Tuesday, June 30, 2026
முகப்பு பதிவு பக்கம் 229

பீகார் : கிராமத்தையே துவம்சம் செய்து போலீசு வெறியாட்டம் !!

சார்தா கிராமத்தில் மீதம் உள்ள மக்கள் கோவிந்த் மஜியின் வீட்டில் கூடியுள்ளனர்.

போலீசு கொட்டடிக் கொலையை கண்டித்து நடந்த போராட்டத்தைத் தொடர்ந்து தலித் மக்கள் வீட்டைவிட்டு வெளியேறக் காரணமான போலீசு அடக்குமுறைகள் குறித்த கள நிலவர அறிக்கை !!

லித் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட பீகாரின் சார்தா கிராமம் ஜூலை 28 அன்று வெறிச்சோடி காணப்பட்டது. அங்கு பெரும்பாலான வீடுகள் மண் மற்றும் வைக்கோலால் கட்டப்பட்டிருந்தன.

ஜூலை 24 மற்றும் 25 அன்று, அம்மாநிலத்தின் ஜெகனாபாத் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் போலீசார் சோதனை நடத்தி, பல வீடுகளை உடைத்தனர் – கதவுகள், தொலைக்காட்சி பெட்டிகள், டியூப்வெல்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் தளவாடங்கள் என உடைக்கப்பட்ட உடமைகள் ஏராளம்.

31 வயதான கோவிந்த் மஜீ-ன் மீது போலீசு காட்டுமிராண்டி தனமாக தாக்குதல் நடத்தி சிறையில் அடைத்து. பின்னர் சிறையிலேயே இறந்த கிராமவாசிக்கு நீதி கேட்டு போலீசுதுறையின் கொடூரத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை பழிவாங்கவே போலீசுதுறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.  ஜூலை 19-ம் தேதி அதிகாலை ஒரு நாட்டு மதுபான வியாபாரம் நடத்தி வந்ததாகக் கூறி கோவிந்த் மஜியை அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். ஏப்ரல், 2016 முதல் பீகாரில் மது தடை செய்யப்பட்டுள்ளது.

மஜி அல்லது முசாஹர் சமூகம் பீகாரில் உள்ள தலித் சமூகங்களில் பொருளாதார, கல்வி மற்றும் சமூக ரீதியாக மிகவும் பின்தங்கிய ஒன்றாகும்.

படிக்க :
♦ காஷ்மீர் : போலீஸ் கொட்டடியில் பள்ளி முதல்வர் மரணம் ! தொடரும் பயங்கரம்
♦ லாக்-அப் கொலைகள்: கேட்பாரற்ற போலீசு ராஜ்ஜியம்!

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மாநிலத்தில் 2,50,000 முசாஹர்கள் உள்ளனர். பெரும்பாலானவர்கள் நிலமற்றவர்கள் மற்றும் பலர் பிற மாநிலங்களுக்கு குடிபெயர்ந்துள்ளனர். பீகாரின் கிராமங்களில் தங்கியிருப்பவர்கள் கட்டுமான தளங்கள், செங்கல் சூளைகள் மற்றும் பண்ணைகளில் தினக்கூலி தொழிலாளர்களாக வேலை செய்கிறார்கள். அவர்கள் ஒரு நாளைக்கு ரூபாய் 150 முதல் 200 வரை சம்பாதிக்கிறார்கள்.

மஜியின் குடும்ப உறுப்பினர்களின் கூற்றுப்படி, சார்தா கிராமத்திலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள தாவுத்நகர் துணை சிறைக்கு அவரை அழைத்துச் செல்வதற்கு முன்பு போலீசார் அவரை இரக்கமின்றி கொடூரமாக  அடித்துள்ளனர். இதன் காரணமாக அவர் ஜூலை 24 அன்று அதிகாலை 1.40 மணிக்கு சிறையில் இறந்துவிட்டார்.

பராஸ் பிகா போலீசு நிலையத்தில் காவலர் ராஜ்குமார் யாதவ் அளித்த புகாரின் அடிப்படையில் மஜி கைது செய்யப்பட்டார். சார்தா கிராமம் இந்த போலீசு நிலையத்தின் அதிகாரத்தின் கீழ் உள்ளது.

சுரந்தி தேவி தனது கணவரின் அடையாள அட்டைகளை வைத்திருக்கிறாள்

யாதவின் புகாரில், “ஜூலை 19 அதிகாலையில், நாங்கள் மது வியாபாரிகளை சோதனை செய்தோம். இந்த செயல்பாட்டில், நாங்கள் சார்தா கிராமத்தை அடைந்து கோவிந்த் மஜியை அவரது வீட்டின் முன் பிடித்தோம். அவரிடம் உள்ள ஒரு பிளாஸ்டிக் கேலனுடன் அவரை பிடித்தோம். அந்த கேலன் முழுவதும் மது இருந்தது. விசாரணையின் போது, அதில் மது இருந்ததை அவர் ஏற்றுக் கொண்டார். மேலும், அவர் நீண்ட காலமாக இந்த தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்’’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த எழுத்துப்பூர்வமான புகாரின் அடிப்படையில், பீகார் மதுவிலக்கு மற்றும் கலால் சட்டம், 2018 பிரிவு 30 (A) இன் கீழ் கோவிந்த் மீது போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். அந்த பிரிவின்படி, ஒரு நபர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், குறைந்தது 10 ஆண்டுகள் செலவிட வேண்டும் சிறை மற்றும் அபராதமாக ரூ.1 லட்சம் செலுத்த வேண்டும்.

மஜியின் மனைவி சுரந்தி தேவி, தனது கணவர் மீது போலீசார் கூறிய குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று கூறியுள்ளார். இந்த தம்பதிக்கு ஆறு வயதில் ஒரு மகள் உள்ளார்.

“ஜூலை 19-ம் தேதி காலை 5 மணியளவில் காலைக்கடன்களை முடிக்க நான் எழுந்திருந்தேன்,” என்று அவர் தி வயரிடம் கூறுகிறார். சுரந்தி தேவிக்கு கழிப்பறை வசதி இல்லை. கிராமத்தில் உள்ள 90 சதவிகித தலித் வீடுகளில் கழிப்பறைகள் இல்லை. எனவே, பெண்கள் இயற்கை உபாதைகளை கழிக்க வயல்களுக்குச் செல்ல பொதுவாக அதிகாலையில் எழுந்து விடுவார்கள்.

“அவர்கள் (போலீசார்) 10 பேர். அவர்கள் எங்கள் வீட்டிற்குள் நுழைந்தனர். நான் என் டெஹ்ரியில் (தாழ்வாரத்தில்) இருந்தேன்” என்று அவர் நினைவு கூர்ந்தார்.

“ஒரு போலீஸ்காரர் என்னை மோசமான வார்த்தைகளால் திட்டினார். என்னை அறைக்குள் வரச் சொன்னார். நான் வயலுக்கு செல்ல வேண்டும் என்று கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினேன். என் கணவர் தூங்கிய படுக்கையறைக்குள் போலீசார் நுழைந்தனர். அவர்கள் அவரை எழுப்பி போலீசு நிலையத்திற்கு இரக்கமின்றி அடித்துக் கொண்டே அழைத்து சென்றனர்” என்று அவர் தி வயரிடம் கூறுகிறார்.

அறைக்குள் எந்த ஒரு பிளாஸ்டிக் கேலனும் இல்லை என்று அவர் சொல்கிறார். போலீசார் அவரை கைது செய்தபோது, அவரிடம் எதுவும் இல்லை. பின்னர், போலீசுதுறையினர் கள்ளச்சாரயத்துடன் ஒரு பிளாஸ்டிக் கேலனை மீட்டதாகக் கூறினர். இது ஒரு முழு பொய் என்று அவர் கூறுகிறார்.

“நான் அவருடன் பத்தாண்டுகளாக இருக்கிறேன். அவர் எப்போதும் விவசாய வேலைகளையே ஈடுபாட்டோடு செய்வார். அவர் ஒருபோதும் மது வியாபாரத்தில் ஈடுபடவில்லை. அவர் ஒரு ஆரோக்கியமான மனிதர். அவருக்கு வேறு எந்த நோயும் இல்லை. அவர் திடீரென இறக்க முடியாது” என்று அவர் கூறுகிறார்.

ஒரு கிராமவாசி கோவிந்த் மஜியின் புகைப்படத்தை வைத்திருக்கிறார்

கோவிந்த் 10-ம் வகுப்பு வரை படித்திருந்தார். அவர் நிலமற்றவர், குத்தகை நிலத்தில் விவசாயம் செய்தார். இது தவிர, அவர் ஆன்லைன் வேலையில் மக்களுக்கு உதவுவார் மற்றும் அவரது மடிக்கணினியின் உதவியுடன் பாடல்கள் மற்றும் திரைப்படங்களை மொபைல் போன்களில் பதிவேற்றிக்கொடுப்பார்.

பூமிகார் சாதியைச் சேர்ந்த அவரது பள்ளி நண்பர் ரோஷன் குமார், “அவன் ஒரு நல்ல பையன். (முசாஹர் சாதியினர் அந்த வட்டாரத்தில் பெரும்பான்மை மக்கள் தொகையில்  உள்ளனர்) இரண்டு மூன்று இளைஞர்கள் மட்டுமே உயர்நிலைப்பள்ளி படித்து தேர்ச்சிப் பெற்றுள்ளனர். அவர்களில் கோவிந்தும் ஒருவன். நாங்கள் ஒன்றாக படித்தோம். அவர் எந்த சட்டவிரோத வியாபாரத்திலும் ஈடுபட்டதை நான் பார்த்ததில்லை. போலீசுதுறை எதை வேண்டுமானாலும் குற்றச்சாட்டாக கூறலாம் ஆனால், அவன் மீதான இந்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது’’ என்றார்.

பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு மற்றொரு உள்ளூர்வாசி தி வயரிடம், “இந்த கிராமத்தில் சிலர் நாட்டு மதுபானம் தயார் செய்கிறார்கள். போலீசுதுறை அவர்களை அடையாளம் கண்டு கைது செய்ய வேண்டும், ஆனால் ஒரு அப்பாவி நபரை ஏன் கைது செய்ய வேண்டும்? என்றார்

தி வயர் ஜெஹனாபாத்தின் எஸ்.பி (போலீசு கண்காணிப்பாளர்) மற்றும் பராஸ் பிகா போலீசு நிலையத்தின் எஸ்.ஹெச்.ஓ (ஸ்டேஷன் ஹவுஸ் ஆபிசர்) ஆகியோரை தொடர்பு கொண்டது.  ஆனால், அவர்கள் அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை.

கொட்டடி கொலை

ஜூலை 23 காலை, சுரந்தி தேவிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. மறுபக்கம் இருந்தவர், அவளது கணவர் சிறையில் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், எப்போது வேண்டுமானாலும் இறக்கலாம் என்றும் கூறினார். அவளை அழைத்த இந்த நபர் அர்வால் மாவட்டத்தில் வசிப்பவர் மற்றும் சிறையில் மஜியுடன் ஒரே அறையில் இருந்தவர். ஜூலை 23 அன்று சிறையிலிருந்து விடுதலையான  அவர் உடனடியாக சுரந்தி தேவியை தொலைபேசியில் தொடர்கொண்டு இந்த தகவலை தெரிவித்தார். கோவிந்த் மஜி தனது சக கைதி விடுதலை ஆகிறபோது அவரது குடும்பத்தினரின் மொபைல் எண்ணைக் கொடுத்து, அவரது உடல்நிலை மோசமடைந்து வருவது குறித்து தனது குடும்பத்தினரிடம் தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

சர்தா கிராமவாசிகளின் வீட்டில் இருந்த தொலைக்காட்சி, போலீசாரால் உடைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது

“நான் அந்த நபரிடம் காலை 6 மணியளவில் பேசினேன்… ஜூலை 23 அன்று, எங்களால் தாவுத்நகர் துணை சிறைக்குச் செல்ல முடியவில்லை. ஜூலை 24, சனிக்கிழமை காலை நாங்கள் அங்கு சென்றோம். அவரது உடல் வேனில் இருந்ததை நான் பார்த்தேன். அவரது கால்கள் மற்றும் கைகளில் பல காயங்கள் இருந்தன. அவரது ஆடைகள் கிழிந்திருந்தன. அவர் ஜூலை 23 இரவு இறந்தார் என்று சிறையில் இருந்த ஒரு காவலர் எங்களிடம் கூறினார்” என்று அவர் (சுரந்தி தேவி) கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், “போலீசார் உடலை எங்களுக்கு கொடுக்கவில்லை. பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல் ஒப்படைக்கப்படும் என்று அவர்கள் கூறினர். மருத்துவமனை அதிகாரிகள் இதுவரை பிரேதப் பரிசோதனை அறிக்கையை வழங்கவில்லை.” என்றார்

சிறை வட்டாரங்களின்படி, கோவிந்தின் உடல்நிலை ஜூலை 22 அன்று மோசமடையத் தொடங்கியது. அவர் தாவுத்நகர் துணை சிறையிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள தாவுத்நகர் துணைப் பிரிவு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். மருத்துவமனையால் வழங்கப்பட்ட ஒரு மருத்துவ குறிப்பு இவ்வாறு கூறுகிறது: “அவர் சுயநினைவு இல்லாமல் மயக்க நிலையில் இருந்தார். அவருக்கு 103 டிகிரி காய்ச்சல் இருந்தது. அவருக்கு குடிப்பழக்கத்தின் அறிகுறிகள் இருந்தது.’’

ஜூலை 22 அன்று மஜீக்கு சிகிச்சை அளித்த டாட்நகர் துணைப் பிரிவு மருத்துவமனையின் துணை கண்காணிப்பாளர் டாக்டர் ராஜேஷ்குமார், போலீசுதுறை வாக்குமூலத்தின்படி அவர் தனது மஜியின் உடல்நிலை பற்றிய தன்னுடய மருத்துவ குறிப்பில் “மஜி மது பழக்கம் உள்ளவர்” என்று எழுதியதை நினைவு கூர்ந்தார்.

நோயாளி என்னிடம் தனக்கு முன்பு எந்த நோயும் இல்லை என்றும் அவர் ஒரு குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் இல்லை என்றும் கூறினார். அவர் ஒரு குடிகாரர் என்று போலீசார் என்னிடம் சொன்னார்கள், அதனால் நான் அதை மருந்து சீட்டில் எழுதினேன்” என்று மருத்துவர் தி வயரிடம் கூறுகிறார்.

“அவர் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தார் மற்றும் ஒரு குடிகாரனைப் போல் தெரியவில்லை. ஜூலை 22 அன்று, அவர் இரண்டு முதல் மூன்று மணி நேரம் மருத்துவமனையில் இருந்தார். நாங்கள் அவருக்கு மருந்துகள், ஊசி மற்றும் குளுக்கோஸ் வழங்கினோம். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நேரத்தில், சிறையில் ஒரு மருத்துவர் இருப்பதால், அவருக்கு சிறையில் சிகிச்சை அளிக்கப்படும் என்று சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்” என்று மருத்துவர் நினைவு கூர்ந்தார்.

ஜூலை 23-ம் தேதி நள்ளிரவு 12.30 மணியளவில் அவரது உடல்நிலை மீண்டும் மோசமடையத் தொடங்கியது என்று சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒரு மண் அடுப்பு, போலீசாரால் அழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சுமார் 70 நிமிடங்கள் தாமதமாக – அதிகாலை 1.40 மணியளவில் சிறை அதிகாரிகள் அவரை மீண்டும் தாவுத்நகர் துணைப் பிரிவு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். குறிப்பாக, சப்-ஜெயிலுக்கும் மருத்துவமனைக்கும் இடையிலான தூரம் 2 முதல் 3 கிலோமீட்டர்கள் மட்டுமே.

மேலும், ஜூலை 22 அன்று அவரது உடல்நிலை மோசமாக இருந்தால், அவர் ஏன் மீண்டும் சிறைக்கு கொண்டு வரப்பட்டார்?

இதற்கிடையில், அவுரங்காபாத் டி.எம் சவுரப் ஜோரவால் சிறை மருத்துவர் மற்றும் சிறை அதிகாரிகளுக்கு ஒரு நற்சான்றிதழ் அளித்துள்ளார். “அவர் இதய நோயால் இறந்தார் என்று பிரேதப் பரிசோதனை அறிக்கை கூறுகிறது. அவர் எங்களுக்கு எதுவும் சொல்லாததால் எங்களுக்கு அது பற்றிய தெரியவில்லை. அவர் மருத்துவக் காரணங்களால் இறந்துவிட்டார் என்பதை நாங்கள் கண்டறிந்தோம், சிறை அதிகாரிகளின் அலட்சியம் இதில் இல்லை” என்கிறார் ஜோராவால்.

மருத்துவமனைக்குச் செல்வதில் தாமதம் என்ற கேள்விக்கு அவர், “அவருடைய உடல்நிலை மோசமடையத் தொடங்கியபோது, மருத்துவர் அவரைச் சோதித்தார். அவர் சில மருந்துகளைக் கொடுக்க முயன்றார். எனவே, அதற்கு நேரம் பிடித்தது. இது தான் நடந்தது.”

ஒரு பெண் போலீசின் மரணம்

ஜூலை 24 காலை கிராமத்திற்கு செய்தி வந்தவுடன், உள்ளூர்வாசிகள் எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கினர். அவர்கள் நேஹல்பூர் சவுக்கில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 110-ல் கூடி போக்குவரத்தை தடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கூட்டத்தை சமாதானப்படுத்த முயன்றனர்.

போலீசாரால் உடைக்கப்பட்ட ஒரு தண்ணீர் பம்ப் .

கூட்டத்தினர் கட்டுப்பாட்டை மீறி போலீசாரை தாக்கியதாக தனது எஃப்.ஐ.ஆரில் போலீசு தெரிவித்திருந்தது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர போலீசார் அவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால், அவர்கள் கேட்கவில்லை. அவர்கள் கோபமடைந்து செங்கற்கள், கற்கள் மற்றும் குச்சிகளால் போலீசாரை தாக்கினர். 13-க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர்” என்று எஃப்.ஐ.ஆர் குறிப்பிடுகிறது.

உள்ளூர்வாசிகள் முதலில் போலீசுதான் மக்களைத் தாக்கத் தொடங்கியது என்று  கூறுகிறார்கள். போராட்டங்கள் எங்கள் உரிமை. என் சகோதரர் கொல்லப்பட்டுவிட்டார். நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்யக் கூடாதா? என்று கோவிந்தின் மூத்த சகோதரர் பாப்லு மஜ்ஜி கேட்கிறார்.

பாப்லு ஒரு செங்கல் சூளையில் வேலை செய்கிறார். அவர் தி வயரிடம் கூறுகிறார், “போலீசார் திடீரென கூடி போராட்டக்காரர்கள் மீது லத்தி சார்ஜ் செய்யத் தொடங்கினர். பதிலுக்கு எதிர்ப்பாளர்களும் அவர்கள் மீது செங்கற்களை வீசத் தொடங்கினர்.

போராட்டத்தின்போது காவலர் காந்திதேவி சாலையில் விழுந்ததாகவும், வாகனம் மோதியதாகவும் போலீசார் தங்கள் எழுத்துப்பூர்வ புகாரில் கூறியுள்ளனர்.

ஆனால், அவர் ஓடி சாலையில் விழுந்தபோது போலீஸ் வேன் தான் மோதியது என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். பாப்லு தி வயரிடம் தான் அந்த இடத்தில் இருந்ததாகவும், அந்த பெண் போலீசு எப்படி இறந்தார் என்று தெளிவாக தெரியும் என்றும் கூறினார்.

“அவர் ஒரு போலீஸ் வேனில் ஏற முயன்றார், ஆனால் அவர் சாலையில் விழுந்தார். அந்த வழியாக சென்ற ஒரு போலீஸ் பேருந்து அவர் மீது மோதியது.

கூட்டத்தை கலைக்க போலீசார் எட்டு ரவுண்டுகள் சுட்டனர்.

பின்னர், மாஜி சமூகத்தைச் சேர்ந்த 51 நபர்கள் மற்றும் 200 பெயர் தெரியாத நபர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பல பிரிவுகள் மற்றும் ஆயுதச் சட்டத்தின் பிரிவு 27-இன் கீழ் போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். இதுவரை, ஒரு சில பெண்கள் உட்பட, பத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜூலை 27 அன்று, கோவிந்தின் உடல் கிராமத்தை அடைந்தது. அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். நிலைமை மேலும் மோசமடையும் என்று அஞ்சியதால் உடலை விரைவில் தகனம் செய்ய போலீசார் வலியுறுத்தியதை உள்ளூர் மக்கள் நினைவு கூர்ந்தனர்.

சுரந்தி தேவி, “போலீசார் தாங்களே உடலை தகனம் செய்வோம் என்றும் நாங்கள் வெளியேற வேண்டும் என்றும் கூறிக் கொண்டிருந்தனர். ஆனால், நாங்கள் வெளியேறவில்லை மற்றும் கிராமத்திலிருந்து சிறிது தூரத்தில், போலீஸ் முன்னிலையில் உடலை எரித்தோம்’’ என்றார்.

போலீஸ் ரெய்டு

ஜூலை 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் தொடர்ந்து இரண்டு நாட்கள் கிராமத்தில் போலீசார் ரெய்டு நடத்தி, முழு வீடுகளையும் சூறையாடினர்.

கிராமத்தில் உள்ள முதியவர்கள் கூறுகையில், “போலீஸின் நடவடிக்கை 1994 மற்றும் 2000-ம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் செயல்பட்ட பீகாரில் உள்ள ‘உயர்’ சாதி பூமிகார்களின் அடியாள் படையான ரன்வீர் சேனா தாக்குதலை ஒத்ததாக உள்ளது. அந்த ரன்விர் சேனா குழு அரை தலித் மக்கள் பலரையும் கொன்று குவித்தது.” என்றார்

கிராமத்தைச் சேர்ந்த சுனைனா தேவி தி வயரிடம் கூறினார், “போலீசார் எதுவும் சொல்லவில்லை. அவர்கள் என் வீட்டிற்குள் திடுதிப்பென நுழைந்து இரண்டு அறைகளை “தேடினர்”. ஒரு அறையில், நான் ஒரு சூட்கேஸில் ரூ.15,000 வைத்திருந்தேன், அதை அவர்கள் எடுத்துச் சென்றனர். ரன்வீர் சேனா குண்டர்களும் அதேபோல்தான் சோதனை செய்வார்கள்.

லலிதா தேவி கூறுகையில், போலீசார் தனது பாத்திரங்கள் அனைத்தையும் உடைத்து நிலம் தொடர்பான ஆவணங்களை கிழித்தெறிந்தனர். இறந்த கோவிந்த் மஜியின் குடும்ப உறுப்பினர்கள் கூறுகையில், எங்கள் வீட்டில் பம்புசெட்டுகள், மடிக்கணினி மற்றும் நாற்காலிகளை சேதப்படுத்தியதாகக் கூறினர். ஜானகியா தேவி கூறுகையில், போலீசார் தனது கதவை உடைத்து தனக்கு சொந்தமான தொலைக்காட்சியை உடைத்தனர்.

ஷீலா தேவி

போலீசு நடவடிக்கைக்கு பயப்படுவதால் பெரும்பாலான கிராம மக்கள் விவசாய வயல்களிலோ அல்லது காடுகளிலோ பதுங்கியுள்ளனர். கிராமவாசிகள் மற்றொரு சுற்று போலீஸ் கொடூரத்திற்கு அஞ்சுகின்றனர்.

ஐம்பத்தைந்து வயதுடைய புத்து மஜ்ஜி தி வயரிடம், “நாங்கள் மாலையில் காட்டுக்குச் சென்று அங்கே இரவுகளைக் கழிக்கிறோம். நான் மட்டும் இல்லை. கிராமத்தின் கிட்டத்தட்ட அனைத்து ஆண்களும் பெண்களும் போலீஸ் நடவடிக்கையைத் தவிர்ப்பதற்காக காட்டில் தங்கியுள்ளனர்.

“போலீசுதுறை எங்களை இரக்கமின்றி அடித்தது,” என்று புத்து கூறுகிறார்.

சர்தாவைத் மட்டுமின்றி, நேஹல்பூர் முசாஹரி தோலாவிலும் போலீசார் சோதனை நடத்தினர். நெஹல்பூர் சார்தா கிராமத்திற்கு அருகில் உள்ளது.

மோகன் மஜி என்ற நடுத்தர வயது மனிதர், கிராமத்தின் இளைஞர்கள் கிட்டத்தட்ட ஒருவாரமாக வயலில் தங்கள் நாட்களைக் கழிக்கிறார்கள் என்று கூறினார்.

“சில நேரங்களில் நாங்கள் இரண்டு விவசாய வயல்களுக்கு இடையில் உள்ள வரப்பில்  தூங்குவோம். சனிக்கிழமை முதல் இரவில் மழை இல்லை. இது எங்களுக்கு உதவியாக உள்ளது. மழை இருந்திருந்தால், நாங்கள் எப்படி இரவைக் கழிக்க முடியும் என்று தெரியவில்லை” என்று நெஹல்பூர் வாசி ஒருவர் கூறினார்.

திறந்தவெளியில் பாம்பு கடிக்கும் ஆபத்து உள்ளது. நெஹல்பூர் முசாஹரி தோலாவைச் சேர்ந்த இரண்டு பெண்கள் வயல்வெளியில் பதுங்கியிருந்தபோது பாம்பு கடித்துள்ளது. இருவரும் உயிர் தப்பினர். அவர்களில் ஒருவர் ஷீலா தேவி.

“நான் வயலில் தூங்கிக் கொண்டிருந்தபோது ஒரு பாம்பு என்னை கடித்தது. 5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஓஜா–விடம் (மந்திரிப்பவர்) செல்ல நாங்கள் ரூ.500-க்கு ஒரு ஆட்டோவை வாடகைக்கு எடுக்க வேண்டியிருந்தது. அவருக்கு ரூ.400 கொடுத்தோம். நல்ல நேரம், நான் உயிர் பிழைத்தேன்” என்று அவர் கூறினார்.

போராட்டத்தில் ஈடுபடாத பலரை போலீசார் எப்.ஐ.ஆரில் குறிப்பிட்டுள்ளதாகவும், உண்மையில், அவர்கள் மற்ற மாநிலங்களில் தங்கியிருப்பதாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

படிக்க :
♦ சாத்தான்குளம் படுகொலை : காவலர்களல்ல, கிரிமினல்களே !
♦ காஷ்மீர் : போலீஸ் கொட்டடியில் பள்ளி முதல்வர் மரணம் ! தொடரும் பயங்கரம்

புத்து மஜ்ஜி தன் மருமகன் பஞ்சாபில் தங்கியிருப்பதாக குற்றம் சாட்டினார். ஆனால், போலீசார் அவரது பெயரை எஃப்.ஐ.ஆர்-ல் சேர்த்துள்ளனர்.

சர்தா உள்ள ஷீலா தேவி தனது கணவர் ஆர்ப்பாட்டத்தில் இல்லை என்று குற்றம் சாட்டினார். ஆனால், போலீசார் அவரை கைது செய்துள்ளனர். “போலீசார் அவரை மோசமாக அடித்துள்ளனர், மருத்துவர்கள் குளுக்கோஸ் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது” என்று அவர் கூறினார்.

கோவிந்த் மஜியின் மரணத்திற்காக அவரது குடும்பத்தினர் இன்னும் போலீசு மற்றும் சிறை அதிகாரிகளுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவில்லை.

“நாங்கள் போலீசுநிலையத்திற்கு பயணம் செய்ய பயப்படுகிறோம். அவர்கள் எங்கள் பேச்சைக் கேட்க மாட்டார்கள். அவர்கள் எங்களை கைது செய்து கோவிந்தைப்போல அடித்து நொறுக்கலாம்” என்று கோவிந்தின் சகோதரர் பாப்லு கூறினார்.

”ஆனால், நாங்கள் நீதி கோருகிறோம். இதன் பின்னணியில் உள்ள போலீசர் தண்டிக்கப்பட வேண்டும்” என்று இறந்த கோவிந்த் மஜியின் விதவை மனைவி சுரந்தி தேவி கூறினார்.


கட்டுரையாளர் : உமேஷ் குமார் ராய்
தமிழாக்கம் : முத்துகுமார்
செய்தி ஆதாரம் : The Wife

’ஹேர்கட்’ பெயரில் பொதுத்துறை வங்கிகளில் கார்ப்பரேட் கொள்ளை !

திவால் சட்டத்தின் (IBC) மூலம்
பொதுத்துறை வங்கிகளை கொள்ளையடிக்கும் முதலாளிகள் !

பதஞ்சலி ருச்சி சோயாவை கைப்பற்றியக் கதை

பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் மொத்த வருவாய் 2021 நிதியாண்டில் (FY21) 30,000 கோடியை எட்டியுள்ளது. இதில் ருச்சி சோயாவின் மூலம் பெற்ற வருமானம் மட்டும் 16,000 கோடியாகும். பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் சமையல் எண்ணெய் உற்பத்தி செய்யும் ருச்சி சோயா நிறுவனத்தை திவால் சட்டத்தின் கீழ் 2020-ஆம் ஆண்டில் கையகப்படுத்தியது.

இந்திய சமையல் எண்ணெய் தேவையில் மூன்றில் ஒரு பகுதியை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட ருச்சி சோயா நிறுவனத்தை பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் கைப்பற்றியதின் மூலம் இந்திய FMCG சந்தையில் முன்னிலை பெறுவதற்கான போட்டியில் இறங்கியுள்ளது.

பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் சமையல் எண்ணெய் உற்பத்தி செய்யும் ருச்சி சோயா நிறுவனத்தை ரூ.4,350 கோடிக்கு திவால் சட்டத்தின் (Insolancy and Bankruptcy Code-IBC) மூலம் 2020-ஆம் ஆண்டில் வாங்கியது. ருச்சி சோயாவை கைப்பற்றுவதில் அதானிக்கும் ராம் தேவ்-க்கும் இடையே நடந்த போட்டியில் மோடியின் கடைகண் பார்வை ராம்தேவ் மீது விழுந்ததினால் பதஞ்சலிக்கு ஆதரவாக இந்த ஒப்பந்தம் முடிந்தது.

படிக்க :
♦ UGC -ன் புதிய வகை கற்றல் – கற்பித்தலுக்கான வழிகாட்டுதலைப் புறக்கணிக்கப்போம் || CCCE
♦ RSS – BJP ன் அறிவியல் புறக்கணிப்பும் இந்துராஷ்ட்ரா வெறியுமே கொரோனா பேரழிவிற்கு காரணம் || CCCE

ருச்சி சோயா நிறுவனம் வங்கிகளிடமிருந்து வாங்கியக் கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் 2017-ம் ஆண்டில் திவால் நிலையை அறிவித்தது. கடன் கொடுத்த வங்கிகள் கடனைத் திரும்பப் பெறுவதற்காக தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் (National Company Law Tribunal-NCLT) முறையிட்டன. தீர்ப்பாயம், திவால் சட்டத்தின்படி கடன் வாங்கி கட்டாமல் இருக்கும் நிறுவனத்தை ஏலம் விட்டு கடன் தொகையை திரும்ப பெரும் நடைமுறையை துவங்கியது.

இந்த ஏலத்தில் அதானி வில்மர் மற்றும் பதஞ்சலி நிறுவனங்கள் போட்டியிட்டு அவைகளின் resolution திட்டங்கள் கடன் வழங்குநர்கள் கமிட்டியின் (Committee of Creditors-CoC) முன் வைக்கப்பட்டது. இறுதியாக பதஞ்சலி நிறுவனத்தின் resolution திட்டத்தினை கமிட்டி ஏற்றுக் கொண்டது. இதன்படி ரூ.4,350 கோடிக்கு ருச்சி சோயா நிறுவனம் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்திடம் விற்கப்பட்டது.

வங்கிகளிடமிருந்து ருச்சி சோயா ரூ.12,000 கோடியை கடனாகப் பெற்றுள்ளது. இதில் அதிக அளவிலானக் கடன்கள் பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து வாங்கியுள்ளது. NCLT மற்றும் கடன் வழங்குநர்கள் கமிட்டி ஏற்றுக் கொண்ட அதிகபட்ச ஏலத் தொகையான ரூ.4,350 (36%) கோடியை பதஞ்சலி நிறுவனம் வங்கிகளுக்கு செலுத்திவிடும்; இது மொத்த கடன் தொகையில் மூன்றில் ஒரு பங்கே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை வங்கிகள் பிரித்துக் கொள்ள வேண்டும். வங்கிகளுக்கு வரவேண்டிய மீதமுள்ள ரூ.7,650 (64%) கோடி கடனானது வங்கிகளின் நட்டக் கணக்கில் சேர்க்கப்பட்டுவிடும். உதாரணமாக, ரூ.1,816 கோடி கடன் கொடுத்த SBI ரூ.883 கோடியை மட்டுமே திரும்பப் பெறும், மீதமுள்ள ரூ.933 கோடியை காந்தி கணக்கில் எழுதிவிட்டனர்.

இதற்கு ஆங்கிலத்தில் இவர்கள் வைத்துள்ள பெயர் “haircut”, அதாவது மயிர் வெட்டிக் கொள்வது; ரூ.7,650 கோடி செலவு செய்து கடன் கொடுத்த வங்கிகள் மயிர் வெட்டிக் கொள்கிறார்கள்.

இதுபோலவே வீடியோகான் நிறுவனம் வங்கிகளிடமிருந்து பெற்ற கடனான 56824.3 கோடியை கட்டமுடியாமல் திவால் நிலையை அறிவித்தது. திவால் சட்டத்தின் மூலம் இந்நிறுவனத்தினை 5% கடன் தொகைக்கு (ரூ.2,777 கோடிக்கு) வேதந்தாவின் துணை நிறுவனமான Twin Sister நிறுவனத்திற்கு விற்க ஒப்புதல் அளித்துள்ளது NCLT. வீடியோகான் வங்கிகளுக்குத் செலுத்த வேண்டிய 95% கடனை வங்கிகளின் வாராக்கடன் கணக்கில் எழுதிவிட்டனர்.

இதுபோல கடந்த 6 ஆண்டுகளில் 4,540 நிறுவனங்கள் திவால் நிலையை அறிவித்துள்ளன. இதில், அதிகளவு கடன்கள் பொதுத்துறை வங்கிகளிடமிருந்தே பெறப்பட்டுள்ளது. இந்நிறுவனங்களுக்கு கடன் கொடுத்த வங்கிகளோ கொடுத்தக் கடனில், NCLT-ல் தள்ளுபடி செய்ததுபோக, மிகக் குறைந்த அளவு தொகையையாவது திரும்பப் பெறுவதே வெற்றி எனக் கருதுகின்றனர்.

தொழில் வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம் என்ற போர்வையில் பொதுத்துறை வங்கிகளில் உள்ள மக்களின் சேமிப்பான பல லட்சம் கோடிகளை முதலாளிகள் கூட்டத்திற்கு தாரை வார்த்தது மட்டுமல்லாமல், வராக்கடன் பிரச்சனையால் நிதி நெருக்கடியில் இருக்கும் பொதுத்துறை வங்கிகளுக்கு மூலதனத்தை அதிகரிக்கிறோம் (capital infusion) என்ற பெயரில் மக்களின்  வரிப்பணத்தையும் அள்ளி கொடுத்துள்ளனர்.

உதாணமாக மோடி ஆட்சிக்கு வந்த கடந்த ஏழு ஆண்டுகளில் மட்டும் haircut, writeoff என்று ரூபாய் 8 லட்சம் கோடியை பொதுத் துறை வங்கிகளிலிருந்து முதலாளிகளுக்கு கொடுத்துள்ளனர். இவ்வங்கிகள் தான் பொதுமுடக்கத்தால் நசிந்துபோய் இருக்கும் சிறு மற்றும் குறு தொழில்களுக்கும் டாக்ஸி போன்ற வாகன கடன்களுக்கும் வட்டியை கூட தள்ளுபடி செய்ய மறுக்கிறது.

அதேபோல் இவர்களுக்கு கடன் கொடுக்க சொன்ன ஒன்றிய அரசு மக்களுக்கு நிவாரணம் வழங்கவோ கடனில் வட்டியை தள்ளுபடி செய்யவோ நிதி இல்லை என்று சொல்கிறார்கள். தற்போது ராம்தேவ்-க்கு வருவோம்.

2019-ம் ஆண்டு ருச்சி சோயாவை கையகப்படுத்துவதற்கான ரூ.4,000 கோடியை பொதுத்துறை வங்கிகளிடமிருந்து கடனாக பெற ராம்தேவ் முயற்சிந்திருந்தார். அச்சமயத்தில் பதஞ்சலி  நிறுவனத்தின் நிதிநிலைமைகள் சரியில்லை எனக் கூறி Brickwork, ICRA, CARE ஆகிய தர நிர்ணய நிறுவனங்கள் பதஞ்சலி நிறுவனம் கடன் வாங்குவதற்கான தரமதிப்பை (+)ல் இருந்து (-)ஆக குறைத்திருந்ததிந்தன. அதனால் பொதுத்துறை வங்கிகள் ராம்தேவ்-க்கு கடன் வழங்க தயக்கம் காட்டின.

2019-ம் ஆண்டு அக்டோபரில் ஒரு கூட்டம் ஒன்றில் பேசிய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சுய உதவிக் குழுக்களுக்கும் ஆன்மீகத் தலைவர்கள் நடத்தக் கூடிய நிறுவனங்களுக்கும் கடன் வழங்கப் பொதுத்துறை வங்கிகள் தயக்கம் காட்டக் கூடாது என வெளிப்படையாகவே கூறினார். இதன் விளைவாக SBI உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள் பதஞ்சலி நிறுவனத்திற்கு கடன் வழங்க ஒப்புக் கொண்டன.

திவாலான ருச்சி சோயாவிற்கு SBI உள்ளிட்ட வங்கிகள் வழங்கிய கடனில் 65% (ரூ.7,650 கோடி) ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. தற்போது திவாலான ருச்சி சோயாவை வாங்குவதற்கு அதே வங்கிகள் ரூ.4,000 கோடியை ராம்தேவ்-விற்கு கடன் கொடுத்திருக்கிறது.

திவால் நிலையில் இருக்கும் தனியார் நிறுவனங்களின் கடன்களை தள்ளுபடி செய்து மறுஉயிர் கொடுக்கும் அரசுகள் கடனில் இருக்கும் பொதுத்துறை நிறுவனங்களை காப்பாற்ற எந்த கடன் தள்ளுபடியையும் கொடுக்க விரும்புவதில்லை.

படிக்க :
♦ தமிழகப் பல்கலைக் கழகங்களில் பறிபோகும் 69 சதவிகித இடஒதுக்கீடு || CCCE
♦ வல்லரசுக் கனவும் மாட்டுச்சாணி ஆய்வும் !! || CCCE

உதாரணமாக கடனில் தத்தளித்து கிட்டத்தட்ட திவாலாகி விடும் நிலையில் இருக்கும் மின்சார வாரியத்தை எடுத்துக் கொள்ளலாம். சமீபத்தில் வந்த தகவல்கள் மூலம் தமிழ்நாடு மின்சார வாரியம் மாதம் நூற்றுக்கு ரூ.1 வட்டி என்கிற அளவில் கூட கடன் வாங்கி உள்ளது என்று தெரிந்து கொண்டோம். நெருக்கடியில் இருக்கும் தனியார் நிறுவனங்களுக்கு வங்கிகள் haircut செய்துகொள்ள முடியும் என்றால் மக்களுக்கு சேவை செய்யும் மின்சார வாரியம் போன்றவற்றுக்கு ஏன் தள்ளுபடி செய்ய முடியாது?

மாறாக, கொரோனா நெருக்கடியால் மாநில அரசுகளுக்கு ஏற்பட்டிருக்கும் நிதி நெருக்கடியை பயன்படுத்தி மின்சார வாரியங்களை தனியார்மயமாக்க வேண்டும் என்றும் மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசு அழுத்தம் கொடுக்கிறது.

தனியார்மயத்துக்கு இவர்கள் சொல்லும் காரணம், தனியார்மயம் தான் இந்த கடன் பிரச்சனையில் இருந்து மின்சார வாரியங்கள் வெளியே வர ஒரே வழி என்பது தான்.

பாபா ராம்தேவ் போன்ற கார்ப்பரேட் கம்பெனிகளை நடத்தும் கார்ப்பரேட் சாமியார்களுக்கு கிடைக்கும் சலுகைகள் மக்களுக்காக சேவை செய்யும் அரசு நிறுவனங்களுக்கோ, நிதி நெருக்கடியில் இருக்கும் அரசுகளுக்கோ கிடைப்பது இல்லை.

(தொடரும்…)

ராஜன், அருண்

RSS-ன் நாஜி பாரம்பரியத்தை அம்பலப்படுத்தும் திரேந்தர் ஜா || முகமது இலியாஸ்

The Caravan இதழில் இந்த மாதம் அட்டைப்படக் கட்டுரையாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கருத்தியலைத் தீர்மானித்த ‘குருஜி’ கோல்வால்கரின் ஜெர்மானிய நாஜி பாசம் குறித்தும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நாஜி கருத்தியலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது என்பதையும் முன்வைத்து எழுதியிருக்கிறார் எழுத்தாளர் திரேந்திர ஜா.

நிழல் ராணுவங்கள்’ என்ற தலைப்பில் சங் பரிவாரின் அமைப்புகள் குறித்து இவர் எழுதிய புத்தகம் தமிழில் கிடைக்கிறது. இவரது ‘Aesthetic Games’ இந்து சாமியார்களுக்கும், இந்துத்துவத்திற்கும் இடையிலான தொடர்பை விவரிக்கும் முக்கியமான நூல்.

படிக்க :
♦ மோடி மட்டும்தான் முதன்மையான எதிரியா ? || காஞ்சா அய்லைய்யா
♦ நூல் அறிமுகம் || இந்துவாக நான் இருக்க முடியாது : ஆர்.எஸ்.எஸ்-ல் ஒரு தலித்தின் கதை || பன்வர் மெக்வன்ஷி || சு.கருப்பையா

’குருஜியின் பொய்கள்’ என்று தலைப்பிடப்பட்டிருக்கும் இந்தக் கட்டுரையில் இருந்து…

  • We or Our Nationhood defined என்று கோல்வால்கர் எழுதிய புத்தகம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பைபிள் என்று அழைக்கப்படுகிறது. இதில் இந்துக்களுக்கு ஹிட்லர் போன்ற தலைவர் தேவை என்றும், சிறுபான்மையினரை நாஜிக்கள் யூதர்களை அழித்ததுபோல அழிக்க வேண்டும் எனவும், இந்துத் தேசியம் குறித்து நாஜி ஜெர்மனியைப் போன்ற ஒப்பீடுகளுடன் எழுதியிருக்கிறார் கோல்வால்கர். 1939-ல் வெளியான இந்தப் புத்தகத்தை, காந்தி படுகொலைக்குப் பிறகு, தான் எழுதவேயில்லை என்று பல்டி அடித்ததை அம்பலப்படுத்தியிருக்கிறார் திரேந்திர ஜா.
  • We or Our Nationhood defined புத்தகம் சாவர்க்கரின் சகோதரர் கணேஷ் சாவர்க்கர் மராத்தி மொழியில் எழுதிய புத்தகத்தின் மொழிபெயர்ப்பு என்று 1963ல் அறிவிக்கிறார் கோல்வால்கர். கணேஷ் சாவர்க்கர் எழுதிய அந்தப் புத்தகம் இந்துத் தேசியம் குறித்த புத்தகம் என்ற போதும், அது நாஜி ஜெர்மனியை அடிப்படையாகக் கொண்டதல்ல என்பது இந்தக் கட்டுரையில் விளக்கப்படுகிறது. கணேஷ் சாவர்க்கர் இறந்து இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, ஆர்.எஸ்.எஸ் அமைப்பை நாஜி தத்துவத்தோடு ஒப்பிட்டு விமர்சனங்கள் எழ, தனது தலைமைப் பொறுப்பையும், தனது அமைப்பையும் காப்பாற்ற இப்படியொரு பொய்யைக் கூறியிருக்கிறார் கோல்வால்கர்.
  • முசோலினியின் பாசிஸ்ட் கட்சியும், ஹிட்லரின் நாஜி கட்சியும் தங்கள் தேசிய வளர்ச்சியை முன்னிறுத்தி, தங்கள் வரலாற்றுப் பெருமையை மீட்டதை இந்துக்களும் செய்ய வேண்டும் என்று எழுதுகிறார் கோல்வால்கர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பைத் தோற்றுவித்தவரும், அதன் முதல் தலைவருமான ஹெட்கேவாரின் குரு மூஞ்சே இந்து மகா சபா அமைப்பை நடத்தி வந்தவர். இவர் இத்தாலி சென்று முசோலினியைச் சந்தித்தவர்.

  • We or Our Nationhood defined புத்தகமே கோல்வால்கருக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் அடையாளத்தைத் தேடித் தந்திருக்கிறது. அதுவரை ஹெட்கேவாரின் வலதுகரமாக கருதப்பட்டவர், இந்தப் புத்தகத்தின் மூலமாகவும், அதுகுறித்த விவாதங்களின் மூலமாகவும் சங்கிகளை ஈர்த்திருக்கிறார். அதனால் அமைப்பின் பொதுச் செயலாளர் பதவி அவருக்குக் கிடைத்தது. ஹெட்கேவார் தனக்குப் பிறகு, ஆர்.எஸ்.எஸ் தலைவராக கோல்வால்கரை நியமித்திருக்கிறார்.
  • காந்தி படுகொலை வரை, ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கோல்வால்கரின் நாஜி கருத்துகளை வெளிப்படையாகப் பிரசாரம் செய்து வந்திருப்பதை அன்றைய உளவுத்துறை அறிக்கைகள் காட்டுகின்றன. ‘முஸ்லிம்களை எதிர்ப்பது மட்டும் நமது குறிக்கோள் அல்ல; அவர்களை அழிக்க வேண்டும். அதற்காக ஆட்களைத் தயார் செய்ய வேண்டும்’ என்று 1942-ல் பேசியுள்ளார் கோல்வால்கர். அன்றைய உளவுத்துறை அறிக்கைகளின்படி, ஆர்.எஸ்.எஸ் ஊழியர்கள் ஹெட்கேவார், சாவர்க்கர், மன்னர் சிவாஜி ஆகியோரின் வரலாற்றோடு ஹிட்லர், முசோலினி ஆகியோரின் வரலாற்றையும் வாசிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர். கோல்வால்கர் தன்னை Hindu führer ஆக மாற்றிக்கொள்ள கடும் முயற்சி எடுத்திருக்கிறார்.
  • காந்தியின் படுகொலை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் திட்டங்களைத் தலைகீழாகத் திருப்பிப்போட்டது. அமைப்பு தடை செய்யப்பட, மென்மையான பாதையைத் தேர்ந்தெடுத்தார் கோல்வால்கர். அதுவரை, இந்துக்களின் காவலனாகத் தன்னை முன்னிறுத்திய அவர், அதன் பிறகு தன்னை கடவுளின் அவதாரம் என்று முன்னிறுத்திக் கொள்ளத் தொடங்கினார். We or our Nationhood defined புத்தகத்தில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டவர், பத்திரிகை சந்திப்புகளில் தன்னைப் புகைப்படம் எடுக்கக் கூடாது எனக் கட்டளையிட்டார். அவரது ஆணையையும் மீறி எடுக்கப்பட்ட புகைப்படங்களில் அவர் தனது முகத்தை மறைத்திருப்பதையும் The Caravan இதழ் கட்டுரை வெளியிட்டிருக்கிறது.
  • 1998-ல் நாடாளுமன்ற விவாதம் ஒன்றில், முன்னாள் பிரதமர் சந்திரசேகர் பி.ஜே.பிக்கும் பாசிஸ்ட் கட்சிக்கும் தத்துவார்த்த ரீதியாகத் தொடர்பு இருப்பதைக் கேள்வி எழுப்பிய போது, அப்போதைய உள்துறை அமைச்சர் அத்வானி, கோல்வால்கருக்கும் அந்தப் புத்தகத்திற்கும் தொடர்பில்லை என்று பதிலளித்தார்.

வெளிநாட்டு இந்துத்துவ ஆதரவாளர் டேவிட் பிராவ்லி முதல் உள்நாட்டு சங்கி இண்டெலெக்சுவல்கள் வரை கோல்வால்கருக்கும் நாஜி தத்துவத்திற்கும் தொடர்பில்லை என்பதைப் பதிவு செய்ய பல்வேறு முயற்சிகள் எடுத்திருந்தாலும், அதனை ஆதாரங்களோடு மறுத்திருக்கிறது திரேந்திர ஜாவின் இந்தக் கட்டுரை.


ர. முகமது இல்யாஸ்

முகநூலில் : Ilyas Muhammed Raffiudeen

disclaimer

இழிவாகப் பார்க்கப்படும் தாய்மொழி வழிக் கல்வி : ஒரு பெற்றோரின் அனுபவம் !

School

தமிழ்வழிக் கல்வியில் தன் மகனைச் சேர்த்த பெற்றோரின் அனுபவம்!

சென்னையைச் சேர்ந்த நண்பர் ஒருவர் ஆறு வயதான மகனைப் பள்ளிக் கூடத்தில் சேர்த்ததில் ஏற்பட்ட சிக்கல்களைப் பற்றிய பதிவு இது. தமிழ் மொழிப் பற்றாளரான அவர் தனது மகனை தமிழ் வழியில் தான் படிக்க வைக்க வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக இருந்தவர்.

சென்ற ஆண்டு தன் வீட்டுக்கு அருகே உள்ள அரசு தொடக்க பள்ளி ஒன்றில் தன் மகனை மழலையர் வகுப்பில் (யு.கே.ஜி) சேர்த்திருந்தார். ஆனால் அப்பள்ளியில் யு.கே.ஜி. தமிழ் வழியில் இல்லை, ஆங்கில வழியில் மட்டும்தான் இருக்கிறது என்று கூறியிருந்தார்கள். எனினும் இவர் தமிழ் வழிக் கல்வியை வலியுறுத்திக் கேட்கவே அடுத்த கல்வியாண்டில் முதலாம் வகுப்புக்கு செல்லும் போது தமிழ் வழியில் மாற்றிக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கின்றனர்.

அரசு தொடக்கப் பள்ளியில் தமிழ் வழியில் மழலையர் கல்வி ஏன் இல்லை என்ற கேள்வியே நம்மை தொக்கி நின்று கொண்டிருக்கையில், இந்த ஆண்டு ஒன்றாம் வகுப்பில் சேர்ப்பதற்காகச் சென்று கேட்ட போதும் “இல்லை சார் தமிழ் மீடியம் இல்லை. இங்கிலீஷ் மீடியம் தான் இருக்கு. நீங்க அதிலேயே சேருங்களேன்” என்று சொன்னதைக் கேட்டு அவர் அதிர்ந்து போயிருக்கிறார்.

அதெப்படி, நீங்கள் தானே சொன்னீங்க. அடுத்த ஆண்டு தமிழ் மீடியம்ல மாத்திக்கலாம்னு, இப்ப எப்படி இல்லைன்னு சொல்றீங்க? அதெப்படி இல்லாமல் போகும்” என்று கேட்டிருக்கிறார். “சார், தமிழ் மீடியம்ல யாரும் இல்ல, உங்க பையன் ஒருத்தனுக்காக சேர்க்க முடியாது, நீங்கள் வேணும்னா இங்கிலீஷ் மீடியம்லயே சேருங்களேன்” என்று அப்பள்ளியின் ஆசிரியர்கள் கூறியுள்ளனர். அவர் சம்மதிக்கவில்லை.

படிக்க :
♦ அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சரியாக சொல்லி கொடுக்கவில்லையா?
♦ ஆங்கில மோகத்திற்கு பலியிடப்படும் அறிவுத்திறன் – ஒரு கள ஆய்வு !

ஒரு அரசுத் தொடக்கப் பள்ளியிலேயே “தமிழ் மீடியம் இல்லை, யாரும் சேர்க்கவில்லை, அதனால் உங்கள் பிள்ளையையும் தமிழ் வழியில் சேர்க்க முடியாது” என்று அந்த ஆசிரியர் சொன்னதை அவரால் ஏற்க முடியவில்லை. வேறுபள்ளியில் தமிழ் வழியிலேயே சேர்த்துக் கொள்ளலாம் என்று வந்துவிட்டார்.

வேறொரு பள்ளிக் கூடத்தில் சேர்ப்பது பற்றி யோசித்துக் கொண்டிருக்கும்போது, அந்தப் பகுதியில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர்கள் தன் வீட்டருகே பிரச்சாரம் செய்து கொண்டிருப்பதைக் காண்கிறார். “அனைவரும் தங்கள் வீட்டுப் பிள்ளையை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும்” என வீட்டுக்கு வீடு துண்டுப் பிரசுரம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்களிடம் சென்று ஒரு துண்டு பிரசுரத்தை வாங்கிய பின் அக்குழுவிலிருந்த ஒரு ஆசிரியரிடம் “என் பையனை ஒன்னாவது வகுப்புல சேர்க்கனும். பக்கத்துல இருக்கிற பள்ளிக்கூடத்துல தமிழ் மீடியமே இல்லைன்னு சொல்லுறாங்க, நம்ம பள்ளிக் கூடத்துல தமிழ் மீடியம் இருக்கா?” எனக் கேட்டுள்ளார்கள். ”இருங்க கேட்டு சொல்றேன்” என இன்னொரு ஆசிரியரிடம் போனில் பேசிய அவர் “இல்ல சார் தமிழ் மீடியம் இல்ல. இங்கிலீஷ் மீடியம் மட்டும் தான் இருக்காம்” என்று சொல்லிய போது அவருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. இது இரண்டாவது முறை. அரசுப் பள்ளிக் கூடங்களிலேயே தமிழ் வழிக் கல்வி இல்லை என்பதனை அவரால் நம்ப முடியவில்லை.

இது பற்றி தன் வீட்டருகே உள்ள சத்துணவுக் கூட ஆசிரியர் ஒருவரிடம் பேசியபோது, அவருக்கு அந்த மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியரை தெரிந்திருந்தது. ஆகவே அவருக்கு போன் போட்டு பேசி, அப்பள்ளியில் தமிழ் வழி இருக்கிறது என்பதனை உறுதிபடுத்தியுள்ளார். மேலும் ”தமிழ் மீடியம் இல்லாமல் இருக்காது, நேரிலேயே சென்று பாருங்கள்” எனவும் வழிகாட்டியுள்ளார்.

உங்கள் பள்ளிப் பருவத்தின் இனிமைகளை உங்கள் குழந்தைகளும் சுவைக்க வேண்டுமா? வாருங்கள், அரசுப் பள்ளிகளை நோக்கி…

அடுத்த நாளே தனது துணைவியாருடன் அம்மேல்நிலைப் பள்ளிக்குச் சென்றார். பள்ளியின் வாசலில் உள்ள அறிவிப்பு பதாகையிலேயே இங்கு தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்வி இரண்டும் உண்டு என எழுதப்பட்டிருந்தது அவருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது. உள்ளே சென்ற பின், சேர்க்கை நடத்துவதற்கான பகுதியில் அமர்ந்திருந்த ஆசிரியர்களிடம் விண்ணப்பத்தை கோரியுள்ளார். அப்போது ஆசிரியர்கள் ”எந்த மீடியம்” என கேட்டபோது, ”தமிழ் மீடியம் சேர்க்கனும் டீச்சர்” என சொல்லியதற்கு இலேசான புன்னகையுடன் “தமிழ் மீடியமா?” என கேட்டுக் கொண்டே அந்த ஆசிரியர்கள் விண்ணப்பத்தைக் கொடுத்துள்ளனர்.

எனது நண்பர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்துகொண்டிருந்தபோது, சில அடிகள் தள்ளியிருந்த அவரின் துணைவியாரைப் பார்த்துக் கொண்டே “இரண்டு பேரும் சேர்ந்து விருப்பத்தோடு தான் தமிழ் மீடியம் சேர்க்குறீங்களா?” எனக் கேட்டுள்ளார் அங்கிருந்த ஆசிரியர் ஒருவர்.

அரசுப் பள்ளிகளில் இருமொழிக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து சாதாரண ஏழை, நடுத்தர வீட்டுப் பெற்றோரும் அரசுப் பள்ளிக் கூடங்களில் ஆங்கில வழியில் சேர்ப்பதையே விரும்புவதால் (விரும்ப வைக்கப்படுவதால்) எதோ ஒரு கொள்கைக்காக தன் துணைவியார் சம்மதமில்லாமல் என் நண்பர் வலுக்கட்டாயமாக தமிழ் வழியில் சேர்க்கிறாரோ என்று நினைத்துதான் அந்த ஆசிரியர் அவ்வாறு கேட்டுள்ளார் என்பது அவரின் துணைவியாருக்கும் புரிந்துவிட்டது. “ஆமாங்க, இரண்டு பேரும் சேர்ந்துதான் முடிவெடுத்தோம்” என்று பதில் சொல்லி அவர்களது சந்தேகத்தை பொய்யாக்கினார் அவர்.

பிறகு ஒருவழியாக அந்த நண்பர் தான் விரும்பிய வண்ணம் தன் மகனை தமிழ் வழியில் சேர்த்துவிட்டார். ஆனால் அவருக்கு நடந்த சம்பவத்தையெல்லாம் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்.

படிக்க :
♦ அண்ணாமலை ஜி, மக்கள் மன்றத்தின் எதிர்வினைதான் மதுரை சம்பவம் !
♦ தேச துரோக சட்டத்தை (124-A) ரத்து செய்யுமா மோடி அரசு ? || தோழர் சுரேசு சக்தி முருகன்

விருப்பத்துடன் தான் சேர்க்கிறீர்களா?” என்று அந்த ஆசிரியர் கேட்குமளவிற்கு தாய்மொழியான தமிழ் வழிக் கல்வியில் சேர்ப்பதென்ன அத்தகைய விரும்பத்தகாத செயலா? உண்மையில் ஆங்கில வழியில் சேர்ப்பவர்களிடம் தான் நியாயமாக இந்தக் கேள்வியை கேட்க வேண்டும். ஏனெனில் அது தான் அந்நியமொழி, ஆனால் மறுகாலனியாக்கக் கொள்கைகள் புகுத்தப்பட்ட பிறகு, நிலைமை தலைகீழாகப் போகுமளவிற்கு ஆங்கில மோகம் சாதாரண மக்களிடமும் திணிக்கப்பட்டிருக்கிறது என்பதனைத் தான் இது காட்டுகிறது.

முன்னர் இவர் சேர்க்க முயன்ற தொடக்கப் பள்ளியிலோ, தமிழ் வழியில் ஒரு மாணவர் கூட இல்லை, அதனால் தனியாக உங்கள் பிள்ளையை மட்டும் தமிழ் வழியில் சேர்க்க முடியாது என்று சொல்லியதையும் சேர்த்துப் பார்க்கும்போது இதன் வீச்சை உணரமுடிகிறது.

அரசுப் பள்ளிக் கூடத்தில் தமிழ் வழியில் தன் மகனை சேர்த்தது குறித்து என் நண்பரின் உறவினர் ஒருவர் “ஏம்பா இப்படி பண்ண, சரி கவர்மண்ட் ஸ்கூல்ல சேர்த்ததே சேர்த்த, அட்லீஸ்ட் அங்கயாவது இங்கிலீஷ் மீடியம்ல சேர்த்திருக்கலாம்ல. இப்படி பண்ணிட்டியே” என்று ‘அக்கறைப்பட்டுக் கொண்டாராம்’.

நிலா, நிலா ஓடி வா..” என்று தமிழ்ப்பாட்டு பாடும் குழந்தையை விட, “டிவிங்கிள்.. டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்” என்று ரைம்ஸ் பாடும் குழந்தைதான் அறிவார்ந்த குழந்தை எனும் இந்த உளவியல் தமிழ்நாட்டு மக்களின் மேல் மறுகாலனியாக்கம் ஏவியிருக்கும் அடிமைப் புத்தி. அதற்கு கிரியாவூக்கியாக சமூகத்தில் ஊறியிருக்கும் பார்ப்பனியம் செயலாற்றுகிறது.

ஆனால், தமிழால் ஆட்சியைப் பிடித்த திராவிடக் கட்சிகளே, இந்த அடிமைப் புத்தியிலிருந்து மக்களை மீட்டெடுத்து மொழியுணர்வு ஊட்டுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மறுகாலனிய கொள்கைகளுக்கு ஏற்ப ஆங்கில வழிக் கல்வி மாயையை மக்கள் மத்தியில் தீனிபோட்டு வளர்த்திருக்கின்றன. இதுவே, அரசுப் பள்ளிக்கூடங்களில் தாய்மொழியான தமிழ் வழிக் கல்வியே இழிவாகப் பார்க்கப்படுவதற்கான முதன்மை காரணம்.


பால்ராஜ்

ஆர்.எஸ்.எஸ் – பாஜகவின் நிகழ்ச்சிநிரலுக்கு பின் செல்லும் திமுக || மக்கள் அதிகாரம்

பொன்னையா கைது:  ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி கும்பலுக்கு பணியும் திமுக || மக்கள் அதிகாரம்

ன்னியாகுமரியில் கிருத்துவ நிகழ்ச்சியில் பேசிய பாதிரியார் பொன்னையா, இந்துமதவெறி அமைப்புகள் கொடுத்த மிரட்டல்கள் காரணமாக கைது செய்யப்பட்டிருக்கிறார். கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடைபெற்ற போராட்டத்தில் பாரதமாதா, மோடி, ஸ்டாலின் ஆகியோரை தரக்குறைவாகப் பேசியதாகக் கூறி 7 பிரிவுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு அவரின் பிணை மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

”சர்ச்(சை) பாதிரியார் கைது, பாரதமாதாவை இழிவு படுத்தியவர் கைது, மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது” இவையெல்லாம், ஊடகங்கள் பொன்னையா கைது செய்திக்கு கொடுத்த தலைப்புக்கள். ஒரு கொலை நடந்தால் அதற்கு பின்னணி என்ன என்பதை ஆராய்ந்து கருத்து கந்தசாமிகளாக இருக்கும் ஊடகங்கள் இந்த சர்ச்சைப் பேச்சின்’ பின்னணி என்ன? என்பதைக் கூறவில்லை. பின்னணியை ஆராய்வது அவர்களின் வழக்கமாக இருந்தாலும் பொன்னையாவின்  பேச்சின் பின்னணியை ஆராய்ந்தால் அது ஆர்.எஸ்.எஸ்க்கு எதிராகப்போகும் என்பதால் அதற்குள் யாரும் போகவில்லை.

மறுக்கப்பட்ட சிறுபான்மை மக்களின் வழிபாட்டு உரிமை

குமரி மாவட்டம் மாத்தூர் தொட்டி பாலத்தின் அருகே உள்ள மலங்கரையில் 62 ஆண்டுகளாக இருந்த ஒரு குறுசபை எனப்படும் சிறு ஜெபக் கூடத்தை விரிவுபடுத்திக் கட்டி, அதன் திறப்பு விழாவும் சிறப்பு ஆராதனை விழாவும் ஜூன் 18-ம் தேதியன்று நடைபெறும் என்று அறிவித்தனர் கிறிஸ்துவ சபையினர். ஜூன் 15-ம் தேதி இந்த அறிவிப்பு வந்ததும், அடுத்த நாள் ஜூன் 16-ம் தேதி கன்னியாகுமரி பாஜக எம்.எல்.ஏ.வான எம்.ஆர். காந்தி அந்த சர்ச்சின் முன் பாஜகவினரோடு திரண்டார். ”இந்த சர்ச் அனுமதியின்றி கட்டப்பட்டிருக்கிறது. இதைத் திறக்கக் கூடாது”என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

படிக்க :
♦ திமுக-வின் எதிரி ஆர்.எஸ்.எஸ் அல்ல – பாஜக மட்டுமே || ர.முகமது இல்யாஸ்
♦ நூல் அறிமுகம் :- ஆர்.எஸ்.எஸ்: இந்து தீவிரவாத கட்டமைப்பின் வேர்

டி.ஆர்.ஓ. இந்த விவகாரத்தை விசாரித்தார். அப்போது கிறிஸ்துவ சபை தரப்பில் பல ஆண்டுகளாக இந்த சபை இயங்குவதற்கான ஆவணங்கள், போட்டோக்கள் உள்ளிட்டவற்றை டி.ஆர்.ஓ.விடம் கொடுத்திருகிறார்கள். ஆனாலும் பாஜகவின் கடும் எதிர்ப்பு காரணமாக அந்த வளாகத்தைச் சுற்றி பச்சை வண்ண பிளாஸ்டிக் சாக்கு கொண்டு மறைத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, திறப்பு விழாவை தடை செய்துவிட்டனர். இது சிறுபான்மை மக்களை மேலும் சினமூட்டுவதாக அமைகிறது.

இந்த நிலையில் ஜார்ஜ் பொன்னையா பொறுப்பு வகிக்கும் ஜனநாயக கிறிஸ்துவ பேரவையும், அதிமுகவுடன் நெருக்கமாக இருக்கும் அருமனை கிறிஸ்துமஸ் குழுவினரும், தமுமுக உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகளும் இணைந்து இந்த விவகாரம் தொடர்பாக அருமனையில் ஜூலை 18-ம் தேதி ஒரு கண்டன ஊர்வலம் நடத்த அனுமதி கோரினார்கள். இந்த விவகாரத்தில் கிறிஸ்துவர்களும், முஸ்லிம்களும் ஒன்றுபட்டது குறிப்பிடத் தக்கது.

இந்தத் தகவல் அறிந்து பாஜக தரப்பினரும் அதே தேதியில் ஊர்வலம் ஒன்றை அறிவித்தார்கள்.  இதை சாக்காக வைத்துக்கொண்டு மோதல் ஏற்படும் என்று சொல்லி இரு தரப்பினருக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. முதலில் அனுமதி கோரியது யார் என்றெல்லாம் காவல்துறையினர் பார்க்கவில்லை. அந்த வகையில் ஜூலை 18-ம் தேதி அருமனையில் கண்டன ஊர்வலத்துக்கு அனுமதி கோரிய கிறிஸ்துவ பேரவை, அருமனை கிறிஸ்துமஸ் அமைப்புக்கும் பாஜகவுக்கும் ஊர்வலம் போக தடைவிதிக்கிறது போலீசு.

ஊர்வல தேதிக்கு இரு நாட்கள் முன்னதாக அப்பகுதியில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தி அப்போராட்டத்தையே சென்ஸிட்டிவான ஒன்றாக மாற்றுகிறது.
இப்படி 62 ஆண்டுகளாக வழிபட்ட இடத்தை ஆர்.எஸ்.எஸ் கும்பலோடு சேர்ந்து முடக்கிய அரசு மீது சிறுபான்மை மக்களுக்கும் அமைப்புக்களும்  உணர்கிறார்கள்.

அதனால்தால் அப்போராட்டத்தில் பலரும் கோபத்தோடு தங்கள் உணர்வுகளை பதிவு செய்தனர். மண்டைக்காடு கலவரத்திற்கு முக்கியக் காரணமான எம்.ஆர்.காந்தி (தற்போது நாகர் கோயில் எம்.எல்.ஏ) தலைமையில் சிலர் மனு கொடுத்தால் சர்ச்சை மூடுவார்கள் என்றால் அரசின் செயல்பாட்டை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அவர் பேசிய உடனே கைது செய்யப்படவில்லை. மாறாக , தமிழகம் முழுவதும் பாஜக கும்பல் ஆர்ப்பாட்டம் ரகளையில் ஈடுபட்ட பிறகு அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

நீதிமன்றத்தை இழிவாக கூறிய எச். ராஜா இதுவரை கைது செய்யப்படவில்லை . பொன் ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், அண்ணாமலை, அர்ஜுன் சம்பத், இராம ரவிக்குமார் ஆகியோர் ஒவ்வொரு நிமிடமும் சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும் நாட்டின் ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் செயல்களையும்  மேற்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ஆளும் வர்க்க பகுத்தறிவு

பகுத்தறிவாளர்களும் ஊடகவியலாளர்களும் பொன்னையா கிருத்துவ பெரும்பான்மை வாதம் பேசுகிறார். எரிகிற எண்ணையில் தீ ஊற்றுகிறார். அதனால் கைது செய்தது சரியே என்கிற வாதத்தை முன்வைக்கிறார்கள். கிருத்துவ பெரும்பான்மை வாதம் பேசுவதால் அவர் கைது செய்யப்படவில்லை. அதில் நமக்கு உடன்பாடும் இல்லை.  எரிப்பவன் மீது  இரண்டாவது பரிசீலனை. எண்ணை ஊற்றுபவன் மீது முதல் பரிசீலனை.   ஒரு இந்து,  இந்து மதத்தை விமர்சிப்பது தவறில்லை என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது

இது முற்றிலும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத கண்ணோட்டமாகும். தவறாக இருப்பின் யாரும் யாரையும் விமர்சிக்க உரிமை படைத்ததுதான் ஜனநாயகம். பிறப்பால் ஆதிக்க சாதியில் பிறந்த ஒருவர் தலித் மக்களின் பிரச்சினைகளை – அதில் உள்ள பாகுபாடுகளைப் பேசக்கூடாதா? இயேசு பூமியை பாயாக சுருட்டிக்கொண்டு சென்றார் என்ற பழைய பைபிளின் முட்டாள்த்தனத்தை எப்படி கேள்வி கேட்க உரிமை உள்ளதோ அதே போல பூமிக்கு பிறந்த நரகாசுரனின் கதையை விமர்சிக்க எல்லோருக்கும் உரிமை உள்ளது.

ஆய்வுக்கு செல்லும் அமைச்சர்கள் சுசீந்திரம் கோயிலுக்கு சட்டையை கழற்றிவிட்டு ஏன் சொல்கிறீர்கள் ? என்ற நியாயமான கேள்வி எப்படி இரு மதங்களுக்கிடையில் பகையை உண்டாக்கும்? இதே வார்த்தையை திக, கம்யூனிஸ்டுகள் சொன்னால் பிரச்சினையில்லை பாதிரியார் சொன்னதுதான் பிரச்சினை என்று திமுக அரசின் நடவடிக்கைகளுக்கு சப்பைக்கட்டு கட்டுகிறார்கள்.

இவர்கள் தான் கந்தசஷ்டி கவசத்தை கருப்பர் கூட்டம் விமர்சித்தது தவறு என்றார்கள். சென்னை அரும்பாக்கத்தில் உழைக்கும் மக்களின் வீடுகள் கூவம் ஆற்றங்கரையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு 30கிலோமீட்டர் தொலைவிற்கு விசிறியடிக்கப் படுவதையும் நியாயம் பேசுகிறார்கள். நீட் தேவை உடனே ரத்து செய்ய முடியாதென்று வியாக்கியானம் தருகிறார்கள். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகுவதெல்லாம் உடனடி சாத்தியமில்லை என்கிறார்கள். இந்தப்பின்னணியில் தான் பொன்னையா ஜார்ஜ்-ன் கைதை நாம் கவனிக்க வேண்டும்.

ஜார்ஜ் பொன்னையா ஒரு மோசடிப் பேர்வழி என்று புகார் வருகின்றது. அதற்கு கைது செய்யப்பட்டாரா என்றால் இல்லை. சாமியார்களே போலிதான் என்பெதெல்லாம் வேறு ஒரு தளத்தில் விவாதிக்க வேண்டியவை. தனிப்படை அமைத்து ஜார்ஜ் பொன்னையாவை கைது செய்ய வேண்டிய அவசியம் திமுக அரசுக்கு ஏன் ஏற்பட்டது?

இந்து விரோதி vs இந்து ஆதரவுவாதி

பாஜக தலைவர் அண்ணாமலை பதவியேற்றவுடன் முக்கியமாக சில விஷயங்களை பதிவு செய்தார்.
1.திமுகவுக்கு எதிர்கட்சி பாஜக தான்
2.திமுகவின் சித்தாந்தத்திற்கு மாற்று சித்தாந்தம் நாங்கள்தான்
3.தமிழகத்தில் குறிப்பாக தென் மாவட்டங்களில் சிறுபான்மையின மக்களுக்கு ஆதரவாக யாருமே இல்லை நாங்கள் மட்டுமே இருக்கிறோம்.

இனி திமுக ஒரு இந்து விரோத கட்சி என்ற பிரச்சாரத்தையே முதன்மையாக பாஜக மேற்கொள்ளும் . அதற்கு பதிலடியாக நாங்கள் இந்து ஆதரவு கட்சிதான் என்ற நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொள்ளும். ஒரு கிராமத்தில் உள்ள ஜெபக்கூடப் பிரச்சினையை மாநில அளவிலான சட்டம் – ஒழுங்கு பிரச்சினையாக மாற்றி அதன் மூலம் திமுகவை தங்கள் வழிக்கு கொண்டு வந்துவிட்டனர். பாஜக என்ன நிகழ்ச்சிநிரல் வைக்கிறதோ அந்த நிகழ்ச்சிநிரலுக்கு பதில் சொல்வதே இனி திமுகவுக்கு வேலையாக இருக்கும்.

திமுக மீது ஏற்படும் அனைத்து அதிருப்திகளையும் சிறப்பாக பாஜக இனி பயன்படுத்தும். அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியே பாஜக வளர்வதற்கு ஏதுவான ஒன்று. ஏனெனில் வலுவான எதிர்க்கட்சி இல்லாத சூழலில் அரசின் மீதான அதிருப்தியை பாஜகவே அறுவடை செய்யும்.

தென்மாவட்டங்கள் தான் அவர்கள் முதல் இலக்கு. அதை நோக்கிய பயணமாக தான் இந்த அருமனை ஜெபக் கூட பிரச்சனையும் பொன்னையா கைதும். குமரி மாவட்டத்தில் கிருத்துவர்கள் அதிகமாக இருப்பதால் இதை வைத்துக்கொண்டு ஆர்.எஸ்.எஸ் கலவரம் செய்ய முயல்வது நாம் அறிந்ததே.

திமுக அரசானது இந்துக்களுக்கு எதிரி என்ற பிரச்சாரத்தை பாஜக மேற்கொள்ளும். திமுகவோ இந்துக்களுக்கு ஆதரவாக இருப்பது தாங்கள் தான் என்பதை நிரூபிப்பதற்காக பாஜக சொல்கின்ற எல்லாவற்றையும் கேட்கும். கடந்த தேர்தல் அறிக்கையில் கூட முஸ்லிம்களுக்கு புனித யாத்திரைக்கு மானியம் கொடுப்பதுபோல இந்துக்களுக்கு கொடுப்போம் என்று அறிவித்தது தான் திமுக.

ஆர்.எஸ்.எஸ். மதவெறி கும்பல் ஜெபக் கூட்டம் நடத்தும் வீடுகளிலும் சர்ச்சைகளிலும் உள்ளே புகுந்து  பல இடங்களில் ரகளை செய்து வருகிறார்கள் . அப்படிப்பட்ட தாக்குதல்கள் மென்மேலும் வளர்வதற்கு இந்தக் கைது நடவடிக்கை பயன்படும்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் வீரமணி அவர்கள் கிருஷ்ணனைப் பற்றி கூறிய கருத்துக்களை வைத்துக் கொண்டு அவர் மீது தாக்குதல் நடத்த சங்கப் பரிவாரங்கள் முயன்றது நாம் அனைவரும் அறிந்ததே. அப்போதும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமை, அது அவரது சொந்தக் கருத்து என்று தெளிவாகக் கூறியதே தவிர அந்தக் கருத்து சரியானது என்று தெரிவிக்கவில்லை.

கந்த சஷ்டி கவசம் பிரச்சினையிலும் கருப்பர் கூட்டத்தை ஆர்.எஸ்.எஸ் நபர்கள் என்றார்கள். பகுத்தறிவுப் பிரச்சாரத்தை எல்லாம் தூக்கி வைத்துவிட்டு ஆட்சியை பிடிப்பது, ஆட்சியை பாதுகாக்க எவ்வித எல்லைக்கு செல்வதும் திமுகவிற்கு புதியதல்ல. ராமன் என்ன என்ஜினியரா? என்று கேட்ட கருணாநிதிதான் அதற்கு சில ஆண்டுகள் முன்னர் ஆர்.எஸ்.எஸ் ஒரு சமூக இயக்கம் என்றார் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

தன்னை திராவிட பாரம்பரியத்தில் இருந்து வந்ததாகக் கூறிக் கொள்ளும் திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கமோ தன் ஆட்சி மீது குற்றம் சுமத்திவிடக்கூடாது என்பதற்காகவும் இந்து மதவெறிக் கும்பலின் மிரட்டலுக்கு பயந்தும் பொன்னையாவை கைது செய்திருக்கிறது.

படிக்க :
♦ புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் – 2021 அச்சு இதழ் !
♦ துக்ளக் : அதுக்கு ஒரு குத்து.. இதுக்கு ஒரு குத்து..

சிறுபான்மை மக்களையும் கம்யூனிஸ்டுகள் மற்றும் நாத்திகர்களை மிக ஆபாசமாகவும் இழிவாகவும் பேசிவரும் ஆர்.எஸ்.எஸ் – பாஜகவினரை கைது செய்ய துப்பற்ற அரசு ஜார்ஜ் பொன்னையாவை கைது செய்துள்ளது.

இன்று பொன்னையாவுக்கு நடைபெற்ற இந்த நடவடிக்கை, நாளை பகுத்தறிவுப் பிரச்சாரத்தை தமிழகத்திலே  மேற்கொள்ளும் நம் மீதும் பரவுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. கந்தசஷ்டி கவசம்  பற்றி மணியம்மையாரும் பெரியாரும் பேசாததை யாரும் பேசிவிடவில்லை. ஆனாலும் ஆர்.எஸ்.எஸ் ரகளைகளுக்குப் பின்னர் கருப்பர் கூட்டம் யூட்யூப் சேனலே முடக்கப்பட்டது. பெரும்பான்மை ஆதரவின்றி கருப்பர் கூட்டம் தனித்துவிடப்பட்டது. இப்போது ஜார்ஜ் பொன்னையா தனித்து விடப்பட்டு இருக்கிறார். இவர்கள் எல்லாம் திமுகவிற்கு ஓட்டு கேட்டவர்கள்; திமுக வந்தால் பாலாறும் தேனாறும் ஓடும் என்று முழங்கியவர்கள்.

ஒன்று அடக்கிவாசி அல்லது அமைதியாக இரு என்பதுதான் தன்னுடைய ஆதரவாளர்களுக்கு திமுக அரசு சொல்லும் செய்தி. காவிகளுக்கு ஆதரவு கொடுப்பது என்பதில் சென்ற ஆட்சிக்கும் இந்த ஆட்சிக்கும் உள்ள வித்யாசம் ஏதுமில்லை என்பதை வருங்காலம் உணர்த்துவதற்கான வாய்ப்புக்களே அதிகம் உள்ளன.

என்ன செய்வது?

ஆர்.எஸ்.எஸ் – பாஜகவை பொருத்தவரை, அவர்களிடம் தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்ற நிகழ்ச்சிநிரல் இருக்கும் அதே நேரத்தில் எதிர்க்கட்சிகள் என்ன செய்ய வேண்டும் என்ற நிகழ்ச்சிநிரலும் இருக்கும். அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ”பெகாசஸ்.” 19 நாட்களில் 30க்கும் மேற்பட்ட மக்கள் விரோத மசோதாக்களை தாக்கல் செய்து அவற்றை சட்டமாக்க வேண்டும் என்பது  பாஜகவின் நிகழ்ச்சிநிரல்.

அம்மசோதாக்களின் தன்மையை மக்களிடத்தில்  கொண்டு மக்களிடத்தில் எழுச்சியை உருவாக்க வேண்டும் என்பதல்ல எதிர்க்கட்சிகளின் நிகழ்ச்சிநிரல். அவர்களிடம் கார்ப்பரேட் எதிர்ப்பு கொள்கை இல்லாததால் நாடாளுமன்றம் முடக்கம் என்பதற்கு மேல் எதுவும் செய்யப்போவதில்லை. அம்பலமான பெகாசஸ் விவகாரத்திற்கு எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற அமளியை  நன்றாக பயன்படுத்திக் கொண்டது பாஜக.

நீட், மேக்கேதாட்டு, மீன்வள மசோதா, டி.என்.ஏ மசோதா, சி.ஆர்.பி.சி திருத்தம், சுற்றுச்சூழல் சட்டத்திருத்தம். , தொழிலாளர் சட்டத்திருத்தம் என கார்ப்பரேட்  – காவி பாசிச திட்டங்களை நடைமுறைப்படுத்தும் ஆர்.எஸ்.எஸ். – பாஜக குமபலின்  சதித்தனங்களை எந்த அளவுக்கு மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி மக்களை போராட்டங்களில் பங்கு கொள்ள வைக்கிறோமோ அந்த அளவுக்கே பாஜகவை துடைத்தெறிந்து விட்டு  தமிழகத்தை மீட்க முடியும் !!

கார்ப்பரேட் – காவி பாசிசத்திற்கு எதிரான போராட்டங்களை தீவிரப்படுத்துவோம்!

பாஜக – ஆர்.எஸ்.எஸ் கும்பலை துடைத்தெறிவோம் !

தோழர் மருது,
செய்தித் தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு  – புதுவை.

புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் – 2021 அச்சு இதழ் !

ன்பார்ந்த புதிய ஜனநாயகம் வாசகர்களுக்கு,

புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2021 இதழ் அச்சுப் பிரதியாக வெளிவந்திருக்கிறது. கொரோனா பெருந்தொற்று முடக்கம் காரணமாக கடந்த ஆறு மாதங்களாக வெளிவராத சூழலில், இந்த மாதத்தில் மீண்டும் வெளி வந்திருக்கிறது புதிய ஜனநாயகம் ! இதழை வாங்குவதற்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் !!

தொடர்பு விவரங்கள் :
தொலைபேசி : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

விலை : ரூ.20 + தபால் செலவு ரூ. 5 = ரூ.25

G-Pay மூலம் பணம் கட்ட :  94446 32561

வங்கி கணக்கு விவரம்,
Bank: SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444.

பாசிச பேரிருளைக் கிழித்தெறி ! – புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2021

 

இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :

  1. பாசிச பேரிருளைக் கிழித்தெறி !
  2. அவர்களது தேர்தல் நாடகம் ஓய்ந்துவிட்டது!
    நமது போராட்டக் களம் காத்துக் கிடக்கிறது!
  3. பத்மா சேஷாத்ரி பால பவன் (PSBB) முதல் சிவசங்கர் பாபா வரை:
    பள்ளிகளில் நடக்கும் பாலியல் அத்துமீறலை ஒழிக்க என்ன வழி?
  4. பொதுச் சுகாதாரக் கட்டமைப்பை ஒழிக்கும் மோடி அரசின் கார்ப்பரேட் கொள்கை !
  5. கொழும்பு துறைமுக நகரம் : சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் இலங்கை !
  6. UGC−ன் புதிய வகை கற்றல் – கற்பித்தலுக்கான வழிகாட்டுதலைப் புறக்கணிப்போம் !
  7. இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட் − லெனினிஸ்ட்) முதலாவது மாநாட்டின் 51−வது ஆண்டு நிறைவு! || திரிபுவாதத்திற்கு எதிரான போராட்ட மரபை தொடர்ந்து உயர்த்திப் பிடிப்போம்!
  8. கியூபா நாட்டில் அமெரிக்கா நடத்தும் அடாவடித்தனங்கள்!
  9. திசைவிலகாத செஞ்சுடர்கள்!

துக்ளக் : அதுக்கு ஒரு குத்து.. இதுக்கு ஒரு குத்து..

மிழ்ச் சமூகத்தில் நீங்கள் அறிவாளியாக அங்கீகரிக்கப்பட வேண்டுமானால், அதற்கான தகுதிகளில் முதன்மையானது, நீங்கள் துக்ளக் வாசகராக இருந்திருக்க வேண்டும் என்பதுதான். முன்னாள் ‘வருங்கால முதல்வரும்’, ‘சிஸ்டம்’ எஞ்சினியருமான ரஜினிகாந்த் அவர்களால் வியந்தோதப்பட்ட ஒரே இதழ் ’துகலக்’ தான் (ரஜினி வாய்மொழியில்).

அத்தகைய பெருமை வாய்ந்த துக்ளக்கை அதன் நிறுவனர் சோ ராமசாமி நடத்திக் கொண்டுவந்த அதே ‘தரத்தில்’, அவருக்குப் பிறகும் நடத்திவருபவர் குருமூர்த்தி.

ஒருவேளை அவரைப் பற்றி கேள்விப்பட்டிராத, பாவஜீவியாக நீங்கள் இருப்பின், அன்னாரைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகம். கடந்த அதிமுக ஆட்சியில், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு ”ஆண்மைச்” சான்றிதழை பொதுவெளியில் வைத்து வழங்கியவர்தான் இந்த குருமூர்த்தி.

துக்ளக்கின் நடப்பு இதழில் (4-8-2021), கீழடி அகழாய்வு குறித்து ‘துர்வாசர்’ எழுதிய கருத்துக்கு சமூக வலைத்தளங்கள் முதல் தமிழ்நாட்டு அமைச்சர் பெருமக்கள் வரை அனைவரும் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

தமிழன் பெருமை என்ற பெயரில், கோடிக்கணக்கில் பணத்தை அகழ்வாய்வில் விரயமாக்குவது சரியானதா? என்று கேட்டிருக்கிறார் குருமூர்த்தி. கொரோனா, மேகேதாட்டு பிரச்சினை போன்ற பல பிரச்சினைகள் இருக்க கீழடியும், கொடுமணலும் தான் முக்கியமா எனக் கேட்டுள்ளார் குருமூர்த்தி. எவ்வளவு ‘தீர்க்கமான’ கேள்வி ?

படிக்க :
♦ ரஜினியின் துக்ளக் தர்பார் – எடப்பாடியின் குருமூர்த்தி தர்பார் !
♦ திரைமறைவு தரகு வேலை செய்யும் துக்ளக் குருமூர்த்தியைக் கைது செய் ! வழக்கறிஞர்கள் புகார்

“ராமன் சிலை கிடைச்சிருந்தா, வாயமூடிட்டு இருந்திருப்ப?” என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் கேட்கிறார்கள். பூமிக்கடியில் எல்லாம் ராமன்சிலை கிடைத்தாலும் குருமூர்த்தி வகையறாக்களுக்கு அது தேவையில்லை. அவர்களுக்கு மசூதிக்குள் கிடைக்கும் ராமன் சிலைதான் முக்கியமானது.

உண்மையிலேயே மக்கள் ‘நலனில்’ அக்கறை கொண்டு எழுதப்பட்ட அந்தக் கட்டுரையை ‘புரிந்து’ கொள்ளாமல், அனைவரும் குருமூர்த்திக்கு வயிற்றெரிச்சல் என்றெல்லாம் கூறி அவரை வாட்டி வதக்கியிருக்கிறார்கள்.

கீழடியில் கிடைக்கும் பண்டைய தமிழ் நாகரிகத்தைப் பார்த்து நவதுவாரங்களிலும் ஏன் எரிச்சல் வருகிறது என்றும் கேட்டிருக்கிறார்கள். அப்படிக் கேட்பவர்கள் ஒரு விசயத்தை சிந்திக்க வேண்டும்.

குருமூர்த்தி வகையறாக்கள் தங்களது பிறவி மேட்டிமைத்தன்மையைக் காட்டுவதற்கான புரட்டுகளுக்கெல்லாம் தொல்லியல் மற்றும் மானுடவியல் ஆய்வுகள் வரிசையாக ஆப்பறைந்தாலும் அதனைக் கண்டு அச்சப்படும் சூழ்நிலையை இப்போது அவர்கள் கடந்து விட்டனர். இந்து ராஷ்டிரத்தையும், போலி வரலாற்றுப் பாடங்களையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பதற்கான அனைத்து ஆயத்தப் பணிகளையும் கிட்டத்தட்ட முடித்துவிட்டனர்.  இனி அவாள் எல்லாம் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. அரசுக் கட்டமைப்பு முழுவதிலும் நிறுவனமயப்பட்ட விதத்தில் ஆதிக்கத்தில் இருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட சூழலிலும், பண்டைய தமிழ்ப் பண்பாடு குறித்து வயிறெரிகிறார் என்றால் தலைக்கனமற்ற அவரது ‘எளிமையை’ பாருங்கள். அதை யாராவது பாராட்டுகிறார்களா ?

குருமூர்த்தி

சமூக வலைத்தளங்களில் பலரும் மோடி அரசு சரசுவதி நதியைத் தேடுவதற்காக பலநூறு கோடிகளை செலவிடுவது பற்றி எடுத்துச் சொல்லி குருமூர்த்தியை கிண்டலடிக்கிறார்கள். இப்படி எள்ளி நகையாடுபவர்கள் அனைவரும் தொலைநோக்குப் பார்வையற்றவர்களாகவே இருக்கின்றனர்.

சரசுவதி நதி பூமிக்கடியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டு, பூமிக்கடியில் இருக்கும் பாதாளச் சிறையில் இருந்து மோடியெனும் புனிதரால் விடுவிக்கப்பட்டுவிட்டால், தெற்கே கன்னியாகுமரி முனை வரைக்கும் அந்த ‘மாயநதி’யின் நீர் பாய்வதோடு, தமிழகமே ‘செழித்தொங்கும்’ என்பதைப் புரிந்து கொள்ள இவர்கள் மறுக்கிறார்கள்.

கீழடி விவகாரம் குறித்து ‘ஆன்டி இந்தியர்கள்’ பலரும் சமூக வலைத்தளங்களில் அலசிவிட்டபடியால் நாம் பேச வந்த முக்கியத் தலைப்பை நோக்கிச் செல்வோம்.

000

மேற்கூறிய துக்ளக் இதழின் தலையங்கத்தில் “விசாரணை தேவை, அராஜகம் கூடாது” என்ற தலைப்பில் பெகாசஸ் உளவுச் செயலி பிரச்சினை பற்றி எழுதியுள்ளார் குருமூர்த்தி.

தலையங்கத்தின் துவக்கத்தில் இந்தியாவில் எழுந்திருக்கும் பெகாசஸ் பிரச்சினையை இரத்தினச் சுருக்கமாக விளக்கிவிட்டு, என்.எஸ்.ஓ நிறுவனம் பெகாசஸை தயாரித்த நோக்கத்தை விளக்குகிறார் குருமூர்த்தி.

பெகாசஸ் ப்ராஜெக்ட் எனும் திட்டத்தின் கீழ் அம்னெஸ்ட்டி இண்டர்நேசனலும், இதர அமைப்புகளும் சேர்ந்துகொண்டு இணையத்தில் ‘சர்வசாதாரணமாகக் கிடைக்கும்!?!!’ 50,000 அலைபேசி எண்களை வைத்துக் கொண்டு, அவற்றை பெகாசஸ் உளவு மென்பொருளால் கண்காணிக்கப்பட்ட எண்கள் எனப் பித்தலாட்டம் செய்வதாகக் கூறி கொந்தளிக்கிறார்.

அந்தக் கொந்தளிப்பு அடங்குவதற்குள் குதூகலமாய், முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இதே அம்னெஸ்ட்டி இண்டர்நேசனல் நிறுவனம் குறித்து காங்கிரஸ் கட்சி ‘கழுவி ஊற்றியதை’ ஆதாரங்களாக எடுத்துக் குவிக்கிறார். பின்னர், அம்னெஸ்டி இண்டர்நேசனல் நிறுவனம் எப்படி இந்திய அரசுக்கு எதிரானதாக இவ்வளவு நாள் இருந்திருக்கிறது என்பதையும் விவரிக்கிறார்.

கட்டுரையின் இந்த இடத்தில்தான், அன்னாரின் ‘நூலாயுதம்’ பளீரென எட்டிப் பார்க்கிறது.

கசிந்த அலைப்பேசி எண் பட்டியலுக்கும் என்.எஸ்.ஓ கண்காணிப்புக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்ற குருமூர்த்தியின் வாதத்திற்கு அம்னெஸ்ட்டி இண்டநேசனலும், ‘தி வயர்’ நிறுவனமும் ஏற்கெனவே பதிலளித்துவிட நிலையில், தர்க்கரீதியாக அம்னெஸ்ட்டியை எதிர்க்க முடியாத குருமூர்த்தியார், பெகாசஸ் உளவு குறித்து அம்பலப்படுத்திய அம்னெஸ்ட்டியின் பழைய வரலாற்றுக்குள் போய், “அம்னெஸ்டி என்ன யோக்கியமா?” என்று கேள்வி எழுப்புகிறார்.

எதிராளியின் மீதான கடந்த கால அவதூறுகளையும், குற்றச்சாட்டுக்களையும் முன் வைத்து எதிரியை விழுமியங்கள் அற்றவராகக் காட்டி, எதிராளியின் வாதத்தை குப்பைத் தொட்டிக்கு அனுப்பும் பார்ப்பன வித்தையை குருமூர்த்திக்கு யாரேனும் சொல்லித் தரவா வேண்டும் ? ஒயிட் பெல்ட்டுகள் எல்லாம் அந்த விசயத்தில் பிளாக் பெல்ட் சாம்பியன்கள்தான்.

படிக்க :
♦ ஆண்ட பரம்பரையே நீ ஆம்பிள்ளையா ? குருமூர்த்திக்கு என்ன பதில் !
♦ அண்டப்புளுகன் ஆர்.எஸ்.எஸ் குருமூர்த்தி !

தி வயர், அம்னெஸ்ட்டி ஆகிய இரண்டு நிறுவனங்களுமே மோடிக்கு எதிரானவை என்றும், என்.எஸ்.. நிறுவனமே குற்றத்தை மறுத்துவிட்டதால், குற்றம் நடக்கவில்லை என்றும் கம்பு சுற்றுகிறார். இறுதியில் முடிக்கும்போது, கண்காணிப்பு நடக்கவில்லை; இதற்கு விசாரணை வைக்கலாம்; ஆனால் நாடாளுமன்ற கூட்டுக் கமிட்டி விசாரணை தான் வேண்டும் எனக் கேட்பது அராஜகம் என்று கூறி முடித்துள்ளார் குருமூர்த்தி.

மொத்தத்தில், அப்படி ஒரு கண்காணிப்பு நடக்கவேயில்லை. அப்படி நடந்ததாக சந்தேகம் இருந்தாலும் அதற்கு, மோடியே அவருக்கு ஏற்ற வகையில் விசாரணை கமிட்டி அமைத்துக் கொள்வார். இதுதான் தலையங்கத்தில் குருமூர்த்தி கூறவரும் கருத்து.

தலையங்கத்தில், பெகாசஸ் மூலம் உளவு பார்த்தல் என்பது நடக்கவே இல்லை என்ற வாதத்திற்கு ஒரு ஓட்டு குத்தியிருக்கிறது துக்ளக்.

000

அடுத்ததாக, 24-ம் பக்கத்தில் ஆர்.நடராஜன் என்பவர் ”உளவும் தேவையே” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அவர் தனது கட்டுரையில் ஒன்றிய காங்கிரஸ் ஆட்சி முதல், மாநில ஆட்சிகள் வரை அனைத்துமே உளவு பார்த்திருக்கின்றன என்பதை சுட்டிக் காட்டுகிறார். இப்போது உளவு பார்க்கப்பட்டதைப் பற்றி குரல் கொடுப்பவர்கள், முதலில் தங்களது மாநிலத்தில் உள்ள உளவுத்துறையைக் களைத்துவிட்டு வந்து பேசட்டும் என்று தொடைதட்டி சவால் விடுகிறார், நடராஜன் .

உளவு பார்ப்பது அனைத்து அரசாங்கங்களும் செய்யும் விசயம்தான் என்றும், அது அவசியமானதும் கூட என்றும் குறிப்பிட்டு, அதற்கு திருவள்ளுவரையும் துணைக்கு இழுத்திருக்கிறார்.

இப்போது பெகாசஸ் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக புகார் கூறுபவர்கள், “குடும்ப விவகாரங்களை மட்டுமே அலைப்பேசியில் பேசுவார்கள்” என்றால் எதற்காகப் பயப்பட வேண்டும்? என்று ‘வேதாந்தப் பூர்வமான’ கேள்வியையும் ’வெள்ளை மனசோடு’ எழுப்பியுள்ளார்.

ஐயா நடராஜன் அவர்களின் தர்க்க நியாயத்தையும், வேகத்தையும் பார்க்கும்போது, நாளை முதல் மோடியும் அமித்ஷாவும் தங்களது அலைப்பேசி உரையாடலை மான் கி பாத்தில் நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்று கேட்பார் போலத் தெரிகிறது. மனமெல்லாம் அவ்வளவு வெள்ளை!

இவ்வளவு பெரிய தர்க்கஞானி, வெறும் துக்ளக்கோடு முடங்கியிருக்கிறார் என்பது காலம் அவருக்கு விதித்த சாபக் கேடா அல்லது துக்ளக்கிற்குக் கிடைத்த விமோச்சன ஒளியா என்பது தெரியவில்லை.

சுருக்கமாகச் சொன்னால், கண்காணிப்பு அவசியமானது. அரசு உளவு பார்த்தால், யாரும் கேள்வி எழுப்பக் கூடாது என்று எழுதியிருக்கிறார். அந்தவகையில், “உளவு பார்ப்பேன்; பார்த்தால் என்ன தப்பு ?” என்ற கருத்துக்கு ஒரு ஓட்டு குத்தியிருக்கிறது துக்ளக்.

மொத்தத்தில், பெகாசஸ் உளவு பார்த்தல் என்பது நடக்கவே இல்லை என்ற வாதத்திற்கு ஒரு ஓட்டுக் குத்து, உளவு பார்ப்பது தவறு இல்லை என்ற வாதத்திற்கு ஒரு ஓட்டுக் குத்து என இரண்டு இடங்களிலும் குத்தியிருக்கிறது துக்ளக்.

ஜனநாயகக் கட்டமைப்பையே உளவு பார்த்தாயா?” என சட்டப்படி கேள்வி கேட்டால் தலையங்கக் கட்டுரைதான் பதில் !! வேதாந்தப்படி கேள்வி கேட்டால் நடராஜன் கட்டுரை தான் பதில் !!

இரட்டை நாக்கு என்பது சங்க பரிவாரத்தினருக்கு பிறவியிலேயெ வாய்க்கப் பெற்ற ஒரு வரப்பிரசாதம் அல்லவா? துக்ளக்கும் குருமூர்த்தியும் மட்டும் என்ன விதிவிலக்கா ?

பின் குறிப்பு :

பெரும் ‘அறிவாளிகள்’ மட்டுமே படித்து புரிந்து கொள்ளக் கூடிய பத்திரிகையாகிய துக்ளக்கை படிக்கும் போது, ஐயா நடராஜனின் கட்டுரையில் ஒரு இடம் மட்டும் புரியவே இல்லை. அதனையும் குறிப்பிட்டாக வேண்டும். துக்ளக்கை புரிந்துகொள்ளத் தக்க அறிவாளிகள் இருந்தால் பதில் தரலாம்.

ஆர்.நடராஜ் தனது கட்டுரையில், வேவு பார்த்தால் தவறில்லை என்ற வாதத்தை கொஞ்சம் தர்க்கப்பூர்வமாக வைக்கையில், மாநில முதல்வர்கள் சுயநலத்துக்காக, தங்கள் சின்ன வீட்டையும் வேவு பார்த்தது நியாயம் என்றால், தேசத்திற்காகச் சிலரை பிரதமரோ அவரைச் சேர்ந்தவர்களோ வேவு பார்ப்பதில் தவறென்ன?” என்று கேட்டிருக்கிறார்.

நமக்குத் தெரிந்த சமீபகால வரலாற்றில், மாநில முதல்வராக இருந்து தன் தனிப்பட்ட விவகாரத்துக்காக ஒரு இளம்பெண்ணை வேவு பார்த்த ஒரே முதல்வர், குஜராத்தை ஆண்ட நரேந்திர மோடி தான். மோடியும் அமித்ஷாவும் குஜராத்தில் ஒரு தந்தையின் வேண்டுகோளுக்கிணங்க ஒரு இளம்பெண்ணை கண்காணித்தார்கள் என்று தானே இவ்வளவு நாளும் கேள்விப்பட்டிருக்கிறோம்!!

நடராஜ் என்ன புதுக்கதை சொல்கிறார் ?


சரண்

சங்கமாக சேர்ந்த தொழிலாளர்களை பணிநீக்கம் செய்த ஃபெவெலி ஆலை நிர்வாகம் || பு.ஜ.தொ.மு

ஒசூர் : ஃபெவெலி ஆலையில் வேலை பறிக்கப்பட்ட
தொழிலாளர்களின் போராட்டத்திற்கு துணை நிற்போம் !

அன்பார்ந்த உழைக்கும் மக்களே ! வணக்கம் !

ஓசூர் பிரபல இருசக்கர வாகனம் தயாரிக்கும் TVS ஆலையின் அருகில் ஃபெவெலி டிரான்ஸ்போர்ட் (Faiveley Transport – a wabtec company) என்ற அமெரிக்க நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த ஆலை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ரயில்களுக்கு தேவையான உதிரி பாகங்களை தயாரிக்கும் நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்ட நிர்வாக அதிகாரிகளும் 105 நிரந்தரத் தொழிலாளர்களும் 200-க்கும் மேற்பட்ட நேரடி உற்பத்தி பிரிவில் வேலை செய்யும் தொழிலாளர்களும் மற்றும் 200-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களும் வேலை செய்து வரும் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனமாகும்.

குறைவான முதலீட்டிலும் சந்தைக்கான போட்டி நிறுவனங்கள் பெரிய அளவில் இல்லாமலும் பொதுத்துறையான இரயில்வேயை சார்ந்து இந்நிறுவனம் இயங்கி வருகிறது. ஆண்டுக்கு சுமார் 1500 கோடி வர்த்தகம் செய்யப்பட்டு நல்ல இலாபம் ஈட்டக் கூடிய நிறுவனமாகும். இலாபத்தின் பெரும் பகுதி மக்களுடையது என்றால் அது மிகையாகாது. மற்றொரு பக்கம் அரசின் வரிச்சலுகை, நிலம், தண்ணீர், மின்சாரம், சாலை வசதி என பல வழிகளில் நன்மைகள் அடைகிறது. ஆனால், உழைக்கும் தொழிலாளர்களுக்கு உரிய பணி நிரந்தரம், சம்பளம், போனஸ் உள்ளிட்ட சட்ட உரிமைகளை மதிப்பதில்லை நிர்வாகம்.

படிக்க :
♦ கொரோனா மரணங்கள் : தொழிலாளர்களின் போராட்டத்திற்கு அடிபணிந்த ஆலைகள் || புஜதொமு
♦ அரியானா : உச்சநீதிமன்ற ஆசியோடு விரட்டியடிக்கப்படும் தொழிலாளர்கள் !

சில ஆண்டுகளுக்கு முன் இந்த ஆலையில் இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து நிரந்தர உற்பத்திப் பிரிவில் வேலை செய்தால் அவர்களுக்கு பணிநிரந்தரம் செய்து ஊதிய உயர்வு உள்ளிட்ட அத்தனை பொருளாதார பலன்களையும் வழங்கி வந்தனர். தற்போது பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனமாக மாறிய பிறகு அதே நிர்வாக அதிகாரிகள் தன்னுடைய கொள்கையை மாற்றிக் கொண்டு பணி நிரந்தரம் செய்வதாக தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி 4 ஆண்டுகளுக்கு மேல் வேலையை பெற்றுக் கொண்டு அவர்களுக்கு பணிநிரந்தரம், ஊதிய உயர்வு என எந்தப் பணி பாதுகாப்பு வழங்காமல் முன்னறிவிப்பு கூட இல்லாமல் 41 தொழிலாளர்களை கடந்த 22 டிசம்பர் 2020-ல் வேலையிலிருந்து நீக்கிவிட்டனர்.

இந்த நிறுவனத்திற்கு வேலைக்கு வரும்போது 23 வயது இளந்தொழிலாளர்களை வேலைக்கு எடுத்து 28 வயதில் வேலையை பறித்து நடுரோட்டுக்கு தள்ளிவிடப்பட்டுள்ளனர். அவர்களுடைய திருமண வாழ்க்கை, எதிர்கால உத்தரவாதம் போன்ற எல்லா கனவையும் சிதைத்து உழைப்பை மட்டும் உறிஞ்சிவிட்டு அவர்களை கரும்பு சக்கையை போல விசி விடுகிறது, ஃபெவெலி நிர்வாகம். இப்படி நான்கைந்து ஆண்டுகளில் தொடர்ந்து நிரந்தர உற்பத்திப் பிரிவில் வேலையை பெற்றுக் கொண்டு வேலை பறிக்கப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை 97-ஐ தாண்டிவிட்டது.

மீண்டும் பணிநீக்கம் தொடரக் கூடாது என்ற நோக்கத்தில் மூன்றாண்டுகளுக்கு மேலாக பணியிலிருந்த தொழிலாளர்கள் சங்கமாக இணையலாம் என முடிவு செய்து தொழிலாளர் உரிமைக்காக போராடும் புரட்சிகர தொழிற்சங்கமான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் தங்களை இணைத்துக் கொண்டு கிளைச் சங்கமாக இயங்க ஆரம்பித்தனர்.

பணி நிரந்தரம், ஊதியஉயர்வு, போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கிருஷ்ணகிரி தொழிலாளர் உதவி ஆணையர் முன்பாக தொழிற்தாவா 2k வழக்கு ஒன்றை எழுப்பியுள்ளனர். இந்நிலையில், தொழிற்சங்கம் அமைத்ததை தெரிந்து கொண்டு முதல் சமரச பேச்சுவார்த்தைக்கு கூட வராமல் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழுவில் கையொப்பமிட்ட 17 தொழிலாளர்களை சட்டவிரோதமாக ஜூலை 15-ம் தேதி பணிநீக்கம் செய்து தொழிலாளர்களின் வாழ்க்கையை நிர்மூலமாக்கி இருக்கிறது நிர்வாகம்.

ஃபெவெலி ஆலையின் கோர முகங்கள்:

சென்றாண்டு கொரோனா பெருந்தொற்று காலத்திலும் பணி நிரந்தரமில்லாத தொழிலாளர்கள் அயராது கடுமையாக உழைத்தனர். நெருக்கடியான சூழலிலும் நிர்வாகத்தின் உற்பத்தி இலக்கு முழுமையாக நிறைவேற்றப்பட்டது. பணிநிரந்தர கோரிக்கை நிர்வாகத்துடன் பேசிய உடனே நிர்வாகம் திட்டமிட்டு ஒரு லே-ஆப்பை அறிவித்து அடுத்த இரு நாட்களில் 41 தொழிலாளர்களின் வேலையை பறித்து வீட்டிற்கு சட்டவிரோத பணிநீக்கத்தை அனுப்பியது நிர்வாகம். பணிநிரந்தரம் செய்வார்கள் என உழைத்த தொழிலாளர்களுக்கு பெரிய இடியாய் இந்த பணிநீக்கம் தலையில் இறக்கியது.

மேலும், சென்ற லாக்டவுன் காலத்தில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பேரிடர் மேலாண்மை சட்டப்படி 2 மாதம் சம்பளம் வழங்கினர். பின்னர் அதற்கு ஈடு செய்யும் வகையில் கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு இலவசமாக ஓட்டிப் பார்த்து நிர்வாகத்தின் உற்பத்தி இலக்கை அடைய மிரட்டியே வேலையை பெற்றுக் கொண்டது. இப்படியெல்லாம் தொழிலாளர்களை தார்மீக ரீதியாக உழைப்பை சுரண்டும் நிர்வாகமானது அவருடைய பணிப்பாதுகாப்பு ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை கேட்கும்பொழுது அதற்கு முறையாக அழைத்து பேசுவதோ கோரிக்கையை குறைந்தபட்சம் நிறைவேற்ற ஆலைக்குள்ளேயே முயற்சிப்பதில்லை. அதற்கு மாறாக, அவருடைய வேலையை பறித்து வயிற்றில் அடிக்கிறது, நிர்வாகம்.

இது மட்டுமில்லாமல் ஸ்டோர் போன்ற இடங்களில் Lead என்ற காணட்ராக்ட்டை பயன்படுத்தி ஆண்டுக்கான சம்பள உயர்வும் இல்லாமல் கடுமையான வேலைக்கு உட்படுத்தி சுரண்டப்பட்டும் வருகிறது. அவர்களுடைய கோரிக்கையை கேட்டால் புதிய காண்ட்ராக்ட் ஆட்களை வைத்து வேலையை பறித்து விடுவதாக மிரட்டி வருகிறது. அவர்களுக்கும் சம்பள உயர்வு, போனஸ் வழங்காமல் கடுமையான உழைப்புச் சுரண்டலை மேற்கொண்டு வருகிறது, இந்த நிறுவனம்.

Faivelay நிறுவனத்தின் சாதனைகள்:

கிட்டத்தட்ட இந்த ஆலையில் வேலை செய்யும் 400-க்கும் மேற்பட்ட நிர்வாக அதிகாரிகளில் அதிகமானோர் மேலாளர்கள், துணை மேலாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட மேலாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு பல லட்சம் சம்பளம் மேலும் அவர்களுக்கு வாரத்தில் இரண்டு நாள் விடுமுறையும் வழங்கப்படுகிறது. தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டிவிட்டு தன்னுடைய திறமையால்தான் இவ்வளவு உற்பத்தியை அடைந்தோம் எனப் பீற்றிக் கொண்டு அதற்கான இன்சென்டிவ் என தனியாக அதிகாரிகள் எடுத்துக் கொள்கின்றனர். உல்லாச வாழ்க்கையில் திளைத்து வருகின்றனர்.

இப்படி இந்த நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் 10 ஆண்டுகள் வேலை செய்தாலும் இன்னும் ஒரு சொந்த வீடுகூட இல்லாமல் வாடகை வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், இந்த நிறுவனத்தில் நிறுவன அதிகாரியாக வேலை செய்யும் சிலர் வேலைக்கு வந்து இரண்டு மூன்று ஆண்டுகளிலேயே இரண்டுக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டியுள்ளனர். சொகுசான வாழ்க்கைக்கு அவர்கள் திரும்பியுள்ளனர். இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் பணிநிரந்தமில்லாத தொழிலாளர்களை மேலும் மேலும் வதைக்கிறது நிர்வாகம்.

நிர்வாகத்தின் உழைப்புச் சுரண்டலுக்கு முக்கிய காரணம் நிரந்தர உற்பத்திப் பிரிவில் கடுமையான உழைப்பை சுரண்டிக் கொண்டு அவர்களுக்கு மீண்டும் வேலை கொடுக்காமல் வயிற்றில் அடிக்கும் மிகப்பெரிய கொடூரம் இந்த நிறுவனத்தில் நடந்துக் கொண்டிருக்கின்றன. இதற்கு முக்கியமான காரணம் தொழிலாளர்களின் சட்டபூர்வ உரிமையான பணிநிரந்தம் பறிக்கப்படுவது குறித்து தமிழக அரசு கண்டுகொள்வதில்லை. நிர்வாகம் சட்டபூர்வ உரிமைகள் பறிப்பது குறித்து தொழிற்சங்கமும் கண்டு கொள்ளாமல் ஊதிய உயர்வு, போனஸ் குறித்து பேசுவதே சங்க நடவடிக்கை என்று கருதிக் கொண்டும் அடுத்த தலைமுறை குறித்து யோசிக்காமல் மெளனமாக இருந்து வருகின்றனர். இதுதான் இளம் தொழிலாளர்கள் வாழ்க்கையை நடுரோட்டிற்கு வந்ததற்கு காரணமாகும். வேறு வழியின்றி போராட்ட களத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தொழிலாளர் வர்க்க ஒற்றுமையே முதலாளித்துவ சுரண்டலை தடுக்கும் !

ஆகவே, தொழிலாளி வர்க்கம் தொடர்ந்து அடக்குமுறையை ஏற்றுக்கொண்டால் ஆங்கிலேயரிடம் போராடி பெற்ற உரிமைகள் கூட பறிபோய்விடும். முதலாளிகள் சட்டத்தை மீறினால் அரசு கண்டுகொள்வதில்லை. ஆனால், தொழிலாளர்கள் தன்னுடைய வாழ்வுரிமையைப் பறிக்கும் போது அதற்கு எதிராக சட்ட ரீதியாக போராடும் போது கூட அவர்களை முறையாக அணுகாமல் நிர்வாகத் தரப்பிலான வாதங்களையே அடுக்கி வைத்து நிர்வாக சார்புடன் அரசின் அங்கமான தொழிலாளர் நலத்துறை ACL அணுகுவது தான் சகிக்க முடியாததாக உள்ளது.

TVS, லேலண்ட், டைட்டான், எக்ஸைடு போன்ற மிகப்பெரிய நிறுவனங்களிலும் CL, காண்ட்ராக்ட், அப்ரண்டீஸ், NEEM, FTE என பல்லாயிரக்கணக்கான இளந்தொழிலாளர்கள் பணிநிரந்தரம் உள்ளிட்ட சட்டபூர்வ உரிமைகள் இல்லாமல் நவனீ கொத்தடிமைகளாக கசக்கி பிழியப் படுகின்றனர். இதற்கு பல வழிகளில் அரசுத்துறை அதிகாரிகளும் பக்க பலமாகவும் இருக்கின்றனர். முதலாளிகளுடைய அடக்குமுறையை எதிர்கொள்ள வேண்டுமென்றால் ஓசூரில் உள்ள பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் ஒன்றிணைந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்கி வர்க்க ஒற்றுமையைக் கட்டிமைத்தால்தான் தீர்வுகாண முடியும்!

This slideshow requires JavaScript.

தொழிலாளர்களே ! பொதுமக்களே !

  • ஃபெவெலி போராட்டம் என்பது எங்களுடைய கோரிக்கைக்காக மட்டுமல்ல!

இந்தியாவில் கோடிக்கணக்கான தொழிலாளர்களை CL, காண்ட்ராக்ட், நீம், FTE என்று பல்வேறு பெயர்களில் உழைப்பு சுரண்டப்பட்டு வாழ்க்கை பாழாவதை எதிர்த்த போராட்டம்!

  • சிறுதுளி என்றாலும் பெரும் வெள்ளமாக மாறுவது போல தொழிலாளர் உரிமைகளை நிலை நாட்ட இந்த போராட்டத்திற்கு தார்மீக ரீதியான ஆதரவை தாருங்கள்!
  • ஒசூரில் ஆயிரம் தொழிலாளர்கள் திரட்டி பொதுக்கூட்டம் நடத்தி நாட்டின் கவனத்தை ஈர்ப்போம்!
  • உங்களை நாடி வந்துள்ளோம். ஆதரவும் நிதி உதவியும் தாருங்கள்!
  • தொழிலாளர்களை சுரண்டும் முதலாளித்துவத்திற்கு சவுக்கடி கொடுக்க அமைப்பாக இணைவோம்.

தமிழக அரசே தலையிடு!

  • வேலை பறிக்கப்பட்ட ஃபெவெலி தொழிலாளர்களுக்கு பணிநிரந்தரம் வழங்க ஆணையிடு!
  • தொழிலாளர்கள் உழைப்பை சுரண்டிவிட்டு பணிநிரந்தரம், போனஸ், ஊதிய உயர்வு வழங்காத நிறுவனத்தின் மீது கிரிமினல் சட்டப்படி நடவடிக்கை எடு!
  • CL, காண்ட்ராக்ட், FTE, அப்ரண்டீஸ், NEEM என்று தொழிலாளர்கள் மீதான உழைப்புச் சுரண்டலுக்கு தடைபோடு!
  • TATA, OLA, DELTA புதிய கம்பெனிகள் வருவது மட்டும் வளர்ச்சி அல்ல… தொழிலாளர்களுக்கு பணிநிரந்தரம் கொடுத்து இயங்குவதே உண்மையான வளர்ச்சி!
  • ஒசூரில் இயங்கும் கம்பெனிகளின் கூட்டாளியாகி விட்ட தொழிலாளர் நலத்துறை, தொழிற்சாலை ஆய்வகத்துறை மீது நடவடிக்கை எடு!

போராட்ட நிதி உதவிக்கு : google pay – 70947 32376

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
Faiveley Transport a wabtec company – கிளைச் சங்கம்.
பதிவு எண் : 24/KRI. செல்: 97880 11784.

000

கிளைச்சங்க பிரச்சார அனுபவங்கள்:

நிர்வாகத்தின் மேற்கண்ட அடக்குமுறைகளை தொழிலாளி வர்க்கத்துக்கு எடுத்துரைக்கும் வகையில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதில் இரண்டு நாட்கள் குடியிருப்பு பிரச்சாரமும் இரண்டு நாட்கள் ஆலை வாயில் பிரச்சாரமும் செய்யப்பட்டது. இப்பிரச்சாரத்தில் பல தொழிலாளர்கள் நிதி கொடுத்து ஆதரவு தெரிவித்தனர். அசோக் லேலண்ட் யுனிட் – 2 ஆலை வாயில் துண்டு ஏந்தி நிதி கோரியதில் ரூ.3980 நிதியை தொழிலாளர்கள் வழங்கினர்.

பிரசுரத்தில் “நிர்வாக அதிகாரிகளுக்கு லட்சங்களில் சம்பளம், உல்லாச வாழ்க்கை” என்ற இந்த வாசகம் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று தந்தது. பிரசுரத்தை படித்தவுடன் தங்கள் பணிநிரந்தரம், ஊதிய உயர்வு, காலைச் சிற்றுண்டி வழங்கப்படாத உரிமைகள் பறிப்பு பற்றிய பிரச்சினையை முன்வந்து பலர் அறிந்துகொண்டனர்.


தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
ஒசூர்

பெகாசஸ் ஸ்பைவேர் : உளவு மென்பொருள்களின் அரசன் !!

பெகாசஸ் : நம்முடனே பயணிக்கும் உளவாளி – பின்னணி என்ன ?

பாகம் 1 : பெகாசஸ் ஸ்பைவேர் : உளவு மென்பொருள்களின் அரசன் !!

ரு வாரத்திற்கும் மேலாக சமூக வலைத்தளங்கள், பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் உலவிக் கொண்டிருக்கும் ஒரு பெயர் பெகசாஸ். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியதும் எதிர்கட்சிகள் “பெகாசஸ்” மீது கேள்வி எழுப்பி பலத்த சர்ச்சையை  ஏற்படுத்தியுள்ளனர்.

பெகாசஸ் திட்டத்தை புலனாய்வு செய்த சர்வதேச ஊடக கூட்டமைப்பானது (International Media Consortium) பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் உலகம் முழுவதும் சுமார் 50,000 தொலைப்பேசி எண்கள் உளவு பார்க்கப்படுகின்றன என்று கூறியுள்ளது. இஸ்ரேலில் உள்ள மென்பொருள் நிறுவனமான NSO “பெகாசஸ் ஸ்பைவேர்” மென்பொருளை உருவாக்கியது.

இந்த மென்பொருளை பயன்படுத்தி உளவு பார்க்கப்பட்ட பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், பணியிலிருக்கும் நீதிபதி, 40-க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், தொழிலதிபர்கள் என இப்பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

படிக்க :
♦ பெகாசஸ் : இந்து ராஷ்டிரத்தின் எதிரிகளே அதன் இலக்குகள் !
♦ பெகாசஸ் : ‘ஜனநாயகக்’ கட்டமைப்பை உளவு பார்க்கும் இந்து ராஷ்டிரம் !!

இந்த பெகாசஸ் எனும் உளவு மென்பொருள் என்ன செய்கிறது? எப்படி தொலைபேசியை உளவு பார்க்கிறது. அப்படி பார்த்த தகவலை என்ன செய்கிறது?

பெகாசஸ் என்றால் என்ன? அது என்ன செய்கிறது?

ஸ்பைவேர் எனப்படுவது தீங்கிழைக்கக் கூடிய உளவு மென்பொருளாகும். இதனை கணினி அல்லது அலைபேசியில் நிறுவி நமது தகவல்களை சேகரித்து, சேகரித்த தகவலை அந்த பயனாளரின் அனுமதி இல்லாமல் மற்றொரு மூன்றாம் நபருக்கு அனுப்புவதுதான் ஸ்பைவேரின் வேலை.

NSO அமைப்பால் உருவாக்கப்பட்ட பெகாசஸ் ஸ்பைவேர் மிகவும் சக்தி வாய்ந்தாக பார்க்கப்படுகிறது. இது உருவாக்கப்பட்டதன் நோக்கம் தொலைபேசியில் ஊடுருவி அதாவது ஸ்மார்ட்போன்களான – அன்ட்ரய்டு அல்லது ஐபோனில் ஊடுறுவி அவற்றையே கண்காணிக்கும் கருவியாகவும் மாற்றுகிறது.

இஸ்ரேலிய அமைப்பான NSO இந்த மென்பொருளை சந்தையில் ஒரு கண்காணிக்கும் கருவியாக விற்கிறது. இதன் மூலம் குற்றவாளிகளையும், தீவிரவாத அமைப்புகளையும் கண்காணித்து பின் தொடர்ந்து பிடிக்க உதவும் என்கிறது. அது மட்டுமல்லாது இந்த மென்பொருளை அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கங்களுக்கு மட்டும்தான் விற்பனை செய்ததாகக் கூறுகிறது.

பெகாசஸ் மென்பொருளானது குறிப்பிட்ட சிலரை இலக்கு வைத்து கண்காணிக்க உதவுகிறது. இந்த மென்பொருளைப் பயன்படுத்துவதற்கான உரிமத் தொகையே பல கோடி கட்டுவதோடு, கண்காணிக்கும் ஒவ்வொரு நபருக்கும் பல கோடி ரூபாய் ஆண்டுக் கட்டணமாக வசூலிக்கிறது பெகாசஸ் நிறுவனம். அதன் காரணமாகவே, இந்த மென்பொருள் வெகுஜன கண்காணிப்புக்காகப் பயன்படுத்தப்படவில்லை.

ஒரு பெகாசஸ் உரிமம் பெற்று பல ஸ்மார்ட்போன்களை வேவு பார்க்க முடியும். 2016-ஆம் ஆண்டின் விலைப்பட்டியிலின் படி, பெகாசஸ் உளவுச் சேவையை ஒரு நாடு வாங்குவதற்கான முதற்கட்ட கட்டணம் சுமார் ரூ. 3.5 கோடியாகும். அதன் பின்னர் கண்காணிக்கப்பட வேண்டிய ஒவ்வொரு 10 எண்களுக்கும் ஆண்டுக்கு ரூ. 5 கோடியை கட்டணமாக வசூலிக்கிறது பெகாசஸ் நிறுவனம்.

பெகாசஸ் எப்படி செயல்படுகிறது?

பெகாசஸ் அன்டராய்டு மற்றும் ஐ.ஒ.ஸ் ஆகிய கைப்பேசி இயங்குதளங்களில் இருக்கும் கண்டுபிடிக்கப்படாத, தீங்கு விளைவிக்கக் கூடிய தவறுகள் மற்றும் பிழைகளையும்,  வாட்சப் செயலியிலிருக்கும் இதுபோன்ற பிழைகளையும் பயன்படுத்தி கைப்பேசிக்குள் நுழைகிறது. கைப்பேசியில் ஏதேனும் பாதுகாப்பு மென்பொருள் நிறுவப்பட்டு இருந்தாலும் கூட அவற்றின் கண்களில் மண்ணைத் தூவி உள்ளே நுழையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த பெகாசஸ் ஸ்பைவேர்.

இந்த பெகாசஸ் மென்பொருள் ஒரு கைப்பேசியில் உள் நுழைவதற்கான வழிமுறையை படிப்படியாக மேம்படுத்தி வந்திருக்கிறது. முதலில், 2016-ம் ஆண்டு காலகட்டங்களில், வெளியில் இருந்து குறுஞ்செய்தி, மின்னஞ்சல், வாட்ஸ்அப் ஆகியவற்றின் மூலமாக அனுப்பப்படும் மோசடியான இணைப்பின் (Malicious link) சுட்டியை அழுத்தினாலே அது கைப்பேசிக்குள் நுழைந்துவிடும்.

இத்தகைய உள்நுழையும் வசதியை 2019-ம் ஆண்டில் மேலும் எளிமைப்படுத்தியது. 2019-ம் ஆண்டில் மேம்படுத்தப்பட்ட பெகாசஸ் ஸ்பைவேர், சீரோ க்ளிக் எனப்படும் வசதியைக் கொண்டிருந்தது. அதாவது எவ்விதமான சுட்டியையும் நீங்கள் அழுத்தாமலேயே உங்களது கைபேசிக்குள் நுழைந்துவிடும் தன்மை கொண்டது.

இதன் காரணமாக, இந்த ஸ்பைவேரால் கண்காணிக்கப்படும் இலக்குகள், அவ்வளவு எளிதாக தாம் பாதிக்கப்படுவதைக் கண்டுபிடிக்க முடியாது. அதன்பின் அடுத்த ஓரண்டிலே வாட்ஸ்அப் நிறுவனம் பெகாசஸ் ஸ்பைவேர் சுமார் 1,400 ஆன்டராய்டு தொலைபேசிகளில்ல் அரசு அதிகாரிகள், ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பட்டார்கள் கண்காணிக்கிறது என்று புதிய குற்றச்சாட்டை வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டது. அமெரிக்காவில் இது தொடர்பாக என்.எஸ்.ஓ நிறுவனம் மீது வாட்சப் நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது.

பெகாசஸ் என்ன செய்யும்?

தொலைபேசியில் ஒரு முறை பெகாசஸ் நிறுவப்பட்டால் தொடர்பில் இருக்கும் இருவருக்குமான செய்தி பரிமாற்றத்தை இடைமறித்து உங்கள் தொலைபேசியில் இருக்கும் குறுஞ்செய்தி, மின்னஞ்சல், தொடர்பு எண்கள், காலேண்டர், பாஸ்வோர்ட், அழைப்பு பற்றிய தகவல், ப்ரௌசெர் தரவுகள், தேடுப்பொறி வரலாறு போன்ற அனைத்தும் திருடப்பட்டு தங்களின் அனுமதியின்றி வேறுவொரு மூன்றாம் நபருக்கு அனுப்பிவிடும்.

நீங்கள் பேசுவதையும் பதிவு செய்யும், மறைமுகமாக உங்களின் கேமராவை ஆன் செய்து உளவு பார்க்கும், ஜிபிஸ் மூலம் உங்களது இடத்தின் அட்சரேகை, தீர்க்கரேகை குறியீட்டையும் எடுத்து அனுப்பும். இப்படி பல்வேறு உளவு வேலைகளை உங்களின் அனுமதியின்றி செய்யும் ஆற்றல் இந்த பெகாசஸுக்கு உள்ளது.

பெகாசஸின் வரலாறு:

2016-ஆம் ஆண்டு கனடாவை சேர்ந்த செக்கியூரிட்டி அமைப்பான சிட்டிசன் லேப் ஆய்வகம் தான் பெகாசசை முதன்முதலில் எதிர் கொண்டது. அந்நாட்டின் மனித உரிமைச் செயல்பட்டாளர் அஹமது மன்சூரின் தொலைபேசியில் தான் பெகாசஸ் கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் பின்னர், 2018-ம் ஆண்டில் சிட்டிசன் லேப் வெளியிட்ட அறிக்கையில் சுமார் 45 நாடுகள் பெகாசஸ் மென்பொருளை NSO விடமிருந்து வாங்கி பயன்படுத்தி வருவதாகத் தெரிவித்தது. அதில் இந்தியாவும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

படிக்க :
♦ பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஊடகவியலாளர்களை குறி வைக்கும் மக்கள் விரோத அரசுகள் !
♦ பெகாசஸ் கண்காணிப்பு அரசியல் சாசன விரோதமானது : நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா எச்சரிக்கை !

2021-ஆம் ஆண்டில் சர்வதேச புலனாய்வு பத்திரிக்கை செய்த ஆய்வில் வெளியான தகவலின் படி பல அரசாங்கங்கள் இந்த மென்பொருளை வாங்கி உளவு வேலையை பார்க்கின்றன என்பது தெரியவந்துள்ளது.

கேள்வி என்னவென்றால் இதை போன்ற மென்பொருளை தேசப் பாதுகாப்பு என்ற பெயரில் தன் நாட்டு மக்களிடமும், முக்கியமாக அரசு பணியில் உள்ள நீதிபதி, ஊடகவியளர்கள், செயற்பட்டார்கள் மீது பயன்படுத்துவதன் நோக்கம் தான் என்ன?

இது பற்றி அரசு இன்னும் தெளிவான எந்த பதிலும் தராமல் காலம் தாழ்த்துவது ஏன்?

(தொடரும்)

பாகம் 2 : பெகாசஸ் : சட்டரீதியாக எதிர்கொள்ள முடியுமா ?

சிந்துஜா
கட்டற்ற மென்பொருள் ஆர்வலர்

disclaimer

ஜக்கி பாலிசி : அட்வைஸும் ஆன்மீகமும் உனக்கு – ஆஸ்தி எனக்கு ! | கருத்துப்படம்

ஷா யோகா மையம் சார்பில் நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் சமீபத்தில் பேசிய சத்குரு ஜக்கி வாசுதேவிடம் பல ’பக்தாள்கள்’ கேட்ட கேள்விகளுக்கு வரிசையாகப் பதில் அளித்துள்ளார். அதில் ஒரு பக்தாள், “ஏன் நீங்கள் சுற்றுச் சூழல் குறித்து அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறீர்கள்” என்று கேட்டுள்ளார்.

இதற்குப் பதில் அளித்த சத்குரு, உலகில் உள்ள ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களில் 33% பேர் இந்தியாவில்தான் இருப்பதாகவும், இதற்குக் காரணம் நமது மண்ணில் போதுமான சத்து இல்லை என்றும் அதன் காரணமாகவே நமக்கு ஊட்டச்சத்து குறைப்பாடு இருப்பதாகவும் கூறியிருக்கிறார். இப்படி ஒரு நிலை இருக்கும் போது, தான் எப்படி சுற்றுச் சூழல் குறித்துப் பேசாமல் இருக்க முடியும் என்று கேட்டுள்ளார்.

படிக்க :
♦ அதிகாரவர்க்கத்தின் துணையோடு விதிகளை மீறிய ஜக்கி வாசுதேவ் !!
♦ யானைகளின் வழித்தடத்தை அழித்து விவசாயிகளின் வயிற்றிலடித்த ஜக்கி !

வெள்ளியங்கிரி மலைப் பகுதியை மொட்டையடித்து, அரசு அதிகாரிகளைக் கைக்குள் போட்டுக் கொண்டு, யானைகளின் வழித்தடத்தை மறித்து ஆதியோகி சிவனின் சிலையையும், ஆசிரம கட்டிடங்களையும் கட்டிக் கொண்டு அந்தப் பகுதியில் ஒட்டுமொத்த இயற்கையையும் சீரழித்த ஜக்கி தான் இவ்வாறு பேசியிருக்கிறார்.

மேலும் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு சொட்டு ஆன்மீகத்தையாவது கொண்டு சேர்த்துவிட வேண்டும் என்பதுதான் தன்னுடைய விருப்பம் என்றும் அதற்காகத்தான் தாம் பல்வேறு ஆன்மிகப் பயிற்சிகளை இலவசமாக வழங்கிவருவதாகவும் கூறியிருக்கிறார்.

இலவச ஆன்மீகம், யோகா பயிற்சி ஆகியவை எல்லாம் பெரிய மீனைப் பிடிக்க தூண்டிலில் மாட்டப்படும் சிறிய மீன்கள்தான். பெரும் கார்ப்பரேட் ஆன்மீக மாஃபியாவாக வளர்ந்து நிற்கும் ஜக்கி வாசுதேவ், இயற்கையை அழிப்பதற்கும் சொத்து சேர்ப்பதற்கும் பயன்படுத்தும் தூண்டில் மீன்கள்தான் ஆன்மீகமும், சுற்றுச் சூழல் ‘அட்வைஸ்’ பம்மாத்துக்களும் !

ஜக்கியின் ஃபார்முலா ஒன்றுதான். அது, “ஆன்மிகம் உனக்கு !! ஆஸ்தி எனக்கு !!”

ஆன்மீகம் மக்களுக்கு; ஆஸ்தி அவர்களுக்கு…!


கருத்துப்படம் : மு. துரை

பெகாசஸ் : ‘ஜனநாயகக்’ கட்டமைப்பை உளவு பார்க்கும் இந்து ராஷ்டிரம் !!

0

முதல் பாகம் || பெகாசஸ் : இந்து ராஷ்டிரத்தின் எதிரிகளே அதன் இலக்குகள் !

பாகம் 2 : ஹிட்லருக்கு எஸ்.எஸ். உளவுப் படை – மோடிக்கு பெகாசஸ்

திருடனுக்குத் தேள் கொட்டியது போல வாய்மூடிக் கிடக்கும் மோடி அரசு :

முன்னரே கூறியது போல 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பெகாசஸ் மூலம் சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் கண்காணிக்கப்பட்டது அம்பலமானது. அந்த சமயத்தில் வாட்சப் நிறுவனம், இந்தியர்களின் தகவல்கள் வாட்சப் மூலம் கண்காணிக்கப்படுவதாக 2019-ம் ஆண்டின் மே மாதமே ஒன்றிய அரசிடம் தகவல் தெரிவித்ததாக அறிவித்தது.

எனில், கடந்த 2019, மே மாதமே இந்தியர்கள் கண்காணிக்கப்படுவது குறித்து தகவல் தெரிந்தும் ஒன்றிய அரசு, அதற்கு எதிரான நடவடிக்கை எதுவும் எடுக்காததற்கான காரணம் என்ன ?

அடுத்ததாக 2019, அக்டோபர் மாத இறுதியில் வாட்சப் நிறுவனம், இந்தியர்களின் அலைப்பேசிகள் என்.எஸ்.ஓ நிறுவனத்தின் உளவு மென்பொருள் மூலம் தான் ஒற்றுளவு பார்க்கப்பட்டன என்பதை பகிரங்கமாக அறிவித்து, என்.எஸ்.. நிறுவனத்தின் மீது அமெரிக்காவில் வழக்கு தொடர்ந்தது.

இதற்குப் பிறகும் என்.எஸ்.ஓ நிறுவனத்தின் மேல் வழக்கு தொடராதது ஏன் ? ஒரு அரசாங்கம் என்ற வகையில் தனது ‘நட்பு’ நாடான இஸ்ரேலின் மூலம் அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

அவ்வளவு ஏன், விவகாரம் தற்போது வெளியே வந்து நாறிய பிறகும் கூட என்.எஸ்.ஓ நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து மோடி அரசு வாய் திறக்கவில்லையே..

இந்தப் பின்னணியில், சட்டீஸ்கரின் தற்போதைய முதல்வர் பூபேஷ் பகெல் என்.எஸ்.ஓ நிறுவன அதிகாரிகள் பாஜகவின் ராமன்சிங் ஆட்சி நடந்த போது சட்டீஸ்கருக்கு வந்து சென்றனர் என்று சமீபத்தில் தெரிவித்ததையும் இணைத்துப் பார்த்தால், மோடி அரசு இன்னும் மலைமுழுங்கியைப் போல கமுக்கமாக இருப்பது ஏன் என்று புரியும்.

திருடனுக்குத் தேள் கொட்டினால், அவன் பொத்திக் கொண்டு தானே இருக்க முடியும் ?

படிக்க :
♦ பெகாசஸுக்கான சோதனையும் இந்திய ஜனநாயகமும் || எம்.கே.வேணு
♦ பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஊடகவியலாளர்களை குறி வைக்கும் மக்கள் விரோத அரசுகள் !

இந்த உளவு வேலையின் பரிமாணம் என்ன ?

இந்தியாவின் அதிகாரமிக்க பதவிகளிலும் பொறுப்புகளிலும் இருப்பவர்களின் மூலம், அவர்களுக்குத் தெரியாமலேயே இந்நாட்டின் இரகசியங்களை ஒரு வெளிநாட்டைச் சேர்ந்த நிறுவனத்தின் உளவு மென்பொருள் மூலம் கண்காணித்திருக்கிறது மோடி அரசு.

பொதுவாகவே, இந்த விவகாரம் பத்திரிகை சுதந்திர பறிப்பு, எதிர்க்கட்சிகளைக் கண்காணித்தல், நீதிபதியை கண்காணித்தல் என தனித்தனி விவகாரங்களாகவே பார்க்கப்படுகிறது.

எந்த ஒரு அரசாக இருந்தாலும், அதில் உளவு என்பது ஒரு அங்கமாக இருக்கத்தான் செய்யும். பொதுவாக முதலாளித்துவ அரசுக் கட்டமைப்பில், நிலவும் அரசுக் கட்டமைப்பை தகர்க்க வேண்டும் என நினைப்பவர்கள், பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள், கடத்தல் பேர்வழிகள் ஆகியோரை கண்காணிக்கவே உளவு வேலைகள் பயன்படுத்தப்படும். அதைப் போல இதுவும் ஒரு சாதாரண உளவு அல்ல.

ஏனெனில், இங்கு உளவு பார்க்கப்பட்டவர்களில் யாரும் பயங்கரவாதிகளோ, பிரிவினைவாதிகளோ, பெண்கள் / குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமை செய்பவர்களோ அல்ல. (அத்தகையவர்கள் அனைவரும் பாஜகவிலும் சங்க பரிவார அமைப்புகளிலும் தான் இருக்கிறார்கள் என்பது தனி விவகாரம்). உளவு பார்க்கப்பட்டவர்கள் யாரும் இந்த அரசுக்கு எதிராக போர் தொடுத்தவர்கள் அல்ல. இந்த அரசுக் கட்டமைப்பை ‘சீராக’ இயக்கியவர்கள். இந்த அரசுக் கட்டமைப்பின் முக்கியப் பதவிகளில் இருப்பவர்கள்.

இந்த நாட்டின் அரசியல்வாதிகள், அதிகாரிகள், நீதிபதிகள், இராணுவத்தினர், உளவுத்துறை ஆகியோர் வரை அனைவரையும் கண்காணித்திருக்கிறது மோடி அரசு.

ஒரு நாட்டை ஒழித்துக் கட்டவோ, அடிமைப்படுத்தவோ விளையும் ஒரு எதிரி நாடு யார் யாரையெல்லாம் கண்காணித்துத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர விளையுமோ, அவர்களையெல்லாம் கண்காணித்திருக்கிறது மோடி அமித்ஷா கும்பல்.

எனில், இவர்களின் நோக்கம் என்ன ?

ஜெர்மனியில், தேர்தல் மூலம் வெற்றிபெற்ற ஹிட்லர், ஆட்சியில் அமர்ந்ததும் அந்நாட்டு பத்திரிகைகள், கலைத்துறையினரை தனது கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டுவந்தான். எதிர்க்கட்சிகளை செயல்படவிடாமல் முடக்கினான். தேச வளர்ச்சி எனும் பெயரில் தொழிலாளர் விரோதச் சட்டங்களை இயற்றினான். நீதித்துறையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தான்.

ஜெர்மனியின் ஜனநாயகக் கட்டமைப்பை படிப்படியாக மூன்றே ஆண்டுகளுக்குள் தனது நாஜி சர்வாதிகார ஆட்சிக் கட்டமைப்பாக மாற்றினான் ஹிட்லர். இதையெல்லாம் செய்வதற்கு ஹிட்லருக்கு தனது சொந்த நாட்டு அரசு அதிகாரிகள், அரசியல் தலைவர்களையே உளவு பார்க்க வேண்டிய அவசியம் இருந்தது. ஹிட்லரின் எஸ்.எஸ். உளவுப் பிரிவு இந்தச் சேவையை செவ்வனே செய்தது.

அதை அப்படியே இந்தியாவில் நடைமுறைப்படுத்தியிருக்கிறது மோடி அமித்ஷா கும்பல். சொந்த நாட்டு அரசுக் கட்டமைப்பின் பொறுப்பாளர்களை கண்காணித்து தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதன் மூலம், தமது இந்துராஷ்டிர பாசிச அரசுக் கட்டமைப்பை நோக்கியப் பயணத்தை விரைவுபடுத்தியிருக்கிறது.

நாம் செய்ய வேண்டியது என்ன ?

எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எழுப்பியுள்ளன. ஆனால் எதற்கும் அசைந்து கொடுக்க மோடி அரசு தயாராக இல்லை.

நீதிமன்றமோ வாய் மூடி அமைதி காக்கிறது. உலகத்தையே உலுக்கியுள்ள இந்த விவகாரத்தில், ஒரு பொறுப்புள்ள நீதிமன்றம், தாமாக முன்வந்து வழக்குப் (suo-motto) பதிவு செய்திருக்க வேண்டும். இதுவரையில் ஏதும் நடக்கவில்லை. இது குறித்து மூத்த பத்திரிகையாளர் ராமும் மற்றொருவரும் இணைந்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். அவ்வழக்கு இன்னும் எத்தனை மாதங்கள் கழித்து விசாரணைக்கு வரும் என்பது மோடி அமித்ஷா கும்பலுக்கே வெளிச்சம்.

குற்றவாளியே ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து கொண்டு, அரசுக் கட்டமைப்பின் அனைத்து அதிகார மட்டத்திலும் இருப்பவர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் சூழலில் சட்டப்படியான எவ்வித முன்னெடுப்புகளும் தீர்வைத் தருவதற்கான வாய்ப்பு இல்லை.

பிரதான எதிர்கட்சியான காங்கிரசும், பிற கூட்டணி கட்சிகளும் நாடாளுமன்றத்திலும், சமூக ஊடகங்களிலும் போராட்டமாகக் கொண்டு போகிறார்களே தவிர, இதனை மக்கள் மத்தியில் கொண்டு சென்று இதை மக்கள் போராட்டமாகக் கொண்டு செல்லவில்லை. அதற்கான முனைப்பும் எதுவும் இல்லை. அப்படி கொண்டு செல்லக் கூடிய அமைப்புகளும் மிகவும் பலவீனமான நிலையில் இருக்கின்றன.

ஒரு உளவு மென்பொருள், நான்கு சுவருக்குள் நடைபெறும் நமது அந்தரங்கங்களை வேறு ஒருவருக்கு நேரலையாக அனுப்புகிறது. நவீன பெருவீத உற்பத்தியில் பண்ணைகளில் ஆடுகள், மாடுகள், பன்றிகள் ஆகியவற்றை தொடர்ந்து கண்காணிக்க அவை அடைக்கப்பட்டுள்ள பட்டிகளில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த விலங்குகளுக்கு அந்தரங்கம் என்று எதுவும் கிடையாது என்ற வகையில் அவை அது குறித்துக் கவலைப்படுவதில்லை.

நமது அந்தரங்க நடவடிக்கைகளை நமது கைப்பேசியின் மூலமாகவே ஒரு கிரிமினல் கும்பலால் பார்க்க முடியும் அளவிற்கு ஒரு பெரும் தொழில்நுட்பக் கேடான விவகாரத்தை ஒரு அரசே செய்திருக்கிறது என்ற கோபம் நமக்கு வருவதில்லை.

தனிப்பட்ட ரகசியம் காக்கப்படும் என்ற உறுதியளித்துதான், கண் கருவிழி அடையாளம், கைரேகை என நமது தனித்துவ அடையாளங்களை ஆதார் என்ற பெயரில் ஏற்கெனவே இந்த அரசு எடுத்தது. இரண்டாண்டுகளுக்கு முன்னர் அவை கசிந்த போதும் அதைப் பற்றி இந்த அரசு கவலைப்படவில்லை. இதைப் பற்றி நம்மில் பலருக்கும் கவலையில்லை.

அதே போலத்தான் தற்போது பெகாசஸ் எனும் இந்த உளவு மென்பொருள் திருட்டுத்தனமாக பலரது அலைபேசிகளில் நுழைக்கப்பட்டு பலரும் கண்காணிக்கப்பட்டதையும், பலரது அந்தரங்கத் தகவல்கள் அரசின் கைகளில் இருப்பதையும் நாம் சர்வ சாதாரணமாகக் கடந்து போகிறோம். அது யாரோ ஒருவருக்கு எங்கேயோ நடப்பதாகவும், நமக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்றும் நினைக்கிறோம். நமது அந்தரங்கம் குறித்த இந்த அக்கறையற்ற மனநிலையே, பாசிஸ்டுகளுக்கு பலம் சேர்க்கக் கூடியதாக இருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பலின் இந்துராஷ்டிரத்தை நோக்கிய முன்னெடுப்பில் அரசுக் கட்டமைப்பில் இருக்கும் அனைவரும் கண்காணிக்கப்படுகிறார்கள். நாளை இந்து ராஷ்டிரம் அமைக்கப்பட்ட பிறகு, பாரத மாதாவின் பெயரால் பெகாசஸ் போன்ற ஒரு அதிகாரப்பூர்வ உளவு மென்பொருள் மூலம் ஒவ்வொரு குடிமகனும் கண்காணிக்கப்படலாம்.

இந்துராஷ்டிரத்தை ஏற்றுக் கொண்டு, பட்டியில் அடைக்கப்பட்டிருக்கும் விலங்குகளின் நிலைமைக்குச் செல்ல நம்மை நாமே தயார்படுத்திக் கொள்ளப் போகிறோமா அல்லது இத்தகைய உளவு வேலைகளுக்கு எதிராகவும், இந்து ராஷ்டிரத்துக்கு எதிராகவும் களம் இறங்கப் போகிறோமா ?

(முற்றும்)


சரண்

செய்தி ஆதாரம் : தி வயர்

இலங்கை தொழிற்சங்க போராட்டம் – ஒரு மறைக்கப்படும் வரலாறு || கலையரசன்

0
  • சியாவிலேயே முதலாவது தொழிற்சங்கம் இலங்கையில் தான் தொடங்கியது. 1893-ஆம் ஆண்டு ஐரோப்பிய முதலாளிகளின் அச்சகங்களில் வேலை செய்த தொழிலாளர்கள் ஒரு தொழிற்சங்கமாக ஒன்றிணைந்தனர்.
  • இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் கொழும்பு நகரில் பல தொழிற்துறைகளில் வேலை செய்த பெரும்பாலான தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இணைந்து கொண்டனர். சேவைத்துறை தொழிலாளர்கள், ரிக்சா வண்டி ஓட்டுவோர், டிராம், ரயில் ஊழியர்கள், அலுவலக ஊழியர்கள் இவ்வாறு பலவகையான தொழிற்பிரிவினர் தொழிற்சங்க அமைப்பாகினார்கள்.
  • 1931 முதல் 1970 வரை, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) விதிகளுக்கு ஏற்றவாறு அரசு சட்டங்களை மாற்றியமைத்ததில், தொழிற்சங்கங்களின் பங்களிப்பு இருந்தது. இடையறாதப் போராட்டங்களின் மூலம் தொழிலாளர்கள் தமது உரிமைகளை ஒவ்வொன்றாக வென்றெடுத்தனர்.

படிக்க :
♦ இலங்கை : நாடு முழுவதும் வலுவடையும் 1000 ரூபாய் தோட்டத் தொழிலாளர் போராட்டம் !
♦ நாஜிகளை நடுங்க வைத்த நெதர்லாந்து வேலை நிறுத்தப் போராட்டம் || கலையரசன்

  • இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர், 1945 – 1947 ஆகிய மூன்று வருடங்களுக்குள் மாத்திரம் அடுத்தடுத்து பல வேலைநிறுத்தப் போராட்டங்கள் நடந்துள்ளன. கொழும்பு துறைமுகத் தொழிலாளர்கள் மட்டுமல்லாது, போக்குவரத்து, நகரசபை, வங்கி ஊழியர்களும் வேலைநிறுத்தப் போராடங்களில் ஈடுபட்டனர். தேயிலை, ரப்பர் தோட்டங்களில் வேலை செய்த மலையகத் தமிழர்களும் வேலைநிறுத்தம் செய்தனர். இதன் விளைவாக இடதுசாரி கட்சிகளுக்கு மக்கள் ஆதரவு பெருகியது. அவை உழைக்கும் வர்க்க மக்களின் தலைமையாக உருவாகின. இடதுசாரிகள் தமக்கான மக்கள் ஆதரவு தளத்தில் நம்பிக்கை வைத்து இலங்கைக்கு முழுமையான சுதந்திரம் கோரினார்கள்.
  • எல்லாப் போராட்டமும் வெற்றியளிக்கா விட்டாலும், அரசு பல கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டது. வேலைக்கு சேர்ப்பது, மாற்றம் செய்வது, பணி நீக்கம் செய்வது போன்றவற்றில் பிரச்சனைகள் ஏற்பட்டால், தொழிலாளர்கள் நீதிமன்றம் சென்று வழக்காடும் உரிமை கிடைத்தது. அதை விட சம்பளத்துடனான விடுமுறை, நஷ்டஈடு, மற்றும் பல சலுகைகள் கிடைத்தன.

  • இலங்கை சுதந்திரமடைந்த ஆரம்ப காலங்களில், தொழிலாளர்கள் வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகளின் பட்டியல் :
  1. ஒழுங்கமைக்கப் படாத தொழிற்துறைகளிலும் கூட சம்பளம் நிர்ணயிப்பதற்கான குழு  உருவாக்கப்பட்டது.
  2. தனியார் நிறுவனங்கள் தொழிற் சங்கங்களுடன் சேர்ந்து இயங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
  3. தொழிலகங்களில் நடக்கும் பிரச்சனைகளை பேசித் தீர்ப்பதற்கான அமைப்புகள் உருவாக்கப்பட்டன.
  4. வேலை நேர இடைவேளை, வேலை செய்யும் நேரம் ஆகியன தீர்மானிக்கப்பட்டன.
  5. பெண்களுக்கான மகப்பேறு விடுமுறை கிடைத்தது. அதைக் காரணம் காட்டி பணி நீக்கம் செய்வது தடுக்கப்பட்டது.
  6. தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் சமூக நலப் பாதுகாப்பு சலுகைகள் கிடைத்தன.
  7. தனியார் நிறுவன முதலாளிகள் கூட தொழிலாளர் நலத்துறை அதிகாரியை கலந்தாலோசிக்காமல் பணி நீக்கம் செய்ய முடியாது.

இலங்கையில் தொழிலாளர்கள் அனுபவித்து வந்த உரிமைகள் எப்போது, எப்படிப் பறிக்கப்பட்டன?

  • 1977-ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில், முதலாளிய ஆதரவு வலதுசாரிக் கட்சியான யு.என்.பி. அறுதிப்பெரும்பான்மை பெற்று வென்று ஆட்சிக்கு வந்தது.
  • ஆசியாவிலேயே முதல்தடைவையாக, ஜே.ஆர். ஜெயவர்த்தன நியோ – லிபரலிச பொருளாதாரக் கொள்கையை நடைமுறைக்கு கொண்டு வந்தார். நாட்டின் பொருளாதாரம் திறந்து விடப்பட்டது.
  • 1978-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தம் தொழில்நிறுவனங்கள் விரும்பிய படி தொழிலாளர்களை வேலைக்கு எடுக்கவும், பணி நீக்கம் செய்யவும் அனுமதித்தது.
  • அத்தியாவசிய சேவைகள் துறையில் வேலைநிறுத்தம் செய்வது தடைசெய்யப்பட்டது. ஒரு நிறுவனத்தில் சட்டப்படி வேலைநிறுத்தம் செய்வதற்கான அறிவித்தல் 21 நாட்களுக்கு முன்னர் விடுக்கப்பட வேண்டும். அப்படியே நடந்தாலும், அதற்கு ஆதரவாக, அதனுடன் சம்பந்தப்படாத தொழிலாளர்கள் தோழமை வேலைநிறுத்தம் செய்வது தடுக்கப்பட்டது.
  • நிச்சயமாக தொழிலாளர் வர்க்கம் இந்த அடக்குமுறை சட்டத்திற்கு அடிபணியவில்லை. அதை எதிர்த்து போராடி வந்தது.
  • 1980-ஆம் ஆண்டு நடந்த பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்நின்று நடத்திய 40,000 தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கான தொழிற்சங்கவாதிகள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். அதன் மூலம் அவர்களுக்கு நாடு முழுவதும் அனைத்து நிறுவனங்களிலும் வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டது. அவர்கள் தமது வாழ்க்கையை கொண்டு செல்ல சுயதொழில் செய்து பிழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
  • அவசரகால சட்டம், ஊடகத் தடை, அரச வன்முறைகள் மூலம் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் ஒடுக்கப்பட்டனர்.
  • ஈழப் போராட்டம் வெடித்த பொழுது, அரசு PTA எனும் பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டு வந்து தமிழ் இளைஞர்கள் கைது செய்யப் பட்டு துன்புறுத்தப்பட்ட வரலாறு அனைவருக்கும் தெரியும். ஆனால், அதே சட்டம் தொழிற்சங்கவாதிகளுக்கும் எதிராக பிரயோகிக்கப்பட்டதென்பது பலருக்குத் தெரியாது.

  • 1983 ஜூலை இனக்கலவரத்தை காரணமாகக் காட்டி, அரசு மூன்று இடதுசாரிக் கட்சிகளை தடை செய்தது. ஜேவிபி, கம்யூனிஸ்ட் கட்சி, சமசமாஜக் கட்சி ஆகியன தடை செய்யப்பட்டதால், அவை தலைமை தாங்கிய தொழிற்சங்கங்கள் இயங்க முடியாத நிலைமை உருவாகியது.
  • வடக்கில் வாழ்ந்த தமிழர்கள் மத்தியில் தொழிற்சங்க நடவடிக்கைகள் மிகக் குறைவாகவே இருந்தன. ஏற்கனவே, அந்தப் பிரதேசத்தில் தொழிற்துறை மிக அரிதாகவே இருந்தது. குறிப்பாக, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை ஊழியர்கள் கம்யூனிச தொழிற்சங்க உறுப்பினர்களாக இருந்தனர். ஆனால், போர் தொடங்கிய பின்னர் அந்தத் தொழிற்சாலை இயங்காமல் நின்றுவிட்டது.
  • விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் தென்னிலங்கை தொழிற்சங்கங்கள் இயங்குவது தடுக்கப்பட்டது. தமிழ் தொழிலாளர்கள், தென்னிலங்கை தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதும் தடுக்கப்பட்டது. 2002-ஆம் ஆண்டுக்கு பின்னர், சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் நடந்த யாழ் மருத்துவமனை ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் புலிகளின் நேரடித் தலையீட்டினால் தடுத்து நிறுத்தப்பட்டது.
  • தென்னிலங்கையில் 1987 – 1989 காலப்பகுதியில் நடந்த ஜேவிபி கிளர்ச்சியின் போதும் தொழிற்சங்கவாதிகள் மூர்க்கத்தனமாக ஒடுக்கப்பட்டனர். பெரும்பாலான தொழிற்சங்கவாதிகள் அரசுக்கும், ஜேவிபிக்கும் இடையில் சிக்கித் தவித்தனர்.

படிக்க :
♦ இலங்கை : புத்தளம் குப்பைத் திட்டத்துக்கு எதிராக மார்ச் -19 பெருந்திரள் ஆர்ப்பாட்டம் !
♦ காலனிய ஆட்சியில் இலங்கை – சமரன் குழு எழுதிய கதை !

  • ஒரு புறம் ஜேவிபி தனது கட்டுப்பாட்டின் கீழான தொழிற்சங்கப் போராட்டங்களை மட்டும் ஆதரித்தது. பிற கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கவாதிகளை ஆயுதமுனையில் மிரட்டிப் பணிய வைத்தது. மீறுவோர் கொல்லப்பட்டனர்.
  • மறுபுறம் அரசு இயந்திரம் போரை பயன்படுத்தி தொழிற்சங்கவாதிகளை வேட்டையாடியது. இராணுவம், போலிஸ் மட்டுமல்ல, இரகசிய கொலைப் படையினரும் தொழிற்சங்க உறுப்பினர்களை கண்ட இடத்தில் சுட்டுக் கொன்றனர். தொழிற்சங்க ஆதரவாளர்கள் கூட ஈவிரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்டனர்.
  • தொண்ணூறுகளுக்கு பிறகு எந்தவொரு தொழிற்சங்கமும் அரசுக்கு சவாலாக இருக்கவில்லை. அந்தளவு தூரம், தொழிற்சங்கவாதிகள் இனி எந்தக் காலத்திலும் தலைதூக்க விடாமல் அரச பயங்கரவாதத்தினால் அழித்தொழிக்கப்பட்டனர். அதுவும் இனப்படுகொலை தான். ஆனால், அதைப் பற்றி பேசுவதற்கு இங்கே யாரும் இல்லை.


கலையரசன்
முகநூலில் : Kalai Marx

இந்துத்துவத்தை கற்பிக்க தனி கல்வி வாரியம் அமைக்கும் மோடி அரசு !

னிக்கல்வி வாரியத்தை உருவாக்கி, வேத மரபுகள் மூலம் நவீன பாடங்களைக் கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மக்களவையில் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் எழுப்பட்ட கேள்விக்கு எழுத்து பூர்வமாக ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அளித்துள்ள பதிலில், “மத்தியப் பிரதேச மாநிலத்தின் உஜ்ஜைனி பகுதியில் உள்ள மகரிஷி ராஷ்ட்ரிய வேத வித்யா பிரதிஸ்தான் (MSRVVP), தனியார் கல்வி வாரியம் (அதாவது தனிக் கல்வி வாரியம்) அமைக்கும் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.

அந்தக் கல்வி வாரியத்தில், வாய்வழியாக கற்பிக்கப்படும் வேத மரபுகள் மூலம் நவீன பாடங்களும் கற்பிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

படிக்க :
♦ பெகாசஸ் : இந்து ராஷ்டிரத்தின் எதிரிகளே அதன் இலக்குகள் !
♦ புரட்சியாளரான பின்னும் பூணூல் அணிந்திருந்தாரா சந்திரசேகர் ஆசாத் ?

மகரிஷி ராஷ்டிரிய வேத வித்யா பிரதிஸ்தான்:

ஒன்றிய அரசின் கீழ், சி.பி.எஸ்.இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) மற்றும் தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனம் (NIOS) ஆகிய கல்வி வாரியங்கள் இயங்கி வருகின்றன.

இதில் ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி அமைப்பாக, மகரிஷி ராஷ்ட்ரிய வேத வித்யா பிரதிஸ்தான் செயல்பட்டு வருகிறது.
இவ்வமைப்பு 1987-ஆம் ஆண்டு மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ் பி.வி.நரசிம்மராவ் காலத்தில் கொண்டு வரப்பட்டது.

வேதக் கல்வியின் வாய்வழி பாரம்பரியத்தை பாதுகாத்தல், ஊக்குவித்தல் மற்றும் மேம்படுத்துதல் அதனை கற்பித்து நாடு முழுக்க விரிவுபடுத்துவது என்ற நோக்கத்தோடு செயல்படப் போவதாக அறிவித்தது.

இவ்வமைப்பு இந்தியா முழுவதும் வேத பாடசாலைகளை நிறுவி கல்வி கற்பித்தும் வருகின்றது, இதன் கீழ் பல பாடசாலைகளும் உள்ளன.

வேதக்கல்வி வாரியம் அமைத்தல் :

மோடி அரசாங்கம் பொறுப்பேற்றவுடன் வேதக் கல்வியை விரிவுபடுத்துவதற்காக வேதக் கல்வி வாரியத்தையும் அதற்கென்று தனி பல்கலைக் கழகத்தையும் அரசு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார் பாபா ராம்தேவ்.
அதனைத் தொடர்ந்து 2015-ஆம் ஆண்டு அப்போதைய மனிதவள மேம்பாட்டுதுறை அமைச்சரான ஸ்மிருதிராணி வேத கல்வி வாரியம் அமைக்கபடும் என்று அறிவித்தார்.
இந்த வாரியத்திற்கு தலைவராக பாபா ராம்தேவ் நியமிக்கப்படலாம் என்று 2019-ல் மோடி அரசு கூறியிருந்தது.

மேலும் பாடத்திட்டங்களை உருவாக்குவது, கல்வி நிலையங்களை உருவாக்குவது என அனைத்து பொறுப்புகளும் பாபா ராம்தேவ்வின் யோகா பீடம் அறக்கட்டளைக்கு வழங்கவும் முடிவு செய்து இருந்தது மோடி அரசு.

தற்போதைய தர்மேந்திர பிரதானின் அறிவிபின்படி உருவாக்கப்படவுள்ள இத்தனிக் கல்வி வாரியமானது, “தனியார்” என்ற பெயரில் பாபா ராம்தேவ் போன்ற ஆர்.எஸ்.எஸ்.கும்பல்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

இப்புதிய வாரியத்தின் மூலம் வேத பாட சாலைகளை உருவாக்குவது, பள்ளி பாடத்திட்டங்களை வடிவமைப்பது, நிர்வாகம் செய்வது என்ற அனைத்து முடிவுகளையும் ஆர்.எஸ்.எஸ். பாசிஸ்டுகளான பாபா ராம்தேவ் போன்றவர்களே முடிவுசெய்வார்கள்.

படிக்க :
♦ ரஃபேல் ஊழல் : பிரான்சில் அம்பலமான பின்னும் இந்தியாவில் அமைதி ஏன் ? || தோழர் சுரேசு சக்தி
♦ பத்திரிகை சுதந்திரத்தை வேட்டையாடும் 37 தலைவர்களில் ஒருவர் மோடி !

நவீன கல்வி என்ற பெயரில் இந்து மத புராணங்களையும், அறிவியலுக்கு புறம்பான கட்டுக் கதைகளையுமே பாடத்திட்டமாக அறிவிப்பார்கள். ஏற்கனவே, புதிய கல்வி கொள்கையில், வேத கல்வி முறையை திணிக்கும் வகையில் சில முன்மொழிவுகளை முன்வைத்துள்ளனர். அதில், குருகுல (வேத பாடசலையை) கல்வி முறையையும் அங்கரிப்பது.

அதற்கு சான்றிதழ் வழங்கி பொறியியல், மருத்துவம் போன்ற பட்ட மேற்படிப்புகள் படிக்க அனுமதி வழங்குவது ஆகிய அம்சங்கள் உள்ளன. வேதக்கல்வி வாரியம் அமைத்து, இந்து மத வேதங்களை கற்பிப்பதானது இந்தியக் கல்வித்துறையின் மீதான மிகப்பெரிய பாசிசத் தாக்குதலாகும்.

எனவே, பல்வேறு வழிகளில் கல்வியை காவிமயமாகவும் கார்ப்பரேட்மயமாகவும் மாற்றி வரும் மோடி அரசிற்கு எதிராக, மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் – என அனைவரும் ஓரணியில் திரள வேண்டியது அவசியம்.

சிவா

முகநூலில் : புமாஇமு

disclaimer

மோடி மட்டும்தான் முதன்மையான எதிரியா ? || காஞ்சா அய்லைய்யா

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சர்சங்சாலக் மோகன் பகவத், 2021 மே 15-ஆம் தேதி அன்று இந்தியாவின் கோவிட் பெருந்தொற்று பேரழிவு பற்றி, ‘வரம்பற்ற நேர்மறையான’ கருப்பொருளில் உரையாற்றினார். அதன் பின்னர் தேசிய ஊடகங்களில் இருக்கும் மதச்சார்பற்ற எழுத்தாளர்கள் கூட மோடியை சாத்தான் போலவும், மோகன் பகவத்தை தேவதை என்றும் பாடத் துவங்கினர். “பகவத் மோடியை மட்டந்தட்டி பேசினார்’‘, “கூட்டுப் பொறுப்பு ஏற்குமாறு பகவத் அவருக்கு அறிவுரை வழங்கினார்’‘, “நிகழ்வுகளின் போக்கை சரிசெய்வதற்கு தான் ஆர்.எஸ்.எஸ் இருக்கிறது” மற்றும் இது போன்றவையே அவற்றின் கருப்பொருள்களாகும். சமூக ஊடகங்களிலும் இதே போன்ற கருப்பொருளில் பல சுற்று விவாதங்களைக் கிளப்பி வருகின்றனர்.

மோடிக்கு நிகழ்வுகளின் போக்கை சரிசெய்வதற்கான செய்தியை வழங்கிய இந்த மகத்தான பேச்சுக்கு சற்று முன்பு, பிரபல எழுத்தாளரான அருந்ததி ராய் ஒரு இணைய செய்தி ஊடகத்தில் ஒரு பதிவு எழுதியிருந்தார். அதில், மோடியை பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறும் அவருக்குப் பதிலாக வேறு எந்த ஒரு ஆர்.எஸ்.எஸ் நபராவது பிரதமர் பதவியை ஏற்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். அவர் மோடிக்கு வழக்கத்திற்கு மாறான முறையில், “தயவுசெய்து பதவி விலகுங்கள்உங்களது இடத்தில் தற்போதைக்கு ஆர்.எஸ்.எஸ்ன் ஒப்புதலுடன் அமர உங்களது கட்சியில் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களால் அரசாங்கத்திற்கும் தற்போதுள்ள (பெருந்தொற்று) நெருக்கடி நிலைமையைக் களையும் மேலாண்மைக் குழுவிற்கும் தலைமை தாங்க முடியும்என்பதாக ஒரு வேண்டுகோள் விடுத்தார். (Scroll.in).

படிக்க :
♦ கங்கனா ரணாவத் – பாலிவுட் – சாதிய அரசியல் | காஞ்சா அய்லையா
♦ மோகன் பகவத்தின் இந்தியாவில் எல்லோருமே இந்து தான் : காஞ்சா அய்லய்யா

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மோகன் பகவத் ஒரு புதிய பிரதமரை உருவாக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் அவர் இந்த நெருக்கடியைத் தீர்க்க வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார்.

தவ்லின் சிங் போன்ற சில முன்னாள் மோடி பக்தர்கள்‘, பெருமளவில் நிகழ்வுகளின் போக்கை சரிசெய்யும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று சங்க பரிவாரத்துக்கு பல ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

கொரோனா நெருக்கடி மதச்சார்பற்றவர்களின் தார்மீக நெறிமுறைகளை மாற்றியுள்ளது. பகவத்தும் ஆர்.எஸ்.எஸ்ம் வரம்பற்ற நேர்மறையான வலைப்பின்னலாகத் தெரிகின்றன. அவர்களைப் பொருத்தவரையில், மோடி வெளியேறினால், அனைத்தும் சரியாகிவிடும்

மோகன் பகவத் மற்றும் ஆர்.எஸ்.எஸ் பற்றிய மதச்சார்பற்ற அறிவுத் துறையினரின் இவ்வகையான புரிதல், பல சூத்திர / இதர பிற்படுத்தப்பட்ட சாதி (OBC) இளைஞர்களை மோடியின் அரசியல் வலைக்குள் தள்ளி அவரின் பிடியில் சிக்க வைக்கிறது. மோடி சூத்திர OBC-யோ இல்லையோ, ஆனால் அவரது கையில் OBC என்ற சான்றிதழ் உள்ளது.

மோடி தன்னைப் பற்றிய பல சுய விளம்பரங்களின் மூலம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். குறிப்பாக, தான் ஒரு ஏழை இதர பிற்படுத்த வகுப்பை சேர்ந்தவராகவும், தான் ஒரு தேநீர் கடைக்காரனாகவும், அவரது தாயார் ஒரு வேலைக்கார பணிப்பெண் என்றும் தான் ஒரு காவலாளி என்றும் பல தோற்றங்களைக் கொடுத்திருக்கிறார். இது தென்னிந்தியா உட்பட, நாடு முழுவதும் உள்ள ஓ.பி.சி.க்களை அவரை நோக்கி சாய்த்துள்ளது.

மோகன் பகவத் 2014 பாராளுமன்றத் தேர்தலுக்குப் பிறகும் கூட தாம் ஒரு கடுமையான இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளன் என்பதை வெளிப்படையான அறிக்கைகளில் வெளியிட்டவர். சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை மறுஆய்வு செய்வது பற்றி அவர் பலமுறை வெளியிட்ட அறிக்கைகள்தான், மத்திய அரசை பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான (இபிசி) 10 சதவீத ஒதுக்கீட்டை அரசியல் சாசனத் திருத்தத்துடன் கட்டாயமாகத் திணிக்கச் செய்தது.

தகுதி  மற்றும் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடுக்கான எதிர்ப்பு குறித்த முக்கியமான அறிவுசார் கருத்துக்கள் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன சித்தாந்தவாதிகளிடம் இருந்து வந்தது. மோடி அனைத்து அரசுத்துறை வேலை ஆதாரங்களையும், தனது ஏகபோக முதலாளித்துவ ஆதரவாளர்களுக்கு பயனளிக்கும் வகையில்  தனியார்மயமாக்கினாலும், .பி.சி வாக்குகளை மனதில் கொண்டு இடஒதுக்கீட்டிற்கு எதிராக வெளிப்படையாக பேசுவதில்லை.

மோடி தேர்தல் மூலமான கொடுங்கோன்மை ஆட்சி நடைமுறைப்படுத்தப் படுவதை நேசிக்கிறார் என்றால், ஆர்.எஸ்.எஸ் அமைப்புரீதியாக தேர்தல்களை கீழறுப்பதன் மூலம் மனுதர்ம ரீதியான கொடுங்கோன்மை ஆட்சியை நேசிக்கிறது. ஹெட்கேவர் தொடங்கி கோல்வால்கர், மோகன் பகவத் வரை இந்திய தேசத்தின் மீதான சர்வாதிகாரக் கட்டுப்பாடு குறித்த கோட்பாட்டையும் நடைமுறையையும், அவர்களின் எழுத்துக்களிலும் நடைமுறைகளிலும் வகுத்துள்ளனர். நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் முஸ்லீம் அச்சுறுத்தல் பற்றிய அச்சத்தை உருவாக்குவதை அடித்தளமாகக் கொண்டுதான் அவை வகுக்கப்பட்டுள்ளது.

சூத்திர /இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு / தலித் சமூகத்தைச் சேர்ந்த எவரும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கோட்பாட்டை எழுதியதோ, 1925 முதல் இப்போது வரை அமைப்புத் தலைமைப் பொறுப்பை வகித்ததோ கிடையாது. அதன் கோட்பாட்டு எழுத்தாளர்கள் மற்றும் அதை நடைமுறைப்படுத்த தலைமை தாங்கியவர்கள் அனைவருமே பார்ப்பனர்கள் மட்டுமே. முக்கியமாக ஒரு வலுவான பிற்போக்கு சனாதன தர்மத்தை கடைப்பிடிக்கும் பார்ப்பனர்களாக, அறிவியல் எதிர்ப்பு கண்ணோட்டமும் மனநிலையும் கொண்ட பார்ப்பனர்களாக இருந்தனர். இதனாலேயே ஜவஹர்லால் நேருவின் அறிவியல் அணுகுமுறையை மேற்கத்திய சார்புடையது என்று அவர்கள் கடுமையாகத் தாக்கினர்.

கொரோனா தாக்குதலின் சாவு மணிக்கான அடிப்படை, வேறு பல காரணிகளைத் தாண்டி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் எண்ணற்ற இந்துத்துவ அமைப்புகளின் வலைப்பின்னல்களின் நீண்டகால அறிவியல் எதிர்ப்புப் பிரச்சாரங்களில் வேர்கொண்டுள்ளது. ஜவஹர் லால் நேரு மற்றும் வி.பி.சிங் தவிர மற்ற அனைத்து பிரதமர்களும் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன கும்பலின் கட்டளைக்கு கீழ்ப்படிய வைக்கப்பட்டனர். அவர்கள் ஒருபோதும் சொந்தமாக தமக்கென ஒரு அறிவியல் ஆர்வத்தைக் கொண்டதில்லை. பெரும் அறிஞராக அழைக்கப்படும் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் இந்துத்துவா மீது மிகவும் அனுதாபம் கொண்டிருந்தார். அடல் பிகாரி வாஜ்பாயி இந்துத்துவவாதிகளின் சொந்த மனிதர் – அறிவியல் எதிர்ப்பு சிந்தனை கொண்டவர்.

ஆர்.எஸ்.எஸ் இந்திய சமூகத்தின் ஒவ்வொரு அடுக்கிலும் அறிவியல் எதிர்ப்பு மூடநம்பிக்கையைப் பரப்பியது. இந்திய முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் கூட இந்த ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன கும்பலின் அறிவியல் எதிர்ப்பு பிரச்சாரத்தால் பலியாக்கப்பட்டுள்ளனர். மோகன் பகவத் அந்த மொத்த அறிவியல் எதிர்ப்பு கட்டமைப்பிற்கு தலைமை தாங்குகிறார் என்றால், மோடி அரசிற்கு (அந்த கட்டமைப்பின் ஒரு முக்கிய பகுதி) தலைமை வகிக்கிறார். இந்திய சமூகமானது எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக அதன் மீதான பார்ப்பன கட்டுப்பாட்டின் காரணமாக அறிவியலுக்கும் கட்டுக்கதைக்கும் இடையே போராடிக் கொண்டுள்ளது.

தொண்ணூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஆர்.எஸ்.எஸ் பசுவின் மூத்திரம் மற்றும் அதன் சாணத்தின் மருத்துவ குணங்களுக்கும், அலோபதி மருத்துவ நடைமுறைகளுக்கு எதிர்ப்பாகவும் பிரச்சாரம் செய்து வருகிறது. பாபா ராம்தேவ் அவர்களின் கருத்தியல்ரீதியான வாரிசுதாரர். கும்பமேளா வகையான பழமையான ஆன்மீக அணிதிரட்டல்களே ஆர்.எஸ்.எஸ்-ன் முக்கிய பணிகளாக இருந்தன. அறிவியல் கண்ணோட்டத்தைப் புறக்கணிப்பதிலும் பரந்துபட்டமக்களின் சிந்தனையை வகுப்புவாதப்படுத்துவதிலும் தப்லீக் ஜமாத் போன்ற முஸ்லீம் அமைப்புகளுடன் ஆர்.எஸ்.எஸ் போட்டியிடுகிறது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் முஸ்லீம் பழமைவாதிகளுக்கு இடையிலான போட்டி இந்தியாவில் மருத்துவ அறிவியலின் வளர்ச்சியை தடுத்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தன்னை உலகின் மிகப்பெரிய சமூக-கலாச்சார அமைப்பு என்று கூறிக் கொள்கிறது. ஆனால் அது நாட்டில் எந்த ஒரு பெரிய சுகாதார மையத்தையும் கட்டவில்லை. முஸ்லீம் ஆட்சியாளர்களும் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்தாலும், நல்ல மருத்துவமனைகளை ஒருபோதும் கட்டவில்லை என்பதே உண்மை. அவர்கள் கோட்டைகள் போன்ற பெரும் கட்டிடங்கள், சார்மினார் போன்ற நினைவுச் சின்னங்கள் மற்றும் ஆட்சியாளர்களின் அன்புக்குரிய பெண்களின் பெயரில் தாஜ்மஹால் போன்ற கட்டிடங்களைக் கட்டினார்கள். ஆர்.எஸ்.எஸ்-ம் கூட கோயில்களைக் கட்டும் பிரச்சாரங்களைச் செய்ததே ஒழிய, ஒருபோதும் சுகாதார நல மையங்களைக் கட்டவில்லை.

கிறிஸ்தவ மிஷனரிகள், சுதந்திர இந்தியாவில் கணிசமாக மதம் மாற்றவில்லை என்றாலும், அவர்களை மதமாற்றவாதிகளாகக் காட்டி ஆர்.எஸ்.எஸ் தாக்குகிறது. ஆனால் கி.பி. 1900-ல் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைக் கட்டியது முதல் பல மருத்துவமனைகளை அவர்கள் நாடு முழுவதும் கட்டியுள்ளனர்.

மோகன் பகவத் கொரோனா பெருந்தொற்றுக்கு ஆளானபோது, நாக்பூர் கிங்ஸ்வே மருத்துவமனை (ஆங்கில / கிறிஸ்தவ பெயரை யாரும் கவனிக்க முடியும்) என்று அழைக்கப்படும் அலோபதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். (இந்தியன் எக்ஸ்பிரஸ், 16 ஏப்ரல், 2021). பல மாநிலங்களில் உள்ள அவரது ஊழியர்கள் மாட்டு மூத்திரம் மற்றும் மாட்டுச் சாண சிகிச்சை பற்றி பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் நேரத்தில், மோகன் பகவத் அதிக புரோட்டீன் சத்து கொண்ட நீரிழிவைக் கட்டுப்படுத்துவதற்கான உணவைச் சாப்பிட்டதாக மருத்துவ அறிக்கை கூறியது. மாட்டு மூத்திரம், மாட்டுச் சாண சிகிச்சை போன்ற அறிவுக்குப் பொருந்தாத சங்கி கும்பலின் நடவடிக்கைகளை அவர் ஒருபோதும் பொதுவெளியில் கண்டிக்கவில்லை. இந்த கலாச்சார தேசியவாதத்தின் அர்த்தம் என்ன? அவரது மதச்சார்பற்ற அபிமானிகள்தான் இதற்கு பதிலளிக்க வேண்டும்.

நாட்டை கொரோனா நோய்த் தொற்று தாக்கியதற்குப் பின் அருந்ததி ராய் மற்றும் பல அறிவுத் துறையினர் செய்வதுபோல மோடி என்ற தனிமனிதரை குறிவைப்பதன் மூலம் ஆர்.எஸ்.எஸ் மற்றும் மோகன் பகவத் போன்ற அதன் தலைவர்களை தேவதூதர்களாக முன்னிறுத்துவது, சூத்திர / ஓ.பி.சி.க்கள் / தலித்துகள் / ஆதிவாசிகளான ஒடுக்கப்பட்ட மக்கள் ஆகப் பெரிய ஆபத்தில் மாட்டிக் கொள்ளவதற்கே உதவும். அவர்கள் மேலும் மேலும் மோடியின் (RSS) பிடிக்குள் செல்வதற்கான ஆபத்துள்ளது. இதில் இந்தியாவில் நீண்ட காலமாக அதிகாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட சமூகங்களின் உணர்ச்சிபூர்வமான பிரதிநிதித்துவ பதில் உள்ளது.

இருபிறப்பாளர்களான பார்ப்பன அறிவுத் துறையினர் இசுலாமியர்களை மையப்படுத்தி இந்து மதத்தின் ஒரு பகுதியாக மட்டுமல்லாமல் ஆர்.எஸ்.எஸ் வகை பார்ப்பனியத்தின் ஒரு பகுதியாக அனைத்து சூத்திரர்கள் / ஓ.பி.சி.க்கள் / தலித்துகள் / ஆதிவாசிகளையும், இந்து மதத்திற்குள் அடைத்து இந்து பெரும்பான்மைவாத கோட்பாட்டை நிறுவுகிறார்கள். பார்ப்பனியம்தான் இந்த சூத்திர / ஓபிசி / தலித் / ஆதிவாசி வாழ்க்கையை தொட்டால் தீட்டு என தீண்டத் தகாதவர்களாகவும், கண்ணால் பார்ப்பதே பாவம் என பார்க்கக் கூடாதவர்களாகவும், பொதி சுமக்கும் கழுதைகளைப் போல கடுமையாக உழைக்கும் விவசாயக் கூலிகளாகவும் ஆக்கியது. ஜாட்கள், குஜ்ஜார்கள், படேல்கள், மாராத்தாக்கள் போன்ற உயர்மட்ட விவசாய சூத்திரர்கள் கூட இந்து மதத்தில் ஆர்.எஸ்.எஸ் ஒரு மத தேசிய வாத அமைப்பாக வழிநடத்துவதாக கூறிக்கொள்ளும் ஆசாரியத்துவ உரிமையைப் பெறவில்லை.

இத்தகைய அறிவுத்துறையினர் யாருமே ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனியத்தை ஒருபோதும் எதிர்க்கவில்லை. ஆனால், சிறுபான்மையினரின் பிரச்சினையை மையமாகக் கொண்டு வகுப்புவாதத்தை மட்டுமே எதிர்த்தனர். தலித்/ஆதிவாசி/சூத்திர விடுதலை என்பது மிகவும் வரலாற்று ரீதியான கேள்வியாகும். இந்த சக்திகளின் விடுதலை விஞ்ஞானவாத வளர்ச்சியுடன் தொடர்புடையது. மோகன் பகவத் தலைமையிலான ஆர்.எஸ்.எஸ் அறிவியல் வாதத்திற்கு எதிரானது. மோடியின் அதிகாரவெறி கொண்ட தலைமையை அகற்றுவதற்காக, அவர்கள் மோகன் பகவத்தை நம்பியிருந்தால் ஆர்.எஸ்.எஸ் ஒருபோதும் பலவீனமடையப் போவதில்லை.

ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு வேறு எந்த காங்கிரஸ் தலைவரும் தமது சித்தாந்த அடிப்படையாக அறிவியல் வாதத்தைக் கொண்டு ஆர்.எஸ்.எஸ்-ஐ எதிர்க்கவில்லை. ராகுல் காந்தி ஆர்.எஸ்.எஸ் மீதான விமர்சனத்தை உருவாக்க முயன்றார், அதனால் வழக்குகளை எதிர்கொண்டார். இப்போது அவரும் நின்றுவிட்டார். தனது கட்சியில் ஒரு சூத்திர / ஓபிசி தலைவரைக் கூட கொண்டிராமல், மோடி மீது மட்டுமே அவரது கவனம் உள்ளது. அது இப்போதும் கூட நிச்சயமாக மோடிக்கு உதவுகிறது.

படிக்க :
♦ வளர்ச்சி : தென்னிந்தியாவிலா – பசு வளைய மாநிலங்களிலா ? | காஞ்சா அய்லய்யா
♦ காஞ்சா அய்லைய்யாவின் நூல்களுக்கு டெல்லி பல்கலைக்கழகம் தடை

இப்போது கவனம் மோடியை அகற்றுவதில் மட்டுமே உள்ளது. அது எதிர்க்கட்சிகளுக்கு சரியாக இருக்கலாம். ஆர்.எஸ்.எஸ் மோடியை அகற்றிவிட்டு அந்த இடத்தில் அமித் ஷா அல்லது யோகி ஆதித்யநாத்தை நிறுத்துகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். இது உங்களுக்குச் சம்மதமா? ஆர்.எஸ்.எஸ்-ல் யார் ஜனநாயகவாதி?, அந்த நபர் தற்போதைய சகதியில் இருந்து வெளியேற நாட்டிற்கு எவ்வாறு உதவுகிறார்? இரண்டாவது கொரோனா அலை கும்பமேளாவில் பரவியது, இதில் ஆர்.எஸ்.எஸ்-ன் காரியகர்த்தாக்கள் தரைமட்டத்தில் வேலை செய்தனர். அவர்கள் ஒவ்வொரு வீடு வீடாக, கிராமம் கிராமமாக,  நகரம் நகரமாகச் சென்று வைரசை பரப்பவில்லையா? இப்படி எல்லாம் நடந்து கொண்டிருந்தபோது மோகன் பகவத் என்ன செய்தார்? ஒரு நெருக்கடியான தருணத்தில் மேலும் அதை ஆழப்படுத்தும் ஒரு தவறைச் செய்யாதீர்கள் !

(குறிப்பு : காஞ்சா அய்லையா ஷெப்பர்ட் ஒரு அரசியல் கோட்பாட்டாளர் மற்றும் ஆசிரியர். அவரது சமீபத்திய புத்தகம் கார்த்திக் ராஜா கருப்புசாமியுடன் இணைந்து தொகுக்கப்பட்ட ’ஒரு புதிய பாதைக்கான சூத்திரர்கள்-பார்வை’)

கட்டுரையாளர் : காஞ்சா அய்லைய்யா
தமிழாக்கம் : நாகராசு
செய்தி ஆதாரம் : Counter Currents

disclaimer

பெகாசஸ் : இந்து ராஷ்டிரத்தின் எதிரிகளே அதன் இலக்குகள் !

0

பெகாசஸ் : இந்து ராஷ்டிரத்திற்கான விரைவுப் பாதை! 

பாகம் 1 : பெகாசஸ் மூலம் கண்காணித்தது யார் ?

பெகாசஸ் உளவு மென்பொருள் மூலமாக இந்திய ‘ஜனநாயகத்தின் தூண்களாக’ சித்தரிக்கப்பட்டவை அனைத்தும் ரகசியமாகக் கண்காணிக்கப் பட்டிருக்கின்றன என்ற செய்தி நாடாளுமன்றம் முதல் சமூக வலைத்தளங்கள் வரையில் பரவலாக விவாதிக்கப்படுகிறது.

இந்தியப் பத்திரிகையாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் எதிர்கட்சி அரசியல்வாதிகள், மத்திய அமைச்சர்கள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, அரசு அதிகாரிகள், இவர்கள் அனைவரது நெருங்கிய உறவினர்கள் மற்றும் தொடர்புடையவர்கள் என அந்த உளவு மென்பொருளால் கண்காணிக்கப்படாத பிரிவினர் என யாரும் இல்லை எனலாம்.

இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.. என்னும் நிறுவனம் உருவாக்கிய பெகாசஸ் என்னும் இந்த உளவு மென்பொருள் இந்தியாவிற்கு புதிதல்ல. கடந்த 2019-ம் ஆண்டு பேராசிரியரும் சமூகச் செயற்பாட்டாளருமான தோழர் ஆனந்த் தெல்தும்ப்டே, பெகாசஸ் எனும் உளவு மென்பொருள் மூலமாக தமது கைப்பேசி உளவு பார்க்கப்பட்டதாக வாட்சப் நிறுவனம் தன்னை தொடர்பு கொண்டு தெரிவித்ததை வெளிப்படையாகத் தெரிவித்தார். அதே சமயத்தில் பல்வேறு சமூகச் செயற்பாட்டாளர்களும் இதனை தெரிவித்தனர்.

இத்தகைய கண்காணிப்பை பல்வேறு சமூகச் செயற்பாட்டாளர்களும், முற்போக்கு ஜனநாயக அமைப்புகளும் கண்டித்தன. ஆனாலும் உளவு பார்க்கப்பட்டது குறித்து எவ்வித விசாரணையையும் மோடி அரசு நடத்தவில்லை. தனது நாட்டு குடிமக்களின் கைப்பேசி இஸ்ரேல் நாட்டு நிறுவனத்தின் உளவு மென்பொருளால் கண்காணிக்கப்படுவது தெரிந்ததும், பிரதமர் கொந்தளித்திருக்க வேண்டாமா ? ஆனால் கமுக்கமாக அமைதி காத்தது ஒன்றிய அரசு.

அதனைத் தொடர்ந்து, இந்த என்.எஸ்.ஓ நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டுகள் பல்வேறு நாடுகளிலிருந்து அடுத்தடுத்து வரத் துவங்கின. அல்ஜசீரா எனும் சர்வதேச செய்தி நிறுவனம், தனது பத்திரிகையாளர்களின் கைப்பேசிகளும் பெகாசஸ் மூலம் கண்காணிக்கப்பட்டதைக் கண்டறிந்தது.

படிக்க :
♦ பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஊடகவியலாளர்களை குறி வைக்கும் மக்கள் விரோத அரசுகள் !
♦ பெகாசஸ் கண்காணிப்பு அரசியல் சாசன விரோதமானது : நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா எச்சரிக்கை !

இவையெல்லாம் வெளிவந்த போதும், பெகாசஸ் உளவு மென்பொருளின் தயாரிப்பு நிறுவனமான என்.எஸ்., அதனை மறுத்தது. தாம் அந்த மென்பொருளை தகுதியான அரசாங்கங்களுக்கு மட்டுமே விற்பனை செய்திருப்பதாகவும், தனியார் நிறுவனங்களுக்கோ, தனிநபர்களுக்கோ அதனை தாங்கள் விற்பனை செய்வதில்லை எனவும் கூறி வந்தது.

இந்நிலையில், தி வயர் இணையதளம், சர்வதேச ஊடகங்களான தி கார்டியன் உள்ளிட்ட பல ஊடகங்களோடு ஒன்றிணைந்து, “தி ஃபர்பிட்டன் ஸ்டோரீஸ்” எனும் புலனாய்வு ஊடகத்துடன் கூட்டாகச் சேர்ந்த இந்த பெகாசஸ் மென்பொருளின் மூலம் கண்காணிக்கப்பட்ட தொலைபேசி எண்களின் பட்டியல் கசிந்ததை ஒட்டி, அதனை ஆய்வு செய்தது. அப்பட்டியலைக் கொண்டு அப்படி கண்காணிக்கப்பட்டவர்களை வகை பிரித்து, அவர்களில் சாத்தியமானவர்களிடமிருந்து அவர்களது கைப்பேசிகளைப் பெற்று அவற்றை மின்னணு தடயவியல் சோதனைக்கு உட்படுத்தியது.

இந்த ஆய்வின் அடிப்படையில், தி வயர் இணையதளம் கடந்த வாரத்தில் இருந்து, பெகாசஸ் உளவு மென்பொருளால் கண்காணிக்கப் பட்டவர்களின் பட்டியலையும் அவர்கள் கண்காணிக்கப்பட்ட காலகட்டத்தையும், அக்காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகளையும் ஒருசேர அம்பலப்படுத்தி வருகிறது.

அதனைத் தொடர்ந்து, பாஜக, அதன் சித்தாந்தத் தலைமையான ஆர்.எஸ்.எஸ்., இன்னபிற சங்க பரிவார அமைப்புகள், பாஜகவின் அடிமைக் கட்சிகள் அமைப்புகள் ஆகியவற்றைத் தவிர, பிற அனைத்து எதிர்கட்சிகளும் அமைப்புகளும், ஜனநாயக சக்திகளும், இந்த ரகசிய கண்காணிப்பை ஜனநாயகத்திற்கு விரோதமானதாகக் கூறி கண்டித்துள்ளனர்.

இப்படி இந்தியா முழுவதும் கண்டனங்கள் பெருகி வந்த நிலையிலும், நாடாளுமன்றத்தில் அன்றாடம் அமளி நடக்கும் நிலையிலும், மிகவும் பொறுமையாக “இது ஆதாரமில்லாத குற்றச்சாட்டு” என்று நாடாளுமன்றத்தில் பதிலளிக்கிறார் பாஜக அரசாங்கத்தின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்ச்சர் அஷ்வினி வைஷ்ணவ்.

அஷ்வினி வைஷ்ணவ் முதல் நமது ‘ஆட்டுக்குட்டி’ புகழ் அண்ணாமலை வரை பாஜகவினர் அனைவரும் ஒரே விசயத்தையே மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள். “மத்திய அரசின் மீது ஆதாரமில்லாமல் பழி போடுகிறார்கள், இவர்கள் சொல்வதற்கு எந்த ஆதரவும் இல்லை” என்று சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள்.

பெகாசஸ் மூலம் கண்காணித்தது யார் ?

பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் கண்காணிக்கப்பட்டவர்கள் அனைவரையும் யார் உளவு பார்த்தார்கள் என்பது குறித்து இதுவரை யாரும் எந்த ஆதாரத்தையும் வெளியிடவில்லை.

என்.எஸ்.ஓ நிறுவனம் எந்தெந்த நாட்டிற்கு இந்த உளவு மென்பொருளை விற்பனை செய்தது என்ற தகவலை அந்நிறுவனமே வெளியிட்டாலோ, அல்லது என்.எஸ்.. நிறுவனத்தின் விற்பனை ரகசியங்கள் அடங்கிய கோப்புகளை யாரேனும் கசியவிட்டாலோ மட்டுமே இதுகுறித்து ஆதாரப் பூர்வமாக தெரியவரும்.

சாட்சி இல்லாத கொலை வழக்குகளில், குற்றம் நடந்திருப்பதற்கான காரண காரியங்களில் இருந்து அந்தக் குற்றத்தை செய்திருக்கக் கூடியதாக சந்தேகிக்கத்தக்க நபரை இலக்குவைத்து விசாரணையைக் கொண்டு செல்வதுதான் அடிப்படையானது. அத்தகைய நபர் குற்றம் இழைப்பதற்கான முகாந்திரம் இருக்கிறதா என்பதுதான் கிரிமினல் வழக்கு விசாரணையின் துவக்கப் புள்ளி.

அதே போல, பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் பலரும் திருட்டுத்தனமாக கண்காணிக்கப்பட்ட விவகாரத்தில், அக்குற்றத்தைச் செய்வதற்கான அவசியம் யாருக்கு இருக்கிறது என்பதில் இருந்துதான் குற்றச்சாட்டுகளை முன் வைத்து அவர்களை நோக்கி விசாரணையை முன்னெடுக்க முடியும்.

தற்போது உளவு பார்க்கப்பட்டவர்களை பெகாசஸ் மூலம் கண்காணிப்பதற்கான அவசியம் மோடி அரசிற்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் தான் இருக்கிறது என்பதையே உளவு பார்க்கப் பட்டவர்களுக்கும் மோடி அரசுக்கும் இடையே இதுநாள் வரை நீடித்த உறவு நிரூபிக்கிறது.

கண்காணிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் :

அதானிக்கும் அம்பானிக்கும் ஒன்றிய பாஜக அரசு அள்ளிக் கொடுத்ததை தொடர்ச்சியாக அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள், பசுக் கொலைகள் முதல் லவ் ஜிகாத் வரை நடைபெற்ற இந்துத்துவ கிரிமினல் நடவடிக்கைளில், சங்க பரிவாரக் கும்பல் மற்றும் பாஜகவின் பங்கினை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள்தான் முக்கியமாகக் கண்காணிக்கப்பட்டுள்ளனர்.

உதாரணத்திற்கு, அதானிக்கு 500 கோடி ரூபாய்க்கு வரிச் சலுகை வழங்கும் வகையில் சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கான விதியை ஒன்றிய மோடி அரசு மாற்றம் செய்தது. அச்சமயத்தில் அதனை ‘தி எகனாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி’ எனும் அரசியல், பொருளாதார இதழின் ஆசிரியர் பரஞ்ஜோய் குகா தாகுர்த்தா, தனது கட்டுரையில் அம்பலப்படுத்தினார். அந்தக் காலகட்டத்தில் அவரது எண் பெகாசஸ் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது.

அதே போல, அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவின் சொத்து மதிப்பு, மோடி ஆட்சிக்கு வந்த பிறகு ஒரே ஆண்டில் 16,000 மடங்கு அதிகரித்திருப்பதை அம்பலப்படுத்திய ரோகிணி சிங் எனும் பத்திரிகையாளரின் எண்ணும் இந்த பெகாசஸ் உளவு மென்பொருளால் கண்காணிக்கப்பட்டிருக்கிறது.

இவை இரண்டும் சிறு உதாரணங்கள்தான். இதைப் போன்றே மோடி அரசின் அதானி, அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கைகளையும் இந்துத்துவ நிகழ்ச்சிநிரலையும் அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள் மட்டுமே கண்காணிக்கப்பட்டுள்ளனர்.

மோடி அமித்ஷா கும்பலுக்கு ‘சொம்படிக்கும்’ பத்திரிகையாளர்களான நாவிகா குமார், அர்னாப் கோஷ்வாமி போன்றவர்கள் கண்காணிக்கப்படவில்லை. ஆகவே இங்கு பிரபலமான பத்திரிகையாளகள் என்ற வகையில் உளவு பார்க்கப்படவில்லை.

ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பலின் கார்ப்பரேட் காவி பாசிச நடவடிக்கைகளை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள் மட்டும்தான் கண்காணிக்கப்பட்டுள்ளார்களே தவிர, பொதுப்படையாக பத்திரிகையாளர்கள் என்ற வகையில் அனைவரும் கண்காணிக்கப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

படிக்க :
♦ வாட்சப் : உளவு பார்க்கப்பட்ட இந்திய பத்திரிகையாளர்கள், செயல்பாட்டாளர்கள் !
♦ வளம் கொழிக்கும் இணைய உளவுத் தொழில்

மாற்றுக் கருத்தாளர்களை ஒடுக்குதல் மற்றும் ஆட்சிக் கவிழ்ப்புக்கான உளவு :

கார்ப்பரேட்டுகளுக்கு நாட்டின் வளங்களை அள்ளிக் கொடுக்கும் மோடி அரசின் செயல்பாடுகளையும், மோடியின் இந்துத்துவ பாசிசத் திட்டங்களையும் அம்பலப்படுத்திய சமூகச் செயற்பாட்டாளர்களை பொய் வழக்குகளில் சிக்க வைத்து சிறையில் தள்ள இந்த உளவு மென்பொருளை பயன்படுத்தியுள்ளது மோடி அரசு. ஆனந்த் தெல்தும்டே, சுதா பரத்வாஜ் எனத் துவங்கி, தமிழகத்தின் திருமுருகன் காந்தி, இராமகிருஷ்ணன் ஆகியோர் வரை இந்தப் பட்டியல் நீள்கிறது.

பீமா கொரேகான் வழக்கின் கீழ் கைது செய்யப்பட்ட ஆனந்த் தெல்தும்டே உள்ளிட்ட 16 சமூகச் செயற்பாட்டாளர்களில் 8 பேரின் கைப்பேசிகள் இந்த உளவு மென்பொருள் மூலம் கண்காணிக்கப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகள் என்ற வகையில், எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, பிரியங்காகாந்தி ஆகியோரும் கண்காணிக்கப்பட்டுள்ளனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பேனர்ஜியின் உறவினரான அபிஷேக் பேனர்ஜியையும் உளவு பார்த்துள்ளனர். தேர்தல் நிலைப்பாட்டாளரும், மோடி எதிர்ப்பாளருமான பிரஷாந்த் கிஷோரின் கைப்பேசியையும் கண்காணித்துள்ளனர்.

பெகாசஸ் விவகாரம் அம்பலமாவதற்கு சில நாட்களுக்கு முன்னால், மேற்கு வங்க பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி தமது கட்சிக் கூட்டத்தில் பேசுகையில், அபிஷேக் பேனர்ஜி யார் யாருடன் பேசினார் என்ற ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும், “மாநில அரசு தான் அவர்கள் கையில் உள்ளது, ஆனால் மத்திய அரசு நமது கையில் இருக்கிறது” என்றும் கூறியிருக்கிறார்.

சுவேந்து அதிகாரியின் இந்த வாக்குமூலம், பாஜக உளவு பார்த்திருக்கிறது என்பதை உறுதிபடுத்துகிறது.

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட சமயத்தில் குமாரசாமியின் உதவியாளர்களின் செல்போன்கள் கண்காணிக்கப்பட்டது தற்போது வெளியிடப்பட்ட பெகாசஸ் உளவு மென்பொருளால் கண்காணிக்கப்பட்டவர்கள் பட்டியலில் அம்பலமாகியுள்ளது.

குமாரசாமி ஆட்சியை கவிழ்க்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு மட்டுமே இருந்தது. அந்த வகையில் இந்த உளவு நடவடிக்கையை அவர்களைத் தவிர வேறு யாரால் மேற்கொண்டிருக்க முடியும் ?

உச்சநீதிமன்றமும் தப்பவில்லை :

அடுத்ததாக நீதித்துறை எடுத்துக்கொண்டால், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் இருந்த சமயத்தில், அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த நீதிமன்ற பெண் ஊழியரின் கைப்பேசியும், அவரது உறவினர்கள் 11 பேரின் கைப்பேசியும் கண்காணிக்கப்பட்டிருக்கின்றன. நாட்டின் குடியரசுத் தலைவருக்கு நிகரான மதிப்பு கொண்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் இருக்கும்போதே ரஞ்சன் கோகாயின் கைப்பேசியும் உளவு பார்க்கப்பட்டிருக்கிறது.

இது தவிர இன்னும் சில நீதிபதிகளின் எண்ணும் அந்தப் பட்டியலில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில், அன்றைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது சக நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் பகிரங்கமாக குற்றம்சாட்டியது நினைவிருக்கலாம்.

அத்தகைய மூத்த நீதிபதியான ரஞ்சன் கோகாய், தலைமை நீதிபதியாக அமர்ந்த பின்னர் கூறிய தீர்ப்புகளுக்கும், பதவிக் காலம் முடிந்ததும் அவருக்கு வழங்கப்பட்ட எம்.பி பதவிக்கும் பின்னால் இருக்கும் ரகசியத்தை தற்போது வெளியிடப்பட்டிருக்கும் பெகாசஸ் கண்காணிப்புப் பட்டியலில் அவரது பெயரும் இருப்பது எடுத்துக் காட்டுகிறது.

அரசு உயரதிகாரிகள் :

அடுத்ததாக அரசுத்துறை உயரதிகாரிகள் கண்காணிக்கப்பட்டது பற்றி பார்க்கலாம். கடந்த 2018-ம் ஆண்டு, ரஃபேல் ஊழல் பிரச்சினை உச்சத்தை தொட்ட சமயத்தில், அக்டோபர் 23-ம் தேதி நள்ளிரவில் சிபிஐ தலைவர் பதவியிலிருந்து மோடியால் பதவி நீக்கம் செய்யப்பட்ட அலோக் வர்மாவின் எண் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரின் எண்களும் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்ட சமயத்தில் இருந்து உளவு பார்க்கப்பட்டிருக்கிறது. ரஃபேல் ஊழல் நாயகன் அனில் அம்பானியின் எண்ணும் கண்காணிக்கப்பட்டிருக்கிறது.

அதே போல, மோடியுடன் முரண்பட்ட சிபிஐ அதிகாரி ராகேஷ் அஸ்தானாவின் கைப்பேசியும் உளவு பார்க்கப்பட்டிருக்கிறது. இவை தவிர இன்னும் எண்ணற்ற அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் முதல் தேசிய அளவில் முக்கியப் பொருப்பில் இருக்கும் அதிகாரிகளும் கண்காணிக்கப்பட்டுள்ளனர்.

ஜனநாயகத்தின் நான்கு தூண்களாகச் சொல்லப்படும், நீதித்துறை, அரசு அதிகாரிகள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், ஊடகங்கள் என அனைத்திலும் பெகாசஸ் உளவு மென்பொருளைக் கொண்டு உளவு பார்க்கப்பட்டுள்ளது.

சுருக்கமாகச் சொன்னால், இந்திய நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் அத்தனைத் துறையும் இந்த பெகாசஸ் உளவு பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டுள்ளது.

பெகாசஸ் உளவு வளையத்தில் பாஜக அமைச்சர்களும் வி.எச்.பி தலைவரும்:

பாஜக – ஆர்.எஸ்.எஸ்.-ன் செயல்திட்டமான கார்ப்பரேட் இந்து ராஷ்டிரத்தினை எதிர்ப்பவர்களே கண்காணிக்கப்பட்டுள்ளனர் என்பதாக மட்டும் இதனை சுருக்கிவிட முடியாது.

பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு இந்தியா முழுவதும் கலவரத்தை முன்னின்று நடத்திய விசுவ இந்து பரிஷத், பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகளுக்கு முன் நின்று அவற்றை வழிநடத்திய பிரவின் தொகாடியா கண்காணிக்கப்பட்டிருக்கிறார். பாஜக அமைச்சர்களான அஷ்வனி வைஷ்ணவ், ப்ரகலாத் சிங் பட்டேல் ஆகியோரின் எண்களும் கண்காணிக்கப்பட்டுள்ளன.

ஆகவே பாஜக அரசு இந்த வேலையைச் செய்திருக்க வாய்ப்பில்லை என்றும் சிலர் வாதிடலாம். அவர்களுக்கு ஒரு சில கடந்த கால வரலாற்றை நினைவுபடுத்துவோம்.

கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் மோடி அமித்ஷா கும்பலுக்கும், வி.எச்.பி.யின் பிரவின் தொகாடியாவுக்கும் இடையிலான அதிகார மோதல் உச்சத்திற்கு வந்த நிலையில், உயிருக்குப் பயந்து ஓடிய தொகாடியா தலைமறைவாகி விமான நிலையம் அருகே மயக்கநிலையில் கண்டெடுக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

சொந்தக் கட்சியாக இருந்தாலும் சரி, வெளியில் இருப்பவராக இருந்தாலும் சரி எதிர்ப்பு என்பது மனதளவிலும் கூட யாருக்கும் இருக்கக் கூடாது என்று நினைப்பவர்கள்தான் பாசிஸ்ட்டுகள் !

மோடி ஆட்சியில் அமர்ந்து இரண்டு மாதங்களே முழுமையாக முடிந்திருந்த நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு ஜூலையில், நிதின் கட்காரி வீட்டில் உளவுக் கருவிகள் கண்டெடுக்கப்பட்ட செய்தி வெளிவந்தது நினைவிருக்கலாம். மோடிஜியின் ஆட்சியில் ஆர்.எஸ்.எஸ்.- அமைப்பின் முக்கிய ‘தலைக்கட்டான’ நிதின் கட்காரி வீட்டிலேயே உளவு வேலை நடந்திருக்கிறது எனில், அஷ்வனி வைஷ்ணவ், ப்ரகலாத் சிங் படேல் ஆகியோர் எல்லாம் மோடி அமித்ஷாவிற்கு எம்மாத்திரம் ?

படிக்க :
♦ 2020 : ஊடகத்துறையினர் மீது அதிகரித்த கொலைவெறித் தாக்குதல்கள்
♦ செயல்பாட்டாளர்களை உளவு பார்த்தது யார் ? தகவல்களை வெளியிட வாட்சப் மறுப்பது ஏன் ?

இதுவரையிலான கண்காணிப்புகளின் பின்னணி யாரை குற்றவாளியாகக் காட்டுகிறது ?

முந்தைய தலைப்புகளில் நாம் குறிப்பிட்டவை அனைத்தும் தற்போது வெளியாகியுள்ள பட்டியலில் இருந்து எடுக்கப்பட்ட சிறு உதாரணங்களே. அரசு இயந்திரத்தின் முக்கியமான பொறுப்பில் இருப்பவர்களில் மோடி அமித்ஷா ஆர்.எஸ்.எஸ். கூட்டணியுடன் முரண்டு பிடிக்கக் கூடியவர்கள் அனைவரும் பெகாசஸ் மென்பொருளால் கண்காணிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஆர்.எஸ்.எஸ்.-ன் கார்ப்பரேட் இந்து ராஷ்டிரத் திட்டத்தை முழுமையிலிருந்து அம்பலப்படுத்திய சமூகச் செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் கண்காணிக்கப்பட்டிருக்கின்றனர். இனி வரப்போகும் பட்டியலில் இன்னும் எத்தனை இராணுவ அதிகாரிகள், உளவுத் துறை அதிகாரிகள் இருக்கக்கூடும் என்பது தெரியவில்லை.

மேலே நாம் கண்ட உதாரணங்களில் இருந்து பார்க்கையில், நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானிக்கின்ற பொறுப்பில் இருப்பவர்கள் அனைவருமே கண்காணிக்கப்படவில்லை. அவர்களில், ‘குறிப்பான வகையினர்’ மட்டுமே கண்காணிக்கப் பட்டிருக்கிறார்கள். மேற்கண்ட உதாரணங்கள் மட்டுமல்லாமல், அன்றாடம் தி வயர் இணையதளத்தில் பெகாசஸ் குறித்து வெளிவரும் செய்திகள் அனைத்தும் இந்த வாதத்திற்கு வலுச் சேர்க்கின்றன.

உளவு பார்க்கப்பட்ட அந்த ‘குறிப்பான வகையினர்’ அனைவரையும் கீழ்கண்ட இரண்டு வகைகளுக்குள் பொருத்திவிட முடியும்.

1. மொத்த அரசு இயந்திரத்தின் செயல்பாட்டை சங்கபரிவாரத்தின் கார்ப்பரேட் இந்துராஷ்டிர செயல்திட்டத்தின் கீழ் கொண்டுவருவதற்கான பாஜகவின் முயற்சிகளுக்கு தடையாக இருப்பவர்கள்.

2. மோடி அமித்ஷாவுக்கு தனிப்பட்ட ரீதியில் குடைச்சலாக இருந்தவர்கள்

உளவு வேலையை யார் செய்திருப்பார்கள் என்ற தர்க்கரீதியான முடிவுக்கு வருவதற்கு பொதுவான தர்க்கத்திலிருந்தும் இவ்விவகாரத்தைப் பார்க்கலாம்.

என்.எஸ்.. நிறுவனம், இந்த உளவு மென்பொருளை அரசாங்கங்களுக்கு மட்டுமே விற்பனை செய்வதாகக் கூறியுள்ளது. அந்த நிறுவனத்தின் வாயிலிருந்து கிடைத்திருக்கும் ஒரே ஒரு உருப்படியான தகவல் இதுமட்டும்தான்.

அந்த வகையில், ஏதேனும் ஒரு அரசாங்கம் தான் இந்தக் கண்காணிப்பை நடத்தியிருக்க முடியும். எனில் இந்தியாவில் உளவு பார்க்கப்பட்ட அத்தனை பேரையும் ஒரு அரசாங்கம் தான் கண்காணித்திருக்கிறது என்பது உறுதி. அது இந்திய அரசாங்கமா, வேறு ஏதேனும் நாட்டினுடைய அரசாங்கமா என்பதுதான் துவக்கத்தில் இருந்தே எஞ்சி நிற்கும் கேள்வி.

இவர்களை எல்லாம், வெளிநாட்டு அரசாங்கம் கண்காணிக்க வேண்டிய அவசியம் என்ன ? ஒரு வேளை வெளிநாட்டு அரசாங்கங்கள் இந்தியாவை கண்காணிக்க உளவு பார்க்க வேண்டுமெனில், அவர்கள் யாருடைய கைப்பேசிகளில் இந்த உளவு வேலையைச் செய்திருக்க வேண்டும். மோடி, அமித்ஷாவின் கைப்பேசியில் தானே செய்திருக்க வேண்டும். இந்தியாவின் ஒவ்வொரு செயல்பாடுகளும் இவ்விருவரின் கண்ணசைவில் தானே நடத்தப்படுகின்றன.

உதாரணத்திற்கு, மொராக்கோவிலிருந்து செயல்பட்ட பெகாசஸ் இயங்குமுனை, பிரான்ஸ் அதிபர் மாக்ரோனின் கைப்பேசியை கண்காணித்தது, இந்தப் பட்டியலில் அம்பலமாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் நடவடிக்கையை மொராக்கோ வேவு பார்க்க பிரான்ஸ் அதிபரின் கைப்பேசி தான் கண்காணிக்கப்பட்டிருக்கிறதே தவிர அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர்கள் அல்லது பத்திரிகையாளர்களின் கைப்பேசிகள் உளவு பார்க்கப்படவில்லை.

ஆகவே வெளிநாட்டு அரசாங்கங்கள் இந்தக் கண்காணிப்பைச் செய்திருக்க எந்த முகாந்திரமும் இல்லை என்பது தெளிவாகிறது. எனில் எஞ்சி இருப்பது மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் தான். இந்தக் கண்காணிப்பை மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம்தான் செய்திருக்கக்கூடும் என்ற வாதத்திற்கு மேலும் பல நிகழ்வுகள் வலுச் சேர்க்கின்றன.

அதனை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

(தொடரும்)


சரண்

செய்தி ஆதாரம் : தி வயர்