Thursday, October 23, 2025
முகப்பு பதிவு பக்கம் 417

மெரினா மூலிகை ஜூஸ் : பிழியப்படும் வாழ்க்கை !

சில்லென்ற கடற்காற்றுடன் கார்மேகம் தூறலை தெளித்துக் கொண்டிருந்தது. நம்மாவாழ்வார் இலட்சிணை பொறித்த டி-சர்ட்டுடன் இளைஞர்கள்.

ஒருவர் கற்றாழையை வகுந்து சோற்றை ஒரு பாத்திரத்தில் சேகரிக்கிறார். இன்னொருவர் வாடிக்கையாளர்களுக்கு மண்குவளையில் சூப் பரிமாறிக் கொண்டிருக்கிறார். வேறொருவர் ஆனைநெருஞ்சிச் செடியை நீரில் முக்கி சாறு எடுத்துக்கொண்டிருக்கிறார். இப்படியாக மும்முரமாக சூப் மற்றும் ஜூஸ் விற்பனை நடந்துகொண்டிருக்கிறது.

கடை உரிமையாளர் ரவி

கடை உரிமையாளர் ரவி கூறும்போது,

சொந்த ஊரு மதுரை. இயற்கை உணவுமீது எனக்கு ரொம்ப ஆர்வம். அய்யா நம்மாழ்வார் பேருல, ஃபிரெண்ட் மகாலிங்கத்தோடு பார்ட்னரா சேர்ந்து இந்தக் கடையை நடத்திகிட்டிருக்கேன். மெரினா, பெசன்ட் நகர் மட்டும் இல்லாம இன்னும் ரெண்டு எடத்துல கடைபோட்டிருக்கோம்.

மொத்தம் 12 பேர் வேலை செய்யிறோம், எல்லாம் சொந்தக்காரங்கதான். கிட்டதட்ட ஆறு வருஷமா இந்தக் கடையை நடத்திகிட்டிருக்கோம். இப்ப, ஜூஸ், சூப், புட்டு, இனிப்பு என 30 வகையான உணவுகளை தயார் செய்கிறோம். கடவுள் புண்ணியத்துல ஒரு நாளைக்கு ஆறாயிரம், ஏழாயிரம் சம்பாதிக்கிறோம் என்று மனநிறைவோடு கூறுகிறார்.

மேலும் தொடருகிறார். “காலை அஞ்சிலேருந்து பத்தரை மணி வரைக்குதான் வியாபாரமே. அப்புறம் எல்லாத்தயும் மூட்டகட்டிகிட்டு வேனுல தூக்கிட்டு கௌம்பிடுவோம். அதுக்கப்புறம்தான் வேலையே. வீட்டுக்குப் போனதும் எல்லா பாத்திரங்களையும் கழுவ ஆரம்பிப்போம். அதை பிரிச்சி அடுக்குறதுக்கு பெரும்பாடாயிடும். பகல் 2 மணிக்குதான் மொத்த வேலையும் முடியும். ஏதோ குடும்பத்தோடு செய்யிறதுனால கொஞ்சம் கஷ்டம் இல்லாம போகுது. அப்புறம் அடுத்த நாளுக்குத் தேவையான கீரை, காய்கறிகளுக்கான ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கும்” என்றார் ரவி.

ஒரு ட்ரேயில் சக்கைகளை சேர்த்து, காட்சிக்கு வைத்திருந்தார்கள். இது என்ன புது அயிட்டம் என்று கேட்டதற்கு, “இதெல்லாம் பாத்தாத்தான் சில கஸ்டமர்கள் ஃப்ரெஷ்ஷா இருக்குன்னு நம்புவாங்க. அதனால தினமும் ஜூஸ் போடும்போது, அதன் சக்கையை எடுத்து வைப்போம்” என்றார்.

இதுவரை ரவுடிங்க தொந்தரவு எதுவுமே இல்ல. மகிழ்ச்சியா கடையை நடத்திகிட்டிருக்கோம் என்று கூறிக்கொண்டிருக்கும்போதே, ஜீப்பிலிருந்து இரண்டு போலீஸார் இறங்கி வந்தார்கள். டேய் தம்பி, சார் ரெண்டுபேருக்கும் கேப்பங் கூழும் பருத்திப் பாலும் ஊத்திக் கொடுப்பா என்று கூறிவிட்டு, நம்மை நோக்கி ஒரு மெல்லிய பார்வையை வீசினார்.

ஆயிரம் அர்த்தங்களை உள்ளடக்கிய அந்தப் பரிதாப பார்வையில், “இந்த அட்ஜெஸ்ட்மென்ட் கூட இல்லேன்னா கடை நடத்த முடியுமா?” என்பதும் அடங்கியிருந்தது.

தேனி லோயர் கேம்ப் – குமுளிச் சாலையை மூடி தொழிலாளி வயிற்றில் மண்ணைப் போடாதே !

தேனி மாவட்டம் லோயர் கேம்பிலிருந்து குமுளி வரையுள்ள தேசிய நெடுஞ்சாலையில், 6 கி.மீ தொலைவிற்கு குமுளி மலைச் சாலை அமைந்துள்ளது. செப்டம்பர் மாத இறுதியில் இப்பகுதியில் பெய்த தொடர்மழையில் மலைப்பாதையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இப்பகுதியில் நிலச்சரிவு ஏற்படுவதென்பது இயல்பான ஒன்று. அதற்கேற்ப துரிதமாக செயல்பட்டு பாதைகளை சரிசெய்ய வேண்டியது மாவட்ட நிர்வாகம் மற்றும் வன அதிகாரிகளின் கடமை.

மாறாக, நிலச்சரிவைக் காரணம் காட்டி இப்பாதை வழியே வாகனங்கள் செல்ல தடை விதித்திருக்கிறது, மாவட்ட நிர்வாகம். கம்பம் மெட்டு வழியாகச் சுற்றி செல்ல வேண்டுமென்று மாற்று வழியை காட்டியிருக்கிறது. சைக்கிள் உள்ளிட்டு இருசக்கர வாகனம் கூட செல்லக்கூடாது என்று தடுத்து நிறுத்தப்படுவதால், அன்றாடம் பிழைப்புக்கு குமுளிக்குச் செல்லும் கூலி வேலை செய்வோர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். பால், உள்ளிட்ட அத்யாவசியப் பொருட்களைக்கூட இந்த சாலை வழியே கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. கறந்து கொண்டுவந்த பாலை நடுரோட்டில் கொட்டி தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர், விவசாயிகள். பால் உள்ளிட்ட அன்றாடத் தேவைகளுக்கே கம்பம் மெட்டு வழியாக பல கிலோ மீட்டர் சுற்றி குமுளிக்குச் சென்றுதான் பொருள் வாங்கியாக வேண்டும்.

இந்நிலையில், பாதை செப்பனிடும் பணியை விரைந்து முடிக்கக் கோரியும், அதுவரையில் இருசக்கர வாகனங்களை மட்டுமாவது அனுமதிக்க வேண்டுமென்றும் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் கடந்த அக்-07 அன்று லோயர் கேம்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், நூற்றுக்கணக்கான உழைக்கும் மக்கள், கூலித்தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

பொறுப்பற்ற மாவட்ட நிர்வாகமே ! கூலிக்காரர் சோற்றில் மண்ணைப் போடதே !

• தொடர் மழையால் சரிந்து விழுந்த குமுளி மலைச்சாலையை ஆமை வேகத்தில் செப்பனிட்டு அப்பாவி மக்களை அலைக்கழிக்காதே!

• போர்க்கால அடிப்படையில் சாலைப்பணியை விரைவுபடுத்து!

• குமுளிக்குச் செல்லும் கூலி வேலைக்காரர்கள் இரு சக்கர வாகனங்களில் காலை, மாலை மட்டும் செல்வதற்கு வழி ஒதுக்கீடு செய்து கொடு ! பொது விதியை மீறாதே !

• ஆயிரக்கணக்கான கூலிக்காரர்களை பட்டினியில் தள்ளிவிட்டு யாருக்காக இந்த சாலை வசதி!

• கேட்பாரற்ற அனாதைகளா கூலிக்காரர்கள்?

படிக்க:
எட்டு வழிச்சாலை : நிலத் திருட்டுக்குப் பெயர் வளர்ச்சி !
விளைந்த நெல்லை கொள்முதல் செய்ய எடப்பாடி அரசிடம் சாக்குப் பைகள் இல்லையாம் !

தகவல்:

, லோயர் கேம்ப்.

கிழங்கு கிண்டியபோது கிடைத்த ரத்தினக் கல் | அ.முத்துலிங்கம்

எழுத்தாளர்
அ. முத்துலிங்கம்

நான் பொஸ்டனுக்கு போனால் அவர் ரொறொன்ரோவுக்கு போனார். நான் ரொறொன்ரோவுக்கு போனால் அவர் பொஸ்டனுக்கு போனார். கடைசியில் ஒருவாறு சந்திப்பு நிகழ்ந்தது. பொஸ்டன் நண்பர் வேல்முருகன் என்னை வந்து காரில் அழைத்துப் போனார். பொஸ்டன் பாலாஜி அவரைக் கூட்டிவந்தார். வேல்முருகன் வீட்டில் சந்தித்துக் கொண்டோம். இப்படித்தான் பேராசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதியை சந்தித்தேன். இதுவே முதல் தடவை.

ஒருமுறை அமெரிக்காவில் சு.ராவைச் சந்திக்க விரும்பி அவர் தங்கியிருந்த சாந்தகுரூஸ் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அது பத்து வருடங்களுக்கு மேலேயிருக்கும் என்று நினைக்கிறேன். பேச்சின்போது நடுவிலே திடீரென்று ‘நீங்கள் சலபதியை படித்திருக்கிறீர்களா?’ என்று கேட்டார். நான் ’இல்லை’ என்றேன். ’நீங்கள் படிக்கவேண்டிய முக்கியமான ஆய்வாளர் அத்துடன் எழுத்தாளர்’ என்றார். அதன் பின்னர்தான் அவரைத்தேடி படிக்க ஆரம்பித்தேன்.

ஆ.இரா. வேங்கடாசலபதி

சலபதி சொன்ன கதையும் சுவாரஸ்யமாக இருந்தது. ‘ஒருநாள் எழுத்தாளர் பெருமாள் முருகனை கம்புயூட்டரில் தேடிக்கொண்டு போனேன். அவருடைய பெயர் வந்ததும் கிளிக் பண்ணினேன். அது எப்படியோ தவறுதலாக உங்கள் பெயரை கிளிக் செய்துவிட்டது. கட்டுரையை படிக்க ஆரம்பித்ததுமே இது வேறு ஆரோவுடைய எழுத்து என்பது தெரிந்துவிட்டது. முடிவிலே அ.முத்துலிங்கம் என்று பெயர் போட்டிருந்தது. அதன் பின்னர்தான் உங்கள் எழுத்தை படித்தேன்’ என்றார். ஒருவரை ஒருவர் தற்செயலாக படிக்கத் தொடங்கிய நாங்கள் சந்தித்ததும் இப்படி தற்செயலாகத்தான்.

‘கடிதங்களை தொகுக்கும் ஆர்வம் எப்படி வந்தது?’ என்று அவரைக் கேட்டேன். அவருக்கு வ.உ.சியில் பெரும் பற்று இருந்தது. அவருடைய கடிதங்களை தேட ஆரம்பித்தபோது பாரதி, புதுமைப்பித்தனின் கடிதங்களும், வேறு பல அருமையான தகவல்களும் அகப்பட்டன. இவற்றை வகை வகையாக புறாக்கூண்டுகளுக்குள் வைத்து இருபது வருடங்களுக்குமேல் பாதுக்காக்கிறார். சில ஆராய்ச்சிகள் தொடருகின்றன. சில ஏற்கனவே புத்தகங்களாக வந்துவிட்டன. செம்பதிப்பில் புதுமைப்பித்தன் கதைகள், கட்டுரைகள், பாரதி கட்டுரைகள் எல்லாம் வெளிவந்தது இப்படித்தான் என்றார்.

அப்படிப் பேசிக்கொண்டிருந்தபோதுதான் அவர் சமீபத்தில் செய்து முடித்த ஒரு மகத்தான காரியம் பற்றி அறிய முடிந்தது. ம.இலெ.தங்கப்பா, புதுவையில் தமிழ் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நிறைய தமிழ் கவிதைகள் எழுதியிருக்கிறார். அவர் 50 ஆண்டுகளுக்கு மேலாக சங்கப்பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வந்தார். ஆனால் அவை புத்தகமாக உருப்பெற்றதில்லை. பேராசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதியின் அருமையான முன்னுரையுடன் இந்த நூல் புது தில்லி பெங்குவின் பதிப்பாக, Love Stands Alone என்ற தலைப்பில் சமீபத்தில் வெளிவந்திருந்தது. இது வெளிவர முழுக்காரணமாக இருந்தவர் சலபதிதான்.

வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையாக எப்படியும் புத்தகத்தை வாங்கிவிடவேண்டும் என்று நினைத்தேன். ஆனாலும் சிறிது ஏமாற்றம் இருந்தது. ஜி.யு.போப், ஏ.கே.ராமானுஜன், ஜோர்ஜ் எல். ஹார்ட் போன்றவர்கள் ஏற்கனவே சங்க இலக்கியங்களை மொழிபெயர்த்திருக்கிறார்கள். மீண்டும் ஒன்று தேவையா என்ற நினைவு எழுந்தது. ஓர் ஆராய்ச்சியாளரின் நேரம் எவ்வளவு முக்கியமானது. ஏதாவது சொந்தமாகச் செய்திருக்கலாமே என்ற எண்ணத்தை தவிர்க்கமுடியவில்லை. எனினும் புத்தகத்தை தருவிக்கும் முயற்சியில் இறங்கினேன்.

அமெரிக்காவிலோ கனடாவின் புத்தகக் கடைகளிலோ புத்தகம் விற்பனைக்கு வரவில்லை என்று சொல்லிவிட்டார்கள். அமேஸன்.கொமிலும் தேடி கிடைக்கவில்லை. ஒரு நண்பருக்கு இந்தியாவுக்கு எழுதி அதிவேக தபாலில் ஒரு பிரதியை எடுப்பித்தேன். புத்தகத்தின் விலையிலும் இரண்டு மடங்கு கூடிய தபால் செலவு வைத்த புத்தகம் மூன்று நாளில் ஓர் இரவு ஒன்பது மணிக்கு வந்து சேர்ந்தது. அன்று இரவு படிக்கத் தொடங்கி அடுத்தநாள் காலைதான் முடித்தேன். அப்பொழுதுதான் உணர்ந்தேன் சலபதி தன் நேரத்தை சரியான ஒரு காரியத்துக்குத்தான் பயன்படுத்தியிருக்கிறார் என்று. சமீபத்தில் என்னை வேறு ஒரு புத்தகமும் இப்படி கவரவில்லை.

இந்தப் புத்தகம் பல கேள்விகளை என் மனதில் எழுப்பின. ஓர் ஆங்கில மொழிபெயர்ப்பை படிக்கும்போது அதன் கவித்துவம் முழுக்க புதுமொழியில் வந்துவிடும் என்று எதிர்பார்க்கக்கூடாது. எண்பது சதவீதம் வந்தால் அது வெற்றி. நூறு சதவீதம் வந்தால் மாபெரும் வெற்றி. ஆனால் மொழிபெயர்ப்பு மூலப்பிரதியை தாண்டக்கூடுமா? அப்படி தாண்டினால் அது சரியாக இருக்குமா? சங்க இலக்கியங்களில் ஓர் ஐம்பது பாடல்கள் திரும்பத் திரும்ப மேற்கோள் காட்டப்படும். மேடைகளில் பேசப்படும். ஒருவர் பின் ஒருவராக அவற்றை பலர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். அவற்றை விட்டுவிட்டு அதிகம் பேசப்படாத, கவனிக்கப்படாத பாடல்களை நான் மொழிபெயர்ப்பு நூலில் தேடினேன்.

அவை ஏதாவது புதிய திறப்புகள் கொண்டுள்ளனவா என்று பார்ப்பதுதான் என் எண்ணம். தமிழில் படித்தபோது சாதாரணமாகத் தோன்றிய சில பாடல்கள் ஆங்கிலத்தில் புதிய ஜொலிப்புடன் கண்ணில் பட்டன. பதினாறு மூலையாக வெட்டப்பட்ட ரத்தினக் கல்லை யன்னல் பக்கம் கொஞ்சம் திருப்பி வைத்ததும் புதிய ஒளியை வீசுவது போல.

படிக்க:
தமிழ்நாட்டில் தமிழ் இல்லை ! ஒரு அமெரிக்கரின் அதிர்ச்சி !
அவர்கள் ஒபாமாவுக்கு வேண்டியவர்கள் ! தாமதம் வேண்டாம் !

 

முதலில் ஆச்சரியப் படுத்திய விசயம் நூலின் தலைப்பு. Love Stands Alone. இது குறுந்தொகையில் வரும் பாடலின் ஒரு வரி. தமிழில் இந்தக் குறுந்தொகை கவிதையை பலமுறை தாண்டிப் போயிருக்கிறேன் ஆனாலும் ஆங்கிலத் தலைப்பில் கிடைத்த அர்த்தம்  எனக்கு கிடைக்கவே இல்லை. ஆங்கிலத்தில் கவிதையை படித்தபோதோ அந்தக் கருத்து பட்டென எழுந்து நின்றது.

குறுந்தொகை 174 – பாடியவர் வெண்பூதி
தலைவி தோழிக்கு சொன்னது

பெயல்மழை துறந்த புலம்புஉறு கடத்தக்
கலை முட்கள்ளிக் காய்விடு கடுநொடி
துதைமென் தூவித் துணைப்புறவு இரிக்கும்
அத்தம் அரிய என்னார் நத்துறந்து
பொருள்வயிற் பிரிவார் ஆயின்இவ் உலகத்துப்
பொருளே மன்ற பொருளே
அருளே மன்ற ஆரும் இல்லதுவே.

இதன் பொருளை சுருக்கமாக இப்படிக் கூறலாம். ‘மழை பெய்யாத பாலை நிலத்தில் கிளைவிடும் கள்ளிச் செடியின் காய்கள் வெடிக்கும் சத்தம் மென்மையான சிறகுகள் கொண்ட ஆண், பெண் புறாக்கள் சேருவதற்கு தடையாக அச்சமூட்டுகின்றன. என்னை தவிக்க விட்டுவிட்டு அப்படியான காட்டுப் பாதையில் அவன் பொருள் தேடி புறப்பட்டு போய்விட்டான். இந்த உலகத்தில் பொருள் ஒன்றே உறுதியான பொருள். அருள் என்பது தன்னை ஏற்றுக் கொள்வதற்கு ஆரும் இல்லாமல் நிற்கிறது.’

இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு இப்படி வருகிறது.

In the desolate, rain-forsaken land
the twisted kalli’s pods
open with a crackle
frightening the mating pigeons
with their close-knit downy feathers.

He has left me languishing.
‘In search of wealth’ he said.
He did not mind the risk on the way.

If it comes to that,
then in this world
wealth has all support
and love must stand alone.

அந்தக் கடைசி வரியில் ஒரு சிறு மாற்றம், அது கவிதையை என்ன மாதிரி உயர்த்தி விடுகிறது. காதலுக்கு ஒருவிதத்திலும் துணை கிடையாது என்று தமிழில் வருவது ஆங்கிலத்தில் ‘காதல் தனித்து நிற்கிறது’ (Love Stands Alone) என்று வரும். இதிலே மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால் ஏறக்குறைய 2000 வருடங்களுக்கு முற்பட்ட சங்கப் பாடல் ஆங்கில மொழிபெயர்ப்பில் ஒரு நவீன கவிதைபோலவே தோற்றமளிக்கிறது என்பதுதான்.

இன்னொரு பாடல். புறநானூறு 112. பாடியவர் பாரி மகளிர். நூறு கட்டுரைகளிலும், இருநூறு மேடைகளிலும் மேற்கோள் காட்டப்பட்ட பாடல். சினிமாவும் இந்தப் பாடலை விடவில்லை.

அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்,
எந்தையும் உடையேம்; எம் குன்றும் பிறர் கொளார்;
இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவின்,
வென்று எறி முரசின் வேந்தர் எம்
குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே!

பொருள் மிக எளிது. ‘அன்றைய திங்கள் தந்தை இருந்தார், குன்றும் இருந்தது. இன்றைய திங்களில் வெற்றிகொண்ட அரசர் குன்றை கைப்பற்றிக்கொண்டனர். தந்தையும் இல்லை.’ இதை மொழி பெயர்ப்பதும் எளிது. வெண்நிலவு என்பதை full moon என்று மொழிபெயர்ப்பதே வழக்கம். ஆனால் அந்த வரி இப்படி வருகிறது.

But tonight
the moon is full again,
the triumphant kings
marching with their battle drums
have our hill,
and we are fatherless.
Full moon என்பதற்கு பதிலாக the moon is full again என்ற சொற்தொடர் பயன்படுத்தப் படுகிறது.

சந்திரன் மறுபடியும் நிறைந்துவிட்டான். தேய்ந்த சந்திரன் மீண்டும் வளர்ந்து ஒருமாத காலம் ஓடிவிட்டது சொல்லப்படுகிறது. ஒரு சிறிய சொல் வித்தை கவித்துவ அழகை உயர்த்திவிடுகிறது.

இப்படி ஒரு மாயத் தருணம் ஹோமருடைய இலியட்டிலும் வருகிறது. அச்சில் கிரேக்க வீரன். அவன் திரோஜனான ஹெக்டரை பழிவாங்கும் வெறியிலிருக்கிறான். அச்சில் துரத்த ஹெக்டர் திரோய் நகரத்து சுவர்களை மூன்றுதரம் சுற்றிச்சுற்றி ஓடுகிறான். அச்சில் ஹெக்டரை வெட்டி வீழ்த்தி அவனுடைய குதிக்காலில் கயிற்றைக் கட்டி தேரிலே இழுத்துச் செல்கிறான். பன்னிரெண்டு நாட்களின் பின்னர் கோபம் அடங்கி பிணத்தை ஹெக்டரின் மனைவியிடம் ஒப்படைத்ததும் அவர்கள் மரணச் சடங்குகளை செய்துமுடிக்கிறார்கள்.

So they tended the burial of Hector, tamer of horses என்று ஹோமர் முடிக்கிறார். குதிரைகளை பழக்கும் ஹெக்டர் கொல்லப்பட்ட பிறகும் குதிரைகளால் இழுக்கப்பட்டு கேவலமான முடிவை அடைகிறான். ‘குதிரைகளைப் பயிற்றுவிக்கும் ஹெக்டர்’ என்று கவி சொல்லவில்லை. ‘ஹெக்டர் ஆகிய குதிரைப் பயிற்சிக்காரன்’ என்று சொல்கிறார். மிகச் சாதாரணக் கவிதையாக அதுவரைக்கும் இருந்தது சட்டென்று திறந்து உயிர் கொள்கிறது.

இப்படி உயிர் பெறும் கவிதைகளை இந்த மொழிபெயர்ப்பில் பல இடங்களில் காணலாம். இன்னொரு கவிதை. புறநானூறு 196. ஆவூர் மூலங்கிழார் பாண்டியனை நோக்கிப் பாடியது. நீண்டநாட்கள் அரசன் வாயிலில் நின்றும் புலவருக்கு பொருள் கிடைக்கவில்லை. தருகிறேன் என்று சொன்ன அரசன் தரவில்லை. வயிறெரிந்து புலவர் பாடுகிறார்.

இது நீண்ட பாடல். இதன் பொருள் சுருக்கம் இது. ‘தருவதும் தராமல் விடுவதும் உன் விருப்பம். தருவதாகச் சொல்லி தராமல் இருப்பது நல்லதல்ல. உன் புதல்வர் நோயில்லாமல் வாழட்டும். கல்போலக் கரையாத வறுமையுடன், நாணத்தை தவிர வேறு எதையும் அணியாமல், வாழும் என் மனைவியிடம் நான் திரும்பிச் செல்கிறேன். நீ வாழ்க’ என்கிறார் புலவர். ஆங்கில மொழிபெயர்ப்பில் கடைசிப் பகுதியில் ஒரு சின்ன மாற்றம் நிகழ்கிறது.

While I go away from here
braving the sun and the cold winds,
thinking of my delicate young wife
whose virtue is her loyalty
and who lives in my home
which is but a wind shelter
where my poverty
as if made of stone
sitting tight.

அரசன் பரிசில் தராமல் ஒவ்வொரு நாளாக கடத்தி ஏமாற்றியதில் கொதிக்கும் புலவரின் நெஞ்சம் தமிழ் கவிதையில் மையமாகத் தெரிகிறது. ஆங்கில மொழிபெயர்ப்பில், வறுமையின் உக்கிரம்தான் முதலிடம் பெறுகிறது. என் குடிசையில் வறுமையோ கல்போலக் கரையாமல் நிற்கிறது என்று ஆங்கிலக் கவிதை முடிகிறது. நுட்பமான ஒரு பாய்ச்சல் நிகழ்ந்திருக்கிறது.

குறுந்தொகை, புறநானூறு, அகநானூறு பாடல்களை நான் அவ்வப்போது படிப்பதுண்டு. எத்தனைதரம் படித்தாலும் அவை அலுப்பதில்லை. எந்த ஒரு நல்ல கவிதையும் வாசகரின் பொறிபட்டுத்தான் சுடர்விடும்.  இந்த நூலைப் படித்தபோது பல இடங்களில் ஆங்கில மொழிபெயர்ப்பில் பாடல்கள் இன்னொரு தளத்தில் இயங்குவது போன்ற ஒரு தோற்றம் எனக்கு கிட்டியது. ஒரு மொழிபெயர்ப்பு மூலப்பிரதியை தாண்டி மேலே போகலாமா? போகலாம் என்று சிலர் சொல்கிறார்கள்.

படிக்க :
கனடாவில் எனது முதல் சம்பளம் | அ.முத்துலிங்கம்
இரண்டு டாலர் கிடைத்தது | அ.முத்துலிங்கம்

உலக இலக்கியங்களை தொடர்ந்து ஆய்வு செய்துவரும் பேராசிரியர் David Damrosch உத்தமமான மொழிபெயர்ப்பு மூலப்பிரதியை மிஞ்சலாம் என்றும் அது வாசகர்களை இரண்டு கலாச்சாரங்களுக்குள்ளும் சமமாக அழைத்துச்செல்லும் தன்மையுடையதாக இருக்கும் என்றும் சொல்கிறார்.

இந்த நூல் கொடுத்த அனுபவத்தை எப்படி வர்ணிப்பது என்பதில் பெரும் தயக்கமிருக்கிறது. ஒரு நல்ல கவிதையில் வார்த்தைகள் முன்னே போகும், கவி பின்னே செல்வார் என்று சொல்வார்கள். இங்கே வார்த்தைகளே தெரிகின்றன. இந்த நூலில் ஆங்கில மொழிபெயர்ப்பில்  கவிதைகளைப் படித்துவிட்டு பிரபல கவி, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக கவிதைப் பேராசிரியர் அரவிந் கிருஷ்ண மெஹ்ரோத்ரா கூறியதை நான் என்னுடைய மொழியில் சொல்கிறேன்.

‘நாட்டுப்புற நடனத்தில் பெண்கள் தலைக்குமேல் பானைகளை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி வைத்து நடனமாடுவார்கள். அதை மூச்சைப் பிடித்துக்கொண்டு பதற்றத்தோடு பார்த்து ரசிப்போம். ஒரு தவறான அடி பானைகளைச் சிதற அடித்துவிடும். ஆனால் இந்த மொழிபெயர்ப்பில் கவிதைகள் மீண்டும் மீண்டும் ஒரு நர்த்தனம் செய்து வெற்றியை எட்டிவிடுகின்றன.’ பானையும் தப்பிவிடுகிறது, கவிதையும் தப்பி விடுகிறது. இந்த வர்ணனைகூட நூலுக்கு பற்றாது என்றே எனக்கு தோன்றுகிறது.

குறுந்தொகையில் ஒரு பாடல் உண்டு. ‘காட்டிலே வேட்டுவன் கிழங்கு கிண்டியபோது ரத்தினக் கல் அகப்பட்டது’ என்று வரும். அதை உவமையாகச் சொல்லலாம். அதுவும் போதாது. இந்த நூலைப் படித்தபோது எனக்கு ஏற்பட்ட உணர்வை இப்படித்தான் சொல்லமுடியும். ஏடிஎம் மெசினில் 1000 டொலர் கேட்டபோது அது 2000 டொலர் தந்துவிட்டது போன்ற மகிழ்ச்சி. மூலப் பிரதியை மீறிய மொழிபெயர்ப்பு.

நூலை மீண்டும் படிக்கத் தொடங்கினேன்.

நன்றி :அ.முத்துலிங்கம்
எழுத்தாளர் முத்துலிங்கத்தின் இணைய தளம்

எழுத்தாளர் அறிமுகக் குறிப்பு:
இலங்கையில் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்ததன் பின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டட்ர்ட் மனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்தி செய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்தேன். 2000ம் ஆண்டில் ஓய்வு பெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.

அறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல்கள் என எழுதியிருக்கிறேன்.

***
(அ.முத்துலிங்கத்தின் தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகளை அவரது அனுமதியுடன் இங்கே வெளியிடுகிறோம்.)

அண்ணா பல்கலை தடுப்புச் சுவரை அகற்றக் கோரி சென்னைப் பல்கலை மாணவர்கள் போராட்டம் !

கிண்டி வளாகத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் அறிவியல் துறைகளும் அண்ணா பல்கலைக் கழகமும் இயங்கி வருகிறது. இரு பல்கலைக் கழகத்தையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் வந்து போகிற இடமாக மட்டுமல்லாமல் சென்னையை சுற்றியுள்ள பல்வேறு கல்லூரி மாணவர்கள் தங்களது ஆய்வுப் பணிக்காக அன்றாடம் வந்து செல்கின்றனர். இரண்டுமே அரசு கல்வி நிறுவனங்கள் என்ற வகையில் மருத்துவமனை, தபால் துறை, வங்கிகள், பேருந்து நிலையங்கள் மற்றும் தீயணைப்புத்துறை வண்டிகள் வந்து செல்வதற்காக பொதுவழிப்பாதைகள், பயன்படுத்தப்பட்டு வந்தன. மேலும் கிண்டிவளாகம் வனஉயிரினங்களின் மேய்ச்சல் நிலமாகவும் இருந்து வருகிறது.

ஆனால் இரண்டு பல்கலையைச் சேர்ந்த பெரும்பான்மை ஆசிரியர்களுக்கோ மாணவர்களுக்கோ தெரியாமல் பொதுவழிப்பாதையை மூடும் வகையில் நிரந்தர மதில் சுவரை கட்டி வருகிறது பல்கலைக்கழக நிர்வாகம். இந்நிலையில் சென்னைப் பல்கலைக் கலையின் அன்றாட அலுவல்கள் முற்றிலும் முடங்கும் படி அண்ணா மற்றும் சென்னைப் பல்கலையை இணைக்கும் முக்கிய சாலையை திருட்டுத்தனமாக விடுமுறை நாளான ஞாயிறன்றே (07-அக்டோபர்-2018) கட்டிமுடிக்க முயற்சி செய்தது அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம்.

ஏற்கனவே ஒரு முறை மதில் சுவர் பிரச்சனை சென்னை பல்கலைக் கழக மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் எழுப்பப்பட்டு முதன்மை சாலையை அடைக்கும் பணி சற்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மதில் சுவர் கட்டும் ஒப்பந்தம் யாரால் எங்கு இறுதியானது என்பதே இரு பல்கலைக் கழக பேராசிரியர்களுக்கோ மாணவர்களுக்கோ புரியாத புதிராக தற்பொழுதுவரை இருந்து வருகிறது.

ஏனெனில் சென்னைப் பல்கலைக்கழகத்திலும் சரி அண்ணா பல்கலைக் கழகத்திலும் சரி, ஒழுங்கான குடிநீர் வசதியோ, போதுமான கழிப்பறைகளோ, கழிப்பறைகளில் கதவுகளோ கூட இல்லாதிருக்கும் பொழுது அண்ணாபல்கலைக் கழகமும் சென்னைப் பல்கலைக் கழகமும் 50%-50% என்ற கணக்கில் 90 இலட்சம் செலவழித்து மதில் சுவர் கட்டுவது ‘கட்டிங் அடிப்பதற்கே’ என்று ஒரு சேர கூறுகிறார்கள் மாணவர்களும் னநாயக உணர்வு கொண்ட ஒரு சில பேராசிரியர்களும்.

இந்நிலையில் யாருக்கும் தெரியாமல் மதில் சுவரை கட்டியெழுப்பிவிடலாம் என்று நினைத்த நிர்வாகத்தின் நைச்சியத்தை மாணவர்கள் தங்களது ஒருமித்த போராட்டத்தால் நொறுக்கியிருக்கிறார்கள்.

08-அக்டோபர்-2018 திங்கள் காலை 9 மணியிலிருந்தே சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு செல்லும் பொதுவழியை அடைத்து முன்வைக்கப்பட்டிருந்த காண்கீரிட் தடுப்பை அகற்றக்கோரி சென்னைப் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்கள், பெருந்திரளான முதுகலை மாணவர்கள், அலுவலர்கள், ஒரு சில பேராசிரியர்கள் ஒன்று கூடி சாலையில் அமர்ந்து போராடினர்.

(இரவோடு இரவாக பாதையை மறித்து எழுப்புவதற்காக வைக்கப்பட்டுள்ள காங்கிரிட் கம்பிகள்)

மதில் சுவரின் ஒருபுறம் சென்னைப் பல்கலைக் கழக மாணவர்களும் மறுபுறத்தில் அண்ணாபல்கலைகழக நிர்வாகிகளும் தனியார் ஒப்பந்த காரர்களும் வண்டி நிறைய காவல்துறையினரும் நின்று கொண்டிருந்தனர். காவல்துறையினரை பல்கலைக்கழக வளாகத்திற்குள் வருவதற்கு யார் அனுமதி அளித்தது? என்ற கேள்விக்கு விடை எளிதே. பல்கலைக்கழக நிர்வாகத்தில் மேல் இருப்பவர்கள் பெரும்பாலும் அ.தி.மு.க. அடிமைகளாகவும் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. கும்பலாகவே இருக்கிறார்கள். ஒப்பந்த பணிகள் மூலமாக வந்தவரை வாரிச்சுருட்டலாம் என்பதற்கு இதுபோன்ற போராட்டங்களால் பங்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காக கல்வி நிலையத்திற்குள் காக்கிகளை ஏவி மாணவர்களை ஒடுக்க நினைக்கிறது நிர்வாகம். இதில் அண்ணா பல்கலைக் கழகம் சார்பாக யாரும் போராடி விடக்கூடாது என்பதற்காக நிர்வாகம் தனது அடிமைப் பேராசிரியர்களை தனியார் செக்யுரிட்டிகளுடன் நிற்க வைத்து மாணவர்களை போராட்டத்தில் கலந்துகொள்ள விடாமல் மிரட்டிக்கொண்டிருந்தது. மேலும் அண்ணா பல்கலைக் கழகத்திற்குள் செல்வதற்காக அப்பல்கலையின் மாணவர்களும் போராட்டத்தைப் பார்த்துக்கொண்டே அடைபடவிருக்கும் பொதுவழியின் வாயிலாகவே தங்களது வகுப்பு நோக்கி போவதை தடுத்து நிறுத்தி சுற்றிப்போகும் படி மிரட்டிக் கொண்டிருந்தது அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம்!

நேரம் செல்லச் செல்ல, கூட்டம் அதிகரித்து சற்றேறக்குறைய 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். பேச்சு வார்த்தைக்காக வந்த சென்னைப் பல்கலைக்கழக கிண்டி வளாக இயக்குநர் மற்றும் சில மூத்த பேராசிரியர்கள் மாணவர்களிடம் கருத்து கேட்பது போல பாவனை செய்தனர். இவர்கள் இப்படி பாவனை செய்வது வழக்கமான ஒன்று. இதே மதில் சுவர் பிரச்சனை சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் கூட்டத்தில் எழுப்பப்பட்ட பொழுது புதிதாக பதவியேற்றுக்கொண்ட கிண்டி வளாக இயக்குநர் பேராசிரியர் முருகன், தான் இந்த பிரச்சனையை துணைவேந்தரிடம் கொண்டு செல்வதாக கூறினார். பலமாதங்கள் கழித்து இன்றைக்கு மாணவர்களிடமும் இதே வார்த்தையைத்தான் சொல்கிறார். மேலும் மாணவர்கள் ஏதோ தேவையற்று யாருக்காகவோ போராடுகிறார்கள் என்ற தொனியில் பிரச்சனையை பேராசிரியர்கள் கவனத்திற்கு கொண்டுவந்துவிட்டால் அத்தோடு கலைந்து செல்ல வேண்டும் என்று கூட்டத்தைக் கலைப்பதிலேயே குறியாக இருந்தார். மேலும் எல்லாம் சட்டப்படி நடக்கிறது என்று லீகல் பாயிண்டுகளைப் பேசினார்.

படிக்க:
அண்ணா பல்கலை : மாணவர் சேர்க்கையிலும் பல கோடி இலஞ்சம் – முறைகேடு !
சென்னை பல்கலை மாணவர்களின் தினமலர் அலுவலக முற்றுகை !

இரு பல்கலைக்கழகமும் இதுவரை பொதுவாக பயன்படுத்தி வந்த பொதுவழியை அடைத்து மதில் எழுப்பது நவீன தீண்டாமைச்சுவரைப் போன்று இருப்பது எந்த சட்டத்தில் வருகிறது என்பதற்கும் வன உயிரினங்கள் வந்து செல்லும் இடத்தில் யார் இது போன்று சுவர் எழுப்புவதற்கு அனுமதி அளித்தனர் என்பதற்கும் நிர்வாகத்தினர் பதில் தரவில்லை என்பதுடன் ஏதோ இப்பிரச்சனை இவர்களுக்கு இப்பொழுதுதான் தெரியும் என்பது போல காட்ட நினைத்து மாணவர்களிடையே அம்பலப்பட்டு போனார்கள். இதில் கோட்பாட்டு இயற்பியல் துறைத்தலைவர் ரீட்டா ஜான் ஒருபடி மேலே போய் மாணவர்களைப் பார்த்து மரியாதையா கலைஞ்சு போயிரு என்று மிரட்டினார். வழக்கமான பாணியில் மாணவர்களை அடிமைகளாக நடத்தி மிரட்டி காரியம் சாதிக்கலாம் என்று எண்ணியது பெருந்திரளான மாணவர்கள் கூட்டத்திற்கு முன் ஒப்பேறவில்லை. மாணவர்கள் உறுதியுடன் நின்று போராடினர்.

இன்று நடைபெற்ற போராட்டத்தின் காரணமாக மாணவர்கள் தங்கள் சொந்த அனுபவத்தின் வாயிலாக கீழ்க்கண்ட பல விசயங்களைக் அனுபவமாகப் பெற்றனர்.

• மதில் சுவரை அகற்றுவோம் என்ற கோரிக்கையில் உறுதியாக பெருந்திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர். அறிவியல் துறை வளாகத்திற்கு இத்தீ புதிய வரவு! பெண்களின் பங்களிப்பு அசாதாரணமான ஒன்றாக இருந்தது.

• தற்காலிகமாக பல்கலைக் கழக நிர்வாகம் மதில் சுவரை எழுப்புவதிலிருந்து நைச்சியமாக பின்வாங்கியிருக்கிறது. ஆனால் பொதுச்சொத்தான பல்கலைகழகம் கூறுபோடப்படுவதை மாணவர்களும் பேராசிரியர்களும் வீதிக்குவந்து மக்களிடையே அம்பலப்படுத்தினால் அன்றி இப்பிரச்சனைக்கு தீர்வில்லை.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற இத்தகைய போராட்டம் அணையாமல் தமிழகமெங்கும் மாணவர்களால் கட்டியைமைக்கப்படும் பொழுது தான் பல்கலைக்கழகத்தை மட்டுமல்ல தமிழகத்தையே காக்கமுடியும் என்ற நிதர்சனம் நம் முகம் முன் நிற்கிறது என்பது மிகையல்ல!

பாலியல் வன்கொடுமை : போராடாமல் விடிவில்லை ! பெ.வி.மு

பெண்கள்- குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை :
போராடாமல் விடிவில்லை!

பெண்கள் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குற்றங்கள் தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் கொடூரமாக நடந்தேறி வருகிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்தவை இன்று அன்றாட செய்தியாகி விட்டது.

தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய, அரியலூர் நந்தினி என்ற 15 வயது சிறுமியை இந்து முன்னணியைச் சேர்ந்த பொறுக்கி, பாலியல் வன்கொடுமை செய்து அவளின் பிறப்புறுப்பை சிதைத்து, அவளின் வயிற்றிலிருந்த சிசுவை வெளியே எடுத்து எரித்து கொலை செய்தார். ஆசிஃபா இந்த பெயரை யாராலும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. ரோஜா போன்ற அந்த குழந்தையை பி.ஜே.பி.யைச் சேர்ந்த கோவில் பூசாரி, 17 வயது சிறுவன், அந்த குழந்தையைத்  தேடிச் சென்ற காவல் துறை அதிகாரி என எட்டு பேர் சேர்ந்த கும்பல் மயக்க மருந்து கொடுத்து கோயில் கருவறையிலே வைத்து பாலியல் பலாத்காரம் செய்து குற்றுயிரும், கொலையுயிருமாக இருந்த அக்குழந்தையைக் கல்லை போட்டு படுகொலை செய்து காட்டில் வீசிவிட்டார்கள். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், அயனாவரத்தில் 11 வயது சிறுமியை பல பேர் கும்பல் ஏழு மாதமாக பாலியல் வல்லுறவு செய்துள்ளனர். இந்தக் கொடூரங்கள் எல்லாம் நம் நெஞ்சை  உலுக்கி எடுப்பவை.

பிறந்த குழந்தையா, பள்ளி படிக்கும் சிறுமியா, வயது வந்த குமரியா, மனைவியா, குழந்தை பெற்ற தாயா, நரை விழுந்த பாட்டியா என்ற எந்த வயது வித்தியாசமில்லாமல், பெண்கள் மீது நடத்தப்படும்  கொடூரங்களால்  பெண்கள் எப்போதும் ‘தான் ஒரு பெண்’ என்கிற எச்சரிக்கை உணர்வோடு பள்ளி, கல்லூரி, வேலை பார்க்கும் இடங்கள், பேருந்து, ரயில் என எங்கு சென்றாலும் பயத்துடனே போய் வருகின்றனர். இந்த அச்சம் அவர்களின் சொந்த வீட்டிலும் பின்தொடர்கிறது.

படிக்க:
மரண தண்டனையால் சமூகத்தில் பாலியல் குற்றங்கள் குறையுமா ?
நீங்கள் பாலியல் குற்றவாளியா?

இப்படி அச்சத்தோடும், பயத்தோடும் பெண்கள் வாழவே தகுதியற்ற நாட்டில் தான் பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றவாளியாக்கி, உடை சரியில்லை, இரவு நேரத்தில் அங்கு என்ன வேலை, என அவள் நடத்தையின் மீதே சந்தேகப்பட்டு குற்றம் சாட்டுவது இச்சமூகத்தின் பொதுப்புத்தியாக உள்ளது. இதற்குக் காரணம்  பார்ப்பனியப் பண்பாடும், அது ஊட்டி வளர்க்கும் ஆணாதிக்கமும்தான். பெண் உறுப்புகளை அனுபவிக்க கூடிய பொருளாக மட்டும் பார்க்கும் மனநிலையை ஒரு மனிதனுக்கு ஏற்படுத்துகிறது. எந்த ஒரு மிருகமும் கூட்டு பாலியல் வல்லுறவில் ஈடுபடுவதில்லை. அவற்றை விடவும் மோசமானவனாக மனிதன் தாழ்ந்து போகக் காரணம் என்ன? 20 வயது கூட நிரம்பாத இளைஞனும், 80 வயதைத் தாண்டிய கிழவனும் பலாத்காரத்தில் ஈடுபடுகின்றனர். இவர்களை மனிதத்தன்மை அற்றவர்களாக மாற்றியது எது? இந்தக் கேள்விகளுக்கு பதில் தேடாமல், குழந்தைகளையும், பெற்றோர்களையும் எச்சரிக்கையாக இருக்கச் சொல்லி விளம்பரம் போடுவது அயோக்கியத்தனமில்லையா?

ஆணாதிக்கத்தின் வேர்

கோவிலுக்குள் வைத்து வல்லுறவு செய்யும் இந்துமத வெறியர்கள், பாவமன்னிப்பு கேட்கச் செல்லும் பெண்ணைச் சீரழிக்கும் பாதிரியார்கள், ஒடுக்கப்பட்ட பெண்களைச் சூறையாடும் ஆதிக்கச் சாதிவெறிக் கும்பல் என ஆணாதிக்க, காமவெறி நிரம்பி வழியும் மூளைகளைத்தான் சாதி, மதங்கள் உருவாக்கி வருகின்றன. இந்த சிந்தனைதான் பெண்களை ரத்தமும் சதையும் கொண்ட எல்லா உணர்வுகள் உள்ள சக மனுசியாக மதிக்காமல், பெண் என்றாலே அனுபவிக்கக் கூடியவள் என்ற மனநிலையை உருவாக்கும் அபாய வேர்.

நுகர்வுவெறி

தொழில்நுட்ப வளர்ச்சி என்ற பெயரில் வளர்ந்து வரும் மற்றொரு அபாயம் ஆபாச இணைய தளங்கள். ஸ்மார்ட் போன் வடிவத்தில் நம் சட்டைப்பையில் உட்கார்ந்திருக்கும் சனியன். பெண்களின் உடல்களை விதவிதமாக காட்டி, மகளா மனைவியா எனத் தெரியாத அளவிற்கு பாலியல் வெறியூட்டுகிறது. ‘தனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக் கூடாது. அதை எப்படியாவது அடைந்தே தீர வேண்டும் அதற்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வேன்’ என்பதன் உச்சம்தான் குழந்தைகள் மீது நடக்கும் பாலியல் வன்கொடுமை. பெண்கள் என்றாலே நுகர்ந்துத் தள்ள வேண்டிய, இன்பம் தரும் பண்டம் என்கிற பொதுப்புத்தியை உருவாக்கி, கல்லாக் கட்டும் முதலாளிகளின் இலாபவெறியால் புகுத்தப்படும் கலாச்சார சீர்கேட்டின் பலனாக, வளரும் தலைமுறையான மாணவர்கள் – இளைஞர்கள் சீரழிக்கப்படுகிறார்கள்.

இந்த ஏகாதிபத்திய கலாச்சார சீரழிவின் உச்சம்தான் அபிராமி. பத்து மாதம் சுமந்து சீராட்டி, பாராட்டி வளர்த்த தன் குழந்தைகளை தனது சுகத்திற்காகக் கொலை செய்ய தூண்டியது. அதுதான் உடன் பிறந்தவர்களையே பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக சிதைக்கத் தூண்டுகிறது.

தடுக்க வேண்டியவர்களின் லட்சணம்

கபாலி, சீமராஜா படங்களை, கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளை இன்டர்நெட்டில் பார்க்க முடியாதபடி தடை விதிக்கும் நீதிமன்றம்தான், பெண்களை கவர்ச்சியாக, சோரம் போகக் கூடியவளாக, பால்உணர்வைத் தூண்டக் கூடியவளாக காட்டும் ஆபாச இணையதளங்கள், டிவி சீரியல்கள், சினிமாக்கள், விளம்பரங்களை தடை செய்ய ‘எனக்கு அதிகாரம் இல்லை’ என்று கையை விரிக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளில் பலரும் பாலியல் சீண்டலில் ஈடுபடும் அயோக்கிய சிகாமணிகளாகவே இருக்கிறார்கள்.

குற்றங்களைத் தடுக்க வேண்டிய காவல்துறையின் இலட்சணமோ ஜ.ஜி.யே, பெண் எஸ்.பி.யை பாலியல் சீண்டலுக்கு ஆளாக்குவது, போராடும் பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்வது என்று சந்தி சிரிக்கிறது. அதுமட்டுமல்லாமல் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்க சென்றால் காவல் நிலையத்தில் கவனிக்கப்படும் முறையே  தனியானதுதான். அதிலும் ஏழைக் குடும்பமாக, தாழ்த்தப்பட்ட குடும்பமாக இருந்துவிட்டால் போதும், அவர்களின் கதி அதோ கதிதான்.

படிக்க:
பெண்கள் மீதான வன்கொடுமைகள்: அரசமைப்பே குற்றவாளி!
பெண் குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் : கடுமையான சட்டங்கள் மூலம் தடுத்து விட முடியுமா ?

பெண்களுக்கு எதிராக குற்றம் இழைக்கும் குற்றவாளிகள் பெரும்பாலும் போதைக்கு அடிமையாகி இருப்பதும், மது அருந்தி இருப்பதும், பல வழக்குகளில் நாம் காணும் ஒரு நிலை. வீதிதோறும் இருக்கக்கூடிய மதுபானக் கடைகள் ஆண்களின் உயிரை மட்டும் கொல்வதில்லை, பெண்களுக்கு எதிராகவும் செயல்படுகின்றது. சாராயம், குட்கா விற்று மாணவர்கள் – இளைஞர்களிடம் போதை பழக்கத்தை வேகமாகப் புகுத்தி சீரழித்து வருகிறது ‘அம்மா’ வழியில் ஆட்சி நடத்தும் எடிப்பாடி அரசு. பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகும் பெண்களுக்கு முதல் எதிரி அரசுதான் என்று தெரிந்தும் அதனிடமே மனு கொடுத்தோ கெஞ்சியோ என்ன பயன்.

குற்றங்களை குறைக்க சொல்லப்படும் வழிமுறைகள்

‘குட் டச்’ – ‘பேட் டச்’, சி.சி.டி.வி. கேமிரா பொருத்துவது, தண்டனைகளை கடுமையாக்குவது, உடனடியாகத் தண்டிப்பது போன்ற வழிமுறைகள் சொல்லப்படுகிறது. பாலியல் வன்முறை குற்றங்களுக்கான அவசரச் சட்டம் வந்த பிறகும் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள் குறைந்து விட்டதா? அல்லது ஆணாதிக்க வெறியர்கள் இந்த அவசரச் சட்டத்தைக் கண்டு அஞ்சி நடுங்கிவிட்டார்களா? அல்லது சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகளும் போலீசும் குற்றங்களைத் தடுக்க முனைப்பாகச் செயல்படுகிறார்களா? எதுவும் கிடையாது. உலகமே கைகொட்டிச் சிரிக்கும் அளவுக்கு இந்தியா அவமானப்பட்டுள்ள போதிலும், முன்னைவிட அதிக அளவிலும் வக்கிரமாகவும் பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

எப்படித்  தடுப்பது?

உண்மையான விடுதலைக் காற்றை ஒரு பெண் சுவாசிக்க வேண்டுமெனில், பிற்போக்கு, ஆபாசக் குப்பைகளை ஒழித்து, பெண்ணை சக மனுசியாக மதிக்க சமத்துவமான பண்பாட்டை உருவாக்காமல்,  எந்த வீட்டிலும் தாய், மகள், மனைவி, சகோதரி என யாரையும் பாதுகாக்க முடியாது.  ‘‘போராடுவோமா… வேண்டாமா?’’ என நாம் யோசிக்கும் ஒவ்வொரு நிமிடமும் 45 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி படுகொலை செய்யப்படுகிறார்கள். போராடாமல் நம் குழந்தைகளை காக்க முடியாது என்கின்ற உண்மை நம் முகத்தில் அறையும் போது இனியும் தாமதம் ஏன்? பல இலட்சம் பேர் கூடிய மெரினா போராட்டத்திலும், பல மாதம்  வருடம் என்று நீண்ட எல்லாப் போராட்டங்களிலும் பெண்கள் பாதுகாப்பாகவே இருந்தார்கள்.

படிக்க:
பெண் விடுதலைக்கு தீர்வு என்ன ?
பெண்கள் மீதான வன்முறை: தீர்வு அளிக்கும் திசை எது?

‘‘ஆம், போராட்டங்களே பெண்களை, சமூகத்தைப் பாதுகாக்கும். வாருங்கள் அனைவரும் போராட்டக்களத்தில் கரம் கோர்ப்போம்!’’

  • ஆணாதிக்கத்தின் வேரறுக்கப் போராடுவோம்!
  • பெண்களை முற்றிலும் நுகர்வுப் பொருளாக மாற்றிச் சீரழிக்கும் மறுகாலனியாக்கச் சூழலை துடைத்தெறிவோம்!
  • நம் மாணவர்களையும் இளைஞர்களையும் கலாச்சார சீரழிவிலிருந்து மீட்டெடுப்போம்!
  • ஆண் – பெண் சமத்துவத்தை நிலைநாட்ட சூளுரைப்போம்!

பெண்கள் விடுதலை முன்னணி, சென்னை.

தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யக்கூடாது என்றார் காந்தி | அண்ணல் அம்பேத்கர்

காந்தியம் தீண்டாத மக்களுக்குக் கேடு (பகுதி – 2)

யந்திர சாதனங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதனால்தான் காந்தியார் சர்க்காவை (இராட்டை) போற்றிப் புகழ்கிறார்; கைநெசவையும் கைநூற்பையும் வலியுறுத்துவதும் இந்த எதிர்ப்புக்குள்ள சான்றே ஆகும். அவர் இயந்திர சாதனங்களை இவ்வாறு எதிர்ப்பதும், சர்க்காவை நேசிப்பதும் தற்செயலானவை அல்ல, இது தத்துவம் தொடர்பானதாகும். காந்தியார் 1925 ஜனவரி 8ஆம் நாள் நடைபெற்ற கத்தியவார் அரசியல் மாநாட்டில் தலைமை உரை நிகழ்த்துகையில், இந்தத் தத்துவத்தை விளக்கியுரைப்பதற்கான தனி வாய்ப்பாக அதைப் பயன்படுத்திக் கொண்டார். காந்தியார் கூறியது இதுதான்:

“எல்லையின்றிப் பல்கிப் பெருகிச் செல்லும் உயிரற்ற இயந்திரங்களை வழிபட்டு நாடுகளுக்குச் சலித்துப் போய்விட்டது. ஈடிணையற்ற உயிர் வாழும் இயந்திரங்களை அதாவது நமது உடலை நாமே அழித்துக் கொண்டிருக்கிறோம்; அவற்றைத் துருப்பிடிக்க விடுவதன் மூலமும் அவற்றுக்குப் பதிலாக உயிரற்ற இயந்திர சாதனங்களை நுழைக்க முயலுவதன் மூலமும் இவ்வாறு அழித்துக் கொண்டிருக்கிறோம்; உடல் முழுமையாக வேலை வாங்கப்படவும் பயன்படுத்தப்படவும் வேண்டும் என்பது கடவுளின் விதி. நாம் அதனைக் கண்டு கொள்ளாமலிருக்கத் துணிகிறோம். ராட்டையானது சரீர யக்ஞத்தின் – உடலுழைப்பின் – புனிதச் சின்னமாகும். இந்தத் தியாகத்தைச் செய்யாமல் உணவு உண்பவர் உணவைத் திருடுபவர் ஆவார். இந்தத் தியாகத்தைக் கைவிட்டதன் மூலம் நாம் நாட்டிற்குத் துரோகிகளாகி விட்டோம்; செல்வக் கடவுளின் முகத்தில் கதவை அறைத்து மூடி விட்டோம்.”

இந்து ஸ்வராஜ் (இந்திய தன்னாட்சி) என்ற காந்தியாரின் சிறு நூலை வாசித்துள்ள எவரும் காந்தியார் நவீன நாகரிகத்தை எதிர்ப்பதை அறிந்துக் கொள்ளலாம். இந்த நூல் 1908ல் முதல் முறையாக வெளியிடப்பெற்றது. ஆனால் அதன் பிறகும் அவரது கருத்தியலில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை . 1921இல் காந்தியார் எழுதியதாவது:(3)

“இந்தச் சிறு நூல் நவீன நாகரிகத்தை கடுமையாகக் கண்டிப்பதாகும். இது 1908இல் எழுதப்பட்டது. இன்று முன்னெப்போதைக் காட்டிலும் எனது பற்றுறுதி ஆழமடைந்துள்ளது. இந்தியா நவீன நாகரிகத்தை உதறும் என்றால் அதனால் அது ஆதாயமே அடைய முடியும் என்று நான் கருதுகிறேன். காந்தியாரின் கருத்துப்படி: (4)

“மேற்கத்திய நாகரிகம் சைத்தான் படைத்ததாகும்.

காந்தியாரின் இரண்டாவது இலட்சியம் வர்க்கப் போரை ஒழித்துக் கட்டுவதாகும்; வேலைக்கு அமர்த்துபவர்களும் வேலை செய்பவர்களுக்கும் இடையிலான, நிலவுடமையாளர்களுக்கும் குத்தகையாளர்களுக்கும் இடையிலான உறவு முறையில் காணப்படும் வர்க்கப் போராட்டத்தையும் கூட ஒழித்துக் கட்டுவதாகும். வேலைக்கு அமர்த்துவர்களுக்கும் வேலை செய்பவர்களுக்கும் இடையிலான உறவு முறை குறித்து காந்தியாரின் கருத்துக்கள் 1921 ஜூன் 8 தேதிய நவஜீவன் ஏட்டில் வெளிவந்த ஒரு கட்டுரையில் அவரால் விவரிக்கப்பட்டன; இந்தக் கட்டுரையிலிருந்து பின்வரும் பகுதி எடுத்துத் தரப்படுகிறது:

காந்தியின் நவஜீவன் ஏடு.

“இந்தியாவிற்கு முன்னால் இரு பாதைகள் திறந்துள்ளன; வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்ற மேற்கத்தியக் கோட்பாட்டை நுழைக்கலாம்; அல்லது உண்மைதான் வெற்றி பெறும். உண்மைக்கு விபத்து எதுவும் நேரிடாது, வலுத்தவர்கள் – இளைத்தவர்கள் இரு சாராருக்கும் நீதி பெற உரிமை உண்டு என்ற கிழக்கத்திய கோட்பாட்டை தூக்கிப் பிடிக்கலாம். முதலில் இந்த இரண்டிலொன்றைத் தேர்தெடுக்க வேண்டியது தொழிலாளர் வர்க்கம்தான். தொழிலாளர்கள் வன்முறை வழியில் கூலியுயர்வு பெற வேண்டுமா? அது சாத்தியம் என்றாலும் கூட, அவர்களின் கோரிக்கைகள் எவ்ளவுதான் நியாயமானவை என்றாலும் வன்முறை போன்ற எதையும் அவர்கள் நாட முடியாது. உரிமைகளை அடைவதற்காக வன்முறையைப் பயன்படுத்துவது சுலபமான வழியாகத் தோன்றலாம். ஆனால் நீண்டக் காலப் பார்வையில் அது முட்களடர்ந்த பாதை என்று தெரிந்து விடுகிறது. வாளெடுத்து வாழ்கிறவர்கள் வாளினாலேயே மடிவார்கள். நீச்சல்காரரே நீரில் மூழ்கி இறப்பதுண்டு. ஐரோப்பாவைப் பாருங்கள், அங்கு யாருமே மகிழ்ச்சியுடன் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனென்றால் யாருக்குமே மன நிறைவு இல்லை. தொழிலாளி முதலாளியை நம்புவதில்லை; முதலாளிக்குத் தொழிலாளியிடம் நம்பிக்கையில்லை. இருவருமே ஒருவிதமான வேகமும் வலிமையும் பெற்றுள்ளார்கள். ஆனால் காளை மாடுகளுக்கும் கூட இந்தத் தன்மைகள் உண்டு. அவர்கள் கடைசி முடிவு வரை போராடுகிறார்கள். இயக்கம் அனைத்துமே முன்னேற்றமாகாது. ஐரோப்பிய மக்கள் முன்னேறி வருகிறார்கள் என்று நம்புவதற்கு நம்மிடம் காரணமேதுமில்லை. அவர்களிடம் செல்வம் இருப்பது அறவியல் அல்லது அகவியல் பண்புகள் ஏதும் இருப்பதற்கு சான்றாகாது.

படிக்க:
யார் இந்த காந்தி ? தந்தை பெரியார்
வரலாறு : பிர்லாவின் கரம்தான் காந்தியின் ஊடக அறம் !

“அப்படியானால் நாம் என்ன செய்வது? பம்பாயில் தொழிலாளர்கள் அருமையான நிலை எடுத்திருக்கிறார்கள். நான் எல்லா விவரங்களையும் அறியக் கூடிய நிலையில் இல்லை. ஆனால் என்னால் பார்க்க முடிந்த வரை, அவர்கள் இன்னும் சிறந்த வழியில் போராட முடியும். ஆலை அதிபர் முழுக்க முழுக்கத் தவறு செய்திருக்கலாம். பொதுவாகச் சொன்னால், மூலதனத்துக்கும் உழைப்புக்கும் இடையிலான போராட்டத்தில் முதலாளிகள் பல சந்தர்ப்பங்களில் தவறாக நிலை எடுக்கிறார்கள். ஆனால் உழைப்பானது தன் வலிமையை முழுமையாக உணரும் நிலை ஏற்படும் போது, மூலதனத்தைக் காட்டிலும் கொடுங்கோன்மையானதாக அதனால் மாற முடியும் என்பதை நானறிவேன். உழைப்பானது ஆலை அதிபர்களின் அளவுக்கு மதிநுட்பம் வாய்ந்ததாய் இருக்க வேண்டுமானால் உழைப்பு விதிக்கும் நிபந்தனைகளை ஏற்று ஆலை அதிபர்கள் இயங்க வேண்டியிருக்கும். ஆனால் ஒரு நாளும் உழைப்பு அந்த மதிநுட்பத்தை அடைய முடியாது என்பது தெளிவாய்த் தெரிகிறது. அப்படி அது அடையுமானால், உழைப்பு உழைப்பாக இல்லாமற் போய், அதுவே ஆண்டையாகி விடுகிறது. முதலாளிகள் பணம் தரும் வலிமையைக் கொண்டு மட்டும் போராடவில்லை. அவர்களிடம் மதி நுட்பமும் சாமர்த்தியமும் இருக்கவே செய்கின்றன.

தொழிலாளர்களின் போராட்டங்களை எப்போதும் தனது கட்டுக்குள் கொண்டுவரவே விழைந்தார் காந்தி. அகமதாபாத் டெக்ஸ்டைல் தொழிலாளர்களின் போராட்டத்தில் (1917-20) காந்தி.

“நம்முள் இருக்கும் கேள்வி இதுதான்: தொழிலாளர்கள் அவர்கள் இருக்கக் கூடிய நிலையில் குறிப்பிட்ட உணர்வு நிலையை வளர்த்துக் கொள்ளும் போது, அவர்களது பாதை எதுவாக இருக்க வேண்டும்? தொழிலாளர்கள் தங்களது எண்ணிக்கையையோ, மிருக வலிமையையோ, அதாவது வன்முறையையோ நம்புவார்களானால் அது தற்கொலையாகவே இருக்கும். இப்படிச் செய்வதன் மூலம் அவர்கள் நாட்டிலுள்ள தொழில்களுக்கு ஊறு செய்வார்கள். மறுபுறம், அவர்கள் தூய்மையான நீதியின் அடிப்படையில் நிலை எடுப்பார்களானால் அதை அடைவதற்காகத் தாங்களே துன்புறுவார்களானால், அவர்கள் எப்போதுமே வெற்றி பெறுவார்கள் என்பது மட்டுமல்ல, தங்கள் அதிபர்களைச் சீர்த்திருத்தம் செய்து, தொழில்களை வளர்ப்பார்கள்; அதிபர், ஆட்கள் ஆகிய இரு சாராரும் ஒரே குடும்பத்தின் உறுப்பினர்களாகத் திகழ்வார்கள்.”

பிறிதொரு சந்தர்ப்பத்தில் இதே பொருள் குறித்து காந்தியார் சொன்னார்: (5)

“முன்பும் இப்படித்தான் இருந்தது. இந்தியாவின் வரலாறு மூலதனத்துக்கும் உழைப்புக்கும் இடையே கசப்பற்ற உறவுகளின் வரலாறு அல்ல.”

தொழிலாளர்கள் தங்களது பொருளாதார நிலைமையை மேம்படுத்திக் கொள்வதற்கு வேலைநிறுத்தம் என்னும் கருவியைப் பயன்படுத்துவது குறித்து காந்தியாரின் கருத்துகள் முக்கியமாய்க் குறிப்பிடத்தக்கவை. காந்தியார் சொல்கிறார்: (6)

“ஆகவே வெற்றிகரமாகப் பெரிய பெரிய வேலைநிறுத்தங்களைக் கையாண்டவன் என்ற முறையில், வேலை நிறுத்தத் தலைவர்கள் அனைவரின் வழிகாட்டுதலுக்காகவும். இவ்வேட்டில் ஏற்கெனவே கூறப்பட்ட பின்வரும் கோட்பாடுகளை மீண்டும் எடுத்துரைக்கிறேன்:

1) உண்மையான மனக்குறை இல்லாமல் வேலைநிறுத்தம் கூடாது.

2) சம்பந்தப்பட்ட ஆட்கள் தங்கள் சேமிப்பைக் கொண்டே தங்களைக் காப்பாற்றிக் கொள்ள இயலாதென்றால் அல்லது சிக்கெடுத்தல், நூற்றல், நெசவு செய்தல் போன்ற ஏதாவது தற்காலிக வேலையில் ஈடுபடுவதன் மூலம் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியாதென்றால் வேலைநிறுத்தம் செய்யக் கூடாது. வேலைநிறுத்தம் செய்பவர்கள் ஒருபோதும் பொதுமக்களிடமிருந்து வரும் நன்கொடைகளையோ வேறு தர்மத்தையோ நம்பியிருக்கக் கூடாது.

3) வேலைநிறுத்தம் செய்கிறவர்கள் மாறவே மாறாத குறைந்தபட்சக் கோரிக்கை ஒன்றை நிர்ணயம் செய்ய வேண்டும்; வேலை நிறுத்தம் தொடங்குவதற்கு முன்னதாக அதனை அறிவித்து விட வேண்டும்.

தொழிலாளர்கள் தங்களது எண்ணிக்கையையோ, மிருக வலிமையையோ, அதாவது வன்முறையையோ நம்புவார்களானால் அது தற்கொலையாகவே இருக்கும். இப்படிச் செய்வதன் மூலம் அவர்கள் நாட்டிலுள்ள தொழில்களுக்கு ஊறு செய்வார்கள். (- காந்தி.)

“மனக்குறை நியாயமானதாக இருந்த போதிலும், வேலைநிறுத்தம் செய்கிறவர்கள் காலவரம்பின்றித் தாக்குப் பிடிக்க முடிந்தாலும், அவர்களின் இடத்துக்கு வேலை செய்ய வருவதற்கு வேறு தொழிலாளர்கள் இருப்பார்களானால் வேலைநிறுத்தம் தோற்று விடக் கூடும். ஆகவே புத்திசாலியான ஒருவர் தமது இடத்தை வேறொருவரைக் கொண்டு நிரப்பி விட முடியும் என்று கருதினால் கூலி உயர்வுக்காகவோ வேறு வசதிக்காகவோ வேலை நிறுத்தம் செய்ய மாட்டார்கள். ஆனால் பரோபகாரியான அல்லது தேகப்பற்றுடைய ஒருவர் தமது அண்டை வீட்டுக்காரர் படும் இன்னலுக்காக வருந்தி அதில் தம்மையும் இனைத்துக் கொள்ள விரும்பினால், வேண்டலை விட வழங்கல் கூடுதலாய் இருந்தாலும் வேலைநிறுத்தம் செய்வார். நான் விவரித்தது போன்ற குடியியல் வேலைநிறுத்தத்தில் மிரட்டலின் வடிவிலோ கலகம் செய்யத் தூண்டுவதன் வடிவிலோ வேறு வழியிலோ வன்முறைக்கு இடமே கிடையாது என்பதைக் கூறத் தேவையில்லை… என்னால் ஆலோசனைகளாகத் தெரிவிக்கப்பட்டுள்ள உரைகற்களை வைத்துப் பார்த்தால், வேலைநிறுத்தக்காரர்கள் தங்களுக்கு உதவியாகக் காங்கிரசிடமிருந்தோ வேறு எந்தப் பொது அமைப்பிடமிருந்தோ நிதி கேட்டு விண்ணப்பிக்கவோ நிதி பெறவோ அவர்களின் நண்பர்கள் அவர்களுக்கு ஒருபோதும் ஆலோசனை கூறியிருக்க முடியாது என்பது தெளிவாய்த் தெரிகிறது. வேலைநிறுத்தக்காரர்கள்பால் காட்டப்படும் பரிவின் மதிப்பு அவர்கள் நிதியுதவி பெறுகிற அல்லது ஏற்றுக் கொள்கிற அளவுக்குக் குறைந்து போகிறது. பரிவு காட்டிச் செய்யப்படும் வேலைநிறுத்தத்தின் சிறப்பு பரிவு காட்டுகிறவர்கள் அடையும் சங்கடத்திலும் இழப்பிலும்தான் அடங்கியுள்ளது.

படிக்க:
‘மகாத்மா’ காந்தி எனும் சோளக்காட்டு பொம்மை ! – மின்னூல்
அகிம்சையின் துரோகம் வன்முறையின் தியாகம்

நிலவுடைமையாளர்களுக்கும் குத்தகையாளர்களுக்குமான உறவுமுறை பற்றிய காந்தியாரின் கருத்துக்கள் – நிலவுடைமையாளர்களை எதிர்த்துக் கிளர்ந்தெழுந்த ஐக்கிய மாகாணக் குத்தகையாளர்களுக்கான கட்டளைகளின் வடிவில்-1921 மே 18 நாளிட்ட யங் இந்தியாவில் அவரால் எடுத்துரைக்கப்பட்டன.(7) காந்தியார் சொன்னார்.

காந்தியார் சொத்துடைய வர்க்கத்தைக் காயப்படுத்த விரும்பவில்லை. அவர்களுக்கெதிரான ஒரு பிரசாரத்தையும் கூட அவர் எதிர்க்கிறார். பொருளாதாரச் சமத்துவத்தின் பால் அவருக்கு எவ்வித ஆர்வமும் இல்லை, சொத்துடைய வர்க்கத்தைக் குறிப்பிடுகையில், காந்தியார் பொன் முட்டையிடும் கோழியை நான் அழிக்க விரும்பவில்லை என்று சமீபகாலத்தில்தான் சொன்னார்.

“ஐக்கிய மாகாண அரசு ஒழுங்கின் எல்லைகளைக் கடந்து மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது என்றும் அதேபோது, கிசான்களும் தங்களுக்குப் புதிதாய்க் கிடைத்த வலிமையைப் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிவில்லை என்பதில் ஐயமில்லை. அநேக ஜமீன்தார்களில், அவர்கள் எல்லை கடந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. சட்டத்தை கையிலெடுத்திருப்பதாகவும், தங்கள் விருப்பம் போல் செய்யாதவர்கள் மீது பொறுமையிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் சமூகப் புறக்கணிப்பைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள், அதனை ஒரு வன்முறைக் கருவியாக மாற்றி வருகிறார்கள். அவர்கள் சில இடங்களில் தங்கள் ஜமீன்தார்களுக்கு நீர் வழங்கலையும் நாவிதர் பணியையும், இதர ஊதியப் பணிகளையும் நிறுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது; அவர்களுக்குச் செலுத்த வேண்டிய குத்தகையைக் கூட நிறுத்தி வைத்திருப்பதாக தெரிகிறது. கிசான் இயக்கமானது ஒத்துழையாமையிலிருந்து விலக்கம் பெற்றுள்ளது; ஆனால் அது ஒத்துழையாமை இயக்கத்துக்கு பிறழ்ந்து இருப்பது, அதைச் சாராமல் இருப்பது. உரிய நேரம் வரும் போது அரசுக்கு வரி செலுத்த வேண்டாம் என்று கூற நாம் தயங்க மாட்டோம் என்றும் அதேபோது, ஜமீன்தார்களுக்குக் குத்தகை கிடைக்காமல் செய்ய முயல்வது பற்றி ஒத்துழையாமையின் எந்தக் கட்டத்திலும் எண்ணிப் பார்க்கவில்லை. கிசான் இயக்கமானது கிசான்களின் தகு நிலையை மேம்படுத்துவது, ஜமீன்தார்களுக்கும் அவர்களுக்குமிடையிலான உறவுகளை சீர்படுத்துவது என்ற அளவோடு நிறுத்தப்பட வேண்டும். ஜமீன்தாரர்களுடனான உடன்படிக்கை எழுதப்பட்டதென்றாலும் சரி, வழக்காற்றிலிருந்து அறியப்படுவதென்றாலும் சரி, அந்த உடன்படிக்கையின் வரை முறைகளை நேர்மையாகக் கடைப்பிடிக்குமாறு கிசான்களுக்கு ஆலோசனை கூறப்பட வேண்டும். ஒரு வழக்காறு அல்லது எழுத்து மூலமான ஒப்பந்தம் மோசமானதாய் இருக்குமிடத்து, வன்முறையைக் கொண்டோ ஜமீன்தார்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்காமலோ இவர்கள் அதனை அகற்ற முயலக் கூடாது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஜமீன்தார்களிடம் நட்புடன் விவாதிக்க வேண்டும் தீர்வு காண்பதற்கு முயற்சி செய்யப்பட வேண்டும்.”

காந்தியார் சொத்துடைய வர்க்கத்தைக் காயப்படுத்த விரும்பவில்லை. அவர்களுக்கெதிரான ஒரு பிரசாரத்தையும் கூட அவர் எதிர்க்கிறார். பொருளாதாரச் சமத்துவத்தின் பால் அவருக்கு எவ்வித ஆர்வமும் இல்லை, சொத்துடைய வர்க்கத்தைக் குறிப்பிடுகையில், காந்தியார் பொன் முட்டையிடும் கோழியை நான் அழிக்க விரும்பவில்லை என்று சமீபகாலத்தில்தான் சொன்னார். உடைமையாளர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான பணக்காரர்களுக்கும் ஏழைக்கும் இடையிலான, நிலவுடைமையாளர்களுக்கும் குத்தகையாளர்களுக்கும் இடையிலான, வேலைக்கு அமர்த்துபவர்களுக்கும் வேலை செய்பவர்களுக்கும் இடையிலான பொருளாதாரப் பிணக்கிற்கு அவர் சொல்லும் தீர்வு மிகவும் எளிமையானது. உடைமையாளர்கள் தமது சொத்தினைப் பறி கொடுக்கத் தேவையில்லை. அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம், ஏழைகளுக்கான அறங்காவலர்களாக தங்களை அறிவித்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான். அறக்கட்டளையானது ஒரு தார்மிகக் கட்டுப்பாட்டை மட்டும் நிறைவேற்றுகிற தன்னார்வ அமைப்பாக இருக்க வேண்டும் என்பது உண்மைதான்.

தொடரும்
காங்கிரசும் காந்தியும் தீண்டாத மக்களுக்கு செய்ததென்ன
– டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்

நூலில், அத்தியாயம் – 11 பக்கம்: 327 முதல் 332 வரை.

அடிக்குறிப்புகள்:
(3) யங் இந்தியா 1921 ஜனவரி 26.
(4) தர்ம மாந்தன், பக்கம் 65.
(5) யங் இண்டியா, 1922 பிப்ரவரி 23.
(6) யங் இண்டியா, 1921 ஆகஸ்ட் 11. ( மூலத்தில் அழுத்தம் தரப்படவில்லை )
(7) கிசான் என்பது குத்தகையாளரையும் ஜமீன்தார் என்பது நிலவுடமையாளரையும் குறிக்கும். ( மூலத்தில் அழுத்தம் தரப்படவில்லை )

முந்தைய பகுதி:
பகுதி – 1: காந்தியம் என்பது என்ன ? பாபா சாகேப் அம்பேத்கர்

புத்தகக் குறிப்பு:

  • காங்கிரசும் காந்தியும் தீண்டாத மக்களுக்கு செய்ததென்ன
    – டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்
  • மகராஷ்டிர அரசின் கல்வித்துறை 1991-ல் வெளியிட்ட ஆங்கில பதிப்பின் தமிழாக்கம்
  • பக்கம்: 461 + 30
  • முதல் பதிப்பு: 24, செப்டம்பர் 1998
  • வெளியீடு,
    தலித் சாகித்ய அகாதமி,
    சென்னை – 600 073.

விளைந்த நெல்லை கொள்முதல் செய்ய எடப்பாடி அரசிடம் சாக்குப் பைகள் இல்லையாம் !

ஞ்சையில் அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் சாக்கு பைகள் இல்லை என்றுகூறி விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யாமல் அரசு காலம் தாழ்த்தி வருகிறது.

இதனால் வண்டி வாடகை கொடுத்து விவசாயிகள் எடுத்து வந்த நெல்லை திருப்பி எடுத்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் மீண்டும் வண்டிக்கூலி கொடுக்கமுடியாத நிலையில் அங்கேயே திறந்த வெளியில் கொட்டி காத்திருந்தனர் விவசாயிகள்.

குவித்து வைத்துள்ள நெல்லை சாக்கு மூட்டைகளை போர்த்தி விவசாயிகள் பாதுகாத்து வருகின்றனர். இரவு, பகலாக நெல்லை பாதுகாப்பதால் நாள் ஒன்றுக்கு ரூ.300 செலவாகிறது என்கிறார்கள் விவசாயிகள்.

கொள்முதல் நிலையம் முன்பு குவிக்கப்பட்டிருக்கும் நெல்லை காண்பிக்கும் விவசாயிகள். (படம் : நன்றி – தினகரன்)

அண்மையில் சில நாட்களாக பெய்துவரும் மழையின் காரணமாக நெல்மணிகள் துளிர் விட துவங்கியிருக்கிறது. தனியார் நெல் கொள்முதல் நிலையங்களில் அடிமாட்டு விலைக்கு கேட்பதால் அங்கும் கொண்டு செல்ல முடியாத கையறு நிலையில் நமது விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து தஞ்சாவூர் அருகே ஆழிவாய்க்கால் கிராமத்தைச் சேர்ந்த கார்த்தி கூறியதாவது:

“எங்கள் பகுதியில் பல நூறு ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குவித்து வைத்துள்ளோம். கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை. அருகே உள்ள கொள்முதல் நிலையங்களில் சாக்குகள் இல்லை என்கின்றனர். மழை பெய்வதால் நெல்மணிகள் முளைவிடத் தொடங்கியுள்ளன. இதனால் விளைவித்த நெல்லை விற்பனை செய்யமுடியாமல் தவித்து வருகிறோம்” என்றார்.

இது குறித்து விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க துணை தலைவர் சுகுமாரன் கூறுகையில் :

“நேரடி கொள்முதல் நிலையங்களில் சாக்கு இல்லை என்று கூறி 15 நாட்களாக விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை கொள்முதல் செய்ய மறுக்கிறார்கள். இதனால் ஒவ்வொரு நிலையத்தின் முன்பும் விவசாயிகள் கொண்டு வந்த நெல் அனைத்தும் மழையில் நனைகின்றன. ஒவ்வொரு நிலையத்திலும் குறைந்தது 20 மூட்டைகள் அளவுக்கு நெல் முளைவிட்டு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே ஈரப்பத விதிமுறையை தளர்த்தி அனைத்து நெல்லையும் அரசு கொள்முதல் செய்ய வேண்டும்”. என்கிறார் .

இதே போல தஞ்சை அருகே வயலூர் நரசநாயக்கபுரத்தில் விவசாயிகள் அறுவடை செய்த குறுவை நெல்லை வாங்குவதற்கு கடந்த ஒரு மாதமாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கவில்லை. இதனால் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை நேரடி கொள்முதல் நிலையம் முன்பு விவசாயிகள் கொட்டி வைத்துள்ளனர். கஷ்டப்பட்டு அறுவடை செய்த நெல்லை வாங்குவதற்கு கூட அரசு தயாராக இல்லை.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது :

வயலூர் நரசநாயக்கபுரத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இந்த நெல் கொள்முதல் நிலையத்துக்கு வயலூர், ராமபுரம், குருவாடி, தோட்டக்காடு, கரம்பை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 350 ஏக்கர் உள்ளது. இங்கு அறுவடை செய்யப்படும் குறுவை, சம்பா நெல் கொள்முதல் செய்யப்படும்.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் அறுவடை செய்த 7,000 நெல் மூட்டைகளை நேரடி நெல் கொள்முதல் நிலையம் முன்பும், சாலைகளிலும் குவித்து வைத்துள்ளோம். இந்நிலையில் தஞ்சை பகுதியில் கடந்த சில நாட்களாக லேசான மழை பெய்தது. நேற்று காலை முதல் பலத்த மழை பெய்தது. இந்த மழை நீடித்தால் அறுவடை செய்துள்ள நெல்லை எப்படி விற்பனை செய்ய முடியும்.

17 சதவீத ஈரப்பத்துக்குள் இருந்தால் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படும். கடந்த 3 நாட்ளாக மழை பெய்வதால் நெல் முளைக்கும் அபாயம் உள்ளது. அறுவடை செய்த நெல்லை தனியாரிடம் விற்பனை செய்யலாம் என்றால் அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்ய வேண்டியுள்ளது. எனவே காலதாமதமின்றி நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தஞ்சை – கும்பகோணம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

இதே போல வாண்டையார் இருப்பு, சின்னப்புலிகுடிகாடு பகுதி நெல் கொள்முதல் நிலையங்களில் வைத்திருந்த நெல்லும் முளைத்துவிட்டதால் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

கோப்புப் படம்

இதே போல தஞ்சாவூர் மாவட்டம் திருமண்டங்குடி ஆரூரான் சர்க்கரை ஆலை, திருவிடைமருதூர் வட்டம் கோட்டூர் ஸ்ரீஅம்பிகா சர்க்கரை ஆலை ஆகியவற்றில் பணியாற்றும் 500-க்கும் கூடுதலான பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் 9 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.

ஊதியத்தை நிலுவைத் தொகையுடன் வழங்கும்படி பலமுறை வேண்டுகோள் விடுத்தும் பயனில்லாத சூழலில், இரு சர்க்கரை ஆலைகளின் ஊழியர்களும் ஆலை வளாகங்களில் கடந்த 03-ம் தேதி முதல் உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.

மேலும் இவ்விரு ஆலைகளும் கடந்த 3 ஆண்டுகளாக கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய சுமார் ரூ.100 கோடி நிலுவைத் தொகையை இன்னும் வழங்கவில்லை. இந்த ஆலைகள் மட்டுமின்றி, தமிழகத்தில் மொத்தமுள்ள 24 தனியார் சர்க்கரை ஆலைகளும் கரும்பு விவசாயிகளுக்கு ரூ.1347 கோடி நிலுவை வைத்துள்ளன. “ ஆலை அதிபர்களிடம் 10 முறைக்கு மேல் பேச்சு நடத்திவிட்டோம். ஆனால், சர்க்கரை ஆலைகள் நஷ்டத்தில் இயங்குவதால் நிலுவைத்தொகை வழங்க முடியாது என்று அவர்கள் கூறி விட்டனர்” என்று அமைச்சர் துரைக்கண்ணு ஆட்சியாளர்களின் கையாலாகாதத்தனத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார்.

காவிரியில் தண்ணீருக்கு போராடி கிடைக்கப்பெற்ற கொஞ்ச நஞ்ச தண்ணீரில் கடைமடை கால்வாய்களுக்கு தண்ணீரும் வரவில்லை. இதை மீறி விளைவிக்கும் நெல்லையும் கொள்முதல் செய்யாமல் வீணாக்குகிறது அரசு. தன் கண்முன்னே விளைவித்த நெல்மணிகள் வீணாவதை தடுக்க இயலாமல் என்ன செய்வதென்று விழி பிதுங்கி நிற்கிறார்கள் விவசாயிகள். விளைவித்த கரும்புக்கு உரிய நிலுவையை ஆலைகள் தராமல் இழுத்தடிக்கிறார்கள்.

சாக்கு இல்லை என்பதெல்லாம் ஒரு காரணமா? ஒரு பொறுப்புள்ள அரசு இப்படி சொல்லமுடியுமா? இது போன்ற காரணத்தை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் அரசு சொல்லுமா? சொன்னால் தான் 24 மணிநேர கார்ப்பரேட் ஊடகங்கள் சும்மா விட்டுவிடுவார்களா? அது நாடு முழுவதும் விவாதிக்கப்படும் பொருளாகியிருக்கும். ஆனால் விவசாயிகளிடன் அரசு துணிந்து சொல்ல காரணம் :

  1. கொள்கை அளவில் விவசாயிகளிடம் நேரடி கொள்முதல் செய்வதையும் அதை ரேசன் கடைகளில் விநியோகிப்பதையும் எதிர்க்கின்றன அரசுகள். உலக வங்கியின் திட்டப்படி இத்திட்டங்களுக்கு மூடுவிழா நடத்த திட்டமிட்டே அரசுகள் செயல்படுகின்றன.
  2. விவசாயிகள் தாமாகவே வெளியேறி டெல்டாவை ஹைட்ரோ கார்பன் மண்டலமாக்க வேண்டும் என்பது தான் இவர்கள் விருப்பம். எவ்வளவு தடைகளை கொடுத்தாலும் விவசாயிகள் மனம் தளராமல் விவாசாயத்தை தொடருவதை அரசுகள் விரும்பவில்லை. தொடர்ந்து தொல்லைகள் அளித்து வருகிறார்கள். டெல்டாவில் வேதாந்தா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு சமீபத்தில் அனுமதி அளித்திருக்கிறது மத்திய பா.ஜ.க அரசு.
  3. நாடு முழுவதும் விவாசயிகளின் நிலை இதுதான் என்றாலும் தமிழகத்தில் பா.ஜ.க-எடப்படி கும்பல் சீரழிந்த நிலையை அடைந்திருக்கிறது. விவசாயிகளை எவ்வளவு கிள்ளுகீரையாக நினைத்தால் சாக்கு இல்லை என்பதை காரணமாக சொல்லும் எடப்படி கும்பல்.
    அடுத்த தேர்தலுக்கு மக்களிடம் செல்ல வேண்டும் என்ற குறைந்தபட்ச எண்ணம் கூட இக்கும்பலுக்கு கிடையாது. இது தான் தங்கள் கடைசி ஆட்சி என்பதால் முடிந்த அளவு கொள்ளை அடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. சட்டவிரோத ஆட்சிக்கு முட்டுகொடுத்து வருகிறன நீதிமன்றமும், மத்திய பா.ஜ.க அரசும்.

இது தமிழக நிலை என்றால் டெல்லியில் போராடிய விவசாயிகளை அடித்து மண்டையை உடைத்து அனுப்புகிறது எடப்பாடியின் ஓனரான மோடி அரசு.

பங்கு சந்தையில் சிறு இறக்கம் ஏற்பட்டாலே ஓடி சென்று விளக்கம் சொல்கிறது அரசு. முதலீட்டாளர்களின் நம்பிக்கையை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கிறது அரசு. சமீபத்தில் நிர்வாக திறமை இல்லாமல் வீதிக்குவரவிருந்த ஐ.எல் & எஃ.எஸ் என்கிற நிறுவனத்தை கைதூக்கிவிடுவது என்கிற பெயரில் அதில் தலையிட்டு எல்.ஐ.சி பணத்தை அந்நிறுவனத்திற்குள் புகுத்த முயற்சி செய்துவருகிறது மத்திய அரசு. ஆனால் விவாசாயிகளுக்கோ சாக்கு இல்லை ஊசி இல்லை என உப்புசப்பில்லாத காரணத்தை கூறி அவர்களை துன்புறுத்துகிறது அரசு. போராடினால் மண்டையை உடைக்கிறது அரசு.

நமக்கு வேறு வழியில்லை, வெற்றி கிட்டும் வரை புது புது வழிகளில் போராடுவதை தவிர.

செய்தி ஆதாரங்கள் :

தங்கத்தில் உருளும் இந்திய மகாராஜாக்களின் திருமணங்கள் ! ஆவணப்படம்

ஆவென் லூத்தரா ( நடுவில் கருப்பு சட்டை அணிந்திருப்பவர் )

ந்த ஆவணப் படத்தின் துவக்கத்தில் பணக்காரத் திருமணம் ஒன்று காட்டப்படுகின்றது. ஆவென் லூத்தரா எனும் இளம் இந்தியப் பணக்காரனின் உறவினருடைய திருமணம். தனது இருபதுகளின் துவக்கத்தில் இருக்கும் ஆவென், மாதம் ஒரு மில்லியன் டாலருக்கும் ( ஏழு கோடி ரூபாய்) அதிகமாக சம்பாதிக்கிறார்.

மாதத்தின் பெரும் பகுதியை வெளிநாடுகளில் கழிக்கும் ஆவென், இந்த திருமணத்திற்கு விலை உயர்ந்த பரிசுப் பொருட்களுடன் வந்திருக்கிறார்.

“எந்தக் காரணத்திற்காகவும் இந்தத் திருமணத்தை தவற விட்டிருக்க மாட்டேன். எத்தனை வளர்ந்தாலும் நீங்கள் ஆரம்பித்த இடத்தை மறக்கக் கூடாது என்பார்கள் அல்லவா?” என்கிறார், ஆவென்.

ஆவென் லூத்தரா ( நடுவில் கருப்பு சட்டை அணிந்திருப்பவர் )

ஆவணப் படத்திற்காக மூன்று பணக்காரர்களைத் தெரிவு செய்துள்ளார் அதன் இயக்குனர். ஆவென் பணக்காரக் குடும்பத்தில் பிறந்து சிறு வயதிலேயே சொந்தமாக தொழில் துவங்கியவர்.

அடுத்து மகாராஷ்ட்ராவில் தலித் குடும்பம் ஒன்றில் பிறந்து, 12 வயதில் திருமணமாகி, 16 வயதில் கணவரைப் பிரிந்து, ஆயத்த ஆடைத் தொழிற்சாலையில் கூலி வேலை செய்து, பின் ரியல் எஸ்டேட்டில் கால்பதித்து முன்னேறிய கல்பனா சூரஜ்.

மூன்றாவதாக, ரேமண்ட்ஸ் கௌதம் சிங்கானியா. இம்மூவருக்குமான பொது இழை தங்கள் ‘பணக்காரத்தனத்தை’ பறைசாற்றிக் கொள்வது. இதை இம்மூவரும் வெவ்வேறு வகைகளில் வெளிப்படுத்துகின்றனர்.

படிக்க :
கேரளா : வெள்ளத்தால் தள்ளிப் போன திருமணம் !
வரதட்சிணையால் நின்றுபோன திருமணம்! அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட்!!

ஆவென் லூத்தரா ஒரு இணையத் தொழில்முனைவோர் என தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார். தனது 12வது வயதிலேயே செல்போன் செயலி ஒன்றை உருவாக்கியவர் என இயக்குனர் நமக்கு அறிமுகம் செய்கிறார். தற்போது மேட்டு ‘குடிமகன்கள்’ அல்லது மேட்டுக்குடியினரைப் போல் பீற்றிக் கொள்ள விரும்பும் உயர் நடுத்தரவர்க்கத்தினருக்காக ‘பாட்டில்பாப்’ என்கிற செயலி ஒன்றை உருவாக்கியிருக்கிறார்.

ஐந்து நட்சத்திர மதுக்கூடங்களில் எல்லோரும் பார்க்க வாகான இடத்தில் இருக்கும் மேசையை முன்பதிவு செய்ய உதவும் செயலி. இதை சந்தைப்படுத்த இங்கிலாந்து செல்லும் ஆவென், அடுத்த விமானத்தில் பெர்லின் செல்கிறார்.

பெர்லினில் இன்ஸ்டாகிராம் மூலமாக அறிமுகமான சீனா, ரசியா, ஜெர்மன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பணக்கார குடும்பங்களின் குலக் கொழுந்துகளோடு மது விருந்து. ”எல்லோரும் கடினமாக உழைத்து கவனமாக கொண்டாட வேண்டும் என்கிறார்கள். நான் அறிவுப்பூர்வமாக உழைத்து கடினமாக கொண்டாட வேண்டும் என்கிறேன். கடின உழைப்பால் எதையும் சாதிக்க முடியாது; அவர்கள் முட்டாள்கள். முட்டாள்களால் பணம் சம்பாதிக்கவும் முடியாது”. மது ஆறாக ஓடும் அந்த விருந்தின் நோக்கம் என்ன? தன்னைப் இன்ஸ்டாகிராமில் பின்தொடரும் 2 லட்சம் பேருக்கு தன்னுடைய பணத்தின் வலிமையைக் காட்டுவதற்கு என்கிறார் ஆவென்.

தங்கமுலாம் பூசப்பட்ட ஜாகுவார் கார், தங்க இழைகளால் நிறுவன இலட்சிணை என ஆவெனைச் சுற்றிலும் செல்வம் ஆபாசமாய்ச் சிரிக்கிறது. மலைப்பாம்பின் தோலால் தயாரிக்கப்பட்ட காலணியைக் காட்டி, இது இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒன்றுதான் ஆனால் அதையெல்லாம் யார் பார்க்கப் போகிறார்கள் என நமட்டுச் சிரிப்பு சிரிக்கிறார். சுவரெழுத்து எழுதியதற்கும் போஸ்டர் ஒட்டியதற்கும் ‘தீவிரவாதிகள்’ என தீர்ப்பெழுதப்பட்டு கைது செய்யப்படும் தோழர்களின் நினைவு வந்தது.

படிக்க:
தீம் திருமணங்கள் : அழகின் வக்கிரம் !

கல்பனா சுராஜ் தனது பூர்வீக கிராமத்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறார். பஞ்சைப் பராரிகள் நிறைந்த கிராமத்தின் தலித்துகள் குடியிறுப்பு. தனது இன்னோவா காரில் இருந்து பகட்டான உடையில் இறங்கி அந்தத் தெருக்களில் நடக்கும் கல்பனா, ஆதிக்க சாதித் தெருவையும் தங்கள் தெருவையும் பிரிக்கும் சாக்கடையைக் காட்டி விளக்குகிறார். பின் தான் பிறந்த வீட்டில் இருந்த விறகடுப்பை நமக்கு அறிமுகம் செய்கிறார். அதன் பின் ஒரு கண் பரிசோதனை முகாம். அந்த நாளின் பயணத் திட்டங்கள் முடிவுற்ற நிலையில் மும்பைக்குத் திரும்புகிறார்.

கல்பனா சுராஜ்

மும்பையில் தான் ரியல் எஸ்டேட் துறையில் வளர்ந்தது குறித்து கேமராவிற்கு விளக்கமாக சொல்கிறார். அவரது ஞாயிற்றுக் கிழமைகளை சமூக கடமைகளுக்காக ஒதுக்கியுள்ளதாக பின்னணிக் குரல் விளக்குகின்றது. அந்த ஞாயிற்றுக் கிழமை தனது பூர்வீக கிராமத்தில் இருந்து தங்களது இரண்டு மகள்களின் திருமணத்திற்கு உதவி கேட்டு வந்த பெற்றோரை கேமராவின் முன் சந்திக்கிறார்.

அவர்களிடம் 50,000 ரூபாய் உதவித் தொகை வழங்குகிறார். அந்த தந்தையின் கண்களில் கண்ணீர் வழிகின்றது. துரதிருஷ்டவசமாக அவர் கேமராவுக்கு முதுகைக் காட்டி நிற்கவே, “இதோ பாருங்கள், இவர் அழுகிறார்” என்று அவரது தோளைப் பிடித்து கேமராவை நோக்கித் திருப்புகிறார்.

பணக்காரப் பரம்பரையில் பிறந்தவர் கௌதம் சிங்கானியா. இன்னொரு விஜய் மல்லையா. தனது ஓய்வு நேரங்களை கார் ரேஸ்களிலும், தனது சொகுசுக் கப்பல் பார்ட்டிகளிலும் கழிக்கிறார். கார் பந்தையத்தில் இந்தியா முத்திரை பதிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் என தனது தேசபக்தியைப் பறைசாற்றிக் கொள்கிறார். திரையில் காட்சிகள் மாறுகின்றன.. இதே போல் மற்றொரு கார் ரேஸ் பிரியரான விஜய் மல்லையா தோன்றுகிறார்.

கௌதம் சிங்கானியா

பணக்கார அல்பைகளின் இருண்ட மற்றொரு பாகமாக வரி ஏய்ப்பில் ஈடுபடும் பணக்காரர்களைக் குறிப்பிடுகிறது ஆவணப்படம். ஆனால் உண்மையில் அது மட்டும் தான் இருண்ட பாகமா? ஆவெனின் நிறுவனத்தைக் கேமரா படம் பிடித்துக் கொண்டிருந்த போது பின்னணியில் வர்ணணையாளர் விவரிக்கிறார் ”மிகக் குறைந்த கூலிக்கு தொழில்நுட்ப வல்லுநர்கள் கிடைக்கும் நாடு இந்தியா…”; அதே போல், எந்நேரமும் பார்ட்டியிலும் பந்தைய மைதானத்திலும் கழிக்கும் சிங்கானியா (கேமராவுக்காக) தனது நேரடி விற்பனையகத்திற்கு ஆய்வு நடத்தச் செல்கிறார்.

அப்போது அங்கே பணிபுரியும் பெண் ஊழியர் “சார் இம்மாத இலக்கான இரண்டரை கோடியை நேற்றே அடைந்து விட்டோம்” என பணிவாக விளக்கிக் கொண்டிருக்கிறார்.

பணக்காரர்களின் உலகம் இந்தக் கூலிக்காரர்களின் வியர்வையின் மீதே நிற்கிறது என்பதற்கு ஆவணப்படம் நெடுக ஆங்காங்கே தெறிப்புகளைப் போல் சில வசனங்கள் உள்ளன. உண்மையும் அது தான். ஏழைகளும் உழைப்பாளர்களையும் சுரண்டுவதாலேயே பணக்காரச் சோம்பேரிகளின் உலகம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.

கல்பனா சூரஜ்ஜின் தயாள குணமும் பணம் சேர்க்கும் வித்தையும் விதந்தோதப்பட தெருக்களைப் பிரிக்கும் அந்த சாக்கடை தேவையாக இருக்கிறது. தனது சொந்த மக்கள் இன்னமும் சாதியச் சாக்கடையில் உழன்று கொண்டிருக்கையில் தனது படாடோபமான வாழ்க்கை எந்த உறுத்தலும் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதை அந்த ஐம்பதாயிரம் உறுதி செய்து கொடுக்கிறது.

அதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே அந்த ஏழைத் தகப்பனின் தோளைப் பிடித்து திருப்பி நமக்கு அந்த கண்ணீரை அறிமுகம் செய்து வைக்கிறார் கல்பனா.

நன்றி: அல்ஜசீரா
பதிவு: சாக்கியன்

https://www.youtube.com/watch?v=HEMvdTwJd6Q&vl=en

பாசிசம் உலகமயத்தை எதிர்த்து புதிய சர்வதேசிய இயக்கம் போராடும் !

மெரிக்காவில் காங்கிரஸ் எனப்படும் பாராளுமன்றம் மற்றும் செனட் எனப்படும் மேலவைக்கான தேர்தல்கள் களைகட்டியிருக்கின்றன. அமெரிக்காவை பொருத்தவரை சோசலிசம் கம்யூனிசம் ஆகிய சொற்கள் வசவு சொற்களாக கருதப்பட்ட காலம் தற்போது கேள்விக்குள்ளாவதை இத்தேர்தல் பறைச்சாற்றுகிறது.

தங்களை சோசலிஸ்டுகள் என்று அழைத்துக்கொண்டு பலர் தேர்தல்களில் போட்டியிடுகிறார்கள். அதோடு ஜனநாயக கட்சியின் உட்கட்சி தேர்தல்களில் சில இடங்களில் சோசலிஸ்டுகள் என தங்களை அழைத்துக்கொள்பவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். சோசலிசம் என்பது விவாத பொருளாக மாறியிருக்கிறது.

அமெரிக்க ஜனநாய சோசலிஸ்டுகள் என்கிற அமைப்பு குறுகிய காலத்தில் பல்லாயிரக்கணக்கான உறுப்பினர்களைச் சேர்த்துள்ளது. குறிப்பாக பல்கலைக்கழகங்களில் இவ்வமைப்பு வளர்ந்து வருகிறது. நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வந்த ஒரு கட்டுரையின் தலைப்பு “ ‘ஆம் நாம் சோசலிஸ்டுதான்’ ஏன் சோசலிச முத்திரையை வேட்பாளர்கள் விரும்பி ஏற்றுக்கொள்கிறார்கள்” . தி எக்கனாமிஸ்ட் பத்திரிகை “அமெரிக்காவில் சோசலிசம்” என்று கடந்த மாதம் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது.

கீன்சின் பொருளாதார கொள்கைகளை சோசலிசம் என்பதாக கருதுவது முதல் மார்க்சியத்தை ஏற்றுக்கொண்டு ஆனால் டிராட்ஸ்கியை ஆதரிப்பது என பல வகை கருத்துக்கள் இருந்தாலும் முதலாளித்துவம் தீங்கானது, பன்னாட்டு நிதிமூலதனம் தீங்கானது என்பதை ஏற்றுக் கொள்கிறார்கள். அமெரிக்காவில் தீச்சொல்லாக கருதப்பட்ட சோசலிசத்தையும், மார்க்சையும் மைய நீரோட்டத்திலேயே விவாத பொருளாக்கியிருக்கிறார்கள். அமைப்புச் சித்தாந்தம் இன்றி வால்வீதியில் போராடியவர்கள் இன்று சோசலிசம் குறித்து விவாதிக்கிறார்கள். உலக முதலாளித்துவ கருவறையில் சோசலிசம் குறித்து நடைபெறும் விவாதத்தில் சில பிரச்சினைகள் இருப்பினும் இது நம்மை மகிழ்ச்சி கொள்ள செய்கிறது. அவ்வகையில் கீழ்க்கண்ட கட்டுரை முக்கியமானது என்பதால் மொழிபெயர்ப்பு செய்து வெளியிடுகிறோம்.

அமெரிக்கா மற்றும் மேற்குலகில் முதலாளித்துவத்திற்கு எதிரான தற்போதைய உலகு தழுவிய நிலையையும் ஹிட்லர் உருவான காலத்துக்குமான பொருத்தப்பாட்டையும் அதற்கு தீர்வு என்ன என்பதையும் முன்வைத்து கீரிஸ் முன்னாள் நிதியமைச்சர் யானிஸ் வருஃபகிஸ் எழுதி கார்டியனில் வெளியாகியுள்ள கட்டுரையின் மொழிபெயர்ப்பு இது. கட்டுரையின் இறுதியில் கூறியுள்ளபடி இவர் முன்வைக்கும் தீர்வு என்பது கீனிசிய வாதம் முன்வைப்பதுதான். அதன்படி முதலாளித்துவ கட்டமைப்பை சிற்சில கண்காணிப்புகளோடும், எச்சரிக்கைகளோடும் தொடர்வதுதான். தற்போது உலகளாவிய புதிய சர்வதேச இடதுசாரி இயக்கத்தை முன்வைக்கும் ஆசிரியர் அதை பொதுவான கூட்டமைப்பாக மட்டுமே கூறுகிறார். ஆகவே இன்றைய பிரச்சினை என்ன என்ற அடிப்படையில் நோய்கூறு ஆய்வு ஓரளவிற்கு சரியாக சென்றாலும் சிகிச்சை என்று வரும் போது அது கொஞ்சம் மந்தமாகவே இருக்கிறது. தேவை அறுவை சிகிச்சையா இல்லை சாதாரண வலி நிவராணியா?

ஆசிரியர் வலி நிவாரணியை கோரினாலும் நோய் இப்போது தீவிரமடைந்துள்ளதை அவரது எழுத்துக்களில் நீங்கள் காணலாம். மதவாத பா.ஜ.க., பொருளாதார வலதுசாரி காங்கிரஸ் என நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் நமக்கு மட்டுமானதாக இல்லாமல் பிற நாடுகளும் இதே பிரச்சினைகளைக் கொண்டிருப்பதை இக்கட்டுரை மூலம் அறிய முடிகிறது.

♦♦♦

சர்வதேசிய இடதுசாரிகளின் எதிர்காலம் : பாசிசத்தையும் உலகமயத்தையும் நமது புதிய சர்வதேசிய இயக்கம் எதிர்த்து போரிடும்!

யானிஸ் வருஃபகிஸ்

ம் சகாப்தம், நிதிமூலதன சாக்கடையிலிருந்து தோன்றிப் பரவியுள்ள உலகளாவிய வலதுசாரிகளின் (தேசிய வெறி சர்வதேசிய கூட்டணி ), வெற்றி ஊர்வலத்திற்காக நினைவு கூறப்படும். இந்த அச்சுறுத்தலுக்கு எதிரான வெற்றிகரமான போராட்டத்திற்காகவும் இது நினைவு கூறப்படுமா?  என்றாலும் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் மெக்சிகோ, இந்தியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் முற்போக்கு சக்திகள் தங்களுக்குள் ஒத்திசைவான முற்போக்கு அணிசேர்க்கைக்குத் தயராக இருக்கின்றனவா என்பதைப் பொருத்துதான் அது அமையும்.

நம் பணி முன்அனுபவம் இல்லாத ஒன்றல்ல. முதல் உலகப்போருக்கு பின்னர் பாசிஸ்டுகள் வன்முறையையும், போரையும், வதை முகாம்களையும் வாக்குக் கொடுத்து  ஆட்சிக்கு வரவில்லை. மாறாக முதலாளித்துவ நெருக்கடிகளுக்கு பிறகு தங்கள் சந்தை மதிப்பை இழந்து வெறும் விலங்குகளைப் போல நடத்தப்பட்ட மக்களிடம் உரையாடி ஆட்சிக்கு வந்தார்கள். பாசிஸ்டுகள் மக்களின் பிரச்சினைகளைப் பேசினார்கள், இழந்த பெருமைகளை மீட்டுத் தருவதாக வாக்குறுதியளித்தார்கள்.  தங்களைப் பற்றி  வெறும் வாடிக்கையாளர்கள் (consumers) என்பதைத் தாண்டியும்  மக்களைச் சிந்திக்க வைத்தார்கள், மக்களைத் தாங்கள் பெரும் சித்தாந்தத்தைச் சேர்ந்தவர்கள் என உணர வைத்தார்கள்.

மக்களுக்கு சுயமரியாதையை அளித்த அதே வேளையில், கிடைக்கப் பெற்ற மீள் நம்பிக்கையை அச்சுறுத்தும் ‘அயலாரைப்’ பற்றி எச்சரிக்கையும் செய்தார்கள். சமூக, வர்க்க பண்புகளை புறக்கணித்து வெறும் அடையாளங்களின் அடிப்படையில் நாம் vs எதிர் அயலர் என்கிற அரசியலை கட்டமைத்தார்கள். மக்களுக்கு சமூக அந்தஸ்தை இழக்க நேரிடும் அச்சம் முதலில் அயலார் மீதான மனித உரிமை மீறல்களையும் பின்னர் எல்லா எதிர்ப்புகளின் மீதுமான மனித உரிமை மீறல்களையும் சகித்துக் கொள்ள செய்தது. விரைவில் கட்டமைப்பு (establishment) உருவாக்கிய பொருளாதார நெருக்கடி அதன் அரசியல் மீதான கட்டுப்பாட்டைத் தகர்த்தது. அதே போல முற்போக்காளர்கள் ஒதுக்கப்பட்டார்கள் அல்லது சிறையிலடைக்கப்பட்டார்கள். எல்லாம் முடிந்தது.

இது டொனால்ட் டிரம்ப் எப்படி ஆட்சியைப் பிடித்தார்; பின்னர் எப்படி எதிர்கட்சியான ஜனநாயக கட்சி மீது எப்படி போர் தொடுத்திருக்கிறார் என்பதை நமக்கு நினைவுபடுத்தவில்லையா? இங்கிலாந்தின் கன்சர்வேட்டிவ் பிரெக்சிட் ஆதவாளர்கள் பல பத்தாண்டுகளாக தாங்கள் நிதிக்காக தவிக்கவிட்ட தேசிய மருத்துவ வசதியை எப்படி தற்போது ஆதரிக்கிறார்கள் என்பதையும், முன்னர் தாட்சரிசம் சந்தைச் சக்திகளுக்கு கீழ்படுத்திய ஜனநாயகத்தைத் தற்போது எப்படி ஆதரிக்கிறார்கள் என்பதையும் நினைவுபடுத்தவில்லையா? இது ஆஸ்திரியா, ஹங்கேரி, போலந்து ஆகிய நாடுகளின் தீவிரமான வலதுசாரி அரசுகளின் வழி இல்லையா? புதிய இத்தாலி அரசின் எதேச்சதிகார சால்வினி மற்றும் கிரீசின் கோல்டல் டான் நாசிகளின் வழி இல்லையா? (மோடியையும் இது நினைவுபடுத்துகிறது – மொ.ர்)

1930-களுக்கு பிறகு நாம் பார்க்கவே முடிந்திராத சர்வதேச தேசியவாதிகளின் அகிலம் மீண்டும் பிறப்பெடுப்பதை எங்கு நோக்கினும் வெளிப்படையாகப் பார்க்க முடிகிறது. கட்டமைப்பைப் (establishment) பொருத்தவரை பாசிசத்துக்கு முந்தைய ஜெர்மனி செய்த எல்லா தவறுகளையும் பெரும் விருப்பத்துடன் மீண்டும்  செயல்படுத்துகிறார்கள்.

நோய் கூறு ஆய்வு போதும். இப்போது தேவையான கேள்வி “நாம் என்ன செய்ய வேண்டும்?”.

உலகமய கட்டமைப்புகளுடன் செயல்தந்திர கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. நிதிமூலதனம் மற்றும் அதன் சித்தாந்தங்களுடன் டோனி பிளேர், ஹிலாரி கிளிண்டன், ஐரோப்பாவின் சமூக ஜனநாயகக் கட்சிகள் மிக மிக அதிக சமரசங்களை செய்து கொண்டுள்ளார்கள். பல பத்தாண்டுகளாக திறந்த சந்தையின் கவர்ச்சியை – சந்தை மயமாக்கலுக்கு நம்மை ஒப்படைத்தால் அனைவரும் முன்னேறி விடலாம் – ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். முடிவே இல்லாத மின்தூக்கி நம்மை மேல்நோக்கி வாடிக்கையாளர் திருப்தி வரை கொண்டு செல்லும் என்று நம்பச் சொல்கிறார்கள். ஆனால் அப்படி ஒன்று உண்மையில் இல்லை.

இந்த மாயையை கடந்த 2008-இல் நிகழ்ந்த நம் தலைமுறையின் 1929 தகர்த்துவிட்டது.  கட்டமைப்போ பெரும்பான்மையினரின் சமூக நலதிட்டங்களை வெட்டுவது, சிறுபான்மை முதலாளிகளுக்கு சலுகைகள், அனைவருக்கும் எதேச்சதிகாரம்;  இவைகளைக் கொண்டு பிரச்சினையைச் சரிசெய்துவிட முடியும் எனச் செயல்படுகிறது. இதே சமயத்தில் மக்களிடம் வளர்ந்து வரும் அதிருப்திகளைக் கொண்டு தேசியவாதிகளின் அகிலம் வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது.

இதை முறியடிக்க முற்போக்காளர்கள், மக்களின் அமைதியின்மைக்கும், மகிழ்ச்சியின்மைக்குமான காரணத்தை மிக கூர்மையாக  வெளிப்படுத்த வேண்டும்: எண்ணிக்கையில் அதிகரித்துவரும் சமூக பாதுகாப்பில்லாத மக்களின் மீதும், மேற்கத்திய பாட்டாளி வர்க்கத்திடம் மிஞ்சியிருப்பவைகளின் மீதும், ஒடுக்கப்பட்ட மக்களின் மீதுமான உலகலாவிய சுயநல குழுக்களின் வர்க்கப் போர்தான் அக்காரணம்.

அடுத்ததாக நமது போராட்டங்களை புதிய சர்வதேசிய அணிசேர்க்கை மற்றும் ஒப்பந்தங்களின் வழியொட்டி அமைத்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் மட்டுமே நமது வாழ்க்கை, நம் சமூகம், நமது நகரங்கள் மற்றும் நாடுகளின் அதிகாரத்தை பெற முடியும். பன்னாட்டு நிதி மூலதனம் நமது சமூகத்தை சிதைக்காமல் தடுப்பதோடு, எந்த ஒரு நாடும் தனித்து இல்லை என்பதையும் நாம் தெரியப்படுத்த வேண்டும். எப்படிப் பருவநிலை மாற்றப் பிரச்சினை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நடவடிக்கைகளை கோருகின்றனவோ அதுபோலவே வறுமை ஒழிப்பு, கடன்கள் மற்றும் வங்கிகளுக்கு எதிரானப் போராட்டமும் பரஸ்பர ஒத்துழைப்பைக் கோருகின்றது. வரிவிதிப்புகள் நமது தொழிலாளர்களை பாதுகாக்காது என்பதை தெரியப்படுத்த வேண்டும். கூடவே உள்நாட்டு வேலைகளைப் பாதுகாப்பதோடு, ஏழைநாடுகளின் தொழிலாளர்களுக்கு அரசுகள் குறைந்தட்ச  வருமானத்தை உத்திரவதப்படுத்தும்படியான வர்த்தக உறவுகள் வேண்டி பிரச்சாரம் செய்ய வேண்டும்.

மேலும் நம் முற்போக்கு சர்வதேசிய கூட்டணி ஜான் மன்யார்டு கீன்ஸ்* பரிந்துரைத்தது போன்று ஒரு சர்வதேசிய நாணய தீர்வு மையம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும். அது மூலதன பாய்ச்சலுக்கு கட்டுப்பாடுகளையும் கொண்டிருக்க வேண்டும். சர்வதேச அளவில் ஊதியம், வணிகம் மற்றும் நிதி ஆகியவற்றை மறுசமன் செய்வதன் மூலம் விருப்பமற்ற இடப்பெயர்வு, விருப்பமற்ற வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றைக் குறைக்க முடியும். அதன் மூலம் சுதந்திரமான இடப்பெயர்வு உரிமை என்கிற மனித உரிமை மீதான தார்மீக அச்சம் நீக்கப்படும்.

யார் இவ்வத்தியாவசியத் தேவையான முற்போக்கு அகிலக் கூட்டணியை ஒன்றுபடுத்துவது? அதை ஆரம்பித்து வைக்க தகுதி வாய்ந்தவர்களுக்குக் குறைவில்லை. அமெரிக்காவின் பெர்னி சாண்டர்சின் “அரசியல் புரட்சி”, ஜெர்மி கோர்பைனின் தொழிலாளர் கட்சி, எங்களது ஐரோப்பிய ஜனநாயக இயக்கம், இந்தியாவில் சகிப்பின்மைக்கு எதிராகவும், சமூக நலத்திட்ட நிதிக் குறைப்புகளுக்கு எதிராகவும் போராடிவரும் பல்வேறு இயக்கங்கள் இதை செய்ய முடியும்.

இதை இன்றே ஆரம்பிப்போம். கோபத்தையும் வெறுப்பையும் நம்பிக்கையாக மாற்றும் அந்த நொடியில் நம்மை பலரும் பின் தொடருவார்கள்.

*– ரஷ்ய சோசலிச புரட்சிக்குப் பிறகு தங்கள் நாட்டு பாட்டாளி வர்க்கத்தைக் கண்டு அஞ்சிய மேற்குலக ஆளும் வர்க்கம், தங்களை காத்துக்கொள்ள சமூக நல திட்டங்கள் என்கிற ‘சலுகைகளை’ அளிக்க முன்வந்தார்கள். இந்த பின்னணியில் உதித்த சேம நல அரசு என்கிற கருத்தாக்கத்தின் மூலவர்களில் ஒருவர்தான் கீன்ஸ். சோசலிச முகாம் அழிந்த பிறகு இதற்கான தேவையும் அழிந்து பின்னர் பீரீட்மேனின் பொருளாதார கோட்பாடான தாராளமயக் கொள்கைகள் அமலுக்கு வந்தன. மேற்கத்திய முற்போக்கு சக்திகள், சோசலிஸ்டுகள் என்று அறிவித்து செயல்படுகிற பலர் கீன்சின் சேம நல அரசுகளை முற்போக்கானது என்று கொண்டாடி வருகிறார்கள்.

இக்கட்டுரையிலும் கட்டுரை ஆசிரியர் முதலாளித்துவ அமைப்பு சொல்லும் வளர்ச்சி உண்மையில்லை என்று கூறிவிட்டு அவரும் சேம நல அரசுக்காகவே வாதாடுகிறார்.

கீரிஸ் முன்னாள் நிதியமைச்சர் யானிஸ் வருஃபகிஸ் எழுதி கார்டியனில் வெளியாகியுள்ள கட்டுரையின் மொழிபெயர்ப்பு:
Our new international movement will fight rising fascism and globalists

படிக்க: When will Democrats wake up and resist the socialists’ scheme to take over their party?

சமையற் கலையை விட ஒளிப்பதிவுக் கலை வருமானம் அதிகமா ?

சென்னை கடற்கரையின் காலை நேரம். சுற்றித்திரிந்த ஏழைச் சிறுவர்களை இரண்டு இளைஞர்கள் புகைப்படம் எடுக்கிறார்கள். முடிந்த கையோடு ஒருவர் தனது சட்டைப் பாக்கெட்டிலிருந்து ஒரு சாக்லெட்டை எடுத்து, ஒருவித தயக்கத்துடனே அச்சிறுவனின் கையில் திணித்து மெல்ல நகருகிறார். விஸ்காம் படிக்கும் மாணவர்கள் போலும் என நினைத்து பேச்சு கொடுத்தோம்.

“தம்பி என்ன படிக்கிறீங்க?”

“படிப்பெல்லாம் முடிச்சிட்டோம்னா. இப்போ வேலை செஞ்சிகிட்டிருக்கோம். நாங்க திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவங்க. என்னோட பேரு துரை, இவன் வெங்கட்.

கேட்டரிங் படிச்சா உடனே வேலை கிடைக்கும், நல்லா சம்பாதிச்சு குடும்பத்த காப்பாத்தலாமுன்னு பெரிய கனவோடு சென்னை வந்தோம். SRM-ல படிப்ப முடிச்சிட்டு வேலைக்கும் சேர்ந்துட்டோம். நான் ஃபெதர்ஸ்ல வேலை செய்யிறேன், வெங்கட் டொமினோவுல பிஸ்ஸா மேக்கரா இருக்கான். ஆளுக்கு பத்தாயிரம் சம்பளம் வாங்குறோம்.”

“ பத்தாயிரந்தான் சம்பளமா?”

ஷெஃப்பா (தலைமை சமையற் கலைஞர்) ஆனா நல்ல சம்பளம் வாங்கலாம். இப்ப நான் 3rd – 3-வது லெவல்ல இருக்கேன். இந்த லெவலுக்கு இதுதான் சம்பளம். ஷெஃப்பா ஆகணுமுன்னா பத்து லெவலுக்கு மேல தாண்டணும். அதுக்குள்ள எனக்கும் வயசாகிடும்.

அதனால, எங்களோட ஒரு வருச சம்பளத்துல கொஞ்சம் கொஞ்சமா சேத்து வச்ச பணத்துல இந்த கேமராவ வாங்கியிருக்கோம். வேலைநேரம் போக ஆறு, ஏரி, குளம், பீச்சுன்னு அலைஞ்சி திரிஞ்சி ஃபோட்டோ எடுத்து கத்துகிட்டிருக்கோம். அப்படியே வெட்டிங்க் ஃபோட்டோ கிராபரா ப்ரொஃபெஷன மாத்திரலாமுன்னு இருக்கோம்.”

சென்னை நகரில் காமராவோடு படம் பிடிக்கும் பலரையும் எப்போதும் பார்க்கலாம். சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி மற்றும் காட்சி ஊடக கல்வியின் கவர்ச்சி காரணமாக மாணவர்கள் – இளைஞர்கள் பலரும் காமராக்களோடு அன்றாடம் வலம் வருகிறார்கள். ஐ.டி நிறுவனங்களில் கூட வார இறுதி ஆர்வமாக பலரும் இத்துறையில் கணிசமாக இருக்கிறார்கள். இந்த கேட்டரிங் படித்த இளைஞர்களோ இத்துறையில் பயிற்சி பெற்றால் கணிசமாக ஊதியம் ஈட்டலாம் என நினைக்கிறார்கள். எப்படி சமையற் துறையில் பத்தாண்டு அனுபவம் தேவைப்படுகிறதோ அதே போன்று கேமராவிலும் அதே காலப் பயிற்சி தேவைப்படுகிறது.

இன்னொரு புறம் கல்யாண வீடியோவாகவே இருந்தாலும் கூட அங்கேயும் மூத்த கலைஞர்களுக்கு சொல்லிக் கொள்ளுமளவு வருமானம் இல்லை. பொதுவில் பொருளாதார வறட்சி காரணமாக மக்கள் அதிகம் செலவு செய்வதற்கு தயாராக இல்லை. மற்றொரு புறம் கொஞ்சம் காசு உள்ள நடுத்தர வர்க்கம் பல விசாரணைகளுக்கு பிறகு பிரபலமான புகைப்பட கலைஞர்களை அமர்த்திக் கொள்கிறது. அவர்களுக்கு ஊதியம் அதிகம் என்றாலும் அந்த வாய்ப்பு பலருக்கும் கிடைப்பதில்லை. இக்கரைக்கு அக்கரை பச்சை எனும் நம்பிக்கையில் இந்த இளைஞர்கள் முயற்சி செய்கிறார்கள்.

படிக்க:
பச்சமுத்துவின் பயோரியா பல்பொடி பல்கலைக் கழகம் – தோழர் ராஜு
420 மோசடி சாய் இன்ஸ்டிட்யூட்டை இழுத்து மூடு !

அந்த இளைஞர்களுக்கு வாழ்த்துகளும் சொல்ல முடியாமல், மறுப்பும் சொல்ல முடியாமல் திகைத்து நின்ற நேரத்தில், முன்னொரு நாள் நண்பர் ஒருவர் சொன்னது ஞாபகத்தில் வந்துபோனது; “வீடியோ எடிட்டிங் தெரிஞ்சாதான் கல்யாணத்துக்கே ஃபோட்டோ எடுக்ககூப்பிடுறாய்ங்க”.

ஆக இந்த இளைஞர்கள் இனி எடிட்டிங்கும் கற்றுக் கொள்ள வேண்டும்! அவர்கள் படம் எடுக்கும் ஏழை சிறுவர்கள் இவர்களுக்கு எப்போதும் இலவசமாக கிடைக்க்கும் ‘மாடல்களாக’ பயன்படுகிறார்கள். இவர்களைப் போன்ற ஏழை மாணவர்களோ நவீன காமராக்களை வாங்கும் நுகர்பொருள் சந்தையாக பயன்படுகிறார்கள்.

இதில் யார் யாரை படம் பிடித்து முன்னேறப் போகிறார்கள்?

சபரிமலை பெண்கள் நுழைவை ஆதரித்து சென்னை ம.க.இ.க. சுவரொட்டி பிரச்சாரம் !

ல்லா வயது பெண்களும் சபரிமலை செல்லலாம் தடையில்லை என உச்சநீதி மன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்திருந்தது. இந்தத் தீர்ப்பை கேரள அரசு ஏற்றுக்கொண்டது; தேவசம் போர்டும் ஏற்றுக்கொண்டது; ஜனநாயக சக்திகளும் பல்வேறு கட்சிகளும் இதை ஏற்றுக் கொண்டுள்ளது. அதே நேரம் தற்போது கேரளாவில் இதை ஏற்ககூடாது என்று ஒரு கருத்தை உருவாக்கி வருகின்றனர். அதில் பந்தளம் அரச குடும்பத்தினர், தந்திரி குடும்பத்தினர் மற்றும் இந்துத்துவா இயக்கங்கள் தீவிரமாக இருக்கின்றனர்.

தமிழகத்திலும் இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி, பி.ஜே.பி. கட்சியினர்கள் இந்தத் தீர்ப்பு தவறு என கூறுகின்றனர். ‘பெண்கள் தீட்டு’ என்ற கருத்தும் கோவிலுக்கு வந்தால் புனிதம் கெட்டுவிடும் என்பதும் தீண்டாமைவாதிகளான இந்துமதவெறியர்கள் பக்தர்கள் என்ற போர்வையில் ஒளிந்துகொண்டு பக்தியை வன்முறைக்களமாக மாற்ற முயற்சிக்கிறார்கள். இந்த சதியை கண்டித்து ம.க.இ.க வினர் சென்னை முழுவதும் சுவரொட்டி பிரச்சாரம் மேற்கொண்டனர்.

படிக்க:
சபரிமலை பெண்கள் நுழைவு : போராட்டம் இன்னும் முடியவில்லை !
உச்சநீதி மன்றம் தீர்ப்பு : சபரிமலை அய்யப்பனின் ஆணாதிக்கம் தகர்ப்பு !

தகவல்: ம.க.இ.க., சென்னை.

ராயல் என்ஃபீல்டு : கிளர்ந்தெழும் தொழிலாளர் போராட்டம் | செய்தி – படங்கள் !

கைது ! வேலை பறிப்பு ! அச்சுறுத்தும் நிர்வாகம் – அரசு !
அடிபணியாத ராயல் என்பீல்டு தொழிலாளர்கள் போராட்டம் !!

  • தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக்கும் நீம் (NEEM), எஃப்.டி.இ (FTE) திட்டத்தின் கீழ் 150 தொழிலாளர்களை இணைக்கும் நிர்வாகத்தின் திட்டத்தை ரத்துசெய் !
  • சட்டப்படியான ஊதிய உயர்வை அமல்படுத்து !
  • சட்டப்படி அமைக்கப்பட்டுள்ள தொழிற்சங்கத்துக்கு அங்கீகாரம் வழங்கு !
  • 480 நாட்களுக்கு மேல் வேலை செய்த தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய் !
  • கடந்த 2 ஆண்டுகளாக வழங்கப்படாத சட்டப்படியான போனஸை வழங்கு !

என மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13/09/2018 அன்று ராயல் என்பீல்டு நிர்வாகத்திடம் தொழிலாளர்கள் ஸ்ட்ரைக் நோட்டீஸ் கொடுத்தனர். இதன்படி எந்தப் பேச்சுவார்த்தைக்கும் வராத நிர்வாகத்தைக் கண்டித்து 24/09/2018 அன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். செப்டம்பர் 24, 26, 27 ஆகிய மூன்று தேதிகளிலும் எச்.ஆர் அதிகாரியான ராஜரத்தினம் நிர்வாகத்திடம் பேசுவதாக தொழிலாளர்களிடம் கூறினார். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது எந்தவித பழிவாங்கலும் கூடாது என்ற நிபந்தனையுடன் அதனை ஏற்று 30-ம் தேதி வேலைக்குச் சென்றுள்ளனர்.

படிக்க:
ஆம்பூர் ஷூ தொழிற்சாலை பெண் தொழிலாளர் போராட்டம்
மாருதி சுசுகி தொழிலாளர் போராட்டம் வெல்லட்டும்!

அவ்வாறு வேலைக்குச் சென்ற தொழிலாளர்களிடம் செல்போனை உள்ளே அனுமதிக்க முடியாது என மிரட்டியுள்ளது நிர்வாகம். மேலும் முறையாக வேலை நிறுத்த நோட்டிஸ் கொடுத்துத் தொடங்கிய போராட்டத்தை “சட்டவிரோத வேலை நிறுத்தம்” (Illegal Strike) எனக் கூறி தொழிலாளிகளின் 8 நாள் சம்பளத்தைப் பிடித்துள்ளது. 8 பேருக்கு சார்ஜ் சீட் கொடுத்துள்ளது. பெரியசாமி என்ற தொழிலாளியை டிஸ்மிஸ் செய்துள்ளது.

குழுமி நிற்கும் தொழிலாளர்கள்

இதனை எதிர்த்து மீண்டும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தைக் கலைக்க ஏற்கனவே பல்வேறு சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதோடு பல்வேறு சதிகளையும் செய்யத் தொடங்கியது நிர்வாகம். உள்ளிருப்புப் போராட்டம் நடத்தியபோது பெண்களுக்கான கழிவறைகளை மூடுமாறு உத்தரவிட்டுள்ளார் ஒரு பெண் எச்.ஆர் அதிகாரி.

போராடும் இளம் தொழிலாளிகளின் வீடுகளுக்கு “உங்கள் மகன்/ மகள் நிர்வாகத்தை எதிர்த்துப் போராடுகிறார். அவர் எதிர்காலம் பறிபோய்விடும்” என கடிதங்கள் அனுப்பியுள்ளது. போராடும் தொழிலாளிகளுக்கு போன் செய்து வேலை பறிபோகும், எதிர்காலம் பாழாகும் என்று அச்சுறுத்தியதோடு மட்டுமின்றி ஊதிய உயர்வு தருவதாகவும் பணி நிரந்தரம் செய்வதாகவும் ஆசை வார்த்தைகளைக் காட்டி நயவஞ்சகமாகவும் தொழிலாளர் ஒற்றுமையை சிதைக்க முயன்றுள்ளது.

போலீசும் இதற்கேற்ப 26/09/2018 தேதிக்கு மேல் உள்ளிருப்புப் போராட்டம் கூடாது எனக் கூறியதோடு வெளியே வந்து போராடும்போது சாமியானா போட அனுமதி மறுத்துள்ளது. போக்குவரத்துக்கு சற்றும் இடையூறின்றிப் போராடியவர்களிடம் போலீசு கூறிய காரணம் “தேசிய நெடுஞ்சாலையில் ’சாமியானா’ போட அனுமதி கிடையாது” என்பதுதான்

குடும்பத்தினர் அச்சப்பட்டபோது பின் வாங்காமல் – நிர்வாகத்தின் அச்சுறுத்தலுக்கும் நயவஞ்சகத்துக்கும் பலியாகாமல் – கொட்டும் மழையிலும் சுட்டெரிக்கும் வெயிலிலும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது தொழிலாளர்கள் போராட்டம். சற்றும் அச்சமின்றிப் போராடும் பெண் தொழிலாளர்களது முழக்கங்கள் நிர்வாகத்தை அச்சுறுத்துகிறது. தான் மேற்கொண்ட எந்தவழியிலும் போராட்டத்தினைச் சிதைக்க முடியாமல் நிர்வாகம் தோற்றுள்ளது.

கடந்த 04/10/2018 அன்று ஏற்பட்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில் தொழிலாளர்கள் மீதான எந்தவிதப் பழிவாங்கலும் கூடாது, போராட்டத்துக்கு முன்பிருந்த பணிச்சூழல் இருக்க வேண்டும் என்னும் நிபந்தனையின் அடிப்படையில் 05/10/2018 அன்று பணிக்குச் சென்றுள்ளனர். மீண்டும் செல்போன்களை அனுமதிக்க மறுத்ததோடு அவர்களிடம் “போராட்டத்தில் ஈடுபட்டதற்காக மன்னிப்புக் கோருகிறேன். இனி போராட்டங்களில் ஈடுபடமாட்டேன். நிர்வாகத்தின் அனைத்து விதிகளுக்கும் கட்டுப்பட்டு நடப்பேன்.” என அடிமைச் சாசனம் எழுதிவைத்து அதில் கையெழுத்தும் கேட்டுள்ளது.

படிக்க:
ஆலை நடத்துறாங்களா ? ஸ்கூல் நடத்துறாங்களா ? யமஹா தொழிலாளர் போராட்டம்
♦ சென்னை : தடைகளைத் தகர்த்த தென்கொரிய தூசான் தொழிலாளர் போராட்டம்

தொழிலாளர்கள் மீண்டும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 200- க்கும் மேற்பட்ட போலீசு ஆலைக்குள் வந்து “எஃப்.ஐ.ஆர் போட்ருவோம் – வாழ்க்கை வீணாகிடும் – ஒழுங்கா வேலைக்குப் போங்க” என மிரட்டியுள்ளது. இதற்கு அடிபணியாமல் தொழிலாளர்கள் போராடவே சுமார் 300 தொழிலாளிகளைக் கைது செய்து வல்லக்கோட்டை திருமண மண்டபத்தில் அடைத்துள்ளது. இதை அறிந்த ஏனைய 2வது ஷிஃப்ட் தொழிலாளர்கள் அனைவரும் ஆலையின் வாசலில் திரண்டனர்.

மேலும் அசோக் லேலண்ட் உள்ளிட்ட 17 தொழிற்சாலைகளிலிருந்தும் தொழிலாளர்கள் அவர்களுக்கு ஆதரவாக வந்து அணிதிரண்டுள்ளனர். போராடினால் வேலைபோகும், எதிர்காலம் பாழாகும் என்ற கருத்தைக் காட்டி இனியும் உழைக்கும் மக்களை ஏமாற்ற முடியாமல், பிளக்க முடியாமல் ஆளும் வர்க்கமும் அரசும் தோற்று நிற்கிறது. விவசாயிகள், மாணவர்கள், பெண்கள், மீனவர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள் எனப் போராடுபவர்களின் பட்டியலில் தனது நீண்ட உறக்கத்தை உதறி எறிந்து தலைமை தாங்க வருகிறது தொழிலாளி வர்க்கம்.

இச்சூழலில் தோழர் பகத்சிங்கின் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.

“சற்றும் சோர்வடையாத நமது மனவுறுதி

ஒவ்வொரு நொடியும் எதிரிகளை பலவீனப்படுத்துகிறது.”

இணைய வணிகம் – மெய்நிகர் போதை | வில்லவன்

2

மெய்நிகர் உலகம் ஏற்படுத்தியிருக்கும் பெரும் மாற்றங்களில் சமூக ஊடகங்களுக்கு

வில்லவன்
அடுத்து முக்கியமானது இணைய வணிகம். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு பெரும் எண்ணிக்கையில் திறக்கப்பட்ட பேரங்காடிகள் பல இப்போது கலையிழந்து நிற்கின்றன. அப்படியான புதிய பேரங்காடிகள் இப்போது அதே வேகத்தில் திறக்கப்படுவதில்லை. ஆன்லைன் மருந்துக்கடைகள் தங்கள் வாழ்வாதாரத்தை பறிப்பதாக மருந்துக்கடை உரிமையாளர்கள் புலம்புகிறார்கள். பிரதான வீதிகளில் மட்டுமல்ல உள்ளடங்கிய தெருக்களிலும் இடுப்புயர பைகளை சுமந்தபடி கொரியர் ஊழியர்கள் பயணிப்பதை அடிக்கடி காண முடிகிறது.

நான் தங்கியிருக்கும் விடுதியில் உள்ள இளைஞர்கள் திடீரென ஒரு மாலையில் பரபரப்பானார்கள். “”ஏய் ஃபலூடா 9 ரூபாய், சீக்கிரம் ஆர்டர் பண்ணு” என தகவல் பரிமாறிக்கொள்ளப்பட்டது. அப்போது உத்தேசமாக 10 பேரேனும் அலைபேசியை எடுக்க ஓடியிருப்பார்கள். பெங்களூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அமேசான் டெலிவரி ஊழியர் அரைமணி நேரம் நின்று வரிசையாக பொருட்களை டெலிவரி கொடுத்தவண்ணமிருக்கிறார் (மருத்துவமனை ஊழியர்கள் அந்த முகவரியில் வாங்கிக்கொள்கிறார்கள்). அவர் பையில் இருப்பதில் பாதி அங்கேயே காலியாகிறது. அமேசான்-இந்தியாவின் பாதி வருவாய் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் இருந்து வருவதாக தரவுகள் சொல்கின்றன. கண்களால் நேரடியாக பார்த்தோ அல்லது அணிந்து பார்த்தோ வாங்க வேண்டிய ஆடைகளும் மூக்குக்கண்ணாடியும்கூட இணையத்தின் வழியே பெருமளவு விற்பனையாகின்றன. அழுகும் பொருட்களான காய்கறி, இறைச்சி வகைகளை விற்க பிக் பேஸ்கெட் நிறுவனம் இயங்குகிறது. சீன இறக்குமதிப் பொருட்களை விற்பதற்கென்றே கியர்பெஸ்ட் எனும் தளம் இருக்கிறது.

ஆன்லைன் சந்தையின் வசீகரிக்கும் அம்சம் அதன் விலை. வெளி சந்தையில் 2500 ஆகும் கண்ணாடிகளை ஆன்லைன் கடைகளில் 1000 ரூபாய்க்கு வாங்கிவிட முடியும். மொபைல் போன்களின் விலையை கணிசமாக குறைத்தவை ஆன்லைன் வழியே போன் விற்பனை செய்யும் நிறுவனங்கள்தான். ஜியோமி நிறுவனம் ஒரே நாளில் 20 லட்சம் போன்களை விற்ற சம்பவம்கூட நடந்திருக்கிறது. பெருநகரங்களில் பயணத்தை/ பயணச் செலவை தவிர்ப்பதற்கும் ஆன்லைன் ஷாப்பிங் செய்யப்படுகிறது. ஆனால் ஆன்லைன் வழி நுகர்வு என்பது வெறுமனே பொருள் தேவையை பூர்த்தி செய்யும் செயலாக இருப்பதில்லை.

சமீபத்தில் பேடிஎம் நிறுவனம் ஒரு ரூபாய்க்கு செருப்பு, ஸ்பூன் போன்ற பொருட்களை விற்பனை செய்தது (ஷிப்பிங் செலவு உட்பட). அதற்கு சில நாட்களுக்கு முன்னால் ஃபிலிப்கார்ட் நிறுவனம் தமது வாடிக்கையாளர்களுக்கு கோல்டு மெம்பர்ஷிப்பை இலவசமாக கொடுத்தது (இதில் பொருள் அனுப்பும் செலவு இலவசம் மற்றும் சில சலுகைகள் கிடைக்கும். இதையொத்த சலுகையை நீங்கள் அமேசானில் பெற ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்). சில வட இந்திய நகரங்களில் இப்போது மளிகைப் பொருட்களை பாதி விலைக்கு விற்கிறது அமேசான் (பேண்ட்ரி எனும் பெயரில் மளிகைப் பொருட்களை விற்கிறது அமேசான், இது பெருநகரங்களில் மட்டும்). எல்லா நிறுவனங்களும் இப்படியான திடீர் சலுகைகளை கொடுக்கின்றன. ஏன்?

படிக்க:
அமேசான் வழங்கும் கறுப்பு வெள்ளி !
வால்மார்ட் மேட் இன் பங்களாதேஷ் – ஆவணப்படம்

சில வகையான மொபைல் போன்கள் எப்போதும் கிடைக்காது. அவை ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே விற்பனைக்கு வரும் (ஃபிளாஷ் சேல்). அப்போதும் சில நிமிடங்களில் அவை விற்றுத் தீர்ந்துவிடும். ஜியாமி போன்கள் பெரும்பாலும் இப்படித்தான் விற்பனையாகின்றன. அந்த நிறுவனங்களால் இந்த ஃபோன்களை பெருமளவில் உற்பத்தி செய்து குவித்துவிட முடியும். எவ்வளவு விற்பனை ஆகும் என்பதையும் கணிப்பதும் சுலபம். இருப்பினும் ஏன் ஓரிரு நிமிடங்களில் விற்பனை முடிந்துபோகுமாறு திட்டமிடுகிறார்கள்?

இது வியாபாரம் மட்டும் இல்லை. அந்த நிறுவனங்கள் மக்களை தயார்ப்படுத்துகின்றன. பொருள் வாங்குவது என்பதாக இல்லாமல் அந்த செயலியில் மக்கள் எப்போதும் மேய்ந்துகொண்டிருக்கவேண்டும் என்பதற்காகவே இந்தத் திடீர் சலுகைகள் தரப்படுகின்றன. திடீரென ஒரு சலுகை வரக்கூடும் எனும் எச்சரிக்கை உங்கள் மனதில் இருந்தால் நீங்கள் தொடர்ந்து அந்தத் தளங்களை பார்வையிட்டுக்கொண்டே இருப்பீர்கள். ஃபிளாஷ் சேல் என்பது அந்த பொருள் மீதான எதிர்பார்ப்பை உங்களிடம் உருவாக்குகிறது. அதில் பொருளை வாங்கிவிட்டால் லட்சம் பேரோடு போட்டியிட்டு வென்ற பரவசம் கிடைக்கிறது. அதில் பொருள் கிடைக்காவிட்டாலோ நீங்கள் தோற்றவராகிறீர்கள். ஆகவே அடுத்த முறை வென்றாக வேண்டும் எனும் முனைப்பை அந்தப் பொருள் உருவாக்குகிறது. மிகைப்படுத்தவில்லை, பல சமயங்களில் ஃபிளாஷ் சேல்களில் கிடைக்கும் பொருள் உங்களை மகிழ்ச்சிப்படுத்துவதில்லை. அந்தப் போட்டியில் கிடைக்கும் பரவசம் உங்களை தற்காலிகமாக மகிழ்வூட்டுகிறது. அதனால்தான் அந்த பரவசத்தை நுகர அடுத்த மாடல் ஃபோனின் ஃபிளாஷ் சேல் நடக்கையில் போனை மாற்றும் முடிவுக்கு பலர் செல்கிறார்கள். கிட்டத்தட்ட குடிகாரனுக்கு ஒப்பான நிலை இது.

ஆசிரியராக இருக்கும் என் நண்பர் ஒருவர் ரெட்மி 5 ப்ரோ ஃபோன் ஒன்றை விளையாடுத்தனமாக ஆர்டர் செய்ய முற்பட்டார் (இது முதல் முறை). பிறகு வரிசையாக நான்கு ஃபிளாஷ் விற்பனைகளில் அவரது முயற்சிகள் தோல்வியடைந்தன. இறுதியில் அந்த போனை வாங்குவது என்பது ஒரு கவுரவப் பிரச்சினையானது. கடைசி முறை நண்பரிடம் ஏர்டெல் சிம்மை கடன் வாங்கி (அதுதான் அங்கே ஒழுங்காக சிக்னல் கிடைக்குமாம்), கிரெடிட் கார்டு தகவல்களை முன்கூட்டியே செயலியில் உள்ளிட்டு காத்திருந்து அந்த போனை வாங்கியிருக்கிறார்.

படிக்க:
நுகர்வு – கழிவு – பண்பாடு : புதிய கலாச்சாரம் நவம்பர் 2016
நூலறிமுகம் : பன்றித் தீனி – பிக் பாஸ் – கொலைகார கோக் – செயற்கை நுண்ணறிவு

அவர் போனை அதிகம் பாவிப்பவர் அல்ல. அவரது வாட்சப் பயன்பாடுகூட மிகவும் குறைவானதே. ஆனால் அந்த போனை வாங்கியதன் மூலம் அவர் மனம் ”ஆன்லைனில் பொருள் வாங்குவது பரவசமூட்டக்கூடியது. அதில் நீ ஒரு வீரனைப்போல உணரலாம்” என விளங்கிக்கொண்டிருக்கும். ஆகவே அடுத்த முறை அவருக்கு மனச்சோர்வு உண்டாகும்போதெல்லாம் அவர் ஆன்லைன் வணிக செயலிகளை மேய்வார். காரணம் அது தரும் பரவசம் மனச்சோர்வை விலக்கும் எனும் நம்பிக்கை அவருக்குள் செலுத்தப்பட்டுவிட்டது. சூதாட்டக்காரர்களை செலுத்துவது இத்தகைய அடிமைத்தனம்தான்.

இப்படியான ஒரு வாய்ப்பு இருப்பதால்தான் நிறுவனங்கள் பெரும் மூலதனத்தை ஆன்லைன் வணிகத்தில் கொட்டுகின்றன. அமேசான்தான் இந்தியாவின் பெரிய ஆன்லைன் வணிக நிறுவனம்; அதன் முதலாளிதான் இன்று உலகின் பெரும் பணக்காரர். இந்த ஒரு நிறுவனம்தான் அமெரிக்காவின் 40% நுகர்பொருட்களை விற்கிறது. அமெரிக்காவில் இதுவரை சந்தையை கட்டுப்படுத்தி வந்த வால்மார்ட் தமது விற்பனை உத்திகளை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இப்போது இருக்கிறது (வால்மார்ட் நடத்தியது ஒரு ரவுடி ராஜாங்கம், அவர்கள் கேட்ட விலைக்கு கொடுக்காவிட்டால் அந்த பொருளை சந்தையில் இருந்து ஒழிக்க வால்மார்ட்டால் முடியும். காரணம் சில்லறைவணிகம் பெருமளவு அவர்கள் வசம் இருந்தது).

அமேசான் இந்தியாவின் பெரிய போட்டியாளர் ஃபிலிப்கார்ட்டை இப்போது கையகப்படுத்தியிருப்பது வால்மார்ட் (ஃபிலிப்கார்ட் நிறுவனமானது ஈபே, மிந்த்ரா உள்ளிட்ட மேலும் சில இணையதள கடைகளை ஏற்கனவே கையகப்படுத்தியிருக்கிறது). இது அனேகமாக அமேசானுக்கு நெருக்கடி கொடுக்க வால்மார்ட் செய்த நடவடிக்கையாக இருக்கலாம். ஆன்லைன் வணிகத்தின் பெரும் சந்தையான இந்தியாவில் நுழையும் முயற்சியாக இருக்கலாம். அல்லது சந்தையில் நீடித்திருக்க ஆன்லைன் வணிகம் தவிர்க்க முடியாதது எனும் அனுமானமாக இருக்கலாம்.

இ காமர்ஸ் உலகின் இன்னொரு ராட்சசன் அலிபாபா இந்தியாவின் பேடிஎம் நிறுவனத்தில் பெரிய அளவில் முதலீடு செய்திருக்கிறது. இப்போது வாரன் பஃபட் நிறுவனம் அதில் கூடுதலாக முதலீடு செய்திருக்கிறது. ஆக இந்தியாவின் மிகப்பெரிய மூன்று ஆன்லைன் நிறுவனங்கள் வெளிநாட்டு கம்பெனிகள்தான். டாடா நிறுவனம் டாடா கிளிக் எனும் ஆன்லைன் நிறுவனத்தை நடத்துகிறது. ஸ்னாப்டீல் போன்ற பல கடைகளும் சந்தையில் போராடிக்கொண்டிருக்கின்றன. அவை இந்த மூன்று பகாசுரக் கம்பெனிகளிடம் தோற்கலாம் அல்லது கடையை அவர்களிடமே விற்றுவிட்டு கிளம்பலாம்.

எல்லோரும் இருக்கும்போது இந்தியாவின் ஓனர் அம்பானி மட்டும் சும்மாயிருப்பாரா? அவர் பங்கிற்கு ஏ ஜியோ எனும் செயலி வழி இணைய ஃபேஷன் கடையை நடத்துகிறார். ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ் எனும் பெயரில் 400க்கும் மேலான ஆயத்த ஆடைக் கடைகளை முகேஷ் அம்பானி நிறுவனம் நடத்துகிறது. அதே பெயரில் இணைய வழி வியாபாரமும் நடக்கிறது. இந்தியாவின் இரண்டாவது பெரிய வேலைவாய்ப்பு பிரிவு ஜவுளித்துறைதான். அதனை சந்தியில் நிறுத்தும் வேலையை அம்பானி செய்யும் வாய்ப்பு தெளிவாகத் தெரிகிறது. காரணம் ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ் ஆடைகள் பெரும்பாலும் மேட் இன் பங்களாதேஷ். ஏற்கனவே இந்தியாவின் ஏற்றுமதி சந்தையை வங்காள தேசம் பெருமளவு கைப்பற்றிவிட்டது. இப்போது திருப்பூரை கொஞ்சம் உயிர்ப்போடு வைத்திருப்பது உள்ளூர் சந்தைதான். அதையும் வாரி வாயில் போட களமாடுகிறார் அம்பானி.

சந்தையை ஆக்கிரமிக்கும் இந்தப் போட்டி ஒரு போரைப்போல நடந்துகொண்டிருக்கிறது. அமேசான் தமது கிரேட் இண்டியன் சேல் எனும் பெருவிற்பனை விழாவை இந்த மாதம் நடத்துகிறது. அதே நாட்களில் ஃபிலிப்கார்ட் பிக் பில்லியன் டே எனும் விற்பனை விழாவை நடத்துகிறது. பேடிஎம் தன் பங்குக்கு கோல்டுபேக் ஷாப்பிங் ஃபெஸ்டிவலை நடத்தவிருக்கிறது. மற்ற அல்லு சில்லுகளும் தன் பங்கிற்கு ஏதேனும் நடத்தலாம். இதற்காக கோடிகளைக் கொட்டி விளம்பரம் செய்கிறார்கள். ஆன்லைன் ஷாப்பிங் அடிமைகளின் தீபாவளி இந்த மாதம் பதினைந்தாம் தேதியே முடிந்துவிடும். அந்த அளவுக்கு தயாரிப்பு வேலைகள் நடக்கின்றன.

2015, 16 ஆம் ஆண்டுகளில் பிக் பில்லியன் டே விற்பனையின்போது ஃபிலிப்கார்ட்டின் சர்வர்கள் முடங்கின. அந்த அளவுக்கு இணையக்கூட்டம் அந்த தளத்தை மொய்த்தது. அதே ஆண்டுகளில் நடந்த விற்பனைத் திருவிழாக்களில் அமேசானின் டெலிவரி பன்மடங்கானது. இருசக்கர வண்டிகளில் டெலிவரி ஆன தெருக்களில் எல்லாம் டாடா ஏஸ், டெம்போக்களில் டெலிவரி ஆனதை பார்த்திருக்கிறேன் (இரண்டாம் நிலை நகரங்களில்). ஆன்லைன் ஷாப்பிங்கை எப்படி திறம்பட செய்வது என ஆலோசனை வழங்கும் செயலிகள்கூட வந்தாயிற்று. பேடிஎம் நிறுவனம் இறக்குமதிப் பொருட்களை விற்பதற்கென்றே வேர்ல்டு ஸ்டோர் எனும் பிரத்தியோக பகுதியை தமது செயலியில் வைத்திருக்கிறது. அதில் தோடு, வளையல், பொம்மை என சகலமும் கிடைக்கின்றது. ஃபேன்சி ஸ்டோர் முதல் பிளாட்பாரக்கடை வரை எங்கும் செல்லாமல் உட்கார்ந்த இடத்திலேயே சீன சந்தையில் நீங்கள் பொருள் வாங்க இயலும். பிலிப்கார்ட் தமது கிட்டங்கிகளை முழுமையாக ரோபோக்கள் மூலம் கையாள நடவடிக்கை எடுத்திருக்கிறது. அதன் மூலம் 2 மணி நேர டெலிவரிகூட சாத்தியப்படலாம். அமேசான் ஏற்கனவே இதனை செய்ய ஆரம்பித்துவிட்டது.

இந்தப் போட்டியினால் நமக்கு எல்லாமே சல்லிசாக கிடைக்கிறது என நம்பிவிட வேண்டாம். விலையில் பல தில்லுமுல்லுகள் நடக்கின்றன. தி.நகர் தெருக்கடைகளில் நூறு ரூபாய்க்கு கிடைக்கும் மொபைல் கேஸ் இந்த தளங்களில் 200 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது. சாதாரண மருந்துக் கடைகளில் 170 ரூபாய்க்கு விற்பனையாகும் செரிலாக் (குழந்தைகள் உணவு) அமேசானில் 286 ரூபாய், அதில் அதன் உண்மையான விலை 499 என பொய்யாக குறிப்பிட்டிருக்கிறார்கள். அமேசானின் தள்ளுபடி விலையைக் காட்டிலும் உள்ளூர் விலை 100 ரூபாய் குறைவு.

பேடிஎம் ஒரு சீன தயாரிப்பு கைக்கடிகாரத்துக்கு 100% கேஷ்பேக் என அறிவிக்கிறது (கேஷ்பேக் என்பது பொருளுக்கு நீங்கள் கொடுத்த பணம் சில நாளில் உங்கள் பேடிஎம் கணக்கில் வரவு வைக்கப்படும். அதற்கான பொருட்களை பிறகு நீங்கள் வாங்கிக்கொள்ளலாம்). ஆனால் அதன் விலையில் இருக்கிறது பித்தலாட்டம். அந்த பிளாட்பார கடிகாரத்தின் விலை 3300 ரூபாய். ஆக 100 ரூபாய் கடிகாரத்தை 3300 ரூபாய் கொடுத்து வாங்கினால் பேடிஎம் உங்களுக்கு 3300 ரூபாயை திருப்பித்தரும் . அதுவும் பணமாக அல்ல, அவர்களிடமே பொருள் வாங்கி அந்த பணத்தை கழிக்க வேண்டும். (இது அப்பட்டமான ஏமாற்றுவேலை என்பதை சராசரி அறிவுடைய எவரும் கண்டுபிடிக்கலாம். ஆனால் அந்த கடிகாரம் 5 நிமிடங்களில் விற்றுத்தீர்கிறது.).

படிக்க:
குன்றத்தூர் அபிராமி : கலாச்சார நீதிபதிகளின் தற்குறித் தீர்ப்புகள்
மியூசிக்கல்லி செயலி உருவாக்கும் ரசனை எத்தகையது ?

இதன் சேதாரங்கள் மூன்று இடங்களில் வெளிப்படலாம்.

முதலில் இந்த ஷாப்பிங் மனோபாவம் நமது நடத்தையில் பாரிய மாற்றங்களை உருவாக்குகிறது. ஒரு தேவை உருவாகி அதற்காக நாம் ஒரு பொருளை வாங்குவதுதான் வழக்கமான நடைமுறை. ஆனால் இப்போது ஷாப்பிங் தளங்கள் பொருளைக் காட்டி, உணர்வுகளைத் தூண்டி தேவையை வலிந்துத் திணிக்கின்றன. முதலில் ஒரு பரவச உணர்வுக்கு ஆட்பட்டு பிறகு அது பதட்டக்குறைப்பு செயலாக சுருங்குகிறது (கிட்டத்தட்ட சாராயத்தைப்போல). அதாவது ஷாப்பிங் செய்தால் நன்றாக இருக்கும் எனும் நிலைமாறி ஷாப்பிங் செய்யாவிட்டால் கைநடுக்கும் எனும் நிலைக்கு செல்லலாம். வெறுமையாக உணரும்போது ஷாப்பிங் தளங்களை மேயும் வேலையை பலரும் செய்வதை காணமுடிகிறது. மொபைல் அடிமைத்தனத்தைப்போல ஷாப்பிங் அடிமைகள் (அடிக்ட்) பரவலாக உருவாகிறார்கள்.  குக்கிராமங்களை வரை நீளும் ஸ்மார்ட்போன் பயன்பாடும் வலுப்படும் ஆன்லைன் வணிக கட்டமைப்பு இந்த அடிமைத்தனத்தை இன்னும் தீவிரமாக்கலாம்.

பிளாட்பார கடிகாரத்தின் விலை 3300 ரூபாய்.

இரண்டாவதாக இது நம் நாட்டில் இருக்கும் சிறுவணிக கட்டமைப்பை கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கும். இணையத்தில் இல்லாத பொருளே இல்லை எனும்போது, எல்லோர் கையிலும் ஸ்மார்ட் போன்கள் இருக்கும்போது, பணம் செலுத்தும் வழிகள் எளிமையாக இருக்கும்போது மக்கள் அதன் பக்கம் திரும்புவது நடந்தே தீரும். அவை இறுதியில் சாதாரண சிறு வியாபாரிகளை பாதிக்கும். மேலும் இந்த சப்ளை செயின் அளிக்கும் வேலைவாய்ப்பு முற்றிலும் நிரந்தரமில்லாதது. மூட்டை துக்கி முதுகுவலி வந்த பின்னால் அந்த டெலிவரி ஊழியர்கள் என்ன ஆவார்கள் என்பதற்கு எந்த பதிலும் இல்லை. அமேசானிலேயே விஷம் வாங்கிக்குடித்து சாகவேண்டியதுதான். மேலும் தேவையற்ற பொருட்களுக்கு செலவிடும் மக்கள் தேவையானவற்றுக்கு செலவைக் குறைப்பார்கள். அதுவும் மறைமுகமாக இந்தியாவின் வணிக கட்டமைப்பைத்தான் சிதைக்கும்.

இறுதியாக இந்த ஷாப்பிங் கலாச்சாரம் சேர்க்கும் குப்பைகள் ஒரு பெரும் சுற்றுச்சூழல் பிரச்சினை. வரும் ஜனவரி முதல் பாலித்தீன் மற்றும் பிளாஸ்ட்டிக் பயன்பாட்டை ஒழிக்க அரசு முடிவெடுத்திருக்கிறது (பைகள், டீ கோப்பைகள் போன்றவை). கிருஷ்ணகிரி வட்டாரத்தில் இப்போதே தடை வந்தாயிற்று. ரோட்டுக்கடை போடுபவர்கள் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் 5000 ரூபாய் அபராதம். ஆனால் உலகின் பெரும் பணக்காரர் அமேசானுக்கு அது பொருந்தாது. பொருட்களை சேதமாகாமல் அனுப்ப உபயோகிக்கப்படும் பிளாஸ்டிக் உறைகளும் பபுள் பேக்கிங் தாள்களும் தெர்மாகூல் அட்டைகளும் பெரும் சூழல் அபாயங்கள். மேலும் அளவுக்கு மீறி நுகரப்படும் தரமற்ற (மலிவான) சீன பொருட்கள் இன்னொரு சூழல் அபாயம். அவை வெகுசீக்கிரமே குப்பைக்குப் போகும். இப்போது சிறு நகரங்களில்கூட குப்பை கொட்ட இடமில்லை. இவற்றை கையாளவும் கட்டுப்படுத்தவும் எந்த திட்டமும் நம்மிடம் இல்லை.

நாம் இவை குறித்து கவலைப்பட ஆரம்பிக்கும்போது சிக்கல் கைமீறிப்போயிருக்கும். என்ன செய்யலாம்?

– வில்லவன்

அரசியல் விமர்சகர். வினவு தளத்தில் “வில்லவன் சொல்” எனும் தலைப்பில் பத்தி எழுதுகிறார்.

நூல் அறிமுகம் : நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி

வனைக் கொன்றுவிடலாமென்று முடிவு செய்திருக்கிறோம். உங்களில் யார் இவனைச் சுட்டுக் கொல்கிறீர்கள்?

யாரும் எதுவும் பேசவில்லை .

லட்சுமணாவின் கண்டிப்பு மிகுந்த குரல் திரும்பவும் உயர்ந்தது.

தயாராக இருப்பவர்கள் கை தூக்குங்கள். மற்ற மூன்று பேரும் தயங்கிக் கொண்டே கைகளைத் தூக்கினார்கள். நான் கண்டு கொள்ளாமலிருந்து விட்டேன்.

“உனக்கென்ன, முடியாதா?

டி.ஒய்.எஸ். பி.யின் கேள்வி.

“இவனை நாங்கள் உயிருடனல்லவா பிடித்தோம், இவன் எந்த எதிர்ப்புமே காட்டவில்லையே? இவனை நீதிமன்றத்தில் அல்லவா ஆஜர்படுத்த வேண்டும்?”

“ப்ளடி, அதைத் தீர்மானிக்கிறது நீயா?”

லட்சுமணா சொன்னார்:

“இந்த வேலையை நீதான் செய்ய வேண்டும். அல்லது, நக்சலைட்களுடன் நடந்த மோதலில் மேலும் ஒரு கான்ஸ்டபிள் கொல்லப்படலாம்.”

‘நான் வர்க்கீசின் முகத்தைப் பரிதாபமாகப் பார்த்தேன். ஒரு நிமிட யோசனை. பிறகு, வர்க்கீசை நானே கொன்று விடுவதாகத் தீர்மானித்தேன்.  “செய்கிறேன்.  குரலையுயர்த்திச் சொன்னேன். விசையை இழுத்தேன், குண்டு தெறித்தது. மிகச் சரியாக இடதுபுற நெஞ்சில்.”

குண்டு பாய்ந்த சத்தத்தையும் மீறி வர்க்கீசிடமிருந்து இறுதி சத்தம் முழங்கியது. “மாவோ ஐக்கியம் சிந்தாபாத். புரட்சி. வெல்லட்டும்”

1970 பெப்ரவரி 18 ஆம் தேதி சாயுங்கால நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தைப் பற்றிய ஒரு சுய வாக்குமூலம்தான் பி.ராமச்சந்தின் நாயர்  எனும் காவலரை வரலாற்றுத் திசை வெளிக்குக் கொண்டு வருகிறது.  சம்பவம் நிகழ்ந்த ஏழாண்டுகளுக்குப் பின் அதைக் குறிப்புகளாக எழுதி வர்க்கீசின் வலதுகரமாக அறியப்பட்ட தோழர் ஏ.வாசுவிடம் ஒப்படைத்த பிறகும் இரு பத்தாண்டுகளுக்குப் பிறகுதான் அந்தச் சுய ஒப்புதலை உலகம் அறிந்து கொண்டது. வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு போலீஸ்காரர் தனக்குச் செய்ய வேண்டியதிருந்த ஒரு பாதகச் செயலைச் சுயமாகவே ஒப்புக் கொண்டிருக்கிறார்: “நான் தான் அதைச் செய்தேன். என் கைகளாலேயே அதைச் செய்ய வேண்டியதாயிற்று. நான் இதோ உங்களெதிரில் நிற்கிறேன். என்னைத் தண்டியுங்கள்” என்று.

இதுவரை ஏ.வர்க்கீஸ் எனும் நக்சலைட் புரட்சிக்காரனின் சாவைப் பற்றி ஊடகங்களும் கவிஞர்களும் உருவாக்கியெடுத்த புனைவுகள் மட்டுமே நமது நினைவுகளிலிருந்தன. ஒடுக்கப்பட்டோரின் பெருமான் என்றறியப்பட்டிருந்த வர்க்கீஸ் வயநாட்டின் காட்டில் வைத்து காவல்துறையால்… இடுப்பு வரை கொதிக்கும் நீரில் வேக கண்களைத் தோண்டியெடுத்து, உடலைச் சல்லடையாகச் சுட்டுத் துளைத்து, கையில் ஒரு நாட்டுத் துப்பாக்கியை வைத்து இன்று வர்கீஸ் பாறை என்றறியப்படும் பாறையின் மீது மல்லாந்தபடி படுக்க வைத்து…

ஒருமுறை ‘நாடுகத்திக’ என்ற நாடகத்திற்கு ஒரு வர்கீஸ் தினத்தன்று நானும் அங்கே போயிருந்தேன். ஆதிவாசிகள் நிறைந்த ஒரு சபை நாடகத்தின் இறுதிகட்டத்தில் தொல்குடித் தெய்வங்களை அழைத்து தங்களை விட்டுப் பிரிந்து சென்ற மூத்தார்களை அழைத்து நாடகத்தின் கதாபாத்திரங்கள் திமிர்த்தாடிய போது பார்வையாளர்களாக இருந்த ஆதிவாசிகள் அத்தனைபேரும் அவர்களுடன் சேர்ந்து நடத்திய ஆட்டம், ஒரு போதுமே மறக்க முடியாத நாடக அனுபவமாகவும் அரசியல் அனுபவமாகவும் இருக்கிறது. அப்போதும்கூட வர்க்கீசின் மரணம், ஒரு மோதலின்போது நடந்த கொலை என்ற மூடு பனிக்குள்தான் ஊடகங்களும் கவிஞர்களும் உருவாக்கியெடுத்த புனைவுகள் இருந்தன.

1970-ல் கேரளத்தில் நக்சல்பாரிகளைப் போலீசார் வேட்டையாடியபோது பழங்குடி மக்களுக்காகப் போராடிய தோழர் வர்க்கீசை, சி.ஆர்.பி. போலீஸ் கான்ஸ்டபிள் ராமச்சந்திரன் நாயர் மேலதிகரியின் நிர்ப்பந்தத்தால் தனக்கு ஆதர்சமான மனிதரையே தன் கைகளால் கொன்றதைப் பற்றி 20 வருடங்களுக்குப் பின்னர் வெளியிட்ட தன் வாக்குமூலமே இந்நூல்.

அன்றுவரை வெறுமொரு காவலராக மட்டுமே இருந்த ராமச்சந்திரன் நாயரின் ஒப்புதல் வாக்குமூலம் வெளிவந்தபிறகு, முப்பதாண்டுகளுக்கு முன் வயநாடன் காடுகளில் நடந்தவைகளைப் பற்றி உலகம் அறிந்து கொண்டது. அவர் சொல்கிறார். “இப்படித்தான் நடந்தது. என்னைக் கொல்ல வைத்தார்கள். எனக்குச் செய்ய வேண்டியதாயிற்று. முப்பது ஆண்டுகளாக நான் இந்தப் பாரத்தைச் சுமந்து திரிந்தேன். எனக்கு இதை வெளி உலகிற்குச் சொல்லியேயாக வேண்டும். உங்களில் சிலரிடம், தோழர் வர்க்கீசின் மிக நெருங்கிய சிலரிடம் சொல்லியும்கூட நீங்கள் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையே? இதோ, நான் தஸ்தாவேஸ்கியின் ஒரு கதாபாத்திரம் போல்…”

அவசர நிலைக்காலம் முதல் தோழர் ஏ.வாசுவுடன் மிக நெருக்கமாகப் பழகி, அவரை அறிந்து கொண்டவன் என்ற நிலையில் நான் உறுதியாக நம்புகிறேன். வாசு அண்ணன், ராமச்சந்திரன் நாயரின் சுய ஒப்புதல் வாக்குமூலம் பற்றிய விஷயத்தை மறந்துதான் போயிருப்பாரென்று. அந்தக் குறிப்பு எங்கேயோ வைத்துத் தவறிவிட்டது. ஆனால் வர்க்கீசின் மரணத்தைப் பற்றிய உண்மைகளை அவசர நிலை வாபஸ் பெறப்பட்டதன் பின் நடந்த வர்க்கீஸ் தினம் முதல் (கேரளத்தில் முதன் முதலாக நக்சலைட்களின் இந்தப் பொதுக்கூட்டம் கோழிக்கோடு டவுண் ஹாலில் வைத்து நடந்தது) ஒவ்வொரு வர்க்கீஸ் தினத்தையும் நடத்திக் கொண்டிருக்கும் இந்தத் தோழர், வர்க்கீசின் நினைவுகளை உரத்த குரலில் பேசிக் கொண்டுதானிருக்கிறார்.

ஆனால் இந்த உண்மைகளுக்கு அடிப்படையாக இருக்கும் இந்த சுய ஒப்புதலின் குறிப்புகளை அவர் மறந்தே போய்விட்டார். ஏழெட்டு வருடங்களாகத் தொடர்ந்து சிறைவாசம் அனுபவித்து விசாரணைகளுக்குள்ளாகி சித்திரவதைகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒருவர் சராசரி மனோநிலையுடன் இருக்க முடியாது என்பதுதான் இயல்பு. அதன் காரணமாக அந்த மறதி, அவர் ஏற்ற சித்திரவதைகளின் கொடூரத்தையே காட்டுகிறது. தோழர் வாசு, தோழர் வர்க்கீசின் வீர மரணம் தொடர்பான உண்மைகளை, அதைத் தெரிவித்த காவலரின் சுய ஒப்புதலை எதற்காக மறைக்க வேண்டும்?

படிக்க:
வரலாறு: ஒரு மன்னன் மனிதனான கதை
காஷ்மீர்: கொலைகார இந்திய இராணுவத்தை நீதிமன்றம் தண்டிக்காது

கொஞ்சம் காலதாமதமாக நடந்திருந்தாலும் வெளிப்படுத்தப்பட்ட இந்த வாக்குமூலம், இறுதியாக நடந்த நமது புரட்சி இயக்கத்தை அதிகார வர்க்கம் எதிர்கொண்ட முறை, நாம் அவற்றை வாய்மூடி பார்த்து நின்ற விதம் திரும்பவும் ஒருமுறை விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்களாயிற்று. நமது அணுகுமுறைகள் ஜனநாயக விதிப்படி நடந்தேறுவதாக நாம் நம்பிக்கொண்டிருப்பதில் என்ன அர்த்தமிருக்கிறது. இந்தக் காவலரின் மனசாட்சி முன் வைக்கும் கேள்விகள் மிக எளிமையானவை.

குற்றம் சாட்டப்பட்ட ஒருவனைப் பிடித்தால் அவனை நீதிமன்றத்தில் அல்லவா காவல் துறையினர் ஆஜர்படுத்த வேண்டும்? குற்றவாளியென்று அவனை முத்திரையடித்து அவனுக்குத் தண்டனையும் வழங்குவதற்கான அதிகாரம் காவல் துறைக்கு இருக்கிறதா? இதைச் செய்ய வேண்டியது நீதித்துறையல்லவா? நீதித் துறையின் பொறுப்புகளைக் காவல்துறையிடம் ஒப்படைத்தது யார்? ஜனநாயகக் கட்டமைவின் கீழிருக்கும் ஒவ்வொரு பிரஜைகளாலும் கேட்கப்படவேண்டிய கேள்விகள் இவை.

இந்தக் கேள்விகளை நம் போன்ற குடிமக்கள் கேட்காமலிருக்கும்போது ஒரு காவலர் இரண்டு கைகளையும் மேலே உயர்த்திப் பிடித்து இதைக் கேட்கும்போது நாம் அப்படியே கூனிப் போகிறோம். நம்முடைய ஜனநாயக உணர்வும் மொத்தமே இவ்வளவுதானா? நம்மிடையிலுள்ள ஒருவரை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும் செழுமைப்படுத்தவும் முயற்சி செய்த ஒருவரை இப்படியெல்லாம் செய்த பிறகும் நாம் பிரஜைகள், ஆகா!

குற்றம் சாட்டப்பட்ட ஒருவனைப் பிடித்தால் அவனை நீதிமன்றத்தில் அல்லவா காவல் துறையினர் ஆஜர்படுத்த வேண்டும்? குற்றவாளியென்று அவனை முத்திரையடித்து அவனுக்குத் தண்டனையும் வழங்குவதற்கான அதிகாரம் காவல் துறைக்கு இருக்கிறதா? இதைச் செய்ய வேண்டியது நீதித்துறையல்லவா?

எதுவாயினும் வழக்கு இப்போது நீதிமன்றத்தில் இருக்கிறது. பொதுவாகவே, இப்படியொரு சுய ஒப்புதலை ஒருவர் வெளிப்படுத்தினால் அவரை காவல்துறையின் தரப்புசாட்சியாக்கி வழக்கைப் பதிவு செய்வதுதான் வழக்கம். இப்படித்தான் செய்யவும் வேண்டும். ஆனால், இங்கே சி.பி.ஐ. குற்றத்தை வெளிப்படுத்தியவரையே முதல் பிரதிவாதியாக்கி குற்றப்பத்திரிகையை அளித்திருக்கிறது. ராமச்சந்திரன் நாயர் பதறிவிடவில்லை.

அவர் சொல்கிறார். “நீதிமன்றம் தன்னைத் தண்டிக்க வேண்டும். வாழ்க்கையில் செய்த பாதகச் செயலுக்கானத் தண்டனையாகச் சிறையிலடைக்கப்பட வேண்டு மென்பதுதான் தனது கடைசி ஆசை” என்று. ஆனால், தன்னுடனிருக்கும் சக பிரதிவாதிகளான தனது மேலதிகாரிகளும் தன் இடது புறத்திலும் வலது புறத்திலுமாக நின்று தண்டனை அனுபவிக்க வேண்டும்; தவறு செய்தவன் தண்டனையை அனுபவித்தேயாக வேண்டும்.

இதில், எல்லாக் குற்றவாளிகளும் தண்டிக்கப்படுவார்களா, முக்கியக் குற்றவாளிகள் மட்டும் தப்பித்துக் கொள்வார்களா, அல்லது குற்றத்தை ஒப்புக் கொண்ட பாவத்திற்கு, இந்தக் காவலர் மட்டுமே தண்டிக்கப்படுவாரா, என்னதான் நடக்கப் போகிறது என்ற மன உணர்வுகளை நாம் தற்போது வெளிக்காட்ட வேண்டாம். வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால். இதனிடையில்தான் ராமச்சந்திரன் நாயர் தனது நினைவுகளைப் பதிவு செய்து கொள்ளத் துவங்கினார்.

ஒரு சுய ஒப்புதல் வாக்குமூலம் என்ற அளவில் கவனிக்கப்பட வேண்டிய ஒருவரது வாழ்க்கைக் கதை. அந்த முகம், அந்தப் பாவம், தைரியம், சஞ்சலமின்மை… தோழரின் அந்திம நிமிடங்களைப் பற்றி எழுதுவதற்கு இந்த ஆறாம் வகுப்பு படித்தவனிடம் வார்த்தைகளில்லை என்ற தயக்கத்தை வெளிப்படுத்தியிருந்தாலும் இது, அவரது பணிவை மட்டும்தான் காட்டுகிறது. இந்த வாழ்க்கைக் கதையினூடே நான் பல தடவை கடந்து சென்று, வாசிப்பின் தடங்கல்களைத் தவிர்ப்பதற்காக மட்டும் சில தலையீடுகள் செய்த ஒருவன் – இந்தப் புத்தகத்தின் எடிட்டர் என்ற நிலையில் பொறுப்புணர்வுடன் இந்தப் புத்தகத்தை முன் வைக்கிறேன். பொக்குடனின், ஸி.கே.ஜானுவின், நளினி ஜமீலாவின், வினயாவின் நினைவுப் பகிர்வுகள் போல் மலையாளத்தில் எழுதப்பட்ட விளிம்பு நிலை வாழ்வியல் பதிவுகளில் இதுவுமொன்று.

படிக்க:
சட்டீஸ்கர் : அதிர்ச்சி நிறைந்த கதைகளால் நிரப்பப்பட்ட பஸ்தார் சாலை !
திரட்சியுற்ற வெறுப்பின் ஆயுதங்கள் – ஷோமா சவுத்ரி

நான் இவ்வளவு பொறுப்புணர்வுடன் இந்தப் புத்தகத்தை வெளிக்கொண்டு வர முன் வருவதற்கானக் காரணம், இது ஒப்புதல் வாக்கு மூலம் என்பது மட்டுமல்ல, இந்தப் புத்தகம் முப்பத்தி மூன்றரை வருடங்கள் காக்கியுடுத்தி ஒரு காவலராக நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவர், அப்பட்டமாகத் திறந்து காட்டும் ஒரு வேதனை மிகுந்த வாழ்க்கைக் கதையும் என்பதுதான். தனது 16வது வயதில் ஒரு டேப்பிங் தொழிலாளியாகத் தனது வாழ்க்கையைத் துவங்கி இப்போது ஒரு பாதுகாப்புப் பணியாளராக வாழ்க்கையைக் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த சாதாரண மனிதன் காக்கி உடையின் அரசியல் என்னவென்பதை நெஞ்சைத் தொட்டு இந்த சுயவரலாற்றினூடே வெளிப்படையாக அறிவித்துக் கொள்கிறார்.

‘மனோரமா’ வார இதழில் வெளியான பழைய ‘டோம்ஸ்’ கேலிச் சித்திரத்தையும் நினைவுக்குக் கொண்டு வருகிறார். ‘நான்கு மனிதர்களும் ஒரு காவலரும்’. காவலரால் ஏன் ஐந்தாவது மனிதனாக ஆக முடியவில்லை. ராமச்சந்திரன் நாயர் சொல்கிறார். “நீங்கள் இவ்வளவு சம்பளம் கொடுத்துப் பாதுகாக்கும் காவல்துறை எப்படி நடந்து கொள்கிறதென்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். அதையறிந்து கொள்வதற்கான உரிமை உங்களுக்கு இருக்கிறது. உங்களிடமிருந்து சம்பளம் வாங்குபவர்கள் நாங்கள். உங்களால் நிலைபெற்றிருக்கிறது இங்குள்ள அமைப்புகள். காக்கியென்றால் என்னவென்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்”. காக்கிக்குள்ளிருக்கும் காவல்துறை எதுவென்பதை  வழக்கமான ஒரு சுய வரலாறுபோல் இந்த சுய ஒப்புதலை வாசிக்கத் துவங்கும் நாம் ஒரு காவலரின் வாழ்க்கையை பற்றி மட்டுமல்ல, நமது காவல்துறையைப் பற்றியும் அறிந்து கொள்கிறோம்.

நம் மொழியில் இதற்கு முன் இப்படியொரு அறிமுகம் நடந்ததில்லை. ஆகவே, நமக்கு இந்த சுயசரிதை ஒரு சாதாரண காவலரின் திடுக்கிடச் செய்யும் சுய அறிவிப்பாகவும் மாறுகிறது.

தனது 16வது வயதில் ஒரு டேப்பிங் தொழிலாளியாகத் தனது வாழ்க்கையைத் துவங்கி இப்போது ஒரு பாதுகாப்புப் பணியாளராக வாழ்க்கையைக் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த சாதாரண மனிதன் காக்கி உடையின் அரசியல் என்னவென்பதை நெஞ்சைத் தொட்டு இந்த சுயவரலாற்றினூடே வெளிப்படையாக அறிவித்துக் கொள்கிறார்.

காவல்துறையைப் பற்றி நமது திரைப்படங்கள் உருவாக்கும் ஒரு புனைவிருக்கிறதல்லவா? மம்முட்டியும், சுரேஷ் கோபியும், இப்போது பிரித்விராஜும் பிரதிநிதித்துவப்படுத்தும், நீதிமான்களும் யோக்கியர்களுமான காவல் அதிகாரிகள், இன்னசென்டும், ஜகதியும், மாமுக்கோயாவும், இந்தரன்சும் பிரதிநிதித்துவப்படுத்தும் சாதாரண காவலர்கள் எனும் கோமாளியும் ஏமாளியுமான வேடங்கள். அவசர நிலைக் காலத்தில் கக்கயம் முகாம் துவங்கி பல தடவைகள், பல இடங்களில் வைத்துக் காவலர்களுடன் பழகி, அவ்வப்போது அவர்களிடமிருந்து சிறு அளவிலான அடி உதையும் வாங்கி, சமூகப் பரப்பில் தொடர்ந்து இயங்கி வருபவன் என்ற நிலையில், என் அனுபவம் முற்றிலும் வேறானது.

நம்முடைய காவலர்கள் இதற்கு நேர் எதிரானவர்கள். நமது சாதாரணக் காவலர்கள் ஊமைகள். அவர்களுக்கு ஏமாளிகளும் கோமாளிகளுமாக ஆக வேண்டியச் சூழல்கள் உருவாவதற்கானக் காரணங்கள், காவல்துறையின் அதிகார மனோபாவங்களும் வர்ணாஸ்ரம் படிநிலைகளில் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற நிலையில் அவர்கள் அனுபவிக்க நேரும் கசப்பான உண்மைகளும்தான். தோளிலிருக்கும் நட்சத்திர அடையாளங்களின் எண்ணிக்கை அதிகரிக்குந்தோறும் அவர்களது மனவளம் குறைந்துகொண்டே வருகிறது. நேரடியாகப் பொருள் கொள்வதனால் அவர்கள் குற்றவாசனையுள்ளவர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்களென்பதுதான் அனுபவ உண்மை. இந்த உண்மையை எதிர்கொள்வதற்கு ஒரு ஊடகம் என்ற நிலையில் திரைப்படங்களால் இயலாமலாகி விடுகிறது.

ஆகவே, அவர்கள் அதிகார மையங்களைத் திருப்திபடுத்தும், மேலே எல்லாமே சரியாகத்தானிருக்கிறதென்பது போன்ற பிம்பங்களைத் தான் வார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பரத் சந்திரன் ஐ.பி.எஸ். எனும் சுரேஷ் கோபியின் புதிய திரைப்படம் இதை இப்போது எழுதிக் கொண்டிருக்கும்போது தியேட்டருக்கு வந்திருக்கிறது. இந்த வரிசையில் வந்த கடைசித் திரைப்படம் இது.

படிக்க:
மரணத்தை வென்றவன் நினைவைத் துரத்துகிறான் !
நக்சல்பாரி இயக்கத்தின் வரலாறு !

ஒரு விஷயத்தை உரத்தக் குரலில் கேட்டு நான் இந்த முன்னுரையை முடித்துக் கொள்கிறேன். பி.ராமச்சந்திரன் நாயர் எனும் இந்த சாதாரணமான ஒரு காவலர் எழுதியதைப்போல் சுய வாழ்க்கையை வெளிப்படையாகத் திறந்துகாட்ட ஒரு சுய ஒப்புதல் வாக்குமூலம் தர ஏதாவதொரு ஐ.பி.எஸ்.காரர் முன்வருவாரா? அப்படியொன்று நடக்கும் வரை ராமச்சந்திரன் நாயரின் இந்த சுய வரலாறு அதன் நேர்மையின் பொருட்டு வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்கும், எளிய காவலர் ஒருவரது வாழ்க்கைக்கு வேறென்ன ஆதாரம் வேண்டும்?

இன்னசென்ட், ஜகதி, மாமுக்கோயா, இந்தரன்ஸ் வேடங்களில் கேலி செய்யப்படும் அத்தனை காவலர்களது வாழ்க்கையின் மதிப்பீடுகளையும் இந்தப் புத்தகம் மீட்டெடுத்திருக்கிறது. ஒரு காவலரால் மட்டுமே இது போன்ற  புத்தகத்தை எழுத முடியும், உயரதிகாரிகளால் முடியாது. மிகுந்த நம்பிக்கையுடன் நான் இந்தப் புத்தகத்தை வாசகர்களின் முன்வைக்கிறேன்.

(”பரத் சந்திரன் ஐ.பி.எஸ்., இது போன்ற ஒரு புத்தகம் எழுதுவாரா ?” என்ற தலைப்பில் சிவிக் சந்திரன் எழுதிய இந்நூலுக்கான முன்னுரை)

நூல்: நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி
மலையாள மூலம்: ராமச்சந்திரன் நாயர்
(தமிழில்: குளச்சல் மு.யூசுப்)

வெளியீடு:மக்கள் கண்காணிப்பகம்,
6, வல்லபாய் சாலை, சொக்கிகுளம், மதுரை – 625 002.
பேச: 0452-2531874
மின்னஞ்சல்: info@pwtn.org

பக்கங்கள்: 214
விலை: ரூ.120.00

இணையத்தில் வாங்க: tamil books online | Common Folks | new book lands

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு:
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி: 99623 90277

ஆப்பிள் நிறுவன அதிகாரியை கொலை செய்த உ.பி. போலீசு : இது 67- வது என்கவுண்டர் கொலை !

ப்பிள் நிறுவன விற்பனை அதிகாரி பணி முடித்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது உத்திரப் பிரதேச போலீசின் துப்பாக்கிச் சூட்டில் பரிதாபமாக பலியாகியிருக்கிறார். இந்துத்துவ ரவுடி சாமியார் ஆதித்யநாத் பதவியேற்றதிலிருந்து தொடங்கிய என்கவுண்டர் பலிகளின் பட்டியலில் ஆப்பிள் நிறுவன விற்பனை அதிகாரி 67-வது நபராக சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு (28.09.2018) தனது சக பணியாளருடன் காரில் பயணித்துக்கொண்டிருந்தார் ஆப்பிள் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றிக்கொண்டிருந்த விவேக் திவாரி. லக்னௌ அருகே இவர்களுடைய வாகனத்தை இருசக்கர வாகனத்தில் வந்த போலீசார் இருவர் வழிமறித்துள்ளனர். ஒரு போலீசுக்காரர் கையில் இருந்த லத்தியால் காரின் கண்ணாடி வழியே விட்டு தாக்கி நிறுத்த முயன்றிருக்கிறார். இதில் பதட்டமடைந்த விவேக் திவாரி, தொடர்ந்து காரை இயக்கியிருக்கிறார். இன்னொரு போலீசுக்காரர், எடுத்த எடுப்பிலேயே துப்பாக்கியை எடுத்து விவேக் திவாரியை சுட்டிருக்கிறார். இரத்த வெள்ளத்தில் சிறிது தூரம் சென்ற அந்தக் கார் பாதையோரம் இருந்த சுவரில் மோதி நின்றிருக்கிறது.

கொல்லப்பட்ட விவேக் திவாரி.

காரில் உடன் பயணித்த அலுவலக பெண் சனா கான், உயிருடன் இருந்த அவரை மருத்துவமனையில் சேர்க்க அருகில் இருந்தவர்களிடம் உதவி கேட்டிருக்கிறார். ஆனால், எவரும் உதவவில்லை.

“சாலையின் இருபுறமும் ட்ரக்குகள் நின்றன. நான் அன்று என்னுடைய போனை வீட்டிலேயே விட்டுவிட்டேன். சாரின் போன் லாக்-ஆகி விட்டது. அருகில் இருந்தவர்களிடம் நிலைமையைச் சொல்லி போனைக் கேட்டேன். எவரும் தரவில்லை. 15 நிமிடம் கழித்து போலீசு ரோந்து வாகனம் வந்தது, அவர்கள் ஆம்புலன்சை அழைத்தார். அது வரவும் தாமதமானதால் போலீசு வாகனத்தில் கொண்டு செல்லக் கேட்டேன். மருத்துவமனைக்கு சாரை கொண்டு சென்றோம். ஆனாலும் காப்பாற்ற முடியவில்லை” என்கிறார்.  நடந்த விவரங்கள் குறித்து போலீசு வாக்குமூலம் வாங்கிக் கொண்ட பிறகும் தன்னை கண்காணிப்பதாக சனா கான் பயம் கொள்கிறார்.

‘தேவையில்லாமல் ஆயுதத்தை பயன்படுத்திய’ குற்றத்துக்காக பிரசாத் சவுத்ரி, சந்தீப் என்ற இரு போலீசுக்காரர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறுகிறது உ.பி. போலீசு. சுட்டுக்கொல்லப்பட்டவரின் பெயர் விவேக் திவாரி என்பதாலும் அவர் ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றுகிறவர் என்பதாலும் இந்த ‘நடவடிக்கை’ எடுக்கப்பட்டிருக்கிறது என யூகிக்கலாம்.

இதுவரை உ.பி.யில் 1500 என்கவுண்டர்கள் நடத்தப்பட்டிருக்கின்றன; அதாவது ஆதித்யநாத் பதவி ஏற்ற பிறகு. இதில் குற்ற சம்பவங்களில் தொடர்புடைய 66 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 700 பேர் காயங்களுடன் தப்பினர். 4 போலீசுக்காரர்கள் இந்த மோதலில் இறந்துள்ளனர். 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த என்கவுண்டர் ‘ஆபரேசனி’ன் போது காயமடைந்துள்ளனர்.

சுட்டுக்கொன்ற போலீசு கான்ஸ்டபிள் பிரசாத் சவுத்ரி.

இந்த ஆண்டு மே மாதம், முசாஃபர் நகரில் 50-வது என்கவுண்டர் கொலை செய்த போலீசுக்காரருக்கு ரூ. 50 ஆயிரம் சன்மானம் அளித்து ‘சிறப்பி’த்தது கொலைவெறி சாமியார் அரசு.

தான் பதவியேற்றவுடன் கிரிமினல்கள் அனைவரையும் சரண்டராகுங்கள் அல்லது மாநிலத்தை விட்டு ஓடுங்கள் (முதல் நபராக கொலை குற்றம்சாட்டப்பட்ட கிரிமினல் முதல்வர் என பெயர் பெற்ற ஆதித்யநாத் ஓடியிருக்கவேண்டும். ஆனால், இந்த இடத்தில் அவர் நீதியை நிலைநாட்ட வந்த தேவன் ஆகிவிட்டார்) என்றார். அதன்படி ‘ஆபரேசன் க்ளீன்’ என்ற திட்டத்தை போலீசு தொடங்கியது. உ.பி.போலீசு தெரிவித்துள்ள தகவலில் 2017 மார்ச் 20 முதல் 2018 ஜனவரி 31 வரை 1142 என்கவுண்டர்கள் நடத்தப்பட்டுள்ளன.

உ.பி.யின் முன்னாள் டி.ஜி.பி. ஏ.எல். பானர்ஜி  சொல்கிறார், “உ.பி. போலீசுக்காரர் இப்போது தலைமை காவல் அதிகாரிகளிடம் மட்டுமல்லாமல், அரசியல்வாதிகள், அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் செய்தி தொடர்பாளர்களுக்குக்கூட அறிக்கை அளிக்க வேண்டும்” என்கிறார்.

“நேரமின்மை காரணமாக போதிய பயிற்சியை காவலர்களுக்கு தர முடிவதில்லை. காவலர்களின் பயிற்சி காலத்தை ஒன்பது மாதங்களிலிருந்து ஆறு மாதங்களாக குறைத்துவிட்டோம். இந்த துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய காவலர்கள் இன்னமும் பயிற்சியில் இருந்து கொண்டிருக்கலாம். ஆனால், அவர்கள் பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு துப்பாக்கியை எப்படி கையாள்வது என்பதே தெரியவில்லை” என்கிறார் முன்னாள் போலீசு அதிகாரி. போலீசு அதிகாரி முட்டுக்கொடுத்தாலும் சுடச்சொல்கிற உத்தரவு இருப்பதால்தானே ஒரு காவலர் துப்பாக்கியைத் தூக்குகிறார்? போலீசு அதிகாரி சொல்வதுபோல, சட்டத்தின்படி, எதிர்த் தாக்குதல் நடத்த மட்டுமே துப்பாக்கியை தூக்க வேண்டும். சாலையில் சென்று கொண்டிருந்த விவேக் திவாரி எவரைத் தாக்கினார்?

படிக்க:
உ.பி காவி தர்பார் : 1200 போலி மோதல் கொலை – 160 பேர் NSA – வில் கைது ! சிறப்புக் கட்டுரை
ரவுடி யோகி ஆதித்யநாத் : பார்ப்பனிய பாசிசத்தின் ஜனநாயகம்

தன்னுடைய 32 ஆண்டுகால பணி அனுபவத்தில் ‘உண்மையான என்கவுண்டர்’ மிக அரிதாக நடந்ததென மற்றொரு ஓய்வுபெற்ற போலீசு அதிகாரி எஸ்.எஸ். தாரபூரி ஒப்புக்கொள்கிறார் . என்கவுண்டர்களால் ஒருபோதும் குற்றங்களை குறைக்க முடியாது என்பது அவர் கருத்து. “உ.பி.யில் நடக்கும் என்கவுண்டர்கள் அனைத்தும் திட்டமிட்டு அரங்கேற்றப்படுபவையே” என்கிறார் அவர்.

உ.பி.யின் கொலைகார முதல்வர் யோகி ஆதித்யநாத்.

வெளியான தகவல்களின்படி அதிக அளவில் மீரட் பகுதியில் 449 என்கவுண்டர்கள் நடத்தப்பட்டுள்ளன. அடுத்து ஆக்ரா பகுதியில் 210 என்கவுண்டர்கள். மூன்றாவது இடம் பரேலிக்கு 196 என்கவுண்டர்கள். முதலமைச்சர் தொகுதியான கோரக்பூர் குறைவான என்கவுண்டர் நடந்த இடம். (முதலமைச்சர் தன் பரிவாரங்களுக்கு சிறப்பு சலுகை கொடுத்திருக்கிறார்)

திவாரியின் படுகொலைக்குப் பிறகு ‘தி ஏசியன் ஏஜ்’ இப்படி எழுதியிருந்தது, “ஆயுதம் தாங்கிய காவலருக்கு அரைகுறை பயிற்சி இருப்பது தெரிகிறது. ஆனாலும் அவரிடம் குண்டுகள் சேர்க்கப்பட்ட துப்பாக்கியை தந்திருக்கிறார்கள். போதிய பயிற்சி இல்லாதவர்களுக்கு லத்தி கொடுப்பது போதுமானது. இவர்களிடம் துப்பாக்கியை தருவது கொல்வதற்கு தரும் அனுமதியைப் போன்றதாகும். சுடுவதைக் காட்டிலும் தொடர்புடையவரை நிலைகுலையச் செய்யலாம் – ஆனால் இது கொல்வதற்கான பகிரங்க அழைப்பு!”.

உ.பி. நீர்பாசன துறை அமைச்சர் தரம்பால் சிங் சனிக்கிழமை அளித்த பேட்டியில் ஆதித்யநாத் ஆட்சி காலத்தில் ‘உண்மையான கிரிமினல்’கள் சுட்டுவீழ்த்தப்படுவார்கள்” என்கிறார். கிருஷ்ண பரமாத்மா போல் கையைத் தூக்கி அருள்பாலிக்காத குறையாக எல்லோருக்கும் நீதி கிடைக்கும் என்கிறார். குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்கும் என்கிறார். இந்தியாவுக்கு நரேந்திர மோடி பிரதமராக கிடைத்திருப்பதும், உ.பி.க்கு ஆதித்யநாத் கிடைத்திருப்பதும் மக்கள் செய்த ‘பாக்கியம்’ என்கிறார்.

ஆமாம், கொலைகார ஆட்சியாளர்கள் கைகளில் துப்பாக்கியோடு அலைவது பாக்கியமா? பயங்கரமா?

– கலைமதி

செய்தி ஆதாரம்: