Sunday, June 22, 2025
முகப்பு பதிவு பக்கம் 425

இந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் ? மு.வி.நந்தினி

ஸ்ரீரெட்டி என்ற நடிகர் (நடிப்பை தொழிலாகக் கொண்ட ஒரு ஆணை மதிப்பிற்குரிய வகையில் நடிகர் என குறிப்பிடும் சமூகம், அதே தொழிலை செய்யும் ஒரு பெண்ணை ‘நடிகை’ என ஒருமையில் அழைக்கிறது. நடிப்பை தொழிலாகச் செய்யும் அனைவரையும் நடிகர் என்றே குறிப்பிட விரும்புகிறேன்) தான் சார்ந்த திரைப்படத்துறையில் பெண்கள் பாலியல் பண்டங்களாக சுரண்டப்படுவதை எதிர்த்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

தெலுங்கு திரைப்படத்துறையில் பிரபலமான தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குநர்கள் ‘வாய்ப்பு’ தருவதாகக் கூறி தன்னை பாலியல் சுரண்டல் செய்ததை அவ்வவ்போது தன்னுடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டுவருகிறார். ஸ்ரீரெட்டியின் ‘ஸ்ரீலீக்ஸ்’ இந்திய ஊடகங்களுக்கு நல்ல தீனி என்றாலும், தான் சார்ந்த திரைத்துறையிலிருந்து அவருக்கு எவ்வித ஆதரவும் கிடைக்கவில்லை. மாறாக, தெலுங்கு படங்களில் நடிக்க அவருக்கு தடை விதித்தது, டோலிவுட் நடிகர் சங்கம். பெண்கள் அமைப்பினரின் தலையீட்டால் அந்தத் தடை நீக்கப்பட்டிருக்கிறது. இரண்டு, மூன்று படங்களில் நடித்திருக்கும் ஸ்ரீரெட்டிக்கு, இந்த பிரச்சினையின் காரணமாக நடிக்க வாய்ப்பு எதுவும் கிடைத்ததாகத் தெரியவில்லை.

ஸ்ரீரெட்டி

இங்கே ஒரு இடையீட்டுச் செய்தியாக ஒன்றை சொல்ல விரும்புகிறேன்.  பணம் புரளும் சினிமா தொழிலில் பெண்கள் பாலியல் பண்டங்களாக பயன்படுத்தப்படுவது கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை ‘இயல்பாக’ உள்ள ஒரு விஷயமாக, மூடிமறைக்கப்படும் விஷயமாகத்தான் இருந்து வருகிறது. சுரண்டப்படும் ஒரு சமூகம் அல்லது பாலினம் தொடர்ந்து சுரண்டலுக்கு ஆளாகிக் கொண்டுதான் இருக்கும் என்பது இயற்கை நியதி அல்ல. மாற்றங்கள், எதிர்குரல்கள் எழத்தான் செய்யும். சமூகத்தின் முதிர்ச்சியைப் பொறுத்து எதிர்வினைகளின் வேகம் இருக்கும். அந்தவகையில் ஹாலிவுட்டில் எதிர்க்குரல் ஒலிக்கத்தொடங்கியுள்ளது.

‘#metoo’ என்ற பெயரில் திரைப்பட வாய்ப்புக்காக தாங்கள் எப்படி சுரண்டலுக்கு உள்ளானோம் என ஹாலிவுட் நடிகர்கள் பலர் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் மீது குற்றம் சுமத்தினார்கள். பிரபல நடிகர் ஏஞ்சலினா ஜோலி, குவெந்த் பால்ட்ரோ, ஜெனிஃபர் லாரன்ஸ், உமா த்ரூமன் ஆகியோரும் இதில் அடக்கும். சினிமா நடிக்க வந்த புதிதில் (இதில் பலர் சினிமா குடும்பத்தைச் சார்ந்தவர்களாக இருந்தபோதும்) பாலியல் சுரண்டலுக்கு ஆளானோம் என ஊடகங்களிடம் பேசினார்கள்.

சிறுமியை பாலியல் வன்கொடுமை
தமக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை பொதுவில் அம்பலப்படுத்திய ஹாலிவுட் நடிகர்கள்

அதன் பின் 70க்கும் மேற்பட்ட நடிகர்கள் தங்களுடைய மோசமான சுரண்டல் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்கள். பிறகு, நடந்ததுதான் கவனிக்கத்தக்கது. குற்றச்சாட்டுக்கு ஆளான ஆண்கள் மீது வழக்குகள் பதியப்பட்டன; அவர்களுடைய கௌரவமிக்க திரைத்துறை-சமூகம் சார்ந்த பதவிகள், பொறுப்புகள் பறிக்கப்பட்டன; பலருடைய சினிமா ஒப்பந்தங்கள், டிவி தொடர் ஒப்பந்தங்கள் பறிக்கப்பட்டன. குற்றச்சாட்டுக்கு ஆளான ஹார்வி வெயின்ஸ்டீன் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனத்திலிருந்தே நீக்கப்பட்டார். ஆஸ்கார் விருது தேர்வு குழுவின் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டார்.  கைதும் செய்யப்பட்டார்.

இப்போது ஸ்ரீரெட்டி விவகாரத்துக்கு வருவோம். தெலுங்கு திரைத்துறையில் தனக்கு நேர்ந்த சுரண்டலை சொன்ன ஸ்ரீரெட்டி, தமிழ்லீக்ஸ் என்ற பெயரில் கோலிவுட் இயக்குநர்கள், நடிகர்கள் குறித்து எழுத ஆரம்பித்தார். தமிழ் ஊடகங்களில் நாள்தோறும் இது செய்தியானது.  செய்தி எழுதும் பொருட்டு அவருடைய முகநூல் பக்கத்துக்கு சென்று பார்த்தேன். வெறிபிடித்த ஆண்களிடையே சிக்கிக்கொண்டதைப் போன்ற உணர்வு.

நான் மிகைப்படுத்தி சொல்லவில்லை, நான் உணர்ந்ததை எழுதுகிறேன்.  நாகரிகத்தில், தனிமனித உரிமைகளை காப்பதில் முன்னேறிய ஒரு சமூகம், பாதிக்கப்பட்ட பெண்களின் பக்கம் நிற்கிறது.  இங்கே என்ன நடக்கிறது? குற்றச்சாட்டுகளை சொன்ன பாதிக்கப்பட்ட பெண் தான் சார்ந்த தொழிலில் இயங்க தடை விதிக்கப்படுகிறது. வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. அனைத்துக்கும் மேலாக, ஒட்டுமொத்த சமூகமும் பரிசாக என்ன தருகிறது தெரியுமா?

  •  உன்னோட _____ அவ்வளவு பெரிசா?
  •  ஒருத்தரையும் விட்டு வைக்கலையா?!
  •  உனக்கு எய்ட்ஸ்தான் வரும்
  •  சீக்கிரம் வீடியோ ரிலீஸ் பண்ணு, அப்பதான் நீ பாதிக்கப்பட்டதை நம்புவோம்
  •  உன் ரேட் என்ன?
  •  அதே ஹோட்டல்ல நான் காத்திக்கிட்டு இருக்கேன். நீ வா

இதெல்லாம் சும்மா…ஸ்ரீரெட்டியின் முகநூல் பக்கத்தில் சென்று பாருங்கள். இத்தகைய கழிசடை ஆண்களுடன்தான் சமூகத்தில் வாழ்கிறோம் என பயம் பீடிக்கும். நடுக்கம் வரும். எவ்வித கூச்சமும் இன்றி, எப்படி இந்த ஆண்களால் இப்படியெல்லாம் எழுத முடிகிறது? பெண்ணை போகப்பொருளாக மட்டுமே, புணர்வதற்குரிய பொருளாக மட்டுமே பார்க்கும் இந்த மனோபாவம் எப்போது மாறும்?

ஸ்ரீரெட்டி, ‘கவர்ச்சி நடனம் ஆடும் பெண்; அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால்தான் அவர் இப்படியெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார் எனவும் பல மேதைகள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். குற்றம் சாட்டியவரின் இயல்பை ஆராய்வது, குற்றத்தின் வீரியத்தை குறைக்கும், மடைமாற்றும் அயோக்கியத்தனம். ஸ்ரீரெட்டி ‘நல்லவர்’ இல்லை என முதன்மைப்படுத்தி, அவரை சுரண்டியவர்களை தப்பிக்க விடும் அயோக்கியத்தனம்.

சிறுமியை பாலியல் வன்கொடுமை
7-ம் வகுப்பு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இத்தகைய இயல்பான முகங்கள்தான் ஸ்ரீரெட்டியின் முகநூலிலும் வெறுக்கத்தக்க பின்னூட்டங்கள் இடுகின்றன.

ஸ்ரீரெட்டியின் முகநூலில் பின்னூட்டமிட்டவர்களில் இயக்குநரின் ரசிகன், இயக்குநரின் ஜாதி, நடிகரின் ரசிகர், பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள், ஸ்ரீராமரை முகப்புப் படமாகக் கொண்டவர்கள், நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை என்று சொல்லக் கூடியவர்கள், இயற்கை ஆர்வலர்கள், முகநூல் போராளிகள் என பலருடைய முகங்களை அன்றாடம் நாம் பார்க்கிறோம்.

அதுபோன்றதொரு இயல்பான சாயலில் 60, 50, 40, 30, 20 வயதுகளில் இருந்த, ஒரு குழந்தையை தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய நபர்களின் படங்கள் சமூக வலைத்தளத்தில் பார்க்க முடிந்தது. இந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம்?

என்னைப் பொறுத்தவரை, சாதிய – வர்க்கச் சுரண்டலைக் காட்டிலும் மிக மிக ஆபத்தானது பாலின சுரண்டல். வீட்டிலிருந்தே சுரண்டலுக்கு எதிரான மனோபாவம், சமத்துவம் பிறக்க வேண்டும். தான் அழைத்த நேரத்திற்கெல்லாம் படுக்க வருபவள்தான் தன் வீட்டு பத்தினி மனைவி என்கிற மனோபாவம் இங்கே மாறவேண்டும்.

இந்திய படுக்கையறைகள் வன்கொடுமை கூடாரங்களாக இருப்பதாகத்தான் பல ஆய்வுகள் சொல்லிக் கொண்டிருக்கின்றன. வன்கொடுமை மனநிலையை ‘இயல்பான’தாக கருதிக்கொள்ளும் சூழலிலிருந்துதான் ஸ்ரீரெட்டியின் முகநூலில் எழுதுகிறவர்களும், 12 வயது சிறுமியை வன்கொடுமை செய்தவர்களும் உருவாகிறார்கள். அதிகபட்ச தண்டனைகள் ஒருவித பயத்தை உடனடியாக விதைக்கலாம். ஆனால், சமூகத்தின் உள்ளிருக்கும் இந்த விஷ மனநிலை மாறினால் மட்டுமே கொடூரங்களின், வெறித்தனங்களின் எண்ணிக்கை குறையும்.

ஆண்களை மட்டுமே குற்றம் சொல்வதா என பல ‘முற்போக்காளர்கள்’, பல ‘பெண்ணியவாதிகள்’ வருத்தம் கொள்கிறார்கள். “இந்த உலகத்தை பிரதிநிதிப்படுத்துகிற, ஏன் இந்த உலகமே ஆணின் சிந்தனையில் உருவானதுதான். அதை அவர்கள் பார்வையிலிருந்தே வர்ணிக்கவும் செய்வார்கள். ஆனால், உண்மை முற்றிலும் வேறானது” என்கிற சிமோன் திபொவாரின் மேற்கோளை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். தன்னுடைய ஆதிக்கத்தனத்தை உணராத முற்போக்காளர்களாலும் ஆண்டைகளுக்கு சலாம் போடும் அடிமையின் மனநிலையை ஒத்த ஆணாதிக்கத்துக்கு குரல் கொடுக்கும்  லிபரல் பெண்ணியவாதிகளாலும் நிரம்பியது தமிழ் சமூகம்.   பல்லாயிரம் வருடங்களாக சுரண்டலுக்கு ஆளாகியிருக்கும்  பெண் சமூகம் கடுமையான  உரையாடல்களை நிகழ்த்தினால் மட்டுமே, ஆணாதிக்க சூழலை தகர்க்க முடியும்.

– மு. வி. நந்தினி

மு.வி.நந்தினி கடந்த 14 ஆண்டுகளாக தமிழின் பல இதழ்களில் பத்திரிகையாளராக பணியாற்றியிருக்கிறார். தற்போது டைம்ஸ் தமிழ் டாட் காம் இணையதளத்தின் ஆசிரியராக இருக்கிறார். சுற்றுச்சூழல், சமூகம், இந்துத்துவ அரசியல், பெண்ணியம் சார்ந்து எழுதிவருகிறார். வினவு கருத்தாடல் பகுதியில் பாரமுகம் பார்ப்போம் எனும் தலைப்பில் எழுதுகிறார்.

கட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும் ! | பறையிசை படக் கட்டுரை

றை இசையைக் காதில் கேட்டதும் உடம்பில் நூறு மெகாவாட் மின்சாரம் பாய்ச்சியதைப் போன்றதொரு உணர்வு. இளமைத் துடிப்புணர்ச்சி நரம்பு மண்டலங்கள் முழுவதும் பரவி, உங்கள் கால்களை கபடி ஆடச்செய்யும் மகிமை பறையிசைக்கு மட்டுமே உரித்தான ஒன்று. பறையிசையின் மகிமை பொதுவில் மேடையேற்றப்படுவதில்லை. அந்த வித்தையை நிகழ்த்தும் கலைஞர்களும் மேடையேற்றப்படுவதில்லை. சென்னை ராயப்பேட்டை முத்தையா தோட்டத் தெரு பேண்டு வாத்தியக் கலைஞர்கள் வாழும் ஒரு பகுதி. அவர்களைச் சந்திப்போம்!

முத்தையா தோட்டத் தெரு
எந்த வசதிகளுமின்றி ஒதுக்குப்புறத்தில் வசிக்கும் பறையிசை கலைஞர்களின் வீதி.. முத்தையா தோட்டத் தெரு

இசைத் தென்றல் சசிக்குமார்

பேண்டு வாத்தியத்துல எங்க குடும்பம் பேர் போனது. அடையாறு – ரிசர்வ்பேங்கு – ராயப்பேட்டை சுத்தி இருக்கும் எல்லா இடத்திலும் பன்னீர்செல்வம் பேண்டுன்னா தெரியாதவங்களே இல்ல. அந்த அளவுக்கு மவுசு இருந்தது.

ஆனா இன்னிக்கி நாங்க வேலை இல்லாம இருக்கோம். இப்பல்லாம் கல்யாணம்ன்னா, மண்டபத்துக்காரங்களே ஆர்டர வாங்கிக்கிறாங்க. சாவுன்னா ’பிரீசர் பாக்ஸ்’காரன் ஆர்டர எடுத்துடுறான். எங்கள தேடி வரவங்க கொறஞ்சிடுறாங்க. சாவு ஊட்டுக்கு தாரை தப்பட்டை அடிக்க மூனு பேர் நாங்க போனா நாலாயிரம் கேட்போம். அவுங்க ஆயிரம் ரூபா குறைச்சிட்டு மூவாயிரமா கொடுப்பாங்க.

’பிரீசர் பாக்ஸ்’ போடுறவங்க கிட்ட ஆர்டர கொடுத்தா சாமியானா பந்தல் போடுறதுல இருந்து கருமாதி வரைக்கும் எல்லா வேலையும் செய்யிறதா பேசி முப்பதாயிரம் வாங்கிக்குவாங்க. அப்ப எங்களுக்கு வேலை இல்லாம போயிடுது.
எங்களுக்கு கல்யாண ஆர்டர் வரும். புல் செட்டப்போட வரசொல்லுவாங்க. அப்படின்னா, இருபது பேர் போவோம். பாட்டு பாடுற ஒருத்தரும், கீபோர்டு வாசிக்கிற ஒருவரும் மேலே இருப்பாங்க. மீதி பதினெட்டு பேர் கீழே இருப்போம்.

முத்தையா தோட்டத் தெருகல்யாண ஊர்வலம் முடியிற வரைக்கும் வாசிக்கனும். அதுக்கு நாங்க முப்பதாயிரம் கேட்போம். யாரும் தரமாட்டாங்க. அவ்ளோ பணம் எங்ககிட்ட கொடுக்கிறதுக்கு ஒரு நகை வாங்கி போட்டுக்கலாம்னு நினைச்சி ஆர்டர கேன்சல் பண்ணிட்டு போயிடுராங்க.

சில விஐபி ஆர்டர் வரும். அதாவது படத்துக்கு பேண்டு வாசிக்க கூட்டிட்டு போவாங்க. காலமெல்லாம் காதல் வாழ்க, பட்டியல்னு சில படத்துக்கு பேண்டு வாசிச்சிருக்கேன். அதுல எதாவது கெடைக்கும்.

என்கிட்ட ட்ரம்பெட், சட்டி மேளம், தப்பு செட்டு, கானா இசைக்கு டோலாக் செட்டு, பஞ்சாபி மேளம் டோலிக் பாசா, மொரா கோர்ஸ், சைட் ட்ரம், டோல், கட்ட மேளம் (மாட்டுத்தோல் மேளம்) எல்லாம் இருக்கு. அத்தனையும் வாசிப்பேன். ஒரு தொழில் செய்யுறோம்னா எல்லாத்தையும் கத்துக்கணும்.

திருவல்லிக்கேணி, நடுக்குப்பம், அயோத்திகுப்பம் இதெல்லாம் எங்க ஏரியா. இங்கல்லாம் கல்யாணம், கருமாதின்னா எங்ககிட்டதான் வருவாங்க. தலைக்கு ஆயிரம் ரூபா கணக்கு பண்ணி தருவாங்க. டிரம்ப்பெட் ஊதுறவங்களுக்கு கூலி தொள்ளாயிரம். கட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு மட்டும் ஆயிரத்து ஐநூறு ரூபா. இதை எல்லாரும் அடிக்க மாட்டாங்க. அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும். கட்ட மேளம் அடிக்க தெரியாதவங்களை கூட்டிட்டு போனோம்னா தொழில் போயிடும். ஆளு கணக்கு காட்ட எல்லாரையும் கூட்டி போயிட்டு கழுத்துல மாட்டி விட முடியாதுல்ல.

கோயில்ல பம்பை உடுக்கை அடிச்சா எப்படி சாமி ஆடுவாங்களோ அதேமாதிரி கட்ட மேளம் அடிச்சா எல்லாருக்கும் தானா ஆட்டம் வரும். ஆடாதவங்க கூட ஆடுவாங்க.
பொணத்துக்கு மாலை போட வரவங்களை கூட்டிட்டு வர போனோம்னா அம்பது, நூறு கொடுப்பாங்க. கைச் செலவுக்கு ஆகும். ஆடி மாசம் வந்தா வேலை கிடைக்கும். விநாயகர் சதுர்த்தி அன்னிக்கு ஒருநாள் முழுக்க வேலை இருக்கும். அப்புறம் மஞ்சதண்ணி, காதுகுத்து, பொறந்த நாள் பங்க்சனுக்கும் போவோம். எலக்சன் நேரத்துல ஒரு பத்து நாள் வேலை இருக்கும். பிரச்சாரம் பண்ணும்போது மோளம் அடிக்க கூப்பிடுவாங்க. சில நேரம் அது எல்லாம் கேன்சல் ஆகிடும்.

பன்னீர் செல்வம், சசிக்குமாரின் தந்தை. செனாய் வாசிப்பதில் வித்தகர்.

ஒருமுறை வாசிக்கச் சொன்னதும் ஆர்வமாக வந்து சுவற்றில் மாட்டி வைத்திருந்த செனாயை எடுத்து துடைத்துவிட்டு, ஒரு சின்ன பெட்டியில் இருந்த பீப்பியை (விசில்) எடுத்து தண்ணீரில் நனைத்து நமக்காக ஊதினார். தள்ளாத வயதில் தம் கட்ட முடியவில்லை. இருந்தாலும் மூச்சை இழுத்து ஊதினார். அவருடைய மூச்சே செனாயில் தான் அடங்கி உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.

சூர்யா, பன்னீரின் பேரன், சசிக்குமாரின் மகன்.

பி.காம். முடிச்சிருக்கேன். மேல படிக்கனும். இதையெல்லாம் நானும் வாசிப்பேன். திருமண நிகழ்ச்சிகளுக்கு மட்டும் அப்பாகூட போயிட்டு வாசிப்பேன். சாவுக்கெல்லாம் கூட்டினு போக மாட்டாரு. பாக்கறவங்க தப்பா நெனப்பாங்கன்னு சொல்லுவாரு. அதனால போறதில்ல.

கோவலன்-லோகேஸ்வரி.

நாங்க சேட்டு பங்க்சனுக்கும் பேண்டு வாசிக்க போவோம். டோலிக் பஞ்சா என்ற தூக்க முடியாத ட்ரம்ஸ்களை வண்டியில எடுத்துனு போயிட்டு வாசிப்போம். எங்க ஜனங்க எந்த பங்க்சனா இருந்தாலும் இந்த மியுசிக் இல்லாம நடத்த மாட்டாங்க.

கல்யாணம், காதுகுத்து, மஞ்சள் நீராட்டு, பர்த்டே பங்க்சன், சாவு, கருமாதி இப்படி எல்லாத்துக்கும் விதவிதமா வாசிப்போம். அது அதுக்கு தனிப்பாட்டு தனி ட்ரெஸ். அந்தந்த கெட்டப்புல தான் போவோம். ரெண்டு பேரு, அஞ்சிபேரு, பத்துபேரு, இருபதுபேருன்னு பணத்துக்கு ஏத்த மாதிரி எங்களை கூப்பிடுவாங்க. ஒரு பங்க்சனுக்கு ஐநூறு ரூபாயில இருந்து ஆயிர ரூபா வரை கெடைக்கும்.

விக்னேஷ் – யுவராஜ். பேண்டு விற்பன்னர்கள்.

இத பறமோளம்- சாவு மோளம், பேண்டு வாத்தியம் அடிக்கிறவன்னு எங்களை மட்டமா பார்ப்பாங்க. ஆனா இந்த வாத்தியத்தினுடைய ஒரிஜினல் பேரு ராஜ வாத்தியம். இப்போ இதிலும் பெருசா வேலை இல்ல.கூலியும் இல்ல.

ஈவண்ட் மேனஜ்மென்ட் மாதிரி புரோக்கர் வேலை செய்யிறவங்கதான் இதுல சம்பாதிக்கிறாங்க. கல்யாண கவரேஜ் எடுக்கிறவங்க எல்லா கல்யாண மண்டபத்தையும் புடிச்சி வச்சிக்கிற மாதிரி இவனுங்க எல்லா சுடுகாட்டையும் பிடிச்சி வச்சிகிறானுங்க. பள்ளிகரணை, வேளச்சேரி, லைட் ஹவுஸ், திருப்போரூர் இப்படி எல்லா சுடுகாடும் இவனுங்களோட ராஜ்ஜியம்தான். பொணத்துக்கு பிரீசர் பாக்ஸ் வக்கிறது பாடை கட்டுறது பூ வேலை செய்யிறது, சடங்கு செய்து பிணத்தை சங்கூதி பொதைக்கிற வரைக்கும் பேக்கேஜா பேசிக்கிறாங்க.

இருபதாயிரத்துல இருந்து ஒரு லட்சம் வரை வாங்குறாங்க. வி.ஐ.பி சாவுன்னா பத்து லட்சம் கூட செலவு செய்வாங்க. நாட்டுக்கோட்டை M.A. ராமசாமி சாவுக்கு கூட நாங்க வாசிச்சோம். எங்களுக்கு ஒருநாளைக்கு வெறும் ஐநூறு ரூபாதான் கொடுத்தாங்க.

கீர்த்தி,சோயா,சீமா,மோனிஷா. பள்ளி செல்லும் குழந்தைகள்

முத்தையா தோட்டத் தெரு

முத்தையா தோட்டத் தெரு வீதியில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் வாசிப்பு சத்தம் கேட்டதும் துள்ளிக் குதித்து மகிழ்ச்சியில் ஓடிவந்தனர்.

-வினவு புகைப்படச் செய்தியாளர்கள்

அமேசான் ப்ரைம் டே அன்று அமேசான் தொழிலாளர்கள் போராட்டம் !

ரோப்பாவில்  பணிபுரியும் அமேசான் ஊழியர்கள், அந்நிறுவனத்தை எதிர்த்து அமேசான் பிரைம் தினத்தன்று  வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

அமேசானை எதிர்த்துப் போராடும் ஐரோப்பிய தொழிலாளர்கள்

இணைய வர்த்தக ஜாம்பவனான அமேசான் நிறுவனம் உலகம் முழுவதும்  ஆன்லைன் ஷாப்பிங் – இணைய வர்த்தகத் துறையில் கோலோச்சி வருகிறது. வருடத்தில் சில குறிப்பிட்ட நாட்களில் ’முதன்மை தினம் – Prime Day‘  என்ற ஒரு சிறப்புச் சலுகையை அறிவித்து தள்ளுபடி விலையில் பொருட்களை விற்பனை செய்து இலாபத்தைக் குவிக்கிறது. துணிக்கடைகளுக்கு ஒரு ஆடிக்கழிவு, நகைக்கடைகளுக்கு ஒரு அட்சய திரிதியை போல அமேசானுக்கும் ஒரு பிரைம் தினத்தை வைத்திருக்கிறார்கள்.

ஜெர்மனியில் செயல்பட்டுவரும்  அமேசான் நிறுவனத்தின் ஆறு சேமிப்புக் கிடங்குகளில் வேலைபார்த்து வரும் ஊழியர்கள், தங்களுக்குக் கூலி உயர்வு, மருத்துவ வசதிகள் போன்றவற்றை செய்து தர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே கோரிக்கைகளுக்காகப் போராடி வரும் ஸ்பெயின், போலந்து நாடுகளில் வேலை பார்க்கும் அமேசான் தொழிலாளர்களை ஆதரித்து செவ்வாய்க்கிழமை(17.07.2018)  அன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அமேசான்
அமேசானை எதிர்த்துப் போராட்டம் நடத்தும் தொழிலாளர்கள்

ஜெர்மனி நாட்டில் ஏறக்குறைய 16,000 ஊழியர்களைக் கொண்ட அமேசான் நிறுவனம் வெர்டி எனப்படும் தொழிற்சங்கத்தின் கோரிக்கைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் புறக்கணித்ததே இந்தப் போராட்டத்திற்கு வழிவகுத்துள்ளது. வெர்டி தொழிற்சங்க செய்தித்தொடர்பாளர் ஸ்டெபானி நட்சென்பெர்கர் கூறுகையில் ‘ எங்கள் கோரிக்கை மிக எளிமையானது; அமேசான் நிறுவனம் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது; ஆனால் தொழிலாளிகளுக்கான சம்பளம், மருத்துவ வசதி போன்றவற்றை படிப்படியாகக் குறைத்து வருகிறது; இதற்குத் தீர்வு காணவேண்டுமென்பதே எங்களின் கோரிக்கை’ என்கிறார்.

ஸ்பெயின் நாட்டில் வேலை பார்த்து வரும் 2000 அமேசான் நிறுவன ஊழியர்கள் கடந்த திங்கட்கிழமை(16.07.2018) தொடங்கி மூன்று நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமேசான் நிறுவனமோ இதை மறுத்து அப்படி ஒன்றும் மிகப்பெரிய போராட்டங்கள் நடைபெறவில்லை என சமாளித்து வருகிறது.

போலந்து நாட்டில் நடைபெற்று வரும் போராட்டத்தில் வேலைக்குச் சென்று கொண்டே, ஆனால் குறைந்தபட்ச வேலைகளை மட்டுமே செய்து தங்களது போராட்டத்தைத் தொடர்கின்றனர். இதற்கெல்லாம் காரணங்கள் இல்லாமல் இல்லை. அமேசான் நிறுவனத் தலைவரான ஜெஃப் பெசோஸ்-இன் வருவாய் மதிப்பு $150 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டிப் போய் கொண்டிருக்கிறது. மேலும் இவர்தான் தற்போது உலகிலேயே பணக்கார நபர் என்கிறது புளூம்பெர்க் பில்லியனர் என்கிற இணையதளத்தின் பட்டியல். Bloomberg Billionaires Index

இது மட்டுமல்லாமல் அமேசான் நிறுவன வர்த்தக மதிப்பு $888 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்து, ஆப்பிள் நிறுவனத்திற்கு அடுத்ததாக, உலகின் இரண்டாவது பணக்கார நிறுவனமாக உள்ளது.

அமேசான்
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்

குறைந்தபட்ச தொழிலாளர் சட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ள ஐரோப்பாவுக்கே இந்த நிலைமையென்றால், இந்தியா போன்ற நாடுகளில் வேலை செய்யும் அமேசான் ஊழியர்களின் நிலை பற்றி விளக்குவதற்கு எதுவுமில்லை.

இவ்வளவு வருமானம் இருந்தும், அமேசான் நிறுவனத்தால் தொழிலாளர்களின் குறைந்தபட்ச கோரிக்கைகளைக் கூட ஏன் நிறைவேற்ற முடியவில்லையென்றால் அதற்குப் பெயர்தான் இலாபவெறி.

  • வினவு செய்திப் பிரிவு

மேலும் படிக்க:
Amazon workers in Europe go on strike during Prime Day

கருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது ?

சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் காது கேளாத, வாய் பேச இயலாத 12 வயது சிறுமியை வன்புணர்ச்சி செய்த 60 முதல் 25 வயது வரை அடங்கிய 17 பேர் கயவர் கூட்டம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. சமூகவலைத்தளங்களில் அவர்களை உடன் தூக்கிலிட வேண்டுமென்று பலரும் கோபத்தோடு எழுதி வருகின்றனர். ஒரு சிறுமியை வன்புணர வேண்டுமென்ற எண்ணம் இவர்களுக்கு எப்படி வந்தது?

இணையம் வந்த பிறகு போர்னா என்பது பலருக்கும் மலிவாக கிடைக்கிறது. பிக்பாஸ் சீசன் 2 முதல் தமிழ்ப் படங்களின் “ஐட்டம் சாங்” வரை பெண்ணுடலை நுகரவேண்டும் என்ற வெறி திட்டமிட்டு திணிக்கப்படுகிறது. குடும்ப வன்முறைகளை “கள்ளக் காதல்” செய்திகளாவும், சொல்வதெல்லாம் உண்மை வழியான கிசுகிசு அரிப்புக்களாகவும் ஊடகங்கள் மக்களை பயிற்றுவிக்கின்றன. போலீசு முதல் தனியார் நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள் வரை ‘பணிந்து’ போகும் பெண்களுக்கே வாய்ப்புகள் என்பது எழுதப்படாத விதியாக வதைத்து வருகின்றன.

பல்கலைக்கழக பேராசிரியர்கள், துணை வேந்தர்கள், இன்னபிற ‘தாத்தாக்களுக்கு’ மாணவிகளை பலியாக்க முயன்றார் நிர்மலா தேவி! இந்த அறுபது வயது பெரிய மனிதர்களுக்கும் அயனாவரம் வயதான செக்கியூரிட்டிகளுக்கும் என்ன வேறுபாடு?

நமது சமூக அமைப்புகளில் பல மட்டங்களில் பாலியல் வன்முறை என்பது அதிகாரப்பூர்வமாகவும் அதிகாரப்பூர்வமற்றும் நிலைநாட்டப்பட்டிருக்கிறது. இந்நிலையில் பாலியல் வன்புணர்ச்சிகளின் மூலகாரணம் எவை என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது?

சினிமா மற்றும் ஃபோர்னோ
ஆணாதிக்க வெறி
உலகமயம் பரப்பும் நுகர்வு வெறி
மேற்கண்ட மூன்றும்
நீதித்துறையின் தோல்வி

டிவிட்டரில வாக்களிக்க:

யூடியூபில் வாக்களிக்க:

https://www.youtube.com/user/vinavu/community

எம்.பி.ஏ படிச்சிட்டு எதுக்கு வாழ்றேன்னே தெரியலயே அக்கா !

1

ழுத்துல பூ மாலை, நெத்தி நிறைய விபூதி, கன்னத்துல சந்தனம், குங்குமம், தோள்ல காவடி, நாக்குல அலகு, உடம்பச் சுத்துன ஈரச் சேலை… இந்த உருவத்தோட திருவிழா கூட்டத்துல என்னப் பாத்து சிரிச்சது சங்கீதான்னு என்னால சத்தியமா நம்ப முடியல.

உடம்பும் முகமும் அரும்பு மலராட்டம் ஒரு சேர இருப்பாளே, என்ன ஆச்சு இவளுக்கு? இவ வயசு பொண்ணுங்கள்லாம் சேலைக் கொசுவம் கலையாம நடக்கயில இவமட்டும் எதுக்கு இப்படி? இத்தன சின்ன வயசுல பக்தி பழமா நிக்கிறாளே, இவளுக்கென்ன வேண்டுதலு? யாருகிட்டையும் கேக்க முடியாம வாயடச்சு நின்னேன். திரும்பி வர்றேன்னு சைகை காட்டிட்டு போனா.

சங்கீதாவுக்கு கல்யாணம் ஆன நாலு வருசத்துக்கு பிறகு இந்த கோயில் திருவிழாவுலதான் பாத்தேன். ஒரே ஊரு, பக்கத்து வீடு, சின்ன வயசுலேருந்தே தெரியும்.

பெண் அவலம்அசோக வனத்து சீதயப் போல எப்போதும் அவ முகத்துல ஒரு சோகம் படர்ந்திருக்கும். ஆனா யாரு எது கேட்டாலும் பட்டுன்னு சிரிச்ச மொகத்தோட பதில் சொல்லுவா. அவ்வளவு ஏங்க! சங்கீதாவ பத்தி ஒரு வரியில சொல்லனுன்னா இவ நம்ம வீட்டு பொண்ணா இருக்கக் கூடாதான்னு  நெனைக்கத் தோனும்.

சங்கீதாவும் அவ தங்கச்சியும் சின்ன வயசா இருக்கும் போதே அப்பா குடும்பத்த விட்டுட்டு வேற ஒரு பெண்ணு கூட தொடர்பு வச்சுகிட்டு அங்கேயே போயிட்டாரு. அதுவும் கண் காணாத எடத்துல இல்லிங்க, நூறடி தூரத்துலதான். அந்த கொடுமைய சகிச்சுகிட்டு வாழ்ந்தாங்க அவங்க அம்மா. ஆம்பளன்னா அப்படிதான் இருப்பான்னு சப்பகட்டு கட்டுனாங்க சொந்த பந்தமெல்லாம். இதனால கூனி குறுகிப் போன சங்கீதா மத்தவங்க கிட்ட இருந்து ஒதுங்கியே இருந்தா.

அவளப் பத்தின நினைவோட காட்டு கோவில்லருந்து நான் மெதுவா நடந்து வீட்டுக்கு வரங்காட்டி அவ ஓட்டமும் நடையுமா என்ன வந்து சேந்துட்டா.

“நல்லா இருக்கிங்களாக்கா ? பதிலுக்கு என்ன நீங்க அப்படி கேட்டுடாதீங்க. இத்தன வருசம் கழிச்சு பாக்கற உங்ககிட்ட நல்லா இருக்கேன்னு பொய் சொல்ல முடியாது.”

அவ போட்டுருந்த ஆன்மீக அலங்கோலத்த கலச்ச பிறகும் என்னால் ஒத்துக்க முடியல சங்கீதாதான்னு.

“என்னாக்கா புதுசா பாக்குறா மாறி அப்படி பாக்குறீங்க. புரிஞ்சு போச்சு.! என்னடா நாம பாக்கும் போது கொத்தரங்கா மாறி இருந்தாலே இன்னைக்கி பெரிய கோயில் நந்தி போல இருக்காளேன்னு பாக்கிறீங்க. அதானே?”

அவ படிச்ச படிப்புக்கும் போட்டுருந்த கோலத்துக்கும் பொருத்தமே இல்ல. ஏண்டி இப்படின்னு கேட்டா இந்த எடத்துலேயே அழுதுடுவா.. அதுமட்டும் நிச்சயம். என்ன சமாதானப் படுத்த அவ சமத்தா பேசுரான்னு மட்டும் புரிஞ்சது. காலையிலேருந்து பச்சத்தண்ணி பல்லுல படாமெ விரதமிருந்து ஊரச் சுத்தி காவடி தூக்கி அசதியா இருந்தவள அழ வைக்க மனசில்ல. அவளே பேசட்டுன்னு நிதானமா இருந்தேன்.

“ஒரு பொண்ணுக்கு பெரிய சந்தோசம் கொழந்த பிறக்குறது. பெரிய துன்பம் குழந்தை இல்லாம இருக்குறது. ஆசையா பெத்துக்க வேண்டிய குழந்தைய கடமைக்காக பெத்துக்கிட்டா போதுன்னு நெனைக்க வச்சுட்டாங்க. பிள்ளைய பெத்துக்கறதுக்காக என்னோட உடம்ப பழுது பாத்து பழுது பாத்து… இப்ப எல்லா பாகமும் பஞ்சராப் போயி நிக்கிறேன்க்கா.

எனக்கு கொஞ்சம் தைராய்டு இருக்குன்னு உங்களுக்கே தெரியும். அத பிரச்சனையா நெனச்சி குழந்த பெத்துக்க முடியாத நோயா பாக்க ஆரம்பிச்சுட்டாங்க வீட்டுக்காரரும், மாமியாரும். எப்பையுமே இருக்கும் இந்த பிரச்சனை, பீரியடு டயத்துல வீடு பூகம்பமா மாறும், இல்ல மயான அமைதி இருக்கும்.

நாள் கடந்து போறத பொறுக்க முடியல அவங்களால. அடுத்தடுத்த டாக்டர் வைத்தியம்னு கூட்டிட்டு போயிட்டே இருந்தாங்க. கர்பப்பை சுத்தம், கர்பப் பையில நீர் கோத்துகிட்டு கட்டி இருக்குன்னு மூனு தடவ வயித்துல ஓட்ட (லேப்ராஸ்க்கோபி மருத்துவம்), ஏகப்பட்ட மருந்து, மாத்தரய சாப்புட்டு ரெண்டே வருசத்துல உடம்பு ஊதி போச்சு.  இப்ப ரணமா இருக்கு. இப்ப உடம்ப கொறைச்சாதான் கொழந்த பொறக்குமுன்னு சொல்றாங்க. சொல்லப்போனா படிச்ச எனக்கே தெரியல எந்த மாத்திரய எதுக்கு சாப்புடறேன்னு.

அலோபதி மருத்துவத்தோட கிராமத்துல யாரெல்லாம் கொழந்த இல்லன்னு பச்சல மருந்து குடுக்குறாங்களோ எல்லாத்தையும் குடிச்சிட்டேன். பத்தாதத்துக்கு அம்மன் கோயில்லேருந்து அய்யனாரு கோயிலு வரைக்கும் பால்கொடம் காவடி எல்லாம் அமர்க்களமா போயிட்டு வாரேன்.”

உன் வீட்டுக்காரரு வெளி நாடெல்லாம் போயி வந்தவராச்சே அவருமா இதுக்கெல்லாம் ஆமோதிக்கிறாரு.

“அய்யோ அய்யோ. அக்கா அவருக்கு கிடச்ச நாலு மாச லீவுல நான் கர்பமாயிட்டா எனக்கு பொறுப்பான வேலைய கொடுத்துட்டு நிம்மதியா போகலாமுன்னு சொன்னவரே அவருதான். கொழந்த இருந்தா அத வளர்க்குற வேலையில எம்மனசு அப்புடி இப்புடி அலையாது அப்படிங்கற கீழ்த்தரமான புத்தி அந்த ஆளுக்கு.

பெண் அவலம்
மாதிரிப் படம்

கல்யாணம் முடிஞ்சு நாலு மாசத்துலேயே தெரிஞ்சுருச்சு பக்கா குடிகாரன்னு. கொழந்தைக்காக ரெண்டு பேருமேதான் டாக்டர்கிட்ட போனோம். அவருக்கும் சில குறைபாடு இருக்குன்னு சொல்லி மருந்து கொடுத்தாங்க. மாசத்துல பத்து நாள் மருந்து சாப்பிடும் போதாவது சாராயம் குடிக்காம இருக்கனுமுன்னு டாக்டர் சொல்றாங்க. ஆனா அவரால பத்து நாள் குடிக்காமெ இருக்க முடியல.

அம்மாட்ட வந்து சொன்னா யாருதான் குடிக்காம இருக்கான்னு சமாதானம் சொல்றாங்க. சரி அவன திருத்தலான்னா, உங்க அப்பனே குடிகார பொம்பளப் பொறுக்கி, நீ எனக்கு பாடம் எடுக்க எந்த தகுதியும் கெடையாதுன்னு அசிங்கப்படுத்துறான்.”

சாதி, பணம் படச்ச பெரிய இடத்து கூட்டத்த சேந்த ஏழை பொண்ணு சங்கீதா. சாதி, பணத் திமிர்ல குடி, பொம்பள சவகாசம்னு அப்பாவோட நடத்த கெட்ட பழக்கம் குடும்பத்த நடுத்தெருவுல நிறுத்துச்சு. தப்பு செஞ்ச அப்பா தாராளமா தலை நிமுந்து நடக்குறாரு. தண்டனை பொண்ணுக்கு. அடிமைப்பட்ட இப்படியான வாழ்க்கைய அம்மாவும் ஏத்துக்கணும், 30 வருசம் கடந்து பொண்ணும் ஏத்துக்கணும். அந்த நிலையிலதான் இன்னும் பொண்ணுங்க வாழ்க்க இருக்கு.

“பெத்தவங்க செய்யும் பாவம் பிள்ளைங்கள சேருன்னு சொல்றது இதுதான் போலருக்கு. எனக்கு விவரம் தெரிஞ்சு நான் அப்பான்னு கூப்புட்ட ஞாபகமே இல்ல. ஆனா என்னோட கல்யாணத்து அன்னைக்கி பாத பூஜ செய்ய சொல்லி அவரு கையால கன்னியாதானம் பன்னி குடுக்குறாங்க. இத்தன வருசம் இல்லாத அப்பா இப்ப எப்படி திடீர்னு வந்தாரு, அதெல்லாம் செய்ய மாட்டேன்னு எத்தன வம்பு பண்ணேன். நான் அதிகமா பேசுறதா சொந்தக்காரங்க என்ன அசிங்கமா பாத்தாங்க.

நான் எங்க அம்மாட்ட எத்தனையோ தடவ கேட்ருக்கேன். சாதி பெருமைக்கி ஏம்மா நாம பட்டினி கெடக்கணும். வீட்டுக்கே வராத அப்பாவுக்காக நீ எதுக்குமா தாலிய சுமந்துட்டு இருக்குறன்னு. நீ படிச்ச திமிர்ல பேசுர இதுதான் கௌரவம்னுச்சு… இன்னைக்கி எனக்கு போட்ட தலையெழுத்து ஒனக்கும் போட்டுட்டான் ஆண்டவன்னு நெனச்சுக்கணுங்குது.

இதுதான் குடும்ப கௌரவம், குடும்ப கௌரவமுன்னு சொல்லி சொல்லியே இப்ப எனக்கும் இதுதான் கௌரவமுன்னு பழகிப்போச்சு. யாருட்ட சொல்லி அழறதுன்னே தெரியலக்கா.”

அடங்காத ஆராசனையோட அழுத அவளுக்கு நான் என்ன ஆறுதல் சொல்லி நிறுத்துறது. அவன விட்டுட்டு உனக்கு புடிச்ச நல்ல வாழ்க்கைய ஏற்படுத்திக்கன்னா? இல்ல, நீ படிச்சவதானே, சொந்த கால்ல நின்னு காட்டுன்னா? அப்படியான சமூகத்துலயா நாம இருக்கோம்?

பெண் அவலம்“குடிக்கிறான், அடிக்கிறான், குழந்தை பெத்துக்க முடியாத மலடின்னு சொல்றான் நிதமும். கெட்ட கெட்ட வார்த்தைகளால் அவமானப் படுத்துறான். ஆனாலும் அடுத்த நேரம் அவங்கிட்ட சிரிச்சுகிட்டு குடும்பம் நடத்த பழகிக்க வேண்டிருக்கு. இதையெல்லாம் உதறி தள்ளிட்டு வெளிய வந்துட்டா என்னன்னு நெனப்பேன்? ஆனா எங்கப்பா, எம்புருசனப் போல மனுசங்க நெரஞ்ச இந்த ஊரு உலகத்துல நான் எங்குட்டு போக?

எம்.பி.ஏ படிச்சேன்னு சொல்லிக்க வெக்கமாருக்கு. எங்க அம்மா பால் வியாபாரம் பண்ணி, சந்தன மணி மாலை கட்டி, ஊதுவத்தி திரிச்சு அத்தன செரமப்பட்டு படிக்க வச்சாங்க. ஆனா வெளியூருக்கு வேலைக்கு அனுப்ப மறுத்துட்டாங்க. வேலைக்கி போயிருந்தா தன்மானம் போகும்போது எதுத்து நாலு கேள்வி கேக்குற தைரியமாவது வந்துருக்கும்.

கல்யாணத்துக்கும் சாதி கௌரவத்துக்குதான் படிக்க வச்சேன். நீ பாட்டுக்கு வெளியூர் போயி காதல்னு வந்து நின்னா குடும்ப மானம் போயிடும்னுச்சு அம்மா. இன்னைக்கி நாலு செவுத்துக்குள்ள எம்மானம் போகுது. பிள்ளை இல்லன்னு சொல்லி ஊர் பாக்க திருவிழாவுல மானம் போகுது. எதுக்கு வாழ்றேன்னே தெரியல”னு சொன்னா.

“எதுக்கு வாழ்றேன்னே தெரியல” சங்கீதா சொன்ன இந்த வார்தைதான் அனேகமா பல பெண்களோட நிலையா இருக்கு. கண்ணை கட்டிக்கிட்டு கிணத்துல விழுவறதும், விழ பழக்கப் படுத்துறதும்தான் நம்ம நாட்டுல பெண்களோட கௌரவமா இருக்கு!

– சரசம்மா
(உண்மைச் சம்பவம். பெயர், அடையாளங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.)

திருச்சபையா? பாதிரிகளின் பாலியல் வன்முறை கூடாரமா ?

முறைகேடாக நிலத்தை விற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட கார்டினல் ஜார்ஜ் அலெஞ்செரி மீது வாடிகன் நடவடிக்கை எடுத்து சில வாரங்களே ஆன நிலையில் கத்தோலிக்க பாதிரி ஒருவர் மீதான பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகளால் கேரள கத்தோலிக்க திருச்சபை ஒன்று ஆட்டங்கண்டுள்ளது.

ஜலந்தரைச் சேர்ந்த பாதிரியார் பிராங்கோ முலக்கல் 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை தன்னை 13 முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக 46 வயதான கன்னியாஸ்திரி ஒருவர் கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி காவல்நிலையத்தில் புகாரளித்தார். பஞ்சாப்பின் ஜலந்தரை சேர்ந்த இயேசு திருச்சபை சமயப்பரப்பு அமைப்பின் உறுப்பினராக அந்த கன்னியாஸ்திரி உள்ளார். அந்த இயேசு திருச்சபை கேரளாவில் கோட்டயத்தை சேர்ந்த குரவிலங்காடு மற்றும் கண்ணூரைச் சேர்ந்த பரியாரம் ஆகிய இரண்டு இடங்களில்  மடங்களை நிர்வகித்து வருகிறது.

அதில் ஒரு மடத்தை சேர்ந்தவர்தான் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் அந்த கன்னியாஸ்திரி. அந்த மடத்தில்தான் பாதிரி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். பாலியல் பலாத்காரம் நடந்ததாக கூறப்படும் நாட்களில் பாதிரியார் அங்கு இருந்ததை மடத்தின் பார்வையாளர் நாட்குறிப்பும் உறுதி செய்கிறது.

பாதிரிகளின் பாலியல் வன்முறை
பாதிரி பிராங்கோ முலக்கல்

அந்தக் குற்றச்சாட்டை பிராங்கோ முலக்கல் மறுத்துள்ளார். கன்னியாஸ்திரி மீதான விசாரணைக்கு உத்தரவிட்டதற்காக அவர் பழி வாங்குவதாக கூறியிருக்கிறார். “தன்னுடைய கணவருடன் அந்த கன்னியாஸ்திரி தொடர்பு வைத்திருப்பதாக கூறி ஒருப் பெண்ணிடம் இருந்து எனக்கு ஒரு புகார் வந்தது” என்று பிராங்கோ கூறினார்.

கன்னியாஸ்திரியின் குற்றச்சாட்டை முன்கூட்டியே தடுத்து நிறுத்தும் நோக்கில் தமது பிரார்த்தனை கூட்டத்தை சேர்ந்த நான்கு கன்னியாஸ்திரிகளும் அவர்களது உறவினர்களும் சேர்ந்து பிராங்கோ முலக்கலை கொலை செய்ய திட்டமிட்டதாக குற்றஞ்சாட்டி ஜலந்தர் மறை மாவட்ட திருச்சபையின் தகவல் தொடர்பு அதிகாரியான பீட்டர் கவம்பட் கோட்டயம் காவல்துறை கண்காணிப்பாளரான அரி சங்கரிடம் ஒரு வழக்கைப் பதிவு செய்திருந்தார்.

“பாதிரி மீது கன்னியாஸ்திரி கொடுத்த பாலியல் பலாத்கார புகார் மீது ஒரு வழக்கும் கன்னியாஸ்திரி மற்றும் அவரது கூட்டாளிகள் பாதிரியை கொலை மிரட்டல் புகார் மீது ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளன” என்றும், இரண்டு வழக்குகளையும் ஆய்வு செய்து வருவதாகவும் சங்கர் கூறினார்

வியாழக்கிழமை அன்று கோட்டயம் நீதிமன்ற நீதிபதியின் முன்பு தன்னுடைய குற்றச்சாட்டை பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி மீண்டும் பதிவு செய்தார். மேலும்  பாதிரி தனக்கு உள்நோக்கத்துடன் அனுப்பிய குறுஞ்செய்தியையும் காவல்துறையிடம் பகிர்ந்திருக்கிறார்.

கேரளாவிற்கு வரவழைத்து பாதிரியை விசாரிப்பதா அல்லது தற்போது அவர் இருக்கும் ஜலந்தர் சென்று விசாரிப்பதா என்று இன்னும் முடிவு செய்யவில்லை என்கிறது போலீசு.

தொடரும் சர்ச்சைகள்

கேரளாவைச் சேர்ந்த பல்வேறு கிறித்தவ தேவாலயங்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் ஒன்றும் புதிதல்ல. 16 வயதான சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கருவை கலைக்க முயற்சித்ததாக குற்றஞ்சாட்டி புனித செபஸ்டியன் தேவாலயத்தின் பாதிரி ராபின் 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் போலீசால் கைது செய்யப்பட்டார். ஆனால் அந்த சிறுமிக்கு பின்னர் குழந்தை பிறந்தது. 9 வயதான சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக இராஜு கோக்கேன் என்ற மற்றொரு பாதிரி 2014–ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

திருச்சூரை சேர்ந்த புதன்வெளிக்கராவில் உள்ள தன்னுடைய வீட்டில் 14 வயதேயான சிறுமியை பாதிரி எட்வின் பிகாரெஸ் பாலியல் பலாத்காரம் செய்ததற்காக 2016-ம் ஆண்டில் அவருக்கு இரண்டு ஆயுள் தண்டனை விதித்து எர்ணாகுளம் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கடந்த 2013-ம் ஆண்டில் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்ததாக புனித ஸ்டானிஸ்லாஸ் தேவாலயத்தின் மதகுருவான ஆரோக்கியராஜ் மீது குற்றம் சாட்டப்பட்டது. பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்ட பாதிரி அந்த தேவாலயத்தில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் அவர் மீது போலீசில் எந்த வழக்கும் பதியப்படவில்லை.

இந்தியாவில் லத்தீன்,  சிரோ-மலபார் மற்றும் சிரோ-மலங்கரா தேவாலயங்கள் கத்தோலிக்க திருச்சபை நிர்வாகத்தில் வருகிறது. ரோமன் கத்தோலிக்க திருச்சபைக்கு 132 மறை-மாவட்டங்களும், சிரோ-மலபார் தேவாலயத்திற்கு 31 மறை-மாவட்டங்கள் மற்றும் சிரோ-மலங்கரா தேவாலயத்திற்கு 11 மறை-மாவட்டங்களும் இந்தியாவில் உள்ளன.

தேவாலய பாதிரிகள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டார்கள் என்பது மனவருத்தத்தை தந்ததாக சிரோ-மலபார் தேவாலயத்தின் முன்னாள் செய்தித் தொடர்பாளரான அருட்தந்தை பால் தெலக்காட் கூறினார். “இது அதிகரித்து வருவது கண்டு நான் வருத்தமடைகிறேன். மேலும் இது தேவாலயத்திற்கு சவாலான ஒன்று” என்றும் கூறினார்.

பாதிரிகளின் பாலியல் வன்முறை
சகோதரி ஜெஸ்மி

கன்னியாஸ்திரிகளின் மீதான அத்துமீறல்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் சிறு பகுதி மட்டுமே வெளியே வந்திருக்கிறது என்று திருச்சூரை சேர்ந்த புனித மேரி கல்லூரியின் முன்னாள் முதல்வரான சகோதரி ஜெஸ்மி கூறுகிறார். “பல்வேறு திருச்சபைகளில் கன்னியாஸ்திரிகளின் நிலைமை படுமோசமாக இருக்கிறது” என்றார் அவர். மேலும் “நமது சமூகத்தின் பிற பெண்களது நிலையை விட அவர்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. தங்கள் மீது பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் மீது புகார் அளிக்கவாவது நமது சமூகம் இடம் கொடுக்கிறது. ஆனால் கன்னியாஸ்திரிகள், தங்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களுக்கு மௌனமாக இருக்க வேண்டும். பலாத்காரம் செய்த பாதிரிகள் மீது கன்னியாஸ்திரிகள் புகாரளிக்காதவாறு அவர்களது முன்னோடிகள் பார்த்துக் கொள்கிறார்கள்” என்றும் கூறினார்.

மதர் கார்மிலைட்(Mother Carmelite) சபையில் பணியாற்றிய போது 33 ஆண்டுகளாக தனக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவுகள் மற்றும் மனரீதியிலான சித்திரவதைகளைப் பற்றிய தன்வரலாற்று நூலான “ஆமென், ஒரு கன்னியாஸ்திரியின் தன்வரலாறு” என்ற நூலில் விளக்குகிறார் தற்போது 62 வயதான ஜெஸ்மி. தேவாலயங்கள் தங்களது புனிதத்தன்மையை இழந்துவிட்டன என்று தேவாலயங்கள் சீர்திருத்த இயக்கமான “வெளிப்படையான தேவாலய இயக்கத்தின்” தலைவரான ரெஜி ஜல்லனி கூறினார். மேலும், “பாதிரிகள் மற்றும் கன்னியாஸ்திரிகள் இகலோகத்தில் மூழ்கி விட்டனர். பாதிரிகளின் பணபலத்தையும் அரசியல் செல்வாக்கையும் கட்டுப்படுத்தினால் மட்டுமே தேவாலயங்களைத் தூய்மைப்படுத்த முடியும்” என்றும் அவர் கூறினார்.

குற்றச்சாட்டை கட்டமைத்தல்

சட்டரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நான் அஞ்சமாட்டேன் என்று மலையாள செய்தித் தொலைக்காட்சியான ஏசியாநெட்டில் கடந்த ஜூன் 30–ம் தேதி அன்று முலக்கல் கூறியுள்ளார். “சட்டம் தன்னுடைய கடமையை செய்யட்டும். நான் அதற்கு பயப்படவில்லை. நான் குற்றவாளி என்றால் நான் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும். அனைத்து குற்றச்சாட்டுகளையும் நீதிமன்றத்தில் நான் எதிர்கொள்வேன்” என்றும் கூறினார்.

கன்னியாஸ்திரி ஒழுக்கக்கேடான நடவடிக்கைகளில் ஈடுப்பட்டதாக 2016-ம் ஆண்டு புகார் தெரிவிக்கப்பட்டதாக பாதிரி கூறியுள்ளார். “ஒரு பெண்ணிடம் இருந்து அந்த புகார் வந்தது. அவரது கணவருடன் கன்னியாஸ்திரிக்கு தொடர்பு இருந்ததாக அந்த புகார் கூறியது. எனவே அதன் மீது விசாரணை நடத்த அந்த சபையின் தலைமை அருட்தாயிடம் கேட்டுக்கொண்டேன். அதன் பிறகு அந்த கன்னியாஸ்திரி எனக்கு எதிரி ஆகிவிட்டார். இப்போது அவர் என்னை பழி வாங்குகிறார்” என்று பாதிரி கூறினார்.

கன்னியாஸ்திரியின் அலட்சிய அணுகுமுறையால் அந்த விசாரணை முடிக்கப்படவில்லை என்று பாதிரி கூறினார். ”விசாரணை இன்னும் முடியாததால் ஜூலை 2-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறும் இல்லையென்றால் ஒழுங்கு நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என்றும் கன்னியாஸ்திரிக்கு சபையின் தலைமை அருட்தாய் எச்சரிக்கை கொடுத்திருந்தார். அவர் பதிலளிக்கவில்லை. மாறாக எனக்கு எதிராக புகாரளித்திருக்கிறார்” என்று அவர் கூறினார்.

ஆனால் ஜலந்தரில் இருந்து குரவிலங்காடு மடத்திற்கு வந்த விசாரணைக் குழுவின் புகைப்படத்தை முலக்கலின் வாதத்திற்கு எதிராக கன்னியாஸ்திரியின் குடும்பம் வெளியிட்டிருக்கிறது. “இந்த புகைப்படம் ஜூன், 2-ம் தேதி அந்த விசாரணைக்குழு மடத்திற்கு வந்த போது எடுத்தது” என்றார் கன்னியாஸ்திரியின் குடும்ப உறுப்பினர் ஒருவர். மேலும் “போலீசு நிலையத்தில் புகார் கொடுப்பதற்கு முன்னதாகவே தேவாலயத்தில் கன்னியாஸ்திரி புகாரளித்ததை இது உறுதிப்படுத்துகிறது. தேவாலயக்குழுவும் ஜூன் 30-ம் தேதிக்கு முன்னதாக தீர்வை கண்டுபிடிப்பதாக உறுதியளித்திருந்தது. தேவாலயம் நடவடிக்கை எடுக்காததாலேயே காவல்நிலையத்தில் அவர் புகாரளித்தார். ஆனால் பாதிரியோ தண்டனையில் இருந்து தப்பிக்க உண்மைகளை சிதைக்கிறார்.” என்றும் கூறினார்.

  • வினவு செய்திப் பிரிவு

நன்றி : ஸ்க்ரோல் இணையதளத்தில் அமீருதீன் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்

நாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் அகதிகள் !

தோ, அந்த ஆற்றின் வளைவில் இருப்பதுதான் என்னுடைய வீடு” என்று தன்னுடைய நண்பனின் கைப்பேசியில் உள்ள கூகிள் வரைபடத்தில் காட்டுகிறான் 13 வயதான முகேஷ். அதில் தங்களுக்குப் பரிச்சியமான காவல் நிலையம், கோயில் மற்றும் பாலம் உள்ளிட்ட நினைவிலிருக்கும் தனது கிராமத்தின் புகைப்படங்களை தங்களது விரல்கள் மூலம் பெரிதாக்கியும் சிறிதாக்கியும் ஒப்பிட்டு அடையாளம் கண்டு உற்சாகமானார்கள்.

புதுத்தெருவின் (Nai Sarak) நுழைவில் 15 மீட்டர் நீளமான அந்த வளைந்த நடைபாதையெங்கும் வீட்டைப் பிரிந்திருப்பவர்களின் சோகம் சூழ்ந்திருக்கிறது. பீகாரின் முசாபர்நகரில் உள்ள தங்களது வீடுகளிலிருந்து ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் இடம்பெயர்ந்திருக்கும் முகேஷ் உள்ளிட்ட 45 அகதிகளுக்கு சாவ்ரி பஜாரின் (Chawri Bazaar) மூலையில் இருக்கும் அந்த பழைய தில்லியின் மொத்த காகிதச் சந்தைதான் அடுத்து வரும் இரவுக்கு புகலிடம் கொடுக்கவிருக்கிறது. கடுமையான எடை கொண்ட பொருட்களை சுமந்து பாரவண்டிகள் மூலம் அவற்றை கடைகளுக்கும், பண்டகசாலை மற்றும் கிடங்குகளிலிருந்து சரக்கு மிதிவண்டி மற்றும் சரக்கு ஆட்டோக்கள் மூலம் தொடர்வண்டி நிலையத்திற்கும் கொண்டு சேர்க்கும் எண்ணிறந்த சுமை தூக்கும் தொழிலாளிகளில் (jhalliwallahs) அவர்களும் ஒரு பகுதியினர்.

நடைபாதை வியாபாரிகள், விளம்பர அட்டைகள், உறங்குபவர்கள் என நடைபாதையை ஆக்கிரமித்துள்ள அனைத்தையும் காலி செய்யச் சொன்ன உச்சநீதிமன்ற ஆணையின்படி நகராட்சி அலுவலர்களால் புதுத்தெரு தூய்மைப்படுத்தப்பட்டுவிட்டது. நெகிழி சாக்குகள், கயிற்றுத்துண்டுகள், காகித சுருள்கள் மற்றும் கோப்புகளை பொட்டலம் கட்டத் தேவையான பொருள்களும் அவற்றில் அடங்கும். மெத்தை மடிப்புகள் மற்றும் சொந்த பயன்பாட்டு பொருட்கள் – மாற்று உடைகள் மற்றும் உணவு தயாரிக்க மற்றும் பரிமாறத் தேவையான தட்டுமுட்டு பாத்திரங்கள் என்று சந்து பொந்தெங்கும் காணப்படுகின்றன.

நான்கு அல்லது ஐந்து பேர் கொண்ட சிறு குழுவினர் மண்ணெண்ணெய் அடுப்புகளில் தங்களுக்கு தேவையான ஒன்றை சமைக்கின்றனர். ஞாயிறைத் தவிர மற்ற நாட்களில் பகலில் கடுமையாக உழைப்பதற்கு பயிறு, அரிசி, காய்கறிகளையும், ஒரு கோப்பை பாலினையும் நாள்தோறும் உணவில் சேர்க்கும் நல்வாய்ப்பை பெற்றுள்ளனர்.

இந்தியாவின் உள்நாட்டு அகதிகள்

மேற்கு வங்கம் மற்றும் உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த அகதிகள் சாவ்ரி பஜாரின் பிற பகுதிகளிலும் தங்கியுள்ளனர். முகலாய கஸ்பாவின் (Mughal Kasbah) ஒவ்வொரு வளைவு மற்றும் சந்தின் கால் பகுதிகளில் அவர்கள் தங்கியுள்ளனர். ஆனால் ஏற்கனவே நடைபாதையில் அபாயகரமான உரிமைப் பிரச்சினை இருப்பதால் இன்னும் எவ்வளவு காலம் அங்கு தாக்குப்பிடிக்க முடியும் என்ற சந்தேகங்களும் அவர்களுக்கு எழுகின்றன.

எண்ணிறந்த நடைபாதை வியாபாரிகளையும் முறைசாரா தொழிலாளர்களையும் வேலையை விட்டுத் துரத்திய நீதிமன்றத்தின் ஆணை, 19  மாதங்களுக்கு முன்பு நாடு முழுவதும் ஏழை எளிய மக்களை பேரிடருக்கு தள்ளிய மோடியின் பணமதிப்பழிப்பு நடவடிக்கை குறித்து எதுவும் கேட்கவில்லை.

“நாங்கள் ஏதிலிகள்: அனைத்தையும் இழந்தவர்கள்” என்று பருப்புக்குழம்பைக் கிளறிக்கொண்டிருந்த மாஸ்டர்ஜி அதை நிறுத்தி குரலை உயர்த்தி பேசினார். “நாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள். மற்றவர்களின் இரக்கத்தை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள். அனைத்து நம்பிக்கையும் இழந்த பிறகு உதவிக்கு கடவுளைத்தான் எதிர்பார்க்கிறோம்” என்று மேலும் கூறினார்.

“பீகாரில் எங்கள் பகுதியில் ஏற்படும் வெள்ளம் இடம்பெயர்வதற்கு எங்களை தயார்படுத்தியிருக்கிறது. தேசிய நெடுஞ்சாலையோரத்தில் தார்த்துணி கூடாரத்திலோ அல்லது மழைக்காலத்தில் கரை புரண்டோடும் பாக்மதி ஆற்றங்கரையிலோ வாழ நேரும்போது உங்களது பொருட்களை கட்டிக்கொண்டு விரைவாகவும் பாதுகாப்பாகவும் வேறொரு பகுதிக்குச் செல்ல நீங்கள் கற்றுக்கொள்கின்றீர்கள்” என்று அந்த குழுவில் அதிகம் கற்றவரும், வயதில் மூத்தவருமான மாஸ்டர்ஜி-யின் பேச்சுக்கு கூச்சம் கலந்த புன்னைகையுடன் விளக்கமளித்தார் இராம்நாத்.

இந்தியாவின் உள்நாட்டு அகதிகள்ஒவ்வொரு வெள்ளத்தின் போதும் தேசிய பேரிடர் நிவாரணப்படையினர் ஹெலிகாப்டர் மூலம் போடும் உணவுப்பொட்டலத்தை பற்றிய மாஸ்டர்ஜியின் இந்த மேலோட்டமான பேச்சு அவரது பகுதியிலிருந்து வரும் ஒவ்வொருவரின் பொதுவான சித்திரமாக இருக்கிறது.

பிரவ்ச்சா (Pirauchha) கிராமத்தில் ஒரு தொடக்கப்பள்ளியில் சிறிது காலம் ஆசிரியராக பணியாற்றியதே ‘மாஸ்டர்ஜி’ பட்டத்திற்கான காரணம். மாஸ்டர்ஜி தங்கியிருக்கும் நடைபாதையின் ஒரு பகுதியில் தங்கியிருக்கும் பெரும்பாலானோர் அந்த கிராமத்திலிருந்துதான் வந்திருக்கின்றனர். எந்த சூழ்நிலையில் மதிப்புமிக்க அந்த வேலையை அவர் பறிகொடுத்தார் என்பதை அவர் சொல்லவில்லை என்றாலும் ஒரு மனிதனின் நல்வாய்ப்பு எப்படி திடீரென தலைகீழாக புரளக்கூடும் என்பதற்கு அவருடன் தங்கியிருக்கும் இளைஞர்கள் அவரையே எடுத்துக்காட்டாக காட்டுகின்றனர்.

இராம்நாத்தும் பிரவ் சச்சாவிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் அசியா ஜரங்கை சேர்ந்த அவரது நான்கு நண்பர்களும் இன்னும் சற்றுத்தொலைவில் உள்ள சந்தையில் வேலை செய்கின்றனர். அங்கு பெரும்பாலும் கிழக்கு உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த அகதிகளே வேலை செய்வதாக அவர்கள் கூறினர். ஆனால் வேலையிலிருந்து திரும்பிய பிறகு அவர்களுடன் சேர்ந்தே இரவில் தங்குகின்றனர்.

வேலை குறைந்த மதிய நேரங்களில் சமீபத்தில் மூடப்பட்ட ஜாமியா உணவகத்தின் அலங்கார வளைவுகளின் கீழே அவர்களைப் பார்க்க முடியும். ஒட்ட நறுக்கிய தலைமுடி, கசங்கிய பருத்தி சட்டைகள் மற்றும் புகையிலை கறை படிந்த வாய்களைப் பார்க்கும் போது அவர்கள் மாலுமிகள் போல இருக்கிறார்கள். உண்மையில் இந்த அகதிகள் கங்கை சமவெளியில் இருந்து கடல்களை கடந்து மொரீசியஸ் அல்லது டிரினிடாட் மற்றும் டொபாகோ சென்ற அகதிகளின் வாரிசுகளே. அடிமைகளுக்கு பதிலாக இவர்களின் முன்னோர்களை கரும்புத்தோட்டங்களில் வேலை செய்ய வெள்ளையர்கள் 1830-களில் ஈடுபடுத்தினர்.

பீகாரின் துக்கம் என்றழைக்கப்படும் பாக்மதி (Bagmati), கண்டகி (Gandak) மற்றும் கோசி (Kosi) ஆகிய இமயமலை ஆறுகளின் வெள்ளங்கள் பீகாரின் சமவெளிப்பகுதி மக்களை பல தலைமுறைகளாக புலம்பெயரச் செய்திருக்கிறது. குறுகிய பார்வை கொண்ட பொறியியல் தலையீடுகள் மற்றும் வெள்ளப்போக்கை கட்டுப்படுத்த ஒதுக்கப்பட்ட நிதியாதாரத்தில் நடைபெற்ற ஊழல்களால் சூழ்நிலை மிகவும் மோசமாகி வெளியேறும் மக்களின் எண்ணிக்கையை அதிகமாக்கிவிட்டது.

சீதை பிறந்த ஊராக நம்பப்படும் சீதாமர்ஹி (Sitamarhi) அருகே பாக்மதி ஆற்றின் மீது அணைக்கட்டும் பழைய திட்டம் ஒன்று தற்போது புத்துயிர் பெற்றுள்ளது. சீதாமர்ஹிக்கு 70 கிலோமீட்டர் தெற்கே உள்ள பிரவ்ச்சாவின் குடிமக்களுக்கு அவர்களது குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்கள் அனைத்தும் அணை கட்டவிருக்கும் பகுதிக்குள் இருப்பதால் இழப்பீட்டை வாங்கிக்கொண்டு இடத்தை காலி செய்ய வேண்டும் என்ற அரசின் அறிவிப்புகள் இந்த ஆண்டின் துவக்கத்தில் வந்துள்ளன.

“எங்களது வளமான விளைநிலங்களுக்கு அதன் பாதி மதிப்பிலான இழப்பீடுகளை ஏற்றுக்கொண்டு எங்களது வீடுகளில் இருந்து துரத்தியடிக்கப்படுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். கோடை பயிர் வீணாகிப்போவதோ அல்லது வீட்டிலிருந்து வெகுதூரத்தில் இப்படி அவலமான நிலைமைகளில் வேலை செய்வதோ கூட இதைவிட மோசமில்லை” கூட்டமிகு துணிச்சந்தையை தனது சோர்வுற்ற கண்களால் அலசியவாறே மதன் கூறினார்.

ஞாயிற்றுகிழமைதான் அவர்களுக்கு ஒரே ஓய்வு நாள். அன்று, இரமலான் வழிபாட்டாளர்கள் கூட்டத்தின் மத்தியில் தன்னுடன் வேலை செய்பவர்கள் சிலரைக் கூட்டிக்கொண்டு மல்யுத்த போட்டியைக் காண மதன் சென்று கொண்டிருக்கிறார். மீனா பஜார் அருகேயுள்ள அந்த சிறிய அரங்கிற்கு வந்தபோது இரமலான் நோன்பு நடப்பதால் 30 நாட்களுக்கு மல்யுத்த போட்டி நிறுத்தப்பட்டுள்ளதாக அவர்களிடம் கூறப்பட்டது. “மல்யுத்த வீரர்கள் முஸ்லிம்கள் என்று தெரிந்திருந்தால் நாங்கள் இங்கே வந்திருக்க மாட்டோம்” என்று கிட்டத்தட்ட மன்னிப்பு கேட்கும் தொனியில் மதன் கூறினார். கலவையான மல்யுத்த வீரர்களை கொண்ட பிரபலமான விளையாட்டு போட்டி நடக்கும் பழைய டெல்லியின் இந்த அரங்கம் சமூக நல்லிணக்கத்திற்கு உறுதியில்லாத காட்சியாக விளங்குகிறது.

இந்தியாவின் உள்நாட்டு அகதிகள்இந்நிலையில் மதனின் இக்கருத்து டெல்லி போன்ற நகரங்களுக்கு புலம் பெயர்ந்திருக்கும் அகதிகளுக்கு ஒரு உலகக்கண்ணோட்டத்தை அளிக்கிறது. ஆற்று வெள்ளத்தாலும், சாதி அடையாளங்களாலும் எதிரிகளின் கருத்துக்களாலும் ஆண்டாண்டுகளாக பாதிப்புக்குள்ளாகும் வாழ்க்கையில் இது அவர்களுக்கு ஒரு உறுதியான இணக்கத்தை அளிக்கிறது. மேலும் இன்றைய இந்தியாவின் இனவாத வன்முறைகள் நிறைந்த சூழலில், புலம் பெயர்ந்த அகதிகள் பலர் போராளி இயக்கங்களின் ஆதரவாளர்களாகவும் உள்ளனர்.

வெளிச்சமற்று அழுக்கடைந்த சாவ்ரி பஜாரின் அந்த நடைபாதையில் கூட யாதவர்களுக்கும் தாழ்த்தப்பட்ட சாமர்களுக்கும் (Chamars) இடையே நான்கடி இடைவெளி இருக்கிறது. சாதியரீதியிலான வாக்களித்தல் இந்திய ஜனநாயகத்திற்கும் பொருத்தமில்லாமல் இருப்பதாக பிரவ்ச்சா மற்றும் அசியா ஜரங்கை சேர்ந்த யாதவ சாதியினர் ஒருவேளை கூறலாம். ஆனால் அருகேயிருக்கும் சாமர்ஸ் சாதியினரிடம் ஏன் உணவு தீண்டாமை பார்க்கின்றீர்கள் என்று அவர்களிடம் கேட்டுப்பாருங்கள். அவர்களது பகைமை உணர்வு இயற்கையின் மாறா விதிகள் போல இருப்பது தெரியும். அவர்களுக்கு இரண்டு விசயங்கள் மட்டுமே உறுதியானது: சாதிப்பாகுபாடு மற்றும் ஆற்று வெள்ளங்கள்.

இந்தியாவின் உள்நாட்டு அகதிகள்இது திங்கள்கிழமை மாலை 7:30 மணி. முகேஷும் அவனது இளம் வயது முதலாளியும் புதுத்தெருவின் வளைவுகளைத் தாண்டிய சந்தில் உள்ள ஒரு தெருவோரக் கடையை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். காபி தயாரிக்கும் அந்த பளபளக்கும் இயந்திரம்தான் அவர்களிடம் இருக்கும் விலை மதிப்பில்லா ஒரே பொருள். முகேஷ் தூய்மைப்படுத்துவதில் மும்முரமாக ஈடுப்பட்டிருக்க அவனது முதலாளி அன்றைய வருமானத்தை எண்ணிக்கொண்டும், ஆர்டர்களுக்காக பயன்படுத்தும் தொலைபேசியை எடுத்து வைத்துக் கொண்டும் இருந்தார். அடுக்கடுக்கான காகித தம்ளர்கள், குடுவைகள், தேனீர் மற்றும் காபித்தூள் குடுவைகள் மற்றும் மர நாற்காலியின் அடியில் முகேஷின் பலவீனமான சிறிய உருவம் தற்போது மறைந்து விட்டது. அந்த பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்கு அருகேயுள்ள கிடங்கிற்கு அவற்றை எடுத்துச் செல்கிறான் முகேஷ்.

இதற்கிடையில் கிடங்கிலிருந்து மிதிவண்டியில் ஏற்றுவதற்காக 40 கிலோ சுமையை முகேஷின் அண்ணனான மதன் சுமந்து கொண்டிருந்தார். காலை முழுவதும் காத்திருந்தும் வேலை கிடைக்காமல் இருந்ததால் கிடைத்த இந்த வேலையை சோர்வடையும் வரை செய்வதில் அவருக்கு மகிழ்ச்சி. மூச்சை இழுக்க சற்றே நிற்கிறார். தன்னுடைய புருவத்தில் இருந்து வடியும் வியர்வையைத் துடைத்துக்கொண்டே தன்னுடைய தம்பிக்கும் வயதான உறவினர் ஒருவருக்கும் இடையேயான தகராறை எப்படி தீர்ப்பது என்று யோசிக்கிறார்.

“அவனுக்கு இங்கே என்ன வாய்ப்புகள் இருக்கின்றன?” என்ற கேள்விக்கு, “எனக்குத் தெரியவில்லை. எங்களது ஊரில் அவனுக்கு எந்த முன்னேற்றமும் இல்லை. எப்போதுமே சச்சரவுதான். பள்ளிக்கூடமும் செல்லமாட்டான். அதனாலேயே அவனை இங்கே அழைத்து வந்து விட்டேன்” என்று அவர்களிருவருக்கும் இரவு உணவு தயாரித்துக் கொண்டே மதன் கூறினார்.

இந்தியாவின் உள்நாட்டு அகதிகள்முன்பு டீக்கடை பையனாக டீ விற்றதாகக் கூறிய மோடி, அதை 2014 பொது தேர்தலின் போது வெற்றிகரமாக சந்தைப்படுத்தினார். அவரது கட்சி ஆட்சியதிகாரத்தை கைப்பற்றி விட்டது. இன்று அமெரிக்க பாணியிலான தகுதியுள்ளவனுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவது பற்றியும், வெற்றியாளன் அனைத்தையும் எடுத்துக் கொள்வது பற்றியும் மேட்டுக்குடியினர் அங்கலாய்க்கும் அதே நேரத்தில் பாதிக்கப்படுபவர்களும் ஏழை மக்களும் மிகச்ச்சாதாரணமாக கைவிடப்படுகின்றனர். இந்தியாவின் இதயமான கிராமப்புற ஏழை மக்கள் துன்பக்கடலில் மூழ்கடிக்கா வண்ணம் ஏற்படுத்தப்பட்ட மிகக்குறைந்த சமூக நலத்திட்டங்கள் கூட இன்று அழிக்கப்படுகின்றன. இந்நிலையில் தேநீர் விற்கும் முகேஷிற்கு என்ன வாய்ப்பு இருக்கப் போகிறது?

மே மாத கத்திரி வெயில் சற்றே குறையத்தொடங்கிய அந்த நேரத்தில் ஆற்றை நோக்கியிருக்கும் அவனது வீட்டைப்பற்றி முகேஷ் கூறிக்கொண்டிருக்கும் போது அவனை விட சற்றே வயது குறைந்த அவனது நண்பன் கூறத்தொடங்கினான். “கங்கைத் தாயின் கரையிலிருந்து பார்க்கும் போது வலப்புறமாக வீடு உள்ளது. மாலை நேரத்தில் வீசும் தென்றல் காற்று மிகவும் அற்புதமாக இருக்கும் ” கண்களை மூடி மனதில் அதை உணர்ந்தவனாக கூறினான்.

இந்தியாவின் உள்நாட்டு அகதிகள்” அவனது (முகேஷின்) வீட்டிலிருந்து சற்றுத் தொலைவில் மதகு ஒன்று உள்ளதை நீங்கள் பார்க்கலாம். மழைக்காலங்களில் அதிலிருந்து ஏராளமான நீர் பீறிட்டு வெளியேறும்” என்று கூறினான் அவன்.

கார்காலத்தில் அந்த மதகு ஆபத்தானதா என்று நான் முகேஷை கேட்கிறேன். சிறிது நேரம் யோசித்துவிட்டு ”நீங்கள் எங்கு நிற்கின்றீர்கள் மற்றும் எந்த பக்கத்திலிருந்து அதைப் பார்கிறீர்கள் என்பதைப் பொருத்தது அது” என்று அவன் பதிலளிக்கிறான்.

-வினவுச் செய்திப் பிரிவு

என் தந்தை பாலய்யா | நூல் அறிமுகம்

ணிக்காலம் முழுதும் வேதியியல் ஆசிரியராகவே இருந்த நான், தலித் குடும்பமான என் குடும்பத்தின் கதையை ஒருநாள் எழுதுவேன் என்று சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.. என் குடும்பத்தின் மூன்று தலைமுறையின் கதையை எழுதியுள்ளேன். இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெரும்பான்மையான சம்பவங்கள், என் அப்பா ஓய்வு பெற்றபிறகு ஒவ்வொரு மாலையும் அவருக்கு  நான் சாராயம் வாங்கிக் கொடுக்க, அதைக் குடித்துக்கொண்டே அம்மாவும் அவரும் எங்களை வளர்க்க சிரமப்பட்ட காலங்களைப் பற்றி அவர் சொன்னவை.

வங்கபல்லி என்ற சிறு கிராமத்தில் தொடங்கி, தெலுங்கானாவின் பல்வேறு இடங்களைக் கடந்து ஆந்திராவின் தலைநகரம் ஹைதராபாதின் இரட்டை நகரான செகந்திராபாத்தில் வந்து முடிகிறது. யோசித்துப் பார்த்தால், ஆங்கில ஆட்சியிலிருந்து சுதந்திர நாடாக மாறிய இந்தியாவின், கொந்தளிப்பான காலகட்டத்தைக் கடந்து வந்திருக்கும் கதை. கால கட்டத்தோடு மாறிக்கொண்டிருந்த வாழ்வுகளின் கதையும்கூட…

தாத்தாவின் மகனான என் தந்தை பாலய்யாவைப் பற்றியும் அவரின் பிள்ளைகள் பற்றியும் கூறும் இந்தக் கதை மூன்று தலைமுறைகளினூடாகப் படிப்பறிவற்றிருந்த எங்களின் குடும்பம் எப்படி கல்வியின் உச்சம் தொட்டது என்பதையும் பதிவு செய்கிறது. அன்றாடம் சம்பாதித்து அன்றாடம் உண்ட நிலையிலிருந்து ஆழமான சிந்தனைக்கும் சுய முன்னேற்றத்திற்குமான நிலைக்கு அவர்கள் பயணப்பட்டதைப் பற்றிக் கூறுகிறது…

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தலித்துகள் ஒதுக்கிவைப்பட்டவர்களாக மிக மோசமான நிலைமையில் வாழ்ந்து வந்தார்கள். தீண்டாமையை நானே கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்..

காலம் காலமாக எவ்வளவு மனிதத்தன்மையற்ற சூழலில் தங்கள் முன்னோர்கள் வாழ்ந்தனர் என்பதை அவர்கள் தெரிந்துகொள்வதற்கான ஒரு முயற்சிதான் இந்தப் புத்தகம்.. முன்னேற்றமான வாழ்வை நோக்கி நகரும் எண்ணத்தில் இன்று இவர்கள் தங்கள் வரலாற்றிலிருந்து விலகிச் சென்று கொண்டிருக்கிறார்கள்..

இந்தக் கதையை நான் எழுதியே தீரவேண்டும் என்ற எண்ணம் என் அழகான பேத்தியைப் பார்த்தபோது தோன்றியது. அவள் அமெரிக்காவில் பிறந்தவள். சிவப்பான உதடுகளும் சுருட்டை முடியும் அழகான பெரிய கண்களுமாக நான் பார்த்ததிலேயே அழகியாக அவள் இருந்தாள். இந்தக் குழந்தை வளர்ந்து பெரியவளாகும்போது இந்திய நாட்டிலிருந்தும் குறிப்பாகத் தலித் சமூகத்திலிருந்தும் அந்நியப்பட்டு இருப்பாள் என்று எனக்குத் தோன்றியது.

அமெரிக்க வரலாற்றையும் இன வெறியையும் அடிமை முறையையும் பற்றி அவளால் படிக்க முடியும். அடிமை முறையினும் கொடுமையான சாதிய முறைகள் பற்றியும் தீண்டாமை பற்றியும் அவள் எப்படி அறிந்துகொள்வாள்? தனது மூதாதையர்கள் யாரென்றோ, எங்கிருந்து வந்தார்களென்றோ அவளால் அறிந்து கொள்ள முடியுமா? அதனாலேயே இந்தப் புத்தகத்தை உடனடியாக எழுதத் தொடங்கினேன்..

என் தாத்தா மட்டும் தன் செருப்புத் தைக்கும் தொழிலில் சிறந்து விளங்கி, தான் தைத்த செருப்பை நிசாமுக்கு வழங்காமல் இருந்திருந்தால் எங்கள் கதையும் இன்றுவரை அடிமைத் தளையில் சிக்குண்டிருக்கும் பல தலித்துகளின் கதையைப் போலவே இருந்திருக்கும்.

இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்குத் தங்கள் உயிரையும் பணயம் வைத்து, தீண்டத்தகாதவர்கள் ஆற்றிய பங்கை இதுவரை யாரும் முழுமையாக அங்கீகரித்தது கிடையாது, பதிவு செய்ததும் கிடையாது. அப்படி அவர்கள் செலுத்திய உழைப்பில் விளைந்த பொருளாதாரத்தின் பயன்களைத் தலித்துகள் அனுபவித்ததும் கிடையாது.

நம் வரலாற்றை நாமே எழுத வேண்டிய காலம் வந்துவிட்டது. “ஒரு ஊர்ல ஒரு ஏழை பிராமணன் இருந்தானாம்…” என்று தொடங்கும் பிராமணர்களின் கதைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். என் குடும்பத்தினர் மட்டுமல்ல ஒவ்வொரு தலித்தும் தலித் அல்லாத ஒவ்வொருவரும்கூட வருங்காலத்தைக் கட்டமைக்க, வரலாற்றை அறிந்திருக்க வேண்டும்.

– (என்னுரையில், நூலாசிரியர் ஒய்.பி.சத்தியநாராயணா)

நூல்: என் தந்தை பாலய்யா
ஆசிரியர்: ஒய்.பி.சத்தியநாராயணா
(தமிழில்: ஜெனி் டாலி அந்தோணி)

வெளியீடு: காலச்சுவடு,
காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி)லிட்., 669, கே.பி.சாலை, நாகர்கோவில் – 629001.
தொலைபேசி: 91-4652–278525,
மின்னஞ்சல்: publications@kalachuvadu.com

பக்கங்கள்: 288
விலை: ரூ.325.00

சென்னையில் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று,
(கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
கடையின் புதிய முகவரி கீழே)
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம், ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை,
நெற்குன்றம், சென்னை – 600 107. பேச : 99623 90277
  • வினவு செய்திப் பிரிவு

ஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12

ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் – ஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா

பெரும்பான்மையான உழைக்கும் மக்களை பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஒடுக்கும் பார்ப்பனியத்தின் ஆட்சியை இந்தியா முழுவதும் நிலைநாட்டி, மனுதர்மத்தையே அரசியல் சாசனமாக்கத் துடிக்கும் இந்துத்துவா இயக்கங்களின் தாய்க் கழகமான ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வரலாறு தெரியுமா உங்களுக்கு ? இந்த வினாடி வினாவில் ஆர்.எஸ்.எஸ். குறித்த சில கேள்விகள். முயன்று பாருங்கள் !

1.இந்துமதவெறியின் மூல நிறுவனமான “ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் – இந்தப் பெயர் எந்த மொழியில் அமைந்திருக்கிறது?
2. ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் – இதன் சரியான மொழிபெயர்ப்பு என்ன?
3. ஆர்.எஸ்.எஸ் துவக்கப்பட்ட ஆண்டு எது?
(இக்காலத்தில்தான் இந்துத்துவாவின் நேரெதிர் சித்தாந்தமான பொதுவுடைமையின் பால் ஈர்க்கப்பட்ட பகத்சிங்கும் வாழ்ந்தார்)
4. ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களுக்கு அன்றாடம் சிந்தாந்தம் – உடற்பயிற்சி இரண்டிலும் வெறியேற்றப் பயன்படும் இடத்தின் பெயர் “ஷாகா”-இதன் பொருள் என்ன?
5.ஆர்.எஸ்.எஸ் தோற்றுவித்தலுக்கு உற்சாகமூட்டிய ஐரோப்பிய சித்தாந்தம் எது?
6. முசுலீம்களை வெளியேற்றி ‘இந்துக்களை’ பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை துவக்கியது யார்?
7. ஆர்.எஸ்.எஸ்-இன் முதல் மூன்று தலைவர்களும் மராட்டிய சித்பவன பார்ப்பனர்களாக இருந்ததற்கு காரணம் என்ன?
8. ஆர்.எஸ்.எஸ் இயக்க நிறுவனருக்கே இல்லாத சித்தாந்த் தெளிவை வழங்கிய “ஹிந்துத்துவா” நூலை எழுதியவர் யார்?
9. காங்கிரசுக் கட்சியில் உள்ளவர்களில் ஆர்.எஸ்.எஸ் நிறுவனரின் பார்ப்பனிய மனதைக் கவர்ந்தவர் யார்?
10. சாவர்க்கரும், ஹெட்கேவாரும் இணையும் புள்ளி எது?
11. ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்களில் ஸ்வயம்சேவகர்களை வெறியேற்றக் கொடுக்கப்படும் “ஷாரீரிக் – பௌதிக்” பயிற்சிகளின் பொருள் என்ன?
12. ஆர்.எஸ்.எஸ்-இன் அதிகாரப்பூர்வக் கொடி எது? அதுதான் “இந்து ராஷ்டிரம்” அமையும் போது தேசியக் கொடியாக இருக்குமாம்!
13. ஆர்.எஸ்.எஸ் கொடியின் பின்னணி என்ன?
14. ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் தேர்தல் மூலம் தலைவர்கள் தெரிவு செய்யப்படுகிறார்களா?
15. ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் அதிக அதிகாரம் படைத்த நிர்வாகிகள் யார்?
16. ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் பெண்கள் உறுப்பினர்களாக – ஸ்வயம் சேவகர்களாக சேர முடியுமா?
17. காந்தி தலைமையிலான காங்கிரசுக் கட்சியோடு ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் முதலில் முரண்பட்ட விசயம் எது?
18. மசூதிகள் இருக்கும் தெருவில் கலவர நோக்கத்துடன் விநாயகர் ஊர்வலம் செல்வதை ஆர்.எஸ்.எஸ் ஆரம்பித்த வருடம் இடம் எது?
19. 1947-க்கு பிந்தைய வரலாற்றில் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் இந்திய அரசால் எத்தனை முறை தடை செய்யப்பட்டது?
20. 1940-ம் ஆண்டில் ஆர்.எஸ்.எஸ் தலைவராக நியமனம் செய்யப்பட்ட கோல்வால்கரின் பார்வையில் இந்திய சுதந்திரம் என்பது என்ன?
21. 1942-ஆகஸ்டு மாதத்தில் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு – Quit India Movement இயக்கத்தின் போது ஆர்.எஸ்.எஸ் நிலை என்ன?
22. இரண்டாம் உலகப் போரின் போது ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வால்கர் யாரை ஆதரித்தார்?

தொடரும்..

– வினவு செய்திப் பிரிவு

கருத்துக் கணிப்பு : சேலம் 8 வழிச்சாலையால் நாடு முன்னேறுமென ரஜினி கூறியிருப்பது ?

கருத்துப்படம் : வேலன்

டார்ஜ்லிங்கில் நடக்கும் படப்பிடிப்புக்கு இடையில் போயஸ் தோட்டத்தில் ஓய்வுக்கு வருகிறார் ரஜினி! பறந்து பறந்து சண்டை போடும் ரிஸ்க்கான காட்சிகளில் கடும் உழைப்புடன் நடித்து விட்டு வரும் இந்த ‘நல்லவர்’ ஓய்வு மாதங்களிலும் தனது சமூகக் கடமைகளை மறப்பதில்லை. மற்றவர்கள் கப்பித்தனமாக வார விடுமுறையில் மட்டும் ஓய்வெடுக்கும் போது இவரோ மாதக்கணக்கில் ஓய்வெடுக்கும் தாராள மனம் கொண்டவர்.

ஈரோட்டைச் சேர்ந்த சிறுவன் யாசின் கீழே கிடந்த ரூ.50,000 பணத்தை போலீசிடம் ஒப்படைத்த செய்தி ஈரோடு போலீசு வழியாக ஊடகங்களில் குற்றச்செய்தியைக் கவனிக்கும் செய்தியாளர்களிடம் வந்து சேர்ந்ததும் கிளம்பியது மேட்டுக்குடியின் மனிதாபிமானப் படை!

குஷ்பு, சூர்யா துவங்கி பலரும் யாசினின் தந்தையிடம் பேசி பாராட்டத் துவங்கினார்கள். எப்போதும் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கும் அகரம் அறக்கட்டளை புகழ் நடிகர் சூர்யா சிறுவனது கல்விச் செலவை ஏற்பதாக முதலில் அறிவித்தார். யாசினின் தந்தையோ அவன் அரசுப் பள்ளியில்தான் படிக்கிறான், அங்கேயேதான் படிப்பான், செலவு ஏதுமில்லை என்று கூறினார்.

மற்றவர்கள் முந்தியது கேள்விப்பட்ட ரஜினி ரசிகர் மன்ற படை உடனே யாசின் வீட்டிற்கு படையெடுத்தது. அங்கேயே அவனது குடும்பத்தாரிடம் பேசி ரஜினியை அந்த சிறுவன் பார்க்க விரும்பியதாக ஒரு செய்தியை உருவாக்கினார்கள். பிறகு சிறுவன் யாசின் சென்னை வந்தான். ரஜினியும் அவனுக்கு தங்கச் சங்கிலி போட்டு, கல்விச் செலவை ஏற்பதாக கூறினார். இனி அந்தச் சிறுவன் டார்ஜிலிங்கிலோ, ஊட்டியிலோ தங்கிப் படிப்பானென வாட்ஸ் அப் வதந்திகளை படிப்போர் நம்பித்தான் ஆகவேண்டும்.

மட்டுமல்ல, இப்பேற்பட்ட ரசிகனைக் கொண்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதெனவும் ரஜினி வழிந்திருக்கிறார். அப்போது ஈரோடு ரசிகர் மன்ற தளபதிகள் விசமச் சிரிப்புடன் நகைப்பது உறுதி.

இத்தகைய கருணைவயப்பட்ட நிகழ்வில் அன்னார் சில பல அரசியல் கருத்துக்களையும் கூறியுள்ளார். காமராஜர் ஆட்சி பொற்காலம், கல்வியில் சிறந்த தமிழ்நாடு, அமைச்சர் செங்கோட்டையன் தனது பணிகளைச் சிறப்பாக செய்து வருகிறார்……எல்லாம் அன்னார் உதிர்த்தவை. இறுதியில் காந்திய மக்கள் இயக்கத் தலைவரும், செத்துப் போன அ.தி.மு.க-வின் பி டீமான மக்கள் நலக்கூட்டணியின் பிதாமகரும், புரோக்கருமான தமிழருவி மணியன் ரஜினி கட்சியில் சேரப்போவது அப்போதுதான் ரஜினிக்கு தெரியுமென அப்போது ரஜினியே தெரிவித்திருக்கிறார். காந்தி வழி வந்தவர் அப்படி இணைவது குறித்தும் மகிழ்ந்திருக்கிறார். கபாலி படத்திற்கு பிறகு இப்படி ஏகப்பட்ட மகிழ்ச்சிகள் – மகிழ்ச்சி!

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து யோசிக்காத ரஜினி, ஒரு நாடு, ஒரு தேர்தல் எனும் சேம்டைம் பாராளுமன்ற – சட்டமன்ற தேர்தலை ஆதரிக்கிறாராம். ஆக மொத்தம் இந்த வாக்கு மூலங்களின் வார்த்தைகளை கோர்த்துப் பார்த்தால் அடுத்த தேர்தலில் ரஜினி-அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி உறுதி என்பது உறுதி.

இறுதியாக சேலம் எட்டுவழிச்சாலையை ஆதரித்து பேசியிருக்கிறார். “பசுமை வழிச்சாலை போன்ற பெரிய திட்டங்களால்தான் நாடு முன்னேறும், அதனால் பலருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்” என்று தனது மனக்கிடக்கையை உரித்துள்ளார்.

விவசாயகளிடமிருந்து பறிக்கப்படும் நிலத்திற்கு ஈடாக அவர்கள் மனம் விரும்பும் பணம் கொடுத்து சாலை போடவேண்டுமென சூ.ஸ்டார் விரும்புகிறாராம். இனிமேல் பறிமுதல் செய்யப்படும் நிலங்களுக்கு சந்தை விலை எனும் சட்டப் பிரிவு நீக்கப்பட்டு மனம் விரும்பும் விலை எனும் புதிய பிரிவு வருவது உறுதி என்பதை அதே வாட்ஸ்அப் வதந்தி விரும்பிகள் மீம் போட்டு பரப்புவதும் உறுதி.

எட்டுவழிச்சாலையை ரஜினி ஆதரிப்பதால் இனி அது சூப்பர் வழிச்சாலை என அதில் பசுமையை வெட்டிவிட்டு அ.தி.மு.க அமைச்சர்கள் மனம் குளிர்ந்து பேசுகிறார்கள். தூத்துக்குடி சென்று சமூகவிரோதிகளைக் கண்டறிந்தவர், சேலத்தில் சூப்பராக விளம்பரம் செய்வது குறித்து, அந்த சாலையினால் வேலைவாய்ப்பு பெறும் எடப்பாடியின் மாமனார் மற்றும் இன்னபிற வேலையற்றவர்கள் மனம் குளிர்வார்கள்.

இனி கருத்துக் கணிப்பு கேள்வி:

சேலம் பசுமைவழிச் சாலையால் வேலை வாயப்பு பெருகி, நாடு முன்னேறும் என ரஜினி கூறியிருப்பது?

வன்மையாக கண்டிக்கத் தக்கது
நிச்சயம் வரவேற்கத் தக்கது
கருத்து சொல்வதற்கே அருகதையற்றது

டிவிட்டரில் வாக்களிக்க:

ஃபேஸ்புக்கில் வாக்களிக்க:

யூடியூபில் வாக்களிக்க:

https://www.youtube.com/user/vinavu/community

பெய்ஜிங்கில் வெளியேற்றப்படும் ஏழைகள் ! இதுதான் சீனாவின் வளர்ச்சி !

”மகளே, நான் இதையெல்லாம் உன் எதிர்காலத்திற்காகவே செய்கிறேன். உனது தந்தையும், தாத்தாவும் அனுபவித்த துயரங்களை எல்லாம் நீயும் அனுபவித்து விடக்கூடாது என்பதற்காகவே செய்கிறேன். அதற்காகத்தான் நாங்கள் பட்டப் பகலில் பலரும் பார்க்க உண்மையை உரக்கப் பேசத் துணிந்தோம்” மூடிய அறையினுள் அந்த வீடியோ பதிவு செய்யப் பட்டுள்ளது. வெளியே போலீசார் கதவைத் தட்டும் சப்தம் கேட்டுக் கொண்டிருக்க கைப்பேசியின் செல்பி கேமரா மெல்லிய நடுக்கத்தோடே அந்த மனிதன் பேசுவதைப் பதிவு செய்கிறது.

” வளர்ச்சி, முன்னேற்றம் ” யாருக்கு ?
பளபளக்கும் சீனத் தலைநகர் பெய்ஜிங்.

அந்த மனிதரின் பெயர் க்வாய் யோங். சீனாவைச் சேர்ந்தவர். சென்ற 2017-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி சீனத் தலைநகர் பெய்ஜிங்கை அடுத்துள்ள புறநகரம் ஒன்றில் உள்ள அடர்த்தியான சந்தையில் தீ விபத்து ஒன்று நடக்கிறது. இந்த விபத்தையே முகாந்திரமாகக் கொண்டு மக்கள் அடர்த்தியாக வாழ்வது பாதுகாப்பற்றது என அறிவித்த சீன அரசாங்கம், சீனாவின் நாட்டுப்புறத்தில் இருந்து இடம்பெயர்ந்து அப்பகுதியில் வாழ்ந்து வந்த கூலித் தொழிலாளிகள் அனைவரையும் உடனடியாக அப்புறப்படுத்தியது.

சுமார் 20 ஆண்டுகளாக அங்கே வாழ்ந்து, பளபளப்பான சர்வதேச நகரமாக பெய்ஜிங்கை உருமாற்றிய அந்த மக்கள் ஓரிரு நாள் அவகாசத்தில் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டனர். அவர்களது வாழிடங்கள் புல்டோசர்களால் தகர்த்து தரைமட்டமாக்கப்பட்டன.

” வளர்ச்சி, முன்னேற்றம் ” யாருக்கு ?
பெய்ஜிங் நகர்புற சேரிகள் (மாதிரி படம்)

அதை எதிர்த்து நடந்த மக்கள் போராட்டங்கள் அனைத்தையும் மொத்தமாக இருட்டடிப்பு செய்தது சீன அரசாங்கம். உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் எவரும் போராட்டம் நடக்கும் இடத்திற்கு அருகே கூட அனுமதிக்கப்படவில்லை. கடுமையான தணிகை அமலில் இருந்த போதும் உள்ளூர் மக்கள், நடக்கும் போராட்டங்களை தங்களை கைபேசிகளில் பதிவு செய்து உலகளவில் பரவச் செய்தனர். அவ்வாறு போராட்டங்களை வெளியுலகுக்கு தெரியப்படுத்தியவர்களில் முக்கியமானவர் க்வாய் யோங்.

நூற்றுக்கும் மேற்பட்ட வீடியோக்களை தனது செல்பேசி கேமராவில் பதிவு செய்து இணையத்தின் மூலம் உலகறியச் செய்தார் யோங். அவர் எடுத்த வீடியோ ஒன்றில் பளபளப்பான சாலை ஒன்றில் கார்கள் அணிவகுத்து நிற்க, போராட்டக்காரர்கள் சாலையை மறித்து நின்று முழக்கமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

“நாங்கள் சாப்பிட வேண்டும்” “எங்களுக்கு இருப்பிடம் வேண்டும்” என்று முழக்கமிடும் மக்களின் உரிமை முழக்கத்திற்கு பதிலாக  போலீசாரை அனுப்புகிறது அரசு.
“உங்கள் பிரச்சினையை அப்புறம் பார்க்கலாம். முதலில் நீங்கள் நின்று கொண்டிருப்பது பொதுச் சாலை. இது அரசாங்கச் சொத்து. சாலை அரசாங்கத்துக்குச் சொந்தமானது தெரியும் தானே.. முதலில் அனைவரும் கலைந்து ஓடிப் போங்கள்” அடிவயிற்றிலிருந்து போராட்டக்காரர்களைப் பார்த்து கூச்சலிடுகிறார் ஒரு போலீசு அதிகார. அதிகாரத்தின் குரல்கள் சேலத்திலும் சீனத்திலும் ஒன்றே போல் கேட்பதில் நமக்கு எந்த வியப்புமில்லை.

க்வாய் யோங் போலீசாரால் கைது செய்யப்படுகிறார்.

*****

பெய்ஜிங்கை உலகத் தரமான நகரமாக உருவாக்கும் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார் சீன அதிபர் ஜின்பிங். 2020-ம் ஆண்டுக்குள் தலைநகர் பெய்ஜிங்கின் மக்கள் தொகையை 15 சதவீதம் குறைப்பது அத்திட்டத்தின் ஒரு அங்கம். கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக நாட்டுப்புறங்களில் இருந்து பெய்ஜிங்குக்கு குடியேறிய கூலித் தொழிலாளர்கள் தாம் அரசின் இலக்கு. இன்றைய தேதியில் சுமார் 70 லட்சம் இடம்பெயர் தொழிலாளர்கள் பெய்ஜிங்கில் வசித்து வருகின்றனர். பெரும்பாலும் சேரிகளில் வாழ்ந்து வரும் இவர்களைப் படிப்படியாக வெளியேற்றி வருகிறது சீன அரசு.

சீன அதிபர் ஜின்பிங்

ஷின் ஜான் அவ்வாறான ஒரு சேரிப் பகுதி. சுமார் ஒருலட்சத்து இருபதாயிம் மக்கள் வசித்து வரும் அந்த சேரிப்பகுதியை விட்டு மூன்றே நாட்களில் காலி செய்து விட வேண்டும் என மக்களுக்கு உத்தரவிட்டுள்ளது அரசு. அல்ஜசீரா தொலைக்காட்சி செய்தியாளர்கள் அந்த மக்களின் வாழ்க்கையையும் இவ்வாறு அவர்கள் விரட்டியடிக்கப்படுவதால் எதிர்கொள்ளும் துன்ப துயரங்களையும் ஆவணப்படம் ஒன்றில் பதிவு செய்துள்ளது.

”சுற்றிலும் பார்த்தீர்கள் அல்லவா.. இந்தக் குப்பை கூளங்களுக்கு மத்தியில் தான் நாங்கள் வாழ்ந்து வந்தோம். இப்போது எங்களுக்கு மூன்று நாட்கள் அவகாசம் கொடுத்திருக்கிறார்கள்… அனைத்தையும் வழித்து சுத்தம் செய்து விட்டு எங்காவது ஓடிப் போக வேண்டும்” என்கிறார் ஒரு பெண்.

அதே பகுதியைச் சேர்ந்தவர் ஷின் ஜே. சிறிதாய் ஒரு மளிகைக் கடை நடத்தி வந்துள்ளார். அவரது வீட்டையும் கடையையும் மூன்றே நாட்களில் காலி செய்ய வேண்டும். வீட்டை காலி செய்து விடலாம்; ஆனால் கடையையும் அதில் உள்ள பொருட்களையும் என்ன செய்வது? பொருட்களை மூன்றே நாட்களில் விற்றுத் தீர்க்க முடியாது; வாங்குவதற்கு அக்கம் பக்கத்தில் வாழ்ந்து வந்த மனிதர்களும் இப்போது இல்லை. வேறு ஒரு பகுதியில் தற்காலிகமாக ஒரு இடத்தை வாடகைக்குப் பிடித்து கடையின் பொருட்களை எல்லாம் அங்கே அள்ளிச் சென்று அடைத்து விட்டு அவற்றை வந்த விலைக்கு தள்ளி விட்டால் போதும் என வாடிக்கையாளர்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்.

“அதிபர் ஜின்பிங் பேசியதை தொலைக்காட்சியில் கேட்டேன். அப்போது கேட்கும் போது நன்றாகத் தான் இருந்தது. பொருளாதார சீர்திருத்தம் என்றார்… நாட்டை திறந்து விடுவோம் என்றார்… ஆனால் இப்போது பாருங்கள் எங்களுக்கு பெய்ஜிங் இல்லை என்கிறார்கள். நான் இனி இன்னொரு நகரத்தைப் பார்த்து ஓட வேண்டும். அது ஷாங்காயா, குவாங்சௌவா எனத் தெரியவில்லை.. எங்கே போவதென்றே எனக்குத் தெரியவில்லை” ஷின் ஜேவின் கண்களில் நீர் வழிந்தோடப் பேசிக் கொண்டிருக்கிறார்.

ஜின்பிங்கின் அறிவிப்பைத் தொடர்ந்து இடம்பெயர்த் தொழிலாளர்கள் வாழ்ந்து வந்த புறநகர் பகுதிகள் அனைத்தும் இப்போது பேய் நகரங்களைப் போல் காட்சி அளித்துக் கொண்டிருக்கின்றன. மக்கள் அனைவரையும் விரட்டியடித்த பின் அந்த நிலங்களை எல்லாம் ரியல் எஸ்டேட் முதலைகளுக்கு அள்ளிக் கொடுத்துள்ளது சீன அரசாங்கம். தாங்கள் வாழ்ந்து வளர்த்தெடுத்த நகரம் தங்களையே பிடறியைப் பிடித்து தள்ளுவதைப் பார்க்கப் பொறுக்க முடியாமல் கண்ணீரோடு நீண்ட வரிசைகளில் பெய்ஜிங்கை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள் மக்கள்.

*****

”நான் பொறுத்திருந்து பார்க்கப் போகிறேன். அதன் பின் சூழலுக்குத் தகுந்தாற் போல் மாறிக் கொள்வேன். இது ஒரு கொரில்லா யுத்தம் போலத் தான். அவர்கள் எங்களை ஓரிடத்தில் இருந்து விரட்டினால் நாங்கள் இன்னொரு இடத்திற்குச் சென்று விடுவோம். நிலைமை மிக மோசமாக மாறினால் எங்கள் ஊருக்கே போய் விட வேண்டியது தான். அதற்குப் பிறகும் பெய்ஜிங்கில் எங்களுக்கு என்ன வேலை?” எனக் கேட்கும் அந்த மனிதர் இடித்து வீழ்த்தப்பட்ட கட்டிடங்களின் சிதிலங்களுக்கு இடையே நின்று கொண்டிருக்கிறார். அவர் பெயர் ஸூ ஜி. ஷின் ஜான் புறநகர்ப் பகுதி இடிக்கப்பட்டதில் தனது வீட்டையும் கடையையும் இழந்தவர்.

உங்கள் உழைப்பு தேவை ஆனால் நீங்கள் தேவையில்லை.

ஸூ ஜி ஒரு மெக்கானிக். அவரது மனைவி அருகில் உள்ள பெரிய கடையில் ஊழியராகப் பணிபுரிகிறார். இருவருமாகச் சேர்ந்த மாதம் 1700 டாலர்கள் சம்பாதிக்கிறார்கள். ஒரு காரை சுத்தம் செய்து கொடுக்க 45 டாலர் கட்டணமாகப் பெறுகிறார் ஸூ ஜி. இதே தனது சொந்த ஊர் என்றால் மாதம் வெறும் 700 டாலர்கள் தான் சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்கிறார் ஸூ ஜி. நாட்டுப் புறத்தில் இருந்து பெய்ஜிங் போன்ற ஒரு பெரு நகரத்திற்கு வேலை தேடி வருவது அத்தனை சுலபமான காரியமில்லை என்கிறார் ஸூஜி.

முதலில் வேலை தேடிச் செல்விருப்பதைப் பதிவு செய்ய வேண்டும். பதிவாவதற்கு மூன்று வாரங்கள் காத்திருக்க வேண்டும். பின் உள்ளூர் பாதுகாப்பு அலுவலகத்திற்குச் சென்று தன் மேல் எந்த குற்ற வழக்கும் நிலுவையில் இல்லை எனத் தடையில்லாச் சான்று வாங்க வேண்டும். அதன் பின் உள்ளூர் நிர்வாகத்திடம் பிறப்புச் சான்றிதழ் பெற்று வெளியூருக்குச் செல்லவிருப்பதை அறிவிக்க வேண்டும். இத்தனைக்கும் பின் எந்த பெரு நகரத்துக்கு செல்வதாய் பதிவு செய்யப்பட்டுள்ளதோ அந்த நகரத்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றிலிருந்து பணிக்கான ஆணை பெற்றிருக்க வேண்டும்.

” வளர்ச்சி, முன்னேற்றம் ” யாருக்கு ?இடியாப்பச் சிக்கலான இந்த நிர்வாக நடைமுறைகளைத் தாண்டியே கோடிக்கணக்கான மக்கள் நாட்டுப்புறங்களில் இருந்து பெருநகரங்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். அப்படியே இடம் பெயர்ந்து செல்லும் நகரங்களில் மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட எந்தவிதமான சமூகப் பாதுகாப்பும் இத்தொழிலாளிகளுக்கு கிடைப்பதில்லை. அதே போல் பெருநகரங்களின் வாழ்க்கைச் செலவை ஈடுகட்டும் அளவுக்கான வருமானமும் கிடைக்காது. எனவே மக்கள் தங்களது குழந்தைகளை ஊரில் உள்ள பெற்றோரின் பொறுப்பில் விட்டு விடுகின்றனர். சீனாவில் மட்டும் சுமார் 61 மில்லியன் (6.1 கோடி) குழந்தைகள் பெற்றோரைப் பிரிந்து தாத்தா பாட்டிமார்களின் பொறுப்பில் வளர்ந்து வருவதாகச் சொல்கிறது ஒரு கணக்கெடுப்பு.

இடம்பெயர்ந்து நகரங்களுக்கு வரும் பெற்றோர் தங்கள் குழந்தைகளை வருடத்திற்கு ஓரு முறையே பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. பெரும்பாலும் சீனப் புத்தாண்டிற்கு சொந்த ஊர் செல்லும் தொழிலாளிகள், தங்கள் கைபேசிகளில் பதிந்து வரும் பிள்ளைகளின் படங்களைப் பார்த்துக் கொண்டே ஏக்கத்தோடு அடுத்த ஒரு வருடத்தைக் கழிக்க வேண்டும்.

ஸூ ஜியின் வருமானம் ஓரளவுக்குப் நன்றாக இருப்பதால் மாதம் ஒருமுறையாவது சொந்த ஊருக்குச் சென்று விடுகிறார். இந்த முறை தனது மகனைப் பார்க்க ஊருக்குச் செல்லும் ஸூஜியுடன் அல்ஜசீராவின் செய்தியாளரும் செல்கிறார். ஸூஜியின் தந்தையும் முன்னொரு காலத்தில் பெய்ஜிங்கில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்தவர் தான். இப்போது அவருக்கு கிராமத்தில் சொந்தமாக ஒரு துண்டு நிலம் இருக்கிறது. சிறிய அளவில் நடக்கும் விவசாயத்தின் வருமானத்தைக் கொண்டு எப்படியோ சமாளித்து வருகிறார். கிராமத்திலிருந்து மீண்டும் பெய்ஜிங் கிளம்பும் ஸூஜியின் காரைப் பார்த்து ஏக்கத்தோடு அழுகிறான் அந்தச் சிறுவன்.

சேலமானாலும் சீனமானாலும் வளர்ச்சி மக்களுக்கானது அல்ல… (படம் : தினகரன்)

“நாங்கள் இரகசியமாகத் தான் வேலை செய்ய வேண்டும். அரசாங்கத்துக்குத் தெரிந்தால் சிக்கல் தான்… நான் என்ன நினைக்கிறேன் என்றால், தேசம் தான் என்ன நினைக்கிறதோ அதைச் செய்யத் தான் போகிறது. தனிநபர்களால் அதைத் தடுத்து விட முடியுமா என்ன.. இதைத் தவிற வேறென்ன சொல்ல முடியும் என்னால்?” என்கிறார் ஸூஜி.

அரசின் ‘‘இடிதடி” திட்டத்தின் பட்டியலில் சுமார் 100 பள்ளிக்கூடங்களும் இருக்கின்றன. அவையெல்லாம் கூலித் தொழிலாளர்களின் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகள். சுமார் 80,000 பிள்ளைகள் அந்தப் பள்ளிகளில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

“இந்தப் பள்ளிக்கூடங்களை இடித்து விட்டால்  எங்கள் பிள்ளைகள் எங்கே போவார்கள்? இவர்களின் பெற்றோரெல்லாம் இங்கே ஏதோவொரு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். பிள்ளைகளை ஊரில் விட்டு வளர்க்கும் வாய்ப்பு இல்லை என்பதால் தான் இங்கே அழைத்து வந்துள்ளனர். பள்ளிக்கூடங்களை இடித்து விட்டால் இவர்களுக்கு வேறு போக்கிடம் கிடையாது. பெற்றோர் இவர்களின் படிப்பை நிறுத்தி விடுவார்கள்” என்கிறார் பள்ளி ஆசிரியை ஒருவர்.

*****

சீனாவில் நடந்து கொண்டிருப்பது ‘கம்யூனிச’ அரசு இல்லை. ஆனால் அது கம்யூனச நாடு என்கிற மயக்கம் ஊடகங்களால் உருவாக்கப்படுகிறது. முப்பதாண்டுகளுக்கு முன்பாகவே முதலாளித்துவத்தை வரித்துக் கொண்ட வெறும் பெயர்தாங்கிக் கம்யூனிஸ்டுகளால் நடத்தப்படும் ஒரு எதேச்சாதிகார அரசுதான் சீனாவை ஆள்கிறது. மக்களுக்கான குறைந்தபட்ச சமூக பாதுகாப்பைக் கூட உத்திரவாதப்படுத்திக் கொடுக்க வேண்டும் என்கிற எண்ணமில்லாத கருணையற்ற அரசாங்கம் தான் சீனத்தில் நடந்து வருகின்றது என்பதை துல்லியமாக அம்பலப்படுத்துகிறது அல்ஜசீராவின் இந்த ஆவணப்படம்.

”வளர்ச்சி, முன்னேற்றம்” என சந்தைப் பொருளாதார சட்டகத்துக்குள் புழங்கிக் கொண்டிருக்கும் சொற்கள் உழைக்கும் மக்களுக்கே எதிரானது என்பதற்கு சேலம் மட்டுமின்றி சீனமும் இரத்த சாட்சியாக நம்முன் இருக்கின்றது. இந்த ஆவணப்படத்தை அவசியம் பார்ப்பதோடு நண்பர்களுக்கு கட்டாயம் அறிமுகம் செய்து வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

https://www.youtube.com/watch?v=2kGy8FD0oQg

காக்டெய்ல் புகழ் பெர்முடா உலக தனிநபர் உற்பத்தி திறனில் முதல் நாடாம் !

ஜி.டி.பி மாயை : மதிப்புக் கூட்டலும் மதிப்பு கைப்பற்றலும் – ஜான் ஸ்மித்

பாகம் : 6

ஜான் ஸ்மித் லண்டனில் உள்ள கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் அரசியல், அரசியல் பொருளாதாரம், மனித உரிமைகள், இனப்படுகொலை துறைகளின் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். ஏகாதிபத்தியமும் உலகமயமாக்கலும் பற்றிய அவரது எதிர்வரும் புத்தகத்தை மன்த்லி ரிவியூ பிரஸ் வெளியிடவிருக்கிறது.

ஜி.டி.பி — சில சுயமுரண்களும், வினோதங்களும்

ஜி.டி.பி, வர்த்தகம் தொடர்பான தரவுகளின் ஏற்றுக் கொள்ளப்பட்ட விளக்கங்களை நிராகரிப்பதற்கான கோட்பாட்டு அடிப்படையை பார்ப்போம். அதற்கு முன்பு இந்த புரட்சிகரமான நிராகரிப்புக்கான தேவையை உருவாக்கும் சுயமுரண்களையும், விளக்கங்களையும் புரிந்து கொள்ள வேண்டும். மூன்று உலகளாவிய பண்டங்களில் நாம் பார்த்தது போல, ஒரு வாடிக்கையாளர் ஐஃபோன் ஒன்றை வாங்கும்போதோ, எச்&எம் ஆடை ஒன்றை வாங்கும்போதோ, அல்லது இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களை வாங்கும்போதோ, இறுதி விற்பனை விலையின் ஒரு சிறு பகுதி மட்டுமே அந்தப் பொருள் உற்பத்தி செய்யப்பட்ட நாட்டின் ஜி.டி.பி.-யில் சேர்கிறது. அதன் பெரும்பகுதி, எந்த நாட்டில் அந்தப் பொருள் நுகரப்படுகிறதோ அந்த நாட்டின் ஜி.டி.பி-யில் சேர்க்கப்படுகிறது. இதில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று நினைப்பவர் ஒரு பொருளாதாரவியலாளராக மட்டுமே இருக்க முடியும்.

Bermuda
2007-ல் உலகிலேயே அதிக தனிநபர் உள்நாட்டு உற்பத்தி கொண்ட நாடு எது தெரியுமா? அது பெர்முடா

ஜி.டி.பி புள்ளிவிபரங்கள் தோற்றுவிக்கும் இந்த சுயமுரண்களுக்கு இன்னும் துலக்கமான அதிர்ச்சியளிக்கும் உதாரணம் ஒன்றை பார்ப்போம். 2007-ல் உலகிலேயே அதிக தனிநபர் உள்நாட்டு உற்பத்தி கொண்ட நாடு எது தெரியுமா? அது பெர்முடா. அதாவது பெர்முடா நாட்டின் குடிமக்கள் இந்த பூமிப்பரப்பிலேயே மிக அதிக உற்பத்தித் திறன் படைத்தவர்கள். செப்டம்பர் 2001-ல் உலக வர்த்தக மைய தாக்குதலைத் தொடர்ந்து வேலியிடப்பட்ட நிதியங்கள் புதிய புகலிடம் தேடின. அவை சென்றடைந்த பெர்முடா என்ற இந்த வரியில்லா சொர்க்கத்தீவு அதுவரை முதல் இடத்தில் இருந்த லக்சம்பர்கை முந்தி உலகின் அதிக தனிநபர் உள்நாட்டு உற்பத்தி கொண்ட நாடாக மாறியது. மேலும், காத்ரினா புயலைத் தொடர்ந்து பெர்முடா மேலும் வளர்ச்சி அடைந்தது. காத்ரினா புயலுக்குப் பின் காப்பீட்டு பிரீமியங்கள் சர்வதேச அளவில் அதிகரித்தன. குறுகிய கால நிதிமூலதனம் மறுகாப்பீட்டு துறையில் அதிகமாக பாய்ந்தது. அந்தத் துறையின் முக்கியமான மையங்களில் ஒன்று பெர்முடா. இவ்வாறாக, உலகின் தனிநபர் உற்பத்தித் திறன் மிக அதிகமான நாடாக வரிசைப்படுத்தப்பட்டது பெர்முடா. இருந்த போதும், கடலோர பார்களில் தயாரிக்கப்படும் காக்டெய்ல்களும், பிற மேட்டுக்குடி சுற்றுலா சேவைகளும்தான் பெர்முடாவில் நடக்கும் ஒரே உற்பத்தி நடவடிக்கை.31

இன்னொரு பக்கம், பெர்முடாவுக்கு 1,600 கிலோமீட்டர் தெற்கு-தென்மேற்காக உள்ள டொமினிகன் குடியரசில் 57 ஏற்றுமதி உற்பத்தி மண்டலங்களில் 1.54 லட்சம் தொழிலாளர்கள் குறைகூலிக்கு உழைத்து தேய்ந்து கொண்டிருக்கிறார்கள். முக்கியமாக வட அமெரிக்கச் சந்தைக்கு அனுப்புவதற்காக காலணிகளையும் ஆடைகளையும் அவர்கள் உற்பத்தி செய்கின்றனர்.32 வாங்கும் திறன் அடிப்படையிலான டாலர் மதிப்பில் அந்நாட்டின் தனிநபர் ஜி.டி.பி பெர்முடாவின் ஜி.டி.பி-ல் 8 சதவீதம், சந்தை செலாவணி வீதத்தில் பார்க்கும் போது அது 3 சதவீதம் மட்டுமே; 2007-ம் ஆண்டு தனிநபர் உற்பத்தியைப் பொறுத்த வரை சி.ஐ.ஏ உலகத் தகவல்கள் கையேட்டில் அது பெர்முடாவுக்குக் கீழே 97-வது இடத்தில் பின்தங்கி இருந்தது. இருப்பினும், எந்த நாடு உலக வளத்துக்கு அதிக பங்களிப்பு செய்கிறது, பெர்முடாவா அல்லது டொமினிகன் குடியரசா?

Leather Factory
டொமினிகன் குடியரசில் 57 ஏற்றுமதி உற்பத்தி மண்டலங்களில் 1.54 லட்சம் தொழிலாளர்கள் குறைகூலிக்கு உழைத்து தேய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பெர்முடாவையும், டொமினிகன் குடியரசையும் ஒப்பிடுவது ஒரு தனிச்சிறப்பான விஷயம்தான். பெர்முடாவின் ஏற்றுமதியான “நிதித்துறை சேவைகள்” உற்பத்தி சாராத நடவடிக்கைகள். அவை டொமினிகன் குடியரசு போன்ற நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் மதிப்புகளை குவித்து, அவற்றை முதலாளிகளுக்கு பிரித்துக் கொடுக்கும் மையமாக உள்ளன. “தனிநபர் உற்பத்தி” வேலியிடப்பட்ட நிதிய வர்த்தகர்களும், ஆலை தொழிலாளர்களும் சமூகத்தின் நலனுக்கும் அளிக்கும் பங்களிப்பின் உண்மையான சரியான அளவீடு என்றால் பெர்முடா, டொமினிகன் குடியரசு ஆகிய இரண்டு நாடுகளின் இடம் நிச்சயமாக நேர் எதிராக இருந்திருக்க வேண்டும்.

ஜி.டி.பி தோற்றமயக்கத்தை இன்னும் நெருக்கமாக புரிந்து கொள்வதற்கு ஒரு சுயமுரணை பார்க்கலாம் : வால்-மார்ட், டாப் ஷாப் போன்ற கடைகளில் பொருட்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதற்கு சீனா மற்றும் பிற காலணி, அணிகலன் உற்பத்தியாளர்களிடமிருந்து போட்டி தீவிரமாவதாக வைத்துக் கொள்வோம். இதன் விளைவாக டொமினிகன் குடியரசு முதலாளிகள் தமது தொழிலாளர்களின் கூலிகளை குறைக்க வேண்டியது வரும். இந்த போட்டி புதிய உற்பத்தி முறைகளால் இல்லாமல் சீனாவில் தொழிலாளர்களின் கூலி குறைவதால் ஏற்பட்டது என்றும் வைத்துக் கொள்ளலாம். வேறு விதமாகச் சொல்லப் போனால், இந்தப் பண்டங்களை உற்பத்தி செய்வதற்கு தேவைப்படும் சமூக உழைப்பு நேரம் மாறவில்லை. இந்நிலையில் கூலி குறைந்திருப்பது, சுரண்டல் அதிகரிப்பதையும், உபரிமதிப்பு வீதம் (லாபம்) அதிகரித்திருப்பதையும் காட்டுகிறது.

காலணி தொழிலாளர்கள் அதிகமாகச் சுரண்டப்படுவதன் விளைவாகத் தோன்றும் கூடுதல் உபரிமதிப்பில் ஒரு பங்கு மட்டுமே அந்த நாட்டு முதலாளிகளின் லாபத்தில் சேர்கிறது. எஞ்சிய பகுதி ஒட்டு மொத்த முதலாளித்துவ உற்பத்தியின் உபரிமதிப்புகளின் தொகுப்புக்கு போய்ச் சேருகிறது. அது பல்வேறு வகையான முதலாளிகளுக்கிடையே லாபமாக பகிர்ந்து கொள்ளப்படுகிறது. அதில் ஒரு பகுதி, நுகர்வோரின் நுகர்வு அளவை அதிகரிக்கும் வகையில் அவர்களுக்கும் ஒரு பகுதி சேருகிறது.

டொமினிகன் குடியரசில் உண்மையான கூலி குறைக்கப்படுவதன் விளைவாக அந்நாட்டு தொழிலாளர்களின் உழைப்பு முதலாளிகள் ஈட்டும் உபரிமதிப்புக்கும், லாபத்துக்கும் இன்னும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஆதாரமாக மாறுகிறது. ஆனால், ஜி.டி.பி, வர்த்தகம் தொடர்பான புள்ளிவிபரங்கள் இதற்கு நேர் எதிர் மாறான முடிவுக்கு நம்மை இட்டுச் செல்கின்றன : டொமினிகன் குடியரசில் கூலி குறைவது அதன் ஏற்றுமதி பொருட்களின் விலைகளை வீழ்ச்சியடையச் செய்கிறது; டொமினிகன் குடியரசு உலக செல்வத்துக்கும் வழங்கும் பங்களிப்பும் குறைகிறது. டொமினிகன் குடியரசு தொழிலாளர்களின் உற்பத்தித் திறனும் இதே வகையில்தான் அளவிடப்படுகிறது. உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி விலை குறைவது தொழிலாளரின் உற்பத்தித் திறன் குறைவதாக பார்க்கப்படுகிறது. இதுதான் உற்பத்தித் திறனை அளவிடுவதற்கு இப்போது பயன்படுத்தப்படும் நடைமுறை.

ஆனால், உண்மையில் இந்தத் தொழிலாளர்கள் முன்பு உற்பத்தி செய்த அதே எண்ணிக்கையிலான காலணிகளையே உற்பத்தி செய்கின்றனர், ஆனால் குறைவான பணத்தை கூலியாகப் பெறுகின்றனர். இதனால் அவர்கள் “மூலதனத்துக்கு உற்பத்தித் திறன்” அதிகமானவர்களாக மாறுகிறார்கள். இருப்பினும், மதிப்புக் கூடுதல் பற்றிய தரவுகள் அவர்களது உற்பத்தித் திறன் வீழ்ச்சியடைந்ததாக அறிவிக்கின்றன. “உழைப்பின் உற்பத்தித் திறன்” பற்றிய புள்ளிவிபரங்கள், ஜி.டி.பி, வர்த்தகம் தொடர்பான புள்ளிவிபரங்களைப் போலவே திரிக்கப்பட்டவையாக இருக்கின்றன.

GDP illusion
“உழைப்பின் உற்பத்தித் திறன்” பற்றிய புள்ளிவிபரங்கள், ஜி.டி.பி, வர்த்தகம் தொடர்பான புள்ளிவிபரங்களைப் போலவே திரிக்கப்பட்டவையாக இருக்கின்றன.

உண்மையில், உலக முதலாளித்துவத்தை புரிந்து கொள்வதற்கான திறவுகோல், “உழைப்பின் உற்பத்தித் திறன்” என்பதற்கு நாம் என்ன பொருள் கொள்கிறோம் என்பதையும், அதை நாம் எப்படி அளவிடுகிறோம் என்பதையும் பொறுத்திருக்கிறது. பொருளாதாரவியல் அறிஞர்களும், புள்ளியியலாளர்களும், ஒவ்வொரு தொழிலாளியும் சேர்க்கும் மதிப்பை கணக்கிடுகின்றனர். ஆனால், மார்க்சிய அரசியல் பொருளாதாரம் மிகவும் வேறுபட்ட ஆரம்பப் புள்ளியைக் கொண்டிருக்கிறது : மைய நீரோட்டத்தின் உற்பத்தித் திறன் என்ற கருதுகோள் விலையையும், மதிப்பையும் போட்டு குழப்பிக் கொள்கிறது. அதன்மூலம், இரண்டுக்கும் இடையே உள்ள சிக்கலான உறவை மறைந்து போகச் செய்து விடுகிறது. மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, “உற்பத்தித் திறன்” என்பது மார்க்ஸ் தன்னுடைய மகத்தான கண்டுபிடிப்புகளில் ஒன்றாக கருதிய “உழைப்பு பயன்மதிப்பாக வெளிப்படுகிறதா அல்லது பரிமாற்ற மதிப்பாக வெளிப்படுகிறதா என்பதன் அடிப்படையிலான அதன் இரட்டைத் தன்மையை” உள்ளடக்கிய முரண்பாடுகளின் ஐக்கியம்.33

(தொடரும் …)

முந்தைய பாகங்கள்:

  1. ஆப்பிள் ஐஃபோன் தரமும் ஷென்சென் நகர தொழிலாளிகளின் தற்கொலையும் !
  2. ஆப்பிள் நிறுவனம் சீனாவிலிருந்து திருடுவது எவ்வளவு ?
  3. ஜி.டி.பி மாயை : மதிப்புக் கூட்டலும் மதிப்பு கைப்பற்றலும் – ஜான் ஸ்மித்
  4. அவர்கள் ஒரு கோப்பை காஃபியைக் கூட விட்டு வைக்கவில்லை !
  5. உலகம் உழைக்கிறது – அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் நாடுகள் வாழ்கிறது !

மொழிபெயர்ப்பு : குமார்
ஆங்கில மூலம்
: Value Added versus Value Capture by John Smith
நன்றி : Monthly Review
நன்றி: புஜதொமு – ஐ.டி. ஊழியர்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரை. 

லைக்கா குழுமம் : மோடிக்கு வரவேற்பு – ராஜபக்சேவுடன் தொழில் கூட்டணி !

10

மோடி – வேதாந்தா – லைக்கா – ரஜினி 

ங்கிலாந்து அரச குடும்பம் – ஆளும் கட்சியோடு மட்டும் உறவு கொண்டு லைக்கா குழுமம் கொழிக்கவில்லை. இலங்கையின் ராஜபக்சேவோடு நெருக்கமான தொழில் உறவும் இந்தியாவின் மோடிக்கு இங்கிலாந்தில் புரவலராகவும் பணியாற்றியுள்ளது.

செப்டம்பர் 2015-ல் இங்கிலாந்து சென்ற மோடியை வரவேற்பதற்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் சுமார் 60,000 பேர் கலந்து கொள்ளும் நிகழ்வு ‘இங்கிலாந்து மோடியை வரவேற்கிறது’ என்ற பதாகையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்நிகழ்வில் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த அப்போதைய இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கலந்து கொண்டார்.

Lyca productions
தமிழ்நாட்டின் சினிமாத்துறை தாதாவாக உருவெடுக்கும் லைக்காவின் சுபாஷ்கரன்.

அந்நிகழ்வு நடைபெற்ற லண்டன் வெம்பிளி அரங்கத்தின் வாடகை மட்டும் 2 மில்லியன் பவுண்டுகள் (சுமார் ரூ. 17.32 கோடி), மொத்த செலவு சுமார் ரூ. 25 கோடி. இச்செலவுத் தொகை அனைத்தையும் பொறுப்பெடுத்துக் கொண்டதோடு மோடி பிராண்டை விளம்பரப்படுத்தி உதவிய பன்னாட்டு நிறுவனங்களில் சுபாஷ்கரனின் லைக்கா மொபைல் நிறுவனமும் ஸ்டெர்லைட் இழிபுகழ் அனில் அகர்வாலின் வேதாந்தா நிறுவனமும் முன்னிலை வகித்தன. ஆகவேதான் லைக்காவின் நடிகரான ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்று வந்து போராடும் மக்களை சமூகவிரோதிகள் என்று சொன்னதன் பின்னே அவரது நலனும், லைக்காவின் நலனும், வேதாந்தாவின் நலனும், பா.ஜ.க-வின் நலனும் உள்ளன.

அதோடு லைக்கா நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ராஜு மகாலிங்கம் ரஜினி மக்கள் மன்றத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ராஜு மகாலிங்கம் 2005-2011 காலத்தில் லைக்காடெல், லைக்கா மொபைல் நிறுவனங்களின் இந்திய தலைமை அதிகாரியாகவும், பின்னர் லைக்கா புரொடக்சன்சின் தலைமை செயல் அதிகாரியாகவும் செயலாற்றியுள்ளார்.

rajini kanth
லைக்காவின் நடிகரான ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்று வந்து போராடும் மக்களை சமூகவிரோதிகள் என்று சொன்னதன் பின்னே அவரது நலனும், லைக்காவின் நலனும், வேதாந்தாவின் நலனும், பா.ஜ.க-வின் நலனும் உள்ளன.

ராஜு மகாலிங்கத்தின் தலைமையில்தான் ரஜினி மக்கள் மன்றம், ஒரு தேர்ந்த கார்ப்பரேட் நிறுவனம் தனது பொருளை சந்தைப் படுத்துவதைப் போல் ரஜினி பிராண்டை சந்தைப்படுத்துகிறது. ரஜினியின் படங்களை தயாரிக்கிறது லைக்கா; ரஜினியின் அரசியல் செயல்பாடுகளை தயாரிக்கிறார் ராஜு மகாலிங்கம். அதே போன்று கமல் மற்றும் பிற முன்னணி நடிகர்களை வைத்து லைக்கா பெரும் முதலீட்டில் படங்கள் தயாரிப்பதும், தயாரிக்கப்பட்ட படங்களை பெரும் நிதியில் வாங்கி வினியோகிப்பதும் கூட சந்தேகத்திற்குரியதுதான். ஏனெனில் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகத்தையும் இவர்கள் கட்டுப்படுத்தும் போது, அரசியலைக் கட்டுப்படுத்தத் துடிக்கும் கமல் – ரஜினி போன்ற கோமாளிகளை இவர்கள் பெரும் நிதி கொடுத்து கட்டுப்படுத்துவது இயல்பாக நடக்கும்.

சிஸ்டம் கெட்டுவிட்டது என்று சொல்லி அரசியலுக்கு வந்துள்ள ரஜினி, தூத்துக்குடியில் போராடிய மக்களை சமூக விரோதிகள் என்று சொன்னது மற்றும் தூத்துக்குடியில் ‘யார் நீங்க’ என்று கேட்ட இளைஞர் சந்தோசை ரஜினி மக்கள் மன்றத்தினர் மிரட்டியதன் பின்னணியும் இதுதான். சொல்லப்போனால் மிரட்டப்பட்ட இளைஞர் சந்தோசின் வீடியோவை ராஜு மகாலிங்கமே வெளியிடுகிறார். ரஜினியை முதலீடாக்கி தமிழக அரசியல், இந்திய அரசியல், பொருளாதார திட்டங்கள் என லைக்கா தீர்மானித்து செயல்படுவதற்கு மேற்கண்ட நிகழ்வுகளே சாட்சி !

கடந்த 2016, மே 31-ல் இந்திய தொலைதொடர்பு அமைச்சகம், தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) பரிந்துரையின் அடிப்படையில் செல்பேசி மெய்நிகர் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு அனுமதியளித்தது. பலதரப்பட்ட சேவை வழங்கும் நிறுவனங்களைக் கொண்ட இந்திய சந்தையின் நடைமுறைச் சிக்கல்களால் செயல்படுத்தப்படாமல் உள்ளது. ரிலையன்ஸ் ஜியோவின் மூலம் முகேஷ் அம்பானி ஏகபோகத்தை அடையும்போது ஒருவேளை லைக்கா மற்றும் இதர நிறுவனங்கள் ஜியோவிற்கு கீழ் மெய்நிகர் சேவை வழங்கும் நிறுவனங்களாக செயல்பட துவங்கக் கூடும்.

ராஜபக்சே + லைக்கா = ஊழல் + கருப்புப் பணம்.

இலங்கையில் தமிழ் மக்களை இனப்படுகொலை செய்த ராஜபக்சே கும்பலோடு லைக்காவிற்கு இருக்கும் உறவு இன்னும் ஆழமானது. ஒருவேளை ராஜபக்சே அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் லைக்கா நிறுவனம் ராஜபக்சேவின் அதானியாக மாறியிருக்கும்.

rajapaksha
ராஜபக்சே + லைக்கா = ஊழல் + கருப்புப் பணம்.

லைக்காவிற்கும் ராஜபக்சே குடும்பத்திற்குமான உறவு 2005-ம் ஆண்டிலிருந்தே தொடங்குகிறது. லங்காநியூஸ்வெப் இணையதளம் வெளியிட்ட தகவலில் 2005-ம் ஆண்டு லைக்கா 200 மில்லியன் ரூபாய்கள் தேர்தல் நிதி வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளது. ஜானகி விஜயரத்ன என்ற பெண் ஒருவர் மூலமாக ராஜபக்சே சகோதரர் பசில் ராஜபக்சேவிற்கு 2005-ம் ஆண்டு இந்நிதி கைமாற்றப்பட்டதாக லங்காநியூஸ்வெப் தெரிவிக்கிறது.

2006-ம் ஆண்டு ராஜபக்சே ஆட்சியில் ஸ்கைநெட் என்ற லெட்டர் பேட் நிறுவனம் தொலை தொடர்பு சேவை வழங்கும் நிறுவனமாக பதிவு செய்து துவங்கப்படுகிறது. ஸ்ரீசேனா மற்றும் கே.எம்.எஸ் பண்டாரா என்ற இருவர் 10 இலங்கை ரூபாய் மதிப்புள்ள இரண்டு பங்குகளில் ஆளுக்கு ஒரு பங்கைக் கொண்டு அதன் பங்குதாரர்களாக இருக்கின்றனர். அதாவது அந்நிறுவனத்தின் மொத்த மதிப்பு 20 இலங்கை ரூபாய்கள். 175/2 பழைய கொட்டவா ரோடு, மிரன்ஹா, நியுகேகொடா, எனும் முகவரியில் தொடங்கப்படுகிறது இந்த உப்புமா நிறுவனம். இதன் பின் பொறியாளர் அஜந்தா கருணதாசா என்பவர் இயக்குனராக இணைக்கப்படுகிறார். ஆவணங்களில் இவருடைய வசிப்பிட முகவரியாக ஏற்கனவே நிறுவனம் ஆரம்பிக்க கொடுக்கப்பட்ட முகவரியே நியுகேகொடா முகவரியே குறிப்பிடப்படுகிறது. இதன் பின் இந்நிறுவனம் ஒராண்டுக்கும் மேல் எந்த செயல்பாடும் இன்றி ஆழ்ந்த தூக்கத்திலிருக்கிறது. அதனால்தான் இவைகள் உப்புமா கம்பெனி என்று அழைக்கப்படுகிறது. பினாமி நிறுவனங்கள் பலவும் இப்படியான செயல்பாடுகளைக் கொண்டிருக்கின்றன.

கொல்லப்பட்ட சண்டே லீடர் பத்திரிக்கையின் ஆசிரியர் லசந்தா

இந்தக் காலகட்டத்தில் அரசு நிறுவனமாக சிறீலங்கா டெலிகாம் கம்பியில்லா சேவைக்கான (WiMAX) என்ற 2G அலைக்கற்றை சேவைக்கான உரிமத்தைப் பெற ஒழுங்கமைப்பு ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தது. தனியார் தொலைபேசி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி சிறீலங்கா டெலிகாமிற்கு நிராகரிக்கபட்டது. அப்போது தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது அதிபர் ராஜபக்சே என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி ராஜபக்சே கும்பல் என்பது இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, மொத்த இலங்கை மக்களுக்குமே எதிரி என்று நிரூபிக்கப்படுகிறது. இனப்படுகொலையும், தனியார்மய ஆதரவும் வேறு வேறு அல்ல என்பதோடு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு பிறகு மொத்த இலங்கையை சுருட்டுவதற்கு ராஜபக்சே திட்டம் போட்டிருந்ததையும் இது காட்டுகிறது.

ஸ்ரீலங்கா தொலை தொடர்பு நிறுவனத்திற்கு ஒதுக்கப்படாத கம்பியில்லா சேவைக்கான (WiMAX) உரிமம் லெட்டர் பேட் கம்பெனியான ஸ்கைநெட்டுக்கு மார்ச் 2007-ல் ஒதுக்கப்படுகிறது. பின்னர் மார்ச் 15, 2007 அன்று ஸ்கைநெட்டின் 9,50,000 (95%) பங்குகளை ஹாஸ்டிங்க்ஸ் ட்ரேடிங்க் ஈ சர்விசஸ் என்ற போர்ச்சுக்கலை சேர்ந்த லைக்காவின் கிளை நிறுவனம் வாங்குகிறது. இப்போது வெறும் 20 ரூபாய் கம்பெனி 9,50,000 இருபது ரூபாய்கள் மதிப்புள்ள கம்பெனியாகிவிட்டது. லைக்காவின் கரம் பட்டதும் ஒரு உப்புமா கம்பெனி, சரவண பவன் போன்றொதொரு பெரும் ஓட்டலாக மாறிவிட்டது.

himal
வலதுப்புறத்தில் ராஜபக்சேவின் மருமகன் ஹிமல் லலீந்திர ஹிட்டிராச்சி

இரண்டு வாரம் கழித்து பொறியாளர் அஜந்தா கருணதாசா தனது இயக்குனர் பதவியிலிருந்து விலகுகிறார். அதே சமயத்தில் ராஜபக்சேவின் மருமகன் ஹிமல் லலீந்திர ஹிட்டிராச்சி 5% பங்குகளுடன் இயக்குனர் பொறுப்பை ஏற்கிறார். ஹிமல் லலீந்திர ஹிட்டிராச்சியின் ஆவணங்களிலும் வசிப்பிடமாக அதே நியுகேகொடா முகவரியே  குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் ஒட்டுமொத்த WiMax தொழில் நுட்பதிறன் சேவையின் பெரும் தொழில் அதிபராக மாறுகிறார் ராஜபக்சே மருமகன்.

சிறீலங்கா டெலிகாம், ஸ்கைநெட்டிடம் இருந்த அலைக்கற்றை உரிமத்தை பயன்படுத்த 100 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஒப்பந்தம் செய்துகொள்ள நிர்பந்திக்கப்பட்டது. மேலும் ஸ்கைநெட்டில் முதலீடு செய்ய சிறீலங்கா டெலிகாம் நிர்பந்திக்கப்பட்டது.  இதன் மூலம் ராஜபக்சே குடுபத்தினரும் லைக்கா நிறுவனமும் இணைந்து நடத்திய 100 மில்லியன் டாலர் மதிப்பிலான (சுமார் ரூ. 650 கோடி) ஊழல்களையும் சண்டே லீடர் பத்திரிக்கை வெளிக்கொண்டு வந்தது. பின்னர் அதன் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க சந்தேகத்திற்கிடமான வகையில் படுகொலை செய்யப்பட்டார். கவனியுங்கள், அரசு நிறுவனத்தின் நிதியை கைப்பற்றியது, ஒரு தனியார் நிறுவனத்திற்கு உரிமம் வழங்கியது, தனது குடும்பத்தினரை நிறுவன அதிபர்களாக மாற்றியது என ராஜபக்சே வெளிப்படையாக ஊழல் செய்கிறார். அவை அத்தனைக்கும் லைக்காவே அடிப்படையாக இருக்கிறது. இறுதியில் இந்த ஊழல்களை வெளிக் கொணர்ந்த லசந்த கொல்லப்படுகிறார்.

ஆனால் லைக்காவின் தயாரிப்பில் விஜய் நடித்த கத்தி படம் வெளிவந்த போது சீமான், சுபாஷ்கரனுக்கு ஆதரவாக நின்றது குறிப்பிடத்தக்கது. ஆக இனப்படுகொலை செய்த ராஜபக்சேவின் ஊழலை ஒரு சிங்களர் வெளிக் கொணர்ந்தார் – அதற்காகவே கொல்லப்படுகிறார், இனப்படுகொலையை எதிர்ப்பதாகக் கூறும் சீமான் லைக்காவை ஆதரிக்கிறார். இந்த முரண்பாடே லைக்காவின் இடம் என்ன என்பதையும், நமக்குத் தெரிந்த அரசியல் உலகம் எப்படி இயங்குகிறது என்பதையும் உணர்த்திவிடும்.

subaskaran
குடும்பத்துடன் சுபாஷ்கரன் அல்லிராஜா

இப்படியாக லைக்காவின் நிதியோடு ராஜபக்சே குடும்பத்தால் பினாமி நிறுவனம் ஆரம்பிக்கப்படுகிறது. இலங்கை அரசு நிறுவனத்திற்கு உரிமம் மறுக்கப்படுகிறது. பினாமி கம்பெனி உரிமத்தைப் பெறுகிறது. அதன் பங்குகளை லைக்கா சுபாஷ்கரன் வாங்குகிறார். அந்த உரிமத்தில் ஒரு பகுதியை பயன்படுத்திக்கொள்ள அரசு நிறுவனம் நிர்பந்திக்கப்படுவதோடு அப்பினாமி நிறுவனத்தில் அரசின் முதலீட்டையும் போடச் செய்து நடந்த ஊழல், கருப்புப் பணப் பரிவர்த்தனைகளில் தொடர்புடையவர்தான் லைக்கா சுபாஷ்கரன் அல்லிராஜா. ஆக லைக்காவின் திரைப்படத் தயாரிப்பில் பணப் பெறும் தமிழக நடிகர்களோ தொழில் நுட்பக் கலைஞர்களோ அனைவரும் அந்தப் பணத்தில் கொல்லப்பட்ட ஈழத்தமிழ் மக்களின் இரத்தம் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. ஒருவேளை அவர்களே மறுத்தாலும் நாம் அதை மறக்கவோ மன்னிக்கவோ கூடாது.

மலேசியா, சிங்கப்பூர், மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பா போன்றவற்றை இணைக்கும் தெற்காசியா-மத்திய கிழக்கு-மேற்கு ஐரோப்பா (SEA-ME-WE) என்ற கடலடி ஒளியிழை (submarine optical fibre) தடத்தின் இணைப்புப் புள்ளியாக இலங்கை இருக்கிறது. இந்த இணைப்புப் புள்ளியை இலங்கை அரச நிறுவனமான சிறீலங்கா டெலிகாம் நிர்வகிக்கிறது. இவ்வழித் தடத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு கொள்ளை லாபமீட்ட சர்வதேச தகவல் தொடர்பு நிறுவனங்கள் போட்டி போடுகின்றன.

spiritual politics
ஆன்மீக அரசியல்வாதிகளும் கூட்டு களவாணிகளும்

2006-லிருந்து ராஜபக்சே ஆட்சியில் இருந்த காலப்பகுதி முழுவதும் புலம்பெயர் நாடுகளிலிருந்து இலங்கைக்கு நடந்த தொலைத் தகவல் பரிமாற்றங்கள் அனைத்தும் லைக்கா – சிறீலங்கா டெலிகாம் – ஸ்கைநெட் வழியாகவே நடந்தன. இந்நிறுவனங்கள் குறிப்பாக ஸ்கைநெட்-லைக்கா மொபைல் நிறுவனங்கள்- தகவல் பரிமாற்றங்கள் அனைத்தையும் இலங்கை பேரினவாத அரசுக்காக ஒட்டுக்கேட்டு, உளவு பார்த்து இனப் படுகொலைக்கு உதவியிருப்பதற்கும் சாத்தியமிருக்கிறது.

இனப்படுகொலைக்குப் பின்னர் உலகின் ஜனநாயகவாதிகளும், முற்போக்கு சக்திகளும் இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடக்கக்கூடாது என்று குரலெழுப்பிக் கொண்டிருந்த வேளையில், லைக்கா நிறுவனமோ மாநாடு நடத்துவதற்கு முதன்மையான நிதி வழங்குனராக செயல்பட்டது. காமன்வெல்த் மாநாட்டின்போது இலங்கை இராணுவத்துடன், இராணுவ ஹெலிகாப்டரில் சுற்றித் திரிந்தார் சுபாஷ்கரன் அல்லிராஜா. இதே நேரம் லைக்காவிடம் ஊதியம் பெற்ற எழுத்தாளர் ஜெயமோகன், இலங்கை அரசை ஆதரிக்கும் ஈழத்தமிழரின் விருந்துபசாரத்தில் ஆஸ்திரேலியாவில் கழித்துக் கொண்டிருந்தார். இனம் இனத்தோடு எப்படி ’கொலைநயத்தோடு’ ஒன்று சேர்கிறது பாருங்கள்!

2006-ல் மிகின் லங்கா என்ற குறைந்த கட்டண விமான சேவை நிறுவனத்தை மக்கள் பணத்தைக் கொண்டு ராஜபக்சே அரசு துவங்கியது. இதற்கு அமைச்சரவையின் ஒப்புதலைக் கூட ராஜபக்சே பெறவில்லை. வரவு செலவு ஆண்டறிக்கையின் படி 2008-ம் ஆண்டில் சுமார் 320 கோடி இலங்கை ரூபாயும், 2009-ம் ஆண்டில் சுமார் 130 கோடி இலங்கை ரூபாயும், 2010-ம் ஆண்டில் சுமார் 120 கோடி இலங்கை ரூபாயும், இழப்படைந்ததாக அறிவித்தது. மிகின் லங்கா தனது நட்டத்தை அறிவித்த பின் 2014-ஆம் ஆண்டில் லைக்கா பிளை Level 6, East Tower, World Trade Center, Colombo (Number of Company: PV 96006 ) என்ற முகவரியில் கொழும்பில் தனது கிளையை ஆரம்பிக்கிறது.

mihin lanka
அரசாங்கத்தால் தொடங்கப்பட்டு  லைக்காவால் ஒழிக்கப்பட்ட மிகின் லங்கா ஏர்லைன்ஸ்

ராஜபக்சேவின் மைத்துனர் தலைவராக இருந்த சிறீலங்கன் ஏர்லைன்ஸ் லைக்கா ஃப்ளை நிறுவனத்தை முக்கிய தொழில் கூட்டாளியாக அறிவித்திருந்தது. சிறீலங்கன் ஏர்லைன்சின் இங்கிலாந்து முகவராகவும் லைக்கா ஃப்ளை செயல்பட்டு வருகிறது. லைக்கா ஃப்ளை இலங்கை அரசின் சுற்றுலாத் துறையின் அதிகாரப்பூர்வ ஐரோப்பிய முகவராக செயல்பட்டு இன அழிப்பு போருக்குப் பின் இலங்கை சுற்றுலாவை வைத்தும் கல்லா கட்டுகிறது. அதாவது ஒரு மலிவு கட்டண அரசு சேவையை துவங்கி ஊழலின் மூலம் ஒழித்துவிட்டு அதனிடத்தில் தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளனர்.

2014, மார்ச் மாதம் லண்டனில் வந்துராம்ப காசப்ப தேரர் என்ற சிங்களப் பேரினவாத பவுத்த பிக்கு நடத்திய உணவுத் திருவிழாவின் முழுச்செலவையும் பொறுப்பேற்றது லைக்காவின் துணை நிறுவனமான லைக்கா ஃப்ளை (LycaFly).

இங்கிலாந்து பல்கலைக் கழகங்களில் புலம்பெயர் தமிழ் மாணவர் ஒன்றியங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு முன்னர் புலி ஆதரவு அமைப்புகளாகச் செயல்பட்ட இவ்வமைப்புக்களுக்கு லைக்கா குழுமம் 5 ஆயிரத்திலிருந்து 6 ஆயிரம் பவுண்ட் வரையிலான நிதியுதவிகளை அளித்துள்ளது. சில பல்கலைக்கழக மாணவர் அமைப்புக்களின் இணையங்களில் லைக்காவிற்கான இலவச விளம்பரங்களும் வெளியாகின.

chandrika
ஒவ்வொரு நாட்டின் அரசியல்வாதிகளையும் கைக்குள் போட்டுகொண்டு ஊழல் மோசடிகளை செய்து ஆசிய பகுதிகளிலே தாதாவாக உருவெடுக்கும் லைக்கா.

இனப்படுகொலைக்கு பின்னர் புலம்பெயர் ஊடகங்கள், வானொலிகள் லைக்கா – லிபாரா நிறுவனங்களால் கையகப்படுத்தப்பட்டன; விளம்பரங்களின் மூலம் இலங்கை அரசின் தொங்குசதையாக மாற்றப்பட்டன.

ராஜபக்சே குடும்பத்துடன் லைக்கா நிறுவனத்தின் வியாபார மற்றும் அரசியல் தொடர்புகளை  தொடர்ச்சியாக வெளியிட்டு வந்ததற்காக லங்கா நியூஸ் வெப் மற்றும் இலண்டனில் செயல்படும் இனியொரு போன்ற சில இணைய ஊடகங்கள் தொடர்ச்சியாக தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு சில நாட்கள் முடக்கபட்டன.

2009-ம் ஆண்டு இனப்படுகொலைக்கு முற்பட்ட காலத்திலிருந்தே ராஜபக்சே அரசுடன் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த லைக்காவின் நடவடிக்கைகள் இன்றைய இலங்கை அரசாலும் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை. மாறாக லைக்காவின் மாதிரி கிராமத்தை சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க திறந்துவைத்துள்ளார்.

லைக்கா குழுமம் தொழில் செய்யும் எந்த கட்டமைப்பையும் தானே உருவாக்கவில்லை; மாறாக ஐரோப்பாவில் மற்ற நிறுவனங்களின் கட்டமைப்பை பயன்படுத்தும் உரிமத்தை பெறுதல் (லைக்கா மொபைல்), இலங்கையில் ஊழல், கருப்புப் பண பரிவர்த்தனைகளின் மூலம் நிறுவனங்களை கையகப்படுத்துதல், பங்குகளை வாங்குவது போன்றவை மூலம் தனது தொழிலை செய்துவருகிறது.

பிரிட்டன் அரசகுடும்பம் மற்றும் இங்கிலாந்து அரசுடனான உயர்மட்ட உறவு, இலங்கை சிங்களப் பேரினவாத அரசுடனான தொழில் மற்றும் அரசியல் தொடர்புகள், தமிழ் தேசிய அமைப்புகளுடன் உறவு, ஐரோப்பாவில் பினாமி நிறுவனங்கள், நிழலுலகத் தொடர்புகள், நடவடிக்கைகள், அம்பலப்படுத்துவோரை மிரட்டிப் பணியவைப்பது, என்று ஒரு தேர்ந்த குற்ற கும்பலுக்கே (Crime Syndicate) உரிய சகல வலைப் பின்னல்களையும் பெற்றிருக்கிறது லைக்கா குழுமம்.

இப்பேர்ப்பட்ட ‘விருது’களோடு லைக்கா நிறுவனம் தமிழ் சினிமாவின் நிரந்தர புரவலராக மாறுவதோடு ரஜினி – கமல் போன்றவர்களுக்கு பெரும் ஊதியத்தையும் அளிக்கிறது. மோடியோடும் பெரும் நட்பைக் கொண்டிருக்கிறது. இறுதியில் கூட்டிக் கழித்துப் பார்த்தால் இந்துத்துவத்தை எதிர்க்கும் தமிழ் மக்களை வீழ்த்துவதற்கு தமிழகத்தில் ஒரு அதானி தலையெடுத்து விட்டார். அவரது பெயர் சுபாஷ்கரன் அல்லி ராஜா. அவரது நிறுவனம் லைக்கா!

– முற்றும்

இளநம்பி
(வினவு புலனாய்வு குழு உதவியுடன்)

பாகம் 1: கருப்புப் பணம் = ரஜினி – ஷங்கர் – ஜெயமோகன் – லைக்கா
பாகம் 2 : லைக்காவின் மோசடி பணத்தில் கொழிக்கும் கமல் – ரஜினி – காலாக்கள் !

ஆதாரங்கள்:

உரிமை கேட்டால் சஸ்பண்ட் ! குடந்தை கல்லூரி முதல்வர் அராஜகம் !

2

ஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் அரசினர் கலைக் கல்லூரி அமைந்துள்ளது. எல்லா அரசுக்கல்லூரியைப் போன்று இந்த கல்லூரியும் அடிப்படை வசதிகள் ஏதுமற்ற நிலையில்தான் இருந்து வருகிறது. இக்கல்லூரியில் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

குடந்தை அரசு கல்லூரி

பல கிலோமீட்டர் தொலைவில் இருந்து படிக்கவரும் மாணவர்கள் அதிகாலையே கிளம்பி கல்லூரிக்கு வருவதால் தங்களது காலை உணவையும், மதிய உணவையும் உட்கொள்ள முடியாத நிலை இருந்து வந்தது. கழிப்பறை வசதிகூட இல்லாத கல்லூரியில் உணவகம்(கேண்டின்) மட்டும் இருந்துவிடுமா என்ன?.

இந்நிலையில்தான் அக்கல்லூரியில் இயங்கிவரும் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில் பல போராட்டங்கள் நடத்தப்பட்டு, அதன் மூலம் கேண்டின் வசதி பெறப்பட்டது.

இந்த நிலையில் கல்லூரியின் புதிய முதல்வராக பூங்கோதை என்பவர் பொறுப்பேற்றார். இவர் பதவியேற்றது முதல் எப்போதுமே மாணவர்கள் மத்தியில்  ஒரு ‘ஸ்ட்ரிக்ட் ஆபிசராக’ (சிடுமூஞ்சியாக) நடந்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 11.07.2018 அன்று கேண்டின் வாசலில் மாணவர்கள் சாப்பிடக் காத்துக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்த கல்லூரி முதல்வர் மாணவர்களை அங்கு நிற்கக்கூடாது என அதட்டினார்.

பதிலளிக்க வாயெடுத்த மாணவர்களை பேசவிடாமல் தனது ‘ஸ்ட்ரிக்டான’ பேச்சால் வாயடைத்தார். இதனை கவனித்த பு.மா.இ.மு. தோழர் பகத் முன் வந்து, மாணவர்கள் வெளியூரில் இருந்து வருவதாகவும், காலையில் சாப்பிட நேரம் இல்லாத காரணத்தால்தான் கல்லூரி கேண்டினில் உணவருந்துவதாகக் கூறினார்.

பகத் பேசி முடிப்பதற்குள், “அதுக்கு? வெளியூர்னா இங்க ஏன் படிக்க வந்தீங்க, முடிலைன்னா, காலையில் 5 மணிக்கே சாப்பிட்டு வா” என அதிகாரத் தொனியில் பதிலளித்துள்ளார் முதல்வர் பூங்கோதை.

மாணவர்கள் போராடிப் பெற்ற கேண்டீனில் சாப்பிடக்கூடாது என்று பேசுவதற்கு முதல்வருக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என்று பகத் பதிலளித்துள்ளார். மேலும் பல முறை மாணவ, மாணவிகளுக்கு குடிக்க நல்ல தண்ணீர் கேட்டும், நல்ல கழிப்பறை கேட்டும் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார் பகத்.

அதற்கு முதல்வர் “ இது கவர்மெண்ட் காலேஜ், கேண்டின் இப்படி தான் இருக்கும் இஸ்டம் இருந்தா சாப்பிடு, இப்படி தான் பாத்ரூம் இருக்கும் , இஸ்டம் இருந்தா போங்க.. இப்படிதான் காலேஜ் இருக்கும் இஸ்டம் இருந்தா படிங்க, இல்ல டி.சி வாங்கிட்டு கிளம்புங்க” என அதிகாரத் திமிரை காட்டியுள்ளார்.

பதிலடியாக நமது தோழர் “ எங்கள் உரிமைகளை எப்படி பெறணும்னு எங்களுக்குத் தெரியும்…. எங்களுக்கு பாடம் எடுக்குறதுதான் உங்க வேலையே தவிர, எங்களுக்கு ஆர்டர் போடறது இல்ல…” என மாணவர்களின் உரிமையை பேசியுள்ளார்.

முதல்வரோ “உங்க இடத்துல வந்து பேசறதுனாலதான், உங்களுக்குத் திமிரு, என் இடத்துக்கு வந்து பேசுங்க” என மாணவர்களை மிரட்டிவிட்டுச் சென்றுள்ளார்.

இவ்வாறு வாதம் நடக்கும்போதே மாணவர்கள் 300 பேர் சூழ, நமது தோழரின் தைரியமான பேச்சு மாணவர்களுக்கு நம்பிக்கையையும், முதல்வரின் திமிரான பேச்சு கோபத்தையும் கிளப்பியது.

மாணவர்கள் மத்தியில் “அடிப்படை வசதிகளுக்காக போராட்டம் செய்தே ஆக வேண்டும்’’ என்ற கருத்து வலுவடைந்தது. அதன் விளைவாக 12.07.2018 அன்று சுமார் 2000 மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

போராட்டத்தை கலைக்க முயன்ற முதல்வர், திரண்டிருந்த மாணவர்களின் முன் வந்து “படிக்க விருப்பான மாணவர்கள் உள்ளே போங்க’’ என மிரட்டியிருக்கிறார். மாணவர்கள் அனைவரும் உள்ளே போகாமல் முதல்வர் முகத்தில் கரியைப் பூச, அசிங்கப்பட்ட முதல்வர் ஆத்திரத்துடன் உள்ளே சென்றுள்ளார்.

உள்ளே சென்ற முதல்வர் மாணவர்களின் கோரிக்கை பற்றி அக்கறை காட்டாமல், மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல், போலீசுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். மேலும் போராடக்கூடிய மாணவர்களை அச்சுறுத்தும் வகையில், முன்னணியான நான்கு தோழர்களை குறிவைத்து சஸ்பெண்ட் செய்தது கல்லூரி நிர்வாகம்.

அதில் ஒருவருக்கு கல்லூரிக்குள் நுழைவதற்கு தடை விதித்துள்ளார், மீறி கல்லூரிக்குள் நுழைந்தால் கைது செய்யவும் உத்திரவிட்டுள்ளார் முதல்வர் பூங்கோதை.

இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த இடைநீக்கத்துக்கு காரணம் “அனுமதியின்றி போராட்டம் நடத்தி, கல்லூரி நலனுக்கு தீங்கு ஏற்படுத்தியதால் எடுக்கப்பட்ட நடவடிக்கை” என கூறியுள்ளது கல்லூரி நிர்வாகம்.

ஸ்டெர்லைட், 8 வழிச் சாலை, மீத்தேன் திட்டம், நியூட்ரினோ போன்ற தேசத்தை அழிக்கும் நாசகாரத் திட்டத்தை எதிர்த்து பேசுபவர்கள் எல்லாம் தேசவிரோதிகள் என பி.ஜே.பி குற்றஞ்சாட்டுவதைப்போல், இங்கும் கல்லூரிக்கும், கல்லூரியில் பயிலும் மாணவர்களின் நலனுக்காகவும் போராடிய மாணவர்களை கல்லூரி நலனுக்கு எதிராக செயல்படுவதாக குற்றம் சுமத்தியுள்ளனர். இனி கக்கூசுக்காக போராடினால்கூட தேசவிரோதம் என கூறுவார்கள் போலும்.

ஒரு மோடி, ஒரு எடப்பாடி மட்டுமல்ல இது போன்று முக்கிய உயர்பதவிகளில் பல மோடி’களும் எடப்பாடிகளும் உள்ளனர்..

”உரிமைகளைப் பெறாமல் விடமாட்டோம், அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம்..” என மாணவர்கள் அடுத்த கட்டப் போராட்டத்திற்கு தயாரகின்றனர்…

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, குடந்தை
தொடர்புக்கு : 97902 15184