இத்திரைப்படத்தை ஆல்ஃபிரட் ஹிட்ச்காக்கிற்கு அர்ப்பணித்துள்ளார் இயக்குநர். விதவிதமான கொலைகாரர்களை கதைப்படுத்தி உலக அளவில் த்ரில்லர் வகைப் படங்களுக்கு புகழ்பெற்ற ஹிட்சாக்கோடு தனது படம் அணி சேரவேண்டும் என்பது இயக்குநரது ஆசை. இந்த ஆசை நிராசையானதா, நியாயமானதா?
இளம் பெண்களது தலையை வெட்டி முண்டமாகவும் அரை நிர்வாணமாகவும் பொது இடங்களில் பார்வைக்கு வைக்கும் கொடூரமான கொலைகாரன். அவனைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறும் ஒரு பெரிய போலீசு கூட்டம். அவனைப் பற்றி ஒரு மனநல மருத்துவரோடு விவாதிக்கும் ஆர்.ஜே-வாக அதிதி ராவ். அவளை ஒருதலையாக காதலிக்கும் பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக உதயநிதி. பிறகு அதிதியையே கொலைகாரன் கடத்துகிறான். கொல்லும் தருணத்தில் பயப்படாமல் விரைவில் அவனைக் கண்டுபிடிக்க கவுதம் (உதயநிதி) வருவான் என அவள் சொல்ல கொலைகாரன் அவளை ஒரு வாரம் விட்டுவிடுகிறான். தன்னைக் கவுதம் கண்டுபிடித்துவிடுவானோ என்று பயப்படுகிறான். இடை ஆத்திரத்தில் விலை மாதையும் வேறு ஒரு பெண்ணையும் அவனது வழக்கப்படி கொல்கிறான்.
அதிதியை தேடி உதயநிதி செல்லும் போது இதே வழக்கை முன்னர் விசாரித்த காவல்துறை அதிகாரி நித்யா மேனன் வருகிறாள். மாடிப்படியில் தவறி விழுந்து இடுப்புக்கு கீழ் செயலற்று இருக்கிறாள். இருவரும் சேர்ந்து கொலைகாரனைக் கண்டுபிடித்து அதிதியை மீட்கிறார்கள்.
படத்தில் உள்ள லாஜிக் மீறல்களையே பெரும்பாலான விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். பார்வையற்ற கவுதம் ஒவ்வொரு முடிச்சாக அவிழ்த்துக் கொண்டிருக்கும் போது போலீசு பெருங்கூட்டமாக வெறும் பார்வையாளராக இருப்பது, பொதுமக்கள், மீடியா அனைவரும் இருக்கும் போது காவல்துறை ஆணையர் உடலை பார்க்கும் வரை அரை நிர்வாணத்தோடு முண்டமாக பார்வைக்கு வைத்திருப்பது, கொலை நடக்கும் கோயம்புத்தூரில் சிசிடிவிக்கள் இல்லாதது, பின்பாதி முன்பாதி போல விறுவிறுப்பாக இல்லாமல் இருப்பதாக அவர்கள் விமர்சிக்கிறார்கள். இவையெல்லாம் பெரிய பிரச்சினை இல்லை.
கொலைகாரன் ஏன் அப்படி கொடூரமான கொலைகாரனாக சைக்கோபாத்தாக மாறிப்போனான்? அந்தக் காரணத்தைக் கேட்டு அதிதியே அவனை இறுதிக் காட்சியில் மன்னிக்கிறாள். அவனிடம் ஒரு குழந்தையை கண்டதாகவும் அவனை ஒரு தாய் அல்லது சகோதரி போல காப்பாற்றுவேன் எனவும் கூறுகிறாள். இத்தனைக்கும் அவள் முன்னாலேயே சில பெண்களது தலையை அவன் வெட்டுகிறான்.
தலைவெட்டும் இடத்தில் சிறை போன்ற அமைப்பில் ஒரு வயதான பெண்ணும், ஆணும் அடைபட்டிருக்கிறார்கள். பெண்ணாகப்பட்டவர் கொலைகாரனது ஆசிரியர். பள்ளியிலேயே சுய இன்பம் செய்ததாக அவனைக் குற்றம் சாட்டி அடித்து சீர்திருத்தப் பள்ளியில் குற்றவாளியாக சேர்த்தவர். சீர்திருத்தப் பள்ளிக்கு கொண்டு சென்ற போலீசுக்காரன் அச்சிறுவனை பாலியல் வன்முறை செய்கிறான். அந்த ஆசிரியோ இன்னும் அவன் தவறு செய்திருப்பதாக கூக்குரலிடுகிறாள். இத்தனை ‘ஒழுக்கம்’ பார்க்கும் அவள் அதிதியிடம் புகைப்பதற்கு பீடியும் கேட்கிறாள்.
சரி, பள்ளி நாட்களில் இப்படி சுய இன்பம் செய்து ஆசிரியரிடம் மாட்டிக் கொண்டு அதனால் மனவதைக்கு ஆளாகி இப்படி ஒரு கொலைகாரனாக மாற முடியுமா? இந்த கேள்விதான் மிகப்பெரிய லாஜிக் மீறல். இன்றைய ஆண்ட்ராய்டு காலத்தில் பாலியல் சார்ந்த விசயங்கள் கைக்கு அடக்கமாய் அனைத்து பிரிவினரிடமும் சென்று சேரும் போது சிறு வயதில் கரப்பழக்கம் காரணமாக தவறு செய்து விட்டதாக கதைக்கும் சேலம் சிவராஜ் வைத்தியரை பெரும்பாலானோர் பொருட்படுத்துவதில்லை, பொருட்படுத்தும் சிலர் இருக்கிறார்கள் என்பது நமது மக்களிடம் ஹீலர் பாஸ்கருக்குரிய மார்க்கெட் இன்னமும் இருப்பதைக் காட்டுகிறது. இயக்குநர் மிஷ்கினும் சேலம் சிவராஜின் சீடராக இக்கதையின் அடிச்சரடை வடித்துள்ளார்.
மேலும் கொலைகாரன் தனது இடத்தில் சர்ச் போன்று வடிவமைத்துள்ள இடத்தில் ஆசிரியரை கன்னியாஸ்திரி வேடத்தில் அமரச்செய்து தான் தவறு செய்யவில்லை ஜிப் மாட்டிக் கொண்டுவிட்டதால் கை அந்த இடத்தில் இருக்கிறது என்று கதறுகிறான். ஆசிரியரோ அவனுக்கு அறுபது சவுக்கடி கொடுக்க வேண்டுமென கத்துகிறாள். அதிதி மட்டும் மாடர்ன் கேர்ளாக சுய இன்பம் என்பது சாதாரண விசயமாயிற்றே என்று சுட்டிக் காட்டுகிறாள்.
இதன்படி கொலைகாரன் சுய இன்பமே செய்யாமல் சிறு வயதில் தண்டனை பெற்று கொலைகாரனாக மாறினான் என்றோ, சுய இன்பம் செய்து அதனால் ஏற்பட்ட அவமானத்தை மறைக்க முயற்சித்து தோல்வியுற்று பின்னர் கொலைகாரனாக மாறினான் என்றோ வைத்துக் கொள்ளலாம். எப்படி இருந்தாலும் இந்த பிளாஷ் பேக் தலையை வெட்டும் ஒரு கொலைகாரனாக ஒருவனை மாற்றும் பாரிய சக்தி வாய்ந்த சம்பவமல்ல.
இந்தியா டுடே-வில் நாஞ்சில் நாடன் எழுதிய சிறுகதை இந்த மையச்சரடை சரியாக முன்வைக்கிறது. பள்ளியின் இறுதி பெஞ்சில் சுய இன்பம் செய்யும் மாணவனை கண்டிக்கும் ஆசிரியர் அவனை தலைமை ஆசிரியரிடம் கொண்டு சென்று பெற்றோரை அழைக்க வைக்கிறார். மாணவனின் தந்தையோ நீங்களெல்லாம் பிள்ளை குட்டிகளை பெற்றவர்களில்லையா என்று வைது விட்டு மகனை அழைத்துச் செல்வார். கதை முழுக்க ஆசிரியர்களின் போலியான ஒழுக்கத்தை நையாண்டி செய்திருப்பார் நாஞ்சில் நாடன்.
உண்மையில் சுய இன்பம் குறித்த சமூகத்தின் பார்வையை குத்திக் காட்ட வேண்டுமென்றால் அதை அப்படி ஒரு நகைச்சுவையாக காட்டி உபதேசித்திருக்கலாம். ஆனால் இருட்டுக்கடை அல்வாவை சாப்பிடுவதற்கு நாஞ்சில் நாடன் பயன்படுத்திய ஒரு சில்வர் ஸ்பூன் போதாது திருப்பாச்சி அருவாள் இருந்தால்தான் வெட்ட முடியும் என்று மிஷ்கின் யோசித்திருக்கிறார்.
பாலியல் வன்முறைகள் கொடூரமான நடக்கும் நிர்பயாக்கள் காலத்தில் வாழ்கிறோம். குற்றச் செய்திகளையே வைத்து டிஆர்பி ரேட்டிங்கில் பாலிமர் செய்தி தொலைக்காட்சியும், ஒன் இண்டியா இணைய தளமும் முன்னணி வகிக்கின்றன. சமூகத்தில் அனைத்து விதமான குற்றங்களும் கொடூரங்களும் நடக்கும் காலத்தில் இப்படி ஒரு கதை அமைத்து அதற்கு பின்னணியாக இப்படி ஒரு சப்பை காரணத்தை முன்வைக்கும் இயக்குநரது புத்தாக்க சிந்தனை அறுவெறுப்பை ஊட்டுகிறது.
மிஷ்கினது சிந்தனையில் கொலையை எப்படி தத்ரூபமாக காட்டுவது, அக்காட்சிகளை எப்படி ஒரு காவியம் போல சித்தரிப்பது என்பதே இருக்கிறது. சிந்தனைக்கு வழியில்லாத போது சித்தரிப்புகள் விஸ்வரூபமெடுக்கின்றன. சமூகவியல், உளவியல், வரலாறு, நடப்பு நிகழ்வுகள், இன்றைய சமூக இயக்கம், நவீன வாழ்க்கை குறித்து அவருக்கு அக்கறையில்லை. கொலை செய்யும் பெண்ணொருத்தியின் டிவிட்டர் கணக்கை ஹேக் செய்யச் சொல்கிறான் கொலைகாரன். ஹேக்கரோ அந்தப் பெண்ணின் ஐ.பி நம்பரை கண்டுபிடித்து மாபெரும் சாதனையைச் செய்தது போலச் சொல்கிறான். ஐ.பி நம்பரை கண்டுபிடிப்பதற்கு நூற்றுக்கணக்கான இலவச சேவைகள் இருக்கின்றன. அதையே ஒரு ஹேக்கர் கண்டுபிடிக்க வேண்டுமென்றால் ஹேக்கர் குலமே வெட்கித் தலைகுனியும். அதனால்தான் என்னமோ ஹேக்கரையே கொலைகாரன் கொன்று விடுகிறான். தடயம் இருக்கக் கூடாதாம்.
இயக்குநர் மிஷ்கின்
தலையை வெட்டி முண்டமாக்கி பொது இடத்தில் வீசுவதையும், அதற்காக பெண்களை வேட்டையாடுவதை ஒரு நவீன இளைஞனது பாணியில் செய்வதற்கும் பாரிய குற்ற மனது வேண்டும். அதை ஏதோ மனநோய் என்று காட்டுவது குற்றவாளியின் மனநிலையை எளிமைப்படுத்தும் மனநிலை. பொதுவில் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இப்படி தொடர் கொலைகளை செய்யும் கொலைகாரர்களாக இருப்பதில்லை. அவர்கள் அதிகமும் தங்களை அறியாமல் வதைத்துக் கொள்கிறார்களே அன்றி உடன் இருப்பவர்களை அல்ல. உடன் இருப்பவர்களது சிரமம் மனநிலை பாதிப்படைந்தவர்களை புரிந்து கொள்வதும் அவர்களை தொடர்ந்து நிதானமாக பராமரிப்பதும்தான்.
கொலைகாரன், தொடர் கொலைகாரன் என்றால் அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்றொரு ஸ்டீரியோ டைப் அபத்தத்தை தமிழ் சினிமா தொன்று தொட்டு கடைபிடித்து வருகிறது. அந்த ஸ்டீரியோவில் மிஷ்கினும் எட்டுக் கட்டையில் ஒலிக்கிறார்.
அதுவும் சுய இன்பம் காரணமாக ஒருவன் தொடர் கொலைகாரனாக மாறுகிறான் என்பது அபத்தத்தின் உச்சம். சாதாரணமான விசயங்களை சாதாரணமாக பரிலசீப்பதற்கு பதில் இயக்குநர் மிஷ்கின் அசாதாரணமுறையில் பரிசீலிக்கிறார். அத்தகைய அசாதரணம்தான் அறிவு என்கிறார். இது ஆங்கிலப் புத்தகங்களைப் படித்தால்தான் அறிவு ஒளிரும் என்பது போல ஒரு வியாதி. நாம் ஒரு தெருவோர தேநீர்க்கடையில் டீக்குடித்துவிட்டு அளவளாவும் போது மிஷ்கின் அதையே இமயமலைச் சிகரங்களில் உள்ள டீக்கடையில் செய்ய நினைக்கிறார். நமது வீட்டறையில் சில்வியா பிளாத்தின் கவிதையை படித்துக் கொண்டால் போதுமானது என நாம் எண்ணுகையில் அதே சில்வியா கவிதையை கரீபியன் தீவுகளில் படிக்க வேண்டும் என எண்ணுகிறார் மிஷ்கின்.
ஒரு குற்றவாளியின் கோணத்தில் நியாயத்தை பேச வேண்டும் என்ற முறையில் இப்படம் இறுதியில் அமைகிறது. ஆனால் அதற்குரிய நியாயத்தை கதையோட்டமும் காட்சிகளும் கொண்டிருக்கவில்லை. அல்லது ஒரு குற்றவாளியின் குற்ற மனது கொடூரமாக பரிணாமம் அடைந்ததை காட்ட வேண்டும் என்ற முறையிலும் கதை அமையவில்லை. அதற்குரிய சமூக உளவியலையும் பேசவில்லை. மாறாக குற்றங்களை பூதாகரமாக காட்ட வேண்டும் என்பதற்காகவே ஒளிப்பதிவும், அரங்க அமைப்பும், இசையும், மிகை நடிப்பு கதாபாத்திரங்களும் பயன்பட்டிருக்கின்றன. இப்படியாக வடிவத்திற்காக எடுக்கப்பட்ட “சைக்கோ” படம் உள்ளடக்கத்தில் பூஜ்ஜியமாக கரைந்து போகிறது.
செய்தித் தொலைக்காட்சிகளின் மாலை நேர மருத்துவ நேரலை நிகழ்ச்சிகளில் அன்றாடம் சுய இன்பம் என்பது ஒரு தவறல்ல, அது ஒரு இயற்கையான பழக்கம் என்று மருத்துவர்கள் அடிக்கடி கூறி வருகிறார்கள். அதையே ஒரு தொடர் கொலை செய்வதற்கான முகாந்திரம் என்று சுய இன்பத்தை கேலி செய்து கொடூரமாக்கியிருக்கிறார் இயக்குநர். சுய இன்பம் குறித்து சமூகம் கருதும் அறியாமைகளையும், போலி ஒழுக்கங்களையும் பரிசீலிப்பதற்கு இப்படம் முனையவில்லை. அது குறித்து ஒரு எதிர்மறை அதிர்ச்சி வைத்தியத்தையே அளிக்கிறது. இதனால சமூகத்திற்கு எந்தப் பயனும் இல்லை. யாரும் இந்த விசயத்தினுள்ளே எட்டிக் கூட பார்க்க மாட்டார்கள்.
இறுதிக் காட்சியில் கொலைகாரன் மலை உச்சியில் இருந்து குதிக்கிறான். அதைக் காட்சிப்படுத்தியிருக்கும் விதத்தைக் பார்க்கும் போது அவன் ஒரு சுதந்திரப் பறவை போல காற்றில் பறக்கிறான். ஜெயமோகனது சிறுகதை ஒன்றின் இறுதியில் தற்கொலைக் காட்சி ஒன்று வரும். அதில் பூமித்தாய் அவனை எடுத்து வாரிக் கொண்டாள் என்ற வரி தன்னை கவர்ந்தது என்று மிஷ்கின் கூறியிருக்கிறார். இந்தக் காட்சியும் கூட அந்தக் கவர்ச்சியின் பாற்பட்டதுதான்.
‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியை திரையில் விசிலடித்து ரசித்து வந்த தமிழ்ச் சமூகம், பெரியார் பற்றிய அவரது சமீபத்திய பேச்சுக்களை சமூக வலைத்தளங்களிலும் பொதுவெளியிலும் கிண்டலடித்துக் கண்டனமும் செய்து வருகிறது.
சங்க பரிவாரக் கும்பல் குருமூர்த்தி மூலமாக தனது தமிழக முகமாக ரஜினிகாந்தை ஒரு ‘ஆளுமை’யாகக் கட்டமைக்கத் திட்டமிட்டுவரும் நிலையில், அந்த ‘ஆளுமை’ சிதைக்கப்படுவதைக் கண்டு தாங்க முடியாத இந்து தமிழ் திசை தனது தலையங்கத்தின் தொடக்கத்திலேயே இந்தக் ‘கொடுமைகளை’ எல்லாம் குறிப்பிட்டு தமிழகத்தில் “சமூக வெளி மோசமாகி” விட்டதாக வருந்துகிறது.
உள்நுழைந்ததும், துக்ளக் கூட்டத்தில் பெரியார் விவகாரத்தை ரஜினி பேசுவதற்கான நியாயத்தை நம்மிடையே முன் வைத்து நமது அங்கீகாரத்தைக் கோருகிறது இந்து தமிழ் திசை. சோ ராமசாமியின் தைரியத்துக்கு உதாரணம் கொடுப்பதற்காகத் தான் 1971 சேலம் மாநாட்டைப் பற்றி ரஜினி குறிப்பிட்டாராம். அதாவது, “ரஜினி பெரியாரைப் பற்றி பேசியதில் வேறெந்த உள்நோக்கமும் இல்லை என்பதைத்தான் இந்து தமிழ்திசை நமக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறது.
அடுத்ததாக, பெரியார் நடத்திய சேலம் மாநாட்டில் கடவுள் சிலைகள் அவமதிக்கப்பட்டதை வேறு யாரும் கண்டிக்கவில்லை; சோ ராமசாமிதான் கண்டித்து எழுதினார் என்ற ‘வரலாற்றுத்’ தகவலை துக்ளக் மேடையில் ரஜினிகாந்த் சாதாரணமாக பேசியதற்காக பெரியாரிய, முற்போக்கு அமைப்புகள் கண்டனங்களையும் முற்றுகைப் போராட்டங்களையும் அறிவித்திருப்பது கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது எனக் குறிப்பிடுகிறது இந்து தமிழ் திசை.
நிர்வாணமாக செருப்பு மாலை போட்டு ஊர்வலம் எடுத்துச் சென்றனர் என உண்மைக்குப் புறம்பாக ரஜினிகாந்த் பேசியதைக் குறிப்பிடாமல், ஒரு சாதாரண விசயத்தை ரஜினிகாந்த் பேசியதற்காக அவருக்கு எதிராக பெரியாரிய அமைப்புகள் களத்தில் இறங்கிப் போராடுகிறார்கள் என்ற தோற்றத்தை இதன்மூலம் கொடுத்துவிட்டுக் கடந்து செல்கிறது இந்து தமிழ் திசை.
அடுத்த சில பத்திகளுக்குப் பிறகு,
“பெரியாரியர்களின் மொத்த வாதமும் இந்த விஷயத்தில் ஒன்றுதான், “ரஜினி குறிப்பிட்டபடி ராமர் – சீதை படங்கள் நிர்வாணமாகவோ செருப்பு மாலை அணிவித்தோ எடுத்துச் செல்லப்படவில்லை; அந்த ஊர்வலத்தில் பெரியார் மீது காலணி வீசப்பட்டதன் எதிர்வினையாகவே கடவுளர் படங்கள் காலணியால் அவமதிக்கப்பட்டதானது நடந்துவிட்டது” என்பதே அது.” என்கிறது.
மேற்கண்ட பத்தியில், ரஜினி தவறான தகவலைப் பேசியதாக பெரியாரியர்கள் சொல்வதாகக் கூறும் இந்து தமிழ்திசை அது குறித்து தமது கருத்தைப் பதிவு செய்யாமல், பின்வருமாறு அதைக் கடந்தும் செல்கிறது. “சரி, ரஜினி சொன்ன அந்த ஒரு தகவலில் தவறு இருப்பதாகவே கொண்டாலும், ஒரு மறுப்பு அறிக்கையோடு முடிந்திடக்கூடிய விஷயம்தானே இது? இதற்கு ஏன் இவ்வளவு பதற்றம்?” என்றும் வினவுகிறது.
பிரச்சினையின் நடுநாயகமாக வீற்றிருப்பது துக்ளக் பத்திரிகை. அதன் ஆசிரியர்களுள் ஒருவரான ரமேஷ், ராமர், சீதை சிலையை நிர்வாணமாகக் கொண்டு சென்றார்கள் என ரஜினி கூறியது தவறான தகவல் என ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார். ஆனால் இந்து தமிழ் திசையைப் பொறுத்தவரையிலும் செத்துப் போன சோ ராமசாமியே மீண்டும் வந்து ரஜினி சொன்னது பொய் எனக் கூறினாலும் அதன் மீது தன்னுடைய கருத்தைக் கூற தயாராக இல்லை என்பதை மேற்கண்ட அதன் வாசகங்கள் நமக்குச் சொல்கின்றன.
நமக்குத் தெரிந்தவரையில் தலையங்கம் என்பது நடப்பு நிகழ்வுகளின் மீது ஒரு பத்திரிகை தனது சொந்தக் கருத்தை பகிரங்கமாகப் பேசுவதற்கான பகுதி.
நிர்வாண ராமர், சீதா சிலையை பெரியார் ஊர்வலமாகக் கொண்டு சென்றார் என ரஜினி சொன்ன தகவல் சரியானதா ? தவறானதா ? அதன் மீது இந்து தமிழ்திசையின் கருத்து என்ன ? “ரஜினி சொன்னது தவறுதான். ஆனாலும் அதைப் பெரிதுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை” என்று கூட சொல்லட்டும், பரவாயில்லை. அல்லது “ரஜினி சொன்னதில் எந்தத் தவறும் இல்லை” என்று கூட சொல்லட்டும்; ஆனால் அதை நேரடியாகச் சொல்லக்கூடிய நேர்மை வேண்டுமல்லவா? அதுதானே யோக்கியமான பத்திரிகைக்கு அழகு ?
அடுத்ததாக ரஜினி மன்னிப்பு கேட்க மாட்டேன் எனச் சொன்னபிறகும் நீதிமன்றம் செல்வதாக பெரியாரிய இயக்கங்கள் கூறியிருப்பது, இந்து தமிழ் திசையைப் பொறுத்தவரையில் அபத்தமானதாம்; கருத்துச் சுதந்திரத்துக்கு விரோதமானதாம்; கண்டனத்துக்குரியதாம்.
கூச்சமே இல்லாமல் ஒரு பொய்யான தகவலைச் சொல்லிவிட்டு, அது பொய்தான் என்பதை பலரும் நிரூபித்த பின்னரும், மன்னிப்புக் கேட்க முடியாது எனத் திமிராகப் பேசும் ஒரு மனிதன் மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்வது எவ்வகையில் கண்டனத்துக்குரியது என்பதும் கருத்துச் சுதந்திரத்திற்கு விரோதமானது என்பதும் இந்து தமிழ் திசைக்கே வெளிச்சம்.
அந்தத் தலையங்கத்தின் மீதப் பகுதி முழுக்க கருத்துச் சுதந்திரம் பற்றியும், திராவிட இயக்கம் பற்றியும் நம் அனைவருக்கும் வகுப்பு எடுக்கிறது இந்து தமிழ் திசை.
அதில் ஒரு இடத்தில், “இத்தகு சூழலில், கடவுளையே விமர்சிக்கும் அளவுக்குக் கருத்துச் சுதந்திரத்தைக் கொண்டாடும் ஒரு இயக்கம், தம்முடைய தலைவர், இயக்கம் தொடர்பான ஒரு செய்திக்காக இவ்வளவு பதறுவதும் எதிர்ப்பதும் பெரிய முரணாக இருக்கிறது.” என்று பெரியாரிய அமைப்புகளைக் குறிப்பிடுகிறது.
இந்திய சமூகத்தில் ஏற்கெனவே கருத்துச் சுதந்திரம் வழிந்தோடிக் கொண்டிருந்தது போலவும், அதைக் கொண்டாடி கடவுள் எனும் கருத்தாக்கத்தை பெரியார் எதிர்த்தது போலவும் எளிமையாகக் கடந்து போகிறது தமிழ்திசை.
கடவுளர்களது புராணக் கட்டுக்கதைகள் மூலம் சாதிய படிநிலையை சமூக யதார்த்தமாக மாற்றிய பார்ப்பனியத்தை எதிர்த்துப் பெரியார் நடத்திய கலகத்தின் விளைவாக வெற்றிகொள்ளப்பட்டதுதான் தமிழகத்தில் தற்போது நிலவும் கருத்துரிமை. பார்ப்பனியத்துக்கு எதிரான போராட்டத்தின் விளைபொருள் அது.
அவ்வகையில் திராவிட, ஜனநாயக, முற்போக்கு இயக்கங்களால் வென்றெடுக்கப்பட்ட கருத்துரிமையை, தான் பேசியது தவறு எனத் தெரிந்தே அவதூறு பேசும் அரைவேக்காட்டு ரஜினியின் உளறுவதற்கான உரிமையோடு ஒப்பிடுவதன் மூலம் கருத்துச் சுதந்திரத்தின் மீது புல்டோசரை ஏற்றுகிறது இந்து தமிழ்திசை.
ஜல்லிக்கட்டு போராட்டம், ஒக்கிப் புயல் , தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம், பொள்ளாச்சி பாலியல் வன்முறை, பாபர் மசூதி இடிப்பு, குடியுரிமை திருத்தச் சட்டம் என பல்வேறு விவகாரங்களிலும் செய்திகளை வலதுசாரி – ஆளும்வர்க்க சார்புத்தன்மையோடு நைச்சியமாக இந்து தமிழ் திசை எழுதி வந்திருக்கிறது என்பது நாம் அறிந்த வரலாறுதான் !
அந்த வரலாற்றில் இது பத்தோடு பதினொன்றுதான் எனினும், நமது ஆதங்கம் எல்லாம் கருத்து சுதந்திரத்திற்கு இந்தச் சாத்தான் எல்லாம் வந்து வேதம் ஓதுகிறதே என்பதுதான் !
பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தோன்றிய தேசியவாதக் கோட்பாடுகள் இன்று உலகம் முழுவதும் பரவியுள்ளன. பண்டைய காலத்து பெருமை பேசுவதும், ஆயிரம் வருடங்களானாலும் இனம் மாறவில்லை என்று நம்புவதும் தேசியவாதத்தின் கொள்கைகள். தமிழ்த்தேசியம் என்றாலும், ஜெர்மன் தேசியம் என்றாலும் அதில் எந்தக் குறையும் இல்லை. எப்போதுமே மொழி அடிப்படையில் உருவாக்கப்படும் தேசியவாதம் ஒரு கற்பிதம் தான். ஜெர்மன் தேசியமும் அதற்கு விதிவிலக்கல்ல.
உண்மையில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தான் ஜேர்மனியர்களுக்கு “இன உணர்வு” ஏற்பட்டது. அதற்கு முன்னர் யாருமே தம்மை ஜெர்மனியர் என்று அழைத்துக் கொள்ளவில்லை. அவர்கள் ஒன்றில் புரூசியர், ஆஸ்திரியர் என ராஜ்ஜியத்தின் பெயரால் அழைக்கப் பட்டனர். அல்லது அவரவர் வாழ்ந்த பிரதேசத்தின் பெயரால் அழைக்கப் பட்டனர். அல்லது கத்தோலிக்கர், புரட்டஸ்தாந்துக்காரர், யூதர்கள் என்று மதத்தின் பெயரால் அழைக்கப் பட்டனர். பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையில் ஜெர்மன் இனத்தவர்கள் ஒற்றுமையில்லாமல் தமக்குள் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டனர்.
1860 -களில் ஜெர்மனியின் வரைபடம்.
ஜெர்மனியர்கள் என்றால் யார்? ஆங்கில மொழியில் ஜெர்மன் என்று அழைக்கப் பட்டாலும், ஜெர்மன்காரர்கள் தம்மை டொய்ச்சே என்று அழைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் பேசும் மொழி டொய்ச் என்றும், அவர்களது நாடு டொய்ச்லாந்து என்றும் அழைக்கப் படுகின்றது. பிரெஞ்சு, ஸ்பானிஷ் காரர்கள் தமது மொழியில் அலெமான் என்று அழைக்கிறார்கள். ஜெர்மன், அலெமான் என்பன பண்டைய காலத்தில் ஜெர்மனியர்களை குறிக்கப் பயன்படுத்தப் பட்ட பெயர்ச் சொற்கள் தான். அதே நேரம் டச்சு, பிரெஞ்சு, ஆங்கிலேயர் என்பன கூட ஜெர்மன் இனத்தவரைக் குறிப்பிடும் சொற்கள் தான்.
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர், ஐரோப்பாக் கண்டத்தில் ரோம சாம்ராஜ்யத்திற்கு வடக்கே வாழ்ந்த மக்கள் நாகரிகமடையாத காட்டுமிராண்டிகளாக கருதப் பட்டனர். ரோமர்கள் அந்த மக்களை “கெர்மானி” (Germani) எனும் பொதுப் பெயரில் அழைத்தனர். அதுவே பிற்காலத்தில் ஆங்கிலத்தில் ஜெர்மனி ஆகியது. ஆனால், கெர்மானி என்பது ஒரே மொழி பேசும், ஒரே இனத்தைக் குறிக்கும் சொல் அல்ல. இன்றைய ஜெர்மானியர்கள் மட்டுமல்லாது, டச்சுக்காரர்கள், டேனிஷ்காரர்கள், சுவீடிஷ்காரர்கள், நோர்வீஜியர்கள் எல்லோரும் ரோமர்களின் பார்வையில் கெர்மானி தான்.
உண்மையில் அன்றிருந்த ஜெர்மன் இனத்தவர்கள் நாகரிக வளர்ச்சி அடைந்திருக்கவில்லை. அவர்கள் நகரங்களை கட்டவுமில்லை. அவர்களது மொழிக்கு எழுத்து வடிவம் இருக்கவில்லை. அவர்கள் இடி, மின்னல், மரங்கள் போன்றவற்றை வணங்கும் இயற்கை வழிபாட்டை பின்பற்றினார்கள். அத்துடன் ஜெர்மன் இனக்குழுக்கள் அடிக்கடி தமக்குள் ஒற்றுமை இல்லாமல் அடிக்கடி யுத்தம் செய்து கொண்டிருந்தன. அதனால் பெருந்தொகையிலான அகதிகள் ரோமர்களின் நாட்டுக்குள் தஞ்சம் கோரி இருந்தனர்.
இன்று ஆப்பிரிக்கா, ஆசியாவில் இருந்து புலம்பெயரும் அகதிகளை தடுப்பதற்காக, ஐரோப்பியக் கோட்டை எனும் பெயரில் எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப் படுவது தெரிந்ததே. அதே மாதிரியான சூழ்நிலை தான் பண்டைய ரோம சாம்ராஜ்யத்திலும் நிலவியது. இருண்ட ஐரோப்பாவில் இருந்து ஜெர்மன் அகதிகள் வருவதைத் தடுப்பதற்காக ரோம சாம்ராஜ்யத்தின் வட புற எல்லைகள் பலப்படுத்தப் பட்டன. தெற்கே சுவிட்சர்லாந்தில் இருந்து வடக்கே நெதர்லாந்து வரை ஓடிக் கொண்டிருக்கும் ரைன் நதி தான், அன்று ரோமர்களின் நாகரிகமடைந்த ஐரோப்பாவையும், ஜெர்மனியர்களின் காட்டுமிராண்டி ஐரோப்பாவையும் பிரிக்கும் எல்லையாக தீர்மானிக்கப் பட்டது.
அதற்காக, ஜெர்மனியர்கள் எல்லோரும் ரோம ராஜ்ஜியத்தின் எல்லைக்கு வெளியே வாழ்ந்தார்கள் என்று அர்த்தமில்லை. கணிசமான அளவு ஜெர்மன் இனத்தவர்கள் ஏற்கனவே ரோமப் பேரரசின் குடிமக்களாக உள்வாங்கப் பட்டு விட்டனர். இதற்கு நாம் பெரியளவு யோசிக்கத் தேவையில்லை. ஐரோப்பிய வரைபடத்தில் ரைன் நதிக்கு தெற்கில் உள்ள பிரதேசங்களை பார்த்தாலே போதும்.
அதாவது, இன்றைய நெதர்லாந்தில் ரொட்டர்டாம் நகருக்குக் கீழே உள்ள பகுதியும், பெல்ஜியம் முழுவதும் ரோம நாட்டிற்குள் இருந்தன. அங்கு வாழ்ந்தவர்கள், இன்றைக்கும் கூட, டச்சு மொழி (தற்காலத்தில்: நெடர்லான்ட்ஸ் மற்றும் பிளாம்ஸ்) பேசும் ஜெர்மன் இனத்தவர்கள். அத்துடன் இன்றைக்கு தனிநாடாக உள்ள லக்சம்பேர்க், மற்றும் பிரான்சின் மாகாணமாக உள்ள அல்சாஸ், லோரேன் பிரதேசங்களில் வாழ்பவர்களும் ஜெர்மன் இனத்தவர்கள் தான். இன்றைக்கும் அவர்கள் பேசும் மொழிகள், உண்மையில் ஜெர்மனின் கிளை மொழிகளே!
மேற்குறிப்பிட்ட மக்கள் சமூகத்தினர், ரோம மயமாக்கப் பட்ட ஜெர்மனியர்கள் எனலாம். அவர்களில் படித்தவர்கள் லத்தீன் மொழி பேச, எழுதத் தெரிந்து வைத்திருந்தனர். இந்த “நாகரிக வளர்ச்சி” தான் பிற்காலத்தில், தனித்துவமான ஜெர்மன் மன்னராட்சி தோன்றுவதற்கு அடித்தளம் இட்டது. மத்திய கால ஐரோப்பாவில், அதாவது ரோம சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சியின் பின்னர், ஒரு அசல் ஜெர்மனியரான கார்ல் சக்கரவர்த்தி கெல்ன் (ஆங்கிலத்தில்: கொலோன்) நகரை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தார். கார்ல் மன்னரின் நிர்வாகம் முழுக்க முழுக்க லத்தீன் மொழியில் தான் நடந்தது. அப்போதும் படித்தவர்கள் லத்தீன் பேசினார்கள். ஜெர்மன் மொழி? அது படிப்பறிவில்லாத பாமரர்கள் பேசும் கீழ்த்தரமான மொழியாக கருதப் பட்டது.
ரோமர்கள் ஆட்சிக் காலத்தில், இருண்ட ஐரோப்பாவை அடிபணிய வைக்கும் இராணுவ நடவடிக்கைகள் இடம்பெற்றன. அதற்கான போர்களில் ஈடுபட்ட ரோம இராணுவத்தில், கணிசமான அளவில் ஜெர்மன் மொழி பேசும் வீரர்களும் இருந்தனர். ரைன் நதிக்கு அப்பால் சுதந்திரமாக வாழ்ந்த ஜெர்மனியர்களின் பார்வையில், அந்த வீரர்கள் துரோகிகளாக, ஒட்டுக் குழுக்களாக தெரிந்ததில் வியப்பில்லை. இருப்பினும் காலப்போக்கில் “காட்டுமிராண்டி ஜெர்மனியர்களும்” ரோம இராணுவத்தின் கீழ் இயங்கிய கூலிப் படையில் சேர்த்துக் கொள்ளப் பட்டனர்.
“காட்டுமிராண்டி ஜெர்மனியர்கள்” எதற்கும் அஞ்சாத வீரர்களாக இருந்த படியால், அவர்கள் ரோமர்களால் பிரித்தானியா தீவு வரை கொண்டு செல்லப் பட்டனர். அதனால், ரோமர்கள் காலத்திலேயே பெருமளவு ஜெர்மானியர்கள் இன்றைய பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகளில் சென்று குடியேறத் தொடங்கி விட்டனர். அவர்கள் பெரும்பாலும் ஆண்களாக இருந்த படியால், அடுத்த வந்த தலைமுறையினர் ஜெர்மன் மொழியை மறந்து விட்டனர். ஏனெனில் பொதுவாக தாய்மார் ஊடாகத் தான் மொழி கடத்தப் படுகின்றது.
மத்திய காலத்தில், கிறிஸ்தவ மத ஆட்சிக் காலத்தில் தான், இன்றைய ஐரோப்பிய மொழிகள் வளர்ச்சி அடைந்தன. சாதாரண பாமர மக்களுக்கும் கிறிஸ்தவ மதத்தை பரப்ப வேண்டிய கட்டாயம் இருந்தமை அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். தேவாலயங்களில் லத்தீன் மொழி பயன்படுத்தப் பட்டாலும், பொது மக்களுக்கு புரியும் மொழியிலும் செயலாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதனால் நடைமுறைக் காரணங்களுக்காக “மக்களின் மொழி” பயன்படுத்தப் பட்டது. அது லத்தீன் மொழியில் தெயோடிசே (Theodisce) என அழைக்கப் பட்டது. அது காலப்போக்கில் மருவி டொய்ச் (Deutsch) ஆனது. பிற்காலத்தில், ஜெர்மனியர்கள் அதையே தமது மொழியின் பெயராக ஏற்றுக் கொண்டு விட்டனர்!
தெயோடிசே தான் ஆங்கிலேயரால் டச்(Dutch) என்றும் அழைக்கப் பட்டது. டச் என்பது நெதர்லாந்து, பெல்ஜியத்தில் வாழும் மக்கள் பேசும் மொழியை குறிப்பிடும் ஆங்கில பெயர்ச் சொல். இன்றைய காலத்தில் டச், டொய்ச் (ஜெர்மன்) இரண்டும் வெவ்வேறு மொழிகளை குறிப்பிடும் சொற்கள். ஆனால் குறைந்தது ஐநூறு வருடங்களுக்கு முன்னராவது அது ஜெர்மனின் கிளை மொழியாக கருதப் பட்டு வந்தது.
பதினைந்தாம் நூற்றாண்டில், வட ஜெர்மனியில் லுய்பேக் நகரை மையமாகக் கொண்டு ஹான்சே எனும் வணிகர்களின் அமைப்பு இயங்கியது. மேற்கே அன்த்வேர்பன் (பெல்ஜியம்) முதல் கிழக்கே ரீகா (லாட்வியா) வரையில் ஹான்சே வணிகர்களின் பணத்தால் வளர்ந்த நகரங்கள் பல உண்டு. அன்று வர்த்தக நோக்கிற்காக ஒரு பொது மொழி தேவைப் பட்டது.
அப்போது தரப்படுத்தப் பட்ட ஜெர்மன் மொழி, பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையில் “நேடர் டொய்ச்”(தாழ்நில ஜெர்மன்) என்ற பெயரில் புழக்கத்தில் இருந்தது. இன்றைய ஜெர்மனியில் நேடர் டொய்ச் அழிந்து விட்டது. ஆனால் மத்திய காலத்து நேடர் டொய்ச் பிற்காலத்தில் “நெடர் லான்ட்ஸ்” (டச்) என்ற பெயரில் ஒரு தனியான மொழியாகி விட்டது. தென் ஆப்பிரிக்காவில் பேசப்படும் ஆப்பிரிகான்ஸ் மொழியும் அதிலிருந்து பிரிந்து சென்ற தனி மொழி தான்.
சிலுவைப் போர் (மாதிரிப் படம்)
இதற்கிடையே மத்திய கால ஐரோப்பாவில் இன்னொரு அரசியல்- சமூக மாற்றம் ஏற்பட்டது. ஆயிரம் வருடங்களுக்கு முன்னரும் கிழக்கு ஐரோப்பாவில் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றாத பல இனங்கள் வாழ்ந்தன. அன்றிருந்த போப்பாண்டவர் அங்கெல்லாம் வாள்முனையில் கிறிஸ்தவ மதத்தை பரப்ப வேண்டுமென்றார். அதற்காக தொய்ட்டன்ஸ் எனப்படும் ஜெர்மன் குதிரைப் படையினரை ஒரு சிலுவைப் போருக்கு அனுப்பினார். கிழக்கு ஐரோப்பாவில் கிறிஸ்தவ மதம் பரப்பச் சென்ற ஜெர்மன் படையினர், பெருமளவு நிலங்களை கைப்பற்றி காலனிப் படுத்தினார்கள். அங்கு பெருமளவு ஜெர்மன் இனத்தவரை குடியேற்றினார்கள். குறிப்பாக இன்றைய போலந்தின் வட மேற்குப் பகுதிகள் ஜெர்மன்மயமாகின.
இன்று போலந்துக்கும், லிதுவேனியாவுக்கும் இடையில் காலினின்கிராட் எனும் பெயரில் ஒரு சிறிய நிலப்பகுதி ரஷ்யாவுக்கு சொந்தமாக உள்ளது. அது ஒரு காலத்தில் கேனிங்க்ஸ்பேர்க் என்ற பெயரில் ஜெர்மனியர்களின் பிரதேசமாக இருந்தது. அன்றைய காலத்தில் வட கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்த இனத்தவர்கள் “நாகரிகமடையாத காட்டுமிராண்டிகளாக” கருதப் பட்டனர். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் ரோமர்கள் ஜெர்மனியர்களை பார்த்து நாகரிகமடையாத காட்டுமிராண்டிகள் என்றனர். அதே ஜெர்மனியர்கள் கிறிஸ்தவர்களாக மாறிய பின்னர், கிழக்கு ஐரோப்பாவில் இயற்கை வழிபாடு செய்த மக்களை நாகரிகமடையாத காட்டுமிராண்டிகள் என்றனர்.
காலனிய காலத்தில் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் வாழ்ந்த மக்களை இந்துக்கள் என்ற பொதுப் பெயரில் அழைத்த மாதிரி, அன்றைய ஜெர்மனியர்கள் வட கிழக்கு பிராந்திய மக்களுக்கு “புரூசீ” என்று ஒரு பொதுப் பெயர் சூட்டி இருந்தனர். சில நூறாண்டுகளுக்கு பின்னர், அந்த இடங்கள் யாவும் ஜெர்மனியரின் முழுமையான கட்டுப்பாட்டில் வந்த பின்னர் “புரூசியா” (Prussia) என அழைக்கப் பட்டது. வெளியுலகில் இருந்தவர்களுக்கு, புரூசியா என்பது ஜெர்மனியை குறிக்கும் ஒத்த கருத்துச் சொல்லாக தென்பட்டது. அங்கிருந்த ஜெர்மனியர்களும் தம்மை புரூசியர்கள் என அழைத்துக் கொண்டனர்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏறக்குறைய இன்றுள்ள ஜெர்மனியின் நிலப்பரப்பை உள்ளடக்கிய புரூசிய சாம்ராஜ்யம் இருந்தது. அப்போது ஐரோப்பா முழுவதும் தேசியவாத கொள்கைகள் செல்வாக்குப் பெறத் தொடங்கி விட்டன. அதனால் ஜெர்மனியர்களின் தேசம் எனும் பொருள்படும் “டொய்ச்லாந்து” என்ற பெயர் சூட்டப் பட்டது. இருப்பினும் “ஜெர்மனியரின் தேசத்தில்” போலிஷ், லிதுவேனிய, இன்னும் பல மொழிகளைப் பேசும் சிறுபான்மையின மக்கள் வாழ்ந்தனர்.
அதைவிட கணிசமான அளவு ஜெர்மன் மொழி பேசும் மக்கள் ஆஸ்திரியா சாம்ராஜ்யத்தில் வாழ்ந்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையில் புரூசியாவும், ஆஸ்திரியாவும் இடையறாது போரில் ஈடுபட்டிருந்தன. அதாவது இரண்டு ஜெர்மன் ராஜ்ஜியங்கள் நீண்ட காலம் பகைமை பாராட்டி வந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், அதுவும் ரஷ்யா, பிரித்தானியா ஆகிய வல்லரசுகளின் நெருக்குதல் காரணமாக ஒன்று சேர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அது வரைக்கும், புரூசியாவில், ஆஸ்திரியாவில் வாழ்ந்த யாருக்கும் ஜெர்மன் இன உணர்வு இருக்கவில்லை.
புரூசியா அரசகுடும்பத்தின் அணிகலன்கள். (படம் : நன்றி – விக்கிபீடியா)
பதினெட்டாம் நூற்றாண்டு வரையில் புரூசியாவிலும், ஆஸ்திரியாவிலும் வாழ்ந்த ஜெர்மன் மேல்தட்டு வர்க்கத்தினர் பிரெஞ்சு மொழி பேசினார்கள். அந்தக் காலத்தில் அதுவே நாகரிகமடைந்த மொழியாக கருதப் பட்டது. இன்றைக்குப் பலர் ஆங்கிலம் பேசுவதில் பெருமை கொள்வது மாதிரி, அன்றைய ஐரோப்பிய மேட்டுக்குடியினர் பிரெஞ்சு பேசுவதில் பெருமைப் பட்டனர். இன்றைய ஜெர்மனியிலும், ஆஸ்திரியாவிலும் உத்தியோகபூர்வ ஜெர்மன் மொழியாக உள்ள ஹோக் டொய்ச் (உயர்ந்த ஜெர்மன்) பிரெஞ்சு மொழியின் நிழலில் வளர்ச்சி அடைந்தது.
“ஜெர்மன் ஷேக்ஸ்பியர்” என்று அழைக்கப் படக் கூடிய இலக்கிய மேதை கோதே கூட பிரெஞ்சு மொழியை உயர்வாகக் கருதினார். பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர் நடந்த நெப்போலியன் போர்களின் போது ஜெர்மனி முழுமையாக ஆக்கிரமிக்கப் பட்டது. அதற்காக எல்லா ஜெர்மனியர்களும் நெப்போலியனை ஓர் அந்நிய ஆக்கிரமிப்பாளராக கருதவில்லை. உண்மையில் நவீன ஜெர்மனியின் அடித்தளம் நெப்போலியனால் (ஒரு பிரெஞ்சு ஆக்கிரமிப்பாளர்) இடப்பட்டது என்று சொன்னால் அது மிகையாகாது. நெப்போலியன் காலத்தில் இன்றைய ஜெர்மனியின் பெரும்பகுதியை உள்ளடக்கிய “ரைன் சமஷ்டிக் குடியரசு” உருவானது. அங்கு நிலப்பிரபுக்களின் அதிகாரம் பறிக்கப் பட்டது. சட்டத்தின் ஆட்சி ஏற்பட்டது. சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம் என்ற நடைமுறை வந்தது.
1848-ம் ஆண்டு ஜெர்மனியில் ஒரு புரட்சி நடந்தது. அது பிரெஞ்சுப் புரட்சியின் கொள்கைகளை பின்பற்றிய ஜெர்மன் மத்தியதர வர்க்கத்தினரின் புரட்சி. அவர்கள் அமெரிக்கப் புரட்சியையும் முன்மாதிரியாகப் பார்த்தனர். அவர்களின் கோரிக்கைகள் பின்வருமாறு:
மக்கள் பிரதிநிதிகளுக்கான பாராளுமன்றம் ஒன்றை உருவாக்க வேண்டும்.
அரசமைப்பு சட்டம் எழுதப்பட வேண்டும்.
பிரஜைகளின் தனி மனித உரிமைகள் குறித்த சட்டம் கொண்டு வர வேண்டும்.
தடையற்ற ஊடகச் சுதந்திரம் வேண்டும்.
பெர்லினில் நடந்த ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்கான துப்பாக்கிப் பிரயோகத்தில் முன்னூறு பேரளவில் கொல்லப் பட்டனர். அதன் விளைவாக ஜெர்மன் புரட்சி தோல்வியுற்றது. இருப்பினும் அரசு முன்பு போல இயங்க முடியவில்லை. ஆர்ப்பாட்டக் காரர்களின் கோரிக்கைகளை ஓரளவிற்கேனும் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. புதிதாக கொண்டு வரப்பட்ட பாராளுமன்ற அமைப்பில் ஆரம்பத்தில் பழமைவாதக் கட்சிப் பிரதிநிதிகள் மட்டுமே வீற்றிருந்தனர். சில வருடங்களுக்கு பின்னர் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக உருவாக்கப் பட்ட சோஷலிசக் கட்சியும் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்திற்கு போட்டியிட்டது.
இந்தக் காலகட்டத்தில் ஜெர்மன் தேசியவாதம் தோன்றியது. அது மொழி அடிப்படையிலான கொள்கையை முன்வைத்தது. வாரிசு உரிமை அடிப்படையில் ஆளும் மன்னர் பரம்பரைக்கு பதிலாக, ஜெர்மன் மக்களே ஜெர்மனியை ஆள வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தது. அந்தக் காலத்தில் தேசியவாதக் கொள்கை முற்போக்கானதாக கருதப்பட்டது. லிபரல் சித்தாந்தத்தை பின்பற்றியது. ஆனால் ஐரோப்பிய நாடுகளை ஆண்ட மன்னர்கள் தேசியவாதத்தை கண்டு அஞ்சினார்கள்.
தேசியவாதத்திற்கு இடம் கொடுத்தால் தமது அதிகாரம் முடிவுக்கு வந்து விடும் என்று மன்னர்கள் அஞ்சினார்கள். அடுத்து வந்த ஆண்டுகளில் அந்த அச்சத்தை நிரூபிக்கும் வகையில் பல சம்பவங்கள் நடந்தன. ஆனால் காலம் மாறிவிட்டிருந்தது. கிழக்கே ரஷ்ய சாம்ராஜ்ய விஸ்தரிப்பு காரணமாக, தமக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்த புரூசிய, ஆஸ்திரிய மன்னர்கள் ஒன்று சேர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. வரலாற்றில் முதல் தடவையாக ஜெர்மன் பேசும் மக்கள் அனைவரும் ஒரே கூட்டமைப்பின் கீழ் ஒன்று சேர்ந்தனர். அது ஜெர்மன் தேசியவாதத்தின் எழுச்சிக்கு சாதகமாக அமைந்து விட்டது.
கலையரசன்
கலையரசன் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர். வரலாறு, அரசியல், பண்பாடு ஆகியன குறித்து மார்க்சிய நோக்கில் கலையகம் தளத்தில் தொடர்ந்து எழுதி வருபவர். வெகுசன ஊடகப் பிரச்சாரத்தின் விளைவாக முதலாளித்துவக் கண்ணோட்டத்திற்கு தம்மையறியாமல் ஆட்பட்டிருக்கும் வாசகர்களை மீட்பதில் இவருடைய எழுத்தின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது.
இந்தியப் பொருளாதாரம் இன்று தீர்வுகான முடியாத அளவிற்கு நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளது. இதனால் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி படுவீழ்ச்சி அடைந்துள்ளது. நுண்கடன் கொடுமையில் சிக்கி பெண்கள் விபச்சாரத்திற்குத் தள்ளப்படும் அவலம் அதிகரித்து வருகின்றது. ஜி.எஸ்.டி. கொடுமையாலும், பொருளாதாரமந்தத்தாலும் சிறுதொழில் நடத்துவோர், நட்டமடைந்து குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்கின்றனர். சமையல் எரிவாயு, உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மக்களை மேலும் வறுமைக்கு ஆட்படுத்தி வருகிறது.
மோடியின் பா.ஜ.க. அரசோ தத்தளிக்கும் மக்களை மேலும் சுரண்ட அம்பானி, அதானி போன்ற குஜராத், பம்பாய், இராஜஸ்தான் பகுதிகளைச் சார்ந்த பனியா, பார்சி, மார்வாடி, சிந்தி கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் மற்றும் அமேசான், வால்மார்ட் போன்ற பன்னாட்டு முதலாளிகளுக்கும் வரிச்சலுகைகளை அறிவித்ததுடன் நமது பொதுத்துறைகளையும், வங்கி பணத்தையும் வாரிவாரி வழங்கி வருகின்றது.
70 சதவீத மக்களின் சொத்து மதிப்பைவிட (95 கோடி மக்கள்) நான்கு மடங்கு அதிகமாக ஒரு சதவீத பணக்காரர்களிடம் சொத்து குவிந்துள்ளது. 63 இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பை வைத்து 130 கோடி மக்களுக்கும் ஒரு ஆண்டுக்கான பட்ஜெட் (25 இலட்சம் கோடி) போட முடியும். ஏழை – பணக்காரன் ஏற்றத்தாழ்வு அதிகரித்து கொண்டே போகிறது. இந்நிலையில் வேலையற்றவர்களை, வாங்கும்சக்தி அற்றவர்களை ஒழிக்கப்பட வேண்டியவர்கள் என்றே கருதுகிறது.
பா.ஜ.க. அரசு மக்கள் போராட்டங்களை திசைதிருப்பவும், தனது இந்து ராஷ்டிர கொடுங்கனவை அமல்படுத்தவும் தற்போது குடியுரிமை திருத்தச் சட்டத்தை கையிலெடுத்திருக்கிறது. குடியுரிமைச் சட்டத் திருத்தம் மதத்தை அடிப்படையாக வைத்து குடியுரிமையைத் தீர்மானிக்கிறது. ராம் என்ற பாகிஸ்தானிய இந்து அகதி என்.ஆர்.சி. பதிவேட்டின்போது எந்த ஆவணங்களையும் காட்டத் தேவையில்லை . சி.ஏ.ஏ. மூலம் தானாகவே குடியுரிமை கிடைத்துவிடும். ஆனால், பல தலைமுறைகளாக இந்தியாவில் வசிக்கும் ரஹீம் என்ற முசுலீம் என்.ஆர்.சி.யின்படி உரிய ஆவணங்களைக் காட்டத் தவறினால் குடியுரிமை பறிக்கப்படும்; அவரது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்; வதை முகாம்களில் அடைக்கப்படுவர். இந்துக்களாக இருந்தாலும் சொந்த பிறப்பிடத்தை விட்டு வேலைதேடி குடிபெயர்ந்தவர்கள், நகர்ப்புற சேரிகளில் வசிப்பவர்கள் என பல கோடிக்கணக்கான மக்களுக்கும் இச்சட்டம் எதிரானது. உரிய ஆவணங்களைக் காட்டி அதிகாரிகளை திருப்திப்படுத்த முடியாதவர்கள் சந்தேகப்படும் நபர் என்ற பட்டியலுக்கு மாற்றப்படுவர்.
இந்தச் சட்டம் பெரும்பான்மை இந்துமத மக்களுக்கும் எதிரான கொடூர சட்டம். அதுமட்டுமல்ல, மோடி – அமித்ஷா ஆட்சியை எதிர்த்துப் போராடுபவர்கள், விமர்சிப்பவர்கள், சமூக ஊடகங்களில் பதிவிடுபவர்கள் அனைவரையும் தேச துரோகிகள், பாகிஸ்தானின் ஏஜெண்டுகள், துக்கடா கும்பல்கள் என்று முத்திரை குத்துவதோடு அவர்களை ‘எரித்துக் கொல்வோம்’, ‘மண்ணில் புதைப்போம்’ என்று பாசிச ஆணவத்தோடு பேசுகிறது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க காவி கூட்டம். இஸ்லாமியர்களை எதிரியாகக் காட்டி, இந்து ராஷ்டிரத்தை அமைக்க முயல்கிறார்கள். எதிர்ப்பவர்களை கவுரி லங்கேஷ், கல்புர்கியைப் போல் கொலை செய்வார்கள்; அல்லது உபா சட்டத்தில் கைது செய்து விசாரணையின்றி பல ஆண்டுகள் சிறையில் அடைப்பார்கள்; மக்களுக்குள் பிளவை எற்படுத்தி சாதி, மதவெறி மோதல்களை உருவாக்குவார்கள்; பொய்யை ஊதிப் பெருக்கி உண்மையாக்குவார்கள். கார்ப்பரேட் – காவி பாசிசம் மாநிலத்திற்கு தகுந்தாற்போல் எந்த வடிவத்திலும் உருவெடுக்கும்.
டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து அமைதியாக போராடிய மாணவர்கள் மீது போலீசின் கொடூர கொலைவெறித் தாக்குதல், ஜே.என்.யு. பல்கலைக்கழக விடுதியில் நுழைந்து முகமூடி அணிந்த ஏ.பி.வி.பி. குண்டர்கள் நடத்திய தாக்குதல், இதன் மூலம் போராட்டங்களை ஒடுக்கிவிடலாம் எனக் கருதிய பா.ஜ.க. அரசுக்கு எதிராக மொத்த இந்தியாவும் போராடத் துவங்கி உள்ளது. பா.ஜ.க-வின் எந்த சமாதானங்களையும், வாக்குறுதிகளையும், நம்பத் தயாராக இல்லை.
இந்திய முசுலீம்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என மோடி உத்திரவாதம் அளித்த நிலையில்தான் உ.பி. யோகி ஆதித்யநாத் அரசு, பால் வாங்கச் சென்ற முசுலீம் இளைஞரையும் தொழுகைக்குச் சென்ற முசுலீம் இளைஞரையும் முகத்திலும் கண்ணிலும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது. இணையதள முடக்கம், சொத்து பறிமுதல், 144 தடையுத்தரவு, 20-க்கும் மேற்பட்ட முசுலீம்கள் மீது துப்பாக்கிச் சூடு ; ஓய்வுபெற்ற 70 வயதிற்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி உட்பட ஆயிரக்கணக்கானோர் மீது பொய் வழக்கு, கைது, சிறை; போராடுபவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வது; போராட்டக்காரர்களை கலவரக்காரர்கள் என வரையறுத்து அவர்களை பழிவாங்குவேன் என முதல்வர் யோகி சவால் விட்டது என உ.பி.யில் நடந்தது இந்து ராஷ்டிர அரசுக்கான ஒரு வகைமாதிரி.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் 130 கோடி இந்திய மக்களும் இந்துக்களே என சொல்கிறார். பார்ப்பன வர்ணாசிரம சாதி ஒடுக்குமுறை சித்தாந்தத்திற்கு ஆயிரம் ஆண்டு அனுபவம் உள்ளது. பல மதங்களை உண்டு செறித்தவர்கள். பாபர் மசூதியை இடித்து, அதை சரி என்று தீர்ப்பு பெற்றவர்கள். 75 இலட்சம் காஷ்மீர் மக்களை வீட்டுச் சிறையில் உரிமைகளற்றவர்களாக ஆக்கியவர்கள். ஒரே இரவில் பணமதிப்பு நீக்கத்தை அறிவித்து பல நூறு பேரை பலிகொடுத்து நாட்டு மக்களை நடுத்தெருவில் நிறுத்தியவர்கள். குஜராத்தில் இரண்டாயிரம் முசுலீம்களை இனப்படுகொலை செய்தவர்கள். சி.பி.ஐ. நீதித்துறை, ரிசர்வ் பேங்க், இராணுவம், பத்திரிகை, கல்வித்துறை என அனைத்திலும் இந்துத்துவாவை புகுத்தி ஆக்கிரமித்தவர்கள். இவைகள்தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு இந்து ராஷ்டிர கனவை அமல்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் அடிமைத்தனம், சகிப்புத் தன்மை, ஒதுங்கும் போக்கு, வலிமையான எதிர்க்கட்சி இல்லாததும், கார்ப்பரேட் – காவி பாசிஸ்டுகளுக்கு துணிவை வரவழைத்திருக்கிறது.
1 of 3
குடியுரிமைச் சட்டத் திருத்தம் பாசிச பயங்கரவாதத்தை கொண்டுவரும் வாகனமே. எனவே, தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்காக நமது ஆவணங்களை கேட்டு வரும் அதிகாரிகளிடம் எந்த விவரங்களையும் சொல்லாமல் புறக்கணித்து திருப்பி அனுப்ப வேண்டும். ஆதார் அட்டையில், வாக்காளர் அட்டையில், ரேசன் கார்டில் இல்லாத தகவல்களை யாரும் புதிதாக சொல்லிவிட முடியாது. பெற்றோர் பிறந்த இடத்தை கேட்டால் நம் முன்னோர்களின் சுடுகாட்டு கல்லறையைக் காட்டுங்கள்.
குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான இந்தப் போராட்டம் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் சுயசார்பு பொருளாதாரம், கல்வி, வேலை, ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டமாக நாடு முழுவதும் விரிவடைய வேண்டும். ஹிட்லரின் வாரிசுகளான பா.ஜ.க. – மோடி – அமித்ஷாவை அதிகாரத்திலிருந்து தூக்கி எறியாமல் நமக்கு வாழ்வில்லை என முழங்க வேண்டும்.
உயர்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள் அடக்குமுறைக்கு அஞ்சாமல் போராடி வழிகாட்டி உள்ளனர். அதைத் தொடர்ந்து பல்துறை பிரபலங்கள் உட்பட பரந்துபட்ட மக்கள் இந்தியா முழுவதும் கோடிக்கணக்கில் அணிதிரண்டு போராடுகின்றனர்.
அன்று இந்திரா காந்தியின் எமெர்ஜென்ஸி பாசிசத்தை எதிர்த்து நடந்த மாணவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து கோடிக்கணக்கான மக்கள் திரண்டு போராடினார்கள். அதற்குப் பின்னால் இப்படி ஒரு போராட்டம் கார்ப்பரேட் காவி பாசிசத்திற்கு எதிராக இன்று எழுந்துள்ளது. ஆறாண்டு கால மோடி ஆட்சியில் பல்வேறு கொடுமைகளினால் குமுறிக்கொண்டிருந்த மக்கள் அடக்கிவைத்த ஆத்திரத்தை எல்லாம் இந்தப் போராட்டம் மூலம் வெளிக்காட்டியுள்ளனர்.
மோடி – அமித்ஷா பாசிச ஆட்சிக்கு எதிரான போராட்ட அலை ஓங்கட்டும். புதிய இந்தியா எழட்டும்! கார்ப்பரேட் – காவி பாசிசம் வீழட்டும்!
இந்தியாவின் மதப்பூசல்கள் வெறும் இந்து மதத்திற்கும் இசுலாத்திற்கும் இடையே மட்டும் நடக்கவில்லை. மத்திய காலத்தில் இந்திய அளவிலும் தமிழகத்திலும் பவுத்தம் சமணம் சைவம் வைணவம் ஆகியவற்றிற்கிடையே உக்கிரம்மான சச்சரவுகள் நடைபெற்றன. இதில் பல கோவில்கள் அழிக்கப்பட்டன அல்லது மாற்றப்பட்டன. இது பற்றிய சுருக்கமும் முன்வைக்கப்பட்டுள்ளது. மயிலை சீனி வெங்கடசாமி, அருணன், தி.சு.நடராசன், காமாட்சி ஆகியோர் எழுதிய நூல்கள் இதற்குப் பயன்பட்டன. திருவாருர் தங்கராசு அவர்கள் எழுதிய “திருஞானசம்பந்தர்” எனும் நாடக நூலிலிருந்தும் சில செய்திகள் கிடைத்தன.
வழிப்பாட்டுத்தலங்கள் தாக்கப்படுவதும் அழிக்கப்படுவதும் இங்கு மட்டும்தான் நடந்துள்ளதா? இக்கேள்விக்கு விடை என்ன? மங்கோலியர்கள் பாக்தாதை நிர்மூலமாக்கிய பொழுது மசூதிகள் அழிக்கப்பட்டன. சிலுவைப்போர்களின் பொழுது மசூதிகளும் யூதர்களின் வழிபாட்டுத்தலங்களும் ஒரு புறமும், மாதாகோவில்கள் மறுபுறமும் தாக்குதலுக்கு உள்ளாயின. கிறித்துவத்திற்குள் கத்தோலிக்க புராடெஸ்டெண்டு பூசலில் மாதா கோவில்கள் தாக்கப்பட்டன. இசுலாத்தின் பிரிவுகளான சன்னி பிரிவு ஒரு புறமும் ஷியா, இஸ்மாயிலி மற்றும் சுஃபி பிரிவு மறுபுறமும் மோதின.
இப்பொழுதும் மோதல் தொடர்கிறது. இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுமையுமே வழிபட்டுத்தலங்கள் தாக்குதல்களின் இலக்காக இருந்துள்ளன. இன்னும் இருக்கின்றன.
இந்தியச் சூழலில் இந்து மதமும் இசுலாமும் முரண்பட்டுக்கொண்டன என்பது உண்மையே! அதே சமயம் இந்த இரு பெரும் மதங்களும் உறவாடவும் செய்தன. இந்த உறவாடலின் உன்னதமான பிரதிநிதிகள்தான் அக்பரும் கபீரும்! இந்து மதவாதம் மட்டுமல்ல; இசுலாமிய மதவாதமும் அக்பர் மற்றும் கபீரைப்பற்றி பேசுவது இல்லை. இரு பிரிவினருக்குமே அவர்கள் கசக்கின்றனர். இப்புத்தகத்தின் மையப் பொருள், வழிப்பாட்டுதலங்கள் அழிப்பு என்பதால் கபீரைப் பற்றியோ அல்லது அக்பரின் தீன் இலாஹி எனும் புதிய மதத்தைப்பற்றியோ எழுத இயலவில்லை.
இசுலாமிய மன்னர்கள் கோவில்களைப் பாதுகாத்த ஏராளமான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை முன்வைத்துள்ளோம். இசுலாத்தின் சன்னிப்பிரிவில் ஆழ்ந்த பற்று கொண்ட மதவெறியன் எனக் கருதப்படுகின்ற (அது ஓரளவுக்கு உண்மையும் கூட!) அவுரங்கசீப் கூட கோவில்களை பாதுகாத்திட ஆணைகளை பிறப்பித்துள்ளான் என்பது ஆச்சர்யமான ஒன்று அல்லவா? மறுபுறத்தில் மசூதிகளைக் கட்டுவதற்கு உதவிய இந்து மன்னர்களும் உண்டு. இதில் விஜயநகர மன்னர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்!
போரில் தோற்ற இந்து மன்னர்களின் கோவில்களை இசுலாமிய மன்னர்கள் அழித்தனர். மற்ற கோவில்களை அவர்கள் தொடுவது கூட இல்லை! ஏன்? இந்து மன்னர்கள் மசூதிகளை அழித்த உதாரணங்கள் உண்டு. ஒப்பிடுகையில் அவை மிகச்சில! இசுலாமிய மன்னர்களைத் தோற்கடிக்கும் பொழுது இந்து மன்னர்கள் பொதுவாக மசூதிகளை அழித்தது இல்லை! ஏன்? வழிபாட்டுத்தலம் என்ற முறையில் கோவிலுக்கும் மசூதிக்கும் என்ன வேறுபாடு? இவை மிக முக்கியமான கேள்விகளாகும். இக்கேள்விகளுக்கு வரலாறு முன்வைக்கின்ற பதில்தான் மதவாதத்தின் பிரச்சாரம் பொய் என்பதை தெளிவாக்குகிறது.
ஒவ்வொரு மதமும் தனக்கு ஏற்பட்ட அநீதிக்கு பழிவாங்கப் புறப்பட்டால் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு மதமோதல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும். முடிவே இருக்காது! அழிக்கப்பட்ட கோவில்கள் திருப்பித்தரவேண்டும் என சங்பரிவாரத்தின் கோரிக்கை நியாயம் எனில், சமணம் மற்றும் பவுத்தத்திடமிருந்து பறித்த கோவில்களை இந்து மதம் திருப்பித்தர இயலுமா? இது சாத்தியமல்ல! எனவேதான், 15.08.1947 அன்று வழிபாட்டுத்தலங்கள் என்ன நிலையில் இருந்தனவோ அதே நிலை தொடர வேண்டும் என இந்திய அரசாங்கம் பாபர் மசூதி இடிப்பிற்குப் பின்பு சட்டம் இயற்றியது. பாபர் மசூதி இராமஜென்ம பூமிக்கு மட்டுமே விதிவிலக்கு வழக்கு நடப்பதால்!
எனினும் சங்பரிவாரம் தனது செயல்களைக் கைவிடப்போவது இல்லை. மோடி ஆட்சி தனக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என சங்பரிவாரம் எண்ணுகிறது. சங்பரிவாரத்தின் செயல்பாடுகள் மறுபுறத்தில் சிறுபான்மை மதவெறிக்குக் காரணியாக செயல்படுகிறன. எனவே, மதச்சார்பின்மைக்கான இயக்கம் நடத்துவதும் அதில் அனைத்துப் பகுதி மக்களையும் திரட்டுவது ஒன்றே மதவாத சக்திகளைத் தனிமைப்படுத்தும். அதற்கு இச்சிறு நூல் சிறிதளவாவது உதவினால் அது மிகப்பெரிய வெற்றியாக அமையும். (நூலின் முன்னுரையிலிருந்து…)
கோவில் கொள்ளை மட்டுமல்ல; கோவில்களை அழிப்பதும் இந்து மன்னர்களின் போரின் பொழுது நடந்துள்ளது. பத்தாவது நூற்றாண்டில் இராஷ்ட்ரகூடா அரசனான மூன்றாவது இந்திரன் தனது பரம எதிரியான பிரதியாரா அரசனை தோற்கடித்த பொழுது களப்பிரியாவிலிருந்த அவனின் கோவிலை அழித்தான்; அதனை பெருமையாக பதிவும் செய்தான். சிங்கள அரசனான எட்டாம் அகபோதி தமது சரணாகதிக்கு அடையாளமாக இராஷ்ட்ரகூடா மன்னர்களுக்கு அளித்த இரண்டு புத்தர் சிலைகள் 1007-ம் ஆண்டு இராஜேந்திர சோழன் படையெடுப்பின் பொழுது அழிக்கப்பட்டன. அதே போல அபயகிரி சரணாலயத்தில் இருந்த தங்கத்தாலான புத்தர் சிலை(பாண்டிய மன்னனால் கொள்ளை அடிக்கப்பட்டு மீண்டும் சிங்கள அரசனால் மீட்கப்பட்டது) 1017-ம் ஆண்டு இராஜேந்திர சோழன் படையெடுப்பின்பொழுது கொள்ளை அடிக்கப்பட்டு பின்னர் அழிக்கப்பட்டது. (குல வம்சா 55.2021)
11-ம் நூற்றாண்டில் காஷ்மீரை ஆண்ட ஹர்ஷா எனும் மன்னன் கோவில்கள் கொள்ளை அடிக்கவும், அழிக்கவும் தனியாக ஒரு அமைச்சரையே நியமித்தான். அவன் காலத்தில் குஜராத்தில் இருந்த நூற்றுக்கணக்கான ஜைனக்கோவில்கள் கொள்ளை அடிக்கப்பட்டன மட்டுமல்ல; அவை அழிக்கவும்பட்டன. 11-ம் நூற்றாண்டின் மத்தியில் சோழ அரசன் இராசாதிராசன் சாளுக்கியர்களை தோற்கடித்து தலைநகரான வாதாபியை சூறையாடி, முற்றிலுமாக எரித்தான். இயற்கையிலயே வாதாபியில் இருந்த கோவில்களும் எரிக்கப்பட்டிருக்கவேண்டும். சாளுக்கியர்களின் கறுப்பு கல்லாலான வாயிற்காப்போன் சிலையை சோழமன்னன் தன் தலைநகரத்திற்குக் கொண்டுவந்து போரில் வென்றதற்கான பரிசுகளாக மக்களின் பார்வைக்கு வைத்தான்.
இவையெல்லாம் இசுலாமியர்கள் எனப்படும் துருக்கியர்கள் இந்தியாவிற்கு வரும் முன்பே இந்து மன்னர்களால் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட நிகழ்வுகள் ஆகும். இதனை அப்படியே இசுலாமிய மன்னர்கள் தொடர்ந்தனர். துருக்கியர்கள் வருகைக்குப் பின்னரும் கூட இந்து மன்னர்கள் தாம் தோற்கடித்த மன்னர்களின் கோவில்களைக் கொள்ளை அடிப்பதும் அவற்றை அழிப்பதும் தொடர்ந்தனர். (நூலிலிருந்து பக்.37)
ருத்ரா மகாலயா, குஜராத்.
… என்னதான் ஆட்சி இசுலாமிய சுல்தான்களது என்றாலும், ஆளப்படுகிற பெரும்பான்மை மக்கள் இசுலாமியர் அல்லாதவர்கள். அவர்களில் இந்துக்கள், பவுத்தர்கள், ஜைனர்கள் என பல பிரிவினர் இருந்தனர். இந்துக்களும் இன்றைய காலகட்டத்தில் இருந்ததுபோல அல்லாமல் பல பிரிவுகளைக் கொண்டதாக இருந்தனர். பல மதங்களும் பிரிவுகளும் கொண்ட பன்முக தேசத்தை ஆளும்பொழுது, அதற்கே உரிய சில தேவைகள் எழுந்தன. அவற்றில் முக்கியமானது கோவில்களை பாதுகாப்பது ஆகும். அதனை மிகத்தெளிவாக சுல்தான் மன்னர்கள் உணர்ந்திருந்தனர். – “குஸ்ருகான் ராஜாவான பிறகு இந்துக்களுக்கு நிறைய சாதகங்கள் செய்தார். பசுவதையைக்கூட தடை செய்தார்” என எழுதுகிறார் இபன் பதூதா. இயற்கையிலேயே இவன் கோவில்களையும் பாதுகாத்திருக்க வேண்டும். (அருணன்/காலம்தோறும் பிராமணியம் / தொகுதி-2 / பக்:39)
முகம்மதுபின் துக்ளக் தென்னிந்தியப் பகுதியான டெக்கான் பிரதேசத்தை தன் பேரரசின் கீழ் கொண்டு வந்து 13 ஆண்டுகளுக்குப் பிறகு 1326-ம் ஆண்டில் பிதார் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில் செயல்பட உத்தரவாதப்படுத்த தனது அதிகாரிகளை அங்கு அனுப்புகிறான். அந்த சிவன் கோவிலில் சில உள்ளூர் பிரச்சனைகள் காரணமாக வழிபாடு நடக்கவில்லை. மக்கள் சுல்தானின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். மிக விரைவில் அங்கு வழிபாடு தொடங்குவதை உத்தரவாதப்படுத்த வேண்டும் எனும் ஆணையுடன் சுல்தான் தனது அதிகாரிகளை அங்கு அனுப்பிவைத்தான். (P.B. Desai / Kalyana Inscription of Sultan Muhammad, Saka 1248 / Epigraph ialndica 32 (1957-58:165-168) Eaton p-111) (நூலிலிருந்து பக்.41-42)
நூல் : கோவில்கள், மசூதிகள் அழிப்பு உண்மையும் புரட்டும் ஆசிரியர்கள் : அ.அன்வர் உசேன், வெ.பத்மனாபன்
வெளியீடு : பாரதி புத்தகாலயம், 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை,
சென்னை – 600 018. தொலைபேசி எண் : 044 – 2433 2424 | 2435 6935 மின்னஞ்சல் : tamizhbooks@gmail.com
இந்திய மெய்யியலின் அறுபடாத தொடர்வளர்ச்சியைத்
தமிழகத்தில் மட்டுமே காணமுடியும் !
♦ இந்திய மெய்யியல் வரலாற்றில் தமிழர்களின் இடம் என்ன?
தமிழர்களின் பங்களிப்பு என்ன?
இந்த விஷயத்தைப் பேசும் முன்னர் இந்திய மெய்யியல் வரலாறு எழுதப்பட்ட வரலாற்றைப் புரிந்துகொள்வது அவசியம். அப்போதுதான் தமிழில் உள்ள விவரங்கள் சரியாக ஏன் கவனம் பெறவில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடியும். இந்திய மெய்யியல் வரலாறு எழுதப்படுவதற்கான முயற்சிகள் 18, 19-ஆம் நூற்றாண்டுகளில் தொடங்கப்பட்டன. இம்முயற்சிகளை இந்தியர்கள் தொடங்கவில்லை.
இந்தியத் துணைக்கண்டத்தை அடிமைப்படுத்திய ஆங்கிலேயர்களுக்கு இங்கு எழுந்த குற்றவியல், உரிமையியல் தொடர்பான ஆட்சி அலுவல் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு ஒருங்கிணைந்த சட்டமுறை தேவைப்பட்டது. ஒருங்கிணைந்த சட்ட முறைக்கான அடிப்படை ஏதாவது இருக்கின்றதா, பிளவுபட்டுக் கிடக்கின்ற சமூகத்திற்கு ஏதாவது ஒத்த தன்மை இருக்கின்றதா என்று தேடுகின்றார்கள். அப்படிப் பார்க்கும்போது காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை மனுஸ்மிருதி பொதுவாக ஏற்கப்படுவதைக் கண்டுபிடிக்கிறார்கள்.
கல்கத்தாவில் உள்ள ஆசியவியல் கழக கட்டிடம்.
மனுஸ்மிருதியைக் கண்டு பிடித்துப் பதிப்பித்து மொழிபெயர்க்கிறார்கள். மனுஸ்மிருதியின் அடிப்படையான நால்வருணக் கோட்பாட்டிற்கு எது நியாயம் வழங்குகிறது என்று பார்க்கும்போது வேதநெறி சிந்தனைகளைக் கண்டடைகிறார்கள். இதற்குப் பிறகு நாற்பது, ஐம்பது ஆண்டுகளில் வேதங்கள், உபநிடதங்கள் உள்ளிட்ட முக்கியமான நூல்களை எல்லாம் பதிப்பிக்கின்றார்கள். பதிப்பிக்கும்போதே மொழி பெயர்த்துக் கொள்கின்றார்கள். இதற்காக 1784-இல் ஆசியவியல் கழகத்தை நிறுவுகிறார்கள்.
அப்போதே ஒன்பது இலட்சம் ரூபாய் ஒதுக்குகிறார்கள். இந்தக் கழகத்திற்கு மார்க்ஸ் முல்லரை நியமிக்கிறார்கள். மார்க்ஸ் முல்லர் கீழைதேயவியல் புனித நூல்கள் என்ற நூல் தொகுதிகளில் வேதங்கள், உபநிடதங்கள் உள்ளிட்டவற்றை ஒழுங்குபடுத்தி மொழிபெயர்த்து வெளியிடுகின்றார். வேதங்களுக்கான வேத-பாஷ் யங்களும் வெளியிடப்படுகின்றன. இவற்றையெல்லாம் தொகுத்துக் கொண்டுதான் மைனி என்பவர் இந்துச் சட்டத் தொகுப்பை உருவாக்குகிறார். இந்தச் சட்டத் தொகுப்பு இன்றுவரைக்கும் நடைமுறையில் இருக்கின்றது. இந்தச் சட்டத் தொகுப்பின் பின் புலத்தில்தான் இந்திய வரலாறு, இலக்கியம், சிந்தனை, பண்பாடு ஆகியவை பேசப்பட்டன. இவை எல்லாம் ஆட்சியாளர்களாகிய ஆங்கிலேயர்கள் தங்கள் நலன்களுக்காகச் செய்தவை.
மார்க்ஸ் முல்லர்.
1930-களில் இந்திய மெய்யியல் வரலாற்றை எழுதும் போது எஸ். இராதாகிருஷ்ணன் இந்திய மெய்யியல் வரலாறுபற்றி இந்தியர்கள் எழுதிய நூல்கள் எதுவும் இல்லை எனக் குறைப்பட்டுக் கொள்ளுமளவுக்கு அப்போது நிலைமை இருந்தது. 1950-கள் வரைக்குமேகூட இந்திய மெய்யியல் வரலாற்றைப் பற்றிய இந்தியர்கள் கருத்து எடுபட வில்லை என்பது முக்கியமானது. இந்தக் குறையைப் போக்கும் பொருட்டு இராதாகிருஷ்ணன் தலைமையில் இந்திய அரசு ஒரு குழுவை அமைத்துக் கீழை, மேலை நாடுகளின் மெய்ப்பொருளியல் வரலாறு என்ற நூலை வெளியிடுகிறார்கள். இந்தப் புத்தகத்தைத் தமிழில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கின்றது. இந்திய மெய்யியலுக்கு ஐரோப்பியர்கள் முக்கியத்துவம் தரவில்லை என்பது பற்றியும், வளமான இந்திய மெய்யியல் மரபு பற்றிப் பேச மறுப்பது பற்றியும் அப்போதிருந்த அமைச்சர் அபுல் கலாம் ஆசாத் கேள்விகளை எழுப்புகிறார். அவர் மெய்யியல் வரலாற்றை இந்தியாவிலிருந்து எழுத வேண்டும் என்று கூறினார்.
இந்து சட்டத் தொகுப்பை உருவாக்கிய மைனி.
இந்த நேரத்தில் நம்மவர்கள் இந்தியாவில் இருந்து தொடங்குவது நல்ல விசயம், தமிழ் நாட்டிலிருந்து தொடங்குவதும் அவசியம் என்று சொல்லி இருக்க வேண்டும். அப்போது இங்குத் தமிழ் மேன்மை, தனித்தமிழ் என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தாலும் வரலாறு, பண்பாடு ஆகியவை பற்றியெல்லாம் உருப்படியான பணிகள் நடக்கவில்லை. இந்திய மெய்யியல் வரலாற்றைத் தமிழில் இருந்து தொடங்க வேண்டும் என்று சொல்லுவதற்கு ஆளுமையான ஆட்கள் இல்லை. இந்திய மெய்யியல் வரலாற்றைத் தமிழில் இருந்து தொடங்க வேண்டும் என்பதற்கு ஆதாரங்கள் இருக்கின்றனவா என்று பார்த்தோமானால் நிறைய இருக்கின்றன. அவை ஆய்வுக்குட்படுத்தப்பட்டனவா? பகுத்தாயப்பட்டனவா? என்று கேட்டால் இல்லை.
மயிலை சீனி. வேங்கடசாமி.
1950-கள் வரைக்குமே இந்த ஆதாரங்கள் பெரிய அளவில் கவனத்தில் கொள்ளப்படவில்லை. இதைக் கவனத்தில் கொண்டவர் மயிலை சீனி. வேங்கடசாமிதான். அவர்தான் பௌத்தமும் தமிழும், சைனமும் தமிழும் என்றெல்லாம் நூல்களை எழுதினார். இன்னொரு புறம், திருக்குறள் சைன நூல் என்பதை வலியுறுத்துவதற்காக சைனத் தமிழறிஞர்கள் சைனத் தத்துவங்களைத் தமிழில் தொகுக்கிறார்கள். இந்த மாதிரியான வேலைகளுக்கெல்லாம் அடிப்படையாகவும், தூண்டுதலாகவும் உ.வே.சாமிநாதய்யர் இருக்கின்றார். அவர் சீவகசிந்தாமணிப் பதிப்பிலும், மணிமேகலைப் பதிப்பிலும் சைன, பௌத்த சிந்தனை விவரங்களைத் தொகுத்தளிக்கின்றார். பௌத்தம் பற்றி உ.வே.சா. எழுதிய மணிமேகலை முன்னுரை மிக விரிவானது; முக்கியமானது. இந்தப் பணிகளை ஓரளவு முன்னெடுத்துச் சென்றவர் அயோத்திதாசப் பண்டிதர். ஆனால் போதிய அளவு அவர் கவனம் செலுத்தவில்லை. இந்தப் பணிகள் தொடர்ந்து மேலெடுத்துச் செல்லப்படவில்லை.
ஏ.எல். பாஷம்.
தமிழ்நாட்டில் இந்திய மெய்யியல் வரலாறு பற்றி ஏராளமான குறிப்புகள் இருந்தாலும், அவற்றை இந்திய மெய்யியல் வரலாற்று எழுத்துகளுடன் இணைப்பதற்கு வழிவகைகளை நாம் உண்டாக்கவில்லை. வடக்கே எழுதியவர்கள் தமிழ் விவரங்களைத் தெரிந்துகொள்ளவில்லை. ஆனால், தமிழ் மூலாதாரமான சான்றுகளைக் கொண்டுள்ள மொழி என்பது சிலருக்குத் தெரியவந்தது. ஏ.எல். பாஷம் அஜிவகர்களைப் பற்றி எழுதும் போது அதற்குத் தேவையான அடிப்படைச் சான்றுகளை எல்லாம் தமிழிலிருந்தே எடுத்துக் கொண்டார். அந்த நூல் கூட இன்னும் தமிழில் பெயர்க்கப்படவில்லை. அஜிவகர்கள் இந்திய மெய்யியல் பிரிவுகளில் முக்கியமானவர்கள். அவர்களைப் பற்றி வடமொழியில் அதிக விவரமேதும் இல்லை; தமிழில்தான் இருக்கின்றது என்கிறார் ஏ.எல். பாஷம். தமிழில் இந்திய மெய்யியல் பற்றி விவரங்கள் அதிகமாகவும், தொடர்ச்சியாகவும் காணப்பட்டாலும்கூட அவை சரியாக ஆராயப்படவில்லை; எடுத்துக்கூறப்படவில்லை.
அயோத்திதாசப் பண்டிதர்.
தமிழகத்தைப் பொறுத்த அளவில் மெய்யியல் ஆகட்டும், இறையியல் ஆகட்டும், அவை சார்ந்த குறிப்புகள் மணிமேகலையில் தெளிவாக உள்ளன; அதற்கு முன் ஓரளவு சிலப்பதிகாரத்திலும் உள்ளன. அவை திருக்குறளிலும் விவாதிக்கப்பட்டுள்ளன. இந்த நூல்களை எவ்வளவுதான் பின்தள்ளினாலும் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்கு மேல் பின்தள்ளி வர முடியாது. இந்த நூல்களில் சொல்லப்படும் சிந்தனை முறையைக் கொண்டு மட்டும் நான் இதைக் கூறவில்லை. அவற்றில் சொல்லப்பட்டிருக்கும் வாழ்க்கை முறை, நகர அமைப்பு, வாணிக முறை ஆகியவற்றையெல்லாம் பார்த்தால் அவற்றின் காலம் பற்றித் தெளிவு கிடைக்கும்.
இந்த நூல்களின் காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன்புதான் என்பதின் முக்கியத் துவம் என்னவென்றால், இந்திய மெய்யியல் பற்றிய எழுத்துப்பதிவு விவரங்களும் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்துதான் கிடைக்கிறது என்பது ஆகும். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன்பு என்ன இருந்தது. வேதங்களும், உபநிடதங்களும் இருந்தன. வேதங்கள், உபநிடதங்கள் ஆகியவற்றின் காலம் பற்றிப் பெரிய பிரச்சினை இருக்கின்றது. அவற்றின் காலத்தை முடிவு செய்வதில் ஒவ்வொருவரும் வேறுபடுகின்றனர்.
சங்க இலக்கியத்தில் இயற்கையோடு இணைந்த வாழ்க்கைநெறிச் சிந்தனை இருக்கின்றது. அடுத்து திருக்குறள், சிலப்பதிகாரம் வருகின்றபோது ஊழ், விதி பற்றிய சிந்தனைகளைப் பார்க்க முடிகின்றது. அதற்கடுத்து மணிமேகலை, நீலகேசி ஆகியவற்றில் இந்திய மெய்யியல் மரபு என்று கூறப்படுவதுடன் இணைந்த விவாதப் போக்கு வருகின்றது. அவை பௌத்த, சைன தத்துவத்தை மிக நுணுக்கமாக, விரிவாக வாத முறையில் எடுத்துக் கூறுகின்றன.
ஒருவர் கி.மு. பதினைந்தாம் நூற்றாண்டு என்பார். மற்றவர் கி.மு. பத்தாம் நூற்றாண்டு என்பார். இன்னொருவர் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு என்பார். ஒத்த கருத்து ஏற்படவில்லை. இன்னொரு பிரச்சினையும் உண்டு. அவை என்ன எழுத்தில், என்ன மொழியில் பதிவு செய்யப்பட்டு, பாதுகாக்கப்பட்டன என்று கேட்டால் தெளிவாகப் பதில் இல்லை. உபநிடதங்களைப்பற்றிப் புத்தர் பேசியதனால் அவை புத்தர் காலத்திற்கு முந்தி இருந்திருக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். புத்தர் பேச்சுகள், உரைகள் ஆகியவற்றைத் தொகுத்ததே புத்தர் இறந்து முந்நூறு அல்லது ஐந்நூறு ஆண்டுகளுக்குப் பின்புதான். புத்தர் வாய்மொழிகள் என்று சொல்லப்படுவதிலேயே நம்பகத்தன்மை உறுதியானதாக இல்லை. புத்தர் பேச்சுகளை எல்லாம் ஒரு சுருக்கெழுத்தர் பதிவு செய்தார் என்பது போன்ற சான்றுகள் ஏதும் இல்லை.
புத்தர் இறந்த பின்பு நூறாண்டுகள் கழித்தே புத்தர் கொள்கைகளை வரையறுக்கப் பௌத்தத் துறவிகள் சங்கத்தைக் கூட்டினார்கள் என்று தெரிய வருகின்றது. எப்படிப் பார்த்தாலும் கி.பி.க்குப் பின்புதான் புத்தர் போதனைகள் எழுத்துருவம் பெறுகின்றன. இந்திய வரலாற்றில் வேதங்கள், உபநிடதங்கள், புத்தர் போதனைகள் உள்ளிட்ட எவையும் கி.பி.க்குப் பின்புதான் எழுத்தில் பதிவு செய்யப்பட்டன என்பது முக்கியமானது. இதே காலத்தில் எழுதப்பட்ட தமிழ் நூல்கள் நிறையவே இருக்கின்றன.
இதில் இன்னொரு விஷயமும் உண்டு. வேதாந்தம் பற்றிய குறிப்புகளை வேதங்கள், உபநிடதங்கள் அடுத்து சங்கரர் காலத்தில்தான் காணமுடிகிறது. இடையில் பௌத்த நூல்களில் மறுப்பதற்காக வேதாந்தம் எடுத்துப் பேசப்பட்டு இருக்கின்றது. வேதநெறிபற்றிச் சங்கரருக்கு முன்பு சங்கரரின் ஆசிரியர்கள் பேசியிருக்கின்றார்கள். வேறு யாரும் பேசியதாகத் தெரியவில்லை. ஏன் மகாபாரதத்தில் பேசப்படவில்லையா என்றால், மகாபாரதம் கி.பி. ஒன்பது, பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்புதான் இறுதியான எழுத்து வடிவம் பெற்றது. இதற்கான வெளிப்படையான சான்றுகள் மகா பாரதத்திலேயே இருக்கின்றன. ஆகவே இந்திய மெய்யியலுக்கு இப்போதிருக்கின்ற அமைப்பு, வடிவம் எல்லாம் கி.பி. எட்டாம் நூற்றாண்டுக்குப் பின்புதான் கிடைத்திருக்கின்றது. வடமொழி சான்றுகளில் ஒரு தொடர்ச்சி இல்லை என்பது நமக்குத் தெளிவாகத் தெரிகின்றது.
தமிழ் மரபு அப்படி இல்லை. தமிழ் மரபில் வளர்ச்சியின் தொடர்ச்சியைப் பார்க்க முடிகிறது. சங்க இலக்கியத்தில் இயற்கையோடு இணைந்த வாழ்க்கைநெறிச் சிந்தனை இருக்கின்றது. அடுத்து திருக்குறள், சிலப்பதிகாரம் வருகின்றபோது ஊழ், விதி பற்றிய சிந்தனைகளைப் பார்க்க முடிகின்றது. அதற்கடுத்து மணிமேகலை, நீலகேசி ஆகியவற்றில் இந்திய மெய்யியல் மரபு என்று கூறப்படுவதுடன் இணைந்த விவாதப் போக்கு வருகின்றது. அவை பௌத்த, சைன தத்துவத்தை மிக நுணுக்கமாக, விரிவாக வாத முறையில் எடுத்துக் கூறுகின்றன.
பௌத்த, சைன தத்துவங்கள் பேசும் இலக்கியங்களைப் படைப்பது, இலக்கியங்களைப் பயில்வதற்கான இலக்கணங்களைப் படைப்பது என்பது போன்ற தொடர் நடவடிக்கைகளைக் காண்கிறோம். பெரும்பாலான முக்கியத்துவம் வாய்ந்த தமிழ் நூல்கள் எல்லாம் சைன நூல்களாக இருக்கின்றன. தொல்காப்பியர், திருவள்ளுவர், சீவக சிந்தாமணி ஆசிரியர் திருத்தக்கதேவர், யாப்பருங்கல ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு இலக்கண நூல் களை எழுதின ஆசிரியர்கள் ஆகிய பலரும் சைனர்கள். இந்த சைன மரபு தொடர்ச்சியைப் பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை பார்க்கின்றோம். நமக்கு மிகப் பெருந்தொகையான நூல்கள் மறைந்துபோன பின்பும் இந்தத் தொடர்ச்சி மிகத் தெளிவாகத் தெரிய வருகின்றது. மணிமேகலை, நீலகேசி ஆகியவற்றில் ஒரு தருக்க முறையைக் காண்கிறோம். இந்த நூல்களில் ‘தத்துவவாதி’ என்று சொல்லமாட்டார்கள்; சமயவாதி என்பார்கள்; சமயக்கணக்கர் என்பார்கள். இந்த நூல்களில் தருக்கம் செய்யும் மனிதர்களைக் காண்கிறோம். தருக்கம் செய்யும் இடங்களாகப் பட்டிமண்டபங்கள் இருக்கின்றன. இந்த நூல்களின் விவரங்கள் எல்லாம் வடமொழியில் பதிவாகியுள்ள விவரங்களுடன் ஒத்துப் போகின்றன. இந்த விவாத / தருக்க முறை புலமை சார்ந்ததாகக் காணப்படுகின்றது.
‘நியாயப்பிந்து’ நூலின் ஆசிரியர் தர்மகீர்த்தி.
தருக்க / விவாத முறையைத் தொகுத்து ஒழுங்குபடுத்தியவர்கள் யாரென்று பார்த்தால் தமிழர்களாக இருப்பதைக் காண்கிறோம். இந்தியத் தருக்க முறை விரிவாக, நுணுக்கமாகத் தொகுத்துத் தரும் ‘நியாயப்பிந்து’ நூலின் ஆசிரியர் தர்மகீர்த்தி. அவர் தமிழர். காஞ்சிபுரம் நகரைச் சார்ந்தவர். இதன் மூலம் தருக்க முறை தமிழகத்தில் உருவாகி, இந்தியா முழுவதும் பரவி இருக்கின்றது என்பது தெரிகின்றது. பௌத்த, சைன சிந்தனைகள் தமிழகத்தில் வளர்ச்சியடைந்த போது பாலி, மகதி, வடமொழி ஆகியவற்றில் பலர் நூல்களை இயற்றி இருக்கின்றார்கள். இதைப் பற்றிய விவரங்களை மயிலை சீனி. வேங்கடசாமி தன் நூல்களில் பதிவு செய்திருக்கின்றார். இப்படி பாலி, மகதி, வட மொழி ஆகியவற்றில் நூல் இயற்றியவர்கள் காஞ்சி புரம், திருப்பாதிரிப் புலியூர் (கடலூர்) முதலான நகரங்களைச் சார்ந்தவர். தமிழகத்தைச் சேர்ந்த புத்ததத்தர் இன்று இலங்கையில் இருக்கின்ற தேரவாத பௌத்தத்திற்கு அடிப்படை நூல்களை இயற்றியவர். இதைப் போன்றே சீன, ஜப்பான் ஆகிய நாடுகளில் பௌத்த மதத்தைப் பரப்பியவர் காஞ்சிபுரத்தைச் சார்ந்த இளவரசர் என்ற தொல் மரபுக்கதை இருக்கின்றது. யுவான் சுவாங், இட் சிங் போன்ற சீனப் பயணிகளும் புனித நூல்களைத் தேடித் தமிழகத்திற்கு வந்த செய்திகளையும் அறிகின்றோம். இந்தப் பயணிகளின் குறிப்புகள் நம் வரலாற்றை எழுதுவதற்கான சான்றுகளாகவும் இருக்கின்றன. இவையெல்லாம் இங்கு ஒரு வளமான சிந்தனை மரபு, கல்விப்புலம் இருந்ததைத் தெளிவாகக் காட்டுகின்றன.
இந்தக் கல்விப் புலத்தின் வெளிப்பாடுகளாக மணிமேகலை, நீலகேசி, பின்பு சிவஞான சித்தியார் பரபக்கம் ஆகியவற்றைக் காணமுடிகிறது. இவற்றில் இந்தியச் சிந்தனை மரபுகள், சமயங்கள் தொகையாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இவற்றில் முறையே பத்து, ஆறு, பதினான்கு சிந்தனை மரபுகள் / சமயங்கள் பதியப்பட்டிருக்கின்றன. இப்படிப் பெருந்தொகை யான பதிவை வடமொழியில் சர்வதரிசன சங்கிரகம் என்ற நூலில்தான் காண்கிறோம். இந்த நூல் விஜய நகர அரசை நிறுவிய புக்கர்,ஹரிகரர் மன்னர் களுடன் தொடர்புடைய வித்யாரண்யர் எனப்படும் மாதவரால் இயற்றப்பட்டது. ஆகவே இந்நூலின் காலம் கி.பி. பதினான்காம் நுற்றாண்டு என்பது தெளிவாகத் தெரிகின்றது. இந்த நூலையே இந்திய மெய்யியல் வரலாறு எழுதும் பெரும்பாலான அறிஞர்கள் அடிப்படையாகக் கொள்கின்றனர். சர்வ தரிசன சங்கிரகத்தை விடத் தெளிவாக, நுணுக்கமான விவரங்கள் வெகுகாலத்திற்கு முன்பே தமிழ் நூல் களில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அவையெல்லாம் இராதாகிருஷ்ணன், தாஸ்குப்தா, தேவி பிரசாத் சட்டோபாத்யாயா போன்ற அறிஞர் களின் கவனத்திற்குக் கொண்டு சேர்க்கப்படவில்லை. இதற்கெல்லாம் தமிழ் மேன்மை பேசிய புலமை மரபுதான் காரணம்.
உரையாடியவர் : க.காமராசன் நன்றி : (உங்கள் நூலகம், Friday, June 10, 2011)
பல ஆயிரம் கோடி மதிப்புள்ள, 265 ஏக்கரில் விரிந்து பரந்துள்ளது மெப்ஸ், சென்னையில் பெரும் வர்த்தக மதிப்பு கொண்ட பகுதி குரோம்பேட்டை. அங்கு ஜி.எஸ்.டி சாலையை ஒட்டி இருக்கிறது மெப்ஸ். சென்னை விமான நிலையம் இங்கிருந்து தொட்டு விடும் தூரம்தான். இதனுள் பல நூறு நிறுவனங்கள், ஆயத்த ஆடை, நறுமணப் பொருட்கள், இயந்திர உதிரி பாகங்கள், மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு நுகர்வுப் பொருட்களின் கிடங்குகள், கணினி நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவன கிளைகள், இப்படி பெயர் பலகைகளோடும், எந்த ஒரு பெயர்ப்பலகையும் இல்லாமல், மர்ம மாளிகைகள்.
கண்ணைப் பறிக்கும் பசுமையான இயற்கைச் சூழலுக்குள் அமைந்திருக்கும் இந்த இடத்தில், கேட்பாரற்று மர நிழலில் துப்புரவுத் தொழிலாளர்கள் ஒதுங்கியிருந்தனர். நாம் அவர்களிடம் பொங்கல் வந்துவிட்டதா, பண்டிகைக்குப் புதுத்துணி எடுத்துவிட்டீர்களா என்றோம், அவர்கள் நமட்டுச் சிரிப்புடன் நம்மைப் பார்த்துவிட்டு, “ஆமாம் பண்டிகை தான் இப்ப வாழுது…” என்றனர் கடுப்போடு.
“ உங்களுக்கு என்ன, இவ்வளவு பெரிய இடத்தில் வேலை செய்கிறீர்கள், பெரிய பெரிய கம்பெனிகள்-லாம் இருக்குது, முதலாளிகள் கப்பல் போன்ற கார்களில் இறங்குகிறார்கள், அவர்களிடம் வேலை செய்கிறீர்கள், நீங்கள் என்ன குப்பத்தையும், குடிசையையுமா பெருக்கிக் கொண்டிருக்கிறீர்கள்..” என்றோம்.
துப்புரவுப் பணியாளர் பாப்பாத்தி.
அதற்கு பாப்பாத்தி என்பவர்; “ஆமாம், பெரிய பெரிய முதலாளிங்க இருந்து எங்களுக்கு என்ன பிரயோசனம், காலைல 8.45 மணிக்கு உள்ள நுழஞ்சோம், இன்னும் வேலை ஓயல… பகல் 12 ஆகப்போகுது. குடிக்கிற தண்ணிய கூட நாங்க வீட்டுலேருந்துதான் எடுத்துட்டு வரனும், ஒன்னுக்குப் போகனுன்னா கூட இங்க இடமில்ல. அவசரம்னா ஆளு இல்லாத எடத்துல தான் மறைவா ஒதுங்கனும் என்றார்.
பக்கத்திலிருந்த செல்வி, “அந்த அநியாயத்த கேக்காதீங்க, பெருக்கும்போது ஒருவாட்டி என் புடவைக்குள்ள ஒரே நமச்சல், எரிச்சலா இருந்துச்சு, பதறிப்போயி பக்கத்துல இருந்த கம்பெனி பாத்ரூமுக்குள்ள போயி புடவைய உதறிக்கட்ட அனுமதி கேட்டேன், வெளியாலுங்க உள்ள நுழையக்கூடாதுன்னு என்னய உள்ள விடல, அழுதுக்குனே வெளிய வந்து மரத்து மறைப்புல புடவைய அவுத்துக் கட்டுனேன். உள்ள ஏதோ பெரிய பூச்சி ஒன்னு கடிச்சிருச்சு, உடம்பெல்லாம் தடிச்சி போயி ஊசி போட்டேன்…” என்றார் அந்தப் பதட்டம் மாறாமல்.
“குப்பை அள்ளுற எங்க கதைய கேக்காதீங்க அது மணக்காது, நாத்தமடிக்கும் என்றார் துப்புரவாளர் சுசிலா. ஊறுபட்ட கம்பெனிங்க இங்க இருக்குது, அதுல பல பத்தாயிரம் பேரு வேல செய்யுறாங்க, ஒரு நாளக்கி பத்து லாரி குப்பங்கள வெளில கொண்டு போயி கொட்டனும், 60 துப்புரவு ஊழியர்கள் தான் இத செய்யனும்…” என்று பெருமூச்சு விட்டார்.
தனது பணிச்சூழலையும், துயரத்தையும் விவரிக்கையில் கண்களில் வழியும் கண்ணீரைத் துடைக்கும் சுசீலா.
“குப்பைகள் என்றால் காய்ந்த செடி, கொடி, இலைகளல்ல, அவை தனி, அவை இங்கேயே உரமாக்க பள்ளத்தில் கொட்டி மூடிவிடுவோம், வெளியில் போவதேல்லாம் தொழிற்சாலை வேஸ்டுகள், சாப்பாடு கேண்டீன்–களில் விழும் எச்சில் உணவுகள் பிளாஸ்டிக் தட்டுகள், டம்ளர்கள், ஒவ்வொரு கம்பெனியின் வாசலிலும் பெரிய டிரம் வைத்து அதில் கொட்டிவிடுவார்கள், அதை நாங்கள் ஒரு நாள் எடுக்கவில்லையென்றாலும் நாத்தம் குடலைப் புரட்டும்.
டிரம்மை காலி செய்து திரும்பவும் சுத்தமாக வைப்பது பெரிய கொடுமை, பாதி உடம்பை வளைத்தால்தான் டிரம்மின் அடியிலிருக்கும் எச்சிலைகள் கைக்கு வரும், இப்படி பல நேரங்களில், எங்கள் முகம், துணியெல்லாம் எச்சில் நாற்றமடிக்கும், அதைக் கழுவக்கூட கம்பெனிக்குள் எங்களை அனுமதிக்க மாட்டார்கள், எனவே காகிதத்தில் துடைத்துப் போடுவோம். எங்கள் தலைவிதியை நாங்கள் யாரிடத்தில் சொல்வது” என்றார்.
துப்புரவுத் தொழிலாளி ஏழுமலை.
துப்புரவாளர்களில் வயது முதிர்ந்த ஏழுமலை. நாங்க மொத்தமுள்ள 60 பேரும் ரெண்டு தனியார் கம்பெனிக்கு காண்டிராக்டாக தினக்கூலி வேலை செய்கிறோம். ஒருத்தருக்கு நாளொன்றுக்கு 250 ரூவா சம்பளம். காலை 8.40-க்கு உள்ளே வந்து பெயர் கொடுக்க வேண்டும். மாலை 4.30 மணிக்கு வெளியே அனுப்புவார்கள். 4, 5 சூப்பர்வைசர்கள் தலைமையில் எங்களை குழுக்குழுவாகப் பல வேலைகளுக்குப் பிரித்துவிடுவார்கள்.
இந்த நடைபாதை 2 கிலோமீட்டர் முழுசா ஒரு இலையில்லாமல் சுத்தமாகப் பெருக்கவேண்டும். ஒன்னு விட்டு ஒரு நாள் நடைபாதை முழுக்க தண்ணீர் பிடித்துக் கழுவ வேண்டும். அதே மாதிரி மொத்த சாலையையும் தினமும் பெருக்கவேண்டும். சாலையோர செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சுவது வெட்டி அழகுபடுத்துவது, தனித்தனி கம்பெனிகளின் சுற்றுவட்டாரத்தை சுத்தம் செய்வது, வாரிய குப்பையனைத்தையும் பத்தடி உயரத்துக்கு லாரியில் லோடு ஏத்துவோம். இந்த வேலைகளெல்லாம் அழுக்கும் அசிங்கமும் மட்டுமல்ல, கால் முட்டியும் நெஞ்செலும்பும் பிளந்து போகும், பத்து நிமிடம் கிடைத்தாலும் அப்பாடா என்று உட்காரத்தோனும்.
அந்நேரம் சூப்பர்வைசர் பார்த்தால் ஏன் சோம்பேறி மாதிரி உக்காந்திருக்கிறாய் என்று 4 பேருக்கு முன்னால் முறைப்பார்கள். துடைப்பத்தை எந்த நேரமும் அழுத்திப்பிடிப்பதால் கை எரியும், நாளடைவில் விரல்கள் மரத்துப்போய் துடைப்பம் பிடிக்கமுடியாது, துடைப்பம் தானாகக் கீழே விழும். இந்த வேலையால் எங்களுக்கு எவ்வளவோ கொடும… படிப்பறிவில்லாத நாங்கள் வேற வேலையில்லாததால இப்படி சாகுறோம்.
படிச்சவுங்க எல்லாம் காரிலும் பைக்கிலும், வெள்ளையும் சொள்ளையுமாக எங்கள் எதிரில் போகும்போது நான் மட்டும் என்ன பாவம் செஞ்சோமுன்னு தோனும், நம் பிள்ளைகளாவது இப்படி போகமாட்டார்களா என்று மனம் ஏங்கும். நாங்களெலெல்லாம் கிராமத்தில் பெரிய சாதிக்காரர்கள் என்று பெயரெடுத்தவர்கள், கவுண்டர், நாயக்கர் என்ற பட்டமெல்லாம் இப்ப எங்களுக்கு சோறு போடல. இந்த தொடப்பம் தான் இப்ப எங்களுக்கு சோறு போடுது. கால் வயிறு கஞ்சியாவது ஊத்துது” என்றார் விரக்தியாக.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலையில் கடந்த ஜனவரி முதல்வாரத்தில் மாணவர்கள் ஆசிரியர்கள் மீது வலதுசாரி ஏ.பி.வி.பி கும்பல் நடத்திய தாக்குதல் சம்பவத்தில் வலதுசாரிகளுடனான பல்கலைக் கழக நிர்வாகத்தின் கூட்டுக் களவாணித்தனம் தற்போது அம்பலப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 5-ம் தேதி மாலையில் ஜே.என்.யூ வளாகத்திற்குள் நுழைந்த ஏ.பி.வி.பி. குண்டர் படை, கல்லூரி வளாகம், விடுதி உள்ளிட்ட இடங்களில் குறிப்பான மாணவர்களையும்; ஆசிரியர்களையும் தேடித் தேடி அடித்துக் கடுமையாக காயப்படுத்தியது. இதில் ஜே.என்.யூ மாணவர் சங்கத் தலைவர் அய்ஷெ கோஷ் உள்ளிட்டு பல மாணவர்களும் – ஆசிரியர்களும் படுகாயமடைந்தனர்.
இந்தக் கலவர சூழலிலும் அங்கிருந்த போலீசும், பாதுகாப்புப் படையினரும் அமைதியாக நின்று வேடிக்கை பார்த்தனர். இந்தக் கலவரங்கள் எல்லாம் முடிந்த பிறகு ஜே.என்.யூ. நிர்வாகமும் அதன் துணை வேந்தரும் சாவகாசமாக இரவு 9 மணியளவில் அறிக்கை வெளியிட்டனர்.
அதில் இடதுசாரி மாணவர்கள் தேர்வுக் கட்டணம் செலுத்த விரும்பிய மாணவர்களை தடுத்து நிறுத்தியதாகவும், தேர்வு எழுத விரும்பியவர்களுக்கும், அதனைத் தடுக்க விழைந்த இடதுசாரி தரப்பினருக்கும் இடையேயான பிரச்சினைதான், பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த கலவரத்திற்கான காரணம் என்று அறிக்கை விடுத்தனர்.
இந்த அறிக்கைக்கு ஜே.என்.யூ மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இது அப்பட்டமான பொய் என்றும் இதனை வலதுசாரிகளை தப்பிக்க வைக்கும் உள்நோக்கத்துடன் நிர்வாகம் செய்துவருவதாகவும் மாணவர்களும் – ஆசிரியர்களும் தெரிவித்தனர்.
டெல்லி போலீசைத் தனது பிடியில் வைத்திருக்கும் பாஜக, நிர்வாகத்தின் அறிக்கையைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு போலீசின் மூலம் இக்கட்டுகதையை உண்மை என நிரூபிக்கப் பார்த்தது. ஆனால் இந்தியா டுடே தொலைக்காட்சியைச் சேர்ந்த நிருபர் ஒருவர் எடுத்த ஒரு மறைபுலனாய்வு வீடியோவில் ஏபிவிபி இதில் நேரடியாக ஈடுபட்டது அம்பலமானது.
இதனைத் தொடர்ந்து ஏ.பி.வி.பி-யைத் தப்பவைக்க ஒரு டுபாக்கூர் இந்துத்துவ அமைப்பை இந்த வன்முறைக்கு பொறுப்பேற்றுக் கொள்ளச் செய்தது சங்கபரிவாரம்.
தாக்குதலில் ஈடுபட்ட ஏ.பி.வி.பி. குண்டர்கள்.
இடதுசாரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான் தாக்குதல் சம்பவம் தொடர்பான சிசிடிவி கேமராக்களின் பதிவு இருக்கிறதா என ஜே.என்.யூ. நிர்வாகத்திடம் கேட்கப்பட்ட போது, சிசிடிவி கேமராக்கள் ஏற்கெனவே போராட்டம் செய்த இடதுசாரி மாணவர்களால் நொறுக்கப்பட்டதாகத் தெரிவித்தது நிர்வாகம். கேமராக்களின் பதிவை சேமிக்கும் சர்வர்கள் CIS மையத்தில் இருந்ததாகவும், அந்த மையத்தை அதற்கு முந்தைய நாளே இடதுசாரி மாணவர்கள் தாக்கி நாசம் செய்துவிட்டதாகவும் தெரிவித்தது நிர்வாகம்.
ஜே.என்.யூ.-வின் துணைவேந்தர் ஜெகதீஷ்குமார் மமிதாலா இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளத்துக்குக் கொடுத்த பேட்டியில் “ஜனவரி 5-ம் தேதி நடந்த வன்முறைச் சம்பவங்களின் சி.சி.டி.வி. பதிவுத் தகவல்களை எடுக்க நாங்கள் முயற்சித்து வருகிறோம். ஏனெனில் போராடும் மாணவர்கள் சிசிடிவி தகவல் மையத்தை உடைக்க முயற்சித்துள்ளனர். கடந்த ஜனவரி 3, 4-ம் தேதியே அவர்கள் அந்த மையத்தை உடைக்க முயற்சித்தது ஏன்? அவர்கள் சர்வர்களை முடக்க முயற்சித்தது ஏன் ? அதற்குப் பிறகு 5-ம் தேதி இந்த வன்முறைச் சம்பவம் நடந்திருக்கிறது. இது போன்ற ஒரு சம்பவம் நடைபெறும் என அவர்களுக்கு முன் கூட்டியே தெரியுமோ என சந்தேகம் ஏற்படுகிறது” என்று கூறியிருந்தார்.
அதாவது, விடுதிக் கட்டணக் குறைப்புக்காக போராடும் மாணவர்கள் 5-ம் தேதி இப்படி ஒரு வன்முறையை (தங்களைத் தாங்களே அடித்துக் கொள்ளும்!?! வன்முறையை) நிகழ்த்துவதற்குத் திட்டமிட்டு, அதற்காகவே 3, 4-ம் தேதிகளில் CIS தகவல் மையத்தில் இருக்கும் சர்வரை அடித்து உடைத்திருக்கின்றனர், என்பதுதான் துணைவேந்தர் சூசகமாகத் தெரிவிக்க வந்த குற்றச்சாட்டு.
இந்நிலையில் சமூகச் செயற்பாட்டாளர் ஒருவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ஜே.என்.யூ-வில் நடந்த சம்பவங்கள் குறித்து விவரங்கள் கேட்டுள்ளார். அதற்குக் கொடுக்கப்பட்ட பதில்கள் சங்கிகளின் பொய்களையும் அவர்களுக்குக் கள்ளக் கூட்டாளியாக செயல்பட்ட, ஜே.என்.யூ நிர்வாகம் மற்றும் அதன் துணைவேந்தரின் பொய்களையும் அம்பலப்படுத்தியுள்ளது.
JNU துணைவேந்தர் ஜெகதீஷ்குமார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி கிடைக்கப்பெற்ற பதிலில், “மின்சார சப்ளையில் ஏற்பட்ட இடையூறு காரணமாக, தகவல் மையம் செயல்படவில்லை.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “கடந்த டிசம்பர் 30, 2019 முதல் ஜனவரி 8, 2020 வரையிலான காலகட்டத்தில் எந்த ஒரு சிசிடிவி கேமராவோ, உயிரிஅடையாளக் கருவிகளோ (Biometric Systems) அங்கு உடைக்கப்படவில்லை.
ஜவகர்லால் நேரு பல்கலையின் மையமான சர்வர், ஜனவரி 3-ம் தேதி மின்சார சப்ளையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக நிறுத்தப்பட்டது. மறுநாள்வரை இந்நிலைமை அப்படியே நீடித்தது. ஜனவரி 5-ம் தேதி மதியம் 3 மணி முதல் இரவு 11 மணிவரையிலான அனைத்து சிசிடிவி பதிவுகளும் தொடர்ச்சியாகக் கிடைக்கப்பெறவில்லை.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் பதில் மூலம், சிசிடிவி கேமராவோ, நபர்களின் வருகையைப் பதிவு செய்யும் உயிரிஅடையாளக் கருவிகளையோ போராட்டக் காரர்கள் உடைக்கவில்லை. சர்வரும் மின்சாரப் பிரச்சினை காரணமாக செயலற்றுப் போனதே ஒழிய, யாரும் அதனைத் தாக்கி உடைக்கவில்லை என்ற உண்மையை ஜே.என்.யூ நிர்வாகம் மற்றும் அதன் துணைவேந்தரின் தலையில் போட்டு உடைத்துள்ளது.
மேலும், ஜனவரி 4-ம் தேதி, மதியம் 1 மணியளவில் தகவல் மைய அலுவலகத்தின் சர்வருக்கு வரும் ஆப்டிக் பைபர் கேபிள்கள் சேதப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. சிசிடிவி கேமரா பதிவுகள் எதுவும் தகவல் மைய அலுவலகத்தில் உள்ள சர்வரில் பதிவாகாது என்றும் வளாகத்தில் உள்ள தரவு மையத்தில்தான் பதிவாகும் என்றும் ஆர்.டி.ஐ. பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தகவல், துணைவேந்தர் குறிப்பிட்ட – “சிசிடிவி காட்சிகளை மறைக்க மாணவர்களால் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு சிசிடிவி சர்வர் சேதமாக்கப்பட்ட” – சதிக் கோட்பாட்டை பொய்யாக்கியிருப்பதோடு, சிசிடிவி காட்சிகளை வெளிப்படையாக வெளியிடுவதில் நிர்வாகத்திற்குத்தான் பிரச்சினை என்பதையும் வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.
அனைத்து உயர்கல்வி நிறுவனங்களையும் தமது காவிப் பிடிக்குள் கொண்டுவருவதற்கேற்ற வகையில் தமக்கு வால்பிடிக்கும் துணைவேந்தர்களை நியமித்து ஆட்டுவிக்க நினைக்கிறது ஆர்.எஸ்.எஸ். கும்பல். ஆனால் பல்கலைக்கழகம் என்பது துணைவேந்தர்களுக்குரியது அல்ல; மாணவர்களுக்குரியது என்பதை காவிகளின் செவிட்டில் அறைந்து கூறிவருகிறது ஜே.என்.யூ பல்கலைக்கழகம்.
மதுரைச் செந்தமிழ்ப் பத்திரிக்கையில் 1906-ல் இராஜகோபாலாச்சாரியார் என்பவர் 19-ம் நூற்றாண்டில் தமிழகத்தில் “பொதுக்கல்வி”யின் நிலை பற்றிய ஒரு நல்ல கட்டுரையை எழுதியுள்ளார். அக்கட்டுரையில் இன்றைக்குப் படித்தாலும் வியப்பளிக்கக்கூடிய பல செய்திகள் நிறைந்துள்ளன. அவற்றுள் ஒரு குறிப்பிட்ட செய்தியை நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
1852-ம் ஆண்டுவாக்கில் கிறிஸ்தவ மிஷினரிமார்கள் தமிழ்நாட்டில் 1,885 கல்விநிலையங்களை நடத்தி வந்தனர். அக்கல்வி நிலையங்களில் 38,000 மாணவ மாணவிகளும் படித்து வந்தனர். இவர்களின் படிப்பு செலவுக்காக அன்றைய காலக்கட்டத்தில் கிறிஸ்தவர்களால் செலவிடபட்ட தொகை 40000-ம், 30000-ம் (இன்றைய கணக்கில் சொல்வதானால் 120 கோடியும், 100 கோடியும் ) செலவிடப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்றொரு வியப்பான செய்தி, இந்தப் பள்ளிகளில் பெரும்பாலானவை தஞ்சாவூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி பகுதிகளில்தான் இருந்தன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேகாலத்தில் இந்துமதம் சார்ந்த நிறுவனங்கள் எவ்விதமான கல்விப்பணியையும் செய்யவில்லை என்று கவலையுடன் கூறப்பட்ட குறிப்பும் உள்ளது கவனிக்கத்தக்கது. அந்த செந்தமிழ்ப் பத்திரிக்கையில் எழுதப்பட்டுள்ள பகுதியை உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன்.
1 of 2
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
பொ.வேல்சாமி : தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.
எழுதிய நூல்கள்:
மத்திய கிழக்கு நாடுகளில் 50 வருடங்கள் சர்வாதிகார ஆட்சி நடத்திய கபூஸ் (Qaboos) மறைவு குறித்து ஊடகங்கள் இரங்கல்பா பாடி ஓய்ந்து விட்டன. அநேகமாக எல்லா ஊடகங்களும் அவரைப் பற்றி நல்லதாகவே சொல்லி புகழாரம் சூட்டின. சமூக வலைத்தளங்களில் கூட எதிர்மறையான விமர்சனத்தைக் காணவில்லை. யாரும் சர்வாதிகாரி என்ற சொல்லை பாவிக்கவில்லை. ஏனென்றால் கபூஸ் மேற்கத்திய நாடுகளுக்கு விசுவாசமான அரசியல் தலைவர். அதனால் அவர் இறந்த பின்னரும் போற்றப் பட்டார்.
ஈராக்கை 24 வருடங்கள் ஆண்ட சதாம் ஹுசைன் தூக்கிலிடப் பட்ட நேரத்திலும், லிபியாவை 42 வருடங்கள் ஆண்ட கடாபி கொல்லப் பட்ட நேரத்திலும், இதே ஊடகங்கள் மூச்சுக்கு முன்னூறு தடவை சர்வாதிகாரி என்று கூறின. அவர்கள் வாழ்ந்த காலத்தில் மட்டுமல்லாது, இறந்த பின்னரும் இரக்கமில்லாது தூற்றப் பட்டனர். ஆனால் ஓமானில் 50 வருடங்கள் கொடுங்கோல் ஆட்சி நடத்திய கபூஸ் அவர்கள் கண்களுக்கு சர்வாதிகாரியாக தெரியாதது அதிசயமே.
மேற்கத்திய ஊடகங்களால் கொண்டாடப்பட மறைந்த ஓமன் சர்வாதிகாரி கபூஸ்.
எழுபதுகளின் தொடக்கத்தில் பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கியிருந்த ஓமானை ஆண்ட சுல்தான் தைமூர், அரச மாளிகையில் நடந்த ஒரு திடீர் சதிப்புரட்சியின் மூலம் பதவியிறக்கப் பட்டார். அந்த சதிப்புரட்சிக்கு காரணம் வேறு யாரும் அல்ல. சுல்தானின் சொந்த மகன் கபூஸ், மற்றும் பிரிட்டிஷ் படையினர் தான். தனது தந்தையை தனயனே கைது செய்து சிறையில் அடைக்க வேண்டிய அவசியம் என்ன? பொதுவாக சொல்லப்படும் காரணம் அவரது தந்தை ஒரு விடாப்பிடியான பழமைவாதியாக இருந்தார் என்பதே. ஆனால், உண்மையான காரணத்தை எந்த ஊடகமும் தெரிவிக்கப் போவதில்லை.
எழுபதுகளின் தொடக்கத்தில் ஓமான் ஒரு கம்யூனிசப் புரட்சியின் விளிம்பில் நின்றது. புரட்சி வெல்வதற்கான சாத்தியக்கூறுகள் நிறைய தென்பட்டன. குறிப்பாக நாட்டின் தெற்குப் பிராந்தியத்தின் பெரும் பகுதி ஆயுதமேந்திய கம்யூனிசப் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. அவர்களுக்கு அயல் நாடான சோஷலிச தெற்கு யேமனில் இருந்து உதவி கிடைத்துக் கொண்டிருந்தது.
முன்பிருந்த சுல்தான் ஆட்சிக் காலத்தில் நாடு அபிவிருத்தி அடையவில்லை. சாலைகள் இருக்கவில்லை. பாடசாலைகள் கட்டப்படவில்லை. காலஞ்சென்ற சுல்தான் கபூஸ் தான் அந்த நிலைமையை மாற்றியமைத்தார் என்று ஊடகங்கள் உங்களுக்கு சொல்லி இருக்கலாம். உண்மை தான். ஆனால் ஊடகங்கள் சொல்லாமல் மறைத்த இன்னொரு விடயம் உள்ளது.
ஓமானை ஆண்ட சுல்தான் தைமூர்.
உண்மையில் ஓமான் அபிவிருத்தி அடையாமல் பொருளாதாரத்தில் பின்தங்கி இருந்த படியால் தான் அந்நாட்டு மக்கள் கம்யூனிசப் புரட்சியாளர்களை ஆதரித்தார்கள். கபூஸ் சுல்தானாக பதவியேற்பதற்கு பல வருடங்களுக்கு முன்னரே, கம்யூனிஸ்டுகள் சமூக அபிவிருத்தியில் அக்கறை செலுத்தி வந்தனர். கம்யூனிச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் பாடசாலைகளை அமைத்து பெண் பிள்ளைகளை படிக்க வைத்தனர். இயக்கத்தில் கணிசமான அளவு பெண் போராளிகள் இருந்தனர்.
சுருக்கமாக சொன்னால், ஓமான் தொடர்ந்தும் அபிவிருத்தியில் பின்தங்கி இருந்தால் அது விரைவில் கம்யூனிச நாடாக மாறி விடும் என்று பிரிட்டன் அஞ்சியது. அதன் விளைவுதான், மாளிகையில் நடந்த சதிப்புரட்சியும், கபூஸ் சுல்தானாக பதவியேற்றமையும். எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புள்ள விடயங்கள் தான்.
உண்மையிலேயே கபூஸ் பதவியேற்று அபிவிருத்தி திட்டங்களை தொடங்கியதும் கம்யூனிஸ்டுகளின் போராட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டது. சில போராளிகள் சரணடைந்தனர். இருப்பினும் கம்யூனிச இயக்கம் அழிக்கப் படவில்லை. தென் பகுதிகளில் இன்னமும் செல்வாக்குடன் இருந்தனர். அதனை தனி நாடாக பிரிக்க விரும்பினர். சுல்தான் கபூஸ் உத்தரவின் பேரில் பிரிட்டிஷ் கூலிப்படையான SAS ஒரு “பயங்கரவாத எதிர்ப்புப் போர்” ஆரம்பித்தது. அப்போது ஈரானை ஆண்ட மேற்கத்திய சார்பான ஷா மன்னரும் படைகளை அனுப்பி உதவினார். சில வருடங்களில் ஓமானில் கம்யூனிச இயக்கம் முற்றாக அழிக்கப் பட்டது. எஞ்சியவர்கள் சரணடைந்து விட்டனர்.
ஓமானில் கம்யூனிச அபாயம் நீங்கி விட்டாலும், கபூஸ் என்ற சர்வாதிகாரியின் கொடுங்கோன்மை நீடித்தது. இன்று வரை ஓமானில் அரசியல் கட்சிகள் தடைசெய்யப் பட்டுள்ளன. அங்கு ஊடக சுதந்திரம் கிடையாது. சுல்தானை எதிர்ப்பவர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர். அங்கு நடக்கும் மனித உரிமை மீறல் கொடுமைகள் பற்றி ஏற்கெனவே பல மனித உரிமை அமைப்புகள் அறிக்கைகள் வெளியிட்டுள்ளன.
இருப்பினும் என்ன? மேற்கத்திய நாடுகளின் “ஜனநாயக” அரசியல் தலைவர்கள் ஓமான் சர்வாதிகாரியின் இரத்தம் தோய்ந்த கையைப் பிடித்து குலுக்கத் தயங்கவில்லை. எண்ணை நிறுவன ஒப்பந்தம், ஆயுத விற்பனை வருமானம் என்று தமது நலனில் மட்டும் குறியாக இருந்தனர். அந்த நன்றிக்கடனுக்காக தமது அபிமானத்திற்குரிய சர்வாதிகாரி கபூஸ் இறந்தவுடன் கண்ணீர் வடித்தனர். நாம் யாரை விரும்ப வேண்டும், யாரை வெறுக்க வேண்டும் என்பதை மேற்கத்திய நாடுகளும் அவர்களது ஊதுகுழல் ஊடகங்களும் தீர்மானிக்கின்றன.
கலையரசன் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர். வரலாறு, அரசியல், பண்பாடு ஆகியன குறித்து மார்க்சிய நோக்கில் கலையகம் தளத்தில் தொடர்ந்து எழுதி வருபவர். வெகுசன ஊடகப் பிரச்சாரத்தின் விளைவாக முதலாளித்துவக் கண்ணோட்டத்திற்கு தம்மையறியாமல் ஆட்பட்டிருக்கும் வாசகர்களை மீட்பதில் இவருடைய எழுத்தின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது.
மேல்கோட்டு | The Overcoat | குறுநாவல் – பாகம் – 09
நெடுத்தூரத்திற்கு அப்பால் – எங்கேயோ, ஆண்டவனே அறிவான் – போலீஸ் நிலையத்திலிருந்து ஒளிக்கீற்று வருவதை அக்காக்கிய் அக்காக்கியெவிச் கண்டான். அந்த நிலையம் உலகின் மறு கோடியில் இருப்பது போன்று அவனுக்குப் பிரமையுண்டாயிற்று. மைதானத்தில் அடி வைத்ததுமே அவனுடைய குதூகலம் பெருமளவு மறைந்து போயிற்று. எதோ கெட்டது நிகழப் போகிறது என்று நெஞ்சுக்குள் உணர்ந்தவன் போலத் தன் வசமின்றியே எழுந்த திகிலுடன்தான் அவன் மைதானத்தில் புகுந்தான். பின்னே பார்த்தான், அப்புறம் இரு மருங்கிலும் நோக்கினான். நாற்புறமும் கடல் சூழ்ந்திருப்பது மாதிரிப்பட்டது. “பார்க்காமலிருப்பதே மேல்” என்று எண்ணியவனாய், கண்களை மூடிக்கொண்டு நடந்தவன், மைதானத்தின் மறு எல்லை நெருங்கி விட்டதோ எனத் தெரிந்து கொள்வதற்காக விழிகளைத் திறந்ததுமே, இன்னாரென்று தெரியாத இரண்டு மீசைக்காரர்கள் தன் முகத்திலிடிப்பது போல அவ்வளவு அருகே நிற்கக் கண்டான்.
அவன் கண்கள் இருண்டன, நெஞ்சு திக்திக்கென்று அடித்துக்கொண்டது. எதிரே நின்றவர்களில் ஒருவன் அவன் கோட்டுக் காலரைப் பற்றியவாறே, “இதோ பார், என் கோட்டுத்தான்!” என்று இடிக் குரலில் முழங்கினான். அக்காக்கிய் அக்காக்கியெவிச் “ஆபத்து, காப்பாத்துங்க!” என்று கத்த வாயெடுப்பதற்குள் இரண்டாமவன், எழுத்தனது மண்டையை விடப் பெரிய முட்டியை அவன் மூஞ்சிக்கு நேரே காட்டி, “கூச்சல் போட்டாயோ, தொலைந்தாய்!” என்று பயமுறுத்தினான். அக்காக்கிய் அக்காக்கியெவிச்சுக்குத் தெரிந்ததெல்லாம் அவர்கள் தன் மேல்கோட்டைக் கழற்றிக்கொண்டு கொடுத்த உதையில் தான் வெண்பனியில் தடாரென்று விழுந்தது தான். மேற்கொண்டு எதுவுமே அவன் உணர்வில் படவில்லை.
சில நிமிடங்களுக்குப் பின் ஓரளவு சுய நினைவடைந்து அவன் எழுந்தபோது ஒருவரையும் காணோம். மைதானத்தில் ஒரே குளிராயிருப்பதையும் மேல்கோட்டு இல்லை என்பதையும் உணர்ந்துகொண்டு கூச்சலிடத் தொடங்கினான், எனினும் மைதானத்தின் மறுஎல்லை வரை எட்டுவதற்குக் குரலில் தெம்பு இல்லை என்று பட்டது. புகலற்ற ஆவேசத்துடன், கத்துவதை நிறுத்தாமல் மைதானத்தின் குறுக்காக போலீஸ் நிலையத்தை நோக்கி நேராக ஓடினான். அதன் அருகே, நீள்பிடிக் கோடரி மேல் சாய்ந்து நின்று கொண்டிருந்த போலீஸ்காரன், என்ன இழவுக்காக ஒருவன் காததூரத்திலிருந்தே காட்டுக் கூச்சல் போட்டுக்கொண்டு நம்மைப் பார்க்க ஓடிவருகிறான் என்று எண்ணியவனாய் ஓடிவருபவனை ஆவலுடன் நோக்கினான்.
அக்காக்கிய் அவனை நெருங்கியதுமே, “நீ என்ன ஒன்றையுமே பார்க்காமல் உறங்கிக் கொண்டிருக்கிறாயா, கண்ணெதிரே மனிதனை வழிப்பறி செய்கிறார்கள், அது கூடப் பார்வையில் படவில்லையோ?” என்று மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கக் கத்தத் தொடங்கினான். போலீஸ்காரனோ, தான் எதையும் பார்க்கவில்லை என்றும், தனக்குக் கண்ணில் பட்டதெல்லாம் யாரோ இரண்டு ஆட்கள் மைதானத்தின் மத்தியில் அவனை நிறுத்தியதை மட்டுமே என்றும், அவர்கள் அவனுடைய நண்பர்கள் போலும் எனத் தான் எண்ணிக் கொண்டதாகவும் சொல்லி விட்டு, இங்கே நின்றுகொண்டு வீணாகத் தன்னைத் திட்டுவதற்குப் பதில் மறுநாள் காலை போலீஸ் இன்ஸ்பெக்டரைப் போய்ப் பார்ப்பது பயனுள்ளதென்றும், அவன் கோட்டைப் பறித்துக் கொண்டவர்களை இன்ஸ்பெக்டர் கட்டாயம் கண்டுபிடித்து விடுவாரென்றும் அக்காக்கிய் அக்காக்கியெவிச்சுக்கு யோசனை கூறினான்.
அக்காக்கிய் தலைகால் புரியாத குழப்பத்துடன் வீட்டுக்கு ஓடிப்போய்ச் சேர்ந்தான். கன்னப் பொருத்தை ஒட்டியும், பிடரிலும் இப்போதும் அடர்த்தியின்றி வளர்ந்து வந்த அவன் தலைமயிர் பறட்டையாக ஒரே அலங்கோலமாயிருந்தது; மார்பிலும் விலாக்களிலும் காற்சட்டை பூராவும் வெண்பனி அப்பியிருந்தது. தடதடவென்று கதவு தட்டும் சத்தத்தைக் கேட்டு விழித்துக்கொண்ட வீட்டுச் சொந்தக்காரி படுக்கையிலிருந்து தூக்கிவாரிப் போட்டுக்கொண்டு எழுந்து ஒற்றை ஸ்லிப்பரை மட்டும் அணிந்தவாறு, நாணம் காரணமாகச் சட்டையை ஒரு கையால் மார்பை மூடிப் போர்த்திய படி வாயிலருகே ஓடிச் சென்றாள். கதவைத் திறந்து அக்காக்கியின் கோலத்தைக் கண்டதுமே அவள் திடுக்குற்றுப் பின்வாங்கினாள்.
நடந்த விஷயத்தை அவன் தெரிவித்ததும் அவள் அட பாவமே என்று கைகளை உதறி, “நேரே மாவட்ட போலீஸ் கமிஷனரிடமே போவது நல்லது, போலீஸ் இன்ஸ்பெக்டர் உன்னை ஏய்த்துவிடுவான். ‘அது செய்கிறேன் இது செய்கிறேன்’ என்று வாய்ச்சவடால் அடித்துவிட்டு நட்டாற்றில் விட்டு விடுவான். மாவட்ட போலீஸ் கமிஷனரிடம் நேரே போவதே எல்லாவற்றையும் விட மேல், அவர் எனக்கு வேண்டியவர் கூட, ஏனெனில் என்னிடம் ஒரு காலத்தில் சமையல்காரியாயிருந்த பின்லாந்துப் பெண் ஆன்னா இப்போது மாவட்ட போலீஸ் கமிஷனரின் வீட்டில் குழந்தைத் தாதியாக வேலை செய்கிறாள். தவிர அவர் என் வீட்டைக் கடந்து வண்டியில் போகையில் நான் அடிக்கடி அவரைப் பார்த்திருக்கிறேன், ஞாயிறுதோறும் அவர் சர்ச்சுக்குக் கூடச் செல்கிறார், பிரார்த்தனை செய்யும்போது சுற்றுமுற்றும் எல்லாரையும் சந்தோஷத்தோடு நோக்குவார், இவற்றையெல்லாம் காணும்போது அவர் தயாள குணமுள்ளவராகவே இருக்க வேண்டும்” என்று சொன்னாள்.
இந்த அறிவுரையை முடிவுவரை கேட்டுவிட்டு அக்காக்கிய் ஏக்கத்துடன் தளர்நடை நடந்து தன் அறைக்குப் போனான். அந்த இரவை அவன் எவ்வாறு கழித்தான் என்பதை, பிறரது நிலையில் தம்மைக் கற்பனை செய்து பார்க்கத் திறன் கொண்டவர்கள் தாமே நிர்ணயித்துக் கொள்ளுமாறு விட்டுவிடுவோம். மறுநாள் அதிகாலையில் அவன் மாவட்டப் போலீஸ் கமிஷனரைக் காணச் சென்றான், ஆனால் அவர் உறங்கிக் கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். மீண்டும் பத்து மணிக்குப் போனான், அப்பொழுதும் அவர் தூங்கிக் கொண்டிருந்தார். பதினொரு மணிக்கு அவன் மறுமுறை வந்த போது அவர் வீட்டில் இல்லை என்ற தகவல் கிடைத்தது. மத்தியானச் சாப்பாட்டு வேளையில் அவன் பின்னுமொரு முறை வந்ததும் நுழைவு அறையிலிருந்த எழுத்தர்கள் அவனை உள்ளே போகவிட மனமின்றி, என்ன காரியம், விவரமென்ன, அப்படி என்ன நடந்து விட்டது என்று சொல்லும்படி கேட்டார்கள்.
ஆகக் கடைசியில் அக்காக்கிய் வாழ்க்கையிலேயே முதல் தடவையாக அடித்துப் பேசுவதென்று தீர்மானித்து, தான் மாவட்ட போலீஸ் கமிஷனரை நேரில் காண வந்திருப்பதாகவும், தன்னை உள்ளே விடாமலிருக்க அவர்களுக்கு உரிமை கிடையாதென்றும், தான் துறையிலிருந்து அலுவலக விஷயமாக வந்திருப்பதாகவும், தான் மட்டும் அவர்கள் மேல் குறைகூறி மனுச் செய்து கொண்டால் என்ன ஆகும் என அவர்கள் பார்த்துக் கொள்ளலாம் என்றும் முகத்திலறைந்தாற் போலச் சொன்னான். இதை எதிர்த்துப் பேச எழுத்தர்களுக்குத் துணிவு வரவில்லை. அவர்களில் ஒருவன் கமிஷனரை அழைத்துவரச் சென்றான்.
மேல்கோட்டு பறிக்கப்பட்ட கதையைப் போலீஸ் கமிஷனர் கொஞ்சம் விசித்திரமான முறையில் கேட்டான்.
விஷயத்தின் முக்கிய அம்சத்தில் கவனஞ் செலுத்துவதற்குப் பதிலாக அவன் அக்காக்கிய் அக்காக்கியெவிச்சிடம் “நீ அவ்வளவு நேரங்கழித்து வீடு திரும்பியதேன்? முறைகேடான வீடு எதற்காவது நீ போகவில்லை என்பது நிச்சயந்தானா?” என்றெல்லாம் விவகாரத்துக்கு தொடர்பு இல்லாத ஏதேதோ கேள்விகள் கேட்கத் தொடங்கவே அக்காக்கிய் ஒரேயடியாகக் குழப்பமடைந்து, போலீஸ் கமிஷனர் மேல்கோட்டை மீட்டுத் தருவதற்கு வேண்டிய நடவடிக்கைகள் எடுப்பானா மாட்டானா என்று தெரியாதவனாய் வெளியேறினான்.
ஒரு மாதம் இருக்கும். மகளை பள்ளியில் விட்டு விட்டு திரும்பிக் கொண்டிருந்தேன். ஒரு சின்ன சந்தியில் கடும் வாகன நெருக்கடி நாலா பக்கமும் முட்டிக் கொண்டு எங்கும் நகர முடியாமல் ஸ்தம்பித்துப் போயிருந்தது. அந்த சத்தங்களுக்கு மத்தியில் மிக தெளிவாக ஒரு குரல் கேட்டது “ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்களை எல்லாம் திருத்த முடியாதுடா டேய்” என்று ஒருவர் அனைவருக்கும் கேட்கும் படி கத்தினார். மீண்டும் ஒரு முறைச் சொன்னார்.
உடனே கடவுள் வாசகம் எழுதிய ஆட்டோவில் இருந்து இறங்கிய சாரதி ஒருவர் வாகங்களை ஒழுங்கு படுத்தத் துவங்கினார். மேலும் சிலர் வந்தார்கள். ஒரு குறுகிய நேரத்தில் அந்த நெருக்கடியில் சிக்கிய அனைவருமே தங்களை மனிதர்களாக உணர்ந்திருப்பார்கள் போலும், வாகனங்கள் நகரத்துவங்கியது. நான் அந்த மனிதரைக் கண்ணுற்றேன். அவர் ரொம்ப சாதாரண மனிதராக இருந்தார். படிப்பறிவு இல்லாத பாமரன் போல இருந்தார். நான் இறங்கி டிராபிக் எதையும் சரி செய்யவில்லை அச்சூழலை பயன்படுத்தி வெளியேறி வந்து விட்டேன்.
பெரியார் 90 ஆண்டுகாலம் தமிழ் மக்களின் சிந்தனையோட்டங்களில் ஊடுறுவியவர். மதம், கடவுள் நம்பிக்கை, சாஸ்திரங்கள் என்பதோடு அடிமைத்தனத்தை இயல்பாக ஏற்றுக் கொண்ட மக்களிடம் அதற்கான காரணத்தை ஒளிவு மறைவு இல்லாமல் போதித்தார். அதில் தமிழக மக்களின் பொருளாதார நலன், சமூக நீதி, பெண் விடுதலை, சுகாதாரம், வாழ்க்கை விழுமியங்கள் என நாம் விரும்பும் விஷயங்களும், உண்டு நாம் விரும்பாத விஷயங்களும் உண்டு.
ஆனால், தமிழகத்தில் இன்று வரை வாழும் பெரும்பான்மை மக்களுக்கு பெரியாரைப் பற்றியும் தெரியும் ரஜினியைப் பற்றியும் தெரியும். அதில் பெரியார் பற்றிய எண்ணங்கள் உயர்வானதாகவும், ரஜினி பற்றிய எண்ணங்கள் சாதாரணமானதாவும் இருக்கும்.
ஏதோ ஒரு வகையில் பெரியாரை அனைத்து விதமான வலதுசாரிகளுமே எதிர்த்துத்தான் வருகிறார்கள். காரணம் கருத்தியல் ரீதியாக அவர் பொருள் முதல்வாதக் கோட்பாட்டை முன்னிறுத்தினார். கடவுளை கற்பனை என்றார்.
இந்து மதம் பற்றிய அவரது வியாக்கினாங்கள் அனைத்துமே ஒளிவு மறைவின்றி மக்கள் முன்னால் வைக்கப்பட்டவை. தனக்கு எழுந்த எதிர்ப்புகளை அவர் தன் சுவைகூடிய அரசியல் நகையுடனே எதிர்கொண்டார். இதில் மறைக்கவோ மறுக்கவோ எதுவும் இல்லை. ஆனால், சேலம் நடவாத நிகழ்வை நடந்ததாக கூறும் போதுதான் அது சர்ச்சையாகிறது.
பெரியார் பேசியதில் சரிபாதி விஷயங்கள் அரசின் திட்டமாக இருப்பதுதான் அவரது வெற்றி. அந்த திட்டங்கள் ஏழைப் பெண்களுக்கு, அரசு ஊழியர்களுக்கு, கீழ் மட்ட தொழிலாளர்களுக்கு பயன்படும் திட்டங்களாக உள்ளது. பெரியார் செல்வப்பெருந்தகை மாளிகையில் வாழ்ந்த செல்வந்தர். ஆனால், அவர் ஏழைகளை மாடியில் இருந்து பார்க்கவில்லை கீழே இறங்கி வந்து கீழிருந்து பார்த்தார். அந்த பார்வையில் இருந்துதான் . அவரது கருத்துக்கள் பிறந்தன. அதனால் ஆதாயம் அடைந்த பெருங்கூட்டம் ஒன்று அவரை ஒரு புள்ளியில் இணைத்துப் பார்த்து பெரியாரோடு தன்னை இணைத்துக் கொள்கிறது.
அதில் ஆயிரம் ராமர்கள் வந்தாலும், சோ போய் குருமூர்த்தி வந்தாலும் பெரியாரை தமிழக மக்களின் எண்ண ஓட்டங்களில் இருந்து அகற்றி விட முடியாது. இன்னும் அந்த நிலை அப்படியே தொடர்கிறது. இதற்கு பிரதானக்காரணம் இணையப்பரவல். (இது விரிவாக எழுத வேண்டிய விஷயம் தமிழ் இணையவரலாறு எழுதப்படும் போது இவைகள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்)
கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பெரியார் இயக்கங்கள், திராவிட இயக்கங்கள் தமிழகத்தில் பலவீனமாகியிருக்கிறது. தாக்குதல் நிலையில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளும் நிலைக்கு அவர்கள் வந்திருக்கிறார்கள் என்று என் நண்பர் ஒருவர் சொன்னார். ரஷ்ய ஒன்றியத்தின் சிதைவுக்குப் பின்னர் உலகம் முழுக்க ஏற்பட்ட மாற்றத்தில் துவங்கி உலகம் முழுக்க வலதுசாரிகளின் எழுச்சியோடு இந்தியாவில் சங்கிகளின் கருத்தியல், அதிகார எழுச்சியையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழகத்திலும் இதனுடைய வீச்சை நாம் காண முடியும். ஆனால், இங்கு நாம் கவனிக்க வேண்டியது. பாபர் மசூதியை இடித்தார்கள் லட்சம் பேர் கலவரங்களில் கொல்லப்பட்ட போது அவர்கள் மகிழ்ச்சிக்கூத்தாடினார்கள். பெரியார் பேசி எங்கும் ஒரு கலவரமோ, தாக்குதலோ இல்லை. ஆனால், ஹெச்.ராஜா பேசி இந்த மண்ணில் வன்முறை விதைகள் உருவாகி இருப்பது வரலாறு
அவர்களுக்கு அந்த கவலையில்லை. பெரியார் தொண்டர்களுக்கும், ஜனநாயக சக்திகளுக்கும் அப்படி இல்லை எங்கேனும் கவலரம் வந்து விடுமோ என்ற அச்சம் அவர்களுக்கு எப்போதும் இருக்கும், காரணம் நாம் மாடியில் இல்லை. கீழே நிற்கிறோம்.
உலகம் முழுக்க வலதுசாரிகளின் எழுச்சி இன்னும் சில ஆண்டுகள் நீடிக்கலாம். அல்லது எங்கேனும் ஒரு வசந்தம் நீடித்து நம்மை புதிய வாழ்வினுள் அழைத்துச் செல்லலாம். என்றாலும் பெரியாருக்கும் தமிழக மக்களுக்குமான உறவு நிலை என்ன என்பதை தமிழக மக்களுடன் பெரியார் இயக்கங்கள் எளிய மொழியில் பேசத்துவங்க வேண்டும்!
சென்ற நான்கு நாட்களின் நம்மை கடந்து சென்ற பல செய்திகளை நாம் கவனிக்கவில்லை. அல்லது முக்கியத்துவம் கொடுக்கவில்லை. டோல்கேட் ஒரு நாள் வருமானம் 24 கோடியில் இருந்து 84 கோடியாக உயர்ந்திருக்கிறது. (செய்தி : தினமலர்) இன்னும் 60% பேர் பாஸ்ட்டேக் செய்யவில்லை. இருமுனை கட்டணம் என்பது இனி இல்லவே இல்லை. எல்லாமே சிங்கிள் எண்ட்ரிதான். அதனால் கூடுதலாக வந்த வருமானம் இது. விரைவில் ஒரு நாளைக்கு 98 கோடியை தொடும் என்கிறார்கள். அப்படியெனில் வாரத்திற்கு ? மாதத்திற்கு ?
இவ்வளவு பணம் யாருக்கு ? இழப்பீடாக மக்களுக்கு கொடுத்த பணம், சாலை மேம்படுத்திய பணம் ஆகியவைகளை எத்தனை ஆண்டுகள் கொடுப்போம் ? வாங்கிய கடனை கொடுக்க கொடுக்க குறையத்தானே செய்யும் ? இங்கே ஏன் அதிகரிக்கிறது ? இன்னும் எத்தனை ஆண்டுகள் இப்படி கொடுக்க போகிறோம் ? அதுவும் கழிப்பறை வசதி கூட இல்லாத கேவலமான சுங்கவரி நிலையங்களுக்கு ?
காங்கிரஸ் கொண்டு வந்த நீட் தேர்வை, குடியுரிமை சட்டத்தை, ஜி.எஸ்.டி. -யை கேவலமாக திருத்தி நம் மீது திணித்தார்களோ அப்படியே இப்போது இன்னொரு மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். இனி நிலத்தின் அடியில் சோதிக்க யாரிடமும் அனுமதி கேட்கத் தேவையில்லை என திருத்தம் செய்திருக்கிறார்கள்.
அதாவது மாநில அரசிடம் கூட, என அதன் ஷரத்துகள் சொல்கின்றன. ஏற்கனவே உள்ளாட்சி அமைப்புகளால் ஒரு டாஸ்மாக் கடையைக் கூட அப்புறப்படுத்த முடியாமல் அரசின் கொள்கை முடிவு என பேசியவர்கள், இனி அவைகளால் ஏதும் செய்ய முடியாது நீட்டிய இடத்தில் கையெழுத்து போடுவதை தவிற வேறு ஒன்றுமில்லை என்றொரு சூழலை உருவாக்கியுள்ளார்கள். இதுவரை இதற்கு மாநில அரசு ஒரு மூச்.. கூட எதிர்க்கவில்லை.
ஒவ்வொரு மாநிலத்திற்கும் கொடுக்க வேண்டிய ஜி.எஸ்.டி தொகை அதிகரித்துகொண்டே செல்கிறது. மம்தா ஒவ்வொரு மாதமும் போராடி வாங்குகிறார். மத்தியரசு ஏதேனும் காரணம் சொல்லி கொடுக்க மறுக்கிறது. தமிழ்நாட்டில் 4500 கோடிகளுக்கு மேல் ஜிஎஸ்டி மட்டும் கொடுக்கவில்லை.
இதுபோக மதுரை எய்ம்ஸ் -க்கு இப்போது வரை நில ஆர்ஜித தொகை கூட கொடுக்கவில்லை. இன்னும் பல்கலைகழக நிதி, உள்ளாட்சி உள்ளிட்ட எந்த நிதியும் கொடுத்த மாதிரி தெரியவில்லை. ஜி.எஸ்.டி வந்தால் மாநில அரசுக்கு வரிவருவாய் கூடும் என்ற எச்சைகள் அவர்களின் அடிமைகள் இப்போது வாய் திறக்க மாட்டார்கள். இப்படி ஒரு செய்தி வந்ததே அவர்களுக்கு தெரியாத மாதிரி இருப்பார்கள்.
நீட் தேர்வை ரத்து செய்ய சொல்லி சட்டப்பேரவை கொடுத்த மனுவை குப்பைக்கு தள்ளிய பிஜேபி இப்போது ஐந்தாம் வகுப்பு மாணவர்களை பொது தேர்வு, அதுவும் வேறு பள்ளியில் சென்று எழுதச் சொல்கிறது. பத்தாம் வகுப்பு மாணவன் சைக்கிள், அல்லது கல்லூரி பேருந்தில் செல்வான். ஐந்தாம் வகுப்பு மாணவன் எப்படி செல்வான் ? அரசு பள்ளி மாணவர்களை யார் அழைத்து செல்வார்கள் ? இந்நிலை தொடர்ந்தால் மாணவர்கள் இடைநிற்றல் அதிகரிக்கும் என கல்வியாளர்கள் சொன்ன போதும் ஏன் மத்தியரசு திணிக்கிறது. ஒரே காரணம் ‘நீ படிக்க வராதே’ என்பதையே இந்த பிஜேபி அரசு நீட் முதல் பொதுத்தேர்வு வரை திரும்ப திரும்ப சொல்கிறது.
பிஜேபி -யின் மூடர் கூட அரசும், அதிமுகவின் அடிமை அரசும் சேர்ந்து ஒட்டுமொத்த சீரழிவை செய்துகொண்டிருக்கின்றன. இவர்கள் இருவரின் சித்தாந்தங்களும் மண்ணில் இருந்து அழித்தொழிக்கப்படவேண்டியவை. அது ஒன்று தான் எதிர்கால இந்தியாவை மீட்டெடுக்க ஒரு வழி.. ஒரே வழி…
ஜார்க்கண்ட் – பெயர் குறிப்பிடாத 10,000 ஆதிவாசிகள் மீதான தேசத்துரோக வழக்குகளை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டுள்ளது.
ஆதிவாசி நைய் மன்ச் என்ற கிராம அமைப்பினால் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜார்க்கண்டின் குந்த்தி மாவட்டத்தில் உள்ள ஆதிவாசி கிராமத்தில் இந்திய அரசியலமைப்பின் செதுக்கல்களுடன் கூடிய ஒற்றைக் கல்.
ஜார்க்கண்டின் குந்த்தி மாவட்டத்தில் ஆதிவாசிகள் மீது போடப்பட்ட கொத்துக் கொத்தான தேசத்துரோக வழக்குகளை எதிர்த்து, ரிட் மனு மாநில உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆதிவாசி நைய் மன்ச் என்று புதிதாக அமைக்கப்பட்ட கிராம அமைப்பு சார்பில் வழக்கறிஞர் சுனில் விஸ்வகர்மா ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்த மனுவில், வழக்குகளை சிறப்பு விசாரணை குழுவிற்கு மாற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
ஸ்க்ரோல்.இன் அறிவித்தபடி, 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் மாவட்ட காவல்துறையினர் தாக்கல் செய்த 14 முதல் தகவல் அறிக்கைகளில் பதல்கடி இயக்கத்தில் பங்கேற்ற 10,000 ஆதிவாசிகள் மீது தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. ஸ்க்ரோல்.இன் (Scroll.in) பார்த்ததைவிட அதிகமான முதல் தகவல் அறிக்கைகள் இருக்கும் பட்சத்தில் தேசத்துரோக குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களின் உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே இருக்கக்கூடும்.
ரிட் மனுவை உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. ஜார்கண்ட் அரசாங்கம் மற்றும் காவல்துறைக்கு ரிட் மனு பிரதிகளை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது. இந்த விவகாரத்தில் முதல் கட்ட விசாரணை நிலுவையில் உள்ளது.
பதல்கடி இயக்கம் கல்வெட்டுகள் நடுவதைக் குறிக்கிறது, 2017 ஆம் ஆண்டில் ஆதிவாசி கிராமங்கள் இந்திய அரசியலமைப்பில் பழங்குடி சுயாட்சி தொடர்பான விதிகளை ஒற்றைக் கல் பலகைகள் மூலம் விளக்கின. ஆதிவாசிகளைத் தவறாக வழிநடத்துவதற்கும், அவர்களை அரசாங்கத்திற்கு எதிராக மாற்றுவதற்கும் இயக்கத்தின் தலைவர்கள் அரசியலமைப்பு குறித்து “தவறான விளக்கத்தை” பரப்புவதாக காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது.
ஆனால் ஆகஸ்ட் 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவில், கற்களில் பொறிக்கப்பட்ட அரசியலமைப்பு விதிகளின் விளக்கத்தில் என்ன தவறு என்பதை விசாரணை அதிகாரிகள் நிறுவத் தவறிவிட்டதாக சுட்டிக்காட்டுகின்றனர்.
“பிரிவு 124 (A) இன் கீழான குற்றம் எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் சேர்க்கப்பட்டுள்ளது,” என்று ரிட் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சனை ஆதிவாசி சமூகங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் அளிக்கும் இந்திய அரசியலமைப்பு மற்றும் அதன் ஐந்தாவது அட்டவணை ஆகியவற்றுடன் தொடர்புடையது என்றாலும், பயிற்சியில் உள்ள ‘கற்றுக்குட்டி’ காவல் அதிகாரிகளின் சுய விருப்பதின்பேரிலேயே வழக்கு புனையப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
காவல்துறையினர் பதிவு செய்துள்ள வழக்குகள் “பழங்குடி வழக்கம், விதி மற்றும் கலாச்சாரம்” தொடர்பானவை என்று மனுவில் கூறப்பட்டுள்ளது, ஆனால் விசாரணை அதிகாரிகள் இந்த அம்சங்களை கவனிக்கவில்லை அல்லது ஐந்தாவது அட்டவணையின் கீழ் பழங்குடி சமூகங்களுக்கு கிடைக்கும் அதிகாரங்கள் மற்றும் உரிமைகளை அவர்கள் ஆராயவில்லை.
ஒற்றைக் கல் பலகைகள் அமைப்பது ஆதிவாசி வழக்கத்தின் “பயன்பாடு மற்றும் முக்கியத்துவம்” குறித்து விசாரிக்காமல் பதல்கடியில் பங்கேற்பது ஒரு குற்றமாக போலீசார் முத்திரை குத்தியுள்ளனர்.
வழக்கு நிதி சேகரிக்கும் முயற்சியில் ஈடுபடும் பழங்குடி மக்கள்.
குந்த்தியின் மக்கள் தொகையில் 70% பேர் அச்சத்தில் வாழ்கிறார்கள் என்று ரிட் மனுவில் கூறப்பட்டுள்ளது. ஏனெனில் போலீஸ் முதல் தகவல் அறிக்கையில் “பெயர் தெரியாத” நபர்கள் மீது குற்றம் சாட்டியுள்ளதன் மூலம் எதிர்காலத்தில் யாரையும் எந்த நேரத்திலும் பொய்யாக இதில் சிக்க வைக்க முடியும்.
அருகிலுள்ள கிராமங்களில் 200 -க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் ஜூன் 9 ஆம் தேதி பாண்ட்ரா கிராமத்தில் ஆதிவாசி நியாய மஞ்ச் அமைக்கப்பட்டது. அதன் நோக்கம், ஜார்கண்ட் அரசாங்கத்திற்கு எழுதிய கடிதங்களில் கூறப்பட்டுள்ளபடி, குந்த்தியில் தேசத்துரோக வழக்குகளில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான ஆதிவாசிகளுக்கு நீதி கோருவதாகும்.
இந்த நிருபர் நவம்பர் தொடக்கத்தில் ஒரு நாளில் பாந்த்ரா கிராமத்தில் அமைப்பின் உறுப்பினர்களைச் சந்தித்தார், அவர்கள் வழக்கு நிதிக்காக கிராம மக்களிடமிருந்து நன்கொடைகளை சேகரிக்கும் முயற்சியைத் தொடங்கினர்.
***
ஜார்க்கண்டில் 10,000 ஆதிவாசிகளுக்கு எதிரான தேசத் துரோக வழக்குகள் இந்திய ஜனநாயகம் பற்றி வெளிப்படுத்துகின்றன. பதல்கடி இயக்கத்தின் மையமாக உள்ள குந்த்தி மாவட்டத்திலிருந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் சமூக ஆர்வலர் தயாமனி பார்லாவுடன் ஒரு நேர்காணல்.
ராஞ்சியில் தனது கணவருடன் இயங்கும் தேநீர் கடையில் தயாமனி பார்லா.
முந்தைய பகுதியில், பதல்கடி இயக்கத்தில் பங்கேற்றதற்காக குந்த்தி மாவட்டத்தில் 10,000 க்கும் மேற்பட்ட ஆதிவாசிகள் மீது ஜார்க்கண்ட் அரசு தொடுத்துள்ள தேசத்துரோக வழக்கு குறித்து நாங்கள் அறிக்கை தயாரித்தோம். இந்தப் பகுதியில், பத்தல்கடி இயக்கத்தின ஒரு அம்சமான தேர்தல் புறக்கணிப்புக்கான அழைப்பு குறித்து நாம் மிக நெருக்கமாக இங்க ஆராய்வோம்.
2017-ம் ஆண்டில், ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இருந்து ஒரு மணிநேரம் தொலைவில் உள்ள குந்த்தி மாவட்டத்தில் உள்ள கிராம சந்திப்புகளில் வர்ணம் பூசப்பட்ட பச்சை நிற ஒற்றைக் கல்பலகைகள் உருவாகத் தொடங்கின. பழங்குடி சுயாட்சி தொடர்பான இந்திய அரசியலமைப்பின் விதிகள் அதில் பொறிக்கப்பட்டுள்ளன என ஆதிவாசிகள் விளக்கமளித்தனர். காலனிய காலத்திலிருந்து தொடரும் ஆதிவாசிகளின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் ஆதிவாசிகளின் நில உரிமையைப் பாதுகாக்கும் சட்டங்களை நீர்த்துப் போகச் செய்யும் பாரதிய ஜனதாக் கட்சி அரசாங்கத்தின் நடவடிக்கையிலிருந்து பழங்குடி மக்களின் உரிமையைப் பாதுகாக்கவே இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
பதல்கடி என்று அழைக்கப்படும் இந்த இயக்கம், அதாவது, கற்களை இடுவது, முக்கிய நிகழ்வுகளை குறிக்கும் வகையில் ஒற்றைக் கல் நிறுவும் பழமை வாய்ந்த முண்டா ஆதிவாசி பாரம்பரியத்தை இந்த இயக்கம் ஈர்த்தது. 1990-களின் பிற்பகுதியில், ஆதிவாசி பகுதிகளில் உள்ள கிராம சபைகளுக்கு சுயாட்சி வழங்கும் பஞ்சாயத்து (விரிவாக்கம்) திட்டமிடப்பட்ட பகுதிகளுக்கான சட்டங்களும் இதேபோல் கற்களில் பொறிக்கப்பட்டன.
ஆயினும், பதல்கடியில் இருப்பது குஜராத்தில் உள்ள சதிபதி வழிபாட்டின் கூறுகளை அடிப்படையாகக் கொண்டது, இது இங்கிலாந்தின் விக்டோரியா மகாராணி அங்கீகரித்தபடி, ஆதிவாசிகள் இந்தியாவின் உரிமையாளர்கள் என்று கூறுகிறது. 1930 -களில் குஜராத்தின் பழங்குடிப் பகுதிகளில் எழுந்த சதிபதி இயக்கத்தின் தடங்களைக் கொண்டுள்ளது இந்த பத்தல்கடி இயக்கம். இதைப் பின்பற்றுபவர்கள் அரசாங்க சேவைகள் மற்றும் நலத்திட்டங்களைப் பயன்படுத்த மறுத்து தேர்தல்களில் இருந்து விலகி இருக்க வேண்டும். குஜராத்தில் அரசு நிர்வாகம் பெரும்பாலும் பழங்குடி மக்களைப் புறக்கணித்ததாகவேத் தெரிகிறது. உரிமைகளைப் பாதுகாப்பதை மையமாகக் கொண்ட ஆதிவாசி இயக்கங்களைப் போலல்லாமல், சதிபதி பின்பற்றுபவர்கள் மாநிலத்தின் செயல்களிலிருந்து விலகி இருக்க விரும்பினரேயன்றி மாநில அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக போராடும் வகையில் செயல்படவில்லை.
ஜார்கண்டில் உள்ள பதல்கடி இயக்கத்தின் தலைவர்களை குஜராத்தின் சதிபதி முறை எவ்வாறு பாதித்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. பழங்குடி மக்களின் சுயாட்சிக்கான அரசியலமைப்பு விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அவர்கள் சதிபதியின் சில யோசனைகளை தங்கள் பிரச்சாரத்தில் பயன்படுத்திக் கொண்டனர் என்று சொல்லலாம்.
ஆனால் பதல்கடி மீது அரசாங்கம் பெரிதும் தாக்குதல் நடத்திய போது, அதன் தலைவர்களில் பலரைக் கைதுசெய்து, ஆயிரக்கணக்கான ஆதிவாசிகளை தேசத்துரோக குற்றச்சாட்டுக்கு உட்படுத்தி, அதன் மூலம் கல் போடும் விழாக்களை நிறுத்தி வைத்தாலும், குஜராத்தைச் சேர்ந்த சதிபதி தலைவர்களை இது மிகவும் ஈர்த்ததாகத் தெரிகிறது.
அக்டோபர் 14-15 தேதிகளில், குந்த்தி மாவட்டத்தின், குட்டிகடா கிராமத்தில் விஸ்வ சாந்தி சம்மேளனத்தின் கீழ் ஒரு பெரிய கூட்டம் நடைபெற்றது. குஜராத்தைச் சேர்ந்த சதிபதி தலைவர்கள் இதில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. பதல்கடி நிகழ்வுகள் மீதான ஒடுக்குமுறையைப் போலல்லாமல், காவல்துறை இந்தக் கூட்டத்தை சீர்குலைக்கவில்லை.
‘ஏ.சி.பாரத் சர்க்கார்’ சின்னங்களுடன் சுவரொட்டிகள் குழுவின் ஒரு பகுதியாக சதிபதி தலைவர் குன்வர் கேசரி சினின் புகைப்படம்.
சில வாரங்கள் கழித்து, மேற்கண்ட கூட்டத்தின் தடயங்கள் குட்டிகாடா கிராமத்தில் இன்னும் காணப்பட்டன. சதிபதி தலைவர் குன்வர் கேசரி சின் நிறுவிய ஆதிவாசி மாநிலம் என்று அழைக்கப்படும் “ஏசி பாரத் சர்க்கார்” என்கிற வாசகம் பொறிக்கப்பட்ட லேமினேட்டட் சுவரொட்டிகள் மண் சுவர்களில் பதிக்கப்பட்டிருந்தன. ஆதிவாசி ஆண்களும் பெண்களும் வெள்ளை நிற உடையணிந்து வீட்டிற்குள் இருந்து வெளியே வந்தனர். அவர்கள் விஸ்வ சாந்தியைப் பின்பற்றுபவர்கள் என்று ஒரு இளைஞர் கூறினார்.
அவர் கோடிட்டுக் காட்டிய கருத்துக்கள் சதிபதியின் கொள்கைகளில் முழுமையாக தொகுக்கப்பட்டுள்ளன. ஆதிவாசிகள் மனிதனால் உருவாக்கப்பட்ட அரசுக்கு வெளியே உள்ளவர்கள், இந்திய நீதிபரிபாலன முறைக்கு அப்பாற்பட்டவர்கள், இயற்கையான மக்கள் ஆவர்.
அவர்களும் பதல்கடியைப் பின்பற்றுபவர்களா என்று கேட்டதற்கு, அந்த இளைஞர் விஸ்வ சாந்திக்கு பத்தல்கடி இயக்கத்துடன் எந்த தொடர்பும் இல்லை என்று வலியுறுத்தினார். “இந்திய அரசியலமைப்பு ஆதிவாசிகளுக்கு பொருந்தாது, இதற்கும் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை,” என்று அவர் அறிவித்தார். அரசியலமைப்பு மற்றும் சட்டங்கள் எங்களுக்குப் பொருந்தாது என்றால், நில வருவாய் விதிகள் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை நாங்கள் ஏன் நம்ப வேண்டும்? “ஆதிவாசி அல்லாத இந்திய மக்கள் அதாவது உங்கள் அமைப்பு கூட எங்களை ஏ.சி.பாரத் மக்கள் என அங்கீகரிக்கிறது” என்று அவர் கூறினார்.
சதிபதி முறையைப் பின்பற்றுபவர்கள் கூறும் நில வருவாய் புத்தகங்கள் மற்றும் முத்திரைகள் ஒரு ஆதிவாசி அரசின் இருப்பை நிலைநிறுத்துகின்றன.
பா.ஜ.க அரசாங்கம், பத்தல்கடி இயக்கத்தை ஆதரிப்பதன் மூலம் இந்த இயக்கத்தை சீர்குலைக்க முயல்வதாக ஜார்கண்ட்டில் உள்ள பல ஆதிவாசி தலைவர்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆதிவாசிகளை தேர்தலிலிருந்து விலகி இருக்கச் செய்வதன் மூலம் அரசியலமைப்பை அடிப்படையாகக் கொண்ட இவர்களின் சவாலான இந்த இயக்கம் உயிர்ப்பற்ற முறையில் அதன் வீரியத்தை இழப்பது ஆளும் கட்சிக்கு சாதகமாகிவிடுகிறது. இதற்கு ஆதாரமாக மே மாதம், குந்த்தியில் நடந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க வுக்கு எதிராக வாக்களிக்க வேண்டிய ஆதிவாசிகள் தேர்தலைப் புறக்கணித்ததால் பா.ஜ.க 1,445 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை இங்கே குறிப்பிடலாம்.
இந்த நிகழ்வுகளால் கலக்கமடைந்தவர் ஆதிவாசி தலைவர்களில் ஒருவரான தயாமனி பார்லா. இவர் ஒரு பத்திரிகையாளர், எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலர். பல பத்தாண்டுகளாக, பழங்குடியினரை அவர்களது வாழ்விடங்களிலிருந்து அகற்றுவதற்கு எதிரான எதிர்ப்பு இயக்கங்களில் பார்லா முன்னணியில் உள்ளார். உலகளாவிய கூட்டு நிறுவனமான ஆர்செலர்-மிட்டலின் எஃகு திட்டம் (Steel Project) அமைப்பதை எதிர்த்து வெற்றிகரமான போராட்டத்திற்கு தலைமை தாங்கிய உடனேயே அவர் 2012-ல் சிறையில் அடைக்கப்பட்டார்.
2014-ம் ஆண்டு, குந்த்தி மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் பார்லா போட்டியிட்டு தோல்வியடைந்தார். முன்னாள் முதலமைச்சர் பாபுலால் மராண்டி தலைமையிலான பிராந்தியக் கட்சியான ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா சார்பில் இந்த ஆண்டு, தற்போது நடைபெறும் குந்த்தி தொகுதியில் இருந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார்.
ஆதிவாசிகள் தேர்தல் செயல்முறையிலிருந்து விலகி இருப்பது மற்றும் பதல்கடி இயக்கத்தின் வீழ்ச்சி குறித்த ஆபத்துகள் பற்றி ஸ்க்ரால்.இன் (scroll.in)-க்கு அளித்த பேட்டியில் தனது அச்ச உணர்வை பார்லா வெளிப்படுத்தினார். கடினப் போராட்டத்தின மூலம் பெற்ற அரசியல் அமைப்பு உரிமைகள் இன்று மிகப் பெரிய சவாலை எதிர்நோக்கி உள்ளன என்கிறார் அவர்.
இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய அரசியலமைப்பு சபையில் பழங்குடி சமூகங்கள் சார்பாக பங்கேற்ற குந்த்தியில் பிறந்த மக்களைக் கவர்ந்த தலைவர் ஜெய்பால் சிங் முண்டா அவர்கள் தலையீட்டின் பேரிலேயே ஆதிவாசிகளின் உரிமைகள் நிலை நாட்டப்பட்டன; ஜெய்பால் சிங் முண்டா அரசியலமைப்பு சபைக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால், எங்களுக்கு ஐந்தாவது அட்டவணை கூட இருந்திருக்காது என்கிறார் பார்லா.
அரசியலமைப்பு சபையின் விவாதங்களின் போது ஜெய்பால் சிங் முண்டா அவர்கள் மேற்கொண்ட கடுமையான முயற்சியின் விளைவாகவே மிகவும் பயனுள்ள ஐந்தாவது அட்டவணை இந்திய அரசியல் அமைப்பில் சேர்க்க அரசியலமைப்பு சபையை நெட்டித் தள்ளியது. பதல்கடி கல்வெட்டுகளில் உள்ள விளக்கங்கள் அவரது புரிதலை பிரதிபலிப்பவை.
***
பார்லாவுடனான நேர்காணல், ராஞ்சியில் தனது கணவருடன் அவர் நடத்தும் தேநீர் கடையில் எடுக்கப்பட்டவை.
குந்த்தி மாவட்டத்தில் இருந்து தற்போதுதான் திரும்பினோம். அங்கு 10,000-க்கும் மேற்பட்ட ஆதிவாசிகள் மீது தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இது குறித்து நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
அரசியலமைப்பின் ஒரு பகுதியை கல்லில் எழுதுவது அரசியலமைப்புக்கு எதிரான மற்றும் தேசத்துரோக செயலாக எப்படி இருக்கும்? இது பதல்கடி ஆதிவாசி பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும். சட்டத்தைப் பற்றி மக்களுக்குக் கற்பிக்க கல் வெட்டுகளைப் பயன்படுத்துவதற்கான யோசனை கூட புதியதல்ல. முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும் சமூக ஆர்வலருமான பி.டி. சர்மா 1990-களில் கற்களில் திட்டமிடப்பட்ட பகுதிகளுக்கு பஞ்சாயத்து விரிவாக்கத்தின் விதிகளை எழுத கிராமங்களை ஊக்குவித்தார்.
இயக்கம் பற்றி நீங்கள் எப்போது முதலில் அறிந்தீர்கள்?
பதல்கடி தொடங்கியபோது, ‘பதல்கடி நிகழ்கிறது, பதல்கடி நிகழ்கிறது’ என்று கேள்விப்பட்டோம். ஆனால் செய்தித்தாள்களில் அதைப் பற்றிய செய்திகள் வந்த பின்னரே, அது உண்மையில் நிகழ்கிறது என்று நாங்கள் உறுதியாக நம்பினோம். ஆனால், அதை வளர்ச்சிக்கான எதிர்ப்பு, அரசாங்க எதிர்ப்பு என்று செய்தித்தாள்கள் சித்தரித்தன. அது நடந்த கிராமங்களுக்கு நான் சென்றபோது, பாந்த்ராவைப் போலவே, ஊடக அறிக்கையும் தவறானது மற்றும் ஒரு பக்கச்சார்பானது என்பதை உணர்ந்தேன். இயக்கத்தை கேவலப்படுத்தும் முயற்சியாகவே இது இருந்தது.
இந்திய அரசியலமைப்பு செதுக்கப்பட்ட கல் வெட்டு. இதற்குப் பின்னால் அமைந்திருப்பது ஒரு தூய்மை இந்தியா விளம்பரம். தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் கட்டப்பட்ட மோசமான கழிப்பறைகள் தங்களுக்கு சிறிதும் பயன் அளிக்கவில்லை.
பதல்கடியை கிறிஸ்தவ மிஷனரிகள் நிதியுதவி செய்ததாக அரசாங்கம் கூறியது. ஆனால், கிறிஸ்தவர்களின் அதிக மக்கள் தொகை கொண்ட குந்த்தி மாவட்டத்தில் உள்ள டோர்பா வட்டாரத்தில் எந்த பதல்கடி விழாக்களையும் காணவில்லை என்ற உண்மையை அவர் விளக்கினார்.
உள்ளூர் எம்.எல்.ஏ நீலகாந்த் முண்டா மற்றும் உள்ளூர் எம்.பி. கரியா முண்டா இருவரும் அங்கம் விகிக்கும் பாரதிய ஜனதாக் கட்சியின் பின்னணியில்தான் பதல்கடி இயக்கம் தொடங்கியது என்பதும் கவனிக்கத்தக்கது. அவர்கள் ஏன் தங்கள் சகாக்களிடம் இதை எடுத்துச் செல்லவில்லை? அவர்கள் நினைத்திருந்தால், இந்தச் பிரச்சனையைத் தவிர்த்திருக்கலாம். இந்தப் பிரச்சனையை பெரிதாக்குவது அரசாங்கத்திற்கு ஏதுவாக இருந்தது.
நீங்கள் பேசும் பிரச்சனை என்ன?
மக்கள் பதல்கடியைத் தொடங்கியபோது, அவர்கள் அதை சரியான வழியில் தொடங்கினர், அவர்கள் அரசியலமைப்பைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள், ஆனால் பின்னர் ஒரு புதிய நாணயத்தை உருவாக்கும் எண்ணத்தைப் போல விசித்திரமான கருத்துக்கள் நுழைந்தன. இந்த யோசனைகள் எங்கிருந்து வருகின்றன என்பதைப் புரிந்துகொள்வது கடினம்.
ஆனால், ஆதிவாசிகளின் கூட்டு வலிமையை உடைக்கும் நோக்கத்துடன், இயக்கத்தை கேவலப்படுத்தவும், அப்பாவி மக்களை கைது செய்யவும் அரசாங்கம் அவற்றைப் பயன்படுத்தியது. ஆதிவாசிகள் தேசத்துரோகம் செய்கிறார்கள் என்பதை அரசாங்கம் நிரூபிக்க விரும்பியது. இப்பகுதியில் இப்போது நடப்பவை அனைத்தும் வெளிப்படையாகனதாகவும் திட்டமிடப்பட்டதாகவும் தெரிகிறது.
இதை ஏன் சொல்கிறீர்கள்?
கிராமத் தலைவர்கள் மீது தேசத் துரோகக் குற்றச்சாட்டுகளை அரசாங்கம் சுமத்தி வருகிறது, ஆனால் இந்த இயக்கத்தில் குஜராத் தொடர்பு இருப்பது அனைவருக்கும் தெரியும். குஜராத் தொடர்பு இருப்பதாக அரசாங்கமே கூறுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் எங்கிருந்தாலும் அவர்களை வேட்டையாடுவதாக அது கூறுகிறது. அப்படியானால், குஜராத்திலுள்ளவர்களை ஏன் அரசாங்கம் கைது செய்யவில்லை? குந்த்தியில் உள்ள அப்பாவி கிராமவாசிகளை மட்டும் வேட்டையாடி சிறையில் அடைப்பது ஏன்?
ஆனால் பதல்கடி இயக்கம் முற்றிலும் உள்ளூர் சார்ந்ததல்லவா?
பதல்கடி குஜராத்தைச் சேர்ந்தவர்களால் தொடங்கப்படவில்லை, அது எங்கள் சொந்த மக்களால் தொடங்கப்பட்டது. ஆனால் இயக்கங்களில் ஊடுருவி அது எவ்வாறு உள்ளிருந்தே திசைதிருப்பப்படுகிறது என்பதைக் கண்காணிப்பது கடினம். இந்த இயக்கம் தற்போது பெற்றிருக்கின்ற வடிவத்தைப் பார்க்கும் போது மறைமுகமாக ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.கவின் கை இருப்பதைக் குறிக்கிறது.
உங்கள் கூற்றுப்படி, பா.ஜ.கவின் கை இருப்பதற்கான அறிகுறிகள் யாவை?
தேர்தல் புறக்கணிப்புக்கான கோரிக்கை. இந்த கோரிக்கையை பாஜக விரும்புகிறது, ஏனெனில் அது அவர்களுக்கு பொருந்தும். சமீபத்தில், விஸ்வ சாந்தி சம்மேளனத்தின் பதாகையின் கீழ் ஒரு கூட்டம் நடைபெற்றது. இதில் குஜராத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். பதல்கடி இயக்கத்தின் மீதான அடக்குமுறை ஏற்கனவே அதிகமாக ஏவப்பட்டிருந்தாலும் இம்முறை, கூட்டம் நடக்க அரசாங்கம் அனுமதித்தது.
பதல்கடி மீது அரசாங்கம் ஏன் பெரிய அளவில் அடக்குமுறையை ஏவியது என்று நினைக்கிறீர்கள்?
ஏனென்றால், மக்கள் தங்கள் உரிமைகள் குறித்து தெளிவு பெற்று வருகிறார்கள்.
1829 கோல் கிளர்ச்சி, 1859 சர்தாரி கிளர்ச்சி, 1890 பிர்சா முண்டாவின் உல்குலன் ஆகிய ஆதிவாசிகளின் முக்கியமான எழுச்சிகள். இவை அனைத்தும் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள 24 மாவட்டங்களில் ஒன்றான குந்த்தி மாவட்டத்திலிருந்து மட்டுமே தோன்றின என்பதை நினைவில் கொள்வது அவசியம்.
சுதந்திர இந்தியாவிலும், வளர்ச்சி திட்டங்கள் என்ற போர்வையில் கொண்டுவரப்பட்ட கோயல் கரோ திட்டம், நேத்ராஹாட் துப்பாக்கி பயிற்சி முகாம், ஆர்செலர்-மிட்டல் எஃகு ஆலை எதிர்ப்பு இயக்கங்களில் குந்த்தி மாவட்டமே முன்னணியில் உள்ளது. இங்குள்ள மக்கள் ஒருபோதும் அச்சுறுத்தலுக்கு அஞ்சியதில்லை; தங்கள் நிலத்திற்கான அரசாங்கம் கொடுத்த இழப்பீட்டை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை. இப்படித்தான் அவர்கள் தங்களது நிலத்திற்கும் உரிமைக்கும் மதிப்பளிக்கிறார்கள்.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும், ஒரு மாவட்டத்தில் சுமார் 15,000 பேர் தேசத்துரோக குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒரே மாநிலம் ஜார்க்கண்ட். இது எதை விளக்குகிறது?
ஒரு அணுசக்தி திட்டத்திற்கு எதிராகப் போராடிய கூடங்குளம் மக்கள் மீதுதான் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கானோர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஆம், உதயகுமார் போராட்டத்திற்குத் தலைமை தாங்கினார். ஒரே நேரத்தில் ஒரு லட்சம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அங்கு கூட, குந்த்தியில் நாம் கண்டது போல 15,000 பேர் மீது அல்ல, மாறாக 8,000 பேர் மீது ஒரே நேரத்தில் தேசத் துரோக வழக்கை தொடுக்க முடிந்தது.
குந்த்தியின் ஆதிவாசி கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்புக்கு உள்ள ஆதரவு என்ன?
பதல்கடி மீது முதலில் பிரச்சனை வெடித்தபோது, நான் ஆர்வமாக இருந்தேன், நான் வளர்ந்த ஒரு பகுதியில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள விரும்பினேன். நான் பாந்த்ரா கிராமத்திற்குச் சென்றேன், அங்கு நான் சில இளைஞர்களைச் சந்தித்தேன். அவர்களிடம் மூன்று மணி நேரம் பேசினேன். அவர்கள் தேர்தல்களை ஆதரிக்கவில்லை என்றும் தேர்தல்களில் நம்பிக்கை இல்லை என்றும் அவர்கள் மீண்டும் மீண்டும் கூறினர். மேலும் அவர்கள் அரசியலமைப்பின் ஐந்தாவது அட்டவணையை மேற்கோள் காட்டி தங்கள் கூற்றுக்களை ஆதரித்தனர்.
ஜெய்பால் சிங் முண்டா.
அவர்களின் கவலைகளை நான் புரிந்து கொண்டேன் என்று நான் மீண்டும் மீண்டும் சொன்னேன், ஆனால் ஆதிவாசித் தலைவர் ஜெய்பால் சிங் முண்டா அரசியலமைப்பு சபைக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால் (அரசியல் அமைப்புப் பணி 1946 இல் தொடங்கியது), எங்களுக்கு ஐந்தாவது அட்டவணை கூட இருந்திருக்குமா? அவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் தான், சட்டமன்றத்தில் ஆதிவாசிகள் தொடர்பான விதிகள் குறித்து விவாதிக்க முடிந்தது, அவர்களின் உரிமைகளுக்காக போராட முடிந்தது.
அவர்களுக்கும் இன்னொரு அறிவுறையையும் கூறினேன். ஐந்தாவது அட்டவணையின்படி, ஆதிவாசி பகுதிகளில் பஞ்சாயத்து தேர்தல்கள் நடத்தப்படக்கூடாது, ஏனெனில் அவை பாரம்பரிய ஆதிவாசி ஆட்சி முறைக்கு முடிவு கட்டிவிடும். எனவே அவை பாதுகாக்கப்பட வேண்டும். இந்த அடிப்படையில் பஞ்சாயத்துத் தேர்தலை எங்களில் பலர் எதிர்த்தோம். ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்டதும், மற்றவர்கள் வார்டு உறுப்பினர்களாக ஆவதற்கான ஆர்வத்தில் தேர்தலில் குதித்தார்கள், ஆனால் நாங்கள் ஒதுங்கியே இருந்தோம்.
நான் மூன்று விசயங்களை மக்கள் முன் வைத்தேன். முதலாவது, சட்டமன்றத்தில் எங்கள் பிரச்சனையை முன்னெடுத்துச் செல்லும் ஒரு பிரதிநிதியை நாங்கள் தேர்ந்தெடுப்பதாகும்.
இரண்டாவது விஷயம், 5,000 பேர் கொண்ட ஒரு பகுதியில், 4,000 பேர் தேர்தலை புறக்கணிக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், வேட்பாளர் ஒருவர் 1,000 நபர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார். அவர் இப்பகுதிக்கு ஒரு சிறுபான்மையினரின் பிரதிநிதியாக இருப்பதோடு மட்டுமல்லாமல், ஆதிவாசிகளின் நிலம், காடுகள், வரலாறு, மொழி மற்றும் கலாச்சாரம் குறித்த கவலைகளை எழுப்புவதில் அக்கறை இல்லாத ஒரு வஞ்சகராக அவர் இருக்கக்கூடும்.
மூன்றாவது விருப்பம் என்னவென்றால், ஒரு பகுதியில் உள்ள 5,000 பேர், 5,000 பேர் தேர்தலில் இருந்து விலகுகிறார்கள், யாரும் வேட்பு மனுவை தாக்கல் செய்யவில்லை. புதிதாக அறுவடை செய்யப்பட்ட அரிசியில் உள்ள அனைத்து தானியங்களும் ஒரே மாதிரியானவை அல்ல, அவற்றில் கருப்பு மற்றும் வெற்று தானியங்களும் கூட இருக்கக்கூடும் என்று இளைஞர்கள் கூறினார். அடிப்படையில், அவர்கள் மொத்த தேர்தல் புறக்கணிப்பை உறுதி செய்ய முடியாது என்பதுதான் இதன் பொருள். தேர்தல் புறக்கணிப்பின் பயன் என்ன, அது பா.ஜ.கவுக்கு மட்டுமே பயனளிக்கும் என்று நான் சொன்னேன்.
பிரதிநிதித்துவ ஜனநாயகம் மீது அவர்கள் விரத்தி அடைந்திருப்பதால் தேர்தல் புறக்கணிப்புக்கான அழைப்பு மக்களிடம் எதிரொலிக்கிறது என்று நினைக்கிறீர்களா?
1990-களில், பெசா சட்டம், பஞ்சாயத்துகள் (திட்டமிடப்பட்ட பகுதிகளுக்கு விரிவாக்கம்) சட்டம் நிறைவேற்றப்பட்டபோது, குந்த்தி மாவட்டத்தில் மிகப்பெரிய கொண்டாட்ட ஊர்வலம் எடுக்கப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கிறதா? ஒரு கிராமத்தில்கூட அச்சட்டம் குறித கல்வெட்டுக்களை வைக்கவில்லை. அப்போது அதன் மீது எந்த முரண்பாடும் இல்லை.
நான் 1995 முதல் மக்கள் இயக்கங்களின் ஒரு பகுதியாக இருக்கிறேன். இடப்பெயர்வுக்கு எதிரான ஒவ்வொரு போராட்டத்திலும், பெண்கள் குழுக்கள், இளைஞர் குழுக்களின் ஆர்ப்பாட்டங்களிலும் நான் பங்கேற்றேன். நான் கோயல் கரோ இயக்கத்தின் ஒரு பகுதியாக இருந்தேன். அதில் 256 கிராமங்களை மூழ்கடிக்கும் ஒரு அணையை எதிர்த்ததற்காக காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர் கொல்லப்பட்டனர். எங்களில் சிலர் மீது காவல்துறை வழக்குகள் பதிவு செய்தாலும், தேசத்துரோக குற்றச்சாட்டு எதுவும் இல்லை. நாட்டிற்கு மின்சாரம் தயாரிக்க அணை தேவை என்று அரசாங்கம் வாதிட்டது, ஆனால் அது எங்களுக்கு தேச விரோதம் என்று முத்திரை குத்தவில்லை. இன்று, இதுபோன்ற ஒரு திட்டத்தை நாங்கள் எதிர்த்தால், அரசாங்கம் நிச்சயமாக எங்கள் மீது தேசத்துரோகக் குற்றச்சாட்டைத் தொடுக்கும்.
நேத்ராஹத் துப்பாக்கி சூடு வரம்பிற்கு நிலம் கையகப்படுத்துவதை நாங்கள் எதிர்த்தபோது எங்களுக்கு எதிராக தேசத் துரோக குற்றச்சாட்டு எதுவும் இல்லை, இது இராணுவத்திற்கும் படையினருக்குமான ஒரு திட்டம் என்று கூட நினைத்தோம். ஆர்சலர்-மிட்டல் எஃகு ஆலைக்கு எதிரான இயக்கத்தை நான் வழிநடத்தினேன். இப்போது அது ஒரு சக்திவாய்ந்த உலகளாவிய எஃகு நிறுவனம். இந்த திட்டம் தேசிய வளர்ச்சிக்கு மட்டுமல்ல, உலக வளர்ச்சிக்கும் பங்களித்திருக்கும். [புன்னகைக்கிறார்].
எட்டு -10 வழக்குகளில் நான் பெயரிடப்பட்டேன், நான் மூன்று மாதங்கள் சிறைக்குச் சென்றேன். ஆனால் என் மீது எந்தத் தேசத்துரோக குற்றச்சாட்டும் இல்லை.
இந்தியர்களுக்கு எதிராக திடீரென பல தேசத் துரோக வழக்குகள் எப்படி வருகின்றன? இந்த நாட்டு மக்கள் திடீரென தேசத்துரோகிகளாக மாறிவிட்டார்களா?
நீங்கள் எழுப்பும் கேள்வி: மக்கள் ஜனநாயகம் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டார்களா? 2014 -க்குப் பிறகு, தேசத்துரோக வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை நீங்கள் பார்க்க முடியும். ஏழைகளுக்காக அல்ல, பணக்காரர்களின் நலன்களுக்காகவே சட்டங்கள் திருத்தப்பட்டுகின்றன. சாதாரண இந்தியர்களின் வருமானம் குறைந்து வருகிறது, அதானியின் வருமானம் அதிகரித்து வருகிறது. 1996 ஆம் ஆண்டில், பெசா சட்டத்தை கல்வெட்டுகளில் எழுதிய போது எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் பதல்கடி மட்டம் இப்போது ஏன் தேசத்துரோகமாக பார்க்கப்படுகிறது?
எனவே ஜனநாயகம் மீதான நம்பிக்கையை இழக்க காரணம் இருப்பதாக நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?
நீல்காந்த் முண்டா மற்றும் கரியா முண்டா [இருவரும் பி.ஜே.பி] போன்ற தலைவர்களை நீங்கள் தேர்ந்தெடுத்தால், அவர்கள் தங்கள் சொந்த மக்கள் மீதான அரசாங்க ஒடுக்குமுறைக்கு எதிராக பேசக்கூட மாட்டார்கள் என்கிற போது நிச்சயமாக மக்கள் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை இழப்பார்கள்.
சோட்டாநாக்பூர் குத்தகைச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்ய மாநில அரசு முயன்றால்; வனச் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு முயன்றால்; காட்டில் கோடரியைச் எடுத்துச் செல்லும் ஆதிவாசியை சுட வன அதிகாரிகளுக்கு அதிகாரத்தைக் கொடுக்கும். பிறகு நிச்சயமாக மக்கள் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை இழப்பார்கள்.
பா.ஜ.க அரசாங்கத்தின் செயல்களால்தான் இந்த நம்பிக்கை இழப்பு என்று நீங்கள் நம்புகிறீர்களா?
ஆம், சுதந்திரமான பேச்சுக்கான இடம் சுருங்கி வருகிறது. பெங்களூரு பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்டதைப் பாருங்கள். 2014 -க்கு முன்பு, எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கொல்லப்படுவது பொதுவாக நடந்ததில்லை. இன்று, பொதுவான மக்களின் கவலைகளைப் பற்றி எழுதுபவர்களுக்கு இனி செய்தித்தாள்களில் இடம் கிடைக்காது. என்னைப் போன்ற குறைந்தது 10-15 ஆதிவாசி எழுத்தாளர்கள் மௌனமாக்கப்பட்டுள்ளனர்.
15 ஆண்டுகளாக, எந்த ஊதியமும் பெறாமல் செய்தித்தாள்களில் எழுதினேன். எனக்குப் பணம் தேவை என்று தங்களுக்குத் தெரியும் என்று கருதியே பத்திரிக்கை ஆசிரியர்கள் எனக்கு வேலைகளை வழங்கினர், ஆனால் நான் விரும்பியதெல்லாம் என் மக்களின் கவலைகளுக்கு குரல் கொடுப்பதற்கான இடம் மட்டுமே என்று நான் சொன்னேன். இன்று, நம்முடைய எழுத்து அரசாங்கத்தை விமர்சிப்பதால் இனி நாம் பேனாவைப் பயன்படுத்த முடியாது. எங்கள் உரைகள் கூட பதிவு செய்யப்படுகின்றன. நான் ஒரு தொலைதூர கிராமத்தில் ஒரு உரையை நிகழ்த்திக்கொண்டிருக்கலாம், ஆனால் ராஞ்சியில் உள்ள அதிகாரிகள் அதை நேரடியாகக் கேட்கிறார்கள். அவர்கள் என்னை தேசத் துரோக குற்றச்சாட்டுக்கு பயன்படுத்தக்கூடிய ஒரு சொல் அல்லது சொற்றொடரைப் கண்டபிடிக்க காத்திருக்கிறார்கள்.
பேச்சு சுதந்திரம், சிந்தனை சுதந்திரம், நாம் என்ன உணவை சாப்பிட விரும்புகிறோம் என்பதை தீர்மானிக்கும் சுதந்திரம் கூட இழந்துவிட்டோம். இது இந்தியாவின் புதிய வாழ்க்கை.
இன்னும் மக்கள் தேர்தல்களிலும் ஜனநாயகத்திலும் பங்கேற்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?
சட்டசபையில் ஒரு குரல் வேண்டும் என்று நான் முடிவு செய்துள்ளேன். ஜார்கண்ட் முதலமைச்சர் ரகுபார் தாஸ் தனது மக்களின் நிகழ்ச்சி நிரலை முன்வைக்க சட்டங்களைத் திருத்த முடியும் என்றால், அதானி மற்றும் அம்பானி தவிர வேறு யாருமல்ல, 40 ஆண்டுகளாக வீதிப் போராளியாக இருந்த என்னைப் போன்ற ஒருவர் தேர்தல்களில் வென்று மல்யுத்தம் செய்து எங்கள் உரிமைகளைப் பாதுகாக்க முடியாதா?
நீங்கள் சட்ட உரிமைகள் மீது நம்பிக்கை வைத்தால், ஜனநாயகத்தின் மீது எவ்வாறு நம்பிக்கை இல்லாமல் இருக்க முடியும்?
ஜனநாயகம் என்பது மக்களுக்காக, நம் மக்களால் செயல்படுத்தப்பட வேண்டும் என்று நான் சொல்கிறேன். சட்டங்கள் உருவாக்கப்பட்ட இடங்களுக்குச் சென்றால் மட்டுமே இது சாத்தியமாகும். நரேந்திர மோடியும் அவரது கட்சி ஆட்களும் இந்த நாட்டின் சட்டங்களை மாற்றி, ஜம்மு-காஷ்மீரில் மூன்று முன்னாள் முதலமைச்சர்களை கைது செய்து, 370 வது பிரிவை இரத்து செய்கிறார்கள்.
நாளை, அவர்கள் ஐந்தாவது அட்டவணையை இரத்து செய்ய விரும்புவதாகக் கூறுவார்கள், அதானி மற்றும் அம்பானி திட்டங்களுக்காக எங்கள் நிலத்தை எடுத்துச் செல்லும்போது ஆதிவாசி கிராம சபைகளுடன் பேசத் தேவையில்லை என்பார்கள்.
ஜனநாயக விரோத சக்திகளை தோற்கடிக்க மக்கள் தேர்தல்களில் பங்கேற்க வேண்டும் என்று ஏன் நீங்கள் நம்புகிறீர்கள்?
அதில் பங்கேற்காமல் நீங்கள் ஜனநாயகத்தை காப்பாற்ற முடியாது. ஜனநாயகம் சுருங்கி வரும் இடம்தான் நாம் செல்ல வேண்டிய இடம்.