Tuesday, June 23, 2026
முகப்பு பதிவு பக்கம் 417

பொறியியல் மாணவர்களின் வேலைக்கு வேட்டு வைக்கும் கேட் தேர்வு | கணேசன்

பொறியியல் பட்டதாரி மாணவர்களுக்கு கேட் ( GATE – Graduate Aptitude Test in Engineering ) எனப்படும் திறனறித் தேர்வை நடத்தப் போவதாக சமீபத்தில் அறிவித்துள்ளது, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் (AICTE). ”இந்த முடிவு பல இலட்சம் பொறியியல் படித்த மாணவர்களின் எதிர்காலத்தைப் பறித்துவிடும் அபாயம் உள்ளது” என்கிறார், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் த.கணேசன்.

தோழர் த.கணேசன்.

இதுகுறித்து, மேலும் அவர் பேசும்பொழுது, ‘’ஏற்கெனவே மருத்துவப் படிப்பில் ஏழை – தாழ்த்தப்பட்ட மாணவர்கள் நுழைய முடியாதவாறு நீட் தேர்வை கொண்டு வந்து அவர்களின் மருத்துவக் கனவை பறித்துவிட்டார்கள். அவ்வாறு இன்னல்களை எதிர்கொண்டு மருத்துவம் படித்துவிட்டு வெளியேறிவிடலாம் என்றால், அதற்கும் ஒரு திறனறித் தேர்வை நடத்தி, மருத்துவராகும் தகுதியைப் பறித்துவிடுகிறார்கள். சட்டக்கல்வி பயிலும் மாணவர்களும் திறனறித் தேர்வை எதிர்கொண்டால்தான் வழக்கறிஞராகப் பதிவு செய்ய முடியும். அதேபோலதான், தற்போது பொறியியல் பயிலும் மாணவர்கள் இறுதியாண்டில், கேட் தேர்வை எழுதி அதில் தேர்ச்சிப் பெற்றால்தான் அவர் பொறியாளராக வெளியில் பணியாற்ற முடியும் என்ற சூழலை கொண்டுவந்துள்ளது.

இந்தியா முழுவதும் 3000 பொறியியல் கல்லூரிகள், தமிழகத்தில் மட்டும் 500க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றது. ஆண்டுக்கு 7 இலட்சம் மாணவர்கள் படித்து வெளியே வருகிறார்கள். அவர்களுடைய எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக் குறியாகிவிடும்.

நான்காண்டுகளில் அந்த மாணவனின் திறமையை சோதித்தறிய முடியாதவர்கள், அந்த ஒரு தேர்வில் அவனது திறமையை சோதித்துவிடப் போகிறார்களா?

இதெல்லாம் பொய். ஏமாற்று. உண்மையான காரணம், படித்த இளைஞர்கள் வேலையில்லாமல் திரிகிறார்கள். வேலையில்லாத் திண்டாட்டம் நாடுமுழுதும் பெருகியிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் ஒன்னேகால் கோடி பேர் வேலையின்றி இருக்கிறார்கள். இதில் கணிசமானோர் பொறியியல் பட்டதாரி மாணவர்கள்.

கடந்த 15 ஆண்டுகளில் பொறியியல் படிப்பின் மீது ஒரு கவர்ச்சியை உருவாக்கி, பல தனியார் பொறியியல் கல்லூரிகளை உருவாக்கி, பல இலட்சம் மாணவர்களிடம் பல கோடி ரூபாய் கொள்ளையடித்து, கல்வியை வியாபாரமாக்கி இவர்கள் சம்பாதித்துவிட்டார்கள்.

படிக்க:
பொறியியல் கல்வியின் சீரழிவும் ! கையாலாகாத உயர்கல்வி கட்டமைப்பும் !!
கல்வி வியாபாரம் : வாங்க சார்… வாங்க ! மின்னூல்

ஆனால், பொறியியல் படித்து வெளியில் வந்த மாணவர்கள் வேலையின்றி  தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்கள். ஐந்தாண்டுகளில் நாட்டை வல்லரசாக்கிவிடுகிறேன் என்று சொன்னவர்கள் இன்று அனைத்திலும்  தோல்வியைத் தழுவியிருக்கிறார்கள். இளைஞர்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள். இந்தச் சூழலில்தான் கேட் தேர்வு கொண்டுவரப்படுகிறது.’’ என்கிறார்.

இதன் பின்னுள்ள அரசியல் உண்மைகளை உணர்ந்து, கேடான நோக்கத்தோடு கொண்டுவரப்படும் இத்தகைய திறனறித்தேர்வுகளுக்கு எதிராக மாணவர்கள் இளைஞர்கள் போராட முன்வரவேண்டும் என்றும் அறைகூவல் விடுக்கிறார், தோழர் த.கணேசன்.

அவரது உரையின் முழு காணொளி…

பாருங்கள் ! பகிருங்கள் !!

சர்க்கரை நோய் – உடல்பருமனை கட்டுப்படுத்துவது சரிவிகித உணவா – பேலியோ உணவா ? மருத்துவர் BRJ கண்ணன்

நாம் உண்ணும் உணவில் 50-55% மாவுச்சத்தும், 25-30% கொழுப்புச் சத்தும், 20% புரதச் சத்தும் இருக்க வேண்டும். இதுதான் சரிவிகித உணவு. யோசித்து பாருங்கள், நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் அல்லது நேற்று இரவு சாப்பிட்ட உணவில் எந்த அளவிற்கு கொழுப்பும், புரதமும் இருக்கிறது என்று சொல்ல முடியுமா? முடியாது.  பிரச்சனையே இங்குதான். நாம் எடுத்துக் கொள்வது முழுக்க முழுக்க கார்போ ஹைட்ரேட்தான் (மாவுச் சத்து).

காலை முதல் இரவு வரை மாவுப் பொருட்கள்தான். காலை இட்லி, மதியம் சாதம், இரவு சப்பாத்தி என்று உண்ணும் உணவில் மாற்றம் இருக்குமே ஒழிய உள்ளே இருப்பது எல்லாமே சர்க்கரைதான்.  50% சாப்பிட வேண்டிய சர்க்கரையை 80-85%  சாப்பிட்டால் அந்தக் கூடுதல் சர்க்கரை உடம்புக்குள் போய் என்னவாகும்? அது இரத்தத்தில் சர்க்கரையாக ஏறுகிறது.

இதனை சரி செய்ய இரண்டு வழிகள் உள்ளன.  ஒன்று அந்த சர்க்கரையை நீங்கள் உபயோகித்துக் கொள்ள வேண்டும். அதாவது, தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். நடக்க வேண்டும், ஓட வேண்டும், தினமும் உழைப்பில் ஈடுபட வேண்டும். அப்படி செய்தால் அந்த சர்க்கரை உடலால் உபயோகப்படுத்தப்படும். இல்லை என்றால் அன்ன ஆகும்? அந்த சர்க்கரையை நமது உடலால் அப்படியே சர்க்கரையாக சேமித்து வைக்க முடியாது.

நம்ம உடம்புல இன்சுலின் என்று ஒரு ஹார்மோன் உள்ளது. அது யாருக்கெல்லாம் நன்றாக சுரக்கிறதோ அவர்களுக்கெல்லாம், அது அந்த சர்க்கரையை கொழுப்பாக சேமித்து விடும். அது சுரக்காதவர்களுக்கு, ரத்தத்தில் சர்க்கரை தேங்கி விடும். அவர்களுக்கு சர்க்கரை நோய் உண்டாகும். உடல் பருமனுக்கும் மாவுப் பொருட்கள்தான் காரணம். இரண்டிற்கும் இது காரணமாகிவிடுகிறது. சர்க்கரை நோய் வந்தவர்களுக்கு அது கட்டுக்குள் இல்லாமல் போவதற்கும் காரணம் மாவுப்பொருட்கள்தான்.

நாம் அனைவரும் என்ன நினைக்கிறோம் ? குண்டாக இருப்பவர்கள் எண்ணெய் உணவு அதிகம் சாப்பிடுவதாக நினைக்கிறோம். ஆனால், அவர்களிடம் கேட்டால் அப்படி அதிகம் சாப்பிடுவதில்லை, வாரத்துக்கு ஒருமுறைதான் ’நான்வெஜ்’ சாப்பிடுகிறேன் என்பார்கள். அது உண்மைதான். அந்த உடல் பருமனுக்கும் உடலில் சேருகின்ற மாவுப் பொருட்கள்தான் காரணம்.

நம் உணவை எப்படி சரிவிகிதத்திற்கு கொண்டு வருவது? மாவுப் பொருட்களான அரிசி, கோதுமை போன்றவற்றை குறைத்துக்கொண்டு முட்டை, பால், பழம், நவதானியங்களை அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். காலையில் இரண்டு முட்டை, பால், மதியம் கீரை, காய்கறி, தயிர், இரவு, சுண்டல், மொச்சை, பச்சை பட்டானி என்று மாற்றி மாற்றி எடுத்துக் கொண்டால் சரிவிகிதத்தை அடைந்து விடலாம்.

  “தட்டைத் திருப்புங்கள்” என்று நோயாளிகளுக்கு எல்லாம் சொல்வேன். இரண்டு முட்டையை வைத்துக்கொண்டு அதிக பிரியாணி சாப்பிடுவார்கள். வேண்டாம் இரண்டு அல்லது மூன்று முட்டையை வைத்துக் கொண்டு கொஞ்சமாக சோறு சாப்பிட வேண்டும். காய்கறிகளின் அளவைக் கூட்டிக்கொண்டு சாதத்தை குறைத்து விட வேண்டும். இப்படி மாற்றி சாப்பிட்டால் நாம் சரிவிகித உணவுக்கு வரலாம்.

இப்ப சரிவிகித உணவுக்கு வரவேண்டிய முதல்படி என்ன?  மாவுப்பொருட்களை குறைக்க வேண்டும். இட்லி, தோசை, சப்பாத்தி இல்லாமல் போனால் அந்த இடம் வெற்றிடமாக இருக்கும். அதனை எதை வைத்து நிரப்புவது? எதைக்கொண்டு வேண்டுமானாலும் நிரப்பிகொள்ளலாம். அது ‘சைவம்’  அல்லது ‘அசைவம்’ எதுவாகினும் இருக்கலாம்.

நாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் தானியங்களுக்கு (அரிசி, கோதுமை, திணை வகைகள் கேழ்வரகு, கம்பு, சாமை, வரகு போன்றவை)  பதிலாக நவதானியங்களை (பயறு வகைகள் – பட்டாணி, கொண்டக்கடலை, பருப்பு வகைகள், இதர பயிறு வகைகள்) அதிகமாக சேர்க்கலாம். அப்படி செய்தால் மாவுப்பொருள் குறைந்து விடும். வேண்டிய கொழுப்பும், புரதமும் கிடைக்கும். இப்பொழுது நாம் பண்ண வேண்டியதெல்லாம் கொழுப்பின் மீது இருக்கும் பயத்தை தூக்கி  சர்க்கரையின் மேல் வைக்க வேண்டும். சாதாரணமாக ஒரு உணவைப் பார்த்தோமெனில், “அய்யோ இதில் கொழுப்பு இருக்கே” என நினைப்பதற்குப் பதில், “இதில் மாவுப்பொருள் இருக்கே” என்று நினைத்தால் நீங்கள் சாதாரண நிலைக்கு வந்து விடலாம்.

இடையில் பசித்தால் வெள்ளரிப் பிஞ்சு, கேரட், தேங்காய்  போன்றவை சாப்பிட்டுக் கொள்ளலாம். இந்த சரிவிகித உணவின் மூலம் நிறைய நன்மைகள் இருக்கிறது. சர்க்கரை மற்றும் உடல் பருமனைக் குறைப்பதற்கு உதவும்.

மற்றொரு  நன்மை என்னவென்றால், இதற்கு மாறினால் 10 – 15 நாட்களில் வாயு பிரச்சினை தீர்ந்து விடும். அசிடிட்டி, அஜீரணம் போன்றவற்றிற்கு முக்கியக் காரணமே கார்போஹைட்ரேட்தான். பெண்களுக்கு கர்ப்பப்பையில் வரும் கட்டியை பி.சி.ஒ.டி என்று சொல்வார்கள். அதற்குமே இது நல்ல தீர்வாக அமையும். இந்த பி.சி.ஒ.டி-க்கான சிகிச்சையாக, சர்க்கரை நோயாளிக்கு கொடுக்கப்படும் மெட் பார்மின் மாத்திரைதான் கொடுக்கப்படுகிறது. இந்தப் பிரச்சனைக்கும் காரணம் அளவுக்கதிகமான மாவுப் பொருட்கள்தான். ஆக ஒழுங்காக இதனை சாப்பிட ஆரம்பித்துவிட்டால் எல்லா நன்மைகளும் நம்மை வந்தடையும்.

சரி, பேலியோ டயட் என்கிறார்களே அப்படி என்றால் என்ன?

நாம் ஏற்கனவே சொன்னது போல சரிவிகித உணவில் 50-55% கார்போஹைட்ரேட். 25% கொழுப்பு, மீதி புரதம். இப்போது கார்போஹைட்ரேட்டை 80%-லிருந்து 30-25% அளவை குறைத்து விட்டோம். இப்போது நாம் உணவில் குறைத்த பகுதியை எதனால் நிரப்புவது ? முக்கியமாக நாம் கொழுப்பும் புரதமும் சாப்பிட வேண்டியது வரும்.

பேலியோ உணவில் பருப்பு, நவதானியங்கள் (பயறு வகைகள்) கிடையாது.  நிறைய பழங்கள் கிடையாது. கொஞ்சமாக பால் எடுத்துக் கொள்ள வேண்டும். (பேலியோவில் பாலுக்கு பதில் நெய், வெண்ணெய் எடுக்கிறார்கள்) முழுக்க முழுக்க முட்டை, இறைச்சி, உலர்ந்த கொட்டைகள் (மற்றும் கிழங்குகள் தவிர்த்த கீரை, காலிஃபிளவர் போன்ற காய் வகைகள்)அந்த மாதிரிதான் சாப்பிட வேண்டியது வரும். இதற்கு பெயர்தான் பேலியோ டயட்.

இந்த பேலியோ டயட் யாருக்கெல்லாம் கொடுக்கலாமென்றால், சர்க்கரை நோயாளிகள், மாத்திரை, உடற்பயிற்சி, சரிவிகித உணவு இதனை சரியாக பின்பற்றியும் சர்க்கரை கட்டுக்குள் வரவில்லை என்றால் அவர்கள் இந்த பேலியோ டயட்டை முயற்சி செய்யலாம். அதேமாதிரி குண்டாக இருப்பவர்கள் பல வழிகளில் உடல் பருமனைக் குறைக்க முடியவில்லை என்றால் இந்த முறைக்கு மாறிக் கொள்ளலாம். தப்பில்லை. இதனை 6 – 12 மாதங்கள் வரை பின்பற்றி வேண்டிய அளவிற்கு சர்க்கரை, பருமன் கட்டுக்குள்  வந்து விட்டால்  கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து விட்டு  பிறகு சரிவிகித உணவிற்கு மாறிக் கொள்ளலாம். குறுகிய காலத்திற்கு பேலியோவை பின்பற்றுவதால் தவறு இல்லை. அதனால் நன்மை இருக்கிறது. ஆனால் இதையே வாழ்க்கை முழுவதும் பின்பற்ற முடியுமா? என்பதுதான் கேள்வி. தற்போது உள்ள  அறிவியல் சொல்வது என்னவென்றால் ரொம்ப நாளைக்கு மாவுப் பொருட்களை தவிர்ப்பது பிரச்சினை என்கிறது. அதனால் அதனை பரிந்துரைக்கக் கூடாது என்று அறிவியல் சொல்கிறது.

படிக்க:
தொப்பை வயிறு, சப்பை மூளை, குப்பை உணவு!
ஆர்கானிக் உணவு: சதிக்கு பலியாகும் நடுத்தர வர்க்கம்!

பேலியோ டயட், சரிவிகித உணவைப் பற்றி பார்த்துவிட்டோம். இப்ப சாப்பிட்டுக்கொண்டு இருப்பது போன்று யாரெல்லாம் மாவுப்பொருட்களை சாப்பிடலாம் என்றால், உடலுழைப்பில் அதிகம் ஈடுபடுபவர்கள், ரிக்‌ஷா ஓட்டுனர்கள், விவசாயிகள் போன்றவர்கள் தொடரலாம். இதனையே சாப்பிட்டு தொப்பை, உடல் பருமன் இல்லாதவர்கள் சாப்பிட்டுக் கொள்ளலாம். உங்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ குறைவாக சாப்பிட்டுக் கொள்கிறீர்கள். அல்லது உங்கள் உடம்பு ஓரளவு மெட்டாபாலிஸ் (வளர்சிதை மாற்றம்) செய்கிறது. தொப்பை, உடல் பருமன், உடலுழைப்பு குறைவாக இருப்பவர்கள் கண்டிப்பாக மாறியாக வேண்டும். மாறினால் உடம்பில் நோய் வராமல் தடுக்கலாம். அதன்மூலம் பல்வேறு பிரச்சினைகளில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

காணொளியைக் காண

நன்றி: மருத்துவர் BRJ கண்ணன்,
இதயத்துறை மருத்துவர், (Senior Interventional Cardiology)
வடமலையான் மருத்துவமனை, மதுரை.

கஜா புயல் பாதிப்பிற்குள்ளான டெல்டா கிராமங்களில் மக்கள் அதிகாரம் களப்பணி

ஜா புயலால் பாதிப்பிற்குள்ளான காவிரி டெல்டா மாவட்டங்களில் புணரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மக்கள் அதிகாரம் தோழர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டப் பகுதிகளிலிருந்து வந்துள்ள தோழர்கள் இடிந்த குடிசை வீடுகளை தற்காலிகமாக சீர்செய்வது மக்களின் தேவையறிந்து அதற்கேற்ப நிவாரணப் பொருட்களை சேகரித்து வீடு தோறும் விநியோகித்து வருகின்றனர்.

குடிசைகளில் குடியிருந்து வந்த மக்கள், மொத்தக்குடிசையுமே இழந்துள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களில் அடுத்தடுத்து மழை பெய்ய வாய்ப்புள்ள இந்தச் சூழலில் தற்காலிக ஏற்பாடாகவாவது குடிசைகளை சீரமைப்பது அவசரப் பணியாகிறது.

நிவாரணப் பொருட்களை சேகரிப்பதில் உள்ள பொருளாதார ரீதியான தடைகள் மற்றும் பாதிக்கப்பட்ட கிராமங்களிலேயே சில வாரங்கள் தங்கி புணரமைப்புப் பணிகளை செய்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் அனைத்தையும் எதிர்கொண்டு, இப்பணியைத் தொடர்ந்து செய்து வருகின்றனர், மக்கள் அதிகாரம் தோழர்கள். இவர்களோடு, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் தோழர்களும் களத்தில் பணியாற்றி வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம், பட்டுக் கோட்டை தாலுகா, தம்பிக் கோட்டை வடகாடு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு பாடப் பொருள்கள் வழங்கப்பட்டது.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா, அதிராம்பட்டினம் பகுதி.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாலுகா, நொச்சியூர் கிராமம்.

வேதாரண்யம், அவுரிகாடு பகுதி.

வேதாரண்யம், வாட்டாக்குடி இரணியன் நகர்.

திருவாரூர் மாவட்டம் தாய்மண் பாரம்பரிய வேளாண்சார் நிறுவனம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை மக்கள் அதிகார தோழர்களிடம் வழங்கினர்.

படிக்க:
மேக்கேதாட்டு அணைக்கு அனுமதி : அரசியல் சட்ட விரோதமானது !
இறைச்சித் தொழிலை அழிக்கும் பாஜக ! இறைச்சி சங்கத்தின் அன்வர் பாஷா நேர்காணல்

களப்பணியில் இணைந்து பணியாற்ற / நிவாரணப் பொருட்கள் வழங்க விரும்புவோர் மக்கள் அதிகாரம் தோழர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

மக்கள் அதிகாரம், சென்னை – 9176 801656
மக்கள் அதிகாரம், திருவாரூர் – 9962 366321, 9626 352829
பு.மா.இ.மு., வேதாரண்யம் – 6383 461270

தகவல்:

ஒரு பெண் சோகமாய் இருக்கும் போது சங்கீதம் தேவைப்படும் !

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 32

மாக்சிம் கார்க்கி
நிகலாய் மாலையில் திரும்பி வந்தான். அவர்கள் எல்லோரும் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, சோபியா சிரித்துக்கொண்டே அவள் எப்படி தேசாந்திர சிட்சையிலிருந்து தப்பியோடி வந்த மனிதனைச் சந்தித்தாள், அவனை எப்படி மறைத்து வைத்தாள். அவள் எப்படி ஒற்றர்களுக்காக பயந்து நடுங்கினாள், வழியில் பார்க்கின்ற ஒவ்வொருவரையுமே ஒற்றர்கள் என்று அவள் எப்படிக் கருதினாள். ஓடிவந்த மனிதன் எப்படி நடந்துகொண்டான் என்பன போன்ற விவரங்களையெல்லாம் சுவாரசியத்தோடு விளக்கிச் சொன்னாள். அவளது குரலில் ஒரு பெருமைத்தொனி ஒலிப்பதாகத் தாய் கண்டறிந்தாள். ஒரு தொழிலாளி தான் ஒரு சிரம சாத்தியமான காரியத்தை வெற்றிகரமாகச் செய்து முடித்ததைப் பற்றி அடையும் பெருமித உணர்ச்சி போலிருந்தது அது.

இப்போது அவள் ஒரு சாம்பல் நிற வேனிற்கால நீள் அங்கி அணிந்திருந்தாள். அந்தக் கவுன் அவளை மேலும் சிறிது நெடியவளாகக் காட்டியது. அவளது கண்கள் கருமை எய்தின போலவும் அவளது நடமாட்டங்கள் மிகுந்த அடக்கம் கொண்டன போலவும் தோன்றின.

“உனக்கு இன்னொரு வேலை காத்திருக்கிறது, சோபியா” என்று சாப்பிட்டு முடிந்தவுடன் கூறினான் நிகலாய். ”விவசாயிகளுக்காக நாம் பத்திரிகை நடத்த ஏற்பாடு செய்திருக்கிறோம் என்று நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். சமீபத்தில் நடந்த கைதுகளால், அப்பத்திரிகையை வினியோகித்து வந்த மனிதனோடு நமக்கிருந்த தொடர்பு விட்டுப் போய்விட்டது. அவனைக் கண்டுபிடிப்பதில் பெலகேயா நீலவ்னா மட்டும்தான் நமக்கு உதவக் கூடியவள். நீ அவளைக் கிராமத்துக்கு ஒரு முறை உன்னோடு அழைத்துச் செல்லவேண்டும், கூடிய சீக்கிரம்.” ‘ரொம்ப சரி” என்று பதில் கூறிக்கொண்டே சிகரெட்டை ஒருமுறை இழுத்துக் கொண்டாள் சோபியா. ”சரி, நாம் போவோம். இல்லையா, பெலகேயா நீலவ்னா?”

“கட்டாயம்.”

“அதென்ன, ரொம்ப தூரமோ?”

“சுமார் 80 கிலோ மீட்டர் தூரம்தான்.”

”நல்லது சரி, இப்போது எனக்குக் கொஞ்சம் வாத்தியம் வாசிக்க வேண்டும் போலிருக்கிறது, பெலகேயா நீலவ்னா. நீங்கள் என் வாத்தியத்தைக் கொஞ்ச நேரமேனும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?”

”என்னைப் பற்றிக் கவலைப்படாதே, அம்மா. நான் ஒருத்தி இங்கே இல்லையென்றே நினைத்துக் கொள்ளேன்” என்று கூறிக்கொண்டே, சோபாவின் ஒரு மூலையில் போய்ச் சாய்ந்தாள் தாய். அக்காளும் தம்பியும் தாயை ஒரு சிறிதும் கவனிக்காதவர்கள் போலவே காட்டிக் கொண்டனர். எனினும் அவர்கள் அவளைச் சாதுர்யமாகப் பேச்சில் இழுத்துவிட முனைந்தார்கள்.”

“கேள், நிகலாய். இது கிரீக்கின் இசை. இன்று வரும்போது கையோடு கொண்டு வந்தேன். சரி, ஜன்னல் கதவுகளை அடை.”

படிக்க:
வரலாறு : முகலாயர்கள் இந்தியர்கள் இல்லையா ?
இறைச்சித் தொழிலை அழிக்கும் பாஜக ! இறைச்சி சங்கத்தின் அன்வர் பாஷா நேர்காணல்

அவள் வாத்தியத்தைத் திறந்து தனது இடது கையால் மெதுவாக வாசிக்கத் தொடங்கினாள். வாத்தியம் இனிமையான ஆழமான நாதத்தோடு இசைக்க ஆரம்பித்தது. ஒரு தாழ்ந்த பெருமூச்சோடு மற்றொரு ஸ்வரமும் முதல் ஸ்தாயிபோடு சேர்ந்து ஒலித்தது. அவளது வலது கைவிரல்களிலிருந்து ஸ்வரநாதம் பளிச்சிட்டுக் குபுகுபுவெனப் பொங்கிப் பிறந்தது. அந்த ஸ்வரங்கள் அந்தத் தாழ்ந்த ஸ்வரங்களின் இருண்ட சூழ்நிலையிலே பயந்தடித்துப் படபடத்துச் செல்லும் பறவைக் கூட்டம்போல் சிதறிப் பறந்தன.

முதலில் தாய் அந்தச் சங்கீதத்தால் கொஞ்சங்கூட நெகிழவில்லை. அந்தச் சங்கீதப் பிரவாகம் அவளுக்கு வெறும் குழம்பிப்போன சப்த பேதங்களாகவே தோன்றியது. பல்வேறு ஸ்வரங்களும் பின்னு முடைந்தெழும் இங்கித நாத சுகத்தை அவளது செவிகளால் உணர்ந்து அனுபவிக்க இயலவில்லை. அவள் சொக்கிப்போன கண்களோடு நிகலாயைப் பார்த்தாள். நிகலாய் அவள் உட்கார்ந்திருந்த சோபாவின் இன்னொரு மூலையில் கால்களை இழுத்து மடக்கி உட்கார்ந்தான். தங்கமயமான குழல் கற்றையால் விளிம்பு கட்டப்பெற்றுச் சிறந்து விளங்கும் சோபியாவின் பக்கவாட்டு உருவத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். சூரிய ஒளி சோபியாவின் தலை மீதும் தோள் மீதும் படிந்து ஒளிர்ந்தது. வாத்தியத்தின் ஸ்வரக் கட்டைகளின் மீது விளையாடும் அவளது விரல்களைத் தடவிக்கொடுப்பதற்காக நழுவி இறங்கியது. அந்த கீதம் விம்மிப் பெருகி அறை முழுதும் நிரம்பி ஒலித்தது. தாயின் உள்ளத்தைத் தன்னையறியாமல் தொட்டு ஒலிக்கத் தொடங்கியது.

என்ன காரணத்தினாலோ கடந்த காலத்தின் இருள் கிடங்கிலிருந்து ஒரு பெரும் வேதனை மறந்து மரத்துப்போன வேதனை மீண்டும் உயிர் பெற்றெழுந்து அவள் மனத்தில் புகுந்து உறுத்தி மிகுந்த கசப்பைக் கொடுத்தது.

அந்தக் காலத்தில் ஒருநாள் அவளது கணவன் இரவில் அகால வேளையில் நன்றாகக் குடித்துத் தீர்த்துவிட்டு வீட்டுக்கு வந்தான். அவளைத் தன் கரத்தால் இறுகப் பிடித்து, படுக்கையினின்றும் இழுத்துக் கீழே தரையில் தள்ளி ஒரு உதை கொடுத்துவிட்டுப் பேசினான்:

”இங்கிருந்து போய்விடு. நாயே! உன்னைக் கண்டாலே எனக்கு எரிச்சலாய் வருகிறது.”

அவனது அடிகளிலிருந்து தப்பிப்பதற்காக, அவள் தனது இரண்டு வயதான மகனைப் பற்றியெடுத்து, முழுங்காலிட்டிருந்த தன் உடம்புக்கு முன்னால் அவனை ஒரு கேடயம் மாதிரி நிறுத்திக்கொண்டாள். அந்தக் குழந்தை, பயந்து போயிருந்த அந்த அம்மணமான குழந்தை, அலறிக் கூச்சலிட்டது. அவள் கைக்குள் அடங்காமல் திமிறியது,

“போ வெளியே!” என்று கர்ஜித்தான் மிகயீல்.

அவள் துள்ளியெழுந்து சமையல் கட்டுக்குள் ஓடி ரவிக்கையைத் தோள் மீது தூக்கிப் போட்டுக்கொண்டு குழந்தையையும் ஒரு துணியில் சுற்றியெடுத்துக்கொண்டு, வாய் பேசாது முனங்காது படுக்கப்போவதற்கு முன் போட்டிருந்த ஆடையுடனேயே தெருவுக்கு வந்தாள். அப்போது மே மாதம், அன்றிரவு குளிர் மிகவும் விறைத்து நடுக்கியது. தெருப்புழுதி அவளது பாதங்களில் அப்பிக்கொண்டு குளிர்ந்து விறைத்தது, பெருவிரல்களில் ஒட்டிக் கொண்டது. குழந்தை அலறித்துடித்துக் கொண்டிருந்தது. அவள் குழந்தையைத் தன் மார்போடு அணைத்துக்கொண்டு பயமடித்துப் போய் தெரு வழியே விறுவிறுவென நடந்தாள். போகும்போதே குழந்தையைச் செல்லமாகக் கொஞ்சி அதன் அழுகையை நிறுத்த முயன்றாள்.

“அடடா, கண்ணு அடடா …”

பொழுது விடிய ஆரம்பித்ததும் அவள் நாணிக் கூசினாள். தன்னை அந்த அரை நிர்வாணக் கோலத்தில் யாரேனும் தெருவில் பார்த்துவிடக் கூடாதே என அஞ்சினாள். எனவே அவள் ஊர்ப்புறத்திலுள்ள சதுப்புப் பிரதேசத்துக்குச் சென்று, அங்கிருந்த அஸ்பென் மரத்தடியில் உட்கார்ந்தாள். அங்கேயே வெகுநேரம் உட்கார்ந்து, அகன்று விரிந்த கண்களோடு இருளையே வெறித்துப் பார்த்தாள். தூங்கி வழிந்து கொண்டிருக்கும் குழந்தையை உறங்கப் பண்ணுவதற்காகவும் தனது இதய வேதனையைச் சாந்தப்படுத்துவதற்காகவும் அவள் ஒரு தாலாட்டுப் பாட்டை முணுமுணுத்தாள்.

“அடடா, கண்ணு! அடடா…!”

அவள் அங்கிருந்தபோது, ஒரு கரிய பறவை அரவமின்றி அவள் பக்கமாகப் பறந்து சென்றது. அந்தப் பறவையின் சிறகு வீச்சு அவளைச் சோக அமைதியினின்றும் திடுக்கிட்டு எழுந்திருக்கச் செய்தது. குளிரால் நடுநடுங்கிக்கொண்டே வீட்டை நோக்கி, மீண்டும் அந்த வழக்கமான கொடுமையையும் உதைகளையும், ஏச்சுப் பேச்சுக்களையும் நோக்கித் திரும்பி நடந்தாள்……

கடைசி ஸ்வர ஸ்தாயி ஆழ்ந்து முனகியது. உள்ளடங்கி விறைத்துப்போன ஒரு பெருமூச்சுடன் அந்தக் கீதம் மடிந்து மறைந்து போயிற்று.

சோபியா தன் சகோதரனிடம் திரும்பினாள். ”உனக்கு இது பிடித்திருந்ததா?” என்று அமைதியாகக் கேட்டாள்.

“ரொம்ப ரொம்ப!” என்று ஏதோ தூக்கத்திலிருந்து விழிப்புற்றவன் மாதிரி சொன்னான் அவன், “மிகவும்…”

பாரேன் – அமைதியாகவும், நட்புரிமையோடும் ஒன்றாக வாழ்கிற ஜனங்களும் உலகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் சண்டை போடுவதில்லை, குடிப்பதில்லை. அந்த இருண்ட வாழ்விலே உள்ள மனிதர்களைப்போல் இவர்கள் ஒரு துண்டு ரொட்டிக்காக ஒருவருக்கொருவர் சண்டை பிடிப்பதில்லை…

தனது நினைவின் எதிரொலி தாயின் உள்ளத்துக்குள்ளே நடுங்கிப் பாடியது; அதே சமயம் அவள் மனத்தின் ஏதோ ஒரு மூலையில் வேறொரு எண்ணமும் எழுந்தது.

”பாரேன் – அமைதியாகவும், நட்புரிமையோடும் ஒன்றாக வாழ்கிற ஜனங்களும் உலகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் சண்டை போடுவதில்லை, குடிப்பதில்லை. அந்த இருண்ட வாழ்விலே உள்ள மனிதர்களைப்போல் இவர்கள் ஒரு துண்டு ரொட்டிக்காக ஒருவருக்கொருவர் சண்டை பிடிப்பதில்லை…”

சோபியா ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தாள். அவள் இடைவிடாது ஒரேயடியாய்ப் புகைபிடித்தாள்.

“இது காலஞ்சென்ற சோஸ்த்யாவுக்கு ரொம்பப் பிடித்த இசை” என்றாள் அவள். அவள் நெடுக புகைத்து மூச்சு வாங்கினாள். பிறகு மீண்டும் வாத்தியத்தின் கட்டைகளைத் தடவி, ஒரு சோக நாதத்தை எழுப்பினாள். “அவரிடம் நான் எவ்வளவு ஆசையோடு இதை வாசித்துக் காட்டுவேன், அவர் எவ்வளவு உணர்ச்சி வசத்தோடு, தம் இதயமே விம்மிப் புடைத்துப் புளகாங்கிதம் அடையும்படி இந்தச் சங்கீதத்தைக் கேட்பார்!”

“அவள் தன் கணவனைப் பற்றி நினைத்துக் கொள்கிறாள் போலிருக்கிறது” என்று முனகிக்கொண்டாள் தாய்; அவள் புன்னகைகூட செய்கிறாளே….”

”அவர் என்னை எப்படி மகிழ்வித்தார்!” என்று மீண்டும் சோபியா மெதுவாகச் சொன்னாள். அவளது சிந்தனைகளோடு வாத்தியத்தின் மெல்லிய இசையையும் இணைத்து வெளியிட்டாள், “எப்படி வாழ வேண்டும் என்பதை அவர் எவ்வளவு நன்றாகத் தெரிந்து வைத்திருந்தார்!”

“ஆமாம்” என்று தன் தாடியை வருடிக்கொண்டே சொன்னான் நிகலாய்: “அவன் ஒரு இனிய மனிதன்.”

சோபியா அப்போது தான் பற்றவைத்த சிகரெட்டைத் தூர எறிந்துவிட்டு தாயிடம் திரும்பினாள்.

”இந்தச் சத்தம் உங்களுக்குத் தொந்தரவாயில்லையே?” என்றாள்.

தாயால் தனது உணர்ச்சிக் குழப்பத்தை மறைக்க முடியவில்லை.

“என்னை ஒன்றும் கவனிக்காதீர்கள். எனக்கு ஒன்றுமே புரியாது. நான் பாட்டுக்கு இங்கே உட்கார்ந்து கேட்கிறேன். ஏதேதோ நினைக்கிறேன்.”

”ஆனால், நீங்களும் இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே என் விருப்பம்” என்றாள் சோபியா “ஒரு பெண் அவசியம் சங்கீதத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். அதிலும் அவள் துக்கமயமாயிருக்கும்போது…”

அவள் ஸ்வரக் கட்டைகளை அழுத்தி வாசித்தாள். உடனே அந்தப் பியானோ வாத்தியம், பயங்கரச் செய்தியைக் கேள்விப்பட்டவர்களின் பயபீதியின் ஓலத்தைப்போல் ஒலித்து விம்மியது. இந்தத் திகைப்பூட்டும் ஓலநாதம், அவர் இதயத்தையே உலுக்கிவிட்டது. அதற்கு எதிரொலி செய்வதுபோல் பயபீதி நிறைந்த இளங்குரல்கள் துள்ளி வந்து, ஓடி மறைந்தன. மீண்டும் ஒரு உரத்த உக்கிரமான கூச்சல் நாதம் எழுந்து, மற்ற குரல்களையெல்லாம் மூழ்கடித்து ஒலித்தது. இதன் பின்னர், ஏதோ ஒரு பெருந்துயர் ஒலி விம்மியது. எனினும் அந்தத் துயர் ஒலி அனுதாபத்தைவிட ஆத்திரத்தைத்தான் அதிகம் கிளப்பியது. பிறகு ஒரு வலிமைமிக்க இனிய நாதம் ஒலித்துப் பெருகியது. அந்த ஒலியில் கவர்ச்சியும் பிடிப்பும் இருந்தன.

அவர்களிடம் இனிய வார்த்தைகள் புகல வேண்டும் என்ற ஆசை தாயின் உள்ளத்தில் நிரம்பித் ததும்பியது. அந்தச் சங்கீதத்தால் அவள் கிறுகிறுத்துப் போயிருந்தாள். அந்தச் சகோதர சகோதரி இருவருக்கும் தன்னால் உதவ முடியும் என்ற எண்ணம் தோன்றவே அவள் லேசாகப் புன்னகை செய்து கொண்டாள்.

அவள் சுற்றுமுற்றும் பார்த்தாள் – அவளால் என்னதான் செய்ய முடியும்? அவள் அமைதியாக எழுந்து சமையலறைக்குள்ளே சென்று தேநீர்ப் பாத்திரத்தைக் கொதிக்க வைத்தாள்.

ஆனால் இந்த ஒரு செய்கை மட்டும் அவளுக்கு அவர்கள் மீதிருந்த ஆர்வத்தைத் திருப்திப்படுத்திவிடவில்லை. அவள் தேநீரைக் கோப்பைகளில் ஊற்றும்போதே ஏதோ கசந்துபோய் சிரித்துக்கொண்டே சொன்னாள். அவர்களை ஆசுவாசப்படுத்துவதற்கென்றும், அதேபோலத் தன் இதயத்துக்குச் சமாதானம் சொல்வது போலவும் அவ்வார்த்தைகளை அவள் சொன்னாள்:

“நாமெல்லாம் – அந்த இருண்ட வாழ்விலிருந்து வந்த நாமெல்லாம், எல்லாவற்றையும் உணரத்தான் செய்கிறோம். ஆனால், நமது உணர்ச்சிகளை நம்மால் வாய்விட்டுச் சொல்ல முடியவில்லை. நமக்கு வெட்க உணர்ச்சி தோன்றுகிறது. ஏனெனில் நமக்குப் புரிந்த விஷயத்தையே நம்மால் சொல்ல முடியவில்லையே அடிக்கடி – நமது வெட்க உணர்ச்சியால் – நாம் நமது சொந்த எண்ணங்களின் மீதே எரிந்து விழுகிறோம். வாழ்க்கை நம்மைச் சகல கோணங்களிலிருந்தும் தாக்குகிறது. நாமோ ஓய்ந்திருக்க எண்ணுகிறோம். நமது சிந்தனைகளோ நம்மை அப்படியிருக்க விடுவதில்லை.”

நிகலாய் தன் மூக்குக் கண்ணாடியைத் துடைத்து விட்டுக்கொண்டே அவள் கூறியதைக் கேட்டான்; சோபியா தனது அகன்ற கண்களைத் திறந்தபடியே புகை பிடிக்கவும் மறந்துபோய் இருந்தாள். சிகரெட் கூட அணைந்துவிடும் போலிருந்தது. அவள் இன்னும் அந்தப் பியானோ வாத்தியத்தின் முன்புதான் இருந்தாள். தன் சகோதரனை நோக்கிச் சிறிது திரும்பியிருந்தாள். எனினும் தனது வலது கையால் பியானோவின் கட்டைகளை சமயங்களில் தட்டிக் கொடுத்துக்கொண்டாள். தாய் தனது உணர்ச்சியை உருவாக்கி வெளியிடும் மனங்கனிந்த வார்த்தைகளோடு, அந்த ஸ்வரநாதங்களும் ஒன்றிக் கலந்து மிருதுவாக ஒலித்தன.

உங்கள் துர்ப்பாக்கியமோ அன்றாடச் சித்திரவதை; ஆண்டாண்டுதோறும் நிரந்தரமாக நிலைத்திருந்த சித்திரவதை. அந்த மாதிரியான சித்திரவதையை தாங்குவதற்கு உங்களைப் போன்றவர்கள் எங்கிருந்துதான் சக்தி பெறுகிறார்களோ?”

”இப்போது என்னால் என்னைப் பற்றியும், பொதுவாக மக்களைப் பற்றியும் சொல்ல முடியும். ஏனெனில் இப்போது வாழ்க்கையைப் புரிந்து கொள்ளவும்; ஒப்பிட்டுப் பார்க்கவும் என்னால் முடிகிறது. இதற்கு முன்பெல்லாம் ஒப்புநோக்கிப் பார்ப்பதற்கே ஒரு விஷயமும் இருந்தது இல்லை. எல்லோருமே ஒரே மாதிரியாக வாழ்கிறார்கள் என்றே எனக்குத் தோன்றியது. இப்போதோ மற்ற ஜனங்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதையும் நான் எப்படி வாழ்ந்தேன் என்பதையும் என்னால் அறிய முடிகிறது. இதுவும் ஒரு கஷ்டம்தான்!”

அவள் தன் குரலைத் தாழ்த்திக்கொண்டு மேலும் பேசினாள்;

”நான் சொல்லுவது தவறாக இருக்கலாம். சொல்லவே தேவையில்லாமல் இருக்கலாம். ஏனென்றால் உங்களுக்கே அதெல்லாம் நன்கு தெரியும்…”

அவளது குரலில் கண்ணீரின் அடையாளம் தென்பட்டது. எனினும் அவர்களைப் பார்த்தபோது அவள் கண்களில் ஒரு குதூகலம் பிறந்தது. அவள் சொன்னாள்:

”ஆனால் நான் என் இதயத்தை உங்களிடம் திறந்து காட்ட விரும்புகிறேன். உங்களது நலத்தில் நான் எவ்வளவு தூரம் அக்கறை கொண்டிருக்கிறேன் என்பதை உங்களுக்கு எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.”

“நாங்கள்தான் கண்ணாரப் பார்க்கிறோமே” என்று மெதுவாகச் சொன்னான் நிகலாய்.

என்றாலும், தனது ஆவலைத் தான் பூர்த்தி செய்து கொள்ள இயலாதது போலத் தோன்றியது அவளுக்கு. எனவே அவள் தனக்குப் புதியனவாகவும், அளவற்ற முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் தோன்றிய எதையெதையோ பற்றி மீண்டும் பேசத் தொடங்கினாள். பொறுமையும் கசப்புணர்ச்சியும் நிறைந்த தனது வாழ்வைப் பற்றி அவர்களிடம் சொல்லத் தொடங்கினாள். ஆனால் அந்தப் பேச்சில் உக்கிரம் இல்லை; ஏதோ ஒரு இரக்கமான போலி பாவம்தான் தொனித்தது. தனது கடந்தகால வாழ்க்கையை உருவாக்கிய இருண்ட நாட்களைப் பற்றிய சிந்தனைகளைச் சொன்னாள். தனது கணவனிடம் தான் பெற்ற அடி உதைகளைப் பற்றிக் கூறினாள். அந்த அடி உதைகளுக்குரிய காரண காரியமற்ற நிலைமையையும் அவற்றைத் தடுக்க முடியாதிருந்த தன் ஏலாத் தனத்தையும் எண்ணி அவளே வியந்து கொண்டாள்……

அவள் சொல்வதை அவர்கள் அமைதியுடன் கேட்டார்கள். மிருகத்தைப் போல் மதிக்கப்பட்டு நடத்தப்பட்ட அவளது வாழ்க்கையில், தனக்கு நேர்ந்த துயரங்களையும் கொடுமைகளையும் பொறுமையோடு சகித்துத் தாங்கிய அவளது வாழ்வில் படாடோபமோ அலங்காரமோ அற்ற அவளது எளிய வாழ்க்கையின் பின்னணியிலே மறைந்துள்ள யதார்த்தமான அர்த்த பாவத்தை அவர்கள் உணர்ந்து உணர்ச்சி வசப்பட்டார்கள். அவள் மூலம் ஆயிரக்கணக்கான ஜீவன்கள் பேசுவது போலிருந்தது. அவள் வாழ்ந்ததெல்லாம் எளிய வாழ்வு, சர்வ சாதாரண வாழ்வு. இந்த உலகிலுள்ள எண்ணிறந்த பெரும்பான்மை மக்களது வாழ்வைப் போன்ற சாதாரண வாழ்வு. அவளது வாழ்க்கைக் கதை அந்த வாழ்வுக்கு ஒரு உதாரணம்; ஒரு அறிகுறி. நிகலாய் தனது முழங்கைகளை மேஜை மீது ஊன்றி, மோவாயைக் கைகளில் தாங்கியவாறு கண்களைச் சுருக்கி, கண்ணாடி வழியாக அவளைக் கூர்ந்து கவனித்தான். சோபியா நாற்காலியில் சாய்ந்து இடையிடையே நடுங்கிக்கொண்டாள், தலையையும் உலுப்பிக்கொண்டாள். அவளது முகம் மெலிந்து வெளுத்துப்போனது போலத் தோன்றியது. அவள் சிகரெட்டும் பிடிக்கவில்லை.

”ஒரு காலத்தில் நான் என்னையே துர்ப்பாக்கியசாலி என்று கருதினேன்” என்று கண்களைத் தாழ்த்திக்கொண்டு அமைதியாகச் சொன்னாள் சோபியா. “என்னுடைய வாழ்க்கையே ஒரு ஜன்னி மயக்கம் என்று எனக்குத் தோன்றியது. அது என்னை ஒரு சிறு நகரத்திற்கு கடத்தப்பட்டிருந்த காலம். அந்தச் சமயத்தில் என்னைப் பற்றி நினைப்பதைத் தவிர, எனக்கு வேண்டியதைக் கவனிப்பதைத் தவிர, வேறு சிந்தனையோ செயலோ கிடையாது. ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற விருப்பால், நான் எனது துன்பங்களைக் கணக்கிட்டுப் பார்த்தேன். என்னை மிகவும் நேசித்த தந்தையோடு சண்டை பிடித்துக்கொண்டிருந்தேன். என்னைப் பள்ளிக்கூடத்திலிருந்து வெளியேற்றினார்கள்; என்னை ஒரு அவமானச் சின்னமாகக் கருதினார்கள். நான் சிறையிலும் தள்ளப்பட்டேன். எனது நெருங்கிய தோழன் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுத்தான். என் கணவர் கைதாகி, நான் சிறைக்குள் போய் மீண்டும் நாடு கடத்தப்பட்டேன். பிறகு கணவரின் மரணமும் சம்பவித்தது.

இந்த உலகிலேயே நான்தான் மிகவும் துர்ப்பாக்கியமானவள் என்று அப்போது எனக்குத் தோன்றியது. ஆனால், என்னுடைய சகல துர்பாக்கியங்களும் – அதைவிடப் பத்துமடங்கு அதிகமான துர்பாக்கியங்களும் கூட, உங்களுடைய ஒருமாத வாழ்க்கைக்குச் சமமாகாது, பெலகேயா நீலவ்னா! உங்கள் துர்ப்பாக்கியமோ அன்றாடச் சித்திரவதை; ஆண்டாண்டுதோறும் நிரந்தரமாக நிலைத்திருந்த சித்திரவதை. அந்த மாதிரியான சித்திரவதையை தாங்குவதற்கு உங்களைப் போன்றவர்கள் எங்கிருந்துதான் சக்தி பெறுகிறார்களோ?”

”எங்களுக்கு எல்லாம் பழகிப்போய்விடுகிறது” என்று பெருமூச்சுடன் சொன்னாள் பெலகேயா.

இந்த உலகிலேயே நான்தான் மிகவும் துர்ப்பாக்கியமானவள் என்று அப்போது எனக்குத் தோன்றியது. ஆனால், என்னுடைய சகல துர்பாக்கியங்களும் – அதைவிடப் பத்துமடங்கு அதிகமான துர்பாக்கியங்களும் கூட, உங்களுடைய ஒருமாத வாழ்க்கைக்குச் சமமாகாது

”நான் வாழ்க்கையை நன்றாகவே அறிந்திருக்கிறேன் என்றே தோன்றுகிறது” என்று சிந்தனை வயப்பட்டவனாகக் கூறினான் நிகலாய்; “என்றாலும் வாழ்க்கையைப் பற்றிப் புத்தகத்தின் மூலமாவது என்னுடைய பக்குவமடையாத அரைகுறை அபிப்பிராயங்கள் மூலமாவது தெரிந்துகொள்ளாமல், இந்தமாதிரி நேரடியாகக் கேட்டுத் தெரிந்துகொள்ளும்போது, வாழ்க்கை பயங்கரமாய்த் தோற்றமளிக்கிறது. சின்னஞ்சிறு விஷயங்கள்தான் பயங்கரமாய்த் தோன்றுகின்றன. அந்தக் கவனிப்பற்ற சிறுசிறு பொழுதுகள்தான் ஆண்டுகளை உருவாக்குகின்றன……..”

அந்தப் பேச்சு இடைவிடாது விரிந்து பெருகியது. இருண்ட வாழ்க்கையின் சகல அம்சங்களையும் அந்தப் பேச்சு தொட்டு விரிந்தது. தாய் தனது நினைவின் ஆழத்திலேயே முங்கி, முழுகிவிட்டாள். தனது இளமைக்காலத்தில் பயங்கரத்தை உண்டாக்கிய அன்றாடத் துயரங்களையும், ஆறாத மனப் புண்களையும் அவள் சங்கிலித் தொடர்போல நினைவுக்குக் கொண்டு வந்து சிந்தித்துப் பார்த்தாள். கடைசியாக அவள் பேசினாள்:

“நீங்கள் ஓய்வு எடுத்துக்கொள்ளும் நேரமாகிவிட்டது. நான் பாட்டுக்குப் பேசிக்கொண்டே இருக்கிறேனே. சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லி முடித்துவிட என்னால் முடியுமா? முடியாது.”

அக்காவும் தம்பியும் அவளிடமிருந்து மெளனமாகவே விடைபெற்றுச் சென்றனர். வழக்கத்துக்கு மாறாக, நிகலாய் தன் தலையை அதிகம் தாழ்த்தி வணங்கியது போலவும், தன் கரத்தை அதிக அன்போடு குலுக்கியது போலவும் தாய்க்குத் தோன்றியது. சோபியா தாயை அவளது அறை வரையிலும் சென்று வழியனுப்பிவிட்டு, திரும்ப முனையும்போது வாசல் நடையில் நின்றவாறே சொன்னாள். “நிம்மதியாகத் தூங்குங்கள், நல்லிரவு!”

அவளது குரலில் பரிபூரணமான பரிவு தொனித்தது. அவளது சாம்பல் நிறக் கண்கள் ஆர்வங் கலந்த அன்போடு தாயின் முகத்தைக் கனிந்து நோக்கின.

பெலகேயா சோபியாவின் கரத்தைத் தனது இரு கரத்தாலும் பற்றிப் பிசைந்துகொண்டே சொன்னாள்:

“மிகுந்த நன்றி.”

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

தமிழின் தொன்மைக்கு சான்றளித்த ஐராவதம் மகாதேவன் !

சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகம்தான் என்பதற்கு ஆதாரங்களை கண்டறிந்து நிறுவியவர் தொல்லியல்துறை அறிஞர் ஐராவதம் மகாதேவன், கடந்த 26-11-2018 அன்று காலமானார்.

ஐராவாதம் மகாதேவன்.

அக்டோபர் 2, 1930 அன்று பிறந்த ஐராவாதம் மகாதேவன், திருச்சியில் தனது பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, சென்னையில் இரசாயனவியலில் தனது பட்டப்படிப்பை முடித்தார். பின்னர், சட்டக் கல்லூரியில் சட்டக் கல்வியை முடித்துவிட்டு, இந்திய ஆட்சிப் பணிக்கு படித்து தேர்வாகி, ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றினார்.

1962-ல் தொல்லியல் துறை அறிஞர்களான கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி,  கே.வி. சுப்ரமணிய ஐயர் ஆகியோரின் பழக்கம் கிடைத்தது. அப்போதிருந்தே தொல்லியல் துறையில் ஆர்வம் காட்டிவந்த ஐராவதம் மகாதேவன், 1980-ல் விருப்ப ஓய்வு பெற்ற பின் இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் செயல் இயக்குனராக செயல்பட்டார். 1987 முதல் 1991 வரையில் தினமணியின் ஆசிரியராகச் செயல்பட்டார்.

சிந்து சமவெளி நாகரிகத்தில் கண்டெடுக்கப்பட்ட இலச்சினையில் காணப்பட்ட மிருகத்தை குதிரை எனக் கூறி அது ஆரிய நாகரிகம்தான் என்ற கூற்றை முறியடித்து பல்வேறு ஒப்பீட்டு சான்றாதாரங்களின் மூலம் அது காளை என்பதை நிருபித்தார். அதன்மூலம் சிந்துச் சமவெளி நாகரிகம், திராவிட நாகரிகமே என்பதை உலகிற்கு உரக்கச் சொன்னவர் ஐராவதம் மகாதேவன்.

கடந்த 2009-ம் ஆண்டு மத்திய அரசின் “பத்மஸ்ரீ” விருது பெற்றவர் ஐராவதம் மகாதேவன். திராவிட நாகரிக ஆய்விற்கு அவரது பங்களிப்பைப் பாராட்டி செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் (2009-2010)-ம் ஆண்டுக்கான “தொல்காப்பியர் விருது” வழங்கப்பட்டது.

சென்னையில் கடந்த திங்கள்கிழமை (26-11-2018) அன்று தனது 88-வது வயதில் மரணமடைந்தார். அதிகாரவர்க்கப் பிரதிநிதி, பத்திரிகையாளர், தொல்லியல் துறை நிபுணர் என பல பரிமாணங்களில் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட ஐராவதம் மகாதேவனுக்கு துறைசார் வல்லுனர்கள் செலுத்திய அஞ்சலிகளுக்கான இணைப்பை இங்கே தந்திருக்கிறோம்.

♦♦♦

ஐராவதம் மகாதேவன்: தமிழின் தொன்மைக்குச் சான்றுகளை கொடுத்தவர்

…… தமிழின் தொன்மையைத் தனது கடும் உழைப்பால், ஆய்வுத் திறத்தால் உலக அரங்குக்கு எடுத்துச்சென்றவர் ஐராவதம் மகாதேவன். 38 ஆண்டு காலம் உழைத்து அவர் உருவாக்கிய பழந்தமிழ்க் கல்வெட்டுகள் குறித்த ஆய்வு நூல் (Early Tamil Epigraphy, Harward University press and CreA, 2003) இந்திய வரலாறு என்றாலே, அது வட இந்திய வரலாறுதான் என்றிருந்த நிலையை மாற்றுவதற்கு உதவியது. தமிழ் பிராமி என அவரால் அழைக்கப்படும் பழந்தமிழ் எழுத்துகளையும் ஆரம்ப கால வட்டெழுத்துகளையும் புரிந்துகொள்ள முழுமையானதொரு வழிகாட்டியாக அது விளங்குகிறது.

…… சிந்துவெளி எழுத்துகளும் திராவிடமும்

ஐராவதம் மகாதேவன் கவனம் செலுத்திய இன்னொரு துறை சிந்துவெளி எழுத்துகள் குறித்தனவாகும். சிந்துவெளி நாகரிகத்தை ஆரியக் கலப்பில்லாத அதற்கு முற்பட்ட நாகரிகம் என நிறுவினார் ஐராவதம் மகாதேவன். “சிந்துவெளி நாகரிகம் ஒரு நகர நாகரிகம். ஆனால், ஆரியர்களுடைய நாகரிகமோ கிராமப்புறத்தைச் சார்ந்த மேய்ச்சல் நிலத்தோடு தொடர்புடைய நாகரிகமாகும். சிந்துவெளியில் கிடைத்த குறியீடுகள், முத்திரைகளில் பல்வேறுவிதமான விலங்குகளின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை எதிலும் குதிரையின் உருவம் காணப்படவில்லை. குதிரை என்பது ஆரியர்களின் வருகைக்குப் பிறகே இந்தியாவில் அறிமுகமானது” என்று எடுத்துக்காட்டினார் ஐராவதம் மகாதேவன்.

சிந்துவெளிப் பண்பாடு ஒரு திராவிடப் பண்பாடுதான் என்று நீண்டகால ஆராய்ச்சியின் மூலம் நிரூபணம் செய்த அஸ்கோ பர்போலாவின் வாதத்தை வழிமொழிந்த ஐராவதம் மகாதேவன், சிந்துவெளிக் குறியீடுகளை அஸ்கோ பர்போலா படித்த முறையில் சில குறைபாடுகள் இருப்பதையும் சுட்டிக்காட்டினார். பர்போலா ‘அணில்’ என்ற உருவத்தை ‘பிள்ளை’ எனப் பொருள் கொண்டதையும், ‘வளையல்’ போன்ற குறியீட்டுக்கு ‘முருகு’ என்று பொருள் கொண்டதையும் மொழியியல் அடிப்படையில் தவறென்று சுட்டிக்காட்டினார்.

சிந்துவெளிக் குறியீடுகளைப் படிப்பதற்கு ஐராவதம் மகாதேவன் கையாண்ட முறையே நம்பகமானதாக உள்ளது.

– ரவிக்குமார், எழுத்தாளர், வழக்கறிஞர்.  – ’தி இந்து தமிழ்’ (மேலும் படிக்க)

♦♦♦

காலத்தின் கல்வெட்டு!

….. ‘‘40 ஆண்டுகளுக்கு முன் ஐராவதம் மகாதேவன் வெளியிட்ட ‘சிந்துவெளி எழுத்து, குறியீடுகளின் தொகுப்பும் அட்டவணைகளும்’, சிந்துவெளி ஆய்வில் ஒரு மறக்க முடியாத மைல் கல். சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிடக் கருதுகோளுக்கு வலுச்சேர்த்த ஆய்வறிஞர் அவர்.

சிந்துவெளிப் பண்பாட்டின் எச்சங்கள் இந்தியா முழுவதும் பரவியிருக்கும் என்பதால், அதன் தொடர்ச்சியை‌ வேத இலக்கியங்கள் மற்றும் வட இந்திய மரபுகள் மூலமாகவும், பழந்தமிழ் இலக்கியங்கள் மற்றும் தமிழ்த் தொன்மங்கள் மூலமாகவும் இரு முனைகளில் இருந்தும் மீட்டுருவாக்கம் செய்யமுடியும் என்பதே ஐராவதம் மகாதேவனின் அணுகுமுறை.”

தமிழ்மகன்விகடன்  (மேலும் படிக்க)

♦♦♦

படிக்க:
♦ சிந்துவெளி நாகரீகம் திராவிட நாகரீகமே
♦ கீழடி : மண்ணிட்டு மூடப் பார்க்கிறது பார்ப்பன பாஜக அரசு

♦♦♦

ஆய்வு நேர்மையும் வாழ்வு நேர்மையும் வேறுவேறல்ல!

….. ஹார்வர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் மைக்கேல் விட்சல், அவர் அப்போது பதிப்பித்துக்கொண்டிருக்கும் ‘ஹார்வர்டு கீழை நூல்கள் வரிசை’யில் (Harvard Oriental Series) வெளியிட மகாதேவனிடம் இந்நூலைக் கேட்டார்.

ஹார்வர்டு கீழை நூல்கள் வரிசையில் ஒரு அறிஞரின் நூல் வெளியிடப்படுவது அறிவுலகில் மிக உயரிய கௌரவங்களில் ஒன்றாகக் கருதப்படுவது. முழுமை அடையாத ஒரு கையெழுத்துப் பிரதியைப் பார்வையிடாமல்கூட ஹார்வர்டு தன்னுடைய புகழ்மிக்க கீழை நூல்கள் வரிசையில் வெளியிட முன்வந்தது, உலக அறிஞர்களிடையே மகாதேவனின் புலமைக்கு எவ்வளவு மதிப்பிருந்தது என்பதை நமக்குச் சொல்லிவிடக்கூடியது.

‘க்ரியா’ எஸ்.ராமகிருஷ்ணன்  – ’தி இந்து தமிழ்’ (மேலும் படிக்க)

♦♦♦

தமிழ் பிராமி எழுத்துக்கு உயிர்கொடுத்த ஐராவதம் மகாதேவன் மறைவு

….. சிந்து சமவெளி ஆராய்ச்சி மற்றும் தொல்தமிழ் கல்வெட்டுகள் ஆகிய துறைகளில் ஐராவதம் மகாதேவனின் பங்களிப்பு அளப்பரியது என அவரோடு பயணித்த மூத்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன் கூறுகிறார்.

”ஆராய்ச்சிகள் நடத்தும்போது, அதன் தீர்வுகளை நேர்மையாக எதிர்கொள்ளவேண்டும் என்ற கருத்துப்படி வாழ்ந்தவர் மகாதேவன். கிடைத்த தரவுகளுக்கு உண்மையாக இருந்தவர். கணினி பயன்பாடு குறித்து பலரும் அறிந்திராத காலத்தில், 1977ல், சிந்துசமவெளி குறியீடுகளின் எழுத்துக்கள் மற்றும் பொறிப்புகளை அட்டவணைப்படுத்தியவர். வரலாற்று ஆராய்ச்சிகளில் மறக்கமுடியாத ஆளுமையாக இருப்பவர். அவரது கடைசி யோசனை கூட சிந்துவெளி பற்றியதாகவே இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை”என்று கூறுகிறார் பாலகிருஷ்ணன்”

– பிபிசி தமிழ் (மேலும் படிக்க)

♦♦♦

ஐராவதம் மகாதேவன்: காலம் அரிக்காத கல்வெட்டு!

…. பௌத்தர்களும் சமணர்களும் தமிழ்ச் சமூகத்துக்கும், இலக்கியத்துக்கும் ஆற்றியுள்ள சேவையை ஐராவதம் மகாதேவனும் அந்த நூலில் உறுதிப்படுத்தியுள்ளார். ஏறத்தாழ கிபி பதினாறாம் நூற்றாண்டு வரை அந்த சேவை நீடித்ததையும் அவர் சுட்டிக் காட்டியிருந்தார் . தொல்காப்பியம், நன்னூல் போன்ற இலக்கண நூல்களும்; சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, பெருந்தொகை போன்ற காப்பியங்களும்; திருக்குறள், நாலடியார் போன்ற அற நூல்களும்; திவாகரம், பிங்கலந்தை, சூடாமணி போன்ற அகராதி நூற்களும் சமணர்களால் இயற்றப்பட்டன என்பதைத் தனது நூலில் சுட்டிக்காட்டியிருக்கும் ஐராவதம் மகாதேவன் தமிழ் மொழிக்கு வரிவடிவம் கொடுத்தவர்கள் சமணர்களே என்று தமது ஆய்வு நிரூபணம் செய்கிறது என்றும் தெரிவித்திருந்தார். பிற்காலத்தில் சங்க இலக்கியம் செழிக்க அவர்கள் ஏற்படுத்தித் தந்த வரிவடிவமே உதவியது. மக்களிடம் கல்வி அறிவு பரவவும் அதுவே காரணமாயிற்று’ எனவும் ஐராவதம் மகாதேவன் அந்த நூலில் குறிப்பிட்டிருக்கிறார் (பக்கம் 139).

ரவிக்குமார் – மின்னம்பலம் (மேலும் படிக்க)

♦♦♦

படிக்க:
தமிழகத் தொல்லியல் ஆய்வுகள் – கீழடி வரை : நூல் அறிமுகம்
சிறப்புக் கட்டுரை : ஆரியர்கள் வந்தேறிகள்தான் – நிரூபிக்கிறது மரபணுவியல் ஆய்வு !

♦♦♦

துறைசார் அறிஞர்களுக்கு வெளியே ஒளிர்ந்த மேதை மகாதேவன்

…. சிந்து சமவெளியில் கிடைத்த ஒரு இலச்சினையை அடையாளம் காண்பதுதான் மிகப் பெரிய சவாலாகத் திகழ்ந்தது. அதற்கு மட்டுமே அவர் 50 ஆண்டுகளைச் செலவிட்டிருக்கிறார். இந்தக் குறியீடுகள் இதைச் சொல்லலாம் அல்லது அதைச் சொல்லலாம் என்ற வகையில் அவர் எதையும் அணுகியதே கிடையாது. மொழியியல் இலக்கணங்களையும், ஆய்வுத்திறனையும் இணைத்தே பகுத்தாய்ந்து முடிவுக்கு வந்தார்.

எல்லா இலச்சினைகளையும் தொகுத்து அவற்றிலிருந்து பெறும் தகவல்களை அட்டவணைப்படுத்தினார். இதற்குச் சில ஆண்டுகள் பிடித்தன. அவைதான் கல்வெட்டு ஆராய்ச்சி, மொழி ஆராய்ச்சி, மானுடவியல் ஆராய்ச்சி ஆகியவற்றில் இனி ஈடுபடுவோருக்கு மிகச் சிறந்த திறவுகோலாகப் பயன்படவிருக்கிறது. இந்தியத் தொல்லியல் துறை 1977-ல் அதை நூலாக வெளியிட்டது. (The Indus Script: Texts, Concordance and Tables.)

ரொமிலா தாப்பர்  – ’தி இந்து தமிழ்’ (மேலும் படிக்க)

♦♦♦

தினமணி முன்னாள் ஆசிரியர் ஐராவதம் மகாதேவன் இன்று காலமானார்

1977-ல் அவர் வெளியிட்ட ‘தி இண்டஸ் ஸ்கிரிப்ட்: டெக்ஸ்ட்ஸ் , கன்கார்டன்ஸ் அண்ட் டேபிள்ஸ் (The Indus Script : Texts, Concordance | and Tables (1977) ) என்ற நூல் சிந்து சமவெளி எழுத்துக்களைக் குறித்த ஆராய்ச்சிகளில் ஒரு மைல்கல். அந்த நூலில்தான் சிந்து சமவெளி எழுத்துக்களுக்கும் திராவிட மொழிக் குடும்பத்துக்கும் இடையிலான உறவைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். சிந்து சமவெளி கலாச்சாரம் என்பது திராவிடக் கலாச்சாரமே என்று நிறுவுவதில் அவருடைய ஆய்வுகள் பேருதவி புரிந்து வருகின்றன.

முற்காலத் தமிழ்க் கல்வெட்டுகளை ஆராய்ந்து அவற்றைப் பற்றி விரிவாக எழுதி 2003-ல் அவர் வெளியிட்ட ‘ஏர்லி தமிழ் எபிகிராஃபி: ஃப்ரம் தி ஏர்லியஸ்ட் டூ த சிக்ஸ்த் சென்சுரி ஏ.டி.’ (Early Tamil Epigraphy, | from the Earliest Times to the Sixth century A.D (2003) என்கிற பெருநூல் மிகவும் முக்கியமானது. அவருடைய மகத்தான சாதனைகளுள் ஒன்றாக இந்த நூல் கருதப்படுகிறது. சிந்து சமவெளி எழுத்துக்களும் பிராமி எழுத்துக்களும் ஐராவதம் மகாதேவனின் நிபுணத்துவத்தில் பிரதானமான பகுதிகள்.

– தினமணி (மேலும் படிக்க)

♦♦♦

’வரலாறு’ எனும் இணையதளத்தில் ஐராவதம் மகாதேவன் எழுதிய சில கட்டுரைகளுக்கான சுட்டிகள்:

தொகுப்பு:

ரஃபேல் புகழ் பிரான்சிலிருந்து 2 உளவாளிகள் குமரி வந்தனராம் ! பொன்னாரின் திடுக்கிடும் உளறல் !

டந்த நவம்பர் மாதத்தில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆர்த்தர் பௌவார்ட், ஜூல்ஸ் கிரவ்தாட் ஆகிய இரண்டு பத்திரிகையாளர்கள் சென்னை வந்திருக்கின்றனர். அவர்கள் ”ஃபொர்பிடன் ஸ்டோரீஸ்” (Forbidden) என்ற பிரெஞ்சுப் பத்திரிகை சார்பாக தமிழகத்தில் சட்டவிரோத மணல் கொள்ளை குறித்து ஆய்வு செய்யும் பத்திரிகையாளர்களுக்கு எதிரான மிரட்டல்கள், கைது தாக்குதல் குறித்து ஆய்வு நடத்த வந்திருந்தனர்.

சென்னை வந்த அந்த பத்திரிகையாளர்கள், ஏற்கெனவே வைகுண்டராஜனின் சட்டவிரோத மணல் கொள்ளை குறித்து ஆய்வு செய்து அம்பலப்படுத்திய சந்தியா ரவிசங்கர் என்ற சென்னை பத்திரிகையாளரின் மூலம், டி. ஆனந்தகுமார் மற்றும் எம்.ஸ்ரீராம் ஆகியோருடன் தொடர்பு கொண்டுள்ளனர்.

பிரெஞ்சு பத்திரிகையாளர்கள்.

வைகுண்டராஜனின்  சட்டவிரோத அரிய வகை மணல் கொள்ளை தூத்துக்குடி, கன்னியாகுமரி பகுதிகளில் பல பத்தாண்டு காலமாக நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் உள்ள முறையற்ற சட்டவிரோத மணல் கொள்ளை குறித்து ஆய்வு நடத்த, ஆனந்தகுமார், ஸ்ரீராம் ஆகியோருடன் ஆர்தர் பௌவார்ட் மற்றும் ஜூல்ஸ் கிரவ்தாட் ஆகியோர் கன்னியாகுமரி சென்று அங்கு நடைபெறும் மணற்கொள்ளை குறித்து விசாரித்து வந்திருக்கின்றனர்.

இந்நிலையில், ஆர்தர் பௌவார்ட்டும், ஜூல்ஸ் கிரவ்தாட்டும், குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய அரியவகை மணல் நிறுவனத்தின் (ஐ.ஆர்.இ.எல்) மேலாளரைச் சந்திக்க அனுமதி கேட்டுள்ளனர். அவர்களை உள்ளே அனுமதித்த மேலாளர், அப்பத்திரிகையாளர்களை அவர்களது சந்திப்பின் இடையிலேயே வெளியேறுமாறு கூறியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து அவர்களும் வெளியேறியிருக்கின்றனர்.

அதனைத் தொடந்து மறுநாள் அவர்கள் இருவரும் தங்களது சொந்த நாட்டிற்குத் திரும்பியுள்ளனர். தாது மணல் கொள்ளை குறித்து வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் விசாரிக்கிறார்கள் என்பதைக் கேள்விப்பட்ட மணல் கொள்ளை கும்பல், உடனடியாக உள்ளூர் போலீசு கும்பலை முடுக்கி விட்டிருக்கிறது. உடனடியாக களத்தில் இறங்கிய போலீசு, பிரெஞ்சு பத்திரிகையாளர்கள் தங்கியிருந்த விடுதியில் விசாரித்து அவர்களுடன் வந்த பத்திரிகையாளர்கள் ஆனந்தகுமார், ஸ்ரீராம் ஆகியோரை உடனடியாக விசாரணைக்கு வரவழைத்தது. கன்னியாகுமரி டி.எஸ்.பி. பாஸ்கரன் கடந்த 27-ம் தேதி அனந்தகுமாரையும், ஸ்ரீராமையும் தொடர்பு கொண்டு, நேரில் வந்து நடந்த விசயங்களை விளக்குமாறு கூறியிருக்கிறார்.

இதையடுத்து நவம்பர் 28-ம் தேதி கன்னியாகுமரியில் டி.எஸ்.பி. பாஸ்கரனை காலை 11 மணிக்கு அவரது அலுவலகத்தில் சந்தித்துள்ளனர். இருவரிடமும் சுமார் 6 மணிநேரத்திற்கும் மேல் போலீசு நிலையத்திலேயே விசாரணையை நடத்தியுள்ளது போலீசு. கூடுதலாக, அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளது. அதன் பின்னர் மீண்டும் போலீசு நிலையத்திற்கு அழைத்துவந்து ஆனந்தகுமாரை சிறையிலடைத்தது. ஸ்ரீராமை மட்டும் ஹோட்டலுக்குச் செல்ல அனுமதித்தது. இதனைத் தொடர்ந்து பல்வேறு மூத்த பத்திரிகையாளர்கள் போலீசாரிடம் விசாரித்த பின்னர், அனந்தகுமாரை ஹோட்டலுக்குச் செல்ல அனுமதித்துள்ளது. கூடவே 4 போலீசை அவர்களது அறை வாசலில் காவல் வைத்தது.

பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இந்து என். ராம் உள்ளிட்ட பத்திரிகையாளர்கள்.

மறுநாள் மீண்டும் இருவரையும் போலீசு நிலையத்திற்கு அழைத்து விசாரணையைத் தொடர்ந்துள்ளது. உளவுப் பிரிவு, க்யூ பிரிவு உள்ளிட்ட ஆளும் வர்க்கத்தின் சேவக பிரிவுகள் அனைத்தும் வரிசையாக விசாரித்துள்ளன. இதனிடையே மூத்த வழக்கறிஞர் கீதாவின் தலையீட்டின் பேரிலேயே அவர்களை விடுவித்தது போலீசு.

இந்த விசாரணையின் போது பிரெஞ்சு பத்திரிகையாளர்கள் இருவரும் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் தங்களது பத்திரிகை அடையாள அட்டையைக் காட்டி தாங்கள் சட்டப்பூர்வமாக அனுமதி பெற்றே அங்கு வந்ததற்கும் ஆதாரம் காட்டியுள்ளனர். இந்த விசாரணையின் போது டி.எஸ்.பி. பாஸ்கரன் சட்டவிரோத மணல் கொள்ளை குறித்து எதுவும் பேசக் கூடாது என பத்திரிகையாளர்களை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இந்த விசாரணை குறித்து பத்திரிகையாளர் அனந்தகுமார், டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகைக்கு கூறுகையில், டி.எஸ்.பி. அலுவலகத்தில் நாங்கள் சட்டவிரோதமாக சிறைவைக்கப்பட்டது குறித்து மிகவும் அதிர்ச்சியடைந்தோம். மணிக்கணக்கில் எங்களிடம் கேள்வி கேட்டனர். எங்களை சில வாக்குமூலங்களில் கையெழுத்திடச் சொன்னார்கள். நாங்களும் கையெழுத்திட்டோம். ”சன் வேர்ல்ட்” தங்கும் விடுதிக்கு எங்களை அழைத்துச் சென்று அங்கு சுமார் 6 மணிநேரத்திற்கும் மேலாக அடைத்துவைத்தனர் என்று கூறியிருக்கிறார்.

இது குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு முன்னுக்குப் பின் முரணான தகவல்களைக் கூறியுள்ளார் கன்னியாகுமரியின் எஸ்.பி. ஸ்ரீநாத். அவர்கள் இருவரும் ஐ.ஆர்.ஈ.எல் நிறுவனத்திற்குள் அனுமதியின்றி சென்றனர் என்றும் தடை செய்யப்பட்ட இடங்களை புகைப்படங்கள் எடுத்தனர் என்றும் பின்னர் புகைப்படங்கள் எதுவும் எடுக்கவில்லை என்றும் உளறிக் கொட்டியுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையின் சட்டவிரோத நடவடிக்கை ஆகட்டும் அல்லது வைகுண்டராஜனின் தாதுமணல் கொள்ளை ஆகட்டும், திருச்செந்தூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் நடக்கும் அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் புரோக்கர் வேலை செய்து வருகிறது பா.ஜ.க. கும்பல். ஸ்டெர்லைட் விவகாரத்தில் அப்பட்டமாக அனில் அகர்வாலுக்கு ஆதரவாக பா.ஜ.க. செயல்பட்டது.

தாதுமணல் கொள்ளை புகழ் வைகுண்டராஜன், சுப்ரமணியசாமி வழியாக தனது பாஜக லாபியை வைத்துள்ளார். ஏற்கனவே எஸ்.வி.சேகர் “அண்ணாச்சி”யிடம் பேசி நியூஸ் 7 தொலைக்காட்சியில் மதிமாறன் போன்றோரை அழைக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொண்டதை பகிரங்கமாக அறிவித்திருக்கிறார். செத்துப் போன ஜெயாவின் தர்பாரில் அங்கம் வகித்த வைகுண்டராஜன் தற்போது நியூஸ் 7 தொலைக்காட்சி மூலம் பாஜக-வின் தமிழகத் திட்டத்திற்கு தீயாய் வேலை செய்கிறார்.  எனவே பா.ஜ.க. கும்பல், தமது கூட்டாளி வைகுண்டராஜனின் சட்டவிரோத மணற்கொள்ளை அம்பலப்பட்டால், சும்மா விட்டுவிடுமா என்ன ?

உடனடியாக களத்தில் இறக்கிவிட்டது பொன்.ராதாகிருஷ்ணனை. மத்திய அமைச்சராக இருந்து கொண்டு கூச்சமே இல்லாமல் பொய் சொல்லக் கூடிய உயிரினங்கள் பா.ஜ.க.வில் மட்டுமே வாழ்ந்து வருகின்றன. அதற்கு ஒரு உதாரணம் பொன்.இராதாகிருஷ்ணன்.

அந்த இரண்டு பிரெஞ்சு ‘உளவாளிகளும்’ கள்ள பாஸ்போர்ட்டில், கள்ளத் தோணி வழியாக கன்னியாகுமரிக்குள் நுழைந்தனர் என எவ்வித ஆதாரவும் இல்லாமல் அடித்து விடுகிறார் பொன்னார். தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்ததாக கிளப்பி விட்டவர் வைகுண்டராஜனுக்காக அதிகமாக கூவுகுகிறார்.

சங்கிகளின் பொய்ப் பிரச்சாரம்.

கன்னியாகுமரியில் திடீர் திடீரென போஸ்டர்கள் முளைக்கத் தொடங்கிவிட்டன. ”கன்னியாகுமரி மாவட்டத்தில் ஃப்ரான்ஸ் நாட்டு உளவாளிகள்.. பொதுமக்களே உஷார்!” என இரண்டு பிரெஞ்சு பத்திரிகையாளர்கள் புகைப்படத்தையும் போட்டு, அவர்களது பெயரை தப்பும் தவறுமாக எழுதி மொட்டையான போஸ்டர்கள் அடித்து வெளியிட்டுள்ளது ஒரு கும்பல். இதை பாஜக ஆதரவுடன் வைகுண்டராஜனின் ஆட்கள் செய்திருக்க வேண்டும். அல்லது பாஜக-வே வைகுண்டராஜன் ஆதரவுடன் செய்திருக்கும்.

எது எப்படி இருந்தாலும், இந்த விவகாரத்திலும் பத்திரிகையாளர்களை மிரட்டி, இனி யாரும் ஆய்வு செய்ய வரக்கூடாது என்பதில் வெற்றி பெற்றுவிட்டதாக வைகுண்டராஜன் கும்பல் நினைத்துக் கொண்டிருக்கலாம்.

படிக்க:
மணற் கொள்ளையன் வைகுண்டராஜன் : தெற்கத்தி வீரப்பன் !
மேக்கேதாட்டு அணைக்கு அனுமதி : அரசியல் சட்ட விரோதமானது !

இவ்விவகாரம் ஊடகங்களில் போலீசு செய்தியாகவே வெளிவந்து கொண்டிருந்ததை, இந்து குழுமத்தின் தலைவர் என்.ராம் உடைத்துள்ளார். நேற்று 3.12.2018 அன்று ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணியின் சார்பில் ஏற்பாடு செய்யபட்ட பத்திரிகையாளர்கள் சந்திப்பில் என்.ராம், போலீசின் இந்த சட்டவிரோத நடவடிக்கையை அம்பலப்படுத்தி, வந்திருந்தவர்கள் ஃப்ரெஞ்சு நாட்டு பத்திரிகையாளர்கள் என்பதையும், அவர்கள் முறையான வழியில்தான் வந்திருக்கின்றனர் என்பதையும் அம்பலப்படுத்தியுள்ளார்.

இருப்பினும் சங்க பரிவாரக் கும்பல், சட்டவிரோத கார்ப்பரேட்டுகளுக்கான தனது ’மாமா’ வேலையை சலியாமல் செய்து கொண்டுதான் இருக்கிறது. தமிழக பத்திரிகைகளும் இவ்விவகாரம் குறித்து எதுவும் வெளியாகாதவாறு அவற்றை அடக்கி வாசிக்கின்றன. நாளை (05-12-2018) அன்று இவ்விவகாரத்தைக் கண்டித்து பா.ஜ.க,, கன்னியாகுமரியில் ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கிறது.  ’இந்து’ என்.ராம், வந்தவர்கள் பிரெஞ்சு பத்திரிகையாளர்கள் என ஒருபக்கம் கூறிக் கொண்டிருக்க, மறுபக்கத்தில் பா.ஜ.க.வின் போராட்டச் செய்தியை அப்படியே வெளியிட்டிருக்கிறது தமிழ் இந்து இணையதளம். அதில் மேற்படி பிரான்ஸ் உளவாளிகள் எனும் அவதூறை அச்சுபிசகாமல் வெளியிட்டிருக்கிறது.

பிரான்சில் இருந்து ரஃபேல் விமானத்தை வாங்குகிறது இந்திய அரசு. அந்த விமான பேரத்தில் ஊழல் வெளி வந்து நாறிக் கொண்டிருப்பது தனிக் கதை. ஆனால் பிரான்சில் இருந்து தனது விமானப்படைக்கு தேவையான போர் விமானங்களை வாங்கும் இந்தியாவிற்கு பிரான்ஸ் நாடு ஏன் உளவாளிகளை அனுப்ப வேண்டும்? ரஃபேல் விமான பேர ஊழலில் பிரான்சை காப்பாற்ற இந்தியாவும், மோடியைக் காப்பாற்ற பிரான்சும் முயற்சி செய்யும் போது இந்த உளவாளி கதைக்கு அடிப்படையே இல்லை.

ஒருவேளை பிரான்ஸ் இந்தியாவை வேவு பார்க்க நினைத்திருந்தால் ரஃபேல் விமானத்தில் ஒரு ‘கருவி’ யை பொருத்தி விட்டால் போயிற்று! புதியத 2000 ரூபாய் நோட்டில் ஜிபிஎஸ் கருவியை பதியும் போது ஹைடெக்கான ரஃபேல் விமானத்தில் ஒரு ஒட்டுக் கருவியை பொருத்த முடியாதா என்ன? மோடி அமைச்சர்களே பிரான்சின் தயவில் காலம் கழிக்கும் போது இவர்கள் ஏன் இரண்டு பத்திரிகையாளர்களை உளவாளிகளாக அனுப்ப வேண்டும்?

மோடி ஊர் ஊராக போய் இந்தியாவில் தொழில் நடத்த வெளிநாட்டு கம்பெனிகளை வருந்தி அழைக்கும் காலத்தில் யார் யாரை உளவு பார்க்கிறார்கள்?

மேலும் படிக்க :
பத்திரிகையாளர்களை சட்டவிரோத காவலில் விசாரித்தது தவறு: விசாரணைக்கு டிஜிபி உத்தரவிட ‘இந்து’ என்.ராம் வலியுறுத்தல்

‘French Spies’ in Tamil Nadu Were Journalists Exposing Sand Mining

கல்வி உரிமையை பறிக்க வரும் இந்திய உயர்கல்வி ஆணையம் !

உயர்கல்வி ஆணைய மசோதாவை முறியடிப்போம் ! -மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி விடும் அறைகூவல்.

டந்த 2000-ஆம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சியில் பிர்லா-அம்பானி தலைமையில் அமைக்கப்பட்ட குழு “உயர்கல்வி நிறுவனங்களுக்கு யூ.ஜி.சி. நிதி வழங்கக் கூடாது, கார்ப்பரேட் நிறுவனங்கள் உதவியோடு அந்தந்தப் பல்கலைக்கழகங்களே நிதி திரட்டிக்கொள்ள வேண்டும்” என்று யூ.ஜி.சி.யைக் கலைக்கத் தூபம் போட்டது.

மோடி ஆட்சிக்கு வந்தபின் 2015-இல் முன்னாள் யூ.ஜி.சி. தலைவர் அரிகவுதம் தலைமையில் அமைக்கப்பட்ட குழு யூ.ஜி.சி.யைக் கலைத்துவிட வேண்டும் எனக்கூறி, வெளிப்படையாகவே அறிக்கை கொடுத்தது. அதைத்தான் இப்போது மோடி அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.

கடந்த ஜூலை மாதம் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இந்திய உயர்கல்வி ஆணையம் 2018 என்ற மசோதாவைப் பொதுமக்களின் கருத்துக் கேட்புக்காக வெளியிட்டது. தற்போது நடைமுறையில் உள்ள பல்கலைக்கழக மானியக் குழுவைக் (UGC) கலைத்துவிட்டு, அதற்குப் பதிலாக இந்திய உயர்கல்வி ஆணையம் (HECI) என்ற எதேச்சதிகாரம் கொண்ட அமைப்பை உருவாக்குவதுதான் இம்மசோதாவின் நோக்கம்.

ஆராய்ச்சி மாணவர்கலுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகையை நிறுத்தி வைக்கும் முடிவைக் கைவிடக்கோரி மாணவர்கள் யூ.ஜி.சி வளாகத்தை முற்றுகையிட்டு நடத்திய ஆர்ப்பாட்டம். (கோப்புப் படம்)

‘உயர் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக’ இப்புதிய அமைப்பு தேவைப்படுவதாகக் கூறுகிறது மோடி அரசு. ஏற்கனவே, ‘தரமான மருத்துவக் கல்வி’ என்ற பெயரில் நீட் தேர்வைத் திணித்தார்களே’ என்னவானது? ஒருபுறம் தனியார் பயிற்சி மையங்கள் கொள்ளையடிப்பதும், மறுபுறம் கிராமப்புறங்களைச் சார்ந்த அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக்கல்வி வாய்ப்பு அடியோடு பறிபோவதும்தான் நடந்து வருகிறது. இதுதான் இவர்கள் சொல்லும் தரத்தின் யோக்கியதை.

கல்வியின் தரத்தைப் பற்றிக் கவலைப்படும் இவர்கள்தான், கல்வித்துறையில் உள்ள “இன்ஸ்பெக்டர் ராஜ்” என ஏசப்பட்ட கண்காணிக்கும் முறையை முடிவுக்குக் கொண்டு வருகிறார்கள். கல்வித்துறையின் மீதான அரசின் கட்டுப்பாடும், ஒழுங்குபடுத்தும் சட்டமுறைகளும் இருப்பதால்தான், குறைந்தபட்சமாவது கல்வித்தரம் உள்ளது. இன்ஸ்பெக்டர் ராஜ் முறையை ஒழிப்பதன் மூலம் அம்பானி, அனில் அகர்வால் போன்ற கார்ப்பரேட் கொள்ளையர்களுக்கான சந்தையாகக் கல்வித்துறை மாற்றப்படுகிறது என்பதே உண்மை.

இந்திய உயர் கல்வி ஆணையத்தில் மொத்தம் 12 உறுப்பினர்கள் இருப்பார்கள். இதில் மூன்று உறுப்பினர்கள் மத்திய அமைச்சகச் செயலாளர்கள்; (மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், திறன் மேம்பாட்டு அமைச்சகம்) கார்ப்பரேட் முதலாளிகளில் ஒருவர் உறுப்பினராக இருக்கலாம். உயர்கல்வி ஆணையத்தின் தலைவராக வெளிநாட்டில் வாழுகின்ற இந்தியர்களும் (NRI) தேர்ந்தெடுக்கப்படலாம் என மசோதா கூறுகிறது. மேலும், மத்திய இணைச் செயலாளர் பொறுப்புக்கு இணையான ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியும் இவ்வாணையத்தில் இருப்பார். இரண்டு பேர் மட்டுமே பேராசிரியர்கள். மொத்தமாக அதிகாரிகளாலும் முதலாளிகளாலும் நிர்வகிக்கக் கூடிய அமைப்புதான் உயர்கல்வி ஆணையம்.

உயர் கல்வி பற்றிய அகில இந்தியக் கணக்கெடுப்பு 2018-இன் படி (All India Survey on higher education) மொத்தம் 40,000 ஆயிரம் கல்லூரிகளும் 856 பல்கலைக்கழகங்களும் இந்தியாவில் உள்ளன. இதில் 35% சதவிகிதக் கல்லூரிகள் அரசு கல்லூரிகள். இதில் மிகப் பெரும்பான்மையான கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் மாநில அரசுகளின் நிதியுதவி மற்றும் கட்டுப்பாட்டில் உள்ளவை. ஆனால், இம்மசோதாவின் மூலம் கல்வித்துறையின் மீதான மாநில அரசுகளின் உரிமை வலுக்கட்டாயமாகப் பறிக்கப்படுகிறது. இந்திய உயர் கல்வித்துறை நேரடியாக மைய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படுகிறது.

அடுத்து, மிக முக்கியமாக, உயர்கல்வித்துறைக்கு மானியம் வழங்கும் முறையை மோடி அரசு ஒழித்துக்கட்டுகிறது. பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) மிக முக்கியப் பணிகளில் ஒன்று மத்தியப் பல்கலைகழகங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது மற்றும் மாநிலப் பல்கலைக்கழகங்களுக்கு ஆராய்ச்சி மற்றும் துறை மேம்பாட்டிற்காகப் பல்வேறு திட்டங்களின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்வதாகும். ஆனால், இப்போது அமைக்கப்படும் உயர்கல்வி ஆணையத்திற்கு ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் இல்லை. உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கான விதிமுறைகளை நிர்ணயிப்பது மட்டுமே இதன் வேலையாகும்.

மத்திய அரசு நடத்துகின்ற கல்வி நிறுவனங்களுக்குக் கடன் வழங்குவதற்காக உயர் கல்வி நிதி முகமை (HEFA – Higher Education Financial Agency) என்ற நிதி நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களின் உள்கட்டமைப்பு தேவைகளுக்காக இதன் மூலம் கடன் வழங்கப்படுகிறது.

மேலும் 2020-க்குள் 1 இலட்சம் கோடி வரை உயர் கல்வித் துறையில் Revitalizing Infrastructure System in Education (RISE) திட்டத்தின் மூலம் முதலீடு செய்யப்போவதாக கூறுகிறார் மோடி. மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தோடு மத்தியப் பல்கலைக் கழகங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்று சமீபத்தில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு மற்றும் இதர தேவைகளுக்காக HEFA அல்லது RISE மூலம் கடன் வழங்கப்படும். இந்தக் கடனைத் திருப்பிக் கட்ட கல்விக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என அச்சுற்றறிக்கை கூறுகிறது. இப்படி கல்வித்துறையை ஒட்டுமொத்தமாகத் தனியார்மயப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாகி வருகின்றன.

படிக்க :
♦ உயர்கல்வி எதிர்கொள்ளும் சவால்கள் | முனைவர் ரமேஷ் உரை
♦ பொறியியல் கல்வியின் சீரழிவும் ! கையாலாகாத உயர்கல்வி கட்டமைப்பும் !!

தரவரிசைப் பட்டியலில் (Graded autonomy institutions) முன்னணியில் உள்ள பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களை அனுமதிப்பது கட்டாயம். உலகத் தரவரிசைப் பட்டியலில் இந்திய உயர் கல்வி நிறுவனங்கள் இடம்பெற வேண்டும் என்பதற்காகக் கொண்டுவரப்பட்ட மேன்மைதகு நிறுவனங்கள் என்ற திட்டத்தின் நோக்கமே, இந்திய உயர்கல்வி சந்தையை வெளிநாட்டுச் சந்தையோடு இணைத்து, அதனைச் சர்வதேசமயமாக்குவதுதான்.

இதன் மூலம் பல இலட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள ( 2020-இல் இந்தியக் கல்விச் சந்தையின் மொத்த மதிப்பு 9,36,000 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது) இந்திய உயர்கல்வி சந்தையில் வெளிநாட்டு நிதி மூலதனம் மற்றும் அதன் பல்கலைக்கழகங்கள் நேரடியாக ஆதிக்கம் செலுத்த வழிவகை செய்யப்படுகிறது.
இதனை அமல்படுத்துவதற்குச் சாதகமான அமைப்பாகத்தான் உயர்கல்வி ஆணையம் உருவாக்கப்படுகிறது. இந்த பின்னணியிலிருந்தே பல்கலைக்கழக மானியக் குழு கலைக்கப்படுவதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஏற்கனவே சிவ்நாடார், டாடா, அசிம் பிரேம்ஜி, ஆசிஸ் தவான், பிர்லா போன்ற தரகுமுதலாளிகள் பல்கலைக்கழகங்களை நடத்தி வருகின்றனர். மிட்டல், அதானி, வேதாந்தா போன்றோர் பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான தீவிர முயற்சியில் உள்ளனர். இவர்களை ஊக்குவிப்பதற்காகவே அம்பானியின் தொடங்கப்படாத ‘ஜியோ கல்வி நிறுவனத்திற்கு’ மேன்மை தகு தகுதியை மோடி அரசு வழங்கியுள்ளது.

நிதி ஆயோக் கடந்த 2017-இல் மத்திய அரசிற்கு வழங்கிய பரிந்துரையில் தர தன்னாட்சி பட்டியலில் முதலாம், இரண்டாம் நிலைகளில் வராத கல்லூரி / பல்கலைக்கழகங்களை மூடிவிட வேண்டும் எனக் கூறியுள்ளது. உயர் கல்வி ஆணையம் அமைந்துவிட்டால், அரசு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு நிச்சயம் மூடு விழா நடத்தப்பட்டுவிடும்.

தமிழகத்தில் அதற்கான அறிகுறிகள் இப்பொழுதே தெரிகின்றன. தொழில்நுட்பக் கல்வி பயிலும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு அரசு இதுவரை வழங்கி வந்த கல்வி உதவித்தொகை (அரசாணை 92 அடிப்படையிலானது) நிறுத்தப்பட்டுவிட்டது. அரசு கலைக் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகை குறைக்கப்படுகிறது. அதேசமயம், இன்னொருபுறத்தில் பல்கலைக்கழகங்கள், அதன் உறுப்புக் கல்லூரிகளின் கல்விக் கட்டணம் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

தனியார் பொறியியல் கல்வி நிறுவனங்கள் கல்விக்கட்டணத்தை இரண்டுமடங்காக உயர்த்தப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

நீட் தேர்வைத் திணித்து மருத்துவக்கல்வியை பறித்துக்கொண்டார்கள். பொறியியல் கல்வியும் இனி இல்லை என்றாகிவிட்டது. கலை-அறிவியல் படிப்பிலாவது ஒரு பட்டத்தை வாங்கி விடலாம் என நினைக்கும் ஏழை – நடுத்தர வர்க்கத்தினர், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பிரிவினரான பெரும்பான்மை மாணவர்களின் எதிர்பார்ப்பையும் அடித்து நொறுக்குகிறார்கள்.

நாம் என்ன செய்யப்போகிறோம்?

எமது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, மாணவர்கள், பேராசிரியர்கள் மத்தியில் கடந்த ஜூலை 25- ஆம் தேதி முதல் தொடர்ச்சியான இயக்கம் நடத்தி வருகிறது.

உயர்கல்வி ஆணைய மசோதாவை எதிர்த்துப் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில் சென்னையில் ஆகஸ்டு 21 அன்று நடைபெற்ற அரங்குக் கூட்டம்.

இவ்வியக்கத்தின் போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டத் தலைநகரங்களில் நூற்றுக்கணக்கான மாணவர்கள், கல்வியாளர்கள், பேராசிரியர்கள், பல்வேறு மாணவர் அமைப்பின் பிரதிநிதிகள் பங்கேற்புடன் ஆர்ப்பாட்டங்களையும், கருத்தரங்குகளையும் நடத்தி வருகிறது. உயர்கல்வியைக் காக்கும் போராட்டத்தில் கல்வியின் மீது அக்கறை கொண்ட அனைவரையும் அறைகூவி அழைக்கிறது.

  • கலை, அறிவியல், சட்டம், பொறியியல், மருத்துவக் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் படிக்கும் அனைத்து மாணவர்களும், பேராசிரியர்களும், பெற்றோர்களும் ஒன்றுசேர்வோம்!
  • உயர் கல்வி பாதுகாப்புக் குழுக்களைக் கட்டுவோம்!
  • உயர்கல்வி ஆணைய முன்வரைவு சட்ட மசோதாவைத் தகர்ப்போம்!

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, தமிழ்நாடு.
புதிய ஜனநாயகம், நவம்பர் 2018

மின்னூல்:

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

15.00Add to cart

நன்றி பெறத் தகுதியுடையவர் நீங்கள்தான் அம்மா

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 31 (தொடர்ச்சி)

மாக்சிம் கார்க்கி
“நமது குழந்தைகள் உலகினுள்ளே புகுந்து புறப்பட்டுவிட்டார்கள்!” என்று அவள் நினைத்தாள். அப்போது அவள் திறந்துகிடக்கும் ஜன்னலின் வழியே, இலைகளின் சலசலப்போடு கலந்து வரும் தனக்குப் பழக்கமற்ற பட்டணத்து இரைச்சலைக் காது கொடுத்துக் கேட்டாள். அந்தச் சப்தங்கள் எங்கோ தொலைவிலிருந்து மங்கித் தேய்ந்து களைத்துச் சோர்ந்து போய் வந்தன. அந்த அறைக்குள்ளே வரும்போது அந்தச் சப்த அலைகள் அநேகமாகச் செத்துத்தான் ஒலித்தன.

மறுநாள் காலையில் அவள் தேநீர்ப் பாத்திரத்தைத் தேய்த்துத் துலக்கி, தேநீருக்காக வெந்நீர் காயவைத்தாள். அரவமின்றி மேஜையைச் சரி செய்தாள். பிறகு நிகலாய் எழுந்து வருவதை எதிர்நோக்கிச் சமையலறையில் காத்திருந்தாள். அவன் இருமிக்கொண்டே கதவைத் திறந்தான். ஒரு கையால் தன் மூக்குக் கண்ணாடியைப் பிடித்துக் கொண்டும் மறுகையால் சட்டைக் காலரைப் பிடித்துக் கொண்டும் அவன் வந்தான். காலை வணக்கம் கூறிக்கொண்ட பிறகு, அவள் தேநீர்ப் பாத்திரத்தை அடுத்த அறைக்குள் கொண்டு போனாள். அதற்குள் அவன் தரையெல்லாம் தண்ணீரைக் கொட்டி முகம் கை கழுவினான். தனக்குத்தானே முனகிக்கொண்டு, தனது பல் விளக்கும் பிரஷையும் சோப்பையும் கீழே நழுவவிட்டான். சாப்பிடும்போது அவன் தாயைப் பார்த்துச் சொன்னான்:

”நான் விவசாய இலாகாவில் எனக்குப் பிடிக்காத வேலையொன்றைப் பார்த்து வருகிறேன். நம்முடைய விவசாயிகள் எப்படி நாசமாகிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கவனிக்கிறதுதான் என் வேலை.”

”நான் விவசாய இலாகாவில் எனக்குப் பிடிக்காத வேலையொன்றைப் பார்த்து வருகிறேன். நம்முடைய விவசாயிகள் எப்படி நாசமாகிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கவனிக்கிறதுதான் என் வேலை.”

ஒரு குற்றப் புன்னகையோடு அவன் மேலும் பேசினான்:

”பட்டினிதான் விவசாயிகளை அகாலத்திலேயே கல்லறைக்குள் தள்ளிச் செல்கிறது. அவர்களது குழந்தைகளும் பிறக்கும்போதே சோனியாகப் பிறந்து, இலையுதிர் காலத்தின் ஈசல் பூச்சிகளைப் போல் மாண்டு மடிகின்றன. எங்களுக்கும் இது தெரியும், இதற்குரிய காரணமும் எங்களுக்குத் தெரியும். இந்தக் காரணத்தின் வளர்ச்சியைப் படிப்படியாகக் கவனித்துக்கொண்டு இருப்பதற்கு எங்களுக்குச் சம்பளம் கூடக் கொடுக்கிறார்கள். ஆனால், இப்படியே இது போய்க் கொண்டிருந்தால்……”

“நீங்கள் ஒரு மாணவரா!” என்று கேட்டாள் தாய்.

“இல்லை. நான் ஆசிரியர். என் தந்தை வியாத்தியாவிலுள்ள ஒரு தொழிற்சாலையில் மானேஜர். ஆனால், நானோ ஆசிரியர் வேலைக்குத்தான் படித்தேன். கிராமத்திலே இருந்தபோது நான் முஜிக்குகளுக்குப் புத்தகங்களைக் கொடுத்து உதவினேன். அதன் காரணமாக, என்னைச் சிறையில் போட்டார்கள். தண்டனைக் காலம் முடிந்த பிறகு நான் ஒரு புத்தகக் கடையில் விற்பனைக்காரனாக வேலை பார்த்தேன். ஆனால் எனது ஜாக்கிரதைக் குறைவினால் மீண்டும் என்னைச் சிறையில் போட்டார்கள். கடைசியாக என்னை அர்ஹாங்கெல்சுக்கு நாடு கடத்திவிட்டார்கள். அங்கும் அங்கிருந்த கவர்னரின் வெறுப்புக்கு நான் ஆளானேன். அதன் காரணமாக மீண்டும் என்னை வெண்கடல் கரையிலுள்ள ஒரு சிறு கிராமத்துக்கு நாடு கடத்தினார்கள். அங்கு ஒரு ஐந்து வருஷ காலம் வாழ்ந்தேன்.”

சூரிய ஒளி நிறைந்த அந்த அறையில் அவனது குரல் மளமளவெனப் பொழிந்தோடியது. இதற்கு முன்பே இது மாதிரி எத்தனையோ கதைகளைக் கேட்டிருக்கிறாள் தாய். எனினும் அந்தக் கதைகளைச் சொல்பவர்கள் ஏன் இத்தனை அமைதியோடு, ஏதோ தவிர்க்க முடியாததொன்றைப் பேசுவது போல், அவற்றைக் கூறுகிறார்கள் என்பது மட்டும் அவளுக்குப் புரியவில்லை.

“இன்று, என் சகோதரி வருகிறாள்.” என்றான் அவன்.

“அவளுக்குக் கல்யாணமாகிவிட்டதா?”

“அவள் ஒரு விதவை. அவளது கணவன் சைபீரியாவுக்கு கடத்தப்பட்டுச் சென்றான். ஆனால் அவன் அங்கிருந்து தப்பியோடி விட்டான். இரண்டு வருஷங்களுக்கு முன்னால், அவன் ஐரோப்பாவில் காசநோயால் செத்துப் போனான்.”

“அவள் உங்களைவிட இளையவளா?”

“ஆறு வருஷம் மூத்தவள். நான் அவளுக்கு மிகவும் கடமைப்பட்டவன். அவள் இங்கு வந்து சங்கீதம் வாசிப்பது வரை நீங்கள் பொறுத்திருங்கள். அது அவளுடைய பியானோவாத்தியம்தான். பொதுவாகச் சொன்னால், இங்குள்ள பொருள்களில் பெரும் பாகம் அவளுடையவைதாம். புத்தகங்கள் மட்டுமே என்னுடையவை.

“அவள் எங்கு வசிக்கிறாள்?”

“எங்கும்தான்” என்று சிறு புன்னகையோடு பதில் சொன்னாள் அவன். ”எங்கெல்லாம் ஒரு துணிச்சலான ஆசாமி தேவையோ அங்கெல்லாம் அவள் இருப்பாள்.”

“அவள் இந்த மாதிரி – இந்த மாதிரி வேலைக்குக் கூடச் செல்கிறாளா?’

”ஆமாம். நிச்சயமாய்!” என்றான் அவன்.

அவன் சீக்கிரமே போய்விட்டான்; தாய் “இந்த மாதிரி வேலையைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினாள். அந்த வேலைக்காக ஒவ்வொரு நாளும் அமைதியோடும் விடா முயற்சியோடும் தங்களைத் தாமே தத்தம் செய்து கொள்ளும் மனிதர்களைப் பற்றி நினைக்கும்போது, ஏதோ ஒரு மலையின் முன்னே இரவு வேளையில் நிற்பதுபோல் அவளுக்குத் தோன்றும். மத்தியானத்துக்கு மேல், நெட்டையான அழகிய பெண் ஒருத்தி வந்தாள்.

அவள் கரியநிற உடையுடுத்தியிருந்தாள். தாய் கதவைத் திறந்தவுடன் அவள் தன் கையிலிருந்த மஞ்சள் நிறமான சிறு பையைக் கீழே நழுவ விட்டுவிட்டு தாயின் கையைப் பற்றிப் பிடித்தாள்.

“நீங்கள்தானே பாவெல் விகாய்லவிச்சின் தாய்!” என்று கேட்டாள்.

”ஆம்!’ என்று பதிலுரைத்தாள் தாய். எனினும் அந்தப் பெண்ணின் அழகிய கோலத்தைக் கண்டது முதல் அவளுக்கு என்னவோ போலிருந்தது.

”நீங்கள் எப்படி இருப்பீர்களென்று கற்பனை எண்ணியிருந்தேனோ, அப்படியே இருக்கிறீர்கள். நீங்கள் இங்கு வந்து வசிக்கப் போவதாக என் தம்பி எழுதியிருந்தான்” என்று அவள் கூறிக்கொண்டே, கண்ணாடியின் முன் நின்றுகொண்டு தொப்பியைக் கழற்றினாள். “நான் வெகு காலமாகப் பாவெல் மிகாய்லவிச்சோடு நட்புரிமை கொண்டவள். அவன் உங்களைப் பற்றிக் கூறியிருக்கிறான்.”

அவளது குரல் உள்ளடங்கியிருந்தது. மேலும் அவள் மெதுவாகத்தான் பேசினாள். அவளது நடமாட்டங்கள் மட்டும் விறுவிறுப்போடும் வேகத்தோடும் இருந்தன. அவள் தனது சாம்பல் நிறக் கண்களால் புன்னகை புரிந்தாள். அதில் வாலிப பாவமிருந்தது. அவளது கன்னப் பொறியில் சிறு சிறு சுருக்க ரேகைகள் விழுந்திருந்தன. அவளது சிறு காதோரங்களுக்கு மேல் இளம் நரை ரோமங்களும் மின்னிக் கொண்டிருந்தன.

“எனக்குப் பசிக்கிறது. கொஞ்சம் காப்பி குடித்தால் தேவலை” என்றாள் அவள்.

”அதற்கென்ன. தயார் செய்கிறேன்” என்று பதிலுரைத்தாள் தாய். பதில் கூறிவிட்டு அவள் அலமாரிக்குச் சென்று காப்பிச் சட்டியை எடுத்துக்கொண்டே கேட்டாள்..

”என்னைப் பற்றி பாவெல் சொன்னதாகவா சொன்னீர்கள்?”

”எவ்வளவோ சொல்லியிருக்கிறான், அந்த மாது தோல் சிகரெட் பெட்டியைத் திறந்து ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தாள்.

“நீங்கள் அவனைப் பற்றி ரொம்பவும் பயந்து போயிருக்கிறீர்களா?” என்று கேட்டுக்கொண்டே அவள் அந்த அறைக்குள் உலவினாள்.

சாராய அடுப்பில், காப்பிச் சட்டிக்குக் கீழாக எரியும் நீல நிறத் தீ நாக்குகளைப் பார்த்துக்கொண்டே லேசாகப் புன்னகை புரிந்தாள் தாய். அந்தப் பெண்ணின் முன்னிலையில் ஏற்பட்ட சங்கட உணர்ச்சியை விழுங்கி உள்ளடக்கிய அவள் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கியது.

“அப்படியென்றால், அவன் அவளிடம் என்னைப் பற்றிக் கூறியிருக்கிறான், நல்ல பிள்ளை!” என்று தனக்குத்தானே நினைத்துக்கொண்டு, பிறகு மெதுவாகச் சொன்னாள்.

”ஆமாம். அது ஒன்றும் சாமானியமான சிரமம் அல்ல. ஆனால், முன்புதான் அந்தச் சிரமம் எனக்குப் பெரிதாய் இருந்தது. இப்போது அவன் தன்னந்தனியாக இல்லை என்பதால் எனக்குக் கொஞ்சம் நிம்மதி”

அந்தப் பெண்ணின் முகத்தை ஒருமுறை பார்த்துக்கொண்டே தாய் அவளது பெயரைக் கேட்டாள்.

“சோபியா’ என்றாள் அந்தப் பெண்.

தாய் அந்தப் பெண்ணைக் கூர்ந்து பார்த்தாள். அந்தப் பெண்ணிடம் ஏதோ ஒரு பரபரப்பு – அதீதமான அவசரமும் துணிவும் கொண்ட பரபரப்புக் காணப்படுவதாகத் தோன்றியது.

“இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அவர்கள் அதிக நாள் சிறையில் இருக்கக்கூடாது என்பதுதான்” என்று தீர்மானமாகச் சொன்னாள் அந்தப் பெண். “அவர்களுக்கு மட்டும் விசாரணையைச் சீக்கிரமே நடத்தினால் அவர்களை நாடு கடத்திவிட்டவுடனேயே, பாவெல் மிகாய்வலிச் அங்கிருந்து தப்பியோடி வருவதற்கு நாம் உடனடியாக ஏற்பாடு செய்து தருவோம். அவன் இப்போது இங்கு அவசியம் இருந்தாக வேண்டும்.”

தாய் வியந்துபோய் சோபியாவைப் பார்த்தாள். சோபியா தனது சிகரெட் கட்டையை எங்கு போடுவது என்பதற்காக அங்குமிங்கும் இடம் பார்த்துக் கொண்டிருந்தாள். கடைசியாக, அவள் அந்தச் சிகரெட் கட்டையை ஒரு பூத்தொட்டியிலிருந்த மண்ணில் புதைத்து அமுக்கினாள்.

“ஐயோ! அது பூக்களைக் கெடுத்து விடுமே!” என்று தன்னையறியாமல் கூறினாள் தாய்.

“மன்னிக்க வேண்டும்” என்றாள் சோபியா. ”நிகலாவும் இதே விஷயத்தைத்தான் எனக்கு எப்பொழுதும் சொல்லுவான்.”

அவள் அந்தச் சிகரெட் கட்டையை அதிலிருந்து எடுத்து, ஜன்னலுக்கு வெளியே எறிந்தாள்.

இதைக் கண்டவுடனே தாய் மீண்டும் ஒரு சங்கட உணர்ச்சியுடன் அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டே ஒரு குற்றவுணர்வுடன் சொன்னாள்:

”முன்பெல்லாம் ஒரு நபரிடம் நான் என் மனத்திலுள்ள விஷயத்தை வெளியிட்டுக் கூறத் துணிவதென்றால் அதற்கு எனக்கு அந்த நபரோடு ரொம்ப நாள் பழக்கம் வேண்டும். ஆனால், இப்போதோ என் இதயம் எப்போதும் திறந்து கிடக்கிறது. எனவே இதற்கு முன் நான் எண்ணிப் பார்த்திராத விஷயங்களைக்கூட, திடீரெனச் சொல்லித் தீர்த்துவிடுகிறேன்.”

“என்னை மன்னியுங்கள் நான் வேண்டுமென்று அப்படிச் சொல்லவில்லை. என்னையறியாமலே வாய் வந்துவிட்டது. உங்களுக்குப் போதிக்க நான் யார்?”

”நான் அசுத்தம் பண்ணினால் போதித்தால் என்னவாம்?” என்று தோளை உலுக்கிக் கொண்டே கேட்டாள் சோபியா. ”சரி, காப்பி தயாராய் விட்டதா? ரொம்ப நன்றி. ஒரே ஒரு கோப்பைதானா? உங்களுக்கு ஒன்றும் வேண்டாமா?”

திடீரென்று அவள் தாயின் தோளைப் பற்றிப்பிடித்து அவளைத் தன்னருகே இழுத்து அவளது கண்களை ஆழ்ந்து நோக்கிக்கொண்டே கேட்டாள்:

”நீங்கள் என்ன வெட்கப்படுகிறீர்களா?”

தாய் லேசாகப் புன்னகை புரிந்தாள்.

“இப்பொழுதுதான் சிகரெட் கட்டையைப் பற்றி உங்களிடம் சொன்னேன். அதற்காக நான் வெட்கப்படுகிறேனா என்று கேட்கிறீர்களா?” என்றாள் தாய். தனது வியப்புணர்ச்சியை மூடி மறைக்காமல் அவள் மீண்டும் ஏதோ கேட்கும் பாவனையில் பேசினாள்:

”நேற்றுத்தான் நான் இங்கு வந்தேன். அதற்குள்ளாக இதை என் சொந்த வீடு போலவே கருதி நடந்து வருகிறேன். எதற்கும் அஞ்சாமல், என்ன சொல்லுகிறோம் என்பதே தெரியாமல்….”

“அப்படித்தானிருக்க வேண்டும்” என்றாள் சோபியா.

”என் தலையே சுற்றுகிறது. நானே எனக்கு அன்னியமாய்ப் போய்விட்டதுபோல் தோன்றுகிறது” என்று மேலும் பேசத் தொடங்கினாள் தாய். ”முன்பெல்லாம் ஒரு நபரிடம் நான் என் மனத்திலுள்ள விஷயத்தை வெளியிட்டுக் கூறத் துணிவதென்றால் அதற்கு எனக்கு அந்த நபரோடு ரொம்ப நாள் பழக்கம் வேண்டும். ஆனால், இப்போதோ என் இதயம் எப்போதும் திறந்து கிடக்கிறது. எனவே இதற்கு முன் நான் எண்ணிப் பார்த்திராத விஷயங்களைக்கூட, திடீரெனச் சொல்லித் தீர்த்துவிடுகிறேன்.”

படிக்க:
அயோத்தி வேண்டாம் : கடனை தள்ளுபடி செய் ! டெல்லியில் விவசாயிகளின் போர்க்குரல்
காவிரி டெல்டா – துயரம் துரத்தும் நிலம் | வில்லவன்

சோபியா மீண்டும் ஒரு சிகரெட்டை எடுத்துக்கொண்டே தனது சாம்பல் நிறக் கண்களில் மிருதுவான ஒளி ததும்பத் தாயைப் பார்த்தாள்.

“அவன் தப்பிச் செல்வதற்கு ஏற்பாடு செய்வதாகக் கூறுகிறீர்கள். ஆனால் அப்படி ஓடி வந்த பிறகு அவனால் எப்படி வாழ முடியும்?” என்று தன் மனத்துக்குள் அழுத்திக்கொண்டிருந்த அந்தக் கேள்வியைக் கேட்டு, மனப் பாரத்தைக் குறைத்துக்கொண்டாள் தாய்.

“அது ஒன்றும் பிரமாதமில்லை” என்று கூறிக்கொண்டு இன்னொரு கோப்பை காப்பியை ஊற்றிக்கொண்டாள் சோபியா. ”இப்படி ஓடி வந்தவர்களில் எத்தனையோ பேர் எப்படி வாழ்கிறார்களோ, அப்படியே அவனும் வாழ்வான். நான் அப்படி ஒரு ஆசாமியைச் சந்தித்தேன். அவனை அவன் வசிக்க வேண்டிய இடத்திற்கு அழைத்துச் சென்றேன். அவனும் நமக்கு இன்றியமையாத ஆசாமிதான். அவனை ஐந்து வருஷகாலத்திற்கு நாடு கடத்தினர். ஆனால் அவன் அங்கு மூன்றரை மாதம்தான் காலம் தள்ளினான்.”

தாய் அவளது முகத்தையே சிறிது நேரம் பார்த்தாள். பிறகு புன்னகை புரிந்தாள். அதன் பின் தலையை அசைத்துக்கொண்டே மெதுவாகச் சொன்னாள்.

“மே தினக் கொண்டாட்டம் என்னிடம் ஏதோ ஒரு மாறுதலை உண்டாக்கிவிட்டது போல் எனக்குத் தோன்றுகிறது. அது என்ன என்பதை என்னாலேயே கண்டுபிடிக்க முடியவில்லை. நான் என்னவோ ஒரே சமயத்தில் இரண்டு பாதைகளில் சென்று கொண்டிருப்பதுபோல் ஒரு பிரமை. சமயங்களில் எல்லாமே எனக்குப் புரிந்துவிட்டது போல் தோன்றுகிறது. மறுகணம் ஒரே மங்கல்; கண்முன் இருள் மண்டிக் கவிகிறது. உதாரணமாக உங்களைப் பார்க்கிறேன். நீங்கள் ஒரு பெரிய இடத்துப் பெண். இந்த வேலைக்கு வருகிறீர்கள்…. பாவெலை தெரிந்திருக்கிறீர்கள். அவனைப் பற்றி நல்லபடியாய்ப் பேசுகிறீர்கள், அதற்காக நான் உங்களுக்கு நன்றி கூற வேண்டும்.

“நன்றி பெறத் தகுதியுடையவர் நீங்கள்தான்” என்று கூறிச் சிரித்தாள் சோபியா.

”நான் என்ன செய்துவிட்டேன்? அவனுக்கு இதையெல்லாம் கற்றுக் கொடுத்தது நானில்லையே” என்று பெருமூச்செறிந்தாள் தாய்.

சோபியா சிகரெட்டை கோப்பைத் தட்டில் நசுக்கி அணைத்தாள். அவள் தலையை அசைத்த அசைப்பில் அவளது பொன்நிற முடி, உலைந்து நழுவி, அவளது இடை வரையிலும் வந்து விழுந்து கற்றை கற்றையாய் புரண்டது.

”சரி, இந்த அலங்காரத்தையெல்லாம் களைவதற்கு நேரமாகிவிட்டது” என்று கூறிக்கொண்டே அவள் எழுந்தாள், எழுந்து வெளியே சென்றுவிட்டாள்.

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

மேக்கேதாட்டு அணைக்கு அனுமதி : அரசியல் சட்ட விரோதமானது !

மேக்கேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு மத்திய அரசின் அனுமதியளித்திருப்பது நாம் அறிந்ததே. இவ்விவகாரத்தில் மத்திய அரசு துரோகம் புரிந்துள்ளதும், அரசியல் சட்ட விரோதமாக செயல்பட்டதும் தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது.

மேகேதாட்டுவில் அணை கட்ட அனுமதி அளிக்குமாறு, மத்திய அரசின் நீர்வளத்துறை, வனத்துறை ஆகியவற்றிடம் கடந்த 2018, செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் செயல்திட்ட வரைவு அறிக்கை மற்றும் கோரிக்கை மனுவை அளித்தது கர்நாடக அரசு. இதில் மேக்கேதாட்டுவில், ரூ 5,912 கோடியில் அணையும் சுமார் 400 மெகாவாட் திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையமும் அமைப்பதற்கான திட்ட வரைவு சமர்ப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் செப்டம்பர் முதல் வாரத்தில் கொடுக்கப்பட்ட மேக்கேதாட்டு அணைக்கான செயல்திட்ட வரைவு அறிக்கையை அங்கீகரித்து கர்நாடக அரசு அணை கட்ட மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. இதற்கான அனுமதி கடிதத்தை நேற்று (27-11-2018) கர்நாடக அரசிற்கு அனுப்பியது மோடி அரசு. மேலும் இது குறித்து விரிவான ஆய்வறிக்கை தயாரிக்குமாறும் பச்சைக் கொடி காட்டியுள்ளது.

இச்செய்தி வெளியானதும் தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இச்சூழலில் டெல்லியில் 03.12.2018 அன்று காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மேக்கேதாட்டு அணை திட்டத்திற்கு தமிழகம்  கடும் எதிர்ப்பை தெரிவித்ததோடு, மத்திய அரசு வழங்கிய அனுமதியை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியது.

தில்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் மாதாந்திரக் கூட்டத்தில் அதன் தலைவர் மசூத் ஹுசேன்,  தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநிலப் பிரதிநிதிகளும், மத்திய அரசின் நீர்வளத்துறை ஆணையத்தின் அதிகாரிகளும் பங்கேற்றனர். தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், திருச்சி மண்டல பொதுப் பணித்துறை தலைமைப் பொறியாளர் ஆர்.செந்தில்குமார், காவிரி தொழில்நுட்பப் பிரிவு தலைவர் சுப்ரமணியன், துணைத்தலைவர் கே.எஸ்.ராம்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

தமிழக பிரதிநிதிகள் பேசும்போது, “உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதி இல்லாமல், காவிரி ஆற்றின் குறுக்கே எந்த புதிய அணையும் கட்ட முடியாது. இந்நிலையில், மத்திய அரசு கர்நாடகாவுக்கு மேகேதாட்டுவில் அணை கட்ட அனுமதி அளித்தது சட்டப்படி தவறு. இந்தத் திட்டம் நிறைவேறினால் தமிழக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே, மத்திய அரசு இந்த அனுமதியை திரும்பப் பெற வேண்டும்” என வலியுறுத்தினர்.

மேலும் “பெங்களூரு குடிநீர் தேவைக்காக நெட்கல் நீர்த்தேக்கத்தில் இருந்து ஏற்கனவே கர்நாடகம் தண்ணீர் எடுத்துக் கொண்டிருக்கிறது. அப்படியிருக்க, குடிநீருக்காக மேக்கேதாட்டுவில் அணை கட்ட அவசியம் ஏதும் இல்லை. அப்படி அணை கட்டப்பட்டால் கிருஷ்ணராஜசாகர், கபினி மற்றும் பில்லிகுண்டுலுக்கு இடைப்பட்ட பகுதிகளில் தற்போது தமிழ்நாட்டுக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் கிடைத்துக் கொண்டிருக்கும் நீர் தடுத்து நிறுத்தப்படும். இதனால் மிக முக்கியமான ஜூன் முதல் செப்டம்பர் மாதங்களில் தமிழ்நாட்டின் பாசனத்துக்கு நீர் கிடைக்காமல் போய் விடும்.” என்று கூறினர்.

படிக்க:
♦ மேக்கேதாட்டு அணை : மீண்டும் அநீதி!
♦ அகண்ட காவிரியின் வெள்ளம் வறண்ட நீ்ர்நிலைகளுக்கு வராதது ஏன் ?

ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் மசூத் ஹூசேன் கூறியதாவது:

“கூட்டம் சமூகமான முறையில் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவை இப்போது கூற முடியாது. அடுத்த கூட்டம் ஜனவரியில் நடைபெறும். மேக்கேதாட்டு பற்றி நாங்கள் விவாதிக்கவில்லை. தமிழக அரசின் எதிர்ப்பை ஆணையம் கருத்தில் கொண்டுள்ளது. கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கை மேலாண்மை ஆணைய அனுமதி பெற்றே தாக்கல் செய்ய முடியும். இந்த திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு, மற்ற மாநிலங்கள் மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதலைப் பெறவேண்டும்.”

இதனிடையே கர்நாட அரசின் நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார், அணைக் கட்டுமான பகுதியை நிபுணர் குழுவுடன் 07.12.2018 அன்று பார்வையிடுவதாக கூறியிருக்கிறார்.

ஆக மத்திய அரசு முதற்கட்ட அறிக்கையை ஏற்று முழு விரிவான அறிக்கையை முன்வைக்குமாறு ஏன் கர்நாடக அரசிடம் கூறியது? இச்செய்தி வெளியானதும் இப்படி அறிக்கை முன்வைப்பது தவறு என காவிரி மேலாண்மை ஆணையம் ஏன் கூறவில்லை?

தமிழகத்திற்கு ஸ்வாகா! நிம்மதியாய் யோகா புரியும் மோடி.

அப்படி ஒரு முதற்கட்ட அறிக்கையை அனுமதிக்க கூடாது என மத்திய நீர்வளத்துறை ஆணையத்தை தடுக்க முடியாது என காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் கூறுகிறார். ஆனால் இரண்டாம் கட்ட விரிவான அறிக்கைக்கு ஆணையம் அனுமதி அளிக்க வேண்டும் எனக் கூறுகிறார். ஏனிந்த முரண்பாடு? இதன்படி இந்த ஆணையத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை என தமிழகம் கூறியது உண்மை என நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து விடுதலைச் சிறுத்தை கட்சியின் ரவிக்குமார் ’தி இந்து’வில் எழுதிய கட்டுரையில், “கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் உச்ச நீதிமன்றத்தில் காவிரி வழக்கு நடந்தபோது, அன்றைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ‘மேகேதாட்டு நீர்த்தேக்கத் திட்டத்தை உபரி நீரைத் தேக்கி வைப்பதற்கான ஏற்பாடாக ஏன் கருதக் கூடாது?’’ என தமிழகத்துக்காக வாதாடிய வழக்கறிஞரிடம் கேட்டார். ‘கர்நாடகம் அல்லாத மூன்றாவது தரப்பின் கட்டுப்பாட்டில் அந்த நீர்த் தேக்கம் இருக்குமானால் அதை ஏற்றுக்கொள்கிறோம்’ என அவர் பதிலளித்தார். வழக்கறிஞர் கூறியது கர்நாடகத்துக்கு ஆதரவாக இருக்கிறது என அப்போதே அதற்கு தமிழக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தைத் தெரிவித்தன.

மேக்கேதாட்டு திட்டத்தை எதிர்த்து இப்போது உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடுத்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுவிட்ட நிலையில், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் உடனடியாக நியாயம் வழங்கும் என நாம் எதிர்பார்க்க முடியாது. 2019 பொதுத்தேர்தலை மனதில் வைத்துதான் மத்தியில் ஆளும் பாஜக அரசு அப்பட்டமாக கர்நாடகத்துக்கு ஆதரவான நிலை எடுத்திருக்கிறது. அரசியல் நோக்கம் கொண்ட இந்த முடிவை அரசியல் களத்திலும் எதிர்கொண்டாக வேண்டும்.

எனவே, தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, ஒட்டுமொத்தத் தமிழகமும் ஓரணியில் இருக்கிறது எனக் காட்ட வேண்டும். அதுமட்டுமின்றி, தமிழக சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி இதற்காகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.” என்று கூறியிருக்கிறார்.

படிக்க:
♦ ஆய்வுக்குழு கிடக்கட்டும் ! ஸ்டெர்லைட்டை மூட தனிச்சட்டம் இயற்று ! மக்கள் அதிகாரம்
♦ தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் : வினவு செய்தியாளரின் நேரடி அனுபவம் !

இதன்படி மேக்கேதாட்டு அணையில் உபரிநீரைத் தேக்கி அதை மூன்றாவது தரப்பு நிர்வகித்தால் பிரச்சினை இல்லை என தமிழக அரசு கூறியிருப்பது தெரிகிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் பாஜக-வின் வெற்றிக்கு எப்படி இந்த மேக்கேதாட்டு அணை தேவைப்படுமோ, அதே போல எடப்பாடி அரசு தமிழகத்தில் பாஜக-வுடன் கூட்டணி அமைத்தே ஆக வேண்டிய அடிமைத்தன நிலையில் மேக்கேதாட்டு அணைப் பிரச்சினையை அடக்கி வாசிக்க வேண்டிய நிலைமை இருக்கிறது.

இனி வரும் காலத்தில் நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுத்துவருகிறோம் என்று எடப்பாடி அரசு சொல்லும். கர்நாடக அரசோ, மத்திய அரசின் ஆதரவுடன் அணை கட்டும் முயற்சியை செய்யும். இதை தடுக்க வக்கற்ற காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டங்களை மாதாமாதம் நடத்தும்.

ஆக மத்திய அரசு சட்டப்படியோ, நீதிமன்ற உத்தரவுப்படியோ, காவிரி மேலாண்மை ஆணையத்தின் விதிமுறைப்படியோ நடக்கவில்லை. அப்பட்டமாக அனைத்து சட்டங்கள், தீர்ப்புக்களை மீறி கர்நாடக மாநிலத்தை ஆதரிக்கிறது. இந்தப் பிரச்சினையில் தமிழகத்திற்கு துரோகம் இழைக்கப்படுவது மட்டுமின்றி, இந்தியாவில் அரசியல் சாசன சட்டத்தின்படி ஜனநாயகமோ அரசாட்சியோ இல்லை என்பது மீண்டும் ஒரு முறை  நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் ஜனநாயக ஆட்சி நடைபெற வேண்டுமென்றாலே மத்திய அரசின் துரோகம் தமிழக மக்களால் வீழ்த்தப்பட வேண்டும்.

தென்கொரியா : சாலையோர சத்துணவும் சலிக்காத புன்னகையும் ! படக் கட்டுரை

தென் கொரியாவின் பழமையான குவாங்ஜங் சந்தையின் ஆளுமை மிக்க பெண்கள் !

ந்தடிமிக்க தெருக்களில் வாசனையை, ஒலியை நுகர்ந்தபடி விலை குறைவான பாரம்பரியமிக்க கொரிய உணவைத் தேடி நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் வருகிறார்கள்.

குளிர்ந்த இலையுதிர் கால ஞாயிற்றுக்கிழமை, சூரியன் மறையத் தொடங்கும் வேளையில் தென் கொரியாவின் சியோல் நகரில் உள்ள மிகப் பழமையான குவாங்ஜங் சந்தை பரபரப்பாகிறது.

நூற்றாண்டு பழமையான இந்தச் சந்தை ஜோஸான் அரச வம்ச காலத்தில் உருவானது. 1910-1945 வரை கொரியாவை ஆக்கிரமித்திருந்த, ஜப்பானிய காலனி ஆட்சியில் தப்பிப் பிழைத்தது இந்தச் சந்தை. 1950-53 களில் நடந்த கொரிய போரின்போது சந்தையின் ஒரு பகுதி அழிக்கப்பட்டது.

ஆனால்,  இன்றும் உயிர்ப்புடன் இருக்கும் இந்த பரபரப்பான சந்தையில் பாரம்பரிய உடைகளையும் சாயம் ஏற்றப்பட்ட துணிகளையும் வாங்கலாம். அப்போது பிடித்த மீன்கள், உள்ளூர் இறைச்சி வகைகள், அரிசி கேக் (இட்லி போன்ற ஒருவகையான உணவு), பலவகையான கிம்சி (காய்கறி ஊறுகாய்) கடைகளைத் தெரு முழுக்க பார்க்க முடியும். இப்போது பலரை அதிகமாக ஈர்ப்பது உணவு கடைகள்தாம்.

துணிகள் விற்கும் அமைதியான பகுதியை கடந்து சென்றால், பரபரப்பான ஆவி பறக்கும், நெரிசல் மிக்க பாரம்பரிய தெரு உணவு கடைகள் வருகின்றன.  பிண்டேடோக் (பச்சை பயறு கார தோசை), மயாக் கிம்பாப் (சாதத்தை பயன்படுத்தி செய்யப்படும் ஒரு கார பதார்த்தம்), கிளாஸ் நூடுல்ஸ், பன்றியின் கால்பாதம், குடல் பகுதிகளுடன் நூடுல்ஸ் சேர்த்து செய்யப்படும் சண்டே, மீன் சூப், சஷிமி, காரசாரமான வேகவைத்த அரிசி பலகாரங்கள் போன்றவற்றை இங்கே கிடைக்கும் பாரம்பரிய உணவுகளில் சில…

பரப்பான இந்தச் சூழலில் உணவுகளை பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள் அஜுமாக்கள் (கொரியாவில் வயதான பெண்களை அஜுமா என்று அழைப்பர்). அவர்கள் வல்லமைமிக்க சக்தியாக, அரிசி வைன் மற்றும் பீருடன் வருகிற வாடிக்கையாளர்களின் பசியைப் போக்கிக் கொண்டிருக்கிறார்கள். வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிற கடின உழைப்பாளிகளான இவர்கள், பழைய உள்ளூர்வாசிகள், இளைய மாணவர்கள், வெளிநாட்டவர்களுக்கு பற்கள் தெரிய புன்னகைத்து உணவு பரிமாறுகிறார்கள்.

திருமதி யூன், கடந்த இரண்டு வருடங்களாக இந்தச் சந்தையில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். இவர் பணியாற்றும் கடை இருபதாண்டுகளாக உள்ளது. அதிகாலை 4 மணிக்கு தொடங்கும் இவருடைய வேலை, நள்ளிரவு வரை நீடிக்கிறது.

கோழி கால்களுடன், காய்கறிகள் கலந்த சாதத்தை, பன்றி இறைச்சி மற்றும் சில துணை உணவுகளுடன் இவர் பரிமாறுகிறார். சில சமயம் வெளிநாட்டு வாடிக்கையாளருடன் தொடர்பு கொள்வது கடினமாக இருப்பதாக கூறுகிறார் இவர். ஆனால், ருசியான உணவு இதயங்களை இணைத்து விடுவதாக சொல்கிறார். இதனால் மீண்டும் மீண்டும் வாடிக்கையாளர்கள் தேடி வருகிறார்கள் என்கிறார்.

ஏராளமான கடைகள் ஒன்றுக்கொன்று போட்டியாக செயல்படுகின்றன. பெரும்பாலும் இவை பெண்களால் இயக்கப்படுகின்றன. இந்தப் பெண்கள் மாதம் ஒருமுறை ஒன்று சேர்ந்து சுற்றுலா செல்கிறார்கள். திருமதி யூன், போட்டியாக தன்னுடைய கடையை நடத்துவதைக் காட்டிலும், சந்தையில் கிடைக்கும் எல்லா உணவுமே ருசியானது என்கிறார்.

நாளுக்குநாள் சர்வதேச சுற்றுலா பயணிகளாலும் கார்டன் ராம்சே போன்ற பிரபல சமையல் கலைஞர்களாலும் கவர்ந்திழுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தச் சந்தை, தன்னுடைய அசலான தன்மையை இழந்து விடாமல் தன்னை பாதுகாத்து வருகிறது.

கடந்த ஞாயிறு அன்று இந்தச் சந்தையை காண வந்திருந்த, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளான ஜூடி மற்றும் ராப் இங்கிருக்கும் அற்புதமான காட்சிகளை, ஒலிகளை, வாசனையை குறிப்பாக, உணவுக் கடைகளை நடத்தும் பலம் பொருந்திய பெண்களின்  படையை சிறப்பாக குறிப்பிடுகிறார்.

ஆஸ்திரேலியா சுற்றுலா பயணிகள் ஜூடியும் ராப்பும் சந்தையின் ஒலியையும் வாசனையையும் நுகர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

“வயதானவர்களுக்கு இளையவர்களுக்கு இது உற்சாகமான, புன்னகையுடன் வாடிக்கையாளர்களை வரவேற்கும் இடம் இது.  கொரிய உணவுகளை சமைத்து, பரிமாறுவதில் தனித்தன்மையுடன் இவர்கள் செயல்படுகிறார்கள்” என்கிறார் ஜூடி.

சியோலின் உள் நகரப் பகுதியில் இருக்கும் குவாங்ஜங் சந்தை, சுற்றுலா பயணிகளுடன் இருக்கிறோம் என்கிற உணர்வைக் கடந்து, கொரிய மக்களுக்கு பாரம்பரிய கொரிய உணவுகளை வழங்கும் மிகச்சிறந்த இடமாகும்.

படிக்க:
சென்னை பாரீஸ் கார்னர் : இதோ பாக்குறியே இந்த ரோடு தான் எங்க வீடு !
1991 சீர்திருத்தம் – வறுமையின் நிலை என்ன ? சிறப்புக் கட்டுரை

உள்ளூர்வாசிகளுடன் அமர்வது, இருப்பதும் அவர்களால் வரவேற்கப்படுகிறது. அவர்களுடைய கலாச்சாரம், உணவு குறிப்பாக அரிசி வைன் தரும் தனித்தன்மையான அனுபவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறார்கள்.  இவை அனைத்தும் குவாங்ஜங் சந்தையில் உள்ள பெண்கள் இல்லாவிட்டால் சாத்தியமாகாது.

♦♦♦

எண்ணெயில் வறுத்தெடுக்கும் பலகாரங்கள் இந்தச் சந்தையில் பிரபலமானவை. பச்சை பயறு, முளைகட்டிய தானியங்கள், காய்கறிகள் கொண்டு வார்க்கப்படும் சிறு சிறு தோசைகள் பலருக்கு பிடித்தமான உணவு.

உள்ளூரில் வியாபாரிகளின் பசிக்கு உணவுடன் பீரை பரிமாறும் அஜூமா.

காரசாரமான முட்டைகோஸ் அல்லது முள்ளங்கி ஊறுகாய் (கிம்சி) எல்லாவகையான உணவுகளுடன் சேர்த்து பரிமாறப்படுகிறது.

தென் கொரியாவின் பிரபலமான உணவான காரசார அரிசி கேக் (இட்லியை கார சட்னியில் பிரட்டியெடுப்பது போல) பரிமாறப்படுகிறது.

பன்றியின் பாதங்களும் மூக்குப் பகுதியும் உண்ணத் தயாரான நிலையில் சந்தையின் பல இடங்களில் காண முடியும்.

பன்றியின் குடலில் கிளாஸ் நூடுல்ஸ் அடைக்கப்பட்டு தயாரிக்கப்படும் உணவு, ‘சந்தே’ என அழைக்கப்படுகிறது.

சிவப்பு பீன்ஸ் கொண்டு தயாரிக்கப்படும் கஞ்சி அல்லது களி பரிமாறத் தயாராக…

காரசாரமான அரிசி கேக், கிழங்குகளுடன், காரசாரமான குழம்பு சேர்த்து பரிமாறப்படுகிறது.

ஒரே ஒரு பெண் நிர்வகிக்கும் கடையில் வேலைப்பளு தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது.

படிக்க:
மத்திய பிரதேசம் – உழைக்கும் மாடாய் பெண்கள் !
செம்படையில் பெண்கள் – திரைப்படம்

காரசாரமான பன்றி இறைச்சி, காய்கறிகளுடன் சேர்த்து பரிமாறப்படும்போது, விலை மலிவான, அதேசமயம் ஆரோக்கியமான உணவு சாத்தியமாகிறது.

பிரபலமான பிபிம்பாப் என்ற பதார்த்தத்தில் அரிசி சாதத்துடன் இறைச்சி, காய்கறிகள், முளைகட்டிய பீன்ஸ் ஆகியவை சேர்த்து பரிமாறப்படும்.


நன்றி: aljazeera
தமிழாக்கம்: கலைமதி

மதுரை 1939-ம் ஆண்டு கோவில் நுழைவு : சாந்துப் பட்டருக்கு சாணி ஊற்றிய பார்ப்பனர்கள் !

மதுரைக் கோவில் நுழைவும் ஜாதிப் பிரஷ்டம் செய்யப்பட்ட சாந்து பட்டரின் குடும்பமும்

1939ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி காலை ஐந்து ஒடுக்கப்பட்டவர்களையும் ஒரு நாடாரையும் அழைத்துக்கொண்டு தமிழ்நாடு அரிஜன சேவா சங்கத்தைச் சேர்ந்த இரண்டு மேல் ஜாதி அதிகாரிகள் மீனாட்சியம்மன் திருக்கோவிலுக்குள் நுழைந்தனர். கோவிலின் நிர்வாக அதிகாரி ஆர்.எஸ். நாயுடுவும் பிற ஊழியர்களும் அவர்களை வரவேற்று மீனாட்சி சன்னதிக்கு அழைத்துச் சென்று சாமியைக் கும்பிட வைத்தனர்.

மதுரைக் கோவில் நுழைவின்போது எடுக்கப்பட்ட படம்.

அதற்கு அடுத்த நாள் , ஜூலை 9ஆம் தேதி முத்து சுப்பர் பட்டர் என்பவர் காலை வழிபாட்டை முடித்துவிட்டு , மாலையில் கதவுகளைத் திறக்க மறுத்தார். சுத்தீகரண சடங்குகளைச் செய்யாமல் கோவில் கதவுகளைத் திறக்க முடியாது என்று கூறினார். சாவிகளைப் பெற நிர்வாக அதிகாரி செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.

சாந்து பட்டர் என்ற சாமிநாத பட்டர்.

வெளியூருக்குச் சென்றிருந்த சாந்து பட்டர் என்பவர் அன்று இரவு ஊர் திரும்பினார். அடுத்த நாள் காலையில் கோவில் பூட்டுகள் உடைக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. இதற்குப் பிறகு பூஜைக்கு வராத பட்டர்கள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

கிட்டத்தட்ட சாந்து பட்டரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் நீக்கப்பட்டனர். திருநெல்வேலியிலிருந்து பட்டர்கள் அழைத்துவரப்பட்டு பூஜைகள் நடந்தன.

1939லிருந்து 1945வரை இந்த பட்டர்கள் கோவிலிலிருந்து நீங்கியிருந்தனர். இது தொடர்பாக பல வழக்குகள் தொடரப்பட்டு, முடிவில் சமரச ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, ‘சுத்தீரகணச் சடங்கு ஏதும் செய்யப்பட மாட்டாது.

சாந்து பட்டர் வசித்த வீட்டில் இருந்த கல்வெட்டு.

நிர்வாக அதிகாரியின் உத்தரவே இறுதியானது’ போன்ற நிபந்தனைகளை ஏற்று 1945ல் பட்டர்கள் திரும்பவும் கோவிலுக்குள் வந்தபோது, அவர்களுக்கு நிர்வாகத்திலும் கோவிலுக்குள் தங்கள் நிலையிலும் பழைய செல்வாக்குக் கிடைக்கவில்லை. ஆனால், சாந்து பட்டரின் குடும்பம் ஒதுக்கிவைக்கப்பட்டது.

சி.ஜே. ஃபுல்லர் எழுதிய Servants of the Goddess: The Priests of a South Indian Temple புத்தகத்தில் சாந்து பட்டரைப் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. ஆனால், அவரது புகைப்படம் இல்லை.

அவரது சந்ததிகளைத் தேடிப்பிடித்து, சாந்து பட்டர் என்ற சாமிநாதபட்டரின் புகைப்படத்தைக் கண்டெடுத்தேன். அவரது புகைப்படம் வெளியாவது இதுவே முதல் முறையென நினைக்கிறேன்.

இது தொடர்பாக பிபிசி தமிழ் வெளியிட்டிருக்கும் கட்டுரையை
வாசகர்கள் அவசியம் படிக்க வேண்டும்

தலித்துகளை தடுக்க பூட்டப்பட்ட கோயில் பூட்டுகள் உடைக்கப்பட்ட வரலாறு

(கட்டுரையில் இருந்து..
“கோவில் நுழைவுக்குப் பிறகு எங்கள் சமூகத்திடமிருந்தே பல கொடுமைகளை அனுபவித்தோம். என் அப்பா கோவிலிலிருந்து வீடு திரும்பும்போது அவர் மீது சாணியைக் கரைத்து ஊற்றுவார்கள். திடீரென ஆட்கள் அடிப்பார்கள். சுந்தரமும் (தற்போது மதுரை சென்ட்ரல் சினிமாவின் உரிமையாளர்) ஆறுமுகமும் (அன்சாரி வாசக சாலையை நடத்தியவர்) அப்போது என் தந்தைக்கு பாதுகாப்பாக இருந்தார்கள்….

ஆலயப் பிரவேசம் நடந்ததற்கு அடுத்த நாள், ஜூலை 9ஆம் தேதியன்று முத்து சுப்பர் பட்டர் என்ற பூசகர், காலை வழிபாட்டை முடித்துவிட்டு, கோவிலின் கதவுகளை மூடிவிட்டு மாலையில் திறக்க மறுத்துவிட்டார். கோவிலைச் சுத்தப்படுத்தும் சடங்குகளைச் செய்த பிறகே கோவிலைத் திறக்க முடியும் என்று சொல்லிவிட்டார். நிர்வாக அதிகாரியால் அவரிடமிருந்து சாவிகளைக் கைப்பற்ற முடியவில்லை. அதே நாளில் கோவிலின் சாவியை வைத்திருந்த மற்றொரு பட்டரான சாமிநாதபட்டர் வெளியூருக்குச் சென்றிருந்தார்.)

நன்றி: Muralidharan Kasi Viswanathan

நூல் அறிமுகம் : பொது உடைமைக் கல்வி முறை | குரூப்ஸ்காயா

ல்வி முறையும், கல்வி நிலையங்களும் சமூக பொருளாதார – பண்பாட்டு அமைப்பின் வெளிப்பாடாக அமைகின்றன; அதே வேளையில் குறிப்பிட்ட சமூக – பொருளாதார – பண்பாட்டு அமைப்பினைக் காப்பாற்றுகின்றவையாகவோ அல்லது சிதைக்கின்றவையாகவோ இயங்குகின்றன. இந்த எடுகோளின் அடிப்படையில் நோக்கினால் பொது உடைமையாளர்கள் முன்மொழியும் புதிய சமூக – பொருளாதார – பண்பாட்டு அமைப்பு முற்றிலும் புதியதொரு கல்வி முறையைக் கோருகின்றது. எந்த புதியதொரு முறையும் தானாகவே தோன்றிவிடாது. குறிப்பிட்ட சமூக நடைமுறைத் தேவையினை உணரும் இயக்கங்களால், மனிதர்களால் வளர்த்தெடுக்கப்படுகிறது.

இந்த வகையில் சோவியத் ஒன்றியத்தில் சோசலிச (சமூக உடைமை) முறையைக் கட்டியெழுப்புவதற்கு நடைபெற்ற வர்க்கப் போராட்டங்களின் ஒரு பகுதியாகத் தொழிலாளர் – உழவர்களிடையே புதிய கல்வி இயக்கம் எழுந்தது. இந்த இயக்கத்தைக் கட்டியெழுப்பியும், வளர்த்தும், மார்க்சிய – லெனினிய அடிப்படைகளைப் புதிய சூழல் தேவைக்கேற்ப கையாண்டும் படைப்பாற்றல் மிக்க தலைவராகக் குரூப்ஸ்காயா விளங்கினார். அவருடைய எழுத்துக்கள் பொது உடைமைக் கல்வி முறையை உருவாக்கும் நடைமுறையின் முதல் அனுபவங்கள் ஆகும். அவருடைய சில கட்டுரைகளைத் தொகுத்து நூலாக அளிக்கின்றோம். கற்றல் – கற்பித்தல் குறித்து மார்க்சிய – லெனினிய நோக்கில் ஆராயவும் ஒழுங்கமைத்து கொள்ள விரும்புவோருக்கு இவ்வெளியீடு மகிழ்ச்சி அளிக்கும். (நூலின் பதிப்புரையிலிருந்து)

நாடெழ்த கான்ஸ்தாந்தி நோவ்னா குரூப்ஸ்காயா (1869 – 1939) ரஷ்ய புரட்சியாளர்களுள் ஒருவர்; எழுத்தாளர்; கல்வியாளர். அவர் ரஷ்ய சமூக – ஜனநாயகக் கட்சியின் போல்சுவிக் குழு செயல்பாட்டுத் தலைவர்; சோவியத் ஒன்றிய போல்சுவிக் பொது உடைமைக் கட்சியின் மையக் குழு உறுப்பினர். குருப்ஸ்காயா புரட்சிக்கு முன் பல தொழிலாளர் குழுக்களுக்குக் கல்வி போதித்தார்; புரட்சிக்குப் பின் கம்சோல் என்றழைக்கப்பட்ட பொதுஉடைமை இளைஞர் சங்கத்தையும், இளம் தன்னார்வத் தொண்டர் படையினையும் கட்டியெழுப்பியவர். அவர் 1929 முதல் 1939 வரை சோவியத் ஒன்றியத்தின் இணை கல்வி அமைச்சராகப் பணியாற்றினார். இவை எல்லாவற்றையும் விட குரூப்ஸ்காயா தோழர் லெனினின் ஆலோசகரும், இணையரும் என்பதால் உலகெங்கும் நன்கு அறியப்பட்டவர்.

புரட்சிக்கு முன்னும், புரட்சிக்குப் பின்னும் தொழிலாளர்களிடையேயும் உழவர்களிடையேயும் குரூப்ஸ்காயா கல்வி போதித்தார்; கல்வி இயக்கத்தை முன்னெடுத்தார். அவர் தொழிலாளர்களும், உழவர்களும் கல்வி பெறுதல் வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியாக நோக்கினார். அதனால் கல்வியின் உள்ளடக்கத்திலும், போதனை முறையிலும் தீவிரமான மாற்றத்தைக் கொண்டு வந்தார். மார்க்சிய அடிப்படைகளைப் புதிய கல்வி முறையை – பொதுஉடைமை கல்விமுறையை உருவாக்குவதற்கு வளமான முறையில் பயன்படுத்தியுள்ளார்.

படிக்க:
புதிய கல்விக் கொள்கையல்ல – கல்வி மறுப்புக் கொள்கை !
வாழ்க்கையைப் புரிய வைப்பதுதான் கல்வி – நூல் அறிமுகம்

குரூப்ஸ்காயா 1917 முதல் 1936 வரை எழுதிய சில கட்டுரைகள், ஆற்றிய சில சொற்பொழிவுகள் ஆகியவற்றை கொண்டது ‘கம்யூனிஸ முறையில் இளைஞர்களைப் பயிற்றி வளர்த்தல்’ என்ற நூல். இந்நூலை மாஸ்கோ புரோகிரஸ் பதிப்பகம் 1960-களில் வெளியிட்டிருக்கலாம். வெளியிட்ட ஆண்டும், மொழிபெயர்ப்பாளர் பெயரும் நூலில் இல்லை. இந்நூலிலிருந்து எட்டுக் கட்டுரைகளைத் தொகுத்து ‘பொது உடைமைக் கல்வி முறை’ என்னும் நூலாக வெளியிடுகின்றோம்.

இத்தொகுப்பு நூலின் வாயிலாக மாக்சிய – லெனினியத்திற்கு குரூப்ஸ்காயா அளித்த சிறு பங்களிப்பையாவது நாம் அறிந்து கொள்ள முடியும்; அத்துடன் இந்நூல் மார்க்சிய லெனினிய நோக்கில் கற்றலையும் கற்பித்தலையும் முறைப்படுத்திக் கொள்ள சிறந்த வழிகாட்டுதலையும் வழங்குகிறது. (நூலின் அறிமுக உரையிலிருந்து, பக்.9-10)

புத்தகங்களிலிருந்து மட்டும்தான் அறிவு பெற முடியும் என்ற முடிவுக்கு நாம் எப்படியோ வந்துள்ளோம். வாழ்க்கையை எவ்வாறு பின்பற்றுவது, எவ்வாறு அதைக் கூர்ந்து நோக்கி ஆராய்வது, புதிய முறையில் வாழ்வது என்பது நமக்கோ, முன்னோடித் தலைவர்களுக்கோ, ஆசிரியர்களுக்கோ தெரிவதில்லை. ஆயினும் வாழ்க்கை என்றால் என்ன எனக் காட்டும் சுற்றுப்பயணங்களும் விளையாட்டுக்களும் உள்ளன. பள்ளிக்கு அப்பாற்பட்ட நமது வேலைகளில், வெளியிடங்களுக்குச் செல்லுவது போன்ற சமயங்களில் இயற்கை, மக்கள், வாழ்க்கை ஆகியவற்றை ஆராய வேண்டும். இதை நாம் கற்றுக் கொடுக்கவில்லை. நமது குழுக்கள் பெரும்பாலும் விளையாட்டு அல்லது நாடக மேடை சம்பந்தப்பட்ட செயல்களில் மட்டுமே ஈடுபடுகின்றன. (நூலிலிருந்து பக்கம் – 75)

பள்ளிக்கு அப்பால் செய்யும் வேலை மிகவும் முக்கியமானது. குழந்தைகளைச் சரியாக வளர்க்கவும், அவர்களின் சிறப்பான வளர்ச்சிக்குத் தேவையான வாய்ப்புகளை உண்டாக்கவும் அது உதவுகிறது. அவர்களது முன்முயற்சிக்கு நாம் ஆதரவு தர வேண்டும், அவர்கள் ஆக்க வேலைகளில் ஈடுபடுவதற்கு வாய்ப்புகளைத் தரவேண்டும், அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். பெற்றோர் அடிக்கடி குழந்தைகளுக்குச் செல்லம் கொடுக்கிறார்கள்.

சினிமாக்களுக்கும் திரையரங்குகளுக்கும் அடிக்கடி செல்ல அவர்களை அனுமதிக்கிறார்கள். சினிமா குழந்தைகளைப் பதற்றப்படுத்துகிறது. அவர்களைக் கவனியுங்கள், ஒரு சினிமா படத்தைப் பார்த்தபிறகு அவர்கள் பெரும்பாலும் தம் தாயாருடன் முரட்டுத்தனமாகப் பேசுவதையும், தங்கள் வகுப்பு சகாக்களுடன் சண்டையிடுவதையும் நீங்கள் காணலாம். சிறுவர்கள் புரிந்து கொள்ளும், கண்டு மகிழும் சினிமாக்களை, அவர்களது கண்ணோட்டத்தை விரிவுபடுத்தும் சினிமாக்களை, அவர்களுக்குக் காட்ட வேண்டும். வயது வந்தோருக்கான படங்களைப் பார்க்கும் சிறுவர்கள் பெரும்பாலும் அவற்றைப் புரிந்து கொள்வதில்லை. ஆயினும் அவர்கள் நடிகர்களைப் பாவனை செய்ய முயலுகிறார்கள். சாப்ளின் நடித்த பட மொன்றில் மூக்கு திருகப்படுவதைக் கண்ட குழந்தைகள் திருப்புளியால் அவ்வாறு தாங்களும் செய்ய முயன்றதாகக் கேள்விப்பட்டேன். முக்கியமானது என்ன வென்றால் அவர்கள் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும், நாம் அவர்கள் எண்ணங்களைச் சரியான பாதையில் திருப்பிவிட வேண்டும்.

சிறுவர்களின் தொழில் நுணுக்கக் குழுக்களைப் பரந்த முறையில் நாம் விரிவடையச் செய்ய வேண்டும், தொழிற்சாலைகள், மின்சார நிலையங்கள் போன்றவற்றுக்கு சென்று பார்க்க ஏற்பாடு செய்ய வேண்டும். சிறுவர்கள் நாம் விரும்பியதைச் செய்வதற்கான வேலை அறைகள் ஒவ்வொரு கலாசார மாளிகையிலும் இருக்க வேண்டும்.

தங்களது பெற்றோர்கள் தொடக்கிய வேலைகளைத் தாங்கள் தொடர்ந்து செய்யும் வகையில் குழந்தைகளை வளர்க்க வேண்டும். தந்தையார் ஆரம்பித்தவற்றைக் குழந்தைகள் நிறைவேற்ற வேண்டுமென லெனின் விரும்பினார். மேலும் நன்கு போராட நம் குழந்தைகள் கற்றுக் கொள்ளுவார்கள், அவர்கள் வெற்றி பெறுவார்கள் என அவர் கூறுவது வழக்கம்.

குழந்தைகளுக்குத் தேவையான பயிற்சியை அளிப்பதிலும், அவர்கள் குணநலன்களை வளர்ப்பதிலும், உபயோகமாக இருக்க அவர்கள் கொண்டுள்ள விருப்பத்தை அதிகரிப்பதிலும், அவர்களைச் சமூக ஊழியர்களாயும் கூட்டத்தினராயும் கொண்டு வருவதிலும் மேலும் அதிக கவனம் செலுத்துங்கள். பலதிறன் பெற்றவர்களாக அவர்கள் வளர்ச்சியுற முயற்சி செய்யுங்கள்.- ‘வாஜாத்தீய்’ சஞ்சிகை, இதழ் 6,1937. (நூலிலிருந்து பக்கம் 77-78)

நூல்: பொது உடைமை கல்வி முறை
ஆசிரியர்: குரூப்ஸ்காயா

வெளியீடு: முகம் பதிப்பகம்,
20/37, 13-வது தெரு, அய்யர் மனைப்பிரிவு, சிங்காநல்லூர், கோவை – 643 005.
பேச: 0422 – 2593938
மின்னஞ்சல்:mugambooks@gmail.com

பக்கங்கள்: 112
விலை: ரூ.70.00

இதர மின் நூல்கள் (e books)

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு:
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி: 99623 90277

உலகின் மிகப்பெரிய தண்டனை | அ.முத்துலிங்கம்

தண்டனை | அ.முத்துலிங்கம்

எழுத்தாளர் அ. முத்துலிங்கம்
விமானத்தில் ஒரு முறை பறந்து கொண்டிருந்தபோது அது பாதி வழியில் பழுதாகி மேலே பறக்க முடியாமல் கீழே அகப்பட்ட விமான நிலையம் ஒன்றில் இறங்கியது. முதலில் இரண்டு மணித்தியாலத்தில் விமானம்  சரியாகிவிடும் என்று சொன்னார்கள். பின்னர் ஆறு மணி நேரம் என்றார்கள். பழுது பார்க்கப்பட்ட விமானத்தில் ஏறி மூன்று மணிநேரம் ஓடுதரையில் காத்திருந்த பின்னர் மீண்டும் இறக்கப்பட்டோம். ஒரு முழு நாள் ஆனது.

விமானக் கம்பெனி பயணிகளுக்கு தங்க இடமும் உணவும் ஏற்பாடு செய்து, ஒரு புது விமானம் வருகிறது காத்திருங்கள் என்றது. எல்லா பயணியரும் கோபத்தின் உச்சிக்கு போய் பழுதுபட்ட விமானத்தில் மீண்டும் பறப்பதற்கு  தயாராக இருந்தார்கள். காத்திருப்பது ஒருவருக்குமே பிடிப்பதில்லை. அது பெரிய தண்டனை.

மாதிரிப் படம்

ஆப்பிரிக்காவில் வேலை கிடைத்து நான் அங்கே போனபோது நடந்த ஒரு சம்பவம். அந்த நாட்டில் அப்பொழுது கிட்டத்தட்ட மூன்று வருடங்களைக் கழித்து விட்டேன். எங்கள் வீடு காட்டுப் பகுதியில் நாலு தூண்களுக்கு மேல் தனியாக நின்றது. நான் வேலை செய்த கம்பனி காட்டு மரங்களை வெட்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. கம்பெனியில் கணிசமான அரசாங்க முதலீடு இருந்தபடியால் அது ஒரு முற்று முழுதான அரசாங்க நிறுவனமாக மாறுவதற்கு முயன்று கொண்டிருந்தது.

ஒருநாள் பின்னேரம் ஏழுமணியளவில் நான் வெளிவராந்தாவில் உட்கார்ந்து ஓய்வெடுத்தேன். மனைவியும் பிள்ளைகளும் உள்ளே இருந்தார்கள். வெளியே எரிந்த மின்விளக்கை அணைத்திருந்தேன். ஏனென்றால் ஆப்பிரிக்காவின் அத்தனை பூச்சிகளும் என்னைச் சுற்றி மொய்த்துவிடும். காடு எழுப்பும் ஒலி நேரத்துக்கு நேரம் மாறுபடும். ஆறு மணிக்கு ஒரு சத்தம், ஏழு மணிக்கு ஒரு சத்தம், நடு இரவு ஒரு சத்தம் என்று வித்தியாசமாக இருக்கும். அந்த ஒலிகளை தனித்தனியாக இனம் பிரித்து இது இன்ன பூச்சியின் சத்தம், இது இன்ன பறவையின் சத்தம், இது இன்ன மிருகத்தின் சத்தம் என்று ஊகிப்பது எனக்கு பிடித்த விளையாட்டு. அதைத்தான் செய்து கொண்டிருந்தேன்.

அப்பொழுது பார்த்து திடீரென்று ஒரு வாகனம் வந்து நின்றது. அந்த நேரத்தில் ஒருவரும் காட்டுக்கு அண்மையில் இருக்கும் என் வீட்டிற்கு  வருவது கிடையாது. அது அரசாங்க முத்திரை பதித்த வாகனமாயிருந்தபடியால் ஆச்சரியம் இன்னும் கூடியது. சீருடை அணிந்த சேவகன் ஒருவன் வந்து ஒரு தந்தியை கொடுத்து விட்டு போனான். வழக்கமாக இப்படி, இந்த நேரத்தில்  தந்தி விநியோகிப்பதில்லை. இது விபரீதமாகப் பட்டது. ஏதோ முக்கியமான சமாச்சாரம் என்று நினைத்துக்கொண்டு உறையை பிரிப்பதற்காக வீட்டின் உள்ளே போனேன். மின்விளக்கு வெளிச்சத்தில் என் கை உதறுவதைக் கண்டேன். என் மனைவி மகளைத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு என் பக்கத்தில் நின்றாள். என் மகன் காலைப் பிடித்துக்கொண்டு கீழே நின்றான். ஒரு சொல் ஒருவரும் பேசாவிட்டாலும் அந்த தந்திக்குள் எங்கள் வாழ்க்கையை மாற்றப் போகும் ஏதோ வார்த்தைகள் இருப்பது அந்தக் கணம் எல்லோருக்கும் தெரிந்திருந்தது.

மாதிரிப் படம்

அந்த நாட்டு ஜனாதிபதியின் அரண்மனையிலிருந்து தந்தி வந்திருந்தது. மூன்றே மூன்று வார்த்தைகள்தான். ‘அரண்மனைக்கு உடனே வரவும்.’ என் முகம் எப்படி மாறிப் போனது என்பது எனக்கு தெரியாது. ஆனால் மனைவியின் கண்களில் முன்னெப்பொழுதும் தோன்றாத பீதி தெரிந்தது. என்ன என்ன என்று கேட்டார். என்னால் பதில் சொல்ல முடியவில்லை. நிச்சயமாக அரசமாளிகை இரவு விருந்துக்கு என்னை கூப்பிடவில்லை. தங்க மாலை போட்டு விருது வழங்கவும் அழைக்கவில்லை. என்னைப் போன்றவர்களுக்கு ஜனாதிபதியிடமிருந்து தந்தி வந்தால் அதன் பொருள் ஒன்றுதான். நீங்கள் சிறைக்கு செல்கிறீர்கள். அல்லது நாடு கடத்தப் படுகிறீர்கள். நான் என்ன நடந்திருக்கும், எதற்காக இந்த தந்தியை அனுப்பியிருக்கிறார்கள் என்று மூளையை ஆசுவாசப்படுத்தி யோசிக்க ஆரம்பித்தேன்.

எங்கள் கம்பனிக்கு ஒரு தலைமையதிகாரி இருந்தார். என்னிலும் பார்க்க இருபது வயது கூடியவர். அஞ்சா நெஞ்சர். நுட்பமாகச் சிந்தித்து செயலாற்ற தெரிந்தவர். தொடர்ந்து 12 மணி நேரம் களைக்காமல் வேலை செய்யக்கூடியவர் ஆனால் அதே சமயம் கேளிக்கை பிரியர். நான் கம்பெனியில் சேர்ந்ததும் கொஞ்சம் கொஞ்சமாக தன் வேலைகளை எல்லாம் என் பக்கம் தள்ளிவிட்டு கம்பெனி விசயமாக பயணம் செய்வதை தன் முழுநேர கடமையாக மாற்றினார். மாதத்தில் இருபது நாட்கள் அவர் வெளிநாட்டில் சுற்றினார். அந்த நாட்களில் அவர் வேலையையும் நான்தான் பார்க்க வேண்டும்.

ஒரு வாரத்திற்கு முன்பு ஜனாதிபதிக்கு வேண்டிய ஒருவர் அவரிடமிருந்து ஒரு கடிதத்தை கொண்டு வந்தார். கையெழுத்து இல்லாத, தட்டச்சு செய்த இரண்டு வரிக் கடிதம். அதை நீட்டி ஒரு காரியம் ஆகவேண்டுமென்று சொன்னார். அவர் கேட்டது கம்பனி விதிகளுக்கு அப்பாற்பட்டது ஆகவே நான் மறுத்து விட்டேன். என்னுடன் வேலை செய்தவர்கள் அவர் பலம் வாய்ந்தவர் என்றும், அவரைப் பகைக்க கூடாது என்றும் அறிவுறுத்தினர். நான் அதை உதாசீனம் செய்தேன். அப்பொழுது எனக்கு வயது இப்பொழுது இருக்கும் வயதில் சரி பாதி. மூளையும் சரி பாதி. ‘கோழியும் அவங்கட, புழுங்கலும் அவங்கட’ என்பதை நான் நினைத்துப் பார்க்கவில்லை. அதன் விளைவுதான் இந்த தந்தி என்பது ஊகிக்கக் கூடியதாக இருந்தது.

படிக்க:
♦ கிழங்கு கிண்டியபோது கிடைத்த ரத்தினக் கல் | அ.முத்துலிங்கம்
♦ ஓட்டை விழுந்த வெண்ணெய்க் கட்டி | அ.முத்துலிங்கம்

மனைவி இப்பவே புறப்பட வேண்டுமா என்று கேட்டார். தந்தியின் வாசகம் மிகத் தெளிவாக இருந்தது. அரண்மனைக்கு உடனே வரவும். அரண்மனை மூன்று மணி தூரத்தில் இருந்தது. காட்டுப் பாதையில் இரவில் தனியாக பிரயாணம் செய்ய வேண்டும். இப்பொழுது புறப்பட்டால் இரவு ஒரு மணிக்கு அரண்மனை போய்ச் சேரலாம். ஜனாதிபதி என்னை எதிர்பார்த்து அந்த நேரம் காத்திருக்கப் போகிறாரா? அடுத்த நாள் காலை நாலு மணிக்கு புறப்படுவதென தீர்மானித்தேன்.

நான் அன்றிரவு தூங்கவில்லை. புறப்படுவதற்கு முன்னர் மனைவி என்னென்ன செய்ய வேண்டுமென்று பட்டியலிட்டேன். என்னை சிறையில் அடைத்தார்கள் என்றால் எந்த வழக்கறிஞரை தொடர்பு கொள்ளவேண்டும், அவரிடம் என்ன விவரங்கள் சொல்லவேண்டும் போன்ற குறிப்புகளை எழுதினேன். என்னை நாடு கடத்தினால் எந்த தூதரகத்தை அணுகவேண்டும் போன்ற விவரங்களையும் குறித்து வைத்தேன். என்ன என்ன சாமான்களை சூட்கேசுகளில் அடைக்கவேண்டும் என்ற முடிவை அவரிடமே விட்டு விட்டேன்.

அடுத்த நாள் அதிகாலை நாலு மணிக்கு புறப்பட்டு சரியாக ஏழு மணிக்கு அரண்மனை வாசலை அடைந்தேன். காவல் காக்கும் ராணுவ வீரர்கள் என்னையும் தந்தியையும்  பார்த்த பின்னர் உள்ளே விட்டார்கள்.  அரண்மனை இன்னும் திறக்கப் படவில்லை. வெளியே காணப்பட்ட பளிங்கு இருக்கை ஒன்றில் அமர்ந்து காத்திருக்கத் தொடங்கினேன். எட்டு மணிக்கு அரண்மனை சுறுசுறுப்பானது. ஜனாதிபதியின் அந்தரங்கக் காரியதரிசி வந்தாள். முப்பது வயது மதிக்கத்தக்க பெண். கழுத்து நீண்டு, தலை நிமிர்ந்து நாடியும் செவியும் ஒரே நேர்கோட்டில் இருந்தன. அவளிடம் என் தந்தியை காட்டினேன். அவள் அதைப் படிக்கவில்லை. ஆழப் புதையும் கம்பளம் விரித்த ஓர் ஆடம்பரமான அறையைக் காட்டி அங்கே தங்கச் சொன்னாள். ஜனாதிபதி வந்ததும் முதல் ஆளாக என்னை அழைப்பார் என்று நினைத்தேன். இன்னும் பலர் ஒவ்வொருவராக வந்து வெவ்வேறு ஆசனங்களில் அமர்ந்துகொண்டார்கள். சிலர் உள்ளே போனார்கள். சிலர் வெளியே வந்தார்கள். இரண்டு வெளிநாட்டு தூதுவர்கள் வந்து அவர்களும் காத்திருந்தார்கள். தொழிலதிபர்கள் மாத்திரம் உடனுக்குடன் உள்ளே போய் வெளியே வந்தார்கள். ஆட்கள் போவதும் வருவதுமாய் ஒரு ரயில்வே ஸ்டேசன் போல அந்த அறை அமளியுடன் காணப்பட்டது. என்னை ஒருவரும் அழைக்கவில்லை. அதே சொகுசு நாற்காலியில், அதே இடத்தில், அதே உடல் வளைவுகளுடன் நான் காத்திருந்தேன்.

எனக்கு பாத்ரூமுக்கு வந்தது, நான் போகவில்லை. சரியாக அந்த நேரம் பார்த்து அழைக்கப்பட்டால் நான் என்ன செய்வது. தண்ணீர் தாகமெடுத்தது. சற்று தள்ளி கேட்டுக்கு வெளியே ஒரு கடையில் குளிர்பானம் விற்றார்கள். சிலர் போய் குடித்துவிட்டு வந்தார்கள். நான் குடிக்கவில்லை. எனக்கு பசித்தது. சிறைக்கூடத்தில் என்ன உணவு தருவார்கள் என்று யோசனை போனது. அன்று அந்த நாற்காலியில் உட்கார்ந்து என் மனம் யோசித்த அவ்வளவையும் எழுதினால் அது பெரிய நாவலாக விரிந்திருக்கும். ஓர் அரண்மனையில் ஜனாதிபதியை சந்திக்க காத்திருக்கும் ஒருவர் என்ன செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியவில்லை.

மறுபடியும் அந்தரங்க காரியதரிசியிடம் சென்றேன். அவள் எனக்கு வட்டமான பின்பக்கத்தை காட்டிக்கொண்டு நின்றாள். உடம்பை ஒட்டிப் பிடித்த கட்டையான ஸ்கேர்ட். உயரமான சப்பாத்து. அவளிடம் கை கொடுக்கும்போது சிலர் இடது கையினால் வலது முழங்கையை தொட்டுக் கொண்டு கொடுத்தார்கள். பழுதுபட்ட திசைகாட்டி முள்போல அவள் சுழன்று கொண்டு வேலை செய்தாள். எங்கே நடமாடுகிறாள் என்பதை அவளின் சப்பாத்தின் ஒலியை வைத்து சொல்லி விடலாம். அந்த ஒலியில் அதிகாரம் இருந்தது. கழுத்திலே மெல்லிய ஸ்கார்ஃபை பூப்போல கட்டியிருந்தாள். ஒரு தோடம்பழத்தை உரித்து நடுவிலே ஓட்டைபோட்டு உறிஞ்சிக்கொண்டிருந்தாள். என்ன தண்டனை கிடைத்தாலும் பரவாயில்லை, ஒரு நிமிடம்கூட இனிமேல் தங்கமுடியாது என்று எனக்கு தோன்றியது.  அவளிடம் நான் வாய் திறக்கக்கூட இல்லை. என்னைப் பார்த்ததும் தோடம்பழத்தில் புதைந்திருந்த சொண்டை வெளியே எடுத்து ‘ஜனாதிபதிக்கு நீங்கள் வந்திருப்பது தெரியும். அவர் அழைப்பார்’ என்றாள். சொண்டு மறுபடியும் தோடம்பழத்திற்குள் போய்விட்டது.

Administrative-Punishment-a-painting by Jan Komsk

என்ன நடக்கிறது இங்கே? சிறைக்கூடத்தை தயார் செய்கிறார்களா அல்லது பிளேன் டிக்கட் ஏற்பாடு செய்கிறார்களா? என்னை முதலில் அனுப்பிவிட்டு பின்னர் மனைவியையும் பிள்ளைகளையும் அனுப்புவார்களா? இதற்கெல்லாம் ஒரு முறை இருக்கவேண்டுமே? அப்பொழுது பார்த்து இரண்டு பொலீஸ்காரர்கள் வந்தார்கள். நான் என்னை தயார்படுத்திக் கொண்டேன். அவர்கள் இருவரும் ஒருவர் கையை ஒருவர் பற்றியபடி காரியதரிசியிடம் போய் பேசிவிட்டு என்னை நோக்கி வந்தார்கள். ஒரு நிமிடம் தாமதமாகியிருந்தால் நான் எழும்பி கைகளை நீட்டியிருப்பேன். அவர்கள் என்னை கவனிக்கவில்லை, வந்த மாதிரியே வெளியே போனார்கள். சுவர்க்கடிகாரத்தை பார்த்தேன், அது ஏழுதரம் அடித்தது.  நான் கண் விழித்தபோது எனக்கு முன்னால் இரண்டு கறுத்த வழுவழுப்பான தொடைகள் தெரிந்தன. காரியதரிசிப் பெண் என்னை குனிந்து பார்த்து ‘நீங்கள் போகலாம்’ என்றாள். நான் ஒன்றுமே கேள்வி கேட்கவில்லை. உடனே எழுந்து புறப்பட்டேன்.

மூன்று வார்த்தைகளில் வரச் சொன்னார்கள், இரண்டு வார்த்தைகளில் வீட்டுக்கு போகச் சொன்னார்கள். நான் காத்திருந்த இந்த 12 மணித்தியாலத்தில் என்னைக் கூப்பிட்டு விசாரிக்க வேண்டிய பிரச்சினைக்கு என்ன நடந்தது. தானாகவே தீர்ந்து விட்டதா?  ஜனாதிபதியின் உணவருந்தும் வேளை நெருங்கிவிட்டதால் என்னை போகச் சொல்லி  மறுபடியும் நாளை வரச் சொல்வார்களா? திரும்பிப் போகும் வழியெல்லாம் இதைத்தான் யோசித்தேன். இரண்டு வருட சிறைத் தண்டனை அனுபவிக்கவும் நான் தயாராக இருந்தேன் ஆனால் இந்தக் காத்திருத்தல் மட்டும் வேண்டாம்.

சரியாக இரவு 10 மணிக்கு வீடு வந்து சேர்ந்தேன். நான் பார்த்த காட்சி என்னைத் திடுக்கிட வைத்தது. இரண்டு சூட்கேசுகள் நிறைய அடைக்கப்பட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மனைவி பயண ஆடைகள் தரித்து புறப்பட தயாராக இருந்தார். என் குழந்தைகளும் நல்ல ஆடைகள் உடுத்திக் காணப்பட்டனர். மகள் பொம்மையை கட்டிப்பிடித்தபடி வாசலிலேயே தூங்கி விட்டாள். என்னுடைய மகன் பள்ளிப் புத்தகங்களையும் நோட்டுப் புத்தகங்களையும் ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கி கயிற்றினால் கட்டி முக்காலி போலச் செய்து அதற்கு மேல் உட்கார்ந்திருந்தான். கறுப்பு கால்சட்டை, வெள்ளை  சேர்ட் அணிந்து ஏதோ பள்ளிக்கூடம் போகப் புறப்பட்டது போல அமைதியாக இருந்தான். அவனுடைய முதல் கேள்வி ‘கே.எல்.எம் பிளேனிலா பறக்கப் போகிறோம்?’ நான் இல்லை என்றேன். மனைவி சூட்கேசுகளை உள்ளே வைக்கட்டா என்றார். ஓம் என்றேன். பிள்ளைகளின் உடுப்பை களையட்டா? ஓம் என்றேன். சப்பாத்துகளை கழற்றட்டா? ஓம் என்றேன்.

அவர்கள் காத்திருந்த அந்த 12 மணி நேரத்தைப் பற்றி யோசித்தேன். மனைவி காலையிலேயே சூட்கேசுகளை அடுக்கி வாசலிலே வைத்து விட்டதாகச்  சொன்னார். அன்று வீட்டிலே சமைக்கவில்லை. முதல்நாள் மிச்சமிருந்த உணவை சாப்பிட்டிருந்தார்கள். எந்த நிமிடமும் ஒரு பொலீஸ் வண்டி வரக்கூடும் என்று எதிர்பார்த்ததாகச் சொன்னார்கள். வீட்டினுள் தொட்டியில் வளர்த்த பூக்கன்றுகளுக்கு கடைசித் தரமாக நிறையத் தண்ணீர் ஊற்றி அது தரையில் ஓடிக்கொண்டிருந்தது.. அவர்கள் அனுபவித்த வேதனையை நினைத்த போது பெரும் துயரம் எழுந்து என்னை மூடியது.

நோர்மன் மெய்லர் எழுதிய The Executioner’s Song என்ற புத்தகம் ஒரு கொலையாளியின் கதையை சொல்கிறது. . கரி கில்மோர் என்பவன் ஒரு ஹோட்டல் மனேஜரை கொலை செய்து விடுகிறான். அவனுக்கு அமெரிக்க நீதிமன்றம் மரண தண்டனை விதிக்கிறது. கொலையாளியை சுட்டுக் கொல்ல வேண்டும் என்பதுதான் தீர்ப்பு. நாலு பேர் துப்பாக்கிகளை தூக்கி குறிவைத்து சுடத் தயாராகி, கட்டளைக்காக காத்திருக்கிறார்கள். அப்பொழுது கரி கில்மோர் சொல்கிறான் ‘Let’s do it.’ ‘இதை முடித்துவிடுவோம்’ என்கிறான். இறப்பதிலும் பார்க்க காத்திருப்பது அவனுக்கு கூடிய தண்டனையாகப் படுகிறது.

நான் என் வாழ்க்கையில் மேற்கொண்ட அநேகவிதமான பயணங்களிலிருந்தும், வசித்த நாடுகளிலிருந்தும், சந்தித்த மனிதர்களிலிருந்தும் பல விசயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். அவற்றிலே நான் கண்ட உண்மை என ஒன்றிருக்கிறது. தண்டனைகளில் ஆகக் கொடுமையானது காத்திருக்க வைப்பதுதான். என்ன நடக்கப்போகிறது என்பது தெரியாமல் காத்திருக்க வைப்பது இன்னும் கொடூரமானது. ஜனாதிபதிகளுக்கு அது தெரியும்.

நன்றி :அ.முத்துலிங்கம்
எழுத்தாளர் முத்துலிங்கத்தின் இணைய தளம்

எழுத்தாளர் அறிமுகக் குறிப்பு:
இலங்கையில் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்ததன் பின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டட்ர்ட் மனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்தி செய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்தேன். 2000ம் ஆண்டில் ஓய்வு பெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.

அறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல்கள் என எழுதியிருக்கிறேன்.

(அ.முத்துலிங்கத்தின் தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகளை அவரது அனுமதியுடன் இங்கே வெளியிடுகிறோம்.)

மோடி நாட்டுக்கு நல்லது செய்கிறார் ! ரஜினி பாராட்டு – கருத்துக் கணிப்பு

டிகர் ரஜினியை யாரும் சந்தித்து நேர்காணல் எடுக்க முடியாது. அப்படி எடுக்க வேண்டுமென்றால் அவர் படம் சமீபத்தில் வெளிவந்திருப்பது ஒரு நிபந்தனை. நேர்காணல் மட்டுமல்ல ரஜினியின் பத்திரிகை செய்திகளுமே கூட படங்களுக்கான முன்னோட்ட விளம்பரத்திற்காக மட்டுமே வரும். காலாவிற்காக தூத்துக்குடி சென்றவர் பிறகு காலியானது நேற்றைய கதை!

படிக்க:
♦ 2.0 : ரஜினி + ஷங்கரின் சிட்டுக்குருவி செல்பேசி லேகியம் !
♦ யார் அந்த ஏழு பேர் ? ரஜினியை குஜினியாக்கிய தமிழ் ஃபேஸ்புக்

லைக்கா சுபாஷ்கரன் மற்றும் இயக்குநர் ஷங்கரின் 2.0 படத்திற்காக திருவாளர் ரஜினிகாந்த் இந்தியா டுடே ஆங்கில ஊடகத்திற்காக மனமிறங்கி நேர்காணல் அருளியிருக்கிறார். 2.0 படம் இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாயிருப்பதால் இந்த நேர்காணல் வாய்ப்பு அகில இந்திய ஊடகம் ஒன்றிற்கு கிடைத்திருக்கிறது. அந்த நேர்காணல் செய்திகளை தமிழ் ஊடகங்கள் ஒரே மாதிரி டெம்பிளேட்டில் வெளியிட்டிருக்கின்றன.

உள்ள நல்லாத்தானே பேசுனாரு, இங்க வந்து இப்படி சொல்லிட்டாப்புலயே ! – மோடி மைண்ட் வாய்ஸ்

அதில் மோடியை ரஜினி பாராட்டுவதாக மட்டும் முன்னிலைப்படுத்தப் படுகிறது. தமிழகத்தில் வரும் தேர்தலில் பாஜக தலைமையில் ஒரு கூட்டணி அமைய வேண்டும்; அதில் ரஜினி இடம்பெறவேண்டும் என அமித்ஷா – மோடி, குருமூர்த்தி முதல் தமிழிசை, பொன்னார் வரை பெரும் திட்டமே தீட்டியிருக்கிறார்கள். அதை சாத்தியப்படுத்துவதற்காகவே ஊடகங்களும் மேற்கண்ட நேர்காணல் செய்தியை விமர்சனமின்றி அப்படியே ஒரே மாதிரியாக வெளியிட்டிருக்கின்றன.

அந்த நேர்காணலில் அவர் பல விசயங்களைப் பேசியிருக்கிறார். அனைத்தும் பாஜகவிற்கு உடன்பாடானவைதான்.

நடிப்பை பிழைப்பிற்காக ஆரம்பித்தாலும் தற்போது பொழுது போக்கு, மகிழ்ச்சிக்காக நடிக்கிறேன். நடிப்பிறகு சிவாஜியும், சிகரெட் பிடிக்கும் ஸ்டைலுக்கு சத்ருஹன் சின்ஹாவும் முன்மாதிரிகள். இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு கற்ற பாடம் “அனைத்துமே ஒரு விளையாட்டுதான்”. எம்.ஜி.ஆர் நல்லவர். ஜெயலலிதா ஒரு மாபெரும் தலைவர். அவரது ஆட்சியைப் பற்றி இப்போது பேசவில்லை என்றாலும் ஒரு தனி மனுஷியாக அவர் இங்கே வாழ்ந்து ஆட்சி செய்திருப்பது ஒரு வரலாற்று சாதனை.

தமிழர்கள் கடின உழைப்பாளிகள், அறிவார்ந்த மக்கள். ஆனால், தாங்கள் யார் என்பதை அவர்கள் தற்போது மறந்து போயிருக்கின்றனர். நல்ல தலைமைதான் தமிழகத்தின் தற்போதைய தேவை. இங்கு தலைமைக்கான வெற்றிடம் இருக்கிறது. மக்களிடம் இருந்து வாக்குகளை மட்டும் பெறுவதை நோக்கமாக கொள்ளாமல், அவர்களுக்கு தேவையானது என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும். நான் இன்னும் முழுமையாக அரசியல் பணிகளில் ஈடுபடவில்லை. அரசியலுக்கு வந்தால் தனித்துவமாக, மாற்று அரசியலை உருவாக்க விரும்புகிறேன்.

படிக்க:
♦ நான்தாம்பா ரஜினிகாந்த்! | துரை.சண்முகம்
♦ டிவிட்டரில் வறுபடும் ரஜினி ! ஆன்மீக அரசியல் சும்மா அலறுதில்ல !

பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு நல்லது செய்ய நினைக்கிறார். அதற்காகவே கடினமாக முயற்சித்து பல்வேறு செயல்களை செய்கிறார். மக்களுக்கு சிறந்தவற்றை கொடுக்க முயற்சிக்கிறார்.

இந்தியா டுடே ஆசிரியர் குழுவுடன் ரஜினி

இவையெல்லாம் அவர் அருளிய முத்துக்கள். மேலும் சபரிமலையில் நீதிமன்றத் தீர்ப்பு என்பது பக்தர்கள் விசயத்தில் தலையிடுவதாக இருக்கக் கூடாது என்றும் கூறியிருக்கிறார். இந்த நேர்காணலை இந்தியா டுடே அச்சு இதழின் அட்டைப் படக்கட்டுரையாகவும் வெளியிட்டிருக்கிறார்கள். அதன் தலைப்பு “ அரசியல் உலகம் அபாயகரமானது”.

உண்மைதான். ரஜினி போன்றவர்களும் நுழையும் பலவீனம் இருப்பதால் அரசியல் உலகம் அபாயகரமானதுதான்.

தமிழக அரசியலில் வெற்றிடம் நிலவுகிறது. மோடி நல்லவர். ஜெயலலிதா நல்லவர். அனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் ரஜினியின் அரசியல் நுழைவு எப்படி இருக்கும் என்பது வெள்ளிடை மலை.

இன்றைய கேள்வி:

இந்தியா டுடே நேர்காணலில் நடிகர் ரஜினி பிரதமர் மோடியை பாராட்டியிருப்பதற்கு காரணம்  என்ன?

♠ மோடியின் 2.0தான் ரஜினி
♠ பாஜக-வுக்கு முட்டுக்கொடுக்க
♠ மோடியின் பிரச்சாரக்
♠ ரெய்டு பயம்
♠ 2.0-க்கு ஓசி விளம்பரம்

(பதில்களில் மூன்றை தெரிவு செய்யலாம்)

யூடியூபில் வாக்களிக்க:

https://www.youtube.com/user/vinavu/community

ட்விட்டரில் வாக்களிக்க:

நீதிபதி லோயா மரணம் : மீண்டும் விசாரணை தேவை – முன்னாள் நீதிபதி ஏ.பி.ஷா

சொராபுதீன் போலி மோதல் கொலை வழக்கை விசாரித்த சிபிஐ நீதிமன்ற நீதிபதி பிரிஜ்கோபால் ஹரிகிஷன் லோயாவின் சந்தேக மரணம் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.பி.ஷா கருத்து தெரிவித்துள்ளார்.  நீதித்துறையிலிருந்து நீதிபதி லோயாவின் குடும்பத்திற்கு ஆதரவாக வந்திருக்கும் ஒரே ஆதரவு குரல் ஏ.பி. ஷா-வினுடையது.

சொராபுதீன் போலி மோதல் கொலை வழக்கில், அப்போதைய குஜராத் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்தனர். இந்த வழக்கின் நீதிபதியாக இருந்த லோயா, மர்மமான முறையில் டிசம்பர் 2014-ம் ஆண்டு நாக்பூரில் கொல்லப்பட்டார். மாரடைப்பால் மரணமடைந்ததாக போலீசு தரப்பு தெரிவித்த நிலையில், நீதிபதியின் குடும்பம் இந்த மரணத்தில் சந்தேகத்தைக் கிளப்பியது.

முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.பி.ஷா

நீதிபதி லோயா மரணமடைவதற்கு சில வாரங்களுக்கு முன், தங்களுக்கு சாதகமான தீர்ப்பைத் தர, லோயாவிற்கு குற்றம் சாட்டப்பட்டோர் தரப்பு ரூ. 100 கோடியை லஞ்சமாக தர முயன்றதும் தெரியவந்தது. லோயாவின் மரணத்தின் பின்னணியில் இந்த விஷயத்தையும் கவனத்தில் கொண்டு விசாரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.பி.ஷா.

“அதிகாரிகள் தரப்பில் நீதிபதி லோயா, மாரடைப்பால் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாக்பூரில் மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறி, தாண்டே என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து இன்னொரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அங்கே அவர் இறந்துவிட்டதாக அறிவித்திருக்கிறார்கள். உறவினர்களுக்கு விஷயத்தை சொல்லாமலே உடற்கூராய்வு வரை சென்றிருக்கிறார்கள். உறவுக்காரர் என நீதிபதி லோயா குடும்பத்துக்கு தொடர்பே இல்லாத ஒருவர் கையெழுத்திட்டிருக்கிறார். மருத்துவராக உள்ள லோயாவின் சகோதரி, நீதிபதியின் சட்டையில் ரத்தத் துளிகள் இருந்ததாக தெரிவிக்கிறார். மூன்று நாட்களுக்கு கழித்து, குடும்பத்தாரிடம் கொடுக்கப்பட்ட செல்போனில் அத்தனை தகவல்களும் அழிக்கப்பட்டிருக்கின்றன.

படிக்க:
♦ நீதிபதி லோயா பிரேதப்பரிசோதனை அறிக்கையில் உள்ள ஓட்டைகள் !
♦ பாஜக – மோடி – அமித்ஷா – நீதிபதி லோயா மர்ம மரணம் ?

சொராபுதீன் என்கவுண்டர் வழக்கிலிருந்து விலகிக் கொள்ளும்படி அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகள் அழிக்கப்பட்டிருப்பதாக நீதிபதியின் குடும்பம் தெரிவிக்கிறது. நீதிபதி முக்கிய அரசியல்வாதிகளுக்கு எதிரான வழக்கை விசாரித்துக் கொண்டிருப்பதை அவருடைய குடும்பம் அறிந்திருந்தது. நீதிபதிக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் முக்கிய பொறுப்பிலிருந்த ஒருவரிடமிருந்து அழுத்தம் வந்ததையும் குடும்பம் அறிந்திருக்கிறது. அதுகுறித்து நீதிபதி லோயா மிகுந்த மன அழுத்ததில் இருந்ததையும் அவருடைய குடும்பம் நினைவுபடுத்துகிறது. அதோடு, நீதிபதிக்கு லஞ்சம் தர முயன்ற விஷயமும் தெரியவந்துள்ளது. மும்பையில் நிலம் அல்லது ஃபிளாட் வேண்டுமா என அவரிடம் கேட்கப்பட்டதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

இவர்களின் அழுத்ததுக்கு பணியாமல், நீதிபதி பொறுப்பை உதரிவிட்டு, சொந்த ஊருக்குத் திரும்பி விவசாயம் செய்ய வந்துவிடப் போவதாக தன்னுடைய தந்தையிடம் லோயா தெரிவித்திருக்கிறார். இத்தனை விஷயங்களையும் அறிந்த நீதிபதி லோயாவின் மகன், தன் தந்தையின் மரணத்தை விசாரிக்க வேண்டும் என கடிதம் எழுதுகிறார்.

இயற்கையாக மரணித்ததாகச் சொல்லப்படும் நீதிபதி லோயா

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, தாமாக முன்வந்து இந்த விஷயத்தை கவனத்தில் கொண்டு இதுகுறித்து விசாரிக்கலாமா கூடாதா என்பது பற்றி முடிவெடுக்க வேண்டும். இந்த லஞ்ச புகார் விசாரிக்கப்படவில்லை எனில், அது நீதித்துறைக்கு மிகப்பெரும் களங்கமாக அமையும்” என தி வயர் இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார் நீதிபதி ஏ.பி. ஷா.

“நீதிபதி லோயா குறித்து விசாரித்தேன். அவர் ’மிக நேர்மையானவர்’ என பெயர் பெற்றவர். அவர் மாவட்ட நீதிமன்றத்தின் மூத்த உறுப்பினர். அவருடைய மரணம் குறித்து அவர் குடும்பத்தார் எழுப்புகிற சந்தேகங்களை விசாரிக்காவிட்டால், கீழ்நிலையில் இருக்கிற நீதிபதிகளுக்கு அதுதவறான செய்தியையே தரும். சமீபத்தில் நீதித்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் பல சம்பவங்கள் நடந்துவருகின்றன. அவற்றில் விசாரணைக்கான முகாந்திரங்கள் உள்ளன. அவற்றை விசாரிப்பது, தொடர்புடையவர்களுக்கு எதிரான களங்கத்தை துடைக்கவும்கூட உதவலாம்.

லோயா லெவலுக்கு போக வேணாம் என அமித்ஷாவிற்கு ஆலோசனை கொடுக்கிறாரோ மோடிஜி?

மேலும், நான் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நீதிபதி லோயா குடும்பத்தாரின் குற்றச்சாட்டின் மீது நான் கருத்து சொல்லவில்லை. ஆனால், அவர்களின் குற்றச்சாட்டின் மீது நிச்சயம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என சொல்கிறேன்.  விசாரணை நடத்தப்பட போதுமான காரணங்கள் உள்ளன. நீதித்துறையை, நாட்டின் மிக உயர்ந்த அமைப்பாக கருதுகிறேன். அந்த அமைப்பைச் சேர்ந்த ஒருவரின் குடும்பம், குற்றச்சாட்டை எழுப்பும்போது, நிச்சயம் அது விசாரிக்கப்பட வேண்டும்” என்கிறார் நீதிபதி ஏ.பி. ஷா.

படிக்க:
♦ சொராபுதீன் கொலை வழக்கையே கொன்ற அமித் ஷா- மோடி கும்பல்
♦ கொலைகார அமித் ஷா விடுதலை !

நீதிபதியின் சந்தேக மரணம் குறித்து விசாரிக்க கடந்த ஏப்ரல் மாதம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், நவம்பர் 26-ம் தேதி, மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை நீதிமன்றத்தில் நீதிபதி லோயா மரணத்தை விசாரிக்கக்கோரும் மனு ஒன்றை வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்திருந்தார்.  இந்த மனு, எஸ்.பி. சுக்ரே மற்றும் எஸ்.எம். மோதக் ஆகியோரின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ‘எங்கள் முன் அல்ல’ எனக்கூறி மனுவை விசாரிக்க மறுத்துவிட்டனர்.

அந்த மனு, பி.என். தேஷ்முக் மற்றும் சொப்னா ஜோஷி அடங்கிய அமர்வு முன்  28-ம் தேதி விசாரணைக்கு அனுப்பப்பட்டது. நீதிபதி சொப்னா ஜோஷி இந்த மனு விசாரணையிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டார்.

நீதிபதி ஒருவரின் மரணத்தை விசாரிப்பதற்குக்கூட திராணியற்ற ‘உயர்ந்த’ அமைப்பாகத்தான் இந்திய நீதிமன்றங்கள் இருக்கின்றன. சக நீதிபதிகளே, மூத்த நீதிபதி ஒருவரின் மரணத்தை விசாரிக்கத் தயாராக இல்லை.  ’இந்துத்துவ’ காவி கும்பல் ஆபத்தானது, பயங்கரமானது என்பதற்கு நீதித்துறையில் நடந்திருக்கும் இந்தக் கொலை மிகச்சிறந்த சான்று.

மேலும் படிக்க:
♦ Exclusive: Justice A.P. Shah Says ‘Suspicious Death’ of Sohrabuddin Case Judge Needs Probe
♦ B.H. Loya’s Death: Another High Court Judge Withdraws From the Case