுகொள்ள முடிந்தது.

”பெண்டுகளா, அடப் பெண்டுகளா! என்ன கூட்டம் போடுகிறீர்கள் இங்கே, எதற்காக? இதென்ன, நாடக மேடை என்ற எண்ணமா? தமாஷாகவா? அட கால்களுக்கு அடியில் நுழையாதீர்கள், ஆட்டுக் கூட்டங்களா – ஆண்டவா, மன்னிப்பாயாக – அரைப் பைத்தியங்களா!” என்று மிஹாய்லா தமது கழுத்துப் பட்டையை லாவகமாக அழுத்தியவாறு இறைந்தார்.

கூட்டத்தினரின் பேச்சுக்கள் அலெக்ஸேயின் காதுகளை எட்டின:

“ஐயோ, எப்படித் துரும்பாக இளைத்திருக்கிறான் பாரேன்! அசைவையே காணோமே, உயிரோடுதான் இருக்கிறானா?”

“நினைவிழந்து கிடக்கிறான். இவனுக்கு என்ன நேர்ந்தது? ஐயோ பெண்டுகளே, எப்படி இளைத்திருக்கிறான், எப்படி எலும்பும் தோலுமாக இருக்கிறான்!”

அப்புறம் வியப்பு அலை சற்று அடங்கியது. இந்த விமானிக்கு நேர்ந்தது என்ன என்று தெரியாவிட்டாலும் பயங்கரமாக இருக்கும் எனப் புலப்பட்டது. பெண்கள் அதனால் மலைத்துப் போனார்கள். ஸ்லெட்ஜ் காட்டோரமாக இழுத்து வரப்பட்டு நிலவறை கிராமத்தை மெதுவாக நெருங்கிக் கொண்டிருக்கையில், அலெக்ஸேயை யார் வீட்டில் தங்கவைப்பது என்பது பற்றி விவாதம் தொடங்கிவிட்டது.

“என் வீடு உலர்ந்திருக்கிறது. மணல் பரப்பியிருக்கிறது, நல்ல காற்றோட்டம் உண்டு… என் வீட்டில் சிறு அடுப்பும் இருக்கிறது” என்று கூறினாள் பளிச்சிடும் வெண்விழிகளும் வட்ட முகமும் கொண்ட சிறுகூடான ஒரு மாது.

“அடுப்பாம், அடுப்பு! எத்தனை பேர் உங்கள் வீட்டில் வசிக்கிறார்கள்? புழுக்கமே ஆளைக் கொன்றுவிடுமே! மிஹாய்லா, என் வீட்டில் தங்கவை. என் மூன்று மகன்கள் செஞ்சேனையில் இருக்கிறார்கள். கொஞ்சம் போல கோதுமை மாவு மிஞ்சியிருக்கிறது. இவனுக்கு தோசை சுட்டுப் போடுவேன்!”

“இல்லை, இல்லை, என் வீட்டில் தங்கட்டும்! எங்கள் வீடு விசாலம். நாங்கள் இரண்டு பேர் தான் வசிக்கிறோம். இடம் நிறைய இருக்கிறது. தோசை சுட்டு எங்கள் வீட்டுக்கு எடுத்து வா. எங்கே சாப்பிட்டாலும் இவனுக்கு ஒன்று தானே. நாங்கள் இவனைச் சொஸ்தப் படுத்துவோம். பனிப்பதம் செய்த மீனும் வெண் காளான் வற்றலும் என்னிடம் இருக்கிறது. மீன் குழம்பும் காளான் சூப்பும் வைத்துத் தருவேன்.”

“இவன் மீன் குழம்பு சாப்பிடுகிறது எங்கே? பிழைப்போமா மாட்டோமா என்று கிடக்கிறான்! எங்கள் வீட்டுக்கு இவனைக் கொண்டு வாரும் மிஹாய்லா மாமா, எங்களிடம் பசு மாடு இருக்கிறது, பால் கிடைக்கும்!”

ஆனால், மிஹாய்லாவோ கிராமத்தின் நடுவில் இருந்த தனது நிலவறை வீட்டுக்கு ஸ்லெட்ஜை இழுத்துச் சென்றார்.

அலெக்ஸேய் நினைவுப்படுத்திக் கொண்டான்: இருண்ட, சிறு நிலவறை வளையில் அவன் படுத்திருந்தான். சுவரில் நுழைக்கப்பட்டிருந்த சிறாய் விளக்குச் சற்றே புகைந்து சரசரப்புடன் பொறிகள் சிந்தியவாறு எரிகிறது. அதன் வெளிச்சத்தில் தெரிகின்ற நிலவறையில் உள்ள சாமான்கள்; மரக்கட்டையைத் தரையில் புதைத்து அதன் மேல் ஜெர்மானியச் சுரங்க வெடிப் பெட்டிப் பலகைகளைப் பொருத்திச் செய்யப்பட்டிருந்த மேஜை, அதன் அருகே மனைகளுக்குப் பதிலாக முண்டுக்கட்டைகள். மேஜை மேல் குனிந்தவாறு அமர்ந்திருக்கிறாள் கிழவி போன்று கறுப்பு உடை அணிந்த, ஒடிசலான ஒரு பெண். மிஹாய்லா தாத்தாவின் இளைய மாற்றுப் பெண் வார்யா இவள். அடர்த்தியற்ற சுருட்டை வெண்மயிர் படிந்த கிழவரின் தலையும் தெரிகிறது.

வைக்கோல் நிரப்பிய கோடிட்ட மெத்தை மேல் படுத்திருக்கிறான் அலெக்ஸேய். பல்வண்ண ஒட்டுக்கள் போட்ட அதே ஆட்டுத்தோல் கோட்டையே அவன் போர்த்திருக்கிறான். உடம்பெல்லாம் கற்களால் அடித்து நொறுக்கப்பட்டது போல் வலிக்கிறது. உள்ளங்கால்களில் சுடு செங்கற்கள் கட்டப்பட்டிருப்பது போலக் கால்கள் காந்துகின்றன. எனினும், நம்மை ஒருவரும் தொடமாட்டார்கள், இயங்கவோ, சிந்தனை செய்யவோ, அஞ்சவோ தேவையில்லை என்பதைத் தெரிந்துக் கொண்டு இந்த மாதிரி அசையாமல் கிடப்பது இன்பமாய் இருக்கிறது.

அலெக்ஸேய் கண்களை மூடிக் கொள்கிறான். கறுப்பு ஜெர்மன் கழுகுச் சின்னம் பொறித்த சாக்குத் துணியால் உறை தைக்கப்பட்ட திறந்த கதவின் வழியாக திடீரெனக் குளிர் காற்று குப்பென வீசவே அவன் கண்களைத் திறந்தான். மேஜை அருகில் இருக்கிறாள் யாரோ ஒரு மாது. மேஜை மேல் ஒரு சாக்குப்பையை வைத்துவிட்டு, அதைத் திரும்ப எடுத்துக் கொண்டு விடுவோமோ எனத் தயங்குபவள் போல அதன் மேல் கைகளை வைத்தவாறு பெருமூச்செறிகிறாள். பின்பு வார்யாவிடம் சொல்லுகிறாள்:

“இது ரவை. சமாதான காலம் முதலே கோஸ்த்யாவுக்காகப் பத்திரப்படுத்தி வைத்திருந்தோம். இப்போதோ அவனுக்கு ஒன்றும் தேவையில்லை. நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். விருந்தாளிக்குப் பொங்கல் சமைத்துப் போடுங்கள். சின்னப் பிள்ளைகளுக்கு ஏற்றது ரவைப் பொங்கல். இவருக்கு இப்போது இது சரியாயிருக்கும்.”

இப்படிச் சொல்லிவிட்டு, தனது ஏக்கத்தை எல்லோர் மீதும் பரப்பியவாறு திரும்பி மெதுவாக வெளியேறுகிறாள் அவள். அப்பறம் ஒருத்தி மீன் கொண்டு வருகிறாள். மற்றொருத்தி கணப்புக் கல்லில் சுட்ட தோசைகள் கொண்டு வருகிறாள். அவற்றின் வெதுவெதுப்பான, புளித்த கோதுமை மணம் நிலவறை முழுவதிலும் பரவுகிறது.

ஆகா, பெண்களே, பெண்களே! விலைமதிப்பில்லாத மாணிக்கங்கள் நீங்கள்!… ருஷ்யப் பெண் விலை மதிக்க முடியாத இரத்தினம் என்கிறேன்… தன்னிடம் உள்ளதை எல்லாம் அள்ளித் தந்துவிடுவாள், தலையைக் கூடக் கொடுத்து விடுவாள் நமது பெண்.

செர்யோன்காவும் பேத்யாவும் வருகிறார்கள். குடியானவர்களுக்குரிய நிதானத்துடன் செர்யோன்கா வாயிலருகே தலையிவிருந்து தொப்பியைக் கழற்றிக் கையில் பிடித்துக் கொண்டு, “உங்களுக்கு வணக்கம் என்று சொல்லி மேஜை மேல் இரண்டு சர்க்கரைக் கட்டிகளைப் போடுகிறான், மட்டப் புகையிலைத் துணுக்குகளும் தவிடும் அவற்றில் ஒட்டிக் கொண்டிருக்கின்றன. “அம்மா கொடுத்தனுப்பினாள். சர்க்கரை உடம்புக்கு நல்லது, சாப்பிடுங்கள்” என்று கூறிவிட்டுத் தாத்தாவை நோக்கிக் காரியப்பாங்குடன் சொன்னான்: “எரிந்த கிராமத்துக்கு மறுபடி போனோம். இரும்புச் சட்டி ஒன்றைத் தேடி எடுத்தோம். ரொம்ப கரிந்து போகாத இரண்டு மண் வாரிகளும் காம்பு இல்லாத கோடாரியும் கிடைத்தன. கொண்டு வந்தோம், பயன்படும்.”

வெகு நேரத்துக்குப் பிறகுதான், இதை எல்லாம் எண்ணிப் பார்த்த போதுதான், கிராமத்தினர் தனக்குக் கொண்டு வந்து அளித்த பரிசுகள் எவ்வளவு மதிப்புமிக்கவை என்பதை அலெக்ஸேயால் அறிந்து கொள்ள முடிந்தது. இந்தக் குளிர் காலத்தில் சுமார் மூன்றில் ஒரு பங்கு கிராமவாசிகள் பட்டினியால் மடிந்து போனார்கள். ஒரு ஆளையோ அல்லது இருவரையோ கூட அடக்கம் செய்யாத குடும்பம் ஒன்று கூட குடியிருப்பில் இல்லை.

“ஆகா, பெண்களே, பெண்களே! விலைமதிப்பில்லாத மாணிக்கங்கள் நீங்கள்! என்ன, கேட்டாயா, அலெக்ஸேய், ருஷ்யப் பெண் விலை மதிக்க முடியாத இரத்தினம் என்கிறேன். அவள் நெஞ்சு இளகிவிட்டதோ, தன்னிடம் உள்ளதை எல்லாம் அள்ளித் தந்துவிடுவாள், தலையைக் கூடக் கொடுத்து விடுவாள் நமது பெண். ஊம்? இல்லையா?” அலெக்ஸேய்க்குக் கொடுக்கப்பட்ட இந்தப் பரிசுகளை எல்லாம் ஏற்றுக் கொண்டு மிஹாய்லா தாத்தா இவ்வாறு திரும்பத் திரும்ப உரைத்தார். பின்பு தமக்கு எப்போதும் இருக்கும் வேலையில் மீண்டும் ஈடுபட்டார்: சேணத்தைச் செப்பனிட்டார், நுகவார்களைத் தைத்தார், அல்லது தேய்ந்து போன நமுதா ஜோடிகளுக்கு அடிகள் தைத்தார். “தம்பீ, அலெக்ஸேய், வேலையிலும் இவள், அது தான் நமது பெண் பிள்ளை, நமக்கு சளைக்க மாட்டாள். சில வேளைகளிலோ வேலையில் ஆண்களையே முந்தி விடுவாள்! இந்தப் பெண்களின் நாக்கு இருக்கிறதே, அதுதான் பொல்லாதது. என்னை முட்டாளாக அடித்து விட்டார்கள். என்னை என் வீட்டுக்காரி அனீஸியா காலமானதும் நான், பாவி, நினைத்துக் கொண்டேன்: ‘ஆண்டவா, போற்றி, சந்தடி இல்லாமல் நிம்மதியாய் வாழ்வேன்!’ என்று. ஆண்டவன் இதற்கு என்னைத் தண்டித்து விட்டான். எங்கள் கிராம ஆண்களில் இராணுவத்தில் எடுத்துக் கொள்ளப்படாமல் பாக்கி இருந்தவர்கள் எல்லோரும், ஜெர்மானியர்கள் வந்ததும் கொரில்லாப் படைகளில் சேர்ந்துவிட்டார்கள். நானோ, செய்த பெரும் பாவத்துக்குத் தண்டனையாகப் போலும், பெண்கள் கூட்டத்துக்குக் கமாண்டர் ஆகிவிட்டேன் – ஆட்டு மந்தையில் கடா போல… ஓ ஹோ-ஹோ!”

தன்னை ஆழ்ந்த வியப்புக்கு உள்ளாக்கிய எத்தனையோ விஷயங்களை அலெக்ஸேய் இந்தக் காட்டுக் குடியிருப்பில் கண்டான். ப்ளாவ்னி கிராமத்தில் வாழ்ந்த மக்களுக்கு வீடுகளோ, வேளாண்மைக் கருவிகளோ, கால்நடைகளோ, அன்றாடத் தேவைக்கான தட்டுமுட்டுச் சாமான்களோ, உடைகளோ, எதுவுமே – பல தலைமுறைகளின் உழைப்பால் சேகரிக்கப்பட்டிருந்தவை எவையுமே – இல்லாதவாறு அடித்துவிட்டார்கள் பாசிஸ்டுகள்.

மக்கள் இப்போது காட்டில் வசித்தார்கள். பெருந்துன்பத்தில் உழன்றார்கள். ஹிட்லர் படையினர் தங்களை கண்டுபிடித்து விடுவார்களோ என்ற அச்சத்தால் ஒவ்வொரு கணமும் கவலையுற்றனர். ஆனால், ஆறுமாத வசவு திட்டுகளுக்கும் விவாதங்களுக்கும் பிறகு, ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பதாம் ஆண்டில் முன்னணி ஊழியர்களால் எப்படியோ ஒரு விதமாக நிறுவப்பட்ட கூட்டுப்பண்ணை தகர்ந்து விடவில்லை. மாறாக, போரினால் ஏற்பட்ட பெரும் விபத்து மக்களை முன்னிலும் நெருக்கமாக ஒற்றுமைப்படுத்தியது.

நிலவறை வீடுகளைக் கூட மக்கள் ஒன்று சேர்ந்து தோண்டி அமைத்துக் கொண்டார்கள். அவற்றில் பழங்கால முறைப்படி குடியேற விடாமல் வேலைக் குழு முறைப்படி ஒழுங்காகக் குடியேறினார்கள். தனது கொலையுண்ட மருமகனின் இடத்தில் கூட்டுப்பண்ணைத் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் மிஹாய்லா தாத்தா. கூட்டுப்பண்ணை பழக்கவழக்கங்களை அவர் சிரத்தையுடன் கடைப்பிடித்தார். காட்டின் நடுவே பைன் மரத் தோப்புக்குள் விரட்டப்பட்டு நிலவறை வீடுகளில் வசித்த கிராமத்தினர் வேலைக் குழுக்களாகவும் பிரிவுகளாகவும் அமைந்து வசந்த கால வேளாண்மைக்கு ஆயத்தம் செய்யலானார்கள்.

தப்பி ஓடிய பிறகு தங்களிடம் மிஞ்சியிருந்த தானியங்களை, பட்டினியால் தவித்துக் கொண்டிருந்த குடியான மாதர்கள் பொது நிலவறையில் ஒரு மணி கூட விடாமல் கொண்டு சேர்த்தார்கள். ஜெர்மானியர் கைகளில் அகப்படாமல் உரிய நேரத்தில் காட்டுக்கு ஓட்டி வரப்பட்ட பசுக்களின் கன்றுகளைப் பராமரிப்பதற்குக் கண்டிப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆட்கள் பட்டினி கிடந்தார்கள், ஆனால் பொது கால்நடைகளை உணவுக்காகக் கொல்லவில்லை. உயிரையே இழக்க நேரிடும் அபாயத்தை மேற்கொண்டு சிறுவர்கள் தீக்கிரையான கிராமத்துக்குப் போய் எரிபாடுகளைத் தோண்டி நெருப்புச் சூட்டால் நீலம் பாரித்திருந்த கலப்பைகளை எடுத்து வந்தார்கள். அவற்றில் ஓரளவு உருப்படியாக இருந்தவற்றிற்கு மரக் கைபிடிகள் செய்து பொருத்தினார்கள். சாக்குத்துணிகளால் நுகங்கள் செய்தார்கள், வசந்த காலத்தில் பசுக்களைக் கட்டி உழுவதற்காக. பெண்களின் வேலைக் குழுக்கள் முறை வைத்துக் கொண்டு ஏரிகளில் மீன் பிடித்து குளிர்காலம் பூராவும் கிராமத்திற்கு உணவளித்தன.

மிஹாய்லா தாத்தா “தன் பெண்களைப் பற்றி முணு முணுப்பார். அலெக்ஸேய்க்குப் பிடிபடாத ஏதேனும் வேளாண்மை விவகாரங்களைப் பற்றி அவர்கள் அவருடைய நிலவறையில் நீண்ட வாக்குவாதங்கள் நடக்கும் போது காதுகளைப் பொத்திக் கொள்வார். சில வேளைகளில் தம்மை மீறிய கோபம் காரணமாக உச்சக் குரலில் அவர்களை அதட்டுவார். ஆயினும் இந்த மாதர்களை மதிக்க அவருக்கு இயன்றது. அலெக்ஸேய் மெளனமாகக் கேட்டுக் கொண்டிருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு சில வேளைகளில் “பெண் ஜன்மங்களை” வானளாவப் புகழ்வார்.

“நீயேதான் பாரேன் அலெக்ஸேய், என் அருமை நண்பா, என்ன நேர்ந்திருக்கிறது என்பதை. தலைமுறை தலைமுறையாகப் பெண்ணின் சுபாவம் சிறு துண்டைக் கூட இரண்டு கைகளாலும் இறுகப்பற்றிக் கொள்வதுதான். ஊம்? அப்படித்தானே. ஏன்? கஞ்சத்தனமா? இல்லை. அவளுக்கு அந்தத் துண்டு விலைமிக்கது, குழந்தைகளுக்கு ஊட்டுபவள் பெண் தானே, என்னதான் சொன்னாலும் குடும்பத்தை நிர்வகிப்பவள் அவள் தானே, அதனால் தான் பொருள்கள் விஷயத்தில் அவளுக்கு அவ்வளவு கரிசனம்.

இப்போது கேள், விஷயம் என்ன என்பதை நீயே பார்க்கிறாய், பொறுக்குகளைக் கூடக் கணக்கிட்டுச் செலவிடுகிறோம். பஞ்சமான பஞ்சமில்லை! இந்த நிலைமையில் திடீரென்று கொரில்லா வீரர்கள் எங்களிடம் வந்து சேர்ந்தார்கள். நடந்தது ஜனவரியில், இவர்கள் எங்கள் கிராமத்தை சேர்ந்தவர்கள் அல்ல. எங்கள் ஆட்கள் ஒலேனினோ பக்கத்தில் எங்கோயோ சண்டைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் வேறு ஆட்கள், ஏதோ ரயில் பாதையைச் சேர்ந்தவர்கள். நல்லது. வந்து சேர்ந்தார்கள். ‘பட்டினியால் தவிக்கிறோம்’ என்றார்கள்.

எங்கள் பெண்கள் அடுத்த நாள் பைகள் நிறைய உணவுப் பண்டங்களைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டார்கள். சொந்தக் குழந்தைகள் சோகைப் பிடித்து ஊதிப் போயிருக்கின்றன, நிற்கவே முடியாமல் தள்ளாடுகின்றன. ஊம்? அப்படித்தானே?….. இது தான் சேதி! நான் மட்டும் படைத் தலைவனாக இருந்தால், ஜெர்மானியர்களை நாம் விரட்டியடித்துமே என் படையிலுள்ள தலைசிறந்த வீரர்களைத் திரட்டி, ஒரு பெண்ணை முன்னால் நிறுத்தி அவளுக்கு எதிரே, ருஷ்யப் பெண்ணுக்கு எதிரே அணிவகுத்து நடந்து இராணுவ மரியாதை செய்யும்படி கட்டளை இடுவேன், நமது பெண்ணுக்கு!”

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

கல்லூரி மாணவி திலகவதி படுகொலை ! தீர்ப்புக்கு முன்பே தீ மூட்டும் சாதி வெறி !

தேதி : 15.05.2019

பத்திரிக்கைச் செய்தி!

கடலூர் மாவட்டம், கருவேப்பிலங்குறிச்சி – கல்லூரி மாணவி திலகவதி படுகொலை ! ஆணவக்கொலையா? – காதல் கொலையா?

தீர்ப்பு வரட்டும்! அதற்கு முன் தீ மூட்ட வேண்டாம் !

ந்த குற்றமும் செய்யாத மாணவி திலகவதியின் மரணம் நெஞ்சை உலுக்குகிறது. இனிமேல் யாரும் இது போன்று சாகக் கூடாது என சாதிக்கு அப்பாற்பட்டு நாம் அனைவருமே விரும்புகிறோம். ஆனால், அதற்கு எந்த உத்திரவாதமும் இல்லாத நிலையில் நாம் வாழ்கிறோம்.

எந்தவித திருமணமானாலும் அது இரு தனிநபர்கள் சம்பந்தப்பட்டது அல்லது இரு குடும்பத்தினர் சம்பந்தபட்டது மட்டுமே என்று பார்ப்பதற்கு நாம் பழக வேண்டும். நாடக காதல், ஒரு தலைகாதல், என்ற சாதிவெறிக்கு நாம் தூண்டில் இறையாகக் கூடாது.

மே மாதம் 8-ம் தேதி மாலை 5:00 மணியளவில் விருத்தாசலம் தனியார் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் இரண்டாமாண்டு படித்து வரும் திலகவதி என்ற மாணவி கருவேப்பிலங்குறிச்சியில் அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மாணவி திலகவதி

திலகவதியின் பெற்றோர் சுந்தரமூர்த்தி – கொளஞ்சி கூலி தொழில் செய்து வரும் அடித்தட்டு குடும்பத்தினர். இந்த கொலையைச் செய்ததாக, பள்ளியில் அவருடன் ஒன்றாக படித்து பழகி வந்த ஆகாஷ் என்ற கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்து சிறையிலடைத்து உள்ளனர். கொலை செய்யப்பட்டவர் வன்னியர், கொலை குற்றம் சாட்டபட்டவர் தலித் என்பதால் சாதி அரசியல் உள்ளே நுழைந்து இரு சமூகத்தினரிடையே பதற்றத்தை ஏற்படுத்த முயல்கிறது.

தலித் மக்கள் வாழும் பகுதியான (ஆகாஷ் ஊர்) பேரளையூர் கிராமத்தில் அச்சத்தின் காரணமாக ஆண்கள் – இளைஞர்கள் அனைவரும் வெளியூர் சென்று விட்டனர். பெண்களும் சிறுவர்களும் மட்டுமே உள்ளனர். இத்தகைய அச்சத்திற்கு யார் காரணம்? யார் பொறுப்பேற்பது? அரசா? ஆதிக்கசாதி வெறியர்களா?

இது காதல் கொலையா அல்லது ஆணவக்கொலையா என்பது விசாரணைக்குப் பின்னர்தான் தெரியவரும். ஆனால், அதற்கு முன்னரே மருத்துவர் ராமதாஸ் அவர்கள் திலகவதியின் கொலைக்கு வழக்கம் போல் தலித் மக்கள் மீது குற்றஞ்சாட்ட முயல்வதுடன், பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தை இதற்காக களத்தில் முடுக்கி விட்டுள்ளார்.

படிக்க:
சாதி உங்களுக்கு என்ன செய்தது ?
♦ சாதி வெறியை ஊதிவிடும் தேவராட்டம்

தன் சொந்த சாதியில் மணம் முடிக்க வேண்டும் என சராசரியாக சிந்திக்கும் பெற்றோரை சாதிவெறியர்களாக மாற்ற முயற்சிக்கிறார். முஸ்லீம்களை எதிரியாக காட்டி வளரும் பா.ஜ.கவின் மதவெறி அரசியல் போல தலித்துக்களை எதிரியாக காட்டி சாதிவெறி அரசியலை வளர்க்க முயல்கிறார் மருத்துவர் ராமதாஸ். இதற்காக தலித் அல்லாத அனைத்து சாதியினரையும் துணைக்கு அழைக்கிறார்.

திலகவதியின் கொலைக்கு காரணமான குற்றவாளி யாராக இருந்தாலும் அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்கமுடியாது. கொலையை நேரில் பார்த்தவர்கள் யாரும் இல்லாத நிலையில் கைது செய்யப்பட்டிருக்கும் ஆகாஷ்தான் உண்மைக் குற்றவாளியா அல்லது இது திலகவதியின் உறவினர்களால் செய்யப்பட்ட ஆணவக் கொலையா என்பது விசாரிக்கப்படவேண்டும்.

கொலை செய்ததை ஆகாஷே ஒப்புக்கொள்வதாக ஒரு வீடியோவை பதிவு செய்து போலீசார் அதனை வெளியில் பரவ விட்டிருக்கின்றனர். இத்தகைய சாட்சியத்தை நீதிமன்றம் ஏற்காது என்பது போலீசாருக்கு நன்கு தெரியும். இருந்த போதிலும் சட்டவிரோதமாக ஒரு தரப்பிற்கு ஆதரவாக வீடியோவை வெளியிட்டு, பதற்ற நிலையை உருவாக்கியிருக்கின்றனர். இந்த நடவடிக்கை அனைவருக்கும் போலீசார் மீது சந்தேகத்தை ஏற்படுத்துவதால், சி.பி.சி.ஐ.டி. போலீசார் மூலம் சிறப்பு விசாரணைக்கு உத்திரவிட வேண்டியது அவசியமானதாகும்.

ஆகாஷ் திலகவதி இருவரும் பழகி வந்ததும், ஒன்றாகப் பள்ளியில் படித்து வந்ததும், அடிக்கடி திலகவதியின் வீட்டிற்கு ஆகாஷ் செல்வதும் இரு தரப்பு பெற்றோர்களுக்கும் தெரியும். இவர்கள் பழகியது ஊரில் உள்ள அனைவருக்கும் தெரியும். இரு குடும்பங்களுமே ஏழைகள். “திலகவதியை ஆகாஷ் கொலை செய்யவேண்டிய அவசியம் இல்லை. ஆகாஷ் அத்தகைய சுபாவம் உடையவன் அல்ல. கொலை நடந்த நேரத்தில் ஆகாஷ் பேரளையூர் என்ற தனது கிராமத்தில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தான்” என்று அந்த ஊரைச் சேர்ந்த மக்கள் கூறுகின்றனர்.

கண்ணகி – முருகேசன்

நாடகக்காதல் என்ற பிரச்சாரத்தை நம்புகிறவர்கள் கண்ணகி முருகேசன் கொலையை நினைத்துப் பார்க்க வேண்டும். 2003 -ல் விருத்தாசலத்தில் தலித் இளைஞர் பொறியியல் பட்டதாரி முருகேசன். வன்னியர் வகுப்பை சேர்ந்த கண்ணகி  வணிகவியல் பட்டதாரி. இவர்களது காதலின் எதிர்வினையாக, இருவர் வாயிலும் விஷம் ஊற்றி உயிரோடு எரித்துக்கொல்லப்பட்னர்.

இருவரின் பெற்றோரிடமும் ஒப்புதல் வாக்குமூலம் பெற்று அவர்களையே குற்றவாளியாக்கி குற்றப்பத்திரிக்கையையும் தாக்கல் செய்து போலீசார் வழக்கை முடித்தனர். பிறகு சி.பி.ஐ விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டது. பெண்ணின் தந்தை சகோதரன் உள்பட 15 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து அதனுடன் சாட்சியத்தை அழிக்க முயன்றதாக விருத்தாசலம் போலீசு ஆய்வாளர் மற்றும் துணை ஆய்வாளரையும் அந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்த்து உள்ளது சி.பி.ஐ. 16 ஆண்டுகள் ஆனபிறகும் கண்ணகி முருகேசன் வழக்கு நீதிக்காக காத்திருக்கிறது.

பருவம் வராத காதலும் பாலியல் சார்ந்த குற்றங்களும் இன்று மென்மேலும் அதிகரித்து வருகின்றன. ஆபாச நுகர்வு வெறி கலாச்சார சீரழிவிற்கு அனைவரும் விட்டில் பூச்சிகளாக பலியாகின்றனர். சாதியோ, வயதோ, பதவியோ இந்த சீரழிவுக்குத் தடையாக இல்லை.

உள்ளூர் மாஜிஸ்டிரேட் முதல் உச்ச நீதிமன்ற நீதிபதி வரை பாலியல் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.  ஏட்டு முதல் தனக்கு கீழ் உள்ள எஸ்.பி-யை பாலியல் துன்புறுத்தல் செய்த ஐ.ஜி வரை, பாலியல் புகாரில் உள்ளனர். 3 வயது குழந்தை முதல் வயது முதிர்ந்த பெண்கள் வரை வல்லுறவு – கொலை செய்யப்பட்டு வருகின்றனர். பாலியல் நுகர்வு வெறியாலும் பக்குவமின்மையாலும் பல கொலைகளும் தற்கொலைகளும் தினம்தோறும் நடக்கின்றன. இந்த சூழ்நிலை, பெண்களை மட்டுமல்ல நம் அனைவரையும் அச்சுறுத்துகிறது.

பொள்ளாச்சி பாலியல் வல்லுறவுக் குற்றத்தில் 250 -க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். பெண்களை வீடியோ படம் எடுத்து வைத்துக் கொண்டு அதைக்காட்டி அவர்களை விலை மாதர்களாக விலைபேசியது என்பது கொலைக்குற்றத்தைக் காட்டிலும்  கொடிய குற்றம். ஆனால் பேருக்கு சிலரை கைது செய்து அந்தக் குற்றக்கும்பலை போலீசு பாதுகாக்கிறது. இந்தக் கிரிமினல்களின் சாதி என்ன என்ற கேள்வியையோ, பாதிக்கப்பட்ட பெண்களின் சாதி என்ன என்ற கேள்வியையோ யாரும் எழுப்பவில்லை.

இங்கே நடந்திருப்பது ஒரு கொலைக்குற்றம். நேர்மையான விசாரணை உண்மைக் குற்றவாளியைக் கண்டுபிடிக்கட்டும். அதற்கு முன்னர் இத்தகைய சம்பவங்களை சாதியப் பார்வையில் பார்க்க சொல்லித் தூண்டிவிடும் சாதிவெறி அரசியலை நாம் அனைவரும் புறக்கணிக்க வேண்டும்.

எனவே;

  • திலகவதியின் படுகொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்திரவிட வேண்டும்.
  • தங்களது இரு மகள்களையும் இழந்து தவிக்கும் திலகவதியின் பெற்றோர்களுக்கு தமிழக அரசு மாதம் தோறும் உதவித் தொகை வழங்குவதுடன், உரிய அரசு வேலை வழங்க ஆவண செய்ய வேண்டும்.
  • அதிகரித்து வரும் பாலியல் ஆபாச நுகர்வு வெறி குற்றங்களுக்கு நிரந்தர தீர்வுகாணும் வகையில் அரசியல் கட்சிகள், இயக்கங்கள், அரசை நிர்பந்தித்து போராட வேண்டும்.
  • காதல் தற்கொலை, கொலை சம்பவங்களில் சாதி மத வெறி அரசியலை தூண்டி மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தும் சாதிக்கட்சிகள், சாதிசங்கங்களை அனைத்து தரப்பு மக்களும் புறக்கணிக்க வேண்டும்.

தோழமையுடன்,
வழக்கறிஞர் சி.ராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்.

ஆரிய யோகத்தின் அற்புத சக்தியைப் பாரடா !

சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாடகம் | பாகம் – 15


காட்சி : 22

இடம் : ஆஸ்ரமம்
உறுப்பினர்கள் : காகப்பட்டர், ரங்கு பட்டர்

காகப்பட்டர் : காடு, மேடு என்று பாராமல் களத்திலே நின்று போரிட்டான். ஆனால், நமது காலடியில் வீழ்ந்தால் தான் ராஜ்யம் அவனுக்கு… ரங்கு பட்டர், என்னடா சொல்றே இப்போ?

ரங்கு பட்டர் : சொல்றதா? ஆனந்தத் தாண்டவமாடலாமான்னு – தோன்றது, குருதேவா. நினைக்க நினைக்க நேக்கு ஆச்சர்யமாய் இருக்கு. புனா எங்கே இருக்கு ? காசி எங்கே இருக்கு? மண்டலம் அங்கே இருக்கு. ஆனா அதை …

காகப்பட்டர் : பரிசுத்தமாக்க இங்கே நம்மிடமிருக்கும் கமண்டல தீர்த்தம் தேவைப்படுகிறது.

ரங்கு பட்டர் : ஆச்சர்யமா இருக்கு ஸ்வாமி!

காகப்பட்டர் : ஆரிய யோகத்தின் அற்புத சக்தியைப் பாரடா அசடே

ரங்கு பட்டர் : ராஜ்யம் சம்பாதிக்க அவன் பட்டபாடு எவ்வளவு? கொட்டிய ரத்தம் எவ்வளவு?

காகப்பட்டர் : மாவீரன்! மராட்டியத்தைப் பிழைக்க வைத்த வீரன் என்று மண்டலமெல்லாம் புகழ்கிறதாம் அவனை . அவன், அசட்டு ரங்கு பட்டர், அந்த வெற்றி வீரன் இந்த வேதிய குலத்தினிடம் தஞ்சம் புகுந்தாக வேண்டி வருகிறது. தெரிந்து கொள்ளடா தெளிவற்றவனே.

ரங்கு பட்டர் : ஆமாம் ஸ்வாமி! அவன் வீராதி வீரனாகத் தான் இருக்கிறான். என்றாலும் அவனை நம்முடைய ஆரிய சோதராள் எதிர்க்கிறாளே, தெரியுமா!

காகப்பட்டர் : ஏண்டா தைரியம் வராது? பைத்தியமே! எவ்வளவு பெரிய வீராதி வீரனாக இருந்தாலும், சிவாஜியாகட்டும், வேறே எந்த ஜீயாகட்டும் மனிதன்தானே? நாம் பூதேவாடா ! பூதேவா! மனிதர்களுக்கு மேம்பட்டா . அதுதானே சாஸ்திரம். அந்த சாஸ்திர பலம் இருக்கும் போது எப்படிப்பட்ட சூராதி சூரனையும் ஏன் நாம் எதிர்க்க முடியாது?

ரங்கு பட்டர் : சூட்சம பலம் இருக்கு ஸ்வாமி நம்மிடம்.

காகப்பட்டர் : சந்தேகமென்ன? நால்வகைச் சேனைகள் உண்டு, அவனிடம், சிவாஜியிடம் ; நம்மிடம் நாலு வேதங்கள். அஸ்திர சாஸ்திரம் அவனிடம் ; ஆகம சாஸ்திரம் நம்மிடம் . வாள் ஏந்துகிறான் அவன்! கூர்மையான வாள்; கேவலம் புல்லைத்தான் ஏந்துகிறோம் நாம். உலர்ந்து போன புல்லடா, புல். ஆனால் பாரடா மண்டூ ! புல் ஏந்தியின் ஆசி கிடைத்தால்தான் அவன் பூபதி ஆக முடியும். பூகரரிடம் ஒலையனுப்பினேன் முதலில்,
சம்மதம் தர முடியாது பட்டாபிஷேகத்திற்கு என்று.

ரங்கு பட்டர் : ஆமாம் நானும் கூட கொஞ்சம் பயந்துதான் போனேன். உம்முடைய சம்மதம் கிடைக்கப் போனா என் தலையிலே கிரீடம் ஏறாமலா போகும்னு கோபமாகப் பேசிவிட்டு, எங்கே அவர் மகுடாபிஷேகம் செய்துண்டுடறாளோன்னு நினைச்சேன்.

காகப்பட்டர் : முடியுமா? அப்படி அவர் துணிஞ்சி செய்றதுன்னு ஆரம்பிச்சா நம்ம படைகள் சும்மா இருக்குமா? ஏண்டா, பேந்தப் பேந்த விழிக்கிறே? நமக்கு ஏது மராட்டியத்தில் படையின்னு விழிக்கிறியா? படைன்னா நான் நம்ம ஆரியச் சோதராளைச் சொல்றேண்டா. அவா சும்மா விட்டு விடுவாளோ? பாவி நீசன் சண்டாளன் அப்படி இப்படின்னு கூச்சலைக் கிளப்பினான்னா, பரத கண்டமே பயத்தாலே கிடுகிடுண்ணு ஆடும்டா ஆடும் !

ரங்கு பட்டர் : அதனாலேதான் மறுபடியும் தூதுவனை அனுப்பினா உம்மிடம்.

காகப்பட்டர் : நானும் இதற்குள் கொஞ்சம் தீர்க்கமா யோசித்துப் பார்த்தேன். இந்தப் பட்டாபிஷேகத்திற்குச் சம்மதம் தந்து, கூட இருந்து காரியத்தைச் செய்தா விஷேசமான பலன் இருக்கு. பரத கண்டம் முழுவதும் நம்ம கீர்த்தி பரவும். அது சாதாரணம். நம்மவர் எங்கே இருந்தாலும் தலை நிமிர்ந்து நடப்பாளோண்ணோ ? மதிப்பு எவ்வளவு அதிகமாகும். அதைக் கணக்கிட்டுப் பார்த்ததாலே தான் நானும் சரி! பட்டாபிஷேகத்துக்குச் சம்மதிக்கிறேன்னு புதிய தூதுவன் நீலோஜியிடம் சொல்லி அனுப்பினேன். தெரிகிறதா?

ரங்கு பட்டர் : தெரிகிறது ஸ்வாமி தெரிகிறது. ஆனால் திகிலும் பிறக்கிறது.

காகப்பட்டர் : திகிலா? ஏண்டா மண்டு, ஏண்டா திகில் ?

ரங்கு பட்டர் : இந்தச் சூட்சமம் அவாளுக்கும் தெரிந்துவிடுமானால், நம்ம கதி என்னங்கிற திகில்தான்.

காகப்பட்டர் : வீண் பயம்டா உனக்கு நமது புராண, இதிகாசாதிகளை , நீ சாமான்யமானவைன்னு எண்ணிண்டிருக்கே. டே ரங்கு, அவைகளுக்கு ஜீவன் உள்ளமட்டும், நாம் என்ன சொன்னாலும் இவர் கேட்பா என்ன செய்தாலும் தகும். டே, ரங்கு சொன்னா உடனே காதிலே கேட்கப் பிடிக்காத, சகிக்க முடியாத விஷயங்கன்னு சில உண்டோ , இல்லையோ.

ரங்கு பட்டர் : சிலவா? பல உண்டு ஸ்வாமி!

காகப்பட்டர் : உதாரணமாக… பஞ்சமா பாதகம் இருக்கு.

ரங்கு பட்டர் : ஆமாம்! கொலை, களவு, கட்குடி, சூதாட்டம்.

காகப்பட்டர் : ஆமாண்டா என்னடா நேக்குப் பாடம் சொல்ல ஆரம்பிக்கிறே? இவைகளைக் கேட்டாலே பதறுவா. பழிப்பா, இகழுவாளோண்ணோ ?

ரங்கு பட்டர் : ஆமாம் நம்ம சாஸ்திராதிகளும் பஞ்சமா பாதகங்கள் கூடாதுண்ணுதான் சொல்லிண்டு வர்றது.

வாள் ஏந்துகிறான் அவன்! கூர்மையான வாள்; கேவலம் புல்லைத்தான் ஏந்துகிறோம் நாம். உலர்ந்து போன புல்லடா, புல். ஆனால் பாரடா மண்டூ ! புல் ஏந்தியின் ஆசி கிடைத்தால்தான் அவன் பூபதி ஆக முடியும்.

காகப்பட்டர் : சாஸ்திரங்கள் சொல்லுகின்றன. சாமான்யருக்கும் தெரியும். ஆனா டே, ரங்கு பட்டர் குரு பத்தினியைக் கெடுத்த சந்திரன். ரிஷி பத்தினியைக் கெடுத்த இந்திரன், விருந்தையைத் தேடிக் கொடுத்த விஷ்ணு, சப்த ரிஷிகளின் பத்தினிமார் மீது மோகம் கொண்ட அக்கினி, மகளை மனைவியாக்கிக் கொண்ட பிரம்மா, தாரகா வனத்து ரிஷிப் பத்தினிகளைக் கொடுத்த சிவன் – இப்படித் தேவர் மூவரைப் பற்றிக் கூறப்பட்டிருக் கேல்லோ – பஞ்சமா பதாகத்திலே லேசானவைகளா இவை?

ரங்கு பட்டர் : ஆமாம், ஸ்வாமி! சில சமயம் நேக்கு நெசமாகச் சொல்றேன். அதையெல்லாம் நெனைச்சுண்டா, சகிக்க முடியறதில்லே. நாக்கைப் பிடுங்கிண்டு சாகலாமான்னு தோன்றது.

காகப்பட்டர் : உனக்குத் தோன்றதுடா அப்படி. ஆனா மகா ஜனங்க என்ன சொல்றா? ஏதாவது பதைக்கிறாளா? பதற்றாளா? சேச்சோ இப்படிப்பட்ட பஞ்சமா பாதகம் செய்ததாகவா பகவானைப் பத்தின சேதிகள் இருப்பதுண்ணு கேக்கறாளா? கொஞ்சமாவது கூசறாளா?

ரங்கு பட்டர் : இல்லையே ஸ்வாமி அதுதானே ஆச்சர்யமா இருக்கு.

காகப்பட்டர் : எப்படிடா அவா பதற முடியும்? பகவானுடைய லீலா விநோதங்கள்ணு இவைகளைப் பத்தி புராணம் சொல்றது . புராணங்களை சிரவணம் செய்தாலே போற கதிக்கு நல்லதுண்ணா சாஸ்திரம் சொல்றது. அப்படி இருக்கும் போது எப்படிடா மகாஜனங்க இவைகளை ஏற்றுக் கொள்ளாமலிருப்பா? பார்த்தாயோ நமது புராணாதிகளுக்கு உள்ள சக்தியை. பஞ்சமா பாதகம் ததும்பும்டா கதைகளிலே ஆனா அவைகளைப் பஞ்சாமிர்தமா எண்ணிப் பருகுறாளோண்ணோ மகாஜனங்க? பார்க்கிறாயோண்ணோ !

ரங்கு பட்டர் : ஆமாம் ஸ்வாமி!

காகப்பட்டர் : அப்படி இருக்க, நம்ம புராணம், இதிகாச சாஸ்திரம் இவைகளெல்லாம் இப்படி இருக்கும் போது மராட்டிய மண்டலத்துக்கு மகாராஜனாக சிவாஜி நம்முடைய சம்மதம் கேட்காமல் இருப்பானோ? ஒவ்வொரு கோட்டையைப் பிடிக்கிற போதும் கொக்கரிச்சிருப்பா ஜெயவிஜீ பவ என்று. ஊர்களைப் பிடிக்கும் போது உற்சவம் நடத்தி இருப்பா. அந்தக் களிப்பினிலே களத்திலே பிணமான மகனைக் கூட தந்தை மறந்திருப்பான். ரத்தத்தை ஆறுபோல் ஓடவிட்டு, பிணங்களை மலை மலையாகப் போட்டு வெற்றி முரசு கொட்டியிருப்பார்; சங்கம் ஊதியிருப்பா, ஜெயம் ஜெயம்ணு. அந்தப் பெரிய சாம்ராஜ்யத்தை ரங்கு பட்டர், உன் குரு, படை எடுக்காமலே, இருந்த இடத்திலிருந்தே ஜெயித்து விடுகிறதைப் பாருடா. இது தானடா மண்டு ஆரிய யோகம்.

ரங்கு பட்டர் : இந்த அண்ட சராசரங்களிலே இதற்கு ஈடு கிடையாது குருதேவா.

காகப்பட்டர் : ஒரு பெரிய சாம்ராஜ்யாதிபதியை நான் விரும்பினால் பூபதியாக்க முடியும். எனக்கு இஷ்டமில்லேன்னா அவனையே பாபியாக்க முடியும். நீ இந்த ஆரிய வாழ்வை அற்பமென்று கருதி ராஜயோகம் கேட்டாயோடா ராஜயோகம்! எத்தனை ராஜாக்கள் வேண்டுமடா, உனக்குப் பணிவிடை செய்ய? புறப்படு ரங்கு, மராட்டியத்தின் மீது படையெடுப்போம். கட்டு மூட்டையை ! கொட்டு முரசை ; ஒஹோ இங்கே இல்லையா? அது சரி வா அங்கே போய் அவன் அரண்மனையிலேயே உள்ள முரசையே கொட்டுவோம். நம்ம ஜெயத்தைத் தெரிவிக்க நாம் சிரமப்பட்டுக் கொட்டுவானேன். அவர்களையே விட்டுக் கொட்டச் செய்வோம் புறப்படு.

♦ ♦ ♦

காட்சி : 23
இடம் : வீதி
உறுப்பினர்கள் : சிட்னீஸ், வீரர்கள்

சிட்னீஸ் : வீரர்களே! காசிவாசி காகப்பட்டருக்கு அமோகமான வரவேற்பு நடத்த வேண்டும், திருவிழா போல் இருக்க வேண்டும்; எங்கு பார்த்தாலும் மகர தோரணங்கள். கொடிகள் அசைந்தாடியபடி இருக்க வேண்டும் அவரை வரவேற்பு செய்வதைப் போல ஆலயங்களில் எல்லாம் பூசை! சத்திரம், சாவடிகளிலெல்லாம் சமாராதனை நடத்த வேண்டும்.

வீரன் – 1 : தேவேந்திர பட்டணம் போல சிங்காரித்து வைத்திருக்கிறோம் நகரத்தை .

சிட்னீஸ் : காகப்பட்டர்பட்டரின் வரவேற்பு வைபவத்திலே சங்கீத வித்வான்கள் இருக்க வேண்டும். கவிவாணர்கள் – இயற்றும் புதிய கவிதைகளை அவர்கள் இனிய இசையுடன் சேர்த்துப் பாட வேண்டும்.

வீரன் – 2 : குறைவில்லாதபடி ஏற்பாடு செய்துவிடுகிறோம்.

சிட்னீஸ் : முக்கியமான விஷயம். பிராமணர்களிடம் மிகவும் பயபக்தி விசுவாசத்துடன் மக்கள் நடந்துக் கொள்ள வேண்டும். அவர்கள் மனம் கோணும்படி யாரும் நடந்து கொள்ளக் கூடாது. வருகிறவன் காகப்பட்டர். ஆரியகுலத் தலைவர். ஆகவே ஆரியர்களிடம் தனியான அக்கறை அவருக்கு இருக்கும். அதை அறிந்து நடந்து கொள்ள வேண்டும்

வீரன் – 1 : ஆகட்டும் எங்களால் ஒரு தகராறும் வராது.

சிட்னீஸ் : காகபட்டரின் மனம் மகிழ வேண்டும். மகுடாபிஷேகம் நடைபெற்று மாவீரன் சிவாஜி மகாராஜனானால்தான் மராட்டியமும் மகிழும்; பரதகண்டமும் பூரிப்படையும். ஆகவே, இந்த வரவேற்றைப் பொருத்திருக்கிறது. மராட்டியத்தின் எதிர்கால வாழ்வு. இதையறிந்து காரியங்களைக் கவனியுங்கள். போய்வாருங்கள்.

(தொடரும்)

நன்றி: Project Madurai

முந்தைய பகுதி: சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்

தமிழையும் ஏழைகளையும் கல்வியிலிருந்து ஒழித்துக்கட்ட சதி | புமாஇமு கண்டனம் | காணொளி

0

மாணவர்களின் கல்விக் கட்டணத்தை உயர்த்தும் அண்ணா பல்கலைக் கழகம் !

ண்ணா பல்கலைக் கழகம் இந்த ஆண்டு முதல் கல்விக் கட்டணத்தை சுமார் 130% அதிகரித்திருக்கிறது. இது கிராமப்புறங்களிலிருந்தும், ஏழைக் குடும்பங்களிலிருந்தும் கல்வி பயில வரும் மாணவர்களை உயர்கல்வியை விட்டே விரட்டும் சதிச்செயலாகும். அண்ணா பல்கலையின் சதிச் செயலை அம்பலப்படுத்துகிறார், புமாஇமு-வின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன்.

பாருங்கள் ! பகிருங்கள் !

 

மோடி கூட்டணியுடன் தமிழை அழிக்கத் திட்டமிடும் தமிழக பள்ளிக் கல்வித்துறை !

மிழக பள்ளிக் கல்வித்துறை சமீபத்தில் ஒரு பரிந்துரையை வெளியிட்டுள்ளது. உயர்நிலைப் பள்ளியில் மொழிப் பாடத்தில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் எதாவது ஒரு மொழியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம் என்று மாற்றம் கொண்டுவரப் பரிந்துரைத்துள்ளது. ஏற்கெனவே மக்கள் மத்தியில் ஆங்கில மாயையைப் பரப்பிவிட்டு தமிழ் வழிக் கல்வியை ஒழித்துக் கட்டியிருக்கிறது அரசு.

இந்நிலையில் மொழிப்பாடத்தில் தொற்றிக் கொண்டிருக்கும் தமிழையும் ஒட்டுமொத்தமாக ஒழித்துக்கட்டும் இந்தச் சதியை அமல்படுத்தத் துடிக்கிறது காவிகளின் அடிமை எடுபிடி அதிமுக அரசு. இதனை எதிர்த்து மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் இணைந்து மீண்டும் ஒரு ஜல்லிக்கட்டு போராட்டத்தைத் தொடங்குவோம் என்று அறைகூவல் விடுக்கிறார் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் !

பாருங்கள் ! பகிருங்கள் !

ரஞ்சன் கோகோய் : நீதி செத்துவிட்டது ! நீதிபதிகள் வாழ்க !

1

”நீதி செத்து விட்டது. நீதிபதிகள் வாழ்க” என்கிறது வயர் இணையதளத்தில் வெளியான கட்டுரை ஒன்றின் தலைப்பு. இன்றைக்கு இந்திய நீதித்துறை வந்து சேர்ந்திருக்கும் இழிந்த நிலைக்கு அந்தத் தலைப்பு மிகவும் பொருத்தமானது. “பாமர மக்களின் இறுதி நம்பிக்கை” எனச் சொல்லப்பட்ட நீதித்துறை தன்னளவில் ஒரு கட்டப்பஞ்சாயத்துக் கும்பலாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை புரியாதவர்களுக்கும் புரிய வைத்திருக்கின்றன கடந்த மூன்று வார நிகழ்வுகள்.

உச்ச நீதிமன்றத்தில் பணிபுரிந்து தற்போது பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள பெண் ஊழியர் ஒருவர் கடந்த ஏப்ரல் 19-ம் தேதியன்று பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை எழுப்புகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் 10 மற்றும் 11-ம் தேதிகளில் தனக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறலை வாக்குமூலமாக (affidavit) தயாரித்து உச்சநீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகளுக்கும், ஊடகங்களுக்கும் அனுப்புகிறார். இவ்வாறான பாலியல் அத்துமீறல்கள் குறித்த புகார்கள் எழும் போதெல்லாம் கூடவே தோன்றும் ஒரு கேள்வி, ”ஏன் இத்தனை தாமதமாக குற்றச்சாட்டு எழுப்பப்படுகின்றது?” என்பதே. அந்தக் கேள்விக்கான விடையை அவரது வாக்குமூலத்திலிருந்தே நாம் பார்க்கலாம். அந்த வாக்குமூலம் ஒரு உண்மைக் கதையைச் சொல்கிறது. அது உண்மையானது மட்டுமல்ல துயரமானது.

இது தனக்கு இழைக்கப்பட்ட அநீக்கு நீதி வேண்டியதால் அல்ல – மாறாக அந்த அநீதிக்கு உடன்பட்டுப் போகவில்லை என்பதால் ஒரு குடும்பமே வல்லூறுகளால் சிதைக்கப்பட்ட கதை. வேலை இழப்புகள், பொருளாதார இழப்பு, உடல் ரீதியிலும், உளவியல் ரீதியிலும் சித்திரவதைகள், பொய் வழக்குகள் என நீளும் அதிகாரத்தின் இரத்த வெறி பிடித்த கரங்கள் ஒரு குடும்பத்தை நிர்கதியாக்கிய கதை. அனைத்து முனைகளிலும் நம்பிக்கை இழந்த அந்தப் பெண் இப்போது “நான் இழப்பதற்கு ஒன்றுமே இல்லை.. தேவையெல்லாம் நீதி ஒன்றுதான்” என ஓடுவதை நிறுத்தி விட்டு தன்னைத் துரத்திக் கொண்டிருக்கும் வேட்டை நாய்களை எதிர்நோக்கித் திரும்பியிருக்கிறார்.

♦ ♦ ♦

தில்லியைச் சேர்ந்த அந்தப் பெண்ணுக்கு இப்போது 35 வயது. ராஜஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட தலித். திருமணமான புதிதில் தனியார் துறையில் வேலை பார்த்து வந்துள்ளார். கணவருக்கு காவல்துறையில் வேலை – கான்ஸ்டபிள். ஒரு பெண் குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் ஆனபோது வேலையிலும் தொடர்ந்து கொண்டு குழந்தையையும் பராமரிப்பது சிரமமாக இருக்கவே வேலையை இராஜினாமா செய்கிறார். குழந்தையை கவனித்துக் கொண்டே அரசு வேலைக்கு முயற்சித்து வந்தவருக்கு, உச்ச நீதிமன்றத்தில் ஒரு பணி வாய்ப்பு இருப்பது தொடர்பான பத்திரிகை விளம்பரம் கணவரின் மூலம் தெரிய வருகிறது.

அந்தப் பணிக்கு விண்ணப்பித்து அதற்கான தேர்வில் வெல்லும் அந்தப் பெண், 2014-ம் ஆண்டு மே மாதம் பணியில் சேர்கிறார். உச்சநீதிமன்றத்தில் பணி என்றதும், சட்டம் குறித்த படிப்பு அவசியம் எனக் கருதி 2015-ம் ஆண்டு சட்டக் கல்லூரியிலும் சேர்கிறார். உச்சநீதிமன்ற நூலகத்தில் தட்டச்சு செய்வது மற்றும் ஆவணப் பராமரிப்பு, நீதிபதிகளுக்குத் தேவையான நூல்களை எடுத்துக் கொடுப்பது போன்றவை இவருக்கான பணி. இதையடுத்து நீதிபதிகளின் அவைகளில் வாய்ப்பும் இவருக்குக் கிடைக்கிறது. 2014-15 மற்றும் 2015-16 ஆகிய வருடங்களில் இவரது செயல்பாடு சிறப்பாக இருந்ததாக, அந்தந்த வருடங்களின் பணி மதிப்பீட்டு ஆவணங்களில் (appraisal) குறிப்பிடப்பட்டுள்ளது.

2016 அக்டோபர் மாதம், நீதிபதி ரஞ்சன் கோகோயின் அவையில் பணியமர்த்தப்படுகிறார். அதன்பின் மெல்ல மெல்ல இவர்மேல் நீதிபதியின் அக்கறை திரும்புகின்றது. குறிப்பான புத்தகங்களைத் தேடி எடுத்துக் கொடுப்பது, தீர்ப்பு விவரங்களை தேடிக் கொடுப்பது என நேரடியாக நீதிபதியே சில வேலைகளை அளிக்கிறார். ஒரு கட்டத்தில் இவரோடு பேசுவதற்காக செல்பேசி ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார். வெகு சிலருடன் மட்டுமே தொடர்பு கொள்ளும் செல்பேசி எண்ணில் இருந்து வாட்சப் மூலம் பேசத் துவங்கியிருக்கிறார் கோகோய்.

அந்த செல்பேசியை எப்படிப் பயன்படுத்துவது என்பதற்கும் ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளார் நீதிபதி. குடும்பத்தினர், நண்பர்களின் முன் பேசக் கூடாது, வாட்சப் மூலம் மட்டுமே பேச வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். வாட்சப்பில் பேசுவது மறையாக்கம் செய்யப்பட்டிருக்கும் என்பதோடு அதை பதிவு செய்வதும் எளிதல்ல என்பது குறிப்பிடத்தக்கது. வேலை நேரத்தில் பேசுவதைத் தாண்டி இரவு நேரங்களிலும் ஏதாவது ஒரு முகாந்திரத்தை ஏற்படுத்திக் கொண்டு பேசி வந்துள்ளார் கோகோய்.

2018 ஆகஸ்ட் மாதம் முதல் அந்தப் பெண்ணின் பணியிடத்தை தனது இருப்பிட அலுவலகத்திற்கே மாற்றியுள்ளார் கோகோய். அவர் நீதிமன்றத்திற்கு கிளம்புவதற்கு முன்பே பணிக்கு வரவேண்டும், நீதிமன்றத்தில் இருந்து வீடு திரும்பிய பின்னரே இவர் கிளம்பிச் செல்ல முடியும். ஒரு கட்டத்தில் ஒவ்வொரு நாள் காலையிலும் “காலை வணக்கம்” என்றும் இரவு வீடு திரும்பியதை தெரிவிக்கவும் வாட்சப் மூலம் மெசேஜ் அனுப்ப வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மதிப்பு மிக்க ஒரு பதவியில் இருக்கிறவர், 64 வயதனவர் என்பதால் நீதிபதியின் இது மாதிரியான கோரிக்கைகளுக்கு உள்நோக்கம் எதுவும் இருப்பதாக அந்தப் பெண் சந்தேகிக்கவில்லை. மாறாக, வேலையில் ஜூனியரான தனக்கு ஒரு தலைமை நீதிபதியின் கீழ் பணிபுரிய வாய்ப்புக் கிடைத்திருப்பதையும், அதன் மூலம் சட்ட நுணுக்கங்களைக் கற்றுக் கொள்ள முடிவதையும் எண்ணி அவர் பெருமிதம் கொண்டிருக்கிறார்.

இதற்கிடையே கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம், எதிர்கால திட்டங்கள் குறித்து நீதிபதி கேட்டறிந்துள்ளார். அதன்படி அவரது மாற்றுத்திறனாளி சகோதரர் ஒருவர் வேலையின்றி இருப்பதை அறிந்து கொண்ட தலைமை நீதிபதி, தனது பதவிக்கென இருக்கும் ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி அவருக்கு வேலை வாங்கிக் கொடுத்துள்ளார். அக்டோபர் 3-ம் (2018) தேதி தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட ரஞ்சன் கோகோய், சரியாக ஒரே வாரத்தில் அந்தப் பெண்ணின் சகோதரருக்கு வேலை வாங்கிக் கொடுத்துள்ளார்.

அக்டோபர் 10-ம் தேதி பணி நியமன உத்தரவுடன் தனது வீட்டுக்கு வந்த நீதிபதி அந்தப் பெண்ணை தனது அலுவலகத்திற்கு வரவழைத்துள்ளார். மருத்துவ பரிசோதனையின் படி அவரது சகோதரருக்கு போதிய உடல் தகுதி இல்லை என்றாலும் தனது செல்வாக்கின் மூலம் வேலை வாங்கிக் கொடுத்திருப்பதாக சொன்ன நிதிபதி, இதற்காக எனக்கு என்ன செய்யப் போகிறாய் எனக் கேட்டுள்ளார். அதற்கு பதிலாக நன்றியுடன் இருப்பேன் என அந்தப் பெண் தெரிவித்திருக்கிறார்.

அப்போது தனது இருக்கையில் இருந்து எழுந்து அந்தப் பெண்ணை நெருங்கிய தலைமை நீதிபதி அவரது முதுகை வருடிக் கொடுத்து, கன்னத்தைக் கிள்ளியிருக்கிறார். நீதிபதியின் செயலால் உறைந்து போயிருக்கிறார் அந்தப் பெண். அதை கவனித்த நீதிபதி, இப்படித்தான் என் மகளிடமும் நடந்து கொள்வேன் என சிரித்தபடி கூறியுள்ளார். மேலும், தனக்கு என்ன கைமாறு செய்யப் போகிறாய் என்பதை மறுநாள் எழுதி எடுத்து வருமாறு கூறிச் சென்றுள்ளார்.

இதற்கு மறுநாள், அக்டோபர் 11-ம் தேதி காலை, அந்தப் பெண்ணை தனது அலுவலக அறைக்கு அழைத்த நீதிபதி மீண்டும் அதே பேச்சை எடுத்துள்ளார் – “எனக்கு என்ன கைமாறு செய்யப் போகிறாய்?”. மீண்டும் அந்தப் பெண் உங்களுக்கு நன்றியுடையவர்களாக எங்கள் குடும்பம் இருக்கும் எனக் கூறியிருக்கிறார். நீதிபதி சொன்னது போல் ஒரு துண்டுச் சீட்டில் எழுதி எடுத்துச் சென்றுள்ளார். அதை ஏறெடுத்துப் பார்க்காத தலைமை நீதிபதி, அந்தப் பெண்ணின் அருகில் சென்று கட்டிப்பிடித்துக் கொண்டே “எனக்கு இதுதான் தேவை” என்றுள்ளார். அதிர்ச்சியில் என்ன செய்வதெனத் தெரியாமல் ஒரு கணம் உறைந்து விட்ட அந்தப் பெண் உடனே சுதாரித்துக் கொண்டு நீதிபதியைப் பிடித்து தள்ளி விட்டுள்ளார். அதில் ரஞ்சன் கோகோயின் தலை புத்தக அலமாரியில் இடித்துக் கொண்டிருக்கிறது. உடனே அங்கிருந்து வெளியேறி தனது அலுவலக அறைக்குச் சென்றுள்ளார் அந்த பெண்.

நாட்டிலேயே உச்சபட்ச அதிகாரம் கொண்ட ஒருவர் – இந்த நாட்டின் தலைமை நீதிபதியே தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்ட அதிர்ச்சியில் என்ன செய்வதென்றே தெரியாமல் உடைந்து போயிருக்கிறார் அந்தப் பெண். சிறிது நேரம் கழித்து தனது அலுவல் அறைக்கு வருமாறு நீதிபதி அழைக்கவே அங்கே சென்றுள்ளார். அங்கே நடந்ததை அப்படியே மறந்து விடும்படியும், வெளியே சொன்னால் உனது குடும்பம் நிம்மதியாக இருக்காது என்றும் நீதிபதி மிரட்டியுள்ளார். மேலும், அவரது கையில் ஒரு வெள்ளைத் தாளைக் கொடுத்து தான் சொல்லும்படி எழுதுமாறு கேட்டுள்ளார். என்ன செய்வதெனத் தெரியாத குழப்பத்தில் அந்தப் பெண் நீதிபதி சொல்வதை எழுதியுள்ளார். அந்த சம்பவத்தையே தலைகீழாக திருப்பி, அந்தப் பெண் தான் நீதிபதியிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதைப் போல் சித்தரிக்கும் விதமாக கோகோய் எழுதி வாங்கியுள்ளார்.

அன்றைக்கு இரவு வீடு திரும்பியவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது

♦ ♦ ♦

திலக் நகர் காவல் நிலைய பொறுப்பதிகாரி அந்தப் பெண்ணின் அக்கம் பக்கம் வீட்டாரிடமும், அவர் இருந்த குடியிருப்பின் நலச் சங்கத் தலைவரிடமும் தொலைபேசியில் அழைத்து அவருக்கும் அவரது கணவருக்கும் ஏதேனும் பிரச்சினைகள் இருந்ததா என விசாரித்துள்ளார். பணி முடிந்து வீடு திரும்பிய அப்பெண்ணிடம் இவ்வாறு விசாரிக்கப்பட்டதை அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். இனிமேலும் தலைமை நீதிபதியின் வீட்டில் பணி புரிய முடியாது என முடிவெடுத்த அப்பெண் உடனே ரஞ்சன் கோகோயை அழைத்து தனது முடிவைத் தெரிவிக்க முயன்றுள்ளார். தொலைபேசியை நீதிபதி எடுக்கவில்லை; ஆனால் சிறிது நேரம் கழித்து நீதிபதியின் உதவியாளர் அழைத்து இரவு நேரங்களில் நீதிபதியை அழைக்கக் கூடாது என மிரட்டியுள்ளார்.

மறுநாளில் இருந்து நீதிபதியின் நடத்தையில் பெரும் மாற்றங்கள் தெரியத் துவங்கியுள்ளது. எப்போதும் தனியே அழைத்துப் பேசும் நீதிபதி, அன்றிலிருந்து யாராவது ஒருவரை உடன் வைத்துக் கொண்டே பேசியிருக்கிறார். அறையின் கதவைத் திறந்தே வைத்திருக்கிறார். மற்றபடி வழக்கம் போல் “காலை வணக்கம்” தெரிவித்து மெசேஜ் அனுப்ப வேண்டும் எனவும், மற்ற வேலைகளும் எப்போதும் போல் நடக்க வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார். தொடர்ந்த நாட்கள் மிக இறுக்கமாகச் சென்றுள்ளன. அக்டோபர் 22 (2018) தசரா விடுமுறைகளுக்குப் பின் நீதிமன்றம் செயல்படத் துவங்கிய முதல் நாளிலேயே அந்தப் பெண் பணியிட மாறுதல் செய்யப்படுகிறார்.

சில நாட்கள் கழித்து அந்த பெண்ணின் புதிய வேலை இடத்திற்கு வேறு இரண்டு நீதிபதிகளோடு சென்ற ரஞ்சன் கோகோய், அவரது வேலையை அனைவரின் முன்பும் பாராட்டி பேசியுள்ளார். பிறகு தனியே அழைத்து மீண்டும் தனது நீதி அவையில் பணிபுரிய முடியுமா எனக் கேட்டுள்ளார். அதை மறுத்து விட்ட அப்பெண், தான் தற்போது பார்த்துக் கொண்டிருக்கும் வேலையே திருப்தியளிப்பதாகச் சொல்லியுள்ளார்.

அதைத் தொடர்ந்து அவர் பிரச்சினைகளின் நீண்ட வரிசை ஒன்றை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. குறுகிய நாட்களுக்குள் ஒவ்வொரு துறையாக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார். நவம்பர் 16-ம் தேதியன்று அவரது இருக்கையை எடுத்து பொருட்கள் நிர்வகிக்கும் அறைக்குள் போட்டிருக்கிறார்கள். நவம்பர் 17-ம் தேதி (சனிக்கிழமை) நீதிமன்றம் அரை நாள் செயல்படும். அன்றைக்கு அவரின் மகளுடைய பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிக்காக அரை நாள் விடுப்பு எடுத்துள்ளார்.

அன்றைக்கு மாலை அவரை உடனடியாக நீதிமன்றம் வருமாறு அழைத்துள்ளனர். ஆனால், குழந்தையை அழைத்துச் செல்ல கணவர் வரவில்லை என்பதைச் சொல்லி வர முடியாத நிலையை விளக்கியிருக்கிறார். நவம்பர் 19-ம் தேதி உச்சநீதிமன்றப் பதிவாளர் நடத்தை விதிகளின் கீழ் விளக்க கடிதம் (மெமோ) ஒன்றை அனுப்பியுள்ளார். அதாவது, முறையற்ற விடுமுறை எடுப்பது, பணியிட மாற்றத்துக்கு உட்பட மறுப்பது, உயரதிகாரிகளின் உத்தரவுகளுக்கு கீழ்படிய மறுப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது என அதில் கேட்டுள்ளார் உச்சநீதிமன்ற பதிவாளர். இதற்கு 22-ம் தேதி பதிலளித்த அப்பெண், தான் உயரதிகாரிகளின் உத்தரவுகள் எதையும் மீறவில்லை எனவும், பணியிட இருக்கை மாற்றத்திற்காக யாரையும் அணுகவில்லை எனவும், 17-ம் தேதி குழந்தையின் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்காக விடுப்பு கேட்டிருந்ததையும் தனது பதிலில் குறிப்பிட்டிருந்தார்.

எனினும், அவரது பதில் திருப்தியளிக்கவில்லை என மற்றும் ஒரு மெமோ அனுப்பியுள்ளார் பதிவாளர். மறுநாள் அவரிடம் பணி இடைநீக்க உத்தரவை அளித்துள்ளனர். டிசம்பர் பத்தாம் தேதி துறைவாரியான நடவடிக்கை மற்றும் விசாரணை குறித்த கடிதம் ஒன்று வந்துள்ளது. அதற்கு பதிலளித்த அப்பெண், தன் சார்பில் வாதாட ராஜ்யசபை ஊழியர் லக்‌ஷ்மன் சிங் நெகியை அனுமதிக்க வேண்டியுள்ளார் – இது சட்டப்பூர்வமாக அனுமதிக்கக் கூடியதே என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், அவ்வாறான அனுமதி அவருக்கு கிட்டவில்லை.

இதற்கிடையே டிசம்பர் 17-ம் தேதியன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைப்பு வந்துள்ளது. குறிப்பிட்ட நாளில் விசாரணைக்காக உச்சநீதிமன்ற வளாகம் சென்ற அந்தப் பெண்ணுக்கு திடீரென அச்சத் தாக்குதல் (panic attack) ஏற்பட்டுள்ளது. மயங்கி விழுந்த அவரை அங்கிருந்த ஊழியர்கள் ராம் மனோகர் லோகியா மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும், மயக்கடைவதற்கு முன்பே தான் வளாகத்திற்குள் வந்து விட்ட தகவலை அலுவலக உதவியாளரின் மூலம் விசாரணை அதிகாரிக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

படிக்க:
“ராடாரேந்திர மோடி !” – மோடியை வறுத்தெடுத்த வலைத்தளவாசிகள் !
ஒரு விரல் புரட்சியால் ஈரானிடம் எண்ணெய் வாங்க முடியுமா ?

அதற்கு மறுநாள் விசாரணை அதிகாரி கடிதம் ஒன்றை அனுப்புகிறார். அதில் விசாரணைக்கு அவர் வரவில்லை எனவும், குற்றம் ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தற்போது (ஏப்ரல் 19-ம் தேதி) அந்தப் பெண் அனுப்பிய வாக்குமூலப் பிரமாணத்தில் அவர் மருத்துவமனைக்கு மயங்கிய நிலையில் கொண்டு செல்லப்பட்டது குறித்தும், தனது நிலை அங்கிருந்த ஊழியர்களுக்கு தெரிந்தது குறித்தும், மருத்துவமனையின் பரிசோதனை அறிக்கை போன்றவற்றையும் இணைத்துள்ளார். இறுதியாக டிசம்பர் 21-ம் தேதி அவரது வேலை பறிக்கப்படுகிறது.

திட்டமிடப்பட்ட சதி நோக்குடன் அந்தப் பெண்ணின் வேலை பறிக்கப்பட்டதோடு வேட்டை நாய்களின் வெறி அடங்கவில்லை. அவரது குடும்பத்தினரும் அநியாயமான முறையில் பழிவாங்கப்பட்டுள்ளனர்.

♦ ♦ ♦

டிசம்பர் 28ம் தேதி தில்லி காவல் துறையில் பணிபுரிந்து வந்த அவரது கணவர் மற்றும் சகோதரர் எவ்வித காரணங்களும் சொல்லப்படாமல் பணி இடை நீக்கம் செய்யப்படுகின்றனர். தனிப்பட்ட முறையில் அவர்கள் என்ன காரணம் என்று கேட்ட போது, “மேலிடத்தில் இருந்து வரும் அழுத்தம்” என்று சொல்லப்பட்டுள்ளது. அன்றைக்கே உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் அலுவலகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவரைத் தொடர்பு கொள்ளும் அப்பெண்ணின் கணவர், “தங்கள் வாழ்க்கையே சீரழிந்து போய் விட்டது”, எனக் கதறி ரஞ்சன் கோகோயைச் சந்திக்க உதவுமாறு கேட்டுள்ளார். தனக்கு ஏதும் தெரியாது என்று தொலைபேசியைத் தொடர்பைத் துண்டித்துக் கொண்ட அந்த அதிகாரி, அதன் பின் இவரது எண்ணை பிளாக் செய்துள்ளார்.

டிசம்பர் 28-ம் தேதி பணி இடைநீக்கம் செய்யப்பட்ட அவருக்கு அதற்கான விளக்கம் ஜனவரி 2-ம் தேதிதான் அதிகார்ப்பூர்வமாக மாவட்ட கண்காணிப்பாளரிடம் இருந்து கிடைக்கிறது. அதாவது, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் அலுவலகத்திற்கு தேவையற்ற முறையில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதே பணி இடை நீக்கத்திற்கு காரணம் என்றது அந்த விளக்க கடிதம். மீண்டும் ஜனவரி 9-ம் தேதி மற்றுமொரு விளக்க கடிதம் அளிக்கப்படுகிறது; அதில், அப்பெண்ணின் கணவருக்கும் சகோதரருக்கும் உள்ளூர் சூதாட்டக் கும்பலோடு தொடர்பு இருந்ததே பணி இடை நீக்கத்திற்கு காரணம் என்கிறது. மேலும் 2012-ம் ஆண்டு இவர்களுக்கு எதிராக பதியப்பட்ட வழக்கும் ஒரு காரணமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும், அந்த வழக்கு அப்போதே தீர்க்கப்பட்டு விட்டது என்கிறார் அப்பெண்.

ஜனவரி 10-ம் தேதி திலக் மார்க் காவல் நிலைய பொறுப்பதிகாரியிடம் இருந்து அப்பெண்ணின் கணவருக்கு அழைப்பு வருகிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயைச் சந்தித்து மன்னிப்புக் கேட்டால் எல்லா பிரச்சினையும் தீர்ந்து விடும் என்று அந்த அதிகாரி ஆலோசனை கூறுகிறார். அதற்குத் தயார் என முன்வரும் கணவர், அந்த உரையாடலை பதிவு செய்து வைத்துக் கொள்கிறார். ஜனவரி 11-ம் தேதி மீண்டும் திலக் மார்க் காவல் நிலையத்திற்கு கணவருடன் செல்கிறார் அப்பெண். பொறுப்பதிகாரி சோலங்கி தனது தொலைபேசியின் மூலம் உச்சநீதிமன்றப் பதிவாளர் தீபக் ஜெயினிடம் எப்படி எப்போது தலைமை நீதிபதி வீட்டுக்குச் செல்வது எனக் கேட்கிறார். பின்னர் தனது சொந்தக் காரில் இவர்களை நீதிபதியின் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார்.

நீதிபதியின் வீட்டிற்கு இவர்கள் சென்றபோது அங்கே ரஞ்சன் கோகோய் இல்லை. மாறாக உச்சநீதிமன்ற பதிவாளர் தீபக் ஜெயினும் கோகோயின் மனைவியும் இருந்துள்ளனர். இவர்களைப் பார்த்த கோகோயின் மனைவி, “மூக்கு தரையில் பட குப்புற விழுந்து மன்னிப்புக் கேள்” எனக் கேட்டிருக்கிறார். அதன்படி மன்னிப்புக் கேட்டுள்ளனர் இருவரும். மீண்டும் அவர்களைக் காவல் நிலையம் அழைத்து வந்த சோலங்கி, இனிமேல் பிரச்சினைகள் தீர்ந்து விடும் என்றும் மீண்டும் பழைய வாழ்க்கை கிடைத்து விடும் என்றெல்லாம் உறுதி கூறுகிறார். மேலும், இந்தப் பிரச்சினை குறித்து யாரிடமும் பேசக் கூடாது என்றெல்லாம் அறிவுறுத்துகிறார். இந்த உரையாடலையும் தம்பதியினர் பதிவு செய்து வைத்துள்ளனர்.

ஆனால் சொன்னபடி எந்த வகையிலும் பிரச்சினைகள் ஓய்ந்தபாடில்லை. ஜனவரி 14-ம் தேதி அவருடைய மாற்றுத் திறனாளி சகோதரரின் வேலை பறிக்கப்படுகிறது. தொடர்ந்த நாட்களில் அச்சத் தாக்குதலும், உளவியல் அழுத்தங்களும் அதிகரிக்கின்றன. ஒருகட்டத்தில் அவருடைய ஒரு காது கேட்கும் திறனை இழக்கிறது. கோகோயின் மனைவியை அந்தப் பெண் சந்தித்த பின், சரியாக ஐம்பது நாட்கள் கழித்து (மார்ச் 3-ம் தேதி) தில்லி திலக் மார்க் காவல் நிலையத்தில் அந்தப் பெண்ணின் மீது முதல் தகவல் அறிக்கை ஒன்று பதிவு செய்யப்படுகிறது. அதாவது ஹரியாணாவைச் சேர்ந்த நவீன் குமார் என்பவரிடம் உச்சநீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக லஞ்சம் பெற்று ஏமாற்றியதாகப் புகார்.

இதில் வேடிக்கை என்னவென்றால், லஞ்சம் கொடுப்பதே குற்றம் என்ற நிலையில் புகாரளித்தவரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக, ராஜஸ்தானில் உள்ள தனது பூர்வீக கிராமத்திற்கு குடும்பத்துடன் சென்றிருந்த அந்தப் பெண்ணை கைது செய்ய ஒரு விசேட போலீசு படை அங்கே விரைகிறது. அந்தப் பெண், அவரது கணவர், வழக்குடன் எந்த தொடர்பும் இல்லாத அவரது சகோதரி என அனைவரையும் விலங்கு பூட்டிக் கைது செய்கிறது போலீசு. இதில் அந்தப் பெண்ணின் காலில் விலங்கைப் பூட்டி அதை போலீசு ஜீப்பின் இருக்கையோடு பிணைத்த நிலையில் அங்கிருந்து தில்லிக்கு அழைத்து வந்துள்ளனர். ஏறக்குறைய ஒரு பயங்கரவாதக் கும்பலைக் கையாள்வதைப் போல் அந்தக் குடும்பத்தை அன்றைக்கு அலைக்கழித்துள்ளது போலீசு.

அதன்பின் திகாரில் அடைக்கப்பட்ட அந்தப் பெண்ணின் மேல் உடல் ரீதியிலும் உளவியல் ரீதியிலும் ஏராளமான சித்திரவதைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இதற்கிடையே தற்போது கேரவன், தி வயர், லீஃப்லெட் போன்ற பத்திரிகையைச் சேர்ந்த நிருபர்கள் புகாரளித்த நவீன் குமாரைச் சந்தித்து பேசியுள்ளனர். வழக்கு குறித்தும், தனது புகார் குறித்தும் முன்னுக்குப் பின் முரணாக பேசும் நவீன் குமார், இந்த வழக்கை நடத்த வேண்டும் என்பதிலோ, ஏமாற்றப்பட்ட தனக்கு “நீதி” கிடைக்க வேண்டும் என்பதிலோ எந்த முனைப்பும் காட்டவில்லை என்பதை பத்திரிகையாளர்கள் பதிவு செய்துள்ளனர். மிகத் துலக்கமாகத் தெரியும் உண்மை என்னவென்றால், அந்தப் பெண்ணை வேட்டையாடும் ஒரே நோக்கத்திற்காகவே இந்த வழக்கை ஜோடித்துள்ளனர்.

சிறையில் இருந்து பிணையில் வெளி வந்திருக்கும் அந்தப் பெண் இப்போது ஒரு முடிவுக்கு வந்து விட்டார். இழப்பதற்கு எதுவுமே இல்லாத வகையில் அவரிடமிருந்த அனைத்தும் பறிக்கப்பட்டு விட்டன. வேலைகள் பறிக்கப்பட்டு பொருளாதார ரீதியில் நொறுக்கப்பட்டு விட்ட அந்தக் குடும்பத்தின் நிம்மதியும் சீர்குலைக்கப்பட்டு விட்டது. வயர், கேரவன் உள்ளிட்ட பத்திரிகைகளுக்கு பேட்டியளித்துள்ள அந்தப் பெண்ணிடம் ”தலித் பின்னணி கொண்ட நீங்கள் சமூகத்தில் ஒரு இடத்தைப் பிடிக்க நிறைய போராடியிருப்பீர்கள், அதைப் பற்றி சொல்லுங்கள்” என கேட்டனர் பத்திரிகையாளர்கள். அதற்கு அந்தப் பெண் அளித்த பதில் –

“சாதியைத் தெரிந்து கொண்ட பின் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள். அதன் பின் உங்களுக்கு எந்த முக்கியத்துவமும் கிடைக்காது. உங்கள் வேலையில் அசாதாரணமான சாதனைகள் புரியாவிட்டால் வாழ்க்கையில் எதுவுமே கிடைக்காது. நான் எனது சாதி அடையாளத்தை பின்னுக்குப் போட்டு விட்டு மற்ற “சாதாரண மனிதர்களைப்” போல் நடக்க வேண்டும் என்றே முயற்சித்தேன்.

எனக்கு தனியார் பள்ளியில் கல்வி கிடைக்கவில்லை. எங்களைப் போன்றவர்கள் எங்கே போய் படிக்க முடியுமோ அங்கே படித்தேன் – அரசுப் பள்ளியில்தான் படித்தேன். சில நேரம் இதையெல்லாம் நான் மறைத்துக் கொள்ள வேண்டியிருந்தது. நீங்கள் இந்தப் பிரிவைச் சேர்ந்தவர் என்பது தெரிந்தால் மற்றவர்கள் உங்களை விட்டு விலகிச் சென்று விடுவார்கள்.”

பேட்டியின் மற்றோர் இடத்தில்….

”நான் ஒரு விளையாட்டு வீராங்கனை. கூடைப் பந்தாட்டம் மற்றும் நீச்சல் போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். நான் எதைச் செய்தாலும், அதில் 100 சதவீத திறமையை வெளிப்படுத்துவேன். கோகோயின் அலுவலகத்திலும் அப்படித்தான். எனது 100 சதவீத திறமையை வேலையில் வெளிப்படுத்தினேன்”

சமூகத்தின் ஒடுக்கப்பட்ட பிரிவிலிருந்து போராடி தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி வைத்திருந்தார் அந்தப் பெண். இன்றைக்கு அவையத்தனையும் அதிகாரப் பசி கொண்ட ஓநாய்கள் குதறிப் போட்டு விட்டன. அவரே சொல்வது போல் இனி அவர் இழப்பதற்கு ஒன்றுமே இல்லை; ஆனால் அடைவதற்கு நீதி உள்ளது.

ஆனால் அவருக்கு நீதி கிடைக்குமா?

♦ ♦ ♦

ந்தப் பெண்ணின் வாக்குமூலம் உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் அனைவருக்கும், பத்திரிகையாளர்களுக்கும் அனுப்பப்பட்டு அவை பொதுவெளியிலும் வெளியாகின. உடனடியாக தன்னையும் உள்ளடக்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒன்றை ஏற்படுத்திய ரஞ்சன் கோகோய், தன் மீதான புகாரை தானே விசாரித்தார். இது கிராமத்து நாட்டாமைகளின் பஞ்சாயத்துகளில் கூட காணக் கிடைக்காத ஒரு காட்சி. விசாரணையின் முடிவில் தன்னுடைய சொற்ப வங்கிக் கையிருப்பை தனது யோக்கியதாம்சத்துக்கு சாட்சியாக சுட்டிக்காட்டினார் ரஞ்சன் கோகோய். மேலும், பத்திரிகைகள் இந்தக் குற்றச்சாட்டுகளை விவாதிக்கக் கூடாதென்றும், புகாரை விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட மற்றுமொரு அமர்வு அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

முதலாவதாக அமைக்கப்பட்ட மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வால், மற்றுமொரு மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வும், இந்த விவகாரத்தில் தலைமை நீதிபதியை வீழ்த்தும் சதி இருப்பதாக போடப்பட்ட பொதுநல வழக்கை விசாரிக்க மூன்றாவதாக ஒரு அமர்வும் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் இரண்டாவதாக அமைக்கப்பட்ட மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு நீதிபதிகள் பாப்டே, ரமணா மற்றும் இந்து மல்ஹோத்ரா ஆகியோரை கொண்டு அமைக்கப்பட்டது. இதில் நீதிபதி ரமணா ரஞ்சன் கோகோய்க்கு நெருக்கமானவர் என்பதையும், பாலியல் புகாரை விசாரிக்கும் கமிட்டியில் பெரும்பான்மையாக ஆண்களே இருப்பதையும் சுட்டிக்காட்டி அந்தப் பெண் ஆட்சேபித்தார். அதையடுத்து ரமணா அந்த அமர்விலிருந்து விலகிக் கொள்ள, அந்த இடத்திற்கு தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் “மனசாட்சி” புகழ் இந்திரா பானர்ஜி நியமிக்கப்படுகிறார்.

இந்த அமர்வு இரண்டுமுறை அந்தப் பெண்ணை அழைத்து விசாரித்துள்ளது. முதல் நாளன்று நடந்த விவகாரங்களை அப்படியே சொல்லுமாறு அவரிடம் கேட்டுவிட்டு இந்த வழக்கின் சாதகபாதகங்கள், என்னென்ன சாத்தியங்கள் உள்ளன என்பதைப் பற்றியெல்லாம் “எடுத்து” எடுத்து சொல்லியிருக்கிறார்கள். இரண்டாம் நாள் அந்தப் பெண்ணை மிரட்டும் விதமாக கறாராக பேசியிருக்கின்றனர். இந்த விசாரணையின் போது அந்தப் பெண் தன்னுடன் ஒரு வழக்குரைஞரை வைத்துக் கொள்ளவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விவாதிக்கப்படும் விசயங்களில் நிறைய சட்ட மொழியில் இருப்பதால் ஒரு வழக்குரைஞர் தேவை என்பதை முதல் நாளில் இருந்தே அந்தப் பெண் வலியுறுத்தி உள்ளார். மேலும், கடந்த சில மாதங்களாக நடந்த கொடூரங்களின் விளைவாக ஏற்பட்ட மன அழுத்தத்தில் தனது ஒரு காது கேட்கும் திறனை முற்றிலுமாக இழந்து விட்டதால் தன்னுடன் ஒரு வழக்கறிஞர் இருந்தால்தான் நீதிபதிகள் கேட்கும் கேள்விகளைப் புரிந்து கொண்டு பதில் அளிக்க முடியும் என்றும் முன்வைத்துள்ளார்.

அதே போல் விசாரணையின் விவரங்கள், விசாரணையின் போது தனது தரப்பில் சொல்லப்பட்டவைகளை பதிவு செய்து அளிக்க வேண்டும் என்றும், ரஞ்சன் கோகோய் தன்னிடம் தொலைபேசியில் பேசிய விவரங்களை தொலைத்தொடர்புத் துறையிடம் இருந்து பெற்று அதையும் சாட்சியமாக எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் அந்தப் பெண் கோரியுள்ளார். இவையனைத்தும் நியாயமான கோரிக்கைகள். எனினும் இவையனைத்தையும் மேன்மை தங்கிய நீதிபதிகள் நிராகரித்துள்ளனர். வேறு வழியின்றி மூன்றாம் விசாரணையின் போது தனக்கு இந்த அமர்வின் மீது நம்பிக்கை இல்லை எனக் கூறி விசாரணையில் இருந்து விலகியுள்ளார் அந்தப் பெண்.

அதன் பின் ரஞ்சன் கோகோயையும் விசாரிப்பதாக ஒரு நாடகத்தை நடத்தி விட்டு “அவர் மேல் எந்தக் குற்றமும் இல்லை” என்பதை அந்த அமர்வு ஒருதலைபட்சமான முறையில் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் அந்தப் பெண் தன்னந்தனியாக ஒரு தரப்பாக நிற்க அவருக்கு எதிராக உச்சநீதிமன்ற நீதிபதிகள், தலைமை நீதிபதி, உச்சநீதிமன்ற பதிவாளர், காவல் துறை என அரசின் உறுப்புகள் அனைத்தும் ஒரே தரப்பாக கரம் கோர்த்து நின்றன.

பாதிக்கப்பட்ட, காது கேளாத ஒரு பெண்ணுக்கு வழக்கறிஞரை அமர்த்தும் உரிமையைக் கூட மறுத்து விட்டு ஒரு தலைப்பட்சமாக நடந்த விசாரணையையும், இந்த தீர்ப்பையும் கண்டித்து ஜனநாயகத்தில் இன்னும் நம்பிக்கை கொண்டவர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர் – அவர்களை குண்டுக்கட்டாக கைது செய்தது போலீசு.

அக்டோபர் 10 மற்றும் 11-ம் தேதிகளில் ரஞ்சன் கோகோயின் வீட்டில் உள்ள அலுவலக அறையின் பூட்டிய கதவுகளுக்குப் பின்னே நடந்தவைகளுக்கு சாட்சிகள் இல்லை. ஆனால், அந்தக் கதவு திறந்த பின் அதற்கு வெளியே நடந்த அனைத்திற்கும் சந்தர்ப்ப சாட்சியங்கள் உள்ளன. அந்தப் பெண் ஓட ஓட விரட்டப்பட்டுள்ளார்; அவரது குடும்பமே குறிவைத்து தாக்கப்பட்டிருக்கிறது. அவரது குற்றச்சாட்டை குற்றவாளிகளே முன்னின்று விசாரித்து தங்களுக்கே சாதகமான தீர்ப்பை எழுதிக் கொண்டனர். இவையனைத்தும் பட்டப்பகல் வெளிச்சத்தில் நடந்துள்ளது.

படிக்க:
இந்தியாவின் சிறந்த விஞ்ஞானி : செல்லூர் ராஜுவா ? மோடியா ? கருத்துக் கணிப்பு
மே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகள் நினைவை நெஞ்சிலேந்துவோம் ! தூத்துக்குடி மக்கள் அறைகூவல் !

இப்படி வேட்டையாடப்படுவதற்கு அந்தப் பெண் செய்த குற்றம் என்ன? ஜனநாயகத்தின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட “தூணின்” முன் அடிபணிந்து போக மறுத்ததைத் தவிர அந்தப் பெண் யாதொரு குற்றத்தையும் செய்திருக்கவில்லை. எனினும் அவர் ஓட ஓட விரட்டப்பட்டுள்ளார். அவர் கடும் உழைப்பின் மூலம் உருவாக்கிய அனைத்தும் அழித்து நிர்மூலமாக்கப்பட்டுள்ளது. யார் தரப்பில் நியாயம் உள்ளது, யார் தரப்பில் உண்மை உள்ளது என்பதற்கு இந்த சந்தர்ப்ப சாட்சியங்களே போதுமானவை.

இயேசுவின் புகழ்பெற்ற பிரசங்கம் ஒன்றில் இவ்வாறாகச் சொல்வார் – ”உப்பு நல்லதுதான், உப்பு சாரமற்றுப்போனால் எதினால் சாரமாக்கப்படும்? அது நிலத்துக்காகிலும் எருவுக்காகிலும் உதவாது, அதை வெளியே கொட்டிப்போடுவார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்” என்றார்.

அனைத்தையும் இழந்து விட்டு நீதியும் மறுக்கப்பட்டு அழுது கொண்டிருக்கும் அந்தப் பெண்ணின் கண்ணீர்  இந்திய நீதித்துறை சாரமற்றுப் போய் விட்டதை நமக்கு உணர்த்துகின்றது.

♦ ♦ ♦

னநாயகத்துக்கு ஆபத்து என்று பத்திரிகையாளர்களை அழைத்துக் குரல் கொடுத்த 4 நீதிபதிகளில் கோகோயும் ஒருவர். இதற்கு முந்தைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை எதிர்த்துத்தான் அவர் குரல் கொடுத்தார்.

போலி மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பான வழக்கில், லஞ்சம் வாங்கிக்கொடுத்த இடைத்தரகரான ஒரு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியை கையும் களவுமாகப் பிடித்து விட்டது சிபிஐ. மருத்துவக் கல்லூரி தீர்ப்பை வழங்கியவரை தீபக் மிஸ்ரா. குற்றச்சாட்டே அவருக்கு எதிராகத்தான் என்பது தெளிவாகத் தெரிந்த நிலையிலும் தனக்கு எதிரான வழக்கை எந்த நீதிபதி விசாரிக்க வேண்டும் என்று அவரே தீர்மானித்ததுதான் அன்றைய பிரச்சினை. இந்த ஊழலில் தீபக் மிஸ்ரா மோடி அரசிடம் சிக்கிக்கொண்டிருந்த நிலையில்தான், லோயா மரணம் தொடர்பான வழக்கிற்கு உச்ச நீதிமன்றம் சமாதி கட்டியது. அவரை நாடாளுமன்றக் கண்டனத்திலிருந்து காப்பாற்றி விட்டது மோடி அரசு.

அதற்கு முந்தைய தலைமை நீதிபதி தத்து ஜெயலலிதாவுக்கு ஒரு வரியில் பிணை வழங்கிய உத்தமர். அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருந்தார் என்று முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கட்ஜு ஆதாரங்களுடன் குற்றம் சாட்டினார். எதுவும் நடக்கவில்லை.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகளில் மூன்றில் ஒரு பங்கினர் மேல் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடுத்து போடப்பட்ட வழக்கு பல ஆண்டுகளாக அங்கே தூங்குகிறது.

நாலும் மூணும் எட்டு என்று ஜெயலலிதாவுக்கு தீர்ப்பு வழங்கிய கர்நாடக உயர்நீதி மன்ற நீதிபதி குமாரசாமி மட்டுமல்ல, எண்ணற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் மீது ஊழல் புகார்கள் உள்ளன. கார்ப்பரேட் நிறுவனங்களும், ஊழல் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், தொழில் முறை கிரிமினல்களும் மபியா கும்பல்களும் நீதியை விலை பேசி வாங்குவது நாடறிந்த ரகசியம்.

உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தியவர்களும், அதனை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்களும்தான் துன்புறுத்தப் பட்டிருக்கின்றனரேயன்றி, எந்த நீதிபதியும் தண்டிக்கப்பட்டதில்லை.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலுமாக மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஒப்புதலின்றி உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுக்கவியலாது என்ற சட்டப் பாதுகாப்பு, நீதித்துறையின் சுதந்திரத்தைப் பேணும் பொருட்டும், ஜனநாயகத்தின் மற்ற இரு தூண்களான நாடாளுமன்றமும், நிர்வாக எந்திரமும் அத்து மீறும்போது, அரசமைப்பு சட்டத்தையும் மக்கள் உரிமைகளையும் பாதுகாக்கும் நோக்கத்துக்காகத்தான் வழங்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

ஆனால் அரசமைப்பு சட்டத்துக்கும் மக்கள் உரிமைகளுக்கும் எதிராகவும், கார்ப்பரேட் கொள்ளைகளுக்கும் அரச பயங்கரவாதத்துக்கும் ஆதரவாகவும்தான் எண்ணற்ற தீர்ப்புகளை நீதிமன்றங்கள் வழங்கியிருக்கின்றன. 20 லட்சம் பழங்குடி மக்களை வெளியேற்றும் தீர்ப்பு, நர்மதா அணைக்கட்டு தீர்ப்பு, கூடங்குளம் தீர்ப்பு, ஆதார் தீர்ப்பு, நீட் தீர்ப்பு, அப்சல் குரு – எழுவர் விடுதலை தீர்ப்புகள், ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்துக்கு ஆதரவான தீர்ப்பு, பாபர் மசூதி நிலத்தை அபகரிக்கும் தீர்ப்பு, தில்லை கோயிலை தீட்சிதருக்கு வழங்கும் தீர்ப்பு, அனைத்து சாதியினரையும் அரச்சகராக்க மறுக்கும் தீர்ப்பு, பார்ப்பனிய ஆதிக்கத்தை நியாயப்படுத்தும் தீர்ப்புகள் என்று இவற்றைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

மக்களுக்கு ஆதரவாகவும், அரசுக்கு எதிராகவும் வழங்கப்படும் தீர்ப்புகளை அரசுகள் அமல்படுத்துவதே இல்லை. அவற்றை  நீதிமன்றங்கள் கண்டு கொள்வதும் இல்லை. ஐகோர்ட் அதிரடி, சுப்ரீம் கோர்ட் சாட்டையடி என்ற மாலைப் பத்திரிகை சுவரொட்டிகளையும் நீதிமன்ற தீர்ப்புகளைத் தொடர்ந்து நடைபெறும் தொலைக்காட்சி விவாதங்களையும் நம்புகிறவர்கள் பாமரத்தனமான மூடர்கள் என்றே சொல்ல வேண்டும்.

ஜனநாயகத்தின் நான்கு தூண்களும் ஒருவரையொருவர் பிளாக்மெயில் செய்து தங்களது ஊழல்களையும் முறைகேடுகளையும் மறைத்துக் கொள்வதற்குத்தான் தாங்கள் பெற்றிருக்கும் சிறப்புரிமைகளைப் பயன்படுத்துகிறார்களேயன்றி மக்கள் நலனுக்காக அல்ல.

கோகோய் விவகாரத்தில் அந்த பரிதாபத்துக்குரிய பெண்ணை வேட்டையாடுவதில் போலீசு நீதிபதிக்குத் துணை நின்றிருப்பதும், “நீதித்துறையின் மாண்பைக் காப்பாற்ற” மோடி அரசு கோகோயை ஆதரிப்பதும், ஆகப்பெரும்பான்மையான ஊடகங்கள் பிரச்சினையை அடக்கி வாசிப்பதும் மேற்சொன்ன உண்மையைத்தான் நிரூபிக்கின்றன.

இந்த அரசுக்கட்டமைப்பின் உறுப்புகள் தமது நோக்கங்களாகவும், தாங்கள் பெற்றிருக்கும் அதிகாரத்துக்கான நியாயங்களாகவும் கூறி வந்த அனைத்தும் அம்பலமாகிவிட்டன. இந்த அரசுக்கட்டமைப்பு முழுவதும் திவாலாகி நிலைகுலைந்து தோற்றுவிட்டது.

இந்த சூழல் இந்துத்துவ பாசிஸ்டுகளுக்கு கிடைத்திருக்கும் வரப்பிரசாதம். அரசமைப்பின் உறுப்புகளில் சங்க பரிவாரத்தினரை நிரப்புவதன் மூலம் அவற்றைக் காவிமயமாக்குவது ஒரு வழி. அதை எதிர்த்து சில கட்சிகளும் அறிவுத்துறையினரும்  குரலாவது எழுப்புகிறார்கள்.

ஊழல்-கிரிமினல்மயமாகியிருக்கும் நீதிபதிகளையும், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும், அமைச்சர்களையும், போலீசு அதிகாரிகளையும் தங்கள் கையாட்களாக மாற்றிக்கொள்வதன் மூலம் தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வது இன்னொரு வழி. இந்தக் கட்டமைப்பின் அங்கமாக இருக்கும் கட்சிகள் எதுவும் இதை எதிர்த்துக் குரல் எழுப்ப இயலாது. எல்லாக் கட்சிகளும் கோகோய் விவகாரத்தில் மவுனம் சாதிப்பது இதற்கு இன்னொரு சான்று.

இந்த அரசுக் கட்டமைவுக்கு வெளியே, நிறுவப்படும் மக்கள் அதிகாரம்தான் தீர்வு – இந்தக் கட்டமைப்புக்குள் தீர்வு தேட இயலாது என்று கூறுவதை காரிய சாத்தியமற்றது என்றும், இதற்கு உள்ளேதான் தீர்வைத் தேடவேண்டும் என்றும்  கூறுபவர்கள் இந்தப் பெண்ணுக்குப் பதில் சொல்லட்டும்.

“உங்களிடம் எனக்கு நீதி கிடைக்காது” என்று மூன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளிடம் முகத்தில் அறைந்தாற்போல கூறிவிட்டு நீதிமன்ற அறையை விட்டு வெளியே வந்திருக்கிறார் அந்த தலித் பெண்.

நீதி வேண்டுபவர்கள் இந்த அரசுக் கட்டமைப்புக்கு வெளியே அதனைத் தேடுங்கள் என்பதுதான் இந்தப் பெண்ணின் கதையிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய நீதி.

சாக்கியன்

புருடா மன்னன் – Cloudy மோடி | காணொளி

னைவருக்கும் காதில் பூ சுற்றும் திறன் கொண்டவர்களை புருடா மன்னன் என்று அழைப்பதுண்டு. நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், தனது பெருமைகளையும் பராக்கிரமங்களையும் இருபத்திமூன்றாம் புலிகேசியைப் போல ஒரு இந்தித் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்தார்.

பேட்டியில் தாம் 1987-88-ம் ஆண்டிலேயே டிஜிட்டல் கேமராவை வைத்திருந்ததாகவும், பாலாக்கோட் தாக்குதலுக்குத் தான்தாம் ஐடியா கொடுத்ததாகவும் பேட்டியளித்தார். பேட்டி வெளியான மறுநிமிடம் தொடங்கி உலகமே நமது ’பி.எம்’ மோடியை புருடா மோடியாக அடையாளம் கண்டுகொள்ளத் தொடங்கிவிட்டது.

அப்படி அந்தப் பேட்டியில் என்னதான் சொன்னார் மோடி… ’தரமான’ மொழிபெயர்ப்போடு ஒரு ’தரமான சம்பவம்’..

பாருங்கள் ! பகிருங்கள் !

 

புர்கா தடை என்னும் அக்கினி | ஸர்மிளா ஸெய்யித்

”புர்கா / நிகாப் இல்லாமல் வெளியே வரவே மாட்டேன்” என்று ஐந்து பெண் மக்களின் தாயொருவர் அடம்பிடித்து அழுதபடி வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றார் என்ற செய்தி காது வழியாக நுழைந்தபோது மூளையின் நரம்புத் தொகுதிகளில் ஒரு பெருத்த வலியை உணர்ந்தேன். எமது பெண்களை ஆணாதிக்கம் கொண்டுவந்து நிறுத்தியிருக்கும் இடம் இதுதான். ”பாதுகாப்புக் காரணங்களுக்காக புர்கா / நிகாப் தடை செய்யப்பட்டுள்ளதனால் பெண்கள் இவற்றை  அணிந்து கொண்டு வெளியே வராதீர்கள், வீடுகளிலேயே இருந்துவிடுங்கள்” என்று மிக எளிதாக ஆண்கள் தீர்மானம் இயற்றிவிட்டார்கள். அவர்களுக்குத் தெரியாது புர்கா / நிகாபை பாதுகாப்புக் கவசமாக கருதி அணிகின்ற பெண்களும் இருக்கிறார்கள் என்று. பெண்கள் என்றாலே அவர்கள் வெளியுலகம் மறுக்கப்பட்டவர்கள் என ஆண்களின் புத்தியில் வேரோடிப்போயிருக்கும் ஆதிக்க சிந்தனையிலிருந்தே இதுபோன்ற அறிவித்தல்கள் வர முடியும்.

இதைப் பற்றி உரையாடிக் கொண்டிருக்கும்போது  முஸ்லீமல்லாத  தோழியொருத்தி கேட்டாள் ”புர்கா / நிகாப் இல்லாமல் வரவே மாட்டேன் என்கிற பெண்கள் நிஜமாகவே இருக்கிறார்களா?” என்று. ”ஆமாம் இருக்கிறார்கள். இதில் என்ன ஆச்சரியம், சீத்தை உடுத்திப் பழகிய ஆச்சியிடம்,  சீத்தையைத் தடை செய்தாயிற்று. இனி நீ கழிசன்தான் உடுத்த வேண்டும் என்று சொன்னால் ஆச்சி ஏற்பாரா?” எனக்கேட்டேன்.

”அது எப்படி முடியும், சீத்தை அவருக்குச் சௌகரியமான உடை. பழக்கமான உடை. பழக்கமற்ற, அசௌகரியமானதா  இல்லையா என்றே தெரியாத ஒன்றைச் சீத்தைக்குப் பதிலாக அவர் எப்படி ஏற்பார்?” என்றாள் பதிலுக்கு.

”இங்கேயும் அப்படித்தான், சௌகரியமான பழக்கமானதென்று இத்தனை காலமும் உடுத்திப் பழகிய புர்கா / நிகாபை ஒரே நாளில் தடை செய்தால் எப்படி அவர்களால் இயல்பு நிலைக்கு வரமுடியும்? சாதாரணமாக ஏற்கமுடியும்?”

நமக்கெல்லாம் புர்கா / நிகாப் ஒரு கறுத்த அல்லது அடர்ந்த நிறத்திலான அங்கி. கனமான ஓர் உடை. அதனுள் பெண்கள் அவிந்து புழுங்குகிறார்கள் என்ற அனுதாபம் வேறு. ஆனால், அணிகிறவர்களுக்கோ பல நியாயங்கள். அது கலாசாரம், அடையாளம், பாதுகாப்பு, சமூக அங்கீகாரம், கௌரவம். இந்த நியாயங்களின் அடிப்படையில்தான் இந்த உடையை அவள் இத்தனை காலம் தோளில் சுமந்தாள். தற்துணிவுடன் வீதிகளில் இறங்கி நடந்தாள். இதையெல்லாம் எப்படி ஒரே நாளில் விட்டுத்தந்துவிட்டுச் ”சரிதான்” என்று கடப்பாள்?

புர்கா / நிகாப் தடை செய்வதற்கு முன்பு இதுபற்றிய கலந்துரையாடல் பெண்கள் மட்டங்களில் நடந்திருக்கவேண்டும். தடைக்கான காரணம் பாதுகாப்பு என்று குறிப்பிடப்பட்டபடியால் (அது நியாயமற்ற பொய்யான காரணம்)  அது முறையான வழியில் பரீட்சாத்திக்கப்பட்டிருக்க வேண்டும். பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு முகத்திரையை விலக்கி அடையாளத்தை உறுதி செய்ய பெண்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று வலியுறுத்தியிருக்க வேண்டும். இவை எவையும் நிகழ்த்தப்படவில்லை. இந்தப் படிமுறை ஒழுங்கில் நடவடிக்கைகள் நடந்திருந்தால் முகத்திரை அணியும் பெண்கள் இயல்பாக்கம் அடைய வழி உண்டாகியிருக்கும்.

பாதுகாப்புக் காரணங்களுக்காக முகத்திரையை விலக்குவதற்கு பெண்கள் மறுத்திருந்தாலோ அல்லது பெரும் அச்சுறுத்தலை உருவாக்கும் விதத்தில் செயற்பட்டிருந்தாலோ முகத்திரையைத் தடை செய்வதற்கு நியாயங்கள் இருந்திருக்கும். இங்கு அப்படியெந்த நியாயமும் சொல்வதற்கில்லை. இப்போது, எவர் வேண்டுமென்றாலும் பெண்களின் பர்தாவைக் கழற்றி எறியலாம் என்ற நிலையை அரசு ஏற்படுத்தியிருக்கிறது. வீதியிலோ பொது இடங்களிலோ அவர்களை அவமானப்படுத்தலாம் என்ற வன்முறை கட்டவிழ்க்கப்பட்டிருக்கிறது. புர்கா / நிகாப் என்பதன் அர்த்தப்பாடு புரியாமலும், வர்த்தமானி அறிவித்தலைப் பொருட்படுத்தாமலும் பல அரச ஸ்தாபனங்களில் ”ஹிஜா”பிற்கு எதிரான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

மருத்துவமனைகள், பாடசாலைகள், பிரதேச சபைகள், பிரதேச செயலகங்கள், கச்சேரிகள் என்று எல்லா இடங்களிலும் இந்த அத்துமீறல் நடக்கிறது. இராணுவச் சிப்பாய் துப்பாக்கியினால் நிகாபை இழுத்துக் களைந்த சம்பவம் புத்தளத்தில் பதிவாகியது. அதே பிரதேசத்தில் பிறப்புப் பதிவைப் பெறுவதற்குச் சென்ற பெண் ஹிஜாப் முதற் கொண்டு உடுத்தியிருந்த அபாயா வரை கழற்றும்படி கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறாள். பல பாடசாலைகளில் ஆசிரியைகள் மீதும் இவ்வாறான வன்முறைகள், துஷ்பிரயோகங்கள் பாய்ந்துள்ளன. பிரதேச சபைகள், பிரதேச செயலகங்கள் முஸ்லிம் பெண்களின் உடை தொடர்பாக பல எழுதப்படாத விதிகளை தங்கள் சௌகரியம்போல உருவாக்கி வருகின்றன.

அரச மருத்துவமனைகளுக்குச் செல்லும் முஸ்லீம் பெண்களின் வருகை கணிசமானதாக குறைந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்களிலிருந்து வரும் செய்திகளில் இருந்து அறியமுடிகின்றது. அரச மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காகச் செல்கின்ற பெண்கள் வசதிபடைத்தவர்களோ, ஜம்மியத்துல் உலமா சபை உறுப்பினர்களின் மனைவியரோ அமைச்சர்களின், பாராளுமன்ற உறுப்பினர்களின் மனைவிகளோ அல்ல. உழைக்கும் வர்க்க எளிய மக்கள்தான் அரச மருத்துவமனைகளுக்குச் செல்கின்றார்கள். புர்கா தடை என்பது வெறுமனே அரசியல் கலாச்சார பிரச்சினை மட்டுமல்ல. இதுவொரு வர்க்க விவகாரமும் கூட.

புர்கா அணிகின்ற பெண்களில் 75% நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். இந்த உடைக்குப் பின்னால் பொருளாதாரக் காரணங்களும் இருக்கின்றன. புர்கா தடையினால் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் பெண்கள் சிகிக்சைக்கு என்ன செய்வார்கள்? எங்கு செல்வார்கள்? தனியார் மருத்துவமனைகள் பாதுகாப்புப் பரிசோதனைகளுக்குப் பின்பு புர்காவுடனேயே பெண்களை உள்ளே அனுமதிக்கிறது. ஏன்? ஏனென்றால் அவர்கள் பணம் செலுத்தியே அங்கு செல்கின்றார்கள். ஆக, பணமிருந்தால் புர்கா தடையைப் பொருட்படுத்த வேண்டியதில்லை. ஆனால், ஏழை எளிய மக்கள் எங்கு போவார்கள்? இவர்களேதான் அரச பேருந்துகளில் பயணிப்பவர்களும். நம் நாட்டின் ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களைப் போல பஜரோக்களில் பறப்பவர்கள் அல்ல இந்தப் பெண்கள்.

மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் பெண்கள் பலர் வேலைக்குச் செல்வதற்குத் தயங்குகின்றனர். ஏன், வெளியேறுவதற்கே தயங்குகின்றனர். குற்றவாளிகளாக நடத்தப்படும் இந்த நிலையை சாதாரண ஒன்றாக எந்தப் பெண்ணாலுமே ஏற்க முடியாது.

ஆங்கிலத்தில் சொல்வார்கள். ”Put yourself in their shoes”. அதாவது, மற்றொருவரின் சூழ்நிலையைப் புரிந்து கொள்ள அந்தச் சூழ்நிலையில் தன்னைத்தானே பிரதியீடு செய்ய, அவர்களின் கண்ணோட்டத்தைப் புரிந்து கொள்ள தீர்ப்பு வழங்குவதற்கு முன்பு தங்கள் கால்களை அடுத்தவரின் சப்பாத்துக்களில் வைத்துப் பாருங்கள் என்கிற அர்த்தம். புர்கா / நிகாப் பிரச்சினையை இந்தப் பார்வையில்தான் அணுகவேண்டும்.

இந்நாட்களில் நான் அதிகம் எதிர்கொள்ளும் கேள்விகளில் ஒன்று, ”நீங்கள் புர்கா / நிகாப்  போன்ற உடைகளில் விருப்பமற்றவர். அப்படியிருந்தும் இப்போது இந்த உடைக்கு ஆதரவாகப் பேசுவது ஏன்?”

உண்மையில் இப்போதும் புர்கா / நிகாப் என்கின்ற இந்த ஆடைக்காகப் பேசவில்லை. பெண்களுக்காகத்தான் பேசுகிறேன். இந்த ஆடையில் நான் விருப்பமற்றவளாக இருப்பதும், அணியாதிருப்பதும் அணிகின்ற பெண்களின் உளவியலைப் புரிந்துகொள்வதிலிருந்தும் என்னைத் தடுக்கவோ பின்வாங்கச் செய்யவோ இல்லை. அவர்களின் காலணிகளுக்குள் எனது பாதங்களை விட்டுப் பார்க்க  முடிகின்றது. முன்பு பேசியதும் பெண்களுக்காகத்தான். அப்போதும் இந்த உடை பெண்களின் தெரிவாக இருக்கவில்லை. இப்போதும் இது பெண்களின் தெரிவாக இல்லை. ஆண்களின் இசைக்கு ஆடும் இலத்திரனியல் பொம்மைகளாகப் பெண்கள் இருக்கக்கூடாது என்பதே  அன்று பேசியதற்கும் இன்று பேசுவதற்குமான பொதுவான காரணம்.

கல்வி VS புர்கா என்று வரும்போது பெண்கள் புர்காவைத் தெரிவு செய்யும் நிலையில் இருக்கின்றனர். தொழில் VS புர்கா வருமிடத்திலும் பெண்கள் புர்காவையே தெரிவு செய்கின்ற நிலையில் உள்ளனர். முஸ்லீம் சமூகம் பெண்கள் வலுவடைய (Empower) இடமளிக்கவில்லை என்பதற்கு இதைவிட வேறென்ன உதாரணம் வேண்டும்? புர்கா என்பது ஒரு பெண்ணின் அடையாளமாக இருக்கமுடியாது. அவள்தான் அவளது அடையாளம். புர்கா ஒரு பெண்ணின் ஆளுமையை (Personality)  தீர்மானிக்க முடியாது. ஆளுமை என்பது அவள் அணிகின்ற உடையில் மட்டுமே இருக்கக்கூடியதில்லை. அவள்தான் ஆளுமை! இந்த எளிய சமன்பாட்டைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் மனம் பெண்களுக்கு இல்லாது போய்விட்டது இன்னொரு துயரம். ஆண்களின் திணிப்பையும், தன் மீதான அடக்குமுறைகளையும் எதிர்கொள்வதற்கு அறிவும் தெளிவும் இல்லாமல் ஒரு உடையைப் பிடித்துத் தொங்குகிற நிலைக்கு பெண்கள் கொண்டுவரப்பட்டிருக்கிறோம்.

”நீ சொல்கிறபோது அணியவும், நீ சொல்கிறபோது கழற்றவும் செய்யும் இந்த உடையைப் பிடி”  என்று களைந்து ஆண்களின் முகத்தில் வீசியெறிந்துவிட்டு நடக்கும் மனத்துணிவு இத்தனைக்குப் பிறகும் ஒரு பெண்ணுக்குக்கூட வரவில்லை.

ஆண்கள் வன்முறைகளின் உற்பத்தியாளர்கள். போர்களைத் துவக்குகிறவர்கள். இவர்களின் இந்த அனைத்துச் செயல்களும் நெறிப்பது பெண்களின் கழுத்துக்களைத்தான். ”கழுத்து இருகி மூச்சே போனாலும் பரவாயில்லை இன்னும் இறுக்கிப் பிடியுங்கள்” என்று கெஞ்சக்கூடிய சுயமிழந்த பெண்களைக் கொண்ட ஒரே நூற்றாண்டு இதுவாகத்தான் இருக்கமுடியும்.

பெண்களின் உடைகளை களைந்து தங்களின் ஆதிகால வெறுப்பையும் இனவெறியையும் தீர்த்துக் கொள்கிறவர்கள் இந்த நூற்றாண்டில் இதே நாட்டில்தான் நம்மோடு வாழ்கிறார்கள். முஸ்லீம் சமூகத்தின் மீது இருந்துவந்த நீண்ட காலப் புகை கொளுந்து விட்டு எரியத் தொடங்கியிருக்கிறது. சிங்களப் பேரினவாதம் கனவு காண்பதுபோல இந்த தீ முஸ்லீம் சமூகத்தை மட்டுமே எரித்து சாம்பலாக்கி அணைந்துவிடுமா என்பதே இங்குள்ள மிகப்பெரிய கேள்வி.

படிக்க:
2010-ல் இசுலாமியப் பெண்கள்: மதமும் வாழ்க்கையும் !!
வஹாபியிசத்தை வரவேற்றார்களா இலங்கை முஸ்லீம்கள் ?

முஸ்லீம் இளைஞர்களை தீவிரவாதத்தின் பால் இன்னும் இன்னும் இழுபட்டுச் செல்வதற்கு ஏதுவாகவே இந்த செயற்பாடுகளை அதிகார சக்திகள் ஏவிவிட்டுள்ளதா என்பதுகூட சாத்தியமான சந்தேகமே. தனது சகோதரியோ, தாயோ மனைவியோ கொல்லப்பட்டால்கூட ஒரு ஆண் பொறுத்துக்கொள்வான். ஆனால், அவள் அவமானப்படுத்தப்படுவதை அவளது ஆடை களையப்படுவதை அவனால் நீண்ட காலத்திற்குப் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. இது ஆசிய நாட்டு ஆண்களின் மிக எளிய உளவியல் சமன்பாடு.  இந்த உளவியலோடு விளையாடுவது ஆபத்தான விளைவுகளையே ஏற்படுத்தும்.

முஸ்லீம் சமூகத்தை முழுவதும் ஓரம்கட்டி ISIS தீவிரவாதத்தை இலங்கையிலிருந்து ஒழிக்கலாம் என்பது சிங்களப் பேரினவாதத்தின் பகல் கனவு. கண்ணுக்குத் தெரியாத எதிரியைத் தாக்கமுடியாத இயலாமையை கண்ணுக்கு எதிரில் இருக்கும் அப்பாவி மக்களின் மீது திணிப்பதுபோன்ற கோழைத்தனமான ஒரு செயற்பாட்டை முன்னெடுப்பதைவிடவும் தரம்குறைந்த நிலை வேறொன்றுமேயில்லை. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பிற்பாடு இடம்பெற்ற கைதுகள் பலவும் முஸ்லீம் சமூகத்தவர்களின் ஒத்துழைப்புடன் நடந்தவை. ஆயுதங்களையெல்லாம் கைப்பற்றிச் சுத்திகரிப்புச் செய்தாயிற்று என்ற துணிவில் பேரினவாதிகள் ஆடும் ஆட்டம் இது. பேரினவாதத்திற்கு இது பேரிழப்பாக முடிவது மட்டுமல்ல இந்த நாட்டின் அமைதியைக் குலைத்து மக்கள் ஒற்றுமையாக பாதுகாப்பாக வாழமுடியாத சுடுகாட்டில் அரசியல் பிழைப்பு நடத்துவதற்கே இட்டுச் செல்லும்.

ஸர்மிளா ஸெய்யித்

அச்சில் வராத தொல்காப்பிய இளம்பூரணர் எழுத்ததிகார உரை !

“இன்றுவரை அச்சில் வராத” தொல்காப்பிய இளம்பூரணர் எழுத்ததிகார உரை முழுமைக்குமான மிகச் சிறந்த விளக்கம். (ஆசிரியர் பெயர் தெரியவில்லை)

ண்பர்களே….

பொ.வேல்சாமி
தொல்காப்பிய இலக்கண நூலுக்கு எழுதப்பட்ட உரைகளுள் மிகப் பழமையானதும் தமிழ் மரபில் நின்று எழுதப்பட்டதுமான அரிய உரை என்பது இளம்பூரணர் எழுதியது. இந்த உரை நூல் 1868-ல் முதல்முதலாக அச்சாகியது. பின்னர் 1928-ல் தேசபக்தர் வ.உ.சிதம்பரம் பிள்ளை இந்நூலை அச்சிட்டார். 1969-ல் பேராசிரியர், அடிகளாசிரியர் சிறப்பான ஆய்வுப்பதிப்பை வெளியிட்டுள்ளார். 1969-ல் பேராசிரியர் கு.சுந்தரமூர்த்தி மாணவர்களுக்கு பயன்படும்படியான ஒரு பதிப்பையும் வெளியிட்டுள்ளார்.

இப்பொழுது பேராசிரியர், கோபாலைய்யர், பேராசிரியர் கங்காதரன் அவர்களால் மிகச் சிறப்பாக ஆராயப்பட்ட ”தொல்காப்பிய எழுத்ததிகார உரைக்கொத்து“ நமக்கு கிடைக்கிறது.

இந்தப் பதிப்புகளுக்கிடையே தமிழ் இலக்கண உலகமறியாத ஒரு இளம்பூரணர் உரைக்கான விளக்க நூல் ஒன்று கையெழுத்துப் பிரதியிலேயே காணக் கிடைக்கிறது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தமிழ் இலக்கணக் கல்வி மரபு சாரந்த பல செய்திகளுக்கான விளக்கங்களும் தொல்காப்பிய எழுத்ததிகாரத்திற்கு நச்சினார்கினியர் எழுதிய உரையை ஒப்பிட்டும் நவீன மொழியில் கருத்துக்களை மேற்கோள் காட்டியும் சுவையாக எழுதப்பட்டுள்ளது. இதை எழுதிய அறிஞர் யாரென்று குறிப்பிடப்படவில்லை. நான் ஆராய்ந்துப் பார்த்ததில் இந்த விளக்கத்தை எழுதியிருப்பவர் பெரும் இலக்கணப் புலவர் வேங்கடராஜூலு ரெட்டியாராக இருக்கலாம் என்று தோன்றுகிறது.

ஏனென்றால் 1944-ல் ரெட்டியார் எழுதிய எழுத்ததிகார ஆய்வு என்ற நூலில் உள்ள கருத்துக்களும் குற்றியலுகரம் பற்றிய கருத்துக்களும் ரெட்டியார்தான் இந்த விளக்கத்தை எழுதியிருப்பார் என்பதை வலியுறுத்துகின்றன. இந்த கையெழுத்துப் பிரதியில் ரெட்டியார் பலமுறை குறிப்பிடப்படுவதும் இக்கருத்துக்கு அரண் சேர்க்கிறது.

குறிப்பு : 162, 214 பக்கங்கள் உள்ள இரண்டு தொல்காப்பிய எழுத்ததிகார இளம்பூரணம் விளக்க உரை கையெழுத்துப் பிரதிகளை நீங்கள் தரவிறக்கம் செய்து கொள்வதற்கு வசதியாக அதன் இணைப்பைக் கொடுத்துள்ளேன்.

தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும் …

நன்றி : முகநூலில் பொ. வேல்சாமி

பொ.வேல்சாமி: தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.

கோவை சட்டக் கல்லூரி மாணவர்களைப் பழி வாங்காதே | புமாஇமு

0

கண்டன அறிக்கை !

தேதி: 14.5.2019

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை எதிர்த்து போராடிய மாணவர்கள் 68 பேரை தேர்வு எழுதவிடாமல் பழிவாங்கிய கோவை சட்டக் கல்லூரி நிர்வாகத்தை வன்மையாக கண்டிக்கிறோம்!

பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தை எதிர்த்து கடந்த மார்ச் மாதம் தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராடினார்கள். அதன்போது கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் 14- 3- 2019 அன்று சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தை முன்நின்று நடத்தியதாகக் கூறி சுமார் 167 மாணவர்கள் மீது காவல்துறையும்,  கல்லூரி நிர்வாகமும் சேர்ந்து பொய் வழக்குப் போட்டது. குறிப்பாக 17 மாணவர்களை குறிவைத்து பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது கல்லூரி நிர்வாகம்.

இந்தப் பொய் வழக்கை திரும்பப் பெற வேண்டும் என மாணவர்கள் தொடர் உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்தினார்கள். அதன் பிறகு மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்த வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்கிறோம். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது எந்தப் பழிவாங்கும் நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என்று கல்லூரி முதல்வர் கே. கோபாலகிருஷ்ணன் அவர்கள் எழுத்துப்பூர்வமாக 20-3- 2019 அன்று கடிதம் கொடுத்துள்ளார்.

படிக்க :
♦ பொள்ளாச்சி : குற்றவாளிகளைப் பாதுகாக்கும் சௌக்கிதார்கள் | மருதையன் நேர்காணல் | காணொளி
♦ பொள்ளாச்சி : ஃபேஸ்புக் பயன்பாடுதான் பெண்களுக்கு பிரச்சினையா ?

ஆனால், தற்போது 68 மாணவர்களை தேர்வு எழுதவிடாமல் தடுத்து, மீண்டும் அந்த செமஸ்டரிலேயே படிக்க வேண்டும் என்று உத்தரவு போட்டுள்ளது  கல்லூரி நிர்வாகம். குறிப்பாக பல்கலைக்கழகத் தேர்வு தொடங்க ஒரு வாரம் மட்டுமே இருக்கும் சமயத்தில், திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின், நிர்வாகத்தின் தவறுகளை எதிர்க்கும் மாணவர்களின் எதிர்காலத்தை பாழக்கும் வகையில் தேர்வு எழுதவிடாமல், மீண்டும் அதே செமஸ்டரில் படிக்கும் வேண்டும் என உத்தரவிட்டிருக்கும் கல்லூரி முதல்வர் கே. கோபாலகிருஷ்ணன் செயலை எமது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

அதேபோல், ’’இது எனது சொந்த ஊர். இது என்னுடைய கல்லூரி. என்னை பகைத்துக் கொண்ட அவர்கள் யாரையும் நான் படிக்க விடமாட்டேன்’’ என கல்லூரி முதல்வர் கே.கோபாலகிருஷ்ணன் ஒரு பண்ணையாரைப்போல மிரட்டுவதாக மாணவர்கள் தெரிவிக்கிறார்கள்.

சட்டக்கல்லூரி விதியின் படி பொறுப்பு முதல்வராக ஒருவர் 3 ஆண்டுகள் மட்டும்தான் பொறுப்பில் இருக்க முடியும்.  ஆனால் கே.  கோபாலகிருஷ்ணன் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும் சட்டக்கல்லூரியின் விதிக்குப் புறம்பாக பொறுப்பு முதல்வராக நீடிக்கிறார். ஆளும் கட்சியில் செல்வாக்கு, அதிகார, பண பலம்தான் இதற்கெல்லாம் காரணம். இப்படிப்பட்ட கிரிமனல்கள் ஒரு கல்லூரியின் முதல்வராக இருந்தால் அந்தக் கல்லூரியும், மாணவர்களும் எப்படி உருப்பட முடியும்?

எனவே, கே. கோபாலகிருஷ்ணனை கல்லூரி முதல்வர் பொறுப்பில் இருந்து விடுவித்து புதிய தகுதியான முதல்வரை உடனே நியமனம் செய்ய வேண்டும்.  மாணவர்கள் தேர்வு எழுத தடைவிதித்து அதே செமஸ்ட்ரிலேயே அவர்கள் மீண்டும் படிக்க வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவாக அனைத்து பேராசிரியர்களும், கல்லூரி மாணவர்களும்,  மாணவர் அமைப்புகளும்,  ஜனநாயக சக்திகளும் குரல் கொடுக்க வேண்டும் என எமது புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி சார்பில் கோருகிறோம்.

இவண்
த. கணேசன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.

முதல் காதல் அபத்தமா ? அழியா நினைவா ? | மு.வி. நந்தினி

ண்மையில் வெளியாகி சுமாராக ஓடிய ‘96’ திரைப்படம், முன்னாள் – இன்னாள் காதலர்களின் ‘அழியா நினைவு’களை கிளறிவிட்டுச் சென்றிருக்கிறது. படம் வெளியாகி நான்கைந்து மாதங்கள் ஆனபோதும், தாக்கம் குறையவில்லை.

பாராமுகம் பார்ப்போம் – மு.வி.நந்தினி
ஜனவரி புத்தக சந்தையின்போது ‘96’ என்ற பெயரில் ‘முதல் காதல்’ அனுபவங்களைக் கொண்டு வெளியான நூல், அதிகமாக விற்றதாக அந்நூலின் ஆசிரியரும் பதிப்பாளரும் அறிவிக்கிறார்கள். மற்றுமொரு ‘மகுடமாக’ தமிழில் வெளியான இந்தப் படம், அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் இப்போது தயாராகி வருகிறது.

‘96’ படத்தின் கதை மிக எளியது. ஜானகி – ராமச்சந்திரன் என்ற ஒரே பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கிடையே ஏற்படும் பதின்பருவக் காதல், அந்தக் காதலை இருவரும் எப்படி தங்களுடைய முப்பதுகள் வரை தூக்கி சுமக்கிறார்கள் என்பதே படத்தின் கதை. படத்தில் நாயகி தனது பதின்பருவக் காதலை மறந்து திருமணம் செய்துகொள்கிறாள். அவளுக்கு குடும்பம் இருக்கிறது. நாயகன் திருமணம் செய்துகொள்ளவில்லை; ஆனால், திருமணம் செய்துகொள்ளும் எத்தனிப்பில் இருக்கிறான். இருவரும் பழைய மாணவர்களின் ஒன்றுகூடலில் சந்திக்கும்போது தங்களுடைய ‘நிறைவேறா முதல் காதல்’ குறித்து அழுது தீர்க்கிறார்கள்; உருகிப் போகிறார்கள். இருவரும் வேறு வேறு பாதையில் வெகுதூரம் சென்றுவிட்டார்கள். அவர்கள் ஒன்று சேர முடியாது. அவர்கள் ஒன்று சேர்வதற்கான நியாயமும் காரணமும் அவர்களிடம் இல்லை. எனவே, மென்சோகத்துடன் அவரவர் வழியைப் பார்த்து கிளம்புகிறார்கள்.

இந்த மென்சோகம்தான் பலரை ‘96’ படத்தை விதந்தோத வைத்துக்கொண்டிருக்கிறது. படம் வெளியானபோது பலர் தங்களுடைய ‘முதல் காதல்’ அனுபவங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டு சிலாகித்தார்கள். பழைய பயன்படாத குப்பைகளைக் கிளறி, அந்தக் குப்பைகளைப் பார்த்து கடந்த காலத்தை வெட்டியாக நினைவுகொள்வோமே… அதுபோல ‘முதல் காதல்’ அனுபவங்கள் குவிந்தன. அதென்ன ‘முதல் காதல்’? எந்த வயதில், யார் மீது வருவது முதல் காதல்? இருவரும் காதலிப்பது முதல் காதலா? அல்லது ஒரு தலையாக காதலிப்பதும் முதல் காதலில் வருமா? முதல் காதல் அபத்தமா ? அல்லது அழியா நினைவா? சில நிகழ்ந்த சம்பவங்களின் வழியாக நாம் இதுகுறித்த முடிவுக்கு வருவோம்…

சம்பவம் 1 :

என்னுடன் பணியாற்றிய நண்பர் ஒருவர் அழகாகப் பாடுவார். இளையராஜாவின் மென்சோகப் பாடல்களையே எப்போதும் பாடிக்கொண்டிருப்பார். ஏன் எப்போதும் சோகப்பாட்டே பாடுகிறீர்கள் எனக் கேட்டபோது, தன்னுடைய நிறைவேறா ‘முதல் காதல்’ கதையைச் சொன்னார். பத்தாண்டுகளுக்கு முன் நிகழ்ந்த காதல், திருமணத்தில் முடியவில்லை. அந்தப் பெண் வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டார்; இவரும் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஒரு மகனும் மகளும் உண்டு. மறக்காமல் தன்னுடைய காவிய சோகத்தை தினந்தோறும் நினைவில் கொள்ள தனது மகளுக்கு ‘காதலி’யின் பெயரையே வைத்திருக்கிறார்.

‘உங்கள் மனைவிக்கு இப்படியொரு காதல் கதை இருந்து, அவர் காதலன் பெயரை உங்கள் மகனுக்கு வைத்திருந்தால் ஒப்புக் கொண்டிருப்பீர்களாக’ என அருகில் இருந்த நண்பர் ஒருமுறை கேட்டார். அதற்கு அவரிடம் பதில் இல்லை. மழுப்பலான சிரிப்புதான் பதிலாக வந்தது. ‘இது ஒருவகையில் உங்கள் மனைவிக்கு செய்யும் துரோகம் இல்லையா?’ என இன்னொரு நண்பர் கேட்டார். ஆனாலும், அந்த நண்பர் தினமும் ‘முதல் காதல்’ நினைவுகளை பாடாமல் விட்டதில்லை.

படிக்க:
லவ் – பியார் – பிரேமா – காதல் | மு.வி.நந்தினி
♦ நீங்க காதலிக்கிறீங்களா ? காதல் – பார்வைகள் பத்து !

மேற்சொன்ன நண்பரைப்போல, ‘முதல் காதல்’ கதைகளை பேசிக் ‘கொல்லும்’ பல ஆண்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால், இப்படியான ‘முதல் காதல்’ அனுபவங்களை விதந்தோதும் ஒரு பெண்ணைக்கூட சந்திக்கவில்லை. பலருக்கு காதல் கைகூடாமல், வேறொரு ஆணுடன் திருமணம் நடந்தபோதும்கூட தங்கள் ‘முதல் காதலை’ தனிப்பட்ட பேச்சிலும்கூட நினைவு கூறியதில்லை. பெண்கள், ஆண்களைக்காட்டிலும் நிதர்சனத்தில் வாழ்கிறவர்களாக இருக்கலாம். அல்லது ஆண்களைப்போல தங்களுடைய காதல் பராக்கிரமங்களை சொல்லிக்கொள்ளும் ‘சுதந்திரம்’ பெண்களுக்கு இல்லாமல் இருக்கலாம். அல்லது பெண்கள் முதல் காதலை நினைப்பதால் உண்டாகும் சிக்கலை எதிர்கொள்ளத் தயாராக இல்லை; அவர்களுடைய சமூக வாழ்நிலை அதற்கு இடம்கொடுக்காது. ஆனால், ஆண்கள் முதல் காதலைத் தொடர எப்போதும் தயாராக இருக்கிறார்கள். அதனால் ஏற்படும் விளைவுகளை சந்திக்கும் சமூக வாழ்நிலையும் அவர்களுக்கு பிரகாசமாகவே உள்ளது.

ஆக, ‘முதல் காதலில்’ ஆண்கள் ஏன் மயங்கித் திளைக்கிறார்கள் என்பதற்கு தனக்கு இன்னொரு விருப்பத்தேர்வு இருக்கிறது என்பதும் அது தனது ஆண்மைக்கு ஒளிகூட்டக்கூடியது என்பதுமே முதன்மையான காரணங்கள். மேலே சொன்ன முதல் சம்பவத்தின் தொடர்ச்சியாக இரண்டாவது சம்பவத்தை சொல்கிறேன். ஆனால், இரண்டும் வேறு நபர்களுக்கு நடந்தவை.

சம்பவம் 2 :

அவர்கள் இருவரும் ஒரே அலுவலகத்தில் வேலைப் பார்த்தவர்கள். இருவருக்கும் காதல். ஆனால், வேறு வேறு நபர்களுடன் திருமணம். பெண், ஒரு குழந்தையுடன் கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக விவாகரத்து பெற்றுவிடுகிறார். ஆணுக்கு, அவன் கட்டிய மனைவியால் பிரச்சினை இல்லை. அவர்களுக்கு குழந்தைகளும் உண்டு. விவாகரத்துக்குப் பின் அந்தப் பெண் அலுவலகம் வருகிறாள், இருவருக்கும் மீண்டும் ‘முதல் காதல்’ துளிர்விடுகிறது. அந்த ஆண், அந்தப் பெண்ணை ‘திருமணம்’ செய்துகொள்கிறான். அது சட்டப்படியான திருமணம் அல்ல. ஏனெனில் அவனுடைய குடும்பத்தைக் கைவிட அவனுக்கு மனதில்லை.

பகலில் காதலி வீட்டிலும் இரவில் கட்டியவள் வீட்டிலும் இருப்பான். ஒழிந்துவிட்டதாக கருதப்பட்ட இருதார மணம், இப்படியாக உயிர்ப்பெற்று இன்றும் நடைமுறையில் இருக்கிறது. இதற்கிடையே அந்தப் பெண், அவனுக்கு ஒரு பெண் குழந்தையும் பெற்றுவிட்டாள். அந்த சமயத்தில் அவனுக்கு விபத்து. காலில் அடிபட்டு கட்டியவள் வீட்டில் அடங்கிவிட்டான். அவனை நம்பி, குழந்தையைப் பெற்ற அவள் மூன்று மாத கைக்குழந்தையை விட்டுவிட்டு, பணிக்குப் போக வேண்டிய கட்டாயம். ‘முதல் காதல்’ இப்போது நுனிவரை இருவருக்கும் கசக்கிறது!

சம்பவம் 3 :

இன்னொரு முதல் ‘காதல் கதை’, சற்றே தூக்கலான சோகம் நிறைந்தது. சோகம், ‘முதல் காதல்’ ஜோடிகளுக்கு அல்ல, இவர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு. அவர்கள் இருவரும் பதின்பருவத்தின் முடிவில் பணிபுரியும் இடத்தில் காதல் வயப்பட்டார்கள். இருவரும் ஒருவரிடம் ஒருவர் காதலை சொல்லிக்கொள்வதற்குள் ‘விதி’ அவர்களை பிரித்துவிட்டது. அந்தப் பெண்ணுக்கு வீட்டில் அவசர அவசரமாக திருமணம் செய்துவிட்டார்கள். திருமணம் ஆன விசயமேகூட நீண்ட மாதங்கள் கழித்துதான் தெரியவந்திருக்கிறது. அந்தப் பெண், கணவருடன் வேறொரு ஊருக்கு சென்றுவிடுகிறார். எதேச்சையாக அதே ஊருக்கு இந்த ஆணுக்கு பணிமாற்றல் கிடைக்கிறது.

பொதுவான நண்பர்கள் மூலமாக பெண்ணின் வீட்டுக்குச் செல்கிறார் ஆண். இருவருக்குள்ளும் இருந்த ‘முதல் காதல்’ துளிர்க்க தொடங்குகிறது. சில மாதங்களுக்குப் பின், கைக்குழந்தையுடன் படிக்கப்போவதாகச் சொல்லி, தாய் வீட்டிற்கு திரும்புகிறார் அந்தப் பெண். ஆணுக்கும் மீண்டும் அதே ஊரில் பணி. இவர்கள் ‘முதல் காதல்’ இந்த முறை, எங்கு போய் முடிய வேண்டுமோ அங்கு முடிகிறது. எதிர்ப்பார்த்த திருப்பமாக, அந்தப் பெண்ணின் வீட்டாருக்கு விசயம் தெரிந்து, இருவரையும் மிரட்டி, அவர்களைப் பிரிக்கிறார்கள். பெண்ணின் கணவர் ‘பெருந்தன்மை’யாக அவரை ஏற்றுக்கொள்கிறார்.

அந்த ஆணை, வேறொரு பெண் திருமணம் செய்துகொள்வதிலிருந்து இதில் சோகம் ஆரம்பிக்கிறது. முதல் காதலிலிருந்து மீளாத, அல்லது மீள முடியாத நிலையில் இருக்கும் ஆண், தன்னுடைய கடந்த காலத்தை சொல்லியே அந்தப் பெண்ணை திருமணம் செய்துகொள்கிறான். அந்தப் பெண்ணுக்கு இதை வெளிப்படையாகச் சொன்னதே அவனை திருமணம் செய்துகொள்ள கூடுதல் தகுதியாகத் தெரிந்திருக்கிறது. ஆனால், திருமணத்துக்குப் பின்தான் இங்கே வாழ்க்கை தொடங்குகிறது.

‘முதல் காதலை’ விட்டு மீள முடியாமல் தவிக்கும் அவன், தன் மனைவி மீது அதைக் கொட்டுகிறான். வேறொரு ஆண் மூலம் காதலி பெற்ற குழந்தையை தன் குழந்தையாக சொல்லிக்கொண்ட அவனுக்கு, மனைவி அலுவலக விசயமாக போனில் பேசுவதுகூட, ‘படுப்பதாக’ப் படுகிறது. வார்த்தைகளாலும் அடியினாலும் அவளை சித்ரவதை செய்கிறான். பாலுறவின்போது, ‘நீ அவளைப்போல இல்லை’ என்கிறான். அந்தப் பெண் அவனுடன் வாழ முயற்சித்தபோதும், அவன் இறந்த காலத்தை விட்டு வெளியேறத் தயாராக இல்லை.

“ஒருமுறை குடும்பத்தோடு வெளியே போயிருக்கோம். அப்போ ரோடு கிராஸ் பண்ணும்போது அன்கான்ஷியசா அவரோட கையைப் பிடிச்சிட்டேன். உடனே, அவர் அன்கான்ஷியசா கையை உதறினார். அந்தக் காட்சியை என்னால் மறக்கவே முடியாது. சாதாரணமா அவர்கிட்ட நெருங்கவே பதட்டமா இருக்கும்கா. இந்த பதட்டத்தோடதான் காலத்தை ஓட்டிக்கிட்டு இருக்கேன்” என தனது சீரழிந்துபோன திருமண வாழ்க்கையை பகிர்ந்துகொண்டார் அந்தப் பெண். திருமணம் ஆன அடுத்தடுத்த ஆண்டுகளில் அவருடைய பெற்றோர் இறந்துவிட்டபடியால், அந்தப் பெண்ணிற்கு போக்கிடம் இல்லை. அவனை திருமணம் செய்துகொண்டதைத் தவிர, வேறு எந்த தவறையும் இழைக்காத அந்தப் பெண்ணை ‘முதல் காதலின்’ பெயரால் சித்ரவதை செய்கிறான் அவன்.

இந்த மூன்று சம்பவங்களிலும் தொடர்புடைய நபர்களின் மனவக்கிரத்தின் அடிப்படையில் அவர்களுடைய செயல்பாடுகளின் அளவுகள் கூடக்குறைய இருக்கின்றன. இந்த மனவக்கிரத்தின் பொதுவான அம்சமாக இருப்பது மறக்க முடியாத ‘முதல் காதல்’ என்னும் அபத்தம்.

‘96’ படம் பார்த்துவிட்டு, வாட்சப் குரூப் மூலம் ‘முதல் காதலை’ தேடி வரும் ஆண்கள் இருக்கிறார்கள். தொடர்புடைய ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனியாக குடும்பம் இருக்கிறது. நட்பாக நலம் விசாரித்த அந்தப் பெண்ணைப் பார்க்க, 400 கி.மீ கடந்து அவன் திடீரென வந்து நின்று, ‘நாம் நட்பாக இருப்போம்; பேசலாம் வா’ என அழைக்கிறான். அது என்னவகையான ‘நட்பாக’ இருக்க முடியும்?

விஜய் நடிப்பில் ‘பூவே உனக்காக’ என்றொரு அபத்தப் படம் வந்தது. அந்தப் படத்தில் வரும் ‘செடியில பூ பூக்கறதுபோல, ஒரேமுறைதான் காதல் வரும்’ என்கிற வசனம் இப்போதும்கூட பிரபலமானது. இந்த வசனத்தைக் கேட்டு, பெரும்பாலான ஆண்கள் ஓரக்கண்ணில் கண்ணீர் சிந்துகிறார்கள். அந்த பெரும்பாலான ஆண்கள் எவரும் வாழ்க்கை முழுவதும் அப்படியே ‘முதல் காதல்’ நினைவாகவே இருந்துவிடுவதில்லை என்பதே யதார்த்தம். அப்படி இருப்பது இயற்கைக்கு முரணானது தானே?

படிக்க:
என் தோழி என்ன தவறு செய்தாள்? – சந்தனமுல்லை
♦ குழந்தைகள் கணிதத்தை எப்படிப் பார்க்கிறார்கள் ?

‘முதல் காதல்’ நினைவுகள் ஏன் மறக்க முடியாததாக பலருக்கு இருக்கிறது? முதன்முதலில் வானத்தில் பறக்கும் நிகழ்வு தரும் த்ரில் போன்றதொரு அனுபவத்தை ‘முதல் காதல்’ தருவதால் அது மறக்க முடியாததாக உள்ளது என்கிறார்கள், உளவியலாளர்கள். அதைக் கடந்து வேறு எந்த ‘புனித’மும் அதற்கு இல்லை. இதுவே கூட, சிலருக்கு த்ரில் அனுபவமாக இருக்கலாம், சிலருக்கு டிராஜிடியாகவும் அமைந்துவிடலாம்.

அதோடு, எதை முதல் காதல் என சொல்கிறார்கள்? எட்டு வயதில்கூட ஆண்-பெண் ஈர்ப்பு சாத்தியம். அதை முதல் காதல் என சொல்லலாமா? பதின்பருவத்தில் ஹார்மோன் கிளர்ச்சியால் உண்டாகும் ஈர்ப்பை முதல் காதல் என சொல்லலாமா? அல்லது ஆணுக்கும் பெண்ணுக்கும் சட்டப்படியான திருமண வயதை எட்டிய பின் வருவதுதான் முதல் காதலா? அல்லது படிப்பு, வேலை என செட்டிலானபின் வருவது முதல் காதலா? 30, 40 வயதில் முதல் காதல் வந்தால் அதை முதல் காதல் பட்டியலில் சேர்க்கலாமா? எதை ‘முதல் காதல்’ என்கிறார்கள்? முதல் காதலுக்குப் பிறகு வரும் காதலெல்லாம் அழகிய நினைவாக கொண்டாட தகுதியற்றதா?

அப்படியெனில், கடந்துபோன முதல் காதலை கொண்டாடுகிற பலர், நிகழ்காலத்தில் அன்பில்லாத வறட்டுத்தனமான வாழ்க்கையை வாழ்வது தெரிகிறது. கிட்டத்தட்ட இறந்தகாலத்தை மறக்க முடியாத மனநோயாளிகள் போன்றதொரு நிலையில் வாழ்கிறார்கள். மனநோய் அவர்களை மட்டும் பாதிப்பதில்லை. அவர்களையும் கடந்து அவர்களுடைய குடும்பத்தை பாதிக்கிறது; சமூகத்தில் பிரச்சினையை உண்டாக்குகிறது. ஒருதலை காதல் கொலைகள், காதலின் பெயரால் நிகழும் வன்முறைகளுக்கு மிகைப்படுத்தப்பட்ட, புனிதமாக்கப்பட்ட, சினிமாக்களால் ஊதிப் பெரிதாக்கப்பட்ட ‘முதல் காதல்’ என்கிற அபத்தமே அடித்தளமாக இருக்கிறது என்பதை மறுக்க முடியுமா? அவற்றை பட்டியலிட்டால் மேலே சொன்ன சம்பவங்களைக் காட்டிலும் வன்முறையின் அளவு இவற்றில் கூடுதலாக இருக்கும்.

வழக்கமாக ஆண்-மைய சமூகத்தில் காதலும் திருமணமும் பெண்களை சுரண்ட கிடைத்த கருவிகளாகிவிட்ட நிலையில் ‘முதல் காதல்’ என்பதையும் ஒரு சுரண்டல் ஆயுதமாகவே ஆண்கள் பயன்படுத்துகிறார்கள். பெண்களை கொல்லவும் அவர்கள் மீது கட்டற்ற வன்முறைகளை ஏவவும் அவர்களை சுரண்டவும் ஆண்களுக்கு கிடைத்த மற்றுமொரு ஆயுதமே‘முதல் காதல்’. பண்பட்ட மனிதராக வாழ விரும்பினால் முதலில் இந்த ஆயுதத்தை தூக்கி எறியுங்கள்.

மு.வி.நந்தினி
மனக்கதவை மூடி வைத்திருந்தாலுமேகூட உங்களையும் அறியாமல் நீங்கள் மீண்டும் காதல் வயப்பட்டிருப்பீர்கள். அவர் உங்கள் அருகில் இருப்பவராக இருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம். அதை நிகழ் காலத்தில் தேடிக் கண்டடையுங்கள்; இறந்த காலத்தில் அல்ல.

மு.வி.நந்தினி கடந்த 14 ஆண்டுகளாக தமிழின் பல இதழ்களில் பத்திரிகையாளராக பணியாற்றியிருக்கிறார். தற்போது டைம்ஸ் தமிழ் டாட் காம் இணையதளத்தின் ஆசிரியராக இருக்கிறார். சுற்றுச்சூழல், சமூகம், இந்துத்துவ அரசியல், பெண்ணியம் சார்ந்து எழுதிவருகிறார். வினவு கருத்தாடல் பகுதியில் பாரமுகம் பார்ப்போம் எனும் தலைப்பில் எழுதுகிறார்.

ஒரு குடம் தண்ணிக்கு ஓராயிரம் பேர்கிட்ட வசவு வாங்கறதா இருக்கு !

மிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. தண்ணீருக்கான போராட்டம் தமிழகத்தின் பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது. சென்னையில் தினந்தோறும் போராட்டம் நடைபெறுவது வழக்கமாகிவிட்டது. பல்லாவரத்தில் போராட்டம்.. மாதவரத்தில் போராட்டம், வண்ணாரப்பேட்டையில்  போராட்டம்… எங்கும் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கடந்த 08.05.2019  புதன்கிழமை அன்று சென்னை வண்ணாரப்பேட்டை 4-வது மண்டலத்தில் உள்ள பார்த்த சாரதி நகரில் உள்ள மக்கள் தண்ணீர் கேட்டு சாலை மறியல் செய்திருக்கின்றனர்.

அப்பகுதியில் நிலவும் தண்ணீர் பிரச்சனை குறித்து அவர்கள் சொல்வது நம்மை உலுக்குகிறது. “உண்மையில் இப்படி ஒரு பஞ்சத்தை  எதிர் கொள்வோம் என்று நாங்கள் கனவிலும் நினைத்து பார்த்தது இல்லை” என்கிறார்கள் தண்ணீர் லாரிக்காக காத்திருந்த அப்பகுதி பெண்கள்.

படிக்க:
♦ ஒரு விரல் புரட்சியால் ஈரானிடம் எண்ணெய் வாங்க முடியுமா ?
♦ “ராடாரேந்திர மோடி !” – மோடியை வறுத்தெடுத்த வலைத்தளவாசிகள் !

தண்ணிர் லாரி வந்ததும் கூடியிருந்த மக்கள் எல்லோரும் ஓடியவாறு வரிசையில் நின்று குடங்களை அதனருகே வைத்தவாறு பரபரப்பாகினர். தண்ணீரை முறையாக எல்லோர் வீட்டுக்கும் கொடுக்க ஒரு மேஸ்திரி நியமித்து இருந்தார்கள். ஒரு குடத்திற்கு ஒரு ரூபாய் கொடுத்த பிறகு அவர் தண்ணீரை திறந்து விடுகிறார்.

வந்த தண்ணீர் லாரியின் கொள்ளளவு 9,000 லிட்டர். ஆனால், காத்திருந்த குடங்களோ அதிகம். எல்லோருக்கும் தண்ணீர் கிடைக்கவில்லை. ஒருவர் மட்டும் “பாத்தியா இந்த ரெண்டு கொடத்துக்காக நான் எவ்வளவு பாடுபட்டேன்” என்று இரண்டு கைகளிலும் பிளாஸ்டிக் குடங்களை தாங்கி கொண்டு மூச்சு முட்ட சொல்லிக் கொண்டே நகர்ந்தார்.

மற்றவர்கள் தண்ணீர் கிடைக்காத கோபத்தில் பொறுமிக் கொண்டே போக……  அசதியாக உட்கார்ந்த மேஸ்திரி கோமளாவிடம்…  இந்தப் பகுதியில் தண்ணீர் பிரச்சினையை எப்படி இருக்கு என்றதும்….

“நா… என்ன சொல்ல… அதான் நீங்களே பார்த்திங்களே எங்க நெலமைய.  இதோ.. இந்த லாரிகாருக்கு வசூல் பண்ண காசு 250 ரூபாயில 220 ரூபா அவருக்கு கொடுக்கனும். மீதி இருக்கிறது 30 ரூபா தான்” என்று சில்லறையை எடுத்துக் காட்டினார்.

லாரி ஓட்டுநரிடம் பணத்தை கொடுத்துவிட்டு மூச்சிறைக்க சொன்னார்… “எப்பா சாமி… உன்னை கெஞ்சிக் கேட்டுக்குறேன்.  தண்ணி மட்டும் கொண்டு வராம இருந்துடாத… நீ கேக்குற காசகூட கொடுத்துடுறோம். இந்த தண்ணிக்காக நாங்க படாதபாடு படுறோம்.  எப்ப தண்ணி வருமோன்னு வேலைக்கும் போகாம வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறோம் தயவு செஞ்சி வந்துருப்பா… ப்ளீஸ்”  என்றார்.

“சரிக்கா”.. என்று சொல்லிவிட்டு அந்த லாரி ஓட்டுநர் கிளம்பியதும் சொன்னார். “இந்த பார்த்தசாரதி தெருவில் மொத்தம் 9 சந்து வரை இருக்கு. பாக்கதான் சின்னதா இருக்கும். ஒவ்வொரு சந்துக்கும் 100-லருந்து 150 குடும்ப வரைக்கும் இருக்கும். மொத்தமா ஆயிரம் குடும்பங்களுக்கு மேல இங்க இருக்காங்க.

பெரும்பாலும் பிட்டர், எலெக்ட்ரிசியன், ஏசி மெக்கானிக், டூவீலர் மெக்கானிக் சுத்தி இருக்க சின்ன சின்ன பட்டறைகளில் தான் வேலை செய்து வருகிறார்கள். இதுதான் இங்கு வாழக்கூடிய மக்களின் அடிப்படை ஆதாரமாக இருக்கிறது. வேலைக்கு போனால் தான் சாப்பாடு என்ற  நிலைமையில் இருக்கும்  எங்களுக்கு குடிக்க தண்ணிகூட கிடைக்கிறதில்ல.

கடந்த 20 நாளா சரியா தண்ணி வரது இல்ல… ஒண்ணு விட்டு ஒருநாள் தண்ணி வரும். அதுவும் இப்ப வர்ரது இல்ல.  நாங்க தினம் தினம் ஓடிப்போய் அதிகாரிங்ககிட்ட எழுதி கொடுத்துட்டு வருவோம். ’எங்க தெருவுக்கு தண்ணி வேணும்’ன்னு சொல்றதுக்கு காலையில் 6 மணிக்கு அந்த ஆபிசுக்கு போய் விடுவோம். அங்க போயிட்டு சொன்ன 2 மணிக்கு அனுப்புறோம்னு சொல்லுவாங்க. நாம நம்பி வந்துடக் கூடாது அங்கேயே நின்னாதான் தண்ணி அனுப்புவாங்க. 2 மணிக்கு நீங்க போய் சொன்னிங்கன்னா 6 மணிக்குதான் வருவாங்க. வேலைக்கு போற யாராவது ஒருத்தவங்க வேலைக்கு லீவு போட்டுட்டு அந்த அலுவலகத்துக்கு நடையா நடக்கணும். அப்படி நடந்தா தான் நாங்க தண்ணி குடிக்க முடியும்.

லாரி வந்ததும் ஒரு வீட்டுக்கு ஐந்து குடம் தண்ணீர் புடிக்கிறதுக்கு அனுமதி உண்டு.  அஞ்சி கொடம் தண்ணியத்தான் இரண்டு நாள் வரைக்கும் வச்சிக்கனும். துணி துவைக்கிறதோ, குளிப்பதோ அல்லது கக்கூஸ் போறது எதுவா இருந்தாலும் இந்த அஞ்சு குடம் தண்ணீரிலேயே எல்லா வேலையும் முடிச்சிக்கனும்.

தண்ணி இருந்தப்ப டெய்லி குளிச்சோம். இப்ப அப்படி இல்லை. குளிக்கிறதுக்கு நாலு நாளாவது, அழுக்கு துணிகளை தான் வேலைக்கு போட்டுட்டு போறோம். துணி மொத்தமா சேர்த்து ஒருநாள் புடிக்கிற தண்ணியில துவைச்சிக்கிறோம்.

இந்த ஏரியாவுல ஒரு குடும்பத்துக்கு குறைந்தபட்சம் 7 லிருந்து 8 பேர் வரை இருக்காங்க. இதுபோக குழந்தை குட்டி என்று ஏராளமா இருக்குதுங்க. இந்த குழந்தைங்க தண்ணில விளையாடுதுங்க. அவங்ககிட்ட போயிட்டு எதையும் எடுத்துச் சொல்ல முடியல. சொன்னா புரிஞ்சிக்கிற வயசுமில்ல. இதுவே எங்களுக்கு பெரிய பிரச்சனையா இருக்கு.

இந்த தண்ணீர் குடிக்கிறதுக்கு நாங்க ஊர்ல இருக்கிற எல்லார்கிட்டயும் திட்டுவாங்கறதா இருக்கு. இப்ப எங்க தெருவுக்கு ஒரு லாரி வருது அப்படின்னா எங்களால தண்ணி புடிக்க முடியல. அப்புறம் நாங்க பக்கத்து தெருவுக்கு வர லாரில தண்ணி புடிக்க கொடத்த தூக்கிட்டு ஓடுவோம். அங்க இருக்கறவங்க  “ உங்க ஏரியாவுல தான் தண்ணி வருதே….. இங்க எதுக்கு நீ வர” அப்படின்னு நம்ம கிட்ட சண்டைக்கு வருவாங்க.

ஒரு குடம் தண்ணிக்கு ஓராயிரம் பேர்கிட்ட வசவு வாங்கறதா இருக்கு. தண்ணி இல்லன்னா உயிர் வாழ முடியுமா யோசிச்சு பாருங்க? லாரி வரும்போது வீட்ல ஆள் இல்லாதவங்க, இல்லனா தண்ணி கெடக்காதவங்க என்ன பண்ணுவாங்கன்னா நைட்டு ரெண்டு, மூனு மணிக்கு குடிநீர் வாரிய ஆபிசுக்கு போயிட்டு தண்ணீர் கொண்டு வருவாங்க. ஆட்டோ, பைக்குன்னு எடுத்துட்டு போயிடுவாங்க. அந்த நேரத்துக்கு போனாதான் நெரிசல் இல்லாம இருக்கும். இல்லனா அங்கயும் கூட்டம்தான்.

இதுக்கு முன்னாடி எங்களுக்கு தண்ணி பஞ்சம் வந்தது இல்லை. கார்ப்பரேஷன் வாட்டர் தான். டெய்லியும் குழாய்ல தண்ணி வந்துரும். ஆனா இப்ப லாரி தண்ணீரை நம்பி தான் இருக்கிறோம்.

படிக்க:
இந்தியாவின் சிறந்த விஞ்ஞானி : செல்லூர் ராஜுவா ? மோடியா ? கருத்துக் கணிப்பு
நூல் அறிமுகம் : பிம்பச் சிறை (எம்.ஜி.ஆர் – திரையிலும் அரசியலிலும்)

தண்ணி வேணும்னு அதிகாரிங்கள கேட்டா, எந்த பதிலும் சொல்ல மாட்றாங்க. கொஞ்சம் கோவமா கேட்டா “எவ்வளவு பேருக்கு தான் நாங்களும் தண்ணி அனுப்ப முடியும். உங்கள மாதிரி நாங்களும் மனுஷங்கதானே” அப்படின்னு நம்மளையே திருப்பிக் கேட்கிறாங்க. பரிதாபமா பேசுறாங்க.

ஏற்கனவே வீட்ல நாங்க 60 அடி போர் போட்டு இருக்கிறோம். அதுல தண்ணி ஏறவில்லை. 19 அடியில கிணறு வெட்டியிருக்கோம். அதுலயும் தண்ணி இல்ல. இப்ப என்ன பண்ண முடியும்? அதிகாரிங்களத்தானே கேக்க முடியும்.

கேன் வாட்டர் வாங்கலாம்னா அதுவும் விலை கூடிடுச்சு. அதுவும் சொல்ற நேரத்துக்கு வருவதில்லை. இந்த லாரிக்காரன் மாதிரியே கேன் வாட்டர்காரங்களும் ஏமாத்துறாங்க. அப்படியே வந்தாலும் வழியிலேயே இருக்கிறவங்க மடக்கிக்கிறாங்க. கடைசியில இருக்கிறவங்களுக்கு தண்ணீர் கிடைக்கிறது பெரும்பாடாக இருக்கு. அதே மாதிரி இங்க டேங்க் இருக்குது. தெருவுக்கு தெரு வச்சிருக்காங்க. ஆனால் அது எதுக்கும் பயன்படாம இருக்குதுங்க.

எனக்கு தெரிஞ்சு பத்து பதினைந்து வருஷம் ஆகுது அதுல தண்ணி புடிச்சி. அதை சரி பண்ணுங்க அப்படின்னு சொன்னா, இதோ வறேம்மா…. நாளைக்கு வறேம்மா’னு” அதிகாரிகள் சொல்லிட்டு போயிடுறாங்க. அதுக்கப்புறம் திரும்பி வருவதே இல்லை.

எங்க ஜனங்க ரொம்ப கடுப்பாகி இனிமே இந்த அதிகாரிங்களை நம்புனா வேலைக்கு ஆகாது. நாமளே காசு போட்டு இந்த டேங்கை சரி பண்ணிடலாம். இந்த டேங்குல தண்ணீர் நிரப்பிடட்டும். வேலைக்கு போனவங்ககூட வந்து புடிச்சிக்குவாங்க அப்படின்னு சொல்லி இருக்கிறார்கள்” என்று சொல்லிவிட்டு “எவ்வளவு காசு கேட்டாலும் கொடுக்க மக்கள் தயாராக இருக்கிறோம்….. ஆனால், தண்ணி தான் கிடைப்பதில்லை” என்கிறார் கோமளா.

ஒரே ஒரு குடம் மட்டும் பிடித்த சுல்தானா என்பவர் கையிலிருந்த குடத்தை தனது கணவரிடம் கொடுத்துவிட்டு சொன்னார்.  “நாங்க நாயா அலஞ்சாலும் எங்களுக்கு தண்ணி கெடச்ச பாடில்லை. முஸ்லீம்கள் இப்ப எங்களுக்கு நோன்பு இருக்கும் நேரம். சரியா தண்ணீர் கிடைக்கிறது இல்லை. அதற்கு முக்கியமான காரணம் லாரில வர தண்ணி எல்லாத்தையும் வீட்டு ஓனருங்க சம்புல போட்டு அடைச்சு வச்சிக்குறாங்க. எங்கள மாதிரி வாடகைக்கு இருக்கவங்களால சமாளிக்க முடியல.

சுல்தானா.

கீழ இருக்கவங்களுக்கு சிரமம் இல்லாம தண்ணி புடிச்சி வச்சிக்குறாங்க. நாங்க மேல இருந்து கீழ வரதுக்குள்ள தண்ணியும் காலியாகிடுது. லாரியும் காணாம போயிடுது. குளிக்கவும் தண்ணி இல்ல. குடிக்கவும் தண்ணி இல்ல.

தினமும் சமைக்க மட்டும் ஒரு கேன் வாட்டர் வாங்கிக்குவோம். அதற்கு முப்பது ரூபா. சமைச்சது போக குடிக்கிறதுக்கு மட்டும் வச்சிக்குவோம். ஒண்ணுவிட்டு ஒருநாள்தான் தண்ணி வரும். அதுவரைக்கும் பத்திரமா பாத்துக்கனும்” என்கிறார் சுல்தானா.

அப்பகுதியில் செயல்பட்டு வரும் சிஐடியு தொழிற்சங்கத்தின் நகர செயலாளர் தினேஷ் அவர்களை கேட்டபோது சொன்னார். ”குறிப்பாக 3 மற்றும் 4வது சந்தில் சுமார் 150 குடும்பங்கள் வசிக்கும். இந்த சந்திற்கு மட்டும் மெட்ரோ பைப் லைன் மூலமாக தண்ணீர் கொடுத்ததால் லாரி தண்ணீர் வீடுகளில் கட்டி வைத்திருந்த தண்ணீர் தேக்க தொட்டிக்கு (சம்ப்)  சென்று விடுவதால் பல வீடுகளுக்கு தண்ணீர் போவதில்லை. இது ஒரு பக்கம் இருக்க கடந்த சில நாட்களாக லாரி தண்ணீர் வருவதையும் நிறுத்தி விட்டார்கள்.

மேலும் மெயின் தெருவில் பல மாதங்களாகவே சாக்கடை தண்ணீர் கலந்து வருகிறது. இப்பிரச்சனையை தீர்க்க மெட்ரோ வாட்டர் அதிகாரியை சந்தித்து மனு கொடுத்தால் அதற்கும்  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுதான் போராட்டத்திற்கு முக்கிய காரணம்.

சொந்தமாக போர் போட்டு தண்ணீர் பிடித்துக் கொள்வதற்கான வசதியும் இல்லை. அதற்கான சூழலும் இல்லை. காரணம் 60 அடி 70 அடி மட்டத்திற்கு தண்ணீர் இல்லை. அப்படியே 150 அடிக்கு போட்டால் உப்பு தண்ணீர் தான் வருகிறது என்பதால் இந்த லாரி தண்ணீரையே நம்பி இருக்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்” என்கிறார்.

“தண்ணீர் பஞ்சம்” – “பூமியில் தண்ணியில்லை” – “மழை பெய்யவில்லை” வேறு என்ன செய்ய முடியும்? என்று பொதுவான பிரச்சனையாக கருதி புறந்தள்ளும்படியாக இல்லை. நாம் எதிர்பாராத வகையில் மிகப்பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறோம் என்பதற்கான ஒரு வகை மாதிரிதான் இது!

படிக்க:
தாகத்திற்கா தண்ணீர் லாபத்துக்கா ? – கோவன் புதிய பாடல் !
பெருக்கெடுக்குது டாஸ்மாக் சரக்கு ! வறண்டு போனது குடிநீர் !

சென்னை நகரம் முழுவதும் இதுதான் நிலை. வசதி உள்ளவர்கள் தமது அடுக்ககங்களில் பாதாள அறைகளில் லாரித் தண்ணீரை நிரப்பிக் கொள்கிறார்கள். இப்போது அதற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு அதிக விலைக்கு விற்கிறார்கள். தண்ணீர் வசதி இல்லாத வீடுகளிலிருந்து குடித்தனக்காரர்கள் காலி செய்கிறார்கள். தண்ணீர் வசதி உள்ள வீடுகளின் வாடகை திடீரென உயர்ந்திருக்கிறது. கேன் வாட்டர்களுக்கு கடுமையான கிராக்கி ஏற்பட்டிருக்கிறது. பல இடங்களில் மாநகராட்சி தண்ணீர் வருவதே இல்லை. சில வி.ஐ.பி பகுதிகளில் மட்டும்தான் வருகிறது.

தண்ணீருக்காக அன்றாடம் பெரும் போராட்டத்தை நடத்த வேண்டிய நிலையில் சாதாரண மக்கள் இருக்க, நடுத்தர வர்க்கமோ தனது துண்டு விழும் பட்ஜெட்டில் மேலும் செலவை தண்ணீருக்காக போட வேண்டிய நிலையில் இருக்கிறது. பிரச்சினையை தீர்க்க வேண்டிய அரசோ செயலற்று இருக்கிறது. ஊடகங்களோ தேர்தல் பரபரப்பில் காலந்தள்ளுகின்றன.

வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்பார்கள். அன்றாடம் அரசுக்கும் மாநகராட்சிக்கும் எதிராக போராடும் சிந்தனை உள்ள மக்களுக்கே தண்ணீர் கிடைக்கும் என்பது தற்போதைய சேதி! இந்தக் கோடைகாலம் சுட்டெரிக்கும் வெயிலோடு போராடும் காலமாகவும் இருக்கிறது.

– வினவு களச் செய்தியாளர்.

இஸ்லாமிய மத அடிப்படைவாதமும் இலங்கை குண்டுவெடிப்புகளும் !

”இஸ்லாமிய மத அடிப்படைவாதமும் இலங்கையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளும்!” என்ற தலைப்பில் இலங்கையில் செயல்பட்டுவரும் புரட்சிகர அமைப்பான புதிய ஜனநாயக மாக்சிச – லெனினிச கட்சி ஒரு சிறு வெளியீட்டை வெளியிட்டுள்ளது.

இந்த வெளியீட்டை PDF கோப்பாக தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும். இந்த வெளியீட்டை முழுமையான பதிவாக இங்கு வெளியிட்டுருக்கிறோம்.

***

இஸ்லாமிய மத அடிப்படைவாதமும் இலங்கையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளும் !

அனைத்து மத அடிப்படைவாதங்களும் எதிர்க்கப்படவேண்டும் ! முஸ்லீம் மக்கள் எல்லோரையும் சம்மந்தப்படுத்தி நோக்கக்கூடாது !

தாக்குதலும் எதிர்வினைகளும்

டந்த 2019 ஏப்ரல் 21-ம் திகதி கிறிஸ்தவ தேவாலயங்களிலும் ஹோட்டல்களிலும் தற்கொலைக் குண்டுதாரிகள் குண்டுகளை வெடிக்க வைத்ததால் 250-க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். திட்டமிட்டு இலக்கு வைத்த தேவாலயங்கள் மூன்றும் கத்தோலிக்கத் தேவாலயங்கள் எனவும் நேரந் தவறியதால் சியோன் தேவாலயம் தாக்கப்பட்டது எனவும் தெரியவந்துள்ளது.

தாக்குதல்கள் நிகழ்ந்த நாள் கிறிஸ்தவர்கட்கு அதி புனிதமான உயிர்த்த ஞாயிறு. அது கிறிஸ்தவர்கள் பெருந்தொகையாகத் தேவாலயஞ் சென்று விசேட ஆராதனைகளிற் பங்கேற்கும் நாள். எனவே தாக்குதல்களின் நோக்கம் தேவாலயங்களைச் சேதப்படுத்துவதுடன் பெருந்தொகையான கிறிஸ்தவர்களைக் கொல்வதுமாகும். குறி தவறிய ஒரு ஹோட்டல் உட்பட, இலக்கு வைத்த ஹோட்டல்கள் என்ன அடிப்படையிற் தெரியவாயின என நிச்சயமில்லை.

இத் தாக்குதல்கள் எழுப்பும் முக்கிய கேள்விகளைப் புறக்கணித்தே, அரசியற் பிரமுகர்களும் சமூகத் தலைவர்களும் தாக்குதல்களைப் பற்றியும் மேற்கொண்டு இவ்வாறான தாக்குதல்களைத் தவிர்ப்பதைப் பற்றியும் அதிகமாகப் பேசுகின்றனர். மிக நிதானமான சிலர், சமூகங்களிடையே ஒற்றுமையைப் பேணலும் பாரபட்சத்தை நீக்கலும் தேவை என வலியுறுத்துகின்றனர். பலர் தங்களுடைய இறுகிய சிந்தனைகளினின்று விடுபடாது, தமக்கு வாய்ப்பான விளக்கங்களையும் தீர்வுகளையும் முன்வைக்கின்றனர். சில ஊடகங்களின் நடத்தை எரிகிற வீட்டில் விறகு பொறுக்கும் வழமையில் வணிக நோக்குடன் தொடர்கிறது.

படிக்க :
♦ இலங்கை குண்டு வெடிப்பு : எங்கட நாட்டுப் பக்கம் வந்திடாதே | பாஜக-வைச் சாடும் இலங்கை மக்கள் !
♦ இலங்கை குண்டுவெடிப்பு

இது தனியே முஸ்லிம்கள் பற்றிய பிரச்சனையல்ல. முஸ்லீம் ‒ கிறிஸ்துவப் பகை பற்றியதுமல்ல. இது முழு நாட்டினதும் பிரச்சனை. நாட்டின் அமைதியும் மக்களின் பாதுகாப்பும் பற்றிய பிரச்சனை. எனினும் இப் பிரச்சனையின் அடிப்படை, தேசிய இனப் பிரச்சனை ஒரு பகை முரண்பாடாக்கப்பட்டமையாகும். அதனால் சாதாரண மக்களிடையே இனப் பகை கூறிப்பிடத்தக்க அளவில் இல்லாவிடினும் பிற சமூகங்களைச் சிறிதேனும் சந்தேகத்துடன் நோக்கும் தன்மை உருவானது.

எனவே, முஸ்லிம் தீவிரவாத எழுச்சியின் பின்புலத்தைச் சிறிது ஊன்றி நோக்க வேண்டும். அதன் தேசிய, சர்வதேசியப் பரிமாணங்களையும் கவனிக்க வேண்டும். அதைவிட, முஸ்லிம் சமூகத்தினருக்கும் பிற சமூகத்தினருக்கும் இருந்த உறவின் சீரழிவையும் அதற்குப் பங்களித்த சமூகப் போக்குகளையும் விசாரிக்கவேண்டும்.

முதலில், முஸ்லிம்களின் சமூக அடையாளத்தையும் பிற சமூகங்களுடனான அவர்களுடைய உறவையும் கவனிப்போம்.

முஸ்லிம்களின் சமூக அடையாளம்

முஸ்லிம்கள் நீண்டகாலமாகத் தம்மை ஒரு தேசிய இனமாக அறிவிக்காத போதும், அவர்கள் தமது தனித்துவத்தை ஒரு நூற்றாண்டுக்கு மேலாக வலியுறுத்தி வந்துள்ளனர். இஸ்லாம் மதம் வணிகர்கள் ஊடாகவே இலங்கைக்கு அறிமுகமாகியதால், முஸ்லிம்களிடையே வணிகர்களின் விகிதாச்சாரம் பிற சமூகங்களில் உள்ளதினும் அதிகம். எனினும் இன்று பெரும்பாலோர் உடல் உழைப்பாற் பிழைப்போராவர்.

சிங்கள முதலாளிகட்கு முஸ்லிம்களுடன் வணிகப் போட்டியிருந்தது. அதன் விளைவாகவே 1915-ல் வடக்கு ‒ கிழக்கு தவிர்ந்த இலங்கையிற் கடுமையான சிங்கள ‒ முஸ்லிம் மோதல் நடந்தது. அம்மோதலில் வன்முறையைத் தூண்டியமைக்காகக் கைதான சிங்கள பேரினவாதத் தலைவர்களின் சார்பில் கப்பலில் லண்டனுக்குப் போய் வாதாடிய சேர் பொன்னம்பலம் இராமநாதன் பேரினவாதிகளை விடுவிக்குமாறு மன்றாடியதோடு, முஸ்லிம்கட்குப் பாதகமாயும் பேசியமை தென்னிலங்கை முஸ்லிம் தலைவர்களிடையே கசப்பை ஏற்படுத்தியது.
முஸ்லிம்களில் ஏகப்பெரும்பாலானோரின் வீட்டு மொழி தமிழ் என்ற காரணத்தை முன்னிறுத்தி, அவர்கள் தமிழர்கள் என்றும் முஸ்லிம்கட்குத் தனிப் பிரதிநிதித்துவம் தேவையில்லை என்றும் இராமநாதன் முன்னர் வாதித்தமையும் நோக்கத்தக்கது.

படிக்க :
♦ இலங்கை குண்டுவெடிப்பு : குற்றவாளிகளைப் பிடிக்க உதவிய இசுலாமியர்கள் !
♦ ரஞ்சன் கோகோய் மீதான பாலியல் குற்றச்சாட்டு ! உண்மையா ? பொய்யா ?

முஸ்லிம்கள் கிழக்கிலங்கையிற் கணிசமானளவு பிரதேசத்திற் செறிவாக வாழ்கின்றனர். வடக்கிலும் மேற்குக் கரையோரமாயும் முஸ்லிம்கள் கணிசமாக வாழும் பிரதேசங்கள் உள்ளன. ஆயினும் ஏகப் பெரும்பாலோர் பல இடங்களிற் சிங்கள மக்களிடையே ஒரு குறிப்பிடத்தக்க சிறுபான்மையாக உள்ளனர். எனவே அவர்கள் தமிழருடன் ஒப்பிடத்தக்க மொழிப்பற்று உடையோராயினும், அவர்களின் தனித்துவம், மொழியை விட முக்கியமாக மதமும் பண்பாடும் சார்ந்திருந்தது.

ஜி.ஜி. பொன்னம்பலம்

அவர்களுடைய தனித்துவத்தை இராமநாதன் நிராகரித்தார். முற்றிலும் யாழ், குடாநாட்டை மையப்படுத்திய தமிழ்த் தேசிய அரசியலை அவருக்குப் பின் வந்த ஜி.ஜி. பொன்னம்பலம் முன்னெடுத்தார்.

வடக்குக் கிழக்கு மாகாணத் தமிழரையும் மலையகத் தமிழரையும் முஸ்லிம்களையும் ஒரு பொது அடையாளத்துட் கொண்டுவரும் நோக்குடன் தமிழரசுக் கட்சி தமிழ் பேசும் மக்கள் என்ற கருத்தை முன்வைத்தது. அது வடக்கு‒கிழக்கின் முஸ்லிம்கட்கு உடன்பாடானதெனினும், தமிழரசுக் கட்சியின் கோரிக்கைகளும் போராட்டங்களும் முஸ்லிம்களதும் மலையகத் தமிழரதும் சிறப்பான தேவைகளை வலியுறுத்தத் தவறின. தமிழரசுக் கட்சிக்குப் பாராளுமன்ற ஆசன எண்ணிக்கை முக்கியமாயிருந்தது. முஸ்லிம் பிரமுகர்கட்குத் தங்களைத் தனிப்பட வலுப்படுத்தும் தேவை இருந்தது. எனவே, வெறும் தேர்தல் வாக்குக் கணிப்பின் மீது கட்டியெழுப்பிய புரிந்துணர்வு நிலைக்கவில்லை.

பேரினவாதிகளுடைய ஒடுக்கல் அணுகுமுறையாலும் தமிழ்த் தேசியவாதிகளின் குறுகிய நோக்காலும் தேசிய இனப் பிரச்சனை மோசமாகி ஒடுக்குமுறை வலுத்த சூழலில் தமிழீழக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அக்கோரிக்கை நாட்டில் வாழும் தமிழ்த் தேசிய இனம் முழுவதையும் பற்றிய கணிப்பில்லாமலும் முஸ்லிம், மலையகத் தமிழ் மக்கள் பற்றி உரிய சிந்தனை இல்லாமலும் அமைந்தது. எனவே, முஸ்லிம்கள் தமிழ் மக்களின் உரிமைகட்கு ஆதரவாக இருந்தபோதும் பிரிவினை பற்றிய ஐயத்துடனேயே இருந்தனர்.

தமிழர் ‒ முஸ்லிம்கள் பிரிவினை

தமிழ்ப் பாராளுமன்ற அரசியற் தலைமைகள் மீதான நம்பிக்கையை இழந்த நிலையில் முன்னணிக்கு வந்த தமிழ்த் தேசிய இளைஞர் இயக்கங்களிடையிலும் குறுந்தேசிய மேலாதிக்கப் போக்கு முனைப்பாயிருந்தது. முஸ்லிம்கள் தமிழீழக் கோரிக்கையை ஏற்றேயாக வேண்டுமெனப் பெருவாரியான இளைஞர் இயக்கங்கள் நிர்ப்பந்தித்தன.

குறிப்பாக, விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் வலுத்த போர்ச் சூழலில், முஸ்லிம்களும் தமிழ் மக்களைப் போல தமக்குக் கீழ்ப்பட்டு நடக்க வேண்டுமென எதிர்பார்த்த விடுதலைப் புலிகளின் அணுகுமுறையால் முஸ்லிம்கள் அதிருப்தி அடைந்தனர். அதன் பயனாகக் கிழக்கில், குறிப்பாக மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில், முஸ்லிம்களை வலிந்து தாக்கலும் முஸ்லிம்களின் எதிர்த் தாக்கலும் சில முஸ்லிம்கள் அரசாங்கத்துடன் நிற்பதுமாகத் தமிழ் ‒ முஸ்லிம் நல்லுறவுக்குக் கேடு விளைந்தது.

காத்தான்குடி மசூதி மீதான தாக்குதல்

அதை மேலும் மோசமாக்குமாறு 1990-ல் விடுதலைப் புலிகள் முஸ்லிம்களை வடக்கிலிருந்து வெளியேற்றியமை தமிழ்த் தேசியத்துக்கும் முஸ்லிம்கட்குமிடையே கடும் பிரிவை ஏற்படுத்தியது.

தமிழரிடமிருந்து முஸ்லிம்கள் விலகுவதை விரும்பித் தமிழ் ‒ முஸ்லிம் பகையைத் தூண்டும் செயல்களைச் சில முஸ்லிம் அரசியல்வாதிகள் செய்தனர். அதை வாய்ப்பாக்கிய சில தமிழ்த் தேசியவாதிகளும் தமிழ் ‒ முஸ்லிம் பகைக்குத் தூபமிட்டனர். அதில் பேரினவாதிகள் குளிர்காய்ந்தனர்.

இன்று தென்னிலங்கையில் முஸ்லிம்களிற் குறிப்பிடத்தக்க பகுதியினர் அரசாங்க நிர்ப்பந்தத்தாலும் வளக் குறைவுகளாலும் சில சமயம் சுய தெரிவாயும் சிங்கள மூலமே கல்வி பெறுகின்றனர். சிங்களம் இன்னமும் பலரின் வீட்டு மொழியாகாவிடினும், முஸ்லிம் சமூகத்தின் அடையாளம் மேலும் மேலும் மதமும் பண்பாடும் சார்ந்து அமையும் சூழ்நிலை வலுத்துள்ளது.

எவ்வாறாயினும், சிங்களத் தேசியவாதம் சிங்கள ‒ பௌத்த பேரினவாதமாக உருமாறிய நிலையில் அது முஸ்லிம்களைச் சிங்களவர்களாக ஏற்கும் வாய்ப்புக் குறைவு. அதேவேளை, தமிழ்க் குறுந்தேசியம் ஒருபுறம் முஸ்லிம்களின் தனித்துவத்தை மறுத்து அவர்களைத் தமிழ் மேட்டுக்குடிகட்குக் கீழ்ப்பட்டோராகக் கருதுவதால், முஸ்லிம்கள் தமிழ்த் தேசிய அடையாளத்துக்கு உட்படவும் வாய்ப்பு இல்லை எனலாம்.

தேசிய இனமாக முஸ்லிம்கள்

பொது நிலைமைகளுடன் குறிப்பான நிலைமைகளையும் கணிப்பிற்கொண்ட புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி, முஸ்லிம் தலைவர்களையும் மலையகத் தமிழ்த் தலைவர்களையும் விட முற்போக்காகச் சிந்தித்து, முஸ்லிம்களதும் மலையகத் தமிழரதும் தனித்துவத்தை அங்கீகரித்ததோடு, அவர்களைத் தனித் தேசிய இனங்களாக ஏற்கவேண்டுமெனவும் வற்புறுத்தியது.

அந்த அடிப்படையிலேயே சுயநிர்ணயக் கோட்பாட்டை மேலும் விரிவுபடுத்தி, நாட்டின் நான்கு தேசிய இனங்கட்கும் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி, ஐக்கிய இலங்கைக்குட் சுயாட்சி அமைப்புகள் என்ற தீர்வை முன்வைத்தது.

1978-ம் ஆண்டின் அரசியல் யாப்புப் புகுத்திய விகிதாசாரத் தேர்தல் முறை முஸ்லிம்கட்கு முன்னெப்போதினும் அதிகப் பிரதிநிதித்துவத்துக்கு வழி செய்தது. அதன் மூலம் பாராளுமன்றத்திற் கணிசமான ஆசனங்களை வென்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அமைச்சர் பதவிகளைப் பெறவும் பிற சலுகைகளையும் வளங்களையும் அடையவும் முற்பட்டதேயொழிய, முஸ்லிம் மக்கள் ஒரு தேசிய இனமாகவோ தனித்துவமான ஒரு சமூகமாகவோ எதிர்நோக்கும் பிரச்சனைகளைப் பார்க்கவில்லை. இப்போக்கு முஸ்லிம் பாராளுமன்ற அரசியற் தலைமைகளின் சமூக நம்பகத்தை வேகமாகக் குலைத்தது.

பேரினவாதத்தின் இலக்காக முஸ்லிம்கள்

1915 -க்குப் பின் நீண்டகாலமாக சிங்கள ‒ முஸ்லிம் மோதல் ஏதும் நிகழவில்லை. ஆயினும், முஸ்லிம் வணிகர்கள் இரத்தினக்கல் வணிகம் போன்ற துறைகளிலும் 1970 -களின் எண்ணெய் நெருக்கடிக்குப் பின்பு மத்திய கிழக்குப் பொருளாதாரம் கண்ட செழிப்பின் பயனான புதிய வணிக முயற்சிகளிலும் மேலுஞ் செல்வந்தர்களான சூழ்நிலையிற், பழைய போட்டியுணர்வு தலைதூக்கியது. எனினும் ஒருசில உள்ளூர் மோதல்கட்கு மேல் குறிப்பிடத்தக்களவில் எதுவும் நிகழவில்லை.

1977 -க்குப் பின் தமிழ்த் தேசிய இனத்தை இலக்குவைத்த சிங்களப் பேரினவாதம், முஸ்லிம்களுடன் தனது முரண்பாட்டைத் தாழ்நிலைக்கு இறக்கியது. ஆயினும் முஸ்லிம்கட்கெதிரான கசப்பு நீறுபூத்த நெருப்பாகத் தொடர்ந்தது. அதை முஸ்லிம் அரசியல்வாதிகள் அறிவராயினும். வாக்கு வங்கிகளைப் பலப்படுத்துவதிலும் பாராளுமன்ற, அமைச்சுப் பதவிகளைக் கட்டிக்காப்பதிலும் தங்களையும் தங்களது குறுகிய வட்டங்களை வளப்படுத்துவதிலும் அவர்கள் கவனங்காட்டினரே ஒழிய, முஸ்லிம்களைப் பிற சமூகங்களுடன் இணக்குவதைப் பற்றி அக்கறை கொள்ளவில்லை.

படிக்க :
♦ புலித் தலைமை படுகொலை: சதிகாரர்களும் துரோகிகளும்.
♦ ஈழப் போராளிகள் முதுகில் குத்தும் எம்.ஜி.ஆர்-ராஜீவ் கும்பல்!

சிங்கள ‒ பௌத்த மதவாதம் சிஹல உருமய எனத் தொடங்கி இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ஜாதிக ஹெல உருமய எனும் அப்பட்டமான சிங்கள ‒ பௌத்த இனவாத அமைப்பாகப் பரிணமித்தது. அதனோடொட்டி முஸ்லிம் விரோதத்தை முதன்மைப்படுத்தும் வன்முறை அமைப்புகள் தோன்றின. அவற்றுள் முக்கியமானவை பொது பல சேன. சிஹல ராவய, சிங்ஹ லே போன்றவை.

அதேவேளை, கிறிஸ்தவர்கட்கும் முஸ்லிம்கட்கும் எதிரான துவேஷத்தைக் கிளறிய சோம தேரர் போன்றவர்கட்கு ஊடக ஆதரவும் இருந்தது. 2003 -ஆம் ஆண்டு ரஷ்யாவுக்குச் சென்ற சோம தேரர்; நோய் காரணமாக மரித்ததை ஒரு சதியென்று கூறிக் கிறிஸ்தவ ஆலயங்கள் தாக்கப்பட்டன. இப் போக்கு இன்னமும் தொடர்கிறது.

விடுதலைப் புலிகளின் தோல்வியின் பின், சிங்கள‒பௌத்த வன்முறை அமைப்புகள், தேசிய இனப் பிரச்சனையின் தீர்வுக்கு ஆப்பு வைப்பது போக, முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் குறிப்பாக இலக்கு வைத்தன. முஸ்லிம் வணிக நிறுவனங்கள் தாக்கப்பட்டன. ஆயினும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கக்கூடிய சூழ்நிலைகளிலும் பேரினவாதிகளுடன் சமரசம் செய்வதையே முஸ்லிம் பெருவணிகர்கள் விரும்பினர். இப் பலவீனத்தைச் சிங்கள‒பௌத்த வெறியர்கள் தமக்குச் சாதகமாக்கினர்.

சிங்கள‒பௌத்த வெறியர்கள் ஹலால் மாமிசத்துக்கு எதிராக முன்னெடுத்த இயக்கத்தின் போது, இரு தரப்புகளிலும் இருந்த பிரச்சனைகளை அறிந்த முஸ்லிம் தலைமைகள், சிங்கள மக்களுக்கு ஹலால் பற்றி அறிவூட்டாததோடு, ஹலால் என்பதைப் பணம் சம்பாதிக்கும் உபாயமாக்கும் மத நிறுவனங்களைக் கண்டிக்கவும் தயங்கினர். இதனால் முஸ்லிம்கள் சிங்களவர் மீது ஹலால் மாமிசத்தைத் திணிப்பதாகப் பொது பல சேன ஆகிய நிறுவனங்கள் நடத்திய துவேஷப் பிரசாரங்களை வேளைக்கே முறியடிக்க இயலவில்லை.

முஸ்லிம்களிடையே மத அடிப்படைவாதப் போக்கு

முஸ்லிம் சமூகம் அரசியற் தளத்திற் தனிமைப்பட்ட அதே வேளை, அதை மேலும் தனிமைப்படுத்துங் காரியங்களில் சவுதி நிதி உதவியுடன் செயற்பட்ட சலாஃபி‒வஹாபி முகவர்கள் தீவிரமாயினர்.

1970 -களின் இறுதி ஆண்டுகள் தொட்டு மத்திய கிழக்கில் வேலை தேடும் போக்கு வலுத்தது. அதை யூ.என்.பி. அரசாங்கம் ஊக்குவித்தது. அதன் தீய சமூக விளைவுகளைப் பற்றி இப்போது பலரும் பேசுவர்.

இலங்கை முஸ்லிம்களின் சமூக வாழ்வில் அரபியப் பண்பாட்டுத் திணிப்பு ஒரு முக்கிய அம்சமாகும். மத்திய கிழக்கில் வேலை வாய்ப்புகள் பெண்களைப் பணந்திரட்டும் பொறிகளாக்கிய அளவுக்குப் பெண்கள் சம்பாதித்த பணம் அவர்களுடைய சமூக விடுதலைக்கு உதவவில்லை.

அரபுச் சமுதாயங்களின் (முக்கியமாகப் படுபிற்போக்கான ஆட்சிகளைக் கொண்ட அரபுத் தீபகற்ப நாடுகளின்) கடும் ஆணாதிக்கச் சிந்தனை ஆண்கள் மூலமும் பெண்கள் மூலமும் இலங்கை முஸ்லிம் சமூகத்திற் பரவியது.

அதைவிடப், பல்வேறு அரபு நாடுகள் முஸ்லிம்களிடையே தமது செல்வாக்கை வளர்க்க நிதியுதவி, நிவாரணப் பணிகள், அபிவிருத்தித் திட்டங்கள் போன்றவற்றைப் பாவித்தன. குறிப்பாக, நிதியுதி முதல் சலாஃபி‒வஹாபி பிரசாரங்கள் உட்படப் பல வழிகளிற் சவூதிச் செல்வாக்கு முஸ்லிம் சமூகத்தை ஊடுருவியது.

இஸ்லாம் என்பது இன்னது தான் என்று கட்டுப்படுத்தவும் அதற்குப் புறம்பான எதுவும் இஸ்லாமிய மார்க்கத்துக்கு விரோதமானது எனவும் முஸ்லிம் சமுதாயத்தினுட் புதிய கட்டுப்பாடுகள் உருவாகின. தனிப்பட்ட அளவில் இது பெண்களின் உடை பற்றிய கட்டுப்பாடாக வெளிப்பட்டது. முஸ்லிம் ஆண்கள் தாடி வைப்பது முதல் சவூதியில் அணிவது போன்ற மேலங்கி அணிவது வரை வற்புறுத்தப்பட்டது.

முஸ்லிம் விரோத வன்செயல்களும் நிந்தனைகளும் வலுத்தநிலைமைகளில் அதற்குத் தமது எதிர்ப்பைக் காட்டவும் கணிசமானோர் இஸ்லாமிய உடைகளை அணியலாயினர். இஸ்லாமிய உடை அணிந்த யாவரும் சலாஃபி‒வஹாபிகளல்ல. எனினும் நாட்டில் வலுத்துவந்த மதவாதச் சிந்தனைகளிடையே அது முஸ்லிம்களைப் பிற மதத்தினரிடமிருந்து தனிமைப்படுத்த உதவியது.

அதேவேளை, மதத் தீவிரவாதம் முஸ்லிம் சமூகத்தினுட் பிளவுகளை விளைவித்தது. மதச்சார்பற்றுச் சிந்திக்கும் முஸ்லிம்களையும் சலாஃபி‒வஹாபிகள் ஏற்காத நடைமுறைகளைக் கடைப்பிடிப்போரையும் மார்க்க விரோதிகள் என நிந்திக்கவும் முஸ்லிம் சமூகத்தினின்று விலக்கவும் முயற்சிகள் நடந்தன.

சூஃபியம் எனும் திறந்த சிந்தனைப் போக்குள்ள ஒரு வகைச் சித்தர் மரபு இலங்கையிலும் இருந்துள்ளது. அதைவிட நல்லொழுக்கமுடைய முஸ்லிம் சான்றோரின் ஜனாஸாக்களை (சடலங்களை) அடக்கிய கபுர் எனும் கல்லறைகளை வணங்கும் வழக்கமும் இருந்துள்ளது. இவை யாவும் கடுமையாகச் சாடப்பட்டன. ஒரு தசாப்தம் முன்னர் மேற்கில் பேருவளையிலும் கிழக்கில் காத்தான்குடியிலும் மார்க்க விரோதப் பள்ளிவாசல்கள் என சூஃபி பள்ளிவாசல்களைத் தாக்கிய நிகழ்வுகள் பரவலாகப் பேசப்பட்டன.

முஸ்லிம் சமூகத்தைப் பிளந்த இப் போக்குகள் ஆழப் புரையோடி மேலால் அயறு படர்ந்த புண்களாக இருந்தன. முஸ்லிம் மக்களைப் பிறரிடமிருந்து பிரிக்கும் தீவிரப் போக்குகளை முறியடிக்க முஸ்லிம்களிற் பெரும்பான்மையினருக்கு ஆதரவு தேவையாய் இருந்த சூழ்நிலையில், முஸ்லிம் விரோதப் பிரசாரமும் வன்முறையும் தீவிரப் போக்குகட்கும் அடிப்படைவாதத்துக்கும் மேலும் தனிமைப்படலுக்குமே உதவின.

முஸ்லிம் மக்களும் முஸ்லிம் தலைமைகளும்

தென்னிலங்கையில் 1970 -களின் நடுப்பகுதியில் நடந்த ஓரிரு வன்செயல்களை ஐக்கிய முன்னணி அரசாங்கம் கவனமாகக் கையாண்டு அவை பரவாமற் தடுத்தது. ஆனால் அடியாழத்திலிருந்த துவேஷத்தின் காரணங்களை விளங்கவோ களையவோ இயலவில்லை.

1970 -களில் இரத்தினக் கல் வணிகம் மூலம் சில முஸ்லிம் வணிகர்கள் பெருஞ் செல்வந்தர்களாயினர். அதைவிட, 1974 -இன் பின் எண்ணெய் விலை பன்மடங்கு உயர்ந்ததால் மத்திய-கிழக்கு நாடுகளின் பொருளாதாரம் செழித்தது. அதையொட்டி வணிக, வேலை வாய்ப்புகள் வளர்ந்தன. இதனால் இலங்கையின் எல்லாச் சமூகத்தினரும் நன்மையடைந்தாலும், முஸ்லிம்கள் வாய்ப்புகளைக் கூடியளவிற் பயன்படுத்தினர். 1978 -இன் திறந்த பொருளாதாரக் கொள்கையையடுத்து மத்திய கிழக்கிற் தொழில்தேடும் போக்கு வேகமடைந்தது.

அதைவிட, 1956 முதல் அரசாங்கம் முஸ்லிம்களின் கல்வியிற் சிறப்பான கவனங் காட்டியது. 1970 தொட்டு முஸ்லிம்கள் உயர் கல்வியிற் துரிதமாக முன்னேறினர். எனவே, முஸ்லிம்களுடன் வணிகத் துறையில் இருந்த போட்டி 1980 -களில் உயர் கல்வித்துறைக்கும் விரியலானது.

அது போக, முஸ்லிம் செல்வந்தர்கள் தம் செல்வச் செழிப்பைக் காட்டுமாறு ஆடம்பர வீடுகளையும் பெரிய பள்ளிவாசல்களையும் கட்டலாயினர். பெரு நகரங்களை விட முக்கியமாகப், பொருளாதார வளங்குறைந்த சிறிய பட்டணங்களில் இவை வறுமைப்பட்ட பிற சமூகத்தினரின் கண்களை உறுத்தின. மத்திய கிழக்கிலிருந்து வந்த நிதியுதவி முஸ்லிம் சமூகத்தின் வசதி படைத்தோரை வளப்படுத்தியமை பலரது கவனத்தையும் ஈர்த்தது.

பேரினவாத அரசியற் கட்சிகள் ஆட்சி அமைக்க முஸ்லிம் அரசியல் தலைமைகளின் அரசியல் சந்தர்ப்பவாதம் உதவியபோதும், முஸ்லிம் தலைவர்கள் பேரம் பேசி முக்கிய பதவிகளைப் பெறுவதும் அவற்றின் மூலம் தம்மையும் தம்மைச் சார்ந்தோரையும் வளப்படுத்துவதும் பற்றிய வெறுப்பு இருந்தது. முஸ்லிம் தலைமைகள் இவ்வாறான விடயங்களைக் கவனிப்பதற்கு மாறாகத் தமது முஸ்லிம் வாக்கு வங்கிகளை வலுப்படுத்தும் நோக்கிற் செயற்பட்டனர்.

1978 -ஆம் ஆண்டுக்குப் பிந்திய விகிதாசாரத் தேர்தல் முறை, முற்றிலும் முஸ்லிம் வாக்குகளையே நம்பித் தேர்தலில் இறங்க இடமளித்தது. எனவே முஸ்லிம் காங்கிரஸ் முதலிற் கிழக்கிலும் பின்பு வடக்கிலும் தன்னை வலுவாக நிலைநிறுத்தியது. பிற மாவட்டங்களிற், பேரினவாதக் கட்சிகளில் இணைந்தும் (அரிதாகத் தனித்தும்) போட்டியிட்டுத் தேர்தல்களில் வென்ற முஸ்லிம் பாராளுமன்ற அரசியல்வாதிகட்கு முஸ்லிம் சமூகம் ஒரு தேசிய இனம் என்ற உணர்வோ அதன் தேசிய அபிலாசைகள் என்ன என்ற கவனிப்போ முஸ்லிம் மக்கள் முகங்கொடுக்கும் சமூகப் பிரச்சனைகள் என்னவென்ற அக்கறையோ இருக்கவில்லை.

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி முஸ்லிம்களை ஒரு தேசிய இனமாக ஏற்ற பின்பும், முஸ்லிம்களின் அரசியலை ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் முன்னெடாமல் முஸ்லிம் அடையாளத்தின் பேரில் வாக்கு வேட்டையாடுதைத் தாண்டி முஸ்லிம் அரசியல் வளரவில்லை.

சென்ற நூற்றாண்டின் முடிவையண்டி இந்த நூற்றாண்டின் முற்பகுதி வரை கிழக்கிலங்கையில் முஸ்லிம் தேசம் என்ற ஒரு கருத்துச் சிறிது முக்கியம் பெற்றது. எனினும், இலங்கையின் முஸ்லிம் சமூகத்தின் குடிப்பரம்பலின் சிக்கல்களைக் கணிப்பில் எடாமல், தமிழீழக் கோரிக்கைக்கு ஏட்டிக்குப் போட்டியான ஒரு மனநிலையுடன் முஸ்லிம்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில் வாழ்வோரை மட்டுமே கருதி முன்வைத்த இக் கருத்து விரைவாக அடங்கியது.

அதற்கு மாறாக, வேறெந்த அரசியற் கட்சியும் பேசத் துணியாதவாறு, முஸ்லிம்களை ஒரு தேசிய இனமாக ஏற்று, அவர்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில் சுயாட்சிகளையும் அவர்கள் ஐதாக வாழும் பகுதிகள் உள்ளக சுயாட்சிக் கட்டமைப்புகளையும் நிறுவ வேண்டும் என்ற ஆலோசனையை தேர்தல் அரசியல் நோக்கிற் செயற்பட்ட முஸ்லிம் தலைமைகள் கருத விரும்பவில்லை. அதே வேளை, தமிழ்த் தேசியவாதக் கட்சி எதுவும் முஸ்லிம்களை ஒரு தேசிய இனமாக ஏற்கத் துணியவில்லை.

எனவே முஸ்லிம்களின் அரசியல், தெளிவான சமூகநோக்கும் அரசியல் நெறியும் இல்லாமல் அடையாள அடிப்படையில் தேர்தல்கட்கு முகங்கொடுப்பதற்கும் முஸ்லிம் சமூகம் தாக்கப்படும் போதோ குறிப்பான நெருக்கடியை எதிர்நோக்கும் போதோ உரக்கப் பேசுவதற்குமான வரையறைக்குட்பட்டது.

முஸ்லிம்கள் கிழக்கில் அடுக்கடுக்காக நிலப்பறிப்பையும் வடக்கில் மீள்குடியேறத் தடைகளையும் தெற்கு முழுவதும் பேரினவாத நிந்தனையையும் வன்முறையையும் எதிர்நோக்குகையில், அதைக் கையாளற்குரிய விரிந்த அரசியல் நோக்கும் அணுகுமுறையும் முஸ்லிம் தலைமைகட்கு வாய்க்கவில்லை.

முஸ்லிம் சமூகம் இவ்வாறு பிற சமூகங்களிடமிருந்து தனிமைப்படவும் தனக்குள்ளேயே பிளவுண்ணவும் காரணங்களைச் சுருங்கக் கூறின்:

I. சவூதி அராபியாவின் ஆழமான பொருளாதார ஊடுருவல்.

II. சவூதி முகவர்களாக இயங்கிய இஸ்லாமியத் தூய்மைவாதிகள் முஸ்லிம் சமூகத்தின் மீது அராபியப் பண்பாட்டைத் திணித்தமை.

III. நாட்டின் அரசியலில் பேரினவாத எழுச்சியும் அதையொட்டித் தமிழ்க் குறுந்தேசியவாத எழுச்சியும்.

IV. முஸ்லிம் அடையாள அரசியல் தேர்தல் இலக்குடன் செயற்பட்டமையும் முஸ்லிம் தேசிய இனத்தின் பிரச்சனைகளை நாடாளவிய நோக்கிற் கருதத் தவறியமையும்.

V. இடதுசாரி இயக்கத்தில் முஸ்லிம்களின் பங்குபற்றல் ஓய்ந்தமை. (இதற்கு இடதுசாரி இயக்கம் 1970 -களின் போது கண்ட நலிவும் பேரினவாதத்தினதும் தமிழ்க் குறுந்தேசியத்தினதும் எழுச்சியும் பங்களித்தன.)

முஸ்லிம்கள் ஒரு தேசிய இனமென வலியுறுத்திய புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி, முஸ்லிம்களை அவ்வாறு அடையாளப்படுத்தி அவ்வடிப்படையில் முஸ்லிம்களின் தேசிய உரிமைகட்காகப் போராடுவதன் மூலமே முஸ்லிம்கள் நடுவே இஸ்லாமியத் தீவிரவாதம் பரவுவதைத் தவிர்க்க இயலும் என விளக்கியது. இவ்விடயத்தில் முஸ்லிம்களின் தனித்துவத்தை ஏற்க மறுத்த தமிழ்த் தேசியவாதமும் முஸ்லிம் அரசியல் தலைமைகளின் சந்தர்ப்பவாதமும் பெருந் தவறிழைத்தன.

முஸ்லிம்கள் செறிவாக வாழும் பகுதிகளில் முஸ்லிம்களைத் தமிழரிடமிருந்து தனிமைப்படுத்தல் மூலம் தமது வாக்கு வங்கிகளை வளர்த்த முஸ்லிம் அரசியல்வாதிகட்குத், தென்னிலங்கையில் மொழி, பண்பாட்டு உரிமைகளும் ஜனநாயக உரிமைகளும் மறுக்கப்படும் முஸ்லிம்களின் பிரச்சனைகள் பற்றிய அக்கறை துளியும் இருக்கவில்லை.

தென்னிலங்கை முஸ்லிம் பிரமுகர்கட்கு யாருடன் கூட்டுச் சேர்ந்தால் பாராளுமன்றப் பதவிகளையும் அமைச்சர் பதவிகளையும் பெறலாம் என்பதை விட வேறு கவனம் இருக்கவில்லை.

எனவே இலங்கையில் முஸ்லிம்களின் சுயநிர்ணயமும் சுயாட்சியும் பற்றிய அக்கறைக்குப் பதிலாக, குறிப்பிட்ட சில பிரதேசங்களில் தமது அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கும் தனிப்பட்ட சலுகைகளைப் பெறுவதற்கும் மட்டுமே முஸ்லிம் அரசியல் சக்திகள் முயன்றன.

அண்மைய முஸ்லிம் விரோத அலை

இப் பின்புலத்தில், 2002 -ஆம் ஆண்டு மாவனல்ல தாக்குதலின் பின் அடுத்தடுத்து நிகழ்ந்த முஸ்லிம் வணிக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள், முஸ்லிம் வணிகர்களைப் புறக்கணிக்கும் பிரசாரம், ஹலால் மாமிச விற்பனையை முஸ்லிம்கட்கெதிரான பிரசாரமாக்கியமை, பொது இடங்களில் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் நிந்தித்தல் ஆதிய துன்புறுத்தல்கள் வலுத்தன.

குறிப்பாக ராஜபக்ச ஆட்சியில் போர் உச்சத்தை எட்டிய சூழலில் வலுவடைந்த பொது பல சேன, சிஹல ராவய, ராவண பலய அமைப்புகள் முஸ்லிம் விரோதத்ததைச் சிங்கள இளைஞர்களிடையே பரப்பின. ஜூன் 2014 -இல் உச்சத்தை எட்டிய முஸ்லிம் விரோதம் அளுத்தகமவில் முஸ்லிம் விரோத வெறியாட்டமாக வெளிப்பட்டது. அதிற் பங்குபற்றியவர்களையும் அதைத் தூண்டியவர்களையும் தண்டிக்க ராஜபக்ச அரசாங்கம் விரும்பாமை 2015 -ஆம் ஆண்டு சனாதிபதித் தேர்தலில் ராஜபக்சவின் வீழ்ச்சிக்கு ஒரு காரணமானது.

முஸ்லிம்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த சனாதிபதி சிரிசேனவோ யூ.என்.பி.‒ஸ்ரீ.ல.சு.க அரசாங்கமோ குற்றவாளிகளைத் தண்டிக்கத் துணியவில்லை. அதைவிட, ரக்பி கால்பந்தாட்ட வீரர் தாஜுடீன் கொலை விசாரணையைத் தேர்தல் பிரசாரத்திற் பாவித்த யூ.என்.பி. பின்பு அந்த விசாரணையை இழுத்தடித்தமை போன்ற விடயங்கள் முஸ்லிம்களிடையே அதிருப்தியை வளர்த்தது.

முஸ்லிம்கட்கெதிரான மதத் துவேஷகள் தண்டிக்கப்படாமை பௌத்த‒சிங்கள வெறியர்கட்குத் துணிவூட்டியது. முஸ்லிம்கட்கு எதிரான பொய்ப் பிரசாரங்கள் மூலம் 2018 பெப்ரவரியில் அம்பாறையிலும் அடுத்து கண்டியிலும் நடந்த வெறியாட்டத்தை உடனடியாகக் கட்டுப்படுத்த அரசாங்கம் தவறியமையும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடாமையும் முஸ்லிம் சமூகத்தை மேலும் வருத்தியது.

இத்தனைக்கும் நடுவே, முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் வழமை போல பதவிகளை இறுகப் பற்றிக் கொண்டு சடங்காக அறிக்கைகளை விடுத்து மனநிறைவு கொண்டனர்.

ஐ.எஸ்.ஸின் கவர்ச்சி

அளுத்கம நிகழ்வுகளின் பின் முஸ்லிம் இளைஞர்களிற் கணிசமானோரிடம் ஏற்பட்ட மனக் கொதிப்பு அவர்களைத் தீவிரவாதத்தை நோக்கி உந்தியது. இக் காலத்தில் அமெரிக்க‒சவூதி ஆதரவுடன் சிரியாவில் வேர்கொண்ட இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்.) வேகமாக வளர்ந்தது. சிரிய அரசாங்கத்தைக் கவிழ்க்க சவூதி அராபியா, கட்டார், துருக்கி ஆகிய நாடுகள் வெவ்வேறு நோக்கங்களுடனும் அமெரிக்க ஊக்குவிப்போடும் 2011 முதல் நேரடியாகச் செயற்பட்டன.

அவற்றின் ஆதரவுடைய போராளிகள் வெல்லத் தவறிய நிலையில், 2013 -இல் உருவான ஐ.எஸ். சர்வதேச மட்டத்தில் தன் இஸ்லாமியப் படைக்கு ஆட்களைத் திரட்டியது. அமெரிக்காவும், சவூதி அராபியாவும், கட்டாரும், துருக்கியும் ஐ.எஸ்.ஸை ஆதரித்தன.

ஐ.எஸ்.ஸிற்கான நிதி சவூதி அராபியா, கட்டார் உட்பட்ட நாடுகளிலிருந்தும் சிரியாவிற் களவாடிய எண்ணெயைத் துருக்கிக்கு அனுப்பியும் தீவிரவாத ஆதரவு நிறுவனங்களிடமிருந்தும் கிடைத்தது.

முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள் எல்லாவற்றிலும் ஐ.எஸ். வேரூன்றாமை கவனிக்கத்தக்கது. எனினும் முஸ்லிம்கள் ஒரு சமூகமாக வாழும் நாடுகள் பலவற்றிலிருந்தும் ஐ.எஸ். ஆட்களைத் திரட்டியது. ஐரோப்பாவில் இஸ்லாமிய விரோதத்திற்கு முகங்கொடுத்த முஸ்லிம்கள் தொட்டு ஆசிய நாடுகளின் அதிருப்தியுற்ற முஸ்லிம்கள் வரை ஏலவே இஸ்லாமிய அடிப்படைவாத ஈர்ப்புக்கு உட்பட்டிருந்தனர். அவர்களிடையே அல் கைடா போன்ற இயக்கங்களிலும் பிற போராளி அமைப்புகளிலும் இணைந்தோரை விட ஐ.எஸ்.ஸில் இணைந்தோரின் தொகை அதிகம். காரணம், ஐ.எஸ்.ஸின் வெற்றியின் கவர்ச்சி. குறுங்காலத்திற் தனக்கென ஒரு பெரிய பிரதேசத்தை உருவாக்கிய ஐ.எஸ். ஒரு இஸ்லாமிய அரசை (கலிபா ஆட்சியை) அறிவித்தது.

2017 -இல் அதன் பிரதேசம் துரிதமாகச் சுருங்கியதோடு அதன் பெருமை மங்கியது. அதில் இணைந்த போராளிகள் தமது நாடுகட்கு மீள இயலாதபோது வேறு நாடுகளின் தீவிரவாத அமைப்புகளில் இடம் தேடினர். பலர் அரசியலிலிருந்து ஒதுங்கினர். சிலர் தமது மதச் செயற்பாடுகளை மட்டும் தொடர்ந்தனர்.

இலங்கையில் முஸ்லிம் அடிப்படைவாதம் சென்ற நூற்றாண்டின் இறுதிப் பகுதியிற் தொடங்கியதையும் அதன் பிரதான ஆதரவுத் தளம் சவூதி அராபியா என்பதையும் 2013 -க்குப் பின்பே இலங்கையில் ஐ.எஸ். தோன்றியதையும் கருத்திற் கொள்ளத் தகும்.

இலங்கையில் ஒரு பயங்கரவாதக் குழுவின் தோற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் பின்புலமாகவுள்ள புறக்காரணிகளுள் ஐ.எஸ். மட்டுமன்றி சவூதி அராபிய, அமெரிக்க முகவரகங்களும் அடங்கும். ஆனால்; அதன் தளம் உள்ளூர் முஸ்லிம்களைக் கொண்டது. இஸ்லாமிய அடிப்படைவாதத்தை முன்னெடுத்த சலாஃபி‒வஹாபி குழுக்கள் போக, முஸ்லிம் அரசியல்வாதிகள் பற்றி விரக்தியுற்றோர், குறிப்பாக இளையோர், இவ் வன்முறைப் போக்கில் இணைந்தனர்.

ஐ.எஸ். இலங்கையில் வேர்கொள்வதை சவுதியின் தீவிர மதவாத அமைப்புகள் ஊக்குவிக்க வாய்ப்பு மிக இருந்தது. பெருமளவான ஆயுதத் திரட்டலும் தற்கொலைப் படைப் பயிற்சியும் ஐ.எஸ். தூண்டுதலாலோ துணையோடோ நடந்ததென்பது மிகச் சாத்தியம். மத்திய கிழக்கில் ஐ.எஸ். சந்தித்த தோல்வியும் எதிர்நோக்கும் பேரழிவும் ஐ.எஸ்.ஸின் கலிபாப் பேரரசுக்கு முடிவுகட்டிய பின், ஐ.எஸ். தலைமை இலங்கைக்கென ஒரு வேலைத் திட்டத்தைக் கொண்டிருந்தது என்பது கடினம்.

தாக்குதலின் நோக்கம்

இத் தாக்குதல்கள் பற்றி மேலும் விளக்கம் தேவைப்படும் சில கேள்விகள் உள்ளன.

I. இத் தாக்குதல் ஏன் கத்தோலிக்கர்களைக் குறிவைத்தது?

II. தாக்குதல் முயற்சிகள் யாவும் எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றிருந்தாலும் இவ்வாறான தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தும் வாய்ப்போ சூழலோ இருந்ததா?

III. தாக்குதல் பற்றி எவ்வளவு தகவல்கள் இந்திய உளவு நிறுவனங்கட்குத் தெரிந்திருந்தன?

IV. இந்திய உளவு நிறுவனங்கள் தகவல்களை ஏன் இடைநிலை மட்டத்திற் பரிமாறின?

V. தகவல்களை அறிந்த உயர்மட்ட அதிகாரிகளும் அரசியல், அரசாங்கத் தலைவர்களும் யார்? அவர்கள் ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை?

இந்திய உளவுத் தகவல்கள் கிடைத்து, உடனடியாகச் செயற்பட்டிருப்பின் அறிந்த இலக்குகளைக் காப்பாற்றியிருக்கலாமே ஒழியத் தனிமனிதர்களாகவோ சிறு குழுக்களாகவோ செயற்பட்ட தற்கொலைக் குண்டுதாரிகள் இவ்வாறான தாக்குதலை மே தினம், வெசாக் போன்று இன்னும் அதிகமாக மக்கள் திரளும் நாட்களில் நடத்தியிருக்கலாம். ஏனெனிற் பயங்கரவாதிகளின் நோக்கம் கத்தோலிக்கர்களிற் சிலரையும் சுற்றுலாப் பயணிகள் சிலரையும் அழிப்பதைவிட விரிவானது என்றே தெரிகிறது.

விரிவான நீண்டகாலப் போராட்டத்துக்கு வாய்ப்புக் குறைவு என்பதோடு ஆக மிஞ்சி ஒரு சில இலக்குகள் மீது தற்கொலைத் தாக்குதல்களை விட அதிகம் இயலாத ஒரு வன்முறை அமைப்பு ஒரே நாளில் இவ்வளவு பெரிய உயிரழிவாலும் கணிசமான பொருளழிவாலும் சாதித்தது என்ன?

படிக்க :
♦ இஸ்லாமிய சர்வதேசியம் ஒரு மாயமான் !
♦ இசுலாமிய பயங்கரவாதமா ? இசுலாமியவாத பயங்கரவாதமா ?

உடனடி விளைவுகள் எனக் கூறக்கூடியன:

I. நாட்டில் அச்ச உணர்வை வலுப்படுத்திப் பாதுகாப்புத் தேவையை அரசாங்கம் வலியுறுத்தவும் அதன் பெயரில் அடக்குமுறைச் சட்டங்களைப் புகுத்தவும் வாய்ப்பு உருவானமை.

II. சமூகங்களிடையே சுமுக உறவைச் சீரழித்துப் பரஸ்பர ஐயத்தை வலுப்படுத்தியமை. (குறிப்பாக முஸ்லிம் துவேஷ உணர்வைப் பரப்புவோரின் கைகளைப் பலப்படுத்தியமை.)

III. இலங்கையில் நுழையக் காத்திருக்கும் அந்நிய மேலாதிக்கச் சக்திகள், முக்கியமாக அமெரிக்கா அடுத்து இந்தியா, நாட்டின் பாதுகாப்பை முன்னிறுத்திப் படைத் தளங்களை நிறுவவோ வேறு வகையிலோ இராணுவ உறவுகளை வலுப்படுத்த ஊக்குவிப்பு.

IV. முஸ்லிம்களின் இருப்பைச் சமூகத்தளத்திலும் பொருளாதாரத் தளத்திலும் மிரட்டலுக்குட்படுத்தல்.

V. குறுகிய‒இடைக்கால நோக்கில் நாட்டின் பொருளாதார நெருக்கடியை மோசமாக்கல்.

எனவே இத் தாக்குதல்களின் மூலம் நலனடையும் சக்திகள் எவை என நாம் கவனிக்கவேண்டும். ஐ.எஸ். மட்டுமே அவற்றுடன் தொடர்புடைய அயற் சக்தி என்று விடயத்தை எளிதாக விளக்க இயலாது.

ஐ.எஸ். யாருடைய கருவி என்பது போக, தேசிய தௌஹிட் ஜமாத்தை (NTJ) ஜமாத்தெய் மில்லத்து இப்ராஹிம் (JMI) ஆகியவற்றை ஐ.எஸ். வழிநடத்தியது என்று சொல்லி அவற்றைப் பயன்படுத்தக் கூடிய வேறு சர்வதேச நிறுவனங்களைப் புறக்கணிக்கலாகாது. ஏனெனில் பயங்கரவாத இயக்கங்களை எதிர்த்துப் போரிடுவதாக அறிவிக்கும் அமெரிக்கா அதே பயங்கரவாத இயக்கங்களைத் தனக்குக் கீழ்படிய மறுக்கும் ஆட்சிகளைக் கவிழ்க்கப் பயன்படுத்துகிறது.

இத் தாக்குதல்கள் பற்றிய விவரங்களை நுணுக்கமாக இந்திய உளவுத்துறை அறிந்து இலங்கைக்குத் தகவல் வழங்கியதாயும் அவை மேலிடத்துக்குப் போகத் தவறியதாயும் மாறிமாறிக் குற்றச்சாட்டுகளைப் பரிமாறும் அதே வேளை, என்ன தகவல்கள் என்றும் யார் எதை யாருக்கு எவ்வாறு வழங்கினர் என்றும் விவரமறிய மக்களுக்கு உரிமையுண்டு. அவ் விவரங்களை இதுவரை வழங்காமை விசாரிக்கத் தக்கது.

பின் விளைவுகளும் எதிர்காலமும்

தேடுதல்களின் போக்கில் இந் நிகழ்வுடன் தொடர்புள்ளவர்கள் மட்டுமன்றித் தொடர்பற்ற பலரும் கைதாகின்றனர். ஒவ்வொரு முஸ்லிமையும் சந்தேகத்துக்குரியவராகவும் ஒவ்வொரு பள்ளிவாசலையும் மதராசாவையும் பயங்கரவாதப் பாசறையாகவும் நோக்கும் போக்கு வலுத்துள்ளது.

இப் போக்குத் தொடர்வது நாட்டின் சமூகங்களின் ஒற்றுமைக்கு நல்லதல்ல. முஸ்லிம்கட்கு எதிரான பாரபட்சம் வலுத்தால்; அதன் பயனான அதிருப்தி நாட்டை எங்கு கொண்டு செல்லும் என நாம் சிந்திக்க வேண்டும்.

ஏற்கெனவே நாட்டின் பாதுகாப்பின் பெயரில் அடக்குமுறைச் சட்டங்களை நிறைவேற்றும் முயற்சிகள் துரிதமாகின்றன. பயங்கரவாதத்தையும் தீவிரவாதத்தையும் ஒழிப்பது என்ற பெயரில் மக்களின் நியாயமான பேராட்டங்கட்குத் தீவிரவாத முத்திரை குத்தியும் அரச வன்முறைக்கெதிரான மக்களின் தற்காப்பு முயற்சிகட்குப் பயங்கரவாத முத்திரை குத்தியும் மக்களை அடக்கும் முயற்சிகள் பற்றி மக்கள் விழிப்போடிருக்க வேண்டும்.

ஆயுதப் போராட்டத்தை ஏற்கும் புரட்சிவாதிகள் புரட்சிகர வன்முறைக்கும் எதிர்ப்-புரட்சிகர வன்முறைக்கும் வேறுபாட்டை அறிவர். தமது போராட்டங்கள் மக்களைத் துன்புறுத்துவதை நிராகரிக்கும் அதேவேளை, ஆளும் வர்க்க ஒடுக்குமுறைக்கும் அரச பயங்கரவாதத்திற்கும் எதிராக மக்கள் ஆயுதம் ஏந்துவதை மக்களின் அடிப்படை உரிமையாக அவர்கள் ஏற்கின்றனர். ஆனாற் தனிமனிதப் பயங்கரச் செயல்களையும் வலிந்து மக்களைத் துன்புறுத்தும் வெறிச் செயல்களையும் அவர்கள் எதிர்க்கின்றனர். மக்கள் விரோத ஆட்சியை மாற்றி அதனிடத்தில் மக்களாட்சியைக் கொண்டுவரும் அரசியல் தீவிரவாதமல்ல.

இன்று முக்கியமான விடயம் தேசிய இனங்களின் ஒற்றுமை. குறிப்பாக, உழைக்கும் மக்கள் இன வேறுபாடு கடந்து இணைந்து செயற்படல். குறுந் தேசியவாதத் தலைமைகளும் பேரினவாதக் கட்சிகளும் அதைச் செய்யத் தகுதியற்றவை.

தேர்தல் அரசியலுக்காக இன உணர்வுகளைக் கிளறிப் பகையைத் தூண்டுவோர் மேலோட்டமாகவே ஒற்றுமையைப் பேசுவர். அதன் கீழ், இனப்பகை நீறுபூத்த நெருப்பாகக் கனலும். மதத் தலைவர்கள் மேடையேறி மத நல்லிணக்கம் பற்றிப் பேசினும் கீழ் மட்டங்களில் சமூகங்களின் இணக்கப்பாட்டுக்குச் செயலாற்ற வல்லோரல்ல.

படிக்க :
♦ ஒரு விரல் புரட்சியால் ஈரானிடம் எண்ணெய் வாங்க முடியுமா ?
♦ ரஞ்சன் கோகோய் மீதான பாலியல் குற்றச்சாட்டு ! உண்மையா ? பொய்யா ?

மத நிறுவனங்களிற் செல்வாக்குள்ள மேட்டுக்குடிகளின் நலன்கட்கு மாறாக எந்த மதத் தலைமையும் செயற்பட்டதில்லை. கீழ் மட்டங்களில் உள்ள மதகுருமார் மதஞ்சாராத சமூக‒அரசியல் அமைப்புகளில் பங்குபற்றினால் அவர்களால் மதத் தலைவர்கள் என்போரை விட அதிகம் செய்ய இயலும். ஆயினும் மக்களிடையே மூடநம்பிக்கைகளையும் மூடிய சிந்தனையையும் ஊக்குவிக்கும் மதகுருமார் பற்றி மக்கள் விழிப்புறுவது அவசியம்.

வரலாற்று நோக்கில் இலங்கையின் அனைத்துத் தேசிய இனங்களையும் அணைத்துச் செயற்பட்ட பெருமை இடதுசாரி இயக்கத்தினது. தேர்தல் அரசியல் தொடங்கிய நாள் முதல் முதலாளியக் கட்சிகள் இன அடிப்படையிலேயே இயங்கியுள்ளன. தேர்தல் அரசியல் பாராளுமன்ற இடதுசாரிகளைப் பேரினவாதிகளுடன் சமரசஞ் செய்யத் தூண்டியது. அவர்கள் வேறுபடுமளவுக்குப் பேரினவாத ஒடுக்கலுக்குத் துணைபோன போதும் அப்பட்டமான இனத் துவேஷ அரசியலில் இறங்கியோர் வெகு சிலரே.

இடதுசாரி முகமூடியுடன் தொடங்கிய ஜே.வி.பி. பேரினவாதத்தை முதன்மைப்படுத்தியே தன்னை வளர்த்தது. போரின் முடிவு வரை, அதன் பேரினவாத அணுகுமுறை வலுவாயிருந்தது. இப்போது பேரினவாதத்தின் மூலம் அதிகஞ் சாதிக்க இயலாமையால் பேரினவாதத்தை அடக்கி வாசித்தாலும் அதன் கொள்கைகள் இன்னமும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை பற்றிச் சரியான புரிதல் அற்றவை.

பல முஸ்லிம்கள் இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்குப் பலியாகவும் முஸ்லிம்கள் தம்மைப் பிற சமூகங்களினின்று தனிமைப்படுத்தவும் முக்கியமான ஒரு காரணம் இடதுசாரி அரசியலின் நலிவு. இன்று தமிழ்த் தேசியவாதமும் இந்து மதவாதப் போக்குகளின் விளைவான முரண்பாடுகளையும் பிளவுகளையும் எதிர்நோக்குகிறது.

இந்தியாவில் மதவாத அரசியல் இந்துத்துவமாக வெளிப்பட்ட பின், 1980-கள் தொட்டு இந்துத்துவம் தமிழ்ச் சமூகத்தை ஊடுருவி முஸ்லிம், கிறிஸ்தவத் துவேஷத்தை வளர்த்துள்ளது. போரின் முடிவோடு துரித வளர்ச்சி கண்ட இந்துத்துவம் பவுத்த மதவெறியர்களுடன் இணக்கங் காணத் துடிக்கிறது. ஏட்டிக்குப் போட்டியாக நடக்கும் சினமூட்டல்கள் பற்றி மக்களை விழிப்பூட்டும் பணி நம் முன்னுள்ளது.

மதவாத அரசியல் மக்களைப் பிரித்து முதலாளியத்தினதும் ஏகாதிபத்தியத்தினதுங் கைகளை வலுப்படுத்தியுள்ளது. நாட்டை மதவாதத்தினின்று காப்பாற்ற அரசை மதச்சார்பற்றதாக்க வேண்டும். நேபாளத்தின் இந்து முடியரசைப் பிரதேச சுயாட்சிகளைக் கொண்ட மதச்சார்பற்ற அரசாக மாற்றிய நேபாள அரசியல் யாப்பிற் குறைபாடுகள் இருப்பினும், மதச் சார்பின்மையும் அதிகாரப் பரவலாக்கமும் நேபாளத்தின் சமூக ஒற்றுமைக்கு உதவுவன. அதன் பாடங்களை நாம் கற்க வேண்டும்.

சிதறிக் கிடக்கும் போராளிகட்கான ஒரு வேலைத்திட்டம் இல்லாத நிலையில் அவர்கள் உதிரிகளாகச் செயற்படவும் பிற மதவாத அமைப்புகளில் இணையவும் வாய்ப்புண்டு. எனவே மதத் தீவிரவாதத்தினின்று அவர்களை மீட்பது அவசியம். அதில் முஸ்லிம் சமூகத்துக்கு மட்டுமன்றிப் பிற சமூகங்கட்கும் பொறுப்புண்டு.

தேர்தல் அரசியலுக்குப் பலியாகாது, குறுகிய இன அடையாள வற்புறுத்தலைப் பகிரங்கமாக நிராகரிக்கும் சமூக‒அரசியல் சக்திகள் மட்டுமே தேசிய இனங்களின் ஒற்றுமைக்கு வழிகாட்டித் தலைமை தாங்க வல்லன.

இப்போது, ஏப்ரல் 21 -இன் துன்ப நிகழ்வுகளை மறந்து அரசியல் ஆதாயந் தேடுவதிலேயே பாராளுமன்ற அரசியற் கட்சிகளும் தலைவர்களும் குறியாயுள்ளனர். நாட்டின் அவலத்தைப் பாவித்து ஊடுருவ ஏகாதிபத்தியமும் பிராந்திய மேலாதிக்கவாதிகளும் துடிக்கின்றனர்.

அடக்குமுறைச் சட்டங்களை நிறைவேற்றியும் அரச இயந்திரத்தை மேலும் வலுவாக ஆயுதபாணியாக்கியும் மக்களின் ஜனநாயக உரிமைகளை முடக்கும் முதலாளிய, ஏகாதிபத்திய நோக்கங்கள் அறவே மக்கள் விரோதமானவை.

எனவே நேர்மையான இடதுசாரிகளின் முன்னுள்ள பணி பாரியது. அரசியலை மக்கள்மயப்படுத்தி ஒரு புரட்சிகர வெகுஜன இயக்கத்தைக் கட்டியெழுப்பல் மூலமே, மக்கள் விரோத அரசையும் அதன் ஏகாதிபத்திய எசமான்களையும் அவர்கட்கு மறைமுகமாக உதவும் அனைத்து மதத் தீவிரவாதிகளையும் முறியடிக்க இயலும். இத்தகைய மக்கள் சார்பு இடதுசாரி இயக்கங்களுடன் மக்கள் இணைந்து பணியாற்ற முன்வர வேண்டும்.

வெளியீடு :
புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி,
இலங்கை.

ஒரு விரல் புரட்சியால் ஈரானிடம் எண்ணெய் வாங்க முடியுமா ?

ஒரு விரல் புரட்சி செய்தால் அமெரிக்க உத்தரவை மீறி ஈரானிடன் கச்சா எண்ணெய் வாங்க முடியுமா ?

பிஜேபி ஆதரவாளர்கள் கிட்ட கேட்டா, எங்க தலைவர் வீராதி வீரன் சூராதி சூரன், ‘அவர் சிவந்த கண்களை காட்டினால் போதும் அதை பார்த்து இந்த லோகத்துல இருக்கற அனைத்து தலைவர்களும் நடுங்குவாங்க’ன்னு எல்லாம் அடிச்சு விடுவாங்க.

பிஜேபி-காரர்கள் இப்படி என்றால், தேர்தல் வந்துவிட்டதால் மற்ற கட்சிக்காரர்கள் எல்லாம் சொல்வது ஒன்றே ஒன்றை தான், அதுதான் ‘ஒரு விரல் புரட்சி’ – தேர்தலில் வாக்களிப்பதன் மூலம் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்துவிடலாம், அதனால் ஓட்டு போடுங்கள்!

எப்போதும் போல, உண்மை இவர்கள் சொல்வதற்கு நேர்மாறாக இருக்கிறது!

மே 2019 முதல் இந்தியா ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா அனுமதி மறுத்துவிட்டது என்று செய்திகள் வருகின்றன. நமக்கு இயல்பாக எழும் கேள்வி /  எழவேண்டிய கேள்வி, ‘இந்தியா ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை அமெரிக்காவால் எவ்வாறு தடை செய்ய முடியும்?’ என்பதுதான்.

இதை புரிந்துகொள்ள கொஞ்சம் பின் நோக்கி செல்ல வேண்டும்.
அதற்கு முன் சில தகவல்கள். இந்தியா தனது பெட்ரோலிய தேவைகளை இறக்குமதி செய்துதான் பூர்த்தி செய்கிறது என்று நமக்கு தெரியும். சுமார் 80 சதவீதம் இறக்குமதி செய்யப்பட்ட பெட்ரோலிய பொருட்களையே நாம் உபயோகிக்கிறோம். இதில் 10-12 சதவீதம் ஈரானில் இருந்து இறக்குமதி செய்வதாகும்.

ஒபாமா அதிபராக இருந்த சமயத்தில், ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது. ஈரானிடம் அணு ஆயுதம் இருப்பது அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது என்று கூறி அமெரிக்கா ஈரான் மீது பொருளாதாரத் தடை விதித்தது. பொருளாதாரத் தடையால் அத்தியாவிசய பொருட்களை இறக்குமதி செய்வதில் ஈரான் மிகவும் சிரமப்பட்டது. மற்ற நாடுகளின் அழுத்தத்தாலும் ஈரான் கொஞ்சம் விட்டுக்கொடுக்க முன்வந்ததாலும் ஒபாமா அவருடைய பதவியின் இறுதி காலத்தில் ஈரானுடன் அணு ஒப்பந்தத்தை கையெழுத்திட்டார்; ஈரான் மீதான பொருளாதார தடை நீக்கப்பட்டது. ஈரானும் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியை கைவிடுவதாக உத்தரவாதம் அளித்தது. திருவாளர் டிரம்ப் அதிபராகும் வரை எந்த பிரச்னையும் இல்லாமல் இருந்தது!

டிரம்ப் பிரச்சாரத்தின்போதே ஈரானுடனான அணு ஒப்பந்தத்தை முறிக்கப்போவதாக பேசி வந்தார். பதவி ஏற்று ஒரு ஆண்டிற்கு பிறகு, மே 2018-ல், ஒருதலைப்பட்சமாக அந்த ஒப்பந்தத்தை முறித்து, ஈரான் மீது பொருளாதாரத் தடையும் விதித்தார்.

படிக்க:
♦ ஈரான் கச்சா எண்ணெய் : அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணிந்த மோடி அரசு!
♦ ஈரான் அணுசக்தி ஒப்பந்த முறிவும் இஸ்ரேலின் போர்வெறியும்!

விதித்தால் விதிக்கிறார்கள், அவர்களுக்குள் இருக்கும் பிரச்சனைக்கும் நமக்கும் என்ன சம்மந்தம்?

அமெரிக்கா ஈரான் மீது பொருளாதார தடை விதித்ததால் இந்தியாவையும் ஈரானிடம் இருந்து பெட்ரோலிய பொருட்கள் வாங்க கூடாது என்று சொல்கிறது.
‘நீ யாருடா நான் எங்க, என்ன வாங்கணும்னு சொல்றதுக்கு?’ என்று இந்தியாவால் சொல்ல முடியவில்லை. ஏனென்றால், இந்தியா டாலர் கொடுத்துதான் எண்ணெய் வாங்குகிறது. அந்த டாலர்களை எல்லாம் அமெரிக்கன் வங்கிகள் வழியாகத்தான் ஈரானுக்கு கொடுக்க முடியும். அந்த வங்கிகள் பொருளாதார தடையினால் அந்தச் சேவையை செய்ய முடியாது என்று சொன்னார்கள்.

2-3 வருடங்களுக்கு முன், ஒபாமா ஆட்சி காலத்தில் ஈரான் மீது பொருளாதார தடை இருந்தபொழுதும், இதே பிரச்சனை வந்தது. அப்பொழுது, இந்தியாவிடம் ரூபாயிலேயே பணம் பெற்றுக்கொள்வதாக ஈரான் சொன்னது. இந்தியாவும் ஈரான் பெட்ரோல் ஏற்றுமதி நிறுவனங்களை இந்திய வங்கி ஒன்றில் கணக்கு துவங்க சொல்லி அந்த வங்கிக் கணக்கில் இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலுக்கான பணத்தைச் செலுத்தி வந்தார்கள். ஈரான் அந்த ரூபாய் பணத்தை வைத்து இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு பணம் செலுத்தி வந்தது.

இந்த ஏற்பாடு மே 2018-ல் டிரம்ப் பொருளாதார தடை விதித்த பொழுது வேலை செய்யாமல் போய்விட்டது. ஏனென்றால், ஒபாமா ஆட்சியின் பொருளாதார தடையின்போதே அமெரிக்காவால் கட்டுப்படுத்த முடியாத மாதிரி ஒரே ஒரு இந்திய வங்கிதான் இருந்தது. ‘அமெரிக்க பொருளாதார தடை இந்திய வங்கியை எப்படி கட்டுப்படுத்தும்’ என்று சந்தேகம் வருகிறதா? வரவேண்டும்!

பெரும்பாலான இந்திய வங்கிகள், அமெரிக்காவில் கிளைகள் வைத்திருப்பது மட்டுமல்லாமல் டாலரில் பரிவர்தனைகளும் சொத்துக்களும் வைத்திருப்பார்கள். இப்படிப்பட்ட வங்கிகளின் டாலர் சேவைகளை அமெரிக்க அரசால் முடக்க முடியும். ஈரானுடன் பரிவர்த்தனை செய்யும் எந்த ஒரு நிறுவனத்தையும் அமெரிக்க அரசாங்கம் முடக்க முயற்சி செய்யும்.

கடந்த முறை இருந்த ஏற்பாட்டில் யூகோ வங்கி என்ற ஒரு வங்கிக்கு அமெரிக்க சொத்துக்களோ சேவைகளோ எதுவும் இல்லாமல் இருந்ததால் அந்த வங்கியை உபயோகப் படுத்தி ரூபாயில் ஈரானுக்கு பணம் செலுத்த முடிந்தது. ஆனால் இந்த முறை, யூகோ வங்கிக்கும் அமெரிக்க சொத்துக்கள் இருப்பதால் ஒரு வழியும் இல்லாமல் நிற்கிறது இந்திய அரசாங்கம்.

பணம் செலுத்துவது போக, எண்ணெயை ஏற்றி வரும் கப்பல், அந்த கப்பலுக்கு காப்பீடு வழங்கும் காப்பீட்டு நிறுவனம் ஆகியவற்றை அமெரிக்காவால் எளிதாக கட்டுப்படுத்த முடியும். பொருளாதாரத் தடை விதித்த பின், ஈரானுடன் எந்த விதத்தில் சம்பந்தப்பட்டாலும் சம்பந்தப்படும் நிறுவனத்தை அமெரிக்காவில் செயல்பட அனுமதிக்காது. எண்ணெய் கப்பல் நிறுவனங்களும், அதற்குக் காப்பீடு வழங்கும் நிறுவனங்களும் உலகத்திலேயே மிகக் குறைவாகத் தான் இருக்கும், அவற்றுக்கும் அமெரிக்காவுடனான வியாபாரம்தான் முதன்மையானதாக இருக்கும். இவ்வாறிருக்க அமெரிக்கா எளிதில் கட்டுப்படுத்தி விடுகிறது.

படிக்க:
♦ “ராடாரேந்திர மோடி !” – மோடியை வறுத்தெடுத்த வலைத்தளவாசிகள் !
♦ தேர்தல் – 2019 : அரசுக் கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு | மக்கள் அதிகாரம்

இவை அனைத்தையும் சரி செய்துதான், ஒபாமா ஆட்சிக் காலத்தில் இந்திய அரசு ஈரானிடம் எண்ணெய் வாங்கியது என்பது வேறு கதை.

இந்த நிலையில், ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை திடீர் என்று நிறுத்தினால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்படுவோம்; அதனால் எங்களுக்கு விலக்கு வேண்டும் என்று இந்திய அரசு அமெரிக்காவிடம் கேட்டது. கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து 6 மாதத்திற்குள் ஈரானிடமிருந்து இறக்குமதியை முற்றிலுமாக நிறுத்திவிட வேண்டும் என்று அமெரிக்கா விலக்கு வழங்கியது. அந்த 6 மாத விலக்கு ஏப்ரல் 2019-உடன் முடிவுக்கு வந்தது. விலக்கை நீட்டிக்குமாறு இந்தியா விடுத்த கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்தது.

ஈரானுக்கும் இந்தியாவுக்கும் உள்ள உறவை பற்றியும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். 1947-ல் இந்தியாவில் சுத்திகரிப்பு ஆலைகள் அமைக்குமாறு மேற்கத்திய நிறுவனங்களான ஷெல் (Shell), கால்டெக்ஸ் (caltex) போன்றவற்றிடம் இந்திய அரசு கேட்ட பொழுது அந்த நிறுவனங்கள் மறுத்துவிட்டன. அதன் பிறகு, 1960-களில் ஈரானுடன் இணைந்துதான் இந்தியாவில் சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்பட்டது. அப்போது இந்தியாவுக்கு உதவியது ஈரான்! அப்படி வலுவாக இருந்த உறவு இப்போது எப்படி இருக்கிறதென்று பாருங்கள்!

விலக்கு நீட்டிப்பு கேட்ட பொழுது, விலக்கை நீட்டிக்கவில்லை என்றால் இந்தியா அதிக விலை கொடுத்து கச்சா எண்ணெய் வாங்க வேண்டி இருக்கும் என்று இந்தியா அமெரிக்காவிடம் வாதிட்டது, முறையிட்டது. அதற்கு ‘இந்தியா அமெரிக்காவிடம் இருந்து குறைந்த விலையில் எண்ணெய் வாங்கலாம்’ என்று அமெரிக்கா பதிலளித்தது. ஆனால், இந்த உத்தரவாதமும் இப்போது காற்றில் பறந்துவிட்டது. கடந்த சில நாட்களாக கச்சா எண்ணெய் விலை அதிகமாகிறது அமெரிக்கா விற்கும் விலையை குறைக்க வேண்டும் என்று இந்தியா கேட்ட பொழுது, தனியார் நிறுவனங்களை இந்த விலைக்கு தான் விற்க வேண்டும் என்று எங்களால் வற்புறுத்த முடியாது என்று அமெரிக்க வர்த்தக அமைச்சர் தெரிவித்துவிட்டார் என்று செய்திகள் வந்தன.

இன்னும் சில முக்கிய செய்திகளும் வந்தன. இந்தியா அமெரிக்காவிடம் இருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2017-18 உடன் ஒப்பிடும் பொழுது 2018-19-ல் இந்தியா அமெரிக்காவிடம் இருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயின் அளவு நான்கு  மடங்கு அதிகரித்துள்ளது.
குறைந்த விலையில் இரானிடம் எண்ணெய் வாங்குவதற்கு பதிலாக அதிக விலையாக இருந்தாலும் தன்னிடம்தான் வாங்க வேண்டும் என்பது அமெரிக்கா ஈரானிடம் அணு ஆயுதம் இருக்கிறது என்று புருடா விடுவதற்கு ஒரு காரணம்.  இதற்குமேல் வெளிப்படையாக இருக்கவும் முடியாது.

இது ‘பாவப்பட்ட’ ஏழைகளை பாதிக்கின்ற விஷயமோ, இன்னும் 10 ஆண்டுகள் கழித்து பாதிக்கக்கூடிய விஷயமோ அல்ல, அடுத்த முறை பெட்ரோல் பங்க் செல்லும்போது நம்மை நேரடியாக பாதிக்கப்போகும் விஷயம்.

இந்த பிரச்சனை போல பல பிரச்சனைகளுக்கு நமக்கு கொடுக்கப்படும் ஒரே மாத்திரை – ‘ஓட்டு’. ஒரு ஓட்டு போட்டால் இது போன்ற அனைத்து பிரச்சனைகளை பற்றியும் நாம் மறந்துவிடலாம் என்று நமக்கு போதிக்கப்படுகிறது. அமெரிக்கா, இந்தியாவை மட்டுமல்ல – நம்மைப் போன்ற பல நாடுகளை காலனி போல நடத்துகிறது, இதற்கு ஒரே ஓட்டு தீர்வு தந்துவிடும் என்று சொல்கிறார்கள்.

ஓட்டு போடுவதுடன் நமது பிரச்சினைகள் தீர்ந்துவிடுமா?

சும்மா ஊர்ல போஸ்டர் ஒட்டுறவன், பாட்டு பாடுறவன், சிலைக்கு மாலை போடுறவன், மனித உரிமைக்காக போராடுபவர்கள், தலித்துகளுக்காக போராடுபவர்கள், அரசின் திட்டங்களுக்கு எதிராக போராடுபவர்கள், எங்கள் மண்ணை, காட்டை, காற்றை நாசம் செய்யாதே என்று போராடுபவர்கள் – என இவர்கள் அனைவரையும் அரசு பிடித்து சிறையில் அடைக்கிறது.

என்ன காரணத்துக்காக சிறையில் அடைக்கிறது தெரியுமா? இவர்கள் நாட்டின் இறையாண்மைக்கு எதிராகச் செயல்படுகிறார்கள் என்றுச் சொல்லி சிறையில் அடைக்கிறது. இந்த இறையாண்மை என்றால் என்ன? ஒரு நாட்டுக்கு தன்னைத் தானே ஆளும் உரிமை என்பதுதான் இறையாண்மை. நாட்டு மக்கள் போஸ்டர் ஓட்டுவதால், பாடுவதால், போராடுவதால், இந்தியாவின் இறையாண்மைக்கு தீங்கு நடப்பதாக அரசு கூறுகிறது. இந்த சிறிய மனிதர்கள் இவ்வளவு பலம் கொண்ட அரசை என்ன செய்ய முடியும் என்று நீதிமன்றங்களும் கேட்பது இல்லை, நாமும் பெரும்பாலும் கேட்பது இல்லை.

உண்மை என்னவென்றால், இது போல் போராடும் சிறிய மனிதர்களால்தான் இந்தியாவின் இறையாண்மை மீட்கப்படுகிறது, காப்பாற்றப்படுகிறது. தூத்துக்குடியில் லண்டன் நிறுவனம் சுற்றுச் சூழலை மாசுபடுத்துவதாகட்டும், நியம்கிரியில் அதே நிறுவனம் காடுகளையும் மலைகளையும் அழிப்பதாகட்டும், ஒரிசாவில் கொரிய நாட்டை சேர்ந்த போஸ்கொ நிறுவனம் ஆதிவாசிகளின் வாழ்வாதாரத்தை அழிப்பதாகட்டும், பல இடங்களில் வெளிநாடுகளில் இருந்து வரவிருந்த அணு உலைகளாகட்டும் – இவை அனைத்தையும் இந்திய அரசு தடுக்கவில்லை, எளிய மனிதர்களின் போராட்டங்கள்தான் தடுத்தன! போராட்டங்கள் தான் இறையாண்மையைக் காப்பாற்றின!

ஒரு விரல் புரட்சி செய்தாலும் செய்யாவிட்டாலும், போராட்டங்களே நம்மையும், நமது சந்ததிகளையும், இறையாண்மையையும் காப்பற்றும்!

செய்தி ஆதாரங்கள் :

– அருண் கார்த்திக்

இந்தியாவின் சிறந்த விஞ்ஞானி : செல்லூர் ராஜுவா ? மோடியா ? கருத்துக் கணிப்பு

வைகை அணையின் நீர் ஆவியாகாமல் தடுக்க தெர்மோகோல் போட்டு பிரபலமானார் தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு. அன்று முதல் தெர்மோகோல் ராஜு என்று தமிழகத்தால் அன்போடு அழைக்கப்படுகிறார். ஆனால் மோடியோ உலகப் புகழ் பெற்றுவிட்டார்.

1988-லேயே டிஜிட்டல் காமரா பயன்படுத்தியது, மின்னஞ்சல் அனுப்பியது போக, இந்த ஆண்டு நடந்த பாலகோட் தாக்குதலின் போது ஹாலிவுட் படங்கள் போல மோடிதான் தாக்குதலுக்கு தலைமை தாங்கியதும் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எந்த நேரம் விமானங்களை அனுப்பலாம் என்று தளபதிகள் தலையை பிய்த்துக் கொண்ட போது, மேகங்கள் சூழ்ந்த அந்த நேரத்தில் அனுப்பினால் பாகிஸ்தான் ரேடார்களை ஏமாற்றி குண்டு போட்டுவிட்டு திரும்பி விடலாம் என்று சொல்லியிருக்கிறார் மோடி. உடனே விமானங்களும் மேகங்களில் மறைவாக பறந்து சென்று குண்டுகளைப் போட்டுவிட்டு திரும்பி விட்டன.

படிக்க:
♦ செயற்கை நுண்ணறிவு : அறிவியல் உலகில் அறம் சார்ந்த கேள்விகள் !
♦ ஸ்லீப்பர் செல் சங்கிகளின் நஞ்சு பரப்புத் தளமாகும் வாட்சப் குழுக்கள் !

மேகங்கள் ரேடாரை மறைத்து விடுமா என்றுஅறிவியல் உலகமே அதிர்ச்சியடைந்தாலும் மீம்கள் உலகம் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருக்கிறது.

இன்றைய கேள்வி :

இந்தியாவின் சிறந்த விஞ்ஞானி யார் ?

  • செல்லூர் ராஜு
  • நரேந்திர மோடி

டிவிட்டரில் :

யூ-டியூபில் இங்கு அழுத்தி வாக்களிப்பீர்