Sunday, July 20, 2025
முகப்பு பதிவு பக்கம் 202

நூல் அறிமுகம் : செல்லாத பணம் || இமையம் || எஸ். காமராஜ்

லக்கிய வடிவங்கள் நிகழ்கால சமூகத்தின் பிரதிபலிப்புகளாய் விளங்குகின்றன. நாம் வாழ்கின்ற சமூகத்தில் நல்லவர்களும் – கெட்டவர்களும், மனிதர்களும் – மனித மிருகங்களும், ஒழுக்க நெறி கொண்டவர்களும், ஒழுக்க நெறி தவறியவர்களும் ஒன்று கலந்து தான் வாழ்ந்தாக வேண்டும் என்பதே சமூக எதார்த்த நடைமுறை.

பண்பாட்டு சீரழிவுகள், சாதிய ஒடுக்குமுறைகள், வர்க்க வேறுபாடுகள், கல்வித்தகுதி வாழ்க்கையில் எத்தகைய சிக்கல்களை தோற்றுவிக்கிறது என்பதை உணர்வுப்பூர்வமாக, “செல்லாத பணம்” நாவலின் வாயிலாக நிகழ்கால சமூக எதார்த்தத்தை படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் எழுத்தாளர் இமையம்.

வசதியான நடுத்தரவர்க்க வீட்டுப்பெண் ரேவதி, ஒரு பொறியியல் பட்டதாரி. பர்மாவிலிருந்து வந்த அகதியும் ஆட்டோ ஓட்டுநருமான ரவியை காதலிப்பதாக கூறி அவனையே “திருமணம் செய்து கொள்வேன்” என்று பிடிவாதமாக உறுதியாக இருக்கிறாள்.

ரேவதியின் தந்தை நடேசன், தலைமை ஆசிரியராக பணியாற்றுகிறார். ரேவதியின் மொத்த குடும்பமுமே இந்தக் காதலை எதிர்க்கிறது. சாதி – தொழில் – படிப்பு – பொருளாதாரப் பின்புலம் – சுற்றத்தார் மதிப்பு என இவற்றில் எதிலுமே ரேவதியின் குடும்பத்திற்கு சமமற்ற ஆட்டோ டிரைவர் ரவியை காதலிக்கிறாள் ரேவதி.

படிக்க :
♦ ஊறிப்போன ஆணாதிக்க சிந்தனையை அகழ்ந்தெடுத்து அகற்றிய கொரோனா ஊரடங்கு !
♦ தி கிரேட் இந்தியன் கிச்சன் || ஆணாதிக்கமும் மதமும் இங்கு தோலுரிக்கப்படும்

ரேவதியின் மனதை மாற்ற, அவரது பெற்றோர்கள் எத்தனையோ வழிகளை கையாண்டும் ரவியை தான் கல்யாணம் கட்டிக் கொள்வேன் என்பதில் உறுதியாக இருக்கிறாள். ரேவதியின் பெயரை உடம்பு முழுவதும் பச்சை குத்திக் கொண்டு, அவளுக்காக கையில் பிளேடால் கீறிக்கொண்ட ஆட்டோ டிரைவர் ரவியின் செய்கைகள் அனைத்தையுமே காதலின் அளவீடாகக் கருதுகிறாள் ரேவதி.

“அவன் ஸ்டேட்டஸ் தெரிஞ்சுமா அவனை காதலிக்கிறாய்?”
“ம் ”
“எப்படி !”
“பிடிச்சிருக்கு”
“எதனால ?”
“தெரியல ”
“உலக அதிசயமானது அவன் கிட்ட நீ எதை பார்த்த”
“ஒன்னும் இல்ல.”
”நீ சொல்றதெல்லாம் மனசுல நிக்கல.”
“அவன் சொன்னது மட்டும்தான் நிக்குது”

ரேவதியின் அண்ணன் மனைவி அருள்மொழிக்கும் ரேவதிக்கும் இடையிலான உரையாடல் இது. ‘தன் பெண்ணின் வாழ்க்கை சிதைந்து போய்விடுமே’ என்ற
அச்சத்தால் அந்தக் குடும்பமே அதைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்கிறது. அவனைத்தான் கட்டுவேன் என்று பிடிவாதத்தில் உடும்பு பிடியாக இருக்கிறாள் ரேவதி.

இதன் விளைவாக அந்த குடும்பம் படும் வலி – வேதனை- துயரங்கள், அவற்றுக்கு அக்குடும்பம் காட்டும் எதிர்வினைகள், ரவி மீது காட்டும் பாரபட்சம், அவை ஏற்படுத்தும் தாக்கங்கள் என அத்தனையையும் மிகையான புனைவு இல்லாமல் கதைக்களம் பின்னப்பட்டுள்ளது தான் இந்த நாவலின் சிறப்பு. சமூகத்தின் பலதரப்பட்ட மனிதர்களையும் நம் கண் முன் எடுத்துக் காட்டியிருக்கிறது இந்நாவல்.

பெற்றோர்கள், உறவினர்களின் எதிர்ப்புகளை மீறி ரவியை திருமணம் செய்துகொள்ளும் ரேவதியின் வாழ்க்கையில், ரவியின் எதற்கும் கட்டுப்படாத ஒழுக்கமற்ற நடத்தையும்; அவனது குடிப்பழக்கமும், அவனது ஆணாதிக்க சந்தேகப் பார்வையும், ஒடுக்குமுறையும் ரேவதியின் வாழ்க்கையில் விளையாட ஆரம்பிக்கிறது.

அடியும் உதையும் வறுமையும், கணவனின் சந்தேக குணமும், தனது தாய் தந்தையின் ஒதுக்குதலும், ரேவதிக்கு வாழ்க்கையின் மீது மிகப்பெரிய வெறுப்பை உண்டாக்குகின்றன. தனது பொறியியல் பட்டப் படிப்பை வைத்து நல்ல வேலையில் அமர்ந்து தனது கணவனையும், அவனது குடும்பத்தையும் சீர்தூக்கி விடலாமென்று நினைத்த ரேவதியின் கனவு சுக்கு நூறாகிப் போகிறது.

தனது மகளின் வாழ்க்கை இப்படி சீரழிந்து விட்டது என்று எண்ணி கலங்குகிறாள் ரேவதியின் தாய். ஏதாவது கேட்கும்போதெல்லாம் பண உதவி செய்கிறார். இரண்டு குழந்தைகளைப் பெற்ற பிறகும் திருந்த மறுக்கிறான் ஆட்டோ டிரைவர் ரவி. மது அடிமையாகி, ஆணாதிக்க வெறியோடு தனது மனைவியை துன்புறுத்துகிறான். நிலைகுலைந்து போய் விரக்தியின் விளிம்பில் நிற்கிறார் ரேவதி. தாய் தந்தை சகோதரன் உள்ளிட்ட குடும்ப உறவுகளுடனான மனக்கசப்பு மிக்க உறவு மற்றும் கணவன், குழந்தைகள் என்ற குடும்ப உறவு ஆகிய இரண்டுக்கும் இடையில் சிக்கித் தவிக்கிறாள் ரேவதி.

தன் அம்மாவிடம் பணம் வாங்கி ஆட்டோ வாகனத்திற்கு கட்ட வேண்டிய தவணைத் தொகையை வைத்திருக்கிறாள் ரேவதி; அதை எடுத்துக்கொண்டு போய் குடித்துவிட்டு வந்து நிற்கிறான், குடிநோயாளி ரவி. விரக்தியின் விளிம்புக்கு சென்ற ரேவதி இனி உயிர் வாழ்வது அர்த்தமற்றது என்ற முடிவுக்கு வருகிறார்.

“நீ இல்லாவிட்டால் நான் செத்து விடுவேன்” என்ற ரவியின் ஒரு சொல்லின் பின்னே தன் வாழ்க்கையை ஒப்படைத்த ரேவதி, “சாகிறது என்றால் போய் சாவு” என்ற ரவியின் ஒற்றைச் சொல்லை கேட்டு செத்துப் போக முடிவு செய்கிறாள்.

80 சதவிகித தீக்காயங்களுடன் ரேவதி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார்.ஜிப்மர் மருத்துவமனையின் தீ விபத்து பிரிவு என்ற வளாகத்துக்குள் நடக்கும் நிகழ்வுகளை ஒட்டியே இந்த நாவலின் கதைக்களம் பின்னப்பட்டிருக்கிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் உடல் எரிந்து மருத்துவமனைக்கு புகுவதும், உடல் கொள்ளும் தவிப்புகளும், உயிர் பிரிவதும் என விவரிக்க முடியாத வேதனையான உணர்வுகளை மனதை உலுக்கும் வகையில் நமக்குக் கடத்துகிறது இந்த நாவல்.

தீக்குளிப்புக்குப்பின் நடக்கும் போராட்டங்களையும், உடனிருப்பவர்கள் படும் வலியையும்; வேதனையையும் ஆற்றாமையையும்; அழுகையையும் மனப் போராட்டங்களையும், – நேரில் காண்பதுபோல் – நாம் அங்கே நிற்பது போன்ற ஒரு உணர்வை இந்த நாவல் ஏற்படுத்துகிறது. ஜீவ மரணப் போராட்டத்தில் இந்த உயிரை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற தவிப்போடு பல்வேறு உறவுகளின் உணர்ச்சிக் கொந்தளிப்புகளை மருத்துவமனையைச் சுற்றி சுற்றி பின்னி விரிகிறது “செல்லாத பணம்” நாவல்.

படிக்க :
♦ மல்லாக்கத் துப்பலாமா பெற்றோர்களே ? எழுத்தாளர் இமையம்
♦ நூல் அறிமுகம் : தூப்புக்காரி || மலர்வதி || சு.கருப்பையா

“எவ்வளவு பணம் ஆனாலும் பரவாயில்லை என் பெண்ணை காப்பாற்றுங்கள் “என்று கதறுகிறார் ரேவதியின் தந்தை. இவ்வளவு நாளும், தன் பேச்சை மீறி திருமணம் செய்ததால், தன் பெண்ணை முகம் கொடுத்துக் கூட பேச மனமில்லாத அதே தந்தை. மருத்துவர் ஒற்றை வரியில் சொல்லிவிடுகிறார். “இந்தப் பணம் இப்போ இங்கே செல்லாத பணம்” என்று.

ரேவதியின் மரணம் ரேவதியின் வாக்குமூலத்தின்படி அது ஒரு விபத்து. அவளது தாய்தந்தையரைப் பொருத்த வரையில் அது ரவி செய்த கொலை. ரவி விவரித்தபடி அது ஒரு தற்கொலை!

தற்கொலையோ, கொலையோ இவற்றை விட கொடுமையானது வாழும் போதே நடத்தப்படும் உணர்வுக் கொலை. ரேவதி உயிரோடு இருக்கையில் அத்தகைய உணர்வுக் கொலையை முன்னின்று நடத்தியவர்கள் தான் அவள் இறந்த பிறகு, அது கொலை என்றும் தற்கொலை என்றும் மாறி மாறி குற்றம்சாட்டிக் கொள்கிறார்கள்.

“தாலி கட்டிய மறுநாளே வெளியே போகக்கூடாது, அக்கம்பக்கம் பேசக்கூடாது, தெருவில் நடக்கக் கூடாது என்று கூறிவிட்டான். 24 மணி நேரமும் சந்தேகம்தான், பொறுக்கிப் பயலுக்கு” என்று தன் மகள் அவளது கணவன் ரவியிடம் பட்ட வேதனையைச் சொல்லி அழுகிறாள் ரேவதியின் தாய்.

அனைவரும் வெறுத்து ஒதுக்கும் ரேவதியின் கணவன் ரவியிடம் ரேவதியின் அண்ணன் மனைவி அருள்மொழி உரையாடுகிறார். ரவியின் வாதங்களைக் கேட்ட பின்னர்,  “இவ்வளவு புத்திசாலித்தனமாக பேசுகிறானே ஆட்டோ டிரைவர்… இந்தப் புத்திசாலித்தனம் நல்ல நடப்புக்கு மாற்றப்பட்டு இருந்தால் இப்படிப்பட்ட சோகம் நிகழ்ந்திருக்காது” என்று எண்ணி வருந்துகிறாள்.

ரவியின் புத்திசாலித்தனம் ஏன் நல்ல நடப்புக்கு மாற்றப்படவில்லை? ரவியின் ஆணாதிக்க – உதிரித்தனமான மனநிலை எங்கிருந்து ஏற்பட்டது ? ரவியின் மீது ரேவதி வைத்திருந்த காதலையும், ரேவதிக்காக உடல் முழுக்க பச்சைகுத்திக் கொண்டு கையை பிளேடால் அறுத்துக் கொள்ளும் அளவிற்கு ரவி வைத்திருந்த காதலையும் தாண்டி ரேவதியை மரணத்தை நோக்கித் தள்ளியது எது ?

நிலவும் முதலாளித்துவ சமூகம், ஏற்படுத்தியிருக்கும் சமூக ஏற்றத்தாழ்வு ரவியைப் போன்ற ஆணாதிக்க, குடி நோய்க்கு அடிமையான ஒழுங்கீனமான இளைஞர்களை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது. சமூகம் ஏற்படுத்தியிருக்கும் இந்த ஏற்றத்தாழ்வில், தாழ்நிலையில் இந்தச் சமூகத்தால் இருத்தி வைக்கப்பட்டவர்கள் மீது அதற்கு சிறிது மேலே உள்ளவர்கள் காட்டும் அசூயையும், அதன் மீது அவர்க்ள் நடத்தும் மறைமுகத் தீண்டாமை நடவடிக்கைகளும், ரவியைப் போன்ற இளைஞர்களை அதே நிலையில் இருத்தி வைக்கின்றன.

ரேவதி இறந்ததும், அவரது தாய் தனது கணவரிடம், “காச கொடுத்தீங்க. பொருளை கொடுத்தீங்க. நான் எதை செஞ்சாலும் ஏன் என்று கேட்காம இருந்தீங்க. எல்லாம் செஞ்சு என்னத்துக்கு ஆச்சு? நேரில கூப்பிட்டு அந்த நாய மிரட்டல; அவனை மிரட்டி இருந்தா அவனுக்கு பயம் வந்திருக்கும்;அடங்கி இருப்பான். தெரு பொறுக்கி நாய் கிட்ட என்ன பேசறதுன்னு இருந்தீங்க; மானம் போயிடும், மானம் போய்விடும் என்று ஒதுங்கி-ஒதுங்கி போனீங்க” என ஆற்றாமையோடு கேட்கிறாள்.

மகள் தனது விருப்பத்துக்கு மாறாக, தன் ‘தரத்துக்கு’ கீழான ரவியை திருமணம் செய்து கொண்டதால், சமூக எதார்த்தத்தின் கட்டுகளுக்குள் சிக்கியிருந்த ரவியை அதிலிருந்து மீட்டெடுப்பது பற்றி ரேவதியின் தந்தையுடைய ‘உயர்தர’ மனம் யோசிக்கக் கூட இல்லை. இதை ரவியின் குரலிலேயே ஒலிக்கிறது இந்த நாவல்.

“சல்லிப்பயல் சல்லிப்பயல் ஆகத்தான் இருப்பான்.. ஆனால் பெரிய மனுஷன் பெரிய மனுஷன் ஆக இருக்க வேண்டுமா இல்லையா?” என்று ரவியின் கேள்வி நம்மை உலுக்கி எடுக்கிறது.

ரேவதியின் கல்வித் தகுதி அவளுக்கு முழுமையான சமூக விழிப்புணர்வை உருவாக்கவில்லை. சமூகத்திலும் அதன் பிரதிபலிப்பாக தனது குடும்பத்திலும் நிலவும் சாதிய, வர்க்கரீதியான ‘உயர்’ மனநிலையை ஒதுக்கும் அளவிற்கு விழிப்புணர்வு கொண்ட ரேவதியால், வாழ்க்கை பற்றிய தனது விருப்பத்திற்கு ஏற்ற துணையைத் தேர்வு செய்வதற்கு அறிவுப்பூர்வமாக சிந்திக்க முடியவில்லை. அங்கு தனது உணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாள். பணிக்குச் செல்லும்  தனது விருப்பம் முதல், சாதாரணமாக தெருவுக்குச் செல்வதையே தடை செய்யும் – சந்தேகிக்கும் – ‘கணவன்’ ரவியைக் கண்டு அதிர்ச்சியுறுகிறாள்.

ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு ஏற்படும் உள்ளக் கலப்புக்கு நட்பு என்று பெயர். வெறும் உடல் கலப்புக்கு காமவெறி என்று பெயர். நட்புணர்வும் காமமும் கலந்ததே காதல். குணமறிந்து காதல் கொள்! உடல் அறிந்து, உடல் அழகு சார்ந்து அல்ல! கண்டதும் காதல் என்பதெல்லாம் வெறும் உணர்ச்சியின் வெளிப்பாடு.

நடுத்தரவர்க்க பெண்கள் பழமையான ஆணாதிக்க மேலாண்மை மதிப்புக்கு உட்பட்டு தங்கள் வாழ்வில் அனுபவிக்கும் இன்னல்களையும், கொடுமைகளையும் மௌனமாக சகித்துக் கொண்டு இருக்கின்றனர். குடிகார கணவனை சீர் படுத்துவதற்கான போராட்டத்தை நடத்தாமல், தனது குழந்தைகளுக்காக வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற துணிச்சலான உணர்வோடு, நிலைமைகளை மாற்றுவதற்கு போராடுவதற்கு மாறாக தற்கொலை என்ற கோழைத்தனமான முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்.

ரேவதியின் வாழ்க்கை சிதைந்து போனதற்கு நிலவுகின்ற ஆணாதிக்க சமூகமும், குடி உள்ளிட்ட பண்பாட்டுச் சீரழிவுகளும், சாதி ஆதிக்க உளவியலும், நடுத்தர வர்க்கத்தின் ஒதுங்கும் போக்கும், வறட்டு கௌரவமும் அடிப்படைக் காரணிகளாக உள்ளன.

சமூகத்தில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும்; சாதியப் படிநிலை வரிசையும் இதற்கு ஏற்ற, சாதி ‘அருமை பெருமைகளும்’ திருமணங்களின் மூலமாகவே நிலைநிறுத்தப்பட்டு வருகிறது.

பொருளாதாரம்-கல்வி-ஒழுக்கம்-தொழில் இந்த நான்கும் சரியாக இருந்தால் சாதி சற்று பின்வாங்குகிறது; சமரசம் செய்து கொள்கிறது. இந்த நான்கும் இல்லையென்றால் சாதி வெறியாக மாறி தாண்டவமாடுகிறது.

இந்த நாவலில் வரும் ரேவதியின் அண்ணன் முருகனும், அவளது கல்லூரி தோழி அருள் மொழியும் காதலிக்கிறார்கள். வர்க்க அந்தஸ்தும் கல்வித் தகுதியும் ஒன்றாய் இருப்பதால் இங்கு சாதி சமரசம் செய்து கொள்கிறது.

ஒரு பர்மா அகதியை சாதி கடந்து திருமணம் செய்து கொள்ளும் ஒரு பெண் – தனது வர்க்கத்துக்கும் குறைவான தான்தோன்றித்தனமான குணகேடுகள் கொண்டவனை திருமணம் செய்துகொண்டு சிக்கித் தவிக்கும் ஒரு பெண் – தன்னைச் சுற்றியுள்ள சமூக மதிப்பீடுகளுக்கு எப்படி தன்னை பலிகொடுக்க வேண்டி உள்ளது என்பதை யதார்த்தமாகவும் மிக நுட்பமாகவும், உணர்ச்சிகள் இழையோட, மிக ஆழமாகவும் “செல்லாத பணம்” கதைக்களம் மனதை உலுக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

நிலவுகின்ற சாதி அமைப்புக்கும் – பால்நிலை பாகுபாட்டுக்கும் இடையில் ஒரு நெருக்கமான உறவை பெண் விடுதலை என்ற நோக்கில் சமத்துவத்துக்கான பண்பாட்டுப் போராட்டத்தை நடத்த வேண்டியுள்ளது.

சமத்துவ – ஜனநாயக உணர்வை ஏற்படுத்த நடைபெறும் போராட்டத்தின் வாயிலாகத்தான் சமூக அவலங்களுக்கு தீர்வைத் தேட முடியும்.

“செல்லாத பணம்” என்கின்ற சமூக யதார்த்த நாவல் இலக்கியத்தை மிகையான புனைவுகள் இன்றி எழுத்தாளர் இமையம் சிறப்பாக படைத்துள்ளார்.

எஸ். காமராஜ்

disclaimer

நள்ளிரவில் எரிவாயு குழாய்களை குவித்த கெயில் நிறுவனம் : விவசாயிகள் போராட்டம் !

ருமபுரி எர்ரப்பட்டியில் இரவோடு இரவாக விவசாய நிலத்தில் எரிவாயு குழாய் பதிப்பதற்காக ஆயிரக்கணக்கில் குழாய்களை குவித்து வைத்துள்ளது கெயில் நிறுவனம்.

ஆட்சிகள் மாறினாலும் விவசாயிகளின் துயரங்கள் மாறுவதில்லை. கடந்த 10 ஆண்டுகளாக விவசாய நிலத்தில் எரிவாயு குழாய் பதிக்கக் கூடாது என்று விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஆட்சியாளர்கள் விவசாயிகளின் போராட்டத்தை என்றுமே மதித்து நடப்பதில்லை.

கர்நாடக, கேரளா போன்ற மாநிலங்களில் சாலை ஓரமாக குழாய்களை பதிக்கும் போது தமிழகத்தில் மட்டும் விவசாய நிலத்தில் பதிக்கப்படுவது ஏன்? என்ற விவசாயிகளின் கேள்விக்கு பதில் இல்லை.

படிக்க :
♦ நூல் அறிமுகம் : கெயில் வளர்ச்சிக்குப் பலியாகும் விவசாய நிலங்கள் !
♦ விவசாயிகளை காவு வாங்கும் கெயில் – சிறப்புக் கட்டுரை

இந்த குழாய் பதிப்பு காரணமாக தமிழகத்தில் 7 மாவட்டங்களில் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதோடு விவசாயிகளின் வாழ்க்கையும் பறிபோகிறது. சாலை ஓரமாக கொண்டு சென்றால் விவசாய நிலங்கள் பாதிக்காது என்ற கோரிக்கையை கூட ஏற்றுக் கொள்ள ஆட்சியாளர்கள் மறுப்பது ஏன் என்று குற்றம் சாட்டுகிறார்கள் விவசாயிகள்.

தருமபுரி எர்ரப்பட்டியில் விவசாயிகளுக்கு தெரியாமல் இரவோடு இரவாக, ஆயிரக்கணக்கான குழாய்களை குவித்து வைத்துள்ளனர். இதனை அறிந்த விவசாயிகள் 19.7.2021(இன்று) காலை 10 மணிக்கு ஏர்ரப்பட்டியில் குவிந்தனர்.

This slideshow requires JavaScript.

முறையான பேச்சுவார்த்தையோ, உரிய பதிலோ அரசு தரப்பில் கொடுக்கப்படாத பட்சத்தில், விவசாயிகள் சங்க தலைவர் ஈசன் தலைமையில் காத்திருப்புப் போராட்டம் நடைப்பெற்றது. இந்தப் போராட்டத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த தோழர்கள், மக்கள் அதிகாரத்தின் வட்டார ஒருங்கிணைப்பாளர் தோழர் சிவா தலைமையில் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து காத்திருப்புப் போராட்டத்தில் உடன் கலந்துக் கொண்டனர்.

This slideshow requires JavaScript.

தகவல் :
மக்கள் அதிகாரம்
தருமபுரி மண்டலம்
9097138614.

மக்களை நம்ப வைத்து கழுத்தறுக்காதே ! சட்டம் இயற்றி ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடு !

PP Letter head

19.07.2021

தமிழக அரசே !
மக்களை நம்ப வைத்து கழுத்தறுக்காதே !
சிறப்பு சட்டம் இயற்றி ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடு !

பத்திரிகை செய்தி

கொரோனா நெருக்கடி அதனால் ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறை என்ற முகாந்திரத்தை வைத்துக் கொண்டு, 15 உயிர்களை இழந்து மக்களால் போராடி மூடப்பட்ட நாசகார ஸ்டெர்லைட்டை மீண்டும் சதித்தனமாக திறப்பதற்கான முயற்சியை ஸ்டெர்லைட் நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் மேற்கொண்டது. இது தமிழக மக்கள் மத்தியில் பரவலான எதிர்ப்பை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மக்கள் இத்தகவலை தெரிந்தவுடனே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

எக்காரணம் கொண்டும் ஸ்டெர்லைட்டை திறக்கக் கூடாது என்பதை அதன் மூலம் அரசிடமும், நீதிமன்றத்திடமும் பதிவு செய்தனர். மக்களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி உச்சநீதிமன்றத்தின் வாயிலாக கடந்த ஏப்ரல் 27 ம் தேதி திறப்பதற்கான ஆணையை ஸ்டெர்லைட் நிறுவனம் பெற்றது. அதே சமயத்தில் தமிழகத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சிகள் கூட்டத்தின் மூலம் மக்களின் கருத்துக்கள் எதையும் மதிக்காமல் ஆக்சிஜனுக்காக ஸ்டெர்லைட்டை திறக்கலாம் என அனைத்துக் கட்சிகளும் முடிவெடுத்து, தங்களது கார்ப்பரேட் விசுவாசத்தை வெளிப்படுத்தி கார்ப்பரேட் சேவையில் நாங்கள் எல்லோரும் ஓரணி தான் என்பதை நிரூபித்தனர் .

ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்கிய ஸ்டெர்லைட் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வாக்குறுதிபடி அளித்த 1050 டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்யவில்லை. ஒரு நாளைக்கு 30 டன் ஆக்சிஜனை மட்டுமே உற்பத்தி செய்தது. அதன் தொடர்ச்சியாக ஏறக்குறைய 1500 டன் வளிமண்டல ஆக்சிஜனை வீணடித்ததை பலரும் அம்பலப்படுத்தினர். இப்படிப் பொய்யான வாக்குறுதியை அளித்து, அராஜகமாக நடந்துக் கொண்ட ஸ்டெர்லைட் நிறுவனத்தை உச்சநீதிமன்றமோ, தமிழகத்தின் பெரும்பான்மை அரசியல் கட்சிகளோ எந்தக் கேள்வியும் எழுப்பவில்லை.

படிக்க :
♦ ரஃபேல் ஊழல் : பிரான்சில் அம்பலமான பின்னும் இந்தியாவில் அமைதி ஏன் ? || தோழர் சுரேசு சக்தி
♦ ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கான சதித்தனமான முயற்சிகளை முறியடிப்போம் || மக்கள் அதிகாரம்

ஆக்சிஜன் உற்பத்தி செய்கின்ற எந்த ஒரு தனியார் நிறுவனமும் செய்யாத ஒரு வேலையை ஒன்றிய அரசு நிறுவனங்களின் உதவியோடு ஸ்டெர்லைட் நிறுவனம் செய்தது. அனைத்து செய்தித்தாள்களிலும் INDIAN MEDICAL ASSOCIATION உள்ளிட்ட நிறுவனங்கள் ஸ்டெர்லைட்டை பாராட்டிய விளம்பரங்கள் வெளியானது. “உற்ற நேரத்தில் உயிர் காற்று! “ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்திற்கு நெஞ்சார்ந்த நன்றி” என்று கொலைகாரனுக்கு புனிதர் பட்டம் கொடுத்திருந்தன அந்நிறுவனங்கள். மக்கள் மத்தியில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆதரவான மனநிலையை உருவாக்குவதற்கான வேலையை திட்டமிட்டு நடத்தின.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கட்டில்கள், மெத்தைகள், மருத்துவ உபகரணங்களை சட்டவிரோதமாக கொடுக்கப்பட்டன. அதில் அந்நிறுவனத்தின் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. அங்குள்ள அறிவிப்பு பலகையிலும் ஸ்டெர்லைட் நிறுவனம் தான்உதவிகள் செய்ததை விளம்பரப்படுத்திக் கொண்டது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகமும் கேள்வி எழுப்பவில்லை. மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதைக் கேள்விப்பட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கங்கள் மருத்துவமனை நிர்வாகத்திடமும், மாவட்ட ஆட்சியரிடமும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தன. நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மக்கள் நடவடிக்கை எடுப்போம் என்று எச்சரித்த பின்பு, மாவட்ட நிர்வாகம் கட்டில்களில் உள்ள வேதாந்தா என்ற பெயரினை மட்டும் அழித்து “நடவடிக்கை” எடுத்தது. தொடர்ந்து சட்டவிரோதமாக செயல்பட்ட ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக, ஸ்டெர்லைட் என்கிற ஓநாய்க்கு ஆக்சிஜன் தயாரிக்க ஆதரவு அளித்த ஆளும் தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் யாரும் பொங்கி எழவில்லை.

தொடர்ந்து அந்த ஓநாய் கிராமப்புறங்களில் தனது ஆதரவாளர்களை தனக்கு ஆதரவாக பேச வைத்து சட்டவிரோதப் பணியை அதிகார வர்க்கத்தின் ஆசியோடு தடையின்றி தொடர்ந்தது.

இச்சூழ்நிலையில்தான் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் ஜூலை 31 க்குப் பிறகு ஸ்டெர்லைட்டை மூடுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். “தற்போதைக்கு என்ன அவசரம்? தொற்று எண்ணிக்கை பூஜ்ஜியம் வரட்டும், அதற்குபிறகு மூடுவது பற்றி யோசிக்கலாம்’’ என்று ஸ்டெர்லைட்டின் குரலாக பேசுகிறார் சுகாதரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடனே சிறப்பு சட்டம் இயற்றி ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடுவோம் என்று வாக்குறுதி கொடுத்தார். தற்போது அந்தர்பல்டி அடித்து மாற்றி பேசுகிறார்கள். மக்களை எவ்வளவு கிள்ளுக்கீரையாக நினைத்தால் இவர்கள் இப்படி பேசவார்கள்?

அன்று எதிர்கட்சிகளாக இருந்து ஸ்டெர்லைட்டுக்கு எதிராக சிலம்பம் சுற்றிய இதர கட்சிகள் தற்போது வாய்ப்பொத்தி அமைதிகாக்கின்றன. உதிரம் சிந்தி, உயிர் கொடுத்து மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழக மக்களும் எதிர்ப்பு தெரிவிக்கும்போது இதையெல்லாம் ஒரு பொருட்டாக கருதாமல், ஓநாய்க்கு ஆதரவாக சுகாதாரத்துறை அமைச்சர் பேசியதை இயல்பாக கடந்து செல்ல முடியுமா? நாங்களும் கார்ப்பரேட்டுகளின் ஆட்கள்தான் என்பதைத்தானே இதன்மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

இதற்கெதுவும் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பதற்கு கூட்டணிக் கட்சிகளின் / பல்வேறு அமைப்புகளின் கள்ளமவுனத்திற்கு காரணம் என்ன?

இன்னும் 6 மாதத்திற்கு ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி தேவை என்று கடந்த ஜூலை 7ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது ஸ்டெர்லைட் நிர்வாகம். ஜூலை 22-ல் விசாரணைக்கு அனுமதி அளித்துள்ளது உச்சநீதிமன்றம். மறுபடியும் அனைத்துக் கட்சிகள் கூட்டத்தைக் கூட்டி ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதியை நீட்டிப்பதை அறிவிப்பதுதான் அடுத்தகட்ட திட்டமாக இருக்கும்.

தூத்துக்குடி மக்களை, உயிர்நீத்த தியாகிகளை இதைவிடவும் அவமானப்படுத்த முடியுமா?

அதிகார வர்க்கத்தின் துணையோடு நிறுவனத்தை திறப்பதற்கான வேலைகளை கொலைகார ஸ்டெர்லைட் நிறுவனம் வேகப்படுத்தி கீழறுப்பு வேலைகளையும் வெளிப்படையாக செய்து வருகிறது.

ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடுவதற்கு மக்கள் போராட்டத்தை தவிர வேறெந்த வழியும் இல்லை!

தமிழக அரசே!
மக்களை நம்ப வைத்து கழுத்தறுக்காதே!
சிறப்பு சட்டம் இயற்றி ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடு!
தூத்துக்குடி மக்களுக்கு துணை நிற்போம் !
ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்றுவோம் !
அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறு !
ஸ்டெர்லைட் படுகொலைக்கு காரணமானவர்கள் மீது கொலைவழக்கு பதிவு செய்!

தோழமையுடன்

தோழர் வெற்றிவேல் செழியன்,
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
91768 01656

டேனிஷ் சித்திக் மறைவு : பாசிச எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு || கருத்துப்படம்

ப்கானில் தாலிபான்களுக்கும் ஆப்கன் அரசு படையினருக்கும் இடையே நடந்து வரும் போர் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிக்கையாளர் டேனிஷ் சித்திக் போர்க்களத்தில் உயிரிழந்தார்.

கொரோனா போரிடர் காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் சந்தித்த அவலம், கொரோனாவில் பாதிக்கப்பட்ட மக்கள் ஆக்சிஜன் இல்லாமலும் படுக்கை வசதிகள் இல்லாமலும் அரசு மருத்துவமனைகளில் அவதிப்பட்டதும், எரிக்கக் கூட இடமில்லாமல் குவிந்து கிடந்த கொரோனா பிணங்கள் என கொரோனா பேரிடரில் மோடி அரசின் கையாலாகாத் தனத்தை  தமது புகைப்படங்களின் மூலம் உலகறியச் செய்தவர் டேனிஷ் சித்திக்.

சி.ஏ.ஏ.-வுக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தின் மீது இந்துத்துவ வெறியர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு, மற்றும் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் நாள் துவங்கி டெல்லியில் அரங்கேற்றப்பட்ட கலவரங்கள் வரை அனைத்தையும் துணிச்சலாக அம்பலப்படுத்தியிருந்தார் சித்திக்.

ஒரு முசுலீம் இளைஞரைச் சூழ்ந்து கொண்டு இந்துத்துவக் கும்பல் கடுமையாகத் தாக்குவதை சித்திக் எடுத்த புகைப்படம், இந்தியாவில் மோடியின் மதவெறியை உலகறியச் செய்தது.

புகைப்படக் கலையில்  கலையின் அழகியலைத் தாண்டி, சமூகத்துக்கான தேவை உள்ளடக்கப்படும் போதுதான் அந்தப் புகைப்படம் உயிர்பெறுகிறது. அத்தகைய தன்மையை வெளிப்படுத்துவதற்கு பரந்துபட்ட மக்களின் மீதான பேரன்பும், ஒடுக்குமுறையையும் மிரட்டல்களையும் எதிர்த்து நிற்கும் பெரும் துணிச்சலும் தேவை. அதைத் தன்னகத்தே கொண்டுள்ள ஒரு போராளிதான் டேனிஷ் சித்திக்

அவரது மறைவு, இந்தியா எதிர்கொண்டுள்ள பாசிசத்தை எதிர்த்து ஜனநாயக – புரட்சிகர சக்திகள் நடத்தும் போராட்டத்திற்கு ஏற்பட்ட பின்னடைவு என்பதை அவரது மறைவை ஒட்டி, பாஜக உள்ளிட்ட சங்க பரிவாரக் கும்பல், சமூக வலைத்தளங்களில் குதூகலமாக வெளியிட்ட பதிவுகள் நிரூபிக்கின்றன.

ஆளும் வர்க்கக் கொடூரங்களின் துயரப் பதிவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்
புகைப்பட ஓவியன் டேனிஷ் சித்திக்


கருத்துப்படம் : மு.துரை

அரியானா : உச்சநீதிமன்ற ஆசியோடு விரட்டியடிக்கப்படும் தொழிலாளர்கள் !

ரவல்லி மலைத்தொடர் வனப்பகுதியை ஒட்டிய ஃபரிதாபாத் மாவட்டத்திற்கு உட்பட்ட, கோரிக்கான் என்ற சேரி பகுதியில் அதிகளவிலான கூலி தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தலித், சிறுபான்மை மக்கள் இரண்டு தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர்.

இப்பகுதியில் 173 ஏக்கர் நிலப்பரப்பில்  உள்ள 10,000-க்கும் மேற்பட்ட வீடுகளை அகற்ற அம்மாநில அரசு முடிவு செய்து இருக்கிறது. அரியானா மாநில அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த கோரியும், வீடுகள் இடிக்கபடுவதற்கு முன்னர் பாதுகாப்பு கோரியும் அப்பகுதி மக்கள், போராடும் இயக்கங்கள் உச்சநீதிமன்றத்தை அணுகினர்.

படிக்க :
♦ தீவுத்திடல் குடிசைகள் இடிப்பு : எடப்பாடி அரசின் அடாவடித் திமிரும் தீண்டாமையும்..
♦ அகமதாபாத் : ஜப்பான் நிறுவன இலாபத்திற்காக அகற்றப்படும் தொழிலாளர் குடியிருப்புகள் !

உச்சநீதிமன்றம் ஜூன் 7-ஆம் தேதியன்று தீர்ப்பு வழங்கியது. கோரிக்கான் பகுதியில் உள்ள குடிசை பகுதியை உடனடியாக அகற்றுமாறு அம்மக்களுக்கு எதிராக அநீதியான உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனை கண்டித்து குடியிருப்புகளை அகற்ற கூடாது என்று அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நீதிமன்றமோ தனது அநீதியான தீர்ப்புக்கு ஆரவல்லி மலைத்தொடரில் உள்ள காடுகளைப்  பாதுகாப்பதாக கூறி ’நியாயம்’ கற்பிக்கிறது. ஆனால், அதே பகுதியில் மலைத்தொடரை ஒட்டி உயர்தர தங்கும் விடுதிகள், அப்பார்ட்மெண்ட்ஸ், 500-க்கும் மேற்ப்பட்ட பண்ணை வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மேலும், சட்டத்திற்கு புறம்பாக சுரங்கங்கள் செயல்படுகின்றன. அப்பகுதியில் உள்ள காடுகளை பெரும் தொழில் நிறுவனங்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளன.

சாதரண குடிசை அமைத்து வாழக் கூடிய கூலி தொழிலாளர்களை வன ஆக்கிரம்மிப்பாளர்களாகவும், விரோதிகளாகவும் சித்தரிக்கும் உச்சநீதிமன்றமும் ஒன்றிய அரசும், அம்பானி, அதானி, டாடா மற்றும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தன் விருப்பத்துக்கு ஏற்றது போல் இயற்கை வளங்களை  கொள்ளையடிக்கவும், காடுகளை அழிப்பதையும், பெரும் சுற்றுலா தளங்கள் அமைக்கவும் சிவப்பு கம்பளம் இட்டு வரவேற்கின்றன.

மக்களுக்கு அடிப்படை உரிமையை மறுக்கும் அரசு, கார்ப்பரேட் கொள்ளையடிக்க அனைத்து அனுமதியையும் உடனே வழங்க சூற்றுச்சூழல் சட்டத்தையே மாற்றி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

அரியானா மாநில அரசின் நடவடிக்கையால் கோரிக்கான் பகுதியில் 2000-க்கும் மேற்பட்ட வீடுகள் தற்போது இடிக்கப்பட்டுவிட்டன. தொடர்ந்து இடிக்கபட்டும் வருகின்றன. கோரிக்கான் பகுதியில் மட்டும் 20,000 மேலான குழந்தைகள், சிறுவர்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். 5000-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரசின் இந்த மனித தன்மையற்ற செயலால் வீடுகளை இழந்தும், கொரோனாவால் வேலை இழந்தும் வாடகை கொடுக்க கூட பணம் இல்லாமலும் திறந்த வெளியில் வாழும் நிலைமைக்கு அம்மக்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

இந்திய அரசியலமைப்பின் 21-வது பிரிவின் கீழ் அடிப்படை சட்ட உரிமையான உயிர் வாழ்வதற்கான உரிமையின்படி மக்களுக்கு தங்குமிடத்தை உத்திரவாதம் செய்வது அரசின் கடமை.

ஆனால், அதைப்பற்றி வாய் திறக்காத உச்ச நீதிமன்றமோ, நிதிகேட்டுச் சென்றவர்களை வீதியில் தள்ளுவதற்கு விரைந்து நடவடிக்கை வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது. உழைக்கும் மக்களுக்கு நீதிமன்றத்தில் நீதி கிடைக்காது என்பதை மீண்டும் நிருபித்து இருக்கிறது இத்தீர்ப்பு.

ஏற்கனவே 1990-களில் ஆரவல்லி மலைத்தொடர்களில் உள்ள காடுகளை அழித்து சுரங்க பணிகள் மேற்கொள்ளபட்டன. இச்சுரங்க செயல்பாடுகளால் சீரழிக்கப்பட்ட பகுதி தான் கோரிக்கான் ஆகும். மக்கள் வாழமுடியாத ஒரு பகுதியாக தான் இருந்தது.

அப்பகுதியை வியர்வையும், ரத்ததையும் சிந்தியும் பல ஆயிரங்கள் செலவு செய்தும் மறுசீரமைத்து அம்மக்கள் குடியிருப்புக்களை அமைத்துள்ளனர். இன்றும் அப்பகுதியில் மின்சார வசதி கிடையாது, குடிநீர் வசதி கிடையாது. எந்த அடிப்படை வசதியும் அரசு செய்து தரவில்லை.

அரியானா மாநில அரசும், உச்சநீதிமன்றமும் சொல்வது போல், காடுகளை பாதுகாப்பது இவர்களின் நோக்கம் அல்ல. கோரிக்கான் பகுதியானது டெல்லி மெட்ரோ சிட்டிக்கு உட்பட்ட பகுதியாகவும், ஸ்மார்ட் சிட்டியின் ஒரு பகுதியாகவும் உள்ளது. அப்பகுதியில் பெரும்பாலும் தலித், சிறுபான்மை, தொழிலாளர் வர்க்கத்தை சேர்ந்தவர்கள் தான் வாழ்கின்றனர்.

நகரத்தில் இருந்து சேரியை அப்புறப்படுத்துவது  என்ற பார்ப்பனிய திட்டத்தின் அடிப்படையிலும், வளர்ச்சி, சூற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற பெயரில் கார்ப்பரேட்களுக்கான பொலிவுறு நகரத்தை அமைக்கவும் தான் கோரிக்கான் பகுதி மக்கள் விரட்டியடிக்கப் படுகின்றனர்.

படிக்க :
♦ நாங்கள் உறங்கினாலும் எங்கள் உடல்கள் உறங்குவதில்லை : டெல்லி குடியிருப்பு வாழ்க்கை
♦ அசாம் : 70 ஆண்டுகளாக வீடு, சாலை, மின்சாரம் இல்லாமல் வாழும் பழங்குடிகள் !

இது நாட்டின் ஒரு பகுதியில் மட்டும் நடக்கவில்லை, சிங்கார சென்னை என்ற பெயரில் அதனை சுற்றியுள்ள சேரி பகுதியை காலி செய்வது, குஜராத்- மும்பை புல்லட் ரயில் திட்டம், அகமதபாத் மெட்ரோ திட்டம், மும்பை பெருநகர வளர்ச்சி திட்டம் என்ற பெயரில் கார்ப்பரேட் நலனுக்காக  உழைக்கும் மக்களை நகர்புறத்திலிருந்து அப்புறப்படுத்தும் வேலையை வேகமாகச் செய்து வருகின்றன ஒன்றிய, மாநில அரசுகள்.

எனவே, போராடும் கோரிக்கான் பகுதி மக்களின் போராட்டத்திற்கு துனை நிற்போம். வளர்ச்சி என்ற பெயரால் கொண்டுவரப்படும், மக்களின் வாழ்வாதரத்தை பறிக்கும் தனியார்மய – தாராளமய கொள்கையின் ஒரு பகுதியான ஸ்மார்ட் சிட்டி  திட்டத்தை எதிர்த்து போராடுவோம்.

பிரபு
செய்தி ஆதாரம் : countercurrents, countercurrents2

முகநூலில் : Revolutionary Students Youth Front – Rsyf
disclaimer

உ.பி : முசுலீம்களை எதிரிகளாக சித்தரிக்க துணைபோகும் மக்கள் தொகை வரைவு !

0

த்தரப் பிரதேசத்தை ஆளும் பாஜக அரசு, மக்கள் தொகையை கட்டுப்படுத்த உத்தரப் பிரதேச மக்கள் தொகை (கட்டுப்பாடு, நிலைநிறுத்தல் மற்றும் நலன்) 2021 என்ற பெயரில் வரைவு ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த மசோவின் நோக்கம் மக்கள் தொகையை கட்டுப்படுத்த எனக் கூறிக் கொள்கிறது. ஆனால், இத்திட்டத்தைக் கொண்டு வருவதன் உள்ளார்ந்த நோக்கம், முசுலீம்களின் மக்கள் தொகையை மிகைப்படுத்திக் காட்டி மக்களிடம் முசுலீம்களின் மீதான காழ்ப்பை வளர்க்கும் இந்துத்துவ மதவெறியே.

இந்த சட்ட வரைவின்படி, 2 குழந்தைகளை மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாட்டை மீறியவர்களுக்கு அரசு சலுகைகள் பறிக்கப்படும். அதன்படி, அரசு வேலை வாய்ப்பு பெற தடை விதிக்கப்படும். மாநில அரசின் நலத் திட்டங்கள் வழங்கப்படமாட்டாது. ரேஷன் பொருட்கள் 4 பேருக்கு மட்டுமே வழங்கப்படும். உள்ளூர் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்படும்.

படிக்க :
♦ கோயிலை சுற்றியுள்ள முஸ்லிம் வீடுகளை அகற்ற முயற்சிக்கும் யோகி அரசு !
♦ யோகி ஆட்சியில் உ.பி : பாலியல் வன்முறையின் தலைநகரம் !

அரசு பணியில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்பட மாட்டாது. அரசு வேலையில் சேரும்போது இரண்டு குழந்தை இருப்பின் அவர்கள், இந்த கொள்கைக்கு முரணாக செயல்பட மாட்டோம் என்ற உறுதிமொழியை அளிக்க வேண்டும். இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் ஏற்கனவே அரசு பணியில் அல்லது உள்ளாட்சி நிர்வாகத்தில் இருப்பவர்களுக்கு பொருந்தாது.

2 குழந்தைகள் மட்டுமே பெற்றுக் கொள்ளும் தம்பதியினருக்கு பல்வேறு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி வீடு கட்டவும், வாங்கவும் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும். மின் கட்டணம், குடிநீர், வீட்டு வரி ஆகியவற்றில் சலுகை அளிக்கப்படும். கூடுதலாக இரு முறை சம்பள உயர்வு, சம்பளத்துடன் கூடிய 12 மாத பேறுகால விடுப்பு ஆகியவை அளிக்கப்படும்.

ஒரு குழந்தை மட்டும் பெற்றுக் கொள்பவர்களுக்கு கூடுதலாக இலவச சிகிச்சை அளிக்கப்படும். ஐ.ஐ.எம், எய்ம்ஸ் போன்ற கல்வி நிறுவனங்களில் முன்னுரிமை, பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி வழங்கப்படும். பெண் குழந்தையாக இருப்பின், உயர்கல்வி கற்க உதவித் தொகை அளிக்கப்படும்.

ஒரு குழந்தை பெற்றபின் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்களுக்கு, ஆண் குழந்தையாக இருப்பின் ரூ.80 ஆயிரமும், பெண் குழந்தையாக இருப்பின் ரூ.1 லட்மும் அளிக்கப்படும் எனவும் புதிய மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரைவு மசோதா குறித்து அடுத்த 10 நாட்களுக்கு மக்கள் மத்தியில் கருத்துக் கேட்ட பின் ஜூலை 19-ம் தேதி இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஸ்க்ரால் உள்ளிட்ட செய்தி தளங்கள், இரண்டு குழந்தைகள் மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என சர்வாதிகாரத்தனமாக சட்டமியற்றக் கோரும் பா.ஜ.க-வைச் சேர்ந்த சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் உண்மை நிலையை அலசியுள்ளன.

உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்களின் வலைத்தளத்தின் தகவல்களின் அடிப்படையில் உத்தரப் பிரதேச எம்.எல்.ஏக்களை பகுப்பாய்வு செய்ததில், அவர்களில் பெரும்பாலானோர் தற்போது இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொண்டுள்ளனர். இதில் மாநில அமைச்சரவையில் உள்ள 23 அமைச்சர்களில் 10 பேரும், ஆளும் கட்சியின் எம்.எல்.ஏ.க்களில் பாதியும் அடங்குவர்.

ஒட்டுமொத்தமாக, உத்தரப் பிரதேச எம்.எல்.ஏக்களில் 27% பேர் மூன்று குழந்தைகளையும், 32% பேர் இரண்டு குழந்தைகளையும், 9% பேர் ஒரு குழந்தையையும் பெற்றுள்ளனர்.

இந்த சட்ட வரைவு எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பி.க்களுக்கு பொருந்தாது என்பதால் அதன் தற்போதைய வடிவத்தில் நிறைவேற்றப்பட்டால் இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட பிரதிநிதிகள் பாதிக்கப்பட மாட்டார்கள். ஆனால், இந்த சட்ட வரைவை வடிவமைத்த சட்ட ஆணையமோ, “நிலையான வளர்ச்சியை, சமமான விநியோகத்துடன் மேம்படுத்துவதற்கு மாநிலத்தின் மக்கள் தொகை கட்டுப்படுத்துவது, நிலைப்படுத்துவது அவசியம்” என்கிறது.

எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் உள்ளிட்ட அதிகாரம் படைத்த பிரிவினரை விலக்கி, ஏழைகளை குறிவைப்பதற்கென்றே இத்தகை சட்ட வரைவு முன்வைக்கப்பட்டுள்ளதாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் விமர்சித்துள்ளது. இந்தக் கூற்றின்படியே, நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் இந்த மக்கள் தொகை கட்டுப்பாடு சட்ட வரைவை தாக்கல் செய்ய உள்ளதாகக் கூறும் பா.ஜ.க எம்.பி, ரவி கிஷனுக்கு நான்கு குழந்தைகள்.

இரண்டு குழந்தைகள் மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் அல்லது ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது போன்ற கட்டாய நடவடிக்கைகள் எதிர் விளைவுகளே உருவாக்கும் எனவும், குடும்பக் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வே இந்தியாவில் தேவை எனவும் நிபுணர்கள் கூறி வருகின்றனர். மேலும், எந்தவித திட்டமிடலும் இல்லாமலேயே 15 வயது முதல் 49 வயது வரையிலான பெண்களின் கருவுருதல் விழுக்காடு 2030-ஆம் ஆண்டில் 1.8 விழுக்காடு குறையும் என ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.

சீனா தனது இரண்டு குழந்தைக் கொள்கையை சமீபத்தில் திருத்திய பின்னர், இந்திய மக்கள்தொகை அறக்கட்டளை ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், ‘கட்டாய மக்கள் தொகைக் கொள்கைகளை அமல்படுத்துவதில் சீனாவின் தோல்வியுற்ற அனுபவத்திலிருந்து இந்தியா கற்றுக் கொள்ள வேண்டும். கருவுறுதலில் மதத்திற்கு சிறிதளவே பங்கிருக்கிறது. ஆனால், கல்வி அளிப்பது, வேலை வாய்ப்புகளை உருவாக்குவது மற்றும் கருத்தடைகளை அணுகுவதற்கு எளிதாக்குவது மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்தும்” எனக் கூறியது.

இந்துத்துவ கும்பல் நீண்ட நாளாக கூறிவரும், ‘முசுலீம் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது; இந்து மக்கள் தொகை குறைகிறது’ என்ற ஆதாரமற்ற சதி கோட்பாட்டின் வெளிப்பாடாகவே உத்தரப் பிரதேச அரசாங்கத்தின் சட்ட வரைவு உள்ளது.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், மக்கள் தொகையை சமநிலைப்படுத்த ஒரு பொதுவான சட்டம் தேவை எனக் கூறினார். 2015-ம் ஆண்டில், ஆர்.எஸ்.எஸ்., மக்கள் தொகைக் கொள்கையைக் கோரும் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. அனைவருக்கும் இயற்கை வளங்கள் கிடைப்பதைக் கருத்தில் கொண்டு கொள்கை தயாரிக்கப்பட வேண்டும் எனக் கூறிய அந்த தீர்மானத்தில் நாட்டில் முசுலீம்கள் அதிகளவு 26 சதவீதத்திற்கும் அதிகமாக வாழும் கேரள மாநிலத்தில் சமநிலையற்ற தன்மை நிலவுவதாக உதாரணம் கூறியது.

படிக்க :
♦ பாஜகவினர் மீதான முசாஃபர்நகர் கலவர வழக்கை வாபஸ் வாங்க யோகி அரசு முடிவு !
♦ உ.பி : காட்டாட்சியின் உச்சத்தில் ஆதித்யநாத் அரசு !

ஏற்கனவே உத்தரப் பிரதேசம் இந்துத்துவ ‘கொள்கை’களை செயல்படுத்திப் பார்க்கும் சோதனைச்சாலையாக உள்ள நிலையில், மேலும் ஒரு ‘சோதனை’ முயற்சியாக இந்த மக்கள் தொகை மசோதாவை கையிலெடுத்துள்ளது இந்துத்துவ அரசாங்கம். நடைபெற இருக்கிற சட்டமன்ற தேர்தலில் பிரிவினையைத் தூண்ட இதுவே ஆயுதமாகவும் இருக்கலாம்.


கலைமதி
செய்தி ஆதாரம் : Scroll.in, The Wire

பள்ளிகளை திறப்பதற்கான காலம் இது !! || Dr. சந்திரகாந்த் லகாரியா

16 மாதங்களுக்கு முன்பு வரை இந்தியாவில் ஏறத்தாழ 250 மில்லியன் குழந்தைகள் நேரடியாக பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர். இப்போதும் 170 நாடுகளில் பள்ளிகள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ செயல்பட்டுக் கொண்டே தான் இருக்கின்றன. இது நம்ப முடியாத ஒன்றாக கூட இருக்கலாம். ஆனாலும் உண்மை.

பெரும்பான்மையான நாடுகளில் கொரோனா பெரும் தொற்று காலத்திலும் பள்ளிகள் தொடர்ந்து செயல்பட்டன; குறிப்பிட்ட சில காலகட்டங்களைத் தவிர.

இந்தியாவின் கொள்கை வகுப்பவர்கள், இந்தியாவில் உள்ள பள்ளிகளை மீண்டும் குழந்தைகளுக்காக  திறப்பதைப் பற்றி விரைந்து முடிவெடுக்க வேண்டிய தருணம் இது. இந்தப் பெரும் தொற்றானது பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தி ஆன்லைன் வகுப்பிற்குள் தள்ளிவிட்டிருக்கிறது. எப்படியாகினும் இணையவழி வகுப்பானது ஒருபோதும் பள்ளியில் கற்பிக்கும் முறைக்கு கிஞ்சித்தும் ஈடாகாது என்பதே உண்மை.

படிக்க :
♦ நீட் தேர்வு : தமிழக அரசை நம்பி இருப்பது தீர்வல்ல ! போராட்டமே தீர்வு !
♦ பள்ளி மாணவர்களை நட்டாற்றில் விட்டுவிட்டு கல்வியை கடைச் சரக்காக்கும் மோடி அரசு || CCCE

மிகவும் பின்தங்கியோரை பெரும்பான்மையாக கொண்டுள்ள இந்தியாவில், அவர்களின் குழந்தைகள், தங்கள் பெற்றோரிடம் ஆன்லைனில் படிப்பதற்கு தேவையான  பொருட்களை கேட்க நிர்பந்திருக்கிறது இச்சூழல். எப்படிப்பட்ட ஏற்பாடுகளைச் செய்து ஆன்லைன் கல்வி முறையை அளித்தாலும் அது பள்ளிகளில் கல்வி கற்பிக்கும் முறையான ஊடாடும் முறை மூலம் (Intraction) கடைசி பெஞ்சில் அமர்ந்திருக்கும் மாணவனுக்கு கூட கற்றுக் கொடுக்கும் தெளிவான மொழி உச்சரிப்பு, சமூக அறிவு, உடல் மற்றும் மன ரீதியான வலிமை ஆகியவற்றுக்கு ஈடாகாது.

ஏற்கெனவே, பொருத்தமற்ற கல்வி முறையை கொண்டுள்ள இந்தியப் பள்ளிகள்,  பெருந்தொற்று காலத்தில் பெருமளவு கடைப்பிடிக்கப்பட்ட இணையவழிக் கல்வி முறையால் மென்மேலும் குழந்தைகளிடமிருந்து விலகிப்போனது.

இந்தியாவில் அறிவிக்கப்பட்ட அன்லாக் டவுன் திட்டமானது, சுற்றுலாத் துறையையும் பொருளாதார நடவடிக்கைகளையும் உடனே மேற்கொள்ள கட்டாயப்படுத்துகிறது. பள்ளிகளை உடனே திறந்து மாணவர்களுக்கு கல்வி அளிப்பது குறித்த அறிவிப்பு ஏதுமில்லை. ஒருமாத கல்வி இடைவெளியானது இருமாத கற்பித்தலை இழந்ததற்கு சமமாகும். அப்படியானால் இந்தியாவில் உள்ள குழந்தைகள் ஏற்கனவே 32 மாதங்கள் கற்றலை இழந்துள்ளன. ஒருவேளை இவ்வாண்டு மீண்டும் பள்ளிகள் தொடங்கப்பட்டாலும், கடந்த மற்றும் இந்த கல்வி ஆண்டானது மாணவர்களுக்கு பெரும் நட்டமாகவே இருக்கும். Covid-19 மூன்றாவது அலையானது பள்ளிக் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்ற கருத்தின் காரணத்தால் ஏற்பட்ட உச்சபட்ச பயமானது பள்ளிகள் திறப்பது பற்றி பேசும்போது அனைவருக்கும் தொற்றிக் கொள்கிறது.

கொள்கை வகுப்பாளர்களாலும் பெற்றோர்களாலும் உருவாக்கப்பட்ட இந்தத் தவறான கூற்றானது, மீண்டும் பள்ளிகளைத் தொடங்குவது பற்றிய வாதத்தையே தடுத்து நிறுத்தி விட்டது எனலாம். அடுத்தடுத்து வரக்கூடிய இந்தத் தொற்று அலைகளால் குழந்தைகளுக்கு மட்டும் கூடுதலான பாதிப்பு ஏற்படும் என்பது தவறானது. 18 வயதுக்கு மேற்பட்டோரை காட்டிலும் அதிகமாக குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்கு எவ்விதமான அறிவியல்பூர்வமான சான்றுகளும் இதுவரை இல்லை என்பதே உண்மை.

SARS-COV2 ஏற்பிகள் குழந்தைகளின் நுரையீரலில் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. எனவே நோயின் ஆபத்தானது குழந்தைகளுக்கு அதிகம் என்பது இது ஏற்புடையது அல்ல. அமெரிக்காவில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தியதிலிருந்து, குழந்தைகளை பெருந்தொற்று தீவிரமாக பாதிக்கும் என்பதற்கு எவ்வித சான்றும் இல்லை. குழந்தைகளைத் தீவிரமாகத் தாக்கும் வகையில் புதிய வகையிலான ஆபத்து எதுவும் இல்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

நாம் கவனத்தில் கொண்டு பரிசீலிப்பதற்காக மூன்று வகையான அறிவியல் சான்றுகள் உள்ளன.

ஒன்று, பள்ளிகளை திறக்க வேண்டும் என்பதற்காக அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும் என்று காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. பள்ளிகளைத் திறப்பதற்கு தடுப்பூசி கட்டாயம் போடப்பட்டு இருக்க வேண்டிய அவசியமும் இல்லை என்பதை சர்வதேச மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். உலகில் எந்த நாடும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடத் தொடங்கவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு தடுப்பூசி போடத் தொடங்கினாலும் அதற்கு பல மாதங்கள் ஆகும்.

இரண்டாவதாக, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தடுப்பூசி போடுவது நல்ல யோசனையாக இருந்தாலும் அதனை கட்டாயப்படுத்தக் கூடாது.

மூன்றாவதாக, எட்டாம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு முதலில் பள்ளிகளை திறக்க வேண்டும். ஏனெனில் இவ்வயதுடையவர்களுக்கு நோய்த் தொற்றுவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது.

9 முதல் 12-ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு அதிக கவனத்துடனும் கூடுதல் முன்னேற்பாடுகளுடன் பள்ளிகளை திறக்க வேண்டும்.

இந்தியாவில் உள்ள மாநிலங்கள் கட்டாயமாக உச்சபட்ச கவனம் கொடுத்து மீண்டும் பள்ளிகளை திறப்பதற்கான பருண்மையான திட்டங்களையும் வழிகாட்டுதல்களையும் உருவாக்க வேண்டும்.

ஒன்றிய அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகளை கையாள்வதற்கும் மாற்றி அமைப்பதற்கும் மாநிலங்களுக்கு எல்லா வகையான உரிமைகளும் அளிக்கப்பட வேண்டும்.

சர்வதேசச் சான்றுகளுடன் களநிபுணர்கள் மற்றும் தொற்றுநோய்கள் நிபுணர்களைக் கொண்ட குழுவால் காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப நடைமுறை கொள்கைகள், வழிகாட்டி நெறிமுறைப்படுத்தப்பட வேண்டும். நோய்த் தொற்றினை எதிர்கொள்ள தேவையான காற்று வசதி, இடவசதி போன்றவைகளைக் கொண்ட உறுதியான பள்ளிக் கட்டமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். பள்ளியானது நிழலுடன் கூடிய திறந்த வெளியில் நடத்தப்பட வேண்டும்.

பள்ளி சுகாதார சேவைகளை மேம்படுத்துவது, பள்ளிக் குழந்தைகளுக்கு தொடர்ச்சியான பரிசோதனைகளை மேற்கொள்வது, தொற்று காலத்திற்குப் பொருத்தமான பழக்க வழக்கங்களை குழந்தைகளுக்கு கற்பிக்கும் படி பெற்றோர்களுக்கு வலியுறுத்துவது போன்ற ஒருங்கிணைந்த செயல்களை மேற்கொள்ள வேண்டும். பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் தொற்று நோய் பாதுகாப்பு வழிமுறைகளை மாணவர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய அவசியத்தை பயிற்றுவிக்க வேண்டும்.

படிக்க :
♦ தமிழகத்தில் அதிகரித்து வரும் தனியார் பள்ளி கட்டணக் கொள்ளை !
♦ PSBB முதல் சிவசங்கர் பாபா வரை : பள்ளியில் நடக்கும் பாலியல் அத்துமீறலை ஒழிக்க என்ன வழி !

குறைவான எண்ணிக்கையில், சுழற்சி முறையில் – மாற்று நாட்கள், வாரம் மூன்று நாட்கள், வாரம் இரு நாட்களில் – போதிய நாட்கள் போதிய இடைவெளியுடன் பகுதிகளாக (Shift) வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.

பள்ளிக்கு வரும் குழந்தைகளின் விகிதத்தில் மாறுபாடு ஏற்படும் போது அது தொடர்பாக பெற்றோர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும்.

இப்போது உள்ள ஹைபிரிட் பள்ளியறை மற்றும் ஆன்லைன் கல்விமுறை தொடருமானால் பெற்றோர்களுக்கு தெரிவு செய்ய வேறு எதுவும் வழியே இல்லை.

தொடர்ச்சியான உறுதியான நடவடிக்கைகள் மூலம் பெற்றோர்களின் தேவையற்ற பயத்தை ஒழித்துக்கட்ட வேண்டியது நம்முடைய கடமையாகும்.

சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகள் யார் என்று ஆராயப்பட்டு அவர்களின் தேவைகள் உளப்பூர்வமாக நிறைவேற்றப்பட வேண்டும்.

மிகவும் அதிகப்படியான அளவில் குழந்தைகளை பாதுகாக்க எடுத்த – எடுக்கும் முயற்சியானது, குழந்தைகளிடமிருந்து கல்வியையும் கற்பித்தலையும் இழக்கவே செய்துள்ளது.

உடல்ரீதியாக, மனரீதியாக, சமூகரீதியாக, உணர்வுபூர்வமாக குழந்தைகளின் வளர்ச்சிக்கு பள்ளிகள் திறப்பது என்பது அத்தியாவசியம்.

அறிவியல் அணுகுமுறை, அறிவியல் சான்றுகள் போன்றவை குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு செல்வதற்கான திட்டங்களை மேம்படுத்தி கற்பித்தலுக்கான பாதையை திறந்து இழந்த காலத்தை ஈடுசெய்யும்.

ஆம், இந்தியாவில் மீண்டும் பள்ளிகளை திறப்பதற்கான காலம் இது !

(குறிப்பு : IT’S TIME TO CONSIDER REOPENING SCHOOLS என்ற தலைப்பில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் வெளியான ஆங்கிலக் கட்டுரையின் மொழியாக்கம். இக்கட்டுரையாளர் Till we win : indias fight against the covid 19 pandemic என்ற புத்தகத்தை மற்றொருவருடன் இணைந்து  எழுதியவர் ஆவார்.)


கட்டுரையாளர் : மருத்துவர் சந்திரகாந்த் லகாரியா, பொது மருத்துவர் மற்றும் தொற்றுநோய் இயல் நிபுணர்
தமிழாக்கம் : மருது
முகநூலில் : Revolutionary Students Youth Front – Rsyf

disclaimer

மேகதாது அணை : தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் சதி || மக்கள் அதிகாரம் தருமபுரி

காவிரியின் குறுக்கே மேகதாது அணை – தென்பெண்ணை குறுக்கே தடுப்பணை

தமிழகத்தை பாலைவனமாக்க துடிக்கும் கர்நாடகம் – பாஜக – கார்ப்பரேட் கூட்டுச் சதியை முறியடிப்போம் !

மேகேதாட்டு பகுதியில் ரூ. 9,000 கோடி செலவில் அணை கட்டுவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்து வருகின்றது கர்நாடக அரசு. இந்த அணையின் மூலம் 4.75 டிஎம்சி தண்ணீரை குழாய் வழியாக பெங்களூருக்கு எடுத்துச் செல்லத் திட்டமிட்டுள்ளது கர்நாடக அரசு.

மேகதாதுவில் அணை கட்டுவதன் மூலமாக காவிரி நதிநீரை நம்பி விவசாயம் செய்யும் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே இதை உடனடியாக கர்நாடக அரசு கைவிட வேண்டும். கர்நாடகத்தில் மேகேதாட்டு அணை கட்ட வேண்டும் என கொக்கரிக்கும் பாஜக, தமிழ்நாட்டில் கள்ள மவுனம் சாதிக்கிறது.

இதனை அம்பலப்படுத்தி தருமபுரி மக்கள் அதிகாரம் சார்பாக மேட்டூர் அணை நீர்தேக்கம் பகுதியான நாகமரை மற்றும் ஏரியூர் போன்ற இடங்களில் பென்னாகரம் வட்டார ஒருங்கிணைப்பு குழு தோழர்களால் ஜூலை 15 அன்று பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

This slideshow requires JavaScript.

தகவல் :
மக்கள் அதிகாரம்
தருமபுரி மண்டலம்.
9790138614

கொங்கு நாடு : கொளுத்திப் போட்ட தினமலர் – ஊதிவிடும் மாலன்

2

கொங்குநாடு !
தனி யூனியன் பிரதேசமாகிறது தமிழக மேற்கு மண்டலம்
திமுக. வின் மோதல் போக்கால் மத்திய அரசு கோபம்
ஸ்டாலின் அரசுக்கு ‘விளையாட்டு’ காட்ட பலே திட்டம்”

இது கடந்த ஜூலை 10-ம் தேதியன்று வெளிவந்த தினமலர் பத்திரிகையின் முதல் பக்க கொட்டையெழுத்துச் செய்தித் தலைப்பு !

இந்தத் தலைப்பு வந்தவுடன் தமிழகம் முழுவதும் முற்போக்கு அமைப்புகள் பலவும் இதற்கு எதிரான கண்டனங்களைத் தெரிவித்தன. சமூக வலைத்தளங்களிலும் இதற்கு வலுவான கண்டனங்கள் எழத் துவங்கின.

ஒருபுறம், பெருகி வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு, தடுப்பூசி போதுமான அளவு கொடுக்க வக்கில்லாத நிலைமையில் மக்களை திசை திருப்ப மோடி கும்பல் செய்யும் “சீப் பாலிடிக்ஸ்” என்று ஒரு தரப்பினர் அதைப் புறங்கையில் தள்ளிவிட்டனர். கோவையை தொழில் ரீதியாகவும் , சொத்து ரீதியாகவும் ஆக்கிரமித்திருக்கும் வட இந்திய மார்வாடிகளை வைத்து சங்க பரிவாரத்தினர் கிளப்பிவிட்டிருக்கும் புதுக்கதை இது என்று பலரும் கூறினர்.

படிக்க :
♦ அடுத்த ஆட்சியும் பா.ஜ.க.தான் … தினமணி – தினமலர் தலையங்க ஆவேசம் !
♦ 9 தொழிலாளிகளை விட நான்கு பசுக்களே முக்கியம் – தினமலர் வக்கிரம்

மற்றொரு புறம், பாஜக – சங்க பரிவாரக் கும்பலும், அதன் அடிபொடி ட்ரோல்களும் கொங்கு நாடு ஏன் தேவை என்பது குறித்து விசமத்தனமான பிரச்சாரத்தை மேற்கொண்டன. இந்நிலையில் இது குறித்து பாஜக எவ்வித உறுதியான கருத்தையோ, பதிலையோ தெரிவிக்கவில்லை.

பொதுவாகவே, பொதுச் சமூகம் சிந்திக்காத விசயங்களைஅதற்கு பாதிப்பு ஏற்படுத்தும் விசயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர், அதற்கான பீடிகை போடுவதையும், அதற்காக ஆழம் பார்க்கும் வேலையையும் ஆளும் வர்க்கங்கள் செய்யும்.

மக்களின் மனதில் ஒரு சட்டத்தைப் பற்றியோ அல்லது திட்டத்தைப் பற்றியோ ஒரு நேர்மறையான ஆதரவான சிந்தனையை எழச் செய்வதற்கும், இத்தகைய சட்டங்களோ திட்டங்களோ அறிமுகப்படுத்தப்பட்டால், அதற்கு மக்களின் எதிர்வினை என்னவாக இருக்கும் என அறிந்து கொள்வதற்கும் இத்தகைய பணிகளை அரசாங்கமும் ஆளும் வர்க்கமும் திட்டமிட்டு மேற்கொள்ளும்.

இதற்கு சங்க பரிவாரக் கும்பலும் அதன் தலைமையிலான மோடியின் ஆட்சியும் விதிவிலக்கல்ல. இதே பாணியில் தான் தனது இந்துத்துவ நிகழ்ச்சிநிரலை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தத் துவங்கும் முன்னர், ஆழம் பார்ப்பதற்காக கொங்குநாடு விவகாரத்தைக் கொளுத்திப் போட்டிருக்கிறது சங்க பரிவாரக் கும்பல்.

தாம் உள்ளே நுழைய விரும்பும் இடங்களின் தன்மையை ஆராய்ந்து, அவற்றின் சமூக அடிப்படையை நொறுக்குவதோடு, அந்த இடங்களில் உள்ள அரசியல் அணி சேர்க்கையையும் அதற்கேற்றவாறு கட்டியமைக்கும் தந்திரத்தில் கை தேர்ந்தது பாஜக கும்பல். காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்கள் ஆகியவற்றில் பாஜக பெற்ற வெற்றிகளே இதற்கான சமீபத்திய சாட்சிகள்.

அந்த வகையில் தற்போது சங்க பரிவாரக் கும்பல், தமிழ் நாட்டை தனது கட்டுக்குள் கொண்டுவருவதற்கான அரசியல் அணி சேர்க்கையையும், தமிழ்நாட்டின் அடிப்படையாக இருக்கும் மொழி சார்ந்த ஒற்றுமையையும் உடைக்கும் வகையில் திட்டமிட்டுக் களமிறங்கியுள்ளது.

சங்க பரிவாரத்தின் அணி சேர்க்கையைப் பொறுத்தவரையில், பத்தாண்டு ஆட்சியில் ஒட்டு மொத்தத் தமிழ்நாட்டையும், கொள்ளையடித்துச் சேர்த்த சொத்தை மத்திய அரசின் கைகளிலிருக்கும் வருமான வரித்துறை, இலஞ்ச ஊழல் ஒழிப்புத்துறை மற்றும் அமலாக்கத்துறையின் பிடியிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் அதிமுகவின் எடப்பாடி .பி.எஸ். கும்பல் அதன் முதல் கூட்டாளி.

தனது சாதிய சனாதன தர்மத்தை களத்தில் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கும் பாமக ராமதாஸ், பார்ப்பனியப் படிநிலையில் தமது சாதிக்கான இடத்தை சிறிது மேம்படுத்தி தமக்குக் கீழே பிற சாதிகளை மிதிக்கக் காத்திருக்கும் “புதிய தமிழகம்” கிருஷ்ணசாமி ஆகியோர் எல்லாம் சங்க பரிவாரத்தின் கொள்கைரீதியான கூட்டாளிகள்.

பணத்திற்காகவும், பதவிக்காகவும், சாதி ஆதிக்கத்திற்காகவும் சுயமரியாதையை இழந்து சங்க பரிவாரத்துக்குச் சேவகம் செய்யத் தயாராக இருக்கும் இவர்கள்தான் பாஜகஆர்.எஸ்.எஸ்.-ன் நிரந்தரக் கூட்டாளிகள்.

இவர்கள் தவிர, தென் தமிழகத்தில் நாடார் சாதி மற்றும் ராமநாதபுரம் பகுதிகளில் மறவர் சாதி மற்றும் கொங்கு வட்டாரத்தில் கவுண்டர் சாதி உள்ளிட்ட சாதிச் சங்கங்களுக்குள் இரண்டரக் கலந்து நிறைந்திருக்கிறது சங்க பரிவாரக் கும்பல். இதுதான் சங்க பரிவாரத்தின் அரசியல் அணி சேர்க்கை.

தமிழ்நாட்டில் மொழியை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டிருக்கும் ஒற்றுமையை உடைப்பதன் மூலம் சாதியரீதியான அணிதிரட்டலையும் அதன் மூலமாக மதரீதியான பிளவையும் உண்டாக்குவதற்குத் திட்டமிடுகிறது சங்க பரிவாரம். அதன் முதல் வெட்டு கொங்குநாடு என்பதாக விழுந்திருக்கிறது.

தமிழகத்தைத் துண்டாட பாஜக, ஆர்.எஸ்.எஸ். கும்பல் சதி செய்கிறது என தமக்கு எதிராக கொங்குநாடு விவகாரம் திரும்பிவிடக் கூடாது என்பதில் சங்க பரிவாரம் தெளிவாக இருக்கிறது. அதனால் தான் முன்னெச்சரிக்கையாக தமக்கு புரோக்கர் வேலை பார்க்கும் தினமலர் மூலம் “கொங்கு நாடு ” விவகாரத்தை கொளுத்திப் போட்டுள்ளது.

இப்படி கொளுத்திப் போட்டுவிட்டு, தமக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று பாஜக ஒதுங்கியிருக்கும் போதே, சங்க பரிவாரத்தின் பிற உதிரி அமைப்புகள் கொங்குநாடு விவகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு உருட்டுகின்றன. இந்த உருட்டுகள் ஒரு பக்கத்தில், இரைச்சல் வடிவில் ஓலம் எழுப்பிக் கொண்டிருக்கையில் கவித்துவமாக மற்றொரு புறத்தில் உருட்டுகிறார், ‘எழுத்தாளர்’ மாலன்.

சமூக வலைத்தளங்களில் ‘மேஜர் மாமா’ என சில ஆண்டுகளாக போற்றப்படும் மாலன், தினமணியில் கடந்த ஜூலை 14-ம் தேதி ஒரு நடுப்பக்கக் கட்டுரையை எழுதியிருக்கிறார். மாநிலச் சீரமைப்பு : அம்பேத்கர் சொல்வது என்ன ?” என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரையில் தினமலர் பற்ற வைத்த ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிநிரலை அணையவிடாமல் ஊதிவிடும் வேலையைச் செய்ய மெனக்கெட்டிருக்கிறார் மாலன்.

கட்டுரையை துவக்கும்போதே, “பெரிய மாநிலங்களைச் சிறிய மாநிலங்களாக பிரிப்பது நல்லதா? தீங்கானதா? ஒரு மொழிக்கு ஒரு மாநிலம் என்று மாநிலங்கள் உருவாக்கப்பட்டிருப்பது சரியா தவறா என்ற கேள்விகள் இன்று பல தளங்களில் ஒலிக்கின்றன” என்று பீடிகை போட்டு துவங்குகிறார்.

தமது நோக்கத்தை வெளிப்படையாக தெரிவிக்கும் அடிப்படை நேர்மையற்ற கோழைகளின் வழிமுறைதான் இத்தகைய பீடிகைகள். நடக்காத ஒரு விவாதத்தை, பெரும் அறிவுத்துறை விவாதம் என்பதாகக் காட்டி, தனது சுயநலத்திற்காக எடுக்கும் நிலைப்பாட்டை அறிவுத்துறை விவாதத்தில் தாம் கண்டறிந்த சமூகத் தீர்வாக முன் வைக்கும் சந்தர்ப்பவாத வழிமுறைதான் இது. மாலன் போன்ற உயர் ரக’ அறிவுஜீவிகள் இதைக் கடைபிடிக்கவில்லை என்றால்தான் ஆச்சரியப்படவேண்டும்.

படிக்க :
♦ மாணவர் போராட்டம் குத்தாட்டமா ? தினமலர் எரிப்புப் போராட்டம் !
♦ ஹதியா – ஜி.எஸ்.டி. – தேசபக்தி : மாலன் பொங்குவது ஏன் ?

சரி, விசயத்திற்கு வருவோம். கட்டுரையின் பெரும்பகுதியில், அம்பேத்கர் மாநிலப் பிரிவினை குறித்து எழுதியுள்ள நூலில் இருந்து சில பகுதிகளை எடுத்தாண்டு, கடைசிக்கு முந்தைய பத்தி வரை வளைத்து வளைத்து எழுதி, ஒரு மொழி பேசும் ஒரே மாநிலம் தான் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ஒரே மொழி பேசும் மாநிலத்தை நிர்வாகத்துக்காக இரண்டு மூன்றாகக் கூட பிரித்துக் கொள்ளலாம் என்ற இடத்திற்கு வந்து சேர்கிறார் .

அதாவது தமிழ் மொழி பேசும் தமிழ்நாட்டை நிர்வாகத்துக்காக இரண்டு மூன்றாகக் கூடப் பிரித்துக் கொள்ளலாம் என்பதைத்தான் அம்பேத்கரை எல்லாம் துணைக்கு அழைத்து வந்து கூறியிருக்கிறார். திடீரெனெ தமிழ்நாட்டை பிரித்துக் கொள்ளலாம் என ‘சும்மா’ சொல்லிவிட்டுப் போக முடியாது அல்லவா, அதனால்தான் கடைசி பத்தியில் அதற்கான காரணங்களைச் சொல்லி கட்டுரையை முடித்திருக்கிறார் மாலன்.

அதாவது, சென்னையும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களும் தான் வளர்ச்சியடைந்திருக்கின்றன என்றும் பிற மாவட்டங்கள் வளர்ச்சியடையவில்லை என்றும் தமிழகம் தலை பெருத்து உடல் வற்றியிருக்கிறது என்றும் கூறியிருக்கிறார் மாலன்.

எந்த புள்ளிவிவரத்தின் அடிப்படையில் இந்த “கம்பி கட்டும்” கதையை சொல்கிறார் என்பதை அவர் எழுதவில்லை. எழுதவில்லை என்றாலும் நாம் கேள்வி கேட்கக் கூடாது. பாவம் .. அவருக்கும் பதவிப் பசி எடுக்குமல்லவா ? விட்டுவிடுவோம். சாதகமாக தீர்ப்பெழுதியவனுக்கு கவர்னர் பதவி கிடைக்கும் நாட்டில், இப்படியான கவித்துவ உருட்டல்களுக்கு ஒரு டவாலி பதவியாவது கிடைக்காதா என்ன ?

தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்றோ, மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்றோ எந்தப் பகுதி மக்களிடமிருந்தும் வராத ஒரு கோரிக்கையை இங்கு கொளுத்திப் போடும் ஆர்.எஸ்.எஸ். கும்பலின் சதிக்கு தூபம் போடுகிறார் மாலன்.

வட தமிழகத்தை நிர்வாக ரீதியாக பிரிக்க வேண்டும் என ராமதாஸ் அவ்வப்போது ஈனக்குரலில் புலம்புவது மட்டும்தான் எப்போதாவது நடைபெற்றிருக்கிறதே அன்றி, இத்தகைய கோரிக்கைகள் என்றும் மக்களிடமிருந்து வந்த கோரிக்கைகள் அல்ல.

கவுண்டர் சாதியினரின் ஆதிக்கம் அதிகமுள்ள கொங்குமண்டலத்தைத் தனியாகவும், வன்னியர் சாதியினரின் ஆதிக்கம் அதிகமுள்ள வட தமிழகத்தைத் தனியாகவும் பிரிப்பதன் மூலம் சாதிய முனைவாக்கத்தை தீவிரப்படுத்தி அதன் மூலம் தமது இருப்பை தமிழகத்தில் உறுதி செய்து கொள்ள எத்தனிக்கிறது சங்க பரிவாரக் கும்பல்.

நான்காண்டு அடிமைகளின் ஆட்சியில், ஏற்கெனவே தமிழ் நாட்டிற்குள் தலைதூக்கிக் கொண்டிருக்கும் சாதிய முனைவாக்கத்தை விரைவுபடுத்தும் சங்க பரிவாரக் கும்பலின் முயற்சிகளை முறியடிப்போம். அதற்குத் துணை போகும் மாலன், தினமலர் போன்ற ஊடக புரோக்கர்களையும், சாதியக் கட்சிகளையும் புறக்கணிப்போம் !!

சரண்
செய்தி ஆதாரம் : தினமலர் – 10.07.2021 , தினமணி – 14.07.2021

 

பெருகி வரும் வரதட்சணைக் கொலைகளின் பின்னணி என்ன ?

கேரளா : அதிகரிக்கும் வரதட்சணை மரணங்கள் !
பார்ப்பனிய ஆணாதிக்க சமூகமும் அதை கட்டிக் காக்கும் அரசுமே முதன்மைக் குற்றவாளிகள் !

டித்த, நாகரீகத்தில் முன்னேறிய மாநிலம் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் கேரள மாநிலத்தில், வரதட்சணைக் கொடுமையால் பெண்கள் மரணமடைவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுவும் சமீபத்தில் இரண்டே நாட்களில் அடுத்தடுத்து  நிகழ்ந்த மூன்று இளம் பெண்களின் மரணம் அம்மாநிலம் முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், இரு பெண்களின் மரணம் ராணுவ அதிகாரி வீட்டிலும், போலீசு அதிகாரி வீட்டிலும் நிகழ்துள்ளது.

சுசித்ரா

சுசித்ரா என்ற 19 வயதான இளம் பெண் ஆலப்புழாவில் உள்ள வல்லிக்குன்னத்தை சார்ந்த இராணுவ வீரரைக் கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணமான ஒரு மாதத்தில் கணவர் விஷ்ணு உத்தரகாண்ட் சென்றுவிட்டார். திருமணம் முடிந்து மூன்றே மாதங்கள் ஆன நிலையில் வரதட்சணை கொடுமை காரணமாக ஜூன் 22 அன்று சுசித்ரா தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் நிகழ்வதற்கு முதல் நாள் அர்ச்சனா என்ற 24 வயது பெண்ணும் மர்மமான முறையில் இறந்துள்ளார். அர்ச்சனா ஒரு வருடத்திற்கு முன்பு சுரேஷ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். சுரேஷ் வீட்டில் வாழ்ந்து வந்த அர்ச்சனாவிடம் சுரேஷின் சகோதரனுக்காக மூன்று லட்சம் பணம் கேட்டு வாங்கியுள்ளனர் சுரேஷின் குடும்பத்தினர்.

அதன் பிறகு மீண்டும் சுரேஷின் குடும்பத்தினர் பணம் கேட்டபோது, அர்ச்சனாவின் தந்தை பணம் தர மறுத்துவிட்டார். இதனடிப்படையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சுரேஷும் அர்ச்சனாவும் தனியாக வாடகை வீட்டிற்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். தாய் வீட்டிலிருந்து வாடகை வீட்டிற்கு ஜூன் 21-ஆம் தேதி அர்ச்சனாவை அழைத்து சென்றுள்ளார் சுரேஷ். அன்றிரவே அர்ச்சனா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகின்றது.

அர்ச்சனா

தப்பிக்க முயற்சித்த சுரேஷை போலீஸார் கைது செய்துள்ள நிலையில், மகளின் இறப்பு குறித்து அர்ச்சனாவின் தந்தை கூறுகையில் “அர்ச்சனாவை சுரேஷ் குடித்துவிட்டு துன்புறுத்துவார், பலமுறை அர்ச்சனாவிடம் பணம் கேட்டு வாக்குவாதம் செய்வார்” என்றும் “அர்ச்சனாவை தற்கொலைக்கு தூண்டியதே சுரேஷ் தான்” என்றும் கூறியுள்ளார்.

அதே ஜூன் 21-ம் தேதி பெரிய பேசுபொருளாக மாறிய சம்பவம்தான் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட 24 வயது நிரம்பிய ஆயுர்வேத மருத்துவ மாணவி விஸ்மயா-வின் மரணம். மாநில போக்குவரத்து உதவி ஆய்வாளரான கிரணை கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டு கொல்லத்தில் கிரணின் வீட்டில் வசித்து வந்துள்ளார் விஸ்மயா. இவர்களின் திருமணத்தின் போது விஸ்மயாவின் தந்தை வரதட்சணையாக 11 லட்சம் மதிப்புள்ள ஒரு காரும், 1.25 ஏக்கர் நிலமும், 100 சவரன் தங்க நகையும் தந்துள்ளார்.

விஸ்மயா

ஆனால், இவற்றில் தன் பணவெறியை தனித்துக் கொள்ள முடியாத கிரண், வரதட்சணைக்காக விஸ்மயா-வை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பே கிரண் தன்னை அடித்து காயப்படுத்திய புகைப்படங்களை தன் நெருங்கிய உறவினருடன் வாட்ஸாப்பில் பகிர்ந்து கொண்டுள்ளார் விஸ்மயா. இதற்கிடையே IPC section(B) 306-கீழ் வரதட்சணை கொடுமைகாகவும் வரதட்சணை திருமணத்திற்காகவும் கிரண் கைது செய்யப்பட்டதோடு அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளது போலீசுத்துறை.

கேரளப் பெண்கள் பலர் “வரதட்சணை தர மாட்டோம்” என்றும் “பெண்கள் விற்பனைக்கு அல்ல” என்றும் தங்கள் வீட்டில் எழுதி ஒட்டிய புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து பிரச்சாரம் செய்ததற்கு எதிராக, “ரூ.50,000 சம்பளம் கேட்கக் கூடாது; சொந்த வீடு கேட்கக் கூடாது” என்று சில இளைஞர்களும் இதே பாணியில் பிரச்சாரம் செய்தது பலரின் ஆணாதிக்க அடக்குமுறை புத்தியை திரை விலக்கி காட்டுகிறது.

வயதானவர்கள் தான் வரதட்சணை கேட்கிறார்கள் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், ஜீன்ஸ் அணிந்த பழமைவாதிகளாக தான் இன்னும் பல இளைஞர்கள் இருக்கின்றனர்.

சமீபத்தில் வரதட்சணை கொடுமையால் நிகழ்ந்த மரணங்கள் அதிர்ச்சி அளிப்பதாகக் கூறுயுள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன். இனி பெண்கள் சம்மந்தமான புகாருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் குடும்ப தகராறுகளை ஒழிக்க மாவட்ட ரீதியாக போலீசுத்துறையினர் அறிவுறுத்தப் பட்டிக்கின்றனர் என்றும் கூறியதோடு, 24 மணி நேர ஹெல்ப்லைன் ஒன்றை அறிவித்துவிட்டு முதல்வர் தன் கடமையை முடித்துக் கொண்டுள்ளார்.

இவர் அதிர்ச்சிக்குள்ளாவது போல கேரளாவில் வரதட்சணை தொடர்பாகவும் குடும்ப வன்முறை தொடர்பாகவும் மரணங்கள் நிகழ்வது புதிய விடயமல்ல. கடந்த 2016-ஆம் ஆண்டிலிருந்து 2020 ஏப்ரல் வரை – இவரது ஆட்சிக் காலத்தில் – கேரளாவில் 15,140 வரதட்சணை கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன. அந்த வழக்குகளை அரசும் போலீசுத்துறையும் நீதித்துறையும் என்ன செய்தது? எத்தனை வழக்குகளுக்கு நீதி கிடைத்தது? சர்ச்சை பெரிய அளவில் வெடித்தால் மட்டும் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பது போல் மக்களிடம் பிம்பத்தை ஏற்படுத்துவதும், மற்றபடி வழக்குகளை கிடப்பில் போட்டு நீர்த்துப்போக செய்வதும் இந்த அரசுக்கும், போலீசுத்துறைக்கும், நீதித்துறைக்கும் வழக்கமான ஒன்றுதானே.

இச்சம்பவங்கள் குறித்து கேரள மகளிர் ஆணையம் கூறுகையில், “திருமணத்தில் பெண்ணுக்கு வரதட்சணையாக தரப்படும் தங்க நகை மற்றும் பரிசுப் பொருட்களின் மீது பெண்ணுக்கு உரிமை வழங்க வேண்டும். அதன் மீது கணவன் வீட்டார் உரிமை கொண்டாடக் கூடாது” என்று கூறியுள்ளது. பிறந்த குழந்தை சிசுக் கொலை செய்யப்படுவதற்கும், இருபது வயது இளம்பெண் தற்கொலை – கொலை செய்யப்படுவதற்கும் காரணமாக இருப்பது இந்த வரதட்சணை தான். ஆனால், வரதட்சணையை முற்றிலுமாக ஒழிப்பதைப் பற்றி வாய்கூடத் திறக்காமல், வரதட்சணையாக வாங்கும் நகை யாருடைய உரிமையின் கீழ் வரும் என்று பேரம் பேசிக் கொண்டிருக்கின்றது கேரள மகளிர் ஆணையம்.

கேரளாவில் மட்டும் 2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை வரதட்சணை தொடர்பான மரணங்கள் 66 நிகழ்ந்துள்ளன. இந்தியாவில் படிப்பறிவில் முதன்மையாக இருக்கும் கேரளாவிலேயே இந்த நிலை என்றால் மற்ற மாநிலங்களை பற்றி நாம் கற்பனை செய்து பார்த்து கொள்ளலாம்.

உத்திரப்பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் வரதட்சணை தொடர்பான மரணங்கள் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றன. பெண்களுக்கு வீட்டிற்குள்ளும் பாதுகாப்பில்லை. வீட்டிற்கு வெளியிலும் பாதுகாப்பில்லை. வெளியில் நடக்கும் பாலியல் கொடுமைகளாவது குற்றம் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டு வெளிச்சத்திற்கு வருகின்றது. ஆனால், குடும்ப வன்முறைகள் சட்டவிரோத செயல் என்றே தெரியாமல் பல பெண்கள் வாழ்ந்து மடிகின்றனர்.

2001 முதல் 2012 வரை 91,202 வரதட்சணை தொடர்பான மரணங்கள் நிகழ்ந்துள்ளன. தேசிய மகளிர் ஆணையத்தின் தரவுகளின்படி 2020 ஏப்ரல் மாதம் வரையில் 25,885 பெண்களுக்கு எதிரான புகார்கள் பதிவாகியள்ளது. அதில் குடும்ப வன்முறை புகாரின் எண்ணிக்கை மட்டும் 5,865.

இந்தியாவில் வரதட்சணை தடுப்பு சட்டம் வந்து 60 வருடம் ஆகிவிட்டது. வரதட்சணை பெறுவதையும் கொடுப்பதையும் தடுக்க பல்வேறு கடுமையான சட்டங்கள் வந்துவிட்டன. ஆனால், வருடாவருடம் வரதட்சணை-மரணம், வரதட்சணை-கொடுமை தொடர்பான புகார்கள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றன.

ஒரு மணி நேரத்திற்கு ஒரு பெண் வராதட்சணை கொடுமைக்கு மரணிக்கிறாள். பெண்களுக்கு நடக்கும் பாலியல் ஒடுக்குமுறையையும், குடும்ப ஒடுக்குமுறையையும், வரதட்சணை கொடுமையையும் தடுப்பதில் இந்த அரசமைப்பும், சட்டங்களும் எப்படி தோற்று போயிருக்கின்றது என்பதை இந்த மரணங்கள் தெளிவாக அம்பலப்படுத்துகின்றது.

இத்தனைக்கும் பெண்கள் மீது நடத்தப்படும் அனைத்து வன்முறைகளும் வழக்காவதில்லை. பல பெண்கள் குடும்ப மானம், குடும்ப மிரட்டல் காரணமாக தன் மீது தொடுக்கப்படும் வன்முறைகளை வெளியில் சொல்வதே இல்லை. அப்படியே சொன்னாலும் அது குடும்பதிற்குள்ளேயே பஞ்சாயத்து செய்யப்படுகின்றது. அதை மீறி சிலர்தான் வழக்கு தொடுக்க முன் வருகின்றனர். அப்படி முன்வரும் பல வழக்குகளிலும் போலீசுத் துறையினர் – அது மகளிர் போலீசாக இருந்தாலும் – தம்முள் ஊறிய ஆணாதிக்க புத்தியைக் கொண்டு அக்குடும்பத்திற்கு அறிவுரை கொடுத்து கட்டப்பஞ்சாயத்து நடத்தி அனுப்பி வைக்கின்றனர். இதில் எஞ்சிய ஒரு சில வழக்குகள் மட்டும்தான் இப்போது நாம் பார்ப்பவை.

இதிலும் எத்தனை வழக்குகள் நிலுவையில் போடப்படாமல், திரும்பி பெறப்படாமல், குற்றம் நடந்ததை நிரூபிக்கப்படுகின்றது என்பதை யோசித்தால், இந்தச் சமூக அமைப்பும் அரசமைப்பும் எந்தளவு பெண்களுக்கு எதிரானதாக உள்ளது என்பதை நாம் உணர முடியும்.

2001-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை வரதட்சணை தொடர்பான வழக்குகளில் வெறும் 48 சதவீத வழக்குகளே நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. இதே காலகட்டத்தில் மிரட்டல்களாலும், நீதி கிடைக்காது என்ற விரக்தியினாலும் 1,389 வழக்குகள் திரும்பப்பெறப்பட்டுள்ளன.

இது எங்கோ ஒரு பெண்ணுக்கு நிகழும் கொடுமை இல்லை.  பார்ப்பனிய – ஆணாதிக்க கருத்துக்களால் கட்டி எழுப்பப்பட்ட இந்த சமூகத்தினால் ஒட்டு மொத்த பெண் இனத்திற்கே நிகழும் கொடுமை.

ஆனால், இது போன்ற பிரச்சனைகள் திரும்பத் திரும்ப ஒரு தனிநபர் பிரச்சனையாகவே சுருக்கப்படுகிறது. வீதியில் நடக்கும் பாலியல் வன்முறைகளையும் அத்துமீறல்களையும் கண்டு கொதித்தெழுபவர்கள் கூட தன் குடும்பத்திற்குள் பெண்ணுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் குறித்தும், பெண் ஒடுக்கப்படுவது குறித்தும் பெரிதாக கவலைப்படுவதில்லை. ஏனெனில், இந்திய சமூகக் கட்டமைப்பின் அடிநாதமாக பார்ப்பனிய ஆணாதிக்க சிந்தனையும், சொத்துடைமை சமூக அமைப்பும் திகழ்கிறது. இது ஆண், பெண் என்ற பாரபட்சமின்றி அனைவரிடமும் வெவ்வேறு அளவுகளில் நீடிக்கிறது.

இந்திய சமூகத்தில் விரவிக் கிடக்கும் பார்ப்பனியக் கட்டமைப்பு ஆண்களைச் சார்ந்தே பெண்கள் இயங்கும் வகையில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதுவே நல்லதொரு குடும்பத்திற்கான அளவீடாகவும் சமூகத்தின் பொதுப்புத்தியில்  கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

பெண்கள் சுயமாக வேலைக்குச் சென்று பொருளாதார ரீதியாக தனித்து நின்றாலும், அவர்களும் இந்தச் சுரண்டலில் இருந்து தப்ப முடியாதபடிக்கு, யானையின் கால்களில் கட்டப்பட்ட சங்கிலியைப் போன்று இந்த பார்ப்பனிய ஆணாதிக்கச் சமூகம் செயல்படுகிறது. வரதட்சணை முதல் உழைப்புச் சுரண்டல் வரை அனைத்து விதத்திலும் பெண்களின் மீதான சுரண்டலை அனுமதிக்கிறது.

அனைவருக்கும் பொதுவானதாகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் அரசோ, இந்த அவலத்தைக் களைவதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், ஆளும் வர்க்கங்களின் நலனுக்காக, மலிவான உழைப்புச் சக்திகளாக பெண்களை இன்னும் எப்படி அதிகமாகச் சுரண்ட முடியும்? என கணக்கிட்டுக் கொண்டிருக்கிறது.

கடுமையான சட்டங்கள் வந்தால் இவை எல்லாம் மாறிவிடும் என்று நம்மை நம்பச் சொல்கிறார்கள். சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போலீசுத் துறை, இராணுவத் துறையினர் வீட்டிலும் பெண்களின் நிலை இதுதான் என்பதையே மேற்குறிப்பிட்ட நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.

பெண்களுக்கெதிரான வரதட்சணைக் கொடுமைகள், குடும்ப வன்முறைகள் ஆகியவற்றின் அடிப்படையாக விளங்கும் பார்ப்பனிய – ஆணாதிக்க சமூகக் கட்டமைப்பும், இந்தச் சுரண்டலை அனுமதிப்பதோடு, ஆளும் வர்க்கங்களின் உழைப்புச் சுரண்டலையும் அங்கீகரித்து வளர்த்துவிடும் இந்த அரசுக் கட்டமைப்பும் தான் பிரதான குற்றவாளிகள்.


துலிபா
செய்தி ஆதரம் : Tamil Hindu, Indian Express

ஆனந்த் தெல்டும்டேவைக் கண்டு பாஜக ஏன் அஞ்சுகிறது ? || விஜய தாரணிஸ்

“பாசிஸ்டுகள் எப்போதும் தேர்தல் மூலம்தான் ஆட்சிக்கு வருகிறார்கள். ஆனால், அவர்களை தேர்தல் மூலமாக அப்புறப்படுத்த முடியாது” என்பதை ‘சாதியின் குடியரசு’ எனும் தனது நூலில் ஆனந்த் டெல்டும்டே ஓர் இடத்தில் மேற்கோள் காட்டியிருப்பார்.

ஆனந்த் டெல்டும்டே எழுத்துக்களைக் கண்டு பாஜக அரசு அஞ்சுவதற்கு “சாதியின் குடியரசு – நவீன தாரளமய இந்துத்துவா காலத்தில் சமத்துவம் பற்றி சிந்தித்தல்” மற்றும் “ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும்” ஆகிய நூல்கள் ஓர் உதாரணம்.

இந்த நவீன தாராளமய இந்துத்துவா காலத்தில் சங்பரிவார கும்பல்கள் மூலம் அதிகரித்து வரும் சாதிய / மதவாத பிரச்சினைகளும் உலகமயமாக்கலின் விளைவாக தனியார்மயமும் இந்த நாட்டை சமூக பொருளாதார ரீதியாக பாழ்படுத்திக் கொண்டிருக்கின்றன.

படிக்க :
♦ பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டேவுக்கு பிணை மறுக்கப்பட்டது ஏன் ?
♦ உங்கள் முறை வருவதற்கு முன் நீங்கள் பேசிவிடுங்கள் ! – ஆனந்த் தெல்தும்டேவின் திறந்த மடல் !

இந்த சமூக பொருளாதார சுரண்டல்களை எதிர்த்து போராடக் கூடிய முதன்மை ஆற்றல்களாக கம்யூனிஸ்ட்களையும் தலித்துகளையும் அவர்களின் கூட்டணி சக்திகளாக பிற முற்போக்கு இயக்கங்களையும் முன்நிறுத்துகிறார்.

சாதி குறித்த பார்வையையும் அதை அழித்தொழிப்பதற்கான வழிமுறைகளையும் வெறுமனே கருத்துமுதல்வாத நிலையில் இருந்து அணுகாமல் பொருள்முதல்வாத அடிப்படையில் ஆராய்ந்து சாதியை குறித்தும் சாதிக்கு எதிராக இந்தியாவில் போராடிய இயக்கங்களையும் தனது ஆய்வின் மூலம் விளக்குகிறார் ஆனந்த் டெல்டும்டே.

இங்குள்ள சாதி எதிர்ப்பு இயக்கங்கள், “சாதி உருவானதற்கு காரணம் இந்து மதம் மட்டும்தான், அதை தொடர்ந்து தாக்குவதாலும், மதமாற்றங்களாலும் அழித்தொழிக்க முடியும்” என்று உறுதியாக நம்புவதன் விளைவாக அதிலுள்ள பொருளாயத உறவுகளை பார்க்கத் தவறுகின்றன.

அவருடைய ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும் நூலில் கூறுகிறார்:

“வர்க்கம் என்னும் கருத்தினம் சாதி என்னும் கருத்தினத்தை விட சக்தி வாய்ந்தது என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில், சாதி என்னும் கருத்தினம் சாதிகளை உட்சாதிகளாக பிரிக்கக் கூடியதும் சமுதாயத்தை ஒன்றையொன்று எதிர்த்து நிற்கும் இரண்டு பகை முகாம்களாகப் பிரிக்கும் ஆற்றலற்றதுமாகும்.

இந்திய வரலாற்றுக்கு அடிப்படையாக இருப்பது பார்ப்பனியக் கருத்து நிலைக்கும் பார்ப்பனியமல்லாத கருத்து நிலைக்கும் இடையிலான போரே என்றும் அது இந்திய சமுதாயத்தை ஒன்றுக்கொன்று பகையான நலன்களைக் கொண்ட சாதிகளாக பிளவுபடுத்துகிறது என்றும் சிலர் கூறலாம். சாதி எதிர்ப்பு முகாம் தர முயலும் விளக்கம் இதுதான்.

இப்படி ‘பார்ப்பனியம்’, ‘பார்ப்பனியமல்லாதது’ எனப் பிளவுபடுத்துவது ஒரு பிரச்சினையை ஏற்படுத்துகிறது. அதாவது ‘பார்ப்பனியம்’, ‘பார்ப்பனியமல்லாதது’ என்னும் இரண்டு விசயங்களும் ஏதோ வரலாற்றில் தொடர்ந்து நிலவுகிற எதார்த்தம் எனக் கருத வைக்கிறது. மேலும், பார்ப்பனிய மேலாண்மையின் தாக்கத்தையும் சென்ற நூற்றாண்டிலிருந்து ஏற்பட்டுள்ள வளர்ச்சிப் போக்குகள் உருவாக்கியுள்ள பொருளாயத முரண்பாடுகளையும் கருத்தில் கொள்ளத் தவறுகிறது.”

இப்படி சாதியை கருத்துமுதல்வாத நிலையில் இருந்து அணுகிய சாதி ஒழிப்பு இயக்கங்கள் சாதிகளின் கருத்துநிலை அடிப்படையை பலவீனப்படுத்தின. ஆனால், சாதிகளின் பொருளாதார அடிப்படையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த இயலாமல் விட்டுவிட்டது.

காலனிய ஆட்சி காலத்தில் நடந்த நிலச் சீர்திருத்தங்கள், ஆங்கிலக் கல்விமுறை மற்றும் புதிய வேலைவாய்ப்புகள் சூத்திர சாதிகளின் வர்க்க தன்மையில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. அந்த பொருளாயத மாற்றங்கள் அரசியல் தளத்திலும் எதிரொலித்தது. சூத்திர சாதி மக்கள் தொகையின் எண்ணிக்கையும் அவர்களது பொருளாதார முன்னேற்றமும் அரசியலில் அவர்களுக்கான பிரதிநித்துவத்தை பெறுவதற்கான வாய்ப்பை உருவாக்கியது.

ஆனால், மறுமுனையில் தலித்துகள் நிலமற்ற, உடமையற்ற, உழைக்கும் வர்க்கங்களாக சமூக பொருளாதார அரசியல் தளத்தில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

சாதி ஒழிப்பு என்பது பண்பாட்டு தளத்தை சார்ந்தது மட்டுமல்ல அது வர்க்கப் போராட்டத்தையும் உள்ளடக்கியது. வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்கும் கம்யூனிஸ்ட்கள் தங்களது சமூக பகுப்பாய்வு கருவியான மார்க்சியத்தை சாதியை ஒழிப்பதற்கான கோட்பாட்டுருவாக்கத்திற்கும் நடைமுறைக்கும் பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறார்.

மேலும், சாதி ஒழிப்புக்கான போராட்டத்தில் தொடர்ந்து எழுதிக் கொண்டும் செயல்பட்டுக் கொண்டும் இருக்கும் ஆனந்த் டெல்டும்டே-வின் நூல்கள் சாதியமைப்பை குறித்தும், சமூக வரலாற்றுக்கான பகுப்பாய்வுக் கருவியாக மார்க்சியம் எப்படி வெற்றிகரமாக தொடர்ந்து இருக்கிறது என்பதையும் விளக்குகிறது.

மார்க்சியம் ஏன் படிக்க வேண்டும், அது எப்படி சமூக வரலாற்றை ஆய்வு செய்கிறது, சாதியை ஒழிப்பதில் மார்க்சியத்தின் பொருத்தப்பாடு, அதை நடைமுறைப்படுத்துவதில் கம்யூனிஸ்ட்களின் பங்கு என மார்க்சியம் மற்றும் கம்யூனிஸ்ட்களின் தேவையை அவரது ஒவ்வொரு எழுத்துகளும் வெளிப்படுத்துகிறது.

அம்பேத்கருக்கு உரிய மரியாதையையும் அவரது கொள்கைகளையும் நாங்கள்தான் மதிப்பதாகவும் போற்றுவதாகவும் கூறும் இந்துத்துவ பாஜக அரசு, கடந்த ஆண்டு அம்பேத்கர் நினைவு நாளன்றுதான் பீமா கொரேகான் வழக்கில் ஆனந்த் டெல்டும்டேவை UAPA சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தது.

படிக்க :
♦ நூல் விமர்சனம் : மஹத் – முதல் தலித் புரட்சியின் உருவாக்கம் | ஆனந்த் தெல்தும்டே | எஸ். காமராஜ்
♦ இந்தியா முழுவதும் செயற்பாட்டாளர்களை ஒடுக்கும் மோடி அரசை வீழ்த்துவோம் !

இந்திய நீதித்துறையும் இன்று வரையிலும் அவருக்கு மட்டுமின்றி அவ்வழக்கில் கைது செய்யப்பட்ட எவருக்குமே பிணை வழங்காமல் அரச பயங்கரவாதத்திற்கு துணை நின்று கொண்டிருக்கிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவருமே மக்களுக்காக சிந்தித்த, பேசிய, எழுதிய மனித உரிமை செயல்பாட்டாளர்கள்தான்.

“துப்பாக்கி முனையை விட பேனா முனையே வலிமை வாய்ந்தது” என்பதை உணர்ந்துதான் உலகில் உள்ள எல்லா அரசுகளும் மக்களுக்காக சிந்திக்கும் சிந்தனையாளர்களைக் கண்டு அஞ்சுன்றன. தங்களது சுரண்டல் அமைப்பை கேள்விக்குட்படுத்துகிறவர்களை சிறைப்படுத்துகின்றன.

இதையேத்தான் பாசிச பாஜக அரசும் பீமா கொரேகான் வழக்கிலும் செய்து கொண்டிருக்கிறது. UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் பாஜக அரசு விடுதலை செய்ய வேண்டும். UAPA போன்ற ஒடுக்குமுறை சட்டங்களையும் ஒழிக்க வேண்டும்.


முகநூலில் : Vijay Dharanish

தனிப்பட்ட சுதந்திரத்தை பாதுகாக்க தவறிய இந்திய சட்ட அமைப்பு || இஷா சிங்

0

ஸ்டான் சுவாமியின் மரணமும் – தனிப்பட்ட சுதந்திரத்தை பாதுகாக்கத் தவறிய இந்தியாவின் சிக்கலான சட்ட அமைப்பும்

செயல்பாட்டாளர் ஸ்டான் சுவாமியின் மரணம் இந்திய நீதித்துறைக்கு ஒரு கருப்பு நாள். உடல்நிலை சரியில்லாத ஒரு மூத்த குடிமகனுக்கு பிணை போன்ற அடிப்படை உரிமையைக் கூட நீதிமன்றத்தால் வழங்க முடியவில்லை. மேலும், அவர் முற்றிலும் நிரபராதி எனவும் அவர் மீது சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை எனவும் ஒரு வழக்கு உள்ளது. வரலாற்றில் இந்த துயர்மிகு தருணம், நீதித் துறையினுடைய திறன் மற்றும் மனசாட்சியின் சீரழிவால் – இது தனிப்பட்ட சுதந்திரத்தை சிறிதளவே பாதுகாக்கும் – ஏற்பட்ட விளைவு மட்டுமல்ல, இந்தியாவின் சிக்கலான சட்ட கட்டமைப்பும் இதற்குக் காரணமாகும்.

ஜான் ஸ்டூவர்ட் மில், தனது சுதந்திரம் குறித்த கட்டுரை ஒன்றில், சுதந்திரத்திற்கும் அதிகாரத்திற்கும் இடையிலான போராட்டம், வரலாற்றின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும் என வாதிடுகிறார். ஒரு நபரின் சுதந்திரம், அவரைப் பொறுத்தவரை, கிட்டத்தட்ட முழுமையானது மற்றும் ஒரு நாகரிக சமூகத்தின் எந்தவொரு உறுப்பினரின் மீதும் – அவருடைய விருப்பத்திற்கு மாறாக,  மற்றவர்களுக்கு தீங்கு விளைவிப்பதைத் தடுப்பதே – அதிகாரம் சரியான முறையில் நடைமுறைப் படுத்தப்படுவதாகும்”.

படிக்க :
♦ சாத்தான்குளம் படுகொலை : காவலர்களல்ல, கிரிமினல்களே !
♦ ஸ்டான்சுவாமி மரணத்திற்கு நீதி விசாரணை கோரும் சமூக செயற்பாட்டாளர்கள் !

“மற்றவர்களுக்கு தீங்கு விளைவித்தல்” என்ற சொற்றொடர் பயன்பாட்டில் கண்ணாடி கொண்டு பார்க்கப்பட வேண்டும் என அவர் விளக்குகிறார். இது பெரும்பான்மையினரின் விருப்பம் அல்ல, அதன் கொடுங்கோன்மைக்கு எதிராக என அவர் எச்சரிக்கிறார். மாறாக “பயன்பாடு என்பதன் மிகப்பெரிய பொருளில், நிரந்தர நலன்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு மனிதன் ஒரு முற்போக்கான மனிதனாக” இருக்க வேண்டும் என்கிறார். எனவே, அவர் சுதந்திரத்திற்கான கட்டுப்பாடுகள் எப்போதும் நீண்ட காலத்திற்கு ஒட்டுமொத்த சமூகத்தின் மிகப்பெரிய நன்மைக்காக இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்.

குற்றவியல் சட்டம் என்பது தனிப்பட்ட சுதந்திரத்தின் மீதான ஒரு கட்டுப்பாடாகும். மேலும், அரசுக்கு வழங்கப்பட்ட கைது அதிகாரங்கள் குடிமக்களை உடனடியாக கூண்டில் அடைக்கப்பட்ட மனிதர்களாக மாற்றுவதை குறைக்க உதவுகின்றன. மேலும், அதன் தயவில் அவர்களை விட்டு விடுகின்றன. எனவே, அரசியலமைப்பின் மூன்றாம் பாகத்தின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட சுதந்திரங்கள் தேவையற்ற முறையில் மிதிக்கப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்த, எச்சரிக்கையுடனும், மிகுந்த கண்காணிப்புடனும் செயல்பட வேண்டியது அவசியம்.

இருப்பினும், சமீப காலங்களில் பீமா கொரேகான் செயல்பாட்டாளர்கள், நடிகர் ரியா சக்ரவர்த்தி மற்றும் சிஏஏ போராட்டக்காரர்கள் போன்ற பலதரப்பட்டோரின் தன்னிச்சையான கைதுகள் நிகழ்ந்தன. இந்த கைதுகளின் நோக்கம், சமூகத்தின் பழிவாங்கலுக்கான விருப்பத்தைத் திருப்திப்படுத்துதல், அரசியல் லாபங்களை பெறுதல், எதிர்ப்பாளர்களை அடக்குதல் மற்றும் அரசு இயந்திரங்களுக்கு எதிராக குடிமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துதல், நமது சமூகத்தின் பெரும் நன்மை மற்றும் முன்னேற்றத்தை ஊக்குவிப்பதை விட, ஒரு கடுமையான நினைவூட்டலாக சேவை செய்கிறது.

இந்த போக்கு, தேசத் துரோக வழக்குகள், சட்டத்தை மதிக்கும் குடிமக்களுக்கு எதிராக அரசு முகமைகளால் புனையப்பட்ட பீமா கோரேகான் பொய் வழக்குகள் அல்லது ஊபா போன்ற விதிகளைப் பயன்படுத்தி ஐபிசி குற்றங்களை கடுமையாக மாற்றுவதன் மூலம் நடைமுறைப் படுத்தப்படுவது கவலையளிக்கிறது. இந்திய குற்றவியல் நீதி அமைப்பு, “குற்றவாளி என நிரூபிக்கப்படும் வரை நிரபராதி” என்பதை பெரும்பான்மையாக தொடர்வதைக் காட்டிலும், தனிநபர் சுதந்திரத்தைக் காக்க வடிவமைக்கப்படவில்லை. மேலும், ஒரு முறை ஒரு குடிமகன் அதன் பிடியில் சிக்கிக் கொண்டால், வெளியேறுவது ஒரு கடினமான செயல்முறையாகும், குற்றம்சாட்டப்பட்டவரின் குற்ற உணர்வு குறித்து அதற்கு கவலையில்லை.

கைது செய்வதற்கான பரந்த அதிகாரங்கள்

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (சி.ஆர்.பி.சி.) 41-வது பிரிவு காவல்துறையினருக்கு மிகவும் பரந்த கைது அதிகாரங்களை வழங்குகிறது. அதில், ஒரு நபர் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவிக்கும் ஒரு குற்றத்தைச் செய்துள்ளார் என்ற நியாயமான சந்தேகம் இருந்தால் அவர்களை வாரண்ட் இல்லாமல் கைது செய்ய முடியும்.

தண்டனை ஏழு ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவான வழக்குகளில் கைது செய்யும் அதிகாரங்கள் சி.ஆர்.பி.சி-யின் பிரிவு 41-ஏ மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன. இது குற்றம் சாட்டப்பட்டவர்களை ஆஜராகுமாறு அறிவிக்க வேண்டும். மேலும், உச்சநீதிமன்றத்தின் அர்னேஷ்குமார் வழிகாட்டுதல்கள், கைது நடவடிக்கைக்கு முன் காவல்துறை அதிகாரி அதற்கான விரிவான காரணத்தை அளிக்க வேண்டும் என கூறுகின்றன.

கைது செய்வதற்கான இந்த தேவைகளைத் தவிர்ப்பதற்காக, இந்திய தண்டனைச் சட்டத்தில் (ஐ.பி.சி.) கிட்டத்தட்ட அனைத்து குற்றங்களுக்கும் இருக்கும் மோசமான குற்றச்சாட்டுகளைப் பயன்படுத்துவதற்கான நடைமுறை உருவாகியுள்ளது. திருட்டு என்பது கொள்ளையாக மாற்றப்படுகிறது. ஒரு ஆவணத்தின் எளிய மோசடி ஒரு மதிப்புமிக்க ஆவணத்தின் மோசடியாக மாற்றப்படுகிறது. இது ஆயுள் வரை சிறைவாசம் தரும் குற்றமாகிறது.

குற்றவியல் சதி மற்றும் பொதுவான நோக்கம் போன்ற பிரிவுகள் வழக்கமாக அப்பாவி நபர்களையும், குறைந்த குற்றங்களில் குற்றவாளிகளையும் வழக்கமான குற்றவாளிகள் மற்றும் பெரும் குற்றவாளிகளுடன் இணைக்க வழக்கமாக பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் தேவையான நியாயப்படுத்தல்கள் இல்லாமல் எளிதாக கைது செய்ய வசதியாகிறது. மேலும், இந்த குற்றச்சாட்டுகள் வழக்கமாக விசாரணையின் போது அல்லாமல், குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யும் கட்டத்தில் நீதிமன்றத்தால் விசாரிக்கப்படுகின்றன. இதனால் குற்றம்சாட்டப்பட்டோர் 60-90 நாட்கள் வரை நீட்டிக்கப்பட்ட காவலில் இருக்க அனுமதிக்கிறது.

இயந்திரத்தனமான தடுப்புக் காவல்கள்

அரசியலமைப்பின் 22-வது பிரிவு கைது செய்யப்பட்ட ஒருவரை 24 மணி நேரத்திற்குள் ஒரு மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்த வேண்டும் என்று கோருவதன் மூலம் அவர்களைப் பாதுகாக்கிறது. ஆனால், பெரும்பாலும் நீதிபதிகள் ரிமாண்ட் உத்தரவுகளை அனுப்பும் போது, தங்கள் மனதில் ஏற்றிக் கொள்ள தவறிவிடுகிறார்கள். சி.ஆர்.பி.சி-யின் பிரிவு 167, குற்றம் சாட்டப்பட்டவர்களை 15 நாட்கள் வரை போலீசு காவலிலும் 90 நாட்கள் வரை நீதிமன்றக் காவலிலும் வைக்க மாஜிஸ்திரேட்டுக்கு அதிகாரம் அளிக்கிறது.

படிக்க :
♦ சமூக செயற்பாட்டாளர்களை வேட்டையாடும் பாசிசம் : நேற்று வடக்கு – இன்று ஆந்திரா – நாளை தமிழகம் !
♦ சமூக செயற்பாட்டாளர்கள் கைது : ஆர்.எஸ்.எஸ்-ன் சதிப் பின்னணி என்ன ?

உதாரணமாக, செயல்பாட்டாளர் சுவாமியின் வழக்கில் ரிமாண்ட் உத்தரவு இட்ட நீதிபதி, நோய்வாய்ப்பட்ட மூத்த குடிமகனை முதன்மையான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்காக காவலில் வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை கேள்விக்குட்படுத்தியிருக்க வேண்டும். மேலும், கைது செய்யப்படாமல் விசாரணை எளிதாக தொடர்ந்திருக்க முடியுமே என்ற கேள்வியை எழுப்பியிருக்கலாம்.

அர்னேஷ் குமார் அல்லது மனுபாய் ரத்திலால் படேல் வழக்கிலோ உச்சநீதிமன்றம், தடுப்புக் காவலுக்கு நீதித்துறை பொறுப்புணர்வு தேவைப்படுகிறது, அது ஒரு இயந்திர செயல்முறையாக இருக்க முடியாது என பலமுறை குறிப்பிட்டுள்ளது. இந்த காரணத்திற்காக, 37-வது சட்ட ஆணைய அறிக்கையின் பரிந்துரைகளுக்கு இணங்க, பிரிவு 167 செயல்படுத்தும் நீதிபதிகளை ரிமாண்ட் வழங்குவதற்கான நோக்கத்திலிருந்து விலக்குவதற்காக திருத்தப்பட்டது. ஏனெனில், இதற்கு குறிப்பாக நீதியை செயல்படுத்தும் மனப்பான்மை தேவை.

இவை அனைத்தும் இருந்தபோதிலும், தடுப்பு காவல் இயந்திரத்தனமாக நீட்டிக்கப்படுகிறது. மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களை தடுப்புக் காவலில் வைக்கத் தேவையில்லை என்றாலும் கூட, குற்றம் சாட்டப்பட்டவர்களை போலீசு காவலில் இருந்து நீதித்துறை காவலில் வைப்பது வழக்கமாகியுள்ளது.

உதாரணமாக, கடந்த ஆண்டு தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் கொடூரமான மரணங்கள் தடுக்கப்பட்டிருக்கலாம். மாஜிஸ்திரேட் மேலும் தடுப்புக் காவலில் அனுப்புவதற்கு பதிலாக அவர்களை விடுவித்திருக்கலாம். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான மோசமான குற்றச்சாட்டுகள் நியாயமானதா எனவும், மேலும் காவலில் வைக்க உண்மையான தேவை இருக்கிறதா எனவும் ஒரு முறைகூட அவர் கேள்வி எழுப்பவில்லை.

பிணை என்பது ஒரு சிறப்பு சலுகை!

இராஜஸ்தான் Vs பால்சந்த் வழக்கில் நீதிபதி கிருஷ்ணய்யர்,  “பிணை என்பது விதி, சிறை அல்ல” என்று பொருத்தமாகக் கூறினார். பிணை என்பது ஒரு புனிதமான உரிமை, ஏனெனில் குற்றவாளி என நிரூபிக்கப்படுவதற்கு முன்பு ஒரு நபர் தண்டிக்கப்படுவதில்லை என அது உத்தரவாதம் அளிக்கிறது. எனவே, இது நமது குற்றவியல் நீதி அமைப்பில் சுதந்திரத்தின் பாதுகாப்பு அரண்களில் ஒன்றாகும்.

எவ்வாறாயினும், சி.ஆர்.பி.சி-யின் 437 மற்றும் 439 பிரிவுகளின் கீழ் போலீசு காவலில் உள்ள ஒருவருக்கு பிணை வழங்க நீதிமன்றங்கள் விரும்புவதில்லை.  ஏனெனில் அவர்கள் விசாரணையில் தலையிடுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாக, இது பிரிவு 167-இன் கீழ் 15 நாள் உயர் வரம்பைக் கொண்டுள்ளது. இது போலீசு காவலை நீட்டிப்பதற்கும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பிணை வழங்குவதற்கான உரிமையை மறுப்பதற்கும் அற்பமான மற்றும் தொலைதூர காரணங்களை சுட்டிக்காட்டி போலீஸை தப்பித்துக் கொள்ள அனுமதிக்கிறது.

நடைமுறையின்படி, குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்படும் போது தான் பிணை விண்ணப்பங்கள் வழக்கமாக விசாரிக்கப்படுகின்றன. இங்கேயும், எண்ணற்ற பிரச்சினைகள் எழுகின்றன. நீதிபதிகள் இருக்கமாட்டார்கள் அல்லது விசாரணை தேதிகள் கொடுக்க மாட்டார்கள் அல்லது அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தங்கள் பதில்களை தேவையில்லாமல் தாமதப்படுத்தும்போது, குற்றம் சாட்டப்பட்டவரின் பிணை உரிமை தானாகவே தடுக்கப்படும். அரசியல் ரீதியாக முக்கியமான வழக்குகளில், துணை நீதித்துறை பொறுப்பை அதிகமாகக் கைவிடுவதை ஒருவர் கவனிக்கக்கூடும். அரசால் முறையற்ற முறையில் அதிகாரம் செலுத்தும் வழக்குகளில் நேரடியாக தலையிடுவதைவிட மேல்முறையீடு செய்யப்படுவதையே அவர்கள் விரும்புகிறார்கள்.

பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள் மற்றும் திறமையான சட்ட பிரதிநிதித்துவம் இல்லாதவர்கள் போன்ற பின்னணியிலேயே பெரும்பான்மையான விசாரிக்கப்படாத வழக்குகள் உள்ளன. பிணைக்கு நிச்சயம் அது அவசியம் தேவை. UAPA மற்றும் MCOCA (Maharashtra Control of Organised Crime Act) போன்ற மோசமான தண்டனைகளுடன் கூடிய சிறப்புச் சட்டங்கள் ஐ.பி.சி குற்றங்களுக்காக வழக்கமாக பயன்படுத்தப்படும் போது, இது மேலும் சிக்கலாகிறது. இதனால் பிணை கிடைப்பது மிகவும் கடினமாகிறது. ஊபாவின் பிரிவு 43-D (5) போன்ற கடுமையான விதிமுறைகள், குற்றம் சாட்டப்பட்டவர் முதன்மையான குற்றவாளி என நம்பினால் பிணையை நிராகரிக்க நீதிபதியை அனுமதிக்கிறது. இவை அனைத்தும் பிணை என்பதை ஒரு உரிமை என்பதாக அல்லாமல், சிலருக்கு சிறப்பு சலுகையாக குறுக்கியுள்ளன.

தடுப்புக்காவல் கொடூரங்கள்

சிக்கலான நடைமுறைகள் பேச்சளவில் விடுதலையை பேசிவிட்டு, காவலில் வைப்பதை ஒரு விதிமுறையாக மாற்றுகின்றன. இந்தியாவின் கைதிகளில் 70 விழுக்காட்டினர் வழக்கு விசாரணையில் உள்ளவர்கள். சித்திரவதைக்கு எதிரான உடன்படிக்கைக்கு இந்தியா ஒப்புதல் அளிக்க மறுத்த நிலையில், கடந்த பத்தாண்டுகளில் ஒவ்வொரு நாளும் சுமார் ஐந்து பேர் தடுப்புக் காவலில் இறந்து கொண்டிருக்கிறார்கள். 2001 முதல் 2018 வரை 26 காவல்துறை அதிகாரிகள் மட்டுமே தடுப்பு காவல் மரண வழக்குகளில் தண்டனை பெற்றிருக்கிறார்கள். காவல்துறை அதிகாரத்துக்கு தடுப்புக்காவல் பாதுகாப்பான வெளியாக சேவை செய்கிறது.

சமீபத்தில், ஹரியானாவில் ஒரு இளைஞர் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட உடனேயே இறந்தார். அவர் இறப்பதற்கு முன், அவர் காவல்துறையினரால் உடல் ரீதியாக சித்திரவதை செய்யப்பட்டதாகவும், உண்மையை வெளிப்படுத்தினால் தனது குடும்பம் அடுத்ததாக சித்திரவதைக்கு உள்ளாகும் என மாஜிஸ்திரேட் முன் வாயை மூடவைக்கப்பட்டதாகவும் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். சரியான நேரத்தில் மருத்துவ தலையீட்டால் தப்பிப்பிழைத்திருக்கக்கூடிய ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரும் காவலில் இருந்தபோது தாக்குதலுக்கு ஆளானார்கள்.

விடுதலை ஒரு கேலிக்கூத்து?

இவை அனைத்தும் இந்தியாவின் சிக்கலான நடைமுறைகள் மற்றும் அவை மெதுவாக செயல்படுத்தப்படுவது, ஒருவர் தண்டிக்கப்படுவதற்கு குற்றவாளி என நிரூபிக்கப்பட வேண்டியதில்லை என்பதை உறுதி செய்கிறது. நடைமுறைகள் நீதியின் ஏவலாளியாக இருப்பதற்குப் பதிலாக, அது தானே தண்டனைக்குரியதாகவும், விடுதலையின் சாரத்தை தாக்கக் கூடியதாகவும் உள்ளது. அர்னாப் கோஸ்வாமியின் வழக்கில் நீதிபதி சந்திரசூட்டின் விடுதலைக்கான வரிகள் இப்படி இருந்தன: “ஒரே ஒரு நாள்கூட விடுதலையை பறிப்பது ஒரு நாளை பல நாட்களாக்கும்”. கண்களில் கண்ணீரை வரவழைக்கும் இதயத்தில் நம்பிக்கையை அளிக்கும் இந்த வரிகள், பொதுவான வழக்கு விசாரணைகளில் தொலைதூர கற்பனையாகவே இருக்கின்றன.

படிக்க :
♦ ஸ்டான் சுவாமி படுகொலை : பீமா கொரேகான் வழக்கில் கைதானோரின் குடும்பத்தினர் அறிக்கை !
♦ ஊபா (UAPA) : செயற்பாட்டாளர்களை செயலிழக்க செய்வதற்கு தான் || அருந்ததி ராய்

குற்றவியல் சட்டங்களில் சீர்திருத்தங்களுக்காக சமீபத்தில் அமைக்கப்பட்ட குழுவுக்கு முன் ஒரு முக்கியமான சவால் காத்திருக்கிறது. ஈடுசெய்யமுடியாத மதிப்புமிக்க நேரத்தையும் சுதந்திரத்தையும் இழந்த அப்பாவிகளின் விடுதலை குறித்த முக்கியமான கேள்வியே அது. அதுவரை, நீதித்துறையின் பலிபீடத்தில் பலியிடப்பட்ட தந்தை ஸ்டான் சுவாமி போன்ற தியாகிகள் இருப்பார்கள். ஆனாலும், அவரது எதிர்ப்புணர்வானது எக்காலத்துக்குமானது. அவரின் அநியாய சிறைவாசத்தில் அவர் துணிச்சலோடு பதிலளித்தார் “நாங்கள் இன்னும் ஒரே குரலில் பாடுவோம். ஒரு கூண்டு பறவையால் இன்னும் கூட பாட முடியும்”. நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது, நீதித்துறை அல்ல, அவருடைய மரணம்தான் அவருக்கான விடுதலையை வென்றது.


கட்டுரையாளர் : வழக்கறிஞர் இஷா சிங் (மும்பை உயர் நீதிமன்றம்)
தமிழாக்கம் : அனிதா
செய்தி ஆதாரம் : The Wire

நாசகர கிடெக்ஸ் நிறுவனத்துக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் திமுக அரசு !

கேரளாவில் கடந்த இரு வாரங்களாக பெரிதும் பேசப்பட்டு வரும் பிரச்சனை கிடெக்ஸ் (kitex) என்ற கார்பரேட் நிறுவனம் கேரளா அரசுடன் போட்டுக் கொண்ட ரூ. 3,500 கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்திலிருந்து விலகிக் கொண்டுள்ளது என்பதுதான்.

கிடெக்ஸ் கேரளாவிலிருந்து ஒப்பந்தத்தை விலக்கிக் கொள்ளப் போவதை அறிந்து அண்டை மாநிலங்களான கர்நாடகா, தெலுங்கானா, தமிழ்நாடு என போட்டி போட்டு சலுகை மேல் சலுகை கொடுத்து “நீங்க வந்தா மட்டும்போதும்” என்று அந்நிறுவனத்தை தங்கத் தாம்பூலம் வைத்து வரவேற்கிறார்கள்.

படிக்க :
♦ பெண்களின் உயிரை உறிஞ்சும் ஆயத்த ஆடை தொழிற்சாலைகள் !
♦ ஆயத்த ஆடை தொழிலாளர்கள் – இளமையில் முதுமை, மரணம் ஏன்?

கிடெக்ஸ் என்பது அன்னா கிடெக்ஸ் குரூப் என்ற கார்ப்பரேட் நிறுவனத்தின் ஒரு பிரிவாகும். இந்நிறுவனம் ஆடை நெசவுத் தொழிலில் ஈடுபடும் நிறுவனம் ஆகும்.

அன்னா கிடெக்ஸ் குரூப் என்ற நிறுவனம் 1968-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. 1992-ம் ஆண்டில் இதன் மற்றொரு உற்பத்தி நிறுவனமாக கிடெக்ஸ் லிமிடெட், கொச்சியில் உள்ள கிஷக்கம்பலத்தில் ஆடை வடிவமைப்பு, பள்ளி பைகள் தாயரிக்கும் தொழிற்சாலையாக தொடங்கப்பட்டது. அதற்கு பின் டிராவல் பைகள், பேபி ஸ்கூபீ குழந்தைகள் உடைகள், மற்றும் ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கான உள்ளாடைகள் என இந்த நிறுவனம் விரிவடைந்தது.

கிடெக்ஸின் ஆடை தொழிற்சாலை நிறுவப்பட்ட தொடக்க காலத்திலேயே, உள்ளூர் மக்கள் அந்நிறுவனத்திற்கு எதிராக திரண்டு போராட்டம் நடத்தி எதிர்ப்பைக் காட்டியுள்ளனர். இந்நிறுவனம் அபாயகரமான இரசாயனங்கள் மற்றும் கழிவு நீரை, அருகிலுள்ள பள்ளங்கள் மற்றும் பெரியார் பாலம் ஆகியவற்றில்தான் கலக்கிறது.

மேலும், 2012-ம் ஆண்டில் தி இந்து பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட ஒரு செய்தி அறிக்கை கூறுவதாவது :

“ஊடகங்களில் உரையாற்றிய கவுன்சில் உறுப்பினர்கள், கிஷக்கம்பலத்தில் உள்ள சூரகோடு-செல்லக்குளம் பகுதிகளில் வசிப்பவர்கள் கடந்த 100 நாட்களில் நிறுவனம் ஏற்படுத்தியிருக்கும் மாசுபாட்டை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிறுவனம் பெரியார் பள்ளத்தாக்கு கால்வாய் மற்றும் நெல் வயல்களில் கழிவுகளை வெளியேற்றுவதோடு மட்டுமல்லாமல், ஒரு நாளைக்கு எட்டு லட்சம் லிட்டருக்கும் அதிகமான தண்ணீரை உட்கொண்டதாகவும் கவுன்சில் குற்றம் சாட்டியது. ”

இப்படி, தொழிற்சாலைக்கு எதிராக மக்கள் திரண்டு போராடுவதை திசை திருப்பவும் போராட்ட உணர்வை நீர்த்துப் போகச் செய்யவும், தன்னுடைய நாசகர செயல்பாட்டை மூடி மறைக்கவும் “2020” என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை தொடங்கி அதன் வழியாக கிராம மக்களுக்கு சில ‘உதவிகளை’ தொடர்ச்சியாகச் செய்து வந்தனர்.

இதையெல்லாம் தாண்டி இந்த கார்ப்பரேட் நிறுவனம் உள்ளாட்சி தேர்தலிலும் தன்னுடைய கைவரிசையை காட்டத் தொடங்கியது. பணத்தை கொண்டும், தன்னுடைய சேவைகளின் மூலம் உருவாக்கிய பிம்பத்தை பயன்படுத்தியும் 2020-ம் ஆண்டில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் 2020 (twenty twenty) அமைப்பிலிருந்து  19 வார்டுகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி  18 வார்டுகளில் வென்றது. மேலும், அருகிலுள்ள மஜுவன்னூர், குன்னத்துநாடு, ஐக்காரநாடு என மூன்று பஞ்சாயத்துகளையும் கைப்பற்றியது.

இதன் மூலம் தங்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்களை இல்லாமல் செய்து மக்களின் அனுமதியுடனே தன்னுடைய எல்லா குற்றங்களையும் நிறைவேற்ற முயற்சிக்கிறது. இந்த முறை சட்டமன்ற தேர்தலிலும் தனது வேட்பாளர்களை  நிறுத்தினார்கள். ஆனாலும் இந்த முறை குர்நாடு மற்றும் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்றத் தொகுதிகளில் இவர்களின் வேட்பாளர்கள் தோல்வியடைந்தனர்.

கிடெக்ஸ் நிறுவனம் உருவாக்கிய என்.ஜி.ஓ அமைப்பு

சென்ற முறையே இவர்கள் தோற்ற அந்த ஒரு வார்டு என்பது அந்த நிறுவனம் இருக்கும் பகுதி. இப்படி ஒரு கார்ப்பரேட் நிறுவனம், தன்மீதான எதிர்ப்புகளை ஒடுக்க ஒரு என்.ஜி.ஓ. அமைப்பை தொடங்கி அதைக் கொண்டு சட்டமன்ற தேர்தல் வரை சென்றுள்ளது  கவனிக்கத்தக்கது.

இந்நிலையில், கடந்த ஜுன் மாத இறுதியில் கேரள அரசு அதிகாரிகள் கிட்டெக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான தொழிற்சாலைகளில் பரிசோதனை நடத்தினர். இதை பொறுத்து கொள்ள முடியாத கிட்டெக்ஸ் நிறுவனம் “தாங்கள் அரசியல் காரணங்களுக்காக துன்புறுத்தப் படுகிறோம். எங்கள் தொழிற்சாலையின் பல்வேறு இடங்களில் 40 – 50 அரசு அதிகாரிகள் அத்துமீறி நுழைந்து எங்கள் ஊழியர்களை துன்புறுத்துகிறார்கள்” என்று குற்றம் சாட்டியது.

இதன் அடுத்த நடவடிக்கையாக, 2020-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கொச்சியில் கேரள அரசு ஏற்பாடு செய்திருந்த ‘அசென்ட் கேரளா’ (ASCEND KERALA 2020) உலகளாவிய முதலீட்டாளர் கூட்டத்தில், கிடெக்ஸ் கார்மென்ட்ஸ் ஒரு ஆடை பூங்கா மற்றும் கொச்சி, திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு ஆகிய இடங்களில் மூன்று தொழில்துறை பூங்காக்களை உருவாக்க ரூ.3,500 கோடி முதலீடு செய்ய முன்மொழிந்தது.

35,000 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் என்று கூறிக் கொள்ளப்பட்ட இத்திட்டத்திற்காக நிலத்தை கையகப்படுத்த தொடங்கியது அந்நிறுவனம். மேலும், கொச்சியில் அமைக்கப்படவுள்ள ஆடை பூங்காவிற்கான திட்ட அறிக்கையைத் தயாரித்தது, முழு திட்டமும் 2025-ம் ஆண்டில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சாபு ஜேக்கப், இப்போது கேரளாவில் இந்த திட்டத்தை முன்னெடுக்க விரும்பவில்லை என்றும் இதற்கு அதிகாரிகளின் துன்புறுத்தலே காரணம் என்றும் கூறி இத்திட்டத்தில் இருந்து விலகியுள்ளார்.

இதற்கு பதிலளித்த கேரள அரசு, குறைவான ஊதியம் மற்றும் போதிய வசதிகள் இல்லை என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு (என்.எச்.ஆர்.சி) அளிக்கப்பட்ட புகார்கள் காரணமாக கிட்டெக்ஸ் நிறுவனத்தில் ஆய்வு செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.

கேரள முதல்வர் பினராயி விஜயன்

கடந்த இரு வாரங்களாக இப்பிரச்சனை கேளரா முழுவதும் பெரிதாகப் பேசப்பட்டு வருகிறது. ஆனால், கேரள அரசும் கிட்டெக்ஸ் நிறுவனமும் எதிர் எதிர் கோணத்தில் நிற்கவில்லை. ஏனெனில், கிட்டெக்ஸ் நிறுவனம் தொடர்ந்து தொழிற்சாலை அமைக்கப்பட்டு இருக்கும் இடத்தில் கடுமையான சுற்றுசுழல் பாதிப்பை ஏற்படுத்தி வந்துள்ள நிலையிலும், தொழிற்சாலையில் மாசு கட்டுபாட்டு வாரியம் விதித்த முறையான விதிகளை பின்பற்றாமல் நிறுவனம் இயங்கி வரும் நிலையிலும், கேரள அரசு கிடெக்ஸ் நிறுவனம் தங்கள் மாநிலத்திலிருந்து வெளியேறுவதை விரும்பவில்லை. தங்களுடைய முந்தைய ஆட்சி காலங்களில் இதையெல்லாம் கண்டுகொள்ளவும் இல்லை. அந்நிறுவனத்திற்கு எதிரான மக்களுடைய போராட்டங்களையும் ஒடுக்கியே வந்துள்ளது.

நிலைமை இப்படியிருக்க, இந்த நாசகர நிறுவனத்தை அண்டை மாநிலங்களான தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு என பல மாநிலங்கள் சலுகைகளை வாரி இறைத்து இத்தொழிற்சாலையை தங்கள் மாநிலத்திற்கு கொண்டுவர கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதில் முன்னணியிலும் முதன்மையாகவும் இருப்பது தமிழ்நாடு அரசுதான். எந்த மாநிலமும் அதிகாரப் பூர்வமாக அழைப்பதற்கு முன்னதாகவே, அதிகாரப் பூர்வமாகவே சலுகைகளை அள்ளிக் கொடுத்து சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றது மு.க.ஸ்டாலின் அரசு.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

இந்நிறுவனம் செய்யும் முதலீட்டில் (ரூ.3,500 கோடி) 49% தொகையை மானியமாக அரசே வழங்கும், ஆலைக்குத் தேவையான நிலத்தை 50% மானிய விலையில் வழங்கும், பத்திர பதிவுக்கான தொகையில் 10% மானியம், ஐந்து வருடங்களுக்கு 5% குறைந்த வட்டியில் கடன், ஆலையைப் பராமரிக்க வேண்டிய சுற்றுச்சூழல் கழிவு மேலாண்மைத் திட்டத்திற்கு 25% மானியம், காப்புரிமை தொடர்பான செலவுகளில் 50% மானியம், பயிற்சித் தொழிலாளிகள் ஒவ்வொருவருக்கும் ரூ.4000 உதவித் தொகையை 6 மாதங்களுக்கு அரசே ஏற்கும், உற்பத்தி பொருள்களுக்கு தரச் சான்றிதழ் பெறுவதற்காக 50% மானியம், ஐந்து வருடங்களுக்கு மானிய விலையில் மின்சாரம், முதலீடு செய்யப்படும் மூலதன சொத்துகளுக்கு 100% ஜி.எஸ்.டி வரிவிலக்கு, தொழிலாளர்களின் சம்பளத்தில் 20% தொகையை தமிழ்நாடு அரசே பத்து வருடங்களுக்கு ஏற்கும், மேலும் SC/ST தொழிலாளர்களுக்கு ரூ.6,000 ஊக்க தொகை  வழங்கப்படும். இவையெல்லாம் தமிழக அரசு கிடெக்ஸ் நிறுவனத்தை வரவேற்று அறிவித்துள்ள சலுகைகள். தமிழ்நாடு அரசு சார்பாக அந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளைப் பார்த்தால், குஜராத்தில் மோடி  அரசின் நடவடிக்கைகள் நமது நினைவுக்கு வருகின்றது.

இதற்கு மேல் சலுகையை வழங்க முடியுமா? என்று வாய் பிளக்கும் அளவில் வாரி கொடுத்துள்ளது திமுக அரசு. தன்னுடைய இலாபத்தை பெருக்க, சுற்றுச்சுழலை  நாசமாக்கி, விவசாய நிலங்களை அழித்து, நயவஞ்கமாக மக்களை ஏமாற்றும் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்கு, சுற்றுச்சுழலை பாதுகாப்பதாகவும், விவசாயிகளின் தோழன் எனவும், மக்களின் நலனில் அக்கறை உள்ள அரசாகவும் விளம்பரப்படுத்திக் கொள்ளும் திமுக, இப்படி பல சலுகைகளை அறிவித்திருக்கிறது.

படிக்க :
♦ திமுக-வின் எதிரி ஆர்.எஸ்.எஸ் அல்ல – பாஜக மட்டுமே || ர.முகமது இல்யாஸ்
♦ பெட்ரோல் விலை குறைக்க நிதி இல்லை – பூங்காக்களுக்கு ரூ. 2500 கோடி ஒதுக்கும் திமுக அரசு

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசையே பணியச் செய்யவும், மக்களின் எதிர்ப்பை தமது என்.ஜி.ஓ அரசியல் மூலம் நீர்த்துப் போகச் செய்யவும், அந்த என்..ஜி.ஓ அமைப்பையே தேர்தலில் நிறுத்தி வெற்றிபெறச் செய்வதும் என ஒரு பெரிய ஜனநாயக விரோத சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியிருக்கிறது கிட்டெக்ஸ் நிறுவனம்.

தொழிலாளர்களுக்கு போதுமான சம்பளம் இல்லை, அடிப்படை வசதிகள் இல்லை என்பது போன்ற புகார்களுக்கு செவி சாய்த்து நிறுவனத்தில் ஆய்வு செய்ததையே பகிரங்கமாக கண்டிக்கும் அளவிற்கு, தொழிலாளர்களை ஒட்டச் சுரண்டுவதே இரத்தத்தில் ஊறவைக்கப்பட்ட இந்த நிறுவனம் தமிழகத்திற்கு வரப் போகிறதாம்.

இத்தகைய கொடூர கிட்டெக்ஸ் நிறுவனம், தமிழகத்திற்கு வந்தவுடன் தொழிலாளர்கள் மீதான சுரண்டலையும், சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதையும் கைவிட்டு புனிதனாக தம்மை மாற்றிக் கொண்டுவிடுமா ?

வெறும் ரூ. 3500 கோடி முதலீடு போடுபவனுக்கு, அதைவிட அதிகமான மக்களின் வரிப்பணத்தை சலுகைகளாக அள்ளிக் கொடுப்பதே கிரிமினல் குற்றம்தான்.  போதாத குறைக்கு வரவிருக்கும் நிறுவனத்தின் பின்புலமும் பெரும் கிரிமினல்மயமாக இருக்கிறது.

எதிர்க்கட்சிகளாக இருக்கும்போது மக்களின் போராட்டங்களுக்கு வால்பிடித்து, ஸ்டெர்லைட் போன்ற தனியார் நிறுவனங்களை எதிர்ப்பதாகக் காட்டிக் கொண்ட திமுக, தற்போது கிட்டெக்ஸ் நிறுவன விவகாரத்தில் அம்பலமாகியிருக்கிறது.

வெறுமனே அம்பலமாவது மட்டுமல்ல., நமக்கு எச்சரிக்கையையும்  விடுக்கின்றன. கிடெக்ஸ் எனும் நிறுவனத்தின் சுற்றுச் சூழல் விரோத, மக்கள் விரோத, தொழிலாளர் விரோதத்தன்மைக்கு  சிவப்புக் கம்பளம் விரிக்கும் திமுக அரசு, நாளை இதே தன்மையைக் கொண்ட ஸ்டெர்லைட் நிறுவனத்தை அனுமதிக்காதா என்ன?


மா. கார்க்கி
செய்தி ஆதாரம் : The Hindu, Mainstream weekly, தி இந்தியன் எக்ஸ்பிரஸ், ஜீலை 03, 2021

சாராஸ் திரைப்படம் : குழந்தைப் பேறு வரமா ? சாபமா ? || ராஜசங்கீதன்

காதலுறவு புரியாதவர்கள் காதலிக்கிறார்கள். குடும்பத்தின் தேவை தெரியாதவர்கள் திருமணம் செய்கிறார்கள். குழந்தை வளர்க்க தெரியாதவர்கள் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள்.’

சில வருடங்களுக்கு முன் நான் சொல்லிக் கொண்டிருந்தவை இவை. மட்டையடி நிராகரிப்பாக முதல் பார்வைக்கு தோன்றினாலும் சிறிதளவேனும் இதில் உண்மை இல்லாமல் இல்லை.

ஒரு ஆண் ஒரு பெண்ணையும்; ஒரு பெண் ஒரு ஆணையும் முழுமையாய் அறிதல் என்பதே திருமணத்துக்கு பிறகுதான் நடக்கிறது. உங்களுடன் இருப்பவன் யார் என்பதையே திருமணத்துக்கு பிறகுதான் நீங்கள் ஆராயத் தொடங்க வேண்டும். திருமணத்துக்கு பிறகு குடும்பம் என்கிற உற்பத்தி பொருளாதார சட்டகத்துக்குள்வேறு விழுந்து விடுகிறீர்கள். அதுவும் நமக்கு தெரியாது.

படிக்க :
♦ பெண்களுக்கு எதிரான அடக்குமுறையைக் காட்சிப்படுத்தும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” || விஜயகணேஷ்
♦ NGK : செல்வராகவன் – சூர்யா கூட்டணி Hangover-ல் ஒரு அரசியல் படம் !

இருவர் இருக்கும் குடும்பத்தில் இருவரின் குடும்பங்கள் தொக்கி நிற்கும். அக்குடும்பங்களுக்கு இடையே இருக்கும் கலாசார புரிதல் முரண்கள் ஏற்படுத்தும் சிக்கலான மனநிலைகளில் இருந்து உறவுகள் மேலெழும். அவற்றை கையாளவும் தெரியாது. உடனிருப்பவரை பிறாண்டி வைப்பதாகவே பெரும்பாலும் அது முடியும்.

குடும்பம் என்கிற பொருளாதார சட்டகத்தின் தேவைப்படி வருமானம் முக்கியம். வருமானம் நோக்கி ஓடுகையில் வீடு, கார் என தனிச்சொத்துகளையும் உருவாக்க வேண்டும். எல்லாமும் சேர்ந்து மேலதிக வருமானம் என விரட்டும்போது குடும்பத்தின் இருவரும் ‘பந்தய குதிரை’யையும் தாண்டிய வேகத்துடன் மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்கி உயிர் போகும் வரை ஓடிக் கொண்டிருக்க வேண்டும்.

இந்த ஓட்டத்துக்குள் திடுமென காதல் எங்கே போனது என ஒரு சந்தேகம் எழும். காதலே இல்லையெனில் நாம் உண்மையில் காதலிக்கவே இல்லையா அல்லது அடுத்தவருக்கு நம் மீது ஆர்வம் இல்லையா என்கிற குமைச்சல் மனதில் எழும். குடும்பத்துக்கு அடிப்படையாக இருந்த இருவரின் உறவிலேயே தூரம் தோன்றும். இந்த தூரத்தை கடப்பதற்கு என சமூகமும் குடும்பமும் ஒரு யோசனையை ஒவ்வொரு திருமணத்துக்கு பிறகும் நிர்ப்பந்திக்கும்.

குழந்தை !

இந்த அடிப்படையில் இருந்துதான் Sara’s படம் இயங்குகிறது. படத்தின் ஆக்கம், கதாபாத்திர உருவாக்கம், அவற்றில் இருக்கும் சிக்கல்களை குறித்து நான் பேசப் போவதில்லை. படம் வைக்கும் சில முக்கியமான விஷயங்களை மட்டும் வைத்தே பேசப் போகிறேன்.

படத்தில் சில முக்கியமான தருணங்கள் வருகின்றன. வசனங்களும் இருக்கின்றன. ‘எம்.பி.ஏ. படிக்க ட்ரெயினிங்லாம் போனீங்களே… Parenthood பற்றி தெரிஞ்சுக்க எதாவது ட்ரெயினிங் போனீங்களா?’ என ஒரு மருத்துவ ஆலோசகர் கேட்பார். குறிப்பாக ‘விபத்துகள் எப்போதும் நல்ல விளைவுகளை கொடுப்பதில்லை’ என ஒரு வசனம்.

இதையெல்லாம் பார்த்தால் குழந்தைப் பேற்றை எப்படி கொச்சையாக சிறுமைப்படுத்தி பார்க்க முடிகிறது என சினம் வரலாம். ஆனால், சற்று யதார்த்தம் பேசுவோம்.

எனக்கு தெரிந்த பலர், குழந்தை உருவானதை பற்றி அதிகமாக சொன்னவை இவைதான். ‘நாங்க என்ன விரும்புனோமா? அதுவா உருவாயிடுச்சு’. ‘It was an accident’, ‘இப்போதைக்கு குழந்த வேணாம்னுதான் ப்ளான் பண்ணி இருந்தோம்.. ஆனா form ஆயிடுச்சு’

இவர்களில் எவரும் குழந்தை வெறுப்பவர்கள் கிடையாது. ஆனாலும் குழந்தை பிறப்பை தவிர்ப்பதற்கோ தள்ளிப் போடுவதற்கோ காரணமாக பொருளாதாரமும் பிற திட்டங்களும் இருந்திருக்கின்றன. ‘நீங்கள் எப்போது குழந்தை பெற்றுக் கொள்வீர்கள்’ என்கிற கேள்வி எல்லாம் வேலைக்கான நேர்காணலில் கேட்கப்படும் சூழலில் குழந்தைப் பேறு என்பது எத்தகைய அச்சத்தை உருவாக்கும் என்பதை சுலபமாக புரிந்து கொள்ள முடியாது.

ஒரு பெண், பத்து மாதங்களுக்கு வேலைக்கு செல்லாமல் குழந்தை பெற்றுக் கொள்ளுதல் என்பது அப்பெண்ணின் work life-ஐயே கேள்விக்குறியாக்கும் செயல். குழந்தை பிறந்த பிறகு சில வருடங்களேனும் குழந்தையை கவனித்துக் கொள்ள வேண்டிய நிலையில் அப்பெண்ணின் career graph உடைபடும்.

இவற்றையும் தாண்டி ஒரு கேள்வி. What do we know about parenthood?

நாம் எவரும் வளர்ந்த சூழலில் இன்றைய குழந்தை வளரப் போவதில்லை. அச்சூழலே என்னவென்பது நமக்கு புரிபடாது. அதிகபட்சமாக இந்தியச் சமூகத்தின் parenthood-படி குழந்தை அடிபணிய வேண்டும். எனவே நாம் அடிப்போம், திட்டுவோம் அல்லது கடன் வாங்கி ‘நமக்கு கிடைக்காத வாழ்க்கை’ என பணக்கார வாழ்க்கையை கொடுப்போம்.

தொழில்நுட்பங்களில் முகம் புதைத்து, தனிமையில் வளரும் அந்த குழந்தை என்னவாக போகிறது என்பதை பற்றிய clue அனுதினமும் மாறி வரும் சூழலில் நமக்கு இருக்கவே இருக்காது.

மறுபக்கத்தில் ‘வேலைக்கு சென்றால் நம்மை மதிக்க மாட்டாள்’ என்கிற சிந்தனையுடன் ஒன்றன்பின் ஒன்றாக பெற்றுக் கொடுத்து குழந்தை வளர்ப்பதிலேயே பெண்ணின் வாழ்க்கையை அழிக்கும் திருட்டுத்தனம் நிறைந்த ஆண்களும் பலர் இருக்கின்றனர்.  அப்பெண் தனக்கான இருத்தலை ஆராயாமலே தேங்கி, குறுகிப் போய், முதிர்ந்து பிற்காலத்தில் மகனையும் மகளையும் திருமணம் செய்து கொடுத்தவுடன் குழந்தை பெற்றுக் கொடுக்கச் சொல்லி கேட்கும் தாயாக மாறுவாள்.

திருமணம் முடிந்த ஒரு மாதத்தில் வீராவேசமாக கர்ப்பமாகி குழந்தை பெற்றுக் கொண்ட ஒரு பெண் சொல்கையில், ‘ஜான்.. என் வயசு பொண்ணுகளலாம் பார்க்கும்போது என்னென்னவோ life-ல பண்றாங்களேன்னு பொறாமையா இருக்கு. நான்தான் அவசரப்பட்டுட்டனோன்னு தோணுது. அதுலயும் என் வயசு பிள்ளைகளே வந்து என்னை auntie-ன்ன்னு கூப்பிடும் போதெல்லாம்…’ என சொல்லி கண்ணில் ஜலம் வச்சுண்டார்.

குழந்தைப் பேறு ஆண்களுக்கு சுமை என்றால் பெண்களுக்கு அடிமைத்தனம் மற்றும் சுரண்டல். அதுவும் 2030-ம் ஆண்டிற்குள் உலக வெப்பத்தை 1.5 டிகிரி செல்சியஸ்ஸில் நிறுத்த வேண்டும் என சொல்லியும், 1.2 டிகிரி செல்சியஸ்ஸை தற்போதே அடைந்து, 2030க்கும் நான்காண்டுகளுக்கு முன்னமே 1.5 டிகிரி செல்சியஸ்ஸை எட்டவிருக்கிறோம் என்பன போன்ற செய்திகளை கேட்கையில், இறப்பதற்கே ஒரு குழந்தையை பெற்றெடுக்க வேண்டுமா என்கிற கேள்வி எழாமல் இருக்க முடியாது.

Sara’s எளிதாக நவதாராளவாத இளைஞர்களை கவரக் கூடிய படம் என்றாலும், முக்கியமான சமூக யதார்த்தங்களை விவாதிப்பதற்கான வெளியையேனும் அது உருவாக்குகிறது.

படிக்க :
♦ பெண்கள் மீது தொடரும் சாதிய மற்றும் மூலதனத்தின் சுரண்டல் !
♦ பெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் !

மாறியிருக்கும் சமூக சூழலுக்கேற்ப குடும்ப முறையை ஜனநாயகப்படுத்தாமல், அரச கட்டமைப்பு குழந்தை வளர்ப்புக்கான பொறுப்பை ஏற்காமல் குழந்தையை மட்டும் பெற்றுக் கொண்டே இருப்பதும் குழந்தை பெற கட்டாயப்படுத்துவதும் நவதாராளவாத உலகில் பெண்ணை மேலும் மேலும் அடிமைப்படுத்தும். குடும்பங்களை உடைக்கும். தனிப் பெற்றோரையே உருவாக்கும்.

குழந்தை பெறுதல் அவரவரின் விருப்பம். குறிப்பாக பெண்ணின் விருப்பம்.

காதல், குடும்பம், குழந்தை வளர்ப்பு என பெண் இடம்பெறும் எந்த உறவையும் மீளாய்வு செய்யாமல்தான் பெண்ணுக்கான இருப்பை சமூகத்தில் தொடர்ந்து நிராகரித்துக் கொண்டிருக்கிறோம்.


ராஜசங்கீதன்
முகநூலில் : Rajasangeethan


disclaimer

பத்ம விருதுகள் : ‘திறமையான’ மோடிஜி-க்கு வழங்குவதுதானே சரி !

திறமையானவர்களுக்கு பத்ம விருது வழங்க வேண்டும்; அதற்கு நீங்கள் யாரை வேண்டுமானாலும் பரிந்துரைக்கலாம் என்று கடந்த ஜூலை 11-ம் தேதி மோடி டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

♦ மொத்த நாட்டையும் ஏழே ஆண்டில் திவாலாக்கும் அளவிற்கு இங்கு திறமைசாலி  யார்?
♦ கங்கையைப் புனிதப்படுத்துவேன் என்று கூறி கோவிட் பிணங்களை மிதக்கவிட்டு அழகு பார்த்த சாதனையாளர் யார்  ?
♦ GDP-யை உயர்த்துவதாகச் செல்லி நம்பவைத்து, கேஸ், டீசல், பெட்ரோல் விலையை அதிகரிக்கும் திறன்மிக்கவர் யார்?

இத்தனை திறமையையும் அந்தத் தாடிக்குள் ஒளித்து வைத்துக் கொண்டு வெளியே  ‘எளிமையாக’ வாழும் மோடிஜி மட்டுமே அனைத்து பத்ம விருதுகளையும் பெறத் தகுதியானவர்.

கருத்துப்படம்


கருத்துப்படம் : மு.துரை