Wednesday, June 25, 2025
முகப்பு பதிவு பக்கம் 219

பிரான்ஸ் : பாதுகாப்பு மசோதாவுக்கு எதிரான போராட்டம் || படக் கட்டுரை

போலீசு காட்டுமிராண்டித்தனத்தை புகைப்படம் எடுப்பதையும் அதை சமூக வலைத்தளங்கள், ஊடகங்களில் பதிவிடுவதையும் தடை செய்யும் வகையில்   பிரான்ஸ் அரசு அறிமுகப்படுத்தியுள்ள பாதுகாப்புச் சட்டத்தை எதிர்த்துப் புதிய போராட்டங்கள் பிரான்சில் தொடங்கியுள்ளன. பிரான்ஸ் முழுவதும் பல்வேறு இடங்களில் பத்தாயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.

போராட்டக்காரர்கள், கோவிட்-19-லிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள மாஸ்க் அணிந்து கொண்டு, பிரச்சினைக்குரிய பாதுகாப்பு மசோதாவுக்கு எதிராக பாரீசில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். (படம் : கிரிஸ்டோபர் எனா / AP Photo ]

கண்காணிப்பதற்கு நடைபாதை கண்காணிப்புக் கேமரா மற்றும் ட்ரோன் ஆகியவற்றைக் கண்காணிப்புக் கருவிகளாகப் பயன்படுத்துவதையும் தடை செய்யவும் போராட்டக்காரர்கள் கோரிக்கை வைத்தனர்.

கடந்த சனிக்கிழமை (16-01-2021) அன்று பல்லாயிரம் பேர் பாரீஸ் நகரிலும், பிரான்சில் உள்ள பல்வேறு நகரங்களிலும் நடத்திய இந்தப் பேரணியில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை குறித்த விவரம் செயற்பாட்டாளர்களுக்கும், அதிகாரவர்க்கத்தினருக்கும் இடையே வேறுபட்டது. பிரான்ஸ் முழுவதும் சுமார் 2,00,000 பேர் பேரணியில் கலந்து கொண்டதாக ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், போலீசோ வெறும் 34,000 பேர்தான் கலந்து கொண்டதாகக் குறிப்பிட்டது.

“எங்கேயும் போலீசு, நீதி எங்குமில்லை” மற்றும் “அவசரநிலை, போலீசு அரசு” என்பது போன்ற முழக்கங்களைக் கொண்ட பேனர்களைக் கையில் ஏந்திக் கொண்டு பனிப் பொழிவுக்கு மத்தியிலும் பாரீஸ் நகரில் பேரணிக்கு வந்திருந்தனர்.

பேரணியில் பங்கெடுத்த லில்லெ நகரின் வடப்பகுதியைச் சேர்ந்த ஃப்ரான்கோய்ஸ் என்பவர், “இது ஒருவிதமான சர்வாதிகாரம், இந்தச் சட்டத்தைக் கொண்டு அவர்கள் எவ்வளவுதூரம் செல்வார்கள் என்று ஒருவர் கேட்கிறார். மனிதனின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்திற்கான நாட்டிலேயே இதுதான் நிலைமை என்றால், நான் பிரெஞ்சுக்காரன் என்று கூறிக்கொள்ள வெட்கப்படுகிறேன்” என்றார்.

படிக்க :
♦ விடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் ! | படக்கட்டுரை

♦ பிரான்ஸ் : வலதுசாரி அரசியலுக்குத் தயாராகும் ‘லிபரல் ஜனநாயகம்’

நாடு முழுவதும் இந்தப் பேரணியில் கலந்து கொண்ட போராட்டக்காரர்களில் 75 பேரை போலீசு கைது செய்துள்ளது. அதில் பாரீசில் மட்டும் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரான்சின் உள்துறை அமைச்சர் ஜெரார்ட் டார்மனின் தெரிவித்துள்ளார். போலீசு மற்றும் துணை இராணுவப்படையைச் சேர்ந்தவர்கள் 12 பேர் மோதல்களில் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

பிரிட்டனி நகரில் சுமார் 2400 பேர் பங்கேற்ற சட்டவிரோதமான புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போதான போலீசு நடவடிக்கைகள் போன்ற போலீசின் “பொறுத்தமற்ற” எதிர்வினைச் சம்பவங்கள் போராட்டக்காரர்களின் கோபத்தைத் தூண்டியிருக்கிறது.

மேலும் கடந்த நவம்பர் 21, 2020 அன்று நிராயுதபாணியான கருப்பின இசையமைப்பாளரை அவரது பாரிஸ் ஸ்டூடியோவிலேயே வைத்து வெள்ளை போலீசுக்காரர் தாக்கிய வீடியோ வெளியானதும், பிரான்சின் பாதுகாப்புச் சட்டத்தின் மீதான கோபம் அதிகரித்ததற்கான காரணமாகும்.  இந்தச் சட்டம் பலராலும் கண்டிக்கப்பட்டு, பலரும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரான் வலதுசாரியாக சரிவதை சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.

மேலும் கடந்த ஆண்டு நவம்பரில் டி லா ரிபப்ளிக் (De La Republique) எனும் இடத்தில் இருந்த அகதிகள் முகாமை போலீசு வன்முறையாகக் கலைத்தது உள்ளிட்ட பல்வேறு கேமராவில் பதிவான சம்பவங்கள் மக்களின் கோபத்தை அதிகரித்துள்ளன.

பாரீஸில் கடந்த நவம்பர் 21, 2020 அன்று இசை தயாரிப்பாளர் மிக்கேல் செக்லர் அவரது ஸ்டூடியோவின் வாயிலில் போலீசால் தாக்கப்படுகிறார். [ படம் : மிக்கேல் செக்லர் / GS Group / AFP]
முன்வைக்கப்பட்டுள்ள பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிரான பேரணியின் போது போராட்டக்காரர்களுக்கு அருகே நடந்து செல்லும் போலீசு அதிகாரிகள் [படம் : லெவிஸ் ஜோலி / AP Photo]
பங்கேற்றவர்கள் குறித்த கணக்கீடு அதிகாரவர்க்கத்தினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே பெருமளவில் வேறுபட்டது. [படம் : லெவிஸ் ஜோலி / AP Photo]
பிரச்சினைக்குரிய பாதுகாப்பு மசோதா, போலீசின் காட்டுமிராண்டித்தன நிகழ்வுகளை மக்கள் ஆவணப்படுத்துவதை தடை செய்யும் என விமர்சகர்கள் கூறுகின்றனர். [படம் : லெவிஸ் ஜோலி / AP Photo]
பாரீஸ் நகரில் போராட்டக்காரர்கள் பேரணி செல்வதை போலீசு அதிகாரிகள் பார்வையிடுகின்றனர். போராட்டக்காரர்கள், அதிகமான கண்காணிப்புக் கருவிகள் பயன்படுத்தப்படுவதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தனர். [படம் : கிறிஸ்டோப் எனா / AP Photo]
“புத்தாண்டை வரவேற்க நடனமாடியதற்காக சிறையில் இருக்கிறேன்” என்று எழுதப்பட்ட பதாகையை பிடித்திருக்கிறார் ஒரு போராட்டக்காரர். [படம் : கான்சலோ ஃபுயண்டெஸ் / Reuters]
நாடு முழுவதும் 75 பேரை கைது செய்த்து போலீசு. பாரீசில் மட்டும் 24 பேர் கைது செய்யப்பட்டனர். [படம் : கான்சலோ ஃபுயண்டெஸ் / Reuters]
அம்னெஸ்ட்டி இண்டர்நேசனல் மற்றும் பல்வேறு சங்கங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைப்புக் குழுவால் “சுதந்திரத்துக்கான பேரணிகள் ” அறைகூவல் விடுக்கப்பட்டன. [படம் : கிறிஸ்டோப் எனா / AP Photo]

தமிழாக்கம் : கர்ணன்
நன்றி : Aljazeera

கொரோனா தடுப்பூசி : சோதனைச்சாலை எலிகளாக்கப்பட்ட மக்கள்

0

ந்திய நிறுவனமான பாரத் பயோடெக் சுயசார்பாக உருவாக்கியதாகக் கூறப்படும் கோவேக்ஸின் தடுப்பூசியையும்; இங்கிலாந்தைச் சேர்ந்த ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம், பன்னாட்டு நிறுவனமான ஆஸ்ட்ராஜெனிகா ஆகியவற்றுடன் இணைந்து இந்தியாவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியுட் தயாரித்திருக்கும் கோவிஷீல்ட் தடுப்பூசியையும் அவசர காலத்தில் நிபந்தனைகளுக்குட்பட்ட முறையில் பயன்படுத்துவதற்கு மத்திய மருந்து மற்றும் தரநிர்ணயக் கமிட்டி அனுமதி அளித்திருக்கிறது.

இந்த அனுமதியின் முதற்கட்டமாக நாடெங்கிலும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட 3 கோடி பேருக்கு இத்தடுப்பூசிகளைப் போடும் நடைமுறையும் ஜனவரி 16, 2021 அன்று தொடங்கிவிட்டது.

இத்தடுப்பூசிகளின் செயல் திறன் குறித்தும், அவற்றுக்கு அவசர கதியில் அளிக்கப்பட்ட அனுமதி குறித்தும் பொதுவெளியில் பல்வேறு விமர்சனங்களும், சந்தேகங்களும், கேள்விகளும் நிலவிவரும் நிலையில் தொடங்கப்பட்டிருக்கும் தடுப்பூசித் திட்டம் முதல் நாளிலேயே பெரும் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது.

தமிழகத்தில் ஜனவரி 16, அன்று 16,600 முன்னணிப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போட்டிருக்க வேண்டிய நிலையில், வெறும் 2,783 பேர்தான் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வந்துள்ளனர். குறிப்பாக, கோவேக்ஸின் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளுவதற்கு மருத்துவர்கள் பலரே மறுத்திருப்பதாக ஆங்கில இந்து நாளிதழ் (ஜனவரி, 17, பக்.6) குறிப்பிட்டிருக்கிறது.

படிக்க :
♦ தடுப்பூசிகள் உண்மையிலேயே நோய்களைத் தடுக்கின்றனவா ?
♦ நம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா

இத்தடுப்பூசிகளுக்குத் தரப்பட்ட அனுமதியை, இத்தடுப்பூசியைப் போடுவதற்கான திட்டத்தை யார் முழுமையாக அங்கீகரிக்க வேண்டுமோ, இத்தடுப்பூசி குறித்த நம்பிக்கையை யார் மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டுமோ, அம்மருத்துவ உலகமே இத்தடுப்பூசித் திட்டத்தை ஆதரிப்பதில் இரண்டாகப் பிளவுபட்டு நிற்கிறது.

தமிழகத்தைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் கு.கணேசன் இத்தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்தும் அவற்றுக்குத் தரப்பட்ட அனுமதி குறித்தும் விமர்சனக் கட்டுரையொன்றை தமிழ் இந்து நாளிதழில் எழுதியிருக்கிறார் (தமிழ் இந்து, 07.01.2021). வேலூர் கிறித்தவ மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் ககன்தீப் காங், “கோவேக்ஸின் தடுப்பூசி கொரோனா நுண்கிருமிக்கு எதிராகச் செயலாற்றுகிறது என்பது குறித்த எந்தத் தரவுகளையும் நான் அறிந்திருக்கவில்லை” என்கிறார். “இந்தத் தருணத்தில் நான் யாருக்கும் கோவேக்ஸினைப் பரிந்துரைக்க மாட்டேன்” என்கிறார், அரசு மருத்துவ ஆராய்ச்சித்துறையின் தலைவர். “எந்த அறிவியல் தரவுகளின் அடிப்படையில் கோவேக்ஸின் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டது?” என்ற கேள்வியை எழுப்புகிறார், அனைத்திந்திய மருந்து செயல்பாட்டுக் கூட்டமைப்பைச் சேர்ந்த மாலின் ஐசோலா (The Hindu, 04.01.2021, p.13).

“கோவேக்ஸினின் செயல்திறன் குறித்து மேலதிகமான தரவுகளைத் தருமாறு” (The Hindu, 02.01.2021, p.1) இந்தியத் தலைமை மருந்துகள் கட்டுப்பாடு ஆணையகம் கேட்ட இரண்டாவது நாளிலேயே அத்தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்படுகிறதென்றால், இந்த அவசர அனுமதி குறித்து நிபுணர்களுக்கு மட்டுமல்ல, பாமரனுக்கும்கூடச் சந்தேகம் வரத்தான் செய்யும்.

இக்கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் நியாயமாகவும் நேர்மறையாகவும் பதில் அளிக்க யோக்கியதை அற்ற மோடி அரசு, கேள்வி எழுப்புவர்களைச் சுயசார்பு இந்தியாவிற்கு எதிரானவர்களாக, இந்தியா குறித்துப் பெருமை கொள்ளாத சிறுமதியாளர்களாக அவதூறு செய்து வருகிறது.

கோவேக்ஸின்

கோவேக்ஸின், கோவிஷீல்ட் ஆகிய இரண்டு தடுப்பூசிகளையும் அவசரச் சூழலுக்கு நிபந்தனைகளுக்கு உட்பட்டுப் பயன்படுத்திக் கொள்ளுவதற்கு அனுமதி அளித்துள்ள மோடி அரசு, அந்நிபந்தனைகள் என்னென்ன என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. இவ்விரண்டு தடுப்பூசிகளுள் கோவேக்ஸினுக்கு அளிக்கப்பட்ட அனுமதியில், மருத்துவப் பரிசோதனை அடிப்படையில் (clinical trial mode), குறிப்பாக, உருமாறிய கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி என்ற வகையில் பயன்படுத்தலாம் எனக் கூறப்பட்டிருக்கிறது. இந்த வாரத்தைகளின் பொருள் என்னவென்றால், இத்தடுப்பூசிகளின் பாதுகாப்பையும் செயல்திறனையும் பரிசோதித்துப் பார்க்கும் சோதனைச் சாலை எலிகளாக இந்திய மக்கள் நிறுத்தப்பட்டுள்ளனர் என்பதுதான்.

* * *

புதிதாகக் கண்டுபிடிக்கப்படும் எந்தவொரு தடுப்பூசியையும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அனுமதிக்கும் முன், அத்தடுப்பூசியின் பாதுகாப்பு, நோய் எதிர்ப்பு செயல்திறன் ஆகியவை குறித்து மூன்று கட்டப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு, அப்பரிசோதனைகளில் கிடைக்கும் முடிவுகள் மருத்துவ அறிவியல் உலகின் ஆய்வுக்கு முன்வைக்கப்பட்டு, அம்முடிவுகளை மருத்துவ அறிவியலாளர்களும் ஒவ்வொரு நாட்டின் மருந்து கட்டுப்பாடு துறையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் சட்டபூர்வ நடைமுறையும் மருத்துவ அறமுமாகும்.

முதல் இரண்டு கட்டப் பரிசோதனையைவிட மூன்றாவது கட்டப் பரிசோதனைதான் விரிவான அளவில் நடத்தப்படும். முதல் இரண்டு கட்டப் பரிசோதனைகளில் அத்தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பைத் தூண்டிவிடும் திறன் சோதிக்கப்படும்; மூன்றாவது கட்டப் பரிசோதனையில்தான் அத்தடுப்பூசியின் செயல் திறன் முழுமையாகப் பரிசோதிக்கப்படும். இதன் காரணமாகத்தான் மூன்றாவது கட்டப் பரிசோதனையில் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் அச்சோதனையில் ஈடுபடுத்தப்படுவது வழமையாக உள்ளது.

கோவிஷீல்ட் மற்றும் கோவேக்ஸின் விடயத்தில் இந்த வழமையான சட்டபூர்வ, அறிவியல்ரீதியான நடைமுறை புறக்கணிக்கப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதைத்தான் எதிர்க்கட்சிகளும் பல்வேறு மருத்துவ அறிவியலாளர்களும் கேள்விக்குள்ளாக்கியிருக்கின்றனர்.

கோவிஷீல்ட் தடுப்பூசியின் செயல்திறனைப் பரிசோதிப்பதற்கான மூன்றாவது கட்ட பரிசோதனை இந்தியாவில் முழுமையாகவும் தனியாகவும் நடத்தப்படவேயில்லை. ஆனால், மைய அரசோ, சீரம் நிறுவனம் அத்தடுப்பூசியின் இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்டப் பரிசோதனைகளைச் சேர்த்து நடத்திவிட்டதாக சால்ஜாப்பு ஒன்றைச் சொல்லிவருகிறது. இந்த சால்ஜாப்பை உண்மையாக எடுத்துக்கொண்டாலும், கோவிஷீல்ட் தடுப்பூசியின் செயல்திறன் குறித்து இந்தியாவில் சேகரிக்கப்பட்ட தரவுகள் எதனையும் சீரம் நிறுவனம் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையிடம் சமர்ப்பிக்கவில்லை.

படிக்க :
♦ பதஞ்சலியும் கொரோனா மருந்தும் : தரங்கெட்டுப் போன தமிழ் இந்து நாளிதழ் !
♦ கொரோனா – வேலை, வாழ்வாதாரம், பொது சுகாதாரத்திற்காக போராடு !

இங்கிலாந்து, பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய மூன்று நாடுகளில் நடத்தப்பட்ட கோவிஷீல்ட் தடுப்பூசியின் மூன்றாம் கட்டப் பரிசோதனை முடிவுகளை அப்படியே எடுத்துக்கொண்டு, அதன் அடிப்படையில் கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. அந்நாடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளையும், அதனின் முடிவுகளையும் அப்படியே எடுத்துக் கொள்ளலாமா என்ற கேள்வி ஒருபுறமிருக்க, அப்பரிசோதனைகள் குறித்தே பல்வேறு விமர்சனங்களை, சந்தேகங்களை மருத்துவ அறிவியலாளர்கள் எழுப்பியுள்ளனர்.

குறிப்பாக, இம்மூன்று நாடுகளிலும் ஒருபடித்தான முறையில் இச்சோதனைகள் நடத்தப்படாததால், பரிசோதனையில் கிடைத்த முடிவுகளை நம்பகத்தன்மை கொண்டதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்பது மருத்துவ அறிவியலாளர்களின் வாதம். இங்கிலாந்து அரசு கோவிஷீல்ட் தடுப்பூசியை அவசரகாலப் பயன்பாட்டிற்கு அனுமதித்துள்ள போதிலும், இன்னமும் அமெரிக்க அரசு அத்தடுப்பூசியை அமெரிக்காவில் பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அத்தடுப்பூசியின் செயல்திறன் குறித்து இன்னும் மேலதிகமான தரவுகளைக் கேட்டிருக்கிறது, அமெரிக்க அரசு.

கோவேக்ஸின் தடுப்பூசியை எடுத்துக்கொண்டால், அதனின் செயல்திறனைப் பரிசோதிக்கும் மூன்றாம் கட்டப் பரிசோதனைகள் இன்னும் முடிவடையவேயில்லை. இன்னும் சொல்லப்போனால், மூன்றாம் கட்டப் பரிசோதனையை நடத்துவதற்குத் தேவையான தன்னார்வலர்களை ஈடுபடுத்துவதுகூட இன்னும் முழுமையடையவில்லை. மூன்றாம் கட்டப் பரிசோதனை முடிவுகள் மார்ச் மாதத்தில்தான் கிடைக்கும் என பாரத் பயோடெக் நிறுவனமே அறிவித்துள்ள நிலையில், அத்தடுப்பூசியைப் பரிசோதனை அடிப்படையில் பயன்படுத்துவதற்கு அனுமதி அளித்திருக்கும் மைய அரசு, இத்தடுப்பூசி உருமாறிய கரோனை வைரஸுக்கு எதிராகவும் செயல்படும் என்ற நற்சான்றையும் அளித்திருக்கிறது.

கோவேக்ஸின் தடுப்பூசியின் செயல் திறன், அத்தடுப்பூசி உருமாறிய கொரோனா வைரஸுக்கு எதிராகச் செயல்படும் என மைய அரசு கூறியிருப்பது ஆகியவற்றை மட்டும் மருத்துவ அறிவியலாளர்கள் கேள்விக்குள்ளாக்கவில்லை. இத்தடுப்பூசியைத் தன்னார்வலர்களிடம் பயன்படுத்தி பரிசோதனை செய்வதற்கு அளிக்கப்பட்ட அனுமதி, அப்பரிசோதனைகள் நடத்தப்பட்ட முறை ஆகியவற்றையும் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார்கள்.

கோவேக்ஸின் தடுப்பூசியின் செயல்திறன் குறித்து இன்னும் மேலதிகமான தரவுகளை, டிசம்பர் 30 (2020) அன்று நடந்த கூட்டத்தில் கேட்ட மருந்து கட்டுப்பாட்டுத் துறை, அதற்கடுத்த இரண்டொரு நாட்களிலேயே தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு அத்தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கிறது. எனில், அந்த இடைப்பட்ட நாட்களில் நடந்தது என்ன என்ற கேள்வியைப் பலரும் எழுப்பி வருகிறார்கள்.

அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் கொரோனா தடுப்பூசியை சோதிக்க தன் உடலில் ஏற்றிக்கொள்ளும் தன்னார்வலர்
படம் : REUTERS/Eduardo Munoz

கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டவுடனேயே, “ஆங்கில நாட்டுத் தயாரிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கும் நிலையில் சுதேசி நிறுவனத்தின் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்படாதது தனக்கு அதிர்ச்சியளிப்பதாக” சுப்பிரமணிய சுவாமி தனது டுவிட்டரில் பதிவிட்டார். அப்பதிவு வெளியான 24 மணி நேரத்துக்குள்ளாகவே சுதேசி தயாரிப்பான கோவேக்ஸினுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இந்தத் திடீர் அனுமதியின் பின்னே பா.ஜ.க.வின் சுயதம்பட்ட அரசியல் இருப்பதை மறைத்துக்கொண்டு, இது குறித்துக் கேள்வி கேட்பவர்களை அரசியல் செய்வதாக மலினமாகக் குற்றஞ்சுமத்துகிறது, மோடி அரசு.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கொரோனா வைரஸின் மாதிரியை மே 9, 2020 அன்று பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு அளிக்கிறது. அம்மாதிரி தரப்பட்ட ஐம்பதாவது நாளிலேயே – ஜூன் 29 அன்று அந்நிறுவனத்தின் தடுப்பூசியை மனிதர்களிடம் செலுத்திப் பரிசோதிக்கும் அனுமதியும் அளிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸின் மாதிரியைப் பெற்று, அதனை அழிக்கக்கூடிய தடுப்பூசியை ஆய்வகத்தில் உருவாக்கி, அதனை விலங்குகளிடம் செலுத்திப் பரிசோதித்துப் பின்னர் மனிதர்களிடம் செலுத்திப் பரிசோதிக்கும் அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்குக் குறைந்தது மூன்று மாதம் ஆகும் எனச் சுட்டிக் காட்டும் மருத்துவ அறிவியலாளர்கள், ஐம்பது நாட்களுக்குள்ளாகவே இவையனைத்தும் நடந்தது எப்படி என்ற கேள்வியை எழுப்பியிருக்கின்றனர்.

பாரத் பயோடெக் நிறுவனம் செப்டெம்பர் 2020-ல் வெளியிட்ட அறிக்கையில், கோவேக்ஸின் தடுப்பூசியை மிருகங்களிடம் கொடுத்துப் பரிசோதித்துப் பார்க்கும் ஆய்வு ஜூன் 6-ஆம் தொடங்கியதாகக் குறிப்பிட்டிருக்கிறது. அதேசமயம், ஜூன் 29 அன்று, அதாவது மிருகங்களின் மீது நடத்தப்பட்ட ஆய்வு முடிவதற்கு முன்பாகவே, கோவேக்ஸின் தடுப்பூசியை மனிதர்களுக்குச் செலுத்திப் பரிசோதித்துப் பார்க்கும் அனுமதி வழங்கப்படுகிறது.

மேலும், பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனா வைரஸின் மாதிரியைப் பெற்ற பத்தாவது நாளில், அதாவது மே 20, 2020 அன்று அமெரிக்காவைச் சேர்ந்த ஜெஃபர்சன் தடுப்பூசி நிறுவனத்தோடு கூட்டுச் சேர்கிறது. அந்த அமெரிக்க நிறுவனம் கொரோனாவை அழிக்கக்கூடிய கரோவேக்ஸ் என்ற தடுப்பூசி மருந்தைத் தயாரித்திருப்பதாக முன்னரே அறிவித்திருந்தது. இதனையெல்லாம் இணைத்துப் பார்த்து, பாரத் பயோடெக் நிறுவனம் சுயசார்போடு தயாரித்திருப்பதாகக் கூறிவரும் கோவேக்ஸின் தடுப்பூசியின் ஆதிமூலம் கரோவேக்ஸாக இருக்கக்கூடும் என்ற ஐயப்பாடும் எழுப்பப்பட்டிருக்கிறது (All You Need to Know About Bharat Biotech and Covaxin During the Pandemic, The wire, 03/01/2021).

அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளை எழுதிவரும் ஆகாஷ் சேதி, காயத்ரி லஹா என்ற இரண்டு பத்திரிகையாளர்கள் கோவேக்ஸின் தடுப்பூசி குறித்து வயர் இணைய தளத்தில் எழுதியிருக்கும் கட்டுரையொன்றில், “இத்தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் செயல் திறனைப் பரிசோதிக்கும் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கும் கில்லுகர் மருத்துவமனை, ஜீவன் ரேகா மருத்துவமனை, பிரகார் மருத்துவமனை, ரானா மருத்துவமனை ஆகிய நான்கும் சிறிய மருத்துவமனைகள் என்றும், இம்மருத்துவமனைகள் எந்தவொரு மருத்துவக் கல்லூரியுடனும் இணைக்கப்படவில்லை” என்றும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

ஃபைசர் மற்றும் மாடர்னா ஆகிய இரண்டு நிறுவனங்கள் தயாரித்திருக்கும் கொரோனா தடுப்பூசிகளை அமெரிக்க மக்களின் பயன்பாட்டுக்கு அனுமதிப்பது தொடர்பாக அந்நாட்டின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு நடத்திய கூட்டங்கள் தொலைக்காட்சிகளில் முழுமையாக ஒளிபரப்பப்பட்டன. மேலும், அத்தடுப்பூசிகள் தொடர்பாக நிபுணர்களும், பொதுமக்களும் எழுப்பிய கேள்விகளுக்கு நேரலையில் பதில்களும் அளிக்கப்பட்டன.

ஆனால், இந்தியாவிலோ கோவிஷீல்ட், கோவேக்ஸின் தடுப்பூசிகளின் முதல் இரண்டு கட்ட மருத்துவப் பரிசோதனைகளில் கிடைக்கப்பெற்ற தரவுகள் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை. இத்தடுப்பூசிகள் குறித்து நடத்தப்பட்ட மருந்துக் கட்டுப்பாட்டுக் கமிட்டிக் கூட்டங்களின் கூட்டக் குறிப்புகள் முழுமையாக யாருக்கும் தரப்படவில்லை. இத்தடுப்பூசிகளுக்கு அளிக்கப்பட்ட அனுமதி குறித்து நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலும் அளிக்கப்படவில்லை.

மருத்துவப் பரிசோதனை அடிப்படையில் கோவேக்ஸின் தடுப்பூசியைப் போட்டுக் கொண்ட அரியானா மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ், தடுப்பூசி செலுத்தப்பட்ட இரண்டாவது வாரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அதன் பிறகும்கூட அவருக்குச் செலுத்தப்பட்டது தடுப்பூசியா அல்லது பொய் மருந்தா (placebo) என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

படிக்க :
♦ கொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்
♦ இயற்கையை உறிஞ்சும் ஏகாதிபத்தியம் ! சிறப்புக் கட்டுரை

இத்தடுப்பூசியின் மூன்றாவது கட்டப் பரிசோதனையில் பங்கேற்ற போபால் நகரை சேர்ந்த தன்னார்வலர் தீபக் மராவி (வயது 42) பலியானதை மறைக்க முயன்றதாகப் பலரும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தடுப்பூசிப் போடும் திட்டத்தின் இரண்டாவது நாளிலேயே இத்தடுப்பூசிகளால் 447 பேருக்கு ஒவ்வாமை ஏற்பட்டிருப்பதாகவும், அவர்களுள் மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. மேலும், தடுப்பூசிப் போட்டுக் கொண்ட உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த சுகாதாரப் பணியாளர் இறந்து போனதும் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது.

அனுமதியின் பின்னுள்ள வெளிப்படையற்ற தன்மை, தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்து எழுப்பப்படும் கேள்விகள், மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்ட விதம் குறித்த விமர்சனங்கள் – இவற்றையெல்லாம் இணைத்துப் பார்த்தால், மோடி அரசு இத்தடுப்பூசிகளுக்கு அவசர கதியில் அனுமதி அளித்திருப்பதன் உள்நோக்கத்தை யாரும் புரிந்துகொள்ள முடியும். தனது அரசின் பலமுனைத் தோல்விகளிலிருந்து தற்காத்துக் கொள்ளும் தடுப்புக் கேடயமாக இத்தடுப்பூசிகளைப் பயன்படுத்திக் கொள்ள மோடியும் அவரது பரிவாரங்களும் முயலுகின்றன என்பதுதான் இந்த அவசர அனுமதியின் பின்னுள்ள உண்மை.

தமிழகத்தில் செங்கல்பட்டுக்கு அருகே தடுப்பூசிகளைத் தயாரிப்பதற்காக ஒரு தொழிற்பூங்காவையே அமைத்திருக்கும் மைய அரசு, கொரோனா தடுப்பூசியைத் தயாரிப்பதற்கு அம்மையத்தைப் பயன்படுத்திக் கொள்ளாமல், ஒரு தனியார் கார்ப்பரேட் நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு கொரோனா வைரஸ் மாதிரியை அளித்திருக்கிறது.

எந்த நிறுவனம் தடுப்பூசியைக் கண்டுபிடிக்கிறதோ, அந்த நிறுவனம்தான் தனது சொந்த செலவில் அத்தடுப்பூசியைப் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். அதனால் ஏற்படும் பக்க விளைவுகளுக்கும் அந்த நிறுவனம்தான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் மருத்துவ ஆய்வுலகில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறை. ஆயின், மோடி அரசோ, இத்தடுப்பூசிகளுக்கு அவசர அனுமதி அளித்திருப்பதன் மூலம், அவ்விரு கார்ப்பரேட் நிறுவனங்களின் மருத்துவ ஆய்வுக்கு மக்களின் வரிப்பணத்தை மொய்யாக எழுதியிருக்கிறது. மேலும், இந்திய மக்களைச் சோதனைச் சாலை எலிகளாகப் பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதி அளித்திருக்கிறது.

இதனைத்தான் மோடி அரசு சுயசார்பு என்கிறது. நாம் அதனை கார்ப்பரேட் சார்பு எனக் குற்றஞ்சுமத்துகிறோம்.


அறிவு

ஸ்டாலினும் அவியாத கோழிக் கதையும் : “இதுதான் அவதூறு அரிசியல்!”

ரு தடவை ஸ்டாலின் ஒரு கோழியின் இறகுகளை பிடுங்கி அரசியல் கற்பித்ததாக மேற்கத்திய முதலாளியவாதிகளும், அவர்களது அடிவருடிகளான போலித் தமிழ்த் தேசியவாதிகளும் ஒரு நகைப்புக்கிடமான, பொய்யான புனைகதையை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர்.

அதில் எந்த விதமான உண்மையும் இல்லை. பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டும். இது விஷமிகளால் பரப்பப்படும் கட்டுக்கதை:

//ஒரு முறை ரஷ்ய அதிபர் ஒரு கோழியை நாடாளுமன்றத்துக்குள் கொண்டு வந்து , அதன் இறகுகளை ஒவ்வொன்றாக பிடுங்கி கீழே போட்டார். கோழி வலியால் கத்தியது, துடிதுடித்தது, முற்றிலும் பிடுங்கிய பின் அதை தூக்கி கீழே எறிந்துவிட்டார் . பின்பு அதன் முன்னால் சிறிது தானியத்தை தூவினார். அந்த கோழி அதை தின்று கொண்டு மெதுவாக நகர்ந்து வந்தது … மேலும் சிறிது தானியத்தை தனது காலடி வரை தூவினார் அதை பொறுக்கியபடி … அந்த கோழி கடைசியில் அவர் காலடியில் வந்து நின்றது .

அப்போது ரஷ்ய அதிபர் கூறினார் . ” இதுதான் அரசியல் , மக்களை எவ்வளவு வேண்டுமானாலும் கசக்கி பிழிந்து எடுத்து விட்டு , கடைசியில் சிறிது தானியம் போன்று எதையாவது தூவினால் தம் காலடியில் வந்து கிடப்பார்கள் ” என்று. “மக்கள் இதை சரியாக புரிந்து கொள்ளவில்லையெனில் மீண்டும் மீண்டும் அவர்களின் சிறகுகள் பிய்த்து எறியப்படும். இனியாவது சிறுபான்மை இனத்தவர்கள் அற்ப சலுகைக்கும், ஆடம்பர வாழ்க்கைக்கும், அரசியல்வாதிகளின் பகட்டு பேச்சுக்கும் விலைபோகாவிட்டால் சரிதான். இனியும் திருந்தாத ஜென்மங்களே வாழ்ந்து தான் என்னபயன்” //

படிக்க:
♦ ஆதிக்க சாதிவெறிக் கும்பலின் அவதூறுகள் !
♦ வேளாண் சட்டத்தினை அமல்படுத்தத் துடிக்கும் மோடி அரசு !

உண்மையில் இப்படி ஒரு சம்பவம் நடக்கவேயில்லை. அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. கொர்பெசேவ் ஆட்சிக் காலத்தில் ஸ்டாலின் எதிர்ப்பு எழுத்தாளர் Chingiz Aitmatov எழுதிய புனைகதை, மேற்கத்திய தீவிர வலதுசாரிகளால் பரப்பப் பட்டது. அதை எந்த கேள்வியும் இல்லாமல் நம்பும் சில தமிழர்களும் சமூகவலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.

முதலாவதாக, அரசியல் தெரியாத முட்டாள்கள் யாரும் சோவியத் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப் படுவதில்லை. இது முழுக்க முழுக்க முதலாளித்துவ அரசியல்வாதிகளின் கண்ணோட்டத்தில் இருந்து சொல்லப் படுகின்றது.

முதலாளித்துவ நாடுகளில் இருப்பது போன்று, சோவியத் யூனியனில் “அரசு எதிர் மக்கள்” என்ற அரசியல் பேசப்படுவதில்லை. இன்னும் சொன்னால், ஸ்டாலின் காலத்தில் “அனைத்து மக்களுக்குமான நாடாக” சோவியத் யூனியன் இருக்கவில்லை. அது முதலாளித்துவ வர்க்கத்தினருக்கு எதிரான பாட்டாளி வர்க்கத்தினரின் தேசமாக இருந்தது.

தோழர் ஸ்டாலின்
மக்க்ள் மனதிலிருந்து நீங்காத தோழர் ஸ்டாலின்

அதன் அர்த்தம் முதலாளிய வர்க்கத்தினரும், அவர்களை ஆதரிப்பவர்களும் சம உரிமை கொண்ட மக்களாக கருதப் படவில்லை. ஆகவே இந்தப் புனை கதையில் சொல்லப் படும் “மக்கள்” யார் என்பது கேள்வி. இந்தக் கதையில் உவமை காட்டப்படும் கோழி முதலாளிய வர்க்கத்தினரை குறிக்கின்றதா என்பதை அவர்கள் தெளிவு படுத்த வேண்டும்.

இரண்டாவதாக, “அரசு மக்களுக்கு சலுகைகள் கொடுக்கும்” முறை முழுக்க முழுக்க முதலாளித்துவ பொருளாதார அமைப்பு சார்ந்த விடயம். மேற்கத்திய நாடுகளில் கூட, பொருளாதாரம் முழுவதும் முதலாளிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதால் தான் அரசு மக்களுக்கு சலுகைகள் வழங்குகின்றது.

ஒரு சோஷலிச நாட்டில் அந்த “சலுகைகள்” மக்களின் உரிமைகளாக கருதப் படுகின்றன. அவற்றை செயற்படுத்துவது அரசின் கடமை. அந்த வகையில் ஸ்டாலின் காலத்தில் கொல்ஹோஸ் போன்ற கூட்டுறவு பண்ணைகள் உருவாக்கப்பட்டன. அந்த பண்ணை அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள மக்கள், அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யக் கூடியதாக, அதாவது தன்னிறைவு கொண்டதாக இருக்க வேண்டும். தமக்கு தேவையான தானியங்களை உற்பத்தி செய்யும் விவசாயிகள் எதற்காக அரசில் தங்கியிருக்க வேண்டும்?

இந்தக் கதையில் எந்த லாஜிக்கும் இல்லை. கொல்ஹோஸ் பண்ணைகள் தானியங்களை உற்பத்தி செய்வது மட்டுமல்லாது, உணவு பதனிடும் உயர் தொழில்நுட்பம் வாய்ந்த தொழிலகங்களையும் கொண்டியங்கின. அவர்களால் உற்பத்தி செய்ய முடியாத டிராக்டர் போன்ற இயந்திரங்களை மட்டும் அரசு வழங்கியது.

எந்த விதமான புரிதலுமின்றி, அடிப்படை அரசியல் அறிவில்லாமல் இது போன்ற கட்டுக்கதைகளை பரப்பி வரும் விஷமிகள் தம்மைத் தாமே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி இது: “இனியும் திருந்தாத ஜென்மங்களே வாழ்ந்துதான் என்ன பயன்?”

முகநூலில் : கலையரசன்

disclaimer

டிக் டாக் இலக்கியாவும் ஜி.பி முத்துவும்தான் நம் கலாச்சார மனநிலையின் அடையாளங்களா ? || மனுஷ்யபுத்திரன்

சென்னை டாக்ஸ் யூ ட்யூபர்கள் கைதாகக் காரணமான மூவருடன் உறவுகொள்வது தொடர்பாக பேட்டி கொடுத்த பெண்ணின் நேர்காணலை பிஹைண்ட் வுட்ஸ் யூ ட்யூப் சேனல் வெளியிட்டிருக்கிறது. அந்தப் பேட்டி சுவாரசியமான ஒன்று. ஒரு சிறுகதை அல்லது நாவலில் வரும் பேட்டிபோல மிகுந்த புனைவுத்தன்மை கொண்டது.

முதலாவதாக, பிஹைண்ட் வுட்ஸில் அந்தப் பெண்ணை பேட்டி எடுக்கும் நபரின் அணுகுமுறை மிகவும் மோசமானது. தன்னை ஒரு காவல் துறை அதிகாரி அல்லது சினிமாவில் வரும் ரங்கராஜ் பாண்டே போன்ற எதிர்தரப்பு வக்கீலாக கற்பனை செய்துகொண்டு பேட்டி எடுக்கிறார். அந்தப் பெண்ணை மிக மோசமாக சித்தரிக்கும் நோக்கம் மட்டுமே அவரிடம் வெளிப்படுகிறது.

ஒரு இதழியலாளனாக நீங்கள் யாரை பேட்டி எடுத்தாலும் பேட்டி காண்பவரின் அடிப்படை கண்ணியத்தை மதிக்க வேண்டும். யூ ட்யூப் சீரழிவுக் கலாச்சாரத்தின் மற்றொரு அம்சம்தான் ஏதோ சமூகப்பொறுப்புடன் கேள்வி கேட்பதுபோன்ற இந்த பேட்டியும்.

இரண்டாவதாக, அந்தப்பெண் மிகுந்த குழப்பத்துடன் பேசுகிறார். இது ஒரு வேடிக்கை என்ற அளவில் கடந்து போய்விடும் என்று நினைத்த விஷயம் வைரலானதும் அதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் காவல்துறைக்கு போகிறார். அவர் கொடுத்த ஒரு பேட்டிக்கு எதிராக அவரே புகார் செய்கிறார். ஒரு அபத்த நாடகத்தின் காட்சி இது. ஆனால் அந்தப் பெண் மோசமான நோக்கங்கள் உடையவராக தெரியவில்லை. கவன ஈர்ப்பிற்காக எதையாவது பேசுகிற , செய்கிற தலைமுறையின் பிரதிநிதி அவர். ஒரு வெற்று கேளிக்கை அல்லது எதிர் மனநிலை. இந்த மனநிலையின் விக்டிம் அவர்.

 

https://youtube.com/watch?v=8-wqRqKEtyY&feature=share

(பிஹைண்ட் உட்ஸ் நேர்காணல் வீடியோ)

மூன்றாவதாக, அந்தபெண் தனது செயல் குறித்து அளிக்கும் விளக்கங்கள். சென்னை டாக்ஸ்-சிற்காக எடுத்த ப்ராங் வீடியோவை பல சேனல்களுக்கும் அவர்கள் கொடுத்ததுதான் பிரச்சினை என அவர் திரும்பத் திரும்ப கூறுகிறார். அதில் எந்த அர்த்தமும் இல்லை. 1500 ரூபாய் ஊதியமாக சென்னை டாக்ஸால் தனக்கு கொடுக்கப்பட்டு ஒரு ஸ்க்ரிப்டட் வீடியோவாகத்தான் தான் பேசியதாக குறிப்பிடுகிறார். அது உண்மை எனில் மக்களின் இயல்பான வெளிப்பாடுகளை காட்டுவதாகச் சொல்லும் ப்ராங்க் வீடியோக்கள் சித்தரிக்கப்பட்ட நாடகங்கள் என்பது புலனாகிறது.

அது தனக்கு அளிக்கப்பட்ட ஸ்க்ரிப்ட் என்று சொல்லும் அந்தப்பெண் தான் பலராலும் பாலியல் ரீதியாக ஏமாற்றப்பட்டதாகவும் அதை வெளிப்படுத்தவே இப்படி பேசினேன் என ஒரு கட்டத்தில் அழுகிறார். அந்த அழுகை மனதை தொடுவதாக இருக்கிறது. ஆனால் இதில் எது ஸ்க்ரிப்டட் எது உண்மை என்ற குழப்பமும் உண்டாகிறது.
அந்தபெண் தன்னைப்பற்றி கூறும் தகவல்கள் சுவாரசியமானவை. தனக்கு யாருமில்லை என்று கூறும் அவர் அந்த வீடியோவில் கமெண்ட்ஸ் செக்‌ஷனில் தன் பெற்றோரைப்பற்றி மோசமாக எழுதப்பட்டதாலேயே புகார் கொடுத்ததாக கூறுகிறார்.

மேலும் தான் ஒரு ஆர்டிஸ்ட் என்றும், ஒரு படத்தில் நடித்திருப்பதாகவும் மெஹந்தி போடுவதில் தான் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றிருப்பதாகவும் இப்படி பல்வேறு திறன்களைக்கொண்ட தனது பெயர் இதனால் கெட்டுவிட்டதாகக் கூறுகிறார். உண்மையில் இது வருந்தத்தக்க ஒன்று.

‘1500 ரூபாய்க்காகவா இப்படி பேசினீர்கள் ?’ என செய்தியாளர் கேட்கும்போது ‘ ஆமாம் நான் 33 ஏழைக்குழந்தைகளை வளர்க்கிறேன். அவர்களுக்கு பிஸ்கட் வாங்கவாவது அந்தப்பணம் பயன்படுமே” என்கிறார். நான் மிகவும் ஜெர்க் ஆன இடம் இதுதான். இது ஒரு பிரமாதமான சினிமா ஸ்க்ரிப்டுக்கான இடம்.

அந்தப்பேட்டியில் அந்தப்பெண் ” ஒரு பெண் இப்படிப்பேசினாள் என்பதற்காகத்தானே இப்படி தாக்குகிறீர்கள்..இதே ஒரு ஆண் பேசியிருந்தால் கண்டுக்க மாட்டீங்க’ என்ற ரீதியில் ஒரு பெண்ணிய கார்டை எடுக்கிறார். பாலியல் விக்டிம், ஏழைக் குழந்தைகளிடமிருந்து ஸ்க்ரிப்ட் இப்போது பெண்ணிய ஸ்க்ரிப்ட்டாக நகர்கிறது.
இதில் மற்றுமொரு ஹைலைட் “நான் ஐந்து கம்பெனிங்களோட அசோசியெஷன்ல இருக்கேன்…யாருக்காச்சும் வேலை வேணும்னா சொல்லுங்க வாங்கித் தரேன்”. உண்மையிலேயே செம கேரக்டர். சந்தேகமே இல்லை.

படிக்க :
♦ வேளாண் சட்டங்கள் நிறுத்திவைப்பு : உச்சநீதிமன்றத்தின் நரித்தனமும் மிரட்டலும் !
♦ வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற கார்ப்பரேட்டுகளின் அடிமடியில் கை வைப்போம் !

சென்னை டாக்ஸில் அந்தப்பெண் பேசிய விஷயங்கள் அன்றாட வாழ்வில் ஆண்களும் பெண்களும் சகஜமாக உரையாடிக் கொள்ளும் பாலியல் குறித்த அதீத விருப்பங்களும் கதைகளும்தான். ஒரு அலைபேசியில் அந்தப் பெண் பேசிய விஷயங்களை அன்றாடம் பல்லாயிரம் காணொளிகள் வாயிலாக ஒரு சமூகமே கண்டு வாயரிஸத்தில் திளைத்துக்கொண்டிருக்கிறது. ஆனால் திடீரென எங்கிருந்தோ மர்மஸ்தானத்தில் கலாச்சார அதிர்ச்சி வெடித்துக்கொள்ளும். கையில் கிடைக்கும் யாரையாவது போட்டு அடுத்து துவைத்தால்தான் அது அடங்கும்.

அந்தப்பெண் பேசிய விஷயங்கள் எந்த சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியதாகும் என்று தெரியவில்லை. அதே சமயம் இதை ஒரு கலாச்சார புரட்சியாக கருதி யாரும் புல்லரிக்க வேண்டாம். மனித உடல்களும் காமமும் அந்தரங்கமும் கேளிக்கைப்பொருளாகும் ஒரு காலத்தின் இன்னொரு நீட்சிதான் இதுபோன்ற வெறும் கவன ஈர்ப்பிற்கான உரையாடல். அந்தப்பெண் மூவருடன் உறவுகொள்வேன் என்று சொல்லும்போது அதைக் கேட்பவர்கள் சில நொடிகள் அதை தாங்கள் கண்ட பல நூறு போர்னோ காட்சிகளோடு மனத்திரையில் விரித்து ஆர்கஸம் அடைவார்கள். அதுதான் இதில் இருக்கும் பிஸினஸ்.

பிரச்சினை, ப்ராங்க் வீடியோ எடுப்பவர்கள் திருட்டுத்தனமாக ஆபாசமாக புகைப்படம் எடுப்பவர்கள்போல மக்களின் இன்னோஸன்ஸை சுரண்டுகிறார்கள் என்பதுதான். ஒருவர் வேடிக்கையாக சொல்லும் ஒரு கமெண்ட் கூட எடிட்டிங்கில் விபரீதமான அர்த்தத்தைக் கொடுக்கும். வைரல் கண்டெண்ட் மூலம் கவனம் ஈர்க்கும் , காசு பார்க்கும் வெறி யூ ட்யூபர்களை எந்த எல்லைக்கும் போகவைக்கிறது. இது ஊடகம் சார்ந்த மாபெரும் சீரழிவு. இந்த சீரழிவு பாலியல் விஷயங்களில் மட்டுமல்ல, மோசனான அரசியல், சாதி, மத பேச்சுகள் என சமூக வலைத்தளங்களில் விரவிக்கிடக்கிறது.

கோவை 360 என்ற யூ ட்யூப் சேனலில் பரிதாபமான தோற்றத்தில் இருக்கும் ஒரு பெண் போகிற வருகிறவர்களையெல்லாம் ” நான் உன்னை லவ் பண்ணுகிறேன்’ என்றோ ” நீ என்னை ஏன் சைட் அடித்தாய்?” என்றோ ப்ராங்கிங் என்ற பெயரில் பிராண்டிக்கொண்டிருக்கும். பொதுவாக செருப்பாலடிக்கத்தோன்றும் பல அந்தரங்க அத்துமீறல்களை ஜாலி என்ற பெயரில் யூ ட்யூபர்கள் சரமாரியாக செய்துகொண்டிருக்கிறர்கள்.

கவன ஈர்ப்பிற்காக இன்ஸ்டாக்ராமில், டிக் டாக்கில் எந்த எல்லைக்கும் செல்வதுபோன்ற ஒரு மனநிலைதான் ப்ராங்க் வீடியோவில் இஷ்டத்திற்கும் பேசுவது. பத்து நிமிட புகழுக்காகவும் சில நூறு லைக்குகளுக்காகவும் மனிதர்கள் எதையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள், தங்கள் சுய கெளரவத்தையும் கண்ணியத்தையும் இழக்கத் தயாராக இருக்கிறார்கள்.

நாம் எல்லோருமே டிக் டாக் இலக்கியா, ஜி.பி முத்து போன்றவர்களின் வெவ்வேறு வடிவங்களாகிக்கொண்டிருக்கிறோம். இந்தக் காலத்தில் இதெல்லாம் இன்னும் கற்பனை செய்ய முடியாத, விபரீத எல்லைகளை நோக்கியே செல்லும். எல்லோருக்கும் ஏதாவது ஒரு பைத்தியம். உலகமயமாதலுக்குப் பிந்தையை ஒரு உதிரிக் கலாச்சாரத்தின் நிழல்கள்.

மனுஷ்ய புத்திரன்

disclaimer

 

இந்துத்துவக் கும்பலைக் கண்டு அஞ்சும் ஆப்பிரிக்க முசுலீம் அகதிகள் !

டந்தாண்டு மார்ச் மாதம், இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடங்கிய நேரத்தில், டெல்லியின் நிஜாமுதீன் என்ற இடத்தில் தப்லிக் ஜமாத் அமைப்பு நடத்திய மதம் சார்ந்த கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு உலகமுழுவதிலும் இருந்து இஸ்லாமியர்கள் பலர் கலந்து கொண்டனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாத இந்து மதவெறி பாசிச மோடி கும்பலோ, பெருந்தொற்று நெருக்கடியைப் பயன்படுத்தி, தப்லிக் ஜமாத்தை சேர்ந்தவர்களை “கொரோனா பரப்பிகள்” என்று முத்திரை குத்தி சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தை செவ்வனே செய்தது.

ABP இந்தி செய்தி நிறுவனமோ Warriors of Covid-19” என்றும் India TV சேனலோ “தற்கொலைப் படையினர்” என்றும் ஜீ நியூஸ், கொரோனா ஜிகாதிகள்” என்றும் தப்லிக் ஜமாத் அமைப்பினருக்கு பல பல பெயர்களையும் சூட்டி, மோடி அரசுக்கு துதிப்பாடின.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டது வெறும் தப்லிக் ஜமாத் அமைப்பினர் மட்டுமல்ல. ஏமன், எத்தியோபியா, சோமாலியா போன்ற வெளிநாடுகளில் இருந்து தங்கள் உயிரைக் காக்க பல்வேறு காலங்களில் இந்தியாவிற்கு வந்திருக்கும் அகதிகள் பலரையும் இந்த சம்பவம் பாதித்துள்ளது. சமுதாயத்தின் ஒரு பிரிவினரால் தாங்கள் “ஜமாத்கள்” என்று அழைக்கப்பட்டுவிடுவோமோ என்ற அச்சத்தால் பீடிக்கப்பட்டுள்ளனர். (2019 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான், மியான்மர், திபெத், இலங்கை மற்றும் சோமாலியா போன்ற நாடுகளில் இருந்து 41,000 அகதிகள் இந்தியாவிற்கு வந்திருக்கிறார்கள் என்று UNHCR புள்ளிவிபரம் கூறுகிறது. உள்நாட்டுப் போரினால் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் நாடுகளில் 2020-ம் ஆண்டில் முதலிடத்தில் சோமாலியா உள்ளது).

படிக்க :
♦ எது அபாயகரமானது? கரோனாவா, ஆர்.எஸ்.எஸ்.−இன் அவதூறா?
♦ அடுத்ததாக தாஜ்மகாலுக்கு குறிவைக்கும் சங்கிகள் !

டெல்லி நீதிமன்றம் 36 வெளிநாட்டவர்களை (தப்லிக் ஜமாத்தினரை) விடுவித்திருந்தாலும், டெல்லியின் கிர்கி பகுதி, மால்வியா நகர், போகல், ஜுங்புரா, வசிர்புர் பகுதிகளில் வாழ்ந்து வரும் பெரும்பாலான அகதிகள் அச்சத்தில் இருந்து இன்னும் மீளவில்லை.

கொரோனா தாக்குதலுக்கு ஆளாவோம் என்ற அச்சமல்ல; எங்கே எங்களை தப்லிக் ஜமாத்தை சேர்ந்த ஆட்கள் என்று முத்திரைக் குத்திவிடுவார்களோ என்று அஞ்சிதான் மார்ச் முழுக்க நாங்கள் வீட்டுக்குள்ளேயே அடைந்திருந்தோம்” என்கிறார் 42 வயதான சோமாலியா அகதி காத்ரா. அவரது 17 வயது மகள் அமிரா, “பல வாரங்களாக நாங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தோம். வீட்டில் இருந்த பொருட்களை வைத்துதான் சமாளித்தோம்” என்றார்.

காத்ரா மற்றும் அவரது மகள்கள் அமிரா, சமிரா ஆகியோர் தென் டெல்லியில் ஒரு சிறிய வீட்டில் ஒரு சோமாலியர் குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் சோமாலியா உள்நாட்டு போரில் இருந்து தப்பிப் பிழைத்து, போரற்ற ஒரு அமைதியான வாழ்க்கையைத் தேடி 2014-ம் ஆண்டு இந்தியாவிற்கு வந்திருக்கிறார்கள்.

ஆனால் அவர்கள் எதிர்ப்பார்த்திருந்த அமைதி அவர்களுக்கு கிடைக்கவில்லை. பிப்ரவரி 2020 CAA எதிர்ப்புப் போராட்டத்தில் கலவரத்தை தூண்டிவிட்டது; அதற்கு அடுத்த மாதமே தப்லிக் ஜமாத் கொரோனாவை பரப்பியது என்று கூறியது அனைத்தும் அவர்களை (அகதிகளை) நிம்மதியிழக்க செய்திருக்கிறது.

டெல்லியில் இருந்த இந்த ஆறு வருடத்தில், நாங்கள் எங்கள் இனத்தின் வாயிலாகத்தான் நாங்கள் அடையாளப்படுத்தப்பட்டோம். இப்போதோ எங்களது மதமே எங்களுக்கு ஆபத்தாகிவிட்டது” என்கிறார் காத்ரா. கொரோனா பரப்பிகள் (தப்லிக் ஜமாத்) வரிசையில் தங்களையும் இணைத்துவிடுவார்களோ என்ற பயத்தினால், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணைம் வழங்கும் மார்ச் மாதத்திற்கான ரேஷன் பொருட்களைக்கூட வாங்க வீட்டை விட்டு வெளியே வர தயங்கி இருக்கிறார்கள்.

இதே பயத்தில்தான் சோமாலியாவைச் சேர்ந்த 29 வயதான முஸ்தாப் அப்துல்லாஹி அகமதுவும் இருக்கிறார். சோமாலியாவில் பாலியல் வன்கொடுமை, கடத்தல், சித்திரவதை மற்றும் கொலைவெறிக்கு ஆளாகும் பானாதிரி பந்தபோ பஹர் சூஃபி (Banadiri Bandabow Bahar Sufi) என்ற சிறுபான்மையினர் சமூகத்தை சேர்ந்தவர் முஸ்தாப். ஹாபர் கிதிர் (Habar Gidir) என்ற இராணுவத்தால் அவரது வீடு கைப்பற்றப்பட்டு, அவரது தந்தை கொல்லப்பட்ட பிறகு 2007 ஆம் ஆண்டு அவர் அங்கிருந்து தப்பித்திருக்கிறார்.

கடந்த 2007-ல் சோமாலியா தலைநகர் மொகாடிஷு அருகில் ஒரு அகதி முகாமில் அவர் தங்கியிருந்தபோது பல இளைஞர்களை போலவே இவரையும் அல் ஷபாப் என்ற தீவிரவாத அமைப்பு கடத்தியது, அங்கிருந்து எப்படியோ தப்பித்து முஸ்தாப் இந்தியாவிற்கு வந்திருக்கிறார். 2012-ல் மைசூரில் தன்னை இன ரீதியாக கிண்டல் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த அவரை ஒரு கும்பல் கிரிக்கெட் மட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவர் தனது முகத்தை அறுவைகிச்சை (Maxillofacial Surgery) செய்து சரிசெய்துள்ளார்.

என்னை நன்கு அறிந்த மக்கள் அக்கம் பக்கத்தில் இருந்தாலும் வீட்டுக்குள்ளேயே இருந்தேன்; வெளியே செல்வதை குறைத்து கொண்டேன். ஏற்கெனவே நடந்த டெல்லி கலவரமே எங்களை பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளிவிட்டது. மக்கள் அவர்களது சொந்த இனத்தையே கொல்லும்போது வெளிநாட்டு முஸ்லீம்களை சும்மா விட்டுவிடுவார்களா என்ன?” என்கிறார் முஸ்தாப்.

நாங்கள் ஏமனுக்கே திரும்பிச் செல்கிறோம்!

2014 ஆம் ஆண்டில் தனது குடும்பத்துடன் இந்தியா வந்திருக்கிறார் எத்தியோபிய அகதி ஹனன் அலி. மாணவர்களால் மட்டுமல்ல ஆசிரியர்களாலும் கிண்டலுக்கும் தாக்குதலுக்கும் ஆளாகியுள்ளவர் இங்கு அரசு பள்ளியில் தான் எதிர்க்கொண்ட இனவெறி சம்பவத்தை நினைவுக் கூறுகிறார். ஹனன் ஆறாம் வகுப்பு படிக்கையில், “படித்து என்ன சாதித்துவிட போகிறாய்?” என்று ஒரு ஆசிரியர் கேட்டிருக்கிறார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஹனன் தேசிய திறந்த பள்ளி நிறுவனம் ஒன்றில் சேர்ந்திருக்கிறார். ஏற்கெனவே இனவெறி தாக்குதலால் பாதிக்கப்பட்டிருக்கும் ஹனனை தப்லிக் ஜமாத் விவகாரம் மேலும் அச்சத்திற்கு தள்ளியிருக்கிறது.

படிக்க :
♦ வலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் ! SOC – CPI (ML) 10-வது பிளீன அறிக்கை !
♦ வேளாண் சட்டங்கள் நிறுத்திவைப்பு : உச்சநீதிமன்றத்தின் நரித்தனமும் மிரட்டலும் !

இந்த துண்டு துணியே (அவருடைய பர்தா) திடீரென எங்களை சிக்கலுக்கு கொண்டுபோய் விட்டிருக்கிறது. இதனை நான் ஒருபோதும் உணர்ந்ததில்லை. ஆனால் இப்போது நாங்கள் எங்கள் இனத்தால் மட்டுமல்ல எங்கள் மதத்தாலும் தாக்கப்படுகிறோம்” என்கிறார் ஹனன்.

ஹனன் தங்கைகள் மற்றும் அவரது தாயார் அமினாக்கு கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் உள்ளன. Maulvis-களை கொரோனா பரப்பிகள் என்று ஊடகங்கள் தூற்றுவதை கண்டு அஞ்சி, அவர்கள் தங்கள் மருத்துவ சிகிச்சைக்கோ அல்லது மருந்துகள் வாங்கவோகூட மார்ச் மாதம் வெளியில் செல்லவில்லை. எத்தியோப்பியாவில் நடந்த இனக் கலவரத்தில் தனது கணவனையும் வீட்டையும் இழந்த அமினா, மீண்டும் இதுபோன்றதொரு இழப்பை சந்திக்க நான் விரும்பவில்லை என்கிறார் படபடப்புடன்.

2015 முதல் டெல்லியில் வசித்து வருகிறது 19 வயதான் ஃபர்ஹியா இப்ராஹிமின் குடும்பம். 2011 ஆம் ஆண்டு சோமாலியாவிலிருந்து தப்பித்து ஏமனுக்கு சென்ற அவரது குடும்பம், அங்கு ஏடனில் ஏற்பட்ட நெருக்கடியில் தனது தந்தையையும் சகோதரனையும் இழந்து கடைசியாக இந்தியாவிற்கு வந்திருக்கிறது. பல வருட போர்கள், பதட்டங்களுக்கு பிறகு அமைதியான வாழ்க்கையைத் தேடி வந்த இப்ராஹிமின் குடும்பத்திற்கு டெல்லி கலவரமும் தப்லிக் ஜமாத் சம்பவமும் மீண்டும் மனவுளைச்சலை தந்திருக்கிறது.

கலவரங்கள் எங்களை அச்சத்தில் ஆழ்த்தினாலும், அது ஒருநாள் முடிவுக்கு வந்துவிடும் என்று நாங்கள் நம்பினோம். ஆனால், தப்லிக் ஜமாத் சம்பவத்திற்கு பிறகு இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு அதிகரிக்க தொடங்கியது. இது எந்தளவிற்கு என்றால், எனது தாய் ஏமனுக்கே மீண்டும் திரும்பிவிடலாம் என்று சொல்லும் அளவிற்கு!” என்கிறார் இப்ராஹிமின்.

கட்டுரையாளர் : தாருஷி அஷ்வனி
தமிழாக்கம் : ஷர்மி
நன்றி : The Wire

தஞ்சை மக்கள் அதிகாரம் : வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் !

போகிப் பண்டிகையில் தேவையற்றதை எரிக்கும் விதமாக வேளாண் சட்ட நகலை எரிக்கும் போராட்டத்தை அகில இந்திய கிசான் சங்கர்ஸ் ஒருங்கிணைப்புக் குழு முன்னெடுத்தது.

அதனடிப்படையில் கடந்த 13/01/2021 அன்று அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் கமிட்டியின் தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் பி. மாசிலாமணி அவர்களின் தலைமையில் வேளாண் சட்ட நகலெரிப்புப் போராட்டம் திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.

படிக்க :
♦ வலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் ! SOC – CPI (ML) 10-வது பிளீன அறிக்கை !
♦ வேளாண் சட்டங்கள் நிறுத்திவைப்பு : உச்சநீதிமன்றத்தின் நரித்தனமும் மிரட்டலும் !

இந்தப் போராட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகி தோழர் பி. பழனிவேல் மற்றும் அக்கட்சி நிர்வாகிகள், DYFI தோழர் சிவா, SFI மாவட்ட செயலாளர் தோழர் சுர்ஜித், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செய்தித் தொடர்பாளர் தோழர் பாலதண்டாயுதம், தோழர் மாரியப்பன் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் தங்க. சண்முகசுந்தரம், தோழர் ஆசாத் ஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

படங்கள்:

இந்தப் போராட்டத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக முழக்கமிட்டு வேளாண் சட்ட நகல்கள் எரிக்கப்பட்டன.

தகவல்
மக்கள் அதிகாரம்
தஞ்சை மண்டலம்,
திருவாரூர்
தொடர்பு :
8220716242

வலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் ! SOC – CPI (ML) 10-வது பிளீன அறிக்கை !

47

09-01-2021

பத்திரிகை செய்தி:

வலது திசை விலகலில் இருந்து
கட்சியை மீட்டெடுப்போம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, தோழர்களே, ஜனநாயக சக்திகளே !

தமிழகத்தின் முன்னணி அரசியல் சக்திகளில் ஒன்றாகத் திகழ்ந்து வரும், புரட்சிகர மார்க்சிய லெனினிய குழுவாகிய, மாநில அமைப்புக் கமிட்டி, .பொ..(மாலெ), தமிழ்நாடு – (SOC – CPI (M-L), Tamilnadu) – ஆகிய எங்களது அமைப்பின் தலைமைக் குழுவில் இருந்த இரண்டு உறுப்பினர்கள் கடந்த அக்டோபர்-2019-ல் சில அமைப்புப் பிரச்சினைகளை எழுப்பினர். இது தொடர்பாக, அமைப்புக்குள் உட்கட்சி விவாதம் நடத்தி தீர்ப்பதற்குத் தலைமைக் குழு தயாராக இருந்தது.

அந்தச் சூழலில், எமது மக்கள் திரள் அமைப்புகளின் தலைமையில் கார்ப்பரேட்காவி பாசிசத்திற்கு எதிராக ஓர் எழுச்சிகரமான மாநாடு நடந்தேறிய மறுநாளே, அவ்விருவரும் மா...வின் மீது அவதூறுகளையும், இழிவான தாக்குதல்களையும், பல வடிகட்டிய பொய்களையும் வாரியிறைத்து, கட்சியில் இருந்து வெளியேறுவதாக எமது இணைய தளத்திலேயே விலகல் அறிக்கை (24.02.2020) வெளியிட்டு, அமைப்பின் மீது ஓர் அதிர்ச்சித் தாக்குதலைத் தொடுத்தனர்.

இந்தத் தாக்குதல் எமக்கும் எமது தோழர்கள் மற்றும் அமைப்பின் ஆதரவாளர்கள், ஜனநாயக சக்திகள் மத்தியில் குழப்பத்தையும் அவநம்பிக்கையையும் தோற்றுவித்தது. மாநாட்டின் வெற்றியைச் சீர்குலைத்தது.

இவ்விருவர் தொடுத்த திடீர்த் தாக்குதலைத் தொடர்ந்து, அமைப்புக்குள் இருந்த அக்கும்பலுக்கு ஆதரவான சிலரின் நெருக்கடி காரணமாகவும், மா...வில் மறைந்திருந்த ஒரு மா... உறுப்பினர் மற்றும் ஒரு மாற்று உறுப்பினரின் நெருக்கடி மற்றும் மிரட்டல் காரணமாகவும், அமைப்பில் இருந்து வெளியேறுவதாக பொதுவெளியில் அறிவித்த அவ்விருவர் மா... மீது வைத்திருந்த விமர்சனத்தை நாங்கள் ஏற்கவில்லை எனினும், அமைப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்குத் தார்மீகப் பொறுப்பெடுத்து, மா... தலைமைப் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தது.

மா...வில் இருந்து வெளியேறிய அவ்விருவரும் எழுப்பிய பிரச்சினைகளைத் தீர்க்கும் பொருட்டும், உட்கட்சி விவாதத்தை நடத்தி, புதிய மா...வைத் தேர்வு செய்வதற்கான பிளீனத்தை நடத்த ஓர் இடைக்காலக் கமிட்டி (.கா..) தேர்வு செய்யப்பட்டது. இதன் பின்னர், மா...-வில் மறைந்திருந்த ஓர் உறுப்பினர் மற்றும் ஒரு மாற்று உறுப்பினர் ஆகியோர் இணைந்து மா...வில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்து மேலும் நெருக்கடி கொடுத்தனர். மா...விற்கு எதிராக, பல்வேறு சதி நடவடிக்கைகள் மூலமாக அணிகளின் மத்தியில் அவதூறு பிரச்சாரங்களை செய்ததன் மூலமும், அமைப்பு முறைகளை மீறி பலவாறாக கோஷ்டிகளைக் கட்டியும், தலைமையைக் கைப்பற்ற இவர்கள் முயற்சித்தனர். இப்பிரச்சினையில் தொடக்கத்தில் இருந்து, அமைப்பு பிளவுபட்டுவிடக் கூடாது என்ற நோக்கத்தில், சந்தர்ப்பவாதமாக அணுகி வந்த மா.., பின்னர் இ.கா.. மற்றும் மா...வில் மறைந்திருந்த துரோகக் கும்பலைக் கட்சியை விட்டு வெளியேற்றியது.

இதனைத் தொடர்ந்து, இந்த பிளவுவாதகலைப்புவாதசதிகார எதிர்ப்புரட்சி கும்பல், தங்களுக்கு விசுவாசமாக வளர்த்து வைத்திருந்த சிலரையும் இணைத்துக் கொண்டு, மா...வுடனும் மாவட்ட பொறுப்பாளர்களுடனும் முரண்பட்டிருந்த தோழர்களிடம் அவதூறு பிரச்சாரங்களை செய்து தங்களுடன் இணைத்துக் கொண்டு தாங்கள்தான் மா... என்று தன்னிச்சையாக அறிவித்துக் கொண்டனர். இதன் மூலம் மா...வைப் பிளவுபடுத்தியுள்ளனர். இதன் காரணமாக, இந்த பிளவுவாதகலைப்புவாதசதிகார எதிர்ப்புரட்சி கும்பலைக் கட்சியை விட்டு வெளியேற்றிய போது, அணிகளில் கணிசமானோர் அவர்களின் பின்னால் சென்றுள்ளனர்.

அமைப்பில் இருந்து வெளியேறியதாக பொதுவெளியில் அறிவித்திருந்த இருவரும், இந்தப் பிளவுவாத கும்பல்களின் சூத்திரதாரிகளாக பின்னணியில் இருந்து இயக்கி வந்துள்ளனர். மொத்தத்தில், இந்தக் கும்பல், தாராளவாத சந்தர்ப்பவாதத்தின் கடைக்கோடி நிலைக்குச் சென்று, கேடுகெட்டு, சீரழிந்து போய், அமைப்பை பிளவுபடுத்தும் வகையில் செயல்பட்டுள்ளது; பாட்டாளி வர்க்கக் கட்சியை ஒரு தாராளவாத பிரச்சார அரங்கமாக மாற்ற முயற்சித்துள்ளது.

இந்நிலையில், கட்சி பிளவுபட்டதற்கான காரணங்களான அமைப்பின் அகநிலையில் இருந்த தவறுகளைப் பரிசீலித்து புதிய தலைமையைத் தேர்வு செய்யும் பொருட்டு எமது அமைப்பின் 10-வது பிளீனம் ஜனவரி 01 முதல் 03-ம் தேதி வரை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இந்த பிளீனம் மனந்திறந்த வகையில் பிரச்சினைகளை விரிவாகவும் ஆழமாகவும் பரிசீலித்தது.

கட்சியில் நிலவும் அகநிலைத் தவறுகளின் பொதுத்தன்மையைத் தொகுத்துப் பார்த்து, அமைப்பு வலது திசைவிலகல் அடைந்திருப்பதுதான் பிளவிற்குக் காரணம் என்பதைப் இப்பிளீனம் உணர்ந்தது. அந்த வகையில் வலது திசை விலகலை கீழ்க்கண்ட வகையில் வரையறுத்துள்ளது.

1992-க்குப் பின்னர், எமது அமைப்பினுடைய பொதுத்திசை வழியின் முக்கிய அம்சமான போர்க்குணம் வர்க்க அடித்தளம் என்ற மூல முழக்கங்களைக் கைவிட்டு, செயல்தந்திர அரசியலை மாநிலம் தழுவிய அளவில் பிரச்சாரமாக எடுத்துச் செல்லும் ஒரு தன்னெழுச்சி அரசியல் வழியை மா... நடைமுறைப்படுத்தியது. தொடக்கத்தில் சில கிளர்ச்சி நடவடிக்கைகளுடன் தொடங்கிய இந்தப் பாதை, 1997-இல் மேலும் திசை திரும்பி, வெறும் பிரச்சாரங்களை மையப்படுத்தியதாக மாறியது.

2015-இல் முன்வைக்கப்பட்டு முன்னெடுத்துச் செல்லப்பட்ட கட்டமைப்பு நெருக்கடி என்ற புதிய செயல்தந்திரம், அதன் இயல்பிலேயே ஆளும் வர்க்க அரசியலின் ஒருசில கூறுகளை உள்ளடக்கியதாகவும், சோசலிசத்தை நோக்கிய புதிய ஜனநாயகப் புரட்சியை மாற்றாக முன்வைக்காமலும் அமைந்திருந்தது. இது கட்சியில் இருந்த தோழர்களின் சோசலிச உணர்வு குன்றுவதற்குக் காரணமாக அமைந்திருந்தது.

மேலும், அடிப்படை உழைக்கும் வர்க்கத்தின் பிரச்சினைகள், பொருளாதாரப் பிரச்சினைகள் எல்லாம் முக்கியமானவை அல்ல, அரசியலைப் பிரச்சாரமாக எடுத்துச் செல்வதுதான் முக்கியமானவை என்று முன்னெடுத்துச் செல்லப்பட்ட செயல்தந்திர அரங்கின் செயல்பாடுகள் காரணமாக, அடித்தள உழைக்கும் வர்க்கத்துடன் ஐக்கியமும் நெருக்கமும் குறைந்து வரத்தொடங்கியது.

கடந்த 25 ஆண்டு காலமாகப் பின்பற்றப்பட்ட இந்தத் தன்னெழுச்சி வகைப்பட்ட பிரச்சார வேலைப்பாணியாலும், செயல்தந்திரத்தை முன்னெடுத்துச் சென்றதில் நடந்த மேற்கண்ட தவறுகள் காரணமாகவும், எமது மக்கள்திரள் அரங்கின் பிரபலத் தலைவர்களும், குட்டி முதலாளித்துவப் படிப்பாளிப் பிரிவினரும் கட்சி அமைப்பு முறைகளை மீறிய, கண்காணிப்புக்கு அப்பாற்பட்ட தனிச்சிறப்பான சலுகைகள் பெறும் நிலை உருவானது.

இவர்களைக் கையாளும் சந்தர்ப்பவாத அணுகுமுறைகள் வளர்ந்து மாநில அமைப்புக் கமிட்டியை விசாரிக்கும் விசாரணைக்குழு அமைத்தல், மாநில அமைப்புக் கமிட்டியைக் கண்காணிக்கும் கமிட்டி என்று பொருள்படும்படியான ‘ஆலோசனைக்குழு’ அமைத்தல் போன்ற கலைப்புவாத அணுகுமுறைகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், ஏகாதிபத்தியங்களால் திணிக்கப்பட்டுவரும் மறுகாலனியாதிக்கக் கொள்கைகளின் விளைவாக இந்தியாவின் அரசியல் பொருளாதார நிலைமைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஆய்வு செய்வதாக ஏற்றுக் கொண்டிருந்த மா..., கடந்த 8 ஆண்டுகளாக, மூன்றுமுறை அவகாசம் கேட்டும் ஆய்வை முடிக்காததாலும், புதிய நிலைமைகளுக்கு ஏற்ப புதிய செயல்தந்திர அரசியலை வகுத்து முன்வைப்பதாகச் சொல்லி, அதுவும் நிறைவேறாமல் இருந்ததாலும், முன்னணியாளர்கள் மத்தியில் அதிருப்தியும் சோர்வும் நிலவியது.

இதேவேளையில், 1993-க்குப் பிறகான மாநில அமைப்புக் கமிட்டிகள், உரிய காலத்தில் பிளீனத்தை நடத்தாமல் அதிகமான கால அவகாசத்தை எடுத்துக் கொண்டது, ஆண்டறிக்கைகளை முன்வைத்து, தன்னைப் பரிசீலனைக்கு உட்படுத்தாமல் இருந்தது, பிளீனங்களில் நடைமுறைக்கு சாத்தியமற்ற சில முக்கியமான தீர்வுகளை முன்வைத்ததால், அவற்றை நிறைவேற்ற முடியாமல் போனது போன்ற காரணங்களால் அணிகளின் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டிருந்தன.

அதேவேளையில், அமைப்பை வழிநடத்திச் செல்வதில் அதிகாரத்துவ, அனுபவவாத, குறுங்குழுவாதத் தவறுகள் மற்றும் இவற்றின் காரணமாக, அணிகளுக்கும் தலைமைக்குமான இடைவெளி மிக அதிகமாக வளர்ந்திருந்தது என்பதை இந்தப் பிளீனம் அடையாளம் கண்டுள்ளது.

மேலும், அமைப்பில் ஏற்படும் பிரச்சினைகளைக் கையாளுவதில் மா..க இழைத்துள்ள பல தவறுகள் பக்குவமின்மை என்ற வகையைச் சேர்ந்தவை என்பதையும், அமைப்பின் பல்வேறு மட்டங்களில் பக்குவமின்மை வளர்ந்துள்ளதையும் இந்தப் பிளீனம் அடையாளம் கண்டுள்ளது. இவையும் மா... மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தன.

அமைப்பு விரிவடைந்த அளவுக்குப் போதுமான, தகுதியான இரண்டாம் தலைவர்கள் அனைத்து அரங்குகளிலும் இல்லாததாலும், குறிப்பாக, கீழ்மட்ட அணிகளைச் சோதித்து வழிகாட்டி இயக்கும் வேலையறிக்கை பரிசீலனை முறையை மா... படிப்படியாகக் கைவிட்டிருந்ததாலும், அமைப்பின் கீழ்மட்டங்களில் பல்வேறு தாராளவாத, சந்தர்ப்பவாத, குட்டி முதலாளித்துவக் கலாச்சாரம் பரவியிருந்தது.

மேற்கண்ட இந்தச் சூழலைத்தான் வலது திசைவிலகல் என்று பிளீனம் அடையாளம் கண்டுள்ளது. இந்த வலது திசைவிலகலைக் கேடாகப் பயன்படுத்திக் கொண்டுதான், ஒரு தாராளவாதக் கட்சியாக அமைப்பை மாற்றுவதற்கு இந்தச் சதிகார கும்பல் முயற்சித்து, கட்சியைப் பிளவுப்படுத்தியுள்ளது என்பதை பிளீனம் உணர்ந்துள்ளது.

இதே வேளையில், மா... .பொ.. (மாலெ), தமிழ்நாடு ஆகிய எங்களது அமைப்பு, இந்த வலது சந்தர்ப்பவாத தாராளவாத சீர்குலைவுவாத கலைப்புவாத சக்திகளுக்கு கடுகளவும் அடிபணிந்து செல்லாத, புரட்சிகர அடிப்படைக் கூறுகளைத் தன்னகத்தே கொண்டிருந்ததால்தான் கலைப்புவாதத்திற்குப் பலியாகாமல் கட்சி ஐக்கியத்தைக் கட்டிக்காத்து பிளீனத்தை நடத்தியுள்ளது.

குறிப்பாக, மாநில அமைப்புக் கமிட்டியாகிய எங்களது அமைப்பு, நக்சல்பாரி பாரம்பரியத்தை உயர்த்திப் பிடிக்கிறது; மார்க்சியலெனினியமாசேதுங் சிந்தனை என்னும் சித்தாந்த அடிப்படையை உயர்த்திப் பிடிக்கிறது; எஃகுறுதிமிக்க போல்ஷ்விக் பாணியிலான லெனினியக் கட்சி அமைப்பு முறையை உயர்த்திப் பிடிக்கிறது; இந்தியாவில் சோசலிசத்தை நோக்கிய புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்துவதற்கான திட்டத்தை உயர்த்திப் பிடிக்கிறது; நாடாளுமன்ற சமரசப் பாதையை நிராகரித்து புரட்சியை நடத்துவதற்கான மக்கள்திரள் வழியை உயர்த்திப் பிடிக்கிறது ஆகிய அடிப்படை அம்சங்களில் ஊன்றி நின்றதால்தான், இந்தச் சதிகார கும்பலால் கட்சியின் தலைமையை முழுமையாகக் கைப்பற்ற இயலவில்லை என்றும், அதனால்தான் இச்சீர்குலைவு கும்பல் கட்சியைப் பிளவுபடுத்தும் சீர்குலைவு நடவடிக்கைகளில் இறங்கியது என்றும் உணர்கிறோம்.

இந்தச் சூழலில், 25 ஆண்டுகளாக நிகழ்ந்த வலது திசை விலகலுக்குப் பொறுப்பேற்று அணிகளிடம் மா... சுயவிமர்சனமாக முன்வந்துள்ளது. குறிப்பாக, மா... செயலரின் தவறுகள் இந்த திசைவிலகலில் முக்கியப் பங்காற்றியதையும் இந்தப் பிளீனம் விமர்சனமாக முன்வைத்தது. வலது திசைவிலகலின் பல்வேறு கூறுகளைக் கூர்மையாக, விரிவாக, ஆழமாகப் பரீசிலித்து அணிகள் மத்தியில் தன்னையும் மொத்த அமைப்பையும் விரிவான சுயபரிசீலனைக்கு மா... உட்படுத்தியது.

பிளீனத்தின் கூட்டத்தில் பல சுற்றுக்கள் நடந்த வாதப்பிரதிவாதங்களில், கட்சியின் அணிகள் ஜனநாயக பூர்வமாக தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தினர், தலைமையில் தவறுகளைக் கூர்மையாக விமர்சித்தனர். கலைப்புவாதத்திற்கு பலியாகி, அது தவறு என்று உணர்ந்து பின்னர் மா...வின் தலைமையை ஏற்றுக்கொண்ட அணிகளில் சிலர் தங்களது சுயவிமர்சனம் ஏற்றனர்.

தங்களது பகுதிகளில் இக்கலைப்புவாதிகளை அண்டாமல் சில மாவட்டப் பகுதி தோழர்கள் அமைப்பைக் கட்டிக்காத்துள்ளனர். சில மாவட்டப் பகுதிகளில் வழிகாட்டி இயக்குவதற்கான பொறுப்பாளர்கள் இல்லாத நிலையிலும், சில அணிகள் தமது சொந்த அனுபவத்தின் ஊடாகப் பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு, சீர்குலைவுவாதிகளை முறியடித்து, மா...வின் தலைமையை உறுதிப்படுத்தியுள்ளதை இந்தப் பிளீனம் அங்கீகரித்து அத்தோழர்களுக்குப் புரட்சிகர வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

மொத்தத்தில், கட்சியில் பிளவு ஏற்பட்டிருந்தாலும், சதிகாரக் கும்பல் வெளியேற்றப்பட்டது ஒரு நல்நிகழ்வே என்றும், இதன் மூலம் வேண்டாத கழிவுப்பொருட்கள் வெளியேற்றப்பட்டு கட்சியானது தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் இப்பிளீனம் உறுதிபடத் தீர்மானித்துள்ளது. கட்சியின் பிளவுக்கான காரணம் வலது திசைவிலகல் என்று அடையாளம் கண்டிருப்பதும், அதனைத் தீர்ப்பதற்கு சரியான வழிமுறைகளை இந்தப் பிளீனம் முன்வைத்திருப்பதும், மொத்த அமைப்பிற்கும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் அளித்தது.

கட்சியில் ஏற்பட்டுள்ள வலது திசைவிலகலை முறியடித்து எஃகுறுதிமிக்க கட்சியைக் கட்டியமைப்பது, போர்க்குணம் வர்க்க அடித்தளம் என்ற பொதுத் திசைவழியின் மூல முழக்கத்தை உறுதியாக அமல்படுத்துவது; கோட்பாட்டை நடைமுறையுடன் இணைப்பது, கட்சியை மக்களுடன் இணைப்பது; கட்சியின் அனைத்து மட்டங்களிலும் மார்க்சிய லெனினிய சித்தாந்த மட்டத்தை உயர்த்துவது; இந்திய அரசியல் பொருளாதார சமூக நிலைமைகள் குறித்த ஆய்வினை முடிப்பது ஆகிய கடமைகளை நிறைவேற்றுவதில் உறுதியும் அக்கறையும் கொண்ட ஒரு புதிய மாநில அமைப்புக் கமிட்டியை இந்தப் பிளீனம் தேர்வு செய்தது.

மா.., .பொ..(மாலெ), தமிழ்நாடு ஆகிய எமது அமைப்பில் ஏற்பட்டுள்ள இந்தப் பிளவை முறியடித்து, கட்சி ஐக்கியத்தைப் பாதுகாத்து, வலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்டெடுக்கும் வகையில் நடந்து முடிந்துள்ள இந்தப் பிளீனம், எமது அமைப்புக்கு மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள புரட்சிகர மாலெ இயக்க வரலாற்றிலும் முக்கியமான திருப்பு முனையாகும். திரிபுவாத, சந்தர்ப்பவாத, கலைப்புவாத, பிளவுவாத, சதிகார, எதிர்ப்புரட்சி கும்பல்களை புதைகுழிக்குத் தள்ளும் மரண அடியாகும்!

♠ வலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்டெடுப்போம் !
♠ கலைப்புவாதம் – பிளவுவாதம் – சீர்குலைவுவாதம் தாராளவாதம் சந்தர்ப்பவாதம் அதிகாரத்துவம் சமரசவாதம் அனுபவவாதம் குறுங்குழுவாதத்தை முறியடிப்போம் !
புரட்சிகர மக்கள்திரள் வழியில் கட்சியின் திசைவழியை உறுதி செய்வோம்
!
எஃகுறுதிமிக்க போல்ஷ்விக்மயமான கட்சியைக் கட்டியமைப்போம்
!
மார்க்சிய
லெனினியமாசேதுங் சிந்தனையையும், நக்சல்பாரி பாரம்பரியத்தையும் உயர்த்திப் பிடிப்போம்! புதிய ஜனநாயகப் புரட்சியை வென்றெடுப்போம் !

*****

எமது தொழிற்சங்க அரங்கின் பொதுச்செயலாளராக இருந்தவரின் ஊழல் நடவடிக்கைகள் குறித்த எமது விளக்கம் மற்றும் சுயவிமர்சனம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, தோழர்களே, ஜனநாயக சக்திகளே!

எமது தொழிற்சங்க அரங்கின் செயலாளராக இருந்த சுப.தங்கராசு என்பவர், பெல் நிறுவனத் தொழிலாளர்களுக்கு வீட்டுமனை வாங்கித் தரும் சொசைட்டியின் செயலாளராகவும் இருந்து வந்தார். இந்த வீட்டுமனை வாங்கும் விசயத்தில் அவர் ஊழல் செய்வதாக கடந்த அக்டோபர்-2019-ல் கட்சித் தலைமைக்கு புகார் வந்தது. புகார் கிடைக்கப்பெற்ற உடனே, தொழிற்சங்க தலைமைக்குழு மூலமாக இது குறித்து விசாரிக்க ஏற்பாடு செய்தோம். அவர்களும் விசாரணைக்குழு அமைத்து விசாரித்து, விசாரணை அறிக்கையும் சமர்ப்பித்தனர். அவ்வறிக்கையில் ஊழல் மட்டுமல்லாமல் அனாதீன நிலத்தை வாங்கியதும் தெரிய வந்தது.

மா...வில் இருந்து இருவர் வெளியேறியிருந்த சூழலில், அது தொடர்பான வேலைகள், மக்கள் திரள் அரங்கின் மாநாட்டு வேலைகள் போன்றவற்றில் ஈடுபட்டிருந்த நிலையில், இந்த ஊழல் பிரச்சினை தொடர்பான விசாரணைக்குழு அறிக்கை மீது மா..க கவனம் செலுத்தி, நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது. புறநிலையாக பல்வேறு காரணங்கள் மற்றும் கொரோனா ஊரடங்கு காரணமாகவும் இந்த அலட்சியம் நடந்தது.

இந்த நிலையில், 2020 ஜூலை 29-31 தேதியிட்ட நக்கீரன் இதழில் இந்த ஊழல் குறித்த செய்தி வெளியானது. சமூக ஊடகங்களிலும் நூறு கோடி ஊழல் என்றும், இன்னும் பலவாறாக அவதூறாகவும் பலரும் எழுதினர். இதன் பின்னர், தொழிற்சங்கத் தலைமைக் குழுவானது தங்கராசுவை உடனடியாக இடைநீக்கம் செய்தது. முறைப்படியான நடவடிக்கைகளுக்குப் பின்னர், தங்கராசு தொழிற்சங்க அமைப்பில் இருந்தும் கட்சி அமைப்பில் இருந்தும் முழுமையாக நீக்கப்பட்டார்.

தங்கராசு விவகாரத்தில் மா... முறையாகச் சோதித்தறியாமல் பாரிய தவறிழைத்துள்ளதை உணர்ந்து சுயவிமர்சனம் ஏற்றது. குறிப்பாக, அவரை நேரடியாக இயக்கிய மாவட்டப் பொறுப்பாளர் மற்றும் மா... செயலர் ஆகிய இருவரும், இப்பிரச்சனையில் சொசைட்டி அலுவலகம் மற்றும் வசதிகளை அமைப்பு ரீதியாக உபயோகப்படுத்திய பயன்பாட்டுவாதம், தங்கராசு உடனான சமரசமான சகவாழ்வில் இருந்த குட்டி முதலாளித்துவத் தன்மை, முறையாக சோதித்தறியாதது, தனிச்சலுகை அளித்து அவரை நடத்தியது போன்றவற்றை சுயவிமர்சனமாக ஏற்றதை கடந்த 2021 ஜனவரி 1-3 தேதிகளில் நடந்த எமது அமைப்பின் பிளீனம் ஆகப் பெரும்பான்மையாக ஏற்றுக்கொண்டது.

மேலும், தங்கராசு மீது ஊழல் புகார் வந்தவுடன், விசாரணைக்குழு அமைப்பதில் மா.அ.க விரைந்து செயல்பட்டதை பிளீனம் அங்கீகரிக்கும் அதே வேளையில், அவர் மீது நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் செய்ததற்கான சுயவிமர்சனத்தை பிளீனத்தின் ஆகப் பெரும்பான்மை ஏற்கவில்லை.

ஓர் மா..க உறுப்பினர் மற்றும் மா...வின் செயலர் ஆகிய இருவரையும் இந்த மா...வின் பொறுப்புக்காலம் முடிவடையும் நிலையில் இருந்தாலும் மா...வில் இருந்து நீக்க வேண்டும் என்றும், புதிய மா...வுக்கு தேர்வு செய்யப்படக் கூடாது என்றும், இத்தவறு நிகழ்ந்த காலத்தில் பொறுப்பில் இருந்த மற்ற மூன்று மா... தோழர்களுக்கு எச்சரிக்கை விடுத்தும், இந்தப் பிளீனம் ஆகப் பெரும்பான்மையாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த ஊழல் பிரச்சினையானது, கட்சியின் வலது திசை விலகலின் ஓர் அங்கமாகவே உருவாகி, வளர்ந்து, வெளிப்பட்டுள்ளது என இந்தப் பிளீனம் பரிசீலித்து உணர்கிறது.

எமது அமைப்பில் 30-40 ஆண்டுக் காலமாகப் பணிபுரிந்து தலைமைக் குழுவிலும் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு, அற்ப அமைப்புப் பிரச்சினைகளை முன்வைத்து அமைப்பிலிருந்து விலகுவதாக பொதுவெளியில் அறிவித்துவிட்டு ஓடிப்போன இரண்டு மா... உறுப்பினர்களும், மா...விலியே மறைந்திருந்து மா... வுக்கு நெருக்கடி கொடுத்துவிட்டு ஓடிப் போயுள்ள மேலும் இரண்டு மா... உறுப்பினர்களும் இந்தப் பிரச்சினையை நன்கு அறிந்தவர்கள்தான்.

தங்கராசுவை முறையாக சோதித்தறியாமல் தாராளவாதமாக மா... நடந்துகொண்ட தவறில் இவர்களுக்கும் பங்கிருக்கிறது. ஆனால், தற்போது மா...மீது கேடாக அவதூறு பிரச்சாரம் செய்து தங்களை உத்தமர்களைப் போல காட்டிக் கொள்ளும் நயவஞ்சக கபட வேடதாரிகளாக இந்தக் கும்பலை அம்பலப்படுத்தி முறியடிக்க வேண்டும் என்று இந்தப் பிளீனம் அறைகூவல் விடுக்கிறது. தங்கராசுவுடன் சமரசமாக நடந்து கொண்டு கலைப்புவாத நடவடிக்கைகளால் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறரையும் இந்தப் பிளீனம் வன்மையாக க் கண்டிக்கிறது.

இவர்கள் தவிர்த்த, இப்பிரச்சினையில் ஏதேனும் ஒருவகையில் தொடர்புடைய இப்பிரச்சினை குறித்து கண்டிக்காத பிற தோழர்கள் மீதும் பிளீனம் தனது கண்டனத்தைப் பதிவு செய்கிறது. இந்த ஊழல் பிரச்சனையில் படிப்பினையாக, பிரபலமான முன்னணியாளர்களுக்கு சிறப்புச் சலுகைக் காட்டுவது, பயன்பாட்டுவாதம், தாராளவாதம், முறையாக சோதித்தறியாதது ஆகியவற்றுக்கெதிராக தோழர்கள் அனைவரும் அமைப்பு முழுவதும் விழிப்புணர்வுடன் இருந்து போராட வேண்டும். அமைப்பு முழுவதும் பாட்டாளி வர்க்கப் பண்பாட்டு நெறிமுறை மற்றும் கண்ணோட்டத்தில் ஊன்றி நின்று குறிப்பாக தலைமையாக செயல்படக்கூடிய தோழர்கள் செயல்பட வேண்டும் என்று பிளீனம் ஆகப் பெரும்பான்மையாக முடிவு செய்கிறது.

மா...வின் மீதிருந்த அதிருப்தியின் காரணமாக, சதிகாரகலைப்புவாதக் கும்பலின் அவதூறுகளுக்கு பலியாகியுள்ள, புரட்சியை நேசிக்கின்ற தோழர்களே!

கட்சியைக் கைப்பற்றும் நோக்கில் நடைபெற்ற சதியை அம்பலப்படுத்தியுள்ளோம். சதிகாரர்கள், கலைப்புவாதிகள், சீர்குலைவுவாதிகள் ஆகியோரின் தன்மையை வெளிக் கொணர்ந்துள்ளோம். தற்போது அமைப்பில் ஏற்பட்ட பிளவுக்கு கட்சி வலது திசைவிலகல் அடைந்திருப்பது அடிப்படை காரணமாக அமைந்துள்ளது என்று உணர்ந்துள்ளோம். இதில் இருந்து அமைப்பை மீட்டு சரியான மாலெ அடிப்படையிலான நமது மக்கள்திரள் வழியில் அமைப்பை நிலைநிறுத்த இந்தப் பிளீனம் உறுதி பூண்டுள்ளது. தவறுகளை அடையாளம் கண்டு சுயவிமர்சனத்துடன் திருத்திக் கொள்வதற்கான வழியைக் கண்டடைந்துள்ளது.

எனவே, நமது புரட்சிகரக் கட்சியின் அடிப்படையை, பாரம்பரியத்தினை உயர்த்திப் பிடித்து முன்னேறுவதற்கு, சீர்குலைவுவாதிகள் கலைப்புவாதிகளைப் புறக்கணித்துவிட்டு, மீண்டும் கட்சியில் இணைந்து செயல்பட முன்வாருங்கள் என இந்தப் பிளீனத்தின் மூலமாக அழைக்கிறோம்!

எமது அமைப்புக்குப் பலவகையிலும் உதவி வந்துள்ள புரட்சிகர ஜனநாயக சக்திகளே, எமது அமைப்பை நேசிக்கும் உழைக்கும் மக்களே,

எமது அமைப்பின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்திய சதிகாரர்கள் பிளவுவாதிகளை எமது அமைப்பிலிருந்து வெளியேற்றி, சரியான திசையில் நாங்கள் மீண்டும் பயணிக்கத் தொடங்கியுள்ளோம். எனவே, உங்களிடம் நிலவிய குழப்பத்தையும் அவநம்பிக்கையையும் கைவிட்டு எப்போதும் போல எங்களுக்கு ஆதரவாக நிற்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்! புரட்சியைச் சாதிக்கும் மகத்தான கடமையை நிறைவேற்ற எல்லா வகையிலும் எமக்கு உதவியாக நின்று தோள் கொடுப்பீர்கள் என்றும் நாங்கள் திடமாக நம்புகிறோம்!

புரட்சிகர வாழ்த்துகள்!

கும்பல் வன்முறையாக உருமாறும் ஆணவக்கொலை களம் !

ருவர் கனமான சிமிண்ட் கல்லால் பின்னந்தலையில் பலமாக தாக்குகிறார். தாக்கப்பட்ட அந்த இளைஞர் நிலைகுலைந்து கீழே விழுகிறார். முடிவெட்டுகிற அம்பட்ட நாய் நீ, எங்க பொண்ணு உனக்கு கேக்குதா என்று கூறிக்கொண்டே 12 பேர் கொண்ட கும்பல் அந்த இளைஞரை செருப்புக் காலால் எட்டி உதைக்கின்றனர். நெஞ்சில் ஏறி மிதிக்கின்றனர். வயிற்றில் கற்களால் அடித்து காயப்படுத்துகின்றனர். தரதரவென்று இழுத்துச் சென்று மார்பில் கத்தியால் குத்துகின்றனர். வயிற்றிலும் கத்தி குத்து. அந்த இளைஞர் பரிதாபமாக ரத்தம் கசிந்து இறந்து போகிறார்.

இந்த சம்பவம் பிற்பகல் 1.30 மணியளவில் நடக்கின்றது. கொல்லப்பட்ட இடம் கரூர், கல்யாண பசுபதி ஈஸ்வரன் கோவில் எதிரில். கோவிலுக்கும் காவல்நிலையத்திற்கும் இடையில் உயிர்போகும் நிலையில் துடிதுடித்து கிடந்தார் 23 வயது ஹரிஹரன். கல்யாண பசுபதி ஈஸ்வரன் கோவிலை கருமாதி தளமாக மாற்றியிருக்கின்றனர் சாதி வெறி பிடித்த கும்பல்.

படிக்க :
♦ உடுமலை சங்கர் கொலை வழக்கு தீர்ப்பு : சாதி ஆணவக் கொலைகளுக்கான அங்கீகாரம் !
♦ மீண்டும் முருங்கை மரம் ஏறுகிறது வேதாளம் !

ஹரிஹரன் ஏன் கொல்லப்பட வேண்டும்?

எவிடன்ஸ் குழுவினர் களஆய்வில் ஈடுபட்டனர். கரூர், தெற்குத் தெருவில் வசித்து வருபவர் ஜெயராமன். சலூன் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ஹரிஹரன் பொறியியல் பட்டப்படிப்பு முடித்துவிட்டு தனியாக சலூன் கடை வைத்துள்ளார்.
ஹரிஹரனின் வீட்டிற்கு அருகாமையில் தான் வேலன் என்பவர் குடியிருக்கிறார். வேலனின் மகள் மீனாவும் ஹரிஹரனும் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்த காதலுக்கு மீனாவின் குடும்பத்தினர் கடும் எதிர்பபு தெரிவித்து வந்துள்ளனர்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மீனாவின் தந்தை வேலன், பெரியப்பா சங்கர், சித்தப்பா முத்து, தாய்மாமன்கள் கார்த்திகேயன், வெள்ளைச்சாமி ஆகிய 5 பேர் ஜெயராமன் வீட்டிற்கு சென்று, உங்கள் மகனை ஒழுங்காக இருக்க சொல்லுங்கள். நாவிதர் வேலையை மட்டும் பார்க்க வேண்டும். உங்கள் சாதி என்ன எங்கள் சாதி என்ன? உங்கள் மகன் எங்கள் பெண்ணிடம் பழகுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் நடப்பதே வேறு என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

சம்பவ இடத்தைப் பார்வையிடும் எவிடன்ஸ் கதிர் குழுவினர்

இதனை அறிந்த மீனா அலைபேசி மூலமாக ஹரிஹரனின் தாயார் சித்ராவை தொடர்பு கொண்டு, உங்கள் மகனை நான் காதலிக்கிறேன். என்ன நடந்தாலும் அவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் 06.01.2021 அன்று பிற்பகல் 1.30 மணியளவில் 12 பேர் கொண்ட கும்பல் ஹரிஹரனை கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளனர். பொது மக்கள் முன்னிலையில் பட்டப்பகலில் இந்த கொலை நடந்திருக்கிறது.

சங்கர் ஆணவக்கொலை என்பது ஒரு கூலிப்படை வேகமாக அரிவாளால் வெட்டி கொலை செய்து இடத்தைவிட்டு கிளம்பினார். ஆனால் ஹரிஹரன் சுமார் 30 நிமிடம் தாக்கப்பட்டு கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டிருக்கிறார். சுமார் 200 மீட்டர் இடைவெளியில் காவல்நிலையம் இருக்கிறது. அந்த பகுதியில் போலீசாரும் ரோந்து பணியில் இருந்திருக்கின்றனர். இரண்டு நிமிடத்தில் அந்த பகுதிக்கு வந்து அந்த இளைஞரை மீட்டிருக்க முடியும்.

கொல்லப்பட்ட இளைஞர் ஹரிஹரன்

அந்த பகுதியில் இச்சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் எமது குழுவினரிடம் 12 – 15 பேர் சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறினார்கள். ஆனால் மீனாவின் குடும்பத்தினரை மட்டும் குற்றவாளிகளாக வழக்கில் போலீசார் சேர்த்துள்ளனர். பிற உடன் வந்த கும்பலை வழக்கில் சேர்க்காமல் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்துகிறது. குற்றவாளிகளில் 3 பேரை மட்டும் போலீசார் கைது செய்துள்ளனர்.

பெரும் கும்பலோடு ஒரு இளைஞரை தாக்குகின்ற போது பொது மக்கள் அச்சமடைந்து தடுக்க வரமாட்டார்கள். இதனை உணர்ந்துதான் மீனாவின் குடும்பத்தினர் பெரும் இளைஞர் அடியாள் கும்பலோடு சேர்ந்து கொண்டு அந்த இளைஞர் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.

இது திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை. காதலிக்கும் இளைஞரை பொது இடத்திற்கு வரவைத்து கல்லால் அடித்து கொல்வது என்பது நாகரீகமற்ற படுபாதக செயல். தமிழ்நாட்டில் இதுபோன்ற கலாச்சாரம் துவங்கியிருப்பது பெரும் ஆபத்து என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

படிக்க :
♦ கொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே !
♦ வேளாண் சட்டங்கள் நிறுத்திவைப்பு : உச்சநீதிமன்றத்தின் நரித்தனமும் மிரட்டலும் !

கும்பல் தாக்குதல், படுகொலை வன்முறையை தடுக்க தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் மிகப்பெரிய கலவர பூமியாக தமிழகம் மாறும்.
தமிழகத்தில் கொரோனா காலகட்டத்தில் மட்டும் 9 ஆணவக்கொலைகளும் மரணங்களும் நடந்துள்ளன. ஆனால் தமிழக அரசு இவற்றை தடுப்பதில் போதிய ஆர்வமும் அக்கறையும் காட்டவில்லை.

கடந்த 2018-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் ஆணவக்கொலையை தடுப்பதற்கு ஒவ்வொரு மாநில அரசுக்கும் 20 வழிகாட்டுதல் நெறிமுறைகளை தீர்ப்பாக வழங்கி நடைமுறைப்படுத்த வலியுறுத்தியிருக்கிறது. தமிழக அரசு இந்த வழிகாட்டுதல் நெறிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு கொண்டிருக்கிறது.

ஆய்வு முடிந்து திரும்புகையில் ஹரிஹரனின் உறவினர் ஒருவர் நாட்டில் உள்ள மக்களையெல்லாம் நாங்கள் அழகுபடுத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் சாதி எங்களை அசிங்கப்படுத்துகிறது; அழிக்கிறது; கொலை செய்கிறது என்றார்.
மீனா சாட்சி சொல்ல வரமாட்டார். பார்த்தவர்கள் எல்லாம் பயந்து கிடக்கிறார்கள். ஒத்த குடும்பம் நீதிக்காக காத்துகிடக்கிறது. பார்ப்போம்.

முகநூலில் : எவிடென்ஸ் கதிர்

disclaimer

வேளாண் சட்டங்கள் நிறுத்திவைப்பு : உச்சநீதிமன்றத்தின் நரித்தனமும் மிரட்டலும் !

0

த்திய அரசால் இயற்றப்பட்ட வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதை நிறுத்தி வைக்க இன்று (12-01-2021) உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். மேலும் விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே தேங்கி நிற்கும் பேச்சுவார்த்தையை நடத்தி தீர்வு காண்பதற்காக கமிட்டி ஒன்றையும் ஏற்படுத்தியிருக்கிறது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்..பாப்டே, .எஸ். போபண்ணா, ராமசுப்பிரமணியம் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு, இன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடிவருவது தொடர்பான வழக்கில் மேற்கண்ட உத்தரவை வழங்கியுள்ளது.

இதற்கு முன்னரே, கடந்த திங்கள்கிழமை (11-01-2021) அன்று விவசாயிகள் போராட்டத்தைக் கையாளுவதில் “விளைவுதரும் நடவடிக்கைகள்” எதையும் எடுக்காமல் இருக்கும் மத்திய அரசை உச்சநீதிமன்றம் கண்டித்தது. இது குறித்து இன்று (12-01-2020) தாம் முக்கிய முடிவெடுக்கவிருப்பதாகவும் தெரிவித்திருந்தது.

படிக்க :
♦ வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற கார்ப்பரேட்டுகளின் அடிமடியில் கை வைப்போம் !
♦ வேளாண் சட்டத்தினை அமல்படுத்தத் துடிக்கும் மோடி அரசு !

அந்த வகையில் இன்று இந்த சட்டத்தை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. மேலும் விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்த ஒரு கமிட்டி ஒன்றை அமைத்தும், அக்கமிட்டியில் இடம்பெறக்கூடிய நபர்களை முன்மொழிந்தும், அக்கமிட்டிக்கு இருதரப்பும் ஒத்துழைக்குமாறும் உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றத்தின் வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க உத்தரவிட்டதையும் இதற்கு முன்னர் நேற்று மோடி அரசை ‘கண்டித்ததையும்’ சுட்டிக் காட்டி பலரும் இதை ஒரு தற்காலிக வெற்றியாகவோ, அல்லது மோடி அரசுக்கு ஒரு பின்னடைவாகவோ கருதுகின்றனர்.

ஆனால், விவசாயிகள் பிரச்சினை தொடர்பான விவகாரத்தில் இந்த இரண்டு நாட்களில் (ஜன. 11,12 – 2021) உச்சநீதிமன்றத்தின் திருவாயிலிருந்து உதிர்ந்த முத்துக்களில் இருந்து இவ்விவகாரத்தைப் பரிசீலித்தாலே இது திட்டமிட்ட நரித்தனம் என்பது புரியவரும்.

பேச்சுவார்த்தை நடத்த உச்சநீதிமன்றம் அமைப்பதாகச் சொன்ன கமிட்டியில் இடம்பெற்றிருப்பவர்கள், விவசாய பொருளாதார அறிஞர் அஷோக் குலாட்டி, பாரதிய கிஷான் சங்கத்தின் பூபிந்தர் சிங் மண், சேத்கரி சங்க்தனாவைச் சேர்ந்த அனில் கான்வாட் மற்றும் பிரமோத் குமார் ஜோஷி ஆகியோர்தான். இவர்களில் பெரும்பான்மையினர் இதற்கு முன்னர் வெளிப்படையாகவே வேளாண் சட்டங்களை ஆதரித்தவர்கள் என்று தி வயர் இணையதளம் கூறுகிறது.

வேளாண் சட்டங்களை வெளிப்படையாக ஆதரித்தவர்களை வைத்து ஒரு கமிட்டி போடுவேன்; அவர்கள்தான் மத்தியஸ்தம் செய்வார்கள். அதனை நீ ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் ?

கடந்த 11-01-2021 அன்று உச்சநீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணையில் விவசாய சங்கங்களின் சார்பாக ஆஜரான வழக்கறிஞரிடம், “ நாங்கள் போராட்டங்களுக்கு எதிரானவர்கள் அல்ல. நீதிமன்றம் போராட்டங்களை நெறிப்பதாகப் புரிந்து கொள்ளவேண்டாம். ஆனால் நாங்கள் கேட்கிறோம். இந்தச் சட்டங்கள் நிறுத்திவைக்கப்பட்டால், மக்களின் விருப்பத்தைக் கணக்கில் கொண்டு போராட்டத் தளத்தை மாற்றிக் கொள்வீர்களா?” என்று கேட்டுள்ளார் தலைமை நீதிபதி போப்டே.

அதாவது மக்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் போராட்டத்தை நடத்திக் கொள்ளவேண்டுமாம். இப்போது விவசாயிகளின் போராட்டக் களத்தை மாற்ற வேண்டும் என்று எந்த குடிமக்கள் வந்து போராட்டம் நடத்தினர் ? வேளாண் சட்டத்திற்கு ஆதரவாக போராட்டமும், பொதுக்கூட்டமும் நடத்தி அடி வாங்கியதும், விவசாயிகளின் போராட்டத்தை மக்களுக்கு இடையூறு விளைவிப்பதாகக் கூறி வழக்கு தொடுத்ததும் சங்கிகள் மட்டும்தான்.

ஆனால் நீதிபதிகளுக்கு ‘மக்களின்’ தேவைக்காக டெல்லி முற்றுகையை விவசாயிகள் கைவிட வேண்டுமாம்! எந்த மக்கள் ? வேறு யார் கார்ப்பரேட் மக்கள்தான்.

அடுத்ததாக, மக்களால் “தேர்ந்தெடுக்கப்பட்ட” அரசு இயற்றிய ஒரு சட்டத்தை நீதிமன்றத்தால் தன்னிச்சையாக நிறுத்தி வைக்க முடியுமா? அது அரசியல் சாசன சட்டத்திற்கு விரோதமானது என நிறுவினால்தான் ஒரு சட்டத்தை செல்லாததாக அறிவிக்க முடியும். அப்படியில்லாத சூழலில் சட்டத்தை நிறுத்தி வைப்பது என்பது சாத்தியமற்ற ஒன்று.

படிக்க :
♦ வேளாண் சட்டத்தினை அமல்படுத்தத் துடிக்கும் மோடி அரசு !
♦ மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராட வேண்டும் ஏன்?

அப்படி சட்டப்படி சாத்தியமற்ற ஒன்றை அவசர அவசரமாக உச்சநீதிமன்றம் செய்ய வேண்டிய அவசியம் என்ன ?

விவசாயிகள் சங்கம் ஜனவரி 26-ம் தேதி டெல்லிக்குள் நுழையப் போவதாக அறிவித்திருந்தது. பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், .பி, .பி ஆகிய மாநிலங்களில் உள்ள ஆண், பெண் விவசாயிகள், கூலி விவசாய தொழிலாளர்கள் தங்கள் குழந்தைகளுடன், வீட்டில் உள்ள முதியவர்களுடன் கூட்டம் கூட்டமாகப் பங்கெடுத்து நடத்தப்போகும் இந்த டெல்லி நுழைவுப் போராட்ட அறிவிப்பு, மத்திய அரசுக்கு ஒரு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

விவசாயிகள் போராட்டத்தை பிற போராட்டங்களைப் போல சிறு துப்பாக்கிச் சூடு நடத்தியோ, சங்க பரிவாரக் கும்பலை வைத்து கலவரம் விளைவித்தோ கலைத்து விடமுடியாது என்பதை பாஜக அரசு நன்கு உணர்ந்துள்ளது. அதே நேரத்தில் தனது கார்ப்பரேட் எஜமானர்களுக்காக இயற்றப்பட்ட இந்த வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவும் முடியாது. விவசாயிகளும் விடாப்பிடியாக இருக்கின்றனர்.

ஆகவே விவசாயிகளின் போராட்டத்தைக் கலைக்க, இப்போராட்டங்களுக்கு எதிராக மக்கள் மனநிலையை மாற்றும் வகையில் பிரச்சாரம் செய்யத் துவங்கியது. குறிப்பாக பல்வேறு அவதூறுகளைப் பரப்பியது.

முதலில், இச்சட்டம் விவசாயிகளுக்கு ஆதரவானது என்றும், விவசாயிகள் புரிந்து கொள்ளாமல், எதிர்கட்சிகளின் சதிக்கு ஆட்படக்கூடாது என்றும் மோடி நீலிக் கண்ணீர் வடித்து வந்தார்.

அதன் பின்னர், விவசாயிகள் போராட்டத்தில் காலிஸ்தான் தீவிரவாதிகளும், தடை செய்யப்பட்ட அமைப்புகளும் ஊடுறுவிவிட்டதாக சங்க பரிவாரக் கும்பல் சமூக வலைத்தளங்களிலும், மோடி ஆதரவு ஊடகங்களிலும் கருத்துக்களைப் பரப்பத் துவங்கின. ஆனால் அதுவும் மக்கள் மத்தியில் எவ்விதத்திலும் எடுபடவில்லை.

தற்போது நீதிமன்றத்தின் மூலமாக, விவசாயிகளுக்கு எதிரான கருத்துக்கள் மக்கள் மத்தியில் உருவாக்கும் வேலையைத் துவக்கியிருக்கிறது. வெளிப்படையாகவே வேளாண் சட்டங்களை ஆதரித்தவர்களை வைத்து உச்சநீதிமன்றம் ஒரு கமிட்டியை அமைத்துள்ளதோடு, “பிரச்சினையை தீர்க்க உண்மையாக விரும்புவோர், தற்போது அமைக்கப்பட்டுள்ள கமிட்டியை ஏற்றுக் கொள்வார்கள்” என்றும் கூறியிருக்கிறது. இது ஒரு அப்பட்டமான மிரட்டல் அல்லவா ?

நாடெங்கும் நடக்கும் விவசாயிகள் போராட்டம்

நீ என்னோடு இல்லையெனில், எதிரியோடு இருக்கிறாய்” என்ற ஜார்ஜ் புஷ்இன் வார்த்தைகளை நீதிமன்றம் விவசாயிகளைப் பார்த்து தற்போது கூறியிருக்கிறது. இவர்கள் அமைத்த கமிட்டியை ஏற்றால்தான் பிரச்சினையை உண்மையாக தீர்க்க விரும்புவோராம். கமிட்டியில் இருப்பவர்களின் யோக்கியதையைக் கொண்டு கேள்வி எழுப்பினால், பிரச்சினையை உண்மையாக தீர்க்க விரும்பாதவராம்.

உச்சநீதிமன்றமும், மோடி அரசும் உருவாக்க விரும்பும் பிம்பம் அதுதான். “விவசாயிகள் உள்நோக்கத்தோடு மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் போராடுகிறார்கள். உச்சநீதிமன்றம் வேளாண் சட்டங்களை நிறுத்தி வைத்தும் போராட்டத்தைக் கைவிடாமல் நீடிக்கிறார்கள்” என்ற சிந்தனையை சாதாரண மக்களின் மனதில் ஏற்படுத்துவதற்கான முன்னடி வேலைகள்தான் உச்சநீதிமன்றத்தின் இன்றைய உத்தரவுகள்.

விவசாயிகள் இந்த விசயத்தில் தற்போது வரை, வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாமல் தங்களது போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று உரக்கக் கூறியிருக்கின்றனர். விவசாயிகளை நிலைகுலையச் செய்யும் ஆளும் வர்க்கம் மற்றும் அதிகார வர்க்கத்தின் இத்தகைய தாக்குதல்களின் தாக்கத்தில் இருந்து விவசாயிகளைக் காக்க வேண்டும்.

அதற்கு நாம் அனைவரும் தொழிலாளர்களாக, .டி. ஊழியர்களாக, மாணவர்களாக, சிறு வியாபாரிகளாக, சிறு தொழில்முனைவோராக நம் அனைவரின் மீதும் சுரண்டலைத் திணிக்கும் கார்ப்பரேட் கும்பலுக்கு எதிரான போரைத் துவங்க வேண்டும்.

வேளாண் சட்டங்களால் பயனடையத் துடிக்கும் அம்பானி, அதானி உள்ளிட்ட கார்ப்பரேட்டுகளை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கும் போராட்டத்தைத் துவங்க வேண்டும். கார்ப்பரேட் எஜமானர்கள் பணிந்துவிட்டால், அவர்களின் ஏவலாளிகளும் ஏவலாளிகளின் கைப்பாவைகளும் தாமாக அடங்கி விடுவார்கள். இதுதான் நமக்கு உணவிடும் விவசாயிகளை காக்க நம் முன் இருக்கும் ஒரே தீர்வு !


சரண்
செய்தி ஆதாரம்
:
The Wire, The Wire

 

அதிமுக பொதுக்குழு கூட்டம் : போலீஸ் அடாவடித்தனத்தை முறியடித்த பொதுமக்கள் !!

வேலை நிமித்தமாக கடந்த 09.01.2021 அன்று கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து சரியாக காலை காலை 8.15 மணிக்கு பூந்தமல்லி செல்ல உரிய பேருந்தில் ஏறி அமர்ந்தேன். பேருந்தில் பெரும்பாலும் வேலைக்கு செல்வோரும் வெளியூரில் இருந்து வந்தவர்களுமாக நிரம்பியிருந்தனர்.

பேருந்து ரோகிணி திரையரங்கைக் கடக்கையிலேயே, “அ.இ.அ.தி.மு.க. வின் வரலாற்று சிறப்பு மிக்க மாநில செயற்குழு – பொதுக்குழுவிற்கு வருகைத்தரும் ……………….. அவர்களே வருக ! வருக !” என வானகரம் வரை சுவரொட்டிகளும் பேனர்களும் சாலை நெடுகிலும் குத்தாட்டமும் நிரம்பி வழிந்தது தெரிந்தது. முதல்வர் பதவியை அடைவது ஒன்றுதான் சாதனை என்பதால் அடிமைகளுக்கு மேற்படி கூட்டம் வரலாறாக தெரிகின்றது.

சாலையின் சென்டர் மிடியத்தில் வாழைக் கன்னு, கரும்பு, கட்சி கொடிகளும் திருவிழா கோலமாக கட்டப்பட்டிருந்தன. இந்த நிகழ்ச்சியின் விளம்பரதாரர் – விசுவாசிகள் பலர் இருந்தாலும் ஊரக மற்றும் தொழில் துறை அமைச்சரின் (பா.பென்ஜமின்) பாத்திரம்தான் முதன்மையானது என்பதை பார்த்தவுடன் தெரிந்து கொள்ள முடிந்தது.

படிக்க:
♦ வெள்ளாற்றில் 180 கோடி மணல் கொள்ளை ! அதிமுக ஆட்சியில் ஒரு துளி !
♦ பாஜகவும் அதிமுகவும் ஒண்ணு அறியாதவன் வாயில் மண்ணு !

ஏற்கெனவே சொன்னது போல சாலை நெடுகிலும் குத்தாட்டம் – கோஷம் போட கூட்டமும் நிறைந்திருந்ததானது, பொதுப் போக்குவரத்திற்கும் மக்களுக்கும் இடையுறாக இருந்தது அதிகார வர்க்கத்திற்கு தவறாக தெரியவில்லை. விவசாயிகள் – தொழிலாளர்கள் வாழ்வுரிமையை பறிக்கும் சட்டத்திருத்தத்திற்கு எதிராக அவசியமான போராட்டம் என அனுமதி கோரினால் ஆயிரத்தட்டு நொட்டம் சொல்லி மறுப்பதையே சட்டம் என்பார்கள்.

இவர்களின் சட்டம் அதிகாரம் எல்லாம் கார்ப்ரேட்டுகளின் காலை நக்குவதையும் மக்களின் வாழ்வுரிமையை பறிப்பதையும் இலக்காக கொண்டிருப்பது தற்போதைய அரசியல் சூழலில் நாம் காணும் உண்மையாகும்.

வாகன நெரிசலில் சிக்கிக் கொண்டால் விரயமாகும் நேரம், அதன் விளைவாக திட்டமிட்ட வேலைகள் தாமதம் ஆவது அல்லது நடக்காமல் போவதால் ஏற்படும் மன உளைச்சலை விளக்க வார்த்தைகள் போதாது. ஏனெனில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு இப்போதுதான் மெல்ல மெல்ல வேலைக்குச் செல்லும் நிலையில் இது போன்ற நிகழ்வால் மக்களின் அன்றைய நாள் பிழைப்பு நாசமாகிறது.

சிறிது தூரம் போவது பின்னர் நிற்பது என்ற நிலை மாறி பேருந்து ஊர்ந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டது. பயனிகளிடையே முனுமுனுப்பு துவங்கியதோடு, சிலர் தங்களது வேலை நிலைமையைச் சொல்லி எரிச்சலுடன் பேசிக்கொண்டிருந்தனர். இந்நிலையில் பேருந்து மதுரவாயல் பாலம் அருகே சென்றதும் போலீஸ்காரர் ஒருவர் ஒடி வந்து பேருந்தை நிறுத்தி ஒட்டுநரிடம் போரூர் இராமச்சந்திரா வழியாக செல்லுமாறு கூறினார்.

இதற்கு ஒட்டுநர் மறுத்து காலை நேரம் எல்லோரும் வேலைக்கு செல்கின்றனர், இது பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறி மறுப்பை தெரிவித்துக் கொண்டிருக்கும் போது உயர் அதிகாரி போன்ற தோற்றத்தில் இருந்தவர் தனது புருவத்தை உயர்த்தி ஒட்டுநரை பார்த்து “யோவ் நான் DC சொல்றேன் பஸ்ஸை திருப்புய்யா.. என்னய்யா பேசிக்கிட்டு இருக்க” என சொன்னதுடன் தனது கைகளால் (ஒட்டுநர் பக்கம் இருக்கும்) கதவை அடித்து மீண்டும் அதட்டும் குரலில் பேசினார்.

போலீசுக்கும் ஒட்டுநருக்குமான பிரச்சினை, மக்களுக்கும் போலீசுக்குமான பிரச்சினையாக மாறியதும், எதிர்ப்பு பலமாக வந்தது. பத்துக்கும் மேற்ப்பட்டோர் மேற்படி உயர் அதிகாரியை சூழ்ந்து கொண்டு தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். மறுபுறம் பேருந்தின் ஜன்னல்களின் வழியாக வசவுகளும் கண்டனங்களும் இலக்கு நோக்கி பாயும் தோட்டா போல பாய்ந்தவண்ணம் இருந்தன.

நிலைமை கைமீறிப் போவதை உணர்ந்த அதிகாரிகள் வழக்கமான வழியிலே செல்லலாம் என்றனர். இதற்கிடையில் பேருந்து இடது பக்கம் (அதாவது புறநகர் பேருந்துகள் திருச்சி, தஞ்சை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு திரும்பும் இணைப்பு சாலையில்) திரும்பி விட்டபடியால் பேருந்தை முழுவதமாக பின்பக்கமாக எடுத்துதான் திரும்ப வேண்டும். அதற்குகேற்ப தயாரான ஒட்டுநரிடம் மேற்படி அதிகாரி ரிவர்ஸ் வராமாலே முன் பக்கம் இருக்கும் வழியை காட்டி அதில் வண்டியை திருப்புமாறு கூறினார்.

2-3 நாட்கள் தொடர் மழையால் சேறும் சகதியமாக இருந்ததால் ஒட்டுநர் அந்த வழியில் செல்ல தயங்கியவர் கன நேர யோசனைக்கு பிறகு ஒட்டுநர் அந்த சேறும் – சகதியுமான வழித்தடத்தில் பேருந்தை இயக்கினார் பேருந்தும் நகர துவங்கியது.

இதைப் பார்த்த மேற்படி அதிகாரி ஒட்டுநர் தயங்கியபடி பேருந்தை எடுத்ததை ஏதோ மாபெரும் குற்றமாக சித்தரித்து, “தே***யா பசங்களா! பஸ்தான் திரும்பதே இதை ஏன்ட கேக்கமாட்டிங்களா?” என்றும் ஒட்டுநரையும் – நடத்துனரையும் வாய் கூசிப் போகும் அளவு பேசினார். இவர்தான் சென்னை மாநகர் “காவல்”துறையின் துணை ஆணையர் தேன் தமிழ்வாணன்.

இது குறித்து நடத்துனரிடம் பேசுகையில், “எங்கள் இருவரையும் (ஓட்டுநர், நடத்துநர்) செல்போனில் பேட்டோ எடுத்துக் கொண்டனர். பொய்யாக புகார் அளித்து விசாரணை என்ற பெயரில் அலைக்கழிக்கவும் செய்யலாம்” என்றார்.

இப்போது பிரச்சனையை சற்று ஆழமாக பார்க்கலாம். அதிகார வர்க்கத்தைப் பொறுத்தவரையில், ஒரு கட்சியின் பொதுக்குழு கூட்டத்துக்கு பாதுகாப்பு மற்றும் முறைப்படுத்தலும் அவர்கள் ஏற்றுக் கொண்ட சட்டப்படி அவசியமாக இருந்தாலும், ஆகப் பெரும்பான்மையான மக்களுக்கும் அவர்களது அன்றாட நடவடிக்கைகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் செய்வதுதானே அதிகாரிகளின் கடமை ?

படிக்க :
♦ வேளாண் சட்டத்தினை அமல்படுத்தத் துடிக்கும் மோடி அரசு !
♦ இந்தியா 2020 : வல்லரசு கனவும் – தொடரும் துயரமும்

மக்கள் என்றால் ரேஷன் கடையில் வரிசையில் நிற்பவர்கள் டாஸ்மார்க் கடைக்கு செல்பவர்கள் வெள்ளத்திற்கு இரையாகிப்போன பயிர்களுக்கு நிவாரணம் கேட்பவர்கள் கூலி உயர்வு கேட்டு போராடும் தொழிலாளர்கள், இவர்களுக்கெல்லாம் எதுவும் தெரியாது; அவர்கள் மந்தைகள் என்பதுதான் அவர்களின் சட்டவியல் மற்றும் நிர்வாக இயலில் மக்கள் என்போருக்கான விளக்கம்.

சில தினங்களுக்கு முன்பு ஆவடி பேருந்து நிலையம் எதிரில் உள்ள ஒரு தேநீர் கடையில் தேநீர் குடித்துக் கொண்டிருக்கையில் காவலர் பயிற்சி பெறும் இளைஞரொருவர் வந்தார். அவரிடம் பணி நிலைமைகள் மற்றும் ஊதியம் குறித்து பேசிக் கொண்டே துத்துக்குடி துப்பாக்கி சுடு குறித்து என்ன நினைக்கின்றீர்கள்? என்றபோது, “அதைப்பற்றியெல்லாம் பேசக்கூடாது” என்றார். ஏன் என்றபோது, “அது அப்படித்தான்.. அதிகாரி சொல்வதைத்தான் நாங்கள் கேட்க வேண்டும்” என்றார்.

பகுத்தறிவுக்கு பொருந்தாத இவர்களது அதிகாரமும், அதற்கு கட்டுப்பட வேண்டும் என தனது துறையைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி மக்களும் கீழ்படிய வேண்டும் என நிர்பந்திப்பது, அடக்குமுறையும் அடிமைத்தனமும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை உணர்த்துகிறது. இதன் விளைவுதான் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடந்த படுகொலை முதல் அன்றாடம் நடந்தேறும் அடக்குமுறைகள் வரை அனைத்தும். மொத்தத்தில் தனது மேல் அதிகாரிக்கு விசுவாசமாக நடந்து கொள்வதே அதிகாரப் பிரிவினரின்  நேர்மைக்கான இலக்கணமாக போதிக்கப்படுகின்றது.

நடந்த இந்த சிறு நிகழ்வில் மக்கள் பக்கம் நின்றவர்கள் யார் ? ஓட்டுநரும் நடத்துநரும் தானே அன்றி தேன் தமிழ்வாணன் போன்ற அதிகார வர்க்கத்தினர் அல்ல. அதிகார வர்க்கம் என்றுமே ஆளும் வர்க்கத்திற்கு மட்டுமே சேவை செய்யும் என்பதோடு, மக்களுகு எதிரானது என்பதையும் இந்தச் சம்பவம் நிரூபித்திருக்கிறது.

பின் குறிப்பு : பேருந்தின் வழித்தடம் 153A  – CMBT TO திருவள்ளுர்; வண்டி எண் TN 01 AN 2972; புறநகர் பேருந்து நிலையத்தில் புறப்பட்ட நேரம் சரியாக 8.15 AM

ஆ. கா. சிவா
காண்ட்ராக்ட் தொழிலாளர் விடுதலை முன்னணி

பெரம்பலூர் : மரபு வழி பிரசவ மரணம் – அறிவியலை நம்புவோம் !

ரு நாட்டின் முன்னேற்றத்தை அளவீடு செய்வதற்கு அந்நாட்டில் கர்ப்ப காலத்தில் / பிரசவம் ஏற்படும்போது தாய்மார்கள் மரணமடையும் சதவிகிதம் எவ்வளவு? பிறந்த பின் ஒரு வருடத்திற்குள் சிசு மரணமடையும் சதவிகிதம் எவ்வளவு? என்பதைத்தான் முதலில் பார்க்கப்படும்.

இதில் கர்ப்ப காலத்தின் போது பிரசவத்தின் போது பிரசவத்திற்குப் பின் ஆறு வாரங்களுக்குள் ஏற்படும் தாய் மரணங்களை கர்ப்ப கால தாய் இறப்பு விகிதம்” MATERNAL MORTALITY RATE என்று அழைக்கிறோம்

ஏன், இந்த MMR எனும் Maternal Mortality Rate க்கு இத்தனை வெய்ட்டேஜ் (முக்கியத்துவம்) என்றால் கர்ப்பம் மற்றும் பிரசவம் / குழந்தை பிறப்பு ஆகியவை மனிதனின் வாழ்க்கை சங்கிலியில் இன்றியமையாதவை. மேலும் இயற்கை இயல்புடனேயே நடைபெறுபவை. இதை Physiological Process என்று வழங்குவோம்.

படிக்க :
♦ பிரசவகால மரணங்கள் : இலுமினாட்டி பைத்தியங்களுக்கு பதில் !
♦ போலி அறிவியல் – மாற்று மருத்துவம் – மூட நம்பிக்கை : ஒரு விஞ்ஞான உரையாடல்

மாறாக பிரவசம் என்பதோ கர்ப்பம் என்பதோ நோய்க்குறி அன்று. Pathological process அன்று. ஆயினும் ஒரு பெண் கர்ப்பமடைந்ததில் இருந்து அவள் ஒரு கருவை தன்னகத்தே வளர்த்து பிரசவிக்கும் வரை அவளது உடலில் பல மாற்றங்களை சந்திக்கிறாள்.

ரத்த கொதிப்பு ஏற்படுதல் (Pregnancy Induce Hypertension)
கர்ப்பம் சார்ந்த நீரிழிவு நோய் ( Gestational Diabetes)
ரத்த சோகை ( Gestational Anemia)
உயரம் குறைவாக இருந்தாலோ இடுப்பெலும்பு குறுகலாக இருந்தாலோ குழந்தையின் கபால விட்டம் பெரிதாக இருந்தாலோ பிரசவத்தின் போது குழந்தை இறங்காமல் மேலேய நின்று கீழிறிங்குவது தடை படும் ( Cephalo pelvic Disproportion)
ஏற்கனவே தாய்க்கு இதய நோய் / வலிப்பு நோய் இருப்பின் பிரசவத்தின் போது அதன் தீவிரம் கூடி பிரச்சனை தரும் (Heart disease)
பிரசவத்தின் போது ஏற்படும் வலிப்பு நோய்
தாய்க்கு பனிக்குடம் முன்கூட்டியே உடைந்து அதனால் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு கர்ப்பபைக்குள்ளேயே மலம் கழித்து அதை சிசு உண்டு மரணிக்கும் தன்மை (Pre mature rupture of membrane / Meconium Aspiration syndrome)
குழந்தை பிரசவிக்கப்பட்டாலும் நஞ்சுக்கொடி முறையாக வெளியே வராமல் போகலாம்.
குழந்தையும் நஞ்சுக்கொடியும் வெளியே வந்ததும் கர்ப்பப்பை இயல்பாக சுருங்கிவிட வேண்டும். ஆனால் சில நேரங்களில் அவ்வாறு நேராமல் அதீத உதிரப்போக்கு நேரும் தன்மை வரும். இதனால் தாய் கண்ணுக்கு முன்னே மரணமடையும் நிலை வரும். இதை Post partum Hemorrhage என்போம்

மேற்சொன்னவையன்றி இன்னும் ஏனைய முறைகளில் பல சவால்களை முன்னிறுத்தியது கர்ப்ப காலமும் பிரசவமும். இதனால் தான் இதற்கான பிரத்யேக படிப்பாக இரண்டு வருடம் பயிலும் DGO ( Diploma in obstetrics and gynaecology) மற்றும் மூன்று வருட பட்டப்படிப்பான MD( OG) இருக்கிறது.

இன்னும் எம்பிபிஎஸ் பயிலும் மருத்துவர்கள் தங்களது இறுதி ஆண்டு படிப்பில் மூன்று மாதங்கள் கட்டாயமாக மகப்பேறு மருத்துவப்பிரிவில் பாடம் கற்பார்கள். மேலும் தங்களது பயிற்சி மருத்துவ காலத்தில் இன்னும் மூன்று மாதங்கள் மகப்பேறு துறையில் கட்டாயப் பணி செய்வார்கள்.

இத்தனை கடினமான பயிற்சிகளைப் பெற்ற நிபுணர்களும், பிரசவம் பார்க்கத் தேவையான சிறப்பு பயிற்சிகளை கற்றுச்தேர்ந்த செவிலியர்களும், நடுநிலை சுகாதார செவலியர்களும் சேர்ந்து 1980களில் ஆரம்பத்தில் ஒரு லட்சம் பிறப்பிற்கு 500+ தாய் மரணங்கள் நடந்து வந்த நம் நாட்டின் நிலையில் இருந்து தற்போது 2019-ம் ஆண்டு 113 என்ற நிலைக்கு குறைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்த MMR கடந்த 2019-2020-ம் ஆண்டு 53.3 தான்; அதாவது தமிழகத்தில் ஒரு லட்சம் குழந்தை பிறப்பிற்கு 53.3 தாய்மார்கள் இறக்கிறார்கள். தமிழகத்தில் நடக்கும் பிரசவங்களில் 99% சதவிகிதம் மருத்துவமனைகளில் மட்டுமே நடக்கின்றன.

மருத்துவமனைகளில் பிரசவங்கள் நடக்கும் போதும் ஒரு லட்சத்துக்கு 53 மரணங்கள் நிகழ்கின்றனவே என்ற கேள்வி வருவதை அறிய முடிகின்றது. அதற்கான காரணம் அரசு பல முயற்சிகளை செய்து தாய்மார்களை மருத்துவமனைகளுக்கு அழைத்து கர்ப்ப கால சிகிச்சைகளை வழங்கி பிரவசத்தை எளிமையாக்கினாலும் பல கர்ப்பம் சார்ந்த பிரச்சனைகள் அதிகரித்து வருவதும் இன்னும் பலர் இத்தகைய சிறப்பான வசதிகளை பயன்படுத்திக் கொள்ளாமல் தங்களது கர்ப்பகால சந்திப்புகளை உதாசீனம் செய்வதாலும் ஆபத்து காலங்களில் விரைவில் மருத்துவமனைகளை எட்டாமல் தாமதிப்பதும் தாய் மரணங்களுக்கு இன்றவளவும் காரணங்களாக இருக்கின்றன.

எனினும் கர்ப்பகால தாய் மரணங்களைக் குறைத்திட ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகின்றன. அவற்றை இங்கு சுருக்கமாக விளக்குகிறேன்

1. ஜனனி சுரக்ஷா யோஜனா
சுருக்கமாக JSY என்று அழைக்கப்படும் இந்த திட்டம் 2005ஆம் ஆண்டில் இருந்து வழக்கத்தில் இருக்கிறது. இந்த திட்டம் மூலம் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சுகாதார நிலையங்களில் பிரசவம் நிகழுமாயின் கிராமமாக இருப்பின் தாய்க்கு ரூபாய் 700 நகரமாக இருப்பின் ரூபாய் 600 உடனடியாக கிடைக்கும். இது பிரசவ கால செலவினங்களுக்கு உதவும் ஊக்கத்தொகையாகும்.

2. ஜனனி சிசு சுரக்ஷா கார்யக்ராம்
சுருக்கமாக JSSY என்று அழைக்கப்படும் இந்த திட்டம் 2011ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகின்றது. இந்த திட்டம் மூலம் கர்ப்பகால கவனிப்புகள் அரசாங்க நிலையங்களில் நடக்கும் பிரசவங்கள் அனைத்தும் இலவசம். மேலும் சுகப்பிரவசங்களுக்கு மூன்று நாட்கள் மூன்று வேளை உணவு ( தாயோடு சேர்த்து கூட தங்கும் ஒருவருக்கும் வழங்கப்படுகின்றது) சிசேரியன் என்றால் ஏழுநாட்கள் மூன்று வேளை உணவு வழங்கப்படும்.

பிரசவத்திற்கு தாய் வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு வருவதையும் நல்லமுறையில் குழந்தை பெற்று மீண்டும் தாயையும் சேயையும் நலமுடன் வீட்டுக்கு சென்று விடுவதையும் இந்த திட்டம் இலவசமாக்கியது. மேலும் பிறந்த குழந்தைக்கு ஒருவருடம் வரை எந்த நோய் ஏற்பட்டாலும் இலவச சிகிச்சை உறுதி செய்யப்பட்டது.

3. லக்ஷயா (LaQshya)
இந்த திட்டம் 2017 முதல் இயங்கி வருகின்றது. இதன் மூலம் அரசு சுகாதாரத்துறைக்கு கீழ் இயங்கி வரும் மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் மகப்பேறு மற்றும் பிரசவம் பார்க்கும் அறைகள், சிசேரியன் அறுவை சிகிச்சை நடக்கும் அரங்கங்களின் தரத்தை உறுதி செய்வது.

மகப்பேறு சிகிச்சை வழங்கும் நிபுணர்கள் , மருத்துவர்கள் , செவிலியர்கள் சரியான எண்ணிக்கையில் இருப்பதை உறுதி செய்வது, அவர்களுக்கு முறையான பயிற்சிகளை வழங்குவது, அவர்களது அறிவை அப்டேட் செய்வதை உறுதி செய்வது, மகப்பேறு மற்றும் பிரசவ கால அவசர சிகிச்சைத்துறையை மேம்படுத்துவது என்று இந்த திட்டம் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

4. பிரதான் மந்திரி சுரக்ஷித் மட்ரித்வ அபியான்

சுருக்கமாக PMSMA திட்டம். இது 2016-ம் ஆண்டு முதல் நடந்து வருகின்றது. ஒவ்வொரு மாதத்தின் ஒன்பதாவது நாள் நாடு முழுவதும் உள்ள அரசு சுகாதார நிலையங்களில் மகப்பேறு நிபுணர்களின் நேரடி பங்கெடுப்பில் இரண்டாம் மற்றும் மூன்றாம் மும்மாத நிலையில் இருக்கும் கர்ப்பிணிகளுக்கு செக்அப் நடைபெறுவதை இந்த திட்டம் உறுதி செய்கின்றது.

இதன் மூலம் அதிக கவனம் தேவைப்படும் HIGH RISK தாய்மார்கள் அடையாளம் கண்டறியப்படுகிறார்கள். அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார்கள். பிரசவம் சார்ந்த அவர்களது மரணமடையும் வாய்ப்பு வெகுவாக குறைக்கப்படுகின்றது.

5. சுமன் திட்டம் ( சுரக்ஷித் மட்ரிவ்த ஆஷ்வாசன்)

இந்த திட்டம் 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கர்ப்ப காலத்தில் இருக்கும் எந்த தாய்க்கும் சிகிச்சை அளிக்க யாரும் மறுக்கக்கூடாது. மீறி மறுத்தால் அது அலட்சியமாகப் பார்க்கப்பட்டு தண்டனை நிச்சயம் எனும் நிலையை இந்த திட்டம் பிரகடணப்படுத்துகின்றது. கர்ப்ப கால தாய் மரணங்களை கட்டாயம் ஆவணப்படுத்த வேண்டும். மேலும் அவற்றை தீவிரமாக ஆய்வுக்குட்படுத்திட வேண்டும் என்பதை இந்த திட்டம் வலியுறுத்துகின்றது.

ஒவ்வொரு தாயும் கட்டாயம் கர்ப்ப காலத்தில் குறைந்தபட்சம் ஆறு முறை மருத்துவரை சந்தித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை இந்தத் திட்டம் விதிக்கின்றது. பிரதி வாரம் செவ்வாய்க்கிழமையை பிரத்யேகமாக கர்ப்ப கால தாய்மார்களை கவனிக்கும் நாளாக ANTENATAL CARE DAY என்று அறிவித்து அவர்களுக்கு நாடு முழுவதும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. அந்த நாளில் சத்தான மதிய உணவு தாய்மார்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றது.

படிக்க :
♦ பிரசவத்துக்கு ஆஸ்பத்திரி போவக் கூடாதுன்னு எந்த முட்டாள் சொல்றான் ?
♦ பெண்களைக் காப்பாற்றுவது மரபு வழிப் பிரசவமா ? நவீன மருத்துவமா ?

நடுவண் அரசு கொண்டு வந்து தமிழக மருத்துவமனைகளில் அமல்படுத்திடும் மேற்சொன்ன திட்டங்களன்றி நமது தமிழகத்தில் தமிழக அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பின்வருமாறு

1. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித்தொகை
தற்போது அரசாங்க மருத்துவமனைகளில் பதிந்து முறையாக கர்ப்ப கால பரிசோதனைகளை செய்து கொண்டு அரசாங்க மருத்துவமனையில் பிரசவம் பார்த்து முறையாக குழந்தைக்கு தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளும் தாய்க்கு ரூபாய் 18000 ( ஊட்டச்சத்து பெட்டகம் அடக்கமாக) வழங்கப்படுகின்றது. இது நாட்டிலேயே முன்னோடி திட்டமாகும். ஊட்டச்சத்து பெட்டகத்தில் புரதச்சத்து பிஸ்கட்கள், பேரீச்சம் பழங்கள், சத்துமாவு, நெய், துண்டு என்று தாய்வீட்டில் கவனிப்பது போன்று அரசு கவனிக்கிறது.

2. பிறந்த குழந்தைக்கு அம்மா குழந்தைகள் நலப்பெட்டகம் வழங்கப்படுகின்றது
குழந்தைகள் நலப்பெட்டகத்தில் கொசு வலை , நகவெட்டி, குழந்தைகளுக்கான பிரத்யேக சோப், பவுடர் என்று சிறப்பான திட்டமாகும். இவையன்றி நாடுமுழுவதும் கர்ப்பமுற்ற தாய்மார்களை முறையாக பதிவு செய்து அவர்களது கர்ப்பகாலம் முழுவதும் சேவை வழங்கி அவர்கள் பிரசமுற்று குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்குவது வரை அத்தனையும் PREGNANCY INFANT COHORT MONITORING AND EVALUATION என்ற பிரத்யேக மென்பொருள் திட்டம் மூலம் பதிந்து கண்காணிக்கப்படுகின்றது.

இத்தகைய திட்டத்தை வளர்ந்த நாடுகளில் மட்டுமே கேள்விப்பட்டிருப்பீர்கள் ஆனால் நமது நாட்டில் இந்த திட்டம் கடந்த பத்து வருடங்களாகவே செயல்படுத்தப்பட்டு வருவதையும் அறிந்து கொள்ளுங்கள்.

மேற்சொன்ன அத்தனையும் செய்து பிரசவங்களை இலவசமாக்கி இலகுவாக்கி தரமானதாக்கி தாய் மரணங்களை குறைக்க எண்ணினால், ”நான் மரபு வழிப்படி வீட்டில் பிரசவம் செய்து கொண்டு மரணத்தை தேடிக்கொள்வேன்” என்று தாய்மார்கள் நினைப்பது வேதனை அளிக்கின்றது.

உண்மையில் அரசின் இந்த சேவைகளை பாரம்பரிய வாழ்க்கையில் இருக்கும் மலைவாழ் மக்கள் கூட தேடித்தேடி வந்து பெற்றுக்கொள்கின்றனர். ஆனால் படிப்பறிவில் சிறந்து விளங்கும் மேட்டுக்குடி மக்களே அறிவியலை புறந்தள்ளி மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப அழைக்கின்றனர். அவர்களது அறைகூவலை ஏற்றால் மீண்டும் தற்போது நடக்கும் தாய் மரணங்களை காட்டிலும் பத்து மடங்கு அதிகமாகும் நிலை ஏற்படும்.

சுகாதாரத்துறை சார்பாக பலமுறை கெஞ்சி கூத்தாடி அழைக்கப்பட்டும், காவல் துறை மூலம் எச்சரிக்கை வழங்கப்பட்டும் கூட பாரம்பரிய முறைப்படி வீட்டிலேயே முறையான பயிற்சி பெறாதவர்கள் மூலம் பிரசவம் பார்த்துக்கொள்கிறேன் என்று எம்எஸ்சி நர்சிங் பயின்ற சகோதரி முடிவு செய்தது தான் மிகப்பெரிய ஆச்சரியமும் அவலமும்.

குழந்தையின் தலை இடுப்பெலும்பில் சிக்கி மரணிக்க அது அழுகிப்போக தாய்க்கு HELLP எனும் கல்லீரல் கோளாறு மற்றும் ரத்த தட்டணுக்கள் குறைந்து போகும் தன்மை ஏற்பட்டு மரணமடைந்திருக்கிறார். இது நிச்சயம் பலருக்கும் பாடமாக அமைய வேண்டிய நிகழ்வு.

அரசாங்கமும் சரி, அறிவியலும் சரி எவ்வளவு முயற்சி செய்தாலும் தன் உயிரையும் உடலையும் காத்துக்கொள்ளும் தன்னலன் பேணாதவர்களை காத்திட இயலாது. அறிவியல் பாதையில் செல்வோம்! வெல்வோம் !

தற்போதும் கூட மருத்துவ வசதிகள் முழுமையாக சென்று சேராத தமிழகம் அளவு மருத்துவ வசதியை கண்டிராத அசாம் மாநிலத்தில் MATERNAL MORTALITY RATE 213 என்ற அளவில் அதிகமாக உள்ளது. தமிழகத்திலோ இந்த அளவை 53 என்று குறைத்துள்ளோம்.

நாம் வளர்ந்த நாடுகளின் அளவை எட்டிட அறிவியல் கூறும் பாதைக்கு அனைவரும் வருவதே சிறப்பானது என்று கூறி இந்த கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

முகநூலில் : Dr.A.B.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர், சிவகங்கை

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற கார்ப்பரேட்டுகளின் அடிமடியில் கை வைப்போம் !

0

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்தியுள்ள பேச்சுவார்த்தை எவ்வித முடிவும் எட்டப்படாமல் இழுபறியில் முடிந்துள்ளது. தங்களது உரிமைகளுக்காகப் போராடும் விவசாயிகளை மேலும் மேலும் சோர்வுக்கும் விரக்திக்கும் உள்ளாக்கும் வேலையை மத்திய மோடி அரசு தொடர்ந்து செய்து வருகிறது.

மத்திய அரசு கடந்த செப்டெம்பர் மாதம் அவசர அவசரமாக நிறைவேற்றிய வேளாண் திருத்தச் சட்டங்களை எதிர்த்து கடந்த 47 நாட்களாக தொடர்ந்து டெல்லியின் ஐந்து எல்லைப் பகுதிகளிலும் முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

படிக்க :
♦ டெல்லி சலோ : பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சியை வீழ்த்திய நிலமற்ற தலித் கூலி விவசாயிகள் !
♦ டெல்லியில் போராடும் ‘காலிஸ்தானி’ தான் பாஜக-வின் மகிழ்ச்சியான விவசாயியாம் !

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விவசாயிகள் அறைகூவல் விடுத்த டெல்லி சலோ பேரணிக்கு செவி சாய்த்து கிளம்பிய பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், .பி, .பி மாநில விவசாயிகளை அந்தந்த மாநில எல்லைகளில் வைத்து முடக்க நினைத்தது மத்திய அரசு.

பாஜக ஆளும் மாநிலங்களான, அரியானா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆளும் அரசுகள் ஏவிய ஒடுக்குமுறைகளைத் தகர்த்தெறிந்து விட்டு டெல்லி நோக்கித் திரண்டனர் விவசாயிகள்.

மத்தியில் ஆளும் பாஜக அரசின் அனைத்து வகையான வஞ்சக சமரசங்களையும் ஏற்க மறுத்து கடந்த 47 நாட்களாக கடுங்குளிரிலும், மழையிலும் விடாமல் நின்று போராடி வருகிறார்கள் விவசாயிகள்.

இந்நிலையில் இதுவரை விவசாயிகளிடம் 8 முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ள மத்திய அரசு இந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவது சாத்தியமற்றது என்பதையே திரும்பத் திரும்ப ஒரே புராணமாகப் பாடி வருகிறது.

ஜியோவை புறக்கணிக்கும் விவசாயிகள்

சமீபத்தில் நடந்த எட்டாவது சுற்று பேச்சுவார்த்தையில் வேளாண் சட்டங்களை திரும்பவாங்க முடியாது என்றும், நீதிமன்றத்தின் வசம் இந்த விவகாரத்தை விடுவதுதான் சிறந்தது என்றும் மத்திய அரசு கூறியுள்ளதாக விவசாயி சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

விவசாய சங்கத் தலைவரான ஹன்னன் மொல்லா இது குறித்துக் கூறுகையில், இதற்காக மரணம் வரை சண்டையிடத் தயாராக உள்ளோம். நீதிமன்றத்திற்குச் செல்வது ஒரு வழிமுறையல்ல என்றார். அடுத்தகட்ட போராட்டம் குறித்து விவசாயிகள் சங்கம் ஜனவரி 11 –ல் (இன்று) முடிவெடுக்கும் என்றும் பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

பேச்சுவார்த்தையைப் புறக்கணிப்பதன் மூலமும், விவாயிகளைப் போராட்டத்தில் இருந்து தடுப்பதன் மூலமும், விவசாயிகளை தொடர்ச்சியாக ஏமாற்றிவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம் பிரச்சினையை நீதிமன்றத்தில் தீர்க்கச் சொல்கிறது” என்கிறார் அனைத்திந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் கமிட்டியின் (AIKSCC) கவிதா குருகந்தி.

உச்சநீதிமன்றத்திற்கு செல்வது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள கவிதா குருகந்தி, ”உச்சநீதிமன்றம் ஏற்கெனவே விவசாயிகளை போராட்டக் களத்தில் இருந்து வெளியேற்றுவது பற்றி குறிப்பிடுகையில், போராடுவது விவசாயிகளின் ஜனநாயக உரிமை என்று தெரிவித்துள்ளது. மேலும் இந்த வேளாண் சட்டங்களின் அரசியல் சாசன செல்லுபடித்தன்மை அதாவது, மாநில அரசின் அதிகாரத்தின் கீழ் உள்ள ஒரு விவகாரத்தில் மத்திய அரசு சட்டம் நிறைவேற்ற முடியுமா? முடியாதா? என்பது மற்றொரு விவகாரம். இவ்விவகாரத்தில் செல்லுபடியாகும் என்றோ, செல்லுபடியாகாது என்றோ எந்தப் பதிலை நீதிமன்றம் அளித்தாலும், அது இப்பிரச்சினையை தீர்க்கப் போவதில்லை.

ஏனெனில் விவசாயிகள் இச்சட்டங்களின் அரசியல் சாசனத்தன்மை குறித்துக் கேள்வி எழுப்பவில்லை. இந்த வகையான கொள்கைத் திசைவழி மற்றும் சட்டம் குறித்துத்தான் கேள்வி எழுப்புகிறார்கள். இவ்விவகாரம், கொள்கை அடிப்படையிலானதாகப் பார்க்கப் படவேண்டியதே தவிர, அரசியல்சாசனத்தின் அடிப்படையிலான பிரச்சினையாக பார்க்கப்பட வேண்டியது அல்ல. உச்சநீதிமன்றம் என்ன சொன்னாலும், இச்சட்டங்கள் திரும்பப் பெறப்படும் வரை விவசாய சங்கங்கள் தங்கள் முடிவை மாற்றிக் கொள்வதில்லை என்பதில் தெளிவாக இருக்கின்றன” என்று கூறியிருக்கிறார்.

மற்றொரு விவசாயிகள் சங்கத் தலைவரான ஜோகிந்தர் சிங் உக்ரஹான் இதுகுறித்துக் கூறுகையில், “மத்திய அரசு விவசாயிகளின் பலத்தை சோதித்துப் பார்க்கிறது. நாங்கள் பணியப் போவது இல்லை. நாங்கள் லோஹ்ரி (ஜனவரி 13) திருவிழாவையும், பைசாகி (ஏப்ரல் 14) திருவிழாவையும் இங்குதான் கொண்டாடுவோம் போலத் தெரிகிறது” என்று குறிப்பிடுகிறார்.

இப்படி பேச்சுவார்த்தைகள் இழுபறியில் நீடித்திருக்கும் சூழலில், குடியரசு தினத்தன்று டெல்லிக்குள் நுழைய இருப்பதாக விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து ஜோகிந்தர் சிங் கூறுகையில், “ ஜனவரி 26-ம் நாள் அன்று அனைத்து தடுப்பரண்களையும் தகர்த்தெறிந்துவிட்டு டெல்லிக்குள் நுழைவோம் என இந்த அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுக்கிறோம். எங்கள் மீது அவர்கள் தடியடி நடத்தலாம். துப்பாக்கிச்சூடு நடத்தலாம். நாங்கள் அது குறித்து கவலைப்படப் போவதில்லை. எங்களது இறுதி ஆட்டத்தை அவர்களோடு ஆடப் போகிறோம். ஜனவரி 26-ம் தேதி என்ன நடந்தாலும் அது அர்சாங்கத்தின் பொறுப்பு, அவர்கள்தான் அதற்குப் பழிகூறப்பட வேண்டும். ” என்றார்.

படிக்க :
♦ டிசம்பர் 14 : பாஜக அலுவலகங்களை முற்றுகையிடுவோம் – விவசாயிகள் சங்கம் அறைகூவல் !
♦ விவசாயிகள் போராட்டத்தை திட்டமிட்டு கொச்சைப்படுத்தும் பி.ஜே.பி ட்ரோல்கள் !

போராடும் விவசாயிகள் இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது எனத் தயாராகிவிட்டனர். பாசிச மோடி அரசோ, இதனைக் கண்டுகொள்ளத் தயாராக இல்லை. மத்திய அமைச்சர்களும், பாஜக தலைவர்களும் விவசாயிகள் போராட்டம் குறித்து திமிரெடுத்துப் பேசுவது குறையவில்லை.

வெவ்வேறு வழிமுறைகளில் விவசாயிகள் போராட்டத்தை சீர்குலைக்க சதி வேலைகளைச் செய்ய முனைகிறது மோடி அரசு. சட்டரீதியான போராட்டமாக இதனை மாற்றி நீர்த்துப் போகச் செய்ய முனைகிறது. கைமீறிச் செல்லும்போது இப்போராட்டங்களை வன்முறை கொண்டு ஒடுக்கவும் தயாராக உள்ளது.

குஜராத்தில் ஜனநாயகத்தை மலமள்ளும் காகிதமாக மதித்து 2002 கலவரத்தை நடத்தி முடித்த மோடி இந்தியாவின் அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் உரிமைகளையும் காலில் போட்டு மிதித்திருக்கும் மோடி அமெரிக்காவில் தம்மையொத்த வலதுசாரி வெறியர்கள் அந்நாட்டின் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து அதகளம் செய்ததை சமீபத்தில் கண்டித்து அறிக்கைவிட்டார் மோடி.

சட்டவிரோதப் போராட்டங்களின் மூலம் ஜனநாயகத்தின் மாண்புகளை அழிக்க அனுமதிக்க முடியாது” என அமெரிக்க வன்முறையைக் கண்டிக்கிறார் மோடி. இது விவசாயிகள் போராட்டத்தைக் குறிவைத்துக் கூறப்பட்ட வாசகங்கள்தான். சட்டவிரோதமாக கலவரம் நடத்தி ஆட்சிக்கு வந்தவர்தான் இந்த மோடி. டிரம்பும் மோடியின் உயிர் நண்பர்தான். ஹிட்லர் முசோலினியைப் போல, மோடி டிரம்ப் என்பது எடுப்பான ஜோடிதான்.

வேளாண் சட்டங்களின் அடிக்கொல்லியை அலறச் செய்யும் விவசாயிகள் !

ஆனாலும் மோடி “ஜனநாயகத்திற்காகக்” குரல் கொடுக்கிறார்; டிரம்பின் ஆதரவாளர்களுக்கு எதிராக குரல் கொடுக்கிறார் என்றால் அதற்குக் காரணமில்லாமல் இல்லை. விவசாயிகளின் உறுதியைக் கண்டுணர்ந்துள்ள மோடி தலைமையிலான பாசிசக் கும்பல், விவசாயிகளை வில்லன்களாகக் காட்ட அடுத்தகட்ட நடவடிக்கைகளை விரைவில் செய்யத் துவங்கும். அதற்கான சமிக்ஞைதான் அமெரிக்க வன்முறை குறித்த மோடியின் கருத்து.

இதனை முறியடிக்க வேண்டுமெனில், நெருப்பை அணைக்க அடிக்கொள்ளியை பிடுங்கி எடுக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. வேளாண் சட்டத்தை எந்த கார்ப்பரேட்டுகளின் ஏவலுக்குப் பணிந்து அவசர அவசரமாக நிறைவேற்றி அதற்காக சொந்த நாட்டு விவசாயிகளைக் கொல்வதற்கும் தயாராக இருக்கிறதோ, அந்தக் கார்ப்பரேட்டுகளின் அடிமடியில் கை வைத்தால்தான் அவர்களது ஏவலாளியாகச் செயல்படும் மோடி அரசை இறங்கிவரச் செய்ய முடியும். வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வைக்கமுடியும்.

இதற்கு நல்ல ஒரு உதாரணத்தையும் நமக்கு இந்த விவசாயிகள் போராட்டம் எடுத்துக் காட்டியுள்ளது. வேளாண் பொருட்கள் சந்தையில் நுழைந்துள்ள அதானி , அம்பானியின் பொருட்களைப் புறக்கணிப்போம் என விவசாயிகள் கொடுத்த அறைகூவல் முகேஷ் அம்பானியை பொறிகலங்கச் செய்ததை சமீபத்தில் கண்டோம்.

ஜியோ தொலைபேசி இணைப்பைக் கைவிடுமாறும், ரிலையன்ஸ் பொருட்களை புறக்கணிக்குமாறும் விவசாயிகள் அறைகூவல் விடுத்தனர். பஞ்சாபில் பல ரிலையன்ஸ் டவர்கள் சேதமாக்கப்பட்டன. அரண்டு போன முகேஷ் அம்பானி அவசர அவசரமாக, தனக்கு எதிராக ஏர்டெல், வி.. உள்ளிட்ட தொலை தொடர்பு நிறுவனங்கள் சதி செய்வதாகக் கூறினார். மேலும் தாம் வேளாண் சந்தையில் எவ்வித முதலீடும் செய்யவில்லை என்றும் தன்னிலை விளக்கம் அளித்ததோடு, கோர்ட்டிலும் இதனைத் தெரிவித்தார்.

வேளாண் சந்தையில், குளிரூட்டப்பட்ட சேமிப்புக்கலன்கள் தொடங்கி, ஆண்ட்ராய்ட் செயலிகள் வரை முதலீடு செய்துள்ள யோக்கியர்’ முகேஷ் அம்பானி, இப்படி ஒரு பொய்யைச் சொல்ல வேண்டிய அவசியத்தை உருவாக்கியது, அம்பானியின் உயிராதாரமான உள்நாட்டுச் சந்தையின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்தான்.

வேளாண் சட்டங்களின் அடிக்கொல்லி கார்ப்பரேட்கள் தான். அந்த அடிக்கொல்லியை அகற்றுவது என்பது விவசாயிகள் மட்டுமே செய்யக் கூடிய காரியம் அல்ல. நாம் அனைவரும் ஒன்றிணைந்து செய்யக் கூடிய காரியம் அது. வேளாண் சட்டத்தின் பின் நிற்கும் கார்ப்பரேட் கும்பலின் சந்தையின் மீதான தாக்குதல்தான் அவர்களை அதிரச் செய்யும் ஒரே வழி. கார்ப்பரேட் அடிக்கொல்லியை பிடுங்கிவிட்டால், வேளாண் சட்டங்கள் தானாக அணைந்துவிடும் !


சரண்

நன்றி : The Wire

டெல்லி சலோ : பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சியை வீழ்த்திய நிலமற்ற தலித் கூலி விவசாயிகள் !

புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து போராட, ஜனவரி 7-ம் தேதி வியாழக்கிழமையன்று பஞ்சாப் கெட் மஸ்தூர் (PKMU) யூனியன் அமைப்பை சேர்ந்த 2000 கூலி விவசாய தொழிலாளர்கள் பஞ்சாப், டப்வாலியிலிருந்து அரியானாவுக்கும் டெல்லிக்கும் இடையில் உள்ள  திக்ரி எல்லைக்கு புறப்பட்டுள்ளனர். இது புதியதொரு வரலாற்றைப் படைத்திருக்கிறது.

இதை புதிய வரலாறு என நாம் குறிப்பிடக் காரணம், தற்போது போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, திக்ரி எல்லை நோக்கி படையெடுத்திருக்கும் இந்த நிலமற்ற கூலித் தொழிலாளர்கள் அனைவரும், இதற்கு முன்னர் பொதுநிலத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட  மூன்றில் ஒரு பங்கு தங்களுக்குக் கிடைக்கப்பெறாதது குறித்த எழுந்த முரண்பாட்டில் பிற சமூகத்தினரோடு முரண்பட்ட கிராமங்களில் இருந்து வந்துள்ளனர் என்பதுதான்.

படிக்க :
♦ டெல்லி சலோ : தன்னெழுச்சி அல்ல ! வர்க்கரீதியாக அணி திரட்டப்பட்ட விவசாயிகளின் பேரெழுச்சி !
♦ விவசாய மசோதாக்கள் : பஞ்சாப் விவசாயிகளின் உள்ளக் குமுறல் …

நாடு முழுவதும் உள்ள 472-க்கும் மேலான விவசாய சங்கங்கள் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிற அதே நேரத்தில்  டெல்லி எல்லையில் விவசாயிகள் 40 நாட்களுக்கும் மேலாக இன்றுவரை போராடி வருகின்றனர். இந்த போராட்டமானது பஞ்சாப் விவசாயிகளால் தலைமை தாங்கப்பட்டிருக்கிறது. பஞ்சாப்பில் எல்லா சாதியினரும் நிலம் வைத்திருக்கின்றனர். ஆனால், மாநில மக்கள் தொகையில் 25 சதவீதம் உள்ள  ஜாட் சாதியினர்தான் அதிகமாக நிலம் வைத்திருக்கக் கூடியவர்கள். அதே நேரத்தில் மாநில மக்கள் தொகையில்  32 சதவீதம் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள்  வெறும் 2.3 சதவீத விவசாய நிலம் மட்டுமே வைத்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில், இந்த புதிய வேளாண் சட்டத்தை ஆதரிக்கக் கூடியவர்களுக்கு இந்த போராட்டம், ஜாட் சாதியினர் சம்மந்தபட்டது என்று முத்திரை குத்த எளிதாகி விடுகிறது. குறிப்பாக தலித் சமூகம் ஜாட் சாதியினருடன் பஞ்சாப்பின் சில பகுதிகளில் மேற்குறிப்பிட்ட நிலப்பிரச்சினையை ஒட்டி ஏற்பட்ட மோதலை கருத்தில் கொண்டு இப்போராட்டம் குறித்து இத்தகைய கருத்தாக்கத்தை எளிமையாக ஏற்படுத்திவிட முடிகிறது.

உதாரணமாக, 2014-ம் ஆண்டில் சங்க்ருர் மாவட்டத்தின் பால்டு காலன் என்ற கிராமத்தில் உள்ள தலித் மக்கள் அக்கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து பொது நிலத்தில் மூன்றில் ஒரு பங்கை குத்தகைக்காக கோரிக்கை வைத்து கேட்ட பொழுது, அவர்கள் போலீசின் தாக்குதலையும், நீதிமன்ற வழக்குகளையும் சிறையையும் கூட எதிர்கொள்ள நேர்ந்தது. ஆனாலும் உறுதியாக நின்று, அந்தப் பொது நிலத்தில் மூன்றில் ஒரு பங்கு உரிமையை பெற்றனர்.

பால்டு காலன் கிராமத்தை சேர்ந்த நிலமற்ற கூலி தொழிலாளியான ஹர்பால் சிங்கிற்கு  கிராம பொது நிலத்தில் 0.2 ஏக்கர்  மட்டுமே கிடைக்கப்பெற்ற போதிலும், டெல்லி எல்லையில் நடக்கும் போராட்டத்தில் பஞ்சாப்பிலிருந்து வந்த விவசாயிகளுடன் சேர்ந்து கலந்து கொண்டார். ஊருக்கு திரும்பியுள்ள ஹர்பல், “புதிய வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படவில்லை என்றால் எங்களுக்கு  வேலை கிடைக்காது. விவசாயிகளுடன் ஒன்றுபடுவது எங்களின் கடமை. நாங்கள் விவசாயிகளுடன் நட்புறவு வைத்துள்ளோம்” என்று கூறுகிறார்.

2016-ல் சங்க்ருர் மாவட்டம், ஜாலூர் கிராமத்தில் கிராம பொது நிலம் சம்மந்தமாக ஜாட் மற்றும் தலித் மக்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் குர்தேவ் கவுர் என்ற பெண்மணி கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தார். ஆனால், நிலமற்ற கூலி தொழிலாளியான குர்தாஸ் சிங்கும்,  ஜாலூரிலிருந்து வந்து  டெல்லி எல்லையில் நடக்கும் போராட்டத்தில் பங்கெடுத்துக்கொண்ட  பல தலித் மக்களில் ஒருவராக இருக்கிறார்.

தற்போது ஊருக்கு திரும்பியுள்ள குர்தாஸ் , “எங்களுக்கு நிலம் கிடையாது. ஆனால், இந்த சட்டம் எங்களுக்கும் ஆபத்து தரக்கூடியதாக உள்ளது. பொது கிராம நிலம் மீது எங்களுக்கும் நில உடமையாளர்களுக்கும் சண்டை இருந்தது, ஆனால், எங்களுக்குள் தனிப்பட்ட பகை உணர்வு இல்லை.” என்கிறார்.

மேலிருந்து கீழ்நோக்கி வரும் பாதிப்பு :

மேலோட்டமாக பார்த்தால், இந்த புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளை மட்டும் பாதிப்பதாக தோன்றுகிறது. ஆனால், ஜமீன் பிரபாதி சங்கர்ஷ் கமிட்டி என்கிற தலித் நில உரிமைக்காகப் போராடும் அமைப்பின் தலைவர் முகேஷ் மலாடு, விவசாய கூலி தொழிலாளிகளும் இந்த சட்டங்களால் பாதிக்கப்படுவார்கள் என்கிறார். “அரசாங்கம் வேளாண் விளைபொருள் சந்தை கமிட்டியை (APMCs),  கலைத்தால் லட்சக்கணக்கான தலித் கூலி தொழலிளாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழப்பார்கள்.,” என்று தி வயர் இணையதளத்திடம் பேசுகையில் தெரிவித்தார்.

“டெல்லி எல்லையில் போராட வந்திருக்கும் தலித் மக்களில் பெரும்பாலானோர் உயர் அறிவு பெற்றவர்கள். அவர்கள் பல்வேறு அமைப்புகளில் பங்கேற்றுள்ளனர். விவசாய சங்கங்கள் தலித் மக்களை இங்கே கொண்டுவர அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இது புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் மட்டுமல்ல, இது அறிவுஜீவிகளை சிறையில் அடைத்திருக்கின்ற, காஷ்மீரிகளை கொடூர தாக்குதலைத் தொடுத்திருக்கின்ற, தொழிலாளர் சட்டங்களை திருத்தியிருக்கின்ற, என்ஆர்சி சட்டங்களை கொண்டுவந்திருக்கின்ற பாசிச அரசாங்கத்திற்கு எதிரானதோர் போராட்டம்” என்கிறார் முகேஷ் மலாடு

“ தலித் மக்கள் இந்த போராட்டத்தில் நுழைய வேண்டியதன் அவசியம், ஆளும் பாஜக அரசாங்கத்தின் பிரித்தாலும் சூழ்ச்சியை முறியடிப்பதில் முக்கியமானது” என்கிறார் அவர்.

இந்தப் போராட்டம் தொடங்கிய உடனே, பாஜக தானாக முன்வந்து தலித் மக்களின் உரிமைக்காக போராடும் தலைவனைப் போல காட்ட முயற்சித்தது. இவ்வாறாக இந்த தேசியப் போராட்டத்தை நில உடமையாளர்களின் உரிமை பற்றிய பிரச்சினையாக சித்தரித்தது. பிஜேபி ஆளும் உத்திர பிரதேசம் மாநிலம், ஹத்ராசில் ஒரு தலித் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட அதே நேரத்தில்தான் இதுவும் நிகழ்ந்தது. என்ன நிகழ்ந்தது என்பதை மறைக்கும் வகையில் அவருடைய உடல் போலிசால் நள்ளிரவில் எரியூட்டப்பட்டது.

சட்ட விரோத முறையில் பஞ்சாப்பில் உள்ள தலித் அமைப்புகளை கட்டுபடுத்த பாஜக விரும்புவதாக குற்றம் சாட்டுகிறார், முகேஷ் மலாடு. “டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை தொடங்கியதில் இருந்து கடந்த ஒரு மாதமாதத்தில், அமெரிக்காவிலிருந்து ஒரு நபர் உட்பட  வெவ்வேறு இடங்களிலிருந்தும் அனேக நபர்கள் எங்கள் அமைப்புக்கு நிதி கொடுக்க அணுகினர்” என்கிறார் மலாடு.

“பெயர் குறிப்பிடாத நபர் ஒருவர் என்னை தொடர்பு கொண்டு ‘ஜாட் சாதியினர் தொடர்ந்து தலித் மக்களை ஒடுக்குகிற போது, ஏன் உங்கள் அமைப்பு அந்தப் போராட்டத்தில் கலந்து கொள்கிறது? பஞ்சாப்பில் பாஜக ஆட்சி அமைத்தால் அது ஜாட்டுகளுக்குச் சொந்தமான நிலத்தைப் பறிக்க தலித்துகளுக்கு உதவி புரியும்.’ என்றார். தொலைதூர இடங்களிலிருந்து மக்கள் எங்களை தொடர்பு கொண்டு உதவ ஆர்வம் தெரிவித்திருப்பது, இதுதான் முதல்முறை. இது பெரிய கேள்விகளை எழுப்புகிறது. இது பாஜக-வின் விளையாட்டாக இருக்கலாம் என்று நினைக்கிறோம்” என்றார் அவர்.

படிக்க :
♦ விவசாயிகள் போராட்டத்தின் ஆதாரத் தூண்கள் || படக் கட்டுரை
♦ டெல்லி சலோ : வெல்லட்டும் விவசாயிகள் போராட்டம் !!

உணவுக்கு எதிராக லாபம் :

மலாடு அல்லாத பி.கே.எம்.யூ (PKMU) தலைமை உட்பட கூலித் தொழிலாளர் மற்றும் தலித் அமைப்புகளின் பிற தலைவர்களும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

பி.கே.எம்.யூ-வின் மாநில தலைவர் ஜோரா சிங் நஸ்ரலி கூறுகையில், தமது அமைப்பைச் சேர்ந்தவரான 75 வயது தேஜா சிங் என்பவர் பஞ்சாப்பில் உள்ள பத்திந்தாவில் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தபோது நவம்பர் 11 அன்று,  இறந்ததாக குறிப்பிட்டார். தேஜா சிங் நிலமற்ற ஒரு தலித் தொழிலாளி. அவர் பி.கே.எம்.யூ-வில் 20 ஆண்டுகாலமாக சிறந்த செயல்வீரராக இருந்து வந்தார். 900 பி.கே.எம்.யூ-வின் தலைவர்கள் மற்றும் மற்ற அதன் செயல்பாட்டாளர்கள் திக்ரி எல்லையில் போராடிக்கொண்டிருக்கிற நேரத்தில், பி.கே.எம்.யூ-வின் அனேக உறுப்பினர்கள் பஞ்சாப்பில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வருகின்றனர்.

டிசம்பர் 12 மற்றும் 20 தேதிகளுக்கு இடையில் “விழிப்புணர்வு மற்றும் எழுச்சிகொள்ளுதல்” என்ற பெயரில் ஒரு பிரச்சாரத்தை பி.கே.எம்.யூ பஞ்சாப்பில் மேற்கொண்டது. அது 90 கிராமங்களில் உள்ள கூலி தொழிலாளர்களுக்கு அச்சட்டத்தின் பாதிப்புகளை தெரிவிக்கும் விதமாக விளக்கி பிரச்சாரம் செய்தது. இரண்டாவது கட்ட பிரச்சாரம் டிசம்பர் 25 முதல் ஜனவரி 5 வரை நடத்தப்பட்டது. இதில் பி.கே.எம்.யூ-வின் தலைமை 200 கிராமங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டது. அதனை தொடர்ந்து ஜனவரி 7 அன்று திக்ரி எல்லையை நோக்கிய பயணத்தை மேற்கொண்டுள்ளது.

நஸ்ரலி கூற்றுப்படி விவசாயிகள் தங்களின் குறைந்தபட்ச ஆதார விலையையும் நிலத்தையும் இழந்தால், அத்தியாவசிய பொருட்கள் திருத்தச்சட்டம் அமல்படுத்தப்பட்டால் விவசாயக் கூலித் தொழிலாளர்கள்,  விவசாயிகள் பாதிக்கப்படுவதை போலவே பாதிக்கப்படுவார்கள்.

“வர்த்தக கழகங்கள் பெரிய அளவில் விவசாயம் செய்ய தொடங்கினால், அவர்கள் உயர் தொழில்நுட்ப இயந்திரங்களை பயன்படுத்துவார்கள். அவை விவசாய  கூலி தொழிலாளர்களை வேலை அற்றவர்களாக மாற்றும். அரசாங்கம் அத்தியாசிய பொருட்கள் திருத்த சட்டத்தின்படி இருப்பு வைக்கும்  அளவில் கட்டுபாடுகளை  முடிவுக்கு கொண்டுவந்தால், கார்ப்பரேட் கம்பெனிகள் நுகர்வோரை கொள்ளை அடிக்க தொடங்குவார்கள்” என தி வயர் இணையதளத்திடம் நஸ்ரலி தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது: “மக்களுக்கு என்ன தேவையோ அதை கார்ப்பரேட்டுகள் பயிரிட அனுமதிக்க மாட்டார்கள். நாட்டின் மக்கள் தொகைக்கு  போதிய உணவு உற்பத்தி என்பதை விட எது லாபம் தருகிற பயிரோ அதையே பயிரிட கவனம் செலுத்துவார்கள்.  விவசாய கூலி தொழிலாளர்கள் விவசாயிகளுடன் இணைந்து இந்த சட்டங்களுக்கு எதிராக போராட வேண்டும் என்பதற்கு இவையே முக்கியக் காரணங்கள் ஆகும்.”

“கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் நெற்பயிர் காலத்தில் சில பஞ்சாயத்துக்கள் விவசாய கூலி தொழிலாளர்களுக்கான கூலியை குறிப்பிட்ட வரம்பிற்குள் நிர்ணயிக்க தீர்மானம் நிறைவேற்றியதும், இதற்கு எதிராக தலித் மக்கள் போராடினால் சமூக புறக்கணிப்பு செய்யப் போவதாக மிரட்டயதுமான நினைவுகள் நினைவுக்கு வந்தாலும் கூட, உண்மையிலேயே இவை எதுவும் விவசாயிகள் போராட்டத்தில் பங்கு பெறுவதிலிருந்து எதுவொன்றும் எங்களை தடுக்காது” என்றார் நஸ்ரலி.

‘நம் எல்லோருக்குமான ஒரு போராட்டம்’ :

டெல்லி எல்லையில் போராடும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள நிலமற்ற கூலி தொழிலாளார்கள் மட்டுமே தலித்துக்கள் அல்ல. பஞ்சாப், சண்டிகரில் உள்ள அம்பேத்கர் மாணவர் சங்கம்(ASA) சிங்கு எல்லையில் உள்ள போராட்டக்களத்தில் இலவச நூல் நிலையத்தை அமைத்துள்ளது.

மாணவர்கள் அமைத்த இலவச நூலகம்ASA-வின் உறுப்பினரும் பஞ்சாப் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சி மாணவருமான குர்தீப் சிங், “போராடுவதற்கு  நீங்கள் நிலம் வைத்திருப்பவராகவோ அல்லது நிலம் அற்றவராகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் இங்கே சமூகத்தின் உறுப்பினர்களாக பங்கேற்க வந்தோம். குறிப்பிட்ட சாதியின் உறுப்பினர்களாக மட்டுமின்றி பஞ்சாப் மாநிலத்தின் உறுப்பினர்களாகவும் வந்துள்ளோம். எங்கள் போராட்டக்கார்கள் கற்பி, ஒன்றுசேர், புரட்சி செய் என்ற அம்பேத்கரின் கனவை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.

நாங்கள் இங்கே அமைத்துள்ள நூலகம் பல்வேறு தரப்பு சாதி, வர்க்கம் சார்ந்த மக்களை கவர்ந்து வருகிறது. தலித்துக்கள் உட்பட எல்லா பிரிவு மக்களும் இங்கே போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மாதிரியான கூட்டுத்துவ உணர்வு சமூகத்தில் சாதிய உணர்வை அழித்தொழிப்பதற்கு வழிவகுக்கும் என்று நான் உயர்வான நம்பிக்கை வைத்துள்ளேன்.” என தி வயர் இணையதளத்திடம் பேசுகையில் தெரிவித்தார்.

விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்பதற்கு குர்தீப் கூறும் அதே காரணம்தான் 28 வயதான கபடி வீரரும், சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவருமான குஷ்-ஷிடமும் வெளிப்பட்டது. அவர் சிங்கு எல்லை முகாமில் போராட்டத்தில் இருக்கிறார். குஷ், ஹோசிப்பூரில் உள்ள சந்த்ரா கிராமத்தை சேர்ந்தவர். அவரது குடும்பத்திற்கு என நிலம் ஏதும் இல்லை. ஆனால், ஒரு போராட்டக்காரர்  விவசாயியாக இருக்கலாம் அல்லது விவசாயி அல்லாதவராகவும் இருக்கலாம். அது ஒரு பிரச்சினையே அல்ல என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளார்.

“நாம் நமது எல்லோருக்காகவும் போராடவேண்டிய தேவை உள்ளது. என் நண்பர்களில் சிலர் ஜாட் சமூகத்தை சேர்ந்தவர்கள். அவர்களின் வாழ்வாதாரம் விவசாயத்தை சார்ந்து உள்ளது. எங்களின் வாழ்வாதாரம் அவர்களை சார்ந்து உள்ளது. அவர்கள் தங்களின் நிலத்தை இழந்தால் நாம் எப்படி மக்களுக்கு உணவு அளிக்க முடியும்?” ” என்கிறார் குஷ்.

“நம்மையெல்லாம் ஒருவருக்கொருவர் எதிராக நிறுத்த பிஜேபி விரும்புகிறது. ஆனால், நாம் அனைவரும் ஒருவரே. இந்த போராட்டங்களில்  சாதி ஒரு பிரச்சினையாக இருக்கவே முடியாது. இங்கே, ஒவ்வொருவரும் ஒன்றாக இருக்கிறோம். நாம்  இங்கே ஒன்றாக தங்கியிருக்கிறோம். ஒரே தட்டில் உணவு உண்கிறோம்.” என்கிறார் குஷ்

இந்த வலிமையான ஒற்றுமை உணர்வுதான், “இன்னும் பல்வேறு தலித் மக்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்க ஊக்கப்படுத்தப்பட வேண்டும்” என்று பஞ்சாப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் முன்ஜித் சிங் கூறுவதற்கு காரணமாக உள்ளது.

“தலித்துக்கள் இப்போராட்டங்களில் பங்கேற்கிறார்கள். ஆனால், அதிக எண்ணிக்கையில் இல்லை. ஜாட் உள்ளிட்ட தலித் அல்லாதோர் அனைவரும் இருகரம் விரித்து தலித்துகளை அரவணைத்துக் கொள்ள வேண்டும். தலித்துக்களை பயன்படுத்தி பிஜேபி வெற்றிபெற்றால் அதற்கு தலித் அல்லாதோர்தான் பொறுப்பேற்க வேண்டும்.” என்று தி வயர் இணையதளத்திடம் தெரிவித்தார் முன்ஜித் சிங்.


மொழியாக்கம் : முத்துக்குமார்
செய்தி ஆதாரம் : The Wire

 

 

வேளாண் சட்டத்தினை அமல்படுத்தத் துடிக்கும் மோடி அரசு !

த்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்கள் மற்றும் மின்சார திருத்தச் சட்டங்களை ரத்து செய்யக்கோரி 42 நாட்களுக்கும் மேலாக பல லட்சம் விவசாயிகள் கடுங்குளிரையும் பொருட்டாகக் கொள்ளாமல் தலைநகரை முற்றுகையிட்டு போராடி வருகிறார்கள். டெல்லியின் கடுங்குளிருக்கு பல விவசாயிகள் இறந்துள்ளனர். ஏழு சுற்று பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்துள்ள நிலையில் விவசாயச் சட்டத்தினை திரும்பப்பெற முடியாது திருத்தங்கள் செய்கிறோம் என்கிறது மோடி அரசு.

ஆனால் விவசாயிகளோ சட்டத்தினை திரும்பப் பெறுகின்றவரை போராட்டம் தொடரும் என்று உறுதியாகப் போராடிவருகிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளுக்கு மருத்துவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள், சிறுவணிகர்கள் என அனைத்து தரப்பு மக்களும் ஆதரவளித்து வருகின்றனர்.

இச்சட்டத்தின் மூலம் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும், விவசாயிகள் தனியாருடன் ஒப்பந்தம் செய்து லாபமடையலாம், விவசாயத்துறையில் போட்டி ஏற்படும், விவசாயிகள் சுதந்திரமாக தங்களது விலை பொருட்களை சந்தையில் விற்க முடியும், இடைத்தரகர்களை ஒழிக்கும், விவசாயத்தில் அந்நிய முதலீடுகள் குவியும் என்கிறது மோடி அரசு.

படிக்க :
♦ பாஜக மாநிலங்களில் அமல்படுத்தப்படும் பசுப் பாதுகாப்பு சட்டங்கள் !
♦ முசுலீம்கள் பசுக்களை வளர்ப்பதும் ’ லவ் ஜிகாத் ‘ தானாம் !

இந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட அன்றே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பஞ்சாபின் சிரோன்மணி அகாலிதள கட்சியின் ஹர்சிம்ரத் கவுர் பாதல் மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகியுள்ளார். BJP உடனான கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அக்கட்சி அறிவித்து விட்டது. BJP கூட்டணியில் உள்ள அரியானா மாநில துணை முதல்வரோ விவசாயிகளின் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் பதவி விலகப் போவதாகக் கூறியுள்ளார். BJP கூட்டணிக் கட்சிகளே இச்சட்டத்தினை எதிர்த்து வரும் நிலையில் எடப்பாடியோ BJP காரனைவிட ஒருபடி மேலே சென்று இச்சட்டத்திற்கு ஆதரவாக பேசிவருகிறார்.

விவசாயிகளின் போராட்டத்தினால் நெருக்கடிக்கு ஆளாகியுள்ள மோடிஅமித்ஷா கூட்டணி இச்சட்டத்திற்கு மக்களிடம் ஆதரவு திரட்டுவதற்காக மொத்த அரசு இயந்திரத்தையும் முடுக்கி விட்டுள்ளது. உதாரணமாக இந்திய ரயில்வே IRCTC-ல் பதிவு செய்யப்பட்ட தொடர்பு எண்களுக்கு விவசாயச் சட்டங்கள் குறித்து குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது.

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR) ஏற்பாடு செய்திருந்த இணையவழி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 74 விவசாயப் பல்கலைக் கழகத்தை சார்ந்த 15000 மாணவர்களிடம் வீடியோ கான்பிரன்ஸ் நிகழ்ச்சியில் பேசிய விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விவசாயச் சட்டத்தின் நன்மைகள் குறித்து விவசாயிகளிடம் மாணவர்கள் பிரச்சாரம் செய்ய வேண்டுமென்று வேண்டுகோள் வைத்தது என பட்டியல் நீள்கிறது. கூடவே, இந்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை கூட்டமைப்புகளின் (FICCI) தலைவர் உதய் ஷங்கர் “வேளாண் சட்டங்கள் புதிய சீர்திருத்தங்களையும், தேசிய நலனையும் உள்ளடக்கியதாக இருப்பதால் பங்குதாரர்கள் அனைவரும் சட்டத்திற்கு ஆதரவாக குரல்கொடுக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்

விவசாயிகளோ இது எங்களை பலியிட்டு கார்பரேட்டுகளை கொழுக்க வைப்பதற்கானச் சட்டம் என்கிறார்கள். விலை உத்திரவாதம் மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு அளித்தல்) 2020 சட்டத்.தின்படி தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் மேற்கொள்ளும் விவசாயியின் நிலத்தில் எந்த விதை விதைக்க வேண்டும், எந்த உரம், எந்த பூச்சிகொல்லி மருந்துகளை தெளிக்க வேண்டும், எந்த இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும், என்பவை அனைத்தையும் தீர்மானிக்கும் உரிமை ஒப்பந்த நிறுவனத்திற்கு மட்டுமே உண்டு. மேலும் மரபணு மாற்றப்பட்ட விதைகளே பயன்படுத்தப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

punjab farmers protest for kashmirகுறிப்பாக ஒப்பந்தச் சட்டம் அத்தியாயம் 4 பிரிவு 19 ன் படி ஒரு விவசாயியுடன் கார்ப்பரேட் நிறுவனம் போட்ட ஒப்பந்தத்தை மீறி நடக்கும்போது அதை எதிர்த்து அப்பெருநிறுவனத்தின் மீது வழக்கு தொடுக்க விவசாயிக்கு இருக்கக்கூடிய சட்டரீதியிலான உரிமையையும் வேளாண் சட்டங்கள் பறிக்கிறது. பிரச்சனைகளை மாவட்ட ஆட்சியர் அளவிலான மட்டத்திலேயே பேசி பஞ்சாயத்து செய்துகொள்ளச் சொல்கிறது.

இதன்படி ஒரு விவசாயியிடம் கார்ப்பரேட்டு நிறுவனம் ஒரு குறிப்பட்ட பயிரை உற்பத்தி செய்ய கூறி ஒப்பந்தம் போடுகிறது எனில், அறுவடை சமயத்தில் அப்பயிர் சந்தையில் விலை மலிவாகிறது எனும்போது அல்லது உற்பத்தி செய்த பொருளின் தரத்தில், அளவில் மாறுபட்டிருந்தால் ஒப்பந்தத்தில் போட்டபடி இல்லையெனக் கூறி ஒப்பந்த நிறுவனம் கொள்முதல் செய்யவில்லை என்றால் அல்லது ஒப்பந்த விலையைவிட குறைவாகத்தான் தர முடியுமென்றால் அந்த விவசாயியின் நிலையை சற்றே யோசித்துப்பாருங்கள்

அரசிடம் இழப்பீடு கேட்கும் உரிமையைகூட இழந்து நிற்கும் அவனுக்கு கந்துவட்டிக் கொடுமையையும், வங்கிகடன் தொல்லையையும் எதிர்கொள்வதைவிடபூச்சிக்கொல்லி மருந்தை குடும்பத்தோடு தின்றுவிட்டு சாவதுதான் எளிய தீர்வாக இருக்க முடியும். ஒரு சிறு விவசாயியால் பலமிக்க கார்ப்பரேட்டை எதிர்த்து நீதிமன்றத்தின் படியேற முடியாதென்பது மறுக்கவியலாத உண்மை. ஆனால், முதலாளித்துவ சமூகம் கொடுத்த குறைந்தபட்ச ஜனநாயக உரிமையை கூட இந்தச் சட்டம் மறுக்கிறது.

விவசாயிகளின் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) பற்றி வேளாண் சட்டத்தின் எந்தவொரு பகுதியிலும் குறிப்பிடவில்லை. 23 விவசாய விளைப் பொருட்களுக்கு மட்டுமே குறைந்த பட்ச ஆதாரவிலை மத்திய அரசு கொடுத்துவருகிறது. சந்தை விலை ஏற்ற இறக்கத்திலிருந்து விவசாயிகளை காப்பதே இந்த MSP தான். குறைந்தபட்சம் விளைபொருட்களுக்கான உள்ளீட்டு செலவையாவது விவசாயிகள் திரும்ப பெறமுடியும்.

அதிகப்படியான விவசாயப்பொருள்களை MSP-க்குள் கொண்டுவருவதும் அதனை அரசே கொள்முதல் செய்வதும்தான் (APMC மூலமாக) விவசாயிகளை காப்பாற்ற இருக்கக்கூடிய குறைந்தபட்சத் தீர்வு. ஆனால் வேளாண் சட்டமோ MSP யும் APMC யும் இனி இல்லை என்கிறது. விவசாயப் பொருட்களை கார்பரேட்டிடம் விற்கச் சொல்கிறது. எனவே தான் விவசாய விலைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலையை உத்தரவாதப்படுத்த அதனை சட்டமாக்க வேண்டும் என்பதை விவசாயிகள் முக்கிய கோரிக்கையாக வைத்துள்ளார்கள். அரசோ சட்ட அங்கீகாரம் தர மறுக்கிறது.

MSP குறித்து விவசாயத்துறை அமைச்சர் தோமரும் பிரதமர் மோடியும் கூறும் வாய்மொழி உத்திரவாதத்தை விவசாயிகள் நம்பத்தயாராக இல்லை. 04-01-2021 அன்று இந்தியன் எஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு பேட்டியளித்துள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, ‘‘பிரச்சனையின் மூலக் காரணமே மிதமிஞ்சிய தானிய உற்பத்தியும் சந்தை விலையை விட விவசாயப் பொருட்களுக்கான MSP அதிகமாக இருப்பது தான்‘’ என்கிறார். MSP ஐ நீக்க வேண்டும் என்று உலக வர்த்தகக் கழகம் இந்திய அரசிற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்துவருகிறது. இதைத் தான் கட்காரியும் மோடியும் தோமரும் வேறு வேறு விதமாக கூறுகின்றனர்.

BJP ஆதரவு பத்திரிக்கையான ஸ்வராஜ்ய (Swarajya) பத்திரிக்கை ஏற்பாடு செய்திருந்த தி ரோட் டு ஆத்மா நிர்பார் பாரத் என்ற நிகழ்ச்சியில் பேசிய நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் “இந்தியாவில் அதிகப்படியான ஜனநாயகம் இருப்பதால் சீர்திருத்தங்களை மேற்கொள்வது கடினமாக இருக்கிறது.” என்று விவசாயிகள் போராட்டத்தை ஒட்டிப் பேசியுள்ளார்.

படிக்க :
♦ அமர்த்தியா சென் : மாற்றுக் கருத்துக்களை ஒடுக்கி வரும் மோடி அரசு !
♦ அடுத்ததாக தாஜ்மகாலுக்கு குறிவைக்கும் சங்கிகள் !

இச்சட்டங்கள் குறித்து நாடாளுமன்றங்களிலும் போதிய விவாதங்களை மோடி அரசு நடத்தவில்லை. மக்களவையில் தனது பெரும்பான்மை பலத்தைக்கொண்டு விவசாயச் சட்டத்தை நிறைவேற்றிய பாஜக மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாத போதும் கடும் அமலிக்கு இடையே வாய்வழி ஓட்டெடுப்பின் மூலம் சட்டம் நிறைவேற்றப்பட்டதாக அவைத் தலைவர் அறிவித்துவிட்டார். மேலும், தேர்வுக் குழுவிற்கு விவசாயச் சட்டத்தினை அனுப்ப வேண்டும் என்ற எதிர்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கையை மறுத்த விவசாயத்துறை அமைச்சர் இச்சட்டத்தினை உடனே நிறைவேற்ற வேண்டும்.. இது மேலிட உத்தரவு என்று கூறியதாக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கூறுகிறார்.

இந்தியாவின் உயர் அதிகாரம் படைத்தது மத்திய அமைச்சரவை. இந்திய ஜனநாயகத்தின் மையம் நாடாளுமன்றம் என்கிறார்கள். இவர்களுக்கே உத்தரவிட அதிகாரம் கொண்ட அந்த மேலிடம் யார்? நிதிமூலதன கும்பல்கள் தான். கடந்த ஒன்பது மாதங்களாக (கொரோனா காலகட்டத்தில்) பல மக்கள் விரோத சட்டங்களை மோடி அரசு நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது பொதுத்துறை நிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு விற்பது, கார்பரேட்டுகள் வங்கிகள் தொடங்க அனுமதி, தேசிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல், தொழிளாலர் சட்ட திருத்தங்கள் அதன் தொடர்ச்சியிலே தற்போது விவசாயச் சட்டமும் உள்ளது.

இப்பிரச்சனைக்கு தீர்வுகாண முடியாமல் போவதற்கு விவசாய சங்கத் தலைவர்கள் தான் காரணம் என்றும் அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு எப்போதும் தயாராக உள்ளதாகவும் தோமர் கூப்பாடு போடுகிறார். விவசாயிகளின் கோரிக்கையான MSP-க்கு சட்ட ரீதியிலான பாதுகாப்பு மற்றும் விவசாயச் சட்டத்தினை திரும்பப் பெறுவது என்ற இரு கோரிக்கைகளையும் மோடி அரசு ஏற்காததே இழுபறிக்கு காரணம்.

அதே சமயம் விவசாயிகளை படியவைக்கவும் விவசாயப் போராட்டத்தினை மக்கள் மத்தியில் கொச்சைப்படுத்தவும் பல கீழ்தரமான வேலைகளை மோடி அரசு செய்துவருகிறது. பாஜக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத்தோ லட்சக்கணக்கில் திரண்டிருந்த விவசாயிகளை பார்த்து ஒரு சிறு கும்பல்(thukde thukde gang) என்றார். உத்திர பிரதேச முதல்வரான யோகி ஆதித்யநாத் மிகவும் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டவிருப்பதை பொறுத்துக் கொள்ளமுடியாமல் எதிர்க்கட்சிகள் விவசாயிகளைத் தூண்டிவிட்டிருக்கிறார்கள்என்கிறார். பியூஸ் கோயலோ மாவோய்ஸ்ட் பின்னிருந்து போராட்டத்தை வழிநடத்துகிறார்கள் என்கிறார்.

BJP-RSS வானரக் கூட்டங்களோ போராடும் விவசாயிகளை தேச விரோதிகள், தீவிரவாதிகள், காலிஸ்தான் பிரிவினைவாதிகள், பாகிஸ்தான் ஆதரவாளர்கள், மாவோயிஸ்டுகள், சீனாவிற்கு ஆதரவானவர்கள் என்று பிரச்சாரம் செய்கின்றனர். சமூக வலைதளங்களில் போராட்டத்தை மதிப்பிழக்கச் செய்யும் வகையில் தவறான தகவல்களை பாஜக சங்கப்பரிவாரங்கள் பரப்பிவரும் வேலையில், அதற்கு ஆதரவாக BJP-RSS உடன் கள்ளக்கூட்டும், அம்பானியோடு நேரடி வர்த்தக உடன்படிக்கையும் வைத்திருக்கும் பேஸ்புக் நிறுவனம், விவசாயிகள் போராட்டக்குழுவால் உருவாக்கப்பட்ட கிசான் ஏக்தா மோர்ச்சா எனும் முகநூல் பக்கத்தை முடக்கியது. பிறகு எதிர்ப்புகள் எழவே வேறு வழியின்றி முகநூல் பக்கத்தை மீண்டும் விடுவித்தது.

ஒருபக்கம் கூலி விவசாயிகள், சிறுவணிகர்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும் சட்டங்களுக்கு எதிராக போராடுகிறார்கள் அதற்கு நேர் எதிராக அரசும் ஆளும் வர்க்கங்களும் இந்த சட்டத்தை எப்படியும் நடைமுறைப்படுத்திவிட வேண்டுமென்று துடித்துக்கொண்டிருகிறது. கடந்த முப்பது வருடகால மறுகாலனியாக்க கொள்கைகளால் சிறிது சிறிதாக நஞ்சூட்டப்பட்டு வீழ்ந்து கிடக்கும் இந்திய விவசாயத்தின் கடைசி மூச்சையும் நிறுத்தவே இச்சட்டங்கள் வழிசெய்யும். இச்சட்டங்களுக்கு எதிரான வாழ்வா..? சாவா..? போராட்டத்தில் விவசாயிகளுடன் கைகோர்த்து எதிர்த்து நிற்பதென்பது நமது கடமையாகும்.


பாலன்

காஷ்மீரில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை

டந்த அக்டோபர் மாதம் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு வீடு திரும்புகையில் கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட தனது மகளுக்கு டிசம்பரில் அஞ்சலி செலுத்தியது நூரின் குடும்பம். பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி படுகாயமடைந்த அப்பெண் கிட்டத்தட்ட ஒருமாத காலம் மருத்துவமனையில் உயிருக்காக போராடினார்.

கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்த நூரின் மகள், அக்டோபர் மாதம் தனது உறவினரின் திருமணத்திற்கு சென்று, வீடு திரும்புகையில் இரண்டு நபர்களால் கடத்தப்பட்டார். “அவர்கள் அவளைக் கடத்தி அடர்த்தியான தோட்டத்திற்குள் இழுத்துச் சென்றார்கள். அங்கு அவளை பாலியல் பலாத்காரம் செய்து கடுமையாக தாக்கினார்கள்” என்று அப்பெண்ணின் உறவினர்களில் ஒருவர் சம்பவத்தை நினைவுக்கூர்ந்தார்.

அப்பெண் உள்ளூர் மக்களால் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். SKIMS மருத்துவமனையின் மருத்தவ கண்காணிப்பாளர் டாக்டர் ஃபரூக் ஜன் கூறுகையில், “அந்த பெண் மோசமான நிலையில் இங்கு கொண்டு வரப்பட்டார். ஒரு மாத காலமாக ICU-வில் தீவிர சிகிச்சைப் பெற்றுவந்தவர் நவம்பர் 27 அன்று உயிரிழந்தார்” என்றார்.

படிக்க :
♦ வெட்கக்கேடு : மத்தியப் பிரதேசம் பாலியல் குற்ற வழக்கு
♦ ஹதராஸ் பாலியல் வன்கொலை : நள்ளிரவில் எரிக்கப்பட்ட ‘நீதி’ !

அப்பெண் கொடூரமாக தாக்கப்பட்டார் என்கிறார்கள் குடும்பத்தினர். “அவளுக்கு நடந்த கொடூரத்தை நான் மனிதர்களிடமிருந்து சிறிதும் எதிர்ப்பார்க்கவில்லை. மிருகத்தனமாக அடித்து சித்திரவதை செய்யப்பட்டாள். அவள் அணிந்திருந்த தாயத்து கயிற்றை வைத்தே அவள் கழுத்தை நெறித்து கொல்லப்பார்த்திருக்கிறார்கள்; நாக்கை பிளந்திருக்கிறார்கள். அவள் அனுபவித்த வலியை என்னால் கற்பனைக்கூட செய்துப்பார்க்க முடியாது” என்று நெருங்கிய உறவினர் ஒருவர் தெரிவித்தார்.

மற்றொரு உறவினர், “இருவரும் அப்பெண்னை கொலை செய்யப் பார்த்தார்கள். ஆனால், சில உள்ளூர் மக்கள் அவர்களைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்” என்று கூறினார்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறை :

‘பாலியல் வன்கொடுமையிலிருந்து தப்பி பிழைத்தவர்கள் தங்கள் வழக்குகளை சட்டப்பூர்வமாக எதிர்த்துப் போராடுகையில் எதிர்கொள்கின்ற மோசமான சூழ்நிலை’யை ஸ்ரீநகர் குற்றப்பிரிவின் அதிகாரப்பூர்வ தரவுகள் விவரிக்கின்றன.

ஜம்மு–காஷ்மீரில் தற்போது 1,046 பாலியல் வன்கொடுமை வழக்குகள் விசாரணையில் உள்ளன என்பதை ஆறு ஆண்டுகளில் (மார்ச் 2019 வரை) கிடைத்த தரவுகள் தெரிவிக்கின்றன. அவற்றில், 831 வழக்குகள் 2014 முதல் நிலுவையில் உள்ளன. இதில் 820 வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் சிறு குழந்தைகள்.

2019-ல் முதல் மூன்று மாதங்களில் மட்டும் ஜம்மு-காஷ்மீரில் 64 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களில் 33 குழந்தைகளும் அடக்கம். ஆனால் கடந்த ஆறு ஆண்டுகளில் தண்டனை விகிதம் 5 சதவீதத்திற்கும் குறைந்திருக்கிறது என்று தகவல் கூறுகிறது.

ஜம்மு–காஷ்மீர் நிர்வாகம் நீதிமன்றத்தில் ஒரு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையின்படி, கொரோனா ஊரடங்கு காலத்தில் மட்டும் ஜம்மு-காஷ்மீரில் 16 பாலியல் வல்லுறுவு வழக்குகளும், 64 பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளும் நடந்துள்ளன என்று பதிவாகியுள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எவ்வாறு வழக்கமாக மாறியுள்ளன என்பதை இத்தரவுகள் அம்பலப்படுத்துகிறது.

2014-ம் ஆண்டில், 352 வழக்குகளில், 265 மைனர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று தரவு கூறுகிறது. 2015-ல்  312 (251 மைனர்) வழக்குகளும், 2016-ல் 263 (204 மைனர்) வழக்குகளும், 2017-ல் 314 (213 மைனர்) வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2018 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்குகளின் எண்ணிக்கை 359, இதில் மைனர் சம்பந்தப்பட்ட வழக்குகள் 273.

ஏற்றுக் கொள்ளமுடியாத மௌனம் :

21 வயது பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டதன் பின்னரும், ஏற்றுக் கொள்ளமுடியாத மௌனம் காஷ்மீரில் தொடர்கிறது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி உள்ளூர் மக்கள் உடனடியாக போராட்டம் நடத்தினார்கள் எனினும் இச்சம்பவம் யூனியன் பிரதேசத்தின் கவனத்தைப் பெறவில்லை.

“ஏற்றுக்கொள்ள முடியாத இந்த அமைதிக்கான எந்த விளக்கமும் இல்லை. இந்த குரூரத்தை கண்டு கொள்ளாத சமூகமாக மாறிவிட்டோமா? இந்த பள்ளத்தாக்கு நேர்மையான நாகரிகத்துக்கு சொந்தமானது. ஆனால் இதுகுறித்து யாரும் கவலைப்படுவதில்லை” என்று யூனியன் பிரதேசத்தில் பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறைகளைச் சுட்டிக்காட்டுகிறார் இறந்தவரின் மூத்த சகோதரி.

”இந்த அமைதி, வன்முறையை அதிகரிக்கவே செய்யும்” என்கிறார் காஷ்மீரைச் சேர்ந்த பெண்கள் உரிமை ஆர்வலர் எசாபீக் அலி. “ஒரு இளம் பெண்ணின் உயிரைப் பறித்த சம்பவத்தைப் பற்றி உள்ளூர் செய்தி நிறுவனங்கள் எதுவும் பின் தொடரவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர் நம்மில் ஒருவர் என்பதால் மக்கள் மத்தியில் எந்தவிதமான கூச்சலும் அழுகையும் இல்லை. இதுவே வெளிநாட்டவராக இருந்தால், அதைப் பற்றி பேசியிருப்பார்கள்” என்று வருத்தப்படுகிறார் அலி.

வன்முறை சம்பவங்களில் சமூகத்தின் இத்தகைய அலட்சிய போக்கு என்பது சமூகத்தில் பெண்களுக்கான இடங்களை சுருக்கிவிடும் என்கிறார் அலி. அவர், “இது நிச்சயமாக பெண்கள் மற்றும் சிறுமிகளின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும். பெண்களை எங்கும் தனியாக செல்ல அனுமதிக்க மாட்டார்கள்” என்று விளக்குகிறார்.

காஷ்மீரில் பாலியல் வன்கொடுமை பரவல் :

21 வயது மாணவி இறந்த சில நாட்களுக்குள், குல்கம் மாவட்டம் தேவ்சரில் 17 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு ஆளாகியிருக்கிறார். சிறுமியை வல்லுறவு செய்த காட்சியை குற்றவாளிகள் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். போலீஸ் அவர்களை உடனடியாகக் கைது செய்தது.

படிக்க:
♦ புனிதப் பசுவின் சாணத்தை பாஜக தலைவர் வீட்டு முன் கொட்டியதற்கு கொலை முயற்சி வழக்கு !
♦ இந்தியா 2020 : வல்லரசு கனவும் – தொடரும் துயரமும்

மாநில மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவரான நயீமா மெஹூர், “ஆரம்பத்தில் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட குற்றவாளிகள் மரியாதைக் குறைவாகவும் கடுமையாகவும் நடத்தப்பட்டனர். இருந்தும் கடந்த சில ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரிக்கச் செய்திருக்கிறது. முழு பள்ளத்தாக்கையும் உலுக்கிய சில சம்பவங்களும் இருக்கின்றன. பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதம் குறித்த பிரச்சினைக்குரிய பகுதிகளில், பெண்கள் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது.” என்கிறார்.

பெண்கள் மத்தியில் பரவும் அச்சம் :

21 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் கிராமப்புற பெண்களை அதிர்ச்சியில் உறையவைத்தது மட்டுமல்ல அவர்களின் சுதந்திரத்தையும் பறித்துள்ளது.

“இந்த சம்பவத்திற்கு பிறகு வயல்வெளிக்கு போகக்கூட பயமாக இருக்கிறது. வெளியே செல்லவேண்டிய கட்டாயம் இருந்தால், நாங்கள் கூட்டமாகவோ அல்லது எங்கள் குடும்பத்தை சேர்ந்த ஆண்களில் ஒருவரை அழைத்துக் கொண்டுதான் செல்வோம்” என்று கிராமத்து பெண்களில் ஒருவர் கூறுகிறார்.

“நான் குல்கம் மாவட்டத்திலுள்ள கல்லூரியில் இரண்டாமாண்டு சேர்ந்தேன். இந்த சம்பவத்திற்கு பிறகு நான் எனது கல்லூரிக்குக் கூட போகக்கூடாது என்று எனது பெற்றோர் திட்டவட்டமாக கூறிவிட்டனர். என் பெற்றோருக்கு எல்லாவற்றையும் விட என் வாழ்க்கைதான் முக்கியம்” என்று பாதிக்கப்பட்டவரின் மற்றொரு உறவினர் ஒருவர் கூறினார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் 18 வயதான அடில் அகமது தர் மற்றும் 24 வயதான வசீம் அகமது தர். இருவரும் குல்கம் மாவட்டத்திலுள்ள அஸ்முஜி கிராமத்தில் வசிப்பவர்கள். “குற்றம் சாட்டப்பட்ட இருவரும் அனாதைகள். வசீம் பஸ் டிரைவர். இந்த இருவருக்கும் நீண்ட காலமாக போதை பழக்கம் இருக்கிறது” என்று உள்ளூரில் வசிக்கும் ஒருவர் கூறினார்.

“சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது. அவள் இறந்து ஐந்து நாட்கள் (இந்தப் பேட்டி எடுக்கப்படும்போது) ஆகிவிட்டது. எனது சகோதரி கல்லறையில் இருக்கும்போது குற்றம் சாட்டப்பட்டவர்களோ போலீஸ் காவலில் பாதுகாப்பாக உள்ளனர்” என்று ஆதங்கப்படுகிறார் இறந்தவரின் மூத்த சகோதரி. தங்களது இறந்த மகளுக்கு நீதியை உறுதி செய்ய விரைவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அப்பெண்ணின் குடும்பத்தினர் கேட்கின்றனர்.

கட்டுரையாளர் : பிஸ்மா பட்
தமிழாக்கம் : ஷர்மி
நன்றி : The Wire