Monday, June 29, 2026
முகப்பு பதிவு பக்கம் 337

தமிழகத்தை நாசமாக்காதே ! கடலூர் கருத்தரங்க செய்திகள் – படங்கள் !

“அணுக்கழிவு, ஹைட்ரோகார்பன், எட்டு வழிச்சாலை – தமிழகத்தை நாசமாக்காதே !” என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் மாநாடு, கருத்தரங்கம், பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சி ஆகியவற்றை நடத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கடலூரில் 26.08.2019 அன்று மாலை 04:00 மணி அளவில் மஞ்சகுப்பம் டவுன்ஹாலில் கருத்தரங்கம், ம.க.இ.க கலை நிகழ்ச்சி ஆகியவை  நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மக்கள் அதிகாரம், கடலூர் மண்டல ஒருங்கிணைப்பாளர், தோழர் து. பாலு அவர்கள் தலைமைதாங்கினார். அவர் பேசுகையில்:

“கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்கள் அதிகாரம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்துப் போராடி வருகிறது. தமிழகத்தில் மக்கள் அதிகாரம் கூட்டங்களுக்கு அனுமதி கிடையாது ஏனென்றால், இது அதானி – அம்பானி போன்ற முதலாளிகள் தொடர்பான பிரச்சினை எனவே கூட்டத்திற்கு அனுமதி இல்லை.

CUddalore-PP-Meeting-(5)இந்தியாவில் உள்ள 58 மண்டலங்களில் மிகவும் முக்கியமான இடம் தமிழகம். மரக்காணம் முதல் கடலூர் வரை ஒரு மண்டலம், பரங்கிப்பேட்டை முதல் வேதாரண்யம் வரை ஒரு மண்டலம், குள்ளஞ்சாவடி முதல் வேளாங்கண்ணி வரை ஒரு மண்டலம் இதில் மிகவும் முக்கியமானது கடலூர் பகுதி.

இப்படி ஹைட்ரோகார்பன், 8 வழிச்சாலை, அணுக்கழிவு, கோயம்புத்தூர் பகுதியில் கெயில் குழாய் பதிப்பு, தேனியில் நியூட்ரினோ என பல்வேறு திட்டங்களை தமிழகத்தில் கொண்டுவருகிறார்கள். 10 பேர் சேர்ந்து ஒரு பெண்ணை நாசமாக்குவது போல் தமிழகத்தை நாசமாக்க பார்க்கிறார்கள்.

இந்த நாசகார செயல்களை மறைக்க இவர்கள் எடுக்கும் ஆயுதம் டாஸ்மாக், சாதிக்கலவரம், மதக்கலவரம் போன்றவை. எனவே இதையெல்லாம் நாம் முறியடிக்க வேண்டும். மக்கள் அதிகாரம் மட்டும் போராடி இதை முறியடிக்க முடியாது நாம் எல்லோரும் சேர்ந்து எதிர்க்க வேண்டும்” என்று உரையாற்றினார்.

படிக்க :
♦ டியர் மிடில்கிளாஸ், மூழ்கும் கப்பலில் பாதுகாப்பான இடம் எதுவும் கிடையாது !
♦ காஷ்மீர் : மோடிக்கு சொம்படிக்கும் இந்திய பிரஸ் கவுன்சில் !

இதைத்தொடர்ந்து சிதம்பரம், காவிரி டெல்டா விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் திரு இளங்கிரன் பேசுகையில்: “கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி தெரியாமல் உள்ளது எனவே ஒவ்வொரு இளைஞரும் கிராமத்திலுள்ள பத்து விவசாயிகளுக்கு ஹைட்ரோகார்பன் திட்டத்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை தெரியப்படுத்த வேண்டும்.

அதிமுக அமைச்சர் சி.வி. சண்முகம் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்கிறார். இவர்களை நம்பினால் நீட் தேர்வில் என்ன நடந்ததோ, அதேதான் ஹைட்ரோ கார்பன் திட்டதிலும் நடக்கும். மத்திய அரசு தமிழகத்தை சுடுகாடாக நினைக்கிறது, ஆகையால் இந்தத் திட்டத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்” என்று உரையாற்றினார்.

இதைத்தொடர்ந்து திரு இளங்கோவன் அவர்கள் ஹைட்ரோகார்பன், அணுக்கழிவு, புதிய கல்விக் கொள்கை, இந்தி – சமஸ்கிருத திணிப்பு, ஆகியவற்றை அம்பலப்படுத்தும் வகையில் கவிதை வாசித்தார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

அவருக்கு அடுத்தபடியாக ஹைட்ரோகார்பன் – சாகர்மாலா எதிர்ப்பு இயக்கங்களின் கூட்டமைப்பு, தோழர் கு. பாலசுப்பிரமணியன் அவரது உரையில்: “நாடே பொருளாதார நெருக்கடியில் இருக்கும் போது, மக்களை பாதுகாப்பது விவசாயம்தான். ஆனால் இன்று விவசாயம் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு வருகிறது.

நாட்டின் வளர்ச்சி என்ற பெயரில் பல்வேறு திட்டங்களை கொண்டு வருகிறார்கள். ஆனால் நாட்டில் வேலைவாய்ப்பு இல்லை, வறுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, குடிநீர் கூட இந்த அரசால் வழங்க முடியவில்லை தமிழகம் முழுவதும் மின்சாரம் வழங்கப்படவில்லை; ஆனால் அரசு ஹைட்ரோகார்பன் எடுப்பதில் மட்டும் ஆர்வம் காட்டுகிறது.

இன்று விவசாயிகள் பெருமளவு தங்களுடைய கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி போராடி வருகிறார்கள் ஆனால் அதை செய்ய மறுக்கும் இந்த அரசு அதானி, அம்பானி போன்ற முதலாளிகளின் கடனை பெருமளவு தள்ளுபடி செய்கிறது.
ஆக அரசு என்பது மக்கள் நலன் இல்லாமல் முதலாளிகள் நலன் என மாறிவிட்டது. எனவே இந்த பிரச்சாரத்தை கிராமந்தோறும் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் இதை எதிர்த்துப் போராடி முறியடிக்க வேண்டும்” என்று கூறி நிறைவு செய்தார்.

இதைத்தொடர்ந்து பத்திரிகையாளர் திரு அய்யநாதன் உரையாற்றும் பொழுது; “தமிழகத்தில் குறிப்பாக காவிரிப்படுகையில் மக்களுடைய பிரச்சினைகளுக்கு போராட்டம், கூட்டம் நடத்த இதற்கு முன் அனுமதி இருந்தது. ஆனால் எப்பொழுது ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக காவிரி படுகையை கபளீகரம் செய்யத் துணிந்தார்களோ; எட்டு வழி சாலைக்காக ஐந்து மலைகளை சிதைக்க துணிந்தார்களோ; மக்களை வாழ வழி இல்லாத நிலையை உருவாக்க அணுக் கழிவுகளை கொட்ட துணிந்தார்களோ; அப்போதிருந்து அவர்கள் கையில் எடுக்கும் ஆயுதம் அடக்குமுறை.

வளர்ச்சி என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக மண் வளங்களையும், கனிம வளங்களையும், மக்களையும் சுரண்டுகிறார்கள். இதனை எதிர்த்து கேட்பவர்களை வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்று முத்திரை குத்துகிறார்கள். பிரதமர் மோடி அவர்களே, இன்றைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவுக்கு என்ன பதில் வைத்துள்ளீர்கள்?

உலகம் முழுவதும் தொழில்நுட்ப மாற்றத்தினால் மின்கலங்களுக்கும் மாறிக் கொண்டிருக்கும் வேளையில்; உலகம் முழுவதும் கச்சாப்பொருள் சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில்; ஹைட்ரோ கார்பன் யாருக்காக எடுத்து எங்கே கொடுக்கப் போகிறீர்கள்?”

மேலும் மக்கள் சந்தித்து வரும் பொருளாதார நெருக்கடி, வேலைவாய்ப்பின்மை, மக்களின் வாங்கும் சக்தி குறைதல் என்று அடுக்கடுக்கான பிரச்சினை குறித்த கேள்விகளை முன் வைத்து எழுச்சிகரமாக உரையாற்றினார்.

படிக்க :
♦ வேதாரண்யம் அம்பேத்கர் சிலை உடைப்பு : கடலூர் மாணவர்கள் போராட்டம் !
♦ இந்து ராஷ்டிரம் : நம் கண்முன்னேயே நெருங்கிக் கொண்டிருக்கிறது !

அவரைத் தொடர்ந்து மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளாளர் தோழர் காளியப்பன் அவரது சிறப்புரையில்: “தமிழகத்தில் அணுக்கழிவு, ஹைட்ரோகார்பன், எட்டு வழி சாலை, போன்ற திட்டங்கள் எல்லாம் நாட்டின் வளர்ச்சி என்ற பெயரில் திணிக்கப்படுகிறது. ஆனால் நாட்டு மக்கள் இந்த வளர்ச்சி எங்களுக்கு தேவையில்லை என்று எதிர்க்கிறார்கள், போராடுகிறார்கள்.

தமிழக சட்டமன்றத்தில் அமைச்சர்கள் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கொண்டு வந்தால் நாங்கள் கிரிமினல் வழக்கு தொடருவோம் என்கிறார்கள். ஆனால் மக்கள் ஹைட்ரோகார்பன் வேண்டாமென தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றினால் போலீசு மக்கள் மீது வழக்கு போடுகிறது. எனில் தமிழகத்தில் யாருக்கு அதிகாரம் இருக்கிறது.

கார்ப்பரேட்டுகள் என்ன நினைக்கிறார்களோ அதைத்தான் ஆட்சியாளர்களும், போலீசும் செய்கிறது. தமிழகம் முழுவதும் மக்கள் இந்த நாசகார திட்டங்களுக்கு எதிராக பல்வேறு அமைப்புகளை ஏற்படுத்தி போராடி வருகிறார்கள். ஆனால் இது போதுமானது கிடையாது.

நாம் இப்போது தனித்தனி ஆயுதமாக இருக்கிறோம், அனைத்தையும் ஒன்று சேர்க்க வேண்டும். நாம் மிகப்பெரிய சக்தியை மாற வேண்டும், மாபெரும் சக்தியாக எழுந்து நாசகார திட்டங்களை விரட்டி அடிப்போம்.” என்று கூறி நிறைவு செய்தார்.

பின்னர் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கலைக்குழு சார்பில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. கடைசியாக மக்கள் அதிகாரம் கடலூர் வட்டார குழு தோழர் ஜெயக்குமார் நன்றியுரையாற்றினார். அத்துடன் கூட்டம் நிறைவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் – இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள் என சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
கடலூர் மண்டலம்.
தொடர்புக்கு :  81108 15963


இதையும் பாருங்க :

எங்க மண்ணு.. எங்க ஊரு.. மீத்தேன் எடுக்க நீ யாரு ? – பாடல் வீடியோ

ஸீனா உன்னுடைய இதயத்தைப் பதிவு அஞ்சலில் திருப்பி அனுப்புவாள் !

உண்மை மனிதனின் கதை | மூன்றாம் பாகம் | அத்தியாயம் – 02-அ

கட்டான பஸ்களின் ஜன்னல்களிலிருந்து வெளியே பார்த்தன பழுப்பேறிய, கிளர்ச்சி பொங்கும் முகங்கள். உயரமற்ற மேனியும் வழுக்கைத் தலையும் நொண்டும் காலும் கொண்ட ஓர் ஆர்மீனியன் கோடிட்ட பைஜாமா அணிந்து கெந்திக் கெந்தி நடந்தவாறு பஸ்களின் அருகே அலை பாய்ந்தான். இளைப்பாறுவோர் கூட்டம் ஒவ்வொன்றிலும் கட்டாயமாகக் காணப்படும், எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படும் வேடிக்கைப் பேச்சாளர்கள் மற்றும் சுய விருப்ப விகடகவிகளில் இவன் ஒருவன். கைத்தடியை வீசி ஆட்டியவாறு ஒரு பிரயாணிக்கு ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான் அவன்:

“ஏய், வானில் பாசிஸ்டுகளுக்கு என் வணக்கத்தைத் தெரிவியுங்கள்! பேத்யா! உன்னை ‘நிலவு ஸ்நானத்தை’ முடிக்க விடாமல் அடித்தற்காக அவர்களிடம் கணக்குத் தீர்த்துக்கொள். பேத்யா! தலைசிறந்த சோவியத் விமானிகளின் காதல் விவகாரங்களில் அவர்கள் குறுக்கிட்டது பண்பற்ற செய்கை என்று வானத்தில் அவர்களுக்குக் காட்டு. பேத்யா! போர்க்களத் தபால் நிலைய எண்ணை விரைவில் எழுதி அனுப்பு. ஸீனா உன்னுடைய இதயத்தைப் பதிவு அஞ்சலில் திருப்பி அனுப்புவாள்….”

மரச்சாலைத் திருப்பத்தில் பஸ்கள் மறைந்துவிட்டன. மாலை வெயிலில் பொன்மயமாக மின்னிய புழுதி அடங்கி விட்டது. மேலங்கிகளும் கோடிட்ட பைஜாமாக்களும் அணிந்த இளைப்பாறுவோர் மெதுவாகப் பூங்காவில் அவரவர் வழிகளில் நடக்கலானார்கள். நொண்டி ஆர்மீனியன், மெரேஸ்யெவை அலுவலகத்துக்குக் கொண்டுவிட்டுப் போனான். கிட்டத்தில் கூர்ந்து பார்க்கையில், பெரிய அழகிய, சோகம் ததும்பிய விழிகள் கொண்ட அவனது முகம் ஆழ்ந்த, அறிவார்ந்த தோற்றம் உள்ளதாகக் காணப்பட்டது. தான் மருத்துவ நிலாக் கமிட்டித் தலைவன் என்று வழியில் அவன் தன்னை வேடிக்கையாக அறிமுகப்படுத்திக் கொண்டான். நிலா ஸ்நானம் எந்தக் காயத்துக்கும் கைகண்ட மருந்து என்றும் இந்தக் காரியத்தில் தான்தோன்றித் தனத்தையும் ஒழுங்கின்மையையும் தான் அனுமதிப்பதில்லை என்றும் மாலை உலாவலுக்கு ஏற்ற ஆடைகள் பற்றித் தானே குறிப்பு எழுதித் தருவதாகவும் கூறினான். அவன் ஏதோ இயந்திரம் போல வேடிக்கை பேசினான். அப்போது அவனுடைய விழிகள் அதே ஆழ்ந்த தோற்றம் கொண்டிருந்தன, எதிரொளியை ஆவலுடன் கூர்ந்து நோக்கின.

அலுவலகத்தில் வெள்ளை நீளங்கி அணிந்த ஒரு பெண் மெரேஸ்யெவை எதிர்கொண்டாள். அவளுடைய கேசம் ஒரே செம்பழுப்பாக இருந்தமையால் அவளது தலை மூண்டெரியும் தீக்கொழுந்துகளால் சூழப்பட்டது போலத் தோற்றம் அளித்தது.

தான் படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை வைத்து விட்டுக் கண்டிப்பான குரலில் கேட்டாள் அவள்: “மெரேஸ்யெவ்? அலெக்ஸேய் பெத்ரோவிச் மெரேஸ்யெவ்?” விமர்சனக் கண்களுடன் விமானியை ஏற இறங்க நோட்டமிட்டாள். “நீங்கள் என்ன என்னிடம் விளையாடுகிறீர்கள்? அதோ பதிவாகியிருக்கிறது: ‘மெரேஸ்யெவ், சீனியர் லெப்டினன்ட், கால்கள் இல்லாதவர்’ என்று. நீங்களோ….”

“என்ன ஆனாலும் நான்தான் அலெக்ஸேய் மெரேஸ்யெவ். இதோ என் நியமனப்பத்திரம்… நீங்கள் தாம் லோல்யாவா?”

“இல்லை. எங்கிருந்து இந்தப் பெயரைத் தேடிப் பிடித்தீர்கள்? என் என் பெயர் ஸீனா. உங்கள் பொய்க்கால்களா இப்படி இருக்கின்றன?” என்று நம்பிக்கை இன்றி அலெக்ஸேயின் கால்களைப் பார்த்தாள்.

“ஓகோ! அப்படியானால் பேத்யா தன் இதயத்தைப் பறி கொடுத்த அதே ஸீனாவா நீங்கள்?”

“மேஜர் புர்நாஸியான் என்னைப் பற்றி உங்களிடம் இப்படிக் கதை கட்டிவிட்டாரோ? அதற்குள் அவருக்கு வாய்ப்பு கிடைத்துவிட்டதே. ஐயே, இந்த புர்நாஸியானைக் கண்டாலே கரிக்கிறது எனக்கு! எதை எடுத்தாலும் கேலியும் நையாண்டியும், எதை எடுத்தாலும்! பேத்யாவுக்கு நான் நடனமாடக் கற்றுக் கொடுத்தேன் என்றால் இதில் என்ன பிரமாதம் வந்துவிட்டது? நல்ல வம்புதான் போ!”

“இப்போது எனக்குக் கற்றுக் கொடுப்பீர்கள், சம்மதம் தானே? ‘நிலவு ஸ்நானத்துக்கு’ எனக்கு அனுமதிச் சீட்டு தருவதாக புர்நாஸியான் வாக்களித்திருக்கிறார்.”

அந்தப்பெண் முன்னிலும் அதிக வியப்புடன் அலெக்ஸேயை நோக்கினாள்.

“நடனமாடப் போகிறீர்களா? எப்படி? கால்கள் இல்லாமலா? நல்ல வேடிக்கைதான். நீங்களும் எல்லாவற்றையும் பரிகசிக்கிறீர்கள் போலும்” என்றாள்.

இந்தச் சமயத்தில் மேஜர் ஸ்த்ருச்கோவ் அறைக்குள் ஓடிவந்து மெரேஸ்யெவை இறுகத் தழுவிக்கொண்டார்:

“ஸீனா, ஏற்கனவே பேசி வைத்துக்கொண்டோம் அல்லவா, சீனியர் லெப்டினன்ட் என் அறையில் தங்குவார் என்று”

ஒரே மருத்துவமனையில் நீண்ட காலம் தங்கிச் சிகிச்சை பெறுபவர்கள் அப்புறம் சகோதரர்கள் போல ஒருவரையொருவர் சந்தித்தார்கள். மேஜரை அனேக ஆண்டுகள் காணாதவன் போல அலெக்ஸேய் பெருங்களிப்பு அடைந்தான். ஸ்த்ருச்கோவின் சாமான் பை ஆரோக்கிய நிலையத்தில் இருந்தது. அவர் இங்கே சொந்த வீட்டில் போல விட்டாற்றியாக இருந்தார். எல்லாவற்றையும் தெரிந்து கொண்டிருந்தார், எல்லோருக்கும் அவரைத் தெரிந்தது.

இரவுச் சாப்பாட்டுக்குப் பிறகு உடனேயே அலெக்ஸேய் கட்டிலில் ஏறி, மாலை மூடுபனி காரணமாக ஈரப்பதமாயிருந்த, குளிர்ந்த படுக்கை மீது நீட்டிப்படுத்து அக்கணமே உறங்கி விட்டான்.

அந்த இரவில் அவன் விந்தையான, கலவரமூட்டும் கனவுகள் கண்டான். நீலம் பாரித்த வெண்பனி, நிலா. காடு, சடை வலை போல அவனை மூடிப்போர்த்திருந்தது. இந்த வலையை அறுத்துக் கொண்டு அவன் விடுபட வேண்டும், ஆனால் வெண்பனி அவன் கால்களைப் பிணித்தது. இன்னதென்று விளங்காத, ஆனால் பயங்கரமான துன்பம் தனக்கு நேரப் போகிறது என்று உணர்ந்து அலெக்ஸேய் வேதனை அடைந்தான். கால்கள் வெண்பனியில் விரைத்துப் போயின, ஆனால் அவற்றை அங்கிருந்து அகற்ற அவனுக்கு வலுவில்லை. அவன் முனகினான், புரண்டான். அதற்குள் அவன் முன் காடு அல்ல, விமான நிலையம் இருந்தது. நெடுங்காலனான டெக்னீஷியன் யூரா இறக்கையற்ற, விந்தையான மெத்தென்ற விமானத்தின் விமானி அறையில் இருந்தான். அவன் கையை ஆட்டினான், சிரித்தான், பின்பு செங்குத்தாக மேலே கிளம்பி வானில் பறந்தான். மிஹாய்லா தாத்தா அலெக்ஸேயைத் தூக்கிக் கொண்டு குழந்தையிடம் சொல்வது போல, “கிடக்கிறான் அவன். போகட்டும். நீயும் நானும் வெந்நீரில் குளிப்போம், அங்கங்களைச் சூடுபடுத்திக் கொள்வோம், நன்றாக, இதமாக” என்றார். ஆனால் சூடான பலகையில் அல்ல, வெண்பனியில் அவனைக் கிடத்தினார் அவர்.

அலெக்ஸேய் எழுந்திருக்கப் பார்க்கிறான், முடியவில்லை. தரை அவனை வலுவாகத் தன்பக்கம் இழுத்து அழுத்துகிறது. இல்லை, இழுத்து அழுத்துவது தரை அல்ல, கரடி ஒன்று தன் சூடான உடம்போடு அவன் மேல் விழுந்து அவன் மூச்சைப் பிடித்தது, அங்கங்களை முறிக்கப் பார்த்தது, கொர் கொர்ரென்று செருமிற்று. விமானிகளை ஏற்றிக் கொண்டு பஸ்கள் அருகாகச் சென்றன. ஆனால் ஜன்னல்கள் வழியே சந்தோஷமாக வெளியே பார்த்துக் கொண்டிருந்த அந்த ஆட்கள் அவனைக் கவனிக்கவில்லை. அவர்களை உதவிக்கு வரும்படி கத்தி அழைக்க விரும்பினான் அலெக்ஸேய், அவர்களை நோக்கிப் பாய்ந்து ஓட, அல்லது கையால் ஜாடையாவது காட்ட அவன் முயன்றான். ஆனால் முடியவில்லை. வாய் திறந்தது எனினும் கிசுகிசுப்புதான் கேட்டது. அலெக்ஸேய்க்கு மூச்சுத் திணற ஆரம்பித்தது. இருதயத்துடிப்பு நிற்பதை அவன் உணர்ந்தான். கடைசி முயற்சி செய்து பார்த்தான்…..

விளங்காத கலவர உணர்ச்சியுடன் விழித்துக்கொண்டான் அலெக்ஸேய். அறையில் நிசப்தம். லேசான ஒலிப்புடன் மூச்சுவிட்டவாறு உறங்கிக்கொண்டிருந்தார் மேஜர். நிலவொளித் தம்பம், அறையின் குறுக்கே சென்று தரையில் ஊன்றியிருந்தது. அந்தப் பயங்கர நாட்களின் மாதிரி உருவங்கள் ஏன் திடீரென்று திரும்பி வந்துவிட்டன? இந்த நாட்களை அலெக்ஸேய் அனேகமாக நினைவுபடுத்திக் கொள்ளவே இல்லை. எப்போதாவது ஞாபகப்படுத்திக் கொள்ளத் தொடங்கினாலும் அவை அவனுக்கு ஏதோ பிதற்றலான கட்டுக் கதையாகவே தோன்றின. ஒரு சீரான மெல்லொலி, உறக்க முணுமுணுப்பு, இரவுக் காற்றின் நறிய குளுமையுடன் நிலவால் ஒளியுறுத்தப்பட்ட விரியத் திறந்த ஜன்னல் வழியே அறைக்குள் பெருகியது. ஒரு சமயம் அது கிளர்ச்சியுடன் பொங்கி வந்தது, மறுசமயம் தொலைவில் அகன்று அமிழ்ந்தது, வேறு சமயம் கலவரம் நிறைந்த சீறல் ஒலியாக மாறியது. பைன் மரச் சோலையின் சலசலப்பு அது.

படிக்க:
ஸ்டெர்லைட் எதிர்ப்பு வழக்கு விசாரணை ! என்ன நடக்கிறது ?
பெஹ்லு கானை கொன்றவர்களை விடுவித்தது நீதிமன்றம் !

அலெக்ஸேய் கட்டிலில் உட்கார்ந்து பைன் மரங்களின் மர்ம ஒலியை வெகு நேரம் கேட்டுக்கொண்டிருந்தான். பின்பு அந்த மாய மயக்கத்தை விரட்டியவன் போலத் தலையை வெடுக்கென்று அசைத்தான். பிடிவாதம் நிறைந்த மகிழ்பொங்கும் ஆற்றல் அவனுக்குள் மீண்டும் நிறைந்தது. ஆரோக்கிய நிலையத்தில் அவன் இருபத்து எட்டு நாட்கள் தங்கியிருக்க வேண்டும். அவன் போரிடவும் விமானமோட்டவும் வாழவும் போகிறானா அல்லது டிராமில் மற்றவர்கள் எப்போதும் அவனுக்கு உட்கார இடங்கொடுத்து விலகிக் கொள்ளவும் அனுதாபத்துடன் அவனைப் பார்க்கவும் வேண்டியிருக்குமா என்பது அதன் பிறகே தீர்மானிக்கப்படும். எனவே, இருபத்து எட்டு நாட்கள் கொண்ட இந்த நீண்ட அல்லது குறுகிய காலத்தின் ஒவ்வொரு நிமிடமும் உண்மை மனிதன் ஆவதற்குரிய போராட்டமாக விளங்க வேண்டும்.

நிலவு வெளிச்சத்தில் கட்டிலில் உட்கார்ந்துகொண்டு, மேஜரின் குறட்டையைக் கேட்டவாறே பயிற்சித் திட்டம் வகுக்கலானான் அலெக்ஸேய். காலை, மாலை உடற்பயிற்சி, நடை, ஓட்டம், கால்களுக்கு விஷேசப் பயிற்சி ஆகியவற்றை இந்தத் திட்டத்தில் அவன் சேர்த்துக் கொண்டான். அவனுக்குச் சிறப்பாகக் கவர்ச்சி அளித்தது, செயற்கைக் கால்களை எல்லா வகைகளிலும் பழக்கித் தேர்ச்சிபெறச் செய்வதாக நம்பிக்கை ஊட்டியது ஸீனாவுடன் உரையாடுகையில் அவனுக்கு உதித்த கருத்துத்தான்.

நடனமாடக் கற்றுக் கொள்வது என்று அவன் முடிவு செய்தான்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

டியர் மிடில்கிளாஸ், மூழ்கும் கப்பலில் பாதுகாப்பான இடம் எதுவும் கிடையாது !

2
Sinking-Ship-Indian-economy-Slider

வில்லவன்
சூரின் நடுத்தர வர்க்க தெருவொன்றில் 20 ஆண்டுகளாக வசிக்கும் நண்பர் ஒருவரோடு பேசிக்கொண்டிருந்தேன். குடும்பத்தலைவியான அவர் உதவும் மனப்பான்மை கொண்டவர், சுற்றியிருப்போரோடு நல்ல இணக்கமான நட்பை பேணுபவர். சுமார் 20 வீடுகள் கொண்ட அவரது தெருவில் நிகழ்ந்த (அவர் விவரித்த) சில சம்பவங்கள் நாம் எத்தகைய மோசமான எதிர்காலத்தை நோக்கி நகர்கிறோம் என்பதை முன்னறிய உதவும்.

சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்புகூட மிகவும் பரபரப்பாக வேலை நடந்த ஒரு சிறுதொழில் நிறுவன அதிபர் இன்று மொத்த நிறுவனம் மற்றும் இதர சொத்துக்களை விற்றுவிட்டு வேலை தேடிக்கொண்டிருக்கிறார். கனவுகளோடு கட்டிய அவர் வீடு விற்பனைக்கு வரவிருக்கிறது. அடையாள மறைப்புக்காக இன்னும் கசப்பான மேலதிக தகவல்களை தவிர்க்க வேண்டியிருக்கிறது.

Sinking Ship Indian economyஅடுத்தவர் இரண்டு நிறுவனங்களை நடத்தியவர், உயர் மத்தியதர வாழ்க்கை வாழ்ந்தவர். கடந்த ஆறு மாதங்களில் அடுத்தடுத்து இரு நிறுவனங்களையும் மூடிவிட்டார். கம்பெனி விற்பனைக்கு தயாராக இருக்கிறது. வேறெதுவும் விற்பதற்கு பாக்கியில்லை. வீட்டைக் காலி செய்துவிட்டு போயிருக்கிறார்கள். பள்ளிக் கட்டணத்துக்கு வழியில்லாமல் பிள்ளைகள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருப்பதாக தகவல். இங்கேயும் மேலதிக தகவல்கள் நம்மை அச்சுறுத்தவல்லவையே.

அதே தெருவில் வசித்த ஒருவர் இன்னும் சிறிய நிறுவனம் நடத்தியவர், கொஞ்சம் முன்பே நட்டத்தை சந்தித்து நிலைமை கைமீறும் முன்பு எந்திரங்களை விற்றுவிட்டு ஊரை காலி செய்துகொண்டு போயிருக்கிறார்.

அந்த தெருவில் குடியிருந்த சமீபத்தில் மணமான ஒரு இளைஞர் தமது வாடகை வீட்டை காலி செய்துகொண்டு போயிருக்கிறார். மனைவியை சொந்த ஊரில் தங்கவைத்துவிட்டு இவர் நண்பர்களோடு அறையொன்றை பகிர்ந்துகொண்டு வாழ்கிறார். காரணம் மாதத்தில் 15 நாட்கள் மட்டுமே அவர் பணியாற்றும் நிறுவனத்தில் வேலை இருக்கிறது. குடும்பமாக வாழ சம்பளம் போதவில்லை.

படிக்க:
ஓசூர் அசோக் லேலாண்டில் சட்டவிரோத லே – ஆஃப் !
இந்திய நாடு, அடி(மை) மாடு !

வெறுமனே 20-30 குடும்பங்களை உள்ளடக்கிய சிறிய தெருவொன்றின் நிலை இது. ஏனைய இடங்களின் நிலை இப்படியே இருக்கவேண்டும் என அவசியமில்லை. ஆனாலும் இந்த ஒற்றை சிறு பரப்பின் சூழல் ஏனைய பகுதியினருக்கு ஒரு எச்சரிக்கை. மேற்சொன்ன யாரும் ஊதாரிகளோ சூதாடிகளோ அல்ல. அரசு மற்றும் சுயமுன்னேற்ற பிரச்சாரகர்களின் அறிவுரைக்கிணங்க சுய தொழில் செய்தவர்கள். அதில் தேவைக்கு அதிகமாக உழைத்து நடுத்தர வாழ்வை வாழ்ந்தவர்கள். இப்படியான செய்திகள் உங்கள் வசிப்பிடத்திலும் இருக்கக்கூடும். அப்படியில்லை என்றால் இனி வந்தே தீரும்.

காரணம், நாடு முழுக்க நுகர்வு என்பது மந்தமாகியிருக்கிறது. அதனால் உற்பத்தி குறைப்பும், வேலையிழப்பும் முழுவீச்சில் ஆரம்பித்திருக்கின்றன. ஆகவே இதன் தாக்கத்தில் இருந்து நாம் யாருமே தப்ப முடியாது. நம் வேலையோ வருவாயோ ஏதோ ஒன்று பாதிக்கப்படப்போகிறது. இதனை பெருந்தொகையான மத்தியதர வர்க்கம் உணரத் துவங்கிவிட்டதாகவே ஊகிக்கிறேன். சில மாதங்களுக்கு முன்பு இதனை சொன்னபோது எதிர்மறையாக பேசுவதாக சலித்துக்கொண்ட பலரும் இப்போது மெல்ல ஆமோதிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். பெங்களூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் பல மூடப்பட்டிருக்கின்றன. மேலும் சில மூடப்படவிருப்பதாக தொழிலாளர்களிடம் சொல்லப்பட்டிருக்கிறது.

ஆனாலும் ஒரு பிடிவாதமான நம்பிக்கை மத்தியதரவர்க்கத்திடம் இருக்கிறது. அதனை நம்பிக்கை என்றுகூட சொல்ல முடியாது, ‘விஷ்ஃபுல் டெல்யூஷன்’ (Wishful delusion) என்று சொல்லலாம். அதாவது அதீத விரும்பம் மிகைநம்பிக்கையாக மாறியிருக்கும் நிலை. நமக்கு எதுவும் மோசமாக நடந்துவிடக்கூடாது எனும் பெருவிருப்பம் நமக்கு எதுவும் மோசமாக நடந்துவிடாது எனும் மிகை நம்பிக்கையாக உருமாறியிருக்கிறது. நேரிலும் சமூக ஊடகங்களிலும்கூட இவர்களோடு உரையாடுவதில் பெரிய இடையூறாக இருப்பது உண்மையைவிட்டு விலகி ஓடும் இந்த இயல்புதான். இது வெறிபிடித்ததுபோல பக்தியின் பக்கமும் சோதிடத்தின் பக்கமும் மக்களை தள்ளுகிறது. யதார்த்தம் கசப்பானதாக இருப்பதால் அதனை சுட்டிக்காட்டாத கோயில் சிலைகளும், போலி நம்பிக்கையளிக்கிற அல்லது பரிகாரம் போன்ற எளிய மற்றும் தனிப்பட்ட தீர்வுகளை தருகிற சோதிடர்களும் நடுத்தர வர்க்கத்தை வசீகரிக்கிறார்கள்.

ஆனால் தற்காலிக ஆற்றுப்படுத்துதல்களுக்கு இனி பலன் ஏதும் இருக்கப்போவதில்லை. நாம் ஒரு வதைமுகாமின் வாயிலில் நிற்கிறோம். ஒரு வதைமுகாமின் அதிகபட்ச சவுகர்யம் என்பது உங்கள் பழைய நினைவுகளும் சக மனிதர்களின் அன்பும் அரவணைப்பும்தான். அதுதான் இனி பெரும்பான்மை இந்தியர்களின் தலைவிதி.

உங்கள் வருமானத்துக்கான கதவுகள் மூடப்படுகின்றன. பொருளாதாரத்தேக்கம் எல்லா தரப்பு மக்களின் வருமானத்தையும் பறிக்கும் அல்லது குறைக்கும். அது இன்னும் மோசமான தேக்கத்தை நோக்கி இட்டுச்செல்லும். அது வாங்கும் திறனை சிதைத்து இன்னும் அதிகமாக பொருளாதார தேக்கத்தை ஏற்படுத்தும். 2009 அமெரிக்க பொருளாதார பெருமந்தத்தின்போது பெங்களூரில் இருக்கும் ஒரு பெரிய மருத்துவமனை 15% சம்பள வெட்டை கொண்டுவந்தது. சீக்குகளுக்கு பஞ்சமில்லாத ஊரின் ஆஸ்பத்திரியே சம்பளத்தில் கைவைக்கும் எனில் ஏனைய துறைகள் பற்றி கேட்கவே வேண்டாம்.

மிடில் கிளாசின் இன்னொரு பெரிய நம்பிக்கை அவர்களது சேமிப்பு அல்லது சொத்துக்கள். அவையும் இனி கைகொடுக்கப் போவதில்லை. நிலமதிப்பு அப்படியேதான் இருக்கிறது. ஆனால் வாங்க ஆளில்லை. நிலமும் வீடும் இன்று ஒரு செத்த முதலீடு. அவை கூடுதலாக செலவு வைக்குமேயன்றி இனி லாபம் தரப்போவதில்லை. வங்கி சேமிப்புக்கள் மீதான வட்டி 15 ஆண்டுகளில் பாதியாக குறைந்திருக்கிறது. இன்று அது உண்மையான பணவீக்க விகிதத்தைவிட குறைவு. ஆக உங்கள் வங்கி சேமிப்பின் மதிப்பு ஆண்டுதோறும் குறைகிறது, வட்டியோடு சேர்த்து கணக்கிட்டாலும்கூட.

படிக்க:
தீபாவளி இனிக்காது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள் !
♦ காஷ்மீர் : மோடிக்கு சொம்படிக்கும் இந்திய பிரஸ் கவுன்சில் !

பென்ஷன் திட்டங்கள், எல்.ஐ.சி மற்றும் பி.எஃப் ஆகியவையும் பங்கு சந்தையில் பணத்தை கொட்டுகின்றன. அதன் பணத்தை விழுங்கிய ஐ.எல்.எஃப்.எஸ் நிறுவனம் இனி பிழைக்க வழியில்லை எனும் நிலையில் இருக்கிறது. பணம் போட்ட பாவத்துக்காக ஐ.டி.பி.ஐ வங்கியை அதன் முரட்டு நட்டத்தோடு கைப்பற்றி கட்டிக்கொண்டு அழுகிறது எல்.ஐ.சி. புதிய பென்சன் திட்டத்தின் வட்டியும் சமீபத்தில் 8% இல் இருந்து 7.9% ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. ரிசர்வ் வங்கியின் கடைசி கையிருப்பு 1.76 லட்சம் கோடி அரசால் எடுத்துக்கொள்ளப்பட்டிருகிறது. அடுத்து மிச்சம் இருப்பது பி.எஃப் பணம் மட்டும்தான். அதுவும் தேசபக்தி கணக்கில் வரவு வைக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.

இதன் சமூக தாக்கங்களை நாம் இன்னமும் யோசிக்கக்கூட இல்லை. பொருளாதாரத்துக்கும் சமூக குற்றங்களுக்கும் (மனநலத்துக்கும் கூட) நேர்மறையான தொடர்புண்டு. தஞ்சையில் 2 வருடங்கள் மழை இல்லாவிட்டால் வழிப்பறியும் திருட்டும் அதிகம் நடக்கும். ஆதரவற்ற பிள்ளைகளும் கல்வி மறுக்கப்படும் பிள்ளைகளும்தான் சமூக விரோதிகளின் இலக்கு. கல்வி, மருத்துவம் மற்றும் ஓய்வுகால பராமரிப்பு ஆகியவற்றுக்கு அரசு பொறுப்பெடுத்துக்கொள்ளும் நாடுகளில் தற்கொலை விகிதம் மிகக்குறைவு. இந்த கோணத்தில் பார்க்கையில் நாம் இன்னும் மோசமான சமூகக்குற்றங்களை எதிர்கொள்ள தயராக இருக்க வேண்டும். கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ளும் செய்திகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்திருப்பது தெரியும். பொருளாதாரம் மோசமடைவதால் உருவாகும் எல்லா குற்றங்களாலும் அதிகம் பாதிக்கப்படப் போவது மிடில்கிளாஸ்தான். காரணம் அதுதான் சுலபமான இலக்கு.

Middle-classஇன்னொரு முக்கியமான பிரச்சினை, தாராளமயம் உருவாக்கியிருக்கும் பொருள்சார் மதிப்பீடுகள். சற்றேறக்குறைய ஒரு தலைமுறை மனிதர்கள் எல்லாவற்றையும் பொருள் சார்ந்து மதிப்பிடக் கற்றுகொண்டிருக்கிறார்கள். வெற்றி, தோல்வி, மகிழ்ச்சி, கவலை, அந்தஸ்து, லட்சியம், வாழ்வின் அர்த்தம் என எல்லாமே பொருள் சார்ந்ததாகவே அவர்களுக்கு இருக்கிறது. மனநல ஆற்றுப்படுத்துனர்கள் எதிர்கொள்ளும் குடும்ப பிரச்சினை சம்பவங்கள் எல்லாமே பெருமளவு இந்த மதிப்பீட்டின் விளைவாக உருவானவையாகவே இருக்கின்றன. மனிதர்களின் வருவாய் ஆதாரங்கள் நாசமாகி சேமிப்புக்கள் பாதுகாப்பற்றதாகும்போது இந்த மதிப்பீட்டின் வழியே உலகைக் காண பயிற்றுவிக்கப்பட்டவர்கள் தம் வாழ்வே அர்த்தம்ற்றுப்போனதாக உணரக்கூடும். மனரீதியான பிரச்சினைகளையும் உறவுச் சிக்கல்களையும் இழுத்துவர அது ஒன்றே போதுமானது. இது மிகையான கற்பனை எனில் நாம் இழக்க ஏதுமில்லை, ஒருவேளை இது பகுதியளவு உண்மை என்றாலும் அதன் விளைவுகளை சமாளிக்கும் வழிகள் நம்மிடையே இல்லை.

நீங்கள் ஆசைப்படுவதற்கும் அடைய முடிவதற்கும் இடையேயான இடைவெளிதான் உங்கள் ஸ்ட்ரெஸ்ஸின் (Stress) வீரியத்தை தீர்மானிக்கிறது. ஆகவே இந்த பொருளாதார முடக்கம் பொருள்சார் மதிப்பீடுகளை மட்டும் கொண்டிருக்கும் பெரும்பான்மை நடுத்தர வர்க்கத்திடையே பரவலாக மன அழுத்த மற்றும் மனப்பதட்ட நோயாளிகளை உருவாக்கப்போகிறது. மேலும் அரசு ஜீவித்திருக்க மக்களின் ஒரு தரப்பை சுரண்டியாக வேண்டும். செருப்பால் அடித்தாலும் செக்கு மாடுமாதிரி வாழும் நடுத்தர வர்க்கமே அதன் பாதுகாப்பான ஒரே இலக்கு. எல்லாவற்றுக்கும் தனிமனித தீர்வுகளை தேடுகிற அனாதை இல்லங்களுக்கு ஒருவேளை சோறு போடுவதைவிட வேறு சமூகப் பணியையே அறிந்திராத இவர்களை சுரண்ட பெரிய துணிச்சல் அவசியம் இல்லை.

இதுவரை உழைத்த உழைப்பு வீண், சம்பாதித்தவை யாவும் அர்த்தமற்றவையாகப் போகின்றன. நிச்சயமற்ற நிகழ்காலம் கொஞ்சமும் பாதுகாப்பற்ற எதிர்காலத்தை முன்னறிவிக்கின்றது. இதுதான் நீங்கள் 2014-ல் ஆவலோடு எதிர்பார்த்த இந்தியா.

சூழல் சீர்கேடு, சிதைந்துபோன பொருளாதாரம் மற்றும் மதவெறி என ஒரு நாட்டை பாதுகாப்பற்றதாக்கும் எல்லாமே உச்சத்தில் இருக்கும் இந்தியாவைத்தான் நாம் நம் பிள்ளைகளுக்கு பரிசளித்திருக்கிறோம். அதாவது அமெரிக்காவுக்கு இணையான வளர்ச்சியடைந்த நாட்டை உருவாக்குவதாக சொன்ன பொய்களை நம்பி கனவு கண்டுகொண்டிருந்தோரிடம் ஆப்கானிஸ்தானைவிட மோசமான ஒரு நாட்டை டெலிவரி செய்திருக்கிறது ஆர்.எஸ்.எஸ்.

பிரார்த்தனைகள், படிப்பு, உழைப்பு என மகிமைப்படுத்தப்பட்ட எந்த மீட்பர்களும் இந்த சாபத்தில் இருந்து நம்மை காக்கப்போவதில்லை. வீதிக்கு வருவதுதான் நமக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. அங்கே போராட்டக்காரனாக வருவதா அல்லது பிச்சைக்காரனாக வருவதா என தேர்வு செய்யும் வாய்ப்பு மட்டுமே நமக்கு மிச்சமிருக்கிறது.

வில்லவன்

அரசியல் விமர்சகர். வினவு தளத்தில் “வில்லவன் சொல்” எனும் தலைப்பில் பத்தி எழுதுகிறார்.

கேள்வி பதில் : மூடநம்பிக்கைகளை விமர்சித்து இன்றைய தலைவர்கள் பேசுவதில்லையே ஏன் ?

கேள்வி : //மூடநம்பிக்கை, கடவுள் மற்றும் அதன் வழிபாட்டு முறைகளை பெரியார் கடுமையாக விமர்சித்தது மற்றும் கேள்வி கேட்டதை போல தற்கால தலைவர்கள் யாரும் விமர்சிப்பது இல்லையே? ஏன்? எதனால்?//

– அறிவரசு

ன்புள்ள அறிவரசு,

“ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்று அண்ணாதுரை காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் நாத்திகப் பிரச்சாரத்தைக் கைவிட்டது. கருணாநிதி உயிருடன் இருந்தபோது சில தருணங்களில் அவர் லேசாக நாத்திகப் பார்வையை வெளிப்படுத்தியிருக்கிறார். ராமன் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தான் என்று சேது சமுத்திரத் திட்டப் பிரச்சினையின் போது அவர் எழுப்பியது ஒரு சான்று. அதனால்தான் விசுவ இந்து பரிஷத்தின் சாமியார்கள் அவரது தலையை வெட்ட வேண்டும் என்று அப்போது பேசினார்கள். மேலும் இறக்கும் வரையிலும் அவர் பார்ப்பனப் பண்டிகைகளுக்கு (தீபாவளி போன்ற) வாழ்த்துச் சொல்வதில்லை. அவரது மறைவுக்கு பின்னர் திமுக-வில் அப்படி கொஞ்சமாக பேசக்கூட ஆள் இல்லை.

ADMK Mansoruஅதிமுக-வை ஒரு திராவிட இயக்கம் என்றே எடுத்துக் கொள்ள முடியாது. அம்மா காலத்தில் மண் சோறு சாப்பிட்டு அலகு குத்தி காவடியாட்டம் எடுத்தம் கட்சி அது. அம்மா காலத்திலும் சரி அடிமைகள் எடப்பாடி, ஓபிஎஸ் காலத்திலும் சரி அவர்கள் இந்துத்துவ பாஜக-வின் இயல்பான இளைய பங்காளியாக இருக்கின்றனர்.

தேர்தல் அரசியலில் பங்கேற்கும் இரண்டு கம்யூனிஸ்டுக் கட்சிகளும் நாத்திகப் பிரச்சாரத்தை கையில் எடுப்பதில்லை. மட்டுமல்ல அப்படி பேசினால் இந்துக்களிடமிருந்து தாம் தனிமைப்படுவோம் என்று அவர்கள் கருதுகிறார்கள். திருவண்ணாமலை தீபத்திற்கும், தீபாவளிக்கும் தீக்கதிர் சிறப்பு மலரே வெளியிடுகிறது. இவர்களே இப்படி என்றால் மற்ற ஓட்டுக் கட்சிகளைப் பற்றி சொல்லத் தேவையில்லை.

கட்சி பெயரில் திராவிடம், முற்போக்கு என்றெல்லாம் வார்த்தைகளை வைத்திருக்கும் விஜயகாந்த் நல்ல நேரம் பார்த்துத்தான் தனது கட்சியின் பெயரை அறிவித்தார். அதுவும் சாமி முன் துண்டுச் சீட்டுகளை போட்டு பயபக்தியுடன் எடுக்கப்பட்ட பெயர்தான் தே.மு.தி.க. அத்திவரதருக்கு அதிக நேர தரிசனம் கேட்டதுதான் அவரது இப்போதைய அரசியல் கோரிக்கை. ரஜினியோ தனது அரசியலையே ஆன்மீக அரசியல் என்று அறிவித்து விட்டார். அதன் படி இவர் ஆர்.எஸ்.எஸ்., பாஜக வழி அப்பட்டமான இந்துத்துவ அரசியல் பேசக்கூடியவர். சீமானைப் பொறுத்த வரை நிறையவே தமிழ் ஆர்.எஸ்.எஸ்-ஆக பேசுகிறார். ஆகவே நாம் தமிழர் கட்சியும் ஆத்திகத்திற்கு ஆதரவான கட்சிதான்.

படிக்க:
கேள்வி பதில் : உணர்ச்சி வசப்படுவது நல்லதா ? சுபாஷ் சந்திரபோஸ் வலதா இடதா ?
♦ வேதங்களிலேயே சொல்லப்பட்ட புவியீர்ப்பு விசை ! நியூட்டனெல்லாம் லேட்டு !

திராவிடர் கழகம் பெரியார் கொள்கைகளை வெளியீடுகளாக கொண்டு வருகிறது, அவர்கள் பத்திரிகைகளில் எழுதுகிறது என்பதைத் தாண்டி மக்களிடையே ஊக்கமாக நாத்திகப் பிரச்சாரம் செய்வதில்லை. ஒரு வர்த்தக நிறுவனம் போல நிலைபெற்று விட்ட பின்னர் அவர்கள் அரசியல் அரங்கில் பேசுவதும் செய்வதும் குறைந்து விட்டது. இவர்களிடமிருந்து பிரிந்த பெரியார் திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் அவ்வப்போது நாத்திகப் பிரச்சாரத்தை அரசியல் ரீதியாக செய்கிறார்கள். விநாயகர் ஊர்வலத்தை எதிர்த்து பெரியார் ஊர்வலத்தை நடத்துவது போன்று சில போராட்டங்களை செய்கிறார்கள்.

ம.க.இ.க போன்ற அமைப்புகளும் அரசியல் ரீதியாக இந்துத்துவத்தை எதிர்த்து இயக்கம் நடத்தும் போது இந்துமத மூடநம்பிக்கைகளை எதிர்த்து போராட்டம் நடத்துகிறார்கள். ராமன் பட எரிப்பு, திருவரங்கம் கருவறை நுழைவுப் போராட்டம், தஞ்சை தமிழ் மக்கள் இசை விழா, அசுரகானம் போன்ற பாடல் ஒலிப்பேழைகள், தில்லையில் தமிழில் பாடும் போராட்டம் ஆகியவை சில சான்றுகள். எனினும் இவையெல்லாம் அத்திவரதருக்கும், குடந்தை மாகமகத்திற்கும் திரளும் பக்தர் வெள்ளத்திற்கு போதுமானவை அல்ல.

பெரியார் பார்ப்பனிய ஆதிக்கத்தை வீழ்த்த புராண, இதிகாச புரட்டுக்களை அம்பலப்படுத்துவது அவசியம் என்பதில் உறுதியாக இருந்தார். இன்று பாஜக – ஆர்.எஸ்.எஸ் அணி தமிழகத்தில் வளர்ந்திருக்கிறது. அவர்கள் தாம்தான் இந்துக்களின் ஏகபோக பிரதிநிதியாக மக்களிடையே பேசுகிறார்கள். உண்மையில் அவர்கள் பார்ப்பன மற்றும் சில ஆதிக்க சாதிகளின் பிரதிநிதிகள் மட்டுமே பெரும்பான்மையான ‘இந்துக்களுக்கு’ அவர்கள் பிரதிநிதி இல்லை என்பதை சமூகநீதி பேசும் கட்சிகள் உரத்துப் பேசுவதில்லை. அவ்வகையில் அவர்கள் இந்து மதத்தை விமர்சித்தால் இந்துக்களிடமிருந்து தனிமைப்படுவோம் என்று அஞ்சுகிறார்கள்.

உண்மையில் இந்து மதம், இந்துக்கள் என்ற அடையாளம் இங்கே யதார்த்தத்தில் நிலவவில்லை. சாதிதான் இந்துமதத்தின் ஆன்மா. அவ்வகையில் ஆதிக்க சாதி சங்கங்களை ஆர்.எஸ்.எஸ் வளைத்துப் போட்டிருப்பதால் இங்கே ஆதிக்க சாதி வெறியர்களும் நாத்திகப்  பிரச்சாரத்திற்கு எதிராக இந்துத்துவத்தின் குரலை பேசுகிறார்கள். சென்னையில் ஆர்.எஸ்.எஸ் நடத்தும் ஆன்மீகக் கண்காட்சியில் பல்வேறு ஆதிக்க சாதி சங்கங்கள் கலந்து கொள்வது ஒரு சான்று. இப்படி சாதிவெறியும், மதவெறியும் சேர்ந்து இங்கே வளர்கிறது.

மொழி, பண்பாடு, பக்தி அனைத்திலும் பார்ப்பனியம் ஆதிக்கம் செய்கிறது என்ற உண்மையை பிரச்சாரம் செய்யும் போது அது இந்துக்களிடமிருந்து நம்மை தனிமைப்படுத்துவதில்லை, மாறாக இந்துமதவெறி அமைப்புக்களைத்தான் இந்துக்களிடமிருந்து தனிமைப்படுத்துகிறது. இந்த உண்மையை முற்போக்கு இயக்கங்கள் உணர்ந்து கொண்டு பிரச்சாரம் செய்யும் போது பெரியார் கொள்கைகளுக்கு இங்கே ஒரு தொடர்ச்சி இருக்கும்.

நன்றி!

(கேள்வி பதில் பகுதிக்கு நிறைய கேள்விகளை நண்பர்கள் கேட்கிறார்கள். மகிழ்ச்சி. கூடுமானவரை உடனுக்குடன் பதிலளிக்க முயல்கிறோம். சில கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு கூடுதலான நேரம் தேவைப்படுகிறது. கொஞ்சம் காத்திருங்கள்.)

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

திருக்குறள் – புகழ்பெற்ற பழைய உரையாசிரியர்களின் உரைகள் PDF வடிவில் !

1

திருக்குறள் – புகழ்பெற்ற பழைய உரையாசிரியர்கள் அனைவருடைய உரைகளும் ( பரிமேலழகர் உரைக்கு விளக்கமும்) PDF வடிவில் 3400 பக்கங்கள் உங்கள் கைகளில்…

நண்பர்களே…

பொ.வேல்சாமி

திருக்குறளுக்கு பழங்காலத்திலேயே பல வேறுபட்ட கருத்துக்களைக் கொண்ட ஆசிரியர்கள் உரை எழுதி இருந்தனர். அவர்களுள் 1917-ம் ஆண்டு வரை பரிமேலழகர் உரையைத் தான் அச்சிட்டார்கள், படித்தார்கள். 1917-ல் மணக்குடவர் உரையை வ.உ.சிதம்பரம் பிள்ளை வெளியிட்டார். பரிமேலழகருக்கு அடுத்தப்படியாக அச்சில் வந்த உரை இதுதான்.

1925-ல் பொன்னுசாமி நாட்டார் என்பவரால் மணக்குடவர் உரை குறிப்பிடத்தக்க சில விளக்கங்களுடன் வெளியிடப்பட்டது. 1945, 1948-ல் திருப்பதியிலிருந்து காளிங்கர் மணக்குடவர் உரை வெளியிடப்பட்டது. திருப்பதியிலிருந்து வெளியிடப்பட்ட இந்தப் பதிப்பில் அறத்துபால் முழுமையாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இந்நிலையில் சிறப்புமிக்க எல்லா பழைய உரைகளையும் முழுமையாக மகாவித்துவான் தண்டபாணி தேசிகர் தன்னுடைய குறிப்புகளுடன் 1950, 1951, 1952-ல் எழுதியதை தருமபுர ஆதினம் 3 தொகுதிகளாக வெளியிட்டது. இத்தொகுதிகளின் திருக்குறள் பரிமேலழகர் உரையில் வந்துள்ள நுட்பமான இலக்கண குறிப்புகளுக்கு சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பே காரிரத்தின கவிராயரால் தெளிவான விளக்கம் எழுதப்பட்ட “திருக்குறள் நுண்பொருள்மாலை” நூலும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பரிமேலழகர் உரைக்கு நுட்பமாகவும் தெளிவாகவும் ( தங்களுடைய சனாதனத்தையும் விடாமல் ) எழுதப்பட்டு மாணவர்களுக்கு பல ஆண்டுகள் பாடமாக வைக்கப்பட்டிருந்த வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியார் பதிப்பான முழு நூலின் PDF யையும் இத்துடன் இணைத்துள்ளேன். திருக்குறள் முழுமைக்கும் வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியார் விளக்கம் எழுதவில்லை. வை.மு.சடகோப இராமானுாச்சாரியார் 108 அதிகாரங்களுக்கும் மீதியுள்ள பகுதிகளுக்கு வை.மு.கோ எழுதியது காலபோக்கில் நூல் முழுமைக்கும் வை.மு.கோ தான் எழுதியதாக தமிழ் உலகம் ஏற்றுக்கொண்டது.

திருக்குறள் – உரைவளம் : அறத்துப்பால் (பக்.575)

திருக்குறள் – உரைவளம் : பொருட்பால் (பக்.1130)

திருக்குறள் – உரைவளம் : காமத்துப்பால் பக்.539

திருக்குறள் : அறத்துப்பால் மூலமும் பரிமேலழகருரையும் (பக்.316)

திருக்குறள் : பொருட்பால் காமத்துப்பால்களின் மூலமும் பரிமேலழகருரையும் (பக்.840)

பொ.வேல்சாமி : தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.
எழுதிய நூல்கள்:

  • பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
  • கோவில் நிலம் சாதி
  • பொய்யும் வழுவும்

தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 3 நாள் தொடர் போராட்டம் !

மிழ்நாடு மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களின் மாநிலம் தழுவிய தொடர் போராட்டம் சென்னை, அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தின் பின்புறம், கடந்த 24.08.2019 முதல் 27.08.2019 வரையிலான மூன்று நாட்கள் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான தொழிலாளிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.

  1. நாளொன்றுக்கு ரூபாய் 380 தினக் கூலியாக வழங்கு.
  2. வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாடு மின்வாரிய பணிகளில் ஈடுபடுத்தப்படும் ஒப்பந்த பணியாளர்களை உடனடியாக தடுத்து நிறுத்து!
  3. பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்!

    – ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து போராடினர்.

தொழிலாளர்களின் இப்போராட்டத்தை ஆதரித்து பு.ஜ.தொ.மு-வின் காண்டிராக்ட் தொழிலாளர் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் சிவா 24.08.2019 அன்று நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

TNEB Workersஅவர் பேசுகையில் மின்வாரியத்தில் காலிப் பணியிடங்கள் இருந்தும் பல ஆண்டுகளாக பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களை அந்த இடங்களில் நிரப்பாமல் இருக்கக் காரணம் தனியார்மய தாராளமயக் கொள்கைகள்தான் என தனது பேச்சில் அம்பலப்படுத்தினார். அத்துடன் தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களின் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒரு தொழிலாளி பேசுகையில் “கடந்த 1996-ம் ஆண்டுமுதல் தமிழக மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிகிறேன். என்னைப் போலவே ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தமிழகம் முழுவதும் உள்ளார்கள். இவர்கள் அனைவரும் கடும் உழைப்பில் ஈடுபடக்கூடியவர்கள்.

உங்களுக்கு சந்தேகமாக இருந்தால் உங்கள் வீட்டருகில் உள்ள மின்வாரிய அலுவலகம் அல்லது பணிமனைக்கு சென்று கேளுங்கள். அங்கு நிரந்தர தொழிலாளர்களைவிட ஒப்பந்த தொழிலாளர்கள்தான் அதிகமாக இருப்பார்கள்.

படிக்க:
♦ காஷ்மீர் : மோடிக்கு சொம்படிக்கும் இந்திய பிரஸ் கவுன்சில் !
♦ கார்ப்பரேட் கம்பெனி இலாபமே மின்வாரியத்தின் நட்டம்!

இவ்வாறு மின்வாரியத்தில் காலிப்பணியிடங்கள் இருந்தாலும் அதில் பல ஆண்டுகளாக வாரியத்துக்காக உழைத்த எங்களை பணியமர்த்துவதில்லை. அது மட்டுமில்லை எங்களுக்கான கூலியைக் கூட முறையாக கொடுப்பது இல்லை. தமிழகத்தில் கடந்த காலங்களில் ஏற்பட்ட இயற்கை பேரிடர் சமயத்தில் முழுவதுமாக பணியாற்றியது நாங்கள்தான்.

கடந்த ஆண்டு கஜா புயலின் போதும் சரி அதற்கு முன்பான வர்தா புயல் சமயங்களில், அப்பகுதியின் நிலைமைகளை சீராக்கியது எங்கள் உழைப்புதான். அதுபோன்ற நேரங்களில் எங்களுக்கான அடிப்படை வசதிகள் கூட முழுமையாகக் கிடைக்காது. ஏதாவது பள்ளிக்கூடம் அல்லது திருமண மண்டபத்தில் தங்க வைப்பார்கள். ஆனால் அவற்றை அந்த நேரத்தில் நாங்கள் ஒரு பொருட்டாகக் கூட கருதியதில்லை. ஆனால் தற்போது போலீசார் எங்கள் போராட்ட இடத்தை சுற்றியுள்ள தெருவிளக்குகளை மாலையில் அணைத்து விடுகின்றனர்.” என்றார்.

தொடர்ந்து மூன்றுநாட்களாக போராட்டம் நடந்துவந்த நிலையில் 27.08.2019 அன்று மாலை மின்சாரத்துறை அமைச்சர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசியுள்ளார். அதில் அவர்களது கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதால் போராட்டம் தற்காலிகமாக முடித்துக் கொள்ளப்பட்டது.

வாக்குறுதி கொடுத்ததைப் போல, நடவடிக்கைகள் ஏதும் இல்லையென்றால், மீண்டும் போராட்டம் தொடரும் என்று தொழிலாளர்கள் தெரிவித்தனர். இறுதி வரையில் போராட்டங்கள் மட்டுமே தீர்வைத் தரும் என்பதுதான் வரலாறு !

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தமிழ்நாடு.

மராட்டியம் : வரலாறு பாடநூல்கள் காவி மயமாக்கப்பட்ட வரலாறு !

0
Veer-Shivaji-textbook

காவிகள் மறைத்த சிவாஜி வரலாறு ! – பாகம் 2

உண்மையான வரலாற்று ஆய்வுகளை செய்வதிலிருந்து அரசாங்கங்களை தடுக்கும் குறுகிய பிற்போக்கு செயல்முறைகளை பதிவு செய்யும் பொருட்டு மார்ச் 1994-ல் மகாராஷ்டிரா மாநில பாடநூல் வாரியத்தின் முன்னால் தலைவர் டாக்டர் அரவிந்த் தேஷ்பாண்டேவை நேர்காணல் கண்டோம். அதிலிருந்து சில பகுதிகளை நாங்கள் இங்கே தருகிறோம்.

***

1980 – 81-ல் மகாராஷ்டிர பாடநூல் கழகம்  தொடங்கியதிலிருந்து வரலாற்று நூல்களில் மதச்சார்பின்மை மேலோங்கி இருக்க வேண்டும் என்பதே அதில் பங்கு பெற்றிருந்த எங்களுக்கு முதன்மையான குறிக்கோளாக இருந்தது. சான்றாக, சிவாஜி ஒரு இந்து நாயகனாக எப்பொழுதும் சித்தரிக்கப்பட்டு வருகிறார். ஆனால் நீங்கள் இதைச்செய்யும் தருணம் முதல் அறிந்தோ அறியாமலேயே பக்க சார்பு வந்து விடுகிறது.

முதல் நான்கைந்து ஆண்டுகளுக்கு மிகவும் எச்சரிக்கையாக இருந்தோம். அதனால் பாடநூல்களில் இந்த பக்கசார்பை நீக்குவதற்கு எங்களாலான முயற்சிகள் அனைத்தையும் செய்தோம். விரைவில் அதற்கான வினையை அதாவது சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை சமூகம் இரண்டுமிடத்தும் எதிர்ப்புகளை அறுவடை செய்ய தொடங்கினோம்.

Veer Shivajiஇது நான்காம் பாடநூலில் ஏற்பட்ட கசப்பான நிகழ்வு. 1986-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கல்வி திட்டத்தினால் ஒட்டுமொத்த பாடத்திட்டமும் மாற்றப்பட்டது. வரலாறு பாடத்திலும் வட்டார வரலாறு, இந்திய கலாச்சாரம் மற்றும் சமூகவியல் குறித்த புதிய பகுதிகள் சேர்க்கப்பட்டன. அதே நேரத்தில் புதிய பாடத்திட்டத்தை தயாரித்து வெளியிடுவதற்கு கடுமையான பொருளாதார பிரச்சினைகளையும் சந்தித்தோம். ஒட்டுமொத்த மாநிலத்திலுமுள்ள இலட்சக்கணக்கான மாணவர்களுக்கு மலிவு விலையில் நூல்கள் கொடுக்க வேண்டியிருந்ததால் 96 பக்கங்களாக அது குறைக்கப்பட்டது. ஆனால் நான்காம் வகுப்பு பாடத்திட்டத்தினை பார்த்தால் 96 பக்கங்களில் 80 பக்கங்கள் சிவாஜி பற்றியே பேசுவதை நாங்கள் கண்டோம். நாங்கள் விரும்பிய வேறு எதையும் சேர்ப்பதற்கான வாய்ப்பு சிறிதளவே இருந்தது.

ஒரு புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தும் எங்களது நோக்கத்திற்கு தோதாக சிவாஜியைப் பற்றிய சில பகுதிகள் நீக்குவதற்காக வரையறுக்கப்பட்ட பாடத்திட்டத்தில் சில திருத்தங்கள் செய்தோம். குழு உறுப்பினர் பேராசிரியர் ஆர்.ஆர் போஸ்லேயும் அதற்கு ஒப்புதல் அளித்தார். சில பத்திகள் மாற்றப்பட்டன. சில புதிதாக எழுதப்பட்டன. அதே நேரத்தில் இந்த தகவலை யாரோ ஊடகத்திற்கு கசிய விட்டனர். திருத்தப்பட்ட பாடநூல் அச்சிட்டு வெளியிடுவதற்கு முன்பே மராத்தி தினசரியான கேசரி செய்தித்தாளின் கடுமையான பிரச்சாரத்தை எதிர்நோக்க வேண்டியிருத்தது.

“வரலாற்றின் எழுச்சியூட்டும் பகுதியை நீக்கி அதை ஒன்றுமில்லாமல் ஆக்குவதாக” எங்கள் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. மாவட்டத்திற்கு இரு ஆசிரியர்கள் என மொத்தம் 60 ஆசிரியர்கள் மூன்று நாட்கள் வெறுமனே சோதனை வாசிப்புதான் நடத்தி வந்தோம். இந்த சமயத்தில் எங்களில் யாருக்கும் எந்த சிக்கலும் இல்லை. ஆனால் அதுவரை மதசார்பற்ற மற்றும் மனிதநேயமிக்க வரலாறு பாடத்திட்டத்தை உருவாக்க எங்கள் மீது நம்பிக்கை வைத்த அரசு, பத்திரிகை பிரச்சாரத்திற்கு பிறகு முழுமையாக பின்வாங்கி விட்டது.

படிக்க:
♦ பார்ப்பனிய கொட்டத்தை அடக்கிய பீமா கோரேகான் போரின் 200-ம் ஆண்டு !
♦ கேள்வி பதில் : தேவேந்திர குல வேளாளர் – பட்டியல் வெளியேற்ற கோரிக்கை !

1991-ல் சுதாகர் ராவ் நாயக் தலைமையிலான சிறுபான்மை அரசு பதவியிலிருந்த போது நடந்தது இது. எங்களது பணியை ஆதரித்து, வரலாற்றை தனி நபர்களிடமிருந்து விடுவித்து ஒட்டுமொத்த சமூகத்தையும் கவனத்தில் கொள்ளும்படி மட்டுமே வரலாறு பாடத்திட்டத்தை மாற்றியமைக்க முயல்கிறோம் என்று கல்வி அமைச்சர் பேசினார். ஆனால் கட்சிபேதமின்றி அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பிற்கு பயந்து 25 ஆண்டுகால பாடத்திட்டத்திலிருந்து ஒரு சொல்லை கூட மாற்றம் செய்ய மாட்டோம் என்று முதலமைச்சர் உறுதியளித்தார். விளைவு, வகுப்புவாத சக்திகளின் வன்முறை ஆட்டங்கள் இன்றும் தொடர்கின்றன. நாங்கள் பாடுபட்டுழைத்த அந்த பாடத்திட்டம் முழுவதுமாய் அழிந்துவிட்டது. நாங்கள் அனைவரும் எங்கள் பாடத்திட்ட நகல்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டோம்.

இன்றியமையாத கேள்வி இங்கே என்னவெனில், வரலாற்று பிரச்சினைகள் மீண்டும் மீண்டும் கிளரப்படுகிறதே அது ஏன்?

(தொடரும்)


தமிழாக்கம் :
சுகுமார்
நன்றி : சப்ரங் இந்தியா 

ஆடம் ஸ்மித்துக்கு முந்தைய காலம் | பொருளாதாரம் கற்போம் – 32

0
Political-Economy-industrial-revolution-in-england-Slider

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 32

அத்தியாயம் ஆறு ஆடம் ஸ்மித்துக்கு முந்தைய காலம்

அ.அனிக்கின்

பெட்டி முதல் ஆடம் ஸ்மித் வரை, ஒரு நூற்றாண்டுக் காலத்தில் பொருளாதார விஞ்ஞானம் வெகுதூரம் முன்னேறியது; மூலச் சிறப்புடைய மரபினரின் ஆரம்ப நிலையிலிருந்து ஒரு அமைப்பாக உருவாக்கம் பெற்றது; தனித் தனியாக – சில சமயங்களில் அங்கொன்றும் இங்கொன்றாக வெளிவந்த பிரசுரங்களிலிருந்து நாடுகளின் செல்வம் என்று வரையறுத்துக்கூறும் விளக்க நூல் வரை முன்னேறியது. இந்த நூலின் உள்ளடக்கமும் உருவமும் அடுத்த நூற்றாண்டிலும் – அதற்குப் பின்னரும் கூட பொருளாதாரத் தத்துவத்தைப் பற்றி எழுதப்பட்ட ஆராய்ச்சி நூல்களின் இயல்பை நிர்ணயித்தன.

மார்க்ஸ் எழுதியது போல, “அந்தக் காலகட்டத்தில்”(1)  தற்சிந்தனை மிக்க சிந்தனையாளர்கள் அதிகமாக இருந்தனர்; எனவே “அரசியல் பொருளாதாரத்தின் படிப்படியான தோற்றத்தை”(2)  ஆராய்வதற்கு அது முக்கியமானதாகும். இங்கிலாந்தில் மூலச் சிறப்புடையை அரசியல் பொருளாதாரத்தின் மாளிகையை ஒவ்வொரு கல்லாக எடுத்து வைத்துக் கட்டிய சிறப்புமிக்க அறிஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரில் சிலரைப் பற்றி மட்டுமே நாம் இங்கே எடுத்துக் கூறுவது சாத்தியம். நவீனப் பிரச்சினைகளின் அடிப்படையில் பார்க்கும் பொழுதும் அவர்களுடைய கருத்துக்களில் சில சுவாரசியமிக்கவையாக இருக்கின்றன.

18-ம் நூற்றாண்டு

ன்றைய புதிய யுகத்தின் பிரிட்டன் 18-ம் நூற்றாண்டின் முதற்பகுதியில் உருவாயிற்று என்று கூறலாம். நில உடைமையாளர்களான பிரபுக்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையே ஏற்பட்டிருந்த வர்க்க சமரசம் இந்தக் கால கட்டத்தில் உறுதியாயிற்று. இரண்டு சுரண்டும் வர்க்கங்களின் நலன்களும் இணைந்து நெருக்கமாகப் பின்னிப் பிணைந்தன. பிரபுக்கள் முதலாளிகளானார்கள்; முதலாளிகள் நில உடைமையாளர்களானார்கள்.

Political_economy_Map_of_England
18ம் நூற்றாண்டில் இங்கிலாந்தின் வரைபடம்.

அன்று உருவாகி வளர்ச்சியடைந்த அரசியல் அமைப்பு அடிப்படையான அம்சங்களில் இன்றைய தினத்திலும் கூட நீடிக்கிறது; இரண்டு நூற்றாண்டுகளுக்கு அது முதலாளித்துவ ஜனநாயக இலட்சியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியது. அது நாடாளுமன்றத்துக்கு அடங்கிய முடியாட்சியைக் கொண்டிருக்கிறது; அங்கே அரசர் ஆள்கிறாரே தவிர ஆட்சி செய்வதில்லை. அங்கே இரண்டு கட்சிகள் இருக்கின்றன; அவ்வப்பொழுது ஒன்றுக்குப் பதில் மற்றொன்று ஆட்சிக்கு வரும். அந்தக் கால ஐரோப்பாவில் முன் எப்போதும் இருந்திராத அளவுக்குத் தனி நபர் சுதந்திரமும், பத்திரிகைச் சுதந்திரமும், பேச்சுரிமையும் அங்கே உண்டு; ஆனால் சமூகத்தில் வசதி மிக்கவர்களும் பணக்காரர்களும் மட்டுமே இந்த உரிமைகளை உண்மையில் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

நிலவுடைமையாளர்களின் பழமைவாதக் கட்சியான டோரிக் கட்சியும் அதிகமான கல்வி கற்ற பிரபுக்கள், நகர்ப்புற முதலாளிகளின் மிதவாதக் கட்சியான விக் கட்சியும் தமது முடிவற்ற நாடாளுமன்ற, தேர்தல் யுத்தங்களை நடத்துவதற்குத் தொடங்கியிருந்தன. “கீழ்வர்க்கங்களின்” கவனத்தை வர்க்கப் போராட்டத்தின் உண்மையான பிரச்சினைகளிலிருந்து திருப்புவது இந்த யுத்தங்களின் முக்கியமான வேலையாகும்.

படிக்க:
♦ முதலாளிகளின் மூலதனம் எங்கிருந்து வந்தது?
♦ கேள்வி பதில் : மோடியின் காமராஜர் ஆட்சி , தனியார்-தாராள-உலகமயம் – சிலை வழிபாடு !

அரசியல் போராட்டம் இதற்கு முந்திய நூற்றாண்டுகளில் கொண்டிருந்த மதப் பூச்சைப் பெரிய அளவுக்கு இழந்து விட்டது. அதிகாரபூர்வமான ஆங்கிலத் திருச்சபைக்கு அருகிலேயே முந்திய பரிசுத்தவாதத்தின் ஏராளமான பிரிவுகளும் ஏற்பட்டன; இங்கிலாந்து “நூறு மதங்களைக் கொண்ட தீவாக” மாறியது. ஆனால் இது முதலாளித்துவ தேசிய இனத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சியைத் தடை செய்யவில்லை. ஆங்கில வரலாற்றாசிரியரான ஜி.எம். டிரெவெல்யன் பின்வருமாறு எழுதுகிறார்: “மதம் தேசத்தைப் பிரித்தது, ஆனால் வர்த்தகம் தேசத்தை ஒன்றுபடுத்தியது; ஒப்பு நோக்கில் வர்த்தகத்தின் முக்கியத்துவம் அதிகரித்தது. பைபிள் நூலுக்குப் போட்டியாகக் கணக்குப் பேரேடு வந்து விட்டது.”(3)  

Political-Economy-GM_Trevelyan
ஜி.எம். டிரெவெல்யன்

பேரரசு வேகமாக வளர்ச்சியடைந்தது. வட அமெரிக்காவில் மக்கள் குடியேறினர்; மேற்கிந்தியத் தீவுகளில் கரும்பு, புகையிலைத் தோட்டங்கள் தழைத்துப் பெருகின; இந்தியாவும் கனடாவும் வெற்றி கொள்ளப்பட்டன; உலகத்தின் பல பகுதிகளிலும் ஏராளமான தீவுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இங்கிலாந்து நடத்திய யுத்தங்கள் பிரதானமாக வெற்றியடைந்தன. அது சந்தேகமில்லாத படி உலகத்தின் மிகப் பெரிய கடல் அரசியாக, வர்த்தக வல்லரசாக மாறியது. குறிப்பாக, அடிமை வர்த்தகத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த வியாபாரிகளுக்கு அநேகமாக ஏகபோகம் இருந்து வந்தது; அவர்கள் ஆயிரக்கணக்கான நீக்ரோக்களை ஆண்டு தோறும் அமெரிக்காவுக்குப் பிடித்துக் கொண்டு போனார்கள்.

இப்படிப்பட்ட எல்லாவிதமான நிகழ்வுப் போக்குகளுக்கும் இங்கிலாந்தின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் அடிப்படையாக இருந்தன என்பது உண்மையாகும். முதலாவதாகவும் முதன்மையாகவும், நாட்டுப்புறம் மாற்றமடைந்திருந்தது. அந்த நூற்றாண்டின் மத்தியில் கூட, தொழில்துறையைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக உற்பத்தி செய்து கொண்டிருந்தது ஆங்கில முறை விவசாயம், நிலங்களை வளைத்துப் போட்டு வேலி அடைப்பது அந்தக் காலத்தில் மிகவும் பரவலாக இருந்தது. சிறு அளவு நிலவுடைமைகளும் பொது நிலமும் படிப்படியாக மறைந்து பெரிய நிலப்பண்ணைகள் ஏற்பட்டுக் கொண்டிருந்தன; இவை சிறு அளவு நிலங்களாகப் பணக்கார விவசாயிகளிடம் குத்தகைக்கு விடப்பட்டன. இது விவசாயம், தொழில் துறை ஆகிய இரண்டிலுமே முதலாளித்துவத்தின் வளர்ச்சியை ஊக்குவித்தது.

கூலித் தொழிலாளர் வர்க்கம் வேகமாக வளர்ச்சி அடைந்தது; இவர்களிடம் நிலமும் இல்லை, சொத்தும் இல்லை; தங்களுடைய சொந்தக் கைகளைத் தவிர அவர்களிடம் வேறு உடைமைகள் இல்லை. இந்த வர்க்கம் நிலத்தை இழந்த அல்லது பழங்காலத்திலிருந்து வருகின்ற உரிமையான அரை நிலப்பிரபுத்துவக் குத்தகையை இழந்த விவசாயிகளைக் கொண்டும் போட்டியினால் அழிந்து போன குடிசைத் தொழி லாளர்கள், கைவினைஞர்களைக் கொண்டும் ஏற்பட்டிருந்தது.

ஆனால் உண்மையான தொழிற்சாலைப் பாட்டாளி வர்க்கம் இன்னும் “கீழ் வர்க்கங்களில்” முக்கியத்துவமற்ற பகுதியாகவே இருந்தது. முதலாளித்துவச் சுரண்டலிலும் “அந்த நன்மை மிகு பழங்காலத்தின்” எச்சங்கள், தந்தை வழிக் கூறுகள் பல இருந்தன. தொழிற்சாலை அடிமைத்தனத்தின் கோரங்கள் இனி மேல் தான் ஏற்பட வேண்டியிருந்தன.

படிக்க:
♦ வர்க்க ஒற்றுமையே அவநம்பிக்கை பிணிக்கான மருந்து !
♦ கார்ப்பரேட் கொள்ளைக்கான சட்டதிருத்தங்களை கிழித்தெறிவோம் ! பு.ஜ.தொ.மு அரங்கக்கூட்டம்

மறுமுனையில் தொழில்துறை முதலாளிகள் என்ற வர்க்கம் வளர்ந்து கொண்டிருந்தது. இவர்களோடு பணக்கார மேலாண்மைக் கைவினைஞர்களும் வியாபாரிகளும் காலனி நாட்டுத் தோட்ட முதலாளிகளும் சேர்ந்து கொண்டார்கள். கடைசியாகச் சொல்லப்பட்ட இரு ரகங்களைச் சேர்ந்தவர்களும் வெளிநாடுகளில் திரட்டிய செல்வத்தை இங்கிலாந்துக்குக் கொண்டுவந்தார்கள். உற்பத்தி மூலதனத்துக்குக் கீழ்ப்பட்டது பல அடுக்கான நிகழ்வாகும்; முதலில் குடிசைத் தொழில்களுக்கு மூலப் பொருள்களைக் கொடுப்பவர்களாகவும் உற்பத்தி விளைவுகளை வாங்கிக் கொள்பவர்களாகவுமே முதலாளிகள் ஊடுருவி நுழைந்தார்கள்; பிறகு கைத்தொழில் பொருட்களின் உற்பத்தி நிலையங்களையும் தொழிற்சாலைகளையும் ஏற்படுத்தினார்கள்.

Political-Economy-industrial revolution in englandஇது பட்டறைத் தொழில், அதாவது உழைப்புப் பிரிவினையை அடிப்படையாகக் கொண்டு கைகளால் செய்யப்படும் உற்பத்தி யுகத்தின் இறுதிக்கட்டம். முன்னர் பயன்படுத்திய பூர்வீகமான கருவிகளையே உபயோகித்த போதிலும் உழைப்புப் பிரிவினையும் தொழிலாளர்களின் சிறப்புத் தேர்ச்சியும் உற்பத்தித்திறன் அதிகரிப்பதற்கு உதவி செய்தன. இயந்திரத் தொழில் அப்பொழுதுதான் பிறந்து கொண்டிருந்தது. மாபெரும் கண்டு பிடிப்புகளின் யுகம் ஆரம்பமாகிக் கொண்டிருந்தது . 18-ம் நூற்றாண்டின் முப்பதுக்களில் நூற்புத் தொழில் மற்றும் நெசவுத் தொழிலை இயந்திரமயமாக்குகின்ற முதல் முயற்சிகள் செய்யப்பட்டுவந்தன; நிலக்கரியைச் சுட்டுத் தேனிரும்பு தயாரிக்கின்ற முறை கண்டுபிடிக்கப்பட்டது. அறுபதுகளில் ஜேம்ஸ் வாட் நீராவி இயந்திரத்தைக் கண்டுபிடித்தார்.

தொழிலதிபர்கள் தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதற்கும் வணிகர்கள் அந்நிய வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கும் அரசாங்கம் காலனி யுத்தங்களை நடத்துவதற்கும் கடன் வசதி தேவையாக இருந்தது. இதன் விளைவாகப் பண மூலதனத்தைத் திரட்டிய வங்கிகளும் கூட்டுப் பங்குக் கம்பெனிகளும் தோன்றி வேகமாக வளர்ச்சியடைந்தன. தேசியக் கடன் கணிசமான அளவுக்கு உயர்ந்தது. அரசாங்கப் பத்திரங்கள் புழக்கத்துக்கு வந்தன. பங்கு மார்க்கெட் ஏற்பட்டது. லாபத்தை வருமானத்தின் முக்கியமான வடிவமாகக் கொண்ட தொழில்துறை மற்றும் வர்த்தக முதலாளிகளுக்குப் பக்கத்திலேயே பண வசதியுள்ள முதலாளியின் ஆற்றல் மிக்க உருவம் தோன்றியது. அவர் மற்றவர்களுக்குக் கடன் கொடுத்தார். அந்தக் கடனுக்கு வட்டி என்ற வடிவத்தில் உபரி மதிப்பில் அவருக்குப் பங்கு கிடைத்தது.

பண்ட-பண உறவுகள் தேசத்தின் மொத்த வாழ்க்கையிலும் முன்பே நிறைந்திருந்தன. வர்த்தகம் மட்டுமல்லாமல் உற்பத்தியும் பெரும் அளவுக்கு முதலாளித்துவத் தன்மைகளைக் கொண்டிருந்தது. முதலாளித்துவ சமூகத்தின் அடிப்படையான வர்க்கங்கள் அதிகமான தனித்தன்மையோடு வெளிப்பட்டன. சமூக நிகழ்வுகள் பெருந்திரளான அளவில் திரும்பத் திரும்ப நடைபெற்றதன் விளைவாக மூலதனம், லாபம், வட்டி, நிலவாரம், கூலி போன்ற புறவய இனங்கள் தெளிவாக வரையறுக்கப்பட்டன. இவை அனைத்தும் இப்பொழுது கவனமான பார்வைக்கும் விஞ்ஞான ஆராய்ச்சிக்கும் உரிய பொருள்களாக முடிந்தது.

மறுபக்கத்தில், சமூகத்தில் மிக அதிக முற்போக்கான வர்க்கமாக இன்னும் முதலாளி வர்க்கம் இருந்தது. அது தன்னுடைய பிரதான எதிரியாக வளர்ச்சியடைந்து வருகின்ற தொழிலாளி வர்க்கத்தை இன்னும் அங்கீகரிக்கவில்லை. இந்த இரு வர்க்கங்களுக்கிடையே வர்க்கப் போராட்டம் இன்னும் கரு வடிவத்தில்தான் இருந்தது. ஆகவே இங்கிலாந்தில் மூலச் சிறப்புடைய அரசியல் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்குரிய நிலைமைகள் இவ்விதத்தில் உருவாயின.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

(1)  மார்க்ஸ் 1691 முதல் 1752 முடிய உள்ள காலகட்டத்தை, பெட்டியின் கருத்துக்களை வளர்த்துச் செல்லும் வகையில் லாக், நோர்த் ஆகியோர் எழுதிய புத்தகங்கள் வெளியிடப்பட்டதிலிருந்து, ஆடம் ஸ்மித்தின் முன்னோடியான ஹியூமின் முக்கியமான பொருளாதார புத்தகங்கள் வெளியிடப்படுவது வரை உள்ள கால கட்டத்தைக் குறிப்பிடுகிறார்.

(2)  பி. எங்கெல்ஸ், டூரிங்குக்கு மறுப்பு, முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ , 1979, பக்கம் 409 பார்க்க.

(2)  G. Trevelyan, English Social History, London, 1944, p. 295.

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

கேள்வி பதில் : தேவேந்திர குல வேளாளர் – பட்டியல் வெளியேற்ற கோரிக்கை !

Devendra-Kula-Vellalar-Slider

கேள்வி : //தமிழகத்தில் தேவேந்திர குல மக்களின் தற்போதைய பட்டியல் வெளியேற்ற கோரிக்கை பற்றிய உங்களுடைய கருத்து என்ன?//

-திருமலைகுமார்

ன்புள்ள திருமலைகுமார்,

பட்டியல் இன மக்கள் என்ற பிரிவிலிருந்து தங்களை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை தேவேந்திர குல வேளாள மக்களைச் சேர்ந்த சிலரிடமிருந்து ஏன் வருகிறது? அது சாதி – தீண்டாமை எதிர்ப்பு – ஒழிப்பை முன் வைத்து வரவில்லை. ஆண்ட பரம்பரை, பார்ப்பனமயமாக்கம் மற்றும் பாஜக-வின் மறைமுக ஆதரவோடும்தான் வருகிறது.

பள்ளர்கள் தமிழகத்தை ஆண்ட பரம்பரையைச் சேர்ந்தவர்கள், பின்னாளில் ஆளப்படும் பரம்பரையாக வீழ்ந்து போனார்கள் என்று சிலர் முன்வைக்கிறார்கள். இதை பள்ளர் பிரிவைச் சேர்ந்த சில அறிஞர்கள் மட்டுமல்ல ஆதிக்க சாதிகளைச் சேர்ந்தோரும் தத்தமது சாதிகள் ஆண்ட பரம்பரை என்றே கூறுகின்றனர். ஆண்ட பரம்பரை வரலாற்றின் படி ஒரு அரசன் அவனது வாரிசுகள் மட்டுமே ஆண்டிருக்க முடியும். மற்றவர்கள் குடிமக்களாகவோ அடிமைகளாகவோ மட்டுமே வாழ்ந்திருக்க முடியும். குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த அனைவரும் ஆண்டார்கள் என்று பேசினால் ஆள்வதற்கு இந்த ஒரு பூமி போதாது.

புதிய தமிழகம் கிருஷ்ணசாமி பிபிசி தமிழுக்கு அளித்த நேர்காணலில் இப்படி கூறுகிறார்:

“தமிழகத்தில் தேவேந்திர குல வேளாளர் என்று அழைக்கப்படும் மக்கள், பூர்விக வேளாண் குடிமக்கள். இவர்கள் மருத நிலத்தின் மக்கள் ஆவர். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் ஆதி திராவிடர் பிரிவில் தேவேந்திர குல வேளாளர்களை சேர்க்கக்கூடாது என்று அப்போதே இந்த சமுதாயத் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால், வலுவான சமுதாய தலைமை இல்லாத காரணத்தால் தேவேந்திர குல வேளாளர் சமூகம் பட்டியல் சாதிப் பிரிவில் சேர்க்கப்பட்டது. பட்டியல் சாதிப் பிரிவில் சேர்க்கப்பட்டதால் தேவேந்திர குல வேளாளர் சமுதாயம் தனது பூர்வீக அடையாளத்தை இழந்துள்ளது.

ஆதி திராவிடர் என்றும், ஹரிஜன் என்றும் இந்த சமூகம் கொச்சைப்படுத்தப்பட்டது. இட ஒதுக்கீடு என்ற பெயரில் இந்த சமுதாயம் இழிவுபடுத்தப்பட்டது. அதனால், இந்த பட்டியலில் இருந்து தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை நீக்க நாங்கள் கோருகிறோம்.

படிக்க:
வேதாரண்யம் அண்ணல் அம்பேத்கர் சிலை உடைப்பு : திட்டமிட்ட சதி !
♦ கருத்துக் கணிப்பு : புதிய தமிழகம் கிருஷ்ணசாமியின் அடையாளம் எது ?

சாணார் என்றும் கிராமணி என்றும் அழைக்கப்பட்டவர்களை நாடார்கள் என்று அழைக்கிறார்கள். கள்ளர், மறவர், அகமுடையார் என்று அழைக்கப்பட்டவர்களை முக்குலத்தோர் என்றழைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. வன்னியர்கள் என்று அழைக்கப்பட்டவர்களை சத்திரியர்கள் என்றழைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

அதே போல், ஏழு பட்டப்பெயர்கள் கொண்ட எங்கள் சமூகத்தை தேவேந்திர குல வேளாளர் என்று ஒரே பெயரில் அழைக்க நாங்கள் கோருகிறோம். எங்கள் சமுதாயத்தின் அடையாள மீட்புக்காக நாங்கள் இந்த கோரிக்கையை வலியுறுத்துகிறோம்.

பெரும்பான்மை சமூகத்தினருடன் நாங்கள் இரண்டறக் கலப்பதற்கு பட்டியல் சாதிப் பிரிவில் இருந்து தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் வெளியேற வேண்டும்.”

கிருஷ்ணசாமி கோரிக்கையின் படி பட்டியல் இன மக்களிடமிருந்து பள்ளர்களை விடுவித்து விட்டு இதர பிற்படுத்தப்பட்டவர் பட்டியலில் சேர்க்க வேண்டுமாம்.

Dr Krishnasamy
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உடன் கிருஷ்ணசாமியும் அவரது மகனும் (கோப்புப் படம்)

கிருஷ்ணசாமியின் வாக்குமூலத்தின் படி பள்ளர்கள் வேளாண் குடி மக்கள். எனில் வட தமிழகத்தில் விவசாயக் கூலிகளாக பணியாற்றும் பறையர் இன மக்கள், அதே போன்று மேற்கு தமிழகத்தில் பணியாற்றும் அருந்ததி இன மக்களெல்லாம் வேளாண் குடி மக்களில்லையா? இன்றும் தஞ்சை, கீழத்தஞ்சை மாவட்டங்களில் நிலமற்ற விவசாயக் கூலிகளாக அதிகம் பணியாற்றுவது பள்ளர் மற்றும் பறையர் இன மக்கள்தான்.

ஒரு சில ஊர்களில் பள்ளர்களுக்கு நில உரிமை இருக்கிறது என்றாலும் பெரும்பான்மையினர் இன்னும் கூலிகளாகத்தான் வாழ்கின்றனர். அதே போன்று பிற்படுத்தப்பட்டோர், இதர பிற்படுத்தப்பட்டோரிலும் விவசாயக் கூலிகள் இருக்கத்தான் செய்கின்றனர். கிருஷ்ணசாமியின் கணக்குப்படி கூலி வேலை செய்பவர்கள் விவசாயிகள் இல்லைபோலும்!

ஆதிக்க சாதிகளின் சாதி வெறியை, தீண்டாமை ஒடுக்குமுறையை கண்டிப்பதற்கு பதில் நானும் ஆதிக்க சாதிகளின் பட்டியலில் சேருகிறேன், இனிமேல் என்னை ஆதி திராவிடன், ஹரிஜன் என்று அழைக்காதீர்கள் என்று கேட்கிறார் கிருஷ்ணசாமி. அவர் அப்படிக் கேட்டு அதன்படி அரசு நடப்பதாக வைத்துக் கொண்டாலும் இதர ஆதிக்க சாதிகள் பள்ளர் இன மக்களை சரிக்கு சமமாக நடத்துவார்கள் என்று கிருஷ்ணசாமி எதிர்பார்க்கிறார். அது நடப்பதாக இருந்தால் இந்தியாவில் சாதி வேறுபாடுகளும், தீண்டாமையும் இருக்கவே முடியாது.

படிக்க:
கேள்வி பதில் : பா. ரஞ்சித் – தமிழ் அமைப்புகள் – வலது, இடது கம்யூனிஸ்ட்டுகள் !
♦ தமிழகம் : சாதிவெறியர்களின் சொர்க்கபூமியாகிறது !

பட்டியல் பிரிவில் பள்ளர்களை சேர்த்ததாலேயே தாம் இகழப்படுகிறோம் என்று பேசுகிறார் கிருஷ்ணசாமி. இந்தியாவில் தீண்டாமை என்பது ஏதோ ஒரு பேப்பரில் இருக்கும் நிர்வாக விசயத்தால் வந்து விடவில்லை. அது சமூக பொருளாதார அரசியல் வாழ்வில் பௌதீக சக்தியாக இருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களில் பெரும்பான்மையோர் நிலமின்றி வாழ்வதே முதல் பிரச்சினை. தீண்டாமை மற்றும் அசமத்துவ விசயங்களின் அடிப்படையே இந்த நிலமின்மைதான். உழுபவனுக்கு நிலம் சொந்தம் என்ற கோரிக்கை நிறைவேறும் போதுதான் தாழ்த்தப்பட்ட மக்கள் தமது அடிமை நிலையை எதிர்த்துப் போராடும் ஊக்க சக்தியைப் பெற முடியும். பொருளாதார ரீதியாக ஆதிக்க சாதிகளை சார்ந்து நிற்கும் இன்றைய நிலையில் இருந்து அவர்கள் ஊரகப் பகுதிகளில் சமத்துவப் போராட்டங்களை நடத்துவது வெகு சிரமம். அதே போன்று இந்தப் போராட்டத்தில் ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த உழைக்கும் மக்களையும் இணைக்க வேண்டும்.

VENMANI
கீழத்தஞ்சை வெண்மணி தியாகிகள் நினைவுத் தூண்.

கீழத்தஞ்சையில் கம்யூனிச இயக்கம் பண்ணையாதிக்கத்தை எதிர்த்து போராடிய போது இந்த இணக்கத்தை கொண்டு வந்தது. மேற்கு வங்கத்தில் நிலவுடமை கணிசமான அளவுக்கு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது. அதன் காரணமாகவே அங்கே ஆதிக்க சாதி ஒடுக்குமுறை அதிகம் இல்லை.

கிருஷ்ணசாமி போன்ற இட ஒதுக்கீட்டால் ஆதாயம் அடைந்த முன்னேறிய பிரிவினருக்கு பட்டியல் இன மக்கள் என்ற பதம் உறுத்துகிறது. தம்மைப் போன்று இன்னும் சில சாதி மக்கள் அந்தப் பட்டியலில் இருக்கிறார்களே அவர்களெல்லாம் சாதி தீண்டாமையினால் பாதிக்கப்படுவார்களே என்ற சமூக உணர்ச்சி இல்லை. பட்டியல் பிரிவே வேண்டாம் என்று அவர் கோரியிருந்தால் கூட அதில் ஒரு சமத்துவம் இருக்கும். ஆனால் சமூக, பொருளாதார வாழ்வில் இம்மக்களுக்கு இடமில்லை என்ற காரணத்தினால்தான் ஆங்கிலேயர் காலத்தில் பட்டியல் பிரிவு உருவாக்கப்பட்டது.

அதன்படியான இட ஒதுக்கீடு இன்றும் தொடர்கிறது. ஏதோ கிராமத்திற்கு ஓரிருவர் முன்னேறுவதற்காகவாவது இந்த இட ஒதுக்கீடு வழி செய்கிறது. கிருஷ்ணசாமி போன்றோர் முன்னேறிய பள்ளர்களை வைத்து பாஜக உதவியுடன் ஒரு அரசியல் சக்தியாக மாறுவதற்கு இந்த கோரிக்கையை கையில் எடுத்திருக்கிறார்கள். சாதி அரசியலை வைத்து வட இந்திய மாநிலங்களில் அரசியல் செய்யும் பாஜக இங்கே முதல் கட்டமாக கிருஷ்ணசாமியை தெற்கிலும், பா.ம.க ராமதாஸை வடக்கிலும் இறக்கியிருக்கிறது. இதை வைத்து அமித்ஷா ஒரு மாஸ்டர் பிளான் போட்டிருப்பார்.

புதிய தமிழகம் அல்லாத பள்ளர் இன மக்கள் இக்கோரிக்கையை பொதுவில் ஏற்கவில்லை. இட ஒதுக்கீடும், பட்டியல் பிரிவும் நீடிக்க வேண்டும் என்றே அவர்கள் கருதுகிறார்கள். அப்படி கருதுகிறவர்கள் புதிய தமிழகத்தால் சில இடங்களில் பகிரங்கமாக மிரட்டப்படுகிறார்கள். சமூக வலைத்தளங்களில் சமுதாயத் துரோகி என வசைபாடப்படுகிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ்-ன் திட்டத்தோடு புதிய தமிழகம் கிருஷ்ணசாமி முன்வைக்கும் இக்கோரிக்கையை யாரும் ஏற்க இயலாது.

நன்றி!

♦ ♦ ♦

(கேள்வி பதில் பகுதிக்கு நிறைய கேள்விகளை நண்பர்கள் கேட்கிறார்கள். மகிழ்ச்சி. கூடுமானவரை உடனுக்குடன் பதிலளிக்க முயல்கிறோம். சில கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு கூடுதலான நேரம் தேவைப்படுகிறது. கொஞ்சம் காத்திருங்கள்.)

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

வீழ்ச்சியடைந்துவரும் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை !

சிம் பிரேம்ஜி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் வெளியிட்ட அரசாங்க வேலைவாய்ப்பு தரவு ஆய்வு முடிவுகளில் இந்தியாவில் பணிக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட குறைந்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2011 – 12-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கிராமப்புறங்களில் 25%-ஆக இருந்த பெண்களின் வேலை வாய்ப்பு தற்போது 18% ஆக குறைந்துள்ளது. மேலும், நகர்ப்புறங்களில் பணிக்கு செல்லும் பெண்களின் விகிதம் 15%-ல் இருந்து 14% ஆகவும் குறைந்துள்ளது. ஆனால் நகர்ப்புறங்களில் மாத சம்பள வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை கடந்த 2004-ம் ஆண்டு 36.6%-ஆக இருந்ததை விட 2017-ம் ஆண்டில் 52.1%-ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும் சுயதொழில் அல்லது முறைசாரா வேலைகளில் அவர்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது.

Women Workers 1
மாதிரிப் படம்

கிராமப்புற மற்றும் நகர்ப்புற இந்தியாவில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் வேலைவாய்ப்பின்றி உள்ளபோதிலும், அதில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாக சமீபத்தில் அரசாங்கத்தால் வெளிடப்பட்ட “குறிப்பான காலத்திற்கான தொழிலாளர் கணக்கெடுப்பு – 2017 – 2018” உறுதிபடுத்துகிறது.

இந்தியாவில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்துள்ளதாக, தேசிய வேலைவாய்ப்பு தரவுகள் அம்பலமான நான்கு மாதங்களுக்குப் பிறகு, கடந்த மே 31 அன்றுதான் அதிகாரப்பூர்வ தொழிலாளர் ஆய்வு அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டது.

பணியில் பெண்கள்

1993-ம் ஆண்டில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் கிராமப்புற பெண்களில் கிட்டத்தட்ட 33% பேர் வேலைவாய்ப்பு பெற்றிருந்தனர். கடந்த 2011-12-ம் நிதியாண்டில் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் வேலைவாய்ப்பு வேலையின்மை கணக்கெடுப்பு கடைசியாக நடத்தப்பட்டபோது, இது எட்டு சதவீத புள்ளிகள் குறைந்து சுமார் 25% ஆகவும், நகர்ப்புற பெண்களின் விகிதம் ஒரு சதவீதம் குறைந்து 15% ஆகவும் இருந்தது.

2017-18-ல் நடத்தப்பட்ட தொழிலாளர் கணக்கெடுப்பு மதிப்பீடுகள் இந்த நிலை இன்னும் மோசமாகி உள்ளதை தெளிவுபடுத்தியது. இந்த ஆய்வில், கிராமப்புற பெண்களின் பங்களிப்பு 18% ஆகவும், நகர்ப்புற பெண்களின் பங்களிப்பு 14% ஆகவும் குறைந்துள்ளது.

படிக்க:
சூரிய ஒளி மின்சாரம் : மக்கள் வாழ்வாதாரத்தையும் சூழலியலையும் அழிக்கும் அரசு !
♦ தற்கொலை தேசமா நம் இந்தியா ? | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

வீழ்ச்சியடைந்த பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. கணவரின் வருமான அதிகரிப்பு பெண்கள் பணிக்கு செல்வதை குறைக்கும் காரணியாக உள்ளதென்றும், பெண்களின் வீட்டு வேலைகள் மற்றும் குழந்தை பராமரிப்பு போன்ற பொறுப்புகள் அவர்களை பணிக்கு செல்வதில் இருந்து கட்டுப்படுத்துகின்றன என்றும் இருவேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.

2001-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கை, உயர்கல்வியைத் தொடர்வதற்காக பெண்கள் பணிக்கு செல்வதில்லை என தெரிவிக்கின்றது. 2015-ம் ஆண்டு ஒரு ஆய்வறிக்கையில், பெண்களுக்கு தகுதியான, சிறந்த வேலைகள் இல்லாததே அவர்களை பணிக்கு செல்வதிலிருந்து தடுப்பதாக வாதிடுகின்றனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இருப்பினும், கல்வியறிவு பெற்ற பெண்கள் நகரங்களில் சிறந்த வேலைகளைக் கோருகிறார்கள் என்பதற்கு சில சான்றுகள் உள்ளன. நகர்ப்புறங்களில் சில பெண்கள் முறைசார்ந்த வேலைகளில் அதிகளவில் பணியாற்றுகின்றனர்.

2004-ம் ஆண்டில் நகர்ப்புறங்களில் முறையான சம்பளம் பெறும் பணிக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை 35.6%-லிருந்து 2017-ம் ஆண்டு வாக்கில், 52.1% ஆக உயர்ந்திருக்கிறது. ஆகவே, சுயதொழில் புரிவோர் அல்லது முறைசாரா தொழிலாளர்களைக் காட்டிலும் வழக்கமான முறையான ஊதியத் தொழிலாளர்களில் தொழிலாளர் பெண்களின் பங்கு அதிகரித்திருப்பதை தொழிலாளர் கணக்கெடுப்பு அறிக்கை, சுட்டிக்காட்டுகிறது.

2004 மற்றும் 2017 -க்கு இடையில் நகர்ப்புறங்களில் சுயதொழிலில் ஈடுபடும் பெண்களின் பங்கு 47.7%-ல் இருந்து 34.7%-ஆக குறைந்தது. அதே காலகட்டத்தில், நிரந்தரமற்ற தொழிலாளர்களாக பணிபுரியும் பெண்களின் பங்கும் 16.7%-ல் இருந்து 13.1%-ஆக குறைந்துள்ளது.

இந்த காலகட்டத்தில் கிராமப்புறங்களிலும் முறையான, ஊதியப் பிரிவில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்தும், நிரந்தரமற்ற பணியாளராக மற்றும் சுயதொழில் வேலைகளில் சரிவும் ஏற்பட்டது. இது வரவேற்கத்தக்க வளர்ச்சியாக இருந்தபோதிலும், முறையான, சம்பள வேலைகளில் பெண்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது தொடர்ந்து வருகிறது.

Women Workers
மாதிரிப் படம்

வேலைவாய்ப்பு வகைகளில் ஆண்கள் மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை மதிப்பிடுவதற்கு, ஒட்டுமொத்த உழைப்பாளர்களின் எண்ணிக்கையில் உள்ள ஆண்கள் அல்லது பெண்களின் விகிதத்தால், குறிப்பான வேலைவாய்ப்பு வகையில் அந்த பாலினத்தின் பங்கு வகுக்கப்படுகிறது. இதன்படி, சம்பளத் தொழிலாளர்களாக பெண்களின் பங்களிப்பு காலப்போக்கில் அதிகரித்திருந்தாலும், அவர்கள் தொடர்ந்து பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதில்லை. மேலும், பெண்கள் வேலை செய்யும் போது, அவர்கள் சுயதொழில் செய்பவர்களாகவோ அல்லது கூலித் தொழிலாளர்களாகவோ பணியாற்றுவதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளன.

சுயதொழில் மூலம் கிடைக்கும் வருவாய் குறித்த தரவை அறிய ஒரு முக்கியமான கேள்வியை ”குறிப்பான காலத்திற்கான தொழிலாளர் கணக்கெடுப்பு” முன்வைத்தது. இந்தியாவில் பெரும்பான்மையான தொழிலாளர்கள் சுயதொழில் செய்வதால், இது முந்தைய ஆய்வுகள் கவனிக்காத ஒரு முக்கியமான விசயமாகும். வருமானம் குறித்த இந்த தரவு இப்போது வேலைவாய்ப்பு வகைகளில் ஆண்களும் பெண்களும் எவ்வளவு ஊதியம் பெறுகிறார்கள் என்பதை ஒப்பிட்டுப் பார்க்க வழிவகை செய்கிறது.

படிக்க:
ஐசிஐசிஐ சந்தா கோச்சார் : முன்னுதாரணமான பெண் ஊழல் முதலாளி – விசாரணையில் அம்பலம் !
♦ இந்தியா எதிர்கொள்ளவிருக்கும் வேலையின்மை நெருக்கடி !

முறைசார்ந்த, ஊதியப் பிரிவில் கிராமப்புறங்களில் பணிபுரியும் ஆண்கள், பெண்களை விட ரூ 4,594.50 அதிகமாகவும், நகர்ப்புறங்களில் ரூ.3,429.75 அதிகமாகவும் சம்பாதிக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. அதாவது, ஆண்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூ.100-க்கும் பெண்கள் கிராமப்புறங்களில் ரூ.70-ம், நகர்ப்புறங்களில் ரூ.80-ம் மட்டுமே வருமானமாகப் பெறுகிறார்கள் என்பது தெரியவருகிறது.

தொழிலாளர் கணக்கெடுப்பில் வேலை நேரம் குறித்த கேள்வியும் கேட்கப்பட்டது. இதன்படி, கிராமப்புறங்களில் ஆண்கள் மற்றும் பெண்களின் சதவீதத்திற்கு இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் எதுவும் இல்லை. இருப்பினும், நகர்ப்புற குடியேற்றங்களில், சுயதொழில் மற்றும் முறைசார்ந்த வேலைகளில் உள்ள பெண் தொழிலாளர்கள் ஆண்களை விட அதிக நேரம் வேலையில் ஈடுபடுத்தப்படுவதாக தெரியவருகின்றது.

சுயதொழில் செய்யும் ஆண்கள் பெண்களை விட வாரத்திற்கு 12 மணிநேரம் அதிகம் வேலை செய்கிறார்கள். தினக்கூலி வேலைகளில், ஆண்கள் ஒரு வாரத்தில் பெண்களை விட ஏழு மணி நேரம் அதிகம் வேலை செய்கிறார்கள். இருப்பினும், பெண்களின் ஊதியம் பெறாத வேலை நேரத்தை துல்லியமாக கணக்கிடப்பட முடியாததால் இதைக் கொண்டு பெண்கள் குறைவான மணிநேரம் வேலை செய்கிறார்கள் என்பதாக இது குறிக்கவில்லை.

வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் பெண்களின் ஊதியமற்ற உழைப்பை புரிந்துகொண்ட பிறகு, வேலை செய்யும் மணிநேரங்களின் தரவை சிறப்பாகப் பயன்படுத்தலாம்.

மொத்தத்தில் தொழிலாளர்களின் மீதான உழைப்புச் சுரண்டல் இந்தியா முழுவதும் இருந்துவரும் வேளையில், பெண்கள் ஊதியமில்லா உழைப்பிலும் (குடும்ப பராமரிப்பு வேலைகள்) குறைவான ஊதிய வேலைகளிலும் ஈடுபடுத்தப்பட்டு மேலதிகமாகச் சுரண்டப்படுகிறார்கள். இந்தியா போன்ற பார்ப்பனிய ஆணாதிக்கச் சமூகத்தில், இங்கு சுரண்டல் இன்னும் தீவிரமாக இருக்கிறது.


சுருக்கப்பட்ட தமிழாக்கம்:  எல்லாளன்
கட்டுரையாளர் : ஜானகி ஷிபு மற்றும் ரோசா ஆப்ரஹாம்
நன்றி : ஸ்க்ரால் 

சட்டவிரோதமான காரியம் | அ. முத்துலிங்கம்

slider

எழுத்தாளர் அ. முத்துலிங்கம்
ல வருடங்களுக்கு முன் என்னுடன் ஒருவர் வேலை செய்தார். அவர் ஒரு போர்த்துக்கீய பெண்ணை மணமுடித்து. அந்த நாட்டிலேயே தங்கிவிட்டவர். அப்பொழுது ஆப்கானிஸ்தான் பிரிவில் என்னுடன் பெஷாவாரில் வேலை பார்த்தார். அவர் பங்களுர்க்காரர் ஆகையால் கொங்கணி என்று ஒரு பாஷை இருக்கிறதாம், அதை பேசுவார். ஆங்கிலத்தையும் அதே மாதிரி பேசுவார். சில நிமிடங்களும், முதல் நாலு வார்த்தைகளும் தவறிய பிறகுதான் அவர் ஆங்கிலம் பேசுகிறார் என்பது எனக்கு பிடிபடும்.

அவரிடம் எல்லாமே இரண்டு இரண்டு பொருள்கள் இருக்கும். இரண்டு ரேடியோ, இரண்டு காமிரா, இரண்டு இஸ்திரிப்பெட்டி, இரண்டு டிவி, இரண்டு சமையல் அடுப்பு என்று இருக்கும். ஒரு நாள் ஏன் இப்படி என்று கேட்டேன். அதற்கும் அவரிடமிருந்து இரண்டு பதில் வந்தது.

1) திடீரென்று யாராவது விருந்தாளி வந்துவிட்டார். உங்கள் சமையல் அடுப்பு வேலை செய்யவில்லை. என்ன செய்வீர்கள்?

2) இந்த நாடுகளில் திருத்துவோரைப் பிடிப்பது கடினம். அப்படி ஏதாவது பொருளை அவர்கள் பழுதுபார்க்க எடுத்துப் போனாலும் ஒரு மாதம் கழித்துதான் திரும்பக் கிடைக்கும். அது வரைக்கும் என்ன செய்வது?

நியாயம்தான். இவர்தான் என்னை தூண்டியவர், ஒரு சட்ட விரோதமான காரியம் செய்வதற்கு. சட்டவிரோதமான காரியம் என்றால் யாருக்குத் தான் கசக்கும். உடனேயே சம்மதித்துவிட்டேன். இது 20 வருடத்திற்கு முந்திய சமாச்சாரம் என்பதால் அதைச் சொல்வதில் இன்றைக்கு ஒரு பிரச்சனையும் இருக்காது.

பிரிட்டிஷ்காரர் இந்தியாவை ஆண்டபோது ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்து 40 மைல் தூரத்தில் இருக்கும் டாரா என்ற கிராமத்தினருக்கு 200 வருடங்களுக்கு முன்பாகவே துப்பாக்கிகள் செய்வதற்கு அனுமதி வழங்கியிருந்தனர். அன்றிலிருந்து இன்று வரை இந்தத் தொழில் அந்தக் கிராமத்தில் செழித்து வளர்ந்தது. பாகிஸ்தான் பிரிந்து தனியான சுதந்திர நாடாக இயங்கிய போதும் கூட இதில் ஒரு மாற்றமும் இல்லை. மாறாக இன்னும் முன்னேற்றமான மெசின்களில், மேலும் நுட்பமான துப்பாக்கிகளை அவர்கள் செய்தார்கள்.

darra-Vilage of illegle guns
மாதிரிப் படம்

டாரா பகுதியை tribal area என்று சொல்வார்கள். நாங்கள் அங்கே போவதற்கு அனுமதி கிடையாது. இங்கே பாகிஸ்தான் சட்டங்கள் செல்லாது. பழங்குடியினரின் சட்டதிட்டங்களே அங்கே செயல்படுத்தப்பட்டன. வாகனத்தில் செல்லும் போது அந்தப் பகுதியைக் கடந்து செல்லலாம். ஆனால் கால்களைக் கீழே வைக்கக்கூடாது.

இந்தப் பகுதிகளில் ரத்தக் கொலைகள் சர்வ சாதாரணம். கொள்ளை அடிப்பது, ஆட்களைக் கடத்துவது, கார்கள் திருடுவது, போதைப் பொருள் வியாபாரம் செய்வது எல்லாம் அன்றாடம் நடக்கும் காரியம். ஆறு மாதங்களுக்கு முன் ஐ.நா ஊழியர்கள் நாலு பேரைக் கடத்தி, பிணையாக பல ஆயிரம் டொலர்கள் கேட்டார்கள். பாகிஸ்தான் அரசாங்கம் தலையிட்டு ஒருவாறு இவர்களை மீட்ட்டுக் கொடுத்தது.

டாராவில் பல விதமான துப்பாக்கிகள் செய்தார்கள், எல்லாமே நகல்தான். ஆனால் அசல் போல நம்பர்கூட இருக்கும். மூலத்துக்கும் நகலுக்கும் வித்தியாசமே காணமுடியாது. நூறு வருடத்துக்கு முந்திய பிரிட்டிஷ் துப்பாக்கிகள், AK 47, M16, கைத்துப்பாக்கி, சுழல் துப்பாக்கி என்று பலவிதமான உற்பத்திகள் நடந்தன. உங்களுக்குப் பிடித்த புது ரக துப்பாக்கியைக் கொடுத்தால் அதுபோலவே நகல் செய்து தருவார்கள். கிழமையில் எழு நாட்களும் பாகிஸ்தானியர்களும், ஆப்கானியர்களும் துப்பாக்கிகள் வாங்க இந்தக் கிராமத்துக்கு வருவார்கள். ஒரு நாளைக்கு இங்கே ஆயிரம் துப்பாக்கிகள் செய்கிறார்கள் என்று விவரம் அறிந்தவர்கள் சொன்னார்கள்.

படிக்க:
ஆப்கான் – மத்திய ஆசியா – எண்ணெய் – இஸ்லாமிய தீவிரவாதம் !
♦ அமேசான் : பற்றியெரியும் பூமிப்பந்தின் நுரையீரல் !

இந்த இடத்துக்குப் போகக்கூடாதென்ற உச்சமான கட்டளை எங்களுக்கு இருந்தது. இங்கே போவதற்குத்தான் நண்பர் என்னை அழைத்தார். அவரிடம் இரண்டு வாகனங்கள் இருந்தன. அதிலே ஒரு நாலு சில்லு வாகனத்தைக் தெரிவு செய்தார். டாரா தடுக்கப்பட்ட இடம் என்றாலும் பாகிஸ்தானுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த இடத்தை எப்படியும் பார்த்த பிறகுதான் திரும்புவார்கள். சட்டவிரோதமான காரியங்களைச் செய்வதில் மனிதர்களுக்கு உள்ளூர பெரிய ஆசை உண்டு.

டாரா போவதென்றால் பெஷாவரில் இருந்து தெற்கே ஒன்றரை மணித்தியாலம் பயணம் செய்யவேண்டும். கரடுமுரடான பழங்காலத்து அரசர்களின் பாதைகள். வீடுகள் என்றால் தட்டைக் கூரைகளுடன் சுவர்களில் சின்னச்சின்ன சதுர ஒட்டைகள் வைத்து, ஒரு கோட்டை போல கட்டப்பட்டிருந்தன. சண்டை என்று வரும் போது இந்த ஒட்டைகள் துப்பாக்கியால் சுடுவதற்குப் பயன்படும்.

அங்கே போய் இறங்கியதும் ஒரு தொழிற்சாலையைப் பார்க்கப் போகிறோம் என்ற எண்ணமே எனக்கு இருந்தது. ஆனால் அப்படி ஒன்றும் இல்லவே இல்லை. இது ஒரு குடிசைக் கைத்தொழில் போலவே தொழில் நடந்தது. சாரதி எங்களை ஒவ்வொரு வீடாக கூட்டிச் சென்றார். ஒவ்வொரு வீட்டிலும் ஏதாவது ஒரு அயிட்டம் செய்தார்கள். துப்பாக்கி கைப்பிடி ஒரு வீட்டில், குழாய் ஒரு வீட்டில், விசைக் கருவிகள் ஒரு வீட்டில், இப்படி. செம்பட்டைத் தலை மயிரும், பச்சைக் கண்களும் கொண்ட சிறுவர் சிறுமியர் இந்தப் பணிகளில் சாதாரணமாக ஈடுபட்டிருந்தார்கள். பெரியவர்கள் கடினமான வேலைகளைச் செய்தார்கள். ஆனால் இந்த உதிரிப் பாகங்கள் எங்கே பொருத்தப்பட்டு துப்பாக்கியாக மாறுகின்றன என்பது தெரியவில்லை. நிரைநிரையாக இருந்த கடைகளில் பூர்த்தியான துப்பாக்கிகள் விற்பனைக்கு இருந்தன. யாரும் வாங்கலாம், ஒருவித தடையுமில்லை. உங்கள் பெயரைக்கூட அவர்கள் பதிவு செய்வதில்லை. ஒரு கேள்வியில்லை. கடைகளின் முன்னே போடப்பட்டிருந்த கயிற்றுக் கட்டில்களில் வாடிக்கைக்காரர்களும், வேடிக்கைக்காரர்களும் உட்கார்ந்து முதல் நாள் இரவு மிச்சம் வைத்த நித்திரையை தொடர்ந்தனர். இவற்றையெல்லாம் மீறி துப்பாக்கி விற்பனையும் அவ்வப்போது நடந்தது.

darra-Vilage of illegle guns 2இதிலே எனக்கு பிடித்த அம்சம் ஒன்று இருந்தது. அமெரிக்கா போன்ற நாடுகளில் துப்பாக்கிக் கடைகளில் குறிபார்த்து சுட்டு வாங்குவதற்கு வசதிகள் இருக்கும். இங்கே அப்படி ஒன்றும் target வசதிகள் இல்லை. இவர்கள் துப்பாக்கி தேர்வு செய்வது வித்தியாசமாக இருந்தது.

நாங்கள் பார்வையிட வந்த கடையின் சொந்தக்காரர் முற்றிலும் நீல உடையில் காட்சியளித்தார். நீல தலைப்பா, நீல சப்பாத்து, நீல கமிஸ். ஒர் உருண்டையான தலையணையில் சாய்ந்தபடி மொகலாய மன்னர்கள்போல ஹுக்காவை இழுத்தபடி வீற்றிருந்தார். துப்பாக்கிகள் எப்படியும் தங்களைத் தாங்களே விற்றுக்கொள்ளும் என்ற பாவனையில் இவருடைய வியாபாரம் அசிரத்தையாக நடந்தது.

அவருக்கு முன்னால் விருந்தாளி போல காணப்பட்ட ஒருத்தர் நூல் நூலாக பிரிந்த இறைச்சியை கடித்து இழுத்துச் சாப்பிட்டார். உடம்பு முழுக்க ரத்தம் கட்டியது போல அவருடைய நிறம். கைச்சதைகள் திரண்டு உருண்டு போய் தெரிந்தன. அவர் கண்களில் ஒன்று மற்றதிலும் பார்க்க விரைவாக மூடித் திறந்தது. வழிப்பறிக் கள்வன் வேலை பார்ப்பவராக இருக்கலாம். எங்களைக் கண்டதும் ஒரு காலை மடக்கி இடம் விட்டார். இதுவே இவர் எங்களுக்குக் கொடுத்த அதிகபட்ச மரியாதை.

கடையின் மறுபக்கத்தில் இன்னொரு வாடிக்கைக்காரர் AK47 துவக்குகளை ஆராய்ந்து கொண்டிருந்தார். அவருடைய உருவமும் உடையும் அவர் ஆப்கானிஸ்தானிலிருந்து வந்த பட்டான் ஆள் என்பதைக் காட்டியது. ஒரு துப்பாக்கியை தூக்கி ரோட்டுக்கு வெளியே போய் ஆகாயத்தைப் பார்த்து படபடவென்று சுட்டார். சிறுவர்கள் எல்லாம் அவர் காலில் விழுந்து உதிரி சன்னங்களைப் பொறுக்கினார்கள். அவர் உள்ளே வந்தார். இன்னொரு துப்பாக்கியை எடுத்தார் வெளியே போய் மறுபடியும் படபடவென்று சுட்டார். இப்படி மாறி நடந்தது. அவர் டெஸ்ட் பண்ணுகிறார் என்றார் கடையில் வேலைபார்த்தவர். அவர் சுடும்போது காதுகளைக் கூர்மையாக வைத்து அந்த ஒலிச்சீரை ஆராய்கிறார். கடைசியில் ஒன்றை வாங்கிக்கொண்டு காசு கொடுத்துவிட்டுப் போனார். எங்கள் சாரதி சொன்னார், அந்த ஒலி இழையின் நேர்த்தியில் இருந்து அவருக்கு துப்பாக்கியின் தரம் தெரிந்துவிடும் என்று. ஓர் இலக்கை நோக்கி சுடும் சோதனையெல்லாம் தேவையில்லை.

படிக்க:
ஹேப்பி பர்த்டேவுக்கு காசு ! ஏகே47 இலவசம் !!
♦ கேள்வி பதில் : பா. ரஞ்சித் – தமிழ் அமைப்புகள் – வலது, இடது கம்யூனிஸ்ட்டுகள் !

ஒரு சிறுவன் AK47 துப்பாக்கி ஒன்றின் பாகங்களை ஒரு நிமிடத்தில் கழற்றிப் பூட்டினான். பிறகு துடைத்துவிட்டு இன்னொரு முறை பூட்டினான். கைத்துப்பாக்கிகள் அளவுக்கு மீறி துடைக்கப்பட்டு, தடவிக் கொடுக்க வேண்டும் என்ற ஆசையைக்கூட்டும் விதமாக, மினுமினுத்தன. சேர்ட்பைக்குள் வைக்கும் பேனைத் துப்பாக்கிகளும் இருந்தன. விலை ரூபா 250. பளபளவென்று மினுங்கும் ஏகே47 துப்பாக்கியின் விலை ரூபா 10,000. 1919-ம் ஆண்டு பிரிட்டிஷ்காரருடன் நடந்த போரில் ஆப்கானிஸ்தான் அரசர் அமானுல்லாகான் பாவித்தாக சொல்லப்பட்ட லீயென் ஃபீல்டு அசல் துப்பாக்கியின் விலை ரூபா 50,000 தான் என்று முதல் முறையாக வாய் திறந்து சொன்னார். கடை முதலாளி விமான எதிர்ப்பு பீரங்கியில் சுட்டுப் பார்ப்பதற்கு வெறும் 50 டொலர் கட்டணம்தான் என்றார். விமானத்தை வீழ்த்துவதற்கு எவ்வளவு பிடிக்கும் என்பதை நாங்கள் கேட்கவில்லை.

darra-Vilage of illegle guns 3நண்பருக்கு ஒர் ஆசை பிறந்தது. துப்பாக்கியால் சுடும்போது எப்படி இருக்கும். ஒரு டொலர் காசு கொடுத்தால் ஏகே47ல் ஒருமுறை சுட்டுப் பார்க்கலாம். நண்பர் ஏகே47ஐ எடுத்து ஆகாயத்தை நோக்கி ஒருமுறை குருட்டாம் போக்கில் சுட்டார். அந்த குண்டு ஒரு டொலர் காசு போகும் தூரத்துக்குப் போனது. நண்பரின் முகத்தில் ஒரு காது வரைக்கும் நீண்ட சிரிப்பு தோன்றியது. இவரைப் பற்றி உங்களுக்கு ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். இவர் எதை வாங்கினாலும் இரண்டு வாங்குவார், எதைச் செய்தாலும் இரண்டு தடவை செய்வார். இன்னொரு டொலர் கொடுத்து மறுமுறையும் சுட்டு தன் ஆசையைத் தீர்த்துக் கொண்டார்.

அவருக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. தலையைச் சாய்த்து விநோதமாக என்னைப் பார்த்தார். வாழ்க்கையில் ஏகே47ஐ நேருக்கு நேராக நான் சந்தித்ததில்லை. இப்பொழுது தொட்டும் பார்த்தாகிவிட்டது. தோளிலே வைத்துச் சுடும்போது தோளை இடித்துப் புண்ணாக்கிவிடும் என்று முன்பு கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் சும்மா இலக்கில்லாமல் ஆகாயத்தில் சுடுவதில் எனக்கு சம்மதமில்லை. ரோட்டுக்கு மற்றப் பக்கம் சிறுவன் ஒருவன் பழைய லிடோ டின்னை கொண்டுபோய் வைத்தான். ஆபத்து குறைவாகத் தெரிந்த ஒரு ஏகே47ஐ நான் தெரிவு செய்தேன். ஒரு டொலரை கொடுத்ததும் கடைக்காரர் துவக்கு கட்டையை தோளில் எங்கே வைப்பது, எந்தத் துளையில் குறி பார்ப்பது, எப்படி விசையை அழுத்துவது என்று சொல்லித்தந்தார். ஒரு டொலர் காசுக்கு இது மிகவும் அதிகமான பயிற்சியாகவே பட்டது. அவர் சொன்ன உதாரணம் டுத் பேஸ்டை அமுக்குவது போல மெதுவாக, மெதுவாக விசையை அமுக்க வேண்டும் என்பது.

அர்ச்சுனன் மச்சத்தில் இலக்கு வைத்ததுபோல குறி பார்த்து ஆடாமல் நின்றேன். என்னுடைய கையில் ஒரு மனித உயிரைக் கணத்திலே பறிக்கும் சக்தி கூடியிருந்தது. முன்பு பார்ப்பதற்கு வாட்டசாட்டமாகவும், பயங்கரமாகவும் தெரிந்த பட்டான் ஆள் இப்பொழுது சிறு குழந்தை போல காட்சியளித்தான். என் தேகபலம் பத்து மடங்கு அதிகமாகிவிட்டது.

விசையை அழுத்தினேன். தோளிலே தலையணையால் என் நாலு வயது மகள் அடித்ததுபோல் ஓர் அதிர்ச்சி, அவ்வளவுதான். சத்தம்கூட எனக்கு பெரிதாகக் கேட்கவில்லை, மேலே பறப்பது போன்ற ஓர் அற்புதமான உணர்வு. எனக்குப் பக்கத்தில் குழுமியிருந்த சிறுவர்கள் பாய்ந்த விழுந்து ரவைச் சிதறலைப் பொறுக்கினார்கள். அதற்கு பிறகு தான் டின்னைப் பார்த்தேன். அது அப்படியே சேமமாக இருந்தது.

யாரோ என்மீது பூதம் ஒன்றை ஏவிவிட்டது போல இன்னும் பல தடவை இதைச் செய்யவேண்டும் என்ற ஆசை கட்டுக்கடங்காமல் உண்டானது. கண்ணுக்கு தெரியாத பெரிய பவர் என்னிடம் சேர்ந்து அசாதாரணமான தைரியமும், உற்சாமும் தூக்கியது. நான் இரண்டாவது முறை முயற்சி செய்யவில்லை. செய்திருந்தால் அந்த மந்திரக் கட்டில் முற்றாக என்னை இழந்திருப்பேன்.

ஒரு விஷயத்தை என்னால் மறக்க முடியவில்லை. நண்பரிடம் கேட்டபோது அவர் சொன்னது வித்தியாசமாக இருந்தது. முட்டை வாங்கும்போது வெளிச்சத்திலே தூக்கிப் பிடித்து வாங்குகிறோம். சுருட்டு வாங்கும்போது காதுக்கு கிட்டே வைத்து உருட்டி, ஒலியை ஆராய்ந்து அதன் தரத்தை நிர்ணயிக்கிறோம். ஒரு சதத் குற்றியைக்கூட கடித்துப் பார்த்துதான் எடுக்கிறோம், அது போலத்தான் இதுவும். சுடும்போது துப்பாக்கியில் பிறக்கும் ஒலியை வைத்து அதன் தரத்தை சிலரால் தீர்மானிக்க முடியும் என்றார்.

Car-Tyre-punctureதிரும்பும்போது ஓர் அசம்பாவிதம் நடந்துவிட்டது. எங்கள் பயணத்தை ஆரம்பித்து சில நிமிடங்களில் ஒரு டயர் வெடித்தது. அதை மாற்றிக்கொண்டு புறப்பட்டோம். சொல்லி வைத்தாற் போல் இரண்டு நிமிடமாகவில்லை, இன்னொரு டயரும் வெடித்தது. நாங்கள் இன்னும் போக வேண்டிய தூரம் 60 மைல் இருந்தது. பழங்குடியினர் பிரதேசத்தை தாண்டவில்லை. இருட்டிக்கொண்டு வேறு வந்தது. ஒருவித சட்டங்களும் செல்லாத இடத்தில் மாட்டிவிட்டோம்.

எதிரே வந்த ஒரு வாகனத்தில் இடம்பிடித்து டிரைவர் டயரை பழுது பார்க்க எடுத்துக்கொண்டு போய்விட்டார். சில கார்கள் எங்களைத் தாண்டிப் போகும்போது சந்தோஷமாக இருந்தது, பயமும் பிடித்தது. அப்போது எங்களைக் கடந்து ஒரு குதிரை வண்டி போனது. அதற்குள்ளே இரண்டு பர்தா அணிந்த பெண்களும் ஒரு பதினைந்து குழந்தைகளும் இருந்தார்கள். அந்தப் பெண்களுடைய கண்கள் மாத்திரம் ஓட்டை வழியாக எங்களைத் துளைத்துப் பார்த்தன. அரை மணிநேரம் கழித்து தூரத்தில் ஒரு வாகனம் தெரிந்தது. அவர்களும் எங்களை திரும்பிப் பார்த்த படி போனார்கள். இந்த அத்துவானக் காட்டில் எங்களை யாராவது கூறு கூறாக வெட்டிப் புதைத்தாலும் கேட்க ஆளில்லை. டிரைவர் கடைசியில் ஒரு ஒட்டோவில் பழுதுபார்த்த டயருடன் வந்து சேர்ந்தார். எப்படியோ அவசரமாக சில்லை மாட்டிக்கொண்டு வீடு போய்ச் சோந்தோம்.

இந்தப் பயணத்தில் என்னுடைய சாதனை ஒன்று இருந்தது. துப்பாக்கியால் முதல் தடவை குறி பார்த்து சுட்டது அல்ல, பாகிஸ்தான் சட்டங்கள் செல்லுபடியாகாத பழங்குடி வீதி ஒன்றில் உயிரைக் காப்பாற்றிக் கொண்டு திரும்பியது அல்ல. இவ்விரண்டு பொருள்கள் சேகரிக்கும் நண்பர் இரண்டு துணை டயர்கள் வைக்காதது எப்படி நடந்தது. தனிமையான ரோட்டோரத்தில், இருட்டில் காத்திருந்தபோது இந்தக் கேள்வி எனக்கு தொண்டை மட்டும் வந்தது. இதைக் கேட்காமல் இரண்டு மணி நேரம் சமாளித்தது என் வாழ்வில் பெரிய சாதனை என்றே நினைக்கிறேன்.

அ. முத்துலிங்கம்

எழுத்தாளர் முத்துலிங்கத்தின் இணைய தளம்

எழுத்தாளர் அறிமுகக் குறிப்பு :
இலங்கையில் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்ததன் பின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டட்ர்ட் மனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்தி செய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்தேன். 2000ம் ஆண்டில் ஓய்வு பெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.

அறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல்கள் என எழுதியிருக்கிறேன்.

(அ.முத்துலிங்கத்தின் தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகளை அவரது அனுமதியுடன் இங்கே வெளியிடுகிறோம்.)

நூல் அறிமுகம் : உயிரினங்களின் தோற்றம்

சார்லஸ் டார்வின் (1809-1882) வாழ்ந்த காலம் ஐரோப்பாவில் அறிவியல் கிளர்ச்சியும் வணிக முதலாளிய வளர்ச்சியும் கைகோர்த்து எழுந்த காலம். தொன்று தொட்டு நம்பிப்பழக்கப்பட்டுப்போன மையங்கள் அறிவியல் ஆய்வுகளால் கலைக்கப்பட்ட காலம் அது. கலிலியோ, கோபர்நிகஸ் போல டார்வின் உயிர்களின் தோற்றத்தை ஆராய்ந்து கடவுளையும் பைபிளையும் வரலாற்றின் எச்சங்களாக்கினார். மையங்களைத் தொடர்ந்து அழித்த ஐரோப்பிய அறிவியல் மரபும் தத்துவமரபும் கார்ல் மார்க்ஸ், நீட்ஷே, சிக்மண்ட் பிராய்ட், சார்த்தர், பின் நவீனத்துவவாதிகள்… என்று தொடர்ந்து வந்தன. இனக்குழு சார்ந்த மையங்கள் அழிந்து அவற்றினிடங்களில் அணு ஆயுத வல்லரசுகள், பன்னாட்டு வர்த்தகம், காட்சி ஊடகம், விளம்பரம், கணிணி கலாச்சாரம், தீவிரவாதம், டாலர்… என்ற மற்றொரு ரகமான மனித இனத்து மையங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. சார்லஸ் டார்வின் இப்போது இருநூறு ஆண்டுகளுக்குப்பின் உயிர் வாழ்ந்து கொண்டிருந்தால் இந்த மாற்றங்களைத் தமது இயற்கை தேர்வுக் கோட்பாட்டின் மூலாக விளக்கிக் கொண்டிருப்பார். நவீனத்துவ மனிதர்களை இயற்கையின் தேர்வில் உருவாகிய புதிய மனித உயிரினமாக (human species) கண்டிருப்பார்.

எப்படியானாலும், நவீன மாந்தரின் சிந்தனையைப் பாதித்துப் பெரும் மாற்றத்தைச் செய்த அதிமனிதர்களில் டார்வின் குறிப்பிடத்தக்கவர். மனிதர்கள் கடவுள்கள் அல்லர்; ஏனெனில் கடவுள்கள் எப்போதும் இருந்ததில்லை – மனிதரின் சிந்தனைக்கு வெளியே. இயற்கையை மனிதர்கள் தங்களது தாற்காலிக வல்லாண்மைக்காக அழிக்கப் போராடிக் கொண்டிருக்கிற இன்றைக்கு, மனிதர்கள் இன்னும் இயற்கையின் பகுதிகளே என்பதை டார்வின் நினைவூட்டிக் கொண்டிருக்கிறார். உயிரினங்களின் உறுப்புக்கள் பயன்படாமையின் காரணமாக எச்சமாவதாக டார்வின் கூறுகிறார். மனிதரின் எண்ணங்களில் வாழ்க்கை நோக்கங்களில் பயன்படாமை தொடருகிறபோது மனிதரும் இந்தப் புவியும்கூட எச்சங்களாகி மறைந்து போகச் சாத்தியம் உள்ளது என்பதை எதிர்பார்க்கலாம். இயற்கைப் பொருட்களை அழகியல், தத்துவ இயல், சமய இயல் வழிபாட்டுப் பொருட்களாக டார்வின் நோக்கவில்லை. இயற்கையின் இயக்கத்தின் ஊடாகச் சிறகடிக்கும் ஓர் ஒட்டுமொத்தமான பேரழகை டார்வின் கண்டுள்ளார். ரசித்துள்ளார். இந்த ரசனை கூடினால் நாளைய உலகம் பிழைக்கும்.

நானூற்று ஐம்பதுக்கு மேற்பட்ட பக்கங்களை உடைய டார்வினுடைய ஆங்கில நூலை வரிக்குவரி தமிழில் மொழிபெயர்க்கவில்லை. அது முடியாதது மட்டுமல்ல வேண்டாததுமாகும். டார்வினுடைய மையமான விவாதப் பொருள்கள் மட்டுமே தமிழில் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன. பல இடங்களில் மொழிபெயர்ப்பின் அந்நியத்தனம் தெரியத்தான் செய்யும். பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆங்கில உரைநடை ஆங்கிலேயர் அமைத்த தண்டவாளங்களைப் போல (rails) நீண்டு போய்க்கொண்டேயிருக்கும். டார்வின் நூல் ஓர் அறிவியல் ஆய்வாக அமைந்திருப்பதால் எளிதாகத் தமிழில் தருவது பெரும் கடினமாக உள்ளது. (மொழிப்பெயர்ப்பாளர் குறிப்பிலிருந்து…)

உயினங்களின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டாளரான சார்லஸ் டார்வின் இங்கிலாந்தில், ஸ்ரூஸ்பரி (Shrewsbury)யில் பிறந்தார். எடின்பர்க் பல்கலைக்கழகம் கிறிஸ்து கல்லூரி, கேம்பிரிட்ஜ், ஸ்ரூஸ்பரி கிராமர் பள்ளிக்கூடத்தில் கல்வி பயின்றார். 1831-ம் ஆண்டில் பட்டம் பெற்று, அதே ஆண்டில் ‘ஹெச்.எம்.எஸ் பீகிள்’ (HMS Beagle) கப்பலில் ஓர் இயற்கை விஞ்ஞானியாக ஐந்தாண்டுகளாகக் கடற்பயணம் மேற்கொண்டார்.

இதன் நோக்கம் : படகோனியா (Patagonia), டியரா டெல் பூகோ (Tierra del Fuego) கடற்கரைகளை ஆராய்வது; உலகம் முழுவதும் சுற்றி ஒரு தொடர்ச்சியான க்ஷேத்திர வரலாற்று வாசிப்பை (Chronometric reading) செய்வது. இங்கிலாந்து திரும்பியதும் முன்னணி விஞ்ஞானிகளின் வரிசையில் இடம் பெற்றார். 1838-ம் ஆண்டில் இங்கிலாந்தின் புவியியல் கழகத்தின் (Geographical Society) செயலாளரானார். 1839-ம் ஆண்டில் ராயல் காலேஜ் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். 1859-ம் ஆண்டில் ஜான் மர்ரே, டார்வினுடைய ‘இயற்கையின் தேர்வின் வாயிலாக உயிரினத்தின் தோற்றம்’ (The Origin of Species by means of Natural Selection) என்ற நூலை வெளியிட்டார். வெளிவந்தவுடனே அந்நூலுக்கு எதிர்மறையான – பகைபாராட்டும் விமர்சனங்கள் எழுந்தன.

… அண்மைக்காலம் வரை பெரும்பாலான இயற்கை விஞ்ஞானிகள் பலரும் உயிரினங்கள் (species) எவ்வித மாற்றமும் பெறாத சந்ததிகள், அவை தனித்தனியான, மாறாத படைப்புக்கள் என்றே கருதிவந்தார்கள். ஒருசில விஞ்ஞானிகள் இதற்கு மாறாக உயிரினங்கள் மாறுதல்களை அடைகின்றன; தற்போது காணும் உயிரினங்கள் யாவும் இருக்கின்ற உயிர்வடிவங்களுக்கு முந்தைய தலைமுறையின் வாரிசுகள் என்று நம்பினார்கள். நவீன காலத்தில் இக்கருத்தினை அறிவியல் பாங்கில் விளக்க முயன்ற முதல் அறிவியலாளர் பூபோன் (Buffron). செவ்வியல் சிந்தனையாளர் அரிஸ்டாட்டில் தமது “Physical Auscultationes’ உரையாடலில் மழை எதற்காகப் பெய்கிறது என்பது பற்றிக் கூறும்போது ‘பற்கள்’ தேவை காரணமாகவே வளர்கின்றன. முன்னம்பற்கள் கூரானவை, பிளப்பதற்காகத் தக அமைந்தவை. கடைவாய்ப் பற்கள் தட்டையானவை; உணவை அறைக்கத் தக அமைந்தவை. இவை இந்த வேலைகளுக்காக உண்டாக்கப்பட வில்லையாதலால் இவை எதிர்பாராமல் நடந்த நிகழ்வின் விளைவாகும். இதேபோல் உடலின் மற்ற பாகங்களும் வேறு ஒன்றிற்காகத் தக அமைந்தவை போலத் தெரிகிறது. எது எப்படியானாலும் எல்லாப் பகுதிகளும் ஒட்டுமொத்தத்தில் ஏதோ ஒன்றிற்காக உண்டாக்கப்பட்ட தாகத் தோணுகிறது. இவை பேணப்பட்டு உள்ளுக்குள் இருக்கும் தன்னியல்பான ஒன்றால் பொருத்தமாகக் கட்டமைக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது, இவ்வாறு கட்டமைக்கப்படவில்லையென்றால் அவை அழிந்துவிடும்” என்று கூறியது வித்தியாசமானது… (நூலிலிருந்து பக்.5-6)

வளர்ச்சியின் கூட்டு உறவு (கூட்டு இசைவு)

சார்லஸ் டார்வின்.

ஓர் உயிரியின் வளர்ச்சியில், உருவாக்கத்தில் இலேசான மாறுபாடுகளும் அவை இயற்கையின் தேர்வால் பாதுகாக்கப்படுதலும் முக்கியமான விசயங்களாகும். இதனை யாரும் இன்னும் சரிவர அறியவில்லை. இளம்குட்டி அல்லது லார்வா (புழுப்பருவம்) பருவத்தின் நலனுக்காகச் சேமிக்கப்பட்ட மாற்றங்கள் அதன் முதிர்ந்த (adult) பருவத்தின் அமைப்பைப் பாதிக்கின்றன. இதேபோன்று, கருவளரும் பருவத்தில் ஏற்படுகிற பொருத்தமற்ற பாகங்களின் உருவாக்கமானது (malconformation) அதன் முதிர்ந்த பருவத்தின் மொத்த அமைப்பையும் கடுமையாகப் பாதிக்கிறது. உடலின் பல அங்கங்கள் சம விகிதாச்சார அளவு பொருத்தம் உடையவை. கருவளர்ச்சிக் கட்டத்தில் இவை ஒன்றாக உள்ளன. போகப்போக இவை ஒன்றுக்கொன்று உறவுடைய விதத்தில் வேறுபடக் கூடியவையாக உள்ளன. உடலின் வலது இடது பக்கங்கள் ஒரே மாதிரிதான் வேறுபடுகின்றன. கீழ்த்தாடை கை – கால்களோடு சம அளவில் பொருத்தமுடையதாக உள்ளது. இத்தகைய போக்குகள் இயற்கையின் தேர்வால் நன்கு அறியப்பட்டிருக்கும். உடலின் அங்கங்கள் ஒன்றுக்கொன்று சம்பந்தம் உடையவை. ஒன்று மற்றதைப் பாதிக்கும். பறவைகளில் காணக்கூடிய இடுப்பெலும்பின் அளவுக்குத் தக்கவாறு அவற்றின் சிறுநீரகங்களின் வடிவம் வேறுபட்டுள்ளது. குழந்தையின் தலையின் அளவை மனிதத் தாயின் இடுப்பெலும்பின் வடிவம் தீர்மானிக்கிறது. உறுப்புக்களுக்கு இடையிலுள்ள இந்தக் கூட்டு இசைவான உறவும் பந்தமும் புதிராக உள்ளது.

பொருத்தமில்லாத சில பாகங்களுக்கு இடையிலுள்ள உறவைப் புரிந்துகொள்ள முடியவில்லை. பூனையின் நீல விழிகளுக்கும் செவிட்டுத்தன்மைக்கும் உறவு உள்ளது. ஆமையின் பெண் பாலுக்கும் அதன் ஓட்டின் வண்ணத்துக்கும் சம்பந்தம் உள்ளது. புறாவின் கால் விரல்களுக்கு இடையிலுள்ள சவ்வுக்கும், இறகுகளுடைய பாதங்களுக்கும் உறவுண்டு. துருக்கிய நாயின் மயிருக்கும் பற்களுக்கும் இசைவு உண்டு. இவ்வாறு உடல் அங்கங்களுக்கு இடையே உறவு இருந்தாலும், இவ்வுறுப்புக்கள் எந்த வகையில் ஒன்றுக்கு ஒன்று பொருத்தமுடையன என்பது தெரியவில்லை. இந்த உறவும் இசைவும் விபத்தாக நேர்ந்தவையாகும்.

படிக்க:
கேள்வி பதில் : மோடியின் காமராஜர் ஆட்சி , தனியார்-தாராள-உலகமயம் – சிலை வழிபாடு !
” போலி அறிவியலில் பாதிப்பில்லாதது எதுவுமில்லை ” | ஐஐடி இயக்குனருக்கு ஒரு கடிதம் !

எந்த ஓர் உயிரினத்திலும் ஒரு பகுதி அசாதாரணமான அளவுக்கு வளர்ச்சி பெற்றால் அது பெரிய அளவில் மாறுதலுக்கு உள்ளாகும் போக்கில் உள்ளது என்பதை அறியலாம். தனித்த (individual) உயிரினங்கள் (உறுப்பு, அதன் தோற்றம் ஆகியவற்றால் வேறுபட்டு) செயல்பாட்டில் (function) மட்டும் ஒப்புமை கொண்ட உறுப்புக்களின் (analo gous) மாறுதல்களைப் புலப்படுத்தும். ஓர் உயிரினத்தின் ஒரு ரகம் உறவுடைய மற்றொரு உயிரினத்தின் சில பண்புகளை அடிக்கடி ஏற்றுக்கொள்ளும் அல்லது ஒரு மூதாதையின் சில பண்புகளை நோக்கிப் பின் செல்லும். இதனை வீட்டு வளர்ப்பு இனங்களில் காணலாம். மிகவும் குறிப்பிடத்தக்க புறா வகை, துணை – வகைகளின் பண்புகளை ஏற்கிறது. தலையிலும், பாதங்களிலும் இருக்கவேண்டிய இறகுகள் மாறி இடம் பெற்றுள்ளன. நூற்றுக்கணக்கான தலைமுறைகளுக்குப் பின், முன்னர் இருந்த பண்புகள் ஓர் உயிரினத்தில் மீண்டும் தோன்றுவது வியப்பாக உள்ளது. (நூலிலிருந்து பக்.58-59)

மேலும் படிக்க : டார்வின், உயிரினங்களின் தோற்றம், இயற்கைத் தேர்வு – ஒரு அறிமுகம்

நூல் : உயிரினங்களின் தோற்றம்
ஆசிரியர் : சார்லஸ் டார்வின்
தமிழ்ச் சுருக்கம் : ராஜ்கௌதமன்

வெளியீடு : விடியல் பதிப்பகம்,
88, இந்திரா கார்டன் 4-வது வீதி, உப்பிலிபாளையம் – அஞ்சல்,
கோவை – 641 015.
தொலைபேசி எண் : 0422 – 2576772
மின்னஞ்சல் : vidiyalpathippagam@gmail.com

பக்கங்கள்: 136
விலை: ரூ 65.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : panuval

குழந்தைகளே ! புதிய வெற்றிகள் உங்களை வந்தடையட்டும் !

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 4 | பாகம் – 03

பள்ளி முழுவதும் பாராட்டுகிறது.

“இதிலுள்ள எல்லாவற்றையும் நான் மீண்டும் படிப்பேன்” என்று எலேனா தன் அருகில் உள்ளவனிடம் கூறுகிறாள்.

அச்சமயம் கதவைத் தட்டும் சத்தம் கேட்கிறது. நான் இதற்காகத்தான் காத்திருந்தேன். தாத்தோ கதவைத் திறக்க, பள்ளி இயக்குநர் உள்ளே வருகிறார். குழந்தைகள் எழுந்து நின்று வரவேற்கின்றனர்:

“வணக்கம்!” பரிபூரண நிசப்தம். பள்ளி இயக்குநர் அன்பான புன்னகையுடன் ஒவ்வொரு குழந்தையையும் பார்க்கின்றார்.

“மன்னியுங்கள், நான் ஒருவேளை உங்களுக்கு இடையூறு விளைவித்திருக்கக் கூடும். நீங்கள் இன்று அரிச்சுவடியை முடித்துள்ளதை அறிந்தேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சி, எனவே, உங்களுக்குப் பாராட்டுதல்களைத் தெரிவிக்க வந்துள்ளேன்…”

அவர் மீண்டும் தன் பார்வையை ஒவ்வொருவர் மீதும் செலுத்துகிறார். குழந்தைகள் கவனமாகப் பார்க்கின்றனர்.

நீ பலவீனமானவன், மூளை வளர்ச்சி குன்றியவன் என்று சொல்லப் போவதில்லை, இச்சொற்கள் எனக்குப் பிடிக்காதவை. உன் விஷயத்தில் சரியானபடி செயல்படாத என் முறையை பலவீனமானது என்று கூறுவது தான் தகும். நான் இதை மாற்றுவேன், உனக்கு உதவும் மற்ற முறைகளைத் தேடுவேன்.

“உட்காருங்கள்!” என்கிறார் அவர்.

“படிக்க கற்றுக் கொண்டு விட்டீர்களா?”

ஒரே குரலில்: “ஆமாம்!”

“சபாஷ்! உங்களுக்குப் பாராட்டுகள்!…”

அவர் மெதுவாக வரிசைகளின் ஊடாக நடந்து வந்து ஒரு குழந்தைக்குத் தன் கரத்தை நீட்டுகிறார். அவன் இடத்தை விட்டு எழுந்து நிற்கிறான். அவர் அச்சிறுவனின் கண்களையே பார்க்கிறார்.

“உன் பெயரென்ன?.. வாழ்த்துகள், பாராட்டுகள்!”

அவர் உண்மையாக, நன்றாக, கருத்தாழத்தோடு அவன் கையைப் பற்றிக் குலுக்குகிறார்.

இவ்வாறு பள்ளி இயக்குநர் ஒவ்வொருவரையும் தனித் தனியே அணுகுகிறார். குழந்தைகள் அவரையே பார்த்துக் கொண்டிருக்கின்றனர்….

“நீங்கள் எல்லா எழுத்துகளையும் கற்று முடித்ததற்குப் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் தங்கள் பாராட்டுகளைத் தெரிவிக்கும்படி என்னைக் கேட்டுக் கொண்டனர்.”

ஒரே குரலில்: “நன்றி!”

“புதிய வெற்றிகள் உங்களை வந்தடையட்டும்!”

ஒரே குரலில்: “நன்றி!”

“போய் வருகிறேன்!” குழந்தைகள் எழுந்து நிற்கின்றனர்.

ஒரே குரலில்: “போய் வாருங்கள்!”

படிக்க:
நல்லா தூங்கனும் ! அதுதான் ரொம்ப நாள் ஆசை | OLA ஓட்டுனர்
மூடப்படும் அரசுப் பள்ளிகள் – யார் காரணம் ?

பள்ளி இயக்குநர் வகுப்பறையை விட்டு வெளியேறுகிறார். கதவு திறந்தபடியே இருக்கின்றது. இடைவேளைக்கான மணி அடித்தாகி விட்டது, பள்ளி வானொலியில் ஏதோ சொல்வது இப்போது வகுப்பறையில் கேட்கிறது. நான் கவனமாகக் கேட்கிறேன், குழந்தைகளும் தம் காதுகளைத் தீட்டிக் கொள்கின்றனர்:

“அன்புள்ள தயாரிப்பு வகுப்பு மாணவ மணிகளே! நீங்கள் எல்லா எழுத்துகளையும் படித்து முடித்ததை இன்று அறிந்தோம். பாராட்டுகள்! நீங்கள் முழு பள்ளி மாணவர்கள், உங்களுக்கு எழுதப் படிக்கத் தெரியும். உங்களோடு சேர்ந்து பள்ளியில் உள்ள அனைவரும் எல்லா ஆசிரியர்களும் கம்சமோல் உறுப்பினர்களும் பயனீர்களும் மகிழ்ச்சியடைகின்றனர். இன்றைய கதாநாயகர்களின் பெயர்களைப் பள்ளி முழுவதும் அறியட்டும். இதோ அவர்களுடைய பெயர்கள்…”

ஒவ்வொருவர் பெயரையும் படிக்கும் போது நான் அம்முகத்தைப் பார்க்கிறேன். ”உங்களுள் என்ன நடக்கிறது?” என்று நான் மனதில் பேசிக் கொள்கிறேன். “நீங்கள் ஒவ்வொருவரும் கண் முன் வளருவது தெரிகிறது! இது எதனால்? கல்வியில் நீங்கள் முதல் படியைத் தாண்டிவிட்டதாலா? இல்லை, அனேகமாக பள்ளி இயக்குநரின் வாழ்த்தும், உங்களுடைய பெயர்களை வானொலியில் வாசித்ததும் உங்களுடைய தன்னம்பிக்கையைப் பலப்படுத்தியிருக்கும், பெரியவர்களாக வேண்டும், சமுதாய ரீதியாகப் பயனுள்ளவர்களாக வேண்டும் என்ற நாட்டத்தை உறுதிப்படுத்தியிருக்கும்.

சிறுவனே, நீ ஏன் சோகமாய் இருக்கிறாய்! உனது கண்கள் ஏன் சுருங்கி விட்டன? உன் பெயரை வானொலியில் சொல்ல மாட்டார்களே என்று யோசிக்கின்றாயா? பயப்படாதே, நீயும் எழுதப் படிக்கக் கற்றுக் கொள்வாயென நிச்சயமாக நம்புகிறேன். எல்லோரையும் போல் உன்னால் செய்ய முடியாமல் போனதற்கு காரணம் நீயல்லவே. நீ பலவீனமானவன், மூளை வளர்ச்சி குன்றியவன் என்று சொல்லப் போவதில்லை, இச்சொற்கள் எனக்குப் பிடிக்காதவை. உன் விஷயத்தில் சரியானபடி செயல்படாத என் முறையை பலவீனமானது என்று கூறுவதுதான் தகும். நான் இதை மாற்றுவேன், உனக்கு உதவும் மற்ற முறைகளைத் தேடுவேன். எங்கே சிறுவனே, சிரி பார்க்கலாம், இதோ உன் பெயரையும் வானொலியில் சொல்லி விட்டார்கள். இன்றில்லாவிடிலும் நாளை உன்னுள்ளும் அதிசயம் நிகழும்!…”

“இரண்டாவது பாடவேளையில் எழுத்துகளை எழுதுவோம்!… இப்போது ஓய்வெடுங்கள்! சிறுவர்களே, நீங்கள் ஆண் பிள்ளைகள் என்பது நினைவில் இருக்கட்டும்!”

மாயா நாற்காலியில் அசையாமல் உட்கார்ந்திருக்கிறாள். அவளுக்கு உடல் நிலை சரியில்லையா என்ன?

“மாயா, உனக்கு என்னவாயிற்று?”

அவள் மெளனமாக, கல்லைப் போல் உட்கார்ந்திருக்கிறாள், கண்களைக் கூட இமைக்கவில்லை.

“மாயா, பதில் சொல்!”

அவள் உதடுகளை மிகச் சிறிதளவே திறந்து முணுமுணுத்தாள்:

“தாக்குப்பிடிக்கும் திறனைப் பயிற்சி செய்து பார்க்கிறேன்.”

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

கேள்வி பதில் : பா. ரஞ்சித் – தமிழ் அமைப்புகள் – வலது, இடது கம்யூனிஸ்ட்டுகள் !

கேள்வி : //இயக்குநர் பா. ரஞ்சித் பொதுவெளியில் எப்போது பேசினாலும் சீற்றம் கொள்கிறாரே…. அது சரியா?//

– சி. நெப்போலியன்

ன்புள்ள நெப்போலியன்,

இயக்குநர் ரஞ்சித் எப்போதும் சீற்றம் கொள்வதில்லை, தலித் மக்கள் தொடர்பான பிரச்சினைகள் என பொதுவெளியில் பிரபலமாகும் சிலவற்றில் மட்டும் சீற்றம் கொள்கிறார். அது சரியா என பார்ப்பதும் அவர் ஏன் அப்படி சீற்றம் கொள்கிறார் என்று பார்ப்பதும் வேறு வேறு இல்லை. சரி, ஏன் சீற்றம் கொள்கிறார்?

PA-RANJITHசில திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். அவற்றில் இரண்டு ரஜினி படங்கள். அவர் பிரபலமாவதற்கு இது போதும். கூடவே ரஜினி பட இயக்குநர் என்ற அளவில் ஊதியமும் பெறுகிறார். இப்போது அவரிடம் கொஞ்சம் நிதியாதாரம் சேர்கிறது. இரண்டும் சேர்ந்து அவருக்கென ஒரு தனிநபர்வாதப் பார்வையை உருவாக்குகிறது. பிறகு மேடைகளில் பேசுகிறார். வாய்ப்பு வரும்போது தலித் மக்கள் தொடர்பான பிரச்சினைகளில் யாரும் எதுவும் செய்யவில்லை எனத் துவங்கி தலித் அடையாள அரசியலை முன்வைக்கிறார். சில சமயம் அவருக்கு வரும் எதிர்வினைகள் கடுமையாக இருக்கிறது. அதனால் அடுத்தமுறை பேசும்போது இன்னும் கொஞ்சம் முதிர்ச்சியாக பேசுகிறார்.

தலித் மக்கள் தொடர்பான பிரச்சினை பல்வேறு அரசியல் சமூக பொருளாதார விசயங்களோடு தொடர்புடையது. அவற்றோடு களத்தில் இருக்கும் சமூக அரசியல் இயக்கங்களின் பார்வை நடைமுறையோடு தொடர்புடையது. இவற்றை கற்பது, கற்று ஆய்வது என்பது ஒரு தனிநபராக செய்வது வெகு சிரமம். ரஞ்சித் அப்படிப் பேசுவதற்கு காரணம் பிரச்சினையை அவர் தனிநபர் கண்ணோட்டத்தோடு பார்ப்பதுதான். அதுதான் உடனடியான கோபங்களையும், உடனடியான தீர்வுகளையும், மற்றவர்கள் அதாவது இயக்கங்கள் அனைத்தும் சரியில்லை என்ற எண்ணத்தையும் தோற்றுவிக்கிறது. அவரது பிரபலம், இந்தத் தன்மைக்கு இன்னும் வலு சேர்க்கிறது.

சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வென காஸ்ட்லெஸ் கலெக்டிவ் கலை விழாக்கள், கூகை முயற்சிகள் என்று தனது வருமானத்தை போட்டு செய்கிறார். பயிற்சி பட்டறைகள் நடத்துகிறார். இதன் மூலம் ஒரு மாற்றை உருவாக்க முடியும் என்று கூட அவர் யோசிக்கலாம். அவரது முயற்சிகளில் பங்கேற்கும் பொதுவானவர்களில் பெரும்பாலானோர் அவரது திரைப்பட பிம்பத்தை மையமாக வைத்து திரையுலகில் தனக்கொரு இடம் கிடைக்காதா என்று வருகின்றனர். இது ரஞ்சித்துக்கும் தெரியாமல் இருக்காது.

இருப்பினும் யாராக இருப்பினும் தனிநபராக சமூகப் பிரச்சினைக்கு தீர்வு காண முயலும்போது முதல் சுற்றில் பெரும் நம்பிக்கையும், உத்வேகமும் இருக்கும். அடுத்த சுற்றுகளில் அந்த நம்பிக்கை சமூக யதார்த்தத்தால் கொஞ்சமோ நிறையவோ விரக்தியடையும். பிறகு ஊரோடு ஒத்து வாழ் என்று ‘முதிர்ச்சி’ அடையும். இந்த சரணடைவு ஏதோ திரைப்பட பிரபலம் மற்றும் தலித் அரசியல் பேசுவோருக்கு மட்டும் நடப்பதல்ல. மார்க்சியத்தை தனிநபராக ‘தூக்கிச் சுமக்கும்’ தனிநபர்களும் கூட இப்படித்தான் வீழ்கிறார்கள். மற்றவர்களை விட மார்க்சிய தனிநபர்வாதிகளிடம் பேச்சும் எழுத்தும் கொஞ்சம் அதிகமிருக்கலாம். என்ன இருந்தாலும் ஏதோ கொஞ்சம் ‘தத்துவம்’ படித்தவர்கள் அல்லவா?

நன்றி

♦ ♦ ♦

கேள்வி : //நான் குவைத்தில் ஒரு தமிழ் அமைப்பில் இருக்கிறேன். அமைப்பாய் செயல்படும்போது அமைப்பின் ஒற்றுமை முக்கியமா…. ஒற்றுமையை ஒதுக்கிவிட்டு எடுத்துக் கொண்ட செயலின் வெற்றி முக்கியமா….?//

– எம். சிவசங்கரன்.

ன்புள்ள சிவசங்கரன்,

எடுத்துக் கொண்ட செயலும் அமைப்பின் ஒற்றுமையும் ஏன் முரண்படுகிறது? நீங்கள் இருக்கும் தமிழ் அமைப்பு போன்ற மனமகிழ் மன்றங்களில் திட்டவட்டமான விதிகள், ஜனநாயகம், நிதி விசயங்களில் வெளிப்படைத் தன்மை, மன்றங்களின் செயல்பாடு குறித்த தெளிவான பார்வை, இலக்கு ஆகியவை இருக்கும் வரை பெரிய பிரச்சினை இல்லை.

Tamil Mandramமாறாக இவையன்றி சில நண்பர்களது குழாம் அத்தகைய மன்றங்களை நடத்தும் பட்சத்தில் சிறிது காலத்திற்கு பிறகு நண்பர்களது கருத்து வேறுபாட்டாலோ புதியவர்கள் சேராமல் விரிவடையாமலோ மன்றம் நின்று போகும். மேலும் இம்மன்றங்களில் முடிவுகளை அல்லது செயல்பாட்டை மன்றங்களின் புரவலர்களாக இருக்கும் வசதிவாய்ந்த தனிநபர்களை மையமாக வைத்து எடுக்கும் போது சிக்கல் வரலாம். அப்படி  எடுக்காமல் மன்றத்தின் உறுப்பினர்களே கூடிப் பேசி எடுக்கும்போது கருத்து வேறுபாடுகள் வருவது குறையும். அத்தகைய கூட்டுத்துவ முறை ஏற்படும்போது பல்வேறு வழிகளில் சிக்கல்கள் நீங்கும். நீங்கள் குறிப்பிடும் குறிப்பான பிரச்சினை எதுவென்று தெரியவில்லை.

எடுத்துக்கொண்ட செயலும் மன்றமும் ஒத்திசைவாக இருப்பதற்கு மேற்கண்ட வழிமுறைகள் போதுமானது என்று தோன்றுகிறது.

நன்றி.

♦ ♦ ♦

கேள்வி : //வலது, இடது கம்யூனிசம் வேறுபாடு என்ன?//

– சாம்

ன்புள்ள சாம்,

இந்தியப் பொதுவுடமைக் கட்சி 1925-ல் துவங்கப்பட்டது. அதிலிருந்து 1964-ல் பிரிந்தது இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்). முன்னது வலது கம்யூனிஸ்ட் என்றும் பின்னது இடது கம்யூனிஸ்ட் கட்சி என்றும் பொதுவில் அழைக்கப்படுகிறது. ஏனிந்த பிளவு?

இந்தியாவிற்கு போலி சுதந்திரம் கிடைத்த 47-க்குப் பின்னர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 50-களின் துவக்கத்தில் ரசியாவில் திரிபுவாதத்தை அரங்கேற்றிய குருசேவின் பாதையை ஏற்றுக் கொண்டது. நேருவின் ரசிய ஆதரவை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக் கொண்டு காங்கிரசை ஆதரிக்க ஆரம்பித்தது. குருசேவின் திருத்தல்வாதத்தின் படி இனி, “புரட்சியின் மூலம் சோசலிசம் வரத் தேவையில்லை, அமைதி வழியில் பாராளுமன்றத்தின் மூலம் கூட சோசலிசம் வரலாம், வல்லரசு நாடுகளுக்கிடையே சமாதான சகவாழ்வு, சோவியத் நாட்டில் உள்ள அரசாங்கம் அனைத்து மக்களுக்குமான அரசாங்கம்” போன்றவை மார்க்சியத்தை காவு கொடுத்தது. இதை மாவோவின் தலைமையிலான சீனக் கம்யூனிசக் கட்சி 1960-ம் ஆண்டுகளில் விமரிசிக்க ஆரம்பித்தது.

இந்த வரலாற்றுச் சூழலில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி திருத்தல்வாதத்தை பின்பற்றுகிறது என்று சொல்லி மார்க்சிஸ்ட் கட்சி பிளவு பட்டது.

CPM-CPIவலது கம்யூனிசக் கட்சி நேருவை மட்டுமல்ல இந்திராவையும் அவசரநிலை நெருக்கடியையும் ஆதரிக்கும் அளவு சீரழிந்து போனது. வலதுகளிடம் இருந்து சித்தாந்த ரீதியாக பிளவுற்றதாக கூறினாலும் நெருக்கடி நிலைக்கு பிறகு இடது கம்யூனிசக் கட்சியும் சிலமுறை காங்கிரசை ஆதரிக்கும் முடிவை எடுத்தது. கூடவே குருசேவின் திருத்தல் வாதத்தையும், சீனாவில் மாவோவின் தலைமைக்கு பின்னர் தலைமை ஏற்ற டெங்சியோபிங்கின் நவீன திருத்தல்வாதத்தையும் ஏற்றுக் கொண்டது. இவர்களும் பாராளுமன்ற பாதையிலேயே சோசலிசம் கொண்டு வரலாம் என்று ஆரம்பித்து இன்று கேரளாவைத் தவிர எங்கும் ஆட்சியில் இல்லை என்ற நிலையை அடைந்து விட்டார்கள்.

ஆரம்பத்தில் இந்தியக் கம்யூனிசக் கட்சியின் பிற்போக்கான பிரிவினர் வலது கம்யூனிஸ்ட்டுகளாகவும், முற்போக்கு பிரிவினர் பிரிந்து இடது கம்யூனிஸ்ட்டுகளாகவும் வந்தனர் என்ற வழக்கின்படி இந்த இடது, வலது கம்யூனிஸ்ட்டுகள் என்ற பேச்சு வழக்கு அமலில் இருந்தது.

1967-ல் துவங்கிய நக்சல்பாரி விவசாயிகளின் பேரெழுச்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நவீன திரிபுவாதத்தை வேரறுத்து மார்க்சிய லெனினியக் கட்சியை 69-ம் ஆண்டில் தோற்றுவித்தது. அது குறித்த வரலாற்றை கீழ்கண்ட இணைப்பில் படிக்கலாம்.

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

சூரிய ஒளி மின்சாரம் : மக்கள் வாழ்வாதாரத்தையும் சூழலியலையும் அழிக்கும் அரசு !

0

“இந்த நிலம் பயன்பாட்டில் இல்லை என்றும், அரசுக்கு சொந்தமென்றும் யார் சொல்வது? இது எங்கள் கால்நடைகளின் மேய்ச்சல் நிலம். எங்கள் வாழ்வாதாரமே இந்த நிலத்தை நம்பித்தான் இருக்கிறது. இந்த நிலம் யாருக்கும் உடைமையானதல்ல; அதே நேரம் எல்லோருக்கும் சொந்தமானது” என்கிறார் ராக்கு பென்.

வடமேற்கு குஜராத்தில் இந்திய பாகிஸ்தான் எல்லைக் கோட்டில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சரன்கா கிராமத்தைச் சேர்ந்த ராக்கு பென், ஒரு மால்தாரி. ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்க்கும் நாடோடி இடையர் இனத்தைச் சேர்ந்தவர்கள் தான் மால்தாரிகள். இவர்களில் சிலர் இன்னமும் நாடோடி வாழ்கை முறையில் இருந்தாலும், பெரும்பாலானவர்கள் நிரந்தரக் குடியிறுப்புகளை ஏற்படுத்தி அக்கம் பக்கத்தில் உள்ள மேய்ச்சல் நிலத்தை நம்பி வாழ்கின்றனர்.

Neeru-Bai
நீரு பாய் மால்தாரி இன பெண்மணி. (படம் : நன்றி – ஸ்க்ரால்)

சரான்காவில் எல்லையின்றிப் பரந்து கிடக்கும் தரிசு நிலத்தில் அங்குமிங்குமாக புதர்கள் வளர்ந்து நிற்கின்றது. அந்த பெரும் நிலப்பரப்பைக் இரண்டாய்க் கிழித்துச் செல்லும் நெடுஞ்சாலையின் ஒரு புறம் கொஞ்சம் பசுமையாக இருக்கிறது; இன்னொரு புறமோ புதர் மண்டிய தரிசு நிலம். பசுமையாக இருக்கும் பகுதிகள் வனத்துறைக்குச் சொந்தமாந்து. தரிசு நிலத்தை காலம் காலமாக மால்தாரிகள் தங்கள் மேய்ச்சல் நிலமாக பயன்படுத்தி வந்தனர். தற்போது சரான்காவில் அரசால் தரிசு நிலம் எனக் குறிக்கப்பட்ட இடத்தில் சுமார் 5,417 ஏக்கரில் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் தமது பாரம்பரிய மேய்ச்சல் நிலத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் மால்தாரிகள்.

படிக்க:
கோவா : தொடரும் பசுக்குண்டர்களின் அட்டூழியம் !
♦ வேதங்களிலேயே சொல்லப்பட்ட புவியீர்ப்பு விசை ! நியூட்டனெல்லாம் லேட்டு !

மின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ள பகுதியில் சுமார் 2,000 ஏக்கரை சாகுபடி பரப்பு எனவும், எஞ்சியவை அரசுக்குச் சொந்தமான தரிசு நிலம் எனவும் குறிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2010-ல் துவங்கப்பட்ட சூரிய மின் உற்பத்தி நிலையம் 2012 ஏப்ரலில் இருந்து தனது உற்பத்தியைத் துவங்கியது. குஜராத் மாநில மின் சக்திக் கொள்கை (2015) மற்றும் குஜராத் காற்று-சூர்யசக்தி இணை மின் சக்திக் கொள்கை (2018) ஆகியவற்றில் “வாழ்வாதாரம்” மற்றும் “நட்ட ஈடு” போன்ற வார்த்தைகள் இல்லை.

வனத்துறை தனக்குச் சொந்தமான நிலத்தை மேய்ச்சலுக்கு வழங்க மறுக்கும் நிலையில் ஏற்கனவே இருந்த மேய்ச்சல் நிலமும் பறிபோயுள்ளதால் முன்பு தற்சார்புடனும் பொருளாதார சுதந்திரத்துடனும் வாழ்ந்து வந்த மால்தாரிகள் இப்போது துப்புறவுத் தொழிலாளிகளாகவும், தினக்கூலிகளாகவும் மாறியுள்ளனர். பலர் கால்நடை வளர்ப்பை கைவிட்டு விட்டனர்.

***

புவி வெப்பமடைதலைக் கட்டுக்குள் கொண்டு வர புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு (renewable energy) இந்தியா படிப்படியாக மாறிச் செல்வது என 2015 பாரிஸ் ஒப்பந்தத்தில் முடிவானது. இதற்கு 2030-ம் ஆண்டுக்குள் மொத்த மின் உற்பத்தில் 40 சதவீத அளவுக்கு புதுப்பிக்கத்தக்க மூலங்களில் இருந்து மின்னுற்பத்தியை எட்டுவது அவசியம். இதனடிப்படையில் சூரியமின்சக்தியின் உற்பத்தி இந்தியாவில் கடந்த ஆண்டுகளில் பலமடங்கு அதிகரித்துள்ளது. 2014-15 ஆண்டு வாக்கில் 3,744 மெகாவாட்டாக இருந்த சூரிய மின்னுற்பத்தி, மார்ச் 2019-ல் 28,181 மெகாவாட்டாக அதிகரித்துள்ளதாக இந்திய மின் கட்டுப்பாட்டு மையத்தின் ஆண்டறிக்கை குறிப்பிடுகிறது.

Solar-Park-In-Gujarat
படம் : நன்றி – ஸ்க்ரால்

பாரிஸ் ஒப்பந்தத்தில் இந்தியா ஒப்புக் கொண்ட இலக்கை பத்தாண்டுகளுக்கு முன்பாக (2020 -லேயே) அடைந்து விடும் என்கிறது அமெரிக்காவைச் சேர்ந்த சிந்தனைக் குழாம் ஒன்று. இந்தியாவில் சூரிய மின்சக்தி பரவலாகாத 2011 காலகட்டத்தில் ஒரு கிலோவாட்டின் விலை 12.76 வரை இருந்தது தற்போது 2.44 ரூபாயாக சரிந்துள்ளது. எனினும், இந்த விலைக் கணக்கீட்டில் மின்னுற்பத்திக்கான உண்மையான செலவினங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என சூழலியல் செயல்பாட்டாளர்கள் கருதுகின்றனர். உதாரணமாக, மின்கலன்கள் அமைக்கத் தேவைப்படும் ஏராளமான நிலத்தின் உண்மையான மதிப்பானது மின்னுற்பத்தியின் உற்பத்திச் செலவுகளில் குறைத்துக் காட்டப்படுகிறது என்கின்றனர்.

படிக்க:
கேள்வி பதில் : ISO தரச்சான்றிதழ் என்றால் என்ன ?
♦ சூரிய மின்சக்தியிலும் சுயசார்பை அழிக்கும் அமெரிக்கா !

மத்திய அரசின் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான அமைச்சகம் (Ministry of New and Renewable Energy) வெளியிட்டுள்ள ஒரு வரைவு அறிக்கையின் படி, ஒரு மெகாவாட் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்ய 4 – 5 ஏக்கர் நிலம் தேவை. அதே போல் காற்றாலை மூலம் ஒரு மெகாவாட் மின்சக்தியை உற்பத்தி செய்ய ஒரு ஹெக்டேர் (2.47 ஏக்கர்) தேவை. இந்நிலையில் ஒரு ஏக்கர் விவசாய நிலத்தின் விலையை ஒரு மெகாவாட் மின்சாரத்தின் விலையால் வகுப்பதன் மூலம் இறுதி விலை நிர்ணயிக்கப்படுகிறது. இந்த முறையில் விவசாய நிலத்தின் விலையைக் குறைத்துக் காட்டுவதன் மூலம் (அல்லது விவசாயிகளை ஏமாற்றியோ அடித்து பறிப்பதன் மூலமோ) சூரிய மின்சக்தியின் உற்பத்தி விலையை குறைவாக கணக்கீடு செய்கின்றனர்.

இதற்கு அரசின் நிலக் கொள்முதல் கொள்கையும் ஓரளவு துணை போகிறது. எது விவசாய நிலம், எது தரிசு நிலம் என்பதை அரசு முன்வைக்கும் ஆவணங்களின் மூலமே இறுதி செய்யப்படுகிறது. சரான்கா விசயத்தை எடுத்துக் கொண்டால், அது அரசின் ஆவணங்களின் படி பயன்பாட்டில் இல்லாத தரிசு நிலம் – ஆனால், அதை பல கிராமங்களைச் சேர்ந்த இடையர்கள் தங்களது மேய்ச்சல் நிலமாக பயன்படுத்தி வந்துள்ளனர். அடுத்து, விவசாய நிலங்களை கையகப்படுத்தும் போது அதற்கான குறைந்தபட்ச நட்ட ஈடு வழங்கப்படுகிறதே தவிர அந்த நிலம் கைவிட்டுப் போவதால் ஏற்படும் வாழ்வாதார இழப்பு குறித்து அக்கறை கொள்வதில்லை.

சூரிய மின்சக்தி உற்பத்தியில் இவ்வாறான நடைமுறைச் சிக்கல்கள் ஒருபுறம் இருக்க, இன்னொருபுறம் சூழலியல் நோக்கிலும் சில அம்சங்களைக் கருத்தில் கொள்ளவில்லை. முதலில் மிகப் பரந்த நிலப்பரப்பில் நீண்ட காலத்திற்கு சூரிய மின்கலன்களை நிறுவுவதால் நிலத்தின் மீது நேரடியாக சூரிய வெளிச்சம் பாய்வது தடுக்கப்படுகின்றது. இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் என்ன, அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பதைக் குறித்த ஆய்வுகள் இன்னும் முழுமை பெறவில்லை. அடுத்து, பயன்பாட்டுக் காலம் முடிந்த மின்கலன்களை எப்படி சூழலியல் பாதிப்பின்றி அழிப்பது அல்லது மறுசுழற்சி செய்வது என்பதைக் குறித்தும் இந்திய அரசு அக்கறை கொள்ளவில்லை.

***

ற்கெனவே அதிகரித்துவரும் மின்தேவை ஒருபுறம் இருக்க, தற்போது பெட்ரோலிய பொருட்களால் இயங்கும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் விரைவில் மின்சாரத்தில் இயங்கும் நிலை உருவாகி வருகின்றது. பெரும் கார்ப்பரேட்டுகள் மின்சக்தி வாகன உற்பத்தியில் மும்முரம் காட்டி வருகின்றன. இதன் விளைவாக எதிர்காலத்தில் மின்சக்தியின் தேவை பன்மடங்கு அதிகரிக்கவுள்ளது. ஆனால், இன்றளவும் நாட்டின் மின் தேவையை அனல் மின்சாரமே பூர்த்தி செய்து வருகின்றது. அனல் மின்நிலையத்தால் உண்டாகும் சூழலியல் சீர்கேடுகள் ஒருபுறம் என்றால், மாற்று மின்சக்தி என முன் வைக்கப்படும் அணுமின் சக்தியின் அபாயங்கள் இன்னொரு புறம்.

solar-Powerஇந்நிலையில் புதுப்பிக்கத்தக்க மின்னுற்பத்தியாக அறியப்பட்டுள்ள புனல், காற்று மற்றும் சூரியசக்தி ஆகியவை சூழலுக்கு பாதிப்பேற்படுத்தாத மாற்று ஏற்பாடுகளாக இருக்கும். இதில் அரசு கவனம் செலுத்துவதும் ஏற்புடையது தான். ஆனால், இதற்காக நிறுவப்படும் பெரும் திட்டங்கள் மக்களின் வாழ்வாதாரத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மக்களைத் தங்களது வாழிடங்களில் இருந்து அந்நியப்படுத்தி அவர்களை விரட்டியடித்துவிட்டு நிறுவப்படும் இதுபோன்ற திட்டங்கள் அடிப்படையில் யாருக்கானது என்கிற கேள்வியை எழுப்பும்.

ஒரு மனசாட்சியுள்ள அரசாக இருக்கும்பட்சத்தில் அதன் செயல்பாடு மக்களை முதன்மைப்படுத்தியதாகவும், இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துவதற்கு முன் போதுமான மாற்று ஏற்பாடுகளை செய்வதாகவும் இருக்கும். ஆனால், நடந்து கொண்டிருப்பது மோடி சர்கார் என்பதும் அது அதானி, அம்பானிகளுக்கானது என்பதும் ஒரு எதார்த்த உண்மையாக இருக்கும்போது மக்களின் நிலையைப்பற்றி அது எந்தளவுக்குக் கவலைப்படும் என்பதை விளக்கத் தேவையில்லை.


கட்டுரையாளர் : Karthikeyan Hemalatha
தமிழாக்கம் :
சாக்கியன்
நன்றி : ஸ்க்ரால்