Thursday, August 7, 2025
முகப்பு பதிவு பக்கம் 198

தமிழ் கண்டதோர் வையை, பொருநை || வி. இ. குகநாதன்

ண்மைக் காலமாகத் தமிழர் நாகரிகங்கள் தொடர்பாகப் பல்வேறு தொல்லியல் முடிவுகள் வெளிவந்து இன்ப அதிர்வுகளை ஏற்படுத்திய வண்ணமுள்ளன. அந்த வகையில் மிக அண்மையில் `பொருநை` அகழ்வாய்வு பற்றிய முடிவுகளும் வந்துள்ளன. இன்னமும் சொல்லப்போனால் தமிழ்நாட்டிலுள்ள ஆற்றங்கரைகள் எதனை அகழ்ந்தாலும் அங்கு நாகரிக எச்சங்கள் காணப்படும் என்றளவான ஒரு நிலை காணப்படுகின்றது. இந்த வகையில் முதலில் தமிழர் நிலத்திலுள்ள ஆறுகளைப் பார்ப்போம்.
பாரதியார் பாடிய பாடலொன்று தமிழர் ஆறுகளை எமக்குப் படம் பிடித்துக் காட்டும். இப்போது அப் பாடலினைப் பார்ப்போம்.
‘காவிரி, தென்பெண்ணை, பாலாறு தமிழ்
கண்டதோர் வையை, பொருநை நதி – என
மேவிய ஆறுகள் பலவோட – திரு
மேனி செழித்த தமிழ்நாடு’
என்று பாரதியார் பாடியுள்ளார்.

படிக்க :

கிறங்கடிக்கும் கீழடி : வி.இ.குகநாதன்

தமிழர் திருநாள் : விழுங்கக் காத்திருக்கும் காவிகள் ! | வி.இ.குகநாதன்

இங்குள்ள ஆறுகளின் தமிழ்ப் பெயர்களே ஒரு அறிவுசார்ந்த பெயரிடல் மரபாகவே காணப்படுகின்றது. `காவிரி` (காவேரி அல்ல) என்ற சொல்லில், `கா` என்றால் சோலை, இந்த ஆறு செல்லுமிடங்களிலெல்லாம் (மரச்)சோலையினை விரித்துச் செல்வதால், அப் பெயர் பெறும். இந்தக் காவிரி ஆறு நொய்யல் ஆற்றுடன் கலக்கும் இடத்தில்தான் கொடுமணல் உள்ளது. இந்தக் கொடுமணலே சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் `கொடுமணம்` எனும் ஊராகும்.
இத்தகைய கொடுமணல் அகழ்வாய்வு பல நாகரிக எச்சங்களை ஏற்கனவே வெளிக்கொண்டு வந்திருந்தன. `தென்பெண்ணை` , `பாலாறு` ஆகிய ஆறுகள் இன்றும் அதே பெயரிலேயேயுள்ளன. `வையை` எனப்படுவதே இன்றைய வைகை ஆறாகும். `வையை` என்பது மனதிலிடுதல் என்ற பொருளில் வரும் {வை=இடு, வைய்+அ=வைய =மனிதிலிடு (வைதல்)} . இந்த `வையை ` எனும் சொல்லும் சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளது.
“வையை சூழ்ந்த வளங்கெழு வைப்பின்
பொய்யா யாணர் மையற் கோமான்”   – புறநானாறு 71: 10-11.
மேற்குறித்த வையை ஆறு இன்று வைகை என அழைக்கப்படுகின்றது. இந்த வைகைக்கரையிலேயே கீழடி, அகரம், கொந்தகை ஆகிய இடங்கள் அமைந்துள்ளன. இந்தக் கீழடி 4-ம் கட்ட அகழ்வாய்வு முடிவுகள் பற்றி ஏற்கெனவே `கிறங்கடிக்கும் கீழடி` என்ற தலைப்பில் வினவில் ஒரு கட்டுரையாகப் பார்த்துள்ளோம்.
இப்போது ஏழாம் கட்ட ஆய்வும் முடிவுறும் நிலையிலுள்ளது. மேலுள்ள பாரதியார் பாடலில் `பொருநை` எனக் குறிப்பிடப்படுவது இன்று தாமிரபரணி என அழைக்கப்படும் ஆறாகும். பொருநை என்பதே இதன் தமிழ்ப் பெயராகும். `பொருநை` என்பது ஒப்பில்லாப் பெருமை என்ற பொருள் பெறும் என முனைவர் இரவி சங்கர் விளக்குகின்றார் {பொரு= பொருந்துதல்/ ஒப்புமை . பொருநை = ஒப்பில்லாப் பெருமை}. இன்னமும் சொன்னால், தண்பொருநை என்பதே இன்றைய தாமிரபரணியாகும் (தண்மை = குளிர்மை) .
அதே போன்று `ஆன்பொருநை` என்ற பெயரில் மற்றொரு ஆறுமுண்டு, அதுவே இன்று அமராவதி எனப்படுகின்றது. இந்த `ஆன்பொருநை` ஆற்றின் கரையிலேயே `பொருந்தல்` என்ற சங்ககால ஊரின் எச்சங்கள் அகழ்வாய்வில் வெளிவந்திருந்தன. இந்தப் பொருந்தல் அகழ்வாய்வில் கிடைத்த நெல்மணிகளையுடைய கலன் ஒன்றில் `வய்ர` என்ற தமிழி எழுத்துகள் பொறித்த சான்று கிடைத்தமையும்; அந்த நெல்மணிகள் கதிரலை கரிமக் காலக் கணிப்பில் பொ.ஆ.மு 490 எனத் தெரிய வந்தது (BCE490, AMS dating by Beta analytic, USA); கீழடி ஆய்வுகள் வெளிவருவதற்கு முன்னரே தமிழி எழுத்தானது அசோகர் பிராமியினை விடப் பழமையானது என்பதற்கான சான்றாக அமைந்தது. இப்போது பொருநை எனப் பொதுவாக அழைக்கப்படும் தண்பொருநை ஆற்றங்கரை நாகரிகத்தினை விரிவாகப் பார்ப்போம்.
பொருநை நாகரிகம்
சிவகளை, கொற்கை, ஆதிச்சநல்லூர் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வு முடிவுகளை, தமிழ்நாடு அரசானது `பொருநை` நாகரிகம் என்ற பெயரில் வெளியிட்டிருந்தது. அதில் பொருநை ஆற்றங்கரையோர ஆதிச்சநல்லூருக்கருகில் சிவகளை பறம்புப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி ஒன்றிலிருந்து நெல்மணிகள் கண்டெடுக்கப்பட்டன.
இந்த முதுமக்கள் தாழியிலிருந்த `உமி நீக்கப்பட்ட நெல்லினை` கரிமம் நீக்கிப் பார்த்த போது, அதன் வயது ஏறக்குறைய 3176 ஆண்டுகள் (2021+1155=3176) , அதாவது பொருநை ஆற்றங்கரை நாகரிகம் ஆகக் குறைந்தது பொ.ஆ.மு 1155 (BCE 1155 ) இனைச் சேர்ந்தது எனத் தெரிய வந்துள்ளது. இந்தக் காலக்கணிப்பு அனைத்துலக நடைமுறைகளுக்கேற்ப கரிமச் சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது (AMS dating by Beta analytic, USA). இதனையடுத்தே தொல்லியல் அறிஞர் கா.ராஜனும், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினும் `இந்திய வரலாறு இனித் தமிழ்நாட்டிலிருந்தே எழுதப்பட வேண்டும்` எனக் கூறியிருந்தார்கள்.
இத்தகைய தண்பொருநை ஆற்றினை புறநானூறு 11-வது பாடல் குறிப்பிடுகின்றது.
“அரி மயிர்த் திரள் முன்கை
வால் இழை, மட மங்கையர்
வரி மணற் புனை பாவைக்குக்
குலவுச் சினைப் பூக் கொய்து
தண் பொருநைப் புனல் பாயும்
விண் பொருபுகழ், விறல்வஞ்சிப்
பாடல் சான்ற விறல்வேந் தனும்மே
வெப் புடைய அரண் கடந்து,
துப்புறுவர் புறம்பெற் றிசினே:
புறம் பொற்ற வய வேந்தன்
மறம் பாடிய பாடினி யும்மே,
ஏர் உடைய விழுக் கழஞ்சின்,
சீர் உடைய இழை பெற்றிசினே!
இழை பெற்ற பாடி னிக்குக்
குரல் புணர்சீர்க் கொளைவல்பாண் மகனும்மே.
என ஆங்கு,
ஒள்அழல் புரிந்த தாமரை
வெள்ளி நாரால் பூப்பெற் றிசினே.”
– புறநானூறு
பொருள் : தண்பொருநை ஆறு பாயும் வஞ்சி எனும் நகரானது வானளாவிய புகழும் வெற்றியுமுடைய நகராகும். பொருநை ஆற்று மணலில் பெண்கள் பாவை (பொம்மை) செய்தும், பூப்பந்து எறிந்தும் விளையாடுவர். பாலை பாடிய பெருங்கோ பெரும் வீரன். இவன் புறங்கண்ட வீரச் செருக்கினைப் பாடினாள் ஒரு பாடினி. இதற்காகப் பாடினிக்கு அவன் அணிகலன்களைப் பரிசளித்தான்.
இப் பாடலில் கூறப்பட்டது போன்ற பெண் உருவப் பொம்மைகளும், தங்கத்திலான பொருட்களும் அகழ்வாய்வில் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.
கம்பரும் தண்பொருநை பற்றிப் பின்னரான காலப்பகுதியில் பாடுகின்றார்.
“பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை எனும்
திரு நதி பின்பு ஒழிய, நாகக்
கன்று வளர் தடஞ் சாரல் மயேந்திர மா
நெடு வரையும், கடலும், காண்டிர்”.
பொருள் : பொருநை என்னும் அழகிய ஆறும் பிற்பட்டுப் போக, யானைக் கன்றுகள் வாழ்ந்து நிற்கும், பெரிய தாழ்வரைகளையுடைய மகேந்திரம் என்னும் பெரிய மலையையும் தென் கடலையும் காண்பீர்கள்.
அசோகரின் கல்வெட்டுகளில் ஒன்றான `கிர்நார் கல்வெட்டு`(Girnar or Revatak Pravata ) என்ற பிராகிரத மொழிக் கல்வெட்டில் இதே `பொருநை` எனும் தூய தமிழ்ப் பெயரானது ` தாம்பபண்ணி` எனக் குறிபிடப்பட்டுள்ளது (கல்வெட்டுக் காலம் BCE 273-BCE 232 ). இந்தத் தாம்பபண்ணி இலங்கையினைக் குறிப்பதாகத் தவறாக முன்னர் கருதியமையுமுண்டு. தாமிரபரணி என்ற பெயர் எவ்வாறு ஏற்பட்டது என வேறுபட்ட கருத்துகளுண்டு (தாமிரம்- செப்பு கலந்த தண்ணீர், இலங்கையிலிருந்து வந்த தம்பபண்ணி -Thambapanni என்பதன் திரிபு, தண்பொருநை என்பதன் பிராகிரத மொழிப் பலுக்கல்). எது எவ்வாறாயினும் `தாமிரபரணி` என்ற சொல்லினை விடத் `தண்பொருநை` / `பொருநை` என்ற பழந் தமிழ்ப் பெயரினையே நாம் பயன்படுத்துவோம்; அதுவே எமக்கு ஒப்பில்லாப் பெருமையாக அமையும்.
இந்த ஆற்றங்கரையிலுள்ள ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வில் மூடியுடன் கூடிய முதுமக்கள் தாழியும் கிடைத்திருந்தது. அதே போன்று எலும்புகளுடனான முதுமக்கள் தாழிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை பற்றிய குறிப்புகள் பல பழந் தமிழ் இலக்கியங்களில் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் முதுமக்கள் தாழியில் நெல்லையும் வைத்துப் புதைக்கும் பழக்கத்தினையும் அகழ்வாய்வுகள் வெளிக் கொண்டு வந்திருந்தன.
வாய்க்கு அரிசி போடுதல் / அரிசியிடுதல் என இன்றும் சா வீடுகளில் கடைப்பிடிக்கப்படும் சடங்கு இந்த மரபின் தொடர்ச்சியாகவிருக்கலாம். நகரத்தார் நடுவே இன்றும் காணப்படும் `பச்சை குத்திப் பாய் சுருட்டல்` எனும் சடங்கும் இதன் எச்சமேயாகும். இதன்போது குத்தாணியில் பச்சை நெல்லினைப் போட்டுக் குத்தி, உமி நீக்கி அதனை வெள்ளைத் துணியில் உடலத்துடன் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்வர் (இங்கு முதுமக்கள் தாழியில் கிடைத்ததும் இத்தகைய உமி நீக்கிய நெல்லே). இதே போன்று இன்று மங்கல விழாக்களில் மட்டும் பயன்படுத்தப்படும் `நிறைநாழி` (நெல் நிரம்பிய கலன்) என்ற சடங்கு இறப்பு வீடுகளிலும் சில இடங்களில் பயன்படுத்தப்படுவதாக உரையொன்றில் பேரா.க.நெடுஞ்செழியன் குறிப்பிட்டிருந்தார் {`தமிழ் அருங்காட்சியகம் இலண்டன் ` ஏற்பாடு செய்திருந்த `தமிழர்களிடையே ஆசீவகம்` என்ற தலைப்பிலான உரையில் குறிப்பிடப்பட்ட செய்தி, சரி பார்க்கப்பட வேண்டியது}.

படிக்க :

சிந்துச் சமவெளி நாகரிகம் வேத நாகரிகம் அல்ல – மரபணு ஆய்வு முடிவுகள் !

சிந்து சமவெளி மக்களின் பிரதான உணவு மாட்டுக் கறியாம் || ஆய்வில் உறுதி

இச் செய்தி உண்மையாயின் அதுவும் ஒரு மரபுத் தொடர்ச்சியாகவே கருதப்படும்.
இந்தப் பொருநை நாகரிகம் வெளிக்கொண்டு வந்த கண்டுபிடிப்புகளையும், அதன் விளக்கங்களையும் விரிவாகத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள `பொருநை ஆற்றங்கரை நாகரிகம்` என்ற கையேட்டில் காணலாம். (இக் கட்டுரையின் இறுதிப் பகுதியில் இணைப்புள்ளது).
இப்போது வைகைக்கரை நாகரிகத்துடன் (கீழடி…) பொருநை ஆற்றங்கரை நாகரிகமும் தமிழர் கண்ட இரு பெரு நாகரிகங்களாகவுள்ளன. மீண்டும் கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாரதியாரின் பாடல் வரிகளைப் பார்ப்போம். இங்கு பாரதியார் தமிழ் ஆறுகளைச் சொல்லி வருகின்றார். அப்போது காவிரி, தென்பெண்ணை, பாலாறு என வரிசையாகச் சொல்லி வந்தவர் அவ்விடத்தில் நிறுத்தி, ” தமிழ் கண்டதோர் வையை, பொருநை” என்பார். ஆம் தமிழர் கண்ட நாகரிகங்கள் அவைதான் (வைகை, பொருநை). என்ன பொருத்தமான வரிகள் !
குறிப்பு : ’பொருநை ஆற்றங்கரை நாகரிகம்’ தமிழ்நாடு அரசின் கையேட்டினைக் காணக் கீழுள்ள இணைப்பினைச் சொடுக்குக.

வி. இ. குகநாதன்

disclaimer

ஏகாதிபத்திய எதிர்ப்பு நினைவுச் சின்னங்களைக் கண்டு மோடி அரசு அஞ்சுவது ஏன் ?

பார்ப்பன பாசிச கும்பல் ஒற்றுமையின் சின்னமான
ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தை அழிப்பதை அனுமதிப்பதா?

ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தை போராளிகளின் தியாகத்தையும் நாட்டுப்பற்றையும் வெளிப்படுத்தும் வகையில் இல்லாமல் கேளிக்கைக்கான இடமாக மாற்றியமைத்திருக்கிறது மோடி தலைமையிலான ஒன்றிய அரசு. இப்படி தியாகிகளின் நினைவிடத்தை ஒழித்துக் கட்ட பாசிச அரசு துணிந்து முயற்சிப்பதற்கு என்ன காரணம் என்பதை இந்தப் பாசிசக் கும்பலின் பின்னணியை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் போது இந்த நடவடிக்கையில் ஓர் உள்நோக்கம் உள்ளதைக் காண முடியும்.

சுதந்திரத்திற்குப் பிந்தைய ஆர்.எஸ்.எஸ்-ன் இலக்கியங்கள், இதழ்கள் எங்குமே இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்ட ஜாலியன் வாலாபாக் படுகொலைகள் பற்றி ஒரு வரி கூடக் கிடையாது. 1700-களின் இறுதியிலும், 1800களின் துவக்கத்திலும் நடந்த தென்னக தீபகற்ப விடுதலை போராட்டத்திற்குப் பின் 1857-ல் நடந்த நாடு தழுவிய விடுதலைப் போராட்டத்தில் சாதி, மதம், இனம் கடந்து மக்கள் ஒன்றுபட்டு எழுந்து நின்று போராடினர். இந்த விடுதலைப் போருக்குப் பின் அப்படி மக்கள் சாதி, மதம், இனம் கடந்து ஒன்றுபட்டு நின்று போராடியது ஜாலியன் வாலாபாக் போராட்டத்தில்தான்!

1919, ஏப்ரல் 13-ஆம் தேதியன்று ஆள்தூக்கி கருப்புச் சட்டமான ரவுலட் சட்டத்திற்கு எதிராக போராடிய தமது தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிராக ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் மக்கள் தமது குடும்பத்துடன் கூடினார்கள்! அமைதியான வழியில் கூடிய மக்களின் மீது மிருகத்தனமான ஒரு நரவேட்டை நடத்தப்பட்டு, ரத்தச் சகதியில் மூழ்கடிக்கப்பட்டனர். ஆங்கிலேயர்களின் காட்டுமிராண்டித்தனமான இந்தப் படுகொலைகளுக்கு எதிராக, அன்றைக்கு உலகமே கடும் கண்டனம் தெரிவித்தது. வேறுவழியின்றி ஆங்கிலேய அரசு, ‘ஹண்டர்’ என்ற ஒரு நீதிபதியின் தலைமையில் ஒரு விசாரணைக் கமிசன் அமைத்தது.

படிக்க :

ஜாலியன் வாலாபாக் நினைவிடம் : கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை ?

ஜாலியன்வாலாபாக் படுகொலையும் உத்தம் சிங்கின் இருபதாண்டு கால காத்திருப்பும் !

படுகொலையான மக்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கு ம்மேலே என்றாலும், அரசு இந்த எண்ணிக்கையை ஏற்க மறுத்து, விசாரணை கமிசன் மூலமாக 381 பேர்தான் இறந்தார்கள் என பொய்க்கணக்கு காட்டியது. அதேநேரம் இறந்தவர்கள் பற்றிய முழு விவரங்களையும் இந்த கமிசன் பட்டியலிட்டது. அடையாளம் காணப்பட்டவர்கள் 376 பேர்கள்தான். இந்த 376 பேரில் 220 பேர் இந்துக்கள், 90 பேர் சீக்கியர்கள், 66 பேர் இசுலாமியர்கள். இதுபோதாதா சங்கி கும்பலின் வெறுப்பிற்கு? இந்த பட்டியலில் இன்னொரு சிறப்பம்சமும் உள்ளது. இறந்தவர்களில் வணிகர், வழக்கறிஞர், பத்திரிக்கையாளர், இலக்கியவாதி, அரசு ஊழியர், அறிவுத் துறையினர் என பல்வேறு பிரிவினர் இருந்தனர்.

இரும்பு வேலை செய்பவர், துணி துவைப்பவர், நெசவாளர், முடி திருத்துபவர், தினக் கூலிகள், கம்பளம் பின்னுபவர், கொத்தனார், செருப்புத் தைப்பவர், துப்பரவுப் பணியாளர் என எல்லா வர்க்கத்தினரும் உண்டு. பெண்களும் குழந்தைகளும் கூட இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். ஒரு ஆறு மாத கைக்குழந்தையும் கொல்லப்பட்டவர்கள் பட்டியலில் அடக்கம்.

எல்லா சாதியைச் சேர்ந்தவர்களும் வேறுபாடு பார்க்காமல் இந்த போராட்டத்தில் பங்கேற்றதை கமிசனின் அறிக்கை உறுதிப்படுத்துகிறது. சங்கி கும்பலால் தேசத் துரோகிகள் என தூற்றப்படும் 14 காஷ்மீர் இசுலாமியர்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்று வீரமரணம் அடைந்துள்ளனர் என கமிசன் அறிக்கை உறுதிப்படுத்துகிறது.

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பார்ப்பன பாசித்திற்கு எதிரானதாக உள்ள சாதி – மதம் கடந்த மக்களின் இந்த ஒற்றுமையை இவர்கள் எப்படி அனுமதிப்பார்கள்? மென்மையான இந்துத்துவாவைக் கடைப்பிடிக்கும் காங்கிரசும் இவர்களுக்கு சற்றும் குறைந்தவர்கள் அல்ல என்பதை கீழ்வரும் விவரங்கள் அம்பலப்படுத்துகிறது.

இந்த படுகொலையின்போது இன்னுயிரை ஈந்த தியாகிகளின் குடும்பத்தினர் மட்டுமின்றி படுகாயமடைந்து உயிர் பிழைத்தவர்களின் குடும்பத்தினர் தங்களுக்கு தியாகிகள் பென்சனும், அரசின் சில சலுகைகளும் வேண்டும் என இன்னும் போராடிக் கொண்டுள்ளனர்.

ஆனால், இவர்களின் இந்தக் கோரிக்கையை ‘சுதந்திர’ அரசோ, இன்றைய ஆட்சியாளர்களோ இன்று வரையும் கண்டு கொள்ளவில்லை என்பதுதான் கொடுமை. நாட்டின் விடுதலைக்குப் போராடிய குடும்பத்தினரின் கோரிக்கைகளைப் புறக்கணித்துள்ளனர். ‘ஜாலியன் வாலாபாக் படுகொலை தியாகிகளின் குழு’ என்ற அமைப்பு பிரிட்டன் பிரதமருக்கு, ‘இங்கிலாந்து தங்களின் இழப்பிற்கு நட்டஈடு தர வேண்டும்’ என கடிதம் எழுதியது! என்னவொரு ’சுதந்திரம்’! இந்திய ஆட்சியாளர்களை விட கொலைகாரன் கருணையுள்ளவனாகத் தெரிவதனால்தான் இந்த கோரிக்கை என்றால் இதைவிட கொடூரமும் பேரவலமும் வேறு என்ன இருக்க முடியும்?

இந்தக் கொடூரப் படுகொலைக்கான சூத்திரதாரி அன்றைக்கு பஞ்சாப் லெப்டினண்ட் கவர்னராக இருந்த மைக்கேல் ஓ’ டயர் என்பவன்தான். இந்த டயரை கொல்லாமல் விடமாட்டேன் என ஒருவர் சபதமெடுத்தார். அவர் உத்தம் சிங் என்ற இளைஞர். ஏழை தலித் குடும்பத்தில் பிறந்து அனாதையான இவர் இதற்காக 21 ஆண்டுகள் காத்திருந்து பலி தீர்த்தார். ஏனெனில், இந்தக் கொடூரக் கொலைகளைக் கண்ணெதிரே கண்டு கடும் கோபம் கொண்டுதான் சபதமெடுத்தார். தனது சபதம் முடிக்க அவர் பட்ட துயரங்கள் தனிக்கதை.

பல தடைகளைக் கடந்து இங்கிலாந்து சென்று, 1940, மார்ச் 13-ம் தேதி, லண்டனில் உள்ள காக்ஸ்டன் ஹாலில் மைக்கேல் ஓ’ டயரை சுட்டுக் கொன்றார். அவரைக் கைது செய்து நீதிமன்றம் கொண்டு சென்றபோது, தனது பெயரை முகமது சிங் ஆசாத் என்று கூறினார். இந்து, இசுலாமியர், சீக்கியரின் ஒற்றுமையே பிரிட்டிஷ் அரசைத் தூக்கி எறியும் என்பது அவரது உறுதியான முடிவு.

உத்தம்சிங் என்கிற ராம் முகம்மது சிங் ஆசாத்

மரண தண்டனைக்குப் பின் நீதிமன்றத்தில் அவர் கூறியது: “மரண தண்டனை பற்றி எனக்குக் கவலையில்லை. நாட்டின் விடுதலைக்குப் போராடுகிறேன். மகிழ்ச்சியுடன் சாவை எதிர் கொள்வேன். நான் இறந்தால் ஆயிரமாயிரம் இளைஞர்கள் எனது இடத்தில் நின்று போராடுவார்கள்! ஆங்கிலேய ஏகாதிபத்தியம் அடித்து நொறுக்கப்பட்டு விரட்டியடிக்கப்படும். ஆங்கிலேய மக்கள் மீது எனக்கு எந்தப் பகையுமில்லை! இங்கிலாந்து தொழிலாளர்கள் மீது எனக்கு மிகுந்த அனுதாபம் உண்டு. நான் ஏகாதிபத்திய அரசுக்கு எதிரானவன். பிரிட்டன் ஏகாதிபத்தியம் ஒழிக!”.

உத்தம்சிங்கின் இந்தக் குரல் ஏகாதிபத்தியங்களுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் தாசனாக வேலைபார்க்கும் மோடி அரசுக்கு அச்சுறுத்தியதாலோ என்னவோ உத்தம் சிங்கின் சிலையையும்  மாற்றியுள்ளது மோடி கும்பல். அவரது கைகளில் துப்பாக்கி ஏந்தியிருப்பது போல இருந்த சிலையை துப்பாக்கியில்லாமல் மாற்றியமைத்திருக்கிறது பாசிச கும்பல்.

குறிப்பாக உத்தம் சிங் வர்க்க அரசியல் பேசும் கெதார் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பதும் மோடி அரசு அவரைக் கண்டு அஞ்சுவதற்கு முக்கியக் காரணம்.

படிக்க :

மாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்

பகத்சிங் – சோசலிசப் புரட்சியாளனா தீவிர தேசியவாதியா ?

ஆங்கிலேய ஆட்சியாளர்களின் கொடூர சட்டங்களை விட ஆக மிகக் கொடிய சட்டங்களை பார்ப்பன பாசிச இந்துத்துவா ஆட்சியாளர்கள் இயற்றுகின்றனர். கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்யும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விடாப்பிடியாகப் போராடி வரும் பஞ்சாப் விவசாயிகளின் போராட்டம் இந்த பார்ப்பன பாசிச கும்பலுக்கு ஆத்திரமூட்டுகிறது. அதனால்தான் போலீசை ஏவி விவசாயிகளின் மண்டையைப் பிளக்கிறது. பேச்சு வார்த்தைகளுக்கு வர மறுக்கிறது!

இத்தகைய வரலாற்று நினைவிடங்கள் மற்றும் தியாகிகளை வரலாற்றில் இருந்து ஒழித்துக் கட்டுவதற்காகவே இத்தகைய மாற்றங்களைச் செய்து வருகிறது மோடி அரசு. ஆர்.எஸ்.எஸ். கும்பலின் வரலாற்றைத் திரிப்பதற்கான முயற்சிகளில் இதுவும் ஒன்று. இதனை நாம் உடனடியாக முறியடித்தாக வேண்டும் !


நாகராசு

காலனியாதிக்க எதிர்ப்புப் போராளி வ.உ.சி 150-வது பிறந்தநாள் || ம.க.இ.க பிரச்சாரம்

♦ “காலனியாதிக்க எதிர்ப்பு போராளி, மக்கள் தலைவர், தொழிலாளர்களின் தோழர், சுதேசி முன்னோடி, செக்கிழுத்த செம்மல் வ.உ.சி யின் 150-வது பிறந்த நாளை உயர்த்தி பிடிப்போம்” ♦ “கார்ப்பரேட்- காவி பாசிசத்தை முறியடிப்போம்” ♦ என்கிற முழக்கத்தின்கீழ் கடந்த செப்டம்பர் 5-ம் தேதி மதுரை மாநகரத்தில் தெருமுனைப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

மதுரை, அனுப்பானடி பஸ் நிலையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகள் 5 இடங்களில் காலை முதல் துண்டு பிரசுரம் விநியோகித்து தெருப்பிரச்சாரம் செய்யப்பட்டது.
அப்பகுதி மக்களிடம் துண்டுபிரசுரம் விநியோகம் செய்யும் போது இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

படிக்க :

வ.உ.சி : ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியின் 150-வது பிறந்தநாள் || விலையில்லா மின்னிதழ்

ஜாலியன்வாலா பாக் நூற்றாண்டு : தொடருகிறது விடுதலைப் போராட்டம் !

குறிப்பாக, வ.உ.சி, மருது சகோதரர்கள் போன்றவர்களை சாதிய தலைவர்களாக சம்பந்தப்பட்ட சமூகத்தினர் ஒருசிலர் பார்ப்பதும் இக்கலாச்சாரத்தை அரசே திட்டமிட்டு உட்புகுத்துவதையும் விமர்சித்தனர். மேலும் உங்களைப் போன்ற அமைப்பினர்தான் அத்தலைவர்களின் வரலாற்றை சரியாக பிரச்சாரம் செய்கிறீர்கள் என்றனர்.

நமது தோழர்கள் தெருப்பிரச்சாரத்தில் உரையாற்றும் போது, வ.உ.சி.யை மக்களின் தலைவராகவும், ஏகாதிபத்தியத்தின் எதிர்ப்பு போராளியாகவும் அவர் வாழ்ந்ததை விளக்கியும் பிரச்சாரம் செய்தனர். அதே நேரத்தில் அப்பகுதியில் சாதியின் அடிப்படையில் ஒரு குழுவினர் வாகனத்தில் ஊர்வலமாக சென்றனர். இந்த இரண்டு நிகழ்வையும் மக்கள் ஒப்பிட்டு பார்க்கும் விதமாக பிரச்சாரம் அமைந்தது. மேலும் பெரியாரிய சிந்தனையாளர் ஒருவர் இப்பிரச்சாரத்தை சரியான காலகட்டத்தில் நடத்துகிறீர்கள் என வரவேற்று நமது தோழர்களை உற்சாகப்படுத்தினார்.

மதுரை அவனியாபுரம் மந்தை பகுதியிலும் மூன்று இடங்களில் செப்டம்பர் 5 அன்று மாலை 5மணி முதல் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதியைச் சேர்ந்த ஓட்டுனர்கள், தொழிலாளர்கள், பிற உழைக்கும் மக்கள், மாற்றுக் கட்சியினர் ஆர்வமுடன் வாங்கி கவனமாகப் பார்த்தார்கள்.

அதில் நாம் மக்களுக்காகப் போராடிய தலைவர்கள் மக்கள் தலைவராக பார்க்கவேண்டும், சாதித் தலைவராக பார்க்க கூடாது என்பதை வலியுறுத்தி பிரச்சாரம் செய்ததை மக்களும் ஆமோதித்தனர். அதில் ஒரு ஆட்டோ தொழிலாளி நீங்கள் சொல்லும் அத்தனை பிரச்சனையும் உள்ளது அதை தீர்ப்பதற்கு தீர்வு என்ன என்று வினவினார்.

வ.உ.சி வழியில் நின்று அன்னிய மறுகாலனியாக்க கொள்கையை முறியடிக்கப் போராடுவதோடு, அதனை தீவிரமாக அமல்படுத்தும் கார்ப்பரேட் காவி பாசிசக் கும்பலை விரட்டியடிப்பதும் தான் தீர்வு என்றும் தொடர்ந்து விவாதிப்போம் என்றும் கூறி தோழர்கள் விடைபெற்றனர்.

தகவல்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
மாநில ஒருங்கிணைப்பு குழு,
தமிழ்நாடு,
+91 97916 53200.

புத்தக வழிபாட்டை எதிர்ப்போம் || தோழர் மாவோ

0

தோழர் மாவோ உலக பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்காக சிந்திப்பதை நிறுத்தி இன்றுடன் 45-ம் ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. முதலாளித்துவ சுரண்டல் உலகின் அனைத்து மூலைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது. உலகம் முழுவதும் பொதுவுடைமை இயக்கங்கள் சிதறுண்டு கிடக்கின்றன.

புரட்சியை முன்னெடுத்துச் சென்று முதலாளித்துவ சுரண்டலை ஒழித்துக் கட்டி கம்யூனிசத்தை நோக்கி சமூகத்தைக் கொண்டு செல்ல, ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் தங்களைத் தாங்களே பரிசீலித்து, தவறுகளை சீர்படுத்திக் கொண்டு முன்னேற வேண்டும் என்பது பொதுவாக சொல்லப்படும் வாசகமாகிவிட்ட நிலையில், பரிசீலனையை எப்படிச் செய்ய வேண்டும், எப்படி செய்யக் கூடாது என்பதை மிகவும் எளிமையாக விளக்கியிருக்கிறார் தோழர் மாவோ.

1930-ம் ஆண்டு எழுதப்பட்ட “புத்தக வழிபாட்டை எதிர்ப்போம்” எனும் அவரது படைப்பு ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டும் படித்து கிரகித்து தனது வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்க வேண்டிய விஞ்ஞான வழிமுறையாகும். அந்தக் கட்டுரையை இரண்டு பகுதிகளாக இங்கே தருகிறோம்

– வினவு

0O0

புத்தக வழிபாட்டை எதிர்ப்போம்

1. பரிசீலனை இல்லையெனில், பேசுவதற்கான உரிமை இல்லை

ஒரு பிரச்சனையை நீங்கள் பரிசீலனை செய்யாவிடில், அதன் மீது பேசுவதற்கான உரிமையை இழக்கிறீர்கள். இது மிகவும் கடுமையானதாக இல்லையா? சிறிதும் கிடையாது. ஒரு பிரச்சனையையும், அதன் இன்றைய அனுபவங்களையும், அதன் கடந்த கால வரலாற்றையும் நீங்கள் ஆராய்ந்து பார்க்காவிட்டால், அதன் அத்தியாவசிய அம்சங்களைப் பற்றி நீங்கள் அறியாவிட்டால் அது சந்தேகக்திற்கு இடமின்றி அபத்தமானது.

அபத்தமாகப் பேசுவது எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது என்பது அனைவரும் அறிந்ததே. அதைப் பற்றி பேசுவதற்கான உரிமையை உங்களுக்கு மறுப்பது எப்படி அநியாயமானதாகும்? சில தோழர்கள் தங்களது கண்களை மூடிக் கொண்டு, அபத்தமாகப் பேசுகிறார்கள். ஒரு பொதுவுடைமைவாதிக்கு அது அவமானம். ஒரு பொதுவுடைமைவாதி எவ்வாறு தன் கண்களை மூடிக்கொண்டு, அபத்தமாய் பேசமுடியும்?

அது சரிப்படாது! அது சரிப்படாது! நீங்கள் பரிசீலனை செய்ய வேண்டும்! நீங்கள் அபத்தமாய் பேசக்கூடாது!

படிக்க :

கம்யூனிஸ்ட்கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா? | தோழர் மாவோ

கம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீர்செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் | தோழர் மாவோ !

2. ஒரு பிரச்சனையை பரிசீலனை செய்வது அதனைத் தீர்த்து வைப்பதற்கே !

உங்களால் ஒரு பிரச்சனையைத் தீர்க்க முடியவில்லையா? நல்லது, உடனடியாக அதன் இன்றைய அனுபவங்களையும் அதன் கடந்த கால வரலாற்றையும் பரிசீலனை செய்யுங்கள்! பிரச்சனையை முழுமையாக பரிசீலனை செய்து விட்டால், அதனை எவ்வாறு தீர்ப்பது என்று அறிவீர்கள். முடிவுகள் எப்போதும் பரிசீலனைக்கு பின்பே வரும் – பரிசீலனைக்கு முன்பு வராது.

ஒரு முட்டாள்தான் தனியாகவோ மற்றவர்களுடன் இணைந்தோ பரிசீலனை செய்யாமல், தீர்வு காணவும்” ”ஒரு கருத்தை உருவாக்கவும்’ மூளையைக் கசக்கிக் கொள்வான். பயனுள்ள தீர்வுக்கோ, ஒரு நல்ல கருத்துக்கோ இது இட்டுச் செல்லாது என்று வலியுறுத்திக் கூற வேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், அவன் தவறான முடிவிற்கும், தவறான கருத்திற்கும் வருவான் என்பது நிச்சயம்.

ஆய்வுப் பணிகளைச் செய்யும் தோழர்கள் கொஞ்சம் இல்லை, கொரில்லா தலைவர்களும், புதிதாக வந்திருக்கும் ஊழியர்களும் கூட ஒன்றை மேலோட்டமாகப் பார்த்து விட்டு, அதனைப் பற்றி குறைந்த விவரங்களையே தெரிந்து கொண்டு, ஒரு இடத்திற்கு வந்த உடனேயே அதனைக் கண்டித்து, அதனைக் குறைகூறி அரசியல் பிரகடனங்களை வெளியிடுகின்றனர்.

அத்தகைய அபத்தமான உணர்ச்சிகரமான பேச்சுகள் உண்மையில் வெறுக்கத்தக்கன. இவர்கள் விசயங்களை குழப்புவது நிச்சயம். அவர்கள் மக்களின் நம்பிக்கையை இழந்து, எந்தப் பிரச்சனையையும் தீர்ப்பதற்கான திறனற்றவர்கள் என்று நிரூபித்து விடுவார்கள்.

கடினமான பிரச்சனைகளை சந்திக்கும்போது, தலைமைப் பொறுப்பில் இருக்கும் பலர் பிரச்சனைகளைத் தீர்க்க இயலாது பெருமூச்சுவிடுகின்றனர். அவர்கள் பொறுமை இழக்கின்றனர். ”தங்களுக்குத் திறமை இல்லை; இந்த வேலையை செய்ய முடியாது” என்று காரணம் காட்டி, இடமாற்றம் கோருவார்கள். இது கோழைகளின் வார்த்தைகள்.

உங்களது இரு கால்களாலும் இயங்கிக் கொண்டே இருங்கள். தங்கள் பொறுப்பில் இருக்கும் பிரிவினை சுற்றி வாருங்கள். மேலும், கன்ஃபூசியஸ் செய்தது போல ”எல்லாவற்றை பற்றியும் தீர விசாரியுங்கள்”1 அப்போது உங்களது திறமைகள் எவ்வளவுதான் குறைவாக இருந்தாலும், உங்களால் பிரச்சனைகளை தீர்க்க முடியும். ஆய்வுக்காக நீங்கள் வாயிலைக் கடந்து வெளியேறும்போது உங்கள் தலை காலியாக இருக்கலாம். நீங்கள் திரும்பும்போது ஒருபோதும் தலை காலியாக இல்லாமல், பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குத் தேவையான அனைத்து விவரங்களும் அதில் இருக்கும். இவ்வாறுதான் பிரச்சனைகள் தீர்க்கப்படுகின்றன.

நீங்கள் வெளியில் சென்றுதான் ஆக வேண்டுமா? அவசியமில்லை. கடினமான பிரச்சனை என்று தாங்கள் கருதுவது பற்றி தல நிலைமைகளை அறியும் பொருட்டும், தற்போது அது என்ன நிலையில் இருக்கிறது என்று அறியும் பொருட்டும், நிலைமைகளை நன்கறிந்த மனிதர்களோடு உண்மையறியும் கூட்டம் கூட்டலாம். பிறகு, உங்களது கடினமான பிரச்சனையை எளிதாகத் தீர்க்கலாம்.

நீண்ட பேறு காலத்தை பரிசீலனையோடும், பிறப்பு நாளை பிரச்சனையைத் தீர்க்கும் நாளோடும் ஒப்பிடலாம். ஒரு பிரச்சனையை பரிசீலனை செய்வது என்பது உண்மையில் அதனைத் தீர்ப்பதற்குத் தான்.

படிக்க :

லெனினை நினைவுகூர்வதென்பது அவரைக் கற்றறிவது தான் !

லெனின் முன் வைத்த புதுப்பாணியிலான கட்சி !

3. புத்தக வழிபாட்டை எதிர்ப்போம்

கலாச்சார ரீதியாகப் பின்தங்கியுள்ள சீன உழவர்களின் மனப்போக்கின்படி, ஒரு புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள அனைத்துமே சரியானவை. விநோதமாக, விவாதங்களின்போது அது புத்தகத்தில் எங்கு எழுதப்பட்டுள்ளது என்று காட்டுங்கள்” என்று எப்போதும் கேட்பவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் கூட பலர் இருக்கின்றனர்.

உயர்மட்ட தலைமையின் கட்டளை சரியாக இருப்பதாகக் கூறுவது, ‘அது உயர்மட்ட தலைமையிடமிருந்து வருகிறது’ என்பதற்காக, அல்ல; ஆனால், போராட்டத்தின் அக மற்றும் புறச் சூழலுக்கு அதன் உள்ளடக்கம் ஒத்துப் போவதாக இருப்பதாலேயே அவற்றை ஏற்கிறோம்.

கட்டளைகள் மேலிடத்திலிருந்து வருகின்றன என்பதற்காக அவற்றைப் பற்றி விவாதிக்காமலும், உண்மை நிலையின் பின்னணியில் அவற்றை ஆராயாமலும் சடங்குப்பூர்வமான போக்கில் அவற்றை ஏற்பது மிகவும் தவறு. கட்சியின் நிலைபாடுகளும், உத்திகளும் மக்களிடம் ஆழமாய் ஏன் வேர்விடவில்லை என்பதற்கு, இந்த சடங்குத்தனம் செய்யும் கெடுதலே காரணம்.

மேலிடத்தின் கட்டளையை கண்களை மூடிக் கொண்டு, எந்தக் கருத்து மாறுபாடுமின்றி செயல்படுத்துவது, உண்மையில் அதனை நிறைவேற்றுவதாய் இருக்காது. அது அந்தக் கட்டளையை சாதுர்யமாக எதிர்ப்பதும், கவிழ்ப்பதுமாகும்.

புத்தகத்திலிருந்து மட்டும் சமூக விஞ்ஞானத்தை கற்கும் வழிமுறை அவ்வாறே மிகவும் அபாயகரமானது; அது எதிர்ப்புரட்சியின் பாதைக்கு இட்டுச் செல்லும். சமூக விஞ்ஞானத்தை கற்பதில் புத்தகங்களோடு தங்களைக் கட்டுப்படுத்திக் கொண்ட சீன பொதுவுடைமைவாதிகளின் முழுக் குழுவும் எதிர்ப் புரட்சியாளர்களாக மாறிய உண்மையே இதற்குத் தெளிவான நிரூபணமாக இருக்கிறது.

மார்க்சியம் சரியானது என்று நாம் கூறுவது, மார்க்ஸ் ஒரு “தீர்க்கதரிசி” என்பதனால் அல்ல; நமது போராட்டத்திலும், நடைமுறையிலும் அவரது கோட்பாடுகள் உண்மையென நிரூபிக்கப்பட்டதால் மட்டுமே அவ்வாறு கூறுகிறோம். நமது போராட்டங்களில் நமக்கு மார்க்சியம் தேவைப்படுகிறது. நாம் அவரது கோட்பாடுகளை ஏற்கும்போது, “”தீர்க்க தரிசனம்” என்ற புதிரான கருத்தோட்டமான சடங்குத்தனம் நமது மனத்தில் ஒருபோதும் நுழைவதில்லை.

மார்க்சிய நூல்களைப் படித்த பலர் ஓடுகாலிகளாக மாறிவிட்ட நிலையில், படிப்பறிவற்ற தொழிலாளிகள் மார்க்சியத்தை நன்கு கிரகித்துக் கொள்வதை நாம் அடிக்கடி காண்கிறோம். நாம் மார்க்சிய நூல்களை நிச்சயம் படிக்க வேண்டும்; ஆனால் இந்தப் படிப்பு நமது தேசத்தின் உண்மையான எதார்த்த நிலைமையோடு ஒருங்கிணைக்கப்பட வேண்டும். நமக்கு புத்தகங்கள் தேவை. ஆனால் உண்மை சூழ்நிலையிலிருந்து விலகி நிற்கும் புத்தக வழிபாட்டை நாம் வெற்றிகொள்ள வேண்டும்.

புத்தக வழிபாட்டை நாம் எப்படி வெற்றி கொள்ள முடியும்? – எதார்த்த நிலையை பரிசீலனை செய்வதுதான் ஒரே வழி.

படிக்க :

கட்சித் தலைமை பற்றிய பிரச்சினைகள் || தோழர் ஸ்டாலின்

நமது பலம், மக்களோடு கலந்திருப்பதே! | தோழர் ஸ்டாலின்

4. எதார்த்த நிலைமையை சரியாக ஆய்வு செய்யாவிடில், வர்க்க சக்திகளை அகநிலையாக மதிப்பீடு செய்வதும் வேலைக்கான அகநிலைவாத வழிகாட்டலும் தோன்றி வலது சந்தர்ப்பவாதமாகவோ இடது சாகசவாதமாகவோ சீரழியும்

இந்த முடிவை நீங்கள் சந்தேகிக்கிறீர்களா? இதனை ஏற்றுக் கொள்ள உண்மைகள் உங்களை நிர்ப்பந்திக்கும். எந்த பரிசீலனையும் செய்யாமல், அரசியல் சூழ்நிலையை மதிப்பீடு செய்யவோ, ஒரு போராட்டத்தை வழிநடத்தவோ முயன்று பாருங்கள், அத்தகைய மதிப்பீடும் வழிகாட்டுதலும் அடிப்படையற்றதாகவும், அகநிலை வாதமாகவும் இருக்கிறதா? இல்லையா? என்பதை காண்பீர்கள். அது சந்தர்ப்பவாதத்திற்கோ, சாகசவாதத்திற்கோ இட்டுச் செல்கிறதா, இல்லையா என்று அறிவீர்கள். நிச்சயமாய் அது அப்படித்தான் இருக்கும். நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு கவனமாக திட்டமிடத் தவறியது இதற்குக் காரணம் அல்ல; செம்படை கொரில்லாக் குழுவில் அடிக்கடி நிகழ்வது போல, குறிப்பான சமூகச் சூழ்நிலைகளை கவனமாக ஆய்வு செய்யாமல், திட்டங்களை தீட்டுவதே காரணம்.

லி கியுயி2 வகையான அலுவலர்கள் மனிதர்களை அவர்களது தவறுகளுக்காக தண்டிக்கும்போது பாரபட்சம் காட்டுவதில்லை. விளைவாக, அவர்கள் அநியாயமாக நடத்தப்பட்டு விட்டதாக தவறிழைத்தவர்கள் கருதுகின்றனர்; பல சச்சரவுகள் ஏற்படுகின்றன; தலைவர்கள் அனைத்து கவுரவங்களையும் இழக்கின்றனர். செம்படையில் இது அடிக்கடி நிகழ்வதில்லையா?

நாம் அகநிலைவாதத்தை துடைத்தெறிய வேண்டும். நாம் மக்களை வென்றெடுப்பதிலும், எதிரிகளை வீழ்த்துவதிலும் வெற்றி அடைவதற்கு முன்பாக அனைத்து சந்தர்ப்பவாத, சாகசவாத தவறுகளுக்கு எதிராக கவனமாக இருக்க வேண்டும். இலட்சியமயத்தை துடைத்தெறிய உள்ள ஒரே வழி, முயற்சிகளை மேற்கொண்டு, உண்மைச் சூழ்நிலையை பரிசீலனை செய்வதே ஆகும்.

(தொடரும்)

பாகம் 2 : பழமைவாத எண்ணங்களை மாற்றிக் கொள்வீர் || தோழர் மாவோ

குறிப்புகள் :

1. கன்ஃபூசியஸ்ஸின் இலக்கியத் துணுக்குகள் நூல் III ஐ காண்க. “பாயி : “மூதாதையர்களின் ஆலயத்தில், கன்ஃபூஷியஸ் நுழைந்தபோது, அவர் எல்லாவற்றையும் விசாரித்தார்.

2. வடக்கு ஷங் வம்சத்தின் இறுதி ஆண்டுகளில் (960-1127) நடைபெற்ற விவசாயிகளின் போராட்டம் பற்றி விவரித்த “சுயி ஹூ சுவான்” (மார்ஸ் பெஸ்ளின் கதாநாயகர்கள்) என்ற பிரபல சீன நாவலின் நாயகன் லி-கியூ ஆவார். அவர் எளிமையானவர்ர்; வெளிப்படையானவர்; விவசாயிகளின் புரட்சி நோக்கத்திற்கு முகவும் விசுவாசமானவர். ஆனால் முரட்டுத்தனமானவர்; சாதுர்யமானவர் அல்ல.

நூல் : மாவோ – தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் – தொகுதி 6
கிடைக்குமிடம் : அலைகள் வெளியீட்டகம்
தொடர்புக்கு : 98417 75112

பெரு : ‘சோஷலிஸ்டு’ கட்சியின் வெற்றி ஏகாதிபத்தியத்திற்கு எதிரானது அல்ல !

பெரு நாட்டில் ‘சோஷலிஸ்டு’க் கட்சியின் வெற்றி : இது, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான வெற்றியா?
லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெரு−வில் ஒரு நீண்ட இழுபறிக்கு பிறகு ‘‘சுதந்திர பெரு’’ என்ற இடதுசாரிக் கட்சியைச் சேர்ந்த பெட்ரோ காஸ்டிலோ, நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அந்நாட்டின் அதிபராகியுள்ளார்.
இது, ‘‘தேர்தல் மோசடி’’ மூலம் அடைந்த வெற்றி என்றும், ‘‘சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து ஜனநாயகத்தை நிலைநாட்டப்போவதாக’’வும் அமெரிக்க வல்லரசு கூப்பாடு போடுகிறது. இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புகள், படுகொலைகள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் தங்களது பொம்மை அரசை நிறுவிக் கொள்வதன் மூலம், கனிம வளங்கள் நிறைந்த லத்தீன் அமெரிக்க கண்டத்து நாடுகளைத் தனது ஆதிக்கத்தின்கீழ் வைத்துக் கொண்டிருந்த அமெரிக்காவுக்கு, இந்த தேர்தல் வெற்றி ஒரு சரிவாகவே அமைந்துள்ளது.
படிக்க :
தென் அமெரிக்காவில் தோன்றிய அடிமைகளின் சுதந்திர தேசம் !!
நூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட் ஜின்
அதேசமயம், கடந்த 30 ஆண்டுகளாக புதிய தாராளவாதக் கொள்கைகளைத் தீவிரமாக அமல்படுத்திய வலதுசாரிக் கட்சிகளின் ஆட்சிக்கு பிறகு, தற்போது முதன்முறையாக புதிய தாராளவாதக் கொள்கைகளைக் கடுமையாக எதிர்த்துப் பேசுகின்ற சுதந்திர பெரு கட்சி வெற்றி பெற்றிருப்பது, அனைவராலும் முக்கியமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
கனிம வளங்கள் நிறைந்த நாடாக பெரு இருந்தபோதிலும், அந்நாட்டின் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறது. கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் கூட இல்லாமல் உழைக்கும் மக்கள் அவலத்தில் உழல்கின்றனர். மேலும், கொரோனா பெருந்தொற்றால் அதிக உயிரிழப்புகளைச் சந்தித்த நாடுகளில் ஒன்றுதான் பெரு. ஏறத்தாழ 3.5 கோடி மக்கள் தொகையைக் கொண்ட அந்நாட்டில், இரண்டு லட்சம் பேர் மாண்டு போயுள்ளனர்.
சுரங்கங்கள் உள்ளிட்ட நாட்டின் வளங்கள் அனைத்தும் உள்நாட்டு − பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள காரணத்தால், அந்நாட்டில் ஒரு சதவிகிதம் பேர் குபேரர்களாகவும், நாட்டின் ஆகப் பெரும்பான்மையான மக்கள் வறுமையிலும் உள்ளனர். ஊழல் மலிந்த அரசியல்வாதிகளைக் கொண்டுள்ள பெரு−வில், கடந்த ஐந்தாண்டுகளில் நான்கு அதிபர்கள் ஊழல் குற்றம் சாட்டப்பட்டு தங்களது பதவிகளை இழந்துள்ளனர். கடைசி ஏழு அதிபர்களில், ஐந்து பேர் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளனர். ஆலன் கார்சியா என்ற முன்னாள் அதிபர் சிறையிடப்படுவதற்கு முன்னர் பயந்துபோய் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில், அதிபர் பிரான்சிஸ்கோ சகஸ்தியின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில், எட்டு வேட்பாளர்கள் அதிபர் பதவிக்காகப் போட்டியிட்டனர். இருந்தபோதிலும், பாப்புலர் ஃபோர்ஸ் கட்சியின் இளம் பெண் வேட்பாளர் கெய்கோ புஜிமோரி என்பவருக்கும், சுதந்திர பெரு கட்சியின் பெட்ரோ காஸ்டிலோ என்பவருக்கும் இடையில்தான் தீவிரமான போட்டி நிலவியது.
பாப்புலர் ஃபோர்ஸ் என்பது, அமெரிக்க விசுவாச வலதுசாரிக் கட்சியாகும். இதன் தலைவரும் முன்னாள் அதிபருமான ஆல்பெர்டோ புஜிமோரி, அமெரிக்காவின் கைப்பாவையாகச் செயல்பட்டு புதிய தாராளவாதக் கொள்கைகளைத் தீவிரமாக அமலாக்கியவர். இவர் காலத்தில்தான் பெரு−வின் அரசியல் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. தற்போது, இவர் ஊழல் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறையில் உள்ளார். இவரது மகள்தான் கெய்கோ புஜிமோரி.
2008−ஆம் ஆண்டில் மார்க்சியவாதி என்று அறியப்படும் விளாதிமிர் செரோன் ரொஜாஸ் என்பவரால் சுதந்திர பெரு கட்சி தொடங்கப்பட்டது. தற்போது இவர், இக்கட்சியின் செயலாளராக உள்ளார். இக்கட்சியானது, பெரு−வின் மீது ஏகாதிபத்தியங்களால் திணிக்கப்பட்ட புதிய தாராளவாதக் கொள்கைகளைக் கடுமையாக எதிர்கின்ற கட்சியாகவும், ஏகாதிபத்திய எதிர்ப்பு − சோசலிசக் கொள்கைகளை முன்வைக்கின்ற கட்சியாகவும் பொதுவில் அறியப்படுகிறது. உண்மையில், ஏகாதிபத்திய ஆதிக்கத்துக்கும் கார்ப்பரேட் கொள்ளைக்கும் சேவை செய்கின்ற பெரு−வின் அரசுக் கட்டமைப்பைத் தூக்கி எறிவதை தனது இலட்சியமாகக் கொள்ளாமல், அக்கட்டமைப்புக்குள்ளேயே தீர்வைத்தேடும் போலி சோசலிசக் கட்சியாகவே சுதந்திர பெரு கட்சி உள்ளது.
இக்கட்சியால் முன்னிறுத்தப்பட்ட வேட்பாளரான கேஸ்டிலோ, ஒரு சோசலிஸ்ட் அல்ல. ஆசிரியர் சங்கத் தலைவரான இவர், நீண்டகாலம் ‘‘சாத்திய பெரு’’ என்ற தாராளவாதக் கட்சியில் இருந்தவர். இத்தேர்தலில் சுதந்திர பெரு கட்சியின் வேட்பாளராக நிற்கும் வரை, இவர் பெரு அரசியல் களத்தில் அதிகம் அறியப்படாத நபராகவே இருந்தார்.
கல்வியறிவின்மையை ஒழிப்பதாகக் கூறி கேஸ்டிலோவின் தேர்தல் பிரச்சாரம்
இத்தேர்தலில் தன்னை ஒரு விவசாயியாகவும் கிராமப்புற ஆசிரியராகவுமே முன்னிறுத்திக் கொண்டு இவர் பிரச்சாரம் செய்தார். பெரு விவசாயிகளின் பாரம்பரிய நீளமான தொப்பியையும் செருப்பையும் அணிந்துகொண்டு தன்னை தனித்துவமாக அடையாளப்படுத்திக் கொண்டார். இதன் காரணமாகவே, கிராமப்புற விவசாயிகளின் ஓட்டுக்களைப் பெருமளவில் இவரால் கவர முடிந்தது.
‘‘கடந்த கால் நூற்றாண்டுகால ஆட்சிகளின் ஊழல் பாரம்பரியத்திற்கு முடிவு கட்டுவேன்’’, ‘‘வறுமைமையையும் கல்வியறிவின்மையையும் ஒழிப்பேன்’’, ‘‘பெருவின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிற சுரங்களைத் தேசிய உடைமையாக்குவேன்’’ − என்றெல்லாம் அவர் தேர்தல் வாக்குறுதிகளை அளித்தார்.
இவரது தேர்தல் வாக்குறுதிகளில் மிக முக்கியமானதாக கருதப்படுவது, புதிய அரசியல் சாசனம் பற்றியதாகும். 1993−ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியல் சட்டமானது புதிய தாரளவாதக் கொள்கைகளுக்கு இசைவானதாக இருப்பதாகவும், தான் ஆட்சிக்கு வந்தால் புதிய அரசியல் நிர்ணயசபைக்கான தேர்தல் நடத்தி, அதன்மூலம் புதிய அரசியல் சட்டத்தை வகுக்கப்போவதாகவும் கூறிய காஸ்டிலோவின் பிரச்சாரம் பெரு நாட்டின் உழைக்கும் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. ‘‘புதிய அரசியல் சாசனம் அல்லது மரணம்’’ என முழங்கினார்கள், ‘‘சுதந்திர பெரு’’ கட்சியினர்.
எதிர்த்தரப்பு பாப்புலர் ஃபோர்ஸ் கட்சியின் வேட்பாளர் கெய்கோ புஜிமோரி, ‘‘கம்யூனிஸ்டு அபாயத்திலிருந்து அரசியல் சட்டத்தைப் பாதுகாப்போம்’’, ‘‘பெரு−வை வெனிசுலாவாக மாற்ற அனுமதிக்க மாட்டோம்’’ முதலான முழங்கங்களை பெட்ரோ காஸ்டிலோவுக்கு எதிராக முன்வைத்தார். மேலும், 1980−களில் பெரு−வில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஆயுதக் கிளர்ச்சியை நடத்திய ‘‘ஒளிரும் பாதை’’ என்ற சாகசவாத மார்க்சிய − லெனினியக் குழுவினரோடு தொடர்புடையவர்தான் காஸ்டிலோ என்று பொய்ப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டார்.
‘சோசலிஸ்டுக்’ கட்சியின் கேஸ்டிலோ (இடது) எதிர்க் கட்சியின் அதிபர் வேட்பாளர் கெய்கோ புஜிமோரி
இவற்றைத் தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது சாடிய கேஸ்டிலோ, தான் ஒரு கம்யூனிஸ்டு அல்ல என்று வெளிப்படையாகவே சொல்லிக் கொண்டார். தன்னைத் தூய கத்தோலிக்க கிறித்தவராகக் காட்டிக் கொண்டார்.
காஸ்டிலோ ஆட்சிக்கு வந்தால் பணக்காரர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்துவிடுவார்கள் என்று எதிர்க்கட்சிகள் பிரச்சாரங்களை மேற்கொண்டபோது, ‘‘அது சுத்தப்பொய், நான் சொல்வதெல்லாம் பொருளாதாரத்தை ஒழுங்கமைப்பதைப் பற்றித்தான்; அந்நிய தொழில் நிறுவனங்களின் இலாபத்தில் 70 சதவிகிதத்தை உள்நாட்டிலேயே முதலீடு செய்ய வைப்பேன்; ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 20 சதவிகிதத்தைக் கல்வியையும் மருத்துவத்தையும் மேம்படுத்துவதற்குப் பயன்படுத்துவேன்’’ என்று தெளிவாகவே கூறினார், காஸ்டிலோ. ‘‘பணக்கார நாட்டில் ஏழை இருக்கக் கூடாது’’ என்பதே அவரது பிரபலமான முழக்கமான இருந்தது.
கிராமப்புறப் பகுதியான அண்டேயனில் அதிகபட்சமாக 2 இலட்சம் வாக்குகளைப் பெற்ற காஸ்டிலோ, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட கெய்கோ புஜிமோரியை 44,000 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து தேர்தலில் வென்றார். இதனைத் தொடர்ந்து, அமெரிக்க பாசிஸ்டு டிரம்ப்பைப் போலவே, காஸ்டிலோவின் தேர்தல் வெற்றி செல்லாது என்று அறிவிக்கக் கோரி தேர்தல் குழுவினரிடம் முறையிட்டார் புஜிமோரி. வாக்குகளைத் திருடி வெற்றி பெற்றதாக அவர் மீது குற்றஞ்சாட்டினார்.
தோல்வியை ஒப்புக்கொள்ளாத புஜிமோரி, தேர்தல் முடிவுகள் தொடர்பாக சர்வதேச விசாரணை வேண்டும் என்றார். லத்தீன் அமெரிக்கக் கண்டத்து தேர்தல் குழுவினரும் தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்திய நிலையில், ‘‘சர்வதேச விசாரணை’’ என்ற பெயரில் புஜிமோரி கோரியது தனது எஜமானான அமெரிக்காவைக் கட்டப் பஞ்சாயத்திற்கு அழைக்கத்தான் என்பது அப்பட்டமாகத் தெரிந்தது. அமெரிக்க நாடுகளின் அமைப்பு (ஓ.ஏ.எஸ். − Organisation of American States) – என்ற கட்டப் பஞ்சாயத்து அமைப்பிற்கு அவர் வெளிப்படையாக அழைப்பு விடுத்தார். அமெரிக்கா என்ன விரும்புகிறதோ, அதை குறிப்பறிந்து செய்வதுதான் இவ்வமைப்பின் வேலை.
கடந்த 2019 பொலிவிய தேர்தலில் இவா மொரேலஸ் என்ற சோசலிஸ்டுக் கட்சி வேட்பாளர் அதிபராக வெற்றிபெற்றபோது, அங்கு தலையிட்ட ஒ.ஏ.எஸ், அவ்வெற்றி செல்லாது என எவ்வித ஆதாரமும் இன்றித் தீர்ப்பளித்து. இதன்மூலம் அந்நாட்டில் ஒரு இராணுவ சர்வாதிகார ஆட்சிக்கு அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
தன் கட்சியினரை வைத்து பெரு நாடு முழுக்க காஸ்டிலோவுக்கு எதிரான போராட்டங்களை நடத்தினார் புஜிமோரி. இதனால் ஒரு மாதத்திற்கும் மேலாக தேர்தல் முடிவுகள் இழுத்தடிக்கப்பட்டன. புஜிமோரியின் குற்றச்சாட்டில் எவ்வித முகாந்திரமும் இல்லாத காரணத்தால், இவற்றை பெரு தேர்தல் குழு ஏற்றுக்கொள்ளவில்லை. ஜூலை 19−ஆம் தேதி தேர்தல் முடிவுகளை உறுதிப்படுத்தியது, தேர்தல் குழு. கடைசியாக, ஜூலை 28−ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார், பெட்ரோ காஸ்டிலோ.
மொத்தம் 130 இருக்கைகள் உள்ள பெரு காங்கிரசில், எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மையைப் பெறவில்லை. 37 இருக்கைகளை மட்டுமே கேஸ்டிலோவின் சுந்திர பெரு கட்சி வென்றுள்ள நிலையில், 5 இருக்கைகளில் வென்ற பெரு ஒற்றுமைக்கான கட்சியின் (together for peru) கூட்டணியுடன் 42 இடங்களை தக்கவைத்து சிறுபான்மை அரசாங்கமாக பொறுப்பேற்றுள்ளது. எதிர்கட்சியான பாப்புலர் ஃபோர்ஸ் கட்சி 24 இடங்களைப் பெற்று வலுவான எதிர்க்கட்சியாக உள்ளது. இதர இடங்களைப் பெற்ற கட்சிகளும் வலதுசாரிக் கட்சிகளாகவே உள்ளன.
பெரு−வைப் பொறுத்தவரை முன்னர் வெற்றிபெற்ற வலதுசாரிக் கட்சி வேட்பாளர்கள் அனைவருமே அங்கிருக்கும் முன்னாள் இராணுவத் தலைவர்கள் மற்றும் கார்ப்பரேட் மேட்டுக்குடியினரின் ஆதரவோடுதான் பெரு காங்கிரசை அலங்கரித்துள்ளனர். அதாவது, ஆளும் வர்க்கங்கள், அதிகார வர்க்கங்களின் ஆதரவில்லாமல் அவர்களால் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள முடிந்ததில்லை. தற்போது பொறுப்பேற்றுள்ள காஸ்டிலோ மட்டும்தான் இதற்கு விதிவிலக்கானவராக இருக்கிறார்.
இடதுசாரிகளின் வெற்றியை எதிர்த்து வலதுசாரிகளின் ஆர்ப்பாட்டம்
எதிர்கட்சியிலிருக்கும் பிரதிநிதிகளில் முன்னாள் இராணுவத் தலைவர்களும் இருக்கின்றனர். அவர்கள் எவரும் காஸ்டிலோவின் தேர்தல் வெற்றியை ஏற்க மறுக்கின்றனர். காங்கிரசில் 79 இருக்கைகளைக் கொண்டு பலம் வாய்ந்த எதிர்க் கட்சிகளாக வலதுசாரிகள் இருப்பதால், காஸ்டிலோவின் அரசாங்கம் எந்தச் சட்டத் திருத்தங்களைக் கொண்டுவந்தாலும், அவற்றை நிறைவேற்றுவது கடினமாகவே இருக்கும்.
மேலும், பெருவின் அரசியலமைப்பிலேயே ‘‘தார்மீக ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ திறனற்ற ஒரு அதிபரை காங்கிரஸ் பதவி நீக்கலாம்’’ என்ற 19−ஆம் நூற்றாண்டின் பழைய விதியொன்று உள்ளது. இதை காஸ்டிலோவிற்கு எதிராக வலதுசாரிகள் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய வாய்ப்பும் உள்ளது.
இது ஒருபுறமிருக்க, பதவியேற்ற பின்னர் சுரங்கங்களைத் தேசியமயமாக்குவது உள்ளிட்டு, தான் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளைப் பற்றி காஸ்டிலோ இப்போது வாயே திறப்பதில்லை. இதனை முதலாளித்துவ ஊடகங்களே அம்பலப்படுத்துகின்றன. சுதந்திர பெரு கட்சியின் செயலாளரான செரோன் ரொஜாஸ், ‘‘தேர்தல் வாக்குறுதிகளை காஸ்டிலோ மதித்து நடக்க வேண்டும்’’ என்று தனது கட்சியின் சார்பில் அதிபராகியுள்ள காஸ்டிலோவுக்கு உபதேசித்துக் கொண்டிருக்கிறார்.
பெரு நாட்டை முதலாளித்துவ − ஏகாதிபத்தியச் சூறையாடலிலிருந்து விடுவிக்க விரும்புகிற ஒரு சோசலிசக் கட்சி, சொல்லிலும் செயலிலும் புரட்சிகரமானதாக இருக்க வேண்டும். அமெரிக்க மேலாதிக்கத்தையும் பெரு நாட்டின் கார்ப்பரேட் மேட்டுக்குடி வர்க்கங்களையும் ராணுவக் கும்பலையும் வீழ்த்தி, உழைக்கும் மக்களின் அதிகாரத்தை நிலைநாட்டுவதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். அமெரிக்காவின் மறுகாலனியாதிக்கத்தைக் கட்டிக்காக்கும் அரசு எந்திரத்தைத் தகர்த்தெறியும் வகையில், அமெரிக்காவின் பொய்கள், ஆட்சிக் கவிழ்ப்புச் சதிகள், படுகொலைகளை முறியடிக்கும் வகையில், சொந்தமாக மக்கள் படையைக் கொண்டிருக்கவும் வேண்டும். அதன்மூலம் மட்டுமே உழைக்கும் மக்களுக்கான புதியதொரு அரசு எந்திரத்தை நிறுவி, ஏகாதிபத்தியச் சூறையாடலையும் கார்ப்பரேட் கும்பலின் ஆதிக்கத்தையும் வீழ்த்த முடியும்.
படிக்க :
பொலிவியா ஆட்சிக் கவிழ்ப்பு : அமெரிக்காவின் நாட்டாமை !
சிலி நாட்டை அதிரவைத்த மக்கள் போராட்டம் !
ஆனால், பெரு நாட்டின் சோசலிஸ்டுகள் அமெரிக்காவின் மேலாதிக்கத்தையும் கார்ப்பரேட் சூறையாடலையும் கட்டிக் காக்கும் வகையில் அமைந்துள்ள தற்போதைய பெரு நாட்டின் அரசுக் கட்டமைப்பிற்குள்ளேயே தீர்வைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் வெற்றியின் மூலம் இதைச் சாதித்து விட முடியும் என்று இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், தேர்தல் வெற்றியின் மூலம் அமெரிக்க ஆதிக்கத்தையும் கார்ப்பரேட் கொள்ளையையும் ஒருக்காலும் வீழ்த்த முடியாது என்பதை பெரு−வின் அண்டை நாடான சிலி நாட்டின் ரத்தம் தோய்ந்த வரலாறு நிரூபித்துக் காட்டியுள்ளது. இதிலிருந்து படிப்பினைகளைப் பெறாமல், இன்னமும் கானலை நீரென நம்பியோடும் பெரு நாட்டின் சோசலிஸ்டுகளின் நடவடிக்கைகளானது, அந்நாட்டின் உழைக்கும் மக்களுக்கு வேதனைமிக்க இன்னுமொரு துயரக் கதையைத்தான் சொல்லப்போகிறது.


டேவிட்

பெண்களின் சட்டைகளில் பொத்தான்கள் இடதுபுறத்தில் இருப்பது ஏன் ?

பெண்கள் சட்டையில் பொத்தான்கள் இடதுபுறத்திலும்
ஆண்கள் சட்டையில் வலதுபுறத்திலும் இருப்பது ஏன்?
ண்கள் மற்றும் பெண்களின் சட்டைகளைத் துவைக்கும் போதோ அல்லது இஸ்திரி செய்யும் போதோ, பெண்களின் சட்டையில் பொத்தான்கள் இடது பக்கத்தில் இருப்பதை  கவனித்திருக்கலாம். (சில சட்டைகளில் விதிவிலக்காக அமைந்திருக்கும்) அது ஏன் என்று கேள்விக்கு பதில் நாம் யோசித்து கூட இருக்க மாட்டோம். ஆனால் அதன் பின்னிருக்கும் கதைகள் பெண்கள் மீதான வரலாற்று ரீதியான ஒடுக்குமுறைகளைப் பதிவு செய்கின்றன.
நீண்ட காலத்திற்கு முன்பிலிருந்து, சில பத்தாண்டுகளுக்கு முன்புவரை, உடைகள் எவ்வாறு வடிவமைக்கபட வேண்டும் என்பதை பாலினம்தான் தீர்மானித்தது. சமீபத்தில்தான் யுனிசெக்ஸ் ஃபேஷன் (Unisex Fashion) மற்றும் பரிணாம வளர்ச்சியுடன், ஆண்களும் பெண்களும் தங்கள் ஆடைகளை தாங்களே தேர்ந்தெடுக்கும்படியான சூழலும் உரிமையும் உள்ளது. இனி பெண்களுக்கு பாவாடை, சேலை மற்றும் ஆண்களுக்கு பேன்ட், வேட்டி என்பது போன்று ஆடைகளை வைத்து ஒருவரின் பாலினத்தை தீர்மானிக்க முடியாது. அனைவருக்கும் பொதுவானதான உடைகள் தற்போது வரத் துவங்கியுள்ளன. இருப்பினும், ஜீன்ஸ் பேண்ட்களில் சிறிய பாக்கெட்டுகள் மூலமாகவும், சட்டைகளில் இடது பக்க பொத்தான்கள் அமைப்பது மூலமாகவும் பெண்களுக்கு பாகுபாடு காட்டப்படுவது இன்னும் தொடர்கிறது.
படிக்க :
புடவை கடந்து வந்த பாதையும் அது சார்ந்த போராட்டங்களும் ! || சிந்துஜா
பாவாடை பெண்களுக்கே உரிய உடையா ? || சிந்துஜா
நீங்கள் ஒருபோதும் கவனித்தது இல்லை என்றால், பெண்களின் சட்டைகளில் பொத்தான்கள் இடதுபுறத்திலும் ஆண்களுக்கு வலதுபுறத்திலும் இருப்பதை கவனியுங்கள். சரி, இதன் வரலாற்றை சற்றி பின்னோக்கிச் சென்று பார்க்கலாம். பொத்தான்கள் 13-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உடைகளில் வடிவமைக்கப்பட்டன. அப்போதுதான் பொரும்பாலான புதிய தொழில்நுட்பங்களும் உருவாக்கப்பட்டது. அப்போதும் பொத்தான்கள் எல்லோருடைய ஆடையிலும் இடம் பிடிக்கவில்லை. ஏனென்றால் அதன் விலை கூடுதலாக இருந்திருக்கிறது.
அந்த காலத்தில் நவீன ஆடைகள் பெரும்பாலும் உயர்த்தட்டு மக்களுக்குரியது என்று இருந்தது. அவற்றில் பெண்கள் பல அடுக்குகள் கொண்ட ஆடைகளையே பயன்படுத்தினர்.  மறுமலர்ச்சி மற்றும் விக்டோரியன் சகாப்தத்தில் பெண்களின் ஆடைகள் பெரும்பாலும் ஆண்களை விட மிகவும் கடினமானதாகவும், விரிவானதாகவும் இருந்தன – பெட்டிகோட்கள், கோர்செட்டுகள் மற்றும் பெரிய பாவாடைகள் என பயன்படுத்தப்பட்டன. அப்போதெல்லாம் பெண்களுக்கு அவர்களின் பணிப்பெண்களே ஆடையை உடுத்தி விட்டனர். அப்படி அணிவிக்கப்படும் ஆடைகளில்  பொத்தான்களை பூட்டுவதற்கு பணிப் பெண்களுக்கு இலகுவாக இருக்க வேண்டும் என்பதற்காக இடது புறத்தில் பொத்தான்கள் தைக்கப்பட்டது என்றொரு கருத்துண்டு.
நாம் பொரும்பாலான மக்கள் வலது கை பழக்கம் உள்ளவர்கள் பெண்கள் பொதுவாக குழந்தைகளை இடது கைகளில் வைத்திருப்பார்கள், இடதுபுறத்தில் பொத்தான்களை வைப்பதன் மூலம் இலகுவாக பொத்தானை திறந்து தாய்ப்பால் கொடுக்க முடியும் என்று கருத்தும் இதற்குப் பின்னணியில் நிலவுகிறது.
இவை எல்லாம் இது குறித்துக் கூறப்படும் அனுமானங்கள்தான். ஆனால், ஃபேஷன் வரலாற்று இணையப் பதிவர் ஒருவர் மேற்கூறிய கருத்துக்கள் குறித்துக் குறிப்பிடுகையில் 17, 18-ம் நூற்றாண்டுகள் வரையிலும் மேட்டுக்குடி ஆண்களும் வேலைக்காரார்களைக் கொண்டுதான் ஆடை அணிந்திருப்பார்கள். 18-ம் நூற்றாண்டு வரை பெண்களின் ஆடைகளில் பொத்தான்கள் அரிதாகவே இருந்தன. 1860-க்குப் பிறகுதான் பெண்களுக்கான உடைகளில் பொத்தான்கள் இடதுபுறத்தில் தோன்றத் தொடங்கியது.
சிந்திக்க வேண்டிய முக்கிய விசயம் என்வென்றால், உயர் வர்க்க கனவான்கள், தங்களது வேலைக்காரர்களின் வசதிக்காக தங்களின் ஆடையில் மாற்றத்தை ஏற்படுத்தினார்கள் என்பது ஏற்கத் தக்கதாக இல்லையே !
ஆண்கள் சட்டையில் பொத்தான்கள் வலது புறத்தில் தைக்கப்பட்ட தன் காரணம் அவர்கள் போர்க்களத்திலும், ராணுவத்திலும் ஆயதங்களை கையாள வலது கையே பயன்படுத்தினர். அப்படி கையாளுவதற்கு வசதியாக சட்டையில் வலதுபுறத்தில் பொத்தான்கள் வடிவமைத்திருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இது இந்த அனுபவத்திலிருந்து வந்திருக்கலாம் என்கின்றனர்.
ஆனால், இந்த செளகரியம் பெண்களுக்கு ஏன் கிடைக்கவில்லை ? என்ற கேள்விக்கு அவர்களிடம் பதில் இல்லை.  நீடிக்கிறது.
மற்றொரு கருத்தாக்கம் நெப்போலியனை மையப்படுத்தி கட்டமைக்கப்பட்டிருக்கிறது. பிரெஞ்சு பேரரசர் நெப்போலியன் போனபார்ட்டின், சட்டைப் பொத்தான்களுக்கு இடையே தனது வலது  கையை உள்நுழைத்து நிற்கும் புகைப்படப் ‘போஸ்’ (Pose) ஒன்று பிரபலமானது. இதனை தனது அடையாளப்பூர்வமான புகைப்படப் போஸாக அவர் வைத்திருந்தார். பல பெண்களும் நெப்போலியன் போனபார்ட்டை கிண்டல் செய்யும் வகையில் தமது வலது கையை தமது ஆடைகளின் பொத்தான்களுக்கு இடையே நுழைத்து போஸ் கொடுத்துள்ளனர். அதனை அறிந்த நெப்போலியன் போனபார்ட் பெண்களின் சட்டைகளில் உள்ள பொத்தான்களை ஆண்களுக்கு எதிர் பக்கத்தில் வைக்கும்படி உத்தரவிட்டார். அப்படி செய்தால் பெண்கள் தம்மைப் போலவே வலது கையை பொத்தான்களுக்கு இடையே நுழைந்த்துப் போஸ் கொடுத்து தம்மை கிண்டல் செய்ய முடியாது என்றூ கருதி இந்த உத்தரவிட்டுள்ளார். இதுவும் ஒரு கருத்தாக்கம்தான்.
அதையும் கடந்து ஓரு விஷயம் என்வென்றால், அப்போதெல்லாம் குதிரை சவாரி செய்யும்போது பெண்கள் வலப்புற பக்கவாட்டில் அமர்ந்து சவாரி செய்யும் வழக்கம் இருந்திருக்கிறது. பெண்கள் குதிரை சவாரி செய்யும்போது காற்று அவர்களில் மேல் பாய்வதை குறைத்து துணியை விலக விடாமல் தடுக்க இடதுபுறத்தில் பொத்தான்கள் பயன்படுத்தப்பட்டதும் ஓரு காரணம் என்கிறார்கள்.
ஆடையில் பாலின சமத்துவம்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பாலியல் வல்லுநர் ஹாவ்லாக் எல்லிஸ் எழுதுகிறார் ஆண் மற்றும் பெண்: இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை பாலியல் கதாபாத்திரங்களின் ஆய்வு (1894-ல் வெளியிடப்பட்டது), பெண்களின் ஆடைகள் வலமிருந்து இடமாக பொத்தான் இருப்பது பெண்களின் “வலிமை மற்றும் வேகத்தை குறைப்பதாக இருந்திருக்கக் கூடும்” என்கிறார். எனவே, ஆண்களை விட பெண்கள் தாழ்வானவர்கள் என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்கிறார். பெண்கள் ஆடையில் உள்ள சிரமங்களால் பல கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேர்ந்தது.
பெண்களின் ஆடைகள் விடுதலையை வெளிப்படுத்தத் தொடங்கியதும், ஆண்களின் ஆடைகளிலிருந்து (எ.கா:பேன்ட்) புதிய விசயங்கள் பெண்களின் ஆடைகளுக்கும் வந்தன. உற்பத்தியாளர்கள் இடதுபுறத்தில் உள்ள பொத்தான்களை ஆண்கள் மற்றும் பெண்களின் ஆடைகளை வேறுபடுத்துவதற்கான ஒரு நடைமுறையாகப் பராமரித்தனர் என்று மற்றொரு கோட்பாடு வலியுறுத்துகிறது.
படிக்க :
நாகரிக வளர்ச்சியும் ஆடைகளின் வரலாறும் !!
ஜீன்ஸ் : ஆடையின் வரலாறும் – பொதிந்துள்ள உழைப்பின் வரலாறும் !
பெண்களின் சட்டையில் உள்ள இடதுபக்க பொத்தான்கள் பாலின பாகுப்பாட்டின் ஓரு அடையாளம். அடக்குமுறைகள் காலங்காலமாக பெண்களின் ஆடையிலும் தொடர்கிறது என்றால் மிகையாகாது. ஆனால், இன்று காலம் மாறி வருகிறது. அதன் ஒரு வடிவமாக பெரிய நிறுவனங்கள் யூனிசெக்ஸ் உடைகளை கையில் எடுத்திருக்கின்றன. அவை, ஆண்களைபோன்றே சட்டையில் பொத்தான்கள் வலதுபக்கத்தில் வைக்க உந்துகிறது. இதுபோன்ற முன்னெடுப்புகள் கட்டாயம் ஆடையில் சமத்துவத்தை நோக்கி பயணிக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை.
மினசோட்டா ஆடை வடிவமைப்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கிம் ஜான்சன் இது குறித்துக் கூறுகையில் “பாலினங்களுக்கிடையில் பாகுபாட்டை நாம் தொடரும் வரை அது நம் ஆடையிலும் தொடரும்” என்கிறார். உண்மையான வார்த்தைகள் இவை. சமூகத்தில் நிலவும் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள் நீங்கும் வரை, ஆடைகளில் இத்தகைய பாகுபாடுகளும் கட்டுப்பாடுகளும் சமூக எதார்த்தமாக நீடிக்கவே செய்யும் !!
சிந்துஜா
சமூக ஆர்வலர்
disclaimer

ராபியா சைஃபி பாலியல் வன்கொலை : பார்ப்பனிய ஆணாதிக்க அதிகார வர்க்கத்தின் வெறியாட்டம் !

ரண்டு மார்பகங்களும் துண்டிக்கப்பட்டுள்ளன! பிறப்புறுப்பு குத்திக் கீறப்பட்டுள்ளது..! கழுத்து கிட்டத்தட்ட துண்டிக்கப்பட்டு தொங்கும் நிலையில்..!
நெஞ்சில் ஆழமான துளையிட்ட ஓட்டை…! உடல் முழுவதும் ஐம்பதுக்கும் மேற்பட்ட வெட்டுக்கள் மற்றும் குத்தப்பட்ட காயங்கள்….!
அவள் இறப்பதற்கு சற்று முன்பு நான்கு பேருக்கும் அதிகமானோர் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். ஒரு மனித உடல் தாங்க முடியாத அளவிற்கு வேதனை. அசையக் கூட முடியாமல் அவள் இறுதியில் இறந்து விடுகிறாள்.
மேற்கண்ட அதிர்ச்சியூட்டும் வரிகள் திரைப்படம் அல்லது நாவலின் பகுதிகள் அல்ல. குப்பை பொறுக்கியும் வீட்டு வேலை செய்தும் கிடைத்த பணத்தில் ஒரு தாயால் காவல்துறை அதிகாரியாக உருவான அவரது மகள், அவள் வேலைக்குச் சென்ற நான்கு மாதங்களுக்குப் பிறகு தான் வேலை பார்க்கும் இடத்தில் நடக்கும் தவறுகளுக்கு துணை போகாததன் காரணத்தால் மனிதத்தையும் மனசாட்சியையும் குப்பைத் தொட்டியில் வீசிய நமது ஜனநாயக நாட்டின் மக்கள் ஊழியர்களால் தண்டிக்கப்பட்டாள்.
படிக்க :
ஆசிபா : நீதி கேட்கும் பாலிவுட் நடிகைகளை மிரட்டும் பா.ஜ.க இணைய கும்பல்
ஹதராஸ் பாலியல் வன்கொலை : நள்ளிரவில் எரிக்கப்பட்ட ‘நீதி’ !
அவள் பெயர் ராபியா ஷைஃபி. வயது 21. கொல்லப்பட்டது – ஆகஸ்ட் 26. டெல்லி லஜ்பத் நகர் மாவட்ட மாஜிஸ்திரேட் அலுவலகத்தில் சிவில் பாதுகாப்பு அதிகாரி.
நிர்பயா வழக்கை விட கொடிய குற்றம். ஆனால், அனைத்து இந்திய ஊடகங்களும் தகவல்களை மறைத்தன. வழக்கு பதிவு செய்யப்படவில்லை. ஊடகங்கள் செய்தி வெளியிடவில்லை. சமூக ஊடகங்களில் ஹேஷ்டேக் இல்லை. யாரும் மெழுகுவர்த்தி ஏந்தவில்லை. தெரிந்தவர்கள் கூட சொல்லவில்லை. ஆனால் இது போன்ற ஒன்று நடந்திருக்கிறது.
கேட்டால் தலை வெடித்துவிடும், உடல் தளர்ந்து விடும் ஒரு பெரும் கொடூரத்தை சில கொடூரர்கள், நர வேட்டைக்காரர்கள் ஒரு பெண்ணின் மீது, ஒரு பாவப்பட்ட தாயின் மகளின் மீது செய்துள்ளனர்.
ஆகஸ்ட் 26 இரவு, ராபியாவைப் காணவில்லை என்றவுடன், ​​அவளது குடும்பத்தினர் அவளது சக ஊழியர்கள் உட்பட பலரை அழைத்தார்கள். சிறிது நேரம் கழித்து ஒரு சக ஊழியர் அவளது அம்மாவை அழைக்கிறார். அழைப்பு பதிவு செய்யவில்லை என்பதை ஆரம்பத்தில் உறுதி செய்த பிறகு, அவர் சில விஷயங்களை கூறியுள்ளார். ராபியாவை அவருடன் பணிபுரியும் போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்படுவாள் என்று கூறியுள்ளார்.
அவரது மேலதிகாரியின் தொலைபேசி எண்ணைக் கேட்டபோது, ​​அந்த சக ஊழியர் கொடுக்க மறுத்ததுடன், அவரும் கண்காணிப்பில் இருப்பதாகக் கூறி தொலைபேசியை துண்டித்துவிட்டார்.
பின்னர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்ற ராபியா குடும்பத்தினரை உட்காரச் கூடச் சொல்லாமல் வழக்கை முன்னதாகவே பதிவு செய்து விட்டோம். எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துவிட்டோம் என்று கூறி அவர்களது வாக்குமூலத்தை கூட பதிவு செய்யாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
அவரது தந்தை சமித் அகமது கூறுகையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு இரகசிய அறை இருப்பது தனது மகளுக்குத் தெரியும் என்றும் லஞ்சப் பணமாக தினமும் ரூ. 3-4 லட்சம் வருவதாக ராபியா கூறியுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த தகவலை அறிந்ததனால் தான் ராபியா கொல்லப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.
அவளது அலுவலகத்தில் நடந்த ஊழல் குறித்து அவள் பலரிடம் புகார் அளித்துள்ளதாகவும், அவள் பணியில் சேருவதற்கு முன்னால் ஊழல் தடுப்பு பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டதாகவும் குடும்பத்தினர் கூறுகின்றனர். இறுதியில் ஹரியானாவிலிருந்து ராபியாவின் உடல் மீட்கப்பட்டது.
டெல்லியில் ராபியா என்ற போலீஸ் அதிகாரி ஒரு சிலரால் கடத்தப்பட்டு, கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, உறுப்புகள் ஒவ்வொன்றாக சிதைக்கப்பட்டன என்பதை நாடு அறிய பல நாட்களானது என்பது மட்டுமின்றி, இங்கேயுள்ள அரசும் சட்டவியல் அமைப்புகளும் தலைவர்களும் முக்கிய ஊடகங்களும் நடந்த கொடுமைகளை அறிந்திருந்தும், அமைதியாக இருக்கிறார்கள். இது வகுப்புவாதம் நிரம்பிய வஞ்சனையாகும்.
ஒரு பெண்ணுக்கு எதிராக மட்டுமல்ல, ஒரு சமூகத்திற்கு, இந்த நாட்டிற்கு, இங்கே உள்ள நீதி நெறிமுறைகளுக்கு, அனைத்துவிதமான சட்ட முறைமைகளுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுடனான தொடர்ச்சியான அமைதி.
ஒவ்வொரு நாளும் டஜன் கணக்கான தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் இடைவிடாமல் தாக்கப்படுகையில், அவர்களின் பெண் மக்கள் தொடர்ந்து வேட்டையாடப்படும் நாட்டில் நாம் சில பிராமணிய கண்ணீருக்காக மட்டுமே மெழுகுவர்த்திகளை ஏந்துவோம். சில குடும்பங்களுக்கு மட்டுமே நீதியை பெற்றுத் தருவோம்.
படிக்க :
கர்நாடக பாஜக – ஒரு பாலியல் குற்றக் கும்பல் !
யோகி ஆட்சியில் உ.பி : பாலியல் வன்முறையின் தலைநகரம் !
அந்த குடும்பங்களுக்காக மட்டும் கட்டமைக்கப்பட்ட சனாதன பொது புத்தியின்,
உணர்வின் ஊடாக நாம் புலம்பலாம். பசுவை தேசிய விலங்காக ஆக்குவது பற்றி நாம் இன்னும் விவாதிக்கலாம். சங்கிகளுடன் அவர்களது மனோநிலையுடன் அவர்களது அடிமைகளாக சேவகம் செய்யும் ஊடகங்கள் வாந்தி எடுக்கும் செய்தியை அப்படியே விழுங்கலாம். சட்ட அமைப்பில் அங்கம் வகிக்கும் ஒரு அதிகாரிக்கே இது போன்ற மோசமான நிலை ஏற்பட்டிருப்பது பயத்தை உருவாக்குகிறது.
அதுவும் தலைநகரில்! நமது நாடு ஜனநாயகத்தில் இருந்து தடம் புரண்டுவிட்டது.
ஊழல் / பண மோசடி மையமாக மாறிய இந்த நாட்டிலிருந்து நீதியை எதிர்பார்க்க முடியாது. தன் தாய்நாட்டிற்காக வேலை செய்ய தயாரான, தன் வேலையில் நேர்மையாக இருந்த ஒரு பெண்ணின் கொடூர கொலைக்குப் பிறகும் நாம் மீண்டும் அமைதியாக இருக்கிறோம்.
வேட்டைக்காரர்களுக்கு எல்லைகள் இல்லை என்பதை நாம் உணர வேண்டும். அவர்கள் இரைகளை மட்டுமே பின் தொடர்கிறார்கள். டெல்லியில் இருந்து நமது பகுதிகள் அதிக தூரம் இல்லை. நமக்காகவும்தான் அந்த பெண் கொடூரமாக கொல்லப்பட்டாள்.
மக்களைப் பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்டவர்கள் அவர்களுடன் இருந்த ஒருவரையே கொடூரமாக கொன்றுள்ளனர்! ராபியா ஷைஃபி, ஒரு போலீஸ் அதிகாரி. இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்காகவும் தன் உயிரைக் கொடுத்துள்ளார்.
எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு பெண்ணின் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டு, அவளது மேலதிகாரிகளின் கொலை வெறியால் இல்லாமல் போனது, பல ஆசைகள் கொண்ட ஒரு பெண். ஒரு மகள். ஒரு குடும்பம். வெட்கித் தலை குனிகிறோம்.
முகநூலில் : முருகன் திருப்பதி
disclaimer

காஷ்மீர் சிறப்பு உரிமை ரத்து – இரண்டு ஆண்டு நிறைவு : துளிர்விடுகிறது விடுதலை முழக்கம் !

டந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில், அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று இரண்டாம் முறையாக ஆட்சி அமைத்த மோடி தலைமையிலான காவி பாசிச கும்பல், தனது இந்துராஷ்டிரக் கனவை நிறைவேற்றும் விதமாக மூர்க்கத்தனமான நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதில் முதலாவதும், முக்கியமானதும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370 மற்றும் காஷ்மீரிகளுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கும் பிரிவு 35A ஆகியவற்றை ரத்து செய்ததாகும்.
இந்தச் சிறப்புச் சட்டம் நீக்கம் என்பது குறைந்தபட்ச ஜனநாயக நடவடிக்கைகளைக் கூட மேற்கொள்ளாமல், நாடு முழுவதும் இராணுவத்தை நிறுத்தி, காஷ்மீரில் ஊரடங்கை அறிவித்து, இணையம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளை ரத்து செய்து, எதிர்ப்புகளை ஒடுக்கி ஒரு இராணுவ நடவடிக்கைபோல் அமல்படுத்தப்பட்ட பாசிச நடவடிக்கையாகும். காஷ்மீரின் சிறப்புச் சட்டத்தை நீக்கியதோடு அம்மாநிலத்தை ஜம்மு − காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகத் துண்டாடியது, பாசிச மோடி அரசு.
காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டுவது, முன்னேற்றுவது என்ற வகையில்தான் காஷ்மீரின் சிறப்புச் சட்டம் நீக்கப்பட்டதாகவும், இதன் மூலம் ஜம்மு − காஷ்மீர் மற்றும் லடாக்கில் புதிய வரலாறு தொடங்கப்பட்டுள்ளதாகவும், இப்பாசிச நடவடிக்கையை நியாயப்படுத்தினார், பிரதமர் மோடி. தற்போது, சிறப்புச் சட்டம் நீக்கப்பட்டு 2 ஆண்டுகள் கடந்த நிலையில், ‘‘ஜம்மு − காஷ்மீர் யூனியன் பிரதேச அரசு புதிய வரலாற்றுக் கட்டத்திற்குள் பீடுநடை போடுகிறது’’ என்ற தலைப்பில் 2 ஆண்டுகால சாதனைகளை விளக்கி 76 பக்க வெளியீட்டைக் கொண்டு வந்துள்ளது, மோடி அரசு.

படிக்க :

காஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை

காஷ்மீர் : பத்திரத்தில் கையெழுத்துப் போட்டால்தான் விடுதலை !

பொய்யையும் புரட்டையுமே வாழ்வாகக் கொண்ட ஆர்.எஸ்.எஸ். − பா.ஜ.க கும்பல், இந்த வெளியீட்டிலும் ஜம்மு − காஷ்மீரில், மருத்துவம், சுற்றுலா, கல்வி, விளையாட்டு மற்றும் சொத்து உரிமைகள் ஆகியவற்றில் சாதனை நிகழ்த்தியுள்ளதாக, பொய்களையே சாதனைகளாக சுயதம்பட்டம் அடித்துக் கொள்கிறது. ஆனால், ஜம்மு − காஷ்மீரின் உண்மை நிலையோ நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. ஜம்மு − காஷ்மீரின் உண்மை நிலையை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது, ஜம்மு − காஷ்மீர் மனித உரிமைகளுக்கான அரங்கம் (Forum for Human Rights in Jammu Kashmir).
000
காஷ்மீருக்கான சிறப்புச் சட்டம் நீக்கப்பட்ட பிறகு, இரண்டாண்டுகளாக தடுப்புக் காவல்களும், பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கான தடையும் (144) தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. வீட்டிலிருந்து வெளியில் செல்பவர்களுக்கு என்ன நடக்கும் எந்த உத்திரவாதமற்ற சூழல்தான் அங்கு நிலவுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு, காஷ்மீர் மாநிலமே திறந்தவெளிச் சிறைச்சாலையாக மாறியிருக்கிறது.
பொது ஊரடங்கை நீட்டிப்பதோடு, அரசு ஊழியர்கள் உட்பட, காஷ்மீர் மக்களின் மீதான கண்காணிப்பையும் அதிகரித்துள்ளது, மோடி அரசு. சமூக வலைத்தளங்களைக் கண்காணிக்க சிறப்பு பணிப்படை (Special Task Force) உருவாக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். − பா.ஜ.க கும்பல்களுக்கு, மோடி அரசை விமர்சிப்பதும் அம்பலப்பட்டுத்துவதுமே ‘தேச விரோத’ செயல்கள்தான். அதன்படி, காஷ்மீரில் தேச விரோதமாக சமூக வலைதளங்களில் பதிவிட்டார்கள் என்று 18 அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
காஷ்மீரின் உள்ளூர் ஊடகங்கள் மிகப்பெரும் அடக்குமுறைக்கும் போலீசின் மிரட்டலுக்கும் உள்ளாகியிருக்கின்றன. செய்திகள் யாவும் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு இயக்குனரகத்தின் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே வெளியிடப்படுகின்றன. காஷ்மீரின் உண்மைமை நிலையை வெளிக்கொண்டு வரும் பத்திரிக்கையாளர்கள் தாக்கப்படுவதும் துன்புறுத்தப்படுவதும் மற்றும் ஊபா போன்ற கருப்புச் சட்டங்களால் கைது செய்யப்படுவதும் தொடர்கதையாய் உள்ளன.
கடந்த 2019−இல், பெண் பத்திரிக்கையாளர்கள் உட்பட 2,300−க்கும் மேற்பட்டோர் ஊபா சட்டத்தால் கைது செய்யப்பட்டனர். இதில் 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோர் இன்னமும் சிறையில்தான் உள்ளனர். காஷ்மீரில், பத்திரிக்கையாளராக இருப்பது பெரும் சவாலானதாகவும், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவதாகவும் மாறியுள்ளது.
மேலும், 2019−இல் சிறப்புச் சட்டத்தை நீக்கும்போது கைது செய்யப்பட்டவர்களில், சிறுவர்கள் மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் என ஆயிரத்துக்கும் அதிகமானோர் இன்னமும் சிறையில் உள்ளனர். ஆட்கொணர்வு மனு, பிணை கோரும் மனு மற்றும் விரைவான வழக்கு விசாரணை போன்ற சட்ட உரிமைகளும் மறுக்கப்படுகிறது. காஷ்மீர் மக்களைத் தொடர்ந்து அச்சுறுத்தலில் வைப்பதற்கான வழிமுறையாக இவற்றைக் கையாண்டு வருகிறது, பாசிச மோடி அரசு.
இணையதள வசதி, அத்தியாவசியமாகியுள்ள இன்றைய சூழலில், ஜம்மு − காஷ்மீரில் இரண்டாண்டுகளாக இணையதள சேவையும் பகுதியளவிற்குதான் வழங்கப்படுகிறது. அதிலும் இராணுவச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டால் இணையதள வசதி முடக்கப்படுவது இயல்பான நடைமுறையாக உள்ளது. இதனால், காஷ்மீர் மக்களுக்கு வீடே சிறையறையாக மாறியுள்ளது என்றால் அது மிகையாகாது.
ஏனெனில், பொது ஊரடங்கால் வெளியில் செல்லவும் முடியாது; இணையதள சேவையும் முடக்கப்படுவதால் உலக நடப்பிலிருந்து துண்டிக்கப்பட்டு சிறையிலிருக்கும் நிலைதான் காஷ்மீரிகளுக்கு. வீடே சிறையாக உள்ள அம்மக்களின் நிலைமை நம் நெஞ்சை உலுக்குகிறது.
மேலும், காஷ்மீரிலும் கொரோனா பெருந்தொற்றால் ஆன்லைன் வகுப்புகள்தான் நடைபெறுகின்றன. இணையதள வசதி முடக்கப்படுவதாலும், 4ஜி தொலைத்தொடர்புச் சேவை கிடைக்காததாலும் வகுப்புகள் நடத்தவோ, பங்கேற்கவோ முடியாத நிலைமைதான் அங்குள்ளது.
நாடு முழுவதும் அரசியல்வாதிகள், மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்களை பெகசாஸ் உளவு செயலி மூலம் ஒன்றிய அரசு உளவு பார்த்தது போல், காஷ்மீரிலும், 2017 முதல் 2019−ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரை பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளார்கள என 25−க்கும் மேற்பட்டோரை இந்தச் செயலி மூலம் மோடி அரசு உளவு பார்த்துள்ள உண்மையானது, தடவியல் சோதனை மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
தற்போது தாலிபான்கள் ஆப்கானில் ஆட்சியைக் கைப்பற்றியிருப்பதால், இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற பீதியூட்டி, காஷ்மீர் மக்களின் மீதான அடக்குமுறையை இன்னும் அதிகரிக்கத் துடிக்கிறது மோடி அரசு.
காஷ்மீரின் சிறப்புச் சட்ட நீக்கமானது ஆர்.எஸ்.எஸ். − பா.ஜ.க காவி கும்பலின் இந்துராஷ்டிரக் கனவுக்கானது மட்டுமல்ல, அது கார்ப்பரேட் கும்பலின் நலனுக்கானதுமாகும். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய பிரிவு 370−ஐ மோடி அரசு நீக்கியதோடு, காஷ்மீரிகளுக்கு மட்டும் காஷ்மீரில் நிலங்கள், வேலைவாய்ப்பு மற்றும் சொத்துகள் வாங்குவதற்கான உரிமை மற்றும் சலுகைகளை வழங்கிய பிரிவு 35A−யையும் நீக்கியுள்ளது.
இச்சிறப்புச் சட்டம் நீக்கப்பட்டவுடன், ‘‘காஷ்மீரில் இனி இந்தியர்கள் சொத்துக்கள் வாங்கத் தடையில்லை’’ என கூப்பாடு போட்டன ஆர்.எஸ்.எஸ். − பா.ஜ.க காவி கும்பல்கள். சிறப்புச் சட்டம் நீக்கப்பட்ட இரண்டாண்டுகளில், காஷ்மீரில் நடைமுறையில் இருந்த 12 சட்டங்களை ரத்து செய்துள்ளது, யூனியன் பிரதேச அரசு.
அவற்றில் முக்கியமான ஒன்றுதான், 1950−இல் ஷேக் அப்துல்லா ஆட்சியில், கொண்டுவரப்பட்ட் பெரும் பண்ணைகள் ஒழிப்புச் சட்டமாகும் (Big Landed Estaes Abolition Act). இச்சட்டம் கொண்டு வருவதற்கு முன்பு வரை காஷ்மீரின் நிலங்கள் பெரும் பண்ணையார்களுக்கும் நிலப்பிரபுக்களுக்கும்தான் சொந்தமாக இருந்தது. ஆனால், இச்சட்டம் கொண்டுவரப்பட்டு, அமல்படுத்தப்பட்ட இரண்டாண்டுகளில், அதாவது 1952−க்குள் காஷ்மீரில் சுமார் 7 லட்சம் நிலமற்ற கூலி − ஏழை விவசாயிகளுக்கு நிலங்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டன. இதில், சுமார் 2,50,000 தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இந்து விவசாயிகளும் நிலவுரிமை பெற்றனர். முஸ்லீம்களின் ஆட்சி இந்துக்களுக்கு எதிரானது என்று வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வரலாற்றைத் திரித்துப் புரட்டும் ஆர்.எஸ்.எஸ். − பா.ஜ.க கும்பலின் யோக்கியதையை இதன்மூலம் புரிந்து கொள்ள முடியும்.
தற்போது இந்த பெரும் பண்ணை ஒழிப்புச் சட்டத்தை ரத்து செய்ததிலிருந்து, சட்ட விரோத நில ஆக்கிரமிப்புகள் நடைபெறுவதாகவும், வழக்குகள் பதிவாகி வருவதாகவும் செய்திகள் வருகின்றன. மேலும் நாடோடி பழங்குடிகள், தங்கள் வாழ்விடத்திலிருந்து வனத்துறையினரால் விரட்டப்படுவதும் அரேங்கேறி வருகிறது.
மோடி சொல்லும் வளர்ச்சி என்பது அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட்டுகளின் வளர்ச்சி என்பதற்கு பல்வேறு சான்றுகள் உள்ளன. மோடியின் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு, மீத்தேன், சாகர் மாலா, பாரத் மாலா, எட்டுவழிச்சாலை, மோட்டார் வாகன திருத்தச் சட்டம், கடல் வள மசோதா, நீட் மற்றும் புதிய கல்விக் கொள்கை என அனைத்தும் கார்ப்பரேட் நலனுக்காகனவைதான். அந்த வழியில்தான் இப்போது ஜம்மு − காஷ்மீரில் பெரும்பண்ணைகள் ஒழிப்புச் சட்ட நீக்கமும் அரங்கேற்றப்பட்டுள்ளது. காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு சட்டத்தையும், சலுகைகளையும் ரத்து செய்ததன் மூலம், காஷ்மீரில் இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இனி சொத்து வாங்க முடியும் என்ற காவி கும்பலின் கூப்பாட்டையும் பொருத்திப் பார்த்தால் இதன் பலன் யாருக்கானது என்று புரியும்.
காஷ்மீரின் வளங்களை பன்னாட்டு கார்ப்பரேட் முதலைகள் சூறையாடுவதற்காகவும். இஸ்லாமிய மக்களை சொந்த மண்ணில் இரண்டாம்தர குடிமக்களாக்கி தனது அகண்ட பாரத கனவை நிறைவேற்றிக் கொள்ளவும்தான் ஆர்.எஸ்.எஸ். − பா.ஜ.க காவி கும்பல்களால் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, துண்டாடப்பட்டது. கடந்த இரண்டாண்டுகளில் இப்பாசிச கும்பல் காஷ்மீரை தனது கார்ப்பரேட் − காவி பாசிசத்தின் முதலாவது காலனியாக − அடிமைப் பிரதேசமாக்கியுள்ளது.
000
2019−இல் பாசிச நடவடிக்கையின் மூலம் காஷ்மீரின் சிறப்புச் சட்டத்தை நீக்கியபோது, ஒருங்கிணைந்த காஷ்மீரின் லடாக் பகுதிகளிலும் ராணுவத்தைக் குவிப்பது, அரசியல் தலைவர்களை வீட்டுக் காவலில் வைப்பது என்ற வகையில் லடாக் பிராந்தியமும் அடக்குமுறைக்குள்ளானது.
2019−இல், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, கார்கில் மற்றும் லே ஆகிய இரு மாவட்டங்களை உள்ளடக்கி, லடாக் தனியொரு யூனியன் பிரதேசமாகப் பிரிக்கப்பட்டது. அப்பொழுது, சிறப்புச் சட்ட நீக்கம் மற்றும் யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டதை எதிர்த்து முஸ்லீம்கள் அதிகமுள்ள கார்கில் பிராந்தியம் போராட்டக் களமாகியது. புத்த மதத்தினர் பெரும்பான்மையாக உள்ள, லே பிராந்தியமோ யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டதை வரவேற்று மகிழ்ச்சிக் கோலம் பூண்டது. ஆனால், இந்த மகிழ்ச்சி, அடுத்த சில நாட்களிலேயே வற்றிப்போனது.
கடந்த இரண்டாண்டுகளில், ஜம்மு − காஷ்மீரைப் போலவே லடாக்கில் உள்ள நிலங்களின் மீதான உரிமை மற்றும் வேலை வாய்ப்பு ஆகிய சட்டபூர்வமான இரண்டு உரிமைகளும் அம்மக்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளன. லடாக் யூனியன் பிரதேசமாகப் பிரிக்கப்பட்டாலும், அரசு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. ஒருங்கிணைந்த காஷ்மீரின் ஒரு பகுதியாக இருக்கும்போது, இப்பகுதிவாழ் மக்கள் காஷ்மீரின் அரசு வேலைவாய்ப்புகளில் பங்குபெற முடிந்தது. இப்போது, தனி யூனியன் பிரதேசமாகப் பிரிக்கப்பட்டதால் வேலைவாய்ப்பும் பறிபோயுள்ளது.
லடாக்கில் 97 சதவிகிதத்துக்கு மேலானோர் பழங்குடியினராவர். 1990−லிருந்து கார்கில் மற்றும் லே−விற்கு தனித்தனியாக பழங்குடியினரது மலை மேம்பாட்டுக் கவுன்சில் (Hill Developement Council) என்ற சுயாட்சி அதிகார அமைப்பு இயங்கி வந்தது. இக்கவுன்சிலுக்கான தேர்தல் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்கள் இக்கவுன்சிலின் ஆலோசகர்களாக இருந்து வந்தனர். இந்த ஆலோசகர்கள், தங்கள் தொகுதிக்கான தேவைகளையும் அதற்கான செலவுகளையும் முன்வைத்து நிறைவைற்றும் அதிகாரம் கொண்டவர்களாக இருந்தனர்.

படிக்க :

ஜாலியன் வாலாபாக் நினைவிடம் : கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை ?

ஜாலியன்வாலா பாக் படுகொலையின் நாட்குறிப்புகள் !

ஆனால், லடாக் பிராந்தியம் யூனியன் பிரதேசமாகப் பிரிக்கப்பட்ட பிறகு, மைய அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் ஒப்புதல் இல்லாமல், மலை மேம்பாட்டுக் கவுன்சிலின் ஆலோசகர்கள் தங்கள் தொகுதிக்கென சல்லிக் காசு கூட ஒதுக்க முடியாது. இவ்வாறாக, கடந்த இரண்டாண்டுகளில் நிலைமை தலைகீழாக மாறிப் போயுள்ளது. சுருக்கமாகச் சொன்னால், லடாக் பழங்குடியினப் பகுதிகளின் சுயாட்சி உரிமையும் பாதுகாப்பும் அதிகாரமும் மோடி அரசால் பறிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழல்தான், 2019−க்கு முன்பு வரை “லடாக்கை யூனியன் பிரதேசமாகப் பிரிக்க வேண்டும், லடாக்கை அரசியல் சட்டத்தின் அட்டவணை பட்டியல் 6−இல் இணைக்க வேண்டும்” என்று கோரிவந்த லே மாவட்ட மக்களை, கார்கில் மாவட்ட மக்களுடன் இணைந்து மாநில அந்தஸ்து வேண்டும் என்று குரலெழுப்ப வைத்துள்ளது. மத வேறுபாடுகளைக் கடந்து, கார்கில் ஜனநாயகக் கூட்டணியும் (KDA − Kargil democratic alliance), லே மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 6−வது பட்டியலுக்கான மக்கள் இயக்கத்தின் உயர்நிலைக் குழுவும் (ABPMSS) மாநில அந்தஸ்து வேண்டுமென்ற பொது கோரிக்கைக்காக இணைந்து போராடி வருகின்றன.
மோடி அரசின் துரோகத்தை எதிர்த்து, லே பிராந்தியத்தின் பா.ஜ.க. தலைவரான செர்ரிங் டோர்ஜீ, அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பா.ஜ.க.வின் முன்னாள் எம்.பி.யாகிய துப்ஸ்தன் ச்சீவாங், தேசிய மாநாட்டுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் திக்சே ரின்போச்சே, லடாக் பிராந்திய காங்கிரசுத் தலைவர் நவாங் ரிக்சின் ஜோரா, முன்னாள் பா.ஜ.க. தலைவரும் அமைச்சருமான செர்ரிங் டோர்ஜீ முதலான பிரமுகர்கள் இந்த இயக்கத்தைத் தலைமை தாங்கி நடத்தி வருகின்றனர். ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்குப் பின்னர் கார்கில் மற்றும் லே பிராந்திய மக்கள் தங்களது உரிமைக்காக ஐக்கியப்பட்டுள்ளனர். பா.ஜ.க. கட்சியானது இப்பிராந்தியத்தில் தனிமைப்பட்டுப் போயுள்ளது.
லடாக்கில் பற்றிய இச்சிறு பொறியானது, அடக்குமுறைகளாலும், இயற்கைவளச் சூறையாடலாலும் சின்னபின்னமாகியுள்ள பனிமலை சூழ்ந்த காஷ்மீர் மாநிலத்தை மீண்டும் எரிமலையாக வெடித்தெழச் செய்யும் என்பதற்கான அறிகுறியாகும். லடாக் மக்களின் நியாயவுரிமைக்காகவும், ஜம்மு − காஷ்மீரின் அடக்குமுறைக்கு எதிராகவும் குரல் கொடுக்க வேண்டியது, பாசிசத்தை எதிர்க்கின்ற, வீழ்த்தத் துடிக்கின்ற நம் அனைவரின் கடமையாகும்.


அப்பு

நொறுங்கும் நாடாளுமன்ற ஜனநாயகம் அரங்கேறும் பாசிச சர்வாதிகாரம் !

த்தாலியில் 1924−இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் முசோலினியின் பாசிஸ்ட் கட்சி தலைமையில் உருவான தேசிய கூட்டணி அறுதிப் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சியைப் பிடித்த பின்னர், அரசியல் கொலைகள், கும்பல் வன்முறைகள் முதலான சட்டவிரோதமான செயல்பாடுகளைச் செய்துகொண்டே, சட்டங்களைத் திருத்தி ஒரு போலீசு ராஜ்ஜியத்தை உருவாக்குவது, அரசு நிறுவனங்களின் முக்கிய பொறுப்புகளில் பாசிஸ்டுகளை புகுத்துவது − என சட்டபூர்வ மற்றும் சட்டவிரோத வழிமுறைகளை இணைத்துக் கொண்டுதான் பாசிச சர்வாதிகாரம் நிறுவப்பட்டது. அவற்றுள் “நாடாளுமன்றத்திற்கு கட்டுப்படாத” பிரதமரை உருவாக்கியது குறிப்பிடத்தக்க அம்சம்.
இத்தாலியின் வரலாறு, தற்போது இந்தியாவில் நடந்து கொண்டிருக்கும் நிலைமைகளுக்கு ஒப்பானதாகவே இருக்கிறது. நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் நிகழ்வுகள் அனைத்தும் பாசிசம் வேகமாக அரங்கேறி வருவதை நமக்கு எச்சரிக்கவும் செய்கிறது.
000
மோடி அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து மக்கள் மீதான அடக்குமுறைகள் அதிகரிப்பதும், நாடாளுமன்றத்தில் அவற்றைப் பற்றி விவாதிப்பதற்கான நேரமும் சூழலும் குறைவதுமான இரண்டு போக்குகளும் அதிகரித்து வந்தன. கொரோனா தொற்று நோய் பரவத் தொடங்கிய பின்னர், இவ்விரு போக்குகளும் மேலும் தீவிரமடைந்தன.
படிக்க :
இதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் ?
கார்ப்பரேட் நலத் திட்டங்கள் : மக்கள் மீதான மோடி அரசின் பொருளாதார யுத்தம் !
குறிப்பாக, கொரோனா இரண்டாம் அலையின்போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட கொத்துக் கொத்தான மரணங்கள், கங்கைக் கரையை நிறைத்த பிணங்கள், சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா, பாரத் பயோடெக் − என்ற மோடிக்கு நெருக்கமான இரண்டு நிறுவனங்கள் கொள்ளை லாபமடிப்பதற்காகவே கொண்டுவரப்பட்ட தடுப்பூசிக் கொள்கை, அவர்களுக்கு மட்டுமே ஏகபோக அனுமதி, கொரோனா தொற்று அதிகரித்து வந்த சூழலில் உத்திரப்பிரதேசம், குஜராத், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் மோடி − அமித்ஷா கும்பல் ஆயிரக்கணக்கனோரைக் கொண்டு நடத்திய தேர்தல் பொதுக்கூட்டங்கள் − பிரச்சாரங்கள் ஆகியவையெல்லாம் நாட்டு மக்களிடையே கடும் கொந்தளிப்புகளை உருவாக்கின.
மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி வரி நிலுவைகளை வழங்காமல் ஏமாற்றி வருவது, இந்திய − சீன எல்லைப் பிரச்சனை, காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டுமென்ற கோரிக்கை, அம்பலப்பட்டு நாறிய ரஃபேல் ஊழல், விண்ணை முட்டும் பெட்ரோல் − டீசல் விலை உயர்வு, மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தொடரும் விவசாயிகள் போராட்டம் போன்ற எதையும் மோடி அரசு பொருட்படுத்தவில்லை. மேக்கேதாட்டில் அணை கட்டும் கர்நாடகாவின் அடாவடி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களிலும் எந்த பிரச்சனைக்கும் தீர்வு காணாத மோடி அரசின் அலட்சியப்போக்கானது, இனியும் இந்த ஆட்சியைச் சகித்துக் கொள்ள முடியாத நிலைமைக்கு நாட்டு மக்கள் அனைவரையும் தள்ளியது.
ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட மரணங்கள், வேலை இழப்புகள் போன்ற அனைத்திலும் மோடி அரசு பொய்யான விவரங்களை அள்ளி வீசியது. கார்ப்பரேட்டுகளுக்குச் சேவை செய்யும் வகையில் மக்கள் விரோத சட்டத் திருத்தங்களையும் மேற்கொண்டு வந்தது. இவற்றிற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை உழைக்கும் மக்கள் நடத்தி வந்தனர்.
நாட்டில் நடந்துவரும் இந்த அசாதாரணமான நிலைமைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எதிர்க்கட்சிகளால் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்தன. விவாதிக்கப்பட வேண்டிய பிரச்சனைகள் ஒருபுறம் குவிந்து கொண்டிருக்க, இன்னொருபுறம் நாடாளுமன்றக் கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்பதில்லை என்பதும், மற்றொருபுறம் நாடாளுமன்றக் கூட்டங்களில் விவாதங்கள் நடப்பது குறைந்து வருவதென்பதும் தொடர்ந்தது.
சென்ற 2020−ம் ஆண்டில் கொரோனா முதல் அலை உருவாகியதையடுத்து, பட்ஜெட் கூட்டத் தொடர் பாதியிலேயே முடித்துக் கொள்ளப்பட்டது. குளிர்கால கூட்டத் தொடர் ரத்து செய்யப்பட்டது. மழைக்காலக் கூட்டத் தொடரிலும் அவையின் நேரம் குறைக்கப்பட்டுவிட்டது. இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடரும் முன்கூட்டியே முடித்துக் கொள்ளப்பட்டது. மேலும், ஆளுங்கட்சியின் அராஜகமான செயல்பாடுகளாலும் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதாலும் நாட்டையும் மக்களையும் பாதிக்கும் பல்வேறு பிரச்சனைகள் விவாதிக்கப்படவில்லை. ஆகவே, இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலாவது விவாதம் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எதிர்பார்ப்பும் எதிர்கட்சிகள் மற்றும் முதலாளித்துவ ஊடகங்கள் மத்தியில் அதிகரித்து வந்தது.
இந்த சூழலில்தான் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் ஜூலை 19−ம் தேதி தொடங்கி ஆகஸ்டு 13−ம் தேதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டது.
000
நாடாளுமன்றத்தில் கேள்விகளை அனுமதித்து முறையாக விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் முறையிட்ட நிலையில், இரு அவை உறுப்பினர்களையும் ‘‘நாடாளுமன்றத்திற்கு வெளியே’’ கூட்டி பிரதமர் உரையாற்றுவார்; அதில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததையொட்டி அதைக் கைவிட்டது மோடி அரசு.
இந்நிலையில், முதல்நாள் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த பல்வேறு கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதால், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். அன்றைய நாள் மாலையில், இசுரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ என்ற நிறுவனத்தின் ‘‘பெகாசஸ் ஸ்பைவேர்’’ என்ற செயலி மூலம் மோடி அரசை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள், சமூக செயல்பாட்டாளர்கள் − என இந்தியாவைச் சேர்ந்த சுமார் ஆயிரம் பேரை உளவு பார்த்த விவகாரம் வெளிவரத் தொடங்கியது.
மோடி அரசை விமர்சிப்பவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை உடனுக்குடன் அறிந்துகொண்டு, மோடி அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதும் அம்பலமானது. எதிர்க்கட்சிகளின் ஃபோனை ஒட்டுக்கேட்கும் விவகாரம் என்பது புதிய விசயமல்ல. இதற்கு முன்னர் காங்கிரசு ஆட்சியிலும் நடந்தவைதான். நவீன தொழில்நுட்பம் வளர்ந்ததை அடுத்து செல்ஃபோன் வழியாக எதிர்க்கட்சிகளையும், தனது அரசை விமர்சிப்பவர்களையும் துல்லியமாக உளவு பார்த்துள்ளது பா.ஜ.க அரசு. புதிய விசயம் என்னவென்றால், இதுவரை சொந்த நாட்டு மக்களை அந்தந்த நாட்டு அரசுகளே உளவு பார்த்துதான் வரலாறு. ‘தேச பக்தி’யை மொத்தமாக குத்தகைக்கு எடுத்திருக்கும் பா.ஜ.க-வோ அந்நியக் கம்பெனி மூலம் சொந்த நாட்டு மக்களை உளவு பார்த்து, ‘தேச பக்தி’யில் புதிய உச்சத்தைத் தொட்டுவிட்டது.
விவாதங்கள் நடத்தாமல் நாடாளுமன்றத்தைச் செயலிழக்கச் செய்வதை தனது மரபாகவே கொண்டுள்ள பா.ஜ.க-வுக்கும் பிழைப்புவாத எதிர்க்கட்சிகளுக்கும் இந்த பெகாசஸ் பிரச்சனை நல்வாய்ப்பாக அமைந்துவிட்டது. ஜூலை 20−ம் தேதி முதல் பெகாசஸ் விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துவந்தபோதிலும், அனுமதி மறுக்கப்பட்டதால் எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடத் தொடங்கினர். இதைக்காட்டி, ‘‘பாருங்கள், எதிர்கட்சிகள் நாடாளுமன்ற ஜனநாயகத்தை இழிபடுத்துகிறார்கள்’’ என்று நரித்தனமாகப் பிரச்சாரம் செய்து தன்னை ஜனநாயகக் காவலனாகக் காட்டிக் கொண்டது, பா.ஜ.க.
அரசின் மீதான விமர்சனங்களை விவாதிக்க அனுமதி மறுப்பது, எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசுவதற்கு அனுமதி மறுப்பது, ‘‘கூச்சல் போடுகிறார்கள்’’ என்று சொல்லி எதிர்க்கட்சியினரை அவையிலிருந்து வெளியேற்றுவது, எதிர்க்கட்சிகளின் கருத்துகளை விவாதக் குறிப்பில் இருந்து நீக்குவது, தொடர்ந்து அவையை ஒத்திவைப்பது, பிரதமரும் உள்துறை அமைச்சரும் அவைக்கு வராமல் நாடாளுமன்றத்தை அவமதிப்பது − என பாசிஸ்டு கட்சிக்கே உரித்தான வகையில் நாடாளுமன்றத்தை நடத்தியது பா.ஜ.க.
திரிணாமுல் காங்கிரசு எம்.பி−க்கள் ஐந்து பேரை நாடாளுமன்றத்தில் இருந்து இடைநீக்கம் செய்தது, விவாதிக்கும் உரிமை மறுக்கப்படுவதை எதிர்த்து தொடர்ந்து கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சிகளை ‘‘நாடாளுமன்றத்தின் கண்ணியத்தை’’க் கெடுத்துவிட்டார்கள், ‘‘நாடாளுமன்றத்தின் மாண்பு’’ பறிபோய்விட்டது என்று குறை கூறியது, மாநிலங்களவையின் சபாநாகர் வெங்கையா நாயுடு நாடாளுமன்றத்திலேயே கண்ணீர் விட்டு அழுதது − என நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கியது மட்டுமல்ல; கேள்வி கேட்கும் அடிப்படை உரிமையையே கேலிக்கூத்தாக்கி எதிர்க்கட்சிகளை எள்ளி நகையாடியது மோடி − அமித்ஷா கும்பல்.
அத்தனை அயோக்கியத்தனங்களையும் அராஜகங்களையும் தானே செய்துவிட்டு, இறுதியில், நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற வேண்டிய இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே எவ்வித முன்னறிவிப்புமின்றி திடீரென நாடாளுமன்றக் கூட்டத் தொடரை முடித்துவிட்டதாக மோடி அரசு அறிவித்தது.
இந்திய ஜனநாயகத்தில் இன்னமும் நிலவுவதாகச் சொல்லப்படும் நாடாளுமன்ற ‘விவாதச் சுதந்திரமும்’ நிராகரிக்கப்பட்டுவிட்டதன் மூலம் ‘‘ஜனநாயகம் செத்துவிட்டது’’ என்று சொல்லி எதிர்க்கட்சிகள் புலம்புவதைத் தவிர வேறெதுவும் செய்ய இயலாமல் முடங்கிவிட்டன. இந்நிலையில், நாடாளுமன்றத்தைவிட்டு வெளியேற மறுத்து தர்ணா போராட்டத்தில் இறங்கிய எதிர்க்கட்சிகளை நாடாளுமன்ற அவைக் காவலர்களைக் கொண்டு வெளியேற்றாமல், வெளியாட்களைக் கொண்டு வெளியேற்றி, எதிர்க்கட்சிகளையும் நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் மேலும் கேலிக்குரியதாக்கியது, மோடி அரசு.
படிக்க :
பெகாசஸ் : ‘ஜனநாயகக்’ கட்டமைப்பை உளவு பார்க்கும் இந்து ராஷ்டிரம் !!
பெகாசஸ் : இந்தியாவில் யாரெல்லாம் உளவு பார்க்கப்பட்டார்கள் ?
இறுதிவரை, தாங்கள் எழுப்பிய எந்தப் பிரச்சனையையும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க இயலாத எதிர்க்கட்சியினர் அனைவரும் ஒன்றிணைந்து டெல்லியில் பேரணி சென்ற அவலக் காட்சி நடந்தேறியது. இந்த பேரணியில், ‘‘நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நிறைவடைந்துவிட்டது; ஆனால், நாட்டிலுள்ள 60 சதவிகித மக்களின் நலன்களுக்காக இந்தக் கூட்டத் தொடர் நடைபெறவில்லை; நாடாளுமன்றத்திற்குள் பேசுவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை; இதன் மூலமாக மிகப்பெரும் ஜனநாயகப் படுகொலையை மத்திய அரசு நடத்தியுள்ளது’’ என்று காங்கிரசு கட்சித் தலைவர் ராகுல்காந்தி ஒப்பாரி வைத்தார்.
‘‘இந்த நாடு தங்களைக் கைவிட்டுவிட்டது என்ற உண்மையை எதிர்க்கட்சிகளால் இன்னமும் ஜீரணிக்க முடியவில்லை. இக்கூட்டத் தொடரில், தெருக்களிலிருந்து நாடாளுமன்றத்துக்கு அராஜகத்தைக் கொண்டுவருவதே எதிர்க்கட்சிகளின் ஒரே செயல்திட்டமாக இருந்தது’’, ‘‘மழைக்காலக் கூட்டத் தொடரில் நடந்த சம்பவங்களுக்காக நாட்டு மக்களிடம் எதிர்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்றார் பா.ஜ.க-வைச் சேர்ந்த பியூஸ் கோயல். மத்திய அமைச்சர்கள் அடங்கிய ஒரு குழு குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவைச் சந்தித்து, எதிர்க்கட்சிகள் மீது புகார் கொடுத்த நாடகமும் அரங்கேறியது.
தற்போது நாடாளுமன்றத்தில் நடந்து முடிந்த இந்த ‘ஜனநாயகப் படுகொலை’யை ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தமிழக சட்டமன்றக் கூட்டங்களை, 110 விதியின் கீழ் அறிக்கை வாசிக்கும் கூட்டமாகவும் ஜெயலலிதாவின் புகழ்பாடும் கூட்டமாகவும் மாற்றப்பட்டிருந்த வரலாறை நமக்கு நினைவுபடுத்துகிறது.
000
அரசாங்கத்தின் செயல்பாடுகள் மீதான விவாதம் மற்றும் சட்டமியற்றுதல் ஆகிய இரண்டு கடமைகள் நாடாளுமன்றத்திற்குரிய சில முக்கிய கடமைகளாகும். இவற்றில் முதல் கடமையாகிய அரசாங்கத்தின் செயல்பாடுகளை விவாதிக்க அனுமதிக்கப்படவில்லை; அதேசமயம், நாடாளுமன்றக் குழுக்களின் கருத்துகளோ, விமர்சனங்களோ, சோதனையோ இல்லாமலேயே நடப்புக் கூட்டத்தொடரில் 19 மசோதாக்கள் அவசரமாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
சாராசரியாக ஒவ்வொரு சட்ட மசோதாவும் 34 நிமிடங்களில் விவாதங்களே இல்லாமல் நிறைவேற்றப்பட்டுள்ளன. முக்கியமாக, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிலகங்களைப் பற்றிய புதிய திவால் சட்டத் திருத்த மசோதா 2021 (Insolvency and Bankruptcy Code (Amendment) Bill, 2021) ஐந்தே நிமிடங்களில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த மோசடி ஜனநாயகத்தை, ‘‘இந்தியா − செயல்படாத நாடாளுமன்றத்தைக் கொண்டுள்ள நாடாளுமன்ற ஜனநாயகம்’’ என்று முதலாளித்துவ ஊடகங்களே எள்ளி நகையாடுகின்றன. உச்சநீதிமன்ற நீதிபதியோ, ‘‘விவாதங்கள் இல்லாமல் சட்டங்கள் இயற்றப்படுவது நாட்டிற்கு நல்லதல்ல’’ என்று புலம்பியிருக்கிறார். ‘‘மோடி − அமித்ஷா−வின் கொடூர அரசாங்கம்’’, ‘‘பாசிசம்’’ என்று குற்றஞ்சாட்டுகிறார் திரிணாமுல் காங்கிரசின் எம்.பி ஒருவர்.
நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் சட்டங்கள், திட்டங்களை விவாதத்தின் மூலம் பெரும்பான்மை வாக்கெடுப்பு நடத்தியே நிறைவேற்ற வேண்டும் என்ற அரசியல் சாசனத்தின் அடிப்படையில்தான் இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் இயங்கி வருகிறது. ஆனால், அப்படிப்பட்டதொரு நிகழ்வே இல்லையென்றால், இது ஜனநாயகமா என்று கேள்வி எழுப்புகின்றனர், சில அறிவுத்துறையினர்.
இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு இன்று நேர்ந்துள்ள இந்தப் பரிதாபகரமான நிலைமையைக் கண்டு வேதனையடையும் சிலர், சரியான கட்சி ஆட்சிக்கு வந்தால் இதனை மீட்டுவிடலாம் என்று கனவும் காண்கிறார்கள். ‘‘அரசியல் சாசனத்தைக் காப்போம், ஜனநாயகத்தைக் காப்போம்” என்றும் முழங்குகிறார்கள். ஆனால், இது செத்தவன் கையில் வெற்றிலையைக் கொடுத்த கதைதான்.
000
முதலாளித்துவ நாடாளுமன்றத்தை ‘‘அரட்டை மடம்’’ என்று கேலி செய்வார் லெனின். ஆனால், எதிர்க்கட்சிகளுக்கு விமர்சிக்கவும் விவாதிக்கவும் கூட வாய்ப்புத் தராமல், தான் வகுத்துக் கொண்ட விதியின்படியே கூட இயங்க முடியாமல், அனைத்தையும் அவிழ்த்துவிட்ட அம்மண நிலைக்குச் சென்றுவிட்டது, இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம். 1992−ல் தனியார்மயம் − தாராளமயம் − உலகமயம் எனும் மறுகாலனியாதிக்கம் நடைமுறைக்கு வரும் முன்னர் நாடாளுமன்றத்தில் அடிதடிகளும் வேட்டிகளை கிழித்த கதைகளும் ஏராளமாக நடந்துள்ளன. முந்தைய காலங்களில், தங்களது பிழைப்புவாத நோக்கங்களுக்காகவும் ஆளுங்கட்சியினரின் சர்வாதிகாரப் போக்கினாலும் நாடாளுமன்ற அராஜகங்கள் அரங்கேறி வந்தன. ஆனால், தனியார்மய − தாராளமயமாக்கலுக்குப் பின்னர் நடந்துவரும் நாடாளுமன்ற அராஜகங்களுக்கு ஒரு தனி இயல்பு உள்ளது.
தனியார்மய − தாராளமயம் என்பது வெறும் பொருளாதார ஆதிக்க கொள்கை மட்டுமல்ல; அரசியல், சமுதாயம், பண்பாடு − என அனைத்துத் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்துவதற்கான கொள்கையுமாகும். இந்த மறுகாலனியாதிக்கக் கொள்கை தன்னளவிலேயே ஆகப் பிற்போக்கான, ஆக மிகக் கொடுங்கோன்மையான பாசிசத் தன்மை கொண்டது. இந்த கொள்கை நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டதே ‘‘மக்கள் நல அரசு’’ என்ற பெயரில் திரைமறைவில் நடந்துவந்த ஆளும் வர்க்கச் சேவைக்கு பதிலாக, நேரடியான கார்ப்பரேட் பாசிச சர்வாதிகாரத்தை நிறுவுவதற்காகத்தான்; அதற்குத் தடையாக உள்ள அனைத்து பழைய பெயரளவிலான ஜனநாயக நடைமுறைகளையும் ஒழித்துக் கட்டுவதுதான். இந்தப்போக்கு 1990−களிலேயே தொடங்கிவிட்டது.
கல்வி, மருத்துவம், சுகாதாரம், குடிநீர், சாலை, இருப்பிடம் போன்ற எந்த அடிப்படை உரிமைகளையும் உழைக்கும் மக்களுக்கு ஏற்படுத்தித் தருவது அரசின் பொறுப்பல்ல; மக்கள் நலத் திட்டங்களுக்கு வழங்கப்படும் மானியங்கள் படிப்படியாக வெட்டப்பட வேண்டும்; முதலாளிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கின்ற லைசன்ஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்ஜியத்தை ஒழித்துக்கட்டி, உள்நாட்டு − பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளையடிக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுக்கும் புரோக்கர்களாக மட்டுமே அரசாங்கம் செயல்பட வேண்டும் என்பதுதான் மறுகாலனியாதிக்கத்தின் கொள்கை.
இதனடிப்படையில், புதிய கல்விக் கொள்கை, ஜி.எஸ்.டி., தேசிய நீர்க்கொள்கை, தேசிய சுற்றுச்சூழல் சட்டத் திருத்தம், தொழிலாளர் சட்டத் திருத்தம், மூன்று வேளாண் சட்டங்கள், நீட் தேர்வு, புதிய மருத்துவக் கொள்கை, டி.ஏன்.ஏ சட்டத் திருத்தம், ஊ.பா போன்ற கருப்புச் சட்டங்கள், ஆதார், பண மதிப்பிழப்பு நடவடிக்கை − என பா.ஜ.க அரசும், அதற்கு முந்தைய காங்கிரசு அரசும் கொண்டுவந்த சட்டங்கள் கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்தை அனைத்து துறைகளிலும் நிறுவுவதாகவும், அரசியல் சாசனம் மக்களுக்கும் மாநில அரசுகளுக்கும் வழங்கி வந்த உரிமைகள் அனைத்தையும் பறிக்கும் நடவடிக்கைகளாகவுமே அமைந்துள்ளன.
மத்திய அரசு நினைத்தால் மாநில அரசுகளின் உரிமைகளை ஒழித்துக் கட்டமுடியும் என்பதையும், சொல்லிக்கொள்ளப்படும் ‘‘கூட்டாட்சி தத்துவம்’’ என்பது ஒரு வெங்காயமும் இல்லை என்பதையும் இந்த நிகழ்வுகள் நமக்கு உணர்த்தின.
முப்படை தளபதிகளும் கூட்டுச்சேர முடியாது, இது இந்திய ஜனநாயகத்தின் சிறப்பு என்றெல்லாம் தாராளவாதிகள் பெருமை பீற்றிக் கொண்டனர். ஆனால், முப்படைகளையும் இணைத்து இராணுவ ஜெனரல் என்ற ஒரு புதிய அதிகாரத்தை மோடி அரசு உருவாக்கியபோது இவர்கள் வாயடைத்து போனார்கள்.
இதுமட்டுமல்ல, நாட்டின் பொருளாதாரத்தைத் திட்டமிடும் தேசிய திட்டக் கமிஷன் கலைக்கப்பட்டு தனியார்மய − தாரளமய − உலகமயக் கொள்கைகளை நேரடியாகவே நடைமுறைப்படுத்துவதற்கான நிதி ஆயோக் நிறுவப்பட்டது. நாட்டின் பொருளாதார நிலைமையைத் துல்லியமாக அறிந்து கொள்ளும் புள்ளியல் துறை செயலிழக்கப்பட்டு ஒழிக்கப்பட்டு வருகிறது.
நாடாளுமன்றத்திற்கு இருந்த பல அதிகாரங்கள் கார்ப்பரேட் அதிபர்களையும் அதிகாரிகளையும் கொண்ட ஆணையங்களுக்கும், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் பங்கிடப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பெட்ரோல் − டீசல் விலையைத் தீர்மானிப்பது முதல் அத்தியாவசியப் பொருட்களின் விலையை நிர்ணயிப்பது வரை அனைத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களால் அன்றாடம் மேற்கொள்ளப்படுகின்றன. எந்தத் தொழிலுக்கான விதிமுறைகளையும் இனி கார்ப்பரேட்டுகளே வகுத்துக் கொள்ளும் வகையில் நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் எல்லாம் பறிக்கப்பட்டு, ஆணையங்களிடம் வழங்கப்பட்டுவிட்டன.
இந்த ஆணையங்களை அதிகாரிகள், கார்ப்பரேட் நிறுவன அதிபர்கள் கொண்ட ஒரு கும்பல் கட்டுப்படுத்துகின்றன. இந்த ஆணையங்களின் தலைவர்களைப் பிரதமரின் அலுவலகம் கட்டுப்படுத்துகின்றது. இவற்றின் அதிகாரத்தில் நாடாளுமன்றமோ, இந்த நாட்டின் நீதிமன்றமோ தலையிடமுடியாத வகையில் கிட்டத்தட்ட வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் ஒரு பாசிச அரசு உருவாகி வருகிறது.
தன்னாட்சி கொண்ட நிறுவனங்கள் என்று சொல்லப்பட்ட தேர்தல் கமிசன், ரிசர்வ் வங்கி, சி.பி.ஐ, உயர் கல்வி நிறுவனங்கள் போன்றவற்றின் முக்கியமான அதிகாரங்கள் பறிக்கப்பட்டுவிட்டன. ஒன்றிய அரசு நினைத்தால் எந்த நேரத்திலும் ரிசர்வ் வங்கியின் நிதியை எடுத்துக் கொள்ளலாம் என்ற அளவிற்கு இன்று நிலைமை மாறியுள்ளது. தேர்தல் கமிசனோ, மோடி அரசுக்கு ஐந்தாம் படையாகவே வேலை செய்கிறது. இவை மட்டுமின்றி, உயர்கல்வி நிறுவனங்கள், அரசின் கலாச்சார நிறுவனங்கள், தணிக்கை நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்திலும் ஆர்.எஸ்.எஸ் விசுவாசிகள் திட்டமிட்டே நுழைக்கப்பட்டுள்ளனர்.
படிக்க :
விரைவில் சி.ஏ.ஏ. சட்டங்களை அமல்படுத்தப் போவதாக அமித்ஷா பேச்சு
பொது சுகாதாரக் கட்டமைப்பை ஒழிக்கும் மோடி அரசின் கார்ப்பரேட் கொள்கை !
மொத்தத்தில், பீற்றிக்கொள்ளப்பட்ட இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அனைத்து அங்கங்களும் வெட்டிச் சிதைக்கப்பட்டுவிட்டன. அதன் உச்சமாக நாடாளுமன்ற ‘‘விமர்சன சுதந்திரம்’’ அடைந்திருக்கும் பரிதாப நிலையைத்தான் மேலே விளக்கியுள்ளோம்.
இறுதியாக, உளுத்துப்போன குட்டிச்சுவராக காட்சியளிக்கும் இந்த நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடையாளமாக உள்ள கட்டிடத்தையும் மோடி − அமித்ஷா கும்பல் விட்டுவைப்பதாக இல்லை. இந்தப் பழைய கட்டிடத்திற்கு பதிலாக, ரூ.20,000 கோடி செலவில் சென்ட்ரல் விஸ்தா என்ற புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தைக் கட்டியமைத்து வருகிறது.
1925−ம் ஆண்டில் உருவான ஆர்.எஸ்.எஸ்−ன் நூற்றாண்டு நெருங்கி வருகிறது. அயோத்தியில் கட்டப்படும் இராமர் கோவிலுக்கான பணிகளும் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்து ராஷ்டிரத்தின் அங்கமாக புதிய நாடாளுமன்றக் கட்டிடமும் அமையும் என்று நாம் எதிர்பார்க்கலாம். அதுவே, இந்துராஷ்டிரம் தொடங்குவதை அறிவிப்பதாகவும் அமையலாம் !

புதிய ஜனநாயகம்

ஜாலியன் வாலாபாக் நினைவிடம் : கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை ?

சுதந்திரப் போராட்டத்தில் காட்டிக் கொடுத்ததையும், வெள்ளைக்காரனின் காலை நக்கிப் பிழைத்ததையும் தாண்டி ஒன்றும் செய்திடாத சங்க பரிவாரக் கும்பலின் கையில் தியாகத்தின் சின்னத்தைக் கொடுத்தால் அதன் கதி என்னவாகும் ? குரங்கு கையில் கிடைத்த பூமாலையின் கதிதான் ஆகும். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள, ஜாலியன் வாலாபாக் தியாகிகள் நினைவிடத்தை புணரமைப்பதாகக் கூறி விடுதலைப் போரின் அந்த தியாகச் சின்னத்தை கேளிக்கை மைதானமாக மாற்றியுள்ளது.
ஜாலியன் வாலபாக்கில் நடந்த மூர்க்கத்தனமான படுகொலைகள் தான் நமக்கு பகத்சிங்கைத் தந்தது. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் மிக முக்கியமான அடையாளமாக அது பராமரிக்கப்பட்டு வந்தது. இத்தகைய நினைவிடங்கள், அந்த வரலாற்றுச் சம்பவங்களை நினைவில் ஏற்றிக் கொள்ளவும், அங்கு நிகழ்ந்த கொடூரத்தை உணரவும், தியாகிகளை நினைவுகூரவும் தான் அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.
உலகம் முழுவதும் இதுதான் நடக்கிறது. ஆனால், சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்காதது மட்டுமல்ல காட்டிக்கொடுத்த வரலாறும் கொண்ட ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் அந்த நினைவிடத்தின் தியாக உணர்வை அழித்து அதை கேளிக்கைக்கான இடமாக மாற்றியமைத்தது பற்றிதான் இக்கட்டுரை பேசுகிறது.
அமிர்தசரஸில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவிடமானது, இரண்டு ஆண்டுகள் மறுசீரமைப்பு நடந்த பிறகு, நாட்டுப்பற்றைத் தூண்டும் என்று எதிர்பார்க்கக் கூடிய ஒரு தோற்றத்தைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால், இந்த திட்டம் அனைத்து தரப்பிலிருந்தும் குறிப்பாக, தியாகிகளின் குடும்பங்களிலிருந்தும் அதிருப்தியை பெற்றிருக்கிறது. தங்கள் முன்னோர்களின் தியாகத்தை, கண்ணைக் கூசச் செய்யும் பகட்டான விளக்குகள் மற்றும் சுவரோவியங்கள் மூலமாக அழிக்கும் முயற்சி இது என்ற குற்றம்சாட்டியிருக்கின்றனர்.
படிக்க :
ஜாலியன்வாலாபாக் படுகொலையும் உத்தம் சிங்கின் இருபதாண்டு கால காத்திருப்பும் !
ஜாலியன்வாலா பாக் படுகொலையின் நாட்குறிப்புகள் !
கொடூரமான வன்முறையினால் தங்களது இன்னுயிரை இழந்தவர்களுக்கான ஒரு நினைவுச் சின்னத்திற்குப் பதிலாக, அரசாங்கம் இந்த நினைவிடத்தை ஒரு பொழுதுபோக்கு இடம்போல மாற்றிவிட்டது என குற்றம்சாட்டியுள்ளனர்.
ஜாலியன் வாலாபாக் தேசிய நினைவு அறக்கட்டளை மே 1, 1951 அன்று அமைக்கப்பட்டது. 1961, ஏப்ரல் 13-ம் தேதியன்று அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு முன்னிலையில் அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் இதை தொடங்கி வைத்தார். அப்போதிருந்து, ஜாலியன் வாலாபாக்கில் பல பழுதுகள் ஏற்பட்டுள்ளன. அவற்றை அந்தந்த அரசுகள் சரி செய்து வந்தன. ஆனால், அதன் சாரம் ஒருபோதும் சிதைக்கப்படவில்லை. 2019-ல் ஜாலியன் வாலாபாக் படுகொலை 100 ஆண்டுகளை நிறைவு செய்தபோது, மத்திய அரசு ரூ.20 கோடி மதிப்பீட்டில் இதை மறுசீரமைப்பு செய்யப்போவதாக அறிவித்தது.
புதுப்பிக்கப்பட்ட ஜாலியன் வாலாபாக் நினைவிடம் பற்றிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட பின் அது வைரலாகி, குறிப்பாக அதன் மாற்றப்பட்ட நுழைவு வாயில், வெளியேறும் வழி,  தாமரைகுளம் மற்றும் தியாகிகளின் நினைவாக 28 நிமிட ஒலி மற்றும் ஒளி நிகழ்ச்சி ஆகியவை குறித்து பொதுமக்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். வரலாற்று ஆசிரியர்கள் முதல் எதிர்க்கட்சித் தலைவர்கள், எழுத்தாளர்கள், உள்ளூர்வாசிகள், புலம்பெயர்ந்த பஞ்சாபியர் மற்றும் உலகெங்கிலும் உள்ள மக்கள் என அனைவரும் ஜாலியன் வாலாபாக் நினைவுச் சின்னத்தை கேளிக்கைக் கூடமாக மாற்றியதன் மீது தமது கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருக்கின்றனர்.
தியாகிகளின் நினைவாக அதன் உண்மையான சாராம்சத்திற்கு ஏற்ப ஜாலியன் வாலாபாக் நினைவுச் சின்னம் மீட்டெடுக்கப்படாத வரை எதிர்காலத்தில் “தேசிய மற்றும் மாநில அளவில்” நடத்தப்படும் அனைத்து நிகழ்ச்சிகளையும் புறக்கணிக்கப்போவதாக தியாகிகளின் சந்ததியினர் அறிவித்துள்ளனர்.
புனரமைப்புத் திட்டத்தில் தியாகிகளின் குடும்பத்தினரை ஈடுபடுத்தாததற்காகவும், சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அரசு வழங்கும் தாமிரப் பட்டயம், சான்றிதழ்கள் மற்றும் பிற வசதிகளையும் வழங்க வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையை புறக்கணித்ததற்காகவும் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் மற்றும் அறக்கட்டளையின் பிற உறுப்பினர்களையும் அவர்கள் கடுமையாக விமர்சித்தனர்.
ஜாலியன் வாலாபாக் சுதந்திரப் போராட்ட வீரர்கள் அறக்கட்டளையின் தலைவரும், ஜாலியன் வாலாபாக்கில் வீரமரணம் அடைந்த லாலா வசூ மாலின் கொள்ளுப் பேரனுமான சுனில் கபூர், மத்திய அரசு இந்த நினைவிடத்தில் செய்துள்ள மாற்றங்களைக் கடுமையாக எதிர்ப்பதாக தி வயர் நிறுவனத்திடம் தெரிவித்தார்.
“ஜாலியன் வாலாபாக் நுழைவாயில் இப்போது ஒரு திருமண மண்டபம் போல் காட்சியளிக்கிறது. காடி விளக்குகள் மற்றும் அதன் சூழல் ஒரு வணிக வளாகத்தை (Shopping Mall) உங்களுக்கு நினைவூட்டுகிறது. இப்போது இது நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் பாரம்பரியத்தை சித்தரிக்கவில்லை. புதிதாக புதுப்பிக்கப்பட்ட இந்த நினைவிடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து தேசிய மற்றும் மாநில அளவிலான விழாக்களையும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்” என்று அவர் கூறினார்.
ஜாலியன் வாலாபாக் தேசிய நினைவு அறக்கட்டளை நிகழ்வுகளில் தியாகிகளின் குடும்பத்தினரை ஒருபோதும் சேர்க்கவில்லை என்றும், அப்படி சேர்த்திருந்தால் இந்த மாற்றங்களுக்கு எதிராக அவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பார்கள் என்றும் கபூர் கூறினார். புனரமைப்பில் உள்ள மூன்று முக்கிய குறைபாடுகளை சுட்டிக்காட்டிய அவர், “ஜாலியன் வாலாபாக் செல்லும் சந்து சுவர்கள் புடைப்புச் சிற்பங்களுடன் முற்றிலும் மாற்றப்பட்டதும், நீண்ட நுழைவாயிலின் திறந்த நிலையிலான மேல்புறம் இரும்பு கிரில்களால் மூடப்பட்டுள்ளதும் விடுதலை வேட்கைக்கான உத்வேக உணர்வூட்டுவதை தடைப்படுத்துகிறது. அது ஜெனரல் டயரின் வீரர்கள் எவ்வாறு மக்கள் வெளியேற்றத்தைத் தடுத்து ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றனர் என்ற கொடூரத்திற்கான ஒரு சான்றாகும். அந்த உணர்வை இப்போது அழித்துவிட்டனர்.
இரண்டாவதாக, அவர்கள் ‘ஷஹீதி கூ’ (தியாகியின் கிணறு) மூலத்தை சிதைத்து அதை கண்ணாடியால் மூடினர். மூன்றாவதாக தியாகிகளின் புகைப்படங்களையும் அவர்கள் அகற்றிவிட்டனர். இது மிகவும் அவமானகரமானது. விடுதலைக்கான போராட்டங்களில், பஞ்சாபிகள் தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்தனர் என்பது மறுக்க முடியாத வரலாற்று உண்மை. இந்த அரசாங்கம் அந்த வரலாற்றை என்றென்றும் துடைத்தெறிய விரும்புகிறது” என்று அவர் மேலும் கூறினார்.
ஜாலியன் வாலாபாக் படுகொலையில் தனது முப்பாட்டனார் லாலா வாசூ மால் வீரமரணம் அடைந்தபிறகு, அவர்களின் குடும்பத்தில் எந்த மணமகளும் பாரம்பரிய சிவப்பு வளையல்களை அணிந்ததில்லை, இது பயங்கரவாதத்தை நினைவு கொள்ளும் வகையிலான ஒரு அடையாளம் என்று சுனில் கபூர் குறிப்பிட்டார். ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போக்கை மாற்றிய அப்படுகொலையுடன் அவர்கள் தொடர்பு கொண்டிருந்ததைக் குறிக்கும் குடும்ப வழக்கம் இன்னும் அப்படியே உள்ளது.
ஜாலியன் வாலாபாக் அருகே உள்ள கடைக்காரர்கள் குழுவும் கட்டுமான தளம் பொதுமக்களுக்காக மூடப்பட்டதால், அவர்களும் இந்த மாற்றங்களுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்க முடியவில்லை என்று கூறினர். “மாற்றப்பட்ட சந்து கண்டு நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். இது ஒரு ஹோட்டல் நுழைவாயில் அல்லது ஒரு கேளிக்கை பூங்கா போல் தெரிகிறது” என்று ஒரு கடைக்காரர் கூறினார். “ஒரு சோகமான மற்றும் கடந்த காலத்தின் அந்த வரலாற்று உணர்வைக் காண முடியவில்லை. இது பெரும் தவறு” என்றார் மற்றொருவர்.
மத்திய அரசின் ‘முயற்சியை’ பாராட்டும், ஜாலியன் வாலாபாக் ஷாஹீத் பரிவார் சமிதியின் தலைவர் மனிஷ் பெஹல்கூட, “ சந்து மாற்றப்பட்டிருக்கக் கூடாது” என்று சுட்டிக்காட்டினார்.
“இந்த நிகழ்ச்சியில் அரசாங்கம் எங்களை கௌரவித்தது, எங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், குறுகிய பாதை அதன் அசல் தன்மையை இழந்துவிட்டதாக நான் கூட உணர்கிறேன். முன்னதாக, ஜாலியன் வாலாபாக் ‘நானக் ஷாஹி’ செங்கற்களை (சிறிய, மெல்லிய செங்கற்கள்) கொண்டிருந்தது; ஆனால் அவையும் அகற்றப்பட்டுள்ளன. தியாகியின் கிணறு இன்னும் ஒரே மாதிரியாக உள்ளது; ஆனால் சந்து மாற்றம் பொதுமக்களுக்குப் பிடிக்காத ஒன்று” என்று 75 வயதான அவர் கூறினார்.
மனிஷ் பெஹலின் தாத்தா லாலா ஹரி ராம் பெஹலும் இந்த படுகொலையில் வீரமரணம் அடைந்தார். அப்போதிருந்து சுதந்திரத்திற்கான போராட்டத்தில் அவரது குடும்பம் முன்னணியில் உள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூட ஜாலியன் வாலாபாக் இப்படி சீரமைக்கப்பட்டதை விமர்சித்து ட்வீட் செய்தார், “சுதந்திரத்திற்காக போராடாதவர்கள், போராடியவர்களைப் புரிந்து கொள்ள முடியாது.” என்று தெரிவித்திருக்கிறார்.
ஆச்சரியம் என்னவென்றால், முற்றிலும் மாறாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் “எனக்கு இது மிகவும் நன்றாக இருக்கிறது”. என்றூ குறிப்பிட்டிருக்கிறார். குறிப்பாக, ஆகஸ்ட் 14 அன்று, கேப்டன் அமரீந்தர் சிங்கும் அமிர்தசரஸில் ஜாலியன் வாலாபாக் நூற்றாண்டு நினைவுப் பூங்காவை திறந்து வைத்த விழாவில் பங்கேற்றார்.
பொதுமக்களின் கோபத்திற்கு பதிலளித்த அமிர்தசரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் குர்ஜீத் சிங் அஜ்லா, “பா.ஜ.க தலைவர் ஷ்வெயிட் மாலிக் இந்த திட்டத்தின் அறங்காவலராக இருந்தார், மேலும் அவர்தான் மத்திய அரசுடன் தொடர்புகளை பராமரிப்பதுடன், முழு வளர்ச்சியையும் கண்காணித்தார். நாங்கள் ஒருபோதும் அறக்கட்டளையில் பணிகளில் ஈடுபடவில்லை. திறப்பு விழா நாளன்றுதான் நாங்கள் அழைக்கப்பட்டோம். உண்மை என்னவென்றால், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்துடன் பாஜக-வுக்கு எந்த தொடர்பும் இல்லை. அவர்கள் வரலாற்றில் எந்த பங்களிப்பும் செய்யவில்லை. அதனால்தான் அவர்கள் அதை அழிக்க விரும்புகிறார்கள்” என்று கூறினார்.
மேலும், சீரமைப்பின்போது புனரமைப்புத் தளம் முழுவதும் பொதுமக்களுக்கு மூடப்பட்டிருந்தது என்பதை சுட்டிக் காட்டினார்.
இதற்கிடையில், மாநிலங்களவை எம்.பி-யும் முன்னாள் பா.ஜ.க பஞ்சாப் தலைவருமான ஷ்வெயிட் மாலிக், ஜாலியன் வாலாபாக் நினைவு அறக்கட்டளையின் அறங்காவலராகவும் இருந்தார். அவரை தொடர்பு கொள்ள தி வயர் இணையதளம் பலமுறை முயற்சி செய்தபோதிலும் கருத்து தெரிவிக்க அவர் கிடைக்கவில்லை. அவரது அலைபேசி எண் அணைக்கப்பட்டது.
வரலாறு
பக்ரி சம்பல் ஜாட்டா முதல் ஜாலியன் வாலாபாக் வரை என்ற தனது புத்தகத்தில், அதன் ஆசிரியர் டாக்டர் பிரேம் சிங் 1919-ம் ஆண்டின் தொடக்கத்தில், பிரிட்டிஷ் பேரரசை உலுக்கிய மக்கள் போராட்டத்தின் அரங்காக பஞ்சாப் மாறியது என்று எழுதினார்.
ரௌலட் மசோதா நாட்டில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது, 1919, மார்ச் 18-ம் தேதியன்று வைஸ்ராய் கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட பின்னர், அது ரௌலட் சட்டம் என்று அழைக்கப்பட்டது.
அன்று கவுன்சிலின் மூன்று இந்திய உறுப்பினர்கள் தங்கள் ராஜினாமாவை அறிவித்தனர். அவர்கள் மதன் மோகன் மாளவியா, மசார்-உல்-ஹக் மற்றும் முகமது அலி ஜின்னா ஆகியோர் ஆவர்.
அரசாங்கம் “அராஜகவாத மற்றும் புரட்சிகர இயக்கங்களைக்” கையாளுவதற்கு  அதற்கு “அவசரகால அதிகாரங்கள்” வழங்கப்பட வேண்டும் என்று இந்த மசோதா தெளிவாகக் கூறியது.
இந்த மசோதாவின் அதிகாரப்பூர்வ விளக்கம், அரசாங்கக் கொள்கை மீதான விமர்சனத்தின் லேசான வெளிப்பாடு கூட தண்டனைக்குரியதாக ஆக்கப்படலாம் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. இதற்குமேல் குற்றப் புலனாய்வுத் துறையின் சாதாரண கான்ஸ்டபிள் கூட பொதுமக்களில் யார் ஒருவர் மீதும் தேசத்துரோகக் குற்றம் சாட்ட அதிகாரம் இருந்தது. ஆனால், குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு நீதிமன்றத்தை அணுக உரிமை இல்லை. அவரால் ஒரு பிளீடரை நியமிக்க முடியாது. மேல்முறையீடு செய்ய முடியாது. பத்திரிகைகளின் மீதான ஒடுக்குமுறை அவலநிலையும் இதேபோலத்தான் இருந்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டிய கடமை போலீசுத்துறைக்கு இல்லை.
படுகொலை
1919 பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் ரௌலட் மசோதாவுக்கு எதிரான போராட்டம் தொடங்கிய போது, பஞ்சாபில் ரௌலட் மசோதாவுக்கு எதிரான கடுமையான எதிர்ப்பு வளர்ந்தது என்று டாக்டர் பிரேம் சிங் குறிப்பிடுகிறார்.
ஜாலியன்வாலா பாக் தியாகிகள் நினைவிடம் அஞ்சலி செலுத்தும் ஜாலியன்வாலா பாக் தியாகிகளின் குடும்ப உறுப்பினர்கள்.
கர்னல் ரெஜினால்ட் எட்வர்ட் ஹாரி டயர் ஏப்ரல் 13-ம் தேதியன்று காலை ஜலந்தர் கன்டோன்மெண்டில் இருந்து அமிர்தசரஸ் நகருக்கு இராணுவத்தின் ஒரு படைப்பிரிவுடன் புறப்பட்டார். சீக்கியர்களின் அறுவடைத் திருநாளான பைசாகியை மக்கள் கொண்டாடிக் கொண்டிருந்தனர். அத்தோடு டாக்டர் சத்யபால் மற்றும் டாக்டர் சைபுதீன் கிட்ச்லு ஆகியோர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து மாலை 4 மணிக்கு நடைபெற உள்ள பொதுக்கூட்டத்திற்காக ஜாலியன் வாலாபாக்கில் கூடுவதற்கும் மக்கள் முடிவு செய்திருந்தனர். ரௌலட் மசோதாவுக்கு எதிராகப் போராடியதற்காக இந்த இரு தலைவர்களும் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தனர். இது மக்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
ஏப்ரல் 13 மாலை வாக்கில், சில நிமிடங்களில் நூற்றுக்கணக்கான இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் பாக் சுவர் வளாகத்தைச் சுற்றி கிடந்தனர். குறுகலான பாதைகளில் தப்பிக்க முயன்றவர்கள்தான் முதலில் சுடப்பட்டனர். அந்த இடத்திலேயே இருந்த கர்னல் டயர், அதிகபட்ச எண்ணிக்கையிலான மக்கள் இருந்த இடங்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார். சுவரில் ஏற முயன்றவர்களும் இதேபோல் சுடப்பட்டனர். பாக் அருகில் உள்ள தெருக்களில் பல சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
படிக்க :
பட்டேல் சிலைக்கு 3000 கோடி – ஜாலியன் வாலாபாக் நினைவிடத்திற்கு 1 ரூபாய் கூட இல்லை !
ஜாலியன்வாலா பாக் நூற்றாண்டு : தொடருகிறது விடுதலைப் போராட்டம் !
படுகொலைக்குப் பின்னர், டயர் தான் 1,650 சுற்றுகள் சுட்டதாக ஹண்டர் கமிஷனின் முன் ஒப்புக்கொண்டார். கவச வாகனங்ளை பாக் உள்ளே எடுத்துச் செல்ல முடிந்தால், அவற்றை எடுத்துச் சென்று சுடுவதற்கு பயன்படுத்தியிருப்பேன் என்றும் அவர் ஒப்புக்கொண்டார். அவரது வெடிமருந்துகள் தீர்ந்துவிட்டதால் துப்பாக்கிச் சூடு நிறுத்தப்பட்டதாக அவர் கூறினார். குற்றவாளிகளை தண்டிக்க விரும்புவதாக அவர் ஒப்புக்கொண்டார், ஏனெனில் அவர்கள் அவரது உத்தரவுகளை மீறி அங்கு கூடியிருந்தனர். ஏப்ரல் 14-ம் தேதி, இறந்தவர்களின் உடல்களை அடக்கம் மற்றும் தகனம் செய்ய அரசு அனுமதி அளித்தது. ஆனால், இறுதி ஊர்வலம் எதுவும் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால் ஊர்வலம் நடத்த முடியவில்லை.

இதுதான் ஜாலியன் வாலாபாக்கின் கொடூர வரலாறு. ஆனால் அந்தக் கொடூரத்தின் சாட்சியாக விளங்கிய தளத்தை கேளிக்கை விடுதியைப் போல அலங்கோலப்படுத்தியிருக்கிறது, வெள்ளைக்காரனின் கைக்கூலியாகத் திரிந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தேர்தல் பிரிவான பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு.

இதனைக் கண்டித்து பல்வேறு வரலாற்றாசிரியர்களும் அரசியல் தலைவர்களும் தெரிவித்த கண்டன செய்திகள் :

  • ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் முன்னாள் பேராசிரியர் சமன் லால் இந்த மறுசீரமைப்பை “வரலாற்றின் சிதைவு” என்றழைத்தார். “ஜாலியன் வாலாபாக்கிற்கு வருகை தரும் மக்கள் வலி மற்றும் வேதனையுடன் செல்ல வேண்டும். அவர்கள் (ஆட்சியாளர்கள்) இப்போது ஒரு அழகான தோட்டத்துடன், அதை ரசிக்கத்தக்க ஒரு இடமாக மாற்ற முயற்சித்திருக்கிறார்கள். அது ஒரு அழகான தோட்டமல்ல” என்று லால் மேலும் கூறினார்.
  • கிம் ஏ வாக்னர், லண்டனில் வாழும் வரலாற்றுப் பேராசிரியர்  ‘அமிர்தசரஸ் 1919 – அச்சத்தின் பேரரசு மற்றும் படுகொலையினை செய்வது’ என்ற நூலின் ஆசிரியருமாவார். அவர் புதுப்பித்துள்ளதைப் பார்த்ததும், (படுகொலை) “நிகழ்வின் கடைசி தடயங்கள் திறம்பட அழிக்கப்பட்டுவிட்டன” என்று ட்வீட் செய்தார்.
  • எதிர்க்கட்சித் தலைவர்கள் ராகுல் மற்றும் யெச்சூரி, இந்த நடவடிக்கையை “தியாகிகளுக்கு அவமதிப்பு” என்று விமர்சித்தனர்.
  • “இது நினைவுச் சின்னங்களை கார்ப்பரேட் மயமாக்குவது. (நினைவுகளை அழித்தொழிக்கும்) நவீன கட்டிடங்களாக கட்டி முடிப்பார்கள். பாரம்பரிய உணர்வுகளும் மதிப்பும் அழிக்கப்பட்டிருக்கும். தியாகிகளின் காலகட்டத்துடனும் அந்த தியாக உணர்வைப் பெறுவதும் என்பதுடன் போட்டு குழப்பிக் கொள்ளாமல் இவற்றைப் பார்த்து கடந்து செல்ல வேண்டும்” என வரலாற்றாய்வாளர் எஸ்.இர்ஃபான் ஹபீப் ட்வீட் செய்துள்ளார்.

நாகராசு
செய்தி ஆதாரம் :
The Wire

திமுக அரசு பட்ஜெட்டும் அரசுப் பள்ளிகளின் நிலைமையும் || சிறப்புக் கட்டுரை

ள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. “அரசுப் பள்ளிகளை நவீனப்படுத்தவும், அவற்றின் தரத்தை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளிகள் வறுமையின் அடையாளமல்ல, அவற்றைப் பெருமையின் அடையாளமாக மாற்றுவோம்”என நடப்புச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் அவர் அறிவித்திருக்கிறார்.
கடந்த பத்தாண்டுகளில் அரசுப் பள்ளிகள், குறிப்பாக ஆரம்பப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து, தனியார் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் பல அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன. தேசிய கல்விக் கொள்கையின்படி அரசுப் பள்ளிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மாணவர்கள் இல்லை என்றால், அத்தகைய பள்ளிகளை மூடிவிட்டுப் பல கிராமங்களுக்கு மையத்தில் பள்ளி வளாகத்தை உருவாக்க வேண்டும் என ஒன்றிய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. அதிமுக அரசும் அக்கொள்கையை ஏற்றுக் கொண்டது.
குறிப்பாக ஜூலை 04, 2019 அன்று தமிழகத்தில் 1,848 பள்ளிகளில் 10-க்கும் குறைவான மாணவர்கள் பயில்வதாகவும், அவற்றை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது.
படிக்க :
தமிழகத்தில் அதிகரித்து வரும் தனியார் பள்ளி கட்டணக் கொள்ளை !
♦ தமிழகத்தின் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழ்மொழி புறக்கணிப்பு!
ஜூலை 18, 2019 அன்று தமிழகத்தில் 1248 அரசு பள்ளிகள் மூடப்பட்டு, நூலகங்களாக மாற்றப்படும். நூலகங்களில் பணியாற்ற ஆசிரியர்களுக்கு பயிற்சி தேவையில்லை. அங்குள்ள ஆயாக்களே பணியாற்றுவார்கள் என கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாக செய்தி வெளியானது.
ஆனால் அதனை மறுத்து, “பள்ளிகளை மூடும் நோக்கம் அரசிற்கு இல்லை. மூடப்போவதும் இல்லை. மாணவர்களே இல்லாத பள்ளிகள் நூலகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும். அங்கே ஒரு ஆசிரியர் இருப்பார். அங்கிருக்கும் மாணவர்களுக்கேற்ப அந்த ஆசிரியர் தொடர்ந்து பணிகளை ஆற்றுவார்” என ட்விட்டரில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து இருந்தார்.
மேற்கூறிய சம்பவங்கள் அதிமுக அரசு தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த எடுத்த முயற்சிக்கான துலக்கமான எடுத்துக்காட்டுகள்.
கொரோனா வந்தபிறகு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. கொரோனா காலத்தில் வேலையிழந்து, வருமானத்தையும் வாழ்வாதாரத்தையும் இழந்த ஏழை, எளிய விளிம்பு நிலைக் குடும்பங்களைச் சார்ந்தவர்கள் தனியார் பள்ளிகளில் படித்து வரும் தங்கள் குழந்தைகளைக் கட்டணம் செலுத்திப் படிக்க வைக்க இயலாததால், அரசுப் பள்ளிகளில் சேர்க்கத் துவங்கினர். இதுவரையில் 2 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளிலிருந்து அரசுப் பள்ளிகளுக்கு வந்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
இதற்கு அரசுப் பள்ளிகளின் தரம் உயர்ந்ததுதான் காரணம் என்று சொல்லி விட முடியாது. ஏழை, எளிய குடும்பங்களின் வாழ்க்கைத் தரம் சரிந்ததால் ஏற்பட்ட மாற்றம் இது.
கொரோனா தொற்றுக் காலத்தில் அதிக பாதிப்புக்குள்ளானது கல்வி. தேசிய அளவில் ஆரம்பக் கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை பயிலும் 24.7 கோடி மாணவர்களுடைய கல்வி பாதிக்கப்பட்டு, மனஉளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். இந்தச் சவாலை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு, அரசுப் பள்ளிகளில் நிலவும் சில பிரச்சினைகளைப் புரிந்து கொண்டாக வேண்டும்.
தமிழக அரசுப் பள்ளிகளின் நிலைமை:
தமிழ்நாட்டில் உள்ள மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை 58,897. இதில் 35,621 பள்ளிகள் தொடக்கப் பள்ளிகளாகவும், 9,392 பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 5,788 பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 8,096 பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் உள்ளன.
அரசுப் பள்ளிகளை பொருத்த வரை 24,310 தொடக்கப் பள்ளிகள்; 7,024 நடுநிலைப் பள்ளிகள்; 3,135 உயர்நிலைப் பள்ளிகள்; 3,110 மேல்நிலைப் பள்ளிகள் உட்பட மொத்தம் 37,579 பள்ளிகள் உள்ளன.
தனியார்ப் பள்ளிகளைப் பொருத்த வரை தொடக்கப் பள்ளிகள் 5089, நடுநிலைப் பள்ளிகள் 763, உயர்நிலைப் பள்ளிகள் 2046, மேல்நிலைப் பள்ளிகள் 3764 உட்பட மொத்தம் 12,382 பள்ளிகள் உள்ளன.
அரசு உதவிப் பெறும் பள்ளிகளைப் பொருத்த வரை தொடக்கப் பள்ளிகள் 5021, நடுநிலைப் பள்ளிகள் 1508, உயர்நிலைப் பள்ளிகள் 589, மேல்நிலைப் பள்ளிகள் 1210 உட்பட மொத்தம் 8328 பள்ளிகள் உள்ளன.
தமிழ்நாட்டுப் பள்ளிகளில் உள்ள 5.6 லட்சம் ஆசிரியர்களில், 2.27 லட்சம் பேர் அரசுப் பள்ளிகளிலும், 77 ஆயிரம் பேர் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும், 2.53 லட்சம் பேர் தனியார்ப் பள்ளிகளிலும் பணிபுரிகின்றனர். மற்ற பிரிவுகளில் 4,552 ஆசிரியர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.
மொத்தம் 37,579 பள்ளிகள் உள்ள அரசுப் பள்ளிகளில் 2.27 லட்சம் ஆசிரியர்கள் தான் பணிபுரிகின்றனர். ஆனால், 12,382 பள்ளிகள் உள்ள தனியார் பள்ளிகளில் 2.53 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 45,93,422 பேரும், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 22,25,308 பேரும், தனியார்ப் பள்ளிகளில் 64,15,398 பேரும், மற்ற பள்ளிகளில் 83,755 மாணவ, மாணவிகளும் உள்ளனர்.
மொத்தம் 37,579 பள்ளிகள் உள்ள அரசுப் பள்ளிகளில் 45,93,422 மாணவ, மாணவிகள் தான் படிக்கின்றனர். ஆனால், 12,382 பள்ளிகள் உள்ள தனியார் பள்ளிகளில் 64,15,398 மாணவ, மாணவிகள் தான் படிக்கின்றனர்.
அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை தனியார் பள்ளிகளின் எண்ணிக்கையை விட 3 மடங்கு அதிகமாக உள்ளது. ஆனால், மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையிலும், ஆசிரியர்களின் எண்ணிக்கையிலும் தனியார் பள்ளிகள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
மேற்கூறியவற்றில் இருந்து பார்க்கும்போது தமிழக மாணவ மாணவிகள் அரசுப் பள்ளிகளை விட தனியார் பள்ளிகளை நோக்கிதான் செல்கின்றனர். இதை இப்படிக்கூட கூறலாம், இலவசக் கல்வி படிப்படியாக ஒழிக்கப்பட்டு காசு இருந்தால்தான் படிக்க முடியும் என்ற நிலை படிப்படியாக உருவாக்கப்படுகிறது.
2019-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், தமிழகத்தில் 2,391 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்ற தகவலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், பள்ளிக் கல்வித் துறையிடம் சமர்ப்பித்துள்ளனர்.
அரசின் கணக்கின்படியே பள்ளிகளின் நிலைமை இவ்வளவு மோசம் என்றால், உண்மை நிலவரம் இதைவிட மோசமாக இருக்கும். பள்ளிக் கல்வித் துறை அரசாணை நிலை எண் படி, 20 மாணவர்களுக்கு 1 சிறுநீர் கழிவறையும், 50 மாணவர்களுக்கு 1 மலக்கழிவறையும் இருக்க வேண்டும். இந்த அரசாணைகள் எல்லாம் காகிதத்தில்தான் உள்ளது. நடைமுறையில் எந்த பள்ளிக் கூடத்திலும் அமலாக்கத்திற்கு செல்லவில்லை.
உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் தங்களின் மேல்நிலைப் படிப்புக்கு செல்வது குறைவதன் மூலம், தமிழ்நாட்டின் இடைநிற்றல் விகிதமும் அதிகரிக்கிறது என்பதை நம்மால் உணர முடிகிறது. அதாவது, 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் அதிகரித்துள்ளது. இவர்கள் 9,10-ம் வகுப்போடு தங்களின் பள்ளிக் கனவையே இழக்கின்றனர். 2019-20-ல் தமிழ்நாட்டின் மொத்த உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் 9.6 % ஆக உள்ளது.
தமிழ்நாட்டில் ஆரம்பப் பள்ளிகளில், மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் 16% ஆக உள்ளது. இப்படி பல மாணவ, மாணவியர் இடைநிற்றலுக்கு உள்ளாவதால், குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிகை அதிகரித்து வருகிறது
இந்தளவுக்கு இடைநிற்றல் மாணவ மாணவியர் அதிகரிப்பதன் பின்னணியில் வேலைவாய்ப்பின்மையால் குடும்பத்தில் நிலவும் வறுமை உட்பட வெவ்வேறு குடும்ப சூழ்நிலை போன்றவை உள்ளது. 10-ம் வகுப்பு முடித்தவுடன் பலர் குழந்தைகள், குழந்தைத் தொழிலாளராக சென்று விடுகின்றனர்.
இப்படி இடைநிற்றல் அதிகமாவதால், குழந்தைத் தொழிலாளர்கள் அதிகமாவதை போல குழந்தைத் திருமணங்களும் அதிகளவில் நடைபெறுகின்றன. இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் 15 லட்சம் குழந்தை திருமணங்கள் நடைபெறுவதாக யுனிசெஃப் கூறுகிறது. தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் திருமணம் செய்துகொள்ளும் 4 பேரில் ஒருவருக்கு குழந்தை திருமணம் நடைபெறுவதாக தெரியவந்துள்ளது.
படிக்க :
இழிவாகப் பார்க்கப்படும் தாய்மொழி வழிக் கல்வி : ஒரு பெற்றோரின் அனுபவம் !
இந்துத்துவத்தை கற்பிக்க தனி கல்வி வாரியம் அமைக்கும் மோடி அரசு !
இப்படிப்பட்ட மோசமான நிலைமையில்தான் தமிழக அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு உள்ளது. அரசுப் பள்ளிகளை நாடி வருகிற, தனியார் சுயநிதிப் பள்ளிகளிலிருந்து விலகி வருகிற மாணவர்களைத் தக்கவைக்கவும், மேலும் மேலும் அதிகமானோரை ஈர்க்கவும் அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்துவதோடு கல்வித் தரத்தையும் உயர்த்த வேண்டும். தமிழகத்தில் பல மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையைத் தக்கவைப்பதோடு அதிகரிக்கவும் சமூகப் பார்வையோடு பல ஆசிரியர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.
‘குடி’மகன்களை வெளியேற்றிய முகப்பேர் பள்ளி
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ‘அம்பத்தூர் நகராட்சி தொடக்கப் பள்ளி’ 1935-ல் தொடங்கப்பட்டது. 2009-ல் இப்பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை 45. அவ்வாண்டு தலைமை ஆசிரியராக எஸ்.கிருஷ்ணவேணி பொறுப்பேற்றபோது, பள்ளி நிறைவடைந்து ஆசிரியர்களும் மாணவர்களும் வெளியேறும் முன்பாகவே சிலர் மதுபாட்டில்களுடன் பள்ளிக்குள் ‘குடி’யேறிவந்தார்கள். ஆசிரியர்கள் அச்சத்தோடு வெளியேறினார்கள். அப்பகுதி சமூக ஆர்வலர்களைச் சந்தித்துத் தலைமையாசிரியர் நிலைமையை எடுத்துக் கூறினார். அவர்களது தலையீட்டைத் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ‘குடி’மகன்கள் தடுக்கப்பட்டார்கள், பள்ளிக்குச் சுற்றுச் சுவரும் கட்டப்பட்டது.
ஆசிரியர்கள் செலவில் காலைச் சிற்றுண்டியும் சீருடையும் கொடுத்தனர். சில புரவலர்கள் மூலம் 100 நாற்காலிகளும் 12 மேஜைகளும் பெறப்பட்டன. பள்ளியின் தோற்றம் மாற்றப்பட்டது. குழந்தைகளுக்கு ஆங்கில மொழிப் பயிற்சி தனியாக அளிக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் உள்ள ஆர்வலர்கள் மூலம் 6 மடிக்கணினிகள், 6 மேசைக் கணினிகளுடன் கணினிப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. மாவட்ட ஆட்சியரை அழைத்து பள்ளி ஆண்டு விழா நடத்தப்பட்டது.
புளியமரப் பள்ளி என்று ஏளனமாகப் பார்க்கப்பட்ட காலம் போய், தலைநிமிர்ந்த புளியமரம் என முகப்பேரின் அடையாளமாக, அனைவரும் தேடி வரும் பள்ளியாக இது உள்ளது. இப்பள்ளி மாணவர் எண்ணிக்கை கொரோனாவுக்கு முன்பு 110 ஆக உயர்ந்திருந்தது. கரோனாவுக்குப் பிறகு மேலும் 90 மாணவர்கள் சேர்ந்திருக்கிறார்கள். இப்பள்ளியின் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டியுள்ளது. 2017-ல் இப்பள்ளியின் கட்டமைப்பை மேம்படுத்த மாநகராட்சி ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்தது. ஆனால், அந்தத் தொகை இன்னும் பள்ளிக்கு வந்துசேரவில்லை.
பெற்றோர் தேடி வரும் திருவெற்றியூர் பள்ளி
ராமநாதபுரம் மாவட்டம் திருவெற்றியூரில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளி 1975-ல் தொடங்கப்பட்டது. 2013-ல் இப்பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை 203. அவ்வாண்டு தலைமையாசிரியராக ஆ.முத்துச்செல்வி பொறுப்பேற்றார். தினமும் பள்ளி நேரம் முடிந்த பிறகு, மாணவர்களுக்குத் தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளையும் கற்பிக்க ஒன்றரை மணி நேரம் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன. மாணவர்களுக்கு நாடகம், சிலம்பு, பறை போன்ற கலைகளிலும் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பள்ளியைச் சார்ந்த 7 மாணவர்கள் தேசியத் தகுதி – உதவித்தொகைத் தேர்வில் கடந்த ஆண்டு வெற்றிபெற்றார்கள்.
பள்ளி ஆசிரியர்கள் மேற்கொண்ட முயற்சியால், 2020-ல் மாணவர்கள் எண்ணிக்கை 392ஆக உயர்ந்தது. தற்போது அப்பள்ளியில் மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 662. இப்பள்ளியில் குழந்தைகளைச் சேர்ப்பதற்குப் பெற்றோர் தினமும் வருகிறார்கள். இடநெருக்கடி, ஆசிரியர் பற்றாக்குறை இருந்தாலும் மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப் படுகிறார்கள்.
தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினர் 3 புதிய வகுப்பறைகளை 2019-2020-ல் கட்டிக் கொடுத்திருக்கிறார். ஊராட்சி நிர்வாகமும் நிதியுதவி செய்தது. அதேநேரம், தேவையான ஆசிரியர்களை நியமனம் செய்வதோடு, பள்ளியின் கட்டமைப்பை மேம்படுத்திடவும் அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
முன்மாதிரியான மதரசா பள்ளி
சென்னை அண்ணா சாலையில் காயிதே மில்லத் பெண்கள் கல்லூரி வளாகத்தின் ஒரு பகுதியில், அரசு மதரசா மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. 1849-ல் தொடங்கப்பட்ட பள்ளி இது. ஏழை, எளிய குழந்தைகளின் கல்விக்காக ஆற்காடு நவாப் 23 ஏக்கர் பரப்பளவு இடத்தை இப்பள்ளிக்கு அளித்தார். 2017-ல் இப்பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை 140. அதேநேரம், தலைமை ஆசிரியர் கே.சுந்தரவடிவேல் தலைமையில், ஆசிரியர்கள் வீடுவீடாகச் சென்று பிரச்சாரம் செய்த பின்னணியில், மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்பள்ளியில் மிகப்பெரிய மைதானம் உள்ளது. மாணவர்களுக்குக் கால்பந்து, ஹாக்கி, தடகளச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆங்கிலமொழி சிறப்புப் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவுக்கு முன்பு இப்பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை 302. தற்போது மாணவர்கள் எண்ணிக்கை 369ஆக உயர்ந்துள்ளது. அனைத்து சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளும் இந்தப் பள்ளியில் படித்து வருகிறார்கள்.
இப்பள்ளியின் கட்டமைப்பை மேம்படுத்தி, ஆசிரியர்களை நியமித்து, கல்வித் தரத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்தால், மாணவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. சென்னை மாநகரத்தின் மையமான பகுதியில் பெரும் பரப்பளவில் இயங்கி வரும் இப்பள்ளியை முன்மாதிரிப் பள்ளியாக மேம்படுத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மூன்று பள்ளிகளைப் பற்றி தி இந்துவில் செய்தி வெளியாகி உள்ளது.
மேற்கூறிய மூன்று பள்ளிகளும் ஆசிரியர்களின் முன்முயற்சியால் சிறப்பாக இயங்கி வருகிறது. ஆனால் அங்கேயும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாதது, ஆசிரியர் பற்றாக்குறை போன்ற பிரச்சனைகள் உள்ளன. இப்பிரச்சனைகளை களைய தற்போது உள்ள தி.மு.க அரசின் செயல்பாடுகளைப் பற்றி பார்ப்போம்.
தற்போது தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பள்ளிக்கல்வி சம்மந்தமான சில விவரங்கள் பின்வருமாறு :
பள்ளிக் கல்விக்கு மொத்தமாக ரூ.32,599.54 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அனைத்து ஆசிரியர்களுக்கும் தொழில்நுட்ப வசதியுடன் கண்காணிக்கக் கூடிய மற்றும் ஆதாரங்கள் அடிப்படையிலான பயிற்சி வழங்க ஏதுவாக 413 கல்வி ஒன்றியங்களுக்கும் தலா 40 தொடுதிரை கையடக்க கணினிகள் 13.22 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட உள்ளது.
2025-ம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டில் உள்ள 8 வயதிற்குட்பட்ட அனைத்து மாணவர்களும் எண்ணும் எழுத்தும் இயக்கம் ரூ.66.70 கோடி மதீப்பீட்டில் தீவிரமாக செயல்படுத்தப்படும்.
அரசுப்பள்ளி மாணவர்கள் கணினித் திறன்களை இளம் வயதிலேயே பெறுவதை உறுதிசெய்ய 1,784 அரசு நடுநிலைப் பள்ளிகளில் ரூ.114.18 கோடி மதிப்பீட்டில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படும். மேலும், 865 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.20.76 கோடி செலவில் ஸ்மார்ட் வகுப்பறைகள் துவங்கப்படும்.
மேலே கூறியவைகளில் இருந்து பார்க்கும் போது, பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளான கழிவறை, குடிநீர், காற்றோட்டமான அறைகளை ஏற்படுத்துவது மற்றும் தேவையான ஆசிரியர்களை நியமிப்பதுதான் தற்போது உள்ள அவசியமான மற்றும் அத்தியவசியமான தேவை. அதைப் பற்றி எல்லாம் இந்த பட்ஜெட் கவலைப்படவில்லை. இடைக்காலப் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.34,161 கோடி தற்போது இந்த பட்ஜெட்டில் ரூ.32,599 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 37,579 பள்ளிகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வருடந்தோறும் ஒரு பள்ளிக்கு ரூ.10 இலட்சம் வீதம் ரூ.3,758 கோடி ஒதுக்கினாலே போதும், 5 வருடத்தில் தமிழகத்தில் உள்ள எல்லா அரசுப் பள்ளிகளிலும் தேவையான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த முடியும். அப்படிப்பட்ட சிந்தனை முறையும் இந்த அரசுக்கு கிடையாது.
ஆனால், இந்த பட்ஜெட்டில் சென்னையில் மெட்ரோ இரயில் இரண்டாம் கட்டத் திட்டப் பணிகள் தொடங்கப்படும் என்றும், கோவை மற்றும் மதுரை மாவட்டங்களிலும் மெட்ரோ திட்டப் பணிகள் தொடங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மெட்ரோ இரயிலில் சாதாரண ஏழை மக்கள் யார் பயணிக்கிறார்கள்? கட்டண உயர்வு காரணமாக காலியாகதான் சென்று கொண்டிருக்கிறது. சாதாரண மக்கள் பயன்பெறும் வகையில் பேருந்து மற்றும் இரயில்வே போக்குவரத்தை அமைப்பதே மக்களுக்கு உதவிகரமான திட்டமாக இருக்கும்.
கோடிக்கணக்கான ரூபாய்களை கொட்டி கட்டப்படும் மெட்ரோ இரயில் சேவைகள் மேட்டுக்குடிகளுக்கு மட்டுமே பயன்படுகிறது. அப்படிப்பட்ட திட்டத்திற்கு கோடிக்கணக்கான ரூபாய்களை கடன் வாங்கி கொட்டும் மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு இலவசமான கல்வி கொடுப்பதற்கு தேவையான அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை அதிக நிதி ஒதுக்கி பலப்படுத்த தயங்குகின்றன.
ஏனென்றால், யார் ஆட்சிக்கு வந்தாலும் அரசை இயக்குவது தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற கொள்கைகளே. அரசுப் பள்ளிகளுக்கு அதிக நிதி ஒதுக்கி, அதன் கட்டமைப்பை பலப்படுத்திவிட்டால் மக்கள் எல்லாரும் தன் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில்தான் சேர்ப்பார்கள். அதன் விளைவாக கல்வியை விற்பனை சரக்காக்குவது என்ற திட்டம் நிறைவேறாது அல்லவா?
படிக்க :
புதிய கல்விக் கொள்கையை கமுக்கமாக அனுமதிக்கும் தி.மு.க !
புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் அண்ணா பல்கலை || CCCE
அதனால்தான், அரசுப் பள்ளிகளுக்கு ஒதுக்கும் நிதி படிப்படியாக குறைக்கப்படுகிறது. அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு ஒன்னும் இல்லாமல் ஆக்கப்படுகிறது. மக்களிடமும் தனியார் பள்ளிகள்தான் தரமான பள்ளிகள் என்ற சிந்தனை ஏற்படுத்தப்படுகிறது. அதனால், அவர்களும் தன் பிள்ளைகளை கடன் வாங்கியாவது தனியார் பள்ளிகளில் படிக்க வைக்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
அரசுப் பள்ளிகள் வறுமையின் அடையாளமல்ல, அவற்றைப் பெருமையின் அடையாளமாக மாற்றுவோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுவது எல்லாம் வெற்று வாய்ச்சவடால்தான்.
இப்படிப்பட்ட நிலைமைகளில் அரசுப் பள்ளிகளில் கல்வி சொல்லிக் கொடுப்பதை சேவையாக கருதும் சமூக அக்கறை உள்ள ஆசிரியர்களால்தான், சில பள்ளிகள் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து அரசின் உதவி இல்லாமல் சிறப்பாக செயல்படுகின்றன.
ஆனால், அனைவருக்கும் தரமான, இலவசமான, விஞ்ஞானப்பூர்வமான கல்வி கொடுக்க வேண்டிய அரசானது அக்கடமையிலிருந்து விலகி நிற்கிறது.

அமீர்
செய்தி ஆதாரம் : தி இந்து, UDISE + ஆய்வறிக்கை.

அரங்கேறும் பாசிச சர்வாதிகாரம் || புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2021 மின்னிதழ் !

அன்பார்ந்த வாசகர்களே !
”நொறுங்கும் நாடாளுமன்ற ஜனநாயகம்! அரங்கேறும் பாசிச சர்வாதிகாரம்” என்ற தலைப்பில் தற்போது விற்பனையில் உள்ள புதிய ஜனநாயகம் 2021 செப்டம்பர் இதழ் தற்போது மின்னிதழ் வடிவில் வினவு இணைய தளத்தில் கிடைக்கப் பெறுகிறது.
மின்னிதழுக்கான பணம் ரூ.20-ஐ புதிய ஜனநாயகம் அலுவலகத்தின் G-Pay எண்  94446 32561-ல் செலுத்திவிட்டு, பணம் செலுத்தியதற்கான பரிவர்த்தணை விவரத்தை vinavu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் பெயர், தொடர்பு எண், மாவட்டத்தை குறிப்பிட்டு மின்னஞ்சல் அனுப்பவும். உங்களது மின்னஞ்சலுக்கு புதிய ஜனநாயகம் மின்னூல் அனுப்பி வைக்கப்படும்.

நன்றி !

– புதிய ஜனநாயகம்

செப்டம்பர் மாத இதழ் குறித்த விவரம் அறிய : இங்கே அழுத்தவும்.

மோசடியாளர்களிடமிருந்து மீட்கப்பட்ட எல்.ஐ.சி மீண்டும் மோசடியாளர்கள் கையில் ?

0
யுள் காப்பீட்டு நிறுவனத்திற்கு (LIC) வயது 66. இந்நிறுவனத்தின் பிறப்புக்கு காரணம், 1956-க்கு முன்னால் உள்நாட்டு – வெளிநாட்டு தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் செய்த மோசடிகளும் ஊழல்களுமே ஆகும். மோசடி, ஊழல்கள் மூலம் மக்களின் சேமிப்பைச் சூறையாடிய தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், இவைகளை தேசியமயமாக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியும் அகில இந்திய காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் நடத்திய தொடர் போராட்டங்களின் விளைவே எல்.ஐ.சி. நிறுவனத்தின் பிறப்பு.
மோசடி தனியார் காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து அரசுடைமையாக்கப்பட்டு இந்தியா முழுவதும் ஒருங்கிணைந்த முறையில் உருவாக்கப்பட்ட நிறுவனம் தான் எல்.ஐ.சி
அன்றைய நேரு தலைமையிலான அரசால் துவங்கப்பட்ட இந்நிறுவனத்தின் இன்றைய மதிப்பு ரூ.38,04,640 கோடி. இதன் வளர்ச்சி சுமார் ரூ.1 லட்சத்திற்கு மேற்பட்ட நிறுவன ஊழியர்களின் உழைப்பாலும் சிற்றூர்கள், கிராமங்கள் மற்றும் சாதாரண அடித்தட்டு மக்கள் வரை ரத்த நாளங்களாக செயல்பட்டதன் விளைவாக LIC நிறுவனமானது இன்று அசுர வேகத்தை எட்டியுள்ளது என்றால் அது மிகையாகாது.
படிக்க :
LIC தனியார்மயம் : சூறையாடப்படவிருக்கும் மக்களின் காப்பீட்டு நிதி!
LIC தனியார்மயம் : பொன் முட்டையிடும் வாத்தை அறுக்கும் மத்திய அரசு
தேசியமயமாக்கத்திற்கு முன்பு காப்பீட்டுத் துறையிலிருந்த 245 தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் சாதிக்காத சாதனையை ஒரு அரசு நிறுவனம் நிகழ்த்தி உள்ளது. குறைவான முதலீட்டில் இந்த அளவு அபரிமிதமான வருவாயை ஈட்டியதற்கு, பாலிசிதாரர்களுக்கு உரிய முறையில் வாக்குறுதி அளிக்கப்பட்ட வகையில் கடமை தவறாமல் மோசடி செய்யாமல் ஊழல் இல்லாமல் நேர்மையுடன் இறப்பு உரிமங்களை முதிர்ச்சி தொகைகளைக் கொண்டுபோய் சேர்த்தன் மூலம் அவர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக இன்று வரை திகழ்ந்து வருகிறது LIC நிறுவனம். இதுவே, பாலிசிதாரர்களை LIC-யுடன் தொடர்ந்தும் இடைவிடாமலும் பயணிக்க வைக்கிறது.
மேலும் இதன் வருவாய் மற்றும் உபரி,  அதன் சொந்த வளர்ச்சிக்கும் அரசு நிறுவனங்களில் முதலீட்டிற்கும், அரசின் நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்கும், மக்கள் நலத் திட்டங்களுக்கும் உதவுகிறது. இந்நிறுவனம் அரசுடமையாக்கப்படாமல் இருந்திருந்தால்,  இதன் வருவாயும் உபரியும் தனியாரின் பணப்பெட்டியை நிரப்பும். மக்கள் நலத் திட்டங்களுக்கு பயன்படாமல் போகும்.
கொரோனா மரணங்கள் நிறைந்த 2020-21-ம் ஆண்டு காலத்தில் கூட இறப்பு உரிமம் 98.62% முதிர்வுத் தொகையில் 89.78% கொண்டு போய் சேர்த்துள்ளது, LIC நிறுவனம். இந்த நேர்மையை, ஏமாற்று பேர்வழிகளான தனியார் காப்பீட்டு நிறுவனங்களிடம் எதிர்பார்க்க முடியுமா?
முடியாது என்பதைத் தெரிந்தேதான் பாசிசக் கும்பல், LIC காப்பீட்டு நிறுவனத்தின் பங்குகளை நிதி தேவைக்காக விற்கப்போவதாக கூவுகிறது. இது எவ்வளவு பெரிய அயோக்கியதனம்? மேலும், வாக்களித்த மக்களின் [பாலிசிதாரர்களின்] சேமிப்பை சூறையாடி தனியாருக்கு தாரை வார்ப்பது எவ்வளவு பெரிய துரோகம் ?
இவர்களின் நோக்கம் அரசின் நிதி தேவையை நிறைவு செய்வது அல்ல. கார்ப்பரேட்களின் நிதித் தேவையை நிறைவு செய்வதே. ஒன்றிய மாநில அரசுகளின் நிதி தேவையை பூர்த்தி செய்து, பல்வேறு மக்கள் திட்டங்களில் முதலீடுகள் செய்து, பங்கு சந்தை சரியும் போதெல்லாம் அதில் முதலீடு செய்து, நட்டமில்லாமல் இயங்கிவரும் LIC-யின் வருவாய் மற்றும் உபரி அதன் சந்தாதாரர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் செல்வதிலிருந்து  மடைமாற்றி கார்ப்பரேட்டுக்களுக்கு அள்ளிக் கொடுப்பதே, எல்.ஐ.சி தனியார்மயத்தின் நோக்கம்.
LIC நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யப்படுவதை தடுத்து நிறுத்தத்தவறினால், அதன் வருவாயும், உபரியும், சொத்தும் தனியாருக்கு போய் சேரும். இதனால், மக்களின் நலத் திட்டங்களோ, நாட்டின் பொருளாதார தேவைகளோ நிறைவேறாது. மேலும் அதில் போடப்பட்ட மூலதனத்தின் எதிர்காலம் கேள்விக்குறி தான்.
மேலும், பாலிசிதாரர்களின் இறப்பு உரிமத் தொகை, முதிர்ச்சித் தொகை உரிய முறையில் உரிய நேரத்தில் போய் சேராது அல்லது முற்றிலும் சேராமலும் போகலாம். இதற்கு தனியார் நிறுவனங்களின் கடந்த கால ஊழல் மிக்க, மோசடி மிக்க செயல்பாடுகளே சிறந்த உதாரணம்.எல்.ஐ.சி உருவாக்கப்பட்டதே இந்த மோசடிகளுக்கு முடிவு கட்டத்தானே !
LIC நிறுவனம் என்பது தேசத்தின் சுயப் பொருளாதாரத்தையும் மக்கள் நலத் திட்டங்களையும் நிறைவேற்றும் அட்சயப்பாத்திரம். இதை காவிக் கும்பல் களவாடி கார்ப்பரேட்களின் கஜானாவில் சேர்ப்பதை ஒரு போதும் அனுமதிக்கலாகாது.
ஏனெனில், ஒவ்வொரு வருடமும் LIC-க்கு வரும் உபரித் தொகையிலிருந்து ஒன்றிய அரசுக்கு வரும் 5% ஈவுத் தொகையும் மீதமுள்ள 95% பாலிசிதாரர்களுக்கு கிடைக்கும் போனசும் இனி கிடைக்காது.
மேலும், பொதுத்துறை – அரசுத்துறை நிறுவனங்கள் வங்கிகளின் பங்குகள் வீழ்ச்சி அடையும்போது அவைகளை ஓடிப்போய் தாங்கிப் பிடிக்கும் ஆபத்பாண்டவனாக LIC இருக்கிறது. இனி அப்படி ஒரு பொருளாதார பெரும் சக்தி அரசின் கைகளில் இருக்காது.
நாட்டின் பொருளாதாரத்தை ஒரு குறிப்பிட்ட வகையில் ஈடுசெய்யும் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார மந்தம் உற்பத்தி சரிவு பொது முடக்கம் வேலையிழப்பு, வேலையின்மை போன்ற சூழலிலும் LIC  பாதிப்பு இல்லாமல் இயங்குகிறது என்றால் பாலிசிதாரர்களின் தொடர்ச்சியான இடைவிடாத பங்களிப்பும் ஊழியர்களின் அயராத உழைப்புமே ஆகும். மேலும், இதுவரை அரசுக்கு கடனாக, முதலீடாக ரூ.26,86,527 கோடியை வழங்கியிருக்கிறது. அரசின் பல்வேறு திட்டங்களுக்கு ரூ.4 லட்சம் கோடி வரை முதலீடு செய்திருக்கிறது எல்.ஐ.சி நிறுவனம்.  இவை அனைத்தையும் மக்களிடம் இருந்து மறைந்து விட்டது பாசிச மோடி அரசு.
படிக்க :
’ஹேர்கட்’ பெயரில் பொதுத்துறை வங்கிகளில் கார்ப்பரேட் கொள்ளை !
பொதுத்துறை வங்கி தனியார்மயம் : லாபம் தனியாருக்கு ! இழப்பு மக்களுக்கு !
LIC போன்ற நிறுவனங்களுக்கு மூலதனத் திரட்டல் தேவை இல்லை என்பதையும்  இது ஒரு தொழில் நிறுவனம் இல்லை என்பதையும், இந்நிறுவனம் பல்வேறு தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறது என்பதையும், ஒன்றிய அரசு மூடி மறைத்து வரும் பித்தலாட்டத்தையும் நாம் அனைவரும் உணர்ந்து போராட தவறினால் மக்களின் வரிப்பணத்தில் உருவான ஜீவ ஊற்றான LIC-யை தங்கள் அப்பன் வீட்டு சொத்துக்களைப்போல விற்பதைத் தடுக்க முடியாது.
எனவே, இந்த கார்ப்பரேட் – காவி பாசிசக் கும்பலுக்கு குலைநடுக்கம் ஏற்படும் வகையில் மக்களின் தீவிர போராட்டங்களை வீதிக்கு வீதி கட்டியமைப்பது மூலமே மக்களின் நிறுவனங்களின் பறி போகாமல் பாதுகாக்கவும் தொடர்ந்து மக்கள் நிறுவனமாக நீடிக்கவும் முடியும் !!

கதிரவன்

புதிய ஜனநாயகம் செப்டம்பர் – 2021 அச்சு இதழ் !

அன்பார்ந்த வாசகத் தோழர்களே,
னவரி 2021 இதழ் வெளிவந்த பிறகு, கொரோனா ஊரடங்கினாலும் இதர காரணங்களாலும் கடந்த ஆறு மாதங்களாக புதிய ஜனநாயகம் இதழ் வெளிவராமல் இருந்தது. வாசகத் தோழர்களின் தொடர்ச்சியான வலியுறுத்தலால், கார்ப்பரேட் − காவி பாசிசம் அரங்கேறிவரும் இன்றைய காலகட்டத்தின் அரசியல் தேவையை உணர்ந்து பெரும் முயற்சியில் ஆகஸ்டு 2021 இதழைத் தயாரித்து வெளியிட்டோம்.
தமிழகத்தில், 35 ஆண்டுகளுக்கு மேலாக மார்க்சிய − லெனினிய அரசியல் ஏடாக புதிய ஜனநாயகம் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. ஜனநாயக அரசியல் சக்திகள், திராவிட, தலித்திய, பெண்ணிய, தமிழின அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள், விவசாய சங்க, தொழிற்சங்க தோழர்கள் − என பல்வேறு தரப்பினரின் ஆதரவோடு புதிய ஜனநாயகம் இதழ் இயங்கி வந்தது.
பல நூறு தோழர்களின் கடுமையான, அயராத உழைப்பு புதிய ஜனநாயகத்தில் பொதிந்துள்ளது. தமிழகத்தில் தனக்கென ஒரு பெரும் அரசியல் வாசகர் வட்டத்தைக் கொண்டுள்ளது எனில், அது புதிய ஜனநாயகம் இதழ் மட்டுமே. அந்த வகையில், புதிய ஜனநாயகத்திற்கு ஆறு மாதகால ‘இடைவெளி’ என்பது அதன் வாசகத் தோழர்களுக்குப் பேரிழப்பாகும்.
புதிய ஜனநாயகம் இதழ் மீண்டும் வெளிவரவுள்ள செய்தியைக் கேட்ட பலரும் எமக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். சில நண்பர்கள் ரூ.1,000, ரூ.5,000 − என நன்கொடைகளை வழங்கியுள்ளனர். பல வாசகர்கள் ‘‘புதிய ஜனநாயகம் இனி வெளிவராது எனக் கருதியிருந்தோம்; இதழைப் பார்த்த பின்னர் மகிழ்ச்சியாக இருக்கிறது’’; ‘‘அரசியல் பேசுவதற்கு ஆளே இல்லாமல் இருந்த சூழலில், புதிய ஜனநாயகத்தைப் பார்க்கும்போது உற்சாகமாக இருக்கிறது’’ − என கருத்துத் தெரிவித்துள்ளனர்.
சில வாசகர்கள் 5 படிகள், 10 படிகள் என கேட்டு வாங்கி தமது நண்பர்களிடம் கொடுத்துள்ளனர். சில வாசகர்கள், புதிய ஜனநாயகம் ஆகஸ்டு 2021 இதழ் குறித்த வாசகர் கடிதங்களையும் அனுப்பியுள்ளனர். இத்தோழர்கள் அனைவருக்கும் எமது நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகத் தோழர்களின் இத்தகைய நல்லாதரவு எமக்கு பெரும் உற்சாகத்தையும் உந்துதலையும் அளித்துள்ளது. இனி, புதிய ஜனநாயகம் இதழ் முறையாக மாதந்தோறும் முதல் தேதியில் வெளிவரும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
திருச்சி உள்ளிட்ட சில பகுதிகளில் நேரடி சந்தாக்களுக்கு இதழை விநியோகம் செய்துவந்த சிலர் கலைப்புவாத − சீர்குலைவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதோடு, பொறுப்பிலிருந்தும் விலகிவிட்டதால், அந்த நேரடிச் சந்தாதாரர்களுக்கு இதழைக் கொடுக்க இயலவில்லை என்று முகவர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே நேரடியாக சந்தா செலுத்திய வாசகர்கள், தங்களுக்கு இன்னமும் இதழ் கிடைக்கவில்லை எனும் பட்சத்தில், எமது அலுவலக எண்ணுக்குத் தொடர்பு கொண்டு தெரிவித்தால், இதழ் முறையாகக் கிடைக்க ஆவன செய்கிறோம்.
கடும் நிதி நெருக்கடியில்தான் தற்போதையை புதிய ஜனநாயகம் இதழைக் கொண்டுவந்துள்ளோம். நிதி நெருக்கடியை ஈடு செய்ய நன்கொடை மற்றும் சந்தா சேகரிக்கும் பணியை முகவர்கள் மூலம் மேற்கொண்டு வருகிறோம். புதிதாக பெற்றுக் கொள்ளப்படும் சந்தாக்கள் ஜனவரி 2022 முதல் நடைமுறைக்கு வரும். வாசகத் தோழர்கள் நன்கொடை மற்றும் சந்தா செலுத்தி ஆதரித்து, இதழ் வளர்ச்சிக்குத் தொடர்ந்து உதவுமாறு கோருகிறோம்.
– நிர்வாகி
000
புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2021 இதழ் அச்சுப் பிரதியாக வெளிவந்திருக்கிறது. இதழை வாங்குவதற்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் !!
தொடர்பு விவரங்கள் :
தொலைபேசி : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com
விலை : ரூ.20 + தபால் செலவு ரூ. 5 = ரூ.25
G-Pay மூலம் பணம் கட்ட :  94446 32561
வங்கி கணக்கு விவரம்,
Bank: SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444.
நொறுங்கும் நாடாளுமன்ற ஜனநாயகம் அரங்கேறும் பாசிச சர்வாதிகாரம்
இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
  1. நொறுங்கும் நாடாளுமன்ற ஜனநாயகம் அரங்கேறும் பாசிச சர்வாதிகாரம்!
  2. பாசிச மோடி அரசுக்கு எதிராக வளர்ந்துவரும் போராட்டங்கள்!
  3. பத்திரிகை செய்தி : பார்ப்பனரல்லாத அர்ச்சகர் பயிற்சிபெற்ற மாணவர்களில் 24 பேர் அர்ச்சகராக நியமனம்! சரியான அரசியல் தலைமை, தொடர்ச்சியான போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி!
  4. “திராவிட மாடல்” ஆட்சி : கார்ப்பரேட் சேவை! காவியுடன் சமரசம்!!
  5. கார்ப்பரேட் சேவையில் கழக ஆட்சி!
  6. காவி பாசிசத்துடன் சமரசம் செய்துகொள்ளும் தி.மு.க. அரசு!
  7. வெள்ளை அறிக்கையா? கட்டண உயர்வுகளுக்கான முன்னறிவிப்பா?
  8. தேசியக் கடல் மீன்வள மசோதா – 2021 : கடல்வள பேரழிப்பின் ஒரு அங்கம்!
  9. காஷ்மீர் சிறப்பு உரிமை ரத்து செய்யப்பட்டதன் இரண்டாம் ஆண்டு : துளிர்விடுகிறது விடுதலை முழக்கம்!
  10. பெரு நாட்டில் ‘சோஷலிஸ்டு’க் கட்சியின் வெற்றி : இது, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான வெற்றியா?

பணமாக்கல் திட்டத்திற்கு முட்டுக் கொடுக்கும் இந்து தமிழ் தலையங்கம் !

மோடி அரசின் தேசிய பணமாக்கல் திட்டம் “தவிர்க்கவியலாத” தீங்காம்,  முட்டுக்கொடுப்பதில் முன்னிலை வகிக்கும் இந்துதமிழ் திசை !
‘நடுநிலை’ பத்திரிக்கை என்று வாய் கூசாமல் தம்பட்டமடித்து திரியும் இந்துதமிழ் திசை, தினமலர், தினமணி வரிசையில் தானும் பா.ஜ.க சார்பு நாளிதழ்தான் என்று அடிக்கடி அம்பலப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த வாரம் ஒன்றிய அரசு அறிவித்த தேசிய பணமாக்கல் திட்டத்தைப் பற்றி, “மத்திய அரசின் பொருளாதாரச் சீரமைப்பு : தவிர்க்கவியலாத தீங்கு” என்று ஆகஸ்ட் 31 அன்று தலையங்கம் ஒன்றைத் தீட்டியிருக்கிறது.
மக்களின் பொதுச் சொத்துக்களான இரயில்வே, நெடுஞ்சாலைத்துறை, மின்சாரத்துறை, தொலைத்தொடர்பு, விமான நிலையங்கள் மற்றும் விளையாட்டுத் திடல்கள் போன்றவற்றை கார்ப்பரேட்டுகளுக்குக் குத்தகைக்கு விடும் மோடி அரசின் இந்நடவடிக்கை பலரையும் அதிர்ச்சிக்கும் கோபத்திற்கும் ஆளாக்கியுள்ள நிலையில் இதை நேரடியாக நியாயப்படுத்தி எழுத முடியாத இந்துதமிழ் திசை “தவிர்க்கவியலாத தீங்கு” என தனது தலையங்கத்தில் மிக நூதனமாக முட்டுக் கொடுக்க முயற்சித்திருக்கிறது.
படிக்க :
“பணமாக்கல் திட்டம்” : கார்ப்பரேட்டுகளுக்கு இந்தியாவை தாரைவார்க்கும் திட்டம் !
நாட்டை விற்பனை செய்யும் தேசிய பணமாக்கல் திட்டம் || கண்டன ஆர்ப்பாட்டம்
கட்டுரையில், “மத்திய அரசின் பொருளாதாரச் சீரமைப்புத் திட்டத்துக்கு எதிர்க் கட்சிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பு எழுந்திருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. பெருநிறுவனங்களுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது என்ற தொடர் குற்றச்சாட்டுகளுக்கு வலுசேர்க்கும் சான்றாகவே இத்திட்டத்தை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்” என்று எதிர்க்கட்சிகளின் வாதங்களில் உள்ள நியாயத்தையும் எடுத்துக் காட்டுவதுபோல் “நடுநிலையோடு” தொடங்குகிறது. ஆனால், அதற்கு அடுத்த பத்தியிலேயே தனது நரித்தனத்தைக் காட்ட ஆரம்பித்துவிடுகிறது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மோடி அரசின் இத்திட்டம் குறித்து “70 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட சொத்துக்களை ஏழே ஆண்டுகளில் அழிக்கிறது பா.ஜ.க” “மூன்று நான்கு தொழிலதிபர்களுக்கு மட்டுமே பரிசாக அளிக்கப்படுகிறது இந்தக் குத்தகை” என்று விமர்சிப்பதை அப்படியே எடுத்துக் காட்டும் தலையங்கம்; தொடர்ந்து, “காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும் பொதுத்துறை முதலீடுகள் விற்கப்பட்டுள்ளன. இப்போதும் கூட, தனியார்மயத்துக்குத் தாங்கள் எதிரியல்ல என்றே ராகுல் காந்தி விளக்கம் அளித்திருக்கிறார்” என்று ராகுல் காந்தி பேசியதை சுட்டிக்காட்டியும் “காங்கிரஸ், பா.ஜ.க இரண்டுமே தனியார்மயத்துக்கு ஆதரவாளர்கள்தான் என்பதையும் சேர்த்தே இந்தப் பிரச்சனையை அணுக வேண்டியிருக்கிறது” என்று எழுதியிருப்பதன் மூலமும் இத்திட்டத்திற்கெதிரான வாதங்கள் எல்லாவற்றையும் நீர்த்துப்போகச் செய்யக் கூடிய வகையில் மிகவும் தந்திரமாக தலையங்கத்தை அமைத்திருக்கிறது.
மோடி கொண்டு வந்த பணமாக்கல் என்ற தேசத்துரோக திட்டத்திற்கு காங்கிரஸ் மட்டுமா எதிர்ப்பு தெரிவித்தது. ஒட்டுமொத்த இந்திய மக்களையுமே அது அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அனைவரது கண்டனங்களையும் பெற்றுள்ளது. அனைத்து தொழிற்சங்கங்களும் இத்திட்டத்திற்கு எதிராக தங்களது போராட்டங்களைத் தொடங்கியிருக்கிறார்கள். மொத்தத்தில் “பா.ஜ.க vs இந்திய மக்கள்” என்ற பிரச்சனையை வெறுமனே “மோடி vs காங்கிரஸ்” என்று திருப்பிவிட்டு இறுதியாக காங்கிரசைக் கொண்டே அவர்களது வாதங்களை மொக்கையாக்கும் வகையில் திட்டமிட்டு எழுதியுள்ளது இந்துதமிழ் திசை.
இன்று நேற்றல்ல, இந்த உத்திக்கு ஒரு வரலாறே உண்டு. நீட், ஜி.எஸ்.டி, புதிய கல்விக் கொள்கை என்று பா.ஜ.க ஒவ்வொரு நாசகாரத் திட்டங்களைக் கொண்டுவரும் போதும் இத்திட்டங்களுக்கு எதிராக வெளிப்படும் மக்களின் எதிர்ப்புகளை வெறும் பா.ஜ.க-வைப் பிடிக்காத எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பாகச் சித்தரிப்பதும்  “இதெல்லாம் காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே கொண்டுவரப்பட்ட திட்டங்கள்தான். பா.ஜ.க அதை நடைமுறைப்படுத்துகிறது. ஆனால், காங்கிரஸ் தேர்தல் அரசியலுக்காக சந்தர்பவாதமாக அதை எதிர்க்கிறது” என்று பேசுவதும் சங்க பரிவாரங்கள் நீண்டகாலமாக மேற்கொண்டுவரும் உத்திகள். தற்போது பணமாக்கலுக்கு முட்டுக்கொடுக்கும் இந்துதமிழ் திசை தனது தலையங்கத்திற்கு பயன்படுத்தும் உத்தியும் அதேதான்.
இந்த அரசுக் கட்டமைப்பிலுள்ள காங்கிரஸ் உள்ளிட்ட ஓட்டுக் கட்சிகள் அனைத்தும் தனியார்மயத்துக்கு (கார்ப்பரேட்மயத்துக்கு) எதிரானவைகள் அல்ல, மாறாக அதனை அமல்படுத்துவதில் அவர்களிடம் அணுகுமுறையில்தான் வேறுபாடு என்பதை நாம் நீண்ட காலமாகச் சொல்லி வருகிறோம். கொள்கை அளவில் இக்கட்சிகளெல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். தன்னை எதிர்ப்பதற்கு எதிர்க் கட்சிகளிடம் எந்த மாற்றுக் கொள்கையும் இல்லாத (இருக்கமுடியாத) இந்த நிலைதான் உண்மையில் பா.ஜ.க-வை எதிரியே இல்லாத கட்சியாக நிலைநிறுத்தியிருக்கிறது.
ஆனால், நீண்ட காலம் இப்படியே பா.ஜ.க-வால் சாமாளிக்க முடியாது. அதன் மூர்க்கமான மறுகாலனியாக்கத் திட்டங்களின் அமலாக்கம் நாடெங்கும் உழைக்கும் மக்களின் கடுமையான எதிர்ப்புக்கு ஆளாகி வருகிறது. டெல்லி சலோ விவசாயிகளின் வீரம் செறிந்த போராட்டம் அதற்கு ஒரு முன்மாதிரி. அத்தோடு இக்கார்ப்பரேட்மயமாக்கல் திட்டங்களுக்கு எதிராகப் படைக்கலத் தொழிலாளர்கள், வங்கி-காப்பீடு நிறுவன ஊழியர்கள், மின்சாரத்துறை ஊழியர்கள் உள்ளிட்டு பல்வேறு பொதுத்துறை தொழிலாளார்களின் போராட்டங்களும் வெடித்துக் கிளம்பிக் கொண்டிருக்கின்றன.
இதை இந்துதமிழ் திசையாலும் கூட மறுப்பதற்கு முடியவில்லை. ஆகையினால் வேறுவழியில்லாத நிலையில்தான் பா.ஜ.க இதுபோன்ற திட்டங்களைக் கொண்டு வருவதாகவும் மற்றபடி ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க சார்பு அமைப்புகளுக்கே இதில் உடன்பாடு இல்லை என்றும் புளுகித் தள்ளுகிறது.
அதற்குச் சான்றாக “ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் தொடர்புடைய பாரதீய மஸ்தூர் சங்கத்திடமிருந்தும் கூட இம்முடிவுக்கு எதிர்ப்பு வந்துள்ளது” என்று எழுதுகிறது. ஆர்.எஸ்.எஸ்-ன் தொழிற்சங்கமான பி.எம்.எஸ் கூட போலியாகவாவது தனது எதிர்ப்பைக் காட்டித்தான் ஆகவேண்டும் என்ற அளவிற்கு தொழிலாளர் பெருந்திரளது எதிர்ப்பு இருக்கிறது என்பதுதான் உண்மை நிலை.
மேலும் “மத்திய அரசின் இந்த முடிவு இன்றைய பொருளாதார நெருக்கடி மிகுந்த சூழலில் தவிர்க்க முடியாதது என்பதை எல்லோருமே ஏற்றுக் கொள்கிறார்கள்” என்று வேறு எழுதுகிறது. எல்லோருமே ஏற்றுக் கொண்டால் ஏன் ஆர்.எஸ்.எஸ்-ன் தொழிற்சங்க அமைப்பு கூட எதிர்ப்பு தெரிவிக்கிறது என்பதை இந்துதமிழ் திசைதான் விளக்க வேண்டும். இரண்டாவதாக பொதுத்துறைகளை விற்பதற்கு காரணம் பொருளாதார நெருக்கடிதான் என்பது பா.ஜ.க-வே சொல்லாத கருத்தாகும்.
நாடு வளர்ச்சியடைய வேண்டுமென்றால் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது அவசியம், ஆனால் அதற்கான நிதி அரசிடம் இல்லை. ஆகவே பொதுத்துறைகளை குத்தகைக்கு விட்டு ரூ.6 லட்சம் கோடி நிதி திரட்டும் முயற்சியாகவே பணமாக்கல் திட்டம் கொண்டுவரப்படுகிறது என்பதுதான் பா.ஜ.க-வின் வாதம். கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வரிச்சலுகைகள் கொடுக்கவும் வாராக்கடன் தள்ளுபடி செய்யவும் நிதி இருக்கிறது; ஆனால் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு நிதி இல்லையா? என்பது நமது வாதம்.
மேலும், இந்த துறைகள் அனைத்தும் நட்டத்தில் இயங்குவதால் அரசால் இதனை நடத்த முடியவில்லை என்றும் ஒரு வாதம் வைக்கிறார்கள். எல்லா தனியார் கார்ப்பரேட் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் 5ஜி-க்கு விண்ணப்பித்துக் கொண்டிருக்கும்போது பி.எஸ்.என்.எல்-க்கு 4ஜி தொழில் நுட்பத்திற்குக் கூட அனுமதி தரப்படவில்லையே இது தானே அதன் நட்டத்திற்கு காரணம். ஆகவே இது திட்டமிட்டு அரசால் ஏற்படுத்தப்பட்ட நட்டம் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.
தனியார் கார்ப்பரேட் மின் உற்பத்தி நிறுவனங்களை ஊக்குவித்தும் அரசு மின் உற்பத்தியை திட்டமிட்டே நாசமாக்கியும்; பின்னர் அரசே தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கி மானிய விலைக்கோ அல்லது இலவசமாகவோ கூட கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சலுகை வழங்கியது போன்றவைதானே மின்சாரத்துறை நட்டத்திற்கு காரணம். இவையெல்லாம், பொதுத்துறை நிறுவன ஊழியர்களே அரசின் மீது வைக்கும் குற்றச்சாட்டு.
1991-ல் தனியார்மய – தாராளமயம் – உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகள் அமலுக்கு வந்தபின் அரசே திட்டமிட்டு பொதுத்துறை நிறுவனங்களை சீரழிக்க ஆரம்பித்தது. வாஜ்பாய் தலைமையிலான இதே பா.ஜ.க ஆட்சிக் காலத்தில்தான் பொதுச் சொத்துக்களை இலக்கு வைத்து விற்பதற்கென்றே பங்கு விலக்கல் துறை (ministry of dis-invesment) என்று தனி அமைச்சகமே உருவாக்கப்பட்டது. தற்போது முதலீடுகள் மற்றும் பொதுச்சொத்துக்களை நிர்வகிக்கும் துறை DIPAM (department of investment and public asset management) என்ற பெயரில் நிதியமைச்சகத்தின் கீழ் இத்துறை இயங்கி வருகிறது.
இப்படி திட்டமிட்டு உள்கட்டமைப்புகளை சிதைத்துவிட்டு அதையே காரணமாக வைத்து பொதுச் சொத்துக்களைக் கார்ப்பரேட்டுகளுக்கு விற்பதும் குத்தகைக்கு விடுவதும் நடக்கிறது. இதில், கேலிக்கூத்து என்னவென்றால் இதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து இதே உள்கட்டமைப்புகளை மேம்படுத்தப்போவதாக சொல்வதுதான்.
இதற்குள் எல்லாம் போகாமல் வசதியாக “பொருளாதார நெருக்கடி” என்று பா.ஜ.க-வே சொல்லாத தகவலை எடுத்துக் கொண்டு முட்டுக்கொடுக்கிறது இந்துதமிழ் திசை.
கடைசியாக “மாற்று வாய்ப்புகள் என்னென்ன இருக்கின்றன என்பது குறித்து எதிர்ப்பாளர்களிடமிருந்து குறிப்பிடத்தக்க வகையில் எந்த ஆலோசனைகளும் முன்வைக்கப்படவில்லை” என்று எழுதுகிறது. இங்கே கூட எதிர்ப்பாளர்கள் என்று எதிர்க் கட்சிகளை மட்டுமே சித்தரிக்கிறது இந்துதமிழ் திசை. நாம் முன்பே கூறியதைப் போல காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளிடம் தனியார்மயமாக்கத்துக்கு மாற்றுக் கொள்கை இல்லை என்ற தைரியத்தில்தான் இவ்வாறு எழுதுகிறது.
மேலும் “நெருக்கடியான நேரத்தில் மாற்றுத்தீர்வுகளை முன்வைக்காமல் அரசின் முடிவைக் கேள்விக்குள்ளாக்குவது; மேலும் புதிய நெருக்கடிகளை நோக்கித் தள்ளிவிடும் அபாயம் நிறைந்தது” என்று வேறு நம்மை எச்சரிக்கிறது இந்துதமிழ் திசை.
படிக்க :
விவசாயிகளின் போராட்டத்தை இழிவுபடுத்தும் இந்து தமிழ் திசை !
ரஜினியின் கருத்துச் சுதந்திரத்திற்காக களமிறங்கும் இந்து தமிழ் திசை
வளர்ச்சி, முதலீடுகளை ஈர்த்தல் என்ற பெயரில், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மானிய விலையில் கொடுக்கப்படும் நிலம், மின்சாரம், நீர் உள்ளிட்ட கொள்ளைக்கார சலுகைகளை நிறுத்து ; பொதுத்துறை வங்கிகளிலிருந்து இலட்சக்கணக்கான கோடி ரூபாய்களைக் கடனாய் கொடுப்பதை நிறுத்து ; வாங்கிய கடனைக் கட்டாமல் ஏமாற்றும் கார்ப்பரேட் முதலைகளின் சொத்துக்களை பறிமுதல் செய் ; அதில் கிடைக்கும் நிதியை வைத்துப் பொதுத்துறைகளை பலப்படுத்து என்று நாம் சொல்கிறோம். நடுநிலை ஏடான இந்துதமிழ் பா.ஜ.க-வுக்கு இதனை சிபாரிசு செய்யுமா?
பா.ஜ.க கொண்டுவரும் திட்டங்களுக்கெல்லாம் நைச்சியமாக முட்டுக்கொடுத்துக் கொண்டே தமக்கு தாமே ‘நடுநிலை’ என்று வேறு நாமகரணம் சூட்டிக் கொள்கின்றன இந்துதமிழ் திசை போன்ற நாளேடுகள். எதிரியைக் கூட நம்பிவிடலாம். நடுநிலை என்று கழுத்தில் தோளில் போட்டுக் கொண்டே கழுத்தருக்கும் இந்து தமிழ் திசை போன்ற கிரிமினல் கும்பலிடம் என்றும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் !!

பால்ராஜ்
செய்தி ஆதாரம் : இந்து தமிழ்