Sunday, July 20, 2025
முகப்பு பதிவு பக்கம் 201

பெகாசஸ் : ‘ஜனநாயகக்’ கட்டமைப்பை உளவு பார்க்கும் இந்து ராஷ்டிரம் !!

0

முதல் பாகம் || பெகாசஸ் : இந்து ராஷ்டிரத்தின் எதிரிகளே அதன் இலக்குகள் !

பாகம் 2 : ஹிட்லருக்கு எஸ்.எஸ். உளவுப் படை – மோடிக்கு பெகாசஸ்

திருடனுக்குத் தேள் கொட்டியது போல வாய்மூடிக் கிடக்கும் மோடி அரசு :

முன்னரே கூறியது போல 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பெகாசஸ் மூலம் சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் கண்காணிக்கப்பட்டது அம்பலமானது. அந்த சமயத்தில் வாட்சப் நிறுவனம், இந்தியர்களின் தகவல்கள் வாட்சப் மூலம் கண்காணிக்கப்படுவதாக 2019-ம் ஆண்டின் மே மாதமே ஒன்றிய அரசிடம் தகவல் தெரிவித்ததாக அறிவித்தது.

எனில், கடந்த 2019, மே மாதமே இந்தியர்கள் கண்காணிக்கப்படுவது குறித்து தகவல் தெரிந்தும் ஒன்றிய அரசு, அதற்கு எதிரான நடவடிக்கை எதுவும் எடுக்காததற்கான காரணம் என்ன ?

அடுத்ததாக 2019, அக்டோபர் மாத இறுதியில் வாட்சப் நிறுவனம், இந்தியர்களின் அலைப்பேசிகள் என்.எஸ்.ஓ நிறுவனத்தின் உளவு மென்பொருள் மூலம் தான் ஒற்றுளவு பார்க்கப்பட்டன என்பதை பகிரங்கமாக அறிவித்து, என்.எஸ்.. நிறுவனத்தின் மீது அமெரிக்காவில் வழக்கு தொடர்ந்தது.

இதற்குப் பிறகும் என்.எஸ்.ஓ நிறுவனத்தின் மேல் வழக்கு தொடராதது ஏன் ? ஒரு அரசாங்கம் என்ற வகையில் தனது ‘நட்பு’ நாடான இஸ்ரேலின் மூலம் அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

அவ்வளவு ஏன், விவகாரம் தற்போது வெளியே வந்து நாறிய பிறகும் கூட என்.எஸ்.ஓ நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து மோடி அரசு வாய் திறக்கவில்லையே..

இந்தப் பின்னணியில், சட்டீஸ்கரின் தற்போதைய முதல்வர் பூபேஷ் பகெல் என்.எஸ்.ஓ நிறுவன அதிகாரிகள் பாஜகவின் ராமன்சிங் ஆட்சி நடந்த போது சட்டீஸ்கருக்கு வந்து சென்றனர் என்று சமீபத்தில் தெரிவித்ததையும் இணைத்துப் பார்த்தால், மோடி அரசு இன்னும் மலைமுழுங்கியைப் போல கமுக்கமாக இருப்பது ஏன் என்று புரியும்.

திருடனுக்குத் தேள் கொட்டினால், அவன் பொத்திக் கொண்டு தானே இருக்க முடியும் ?

படிக்க :
♦ பெகாசஸுக்கான சோதனையும் இந்திய ஜனநாயகமும் || எம்.கே.வேணு
♦ பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஊடகவியலாளர்களை குறி வைக்கும் மக்கள் விரோத அரசுகள் !

இந்த உளவு வேலையின் பரிமாணம் என்ன ?

இந்தியாவின் அதிகாரமிக்க பதவிகளிலும் பொறுப்புகளிலும் இருப்பவர்களின் மூலம், அவர்களுக்குத் தெரியாமலேயே இந்நாட்டின் இரகசியங்களை ஒரு வெளிநாட்டைச் சேர்ந்த நிறுவனத்தின் உளவு மென்பொருள் மூலம் கண்காணித்திருக்கிறது மோடி அரசு.

பொதுவாகவே, இந்த விவகாரம் பத்திரிகை சுதந்திர பறிப்பு, எதிர்க்கட்சிகளைக் கண்காணித்தல், நீதிபதியை கண்காணித்தல் என தனித்தனி விவகாரங்களாகவே பார்க்கப்படுகிறது.

எந்த ஒரு அரசாக இருந்தாலும், அதில் உளவு என்பது ஒரு அங்கமாக இருக்கத்தான் செய்யும். பொதுவாக முதலாளித்துவ அரசுக் கட்டமைப்பில், நிலவும் அரசுக் கட்டமைப்பை தகர்க்க வேண்டும் என நினைப்பவர்கள், பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள், கடத்தல் பேர்வழிகள் ஆகியோரை கண்காணிக்கவே உளவு வேலைகள் பயன்படுத்தப்படும். அதைப் போல இதுவும் ஒரு சாதாரண உளவு அல்ல.

ஏனெனில், இங்கு உளவு பார்க்கப்பட்டவர்களில் யாரும் பயங்கரவாதிகளோ, பிரிவினைவாதிகளோ, பெண்கள் / குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமை செய்பவர்களோ அல்ல. (அத்தகையவர்கள் அனைவரும் பாஜகவிலும் சங்க பரிவார அமைப்புகளிலும் தான் இருக்கிறார்கள் என்பது தனி விவகாரம்). உளவு பார்க்கப்பட்டவர்கள் யாரும் இந்த அரசுக்கு எதிராக போர் தொடுத்தவர்கள் அல்ல. இந்த அரசுக் கட்டமைப்பை ‘சீராக’ இயக்கியவர்கள். இந்த அரசுக் கட்டமைப்பின் முக்கியப் பதவிகளில் இருப்பவர்கள்.

இந்த நாட்டின் அரசியல்வாதிகள், அதிகாரிகள், நீதிபதிகள், இராணுவத்தினர், உளவுத்துறை ஆகியோர் வரை அனைவரையும் கண்காணித்திருக்கிறது மோடி அரசு.

ஒரு நாட்டை ஒழித்துக் கட்டவோ, அடிமைப்படுத்தவோ விளையும் ஒரு எதிரி நாடு யார் யாரையெல்லாம் கண்காணித்துத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர விளையுமோ, அவர்களையெல்லாம் கண்காணித்திருக்கிறது மோடி அமித்ஷா கும்பல்.

எனில், இவர்களின் நோக்கம் என்ன ?

ஜெர்மனியில், தேர்தல் மூலம் வெற்றிபெற்ற ஹிட்லர், ஆட்சியில் அமர்ந்ததும் அந்நாட்டு பத்திரிகைகள், கலைத்துறையினரை தனது கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டுவந்தான். எதிர்க்கட்சிகளை செயல்படவிடாமல் முடக்கினான். தேச வளர்ச்சி எனும் பெயரில் தொழிலாளர் விரோதச் சட்டங்களை இயற்றினான். நீதித்துறையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தான்.

ஜெர்மனியின் ஜனநாயகக் கட்டமைப்பை படிப்படியாக மூன்றே ஆண்டுகளுக்குள் தனது நாஜி சர்வாதிகார ஆட்சிக் கட்டமைப்பாக மாற்றினான் ஹிட்லர். இதையெல்லாம் செய்வதற்கு ஹிட்லருக்கு தனது சொந்த நாட்டு அரசு அதிகாரிகள், அரசியல் தலைவர்களையே உளவு பார்க்க வேண்டிய அவசியம் இருந்தது. ஹிட்லரின் எஸ்.எஸ். உளவுப் பிரிவு இந்தச் சேவையை செவ்வனே செய்தது.

அதை அப்படியே இந்தியாவில் நடைமுறைப்படுத்தியிருக்கிறது மோடி அமித்ஷா கும்பல். சொந்த நாட்டு அரசுக் கட்டமைப்பின் பொறுப்பாளர்களை கண்காணித்து தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதன் மூலம், தமது இந்துராஷ்டிர பாசிச அரசுக் கட்டமைப்பை நோக்கியப் பயணத்தை விரைவுபடுத்தியிருக்கிறது.

நாம் செய்ய வேண்டியது என்ன ?

எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எழுப்பியுள்ளன. ஆனால் எதற்கும் அசைந்து கொடுக்க மோடி அரசு தயாராக இல்லை.

நீதிமன்றமோ வாய் மூடி அமைதி காக்கிறது. உலகத்தையே உலுக்கியுள்ள இந்த விவகாரத்தில், ஒரு பொறுப்புள்ள நீதிமன்றம், தாமாக முன்வந்து வழக்குப் (suo-motto) பதிவு செய்திருக்க வேண்டும். இதுவரையில் ஏதும் நடக்கவில்லை. இது குறித்து மூத்த பத்திரிகையாளர் ராமும் மற்றொருவரும் இணைந்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். அவ்வழக்கு இன்னும் எத்தனை மாதங்கள் கழித்து விசாரணைக்கு வரும் என்பது மோடி அமித்ஷா கும்பலுக்கே வெளிச்சம்.

குற்றவாளியே ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து கொண்டு, அரசுக் கட்டமைப்பின் அனைத்து அதிகார மட்டத்திலும் இருப்பவர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் சூழலில் சட்டப்படியான எவ்வித முன்னெடுப்புகளும் தீர்வைத் தருவதற்கான வாய்ப்பு இல்லை.

பிரதான எதிர்கட்சியான காங்கிரசும், பிற கூட்டணி கட்சிகளும் நாடாளுமன்றத்திலும், சமூக ஊடகங்களிலும் போராட்டமாகக் கொண்டு போகிறார்களே தவிர, இதனை மக்கள் மத்தியில் கொண்டு சென்று இதை மக்கள் போராட்டமாகக் கொண்டு செல்லவில்லை. அதற்கான முனைப்பும் எதுவும் இல்லை. அப்படி கொண்டு செல்லக் கூடிய அமைப்புகளும் மிகவும் பலவீனமான நிலையில் இருக்கின்றன.

ஒரு உளவு மென்பொருள், நான்கு சுவருக்குள் நடைபெறும் நமது அந்தரங்கங்களை வேறு ஒருவருக்கு நேரலையாக அனுப்புகிறது. நவீன பெருவீத உற்பத்தியில் பண்ணைகளில் ஆடுகள், மாடுகள், பன்றிகள் ஆகியவற்றை தொடர்ந்து கண்காணிக்க அவை அடைக்கப்பட்டுள்ள பட்டிகளில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த விலங்குகளுக்கு அந்தரங்கம் என்று எதுவும் கிடையாது என்ற வகையில் அவை அது குறித்துக் கவலைப்படுவதில்லை.

நமது அந்தரங்க நடவடிக்கைகளை நமது கைப்பேசியின் மூலமாகவே ஒரு கிரிமினல் கும்பலால் பார்க்க முடியும் அளவிற்கு ஒரு பெரும் தொழில்நுட்பக் கேடான விவகாரத்தை ஒரு அரசே செய்திருக்கிறது என்ற கோபம் நமக்கு வருவதில்லை.

தனிப்பட்ட ரகசியம் காக்கப்படும் என்ற உறுதியளித்துதான், கண் கருவிழி அடையாளம், கைரேகை என நமது தனித்துவ அடையாளங்களை ஆதார் என்ற பெயரில் ஏற்கெனவே இந்த அரசு எடுத்தது. இரண்டாண்டுகளுக்கு முன்னர் அவை கசிந்த போதும் அதைப் பற்றி இந்த அரசு கவலைப்படவில்லை. இதைப் பற்றி நம்மில் பலருக்கும் கவலையில்லை.

அதே போலத்தான் தற்போது பெகாசஸ் எனும் இந்த உளவு மென்பொருள் திருட்டுத்தனமாக பலரது அலைபேசிகளில் நுழைக்கப்பட்டு பலரும் கண்காணிக்கப்பட்டதையும், பலரது அந்தரங்கத் தகவல்கள் அரசின் கைகளில் இருப்பதையும் நாம் சர்வ சாதாரணமாகக் கடந்து போகிறோம். அது யாரோ ஒருவருக்கு எங்கேயோ நடப்பதாகவும், நமக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்றும் நினைக்கிறோம். நமது அந்தரங்கம் குறித்த இந்த அக்கறையற்ற மனநிலையே, பாசிஸ்டுகளுக்கு பலம் சேர்க்கக் கூடியதாக இருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பலின் இந்துராஷ்டிரத்தை நோக்கிய முன்னெடுப்பில் அரசுக் கட்டமைப்பில் இருக்கும் அனைவரும் கண்காணிக்கப்படுகிறார்கள். நாளை இந்து ராஷ்டிரம் அமைக்கப்பட்ட பிறகு, பாரத மாதாவின் பெயரால் பெகாசஸ் போன்ற ஒரு அதிகாரப்பூர்வ உளவு மென்பொருள் மூலம் ஒவ்வொரு குடிமகனும் கண்காணிக்கப்படலாம்.

இந்துராஷ்டிரத்தை ஏற்றுக் கொண்டு, பட்டியில் அடைக்கப்பட்டிருக்கும் விலங்குகளின் நிலைமைக்குச் செல்ல நம்மை நாமே தயார்படுத்திக் கொள்ளப் போகிறோமா அல்லது இத்தகைய உளவு வேலைகளுக்கு எதிராகவும், இந்து ராஷ்டிரத்துக்கு எதிராகவும் களம் இறங்கப் போகிறோமா ?

(முற்றும்)


சரண்

செய்தி ஆதாரம் : தி வயர்

இலங்கை தொழிற்சங்க போராட்டம் – ஒரு மறைக்கப்படும் வரலாறு || கலையரசன்

0
  • சியாவிலேயே முதலாவது தொழிற்சங்கம் இலங்கையில் தான் தொடங்கியது. 1893-ஆம் ஆண்டு ஐரோப்பிய முதலாளிகளின் அச்சகங்களில் வேலை செய்த தொழிலாளர்கள் ஒரு தொழிற்சங்கமாக ஒன்றிணைந்தனர்.
  • இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் கொழும்பு நகரில் பல தொழிற்துறைகளில் வேலை செய்த பெரும்பாலான தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இணைந்து கொண்டனர். சேவைத்துறை தொழிலாளர்கள், ரிக்சா வண்டி ஓட்டுவோர், டிராம், ரயில் ஊழியர்கள், அலுவலக ஊழியர்கள் இவ்வாறு பலவகையான தொழிற்பிரிவினர் தொழிற்சங்க அமைப்பாகினார்கள்.
  • 1931 முதல் 1970 வரை, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) விதிகளுக்கு ஏற்றவாறு அரசு சட்டங்களை மாற்றியமைத்ததில், தொழிற்சங்கங்களின் பங்களிப்பு இருந்தது. இடையறாதப் போராட்டங்களின் மூலம் தொழிலாளர்கள் தமது உரிமைகளை ஒவ்வொன்றாக வென்றெடுத்தனர்.

படிக்க :
♦ இலங்கை : நாடு முழுவதும் வலுவடையும் 1000 ரூபாய் தோட்டத் தொழிலாளர் போராட்டம் !
♦ நாஜிகளை நடுங்க வைத்த நெதர்லாந்து வேலை நிறுத்தப் போராட்டம் || கலையரசன்

  • இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர், 1945 – 1947 ஆகிய மூன்று வருடங்களுக்குள் மாத்திரம் அடுத்தடுத்து பல வேலைநிறுத்தப் போராட்டங்கள் நடந்துள்ளன. கொழும்பு துறைமுகத் தொழிலாளர்கள் மட்டுமல்லாது, போக்குவரத்து, நகரசபை, வங்கி ஊழியர்களும் வேலைநிறுத்தப் போராடங்களில் ஈடுபட்டனர். தேயிலை, ரப்பர் தோட்டங்களில் வேலை செய்த மலையகத் தமிழர்களும் வேலைநிறுத்தம் செய்தனர். இதன் விளைவாக இடதுசாரி கட்சிகளுக்கு மக்கள் ஆதரவு பெருகியது. அவை உழைக்கும் வர்க்க மக்களின் தலைமையாக உருவாகின. இடதுசாரிகள் தமக்கான மக்கள் ஆதரவு தளத்தில் நம்பிக்கை வைத்து இலங்கைக்கு முழுமையான சுதந்திரம் கோரினார்கள்.
  • எல்லாப் போராட்டமும் வெற்றியளிக்கா விட்டாலும், அரசு பல கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டது. வேலைக்கு சேர்ப்பது, மாற்றம் செய்வது, பணி நீக்கம் செய்வது போன்றவற்றில் பிரச்சனைகள் ஏற்பட்டால், தொழிலாளர்கள் நீதிமன்றம் சென்று வழக்காடும் உரிமை கிடைத்தது. அதை விட சம்பளத்துடனான விடுமுறை, நஷ்டஈடு, மற்றும் பல சலுகைகள் கிடைத்தன.

  • இலங்கை சுதந்திரமடைந்த ஆரம்ப காலங்களில், தொழிலாளர்கள் வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகளின் பட்டியல் :
  1. ஒழுங்கமைக்கப் படாத தொழிற்துறைகளிலும் கூட சம்பளம் நிர்ணயிப்பதற்கான குழு  உருவாக்கப்பட்டது.
  2. தனியார் நிறுவனங்கள் தொழிற் சங்கங்களுடன் சேர்ந்து இயங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
  3. தொழிலகங்களில் நடக்கும் பிரச்சனைகளை பேசித் தீர்ப்பதற்கான அமைப்புகள் உருவாக்கப்பட்டன.
  4. வேலை நேர இடைவேளை, வேலை செய்யும் நேரம் ஆகியன தீர்மானிக்கப்பட்டன.
  5. பெண்களுக்கான மகப்பேறு விடுமுறை கிடைத்தது. அதைக் காரணம் காட்டி பணி நீக்கம் செய்வது தடுக்கப்பட்டது.
  6. தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் சமூக நலப் பாதுகாப்பு சலுகைகள் கிடைத்தன.
  7. தனியார் நிறுவன முதலாளிகள் கூட தொழிலாளர் நலத்துறை அதிகாரியை கலந்தாலோசிக்காமல் பணி நீக்கம் செய்ய முடியாது.

இலங்கையில் தொழிலாளர்கள் அனுபவித்து வந்த உரிமைகள் எப்போது, எப்படிப் பறிக்கப்பட்டன?

  • 1977-ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில், முதலாளிய ஆதரவு வலதுசாரிக் கட்சியான யு.என்.பி. அறுதிப்பெரும்பான்மை பெற்று வென்று ஆட்சிக்கு வந்தது.
  • ஆசியாவிலேயே முதல்தடைவையாக, ஜே.ஆர். ஜெயவர்த்தன நியோ – லிபரலிச பொருளாதாரக் கொள்கையை நடைமுறைக்கு கொண்டு வந்தார். நாட்டின் பொருளாதாரம் திறந்து விடப்பட்டது.
  • 1978-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தம் தொழில்நிறுவனங்கள் விரும்பிய படி தொழிலாளர்களை வேலைக்கு எடுக்கவும், பணி நீக்கம் செய்யவும் அனுமதித்தது.
  • அத்தியாவசிய சேவைகள் துறையில் வேலைநிறுத்தம் செய்வது தடைசெய்யப்பட்டது. ஒரு நிறுவனத்தில் சட்டப்படி வேலைநிறுத்தம் செய்வதற்கான அறிவித்தல் 21 நாட்களுக்கு முன்னர் விடுக்கப்பட வேண்டும். அப்படியே நடந்தாலும், அதற்கு ஆதரவாக, அதனுடன் சம்பந்தப்படாத தொழிலாளர்கள் தோழமை வேலைநிறுத்தம் செய்வது தடுக்கப்பட்டது.
  • நிச்சயமாக தொழிலாளர் வர்க்கம் இந்த அடக்குமுறை சட்டத்திற்கு அடிபணியவில்லை. அதை எதிர்த்து போராடி வந்தது.
  • 1980-ஆம் ஆண்டு நடந்த பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்நின்று நடத்திய 40,000 தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கான தொழிற்சங்கவாதிகள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். அதன் மூலம் அவர்களுக்கு நாடு முழுவதும் அனைத்து நிறுவனங்களிலும் வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டது. அவர்கள் தமது வாழ்க்கையை கொண்டு செல்ல சுயதொழில் செய்து பிழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
  • அவசரகால சட்டம், ஊடகத் தடை, அரச வன்முறைகள் மூலம் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் ஒடுக்கப்பட்டனர்.
  • ஈழப் போராட்டம் வெடித்த பொழுது, அரசு PTA எனும் பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டு வந்து தமிழ் இளைஞர்கள் கைது செய்யப் பட்டு துன்புறுத்தப்பட்ட வரலாறு அனைவருக்கும் தெரியும். ஆனால், அதே சட்டம் தொழிற்சங்கவாதிகளுக்கும் எதிராக பிரயோகிக்கப்பட்டதென்பது பலருக்குத் தெரியாது.

  • 1983 ஜூலை இனக்கலவரத்தை காரணமாகக் காட்டி, அரசு மூன்று இடதுசாரிக் கட்சிகளை தடை செய்தது. ஜேவிபி, கம்யூனிஸ்ட் கட்சி, சமசமாஜக் கட்சி ஆகியன தடை செய்யப்பட்டதால், அவை தலைமை தாங்கிய தொழிற்சங்கங்கள் இயங்க முடியாத நிலைமை உருவாகியது.
  • வடக்கில் வாழ்ந்த தமிழர்கள் மத்தியில் தொழிற்சங்க நடவடிக்கைகள் மிகக் குறைவாகவே இருந்தன. ஏற்கனவே, அந்தப் பிரதேசத்தில் தொழிற்துறை மிக அரிதாகவே இருந்தது. குறிப்பாக, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை ஊழியர்கள் கம்யூனிச தொழிற்சங்க உறுப்பினர்களாக இருந்தனர். ஆனால், போர் தொடங்கிய பின்னர் அந்தத் தொழிற்சாலை இயங்காமல் நின்றுவிட்டது.
  • விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் தென்னிலங்கை தொழிற்சங்கங்கள் இயங்குவது தடுக்கப்பட்டது. தமிழ் தொழிலாளர்கள், தென்னிலங்கை தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதும் தடுக்கப்பட்டது. 2002-ஆம் ஆண்டுக்கு பின்னர், சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் நடந்த யாழ் மருத்துவமனை ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் புலிகளின் நேரடித் தலையீட்டினால் தடுத்து நிறுத்தப்பட்டது.
  • தென்னிலங்கையில் 1987 – 1989 காலப்பகுதியில் நடந்த ஜேவிபி கிளர்ச்சியின் போதும் தொழிற்சங்கவாதிகள் மூர்க்கத்தனமாக ஒடுக்கப்பட்டனர். பெரும்பாலான தொழிற்சங்கவாதிகள் அரசுக்கும், ஜேவிபிக்கும் இடையில் சிக்கித் தவித்தனர்.

படிக்க :
♦ இலங்கை : புத்தளம் குப்பைத் திட்டத்துக்கு எதிராக மார்ச் -19 பெருந்திரள் ஆர்ப்பாட்டம் !
♦ காலனிய ஆட்சியில் இலங்கை – சமரன் குழு எழுதிய கதை !

  • ஒரு புறம் ஜேவிபி தனது கட்டுப்பாட்டின் கீழான தொழிற்சங்கப் போராட்டங்களை மட்டும் ஆதரித்தது. பிற கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கவாதிகளை ஆயுதமுனையில் மிரட்டிப் பணிய வைத்தது. மீறுவோர் கொல்லப்பட்டனர்.
  • மறுபுறம் அரசு இயந்திரம் போரை பயன்படுத்தி தொழிற்சங்கவாதிகளை வேட்டையாடியது. இராணுவம், போலிஸ் மட்டுமல்ல, இரகசிய கொலைப் படையினரும் தொழிற்சங்க உறுப்பினர்களை கண்ட இடத்தில் சுட்டுக் கொன்றனர். தொழிற்சங்க ஆதரவாளர்கள் கூட ஈவிரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்டனர்.
  • தொண்ணூறுகளுக்கு பிறகு எந்தவொரு தொழிற்சங்கமும் அரசுக்கு சவாலாக இருக்கவில்லை. அந்தளவு தூரம், தொழிற்சங்கவாதிகள் இனி எந்தக் காலத்திலும் தலைதூக்க விடாமல் அரச பயங்கரவாதத்தினால் அழித்தொழிக்கப்பட்டனர். அதுவும் இனப்படுகொலை தான். ஆனால், அதைப் பற்றி பேசுவதற்கு இங்கே யாரும் இல்லை.


கலையரசன்
முகநூலில் : Kalai Marx

இந்துத்துவத்தை கற்பிக்க தனி கல்வி வாரியம் அமைக்கும் மோடி அரசு !

னிக்கல்வி வாரியத்தை உருவாக்கி, வேத மரபுகள் மூலம் நவீன பாடங்களைக் கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மக்களவையில் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் எழுப்பட்ட கேள்விக்கு எழுத்து பூர்வமாக ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அளித்துள்ள பதிலில், “மத்தியப் பிரதேச மாநிலத்தின் உஜ்ஜைனி பகுதியில் உள்ள மகரிஷி ராஷ்ட்ரிய வேத வித்யா பிரதிஸ்தான் (MSRVVP), தனியார் கல்வி வாரியம் (அதாவது தனிக் கல்வி வாரியம்) அமைக்கும் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.

அந்தக் கல்வி வாரியத்தில், வாய்வழியாக கற்பிக்கப்படும் வேத மரபுகள் மூலம் நவீன பாடங்களும் கற்பிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

படிக்க :
♦ பெகாசஸ் : இந்து ராஷ்டிரத்தின் எதிரிகளே அதன் இலக்குகள் !
♦ புரட்சியாளரான பின்னும் பூணூல் அணிந்திருந்தாரா சந்திரசேகர் ஆசாத் ?

மகரிஷி ராஷ்டிரிய வேத வித்யா பிரதிஸ்தான்:

ஒன்றிய அரசின் கீழ், சி.பி.எஸ்.இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) மற்றும் தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனம் (NIOS) ஆகிய கல்வி வாரியங்கள் இயங்கி வருகின்றன.

இதில் ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி அமைப்பாக, மகரிஷி ராஷ்ட்ரிய வேத வித்யா பிரதிஸ்தான் செயல்பட்டு வருகிறது.
இவ்வமைப்பு 1987-ஆம் ஆண்டு மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ் பி.வி.நரசிம்மராவ் காலத்தில் கொண்டு வரப்பட்டது.

வேதக் கல்வியின் வாய்வழி பாரம்பரியத்தை பாதுகாத்தல், ஊக்குவித்தல் மற்றும் மேம்படுத்துதல் அதனை கற்பித்து நாடு முழுக்க விரிவுபடுத்துவது என்ற நோக்கத்தோடு செயல்படப் போவதாக அறிவித்தது.

இவ்வமைப்பு இந்தியா முழுவதும் வேத பாடசாலைகளை நிறுவி கல்வி கற்பித்தும் வருகின்றது, இதன் கீழ் பல பாடசாலைகளும் உள்ளன.

வேதக்கல்வி வாரியம் அமைத்தல் :

மோடி அரசாங்கம் பொறுப்பேற்றவுடன் வேதக் கல்வியை விரிவுபடுத்துவதற்காக வேதக் கல்வி வாரியத்தையும் அதற்கென்று தனி பல்கலைக் கழகத்தையும் அரசு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார் பாபா ராம்தேவ்.
அதனைத் தொடர்ந்து 2015-ஆம் ஆண்டு அப்போதைய மனிதவள மேம்பாட்டுதுறை அமைச்சரான ஸ்மிருதிராணி வேத கல்வி வாரியம் அமைக்கபடும் என்று அறிவித்தார்.
இந்த வாரியத்திற்கு தலைவராக பாபா ராம்தேவ் நியமிக்கப்படலாம் என்று 2019-ல் மோடி அரசு கூறியிருந்தது.

மேலும் பாடத்திட்டங்களை உருவாக்குவது, கல்வி நிலையங்களை உருவாக்குவது என அனைத்து பொறுப்புகளும் பாபா ராம்தேவ்வின் யோகா பீடம் அறக்கட்டளைக்கு வழங்கவும் முடிவு செய்து இருந்தது மோடி அரசு.

தற்போதைய தர்மேந்திர பிரதானின் அறிவிபின்படி உருவாக்கப்படவுள்ள இத்தனிக் கல்வி வாரியமானது, “தனியார்” என்ற பெயரில் பாபா ராம்தேவ் போன்ற ஆர்.எஸ்.எஸ்.கும்பல்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

இப்புதிய வாரியத்தின் மூலம் வேத பாட சாலைகளை உருவாக்குவது, பள்ளி பாடத்திட்டங்களை வடிவமைப்பது, நிர்வாகம் செய்வது என்ற அனைத்து முடிவுகளையும் ஆர்.எஸ்.எஸ். பாசிஸ்டுகளான பாபா ராம்தேவ் போன்றவர்களே முடிவுசெய்வார்கள்.

படிக்க :
♦ ரஃபேல் ஊழல் : பிரான்சில் அம்பலமான பின்னும் இந்தியாவில் அமைதி ஏன் ? || தோழர் சுரேசு சக்தி
♦ பத்திரிகை சுதந்திரத்தை வேட்டையாடும் 37 தலைவர்களில் ஒருவர் மோடி !

நவீன கல்வி என்ற பெயரில் இந்து மத புராணங்களையும், அறிவியலுக்கு புறம்பான கட்டுக் கதைகளையுமே பாடத்திட்டமாக அறிவிப்பார்கள். ஏற்கனவே, புதிய கல்வி கொள்கையில், வேத கல்வி முறையை திணிக்கும் வகையில் சில முன்மொழிவுகளை முன்வைத்துள்ளனர். அதில், குருகுல (வேத பாடசலையை) கல்வி முறையையும் அங்கரிப்பது.

அதற்கு சான்றிதழ் வழங்கி பொறியியல், மருத்துவம் போன்ற பட்ட மேற்படிப்புகள் படிக்க அனுமதி வழங்குவது ஆகிய அம்சங்கள் உள்ளன. வேதக்கல்வி வாரியம் அமைத்து, இந்து மத வேதங்களை கற்பிப்பதானது இந்தியக் கல்வித்துறையின் மீதான மிகப்பெரிய பாசிசத் தாக்குதலாகும்.

எனவே, பல்வேறு வழிகளில் கல்வியை காவிமயமாகவும் கார்ப்பரேட்மயமாகவும் மாற்றி வரும் மோடி அரசிற்கு எதிராக, மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் – என அனைவரும் ஓரணியில் திரள வேண்டியது அவசியம்.

சிவா

முகநூலில் : புமாஇமு

disclaimer

மோடி மட்டும்தான் முதன்மையான எதிரியா ? || காஞ்சா அய்லைய்யா

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சர்சங்சாலக் மோகன் பகவத், 2021 மே 15-ஆம் தேதி அன்று இந்தியாவின் கோவிட் பெருந்தொற்று பேரழிவு பற்றி, ‘வரம்பற்ற நேர்மறையான’ கருப்பொருளில் உரையாற்றினார். அதன் பின்னர் தேசிய ஊடகங்களில் இருக்கும் மதச்சார்பற்ற எழுத்தாளர்கள் கூட மோடியை சாத்தான் போலவும், மோகன் பகவத்தை தேவதை என்றும் பாடத் துவங்கினர். “பகவத் மோடியை மட்டந்தட்டி பேசினார்’‘, “கூட்டுப் பொறுப்பு ஏற்குமாறு பகவத் அவருக்கு அறிவுரை வழங்கினார்’‘, “நிகழ்வுகளின் போக்கை சரிசெய்வதற்கு தான் ஆர்.எஸ்.எஸ் இருக்கிறது” மற்றும் இது போன்றவையே அவற்றின் கருப்பொருள்களாகும். சமூக ஊடகங்களிலும் இதே போன்ற கருப்பொருளில் பல சுற்று விவாதங்களைக் கிளப்பி வருகின்றனர்.

மோடிக்கு நிகழ்வுகளின் போக்கை சரிசெய்வதற்கான செய்தியை வழங்கிய இந்த மகத்தான பேச்சுக்கு சற்று முன்பு, பிரபல எழுத்தாளரான அருந்ததி ராய் ஒரு இணைய செய்தி ஊடகத்தில் ஒரு பதிவு எழுதியிருந்தார். அதில், மோடியை பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறும் அவருக்குப் பதிலாக வேறு எந்த ஒரு ஆர்.எஸ்.எஸ் நபராவது பிரதமர் பதவியை ஏற்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். அவர் மோடிக்கு வழக்கத்திற்கு மாறான முறையில், “தயவுசெய்து பதவி விலகுங்கள்உங்களது இடத்தில் தற்போதைக்கு ஆர்.எஸ்.எஸ்ன் ஒப்புதலுடன் அமர உங்களது கட்சியில் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களால் அரசாங்கத்திற்கும் தற்போதுள்ள (பெருந்தொற்று) நெருக்கடி நிலைமையைக் களையும் மேலாண்மைக் குழுவிற்கும் தலைமை தாங்க முடியும்என்பதாக ஒரு வேண்டுகோள் விடுத்தார். (Scroll.in).

படிக்க :
♦ கங்கனா ரணாவத் – பாலிவுட் – சாதிய அரசியல் | காஞ்சா அய்லையா
♦ மோகன் பகவத்தின் இந்தியாவில் எல்லோருமே இந்து தான் : காஞ்சா அய்லய்யா

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மோகன் பகவத் ஒரு புதிய பிரதமரை உருவாக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் அவர் இந்த நெருக்கடியைத் தீர்க்க வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார்.

தவ்லின் சிங் போன்ற சில முன்னாள் மோடி பக்தர்கள்‘, பெருமளவில் நிகழ்வுகளின் போக்கை சரிசெய்யும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று சங்க பரிவாரத்துக்கு பல ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

கொரோனா நெருக்கடி மதச்சார்பற்றவர்களின் தார்மீக நெறிமுறைகளை மாற்றியுள்ளது. பகவத்தும் ஆர்.எஸ்.எஸ்ம் வரம்பற்ற நேர்மறையான வலைப்பின்னலாகத் தெரிகின்றன. அவர்களைப் பொருத்தவரையில், மோடி வெளியேறினால், அனைத்தும் சரியாகிவிடும்

மோகன் பகவத் மற்றும் ஆர்.எஸ்.எஸ் பற்றிய மதச்சார்பற்ற அறிவுத் துறையினரின் இவ்வகையான புரிதல், பல சூத்திர / இதர பிற்படுத்தப்பட்ட சாதி (OBC) இளைஞர்களை மோடியின் அரசியல் வலைக்குள் தள்ளி அவரின் பிடியில் சிக்க வைக்கிறது. மோடி சூத்திர OBC-யோ இல்லையோ, ஆனால் அவரது கையில் OBC என்ற சான்றிதழ் உள்ளது.

மோடி தன்னைப் பற்றிய பல சுய விளம்பரங்களின் மூலம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். குறிப்பாக, தான் ஒரு ஏழை இதர பிற்படுத்த வகுப்பை சேர்ந்தவராகவும், தான் ஒரு தேநீர் கடைக்காரனாகவும், அவரது தாயார் ஒரு வேலைக்கார பணிப்பெண் என்றும் தான் ஒரு காவலாளி என்றும் பல தோற்றங்களைக் கொடுத்திருக்கிறார். இது தென்னிந்தியா உட்பட, நாடு முழுவதும் உள்ள ஓ.பி.சி.க்களை அவரை நோக்கி சாய்த்துள்ளது.

மோகன் பகவத் 2014 பாராளுமன்றத் தேர்தலுக்குப் பிறகும் கூட தாம் ஒரு கடுமையான இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளன் என்பதை வெளிப்படையான அறிக்கைகளில் வெளியிட்டவர். சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை மறுஆய்வு செய்வது பற்றி அவர் பலமுறை வெளியிட்ட அறிக்கைகள்தான், மத்திய அரசை பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான (இபிசி) 10 சதவீத ஒதுக்கீட்டை அரசியல் சாசனத் திருத்தத்துடன் கட்டாயமாகத் திணிக்கச் செய்தது.

தகுதி  மற்றும் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடுக்கான எதிர்ப்பு குறித்த முக்கியமான அறிவுசார் கருத்துக்கள் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன சித்தாந்தவாதிகளிடம் இருந்து வந்தது. மோடி அனைத்து அரசுத்துறை வேலை ஆதாரங்களையும், தனது ஏகபோக முதலாளித்துவ ஆதரவாளர்களுக்கு பயனளிக்கும் வகையில்  தனியார்மயமாக்கினாலும், .பி.சி வாக்குகளை மனதில் கொண்டு இடஒதுக்கீட்டிற்கு எதிராக வெளிப்படையாக பேசுவதில்லை.

மோடி தேர்தல் மூலமான கொடுங்கோன்மை ஆட்சி நடைமுறைப்படுத்தப் படுவதை நேசிக்கிறார் என்றால், ஆர்.எஸ்.எஸ் அமைப்புரீதியாக தேர்தல்களை கீழறுப்பதன் மூலம் மனுதர்ம ரீதியான கொடுங்கோன்மை ஆட்சியை நேசிக்கிறது. ஹெட்கேவர் தொடங்கி கோல்வால்கர், மோகன் பகவத் வரை இந்திய தேசத்தின் மீதான சர்வாதிகாரக் கட்டுப்பாடு குறித்த கோட்பாட்டையும் நடைமுறையையும், அவர்களின் எழுத்துக்களிலும் நடைமுறைகளிலும் வகுத்துள்ளனர். நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் முஸ்லீம் அச்சுறுத்தல் பற்றிய அச்சத்தை உருவாக்குவதை அடித்தளமாகக் கொண்டுதான் அவை வகுக்கப்பட்டுள்ளது.

சூத்திர /இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு / தலித் சமூகத்தைச் சேர்ந்த எவரும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கோட்பாட்டை எழுதியதோ, 1925 முதல் இப்போது வரை அமைப்புத் தலைமைப் பொறுப்பை வகித்ததோ கிடையாது. அதன் கோட்பாட்டு எழுத்தாளர்கள் மற்றும் அதை நடைமுறைப்படுத்த தலைமை தாங்கியவர்கள் அனைவருமே பார்ப்பனர்கள் மட்டுமே. முக்கியமாக ஒரு வலுவான பிற்போக்கு சனாதன தர்மத்தை கடைப்பிடிக்கும் பார்ப்பனர்களாக, அறிவியல் எதிர்ப்பு கண்ணோட்டமும் மனநிலையும் கொண்ட பார்ப்பனர்களாக இருந்தனர். இதனாலேயே ஜவஹர்லால் நேருவின் அறிவியல் அணுகுமுறையை மேற்கத்திய சார்புடையது என்று அவர்கள் கடுமையாகத் தாக்கினர்.

கொரோனா தாக்குதலின் சாவு மணிக்கான அடிப்படை, வேறு பல காரணிகளைத் தாண்டி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் எண்ணற்ற இந்துத்துவ அமைப்புகளின் வலைப்பின்னல்களின் நீண்டகால அறிவியல் எதிர்ப்புப் பிரச்சாரங்களில் வேர்கொண்டுள்ளது. ஜவஹர் லால் நேரு மற்றும் வி.பி.சிங் தவிர மற்ற அனைத்து பிரதமர்களும் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன கும்பலின் கட்டளைக்கு கீழ்ப்படிய வைக்கப்பட்டனர். அவர்கள் ஒருபோதும் சொந்தமாக தமக்கென ஒரு அறிவியல் ஆர்வத்தைக் கொண்டதில்லை. பெரும் அறிஞராக அழைக்கப்படும் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் இந்துத்துவா மீது மிகவும் அனுதாபம் கொண்டிருந்தார். அடல் பிகாரி வாஜ்பாயி இந்துத்துவவாதிகளின் சொந்த மனிதர் – அறிவியல் எதிர்ப்பு சிந்தனை கொண்டவர்.

ஆர்.எஸ்.எஸ் இந்திய சமூகத்தின் ஒவ்வொரு அடுக்கிலும் அறிவியல் எதிர்ப்பு மூடநம்பிக்கையைப் பரப்பியது. இந்திய முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் கூட இந்த ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன கும்பலின் அறிவியல் எதிர்ப்பு பிரச்சாரத்தால் பலியாக்கப்பட்டுள்ளனர். மோகன் பகவத் அந்த மொத்த அறிவியல் எதிர்ப்பு கட்டமைப்பிற்கு தலைமை தாங்குகிறார் என்றால், மோடி அரசிற்கு (அந்த கட்டமைப்பின் ஒரு முக்கிய பகுதி) தலைமை வகிக்கிறார். இந்திய சமூகமானது எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக அதன் மீதான பார்ப்பன கட்டுப்பாட்டின் காரணமாக அறிவியலுக்கும் கட்டுக்கதைக்கும் இடையே போராடிக் கொண்டுள்ளது.

தொண்ணூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஆர்.எஸ்.எஸ் பசுவின் மூத்திரம் மற்றும் அதன் சாணத்தின் மருத்துவ குணங்களுக்கும், அலோபதி மருத்துவ நடைமுறைகளுக்கு எதிர்ப்பாகவும் பிரச்சாரம் செய்து வருகிறது. பாபா ராம்தேவ் அவர்களின் கருத்தியல்ரீதியான வாரிசுதாரர். கும்பமேளா வகையான பழமையான ஆன்மீக அணிதிரட்டல்களே ஆர்.எஸ்.எஸ்-ன் முக்கிய பணிகளாக இருந்தன. அறிவியல் கண்ணோட்டத்தைப் புறக்கணிப்பதிலும் பரந்துபட்டமக்களின் சிந்தனையை வகுப்புவாதப்படுத்துவதிலும் தப்லீக் ஜமாத் போன்ற முஸ்லீம் அமைப்புகளுடன் ஆர்.எஸ்.எஸ் போட்டியிடுகிறது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் முஸ்லீம் பழமைவாதிகளுக்கு இடையிலான போட்டி இந்தியாவில் மருத்துவ அறிவியலின் வளர்ச்சியை தடுத்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தன்னை உலகின் மிகப்பெரிய சமூக-கலாச்சார அமைப்பு என்று கூறிக் கொள்கிறது. ஆனால் அது நாட்டில் எந்த ஒரு பெரிய சுகாதார மையத்தையும் கட்டவில்லை. முஸ்லீம் ஆட்சியாளர்களும் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்தாலும், நல்ல மருத்துவமனைகளை ஒருபோதும் கட்டவில்லை என்பதே உண்மை. அவர்கள் கோட்டைகள் போன்ற பெரும் கட்டிடங்கள், சார்மினார் போன்ற நினைவுச் சின்னங்கள் மற்றும் ஆட்சியாளர்களின் அன்புக்குரிய பெண்களின் பெயரில் தாஜ்மஹால் போன்ற கட்டிடங்களைக் கட்டினார்கள். ஆர்.எஸ்.எஸ்-ம் கூட கோயில்களைக் கட்டும் பிரச்சாரங்களைச் செய்ததே ஒழிய, ஒருபோதும் சுகாதார நல மையங்களைக் கட்டவில்லை.

கிறிஸ்தவ மிஷனரிகள், சுதந்திர இந்தியாவில் கணிசமாக மதம் மாற்றவில்லை என்றாலும், அவர்களை மதமாற்றவாதிகளாகக் காட்டி ஆர்.எஸ்.எஸ் தாக்குகிறது. ஆனால் கி.பி. 1900-ல் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைக் கட்டியது முதல் பல மருத்துவமனைகளை அவர்கள் நாடு முழுவதும் கட்டியுள்ளனர்.

மோகன் பகவத் கொரோனா பெருந்தொற்றுக்கு ஆளானபோது, நாக்பூர் கிங்ஸ்வே மருத்துவமனை (ஆங்கில / கிறிஸ்தவ பெயரை யாரும் கவனிக்க முடியும்) என்று அழைக்கப்படும் அலோபதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். (இந்தியன் எக்ஸ்பிரஸ், 16 ஏப்ரல், 2021). பல மாநிலங்களில் உள்ள அவரது ஊழியர்கள் மாட்டு மூத்திரம் மற்றும் மாட்டுச் சாண சிகிச்சை பற்றி பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் நேரத்தில், மோகன் பகவத் அதிக புரோட்டீன் சத்து கொண்ட நீரிழிவைக் கட்டுப்படுத்துவதற்கான உணவைச் சாப்பிட்டதாக மருத்துவ அறிக்கை கூறியது. மாட்டு மூத்திரம், மாட்டுச் சாண சிகிச்சை போன்ற அறிவுக்குப் பொருந்தாத சங்கி கும்பலின் நடவடிக்கைகளை அவர் ஒருபோதும் பொதுவெளியில் கண்டிக்கவில்லை. இந்த கலாச்சார தேசியவாதத்தின் அர்த்தம் என்ன? அவரது மதச்சார்பற்ற அபிமானிகள்தான் இதற்கு பதிலளிக்க வேண்டும்.

நாட்டை கொரோனா நோய்த் தொற்று தாக்கியதற்குப் பின் அருந்ததி ராய் மற்றும் பல அறிவுத் துறையினர் செய்வதுபோல மோடி என்ற தனிமனிதரை குறிவைப்பதன் மூலம் ஆர்.எஸ்.எஸ் மற்றும் மோகன் பகவத் போன்ற அதன் தலைவர்களை தேவதூதர்களாக முன்னிறுத்துவது, சூத்திர / ஓ.பி.சி.க்கள் / தலித்துகள் / ஆதிவாசிகளான ஒடுக்கப்பட்ட மக்கள் ஆகப் பெரிய ஆபத்தில் மாட்டிக் கொள்ளவதற்கே உதவும். அவர்கள் மேலும் மேலும் மோடியின் (RSS) பிடிக்குள் செல்வதற்கான ஆபத்துள்ளது. இதில் இந்தியாவில் நீண்ட காலமாக அதிகாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட சமூகங்களின் உணர்ச்சிபூர்வமான பிரதிநிதித்துவ பதில் உள்ளது.

இருபிறப்பாளர்களான பார்ப்பன அறிவுத் துறையினர் இசுலாமியர்களை மையப்படுத்தி இந்து மதத்தின் ஒரு பகுதியாக மட்டுமல்லாமல் ஆர்.எஸ்.எஸ் வகை பார்ப்பனியத்தின் ஒரு பகுதியாக அனைத்து சூத்திரர்கள் / ஓ.பி.சி.க்கள் / தலித்துகள் / ஆதிவாசிகளையும், இந்து மதத்திற்குள் அடைத்து இந்து பெரும்பான்மைவாத கோட்பாட்டை நிறுவுகிறார்கள். பார்ப்பனியம்தான் இந்த சூத்திர / ஓபிசி / தலித் / ஆதிவாசி வாழ்க்கையை தொட்டால் தீட்டு என தீண்டத் தகாதவர்களாகவும், கண்ணால் பார்ப்பதே பாவம் என பார்க்கக் கூடாதவர்களாகவும், பொதி சுமக்கும் கழுதைகளைப் போல கடுமையாக உழைக்கும் விவசாயக் கூலிகளாகவும் ஆக்கியது. ஜாட்கள், குஜ்ஜார்கள், படேல்கள், மாராத்தாக்கள் போன்ற உயர்மட்ட விவசாய சூத்திரர்கள் கூட இந்து மதத்தில் ஆர்.எஸ்.எஸ் ஒரு மத தேசிய வாத அமைப்பாக வழிநடத்துவதாக கூறிக்கொள்ளும் ஆசாரியத்துவ உரிமையைப் பெறவில்லை.

இத்தகைய அறிவுத்துறையினர் யாருமே ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனியத்தை ஒருபோதும் எதிர்க்கவில்லை. ஆனால், சிறுபான்மையினரின் பிரச்சினையை மையமாகக் கொண்டு வகுப்புவாதத்தை மட்டுமே எதிர்த்தனர். தலித்/ஆதிவாசி/சூத்திர விடுதலை என்பது மிகவும் வரலாற்று ரீதியான கேள்வியாகும். இந்த சக்திகளின் விடுதலை விஞ்ஞானவாத வளர்ச்சியுடன் தொடர்புடையது. மோகன் பகவத் தலைமையிலான ஆர்.எஸ்.எஸ் அறிவியல் வாதத்திற்கு எதிரானது. மோடியின் அதிகாரவெறி கொண்ட தலைமையை அகற்றுவதற்காக, அவர்கள் மோகன் பகவத்தை நம்பியிருந்தால் ஆர்.எஸ்.எஸ் ஒருபோதும் பலவீனமடையப் போவதில்லை.

ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு வேறு எந்த காங்கிரஸ் தலைவரும் தமது சித்தாந்த அடிப்படையாக அறிவியல் வாதத்தைக் கொண்டு ஆர்.எஸ்.எஸ்-ஐ எதிர்க்கவில்லை. ராகுல் காந்தி ஆர்.எஸ்.எஸ் மீதான விமர்சனத்தை உருவாக்க முயன்றார், அதனால் வழக்குகளை எதிர்கொண்டார். இப்போது அவரும் நின்றுவிட்டார். தனது கட்சியில் ஒரு சூத்திர / ஓபிசி தலைவரைக் கூட கொண்டிராமல், மோடி மீது மட்டுமே அவரது கவனம் உள்ளது. அது இப்போதும் கூட நிச்சயமாக மோடிக்கு உதவுகிறது.

படிக்க :
♦ வளர்ச்சி : தென்னிந்தியாவிலா – பசு வளைய மாநிலங்களிலா ? | காஞ்சா அய்லய்யா
♦ காஞ்சா அய்லைய்யாவின் நூல்களுக்கு டெல்லி பல்கலைக்கழகம் தடை

இப்போது கவனம் மோடியை அகற்றுவதில் மட்டுமே உள்ளது. அது எதிர்க்கட்சிகளுக்கு சரியாக இருக்கலாம். ஆர்.எஸ்.எஸ் மோடியை அகற்றிவிட்டு அந்த இடத்தில் அமித் ஷா அல்லது யோகி ஆதித்யநாத்தை நிறுத்துகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். இது உங்களுக்குச் சம்மதமா? ஆர்.எஸ்.எஸ்-ல் யார் ஜனநாயகவாதி?, அந்த நபர் தற்போதைய சகதியில் இருந்து வெளியேற நாட்டிற்கு எவ்வாறு உதவுகிறார்? இரண்டாவது கொரோனா அலை கும்பமேளாவில் பரவியது, இதில் ஆர்.எஸ்.எஸ்-ன் காரியகர்த்தாக்கள் தரைமட்டத்தில் வேலை செய்தனர். அவர்கள் ஒவ்வொரு வீடு வீடாக, கிராமம் கிராமமாக,  நகரம் நகரமாகச் சென்று வைரசை பரப்பவில்லையா? இப்படி எல்லாம் நடந்து கொண்டிருந்தபோது மோகன் பகவத் என்ன செய்தார்? ஒரு நெருக்கடியான தருணத்தில் மேலும் அதை ஆழப்படுத்தும் ஒரு தவறைச் செய்யாதீர்கள் !

(குறிப்பு : காஞ்சா அய்லையா ஷெப்பர்ட் ஒரு அரசியல் கோட்பாட்டாளர் மற்றும் ஆசிரியர். அவரது சமீபத்திய புத்தகம் கார்த்திக் ராஜா கருப்புசாமியுடன் இணைந்து தொகுக்கப்பட்ட ’ஒரு புதிய பாதைக்கான சூத்திரர்கள்-பார்வை’)

கட்டுரையாளர் : காஞ்சா அய்லைய்யா
தமிழாக்கம் : நாகராசு
செய்தி ஆதாரம் : Counter Currents

disclaimer

பெகாசஸ் : இந்து ராஷ்டிரத்தின் எதிரிகளே அதன் இலக்குகள் !

0

பெகாசஸ் : இந்து ராஷ்டிரத்திற்கான விரைவுப் பாதை! 

பாகம் 1 : பெகாசஸ் மூலம் கண்காணித்தது யார் ?

பெகாசஸ் உளவு மென்பொருள் மூலமாக இந்திய ‘ஜனநாயகத்தின் தூண்களாக’ சித்தரிக்கப்பட்டவை அனைத்தும் ரகசியமாகக் கண்காணிக்கப் பட்டிருக்கின்றன என்ற செய்தி நாடாளுமன்றம் முதல் சமூக வலைத்தளங்கள் வரையில் பரவலாக விவாதிக்கப்படுகிறது.

இந்தியப் பத்திரிகையாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் எதிர்கட்சி அரசியல்வாதிகள், மத்திய அமைச்சர்கள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, அரசு அதிகாரிகள், இவர்கள் அனைவரது நெருங்கிய உறவினர்கள் மற்றும் தொடர்புடையவர்கள் என அந்த உளவு மென்பொருளால் கண்காணிக்கப்படாத பிரிவினர் என யாரும் இல்லை எனலாம்.

இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.. என்னும் நிறுவனம் உருவாக்கிய பெகாசஸ் என்னும் இந்த உளவு மென்பொருள் இந்தியாவிற்கு புதிதல்ல. கடந்த 2019-ம் ஆண்டு பேராசிரியரும் சமூகச் செயற்பாட்டாளருமான தோழர் ஆனந்த் தெல்தும்ப்டே, பெகாசஸ் எனும் உளவு மென்பொருள் மூலமாக தமது கைப்பேசி உளவு பார்க்கப்பட்டதாக வாட்சப் நிறுவனம் தன்னை தொடர்பு கொண்டு தெரிவித்ததை வெளிப்படையாகத் தெரிவித்தார். அதே சமயத்தில் பல்வேறு சமூகச் செயற்பாட்டாளர்களும் இதனை தெரிவித்தனர்.

இத்தகைய கண்காணிப்பை பல்வேறு சமூகச் செயற்பாட்டாளர்களும், முற்போக்கு ஜனநாயக அமைப்புகளும் கண்டித்தன. ஆனாலும் உளவு பார்க்கப்பட்டது குறித்து எவ்வித விசாரணையையும் மோடி அரசு நடத்தவில்லை. தனது நாட்டு குடிமக்களின் கைப்பேசி இஸ்ரேல் நாட்டு நிறுவனத்தின் உளவு மென்பொருளால் கண்காணிக்கப்படுவது தெரிந்ததும், பிரதமர் கொந்தளித்திருக்க வேண்டாமா ? ஆனால் கமுக்கமாக அமைதி காத்தது ஒன்றிய அரசு.

அதனைத் தொடர்ந்து, இந்த என்.எஸ்.ஓ நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டுகள் பல்வேறு நாடுகளிலிருந்து அடுத்தடுத்து வரத் துவங்கின. அல்ஜசீரா எனும் சர்வதேச செய்தி நிறுவனம், தனது பத்திரிகையாளர்களின் கைப்பேசிகளும் பெகாசஸ் மூலம் கண்காணிக்கப்பட்டதைக் கண்டறிந்தது.

படிக்க :
♦ பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஊடகவியலாளர்களை குறி வைக்கும் மக்கள் விரோத அரசுகள் !
♦ பெகாசஸ் கண்காணிப்பு அரசியல் சாசன விரோதமானது : நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா எச்சரிக்கை !

இவையெல்லாம் வெளிவந்த போதும், பெகாசஸ் உளவு மென்பொருளின் தயாரிப்பு நிறுவனமான என்.எஸ்., அதனை மறுத்தது. தாம் அந்த மென்பொருளை தகுதியான அரசாங்கங்களுக்கு மட்டுமே விற்பனை செய்திருப்பதாகவும், தனியார் நிறுவனங்களுக்கோ, தனிநபர்களுக்கோ அதனை தாங்கள் விற்பனை செய்வதில்லை எனவும் கூறி வந்தது.

இந்நிலையில், தி வயர் இணையதளம், சர்வதேச ஊடகங்களான தி கார்டியன் உள்ளிட்ட பல ஊடகங்களோடு ஒன்றிணைந்து, “தி ஃபர்பிட்டன் ஸ்டோரீஸ்” எனும் புலனாய்வு ஊடகத்துடன் கூட்டாகச் சேர்ந்த இந்த பெகாசஸ் மென்பொருளின் மூலம் கண்காணிக்கப்பட்ட தொலைபேசி எண்களின் பட்டியல் கசிந்ததை ஒட்டி, அதனை ஆய்வு செய்தது. அப்பட்டியலைக் கொண்டு அப்படி கண்காணிக்கப்பட்டவர்களை வகை பிரித்து, அவர்களில் சாத்தியமானவர்களிடமிருந்து அவர்களது கைப்பேசிகளைப் பெற்று அவற்றை மின்னணு தடயவியல் சோதனைக்கு உட்படுத்தியது.

இந்த ஆய்வின் அடிப்படையில், தி வயர் இணையதளம் கடந்த வாரத்தில் இருந்து, பெகாசஸ் உளவு மென்பொருளால் கண்காணிக்கப் பட்டவர்களின் பட்டியலையும் அவர்கள் கண்காணிக்கப்பட்ட காலகட்டத்தையும், அக்காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகளையும் ஒருசேர அம்பலப்படுத்தி வருகிறது.

அதனைத் தொடர்ந்து, பாஜக, அதன் சித்தாந்தத் தலைமையான ஆர்.எஸ்.எஸ்., இன்னபிற சங்க பரிவார அமைப்புகள், பாஜகவின் அடிமைக் கட்சிகள் அமைப்புகள் ஆகியவற்றைத் தவிர, பிற அனைத்து எதிர்கட்சிகளும் அமைப்புகளும், ஜனநாயக சக்திகளும், இந்த ரகசிய கண்காணிப்பை ஜனநாயகத்திற்கு விரோதமானதாகக் கூறி கண்டித்துள்ளனர்.

இப்படி இந்தியா முழுவதும் கண்டனங்கள் பெருகி வந்த நிலையிலும், நாடாளுமன்றத்தில் அன்றாடம் அமளி நடக்கும் நிலையிலும், மிகவும் பொறுமையாக “இது ஆதாரமில்லாத குற்றச்சாட்டு” என்று நாடாளுமன்றத்தில் பதிலளிக்கிறார் பாஜக அரசாங்கத்தின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்ச்சர் அஷ்வினி வைஷ்ணவ்.

அஷ்வினி வைஷ்ணவ் முதல் நமது ‘ஆட்டுக்குட்டி’ புகழ் அண்ணாமலை வரை பாஜகவினர் அனைவரும் ஒரே விசயத்தையே மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள். “மத்திய அரசின் மீது ஆதாரமில்லாமல் பழி போடுகிறார்கள், இவர்கள் சொல்வதற்கு எந்த ஆதரவும் இல்லை” என்று சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள்.

பெகாசஸ் மூலம் கண்காணித்தது யார் ?

பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் கண்காணிக்கப்பட்டவர்கள் அனைவரையும் யார் உளவு பார்த்தார்கள் என்பது குறித்து இதுவரை யாரும் எந்த ஆதாரத்தையும் வெளியிடவில்லை.

என்.எஸ்.ஓ நிறுவனம் எந்தெந்த நாட்டிற்கு இந்த உளவு மென்பொருளை விற்பனை செய்தது என்ற தகவலை அந்நிறுவனமே வெளியிட்டாலோ, அல்லது என்.எஸ்.. நிறுவனத்தின் விற்பனை ரகசியங்கள் அடங்கிய கோப்புகளை யாரேனும் கசியவிட்டாலோ மட்டுமே இதுகுறித்து ஆதாரப் பூர்வமாக தெரியவரும்.

சாட்சி இல்லாத கொலை வழக்குகளில், குற்றம் நடந்திருப்பதற்கான காரண காரியங்களில் இருந்து அந்தக் குற்றத்தை செய்திருக்கக் கூடியதாக சந்தேகிக்கத்தக்க நபரை இலக்குவைத்து விசாரணையைக் கொண்டு செல்வதுதான் அடிப்படையானது. அத்தகைய நபர் குற்றம் இழைப்பதற்கான முகாந்திரம் இருக்கிறதா என்பதுதான் கிரிமினல் வழக்கு விசாரணையின் துவக்கப் புள்ளி.

அதே போல, பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் பலரும் திருட்டுத்தனமாக கண்காணிக்கப்பட்ட விவகாரத்தில், அக்குற்றத்தைச் செய்வதற்கான அவசியம் யாருக்கு இருக்கிறது என்பதில் இருந்துதான் குற்றச்சாட்டுகளை முன் வைத்து அவர்களை நோக்கி விசாரணையை முன்னெடுக்க முடியும்.

தற்போது உளவு பார்க்கப்பட்டவர்களை பெகாசஸ் மூலம் கண்காணிப்பதற்கான அவசியம் மோடி அரசிற்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் தான் இருக்கிறது என்பதையே உளவு பார்க்கப் பட்டவர்களுக்கும் மோடி அரசுக்கும் இடையே இதுநாள் வரை நீடித்த உறவு நிரூபிக்கிறது.

கண்காணிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் :

அதானிக்கும் அம்பானிக்கும் ஒன்றிய பாஜக அரசு அள்ளிக் கொடுத்ததை தொடர்ச்சியாக அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள், பசுக் கொலைகள் முதல் லவ் ஜிகாத் வரை நடைபெற்ற இந்துத்துவ கிரிமினல் நடவடிக்கைளில், சங்க பரிவாரக் கும்பல் மற்றும் பாஜகவின் பங்கினை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள்தான் முக்கியமாகக் கண்காணிக்கப்பட்டுள்ளனர்.

உதாரணத்திற்கு, அதானிக்கு 500 கோடி ரூபாய்க்கு வரிச் சலுகை வழங்கும் வகையில் சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கான விதியை ஒன்றிய மோடி அரசு மாற்றம் செய்தது. அச்சமயத்தில் அதனை ‘தி எகனாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி’ எனும் அரசியல், பொருளாதார இதழின் ஆசிரியர் பரஞ்ஜோய் குகா தாகுர்த்தா, தனது கட்டுரையில் அம்பலப்படுத்தினார். அந்தக் காலகட்டத்தில் அவரது எண் பெகாசஸ் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது.

அதே போல, அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவின் சொத்து மதிப்பு, மோடி ஆட்சிக்கு வந்த பிறகு ஒரே ஆண்டில் 16,000 மடங்கு அதிகரித்திருப்பதை அம்பலப்படுத்திய ரோகிணி சிங் எனும் பத்திரிகையாளரின் எண்ணும் இந்த பெகாசஸ் உளவு மென்பொருளால் கண்காணிக்கப்பட்டிருக்கிறது.

இவை இரண்டும் சிறு உதாரணங்கள்தான். இதைப் போன்றே மோடி அரசின் அதானி, அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கைகளையும் இந்துத்துவ நிகழ்ச்சிநிரலையும் அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள் மட்டுமே கண்காணிக்கப்பட்டுள்ளனர்.

மோடி அமித்ஷா கும்பலுக்கு ‘சொம்படிக்கும்’ பத்திரிகையாளர்களான நாவிகா குமார், அர்னாப் கோஷ்வாமி போன்றவர்கள் கண்காணிக்கப்படவில்லை. ஆகவே இங்கு பிரபலமான பத்திரிகையாளகள் என்ற வகையில் உளவு பார்க்கப்படவில்லை.

ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பலின் கார்ப்பரேட் காவி பாசிச நடவடிக்கைகளை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள் மட்டும்தான் கண்காணிக்கப்பட்டுள்ளார்களே தவிர, பொதுப்படையாக பத்திரிகையாளர்கள் என்ற வகையில் அனைவரும் கண்காணிக்கப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

படிக்க :
♦ வாட்சப் : உளவு பார்க்கப்பட்ட இந்திய பத்திரிகையாளர்கள், செயல்பாட்டாளர்கள் !
♦ வளம் கொழிக்கும் இணைய உளவுத் தொழில்

மாற்றுக் கருத்தாளர்களை ஒடுக்குதல் மற்றும் ஆட்சிக் கவிழ்ப்புக்கான உளவு :

கார்ப்பரேட்டுகளுக்கு நாட்டின் வளங்களை அள்ளிக் கொடுக்கும் மோடி அரசின் செயல்பாடுகளையும், மோடியின் இந்துத்துவ பாசிசத் திட்டங்களையும் அம்பலப்படுத்திய சமூகச் செயற்பாட்டாளர்களை பொய் வழக்குகளில் சிக்க வைத்து சிறையில் தள்ள இந்த உளவு மென்பொருளை பயன்படுத்தியுள்ளது மோடி அரசு. ஆனந்த் தெல்தும்டே, சுதா பரத்வாஜ் எனத் துவங்கி, தமிழகத்தின் திருமுருகன் காந்தி, இராமகிருஷ்ணன் ஆகியோர் வரை இந்தப் பட்டியல் நீள்கிறது.

பீமா கொரேகான் வழக்கின் கீழ் கைது செய்யப்பட்ட ஆனந்த் தெல்தும்டே உள்ளிட்ட 16 சமூகச் செயற்பாட்டாளர்களில் 8 பேரின் கைப்பேசிகள் இந்த உளவு மென்பொருள் மூலம் கண்காணிக்கப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகள் என்ற வகையில், எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, பிரியங்காகாந்தி ஆகியோரும் கண்காணிக்கப்பட்டுள்ளனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பேனர்ஜியின் உறவினரான அபிஷேக் பேனர்ஜியையும் உளவு பார்த்துள்ளனர். தேர்தல் நிலைப்பாட்டாளரும், மோடி எதிர்ப்பாளருமான பிரஷாந்த் கிஷோரின் கைப்பேசியையும் கண்காணித்துள்ளனர்.

பெகாசஸ் விவகாரம் அம்பலமாவதற்கு சில நாட்களுக்கு முன்னால், மேற்கு வங்க பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி தமது கட்சிக் கூட்டத்தில் பேசுகையில், அபிஷேக் பேனர்ஜி யார் யாருடன் பேசினார் என்ற ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும், “மாநில அரசு தான் அவர்கள் கையில் உள்ளது, ஆனால் மத்திய அரசு நமது கையில் இருக்கிறது” என்றும் கூறியிருக்கிறார்.

சுவேந்து அதிகாரியின் இந்த வாக்குமூலம், பாஜக உளவு பார்த்திருக்கிறது என்பதை உறுதிபடுத்துகிறது.

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட சமயத்தில் குமாரசாமியின் உதவியாளர்களின் செல்போன்கள் கண்காணிக்கப்பட்டது தற்போது வெளியிடப்பட்ட பெகாசஸ் உளவு மென்பொருளால் கண்காணிக்கப்பட்டவர்கள் பட்டியலில் அம்பலமாகியுள்ளது.

குமாரசாமி ஆட்சியை கவிழ்க்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு மட்டுமே இருந்தது. அந்த வகையில் இந்த உளவு நடவடிக்கையை அவர்களைத் தவிர வேறு யாரால் மேற்கொண்டிருக்க முடியும் ?

உச்சநீதிமன்றமும் தப்பவில்லை :

அடுத்ததாக நீதித்துறை எடுத்துக்கொண்டால், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் இருந்த சமயத்தில், அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த நீதிமன்ற பெண் ஊழியரின் கைப்பேசியும், அவரது உறவினர்கள் 11 பேரின் கைப்பேசியும் கண்காணிக்கப்பட்டிருக்கின்றன. நாட்டின் குடியரசுத் தலைவருக்கு நிகரான மதிப்பு கொண்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் இருக்கும்போதே ரஞ்சன் கோகாயின் கைப்பேசியும் உளவு பார்க்கப்பட்டிருக்கிறது.

இது தவிர இன்னும் சில நீதிபதிகளின் எண்ணும் அந்தப் பட்டியலில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில், அன்றைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது சக நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் பகிரங்கமாக குற்றம்சாட்டியது நினைவிருக்கலாம்.

அத்தகைய மூத்த நீதிபதியான ரஞ்சன் கோகாய், தலைமை நீதிபதியாக அமர்ந்த பின்னர் கூறிய தீர்ப்புகளுக்கும், பதவிக் காலம் முடிந்ததும் அவருக்கு வழங்கப்பட்ட எம்.பி பதவிக்கும் பின்னால் இருக்கும் ரகசியத்தை தற்போது வெளியிடப்பட்டிருக்கும் பெகாசஸ் கண்காணிப்புப் பட்டியலில் அவரது பெயரும் இருப்பது எடுத்துக் காட்டுகிறது.

அரசு உயரதிகாரிகள் :

அடுத்ததாக அரசுத்துறை உயரதிகாரிகள் கண்காணிக்கப்பட்டது பற்றி பார்க்கலாம். கடந்த 2018-ம் ஆண்டு, ரஃபேல் ஊழல் பிரச்சினை உச்சத்தை தொட்ட சமயத்தில், அக்டோபர் 23-ம் தேதி நள்ளிரவில் சிபிஐ தலைவர் பதவியிலிருந்து மோடியால் பதவி நீக்கம் செய்யப்பட்ட அலோக் வர்மாவின் எண் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரின் எண்களும் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்ட சமயத்தில் இருந்து உளவு பார்க்கப்பட்டிருக்கிறது. ரஃபேல் ஊழல் நாயகன் அனில் அம்பானியின் எண்ணும் கண்காணிக்கப்பட்டிருக்கிறது.

அதே போல, மோடியுடன் முரண்பட்ட சிபிஐ அதிகாரி ராகேஷ் அஸ்தானாவின் கைப்பேசியும் உளவு பார்க்கப்பட்டிருக்கிறது. இவை தவிர இன்னும் எண்ணற்ற அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் முதல் தேசிய அளவில் முக்கியப் பொருப்பில் இருக்கும் அதிகாரிகளும் கண்காணிக்கப்பட்டுள்ளனர்.

ஜனநாயகத்தின் நான்கு தூண்களாகச் சொல்லப்படும், நீதித்துறை, அரசு அதிகாரிகள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், ஊடகங்கள் என அனைத்திலும் பெகாசஸ் உளவு மென்பொருளைக் கொண்டு உளவு பார்க்கப்பட்டுள்ளது.

சுருக்கமாகச் சொன்னால், இந்திய நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் அத்தனைத் துறையும் இந்த பெகாசஸ் உளவு பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டுள்ளது.

பெகாசஸ் உளவு வளையத்தில் பாஜக அமைச்சர்களும் வி.எச்.பி தலைவரும்:

பாஜக – ஆர்.எஸ்.எஸ்.-ன் செயல்திட்டமான கார்ப்பரேட் இந்து ராஷ்டிரத்தினை எதிர்ப்பவர்களே கண்காணிக்கப்பட்டுள்ளனர் என்பதாக மட்டும் இதனை சுருக்கிவிட முடியாது.

பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு இந்தியா முழுவதும் கலவரத்தை முன்னின்று நடத்திய விசுவ இந்து பரிஷத், பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகளுக்கு முன் நின்று அவற்றை வழிநடத்திய பிரவின் தொகாடியா கண்காணிக்கப்பட்டிருக்கிறார். பாஜக அமைச்சர்களான அஷ்வனி வைஷ்ணவ், ப்ரகலாத் சிங் பட்டேல் ஆகியோரின் எண்களும் கண்காணிக்கப்பட்டுள்ளன.

ஆகவே பாஜக அரசு இந்த வேலையைச் செய்திருக்க வாய்ப்பில்லை என்றும் சிலர் வாதிடலாம். அவர்களுக்கு ஒரு சில கடந்த கால வரலாற்றை நினைவுபடுத்துவோம்.

கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் மோடி அமித்ஷா கும்பலுக்கும், வி.எச்.பி.யின் பிரவின் தொகாடியாவுக்கும் இடையிலான அதிகார மோதல் உச்சத்திற்கு வந்த நிலையில், உயிருக்குப் பயந்து ஓடிய தொகாடியா தலைமறைவாகி விமான நிலையம் அருகே மயக்கநிலையில் கண்டெடுக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

சொந்தக் கட்சியாக இருந்தாலும் சரி, வெளியில் இருப்பவராக இருந்தாலும் சரி எதிர்ப்பு என்பது மனதளவிலும் கூட யாருக்கும் இருக்கக் கூடாது என்று நினைப்பவர்கள்தான் பாசிஸ்ட்டுகள் !

மோடி ஆட்சியில் அமர்ந்து இரண்டு மாதங்களே முழுமையாக முடிந்திருந்த நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு ஜூலையில், நிதின் கட்காரி வீட்டில் உளவுக் கருவிகள் கண்டெடுக்கப்பட்ட செய்தி வெளிவந்தது நினைவிருக்கலாம். மோடிஜியின் ஆட்சியில் ஆர்.எஸ்.எஸ்.- அமைப்பின் முக்கிய ‘தலைக்கட்டான’ நிதின் கட்காரி வீட்டிலேயே உளவு வேலை நடந்திருக்கிறது எனில், அஷ்வனி வைஷ்ணவ், ப்ரகலாத் சிங் படேல் ஆகியோர் எல்லாம் மோடி அமித்ஷாவிற்கு எம்மாத்திரம் ?

படிக்க :
♦ 2020 : ஊடகத்துறையினர் மீது அதிகரித்த கொலைவெறித் தாக்குதல்கள்
♦ செயல்பாட்டாளர்களை உளவு பார்த்தது யார் ? தகவல்களை வெளியிட வாட்சப் மறுப்பது ஏன் ?

இதுவரையிலான கண்காணிப்புகளின் பின்னணி யாரை குற்றவாளியாகக் காட்டுகிறது ?

முந்தைய தலைப்புகளில் நாம் குறிப்பிட்டவை அனைத்தும் தற்போது வெளியாகியுள்ள பட்டியலில் இருந்து எடுக்கப்பட்ட சிறு உதாரணங்களே. அரசு இயந்திரத்தின் முக்கியமான பொறுப்பில் இருப்பவர்களில் மோடி அமித்ஷா ஆர்.எஸ்.எஸ். கூட்டணியுடன் முரண்டு பிடிக்கக் கூடியவர்கள் அனைவரும் பெகாசஸ் மென்பொருளால் கண்காணிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஆர்.எஸ்.எஸ்.-ன் கார்ப்பரேட் இந்து ராஷ்டிரத் திட்டத்தை முழுமையிலிருந்து அம்பலப்படுத்திய சமூகச் செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் கண்காணிக்கப்பட்டிருக்கின்றனர். இனி வரப்போகும் பட்டியலில் இன்னும் எத்தனை இராணுவ அதிகாரிகள், உளவுத் துறை அதிகாரிகள் இருக்கக்கூடும் என்பது தெரியவில்லை.

மேலே நாம் கண்ட உதாரணங்களில் இருந்து பார்க்கையில், நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானிக்கின்ற பொறுப்பில் இருப்பவர்கள் அனைவருமே கண்காணிக்கப்படவில்லை. அவர்களில், ‘குறிப்பான வகையினர்’ மட்டுமே கண்காணிக்கப் பட்டிருக்கிறார்கள். மேற்கண்ட உதாரணங்கள் மட்டுமல்லாமல், அன்றாடம் தி வயர் இணையதளத்தில் பெகாசஸ் குறித்து வெளிவரும் செய்திகள் அனைத்தும் இந்த வாதத்திற்கு வலுச் சேர்க்கின்றன.

உளவு பார்க்கப்பட்ட அந்த ‘குறிப்பான வகையினர்’ அனைவரையும் கீழ்கண்ட இரண்டு வகைகளுக்குள் பொருத்திவிட முடியும்.

1. மொத்த அரசு இயந்திரத்தின் செயல்பாட்டை சங்கபரிவாரத்தின் கார்ப்பரேட் இந்துராஷ்டிர செயல்திட்டத்தின் கீழ் கொண்டுவருவதற்கான பாஜகவின் முயற்சிகளுக்கு தடையாக இருப்பவர்கள்.

2. மோடி அமித்ஷாவுக்கு தனிப்பட்ட ரீதியில் குடைச்சலாக இருந்தவர்கள்

உளவு வேலையை யார் செய்திருப்பார்கள் என்ற தர்க்கரீதியான முடிவுக்கு வருவதற்கு பொதுவான தர்க்கத்திலிருந்தும் இவ்விவகாரத்தைப் பார்க்கலாம்.

என்.எஸ்.. நிறுவனம், இந்த உளவு மென்பொருளை அரசாங்கங்களுக்கு மட்டுமே விற்பனை செய்வதாகக் கூறியுள்ளது. அந்த நிறுவனத்தின் வாயிலிருந்து கிடைத்திருக்கும் ஒரே ஒரு உருப்படியான தகவல் இதுமட்டும்தான்.

அந்த வகையில், ஏதேனும் ஒரு அரசாங்கம் தான் இந்தக் கண்காணிப்பை நடத்தியிருக்க முடியும். எனில் இந்தியாவில் உளவு பார்க்கப்பட்ட அத்தனை பேரையும் ஒரு அரசாங்கம் தான் கண்காணித்திருக்கிறது என்பது உறுதி. அது இந்திய அரசாங்கமா, வேறு ஏதேனும் நாட்டினுடைய அரசாங்கமா என்பதுதான் துவக்கத்தில் இருந்தே எஞ்சி நிற்கும் கேள்வி.

இவர்களை எல்லாம், வெளிநாட்டு அரசாங்கம் கண்காணிக்க வேண்டிய அவசியம் என்ன ? ஒரு வேளை வெளிநாட்டு அரசாங்கங்கள் இந்தியாவை கண்காணிக்க உளவு பார்க்க வேண்டுமெனில், அவர்கள் யாருடைய கைப்பேசிகளில் இந்த உளவு வேலையைச் செய்திருக்க வேண்டும். மோடி, அமித்ஷாவின் கைப்பேசியில் தானே செய்திருக்க வேண்டும். இந்தியாவின் ஒவ்வொரு செயல்பாடுகளும் இவ்விருவரின் கண்ணசைவில் தானே நடத்தப்படுகின்றன.

உதாரணத்திற்கு, மொராக்கோவிலிருந்து செயல்பட்ட பெகாசஸ் இயங்குமுனை, பிரான்ஸ் அதிபர் மாக்ரோனின் கைப்பேசியை கண்காணித்தது, இந்தப் பட்டியலில் அம்பலமாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் நடவடிக்கையை மொராக்கோ வேவு பார்க்க பிரான்ஸ் அதிபரின் கைப்பேசி தான் கண்காணிக்கப்பட்டிருக்கிறதே தவிர அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர்கள் அல்லது பத்திரிகையாளர்களின் கைப்பேசிகள் உளவு பார்க்கப்படவில்லை.

ஆகவே வெளிநாட்டு அரசாங்கங்கள் இந்தக் கண்காணிப்பைச் செய்திருக்க எந்த முகாந்திரமும் இல்லை என்பது தெளிவாகிறது. எனில் எஞ்சி இருப்பது மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் தான். இந்தக் கண்காணிப்பை மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம்தான் செய்திருக்கக்கூடும் என்ற வாதத்திற்கு மேலும் பல நிகழ்வுகள் வலுச் சேர்க்கின்றன.

அதனை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

(தொடரும்)


சரண்

செய்தி ஆதாரம் : தி வயர்

புரட்சியாளரான பின்னும் பூணூல் அணிந்திருந்தாரா சந்திரசேகர் ஆசாத் ?

விடுதலைப் போராட்டத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இறுதிமூச்சு வரை போராடிய வீரர் சந்திரசேகர் ஆசாத் அவர்களின் பிறந்த நாளான ஜூலை 23-ஐ முன்னிட்டு தி வயர் இணையதளத்தில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவர்களான ஹர்ஷவர்தன் மற்றும் பிரபாகரன் அகர்வால் ஆகியோர் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம், கீழே கொடுக்கப்பட்டுள்ளது.  சற்று நீளமான கட்டுரைதான்.. ஆனாலும் ஆசாத்தின் வாழ்வில் நாம் அறிந்திராத பல விசயங்களை, அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பல விசயங்களை இந்தக் கட்டுரை பேசுகிறது! படியுங்கள் ! அனைவருக்கும் பகிருங்கள் !!

000

தாய் நாட்டின் விடுதலைக்காக தன் உயிரையே துச்சமென தியாகம் செய்த ஆசாத் இந்திய மக்கள் அனைவராலும் நேசிக்கப்பட்டவராவார். இந்த நாட்டின் விடுதலையானது வெளியிலிருந்து வரக்கூடிய உதவியால் அல்ல; மாறாக உள்நாட்டிலே ஒடுக்கப்பட்ட மக்களால் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்பதை அவர் கொள்கையாகக் கொண்டிருந்தார்.

முறுக்கிய மீசையோடும் கட்டுமஸ்தான உடல் அமைப்போடும் இருக்கக் கூடிய சந்திரசேகர் ஆசாத்தின் படத்தைப் பார்த்தாலே நம்முள் ஒரு வீரஉணர்வு பொங்கி எழும். ஆங்கிலேயரிடம் சிக்காமல் இருப்பதற்காக தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறந்துபோன அவருடைய நினைவுகள் இப்பொழுதும் நம் நினைவிலேயே இருக்கும்.

லஜபதிராயை அடித்துக் கொன்ற போலீஸ் அதிகாரி ஜான் சாண்டர்ஸ் கொலை வழக்கிலும், காக்கோரி ரயில் கொள்ளையிலும் சம்பந்தப்பட்டிருந்த அவர் ஹிந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிபப்ளிகன் அசோசியேஷன் என்ற அமைப்பின் தலைமை கமாண்டராக இருந்தார். இதன் காரணமாகவே நாம் அவருடைய பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் நாம் நினைவுகூரக் கடமைப்பட்டுள்ளோம்.

படிக்க :
♦ பகத் சிங் பிறந்தநாள் : இந்திய புரட்சிகரக் கட்சியின் அறிக்கை !
♦ பகத் சிங்கின் நண்பர் கணேஷ் வித்யார்த்தியை உங்களுக்குத் தெரியுமா ?

யார் இந்த சந்திரசேகர ஆசாத்? எதற்காக அவர் போராடினார்? அவரின் தனிப்பட்ட பிரச்சனைகளின் காரணமாக போராடினாரா? இந்த 115-ம் ஆண்டு பிறந்த நாளில் (ஜூலை 23, 2021) சந்திரசேகர் ஆசாத்தின் புரட்சிகர பயணங்களில் இருந்து சிலவற்றை கற்க முயற்சி செய்வோம்.

1906-ம் ஆண்டு ஜூலை 23-ம் தேதி ஆசாத் அலிராஜ்பூர் என்ற சுதேசி அரசில் உள்ள  பவரா என்ற கிராமத்தில் பிறந்தார். இந்த இடமானது இப்பொழுது மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஜாபூகா மாவட்டத்தில் அமைந்துள்ளது. அவருடைய பெற்றோர்கள் உத்திரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்டவர்கள். தங்களுடைய வாழ்வாதாரத்திற்காக அங்கிருந்து மத்தியப் பிரதேசத்தில் குடிபெயர்ந்தவர்கள் ஆவர். ஆசாத்தின் தந்தையான சீதாராம் திவாரி தோட்ட வேலை செய்து வந்தார். அவருடைய தாய் ஜாக்ரணி தேவி ஆவார்.

அவர் இருந்த கிராமமானது பில் பழங்குடியின கிராமங்கள் சூழ அமைந்திருந்தது. அதனால் இயல்பாகவே பில் பழங்குடியின சிறுவர்களுடன் விளையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அந்த பில் பழங்குடியின மக்களிடம் இருந்து வில் வித்தையைக் கற்றுதுடன் அதிலே மிகச்சிறந்த தேர்ச்சி பெற்றார்.

மிகச் சிறு வயதிலேயே பெற்றோரின் பொருளாதார ஏழ்மை காரணமாக வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார். அவருடைய ஆசிரியர் தாசில்தார் அலுவலகத்தில் வேலைக்கு சேர்த்து விட்டார். ஒவ்வொரு முறையும் உயர் அதிகாரிகள் வரும்பொழுது தலைகுனிந்து அவர்களுக்கு வணக்கம் செலுத்த வேண்டும் என்பது பழக்க வழக்கமாக அங்கே இருந்ததால் இயல்பிலேயே சுயமரியாதை உணர்வு கொண்டிருந்த ஆசாத் இச்செயல்பாடுகளை வெறுத்தார். சில காலம் அங்கேயே வேலை செய்துவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.

1920-களில் பம்பாயில் அவர் பிச்சைக்காரன் ஆகவும் துறைமுகத்தில் கூலியாகவும் இருந்திருக்கிறார். அவர் மும்பையில் இருக்கும் பொழுதுதான் உழைக்கும் வர்க்கத்தின் சொல்லொணாத் துயரங்களை முதன் முறையாக நேரில் கண்டார். அப்படிப்பட்ட அந்த தொழிலாளிகளோடு நெருக்கடி மிகுந்த இடத்தில்தான் தங்கியிருந்தார். இப்படிப்பட்ட நெருக்கடி மிகுந்த இடத்தில் தங்குவதை தவிர்ப்பதற்காகவே திரைப்படங்களுக்கு இரவு நேரத்தில் செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

“கப்பல் துறைமுகத்தில் அவர் வாரத்தில் ஆறு நாட்கள் வரை வேலை செய்வார். அவ்வாறு வேலை செய்து பணம் ஈட்டிய உடனே புது சட்டையையும் திரைப்படத்துக்கு செல்வதற்கான டிக்கெட்டையும் வாங்குவார். ஒரு வாரம் முழுவதும் பயன்படுத்திய பிறகு அந்த சட்டையை தூக்கி எறிந்து விடுவார்.” ஆசாத்தின் பம்பாய் அனுபவங்களைப் பற்றி அவருடன் இணைந்து வேலை செய்த, ஆசாத்தின் வாழ்க்கை சரிதத்தை எழுதிய விஸ்வநாத் வைசாம்பயன் இவ்வாறு கூறுகிறார்.

பம்பாயின் ஒரே மாதிரியான இந்த வாழ்க்கை முறை அவருக்கு மிகவும் சோர்வை ஏற்படுத்துகிறது. மீண்டும் தன்னுடைய முன்னாள் ஆசிரியரை நாடியதன் விளைவாக பெனாரசில் உள்ள காசி வித்யா பீடத்தில் சேர்கிறார். இங்கேதான் அவருடைய அரசியல் வாழ்க்கை தொடங்குகிறது என்று கூறலாம். 1921-ம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி தொடங்கி வைக்கிறார். 15 வயது சிறு இளைஞனான அவர் அந்த இயக்கத்தில் பங்கு கொள்கிறார். அந்த இயக்கம் தொடர்பான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதற்காக போலீசால் கைது செய்யப்பட்டு மாஜிஸ்ட்ரேட் முன்பு நிறுத்தப்படுகிறார்.

இதோ அங்கே மாஜிஸ்ட்ரேட்டுடன் நடைபெற்ற விவாதம்,

 உன்னுடைய பெயர் என்ன?

“ஆசாத்”

உன்னுடைய தந்தை பெயர் என்ன?

நீ எங்கே தங்கி இருக்கிறாய்?

“சிறையில்”

சந்திரசேகர் ஆசாத்தின் பதில்களைக் கேட்டு மிகவும் கோபமடைந்த அந்த மேஜிஸ்ட்ரேட்,  15 வயதான அந்த சிறுவனுக்கு 15 கசையடிகள் தண்டனையாக கொடுக்கும்படி உத்தரவிட்டார்.

ஒவ்வொரு கசையடி விழும் பொழுதும் ‘பாரத் மாதா கி ஜெய்’ இன்று மன உறுதியோடும் அழுது கொண்டே உரத்து முழங்கினார். இந்த சம்பவமானது சந்திரசேகர் என்ற அவருடைய பெயர் ஆசாத் என்று மாறும் அளவுக்கு பெனாரசில் அவரை மிகவும் பிரபலமாக்கியது.

அந்த நாட்களில் காங்கிரஸ் தலைவர்கள் பேசுகின்ற மேடைகளில் சந்திரசேகர் ஆசாத் என்றே அறிமுகப்படுத்தப்படுவார். அவரும் பெயர் காரணம் வந்ததற்கான நீதிமன்ற அலுவலகத்தில் நடைபெற்ற சம்பவத்தை அங்கு விளக்கிப்பேசுவார். இவ்வாறு ஆசாத் காங்கிரஸ் மேடைகளில் ஒரு அங்கமாகி போனார். ஒத்துழையாமை இயக்கத்தில் மிகவும் ஆர்வமுடன் பங்கேற்று இருந்த சந்திரசேகர ஆசாத், காந்தியினால் ஒத்துழையாமை இயக்கம் திரும்பப் பெறப்பட்டது கண்டு, கடும் மனத்துயரம் அடைந்தார். அவர் ஆயுதம் தாங்கிய புரட்சிகர இயக்கத்தில் அடித்துச் செல்லப்படுவதற்கு இந்த சம்பவம் ஒரு முக்கியமான காரணமாக அமைந்தது.

அந்த நேரத்தில் பெனாரஸ் என்பது புரட்சியாளர்களின் ஒரு முக்கியமான மையமாக இருந்தது. ஜோகேஸ் சந்திர சட்டர்ஜி, ராம்பிரசாத் பிஸ்மில் ஆகியோருடன் இணைந்து சசீந்திரனாத் சன்யால் ஹிந்துஸ்தான் ரிபப்ளிகேன் அசோஷியேஷன் என்ற பெயரில் அமைப்பைத் தொடங்கினார்.

பெனாரசை அடித்தளமாகக் கொண்டு செயல்படும் புரட்சியாளர்களான ராஜேஸ்வர்லகரி, மன்மதனாத் குப்தா ஆகியோரை தொடர்பு கொண்டு பின்னர் அவர்களோடு இணைந்து  புரட்சிகர அமைப்பின் ஒரு செயல் துடிப்புமிக்க உறுப்பினர் ஆனார். தொடக்கக்காலத்தில் துண்டறிக்கைகள் விநியோகம் செய்வதும் கட்சி உறுப்பினர்களுக்கு தபால்களை கொண்டு செல்லும் வேலையையும் செய்திருக்கிறார்.

புரட்சிகர அமைப்பின் செயல் துடிப்புமிக்க செயல் வீரனான பின்னர், புரட்சிகர இலக்கியங்களைத் தேடிப் படிப்பதில் ஆர்வம் கொள்ள தொடங்குகிறார்.  அவருடைய கல்வி அறிவு போதாமை காரணமாக மிக குறிப்பிட்ட வரம்புக்குள்ளேயே புத்தகங்களை படிப்பதும் மற்ற தோழர்களை புத்தகங்களை படிக்கச் சொல்லி கேட்பது என்று அவர் தன்னை சித்தாந்த ரீதியாக வளர்த்துக் கொள்வதற்கும் போராடியிருக்கிறார்.

HRA முழு நேர ஊழியரான பிறகு, இத்தாலிய தேசியவாதிகளான மாஜினி மற்றும் கரிபால்டி, ஐரிஷ் புரட்சியாளர்களான மேக்ஸ்வினி மற்றும் பான்டே ஜீவன், சச்சிந்திரநாத் சன்யால்  சுயசரிதை ஆகியவற்றை விருப்பமுடன் படித்தார். ரசியா மற்றும் அயர்லாந்தின் புரட்சிகள் பற்றிய புத்தகங்களையும் குரு கோவிந்த் சிங், சிவாஜி, ராணா பிரதாப் ஆகியோரின் சுயசரிதைகளையும் படிக்கிறார். அக்காலத்தில் புரட்சிகர அமைப்பின் புதிய உறுப்பினர்கள் இப்படிப்பட்ட புத்தகங்களைப் படிப்பது கட்டாயமான ஒன்றாக இருந்தது.

தோழர் சிவவர்மாவிடருந்து கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை புத்தகத்தை ஆசாத் பெறுகிறார். எச்.எஸ்.ஆர்.ஏ-வின் தலைமை கமாண்டராக இருந்தபோது தோழர்கள் அனைவரும் சோசலிசம் பற்றி கற்றுக் கொள்வதற்காக சத்யா பக்த் எழுதிய “ABC OF COMMUNISM” என்ற புத்தகம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எப்படி இருந்தாலும் படிப்பவை அனைத்துமே நடைமுறைக்கானது தான் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

1925-ல் புகழ்பெற்ற காக்கோரி ரயில் கொள்ளையில் ஆசாத் ஈடுபடுகிறார். இதற்கு முன்னதாகவே பல நிலக்கிழார் வீடுகளை கொள்ளையடிக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார். காக்கேரி ரயில் கொள்ளை ஆனது, புரட்சியாளர்கள் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்திற்கு எதிராக நேரடியான யுத்தத்தைத் தொடங்கி விட்டார்கள் என்பதை அறிவித்தது. இந்த சம்பவத்துக்கு பிறகு புரட்சியாளர்களின் மீது மிகவும் கடுமையான அடக்குமுறை செலுத்தப்பட்டது. பலர் சிறையில் அடைக்கப்பட்டனர்; பலர் கொல்லப்பட்டார்கள். எப்படியாகினும் ஆசாத் அதிலிருந்து தப்பித்து ஜான்சியை வந்தடைந்தார். அங்கே சில ஆண்டுகள் மாறு வேடமிட்டு அவர் வாழ்ந்து வந்தார். எப்படிப்பட்ட நேரத்திலும் அவர் தலைமறைவாக சொல்வதில் கெட்டிக்காரராக இருந்ததால் பிஸ்மில் அவருக்கு ‘குயிக்சில்வர்’ என்ற பட்டப் பெயரைக் கொடுத்தார்.

“The Legend of Bagat SIngh” என்ற இந்தி திரைப்படத்தில் ககோரி கொள்ளை தொடர்பான காட்சி

1927-ம் ஆண்டு டிசம்பர் 19-ஆம் தேதி அஸ்வ குல்லா கான், ராம் பிரசாத் பிஸ்மில் ரோஷன் சிங் ஆகிய புரட்சிகர தலைவர்கள் காக்கோரி ரயில் கொள்ளையில் ஈடுபட்டார்கள் என்று கூறி பிரிட்டிஷ் அரசாங்கம் தூக்கு தண்டனை நிறைவேற்றியது.

காக்கோரி ரயில் கொள்ளைக்கு பிறகு புரட்சிகர கட்சியானது மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி சிதிலமடைந்தது. சிறைக்கு வெளியே ஆசாத் மட்டுமே புரட்சிகரக் கட்சியின் உறுப்பினராக இருந்தார். இப்பொழுது இந்த புரட்சிகர கட்சியை மீண்டும் உருவாக்குவதற்கான தேவை அவர் முன்னே இருந்தது. இந்த அவசியமான நோக்கத்திற்காக அவர் பஞ்சாபினை அடித்தளமாகக் கொண்டு செயல்படக் கூடிய பகத்சிங் மற்றும் சுகதேவ் உள்ளிட்ட புரட்சியாளர்களை தொடர்பு கொண்டார்.

அவர்களுடன் மேற்கொண்ட தொடர்ச்சியான கூட்டு முயற்சியின் பலனாக பிரிட்டிஷ் அரசை வீழ்த்துவதற்கான புதிய உற்சாகத்துடன் வளர்த்தெடுக்கப்பட்ட சித்தாந்தத்தால்  பல  புரட்சியாளர்கள் அறுவடை செய்யப்படுவதற்கான காலம் கனிந்தது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வாக வடஇந்தியாவைச் சேர்ந்த பல புரட்சியாளர்கள் இணைந்து ஹிந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிபப்ளிகன் அசாசியேசன் என்ற ஒரு புரட்சிகர  இயக்கத்தை உருவாக்கினார்கள். அந்த இயக்கத்தின் ராணுவ பிரிவுக்கான தலைமை கமாண்டராக சந்திரசேகர ஆசாத் நியமிக்கப்பட்டார். HSRA-ஆனது  HRA-இன் கொள்கைகளோடு இணைந்து மேலும் இது முக்கியமான குறிக்கோள்களை கொண்டிருந்தது.

ஒன்று சோசலிசத்தின் மூலமாக மட்டுமே இக்கட்சியானது தனது இலக்கை அடைய முடியும்.

டர்பன், திலகம், பூணூல் உள்ளிட்ட அனைத்து வகையான சாதி மற்றும் மத ரீதியான அடையாளங்களை அழிக்க வேண்டும்.

லாலா லஜபதிராயை அடித்தே கொன்ற பிரிட்டிஷ் போலீஸ் அதிகாரி ஜேபி சாண்டர்ஸை சுட்டுக்கொலை  செய்ததே HSRA-ன் முதல் நடவடிக்கையாகும்.

இரண்டாவது நடவடிக்கையாக “பொதுப் பாதுகாப்பு மற்றும் தொழில் தகராறு மசோதாவுக்கு எதிராக மத்திய சட்டசபையில் பகத்சிங் மற்றும் பி.கே.தத் ஆகியோரால் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் நடைபெற்றது. மேற்கண்ட இரண்டு சம்பவங்களின் மூலமாக இந்த புரட்சிகரக் கட்சியானது வெளிச்சத்துக்கு வந்ததுடன் பொது மக்களின் ஆதரவையும் ஏகோபித்த அளவில் பெற்றது.

ஆனால், இந்த சம்பவத்துக்கு பிறகு HSRA-ன் தலைவர்கள் பலர் கொல்லப்பட்டும் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

சித்தாந்த பயணத்தில் ஆசாத்

“நான் சிறையிலிருந்து வெளியே வந்து ஆசாத்தை சந்தித்தபொழுது, அவர் சுதந்திர போராட்டம் தொடர்பான கண்ணோட்டங்களில் மிகப்பெரிய மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் பெற்றிருந்தார். புரட்சிகர அமைப்புகளைச் சேர்ந்த புரட்சியாளர்கள் பலர் கொல்லப்பட்டு தியாகி ஆகியுள்ளனர். இந்த சூழலில் தொடர்ச்சியாக புரட்சிகர இயக்கங்கள் வீழ்ச்சி அடைந்து கொண்டே இருப்பதை குறித்து தீவிரமான ஆராய்ந்தறிந்து புரட்சிகர கட்சியானது கண்டிப்பாக விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் வேலை செய்ய வேண்டும். இயக்கத்தின் பிற்காலத் தேவைக்காக தெரிவுசெய்யப்பட்ட சில நபர்களுக்கு ஆயுதப்பயிற்சி அளிக்க வேண்டும்.” என்ற கருத்தை முன்வைத்தார் என்று கூறுகிறார் லாகூர் சதி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அஜாய் கோஷ். 1920-களில் லாகூர் சதி வழக்கில் போதிய சான்றுகள் இல்லை என்று கூறி இவர் விடுவிக்கப்பட்டார். பின்னாளில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகவும் செயல்பட்டார்.

ஒரு முற்போக்கு தேசியவாதியாக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கிய ஆசாத், அதன் வளர்ச்சியின் ஒரு கட்டத்தில் புரட்சிகர கட்சிக்கு அரசியல் சித்தாந்த ரீதியான வளர்ச்சியின் அவசியத்தை உணருகிறார். அதனால் தான் HRA-ஐ HSRA என்று நேரடியாகவே மாற்றியமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறார். இவ்வாறு மாற்றியமைப்பதற்கான முக்கியமான மூன்று காரணங்கள்

  1. காலனிய எதிர்ப்பு தேசியவாதம் என்பதில் இருந்து சோசலிசத்தை நோக்கி முன்னேறுதல்
  2. வெகுஜன அரசியலை நோக்கிய ஆயுதப் போராட்டம்
  3. கறாரான நாத்திகத்தை நோக்கிய சாதி மத அடையாளங்கள் துறப்பு

சிறையில் இருந்து வெளியே வந்த அஜாய் கோஷ், ஆசாத்தை சந்தித்தபோது, தொடர்ச்சியாக கட்சியானது முற்றிலும் முடங்கிப்போய்க் கிடந்தது. மத்திய கமிட்டியானது செயலிழந்து போயிருந்தது. HSRA-ன் மாகாண கமிட்டிகள் சொந்த முறையில் வேலை செய்ய வேண்டுமென்று வழிகாட்டப்படுகிறது. புரட்சிகரக் கட்சி மீண்டும் உருவாக்குவதற்கும் வட இந்தியா மற்றும் மேற்கு, தெற்கு ஆகிய பகுதியில் புரட்சிகர இயக்கத்தை வளர்ப்பதற்காக சில தோழர்களை சித்தாந்த பயிற்சிக்காக யஷ்பால், சுரேந்திரநாத் பாண்டே மற்றும் பவானி சிங் ஆகியோரை சித்தாந்த பயிற்சிக்காக சோவியத் யூனியனுக்கு அனுப்ப வேண்டும் எந்த திட்டத்தையும் கொண்டிருந்தார்.

மேற்கண்ட திட்டமானது மீரட் சதி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் உடனான ஆலோசனையில் இருந்து உருவானதாகும். HSRA மீரட் அமைப்பாளரான ராஜேந்திரபால்சிங் வாரியர் மீரட் சதி வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்தார். அவருடைய தம்பி விஜய்சிங்பால் பாதுகாப்பு கமிட்டியின் உறுப்பினராக இருந்தார். இருவரும் மீரட் சதி வழக்கில் முக்கியமான குற்றவாளிகளாக இருந்தனர்.

வாரியர் தனது நினைவுக் குறிப்புகளின் மூலம் HSRA புரட்சியாளர்கள் சோவியத் யூனியன் செல்வதற்காக பம்பாய் சென்று பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்களை தொடர்பு கொள்ள வேண்டுமென்று திட்டமிடப்பட்டு இருந்ததை கூறுகிறார்.

யஷ்பால் பாம்பே சென்று கம்யூனிஸ்ட் செயல்பாடுகளை சந்திக்கிறார். ஆசாத் இறப்பின் காரணமாக இத்திட்டமானது கைவிடப்படுகிறது பின்னாளில் யஷ்பால் மற்றும் பாண்டே ஆகியோர் கைது செய்யப்படுகிறார்கள். HSRA சார்பில் சோவியத் யூனியனுக்கு கேதார் புரட்சியாளரான பிரீத் சிங் சென்று வந்திருக்கிறார். ஆசாத் கொல்லப்பட்ட அதே ஆல்பிரட் பூங்காவில் சில வாரங்களுக்கு முன்பு அவரை சந்தித்திருக்கிறார்.

ஆசாத்தின் இறுதிக் காலங்களில் அவருடைய சித்தாந்தங்களில் அதிகமான கடுமையான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. சோசலிச தத்துவத்தின் அடிப்படையில் ஏற்கனவே நடத்தப்பட்ட புரட்சிகர போராட்டத்தின் பல்வேறு அனுபவங்களை சேகரித்திருக்கிறார்.

“பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் அடிமைத்தனத்துக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராக நான் செய்துவரும் போராட்டத்தின் விளைவாக நம்முடைய இன்னுயிரை தியாகம் செய்வதற்கு நாம் ஆவலாக இருக்கிறோம். பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிராக நாம் நடத்தக் கூடிய போராட்டங்களை சுதேச அரசுடன் ஒப்பிட முடியாது. ஒருவேளை பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் இந்தியாவை விட்டு வெளியேறிய பிறகு சுதேச அரசுகள் உருவானால் அங்கே இந்த விலங்குகள் (மன்னர்கள்) 10 முதல் 20 வரையிலான பெண்களுடன் அந்தபுரத்தில் சல்லாபித்துக் கொண்டு இருப்பார்கள். அதுதான் அவர்களுக்கு கிடைக்கும் உரிமை எனில்  அவர்கள் நமக்கு என்ன மாதிரியான நீதியை வழங்குவார்கள்” என்று ஆசாத் தன்னுடைய தோழர்களிடம் கூறுகிறார்.

இந்திய தேசிய காங்கிரஸ் ஆகட்டும் அல்லது தேசியவாத இயக்கங்கள் ஆகட்டும் இது நாட்டின் ஒடுக்கப்பட்ட பெரும்பான்மையான மக்களுக்கு ஒருபோதும் நீதியை கொடுக்க மாட்டார்கள் என்று தன்னுடைய கருத்தை தெரிவிக்கிறார். இதன் மூலம் அவருடைய சித்தாந்தம் அது மென்மேலும் வளர்ச்சி அடைந்துள்ளது புரிந்து கொள்ள முடிகிறது. அவர் பரவசமான சூழலில் கீழ்க்கண்ட பாடலை மெல்லியதாக பாடுவார் என்று மன்மத நாத் குப்தா கூறுகிறார்.

“சுதந்திர இந்தியா
அங்கே மக்கள் அனைவருக்கும்
பொதுவான உணவு உண்பதற்கு இருக்கின்றன.
ஆடைகள் உடுத்துவதற்கு இருக்கின்றன.
வீடுகள் தங்குவதற்கு இருக்கின்றன.”

ஆசாத் மிகச்சிறந்த அமைப்பாளராக கட்சியின் தலைமை கமாண்டராக செயல்பட்டார். தத்துவத்திலும் திட்டத்திலும் முன்மாதிரியாக செயல்பட்டார். புரட்சிகர நடவடிக்கைகளை விமர்சித்து காந்தி எழுதிய வெடிகுண்டின் தீமை என்ற கட்டுரைக்கு எதிராக HSRA சார்பில் ‘வெடிகுண்டின் தத்துவம்’ என்ற துண்டறிக்கை விநியோகம் செய்யப்பட்டது. இது தொண்டருக்கு எனது பகவதி சரண்வோரா, யஷ்பால் மற்றும் ஆசாத் ஆகியோர் இணைந்து எழுதினர்.

ஆசாத்தும் மதமும்

புரட்சிகர நடவடிக்கைகளுக்கு நிதி தேவை என்பதற்காக காசிப்பூர் மடாலயத்தை கொள்ளையடிப்பதற்காக திட்டமிடப்பட்டது. அதற்காக ஆசாத் அந்த மடத்திலேயே நான்கு மாதங்களுக்கு மேல் தங்கியிருந்து அந்த மடாலயத்தின் தலைமை பீடாதிபதி இறப்பார் அல்லது அவரை கொலை செய்ய வேண்டும் என்பதற்காக காத்திருந்தார்.

மடாதிபதி இறக்காதபோது அவரை கொலை செய்வதற்கு புரட்சியாளர்கள் தயக்கம்  காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறியிருக்கிறார். இந்தத் திட்டமானது  பின்னாளில் திரும்பப் பெறப்படுகிறது.

முறுக்கிய மீசையோடும் பூணூல் அணிந்த படியும் ஆசாத் இருக்கக்கூடிய படமானது மிகவும் புகழ்பெற்றது. இந்தப் படமானது சமத்துவம் மற்றும் சித்தாந்தம் பற்றிய HSRA நிலைப்பாட்டை கேள்விக்குள்ளாக்குகிறது.

இது ஜான்சியில் ஆசாத் மாறுவேடத்தில் பிச்சைக்காரனாக ராமாயணத்தை பாராயணம் செய்தபோது எடுத்த படமாகும். அவர் பல காலங்களுக்கு முன்னரே பூணூல் அணிவதையும் மத அடையாளங்களை இடுவதையும் 1928-ஆம் ஆண்டில் மத்திய கமிட்டி எடுத்த முடிவின் அடிப்படையில் தவிர்த்துவிட்டார். பூணூல் தொடர்பாக எழுந்த விவாதத்தின் போது “தேசத்திற்காக நீங்கள் உயிர்த் தியாகம் செய்ய முனைந்தால்  கண்டிப்பாக அதையும் தியாகம் செய்வீர்கள்” என்று பதிலளித்தார்.

பல மாறுவேடங்களில் ஆசாத் ஏறத்தாழ ஆறு ஆண்டுகள் புரட்சிகர நடவடிக்கையை மேற்கொண்டார். இந்து துறவி, மோட்டார் மெக்கானிக் இப்படிப் பல வேடங்கள். ஆக மத அடையாளங்களை கருவியாகவே தலைமறைவு வாழ்க்கைக்கு பயன்படுத்தினார்.

கடைசி நாட்கள்

மத்திய சட்டசபையில் வெடிகுண்டு வீசப்பட்ட பிறகு பல தோழர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுகிறார்கள். ஆசாத்தின் கட்சியானது முற்றிலும் முடங்கியது. அப்போதும் கூட அவர் தன்னுடைய நம்பிக்கையை கைவிடாமல் மீண்டும் கட்சியை கட்டுவதற்கான முயற்சியை மேற்கொண்டார். பகத் சிங்கையும் மற்ற தோழர்களையும் எவ்வாறு சிறையில் இருந்து விடுவிப்பது என்பது தொடர்பாகவே அவர் இறுதி நாட்களில் சிந்தித்து வந்தார்.

பகத்சிங் மற்றும் தோழர்களை சிறையில் இருந்து விடுவிப்பதற்காக காங்கிரஸ் தலைவர்களான காந்தி மற்றும் நேரு ஆகியோரை சந்தித்து வலியுறுத்துவதற்காக அவர் முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், அவர் அவர்களிடமிருந்து வெற்று வாக்குறுதிகளை மட்டுமே பெற்றார்.

ஆசாத் புதிய பாதையின் வழியாக கட்சியை மீண்டும் கட்டுவதற்கு அதிகப்படியான முயற்சியை செய்தார். அதற்காகவே பம்பாய் (மும்பை) செல்வதற்கான முயற்சியை மேற்கொண்டார். அங்கு செல்வதற்கு முன் தன்னுடைய இருப்பிடத்தை அலகாபாத்திற்கு மாற்றிக் கொண்டார்.

https://www.youtube.com/watch?v=MHbAJZBTlgg

“The Legend of Bagat SIngh” என்ற இந்தி திரைப்படத்தில் ஆசாத் மரணம் தொடர்பான காட்சி

1931 பிப்ரவரி 27-ம் தேதி ஒருவரை சந்திப்பதற்காக ஆல்பிரட் பூங்காவில் காத்திருந்தார். அப்பொழுது அவரை சுற்றி வளைத்த போலீஸ் சரணடையுமாறு கூறியது. போலீஸிடம் தான் உயிருடன் கைதாக மாட்டேன் என்று அவர் ஏற்கனவே சபதம் செய்திருந்தார். அவருடைய சபதத்தை நிறைவேற்றுவதற்கான நாளும் நெருங்கிவிட்டது. ஆசாத் மிகவும் உறுதியோடு போலீஸ் பட்டாலியனை எதிர்த்து சில மணிநேரங்கள் தீவிரமான சண்டையிட்டார். பிறகு குண்டுக் காயங்களுடன் அவர் உடல் கைப்பற்றப்பட்டது. அவர் தற்கொலை செய்துகொண்டு இறந்தார் என்று மக்கள் கருதுகிறார்கள்.

தாய் நாட்டுக்காக போராடி உயிர் நீத்தவர்களில் மிகவும் நேசிக்கப்பட்டவராக ஆசாத் இப்போதும் இருக்கிறார். வலதுசாரியினர் அவருடைய படத்தை தங்களுடைய போராட்டத்தின் ஒரு பகுதியாக மாற்றுவதற்காக பயன்படுத்துகிறார்கள்.

பல பார்ப்பன இளைஞர்கள் மீசை முறுக்கி விட்டு சாதிப் பெருமையை பறைசாற்றி கொள்வதற்காக சந்திரசேகர் திவாரி என்று தங்களை பெருமையாக அழைத்துக் கொள்கிறார்கள்.

படிக்க :
♦ பிரிட்டிஷ் கைக்கூலியாகவும் தயார் ! என்னை விட்டுவிடுங்கள் | ‘வீர’ சாவர்க்கர் கடிதம் !
♦ மாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்

இந்த நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்களின் மூலமாக மட்டுமே விடுதலை அடைய முடியுமே தவிர வெளியிலிருந்து கிடைக்கக் கூடிய உதவியால் அல்ல என்பதை உறுதியாக கடைப்பிடித்த புரட்சிகர இயக்கத்தின் அசைக்க முடியாத அங்கம் ஆசாத். மத அடிப்படையிலான அரசியலை மட்டுமல்ல; மதங்களின் மீது மிகவும் கடுமையான விமர்சனங்களை கொண்டிருந்தார். ஒரு மனிதன் இன்னொரு மனிதனையோ ஒரு நாடு இன்னொரு நாட்டையோ சுரண்டாத சமூகத்தை உருவாக்குவதற்காக அவர் போராடினார் என்பதே உண்மை.


கட்டுரையாளர்கள் : ஹர்ஷவர்தன் மற்றும் பிரபாகரன் அகர்வால் – ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவர்கள்
தமிழாக்கம் : மருது, மக்கள் அதிகாரம்
செய்தி ஆதாரம் : The Wire

செயல்படாத நிலையில் புலம் பெயர் தொழிலாளர் கண்காணிப்புக் குழு || மக்கள் அதிகாரம்

திருவாரூர் மாவட்டம் காரைக்காட்டு தெருவில் திருச்சியை மையமாகக் கொண்ட சேரிட் என்கிற கட்டுமான நிறுவனத்தில் பீகாரைச் சேர்ந்த கட்டுமான தொழிலாளி சுமார் ஓராண்டுக்கு மேல் வேலைப் பார்த்து வந்தார்.  அவர் கடந்த 05/07/2021 அன்று காலை 8.20 மணி அளவில் தூக்கிடு இறந்துவிட்டார். வழக்குப் பதிவு செய்து சந்தேக மரணம் என்ற அடிப்படையில் காவல் துறை விசாரித்து வருகிறது.

இறந்த தொழிலாளிக்கு ஊனமுற்ற மனைவியும் மூன்று பெண் குழந்தைகளும் இருக்கிறார்கள். தொழிலாளியின் உடல் 10 நாட்களாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்தது.

படிக்க :
♦ “அவர்கள் எங்களை கைவிட்டு விட்டார்கள்” தமிழகத்தில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் !
♦ கொரோனா : கடனில் மூழ்கும் கூலித் தொழிலாளர்கள் !

தொழிலாளியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் சரியான முறையில் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இருந்து அவர் குடுப்பத்தினருக்கு இழப்பீடு வழங்கிட உத்தரவிட வேண்டும். அவருடைய உடலை அவரது சொந்த மாநிலமான பீகாருக்கு அனுப்பி வைக்கும் பொறுப்பை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.

மேலும், இந்த தொழிலாளியை போன்ற வெளிமாநில தொழிலாளிகள் ஆயிரக்கணக்கானோர் திருவாரூரில் வேலை செய்து வருகிறார்கள். ஆனால், அவர்களுக்கு எந்தப் உயிர் பாதுகாப்பும் இல்லாத நிலை இருக்கிறது.

ஆகவே, தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் வெளிமாநில தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்தினர்

போன்ற பல்வேறு கேரிக்கைகளின் அடிப்படையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த மனு அளிக்கு நிகழ்வில் தமிழ்நாடு ஜனநாயக கட்டுமான தொழிற்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் எஸ்.வீரசெல்வன், மக்கள் அதிகாரம் தஞ்சை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் தங்க. சண்முகசுந்தரம், CPI-ML கட்சியின் தோழர் நீதி தமிழன், மக்கள் அதிகாரம் தோழர் ஆசாத் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் உடனடியாக இதை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதனடிப்படையில் திருவாரூர் நகர காவல் நிலையத்தில், காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் தொழிலாளர் நலத்துறை மாவட்ட இயக்குனர் தலைமையில் CPI-ML கட்சியின் தோழர் வீரசெல்வம், மக்கள் அதிகாரம் தோழர் தங்க. சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்திடமிருந்து தொழிலாளி குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் நஷ்ட ஈடாக பெற்றுத் தரப்பட்டுள்ளது.

இறந்த தொழிலாளியின் உறவினர்கள் பீகாரில் இருந்து வரவழைக்கப்பட்டு அவர்கள் முன்னிலையில் தொழிலாளியின் உடல் எரியூட்டப்பட்டது. “கூலி வேலை செய்து பிழைக்கும் நாங்கள் இறந்த வரை எப்படி பார்ப்பது இந்த குடும்பத்தை எப்படி பாதுகாக்கப் போகிறோம் என்று கவலையில் இருந்தோம். ஆனால், எங்களை போன்ற தொழிலாளிகளுக்கு உண்மையாக சேவை செய்யும் அமைப்புகள் தமிழ்நாட்டில் இருக்கிறது என்பது எங்களுக்கு ஒரு புது நம்பிக்கையை கொடுத்திருக்கிறது” என்று தொழிலாளியின் உறவினர் ஒருவர் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

 

This slideshow requires JavaScript.

பிழைப்பு தேடி கூலி வேலைக்காக வரும் வெளிமாநில தொழிலாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மாவட்டம் தோறும் கண்காணிப்பு குழு இருக்கிறது. ஆனால் அந்தக் குழு இயங்காமல் இருக்கிறது. வெளிமாநிலங்களில் இருந்து குறைந்து ஊதியத்திற்காக அழைத்து வரப்படும் கூலித் தொழிலாளிகள் தாங்கள் வேலை செய்யும் நிறுவனத்தில் 12 மணி நேரம் 16 மணி நேரம் வேலை செய்கிறார்கள். அவர்களை கடுமையாக வேலை வாங்கும் நிறுவனங்களோ அவர்களுக்கு எந்தப் பாதுகாப்பும் கொடுப்பதில்லை. உழைப்புச் சுரண்டலை தடுத்து அவர்களை பாதுகாத்துக் கொள்ள தொழிலாளிகள் சங்கம் ஆவது ஒன்றுதான் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்.

தகவல் :
தங்க. சண்முகசுந்தரம்

மக்கள் அதிகாரம், தஞ்சை மண்டலம்
திருவாரூர் : 63747 41279

தேச துரோக சட்டத்தை (124-A) ரத்து செய்யுமா மோடி அரசு ? || தோழர் சுரேசு சக்தி முருகன்

தேச துரோக சட்டம் 124-A என்பது இந்திய குடிமக்களுடைய வாழ்க்கையை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்டது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஒடுக்குமுறைக்காக உருவாக்கப்பட்ட இத்தகைய அடக்குமுறை சட்டங்கள், ஒரு போதும் இந்திய அரசால் நீக்கம் செய்யப்படாது.

இந்த அடக்குமுறை சட்டங்கள் மேலும் தீவரமடையத்தான் செய்யும். அரசின் செயல்பாடுகளால் மக்கள் பாதிக்கப்படும் போது அதை எதிர்த்து குரல் கொடுக்கவோ போராடவோ முற்பட்டால், அவர்கள் இந்த அரசால் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.

குறிப்பாக கார்ப்பரேட்களின் நலன்களின் மீது எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணம் மக்களும் ஜனநாயக சக்திகளும் அடக்கப்படுவதற்கே இதுமாதிரியான மக்கள் விரோத சட்டங்கள் பயன்படும் என்பதை இந்த காணொலியில் விளக்குகிறார் வழக்கறிஞர் சுரேசு சக்தி முருகன்.

காணொளியை பாருங்கள் ! பகிருங்கள் !!

எங்களோட தடுப்பூசி எங்க மோடிஜீ ? || கருத்துப்படம்

நாடெங்கும் தடுப்பூசி பற்றாக்குறை தலை விரித்தாடுகிறது ! குறையத் துவங்கிய கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ள இந்தச் சூழலில், தடுப்பூசியை அதிகரிப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வெறும் வாயிலேயே பள்ளம் வெட்டுகிறார் மோடி !

தடுப்பூசி உற்பத்தியை தனியாருக்கு தாரைவார்த்ததன் மூலம், மக்களை அடுத்த அலைக்கு பலி கொடுக்கத் தயாராகிவிட்டு, அனைவரையும் தடுப்பூசி போட்டுக் கொண்டு பாகுபலியாகச் சொல்கிறார் மோடி !

 

கருத்துப்படம் : மு. துரை

 

கியூபா நாட்டில் அமெரிக்கா நடத்தும் அடாவடித்தனங்கள் !

மெரிக்க மேலாதிக்க வல்லரசு உலகலாவிய பயங்கரவாத அடாவடி அரசாக (Global terrorist rogue State) திகழ்கிறது. அமெரிக்க அறிஞர் நோம் சோம்ஸ்கி “அடாவடி அரசுகளின் உலக விவகாரங்களிலான வன்முறையின் ஆளுமை” என்ற தனது நூலில் அமெரிக்க மேலாதிக்க வல்லரசின் அடாவடித்தனங்களை அடுக்கடுக்காக தோலுரித்துக் காட்டியிருக்கிறார்.

அமெரிக்காவின் அருகிலேயே அமைந்திருக்கும் சின்னஞ்சிறு கியூபா நாட்டை கபளீகரம் செய்வதற்காக பன்னெடுங்காலமாக சதி வலைகளை பின்னி வருகிறது அமெரிக்கா. கியூபாவின் தலைவர் பிடல் காஸ்ட்ரோவை கொலை செய்வதற்கு அமெரிக்க சி.ஐ.ஏ. உளவுப் படை நடத்திய கடுமையான முயற்சிகள் தோல்வியடைந்து அமெரிக்க மேலாதிக்க வல்லரசின் கோரமுகம் உலக மக்கள் முன் அம்பலப்பட்டுப் போய் நின்றது அனைவரும் அறிந்த ஒன்று.

கியூபா அரசை நிலைகுலைய வைப்பதற்கான சதிச் செயல்களை அமெரிக்க மேலாதிக்க வல்லரசு அத்தோடு நிறுத்திக் கொள்ளவில்லை. இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவதாலும் அத்தனை சதிச் செயல்களையும் முறியடித்து பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே கியூபா ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வோடு இருப்பதால், அமெரிக்க மேலாதிக்க வல்லரசு கியூபாவின் மக்கள் நல அரசை சீர்குலைக்க அனைத்து முயற்சிகளையும் செய்கிறது.

படிக்க :
♦ கொரோனா : கியூபாவை எதிர்நோக்கும் பிரேசில் !
♦ இலத்தீன் அமெரிக்க நாடுகளில் சிறுவர்களுக்கு பாதுகாப்பான நாடு கியூபா !

அமெரிக்க மேலாதிக்க வல்லரசு, 60 ஆண்டுகளுக்கு மேலாக கியூபா மீது வர்த்தகத் தடையை விதித்துள்ளது. உலக வரைபடத்தில் வேறு எந்த நாடும் இத்தகைய தடைகளை சந்தித்தது இல்லை. வர்த்தக தடை விதித்ததால் வேறு எந்த நாடும் கியூபாவுடன் வர்த்தகப் பரிவர்த்தனையில் ஈடுபட இயலவில்லை. உயிர் காக்கும் மருந்துகளைக் கூட கியூபாவால் இறக்குமதி செய்ய இயலவில்லை.

29 ஆண்டுகளாக ஐ.நா சபையின் பெரும்பான்மை தேசங்களும் கியூபா மீது உள்ள வர்த்தக தடையை நீக்க வேண்டும் என தீர்மானம் கொண்டு வந்தன. 184 நாடுகள் தடையை நீக்க ஆதரவு தெரிவித்தன. அமெரிக்காவும் இஸ்ரேலும் அந்தத் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த பொருளாதாரத் தடையால் கியூபா 29 ஆண்டுகளில் 150 பில்லியன் டாலர் (ரூ. 11,25,000 கோடி) நஷ்டம் அடைந்து உள்ளது.

இந்த தடைகளையும் தாண்டி, கொரோனா வைரஸை தடுத்து நிறுத்த சிறந்த தடுப்பூசிகளை கியூபா உருவாக்கியுள்ளது. இந்த தடையால் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் சில நாடுகளிலிருந்து தடுப்பூசி மருந்துகளை பெறுவதற்கு கியூபாவிற்கு இயலவில்லை. அமெரிக்காவில் உள்ள ஜனநாயக சக்திகள், மனித நேயர்கள் அமெரிக்க மேலாதிக்க வல்லரசின் இரக்கமற்ற அரக்கத்தனத்தை  கண்டித்து  “கியூபாவிற்கு ஊசிகள், மருந்துகளைக் கொடு” என்ற இயக்கத்தை நடத்துகின்றனர்.

VIDEO: Cuban People Pay Tribute to Fidel Castro at Revolution Sq

உலகம் முழுவதும் தொடரும் கொரோனா நெருக்கடி காரணமாக சமீபத்தில் கியூபாவில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கியூபாவில் தற்பொழுது ஏற்பட்டுள்ள இப்பிரச்சினையை ஊதிப் பெருக்கி அங்கு குழப்பத்தை ஏற்படுத்த அமெரிக்க மேலாதிக்க வல்லரசு தீவிரமாக முயல்கிறது. அங்கிருக்கும் வலதுசாரி அமெரிக்க அடிவருடிகளைக் கொண்டு போராட்டங்களை நடத்தி வருகிறது. கியூபாவில் சமூக ஊடகங்கள் வழியாக புதுவித போரை கியூபாவிற்கு எதிராக நடத்துகிறது. அர்ஜெண்டினா தேசத்தின் தீவிர வலதுசாரியும்  அமெரிக்க கைக்கூலியுமான அகஸ்டின் அந்தோணி என்ற செயல்பாட்டாளர் பல்லாயிரக்கணக்கான ட்விட்டர் கணக்குகளைத் தொடங்கி கியூபாவுக்கு எதிரான பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளார். தொழிலாளர் இயக்க தலைவர்களை, இடதுசாரி சிந்தனையாளர்களை இழிவு செய்வதையே முழு நேரத் தொழிலாக கொண்டிருப்பவன் தான் அகஸ்டின் அந்தோணி என்ற இந்த வலதுசாரி.

கியூபாவிற்கு எதிரான சதித் திட்டங்களுக்கு தலைமையிடமாக புளோரிடா மாநிலத்தில் உள்ள மியாமிச் நகரம் உள்ளது. “நாங்கள் செய்திகளை உற்பத்தி செய்கிறோம்; முதல் வெளிச்சம் பாய்ச்சப்படுவதே சிறந்த செய்தி” என்று கூறுகின்றன இந்த சமூக வலைத்தளங்கள்.

ஆட்டுக்குட்டிக்கு ஓநாய் காவல்” என்பது தான் ஏகாதிபத்திய சித்தாந்த அடித்தளம். உளவுத் தொழில் நுட்பம், புரட்சி எதிர்ப்பு வகுப்புகள் என பயிற்சி கொடுக்கப்பட்டு தான் பொய்யையும் புனை சுருட்டையும் சமூக ஊடகங்களில் ஏகாதிபத்திய எடுபிடிகள் பரப்புகின்றனர்.

10-07-2021 தேதியன்று கியூபாவில் ஆர்ப்பாட்டங்களும் பெரும் குழப்பங்களும் நடைபெற்றன. கியூபாவின் சான் அன்டோனியோ என்ற இடத்தில் கியூப அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த செய்தியை டிவிட்டர் கணக்கின் மூலம் உலகம் முழுவதும் பரப்பினர். அமெரிக்க கடற்படையின் yusneby என்ற கணக்கின் மூலமாகவே இச்செய்தி பரப்பப்பட்டுள்ளது. கியூபாவின் ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசுக்கு எதிராக பெரும் பேரணிகள் நடத்தப்பட்டதாக அமெரிக்காவின் பித்தலாட்ட செய்தியை இந்திய ஊடகங்களும் அப்படியே வாந்தி எடுத்தனர்.

அமெரிக்க மேலாதிக்க வல்லரசின் பிரதிநிதி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பல ஆண்டுகளாக அடக்குமுறைக்கும் பொருளாதார துன்பங்களுக்கும் ஆட்பட்ட போது விடுதலைக்காக போராடும் கியூபா மக்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம் நிற்கிறோம் என்று நீலிக் கண்ணீர் வடித்தார்.

ஏகாதிபத்திய எடுபிடி கும்பலின் எதிர்ப்பு ஆகப் பெரும்பான்மையான கியூபா மக்களால் நிராகரிக்கப்பட்டது. பொருளாதார துன்பங்களின் மூலம் இன்னலுக்கு உள்ளாகும் கியூபா மக்களின் உணர்வைத் தூண்டிவிட்டு கியூபாவின் மக்கள் நல அரசை கவிழ்த்து விடலாம் என்று எண்ணிய அமெரிக்க மேலாதிக்க வல்லரசின் கனவு தகர்ந்தது.

அமெரிக்க நாட்டில் குடியேறிய கியூபா நாட்டினரை தெற்கு புளோரிடா மாகாணத்தில் இயங்கும் தீவிரவாத கும்பலை வைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனர். கியூபா தூதரகத்தின் முன் குண்டுகளை வீசினர். கியூபா நாட்டினர் மீது தொடுக்கும் தாக்குதலை நிறுத்த வேண்டும். கியூபா மீதான முற்றுகையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று சீன அரசு கூறியுள்ளது. வெனிசுலா, மெக்சிகோ ஆகிய நாடுகள் தங்களது முழு ஆதரவையும் கியூபா நாட்டிற்கு வழங்கியுள்ளன.

படிக்க :
♦ எத்தியோப்பிய உள்நாட்டுப் போர் : அமெரிக்காவின் மறைமுக ஆக்கிரமிப்புப் போரே !!
♦ கம்யூனிச அபாயம் : சிரியாவை சீர்கெடுத்த அமெரிக்காவின் கிரிமினல் வரலாறு !

அமெரிக்கா நடத்துகின்ற அத்தனை அடாவடித்தனங்களை, உலக நாடுகளும், உலக பாட்டாளி வர்க்கமும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. அமெரிக்காவின் அட்டூழியங்களை சகித்துக் கொள்ள கியூபா தனித்து விடப்படவில்லை. உலக சமாதானத்துக்கான அமைப்புகள் தங்களது பலத்த கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. சமூக மாற்றத்துக்கான புரட்சிகர அமைப்புகள், சமூக இயக்கங்கள், அறிவுத்துறையினர், மனிதநேய சிந்தனை உள்ள தலைவர்கள் உள்ளிட்டவர்கள் கியூபா மக்களுக்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

தத்துவார்த்த ரீதியில் சில சிதைவுகளும் மாற்றங்களும் நிகழ்ந்துள்ள போதும், கியூபா நாட்டினுடைய அரசு மக்கள் நல அரசாக இருக்கிறது. அமெரிக்க மேலாதிக்க வல்லரசின் அத்துமீறிய தலையீட்டை, அடாவடித்தனத்தை முறியடித்து நாட்டையும் மக்களையும் பாதுகாக்க வேண்டியது சர்வதேச ஜனநாயக சக்திகள் மற்றும் பாட்டாளி வர்க்கத்தின் கடமை. இந்தியத் துணை கண்டத்தில் சமூக மாற்றத்திற்காக போராடும் புரட்சிகர இயக்கத்தின் போராளிகளுக்கும், மக்களுக்கும் இந்த மகத்தான கடமை உள்ளது.


இரணியன்

செய்தி ஆதாரம் : டெலிசர்

தமிழ்நாட்டின் மீதான தாக்குதல்களை முறியடிப்போம் || மக்கள் அதிகாரம் வெளியீடு

மிழகம் பாலைவனம் ஆகாமல் தடுப்பது உழைக்கும் மக்களாகிய நம் அனைவரது கடமையுமாகும். தேர்தல் அரசியல் கட்சிகளை நம்பி அன்று ஜல்லிக்கட்டுப் போராட்டம் தொடங்கப்படவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்த மோடிக்கு எதிரான போராட்டங்கள் எத்தனையெத்தனை?

தமிழகம் தழுவிய கடையடைப்பு, கருப்புக்கொடிப் போராட்டம், எங்கு காணினும் ஆர்ப்பாட்டங்கள் – மறியல்கள், மோடி சென்னைக்கு வந்த போது மூத்திர சந்து வழியாக ஐ.ஐ.டி.க்கு செல்ல வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்திய போராட்டங்கள் என பல போராட்டங்களை தமிழகம் முன்னெடுத்திருக்கிறது. இவை போன்ற போராட்டங்களே இன்று நமக்கு அவசியமானவை.

தொடர்ந்து தமிழ்நாட்டின், தமிழினத்தின் மீது நடத்தப்படும் அடக்குமுறைக்கு முடிவு கட்ட வேண்டுமெனில், தேசிய இனத்தின் நியாயவுரிமைக்காகவும், மோடி அரசின் கார்ப்பரேட் – காவி பாசிசத் திட்டங்களுக்கு எதிராகவும் அனைத்துப் பிரிவு உழைக்கும் மக்களும் ஓரணியில் திரண்டு போராடுவதுதான் ஒரே வழி.

நம்மீது திணிக்கப்படும் கார்ப்பரேட்-காவி பாசிச திட்டங்களுக்கு எதிராகவும் கார்ப்பரேட் கம்பெனிகளின் சுரண்டலுக்கு எதிராகவும் வீறுகொண்டு போராட வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் மக்களின் வாழ்வாதாரங்களைச் சுரண்டும் கார்ப்பரேட்டுகள் மற்றும் அவர்களது கைக்கூலிகளான ரியல் எஸ்டேட் முதலாளிகள், புரோக்கர்கள், அரசு அதிகாரிகளை மக்களின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வரவேண்டும்.

அந்தந்த ஊரில் இருக்கும் வளங்களின் மீது உள்ளூர் மக்கள் அதிகாரம் செலுத்தும் வகையில் உண்மையான ஜனநாயகத்திற்கான மாற்று அதிகார மன்றங்களைக் கட்டியமைக்க உழைக்கும் வர்க்கங்கள், மக்கள் ஓரணியில் திரண்டு போராடுவோம்! மக்கள் எழுச்சியின் மூலம் இதனை சாதிப்போம்!

மேக்கேதாட்டு அணை – யார்கோன் அணை – நீட் தேர்வு :
தமிழகத்தின் மீதான தாக்குதல்களைத் தகர்த்தெறிவோம் || மக்கள் அதிகாரம் வெளியீடு

விலை ரூ. 10

தகவல் :
மக்கள் அதிகாரம்
சென்னை

பாசிச கும்பலுக்கு புரோக்கர் வேலை பார்க்கும் தினகரன் நாளிதழ்

பாசிச மோடி அரசின் ஆட்சியில், தொடர்ச்சியாக பத்திரிகை சுதந்திரம் நெறிக்கப்பட்டு, பத்திரிகையாளர்கள் மிரட்டப்பட்டும், கொல்லப்பட்டும் வரும் சூழல் நிலவுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பத்திரிகையாளர்கள் மிரட்டப்படுவதும், பணிநீக்கம் செய்யப்படுவதும் மிகவும் அதிகமாக நடந்திருக்கிறது.

இந்தியா முழுவதும் கடந்த ஏழாண்டுகளாக, தமது பாசிச நடவடிக்கைகளை அம்பலப்படுத்தும் பத்திரிகையாளர்களை சிறையில் தள்ளியும் மிரட்டியும் வந்திருக்கிறது பாஜக. சமீபத்தில் கூட 40 பத்திரிகையாளர்களின் அலைபேசிகளில், திருட்டுத்தனமாக ஒட்டுக் கேட்கும் ஒற்று மென்பொருளை நிறுவி அவர்களைக் கண்காணித்து வந்த சம்பவம் ஆதாரப் பூர்வமாக அம்பலமாகியிருக்கிறது.

இந்நிலையில், தங்களை அம்பலப்படுத்தும் பத்திரிகைகளைக் குறிவைத்து அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ. ஆகியவற்றின் மூலமாக ரெய்டுகளை நடத்தி, அவற்றை முடக்குவதற்கான வேலைகளையும் செய்து  வருகிறது பாசிசக் கும்பல்.

”நியூஸ் க்ளிக்” எனும் இணையதளம், மோடி ஆட்சியில் நடைபெறும் கார்ப்பரேட் முறைகேடுகளையும், இந்துத்துவ வெறியாட்டங்களையும் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறது. அந்த செய்தி நிறுவனத்தினை மிரட்டி பணியச் செய்யும் வகையில் சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு அந்நிறுவனத்தில் அமலாக்கத்துறை தேடுதல் வேட்டையை நடத்தியது.

படிக்க :
♦ அரசின் கையாலாகா நிலையை மறைக்க தேசியவெறியை கிளப்பும் தினகரன் !
♦ கொங்கு நாடு : கொளுத்திப் போட்ட தினமலர் – ஊதிவிடும் மாலன்

அதன் பின்னர், அந்நிறுவனம் அந்நிய நாடுகளில் இருந்து முறைகேடான முறையில் நிதிபெற்று வந்ததாக பொய்யான குற்றச்சாட்டுகளை, அதிகாரப்பூர்வமற்ற வகையில் கசியவிட்டது. இதனை பல்வேறு ஜனநாயக ஊடகங்களும் கடுமையாகக் கண்டித்தன. இதற்கு எதிரான வழக்கு நீதிமன்றத்த்ல் நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று (19.07.2021), நியூஸ் கிளிக் நிறுவனம் குறித்து ஒரு செய்தியை தினகரன் நாளிதழ் வெளியிட்டிருந்தது.

இலங்கையைச் சேர்ந்த சிங்கம் உதவி : சீனாவுக்கு ஆதரவாக ரூ 38 கோடி வாங்கிய ஊடகம் அமலாக்கத் துறை திடுக்கிடும் தகவல்” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தது தினகரன்.

செய்தியின் உள்ளடக்கத்தில், நியூஸ் கிளிக் ஊடகத்தின் நிதிப் பரிமாற்றங்களை கண்காணித்து வந்த அமலாக்கத் துறை, “கடந்த 2018 முதல் 2021 வரையிலான காலத்தில், சீனாவுக்கு ஆதரவாக செய்தி வெளியிட இந்நிறுவனத்துக்கு 38 கோடி ரூபாய் பணம் கொடுக்கப்பட்டது உறுதியானதாக” தகவல் தெரிவித்திருப்பதாகக் கூறி செய்தி வெளியிட்டது.

மேலும், இலங்கையைச் சேர்ந்த க்யூப வம்சாவளி தொழிலதிபர் நெவில்லே ராய் சிங்கம் என்பவர் இந்த பணப் பரிமாற்றத்துக்குப் பின்புலமாக செயல்பட்டுள்ளார் என்றும் இதில் குறிப்பிட்ட தொகை எல்கர் பரிஷத் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கவுதம் நவ்லகா உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், நவ்லகாவிடம் இதுகுறித்து விசரித்து வருவதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.

இந்தச் செய்தியை வெளியிட்டுள்ள தினகரன், அதற்கான அடிப்படை ஆதாரத்தைப் பற்றியோ, அது குறித்து அச்செய்தி பிரசுரமாவதற்கு முன்பே (18.07-2021 அன்றே) அமலாக்கப் பிரிவின் அவதூறுக்கு மறுப்புத் தெரிவித்து நியூஸ் கிளிக் இணையதளத்தின் ஆசிரியர் பிரபிர் பர்கய்ஸ்தா வெளியிட்டுள்ள மறுப்பையோ வெளியிடவில்லை.

பாசிச மோடி அரசு, ஊடகங்களை முடக்குவதற்கு அமலாக்கத் துறை, வருமானவரித் துறை ஆகியவற்றைப் பயன்படுத்துவது குறித்து சாதாரண நபர்களுக்கே தெரிந்திருக்கும் இந்தச் சூழலில், அனைத்து அறிந்திருக்கும் தினகரன், இதுபோன்ற மொட்டைச் செய்திகளை அதற்கான விளக்கம் ஏதுமின்றி வெளியிட்டுள்ளது.

நியூஸ் கிளிக் செய்தி நிறுவனத்தில் நடத்தப்பட்ட அமலாக்கப் பிரிவு தேடுதல் வேட்டை குறித்து வழக்கு நடைபெற்று வரும் நிலையில், இப்படி பொருத்தமற்ற அரைகுறை தகவல்களை அமலாக்கத்துறை ஊடகங்களுக்கு கசியவிட்டு வருவதாகவும், அது குறித்து சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தமது தளத்தில் தெரிவித்திருக்கிறார், நியூஸ்கிளிக் இணையதளத்தின் ஆசிரியர் பிரபிர் பர்கய்ஸ்தா.

கடந்த 18-07-2021 அன்றே நியூஸ் கிளிக் இணையதளத்தில் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், அமலாக்கத்துறையிலிருந்து கிடைக்கப்பெற்ற செய்தியின் அடிப்படையில் ஒரு இழிவான பிரச்சாரம் நியூஸ் கிளிக் தளத்திற்கு எதிராக நடத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டே அந்த அறிக்கையை துவக்குகிறார்.

நியூஸ் க்ளிக் இணையதளத்தின் மீது செய்யப்பட்டுள்ள, அந்நிய நேரடி முதலீடுகள் மற்றும் அதன் குழுச் சேவைக்காக வழங்கப்பட்ட கட்டணம் ஆகியவை குறித்துதான் அமலாக்கத்துறை விசாரித்தது என்றும், இவை அனைத்தும் வெளிப்படையான வங்கிப் பரிவர்த்தனை மூலமும், முறையான அரசு பிரதிநிதிகள் வாயிலாகவுமே நடைபெற்றவை என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேற்கூறிய இருவகையான பணப் பரிவர்த்தனையும் நம்பிக்கைக்குரிய அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளில் இருந்தும் இந்தியா மற்றும் அமெரிக்காவின் சட்ட வழிமுறிகளுக்கு உட்பட்டே நடத்தப்பட்டுள்ளன. இத்தகைய தாக்குதல்களால் நியூஸ் கிளிக் பணிந்துவிடாது என்றும் தொடர்ச்சியாக தனது பத்திரிகைப் பணியை துணிவுடன் செய்யும் என்றும் அந்த அறிக்கையில் கூறியுள்ளார் நியூஸ் கிளிக் இணையதளத்தின் ஆசிரியர்.

மோடியின் ஊடக ஒடுக்குமுறைக்கு ஒத்து ஊதும் விதமாக ஒரு செய்தியைப் பற்றி முழுமையான விவரத்தை வெளியிடாமல், பாசிச கும்பலுக்குச் சேவை செய்யும் வகையிலேயே செய்தி வெளியிட்டுள்ளது தினகரன்.

நியூஸ் கிளிக்கிற்கு எதிரான பாசிச கும்பலின் இழி பிரச்சாரத்தில் பங்குகொண்ட தினகரன் அதோடு நிற்கவில்லை. பாசிச கும்பலின் அடுத்த ஆயுதத்தையும் வாசகர்களின் மீது பிரயோகித்திருக்கிறது.

பாஜக தலைமையிலான பாசிச கும்பல் மக்களை திசைதிருப்பவும், ஏமாற்றவும் கையில் வைத்திருக்கும் மற்றொரு ஆயுதம், போலி தேச பக்தி மற்றும் பாகிஸ்தான், சீன எதிர்ப்பு உணர்வுகளைத் தூண்டுவதுதான். பிரச்சினை முற்றி வரும் சுழலில் இது போன்ற தேசபக்த விவகாரங்களைக் கிளப்பிவிட்டு, குளிர்காய்வது பாஜகவின் வழக்கம்.

காலங்காலமாக அதை மக்களிடம் கொண்டு சென்று வியாபாரம் செய்வதிலும் தினகரனுக்கு நிகர் தினகரன் தான்.

அதே 18-07-2021 தேதிக்கான நாளிதழில், “ஆப்கானிஸ்தானில் இந்தியாவால் உருவாக்கப்பட்ட சொத்துக்களை தாக்கி அழியுங்கள்.” என்ற தலைப்புடன். “தலிபான் தீவிரவாதிகளுக்கு பாக். உத்தரவு. 10000 வீரர்களை உதவிக்கு அனுப்பியது. ” என்ற உபதலைப்புடன் ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறது.

படிக்க :
♦ ஓ.டி.டி., சமூக ஊடகங்கள், மின்னணு செய்தி ஊடகங்களை முடக்கத் துடிக்கும் மோடி !
♦ டிஜிட்டல் ஊடகங்களின் மீதான மோடி அரசின் தாக்குதல்

இந்தியாவின் பல ஆயிரம் கோடி நிதியுதவி மூலமாக பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்கள் ஆப்கனில் நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும், அந்த கட்டிடங்கள் எல்லாம் இந்தியாவின் பெருமை பேசுவதால், அவற்றை அழிக்க பாகிஸ்தான் 10000 வீரர்களை தாலிபான்களோடு அனுப்புவதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ‘அதிர்ச்சித்’ தகவலை இந்திய உளவுத்துறை நிறுவனங்கள் தெரிவித்ததாகத் தெரிவிக்கிறது இந்தச் செய்தி.

தாலிபான்களின் ஆட்சி ஆப்கானில் வந்தால் பாதிக்கப்படப் போகும் நாடுகளில் பிரதானமானது பாகிஸ்தான் தான். எனில் தாலிபான்களுடன் ஏன் தனது படை வீரர்களை பாகிஸ்தான் அனுப்பப் போகிறது? இந்தியக் கட்டிடங்களை உடைக்க 10000 வீரர்களை தாலிபன்களுடன் அனுப்பும் அளவிற்கு பாகிஸ்தானிடம் பண பலம் உள்ளதா ? என அடிப்படையான சில கேள்விகளிலேயே உடைந்துவிடத்தக்க ஒரு வாதத்தை பெரும் உளவுத்துறை தகவலாகக் கூறி, பாகிஸ்தான் எதிர்ப்பு மனநிலையையும் தேசிய வெறியையும் தூபம் போட்டு வளர்க்கிறது தினகரன்.

ஒருவேளை இப்படி ஒரு விவகாரம் நடைபெற்றிருந்தால் கூட, அதை அதிகாரப் பூர்வமாக சொல்லவேண்டியது இந்திய அரசு தானே ஒழிய, உளவுத்துறை அல்ல. இப்படி இழிவான வகையில் தேசிய வெறியை தேர்தல் சமயத்தில் பாஜக அறுவடை செய்யும் வகையில் வளர்த்துவிடுகிறது தினகரன்.

பாசிசக் கும்பலுக்குச் சேவை செய்யும் வகையிலான இது போன்ற செய்திகளை தினகரனில் அன்றாடம் காணலாம். தினமலர், தினமணி, துக்ளக் போன்ற பத்திரிகைகள் வெளிப்படையாகவே பாசிச கும்பலை ஆதரிக்கும் வகையில் செய்திகளை வெளியிடுவார்கள். இவர்கள் பாஜக-வை ஆதரித்துக் கொண்டே பாசிச சித்தாந்தத்தையும் பரப்புவார்கள்.

ஆனால் தினகரன் போன்ற பத்திரிகைகள், பாஜக-வை எதிர்த்து செய்து வெளியிட்டுக் கொண்டே பாசிச சித்தாந்தத்திற்கு மறைமுகமாக புரோக்கர் வேலை செய்கின்றன. இப்படி நைச்சியமாக பாசிசத்திற்கு சேவை செய்யும் தினகரன் குழுமத்தை தொடர்ந்து அம்பலப்படுத்துவதுதான் ஜனநாயகத்தை பாசிசத்தின் பிடியிலிருந்து காப்பதற்கான ஒரே வழி !

கர்ணன்
செய்தி ஆதாரம் : தினகரன் நாளிதழ் – 19-07-2021

பசில் ராஜபக்சேக்கு அமைச்சர் பதவி : ராஜபக்சே குடும்பத்தின் பிடியில் இலங்கை || ரிஷான் ஷெரிஃப்

சில் ராஜபக்சேவின் பாராளுமன்றப் பிரவேசம் குறித்து விவாதங்கள் செய்வது பயனற்றதொரு செயல். பசில் பாராளுமன்றத்துக்குப் பிரவேசிப்பதில் தவறென்ன இருக்கிறது? தவறு என்றால் அப்பிரவேசம் இந்தளவு தாமதித்தது மாத்திரம்தான்.

பசில் பாராளுமன்றம் வராதிருந்த கடந்த காலம் முழுவதும் அரசாங்கத்தின் முக்கியமான தீர்மானங்கள் அனைத்தும் அவரது ஆலோசனைக்கும், ஆசிர்வாதத்துக்கும் ஏற்பவே எடுக்கப்பட்டன. ஆகவே, பசில் பாராளுமன்றத்தில் இருப்பதுவும், இல்லாதிருப்பதுவும் ஒன்றுதான்.

படிக்க :
♦ லைக்கா குழுமம் : மோடிக்கு வரவேற்பு – ராஜபக்சேவுடன் தொழில் கூட்டணி !
♦ கொழும்பு துறைமுக நகரம் : சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் இலங்கை !

எப்போதும் பசிலின் அறிதலோடுதான் அனைத்தும் நடைபெறுகின்றன. பசில் பாராளுமன்ற அமைச்சர் பதவியை ஏற்று அமைச்சைப் பொறுப்பேற்பது அவரது அரசியல் தலையீடுகளுக்கு இலகுவாக இருக்கும். பசில் அமைச்சர்களுக்கு பேச்சால் மாத்திரமல்லாது உடலாலும் தாக்கக் கூடிய ஒருவர் என்பதால் பெரும்பாலானோர் பசிலின் பாராளுமன்றப் பிரவேசத்தை விரும்புவதில்லை.

பசில் ராஜபக்சே

ராஜபக்சேக்களை ஆட்சியில் அமர்த்திய பின்னர் அவர்களுள் நல்ல ராஜபக்சே, மோசமான ராஜபக்சே என்ற வேறுபாடு இல்லை. அவ்வாறான நிலைமையில் பசில் ராஜபக்சேவின் பாராளுமன்றப் பிரவேசம் குறித்தும், அமைச்சைப் பொறுப்பேற்றது குறித்தும் உரையாடுவது வெறுமனே எமது காலத்தைத்தான் விரயமாக்கும். ராஜபக்சேவின் குடும்பத்தோடு தொடர்புடைய அனைவருக்கும் அரசாங்கத்தின் உயர் பதவிகளை வழங்கிக் கொண்டிருக்கும் இந்த அரசாங்கத்தில் பசிலின் பாராளுமன்றப் பிரவேசம் ஒரு வியப்புக்குரிய விடயமல்ல.

ஒரு குழு ‘பசில் வேண்டும், பசில் இல்லாமல் நாட்டை முன்னேற்ற முடியாது’ என கூச்சலிட்டுக் கொண்டிருக்கையில் அதைக் கேட்டு ஆவேசம் கொண்டு பதிலுக்குக் கூச்சலிடுவது முட்டாள்தனமேயன்றி வேறில்லை. பசிலை சிறப்பாக வரவேற்று அவருக்கு விருப்பமான விதத்தில் செயற்பட இடமளிப்பது போன்ற அரசியல் இலாபமளிக்கும் செயற்பாடு இந்த அரசாங்கத்துக்கு வேறில்லை. பசில் இல்லாததால் அல்லாது, பசிலின் செயற்பாடுகளாலும்தான் தற்காலத்தில் அரசாங்கம் செயலிழந்து போயிருக்கிறது.

பசிலின் நோக்கமெல்லாம் பாராளுமன்றத்துக்குள் பிரவேசித்து, வரப்போகும் இலாபங்கள் அனைத்தையும் சுருட்டிக் கொள்வதுதான். அதில், அவர் மிகவும் திறமை வாய்ந்தவர். இந்த விடயத்தில் இந்த ராஜபக்சேக்கள் அனைவருமே ஒன்றுபோலவே எப்போதும் செயற்படுகிறார்கள். அதை விளங்கிக் கொள்ளாமல் அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டு பிரியும் வரைக்கும் காத்திருப்பது தவறு. இந்த சமூகத்தின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதுதான் ராஜபக்சேக்களின் நோக்கம். கைப்பற்றியதுமே அதை குடும்ப அதிகாரமாக நிலைநிறுத்தி விடுவதிலும் அவர்கள் திறமை வாய்ந்தவர்கள்.

நாமல் ராஜபக்சே

நாமல் ராஜபக்சே அருமையானதொரு உதாரணத்தைக் கூறியிருக்கிறார். அதாவது ஒரு முச்சக்கர வண்டியின் முன்னாலிருக்கும் சக்கரம் மஹிந்த ராஜபக்சே என்றும், பின்னாலிருக்கும் சக்கரங்கள் இரண்டும் பசிலும், கோத்தாபய என்றும் கூறியிருக்கிறார். இந்த மூன்று சக்கரங்களும் இல்லாமல் வண்டி முன்னோக்கி நகராது என்றும் கூறுகிறார். அந்த வண்டிக்குள் சுகமாக அமர்ந்து பயணித்துக் கொண்டிருப்பவர்கள் நாமலும், யோஷிதவும், ரோஹிதவும் என்பது இதில் அவர் சொல்லாமல் போன விடயம்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது, அநாதரவாகிப் போயிருந்த ராஜபக்சேக்களை கை கொடுத்துத் தூக்கி விடுவதில் பசிலின் செயற்பாடுகள் மிக அதிகளவில் பங்காற்றின. அந்த ஒருமைப்பாட்டின் பலம் மிக உயர்ந்தது. அவ்வாறான நிலைமையில் பசிலை இவ்வளவு காலம் பாராளுமன்றத்துக்குக் கூட்டி வராதிருந்ததே பெரும் பிழை. பசில் வந்ததன் பின்னர் இந்த நாடு செழிப்புறும் என்று கூற முடியாவிட்டாலும், ராஜபக்சேக்களின் ஆதாயம் தேடும் செயற்பாடுகள் செழித்து ஓங்கி வளரும் என்பது நிச்சயம். அக்காலத்தில் பசிலை எதிர்த்த அமைச்சர்களும், பசில் அமைச்சைப் பொறுப்பேற்று பதவியேற்ற பின்னர் அவரது இரு பாதங்களையும் முத்தமிடத் தயாராகவே இருப்பார்கள்.

பசிலுக்கும் அமைச்சைப் பொறுப்பை கையளித்ததன் பிறகு அதிகாரங்கள் பலதும் அவர் வசமாகும். ஆகவே, பாராளுமன்றத்திலுள்ள ஏனைய அமைச்சர்கள் பெயரளவில் மாத்திரம் அமைச்சர்களாக இருக்கும் நிலைமை உருவாகும். அவ்வாறான நிலைமையில் அனைத்து அதிகாரங்களும் ராஜபக்சேக்களுக்கே உரித்தாகும்.

நாட்டில் அறுபத்தொன்பது இலட்சம் பேர் பெரும்பான்மை வாக்களித்து ராஜபக்சே அரசாங்கத்திடம் கையளித்த ஆட்சியில் ராஜபக்சேக்களின் நோக்கம் இந்தத் தருணத்தில் மிகச் சரியாக ஈடேறிக் கொண்டிருக்கிறது. இனி பசில் பொறுப்பைக் கையேற்றதன் பிறகு நாட்டில் மீண்டும் ராஜபக்சே யுகமே தலை விரித்தாடும்.

எம்.ரிஷான் ஷெரீப்

disclaimer

ஒழித்துக் கட்டப்பட வேண்டிய மக்கள் தொகை கட்டுப்பாட்டு மசோதா!

பொது சுகாதாரம் மற்றும் சமூக வளர்ச்சித் துறையில் பணிபுரியும் பலரும் சமீபத்தில் உத்தரப் பிரதேச அரசால் கொண்டுவரப்பட்ட மக்கள் தொகை (கட்டுப்படுத்துதல், உறுதிப்படுத்துதல், நலம்) 2021-ஆல் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த மசோதாவானது, இரு குழந்தைகள் மட்டும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதை சட்டப்படியாக்குவதில் கவனம் கொண்டுள்ளது. மேலும், இதனை நடைமுறைப்படுத்துவதற்காக சலுகைகள் மற்றும் சட்ட மீறலுக்கான அபராதம் ஆகியவற்றை குறிப்பிடுகிறது. இந்த மசோதாவின் உள்ளார்ந்த அபாயங்களால் எதிர்மறை விளைவுகள் அதிகரிக்கின்றன.

ஆனால், பெரும்பான்மையான நிபுணர்கள் “வளர்ச்சியே கருத்தடைக்கான சிறந்த வழிமுறை” என்று கூறுகின்றனர். சலுகைகள் – அபராதங்கள் போன்ற பகுத்தறிவற்ற மூடத்தனமான நடவடிக்கைகளால் உறுதியற்ற நீண்ட பயணத்தை நோக்கி செல்ல முடியுமே தவிர தீர்வை அல்ல.

படிக்க :
♦ உ.பி : முசுலீம்களை எதிரிகளாக சித்தரிக்க துணைபோகும் மக்கள் தொகை வரைவு !
♦ இந்திய மக்கள் தொகையில் பாதியளவு வறுமைக்கு தள்ளப்படுவார்கள் : உலக வங்கி அறிக்கை !

1994-ம் ஆண்டில் திட்டமிடல், நடைமுறைக்கான மக்கள்தொகை மற்றும் வளர்ச்சி பற்றிய சர்வதேச மாநாடு நடைபெற்றது. அம்மாநாடானது “கடுமையான முறையில் கட்டாயப்படுத்துதல், சலுகை மற்றும் அபராதங்கள் போன்றவை மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் மிக மிகச் சிறிய பங்கையே ஆற்றும். அதற்குப் பதிலாக மக்களையே தெரிவு செய்யும் முறையை கையாளுவதன் மூலம் மட்டுமே நோக்கத்தை நிறைவேற்ற முடியும்” என்று தெரிவித்தது. அந்த மாநாட்டில் இந்தியாவும் கையொப்பமிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐயத்திற்கிடமின்றி எளிய முறையில் வெளிப்படையாக நம்முடைய கவனத்தை கல்வி, தாய்மை, குழந்தை மருத்துவம் மற்றும் வாழ்வாதாரம் மற்றும் சுகாதார சேவைகள் ஆகியவைகளை மேம்படுத்துவதை முக்கிய தந்திரங்களாக நடைமுறைப்படுத்தும் போது மட்டுமே மக்கள் தொகையை நிலைப்படுத்துவதை உறுதிப்படுத்த முடியும். இதனை தேசிய மக்கள்தொகை கொள்கை (2000) ஆனது தெரிவித்தது. இக்கொள்கையானது இப்போதும் எதிரொலித்த வண்ணமே இருக்கின்றது.

தர்க்க ரீதியாகவும் பகுத்தறிவு ரீதியாக காணும்போது சர்வதேச மற்றும் தேசத்தின் வெளிப்பாடு என்பது கூட சலுகைகள் மற்றும் அபராதங்களுக்கு எதிரானதாகவே உள்ளது. மேலே குறிப்பிட்ட வளர்ச்சி நடவடிக்கைகளுக்கு ஆதரவாக மக்கள் தொகை கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும் என்பதானது உத்தரப் பிரதேசம் மற்றும் மற்ற மாநிலங்களுக்கும் பொருந்தக் கூடியது.

மக்கள் தொகை நிலைப்படுத்தலின் அடையாளம்

காரண காரியங்களின் அடிப்படையில் வந்தடையப்பட்ட கோட்பாடானது கீழ்க்கண்ட உண்மைகளை தெரிவிக்கிறது. அவற்றை எப்பொழுதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இரு குழந்தை கொள்கையானது மீண்டும் மீண்டும் எதார்த்தத்தைப் பொருட்படுத்தாமல் கட்டாயப்படுத்துவதன் பெயரில் நிலையற்று சென்று கொண்டிருக்கிறது.

உத்திரப் பிரதேச தாய்மார்களின் கருவுறும் விகிதமானது தேசிய குடும்ப சுகாதார கணக்கீட்டின்படி 2.1 என்ற அளவில் உள்ளது. பத்து வருடங்களுக்கு முன்பு 3.8 என்ற விகிதத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனை அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை வளர்ச்சியோடு ஒப்பிட வேண்டும். இதுபோலவே குழந்தை இறப்பு விகிதம், தாய்மார்கள் இறப்பு விகிதம், ஊட்டச்சத்து குறைபாடு போன்றவைகளும் மேற்குறிப்பிட்ட ஆண்டுகளோடு ஒப்பிடும்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது.

பல மாநிலங்களின் தொடர் முயற்சியின் விளைவாக குழந்தை பிறப்பு வீதமானது 2.1 என்ற அளவில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இதனை தேசிய குடும்ப சுகாதார கணக்கீடு-4 தெரிவிக்கிறது. அந்த அறிக்கையின் மூலம் ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா, தெலுங்கானா, தமிழ்நாடு உத்தரகாண்ட், மேற்கு வங்காளம் (யூனியன் பிரதேசங்கள் மற்றும் சில வடகிழக்கு மாநிலங்கள் தவிர) ஆகியவை இந்த முன்னேற்ற நிலையை அடைந்துள்ளன. இவை அனைத்தும் வளர்ச்சிக்கான அறிகுறியே.

தேசிய குடும்ப சுகாதார கணக்கீடு நான்கின் படி குழந்தை இறப்பு விகிதம் ஆனது உத்தரப் பிரதேசத்தில் 78 ஆகவும், கேரளாவில் 7 ஆகவும் தமிழகத்தில் 27 ஆகவும் உள்ளது.

பத்து மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் பள்ளிக்குச் செல்லும் பெண் குழந்தைகளின் விகிதமானது உத்திரப் பிரதேசத்தில் 33 சதவீதம், கேரளாவில் 72 சதவீதம், தமிழகத்தில் 50 சதவீதமாக உள்ளது.

கல்வி மற்றும் மருத்துவ சேவைகளை கொடுப்பதற்கான எந்த அளவுக்கு நடவடிக்கைகளை முடுக்கி விடுகிறோமோ அந்தளவுக்கு மக்கள் தொகையை நிலைப்படுத்துதலுக்கான பலனை உணர முடியும்.

ஆண், பெண் விகிதம் குறைபாடு என்ற மிகப் பெரிய பிரச்சினை

இரு குழந்தை கொள்கையினை கட்டாயப்படுத்தும் போது அதன் தாக்கமானது ஆண் குழந்தைகளை பெற்றுக் கொள்வதில் மட்டுமே அதிக முனைப்பு காட்டுவதில் போய் முடியும். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு சீனா.

சீனாவானது தொடக்கத்தில், இரு குழந்தை கொள்கையினை நடைமுறைப்படுத்தியது. அத்திட்டம் எதிர்பார்த்த விளைவை தராததால் ஒரு குழந்தை கொள்கையினை மிகவும் கெடுபிடியுடன் நடைமுறைப்படுத்தியது. இந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்தியதன் விளைவாக குழந்தை பாலின விகிதத்தில் மிகப் பெரியப் பேரழிவை சந்தித்தது.

இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்திரப் பிரதேசத்தில் குழந்தை பாலின விகிதமானது 903 என்ற மிகக் குறைவான அளவிலேயே உள்ளது. அதே நேரத்தில் கேரளாவில் 1047 என்றும் தமிழகத்தில் 954 என்ற அளவிலும் உள்ளன. தேசிய குடும்ப சுகாதார கணக்கீடு 4 மற்றும் 3 ஆகியவற்றை ஒப்பிடும் பொழுது உத்திரப் பிரதேசத்தில் வளர்ச்சிக்கான அறிகுறிகள் மிகவும் மோசமடைந்து இருக்கின்றன.

இப்படி இருந்தபோதும் மடத்தனமான தவறான பாதையை நோக்கி அம்மாநிலம் செல்வதை புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது.

பின்தங்கிய சமூக பொருளாதாரம் மற்றும் குடும்பத்தின் அளவு ஆகியவற்றுக்கான உள்ளார்ந்த உறவுகள் பொருளாதார ரீதியான பாகுபாட்டுடன் ஆராயப்பட வேண்டும்.  சமூகத்தில் ஏழ்மையிலும் ஏழ்மையாக உள்ள சிறுபான்மையினர், தலித்துகள் நிலை ஆராயப்பட வேண்டும்.

அப்படிப்பட்ட மக்களுக்கு அரசியல் மற்றும் நிர்வாகத்திடம் இருந்து நலத்திட்டங்களை கிடைப்பதற்கான இடைவெளியை குறைக்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் சமூகநீதி உரிமையும் கிடைப்பது மிகவும் கடினமாகிவிடும்.

எங்களின் அனுபவத்தில் பார்க்கும் பொழுது, ஏழைச் சமூகமானது மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் எவ்வித முயற்சியும் எடுப்பதில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது. ஆனால், உண்மை என்னவெனில் பெரும்பான்மையான ஏழை மக்கள் கருத்தடைக்கான சேவைகளை பயன்படுத்துகின்றனர் என்பது தான்.

உத்திரப் பிரதேசத்தில் ஐந்தில் ஒரு பகுதி மக்களுக்கு அடிப்படை சேவைகளை வழங்கத் தவறிய அரசு, தேவையற்ற அளவில் 18 சதவீதமாக கருத்தடை சேவையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. (தமிழகத்தில் 10 சதவீதமாக இதன் அளவு உள்ளது)

சட்டமானது சரியான முறையில் சரியான நேரத்தில் பயன்படுத்தப்பட்டிருந்தால் சுகாதார பராமரிப்பு உரிமைக்காக ஏன் பல பத்தாண்டுகளாக போராடிக் கொண்டிருக்கிறோம்?

இத்தனை ஆண்டுகளில் அரசு மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்வதில் தோல்வி அடைந்துள்ளதே, அதற்காக நாங்கள் ஏன் அபராதம் விதிக்கக் கூடாது ?

கிரிமினல்தனமாக உருவாக்கப்பட்ட கட்டாயக் கருத்தடை மையங்களில் நூற்றுக்கணக்கான உயிர்கள் பறிக்கப்பட்டு மனித உரிமைகள் நசுக்கப்பட்ட நினைவுகள் நம்மை விட்டு எப்போதும் அகலப் போவதில்லை. தேவிகா பிஸ்வாஸ் எதிர் யூனியன் ஆப் இந்தியா வழக்கில் கருத்தடை மையங்களை முறைப்படுத்துவதற்காக முயற்சி எடுத்தது உச்சநீதிமன்றம்.

மிக மிக சமீபத்தில், உத்திரப் பிரதேசத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஊனமுற்ற ஒருவர் கொரோனா தடுப்பூசிக்கு செலுத்த சென்றபொழுது அவர் கட்டாயப்படுத்தப்பட்டு கருத்தடை செய்யப்பட்டார். கொடுக்கப்பட்ட இலக்கை நிறைவேற்றுவதற்காக இச்செயல் நடந்ததாக கூறப்படுகிறது.

தவறான பாதையில் செல்லும் அரசு

வெளிப்படையாகத் தெரியக் கூடிய விஷயம் என்னவெனில், அரசானது மக்களின் நல்வாழ்விற்கு தேவையான திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் குடிமக்களின் மீது நம்பிக்கை வைக்காமல் பிரபுத்துவ அடக்குமுறை வகைகளையே பெரிதும் வெளிப்படுத்துகின்றது என்பதை சமீபகால செயல்கள் மூலம் உணர முடியும்.

போலீஸின் கேவலமான அராஜகமான அடக்குமுறை நடவடிக்கைகள் மூலம் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை மறுபரிசீலனை செய்து மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வது உரிமைகளை நிலை நாட்டுவது தொடர்பான முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

படிக்க :
♦ தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா ?
♦ தடுப்பூசி உதவியுடன் மக்கள் தொகையை குறைக்க விரும்பும் பில்கேட்ஸ்

மக்கள் தொகை நிலைப்படுத்துதல் தொடர்பாக கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு கூட்டு முயற்சிகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட அறிவியல் பூர்வமான சான்றுகளை பாராமல் கொண்டுவரப்பட்ட இந்த மக்கள் தொகை கட்டுப்படுத்துதல் மசோதாவானது திரும்பப் பெறப்பட வேண்டும் என்பது கட்டாயமாகும். பிற மாநில அரசாங்கங்கள் எந்த அடிப்படையில் முன்னேறிக் கொண்டு இருக்கிறதோ அவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்.

நமது அரசாங்கங்களுக்கு வளர்ச்சியால் பாதிக்கப்பட்ட மக்களை குற்றம் சாட்டி அவர்களுக்கு அபராதம் விதிப்பது மூலம்தான் கல்வி மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்யாமல் இருந்த தங்களது பொறுப்பின்மையையும் தோல்விகளையும் மூடி மறைக்க முடியும்.

(AN IRRATIONAL DRAFT POPULATION CONTROL BILL THAT MUST GO என்ற தலைப்பில் தி இந்து ஆங்கில நாளிதழில் 17.07.2021 அன்று வெளிவந்த கட்டுரை)


கட்டுரையாளர்கள் : வந்தனா பிரசாத் மற்றும் தீபா சின்கா
தமிழாக்கம் : மருது
செய்தி ஆதாரம் : The Hindu

எண்ணூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் TANGEDCO || மக்கள் அதிகாரம்

கொற்றலை ஆற்று கழிமுகம் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை எதிர்த்த எண்ணூர் மீனவர்கள் போராட்டத்திற்கு துணை நிற்போம் !

19.07.2021

பத்திரிகைச் செய்தி

நிலமும் நீரும் மக்களின் சொத்து – கொற்றலை (கொசஸ்தலை) ஆற்றின் மீது TANGEDCO-வின் ஆக்கிரமிப்பை எதிர்த்து எண்ணூர் மீனவர்களின் நீர்வழிப் போராட்டம் வெல்லட்டும்.  TANGEDCO-வும் L&T-யும் இணைந்து ஆற்றை அழிக்கும் இந்த வேலை கண்டனத்துக்கு உரியது. மக்கள் அதிகாரத்தின் சார்பாக இதை வன்மையாக கண்டிக்கின்றோம்.

“எந்த ஊருக்கும் போய் வேலைக்கொடு என்று நாங்கள் கேட்டது கிடையாது வந்த வேலையை கூட தள்ளிவிட்டு விடுவோம். எங்களுக்கு ஆறு இருக்கிறது சோறு போட” – என்கிறார்கள் எண்ணூர் மீனவப் பெண்கள். அந்த அளவிற்கு கொற்றலை ஆறு அந்த மக்களுக்கான வாழ்வாதாரத்தை வழங்குகிறது.

மூன்று மாதம் முன்பு வரை ஆறாக இருந்த இடத்தில் இன்று, ஆற்றின் ஒரு பகுதியில் L&T-யும் TANGEDCO-வும் சேர்ந்து மணலைக் கொட்டி, எண்ணூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்துடன் (SEZ) இணைந்து அனல்மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரியை கொண்டு செல்வதற்கான கன்வேயர் கட்டுமானத்தை ஆற்றை ஆக்கிரமித்து கட்டுகின்றன.

மணல் கொட்டியதால் இறந்து போகும் இறால்கள்

இதனால் அங்குள்ள மீன்வளம் அழிக்கப்படுவதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. ஆற்றுக்கு பின்புறத்தில் அலையாத்தி காடுகள் இருக்கின்றன. எண்ணூர் கடைமடை பகுதிகளிலேயே மிச்சம் இருக்கக் கூடிய முக்கியமான அடர்த்தியாக ஆரோக்கியமாக உள்ள அலையாத்தி காடுகள். இங்கு ஐந்து வகையான இறால், பல வகையான நண்டுகள், மடவை போன்ற உயிரினங்கள் கிடைக்கும் இயற்கை வளமுள்ள பகுதியாக உள்ளது.

இந்த பகுதி ஊர் மக்கள் தொழில் செய்யும் இடமாக இந்த ஆறு இருக்கிறது. அலையாத்தி காடுகள் இருப்பதால், உயிர் சூழல் அதிகமாக உள்ளது. மீன்கள் இங்கு தான் அதிகம் உற்பத்தியாகிறது. இங்கு மணலை கொட்டுவதால் இங்குள்ள இறால்கள் உற்பத்தி தடைபடுவதோடு அவை அழிகின்றன.  இப்படி மணல் கொட்டுவதால் மூன்று ஆண்டுகளுக்கு இந்த பகுதியில் எந்த உயிரும் உற்பத்தியாகாது என்கின்றனர் மீனவ மக்கள்.

இப்போது கன்வேயர் போடும் இடம் அனுமதி பெற்ற இடம் கிடையாது. ஆற்றிற்கு பக்கத்தில் உள்ள நிலத்தில்தான் வழி போகிறது என்று அனுமதி வாங்கி விட்டு, ஆற்றின் குறுக்கே ஆக்கிரமித்து கன்வேயர் போடுகிறார்கள். இதனால் மீனவப் பெண்கள், குறிப்பாக தலித் சமூகத்தை சேர்ந்த 2500 பேரின் வாழ்வாதாரம் இந்த அலையாத்தி காடுகளை நம்பித் தான் இருக்கிறது. அவர்கள் தான் அதிகம் பாதிக்கப் படுகிறார்கள். சுற்றியுள்ள மீனவ கிராமங்களின் பொருளாதாரமும் இதை நம்பியிருக்கிறது. இந்த சட்டவிரோதமான செயலை அரசு அதிகாரிகள் தடுக்காத நிலையில், மீனவ மக்கள் ஆற்றையும் வளத்தையும் காக்கப் போராடுகிறார்கள்.

ஆற்றில் TANGEDCO-வும் L&T-யும் சேர்ந்து மணலைக் கொட்டி, 2017-ம் ஆண்டிலேயே முடிந்துபோன வழித்தட வேலைக்காக, அனுமதியை புதிதாக புதுப்பிக்காமல் இந்த வேலையை சட்டவிரோதமாக செய்து வருகின்றனர்.

TANGEDCO- L&T-யின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது. மக்கள் அதிகாரத்தின் சார்பாக இதை கண்டிக்கின்றோம். இதை தமிழக அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும். எண்ணூர் மக்களின் நியாயமான போராட்டத்தில் உழைக்கும் மக்கள் அனைவரும் துணை நிற்போம்.

தோழமையுடன்,
தோழர் அமிர்தா,
சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்,
91768 01656.