Wednesday, June 24, 2026
முகப்பு பதிவு பக்கம் 411

மக்கள் மருத்துவர் 5 ரூபாய் டாக்டர் ஜெயச்சந்திரன் மறைந்தார் ! நேரடி ரிப்போர்ட்

ந்து ரூபாய் டாக்டர் என்று வட சென்னை மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட மருத்துவர் ஜெயச்சந்திரன் காலமானார்.

கல்பாக்கம் கொடைப்பட்டினம் கிராமத்தில் பிறந்து வளர்ந்த டாக்டர் ஜெயச்சந்திரன் 1972 முதல் மக்களுக்கான ஒரு கிளினிக்கை தொடங்கி அதில் கட்டணமாக ரூ.2 பெற்று வந்தார். அதிகபட்சமாக ஐந்து ரூபாய் அவ்வளவுதான். அரசு மருத்துவம் தவிர்த்து பெருமளவு மருத்துவ உலகம் கார்ப்பரேட்டின் கொள்ளைக் காடாக மாற்றப்பட்டிருக்கும் சூழலில் அதிக கட்டணமின்றி சிகிச்சை அளித்து வந்தார். சமீபத்தில் ஜெயலலிதாவின் சிகிச்சைக்கான செலவை ஒப்பிட்டு பார்க்கும் போது இந்த மக்கள் மருத்துவரின் சாதனை விளங்கும்.

தமிழ் சினிமா உலகம் தனது மசலா படங்களுக்காக வடசென்னையை ரவுடிகளாக, பொறுக்கிகள் நிறைந்த பகுதியாக தவறாக சித்தரித்து வருகிறது. ஆனால் அந்த மக்களை அவர் குழந்தையாக கருதி இருக்கிறார். எல்லாப் பிரிவு மக்களிடமும் எந்த வித்தியாசமும் இன்றி மக்களுடன் பழகி அவர்களின் மதிப்பையும் அன்பையும் பெற்றிருக்கிறார். அவருடையை இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட மக்களின் அழுகுரலே இதை நமக்கு உணர்த்துகிறது.

அவருடைய இறுதி பயணத்தில் கலந்து கொள்ளவும், மக்கள் கருத்தை அறியவும் சென்றிருந்தோம்.  தள்ளாத வயது முதியோர்கள் முதல் இளைஞர்கள் வரை அவருடைய மக்கள் நலன், சேவைகளை நினைவு கூர்ந்தனர். ஒவ்வொருவரின் நினைவின்போதும் குடும்ப நண்பர், உறவினர், வீட்டின் மூத்த மகனை இழந்ததைப் போன்று அவர்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.

*****

குணசுந்தரி, வயது 67

இவ்ளோ நல்ல மனுசன உலகத்துல எங்கயும் பார்த்தது கிடையாது. உடம்பு முடியாத குழந்தைய தூக்கினு வந்தா குழந்தைக்கு சிரிப்பு காட்டி விடுவாரு. அது என்ன அதிசயமா சிரிக்கும். பெரியவங்களா இருந்தா முதுவுல ஒரு அடி அடிப்பாரு. இவ்ளோ சளிய வச்சிக்கினு வந்துட்டியா அப்பிடின்னு கேட்பாரு.

என் புள்ளங்களுக்கு நோய்நொடின்னு வந்தா அவருகிட்டதான் காட்டுவேன். இவருகிட்ட இரண்டு ரூபா பீசுல இருந்து வறேன். 18 வயசுல இருந்து நான் அவருகிட்ட பாக்குறேன். நாங்க எல்லாம் ஏழைங்க. எத்தனையோ வாட்டி பணமே இல்லாத வைத்தியம் பார்த்துனு போயிருக்கோம். நாங்களே வற்புறுத்தி கொடுத்தாலும் இரண்டு ரூபாய்க்கு மேல வாங்க மாட்டாரு.

அவரு எங்களுக்கு மருந்துகூட கொடுக்க வேண்டியதில்ல. உடம்பு முடியாத போது அவரை போயிட்டு பார்த்தாலே பாசத்தோட தட்டி குடுக்கும்போதே எங்க நோயி போயிடும். – என்று கூறிக்கொண்டே கண்ணீல் வரும் நீரை அடக்க முடியாமல் அழுதார்.

பத்மா, வயது 68

அவரோட எங்களுக்கு நாற்பது வருசம் பந்தம். எதுவா இருந்தாலும் கொழந்த குட்டிய தூக்கினு அவருகிட்ட தான் போவோம். அழுதுனு போற குழந்தைங்ககிட்ட என்ன மாயம் செய்வாரோ தெரியாது, சிரிச்சிக்கினே வரும். இந்த சுத்துப்பட்டுல இருக்க ஏ-பி-சி பிளாக், தெலுங்கானா குப்பம், காசிமேடு இப்படி எல்லா மூலையில இருந்தும் ஏழைங்க இங்க தான் வைத்தியம் பார்க்க வருவாங்க. முடியாம வீட்டுலயே மூச்சி வாங்கினு இருக்குன்னு சொன்னா போதும்,  என்னேரமா இருந்தாலும் அவரு பாட்டுக்கு வந்து டிரிப்பு ஏத்தி விடுவாரு. நேரங்காலமே கிடையாது.

நைட்டு பன்னிரெண்டு மணின்னாலும் கொழந்தைய தூக்கிட்டு போயி வீட்டாண்ட நிப்போம். அவரு தூங்கிக்கினு இருப்பாரு… நாங்க அப்பான்னு குரல் கொடுப்போம். அடுத்த நிமிசம் வந்து நிப்பாரு. வயசானவங்களா இருந்தா எதுக்கு இட்டுனு வரீங்க…. கூப்பிட்டா நானே வருவேன்லன்னு சொல்லுவாரு. என்ன சொல்லி…… என்ன ஆகப்போவுது….. மனுசன் போயிட்டாரு.

லீலாவதி, வயது 71
லீலாவதி – கஸ்தூரி (வலது)

“என்னா சொல்ல……. சொல்றேன் தம்பி அவரைப் பத்தி…. எப்ப அவருகிட்ட வந்தேன்னு ஞாபகம் இல்ல. ஆனா ரொம்ப காலமா வரேன். இப்ப மருமக, பேத்தின்னு வைத்தியம் பாக்க வராங்க. இவர விட்டா வைத்தியம் பாக்க எங்களுக்கு வேற ஆளு கிடையாது. நாங்க பல நேரம் சாப்பாட்டுக்கு வழி இல்லாம இருப்போம். அதுல உடம்புக்கு வேற நோவு வந்துடும்.

இவருகிட்ட வந்து நின்னா காசு இல்லையான்னு பாசமா கேட்டு கையில காசு கொடுத்து அனுப்புவாரு. இப்படி ஒரு மனிசன நான் இனிமேலும் எங்கபோயி பார்ப்போம்….” என்று அழுகிறார்.

கஸ்தூரி, வயது 70

என் பையனுக்கு வயசு முப்பத்தி இரண்டு. உடம்புக்கு முடியாம ஒரு மாசத்துக்கு முன்ன இட்டுனு வந்தேன். “அவனுக்கு  நீ….. இன்னா துணையா?” அப்படின்னு என்ன திட்டினாரு. “இந்த வயசுல ஏன்டா பெத்தவங்களுக்கு கஸ்டம் கொடுக்கிறன்னு அவனையும் திட்டினாரு. வயசு புள்ளைங்க உடம்ப ஒழுங்கா வச்சிருக்கிறதில்ல”ன்னு பெத்த பையனுக்கு புத்திமதி சொல்ற மாதிரி சொல்லுவாரு. கொஞ்ச நாளைக்கு முன்னதான் என் மருமவ உடம்ப தேத்தி கொடுத்தாரு. நாங்க யாருமே அவரை டாக்டரா  பார்த்ததில்ல. அப்பா, தாத்தான்னுதான் உறவு வச்சி கூப்பிடுவோம். இனி நாங்க எந்த ஆஸ்பித்திரிக்கு போவோம்?

சண்முகம் – நதியா

இவ என் பொண்ணு. 16 வயசுல ஒரு ஜுரம் வந்தது இவளுக்கு…. உசுரு போயிடும்னு பார்த்தேன். இவருதான் இத காப்பாத்தினாரு. ஏனோ தெரில….. அவர பார்த்தாலே நம்ப மனசு நெறஞ்சிடும். அவரு நமக்கு வைத்தியமே பார்க்க வேண்டியதில்ல. பாசமா விசாரிக்கிறதுலயே பாதி நோய் போயிடும். இறந்தத கேட்டு வீட்டுல இருக்க முடியல….அதான் ஓடியாந்துட்டேன்.

சுவிஸ் ராஜன், வயது 70
சுவிஸ் ராஜன் (இடதுபுறம் உள்ளவர்)

46 வருசமா நண்பர் அவரு… அவரு கல்யாணத்த பாத்தேன். அவரோட கொழந்தைங்க கல்யாணத்துக்கு எல்லாத்துக்கும் கூட இருந்தேன். இப்ப சாவுக்கும் வந்துட்டேன். இவரு மத்தவங்களுக்கு எல்லாம் டாக்டர். எங்களுக்கு போராட்டத்துக்கு முன்ன நிக்கிற ஒரு பெரும்தூண். மெட்ரோ ரயில் போராட்டம், ராயபுரம் ரயில் நிலையம் (இந்தியாவிலே முதல் ரயில் நிலையம்) புனரமைக்கக்கோரி போராட்டம், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவ முகாம், சுகாதாரம் இப்படி எந்த போராட்டம்னாலும் அவர வச்சிதான் நடத்துவோம். அவரு முன்ன நிப்பாரு.  நம்மளயும் வர சொல்லி நச்சரிப்பாரு. எவ்ளோ பெரிய மனிசன். டாக்டர் தொழிலையும் பார்ப்பாரு, ஊர் வேலையும் செய்வாரு. பொதுத் தொண்டுன்னா தலையில தூக்கி போட்டுக்குவாரு. எங்களுக்கு எல்லாம் பெரிய பலமா இருந்தாரு.

கட்பீஸ் செல்வராஜ்

அவரு செஞ்சத எதை சொல்லுறது….. எதை விடுறது…. அவர் ஒரு மாணிக்கம். என்னோட அத்தை பொண்ணுக்கு 7 வயசு இருக்கும். ஒரு பெரும் ஜுரத்துல பிட்ஸ் வந்து தூக்கினு வந்தோம். பதட்டப்படாம பக்கெட்ல தண்ணிய எடுத்து வந்து, அந்த தண்ணிய கொழந்த தலையில ஊத்த சொன்னாரு. கொஞ்ச நேரத்துல பிட்ஸ் நின்னுடுச்சி. அதுக்கப்பால மாத்திர மருந்து கொடுத்தரு.

சில நாள்ல கொழந்தைக்கு சாதாரணமா ஆயிடுச்சி.  நான் நோயிக்காக யாரனாலும் நைட்டு ஒரு மணிக்கு கூட்டி வந்தாலும் முகம் சுளிக்காம பாத்து அனுப்புவாரு. அந்நேரம் திடீர்னு வெளில இருந்து போன் வந்தாலும், நம்ம பைக்லயே ஏறி உக்காந்துக்கினு வந்து வைத்தியம் பார்ப்பாரு. அப்படி ஒரு மனுசன். இப்பகூட கலைஞர் சாவும்போது நான் மாடியில இருந்து தவறி விழுந்துட்டேன். எழுந்துக்க முடியல.. சப்ப நவுந்து போச்சி. இவருகிட்ட வந்து காமிச்சேன். ஒன்னியுமில்ல… ஒத்தடம் மட்டும் கொடு’ன்னு சொல்லி அவரே அந்த இடத்துல தேச்சி விட்டு அனுப்பினாரு. எங்களுக்கு அவரு அப்பா மாதிரி.

பால கோட்டையா

நானு ஈ.பி-யில துப்புரவு வேலை செய்யுறேன்…. எனக்கு படிப்பறிவு இல்ல. அவர அஞ்சி ரூபா டாக்டர்னு சொல்லுறாங்க. நான் இது வரைக்கும் எந்த ரூபாயும் கொடுத்ததில்ல. எங்களுக்குத்தான் அவரு கொடுப்பாரு. போனதும் சாப்டியான்னு கேட்பாரு. இல்லன்னு சொன்னா….. சாப்பிட பணம் கொடுப்பாரு.  நடு ராத்திரி பொண்டாட்டி கிட்ட ஒடம்பு முடிலன்னு சொல்லுவேன். சொல்லிட்டு தலைய சொறிவேன். அவளும் கூட்டினு போவா. ஒரு மணிக்கு வந்துகீற திரும்பி போகும்போது போலிசு கீலிசு புடிக்க போவுது.. என் பேர சொல்லு. பொண்டாட்டிய பாத்து இட்டுனு போ. பணம் வச்சிருக்கியா…. வேணுமான்னு கேட்பாரு. இப்படி ஒரு மனிசன இனிமே நாங்க எங்க பார்ப்பேன்….

பாலகோட்டையாவின் மனைவி நர்சம்மா.

எங்களுக்கு மூனு கொழந்தைங்க. அதுல இரண்டு பொறந்த சில மாசத்துலயே..  நோவு வந்து தங்காமா போயிடுச்சி… மூணாவது கொழந்தய இவருதான் காப்பாத்தி கொடுத்தார். இப்ப அதுக்கு ஏழு வயசு ஆவுது…..

நர்சம்மா, பாலகோட்டையா

இரண்டு கொழந்த தவறி போயிடுச்சி.. கொழந்த நிக்கல..ன்னு சொல்லி அவருகிட்ட வந்து அழுதேன்…. அவரு என்ன டெஸ்ட் பண்ணி பார்த்துட்டு ஒன்னுமில்ல கர்ப பையில நீர் கட்டி இருக்கு…. அது சரி பன்னிடுறேன்.. பிறகு கொழந்த தங்கும் அப்படின்னு சொன்னாரு. அதன்படியே எல்லாம் நடந்தது.  பொறந்த கொழந்தைக்கு அவருதான் பேரு வச்சாரு. எங்க வீட்டுக்காரும் அதேமாதிரி மறுபொறப்பு எடுத்தாரு.. வயித்துல கட்டி. ஆபுரேசன் பண்ண் சொன்னாங்க. வெளில சில லட்சம் ஆகும்’னு சொன்னாங்க.   எங்க கஸ்டத்த சொல்லி பத்தாயிரத்துல ஒரு ஆஸ்பித்திரியில ரெக்கமண்டு பன்னாரு.

இப்ப இருக்க கொழந்தைக்கும் இதயத்துல ஓட்ட.. இவருதான் மருந்து கொடுத்துனு இருக்காரு. இனிமே அது எல்லாம் யாருகிட்ட போயி வாங்குவேன்?

மதன், வயது 30

எங்கள் குடும்ப நண்பர். 2010 ல் இருந்து அவர் பேச்ச தான் கேட்டு நடக்கிறேன். என்ன மாதிரி பசங்கள பொது வேலைக்கு இழுத்து விட்டு இருக்காரு. அவர் தலைமையில. நாங்க பல நூறு மருத்துவ கேம்ப் நடத்தி இருக்கோம். வர ஏழைங்களுக்கு ஈ.சி.ஜி., எக்கோ, கண் பரிசோதனைன்னு எல்லா செக்கப்பும் இலவசமா செய்யுங்கன்னு சொல்வாரு. வரவங்களுக்கு நோயி எதனா இருக்குன்னு தெரிஞ்சா… சம்பந்தபட்ட மருத்துவமனைக்கு அவரே கைப்பட லெட்டெர் எழுதி கொடுத்து போயி பாக்க சொல்வாரு. ஜனங்க அவர உரிமையா அப்பான்னுதான் கூப்பிடுவாங்க. அவரும் எல்லாரையும் குட்டி, செல்லம் அப்படின்னு தான் வாய் நெறைய கூப்பிடுவாரு.

நானு ஒருதடவ ராத்திரி பன்னிண்டு மணிக்கு ஒரு வேலையா அவரு வீட்டுக்கு போனேன். என்கிட்ட பேசினு இருக்கும் போதே ஒரு போனு வந்தது… போன்ல எதோ உரிமையா கேட்டாரு. தெரிது தெரிது சொல்லு… நான் இப்ப வரேன்னு சொன்னாரு.  அடுத்த நிமிசம் கொஞ்சம் பக்கத்துல என்ன வண்டியில இட்டுனு போறியான்னு என்கிட்ட கேட்டாரு. அந்த நேரத்துல வீடு தேடி போயி வயசான பாட்டிக்கு வைத்தியம் பார்த்துட்டு  திரும்பினாரு.

“நம்மள நம்பி கூப்பிடுறாங்க. அவங்களுக்கு வேற யாரு”ன்னு சமாதனம் சொல்வாரு. அவருக்கு சின்ன உதவி செஞ்சாலும் அதை மத்தவங்க கிட்ட சொல்லி நம்மள பெருமைபடுத்துவார்.. இவன தெரியுமா? அப்படின்னு நமக்கு கூச்சம் வர அளவுக்கு மத்தவங்க கிட்ட அறிமுகப்படுத்துவாரு. எந்த பொது நிகழ்ச்சி என்றாலும் அவரோட அனுமதி கேட்காமலே அவரோட பேரை போட்டுடுவோம். அவரும் ஆட்சேபிக்காம வந்துடுவார். எப்ப அவர பாக்க போனாலும், நோயாளிங்களுக்குத்தான் முன்னுரிமை கொடுத்து பேசுவாரே தவிர, தெரிஞ்சவங்கன்னு நம்மகிட்ட உடனே பேச மாட்டார். கொறஞ்சது இரண்டு மணி நேரம் ஒரு விஷயத்த சொல்றதுக்கு உக்காந்துனு இருக்கனும்.  இந்த வயசுல எப்படியோ போக வேண்டிய எங்கள ஒரு பொறுப்பா மாத்தினவரு அவருதான்.

நடராஜன், அப்பு, கோவிந்து, ராஜா (பறையிசை கலைஞர்கள்)

நாங்களும் எவ்ளோ சாவுக்கு மோளம் அடிச்சி இருக்கோம். மாலை எடுத்துனு போறப்ப மூஞ்ச உம்முனு வச்சிருப்பாங்க. வரும்போது சிரிச்சினு வருவாங்க. ஆனா இங்க வரும்போது எல்லோரும் அழுதுனு வராங்க.. அவ்ளோ நல்லது செஞ்சிருக்காரு மனுசன். அஞ்சி ரூபா கூட வாங்க மாட்டாரம். நமக்கு அவருதான் கொடுத்து அனுப்புவாரு.

பார்த்த சாரதி. அரசு போக்குவரத்து கழக செக்கர்.

பக்கத்துல இருக்க ராபின்சன் பூங்காவுல நாங்க அவரு கூடதான் காலை நடை செல்வோம். அப்பவும் எதாவது ஒன்னு ஏழைங்களுக்கு செய்வாரு. அதைப் பத்தி பேசுவாரு. இல்லாட்டி ஊருல இந்த இந்த பிரச்சனைன்னு சொல்லுவாரு. சதா பொது விஷயம்தான் பேசுவாரு.

ஒருநாள், 5 வயசு கொழந்தைய ஒரு அம்மா தூக்கினு வந்து காமிச்சது. இன்னான்னு கேட்டதுக்கு மூச்சி விட சிரமப்படுறான். எங்க எங்கயோ காமிச்சிட்டேன்.. இனிமேலும் எனக்கு வைத்தியம் பார்க்க தெம்பு இல்ல… நாங்க பிளட் பாரத்துல இருக்கோம்னு சொல்லி.. ஓ..ன்னு அழுது.. அங்கயே கொழந்தைய கை வச்சி டெஸ்ட் பண்ணாரு. இது நுரையீரல்ல நீர் கோத்துனு இருக்கு. இது செலவு புடிக்கிற வைத்தியம்ன்னு சொல்லிட்டு அங்கயே எங்க எல்லார் கிட்டயும் ஒருமணி நேரத்துல ரூ.50,000த்த சின்ன சின்னதா வசூல் பன்னாரு.

அப்பவே அதுக்கு ஒரு பொறுப்பாளர் தேர்ந்தெடுத்து அவர்கிட்ட அந்த பணத்தை ஒப்படைச்சார். இந்த கொழந்தைய நாம எல்லாம் சேர்ந்து காப்பாத்தலாம். நான் இன்னும் தெரிஞ்சவங்க கிட்ட பணம் கேக்குறேன்னு சொல்லி அந்த அம்மாவுக்கு நம்பிக்கை கொடுத்தார்.. இந்த விசயத்த கேட்டு ஒரு தொழிலதிபர் ஐந்து லட்சம் கொடுத்தாரு. இப்படி எல்லாம் அந்த கொழந்தைய காப்பாத்தினாரு. ஒருத்தரோட நல்ல குணத்த சொல்லனும்னா மனிதருள் மாணிக்கம்னு ஏதேதோ சொல்லுவாங்க.. ஆனா அதுக்கும் மேல இவரு…..

மீனாட்சி

என் வீட்டுக்காருக்கு ஒரு நாள் நெஞ்சிவலி வந்துடுச்சி… எங்க கூட்டி போனாலும் 25,000 செலவாகும்னு சொன்னாங்க. அவ்ளோ பணத்த எங்களால பொறட்ட முடில. அப்பதான் இவருகிட்ட வந்து காட்டினோம். அந்த சமயம் ரெய்னி ஆஸ்பித்திரில முகாம் போட்டிருந்தாங்க. அந்த முகாமுக்கு போக சொல்லி லெட்டர் எழுதி கொடுத்தாங்க. அந்த லெட்டர வாங்கிட்டு ட்ரீட்மெண்டு இலவசமா பார்த்தாங்க. அதுமட்டுமில்லாம, 500 ரூபா மதிப்புள்ள மாத்திர மாதந்தோறும் இலவசமா வாங்கிட்டு இருக்கோம். அதுபோக அவரோட அக்கவுண்ட்ல மாசம் ஐநூரு ரூபா போடுறாங்க.. அவரோட புண்ணியத்தால உயிரோடா இருக்காரு. அதே மாதிரி என் பையனுக்கு செருப்பு கடிச்சி இரண்டு காலும் வீங்கிடுச்சி…. இவர்கிட்ட கூட்டியாந்து.. ..ஓ..ன்னு அழுதேன். முன்னூரு ரூபா ஆயின்மெண்ட் கொடுத்து…. பணம் எதுவும் வேணாம்… இத வேளா வேளைக்கு தேச்சி விடு போதும்னு சொன்னாரு…. அவனுக்கும் சரியாகி இப்பதான் கல்யாணம் பண்ணேன்..என்கிறார்.

ராஜேந்திரன், டிரைவர்…

1978 -இல் இருந்து எனக்கு பழக்கம்… இவர்கிட்ட எப்ப போனாலும் டாக்டரா பழக மாட்டார்… சக டிரைவரா பேசுர மாதிரி தான் எங்க கிட்ட நடந்துப்பாரு.! ஆட்டோவுலே ஏறி மீட்டர் 25 ரூபா வந்தா நமக்கு ஐம்பது ரூபா கொடுத்து அனுப்புவாரு.. அப்படி ஒரு மனிதர்..!

மருத்துவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்துள்ள மக்கள் :

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவ்ற்றின் மீது அழுத்தவும் )

*****

ருத்துவர் ஜெயச்சந்திரன் அடிக்கடி சொல்வாராம்.. “மக்கள் நம்மை கடவுளாக பார்க்கிறார்கள். அந்த அளவிற்கு நாம் ஒன்றையும் அவர்களுக்கு செய்து விடவில்லை. நாம் அவர்களை குழந்தையாக பார்க்க வேண்டும்”.

இவர் ஒரு வார்த்தை சொன்னால் அவருக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க பலரும் காத்துக் கிடந்தனர். மக்களுக்காகவும் அவர்களது மருத்துவத்துகாகவும் அன்றி வேறு எதற்காகவும் எவரிடமும் எதையும் கேட்டதில்லை. ஒரு மக்கள் நலப் பணியாளர் எப்படி இருக்க வேண்டுமென்பதற்கு இலக்கணமாக நம் கண் முன்னே வாழ்ந்து காட்டியிருக்கிறார் மருத்துவர் ஜெயச்சந்திரன். அவருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்!

– செய்தி, படம்: வினவு களச் செய்தியாளர்கள்

கஜா புயல் நிவாரணத்தை முறைப்படுத்து ! குடந்தை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

டெல்டா மாவட்டத்தில் கஜா புயலின் கடுமையான பாதிப்புகளில் இருந்து மக்கள் மீளவில்லை. அரசும் நிவாரணப் பணிகள் எதையுமே முறைப்படுத்தாமல், முறையாக நிறைவேற்றாமல் இருந்து வருகிறது.

இதனைக் கண்டித்தும், டெல்டா மாவட்டங்களை பேரிடர் மண்டலமாக அறிவிக்க கோரியும் மக்கள் அதிகாரம் குடந்தை பகுதியின் சார்பில் கடந்த 18-12-2018 அன்று ஆர்ப்பாட்டம் நடத்த போலீசிடம் அனுமதி கோரப்பட்டது.

ஆனால் ஜனநாயக விரோத எடப்பாடி அரசின் போலீசு அதற்கு அனுமதி மறுத்தது. இதனைத் தொடர்ந்து கும்பகோணத்தில் மீன் மார்க்கெட் அருகில் மக்கள் அதிகாரம் சார்பில் கடந்த 20-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இப்போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர்களை கும்பகோணம் மேற்கு போலீசு கைது செய்தது.

மக்களின் அடிப்படை உரிமைக்காக ஜனநாயரீதியில் தமது கருத்தை தெரிவிக்கக் கூட அனுமதியற்ற நிலைதான் இந்தியா முழுவதும் நீடிக்கிறது.

ஜெயபாண்டியன்
மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் (கும்பகோணம் பகுதி)
+91 97892 61624

ஸ்டெர்லைட்டை மூடு : தமிழகமெங்கும் போராட்டம் !

உங்கள் தலைமுறைக்கும் சேர்த்து தான் எங்கள் குரல் ஒலிக்கிறது

மது மக்கள் கூட்டமைப்பு கடந்த 17-12-18 அன்று மாலை தூத்துக்குடியில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தியது. ஸ்டெர்லைட்டை திறக்கலாம் என தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவை கண்டித்து 19-12-18ம் தேதி வீடுகளில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு தெரிவிப்பதென்றும்,  21-12-18ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுப்பதென்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி காவல் துறையினரின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் அனைத்து கிராமங்கள் மாநகர பல பகுதிகளில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது. இன்னும் பல பகுதிகளில் பொதுமக்கள் ஏற்றிக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கு ஆதரவு தெரிவித்து தமிழக மாணவர்கள் குரல் ஓங்கி ஒலிக்கிறது. கட்சிகள், சங்கங்கள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. காவல்துறை நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இன்னும் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு தெரிவிப்பது தொடர்வதால் இன்று  21-12-18 (வெள்ளி) மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பது தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. அடுத்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் தெரிவிக்கப்படும்.

மாநகர பல பகுதிகளில் பொதுமக்கள் கட்டியிருந்த கருப்பு கொடி காவல்துறையினரால் அகற்றப்பட்டுள்ளதை கூட்டமைப்பு வண்மையாக கண்டிக்கிறது. அமைதியான அறவழியில் எதிர்ப்பு காட்டுவதை அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். உங்கள் தலைமுறைக்கும் சேர்த்து தான் எங்கள் குரல் ஒலிக்கிறது.

பொதுமக்கள் உங்கள் வீட்டு முன்பு கருப்பு கொடி கட்டலாம். இதற்கு சட்டப்படி தடையில்லை. ஸ்டெர்லைட் இயங்க உச்ச நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பிக்கும் வரை கொடியை அகற்ற வேண்டாம். கருப்பு கொடி கட்டாத பகுதிகளில் பொதுமக்கள் கருப்பு கொடி கட்டுங்கள். இறந்தவர்கள் – உடல் ஊனமானவர்கள் – சிறை சென்றவர்களின் கனவு, இலட்சியத்தை நிறைவேற்றுங்கள்.

தகவல்:
ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு
(அனைத்து கிராமங்கள் – மாநகர பகுதிகள் ஒருங்கிணைந்தது)
தொடர்புக்கு: 9443584049, 8608723357, 9629373089, 9444969704

***

சென்னை பல்கலை வளாகத்தில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் !

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறக்கக் கூடாதென்று, தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த பள்ளி கல்லூரி மாணவர்கள் 15 -க்கும் மேற்பட்டோர்  டிச – 20 அன்று காலை  சென்னை சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகை அருகில் உண்ணா நிலைப் போராட்டத்தை நடத்தினர்.  ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே அடிமை அரசின் காவல்துறை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை அடாவடியாக கைது செய்துள்ளது.

ஸ்டெர்லைட்டின் கார்ப்பரேட் பலம் அரசின் போலீசு கையில் வைத்துக்கொண்டு தூத்துக்குடி, திருநெல்வேலி சுற்றுவட்டார மக்களை கைது செய்து மிரட்டி வருகிறது.

தனது கல்வி, வேலைகளை விட்டு தூத்துக்குடி மாணவர்கள் சென்னை மக்களை – மாணவர்களை நம்பி இப்போராட்டக்களத்தில் தம் மக்களின் உயிரைக்காக்க தம் உயிரை பணயம் வைத்து இறங்கியுள்ளனர். அவர்களை போலீஸ் கைது செய்துள்ளது.
அம்மாணவர்களை விடுதலை செய்யக்கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு தனிச்சட்டம் இயற்றக்கோரியும் சென்னைப் பல்கலைக்கழக சேப்பாக்க வளாகத்தில் டிச-20 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தகவல்:
அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம்,
சென்னை பல்கலைக்கழகம்.
தொடர்புக்கு: 97101 96787

***

ஸ்டெர்லைட்டை மூடு : குடந்தை அரசினர் கலைக் கல்லூரி மாணவர்கள்
வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்

***

ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது பெண் தோழரிடம் அத்துமீறி நடந்துகொண்ட
மாவட்ட குற்ற பிரிவு டி.எஸ்.பி சரவணன் மீது நடவடிக்கை எடு!

‘’தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி அளித்த டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு அநீதியானது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தனி சட்டம் இயற்று.’’ என்ற தலைப்பின் கீழ் கடந்த (17/12/2018) திங்கள் அன்று விழுப்புரம் மண்டல மக்கள் அதிகாரம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது அங்கு வந்த மாவட்ட குற்ற பிரிவு டி.எஸ்.பி சரவணன் அவர்கள் பேனர், தட்டிகளை பிடுங்கி எறிந்தும், மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் மோகன்ராஜ் அவர்களை சட்டை காலரை பிடித்து இழுத்தும் வேனில் தள்ளினார். அப்போது பதறிபோய் அவர் பின்னே சென்ற பெண் தோழரை கழுத்தைப் பிடித்துத் தள்ளியும், முதுகில் கை வைத்தும் வேனில் ஏற்றினார். மேலும் இதனை கண்டித்து முழக்கமிட்ட தோழர்களை அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளில் ஆபாசமாகத் திட்டியும், உங்களை வீட்லயே வந்து உதைக்காமல் விடமாட்டேன் என்று அடாவடியாக நடந்து கொண்டார்.

ஒருவரை கைது செய்யும் போது பின்பற்ற வேண்டிய அடிப்படை விதிகள் தொடர்பாக உச்சநீதிமன்றம் பல்வேறு வழிகாட்டுதல்களையும், உத்திரவுகளையும் தீர்ப்பாக வழங்கியுள்ளது. குறிப்பாக, பெண்களைக் கைது செய்யும் போது, அவர்களை ஆண் போலிசார் கைது செய்யக் கூடாது, பெண் போலிசு தான் கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட எந்த ஒரு விதியையும் கடைபிடிக்காமல், முற்றிலும் உச்சநீதிமன்றம் கூறிய வழிகாட்டுதல்கள், உத்திரவுகளை மதிக்காமல் டி.எஸ்.பி சட்டத்திற்குப் புறம்பாக அடாவடியாக கைது செய்துள்ளார்.

எனவே, எந்த ஒரு சட்டவழிமுறைகளைக் கடைபிடிக்காமலும், உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை மதிக்காமல் அடாவடியாகவும், அசிங்கமான வார்த்தைகளால் திட்டியும், கடுமையான முறையில் கைது செய்து சட்டத்தை மீறும் வகையில் நடந்து கொண்ட விழுப்புரம் மாவட்ட குற்றபிரிவு டி.எஸ்.பி திரு. சரவணன் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு 19/12/2018 தோழர் மோகன்ராஜ் தலைமையில் எஸ்.பி அவர்களிடம் மனுகொடுக்க சென்றோம், அங்கு அவர் இல்லாத காரணத்தால் ஏ.எஸ்.பி இடம் மனு கொடுத்தபோது, அவர் படித்து பார்த்துவிட்டு நான் எஸ்.பி இடம் மனுவை கொடுத்து விடுகிறேன் என்றார்.

பிறகு டி.ஜி.பி., இடம் மனு கொடுத்தோம், அவர் எனக்கு இந்த சம்பவம் பற்றி  எதுவும் தெரியாது. எனவே போட்டோ அல்லது வீடியோ ஆதாரம் கொடுங்கள் என்று கேட்டார். அவரிடம் செய்திகளில் வெளியான வீடியோவை காண்பித்தோம், பிறகு ஆர்ப்பாட்ட வீடியோ பதிவான சி.டி.யையும்  கொடுத்தோம். அவர் துறைரீதியாக நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.

படிக்க:
ஸ்டெர்லைட் சதியின் பின்னணி என்ன ? மக்கள் அதிகாரம் ராஜு | கேள்வி பதில் நேரலை | இரவு 7 மணி
ஸ்டெர்லைட் : டெல்லி பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவு அநீதியானது | மக்கள் அதிகாரம்

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்வதும், தூத்துக்குடி மக்கள் சிலரை பணம் மற்றும் பரிசுகள் கொடுத்து பணிய வைப்பதும், பணியாத மக்களை போலிசை வைத்து மிரட்டுவதும் தொடந்து நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்களே குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் போராடும் மக்களுக்கு ஆதரவாக பேசினால், பிரச்சாரம் செய்தல், ஆர்ப்பாட்டம் நடத்தினால் உடனடியாக கைது செய்து ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் சொந்த அடியாள் படையாகவே நடந்துகொள்கின்றது போலீசு.

தகவல்:
மக்கள் அதிகாரம், விழுப்புரம் மண்டலம்.
தொடர்புக்கு: 94865 97801

***

‘’தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி அளித்த டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு அநீதியானது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தனி சட்டம் இயற்று.’’  என்ற கோரிக்கைகள் அடங்கிய சுவரொட்டி ஒட்டியதற்காக மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த மூன்று தோழர்களை கைது செய்திருக்கின்றனர் தூத்துக்குடி போலீசார்.

தொகுப்பு: வினவு செய்திப் பிரிவு.

மோடியின் உடனடி விவசாயக் காப்பீடு : மற்றுமொரு ஜூம்லா !

0

யிர் காப்பீட்டை உரிய நேரத்தில் வழங்குவதுதான் புதிய “பிரதான் மந்திரி பீமா யோஜனா” பயிர் காப்பீடு திட்டத்தின் சிறப்பம்சம் என்று ஜனவரி 2016-ம் ஆண்டில் அதை தொடங்கி வைத்த மோடி அரசு குறிப்பிட்டது.

ஆனால், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், ’தி வயர்’ இணையதளத்தால் பெறப்பட்ட தகவலின்படி கடந்த இரண்டு பயிர் பருவ காலங்களில் (2016-17 மற்றும் 2017-18) கொடுக்கப்பட வேண்டிய சுமார் ரூ.2,879 கோடி காப்பீட்டுத் தொகை, விவசாயிகளுக்கு இன்னும் கொடுக்கப்படவில்லை என்பதை அம்பலப்படுத்தியது. விவசாயிகள் மற்றும் விவசாய நலத்துறை அமைச்சகத்திடமிருந்து அக்டோபர் 10-ம் தேதியில் இத்தகவல் கிடைத்தது.

மராட்டிய விவசாயிகள் நடத்திய பேரணி

2017-18-ம் ஆண்டு ரபி பருவத்திற்கான பெரும்பான்மையான காப்பீட்டுத்தொகை கோரிக்கைகள் நிறுவனத்தால் ஆய்வு செய்யப்பட்டு இனிமேல்தான் அங்கீகரிக்கப்பட உள்ளதாக, அமைச்சகம் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளது. 2017-ம் ஆண்டின் காரிஃப் பருவத்தைப் பற்றியே அதன் தரவுகளில் அதிகம் இருந்தன. 2017-18-ம் ஆண்டு ரபி பருவத்தைப் பற்றி வெறுமனே ஒரு விழுக்காடு மட்டுமே இருப்பதை தரவுகள் காட்டுகின்றன.

2016-17-ம் ஆண்டைப் பொருத்தவரை 546 கோடி ரூபாய் இன்னும் வழங்கப்படாமலேயே இருக்கிறது. ஆனால் காப்பீடு திட்ட விதிமுறைகள் படி அறுவடை நடந்து 2 மாதத்திற்குள்ளாகவே கோரிக்கைகள் தீர்க்கப்பட வேண்டும். 2016-17 ஆண்டிற்கான அறுவடை 2017 மே மாதத்திலேயே முடிந்திருக்கும்.

அதே போல, 2017-18-ம் ஆண்டைப் பொறுத்தவரை 2,282 கோடி ரூபாய் இன்னும் வழங்கப்படாமல் இருக்கிறது. அமைச்சகத்திடம் இருந்து பெறப்பட்ட 2017-18 ஆண்டு தரவுகள் பெரும்பாலும் காரிஃப் பருவத்தைப் பற்றியே குறிப்பிடுகின்றன. இந்த பருவத்தைப் பொறுத்தவரை அறுவடையானது மிக சீக்கிரமாக 2017, டிசம்பரிலேயே முடிந்திருக்கும்.

படிக்க:
♦ பிரதம மந்திரி பயிர்க் காப்பீடு திட்டம் : கார்ப்பரேட்டுகளுக்கு நேரடி மானியம் !
♦ பயிர்க் காப்பீடு : விவசாயிக்கு சுண்ணாம்பு காப்பீட்டு நிறுவனங்களுக்கு வெண்ணெய் !

எனவே அறுவடை நடந்த பிறகும் ஒன்பது மாதங்களுக்கு மேலாக 2,282 கோடி ரூபாய் காப்பீடுத் தொகை இன்னும் வழங்கப்படாமல் இருப்பதாக தெரியவரும் அதே நேரத்தில், காப்பீடு திட்டத்தின் விதிமுறைகள் அறுவடைக்குப் பிறகு இரண்டு மாதங்களுக்குள் காப்பீடு வழங்கப்பட வேண்டும் என்பது முரண்பாடாக இருக்கிறது.

2016-17 மற்றும் 2017-18-ம் ஆண்டுகளில் விவசாயிகள் கேட்ட மொத்த காப்பீடுத்தொகை ரூ.34,441 ரூபாயாகும். அதில் காப்பீடு நிறுவனங்கள் திருப்பி தந்தது ரூ. 31,612 கோடி. தராமல் ஏப்பம் விட்டது. ரூ.2,829 கோடி ஆகும்.

ரிலையன்ஸ் பொது காப்பீடு நிறுவனம், ஐ.சி.ஐ.சி.ஐ லொம்பார்ட், எஸ்.பி.ஐ பொது காப்பீடு நிறுவனம், இந்திய விவசாய காப்பீடு நிறுவனம் (Agriculture Insurance Company (AIC) of India), புதிய இந்தியா உத்திரவாத நிறுவனம் (New India Assurance company) ஆகியவைதான் இந்தியாவில் பயிர் காப்பீடு தொழிலில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்கள் ஆகும்.

பொதுத்துறை நிறுவனமான இந்திய விவசாய காப்பீடு நிறுவனத்திடம்தான் விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய பெரும்பாலான பாக்கித்தொகை உள்ளது. விவசாயிகள் கோரிய 1,061 கோடி ரூபாயை இனிமேல்தான் இந்நிறுவனம் கொடுக்க வேண்டும். அதில் 2016-17-ம் ஆண்டின் 154 கோடி ரூபாயும் 2016-17-ம் ஆண்டிற்கான 907 கோடி ரூபாயும் காரிஃப் பருவத்திற்கு மட்டுமே கொடுக்கப்பட வேண்டியது.

2018-ம் நிதியாண்டில், பயிர் காப்பீடு வியாபாரத்தில், இந்திய விவசாய காப்பீடு நிறுவனத்தின் நிகர இலாபம் ரூ.703 கோடியாக இருந்தது. எச்.டி.எப்.சி வங்கி தொடர்ந்து விவசாயிகளுக்கு ரூ.300 கோடியை பாக்கி வைத்துள்ளது. ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியோ ரூ.260 கோடியை தராமல் இருக்கிறது. இந்நிலுவைத்தொகையில் பெரும்பங்கு மராட்டியம், மத்தியப்பிரதேசம், இராஜஸ்தான், தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் இமாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு வழங்கப்படாமல் இருக்கிறது.

படிக்க:
♦ 750 கிலோ வெங்காயத்திற்கு கிடைத்த ரூ 1064 – ஐ மோடிக்கு அனுப்பிய விவசாயி !
♦ அயோத்தி வேண்டாம் : கடனை தள்ளுபடி செய் ! டெல்லியில் விவசாயிகளின் போர்க்குரல்

உண்மையில் 2016-17 பருவத்தில் தரப்படாமலிருந்த ரூ. 546 கோடியில் கர்நாடகத்திற்கு தரப்பட வேண்டியது ரூ.256 கோடி. அந்த ஆண்டில் கர்நாடகா கடுமையான வறட்சியை சந்தித்தது. அதன் 176 வட்டங்களில் 160 வட்டங்கள் வறட்சிப் பகுதியாக அறிவிக்கப்பட்டன.

2017-18 பருவத்தை பொறுத்தவரை, 2018-அக்டோபர் வரைக்கும் இமாச்சல பிரதேசத்திற்கு 92% காப்பீடு தொகை வழங்கப்படாமல் இருந்தது. தமிழ்நாட்டை பொறுத்தவரை கொடுக்கப்பட வேண்டிய ரூ.144 கோடியில் ரூ.124 கோடி (86%) தரப்படாமல் இருந்தது.

கட்டுக்கதைகள் அள்ளிவிட துள்ளி வருகிறார் திருவாளர் 56 இன்ச் மார்பாளர், மோடி

செப்டம்பர் மாதம் இந்த பிரச்சினையை தீர்க்க மைய அரசு முயன்றது. காப்பீடு திட்டத்திற்கான புதிய விதிமுறைகளை அறிவித்தது. அதன்படி அறுவடைக்கு பிறகு இரண்டு மாதங்களுக்குள் காப்பீட்டு தொகையை நிறுவனங்கள் வழங்காவிட்டால் விவசாயிகளுக்கு 12 விழுக்காடு வட்டியை சேர்த்து வழங்க வேண்டும் என்பது அதில் முதன்மையான விதியாக சேர்க்கப்பட்டது. மேலும் மானிய காப்பீடு தொகையை செலுத்துவதற்கு காலந்தாழ்த்தும் மாநில அரசுகள் அதே 12 விழுக்காடு வட்டியை நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டும் என்றும் மைய அரசு கூறியது.

இந்த புதிய விதிமுறைகள் மாற்றத்தை எதுவும் செய்து விடவில்லை என்று வாதிடுகிறார் மேற்கு உ.பியில் செயல்பட்டு வரும் பாரதீய விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த குல்தீப் தியாகி. “இது ஒரு மாற்றத்தையும் செய்யவில்லை. நிறுவனங்கள் அனைத்தும் முன்பு செயற்பட்டதை போலதான் இப்போதும் செயல்படுகின்றன” என்று அவர் கூறினார். சென்ற செப்டம்பரில் வடமேற்கு இந்தியா கண்ட கடுமையான மழையை சுட்டிக்காட்டுகிறார் அவர். “அங்கு மிகப்பெரிய அளவிலான பயிர் சேதம் ஏற்பட்டது. வலுவான கரும்பு பயிர் கூட அதில் சேதமடைந்தது” என்றார்.

“ஆனால் விவசாயிகளின் இழப்பை ஈடு செய்ய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. மாவட்ட அலுவலகங்களுக்கும் நாங்கள் சென்றோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை” என்கிறார் தியாகி.

ஆட்சிக்கு வந்ததுமே விவசாய நிலங்களை கார்ப்பரேட்டுக்கு தாரை வார்க்கும் திட்டத்தை முன்வைத்த மோடி, விவசாய காப்பீடு  விரைவில் கிடைக்க புதிய திட்டம் அறிவிக்கிறார் என்றால் அது வெறும் ஜூம்லாவாக இருப்பதை விட வேறு என்னவாக இருக்க முடியும்?

***

தமிழாக்கம் : சுகுமார்
நன்றி : தி வயர்

அவன் என் இதயத்தில் எழுப்பிய உணர்ச்சி மறையவில்லை

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 40

மாக்சிம் கார்க்கி
றுநாள் முழுவதும் சவ அடக்கத்துக்கான ஏற்பாடுகளைச் செய்வதிலேயே தாய் நாளைப் போக்கினாள். மாலையில் நிகலாயும் சோபியாவும் அவளும் தேநீர் அருந்திக் கொண்டிருந்த சமயத்தில் சாஷா கலகலத்துக்கொண்டே விசித்திரமான உத்வேகத்தோடு வந்து சேர்ந்தாள். அவளது கன்னங்கள் சிவந்து போயிருந்தான. கண்களில் உவகை ஒளி வீசியது. அவள் மனத்தில் ஏதோ ஓர் ஆனந்தமயமான நம்பிக்கை நிறைந்து ததும்புவதாகத் தாய்க்குத் தோன்றியது. இகோரின் வாழ்க்கையை நினைத்துத் துக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அவர்களது சோக நிலைக்கு எதிர்மறை பாவம்போல், அவளது நடவடிக்கை இருந்தது. அபஸ்வரம் போன்ற அவளது குதூகல பாவம் அவர்கள் மனத்தைப் பேதலிக்கச் செய்து, இருளிலே வெடித்தோங்கும் மாபெரும் தீபாக்கினியைப்போல் அவளது மனத்தையும் கண்ணையும் மழுங்கிக் குருடாக்கியது.

நிகலாய் ஏதோ சிந்தித்தவாறே மேஜைப் பலகையில் விரல்களால் தாளம் போட்டான். பிறகு சொன்னான்.

“இன்று நீங்கள் உங்கள் வசமே இல்லை. சாஷா!”

“அப்படியா? இருக்கலாம்!” என்று குதூகலத்தோடு சிரித்துக்கொண்டே பதில் சொன்னாள் அவள்.

தாய் அவளை வாய் பேசாமல் பார்த்தாள். அந்தப் பார்வையிலேயே அவளது நடத்தையைக் கண்டித்தாள். அந்தச் சமயத்தில் சோபியா அவளுக்கு அந்த விஷயத்தை ஞாபகமூட்டினாள்.

“நாங்கள் இகோர் இவானவிசைப் பற்றி இப்போதுதான் பேசிக் கொண்டிருந்தோம்.”

“அவன் எவ்வளவு அருமையான ஆசாமி!” என்றாள் சாஷா. “வாக்கிலே கேலியில்லாமலும், முகத்திலே சிரிப்பில்லாமலும், அவனை நான் என்றுமே பார்த்ததில்லை. மேலும் அவன் என்னமாய் உழைத்தான்! அவன் ஒரு புரட்சிக் கலைஞன்! புரட்சிச் சிந்தனையிலே தலைசிறந்தவன். எவ்வளவு எளிதாகவும் ஆணித்தரமாகவும் அவன் அநீதியைப் பற்றியும், பொய் பித்தலாட்டங்களைப் பற்றியும், பலாத்காரத்தைப் பற்றியும் விவரித்துக் கூறுவான்!”

அவள் அமைதியுடனும், கண்களிலே சிந்தனைவயப்பட்ட களிப்புடனும் பேசினாள். எனினும் அந்தக் கண்களில் மிதந்த களிப்பு அவளது பார்வையிலிருந்த பெருமித நெருப்பை அணைக்கவில்லை; அவளது ஆனந்தவெறி அனைவருக்குமே புரியாததாயினும் தெரியத்தான் செய்தது.

தங்களது தோழன் ஒருவனது மரணத்தால் ஏற்பட்ட துக்கத்தை சாஷாவினுடைய உவகை வெறியால் மாற்றிக்கொள்ள, மறந்திருக்க அவர்கள் விரும்பவில்லை. அதற்குப் பதிலாக தாங்கள் மூழ்கியிருக்கும் சோக உணர்ச்சியிலிருந்து வெளியே வர விரும்பாமலே, அவளையும் தங்களது மனவுணர்ச்சியின் நிலைக்குக் கொண்டுவரவேண்டும் என்று அவர்கள் தம்மையுமறியாமல் முயன்று கொண்டிருந்தார்கள்.

“இப்போது அவன் செத்துப்போனான்” என்று அழுத்தமாகக் கூறிக்கொண்டே சாஷாவின் முகத்தைக் கூர்ந்து கவனித்தாள் சோபியா.

சாஷா திடீரென்று கேள்விபாவம் தொனிக்கும் பார்வையோடு அவர்கள் அனைவரையும் பார்த்தாள்; முகத்தைச் சுழித்தாள். தன் தலையைத் தாழ்த்தி மெளனமானாள், தன் மயிரை மெதுவாக ஒதுக்கிவிட்டுக்கொண்டாள். சில கணநேரம் திக்குமுக்காடிய பிறகு அவள் திடீரென்று தலைநிமிர்ந்து ஆத்திர வேகம் கொண்ட தொனியில் பேசினாள்:

“செத்துவிட்டான்! அதற்கு என்ன அர்த்தம், சாவது என்றால்? எது செத்தது? இகோரிடம் நான் கொண்டுள்ள மதிப்புச் செத்ததா? தோழன் என்ற முறையில் நான் அவனிடம் கொண்டிருந்த பாசம் செத்ததா? அல்லது அவனது கருத்துக்களைப் பற்றியும் சேவையைப் பற்றியும் உள்ள என் நினைவு செத்ததா? அவன் என் இதயத்தில் எழுப்பிய உணர்ச்சி மறைந்ததா? நேர்மையும் துணிவும் கொண்ட மனிதன் என்று அவனை நான் உணர்ந்திருந்த என் அறிவு மறைந்ததா? இவையெல்லாம் செத்தா போயின? என்னைப் பொறுத்தவரை அவை என்றும் சாகாதவை என்பது எனக்குத் தெரியும். ஒரு மனிதனை ‘அவன் செத்துவிட்டான்’ என்று சொல்லும்போது மிகவும் அவசரப்பட்டே கூறி விடுகிறோம் என்றே எனக்குத் தோன்றுகிறது. அவனது உதடுகள்தான் செத்துப்போயின. ஆனால் அவன் உரைத்த வாசகங்கள் இன்னும் வாழ்பவர்களின் இதயங்களிலெல்லாம் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கும்.”

படிக்க:
மஞ்சள் சீருடை – புதியதோர் பிரெஞ்சுப் புரட்சிக்கான அறிகுறி
நான் இந்து என்பதால் இந்துத்துவாவை ஏற்க முடியாது : நயன்தாரா செகல்

“தோழர்களே! நான் சொல்வது முட்டாள்தனமாகக்கூடத் தோன்றலாம். ஆனால், நான் நேர்மையான மனிதர்களின் சிரஞ்சீவித் தன்மையில், என்னை இந்த மாதிரியான அற்புத வாழ்க்கையில் ஈடுபடுத்தியவர்களின் சிரஞ்சீவித் தன்மையில் நம்பிக்கை கொள்கிறேன். அவர்கள் கற்றுக்கொடுத்த இந்த வாழ்க்கை தனது பிரமிக்க வைக்கும் பிரச்சினைகளால், வகைவகையான காட்சிகளால், கருத்துக்களின் வளர்ச்சியால் என்னைப் புல்லரித்துப் புளகாங்கிதம் அடையச் செய்கிறது. இந்தக் கருத்துக்களின் வளர்ச்சி என்னுடைய சொந்த இதயத்தைப் போல் எனக்கு அத்தனை அருமை வாய்ந்ததாயிருக்கிறது. ஒருவேளை நாம் நமது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி வாழலாம்! நாம் சிந்தனைகளுக்கே அடிமைப்பட்டு வாழ்கிறோம். அதனால் அந்தச் சிந்தனை நம்மைப் பாதித்து உருக்குலைத்துவிடும். எதையுமே நாம் உணர்ச்சியற்று மதிப்பிடுகிறோம்…”

”உங்களிடம் ஏதோ அருமையான மாறுதல் ஏற்பட்டிருப்பது போலத் தோன்றுகிறதே” என்று புன்னகையுடன் கேட்டாள் சோபியா.

“ஆமாம்” என்றாள் சாஷா. “ரொம்பவும் அருமையானதுதான். அப்படித்தான் எனக்குத் தோன்றுகிறது. நான் நிகலாய் வெஸோவ்ஷிகோவோடு நேற்றிரவு முழுவதும் பேசிக்கொண்டிருந்தேன். எனக்கு எப்போதுமே அவனைப் பிடித்ததில்லை. அவன் முரட்டுத்தனமும் அறியாமையும் கொண்டவனாகவே எனக்குத் தோன்றினான். சந்தேகமின்றி அவன் அப்படித்தானிருந்தான். எல்லோர் மீதும் அவனுக்கு ஓர் அசைவற்ற மோசமான எரிச்சல் உணர்ச்சியே ஏற்பட்டு வந்தது. எப்போது பார்த்தாலும், எந்த விஷயத்தை எடுத்தாலும் அவன் தன்னை வைத்தே, தன்னைத்தானே முன்னிலையில் வைத்துப் பேசுவான். எப்போது பார்த்தாலும் ‘நான், நான், நான்’ என்று முரட்டுத்தனமாக, குரோத உணர்ச்சியுடனேயே பேசுவான். அவன் பயங்கரமான குறுகிய மனப்பான்மைக்கு ஆளாகியிருந்தான்.”

அவள் புன்னகை செய்தாள். தனது பளபளக்கும் கண்களால் அவர்களை மீண்டும் ஒருமுறை பார்த்தாள்.

“இப்போதோ அவன் “தோழர்களே!” என்று அழைக்கிறான். அவன் அந்த வார்த்தையை எப்படிச் சொல்கிறான் என்பதை நீங்கள் பார்க்க வேண்டுமே! ஒருவித அடக்கமும் அன்பும் கலந்த பாவத்தோடு அழைக்கிறான். அந்த பாவத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அவன் வியக்கத்தக்க முறையில் மாறிவிட்டான். படாடோபமே இல்லை. நேர்மையான ஈடுபாடும், உழைக்க வேண்டும் என்ற ஆர்வமும் அவன் மனத்தில் நிரம்பியிருக்கின்றன. அவன் தன்னைத் தானே உணர்ந்து கொண்டுவிட்டான். அவனது குறைகளையும் நிறைகளையும் அவன் நன்கு தெரிந்து கொண்டுவிட்டான். அவனிடம் காணப்படும் முக்கிய மாறுதல் இதுதான்: அவனிடம் ஓர் ஆழ்ந்த தோழமையுணர்ச்சி தோன்றியிருக்கிறது.”

சாஷா பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த தாய்க்கு ஓர் உண்மை புலப்பட்டது. சாஷாவைப் போன்ற நெஞ்சழுத்தமுள்ள ஆசாமிகூட சமயம் ஏற்பட்டால் குதூகலமும் இங்கிதமும் நிறைந்து விளங்க முடியும் என்பதை உணர்ந்து உள்ளூர மகிழ்ந்து கொண்டாள். ஆனால், அதேவேளையில் அவளது இதயத்தின் அடியாழத்தில் அவள் பொறாமையுணர்ச்சியோடு எண்ணிக்கொண்டிருந்தாள்.

”பாவெலுக்கு மட்டும் என்னவாம்?”

“அவன் தன் தோழர்களைப் பற்றி மட்டுமே நினைக்கிறான்” என்று தன் பாட்டில் நிகலாயைப் பற்றியே பேசத் தொடங்கினாள் சாஷா. அவன் என்னிடம் என்ன சொல்ல வந்தான் தெரியுமா? சிறையிலுள்ள மற்ற தோழர்களைத் தப்பியோடச் செய்யும் விஷயத்தைப் பற்றிச் சொன்னான். அந்தக் காரியம் ரொம்பக் சுளுவானது என்று அவன் சாதிக்கிறான்.”

சோபியா தலையை உயர்த்தி ஆர்வத்தோடு பேசினாள்:

“அதுவும் ஒரு நல்ல யோசனைதான். சாஷா! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”

தாயின் கையிலிருந்த தேநீர்க் கோப்பை நடுநடுங்கியது. சாஷா தன் புருவங்களைச் சுருக்கி விழித்துத் தனக்கு ஏற்பட்ட உத்வேக உணர்ச்சியை உள்ளடக்க முயன்றாள். ஒருகணம் கழித்து, அவள் தீர்மானமான குரலில், எனினும் இனிய புன்னகையோடு பேச முனைந்தாள்.

”அவன் சொல்வது உண்மையென்றால், நாம் அந்த முயற்சியில் ஈடுபட்டுப் பார்க்க வேண்டியதுதான், முயல்வது நம் கடமை!”

திடீரென அவளது முகம் சிவந்தது. ஒன்றுமே பேசாமல் நாற்காலிக்குள் உட்கார்ந்து போனாள்.

”அடி கண்ணே!” என்று சிறு புன்னகை ததும்ப, தன்னுள் நினைத்துக் கொண்டாள் தாய். சோபியாவும் புன்னகை புரிந்தாள். நிகலாய் சாஷாவைப் பார்த்தான். லேசாகச் சிரித்துக்கொண்டான். அந்தப் பெண் தன் தலையை நிமிர்த்தினாள். கடுமையாக எல்லோரையும் பார்த்தாள். அவளது முகம் வெளுத்து, கண்கள் பிரகாசமாக ஒளிர்ந்தன. அவளது குரல் மிகவும் அவமானத்தால் வறண்டு ஒலித்தது.

“நீங்கள் ஏன் சிரிக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும்” என்றாள் அவள். ”நான் ஏதோ சொந்தக் காரணத்துக்காகத்தான் இதைச் செய்யச் சொல்கிறேன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.”

”ஏன் சாஷா?” என்று பாசாங்குடன் கேட்டுக்கொண்டே எழுந்து அவளிடம் சென்றாள் சோபியா. இப்படிச் சொன்னது சாஷாவின் மனத்தைத் துன்புறுத்திவிட்டது என்றே தாய்க்குத் தோன்றியது. சோபியா இப்படிச் சொல்லியிருக்கக்கூடாது என்றே தாய் கருதினாள். தாய் பெருமூச்செறிந்தாள். குற்றம் கூறும் பாவத்தோடு அவளைப் பார்த்தாள்.

“இந்தப் பிரச்சினையில் நான் எந்தச் சம்பந்தமும் கொள்ளத் தயாராயில்லை” என்றாள் சாஷா. ”நீங்கள் இந்தப் பிரச்சினையை என் சொந்த விவகாரமாகக் கருதினால் அதைப் பற்றிய முடிவுக்கு வருவதில் நான் கலந்துகொள்ளவே மாட்டேன்’

“போதும், சாஷா” என்று அமைதியாகச் சொன்னான் நிகலாய்.

தாயும் அவளருகே சென்று, அவளது தலைமயிரைக் கோதித் தடவிக் கொடுக்க ஆரம்பித்தாள். அந்தப் பெண் அவளது கரத்தை எட்டிப் பிடித்தாள். கன்றிச் சிவந்துபோன தன் முகத்தைத் தாயின் முகத்துக்கு நேராக நிமிர்த்தினாள். பேசுவதற்கு வாய் வராததால், தாய் லேசாகப் புன்னகை செய்தாள்; பெருமூச்செறிந்தாள். சாஷாவுக்கு அடுத்தாற்போலிருந்த நாற்காலியில் சோபியா உட்கார்ந்தாள். தன் கரத்தை சாஷாவின் தோள்மீது சுற்றிப்போட்டாள்.

“நீ ஒரு விசித்திரப் பிறவி” என்று அவளது கண்களையே பார்த்துப் புன்னகை செய்தவாறே சொன்னாள் சோபியா.

“நான்தான் அசட்டுத்தனமாய் நடந்து கொண்டுவிட்டேன்……”

”நீங்கள் என்ன, இப்படி நினைக்கிறீர்கள்?” என்று சோபியா பேச முனைந்தாள். ஆனால் அவள் பேச்சை முறித்துக் குறுக்கிட்டுப் பேசினான் நிகலாய்.

“முடியுமென்று தோன்றினால், நாம் நிச்சயம் அவர்கள் தப்பியோடுவற்கு வழிசெய்ய வேண்டியதுதான். சந்தேகமே வேண்டாம்” என்றான் அவன். “ஆனால் முதல் முதலாக நாம் ஒரு விஷயம் தெரிந்து கொள்ள வேண்டும். சிறையிலுள்ள நமது தோழர்கள் இதை விரும்புவார்களா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா?”

சாஷா தன் தலையைத் தொங்கவிட்டாள்.

சோபியா ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தாள். தனது சகோதரனை லேசாகப் பார்த்துக்கொண்டே, அவள் தீக்குச்சியை ஒரு மூலையில் விட்டெறிந்தாள்.

”அவர்கள் எப்படி இதை விரும்பாமல் இருப்பார்கள்” என்று பெருமூச்செறிந்தாள் தாய். ”இது எப்படிச் சாத்தியம் என்பதைத்தான் என்னால் நம்ப முடியவில்லை.”

அந்தக் காரியத்தை வெற்றிகரமாக எப்படி நடத்த முடியும் என்பதைத் தெரிந்து கொள்ள ஆவலாய்த் துடித்தாள் தாய். ஆனால் அவர்களோ வாய் பேசாது மெளனமாயிருந்தார்கள்.

“நான் நிகலாய் வெஸோவ்ஷிகோவைப் பார்க்க வேண்டும்” என்றாள் சோபியா.

“அவனை எங்கு எப்போது சந்திக்க இயலும் என்பதை நான் உங்களுக்கு நாளைக்குச் சொல்கிறேன்” என்றாள் சாஷா.

”அவன் என்ன செய்யப் போகிறான்?” என்று அறைக்குள் மேலும் கீழும் நடந்தவாறே கேட்டாள் சோபியா.

”அவனை அவர்கள் புதிய அச்சகத்திலே அச்சுக்கோப்பவனாக வைக்கலாம் என்று யோசிக்கிறார்கள், அதுவரையிலும் அவன் அந்த ஷிகாரியோடு குடியிருப்பான்”

சாஷா தன் முகத்தைச் சுழித்தாள். அவள் முகத்தில் மீண்டும் அந்த அழுத்த பாவம் குடியேறியது. அவள் எரிந்து விழுந்து பேசினாள்.

“நாளை மறுநாள் நீங்கள் பாவெலைப் பார்க்கச் செல்லும்போது அவனிடம் ஒரு சீட்டுக் கொடுத்துவிட்டு வரவேண்டும்” என்று தாயை நோக்கிக் கூறிக்கொண்டே, நிகலாய் பண்ட பாத்திரங்களை விளக்கும் இடத்துக்குப் போனான். “சொல்கிறது புரிந்ததா? அவர்கள் விரும்புகிறார்களா என்பதை ……”

“தெரியும், தெரியும்” என்று அவசர அவசரமாகப் பதில் சொன்னாள் தாய். ”நான் எப்படியும் அதைக் கொடுத்து விட்டு வருகிறேன்.”

“சரி, நான் போகிறேன்” என்றாள் சாஷா. அவள் ஒவ்வொருவரோடும் விரைவாகவும் மெளனமாகவும் கைகுலுக்கிவிட்டு. ஏதோ ஒருவிதமான அழுத்தந்திருத்தமான நடைபோட்டுக்கொண்டு விறைப்பாக அங்கிருந்து வெளியே சென்றாள்.

அவள் போனபிறகு, சோபியா தன் கரங்களைத் தாயின் தோள்களின் மீது போட்டு, அவள் உட்கார்ந்திருந்த நாற்காலியில் முன்னும் பின்னும் ஊஞ்சலாடினாள்.

”இந்த மாதிரி மருமகளை உங்களுக்குப் பிடிக்குமா, நீலவ்னா?” என்று கேட்டாள் அவள்.

”எனக்காக? நன்றாய்ச் சொன்னாய். அவர்கள் இருவரையும் ஒரு நாளைக்காவது ஒன்றாகப் பார்க்கின்ற காலம் வந்தால்…..” என்று கத்தினாள் தாய். அவளுக்கு அழுகையே வந்துவிடும் போலிருந்தது.

”ஆமாம், சிறு ஆனந்தம் என்றால் எல்லோருக்குமே நல்லதுதான்” என்று மெதுவாகச் சொன்னான் நிகலாய். ”ஆனால் சிறு ஆனந்தத்தால் யாருமே திருப்தியடைவதில்லை. ஆனால் ஆனந்தம் பெருத்துவிட்டாலோ – அதன் தரமும் மலிவாகிவிடுகிறது.”

சோபியா பியானோ வாத்தியத்தருகே சென்றாள். ஒரு சோக கீதத்தை இசைக்கத் தொடங்கினாள்.

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

ஊழியர்களின் வாழ்க்கையை அழிக்கும் விப்ரோ !

ஊழியர்களின் வாழ்க்கையை அழிக்கும்பத்ம விபூஷண்பிரேம்ஜின் இதயமற்ற விப்ரோ

த்யராஜ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்திலிருந்து வருபவர். அவர் ஒரு முதல் தலைமுறை பட்டதாரியாகவும், அவருடைய கிராமத்தில் இருக்கும் வெகுசில பட்டதாரிகளில் ஒருவராகவும் இருந்தார். சத்யராஜின் பெற்றோர்கள் தினசரி கூலித் தொழிலாளர்கள், மிகவும் கஷ்டப்பட்டு தன்னுடைய மகனை பட்டதாரி ஆக்கியுள்ளனர்.

இளநிலை பட்டப்படிப்புக்குப் பின், விப்ரோ டெக்னாலஜி நிறுவனத்தின் வேஸ் (WASE-Wipro Academy of Software Excellence) என்னும் படிப்பிற்கு(course) சத்யராஜ் தேர்வு செய்யப்பட்டார். இது எம்.டெக் (M.Tech) டிகிரி வழங்கும் 4 ஆண்டு படிப்பு. WASE குழுவின் பகுதியாக இருக்கும் நபர்களுக்கு பட்டப்படிப்பை முடிக்கும் வரை குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படும். 5 நாட்கள் விப்ரோவிற்கு வேலை செய்கிறார்கள். சனிக்கிழமை படிப்பதற்காக செலவிடுகிறார்கள்.

ஊழியர்களை அடிமாட்டுக் கூலியில் பணிபுரிய வைக்க விதவிதமாக உருவாக்கப்படும் திட்டங்கள் !

ஒரு ஒப்பந்தத்தின் மூலம் விப்ரோ மலிவு விலையில் இவர்களிடமிருந்து உழைப்பைப் பெறுகிறது. ஆனால் சத்யராஜ்-ஐ பொறுத்தவரை விப்ரோவில் பணிபுரிந்து, நவீன உலகில் தனது வாழ்க்கையை உருவாக்க வாய்ப்பு கிடைத்தது. 4-5 ஆண்டுகள் கடினமாக உழைத்த பிறகு, அவர் திருமணம் செய்துகொண்டு, கௌரவமான சம்பளத்துடன் வாழலாம்.

குறித்த காலத்தில் சத்யராஜ் தனது WASE படிப்பை முடித்தார். அவர் தனது சகோதரியின் திருமணத்திற்கு கடன்கள் மூலமாகவும் மற்றும் சம்பளத்திலிருந்தும் உதவினார். அவரும் கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார். அவரது மனைவி தற்போது 6 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்

தனது WASE படிப்பை வெற்றிகரமாக முடித்தபின், சத்யராஜ் நிரந்தர ஊழியராக விப்ரோவில் சேர்ந்தார். ஆனால் துரதிருஷ்டவசமாக அவர் பணி நீக்கங்களுக்கான இலக்கில் இருந்தார். கடைசி மதிப்பீடு சுழற்சியில் (Appraisal Cycle) குறைவாக மதிப்பிடப்பட்டார். மேலும் பங்களிப்பு எதிர்பார்க்கப்படுகிறது (MCE) என்று ரேட்டிங் வழங்கினர். அவருக்கு PIP எனும் செயல்திறன் மேம்பாட்டு திட்டம் வழங்கப்பட்டது. PIP இன் 3 மாதங்களுக்குப் பிறகு, அவரது PIP செயல்திறன் எதிர்மறையாக இருப்பதாக அவரிடம் கூறப்பட்டது. அவராகவே ராஜினாமாவை சமர்ப்பிக்க நிர்பந்திக்கப்பட்டார். தனது வேலையைப் பாதுகாக்க, சத்யராஜ் NDLF மற்றும் FITE போன்ற பல்வேறு IT தொழிற்சங்கங்களை தொடர்பு கொண்டார். சத்யராஜின் வேலையை காப்பாற்ற அனைத்து சாத்தியங்களையும் நாங்கள் ஆராய்ந்தோம்.

ஆனால் துரதிருஷ்டவசமாக நிறுவனம் சத்யராஜின் சேவைகளை  நவம்பர் 21-ம் தேதியன்று நிறுத்தி விட்டது. அவர் தனது வாழ்நாளில் ஒரே ஒரு MCE மதிப்பீட்டை தனது கடைசி மதிப்பீட்டு சுழற்சியில் பெற்றதால் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். நிறுவனத்தில் வேலை செய்த முந்தைய ஆண்டுகளில் அவருக்கு HVC மதிப்பீடு வழங்கப்பட்டது. அவர் வேறு நகரத்திலிருந்து சென்னைக்கு மாற்றப்பட்டு, விப்ரோ நிறுவனத்தின் விருந்தினர் இல்லத்தில் தங்கியிருந்தார். ஒரு நாள் முன்பாக கடிதம் வழங்கப்பட்டு, விருந்தினர் இல்லத்தை விட்டு வெளியேற அவர் கட்டாயப்படுத்தப்பட்டார்.

இது நேற்று நடந்தது, இப்போது சத்யராஜ் குடும்பத்தை நடத்துவதற்கு தனது அடுத்த வேலையைத் தேடி வருகிறார். விப்ரோவிலிருந்து அவரது திருமணத்திற்கு வாங்கிய 50,000 ரூபாய் கடனில் 36,000 ரூபாய் பாக்கி உள்ளது. இறுதி தீர்வைகளின் படி விப்ரோ 2 மாத சம்பளம் வழங்கும். மீதக் கடனைக் கழித்தபின், அதிகபட்சமாக 24,000 ரூபாய் அவருக்கு கிடைக்கும். சத்யராஜின் தற்போதைய சூழ்நிலை, இந்த பணத்தின் உதவியுடன் அவர் சென்னையில் தனது அடுத்த வேலையைத் தேடி தனது வாழ்வை நடத்த முடியும். அவர் சொன்ன கடைசி வார்த்தை என்னவென்றால், இந்த பணம் முடிவடையும்வரை வேலை தேடுவேன், பணம் முடிந்து விட்டால் எனது கிராமத்திற்குத் திரும்புவேன்.

படிக்க:
♦ ஐ.டி. துறை நண்பா உனக்கு ரோஷம் வேணுன்டா!!
♦ இதயத்தை உலுக்கும் ஐ.டி. கதைகள் !

தொழிற்சங்கத்திலிருந்து, நிறுவனத்திற்கு எதிராக 2A மனுவை தாக்கல் செய்ய நாங்கள் அவருக்கு உதவினோம். சோகமான பகுதி என்னவென்றால் இந்த சட்ட மோதல்கள் குறைந்தபட்சம் 2-3 ஆண்டுகள் எடுக்கும். பல ஊழியர்கள் நிறுவனத்திற்கு எதிராக போராடும் இந்த நீண்ட காலகட்டத்தை தாக்குப்பிடிக்கும் நிலையில் இல்லை.

ஒரு வழக்கில் பல முயற்சிகளுக்குப் பிறகும் ஆஜராகததால் விப்ரோவுக்கு ரூ 3,000 அபராதம் விதிக்கப்பட்ட ஒரு சம்பவம் உள்ளது. இந்த சம்பவம் புனேவில் நடைபெற்றது. அதில் விப்ரோ ஒரு ஊழியரின் வழக்கை இழுத்தடித்ததுடன், பல விசாரணைகளுக்கு ஆஜராகவில்லை. எனவே மீண்டும் மீண்டும் வாய்தா வாங்கியதற்காக விப்ரோவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இங்கே 3,000 ரூபாய் பணம் விப்ரோவிற்கு பெரிதில்லை. விப்ரோவின் எண்ணம் அல்லது வேறு எந்த நிறுவனத்தின் எண்ணத்தையும் இது தெளிவாக காட்டுகிறது. ஊழியர்கள் போராடும்போது நிறுவனங்கள் முடிந்தவரை வழக்குகளை இழுக்க முயற்சிக்கிறார்கள். அவர்களின் பணபலம் மற்றும் வழக்கறிஞர் பலத்துடன் இதைச் செய்கிறார்கள்.

மேலே கூறியபடி, அவர்கள் சட்டத்திற்கு புறம்பாக மூத்த ஊழியர்களை மட்டுமின்றி ஜூனியர் ஊழியர்களையும் வேலையிலிருந்து நீக்க ஆரம்பித்துவிட்டனர்.

இப்போது சத்யராஜின் கர்ப்பிணி மனைவி, அவரது நலனுக்காகவும் அடுத்த வேலைக்காகவும் வேண்டிக் கொண்டிருக்கிறார். விப்ரோவின் சில மேலாளர்கள் மற்றும் மனிதவள அதிகாரிகளின் முடிவு 3 மாதங்களில் பிறக்க இருக்கும் ஒரு குழந்தையின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

நாட்டிற்கு சேவை செய்தாராம் திருவாளர் பத்ம விபூஷன் அசிம் ப்ரேம்ஜி

இதில் சோகமான பகுதி வேலைநீக்கத்திற்கு காரணம் வேலைவாய்ப்புக் கடிதத்தின் ஒரு விதி என்பதுதான். மற்றொரு ஊழியரின் விசாரணையில், தொழிலாளர் நல அதிகாரி, வேலைவாய்ப்புக் கடிதத்தின் விதிமுறைகளைக் காட்டி ஒருவரை வேலையிலிருந்து நீக்க முடியாது என்று கூறியிருக்கிறார். பெரிய நிறுவனங்களில் எவையும் அங்கீகரிக்கப்பட்ட ஒழுங்குமுறை விதிகளை பின்பற்றுவதில்லை. இத்தகைய முடிவுகளை அனுமதிக்காத, மாதிரி ஒழுங்குமுறை விதிகளை அவை பின்பற்ற வேண்டும்.

நிச்சயமாக பெரிய நிறுவனங்கள் இதை நன்கு அறிந்திருக்கின்றன, ஆனால் சத்யராஜைப் போன்ற ஊழியர்கள் நிறுவனத்திற்கு எதிராக எதையும் செய்வதில்லை என்பதை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டு ஊழியர்களை வேலையை விட்டு துரத்துகிறார்கள்.

அனைத்து ஊழியர்கள் கூட்டத்திலும் விப்ரோ மேலாளர்கள், விப்ரோ அதன் வருமானத்தில் 40% நன்கொடைக்கு அளிப்பதாக பெருமையடிக்கின்றனர். விப்ரோ தலைவர் அசிம் பிரேம்ஜிக்கு நாட்டிற்களித்த சேவைகளுக்காக பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது, மேலும் அவர் தொண்டு நோக்கங்களுக்காக தனது செல்வத்தின் பெரும்பகுதியை ஒதுக்கிவைக்கிறார். விப்ரோவின் மேலாளர்கள், அஜிம் பிரேம்ஜியுடன் அவர்களது HR நடைமுறைகளை பற்றி விவாதிக்க வேண்டும். ஊழியர்களின் வாழ்க்கையை நிறுவனம் இப்படித்தான் அழிக்க விரும்புகிறதா என்று கேட்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேல், ‘சேவை சொந்த வீட்டிலிருந்து ஆரம்பிக்கிறது’ என்பதை நினைவுபடுத்த வேண்டும்.

படிக்க:
♦ விப்ரோவில் ஆணாதிக்கத்தை எதிர்த்து போராடிய ஷ்ரேயா உக்கில்
டெக் மகிந்த்ராவில் என்ன நடக்கிறது ?

விப்ரோ ஊழியர் டேவிட் வேலையை இழந்த 3 மாதங்களுக்குள் வங்கிக் கொள்ளை முயற்சி செய்தார். இது தொடர்பாக நமது சங்க வலைத்தளத்தின் கட்டுரையைப் படித்த பிறகு அவருடைய நண்பர்களிடமிருந்து ஒரு மின்னஞ்சல் மறுமொழி கிடைத்தது. வாசகர்களிடம் அந்த மின்னஞ்சலை முன்வைக்க விரும்புகிறோம்:

நான் இதை மிகுந்த வேதனையுடனும், எங்களில் நீண்ட கால உதவி செய்ய விரும்புகிறவர்களின் உதவி பிரவீனுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடனும் எழுதுகிறேன்.

நான் அவரது நண்பர்களில் ஒருவன் மற்றும் முன்பு அவருடன் பணியாற்றியவன். பிரவின் மற்றும் அவரது குடும்பத்தினரை நன்றாகவே எனக்குத் தெரியும். பிரவின் ஒரு நல்ல மனிதர், மிகவும் அறிவார்ந்தவர், பணிவானவர். இசை, பயிற்சியளித்தல் (நடத்தை மற்றும் மென்திறமைகள் பயிற்சி) பற்றிய அவரது அறிவு தனித்துவமானது. அவருக்கு மனைவி மற்றும் இரண்டு அழகான குழந்தைகள் உள்ளனர். எந்தவொரு குடும்பத்திலும் இருப்பதைப் போலவே அவர் வீட்டிலும் குடும்பப் பிரச்சினைகள் இருந்தன. அவர் எப்போதும் குடும்பத்தின் மேல் அக்கறையுடன் வேலை செய்தார். அவரது நடத்தை அவரின் மேலாளர்கள் அனைவராலும், அவரது சக ஊழியர்கள், பயிற்சி மாணவர்கள் மற்றும் நண்பர்களால் மிகவும் பாராட்டப்பட்டது.

வாழ்க்கையின் கடினமான பகுதிகளில் பிரவீன் பயணித்ததை நான் பார்த்திருக்கிறேன், அவற்றிலிருந்து எப்போதுமே ஒரு வெற்றியாளராக வெளிப்பட்டார். வாழ்க்கையையும் வேலையையும் பற்றிய அவரது அறிவுரை மற்றும் எப்போதும் ஏதாவது சிறப்பாக செய்ய வேண்டும் என்ற உணர்வு எனக்கு வாழ்க்கையிலும், வேலையிலும் தொடர்ந்து உத்வேகமளித்தது.

கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்படும் டேவிட்

அவரது குடும்பத்தினர் அவரை இன்னும் கொஞ்சம் அக்கறையுடன் கவனித்திருந்தால், பிரவீன் இந்த தீவிர முடிவை எடுத்திருக்க மாட்டார் என்பது நிச்சயம். அவரது நல்ல நண்பராக நான் வெட்கப்படுகிறேன், வேலைவாய்ப்புகளை பற்றி கூறியதை தவிர அவருக்கு அதிக உதவி செய்ய முடியவில்லை என்று. ஆனால், என் நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுள் யாராவது இத்தகைய எண்ணங்கள் அல்லது செயல்களைச் செய்ய நான் அனுமதிக்க மாட்டேன் என்று எனக்கு நானே உறுதி எடுத்துக் கொள்கிறேன்.

அவருடன் என் கடைசி உரையாடல் புனேயில் பயிற்சியாளர் வாய்ப்பு பற்றியது. அந்த வாய்ப்பை பெற தனது விண்ணப்பத்தை அனுப்பவும் சில அழைப்புகள் செய்யவும் நான் அவரிடம் கூறினேன்.

ஒரு மனிதனுக்குதன் குடும்பத்தை கவனித்துக் கொள்வதற்கான வருமானம்; குடும்பத்தின் ஆதரவு மற்றும் கவனிப்பு ஆகியவை கடினமான சூழ்நிலைகளைக் கடக்க போதுமானது என்று நான் நினைக்கிறேன். பிரவீனுக்கு வாழ்க்கையில் இந்த இரண்டும் குறைவாகவே கிடைத்தது. இவையெல்லாம் இருந்தபோதிலும்அவர் இன்னும் என்னுடைய நல்ல நண்பர். அவரைப் போன்றவர்களுக்கு அப்படி எந்த சட்டமும் இல்லை.

என் நண்பர் பிரவீன் டேவிட், பற்றிய இந்த சம்பவத்தையும் அவரது இரண்டு சிறு குழந்தைகளைப் பற்றியும் இன்னும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

டேவிட் பற்றிய இந்த சம்பவம், ஊடகங்களில் பொம்மை துப்பாக்கி மற்றும் போலி குண்டு மூலம் கொள்ளையடிக்க முயன்ற IT ஊழியர் என்று கோமாளி போல் சித்தரித்து வெளிவந்துள்ளது. நாமும் செய்தியைப் படித்துவிட்டு வழக்கம் போல் மறந்துவிடுவோம். ஆனால் அவரது நண்பரின் இந்த மின்னஞ்சல் டேவிட்டின் வேறொரு பக்கத்தையும் கட்டாய வேலைநீக்கம் IT  ஊழியர்களின் வாழ்க்கையை எப்படி தாக்குகிறது என்பதையும் காட்டுகிறது. நாங்கள், சங்கம் மூலமாக மற்ற சக ஊழியர்களிடம் உங்களால் முடிந்த எல்லா விதங்களிலும் டேவிட்டுக்கு உதவ அனைத்து முயற்சிகளையும் எடுக்குமாறு கோருகிறோம்.

படிக்க:
♦ பொறியியல் மாணவர்களின் வேலைக்கு வேட்டு வைக்கும் கேட் தேர்வு | கணேசன்
♦ வேலைவாய்ப்பு அதிகரித்திருக்கிறதாம் – மோடியின் அடுத்த ஜும்லா

ஜூனியர் ஊழியர்கள் பலரிடம் தங்களது வேலைகள் 10 வருடங்கள் வரை காப்பாற்றப்படும் என்று நினைத்துகொண்டு தொழிற்சங்கங்களில் சேர ஆர்வமற்று இருப்பதை நாங்கள் எச்சரித்துள்ளோம். தொழிற்சங்கங்களின் முக்கியத்துவத்தை பற்றி பலமுறை எச்சரிக்கை செய்துள்ளோம்; விரைவில் நிறுவனங்கள் மூத்த ஊழியர்களோடு புதிய ஊழியர்களையும் குறிவைக்க ஆரம்பிக்கும்.

இப்போது உண்மையில் புலி வந்தே விட்டது. 2 ஆண்டு அனுபவமுள்ள ஊழியர்களுக்கும் வேலை பறிபோகிறது.

மூத்த ஊழியர்களும், சக ஊழியர்களும் வேலையை விட்டு நீக்கப்படும்போது நாம் கைகளை கட்டிக்கொண்டு, நமது வேலையை நினைத்து மகிழ்ச்சியாக இருந்தால் மேலும் பல டேவிட்களையும் சத்யராஜையும் நிறுவனங்கள் உருவாக்கும்.

இதை ஒரு முடிவுக்கு கொண்டு வர சங்கமாக ஒன்றிணைவோம்.

– அனுபவம் மிக்க மூத்த ஊழியர்
மொழிபெயர்ப்பு: மணி
நன்றி: New Democrats

மஞ்சள் சீருடை – புதியதோர் பிரெஞ்சுப் புரட்சிக்கான அறிகுறி

0

கலையரசன்
17 நவம்பர் 2018, மஞ்சள் மேலங்கி அணிந்த சிலர் குழுவாக திரண்டு, பிரான்ஸின் பிரதான சாலைகளை வழிமறித்து போராட்டம் நடத்தினார்கள். அந்நாட்டில் இது போன்ற போராட்டங்கள் அடிக்கடி நடப்பதுண்டு. சில வருடங்களுக்கு முன்னர், விவசாயிகள் பால் மற்றும் விவசாய விளைபொருட்களை தெருக்களில் கொட்டி போக்குவரத்துக்கு இடையூறு செய்தனர். அன்று உண்மையிலேயே பாலாறு ஓடியது. தம்மிடம் கொள்வனவு செய்யும் சூப்பர் மார்க்கெட் நிறுவனங்கள், மிகக் குறைந்த விலை கொடுக்கின்றன என்பது விவசாயிகளின் கோபத்திற்குக் காரணம்.

இந்த தடவை, மஞ்சள் மேலங்கியுடன் வீதிகளை மறித்து போராடியவர்கள், பெரும்பாலும் எரிபொருள் விலையேற்றம் காரணமாக பாதிக்கப்பட்ட வாகன சாரதிகள். பார ஊர்திகளின் சாரதிகள் மட்டுமல்லாது, வேலைக்கு காரில் சென்று வருவோரும் எரிபொருள் செலவு குறித்து அதிருப்தி கொண்டிருந்தனர். இதைத் தவிர, நலிவடைந்த பிரிவினரான சிறு வணிகர்களும் இந்த இயக்கத்தில் இருந்தனர்.

கடலில் பெரிய மீன்கள் சின்ன மீன்களை சாப்பிடுவது போல, மேற்கு ஐரோப்பிய நாடுகள் எங்கும் பெரும் முதலாளிகளின் நிறுவனங்கள் சிறு வணிகர்களின் கடைகளை இல்லாதொழித்து விட்டது. அதைத் தவிர முன்னொரு காலத்தில் அரசு வழங்கிய சலுகைகள் குறைத்து, வேலைப்பளுவையும் கூட்டி விட்டதால் கஷ்டப்படும் ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் போன்ற நடுத்தர வர்க்கத்தினரின் பாடு இன்று திண்டாட்டமாக உள்ளது. அதனால், அடித்தட்டு உழைக்கும் வர்க்கத்தினர் மட்டுமல்லாது, பெரும்பாலான பிரெஞ்சு கீழ் மத்திய தர வர்க்கத்தினர் கூட, இன்றைய சமூகத்தில் நலிவடைந்த பிரிவினராக கருதப்படுகின்றனர்.

மார்க்சிய சொல்லாடலில் “குட்டி முதலாளித்துவ வர்க்கம்” என அழைக்கப்படும், கீழ் மத்தியதர வர்க்கத்தினர் தான் மஞ்சள் சட்டைப் போராட்டத்தை தொடக்கியவர்கள். ஏனெனில் முப்பது வருடங்களுக்கு முன்னர் வசதியாக வாழ்ந்தவர்கள், இன்று ஏழ்மை நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். பிரெஞ்சு சனத்தொகையில் ஒரு சதவீதமான பணக்காரர்கள் மென்மேலும் செல்வம் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதே நேரம் ஏழைகள் மென்மேலும் வறுமைக்குள் தள்ளப்படுகின்றனர்.

அதனால், பெட்ரோல் விலையேற்றம் மட்டும் தான்  போராட்டத்திற்கு காரணம் என்று நினைப்பது தவறாகும். பல ஊடகங்கள் இந்தத் தவறை திரும்பத் திரும்ப செய்து கொண்டிருந்தன. கடந்த பல வருடங்களாக, பிரெஞ்சு உழைக்கும் மக்களின் வருமானம் குறைந்து கொண்டே செல்கின்றது. ஒருபக்கம் விலைவாசி ஏறிக் கொண்டிருக்கையில், மறுபக்கம் சம்பளம் குறைந்து கொண்டு செல்கிறது. நாட்டில் நிலவும் பணவீக்கத்திற்கு ஏற்றவாறு சம்பளம் கூடுவதில்லை. இதெல்லாம் மக்களை போராடத் தூண்டி விட்டன. இதற்கு மேலே பொறுக்க முடியாது என்ற நிலைமையில் தான் அவர்களை வீதியில் இறங்க வைத்தது.

போராட்டக்காரர்கள்  மஞ்சள் மேலங்கி அணிந்து கொண்டமை ஒரு புத்திசாலித்தனமான தெரிவு எனலாம். பிரான்சில் வீதி வேலை செய்பவர்களும், போக்குவரத்து கண்காணிப்பாளர்களும், இரவிலும் ஒளியை பிரதிபலிக்கும்  மஞ்சள் மேலங்கி அணிந்திருக்க வேண்டியது கட்டாயம். வாகன சாரதிகளும் வைத்திருக்க வேண்டும். மஞ்சள் மேலங்கி எனும் ஒரு சாதாரண பாதுகாப்புக் கவசம், இன்று மக்கள் எழுச்சியின் குறியீடாக மாறிவிட்டது.

இந்தப் போராட்டம் பல நாட்களாக தொடர்ந்தது. ஆரம்பத்தில் அஹிம்சை முறையில் தான் போராட்டம் நடந்தது. கலவரத் தடுப்பு போலிஸ் படையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசி கலைக்கப் பார்த்தது. அரச வன்முறைக்கு எதிரான மக்களின் பதில் வன்முறை என்று நிலைமை மோசமடைந்தது. நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இது போன்ற சந்தர்ப்பங்களில் ஆர்ப்பாட்டக்காரர் போன்று மாறுவேடமிட்ட போலீஸ்காரர்கள் சிலரும் கலவரத்தை ஏற்படுத்துவார்கள். இது பிரான்சில் ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட விடயம். ஏனெனில் அஹிம்சாவழிப் போராட்டம் வன்முறைப் பாதைக்கு மாறினால் பொது மக்கள் எதிர்க்கத் தொடங்கி விடுவார்கள் என்பது அரசின் எண்ணம். ஆனால், இந்தத் தடவை அந்தத் தந்திரம் பலிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

 

இந்த தடவை, வன்முறைகள் நடந்த போதிலும் பெரும்பான்மை மக்கள் மஞ்சள் சட்டைப் போராட்டத்தை ஆதரித்தனர். அங்கு ஓர் உள்நாட்டு யுத்தம் நடக்காத குறை. பாரிஸ் நகரில் வீதியில் நின்ற கார்கள் எரிக்கப்பட்டன. அவற்றில் போலிஸ் காரும் ஒன்று. ஆடம்பர பொருட்களை விற்கும் கடைகள் சூறையாடப்பட்டன. சில இடங்களில் கட்டிடங்களும் எரிக்கப்பட்டன. சுற்றுலாப் பயணிகளை கவரும் Arc de Triomphe  நினைவகத்தில் கூட அரசியல் கோஷங்கள் எழுதப்பட்டிருந்தன. காவல்துறையில் இருந்தவர்களின் லீவுகள் இரத்து செய்யப்பட்டு, ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். மொத்தத்தில் பாரிஸ் நகரம் ஒரு யுத்தக்களம் போன்று காட்சியளித்தது.

இதனால் பிரான்சில் நடக்கும் நிகழ்வுகள் சர்வதேச ஊடகங்களின் கவனத்தைக் கவர்ந்து விட்டன. அதன் விளைவாக,  பிற நாடுகளிலும் மஞ்சள் மேலங்கி அரச எதிர்ப்புப் போராட்டத்தின் குறியீடாக மாறியது. மஞ்சள் சட்டைப் போராட்டம் சர்வதேசமயமாகியது. முதலில் அயல்நாடான பெல்ஜியத்திற்கு போராட்டம் பரவியது. அங்கும் எரிபொருள் விலை உயர்வை எதிர்ப்பது என்ற பெயரில் தான் தொடங்கியது. ஒரு கட்டத்தில் பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் இல்லை என்று மூட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. பெல்ஜியத்திலும் போராட்டம் கலவரத்தில் முடிந்தது. நெதர்லாந்திலும் சில இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. ஈராக்கில் பஸ்ரா நகரில் போராட்டத்தில் குதித்த தொழிலாளர்கள் மஞ்சள் மேலங்கி அணிந்திருந்தனர். எகிப்தில் மஞ்சள் சீருடை விற்பனையை அரசு தடை செய்தது.

படிக்க:
நான் இந்து என்பதால் இந்துத்துவாவை ஏற்க முடியாது : நயன்தாரா செகல்
ருமேனியாவில் மன்னர் குடும்பமும் பாட்டாளி வர்க்கமான வரலாறு !

மஞ்சள் சட்டைப் போராட்டம் எந்தவொரு அரசியல் கட்சியினதும் பின்புலம் இல்லாமல் தொடங்கியது. அதற்கென குறிப்பிட்ட அரசியல் இலக்கு இருக்கவில்லை. உண்மையில் பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்கள் ஊடாக தொடர்பு கொண்ட சாதாரண மக்கள் தான் போராட்டத்தில் குதித்தனர். அவர்களில் பலர் இவ்வளவு காலமும் அரசியலில் ஈடுபட்டிராத சாமானியர்கள். கணிசமான அளவினர், பிற்போக்குத்தனமான கருத்துக்களை கொண்டவர்கள். சிலர் பிரெஞ்சு இனவாதிகளாகவும் இருந்தனர். ஓரிடத்தில் வீதித் தடைகளை ஏற்படுத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள், வாகனம் ஒன்றில் மறைந்திருந்த அகதிகளை கண்டுபிடித்து போலீசில் ஒப்படைத்திருந்தனர். அரசியல் உணர்வற்ற மக்கள் போராட வந்தால், இது போன்ற சம்பவங்கள் நடப்பதையும் தவிர்க்க முடியாது.

 

நான் முன்னர் குறிப்பிட்ட நலிவடைந்த பிரிவினரான கீழ் மத்தியதர வர்க்கத்தினர் பெரும்பாலும் FN எனும் இனவாதக் கட்சிக்கு ஆதரவாகவும் உள்ளனர்.  “நாட்டில் வேலையில்லாப் பிரச்சினைக்கு காரணம், பிரெஞ்சுக்காரரின் வேலைகளை வெளிநாட்டவர் செய்வது தான்…” என்று பொருளாதாரப் பிரச்சினையை இனவாதக் கண்ணோட்டத்துடன் குறுக்கிப் பார்ப்பதால், அது ஒரு தீவிர வலதுசாரிக் கட்சியாகவும் உள்ளது.

பிரெஞ்சு இனவாதிகள், பூர்வீக வெள்ளையினத்தவர் மத்தியில் உள்ள வறுமையை மட்டுமே கவனத்தில் எடுக்கிறார்கள். குடியேறிகள் சமூகங்களில் வறுமையும், வேலையில்லாப் பிரச்சினையும் பல மடங்கு அதிகம். ஆனால், பிரான்சில் வாழும் வெளிநாட்டுக் குடியேறிகளும், அகதிகளும் இலகுவில் போராட முன் வர மாட்டார்கள். கிடைப்பதை வைத்து திருப்திப்படுபவர்கள். அதே நேரம், அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தால் நாட்டை விட்டு வெளியேற்றி விடுவார்களோ என்றும் அஞ்சுவார்கள்.

பிரெஞ்சு அரசும், நாட்டில் உள்ள  இனப்பிரச்சினையை பயன்படுத்திக் கொள்ள நினைத்தது. தீவிர வலதுசாரிக் கட்சியினர் குழப்பம் விளைவித்து அரசைக் கவிழ்க்கப்பார்க்கின்றனர் என்று பிரச்சாரம் செய்தது. ஆனால் அந்தப் பிரச்சாரம் எடுபடவில்லை. மஞ்சள் அங்கிப் போராட்டத்தில் தீவிர வலதுசாரிகள் கலந்து கொண்டதை மறுப்பதற்கில்லை. ஆனால் அது பாதி உண்மை மட்டுமே. தீவிர இடதுசாரிகளும் போராட்டக் களத்தில் நின்றனர். மிகச் சிறிய இயக்கமான  மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மூடப்பட்ட கடை ஜன்னல்களில் எழுதப்பட்ட அரசியல் சுலோகங்கள் மூலம் தனது இருப்பை வெளிப்படுத்தி இருந்தது. அதன் உறுப்பினர்கள் கம்யூனிச சின்னம் பொறித்த மஞ்சள் மேலங்கியுடன் முகத்தை மூடிய படி ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டனர். ஒரு பிரெஞ்சு அரச தொலைக்காட்சியான TF1, மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பற்றி தனது செய்தி அறிக்கையில் தெரிவித்தது.

இன்று வரையில் நடந்த சம்பவங்களை வைத்துப் பார்க்கையில் இதை ஒரு புரட்சி என்று கூற முடியாது. ஆனால், புரட்சிக்கு முந்திய ஆரம்ப காலகட்டம் என்று கூறலாம். அதற்காக அடுத்த மாதமே புரட்சி வெடிக்கும் என்று அர்த்தம் அல்ல. அதற்கு இன்னும் சில வருடங்கள் செல்ல வேண்டி இருக்கலாம். உலக வரலாற்றில் நடந்த புரட்சிகள் எல்லாவற்றுக்கும் “புரட்சிக்கு முந்திய காலகட்டம்” என்ற ஒன்று இருந்திருக்கும்.

மக்கள் அரசியல் விழிப்புணர்வு பெறுவதற்கும் குறிப்பிட்ட காலம் தேவை. அதே நேரம், பல்வேறு பட்ட அரசியல் கருத்துக்களை கொண்டவர்களும் ஒரே குறிக்கோளுடன் இணைந்து கொள்வார்கள். பிரான்ஸ் நிலைமையை பொறுத்தவரையில், ஜனாதிபதி மக்ரோன் பதவி விலக வேண்டும் என்பது ஒரு  பொதுவான குறிக்கோள். அவர் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைக்கூலி என்பதே போராட்டக்காரர்களின் பொதுக் கருத்தாக உள்ளது. இந்த விடயத்தில், முரண்பாடான அரசியல் கொள்கைகளை பின்பற்றும் தீவிர வலதுசாரிகளும், தீவிர இடதுசாரிகளும் ஒரே முனைப்போடு உள்ளனர்.

ஒரு நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினைகள் மக்களை புரட்சியை நோக்கி தள்ளிவிடுகின்றன. மேற்கு ஐரோப்பாவில் முன்னொரு காலத்தில் இருந்த, பொது மக்களின் வசதிகளை உயர்த்துவதற்காக பணத்தை செலவிடும் “நலன்புரி அரசுகள்”   இப்போது இல்லை. தற்போது எந்தக் கட்சி ஆட்சி அமைத்தாலும் மக்களிடம் பணம் பறிக்கும் அரசுகளாக உள்ளன. வலதுசாரிக் கட்சியாக இருந்தாலும், இடதுசாரிக் கட்சியாக இருந்தாலும், தேர்தலில் வென்ற பின்னர் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காற்றோடு பறக்க விடுகின்றன. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பெரும் முதலாளிகளுக்கு சேவை செய்வதை மட்டும் நோக்கமாக கொண்டுள்ளது. வாக்காளர்களும் ஊழல்மயக் கட்சிகளுக்கு மாறி மாறி வோட்டு போட்டு களைத்து விட்டார்கள். அதாவது, ஜனநாயக தேர்தல் முறையில் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள்.

ஆரம்ப நாட்களில் போராட்டம் எந்தவித அரசியலுக்கும் கட்டுப்படாமல் ஓர் இலக்கின்றி சென்று கொண்டிருந்தது. பாதிக்கப்பட்ட மக்களின் கோபம், அரசுக்கு எதிராக திரும்பி இருந்தது. அரசு நினைத்தால் பிரச்சினையை தீர்க்கலாம் என நம்பினார்கள். இறுதியில் மஞ்சள் சட்டைப் போராட்டத்திற்கு அடிபணிந்த ஜனாதிபதி மக்ரோன், அடுத்த ஆறு மாதங்களுக்கு எரிபொருள் விலை உயராது என்று வாக்குறுதி அளித்ததுடன், அடிப்படைச் சம்பளம் நூறு யூரோவாக அதிகரிக்கப்படும் என்று அறிவித்தார்.

மக்ரோனின் அறிவிப்பானது யானைப்பசிக்கு சோளப்பொரி மாதிரியான அற்ப சலுகைகளை மட்டுமே வழங்கியது. இதனால் மஞ்சள் சட்டைப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து விடலாம் என்று மக்ரோன் நினைத்தால் ஏமாந்து போவார். சீசாவுக்குள் இருந்து கிளம்பிய பூதத்தை பிடித்து திரும்பவும் அடைப்பது இலகுவான விடயம் அல்ல. அரசியல் வழிகாட்டுதல் இல்லாத இயக்கமாக இருந்த படியால் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தவுடன் கலைந்து விடுவார்கள் என்று எதிர்பார்த்திருக்கலாம்.

ஒரு வெகுஜன அமைப்பாக தொடங்கிய மஞ்சள் சட்டைப் போராட்டத்தின் இடையில் வந்து சேர்ந்து கொண்ட தீவிர இடதுசாரிகள்  மெல்ல மெல்ல அரசியல்மயப்படுத்தி வருகின்றனர். அதன் ஆரம்பம் பாரிஸ் புறநகர்ப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் நடந்த சம்பவம் ஆகும். அந்தப் பாடசாலைக்கு சென்ற போலீசார், மாணவர்களை தடுத்து வைத்து மோசமாக நடத்தியது. மாணவர்கள் கைகளை உயர்த்தி தலைக்கு பின்னால் வைத்துக் கொண்டு, முழங்காலில் நிற்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். போலிஸ் அதை வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பரவ விட்டது.

மாணவர்களை பயமுறுத்தி எச்சரிக்கை செய்வதற்காக, போலிஸ் அவ்வாறு நடந்து கொண்டது. ஆனால், போலிஸ் எதிர்பார்த்தமைக்கு மாறாக, அது மாணவர்களை தீவிர இடதுசாரி அரசியலில் ஈடுபடத் தூண்டியது. அடுத்த நாளே அந்தப் பாடசாலையில் செங்கொடி ஏற்றப் பட்டது. மாணவர்கள் கம்யூனிச சுலோகங்கள் தாங்கிய பதாகைகளை பிடித்துக் கொண்டு தெருவில் இறங்கிப் போராடினார்கள். பாடசாலை மாணவர்கள் போராட்டத்தில் குதித்தவுடன், மிகப்பெரிய தொழிற்சங்கமான CGT ஆதரவு வழங்கத் தொடங்கியது.

ஒரு பக்கம் மாணவர்கள் கல்விக் கட்டண உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். மறுபக்கம் தொழிலாளர்கள் தமது உரிமைகளுக்காக போராடுகின்றனர். ஒரு சமூகத்தில் போர்க்குணாம்சம் மிக்க மாணவர்களையும், தொழிலாளர்களையும் ஒன்று சேர்த்த பெருமை இடதுசாரிகளை சாரும். அதே நேரம், அரேபியர், ஆபிரிக்கர் போன்ற சிறுபான்மையின சமூகங்களையும் இடதுசாரிகளே பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள். தற்போது அவர்களும் பெருமளவில் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்கின்றனர்.

“மக்ரோன் பதவி விலகு!” என்ற ஒற்றைக் கோஷத்துடன் தொடங்கிய மஞ்சள் சட்டைப் போராட்டத்தில் தற்போது முதலாளித்துவ எதிர்ப்பு முழக்கங்கள் கேட்கின்றன. புதிய அரசமைப்பு சட்டம் உருவாக்கப்பட வேண்டும். பணக்காரர்களுக்கு அதிக வரி அளவிடப் பட வேண்டும் என்பன போன்ற முற்போக்கான அரசியல் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. ஏற்கனவே பல புரட்சிகளை கண்டுவிட்ட பிரான்ஸ், மீண்டும் ஒரு புரட்சியை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.

கலையரசன்

கலையரசன் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர். வரலாறு, அரசியல், பண்பாடு ஆகியன குறித்து மார்க்சிய நோக்கில் கலையகம் தளத்தில் தொடர்ந்து எழுதி வருபவர். வெகுசன ஊடகப் பிரச்சாரத்தின் விளைவாக முதலாளித்துவக் கண்ணோட்டத்திற்கு தம்மையறியாமல் ஆட்பட்டிருக்கும் வாசகர்களை மீட்பதில் இவருடைய எழுத்தின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது.

நான் இந்து என்பதால் இந்துத்துவாவை ஏற்க முடியாது : நயன்தாரா செகல்

2

நயன்தாரா செகல் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்.  ஜவஹர்லால் நேருவின் சகோதரி விஜலட்சுமி பண்டிட்டின் இரண்டாவது மகள். இந்திரா காந்தியின் எதேச்சதிகார போக்கை எதிர்த்தவர். மோடி ஆட்சிக்கு வந்த பின்,  உ.பி.யில் நடந்த தாத்ரி கும்பல் கொலையை கண்டித்தும் கோவிந்த் பன்சாரே, தபோல்கர், கல்புர்கி போன்ற முற்போக்காளர் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டித்தும் தனது சாகித்ய அகாடமி விருதை திரும்ப அளித்தார் செகல். அவர் எழுதிய ‘ஒரு இந்துவாக இந்துத்துவாவை எதிர்க்கிறேன்’ என்கிற கட்டுரையின் தமிழாக்கம் இங்கே…

‘நீங்கள் ஏன் இந்துத்துவாவை எதிர்க்கிறீர்கள்?’ எனக்குத் தெரிந்த பெண் ஒருவர் இப்படிக் கேட்டார்.  நான் ஏன் அதை எதிர்க்கிறேன்? நான் அவரிடம் ஏன் என்று சொன்னேன். நான் இரண்டு காரணங்களுக்காக அதை எதிர்க்கிறேன். ஒன்று தனிப்பட்ட காரணம்; மற்றொன்று அரசியல் காரணம்.

தனிப்பட்ட காரணத்திலிருந்தே தொடங்குகிறேன். நான் இந்து என்பதால் இந்துத்துவாவை ஏற்க முடியாது. நான் இந்துவாகப் பிறந்தேன் என்பதற்காக இதைச் சொல்லவில்லை. நான் இதன் மீது நம்பிக்கை கொண்டிருக்கிறேன்.  என்னுடைய மதம் எனக்கு முக்கியமானது. எனக்கு அது பலத்தையும் ஆதாரத்தையும் ஒவ்வொரு நாளும் தருகிறது. என்னுடைய வாழ்க்கை மற்றும் சிந்தனையின் மையம் அது. மற்ற நம்பிக்கைகளை மதிக்க அது கற்றுத்தருகிறது.  இந்த உலகம் ஒரு குடும்பம் என சனாதன தர்மம் கற்றுத்தருகிறது.

நயன்தாரா செகல்.

பல இலட்சக்கணக்கான இந்தியர்களுக்கு, நம்பிக்கை எதுவாக இருந்தாலும் மதம் முக்கியமானது.  கடவுள் மனிதர்களை தேர்வு செய்வதில்லை என உண்மையான மத நம்பிக்கை கொண்ட மக்களுக்குத் தெரியும். படைத்தவரின் கண்களில் நாம் அனைவரும் சமமானவர்களே.

எனவே, என்னுடைய மதம் சொல்லும் கருத்துக்கு மாறாக, தங்களை இந்துக்கள் என சொல்லிக்கொள்வோர் மிருகத்தனமாக, மதத்தின் அடியாட்களாகக் கருதிக்கொண்டு அப்பாவி இந்தியர்களை அடித்துக் கொல்வதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.  தங்களுடைய மதத்தை கேள்வி கேட்பவர்களை குண்டுகளால் துளைப்பதும் டெல்லியிலிருந்து ஈத் பண்டிகைக்காக துணிகள் வாங்கிக்கொண்டு தனது கிராமத்துக்கு ரயிலில் சென்று கொண்டிருந்த 15 வயது சிறுவனை ஒரு கும்பல் கத்தியால் குத்திக்கொன்றதும் சகித்துக்கொள்ள முடியாதது.

இப்படிப்பட்ட பழிவாங்கும் உணர்ச்சியானது, பாதிக்கப்பட்டவர்களை சொல்லமுடியா துயரத்தில் ஆழ்த்திவிடுகிறது.  வருத்தத்தில் இருக்கிற முகமது அக்லக் மற்றும் பெஹ்லு கானை  குற்றவாளிகள் ஆக்கிவிட்டு, அவர்களைக் கொன்றவர்கள் அடுத்த வெறுப்பு கொலையைச் செய்ய சுதந்திரமாக உலவிக்கொண்டிருக்கும் செய்தி, அவர்கள் குடும்பத்தினரை எந்த அளவுக்கு பாதித்திருக்கும்?

ஏசு கிறிஸ்து, சிலுவையில் அறையப்பட்ட வலியுடன் இப்படி வேண்டினார், “கர்த்தரே, அவர்கள் தெரியாமல் செய்ததற்காக அவர்களை மன்னியும்”. ஆனால், இந்துக்களாகிய நாம் அத்தகைய வேண்டுதலை செய்ய முடியாது. ஏனெனில் அவர்கள் இந்துயிசத்தின் பெயரால் அதைச் செய்தார்கள், அவர்கள் என்ன செய்கிறோம் என அறிந்தே செய்தார்கள். இதற்காக அவர்கள் பெருமைப்படவும் செய்தார்கள்.  மதவெறித்தனம் அல்லது இனவெறி கட்டுக்கடங்காமல் போக அனுமதிக்கப்படும்போது உலகெங்கிலும் இதுபோன்ற சம்பவங்கள் பல நூற்றாண்டுகளாக நடந்துவரும் வரலாறு உண்டு. ஆளுகிறவர்களின் கொள்கைகள் இதுபோன்ற வெறியர்களை சுதந்திரமாக ஆதரிக்கும்போக்கு கூடுதல் கவனத்துக்குரியது.

கும்பல் வன்முறைக்கெதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

இதற்கொரு அரசியல் காரணமும் உண்டு. ‘இந்துத்துவா’ என்பது ஒரு அரசியல் கண்டுபிடிப்பு. அது தன்னுடைய அரசியல் காரணத்துக்காக இந்துயிசம் மறு வரையறை செய்தது, அதாவது இந்தியாவை இந்து ராஷ்டிரமாக அறிவிக்கக் கோரியது. அது இந்தியாவை இந்துக்களுக்கான நாடு என்கிறது. மற்றவர்கள் அனைவரும் ஊடுருவியவர்கள், வெளியிலிருந்து வந்தவர்கள் என்கிறது. வரலாற்று ரீதியாக இது தவறானது. ஒவ்வொரு நிலமும் நாகரிகமும் தனது கொள்ளளவை எட்டிய பிறகு, வேறு இடம் தேடிச் சென்றது என்பதே மனித குல வரலாறு. பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நாமும் இடம்பெயர்ந்து வந்தவர்களே. இந்த உலகில் ‘சுத்தமான’ என எதுவும் இல்லை. நாம் அனைத்தும் கலந்தவர்கள். அதுதான் நம்மை உருவாக்கியிருக்கிறது.

இந்தியாவின் முதல் பூர்வகுடிகளும் இந்த நிலத்தில் ஊடுருவியர்கள் அல்லது வெளியில் இருந்து வந்தவர்கள்தாம். கோழியா, முட்டையா எது வந்தது முதலில் என்பது முக்கியமல்ல. நாம் இப்போது இங்கே இருக்கிறோம், அனைத்து மத நம்பிக்கை கொண்ட மக்களும், மொழியினரும், கலாச்சாரத்தினரும், வாழ்க்கை முறைக்கொண்டவர்களும் இந்தியாவில் சம உரிமை உள்ள குடிமக்களே.

படிக்க:
ஸ்டெர்லைட்டை மூடு : குடந்தையில் மாணவர்கள் போராட்டம்
கேள்வி பதில் : ஓட்டுப் போடுவது மட்டுமே பாஜக – வை தோற்கடிக்கும் ஒரே வழியா ?

இந்த உண்மைகளை இந்துத்துவத்தால் ஜீரணிக்க முடியவில்லை. இந்துத்துவத்தின் ஆதரவாளர்கள் எனக்கூறிக்கொள்வோர் இதை இரண்டு வழிகளில் எதிர்கொள்கின்றனர். தங்களுடைய கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் அல்லது மற்றவர்கள் என சுட்டிக்காட்டப்படுவோரை வெளியேற்ற நேரடியான இராணுவ நடவடிக்கை ஒன்றே வழி என தீர்வு சொல்கிறவர்கள். இது மகாத்மா காந்தியில் தொடங்கியது. கடவுள் ஒருவரேதான் அவரை வெவ்வேறு பெயர்களில் அழைக்கிறோம் என அறிவித்ததற்காகவும்  ‘ஈஸ்வர அல்லா தேரே நாம், சப் கோ சன்மதி தே பகவான்’ என்ற மந்திரத்தை சொன்னதற்காகவும் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.  பன்முகத்தன்மைக்கும் விவாதத்துக்கும் எதிர்க்கருத்துக்கும் இப்போது நிகழ்ந்துகொண்டிருப்பவைகளுக்கு 1948-ல் நடந்த இந்த சம்பவத்தை முன்னோடியாக இருந்தது.

இரண்டாவது தீர்வு, இதையே வரலாற்று நூல்களிலிருந்து  துடைத்தெடுப்பது, புதிதாக இந்துத்துவ கண்டுபிடிப்புகளை புகுத்துவது ஆகிவற்றை பதிப்பிக்கப்பட்ட பக்கங்களில் செய்வது. அக்பர் ஒரு சிறந்த தலைவர் அல்ல என்றும் ஹால்திகாடி போரில் மஹாரானா பிரதாப் சிங் வென்றார் என்றும் நமக்கு சொல்லப்படுகிறது. இந்துத்துவ அரசுகள் ஆளும் சில மாநிலங்களில் இது இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னோக்கிச் சென்று முசுலீம் படையெடுப்பை துடைத்தெடுக்கப்பார்க்கிறது.  இத்தகைய படையெடுப்புகளும் வெற்றிகளும் இந்து வரலாற்றை, இந்தியாவின் ‘உண்மையான’ வரலாற்றை மறைப்பதாக இந்துத்துவர்கள் கருதுகிறார்கள். எனவே, மற்றதெல்லாம் பொருத்தமற்றது.

நினைவுகளை அழித்தொழிக்கும் இந்த பிரச்சாரம், ஒரே மாதிரியாக சிந்திக்க வைக்க மனங்களை தயார்படுத்த அவசியமானது. இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக காந்தியின் அகிம்சை கொள்கை இந்தியர்களை ஆண்மையற்றவர்களாக மாற்றியது என்றார்கள். பலவீனத்தைக் காட்டும் இரக்கத்தை நிராகரிக்கவும் அந்த பிரச்சாரம் கோரியது. ஆயுதம் தாங்கிய ஒரு பேரரசை எதிர்க்க ஆயுதம் இல்லாமல் நின்ற இந்தியர்களின் மன உறுதியை எப்படி இவர்களால் திரிக்க முடிகிறது?

அரசியல் குறித்து பெர்டிராண்ட் ரஸ்ஸல் ஒருமுறை இப்படிச் சொன்னார்… “முகமூடி அணிந்த பிசாசு!” இந்துத்துவ ஆட்சியில் இப்படித்தான் அரசியல் மாறிவிட்டது.  இலக்கியம், கட்டடக்கலை, மொழி, உணவு, இசை, நடனம், உடை மற்றும் பழக்கங்கள் என பரந்துபட்ட நமது பன்முக மதங்களும், பன்முக கலாச்சார பாரம்பரியமும் அவமரியாதைக்கு உள்ளாகின்றன; கைவிடப்படுகின்றன. இந்துயிசமும் அல்லாத ஒற்றை கலாச்சாரமாக அது சுருங்கிக்கொண்டுவருகிறது. இந்தியா எதற்காக நின்றதோ, எதற்காக உழைத்ததோ, பாதுகாத்த, பெருமைகொண்ட, போற்றிய பண்பாடு அதற்கு எதிரான திசையில் இருக்கிறது. பன்மையிலும் ஒருமை என்பதற்கு உதாரணமாக உலக நாடுகளால் போற்றப்பட்ட இந்தியா இப்போது மாறிவருகிறது.

கேலிச்சித்திரம்: ஓவியர் முகிலன்.

இதற்கு எதிர்மாறான அரசியல் அப்போது இருந்தது. அது மகாத்மா காந்தி, ஆழ்ந்த இந்துவான அவர், நவீன இந்தியாவுக்கு அடித்தளம் இட்டவர். அவர் தேசிய இயக்கத்தை கட்டியெழுப்பிய போது, அனைத்து மதத்தினரும், சாதியினரும், மொழியினரும், பாலினத்தாரும் ஒன்றிணைந்தார்கள். எந்தவொரு நாட்டின் வரலாற்றிலும் இல்லாத வகையில் வர்க்கத்தினரையும், பெருந்திரளையும் அவர் ஒன்றாக சுதந்திர போராட்டத்தில் இணைத்தார்.  இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்தபோதும், மதசார்பற்ற நாடாக அறிவிக்கப்படவே பலர் விரும்பினார்கள். ஆழமான நம்பிக்கை கொண்ட பல்வேறு மதங்களைக் கொண்ட நாடு என்பதாலேயே அது சாத்தியமானது. அப்போது மதம் தனிப்பட்ட விருப்பமாக கருதப்பட்டது.  தமக்கு எதை வணங்க விருப்பமோ அதை வணங்கும் உரிமையை அரசியலயமைப்பு வழங்கியது. பல்வேறு மதங்களை பின்பற்றிய இலட்சக்கணக்கான மக்கள், வெளிப்படையாக கடவுள் நம்பிக்கையற்றவராக தன்னை அறிவித்துக்கொண்ட, அனைத்து மத மக்களுக்கும் மரியாதை அளித்தவரை திரும்பத் திரும்ப பிரதமராக தேர்ந்தெடுத்தார்கள். இப்படித்தான் எழுபதாண்டுகளுக்கு முன்பு இந்தியா பிறந்தது, வளர்ந்தது. இப்போது இந்துக்கள் என்றும் மற்றவர்கள் என்றும் இந்துத்துவம் இந்தியாவை இரண்டாவது முறையாக துண்டாட நினைக்கிறது.

அடையாளத்தை ஒருகுறிப்பிட்ட வட்டத்துக்குள் அடைக்கப்பார்ப்பது, தன்மைச் சாராதவர்களை வெளியேற்ற முனைவது, உண்மைக்கு இடமில்லை என இப்போதிருப்பதுதான் உண்மை என புதியதை திணிப்பது என உலகமே இப்போது இராணுவ தேசியவாதத்துக்குள் சென்று கொண்டிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.  கடுமையான உழைப்பில் உருவான ஜனநாயம் மற்றும் மதசார்பின்மையின் வாரிசுகளான நாம், இந்த போக்கிலிருந்து நாம் மாறுபட்டவர்கள் என நம்மை நிரூபிப்பது காலத்தின் கட்டாயம்.

நயன்தாரா செகலின் பல கருத்துக்களில் முரண்பாடுகள் இருந்தபோதும், இந்துத்துவத்தை எதிர்க்கும் இந்துக்களின் பிரதிநிதியாக தன்னை கூறிக்கொள்ளும் அவருடைய கருத்தை ஏற்கலாம். இந்தியாவின் பன்முகத்தன்மையை பாதுகாக்க நினைக்கும், கும்பல் கொலையாளிகளை கடுமையாக விமர்சிக்கும் செகலின் கருத்தை நாம் வரவேற்கலாம்.

தமிழாக்கம்: அனிதா

நன்றி: த வயர்.

ஸ்டெர்லைட்டை மூடு : குடந்தையில் மாணவர்கள் போராட்டம்

சென்னை சேப்பாக்கத்தில் தூத்துக்குடி மாணவர்கள் உண்ணா நிலை போராட்டம்!

தூத்துக்குடி மாணவர்கள் சென்னை சேப்பாக்கத்தில் உண்ணா நிலை போராட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கி 1 நிமிடம் கூட அவர்களை போராட்டக்களத்தில் நிற்க விடாமல் வந்த உடனேயே அவர்களை வலுக்கட்டாயமாகவும் அராஜகமாகவும் கைது செய்துள்ளனர் போலீசார்.

குடந்தை அரசினர் கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்புப் போராட்டம் !

இதனைத் தொடர்ந்து, குடந்தை அரசினர் கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

This slideshow requires JavaScript.

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி கொடுத்த பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை கண்டிக்கிறோம்! ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு கொள்கை முடிவெடுத்து, அரசானை வெளியிட வேண்டும்! தூத்துக்குடியில் நிலவும் போலிசின் அடக்குமுறையை கண்டிக்கிறோம்!

This slideshow requires JavaScript.

என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குடந்தை அரசினர் கலைக் கல்லூரி மாணவர்கள் கல்லூரி வாயில் முன்பாக கூடி கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதனைத்தொடர்ந்து, வகுப்பு புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

என்ன நடக்கிறது, தூத்துக்குடியில்?

ஸ்டெர்லைட் சதியின் பின்னணி என்ன ? மக்கள் அதிகாரம் ராஜு

எங்களை கவர்மெண்ட் பெருசா கண்டுக்கவே மாட்டாங்க | சத்துணவு டீச்சருடன் உரையாடல்

நீங்க அங்கன்வாடியில் வேலை செய்றீங்க என்று தெரியும். நீங்க எப்ப முதல்ல வேலையில ஜாயின் பண்ணீங்க? எவ்வளவு வருஷம் ஆகுது? எவ்வளவு சம்பளம்?

ஆமா.. நான் அங்கன்வாடியில் டீச்சரா இருக்கேன். 1992 ல இந்த வேலையில சேர்ந்தேன். நான் சேரும்போது எனக்கு 200 ரூபாய் சம்பளம். இப்ப 27 வருஷம் சர்வீஸ் ஆகிடிச்சி. இப்ப எனக்கு கைக்கு கெடைக்கிற சம்பளம் 13000.

இவ்வளவு வருஷம் சர்வீஸ் இருக்கு ஆனா உங்களுக்கு 13000 தான் சம்பளம்னு சொல்றீங்க. கவர்ன்மெண்ட் வேலையெல்லாம் இத்தனை வருஷம் சர்வீஸ் இருந்ததுனா நிறைய சம்பளம் கிடைக்குமே.. நீங்க சேரும்போதே டீச்சரா தான் சேர்ந்தீங்களா? இல்ல ப்ரொமோஷன் கிடைச்சு வந்தீர்களா?

மத்த கவர்மெண்ட் வேலை மாதிரியெல்லாம் இது கிடையாது. நான் சேரும்போதே டீச்சராதான் சேர்ந்தேன். இத்தனை வருஷம் ஆயிடுச்சு இன்னும் ஒரு பிரமோஷன் கூட கொடுக்கல. எங்களை கவர்மெண்ட் பெருசா கண்டுக்கவே மாட்டாங்க.

உங்களுக்கு மட்டும்தான் ப்ரமோஷன் கெடைக்கலையா இல்ல மத்த எல்லாருக்கும் இதே நிலைதானா?

எனக்கு மட்டுமில்ல.. எல்லாத்துக்கும் இதே நிலைமைதான். போன வருஷம் வரைக்கும் எங்க புரமோஷன் பற்றி எதுவுமே பேசவில்லை. கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் 91வது வருஷம் சேர்ந்தவர்களுக்கு புரமோஷனுக்கு ஆர்டர் வந்தது. இப்பதான் 92 வது வருஷம் சேர்ந்தவங்களோட லிஸ்ட் எடுக்க ஆரம்பிச்சுருக்காங்க. இவங்க சொல்றபடி பார்த்தா அடுத்த வருஷம் மார்ச் மாசம் இல்லன்னா ஏப்ரல் மாசம் எங்களுக்கு புரமோஷன் கிடைக்கும். எனக்கு முன்னாடி ஒரு அக்கா இங்க வேலை செஞ்சாங்க. அவங்க புரமோஷன் வாங்கும்போது அவங்களுக்கு சர்வீஸ் 33 வருசம். அப்படின்னா பார்த்துக்கங்க எங்களை எந்த நிலைமையில் நடத்துறாங்கன்னு.

உங்க சென்டர்ல மொத்தம் எத்தனை பேர் வேலை செய்றீங்க? அவங்களுக்கெல்லாம் என்ன சம்பளம்? இப்ப புதுசா வேலைக்கு எடுக்கும் போது என்ன சம்பளம் கொடுக்குறாங்க?

எங்க சென்டர்ல மொத்தம் ரெண்டு பேரு. அதுல நான் டீச்சர் அப்புறம் ஒரு ஆயாம்மா. எனக்கு இப்போதைக்கு கைக்கு 13000 கிடைக்குது. அதுக்கு மேல பிஎஃப் 1500 பக்கம் பிடிக்கிறாங்க. அப்புறம் ஆயாவுக்கு 7000 ரூபா சம்பளம், 700 ரூபா பிஎஃப் புடிக்கிறங்க. இப்போ புதுசா சேர்ந்த டீச்சர்களுக்கு மொத்தமே 7000 தான் சம்பளம். இதில் என்ன கூத்துனா புதுசா வேலைக்கு சேர்வதற்கு 2 லட்சம் இல்லனா 3 லட்சம் வரைக்கும் கட்சிக்காரர்களுக்கு லஞ்சம் கொடுக்கணும். என்கிட்ட யாராவது வந்து இந்த வேலையில் சேரலாமா.. சேர்ந்தா நல்லதானு கேட்டா, நான் கண்டிப்பா சேரவேண்டாம்னுதான் சொல்லுவேன்.

 உங்களுக்கு சம்பளம் எல்லாம் மாச மாசம் சரியா கொடுக்கறாங்களா?

அதெல்லாம் சரியா வந்துரும். கொஞ்சம் வருஷம் முன்னாடி வரைக்கும் ஆபீஸ்ல போய் கையெழுத்து போட்டு வாங்கணும். இப்ப கடைசியா ஒரு நாலஞ்சு வருஷமா பேங்க் அக்கவுண்ட்ல நேரடியாக சம்பளம் ஏறிடும். ரெண்டு பிட்டா சம்பளம் போடுவாங்க ஒரு டைம் 3000 ரூபா ஏறும் இன்னொரு டைம் 8500 ரூபாய் ஏறும்.

அது ஏன் அப்படி? எதனால் இரண்டு பிட்டா போடறாங்க?

மொத்தமா பார்த்த எங்களுக்கு மூணு எடத்துல இருந்து சம்பளம் வருது. ஒன்னு மத்திய அரசு, இவங்க 3000 ரூபாய் கொடுக்குறாங்க. அது ஃபர்ஸ்ட் டைம் அக்கவுண்ட்ல ஏறிடும். இரண்டாவது வர்ற 8500 ரூபாய் மாநில அரசும் உலக வங்கியும் சேர்ந்து கொடுக்கிறதா சொல்றாங்க. இவங்க ரெண்டு பேரும் எவ்வளவு கொடுக்குறாங்கன்னு தான் தெரியல. மூணு மாசம் முன்னாடி மோடி ஒரு அறிவிப்பை கொடுத்தாங்க. மத்திய அரசு கொடுக்கிற 3000 ரூபாயோட 1500 சேர்த்துக் கொடுக்கறதா சொன்னாங்க ஆனா இதுவரைக்கும் அதை செய்யல.

மத்த மாநிலங்கள் எல்லாம் அங்கன்வாடி சம்பளம் எவ்வளவு தெரியுமா?

எங்க மீட்டிங்ல சொல்லி இருக்காங்க. பாண்டிச்சேரி 26,000 ரூபாய் சம்பளம் கொடுக்கறதா சொல்றாங்க. வெவ்வேறு மாநிலத்தில் வெவ்வேறு மாதிரி சம்பளம் கொடுப்பாங்க போல.

இந்த உத்தரபிரதேசம் பீகார் ராஜஸ்தான் மாதிரி மாநிலங்கள் எல்லாம் ரொம்ப கம்மியா தான் சம்பளம் கொடுக்கிறதா சொல்றாங்க அத பத்தி ஏதாவது தெரியுமா?

ஆமா ஒரு மீட்டிங்ல எங்க மேடம் சொன்னாங்க. அந்த மாநிலங்களில் 1500 ரூபாய் 2000 ரூபாய் சம்பளம் கொடுக்கிறார்களாமாம்.

அது ஏன் அந்த மாநிலங்களில் மட்டும் இவ்வளவு கம்மியா சம்பளம் கொடுக்கிறார்கள்?

இந்த அங்கன்வாடி எல்லா மாநிலங்களிலும் ஒரே மாதிரி கிடையாது. இப்ப தமிழ்நாட்டுல எடுத்துட்டோம்னா காலைல எட்டரை மணில இருந்து சாயந்திரம் நாலு மணி வரைக்கும் பள்ளிகூடத்தில இருக்கணும். ஆனா அந்த உத்தர பிரதேசம் பீகார் ராஜஸ்தான் மாதிரி மாநிலங்கள் எல்லாம் காலைல 11 மணி வரைக்கும் தான் அவங்களுக்கு வேலையாம். அதே நேரத்துல இங்கு தமிழ்நாட்டில் பசங்களுக்கு சத்துணவு சமைச்சு குடுக்கணும். அங்க எப்படின்னா காலையில பால் பிஸ்கட் மட்டும் கொடுப்பாங்க போல. அப்புறம் கஞ்சி கொடுப்பாங்க போல. இதனால தான் அவங்களுக்கு சம்பளம் கம்மியா கொடுக்கிறதா எங்க மீட்டிங்ல சொல்றாங்க. எங்க மேடம் கூட அடிக்கடி திட்டுவாங்க நீங்க 7000 சம்பளம் வாங்கிட்டு ஒரு வேலையும் செய்யறதில்ல அப்படின்னு. ஆனா எங்கள காலையில எட்டரை மணியிலிருந்து சாயந்திரம் நாலு மணி வரைக்கும் நல்லா வேலை வாங்கிடுவாங்க. மத்தபடி அவங்க மாநிலங்களில் என்ன நடக்குதுன்னு தெரியல.

உங்க சென்ட்ரல் மொத்தம் எத்தனை குழந்தைகள் இருக்காங்க?

இப்போதைக்கு எங்க சென்டர்ல 26 குழந்தைங்க இருக்காங்க. இந்த நம்பர் வருஷா வருஷம் மாறிட்டே இருக்கும். ஏன்னா அந்த ஊர்ல பிறக்கிற குழந்தைங்க நம்பர் மாறிக்கிட்டே இருக்கும். ஒரு வருஷம் எல்லாம் எங்க சென்டர்ல 36 குழந்தைங்க இருந்தாங்க. இப்ப 26 பேர் இருக்காங்க.

உங்களோட வேலையை பத்தி கொஞ்சம் சுருக்கமா சொல்லுங்களேன்?

முதல் வேலை என்னன்னா அந்த ஊர்ல இருக்க 3 லிருந்து 5 வயசுக்குள்ள இருக்க குழந்தைகள அங்கன்வாடி மையத்தில் சேர்க்கணும். அந்த குழந்தைகளுக்கு சத்துணவு கொடுக்கணும். இந்த சத்துணவுக்காக அரிசி அப்புறம் சத்து மாவு இதெல்லாம் ஆபீஸ்ல இருந்து அங்கன்வாடி மையத்துக்கு அவங்களே அனுப்பிடுவாங்க. சாப்பாட்டுக்கு தேவையான காய்கறி இதெல்லாம் நாமே வாங்கிக்கணும். இது எவ்வளவு செலவாகுதோ அது ஆபிஸ்ல பில் கொடுத்து பணம் வாங்கிக்கணும். ஆபீஸில் இருந்து முட்டையும் கொடுத்துடுவாங்க.

அப்புறம் பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுக்குற மாதிரி சின்னச்சின்ன பாட்டு அப்புறம் கேம்ஸ் இதெல்லாம் சொல்லி கொடுப்போம். இந்த வேலையெல்லாம் இல்லாம ஊர்ல இருக்கிற கர்ப்பிணி பெண்கள் எத்தனை பேர், அவங்க சரியா ஹாஸ்பிட்டல் போறாங்களா, அப்புறம் புதுசா பொறந்த குழந்தை எத்தனை, அந்த குழந்தைகள் எல்லாம் சரியா தடுப்பு ஊசி போடறாங்களா அப்டின்னு கணக்கு எழுதி வைக்கணும்.

படிக்க:
அங்கன்வாடி
எட்டு வழிச் சாலைன்னு நிலத்த பிடுங்குறான் ராமர் சிலைன்னு வீட்ட இடிக்கிறான் !

இந்த கர்ப்பிணி பெண்களுக்கு சத்து மாவு கொடுக்கணும் பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி போட சொல்லி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். அதுக்கப்புறம் போலியோ சொட்டு மருந்து போடறதுக்கும் வருஷா வருஷம் நாங்க தான் போகணும். அப்புறம் அடிக்கடி விழிப்புணர்வு முகாம்கள் நடத்தணும். சத்துணவு குறித்து விழிப்புணர்வு, இளமகளிர் அவர்களுக்கான சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு இந்த மாதிரியான வேலைகளை செய்யணும்.

ஏற்கனவே சொன்ன மாதிரி கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், இளமகளிர் இவங்க குறித்த தகவல்கள் எல்லாத்தையும் சேகரித்து அதை அறிக்கையாக தயார் செஞ்சு ஆபீஸ்ல கொடுக்கணும். இந்த ரிப்போர்ட் தான் மிகப் பெரிய வேலை. வருஷம் ஃபுல்லா ரிப்போர்ட்ட எழுதிட்டே இருப்போம். அந்த ரிப்போர்ட் வச்சு அடிக்கடி மீட்டிங் நடக்கும் அந்த மீட்டிங்கில் தான் முடிவு பண்ணுவாங்க எந்த ஊர்ல என்ன மாதிரி முகாம் நடத்தலாம் அப்படிங்கறது எல்லாம். இந்த மீட்டிங் நடத்துவதற்கு எல்லாம் தனியாக காசு குடுக்க மாட்டாங்க. அந்த சாப்பாட்டு செலவு மாதிரி அதுக்கு மட்டும் காசு கொடுப்பாங்க.

இந்த மாதிரி மீட்டிங் எல்லாம் ஒரு மாதத்திற்கு எத்தனை தடவை நடக்கும்?

ஆபீஸ் மீட்டிங் வந்து பாத்தீங்கன்னா ஒரு வாரத்துக்கு இரண்டாவது நடக்கும். அப்புறம் அந்த முகாம் மாதிரி நடந்ததெல்லாம் மாசத்துக்கு ஒன்னு பண்ணிடுவோம்.

இந்த மோடி அரசாங்கம் பாத்தீங்கன்னா ஒரு திட்டம் கொண்டு வரதா சொன்னாங்க. அதாவது கர்ப்பிணி பெண்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த சத்துணவு சத்துமாவு போன்ற பொருள்களை நிறுத்திட்டு நேரடியாக அவங்க அக்கவுண்ட்ல பணம் போடற மாதிரி திட்டம் கொண்டு வரதா சொன்னாங்க. இத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க உங்க ஆபீஸ்ல ஏதாவது சொன்னாங்களா?

ஆமாம் இந்த மாதிரி ஒரு திட்டம் வர்றதா ஆபீஸ்ல சொன்னாங்க. எங்களை பொறுத்த வரைக்கும் இந்த திட்டம் வந்துச்சுன்னா நல்லது தான்னு சொல்லுவோம். ஏன்னா எங்களுக்கு வேலை குறையும். ஆனால் இந்தத் திட்டம் முழுசா நடைமுறைக்கு வரும் என்று தெரியல. அதுக்கப்புறம் ஆபீஸ்ல இதை பத்தி பெருசா ஏதும் சொல்லல. மத்தபடி இன்னொரு செய்தி வேணும்னா சொன்னாங்க. அதாவது இந்த கர்ப்பிணி பெண்களுக்கு சத்து மாவு கொடுக்கிற வேலையை எங்க கிட்ட இருந்து வாங்கி இந்த செவிலியர்களுக்கு கொடுக்கிறதா சொன்னாங்க. அதுவுமில்லாம கர்ப்பிணி பெண்களுக்கு உதவித்தொகை 18,000 கொடுக்கிறார்கள் அதுல 4000 ரூபாக்கு சத்துமாவு மட்டுமே அப்புறம் வேற ஏதோ பொருள்கள் எல்லாம் சேர்த்து 2000 இதெல்லாம் போக மீதி 12000 தான் அவங்க அக்கவுண்ட்ல போடுவாங்க.

செவிலியர் என்றால் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருக்கிறவங்களா?

இல்ல,அவங்க இல்ல. அதாவது ரொம்ப சின்ன குக்கிராமங்களில் செவிலியர்ன்னு சொல்லிட்டு ஒரு சின்ன கட்டடம் கட்டி அதுல ஒருத்தர் இருப்பாங்க. ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு போகமுடியாதவர்கள் இங்க போய் பாப்பாங்க. இவங்க கிட்ட செக்கப் எல்லாம் பண்ணிக்குவாங்க. ஏதாவது பெரிய பிரச்சனைனா ஹாஸ்பிடல் போக சொல்லி சொல்லிடுவாங்க. இப்ப பார்த்தீங்கன்னா இந்த ஊர்ல ஒரு அஞ்சு அங்கன்வாடி மையங்கள் இருக்கு அதுல ஒரு செவிலியர் மையம் இருக்கு. இப்ப எங்களுக்கு வர வேண்டிய மருந்துகள் எல்லாம் இந்த செவிலியர் மூலமாக வரும்.

இது சரியா வரும்னு உங்களுக்கு தோணுதா? 5 சென்டர்ல 5 டீச்சர் 5 ஆயாம்மா மொத்தம் 10 பேர் செஞ்சுகிட்டு இருந்த வேலையை ஒரு நர்ஸ் செய்ய முடியுமா?

அது கண்டிப்பா முடியாது தான். ஏன்னா, இங்கே ஒவ்வொரு வீட்டுக்கும் சத்துமாவு கொடுக்குறதுக்கு ரொம்ப கஷ்டபட வேண்டி இருக்கும். ஒரு சிலர் சென்டர்கே வந்து வாங்கிட்டு போயிடுவாங்க. ஒரு சிலர்லாம் நாலஞ்சு தடவை சொல்லி விடனும் அப்ப தான் வருவாங்க. இல்லனா அவங்க வீட்டுல இருந்து யாராவது வந்து வாங்கிட்டு போவாங்க. ரொம்ப முடியாத டைம்ல நாங்களே வீட்டுக்கு போய் கொடுக்கணும். நம்ம தமிழ்நாட்டுல ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் பெண்களோட பேறுகால இறப்பு இதெல்லாம் குறைவாக இருக்கிறதுக்கு இந்த சத்துமாவு ரொம்ப முக்கியமான காரணம். இப்போ இதை செவிலியர் கிட்ட கொடுத்தாங்கன்னா எல்லாருக்கும் போய் சேர்வது கஷ்டம்தான்.

கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி அங்கன்வாடி மையங்கள் எண்ணிக்கையை தமிழக அரசு அதிகரிச்சது. ஆனா புதுசா ஆளுங்க எடுக்கலைன்னு சொல்லி சொல்றாங்க அது உண்மையா?

ஆமா. மூணு வருஷத்துக்கு முன்னாடி இருக்கிற மையங்களோட எண்ணிக்கையை அதிகரிச்சாங்க. அதாவது இந்த ஊர்ல இதுக்கு முன்னாடி 2 மையங்கள் இருந்தது இப்ப பார்த்தீங்கன்னா அது ஐந்தா மாறி இருக்கு. ஆனா உடனே அதற்கான ஆளுங்கள போடல. பக்கத்துல இருக்க மையங்களில் வேலை செய்யுற டீச்சர்களை இன்னொரு மையத்தையும் சேர்த்து பார்க்க சொன்னாங்க. நான் கூட இங்க பக்கத்துல இருக்கிற மையத்தை ரெண்டு வருஷம் பாத்துட்டேன். அதுக்கு தனியா சம்பளம் ஏதும் கொடுக்கல. அப்புறம் இப்போதான் புதுசா ஆள் போட்டாங்க. அப்புறம் புதுசா ஏதும் கட்டிடம் கட்டல. இப்ப நாங்க இருக்கிற மையம் கூட வாடகை கட்டிடம்தான்.

இப்போ எல்கேஜி மற்றும் யுகேஜி தொடங்க போறதா சொல்றங்க.. அத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?

ஆமா.. அது உண்மைதான். எங்க ஆபீஸ்ல அத பத்தியும் சொன்னாங்க. தொடக்க பள்ளி அருகில் உள்ள மையங்கள் மட்டும் இது வரும் போல.

பள்ளிக்கூடத்த விட்டு தள்ளி இருக்க அங்கன்வாடி மையங்கள் என்ன ஆகும்.?

அத பத்தி தெரில. ஆனா பக்கத்துல இருக்க பள்ளிக்கூட ஹெட் மாஸ்டர் எல்லா மையங்களுக்கும் போன் பண்ணி எத்தன குழந்தைகள் இருக்கங்கன்னு விவரம் கேட்டுட்டு இருக்காங்க.

இந்த திட்டம் வந்துச்சுனா உங்களுக்கு வேலை போகாதா?

ஆமா.. அதுக்கு நெறய வாய்ப்பு இருக்கு. இங்க ஸ்கூல் பக்கத்துல இருக்க அங்கன்வாடில வேலை செய்ற அக்கா கூட போலம்பிட்டு இருந்தாங்க. அதும் இல்லாம இந்த திட்டம் வந்தா அதுல டிகிரி முடிச்சவங்கள வேலைக்கு வைக்கிறதா சொல்லிட்டு இருக்காங்க.

அப்போ.. கூடிய சீக்கிரம் உங்க மையத்தையும் மூடிடுவாங்க!!

அது தெரில..ஆனா மொத்தமா 70000 அங்கன்வாடி மையங்கள் மூட போறதா சொன்னாங்க. அது எந்தெந்த மையம்னு தெரில.

அப்போ.. அதுல வேலை செய்யறவங்களோட கதி என்ன?

இதையும் எங்க மீட்டிங்கில பேசினோம். அதுக்கு ஒன்னும் கவலை பட வேண்டாம்னு சூப்பர்வைசர்லாம் சொன்னாங்க. அங்கன்வாடி மையத்த மூடிட்ட்டாலும் அதுல வேலை செய்யற ஆளுங்களை வேற ஏதாவது வேலைக்கு மாத்திடுவாங்க.. இல்லனா சம்பளம் கொடுத்து வீட்ல உடகார வச்சிடுவங்கன்னு..

இவ்ளோ நாள் அங்கன்வாடில வேலை செய்துட்டு திடீர்னு அவங்கள வேற வேலைக்கு அனுப்பினா, அத செய்ய முடியுமா??

அது கஷ்டம் தான். ஆனா வேர வழி இல்லை. இதையே நம்பிட்டு இருக்கவங்களுக்கு எந்த வேலை கொடுத்தாலும் செஞ்சிதான் ஆகணும்.

அப்போ இன்னும் ரெண்டு மூணு வருஷத்துல அங்கன்வாடி அப்டின்னு ஒன்னு இல்லாமலே போய்டுமா?

அது எப்படி போகும்.

ஆமா.. உங்ககிட்ட இருந்த ஒவ்வொரு வேலையும் வேற இடத்துக்கு மாத்திட்டே போனா கடைசில உங்களுக்கு எந்த வேலையும் இருக்காது. அப்றம் அங்கன்வாடி எதுக்கு. இப்போ வேலை செய்துட்டு இருக்க ஆளுங்களை வேலைய விட்டு தூக்கினா கூட சம்பளம் கொடுத்து வீட்ல உடகார வைக்கலாம். ஆனா இருக்க எல்லா மையங்களையும் படிப்படியா குறைச்சி கடைசியா எல்லைத்தையும் மூடிடுவாங்க.

ஆமா.. அப்படித்தான் நடக்கும்.

– சக்திவேல்

கேள்வி பதில் : ஓட்டுப் போடுவது மட்டுமே பாஜக – வை தோற்கடிக்கும் ஒரே வழியா ?

பாஜக-வை தோற்கடிக்க மக்கள் முன் உள்ள வழி ஓட்டு மட்டுமே உள்ளது. ஓட்டு போடாமல் இருந்தால் பாசிச பிஜேபி- க்கு வெற்றி உறுதியாகிவிடாதா? மாற்று வழி என்ன?

– சுந்தரராஜன் பரசுராமன்

ன்புள்ள பரசுராமன்,

டிசம்பர் 6, 1992-ஆம் ஆண்டில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது பாரதிய ஜனதா ஆட்சியில் இல்லை. பாபர் மசூதி இடிக்கப்பட்ட குற்ற வழக்கு அன்று ஆரம்பித்து இன்று வரை தொடர்கிறது. குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. இந்த இடைக்காலத்தில் காங்கிரஸ் அரசாங்கங்கள் மத்தியில் ஆண்டிருக்கின்றன.

அதேபோன்று நாடு முழுவதும் சங்க பரிவாரங்கள் நடத்திய கலவரங்கள் பலவற்றில் இந்துத்துவா குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டது இல்லை. 2002-ம் ஆண்டில் நடந்த குஜராத் கலவரம் தொடர்பான குற்றவாளிகள் இன்று விடுவிக்கப்பட்டு வருகிறார்கள். குஜராத் முசுலீம் மக்களை இனப்படுகொலை செய்த அந்தக் கலவரத்திற்கு பிறகும் கூட இருமுறை காங்கிரஸ் அரசு மத்தியில் ஆட்சி செய்திருக்கின்றது.

இதனை 1947-க்கு பிந்தைய இந்திய வரலாற்று முழுவதிலும் பார்க்கலாம். ஏன் அதற்கு முன்பே பிரிட்டிஷ் காலனிய ஆட்சியின் போதும் கூட பார்க்கலாம். இன்றைக்கு கேரளாவில் பாரதிய ஜனதாவிற்கு ஒரு எம்.எல்.ஏ மட்டும் இருக்கிறார்.

ஆனால் சபரிமலையில் பெண்கள் நுழையலாம் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து இன்றுவரை அங்கே ஆயிரக்கணக்கான பக்தர்களோடு சங்க பரிவார குண்டர்களும் இணைந்து பெண்களை அனுமதிக்க மறுக்கிறார்கள். அன்றாடம் பதட்டத்தையும் பற்ற வைக்கிறார்கள்.

கேரளாவை ஆள்வது மார்க்சிஸ்ட் கூட்டணி ஆட்சி. அது மதவாதத்திற்கு எதிரான ஆட்சியும் கூட. ஆனாலும் அங்கே சபரிமலை பிரச்சனையில் இந்துமதவெறியர்கள் செல்வாக்குடன் மக்களை திசை திருப்புகிறார்கள். தமிழகத்தில் கூட கவுன்சிலர் தேர்தலில் கூட வாக்குகளை பெற முடியாத கட்சி என்ற என்ற புதிய பழமொழிக்கு சொந்தமான பாரதிய ஜனதா கட்சி ஊடகங்களில் கொண்டாடப்படுகிறது. மட்டுமல்ல ஊடகங்களை தன் பிடியிலும் வைத்திருக்கிறது. அனைத்து தொலைக்காட்சிகளிலும் அன்றாடம் நடக்கும் மாலை நேர விவாதங்களில் சேனல் ஒன்றுக்கு இரண்டு நபர்கள் வீதம் நேரடியாகவோ சமூக ஆர்வலர் பேரிலும் இறக்கப்படுகிறார்கள்.

மேகாலயா உயர் நீதிமன்ற நீதிபதி ஒரு தீர்ப்பில் இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுக்கிறார். முன்னாள் ஐ.ஏ.எஸ் ஐ.பி.எஸ் மற்றும் ராணுவ அதிகாரிகள் அனைவரும் பாஜக-வில் சேர்கிறார்கள்.

இந்து அறநிலையத்துறை கோவில்களில் சிலைகள் திருடப்படுவதை விசாரிக்கும் பொன்மாணிக்கவேல் வீட்டு திருமணத்திற்கு எச் ராஜா வந்து ஆசிர்வாதம் தருகிறார். ரப்பர் ஸ்டாம்பாகவே இருந்தாலும் அரசியல் சாசன பதவிகள் என்று மதிக்கப்படும் ஆளுநர்கள் ஜனாதிபதிகள் ஆர்.எஸ்.எஸ் விழாக்களில் கலந்து கொள்கிறார்கள். கடைசியாக கலந்து கொண்டவர் காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி.

தமிழக அமைச்சர் மா.ஃபா பாண்டியராஜனோ, ஆர்.எஸ்.எஸ்-ஐ சொக்கத்தங்கம் என்று சொல்கிறார். எனவே பாரதிய ஜனதாவை தோற்கடிப்பது என்பது தேர்தல் மூலமாக மட்டுமே முடியுமா என்பதைப் பரிசீலியுங்கள்.

படிக்க:
♦ தேர்தல் புறக்கணிப்பு ஏன் ? தீர்வுதான் என்ன ?
♦ ஐந்து மாநிலத் தேர்தலில் பாஜக தோல்வி : மகிழ்ச்சியடையலாம் ! எனினும் மெத்தனம் கூடாது !

அதேநேரம் 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடித்த மோடி அரசு இன்று நீதித்துறை, நிதித்துறை, ராணுவம், ஊடக நிறுவனங்கள் என அனைத்துத் துறைகளையும் இந்துத்துவ மயமாக்கி வருகிறது. அந்த மயமாக்கத்திற்கு அவர்கள் ஆட்சியில் இருப்பது ஒரு முக்கியமான காரணம் தான் மறுக்கவில்லை.

ஆனால் அதைவிட முக்கியமானது மேற்கண்ட அரசு இயந்திரங்கள் அனைத்தும் நெடுங்காலமாகவே இந்துத்துவாவின் செல்வாக்கோடு இயங்கி வருவதாகவும் இருக்கிறது. அதனால் மோடி அரசு இத்தகைய பார்ப்பனிய பாசிச நிகழ்ச்சி நிரலை அதிவேகமாகச் செய்து வருகிறது.

எனவே பாஜகவை தோற்கடிப்பது என்பது தேர்தல் மூலம் நடக்கக் கூடிய ஒன்றல்ல. மக்களைப் பொறுத்தவரை பாஜகவை தோற்கடிப்பது தேர்தல் மூலம் தான் என்று ஒரு சிலர் கருதலாம். சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தலில் முடிவுகளின் போதும் நாம் அதைப் பார்த்தோம். ஆனால் அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி கூட மிதவாத இந்துத்துவ அரசியலில் பேசியதாக விமர்சிக்கப்பட்டது. ஓரளவிற்கு அது உண்மையும் கூட.

அதேநேரம் ஆட்சியில் இல்லாத போது சங்க பரிவாரங்கள் மூர்க்கமாக தமது மதவெறி அரசியலை நிகழ்ச்சி நிரலில் கொண்டு வருகின்றனர். இங்கே இங்கே எச் ராஜா அந்தப் பணியினை அவ்வப்போது செய்து வருகிறார்.

தேர்தல் அரசியல் மூலமாக பாரதிய ஜனதாவை தோற்கடிப்பதற்கு ஓரளவு பங்கு இருப்பதாக மட்டும் சொல்லலாம். மற்றபடி அதனுடைய சித்தாந்தத்திற்கு பலியாக இருக்கின்ற மக்களை பல்வேறு பார்ப்பனிய பண்பாட்டு எதிர்ப்புப் போராட்டங்களின் ஊடாக அரசியல் படுத்த வேண்டியது முக்கியம். ஏனெனில் நாமெல்லாம் இந்துக்கள் என்று அவர்கள், இல்லாத இந்து மதத்தின் பிரதிநிதியாக தங்களை முன்வைக்கிறார்கள். உண்மையில் இந்து மதத்தில் இருப்பதெல்லாம் சாதி பேதமும் வர்க்க பேதமும் பாலின பேதமும் தான். இந்த முரண்பாட்டை புரியவைத்து மக்களை மீட்பது அவசியம்.

ஜல்லிக்கட்டு தடையை நீக்குவதற்கு தமிழக மக்கள் நடத்திய போராட்டம் பாரதிய ஜனதா அரசோடு நீதிமன்றத்தையும் பணிய வைத்தது. அதேபோன்று பெங்களூரு ஆயத்த ஆடை தொழிலாளிகளின் போராட்டம் அவர்களுக்கு உரிய சேமநல நிதியை மீட்டு வந்தது. இதேபோன்று மகாராஷ்டிரா மத்தியப் பிரதேசத்தில் விவசாயிகள் போர்க்குணத்துடன் போராடியதன் விளைவாக இன்று விவசாயக் கடன்கள் ரத்து செய்யப்படுவதையும் பார்க்கிறோம். எனவே பொருளாதாரப் பிரச்சனையாக இருந்தாலும் சரி, பண்பாட்டு பிரச்சனையாக இருந்தாலும் சரி அதில் பார்ப்பனியத்திற்கு எதிரான வெற்றி என்பது வீதியில், ஊரில் பொதுமக்கள் நடத்தும் போராட்டத்தோடு இணைக்கப்பட்டிருக்கிறது.

இதே கருத்தை “இனவாதம், வகுப்புவாதத்தை கருத்தியல் ரீதியாக தோற்கடிக்காமல் வீழ்த்த முடியாது” என பேராசிரியர் பிபன் சந்திராசில சான்றுகளோடு முன் வைக்கிறார். அமெரிக்காவில் 1864-ம் ஆண்டிலேயே அடிமை முறை, சட்டத்தால் ஒழிக்கப்பட்டாலும் இன்று வரை கருப்பின மக்கள் மீதான பேதமும், அடக்கு முறையும் தொடர்வதைப் பார்க்கிறோம். ஜார் ஆண்ட ரசியாவில் யூதர்கள் மீதான அடக்குமறை அதிகம் இருந்தது. அதை சித்தாந்தம், நடைமுறை என இரு அரங்கிலும் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்துப் போராடியது. அந்தப் போராட்டத்தின் பலனால்தான் 1917 புரட்சி முடிந்த பிறகு யூத மக்கள் மீதான ஒடுக்குமுறையை ரசியாவில் துடைத்தெறிய முடிந்தது. 1984 பாராளுமன்றத் தேர்தலில் இரு இடங்களில்தான் பாஜக வெற்றி பெற்றிருந்தாலும் அதன் வகுப்புவாத  செல்வாக்கு அப்படியே இருந்தது. 2004-ம் ஆண்டில் வாஜ்பாயி தலைமையில் தேர்தலை சந்தித்த பாஜக தோற்கடிக்கப்பட்டாலும் அவர்களுடைய இந்துத்துவம் வலுவாகி பின்னர் 2014-ல் மோடி தலைமையில் வெற்றி பெற்றது. கடைசியாக கேரளாவில் தேர்தல் வெற்றி பெறாத பாஜக அங்கே நடுத்தர வர்க்கத்தின் மத்தியில் வகுப்புவாதத்தை பரவலாக்கி வருகிறது, இதை தடுக்கா விட்டால் அதற்கு நாமே பொறுப்பு என்கிறார் பிபன் சந்திரா.

இதை அவர் எழுதிய ஆண்டு 2008. தற்போது 2018-லும் அதுதான் நிலைமை!

பாரதிய ஜனதா ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களது அழுத்தத்திற்கு ஏற்பவே மற்ற கட்சிகள் செயல்படுகின்றனர். அந்த கட்சிகள் மதச்சார்பற்ற கட்சிகளாக இருந்தாலும் இதுதான் நியதி. தமிழக சிறையில் அப்பாவிகளான முஸ்லீம் மக்கள் ஏராளம் பேர் இருக்கிறார்கள். இவர்கள் தி.மு.க மற்றும் அ.தி.மு.க அரசுகள் சிறையில் அடைக்க காரணமே பா.ஜ.க.முன்வைக்கும் இந்துத்துவா அரசியலின் மீதான பயம்தான்.

எனவே பார்ப்பனிய பாசிசத்தை வீழ்த்துவதற்கும், அதை மற்ற மதசார்பற்ற கட்சிகளுக்கு புரியவைப்பதற்குமே கூட மக்கள் அரங்கில் பாஜக வீழ்த்தப்படுவது நிபந்தனை. தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தை எடுத்துக் கொண்டால் அது மூடப்பட்டது மக்களின் போராட்டத்தால். இன்றைக்கு திறக்கப்படுவது என்பது நீதிமன்றத்தின் பெயரால் பாஜக செய்கிறது.

இன்றும் இதை எதிர்த்து முறியடிக்கும் சக்தி மக்களின் கையில்தான் உள்ளது. திமுக முதலான எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருந்தாலும், இல்லை என்றாலும் இத்தகைய போராட்டத்திற்கு தார்மீக ஆதரவைத்தான் தருவார்களே அன்றி நேரடி பங்கேற்பை அல்ல.

ஆகவே ஓட்டுப் போடுவது மக்களிடம் உள்ள ஒரே வழி என்பதும் தவறு. தேர்தல் அரசியலைத் தாண்டிய மக்கள் அரங்கில் இந்துத்துவா சக்திகளை தனிமைப்படுத்தும் போது மட்டுமே அந்த வெற்றியும் மக்களுக்கு கிடைக்கும்.

உங்கள் கேள்விகளை அனுப்ப:

தங்களின் கேள்விகளை பதிவு செய்யுங்கள்

வாழ்க்கை முழுவதும் உன்னைப் போல் உழைப்பேன் ! போய் வா தோழனே !!

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 39

மாக்சிம் கார்க்கி
நிகலாய் இவானவிச் அவளை உணர்ச்சி வெறியோடு வந்து சந்தித்தான்.

“இகோரின் நிலைமை மோசமாயிருக்கிறது” என்றான் அவன்; “ரொம்ப மோசமான நிலை! அவர்கள் அவனை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய்விட்டார்கள். லுத்மீலா இங்கே வந்திருந்தாள். உங்களை வரச் சொன்னாள்…”

“ஆஸ்பத்திரிக்கா?”

பதறிப்போன உணர்ச்சியோடு நிகலாய் தனது மூக்குக் கண்ணாடியைச் சரி செய்து கொண்டே, ரவிக்கை அணிந்து கொள்வதில் தாய்க்கு உதவினான்.

”இதோ – இந்தக் கட்டையும் எடுத்துச் செல்லுங்கள்” என்று தனது வெதுவெதுப்பான ஈரப்பசையற்ற கரத்தால் தாயின் கைவிரல்களை அழுத்திப் பிடித்துக்கொண்டு நடுநடுங்கும் குரலில் சொன்னான் அவன், “நிகலாய் வெஸோவ்ஷிகோவுக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்து முடித்து விட்டீர்களா?”

”ஆமாம்.”

”இகோரைப் பார்க்க நானும் வந்திருக்கிறேன்.”

தாய் களைப்பினால் மயங்கிப் போய் இருந்தாள். நிகலாயின் பதைபதைப்பு அவளது உள்ளத்தில் ஏதோ வரப்போகும் ஒரு ஆபத்தை அறிவுறுத்தும் பயத்தை எழுப்பிவிட்டது.

“அவன் செத்துக்கொண்டிருக்கிறான்” என்று இருண்ட எண்ணம் அவளது மனத்துக்குள்ளே துடிதுடித்துக்கொண்டிருந்தது.

வெளிச்சம் நிறைந்து சுத்தமான அந்தச் சிறு அறைக்குள்ளே நுழைந்ததுமே, வெள்ளை நிறமான தலையணைகளின் மீது சாய்ந்துகொண்டு நிகலாய் கரகரத்த குரலில் சிரித்துக்கொண்டிருப்பதைத் தாய் கண்டாள். கண்டவுடன் அவளுக்கு ஒரு பாரம் நீங்கியது போலிருந்தது. அவள் வாசற்படியிலேயே நின்று இகோர் டாக்டரிடம் என்ன சொல்கிறான் என்பதைக் கேட்டாள்.

“நோயாளிக்கு வைத்தியம் பார்ப்பது என்பது, சீர்திருத்தம் பண்ணுவது மாதிரிதான்…”

“உன் அசட்டுப் பேச்சைவிடு, இகோர்!” என்று கலங்கிய குரலில் சொன்னார் டாக்டர்.

“ஆனால், நானோ புரட்சிக்காரன்! சீர்திருத்தங்களைக் கண்டாலே எனக்குப் பிடிக்காது…”

டாக்டர் இகோரின் கையை மீண்டும் அவனது மடிமீது மெதுவாக வைத்துவிட்டு எழுந்து நின்றார்; ஏதோ சிந்தித்தவாறே தமது தாடியைத் தடவி விட்டுக்கொண்டார். இகோரின் முகத்திலுள்ள வீக்கத்தைக் கவனித்துப் பார்த்தார்.

தாய்க்கு அந்த டாக்டரைத் தெரியும். அந்த டாக்டர் நிகலாயின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர். அவரது பெயர் இவான் தனீலவிச். அவள் இகோரிடம் சென்றாள், அவன் தன் நாக்கை நீட்டி அவளை வரவேற்றான். டாக்டர் அவள் பக்கம் திரும்பினார்.

”அதென்ன, நீலவ்னா, உங்கள் கையிலிருப்பது என்ன?”

“புத்தகங்களாயிருக்கும்” என்றான் இகோர்.

”இவன் படிக்கக் கூடாது” என்றார் அந்தக் குட்டி டாக்டர்.

“இந்த டாக்டர் என்னை முட்டாளாக்கப் பார்க்கிறார்” என்றான் இகோர்.

அவனது நெஞ்சிலிருந்து குறுகிய ஈரமான மூச்சு கரகரப்புடன் மோதிக் கொண்டு வந்தது. அவனது முகத்தில் துளித்துளியாக வியர்வை பூத்திருந்தது. தனது கையை உயர்த்தி நெற்றியைத் துடைத்துக் கொள்வதே அவனுக்குப் பெரும் சிரமமாயிருந்தது. விசித்திரமாய் அசைவற்றிருந்த அவனது வீங்கிப்போன கன்னங்கள் அகன்ற அன்பு ததும்பும் முகத்தை விகாரப்படுத்தி, அவனது முகவடிவை உயிரற்ற முகமூடியைப்போல் உணர்வற்றுப் போகச்செய்தான். அவனது கண்கள் மட்டும் அந்த வீக்கத்துக்குள்ளாகப் புதைந்து போய், தெளிவாக இரக்கம் ததும்பும் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தன.

“ஓ! விஞ்ஞானியே! எனக்கு ஒரே களைப்பாயிருக்கிறது. கொஞ்சம் கீழே படுத்துக் கொள்ளலாமா?” என்று டாக்டரைப் பார்த்துக் கேட்டான் அவன்.

“கூடாது. நீ படுக்கக் கூடாது” என்று விறைப்பாகப் பதில் சொன்னார் டாக்டர்.

“நீ வெளியே போன நிமிஷத்திலேயே நான் படுத்துக்கொள்ளப் போகிறேன்”

”அவனைப் படுக்க விடாதீர்கள். நீலவ்னா தலையணைகளை ஒழுங்காக வையுங்கள். அவனைத் தயைசெய்து பேச விடாதீர்கள். பேசுவது மிகவும் ஆபத்தானது.”

தாய் தலையை அசைத்தாள். டாக்டர் விடுவிடென்று நடந்து வெளியே போனார். இகோர் தன் தலையைப் பின்னால் சாய்த்துக் கண்களை மூடினான்; கை விரல்கள் பிசைந்து கொண்டிருப்பதைத் தவிர, அவனிடம் வேறு எந்த அசைவும் காணப்படவில்லை. அந்தச் சிறு அறையின் வெண்மையான சுவர்கள் ஏதோ ஒரு இனந்தெரியாத மங்கிய சோக பாவத்தையும் வறண்ட குளிர்ச்சியையும் வெளியிட்டுக் கொண்டிருப்பதாகத் தோன்றியது. அங்கிருந்த பெரிய ஜன்னலின் வழியாக வெளியேயுள்ள மரங்களின் உச்சிக்கிளைகள் தெரிந்தன. இருண்டு மண்படிந்த அந்த இலைகளின் மத்தியிலே மஞ்சள் நிறப்பழுப்பு அங்குமிங்குமாக சிதறிக் கிடந்தது; இலையுதிர் காலத்தின் வரவை அது அறிவுறுத்தியது.

”மரணம் என்னை வேண்டா வெறுப்பாக, கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கொண்டு வருகிறது” என்று அசையாமலும் கண்களைத் திறவாமலும் சொன்னான் இகோர், “அவள் எனக்காக வருத்தப்படுகிறாள் என்பது எனக்கு நன்றாய்த் தெரிகிறது. நான் எல்லோருடனும் அவ்வளவு சுமூகமாகப் பழகினேன்!”

“பேச்சை நிறுத்து, இகோர் இவானவிச்” என்று அவனது கரத்தை வருடிக்கொண்டே மன்றாடிக் கேட்டுக் கொண்டாள் தாய்.

”கொஞ்சம் பொறு, நான் நிறுத்திவிடுகிறேன்…”

மிகுந்த சிரமத்தோடு அவன் மீண்டும் பேச முயன்றான். அவனுக்கு மூச்சுத் திணறியது. தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பதற்குச் சக்தியற்று இடையிடையே பேச்சை நிறுத்தி ஆசுவாசப்படுத்திக்கொண்டான்.

“நீ பிரிந்து போகிறாய். எப்பொழுதும் நீ உழைத்த மாதிரியே, ஓய்ச்சல் ஒழிவின்றி. நமது கொள்கையிலே சலனபுத்தியின்றி, என்னுடைய வாழ்க்கை முழுதும் நானும் உன்னைப்போல் உழைத்துக்கொண்டிருப்பேன். போய் வா, தோழனே!”

“நீங்கள் எங்களோடு சேர்ந்திருப்பது ஒரு பெரிய மகத்தான காரியம். உங்கள் முகத்தைப் பார்ப்பதற்கே ஆனந்தமாயிருக்கிறது. சமயங்களில் நானாக நினைத்துக்கொள்வேன் – இவள் கதி என்னவாகும்? நீங்களும் – எல்லோரையும் போலவே – ஒருநாள் சிறைக்குள் போவீர்கள். அதை நினைக்கும்போது எனக்கு உங்கள் மீது அனுதாபம் ஏற்படும். சரி, சிறைக்குப் போவதற்குப் பயப்படுகிறீர்களா?”

”இல்லை” என்று சர்வ சாதாரணமாகச் சொன்னாள் அவள்.

“ஆமாம். நீங்கள் பயப்பட மாட்டீர்கள். ஆனால், சிறைவாசம் ரொம்ப மோசமானது. சிறைவாசம்தான் என்னை இந்தக் கதிக்கு ஆளாக்கிவிட்டது. உண்மையைச் சொல்லப்போனால் நான் சாகவே விரும்பவில்லை …..”

“நீ சாகப் போவதில்லை” என்று சொல்ல நினைத்தாள். ஆனால் அவனது முகத்தைப் பார்த்தவுடன் அவள் அதைச் சொல்லாமலேயே மெளனமானாள்.

“என்னால் இன்னும் உழைக்க முடியும்… ஆனால், என்னால் உழைக்க முடியாதுபோனால் – அப்புறம் நான் உயிர் வாழ்வதில் எந்த அர்த்தமும் கிடையாது – உயிர் வாழ்வது முட்டாள்தனம்…”

தாய் பெருமூச்செறிந்தாள். தன்னையும் அறியாமல் அந்திரேயினுடைய பிரியமான வாசகத்தை நினைத்துப் பார்த்தாள், “இதெல்லாம் உண்மைதான். ஆனால் இது மட்டும் ஆறுதல் தராது.” அன்று முழுவதுமே அவளுக்கு ஓயாத ஒழியாத வேலை. எனவே அவள் களைத்துப் போயிருந்தாள். மேலும் அவளுக்கு ஒரே பசி. அந்த நோயாளியின் கரகரத்த முனகல் பேச்சு அந்த அறை முழுதும் நிரம்பி, அறையின் சுவர்களைத் தொட்டுத் தடவி ஊர்ந்து சென்றது. ஜன்னலுக்கு வெளியே தெரியும் மரத்தின் கிளைகள் கறுத்துத் திரண்டு பயங்கரமாகக் கவிந்து சூழ்ந்த கார்மேகங்களைப்போல் தோன்றி தம்முடைய கருமையால் வியப்பூட்டின. அந்தியின் அசைவின்மையில், சோகமயமாய், இருளை எதிர்நோக்கி எல்லாமே விசித்திரமாக அமைதியடைந்தன.

”எனக்கு எவ்வளவு மோசமாயிருக்கிறது” என்று கூறிவிட்டுக் கண்களை மூடி மௌனத்தில் ஆழ்ந்தான் இகோர்.

“தூங்கு. தூங்கினால் கொஞ்சம் சுகமாயிருக்கும்” என்று போதித்தாள் தாய்.

அவனது சுவாசத்தை பரிசீலனை செய்து பார்த்துவிட்டு அவள் சுற்றுமுற்றும் பார்த்தாள்; சோகத்தின் விறைப்பான பிடிப்பிலே சிக்கி, சிறிது நேரம் அப்படியே அசையாது உட்கார்ந்திருந்தாள். பிறகு அரைத் தூக்கத்தில் ஆழ்ந்தாள்.

வாசல் நடையில் கேட்ட ஏதோ ஒரு சத்தத்தில் அவள் விழித்தெழுந்தாள். விழித்தவுடன் துள்ளியெழுந்து இகோரைப் பார்த்தாள். அவனது கண்கள் விழித்திருப்பதைக் கண்டாள்.

“நான் தூங்கிப் போய்விட்டேன், என்னை மன்னித்துவிடு” என்று மெதுவாகக் கூறினாள் அவள்.

“மன்னிக்கப்படவேண்டியது நான்தான்’ என்று அவன் மெதுவாகச் கூறினான்.

இரவு நேரத்தின் இருள் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தது. அந்த தரை சில்லிட்டுக் குளிர்ந்தது. ஏதோ ஒரு விபரீதமான இருள் எல்லாவற்றின் மீதும் படர்ந்து கவிந்திருந்தது. நோயாளியின் முகமும் இருண்டு போயிருந்தது.

ஏதோ கரகரப்புக் கேட்டது. தொடர்ந்து லுத்மீலாவின் குரலும் வந்தது.

”இரண்டு பேரும் இருட்டில் உட்கார்ந்து ரகசியமாக பேசுகிறீர்கள்? விளக்கு ஸ்விட்ச் எங்கே இருக்கிறது?”

திடீரென அந்த அறையில் கண்ணைக் கூசும் வெள்ளிய ஒளி நிறைந்து பரவியது. அறையின் மத்தியில் நிமிர்ந்து நிற்கும் நெட்டையான லுத்மீலாவின் கரிய உருவம் தெரிந்தது.

இகோரின் உடம்பு முழுவதிலும் ஒரு நடுக்கம் குளிர்ந்து பரவியோடியது. அவன் தன் கையை நெஞ்சுத் தடத்துக்குக் கொண்டு போனான்.

”என்ன இது?” என்று கத்திக்கொண்டே லுத்மீலா அவன் பக்கம் விழுந்தடித்து ஓடினாள்.

அவன் தனது அசைவற்ற கண்களால் தாயைப் பார்த்தான். அந்தக் கண்கள் முன்னைவிட விரிவும் பிரகாசமும் பெற்றிருப்பதுபோல் தோன்றின.

அவன் தன் வாயை அகலத் திறந்தான்; தலையை உயர்த்தினான். தன் கையை மெதுவாக நீட்டினான். தாய் அவனது கையைத் தன் கையில் வாங்கி அவனது முகத்தையே மூச்சு விடாமல் பார்த்தாள். திடீரென்று அவனது கழுத்தும் பலமாக வலித்துத் திருகி வளைந்தது. அவன் தன் தலையைப் பின்னோக்கி வைத்துக்கொண்டே உரத்த குரலில் கத்தினான்.

“என்னால் முடியாது! எல்லாம் முடிந்து போயிற்று!”

அவனது உடம்பு லேசாக நடுங்கியது. அவனது தலை தோள்பட்டை மீது சரிந்து சாய்ந்தது. அவனது படுக்கைக்கு மேலாக நிர்விசாரமாக எரிந்து கொண்டிருக்கும் விளக்கு அவனது அகலத் திறந்த கண்களில் உயிரற்றுப் பிரதிபலித்தது.

”என் கண்ணே!” என்று லேசாக முணுமுணுத்தாள் தாய்.

லுத்மீலா அந்தப் படுக்கையை விட்டு மெதுவாக விலகிச் சென்று ஜன்னலருகே போய் நின்றாள். நின்று வெளியே வெறித்துப் பார்த்தாள்.

“அவன் இறந்துவிட்டான்!” என்று திடீரென்று வழக்கத்துக்கு, மாறான உரத்த குரலில் வாய்விட்டு கத்தினாள் அவள்.

அவள் தன் முழங்கைகளை ஜன்னல் சட்டத்தின் மீது ஊன்றி சாய்ந்து நின்றாள். பிறகு திடீரென்று யாரோ அவள் தலையில் ஓங்கி அறைந்துவிட்ட மாதிரி, அவள் தன் முழங்காலைக் கட்டியுட்கார்ந்து முகத்தை இரு கைகளாலும் மூடி, பொருமிப் பொருமி விம்மியழ ஆரம்பித்தாள்.

தாய் இகோரின் விறைத்துக் கனத்த கைகளை அவன் மார்பின் மீது மடித்து வைத்தாள். அவனது தலையைத் தலையணை மீது நேராக நிமிர்த்தி வைத்தாள். பிறகு அவள் தன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு லுத்மீலாவிடம் போனாள்; அவளருகே குனிந்து அவளது அடர்ந்த கேசத்தைப் பரிவோடு தடவிக்கொடுத்தாள். லுத்மீலா தனது மங்கிய விரிந்த கண்களை மெதுவாக அவள் பக்கம் திருப்பினாள்; உடனே எழுந்து நின்றாள்.

“நாங்கள் இருவரும் தேசாந்திர சிட்சையின்போது ஒன்றாக வாழ்ந்தோம்” என்று துடிதுடித்து நடுங்கும் உதடுகளோடு சொன்னாள் அவள். “நாங்கள் இருவரும் ஒன்றாகவே அங்கு சென்றோம். சிறைவாசத்தை அனுபவித்தோம் …… சமயங்களில் அந்த வாழ்க்கை எங்களுக்குத் தாங்க முடியாததாகவும் வெறுப்பூட்டுவதாகவும் இருக்கும்: எத்தனையோ பேர் மனமொடிந்து போனார்கள்…..” ,

வறண்ட உரத்த தேம்பல் அவளது தொண்டையில் முட்டியது. அவள் அதை அடக்கிக்கொண்டு தன் முகத்தைத் தாயின் முகத்துக்கு அருகிலே கொண்டு வந்தாள், அந்த முகத்திலே படிந்த சோகமயமான பரிவுணர்ச்சியால், அவளது தோற்றம் இளமை பெற்றிருப்பதாகத் தோன்றியது.

“அவனது கேலியும் கும்மாளமும் என்றும் வற்றி மடியாதவை” என்று அவள் விரைவாகக் கூறினாள்; கண்ணீர் பொங்கிச் சிந்தாது இடையிடையே பொருமி விம்மினாள். ”அவன் எப்போதுமே சிரித்துச் சிரித்துக் கேலி பேசுவான். தைரியமற்றவர்களை ஊக்குவிப்பதற்காக தனது சொந்தக் கஷ்டங்களையெல்லாம் வெளியே கட்டாயம் பொறுத்து மறைத்துக் கொள்வான். எப்போதுமே நல்லவனாகவும் அன்போடும் சாதுரியத்தோடும் நடந்து கொள்வான். அங்கே தேசாந்திரப் பிரதேசமான சைபீரியாவிலே சோம்பேறித்தனம் மக்களை லகுவில் ஆட்கொண்டு குட்டிச் சுவராக்கும். அவர்களைக் கீழ்த்தரமான உணர்ச்சிகளுக்குக் கொண்டு செலுத்தும். இந்த மாதிரி நிலைமையை அவன் எவ்வளவு சாமர்த்தியமாக எதிர்த்துப் போராடினான் தெரியுமா? அவன் எவ்வளவு அற்புதமான தோழன் என்பது மட்டும் உங்களுக்குத் தெரிந்தால்……. அவனது சொந்த வாழ்க்கை படுமோசமான துக்க வாழ்க்கைதான், என்றாலும் யாருமே அந்த வாழ்வைப் பற்றி அவன் கூறிக் கேட்டது கிடையாது, கேட்டதே கிடையாது! நான் அவனுக்கு மிகவும் நெருங்கிய சிநேகிதி. அவனது அன்புக்கு நான் பெரிதும் கடமைப்பட்டவள். அவன் தனது அறிவுச் செல்வத்தால் எனக்கு என்னென்ன வழங்க முடியுமோ அத்தனையையும் வரையாது வாரி வழங்கினான். என்றாலும் அவன் களைப்புற்றுத் தன்னந்தனியனாக இருக்கும்போது கூட அவன் மீது பாச உணர்ச்சி காட்ட வேண்டும் என்றோ, அல்லது தான் செய்யும் உதவிக்குப் பிரதியாக அவனை நான் கவனிக்க வேண்டுமென்றோ அவன் கொஞ்சம் கூட, இம்மியளவுகூட. கேட்டதும் கிடையாது; எதிர்பார்த்ததும் கிடையாது…”

அவள் இகோரிடம் போய் அவனது கரத்தை முத்தமிடுவதற்காகக் குனிந்தாள்.

”தோழா; என் அன்பான, இனிய தோழனே! உனக்கு நன்றி. என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நான் உனக்கு நன்றி செலுத்துகிறேன்” என்று வருத்தத்துடன் மெதுவாகச் சொன்னாள். “நீ பிரிந்து போகிறாய். எப்பொழுதும் நீ உழைத்த மாதிரியே, ஓய்ச்சல் ஒழிவின்றி. நமது கொள்கையிலே சலனபுத்தியின்றி, என்னுடைய வாழ்க்கை முழுதும் நானும் உன்னைப்போல் உழைத்துக் கொண்டிருப்பேன். போய் வா, தோழனே!”

அவளது உடம்பு பொருமலினால் குலுங்கியது. தன் தலையை இகோரின் பாதங்களுக்கருகே வைத்துக்கொண்டாள். தாய் இடைவிடாது மெளனமாக அழுது கொண்டிருந்தாள். என்ன காரணத்தினாலோ அவள் கண்ணீரை அடக்க முயன்றாள். லுத்மீலாவைத் தேற்ற. பலமாகத் தேற்ற விரும்பினாள். இகோரைப் பற்றி துயரமும் பாசமும் கலந்த அருமையான வார்த்தைகளைச் சொல்ல எண்ணினாள். கண்ணீரின் வழியாக அவனது அமிழ்ந்துபோன முகத்தை, அவனது கண்களை, முழுதும் மூடாது அரைக்கண் போட்டுத் தூங்குவது போல் தோன்றிய அவன் கண்களை. இளம் புன்னகை பதிந்து நின்ற அவனது கரிய உதடுகளை – எல்லாம் பார்த்தாள். எல்லாமே அமைதியாகவும் வேதனைதரும் ஒளி நிரம்பியதாகவும் இருந்தது.

இவான் தனீலவிச் வழக்கம் போலவே விடுவிடென்று உள்ளே வந்தான். திடீரென அந்த அறையின் மத்தியில் நின்றுவிட்டான். தனது கைகளை விருட்டென்று பைகளுக்குள் சொருகிக் கொண்டு நடுநடுங்கும் உரத்த குரலில் கேட்டான்:

“இது எப்போது நிகழ்ந்தது?”

யாரும் பதில் சொல்லவில்லை. அவன் தன் நெற்றியைத் துடைத்துக் கொண்டான்; லேசாகத் தள்ளாடியவாறு இகோரின் பக்கம் நடந்து சென்றான். அவனிடம் கரம் குலக்கிவிட்டு ஒரு பக்கமாக ஒதுங்கி நின்று கொண்டான்.

“எதிர்பாராதது எதுவும் நடக்கவில்லை. இவனது இருதயம் இருந்த நிலைமைக்கு, இந்த மரணம் ஆறு மாதங்களுக்கு முன்பே நேர்ந்திருக்க வேண்டியது… குறைந்தபட்சம்…..”

இடத்திற்குப் பொருந்தாத. ஓங்கிய, உரத்த அவனது குரல் திடுமென்று நின்றது.

அவன் சுவரோடு சாய்ந்து கொண்டு தன் தாடியை விறுவிறுவென்று திருகித்திரித்தான்; அடிக்கடி கண் சிமிட்டியபடி படுக்கையருகே சூழ்ந்து நின்றவர்களையே பார்த்தான்.

“இவனும் போய்விட்டான்!” என்று அமைதியாகக் கூறினாள்.

லுத்மீலா எழுந்து ஜன்னலருகே சென்று அதைத் திறந்தாள். அவர்கள் எல்லோருமே சிறிது நேரத்தில் அந்த ஜன்னல் பக்கம் வந்து, ஒருவருக்கொருவர் நெருங்கி நின்று இலையுதிர்கால இரவின் முகத்தை வெறித்து நோக்கினார்கள். மரவுச்சிகளுக்கு மேலாக விண்மீன்கள் மினுமினுத்தன. நட்சத்திரக் கூட்டம் வான மண்டலத்தின் ஆதியந்தமற்ற விசாலப் பரப்பையும் விரிவையும் அழுத்தமாக எடுத்துக் காட்டியது.

படிக்க:
புதிய தொடர் : பொருளாதாரம் கற்போம்
சீக்கிய மக்கள் படுகொலை 1984 : ஆண்டுகள் 34 கடந்த பின் காங்கிரசு தலைவருக்கு தண்டனை !

லுத்மீலா தாயின் கரத்தைப் பற்றி எடுத்தாள். வாய் பேசாமல் அவள் தோள்மீது சாய்ந்தாள். டாக்டர் தலையைக் குனிந்து, தனது மூக்குக் கண்ணாடியைத் துடைத்தவாறே நின்றார். ஜன்னலுக்கு வெளியே பரந்து கிடக்கும் அமைதியின் வழியாக, நகரின் ஓய்ந்து கலைத்துப்போன இரவின் ஓசைகள் கேட்டன. குளிர் அவர்களது முகத்தைத் தொட்டுத் தடவி, தலைமயிரைக் குத்திட்டுச் சிலிர்க்கச் செய்தது. லுத்மீலா தனது கன்னத்தில் ஒரு துளி கண்ணீர் வழிந்தோட உடல் எல்லாம் நடுங்கினாள். வெளியே வராந்தாவிலிருந்து உருவமற்ற பயபீதிச் சத்தங்களும், அவசர அவசரமாகச் செல்லும் காலடியோசையும், முக்கலும் முனகலும் ஒலித்தன. எனினும் அவர்கள் மூவரும் வாய் பேசாது சலனமற்று அந்த ஜன்னல் அருகிலேயே நின்று இருளை வெறித்து நோக்கியவாறு இருந்தார்கள்.

தான் அங்கிருக்கத் தேவையில்லை என்று உணர்ந்த தாய், அவளது பிடியிலிருந்து விடுபட்டு விலகி வாசலுக்கு வந்தாள். அங்கு நின்றவாறே அவள் இகோருக்கு வணக்கம் செலுத்தினாள்.

“நீங்கள் போகிறீர்களா?’ என்று எங்குமே பார்க்காமல் அவளை அமைதியாகக் கேட்டார் டாக்டர்.

“ஆமாம்…”

தெருவுக்கு வந்தவுடன் அவள் லுத்மீலாவைப் பற்றியும் அவளது அடங்கிப்போன அழுகையைப் பற்றியும் எண்ணிப் பார்த்தாள்.

“அவளுக்கு எப்படி அழுவது என்றுகூடத் தெரியவில்லை …”

சாவதற்கு முன்னால் இகோர் பேசிய வார்த்தைகள் நினைவுக்கு வரவும் ஓர் ஆழ்ந்த பெருமூச்சு அவள் வாயைப் பிளந்துகொண்டு வெளியேறியது. தெரு வழியாக மெதுவாக நடந்து வரும்போதே அவள் அவனது துடியான கண்களையும், அவனது கம்பீரத்தையும், வாழ்க்கையைப் பற்றி அவன் சொன்ன கதைகளையும் நினைவுகூர்ந்தாள்.

“நல்லவனுக்கு, வாழ்வதுதான் சிரமமாயிருக்கிறது. சாவதோ லகுவாயிருக்கிறது. நான் எப்படிச் சாகப் போகிறேனோ?” என்று அவள் நினைத்தாள்.

அவளது மனக்கண் முன்னால், அந்த வெள்ளைச் சுவர் சூழ்ந்த, வெளிச்சம் நிறைந்த ஆஸ்பத்திரி அறையில் டாக்டரும், லுத்மீலாவும் ஜன்னல் முன்னால் நிற்கின்ற காட்சியும். அவர்களது முதுகுப்புறத்தில் இகோரின் இறந்துபோன கண்கள் வெறித்து நோக்குவது போன்ற காட்சியும் தெரிந்தன. திடீரென அவளுக்கு மனிதகுலத்தின் மீது ஓர் ஆழ்ந்த அனுதாப உணர்ச்சி ஏற்பட்டு மேலோங்கியது. வேதனை நிறைந்த பெருமூச்சோடு அவள் நடையை எட்டிப் போட்டாள். ஏதோ ஒரு மங்கிய உணர்ச்சி அவளை முன்னோக்கித் தள்ளிச் சென்றது.

“நான் சீக்கிரமே போக வேண்டும்” என்று துக்கத்துடன் நினைத்துக் கொண்டாள், எனினும் ஒரு துணிவாற்றல் பொருந்திய சக்தி, அவளது மனத்துக்குள் இருந்து அவளை முன்னால் உந்தித் தள்ளியது.

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

புதிய தொடர் : பொருளாதாரம் கற்போம்

4

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 1

மேல்நிலைக் கல்வி அல்லது இளங்கலை பட்டப் படிப்பில் ஒரு மாணவர் பொருளாதாரம் பயில்கிறார் என்றால் என்ன நினைப்போம்? பாவம் அவருக்கு வேறு படிப்பு கிடைக்கவில்லை, அறிவியல், கணக்கு, வணிகவியல் படிக்கும் அளவுக்கு அறிவில்லையென கருதுவோம். இந்தியாவில் வரலாறும், பொருளாதாரமும் அப்படி புறக்கணிக்கப்படும் படிப்பாக மாறிவிட்டது.

ஆனால் சமூக வாழ்வில் விலைவாசி, பங்குச் சந்தை, பண மதிப்பு, வங்கி, வணகம், வரி என பொருளாதாரம் சார்ந்து பேசுகிறோம், பாதிக்கப்படுகிறோம். பொருளாதாரம் என்றால் என்ன என்பதை வேலைக்கு போன பிறகு அறிய விரும்புகிறோம். அப்போது படிக்க நினைத்தாலும் பொருளாதார இலக்கண வார்த்தைகளும், குழப்பமான பொருளியல் துறைகளும் நம்மை புரிந்து கொள்ள விடாமல் அச்சுறுத்துகின்றன.

இதில் முதலாளித்துவ உலகம் பொருளாதாரத்தை பல்வேறு துறைகளில் பிரித்ததோடு அதன் முழுமையை விலக்கி வைத்து விட்டு ஒரு சூத்திரமாக மாற்றி விட்டது. மேலும் அந்த முழுமை மனித சமுதாயத்தின் சமூக இயக்கம், வரலாறோடு தொடர்புடையது, அடிப்படையானது எனும் தத்துவப் புரிதலையும் தவிர்த்து விடுகிறது. எல்லாம் சேர்த்துப் பார்த்தால் பொருளாதாரம் என்பதை அறிய விரும்பினாலும், அறிய முடியாமல் இருக்கிறது.

மார்க்சிய அறிஞர்கள் பொருளாதாரத்தை அதன் வரலாற்று வளர்ச்சியில் வைத்து உள்ளது உள்ளபடி விளக்குகிறார்கள். இன்றைய முதலாளித்துவ பொருளாதாரத்தின் அடிப்படையை ஆய்ந்து கண்டவர் மார்க்ஸ். பின்னர் அந்த ஆய்வு முடிவுகள் சோசலிசம் எனும் யதார்த்தமாக மாறுவதற்கு உதவின. இன்றைக்கும் முதலாளித்துவம் ஒழிக எனும் முழக்கம் அதன் கருவறையில் ஒலிப்பதைக் கேட்கிறோம். சோசலிச நாடுகளின் வீழ்ச்சிக்கு பிறகும் மார்க்சை தேடிப்பிடித்து படிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்றைய பொருளாதார நெருக்கடிகளை புரிந்து கொள்வதற்கே மார்க்ஸ் பலருக்கும் தேவைப்படுகிறார்.

நிற்க. இந்நூல் மார்க்சின் கண்டுபிடிப்பை பற்றியதல்ல. அவருக்கு முன்னால் பொருளாதாரம் என்பதும் அதன் பல்வேறு அம்சங்களை விளக்கிய அறிஞர்களைப் பற்றியும் ஒரு கதை போல எளிமையாக பொது வாசகருக்கு விளக்குகிறார் இந்நூலாசிரியர்.

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் எனும் இந்நூலை படித்து முடித்த பிறகு நாம் நவீன பொருளாதாரத்தை நன்கு புரிந்து கொள்ளலாம். பொருளாரத்தை பயில விரும்பும் வாசகர்கள் இந்நூலை ஆழ்ந்து படியுங்கள். அதன் தொடர்புடைய செய்திகள், வரலாற்றை தேடிப் படியுங்கள். வெளியாகும் பகுதி குறித்து இங்கேயே விவாதியுங்கள். தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு பதில் அளியுங்கள்!

வாருங்கள் சேர்ந்து படிப்போம்!

நட்புடன்
வினவு

றிமுகம்:

அ.அனிக்கின்
பொருளாதாரச் சிந்தனையின் வளர்ச்சியைப் பற்றி எல்லா மொழிகளிலும் நூற்றுக்கணக்கான புலமை சான்ற புத்தகங்கள் இருக்கின்றன; இந்தத் தொகுப்புடன் இன்னும் ஒரு புத்தகத்தைச் சேர்ப்பது ஆசிரியருடைய நோக்கம் அல்ல. இந்தப் புத்தகம் எல்லோரும் விரும்பிப் படிக்கக்கூடிய கட்டுரைகளின் வடிவத்தில் எழுதப்பட்டிருப்பதால், மிகவும் முக்கியமான வாழ்க்கை வரலாற்று விவரங்களிலும் விஞ்ஞானச் செய்திகளிலும் குறிப்பான வகையில் கவனம் செலுத்துவது சாத்தியமாயிற்று; அத்துடன் இந்த நூலில் இன்று இன்னும் அதிக கவனத்தைப் பெற்றிருக்கும் பிரச்சினைகளைப் பற்றி முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டிருக்கிறது.

இந்தப் புத்தகம் அரசியல் பொருளாதாரத்தைப் பற்றி எந்தவகையிலும் சிறப்பான அறிவு இல்லாமலிருக்கக்கூடிய பொது வாசகருக்காக எழுதப்பட்டிருக்கிறது. அரசியல் பொருளாதாரம் என்பது உலர்ந்துபோன, சுவையற்ற பாடம் என்று நினைப்பது சிலருக்கு வழக்கம். எனினும் கவர்ச்சியான பிரச்சினைகளையும் இரகசியங்களையும் பொறுத்தவரை, இயற்கையோடு ஒப்பிடும்பொழுது சமூகத்தின் பொருளாதார அமைப்பு குறைந்த எண்ணிக்கையைக் கொண்டிருக்கவில்லை. சமீபகாலத்தில் சரிநுட்பமான விஞ்ஞானங்கள், இயற்கை விஞ்ஞானங்கள் ஆகிய துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள் – பொருளாதாரப் பிரச்சினைகளைப் பற்றி கவனம் செலுத்துவது குறிப்பிடத்தக்க வகையில் மிகச் சாதாரணமாகிவிட்டது.

பொருளாதார விஞ்ஞானத்தின் தொடக்க நிலையில், மனிதகுலத்தின் பண்பாட்டின் மீது அழியாத முத்திரையைப் பதித்துச் சென்ற தனிச்சிறப்புடைய சிந்தனையாளர்களை, விரிந்த பரப்பும் தற்சிந்தனையும் கொண்ட விஞ்ஞான, இலக்கியத் திறமைமிக்க மாபெரும் அறிவாளிகளை நாம் காண்பது தற்செயலானதல்ல.

சென்ற காலப் பொருளியலாளர்களும் இன்றைய காலமும்

மனிதர்களின் வாழ்க்கையில் பொருளாதாரம் எப்பொழுதுமே மிக முக்கியமான பங்கு வகித்து வந்திருக்கிறது; இன்று இது குறிப்பிடத்தக்க அளவுக்கு உண்மையாகும்.

பண்டைக்கால மக்கள் அரசியலையும் மத்தியகால மக்கள் கத்தோலிக்க சமயத்தையும் அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்தார்கள் என்று கூறுவது எவ்வளவு பொருளற்றது என்று மார்க்ஸ் சொல்லியிருக்கிறார். மனிதகுலம் எப்பொழுதுமே “பொருளாதாரத்தில் வாழ்ந்திருக்கிறது”; அரசியல், மதம், விஞ்ஞானம் மற்றும் கலை ஆகியவை பொருளாதாரத்தை ஆதாரமாகக் கொள்வதன் மூலமாக மட்டுமே வாழ முடிந்திருக்கிறது. கடந்த காலத்தில் பொருளாதாரம் வளர்ச்சி இல்லாமலிருந்ததனால்தான் இந்தக் காலங்களைப் பற்றி இப்படிப்பட்ட கருத்துக்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது. நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் நவீன பொருளாதாரம் இன்றியமையாத பங்கு வகிக்கிறது.

பிரான்சுவா கெனே.

இன்றைய உலகம் என்பது உண்மையில் இரண்டு வெவ்வேறான உலகங்களாகும்; சோஷலிஸ்ட், முதலாளித்துவ உலகங்களாகும். இவை ஒவ்வொன்றும் தனியான பொருளாதார அமைப்பையும் அரசியல் பொருளாதாரத்தையும் கொண்டிருக்கின்றன. காலனி ஆட்சியிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டிருக்கும் வளர்முக நாடுகள் உலக அரங்கில் மென்மேலும் முக்கியமான பாத்திரத்தை வகிக்கின்றன. எந்தவிதமான வளர்ச்சிப் பாதையைப் பின்பற்றுவது என்று முடிவு செய்ய வேண்டிய அவசியம் இந்த நாடுகளுக்கு மென்மேலும் அவசரமானதாகி வருகிறது. அரசியல் பொருளாதார வரலாற்றைப் படிப்பது, நவீன உலகத்தின் பிரச்சினைகளைப் புரிந்து கொள்வதற்கும் அரசியல் பொருளாதாரம் ஒருவருடைய சொந்த உலகப் பார்வையின் இணைந்த பகுதி என்று புரிந்து கொள்வதற்கும் உதவுகிறது.

முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தின் மூலச் சிறப்புடைய நூல்கள் -குறிப்பாக ஆடம் ஸ்மித், டேவிட் ரிக்கார்டோ எழுதிய நூல்கள் – பொருளாதாரம் என்பது புறவய விதிகள் இயங்குகின்ற அமைப்பு என்ற கோட்பாட்டை முதலாவதாக உருவாக்கி வளர்த்தன. இந்த விதிகள் மனித எண்ணத்திலிருந்து சுதந்திரமானதாக, ஆனால் மனிதர்கள் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றன. அரசின் பொருளாதாரக் கொள்கை இந்த விதிகளுக்கு விரோதமாக இல்லாமல் இவற்றைச் சார்ந்திருக்க வேண்டும் என்று இவர்கள் நம்பினார்கள்.

படிக்க:
சீக்கிய மக்கள் படுகொலை 1984 : ஆண்டுகள் 34 கடந்த பின் காங்கிரசு தலைவருக்கு தண்டனை !
நூல் அறிமுகம் : வகுப்புவாதம் ஒர் அறிமுக நூல் – பிபன் சந்திரா

வில்லியம் பெட்டி, பிரான்சுவா கெனே, இன்னும் மற்ற அறிஞர்கள் பொருளாதார நிகழ்வுப் போக்குகளைப் பற்றி அளவுரீதியாக ஆராய்வதற்குரிய அடிப்படையை அமைத்தார்கள். அவர்கள் இந்த நிகழ்வுப் போக்குகளை ஒருவகையான வளர்சிதைவு மாற்றம் என்ற ரீதியில் ஆராய்ந்து அவற்றின் திசையையும் செயல் எல்லையையும் சுட்டிக்கூற முயன்றார்கள். மார்க்ஸ் சமூக உற்பத்திப் பொருளின் புனருற்பத்தி என்ற தனது கோட்பாட்டில் அவர்களுடைய விஞ்ஞான சாதனைகளைப் பயன்படுத்தினார். நுகர்வுப் பண்டங்களுக்கும் உற்பத்திச் சாதனங்களுக்கும் இடையே உள்ள சமநிலை, குவித்தல் மற்றும் நுகர்வுக்கிடையே உள்ள அளவு வீதங்கள், வெவ்வேறு பிரிவுகளுக்கிடையே உள்ள உறவுகள் நவீன பொருளாதாரத்திலும் பொருளாதார ஆராய்ச்சிகளிலும் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. இவர்கள் பொருளாதார விஞ்ஞானத்தின் முன்னோடிகள். இவர்கள் எழுதிய நூல்கள், நவீன பொருளாதாரப் புள்ளியியலைத் தோற்றுவித்தன; அதன் முக்கியத்துவத்தைப் பற்றி எவ்வளவு சொன்னபோதிலும் அது மிகையானதல்ல.

வில்லியம் பெட்டி.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதற்பாதியில் பொருளாதார ஆராய்ச்சி கணிதவியல் முறைகளை உபயோகிக்க முயற்சி செய்தது. இந்த முறைகள் இல்லையென்றால் இன்று பொருளாதார விஞ்ஞானத்தின் பல பிரிவுகளின் வளர்ச்சியை நினைத்துப் பார்க்கக்கூட முடியாது. பிரெஞ்சுப் பொருளாதார நிபுணரான அன்டுவான் குர்னோ இந்தத் துறையின் முன்னோடிகளில் ஒருவர்.

முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தின் மூலவர்களும் குட்டிமுதலாளித்துவ மற்றும் கற்பனாவாத சோஷலிசத்தைப் பேசியவர்களும் முதலாளித்துவப் பொருளாதாரத்தில் உள்ள முரண்பாடுகள் பலவற்றை ஆராய்ந்தார்கள். முதலாளித்துவ சமூகத்துக்குப் பெருந்தீங்கு விளைவிக்கின்ற பொருளாதார நெருக்கடிகளின் காரணங்களைப் புரிந்து கொள்வதற்கு முதன்முதலாக முயற்சி செய்தவர்களில் ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த பொருளாதார நிபுணரான ஸிஸ்மான்டியும் ஒருவர். மாபெரும் கற்பனாவாத சோஷலிஸ்டுகளான சான்-சிமோன், ஃபூரியே, ஓவன் மற்றும் அவர்களைப் பின்பற்றியவர்கள் முதலாளித்துவத்தை மிக ஆழமான விமர்சனத்திற்கு உட்படுத்தினார்கள்; சமூகத்தை சோஷலிச ரீதியில் புனரமைப்புதற்குரிய திட்டங்களைத் தயாரித்தார்கள்.

வி.இ.லெனின் எழுதியது போல, ”மனித குலத்தின் மிகச்சிறந்த அறிஞர்கள் முன்னர் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில்களைக் கொடுத்ததில்தான் மார்க்சின் மேதாவிலாசம் அடங்கியிருக்கிறது. தத்துவஞானம், அரசியல் பொருளாதாரம், சோஷலிசம் ஆகியவற்றின் மாபெரும் பிரதிநிதிகளின் போதனைகளின் நேரடியான, உடனடியான தொடர்ச்சியாகவே அவருடைய தத்துவம் தோன்றியது1.”

வி.இ.லெனின்.

மூலச் சிறப்புடைய முதலாளித்துவ அரசியல் பொருளாதாரம், மார்க்சியத்தின் தோற்றுவாய்களில் ஒன்றாக இருந்தது. எனினும் மார்க்சின் போதனை அரசியல் பொருளாதாரத்தில் புரட்சிகரமான திருப்புமுனையாக இருந்தது. மூலதனம் என்பது ஒரு சமூக உறவு; விலைக்குப் பெறப்பட்ட பாட்டாளி வர்க்கத்தினரின் உழைப்பைச் சுரண்டுவதே அதன் சாராம்சம் என்பதை மார்க்ஸ் எடுத்துக் காட்டினார். அவர் உபரிமதிப்பு பற்றிய தன்னுடைய கோட்பாட்டில் இந்தச் சுரண்டலின் தன்மையை விளக்கிக் கூறி முதலாளித்துவத்தின் வரலாற்று ரீதியான போக்கை – அதன் பகைமையான வர்க்க முரண்பாடுகள் தீவிரமடைந்து இறுதியில் மூலதனத்தின் மீது உழைப்பு வெற்றியடைவதை எடுத்துக்காட்டினார். எனவே மார்க்சின் பொருளாதாரத் தத்துவம் இயக்கவியல் ரீதியான ஒருமையைக் கொண்டிருக்கிறது; அது அவருக்கு முன்பிருந்தவர்களின் முதலாளித்துவக் கருதுகோள்களை நிராகரிக்கிறது; அவர்கள் உருவாக்கியவற்றில் சரியானவையாக இருக்கும் ஒவ்வொன்றையும் படைப்பாற்றலோடு வளர்த்துச் சென்றது. இந்த ஒருமையை எடுத்துக்காட்டுவதும் விளக்குவதுமே இந்தப் புத்தகத்தின் முக்கியமான நோக்கம்.

விஞ்ஞான சோஷலிசம் மார்க்சிய-லெனினியத்தின் பொருளாதாரக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. இந்தக் கொள்கைகளை முழுமையாகப் புரிந்து கொள்வதற்கும் படைப்பாற்றலோடு வளர்த்துச் செல்வதற்கும் அவற்றின் தோற்றுவாய்களையும் மூலவேர்களையும் விளக்குவது மிகுந்த முக்கியத்துவமுடையதாகும்.

(தொடரும்…)

அடுத்த பகுதியில் பார்க்க இருக்கும் தலைப்பு : மார்க்சும் அவருக்கு முன்பிருந்தவர்களும்.

அடிக்குறிப்பு:
1) V.I. Lenin, collected Works, Vol. 19, p.23

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ

அம்மா அருளிய இட்லி 1 ரூபாய் ! அப்பல்லோவில் அம்மா சாப்பிட்டது 1.17 கோடி ரூபாய் !

“செத்தும் கொடுத்தார் வள்ளல் சீதக்காதி” என்பார்கள். ஜெயலலிதாவோ உயிரோடு இருந்த போதும் இறந்த போதும் கொள்ளையடித்த ஊழல்கள் மளிகைக் கடை பில் போல வந்து கொண்டே இருக்கின்றன.

ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்து வருவது தெரிந்ததே. தமிழகத்தில் ஆதித்யா சானலுக்கு அடுத்தபடியாக காமடியில் போட்டி போடுவது ஆறுமுகசாமி சானல் செய்திகள்தான். அதில் ஜெயலலிதா இட்லி சாப்பிட்டது, குலோப் ஜாமுன் ருசித்தது இன்ன பிற வரலாற்று விவரங்கள் எல்லாம் ஊடகங்களின் பக்கங்களை நிரப்பி வருகின்றன.

அதில் லேட்டஸ்ட் சமாச்சாரம் அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா 75 நாட்கள் இருந்தபோது செலவழிக்கப்பட்ட மருத்துவக் கட்டணம், மளிகைக் கடை பட்டியல் போல வெளிவந்திருக்கிறது. பட்டியலின் மொத்தக் கட்டணம் 6.85 கோடி ரூபாய். இந்தக் கட்டண விவரங்களை நகல் ரசீதுகளுடன் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் ஆணையத்தில் தாக்கல் செய்திருக்கிறது.

அப்பல்லோவில் ’அம்மா’

அதில் ஜெயா தங்கிய அறைக் கட்டணம் 24 லட்சம், சசி அண்ட் கோ, அரசு அதிகாரிகள் அன்ட் கோ தங்கிய அறை வாடகை ஒரு கோடியே 24 லட்சம், உணவுக் கட்டணம் ஒரு கோடியே 17 லட்சம், மருத்துவர்களின் பரிந்துரை 21 லட்சம், மருந்துகளுக்கு 30 லட்சம் என்பவை அடக்கம். இன்னும் நர்சிங், மருந்து, இன்ஜியனிரிங் என பட்டியல் நீள்கிறது. இந்த கட்டணத்தில் ஆறு கோடி ரூபாய்க்கான காசோலையை அதிமுக கட்சி கொடுத்திருக்கிறதாம். மீதியை கொடுக்க வேண்டுமாம். ஊழல் கட்சியாக இருந்தாலும் அப்பல்லோ மருத்துவமனையிடம் காசை காசோலையாக கொடுத்திருக்கறார்கள். ஜெயா உயிரோடு இருந்து, சசிகலாவும் வெளியே இருந்தால் அப்பல்லோ இப்படி தைரியமாக காசு வாங்கியிருக்குமா என்ன?

படிக்க:
♦ அன்னலட்சுமி – திருவோட்டுத் தமிழன் !
♦ அம்மா மட்டுமா ஊழல்… ஊடக மாமாக்களின் கட்டுரை காவியங்கள்

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது இட்லி, பொங்கல், கேசரி, வடை, ரவா கிச்சடி, குலோப் ஜாமுன், காபி, பிஸ்கட், பழச்சாறு, தயிர் சாதம் உள்ளிட்டவைகளை சாப்பிட்டார் என்று மருத்துவர்கள் ஆணையத்தில் வாக்குமூலம் அளித்து இருந்தனர். அதேபோன்று ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போதும் அதிமுக செய்தி தொடர்பாளர்கள் அம்மா இன்று இட்லி சாப்பிட்டார், நேற்று பொங்கல் சாப்பிட்டார், நாளை அல்வா சாப்பிடுவார் என்றெல்லாம் அடித்து விட்டனர்.  இதை வைத்துப் பார்த்தாலும் இந்த சரவண பவன் அயிட்டங்களை தினசரி முழுங்கினாலும் 75 நாட்களுக்கு நாளொன்றுக்கு ஆயிரம் ரூபாய் வைத்தாலும் இலட்ச ரூபாயை தாண்டியிருக்காது. பிறகு எப்படி 1.17 கோடி செலவானது என்பது மக்களின் கேள்வி

ஜெயலலிதா மட்டும் இப்படி சாப்பிட்டிருந்தால் அவர் 75 நாட்கள் தங்கியிருக்கத் தேவையில்லை. இரண்டு நாட்களிலேயே பரலோகம் போய் சேர்ந்திருப்பார். மாறாக எப்படி ஜெயலலிதா கொடநாடு போனால் கோட்டை முதல் தோட்டம் வரை அப்படியே  ஊட்டிக்கு செல்லுமோ அது போன்று அப்பல்லோ மருத்துவமனையிலும் தமிழக அரசும், தோழி சசிகலா பரிவாரமும் சென்று முகாமிட்டனர். அதற்கும் சேர்துத்தான் இந்த ஒரு கோடியே…. உணவு செலவு. இதுபோக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், காவல் அதிகாரிகள், ஊடகங்கள் என அனைவரும் தின்று தீர்த்த கணக்கும் இந்த மெஸ் பில்லில் அடக்கம்.

அதிலும் குறிப்பாக இந்த ஒரு கோடியே 17 லட்சத்தில் யாரெல்லாம் எவ்வளவு சாப்பிட்டு இருக்கிறார்கள் என்பதையும் பட்டியல் போட்டிருக்கிறார்கள் . 48 லட்சம் ரூபாயில் மீடியாக்கள் சாப்பிட்டு இருக்கின்றன. அதனால்தான் அன்று அம்மா மருத்துவமனை அனுபவத்தை தந்தி டிவி முதல் புதிய தலைமுறை வரை அழுது கொண்டே கவரேஜ் செய்தார்கள் போலும். அழுதாலும் தின்பதற்கு அவர்கள் குறைவைத்து விடவில்லை.

அடுத்து அரசு அதிகாரிகள் தின்ன செலவு 20 லட்சம், போலீஸ் அதிகாரிகள் 26 லட்சம், விஐபிக்கள் 18 லட்சம், ஜெயலலிதா வீட்டில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் கட்சிக்காரர்கள் 17 லட்சம் என மொத்தமாக 1 .17 கோடி  ரூபாயில் சாப்பிட்டு தீர்த்திருக்கிறார்கள்.

படிக்க:
♦ அப்பல்லோவில் அம்மா : அறை எண் 2008-ல் கடவுள் !
♦ அப்பல்லோ மருத்துவமனையின் கொடூர முகம் ! வீடியோ

இந்த பட்டியலில் பார்த்தால் கட்சிக்காரர்கள்தான் எண்ணிக்கையில் அதிகம் இருக்க வேண்டும். அவர்களை விட மீடியா அதிகம் தின்றிருக்கிறது. அதிகார வர்க்கம் மொத்தமாக சேர்த்தால் 46 லட்சத்திற்கும் தின்று தீர்த்திருக்கிறது. ஆக இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அழுது இழந்த கலோரியை விட தின்று சேர்த்த கலோரி அதிகம் எனத் தெரிகிறது. அந்த 75 நாட்களும் அப்பல்லோ மருத்துவமனை சமையல் அறையில் மணமும், பணமும் அதிகம் வீசியிருக்கிறது.

அப்பல்லோ மருத்துவமனையில் அம்மா சாப்பிட்டது ஒன்றே கால் கோடி ரூபாய் என்றால் அம்மா அறிமுகப்படுத்திய அம்மா உணவகத்தில் இட்லி ஒரு ரூபாய், சாம்பார், எலுமிச்சை, கறிவேப்பிலை சாத வகைகள் ஐந்து ரூபாய்க்கும் தயிர் சாதம் 3 ரூபாயிலும் விற்கப்படுகிறது.

தமிழனை திருவோட்டுத் தமிழனாக்கிய திருட்டு ’அன்னலட்சுமி’

2013-ம் ஆண்டில் சென்னையில் அம்மா உணவகம் அறிமுகப்படுத்தப்பட்ட போது 10 இடங்களில் திறந்தார்கள். அதற்கு உத்தேசமாக ஓராண்டு 3 கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிட்டார்கள். ஒவ்வொரு உணவகத்திலும் நூற்றுக்கணக்கான மக்கள் சாப்பிடுவார்கள். அப்படி 10 இடங்களிலும் சேர்ந்து 365 நாட்கள் சாப்பிட்டாலும் அதற்கு இவர்கள் கொடுத்த கணக்கின்படி மூன்று கோடி ரூபாய்தான் செலவு. ஆனால் ஏழை மக்களுக்காக அம்மா உணவை அறிமுகப்படுத்திய போயஸ் தோட்டத்து அம்மா மருத்துவமனையில் தங்கியபோது அவரும் அவரது பரிவாரமும் ஒன்றேகால் கோடி ரூபாய்க்கு சாப்பிட்டிருக்கின்றனர்.

சமீபத்தில் எடப்பாடி, ஓபிஎஸ் இரட்டையர்கள் அம்மா உணவகம் சென்று சீன் போட்ட போது அங்கே புதிய தட்டு ஒன்றில் சரவணபவனில் இருந்து வருவிக்கப்பட்ட இட்லி பொங்கலை சாப்பிட்டார்கள். இந்த சீனை ஒப்பிட்டாலும் அப்பல்லோவில் மெஸ் கணக்கு சரியாகத்தான் வந்திருக்கிறது.

இந்தியா முழுவதும் மத்திய அரசும் மாநில அரசுகளும் இணைந்து மதிய உணவு திட்டத்தை அரசுப்பள்ளிகளில் அமல்படுத்துகின்றனர். அதில் ஆரம்பப் பள்ளியில் படிக்கும் ஒரு குழந்தைக்கு உணவு செலவாக 4 ரூபாய் 13 காசை நிர்ணியத்திருக்கிறார்கள். இதையே நடுநிலைப் பள்ளியின் குழந்தைக்கு ஆறு ரூபாய் 18 காசு என நிர்ணயித்திருக்கிறார்கள்.

படிக்க:
♦ ஜெயா எப்படிச் செத்தால் நமக்கென்ன ?
♦ ஜெயா பெயரை நீக்கு – அதிமுக சொத்துக்களைப் பறிமுதல் செய் ! மக்கள் அதிகாரம்

ஒன்று முதல் ஐந்து வரை படிக்கும் குழந்தைகள் ஒரு மதிய உணவில் 50 கிராம் காய்களையும் 100 கிராம் அரிசியையும், 20 கிராம் பருப்பையும், ஐந்து கிராம் எண்ணையையும், 12 கிராம் புரதத்தையும் பெறுகிறார்கள்.

ஆறு முதல் எட்டு வரை படிக்கும் குழந்தைகள் ஒரு நாளைக்கு 75 கிராம் காய்கறி, 30 கிராம் பருப்பு, 150 கிராம் அரிசி, 20 கிராம் புரதம் , 7.5 கிராம் எண்ணையையும் பெறுகிறார்கள்.  யோசித்துப் பாருங்கள் நான்கு ரூபாயிலும், ஆறு ரூபாயிலும் ஒரு குழந்தைக்கு என்ன தந்துவிட முடியும்? ரேசன் அரிசையை மட்டும் சோறாக போட்டுவிட்டு பேருக்கு அதில் ரெண்டு பருப்பும், ஒரு காய்ஞ்ச கத்திரிக்காய் துண்டும் இருக்கும். தமிழகத்தில் ஒரு முட்டை போடுகிறார்கள். மற்ற மாநிலங்களில் அதுவும் இல்லை.

இதனால்தான் என்னவோ உலக பட்டினி அட்டவணையில் உள்ள நாடுகளின் தரவரிசையில் இந்தியா கடைசி இடங்களில் இருக்கிறது. இங்கே 20 கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள் பட்டினி கணக்கிலும் சத்துக் குறைவு பட்டியலிலும் வருகிறார்கள்.

அம்மா பரிவாரம் அப்பல்லோவில் ஒண்ணே கால் கோடி ரூபாயில் சாப்பிடும் பொழுது நமது குழந்தைகள் பட்டினி கிடக்காமல் பிரியாணியா சாப்பிட முடியும்?

– மதன்

சீக்கிய மக்கள் படுகொலை 1984 : ஆண்டுகள் 34 கடந்த பின் காங்கிரசு தலைவருக்கு தண்டனை !

ஒருவெறுப்பின் விதைகள் வேகமாக வளர்ந்து விட்டன
எங்கு பார்த்தாலும் ரத்தவாடை அடிக்கிறது!

1984-ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக கட்டவிழ்க்கப்பட்ட கலவர வழக்கில் தீர்ப்பு வழங்கிய டெல்லி உயர்நீதிமன்றம், குஜராத், கந்தமால், முசாஃபர் நகர், மும்பையில் நடந்த பெருந்திரள் கொலைகளும் அதே பாணியில் நடைபெற்றுள்ளதாக கோடிட்டு காட்டுகிறது.

சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் 2003-ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை வழங்கி டிசம்பர்  17-ஆம் தேதி தீர்ப்பளித்தது டெல்லி உயர்நீதிமன்றம்.

சீக்கியர்களுக்கு எதிரான கலவரம். (கோப்புப் படம்)

நீதிபதி எஸ். முரளிதர், நீதிபதி வினோத் கோயல் ஆகியோர் அடங்கிய அமர்வு, பிரிவு 120பி (சதித்திட்டம் தீட்டுதல்), பிரிவு 302 (கொலை), பிரிவு 436 (வீடு உள்ளிட்டவற்றை அழிக்கும் நோக்கத்தோடு தீ வைத்தல்), 153 ஏ (இரு சமூகங்களுக்கிடையே பகையை தூண்டுதல்) மற்றும் 153 பி (தேச ஒற்றுமைக்கு எதிராக குற்றங்களில் ஈடுபடுதல்) ஆகிய இந்திய தண்டனை பிரிவுகளின் கீழ் சஜ்ஜன் குமாருக்கு தண்டனை வழங்கியது. இதன் அடிப்படையில் அவருக்கு ஆயுள் தண்டனை அளிப்பதாக நீதிபதிகள் அறிவித்தார்கள்.

இந்திய தண்டனை சட்டப் பிரிவுகள் 320, 436, 153 ஏ, 295-ன் படி அதாவது பத்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ஒரு இலட்ச ரூபாய் அபராதமும், அபராதம் செலுத்த முடியாத நிலையில் ஓராண்டு சிறையும் மூன்று ஆண்டு கடுங்காவல் தண்டனையும் மேலும் இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் அனுபவிக்க வேண்டும்.

தேச பிரிவினை, குஜராத், கந்தமால், மும்பை, முசாஃபர் நகரில்நடந்த பெருந்திரள் கொலைகள்!

சஜ்ஜன் குமார்.

தண்டனை அறிவிப்பின் போது, “1984 -ஆம் ஆண்டு நவம்பர் தொடக்கத்தில் தூண்டப்பட்ட கலவரத்தால் டெல்லியில் மட்டும் 2,733 பேர் கொல்லப்பட்டார்கள். நாடுமுழுவதும் 3,350 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள் (அரசு அறிவிப்பின் படி இந்தக் கணக்கு). அதுதான் முதலும் கடைசியுமான பெருந்திரள் குற்றம் என சொல்ல முடியாது. 1984 நவம்பரில் அப்பாவி சீக்கியர்களுக்கு எதிரான கொலைகள்  பிரிவினையின்போது நடந்த வலி மிகுந்த சம்பவங்களை நினைவு படுத்துகின்றன” என சுட்டிக்காட்டியதோடு, குஜராத்தில் நடந்த முசுலீம் இனப்படுகொலை, ஒடிசா கந்தமாலில் நடந்த கொலைகள், பாபர் மசூதி இடிப்புக்குப் பின் மும்பையில் நடந்த கொலைகள், உத்தர பிரதேச மாநிலம் முசாஃபர் நகரில் நடந்த படுகொலைகள் ஒரே பாணியில் நடத்தப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

மும்பய்க் கலவரம். (கோப்புப் படம்)

“சிறுபான்மையினரை குறிவைத்து, ஆதிக்கத்தில் உள்ள அரசியல் கட்சிகள், சட்டத்தை அமலாக்குகிறவர்களின் துணையுடன் இந்தப் படுகொலைகள் நடத்தப்பட்டிருக்கின்றன” எனக் கூறிய நீதிபதிகள், “பெருந்திரள் கொலைகளைச் செய்த கிரிமினல்கள் அரசியல்வாதிகளின் ஆதரவைப் பெற்றதோடு, விசாரணையில் இருந்தும் தண்டனையில் இருந்தும் தப்பினார்கள். இதுபோன்ற கிரிமினல்களை நீதியின் முன் நிறுத்துவது நமக்கு பெரும் சவாலாக உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய பதில் பெறுவதற்குள் தசாப்தங்கள் கடந்து விடுகின்றன. இது நமது  நீதிமுறையை வலுப்படுத்த வேண்டியதை சுட்டிக்காட்டுகிறது. ‘மனிதநேயத்துக்கு எதிரான குற்றங்கள்’ அல்லது ‘இனப்படுகொலைகள்’ எனப்படுபவை  நமது உள்நாட்டு குற்ற சட்டத்தின் ஒரு பகுதியாகவே உள்ளன. இந்த ஓட்டையை நாம் உடனடியாக கவனிக்க வேண்டும்” என்றனர்.

முசாஃபர்நகர் கலவரம். (கோப்புப் படம்)

மத அடிப்படையில் மக்களைக் கொல்வதும் நிறுவனமயமாக்கப்பட்ட வன்முறையும் நமது நாட்டுக்கு புதிதல்ல. கடந்த கால நினைவுகளை கிளறிய நீதிமன்றம், 1947-ஆம் ஆண்டின் கோடை காலத்தில் நடந்த பிரிவினையின் போது, நாடு மிக மோசமான பெருந்திரள் கொலைகளைப் பார்த்தது, பல இலட்சக்கணக்கான சீக்கியர்கள், முசுலீம்கள் மற்றும் இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

அம்ரிதா ப்ரீதம்.

பிரிவினையின்போது இளம் கவிஞராக இருந்த அம்ரிதா ப்ரீதமின் கவிதைகளை நீதிபதிகள் மேற்கோள் காட்டினர். லாகூரிலிருந்து இரண்டு குழந்தைகளுடன் இந்த நாட்டுக்கு அம்ரிதா ப்ரீதம் மேற்கொண்ட துயரமான பயணத்தை ’வாரிஸ் ஷாவுக்கு கவிதை’ என்ற தலைப்பில் கவிதையாக எழுதியிருந்தார்.

“வெறுப்பின் விதைகள் வேகமாக வளர்ந்துவிட்டன
எங்கு நோக்கினும் ரத்தத்துளிகள்
நஞ்சு பாய்ந்த தென்றல் காட்டில் உள்ள மூங்கில் குழல்களை பாம்புகளாக மாற்றிவிட்டன
அவைகளின் நஞ்சு, ஒளியும் வண்ணமும் மிக்க பஞ்சாபை நீலமாக மாற்றிவிட்டன”

வழக்கின் பின்னணி

1984-ஆம் ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதி இந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்தி தன்னுடைய இரண்டு சீக்கிய பாதுகாவலர்களால் படுகொலை செய்யப்பட்டார். அதன் பின், 37 ஆண்டுகள் கழித்து, இந்த நாடு மாபெரும் மனித துயரை மீண்டும் எதிர்கொண்டது. நவம்பர் 1 முதல் நவம்பர் 4 வரையான நான்கு நாட்களில் டெல்லியில் மட்டும் 2733  சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள்.  அவர்களின் வீடுகள் அழிக்கப்பட்டன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த வன்முறையில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள்.

இந்த படுமோசமான குற்றங்களுக்குப் பின்னால் இருந்த பலர் அரசியல்வாதிகளின் அரவணைப்பைப் பெற்றனர். இருபதாண்டு காலமாக விசாரணையிலிருந்தும் தண்டனையிலிருந்து தப்பினார். பத்துக்கும் மேற்பட்ட கமிட்டிகள், கமிஷன்கள் அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டபின்,  2005-ஆம் ஆண்டில் இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டது.

சுட்டுக் கொல்லப்பட்ட இந்திரா காந்தி. (கோப்புப் படம்)

தற்போதைய மேல் முறையீடு சிபிஐ விசாரித்த தென்மேற்கு டெல்லியில் ராஜ் நகர் பகுதி-1 ல் நடந்த ஐந்து சீக்கியர்களின் படுகொலை மற்றும் ராஜ் நகர் பகுதி-2ல் நடந்த குருத்வாரா எரிப்பு குறித்தது.  அப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சஜ்ஜன் குமார் உள்ளிட்ட ஆறு பேர் மீது 2010-ஆம் ஆண்டு வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை தொடங்கியது. மூன்று ஆண்டுகள் கழித்து விசாரணை நீதிமன்றம், ஐந்து பேரை குற்றவாளிகளாக அறிவித்தும் சஜ்ஜன் குமாரை விடுவித்தும் தீர்ப்பளித்தது. ஐவரில் மூவர் மீது ஆயுதம் ஏந்தி கலவரத்தில் ஈடுபட்டது, கொலை செய்தது போன்ற குற்றங்களும் இருவர் மீது ஆயுதம் ஏந்தி கலவரம் செய்தல் என்ற குற்றமும் நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் சொன்னது.  சஜ்ஜன்குமார் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐ மேல்முறையீடு செய்தது. தண்டனை பெற்றவர்களும் விடுவிக்கக்கோரி மேல்முறையீடு செய்தார்கள்.

படிக்க:
உ.பி. இந்துமதவெறிக் கலவரம் : மோடியின் நரபலி அரசியல் !
நூல் அறிமுகம் : வகுப்புவாதம் ஒர் அறிமுக நூல் – பிபன் சந்திரா

இந்த மேல்முறையீட்டு வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் சஜ்ஜன் குமாரை சதித்திட்டம் தீட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் குற்றவாளி என தீர்ப்பளித்தது. மற்ற ஐவரின் மேல் முறையீட்டில் விசாரணை நீதிமன்றம் அளித்த தண்டனையை உறுதி செய்த நீதிமன்றம், சதித்திட்டம் தீட்டியது தொடர்பாக கூடுதல் தண்டனையையும் அறிவித்தது.

சாட்சியங்களின் மன உறுதி!

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள், மூன்று சாட்சியங்களின் மன உறுதி மற்றும் விடாமுயற்சியின் பலனாக நீதியின் முன் நிறுத்தப்பட்டனர். ஜக்திஷ் கவுர் –  கொல்லப்பட்ட ஐவரில் இவருடைய கணவர், மகன் மற்றும் மூன்று உறவினர்கள் அடங்குவர். ஜக்‌ஷிர் சிங் – கவுரின் உறவினர் –  நிர்ப்ரீத் கவுர், இவர் குருத்வாரா எரிக்கப்படுவதையும், வன்முறை கும்பலால் அவருடைய அப்பா உயிரோடு எரிக்கப்பட்டதையும் பார்த்தவர்.

ஒடிசா கந்தமால் கலவரம். (கோப்புப் படம்)

தீர்ப்பின் இறுதியில் நீதிபதிகள் இவ்வாறு தெரிவித்தனர்… “1984-ஆம் ஆண்டு நடந்த படுகொலை ‘மனிதநேயத்துக்கு எதிரான குற்றங்கள்’.  சமூகத்தின் கூட்டு மனசாட்சியின் முன் அவை அதிர்ச்சியை நீண்ட காலத்துக்கு ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். இந்த நீதி கிடைக்க 30 ஆண்டுகள் ஆனது என்பதை மறுக்க முடியாது. நமது குற்றவியல் நீதி அமைப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதும் அது நிமிர்ந்து நிற்கிறது. ஜனநாயகம், சட்டத்தின் வழியில் நடைபெறும் போது இத்தகைய பெருந்திரள் குற்றங்களைச் செய்தவர்கள் நீதியின் முன் நிறுத்த முடியும். நீதி வேண்டி பாதிக்கப்பட்டு பொறுமையோடு காத்திருக்கும் எண்ணற்றவர்களுக்கு ‘உண்மை வெல்லும்;  நீதி கிடைக்கும்’ என்பதை உறுதிசெய்ய வேண்டும்”.

குஜராத் கலவரம். (கோப்புப் படம்)

அபூர்வமாக அரசியல் கொலைகள் குறித்து நீதிமன்றங்கள் உணர்ச்சி பெருக்கோடு தராசை உயர்த்திப் பிடித்து தீர்ப்பு எழுதுவதுண்டு. ஆனால் காலம்தாழ்த்திய நீதியால் என்ன பயன்? சீக்கிய படுகொலை பாணியில் நான்கைந்து பெருந்திரள் படுகொலைகள் நடந்துவிட்டன. ஒருவேளை நீதித்துறை அரசியல் தலையீடு அற்றதாக இருந்து, சீக்கிய படுகொலைகளுக்கு நீதி உடனடியாக கிடைத்திருந்தால், அதே பாணியிலான கும்பல் கொலைகளுக்கு இந்தியாவில் இடமிருந்திருக்காது. ஜனநாயகத்தில் அப்படி நடக்க சாத்தியமே இல்லை. குஜராத் படுகொலைகளுக்கு நீதி கிடைக்க இன்னும் முப்பதாண்டுகள் காத்திருக்க வேண்டும் அல்லது நீதியே கிடைக்காமலும் போகலாம் என்பதைத்தான் இந்தத் தீர்ப்பு மறைமுகமாகக் கூறுகிறது.

தமிழாக்கம்: அனிதா
நன்றி: நியூஸ்கிளிக்