Tuesday, July 29, 2025
முகப்பு பதிவு பக்கம் 756

மார்ச் 23 தியாகிகள் தினம்: நினைவுக்கு உயிர் கொடு!

6
பகத் சிங் - சுகதேவ் - ராஜகுரு
பகத் சிங் - சுகதேவ் - ராஜகுரு

மார்ச் 23 – பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவுநாள்.

இன்னும் எத்தனை வார்த்தைகள்
நமக்காக பேசியிருப்பானோ!
தூக்குக் கயிறு அதற்குள்
பகத்சிங்கின் தொண்டையை இறுக்கியது.

இன்னும்,
எத்தனை உணர்ச்சிகளை
உருவாக்கியிருப்பானோ!
அதற்குள்,
ராஜகுருவின் கண்களை
பிதுக்கிவிட்டது கயிறு.

இன்னும் எத்தனை தூரம்
மக்களைத் திரட்ட நடந்திருப்பானோ?
அதற்குள்,
துடித்து அடங்கிவிட்டன
சுகதேவின் கால்கள்.

சட்லெஜ் நதியில்
கரைந்த சாம்பல்
முல்லைப் பெரியாறில்
முழங்கும்போது,

லாகூர் சிறையில்
முழங்கிய குரல்கள்
இடிந்தகரையில்
எதிரொலிக்கும்போது,

அவர்கள் இல்லையென்று
எப்படிச் சொல்வது?

நாலாபக்கமும்
சுற்றி வளைக்கப்பட்டிருக்கும்
இடிந்தகரை
இன்னுமொரு ஜாலியன்வாலாபாக்காய்
நம் கண்ணில் தெரியுது!

கூட்டப்புள்ளியில் படகினிலேறி
சீருடை கயவரை
துடுப்பினில் ஒதுக்கி,
இடிந்தகரையினில் கால்வைக்கும் துணிச்சலில்
இருக்குது பகத்சிங், சுகதேவ், ராஜகுரு உணர்ச்சிகள்!

போராடும் மக்களுக்கு
மின்தடை, பஸ்தடை, பால்தடை
என வெறியாடும் போலீசின்
பயங்கரவாதத்துக்கு மத்தியில்,

உண்ணாவிரதப் பந்தலில்
தாயின் பசியறிந்து
தானும் நீரருந்தி
சகல படைகளுக்கும் சவால்விட்டு
பயமறியா குழந்தைகளின்
பார்க்கும் விழிகளில்
பகத்சிங்கின் போர்க்குணம் தெரியுது!

கொளுத்தும் வெயிலில்
கண்கள் செருகுது,
கண்ணிமை நுனியில்
பொழுதுகள் கருகுது

முன்னேறும் போலீசை தடுக்கும்
அந்த மூதாட்டியின்
போராட்டக் குரலில்…
சுகதேவின் தீவிரம் தெரியுது!

என்னமாய் படையைக் குவித்தாலும்
துரோகி கருணாநிதி, ஜெயலலிதா இணைந்தாலும்
தெலுங்கானா போராட்டம் போலவே
மார்க்சிஸ்டும், தா.பாவும் காட்டிக் கொடுத்தாலும்
இன்னுமென் உயிர் உள்ளவரை
அந்நியன் கால் மிதிபட்டு
என் தாய்மண் அழுக்கடைய
அனுமதியோம்! என
திண்ணமாய் போரிடும்
தெக்கத்திச் சீமை இளைஞர்களின் ஆவேசத்தில்
ராஜகுருவின் பிடிவாதம் தெறிக்கிறது!

சுற்றி வளைக்கப்பட்டது
முள்ளிவாய்க்கால்!
கழுத்து இறுக்கப்படுகிறது
இடிந்தகரை!

மறுகாலனியச் சுருக்கில்
மாட்டித் தவிக்கிறார்கள் மக்கள்.

இப்படியொரு சூழலில்,
சும்மாய் நினைவுகளை
சுமந்து நிற்பது
பகத்சிங்கிற்கு பாரம்!

நீ பகத்சிங்காய் இயங்குவதொன்றே
பகத்சிங் பார்வையில் நியாயம்!

__________________________________________

–  துரை. சண்முகம்.

_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

பகத் சிங் – அந்த வீரன் இன்னும் சாகவில்லை….பாடல்!

5
பகத் சிங் - சுகதேவ் - ராஜகுரு
பகத் சிங் - சுகதேவ் - ராஜகுரு

உழைக்கும் மக்கள் பிரச்சனைகளை எதிர் கொண்டு எப்படி போராட வேண்டும் என்பதற்கு வழிகாட்டியாக வாழ்ந்து தாய் நாட்டுக்காக உயிர் நீத்தவர் பஞ்சாப் சிங்கம் பகத்சிங். அவரது வீரவரலாறு தலைமுறை தலைமுறையாக நாட்டுப் பற்றுள்ள இளைஞர்களுக்கு ஊக்கமளித்து வருகிறது. உணர்வுபூர்வமாக பகத்சிங்கின் வீரத்தைப் போற்றும் இந்தப் பாடல் பகத்சிங்கின் நினைவைப் போலவே எழுச்சியளிக்கிறது.

======

பகத்சிங். இந்திய விடுதலை வானில் ஒரு விடிவெள்ளி. காங்கிரசின் துரோகத்தாலும் வஞ்சகத்தாலும் அணைக்கப்பட்ட விடுதலைத் தீயை விசிறி எழச் செய்த இளம் சூறாவளி. விடுதலைப் போராட்ட உணர்வை லட்சக் கணக்கான இளைஞர்களின் இதயத்தில் விதைத்திட தன் மரணத்தையே செயல்திட்டமாக மாற்றிக் கொண்ட போராளி. அங்குமிங்குமாய் நடந்த  ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களை தேசமெங்கும் விசிறியடிக்கச் செய்தது பகத்சிங்கின் உயிர்த்தியாகம். விடுதலை எழுச்சியைப் பூட்டி வைக்க நினைத்த காந்தியின் துரோகத்தை உடைத்தெறிந்தது பகத்சிங்கின் வீரமரணம். இந்திய முதலாளியாகவோ, பிரிட்டிஷ் முதலாளியாகவோ, அல்லது இரண்டின் கலப்பாகவோ இருக்கலாம். முதலாளிகளின் சுரண்டல் ஒழிக்கப்படும் வரை இந்தப்போர் தொடரும். இந்தப் போர் எங்களோடு தொடங்கவுமில்லை, எங்கள் வாழ்நாளோடு முடியப் போவதுமில்லை என்றான் பகத்சிங். ‘நாளை அணையப் போகின்ற விடியற்காலை விளக்கு நான், நாட்டு மக்களே தைரியமாக இருங்கள்’ என்றான் பகத்சிங்.  தேச விடுதலைப் போராளியாக களத்தில் கால் பதித்த பகத்சிங் தனது மரணத்தில் கம்யூனிசச் சுடராக ஒளிர்ந்தான்.

_______________________________________

பாடல்:

 

தாய் நாட்டின் மானம் காக்க…
தூக்கு கயிற்றை துணிந்தே முத்தமிட்ட…
எங்கள் பஞ்சாப் சிங்கம் பகத்சிங் தோழனே… தோழனே… தோழனே…

அந்த வீரன் இன்னும் சாகவில்லை – அவன்
தியாகம் இன்னும் மறையவில்லை

கோரஸ் : அந்த வீரன் இன்னும் சாகவில்லை – அவன்
தியாகம் இன்னும் மறையவில்லை
அந்த வீரன் இன்னும் சாகவில்லை

அண்ணல் காந்தியின் அகிம்சைப் பாதையிலே
வீரத்தை அடகு வைத்து மண்டியிட்ட நேரத்திலே

கோரஸ் : வீரத்தை அடகு வைத்து மண்டியிட்ட நேரத்திலே

வெள்ளை ஆதிக்க இருள்தன்னை கிழித்திடவே
வானில் விடிவெள்ளிகள் மூன்று உதித்தனவே..

கோரஸ் : உதித்தனவே… உதித்தனவே…

ஜாலியன் வாலாபாக்கில் மண்ணெடுத்து – அதில்
தேச விடுதலை உணர்வை வளர்த்தெடுத்து –

கோரஸ் : அதில் தேச விடுதலை உணர்வை வளர்த்தெடுத்து

தூக்குக் கயிறு இறுக்கி உயிர் துடித்த நேரத்திலும் – மண்ணில்
விழிபதித்து புன்னகைத்த வீரர்களே

கோரஸ் : வீரர்களே… வீரர்களே…

தூக்கு மரம் நெருங்கி வந்த நேரத்திலும் – நெஞ்சம்
துவளாது எதிர்கொண்ட தீரர்களே

கோரஸ் : நெஞ்சம் துவளாது எதிர்கொண்ட தீரர்களே

அன்று மறுகணமே மரணம் என்ற நேரத்திலும் – அந்த
மாமேதை லெனின் உங்கள் கைகளிலே..

கோரஸ் : கைகளிலே… கைகளிலே…

சினிமா சூதாட்டப் போதையிலே – மூழ்கி
சீரழியும் என்னருமை இளஞர்களே

கோரஸ் : மூழ்கி சீரழியும் என்னருமை இளஞர்களே

இந்த தியாகச் சுடர் பகத்சிங்கின் பெயராலே
அணிதிரண்டிடுவோம் கொடுமைகளை அழித்திடவே…

கோரஸ்: அழித்திடவே…அழித்திடவே…

அந்த வீரன் இன்னும் சாகவில்லை
அவன் தியாகம் இன்னும் மறையவில்லை

அந்த வீரன் இன்னும் சாகவில்லை…சாகவில்லை…சாகவில்லை..

_____________________________________

(இந்தப் பாடல் மக்கள் கலை இலக்கிய கழகம் வெளியிட்டுள்ள ‘நான் உலகம்’ என்ற பாடல் ஒலிக் குறுந்தகடில் இடம் பெற்றுள்ளது)

ஒலிக்குறுந்தகடு தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

1.      புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம், 2வது நிழற்சாலை, அசோக் நகர்,
சென்னை – 600 083. தொலைபேசி: 044-23718706
செல்பேசி: அலுவலக நிர்வாகி தோழர் பாண்டியன் – 99411 75876

2.      கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002.
தொலைபேசி: 044-2841 2367

_____________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

கூடங்குளம்: இடிந்தகரையில் HRPC வழக்கறிஞர்கள் – நள்ளிரவுக் கூட்டம்!

11

கூடங்குளம்-இடிந்தகரை-போராட்டக்-காட்சிகள்-13

நேற்று மாலை திட்டமிட்டபடி மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் இடிந்தகரைக்கு சென்று சேர்ந்தனர். ஆனால் இதுவே ஒரு சாகச பயணம் போல இருந்தது. ஏனெனில் இடிந்தகரைக்கு செல்லும் இரு சாலைகளையும் ஆயிரக்கணக்கான போலீஸ் தடுத்து பெரும் நந்தி போல காவல் காத்து வருகிறது. கிராமத்திலிருந்து 3, 4 கீ.மீட்டர்களில் இருக்கும் போலீசின் கண்காணிப்பைத் தாண்டி யாரும் ஊருக்குள் நுழையவோ, வெளியேறவோ முடியாது.

இந்நிலையில் இடிந்தகரை இளைஞர்களின் உதவியோடு கடற்கரையோரப்பாதை, காட்டுப்பாதை என 3 கி.மீட்டர்கள் சுற்றி நடந்து, போலிசின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு ம.உ.பா.மை வழக்கறிஞர்கள் போராட்டப் பந்தலை அடைந்தனர். இடிந்தகரைக்கு சென்றே ஆகவேண்டுமென்ற ம.உ.பா.மையத்தின் போராட்டம் நேற்றுதான் வெற்றிபெற்றது.

வெளியிலிருந்து யாரும் வந்து பார்க்க முடியாத நிலையில் வழக்கறிஞர்களை பார்த்த உடன் தெருவெங்கும் கூடியிருந்த மக்கள் மகிழ்வுடன் வரவேற்று போராட்ட மேடைக்கு அழைத்துச் சென்றனர்.

இடிந்தகரை போராட்ட பந்தலில் சுமார் பத்தாயிரம் மக்கள் குழுமியிருந்தனர். மேலும் ஒரு பத்தாயிரம் பேர் பந்தலுக்கு வெளியே கடற்கரையோரம் மற்றும் ஊர் முழுவதும் தங்கியிருக்கின்றனர். இங்கு இருப்பவர்களில் சுற்றுவட்டார மீனவ கிராமங்கள் மற்றும் சில விவசாயக் கிரமங்களைச் சேர்ந்தவர்களும் உண்டு. கூடங்குளத்தில் திங்கட்கிழமை முதல் கடையெடுப்பு போராட்டம் நடந்து வருகிறது. அதே போல இடிந்தகரை வட்டார மீனவ கிராமங்களைச் சேர்ந்த ஆண்களும் திங்கட் கிழமை முதல் கடலுக்கு செல்லவில்லை. அந்த வகையில் மீனவர்கள், விவசாயிகள் ஒற்றுமையாக இங்கு குழுமியிருக்கின்றனர். அவர்களின் போராட்ட உணர்வு இப்போதும் குன்றாமல் துடிப்புடன் இருந்து வருகிறது.

ம.உ.பா.மைய வழக்கறிஞர்கள் போராட்ட மேடைக்குச் சென்று உதயக்குமாரிடம் வழக்கு விவரங்களை தெரிவித்தனர். அதையும், அதை எப்படி எதிர்கொள்வது என்பதை மக்களிடம் தெரிவிக்குமாறும் போராட்டக்குழுவினர் கேட்டுக் கொண்டனர். அதன்படி மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ சுமார் ஒரு மணிநேரம் பேசினார்.

“கடலூரிலும், திருச்சியிலும் சிறை வைக்கப்பட்டவர்களை பிணையில் கொண்டு வர வள்ளியூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் போராடி வருகின்றனர். அணு உலை வேண்டும் என்று கூறுபவர்களுக்கு உள்ள உரிமை, வேண்டாம் என்று சொல்வதற்கும், போராடுவதற்கும் அரசியல் சட்டப்படியே உரிமை இருக்கிறது. அந்த உரிமையைத்தான் தமிழக அரசும், காவல்துறையும் காலில் போட்டு மிதித்திருக்கிறது. இன்று இடிந்தகரை வந்து போராட்டக்குழவினரை கைது செய்வதற்கு போலீஸ் அஞ்சுவதற்கு காரணம் இங்கே ஆயிரக்கணக்கில் திரண்டிருக்கம் மக்கள்தான். அந்த மக்கள் சக்தியைப் பார்த்துத்தான் போலீசு அஞ்சுகிறது. அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தப்படி 17 இலட்சம் கோடி ரூபாய்க்கு இங்கே அணு உலைகள் வரவிருக்கின்றன. உங்கள் போராட்டம் வெற்றி பெற்றால் அந்த வணிகம் முதலாளிகளுக்கு நட்டமாகிவிடும் என்பதால் அரசும், காவல்துறையும் இங்கே போர் தொடுத்துள்ளது. தொடர்ந்து போராடுவோம், வெற்றி பெறுவோம்”

என்று அவர் பேசி முடித்ததும் மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். அப்போது மணி இரவு 11 இருக்கும். மக்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க வழக்கறிஞர்கள் இரவு அங்கேயே தங்கினர். இடிந்தகரையின் இரு சாலைகளும் போலீசால் தடுக்கப்பட்டிருப்பதால் அத்தியாவசிய பொருட்கள் வரவில்லை. மின்சாரமும் நேற்றுதான் கிடைத்திருக்கிறது. மாணவர்கள் பள்ளி செல்ல முடியாமல் தவிக்கின்றனர். கடலில் படகுகள் மூலமாக அத்தியவாசிய பொருட்கள் இடிந்தகரைக்கு வருகின்றன. அங்கேயே கூட்டாக மக்களுக்கு கஞ்சி, சாதம் சமைக்கப்பட்டு கொடுக்கப்படுகின்றது.

உதயகுமாருடன் சுமார் 15 பேர் சாகும் வரை உண்ணாவிரதம் கடந்த திங்கட்கிழமை இரவு முதல் இருக்கின்றனர். ஆரம்பத்தில் ஊடகங்களுக்கும் அங்கே செல்வதற்கு தடை இருந்தது. பின்னர் நேற்று மாலை முதல் அது விலக்கப்பட்டிருக்கிறது. ஆங்கில ஊடகங்கள் அங்கிருந்தே நேரடி ஒளிபரப்பு செய்கின்றனர்.

இன்னமும் போலீசு ஊருக்குள் வரவில்லை. அப்படி வாகனங்கள் வருவது போல இருந்தால் மக்கள் உடன் கேள்விப்பட்டு ஊர் எல்லையில் குழுமிவிடுகின்றனர். சுற்று வட்டார மீனவ கிராமங்களிலிருந்து மக்கள் வந்த வண்ணமாகவே இருக்கின்றனர். போலீசின் பிரம்மாண்டமான அணிவகுப்பு அந்த மக்களின் உறுதியை கிஞ்சித்தும் குறைத்துவிடவில்லை.

போராடும் மக்களுக்கு தோள் கொடுப்போம். போராட்டத் தீயை அணைய விடாமல் பாதுகாப்போம்.

____________________________________________________________

– மனித உரிமைப்பாதுகாப்பு மையம்

_______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

இது இடியாத கரை – இடிந்தகரையின் போராட்டக் காட்சிகள் !

18

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

கூடங்குளம்: நாகர்கோவிலில் உதயகுமாரின் பள்ளிக்கூடம் இடிப்பு

14

இடிந்தகரையில் போராடும் மக்களோடு காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வரும் அணுசக்திக்கு எதிரான மக்கள் சக்தி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரை மிரட்டும் வண்ணம் போலீசு தொடர்ந்து செயல்பட்டுவருகிறது. ஆரம்பத்தில் அவரை தொலைபேசியில் கூப்பிட்ட அதிகாரிகள் சரணடைந்து விடுமாறு மிரட்டினர். அவரோ தான் எங்கேயும் ஒளிந்து கொண்டிருக்கவில்லை, மக்கள் மத்தியில் பகிரங்கமாக இருந்து வருகிறேன், மக்கள் முடிவின் படிதான் இங்கு இருக்கிறேன் என்று அந்த மிரட்டலை புறந்தள்ளினார். இதனால் ஆத்திரமுற்ற போலீசு வேறு ஒரு வழியினை கண்டுபிடித்திருக்கிறது.

உதயகுமாரின் மனைவி மீரா உதயகுமார் நாகர்கோவிலில் சாக்கர் மெட்ரிகுலேஷன் நடுநிலைப்பள்ளியினை நடத்தி வருகிறார். ஏற்கனவே இங்கு இந்துமுன்னணி காலிகள் சுற்றுச்சுவரை இடித்து நாசப்படுத்தியிருக்கின்றனர். அதை புகார் செய்த பிறகு காவல்துறை ஒரு போலீஸ் சென்ட்ரியை பாதுகாப்பிற்கு நியமித்திருக்கிறது. ஆனால் முந்தாநாள் மட்டும் அந்த போலீசு காவலை வாபஸ் வாங்கியிருக்கிறது. போலீசு சென்ற பிறகு போலிசு அமர்த்திய கூலிப்படையினர் பள்ளிக்குள் நுழைந்து அனைத்தையும் நாசப்படுத்தியிருக்கின்றனர். பள்ளி வேன், நூலகம், நாற்காலிகள், கண்ணாடிகள் என ஒன்றையும் விட்டு வைக்கவில்லை அந்த கும்பல்.

இது போலீசு செய்ததாகவோ இல்லை போலிசு ஏற்பாடு செய்து நடத்தியதாகத்தான் இருக்க முடியும். ஏனெனில் உதயகுமாரை சரண்டர் செய்யுமாறு மிரட்டியதற்கு அடுத்த நாள்தான் இது நடந்திருக்கிறது. அதுவும் போலீசு காவலை நீக்கிய பிறகு கச்சிதமாக நடந்திருக்கிறது. இதை எதிர்த்து மீரா உதயகுமார் புகார் செய்தும் அதை பதிவு செய்து வரிசை எண் கொடுப்பதற்கு போலீசு மறுத்து வருகிறது.

அணு உலையை எதிர்க்கிறேன் என்று பேசுவதற்கு கூட இந்த நாட்டில் ஜனநாயக உரிமை இல்லை என்பதோடு அப்படி பேசினால் வாழும் உரிமை கூட இல்லை என்பதற்கு இந்த சம்பவமே சான்று. கீழே பள்ளியில் வன்முறைக்கும்பல் நடத்திய அராஜகத்தினை விள்க்கும் புகைப்படங்கள் உள்ளன.

படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்

______________________________________________________________

– செய்தி-படங்கள்: மனித உரிமைப் பாதுகாப்பு மையம்.
______________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

கூடங்குளம்: தடையை மீறி இடிந்தகரை நோக்கி HRPC வழக்கறிஞர்கள்!

24

கூடங்குளம் போராட்டத்தை நசுக்குவதற்க்காக பாசிச ஜெயாவின் போலீசு கிட்டத்தட்ட முழுப் போரையே இடிந்த கரை மக்கள் மீது தொடுத்துள்ளது. சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்கள் எதுவும் அங்கே செல்ல முடியவில்லை. மேலும் அருகாமை இடங்களில் பேருந்து மூலம் செல்லும் மாணவர்களும் முடக்கப்பட்டிருக்கின்றனர். கிராமத்தை சுற்றி ஆயிரக்கணக்கான போலீசு எப்போதும் கண் கொத்திப் பாம்பாக முற்றுகை இட்டு வருகிறது.

கடலூரில் கைது செய்யப்பட்டுள்ள 11 முன்னணியாளர்களில் ஒருவர் பார்வையற்றவர். மற்றொரு முதியவருக்கோ இரண்டு முறை மாரடைப்பு வந்துள்ளது. திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட மக்களில் பெண்களும், சிறுவர்களும் கூட உண்டு. இவையெல்லாம் போலீசின் காட்டு தர்பார் எத்தகையது என்பதை விளக்குகின்றன.

இந்நிலையில் இடிந்தகரை நோக்கி மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்கள் இன்று செல்கின்றனர். இதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  மனு கொடுத்தனர். மாவட்ட ஆட்சியர் பயணத்தில் இருந்ததால் அவரது நேர்முக உதவியாளர் மனுவை பெற்றுக் கொண்டு ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறினார். ஆனாலும் இதுவரை அதிகார வர்க்கம் எவரையும் இடிந்தகரை நோக்கி விடவில்லை.

இந்நிலையில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரும் தன்னை சந்திக்க வரும் வழக்கறிஞர்களை போலிசு தடுப்பதாக ஊடகங்களிடம் தெரிவித்தார். அவர்களை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் தெரிவித்தார். தற்போது வள்ளியூர் நீதிமன்றத்தில் மக்களை பிணையில் எடுப்பதற்கு ஏற்பாடுகளைச் செய்து விட்டு ம.உ.பா.மை வழக்கறிஞர்கள் அனைவரும் இடிந்தகரை நோக்கி செல்கின்றனர்.

போராடும் மக்களுக்கு தோள் கொடுப்போம். போராட்டத் தீயை அணைய விடாமல் காப்போம்.

மாவட்ட ஆட்சியருக்கு அளிக்கப்பட்ட மனு:

அனுப்புநர்;
எஸ் ராஜூ, வழக்கறிஞர்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மனித உரிமைப் பாதுகாப்பு மையம் / தமிழ்நாடு

பெறுநர்; உயர்திரு மாவட்ட ஆட்சியர் / மாவட்ட நிர்வாகத்துறை நடுவர் திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி.

பொருள்; ”கூடங்குளம் இடிந்தகரைப் பகுதி மக்களுக்கு சட்ட உதவி வழங்க வழக்கறிஞர்களை அனுமதிக்க கோரி”

அய்யா, வணக்கம்!

கூடங்குளம் அணு உலையை மூடக்கோரி நடக்கும் அப்பகுதி மக்கள் போராட்டம் வாழ்வுரிமைக்கானதாகும். அது ஜனநாயக முறைப்படி அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை ஆகும். சமீபத்தில் டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தை தடைசெய்து கு.வி.மு.ச. பிரிவு 144-ன்படி உத்தரவிட்டதை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளதை தாங்கள் அறிவீர்கள் என நம்புகிறோம்.

தாங்கள் ராதாபுரம் தாலுக்காவில் பிறப்பித்த பிரிவு 144 தடை உத்தரவின் விளைவாக அந்த சுற்றுவட்டார பல்வேறு கிராமப் பகுதிகளில் குடிநீர் தடைசெய்யப்பட்டுள்ளது. பால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. பல்வேறு பள்ளிக் கூடங்களில் சென்று படிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் முழுமையாக தடுக்கப்பட்டுள்ளார்கள்.

கூத்தங்குளிக்கு சென்று தொழில் நுட்பக் கல்லூரியில் படிக்கும் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் முழுமையாக தடுக்கப்பட்டுள்ளனர். 10,000க்கும் மேற்பட்ட போலீசாரைக் குவித்து கிராமமே போர்க்கோலமாக காட்சியளிக்கிறது. சாலை மறியல் செய்ததற்காக 42 பெண்கள் உட்பட 178 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை பிணையில் எடுக்கவும், அவர்களின் உறவினர்களை சந்தித்து விவரங்களை கேட்டறியவும், மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்களும், மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களும் கூடங்குளம் காவர்நிலையத்திற்கு சென்று கேட்டபோது அனுமதி மறுக்கப்பட்டனர். தொலைப்பேசி வாயிலாக D.I.G.-யை கேட்டபோது, அவரும் 144 தடை உத்தரவால் அனுமதிக்க முடியாது எனக் கூறிவிட்டார்.

மேலும் போராட்டக்குழுவினர் இந்த அணுசக்திக்கு எதிரான நிலுவையிலுள்ள உயர்நீதிமன்ற வழக்குளை எங்களிடம் ஒப்படைத்து அவர்கள் சார்பாக நாங்கள் நடத்திவருகிறோம். போலீசாரால் பாதிக்கப்பட்ட நபர்கள் அரசுக்கு எதிராக நீதிமன்றம் சென்று தற்காத்துக் கொள்வதற்கு அவர்கள் வழக்கறிஞர்களை சந்திப்பதற்கு உரிமையுண்டு. அதுபோல் வழக்கறிஞர்களும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று விசாரித்து நீதிமன்றத்தில் வாதிட உரிமையுண்டு. இது அரசியலமைப்புச்சட்டம் நமக்கு வழங்கியிருக்கக்கூடிய அடிப்படை உரிமையும், இயற்கை நீதியுமாகும். 144 தடையுத்தரவால் மக்களின் வாழ்வுரிமைகளான அடிப்படை உரிமைகளை நிறுத்திவைக்கவோ, ரத்து செய்யவோ முடியாது. மேலும் 144 தடையுத்தரவை ரத்துசெய்து காவல்துறையை திரும்ப பெறவேண்டுமென சென்னை, மதுரை உயர்நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரனைக்கு வந்துள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்தித்து சட்ட உதவிகளை வழங்க காவல்துறை அனுமதி மறுப்பது சட்டபுறம்பானது, மனித உரிமைகளுக்கெதிரானது. எனவே மக்களை சந்திப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க ஆவண செய்ய வேண்டுகிறோம்.

இடம்: திருநெல்வேலி

தேதி: 21.03.2012

இப்படிக்கு உண்மையுடன்
(எஸ். ராஜூ)

____________________________________________________________

– தகவல்: மனித உரிமைப் பாதுகாப்பு மையம்.

____________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

கூடங்குளம்: கைதான மக்களுக்கு திருச்சி, கடலூர் சிறைகளில் நள்ளிரவு வரவேற்பு!

21

கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஆரம்பிக்க ஒப்புதல் அளித்த கையோடு அடக்குமுறை தர்பாரையும் ஏவிவிட்டிருக்கிறது, பாசிச ஜெயா அரசு. ஏற்கனவே முன்னணியாளர்கள் 11 பேர்களை கைது செய்து கடலூர் சிறையில் அடைத்திருக்கிறது. இந்தக் கைதை எதிர்த்துக் கிளம்பிய கூட்டப்புளி கிராம மக்கள் 178பேர்களை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்திருக்கிறார்கள். இவர்களில் 45 பேர் பெண்கள். மேலும்20க்கும் மேற்பட்ட சிறுவர்களும் இதில் உண்டு. அவர்கள் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்டிருக்கின்றனர்.

பாளையங்கோட்டை மத்திய சிறை அங்கிருக்க இப்படி தொலைவில் உள்ள வேறு மத்திய சிறைகளில் அடைக்க வேண்டிய அவசியம் என்ன? தொலை தூரமென்றால் போராடும் மக்கள் விரக்தியடைவார்கள், சொந்த பந்தங்கள் யாரும் சடுதியில் பார்க்க முடியாது என்ற பாசிச நோக்குடன் தமிழக போலீசு இந்த சதித்திட்டத்தை அரங்கேற்றி வருகிறது.

அதன்படி கூட்டப்புளி மக்கள் நேற்று இரவு பத்து மணி அளவில் திருச்சி சிறைக்கு கொண்டு வரப்பட்டனர். இந்த செய்தியைக் கேள்விப்பட்ட உடன் ம.க.இ.கவும் அதன் தோழமை அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் விரைவாக அணிதிரண்டு சிறை வாசலில் காத்திருந்தனர். பேருந்துகள் வந்த உடன் போராடும் மக்களை வாழ்த்தியும், பாசிச ஜெயாவின் காட்டு தர்பாரைக் கண்டித்தும் விண்ணதிர முழக்கங்கள் போடப்பட்டன.

தமது கிராமத்தை விட்டு தொலைவில் இருக்கும் திருச்சியில் நம்மை யார் கவனிப்பார்கள் என்று இருந்த மக்கள் இந்த உற்சாகமான வரவேற்பைப் பார்த்து அவர்களும் முழக்கம் இட்டனர். மேலும் ம.க.இ.க கலைக்குழுத் தோழர்கள் ஏற்கனவே இடிந்தகரை வட்டாரத்தில் விரிவான பிரச்சாரம் செய்திருந்த படியால் மக்கள் தோழர்களை அடையாளம் கண்டு கொண்டதோடு கைதான கவலையை விடுத்து அச்சமின்றி சிறை வாசலில் முழக்கமிட்டனர்.

கைதான மக்களை சிறையில் தள்ளிவிடும் நேரம் என்பதால் போலீசு உணவு ஏதும் வழங்கவில்லை. சிறைத்துறையோ நேரம் கடந்துவிட்டபடியால் உணவு இல்லை என்பதாக கைவிரித்து விட்டது. பொதுவில் கைதாகி செல்லுபவர்கள் அனைவருக்கும் இப்படித்தான் ‘வரவேற்பு’ இருக்கும். இந்நிலையில் தோழர்கள் போலீசின் அலட்சியத்தை கண்டித்ததோடு உடனே அருகாமை கடைகளில் இருந்து பிரட், பழம் வாங்கி மக்களுக்கு அளித்தனர்.

இதே போன்று கைது செய்யப்பட்ட 11 முன்னணியாளர்களும் நள்ளிரவில் கடலூர் மத்திய சிறைக்கு கொண்டு வரப்பட்டனர். அப்போது கடலூர் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் அணிதிரண்டு இரவு 1.30 மணிக்கு சிறை முன்னால் ஆர்ப்பாட்டம் நடந்தனர். அந்த நேரத்திலும் தம்மை வரவேற்க திரண்டிருந்த தோழர்களை கண்டு கூடங்குளம் முன்னணியாளர்கள் நெகிழ்ந்து போயினர்.

திருச்சி, கடலூர் சிறைகளுக்கு கொண்டு சென்று விட்டால் இந்த மக்களை தனிமைப்படுத்தி முடக்கிவிட முடியும் என்று நினைத்த போலீசின் திமிரை முறியடிக்கும் வண்ணம் இந்த சிறை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிறைக்கு செல்லுமுன்னே மக்களிடம் தோழர்கள் உணர்ச்சிகரமாக உரையாற்றினர். தொடர்ந்து தமது புரட்சிகர அமைப்புகள் அவர்களுடன் உடனிருப்பதாக உறுதி அளித்தனர்.

படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்

_________________________________________________________________

– செய்தி, புகைப்படங்கள்: ம.க.இ.க, திருச்சி, பு.மா.இ.மு, கடலூர்.

____________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

அரசு கல்லூரிகளில் அடிப்படை வசதி கோரி மாணவர் ஆர்ப்பாட்டம்!

3

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் குடி நீர், கழிவறை வசதி, உணவக வசதி மற்றும் போதிய கட்டிடங்கள், நூலகம் போன்ற அடிப்படை தேவைகள் இல்லாமல் உள்ளன. மேலும் அக்கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் திறமையை ஊக்குவிக்கும் வகையில் கலை பண்பாட்டு விழாக்களோ,விளையாட்டு விழாக்களோ நடத்தப்படுவது இல்லை. இதனை உடனே கல்லூரிகளில் நடத்த தமிழக அரசை உத்தரவிட வலியுறுத்தியும், மாணவர்கள் தங்கள் ஜனநாயக உரிமைகளுக்காக போராடும் போது அவர்கள் மீது அரசு நடத்தும் தாக்குதலை முறியடிக்க மாணவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் புரட்சிகர மாணவர் –  இளைஞர் முன்னணி, சார்பில் ஆர்ப்பாட்டம் 01.03.2012 அன்று மெமோரியல் ஹால் அருகில் நடைபெற்றது.

காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் முழக்கங்களோடு தொடங்கியது.

செய்து கொடு ! செய்து கொடு!
அரசுக் கல்லூரிகள் அனைத்திலும்
அடைப்படை வசதிகளை
உடனடியாக செய்து கொடு!

லட்சக் கணக்கில் மாணவர் படிக்கும்
அரசுக் கல்லூரிகள் எதிலுமே
குடிநீர் இல்லை  கேன்டீண் இல்லை
கழிவறை வசதிகள் எதுவும் இல்லை!
கல்லூரி என்று சொல்வதே
வெட்கக் கேடு! மானக்கேடு!

வகுப்பறை இல்லை வாத்தியார் இல்லை
கல்வி கற்கும் சூழலும் இல்லை
பட்டம் வாங்க வழி சொல்ல
வக்கில்லாத கவர்மெண்டு
அரசுக் கல்லூரி மாணவர்களுக்கு
வெளி நாட்டுப் பல்கலைக்கழகத்தில்
பாடம் பயிற்சி என்று சொல்லி
வேசம் போடுது! வேடிக்கை காட்டுது!
வெட்கக் கேடு !  மானக்கேடு!

பள்ளிக் கல்லூரி மாணவர்களின்
மதியை மயக்கும் டாஸ்மாக்கு
தெருவுக்கொன்று திறந்துகிடக்கு!
சிந்தனையை சீரழிக்கும்
சினிமாக்களோ சுண்டி இழுக்குது!
ஆபாச அறுவருப்பை
அள்ளி கொடுக்குது தொலைக்காட்சி!

மாணவர்களுக்கு வெறியூட்ட
புதுசு புதுசா கடைவிரிக்குது
நுகர்வு வெறி கலாச்சாராம்!
அடியாட்களாக விலை பேசுது
ஓட்டுக்கட்சிகளின்  பிரியாணி!

அசிங்கத்தை எல்லாம் அப்புறப்படுத்த
துப்பில்லாத நீதிபதிகள்!
அறிவுரை சொல்லும் அதிகாரிகள்!
ஆதங்கப்படும் அறிவு ஜீவிகள்!
மாணவர்கள் சமுதாயத்தை
ரவுடிகள் என்றும் பொறுக்கிகள் என்றும்
அவதூறாக பேசுவது
அயோக்கியத்தனம்! அயோக்கியத்தனம்!

தன்மானமுள்ள மாணவர் நாங்கள்
ரவுடிகள் அல்ல! பொறுக்கிகள் அல்ல!
இந்தி திணிப்பை எதிர்த்து நின்றோம்!
ஈழத்தமிழர்களுக்காக களம் கண்டோம்!
கல்விக் கொள்ளையர்களின் கொட்டம் அடக்க
வீதியில் இறங்கினோம்! சிறை சென்றோம்!
தன்மானமுள்ள மாணவர் நாங்கள்
ரவுடிகள் அல்ல! பொறுக்கிகள் அல்ல!

குயின்மேரிஸ் பச்சையப்பன்
கலை அறிவியல் கல்லூரிகளை
கணப்பொழுதில் இடிக்க நினைத்த
ஜெயா- கருணா கனவுகளை
தவிடு பொடியாக்கினோம்! தடுத்து நின்றோம்!

சமச்சீர்பாட புத்தகத்தை
முடக்க நினைத்த  ஜெயா அரசின்
சதியை எதிர்த்து வெற்றி கண்டோம்!
தன்மானமுள்ள மாணவர் நாங்கள்
ரவுடிகள் அல்ல! பொறுக்கிகள் அல்ல!

மகிழ்ச்சிக்குரிய கல்லூரி வாழ்வை
மயானமாக்கியது அரசுக் கொள்கை
வணிகமயக் கல்விக் கொள்கை!
மாணவர்சங்கத் தேர்தலை இழந்தோம்
உடற் கல்வி- விளையாட்டு
கவிதை-கட்டுரை-கலாச்சாரவிழா
கனவுகள் அனைத்தும் களைந்துபோனது
இருக்கும் விழா ஒன்றே ஒன்று
அது பஸ்டே என்று பறைசாற்றுவோம்!

இனியும் இழக்க கேணைகள் அல்ல
இழந்த உரிமைகளை மீட்டெடுப்போம்!
பஸ்டே விழாவை காத்து நிற்போம்!

தடையை நீக்கு ! தடையை நீக்கு!
மாணவர் எங்கள் உரிமையான
மாணவர் சங்கத் தேர்தல்
தொழிலாளர்-மாணவர் ஒற்றுமைக்கு
அடையாளமான பஸ்டே மீதான
தடையை நீக்கு! தடையை நீக்கு!

தன்மானமுள்ள மாணவர்களே!
புறக்கணிப்போம்! புறக்கணிப்போம்!
ஓட்டுப் பொறுக்கிகள் –சினிமா கழிசடைகளை
புறக்கணிப்போம்! புறக்கணிப்போம்!
எதிர்த்து நிற்போம்! எதிர்த்து நிற்போம்!
மாணவர் மீதான அடக்குமுறைகளை
எதிர்த்து நிற்போம்! எதிர்த்து நிற்போம்!

கட்டியமைப்போம்! கட்டியமைப்போம்!
மாணவர்கள்- ஆசிரியர்கள்
உழைக்கும் மக்கள் ஒற்றுமையை
கட்டியமைப்போம்! கட்டியமைப்போம்!

முறியடிப்போம்! முறியடிப்போம்!
வணிகமயக் கல்வியை ஊக்குவிக்க
அடிப்படை வசதிகள் இல்லாமல்
அரசுக்கல்லூரிகளை சீரழிக்கும்
தனியார்மயம்-தாராளமயம்
உலகமயக் கொள்கைகளான
மறுகாலனியாக்க கல்விக்கொள்கையை
முறியடிப்போம்! முறியடிப்போம்!

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய பு.மா.இ.மு சென்னைக்கிளைச் செயலாளர், தோழர்.வ.கார்த்திகேயன் ”அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில்  குடி நீர், கழிவறை, நூலகம் , போதிய ஆசிரியர்கள் இல்லாதது மற்றும் பல ஆண்டுகளாக இக்கல்லூரிகளில் கலாச்சார பண்பாட்டு விழாக்களை நட்த்தப்படாமல் உள்ளதையும் அதேவேளையில் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவனின்  நிலையையும் ஒப்பிட்டு இதற்கு காரணமான  அரசின் வணிகமயக் கல்விக் கொள்கையை அம்பலப்படுத்தியும் கல்லூரியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தாத அரசு 24 மணி நேரமும் தடையற்ற டாஸ்மாக்கைவழங்குவதையும் ” அம்பலப்படுத்தி பேசினார்.

அடுத்ததாக பேசிய மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர் தோழர் மில்டன் “மாணவர்கள் மீது மட்டுமல்ல போராடுகின்ற மக்கள், வழக்கறிஞர்கள், தொழிலாளிகள் என அனைவரையும் அரசு போலீசு கொண்டு தாக்கி ஒடுக்குகிறது. போராடுகின்ற அனைவரையும் பொறுக்கிகளாகவும் ரவுடிகளாகவும் சித்தரிக்கிறது ஊடகங்களும் அரசும். குறிப்பாக பச்சையப்பன் கல்லூரியில் சமீபத்தில் கல்லூரிக்குள் புகுந்து தாக்கிய போலீசு 13 பேர்களை கைது செய்தது. அதில் மூன்று பேர் அப்பகுதியில் டீ அருந்திக்கொண்டிருந்த பகுதி இளைஞர்கள். ஆனால் அவர்கள்தான் பஸ்டேவில் கலவரம் செய்த மாணவர்கள் என்று கூறுகிறது போலீசு மேலும் 200 பேர்களை கைது செய்யவும் எத்தணிக்கிறது. நீதிமன்றமும் மாணவனின் கருத்தைக் கேட்காமல் ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறது. அதை எதிர்த்து மனித உரிமை பாது காப்பு மையம் நீதிமன்றத்தில் சட்ட ரீதியாக போராடிக்கொண்டுள்ளதை ” விளக்கிப்பேசினார்.

அடுத்ததாக சென்னைக்கிளை செயற்குழு உறுப்பினரும் சட்டக்கல்லூரி மாணவருமான தோழர் மருது”தமிழகம் முழுவதுமுள்ள அடிப்படை வசதிகள் இல்லாமல் சீரழிந்து போன அரசு கல்லூரிகளுக்கு ஒரு சான்று வேண்டுமானால் அது சென்னை அரசு சட்டக்கல்லூரிதான். மாடு மேய்ப்பதற்கு கூட லாயக்கற்ற இந்த இடத்தில் தான் மேன்மைக்குரிய சட்டம் கற்பிக்கப்படுகிறது. பாலாஜி நாயுடு மோசடியாக முதல்வர் பதவியைப் பெற்று வந்த அயோக்கியத்தனத்தனத்தை பு.மா.இ.மு போராடி சட்ட ரீதியாக அம்பலப்படுத்தியுள்ளதையும் இதற்காக கல்லூரி முதல்வர் மீது போலீசு நடவடிக்கை எடுக்கவில்லை. போராடுகின்ற மாணவர்கள் மீது மட்டுமே தாக்குதலைத் தொடுக்கும் இந்த அரசை மாணவர்கள் அனைவரும் இணைந்து மட்டுமே முறியடிக்க முடியும்” என்று கூறினார்.

பு.மா.இ.மு மாநில அமைப்பாளர் தோழர். த. கணேசன் தனது கண்டன உரையில் “அரசும் போலீசும் மாணவர்கள் ரவுடிகள், பொறுக்கிகள் மாணவர்களால் வன்முறை கலாச்சாரம் பரவுகிறது என்ற பொய்ப்பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன. அனைத்துக் கல்லூரி வாசல்களிலும் காக்கிச் சட்டைகள் காவல் காக்கின்றன. ஆனால் மொத்த சமூகம் எப்படி இருக்கிறது? கொலை கொள்ளை என திரும்பிய பக்கமெல்லாம் இருப்பதற்கு என்ன அடிப்படை என்பதை அரசு ஆராய்வதில்லை. மாணவனின் தரப்பினைக் கேட்காமலேயே அவனை குற்றவாளியாக்குகிறது.

அரசு கல்லூரிகளில் மாணவனின் அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்ட சூழலில் ,அவனுக்கு அடிப்படை வசதிகள் இல்லாத சூழலில், கலாச்சார விழாக்கள் நடத்தப்படாத சூழலில் அவனாக அவனுக்கு என்று  ஏற்படுத்திக்கொண்ட விழா என்றால் அது பஸ்டேதான். ஆண்டு முழுக்க தன்னை சுமந்த  பேருந்து தொழிலாளர்களுக்கு புது உடை எடுத்துக்கொடுத்து, தனது சொந்தப் பணத்தில் கொண்டாடி மகிழும் விழாதான் அது. பல ஆண்டுகளாக பஸ்டேவும், ட்ரெயின் டேவும் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதே பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பஸ்டே விழாவை கயிறு கட்டி நடத்தியும் இருக்கிறார்கள் அது வரலாறு. ஆனால் ஓட்டுப்பொறுக்கி கட்சிகளோ தங்களுக்கு அடியாள் வேலை செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு பங்கு சீரழிவை பரப்பியது எனில்  சினிமாக்கள் தன் பங்கிற்கு சீரழிவைப்பரப்பியது.

சங்கரன் கோயிலில் இடைத்தேர்தல் என்ற பெயரில் அந்த ஊரையே நாசாமாக்கி வரும் அரசியல் கட்சிகளை தடுக்க வக்கில்லாத அரசும் போலீசும் எப்படி மாணவனை நேர்வழிக்கு கொண்டுவரும்?.  சாலையில் பேருந்தினை விழாவாக கொண்டு செல்வது பிரச்சினை என்று தடுத்து அடித்து துவம்சம் செய்யும் போலீசு எந்த அரசியல் கட்சி ஊர்வலத்தையோ கோயில் திருவிழாவையோ தடுப்பது இல்லை. ஆக மாணவனை பொறுக்கியாக ரவுடியாக சித்தரிக்க பஸ்டே ஒரு வாய்ப்பு மட்டுமே அரசுக்கு . பச்சையப்பன் கல்லூரியாகட்டும் குயின்மேரீஸ் கல்லூரியாகட்டும் மாணவர்கள் தங்களில் கல்லூரியைக்காக்க நடத்திய வீரஞ்செறிந்த போராட்டம் ஜெயா, கருணா அரசுகளை அசைத்துப் பார்த்து இருக்கிறது.

இந்தி எதிர்ப்பு, சமச்சீர் பாட்த்திட்டம், ஈழத்தமிழர் என அனைத்து போராட்டங்களிலும் முன் நிற்பது மாணவர்கள் தான் அவர்களை மக்களிடமிருந்து தனிமைப்படுத்தி ஒடுக்குவதே அரசின் முதல் வேலை . அதற்குதான் இந்தப் பொய்ப்பிரச்சாரம். இதனை முறியடிக்க உண்மையான எதிரியான போலீசு, அரசை மாணவர்கள் போராடி வீழ்த்துவார்கள்.” என கூறினார்.

தோழர்.வ.கார்த்திகேயன்  நன்றியுரை கூற ஆர்ப்பாட்டம் நிறைவுபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கல்லூரி மாணவர்கள் – மாணவிகள், பெற்றோர்கள், இளைஞர்கள்என 150பேர்கள் கலந்து கொண்டனர். மாணவர்கள் ரவுடிகள், பொறுக்கிகள் என்று அரசு,  நீதிமன்றம், போலீசு, ஊடகங்கள் என அனைவரும் பொய்ப்பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்ட வேளையில் மாணவர்கள்தான் வருங்காலத்தூண்கள் அவர்கள் வரலாற்றை மாற்றியவர்கள், மாற்றப்போகிறவர்கள் என்பதையும் தற்போதைய சூழலில் மாணவனுக்கு ஆதரவாக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மட்டுமே இருப்பதையும் பறைசாற்றியது.

________________________________________________________

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,  சென்னை

_________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

______________

_____________________

_______________________

கொலைக்களமாகுமா கூடங்குளம்? நேரடி ரிப்போர்ட்!

31

koodankulam-கூடங்குளம்கூடங்குளத்தை ஒரு கொலைக்களமாக மாற்றுவதற்குத் தயார் நிலையில் நின்று கொண்டிருக்கிறது போலீசு. போராட்டக்குழுவைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் உள்ளிட்ட 11 பேர் நேற்றே கைது செய்யப்பட்டு, போலீசு வேனிலேயே நாள் முழுவதும் வைக்கப்பட்டிருந்தனர். 2011ஆம் ஆண்டு இறுதியில் சிவசுப்பிரமணியன் மீது போடப்பட்ட ராஜத்துரோகம், சதி உள்ளிட்ட பொய்வழக்குகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். ராஜத்துரோகம், சதியில் ஈடுபட்ட அவரையும் உதயகுமார் போன்றோரையும்தான் முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் சந்தித்து உரையாடினார் என்பது நினைவிருக்கலாம். கைது செய்யப்பட்ட 11 பேரும் கடலூர் சிறைக்கு அனுப்பப் பட்டிருக்கின்றனர்.

இந்தக் கைது நடவடிக்கையை எதிர்த்து கூட்டப்புளி கிராமத்தில் கைது செய்யப்பட்ட 184 பேர் நேற்று நள்ளிரவு நெல்லை ஆயுதப்படை மைதானத்துக்கு கொண்டு வரப்பட்டனர். அவர்களை இரவோடு இரவாக சிறைக்கு அனுப்பும் முயற்சியை வழக்குரைஞர்கள் முறியடித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 45 பேர் பெண்கள். மாணவர்களும் அடக்கம். சிறை வைக்கப்படுவதை எதிர்த்து பெண்கள் போராடினர். இவர்கள் அனைவரும் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.

இடிந்தகரையில் உதயகுமார் காலவரையறையற்ற உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார். அங்கே பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கூடியிருக்கின்றனர். ஆயிரக்கணக்கான போலீசார் அங்கே குவிக்கப்பட்டிருக்கின்றனர். மரியாதையாக வந்து சரணடைந்து விடுமாறு போலீசு எஸ்.பி தன்னை மிரட்டுவதாக மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்குரைஞர்களிடம் உதயகுமார் தொலைபேசியில் தெரிவித்திருக்கிறார். கைது ஆவதற்குத் தான் தயாரென்றும், ஆனால் மக்கள் அதனை விரும்பவில்லை என்பதால், மக்களின் விருப்பத்தையே தான் நிறைவேற்ற இயலும் என்றும் அவர் போலீசுக்கு பதிலளித்திருக்கிறார்.

அங்கே கூடியிருக்கும் மக்களை மிரட்டும் வகையில் சுமார் 60, 70 ஆயுத போலீசு வாகனங்கள் அதிரடியாக வருவதும் பின்னர் பின்வாங்குவதுமாக ஒரு உளவியல் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கின்றன. நரித்தனமாக உதயகுமாரைக் கைது செய்து கூட்டத்தைக் கலைப்பது அல்லது ரத்தக் களறி நடத்தியாவது இன்றிரவு இதனை செய்து முடிப்பது என்ற திட்டத்தில் போலீசு இருப்பதாகவே தெரிகிறது.

இடிந்தகரை செல்லும் சாலை வழிகள் எல்லாம் போலீசால் அடைக்கப்பட்டு விட்டன. 144 தடையாணை பிறப்பிக்கப் பட்டிருக்கிறது. கடல் வழியாக வந்து இடிந்தகரைக்குள் நுழையும் மீனவர்களைக் கண்காணிப்பதற்கும் தடுப்பதற்கும் ஏற்ப டார்னியர் விமானங்கள் கடலின்மீது வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன.

நேற்று மதியம் முதலே கைது செய்யப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்கள் வள்ளியூர், நெல்லை நீதிமன்றங்களில் செயல்பட்டு வருகிறார்கள். இடிந்த கரைக்கு செல்வதற்கு அனுமதிக்க வேண்டுமென்று போராடிய மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்கள் 15 பேர் நெல்லை டி.ஐ.ஜி யை சந்தித்திருக்கிறார்கள். அவர்களுக்கு இடிந்தகரை செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

கைது செய்யப்பட்டவர்களைச் சந்திக்க கூடாது என்று அனுமதி மறுக்கவோ, இடிந்தகரைக்கு செல்லக்கூடாது என்று வழக்குரைஞர்களை தடுக்கவோ போலீசுக்கு சட்டப்படி அதிகாரமில்லை. இப்போது அங்கே நடந்து கொண்டிருப்பது துப்பாக்கியின் ஆட்சி. மத்திய அரசும், ஊடகங்களும், திமுக, காங்கிரசு, போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கட்சிகளும் தனக்குத் துணை நிற்கும் தைரியத்தில் ஒரு பேயாட்டத்தை நடத்துவதற்கு தயாராகி வருகிறது பாசிச ஜெயா அரசு. நலத்திட்டம் என்ற பெயரில் தான் வீசிய 500 கோடி ரூபாய் லஞ்சப்பணத்துக்கு பல்லிளித்து அடிபணியாமல் போராட்டம் தொடரும் என்று மக்கள் அறிவித்து உறுதியாக நிற்பதால், கூடங்குளம் அணு உலைக்கு முன்னதாக, அம்மாவின் தாயுள்ளம் வெடிக்கத் தயாராக காத்து இருக்கிறது.

இந்த அடக்குமுறைகளும், கைதுகளும் ஏற்படுத்தும் தற்காலிகப் பின்னடைவுகளை வென்று முன் செல்வோம். ம.க.இ.க, வி.வி.மு, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, பெ.வி.மு அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் போராடும் மக்களுக்குத் துணை நிற்பார்கள். “கூடங்குளம் அணு உலையை மூடு, அடக்குமுறையை நிறுத்து, பொய்வழக்கில் கைது செய்தவர்களை விடுதலை செய்” என்ற முழக்கங்களின் கீழ் இவ்வமைப்புகளின் சார்பில் தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவிருக்கின்றன.

மின்வெட்டைக் காட்டி கூடங்குளத்துக்கு தமிழக மக்களிடம் ஆதரவு தேடும் சதியை திரைகிழிக்கும் வகையில் தமிழகமெங்கும் பிரச்சாரம் தொடங்கப்பட்டு விட்டது. கூடங்குளத்தின் மக்களை அடக்குமுறையால் சிதறடித்து விட்டால், அப்போராட்டம் அடங்கிவிடாது. தமிழகமெங்கும் அதனைக் கொண்டு செல்வோம். அம்மக்களின் போராட்டத்தைத் தமிழக மக்களின் போராட்டமாக மாற்றியமைப்போம்.

___________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

நெல்லை – கூடங்குளம்…பேரணி, ஆர்ப்பாட்டம் – படங்கள்!

4

“கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு!”  – புரட்சிகர அமைப்புகள் நெல்லை மற்றும் கூடங்குளத்தில் நடத்திய ஆர்ப்பாட்ட பேரணி.

“மக்களின் உயிருக்கும் நாட்டின் அரைகுறை இறையாண்மைக்கும் உலை வைக்கும் கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு!” என்ற முழக்கத்தின் கீழ் ம.க.இ.க; வி.வி.மு; பு.மாஇ.மு; பு.ஜ.தொ.மு; பெ.வி.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கத்தையும், பிப்ரவரி 11 அன்று நெல்லையிலும் கூடங்குளத்திலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற எழுச்சிமிகு பேரணிகளையும் நடத்தியிருக்கின்றனர்.

கடந்த செப்டம்பர் மாதம் முதற்கொண்டே கூடங்குளம் வட்டாரத்தைச் சேர்ந்த மீனவர்களும் பிறபகுதி மக்களும் அணுஉலைக்கு எதிராகத் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இடிந்தகரையில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்துவதுடன், கூடங்குளம் அணு உலையை இயக்குவதற்கு அவ்வப்போது மத்திய அரசு மேற்கொண்டு வரும் சதித்தனமான முயற்சிகளையும் விழிப்புடனிருந்து முறியடித்து வருகின்றனர். எனினும், ஊடகங்கள் மற்றும் அப்துல் கலாம் போன்ற ‘அறிவாளிகளின்’ துணையுடன் அணு மின் நிலையத்துக்கு ஆதரவாக மக்கள் மத்தியில் தீவிரமான பொய்ப்பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டிருப்பதுடன், அணு உலையை எதிர்ப்பவர்கள் நாட்டின் முன்னேற்றத்துக்கு முட்டுக் கட்டை போட்டு, இந்தியா வல்லரசாவதைத் தடுக்கிறார்கள் என்ற கருத்தையும் மன்மோகன் அரசு உருவாக்கியிருக்கிறது. இந்தப் பிரச்சாரம் தமிழக மக்கள் மத்தியில் தோற்றுவித்திருக்கும் தாக்கத்தை முறியடிக்காமல், கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்தில் பொதுக்கருத்தை உருவாக்க முடியாது என்பதைக் கணக்கில் கொண்டு இப்புரட்சிகர அமைப்புகள் தமது பிரச்சாரத்தை விரிவான அளவில் கொண்டு சென்றனர்.

இலட்சக்கணக்கான துண்டறிக்கைகள், சுவரொட்டிகள், சுவரெழுத்துகள், தெருமுனைக்கூட்டங்கள், அரங்குக் கூட்டங்கள், கலைநிகழ்ச்சிகள் போன்ற வடிவங்களில் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இவ்வியக்கத்தினை ஒட்டிக் கொண்டுவரப்பட்ட சிறு வெளியீடு 50,000 பிரதிகள் விற்பனை செய்யப்பட்டது.

கிழக்கு கடற்கரையில் கூடங்குளத்துக்கு வடக்கிலும் தெற்கிலும் உள்ள மீனவக் கிராமங்கள், நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட நகரங்கள், அந்த வட்டாரத்தைச் சேர்ந்த கல்லூரிகள் போன்ற பல்வேறு தரப்பு மக்கள் மத்தியிலும் மூன்று மாவட்டங்களில் பிரசாரம் கொண்டு செல்லப்பட்டது. கரையோர மக்கள் பிரச்சாரத்துக்கு சென்ற தோழர்களையும், கலைக்குழுவினரையும் நெகிழ்ச்சியுடன் வரவேற்று உபசரித்தனர். உடன் வந்தனர். இடிந்தகரைப் போராட்டப் பந்தலில் ம.க.இ.க. கலைக்குழுவினரின் நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றதனால், அடுத்தடுத்து மூன்று நாட்கள் தொடர்ந்து நடத்தப்பட்டது.

அணு உலை ஆதரவு கருத்து கொண்ட சிறு நகரங்களிலும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. பல இடங்களில் காங்கிரசு, பாரதிய ஜனதா காலிகளுடனான கைகலப்பின் ஊடாகவே பிரச்சாரம் கொண்டு செல்லப்பட்டது. படித்த நடுத்தர வர்க்கத்தினரிடையே கூட ஆளும் வர்க்கத்தின் அணு உலை ஆதரவுக் கருத்துகளே ஆதிக்கம் செலுத்தின. எனினும்  அவற்றுக்கு எதிராக வாதிட்டுப் புரியவைக்க முடிகிறது. குறிப்பாக,  கல்லூரி மாணவர்கள் இது குறித்த உண்மைகளைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினர்.மின்வெட்டுக்கு கூடங்குளம்தான் தீர்வு என்ற பொய்ப்பிரச்சாரத்துக்கு பலியான பலர், பேருந்துகளிலும் ரயில்களிலும் பிரச்சாரம் செய்த போது அணு உலைக்கு ஆதரவு தெரிவித்து சண்டைக்கு வந்த போதும், அவர்களது கேள்விகளை பொறுமையாக எதிர்கொண்டு பதிலளித்தார்கள் தோழர்கள்.

பிப்ரவரி 11 அன்று காலை நெல்லை ஜவகர் திடல் செங்கொடி ஏந்திய தோழர்களால் நிரம்பி வழிந்தது. பு.ஜ.தொ.மு. மாநிலத்தலைவர் தோழர் முகுந்தன் தலைமை தாங்கி முழக்கங்களை எழுப்பினார். தொடர்ந்து பேசிய பேரா. தொ.பரமசிவம், “இப்பகுதியை இன்னொரு நந்திக்கிராமம் ஆக்காமல் காங்கிரசு அரசு ஓயப்போவதில்லை என்று கூறியதுடன், கூடங்குளம் பிரச்சினையில் இரட்டை வேடமிடும் மார்க்சிஸ்டுகளையும் அம்பலப்படுத்தினார். அணு உலை வேண்டுமா, வேண்டாமா என்ற கேள்வியை மின்சாரம் வேண்டுமா, வேண்டாமா என்று திசை திருப்பிய ப.சிதம்பரத்தை அம்பலப்படுத்தினார் ம.உ.பா. மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜு.  இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாகத்தான்  மன்மோகன் அரசுக்கு அணுவெறி பிடித்திருக்கிறது என்பதையும், அது ஒரு அமெரிக்க அடிமை ஒப்பந்தம் என்பதையும் அம்பலப்படுத்தியதுடன், கூடங்குளம் அணு உலையின் பாதுகாப்பு குறித்து ஆய்வதற்காக மாநில அரசு அமைத்திருக்கும் குழுவையும், அதன் உறுப்பினர்களையும் அம்பலப்படுத்தினார், ம.க.இ.க. செயலர் மருதையன்.

போராட்டத்தில் அணிதிரளுமாறு அனைவரையும் அறைகூவும் பாடலை ம.க.இ.க. மையக்கலைக்குழு இசைக்க பெருந்திரளாகப் பேரணி நகரத் தொடங்கியது.  அணு உலைக்கும் அமெரிக்க ஆதிக்கத்துக்கும் காவடி எடுக்கின்ற காங்கிரசு, பா.ஜ.க. அடிமைகளை அம்பலப்படுத்தும் காட்சி விளக்கத்தினை நிகழ்த்தியவாறு பு.மா.இ.மு. தோழர்கள் முன்சென்றனர். காட்சி விளக்கத்தையும், பேரணியின் முழக்கங்களையும் கருத்தூன்றிக் கவனித்தனர் மக்கள்.

நெல்லையிலிருந்து சுமார் 75 கி.மீ. தொலைவில் உள்ள கூடங்குளத்துக்கு செல்வதற்கு பேருந்து வசதியில்லை என்பதுடன், போலீசு மிரட்டல் காரணமாக வாடகை வாகனங்கள் வர மறுத்தன. எனவே, பேரணியின் ஒரு பகுதியினர் மட்டுமே வாகனங்களில் கூடங்குளம் செல்ல முடிந்தது.

மாலையில் கூடங்குளம் சென்று இறங்கிய தோழர்களை வரவேற்கக் காத்திருந்தது ஒரு பெரும் மக்கள் திரள். தங்களுடைய போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதிலுமிருந்து வந்திருந்த தோழர்களை வரவேற்குமுகமாக சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு நின்றனர்.

கைக்குழந்தைகளுடன் பேரணிக்கு வந்திருந்த பெண் தோழர்களின் கையிலிருந்து குழந்தைகளை வாங்கிக் கொண்டனர் பெண்கள். மற்றவர்கள் கொடிகளை, முழக்க அட்டைகளை உரிமையுடன் பெற்று ஏந்தினர். பேரணி நகரத் தொடங்கியது. தோழர்களும் மக்களுமாக இரண்டறக் கலந்து விட்ட அந்தப் பெரும் மக்கள் திரள் போகும் பாதையெங்கும் இரு மருங்கிலும் இருந்த வீடுகளிலிருந்து பெண்களும் சிறுவர்களும் இளைஞர்களும் சாரி சாரியாக இறங்கி வந்து பேரணியில் ஒன்று கலந்தனர். அணு உலைக்கு எதிராக ஆவேசத்துடன்  முழக்கமெழுப்பினர்.

இப்பேரணிக்கு ஆதரவு தெரிவித்து மதியத்திற்கு மேல் கடையடைப்பு செய்யப்பட்டிருந்தது. சுமார் 5000 க்கும் அதிகமான மக்கள் நகரின் மையப்பகுதியில் இருந்த தேவாலயத்திற்கு முன்னே திரண்டு நிற்க, போராட்டக் குழுவின் சார்பில், மனோ.தங்கராசு தோழர்களை வரவேற்று உரையாற்றினர். பேரணியில் ஆயிரக்கணக்கான கூடங்குளம் மக்களும் கலந்து கொள்வதைச் சாத்தியமாக்கும் பொருட்டு மறியல் போராட்டத்தை மாற்றியமைக்குமாறு தாங்கள் கோரியதை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி தெரிவித்து போராட்டக் குழுவின் சார்பில் பேசினார் வழக்குரைஞர் சிவசுப்பிரமணியன். தொடர்ந்து கலைக்குழுவினர் நடத்திய நாடகத்தில் ‘நாறவாயன் நாராயணசாமி’ பெரும் வரவேற்பைப் பெற்றார். ம.க.இ.க. மற்றும் அதன் தோழமை அமைப்புகள் நடத்திய போராட்டங்களைப் பற்றியும், இப்போராட்டத்தின் அரசியல் முக்கியத்துவத்தையும் சுருக்கமாக விளக்கிப் பேசினார், தோழர் காளியப்பன். போலீசுக்கோ வழக்குகளுக்கோ அஞ்சவேண்டாம் என்றும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்கள் துணை நிற்பார்கள் என்றும் உறுதி கூறினர் வழக்குரைஞர் வாஞ்சிநாதன். பெருந்திரளான பெண்கள் பங்கேற்கும் எந்தப் போராட்டமும் தோற்றதில்லை என்று, ஓட்டுக் கட்சிகளைப் புறந்தள்ளி எழுந்திருக்கும் இந்தப் போராட்டம்,  ஒரு புதிய துவக்கம் என்றும் பாராட்டினார் வழக்குரைஞர் ராஜு.

வந்திருந்த தோழர்கள் அனைவரையும் வீட்டுக்கு வந்த நெருங்கிய சொந்தங்களாகக் கருதி உணவளித்து உபசரித்தார்கள் கூடங்குளம் மக்கள். கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே தேவாலயத்தின் மணி, வழமையான நேரத்தில் ஒலி எழுப்பத் தொடங்கியவுடன், யாரோ ஒருவர் விரைந்து  சென்று அதனை நிறுத்தினார். இந்தப் போராட்டத்தை நிறுத்த முடியாது என்பதற்கு வேறு சான்று தேவையா என்ன?

___________________________________________

புதிய ஜனநாயகம், மார்ச் – 2012

___________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

கூடங்குளம்: மக்கள் போராட்டத்தை முறியடிக்க மத்திய-மாநில அரசுகளின் சதி!

34

கூடங்குளம்அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக நடத்தி வரும் போராட்டங்களுக்கு அந்நிய நாடுகளில் இருந்து நிதி திரட்டிக் கொடுத்து, அவற்றின் மூளையாக இருந்து, திட்டங்கள் தீட்டிக் கொடுத்து, தானும் பங்கேற்றவர் என்று ஒரு பொய்ப் புகார் சுமத்தி ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கணினிப் பொறியாளர் சோன்டெக் ரைனர் ஹெர்மன் என்பவரை கடந்த மாத இறுதியில் நாகர்கோவிலில் பிடித்து இரவோடு இரவாக, இரகசியமாக சொந்த நாட்டுக்கு நாடு கடத்தி விட்டனர், உளவுப் பிரிவு போலீசார்.

மத்திய உளவுப் பிரிவு போலீசார் (ஐ.பி.) திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ரைனரைப் பிடித்து நாடு கடத்தும்படி ஐ.பி, தமிழக போலீசு இயக்குநர் ராமானுஜத்திற்கு பரிந்துரைத்தது, தமிழக ‘கியூ’ பிரிவு போலீசார் அவ்வாறு செய்தனர்; ரைனரிடம் ஐ.பி. அதிகாரிகள் பலகட்ட விசாரணை நடத்தி, கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டத்துக்கு நிதி திரட்டியதும் போராட்டக் குழுவினருடன் பேசியதும் வழிகாட்டியதும், போராட்டத்தில் அவர் பங்கேற்றதும், கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கே அவர் சென்றதும் ரைனரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் உறுதிசெய்யப்பட்டது என்று போலீசு மூலம் செய்தி கிடைத்ததாக எல்லா நாளேடுகளும் எழுதியுள்ளன.

கூடங்குளம் அணுமின் நிலையம் எதிர்ப்புப் போராட்டங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி வருவதாக பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் அவர்களின் “சமக்சா” நாராயணசாமி கூறிவரும் புகாருக்கு ஆதாரங்களைத் “தேடித் தரும்படி” மத்திய உளவுத்துறை சி.பி.ஐ.க்கு உத்திரவிடப்பட்டிருக்கிறது; அதிகாரபூர்வமற்ற ஆதாரமற்ற இந்த விசாரணை எவ்வாறு அமைய வேண்டும் என்று உள்துறை அமைச்சகத்திடம் சி.பி.ஐ. விளக்கம் கேட்டிருக்கிறது. சி.பி.ஐ.யின் விசாரணை விளையத்துக்குள்  கண்காணிப்பு வட்டத்துக்குள் நெல்லை, குமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மூன்று அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் வந்துள்ளன; அவற்றில் இரண்டு நிறுவனங்களின் வங்கிக் கணக்கு பரிவர்த்தனை முடக்கப்பட்டுள்ளன.

ஜெர்மனி சுற்றுலாப் பயணியை நாடு கடத்துவது, மத்திய அரசின் சி.பி.ஐ., ஐ.பி. மற்றும் மாநில அரசின் கியூ பிரிவு உளவுத்துறையினரின் விசாரணை  கண்காணிப்பு, நடவடிக்கைகள் எதுவும் வெளிப்படையாகவும், அதிகாரபூர்வமாகவும் சட்டப்படியும் செய்யப்படவில்லை. இத்தாக்குதல்கள் எல்லாம் கூடங்குளம் அணுஉலைக்கு எதிராகப் போராடி வரும் இடிந்தகரை மக்களையும் தலைமையையும் மிரட்டிப் பணியவைக்கவும், முடக்கி வைக்கவும் மேற்கொள்ளப்படும் சதிசூழ்ச்சி தாம் என்பது நாடும் மக்களும் அறிந்த வெளிப்படையான உண்மை. பிடிபட்ட ஜெர்மானியர், விசாரணை கண்காணிப்பு வளையத்துக்குள் வந்த அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் மீது தக்க ஆதாரங்கள் இருப்பின் நேரடியான, வெளிப்படையான அதிகாரபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியதுதானே! அதற்குமாறாக சதித்தனமான, நள்ளிரவு, திரைமறைவு, குறுமதி நடவடிக்கைகள் ஒருபுறமும், அவதூறுக் கூச்சல் மறுபுறமும் ஏன்?

அரசும் ஆளும் வர்க்கங்களும் இத்தகைய தந்திரங்களில்  சதித்தனங்களில், அவதூறுப் பிரச்சாரங்களில் ஈடுபடுவதும் ஒன்றும் புதிதில்லை. மக்கள் எழுப்பும் பிரச்சினைகளுக்கு நேர்மையாக முகங்கொள்வதற்கு பதில், ஒன்று அந்நிய சதி, சமூக விரோத, தேசவிரோதச் செயல் அல்லது பயங்கரவாத, தீவிரவாதச் செயல் என்று முத்திரை குத்தி அரசு எந்திரத்தை ஏவிவிட்டுத் தாக்குதல் நடத்துவது என்பது வாடிக்கையானதுதான். உள்நாட்டு விவகாரங்களில் அந்நியத் தலையீடும் நிதியுதவியும் இருப்பதாலேயே மக்கள் போராட்டங்கள் எல்லாம் தவறாகி விடும் என்றால் வங்கதேசம் முதல் சமீபத்திய இலங்கை-ஈழம், மாலத்தீவு விவகாரங்களில் இந்திய அரசின் தலையீடு ஏற்கக்கூடியனவா?

கூடங்குளம் போராட்டத்துக்கு எதிரான மத்திய அரசின்  சூழ்ச்சிகள், தந்திரங்கள், அடக்குமுறைகள் எல்லாவற்றிலும் ஜெயலலிதா அரசுக்கும் பங்கு இருக்கிறது. கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது நூற்றுக்கணக்கான வழக்குகள் போட்டு, ‘கியூ’ பிரிவு போலீசை ஏவி, திரைமறைவு நடவடிக்கைகள் மேற்கொள்வது முதல் கடைசியாக பரமக்குடி பாணியில் கொலைவெறி தாக்குதல் தொடுப்பதற்கு வசதியாக ஏ.டி.ஜி.பி. ஜார்ஜ் தலைமையில் போலீசை அனுப்பி தயாரிப்புகள் செய்கிறது.

ஆனால், புலிகள் பிரபாகரனைப் போல ஜெயலலிதா உதவியுடன் மத்திய அரசை எதிர்த்துப் போராடி வெற்றி பெற முடியுமென்று உதயக்குமார் நம்பச் சொல்கிறார். முள்ளிவாய்க்காலுக்கு நேர்ந்த முடிவு இடிந்தக்கரையிலும் ஏற்படக் கூடாது என்பதுதான் புரட்சிகர, ஜனநாயக சக்திகளின் அக்கறை, எச்சரிக்கை!

___________________________________________

புதிய ஜனநாயகம், மார்ச் – 2012 (தலையங்கம்)

___________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

குஜராத்-இந்து மதவெறிப் படுகொலைகள்: மறுக்கப்படும் நீதி!

18

குஜராத்-படுகொலைகுஜராத் மாநிலத்தில் முசுலீம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இந்து மதவெறிப் படுகொலையின் பத்தாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கடந்த பிப்ரவரி 27, 2012 அன்று அப்படுகொலை நிகழ்வில் பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்கு உரிய நீதி வழங்கக் கோரி பல்வேறு முசுலீம் அமைப்புகளும், ஜனநாயக  மனித உரிமை இயக்கங்களும் நாடெங்கும் ஆர்ப்பாட்டங்களை நடத்தின.  அதே பத்தாண்டுகளுக்கு முன்பு கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி விரைவுவண்டியின் இரு பெட்டிகள் தீக்கிரையாகி, 59 பேர் இறந்துபோன வழக்கில் 11 முசுலீம்களுக்குத் தூக்கு தண்டனையும், 20 முசுலீம்களுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டிருக்கும்பொழுது,  இந்து மதவெறிப் படுகொலை வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

நீதிமன்றத்தை எட்டியிருக்கும் இப்படுகொலை வழக்குகளுள் பத்துபதினைந்து வழக்குகளில் மட்டும்தான் விசாரணை முடிவடையும் தருவாயில் இருப்பதாகக் கூறப்படுகிறது.  இப்படுகொலை வழக்குகள் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இந்து மதவெறிக் குண்டர்கள் பலரும் சிறைக்குப் போன வேகத்தி லேயே பிணையில் வெளியே வந்துவிட்டனர்.  உள்ளூர் அளவில் இப்படுகொலைகளைத் தலைமையேற்று நடத்திய பாபு பஜ்ரங்கி, ஜெய்தீப் படேல், மாயா கோத்நானி உள்ளிட்ட பலரும் பிணையில் வெளியே வந்து சுதந்திரமாகச் சுற்றித் திரிவதோடு, படுகொலை வழக்குகள் தொடர்பான சாட்சியங்களைப் மிரட்டிப் பணிய வைக்கும் வேலைகளையும் பகிரங்கமாகச் செய்து வருகின்றனர்.  இவை அனைத்திற்கும் மேலாக,  இந்து மதவெறி பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட இஷான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி நரேந்திர மோடிக்கு எதிராக, தொடுத்த வழக்கில், மோடி மீது குற்றச்சாட்டு பதியப்படுமா என்பதைக்கூட இன்றுவரை நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை.

இப்படுகொலையை நடத்திய இந்து மதவெறிக் கும்பலே கடந்த பத்தாண்டுகளாக குஜராத்தை ஆண்டு வருவதும்; குஜராத் போலீசு, நீதித்துறை உள்ளிட்ட அம்மாநில அரசு நிர்வாக இயந்திரம் முழுவதும் காவிமயமாக்கப்பட்டிருப்பதும், மோடியின் கைக்கூலிகளால் நிரப்பப்பட்டிருப்பதும்; இன்னொருபுறம் இப்படுகொலை தொடர்பான சில வழக்குகளில் தலையிட்டு விசாரணை நடத்தி வரும் குஜராத் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், சிறப்புப் புலனாய்வுக் குழு போன்ற அமைப்புகள் பல்வேறு சமயங்களில் இந்து மதவெறிக் கும்பலுக்கு ஆதரவாக, அனுசரணையாக நடந்துகொண்டு வருவதும் முசுலீம்களுக்கு நீதி மறுக்கப்படுவதற்குக் காரணங்களாக உள்ளன.  சதித் திட்டம் தீட்டிக் கொடுத்த மோடி தொடங்கி தெருவில் இறங்கி இப்படுகொலையை நடத்திய மோடியின் கடைசி அடியாள் வரை  இவர்கள் அனைவருக்கும் எதிராக ஏராளமான சாட்சியங்கள், ஆதாரங்கள் இருந்தாலும், போலீசு, சிறப்புப் புலனாய்வுக் குழு, நீதித்துறை என்ற இந்தக் கூட்டணி சட்டத்தின் ஓட்டைகள், வரம்புகளைக் காட்டியும், இந்து மனோநிலையிலிருந்தும் அக்கொலைகாரர்களைத் தண்டனையிலிருந்து தப்பவைத்து விடுகிறது.  இந்த அநீதி கடந்த பத்தாண்டுகளாக நடந்து வருவதைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

குஜராத் போலீசு:     

குஜராத்-படுகொலைநரேந்திர மோடி குஜராத் முதல்வராகப் பதவியேற்றவுடனேயே, அம்மாநில போலீசு துறையை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு காவிமயமாக்கும் திருப்பணியைச் செய்யத் தொடங்கினார்.  அம்மாநில அரசில் இருந்துவரும் 65 ஐ.பி.எஸ். பதவிகளுள் 64 பதவிகளை ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு அனுசரணையாக நடந்துகொள்ளும் அதிகாரிகளைக் கொண்டு நிரப்பினார்.

இந்து மதவெறிப் படுகொலை தாண்டவமாடியபொழுது,போலீசார் மோடியின் உத்தரவுப்படி, “இந்துக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியதை’’த் தடுக்காததோடு, பல இடங்களில் இந்து மதவெறி குண்டர்களுக்குத் தேவையான ஆயுதங்களையும் கொடுத்தனர்.  விசுவ இந்து பரிசத்தைச் சேர்ந்த பாபு பஜ்ரங்கி, ரமேஷ் தாவே, அனில் படேல் ஆகியோர் இந்த உண்மைகளை வாக்குமூலமாக தெகல்கா இதழின் நிருபர் ஆஷிஷ் கேதானிடம் ஆரவாரத்தோடு கூறியுள்ளனர்.

இப்படுகொலையில் போலீசுக்கும் நேரடியாகத் தொடர்பிருப்பதால், 2,107 வழக்குகள் போலீசு நிலையத்திலேயே மங்களம் பாடி புதைக்கப்பட்டன.  இப்படி விசாரணையின்றி மூடப்பட்ட வழக்குகளில் 1,594 வழக்குகளை மீண்டும் நடத்தக் கோரி உச்ச நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும், குஜராத் போலீசு வெறும் 117 வழக்குகளில் மட்டும் விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

ஜாகியா ஜாஃப்ரி மோடிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கில் இப்படுகொலை தொடர்பாக 38 ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளையும் குற்றவாளிகளாகச் சேர்க்க வேண்டும் எனக் கோரியிருக்கிறார்.  அகமதாபாத் நகரிலுள்ள நரோடா பாட்டியா, நரோடா காவ்ன் பகுதிகளில் நடந்த படுகொலைகளுக்கு எம்.கே.டாண்டன், பி.பி. கோந்தியா என்ற இரு போலீசு உயர் அதிகாரிகள் உடந்தையாக இருந்ததை விசாரித்த சிறப்புப் புலனாய்வுக் குழு, அக்குற்றச்சாட்டை உறுதிப்படுத்தினாலும், அவர்கள் இருவர் மீதும் கிரிமினல் வழக்குத் தொடரப் பரிந்துரைக்காமல், துறைரீதியான நடவடிக்கை எடுத்தால் போதும் எனக் கூறிவிட்டது.

மதவெறிப் படுகொலையின்பொழுது, இந்து மதவெறிக் குண்டர்களோடு கைகோர்த்துக் கொண்ட போலீசாருக்குப் பிற்பாடு பதவி உயர்வு அளிக்கப்பட்டது;  கொலைகாரக் கும்ப லைக் கைது செய்யத் துணிந்த அதிகாரிகள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.  இதனை விசாரித்த சிறப்புப் புலனாய்வுக் குழு, “இது வழக்கமான நிர்வாக நடைமுறைதான்; இதில் மோடி அரசிற்கு எந்த உள்நோக்கமும் கிடையாது” எனக் கூறியது.

நானாவதி  ஷா கமிசன்: 

இக்கமிசனின் நீதிபதிகளுள் ஒருவரான ஷாவை, “எங்க ஆளு” என்றும், மற்றொரு நீதிபதியான நானாவதியை, “பணத்துக்காகத்தான் அவர் கமிசனில் சேர்ந்திருக்கிறார்” என்றும் குறிப்பிட்டு, குஜராத்தின் முன்னாள் அட்வகேட் ஜெனரல் அர்விந்த் பாண்டியா தெகல்கா நிருபர் ஆஷிஷ் கேதானிடம் உண்மையைப் போட்டு உடைத்துள்ளார்.  அக்கமிசனின் விசாரணை முறையும், அதன் உண்மை சொரூபத்தைக் கடந்த பத்தாண்டுகளில் பலமுறை காட்டிக் கொடுத்திருக்கிறது.

நீதிபதி நானாவதி, தான் கமிசனில் சேர்ந்தவுடனேயே, “கலவரங்களைக் கட்டுப்படுத்த போலீசு எடுத்த நடவடிக்கைகளில் எந்தக் குற்றங்குறையும் காணமுடியவில்லை” எனப் பத்திரிக்கைகளுக்கு பேட்டி அளித்தார்.  “சபர்மதி விரைவுவண்டியின் பெட்டிகள் எரிக்கப்பட்டது மிகப் பெரிய சதிச்செயல்” என மோடிக்கு ஆதரவாக தீர்ப்பளித்திருக்கும் கமிசன், மதவெறிப் படுகொலைகள் பற்றிய விசாரணையை இழுத்தடிக்கும் வேலையைத்தான் கடந்த பத்தாண்டுகளாகச் செய்துவருகிறது.  குறிப்பாக, படுகொலை நடந்து கொண்டிருந்த சமயத்தில், அந்த இடங்களில் இருந்த சங்கப் பரிவார அமைப்புகளின் தலைவர்களுக்கும் போலீசுஅதிகாரிகளுக்கும் இடையே நடந்த உரையாடல்கள் அடங்கிய ஒலித்தகடை, கமிசன் இன்றுவரை ஆய்வு செய்யவே மறுத்து வருகிறது.

நீதிபதி ஷா மார்ச், 2008இல் இறந்த பிறகு, அவர் இடத்திற்கு அக்சய் மேத்தா என்ற நீதிபதியை மோடி அரசு நியமித்தது.  நீதிபதி அக்சய் மேத்தா நரோடா பாட்டியா மற்றும் நரோடா காவ்ன் என்ற இரு இடங்களில் நடந்த படுகொலைகளைத் தலைமை தாங்கி நடத்திய பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த பாபு பஜ்ரங்கியைப் பிணையில் வெளியே அனுப்பி வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கீழமை நீதித்துறை:

குஜராத் மாநில விசுவ இந்து பரிசத் பொதுச் செயலர் திலீப் திரிவேதி, விசுவ இந்து பரிசத்தின் சபர்கந்தா மாவட்டத் தலைவரான பாரத் பட், பாஞ்ச்மஹால் மாவட்ட விசுவ இந்து பரிசத்தின் தலைவர் பியுஷ் காந்தி என இவர்களைப் போன்ற சங்கப் பரிவார ஆட்கள்தான் மதவெறிப் படுகொலை வழக்குகள் அனைத்திலும் அரசு வழக்குரைஞர்களாக நியமிக்கப்பட்டனர்.  மேலும், மதவெறிப் படுகொலை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடிய வழக்குரைஞர்களை, அரசு வழக்குரைஞர்களாக நியமித்த கேலிக்கூத்தும் நடந்திருக்கிறது.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்து மதவெறிக் குண்டர்களுக்கு விரைவாகப் பிணை கிடைக்க ஏற்பாடு செய்வது; சாட்சிகளை மிரட்டுவது, கலைப்பது அல்லது சாட்சிகளிடம் பேரம் நடத்தி வழக்கையே நீர்த்துப் போகச் செய்வது போன்ற சட்டவிரோத வேலைகளைத்தான் இந்தக் கும்பல் அரசு வழக்குரைஞர் என்ற போர்வையில் செய்து வருகிறது.  கீழமை நீதிமன்ற நீதிபதிகள் இந்தச் சட்டவிரோதச் செயல்களைக் கண்டுகொள்ளவில்லை என்பதோடு, அந்நீதிமன்றங்கள் மோடியின் இன்னொரு மூளையாகத்தான் செயல்பட்டு வருகின்றன.  கீழமை நீதிமன்ற நீதிபதிகள் குற்றவாளிகளுக்குச் சாதகமாகச் செயல்பட்டு வருவதை பெஸ்ட் பேக்கரி வழக்கு நாடெங்கும் அம்பலப்படுத்தியது.

நானாவதி  ஷா கமிசனின் சிறப்பு அரசு வழக்குரைஞராக நியமிக்கப்பட்ட அரவிந்த் பாண்டியா, “ஒவ்வொரு நீதிபதியும் தொலைவில் இருந்துகொண்டே எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள் … ஏனென்றால், அவர்கள் அனைவரும் அடிப்படையில் இந்துக்கள்” என நீதிபதிகளின் இந்து மனோபாவத்தை வெளிப்படையாகவே புட்டு வைத்தார்.

உச்ச நீதிமன்றம் மற்றும் சிறப்புப் புலனாய்வுக் குழு:

குஜராத்-படுகொலை-1
பெட்டிச் செய்தி -1

நரேந்திர மோடியைக் குற்றவாளியாகச் சேர்க்கக் கோரி ஜாகியா ஜாஃப்ரி தொடுத்த வழக்கு, பெஸ்ட் பேக்கரி வழக்கில் மறுவிசாரணை நடத்தக் கோரிய வழக்கு ஆகியவற்றில் குஜராத் உயர் நீதிமன்றம் மோடிக்கு ஆதரவாகவே தீர்ப்பு வழங்கியது.  குஜராத் அரசு இயந்திரம் எந்த அளவிற்கு காவிமயமாகி இருக்கிறது என்பதற்கான சான்றுகளாகத்தான் உயர் நீதிமன்றத்தின் இத்தீர்ப்புகளைப் பார்க்க முடியும்.

குஜராத்தில் நடந்த மதவெறிப் படுகொலை தொடர்பான 9 முக்கிய வழக்குகளைத் தனது கண்காணிப்பின் கீழ் விசாரிப்பதற்குச் சிறப்புப் புலனாய்வுக் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்திருந்தாலும், இவ்வழக்குகளின் முடிவுகள் பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்கு நீதியை வழங்கும் என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் கிடையாது.  நீதிபதிகள் வழக்கு விசாரணையின்பொழுது அடிக்கும் சவடால்களும் இறுதியில் அவர்கள் எழுதும் தீர்ப்புகளும் நேருக்கு மாறாக இருப்பதைப் பல வழக்குகளில் காணமுடியும்.

குஜராத்-படுகொலை-2
பெட்டிச் செய்தி - 2

அந்த 9 வழக்குகளுள் ஒன்றான சர்தார்புரா வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டிருந்தாலும், சதிக் குற்றச்சாட்டின் கீழ் அவர்களுள் ஒருவர்கூடத் தண்டிக்கப்படவில்லை. சபர்மதி விரைவுவண்டியின் இரு பெட்டிகள் தீக்கிரையான வழக்கில் 11 முசுலீம்களுக்குத் தூக்கு தண்டனையும், 20 முசுலீம்களுக்கு ஆயுள் தண்டனையும் அளித்து வழங்கப்பட்ட தீர்ப்பில்,  சிறப்பு நீதிமன்றம், குஜராத் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், சிறப்புப் புலனாய்வுக் குழு ஆகிய நான்கும் ஜாடிக்கேத்த மூடியாய்ச் செயல்பட்டுள்ளன.

‘‘முசுலீம்கள் அனைவரும் அடிப்படைவாதிகள்” என இந்து மதவெறி விஷத்தைக் கக்கிவரும் நோயல் பார்மர் என்ற ஐ.பி.எஸ். அதிகாரியைத்தான் சிறப்புப் புலனாய்வுக் குழு இவ்வழக்கின் விசாரணை அதிகாரியாக முதலில் நியமித்தது.  மனித உரிமை அமைப்புகளும், குற்றஞ்சுமத்தப்பட்ட முசுலீம்களும் பார்மரின் நியமனத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த பிறகு, பார்மரின் வலது கையான ரமேஷ் படேல் என்பவர் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.  பிறகெப்படி இவ்வழக்கு விசாரணை நடுநிலையாக நடந்திருக்க முடியும்?  இந்த இரண்டு நியமனங்களையும் உச்ச நீதிமன்றம் கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

லல்லு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தபொழுது அமைத்த பானர்ஜி கமிசன், “சபர்மதி விரைவுவண்டியின் பெட்டிகள் தீக்கிரையானது சதிச் செயல் அல்ல’’எனத் தீர்ப்பளித்தது.  இந்த அறிக்கையைத் தடை செய்ததோடு, அதனைச் சட்ட விரோதமானது என்றும் கூறி 2005  இல் தீர்ப்பளித்தது குஜராத் உயர் நீதிமன்றம்.  அத்தீர்ப்பைத் தடைசெய்ய முடியாது என 2006  இல் தீர்ப்பளித்தது, உச்ச நீதிமன்றம்.  சிறப்பு நீதிமன்றம் சபர்மதி விரைவுவண்டியின் பெட்டிகள் தீக்கிரையானதைப் பயங்கரவாதிகளின் சதிச்செயல் எனத் தீர்ப்பளித்து, முசுலீம்களுக்கு தூக்கு தண்டனையும், ஆயுள் தண்டனையும் வழங்கியிருப்பதை உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது.

நரேந்திர மோடி உள்ளிட்டு 63 பேருக்கு எதிராக ஜாகியா ஜாஃப்ரி தொடுத்த வழக்கில், மோடியை விடுவிக்கும் உள்நோக்கத்துடன்தான் தனது விசாரணையை சிறப்புப் புலனாய்வுக் குழு நடத்திவந்தது. “விசாரணைக்கும் அதன் இறுதியில் வந்தடைந்த முடிவுகளுக்கும் தொடர்பிருப்பதாகத் தெரியவில்லை” என இந்த உள்நோக்கம் பற்றி பட்டும் படாமல் கருத்துத் தெரிவித்த உச்ச நீதிமன்றம், நீதிமன்ற நண்பனாக ராஜூ ராமச்சந்திரன் என்ற வழக்குரைஞரை நியமித்து, சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கைககளை ஆய்வு செய்து, தனியாக அறிக்கை தருமாறு உத்தரவிட்டது.  எனினும், மோடி மீது குற்றச்சாட்டினைப் பதிவு செய்ய வேண்டிய தருணத்தில், அந்த இக்கட்டிலிருந்து தப்பித்துக் கொள்ள, சட்டத்தின் வரம்பினைக் காட்டி, இது பற்றி முடிவெடுப்பதை அகமதாபாத் பெருநகர நீதிமன்றத்திடம் தள்ளிவிட்டது, உச்ச நீதிமன்றம்.  மேலும், மோடிக்கு எதிரான ஜாகியா ஜாஃப்ரியின் வழக்கை இனி கண்காணிக்கப் போவதில்லை என்றும் அறிவித்தது.

ஜாகியா ஜாஃப்ரி இந்த வழக்கில், மோடி மீது 32 குறிப்பான குற்றச்சாட்டுக்களை ஆதாரத்தோடு கூறியிருந்தார்.  இந்த 32 குற்றச்சாட்டுகளுள், சபர்மதி விரைவு வண்டியின் இரண்டு பெட்டிகள் தீக்கிரையான அன்றிரவு நரேந்திர மோடி தனது அதிகாரபூர்வ இல்லத்தில் நடத்திய அதிகாரிகள் கூட்டத்தில், “இந்துக்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்துவதைத் தடுக்காதீர்கள் என  உத்தரவிட்டார்” என்ற குற்றச்சாட்டு மிக முக்கியமானதாகும்.  ஜாகியா ஜாஃப்ரி, தனது இக்குற்றச்சாட்டுக்குச் சாட்சியமாக, படுகொலை நடந்தபொழுது குஜராத் மாநில அரசின் உளவுத் துறையில் துணை ஆணையராகப் பணியாற்றி வந்த சஞ்சீவ் பட்டைக் குறிப்பிட்டிருந்தார்.  மோடி நடத்திய இக்கூட்டத்தை, “மிகப் பெரிய சதியின் தொடக்கம்” எனக் குறிப்பிட்டு வரும் சஞ்சீவ் பட்,  சிறப்புப் புலனாய்வுக் குழுவின் முன் ஆஜராகி, தான் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டதற்கான ஆதாரங்களைத் தந்து, இக்குற்றச்சாட்டை உறுதிப்படுத்தினார்.

குஜராத்-படுகொலைசிறப்புப் புலனாய்வுக் குழு தற்பொழுது அகமதாபாத் பெருநகர நீதிமன்றத்திடம் அளித்துள்ள அறிக்கையில் சஞ்சீவ் பட் அக்கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பதாகக் கூறுவதை நம்ப முடியாது எனக் கூறியிருக்கிறது.  இந்த அறிக்கை அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை என்றாலும், அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய முடிவுகள் ஊடகங்கள் வாயிலாக கசிந்து வெளிவந்துவிட்டன.

மோடி நடத்திய அந்தக் கூட்டத்தில் சஞ்சீவ் பட் உள்ளிட்டு எட்டு அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.  அந்தக் கூட்டத்தில் பட் கலந்துகொண்டது பற்றிய கேள்விக்கு மற்ற ஏழு அதிகாரிகளுள் மூன்று பேர் நினைவில்லை எனப் பதில் அளித்துள்ளனர்; மூன்று பேர் “வரும், ஆனா வராது” என்ற பாணியில் தெளிவில்லாத பதிலை அளித்துள்ளனர்.  ஒரேயொரு அதிகாரி மட்டும்தான் பட் கலந்து கொள்ளவில்லை எனப் பதில் அளித்தார்.  இந்த ஏழு அதிகாரிகளுள் மூன்று பேர் மோடிக்கு மிகவும் நெருக்கமாக இருந்ததால், அவர்கள் தமது பதவி ஓய்விற்குப் பின்பு மோடியின் தயவால் பசையான பதவியில் அமர்ந்துள்ளனர்.  ஒருபுறம் இந்த ஏழு அதிகாரிகளையும் நம்பமுடியாத சாட்சியங்கள் எனக் குறிப்பிடும் சிறப்புப் புலனாய்வுக் குழு, இன்னொருபுறம் சஞ்சீவ் பட் விவகாரத்தில் இந்த நம்ப முடியாத ஏழு அதிகாரிகளின் சாட்சியங்களைக் கொண்டு, சஞ்சீவ் பட் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என முரண்பாடான முடிவை அறிவித்திருக்கிறது; சஞ்சீவ் பட் அக்கூட்டத்தில் கலந்து கொண்டதை நிரூபிக்கும் வேறு சாட்சியங்களை விசாரிக்கவும் மறுத்துவிட்டது.(பார்க்க பெட்டிச் செய்தி)

 

குஜராத்-படுகொலைஜாகியா ஜாஃப்ரி மோடிக்கு எதிராகத் தொடுத்த வழக்கில் நீதிமன்ற நண்பனாக நியமிக்கப்பட்ட வழக்குரைஞர் ராஜூ ராமச்சந்திரன் அளித்திருக்கும் அறிக்கை, சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கையிலிருந்து ஓரளவிற்கு வேறுபட்டிருக்கிற உண்மையும் ஊடகங்கள் வாயிலாகக் கசிந்து வெளிவந்துவிட்டது.  குறிப்பாக, அவரது அறிக்கை மோடி நடத்திய கூட்டத்தில் பட் கலந்து கொண்டிருக்கக்கூடும் என்பதற்குப் பல்வேறு சந்தர்ப்ப சாட்சியங்களை முன்வைத்துள்ளது. மேலும், சஞ்சீவ் பட்டின் சாட்சியத்தை நீதிமன்றத்தின் முன் வைத்து, அவரை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தியிருக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்திருக்கிறது.

‘‘நரேந்திர மோடிக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்குப் போதிய ஆதாரமோ, விசாரிக்கத்தக்க சாட்சியமோ இல்லை; இப்படுகொலை தொடர்பாகச் சில சில்லறைத் தவறுகள் நடந்திருக்கலாமேயொழிய, மோடிக்குக் கிரிமினல் உள்நோக்கம் எதுவுமில்லை; அந்தத் தவறுகளும்கூட மோடி மீது குற்றஞ்சுமத்தி வழக்குத் தொடுக்கும் அளவிற்கு வலுவானவையல்ல” எனக் கூறி, மோடியின் மீது சுமத்தப்பட்ட 32 குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவரை விடுவித்துவிட்டது, சிறப்புப் புலனாய்வுக் குழு.

குஜராத்தில் கடந்த பத்தாண்டுகளாக முசுலீம்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவதற்குப் பல சான்றுகள் உள்ளன.  இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்கு நீதி வழங்குவது ஒருபுறமிருக்கட்டும்; அவர்களுக்கு உரிய நட்ட ஈடுகூட வழங்காமல் வக்கிரமாக நடந்துவருகிறது, மோடி அரசு.  இப்படிபட்ட நிலையில், மோடிக்கு இந்த இனப்படுகொலை தொடர்பாக எந்தவிதமான கிரிமினல் உள்நோக்கமும் கிடையாது என்ற முடிவை அறிவிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு துணிகிறதென்றால், இதிலிருந்தே இந்தக் குழு காவிச் சிந்தனையில் ஊறிப் போன நயவஞ்சகக் கும்பல் என்பதை நாம் புரிந்துகொண்டுவிடலாம்.  இந்த அறிக்கை மோடியைப் பிரதமராக்கிவிடத் துடித்துக் கொண்டிருக்கும் பார்ப்பனக் கும்பலின் வக்கிரத்தை விசிறிவிடத்தான் பயன்படுகிறது.

அதே சமயம், ஊடகங்களால் பெருத்த எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கப்பட்ட ராஜூ ராமச்சந்திரனின் அறிக்கையோ, இம்மதவெறி படுகொலை தொடர்பான சதித் திட்டத்தில் மோடிக்கு உள்ள பங்கு குறித்துப் பேசாமல், இரண்டு மதத்தைச் சேர்ந்தவர்களிடையே பகைமையைத் தூண்டிவிடுதல், சட்டத்தை மதிக்காது அரசு ஊழியர் நடத்தல் போன்ற இரண்டாம்பட்சமான குற்றச்சாட்டுகளைத்தான் மோடி மீது சுமத்தியிருக்கிறது.  அகமதாபாத் பெருநகர நீதிமன்றம் ஒருவேளை சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கையை நிராகரித்துவிட்டு, ராஜூ ராமச்சந்திரனின் அறிக்கையை விசாரணைக்கு எடுத்துக் கொண்டால், இவ்வழக்கு விசாரணையின் முடிவில், ஒருவேளை நரேந்திர மோடிக்கு  மூன்று ஆண்டுவரை சிறை தண்டனை கிடைக்கக்கூடும்.

குஜராத்-படுகொலைஇட்லர் நடத்திய யூத இனப்படுகொலைக்கு இணையான, ராசபக்சே நடத்திய ஈழத்தமிழர் படுகொலைக்கு இணையான குற்றங்களைச் செய்திருக்கும் மோடியின் மீது, குஜராத்தில் பல போலி மோதல் கொலைகளை நடத்தியிருக்கும் மோடியின் மீது வெறும் மூன்றாண்டுகள் சிறை தண்டனை அளிக்கக்கூடிய குற்றச்சாட்டுகளைத்தான் பதிவு செய்ய முடியும் என்றால், இதைவிடக் கேலிக்கூத்தும் கையாலாகத்தனமும் வேறெதுவும் இருக்க முடியாது.

மதச்சார்பின்மை, சிறுபான்மையினர் பாதுகாப்பு என நீட்டி முழங்கும் எந்தவொரு ஓட்டுக்கட்சியும் இந்த வெட்கக்கேட்டைக் கண்டிக்க முன்வரவில்லை.  இது மட்டுமல்ல; காங்கிரசு, போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்டு மதச்சார்பின்மை பேசும் ஓட்டுக்கட்சிகளில் ஒன்றுகூட,  கடந்த பத்தாண்டுகளில் பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்கு நீதியைப் பெற்றுத் தருவதற்கு ஒரு துரும்பைக்கூட எடுத்துப் போடவில்லை.  மோடி தன்னைத் தற்காத்துக் கொள்ள முன்வைக்கும் இந்து மதவெறியும் குஜராத் பெருமையும் கலந்த அரசியலை எதிர்கொள்ளத் திராணியற்று, இந்த ஓட்டுக்கட்சிகள் ஒடுங்கிக் கிடந்தனர் என்பதே உண்மை.  “மோடியைக் கொல்ல முசுலீம் தீவிரவாதிகள் குஜராத்திற்கு வருவதாக” உளவுத் தகவல்களை அனுப்பி, மோடியின்இந்து மதவெறி அரசியலுக்குத் தீனிபோடும் வேலையைத்தான் காங்கிரசு செய்து வந்தது.  தீஸ்தா செதல்வாத், ஹர்ஷ் மந்தேர், மல்லிகா ஷெராவத் போன்றவர்கள்தான் பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்கு ஆதரவாக, மோடியை எதிர்த்துக் களத்தில் நிற்கிறார்கள்.

துக்ளக் சோ போன்ற பார்ப்பன பாசிஸ்டுகள் போலி மோதல் கொலைகள் மூலம்தான் முசுலீம் தீவிரவாதத்தை ஒழித்துக் கட்ட முடியுமே தவிர, சட்டம்  நீதிமன்றம் மூலம் இதனைச் சாதிக்க முடியாது என வெளிப்படையாகவே கூறிவருகின்றனர்.  அரசியல் செல்வாக்குமிக்க இந்து மதவெறி பயங்கரவாதிகளான மோடி, அத்வானி, பால் தாக்கரே போன்றவர்களைச் சட்டப்படி தண்டிக்க முடியாது எனும்பொழுது, சோவின் வாதத்தை இக்கும்பலுக்கு நாம் ஏன் பொருத்தக்கூடாது?

___________________________________________

புதிய ஜனநாயகம், மார்ச் – 2012

___________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

_____________________________________________________

_____________________________________________________

_____________________________________________________

_____________________________________________________

_____________________________________________________

சிறுகதை: அபின்

59

ஏனங்குடிக்குப் புதிதாக மருத்துவனாக வந்தபோது வீட்டின் மொட்டை மாடியிலிருந்து சாலையை வேடிக்கை பார்ப்பது எனக்கு வழக்கம்.

மாட்டின் வாலை முறுக்கிவிட்டு அதன் பின்னே நடப்பவர்கள்; வெள்ளை வெளேரென்ற ஆட்டுக் குட்டியை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு நடப்பவர்கள்; தெருவில் யாரையாவது பார்த்து விட்டால் தலையைக் குனிந்து செல்லம் இளம் பெண்கள்; என்னைப் பார்த்தால் நிறுத்தி வணக்கம் செலுத்திவிட்டுப் போகும் பால்காரர்கள்; புது டாக்டர் எப்படி இருக்கிறார் என ஆவலுடன் என் வீட்டை நோட்டமிடுபவர்கள்….

அப்போதுதான் முதல் முறையாக அப்பாசைக் கவனித்தேன். காற்றில் மிதப்பது போல மெதுவாக மண்ணெண்ணெய் வண்டியை மிதித்துக் கொண்டு செல்வார். அவரது வலது காலை அழுக்கான சேலைத் துணியால் சுற்றியிருந்தார்.

அரசு மருத்துவமனையில் வெளி நோயாளிகள் பிரிவில் நான் இருந்த போது அதே கட்டுடன் அப்பாஸ் ஒரு நாள் என்னைச் சந்தித்தார்.

”கால்ல என்னங்க?” என்றேன்.

”கால்ல புண்ணுங்க சார்” என்றவாறே தரையில் உட்கார்ந்து மெல்ல தனது துணிக்கட்டை அவிழ்க்க ஆரம்பித்தார்.

இரண்டங்குல அளவிற்குப் பெரிய புண் நடு உள்ளங்காலில் இருந்தது. ஆழமான அந்தப் புண்ணின் உள்பகுதி கறுத்து இருந்தது. டார்ச் விளக்குடன் நான் குனிந்தபோது புண்ணிலிருந்து ஒரு வித நாற்றம் பரவியதை உணர முடிந்தது. இத்தனைப் பெரிய புண்ணுடன் எப்படி இவர் மண்ணெண்ணெய் வண்டியை மிதிக்கிறார் என வருத்தமாக இருந்தது.

”புண்ல வலி இல்லீங்களா?” என்றேன்.

”அதெல்லாம் ஒண்ணுமில்லேங்க” என்றவாறு தனது இருகைகளாலும் புண்ணை அழுத்தி எனக்குக் காட்டினார்.

”அப்பாஸ் அண்ணனுக்கு நாலஞ்சு வருஷமா சக்கரை வியாதி இருக்கு சார். அதான் புண்ணு ஆற மாட்டேங்குது. நாங்களும் என்னன்னவோ மருந்து கொடுத்துப் பார்த்துட்டோம்” என்றார் மருத்துவனை ஊழியர் ராதாகிருஷ்ணன்.

அப்பாஸ் அண்ணன் என்று அவர் அப்பாசை மரியாதையாக விளித்தது எனக்கு வியப்பாக இருந்தது. வியப்பிற்கு விளக்கம் உடனே கிடைத்தது.

”சார் உங்களுக்கு ஏதுனா மண்ணெண்ணை வேணுமின்னா அண்ணங்கிட்ட சொல்லுங்க, வீட்ல வந்து கொடுக்கச் சொல்லறேன்” என்றார்.

அதற்குள் அப்பாஸ் ”இந்தப் புண் ஆறுமா சார்?” என்றார்; அவரது பார்வையில் நம்பிக்கையின்மை தென்பட்டது.

”ஆற வைக்கலாங்க. ஆனா தினம் நீங்க இன்சுலின் ஊசி போட்டுக்கணும்; அப்புறம் நீங்க மண்ணெண்ணெய் வண்டி மிதிக்கக் கூடாது. உங்க தொழிலை கொஞ்சம் மாத்திக்கணும். அப்போதுதான் சீக்கிரம் ஆறும்,” என்றேன்.

”ஊசி இங்கேயே போட்டுக்கலாமா?”

”இல்லீங்க இதமாதிரி கிராமப்புறத்து ஆஸ்பத்திரிக்கெல்லாம் இன்சுலின் தரமாட்டாங்க. நீங்கதான் வாங்கிட்டு வரணும்” என்றேன்.

தலையாட்டிய அப்பாஸ் அண்ணனை ஊழியர் அன்புடன் இழுத்துச் சென்றார். அன்று அப்பாசிடம் வாங்கும் மண்ணெண்ணெய்க்கு அவர் காசு கொடுப்பாரா என்பது சந்தேகம்தான்….

______________________________

எனினும் சில நாட்கள் தொடர்ந்து கட்டு கட்டி வந்ததில் புண் ஆறுவதைப் பார்க்க அப்பாசிற்கு என் மேல் நம்பிக்கை ஏற்பட்டிருக்க வேண்டும். எப்படியோ ஒரு நாள் இன்சுலின் ஊசியுடன் வந்தார். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. எப்படியாயினும் ஒரு ஏழைத் தொழிலாளியின் நோய் குணமானால் சரி என்பது போல் ”இன்சுலின் நீங்களே வாங்கிட்டீங்களா பரவாயில்லை. ஆனா ஊசி 40 ரூபாய்க்கு மேல் இருக்குமே.”

”ஆமாங்க ஆனா புண்ணு இப்போ ஆறி வருதுங்க. நீங்க சொன்ன மாதிரி ஊசி போட்டுக்கிட்டா சீக்கிரமே நல்லாயிடுமில்ல.”

அப்பாஸ் ஊசி போட்டுக் கொண்டு கட்டும் அறைக்கு நகர்ந்ததும் ராதாகிருஷ்ணன் என் அருகில் வந்து கிசுகிசுப்பாக ”சார் வடக்குத் தெரு போயிருக்கீங்கல்ல. மூக்கா வீடுன்னு சொல்வாங்கள்ள,” என்றார். நான் புரியாது விழித்தேன்.

”சார் அந்த தெருவுல வீட்டு முன் பக்கம், காம்பௌண்டு சுவரு எல்லாத்திலேயும் கறுப்பு கலர்ல டைல்ஸ் பதிச்சிருப்பாங்கல்ல சார்.”

”ரெண்டு பேருக்கும் ஒரே அம்மா. ரெண்டு அப்பா சார்” என்றார்.

இதைக் கேள்விப்பட்டதும் எனக்கு கஷ்டமாக இருந்தது. ஒரே தாயின் வயிற்றில் பிறந்தவர்கள். ஒருவர் தனது வீட்டின் சுற்றுச் சுவர்களைக் கூட ராஜஸ்தானத்து டைல்ஸ்களால் அழகுபடுத்துகிறார். இன்னொருவர் ஆறாத புண்ணுடன் கூட வண்டியோட்டிப் பிழைக்கிறார். ஏன் இப்படி?

எல்லோரும் ஒரே தட்டில் உணவு உண்ணும் சகோதரத்துவம் எங்கே போனது? நான் சந்தேகத்தை எழுப்பிய உடன் ராதா ”அதெல்லாம் சும்மா சார்! சும்மானாச்சுக்கும் கல்யாணம்னா எல்லாம் அப்படி செய்வாங்க. அவ்வளவுதான்; ஏனங்குடியில் எவ்வளவு முசுலீம்கள் ஏழைகளா இருக்காங்க. எல்லாம் சொல்லுவாங்க சார். ஆனா நம்பள மாதிரிதான்” என்று என்னையும் தன்னோடு சேர்த்துக் கொண்டார்.

­­­­­­­­­­­­­­­_________________________________

ஓரிரு மாதங்கள் கழித்து அப்பாஸ் தன் மனைவியோடு மருத்துவமனைக்கு வந்திருந்தர். ”ரொம்ப நன்றிங்க சார். புண்ணு இப்போ நல்லா ஆறிடுச்சு சார்,” அப்பாஸின் கண்களில் ஈரம். ”நீங்க எந்தம்பி மாதிரி, ஆறு மாசமாக இந்த புண்ணை வச்சிகிட்டு வண்டி ஓட்றதுக்கு சிரமப்பட்டார். நீங்க நல்லா இருக்கணும்” என்றார் அப்பாசின் மனைவி.

தொடர்ந்து அப்பாசின் மனைவி ”இன்சுலின் ஊசி போதுமா? இல்ல இன்னும் போடணுங்களா?” என்றார்.

அவருக்கு மாத்திரையில ரத்தத்தில் சர்க்கரை குறையறது இல்ல,அதனால ஊசிய தொடர்ந்து போடுறதுதான் நல்லது” என்றேன்.

”ரொம்ப கஷ்டமாக இருக்கது தம்பி; ஊசி ரொம்ப வெலையாவுது; நீங்கதான் எப்படியாவது அரசாங்கத்துல சொல்லி ஊசி வாங்கி போட்டுவுடுங்க” என்றவாறு கையெடுத்துக் கும்பிட்டார்.

நான் அரசாங்கத்தின் பிரதிநிதி அல்ல; கையாலாகாத ஒரு அரசாங்க ஊழியன் என அவர்களுக்கு எப்படிப் புரிய வைப்பது?

__________________________________

அன்று இரவு ஜான் முகமதுவைப் பார்க்க அவரது வீட்டிற்குச் செல்ல வேண்டியிருந்தது. ஜான் முகமது என்னைப் பொறுத்தவரையில் ஒரு அற்புதமான மனிதர். சற்றும் களங்கமில்லாத சிரிப்பு அவர் தாடிக்குப் பின்னிருந்து வந்து கொண்டேயிருக்கும். என்னை மதிப்பவர். என்மேல் பிரியம் உள்ளவர். ஐந்து வேளை தொழுகை செய்யும் அவர் நாத்திகனான என்னுடன் கை கோர்த்துக் கொள்வார். என் தந்தையின் வயதையொத்த ஒருவருடன் சமமாக கைகோர்த்துப் பேசுவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.

அவர் வீட்டின் எதிரிலிருக்கும் சந்தில் அப்பாஸ் திரும்புவதை தற்செயலாக கவனித்தேன்.

”என்ன மண்ணெண்ணெய்க்கார அப்பாஸ் இங்க போறாரு” என்றேன் அவரிடம்.

”உங்களுக்குத் தெரியாதா, அப்பாஸ் வீடு அங்கதான் இருக்கு” என்றார் ஜான் முகமது.

அந்த இருளில் சந்திற்கு அப்பால் இருந்த அப்பாசின் வீடு எனக்குப் புலப்படவில்லை.

”அப்பாசின் அண்ணன் வீடு வடக்குத் தெருவில இருக்குன்னாங்களே?” என்றேன்.

”ஆமா பாகப் பிரிவினையிலே அவங்க கொஞ்சம் மோசடி செஞ்சுட்டாங்க.”

”நீங்க இருந்துமா இப்பிடி செஞ்சுட்டாங்க” என்றேனே.

”இல்ல, நான் ஏனங்குடி ஜமாத்துல்ல. அது கரைப்பாக்கம் ஆதலையூர் ஜமாத்” என்றார் ஜான் முகமது.

”எல்லோரும் சகோதரர்ன்னு சொல்றீங்க ஆனா ஜமாத்துக்கு ஜமாத் இப்படி வேறுபாடா?”

புன்னகையுடன் “என்ன செய்யிறது, காலம் மாறிப் போச்சு. தப்புப் பண்றவங்க எல்லா இடத்துலயும் இருக்காங்க. நாங்கூட அவன் அண்ணன்கிட்ட சொல்லிப் பார்த்தேன். கேக்கலை, சரி நம்ம வீட்டுக்கு எதிரில இருக்கிற சந்துல அந்த பழைய வீடு சும்மா கெடந்துச்சு. அதான் இங்க கொண்டு வச்சுருக்கேன்” என்றார். அவரின் பணிவு என்னை நெகிழ வைத்தது.

”அப்பாசுக்கு தினம் இன்சுலின் போடணும், பாவம் ஊசி வாங்க காசு இல்ல போலிருக்கு. நீங்க உங்க ஜமாத்துல சொல்லி கொஞ்சம் ஊசி வாங்கி கொடுக்க முடியுமா?” என்றேன்.

”ஜமாத் என்னங்க, ஜமாத் இதுக்கு, நானே வாங்கி தர்றேன்” என்றார். சொன்னபடியே ஊசியும் வாங்கிக் கொடுத்தனுப்பினார். பலமுறை ஏழை முஸ்லீம் நோயாளிகளுக்கு மருத்துவ உதவி தேவைப்படும்போதெல்லாம் அவரை நாடியிருக்கிறேன். மனம் கோணாமல் அவரும் உதவியிருக்கிறார். ஆனால் எத்தனைக் காலம்தான் அடுத்தவர் தயவில் வாழ முடியும்? அப்பாஸ் ஊசி போட வருவது மெல்ல மெல்ல நின்று போயிற்று.

அதிகமான வேலைப் பளுவின் காரணமாகவும், மனிதர்களை அறைக்குள் மட்டுமே சந்திக்கும் வாழ்க்கை முறையின் காரணமாகவும் நானும் அப்பாசை மறந்து போனேன்.

____________________________________

ஓரிரு வருடங்கள் கழிந்திருக்கலாம். ஒரு நாள் மருத்தவமனையின் வெளி நோயாளிகள் பிரிவில் இருந்தபோது வாசலில் திடீரென ஒரே கூட்டம். கூச்சல். மருத்துவமனை ஊழியர்கள் கட, கடவென வாசல் பக்கம் ஓடினார்கள். கூட்டத்தை விலக்கியவாறு ஒரு சிலர் ‘வழியவிடுங்க’ என்றவாறு ஒரு பெண்ணை இரத்தம் ஒழுக தூக்கி வந்தனர். நிறம் மங்கிய அப்பெண்ணின் துப்பட்டா முழுவதும் ரத்தம் நிறைந்திருந்தது. அருகில் வந்ததும் தெரிந்தது அந்தப் பெண் அப்பாசின் மனைவி என்று.

மருத்துவமனை வராண்டாவில் படுக்கச் செய்து ”என்னவாயிற்று” எனக் கேட்டேன். ”நம்ம ரெண்டாம் நம்பர் பஸ்ல அடிபட்டுட்டாங்க சார்” என்றார் ஒருவர். புடவையை சற்று விலக்கி கால்களைப் பார்த்தேன். வலது கால் முழுக்க சிதைந்து போயிருந்தது. கூட்டத்திலிருந்து பலர் ‘உச்’ கொட்டினார்கள். ஏதும் செய்ய இயலாத நிலையில் அவரை உடனடியாக நாகப்பட்டினம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு நாற்காலியில் வந்து அமர்ந்தேன். மருத்துவமனை வளாகத்தில் இருந்து கூட்டம் கலைந்து கூச்சல் ஓய்ந்து அமைதி நிலவியது.

”எப்படி ஆச்சுங்க ஆக்சிடெண்ட்?” என்றேன் ராதாவிடம். அதற்குள் கடைத்தெருவிற்குப் போய் நிறைய தகவல்கள் சேகரித்து வந்திருந்தார்.

”அப்பாசுக்கு ரொம்ப முடியாம போய் நாகப்பட்டணம் கவர்மெண்ட் ஆஸ்பத்திரில சேத்துட்டாங்களாம். இது அவருக்கு சாப்பாடு எடுத்துக்கிட்டு போயிருக்கு. ஏறுறதுக்குள்ளே பஸ்ஸை எடுத்துட்டானாம் அந்த டிரைவர். ரொம்ப மோசம் சார். எப்பவுமே ஓவர் ஸ்பீடு. பஸ்ஸ எடுத்த வேகத்துக்கு இந்தம்மா கீழே விழுந்து கால் பின் சக்கரத்துல மாட்டிக்கிச்சு.” நேரில் பார்த்தவர் போல் இதைச் சொன்னார்.

”அப்பாசுக்கு என்னவாம்” என்றேன் மெதுவாக.

”ரொம்ப மோசமா இருக்காராம் சார். அன்னிக்கு ஒரு நாள் நானே பார்த்தேன். மூஞ்சி, கை, காலெல்லாம் வீங்கி கிடந்தது. பிழைக்க மாட்டார் சார். கஷ்டம்! ஆனா பாவம் சார் ரெண்டும் சின்ன சின்ன பிள்ளைங்க. அதுங்களை காப்பாத்த வேண்டியது இந்த அம்மாதான் அதுக்குள்ள இவங்களுக்கு இப்படி ஆயிருச்சே” என்றார்.

சமூகத்தின் அவலம் ஒரு சிலருக்கு வெறும் செய்தியாகவே உள்ளது. இந்தச் சமூகத்தின் மீது மக்களை கோபம் கொள்ளாமலிருக்கச் செய்வது எது என யோசிக்கச் சொன்னது. யோசிக்க யோசிக்க தலைவலி அதிகமாக மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குச் சென்றேன்.

என் மனைவி எனது முகவாட்டத்தைப் பார்த்தும் முகம் மாறினாள். மருத்துவமனையில் நடைபெறும் சோகங்களை அங்கேயே மறந்துவிட வேண்டும் என்பது அவளது கட்சி. வாழ்க்கையில் வசதியான வீட்டில் பிறந்து செல்லப் பெண்ணாக வளர்ந்து வாழ்பவளுக்கு வாழ்வின் துன்பங்களும் துயரங்களும் தெரிந்திருக்க நியாயமில்லையோ? வருத்தத்திலேயே படுத்து உறங்கிப் போனேன்.

________________________________

பத்துப் பதினைந்து நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையில் உட்கார்ந்து ஏதோ புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன். ஐப்பசி மாதமாக இருக்க வேண்டும். இப்போதெல்லாம் தமிழ் மாதங்கள் எங்கே தெரிகிறது. ஆனால் வெளியே மழை மட்டும் ஐப்பசி மாதத்தை நினைவில் வைத்துக்கொண்டு கொட்டு, கொட்டென்று கொட்டிக் கொண்டிருந்தது. மழையைப் பார்த்தபோது எனக்கும், நோயாளிகளுக்கும் இடையில் திரை விரித்தது போல இருந்தது. எனக்கு இது போன்றவையே ஓய்வு நாட்கள். அப்போது அந்த மழையிலும் குடை பிடித்துக் கொண்டு ஒருவர் வருவது தெரிந்தது. ஜான் முகமதுவின் வீட்டு வாசலில் அடிக்கடி பார்த்த முகமாக தெரிந்தது. ”என்ன விஷயம்?” என்றேன். அவசரமாக வரச்சொல்லி ஜான்முகமதுதான் சொல்லி அனுப்பியிருந்தார்.

வாசலில் ஆட்டுக் குட்டிகளுடன் உட்கார்ந்து மழையை ரசித்துக் கொண்டிருந்தார் ஜான் முகமது. என்னைக் கண்டதும் பரபரப்பானார். ”என்னது நடந்தே வந்துட்டீங்க. செல்லியிருந்தா நான் ஆட்டோ அனுப்பியிருப்பேன்ல” என்று அன்புடன் கடிந்து கொண்டார்.

காப்பி கொடுத்தவாறே ”நம்ம அப்பாசிற்கு ரொம்ப சீரியசா இருக்கு. நீங்க கொஞ்சம் வந்து பாக்க முடியுமா? அதுக்குத்தான் கூப்பிட்டு அனுப்பிச்சேன்” என்றார்.

”ஏன்? என்னவாச்சு? அவரோட பெண்டாட்டி கூட பஸ்ஸில அடிபட்டாங்களே? அவங்க எப்படி இருக்காங்க?”

”அப்பாசுக்கு உடம்பு முடியாம இருந்து நாகப்பட்டினம் ஆஸ்பத்திரில சேத்து இருந்துச்சு. இடையே இந்த அம்மா வேற பஸ்ஸில அடிப்பட்டு அங்கேயே சேர்த்துருந்தாங்க. பாக்கிறதுக்கு ஆளில்ல, பணமும் இல்ல. அதனால ரெண்டு பேரையும் இங்கு கொண்டு வந்துட்டாங்க. பிள்ளைங்க ரெண்டு பேரும் சின்ன பசங்க அதுலயும் பெரிய பொண்ணு வயசுக்கு வந்துருச்சி.  அதுதான் ஆத்தாவுக்கும் அப்பனுக்கும் கஞ்சிவைச்சு கொடுக்குது; இடையில ஒரு வாரமா பெய்யிற மழையில அவங்க குடியிருக்கிற வீடு பாதி இடிஞ்சி விழுந்துடுச்சி; ரொம்ப பாவமா இருக்கு சார்.”

அப்பாசின் வாழ்க்கையில் நடை பெற்ற சம்பவங்களைக் கோர்வையாக நினைவுபடுத்திப் பார்க்கும் போது எனக்கு வாழ்க்கை மீதே வெறுப்பு உண்டாயிற்று. மெல்ல எழுந்து ஒரே குடையின் கீழ் இருவரும் அப்பாசின் வீட்டை நோக்கி நடக்கலானோம்.

இப்போதுதான் அப்பாசின் வீட்டை முதன் முதலாகப் பார்க்கிறேன். வீட்டினுள் நுழைந்து பார்ப்பதற்கு கதவுகளும், ஜன்னல்களும், தேவைற்றது என்பது போல முன் சுவர் இடிந்து பார்வைக்கு வழிவிட்டிருந்தது. கிழிந்து கையால் தைக்கப்பட்டிருந்த ஒரு சாக்கின் உதவியால் வீடு இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அந்த மறைவுக்குப் பின்னாலிருந்து அப்பாசின் வயதுக்கு வந்த பெண்ணின் முகம் எட்டிப் பார்த்தது.

எந்த பிரக்ஞையும் இல்லாமல் குப்பை போன்று அப்பாஸ் படுத்திருந்தார்; படுக்க வைக்கப்பட்டிருந்தார். முகம் வெள்ளை வெளேரேன வெளிறிவிட்டிருந்தது. கை, கால்கள் முகம் முழுவதும் அளவுக்கு அதிகமாக வீங்கியிருந்தது. அப்பாசின் அருகில் அமர்ந்து ”அப்பாஸ்! அப்பாஸ்!” என தட்டி எழுப்ப முயற்சி செய்தேன்.

மிகவும் பிரயத்தப்பட்டு கண்களைத் திறக்க முயற்சி செய்தார். கண்களின் இமைகள் மிகவும் வீங்கியிருந்தன. அப்பாஸ் கண்களைத் திறக்கச் சிரம்ப்பட்டார். கடைசியில் பிறை போன்று மெல்லிய கீற்றாக கண்களைத் திறந்தவர் என்னை அடையாளம் கண்டு கொண்டது போலத் தோன்றிற்று. நான் நாடித்துடிப்பைப் பார்க்க கை வைத்தேன். நாடியினைத் தொட்டு அறிய முடியாத அளவிற்கு கை வீங்கி இருந்தது. நான் மெல்ல எழுந்தேன்.

”டயபடிக் நெப்ரோபசி வந்து ரீனல் பெய்லியர் ஆயிடுச்ச. சிறுநீரகம் முழுவதும் வலுவிழந்து பழுதடைந்துவிட்டது. என்னைவிட மரணம் அவருக்கு நெருக்கமாக உள்ளது. இனி ஏதும் செய்வதற்கில்லை” ஜான்முகமதுவிடம் தனியே தெரிவித்தேன்.

”சரி போகலாம் வாங்க” என்றார் அவர். அப்பாசிடம் சொல்லிக் கொள்வதற்காக அவரை மீண்டும் எழுப்பினேன். இந்த முறை சற்று உடனேயே கண்களைத் திறந்தார்.

”அப்பாஸ் நான் போயிட்டு வர்றேன்; கவலைப்படாதீங்க நல்லாயிடும்” என்று பொய் சொல்லி வைத்தேன்.

சட்டென்று அப்பாஸ் முகத்தில் ஒரு புன்சிரிப்பு பரவியது. ஆயிரம் அர்த்தங்களைச் சொல்லக் கூடியது அந்தச் சிரிப்பு. மெல்ல வாயைத் திறந்து அரபியிலோ, உருதிலோ ஏதோ கூறினார். வார்த்தைகள் தெளிவாக வந்து விழுந்தன. அதுதான் அப்பாஸ் உச்சரித்த கடைசி வார்த்தைகளாக இருக்கும். எனக்கு அப்பாஸ் என்ன சொன்னார் என அறிய ஆவலாக இருந்தது.

ஜான் முகமதுவின் வீட்டிற்குத் திரும்பியதுமே அப்பாஸ் கூறியது என்ன என அவரிடம் கேட்டேன்.

”இன்னா லில்லாஹி லஇன்னா இலைஹி ராஜிஹன்; தவக்கல்லத்து அலல்லாஹ்; அல்ஹம்மது இபில்லாஹ்!” என்றார்.

அப்படியென்றால்?”

”நாம் அல்லாவுக்கே உரியவர்கள். அவனிடமே திரும்பிச் செல்ல இருக்கிறோம். இப்போதும் அந்த அல்லாவின் மீது நம்பிக்கை கொண்டேன். எல்லாப் புகழும் அல்லாவுக்கே” என்பதாகக் கூறினார். எனக்கு அவரிடம் விடைபெற மனமில்லை.

மெல்ல எழுந்து தெருவில் நடக்கலானேன. அவருக்கும் என் மனதின் கேள்விகள் புரிந்திருக்க வேண்டும். மௌனமாக ஆட்டுக் குட்டிகளுடன் அமர்ந்து விட்டார். எனக்குள் மீண்டும் மீண்டும் அதே கேள்விகள்.

இத்தனைக் கஷ்டத்திலும் அப்பாசுக்கு ஏன் கோபம் வரவில்லை?

வசதியான மகனுடன் சேர்ந்து கொண்டு பெற்ற தாய் மறந்த போதும், வளமற்ற சகோதரன் வண்டியிழுத்துப் பிழைத்தபோதும் வருத்தமுறாத சகோதரனை நினைத்த போதும், வாழ வழியற்று விரட்டும் சமூகத்தினை நினைத்த போதும், இறுதி நேரத்தில்கூட ஆறுதல்தராத உறவுகளை நினைத்த போதும், அடிமேல் அடிஅடித்த விதியின் மீதும், அல்லாவின் மீதும், அவர் கூறிய சகோதரத்துவத்தின் மீதும், அதைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்ளும் தன் மதத்தின் மீதும் ஏன் கோபம் வரவில்லை. எப்படி அவருக்கு இந்த நிலையிலும் அல்லாவுக்கு நன்றி சொல்ல முடிந்தது?

யோசித்தவாறு ஏனங்குடியின் நடுத்தெருப் பள்ளி வாசலைக் கடந்த போது அந்த மழையிலும் பகல் தொழுகைக்கான அழைப்பு விடுக்கப்பட்டது.

இது நஞ்சல்லவா? இந்த நஞ்சு அபின் அல்லவா? இது கிறங்க வைக்கும், மயங்க வைக்கும், ஏங்க வைக்கும் நஞ்சல்லவா?

இதைச் சொன்ன கம்யூனிசத் தத்துவத்தையா தோற்றுப் போனதாகக் கூறுகிறார்கள்? உண்மை எப்படித் தோற்கும்?

மழையின் இரைச்சல் கூடியது. பாங்கோசை அதில் நனைந்து அடங்கியது.

____________________________________________________

–   மருத்துவர். சிவசுப்பிரமணிய ஜெயசேகர்புதிய கலாச்சாரம், டிசம்பர் 1999.

_____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

என்கவுண்டர்: துப்பாக்கி குற்றத்தை உருவாக்குவதுமில்லை – ஒழிப்பதுமில்லை!

13

இயக்குநர் பெர்னாண்டோ மெய்ரலஸ் இயக்கத்தில் 2002-ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம், ‘சிட்டி ஆஃப் காட்‘(CITY OF GOD). பிரேசில் நாட்டின் ரியோடி ஜெனிரா நகரத்தில் அரசால் உருவாக்கப்பட்ட எந்த அடிப்படை வசதிகளுமற்ற சேரிதான் சிட்டி ஆஃப் காட். அங்கே 1960 முதல் 1980கள் வரை இளங்குற்றவாளிகள் தோன்றுவதையும், பின்பு அவர்கள் நகரத்தை கட்டுப்படுத்தக்கூடிய தாதாக்களாக மாறுவதையும், இறுதியில் ஒருவருக்கொருவர் சுட்டுக் கொண்டு சாவதையும் படம் அழுத்தமாக உணர்த்துகிறது.

தாதாக்களை மையமாகக் கொண்ட படங்கள் பல வந்திருந்தாலும் அவை மையமான நாயகன்-வில்லனை மட்டும் சுற்றிக் கொண்டு ஃபார்முலா சினிமா மரபை விட்டு விலகாமல் மசாலாப் படங்களாக நீர்த்துப் போகும். ஆனால் கடவுளின் நகரத்தில் முழுக்க முழுக்க அந்த சேரியின் மாந்தர்கள் விதவிதமான பாத்திரங்களாக வருகிறார்கள். கடவுளின் நகரத்தில் ஏழைச் சிறுவர்கள் எவ்வளவு இயல்பாக வன்முறையின் பக்கம் நகருகிறார்கள் என்பதை உயிரோட்டத்துடன் சித்தரித்திருப்பார் இயக்குநர்.

கடவுளின் நகரத்தில் படம் ஆரம்பம் முதல் இறுதிக்காட்சி வரை பலர் கொல்லப்படுகிறார்கள். மரணம் அங்கே நிரந்தரமாக குடியேறி ஓய்வின்றி வேலை செய்வது போலவும் சொல்லலாம். சமூகத்தில் ஒரு மரணம் தோற்றுவிக்கும் அதிர்ச்சி, துக்கம், துயரம், ஆற்றாமை போன்ற நாகரீக உலகின் உணர்ச்சிகள் அங்கே பெரிய அளவில் இல்லை. அந்த வகையில் கடவுளின் நகரத்தைச் சேர்ந்த சேரிச் சிறுவர்களிடம் மரணபயம் இல்லை.

இப்போது சென்னை என்கவுண்டருக்கு வருவோம். இரு வங்கிக் கொள்ளைகளில் ஈடுபட்டதாக கூறப்படும் 5 இளைஞர்கள் போலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டது ஒரு திட்டமிட்ட போலி மோதல் கொலை என்பது எல்லாருக்கும் தெரியும். இந்த இளைஞர்கள்தான் வங்கிகளை கொள்ளையடித்தார்கள் என்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லாத நிலையில் மற்ற மாநிலங்களிலும் இவர்கள் கொள்ளையடித்தார்கள் என்று பல வழக்குகளை வேறு சேர்த்து வருகிறார்கள். புலனாய்வு செய்ய முடியாத வழக்குகளை முடிக்க போலீசாருக்கு பிணங்களைப் போல உதவும் நண்பன் இல்லை.

சென்னை-என்கவுண்டர்
என்கவுண்டர் செய்யப்பட்ட வடமாநில இளைஞர்கள்

பத்திரிகைகள் கொல்லப்பட்ட இளைஞர்களைப் பற்றி பல தகவல்களை வெளியிட்டு வருகின்றன. இவற்றில் உண்மை எது பொய்யெது என்று யாருக்கும் தெரியாது. எனினும் ஒரு வாதத்திற்க்காக இவையனைத்தும் உண்மையென கொள்வோம். கொல்லப்பட்ட இளைஞர்கள் பீகாரைச் சேர்ந்தவர்கள் என்பதால் தமிழ்நாட்டில் பணிபுரியும் அனைத்து வட மாநில தொழிலாளிகளும் போலிசிடம் அடையாளங்களை பதிய வேண்டும் என்பதில் ஆரம்பித்து, தற்போது சென்னையில் வாடகைக்கு குடிவைத்திருப்போரின் புகைப்படங்களையும் அவர்களைப் பற்றிய விவரங்களையும் வீட்டு உரிமையாளர்கள் போலீசுக்குத் தரவேண்டும் என்றும், தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறது மாநகர காவல்துறை. நடக்கின்ற எந்தவொரு குற்றத்தையும் தனது அதிகாரத்தையும் மக்கள் மீதான கண்காணிப்பையும் கூட்டிக் கொள்வதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்கிறது அரசு. அரசு பாசிச மயமாகி வருவதைறியாத மக்களோ, இந்த போலி மோதல் கொலையை வீரசாகசம் போலக் கொண்டாடுகிறார்கள்.

பல நூறு கோடி வங்கிப்பணத்தை உட்கார்ந்த இடத்திலிருந்தே கொள்ளையடிக்கும் கிங் பிஷர் முதலாளி விஜய் மல்லையாவை என்கவுன்டரில் கொல்லவேண்டும் என்று யாரும் எண்ணுவதில்லை. ஆனால் வங்கியில் சில இலட்சங்களை கொள்ளையடித்த அந்த இளைஞர்கள் மக்கள் பார்வையில் கொல்லப்பட வேண்டியவர்கள் என்று பதிந்திருப்பதற்கு என்ன காரணம்? செயின் பறிப்பு, பீரோ புல்லிங், வழிப்பறி, வீடேறித் திருடுவது போன்ற பெட்டிகேஸ் திருடர்கள்தான் மக்களின் அன்றாட வாழ்வில் நேரடியாக வழிமறிக்கிறார்கள்.

பெருகி வரும் நகரங்களும், விரிந்து வரும் பொருளாதார ஏற்றத் தாழ்வும், குறுக்கு வழியில் பணத்தை அள்ளத் தூண்டும் மறுகாலனியாக்க பண்பாட்டு சூழலும்  இத்தகைய குற்றங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியிருக்கின்றது. எனவே, நாட்டை கொள்ளையிடும் திருடர்களை விட வீட்டைக் கொள்ளையிடும் குற்றவாளிகள் குறித்துத்தான் மக்கள் அதிகம் கவலை கொள்கிறார்கள்.

தான் ஆட்சிக்கு வந்ததும் திருடர்களெல்லாம் பயந்து கொண்டு ஆந்திராவுக்கு ஓடி விட்டதாக கொக்கரித்த ஜெயாவின் பெருமைகளை இத்தகைய குற்றச் செயல்கள் பெருங்கேலி செய்கின்றன. அம்மா ஆட்சிக்கு வந்தவுடன் திருடர்களெல்லாம் வடக்கிலிருந்து தெற்கு நோக்கியல்லவா பாய்கிறார்கள்! சரிந்து விட்ட இமேஜை தூக்கி நிறுத்துவதும், குற்றத் தடுப்பு என்ற பெயரில் போலீசு ஆட்சிக்கு அங்கீகாரம் பெறுவதும், குற்றவாளிகளுக்கும் மரண பயத்தை ஏற்படுத்தலாம் என்ற அசட்டு நம்பிக்கையும் இந்தப் போலி மோதலுக்குக் காரணமாகத் தெரிகிறது.

அதன்படியே நடுத்தர வர்க்கம் இந்த என்கவுண்டரை போற்றிப் பாடுகிறது. வழக்கு, ஆனால் இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடும் பீகார் கிரிமினல்களுக்கு இந்தப் போலி மோதல் மரணபயத்தை ஏற்படுத்துமென்று யாரேனும் உறுதி அளிக்க முடியுமா?

சென்னை-என்கவுண்டர்இந்தியாவின் வறிய மாநிலங்களில் பீகாருக்கு முதலிடம். எட்டரை கோடி மக்களில் 58%பேர் 25 வயதுக்கும் குறைவானவர்கள். இதன் பொருள் பீகாரில் இளைமைத் துடிப்பு அதிகம் என்பதல்ல, சராசரி ஆயுள் குறைவு என்பதுதான். இந்தியாவின் ஆண்டு தனிநபர் வருமான சராசரி ரூ.60,000 என்றால் பீகாரில் அது 18,000. வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களின் இந்திய சராசரி 22.15% என்றால் பீகாரில் 30.6%. இந்தியாவின் நகரமயமாக்கம் 27.8%, பீகாரில் வெறும் 10.5% மட்டுமே. நகர்ப்புறத்து வறுமை இந்தியாவில் 27.78% என்றால் அது பீகாரில் 32.91%ஆக இருக்கிறது.

இந்த புள்ளி விவரங்களைத் தாண்டி நிலவுடைமை கொடுங்கோன்மை அதிகமுள்ள மாநிலமும் பீகார்தான். சாதி ஆதிக்கம், தலித் மக்கள் மீதான வன்கொடுமை, விவசாயத் தொழிலாளர்கள் பண்ணையடிமையாக வாழ்வது, பெண்கள் முன்னேற்றமின்மை, ரன்பீர் சேனா போன்ற ஆதிக்க சாதி ரவுடிப்படைகள், துப்பாக்கிகள் சரளமாகப் புழங்கும் சூழல் அனைத்தும் பீகாரில் நிலவுகின்றது. அங்கே ஒரு ஓட்டுக்கட்சியின் உள்ளூர் தளபதி கூட துப்பாக்கிகள் தூக்கிய அடியாட்களுடன்தான் வலம் வருகிறார்.

இப்படி வன்முறையும், ஏழ்மையும் நிரம்பி வழியும் இந்த மாநிலத்திலிருந்துதான் ஏழைகள் இந்தியாவெங்கும் பிழைப்பதற்கு செல்கின்றனர். அவ்வண்ணம் தமிழகத்திற்கும் வந்த வண்ணம் இருக்கின்றனர். தமிழகத்தின் ஆலைகளிலும் கட்டிடத்தொழிலிலும் கடுமுழைப்பு வேலைகளை பீகார் தொழிலாளிகள்தான் செய்கின்றனர். உழைப்பதற்கு அவர்கள் அஞ்சுவதில்லை. அவர்கள் அஞ்சுவது வாழ்வதற்கு குறைந்தபட்ச வாய்ப்புகளைக் கூட வழங்காத பீகார் மாநிலத்தின் யதார்த்தத்திடம்தான்.

பொருளாதார ஏற்றத்தாழ்வு பீகாரில் அதிகம் என்பதாலும், பண்ணைக் கொடுங்கோன்மை – வன்முறைக் கலாச்சாரம் சகஜம் என்பதாலும் அங்கே திருட்டு, கொள்ளை, ஆள் கடத்தல் முதலான குற்றச் செயல்களெல்லாம் அன்றாட வாழ்வின் அங்கமாகவே ஆகிவிட்டன. கிரிமினல் கும்பல்களிடம் சேருவதும் ஒரு வேலை வாய்ப்பாக இருக்கிறது. சென்னையில் கொல்லப்பட்ட நபர்களின் தலைவர் மட்டும் தொழில்முறை கொள்ளையனாக, ஆடம்பரமாக ஊரில் வாழ்வதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. மற்றவர்கள் அனைவரும் மிகவும் சாதாரணமானவர்கள். அவர்களில் கூலி வேலை பார்த்து பிழைத்தவர்களே அதிகம். மேலும் அதில் ஓரிருவர் என்ன ஏது என்று தெரியாமலேயே இந்த கொள்ளையர்களுக்கு இடம் கொடுத்து ஆதரவளித்திருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.

தமிழக கிரிமினல்களிடம் துப்பாக்கி என்பது இன்னமும் அபூர்வமான பொருளாகத்தான் இருக்கிறது. பீகாரில் அது எளிதில் கிடைக்கிறது. துப்பாக்கி குற்றத்தையும் உருவாக்குவதில்லை, குற்றவாளிகளையும் உருவாக்குவதில்லை. குற்றவாளிகளையும் புலம்பெயர்ந்து வரும் தொழிலாளிகளையும் தோற்றுவிக்கும் சமூகப் பின்னணிதான் நம் கவனத்துக்கு உரியது. அதனை தமிழக காவல்துறையால் என்கவுன்டர் செய்து ஒழிக்கமுடியாது.

ஆதிக்க கும்பல்களின் வன்முறைகளால் கொலைகள் சகஜமாகிப்போன அந்த மாநிலத்தின் மக்களுக்கு மரணம் குறித்தும் பெரிய அதிர்ச்சி இருக்கப் போவதில்லை. பீகாரிலிருந்து வரும் மக்கள் குறைந்த கூலிக்கும், கடுமுழைப்புக்கும் அஞ்சுபவர்களல்ல. அங்கிருந்து வரும் குற்றவாளிகளுக்கும் ஒப்பீட்டளவில் மரணபயம் குறைவாகவே இருக்கும். மரணத்தை அண்மையில் கண்டு பழகிய வாழ்க்கையை இத்தகைய என்கவுண்டர்களா மிரட்டிப் பணியவைக்கும்?

__________________________________________

– புதிய கலாச்சாரம், மார்ச் – 2012
_____________________________________

 வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

அமெரிக்காகாரன் சத்தியமா நான் ஒன்னுமே பண்ணல! – நித்தியானந்தா

13

நித்தியானந்தா

மக்கா,

நாட்டுக்குள்ள பல சங்கதிக சூடா நடக்கது தெரியுமுல்லா! இன்னைக்குத்தாம்லே பிரணாப் முகர்ஜி நம்ம நாட்டோட பட்ஜட்ட தாக்கல் செய்யுதாறு! அதுல எத்தன மக்க தாலிய அறுக்கப் போறாரோ தெரியல. முந்தா நேத்து ரயில்வே பட்ஜெட்டுல சாதாரண மக்கமாரு டிக்கெட்டை எக்குத் தப்பா ஏத்திவிட்டுறுக்காகடே. அதுல அது கட்சி மந்திரிய மாத்தணும்னு ஆத்தா மம்தா பானர்ஜி அம்சமா காமடி பண்ணிக்கிட்டு இருக்கத பாத்தேயில்லா!

சங்கரன் கோவில்ல பிரச்சாரம் முடிஞ்சாலும் 32 மந்திரிமாரு அவனவனுக்கு வாக்கப்பட்ட வட்டத்துல வாக்கு குறைஞ்சா அம்மா பிரிச்சு மேஞ்சுருமேனு பஸ் ஸ்டாண்டு பாய் கடை பிரியாணியை தின்னு செரிக்காம கிடக்கானுகல்லா! இதுல நாங்களும் பஜாருல்ல கடை வச்சுருக்கம்லான்னு தி.மு.க தாத்தா, ம.தி.மு.க மாமா, தே.மு.தி.க சித்தப்புன்னு அல்லா தலைவருமாரும் அங்கனேயே சுத்தி சுத்தி வந்தாகல்லா!

இதெல்லாம் வுட்டுட்டு நித்தி மாமாவைப் பத்தி எழுதணுமான்னு அண்ணாச்சின்னு வினவுக்காரவுக கேட்டாக. இருந்தாலும் பயபுள்ள ஓவரா பிலிம் காட்டுதான், அவன சும்மா வுடலாமான்னு நாந்தேன் எடுத்துச் சொன்னேன்.

இலங்கைக்காரன் முள்ளி வாய்க்கால்ல கொன்னதுக்கு அவனே விசாரித்து அவனே நடவடிக்கை எடுக்கணும்னு அமெரிக்காரன் செனிவாவுல தீர்மானம் கொண்டு வரப்போறான்னு ஊர் பூறா பேச்சாக் கிடக்கு. கொலைய வேடிக்கை பாத்தவன் கொலைகாரனையே நீதிபதின்னு நியமிச்சுட்டு குய்யோ முய்யோன்னு சவுண்டு வுடுதான். இதுதாம்லே அமெரிக்காகாரனோட நீதி! இந்த லட்சணத்துல மைனர் சாமி நித்தியானந்தா அமெரிக்காரனோட ஆதாரம், கீதாரம்னு அறிவாளி பத்திரிகை ஹிந்துவுல ஏதோ பினாத்தியிருக்கான்னு கொஞ்சம் எட்டிப் பாத்தேன். அந்தக் கதயை கேளுலே!

2010-ல அந்த வூடியோவை அல்லா மச்சிங்களும் எத்தன தபா பாத்திருப்பான். அக்கா ரஞ்சிதாவோட மச்சி நித்தி அடிச்ச லூட்டிய பாத்து திருப்பதி வெங்கட்டோட பிரம்ம தரிசனம் மேறி கன்னத்துல போடாத குறையா அட்சிக்கிட்டவன் எத்தன பேரு! இப்புடி ஊரு பூறா, நாடு தாண்டி நாறுன நாஸ்திய இப்போ ஒண்ணுமே இல்லேங்குறான் இவன்!

அதாவது இந்த வூடியோ ஒரிஜினல் இல்லயாம். அல்லாம் மார்பிங் செஞ்சு ரீலீஸ் பண்ணிக்கிறான்னு அட்ச்சு வுடுறான். அத்த உலகப் புகழ்பெற்ற சில அமெரிக்க நிபுணருங்கோ பல நாள் ஆய்வு செஞ்சு, பீறாஞ்சு அல்லாம் கப்சா வீடியோன்னு கிளியரன்ஸ் கொடுத்துட்டானாம். இவுனுங்கோ லேசுப்பட்ட ஆளுங்க இல்லியாம். அமெரிக்காவுல எப்.பி.ஐயோட பல சிக்கலான வாய்தா கேசுங்களையெல்லாம் இவுனுங்கதான் பீறாஞ்சு விடை கொட்த்தானுங்களாம்.

இந்தியாவுல எந்த கோர்ட்டுல வந்துன்னாலும் சாமி சத்தியமா அந்த வூடியோ மேட்டரெல்லாம் மார்பிங்கின்னு சொல்லுறத்துக்கு பயலுவ ரெடியாம்.

ஏலேய் நித்தி, அமெரிக்காகாரனுகிட்ட ஒன்னரையனா காச விட்டெற்ஞ்சா டாக்டர் பட்டம் கொடுப்பான், ரெண்டு ரூபாய காட்டுனா ஊரப் பொளந்த கபோதின்னு விருது கொடுப்பான், எங்கூர்ல எண்ணெய் இருக்குன்னு சொன்னா படையெடுத்து கூட வருவான்.  இராக்குல பேரழிவு அயுதம் இருக்குன்னு சொன்னதோடு, அதுக்கு சி.ஐ.ஏவோட பலமான ஆதாரம் இருக்குன்னு சொல்லி ஊர ஏமாத்தி கடசீல என்னாச்சு? அங்கன பேரழிவும் இல்லை, ஆயுதமும் இல்ல, இவன்தான் அங்கன போய் ஆயுதத்த போட்டு பேரழிவ கொண்டு வந்தான்னு ஒலகமே காறித்துப்பிச்சு. இதுதாம்டே அமெரிக்காகாரனோட இன்டலிஜென்ஸ் தரம். இதப்போய் உலகத்தரம்னு சொன்னா எவம்டே நம்புவான்?

சாருவுக்கு காச விட்டெறிஞ்சு பி.ஆர்.வோ வேலைய பாக்கச் சொன்ன மைனர் சாமி அமெரிக்காகாரனுக்கு சில கோடிய வுட்டெறிஞ்சு கிளீயரன்ஸ் சர்டிபிக்கேட் வாங்கியிருக்கான். காவி உடை உடுத்துன கபோதி கலர் டீ சர்ட் போட்டு உலகத்த தாலியறுக்கும் யுனிவர்சல் ரவுடிகிட்ட விருது வாங்குணா, அத நம்புறதுக்கு நாம என்ன ஆக்கங் கெட்ட மூதியா? வுட்டா ஒபாமாவே இந்தியா வந்து நித்தி மாமாவுக்காக வக்கிலா வேசம் கட்டப் போறாரான்னு அவுத்து வுடுவான் போலிருக்கே.

தமிழ்நாட்டுல மாமி ஆட்சி நடுக்குதுன்னு ஐயருங்கோ மட்டும் துள்ளல இந்த மைனர் மாமாவும்தான் ஹை ஜம்பு கணக்கா துள்ளுறான். இவனோட ஜல்சாவ வெளியே கொண்டாந்த லெனின் கருப்பன், மேட்டரை வுட வேண்டாம்னா பணம் கொடுன்னு பேரம் பேசுனானாம். இவன் ஒத்துக்கலியாம். அதான் அவன் மார்பிங் வூடியோவை ரீலிஸ் செஞ்சான்னு இப்புடி நல்ல புள்ளையாட்டாம் அளக்கறான் இந்த அக்கீஸ்டு. இந்த பிரஸ் மீட்டிங்குல ரஞ்சிதா அக்காவும் “ஆமாம் அல்லாரும் மிரட்டுனாங்கன்னு” பால் வடியும் பச்ச புள்ளயாட்டம் கோரஸ் பாடுது.

இவுனுங்க அந்தப்புற மேட்டரோ இல்லை ஆசிரமத்து கஜனா மேட்டரோ அல்லாத்துலயும் உள்குத்து உண்டுன்னு தெரியாதா இன்னா? ஆனா இவுனக உள்குத்து பொலிட்டிக்சுல அந்த மேட்டரு வந்ததும், அதுல உள்ள ஒரிஜினாலிட்டி உண்மைங்குறதும் அல்லாருக்கும் தெரிஞ்சதுதான். அத்தப்போய் இந்த மாமா இப்போ நைசா பொய்யுன்னு அவுத்து வுடுதான்னா அல்லாம் கன்னடத்து ஐயங்கராம்மா ஆட்சியோட டானிக்குதான வேல செய்யுது?

தூங்குறவன்தான் ஹிந்து பேப்பர படிப்பான்னு டைம்ஸ் ஆஃப் இந்தியா ஒரு வெளம்பரத்தை வுட்ட வுடனே லபோ லபோன்னு அட்சிக்கிட்ட ஹிந்துக்காரன் அதுக்கு போட்டியா டைம்ஸ் ஆஃப் இந்தியாவ மேயுறவனெல்லாம் மேனா மினுக்கி பீட்டருங்கோ, ஹிந்து பத்திரிகைய படிக்கிறவுனெல்லாம் அறிவாளிங்கிற மேறி ஒரு வெளம்பரத்தை போட்டிக்கின்னு வெளியிட்டான்.

ஆனா, பாத்துக்கிடுங்க, காறித்துப்ப வேண்டிய நித்தியானந்தவோட அக்மார்க் பொய்யை ஐஞ்சு காலம் செய்தியா போட்டிருக்கான்னா இதுல யாரு அறிவாளி, யாரு முட்டாள்னு புரியுதாடா போக்கத்த மூதிகளா?

__________________________________________________

– காளமேகம் அண்ணாச்சி

___________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: