தில்லையில் ஆதிக்கம் செலுத்தும் தீட்சிதர் கும்பல் || விடுதலை இராஜேந்திரன் உரை !
தில்லை கோவிலில் தமிழுக்கு அனுமதி மறுத்து ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணின் மீது தாக்குதல் தொடுத்த பார்ப்பன தீட்சிதக் கும்பலை கைதுசெய்து, தில்லை கோவிலில் நந்தன் நுழைந்த வாயிலை அடைத்து எழுப்பப்பட்டிருக்கும் சுவரை இடிக்க வேண்டி வலியுறுத்தி, 11.03.2022 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு ஜனநாயக புரட்சிகர அமைப்புகள் கலந்துகொண்டன. திராவிடர் விடுதலைக் கழகம் அமைப்பின் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராஜேந்திரன் அவர்கள், தில்லை தீட்சிதர்களின் பொய்களையும் புரட்டுகளையும் அம்பலப்படுத்தி பேசினார்.
மத்திய அரசு அதிகாரிகளில் இருந்து, மாநில அரசு அதிகாரிகள் வரை அனைத்து மட்டத்திலும் அவர்கள் தமது செல்வாக்குக்குட்பட்ட நபர்களைக் கொண்டிருப்பதை விரித்துரைத்தார். அவரது உரையின் முழுமையான காணொலியை இங்கு காணலாம் !
பாருங்கள் ! பகிருங்கள் !
தில்லையில் தமிழுக்குத் தடை : நெல்லை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !
பத்திரிகை செய்தி
09.03.2022
இஸ்லாமியர்களுக்கு ஹிஜாப் தடை! தில்லையில் தமிழனுக்கு தமிழுக்கும் தடை!
தில்லையில் இருப்பது தமிழ்நாடா? அதற்குள் ஒரு தனி நாடா?
தில்லை கோயிலை இந்து அறநிலைத்துறையின் கீழ் சிறப்பு சட்டம் இயற்று !
என்ற தலைப்பின் கீழ் 09.03.2022 புதன்கிழமை மாலை 5.00 மணி அளவில் நெல்லை செய்துங்கநல்லூர், பெருமாள்புரம், பாளையங்கோட்டை காவல்துறை ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்தது. கடைசியாக வண்ணாரப்பேட்டையில் ஐனநாயக முறையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு மக்கள் அதிகாரம் சார்பாக ஐனநாயக அமைப்புகள் ஆர்ப்பாட்ட நிகழ்வுக்கு வரும்போது போலீசுத்துறை “மக்கள் அதிகாரம் ” தடை செய்யப்பட்ட அமைப்பு என்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள கூடாது என்றும் தெரிவித்திருக்கின்றனர். அதை மீறி ஆர்ப்பாட்ட இடத்தில் நின்றால் கூட கைது செய்வோம் என்று மிரட்டியுள்ளது போலீசு.
தமிழன் கட்டிய கோயிலில் தமிழனும், தமிழும் போக முடியவில்லை. அதை எதிர்த்து ஜனநாயக முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினால், அதனை தடுத்து மக்கள் அதிகாரம் தோழர்களையும் மற்றும் இதர ஜனநாயக அமைப்பு தோழர்களையும் கைது செய்தது.
தில்லை என்பது மக்கள் சொத்து !
தீட்சத பார்ப்பனக் கும்பலை கைது செய் ! கைது செய் !
ஆடை என்பது எங்கள் உரிமை !
பார்ப்பனியத்தை விரட்ட பெரியாரின் தடியை கையிலெடு! என தோழர்கள் முழங்கினர்.
தி..மு.க திராவிட மாடல் தான் இந்த அடக்குமுறை ! திமுக பெரியார் மண்! சமூக நீதி! என்று சொல்லி ஆட்சிக்கு வந்தது. ஆனால் தில்லைக் கோயிலில் தமிழர்கள் போனால் தீட்சித பார்ப்பன ரவுடி கும்பல் அடிக்கிறது.
தில்லைக் கோயிலில் தமிழுக்கும் தமிழனுக்கும் தடையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினால் அடக்குமுறை செய்கிறது போலீசுத்துறை. நெல்லையில் BJP, RSS கும்பலுக்கு எதிராக பேசினால் தடை. இதுதான் அறிவிக்க படாத சட்டமாக இருக்கிறது . உழைக்கும் மக்களுக்கு எதிராக “காவி-கார்ப்பரேட்” பாசிச கும்பலுக்கு எதிராக ஐனநாயக அமைப்புகள், விவாசாயிகள், மாணவர்கள், தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து களத்தில் முறியடிப்போம்!
தோழமையுடன்
செ.செல்வம்
நெல்லை மண்டல செயலாளர்
மக்கள் அதிகாரம்
தொடர்பு : 9385353605
“டிராட்ஸ்” (TRADS) : காவி பாசிசத்தின் இணையப் படை!
கடந்த ஜனவரி மாதம் 1-ஆம் தேதி காலையில் புத்தாண்டு வாழ்த்து செய்திகளை எதிர்நோக்கி தொலைபேசியை எடுத்த முசுலீம் பெண்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், அவர்களை ‘புல்லி பாய்’ என்ற செயலியின் மூலம் ஏலம் விடும் செய்தி வந்தடைந்தது.
“இன்றைய நாளுக்கான ஏலம்” என்ற பெயரில், நூற்றுக்கும் மேற்பட்ட முசுலீம் பெண்களின் புகைப்படங்கள், அவர்களின் சமூக வலைதளங்களில் இருந்தே எடுத்து ஆபாசமாக சித்தரித்து வெளியிடப்பட்டிருந்தது. முசுலீம் மக்களை உளவியல் ரீதியில் தாக்கித் துன்புறுத்துவதை நோக்கமாகக் கொண்டு செய்யப்பட்ட இதில், 16 வயது குழந்தை முதல் JNU பல்கலைக்கழகத்திலிருந்து காணாமல் போன தன் மகன் நஜீப் அகமதுக்காக நீதி கேட்டு போராடிவரும் 65 வயதான தாய் வரை அனைவரின் புகைப்படங்களும் ஆபாசமாக சித்தரித்து வெளியிடப்பட்டிருந்தது. இவற்றில், அவர்களின் தனிப்பட்ட விவரங்களும் இணைக்கப்பட்டிருந்தது.
இதுபோன்ற பதிவுகள், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் “இராமர் கோயில் கட்டுவதை எதிர்க்கும் பெண்கள்” என்ற தலைப்பில் விளம்பரமாக்கப்பட்டன. இந்த இணைய துன்புறுத்தலில், முக்கியமாக ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிஸ்டுகளின் சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் முசுலீம் வழக்கறிஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் போன்றவர்களே குறிவைத்து தாக்கப்பட்டிருந்தனர்.
படிக்க :
♦ சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழுக்கும் தமிழனுக்கும் தடை || மக்கள் அதிகாரம் அறிக்கை
♦ உக்ரைன் : ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் போர் | தோழர் சுரேசு சக்தி முருகன்
மண்டை முழுவதும் காவி வெறி தலைக்கேறிய சில கேடுகெட்ட கும்பல்கள், சமூக வலைதளங்களை முசுலீம் வெறுப்பு ஆயுதமாக பயன்படுத்தும் – இதுபோன்ற ஏலம் விடும் முறைக்கு புல்லிபாய் செயலி புதிதல்ல. இது மூன்றாவது முறை.
முதலாவதாக, கடந்த ஆண்டு மே 13-ம் தேதி, இஸ்லாமியர்களின் ஈகை திருநாளன்று ‘லிபரல் டாகே’ என்ற யூடியூப் சேனலில் ஒரு காணொளி பரப்பப்பட்டது. “ஈத் சிறப்பு” என்ற பெயரில் அச்சேனலின் நேரடி ஒளிபரப்பில், பாகிஸ்தான் மற்றும் நம் நாட்டு முசுலீம் பெண்களின் புகைப்படங்களை காட்சிப்படுத்தி, பாலியல்ரீதியாக துன்புறுத்தும் வகையில் பேசி ஏலம் விட்ட சகிக்கமுடியாத கொடூரம் அரங்கேறியது. அக்காணொலி நீக்கப்படுவதற்கே பல்வேறு தரப்பிலிருந்து புகார்கள் கொடுக்கப்பட வேண்டியிருந்தது.
இரண்டாவது, கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் தற்போது பேசப்படும் “புல்லி பாய்” என்ற செயலியைப் போல “சுல்லி டீல்ஸ்” என்ற செயலி வெளிவந்து பெரும் சர்ச்சையாகியது. இதில் எண்பதுக்கும் மேற்பட்ட முசுலீம் பெண்களின் புகைப்படங்கள் ஏலம் விடப்பட்டிருந்தது..
இந்த ‘சுல்லி’ மற்றும் ‘புல்லி’ என்ற பெயர்கள் சங்க பரிவாரத்தினர், முசுலீம் பெண்களை இழிவாக பேச பயன்படுத்தும் ‘முல்லி’ என்ற சொல்லின் மாறுபாடாகும். “சுல்லி டீல்ஸ்“ செயலி வெளிவந்தபோதே பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டு வழக்குகளும் பதிவுசெய்யப்பட்டது. ஆனால், இதுதொடர்பாக யாரும் கைதுசெய்யப்படவில்லை; வழக்கு விசாரணையே ஊற்றி மூடப்பட்டது.
சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் விதிகள் 2021-ஐ கொண்டுவருவதற்காக, “இணையம் மற்றும் சமூக வலைதளங்களில் பெண்கள், சிறுமிகளை ஆபாசமாக சித்தரிக்கும் படங்கள், காணொளிகளை பகிர்வது அதிகரித்துவிட்டது. அவர்களை ஒடுக்க வேண்டும்” – என்றெல்லாம் மோடி அரசு கூறிய காரணங்கள் எத்தகைய அண்டப் புளுகு என்பதை இந்த நேரத்தில் நினைவில் கொள்ள வேண்டும்.
000
தற்போதைய புல்லி பாய் விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புல்லி பாய் செயலியைக் கண்டித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு வழக்கறிஞர்கள், பெண் உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் என நாடு முழுவதிலிருந்து கிட்டத்தட்ட 4,500 பேர் கையெழுத்திட்டு ஒரு பகிரங்க கடிதத்தை எழுதியுள்ளார்கள்.
இவ்வாறு பல்வேறு தரப்புகளிலிருந்து கண்டனங்களும் புகார்களும் வந்ததையடுத்து வேறு வழியின்றி காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது. இதுதொடர்பாக, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நீரஜ் பிஷ்னோய், பெங்களூருவை சேர்ந்த விஷால் குமார், உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மயங்க் ராவல், ஸ்வேதா சிங் மற்றும் இந்தூரை சேர்ந்த உம்கரேஷ்வர் தாக்கூர் என ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இந்த “புல்லி பாய்” என்ற செயலி கிட்ஹப் (GitHub) என்ற மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தளத்தில் வெளியிடப்பட்டது. கிட்ஹப் என்பது உலகின் மிகப்பெரிய திறந்தவெளி பயன்பாடுகளை உருவாக்கும் தளமாகும். யார் வேண்டுமானாலும் இந்த தளத்தில் எந்த மென்பொருள் குறியீட்டையும் பதிவேற்ற முடியும். இதற்குமுன் வெளிவந்த சுல்லி டீல்ஸ் என்ற செயலியும் இந்த தளத்தில் வடிவமைக்கப்பட்டதுதான்.
இதில் சுல்லி டீல்ஸ் செயலியை உருவாக்கிய உம்கரேஷ்வர் தாக்கூரும் புல்லி பாய் பயன்பாட்டை உருவாக்கிய நீரஜ் பிஷ்னோய் என்பவனும் “ட்ரேட்ஸ்”(TRADS) என்ற குழுவைச் சார்ந்தவர்கள் என்றும் அங்கிருந்துதான் முசுலீம் பெண்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தி ஏலம் நடத்தும் யோசனை வந்தது எனவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார்கள். மேலும் கைதான நீரஜ் பிஷ்னோய் என்பவன் தாம் செய்ததில் தவறொன்றும் இல்லை, நான் செய்தது சரியே என்று கூறியுள்ளான்.
000
புல்லி பாய் மற்றும் சுல்லி டீல்ஸ் சம்பவங்களைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் இளைஞர்களிடையே “ட்ரேட்ஸ்” என்ற பெயரில் ஒரு குழு செயல்படுவது தெரிய வந்துள்ளது. ட்ரேட்ஸ் (Trads) என்பது “Traditionalists – பழமைவாதிகள்” என்பதன் சுருக்கமாகும். இவர்கள் பெரும்பாலும் இணைய வழியில், தன்னிச்சையாக செயல்படுபவர்களாக உள்ளனர்.
இவர்கள் நவ நாஜிக்கள் மற்றும் மேற்கத்திய நாடுகளின் மாற்று வலது (alternate right) என்று அழைக்கப்படும் வெள்ளை இனவெறி இயக்கங்களை முன்மாதிரியாக கொண்டு செயல்படுகிறார்கள். ஹிட்லர் யூதர்களை செய்தது போல, இஸ்லாமியர்களை வதைமுகாம்களில் அடைத்து சித்திரவதை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.
பிறப்பின் அடிப்படையில் பார்ப்பனர்கள் உயர்வானவர்கள், மற்றவர்கள் கீழானவர்கள் என்ற வர்ணாசிரம கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்த வேண்டும்; ஆண்கள் சுகிப்பதற்கான சதைப் பிண்டமாகவும் அடிமைகளாகவுமே பெண்களை பார்க்கச் சொல்லும் மனு நீதியை இந்திய அரசியலமைப்புச் சாசனமாக மாற்றவேண்டும் – என்று இவர்கள் கூறுகிறார்கள்.
இவர்கள் ஆர்.எஸ்.எஸ்-இன் இந்துராஷ்டிரக் கனவை கொண்டிருந்தாலும் அவர்களின் சில சாத்வீக (மென்மையான) வழிமுறையை கடுமையாக விமர்சிக்கிறார்கள். இவர்களை பொறுத்தவரை முஸ்லிம்கள், தலித்துகள், சீக்கியர்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் மீதான ஒடுக்குமுறையை மேலும் பகிரங்கமாக செய்யவேண்டும் என்று விரும்புகிறார்கள். இந்த செயலியை கூட சீக்கியர்களை இழிவுபடுத்த அவர்களின் பெயர்களை பயன்படுத்திதான் உருவாக்கியுள்ளார்கள்.
சிறுபான்மையினர் மீதான ட்ரேட்ஸ் குழுவினரின் வக்கிரங்களை அவர்கள் வடிவமைத்து பரப்பிய மீம்ஸ்-களில் தெளிவாக காணமுடியும். பாலியல் வல்லுறவினால் இறந்த சிறுபான்மையின பெண் மீது சிறுநீர் கழிப்பது, தலித்துகளை கரப்பான்பூச்சிகளாக சித்தரித்து விஷவாயு மூலம் கொல்வது, முசுலீம் பெண்களை வல்லுறவு கொள்வது போன்று குரூரமான வடிவங்களில் மீம்ஸ்-களை பதிவிடுகிறார்கள். இதையெல்லாம் நகைச்சுவையாக்கி மகிழும் அளவிற்கு இவர்களுக்கு வெறி தலைக்கு ஏற்றப்பட்டிருக்கிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் வெறுப்பை பிரச்சாரம் செய்ததற்காக தடை செய்யப்பட்ட பல டிவிட்டர் கணக்குகள் உண்மையில் ட்ரேட்ஸ்-ஆல் நடத்தப்பட்டதாக மும்பை காவல்துறை கண்டறிந்துள்ளது. இந்த புல்லி பாய் விவகாரத்தில் கைதானவர்கள் எல்லாரும் வெவ்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைப் பார்க்கும்போது இவர்களைப் போன்றவர்கள் நாடுமுழுவதும் பரவலாக இருப்பதை உணரமுடிகிறது.
படிக்க :
♦ புல்லிபாய் : சங்கிகளின் முசுலீம் வெறுப்பு அரசியல்
♦ குறுஞ்செய்திகள் : புல்லிபாய், டெக் ஃபாக் செயலி விவகாரம் – கூடுதல் தகவல்கள்
மேலும், இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விசயம் என்னவெனில், இத்தகைய ஈனச் செயலில் ஈடுபட்டவர்கள் 18 முதல் 22 வயது வரை உள்ளவர்கள் என்பதோடு, அனைவரும் மாணவர்கள். இதில் மும்பை போலீசால் கைதுசெய்யபட்ட ஸ்வேதா சிங் என்பவர் 18 வயதே ஆன பெண். காவி பாசிசம் இளம் தலைமுறையினரில் ஒரு பகுதியினரை தனது வலுவான படையணிகளாக கட்டி வளர்த்துவருகிறது என்பதையே இவை காட்டுகிறது.
இவர்கள் ட்ரேட்ஸ் என்ற இணையவழி குழுவினர்தான். நேரடியாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் இல்லை என்ற தகவல் நம்மை மேலும் திடுக்கிடச் செய்கிறது. ஏனெனில், இது காவி பாசிச கருத்துகளுக்கு உள்ள செல்வாக்கினை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது.
அமைப்பு சாராமலேயே கூட, உலகு தழுவிய ரீதியில் பாசிச கருத்துக்கள் மீண்டும் புத்தெழுச்சி பெற்றுவருவது ஒரு போக்காக உள்ளது என்பது உண்மைதான். தற்போது தெரியவந்துள்ள ட்ரேட்ஸ் என்ற குழுவினரையுமே அப்படித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது.
எனினும், இந்திய சூழலில் இதுபோன்ற பாசிஸ்டு கருத்தாளர்கள் உருவாவதற்கான அடித்தளமாக இருப்பது ஆர்.எஸ்.எஸ்-இன் பன்னெடுங்கால பிரச்சாரமே என்பதோடு இணைத்துதான் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
வேதம், புராணம், மனு நீதி, பகவத் கீதை, இந்திய கலாச்சாரம் என பலபல வழிகளிலும் காவி பாசிசக் கருத்துக்களை மக்களிடையே, குறிப்பாக இளம் பிஞ்சுகளிடையே (இதை புதிய கல்விக் கொள்கை செய்கிறது) திணித்துவரும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வின் கருத்துப் பிரச்சாரத்தையும் கள நடவடிக்கைகளையும் முறியடிக்கும் போராட்டத்தினால் மட்டுமே காவி பாசிசத்தின் கருத்தியல் செல்வாக்கை வீழ்த்த முடியும்.
இதில் நாம் கவனத்தை செலுத்தாத பட்சத்தில், இளம் தலைமுறை பாசிசத்திற்கு பலியாவதை வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும்!
மதி
நிலப்பிரபுத்துவ – முதலாளிய பெண்ணியத்தை புறக்கணிப்போம் || ராஜசங்கீதன்
மார்க்சியமோ கம்யூனிசமோ புரட்சியோ பேசாமல் கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தின விழாக்களே தமிழ்ச்சூழலில் அதிகம்.
இந்தியச் சூழலில் நிலவும் நிலப்பிரபுத்துவ-முதலாளித்துவ இணக்கத்தை அடையாளம் கண்டு வினையாற்றுபவர்கள் கம்யூனிஸ்ட்டுகள் மட்டும்தான். இந்தியப் பெண்ணியத்துக்குள்ளும் இத்தகைய இணக்கம் நிலவுவதை அடையாளம் கண்டுதான் பாலின சமத்துவம் அல்லது பெண் விடுதலைக்கான இடத்தை நாம் பேச முடியும்.
இந்தியச் சூழலில் மூலதனத்தை இயக்குவது பார்ப்பன – பனியாக் கூட்டணியே. சக தோழர்கள் பலருக்கு இந்தப் பார்வையில் முரண் இருந்தாலும், யதார்த்தம் இதுவே. பண்பாட்டு ரீதியாக தாம் பெற வேண்டிய ஆதிக்கத்தின் பொருட்டு பார்ப்பனர்களும் வணிக ரீதியிலான பெருக்கத்தின் பொருட்டு பனியாக்களும் இணைந்தும் இயங்கும் புரிதலுக்குள்தான் நாம் பேசுகிற சமூக விடுதலை, சமத்துவம், சோசலிசம், பெண்ணியம், சாதி ஒழிப்பு ஆகிய அனைத்துமே புதைக்கப்பட்டிருக்கிறது.
உதாரணமாக பார்ப்பன பெண்களும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் சாதிப் பெண்களும் ஒன்றிணைந்து இயங்கும் போக்கை தனித்தனியே நாம் பார்க்க முடியும். இதன் அர்த்தம் என்னவெனில் பார்ப்பனப் பெண் இச்சமூகத்தில் வகிக்கும் உயர்ச்சியும் கொண்டிருக்கும் மூலதனப் பரிச்சயமும் மேற்குறிப்பிட்ட ஒத்திசைவின் மூலம் தானும் பெற்றுவிடலாம் எனப் பட்டியல் சாதிப் பெண்ணும் பிற்படுத்தப்பட்டப் பெண்ணும் நம்புவதால்தான். அந்த சமரசம் ஒருவேளை நேர்ந்தாலும் அது அந்த இரண்டு பெண்களுக்கு இடையிலான ஆதாயமாக மட்டுமே மாறும் என்பதும் மொத்த சமூகத்தின் ஆதாயமாகவோ விடுதலையாகவோ அது மாற முடியாது என்பதுமே நிலப்புரபுத்துவ-முதலாளித்துவக் கூட்டு கொண்டிருக்கும் சூட்சுமங்கள்.
படிக்க :
♦ சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழுக்கும் தமிழனுக்கும் தடை || மக்கள் அதிகாரம் அறிக்கை
♦ மேக்கேதாட்டு அணை : ஓட்டுப் பொறுக்கி – இனவெறி அரசியலில் பா.ஜ.க.வும் காங்கிரசும் ஓரணி !
எனக்குத் தெரிந்த ஒரு உயர்சாதிப் பெண் இருக்கிறார். அவர் ஒரு பட்டியல் சாதி இளைஞரின் வளர்ச்சிக்கு உதவுகிறார். அல்லது அப்படி காண்பித்துக் கொள்கிறார். ஆனால் அவரின் நட்புவட்டத்தில் இருக்கும் அனைவரும் வலதுசாரி ஆளுமைகள்தான். அப்பெண்ணுக்கு ஒரு பெரும் (யாருக்குமில்லா) வாய்ப்பு வாய்க்கிறது. அவரை சாதி ஒழிப்பு சமூகமும் கொண்டாடும். இடதுசாரி வட்டமும் கொண்டாடும். வலதுசாரிகளும் கொண்டாடுவார்கள். இவை எல்லாமும் தன்னுடைய தனிச்சலுகை அல்லது பார்ப்பன வாழ்க்கைமுறை எதையும் இழக்காமலே அவர் அடைந்து விடுகிறார்.
எனவேதான் சாதியம் என்கிற வார்த்தைப் பிரயோகத்தில் பெரிய உடன்பாடு இருப்பதில்லை. இந்தியாவில் சாதியம் என்பது பார்ப்பனீயம் மட்டும்தான்.
ஒரு காலத்தில் வருணாசிரமாக மலர்ந்து முதன்மையான இடத்தில் தங்களை நிறுத்திக் கொண்ட பார்ப்பனர்கள், காலப்போக்கில் எழும்பத் தொடங்கிய சூத்திர கலகத்தின்போது பிற்படுத்தப்பட்ட சாதிகளுடன் கைகளை குலுக்கிக் கொண்டனர். பனியாக்களின் அறிமுகத்தை சூத்திரச் சாதிகளுக்கு வழங்கி வளர்ச்சியை உருவாக்கிக் கொடுத்தனர். பட்டியல் சாதிகளை ஒடுக்கும் அதிகாரம் சூத்திரச் சாதிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.
பிறகு பட்டியல் சாதி கலகம் நேரத் தொடங்க, பார்ப்பனீயம் அவர்களை நோக்கி நட்புக் கரம் நீட்டி, பிற்படுத்தப்பட்டோர் – பட்டியல் சாதியினர் ஆகியோருக்கு இடையிலான வேறுபாட்டை ஆழப்படுத்தும் வேலையைச் செய்கிறது. இரு சூழல்களிலும் ஒரு விஷயம் தெளிவு.
சமூகப் பொருளாதாரப் பண்பாட்டுத் தளங்களில் பார்ப்பனர் தக்க வைத்துக் கொள்ளும் முதன்மை இடம்!
இந்தியச் சூழலில், பார்ப்பனீயத்துடன் சமரசம் செய்து கொள்வதில்தான் சமூக மாற்றமும் பொருளாதார உயர்ச்சியும் நேர்வதாக நம்பப் படுகிறது.
பார்ப்பனீயம் மற்றும் பார்ப்பனரின் அணுக்கத்துடன் மட்டுமே மூலதனம் அல்லது உற்பத்திக் கருவிகளை கையாளக் கூடிய இடம் கிடைப்பதாக நம்பப்படுகிறது. இந்தியப் பெண்ணியக் கருத்தாடல்களும் இதே வழியைத்தான் பின்பற்றுகின்றன. ஆனால் ஒரு முக்கியமான விஷயத்தைத் தவற விடுகிறோம்.
பார்ப்பனீயம் மற்றும் தனிச்சலுகை ஆகியவற்றைப் புறக்கணிக்காத பார்ப்பனப் பெண்ணின் அணுக்கத்துடன் உயர்ச்சியும் வாய்ப்புகளும் கிட்டினாலும் அந்தப் பெண்ணுக்குக் கீழ்தான் நாம் இருப்போம். பார்ப்பன மற்றும் உயர்சாதி ஆணின் மூலதனத்தைக் கைப்பற்றுவதே பெண்ணியம் என நம்பி இயங்கும் அப்பெண்களின் செயல்திட்டத்தின்படி மட்டுமே நாம் இயங்குவோம். அதாவது ஓர் உயர்சாதி ஆணின் மூலதனத்தை ஓர் உயர்சாதி பெண்ணுக்கு மாற்றிக் கொடுக்கும் அரசியலாட்டத்தில் நாம் பகடைக் காய்களாக இருப்போம்.
படிக்க :
♦ போரும் – உழைக்கும் பெண்களும் | க்ளாரா ஜெட்கின் | இக்பால் அகமது
♦ காவிக் கல்வி : பெண்ணடிமைத்தனத்தை பரப்பும் சி.பி.எஸ்.ஈ !
பார்ப்பனீயத்தை உடைக்க வேண்டுமென்றாலும் வருணாசிரமத்தைத் தகர்க்க வேண்டுமென்றாலும் மெய்யான பெண் விடுதலை நோக்கியப் பாதையை அமைக்க விரும்பினாலும் சமத்துவத்துக்கான பார்வையை பெற வேண்டுமென்றாலும் செய்ய வேண்டியது ஒன்றுதான்.
பார்ப்பனீய மனநிலை அற்ற, தனிமனிதவாதம் பாராட்டாத, தன்னலம் பேணாத, தனிச்சலுகைகள் கொள்ளாத, உற்பத்திக் கருவிகள் மற்றும் மூலதனத்தை சமரசத்தின்வழி பகிர்ந்துக் கொள்ளச் சம்மதிக்காத, நிலப்பிரபுத்துவ – முதலாளியப் பெண்ணியவாதத்தை வேறு வார்த்தைகளில் போற்றாத, மூலதனம் மற்றும் உற்பத்திக் கருவிகளைப் பற்றி பேசாமல் ஆண் – பெண் கருத்தாடலாக மட்டும் பெண்ணியத்தைச் சுருக்காத, சமத்துவமான உழைக்கும் மகளிர் பெண்ணியம் மட்டுமே வழி.
ஏஞ்சலா டேவிஸ் சொன்ன ஒரு மேற்கோளுடன் முடிக்கிறேன் :
“பெண்ணியம் என்பது பாலின சமத்துவத்தை தாண்டியப் பல விஷயங்களைக் கொண்டது. பாலினத்தைத் தாண்டியும் பல விஷயங்களைக் கொண்டது”
முகநூலில் : ராஜசங்கீதன்
மேக்கேதாட்டு அணை : ஓட்டுப் பொறுக்கி – இனவெறி அரசியலில் பா.ஜ.க.வும் காங்கிரசும் ஓரணி !
கடந்த ஆண்டு ஜூலை மாதம், “காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் அணை கட்டியே தீருவோம்; இதற்கு தமிழக அரசின் ஒப்புதல் எதுவும் தேவையில்லை” என கூறியது எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. அரசு. திட்டமிட்டபடி கட்டுமானப் பணிகளையும் ஆரம்பிக்கத் தொடங்கியது.
சட்டத்திற்கு புறம்பாக பிரச்சினையை கிளப்பிவரும் கர்நாடக அரசின் அடாவடியை நிறுத்தாமல், அணை கட்டுமானப் பணிகள் தொடர்பாக விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு தனது தமிழின பகைமையை காட்டியது மத்திய மோடி அரசு.
“இது சட்ட நெறிமுறைகளை மீறிய செயல், தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாது” என்று பா.ஜ.க. தவிர்த்த தமிழகத்தின் அரசியல் கட்சிகள் அனைத்தும் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினர்.
படிக்க :
♦ நூல் விமர்சனம் : வண்ணத்துப்பூச்சிகளின் விடுதி || நக்கீரன்
♦ உ.பி : யோகி ஆட்சியில் அதிகரிக்கும் பத்திரிகையாளர்கள் படுகொலை !
கர்நாடக அரசையும் மத்திய மோடி அரசையும் கண்டித்து விவசாய சங்கத்தினர் உட்பட பலரும் போராடினர். மக்கள் அதிகாரம் அமைப்பின் தருமபுரி மண்டலம் சார்பாக மேக்கேதாட்டு நோக்கி பேரணியும் முற்றுகைப் போராட்டமும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, தமிழகத்தின் கடுமையான எதிர்ப்பு காரணமாக தற்காலிகமாக தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது மேக்கேதாட்டு அணை.
இந்நிலையில், அகில இந்திய அளவில் பாசிச பா.ஜ.க.விற்கு எதிரான ஒரே மாற்று எனக் கூறிக்கொள்ளும் காங்கிரஸ் கட்சியின் கார்நாடக பிரிவு, ஓட்டு பொறுக்கும் அரசியலுக்காக மேக்கேதாட்டு அணை பிரச்சினையை கையில் எடுத்துள்ளது.
000
காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு நீர்த்தேக்கக் கட்டுமானப் பணியை உடனடியாக நிறைவேற்றக்கோரி மேக்கேதாட்டிலிருந்து பெங்களூரு நோக்கி “எங்கள் தண்ணீர் எங்கள் உரிமை” என்ற முழக்கத்தின் கீழ் பத்து நாட்கள் பாதயாத்திரையை நடத்த திட்டமிட்டது கர்நாடக காங்கிரஸ்.
அதன்படி, கடந்த ஜனவரி 9 அன்று காலை, ராமநகர் மாவட்டம், கனகபுரா தாலுகாவில், காவிரி மற்றும் அர்காவதி ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் புடைச்சூழ, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முரசு கொட்டி பாதயாத்திரையை தொடங்கிவைத்தார்.
இதில் காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, முன்னாள் துணை முதலமைச்சர் பரமேஸ்வர், முன்னாள் அமைச்சர்கள் உட்பட திரைத்துறையினர் பலரும் கலந்து கொண்டனர்.
பாதயாத்திரையைத் தொடங்கிவைத்து பேசிய எம்.மல்லிகார்ஜூன கார்கே, “இரு மாநிலங்களுக்கும் (கர்நாடகா-தமிழகம்) உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ள, இந்த திட்டத்தை தமிழகம் எதிர்ப்பதன் மூலம் தேவையற்ற சர்ச்சையை கிளப்பியுள்ளது” என்றார்.
கனகபுரா எம்.எல்.ஏ.வும் முன்னாள் நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார், “இந்த பாதயாத்திரை மக்களுக்கானது; காங்கிரஸ் கட்சிக்காகவோ, பதவிக்காகவோ அல்ல” என்றார். தொடர்ந்து, “அன்று இந்திய விடுதலைக்காக காங்கிரஸ் போராடியதுபோல, இன்று தண்ணீருக்காக பா.ஜ.க.வுக்கு எதிராக போராடுகிறோம்” என்று இழிவான இனவெறியை தங்களின் போலி விடுதலைப் போராட்டத்தோடு இணைத்தார்.
சித்தராமையாவோ, தனது தலைமையிலான காங்கிரஸ் அரசால்தான் மேக்கேத்தாட்டு அணை திட்டம் தொடங்கப்பட்டது என்றும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் மாநில மக்களுக்கு, ஆளும் பா.ஜ.க. துரோகம் இழைத்துள்ளதாகவும் தமிழகத்துடன் கூட்டுச் சேர்ந்துள்ளதாகவும் சாடினார்.
இதன் மூலம் தமிழினத்தை வஞ்சிப்பதில் பா.ஜ.க.வை விட கர்நாடக காங்கிரஸ்தான் முன்னோடியாக இருக்கிறது என்று பறைசாற்றிக் கொண்டார். இந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் மறுத்த பா.ஜ.க. முதல்வர் பசவராஜ் பொம்மை, “தனது ஆட்சிக்காலத்தில் மேக்கேதாட்டு திட்டத்தை நிறைவேற்றாமல் கர்நாடக மக்களுக்கு துரோகமிழைத்தது காங்கிரஸ்தான்” என குற்றம்சாட்டினார்.
மேலும், கிருஷ்ணா நதிநீர் திட்டத்திற்கு காங்கிரஸ் அறிவித்த ரூபாய் 10 ஆயிரம் கோடியில் வெறும் 7 ஆயிரம் கோடிதான் செலவு செய்யப்பட்டது என்பதை குறிப்பிட்டு, எந்தவொரு நீர்ப்பாசனத் திட்டத்திலும் காங்கிரஸ் கட்சி உறுதியாக நின்று செயல்படவில்லை என்றார்.
அத்துடன் “மேக்கேதாட்டு திட்டத்தை பா.ஜ.க.தான் மேற்கொண்டுவருகிறது. நான் முதலமைச்சரான பிறகு, திட்டம் குறித்த முழு அறிக்கையும் மத்திய நீர் ஆணையம் மற்றும் காவிரி கண்காணிப்பு வாரியத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இம்மாதம் இத்திட்டம் குறித்த கூட்டம் நடத்தப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும்” என்றார்.
000
ரூபாய் 9 ஆயிரம் கோடி செலவில், காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டில் புதிய அணை கட்டுவதன் நோக்கம், குடிநீர் நீர்த்தேக்க கட்டுமானம் அமைத்து உபரி நீரைத் தேக்கிவைப்பதும், அதன் மூலம் பெங்களூரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பிற மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்குவது மற்றும் மின் உற்பத்தி செய்வதும்தான் என்கிறது கர்நாடக அரசு.
ஆனால், இது தமிழகத்தின் நீர் உரிமையை பறிக்கும் கர்நாடக கட்சிகளின் இனவெறித் திட்டம் என்பதோடு, பெங்களூருவிலுள்ள ஓட்டல், ரியல் எஸ்டேட் முதலாளிகளின் நலனுக்காகவே மேக்கேதாட்டில் புதிய அணை கட்டப்படுகிறது. கர்நாடகத்தின் நீர் ஆதாரத்தை கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்கும் திட்டத்தை கர்நாடக மக்களின், விவசாயிகளின் நலனுக்கான திட்டம் என புளுகி வருகிறது கர்நாட இனவெறிக் கட்சிகள்.
கர்நாடகாவில், ஏற்கெனவே காவிரியின் துணையாறுகளின் குறுக்கே நான்கு பெரிய அணைகளும் ஐந்துக்கும் மேற்பட்ட சிறிய அணைகளும் கட்டப்பட்டுள்ளன. கர்நாடகவிலுள்ள பெரிய அணைகள் மூலம் மட்டுமே 104.55 டி.எம்.சி. நீர் சேமித்து வைக்கப்படுகிறது. அதனால், கர்நாடகத்தின் தேவைக்குப் போக மீதமான நீர்தான் தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் மேக்கேதாட்டுவில் அணை கட்டப்பட்டால், இந்த உபரி நீரும் தமிழ்நாட்டிற்கு வராது.
காவிரி நதிநீரை நம்பி விவசாயம் செய்யும் தமிழ்நாட்டின் 26 லட்சம் ஏக்கர் பாசன நிலம் பாலைவனமாகிவிடும். சென்னை, ராமநாதபுரம், வேலூர், திருப்பூர் உள்ளிட்ட 25 மாவட்டங்களுக்கு குடிநீரும் கிடைக்காது.
ஏற்கெனவே, காவிரியில் தமிழ்நாட்டிற்கு உரிய நீரைத் தர மறுத்துவரும் கர்நாடக அரசு, மேக்கேதாட்டில் அணை கட்டுவதன் மூலம் தமிழகத்தின் உரிமைக்கு நிரந்தரமாகச் சமாதிகட்ட முயற்சிக்கிறது.
000
பல வகைகளில் பா.ஜ.க. உடன் கொள்கை வேறுபாடு இருப்பதாக காட்டிக் கொள்ளும் காங்கிரஸ் கட்சி, தமிழகத்திற்கு விரோதமாக கன்னட இனவெறியை கிளப்பிவிடுவதில் பா.ஜ.க.வுடன் போட்டி போட்டுவருகிறது.
பலவீனமாக இருந்தாலும் தேசிய அளவில், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.விற்கு மாற்று காங்கிரஸ்தான். அதுதான் மதச்சார்ப்பற்ற கட்சி, தாராளவாத ஜனநாயக கட்சி. எனவே அடுத்த தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த காங்கிரசை ஆதரிக்கலாம் என்று சிந்திக்கக்கூடிய முற்போக்கு ஜனநாயக சக்திகளும் அறிவுத்துறையினரும் மேக்கேதாட்டு விசயத்தில், கர்நாடக காங்கிரஸின் செயல்பாடுகளை தேசியத் தலைமை கண்டுகொள்ளாமல் வாய்பொத்திக் கொண்டிருப்பதை சற்று காண வேண்டும்!
படிக்க :
♦ நீட் தேர்வு : சட்டப் போராட்ட அனுபவம், களப்போராட்ட அவசியத்தை போதிக்கிறது!
♦ ஆதாய அரசியலுக்கு உதவுகிறதா நீதிமன்ற தீர்ப்புகள் ? || அரவிந்தாக்ஷன்
ஓட்டுப் பொறுக்கிகளுக்கு, ஓட்டுப் பொறுக்குவதற்கு உட்பட்டதுதான் கொள்கை-கோட்பாடுகள். இனவெறியை தூண்டினால் ஓட்டு கிடைக்குமென்றால் காங்கிரசு அதற்கு தயாராகவே இருக்கும் என்று காட்டுகிறது.
இனவெறி மட்டுமல்ல, மதவெறியிலும்கூட கேரளாவில், பெண்களை சபரிமலைக்குள் அனுமதிக்கும் விசயத்தில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வோடு காங்கிரசும் கூட்டு சேர்ந்துகொண்டதே இதற்கு சான்று.
ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வைப் போல அல்ல, காங்கிரஸ் ‘மென்மையானது’ என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் இந்த ‘மென்மை’ காவி பாசிசத்தின் ‘வன்மை’யிடம் அடிபணிந்துவிடும் என்பதைக் குறிப்பிட்டுதான் நாம் சாடுகிறோம்.
எனவே பாசிச எதிர்ப்போ, அடிப்படை ஜனநாயக கோரிக்கைகளோ; அவற்றை வென்றெடுக்க வேண்டுமானால் மக்கள்திரளை அரசியல்படுத்துவதும் ஜனநாயக சக்திகளின் களப் போராட்டங்களும்தான் தீர்வளிக்குமே ஒழிய, ஓட்டுக்கட்சிகளில் ‘சாத்தியமான மாற்று’ தேடுவது அபத்தம் என்பதை மேக்கேதாட்டு விசயமும் நமக்கு சொல்லுகிறது.
வெண்பா
சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழுக்கும் தமிழனுக்கும் தடை || மக்கள் அதிகாரம் அறிக்கை
பத்திரிகைச்செய்தி
10.03.2022
சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழுக்கும், தமிழனுக்கும் தடை !
யானைக்கு திருட்டுத்தனமாக சொகுசு மண்டபம் கட்டும் தீட்சித பார்ப்பனர்கள் !
தில்லைக் கோயிலை தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர சட்டம் இயற்று !
சென்றமாதம் தில்லைத் திருச்சிற்றம்பலத்தில் தமிழில் பாடச் சென்ற தாழ்த்தப்பட்ட பெண்ணை தாக்கிய தீட்சிதர்களுக்கு எதிராகவும் தில்லைக் கோயிலை அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவேண்டும், நந்தன் நுழைந்தான் என்பதற்காகவே தீண்டாமை என்று கூறி அடைக்கப்பட்டிருக்கும் தெற்கு வாயிலை உடைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை உள்ளிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகளும் தொடர்ச்சியாக போராட்டத்தை நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் கிழக்கு கோபுரம் அருகே முன்னதாக நாட்டியாஞ்சலி நடைபெற்ற இடத்தில் மீண்டும் தீட்சிதர்கள் பள்ளம் தோண்டி யானைக்கு என்று பிரம்மாண்ட சொகுசு கட்டிடம் கட்டி வருகிறார்கள் தீட்சித பார்ப்பனர்கள் . இந்தச் செய்தி பக்தர்களை மிகவும் வேதனை அடையச் செய்துள்ளது என்பது மட்டுமல்ல, பார்ப்பன ஆதிக்கத்தில் இருந்து தில்லை கோயிலை மீட்டெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நம் அனைவருக்கும் விடப்பட்டுள்ள சவால்.
படிக்க :
♦ இலக்கியம் கற்றுக்கொள்ள இலக்கிய நூல்கள் மட்டும் போதுமா ? || பாவெல் சக்தி
♦ நூல் விமர்சனம் : வண்ணத்துப்பூச்சிகளின் விடுதி || நக்கீரன்
இப்படி அனுமதியின்றி மண்டபம் கட்டுவதால் தொன்மை வாய்ந்த திருமலை நாயக்கர் மதில் சேதமடையும் வாய்ப்பு உள்ளது. கோயிலில் மண்டபம் கட்டுவதற்கு தொழில்துறை, நகராட்சி ஆகியவற்றிடம் இருந்து அனுமதியும் பெறவில்லை.
தீட்சித பார்ப்பனர்களின் இந்த திமிர்த்தனமாக நடவடிக்கைக்கு எதிராக தமிழகம் முழுவதும் ஜனநாயக மற்றும் புரட்சிகர அமைப்புகள் போராட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.
மேலும் இப்படிப்பட்ட தில்லுமுல்லுகளையும் அயோக்கியத்தனங்களையும் தொடர்ச்சியாக செய்துவரும் தீட்சிதர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்.
தில்லைக் கோயில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான சிறப்புச் சட்டத்தை வருகின்ற சட்டமன்றத் தொடரிலேயே தமிழ்நாட்டு அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.

தோழமையுடன்
தோழர் வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம் தமிழ்நாடு – புதுவை
9962366321
“இஸ்லாமியர்களுக்கு ஹிஜாப் தடை! தில்லையில் தமிழனுக்கு தமிழுக்கும் தடை! – கடலூர், திருவாரூர் ஆர்ப்பாட்டம் !
மக்கள் அதிகாரம் சார்பாக தமிழகம் முழுவதும் 7,8,9 ஆகிய தேதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்து திட்டத்தின் ஒரு பகுதியாக கடலூர் மற்றும் திருவாரூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
“இஸ்லாமியர்களுக்கு ஹிஜாப் தடை!
தில்லையில் தமிழனுக்கு தமிழுக்கும் தடை!
தில்லை இருப்பது தமிழ்நாடா?
அதற்குள் ஒரு தனி நாடா?
தமிழக அரசே!
தில்லை கோயிலை இந்து அறநிலைத்துறையின் கீழ் கொண்டுவர சிறப்புச் சட்டம் இயற்று” என்ற முழக்கங்களின் கீழ் மார்ச் 8 அன்று காலை 11 மணியளவில் கடலூர் மஞ்சகுப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் கடலுர் கிளை இணை செயலாளர் தோழர் இராமலிங்கம் தலைமை தாங்கினார்.
தோழர் மணிவண்ணன் சிதம்பரம் வட்டார அமைப்பாளர் ம.ஜ.இ.க,
தோழர் தி.ச.திருமார்பன் வழக்கறிஞர், மாநில அமைப்பு செயலாளர் வி.சி.க,
தோழர் தீனா அமைப்பாளர் பெரியார் சிந்தனையாளர் இயக்கம் புதுச்சேரி,
தோழர் வெண்புறா குமார் ஒருங்கிணைப்பாளர் கடலூர் அனைத்து பொதுநல இயக்கம்,
தோழர் பரிதிவாணன் தமிழர் கழகம்,
தோழர் முருகானந்தம் கடலூர் மண்டல செயலாளர் மக்கள் அதிகாரம்
ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இறுதியாக மக்கள் அதிகாரம் கடலூர் கிளைப் பொருளாளர் தோழர் ஜெயக்குமார் நன்றியுரையாற்றினார்.
தகவல் :
மக்கள் அதிகாரம்,
கடலூர் மண்டலம்.
000
7/03/2022 அன்று மாலை 6, மணியளவில் திருவாரூர் தாலுகா குளிக்கரை, கடைவீதியில் மக்கள் அதிகாரம், அமைப்பின் சார்பாக இஸ்லாமியர்களுக்கு ஹிஜாப் தடை! சிதம்பரம் தில்லை நடராஜர் கோவிலில் தமிழனுக்கும் தமிழுக்கும் தடை! தில்லையில் இருப்பது தமிழ்நாடா ? இல்லை அதற்குள் ஒரு தனி நாடா ? தில்லை நடராஜர் கோவிலை இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர சிறப்பு சட்டம் இயற்று ! என்கிற முழக்கத்தை முன்வைத்தும், சிதம்பரம் தில்லை நடராஜர் கோவிலில் சிவபக்தை இலட்சுமியை சாதியை சொல்லி இழிவுபடுத்திய தீட்சிதர்களின் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் போட்டு கைது செய்ய வேண்டும் என்றும், தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட இணைச் செயலாளர் ஆசாத் அவர்கள் தலைமையில், மக்கள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், த. சண்முகசுந்தரம் அவர்கள், ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை விளக்கி பேசினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளர், செல்லத்துரை அவர்கள், தங்கராசு அவர்கள், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட பொருளாளர் முரளி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஒன்றிய பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்து மத பிரச்சினைகள் மூலம் இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கில் மதச்சார்பின்மை என்கிற இந்திய அரசியலமைப்பு சட்டத்தை சீர்குலைக்கும் நோக்கிலும் தொடர்ச்சியாக செயல்பட்டு வருவதை கண்டித்தும் விளக்கி தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருவாரூர்-6374741279
கோகுல்ராஜ் கொலை வழக்கு || மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி !
பத்திரிகை செய்தி
08.03.2022
கோகுல்ராஜ் கொலை வழக்கு
ஆணவக் கொலை குற்றவாளி யுவராஜ் உள்ளிட்டோருக்கு சாகும்வரை சிறை !
நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்பதுடன் உறுதியான நெஞ்சுரத்தோடு இறுதிவரை போராடிய கோகுல்ராஜின் தாய், வாதாடிய வழக்கறிஞர் தோழர் ப.பா. மோகன் உள்ளிட்டோருக்கு மக்கள் அதிகாரம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது!
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த கோகுல்ராஜ் என்ற பொறியியல் பட்டதாரி காணாமல் போனார்.
நாமக்கல் அருகே உள்ள கிழக்கு தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை வேறு உடல் வேறாக கோகுல்ராஜின் உடலானது நாக்கு துண்டிக்கப்பட்டவாறு கண்டெடுக்கப்பட்டது. ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த ஒருவர் பேசிக் கொண்டிருந்ததால் நடத்தப்பட்ட கொலை இது.
இந்த கொலையை சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை என்ற சாதிவெறி அமைப்பின் நிறுவனரான யுவராஜ் தலைமையிலான சாதிவெறிக் கும்பல் நடத்தியது என்பது அடுத்தடுத்த நாட்களில் வெளிச்சத்துக்கு வந்தது, என்றாலும் யுவராஜை போலீசால் நெருங்கவே முடியவில்லை.
படிக்க :
♦ சர்வதேச அளவில் இழிவுபடுத்தப்படும் ‘பறையா’ எனும் சொல் || வி.இ.குகநாதன்
♦ உக்ரைன் : உலகத்தை மேலாதிக்கம் செலுத்துவதற்கான கழுத்தறுப்பு போர்!
சுமார் 100 நாட்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்தபடியே யுவராஜ் ஒட்டுமொத்த போலீசு துறையையே மிரட்டிக் கொண்டிருந்தான். இவ்வழக்கை விசாரித்த டிஎஸ்பி விஷ்ணு ப்ரியாவையும் மிரட்டினான். டி.எஸ்.பி விஷ்ணுபிரியா சில நாட்களில் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார். டிஎஸ்பி விஷ்ணு பிரியாவின் தந்தை எவ்வளவு தூரம் போராடியும் தன்னுடைய மகளின் சாவுக்கு அவரால் இறுதிவரை நீதியைப் பெறவே முடிய இல்லை.
பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு, போலீசில் யுவராஜ் சரணடைந்தான். உழைக்கும் மக்களுக்காக போராடுபவர்களின் சட்டையைப் பிடித்து, இழுத்து, அடித்து, உதைத்து கைது செய்யும் போலீஸ், ஆதிக்க சாதி வெறியன் ஆணவக் கொலை குற்றவாளி யுவராஜ் சரண்டருக்காக காத்துக்கிடந்தது.
யுவராஜை கைது செய்த பிறகும் கூட கோகுல்ராஜின் தோழியான சுவாதி உட்பட பலரும் பிறழ் சாட்சிகளாக மாறிப் போனார்கள். இதனால் கோகுல்ராஜின் தாய், இப்பகுதியில் தொடர்ந்து வழக்கு விசாரணை நடந்தால் நேர்மையாக இருக்காது என்பதால் வேறு பகுதிக்கு மாற்றக் கோரினார் . மேலும் அரசு வழக்கறிஞர், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக செயல்படவில்லை என்பதால் மூத்த வழக்கறிஞர் ப.பா. மோகன் அவர்களை அரசு சிறப்பு வழக்கறிஞராக நியமிக்க வேண்டுமென்று நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தார். அவரின் மனுவை தூக்கி கிடப்பில் போட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் சாதி வெறியர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார்.
இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த பிறகு, வழக்கறிஞர் ப.பா. மோகன் அவர்களை இந்த வழக்கின் அரசு சிறப்பு வழக்கறிஞராக நீதிமன்றம் நியமித்தது .
அதன்படி இந்த வழக்கு மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட 15 பேரில் ஐந்து பேர் விடுவிக்கப்பட்டு 10 பேர் குற்றவாளிகள் என்று கடந்த ஐந்தாம் தேதி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
விசாரணைக்குப் பின் நீதிபதி சம்பத்குமார் குற்றவாளிகளுக்கான தண்டனையை இன்று (08-03-2022) அறிவித்தார்.
ஆதிக்க சாதி வெறி வெறியனும் – தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் தலைவருமான யுவராஜ் மற்றும் அவனது கார் ஓட்டுநர் ஆகியோருக்கு மூன்று ஆயுள் தண்டனையுடன் சாகும்வரை சிறையில் இருக்க தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 8 பேரும் சாகும் வரை சிறையில் இருக்க நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
யுவராஜ் உள்ளிட்ட ஆணவக்கொலை குற்றவாளிகள்- சாதிவெறியர்கள் மேல்முறையீடு செய்து தண்டனையில் இருந்து தப்பிப்பதற்கான வாய்ப்புகள் தான் அதிகமாயிருக்கிறது .
பரப்பன அக்ரகார நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து ஊழல் குற்றவாளி ஜெயலலிதா தன்னைத்தானே விடுதலை செய்து கொண்டார். மேலவளவு முருகேசன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர்கள் எடப்பாடி பழனிச்சாமியின் கருணையால் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டார்கள்.
தர்மபுரியில் வேளாண் கல்லூரி மாணவர்களை எரித்துக் கொன்ற அதிமுக கொலைகாரர்களும் கூட ஆயுள் தண்டனையை முழுமையாக அனுபவிக்காமல் தப்பித்து வெளியே வந்தனர்.
ஆதிக்க சாதி வெறியர்களுக்கும் ஊழல் குற்றவாளிகளுக்கும் கொலைகாரர்களுக்கும் ஆதரவாக இந்த ஒட்டுமொத்த அரசுத் துறையும் செயல்பட்டு கொண்டிருக்கும் இந்த காலத்தில்தான் யுவராஜுக்கு தண்டனை கிடைத்து இருக்கிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
இந்த தண்டனையும் தானாக இந்த அரசின் நீதித்துறையில் கருணையால் வந்தது அல்ல.
இந்த வழக்கில் மொத்தம் 106 சாட்சிகள் சேர்க்கப்பட்டிருந்தன. அதில் முக்கியமான சாட்சி, கோகுல்ராஜின் தோழி திடீரென பிறழ் சாட்சியானார். இதேபோல் பல அரசு தரப்பு சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறி, வழக்கின் போக்கையே மாற்றின. இருந்தபோதும் உறுதியாக வழக்கறிஞர்கள் போராடினார்கள்.
மூத்த வழக்கறிஞர் ப.பா மோகன் உள்ளிட்ட பல வழக்கறிஞர்கள் தன்னலம் கருதாமல் அர்ப்பணிப்புடன் போராடியதால் கிடைத்த தீர்ப்பு இது.
அரசு வழக்கறிஞராக செயல்பட்ட ப.பா. மோகன், இத்தனை ஆண்டுகளில் இதுவரை தனக்கு அரசு வழக்கறிஞருக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை கூட இந்த அரசு வழங்கவில்லை என்றும் இவ்வழக்கிற்காக ஒவ்வொருமுறை வந்து செல்லும் செலவை கூட தானே ஏற்று செயல்படுவதாகவும் கூறியுள்ளார். ஒரு அரசு வழக்கறிஞருக்கு டோல்கேட்டில் வந்து செல்வதற்கான இலவச பாஸைக் கூட கொடுக்காமல் இந்த அரசு எவ்வளவு ஏளனப்படுத்தி இருக்கிறது என்பதை நாம் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.
கோயிலில் தோழியுடன் பேசிக் கொண்டிருந்த ஒரு பட்டியலின பொறியியல் பட்டதாரி காணாமல் போனது – சில நாட்களில் தலை துண்டாகவும் நாக்கு அறுபட்ட நிலையில் அவரது பிணம் கண்டெடுக்கப்பட்டது – நான்தான் கொலை செய்தேன் என்று யுவராஜ் பகிரங்கமாக தெரிவித்த பிறகு நூறு நாட்களாகியும் அவனை கைது செய்யாமல் சரண்டர் ஆக மேற்கொள்ளப்பட்ட போலீஸின் முயற்சிகள் – கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட யுவராஜ் உள்ளிட்டோருக்கு சிறையில் கொடுக்கப்பட்ட ராஜமரியாதை – நீதிமன்றங்களில் யுவராஜ் ஆஜர் படுத்தும்போது அவனுடைய ஆணவமான பேச்சு – சாட்சிகள் எல்லாம் பிறழ் சாட்சிகளாக மாறிப்போனது – அரசு வழக்கறிஞராக ப.பா மோகனை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசு உதாசீனப்படுத்தியது – நீதிமன்றம் மூலம் அவர் நியமிக்கப்பட்டார். இப்படி பல்வேறு தடைகளையும் மீறி அல்லவா இந்த தீர்ப்பு வந்திருக்கிறது!
படிக்க :
♦ உக்ரைன் : ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் போர் | தோழர் சுரேசு சக்தி முருகன்
♦ இலக்கியம் கற்றுக்கொள்ள இலக்கிய நூல்கள் மட்டும் போதுமா ? || பாவெல் சக்தி
சாதி ஆணவக் கொலைகள் பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை. எனினும் இந்த வழக்கில் இருந்து குற்றவாளிகள் யுவராஜ் உள்ளிட்டோர் மேல்முறையீட்டின் மூலம் தப்பிப்பதற்கான எல்லா வாய்ப்புகளும் இருக்கின்றன. அப்படிப்பட்ட சூழல் ஏற்படின் அதற்கு எதிராகவும் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.
தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை, வன்னியர் சங்கம், முக்குலத்தோர் சங்கம் போன்ற ஆதிக்க சாதி வெறி அமைப்புகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான கருத்தினை மக்களிடம் பரப்பி ஆணவக் கொலைகளையும் சாதிவெறி தாக்குதல்களையும் நடத்தி வருகின்றன. உடுமலை சங்கரை கொலை செய்த கௌசல்யாவின் குடும்பத்தினருக்கு ஆதிக்க சாதி அமைப்புகள் நிதி உதவி அளித்தது குறிப்பிடத்தக்கது .
இது போன்ற ஆதிக்க சாதி வெறி அமைப்புகள் அனைத்தும் தடை செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசிடம் மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது. மேலும் ஆதிக்க சாதி வெறியர்களுக்கு எதிரான, ஆதிக்க சாதி சிந்தனைக்கு எதிரான பண்பாட்டுத் தளத்தில் பரந்து விரிந்த பரப்புரையை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஜனநாயக – முற்போக்கு- பெரியாரிய- கம்யூனிச இயக்கங்களுக்கு உள்ளது என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
தோழமையுடன்
தோழர் வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
மாநில அரசுகளை முடக்குவதே மோடி அரசுக்கு முழுநேர பணியாம்!
எதிர்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளின் செயல்பாட்டை முடக்கும் மோடி அரசு – பாகம் 1
பாகம் 2 :
மாநில அரசுகளை முடக்குவதே மோடி அரசுக்கு முழுநேர பணியாம்
ஒன்றிய அரசின் அதிகார வரம்பிற்குள் வரும் சிபிஐ(CBI) மற்றும் அமலாக்கத்துறை(ED) ஆகியவற்றை தனது ஆளுமைக்குள் வராத அரசியல் கட்சிளை மற்றும் அரசியல் ரீதியாக எதிர்க்கும் மாநில அரசுகளை அச்சுறுத்தும் ஆயுதமாக மோடி பயன்படுத்துவது என்பது நாடறிந்த ஒரு செய்தி. அதற்கு ஏராளமான ஆதாரங்களை தரமுடியும். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ஒரு ரூ.2000-க்காக மக்கள் வங்கி வாசலில் மணி கணக்கில் வரிசையில் நின்றபோது தமிழ்நாட்டில் சேகர்ரெட்டியின் வீட்டில் ரெய்டு மூலம் எடுக்கப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளாக ரூ.32 கோடி பற்றி ரிசர்வ் வங்கியே நற்சான்று தந்தது மறக்க முடியாது.
அதன் தொடர்ச்சியாக இன்றளவும் எந்த கட்சியிலிருந்தாலும் சரி, என்ன குற்றங்கள் செய்திருந்தாலும் சரி, பாஜக-வில் ஐக்கியமாகிவிட்டால் கங்கையில் குளித்து புனிதபடுத்தியது போல என்று கேலி சமூக ஊடகங்களில் வைரலாக இருக்கிறது. குதிரை பேரங்களை முன்னெப்போதும் இல்லாத வகையில் கேவலமான முறையில் பயன்படுத்தி தாங்கள் பெரும்பான்மை இல்லாவிட்டாலும் பல மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைத்திருப்பதை முதலாளித்துவ ஊடகங்களே அம்பலப்படுத்தியுள்ளன.
ஜிஎஸ்டி வரியை மாநிலங்கள் மூலம் வசூல் செய்து கொண்டு அவற்றுக்கு உரிய பங்கினை தராமல் இழுத்தடிப்பது அதன்மூலம் மாநில அரசுகளை நிதிபற்றாக்குறையில் நிறுத்தி உரிய திட்டங்களை அமுல்படுத்தவிடாமல் செயலற்ற அரசாக குறை சொல்லுவது என்று நரித்தனமாக நடந்து கொள்கிறது மோடி அரசு. புயல் வெள்ள நிவாரணங்களை எதிர்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு உரிய நேரத்தில் உரிய தொகையை தராமல் வேண்டுமென்றே சிக்கலில் மாட்டிவிடுவது என்ற பாரபட்சத்துடன் நடந்து கொள்கிறது.
படிக்க :
♦ நீங்க யாருக்கு ஓட்டுப் போட்டாலும் நாங்க தான் ஆட்சி செய்வோம் ! பாஜக ஸ்டைல் !!
♦ ” லவ் ஜிகாத் ” சட்டத்தை அமல்படுத்தும் பாஜக மாநில அரசுகள் !
தன்னை எதிர்க்கும் மாநில அரசுகள் மீது அமைப்பு ரீதியாகவும் மோடி அரசு பிரச்சினைகளை உருவாக்கி வருகிறது. அதற்கு ஏற்றவாறு ஐ.ஏ.எஸ் – ஐ.பி.எஸ் அதிகாரிகளிடம் நயவஞ்சகமான முறையில் விசுவாசத்தை சோதனை செய்கிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஐ.ஏ.எஸ் – ஐ.பி.எஸ் அதிகாரிகளை தனிப்பட்ட முறையிலும் கொள்கை ரீதியாகவும் தங்களிடம் கீழ்படிந்து விசுவாசமாக நடக்க வேண்டும் என்பதாக நிர்பந்திக்கப்படுவதை வெளிப்படையாக பல நேரங்களில் வெளிப்படுத்தியுள்ளனர்.
தங்களின் கட்சி பாஜக ஆளாத மாநிலங்களில் உள்ள குறிப்பாக மகாராஷ்டிரா மேற்குவங்கம் ஆகியவற்றிலுள்ள ஐ.ஏ.எஸ் – ஐ.பி.எஸ் அதிகாரிகள் ஒன்றிய அரசின் கட்சியின் கொள்கைகளுக்கு விசுவாசமாக இருக்க வேண்டுமென மிகப்பெரிய நிர்பந்தத்துக்கு உள்ளாவதை வெளிப்படுத்தியுள்ளனர். இப்படிப்பட்ட நடைமுறை இயல்பாகவே சுயாட்சி மனப்பான்மையுள்ள மாநில அரசுகளை வக்கிரமான முறையில் நிர்வாக ரீதியாக முடக்கி போட்டு செயல்பாடற்றதாக்க வேண்டும் அல்லது தங்களுக்கு பணிய செய்யவேண்டும் என்பதற்காகவே செய்யப்படுகிறது. ஒருபுறம் இந்திய அரசியல் சட்டத்தை மதிப்பதாக காட்டிக் கொண்டே அதற்கு எதிரான நடவடிக்கைகளை செய்வதன் மூலம் ஒன்றிய அரசின் அடிப்படையையே தகர்த்து கொண்டிருக்கிறது மோடி அரசு.
மோடி – அமித்ஷா அரசு எதிர்கட்சி ஆளும் மாநிலங்களை ஆளுநர்கள் மூலம் நிர்வாக சீர்குலைவு வேலைகளை செய்து வருகிறது. பாண்டிச்சேரியில் அதன் ஆளுநர் கிரண்பேடி நடத்திய போட்டி அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் மாண்பினை தகர்த்தது. மேற்குவங்கத்தில், மகராஷ்டிராவில் என ஆளுநர்கள் மூலம் அந்தந்த மாநில அரசுகளை செயல்படவிடாமல் குடைச்சல் கொடுத்து வருவது நாளும் வருகிற செய்திதான்.
பாஜக பெரும்பான்மை பெறாத மாநிலங்களிலும் அதிகாரத்தை கைப்பற்ற அரங்கேற்றும் குதிரை பேரங்கள், ஆள்கடத்தல், சிபிஐ மிரட்டல் போன்றவற்றுக்கு உறுதுணையாக பாஜக ஆட்சியை பிடிக்க என்ன அக்கிரமம், அநியாயம் நடந்தாலும் வாயே திறக்காமல் பாஜக-வின் கட்சிகாரர் போல நடக்கும் ஆளுநர்கள் எதிர்கட்சி மாநிலங்களில் பொறுப்பை காட்டுவதாக வம்படியான கோமாளித்தனங்களை அரங்கேற்றுகின்றனர். இப்போது தமிழ்நாட்டிலும் ஆளுநர் மூலம் மோடி – அமித்ஷா கூட்டணி தனது வேலையை காட்டிக் கொண்டிருக்கிறது. இந்தியா குடியரசான பின் முன்னெப்போதும் இல்லாத வகையில் கேவலமான முறையில் அரசியல் சட்டம் ஆளுநர்களை கொண்டு மீறப்படுகிறது.
மோடி பிம்பத்தை ஊதி பெருக்க மக்களின் வரிப்பணம்!
மாநில மத்திய அரசுகளின் கூட்டாட்சி என்ற இந்திய அரசியல் சட்டத்தின் மாண்பினை கேலி செய்யும் வகையில் எந்த பிரதமருக்கும் செய்யாத வகையில் மோடியின் பிம்பத்தை ஊதிபெருக்கி காட்ட அரசின் கஜானா தாராளமாக திறந்துவிடப்பட்டுள்ளது. மாநில அரசு பட்டியலில் இருக்கும் துறைகளில் திட்டங்கள் நிறைவேற்றபடும்போது கூட மோடியின் உருவப்படம் வருவது மோடியின் விளம்பர மோகம் மற்றும் மொத்த நாட்டுக்கே தான்தான் சர்வாதிகாரம் படைத்த தலைவன் என்ற அதிகாரத்துவத்தை நிலைநாட்டுவதாக உள்ளது.
பிரதமர் மோடியை சுற்றி செயற்கையாக போடப்படும் ஆளுமை வழிபாட்டுமுறைகள் அவரை சுற்றி ஒரு ஒளிவட்டம் போட்டு பாராளுமன்றம், நீதிமன்றங்கள், கட்சிகள், ஆட்சிகள் எல்லாவற்றுக்கும் மேலானவராக காட்டுவதற்காகும் செலவினங்கள் யாவும் மாநில மக்கள் வரிப்பணத்திலிருந்து கணக்குகாட்டப்படாத வகையில் பிடுங்கியெடுக்கப்படுகிறது.
உதாரணத்திற்கு பி.எம் கேர்ஸ் நிதி அமைப்பை கொரோனா பெருந்தொற்றையொட்டி பிரதமர் மோடி ஏற்படுத்தினார். ஏற்கனவே பேரிடர் நிதி என்ற தனி அமைப்பும் ஒன்றிய அரசிடம் உள்ளது. இந்த பி.எம் கேர்ஸ் என்பது எவரும் கேள்வி கேட்க முடியாத உள்நுழைந்து செயல்பாடுகளை ஆராய முடியாத வகையில் சீலிடப்பட்டுள்ளது. இது உண்மையில் இந்திய அரசின் பிரதமர் பேரில் இருந்தாலும் நாட்டின் எந்த சட்டத்திட்டங்களுக்கும், ஆடிட் வகைகளுக்கும் உட்படுத்தபட முடியாது.. இந்த நிதிக்கு தரப்படும் பணத்திற்கு வரிவிலக்கு உண்டு. அதுவும் கார்ப்பரேட் சமூக பொறுப்பு என்ற பெயரில். அதே சமயம் மாநில அரசுகள் ஏற்படுத்தியிருக்கும் நிவாரண நிதியகங்களில் செலுத்தப்படும் நன்கொடைகளுக்கு வரிவிலக்கு செய்யப்பட்டுள்ளது. ஒரு கூட்டாட்சி என்ற கொள்கையை தகர்க்க மோடி வைத்திருக்கும் ஆயுதங்களில் இதுவும் ஒன்று.
கூட்டாட்சி ஒன்றியத்தில் சட்டப்பூர்வமாக அமைக்கப்பட்ட அரசுகளை உண்மையில் ஒழித்த ஒரே பிரதமர் மோடி தான். கோவா, அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், திரிபுரா மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய யூனியன் பிரதேசங்கள் மாநிலங்களாக மாற்றப்பட்டன. அதே வேளையில் மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசங்களாயின. இது மத அடிப்படையில் மக்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்த வலிந்து திணிக்கப்பட்ட ஒன்று. 370 சட்ட பிரிவை நீக்கி முஸ்லீம் மக்கள் ஏதோ சலுகைகளை அனுபவித்து வந்ததை போன்ற அவதூறுகளை நாடு முழுக்க பரப்பியது. இதன் மூலம் சிறுபான்மை மக்களுக்கு எதிரான பெரும்பான்மை வெறுப்புணர்வை வளர்க்கும் தொனியுடன் கூடிய அழிவுக்கு வழிவகுக்கும் செருக்கு மற்றும் அடாவடித்தனத்துடனும் அதிகார போதையுடனும் செய்த செயலாகும். வேறெந்த இந்தியப் பிரதமரும் கூட்டாட்சிக் கொள்கை அரசியல் சட்டத்தின் மீது இதை போன்றதொரு மிகக் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை தொடுத்ததில்லை.
ஜம்மு மற்றும் காஷ்மீரை போலவே அதற்கு வெளியேயும், நரேந்திர மோடியும், அமித்ஷாவும் மாநிலங்களின் உரிமைகளை பலவீனப்படுத்துவதற்கு 356-வது பிரிவை விட அப்பட்டமான மற்றும் கொடூரமான நுட்பமான கருவிகளைப் பயன்படுத்தி வருகின்றனர் என்பதுதான் நடைமுறையில் கண்கூடாக தெரிவது.
நாட்டின் மொத்த ஊடகங்களையும் அதிகாரத்தை பயன்படுத்தி தனக்கு உடந்தையாக செயல்படவைத்து மக்களின் வரிபணத்தில் உருவாகி மிகச் சிறப்புடன் செயல்பட்டு வரும் பல்கலைக் கழகங்களின் மாண்புகளை குலைத்து சீரழிப்பது இராணுவத்தை அரசியல்மயமாக்கி தங்களது காவி எண்ணத்தோடு செயல்பட தூண்டுவது; அதை அம்பலபடுத்தி பேசுபவர்களை தேச விரோதிகள் என தூற்றுவது; பெரும்பான்மை மதவாதத்தை வெறித்தனத்துடன் கூடிய வன்முறைகளாக செயல்படுத்த பிரதமரே அதே மத நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று முழுஆதரவு கொடுப்பது என்று இந்திய குடியரசின் கூட்டாட்சி கொள்கையின் மீது பன்முக தாக்குதலை திட்டமிட்டு அரங்கேற்றி வெற்றிகரமாக செயல்படுத்துவதே இத்தனை ஆண்டுகால மோடி – அமித்ஷா ஆட்சியின் சாதனைகளாகும்.
படிக்க :
♦ மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் அணைப் பாதுகாப்பு மசோதா !
♦ நூல் அறிமுகம் || 1974 : மாநில சுயாட்சி || ஆழி செந்தில்நாதன்
இந்த சாதனைகளுக்காக மக்கள் பெருமைபட எதுவும் இல்லை. மாநில அரசுகளும் தேர்தல்கள் மூலம் சட்டப்பூர்வமாக அமைகின்ற அரசுதான். ஆனால், மாநில அரசுகளின் உரிமைகளை பறித்து நிதி ஆதாரங்களை முடக்கி எதற்கெடுத்தாலும் தன்னை நோக்கி கையேந்தும் நிலையில் வைப்பதன் மூலம் மக்களின் ஜனநாயக உரிமைகளை முக்கியமாக ‘வாக்களிப்பதால் கிடைக்கும் சிறப்பான உரிமையை’ கேலிக் கூத்தாக்குகிறது.
மாநில சுயாட்சி கோரிக்கை மாநில அரசுகளின் ஓட்டாண்டித்தனத்தால் வலுவிழந்து இருப்பதும் மோடியின் காட்டுதர்பார் ஆட்சிக்கு காரணமாகும். மாநில சுயாட்சி கோரிக்கையின் மீது மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் அனைத்து அமைப்புகளும் கவனம் செலுத்தி மக்கள் இயக்கங்களை முன்னெடுத்து மாநில அரசுகளுக்கு நிர்பந்தத்தை உருவாக்க வேண்டும்.
மோடி அரசின் செயல்பாடுகளை தனி தனியான செயல்பாடுகளாக பார்க்காமல் ஒரு திட்டமிட்ட முறையில் கட்டமைக்கப்படும் பாசிசத்திற்கான ஊற்றின் மூலமாக மக்களுக்கு புரியவைக்கும் வகையில் தொடர்ந்து அம்பலபடுத்தி விளக்க வேண்டியது ஜனநாயக உணர்வுள்ள செயற்பாட்டாளர்களது கடமையாகிறது.
(முற்றும்)
![]()
மணிவேல்
மூலக்கட்டுரை : ராமச்சந்திர குஹா
நன்றி : ஸ்க்ரால்

























