Saturday, July 19, 2025
முகப்பு பதிவு பக்கம் 198

Work From Home : ஐ.டி. ஊழியர்களை கசக்கிப் பிழியும் முதலாளித்துவ இலாபவெறி !

அன்பார்ந்த ஐ.டி. ஊழியர்களே,
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நாம் Work From Home என்ற பெயரில் வீட்டிலிருந்து வேலை செய்து வருகிறோம். எந்த தொழிற்துறையில் வேலை செய்பவருக்கும் கிடைக்காத – ஏன் நமது ஐ.டி. துறையிலேயே மிகவும் சீனியர்களுக்கு மட்டுமே கிடைத்து வந்த – வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் இந்த வசதி, நம் அனைவருக்கும் கிடைத்த போது, “ஆகா..! இனி குடும்பத்தினருடன் சேர்ந்திருக்கலாம்” என நினைத்து அகமகிழ்ந்தோம்.
ஆனால் நாம் நினைத்தது போன்று நம்மால் குடும்பத்தினருடன் சிலமணி நேரமாவது கழிக்க முடிந்ததா? இல்லவே இல்லை, பெற்றோர் வீட்டிலிருந்தும் தன்னோடு விளையாட, பாடம் சொல்லிக் கொடுக்க வரவில்லை என்று நம் வீட்டு குழந்தைகளின் ஏக்கம் தீரவில்லை, மாறாக அதிகரித்து விட்டது. ஒரே வீட்டில் அக்கம்பக்கமாக உட்கார்ந்து இருந்தபோதிலும் வெவ்வேறு கிரகத்தில் இருப்பது போல் தனித்திருக்கும் பிள்ளைகளை எண்ணி வருந்தும் பெற்றோர்கள் குரலைத்தான் கேட்க முடிந்தது. என்னில் பாதி என ஸ்டேட்டஸ் வைத்த வாழ்க்கைத் துணையுடன் செலவிட்ட நேரம் பாதிக்கும் கீழாக குறைந்துவிட்டது. இதைப்பற்றியெல்லாம் எப்போதாவது எண்ணிப் பார்த்திருக்கிறோமா?
என்ன நடந்தது கடந்த ஒன்றரை ஆண்டுகளில்? நமது நிறுவனத்தின் செலவுகள் குறைந்தன; லாபம் அதிகரித்தது, நம்மில் மிகச் சிலருக்குச் சம்பளம் அதிகரித்தது. ஆனால் இதற்காக நாம் கொடுத்த விலையோ அதிகம். அலுவலகம் சென்று வேலை செய்த போது சராசரியாக 10 மணிநேரம் என்றிருந்த நமது வேலை நேரம் இன்று வரைமுறை இன்றி 18 முதல் 20 மணிநேரம் என்று அதிகரித்துள்ளது. அலுவலகத்தில் இருந்தபோதாவது தேநீர் இடைவேளை, உணவு இடைவேளை என நடுவில் பிரேக் எடுத்துக்கொள்வோம். ஆனால் இன்றோ, நமது தனிப்பட்ட வேலைக்கும், அலுவலக வேலைக்குமான எல்லைக்கோடு மிகவும் மெல்லியதாக மாறிவிட்டது. டீ,காபி குடிப்பது முதல் உணவருந்துவது வரை அனைத்தும் முன்புதான் செய்தாக வேண்டும். நமது இவ்வாறு தினப்பொழுதின் மொத்தத்தையும் முதலாளிக்காக தானம் கொடுத்துவருகிறோம்.
படிக்க :
ஐ.டி. துறை ஆட்குறைப்பு சரியா தவறா ?
ஐ.டி. ஊழியர்களுக்கு நம்பிக்கையூட்டும் பு.ஜ.தொ.மு – ஐ.டி. பிரிவு சங்கம் !
இவ்வாறு எல்லாவற்றையும் கொடுத்து, முதுகு வலி, மன அழுத்தம், உடல் பருமன், பார்வைக் கோளாரு என நோய்களை ‘பரிசாக’ வாங்கிக் கொண்டிருக்கிறோம். வீட்டிலிருந்து வேலை செய்வதால் இந்திய ஐ.டி. ஊழியர்கள் மத்தியில் மன அழுத்தம் அதிகரித்துள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தான் நடத்திய ஆய்விலிருந்து கூறுகிறது. இதனால் இதய நோயும் நம்மை தாக்க துவங்கியுள்ளது. இதுபோன்ற தாக்குதலால் நிலைகுலைந்த இந்திய ஐ.டி. ஊழியர்கள் குறித்த கட்டுரைகள் இணையத்தில் நிரம்பி வழிகின்றன. இதிலிருந்து மீண்டுவிட தியானம், யோகா, உடற்பயிற்சி என பல பரிந்துரைகள் நமக்கு தினமும் வழங்கப்படுகின்றன. இவை தான் நமக்கு தீர்வா?
நோய்க்கான காரணத்தை நாம் புரிந்துகொண்டால்தான் நோயிலிருந்து நம்மால் வெளிவர முடியும். நாம் ஐ.டி. நிறுவனங்களின் லாபவெறி என்ற சுருக்கு மடிவலையில் சிக்கிக் கொண்டிருப்பதுதான் நமது இன்றைய நிலைக்கான காரணம். கிட்டத்தட்ட 15 லட்சம் கோடி ருபாய் சந்தை மதிப்புள்ள இந்திய ஐ.டி. நிறுவனங்கள், தமது லாபத்திற்காக அரசையே வளைக்கும் வல்லமை கொண்டவை.
கொரோனா பெருந்தொற்றால் ஒட்டுமொத்த தொழிற்துறையும் முடங்கிக் கிடக்கும் போது ஐ.டி. துறை மட்டும் பெரும் லாபத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. முன்பு இருந்ததைவிட உற்பத்தித்திறன் (productivity), தற்போது அதிகரித்துள்ளது. வேலைகள் திட்டமிட்ட காலக்கெடுவிற்குள் முடிக்கப்படுகின்றன. எனவே தங்களுக்குச் சாதகமாக உள்ள இந்த முறையை நிரந்தரமாக வைத்துக்கொள்ள ஐ.டி. நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
2025-ம் ஆண்டுக்குள் 75% டி.சி.எஸ் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வார்கள் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. டி.சி.எஸ் மட்டுமல்ல விப்ரோ, இன்போசிஸ், சி.டி.எஸ் என அனைத்து நிறுவனங்களும் இந்த முறையை நிரந்தரமாக்குவது குறித்து ஆலோசித்து வருகின்றன. வீட்டிலிருந்து வேலை செய்வதற்கென்று அலுவலக கட்டமைப்பு முழுவதையும் இந்த நிறுவனங்கள் மாற்றி வருகின்றன. பல நிறுவனங்கள் நகரின் மத்தியில் அதிக வாடகையில் இயங்கி வந்த தங்களது அலுவலகங்கள் பலவற்றை மூடிவிட்டன.
வீட்டிலிருந்து வேலை செய்வது மட்டுமல்ல ஸ்விக்கி, ஜொமோட்டோ போல பகுதி நேர புரோகிராமர்களைக் (freelance programmers) கொண்டுவரவும் இவர்கள் திட்டமிடுகின்றனர். ஐ.டி. துறையில் கிக் பொருளாதாரத்தைப் புகுத்துவது குறித்து விப்ரோ தனது இணையதளத்திலேயே பேசுகிறது. வேலையிழப்பு என்ற கத்தி நம்தலைமீது எப்போது வேண்டுமானாலும் இறங்க காத்திருக்கிறது.
நமக்கான பாதுகாப்பை இந்த அரசாவது உத்தரவாதப்படுத்துமா என்றால் அதுவும் இல்லை. மோடி தலைமையிலான கார்ப்பரேட் விசுவாச அரசு, தொழிலாளர் நலச்சட்ட சீர்திருத்தம் என்ற பெயரில், 44 தொழிலாளர் நலச் சட்டங்களை ரத்து செய்து, நமக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச சட்டபூர்வ உரிமைகளையும் மொத்தமாகப் மொத்தமாக பறித்துவிட்டு நாட்டின் ஒட்டுமொத்த தொழிலாளர்களையும் கார்ப்பரேட் நிறுவனங்களின் அடிமைகளாக மாற்றுவதில் குறியாக இருக்கிறது. இந்த தாக்குதலானது எந்த தொழிலாளியையும் விட்டு வைக்கபோவதில்லை, ஐ. டி. ஊழியர்களும் இதற்கு விதிவிலக்கல்ல..
இந்த காவி கார்ப்பரேட் பாசிசத்தின் கூட்டணி நம்மை மட்டுமல்ல நமது நாட்டின் ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்தையும் அடிமைச் சங்கிலி கொண்டு பிணைக்கிறது. விவசாயச் சட்ட திருத்தம், புதிய கல்விக் கொள்கை, பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி என விவசாயிகள், மாணவர்கள், சிறு,குறு முதலாளிகள் என அனைவரையும் சித்திரவதை செய்கிறது. கொரோனா பெருந்தொற்று கார்ப்பரேட்களது வேலையைச் சுலபமாக்கியுள்ளது. இந்தப் பெருந்தொற்றானது எதிர்காலத்தை கார்ப்பரேட் நிறுவனங்களுக்குப் பிரகாசமானதாகவும், சாமானிய மக்களுக்கு இருண்டதாகவும் மாற்றியுள்ளது. இந்தக் காவி-கார்ப்பரேட் கூட்டணியைத் தொடரவிட்டால் நமக்கான எதிர்காலமே இல்லை என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.
படிக்க :
கொரோனாவிலும் குறையாத இலாபம் ! அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வு !
பொதுத்துறை வங்கி தனியார்மயம் : லாபம் தனியாருக்கு ! இழப்பு மக்களுக்கு !
அது எல்லாம் சரிதான், வீட்டுக் கடன், வாகனக் கடன், பள்ளிக் கட்டணம் என்று அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்ட பிறகு இவற்றையெல்லாம் எதிர்த்து நம்மால் என்ன செய்ய முடியும், என நினைக்கக்கூடும்.
ஐ.டி. ஊழியர்களாக நாம் நாடுமுழுவதும் ஏறத்தாழ 50 லட்சம்பேராக உள்ளோம். ஆனால், நம்மீது நடத்தப்படும் அடக்குமுறைகளை எதிர்க்க வேண்டும் என்கிற உணர்வோ, நம்மால் சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கையோ இல்லை.
தொழிலாளர்களது ஒற்றுமை மாபெரும் சர்வாதிகார அரசுகளையே தூக்கியெறிந்துள்ளது என்பதுதான் வரலாறு.. ஐ.டி. ஊழியர்களான நாம், இந்தியத் தொழிற்துறையின் முன்னோடித் தொழிலாளர்கள். கொரோனா பெருந்தொற்றிலும் மருத்துவம், வங்கித் துறை, அரசு நிர்வாகம் என அனைத்தும் தங்கு தடையின்றி நடைபெறுகிறது என்றால் அதற்குப் பின்னால் ஐ.டி. ஊழியர்களான நமது உழைப்பு உள்ளது. தொழில்நுட்பத்தின் கதவுகளை நம் நாட்டு மக்களுக்காகத் திறந்து விடுபவர்கள் நாம். நமது ஒற்றுமையும் அநீதிக்கு எதிரான போராட்டமும் நமக்கான விடிவாக மட்டுமல்ல இந்த சமூகத்தின் விடிவாகவும் மாறும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
எனவே, கார்ப்பரேட்-களின் லாபவெறிக்காக நம்மீது திணிக்கப்படும் பண்டைய எகிப்திய சிறைக்கூடத்தை நினைவுபடுத்தும் வேலை முறையையும், நமது சொந்த நலன்களோடு, நாட்டின் கோடிக்கணக்கான உழைக்கும் மக்களது நலன்களையும் இணைத்து ஒரு முன்னணி சக்தியாக மாறுவோம். அதன் முதல்கட்டமாக புரட்சிக்கர தொழிற்சங்கமான பு.ஜ.தொ.மு.-வில் அணி திரள்வோம்.

இங்ஙனம்.
புஜதொமு (ஐ. டி. ஊழியர்கள் பிரிவு)
தொடர்புக்கு : 9003009641.

டி.வி.எஸ் நிர்வாகத்தின் குள்ளநரித்தனம் || சங்கம் கடந்து தொழிலாளர்களைத் திரட்டும் புஜதொமு

ஆக்சில்ஸ் இந்தியா - பாடி பிரிவு
ட்டோமொபைல் துறையில் கொடிகட்டிப் பறக்கும் டி.வி.எஸ் நிறுவனம், அதன் துவக்க காலம் முதலாகவே தொழிலாளர் விரோத, தொழிற்சங்க விரோத போக்கோடு நடந்து கொண்டிருப்பதை அறியாதவர்கள் இருக்க முடியாது. தொழிற்சங்கம் அமைத்தே தீருவோம் என்கிற முடிவை டி.வி.எஸ் தொழிலாளர்கள் எடுத்தபோது நிர்வாகம் முந்திக்கொண்டது. ஆளும் வர்க்கத்தின் அடியாள்படையாக இருந்த காங்கிரஸ் கட்சி சார்புடைய ஐ.என்.டி.யு.சி சங்கத்தை டி.வி.எஸ் குழுமம் முழுவதும் நிர்வாகமே திணித்தது.
ஐ.என்.டி.யு.சி க்கு ஏகபோக அங்கீகரித்ததோடு, வேறு சங்கங்கள் கட்டப்பட்டால், அந்த மாற்று சங்கத்தின் உறுப்பினர்கள் அச்சுறுத்தப்படுவதோடு, முன்னணியாளர்களது வேலைபறிப்பும் சர்வ சாதாரணமாக நடந்து வந்தது. தொழிலாளர்களும் வேறுவழியின்றி ஐ.என்.டி.யு.சி உறுப்பினர்களாக சகிப்போடு நீடித்து வந்தனர்.
டி.வி.எஸ் குழுமத்தின் ஒரு பிரிவான ஆக்சில்ஸ் தயாரிக்கும் ஆலை, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் இயங்கி வந்தது. இங்கும் வழக்கம் போல ஐ.என்.டி.யு.சி தான் நிர்வாகத்தின் அடியாள்படையாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் 2010-ல் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் ஆக்சில்ஸ் இந்தியா லிமிடெட் கிளைச்சங்கம் துவங்கப்பட்டது. இந்த அறிவிப்பை கேட்டவுடன் முதலாளியை விட அதிகமாக ஆவேசப்பட்டது, ஐ.என்.டி.யு.சி தலைமைதான்.
படிக்க :
இயற்கை அழிவிற்கு காரணம் உழைக்கும் மக்களா ? கார்ப்பரேட் முதலாளிகளா?
தொழிலாளி வர்க்கத்தை பிளவுபடுத்தும் பண்பாட்டுச் சீரழிவுகள் || புஜதொமு
இந்த துரோகிகள் துணையோடு வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு காரணங்களைச் சொல்லி 20- க்கும் மேற்பட்ட சங்க முன்னணியாளர்கள் பொய்யான குற்றச்சாட்டின் பேரில் வேலைநீக்கம் செய்யப்பட்டனர். வேலைநீக்கத்துக்கு எதிராக தீரமாகவும், ஊசலாட்டமும் இல்லாமல் போராடியதன் விளைவாக தோழர்கள் ஏழுமலையான், பர்கத் அலி ஆகிய இருவரும் 01.7.2021 முதல் ( 11 ஆண்டுகளுக்குப் பிறகு ) பணியில் சேர்ந்தார்கள். இது முன்னுதாரணமிக்க வெற்றியாக இருக்கிறது. இது வேலைநீக்கத்தில் இருக்கும் ஏனைய தொழிலாளர்களுக்கு நம்பிக்கையூட்டுவதாகவும் இருக்கிறது. ஐ.என்.டி.யு.சி சங்க உறுப்பினர்களே மனமுவந்து இந்த வெற்றிக்கு பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.
சங்க வேறுபாடு கடந்து ஒத்த சிந்தனை கொண்டவர்களாக தொழிலாளர்கள் பக்குவப்படும்போது டி.வி.எஸ் போன்ற பழம் தின்று கொட்டை போட்ட நிர்வாகமும், ஐ.என்.டி.யு.சி போன்ற அடிவருடிக் கும்பலும் சும்மா இருப்பார்களா? உடனடியாக தங்கள் சதி வேலைகளை துவங்கிவிட்டனர்.
ஆக்சில்ஸ் இந்தியா – பாடி பிரிவு
கனரக வாகனங்களுக்கான ஆக்சில்ஸ் தயாரிக்கும் இந்த ஆலையின் இன்னொரு பிரிவு திருப்பெரும்புதூர் தொழிற்பேட்டையில் இயங்கி வருகிறது. வழக்கம் போல இங்கும் ஐ.என்.டி.யு.சி தான் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமாக ஆட்டம்போட்டு வருகிறது. செய்யாறு, திருபெரும்புதூர் ஆகிய இரண்டிலும் ஆக்சில்ஸ் தான் தயாரிக்கப்படுகிறது. ஆனாலும், செய்யாறில் உள்ள ஆலையில் பு.ஜ.தொ.மு கிளை எத்தனை இழப்புகள் வந்தாலும் எதிர்கொண்டு முறியடித்து வருகிறது.
ஐ.என்.டி.யு.சி உறுப்பினர்களில் பலரும் பு.ஜ.தொ.மு- வை வெளிப்படையாகவும், மனம் திறந்தும் பாராட்டுகின்றனர்; ஒன்றாகக் கலக்கும் தருணத்தை நோக்கிச் செல்கின்றனர். இந்த ஒற்றுமையை தொடர்ந்து அனுமதித்தால் டி.வி.எஸ் நிறுவன தொழிற்சங்கம்  முழுமைக்கும் பு.ஜ.தொ.மு தலைமை தாங்கும் சூழல் வந்துவிடும் என்கிற அச்சத்தில் நரித்தனத்தில் இறங்கியுள்ளது.
செய்யாறு ஆலைக்கு உற்பத்தி ஆர்டர்கள் குறைந்து விட்டதால், 2009-க்குப் பிறகு வேலையில் சேர்ந்தவர்களை திருப்பெரும்புதூர் ஆலைக்கு பணியிட மாற்றம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. 2009-க்குப் பிறகு பணியில் சேர்ந்த 150-க்கும் மேற்பட்டவர்களில் 90% பேர் ஐ.என்.டி.யு.சி உறுப்பினர்கள் தான். அங்கீகரிக்கப்பட்ட சங்கத்தின் உறுப்பினர்களில் கணிசமானவர்களை கட்டாயமாக, கொத்துக்கொத்தான எண்ணிக்கையில் இடமாற்றம் செய்வது தீய உள்நோக்கம் கொண்டது.
இந்த 2009 பேட்ச் தொழிலாளர்களை 5 ஆண்டுகள் பணி நிறைவடையும் தருணத்தில் வேலைநீக்கம் செய்ய நிர்வாகம் முடிவெடுத்த போது, அங்கீகரிக்கப்பட்ட சங்கமான INTUC கைகழுவி விட்டது. அவர்களுக்காக பு.ஜ.தொ.மு போராடி, வேலையை பாதுகாத்தது. வேலைப்பாதுகாப்பு கிடைத்தவுடன் அவர்களை நிர்வாகமே INTUC சங்கத்தில் சேர்த்துவிட்டது. இவ்வாறாக, தொழிலாளர்களது உரிமைக்காக பு.ஜ.தொ.மு போராடுவதும், அதை முடக்க INTUC கும்பலை நிர்வாகம் கோடாரியாக பயன்படுத்தி வந்ததும் தான் கடந்த 11 ஆண்டுகளாக நடந்து வந்தது. ஆனாலும், பு.ஜ.தொ.மு சோர்ந்து விடவில்லை.

படிக்க :
தென்கொரிய தூசான் நிர்வாகத்துக்கு சம்மட்டி அடி || தூசான் தொழிலாளர் சங்கம்

லெனினால் எப்படி ஒரு புரட்சியை சாதிக்க முடிந்தது ?

இந்த சூழலில் தான் நிர்வாகம் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மீது கட்டாய பணியிட மாற்றத்தை திணித்துள்ளது. பு.ஜ.தொ.மு செல்வாக்கு வளர்ந்துவிடக் கூடாது. இதுவரை ஐ.என்.டி.யு.சி தலைமைக்கு அடங்கிக் கிடந்த கணிசமான தொழிலாளர்கள் பு.ஜ.தொ.மு ஆதரவாளர்களாக மாறி வருகின்றனர். இவ்வாறு வெளிப்படையாக பு.ஜ.தொ.மு -வுக்கு ஆதரவு பெருகி வந்தாலும் ஐ.என்.டி.யு.சி தலைமையால் இனிமேல் உருட்டல்- மிரட்டல் வேலைகளை செய்ய முடியாது. தொழிலாளர்கள் ஒன்றுபட்ட இயக்கமாக திரள்வதற்குள் அவர்களை பிளவுபடுத்தியாக வேண்டும். வழக்கம் போல கூடுதல் சலுகை கொடுத்து ஐ.என்.டி.யு.உறுப்பினர்களது வாயை அடைப்பது இனிமேல் சாத்தியமில்லை.
இந்த சூழலில் , தானே செல்லப்பிள்ளைகளாக வளர்த்து வந்த ஐ.என்.டி.யு.சி தொழிலாளர்களை திருப்பெரும்புதூருக்கு கட்டாய இடமாற்றம் செய்வதால் அங்கிருக்கும்.ஐ.என்.டி.யு.சி -யை நிர்வாகத்தின் விருப்பத்துக்கேற்ப ஆட்டிப்படைப்பதோடு பு.ஜ.தொ.மு செல்வாக்கை செய்யாறு மட்டத்திலேயே நசுக்கிவிட முடியும். காலப்போக்கில் ஐ.என்.டி.யு.சி சங்கத்தை செல்லாக்காசாக்கி விடலாம். ( இதற்கான வேலைகளை திருப்பெரும்புதூர் ஆலையில் இப்போதே துவங்கியுள்ளனர் )
இந்த தீயநோக்கத்துடன் டி.வி.எஸ் ஆக்சில்ஸ் நிர்வாகம் தொழிலாளர்களை ஆளுக்கொரு திசையில் வீசியெறிந்துள்ளது. தானே உருவாக்கி உரமிட்டு வளர்த்த ஐ.என்.டி.யு.சி சங்கம் கூட இனி தேவை இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறது. தொழிற்சங்க உரிமை பற்றியோ, தொழிலார்களை நிர்வாகம் பந்தாடுவது பற்றியோ கருங்காலி தொழிற்சங்கங்கள் கவலைப்படுவதில்லை. ஆனால், பு.ஜ.தொ.மு போன்ற புரட்சிகர தொழிற்சங்கங்கள் இத்தகைய குள்ளநரித்தனத்தை அனுமதிக்காது என்பதை முதலாளி வர்க்கத்துக்கு உணர்த்துவோம்.

பிடிஎஃப் கோப்பாக இந்த பிரசுரத்தை தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்


இவண்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
சென்னை, திருவள்ளூர், காஞ்சி மாவட்டங்கள்
(மாநில ஒருங்கிணைப்புக் குழுவுடன் இணைக்கப்பட்டது)
தொடர்புக்கு : 94448 31578

தாலிபான்களின் கையில் ஆப்கானின் எதிர்காலம் ?

ப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அது தொடர்பான விவாதங்கள் கிளம்பி இருக்கின்றன.
அமெரிக்க விமானம் ஒன்று தனது ராணுவ வீரர்களை ஏற்றிக் கொண்டு செல்வதற்காக காபூல் விமான நிலையத்தில் இருந்து கிளம்புகிறது. அதைச் சுற்றி பெருங்கூட்டம் விமானத்தோடு சேர்ந்து நூற்றுக்கணக்கானோர் ஓடுகிறார்கள். எப்படியாவது உயிர் பிழைக்க வேண்டும் என்பதற்காக உயிரைப் பணயம் வைத்து விமானத்திற்கு வெளியே இருக்கும் இண்டு இடுக்குகளில் எல்லாம் ஏறி உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். விமானம் பறந்து கொண்டிருக்கும் போது மேலே இருந்து இரண்டு பேர் கீழே விழுந்து உடல் சிதறி இறந்து போன காணொலி மனதை பதைக்கச் செய்கிறது.
“அமெரிக்கா எங்களை கைவிட்டுவிட்டது” ” உலக நாடுகள் எங்களை கைவிட்டு விட்டன ” போன்ற குரல்கள் ஆப்கானியர்களிடம் இருந்து வந்துகொண்டே இருக்கின்றன. இனி என்ன ஆகுமோ நம்முடைய எதிர்காலம் என்பது நினைத்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள் ஆப்கானிய மக்கள். அமெரிக்காவை நம்பினால் என்ன கதி கிடைக்கும் என்பதை ஆப்கான் மீண்டும் எடுத்துக்காட்டியிருக்கிறது.
“தாலிபான்கள் எவ்வளவு கொடுமையானவர்கள், அவர்களிடம் இருந்து தப்பிக்க மக்கள் எப்படியெல்லாம் ஓடுகிறார்கள் பாருங்கள்! என்று கூறி கொண்டிருப்பவர்களில் பலர் உத்திரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத்தின் இந்துத்துவ அடக்குமுறை ஆட்சியை நியாயப் படுத்திக் கொண்டிருப்பவர்கள்; அல்லது அதைக் கண்டும் காணாமல் இருப்பவர்களே. உத்திரபிரதேசத்தில் இன்று என்ன நடந்து கொண்டிருக்கிறதோ அதைத்தான் அன்று தாலிபான்களும் ஆப்கானிஸ்தானில் செய்தனர். இனிமேலும் செய்யப்போகின்றனர்.

படிக்க:
♦ ஆப்கானிலிருந்து அமெரிக்கப் படைகள் விலகல் – பின்னணி என்ன ?

♦ தாலிபான்களிடம் ஆப்கானை தாரைவார்த்த அமெரிக்கா !

மத அடிப்படைவாதிகளால் தாலிபான்களின் ஆட்சியில் மக்கள் பட்ட துன்பங்கள் பேரழிவுகள் எல்லாமே உண்மைதான். ஆனால், அமெரிக்கா நடத்திய 20 ஆண்டுகால பொம்மை ஆட்சியில், சிறு சிறு சீர்திருத்தங்களைத் தவிர மக்களின் வாழ்நிலை பெரியதாக எதுவும் மாறவில்லை. மாறாக வறுமையில் அதிகமாகவே பாதிக்கப் பட்டிருந்தார்கள் மக்கள்.
தாலிபான் ஆட்சி எப்படி இருக்கும் என்று யாராவது கேட்டால், இந்தியாவில் மோடி நடத்தும் ஆட்சியை தைரியமாக நாம் எடுத்துக்காட்டாக கூறலாம். ஆப்கானை இதற்கு முன்னர் ஆட்சி செய்த முகமது கனி ஆட்சியை காங்கிரஸ் ஆட்சியுடன் ஒப்பிடலாம்;  2001-க்கு முந்தைய தாலிபான்களின் ஆட்சிக்கு எடுத்துக்காட்டாக முதலமைச்சராக மோடியின் குஜராத் ஆட்சியை கூறலாம். அவ்வளவுதான்.
சங்கிகளும், பல நடுநிலைவாதிகளும் இந்தியாவில் அனைத்து உரிமைகளும் கிடைத்து கொண்டிருப்பதைப் போல ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் காட்டுமிராண்டித்தனத்தை பற்றி நமக்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த ஏழாண்டுகளில் பசுவை கடத்தினார்கள் என்று பொய்யாக குற்றம் சாட்டி நடுரோட்டில் பட்டப் பகலில் நடத்தப்பட்ட எக்கச்சக்கமான கும்பல் படுகொலைகளையும் கும்பல் தாக்குதல்களையும் வட இந்தியாவின் பசு வளைய மாநிலங்கள் அன்றாடம் பார்த்துக் கொண்டிருக்கின்றன. மத நம்பிக்கைக்கு எதிராகப் பேசியவர்களை நடுரோட்டில் கட்டி வைத்து கல்லால் அடித்துக் கொன்றதுதான் 2001-ம் ஆண்டுக்கு முந்தைய தாலிபான் ஆட்சி. இந்தியாவில் நடக்கும் பாஜகவின் பாசிச ஆட்சிக்கும் ஆப்கானிஸ்தானில் ஏற்கெனவே நடைபெற்ற தாலிபான் ஆட்சிக்கும் என்ன வித்தியாசம் ?
சிறுமியை வன்புணர்வு செய்து படுகொலை செய்த கயவனை விடுவிக்கக் கோரி ஊர்வலம் போன இந்திய தாலிபான் கும்பல் தான் பாஜக – ஆர்.எஸ்.எஸ்.
சிறு வயது குழந்தையுடன் சென்று கொண்டிருக்கும் தந்தையை பிடித்து ஜெய் ஸ்ரீ ராம் சொல்லச் சொல்லி அடிக்கிறார்கள், துன்புறுத்துகிறார்கள். புர்கா போடாத பெண்ணை நடுரோட்டில் வைத்து அடித்ததுதான் தாலிபான்களின் முந்தைய வரலாறு.
காஷ்மீரில் 8 வயது சிறுமியை கோயில் கருவறைக்குள்ளேயே வைத்து பாலியல் வன்முறை செய்து கொலை செய்தார்கள் – குற்றவாளிகளுக்கு தேசியக்கொடியோடு ஆதரவு ஊர்வலம் நடத்தினார்கள். குஜராத் கலவரத்தில் 8 மாத கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து சிசுவை கொன்று அப்பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்தார்கள். தாலிபான்கள் தமது ஆட்சிக் காலத்தில் பல இடங்களில் பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள். பெண்களின் கல்வியை மறுத்திருக்கிறார்கள்.
தாலிபான்கள் செய்துவந்த கொடூரங்களையே வேறு வடிவத்தில் இந்துத்துவவாதிகள் அன்றாடம் செய்து வருவதை அன்றாடம் கடந்து போகும்  இந்தியாதான், தாலிபான் பயங்கரவாதிகளின் பிடியில் ஆப்கானிஸ்தான் இருப்பது குறித்து வருத்தப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் வரலாற்றுச் சிறப்புமிக்க புத்தர் சிலையை இடித்த தாலிபான்கள் காட்டுமிராண்டிகள் என்றால், இந்தியாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க பாபர் மசூதியை கரசேவை நடத்தி இடித்த கிரிமினல்கள் மட்டும் எப்படி தேசபக்தர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள் ?
000
ஒரு கும்பல் தாலிபான் அச்சுறுத்தல்களைக் காட்டி, இந்தியாவில் இந்துத்துவ ஆதரவையும், முசுலீம் வெறுப்பையும் வளர்த்துக் கொண்டிருக்க, மற்றொரு கும்பலோ, தாலிபான்களுக்கு புனிதர் பட்டம் சூட்ட முயற்சிக்கிறது.
இந்த முறை ஆப்கானை மீண்டும் கைப்பற்றிய தாலிபான்களின் செய்தித் தொடர்பாளர், “பெண்கள் வேலைக்குச் செல்வதற்கும் படிப்பதற்கும் எவ்வித இடையூறும் செய்ய மாட்டோம். இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு உட்பட்டு பெண்கள் அனைத்து பணிகளிலும் ஈடுபடலாம். அந்நிய நாட்டு நிறுவனங்களையோ பொருட்களையோ தாக்க மாட்டோம் ” என்று கூறியிருக்கிறார்.
எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த ஒருவர் பின்வருமாறு தன் கருத்தை பதிவு செய்கிறார் “தாலிபான் என்பது கெட்ட வார்த்தை அல்ல; தாலிபான் என்றால் மாணவர்கள் என்று பொருள் ” என்கிறார்.
வேறு சிலரோ, “தாலிபான்கள் முதிர்ச்சி அடைந்து விட்டார்கள் ” , “தாலிபான்களை பற்றி பொய்யான தகவல் பரப்பப்படுகிறது, அவர்களை அங்கீகரிக்க வேண்டும்” என்று பேசுகின்றனர்.

படிக்க :
♦ “போ.. போய் உன் பர்காவை போடு” – ஆப்கான் அவலம் !

♦ பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாஜக தான் நம்பர் 1 !

சமீபத்தில் தாலிபான்களிடம் பின்வரும் கேள்வியை ஒரு பெண் செய்தியாளர் எழுப்புகிறார். “அரசாங்க தலைமைப் பதவிக்கு பெண்கள் தெரிவு செய்யப்படுவார்களா?”
இந்தக் கேள்விக்கு விழுந்து விழுந்து சிரித்திருத்திருக்கிறார்கள் தாலிபான்கள். பிறகு சுதாரித்துக்கொண்டு இஸ்லாமிற்கு உட்பட்ட வகையில் அனுமதி அளிக்கப்படும் என்று கூறியிருக்கிறார்கள். இஸ்லாமிக் எமிரேட் ஆப் ஆப்கானிஸ்தான் என்ற பெயர் மாற்றம் செய்துள்ளதாகவும், மத சிறுபான்மையினர், பெண்களுக்கு வரையரறுக்கப்பட்ட சுதந்திரம் கிடைக்கும் என்றும் கூறியிருக்கின்றனர்.
தாலிபான்களிடன் ‘முதிர்ச்சியை’ கண்ட அனைவரும், “முஸ்லிம்கள் இந்தியாவின் பூர்வகுடிகள். அவர்கள் மீதான தாக்குதலை ஒருபோதும் ஏற்கமுடியாது” என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசியதையும், தாலிபான்களின் செய்தித் தொடர்பாளர் பெண்களின் நிலை குறித்துப் பேசியதையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளட்டும். மோகன் பாகவத்தின் இந்தக் கருத்து ‘முதிர்ச்சி’யைக் காட்டுகிறது என்று நம்பினால், தாலிபான்கள் சொல்வதையும் அவர்கள் நம்பட்டும்.
தாலிபான்கள் பெண்களின் கல்விக்கும் சுதந்திரத்திற்கும் எதிரானவர்கள் இல்லை என்று நம்புவதற்கு இதுவரை எந்த அடிப்படையும் இல்லை. இசுலாமிய அடிப்படைவாதத்தை தலையில் வைத்து ஆட்சி செய்யும் கும்பலாகவே தாலிபான் இருந்துவருகிறது.
ஆர்.எஸ்.எஸ். தமது இந்துத்துவ அடிப்படைவாதக் கருத்துக்களை கையில் வைத்துக் கொண்டே, இந்தியாவை ஏகாதிபத்தியங்களின் சுரண்டல் நிலமாக மாற்ற பாஜக மூலம் நடவடிக்கைகள் எடுத்து வருகிறதோ, அதே போலத் தான் தாலிபான்களும். தமது இசுலாமிய அடிப்படைவாதக் கொள்கைகளை வைத்துக் கொண்டே ஏகாதிபத்தியத்தின் சுரண்டலுக்கு ஆப்கானைக் கொடுக்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள்.
தாலிபான்களுடன் சீனா பேச்சுவார்த்தை
இந்தியாவில் எப்படி, ஏகாதிபத்தியச் சுரண்டலுக்கு எதிரான போராட்டங்கள் எழாத வகையில் இந்துத்துவ அடிப்படைவாத சித்தாந்தமான பார்ப்பனியம் மக்களை ஒடுக்கி வைத்திருக்கிறதோ, அதே போலத்தான் ஆப்கானிலும் ஏகாதிபத்தியச் சுரண்டலுக்கு எதிரான மக்கள் போராட்டங்களை முடக்கும் வகையில் தாலிபான்களின் இசுலாமிய அடிப்படைவாதம் முக்கியப் பங்காற்றும்.
சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்டவை நாடுகள் தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று அறிவித்துள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அமெரிக்கா தாலிபான்களுடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை முடித்துவிட்டது.
இப்படி ஏகாதிபத்தியங்களின் சுரண்டலுக்கு எவ்விதத்திலும் தடையாக இருக்க மாட்டோம் என்ற வகையில் அனைத்து நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகே தாலிபான்கள் ஆப்கானில் ஆட்சியைப் பிடித்துள்ளனர். அதன் வெளிப்பாடுதான், சீனாவுடனான சில்க் சாலைக்கான ஒப்புதலும், அந்நிய மூலதனங்களுக்கு பாதுகாப்பு என்ற தாலிபான்களின் அறிவிப்பும்.
சீனா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், ஈரான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ள ஆப்கான் புவியியல் ரீதியாக கேந்திரமான பகுதியாகும். அதனால்தான் ஆப்கானை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பல ஏகாதிபத்தியங்கள் இதற்கு முன்னால் முயற்சித்துள்ளன.
ஆனால் துரதிர்ஸ்டவசமான ஒன்று என்னவெனில், எந்த நாடும் இதுவரை ஆப்கானை தனது முழுமையான கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டு வர iஇதுவரை முடியவில்லை. பிரிட்டன், ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து கடுமையான பின்னடைவை சந்தித்து வெளியேறியிருக்கின்றன.
ஆப்கான் மக்களின் ஜனநாயக வளர்ச்சியினை கருவறுத்த ஏகாதிபத்திய வரலாறு!
ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையில் அமைந்திருக்கும் ஆப்கான், புவியியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தது. 19-ம் நூற்றாண்டில் ஆங்கிலேய – ஆப்கானியப் போர்களுக்குப் பின்னரும் பிரிட்டிஷ் வசமே பெரும்பான்மையான ஆப்கான் பகுதிகள் இருந்தன. 1919-ல் அரசர் `அமனுல்லா கான்’ பதவியேற்ற உடன் சோவியத் ரஷ்யாவுடன் நட்பு பாராட்டினர், இதன் விளைவாகவே ஆப்கான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்து பிரிட்டிஷ் வெளியேறியது.
1921 முதல் 1929 வரையிலான காலகட்டத்தில்,பொருளாதார உட்கட்டமைப்புத் திட்டங்கள், நீர் ஆதாரத் திட்டங்கள், மின் நிலையங்கள், போக்குவரத்து, தொலைத்தொடர்பு என சோவியத் யூனியன் ஆப்கானுக்கு எண்ணற்ற பல உதவிகளைச் செய்தது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் சோவியத் யூனிய்னுக்கு சென்று படித்தனர். காபூலில் இருந்த அறிவியல் மற்றும் கலச்சார மையமானது சோவியத் யூனியனின் அன்புப் பரிசாகும். அந்த மையம் அமெரிக்க ஆதரவு முஜாகிதீன்களால் பின்னர் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அக் காலகட்டம், பழமைவாதத்தின் பிடியில் இருந்து ஜனநாயகத்தை நோக்கி ஆப்கான் பயணித்ததற்கான முதல் படி. அதனை உடைத்தது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம்.
ஆப்கானில் இருந்த பழமைவாதிகளுக்கு ஆதரவு அளித்து அவர்களைத் தூண்டிவிட்டது,  பிரிட்டிஷ் அரசு. 1929-க்குப்பின்னர் பிற்போக்கு சக்திகளின் நெருக்கடியால் அமனுல்லா கான் பதவி விலகினார். இதனால் பாதிக்கப்பட்ட ஆப்கான் – சோவியத் உறவு, சிறிது காலத்திற்குப் பின்னர் மீண்டும் படிப்படியாக வளர்ந்தது.
ஆப்கானிஸ்தானில் பெரும் பொறியிலாளர்கள், புவியிலாளர்களை உருவாக்கிய காபூல் பல்தொழில்நுட்பப் பயிலகம் (பாலிடெக்னிக்) 1960-களில் சோவியத் ரசியாவின் உதவியுடன் கட்டப்பட்டதாகும். 1920-க்கு பின்னால், சோவியத் யூனியனுடனான உறவுகளால் மேம்பட்டிருந்த ஆப்கான் அரசியலின் தொடர்ச்சியாகவே அங்கு மக்கள் ஜனநாயகக் கட்சி உருவானது.
1973-ம் ஆண்டு, ஆப்கானிஸ்தானின் வலதுசாரியினர் மற்றும் அமெரிக்காவால் 40 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்ட ஜாகீர் ஷா ஆட்சிக்கவிழ்ப்பு மூலம் பதவி இறக்கப்பட்டார். அச்சமயத்தில் சமூக ஏகாதிபத்தியமாக மாறியிருந்த ரசியாவின் ஆதரவு பெற்ற பிடிபி கட்சி ஆட்சியில் இருக்கும் போது, கல்வி, மருத்துவம், சுகாதாரம், இருப்பிடம் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தியது. மிகவும் ஒடுக்கப்பட்ட இனங்கள், மத சிறுபான்மையினருக்கு சம உரிமையும் பழமைவாதப்பிடியில் இருந்து மீள பெண்களுக்கு முன்னுரிமையும் அளிக்கப்பட்டது.
1980 மற்றும் 1981 ஆகிய ஆண்டுகளில் ஆப்கானுக்கு சென்ற பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் அங்கு தான் கண்டதை விவரிக்கிறார். ”பெண்கள் கூட்டுறவு தொழிற்சாலைகளில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் முதல்முறையாக தங்களுடைய கௌரவமான வாழ்விற்காக சம்பளத்தைப் பெற்றுக் கொண்டிருந்தார்கள். வயது வந்த ஆண்களும் பெண்களும் ஒரு சேரப் படித்துக் கொண்டிருந்தார்கள். தொழில்முறையாளர்களாக பெண்கள் பலர் அரசின் உச்சபட்ச பொறுப்பிலிருந்தார்கள். குறிப்பாக அக்காலக்கட்டத்தில் கல்வி அமைச்சரே ஒரு பெண்ணாக இருந்தார்.”
“மிகவும் வறிய நிலைமையில் இருக்கும் குடும்பங்கள் கூட மருத்துவரை பார்க்கவும், தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவும் வாய்ப்புகளைப் பெற்றிருந்தார்கள் . நிலச் சீர்திருத்த முறை அங்கேயே தொடங்கியிருந்தது. ஆர்வமுடன் விவசாயிகள் கூட்டுறவு பண்ணைகளில் வேலை செய்யத் தொடங்கியிருந்தார்கள். விலைவாசி கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. உத்திரவாதமான வாழ்க்கையை நோக்கி மக்கள் பயணம் செய்ய தொடங்கியிருந்தார்கள். பொருளாதாரத்திலும் சமூக நீதியிலும் ஆப்கானிஸ்தான் வெகுவாக முன்னேறி இருந்தது. மருத்துவம், சுரங்கம், வேளாண்மை, கல்வியின் என அனைத்திலும் முன்னேறி வந்து இருந்தது”

படிக்க :
♦ மதத்தின் தடைகளைத் தகர்த்து கால்பந்து விளையாட்டில் சாதிக்கும் ஈரான் பெண்கள்

♦ ஈரான் கச்சா எண்ணெய் : அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணிந்த மோடி அரசு !

இந்தக் காலகட்டத்தில் தான், கிராமப்புறங்களில் முஜாஹிதீன்கள் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானின் ஆதரவோடு வளர்ந்து கொண்டிருந்தார்கள். அமெரிக்கா பழமைவாத நிலவுடைமையாளர்களுடன் இணைந்து முஜாகிதீன்களை வளர்த்துக் கொண்டிருந்தது. அமெரிக்காவின் அதிநவீன ஆயுதங்களுடன் முஜாஹிதீன்கள் களத்தில் இருந்தார்கள். 1970-களின் பிற்பகுதியில் முஜாஹிதீன்களின் தாக்குதல்கள் அதிகமாகவே, அதைக் கட்டுப்படுத்துவது என்ற பெயரில் சமூக ஏகாதிபத்தியமாகிப் போயிருந்த சோவியத் ரசியா தனது இராணுவத்தை இறக்கியது. 1977-ல் தொடங்கிய அந்தப் போர், 1989-ல் பல்லாயிரக்கணக்கான துருப்புக்களை இழந்து ரசியா வெளியேறியதோடு முடிவுக்கு வந்தது.
அதை கம்யூனிசத்தின் தோல்வி என்று வல்லரசு நாடுகள் கொண்டாடின. அது அமெரிக்காவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்பட்டது. அப்போது மேற்கத்திய ஊடகங்களில் மிகப்பெரிய போராளியாக பின்லேடன் வர்ணிக்கப்பட்டார். இப்போது போலவே அப்போதும் தனது வேலை முடித்தவுடன் அமெரிக்கா சென்றுவிட்டது.
1992-ம் ஆண்டு சமூக ஏகாதிபத்திய ரசியாவின் ஆசிபெற்ற அதிபர் நச்யிபுல்லா வீழ்த்தப்பட்டார். இதைத் தொடர்ந்து முஜாகிதீன்களில் உள்ள பல்வேறு உட்பிரிவுகளுக்கிடையே போர்கள் நடைபெற உச்சகட்டமாக 1994-ம் ஆண்டு 10,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காபுலில் கொலை செய்யப்பட்டார்கள். இக்காலகட்டத்தில் எழுச்சி பெற்ற தலிபான் அமைப்பு 1996-ல் ஆப்கானில் ஆட்சியைக் கைப்பற்றியது.
தாலிபான் 2.0
1996 முதல் 2001 வரையிலான 5 ஆண்டு கால ஆட்சியில் இருந்த தலிபான்கள், பெண்கள் வேலைக்குச் செல்லவும் பணியில் இருக்கவும் தடை விதித்தனர். மேலும், ஒரு ஆண் பாதுகாவலர் இல்லாமல் வெளியே வரமுடியாத வகையில் அவர்கள் வீடுகளில் அடைக்கப்பட்டனர்.
அடிப்படை ஜனநாயக உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டு, அதற்கெதிராக பேசுபவர்கள் எழுதுபவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர், படுகொலை செய்யப்பட்டனர். சிறுபான்மை மதத்தினரின் உரிமைகள் முற்றிலும் நசுக்கப்பட்டு வழிபாட்டுத்தலங்கள் நொறுக்கப்பட்டன. என்ன, இன்றைய இந்தியாவை நினைவுபடுத்துகிறதா இந்தச் சம்பவங்கள்? பிற்போக்குவாத, மத அடிப்படைவாதக் கும்பல்களின் ஆட்சியில் இவை அனைத்தும் பொதுவான அடிப்படையாகும்.
பொது இடத்தில் மரண தண்டனை மற்றும் கசையடி தண்டனைகள் ஆகியவை நடைமுறையில் இருந்தன. மேற்கத்திய திரைப்படங்கள் மற்றும் புத்தகங்கள் தடை செய்யப்பட்டன. இஸ்லாத்தின் கீழ் விரோதமாக பார்க்கப்பட்ட கலாச்சார கலைப் பொருட்கள் அழிக்கப்பட்டன.
2001 அமெரிக்காவில் நடைபெற்ற இரட்டை கோபுர தாக்குதலில் மூளையாக செயல்பட்டதாக கூறப்பட்ட பின்லேடனை பாதுகாத்தார்கள் என்ற ஒரு காரணத்தைச் சொல்லி, அமெரிக்கா ஆப்கான் மீது ஒரு ஆக்கிரமிப்புப் போரைத் தொடுத்தது.  ஏறத்தாழ இருபது ஆண்டுகள் அந்தப் போர் நீடித்தது.
இந்த காலகட்டத்தில் ஆப்கானில் தனக்கேற்ற பொம்மை அரசாங்கத்தை நிறுவியது. தாலிபான்கள் மட்டுமல்ல பல்வேறு பழங்குடிப் பிரிவைச் சேர்ந்த பல போராளிகள் அமெரிக்காவின் நவீன காலனியாதிக்கத்துக்கு எதிராக தொடர்ச்சியாக போரிட்டனர்.
தங்களால் உருவாக்கப்பட்ட தாலிபான்களை தங்களால் ஒழிக்கவே முடியாது என்ற நிலைமையிலேயே வேறுவழியின்றி ராணுவத்தைத் திரும்பப் பெற்றிருக்கிறது அமெரிக்கா. தங்கள் மூலதனத்திற்கு எவ்வித ஊறும் விளைவிக்கக் கூடாது என்ற நிபந்தனையோடு தான் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அதன் தொடர்ச்சியாகவே இன்று வெளியேறியிருக்கிறது அமெரிக்கா.
ரஷ்யாவை வீழ்த்துவதற்காக பெரும் காட்டுமிராண்டிக் கூட்டத்திடம் ஆப்கான் மக்களை கொண்டு போய் தள்ளி விட்ட வேலையை அமெரிக்கா தான் செய்தது. எந்தக் கும்பலிடமிருந்து ‘கொடுங்கோல்’ ஆட்சியைப் பறித்து ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக வருவதாகச் சொன்னதோ, அந்தக் காட்டுமிராண்டிக் கும்பலிடமே, பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சியை ஒப்படைத்திருக்கிறது.
ஜனநாயகத்தைக் கட்டிக்காப்பதும், ஆப்கான் மக்களை உய்விப்பதும் தான் தமது முதல் கடமை என்று ஆக்கிரமிப்பின் போது பொய்ச் சவடால் அடித்த அமெரிக்கா, தான் உருவாக்கி வளர்த்த தாலிபான் கும்பலிடமே சரணடைந்து, “ஆப்கானை கட்டமைப்பது எங்கள் வேலை அல்ல” என்ற உண்மையை வேறு வழியே இல்லாமல் ஒத்துக் கொள்ள வேண்டிய சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது.
தாலிபான்களைப் பொறுத்தவரையில் அந்நிய நாட்டினர் யாரும் பயப்பட வேண்டாம் என மீண்டும் மீண்டும் வலியுறுத்தி கூறுகின்றனர். இந்தியா தாம் மேற்கொண்ட கட்டுமானப் பணிகளை தொடரலாம் என்று அறிவித்துள்ளனர். அந்நிய நாட்டு மக்களுக்கு தங்கள் மூலம் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.
சவுதியை போன்று பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களுக்கு உட்பட்டு மத அடிப்படைவாதத்தை மேற்கொள்வதற்கு தலிபான்கள் முடிவு செய்திருப்பதைத்தான் தாலிபான்கள் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளும் அவர்கள் தற்போது வெளியிடும் அறிவிப்புகளும் காட்டுகின்றன.

படிக்க :
♦ ஆர்.எஸ்.எஸ். கூறும் இந்து ராஷ்டிரத்தின் இறுதி நோக்கம்தான் என்ன ?

♦ அவசர நிலை : ஆர்.எஸ்.எஸ். அன்றும் இன்றும்

பன்னாட்டு ஏகபோக மூலதனத்தை அனுமதிக்காத பட்சத்தில் மீண்டும் ஏகாதிபத்தியங்களின் தூண்டுதலில் உள்நாட்டுப் போர் ஏற்படும் வாய்ப்பு இருப்பதையும் தாலிபான்கள் அறிவர். கடவுளைக் காப்பாற்ற வேண்டும் என்றாலும் கூட கார்ப்பரேட் ஆசி இல்லாமல் நடக்காது என்பதை அவர்களுக்கு பல்வேறு சுற்றுகளின் மூலம் பல நாட்டு அனுபவங்கள் கற்றுக் கொடுக்கின்றன.
ரசியா, அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான், இந்தியா என அன்னிய வல்லூறுகளின் பசிக்கு மீண்டும் மீண்டும் ஆப்கானை இரையாக்குவதற்கு தயாராகியிருக்கிறது தாலிபான் கும்பல். இதுதான் உண்மையில் தாலிபான்கள் பெற்ற முதிர்ச்சி.
1990-களின் நடுப்பகுதி வரையில் ‘சுதேசி’ எனப் பேசித் திரிந்த ஆர்.எஸ்.எஸ். / சங்க பரிவாரக் கும்பல், மறுகாலனியாக்கச் சூழலுக்கு ஏற்றவகையில் தனது சுதேசி வேடத்தை களைந்தெறிந்துவிட்டு, வாஜ்பாய் ஆட்சியில் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் இந்தியாவை விருந்து வைத்தது. பிரிட்டிஷ் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு ஏற்றவாறு தம்மை தகவமைத்துக் கொண்ட இந்தக் கும்பல், மறுகாலனியாக்கக் காலகட்டத்தில் ஏகாதிபத்தியங்களுக்குத் தகுந்தவாறு தம்மை தகவமைத்துக் கொண்டதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
இதைப் போலத்தான், 1996-2001 காலகட்டத்தில் மத அடிப்படைவாதத்தையும் அபின் பொருளாதாரத்தையுமே நம்பியிருந்த தாலிபான் கும்பல், இப்போது மறுகாலனியாக்கத்துக்கு தகுந்தவாறு தம்மை தகவமைத்துக் கொண்டது.
அமெரிக்காவின் படைகள் இருந்த வரையில், ஏகாதிபத்தியங்களுக்கு தொண்டூழியம் செய்து கொண்டிருந்த முன்னாள் பிரதமர் முகமது கனி, தால்பான்கள் முற்றுகையிட்டதும் ஒரு ஹெலிகாப்டர் முழுவதும் பணத்தை எடுத்துக் கொண்டு தஜிகிஸ்தான் வழியாக தப்பி ஓடிவிட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதுதான் 20 ஆண்டுகால அமெரிக்க பொம்மை ஆட்சியின் லட்சணம்.
மக்கள் மீதான பொருளாதாரச் சுரண்டல் என்ற வகையில் தாலிபானுக்கும் முகமது கனிக்கும் வித்தியாசம் ஒருபோதும் இல்லை. ஒரே வித்தியாசம் மத அடிப்படைவாதத்தை தாலிபான் கும்பல் உயர்த்திப் பிடிப்பதுதான்.
சுருக்கமாகச் சொன்னால், இந்தியாவில் கார்ப்பரேட் – காவி பாசிச நடவடிக்கைகளை மோடி தீவிரமாக அமல்படுத்தி கொண்டிருப்பது போல, ஆப்கானிஸ்தானில் கார்ப்பரேட் – இஸ்லாமிய அடிப்படைவாத சர்வாதிகாரத்தை தாலிபான்கள் தீவிரமாக அமல்படுத்துவதை விரைவில் எதிர்பார்க்கலாம். அதைத் தான் அவர்களது சமீபத்திய அறிவிப்புகள் தெரிவிக்கின்றன.
தங்களது மூலதனத்திற்கு பாதிப்பில்லாத வரையில் எவ்வளவு பிற்போக்குத் தனத்தையும் ஆதரிக்க தயங்க மாட்டார்கள் ஏகாதிபத்தியவாதிகள். குஜராத்தின் நரவேட்டை நாயகனை தனது நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுத்த அமெரிக்கா, அதே மோடி பிரதமராவதற்கான வாய்ப்பிருப்பது தெரிந்ததும், புனிதர் பட்டம் கொடுத்து தனது நாட்டிற்குள் அனுமதித்துக் கொண்டதல்லவா?
மூலதனத்துக்குச் சேவை செய்யும் பட்சத்தில் இனி தாலிபான்களுக்கும் அந்தப் புனிதர் பட்டத்தைக் கொடுக்க உலக முதலாளித்துவம் தயாராகிவிட்டது !!

மருது
செய்தி ஆதாரம் :
People’s World

சீர்காழியில் தோழர் அம்பிகாபதி நினைவேந்தல் கூட்டம் || மக்கள் அதிகாரம்

தோழர் ந. அம்பிகாபதி அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி || அனைவரும் வருக !

க்கள் அதிகாரம் சீர்காழி பகுதித் தோழர் அம்பிகாபதி, கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதியன்று (27/06/2021) இயற்கை எய்தினார். 37 ஆண்டுகளுக்கும் மேலாக நக்சல்பாரி புரட்சியாளராக இறுதிவரை ஆளும் வர்க்கத்துக்கும் வர்க்க எதிரிகளுக்கும் எதிராக மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையை உயர்த்திப் பிடித்தவர் தோழர் அம்பிகாபதி.

சீர்காழி பகுதி மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்ட அமைப்பாளராகவும், பின்னர் விவசாயிகள் விடுதலை முன்னணியின் மாவட்ட அமைப்பாளராகவும் பல ஆண்டுகள் இருந்து வந்தார். விவசாயிகள் விடுதலை முன்னணி நடத்திய பல்வேறு போராட்டங்களில் தலைமையேற்று நடத்தியவர். இறால் பண்ணைக்கு எதிரான போராட்டத்தினை நடத்தி ஆளும் வர்க்கத்தின் நெருக்கடிகளையும் போலீசின் அடக்குமுறையையும் எதிர்த்த போராட்டத்தில் தோழரின் பங்கு அளப்பரியது.

அவரது புரட்சிகர வாழ்வை அனைவரும் வரித்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக அவரது நினைவேந்தல் நிகழ்ச்சியை சீர்காழி மக்கள் அதிகாரம் ஏற்பாடு செய்துள்ளது. அனைத்து தோழர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நாள் – நேரம் : 22.08.2021, ஞாயிறு, மாலை 4:30 மணி
இடம் : பத்மாவதி திருமண மண்டபம், பழைய பேருந்து நிலையம், சீர்காழி

தலைமை : தோழர். வி.ஸ்டாலின்
வரவேற்புரை : தோழர். முருகானந்தம், ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம், கடலூர் மண்டலம்

நினைவேந்தல் உரை :

திரு எம்.பன்னீர் செல்வம் M.A., B.L., சட்ட மன்ற உறுப்பினர், சீர்காழி
தோழர் M.செல்லப்பன், CPI ஒன்றிய செயலாளர், சீர்காழி
தோழர் K.அசோகன் CPIM ஒன்றிய செயலாளர், சீர்காழி
தோழர் N.குணசேகரன் மாவட்ட செயலாளர், CPI.ML (விடுதலை)
திரு O.M.A. முசாஹுதீன், மாநில பொதுச்செயலாளர், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம்
வழக்கறிஞர் வேலு.குபேந்திரன் மண்டல செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தோழர் கோ.நீதிவளவன் மாநில துணை செயலாளர், வி.சி.கட்சி
தோழர் ப.கோபாலகிருஷ்ணன் நீதிபதி ஓய்வு, சீர்காழி
திரு சாமி காமராஜ், நிறுவனர், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம், சீர்காழி தோழர் பெரியய்யா தலைவர் புரட்சியாளர் அம்பேத்கர் அரசு பணியாளர் அமைப்பு தோழர் இராமலிங்கம் ஆசிரியர் (ஓய்வு)
தோழர் தெ.மகேசு மாவட்ட தலைவர், திராவிடர் விடுதலை கழகம்,
தோழர் முத்து.அன்பழகன் மாவட்ட செயலாளர், மா.பெ.பொ.க. சீர்காழி
Er. இரா.கல்யாணசுந்தரம் M.E., P.hD.,
பேராசிரியர் முரளிதரன் மாவட்ட தலைவர், தமிழர் தேசிய முன்னனி
தோழர் க.மா.இரணியன் மாவட்ட செயலாளர், தமிழ் தேச மக்கள் முன்னணி
திரு ந. பரமசிவம் B.A., சென்னை வழக்கறிஞர்,
S.P. நெடுஞ்செழியன், M.A., B.L.,
திரு R. தங்க வேல், முதல்வர், ச.மு.இ.மே.நி.பள்ளி, சீர்காழி
தோழர் ஜீவா, உடையூர்
தோழர் திலிபன், சமூக செயற்பாட்டாளர்
திரு சிவக்குமார், தி.மு.க, சீர்காழி
தோழர் த.செயராமன், நெறியாளர், தமிழ்மண் தன்னுரிமை இயக்கம்
டாக்டர் P.முத்துக்குமார், M.D., குமார் மருத்துவமனை, சீர்காழி
திரு. இமயவரம்பன், ஒருங்கிணைப்பாளர், காவேரி படுகை பாதுகாப்பு இயக்கம் தோழர் சம்பூகன், கும்பகோணம்
தோழர் சுப்பு. மகேசு, தமிழக அமைப்பாளர், தமிழர் உரிமை இயக்கம்
தோழர் ம. குணசேகரன், மாவட்ட தலைவர், திராவிடர் கழகம்
தோழர் ம. சந்திரசேகரன், சீர்காழி ஒன்றிய செயலாளர், திராவிடர் கழகம்
தோழர் கோ. நடராஜன், தமிழ்த் தேசிய பேரியக்கம்
தோழர் பரசுராமன், மாவட்ட தலைவர், த.பெ.தி.க
தோழர் அ. நேதாஜி, ஊராட்சி மன்ற தலைவர், புளியந்துறை
தோழர் விடுதலையாளன், மாவட்ட செயலாளர், தமிழர் உரிமை இயக்கம்
தோழர் குணசேகரன், இந்திய கம்யுனிஸ்ட் கட்சி (மா.லெ)
தோழர் கென்னடி, மக்கள் போராட்ட மையம்
தோழர் இராமலிங்கம், மக்கள் அதிகாரம், கடலூர்
தோழர் செந்தில், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்

தோழர் மருது, செய்தி தொடர்பாளர்
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு – புதுவை

தோழர் அம்பிகாபதி நினைவை நெஞ்சில் ஏந்துவோம் ! அனைவரும் வாரீர் !!


இவண்
தோழர் ந.அம்பிகாபதி நினைவேந்தல் குழு – சீர்காழி.
மக்கள் அதிகாரம்,
கடலூர் மண்டலம்
செல்: 9791286994

வெளிப்படையான அரசு அல்ல – வெட்கக் கேடான மோடி அரசு !!

ரு அரசாங்கம் தன் சொந்த மக்களிடம் எவ்வளவு வெளிப்படைத் தன்மையுடன் நடந்துகொள்கிறதோ, அந்த அளவிற்கு, அந்த நாட்டின் ஜனநாயகம் பாதிப்பிற்கு உள்ளாகாமல் இருக்கும்.

வெளிப்படைத்தன்மை, அதிகமான ஆளுமை போன்ற வாயில் வடைசுடும் சமாச்சாரங்களை தேர்தல் முழக்கங்களாகக் கொண்டு ஆட்சியை அமைத்த மோடி அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மையின் யோக்கியதை என்ன என்பதை சமீபத்தில் வெளியான பல்வேறு தகவல்கள் அம்பலப்படுத்துகின்றன.

பொதுவாக, நீதிமன்றத்தில் ஒரு குற்றவாளி தான் செய்த குற்றத்திலிருந்து தப்பிக்க, நடந்த குற்றத்தில் தனக்கு எந்தவிதத்திலும் பங்குமில்லை என்று பொய் சாட்சிகள் மூலம் நிரூபித்து வழக்கில் இருந்து தப்பிக்க முயற்சிப்பான். ஆனால் இங்கு மோடியரசோ ஒரு படி மேலேபோய், குற்றமே நடக்கவில்லை என்று நிறுவ முயல்கிறது.

குற்றமே நடக்கவில்லை என்று கூறுவது, எதிர்க்கட்சிகள் கேள்விகேட்டால் தகவல் இல்லை என்று கூறுவது என்பதையே தனது நடைமுறையாகக் கொண்டிருக்கிறது மோடி அரசு.

படிக்க :
♦ வெளிப்படைத் தன்மையாக இருங்கள் மோடி || முன்னாள் அரசுச் செயலர் கடிதம்
♦ உலக அளவில் கொரோனாவை மோசமாகக் கையாண்ட தலைவர்களில் மோடி முதலிடம் !

ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் யாரும் இறக்கவில்லை

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மோடியரசு முற்று முழுதும் தோல்வியடைந்தது ஊர் அறிந்ததே. கொரோனா முதல் அலையின்போது, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகையையொட்டி குஜராத்தில் கூட்டம் நடத்தியது, மத்தியபிரதேசத்தில் குதிரை பேரம் மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு நடத்துவதற்காக கொரோனாவுக்கான பொது முடக்கத்தை தள்ளி வைத்தது என கொரோனா பரவலுக்கு முக்கிய காரணமாகவும் இருந்தது மோடி அரசுதான்.

கொரோனா முதல் அலையில் புலம்பெயர் தொழிலாளர்களின் அவலத்தையும், மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் மருத்துவமனை வாசலிலும், வீதியிலும் காத்துக்கிடந்த நோயாளிகளையும் நாம் பார்த்தோம். நாடு முழுவத்கும் கொரோனா மரணங்கள் கோரத் தாண்டவம் ஆடின.

கொரோனா இரண்டாம் அலை துவங்கி விட்டது என வல்லுனர்கள் எச்சரித்த சமயத்திலும், தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களையும், உத்தரப் பிரதேசத்தில் கும்பமேளா கூட்டத்தையும் அனுமதித்து இரண்டாம் அலை பெரும் அபாயகரமானதாக உருவெடுக்க மோடி அரசு துணை நின்றது.

முதல் அலையை விட அபாயகரமானதாக, இரண்டாம் அலையின் கோரத்தாண்டவம் இருந்தது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் நாடே திண்டாடியதையும், சுடுகாடுகளில் விடிய விடிய பிணங்கள் எரிந்ததையும், கங்கையில் கொரோனா பிணங்கள் மிதந்ததையும் உலகமே காறி உமிழ்ந்தது. “தி ஆஸ்த்திரேலியன்தொடங்கி வாஷிங்டன் போஸ்ட்வரை அனைத்து ஊடகங்களும் மோடியை கொரோனா ஒழிப்பில் தோல்வியைத் தழுவியவர் என அம்பலப்படுத்தியது. உலக அரங்கில் இந்தியாவை தலைகுனியச் செய்திருக்கிறார் மோடி.

ஆனாலும், ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவர் கூட இந்தியாவில் இறக்கவில்லை என நாடாளுமன்றத்தில் கூறியிருக்கிறது இந்த மானங்கெட்ட மோடி அரசு. ஒன்றிய அரசின், குடும்ப மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் பாரதி பிரவின் பவார் ராஜ்யசாபாவில் இதனை தெரிவித்தார்.

உலகமே காறி உமிழ்ந்த ஒரு நிகழ்வை ஒரு முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயன்றிருக்கிறார் மோடி. இதை விட கல்லூளிமங்கனாக ஒரு பிரதமர் இருக்க முடியுமா ?

விவசாயிகள் இறப்பா? அப்படி ஒன்று நடக்கவேயில்லை.

மோடியரசு கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக கொண்டுவந்த மூன்று வேளாண் சட்ட திருத்த மசோதாக்களை எதிர்த்து, தலைநகர் டெல்லியில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் விவசாயிகள் போராடி வருகின்றனர். தொடர்ந்து பத்து மாதங்களுக்கும் மேலாக இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதையடுத்து விவசாய சங்களின் கூட்டமைப்பான சம்யுக்த் கிசான் கடந்த மார்ச் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், இந்த போராட்டத்தில் இதுவரை 537 விவசாயிகள் உயிர் நீத்துள்ளனர், என்று கூறியதோடு, உயிர் நீத்த விவசாயிகளின் பெயர்ப் பட்டியலையும், அதே செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார்கள்.

ஆனால், போராட்டத்தில் உயிர்துறந்த விவசாயிசள் பற்றிய எந்தத் தகவலும் எங்களிடம் இல்லை என்று வேளாண்மை மற்றும் விவசாய நல்வாழ்வுத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தாமோர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதெல்லாம் பச்சைப் பொய் அல்லவா ?

மோடி கருப்பு பணத்தை ஒழிக்க வந்தவரா ?  ஒளிக்க வந்தவரா ?

8 நவம்பர், 2016 ஆம் ஆண்டு பிரதமர் மோடி, இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில் தோன்றி 500, 1000 தாள்கள் இனி செல்லாது என அறிவித்தார். அத்தோடு வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப் பட்டிருக்கும் கருப்பு பணத்தை ஒழிக்க கருப்பு பண ஒழிப்புச் சட்டம் 2015′ என்ற சட்டத்தையும் முன் தேதியிட்டு அமலுக்கு கொண்டுவந்தார். இதன்படி வங்கித் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்காக அமெரிக்கா உட்பட பல நாடுகளுடன் ஒப்பந்தமும் போடப்பட்டது.

ஆனால் தற்போது (2021), கடந்த பத்து வருடங்களில், சுவிஸ் வங்கி உட்பட வெளிநாட்டு வங்கிகளில், பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணம் பற்றிய எந்தத்தகவலும் தங்கள் அரசிடம் இல்லை என்கிறார், மத்திய நிதித்துறை அமைச்சர் இணை பங்கஜ் சவுத்ரி.

இந்திய அரசாங்கம், சுவிட்சர்லாந்து நாட்டுடன் போடப்பட்ட தகவல் பகிர்வு ஒப்பந்தம் இன்றும் நடைமுறையில் இருப்பதாக 2019-ல் கூறியது. போக சுவிட்சர்லாந்தின் மத்திய வங்கி, இந்தியாவை சேர்ந்த தனிநபர் மற்றும் குழுமங்கள் தங்கள் வங்கியில் 20,700₹ கோடி ரூபாய் வைப்பு வைத்துள்ளதாக 2020-ஆம் தெரிவித்தது. இத்தனை தகவல்கள் இருந்தும், வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கருப்பு பணம் பற்றிய தகவல் மட்டும் நம் அரசாங்கத்திடம் இல்லை.

இப்போது சொல்லுங்கள் கருப்புப் பண பாதுகாவலன் யார் ?

மலக்குழியில் மரணமடைந்த 340 பேர் 4 மாதத்தில் உயிர்பெற்று விட்டார்களா..?

கடந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் ஒரு மலக்குழி மரணம் கூட நிகழவில்லை என்று ஒன்றிய அரசு அளித்துள்ள பதில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சாக்கடைகள், கழிவுநீர்த் தொட்டிகள், மனிதக்கழிவுகளை சுத்தம் செய்யும் போது உயிரிழந்த வர்களின் விவரங்கள் குறித்து, நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, எல். ஹனுமந்தய்யா ஆகியோர் எழுப்பிய கேள்விக்கு, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் ராமதாஸ் அத்வாலே பதில் ஒன்றை அளித்துள்ளார். அதில், “கடந்த 5 ஆண்டுகளில் இது போன்ற இறப்புகள் ஒன்றுகூட பதிவாகவில்லை” என்று கூறி  சர்ச்சையை ஏற்படுத்தினார்.

கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போதும், இதே கேள்வி நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டு இருந்தது. அப்போது, “கடந்த ஐந்து ஆண்டுகளில், சாக்கடைகள், கழிவுநீர்த் தொட்டிகள், மனிதக் கழிவுகளை சுத்தம் செய்யும் பணிகளின்போது 19 மாநிலங்களில் மட்டும் 340 பேர் உயிரிழந்துள்ளனர்” என்று ஒன்றிய அரசு புள்ளிவிவரம் அளித்திருந்தது. ஆனால், மழைக்காலக் கூட்டத்தொடரில் எழுப்பப்பட்ட அதே கேள்விக்கு, ஒரு மரணம் கூட நிகழவில்லை என மோடி அரசு பதிலளித்துள்ளது. நான்கு மாதத்திற்கு உள்ளாகவேஅதுவும் நாடாளுமன்றத்திலேயே புள்ளிவிவர மோசடியை மோடி அரசு அரங்கேற்றியது.

மருத்துவமனைகளில் மொத்தம் உள்ள படுக்கை வசதி எத்தனை?

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதி ப்ரவின் பவார், “மருத்துவமனைகளில் எத்தனை படுக்கை வசதி உள்ளது என்பது பற்றிய தகவல் எங்கள் அரசிடம் இல்லை. ஏனென்றால், சுகாதாரத்துறையானது மாநில அதிகாரங்களின் கீழ் வருவதால், எங்களிடம் இது பற்றிய தகவல் இல்லை, என்றார். இதன் பொருள் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அந்தந்த மாநில அரசாங்களுக்கே அதிக அளவு பொருப்பு உள்ளது, என்பதன்றி வேறில்லை.

எத்தனை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் இதுவரை இழுத்து மூடப்பட்டுள்ள?

பொதுமுடக்கம் காரணமாக இதுவரை எத்தனை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் இழுத்து மூடப்பட்டுள்ளன? என்ற எதிர்கட்சி உறுப்பினர்களின் கேள்விக்கு, இந்த அரசு நேரடியாக இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.

மாறாக சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்களை ஊக்கவிக்க ரிசர்வ் வங்கி மூலம் தாங்கள் அளித்த வங்கிகடனையும், கடன் தொகைக்கான கால நீட்டிப்பையுமே பெருமிதத்தோடு கூறினார்கள்.

காற்று மாசுபாட்டினால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை எத்தனை?

சுற்றுச்சூழல் பாதிப்பு பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள இந்த நேரத்தில், காற்று மாசுபாடு காரணமாக உயிர் இழந்தவர்கள் பற்றிய கேள்வியை, பாராளுமன்றத்தில் எழுப்பிய போது,  “காற்று மாசுபாட்டிற்கும், மனிதர்களின் இறப்பிற்கும் அல்லது நோய்க்குமான நேரடி தொடர்பை நிறுவுவதற்கான உறுதியான தரவுகள் எதுவும் எங்களிடம் இல்லைஎன்று சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே, பதிலளித்தார்.

ஆனால், 2019-ல் மட்டும் இந்தியாவில் 17-லட்சம் மக்கள் காற்று மாசுபாட்டினால் உயிரிழந்துள்ளனர் என்றும் இது ஒட்டு மொத்த மனித இறப்பில் 18% என்றும், ‘இந்திய அரசின்: உலகளாவிய நோய் தொற்றுக்கான ஆய்வறிக்கை 2019′, (‘States of India: The Global Burden of Disease Study 2019’) தெரிவித்துள்ளது.

கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக ஏற்பட்ட வேலையிழப்புக்கள் எத்தனை?

கோவிட் -19 கொரோனா இரண்டாவது அலையின் போது வேலை இழந்த சாதாரண அமைப்பு சாரா அல்லது ஒப்பந்த ஊழியர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை ஒரு சில எம்.பி.க்கள் அரசிடம் கேட்டனர், எனினும், இது சார்ந்த எந்த விவரங்களையும் அரசு இதுவரை வழங்கவில்லை. அதற்கு பதிலாக, வேலைவாய்ப்பை அதிகரிக்க அரசாங்கம் மேற்கொண்ட பல முயற்சிகளை அது பட்டியலிட்டு தப்பித்தது.

படிக்க :
♦ ஆக்சிஜன் பற்றாக்குறையால் மரணம் இல்லை : மக்களை இழிவுபடுத்தும் மோடி அரசு !
♦ ஒரே நாளில் அதிகளவு தடுப்பூசி : ‘உலக சாதனை’ படைத்ததா மோடி அரசு?

இவை மட்டுமல்லாமல், கொரோனா முதல் அலையின்போது அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக பல புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்தும் கிடைக்கும் வாகனங்களில் ஏறியும் தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல முயன்றனர். வெயிலின் தாக்கத்தால் சாலையில் மயங்கி விழுந்தும், ரயில் தண்டவாளத்தில் படுத்துறங்கும் போதும், அரசு ஏற்பாடு செய்த ரயிலில் பயணம் செய்யும் போது உணவு, தண்ணீர் என ஏதும் இல்லாததாலும் பலர் இறந்தனர். ஆனால் அப்படி இறந்தவர்கள் பற்றிய எந்த தகவலும் தங்களிடம் இல்லை என்கிறது அரசு.

அதேபோல் கொரோனாவால் உயிரிழந்த சுகாதார ஊழியர்கள்(மருத்துவர்கள், செவிலியர்கள், உதவிப்பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் முதலியோர்) பற்றிய தகவலும் இந்த அரசிடம் இல்லையாம்.

கொரோனா பேரிடரின் போது தங்களின் உயிரைப்பயணம் வைத்து பணியாற்றியவர்கள் இவர்கள். இத்தகையவர்கள் பற்றிய தகவல் இல்லாததால், இவர்களுக்கு எந்த நிவாரணமும் இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் இந்திய மருத்துவ கழகத்தின்(IMA) கண்டனங்களுக்கு உள்ளானது மோடி அரசு !

நடைபெறும் மதவாத பாசிச ஆட்சியில், ஆர்.எஸ்.எஸ்இன் கார்ப்பரேட் சேவையும், மதவாத அரசியலுமே மைய இலக்கு. அதனை நிறைவேற்றும் போக்கில் புள்ளிவிவரங்களை வெளியிடுவது தம்மை முழுமையாக அம்பலப்படுத்திவிடும் என்பதை உணர்ந்துள்ள மோடி அரசிடம் வெளிப்படைத் தன்மையை எதிர்பார்ப்பது ’நியாயமா’ ?

மூர்த்தி
செய்தி ஆதாரம் : பிசினஸ் இன்சைடர்

“போ.. போய் உன் பர்காவை போடு” – ஆப்கான் அவலம் !

ஞாயிறன்று காலையில், ஒரு வகுப்பிற்காக பல்கலைக்கழகம் நோக்கி நான் சென்று கொண்டிருந்தேன். பெண்கள் தங்கும் விடுதியில் இருந்து பெண்கள் கூட்டம் ஒன்று வெளியேறி ஓடிவந்தது. என்ன ஆயிற்று என நான் கேட்டேன். அதில் ஒரு பெண், தாலிபான்கள் காபுல் நகருக்கு வந்து விட்டதாகவும் புர்கா அணியாத பெண்களை அவர்கள் அடிப்பார்கள் என்றும் கூறி போலீசு அவர்கள் அனைவரையும் தங்கும் விடுதியில் இருந்து வெளியேற்றியதாகக் கூறினார்.

நாங்கள் அனைவரும் வீட்டிற்குச் செல்ல விரும்பினோம். ஆனால் நாங்கள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த இயலாது. ஓட்டுனர்கள் தங்களது வாகனங்களில் எங்களை ஏற்றிக் கொள்ள மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் ஒரு பெண்ணை வாகனத்தில் ஏற்றிச் செல்வதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை. தங்கும் விடுதியில் இருந்து வந்த பெண்களுக்கு இது இன்னும் மோசமான நிலைமை. அவர்கள் அனைவரும் காபுல் நகருக்கு வெளியில் இருந்து வந்து அங்கு தங்கியிருப்பவர்கள். எங்கே செல்வது என்ற அச்சத்திலும் குழப்பத்திலும் அவர்கள் ஆழ்ந்திருந்தனர்.

இதற்கிடையே, சுற்றி நின்று கொண்டிருந்த ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுமிகளை கிண்டல் செய்து கொண்டு, எங்களது மோசமான நிலைமையை எள்ளி நகையாடினர். ஒருவன், “ போ.. போய் உன் பர்காவை போடு” என்றான். மற்றொருவனோ, “வீதிகளில் சுற்றித் திரிவதற்கு உங்களுக்கான கடைசி நாள் இது” என்றான். மற்றொருவனோ, “ஒருநாள் உங்களில் நால்வரை நான் திருமணம் செய்து கொள்வேன்” என்றான்.

படிக்க :
♦ தாலிபான்களிடம் ஆப்கானை தாரைவார்த்த அமெரிக்கா !
♦ ஆப்கானிலிருந்து அமெரிக்கப் படைகள் விலகல் – பின்னணி என்ன ?

அரசாங்க அலுவலகங்கள் மூடிய நிலையில், எனது சகோதரி வீட்டை அடைய நகரங்களைத் தாண்டி பல கிலோமீட்டர் ஓடினாள். “எனது மக்களுக்கும் சமூகத்துக்கும் நான்காண்டுகள் சேவை புரிய உதவிய கணிணியை பெரும் துயரத்தோடு முடக்கினேன். கண்ணீரோடு எனது பணி மேஜையை விட்டு வெளியேறி எனது உடன் பணிபுரிவோரிடமிருந்து விடை பெற்றேன். எனது வேலையின் கடைசி நாள் இது என்பது எனக்குத் தெரியும்” என்று என் சகோதரி கூறினாள்.

ஆப்கானிஸ்தானில் உள்ள சிறந்த இரண்டு பல்கலைக்கழகங்களில் இருந்து ஒரே நேரத்தில் இரண்டு பட்டப் படிப்புகளை கிட்டத்தட்ட முடித்திருந்தேன். இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ஆப்கானிஸ்தானின் அமெரிக்கப் பல்கலைக்கழகம் மற்றும் காபுல் பல்கலைக் கழகத்தில் இருந்து நான் பட்டம் பெற்றிருக்க வேண்டியது; ஆனால் அனைத்தும் என் கண் முன்னேயே இன்று காலையில் மறைந்தது.

இன்று நான் இத்தகைய மனுஷியாக இருப்பதற்காக பல இரவுகளும் பகல்களும் உழைத்திருக்கிறேன். இன்று காலை வீட்டிற்கு வந்தடைந்ததும் நானும் எனது சகோதரியும் செய்த முதல் காரியம், எங்களது அடையாள அட்டைகள், பட்டயங்கள், சான்றிதழ்கள் அனைத்தையும் மறைத்து வைத்ததுதான். இது பெருமளவில் பாதித்தது. நாங்கள் பெருமைப்படத்தக்க விசயங்களை நாங்கள் ஏன் மறைக்க வேண்டும்? தற்போதைய ஆப்கானிஸ்தானில், நாங்கள் மக்களாக அறியப்படுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டோம்.

ஒரு பெண்ணாக, ஆண்களால் துவக்கி வைக்கப்பட்ட இந்த அரசியல் போரில் பாதிக்கப்பட்டவளாக நான் உணர்கிறேன். நான் இனி சத்தமாக சிரிக்க முடியாது. எனக்கு விருப்பமான பாடல்களை இனி கேட்க முடியாது. எனது நண்பர்களை எனது விருப்பமான தேநீர்க் கடைகளில் சந்திக்க முடியாது. நான் எனது விருப்பமான மஞ்சள் நிற உடையையும் பின்க் நிற உதட்டுச் சாயத்தையும் அணிய முடியாது. எனது வேலைக்கு இனி நான் போகவோ, பல ஆண்டுகள் உழைப்பைச் செலுத்தி சாதிக்க எண்ணிய எனது பல்கலைக்கழக பட்டப் படிப்பையோ நான் முடிக்க முடியாது.

எனது நகங்களை சீர்படுத்த நான் மிகவும் விருப்பப்படுவேன். வீட்டிற்கு நான் செல்லும் வழியில், நகத்தைச் சீர்படுத்த நான் வழக்கமாகச் செல்லும் அழகு நிலையத்தைப் பார்த்தேன். அழகான பெண்களின் படங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தக் கடையின் முன் பக்கம், ஒரே இரவில் வெள்ளையடிக்கப்பட்டிருந்தது.

பெண்களின் பயம் நிறைந்த முகத்தையும், பெண்கள் படிப்பது, பணிக்குச் செல்வது, சுதந்திரமாக இருப்பதை விரும்பாத பெண்களை வெறுக்கின்ற ஆண்களின் முகத்தையும் தான் என்னைச் சுற்றி பார்க்க முடிந்தது. பெண்களை கிண்டல் செய்து கொண்டு சந்தோசமாக இருப்பவர்கள் தான் என்னை மிகவும் அதிகமாக பாதித்தனர். எங்களோடு துணை நிற்பதற்குப் பதிலாக அவர்கள் தாலிபான்களின் பக்கம் நின்றனர். தாலிபான்களுக்கு மேலதிக அதிகாரத்தையும் வழங்கினர்.

தற்போது பெற்றுள்ள குறைந்த சுதந்திரத்திற்காக, ஆஃப்கான் பெண்கள் பல தியாகத்தைச் செய்திருக்கின்றனர். ஒரு அனாதையாக நான், கல்வியைப் பெறுவதற்கு கார்பெட்டுகள் நெய்தேன். பொருளாதாரரீதியாக பல்வேறு சவால்களை எதிர்கொண்டேன். ஆனாலும் எனது எதிர்காலத்திற்கு நிறைய திட்டங்களை வைத்திருந்தேன். அனைத்தும் இவ்வாறு வந்து முடியும் என நான் எதிர்பார்க்கவில்லை.

எனது 24 ஆண்டுகால வாழ்க்கையில் நான் சாதித்த அனைத்தையும் நான் எரிக்க வேண்டும்போலத் தெரிகிறது. அமெரிக்கப் பல்கலைக்கழகத்தின் அடையாள அட்டையையோ, அல்லது விருதுகளையோ வைத்திருப்பது இப்போது ஆபத்தானது. இதை நாங்கள் வைத்துக் கொண்டாலும், அதனை எங்களால் பயன்படுத்த முடியாது. எங்களுக்கு இனி ஆப்கானிஸ்தானில் வேலை கிடையாது.

ஒன்றன் பின் ஒன்றாக மாநிலங்கள் வீழத் துவங்கியதும் எனது அழகான கணவுகள் குறித்து எண்ணிக் கொண்டிருந்தேன். தாலிபானின் முந்தைய ஆட்சிக் காலகட்டத்தையும் அவர்கள் பெண்களை நடத்திய விதத்தையும் குறித்து எனது தாயார் முன்பு கூறியதை எண்ணிப் பார்த்து, நானும் எனது சகோதரிகளும் அனைத்து இரவும் தூங்க முடியவில்லை.

எங்களது அனைத்து அடிப்படை உரிமைகளையும் மீண்டும் இழந்து, இருபது ஆண்டுகளுக்கு முந்தைய நிலைக்குச் செல்வோம் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எங்களது உரிமைகள் மற்றும் சுதந்திரத்திற்கான இருபதாண்டு போராட்டத்திற்குப் பிறகு, நாங்கள் பர்காக்களைத் தேடிக் கொண்டு எங்களது அடையாளங்களை மறைத்துக் கொள்ள வேண்டும்.

படிக்க :
♦ பெண்கள் நடமாடத் தகுதியற்ற நாடா இந்தியா?
♦ பெண்கள் மீது தொடரும் சாதிய மற்றும் மூலதனத்தின் சுரண்டல் !

கடந்த மாதங்களில், தாலிபான்கள் பல்வேறு மாநிலங்களை தங்களது கட்டுப்பாட்டின் கீழ் எடுத்துக் கொண்ட போது நூற்றுக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி தங்களது மனைவிகளையும் பெண்களையும் காப்பாற்ற காபுலை நோக்கி வந்தார்கள். அவர்கள் பூங்காக்களிலோ திறந்த வெளிகளிலோ தங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கான பண நன்கொடைகள், உணவு மற்றும் பிற தேவைகளை பெற்று அவர்களுக்கு உதவுவதற்கான அமெரிக்க பல்கலை மாணவர்களின் குழுக்களில் நானும் ஒருத்தியாக செயல்பட்டு, அம்மக்களுக்கு தேவையானவற்றை விநியோகித்தேன்.

சில குடும்பங்களின் கதைகளை நான் கேட்கையில், என்னால் எனது கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒரு குடும்பம் தனது மகனை போரில் இழந்துவிட்டது. அங்கிருந்து காபுலுக்குச் செல்ல டாக்சிக்கான பணம் இல்லை. ஆகையால் போக்குவரத்து கட்டணத்துக்கு ஈடாக தனது மருமகளை கொடுத்துவிட்டு வந்திருக்கின்றனர். ஒரு பயணத்துக்கான செலவிற்கு எப்படி ஒரு பெண்ணின் மதிப்பு ஈடாக முடியும் ?

இன்று, தாலிபான்கள் காபுல் நகரை அடைந்துவிட்டதாக நான் கேட்டபொழுது, நான் அடிமையாக்கப்படுவேன் என உணர்ந்தேன். அவர்களால் எனது வாழ்க்கையில் அவர்களது இஸ்டத்திற்கு விளையாட முடியும்.

நான் ஒரு ஆங்கில மொழிக் கல்வி மையத்தில் ஆசிரியையாக பணிபுரிந்தேன். மாணவர்கள், ஏ,பி,சி-யை படிக்கச் சொல்லித்தர வகுப்பிற்கு முன்னால் நிற்க முடியாது என்பதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. எனது அழகான சின்னஞ்சிறிய மாணவிகள் தங்களது படிப்பை நிறுத்திவிட்டு அவர்களது வீட்டில்தான் இருப்பார்கள் என்று ஒவ்வொரு முறை நினைத்துப் பார்க்கையிலும், என் கண்ணீர் வழிகிறது

– ஒரு காபுல்வாசி

தமிழாக்கம் : கர்ணன்
நன்றி : கார்டியன்

பார்ப்பனர் அல்லாதார் அர்ச்சகராக நியமனம் : புரட்சிகர அரசியல் தலைமையின் வெற்றி || ம.க.இ.க அறிக்கை

17/08/2021

பார்ப்பனரல்லாத அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களில் 24 பேர் அர்ச்சகராக நியமனம் !
சரியான அரசியல் தலைமை, தொடர்ச்சியான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி !

பத்திரிகை செய்தி !

ஆலயத் தீண்டாமைக்கு எதிராக கோயிலின் உள்ளே சென்று வழிபடும் உரிமையைப் போராடிப் பெற்றதுபோல், கருவறைத் தீண்டாமையை ஒழிப்பதற்காக, அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து 1970-ல் தந்தை பெரியார் கருவறை நுழைவுப் போராட்டத்தை அறிவித்தார்.

அப்போது அன்றைய தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நாங்கள் சட்டம் இயற்றுகிறோம், நீங்கள் போராட்டத்தை கைவிடுங்கள் என்ற வாக்குறுதியின் அடிப்படையில் பெரியார் போராட்டத்தை ஒத்தி வைத்தார்.

இதன் விளைவாக தமிழக அரசு 1971-ம் ஆண்டு வாரிசுரிமைப்படி அர்ச்சகர்கள் பணி நியமனத்தை ஒழித்து, இந்து சமய அறநிலையச் சட்டத்தில் திருத்தம் செய்தது. இதற்கு எதிராக பார்ப்பனர்களும் மடாதிபதிகளும் இந்த சட்டத்திருத்தம் தங்கள் மத உரிமைக்கு எதிராக உள்ளது என காரணம் காட்டி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

படிக்க :
♦ சாதி மட்டுமே ஒரே தகுதி – அர்ச்சகர் வழக்கில் உச்சநீதி மன்றத் தீர்ப்பு !
♦ கருவறை தீண்டாமை, ஜெயா அரசின் துரோக சதி!

1972-ல் இவ்வழக்கை 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து, அர்ச்சகர் என்பவரும் கோயில் கூலி ஊழியர்தான். வாரிசுரிமைப்படி அர்ச்சகர் நியமன உரிமையை ஒழித்து, தமிழக அரசு இயற்றிய சட்டத்திருத்தம் செல்லும். அதேசமயம் கோயில் பூசகர் தெய்வ வழிபாட்டில் எவ்வளவு வல்லவராக இருந்தாலும் ஆகமங்கள் படி குறித்த இனத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். எனவே, கோயிலின் மரபு வழக்கத்திற்கு மாறாக குறிப்பிட்ட இனத்தைச் சேராத ஒருவர் சாமி சிலையைத் தொட்டால் புனிதத் தன்மை கெட்டுவிடும் என்பதை அரசு கருத்தில் கொண்டு அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என அறிவியலுக்குப் புறம்பாக, நயவஞ்சமாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை பெரியார் “ஆபரேசன் சக்சஸ் நோயாளி மரணம்” என நுட்பமாக கண்டித்தார்.

2002-ம் ஆண்டு கேரளாவில் ஈழவர் சாதியைச் சேர்ந்த ஒருவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பார்ப்பனர் அல்லாதவர் அர்ச்சகராகலாம், மரபு பழக்க வழக்கத்தின் படி பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகராக முடியும் என்பதை ஏற்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்த வழக்கின் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டுதான் திமுக அரசு இந்து அறநிலையச் சட்டத்தில் திருத்தங்களை ஏற்படுத்த 2006-ம் ஆண்டில் முதலில் அரசாணையும் பின்பு அர்ச்சகர் பணி நியமனத்தில் பழக்க வழக்கம் மரபு என்பதை ஒழிக்கும் வகையில் அவசர சட்டத்தையும் இயற்றியது. அப்போதும் மதுரையை சேர்ந்த பார்ப்பன ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சங்கம் இந்த அவசர சட்டத்திற்கு எதிராக 1972 தீர்ப்பின் அடிப்படையில் தடை ஆணையை பெற்றது. இதனால் திமுக அரசு சட்டத் திருத்தத்தில் உள்ள முக்கிய பகுதியை விட்டுவிட்டு சட்டம் இயற்றியது.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என 2006-இல் போடப்பட்ட அரசாணையின் படி அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள் அமைக்கப்பட்டு 206 மாணவர்கள் ஒன்றரை ஆண்டுகள் பயிற்சி முடித்து 2008-ல் தீட்சையும் பெற்றனர். ஆனால், சான்றிதழ் கூட வழங்கப்படவில்லை அதையும் போராடித்தான் பெற்றனர். 2015-லேயே இந்த வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகும் 7 ஆண்டுகளாக இருந்த அதிமுக ஆட்சி அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அரசாணை குறித்து எந்தவித தெளிவான தீர்க்கமான முடிவு எடுக்காமலும் பிஜேபி கூட்டணியின் காரணமாகவும் கடைசி வரை தங்களுடைய ஆட்சியில் ஒரே ஒரு மாணவருக்கு அதுவும் ஆகம விதிக்கு உட்படாத ஒரு கோயிலில் மட்டுமே அர்ச்சகர் பணி நியமனம் செய்தது.

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களின் போராட்டம் !

அதன்பிறகு திமுக தனது தேர்தல் அறிக்கையில் அர்ச்சகர் பயிற்சி முடித்த மாணவர்களுக்கு நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அர்ச்சகராக பணி நியமனம் வழங்குவோம் என்று அறிவித்திருந்தனர். அந்த அடிப்படையில் இப்பொழுது பார்ப்பனரல்லாதோர் இருபத்தி நான்கு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு அர்ச்சகர் பணியினை வழங்கப்பட்டுள்ளது. இதனை வரவேற்கிறோம்.

இந்த அர்ச்சகர் பணிநியமனம் என்பது தொடர்ச்சியான வரலாற்று ரீதியான போராட்டத்தின் விளைவே. 1920-களிலேயே தமிழகத்தில் பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிரான சமூக நீதிக்கான குரல் எழத் துவங்கியது. அதிலும் பெரியாரின் தீவிரமான பிரச்சாரமும் போராட்டமும் பார்ப்பனிய ஆதிக்கத்திற்கு எதிராக மக்களை தட்டி எழுப்புவதாகவும் பலத்த அடியாகவும் இருந்தது.

அதில் ஒன்றுதான் 1970-களில் அறிவித்த கருவறை நுழைவுப் போராட்டம். பெரியாருக்கு பின் 1970-களில் தமிழகத்தில் மார்க்சிய லெனினிய இயக்கங்கள் தோன்றியபோது தமிழகத்தில் பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராகவும் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகவும் போராட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து அதற்கான முன்னெடுப்புகளை செய்தது.

ஆகவே உழைக்கும் மக்களின் மீதான கலாச்சார பண்பாட்டு ஒடுக்குமுறைக்கு எதிரான போரட்டத்தினை முன்னெடுப்பதற்காக மக்கள் கலை இலக்கியக் கழகம் கட்டியமைக்கப்பட்டது. 90-களில் ம.க.இ.க-வின் அரசியல் தலைமை ஏகாதிபத்தியம் நமது நாட்டை கொள்ளையடிப்பதையும் அடிமையாக்குவதையும் நோக்கமாக கொண்டு அமல்படுத்தப்பட்ட மறுகாலனியாக்கத்தையும் இந்தியாவில் மதக்கலவரங்களை திட்டமிட்டு உருவாக்கி இந்துக்களை ஒன்றுதிரட்டுவது இந்துராஷ்டிரத்தை அமைப்பது என்பதை நோக்கமாக கொண்டு செயல்பட்ட இந்து மதவெறி அமைப்பான ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க கும்பலை முறியடிப்பது ஆகிய இரு பிரதான கடமையை உள்ளடக்கிய செயல்தந்திர முழக்கமாக மறுகாலனியாக்கத்தையும், இந்து மதவெறி பாசிசத்தையும் முறியடிப்போம் என  முன்வைத்தது.

இதனடிப்படையில்தான் ம.க.இ.க-வும் அதன் தோழமை அமைப்புகளும் மக்கள் மத்தியில் பிரச்சாரங்கள், போராட்டங்களை முன்னெடுத்தது. ஒடுக்கப்பட்ட சமூகத்தில் கலாச்சாரம் பண்பாடு சாதித் தீண்டாமை போன்றவற்றில் நிலவும் பிற்போக்கு விழுமியங்களையும், தனியார்மயம் தாராளமயக் கொள்கையின் மூலமான மறுகாலனியாக்கத்திற்கு எதிராகவும் பார்ப்பன இந்துமத மேலாதிக்கத்திற்கு எதிராகப் போராடுவதை தங்களுடைய முக்கிய கடமையாக உருவாக்கி அதற்கான கூர்மையான செயல்தந்திரத்தை வகுத்து, அதனடிப்படையில் செயல்படத் தொடங்கியது. அக்காலகட்டத்தில்தான் ஆர்.எஸ்.எஸ், சமூகத்தை பின்னுக்கு இழுத்துச் செல்லும் அரசியல் சக்திகளாக உருவெடுத்தது.

நாம் அனைவரும் இந்துக்கள். வாருங்கள், ராமருக்கு கோயில் கட்டலாம் என்கிற ஆர்.எஸ்.எஸ்-ன் நயவஞ்சக கருத்துக்களை மக்கள் முன் அம்பலப்படுத்தும் விதமாக, “எல்லோரையும் இந்து என்கிறாயே எங்களை கருவறைக்குள் அழைத்துச் செல்ல தயாரா?” என கேள்வி எழுப்பியது ம.க.இ.க-வின் கருவறை நுழைவுப் போராட்டம்.

பெரியார் காலத்திற்கு பிறகு பார்ப்பனிய எதிர்ப்பு என்பது வலுவிழந்த நிலையில் ம.க.இ.க-வின் கருவறை நுழைவுப் போராட்டத்தை, கிராமங்களிலும் நகரங்களிலும் பிரச்சாரம், வெளியீடு, பாடல்கள் சுவரெழுத்து போன்ற வடிவத்தினூடாக வீச்சாக கொண்டு செல்லப்பட்டது.

மேலும், பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களையும் இணைத்து ம.க.இ.க தோழர்கள் ஆண்களும் பெண்களும் கருவறையில் நுழைந்து கருவறைத் தீண்டாமைக்கெதிரான ஒரு அரசியல் நடவடிக்கையாக மாற்றியதன் மூலம் உழைக்கும் மக்களை மதவெறியூட்டி மோதவிட்டு பிளவுபடுத்தும் ஆர்.எஸ்.எஸ்-ன் உண்மை முகத்தை கூர்மையாக அம்பலப்படுத்தியது.

பார்ப்பன, பண்பாட்டு ஆக்கிரமிப்பாக ஒடுக்குமுறையாக இருக்கக் கூடிய தியாகராஜ ஆராதனை விழாவில் ‘தமிழ் நீச பாசை’ என்ற மொழித் தீண்டாமையை எதிர்த்து “தமிழில் பாடு இல்லை.. தமிழ்நாட்டை விட்டு ஓடு” என்னும் முழக்கத்தின் கீழ் போராட்டம் நடத்தப்பட்டது.

பண்பாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிரான ஒரு நிகழ்வாக தஞ்சையில் “தமிழ் மக்கள் இசை விழா” நடத்தப்பட்டு தமிழ் மக்களின் கலை இசை என்ற வடிவத்தினை தேர்வு செய்து ஆண்டுதோறும் திருவையாறு தியாகராஜ ஆராதனை என்ற பார்ப்பன மேலாதிக்க கலாச்சாரத்தை அவர்கள் நிலைநிறுத்த முயற்சிக்கின்ற ஒவ்வொரு ஆண்டிலும் அதற்கு எதிராக உழைக்கும் மக்களுடைய கலைகளாக தமிழ் மக்களின் கலைகளாக பார்ப்பன எதிர்ப்பு அரசியல் பண்பாட்டு உள்ளடக்கத்தை நடத்துகின்ற நிகழ்வின் தொடர்ச்சியாக தஞ்சாவூரில் ஒரு பண்பாட்டு இயக்கமாக வளர்க்கப்பட்டது.

பிறகு 2002-ல் குஜராத்தில் நடைபெற்ற மதக்கலவரத்தில் 2000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களின் படுகொலையை எதிர்த்து இந்து சாம்ராஜ்ய ஆதிக்கத்திற்கான திட்டத்தை வீழ்த்துவோம் என்ற வகையில் “பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு” நடத்தி இந்து பார்ப்பன மேலாதிக்கத்தை அம்பலப்படுத்தியது. இதன்மூலம் பெரியார் மறைவுக்கு பின் மங்கிப்போன பார்ப்பனிய ஒடுக்குமுறைக்கு எதிரான உணர்வு ம.க.இ.க தொடர் போராட்டத்தின் மூலமாக மீண்டும் முன்னுக்கு கொண்டுவரப்பட்டது.

2006-ல் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற சட்டத்துக்கு எதிராக தடையாணை வாங்கிய பிறகு, அது அப்படியே உறங்கிப்போன காலகட்டத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்பான மனித உரிமைப் பாதுகாப்பு மையம் இணைந்து பார்ப்பனரல்லாத அர்ச்சகர் பயிற்சி முடித்த மாணவர்களை அர்ச்சகர்களாக நியமனம் செய்யும் இந்த நடவடிக்கையை நாம் நடத்திக் காட்டினால் கருவறையில் இருக்கக் கூடிய தீண்டாமையை அகற்றுகின்ற முயற்சியின் துவக்கமாக அமைந்துவிடும் என்ற அரசியல் நோக்கத்தில்தான் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களை ஒன்றுதிரட்டி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கமாக உருவாக்கப்பட்டது.

தமிழகத்தில் பல்வேறு திராவிட இயக்கங்கள் பெரியாரிய இயக்கங்கள் ஆன்மிகப் பெரியோர்கள் போன்றவர்களெல்லாம் இந்தக் கோரிக்கைக்காக பல்வேறு காலகட்டங்களில் குரல் கொடுத்து இருந்தாலும், இது ஒரு அரசியல் இயக்கமாகவும் அதேபோன்று உச்சநீதிமன்றத்தில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் சார்பாக ஒரு இடை தலையீட்டு மனுவைத் தாக்கல் செய்து அந்த வழக்கிலும் வாதங்களை புரிகின்ற வகையில் உச்சநீதிமன்றம் முதல் நம்ம ஊர் தெரு வரைக்கும் அந்தப் போராட்ட இயக்கத்திற்கான கோரிக்கைகளை வலுப்படுத்தி சென்றதுதான் இந்த அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம்.

இதற்காக தமிழகம் முழுக்க இருக்கக் கூடிய பல்வேறு அமைப்புத் தோழர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து ஒரு வெற்றிகரமான பணியாக மாற்றுவதற்கு வரலாற்றுப் பங்களிப்பை ம.க.இ.க, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் மற்றும் தோழமை அமைப்புகள் இணைந்து செய்தது. எனவே கருவறை நுழைவுப் போராட்டத்தில் இருந்து துவங்கிய ம.க.இ.க-வின் மகத்தான போராட்டம், அதனுடைய சரியான அரசியல் வழிகாட்டுதல் புரிதலோடு இயங்கியப் போராட்டமானது, இன்று ஒரு மிக முக்கியமான வரலாற்று வெற்றியை சாதித்துள்ளது. 24 பார்ப்பனரல்லாத அர்ச்சகர் மாணவர்கள் ஒரே நேரத்தில் இன்று கருவறைக்குள் நுழைந்து பார்ப்பன ஆதிக்கத்தை உடைப்பதற்கான பூசாரிகளாக மாறி உள்ளார்கள்.

படிக்க :
♦ சபரிமலை பெண்கள் நுழைவு : கேரளாவை கலவர பூமியாக்கத் துடிக்கும் பாஜக!
♦ மதுரை 1939-ம் ஆண்டு கோவில் நுழைவு : சாந்துப் பட்டருக்கு சாணி ஊற்றிய பார்ப்பனர்கள்!

ஒரு கம்யூனிச அமைப்பானது, உழைக்கும் மக்கள் மீதான இழிவினை எதிர்த்துப் போராடி அவர்களுடைய கலாச்சார பண்பாட்டு உரிமைகளை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதன் அவசியத்தை இது உணர்த்தியது.

மேலும், இதன் ஊடாகத்தான் பார்ப்பன மேலாதிக்கத்திற்கான சாதி தீண்டாமையை அனைத்து இடங்களிலும் அகற்றுகின்ற நடவடிக்கையின் ஒரு பகுதியாக ம.க.இ.க சாதித்துக் காட்டியிருக்கிறது. இந்த அடிப்படையில் ம.க.இ.க அரசியல் தலைமை பிரிவு, குறிப்பாக இந்த அரசியல் செயல்தந்திரத்தை வகுத்து பார்ப்பன இந்துமதவெறி பாசிசத்தின் ஆதிக்கத்திற்கான அதனுடைய தொடர்ச்சியான இந்து சாம்ராஜ்ய கனவை தமிழகத்தில் கட்டமைக்கின்ற நடவடிக்கைகளுக்கு எதிராக அனைத்து விதமான முட்டுக்கட்டைகளையும், எதிர்ப்பு நடவடிக்கைகளையும் மக்கள் இயக்கமாக மாற்றுவதில் ஒரு மிகச்சிறந்த பங்காற்றி இருக்கிறது என்று சொன்னால் அது மறுப்பதற்கில்லை.

ஆனால் இன்று அந்த அரசியல் சித்தாந்த வேர்களை புறந்தள்ளிவிட்டு, ஒரு சிலர் தாங்கள் தான் முன்னின்று செய்தவர்களாக காட்டப்படுவது என்பது ஒரு அயோக்கியத்தனமான நாணயமற்ற நடவடிக்கை என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

ஆகவே, காவி இருள் சூழ்ந்த இந்நிலையில் கார்ப்பரேட் – காவி பாசிசத்தை முறியடித்து மக்களை பாதுகாக்கவும், தற்போது கிடைத்துள்ள இந்த வெற்றியை முழுமையான வெற்றியாக மாற்றவும் புரட்சிகர ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து கார்ப்பரேட் – காவி பாசிசத்திற்கு எதிராகப் போராடுவோம்.

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
தமிழ்நாடு – புதுவை.
தொடர்புக்கு : 9791653200

குதிராம் போஸ் : காலனியாதிக்கத்துக்கு எதிரான இளம் வீரன் !!

காலனியக்கத்திற்கு எதிரான இந்திய விடுதலைக்கான போராட்ட வரலாற்றில் வங்காள புரட்சியாளர்களின் சுவடுகளை ஒருபோதும் தவிர்க்க இயலாது. அத்தகைய வங்கத்தில் பிறந்து, பிரிட்டிஷ் சர்வாதிகார பேரரசை குலை நடுங்கச் செய்த குதிராம் போஸின் நினைவு தினம், ஆகஸ்ட் 11.  பதினெட்டு வயதே நிரம்பிய நிலையில் காலனியாதிக்கவாதிகளால் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்ட குதிராம் போஸின் வாழ்வு, நாட்டின் விடுதலைக்கு இளைஞர்கள் தம்மை அர்ப்பணிக்க வேண்டிய தேவையை இன்றும் கூட உணர்த்தும் வல்லமை கொண்டது.

1889, டிசம்பர் மாதம் 3-ம் தேதி மேற்கு வங்காளத்தில், மிட்டாப்பூர் மாவட்டத்தில் உள்ள ஹபிப்பூர் என்ற கிராமத்தில் குதிராம் போஸ் பிறந்தார். அவரது தந்தை த்ரைலோக்யநாத், தாயார் லக்ஷ்மிபிரியா தேவி ஆவர். போஸின் தந்தை தாசில்தாராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குதிராம் தனது ஆறாவது வயதில் தாயை இழந்தார். அதற்கடுத்த வருடமே தந்தையையும் இழந்தார். அவரது அக்காவிடம் வளர்ந்தார். அக்காவின் கணவரான அமிர்தலால் ராய், போஸை ஹாமில்டன் உயர்நிலைப் பள்ளியில் சேர்க்கிறார். அந்த நாட்களில் அனுசீலன் சமிதியின் நிறுவனரான அரவிந்தரின் பேச்சுக்களால் கவரப்படுகிறார். தன்னுடைய 15-வது வயதில் அனுசீலன் சமிதி என்ற இயக்கத்தில் சேர்ந்தார். அனுசீலன் சமிதி என்பது ஆயுதப் போராட்டத்தின் மூலமே பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை ஒழித்துக் கட்டமுடியும் என்பதில் நம்பிக்கைக் கொண்ட அமைப்பாகும்.

படிக்க :
♦ புரட்சியாளரான பின்னும் பூணூல் அணிந்திருந்தாரா சந்திரசேகர் ஆசாத் ?
♦ இதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் ?

அவரின் வயதை ஒத்த சிறுவர்கள் எல்லாம் இன்று நடிகர்களின் பின்னால் சென்று கொண்டிருக்கும்போது, குதிராம் போஸோ அன்று நாட்டின் விடுதலைக்காக தன்னை அர்ப்பணிக்கும் கடினமான போராட்டத்தில் தன்னை மகிழ்ச்சியோடு ஈடுபடுத்திக் கொண்டார்.

தன்னுடைய 16-வது வயதில் பிரிட்டிஷ் எதிர்ப்பு துண்டறிக்கைகளை விநியோகித்ததற்காக கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். காலனிய ஆதிக்க போலீசு நிலையங்கள் மற்றும் பிரிட்டிஷ் அதிகாரிகளை குண்டுவீசி தகர்க்க வேண்டும் என்ற எண்ணம் சிறையில் அவருக்கு உருவாகியது. பின்னர் கல்கத்தாவை அடித்தளமாகக் கொண்டு செயல்பட்ட புரட்சியாளரான பரிந்தர குமார் கோஷின் தலைமையில் செயல்படும் விடுதலைப் போராட்டக் குழுவில் தன்னை இணைத்துக் கொள்கிறார்.

“ஜுகந்தர்” – அனுசீலன் சமிதியின் நாளிதழ். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் சுரண்டலுக்கெதிராகப் போராட வேண்டியதன் நோக்கத்தை பரப்புவதே அதன் தலையாய பணியாக இருந்தது. இதனாலேயே பல்வேறு தடைகளையும் இன்னல்களையும் சந்தித்தது. அச்சமயத்தில் அலிப்பூர் மாவட்ட நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றிருந்த டக்ளஸ் போர்ட், ஜூகந்தரின் ஆசிரியரான பூபேந்திரநாத் தத்தா மற்றும் இதர எழுத்தாளர்களை கண்காணிக்க உத்தரவிட்டார். எனினும் தனது தலையங்கங்களில் பிரிட்டிஷ் அரசை கடுமையாக சாடியது. இதனால் மேலும் 5 வழக்குகளைப் பரிசாகப் பெற்றது “ஜுகந்தர்”. அரசின் தொடர் அடக்குமுறைகளால் நிதி நெருக்கடியில் சிக்கியது.

டக்ளஸ் போர்ட், மாவட்ட நீதிபதியாக பொறுப்பேற்றதில் இருந்தே இளம் அரசியல் செயல்பாட்டாளார்கள் மீது கடுமையான மற்றும் அநியாயமான தண்டனைகளை கொடுப்பதையே வாடிக்கையாகக் கொண்டிருந்தார். அமைதிவழிப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்குக் கூட பொது மக்கள் முன்னர் சவுக்கடி கொடுக்கும் தண்டனையை சாதாரணமாக வழங்கினார். இதன்மூலம் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்க நினைத்தார்.

இந்தியர்களை மனிதர்களாகக் கூட மதிக்காத இத்தகையப் போக்குகளை கடுமையாக எதிர்த்த அனுசீலன் சமிதி, அலிப்பூர் மாவட்ட முதன்மை நீதிபதி டக்ளஸ் போர்ட்-ஐ தனது இலக்காக அறிவித்தது.

டக்ளஸ் போர்ட்–ஐ கொல்வதற்கு ஹேமச்சந்திர தாஸால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிவுற்றதை அடுத்து, அனுசீலன் சமிதியானது அடுத்தக்கட்ட தயாரிப்பில் கவனம் செலுத்தியது. அதுவே இந்தியாவின் தீரமிக்க விடுதலைப் போராட்ட வரலாற்றின் பக்கங்களில் மறையாத நினைவானது.

1908-ஏப்ரலில் கொலை நடவடிக்கைக்காக அனுசீலன் சமிதியால், பிரபுல்லா சக்கியும், குதிராம் போஸூம் தெரிவு செய்யப்பட்டனர். டக்ளஸ் கிங்ஸ் போர்ட் உயிருக்கு ஆபத்து இருப்பதை மோப்பம் பிடித்த கல்கத்தா போலீசு, இது தொடர்பாக முசார்பூர் மாவட்ட கண்காணிப்பாளாருக்கு தகவல் அளித்தது. அம்மாவட்ட போலீசு, கிங்ஸ் போர்டுக்கு பாதுகாப்பை அளித்ததுடன் தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டது.

இதனால் பிரபுல்ல சக்கி, தினேஷ் சந்திர ராய் என்ற பெயரிலும் குதிராம் போஸ், ஹரேன் சர்கார் என்ற பெயரிலும் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டனர். தர்மசாலாவில் சில நாட்கள் தங்கி இருந்து, டக்ளஸை நிழல் போல கண்காணித்து வந்தனர். அவனது நீதிமன்ற பணி நேரம், கிளம்பும் நேரம், அவனின் விருப்பப்பூர்வ இடமான கிளப்பில் இருக்கும் நேரம் என கிங்ஸ் போர்டின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் அவர்களது கண்காணிப்பிற்குள் கொண்டு வந்தனர்.

ஏப்ரல் 30, 1908 கிங்ஸ் போர்டின் வாகனத்தை எதிர்பார்த்தபடி, குதிராமும், பிரபுல்ல சக்கியும் தங்களை மரங்களுக்கிடையில் புதைத்துக் கொண்டு காத்திருக்கிறார்கள். கிளப்பில் இருந்து தங்களது இல்லத்திற்கு செல்வதற்காக பலரும் கிளம்பிக் கொண்டு இருக்கிறார்கள் அரசு வழக்கறிஞர் பிரிங்கல் கென்னடி மகள் மற்றும் மனைவி ஆகியோர்  வண்டியில் சென்று கொண்டிருக்கிறார்கள்.

அந்த வண்டி கிங்ஸ்போர்டின் வீட்டை நெருங்குகையில், நீதிபதி கிங்ஸ்போர்டின் வண்டி என தவறுதலாக நினைத்து வெடிகுண்டை வீசிவிட்டு மின்னலென இருவரும் தப்பிக்கிறார்கள். இந்த வெடிகுண்டு வீச்சால் பலத்த காயமடைந்த இரு பெண்களும் அடுத்தடுத்து இறந்து போகின்றனர்.

இச்சம்பவம் நடைபெற்ற உடனேயே, இரவு 9 மணிக்குள்ளேயே மொத்த நகரமும் போலீசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ரயில் நிலையங்கள் முழுவதும் கண்காணிக்கப்பட்டன. இதனை முன் கூட்டியே யூகித்த குதிராம் ஏறத்தாழ 25 மைல் வரை நடந்து சென்று வைனி என்ற ரயில் நிலையத்தை 1908, மே 1 அதிகாலை சென்றடைந்தார். மிகுந்த தாகமடைந்த அவர் ஒரு கடையில் தண்ணீரைக் கேட்கும்போது, இவரின் காலணியற்ற தோற்றத்தை கண்ட இரு போலீசுக்காரர்கள், விசாரிக்க ஆரம்பித்தனர்.

போலீசிடமிருந்து தப்பிக்க முனைந்த குதிராம் போஸ், தனது துப்பாக்கியின் பழுதால்  அதை பயன்படுத்த முடியாமல்போனது. அவரிடமிருந்து ரூ.30 பணம், 37 வெடிகுண்டுகள், ரயில்வே மேப் மற்றும் ரயில் கால அட்டவணை ஆகியவைகள் கைப்பற்றப்பட்டன. அவர் அடுத்த நாள் முசாபர்பூர் போலீசு நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டார்.

“அந்தச் சிறுவனைப் பார்க்க மக்கள் அதிகமாக அங்கே கூடி இருந்தனர். முதல்வகுப்பு பெட்டியில் இருந்து அவனை நடந்தே அழைத்து வந்தனர். அவனிடம் கொஞ்சமும் கவலையோ துக்கமோ இல்லை. மிகவும் மகிழ்ச்சியோடு இருந்தான்.”

மேற்கண்டவாறு ஸ்டேட்ஸ்மென் என்ற ஆங்கில இதழ் பதிவு செய்திருந்தது.

1908, மே 21-ம் தேதி விசாரணை தொடங்கியது. அரசுத்தரப்பு வழக்கறிஞர்களாக மன்னுக், பினோத பிகாரி மஜூம்தார் ஆகியோர் ஆஜராகினர். குதிராம் தரப்பிற்காக பண்டேபாத்யாயா, காளிதாஸ்பாசு உள்ளிட்ட வழக்கறிஞர்கள் இலவசமாக ஆஜராகினர்.

படிக்க :
♦ அகிம்சையின் துரோகம் வன்முறையின் தியாகம்
♦ மலரிடைப் புதைந்த கந்தகக் குண்டுகள்

1908, ஜூன் 13, தண்டனை அறிவிப்பதற்கான நாளின்போது பெயரில்லாத அநாமதேய வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்திருந்தது. அது வங்காளிகளிடமிருந்து அல்ல மாறாக பீகாரிகளிடமிருந்து வந்தது. எனினும் குதிராமுக்கு தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது.

அத்தீர்ப்புக்கு எதிராக குதிராம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. பிரிட்டிஷ் நீதிபதிகளால் ஜூலை 18-ம் தேதி குதிராமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கவர்னர் ஜெனரலுக்கு அனுப்பப்பட்ட மேல்முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டது. 1908-ம் ஆண்டு ஆகஸ்ட் 11-ம் தேதி தூக்கிலிடப்பட்டபோது குதிராம் போஸ் 18 ஆண்டுகளையும் 8 மாதங்களையும் நிறைவு செய்திருந்தார்.

கொல்கத்தாவின் வீதிகளில் மாணவர்கள் குதிராம் போஸுக்காக நிறைந்திருந்தார்கள். ஆனால் காந்தியோ “இந்திய மக்கள் ஒரு போது நாட்டின் விடுதலைக்காக இது போன்ற வழிமுறைகளை பின்பற்றக் கூடாது” என்று பாடம் எடுத்துக்கொண்டிருந்தார்.

“அச்சிறுவன் தூக்கு மேடைக்கு செல்லும்போது, நாட்டின் விடுதலை முழக்கங்கங்களை எழுப்பியவாறு மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டான்.” என்று அடுத்த நாளில் வெளியான நாளிதழ்கள் பதிவு செய்தன.

தாய்நாட்டின் விடுதலைக்காக சிறுவயதில் தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட அவரிடம் இருந்து உறுதியான போர்க்குணமிக்க விடுதலைப் போராட்ட உணர்வை நாம் கற்க வேண்டும்.


மருது
செய்தி ஆதாரம் : Economicstimes, indianexpress

இஸ்ரோ முதல் ஐ.சி.எஃப் வரை மிரட்டப்படும் விஞ்ஞானிகளும் அதிகாரிகளும் !

0

டந்த ஆகஸ்ட் 13 அன்று இந்து தமிழ் நாளிதழ் “உண்மையான தேச துரோகிகளுக்கு என்ன தண்டனை?” என்ற தலைப்பில் தலையங்க செய்தி வெளியிட்டிருந்தது. தேச துரோகிகளுக்கு என்ன தண்டனை என்பதை பார்ப்பதற்கு முன்னால், முதலில் உண்மையான நாட்டுப்பற்றாளர்கள், தேச பக்தர்கள் யார் மற்றும் இந்த நாட்டின் எதிரிகள், தேச துரோகிகள் யார் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.

ரயில் பெட்டி எஞ்சின்களை உருவாக்கும் நமது நாட்டின் பொதுத்துறை நிறுவனமான ஐ.சி.எஃப் நிறுவனம் தயாரித்த டிரெய்ன் – 18 (T-18) என்ற அதிநவீன – மணிக்கு 160 கிலோ மீட்டர் முதல் 180 கிலோ மீட்டர் வரை செல்லக்கூடிய அதிவேக ரயில் உற்பத்தியானது முடக்கப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்பையும், அழகையும், செயல்பாடுகளையும் குறித்து நியூஸ்-18, புதிய தலைமுறை போன்ற தொலைக்காட்சி நிறுவனங்கள் விவரிப்பதில் இருந்தே பொதுத்துறை நிறுவன ஊழியர்களின் உழைப்பின் வண்ணமும், சீரிய சிந்தனையையும் உணர முடியும்.

அவ்வளவு நேர்த்தியான அதிவேக – அதிநவீன ரயில் எஞ்சின் ஐ.சி.எஃப் நிறுவனத்தின் சொந்த முயற்சியில் முனைப்போடு, அந்நிய நாட்டு தொழிற்நுட்பம் இல்லாமல், சொந்த நாட்டு தொழிற்நுட்பத்துடன் மேக்-இன்-இந்தியா என்ற திட்டத்தின் கீழ் 80% அளவில் உள்நாட்டு உதிரி பாகங்களுடன் வெறும் 90 கோடி செலவில் உருவாக்கப்பட்டது. இந்த ரயிலை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தால் இந்த தொகையைவிட பல மடங்கு விலை அதிகரிக்கும்.

படிக்க :
♦ சென்னையின் பெருமை ஐசிஎஃப்பை விழுங்கும் தனியார்மயம் !
♦ சென்னை ஐ.சி.எப். சர்வதேச ரயில்பெட்டி கண்காட்சி ! படக்கட்டுரை

T-18 என்ற அதிவேக ரயிலை குறைந்த செலவில் அதிநவீன ரயிலாக உருவாக்கும் திட்டத்தில் முக்கிய பங்காற்றிய ஐ.சி.எஃப் நிறுவன தலைவர், இயந்திரவியல் பொறியாளர் சுதான்சு உட்பட 11 அதிகாரிகள் மீது முறைகேடு குற்றம்சாட்டப்பட்டு, இந்தத் திட்டம் மூன்றாண்டுகளுக்கு முன்னரே நிறுத்தி வைக்கப்பட்டது.

ஆராய்ச்சி – வடிவமைப்பு ஆகியற்றை உரிய தர நிர்ணயக் கழகத்திடம் அனுமதி பெறாதது; ரயில் தயாரிப்பிற்கு டெண்டர் விட்டதில் முறைக்கேடு என்று குற்றம் சாட்டப்பட்டதோடு; இது தொடர்பான ஆவணங்களையும் ரயில்வே வாரியத்தின் உத்திரவின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை கைப்பற்றி விசாரணையையும் தொடங்கியது. அதனடிப்படையில் T-18 உற்பத்தியும், மேற்கண்ட 11 அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மூன்றாண்டுகளுக்குப் பின்னர் சுதான்சு உள்ளிட்ட 11 பேரும் குற்றமற்றவர்கள் என தற்போது விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். சரி, இவர்கள் மீது இப்படி ஒரு தவறான / போலி வழக்குப் பதிவு செய்ய என்ன அவசியம் ?

ரயில் பெட்டிக்கான எலெக்ட்ரிக் வேலைகளுக்கான டெண்டரை ஐ.சி.எஃப் நிர்வாகம் கோரியது. இதனடிப்படையில் பல நிறுவனங்கள் டெண்டரில் கலந்துக் கொண்டன. அதில் குறைவான தொகையுள்ள மேதா என்ற இந்திய நிறுவனத்தின் டெண்டரை அங்கீகரித்து அந்நிறுவனத்துடன் ஒப்பந்தமும் செய்துக் கொள்ளப்பட்டது. அதே வேலையில், அதிகமான தொகையுள்ள மற்ற நிறுவனங்களின் டெண்டர்களை [அதாவது, கனடாவைச் சேர்ந்த பம்பார்டியர் நிறுவனத்தின் டெண்டரையும், ஜெர்மனியைச் சேர்ந்த சீமன்ஸ் நிறுவனத்தின் டெண்டரையும்] நிராகரித்துவிட்டது.

மேலும் அந்த சமயத்தில், T-18 வகையைச் சார்ந்த 60 அதிவேக ரயில்களை வாங்க, ரயில்வே வாரியம் சர்வதேச டெண்டர்களை கோரப்போவதாகவும், அதில் ஐ.சி.எஃப் நிறுவனம் கலந்து கொள்ளாத வகையில் நிபந்தனைகள் இருப்பதாகவும், ரூ.25,000 கோடியில் வெளிநாட்டில் இருந்து ரயில்களை இறக்குமதி செய்யப்போவதாகவும் செய்திகள் – தகவல்கள் வந்துள்ளதாக ரயில்வே தலைவர் Y.K.யாதவ்-விற்கு சுதான்சு கடிதம் எழுதியுள்ளார்.

BSNL நிறுவனத்தையும் HAL நிறுவனத்தையும் இதே போலவே முடக்கியதையும் இங்கு பொருத்திப் பார்க்க வேண்டும். இந்த பொதுத்துறை நிறுவனங்களை அம்பானி, மிட்டல் போன்ற கார்ப்பரேட்டுக்களுக்கு களவுக் கொடுத்ததோடு இதனை ஒப்பிடலாம்.

இதைப் போலவே ஐ.சி.எஃப் நிறுவனமும் T-18 திட்டமும் கார்ப்பரேட்களால் களவாடப் பட்டுவருகின்றன என்பது திண்ணம். ஆனால், சுருட்டப்போவதும், சூறையாடப் போவதும் எவ்வளவு மில்லியன் டாலர் என்பது கார்ப்பரேட்டுகளுக்குத் தான் வெளிச்சம்.

T-18-ஐ உருவாக்கியவர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கை, இந்திய தொழில்நுட்ப சாதனைகளை – சந்திராயன் விண்கல வடிவமைப்பு போன்ற பெருமிதங்களை –  சாதித்த விஞ்ஞானிகளுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிடுவதற்கு இணையானது என்கிறார் சுதான்சு.

மேக்-இன்-இந்தியா என்ற மோடியின் கனவுத் திட்டத்தைக் கூட அந்நிய – உள்நாட்டு கார்ப்பரேட்கள் தான் தீர்மானிக்கின்றனர் என்பதோடு டி-18 திட்டம் முடக்கப்பட்டதன் மூலம், ஆளும் வர்க்கம், அதிகாரவர்க்கம், அரசியல்வாதிகள் ஆகியோரியின் கள்ளக் கூட்டை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

இப்படி பொதுத்துறை நிறுவனங்களில் சாதனை செய்தவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவது என்ன புதிய விவகாரமா ?இதை ஏற்கெனவே இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் விவகாரத்தில் செய்து காட்டியிருக்கிறார்களே !

நம்பி நாராயணன் மீது விசாரணை மட்டும் நடத்தப்படவில்லை. கைது நடவடிக்கையும், 50 நாட்கள் சிறை வாசத்தையும் சந்தித்தார் அவர்.  அது மட்டுமா ? ‘தேச துரோகி’ என்ற பட்டம் வேறு. இவர் மாநகராட்சிப் பள்ளியில் படித்து விஞ்ஞானியாகி, பின்பு இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்த அப்துல்கலாமுடன் இணைந்து T-1 என்ற ராக்கெட் தயாரிப்பில் ஈடுபட்டவர். உலகில் முதல் திரவ எரிப்பொருளில் இயங்கும் ராக்கெட் எஞ்சினை அறிமுகப்படுத்தியவர்.

உலகம் போற்றிய இஸ்ரோவின் ‘க்ரையோஜினிக்’ எஞ்சின் ஆராய்ச்சியின் இயக்குனரான நம்பி நாராயணன், பாகிஸ்தான் உட்பட சில வெளிநாடுகளுக்கு திரவ ராக்கெட் எரிபொருள், க்ரையோஜினிக் எஞ்சின் தொடர்பான செய்திகளை இஸ்ரோவிலிருந்து திருடி விற்றதாக கேரள போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார். இவருடன் இணை இயக்குநர் சசிக்குமார், ரஷ்ய விண்வெளி அமைப்பின் இந்திய ஒருங்கிணைப்பாளர் சந்திர போஸ் போன்ற அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். சிபிஐ விசாரணைக்குப் பிறகு, இது புனையப்பட்ட [ஜோடிக்கப்பட்ட] வழக்கு என்ற அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர் என்பதை உலகமே அறியும்.

மேலும், விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்கள் தனது சுயசரிதையான “ORBIT OF MEMORIES” என்ற நூலில் “இந்தியா கிரயோகெனின் எஞ்சின் தொழில்நுட்பத்தில் தன்னிறைவு பெறுவது அமெரிக்காவுக்குப் பிடிக்கவில்லை. விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா முன்னேற்றம் காண்பதற்கு தடை ஏற்படுத்த முயல்கிறது. சிஐஏ-வை ஏவிவிட்டு, அடுத்தவர்களை அழிப்பதில் வலிமைப் படைத்த அமெரிக்கா, தனக்கு மசிந்த இந்த போலீஸ் அதிகாரிகளைக் கொண்டு பொய் குற்றச்சாட்டுகளை போட வைத்து என்னைக் கைது செய்தது” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த தொழிற்நுட்பத்தை இந்தியாவுக்கு ரஷ்யா தரக்கூடாது என்று ஜெர்மனியும், பிரான்சும் ரஷ்யாவை மிரட்டின.

படிக்க :
♦ ரயில்வே தனியார்மயம் : ஏழைகளுக்கு எட்டாக் கனியாகும் ரயில் பயணம் !
♦ பயணிகள் இரயில்களை ஒழித்துக் கட்டும் மோடி அரசு !

இவ்வளவு கொடுமைகளை நிகழ்த்திய கொலைகாரப்படை CIA-வின் அடியாளாக செயல்பட்டு சொந்த நாட்டுக்கே உலைவைத்த இந்திய போலிசு அதிகாரிகளும் இதுவரை தண்டிக்கப்படவில்லை என்பதை இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்கள் தன்னுடைய சுயசரிதையில் அம்பலப்படுத்தியுள்ளார்.

இந்தியா இந்த தொழிற்நுட்பத்தி வளரக் கூடாது என கங்கனம் கட்டி வேலை செய்யும் இந்திய நாட்டின் – மக்களின் எதிரியான அமெரிக்க, ஜெர்மனி, பிரான்சு போன்ற ஏகாதிபத்திங்களுக்கு எதிராக ஒரு கண்டன அறிக்கைக் கூட இல்லையே ஏன்?

இதுதான் RSS,BJP பாசிச கும்பலின் இந்திய அதிகாரவர்க்கதின் ஏகாதிபத்திய தேசபக்தி ! வர்க்க புத்தி. ஆனால், உண்மையான நாட்டுப்பற்றாளர்களை – போராளிகளை, பன்சாரே, கல்புர்கி, தபோல்கர், கவுரி லங்கேஷ் போன்ற எழுத்தாளர்களை, நக்சல்பாரி புரட்சியாளர்களை தேச துரோகியாக சித்தரித்து சுட்டுக்கொள்ளுகிறது இந்த அரசு.

இத்தகைய பொதுத்துறை அழிப்பு நடவடிக்கைகளையும், ஒன்றிய அரசின் மக்கள் விரோத  செயல்பாடுகளையும் அம்பலப்படுத்திய ஆனந்த் தெல்ட்தும்டே, வரவர ராவ், சாய்பாபா, சுதா பரத்வாஜ் போன்ற செயற்பாட்டாளர்களை நகர்புற நக்சல்கள் என முத்திரை குத்தி, பொய் வழக்கில் கைது செய்து,  ஊபா சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்து பிணை வழங்காமல் இன்றளவும் சிறையில் அடைத்திருக்கிறது பாஜக.

நீதித்துறை முதல் உளவுத் துறை வரை அரசுக் கட்டமைப்பின் அனைத்து உறுப்புகளையும் பெகாசஸ் போன்ற செயலிகள் மூலம் வேவு பார்ப்பது, அவர்களை மிரட்டியோ, அவர்கள் மீது பொய்வழக்கு போட்டோ அவர்களை முடக்குவது இதன் மூலம் தனது காவி கார்ப்பரேட் பாசிச திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறது பாஜக.

இன்று பொதுத்துறையை பாதுகாத்த ‘குற்றத்திற்காக’ தேசதுரோக முத்திரை குத்தி ஐசிஎஃப் அதிகாரிகள், இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் ஆகியோரைத் தண்டித்தது போல, நாளை நமக்கும் நடக்கலாம். கார்ப்பரேட் காவி பாசிச கும்பல் தமது அயோக்கியத்தனங்களை மறைக்க போடும் வெளி வேசம் தான்  தேசபக்தி, தேச துரோகி எனும் முத்திரைகள் அனைத்துமே !!


கதிரவன்

கண்காணிப்பு முதலாளித்துவம் : நமது சுய சிந்தனையின் பெரும் எதிரி !

மீபத்தில் தோழி ஒருவரின் திருமணத்திற்காக கட்டில், தலையணை, மெத்தை வாங்க என்னிடம் கேட்டு இருந்தார். நானும் இணையத்தில் அது குறித்துத் தேடி ஒரு நிறுவனத்திடமிருந்து வாங்கிக் கொடுத்தேன். அதன்பிறகு எனது தேடுப்பொறி தொடங்கி, முகநூல், மின்னஞ்சல் என எல்லாம் மெத்தை தலையணை கொண்ட விளம்பரங்களால் நிரம்பி வழிகிறது. இது போன்ற அனுபவம் உங்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம். இது ஏன், எப்படி நடக்கிறது என்று எப்போதாவது யோசித்து இருப்போமா?

இது ஒரு தனி உலகமாக செயல்பட்டுவருகிறது. நமது சிந்தனையை மாற்றியமைக்கத் தக்க ஒரு அபாய உலகம் அது. அதற்குப் பெயர் “கண்காணிப்பு முதலாளித்துவம்”.

“கண்காணிப்பு முதலாளித்துவம்” என்பது அடிப்படையில் ஒரு சந்தை உந்துதல் செயல்முறையை விவரிக்கிறது; இந்தச் சந்தையில் விற்பனைக்கான பொருள் உங்கள் தனிப்பட்ட தரவாகும். மேலும், இந்த தரவுகளின் சேகரிப்பு மற்றும் உற்பத்தி இணையத்தில் உலாவும் நம்மைப் போன்ற வெகுஜனங்களின் மீதான கண்காணிப்பை நம்பியுள்ளது. இந்த செயல்பாடு பெரும்பாலும் இணையத் தேடுபொறிகள் (கூகுள்) மற்றும் சமூக ஊடக தளங்கள் (பேஸ்புக்) போன்ற ‘இலவச’ ஆன்லைன் சேவைகளை வழங்கும் நிறுவனங்களால் மேற்கொள்ளப்படுகிறது.

படிக்க :
♦ இணையப் புரட்சியின் யோக்கியதையும் கூகுள் ரீடரும்!
♦ நீலப்பட படைப்பாளிகள் ஆவலுடன் எதிர்பார்க்கும் கூகிள் கிளாஸ் !

இந்த நிறுவனங்கள் வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்தத் தக்க தரவுகளை உருவாக்க நமது ஆன்லைன் செயல்பாடுகளை (விருப்பு வெறுப்புகள், தேடல்கள், சமூக வலைப்பின்னல்கள், கொள்முதல்) சேகரித்து ஆராய்கின்றன. இந்த நிறுவனங்கள் நடைமுறைப்படுத்தும் கண்காணிப்பு, அதன் முழு பரிமாணமும் நமக்கு தெரியாமலேயே – நம்மால் புரிந்து கொள்ளப்படாமலேயே – பெரும்பாலும் செய்யப்படுகிறது.

தொழில்நுட்ப புரட்சியின் தொடர்ச்சியான முன்னேற்றங்கள் நம்மை திகைப்பூட்டும் வகையில் வளர்ந்துள்ளன. ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலின் பேராசிரியரான ஷோஷனா சுபோஃப் தனது “The age of Surveillance Capitalism” புத்தகத்தில் சிலிக்கான் பள்ளத்தாக்கு நிறுவனங்கள் (தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்) மற்றும் பிற நிறுவனங்களும்  பயனர்களின் தகவலை எவ்வாறு கண்காணித்து கணித்து தங்களுக்குச் சாதகமான வகையிலான தகவலை உட்செலுத்தி நம்மை இயக்குகிறது என்பதை விளக்கியிருக்கிறார்.

உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள் தனது சொந்த நோக்கங்களுக்காக நமது தனிப்பட்ட தரவை சுரண்டும் விதத்தில் நம்மை குருடர்களாகவும், செவிடர்களாகவும் ஆக்கியுள்ளன என்று எச்சரிக்கிறார், சுபோஃப். மேலும், இந்த “கண்காணிப்பு முதலாளித்துவம்” தனிநபர் தன்னாட்சியை குறைத்து ஜனநாயகத்தை வேரோடு அழிக்கிறது என்றும் கூறுகிறார்.

தரவு ஒரு பொருளாதார சந்தை

பெரும் தரவு பொருளாதாரம் (The Big Data Economy) 20-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரதானமான ஒன்றாக வளரத் துவங்குகிறது. சமீப காலங்களில், நமது பொருளாதாரம் தொழிற்சாலைகளில் பெருமளவிலான உற்பத்தி வரிசைகளில் இருந்து விலகி படிப்படியாக அறிவுசார் தொழில்நுட்பத்தை நம்பியிருக்கிறது. மறுபுறம், “கண்காணிப்பு முதலாளித்துவம்” டிஜிட்டல் உலகத்தை அடிப்படையாகக் கொண்ட வணிக மாதிரியை பயன்படுத்துகிறது. மேலும், பணம் சம்பாதிக்க “பெரும் தரவு”களையே நம்பியுள்ளது.

இந்த செயல்பாட்டில் பயன்படுத்தப்படும் தரவு பெரும்பாலும் அந்தந்த மக்களிடமிருந்து சேகரிக்கப்படுகிறது. அவர்களே அவர்களின் இலக்குகளாகவும் இருக்கின்றனர். உதாரணமாக, விளம்பரங்கள் மூலம் நம்மை குறிவைக்க கூகுள் தனிப்பட்ட ஆன்லைன் தரவுகளை நம்மிடமிருந்து சேகரிக்கிறது.அதன் மூலம் நமது விருப்பு வெறுப்புகள், தேடல்கள் ஆகியவற்றை அறிந்து கொண்டு நமக்கு தேவையான விசயத்தை கணக்கிட்டு அது தொடர்பான விளம்பரங்களை நம் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறது.

இதேபோல, பேஸ்புக் நமது தரவை வைத்து நாம் எப்படியான பொருளை வாங்க வேண்டும்; யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது போன்று சிந்தனையை நமக்கு தெரியாமலே நம்முள் கட்டமைக்கிறது. அதற்கேற்றாற் போன்ற பதிவுகள், காணொளிகள், போன்றவற்றை நமக்குத் தொடர்ச்சியாகக் காட்டுகிறது.

மூன்றாம் தரப்பு தரகர்கள் கூகுள் அல்லது பேஸ்புக் போன்ற தரவுகளை வைத்திருக்கும் நிறுவனங்களுக்கு நமது தரவை விற்பனை செய்கின்றனர். இந்த நிறுவனங்கள் பல்வேறு மூலங்களிலிருந்து தரவை வாங்குகின்றன. தனிநபர்கள் அல்லது தனிநபர்களின் குழுக்கள் பற்றிய தகவல்களை ஒருங்கிணைத்து பின்னர் அதை விற்கின்றன.

உதாரணத்திற்கு, கடந்த ஆண்டு ஹெல்த் என்ஜின் (HealthEngine), எனும் மருத்துவ முன்பதிவு செயலி, வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பெர்த் வழக்கறிஞர்களுடன் குறிப்பாக பணியிட காயங்கள் அல்லது வாகன விபத்துகள் போன்ற தகவல்களை பகிர்ந்து கொள்வது கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த காலங்களில் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா செயல்பாடுகள் இணைய நிறுவனங்கள் ஆன்லைன் செயல்பாட்டை எந்த அளவிற்கு கண்காணிக்கின்றன என்பதை எடுத்துக்காட்டுகின்றன. கேம்பிரிட்ஜ் அனலிடிகாவின் செயல்பாடுகள் பேஸ்புக்கின் சொந்த விதிகளையும்  மீறி கல்வி ஆராய்ச்சி என்ற போர்வையில் தரவுகளைச் சேகரித்து விற்றன. அவர்களின் கையாளுதல்கள் அமெரிக்காவில் தேர்தல் சட்டத்தையும் அது மீறியிருக்கலாம்.

கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்ஸ் நடவடிக்கைகள் கேள்விக்குரியவையாக இருந்தபோதிலும், கண்காணிப்பு முதலாளித்துவத்தின் பெரிய வியாபாரிகளாகவும், முன்னணி போட்டியாளர்களாகவும், பேஸ்புக், கூகுள் தங்களால் முடிந்தவரை, இன்னும் சட்டப்பூர்வமாக தகவல்களைச் சேகரித்து வருகின்றனர். அதில், அவர்களின் பயனர்கள், பயனர்களின் ஆன்லைன் நண்பர்கள் மற்றும் அவர்களின் ஆஃப்லைன் நண்பர்கள் (நிழல் விவரக்குறிப்பு ஆங்கிலத்தில் Shadow Profile என அழைக்கப்படும்) பற்றிய தகவல்களும் அடங்கும்.

நிழல் சுயவிவரம் என்பது குறிப்பிட்ட சமூக தளத்தில் அவர்கள் இல்லாதபோதும் அவரைப் பற்றி உருவாக்கப்பட்ட ஒரு சுயவிவரமாகும். இப்படியான தகவல்கள் அவர்களின் நண்பர் யாரோ ஒருவருடன் தொடர்பு கொண்டதால் அவர்களைப் பற்றி சில தரவுகள் சேமிக்கப்படலாம். இந்த தளங்கள் மற்றும் இதிலிருந்து சேகரிக்கும் தகவலும் பெரும் லாபம் ஈட்டுகின்றன.

“கண்காணிப்பு முதலாளித்துவம்” யாரால்? எங்கிருந்து வந்தது?

கண்காணிப்பு முதலாளித்துவத்தை முதலில் கூகுள் கையில் எடுத்தது. பொருட்களுக்கு புதிய சந்தைகளை உருவாக்க தரவுகளை பிரித்தெடுக்கும் நடைமுறைகள் மற்றும் தொகுக்கப்பட்ட பயனர்களின் தரவைப் பயன்படுத்தினர்.

தற்போது, மிகப்பெரிய நிறுவனகளான கூகுள், அமேசான், பேஸ்புக் மற்றும் ஆப்பிள் ஒன்றாக செய்கிறார்கள். அவர்கள் நமது செயல்பாடுகள் பற்றிய தரவுகளை சேகரித்து கட்டுப்படுத்துகிறார்கள். நமது தரவுகளை பண்டங்களாகவும் சேவைகளாகவும் மாற்றுகின்றனர். இது இந்த நிறுவனங்களுக்கு வியக்கத்தக்க வணிக வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில், அமேசான், மைக்ரோசாப்ட், ஆல்பாபெட் (கூகுள்), ஆப்பிள் மற்றும் பேஸ்புக் ஆகியவை சந்தை மூலதனமயமாக்கலின் மூலம் உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் முதல் ஆறு இடங்களில் இடம் பெற்றுள்ளன.

உதாரணமாக, கூகுள், சராசரியாக ஒரு வினாடிக்கு 40,000 தேடல்கள், ஒரு நாளைக்கு 3.5 பில்லியன் மற்றும் வருடத்திற்கு 1.2 டிரில்லியன். அதன் தாய் நிறுவனமான ஆல்பாபெட் சமீபத்தில் 822 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடையது.

நமது தரவு ஆதாரங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

புதிதாக கிடைக்கக்கூடிய தரவுகள், ஆதாரங்கள், தரவின் அளவு வியத்தகு முறையில் அதிகரித்துள்ளது. விரிவடைந்த தொழில்நுட்ப சந்தையில் தற்போது சென்சார்களை (Sensor) அடிப்படையாகக் கொண்ட பொருட்கள் அதிகரித்து வருவதுதான் காரணம்.

ஸ்மார்ட் வாட்ச், கூகுள் கிளாஸ், ஸ்மார்ட் ஹோம் சாதனங்கள், ட்ரோன்கள், சென்சார் இணைக்கப்பட்ட பொம்மைகள் மற்றும் தானியங்கி வாகனம் ஆகியவை அடங்கும். மைக்ரோஃபோன்கள், கேமராக்கள், ஆக்ஸிலரோமீட்டர்கள் மற்றும் வெப்பநிலை மற்றும் மோஷன் சென்சார்கள் போன்ற சென்சார்கள் சேகரிக்கப்பட்டு பண்டமாக்கக்கூடிய நமது செயல்பாடுகளின் (தரவு) பட்டியலில் கூடுதல் கவனம் பெறுகின்றது.

படிக்க :
♦ பெகாசஸ் ஸ்பைவேர் : உளவு மென்பொருள்களின் அரசன் !!
♦ பெகாசஸ் : சட்டரீதியாக எதிர்கொள்ள முடியுமா ?

பொதுவாகப் அணியக்கூடிய ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள் மற்றும் உடற்பயிற்சி கண்காணிப்புக் கருவி, நமது அன்றாட சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளின் ஒரு பகுதியாகவே மாறி வருகின்றது. நமது செயல்பாடுகள் மற்றும் பயோமெட்ரிக் தரவுகளைச் சேமித்து நமது உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி நிலையை தரவுகளாக மாற்றுகிறது.

இந்த தரவு சுகாதார காப்பீட்டு வழங்குநர்களுக்கு மிகவும் மதிப்பு வாய்ந்தவை. அமெரிக்காவில், சில காப்பீட்டு வழங்குநர்கள் காப்பீட்டிற்கு தகுதி பெறுவதற்கு பாலிசிதாரரின் சாதனத்திலிருந்து இந்த தரவையும் சமர்பிக்க வேண்டும்.

சென்சார் இணைக்கப்பட்ட பொம்மைகள் கண்காணிப்பு முதலாளித்துவத்துடன் மிகவும் தொடர்புடையவை. மற்றொரு வேகமாக வளர்ந்து வரும் சந்தையில் இவை முக்கிய இடம் வகிக்கின்றன. இந்த பொம்மைகளை மையமாக வைத்து குழந்தைகளின் தரவுகளை மற்றொரு மதிப்புமிக்க பொருளாக மாற்றி சந்தைப் படுத்துகின்றன.

ஓட்டுப் போடும் பெரியவர்கள் முதல் சிறு குழந்தைகள் வரை அனைவரின் தரவுகளும் பண்டங்கள் தான். அவை மனிதனின் தன்னாட்சியை, சுய சிந்தனையை இழக்கச் செய்து, பெரும் கார்ப்பரேட்டுகளின் நோக்கத்திற்கு ஏற்ப ஆடும்  பொம்மலாட்ட பொம்மைகளாக நம்மை மாற்றிவருகின்றன.

அறிவியல் பூர்வமான தொழில்நுட்பங்கள் முதலாளித்துவத்தின் கைகளில் சிக்கியிருக்கையில் அவை எவ்வளவு பெரிய மனிதப் பேரவலத்தை உண்டாக்கக் காத்திருக்கின்றன என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது !

சிந்துஜா சுந்தராஜ்
கட்டற்ற மென்பொருள் ஆர்வலர்
disclaimer

இந்திய குழந்தைகளின் வளர்ச்சியை பாதிக்கும் சாதிய பாகுபாடு !

சாதி பாகுபாடு இந்தியாவில் குழந்தை வளர்ச்சி மற்றும் ஊட்டச்சத்து நிலைமையை எவ்வாறு பாதிக்கிறது?

லகில் உள்ள வளர்ச்சி குன்றிய குழந்தைகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் உள்ளது. அதாவது, ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள், அவர்களின் வயதுக்கு ஏற்ப உயரம் உலகளாவிய வேறுபாட்டு விகிதத்தை விட (அதாவது ஏற்றுக்கொள்ளக் கூடிய வரம்பிற்கு) கீழே உள்ளது. வளர்ச்சி குன்றுதல் என்பது “ஊட்டச்சத்து குறைபாடு, மீண்டும் மீண்டும் தொற்று மற்றும் பொறுத்தமற்ற உளவியல் தூண்டுதலால் குழந்தைகள் அனுபவிக்கும் பலவீனமான வளர்ச்சி” என வரையறுக்கப்படுகிறது.

இது ஏன் முக்கியமான விசயமாகிறது? ஏனெனில் குழந்தைப்பருவத்தின் தொடக்கத்தில் உள்ள மோசமான ஆரோக்கியத்தின் குறியீடுகள் டீனேஜ் மற்றும் பெரும்பாலும் இளமைப் பருவத்திலும் தொடர்கின்றன. நோஞ்சான் மற்றும் வளர்ச்சி குன்றிய தன்மை என்பது ஒருவரின் பிந்தைய வாழ்க்கையில் உடல்நலக்குறைவு மற்றும் இறப்பு, தொற்று அல்லாத நோய்கள், கற்றல் திறன் மற்றும் உற்பத்தித்திறன்  போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும்  பாதகமான விளைவுகளுடன் தொடர்புடையதாக உள்ளது.

உலகளவில் நான்கில் ஒரு குழுந்தை வளர்ச்சி குன்றியதாக உள்ளது என்று   வகைப்படுத்தப்பட்டிருக்க, இது ஒரு உலகளாவிய உடல் நலம் சார்ந்த சவாலாக கருதப்படுகிறது.

படிக்க :
♦ குழந்தை வளர்ப்பை முரணின்றி ஆக்கப்பூர்வமாக நடைமுறைப்படுத்துவது எப்படி ?
♦ உங்கள் குழந்தைகளின் புன்முறுவல்கள் எவ்வளவு அழகாக உள்ளன !

இது உடனடி நலன் சார்ந்த மூன்று முக்கிய கேள்விகளை எழுப்புகிறது. ஒன்று, ஒரு வயது அல்லது ஐந்து வயதில் வளர்ச்சி குன்றியிருக்கும் ஒரு குழந்தை,  பருவ வயதில் வளர்ச்சி குன்றியிருக்கும் நிலையிலிருந்து விடுபட்டு வளர முடியும் என்பதற்கு என்ன வாய்ப்பு? வேறு வார்த்தைகளில் கூறுவதானால், எந்த அளவிற்கு வளர்ச்சி குறைபாடு தொடர்ந்து நீடிக்கும்? இரண்டு, வளர்ச்சி குன்றல் என்பது உடல்நலக் குறைவுக்கான புறநிலை யதார்த்த  குறியீடாக இருந்தாலும், அதன் பிற விளைவுகள் என்ன?

குறிப்பாக, மனித மூலதனம் மற்றும் அகம் சார்ந்த நலனுக்கான தாக்கங்கள் என்ன? மூன்று, வளர்ச்சி குன்றலுடன் தொடர்புடைய காரணிகளின் தொகுப்பு என்ன? வளர்ச்சி குன்றலின் சாத்தியம் வெறுமனே செல்வம் மற்றும் வருமானத்தின் விளைவாக இருக்கிறதா அல்லது கொள்கை தலையீடுகளுக்கு மிகவும் பொருத்தமான மற்ற காரணிகளை அடையாளம் காண முடியுமா?

எங்கள் சமீபத்திய ஆராய்ச்சியில் இந்தக் கேள்விகள் அனைத்தையும் ஆராய்ந்தோம். குறுகிய விடைகளாவன: ஒன்று, ஐந்து வயதில் கடுமையாக வளர்ச்சி குன்றிய குழந்தைகள் இந்தியாவில் 15 வயதில் 74% அதிகமாக வளர்ச்சி குன்ற வாய்ப்புள்ளது. அதாவது ஆரம்பகால குழந்தைப்பருவ வளர்ச்சி குன்றல் மிகவும் தொடர்ந்து நீடிக்கிறது.

இரண்டு, ஆரம்பகால குழந்தை பருவ வளர்ச்சி குன்றல் கணிதம் மற்றும் சொல்லகராதி ஆகியவற்றில் தகுதி பெறுதல் மற்றும் அறிவாற்றல் திறன்களை பாதிக்கிறது. அதேபோல் 15 மற்றும் 22 வயதில் அகநிலை சார்ந்த நல்வாழ்வை பாதிக்கிறது. வளர்ந்த நாடுகளின் ஆராய்ச்சி, குழந்தை பருவ வளர்ச்சி குன்றல் வேலைவாய்ப்பு மற்றும் ஊதியங்களையும் பாதிக்கும் என்று காட்டுகிறது.

இந்த கட்டுரையில் மூன்றாவது கேள்விக்கு நாங்கள் கவனம் செலுத்துகிறோம். ஆனால், நாம் அதற்கு செல்வதற்கு முன், நாம் ஒரு சர்வதேச சூழலில் இப்பிரச்சினையை  முன்வைக்க வேண்டும்.

இந்திய புதிர்

இந்தியாவில் வளர்ச்சி குன்றல் அதிகமாக ஏற்படுவது மட்டுமல்லாமல், சஹாரா ஆப்பிரிக்காவில் உள்ள 30 நாடுகளின் சராசரியுடன் ஒப்பிடுகையில், இந்திய வளர்ச்சி குன்றல் நிகழ்வுகளின் சராசரி அதிகமாக உள்ளது.

குழந்தையின் உயரம் பொதுவாக வறுமையுடன் எதிர்மறையாக தொடர்புடையது. ஏனெனில்  வளர்ச்சி குன்றல் – நோஞ்சான் குழந்தை என்பது நாள்பட்ட ஊட்டச்சத்து குறைபாட்டின் வெளிப்பாடுகளில் ஒன்றாகும். ஆகையால், இந்தியா சப்-சஹாராவை விட ஒரு பணக்கார நாடு என்பதால், சப்-சஹாரா ஆப்பிரிக்காவில் உள்ள குழந்தைகளை விட இந்திய குழந்தைகள் குட்டையாக இருப்பது எளிதில் புரிந்துகொள்ள முடியாது. இந்த புதிர், “இந்தியன் புதிர்” என்று அழைக்கப்படுகிறது. இந்த புதிர் தீர்க்க முயற்சித்த குறிப்பிடத்தக்க கல்வியியல் ஆய்வு கட்டுரை ஆவணங்களின் வடிவத்தில் தீவிர ஆய்வுக்கு வழிவகுத்தது (பொருளாதார அறிஞர்,  டீடன், 2007).

இந்த நிகழ்வுக்கான மேலோங்கிய விளக்கங்கள் பிறப்பு வரிசை மற்றும் மகன் விருப்பமாக (ஆண் பிள்ளை மோகம்) உள்ளது. (ஜெயச்சந்திரன் மற்றும் பாண்டே 2017): முதலாவதாக பிறந்த குழந்தைகள் வளர்ச்சி குன்றியதாக இல்லை. ஆனால், உயர சாய்வு (குள்ளமாதல்), குறிப்பாக பெண் குழந்தையாக இருந்தால்  இரண்டாவது குழந்தையிலிருந்து வினையாற்றுகிறது. பரவலாக இருக்கும் திறந்தவெளி மலம் கழித்தல், அதாவது, நோய் சூழல் (ஸ்பியர்ஸ், 2018); மற்றும் மரபணு வேறுபாடுகள் (பனகரியா, 2013). ஜெயச்சந்திரன் மற்றும் பாண்டே மற்றும் டீன் ஸ்பியர்ஸ் ஆகியோரால் வழங்கப்பட்ட சான்றுகள் மரபணு சார்ந்த விளக்கத்திற்கு எதிராக ஒரு தீவிரமான கேள்விக்குறியை எழுப்புகின்றன.

குழந்தையின் உயரத் தரவைப் பற்றிய எங்கள் முதல் பார்வை யாரும் உணராத ஒரு சித்திரத்தை வெளிப்படுத்தியது. மற்ற பல கட்டுரைகளில் கவனிக்கப்படாமல் இருப்பதைக் கண்டு நாங்கள் ஆச்சரியப்பட்டோம்.

படம் – 1

படம் 1 : துணை சஹாரா ஆப்பிரிக்காவில் உள்ள 30 நாடுகளின் தரவை உள்ளடக்கியது, அவை அந்த நாடுகளில் ஐந்து வயதுக்குட்பட்ட 132 மில்லியன் மக்கள் தொகை மற்றும் இந்தியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட 121 மில்லியன் மக்கள் தொகையை உள்ளடக்கியதாக ஒருங்கிணைந்துள்ளது. இந்தத் தகவல்கள் சமீபத்திய மக்கள் தொகை மற்றும் சுகாதார கணக்கெடுப்பின் (DHS) சமீபத்திய சுற்றிலிருந்து பெறப்பட்டவை; 2015-2016-லிருந்து இந்தியாவுக்கும், 2010-க்குப் பிறகு துணை-சஹாரா ஆப்பிரிக்காவிலிருந்தும் பெறப்பட்டவை.

படம் 1-இன் பேனல் A வயதிற்கான உயரத்தை குறிக்கிறது. *(HFA Z- ஸ்கோர்). இந்திய குழந்தைகள் HFA Z – மதிப்பெண் – 1.48 ஐக் கொண்டுள்ளனர், இது துணை – சஹாரா ஆப்பிரிக்காவின் சராசரி – 1.32-ஐ விட கூடுதலாக 0.16 நிலையான விலகல் அலகுகள் ஆகும். பேனல் பி-யில் வளர்ச்சி குன்றியத் தன்மையின் விகிதம் நேரடியாக குறிப்பிடப்பட்டுள்ளது: அதாவது, பி ஆனது உலக குறிப்பு சராசரிக்கு கீழே 2 நிலையான விலகல்களுக்கு மேல் உள்ள குழந்தைகளின் விகிதம். துணை சஹாரா ஆப்பிரிக்காவை விட இந்தியாவில் குழந்தை பருவ வளர்ச்சி குன்றிய தன்மை 13% அதிகமாக இருப்பதை இந்த குழு காட்டுகிறது (36 எதிராக 31%). படத்தின் இந்த பகுதி முன்னர் பார்க்கப்பட்ட கட்டுரையால் நன்கு அறியப்பட்டதாகவும் மற்றும் பரவலாக பகுப்பாய்வு செய்யப்பட்டதாகவும் உள்ளது.

இது, உலக சுகாதார அமைப்பால் நிர்ணயிக்கப்பட்ட குழந்தைகளின் சராசரி உயரத்திலிருந்து ஒரு குழந்தையின் உண்மையான உயரத்தின் நிலையான விலகல்களின்  எண்ணிக்கை..

காணாமல் போன  இணைப்பு: சாதிய சமூக அடையாளத்தின் பங்கு

இருப்பினும், இந்தியா-சப்-சஹாரா ஆப்பிரிக்காவின் ஒப்பீடு, இந்திய சமுதாயத்திற்குள் இருக்கும் முக்கியமான சமத்துவமின்மையை விவரிக்கிறது. படம் 1-இன் குழு C மற்றும் D-இல், துணை-சஹாரா ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவில் உள்ள நான்கு முக்கிய சமூக குழுக்களுக்கான சராசரி HFA Z-மதிப்பெண் மற்றும் வளர்ச்சி குன்றிய தன்மை விகிதங்களை நாங்கள் குறிப்பிடுகிறோம்: அதாவது, ஆதிக்க சாதி இந்துக்கள் (UC-இந்துக்கள்), பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் (எஸ்சி-எஸ்டி), பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) மற்றும் ஆதிக்க சாதி முஸ்லிம்கள் (யுசி-முஸ்லீம்கள், அதாவது தங்களை எஸ்சி அல்லது ஓபிசி என அடையாளப்படுத்தாத முஸ்லிம்கள்).: இந்த நான்கு வழி வகைப்பாடு இந்திய சமூகத்தின் இரண்டு முக்கிய பிளவுகளுக்கு (சாதி மற்றும் மதம்) வடிவம் கொடுக்கிறது..

படம் 1-ன் குழு சி, வளர்ச்சி குன்றிய தன்மை தொடர்பான விவாதத்தில் இதுவரை தவறவிட்ட ஒரு முறையை வெளிப்படுத்துகிறது: மேல் சாதி (UC) இந்துக்களைத் தவிர அனைத்து குழுக்களுக்கும் உயரக் குறைபாடு, துணை-சஹாரா ஆப்பிரிக்க குழந்தைகளுடன் ஒப்பிடும்போது அதிகமாக உள்ளது. குழு D அதே விஷயத்தை வித்தியாசமாக காட்டுகிறது: மேல்சாதி இந்து குழந்தைகளிடையே வளர்ச்சி குன்றியதன்மை விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் 31 சதவீத குழந்தைகள் வளர்ச்சி குன்றியுள்ளனர். மேல்சாதி-இந்து குழந்தைகள் 26% வளர்ச்சி குன்றிய நிலையில், துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் உள்ள குழந்தைகளை விட 5 சதவிகிதம் புள்ளிகள் குறைவாக இருப்பார்கள்.

எஸ்சி-எஸ்டி, ஓபிசி மற்றும் யுசி-முஸ்லீம் குழந்தைகளில் முறையே 40%, 36% மற்றும் 35% வளர்ச்சி குன்றியுள்ளது. இதனால், SC-ST, OBC-க்கள் மற்றும் UC- முஸ்லீம் குழந்தைகள் 14, 10 மற்றும் 9 சதவிகித புள்ளிகள் அல்லது 35-50%, UC- இந்து குழந்தைகளுடன் ஒப்பிடும்போது அதிக வளர்ச்சி குன்றியிருக்க வாய்ப்புள்ளது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்தியாவில் உள்ள சமூகக் குழுக்களிடையே குழந்தைகளின் உயரத்தில் உள்ள இடைவெளிகள் இந்தியா-சப்-சஹாரா ஆப்பிரிக்கா குழந்தை உயர இடைவெளியை விட இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகம். முழு இந்தியா-துணை-சஹாரா ஆப்பிரிக்காவின் குழந்தை உயர இடைவெளியானது பின்தங்கிய குழுக்களின் குறைந்த குழந்தை உயரத்தால் கணக்கிடப்படுகிறது.

படம் 1-இல் காட்டப்பட்டுள்ள வடிவங்கள் “ஏன் இந்திய குழந்தைகள் ஆப்பிரிக்க குழந்தைகளை விட குறைவாக இருக்கிறார்கள்” என்ற கேள்வியானது” இந்தியாவிற்குள் உள்ள சமூக குழுக்களுக்கு இடையில் குழந்தையின் உயரத்தில் உள்ள இடைவெளிகள் ஏன் அதிகமாக உள்ளன?” என்ற கேள்வியால் மாற்றீடு செய்யப்பட வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகிறது.

நாங்கள் எங்கள் சமீபத்திய ஆய்வில் இதைப் பற்றி பேசுகிறோம். இந்தத் தரவு விவரணையில், இந்தியாவில் குழந்தைப்பருவ வளர்ச்சிக் குறைபாட்டில் சில முக்கிய அம்சங்களை நாங்கள் முன்வைக்கிறோம்.

மாவட்டங்கள் மற்றும் சமூக குழுக்கள் முழுவதும் வளர்ச்சி குன்றலில் மாறுபாடு

வளர்ச்சி குன்றிய தன்மை நிகழ்வுகளில் துணை தேசிய மாறுபாட்டை நாம் ஆராயும்போது, பிராந்திய மற்றும் சமூக குழு மாறுபாடுகளைக் காண்கிறோம். 2015-2016-க்கான தேசிய குடும்பம் மற்றும் சுகாதார கணக்கெடுப்பின் மதிப்பீடுகளை நாங்கள் வழங்குகிறோம் (NFHS-4).

அட்டவணை 1 வளர்ச்சி குன்றியதன்மை நிகழ்வுகள் வாரியாக சமூக குழு வாரியாக மாவட்டங்களின்  வளர்ச்சி குன்றியதன்மை எண்ணிக்கை மற்றும் பங்கை  காட்டுகிறது. இவை படம் 2-ம் காட்டப்பட்டுள்ளன. இது வண்ண-குறியிடப்பட்ட வெப்ப வரைபடங்களை மாவட்ட மற்றும் சமூக குழுக்களின் சராசரி விகிதத்தின் இடஞ்சார்ந்து ஏற்படுவதை காட்டுகிறது. அங்கு மெல்லிய கருப்பு கோடுகள் மாவட்ட எல்லைகளையும் மற்றும் அடர்த்தியான கருப்பு கோடுகள் மாநில எல்லைகளையும் மற்றும் நிறத்தின் அடர்த்தி வளர்ச்சி குன்றிய தன்மையின் பரவல் அதிகரித்து வருவதையும் குறிக்கிறது.

அட்டவணை 1 SC-ST குழந்தைகளுக்கு, 15 மாவட்டங்களில் (2.65%), வளர்ச்சி குன்றிய தன்மையின் சராசரி நிகழ்வு 0 முதல் 20% வரை உள்ளது; 90 மாவட்டங்களில் (15.93%) இது 20-க்கும் அதிகமாகவும் 30%-க்கு சமமாகவும் அல்லது குறைவாக உள்ளது; 171 மாவட்டங்களில் (30.27%) இது 30-க்கும் அதிகமாகவும், 40%-க்கும் குறைவாகவும் உள்ளது; 157 மாவட்டங்களில் (27.79%), இது 40-க்கும் அதிகமாகவும், 50%-க்கும் சமமாகவும் அல்லது குறைவாகவும் உள்ளது; மற்றும் 132 மாவட்டங்களில் (23.36%), இது 50%-க்கும் அதிகமாக உள்ளது. பிற சமூகக் குழுக்களுக்கு வளர்ச்சி குன்றியத் தன்மை அடுக்கு வீதத்தில் இடஞ்சார்ந்த மாறுபாட்டைக் காட்டும் மாவட்டங்களின் தொடர்புடைய எண் மற்றும் பங்கை அட்டவணை 1-ல் காணலாம்.

தொகுப்பாக, 40%-க்கும் அதிகமாக வளர்ச்சி குன்றும் தன்மை (அதாவது மிக அதிகமாக)  உள்ள மாவட்டங்களின் விகிதாச்சாரம் UC இந்துக்களுக்கு 15%; OBC-களுக்கு 37%; SC-ST-க்கு 51% மற்றும் UC முஸ்லீம்களுக்கு 57% ஆகும்.

படம் – 2

படம் 2, பிராந்திய வடிவங்களின் அடிப்படையில், பீகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் எஸ்.சி-எஸ்.டி அதிகமாக உள்ள பகுதிகளில் மிகவும் தெளிவான வடிவத்தைக் காட்டுகிறது. வடக்கு மற்றும் மத்திய சமவெளிகள் பெரும்பாலும் சிவப்பு நிறத்தில் உள்ளன. இன்னும் குறிப்பாக, BIMARU பிராந்தியத்தில் உள்ள SC-ST குழந்தைகளுக்கு, 195 அல்லது 84% மாவட்டங்களில், வளர்ச்சிகுன்றல் பாதிப்பு 40%-க்கும் அதிகமாக உள்ளது; மேலும் 105 அல்லது 44.49% மாவட்டங்களில் பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகள் வளர்ச்சி குன்றியுள்ளனர்.

BIMARU பகுதி தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளுக்கு முற்றிலும் மாறுபட்டது; அனைத்து சாதி குழுக்களிலும் இத்தகைய தீவிர நிலை தடுமாற்றம் குறைவாக இருப்பது மட்டுமல்லாமல் சாதி குழுக்களில் உள்ள வேறுபாடுகளின் அளவு மிகவும் குறைவாக உள்ளது. ஆதிக்க சாதியினருக்கு, பிமாரு பிராந்தியத்தில், 38(16) சதவிகித மாவட்டங்களில் மட்டும், 40(50) சதவிகிதத்திற்கும் அதிகமாக வளர்ச்சி குன்றல் பாதிப்பு உள்ளது.

ஓபிசி மற்றும் ஆதிக்க சாதி முஸ்லீம்களுக்கு, பிமாரு பிராந்தியத்தில், முறையே 61% மற்றும் 71% மாவட்டங்களில் வளர்ச்சி குன்றும் பாதிப்பு 40%-க்கும் அதிகமாக உள்ளது.

சமூக குழுக்களுக்கும் பிராந்தியங்களுக்கும் இடையிலான இடைவெளிகளுக்கு வடிவம் கொடுப்பது என்ன?

சாதி இடைவெளிகளாக நாங்கள் வகைப்படுத்துவது வெறுமனே சமூக-பொருளாதார  கூறுகளில் உள்ள வேறுபாடுகள்தானா என்று பல வாசகர்கள் கேட்டனர். இது உண்மையாக இருந்தால், சூழ்நிலைகளில் உள்ள வேறுபாடுகள் சாதி குழுக்களுக்கிடையேயான குழந்தையின் வளர்ச்சி இடைவெளிகளை விளக்க வேண்டும்.

எங்கள் ஆராய்ச்சியில், இந்த காரணிகளை முதலில் ஆராய்வதன் மூலம் தொடங்குகிறோம்.

குழந்தையின் உயரத்தை பாதிக்கும் ஐந்து முக்கிய காரணிகளை நாங்கள் அடையாளம் காண்கிறோம் :

(i) சுகாதாரம் கிடைக்கப் பெறாமை முக்கியமாக இரண்டு விவகாரங்களால் மாறுபடுகிறது : கழிப்பிட வசதி இன்றி வயலிலோ புதர்களிலோ மலம் கழிக்கும் நிலை. அடுத்ததாக திறந்த வெளியில் மலம் கழிக்கும் ஒரு சூழல், அதனால் பாதிப்புக்கு ஆளாவது;
(ii) தாயின் மனித வளம், இரண்டு குறியீடுகளால் அளவிடப்படுகிறது: பள்ளியில் படித்த காலம் மற்றும் வாசிக்கும் திறன்;  இது உண்மையான சோதனை மூலம் அளவிடப்படுகிறது;
(iii) HFA Z- மதிப்பெண், உயரத்திற்கு ஏற்ற எடை (WFH) – Z மதிப்பெண் மற்றும் வயது ஆகியவற்றால் கணக்கிடப்படுகிற தாயின் மானுடவியல் நிலை;
(iv) சொத்து குறியீட்டு காரணி மதிப்பெண்ணால் அளவிடப்படுகின்ற சொத்து வேறுபாடுகள்; மற்றும்
(v) வீட்டு சொத்தில் பாகம் ஒதுக்கீடு மற்றும் கருவுறுதல் முடிவுகள், பிறப்பு வரிசை மற்றும் உடன்பிறப்புக்களின்  எண்ணிக்கை  ஆகியவற்றால்  நடக்கக்கூடியது.

படம் – 3

குழந்தைகளின் உயரத்தை பாதிக்கும் உப வேறுபாடுகளை பெரிய குழுக்களுக்கிடையிலான வேறுபாடுகளைக் காண்கிறோம். குறிப்பாக ஆதிக்கசாதி  இந்துக்களுக்கும் SC-ST-க்கும் இடையில் வேறுபாடுகளை காண்கிறோம். 23% ஆதிக்கசாதி இந்துக்களுடன் ஒப்பிடும்போது ஒரு சிலரை முதன்மைபடுத்தி முன்னிறுத்த, 58% எஸ்சி-எஸ்டி குடும்பங்கள் கழிப்பறை வசதி கிடைக்கப்பெறாமல் ஒரு புதர் அல்லது வயலில் திறந்தவெளியில் மலம் கழிக்க தள்ளப்படுகின்றன; யூசி-ஹிந்துக்களுக்கு தாய்வழி கல்வியறிவு 83%, SC-ST-க்கு 51%; எஸ்சி-எஸ்டி தாய்மார்கள் 5.26 ஆண்டுகள் பள்ளிப் படிப்புடன் ஒப்பிடுகையில் யுசி-ஹிந்து தாய்மார்களுக்கு 9.47; மற்றும் SC-ST தாய்மார்களின்  HFA Z-மதிப்பெண் -2.15 உடன் ஒப்பிடும்போது, UC – இந்து தாய்மார்களின் சராசரி HFA Z – மதிப்பெண் – 1.82 ஆக உள்ளது.

வளரும் சூழ்நிலைகள் தலித் மற்றும் ஆதிவாசி (SC-ST) குழந்தைகளுக்கு மிகவும் பாதகமானவையாக இருக்க, ஆதிக்க சாதி மற்றும் தலித் குழந்தைகள் வளரும் சூழலில் தெளிவாக பெரிய மற்றும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. சமூக-பொருளாதார  கூறுகளில் உள்ள இந்த வேறுபாடுகள் சமூக குழுக்களுக்கிடையேயான குழந்தையின் உயர இடைவெளியை விளக்குகிறதா?

ஒத்ததை ஒத்ததுடன் ஒப்பிட்டு பார்க்கும் ஒரு வழிமுறையான எண்ட்ரோபி பேலன்சிங்கைப் பயன்படுத்தி, ஆதிக்க சாதி மற்றும் தலித் குழந்தைகளின் “பொருந்திய” மாதிரிகளில் வளர்ச்சி குன்றியதன்மையில் உள்ள வேறுபாடுகளை நாங்கள் ஆராய்கிறோம். அதாவது பல்வேறு பெரிய பரிணாமங்கள் நெடுக தங்களுடைய அரசியல் பொருளாதார பண்பு கூறுகள் பொருந்துகின்ற குழந்தைகள். BIMARU மாநிலங்களில் எங்கள் பொருந்திய மாதிரியில், SC-ST மற்றும் OBC குழந்தைகள் மேல்-சாதி குழந்தைகளை விட வளர்ச்சி குன்றி இருப்பதைக் காண்கிறோம். தாழ்த்தப்பட்ட சாதியினரின் குழந்தைகளிடையே அதிக வளர்ச்சி குன்றியிருப்பது ஒப்பீட்டளவில் அவர்களின் மிகவும் பின்தங்கிய சூழ்நிலைகளால் மட்டுமல்ல என்று இது அறிவுறுத்துகிறது.

யூசி மற்றும் தலித் (எஸ்சி) குழந்தைகளுக்கு இடையேயான இடைவெளிகள் சமூக பாகுபாடுகளால் பாதிக்கப்படுவதாக நாங்கள் பரிந்துரைக்கிறோம். இது சட்டவிரோதமான ஆனால், பரவலான தீண்டாமை நடைமுறையில் வெளிப்படுகிறது. தீண்டாமையின் சுய-அறிக்கை நடைமுறை அதிகமாக உள்ள மாவட்டங்களில் தலித் குழந்தைகளின் உயரம் குறைபாடு அதிகரிக்கிறது. தீண்டாமை மற்றும் குழந்தை உயரம் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை மதிப்பிடுவதற்கு இந்திய மனித மேம்பாட்டு கணக்கெடுப்பின் (IHDS 2012) தரவை நாங்கள் பயன்படுத்துகிறோம்.

படிக்க :
♦ NEP -2020 : ஒளிந்திருக்கும் சாதியமும் ஆணாதிக்கமும் | பேரா. அனில் சத்கோபால்
♦ சாராஸ் திரைப்படம் : குழந்தைப் பேறு வரமா ? சாபமா ? || ராஜசங்கீதன்

தீண்டாமை நடைமுறையில் உள்ள பகுதிகளில் தலித் குழந்தைகளின் HFA Z-மதிப்பெண் கடுமையாக குறைகிறது என்பதை படம் 3 காட்டுகிறது. மாறாக, உயரம்/நாள்பட்ட ஊட்டச்சத்து குறைபாடு நிலைகளுக்கும், தீண்டாமையை எதிர்கொள்ளும் குடும்பங்களின் விகிதாச்சாரத்திற்கும், ஆதிக்க சாதி குழந்தைகளுக்கு எந்த தொடர்பும் இல்லை.

மேலும், குழந்தை முன்னேற்றத்தின் முழுப் பாதையிலும் உள்ள தீண்டாமை நடைமுறையின் தாக்கத்தையும் நாங்கள் ஆராய்கிறோம். எங்களது முடிவுகள், தீண்டாமை கடைபிடிக்கும் குடும்பங்கள் அதிகம் உள்ள பகுதிகள்தான் தாழ்த்தப்பட்ட சமூக  தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் முழு அளவிலான பிரசவ கால மற்றும் பிரசவத்திற்கு  பிந்தய சுகாதார வசதிகளை பெறவோ அல்லது பயன்படுத்தவோ வாய்ப்பில்லாத பகுதிகளாக உள்ளன.

முடிவுரை

குழந்தை உயரத்தில் சாதிய இடைவெளிகள் (யாரும் குறித்து சொல்லவில்லை) முற்றிலும் வர்க்கம் அல்லது சமூக பொருளாதார நிலைகளின் ஒரு பிரதிபலிப்பு இல்லை என்று எங்களது ஆய்வு முடிவுகள் காட்டுகிறது. சாதிய குழுக்கள் குழந்தைகளின் உயரத்தை நிர்ணயிக்கிற விரிவான மாறிகளின் தொகுப்பில் வேறுபடுகையில், அதே கோவாரியட்டுகளின் சமநிலையில் இருக்கும் மாதிரிகளை ஒப்பிடும்போதும் கணிசமான இடைவெளிகள் இருப்பதை நாங்கள் காட்டுகிறோம்.

ஆதிக்க மற்றும் தாழ்த்தப்பட்ட சாதி (தலித்) குழந்தைகளுக்கிடையிலான உயர இடைவெளியோடு தீண்டாமை நடைமுறை தொடர்புடையது என்பதை ஆதாரங்கள் ஐயத்திற்கிடமின்றி எடுத்துக்காட்டுகின்றன. குறிப்பாக, தீண்டாமை நடைமுறையில் உள்ள வேறுபாடு ஆதிக்கசாதி குழந்தைகளின் உயரத்தை பாதிப்பதில்லை.

ஆனால், தீண்டாமை தொடர்பான நடைமுறைகள் அதிகமாக பரவுவது தலித் குழந்தைகளின் குறைந்த உயரத்துடன் தொடர்புடையது. முடிவுகள், இன்னும் கூடுதலாக, தாழ்தப்பட்ட சாதிய குழுக்களில் இருந்து வரும் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு சேவை வழங்குவதில் பாதிப்பை ஏற்படுத்தும் பாரபட்சமான நடைமுறைகளுக்கான பங்கை குறிப்பிடுகிறது. இதன் விளைவாக தாழ்த்தப்பட்ட சாதி குழந்தைகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.

குறிப்பு: இக்கட்டுரை பொருளாதார தரவு மற்றும் பகுப்பாய்வு மையத்திற்காக (CEDA) எழுதப்பட்ட தரவு விவரணையை அடிப்படையாகக் கொண்டது. CEDA  வெளியிடப்பட்ட பிறகு வாசகர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு உரையாற்ற அசல் பகுதி மாற்றப்பட்டுள்ளது.

ஆசிரியர் குறிப்பு : அஷ்வினி தேஷ்பாண்டே அசோகா பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராக உள்ளார். ராஜேஷ் ராமச்சந்திரன் ஹைடெல்பெர்க் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வாளர்.


கட்டுரையாளர் : அஷ்வினி தேஷ்பாண்டே
தமிழாக்கம் : முத்துக்குமார்
செய்தி ஆதாரம் : The Wire

ஆகஸ்ட் 15 : கார்ப்பரேட்டுகளுக்கான சுதந்திரம் ! மக்களுக்கு அல்ல || புமாஇமு கூட்டம்

1

”ஆகஸ்ட் – 15 சுதந்திரமா? அடிமைத் தனமா?” என்ற தலைப்பில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பாக அறைக்கூட்டம் 15.8.2021 மாலை 6 மணிக்கு பென்னாகரத்தில் நடைப்பெற்றது.

புமாஇமு மாவட்ட அமைப்பாளர், தோழர் சத்தியநாதன் தலைமை தாங்கினார். அவர் உரையில், இன்று இந்தியாவில் யாருக்கு சுதந்திரம் இருக்கிறது. இந்த நாட்டை கொள்ளை அடிக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும், காவி பாசிஸ்டுகளுக்கும் சுதந்திரம் உள்ளது. மக்களுக்கு உரிமைகளை கேட்டு போராடுவதற்கும், விவசாயிகள் போராடுவதற்கும் சுதந்திரம் இல்லை.

கல்வியை காவிமயமாக மாற்றம் செய்து, நீட், புதியக் கல்வி கொள்கை ஆகியவற்றை மாணவர்கள் மீது கட்டாயமாக திணித்து வருகிறது மோடி அரசு. பொதுத்துறைகளை சூறையாடி நாட்டை கொள்ளையடித்து, சீரழித்து வருகிறது. நாடாளுமன்றங்களில் தொடங்கி நாடு முழுவதும் மதவெறியை தூண்டுவது, “ஜெய் ஸ்ரீ ராம்” என்ற முழக்கத்தை வைத்து சிறுபாண்மை மக்களை மதரீதியாக பிளவுபடுத்துவது, எதிர்த்துப் போராடுபவர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து சிறையில் அடைப்பது, கொடூரச் சட்டங்களை இயற்றி பொதுச் சொத்துகளை  கார்ப்பரேட்டுகளுக்கு திறந்துவிடுவது என்கிற பாசிச வேலையை செய்து கொண்டே, இதுதான் தேசபக்தி என மக்களை பிளவுபடுத்தி வருகிறது மோடி கும்பல்.

நமக்கு இன்று ஒரே பாதைதான் இருக்கிறது. அது பகத்சிங் வழியிலான பாதை, இது கார்ப்பரேட்டுகளுக்கான சுதந்திரம், மக்களுக்கு போலி சுதந்திரம், அடிமைத்தனம் இதில் நமக்கென்ன கொண்டாட்டம்? என்பதை விளக்கி தலைமை உரையை நிறைவு செய்தார்.

This slideshow requires JavaScript.

அடுத்ததாக சிறப்புரை ஆற்றிய மக்கள் அதிகாரம், மண்டல குழு உறுப்பினர், தோழர் அருண், தனது உரையில், 1947-ல் நடைப்பெற்ற நாடகத்தைதான் சுதந்திரம் என்று கொண்டாடுகிறார்கள். உண்மையில் என்ன நடந்தது?

இந்தியாவில் புரட்சிகரமான மாற்றம் வந்துவிட்டால் நாம் கொள்ளை அடிக்க முடியாது என்பதால் தனக்கு ஏற்ற அடிமைகளை உருவாக்கி வைத்தனர். நேரு போன்ற தேர்ந்தெடுத்த அடிமைகளை கொண்டு புதிய வகையில் மாற்றம் கொண்டுவந்தது பிரிட்டிஷ். நாட்டின் விடுதலைக்காக எண்ணற்ற உழைக்கும் மக்கள் போராடி உயிர்நீத்துள்ளனர். பல ஆயிரம்பேர் சிறையில் அடைக்கபட்டு, சித்திரவதை செய்யப்பட்டு மிகக்கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இப்படி பல ஆயிரம் பேரின் உயிர்த்தியாகத்திலும் இந்திய சுதந்திரத்தை சோசலிச கனவுகளோடும் போராட்டத்தில் ஈடுப்பட்ட பகத்சிங்கும் அவரது சகதோழர்களும் உயிர் தியாகம் செய்தனர்.

இப்படி பலரின் தியாகத்தை மறைத்து பிரிட்டிஷுக்கு எதிரான புரட்சிகர எழுச்சிகளை அகிம்சை என்ற பெயரில் முடக்கிய காந்தியை மட்டும் முன்நிறுத்தி இன்று கொடியேற்றி இனிப்பு கொடுக்கின்றனர். 1947-ல் நாம் பெற்றதாக சொல்வது சுதந்திரமே அல்ல, அது அதிகார மாற்றம், மற்றொரு அடிமைதனத்தை நம் மீது திணித்த நாள் என்பதை வரலாற்று பூர்வமாக விளக்கி பேசினார். இறுதியாக புமாஇமு தோழர் வினய் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

தகவல்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தருமபுரி மாவட்டம்,
6384569228.

மீன் வளத்தையும் மீனவர்களையும் அழிக்க வரும் கடல் மீன்வள மசோதா !

0

டந்து முடிந்த – இல்லை.. இல்லை.. பாஜக பாசிச கும்பலால் விரைவாக முடித்துக் கொள்ளப்பட்ட நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் ஒன்றிய அரசு அறிமுகம் செய்யவிருந்த 20-க்கும் மேற்பட்ட மசோதாக்களில் ஒன்றான தேசிய கடல் மீன்வள (ஒழுங்காற்று) மசோதா (2021) பெருவாரியான மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீனவர்கள் என்றால் நமக்கெல்லாம் நினைவுக்கு வருவது படகோட்டி திரைப்படத்தில் வரும் “கடல்மேல் பிறக்க வைத்தான், எங்களை கண்ணீரில் மிதக்கவிட்டான்” என்ற பாடல் வரிகளே. கரையில் மட்டுமல்ல, கடலிலும் வாழத் தகுதியற்றவர்களாக மீனவர்களை மாற்றுவதே இந்த கடல் மீன்வள மசோதா.

இம்மசோதாவின் படி, மீனவர்கள் 12 கடல் மைல்களுக்கு உட்பட்டே மீன்களை பிடிக்க வேண்டும். அதேவேளையில் எந்த வகையான மீன்களை பிடிக்கப்போகிறார்கள் என்பதையும் முன் கூட்டியே அரசு அதிகாரிகளிடம் பதிவு செய்துவிட்டு செல்ல வேண்டும்.

படிக்க :
♦ மீன்பிடி ஒழுங்குமுறை மசோதா: மீனவர் மீதான இந்திய அரசின் போர்!
♦ மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் எண்ணூர் ஆலைகள் ! | படக்கட்டுரை

கரையில் அரசு அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்ட மீன் வகைகளை மட்டுமே பிடிக்க வேண்டும். இதை மீறினால் முதல்முறை அபராதமும்; இரண்டாவது முறை அபராதத்துடன் கூடிய சிறைத் தண்டனையும்; மீன்றாவது முறையும் மீறினால் படகு பறிமுதல் செய்யப்படும்; மீண்டும் தொழில் செய்ய முடியாதபடி நடவடிக்கை எடுக்கப்படும் அல்லது முடக்கப்படும்.

அப்படியென்றால் மீதமுள்ள கடல் மைல்களில் யார் மீன் பிடிப்பார்கள்? ராட்சத பகாசுரக் கம்பெனிகளும் அதன் ராட்சதக் கப்பல்களும் வலைகளும் தான். இவைகளன்றி மீன் பிடி தொழிலில் ஈடுபடும் (கட்டுமரப்படகு, நாட்டுப்படகு) எந்திர நாட்டுப்படகு, எந்திரப்படகு, விசைப்படகு என்ற 3 வகையினரை பெரும் அளவில் பாதிக்கும்.

மேலும், 12 கடல் மைல் தொலைவுக்குள் மட்டும்தான் மீன் பிடிக்க வேண்டும் என்ற நிபந்தனை. இதனால் முதலீடு, பராமரிப்பு செலவுகளுக்கேற்ற வருவாய் இருக்காது. நடுக்கடலுக்கு செல்லும்போது மட்டுமே இதற்கான வருவாயை எட்ட முடியும்.

கரையில் ஒப்புக் கொண்டபடி, இந்த வகை மீன்களைதான் பிடிக்க வேண்டும். மற்ற மீன் வகைகள் கிடைத்தாலும் திருப்பி கடலிலேயே விட்டு விட வேண்டும் என்பது கவைக்கு உதவாது. ஏனெனில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் கடலின் சூழலுக்கேற்ப பலவகை மீன்கள் வாழவே செய்யும். அவைகள் அனைத்தும் வலையில் சிக்கவே செய்யும். இவற்றை தவிர்க்க முடியாது. இவைகளை திருப்பி விட வேண்டும் என்ற நிபந்தனை மீனவர்களின் முதலீட்டிற்கான வருவாயை தடை செய்து; அவர்களின் வாழ்வுரிமையை பறிப்பதாகவே அமையும்.

இதைவிடக் கொடுமை மசோதாவின் விதிமுறைக்கு உட்பட்டு நடக்கவில்லையெனில் அபராதம், அதையும் மீறினால் அபராதத்துடன் கூடிய சிறைத் தண்டனை, தொழில் முடக்கம். இதன்மூலம் மீன்களின் வாழ்வுரிமையைப் பறித்து தற்கொலைக்கு தள்ளும். இதைவிட வக்கிரம் வேறு என்ன இருக்க முடியும்?

இத்தகைய சட்டங்களும், மசோதாக்களும் நம் கடலின் மீன் வளத்தை நம் நாட்டு மீனவர்களுக்கும், மக்களுக்கும் சேர்க்க தகுதியற்றது என்பதை நிறுவுகிறது. இது இன்று மட்டும் நடந்த நிகழ்வல்ல.

இதற்கான அடிக்கல்லை தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கை அறிவிக்கப்பட்ட 1991-லேயே நாட்டப்பட்டது. தேசிய மீன்வளக் கொள்கையின் கீழ் கூட்டு மீன்பிடி திட்டத்தின் அடிப்படையில் வெளிநாட்டு கப்பல்களுக்கு மீன் பிடி உடிமம் வழங்கியதன் தொடர்ச்சியே இது.

ஆனால், அன்றைய தினத்தில் இத்திட்டத்தை எதிர்த்து நாடு தழுவிய அளவில் மீனவர்கள் நடத்திய போராட்டத்தின் விளைவு அன்றைய நரசிம்மராவ் அரசால் வாபஸ் பெறப்பட்டது. இதற்கு முன்பும், பின்பும் பல்வேறு ஒழுங்காற்று மசோதாக்கள் கொண்டு வரப்பட்டும் மீன்வர்களின் அயராதப் போராட்டங்களினால் அவை தோல்வியையே தழுவி இருக்கின்றன. குறிப்பாக தற்போது 2021-ல் கொண்டு வரப்போகும் மசோதா ஏற்கனவே 2009, 2019-ல் கொண்டு வரப்பட்டு மீன்வர்களின் பரவலான எதிர்ப்பால் கைவிடப்பட்டன.

இது மீனவர்கள் பிரச்சனை என்று நாம் ஒதுங்கி இருக்க முடியாது. போராடியாக வேண்டும். ஏனெனில் நம் அனைவரின் அன்றாட உணவோடு தொடர்புடைய மீன் பிடி தொழிலில் பகாசுரக் கம்பெனிகளின் ராட்சத கப்பல்களை அதன் வலைகளை அனுமதித்தால், நாம் விரும்பி உண்ணும் பலவகை மீன்கள், ‘புத்தம் புதியதாகக்’ கிடைக்காது. அவைகளை அவர்கள் கப்பலிலேயே சுத்தம் செய்து டப்பாக்களில் அடைத்து அங்கிருந்தே தேவைப்படும் சந்தைகளுக்கு அனுப்பி விடுவார்கள். வேண்டுமானால் டப்பாவில் அடைக்கப்பட்ட மீன்களும், குளம், குட்டைகளின் மீன்களும்தான் நமக்கு கிடைக்கும். தரமான மீன்களை நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாது.

பன்னாட்டு கார்ப்பரேட் மீன் பிடி கப்பல்கள், ராட்சத வலைகள் மூலம் முட்டைகள், குஞ்சுகள், தாய் மீன்கள், இறால்கள் அனைத்தையும் சேர்த்து அள்ளி விடுவார்கள். இதனால், மீன்வளம் அடியோடு அழிந்து, மீன் உற்பத்தியையே தடை செய்யப்படும். இதுதான் தனியார்மய தாரளமய உலகமயத்தின் சாதனை; நமக்கோ வேதனை. அதே வேளையில் நம்முடைய மீனவர்களோ, வலையில் சிக்கும் தாய் இறால்களையும் மீன்களையும் மீண்டும் கடலிலேயே விட்டுவிடுவார்கள். அவர்கள் வலையில் குஞ்சுகளும் முட்டைகளும் சிக்காது. அப்படியே ஒரு சில நேரங்களில் குஞ்சுகளும் முட்டைகளும் சிக்கினாலும் அவைகளை மீண்டும் கடலிலேயே விட்டு விடுவார்கள். ஆகையால் மறுஉற்பத்திக்கு தடை ஏற்படாது. மீன்வளம் அழியாது.

நாட்டையும் மக்களையும் பாதிக்கும் இது போன்ற மசோதக்களை ஏன் ஆட்சியாளர்கள் கொண்டு வரவேண்டும் என்று கேள்வி எழலாம். இதற்கு பதில் நமது ஆட்சியாளர்களும், ஆளும் வர்க்கமும் மறுகாலனியாக்கத்திற்கு கோடாரி கொம்பாக மாறியதன் விளைவே ஆகும்.

இதற்கு எதிராக இதுவரை பல்வேறு போரட்டங்கள் நடத்ததையும் கண்டோம். இனிமேல் போராட்டத்தை தொடர்ச்சியாக – இடைவிடாமல் நடத்திதான் ஆக வேண்டும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. தற்போது கூட தமிழகத்தில் 20,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை நிறுத்ததையும், ஊர்வலத்தையும், ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியுள்ளனர். இருப்பினும் இவைகளை விட இன்னும் மூர்க்கமாக நடத்த வேண்டிய தேவை உள்ளது. ஏனெனில் தற்போது நடக்கும் அதானி, அம்பானி கும்பலால் RSS, BJP தலைமையில் நடத்தப்படும் பாசிச ஆட்சி இதற்கெல்லாம் (தற்போதையப் போராட்டங்களுக்கு எல்லாம்) அசைந்து கொடுக்காது.

படிக்க :
♦ கொழும்பு துறைமுக நகரம் : சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் இலங்கை !
♦ சிறு துறைமுகங்கள் மற்றும் ஆழ்கடல் வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் மோடி அரசு !

லட்சக்கணக்கான விவாசாயிகள் மாத கணக்கில் போராடியும் 300-க்கு மேற்பட்ட விவசாயிகள் உயிரைப் பறி கொடுத்தும் வளைந்து கொடுக்காததோடு, கொடூரமாக ஒடுக்கவும் செய்தது மோடி அரசு. எனவே, மீனவர்கள மட்டுமல்லாமல். விவசாயிகள், தொழிலாளர்கள் அதே பிரிவினர் அனைவரையும் பாதிப்புக்கு உள்ளாக்குவது இந்த தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைதான் என்பதை நினைவில் நிறுத்தி அனைத்துப் பிரிவு மக்களும் ஒருங்கிணைந்த வகையில் குறிப்பாக ஆட்சியாளர்களுக்கு நிர்பந்தத்தை ஏற்படுத்தும் வகையில் போராடினால் ஒழிய இதற்கு விடிவும் பிறக்காது. இக்கோடரிக் கொம்பான பாசிசக் கும்பலை விழ்த்தவும் முடியாது.

கதிரவன்

இயற்கை அழிவிற்கு காரணம் உழைக்கும் மக்களா ? கார்ப்பரேட் முதலாளிகளா?

.நா இனியான உலகின் கதையை அறிவிக்கும் அறிக்கையை வெளியிட்டுவிட்டது. ‘தலைக்குமேலே வெள்ளம்போனால் சாண் என்ன முழம் என்ன’ என்கிற கதையை எட்டிவிட்டோம்.

காலநிலை மாற்றம் தீவிரப்படுவதற்கான முக்கியமான பிரச்சினை எங்கு இருக்கிறது தெரியுமா? காலநிலை மாற்றம் குறித்த உரையாடல்களில் இருக்கின்றன.

உரையாடல் 1 :  கார்பன் வாயு உமிழ்வுக்கு விவசாயமே காரணம்.

விவசாயத்தில் கார்பன் உமிழ்வு இருக்கிறதென்றாலும் ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர் விவசாயத்தால் ஏற்படும் உமிழ்வு அல்ல பிரதான காரணம். பெரும் அளவில்  காடழித்து ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் நடத்தப்படும் கார்ப்பரேட் விவசாயத்தில்தான் கார்பன் உமிழ்வு அதிகம்.

படிக்க :
♦ ஐ.பி.சி.சி அறிக்கை : பருவநிலை மாற்றம் குறித்த அபாய எச்சரிக்கை!
♦ முதலாளித்துவமும் பருவநிலை மாற்றமும் !

உரையாடல் 2 : மாடுகள் கார்பன் உமிழ்வுக்கு முக்கிய காரணம்.

மாட்டுக் கறிக்கென வளர்க்கப்படும் மாடுகளால்தான் கார்பன் உமிழ்வு நேர்கிறது என்கிற கருத்து திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. மாடு வளர்ப்பு என்பது மாட்டுக்கறிக்காக மட்டும் நடப்பதில்லை. பால் முதலிய பல காரணங்களுக்காக நடக்கிறது. அதுவும் தனி விவசாயிகள் வளர்க்கும் மாடுகளில் பிரச்சினை கிடையாது.

கார்ப்பரேட் ரக பெரும் பண்ணைகளில் வளர்க்கப்படும் மாடுகளின் எண்ணிக்கையே அதிகம். அவற்றின் கார்பன் உமிழ்வை நிவர்த்தி செய்யும் செயல்முறை நம்மிடம் கிடையாது. அதை செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் அத்தகைய செயல்முறையை நிர்பந்திக்கும் வழக்கமும் நம்மிடமோ அரசுகளிடமோ கிடையாது.

உரையாடல் 3 : ஒரு மனிதன் தன்னளவில் உமிழப்படும் கார்பனை (Carbon Footprint) குறைக்க வேண்டும்.

தன்னளவில் ஏற்படுத்தும் கார்பன் உமிழ்வை குறைக்க அசைவம் சாப்பிட மாட்டார்கள். வாகனம் பயன்படுத்த மாட்டார்கள். தோல் காலணிகள் அணிய மாட்டார்கள். கேட்டால் இயற்கைக்கு பாதகமில்லாமல் வாழ்கிறார்களாம்.

கிரேக்கத்தில் நேர்ந்த காட்டு தீ புகைப்படம்

இந்தியாவின் தனிமனித கார்பன் தடத்துக்கான சராசரி ஒரு வருடத்துக்கு 0.6 டன்னாக இருக்கிறது. அதாவது ஒரு வருடத்தில் ஒரு இந்தியன் 0.6 டன் அளவு கார்பன் உமிழ்கிறான். அதையே சற்று பகுத்து பார்த்தால் ஏழை இந்தியன் 0.2 டன் கார்பன் உமிழ்கிறான். பணக்கார இந்தியன் 1.3 டன் கார்பன் உமிழ்கிறான். இதை அமெரிக்காவுக்கு பொருத்தி பார்த்தால் ஓராண்டில் சராசரியாக ஒரு அமெரிக்கன் 16 டன் கார்பன் உமிழ்கிறான்.

தனி நபர்கள் கார்பன் உமிழ்வை குறைத்தால் எல்லாம் சரியாகி விடுமா?

உதாரணத்துக்கு, அலுவலகம் என எத்தகைய அளவில் ஓர் அலுவலகம் தொடங்கப்பட்டாலும் அதன் ஒரு சதுர மீட்டர் அளவு 91 கிலோ கார்பனை உமிழ்கிறது. இதற்குள் அலுவலக பணியாளர் எண்ணிக்கை, கணிணிகள், ஸ்மார்ட்போன்கள் முதலிய விஷயங்களும் பிற பல விஷயங்களும் அடங்கும். ஆனால், நாம் அலுவலக வேலை பாணியை நிறுத்திவிடவில்லை. குறைக்கக் கூட இல்லை.

உரையாடல் 4 : காலநிலை மாற்றத்திற்கு மனிதனே காரணம்.

இயற்கைக்கு பாதகமாக மனிதன் இருக்கிறான் எனில் எந்த மனிதன்? பணக்கார மனிதனா, ஏழை மனிதனா, முதலாளி மனிதனா, தொழிலாளி மனிதனா? எந்த மனிதன்?

உரையாடல் 5 : காலநிலை மாற்றத்தின் சிக்கலை புரிந்த அரசியல்வாதிகள்.

பொல்சனாரோ, ட்ரம்ப் போல நேரடியாக காலநிலை மாற்றத்தை மறுப்போரை அடையாளம் கண்டு அப்புறப்படுத்துவது எளிது. ஆனால், காலநிலை மாற்றம் இருப்பதை ஏற்றுக் கொண்டு, அதை சரிசெய்ய போராடுவதாக காட்டிக்கொண்டு காலநிலை மாற்றத்தை விரைவுபடுத்தி அழிவை உறுதி செய்யும் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் பாருங்கள். அவர்கள்தான் பிரச்சினை. சுலபமாக கண்டறியவும் முடியாது. கண்டறிந்து சொன்னாலும் ஏற்க மாட்டார்கள்.

உதாரணமாக மோடிக்கு ஐ.நா அவை ‘சுற்றுச்சூழல் காக்கும் சாம்பியன்’ என விருதளித்து கவுரவித்த துயரத்தை சொல்லலாம்.

இந்த ஐந்துவகை உரையாடல்களும் முதலாளித்துவத்தால் முதலாளித்துவத்துக்குள்ளேயே நிகழ்த்தப்படும் உரையாடல்கள்.

ஆங்கிலப் படங்கள் பார்த்திருக்கிறீர்களா?

மொத்தப் படத்தையும் உணர்த்தும் ஒரு frame எப்போதுமே பட போஸ்டர்களாக இருக்கும். ஜுராசிக் பார்க் படத்தில் Dinosaurs ruled the planet என்கிற பதாகை மேலே விழுந்து, கத்திக் கொண்டிருக்கும் டைனோசரின் லோ ஆங்கிள் ஷாட், டைட்டானிக் படத்தில் கப்பலின் லோ ஆங்கிள் ஷாட் என்பன போல.

மெக்சிகோ வளைகுடாவில் எண்ணெய் குழாய் வெடித்து நெருப்புக் கண்ணை கொப்பளித்த புகைப்படம்

சமீப காலமாக இயற்கையும் சில போஸ்டர்களை செய்து கொடுத்துக் கொண்டிருந்தது. கடந்த வருடத்தில் கலிபோர்னியாவின் வானம் சிவப்பான புகைப்படம், மெக்சிகோ வளைகுடாவில் எண்ணெய் குழாய் வெடித்து நெருப்புக் கண்ணை கொப்பளித்த புகைப்படம், தற்போது கிரேக்கத்தில் நேர்ந்த காட்டு தீ புகைப்படம் போன்றவை இயற்கையின் சமீபத்திய போஸ்டர்கள்.

இந்த சூழலிலேனும் காலநிலை மாற்றம் உருவான உண்மையான காரணத்தை பேச வேண்டும்.

குற்றத்தை விசாரிக்காமல் குற்றவாளிகளை அடையாளம் காண முடியாது. குற்றவாளிகளை அடையாளம் காணாமல் தண்டனை கொடுத்தால் உண்மையான குற்றவாளிக்கு தண்டனை கிட்டாது.

காலநிலை மாற்றத்துக்கான அடிப்படை காரணம் முதலாளித்துவம்

அவரவர் நாட்டின் வளத்தை சுரண்டுவதை தாண்டி வேறுவழியில்லாத சூழலில் முதலாளிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதமாக நீராவி எஞ்சின் 19-ம் நூற்றாண்டில்  கிடைத்தது.

பிற நாடுகளில் இருந்து வளங்களை சுரண்டி கொண்டு வரும் வாய்ப்பை ரயில் பாதைகள் உருவாக்கின. முதலாளி இருக்கும் நாட்டுக்குள்தான் சந்தை இருக்கும் என்ற நிலை போய் பல நாட்டு சந்தைகள் உருவாகவும் சூழல்கள் ஏற்பட்டது.

இன்று நாம் பேசும் கார்பன் உமிழ்வு வாழ்க்கைக்கான தொடக்கப்புள்ளி ரயில்களுக்கான கார்பனெடுக்க நிலம் தோண்டப்பட்டபோது போடப்பட்டது. பலவகை முதலீடுகளுக்காகவும் வளச்சுரண்டலுக்காகவும் மேலும் மேலும் நிலம் தோண்டப்பட்டது.

பெட்ரோல், மீதேன் என தோண்டி தோண்டி உற்பத்தி பெருக்கி இன்று நுகர்வாளர்களை விட அதிகமாக உற்பத்தி செய்யும் நிலையை முதலாளிகளின் வெறி உருவாக்கியிருக்கிறது.

இப்பதிவை படிக்கும் சூழலில் கடலையும் கூறு போட்டு விற்கும் மசோதாவை ஐ.நா-வின் சுற்றுச்சூழல் சாம்பியன் நிறைவேற்றி இருக்கிறார் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.

என்னதான் தீர்வு?

Hypothetical Question. தீர்வுக்கான காலத்தை கடந்துவிட்டோம். இருந்தாலும் தெரிந்து கொள்வோம்.

கலிபோர்னியாவின் வானம் சிவப்பான புகைப்படம்

காலநிலை மாற்றம் பற்றி கவலைப்படும் முதலாளித்துவ அறிஞர்களோ, முதலாளித்துவ அரசியல்வாதிகளோ ஐ.நா-வோ உண்மையில் சுற்றுச்சூழலை அழிக்கும் பன்னாட்டு பகாசுர நிறுவனங்களை நேரடியாக கூட ஒன்றும் சொன்னதில்லை.

நியாம்கிரி தொடங்கி தூத்துக்குடி வரை நீளும் மக்களின் போராட்டங்கள்தாம் பகாசுர நிறுவனங்களை எதிர்த்து நின்று போராடி விரட்டி விட்டிருக்கின்றன.

தம் மண்ணை, தன் மொழியை, தன் வரலாறை காக்கப் போராடுவதற்கும் காலநிலை மாற்றத்தை விரைவுபடுத்தும் நிறுவனங்களையும் திட்டங்களையும் எதிர்த்து போராடுவதற்கும் வித்தியாசங்கள் இல்லை.

பெருவிகித உற்பத்தியே பேரழிவுக்கான காரணம் என்கிற இடத்தை அடைந்துவிட்டோம். பெருந்தேசியமும் முதலாளித்துவமும் பேரழிவுக்கான அடிப்படை காரணங்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

படிக்க :
♦ கார்ப்பரேட்டுகளின் பலிபீடத்தில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு !
♦ பருவநிலை மாற்றம் : எச்சரிக்கும் ஃபானி புயல் !

எடுக்கப்படும் வளம் எடுக்கப்படும் மண்ணுக்கே திரும்ப வேண்டும். அம்மண்ணின் மக்களுக்கே பயன்பட வேண்டும்.

குறிப்பிட்ட மக்கள் தொகுதி இருக்கும் எல்லையை வளமும் உற்பத்தியும் தாண்டும் போது மக்களுக்கும் வளத்துக்கும் அந்த வளத்தை கொடுக்கும் இயற்கைக்கும் இடையில் இருக்கும் உறவு அறுகிறது.

அப்பகுதியில் இருக்கும் மக்களின் எண்ணிக்கைக்கும் தேவைக்கும் உட்பட்டு வளம் எடுக்கப்பட வேண்டுமென்கிற கட்டுப்பாடு இல்லாமல் போகிறது. உயிர்ச்சூழலின் மீட்டுருவாக்கம் தடைபடுகிறது. அழிவு உறுதிபடுகிறது.


முகநூலில் : Rajasangeethan

disclaimer

தனியார் கல்லூரி ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட மோசமான நிலை !

கோவிட்-19 பெருந்தொற்று இந்த பொருளாதார அமைப்பின் ஒவ்வொரு துறையையும், இந்தியா மற்றும் உலக அளவில், மிகமோசமாக பாதித்துள்ளது. ஆனால், கல்வி துறையானது ஒப்பீட்டளவில் தன் வருமானத்தை தக்கவைத்துக் கொண்டது.

பள்ளிகளும் கல்லூரிகளும் இணையவழி கல்விமுறைக்கு தங்களை மாற்றிக் கொண்டனர். இணைய வழியில் கற்பிப்பதை காரணமாக வைத்து, பெரும்பாலான தனியார் கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடம் இருந்து முழு கல்வி கட்டணத்தை வசூலித்துவிட்டனர்.

கணக்கெடுப்பும் அதன் முடிவுகளும்

தனியார் கல்வி நிறுவனங்களின் வருமானம் பெருமளவு பாதிப்படையவில்லை. அதுபோலவே அக்கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களின் வாழ்நிலையும் பாதிப்படையவில்லை எனக்கூற முடியாது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஆசிரியர்கள் பணி நீக்கமும் சம்பள குறைப்பும் குடும்பத்தை காப்பதற்காக கிடைக்கின்ற வேலைகளை செய்ய இவர்களை நிர்பந்தித்தன.

படிக்க :
♦ UGC-ன் புதிய வகை கற்றல் – கற்பித்தலுக்கான வழிகாட்டுதலைப் புறக்கணிக்கப்போம் || CCCE
♦ தமிழகப் பல்கலைக் கழகங்களில் பறிபோகும் 69 சதவிகித இடஒதுக்கீடு || CCCE

எடுத்துக்காட்டாக, ஒரு தனியார் கல்லூரியில் பணிபுரியும் உதவி பேராசிரியர் கொரோனா கால சம்பள குறைப்பினால் பாதிக்கப்பட்டு, பனை ஓலை வெட்டும் வேலைக்காக பனைமரம் ஏறும்போது தவறி விழுந்து இறந்துவிட்டார். இந்நிகழ்வானது கொரோனா பெருந்தொற்று அரசு உதவிபெறாத தனியார் கல்லூரிகளில் வேலை செய்யும் பேராசிரியர்களின் பணியிலும் வாழ்வாதாரத்திலும் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளை ஆராய வேண்டும் என எங்களை உந்தியது.

சென்னை பல்கலை கழகத்தின் கீழ் இயங்கும் அரசு உதவிபெறாத தனியார் கல்லூரிகளில் பணி புரியும் 194 பேராசிரியர்களை தொடர்பு கொண்டு தகவல்களை சேகரித்தோம். இந்த தகவல் சேகரிப்பு ஜூன் 13 முதல் ஜூன் 26, 2021-வரை நடத்தப்பட்டது.

எங்களுடைய ஆய்வு முடிவுகளின் படி, கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பே அரசு உதவிபெறாத தனியார் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கு UGC நிர்ணயித்த அளவை விட குறைந்த சம்பளமுமே பெரும்பாலானோருக்கு வழங்கப்பட்டு வந்துள்ளது. இவர்களில் பெரும்பாலானேருக்கு பணி பாதுகாப்பு சலுகைகள் எதுவும் இல்லை.

கோப்புப்படம்

கணக்கெடுப்பில் கலந்து கொண்ட 194 பேரில், 137 நபர்கள் உதவி பேராசிரியர் பணிக்கு தேவையான, யுஜிசி (UGC) வழிக்காட்டியுள்ள, (PhD or NET or SET) தகுதிகளைப் பெற்றிருக்கிறார்கள்.  இதில் 72% பேராசிரியர்கள் ரூ.25,000-கும் குறைவாகவும் 5.1% பேர் ரூ.10,000-க்கும் குறைவாகவும் சம்பளம் வாங்குகின்றனர்.

ஆனால், மத்திய அரசின் 7-வது சம்பள மறுசீராய்வு குழுவின் பரிந்துரைப்படி, உதவி பேராசிரியர்களுக்கான ஆரம்பநிலை மாத சம்பளம், ரூ.76,809-ஆக நிர்ணயித்துள்ளது. மேலும், ஆய்வு முடிவுகளின் படி, 38% பேராசிரியர்கள் மட்டுமே அரசு காப்பீடும்; 42% பேராசிரியர்கள் மட்டுமே சம்பளத்துடன் கூடிய விடுமுறை சலுகையும் பெற்றுள்ளனர்.

தனியார் கல்லூரி பேராசிரியர்களின் இந்த மோசமான நிலைக்கு காரணம், எந்தவொரு ஒழுங்குமுறை சட்டத்தின் மூலம் அக்கல்வி நிறுவனங்கள் கண்காணிக்கப்படாமல் இருப்பதுதான்.

புதிய தாராளவாதக கொள்கையை இந்திய அரசு பின்பற்றுகின்ற காரணத்தினால், அது உயர்கல்வி வழங்குகின்ற பொறுப்பிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டு வருகிறது. இதன் விளைவாக, பல தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் தோன்றியுள்ளன. அகில இந்திய உயர் கல்வி கணக்கெடுப்பு (All-India Survey on Higher Education) 2020 அறிக்கையின் படி, இந்தியாவிலுள்ள மொத்த கல்லூரிகளில் 65% கல்லூரிகள் அரசு உதவிபெறாத தனியார் கல்லூரிகளாகும்.

1980-களின் தொடக்கத்திலேயே உயர்கல்வியை தனியார்மயப்படுத்திய ஒரு சில மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டிலோ 77% தனியார் கல்லூரிகள் இருக்கின்றன. மேற்கண்ட இவ்விரங்கள் லாபமீட்டுவதையே அடிப்படையாகக் கொண்ட தனியார் கல்லூரிகளே உயர்கல்வித் துறையில் ஆதிக்கம் செலுத்துகின்றனர் எனக் காட்டுகிறது.

இணையவழி கல்வி என்ற சுமை

இந்த பின்னணியில் இருந்துதான், கொரோனா பெருந்தொற்று காலத்தில், அரசு உதவிபெறாத தனியார் கல்லூரி பேராசிரியர்களின் வாழ்வாதார பாதிப்பை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அரசு உதவிபெறாத தனியார் கல்லூரி பேராசிரியர்கள் இணைய வழியில் மாணவர்கள் பயில்வதற்கு தங்களால் முடிந்த அனைத்து வகையான முயற்சிகளையும் செய்து வருகின்றனர்.

இருப்பினும், இணைய வசதியின்மை, இடப்பற்றாக்குறை தரமான தொழில்நுட்ப கருவிகள் இல்லாமை போன்ற காரணங்களில் ஒன்றோ அல்லது அனைத்து காரணங்களினாலோ இணையவழி கற்பித்தல்முறை கடினமாக உள்ளதாக கணக்கெடுப்பில் பங்கேற்ற பேராசிரியர்களில் 88% பேர்கள்  தெரிவித்துள்ளனர். இணைய வசதிகளை பேராசிரியர்கள் தங்களின் சொந்த செலவிலேயே ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.

கணக்கெடுக்கப்பட்ட 194 பேராசிரியர்களில் 132 பேர், தொலைப்பேசி, கணினி, மற்றும் தலையணி கேட்பொறி (headphone) போன்ற கருவிகளில் ஒன்றையோ அல்லது அனைத்தையுமோ தங்களது சொந்த செலவிலேயே வாங்கியுள்ளனர். 107 பேராசிரியர்கள் இணையவழி கற்பித்தலின் விளைவாக மனஅழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இவையனைத்தும் தெரிவிப்பது என்னவென்றால் இப்பேராசிரியர்கள் உடலளவிலும், உணர்வு ரீதியாகவும் பொருளாதார ரீதியிலும் பல்வேறு நெருக்கடிகளை இப்பெருந்தொற்று காலத்தில் சகித்துக் கொண்டு இணையவழி கற்பித்தல் சேவையை வழங்கியுள்ளனர்.

இணையவழி கற்பித்தலுக்கான தனியார் கல்லூரி பேராசிரியர்களின் இப்பெரும் முயற்சிகளை இவர்கள் பணிபுரியும் கல்லூரி நிர்வாகத்தினால் அங்கிகரிக்கப்படவில்லை. மாறாக, தனியார் கல்லூரிகளின் சம்பள குறைப்பு நடவடிக்கையின் மூலம் இப்பேராசிரியர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

மொத்த பேராசிரியர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே 2020-21-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதத்தில் தாங்கள் பெற வேண்டிய முழு சம்பளத்தையும் பெற்றதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. மேலும் 10% பேராசிரியர்களுக்கு ஏப்ரல் முதல் ஜூன் 2020 வரை எந்த சம்பளமும் தரப்படவில்லை.

கோப்புப்படம்

கல்லூரிகள் இணையவழி கற்பித்தல் முறைக்கு மாறிவிட்டதால், கல்வி நிறுவனங்களுக்கான நிர்வாகச் செலவுகள் வெகுவாகக் குறைந்திருக்கும். கூடவே, தனியார் கல்லூரிகள் மாணவர்களிடம் கல்வி கட்டணங்களையும் வசூலித்துவிட்டனர். இந்நிலையில், கொரோனா காலத்தில் பேராசிரியர்களின் சம்பளத்தை குறைத்தது எந்த வகையிலும் நியாயமில்லை.

தங்கள் வேலையை தக்க வைத்துகொள்ள சொந்த சேமிப்புகளை கணினி மற்றும் இணைய தொழில் நுட்பத்திற்கு செலவு செய்தும் இணையவழி கற்பித்தலினால் மனஅழுத்ததிற்கும் உள்ளாகியும் மோசமான சூழ்நிலையில் கடினமாக உழைத்த இப்பேராசிரியர்களின் சம்பளத்தை தனியார் கல்லூரி நிர்வாகங்கள் கொரோனா பெருந்தொற்றை சாக்காக வைத்து கொள்ளையடித்துள்ளனர்.

நியாயமற்ற சம்பள குறைப்புகள் தங்களை வேறு வேலைகளுக்கு செல்லவும் வட்டிக்கு பணம் வாங்கி வாழ்க்கை நடத்தும் நிலைக்கும் தள்ளியுள்ளதாக இப்பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். கட்டிட வேலை, விவசாய வேலை, வாகன பழுது பார்க்கும் வேலை, உணவு மற்றும் பல்பொருள்கள் வினியோகிக்கும் வேலை ஆகியவற்றைச் செய்துள்ளனர்.

கொரோனா பெருந்தொற்று அரசு உதவிபெறாத தனியார் கல்லூரி பேராசிரியர்களின் வாழ்வாதாரத்தை பெருமளவு பாதித்திருந்தாலும், சரியான சட்டப்பாதுகாப்பு இல்லாததினால் இப்பெருந்தொற்றுக்கு முன்பே தனியார் கல்லூரி பேராசிரியர்களின் பணிச்சூழல் மிகவும் மோசமாய்தான் இருந்துள்ளது.

இதில் தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் கல்லூரி பேராசிரியர்களின் சம்பளப் பிடித்தம் முழுவதையும் கல்லூரி நிருவாகம் திருப்பியளிக்க வேண்டும்; எந்த காரணமும் இல்லாமல் பணி நீக்கம் செய்யப்பட்ட பேராசிரியர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும்; கொரோனா பெருந்தொற்று காலத்தில் இணையவழி கற்பித்தலுக்காக ஆசிரியர்கள் செய்த செலவை திருப்பித்தர வேண்டும்.

படிக்க :
♦ பள்ளி மாணவர்களை நட்டாற்றில் விட்டுவிட்டு கல்வியை கடைச் சரக்காக்கும் மோடி அரசு || CCCE
♦ இணையவழிக் கல்வி : கல்விக் கொள்ளைக்கான நவீனத் திட்டம் || CCCE

2018-ல் கேரளா அரசங்கம் யுஜிசி தகுதியுடைய கவுரவ விரிவுரையாளர்களுக்கு நாளுன்றுக்கு ரூ.1750 விதம் மாதத்திற்கு ரூ.43,750 என்றும் யுஜிசி-ன் தகுதி இல்லாத விரிவுரையாளர்களுக்கு நாளென்றுக்கு ரூ.1600 வீதம் மாதத்திற்க்கு ரூ.40,000-ஐ அடிப்படை சம்பளமாக தனியார் கல்லூரிகள் வழங்க வேண்டுமென்று அரசாணை வெளியிட்டது. இதுமாதிரியான சட்டத்தினை தமிழக அரசும் இயற்ற வேண்டும்.

தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் (ஒழுங்குமுறை) சட்டம் 1976-யை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதில், தனியார் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் நலனை பாதுகாக்க, உயர்கல்வி கண்காணிப்பு அமைப்புகளான கல்லூரி கல்வி இயக்குநரகம் மற்றும் பிராந்திய கல்லூரி கல்வி இணை இயக்குநரகம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான சட்டத்திருத்தத்தைக் கொண்டுவர வேண்டும்.

(குறிப்பு : கொரோனா பெருந்தொற்றினால் தனியார் கல்லூரி பேராசிரியர்களின் வாழ்நிலை மிகவும் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. ஆனால், கொரோனாவை காரணம்காட்டி பேராசிரியர்களின் சம்பளத்தைக் குறைத்ததின்மூலம் தனியார் கல்லூரி முதலாளிகள் பெருத்த லாபம் அடைந்துள்ளனர். இதுபற்றி தரவுகளோடு லயோயா கல்லூரி லைவ் நிறுவனத்தின் இயக்குனர் A.P.அருண்கண்ணன் மற்றும் மசசுசெட்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர் கிசோர்குமார், சூர்யபிரகாஷ் இருவரும் எழுதிய கட்டுரை தி இந்து பத்திரிக்கையில் வெளிவந்தது. அதன் தமிழாக்கமே இந்தக் கட்டுரை)

தமிழாக்கம் : பாரதி
CCCE-TN

செய்தி ஆதாரம் : The Hindu