Saturday, June 21, 2025
முகப்பு பதிவு பக்கம் 435

பெண் குழந்தைகளைப் பாதுகாக்கும் மோடி அரசின் இலட்சணம் !

பேட்டி பச்சாவ், பேட்டி படாவ் (Beti Bachao, Beti Padhao (BBBP) – பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் – பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்) என்று 22.01.2015 அன்று ஆர்ப்பரித்தார் மோடி. ஆனால் நடந்து கொண்டிருப்பது என்ன?

2016-ஆம் ஆண்டுக்கான தேசிய குற்றப்பிரிவுகள் ஆணையம் (NCRB) அளித்துள்ள தகவல்களின் படி இந்தியாவில் பெண் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் (பாலியல் குற்றங்கள் உட்பட) தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே போகின்றன.

2014-ஆம் ஆண்டில் 89,423 குற்றங்களும், 2015-ஆம் ஆண்டில் 94,172 குற்றங்களும், 2016-ஆம் ஆண்டில் 1,06,958 குற்றங்களும் என வருடத்திற்கு வருடம் இந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகின்றது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

சதவிகிதங்களின் அடிப்படையில் பார்க்கும் போது 2014-இல் 20.1% , 2015-இல் 21.1% மற்றும் 2016-இல் 24.0% என்ற அடிப்படையில் பெண் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

பாரத மாதாவின் புனித பூமியில் நிகழ்த்தப்படும் வன்கொடுமைகள் – மாதிரிப்படம்

2012-இல் அறிமுகப்படுத்தப்பட்ட போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் மட்டும் இதுவரை 37,022 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இவற்றில் 4,954 வழக்குகளுடன் உத்திரப்பிரதேசம் முதலிடத்திலும், 4,815 வழக்குகளுடன் மஹாராஷ்டிரா இரண்டாமிடத்திலும், 4,717 வழக்குகளுடன் மத்தியப் பிரதேசம் மூன்றாமிடத்திலும் உள்ளன. இதே மூன்று மாநிலங்களும் தான் குழந்தை கடத்தலிலும் இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளன.

இந்தியா முழுவதும் பதியப்பட்டுள்ள 54,723 குழந்தை கடத்தல் வழக்குகளில், உத்திரப்பிரதேசத்தில் 9,657 வழக்குகளும், மஹாராஷ்டிராவில் 7,956 வழக்குகளும், மத்தியப்பிரதேசத்தில் 6,016 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்படும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 2015-இல் 10,854 ஆக இருந்து 2016-ஆம் ஆண்டில் ஏறக்குறைய இரட்டிப்பாகி 19,765 ஆக அதிகரித்துள்ளது.

ஆனால் பெண் குழந்தைகளுக்கெதிரான பாலியல் வழக்குகளில் தண்டிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

2016-ஆம் ஆண்டில் 42,196 நபர்களுக்கெதிராக பாலியல் குற்ற வழக்குகள் பதியப்பட்டது. ஆனால் நீதிமன்ற விசாரணைகளுக்குப் பின்னர் 3,859 பேர் மட்டுமே குற்றவாளிகள் என்று அறியப்பட்டுள்ளனர் மேலும் 9,111 பேர் இவ்வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். பெண் குழந்தைகளுக்கெதிரான பாலியல் வல்லுறவு குற்றவழக்குகளில் 24,007 பேர் கைது செய்யப்பட்டு 2,241 பேர் மட்டுமே குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுனர், 5,693 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பெண் குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்ற வழக்குகளில்  பெருநகரங்களைப் பொருத்தவரையில் தலைநகர் டெல்லியில் தான் அதிகப்படியான குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளன. ஆனால் கடந்த மூன்று வருடங்களில் எண்ணிக்கை அளவில் ஒப்பிடும்போது, டெல்லியில் நடக்கும் குற்றங்கள் சிறு அளவில் குறைந்துள்ளது. டெல்லிக்கு அடுத்தபடியாக மும்பை, பெங்களூரு, புனே, லக்னோ ஆகிய நகரங்கள் பெண் குழந்தைகளுக்கெதிராக நிகழ்த்தப்படும் பாலியல் குற்றங்கள் அதிகம் நடக்கும் இடங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன.  இந்த நகரங்களில் குற்றங்களின் விகிதாச்சார  எண்ணிக்கை பாரிய அளவில் அதிகரித்திருப்பது வாழ்வதற்கான சூழல் மிகவும் மோசமாகி வருவதை வெளிப்படுத்துகிறது.

பெண் குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்ற வழக்குகளில், மிக மோசமான மாநிலங்களாக உத்திரப்பிரதேசமும் அதைத் தொடர்ந்து மராட்டியம், மத்தியப்பிரதேசம், மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்கள் முதல் ஐந்து இடங்களைப் பிடித்துள்ளன.

பெண் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்து சீரழிப்பதில் மிக மோசமான இடத்தில் மத்தியப் பிரதேசம் உள்ளது. 2016-ஆம் ஆண்டில் மட்டும் மத்தியப்பிரதேசத்தில் 2,479 பெண் குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்குள்ளாகி சீரழிக்கப்பட்டுள்ளனர். அடுத்தபடியாக மராட்டியம்(2,333), உத்திரப்பிரதேசம்(2,115), ஒடிசா(1,258), மேற்கு வங்கம்(719) என இந்த எண்ணிக்கை நீண்டு கொண்டே போகிறது.

இப்போது பேட்டி பச்சாவ் – பேட்டி படாவ் திட்டத்திற்கு வருவோம். சுமார் 100 கோடி முதலீட்டில் பெண் குழந்தைகளின் வளர்ச்சித் திட்டங்களுக்காக நாட்டில் மிகவும் பின்தங்கிய மாநிலங்கள் உட்பட எல்லா மாநிலங்களிலும் பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம் இப்போது கிணற்றில் போடப்பட்ட கல்லாகத்தான் இருக்கிறது.

இந்தத் திட்டத்தை உலக அளவில் பிரபலப்படுத்தும் விதமாக 28.06.2015 அன்று ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் உரையாற்றிய மோடி பெண் பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுடன் செல்ஃபி எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்க, உடனேயே #SelfieWithDaughter என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் உருவாக்கப்பட்டு அது சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய டிரெண்டிங் ஆனது என்பது வரலாறு. அவ்வளவே தான் மோடி நினைத்ததும் நடந்ததும்.

மேற்கண்ட புள்ளிவிவரங்கள் குறித்து மோடி அண்ட்-கோ-விற்கு தெரியாதா என்ன? ‘கிடப்பது கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மனையில் வை’ என்ற கதையாக இவையெல்லாம் செல்பிக்காக, பிரபலத்துக்காக ஏங்கும் உயர்தர நடுத்தட்டு வர்க்கங்களுக்காகவென்றே பிரத்தியேகமாகத் திட்டமிட்டு உருவாக்கப்படும் சில நிகழ்வுகள் அவ்வளவே…

இதையன்றி இதே சமயத்தில் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டிருக்கலாம், நாட்டு வளங்களைத் தனியார், தரகு முதலாளிகளுக்குத் தாரை வார்க்க பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கலாம், கோமாதாவின் பெயரால் அப்பாவி முசுலீம்கள் அடித்து கொல்லப்பட்டிருக்கலாம் இவ்வளவு ஏன் அன்றைய தினம் எத்தனையோ இளம்பிஞ்சுக் குழந்தைகள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம்.

இவ்வளவு ஏன்? பேட்டி பச்சாவ் – பேட்டி படாவ் என்று ஆர்ப்பரித்த மோடி, சமீபத்தில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு மிகவும் மோசமான சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட காஷ்மீர் சிறுமி ஆசிபா குறித்தோ, அல்லது உத்திரப்பிரதேச மாநிலம் உன்னாவில் ஒரு பா.ஜ.க. எம்.எல்.ஏ-வால் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி குறித்தோ வாய் திறக்கவில்லை. இந்த இரண்டு நிகழ்வுகளிலும் பா.ஜ.க.-வும் அதன் அமைப்புக்களும் நேரடித் தொடர்பு கொண்டிருந்தது கண்கூடாக நிரூபிக்கப்பட்ட போதிலும் மோடியின் இதயம் கணக்கவில்லை.

மேலோட்டமாகப் பார்க்கும்போது இது போன்ற திட்டங்கள் எல்லாம் நம்மை எளிதில் தன்வயப்படுத்திக் கொள்ளும்; ஆனால் இதனால் சமூக வாழ்வில் முன்னேற்றம் ஏற்படுமா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ஆணாதிக்கமும், சாதி-மத ஆதிக்கமும் கொண்ட பிற்போக்குத்தனமான நாம் வாழும் இந்த சமூகம் பெண்கள் மீது தொடர்ந்து அடக்குமுறைகளை ஏவிவரும் நிலையில், தனியார்மயமும் தாராளமயமும் பெண்களை நுகர்வுப்பொருளாக மாற்றியிருப்பதால், நாடு முழுவதும் பாலியல் வக்கிரங்கள் தீவிரமாகி வருகின்றன.

பெண் குழந்தைகள் என்றால் அவர்களின் எதிர்ப்பு குறைவாக இருக்கும் என்பதால், இதுவரை கண்டிராத கொடூரமான பாலியல் தாக்குதல்களுக்கு சிறுமிகள் அடுத்தடுத்து ஆளாகின்றனர்.

இச்சீரழிவுகளை முறியடிக்க குடும்பம் உள்ளிட்டு சமூகத்தின் அனைத்து அரங்குகளிலும் ஜனநாயகத்தை நிலைநாட்டும் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும். குற்றங்களைச் செய்வோரே ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருக்கும் போது மக்கள் சட்ட ரீதியான போராட்டங்களோடு பா.ஜ.க அரசை தனிமைப்படுத்துவதும் முக்கியம்.

– வினவு செய்திப் பிரிவு

மேலும் :

ஸ்டெர்லைட் மூடப்பட்டதில் மகிழ்ச்சியே என்கிறார்கள் ஸ்டெர்லைட் தொழிலாளிகள் !

”ஒரு கை இல்லாமல் வாழ்வதை விட இறப்பது எவ்வளவோ மேலானது” என்கிறார் தூத்துக்குடி புறநகர் பகுதியில் வசிக்கும் 34 வயது கார்த்தீபன். கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்தத் தொழிலாளியான கார்த்தீபனின் கை, கன்வேயர் பெல்டில் சிக்கி நசுங்கியது.

கார்த்தீபன் : மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது (படம் : சுற்றுச் சூழல் தன்னார்வலர் நித்யானந்த் ஜெயராம்)

உடனடியாக அருகில் உள்ள ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் கார்த்தீபன். கார்த்தீபனின் பாதிக்கப்பட்ட கையை வெட்டி எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. எவ்வளவு கொடுத்தாலும் ஈடு செய்யமுடியாத இழப்பை சந்தித்த கார்த்தீபனுக்கு, சட்டப்படி கொடுக்கவேண்டிய இழப்பீட்டுத் தொகையைக் கூட கொடுக்காமல் பிறகு வா, நாளை வா எனக் கூறி இழுத்தடித்துள்ளது ஸ்டெர்லைட் நிர்வாகம். இன்றுவரையில் இழப்பீட்டுத் தொகையை தரவில்லை.

ஸ்டெர்லைட்டைப் பொறுத்தவரையில் கார்த்தீபன் மட்டும் ஒரு விதிவிலக்கான உதாரணம் அல்ல. ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் அலட்சியத்தாலும், பாதுகாப்பற்ற பணிச்சூழலாலும் காயமடைந்து, உறுப்பிழந்து ஆலையால் கைவிடப்பட்ட பல தொழிலாளர்களுள் அவரும் ஒருவர்.

அப்பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் அதிசயகுமார், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்காக சட்ட உதவி செய்து வருகிறார். தகவலறியும் உரிமைச்சட்டத்தின்படி, கடந்த 2006 – 2010-ம் ஆண்டுகளுக்கிடையே ஸ்டெர்லைட் ஆலையில் உயிரிழந்தவர்களின் விவரங்கள் கேட்டு விண்ணப்பித்தார். அதில் கிடைத்த தகவல் அவருக்கு அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது.

அந்த ஐந்தாண்டுகளில் மட்டும் ஆலையில் ஏற்பட்ட மரணங்களுக்காக சிப்காட் போலீசு நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை இருபது. ஒவ்வொரு வழக்கிலும் ’நடவடிக்கை கைவிடப்பட்டது’ என்ற குறிப்போடு வழக்கு இழுத்து மூடப்பட்டிருந்தது. ”ஒவ்வொரு வழக்கும், சட்ட நடைமுறைக்கு வெளியே பணம் கொடுத்து ’பஞ்சாயத்து’ செய்து முடிக்கப்பட்டுள்ளன” என்கிறார் அதிசயக்குமார்.

அதிசயகுமாரின் இந்த வாதத்தை உறுதிப்படுத்துகிறார், அப்பகுதியில் பணிபுரிந்த முன்னாள் ஆலை கண்காணிப்பாளரான பாக்கியராஜ். ’ஸ்டெர்லைட் நிறுவனத்தைச் சேர்ந்த சில அதிகாரிகள் வந்து உயிரிழந்த தொழிலாளர்களின் உறவினர்களுடன் பேரம் பேசி பணத்தைக் குறைத்து இறுதியில் ஒரு தொகையை அவர்கள் கையில் கொடுத்து கணக்கை முடித்துவிடுவார்கள்” என்கிறார் பாக்கியராஜ்.

அவர் மேலும் கூறுகையில், ”ஸ்டெர்லைட் தமது பாதுகாப்பற்ற பணிச் சூழலில் வேலை செய்ய வட இந்தியத் தொழிலாளர்களைப் பெருமளவில் உபயோகித்திருக்கிறது. அவர்கள்தான் மோசமான பணிச்சூழலில் ஏற்படும் விபத்துகளால் பணிக்கு உபயோகமற்றவர்களாகும் போது எளிதில் தூக்கியெறிவதற்கு வசதியாக இருக்கின்றனர். அவர்களால் தமக்குப் பிரச்சினை குறைவு எனக் கருதுகிறது ஸ்டெர்லைட் நிர்வாகம்” என்கிறார்

பீகாரைச் சேர்ந்த 25 வயதேயான மாதவ் ஸ்டெர்லைட்டில் பணிபுரிந்து வந்தார். ஆலை விபத்தில் அவரது கையை இழந்தார். ஆனால் அவருக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டை நிர்வாகம் தராமல் இழுத்தடித்தது. அதன் காரணமாக வெறுத்துப் போய் தனது சொந்த ஊருக்கே திரும்பினார். “இங்கு வந்த பின் எனது வாழ்க்கையே வீழ்ந்து விட்டது. பணமின்றி எனது ஊருக்குச் செல்கிறேன். இந்த வீடியோ சேர வேண்டிய மக்களுக்குச் சேரும் என நம்புகிறேன்” என ஊருக்குச் செல்லும் முன் மனம் நொந்து ஒரு வீடியோ பதிவிட்டுச் சென்றுள்ளார்.

ஜாம்பியாவில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வேதாந்தாவின் சுரங்கத்தைக் கண்டித்து இங்கிலாந்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

ஸ்டெர்லைட்டின் தாய் நிறுவனமான வேதாந்தாவின் இத்தகைய மனிதத்தன்மையற்ற செயல்களுக்காக, இந்நிறுவனத்திற்கு பல அமைப்புகள் பல்வேறு வகைகளில் தங்களது கண்டனத்தைத் தெரிவித்திருக்கின்றன.

கடந்த 2007-ம் ஆண்டே, நார்வே நாட்டின் மக்களின் ஓய்வூதியப் பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கான அரசு அமைப்பான ”நார்வே தொழில் அறத்திற்கான கவுன்சில்”, வேதாந்தா நிறுவனத்தை தனது கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது. ”நார்வே அரசு ஓய்வூதிய நிதியத்திற்கு” வேதாந்தா நிறுவனத்திலிருந்து தமது பங்குகளை விலக்கிக் கொள்ளுமாறும், இனி வேறெந்த பங்குகளையும் வேதாந்தா நிறுவனத்தில் வாங்கக் கூடாது என்றும் பரிந்துரைத்தது.

மனித உரிமைகள் மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு, தொழிலாளர் பாதுகாப்பு முதலானவற்றை செயல்முறைப்படுத்துவதற்கான நெறிமுறைகளை வேதாந்தா நிறுவனம் மீறியதற்காக இந்த நடவடிக்கையை எடுப்பதாக தெரிவித்தது.

நார்வேயின் இம்முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கடந்த 2015-ம் மற்றும் 2016-ம் ஆண்டில் வேதாந்தா நிறுவனம் கோரியது. அதற்கு பதிலளித்த நார்வே தொழில் அறத்திற்கான கவுன்சில், 2016-ம் ஆண்டில் வேதாந்தாவின் நடவடிக்கைகளை ஆய்வு செய்ததில், தடையை விலக்குவதற்கான எவ்வித முகாந்திரமும் இல்லை என்றும் தடை தொடரும் என்றும் தெரிவித்தது.

நியமகிரியைக் கொள்ளையடிக்கும் வேதாந்தாவை கண்டித்து சமூக ஆர்வலர்களின் போராட்டம்

தற்போது தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள அரசாணையின் காரணமாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டிருக்கின்ற நிலையில், சுமார் 3,500 பேர் நேரடியாக பணியிழக்க நேரிடும். இந்த ஆலையைச் சார்ந்து இயங்கும் பிற நிறுவனங்களும் அதன் பணியாளர்களும் இதனால் பாதிப்படையலாம்.

கார்த்தீபனின் மனைவியும் ஸ்டெர்லைட் ஆலையில் பணி புரிந்து வந்தார். தற்போதைய சூழலில் அவரும் பணியிழந்துள்ளார். இவரைப் போன்றே தங்களது வேலையை இழந்த மற்றும் வேலையிலிருந்து வெளியேறிய தொழிலாளர்களும் இருக்கின்றனர்.

பண்டாரம்பட்டியைச் சேர்ந்த முத்துப்பாண்டி அவ்வாறு வேலையிலிருந்து வெளியேற்றப்பட்ட ஒருவர். ”நானும் எனது வேலையை இழந்துவிட்டேன். அதனால் என்ன? இந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்திற்காக பலரும் தமது வாழ்க்கையை இழந்துள்ளனர். அதை ஒப்பிடும்போது, எனக்கு இதெல்லாம் பெரிய விசயமில்லை” என்கிறார் முத்துப்பாண்டி.

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்திற்கு சில நாட்களுக்கு முன்னர், அதற்கு எதிராக ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவு தெரிவித்து ஆட்சியருக்குக் கடிதம் கொடுக்க தொழிலாளர்களிடம் கையெழுத்து கேட்டது நிர்வாகம். கையெழுத்திட மறுத்துள்ளார் முத்துப்பாண்டி.

”இந்த ஆலை பணிபுரியும் எங்களுக்கு பாதுகாப்பற்றதாக இருக்கிறது என்பது எங்கள் அனைவருக்குமே தெரியும். எனது மனசாட்சிப்படி பார்த்தால் நான் சுவாசிக்கும் காற்றை மாசுபடுத்தும் அதே நிறுவனத்தில்தான் நான் வேலை பார்க்கிறேன். எனது வருங்கால சந்ததியினருக்கு ஆரோக்கியம் கிடைக்குமெனில் இந்த நிறுவனத்தை மூடுவது எனக்கு பிரச்சினையே இல்லை” என்று கூறுகிறார் முத்துப்பாண்டி.

ஸ்டெர்லைட்டில் பணிபுரிந்து வந்த மாலதி ஸ்டெர்லைட் ஆலை குறித்துக் கூறுகையில், ” எப்படியும் வேலை மீண்டும் கிடைத்துவிடும். இப்படி சீல் வைப்பதும், கதவடைப்பதும் தற்காலிகமானதுதான்” என்கிறார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் அமைதியடைந்து உடலை வாங்கிச் செல்வதற்காகவே தற்போது தற்காலிகமாக ஆலையை மூடியிருக்கிறது மாநில அரசாங்கம் என்பதைத் தெளிவாகக் கூறுகிறார் மாலதி.   .

ஸ்டெர்லைட்டில் பணிபுரிந்த மற்றொரு தொழிலாளியான மேரி, ”ஆலை அடுத்தடுத்து மூடப்பட்டும் திறக்கப்பட்டும் கொண்டிருக்கிறது. எதற்காக இப்படி செய்கிறார்கள் என்றே புரியவில்லை? இந்த அரசாங்கத்தை நாங்கள் நம்பவில்லை. போலீசையும் நாங்கள் நம்பமாட்டோம். அனில் அகர்வாலால் எங்கள் வலியைப் போக்க முடியாது. நாங்கள் எங்கே போவோம்?” என்கிறார்.

நன்றி: தி வயர், திவ்யா கார்த்திகேயன்.
தமிழாக்கம்: வினவு செய்திப் பிரிவு
மூலக்கட்டுரை:Sterlite Workers: ‘Anil Agarwal Can’t Undo Our Pain. Where Do We Go From Here?’

ஊழியர்களை கசக்கிப் பிழிந்தால் இலாபம் ! பட்டியலிடுகிறார் ஒரு டி.சி.எஸ் ஊழியர்

ரு நிறுவனம் தான் தயாரிக்கும் பொருளின் விற்பனையை அதிகரித்து, வாடிக்கையாளர்களை அதிகரித்து, லாபத்தை அதிகரிக்கலாம். அதன் மூலம் ஊழியர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம்.

ஆனால், விற்பனை மந்தமாக இருக்கும் போது சம்பள உயர்வை குறைப்பது, ஊழியர்களுக்கான வசதிகளை வெட்டுவது, அடிப்படை சலுகைகளை ஒழித்துக் கட்டுவது, பிற செலவினங்களை கட்டுப்படுத்துவது என தொழிலாளர்களை இறுக்கி பிழிந்து, லாபத்தை உயர்த்தி காட்டுவது இன்னொரு உத்தி.

தற்போது $100 பில்லியன் கிளப்பில் நுழைந்துள்ள டிசி.எஸ் நிறுவனத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வரும் செலவு குறைப்பு நடவடிக்கைகள் பற்றிய ஒரு ஊழியரின் பார்வை.

நஷ்டம் எப்படி லாபமாக மாறியது?

டி.சி.எஸ் நிறுவனத்துடன், சி.எம்.சி போன்ற 15 துணை நிறுவனங்களையும் இணைத்து டி.சி.எஸ் குழுமம் என்று அழைக்கப்படுகிறது. போன வருடம் வரை லாபம் காட்டிய டி.சி.எஸ் குழுமத்தில் இருக்கும் டி.சி.எஸ் அல்லாத இதர நிறுவனங்கள், இந்த இந்த ஆண்டு இழப்பு காட்டி உள்ளனர். ஆனால், டி.சி.எஸ் மட்டும் லாபம் காட்டுகிறது. இது எப்படி என்று பார்ப்போம்.

டி.சி.எஸ்-ன் சி.ஈ.ஓ ராஜேஷ் கோபிநாதன்

இப்போது டி.சி.எஸ்-ன் சி.ஈ.ஓ ராஜேஷ் கோபிநாதன். இவர், இதற்கு முன் நிதி பிரிவு தலைமைப் பொறுப்பில் (CFO) இருந்தவர்; அதாவது, அவர் நிதித்துறையில் நிபுணர். அந்த பார்வையிலேயே நிறுவனத்தில் செலவுக் குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறார். ஒரு சி.ஈ.ஓ போல நீண்ட கால நோக்கில் இல்லாமல் குறுகிய கால நோக்கில் செலவைக் குறைக்கும் முடிவுகளை அமல்படுத்துகிறார்.

டி.சி.எஸ்-லிருந்து சி.எம்.சிக்கு

அனுபவம் வாய்ந்த மூத்த ஊழியர்களை டி.சி.எஸ்-ல் இருந்து சி.எம்.சி-க்கு மாற்றுகிறார்கள். இதன் மூலம் டி.சி.எஸ்-ன் செலவு குறைகிறது. ரூ 12 லட்சம் ஆண்டு சம்பளம் வாங்கும் பத்து பேரை CMC-க்கு அனுப்பும் போது, சி.எம்.சி-ன் கணக்கில் செலவு அதிகரிக்கிறது. டி.சி.எஸ்-க்கு ஆண்டுக்கு 1.2 கோடி செலவு குறைகிறது. டி.சி.எஸ்-ன் லாபம் கூடுதலாக காட்டப்படுகிறது.

கூடுதல் நேரம் வேலை செய்தாலும் வாகன வசதி கிடையாது

ஐ.டி நிறுவனத்தின் மூலப் பொருளே ஊழியர்கள் ஆகிய நாம் தான். நாம் 9 மணி நேரம், 10 மணி நேரம், 14 மணி நேரம் என்று கால நேரம் பார்க்காமல் வேலை செய்கின்றோம். இப்படி வேலை செய்கின்ற நமக்குக் கொடுக்க வேண்டிய ஒரு அடிப்படை சேவை போக்குவரத்து வசதி. 8 மணிக்கு, 9 மணிக்கு, 10 மணிக்கு வேலையை முடித்து விட்டு ஊழியர் வீட்டுக்குக் கிளம்பும் போது அவருக்கு வாகனம் (cab) ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்.

ஆனால், இப்படி வாகன ஏற்பாடு செய்வதற்கு ஒரு புராசஸ் வைத்திருக்கிறார்கள். முன்கூட்டியே திட்டமிட்டு பதிவு செய்தால்தான் வாகனம் கொடுக்க வேண்டும். திடீரென்று வாகனம் (cab) தேவைப்படுகின்றது எனில் கிடைக்காது. அப்படி கேட்பதை திட்டத்துக்கு அப்பாற்பட்ட முறையில்தான் (adhoc) எடுத்துக் கொள்வார்கள். திட்டத்தின்படி அனைத்து தேவைகளும் முடிந்த பிறகு கடைசியாகத் தான் வாகனம் கிடைக்கும்.

அவசரமாக டெலிவரி வேலை இருக்கின்றது, அலுவலகத்தில் தங்கி நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டி வருகிறது. வேலையை முடித்து விட்டு வீட்டுக்குப் போக cab கேட்டால் கிடைக்காது; குறைந்தது ஒரு மணிநேரம் காத்திருக்க வேண்டும். இப்படி திட்டமிட்டுத் தான் வாகன வசதி பெற வேண்டும் என்று சொல்லி பெரும்பாலான ஊழியர்களின் தேவைக்கு வாகன வசதியையே தடை செய்து விட்டார்கள்.

எனவே வெளியில் கிடைக்கும் cab அல்லது சொந்த வாகனத்தை பயன்படுத்தி போய் விடுகிறோம். இதன் மூலம் cab பயன்பட்டாளர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது. டி.சி.எஸ்-க்கு லாபம் அதிகரிக்கிறது.

பில்லிங் ரேட் உயர்வு

அடுத்தது Billing Rate. ஒவ்வொரு ஊழியருக்கும் ஒரு மணி நேர வேலைக்கு இவ்வளவு என்ற கணக்கில் வாடிக்கையாளருக்கு பில்லிங் போடப்படும். கடந்த 2 ஆண்டுகளில் பில்லிங் எங்கு எல்லாம் Revise செய்ய வில்லையோ, அங்கு எல்லாம் இந்த ஆண்டு முதல் 6 மாதங்களில் Revise செய்து உள்ளனர். இதனால் $20 பில்லிங் போட்ட ஒரு ஊழியரின் வேலைக்கு இப்போது $25 பில்லிங் போடுகிறது டி.சி.எஸ். ஊழியர்கள் செய்யும் வேலைக்கு வாடிக்கையாளர் கொடுக்கும் அதிக விலை நிறுவனத்தின் லாபத்தில் போய்ச் சேருகிறது.

Fixed Pricing Model

மேலே சொன்ன ஒரு மணி நேரத்துக்கு இன்ன கட்டணம் என்று பில்லிங் போடுவது இதுவரை பரவலாக இருக்கும் முறை. இது Service based வழிமுறை, time and material அடிப்படையிலானது.

இந்த Fixed pricing proposal-ல் வாடிக்கையாளரிடம் உங்களுக்கு இந்த வேலையை குறிப்பிட்ட நேரத்தில் முடித்து கொடுக்கிறேன். அதற்கு தகுந்தார் போல், குறிப்பிட்ட பணம் கொடுக்க வேண்டும் என்ற அளவில் பேரம் பேசுவது. அதன் பிறகு புராஜக்ட்-ல் எவ்வளவு குறைவான ஊழியர்களை வைத்து வேலை செய்கிறோம் என்பது நிர்வாகத்தின் திறமை. இந்த வகையில் அனைத்து account -யும் Fixed pricing -யில் கொண்டு போக வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து கொண்டு இருக்கின்றார்கள். மேலும் பயிற்சி ஊழியர்களை வைத்து வேலையை முடிக்க கட்டாயப்படுத்துகின்றனர்.

பயிற்சி ஊழியர்கள் மூலம் செலவு குறைப்பு

டி.சி.எஸ் அனுபவம் உள்ள நபர்களை வேலைக்கு எடுப்பதை குறைத்திருக்கிறது. கடந்த 6 – 8 மாதங்களாக அனுபவம் வாய்ந்தவர்களை எடுக்கவில்லை.

குறைந்த சம்பளத்தில் பயிற்சி ஊழியர்களை (Trainee) எடுத்து உள்ளனர். ஒரு Account-ல் 20% முதல் 30% trainee இருக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். பயிற்சி ஊழியர் என்பவர் கடந்த 1 ஆண்டுக்குள் சேர்ந்தவர். ஒரு project-ல் 30% பயிற்சி ஊழியர்களை சேர்க்கவில்லை என்றால் ஏன் என்று Business case கொடுத்து Delivery manager-டம் ஏன் அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் தேவை என்று ஏற்க வைக்க வேண்டும்.

பயிற்சி ஊழியர் ஒரு ஆண்டுக்குப் பிறகு அந்தத் ‘தகுதி’யை இழந்து விடுவார். எனவே, திரும்பவும் Trainee எடுக்க வேண்டி வருகின்றது.

குறைந்த சம்பளம் பெறும் Trainee-க்கும் முக்கியமான பொறுப்புள்ள வேலை கொடுக்கப்படும். எனவே, வாடிக்கையாளரிடம் அந்த அளவுக்கு பில்லிங் போடப்படும். ஆனால் போதிய அனுபவமும், பயிற்சியும் பெறுவது வரை அவர்களால் வேலையை முழுமையாக செய்ய முடியாது. புதிய ஊழியருக்கு பயிற்சி கொடுப்பது, அவர்கள் பெயரில் செய்ததாக கணக்கு காட்டப்படும் வேலையை செய்து முடிப்பது என்று பிற ஊழியர்கள் மீது வேலைப் பளு அதிகமாகிறது. இந்த வகையிலும் டி.சி.எஸ் லாபத்தை பிழிந்து எடுக்கிறது.

இதனால் அனுபவம் வாய்ந்த ஊழியர்களுக்கு வாய்ப்புகள் குறைகின்றன. Senior தகுதி உள்ள ஊழியர்கள் புராஜக்ட்-ல் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள். RMG-க்கு அனுப்பப் படுகிறார்.

RMG – திருவிளையாடல்கள்

முன்பு எல்லாம் 20 வருட அனுபவம் உள்ள Developerஆக இருந்த ஒருவரது project முடிந்த பிறகு RMG-ல் (Resource Management Group) அவருக்கு Development related project தான் கொடுப்பார்கள். ஆனால் இப்போது, அந்த நிலை இல்லை.

RMG-ல் skill set தகுந்த மாதிரி project கொடுக்க மறுக்கிறார்கள். Skill Set இருக்கோ இல்லையோ, அவர்கள் கொடுக்கும் project யை ஏற்று கொள்ள வேண்டும். அனுபவம் உள்ள ஒருவரை Development project-ல் போடாமல், Testing project-ல் போடுவார்கள் காரணம் கேட்டால் Development-ல் project இல்லை, எனவே Testing கொடுக்கிறோம் என்று கூறுவார்கள்.

கொடுக்கும் project-ஐ எடுக்க வேண்டும் இல்லையெனில், நீங்கள் இந்த project-ஐ எடுக்க வில்லை எனில் மேல் நிலைக்கு புகார் அனுப்புவோம், என்று மிரட்டுவார்கள்.

அவர் Testing project-ல் அதிக சவாலை எதிர் கொள்ள வேண்டி இருக்கும், performance சரியான அளவில் இருக்காது. அவரை PIP-க்கு அனுப்புவது, ராஜினாமா செய்யச் சொல்லி மிரட்டுவது என்று அலைக்கழிக்கிறார்கள்..

நிர்வாகத்திற்கு Billing தான் முக்கியமாக இருக்கின்றதே, தவிர இந்த associate அந்த வேலைக்கு தகுந்தவரா? என்று பார்ப்பதில்லை. ஊழியர்கள் புதிய திறன்களை கற்றுக் கொண்டு தன்னை வளர்த்துக் கொள்ளும் வசதிகளிலும் கை வைத்திருக்கிறார்கள்.

திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு ஆப்பு

பொதுவாக லே ஆஃப் செய்வதற்கு அவர்கள் சொல்லும் காரணம் திறமையின்மை, skill set-ஐ மேம்படுத்திக் கொள்வது (update) இல்லை ஆகியவை. இப்போது திறன் மேம்பாட்டுக்கான பயிற்சியிலும் கை வைத்திருக்கிறார்கள்.

CMM Standard படி learning portal, certification portal பராமரிக்கப்படுகிறது. இங்கு பட்டியலிடப்பட்டிருக்கும் certification (சான்றிதழ்) பெறுவதற்கான செலவை நிறுவனம் reimbursement செய்ய வேண்டும், இது காலம் காலமாக நடத்து கொண்டு இருக்கின்ற ஒன்று. ஒரு வருடத்திற்கு முன் வரை TCS portal-ல் list ஆகும் எந்த பயிற்சியையும் மேற்கொண்டு அந்த Certificate காட்டி Reimbursement வாங்கி கொள்ளலாம். ஆனால் இப்போது பாதிக்கும் மேற்பட்ட பயிற்சிகளுக்கு reimbursement வாங்க முடியாது.

இதற்கு முன் 1 மாதம் அல்லது 2 மாதம் முன்பு தகவல் தெரிவித்து விட்டு certification தேர்வு எழுதலாம், இப்போது 3 மாதம் முன்பே தகவல் கொடுக்க வேண்டும். project lead, project manager, Delivery Lead ஆகியோரின் approval வாங்க வேண்டும். approval கேட்டும் போது அவர்கள், இது வாடிக்கையாளர் பரிந்துரைத்ததா, இல்லையா? என்று கேள்வி எழுப்புகிறார்கள். அதாவது இந்த சான்றிதழ் பயிற்சி project-க்கு தேவைப்படுகிறதா? இல்லையா? என்பதுதான் கேள்வி. project-க்கு தேவையாக இருந்தால் மட்டும்தான் ஒப்புதல் கொடுப்பார்கள். அது மட்டும் இன்றி இது ஏன் தேவை என்ற business case-ம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் Delivery manager approve கிடைக்கும்.

இவ்வாறு இந்த வழிமுறையை சிக்கல் ஆக்கி விட்டார்கள். எனவே பலர் certification செய்வதை நிறுத்தி விட்டனர். புதிய திறனை வளர்த்து இதுவரை செய்யாத பணிக்கு தன்னை தயார் படுத்திக் கொள்வது சாத்தியமில்லாமல் போகிறது. இதன் மூலமாகவும் டி.சி.எஸ், செலவை மிச்சப்படுத்துகிறது.

ஐ.டி நிறுவனங்கள் எல்லாம் வந்து நமக்கு வேலை வாய்ப்பு கொடுத்தார்கள் என்றுதான் நானும் பல காலம் நம்பிக் கொண்டிருந்தேன். ஒரு காலத்தில் ஆள் கணக்கு காட்டி சம்பாதிக்க நிறைய ஊழியர்கள் தேவைப்பட்டார்கள், அதற்கு ஏற்ற வகையில் வசதிகளையும் செய்து கொடுத்தார்கள்.

இப்போது அந்த கட்டம் முடிந்து, குறைந்த எண்ணிக்கை ஊழியர்கள், குறைந்த செலவு என்று கணக்கு போட்டு லாபம் ஈட்ட வேண்டியிருக்கிறது. ஊழியர்களை, அதிக வேலை, குறைந்த சம்பளம் என்று பிழிந்து லாபம் ஈட்டுகிறது டி.சி.எஸ்.

– மருது

நன்றி : new-democrats

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : பேரா. அ.மார்க்ஸ் – உண்மை அறியும் குழு அறிக்கை | நேரலை LIVE !

3

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பேராசிரியர் அ.மார்க்ஸ் தலைமையிலான உண்மை அறியும் குழுவினரின் கண்டுபிடிப்புகள் குறித்து பேராசிரியர் அ. மார்க்ஸ் விளக்குகிறார்.

இடம்:
அன்னை மணியம்மையார் அரங்கம்
பெரியார் திடல்

நேரலை:

தூத்துக்குடி படுகொலை : சென்னை அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் ரத்து ! போலீசு அனுமதி மறுப்பு !

பத்திரிகை செய்தி                                                                     நாள் : 02.06.2018

அன்புடையீர் வணக்கம்,

ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட தமிழக அரசு சட்டமியற்ற வலியுறுத்தியும்  தூத்துக்குடியில் நடைபெற்ற மக்கள் மீதான துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்தும் நாளை (03.06.2018 ) மாலை 4 மணிக்கு அனைத்துக் கட்சிகளும் பங்கேற்கும் வகையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தோம்.

இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்திற்கு போலீசு நேற்று அனுமதி மறுத்துள்ளது. இதனால் மேற்கொண்டு நீதிமன்றத்திற்கும்  உடனே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வேதாந்தாவுக்காக மக்கள் மீது என்கவுண்ட்டர் செய்த போலீசு இப்போது தன்மீதான பழியை மறைக்க அரசிலமைப்பு சட்டத்தில் இருக்கும் கருத்துரிமையை என்கவுண்ட்டர் செய்துள்ளது. ஆகவே நாளை 03.06.2018 மாலை நடக்கவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுகிறது. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மீண்டும் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

தங்கள்,
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு

போலீஸ் துன்புறுத்தலுக்கு எதிரான உயர்நீதிமன்ற தீர்ப்பு – மக்கள் அதிகாரம் அறிவிப்பு

போலீசு துன்புறுத்தலுக்கு ஆளாகும் தூத்துக்குடி மக்கள்,
விசாரணை என்ற பெயரில் போலீஸ் தொந்தரவு செய்தால் தொடர்பு கொள்ளுங்கள் !

தூத்துக்குடி நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மக்கள் போலீசின் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதையொட்டி, தமிழக அரசுக்கும் காவல்துறை டி.ஜி.பி மற்றும் தென்மாவட்ட ஐ.ஜி ஆகியோருக்கும் எதிராக, எமது அமைப்பின் நெல்லை மாவட்ட ஒருங்கிணைப்பாளரான வழக்கறிஞர் தங்கபாண்டியன் மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் வழக்கு தொடுத்திருந்தார்.

அந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம் நேற்று வழங்கியிருக்கும் தீர்ப்பினை கீழே கொடுத்திருக்கிறோம்.

“The respondents are hereby directed to ensure that the enquiry and investigation conducted by the police, in the cases registered relating to the sterlite copper unit as per the procedures contemplated under the guidelines issued by the hon’ ble supreme court in the case of D.K.Basu. In case if any violation is found, the authorities concerned should initiate legal action against the erred officers.”

“The respondents are further directed to ensure that the residents of Tuticorin and tirunelveli are not subjected to harassment under the guise of enquiry and investigation. Further the inmates and family members of the named accused in any of the cases registered in this regard shall not be disturbed or harassed by the police under the investigation.”

இதன் தமிழாக்கம் கீழ்வருமாறு :

“ஸ்டெர்லைட் தொடர்பான வழக்கில் புலன் விசாரணை செய்யும் போலீசார், டி.கே பாசு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். அவ்வாறு பின்பற்றத் தவறினால், அவ்வாறு தவறுகின்ற அதிகாரி மீது அவரது உயர் அதிகாரிகள் சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

“மேலும், விசாரணை என்ற பெயரில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியைச் சேர்ந்த குடிமக்களை போலீசார் துன்புறுத்தக் கூடாது என்று உத்தரவிடப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்களையோ, அந்த வீட்டைச் சேர்ந்தவர்களையோ போலீசார் எந்த விதத்திலும் தொந்தரவு செய்வதோ, துன்புறுத்துவதோ கூடாது எனவும் உத்தரவிடப்படுகிறது.”

எனவே போலீசின் துன்புறுத்தலால் பாதிக்கப்படும் மக்கள், உங்களைத் துன்புறுத்திய போலீசு அதிகாரியின் பெயர், துன்புறுத்திய நாள், நேரம், இடம் போன்ற தகவல்கள், என்ன விதமாகத் தொல்லை கொடுத்தார்கள் என்ற விவரம் ஆகியவற்றை எழுதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தென்மண்டல ஐ.ஜி ஆகியோருக்குப் புகார் அனுப்பவும்.

இதன் பிறகும் அத்தகைய தொல்லைகள் தொடர்ந்தால், இது தொடர்பாக சம்மந்தப்பட்ட போலீசு அதிகாரியின் மீது நடவடிக்கை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும்.

இது தொடர்பாக சட்ட உதவி தேவைப்படுவோர் வழக்கறிஞர் மருது, 99623 66321 என்ற கைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இவண்
வழக்கறிஞர் ராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு.

நூறு ரூபா டிக்கெட்டை ஆயிரம் ரூபாய்க்கு விக்கிற மொக்க பீசு ! ஓடும் ரயிலில் ரஜினிக்கு செருப்படி !

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் பதிமூன்று பேரை படுகொலை செய்தது அ.தி.மு.க. எடப்பாடி போலீசு. அதன் ரத்தக்கறை காயும் முன்னே ஆர்.எஸ்.எஸ். சங்கி ரஜினி மறைகழண்ட மங்கி போல அப்போராட்டத்தை கொச்சைப் படுத்தினார். சமூக விரோதிகள் – விஷக்கிருமிகள்தான் இதற்கு காரணம் என்றார். போராட்டத்தின் போது  போலீசு மீது கல்  எறிந்தவர்களின்  படங்களை பத்திரிகைகளில் வெளியிட வேண்டும். எல்லாவற்றுக்கும் போராட்டம் என்றால் தமிழ்நாடு சுடுகாடாகத்தான் மாறும் என்று சாபம் கொடுத்தார். ரஜினியின் சாபம் பலிக்குமா என்று சென்னை செங்கல்பட்டு மின்சார ரயிலில் மக்களிடம் கேட்டோம்! மக்கள் நெருப்பாய் சீறினர்.

சங்கர், திண்டிவனம் கோவிந்தசாமி  அரசு கலைக்கல்லூரி.
மக்கள் அவனை ஏத்தி விட்டது தான் எல்லாரையும் கேவலமா பேசுறான். மக்களுக்கு இப்பதான் அவன் சுயரூபம் தெரியுது. அது நல்லது தான். மீடியாக்காரனுங்க அவனை பெருசு பண்ணி விட்டுட்டானுங்க. என்ன பேசுறோம்னு தெரிஞ்சி தான் பேசுறான். அரசியலுக்கு வரதா சீன் காட்டி சினிமாவை ஓட்டுறான். எவ்ளோ திமிரு.

கிருஷ்ணமூர்த்தி.
நம்மகிட்ட பிராப்ளம் இருக்கு சார். நம்ம பேமிலிக்காக நாம ஓடிக்கினு இருக்கோம். இதனால் ரிட்டையர்டு ஆனவன் எல்லாம் தலைவன் ஆகிடலாம்னு பாக்கிறானுங்க. நாம திருந்தனும்.

பாலாஜி, ஐ.டி. ஊழியர்.
அவருடைய கருத்து, பி.ஜே.பி. கருத்து எல்லாம் ஒன்னு. யாரு சமூக விரோதின்னு பேர் சொல்லுறானுங்களா? வேல்முருகனா, தி.மு.க.வா? தமிழக மக்களா? யார் சொல்லு? சினிமாவா இது பன்ச் டயலாக் பேசுறதுக்கு. அந்தாளு போலீசு எழுதி கொடுக்கிறதை வரி விடாம படிக்கிறான்.

சுரேஷ்.
நடிச்சி சம்பாரிச்சி முடிச்சிட்டானுங்க. இப்போ மக்கள் மீது அக்கறை இருக்க மாதிரி நடிக்க பாக்குறானுங்க. மக்கள் மீது உண்மையிலே அக்கறை இருந்தா இந்த மாதிரி பேசுவானுங்களா? இது சென்ட்ரல் கவர்ன்மெண்டும், போலீசும் எழுதி கொடுத்தது. அதை அப்படியே சினிமா மாதிரி நெனச்சிக்கினு பேசிட்டார்.

பிரேம்நாத்,  இன்ஜினியர், தனியார் துறை.
டீட்டெயிலா  சொல்லனும்னா அந்த ஆளுக்கு ஒன்னும் தெரியாது. சினிமா சூட்டிங், ஏ.சி. ரூம் இது தவிர வேற எதுவும் தெரியாது. துப்பாக்கி வச்சிருந்தா போலீசு ஜனங்களை சுடலாம்னு இருக்குதா? அதைக் கேட்டானா அந்த ஆளு. மக்களை கெடுத்து சினிமா பைத்தியங்களா மாறினா சரியாமாம். ஆனால் போராடினா தப்பாம். அந்த அளவுக்கு மக்களை மடையனா நினைக்கிறார். எல்லாத்தையும் காலா  பட புரமோஷன் போல பாக்கிறார் போல.

ராஜி, தகவல் தொழில்நுட்பம்.  (புகைப்படம் தவிர்த்தார்)
எந்த ஆதாரமும் கொடுக்காம எப்படி சமூக விரோதிகள் காரணம்னு சொல்றாரு தெரியல. எந்த விசாரணையும் இல்ல. எந்த பொறுப்பும் இல்ல. அவரு பேசறதை ஒரு பேச்சாக்கூட எடுக்க முடியாது.

லோகு, கொத்தனார்.
தமிழ்நாட்டுல வந்து ஆட்டுவாராமாம் அவரு. எந்த ஊரு அவரு. அவரு நூறு ரூபா டிக்கெட்டை ஆயிரம் ரூபாக்கு விப்பாறு சம்பாதிப்பாரு. இப்ப  யாரை ஏமாத்தலாம்னு பாக்கற. மொக்கை பீசு.

கார்த்திகேயன், தனியார் நிறுவனம்.
எல்லோரும் பாலிடிக்ஸ் பண்றங்க. மீடியாகாரங்க அதுக்கு மேல பன்றாங்க . சமூக விரோதிங்க கலந்துக்கிட்டாங்கன்னு அவரு சொல்றார். போராடுன ஜனங்க அப்படி இல்லனு சொன்னா, அவங்க அப்பாவியா இருக்காங்கன்னு அர்த்தம். அவங்களுக்கு அது தெரியலன்னு நாம எடுத்துக்க கூடாதா, அவங்களுக்கு எல்லாம் தெரிஞ்சி தான் ஓ.பி.எஸ்.ஐயும் இ.பி.எஸ்.ஐயும் முதல் மந்திரியா தேர்ந்தெடுத்தாங்களா? அதுமாதிரி தான் இது.

ஜெயரன்.
ஜல்லிக்கட்டுல ஆட்டோவுக்கு தீ வச்சது யாரு. இரண்டு வருஷம் ஆச்சி. அதுக்கே இன்னும் நியாயம் வரல. இப்ப சுட்டுக்கொன்னுட்டு சமூக விரோதின்னு சொல்றாங்க போலீசு. அதைத்தான் இவரும் சொல்றார்.  இவருக்கு  தெரியும்னா யாரு சொல்லு. இது இன்னா படமா, டீசர் ஓட்றதுக்கு. நூறு நாள் போராட்டம் நடக்கும்போது நீ ஏன் அங்க போகல. ஆடிட்டர் குருமூர்த்தி அப்ப போ’ன்னு சொல்லலையா?

வினோத்குமார்.
பேசுறதுக்கே தகுதி இல்லாத ஆளுங்க. பால்குடம் தயிர்க்குடம்னு தன் கட்டவுட்டுக்கு ஊத்த சொல்லி ரசிச்சவன் அவன். போராட்டம் பத்தி பேசுறதுக்கு அவனுக்கு என்ன யோக்கிதை இருக்கு. காலா டிக்கெட் எப்படி ஆயிரம் இரண்டாயிரம் ரூபாய்க்கு விக்கிறதுன்னு பாக்க சொல்லுங்க. அந்த வேலைக்கு தான் அவர் லாயிக்கு.  கோழைங்க அந்த ஆளு. பி.ஜே.பி. சப்போர்ட்ல பேசுறாரு. இல்லாட்டி காலா படம் ஓடாதுன்னு  பயம். இ.பி.எஸ்.  ஒ.பி.ஸ்க்கே பயப்படுறாங்க. பச்சை துரோகி.

வளையாபதி.
தமிழ்நாட்டு மக்களுக்கு இவரு என்ன சினிமா காமிக்கிறாரா? மக்கள் எப்படி போராடணும்னு இவரு சொல்வாராம் நாம அதை கேட்டுக்கணுமாம். எல்லாம் தலையெழுத்து. நாற்பது வருசமா சினிமா சூட்டிங்கில் இருந்தவரு இப்பதான் வெளியே வந்து  நிஜ சூட்டிங்கை பார்த்து பயந்து போயிருக்கார்.

கோவிந்தன், துறைமுக ஊழியர்.
எச்ச ராஜா மாதிரியே பேசுறார். ஜனங்களுக்கு இல்ல. தன எஜமானன் பி.ஜே.பி.யை குளிர வைக்க பேசுறார். எச்ச ராஜா மாதிரியே உக்கார்ந்து இடத்துலயே விளம்பரம் தேடுறார். இதான் அவர் தனிவழியா? இவர்கிட்ட யாருகேட்டாங்க  காமெடி பீசு கருத்து சொல்லுறதுக்கு ஒரு தகுதி வேணாம்.

கோபி, சரண், சக்திவேல், டூரிசம் அண்டு  கேட்டரிங் மாணவர்கள்.
நம்மளை செருப்பு மாதிரி நினைக்கிறார் அவரு. நம்மள சொல்லணும். நம்ம சினிமா பாக்கிறவங்க தானே எல்லாம் சின்ன பசங்கன்னு நினைக்கிறார். போராடுவது நாம, கருத்து சொல்ல மட்டும் அவரா, இந்த அதிகாரம் அவருக்கு யாரு கொடுத்தது. மக்கள் போராடும்போது போயி ஒளிஞ்சிக்கினு இப்ப வீர வசனம் பேசுறார்.

சஞ்சய், துணை நடிகர்.
“யார் நீ” சின்னப்பையன் கேட்டதுல பயந்து போனாருங்க அவரு. நம்மளையே இப்படி கேக்குறானுங்களே. பி.ஜே.பி.க்கு இங்க யாரும் பயப்படல, சுட்ட பிறகு திருந்த மாட்டேங்குறாங்க. அந்த வெறி. சமூகவிரோதிங்க விஷக்கிருமிங்கன்னு உளருறாரு. “நான் தான் ரஜினின்னு” சொல்ல வச்சிட்டார் ஒரு சின்ன பையன். போலீசு தான் இனிமே அவருக்கு பாதுகாப்பு. போலீசுக்கு பின்னால பதுங்குறார். அதான் போலீசு ஸ்கிரிப்டை வரி விடாம படிக்கிறார்.

கணேசன், டிரைவர்.
நம்மள வெறுப்பேத்துறான் அந்த ஆளு. நூறு நாளு அவுங்க அங்க போராடி சாவாங்கலாம், இவரு அங்க கைய ஆட்டினு போயிட்டு கருத்து சொல்வாராம். வீட்டுக்குள்ள இருக்கும்போது போலீசை திட்டுவாரு. வெளில வந்தா போலீசை பாராட்டுவார். வடிவேல்தான் இவரு.

கதிர், கோடம்பாக்கம் சினிமாதுறை, ஊழியர்.
போட்டோபிளட் மின் விளக்கு பராமரிப்பவர். திருட்டு நாய் அவனை பத்தி பேசாதீங்க, தமிழ்நாட்டு மக்களை வச்சி வளந்துட்டான். போராட்டம் நடத்தும்போது எட்டிப்பாக்கல. இப்ப போலீசு சொல்றத வாந்தி எடுக்கிறான். மனசு ஆறலை அறிவுகெட்டவன்.

  • வினவு புகைப்பட செய்தியாளர்கள்.

கோப்ராபோஸ்ட் அம்பலப்படுத்தும் தினமலர் – சன் குழுமம்

3

“நாமிருவரும் ஒரே அலைவரிசையில் தான் பயணித்துக் கொண்டிருக்கிறோம்” என்று உத்திரவாதமளிக்கிறார் ஆதிமூலம். மறைவான கோணத்திலிருந்து அந்த உரையாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது. எதிரில் அமர்ந்திருப்பவரிடம் ஆதிமூலம் தொடர்ந்து பேசுகிறார்.

தங்கள் குடும்பத்திற்கும் பாரதிய ஜனதாவுக்கும் இடையேயான பாரம்பரிய உறவு குறித்துச் சொல்கிறார். பிரதமர் மோடி தமிழகம் வந்தால் தங்கள் குடும்பத்தை சந்திக்காமல் செல்லமாட்டார் என பெருமைப்பட்டுக் கொள்கிறார். தனது தந்தை மாதம் ஒருமுறையாவது தில்லி செல்வாரென்றும் பிரதமரைச் சந்திப்பார் என்றும் குறிப்பிடுகிறார்.

அந்தக் காணொலியில் பங்கேற்ற நபர்கள் சாதாரணமானவர்களாக இருந்திருந்தால் இரகசிய கேமராவில் பதிவு செய்யப்பட்ட அந்த உரையாடலுக்கும் பெரிய மதிப்பு இருந்திருக்காது; நாலாந்தர அரசியல் புரோக்கர்களின் வழமையான அலட்டலாக கடந்து போயிருபோம்.

ஆனால், ஆதிமூலம் சாதாரணமானவரல்ல; அவர் ஜனநாயகத்தின் ‘நான்காம் தூணில்’ உள்ள செங்கற்களில் ஒருவர், ‘உண்மையின் உரைகல்லுக்குச்’ சொந்தக்காரர்களில் ஒருவர் – தினமலர் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

தினமலரை நிறுவிய ராமசுப்பையரின் பேரன், தற்போது அந்தப் பத்திரிகையின் வர்த்தகப் பிரிவின் இயக்குநராக செயல்பட்டு வருகிறார். எனவே மேற்படிக் காணொளியும் அதில் வரும் உரையாடலும் நமது கவனத்திற்கு உரியதாகிறது.

*****

மேற்படி உரையாடல் கோப்ராபோஸ்ட் இணையதளம் நடத்திய மறைபுலனாய்வு நடவடிக்கையில் (Sting operation) ஒரு பகுதியாக வருகிறது. புஷ்ப ஷர்மா என்கிற பத்திரிகையாளர் ‘ஆச்சார்யா அடல்’ எனும் புனைப் பெயரோடு பல்வேறு பத்திரிகை முதலாளிகளையும் நிர்வாகிகளையும் சந்திக்கிறார்.

தன்னை நாக்பூரில் இருந்து வருபவராகவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்போடு நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும் நம்ப வைக்கிறார். இந்துத்துவ அமைப்புகளின் சார்பில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக பிரச்சார திட்டம் ஒன்று வகுக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்.

தங்களுடைய பிரச்சார திட்டம் மூன்று கட்டங்களாக வகுக்கப்பட்டிருப்பதாகவும், அவற்றை சம்பந்தப்பட்ட பத்திரிகைகளில் அரசியல் கலப்பற்ற பொதுவான செய்திகளாகவோ ஆன்மீக துணுக்குகளாகவோ விளம்பரமாகவோ வெளியிட வேண்டும் என்கிறார்.

ஆறு மாத காலத்திற்கு திட்டமிடப்பட்ட இப்பிரச்சாரத்திற்கு பெரும் தொகை ஒன்றையும் கொடுப்பதற்கு முன்வரும் புஷ்ப ஷர்மா (ஆச்சார்ய அடல்), இது ஒரு நல்ல ‘வியாபார வாய்ப்பு’ எனச் சொல்லி சம்மதிக்க வைக்கிறார்.

பிரச்சாரத்தின் முதல் கட்டமாக, சம்பந்தப்பட்ட பத்திரிகை கிருஷ்ணர் மற்றும் பகவத் கீதை குறித்த விளம்பரங்களை வெளியிட வேண்டும். தங்களது கட்சி கடந்த முப்பது வருடங்களாக ராமர் மற்றும் அயோத்தியை வைத்து போதுமான வரைக்கும் அரசியல் ஆதாயம் அடைந்து விட்டதால் புதிய குறியீடுகள் தேவைப்படுகிறது என்கிறார்.

பகவத் கீதை மற்றும் கிருஷ்ணரைக் குறித்த துணுக்குகள், செய்திகள் மற்றும் கட்டுரைகளின் மூலம் சமூகத்தில் ஒரு பொதுவான ஆன்மீகச் சூழலை உண்டாக்குவது திட்டம் என்றும், தாங்கள் ‘இந்துத்துவ’ சக்தியாக அறியப்படுவதால் இந்தச் சூழலே தேர்தலின் போது தங்களுக்கான ஓட்டுகளாக மாறி விடும் என்றும் சொல்கிறார்.

இரண்டாவது கட்டமாக, ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் மாயாவதி போன்ற எதிர்கட்சித் தலைவர்களைக் குறித்து பகடியாக எழுத வேண்டும்; ராகுல் காந்தியை பப்பு என்றும், அகிலேசுக்கு புவா (Bua) என்றும், மாயாவதியை பபுவா (Babua) என்றும் அடைமொழியிட்டு கிண்டல் செய்ய வேண்டும். இதன் மூலம் மக்களின் பொது புத்தியில் இந்தத் தலைவர்கள் ஆளுமையற்றவர்கள், கேலி கிண்டலுக்கே தகுதி படைத்தவர்கள் என்பதை மறைமுகமாக பதிவு செய்வது திட்டம் என்கிறார்.

முதலிரண்டு கட்டங்களால் உருவான ஒரு பொதுக்கருத்தை தங்களுக்கான ஆதரவாக மாற்றுவது இறுதிக் கட்டம் என்கிறார். இந்தப் பிரச்சாரத்திற்காக வழங்கப்படும் கட்டுரைகள் அல்லது விளம்பரங்கள் எந்த வகையிலும் சட்டத்திற்கு விரோதமாகவோ, சமூகத்தைப் பிளவு படுத்தும் விதமாகவோ இருக்காது என்று உத்திரவாதமளிக்கிறார் ‘ஆச்சார்ய அடல்’.

ஆனால், சம்பந்தப்பட்ட பத்திரிகைகள் இந்தப் பிரச்சாரத்தின் அங்கமாக (கூலி பெற்றுக் கொண்டு) வெளியிடும் கட்டுரைகள் அல்லது விளம்பரங்களின் உண்மையான சூத்திரதாரிகள் யார் (ஆர்.எஸ்.எஸ். தான்) என்பது இரகசியமாக பராமரிக்கபப்ட வேண்டும். முடிந்த வரை ‘பொதுவானதாகவும்’ ‘நடுநிலையானதாகவும்’ தோற்றமளிப்பதே இருவருக்கும் நல்லது எனக் குறிப்பிடுகிறார் ஆச்சார்ய அடல்.

ஆபரேஷன் 136 எனும் பெயரில் நடத்தப்பட்ட இந்த மறைபுலனாய்வின் காணொளி விவரங்களை கோப்ரா போஸ்ட் இணையதளம் இரண்டு கட்டங்களாக வெளியிட்டது. முதல் கட்டம் மார்ச் மாதமும், இரண்டாம் கட்ட விவரங்களை மே மாதமும் வெளியிட்டுள்ளது.

டைம்ஸ் ஆப் இந்தியா, இந்தியா டுடே, ஹிந்துஸ்தான் டைம்ஸ், நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற ஆங்கிலப் பத்திரிகைகள் மற்றும், ஜீ நியூஸ், நெட்வொர்க் 18, போன்ற செய்தித் தொலைக்காட்சிகள் மற்றும், பாரத் சமாச்சார், சுவர்னா, டைனிக் பாஸ்கர் போன்ற வட இந்திய பத்திரிகைகள் இந்த மறைபுலனாய்வில் கையும் களவுமாக பிடிபட்டனர். மொத்தம் சுமார் 24 பத்திரிகை நிறுவனங்கள்.

தமிழகத்தைப் பொருத்தவரை தினமலர் மற்றும் சன் டிவி நிர்வாகம் ‘தாங்கள் காசுக்கு சோரம் போகத் தயார்’ என ஆச்சார்ய அடலின் முன் வாலாட்டி நின்ற காட்சிகள் வெளியாகியுள்ளன. பத்திரிகைகள் தவிர இணையவழி பணப்பரிமாற்ற சேவை வழங்கும் பேடிஎம் (paytm) நிறுவனமும் இப்புலனாய்வின் மூலம் அம்பலமாகியுள்ளது.

*****

ணத்திற்காக மட்டும் சோரம் போய்விட்டதாக தினமலரைச் சொல்வது சரியாக இருக்காது. ஏனெனில், அதன் நாடி நரம்புகளிலும், இரத்த நாளங்களிலும், எலும்பு மஜ்ஜை வரை வேசைத்தனத்தில் ஊறித் திளைக்கிறது.

தினமலரை பத்திரிகை என்று வகைப்படுத்துவது கூட அதன் தகுதிக்கு அதிகமானது; தினமலரைப் பத்திரிகை என்றால் பேருந்து நிலைய கழிவறைச் சுவர்களை புனித வேதங்கள் என்று அழைக்க வேண்டியிருக்கும்.

தமிழர்களை ‘டமிலர்கள்’ என விளித்துக் கிண்டல் செய்வதில் துவங்கி, மக்களின் உயிராதார போராட்டங்களைத் தீவிரவாதச் செயல்களாக சித்தரிப்பது வரை தினமலரில் வெளியாகும் ஒவ்வொரு வார்த்தைகளிலும், வார்த்தைகளுக்கு இடையிலான இடைவெளியிலும் பொங்கி வழிவதன் பெயர் பார்ப்பனத் திமிர்.

பெரியார் இயக்கங்கள், இடதுசாரிகள் உள்ளிட்ட ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகளின் மீது மட்டுமில்லாமல் மொத்தமாக தமிழர்களின் மீதே ஆழ்ந்த வன்மம் தினமலருக்கு உண்டு. அந்த வன்மம் பார்ப்பனியம் தமிழகத்தின் பொது அரங்கில் கேள்விக்குள்ளாக்கப்பட்டு வீழ்த்தப்பட்டதில் இருந்து முளைவிடுகிறது. இது தான் ஆர்.எஸ்.எஸ். – இந்துத்துவ கும்பலோடு தினமலர் கைகோர்க்கும் புள்ளி.

சென்ற பாராளுமன்றத் தேர்தலின் போது தமிழகத்தில் மோடி ஆதரவு அலை அடிப்பதாக துணிந்து புளுகி வந்தது தினமலர். அந்தப் பச்சைப் பொய்களுக்குப் பின்னணி என்னவென்பதை ஆதிமூலம் தனது சொந்த வாயால் இரகசிய கேமரா முன் விவரிக்கிறார்.

‘ஆச்சார்ய அடல்’ முன்வைத்ததைப் போன்ற பிரச்சாரப் பணிகளை தமது பத்திரிகை முந்தைய காலங்களில் செய்திருப்பதாக குறிப்பிடுகிறார் ஆதிமூலம். சென்ற தேர்தலுக்கு முன் மோடியைச் சந்திக்க தெரிவு செய்யப்பட்ட வெகுசில பத்திரிகையாளர்களில் தாங்களும் இருந்ததாக பெருமையோடு குறிப்பிடுகிறார்.

தமிழகத்தின் இரண்டு கட்சிகளையும் பகைத்துக் கொண்டதால் பல ஆண்டுகளாக விளம்பர வருவாய் கிடைக்காமல் இருந்ததாகவும், இவ்வாறு தமிழகத்தின் இருபெரும் கட்சிகளைப் பகைத்துக் கொண்டதாலேயே தேசிய கட்சியின் அன்பு தமக்கு கிடைத்ததாகவும் குறிப்பிடுகிறார்.

தினமலருக்கும் இந்துத்துவ கும்பலுக்குமான ‘ஒரே அலைவரிசை’ கொள்கை ரீதியிலானது மட்டுமல்ல என்பதை ராமசுப்பையரின் வாரிசான அந்துமணி ரமேசின் மைனர்தனங்களே பறைசாற்றுகின்றன. எனவே தினமலர் அம்பலமானதில் நமக்கு எந்த ஆச்சர்யமும் இல்லை ; ஆனால், தனது சொந்த விருப்பத்தில் செய்யும் காரியங்களுக்கும் கூலி வாங்கத் தயாராக இருந்தது தான் ஆச்சர்யம். விலைமாதிடம் ‘சேவை’ பெற்றுக் கொண்டு அவளிடம் இருந்து மாமூலையும் வசூலிக்கும் ஏட்டையா தான் தினமலர்.

*****

கோப்ராபோஸ்டின் மறைபுலனாய்வில் ’திராவிட’ நிழலில் வளர்ந்த சன் டி.வி.யும் பிடிபட்டிருப்பதைக் குறிப்பிட்டு பெரியாரிய வாடை கொண்ட சில உடன் பிறப்புக்கள் அதிர்ச்சி அடைகின்றனர்; கண்டிக்கின்றனர்.

வெளியாகியுள்ள காணொளியில் ஆச்சார்யா அடல் வெளியிட விரும்பும் விளம்பரங்களின் நோக்கம் என்னவென்று சன் டிவி-யின் வணிகப் பிரிவுத் தலைவர் அலெக்ஸ் ஜார்ஜ் கேட்கிறார். அதற்கு மற்ற பத்திரிகை முதலாளிகளிடம் கூறிய அதே காரணங்களை விளக்குகிறார் ஆச்சார்யா. அனைத்துக்கும் தலையாட்டும் ஜார்ஜ், தங்களது தொலைக்காட்சியில் விளம்பரம் செய்ய ஆகும் கட்டணத்தைக் குறித்துப் பேசுகிறார்.

மற்றொரு காணொளியில் சன் குழுமத்துக்குச் சொந்தமான அச்சு ஊடகங்களின் விற்பனைப் பிரிவுத் தலைவர் ராஜேஷ் கண்ணாவைச் சந்திக்கிறார் ஆச்சார்யா. தனக்கு மோடியைப் பிடிக்கும் என்றும், பணமதிப்பழிப்பு மற்றும் ஜி.எஸ்.டி. போன்ற நடவடிக்கைகள் நல்ல திட்டங்களென்றும் குறிப்பிடுகிறார் ராஜேஷ்.

சன் டிவி பணத்தையும், லாபவெறியையும் மட்டுமே குறிக்கோளாக கொண்ட அப்பட்டமான கார்ப்பரேட் நிறுவனம். அதாவது தி.மு.க.வின் தொழில் முகம். கொள்கை கோட்பாடுகள் உள்ளிட்ட ‘வெங்காயங்களை’ விட டி.ஆர்.பி. ரேட்டிங் எனும் சந்தை மதிப்பு தான் சன் டிவி-க்கு முக்கியம்.

சன் குழும ஊடகங்களில் வெளியாகும் நிகழ்ச்சிகளும், செய்திகளும் இந்த அடிப்படையிலேயே தெரிவு செய்யப்படுகின்றன. ஆனால், பச்சையான கார்ப்பரேட் நலன் தனது வளர்ச்சிப் போக்கில் பாசிச அரசியலோடு கைகோர்க்க வேண்டும் என்பதே தர்க்க ரீதியான முடிவாகும்.

தினமலர் வகையறாக்கள் தமது சொந்த சுயவிருப்பத்தின் அடிப்படையில் இந்துத்துவத்திற்கு காவடி தூக்குகிறார்கள் என்றால், சன் டி.வி போன்ற ‘திராவிட’ கார்ப்பரேட்டுகள் கூலிக்கு காவடி தூக்குகின்றனர். இரண்டின் விளைவும் ஒன்று தான்.

“பாசிசம் என்பதை கார்ப்பரேடிசம் என்ற சொல்லால் அழைப்பதே மிகவும் பொருத்தமானது. ஏனென்றால், பாசிசம் என்பது தனியார் குழும முதலாளித்துவத்தின் அதிகாரம், அரசு அதிகாரம் ஆகியவற்றின் ஒன்றிணைவைக் குறிக்கிறது” என்பது பாசிசத்துக்கு பெனிட்டோ முசோலினி அளித்த விளக்கம்.

ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட பெரியார் பற்றாளர்களுக்கு முதலாளித்துவம் இந்துத்துவத்தின் பங்காளி என்பதை பொட்டிலடித்தாற் போல் உணர்த்தியுள்ளார் கலாநிதி மாறன்.

– தொடரும்.

  • சாக்கியன்

தேன் மிட்டாய் போல இனிக்காது எங்கள் வாழ்க்கை !

குர்குரே, லேய்ஸ் என குழந்தைகளைக் கவர்ந்திழுக்கும் தின்பண்டங்களுக்கு மத்தியில். குற்றுயிராக போட்டியிடும் தேன் மிட்டாயையும், கடலை மிட்டாய்களையும் உற்பத்தி செய்யும் குடிசைத் தொழில்களைக் கழுத்தறுக்கிறது மோடியின் ஜி.எஸ்.டி.

இந்த நெருக்கடிக்கு மத்தியிலும் தின்பண்டங்கள் தயாரிப்பில் ஈடுபடும் குறு – தொழிலகங்களையும், அதில் வேலை செய்யும் தொழிலாளிகளையும் பற்றியது இந்த புகைப்படப் பதிவு.

***

ழைய வண்ணாரப் பேட்டை தெலுங்கு செட்டித் தெரு, குழந்தைகள் விரும்பும் நொறுக்குத்தீனிகள், தின்பண்டங்களின் கிடங்கு.

இங்கு சிகடை (சீடை), தேன்மிட்டாய், பால்பன், பர்பி, கடலை உருண்டை, அல்வா, மைசூர் பாகு, பல்லி மிட்டாய் என்று முப்பதுக்கும் மேற்பட்ட தின்பண்டங்களை வீட்டுக்கு வீடு தயாரிக்கிறார்கள்.

ஒவ்வொரு இடத்திலும் ஐந்து முதல் ஐம்பது தொழிலாளர்கள் என, 600-க்கும் மேற்பட்ட குடிசைத் தொழிலகங்கள் இங்கு உள்ளன.

பெண்களும், ஆண்களுமாக காலை 7:00 மணிக்கு வரும் தொழிலாளர்கள்  இரவு 7:00 மணி வரை வேலை செய்கிறார்கள். ஒருமணி நேர உணவு இடைவேளை தவிர மற்ற எல்லா நேரமும் குனிந்த தலை நிமிராமல் உருண்டை பிடிப்பதும், அடுப்படியில் நிற்பதுமாக உழைக்கிறார்கள்.

இவ்வாறு கடினமாக உழைக்கும் இவர்களுக்கு தினக்கூலியாக; பெண்களுக்கு ரூ.300-ம் ஆண்களுக்கு ரூ.500-ம் கிடைப்பதே அரிது.

கொதிக்கும் வெல்லப்பாகில் கிளறி, இறக்கப்பட்ட கடலைமிட்டாய் கலவையை அதே சூட்டில் உருண்டையாக பிடிக்கும் தமிழ்செல்வி, பத்மாவதி மற்றும் மகேஸ்வரி.

கொளுத்தும் வெயிலில் கொதிக்கும் கொப்பரை அருகில் அவர் செய்யும் வேலை,  நமக்கு அவர்களின் வாழ்நிலையை உணர்த்துகிறது.

எப்படி உங்களால் இந்த சூட்டில் வேலை செய்ய முடிகிறது என்று கேட்டதற்கு, “வயிறு ஒன்னு இருக்குதுல.. இல்லனா, நீங்க ஒக்கார வச்சி சோறு போடுறீங்களா” என்றார் இந்த இளம் தொழிலாளி.

இத்தொழிலில் ஈடுபட்டுள்ள குறு முதலாளிகள் விவசாயிகள் மாதிரியே தங்கள் பொருட்களுக்கு உரிய விலை இல்லாமல் உழைப்பைக் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

உதாரணத்திற்கு, ஐந்து ரூபாய் மதிப்பிலான அறுபது உருண்டைகள் அடங்கிய ஜாரை வெறும் 180 ரூபாய்க்கு கொடுக்கிறார்கள். வாங்கி செல்பவர்கள் நூற்று இருபது லாபம் வைத்து ரூ.300-க்கு விற்கிறார்கள்.

“இந்த வியாபாரமும் பள்ளி விடுமுறை நாட்கள் வந்தால் இருக்காது. திரும்பவும் குழந்தைகள் பள்ளிக்கு வந்தால் தான் எங்களுக்கு வியாபாரம்” என்றனர்.

இம்மாதிரி 300-க்கும் மேற்பட்ட சிறு உற்பத்தியாளர்கள் இங்கு வசிக்கிறார்கள். இதில் தங்கக்கிளி, உதயம், ஆனந்தா, உமா என்று விரல் விட்டு எண்ணக்கூடிய நிறுவனங்கள்தான் இத்தொழிலில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு போட்டியாக நின்று சவால் விடுகிறார்கள்.

அவர்களும் மோடி ஆட்சியில் சிறுதொழிலில் ஏற்பட்ட நலிவுகளை எரிச்சலுடன் பேசுகிறார்கள். “எங்களுக்கு இவர்கள் ( மைய, மாநில அரசுகள்) உதவி செய்ய வேண்டாம். உபத்திரம் செய்யாமல் இருந்தாலே நாங்கள் பிழைத்துக் கொள்வோம்” என்றனர்.

– வினவு புகைப்படச் செய்தியாளர்

ஸ்டெர்லைட் – துப்பாக்கிச் சூடு : சென்னையில் அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் !

0

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கொள்கை முடிவெடுத்து சட்டமியற்ற வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் !

நாள் : 03.06.2018, ஞாயிறு.
நேரம் : மாலை 3:30 மணி.
இடம் : வள்ளுவர் கோட்டம், சென்னை.

 

தலைமை :

வழக்கறிஞர் தோழர் சி.ராஜூ
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.

கண்டன உரையாற்றுவோர் :

திரு ஆர்.எஸ். பாரதி, MP
அமைப்புச் செயலாளர், திராவிட முன்னேற்றக் கழகம்.

தோழர் தொல். திருமாவளவன்
தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி.

தோழர் அ.சவுந்தர்ராஜன்
மத்தியக் குழு உறுப்பினர், சி.பி.எம்.

தோழர் S. ஏழுமலை
தென்சென்னை மாவட்ட செயலாளர், சி.பி.ஐ.

தோழர் கவிஞர். கலி பூங்குன்றன்
மாநில துணைத் தலைவர், திராவிடர் கழகம்.

தோழர் மருதையன்
மாநில செயலாளர், மக்கள் கலை இலக்கியக் கழகம்.

தோழர் தியாகு
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

தோழர் ஆழி.செந்தில்நாதன்
ஒருங்கிணைப்பாளர், தன்னாட்சி தமிழகம்.

மூத்த வழக்கறிஞர் தோழர் சங்கரசுப்பு
சென்னை உயர்நீதிமன்றம்.

வழக்கறிஞர் தோழர் கு.பாரதி
மாநில செயலாளர், ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம்.

பேராசிரியர் ப.சிவக்குமார்
முன்னாள் முதல்வர் குடியாத்தம் அரசுக் கல்லூரி.

தோழர் கவின்மலர்
எழுத்தாளர்.

நன்றியுரை :

தோழர் வெற்றிவேல் செழியன்
சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.

தகவல் :
மக்கள் அதிகாரம்
சென்னை மண்டலம்,
தொடர்புக்கு – 9176801656.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு : உறவினர்கள் குமுறல் ! வீடியோ

தூத்துக்குடி துப்பாக்கி சூடு : உறவினர்கள் குமுறல் !

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தார் சார்பில் 30.05.2018 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதில் தங்கள் தரப்பு வாதமாக “ஏற்கனவே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டவர்களின் உடல்களை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். அப்போது பாதிக்கப்பட்ட தரப்பினரின் சார்பில் ஒரு மருத்துவர் உடன் இருக்க வேண்டும், அதனை வீடியோ பதிவு செய்ய வேண்டும். துப்பாக்கிச் சூடு நடத்திய போலீஸ் மீது கொலைவழக்கு பதிய வேண்டும். இறந்தவர்களுக்கு தூத்துக்குடி பகுதியில் நினைவிடம் அமைக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும்.” ஆகிய கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மறு பிரேத பரிசோதனை நடத்தலாம் எனக் கூறியிருந்தனர். ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் தரப்பில் இருந்து அவர்கள் சொல்லும் மருத்துவர்களை அனுமதிக்க முடியாது என தெரிவிதனர். மாறாக வேறு சில அரசு மருத்துவர்கள் முன்நிலையில் பிரேத பரிசோதனை செய்யலாம் எனக் கூறி இருந்தனர்.

இது மக்களை படுகொலை செய்த அரசுக்கெதிரான ஆதாரங்களை அழிக்கும் வகையில் அமையும் என்பதால் உறவினர்கள் தரப்பில் இதனை ஏற்க மறுத்துவிட்டனர். அதனடிப்படையில் தாங்கள் உச்ச நீதிமன்றம் செல்வதாக அறிவித்தனர். அதற்கு ஒருவார காலம் அவகாசம் கோரப்பட்டு, அதுவரை உடல்களை பதப்படுத்திவைக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர்.

நிவாரணம் என்ற பசப்புகளுக்கும், அரசின் மிரட்டல்களுக்கும் மசியாமல் தங்களுக்கான நியாயத்திற்காக போராடும் இவர்களின் உறுதியை பாருங்கள். இவர்களைத் தான் சமூக விரோதி என்கிறார் ரஜினி. அதற்கும் அவர்கள் தக்க பதிலளித்துள்ளனர். இந்த வீடியோவை பாருங்கள்… பகிருங்கள்…

நூல் அறிமுகம் : கெயில் வளர்ச்சிக்குப் பலியாகும் விவசாய நிலங்கள் !

கெயில் வளர்ச்சிக்குப் பலியாகும் விவசாய நிலங்கள் !

ழகான கிராமம் ஒன்றின் பெயர் ‘நகரம்’; இது ஆந்திராவின் கிழக்குக் கோதாவரி மாவட்டத்தில் அமலாபுரத்திற்கு அருகில் மாமிடி கூடூர் ஒன்றியத்தில் உள்ளது. 27.06.2014 காலை 5.00 மணிக்கு இருள் பிரியாத காலை வேளையில் தேநீர்க்கடை வைத்துப் பிழைக்கும் வாசு படுக்கையிலிருந்து எழுந்து தன் அன்றாடப் பணிகளுக்கு தயாராகிறார். தன் வீட்டின் முன்புறம் அவர் நடத்தும் தேநீர்க் கடைக்கு அதிகாலையில் வரும் வாடிக்கையாளர்களை வரவேற்க சீக்கிரம் தயாராக வேண்டும். தனக்கும் தன் குடும்பத்திற்கும் நெருங்கி வந்து கொண்டிருந்த பயங்கரத்தை அறியாமல் தன் தேநீர் அடுப்பை பற்றவைக்கிறார். அந்த தீக்குச்சி அவரையும் அவரது குடும்பத்தையும் சுற்றியிருந்தவர்களையும் சிதறடிக்கிறது. உறங்கிக் கொண்டிருந்தவர்கள் காதுகளைச் செவிடாக்கும் சத்தத்தைக் கேட்டு விழித்துக் கொண்டவர்கள் அந்த பயங்கரக் காட்சியைக் காண்கிறார்கள். ஒரு பெரிய நெருப்புக் கோளம் அங்கிருந்த அத்தனைப் பொருட்களையும் சுருட்டிக் கொள்கிறது.

கிருஷ்ணா கோதாவரி படுகையில் 1990இல் இயற்கை வாயு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்ட நாள் முதல் இதுவரை சுமார் 12 சம்பவங்கள் நடந்துவிட்டன. ஆனால், நடந்தவற்றில் இதுதான் மிக மோசமானதாகும். கடந்த சில ஆண்டுகளாகவே குழாயில் கசிவுச் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வந்துள்ளன. 2010 இல் பொன்னாமந்தா கிராமத்தில் பெரிய கசிவு நிகழ்ந்தது. 1990 களில் பசலராபு கிராமத்தில் எண்ணெய் கிணறு வெடித்து 65 நாட்கள் எரிந்ததுதான் உலகிலேயே இரண்டாவது பெரிய குழாய் வெடிப்பு ஆகும்.

உலகெங்கும் மிக சாதாரணமாக நிகழும் பல பேரழிவுகளில் நிறமற்ற மணமற்ற இந்த எரிவாயுவின் கசிவின் மூலம் அப்பாவி மக்களைக் கொல்லும் வெடிப்புகளும் தீ விபத்துகளும் அடக்கம். (நூலிலிருந்து)

நூல்: கெயில் வளர்ச்சிக்குப் பலியாகும் விவசாய நிலங்கள் !

பதிப்பகம்: பூவுலகின் நண்பர்கள், எண்:73, சாய்லட்சுமி குடியிருப்பு, இரண்டாவது பிரதான சாலை, சின்மயாநகர், விருகம்பாக்கம், சென்னை – 600 092.
பேச: 044 – 4380 9132, 98416 24006.

பக்கங்கள்: 24
விலை: ரூ.25.00

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,
(கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
கடையின் புதிய முகவரி கீழே)
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை,
நெற்குன்றம், சென்னை – 600 107.
(வெங்காய மண்டி பேருந்து நிறுத்தம் அருகில்)
பேச – (தற்காலிகமாக) : 99623 90277

  • வினவு செய்திப் பிரிவு

 

ஓட்டுனரை தற்கொலைக்குத் தள்ளிய சான் அகாடமி பள்ளி !

சென்னை பள்ளிக்கரணை, நாராயணபுரம் பகுதியில் இயங்கிவரும் சான் அகாடமி  பள்ளியில் பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்தவர் அன்பு. கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதியன்று பள்ளியின் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

பொதுவில் இதுபோன்று பணியிடங்களில் தற்கொலைகள் நடக்கும் பொழுது, தற்கொலைக்கான காரணத்தை போலீசுதான் விசாரிக்கும், நடவடிக்கைகள் மேற்கொள்ளும்.

ஆனால், இங்கே தலைகீழாக போலீசு வேலையை பள்ளி நிர்வாகமே மேற்கொண்டது. புதிய ஜனநாயக வாகன ஓட்டுநர்கள், டெக்னீஷியன்கள் மற்றும் ஊழியர்கள் சங்கத்தில் அவரைச் சேரச்சொல்லி வற்புறுத்தியதால்தான் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று குற்றஞ் சுமத்தியது.

பள்ளி முதல்வரும், போக்குவரத்து நிர்வாகியும், மற்ற ஒட்டுநர்கள் மற்றும் பணியாளர்களையும் கூட்டிவைத்து “சங்கத்தில் சேர வற்புறுத்தப்பட்டதன் காரணமாகத்தான் அன்பு தற்கொலை செய்துகொண்டதாகவும், இந்த சம்பவத்தை பற்றி யாரும் வெளியில் பேசக்கூடாது. குறிப்பாக அந்த சங்கத்தினரோடு யாரும் பேசக்கூடாது, தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது”, என்று கட்டளையிட்டு பத்து நிமிடத்தில் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக பள்ளியை விட்டு வெளியேறுமாறு மிரட்டப்பட்டனர்.

அதற்கு முன்னதாக, அத்தொழிலாளர்களிடம் “யாரிடமும் சொல்லமாட்டோம்” என்று சத்தியம் வேறு வாங்கியிருக்கிறார்கள். “சத்தியத்தை மீறினால், வேலை போய்விடும்” என்றும் எச்சரித்திருக்கின்றனர்.

இதே பள்ளியின், வேளச்சேரி கிளையில் ஓட்டுநராகப் பணியாற்றும் தெய்வீகன் மற்றும் வெங்கட்ராமன் ஆகிய இரண்டு தொழிலாளிகளை அழைத்து “அன்புவின் சாவுக்கு நீங்கள்தான் காரணம், உங்களது சங்கத்தில் சேரச்சொல்லி அவரை மிரட்டியதால்தான் அவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார், எனவே, நீங்களாகவே விலகல் கடிதம் கொடுத்துவிட்டு கிளம்புங்கள்” என்று மிரட்டினார், பள்ளியின் நிர்வாக அதிகாரி அர்ச்சனா.

இந்த விசாரணை மிரட்டல்கள் எல்லாம், அன்பு இறந்துவிட்டதாக தகவல் தெரிந்த ஒரு மணி நேரத்திற்குள்ளாக நடந்து முடிந்திருக்கிறது, என்பதுதான் இங்கே கவனிக்கத்தக்கது.

ஜேப்பியாரின் அடாவடித்தனத்தை அம்பலப்படுத்தும் பு.ஜ.தொ.மு. வின் சுவரொட்டி. (கோப்புப் படம்)

கொத்தடிமைகளுக்கும் கீழான நிலையில் நடத்தப்பட்ட தொழிலாளர்களை சங்கமாக அணிதிரட்டி, பள்ளி நிர்வாகத்தின் ஆண்டைத்தனத்திற்கு எதிராகவும், தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் தொடர்ச்சியானப் போராட்டங்களை முன்னெடுத்து வந்திருக்கிறது, புதிய ஜனநாயக வாகன ஓட்டுநர்கள், டெக்னீஷியன்கள் மற்றும் ஊழியர்கள் சங்கம்.

சங்கத்தில் செயல்படும் முன்னணியாளர்களை மிரட்டிப் பணியவைப்பது; தொழிலாளர்கள் மத்தியில் கருங்காலிகளை உருவாக்குவது; சங்கத்தை விட்டு வெளியேறினால் சலுகைகள் உண்டு என ஆசை காட்டுவது; உறுதியுடன் நிர்வாகத்தை எதிர்க்கும் தொழிலாளர்களை பணியிடமாற்றம் செய்வது, போலீசு உதவியுடன் பொய்வழக்குப் போட்டு அலைக்கழிப்பது என பல்வேறு வகைகளில் பழிவாங்கும் போக்கை கடைபிடித்து வந்தது, பள்ளி நிர்வாகம். தற்போது, அன்புவின் தற்கொலையைம் தனது பழிவாங்கும் நோக்கத்திற்கு பயன்படுத்திக்கொண்டது.

தமக்கு தொடர்ந்து ‘சங்கம், உரிமை’ என்று குடைச்சல் கொடுத்துவரும் வாகன ஓட்டுநர் சங்கத்தின் நடவடிக்கையை முடக்க வேண்டும் என்ற நோக்கில், தொழிலாளர்களுள் சிலரை கருங்காலிகளாக உருவாக்க திட்டமிட்டது நிர்வாகம்.

அத்திட்டத்தையொட்டிதான், அன்புவிடமும் நிர்வாகம் பேசியிருக்கிறது. சங்கத்திற்கு எதிராக புகார் கொடுக்குமாறும் மிரட்டியிருக்கிறது. மேலும், கியூ பிரிவு போலீசை கூட்டி வந்தும் அன்புவிடம் விசாரித்திருக்கின்றனர். சங்க நடவடிக்கைகள் குறித்து கேள்வி கேட்டிருக்கின்றனர். தாம் அச்சங்கத்தை விட்டு ஓராண்டுக்கு முன்னரே விலகி வந்துவிட்டதாகப் பலமுறை சொல்லியும் மீண்டும் மீண்டும் விசாரணை என்ற பெயரில் அவரை மன உளைச்சலுக்குள்ளாக்கியிருக்கின்றனர். நிர்வாகம் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, கடந்த ஒரு மாதமாகவே, அவர் பணிக்கு வரும்பொழுதே குடித்துவிட்டுதான் வந்தார் என்றும் இதனை உறுதிபடுத்துகின்றனர், சக தொழிலாளர்கள். இந்தப் பின்னணியில்தான் அன்பு தற்கொலை செய்துகொண்டு இறந்திருக்கிறார்.

‘’ சங்கத்தில் இருப்பது தெரிந்தால் வேலையை விட்டு விரட்டிவிடுவோம் என்ற பள்ளி நிர்வாகத்தின் மிரட்டலுக்கு பயந்து சங்கத்திலிருந்து ஓராண்டுக்கு முன்னரே விலகியும் விட்டார். அவரை நேரில் பார்த்து ஒரு வருடங்களுக்குமேல் ஆகிறது; அவரோடு தொலைபேசியில் பேசி ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிறது.’’ என்று அவ்விரு தொழிலாளர்களும் விளக்கமளித்த போதிலும் அதனை காதில் கூட வாங்கிக்கொள்ளாமல், கொலைக்குற்றவாளிகளை போலீசு கையாள்வதைப் போல கதவை அடைத்து வைத்துக்கொண்டு அவர்களை விசாரித்தது, பள்ளி நிர்வாகம்.

இதன் நோக்கம், உளவியல் ரீதியாக அவர்களை பலவீனமடையச் செய்ய வேண்டுமென்பதுதான். ”நிர்வாகம் கொடுத்த டார்ச்சர் தாங்க முடியாமல்தான் அன்பு தற்கொலை செய்து கொண்டார்” என்ற உண்மையை சங்கம் அம்பலப்படுத்திவிட்டால், பள்ளியின் பெயர் அடிபட்டு கல்லா கட்டமுடியாமல் போய்விடும் என்ற அச்சத்தின் காரணமாகத்தான், நயவஞ்சகமான முறையில் சங்கத்தின் மீதே பழியை போட்டது, பள்ளி நிர்வாகம்.

இதற்கிடையில், பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமாரை கைக்குள் போட்டுக்கொண்ட பள்ளிநிர்வாகம்,  போலீசை வைத்தே அன்புவின் மனைவியிடம் பேரம் பேசியது. ”பணம் வாங்கித் தருகிறேன், ஏதாவது வேலை வாங்கித் தருகிறேன், இப்போதைக்கு பிரச்சினை இல்லாமல் ஊருக்கு எடுத்து சென்று அடக்கம் செய்துவிடுங்கள்” என்று நைச்சியமாக பேசி அவசரம் அவசரமாக அன்புவின் உடலை அவரது மனைவியிடம் ஒப்படைத்து அவரது ஊருக்கு அனுப்பிவைத்தது, போலீசு.

அன்புவின் இறுதிச் சடங்கில் தொழிலாளர்கள் யாரும் பங்கேற்கக்கூடாதென்று விடுமுறை வழங்கவும் மறுத்துவிட்டது பள்ளி நிர்வாகம். சற்றுநேரம் வரையில் தன்னோடு சேர்ந்து பணியாற்றிய அன்புவை இழந்துவிட்ட துயரத்தில் அவரது முகத்தையாவது பார்த்துவிடவேண்டுமென்ற ஆற்றாண்மையில் மருத்துவமணையில் குவிந்தனர் சக தொழிலாளர்கள்.

பிணவறையில் கிடத்தப்பட்டிருந்த அன்புவின் சடலத்தைக்கூட சக தொழிலாளர்கள் பார்க்கவிடாமல் விரட்டியடித்தது, போலீசு. “உன் மீதுதான் சந்தேகமாக இருக்கிறது”, ”உன் அட்ரசைக் கொடு”, ”உன் செல்போனைக் கொடு”  என  அவர்களைப் பயமுறுத்தி விரட்டியது. பள்ளி நிர்வாகத்தின் அப்பட்டமான அடியாளாகவே செயல்பட்டது, பள்ளிக்கரணை போலீசு. அக்கம்பக்கமாக வசித்து வரும் அவரது உறவினர்களுக்குக் கூடத் தெரியாத வகையில் பள்ளி நிர்வாகம் ஏவிய வேலையை கச்சிதமாக முடித்தும் கொடுத்தார் போலீசு இன்ஸ்பெக்டர் சிவக்குமார்.

வேளச்சேரி பள்ளிக் கிளையின் முதல்வரும் போக்குவரத்து நிர்வாகியும், ஓட்டுனர்கள் தெய்வீகன் மற்றும் வெங்கட்ராமன் ஆகிய இருவரையும் மீண்டும் விசாரணைக்கு அழைத்துள்ளனர். விசாரணை என்ற பெயரில் அழைத்து, ”பிரச்சினை வெளியே தெரியாமல் பார்த்துக் கொண்டால் பிழைத்துக் கொள்ளலாம் என்றும் இல்லையென்றால் சிறைக்குத்தான் செல்லவேண்டியதுவரும்” என்றும் கூறி மிரட்டியுள்ளனர். ”குற்றத்தை ஒப்புக்கொண்டு தாமாக பணியிலிருந்து விலகுவதாக கடிதம் எழுதி தரும்வரையில் வெளியில் விடப்போவதில்லை” என்று கூறி அறையின் கதவை மூடினர். இயற்கை உபாதைகளுக்காகக்கூட அவர்கள் வெளியே செல்ல முடியாதவாறு, காவல் காத்தனர்.

பள்ளிநிர்வாகத்தால் சட்டவிரோதமான முறையில் தாம் சிறைவைக்கப்பட்டிருக்கும் தகவலை  குறுஞ்செய்தியாக தமது குடும்பத்தினருக்கும், சங்க முன்னணியாளர்களுக்கும் அனுப்பியுள்ளனர்.

வாகன ஓட்டுநர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை அப்போதே எதிர்த்திருக்கிறது, சங்கம். (கோப்புப் படம்)

இதனைத்தொடர்ந்து, ”பள்ளி நிர்வாகம் கடத்தி சென்ற தனது கணவரை மீட்டுத் தருமாறு” வேளச்சேரி காவல் நிலையத்தில் புகாரளித்தார் தெய்வீகனின் மனைவி வெண்ணிலா. புகாரைத் தொடர்ந்து வெண்ணிலாவுடன் பள்ளிக்குப் புறப்பட்டுச் சென்றது, வேளச்சேரி போலீசு.

அன்பு தற்கொலை செய்துகொண்டது பள்ளிக்கரணை பள்ளிக் கிளையில். விசாரணை நடப்பது வேளச்சேரி கிளையில். பள்ளிக்கரணை போலீசு என்றால், பிரச்சினை இல்லை. இது வேளச்சேரி போலீசு. இதனை சற்றும் எதிர்பார்க்காத, அர்ச்சனாவும் பள்ளி முதல்வரும், அங்கிருந்த அனைத்து ஊழியர்களையும் பின்வாசல் வழியாக 5 நிமிடத்தில் அவசரமாக வெளியேற்றிவிட்டு, முன் கேட்டைப் பூட்டிவிட்டு போலீசிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ‘தங்களது தொழிலாளர்களிடம் வெறுமனே விசாரித்துக் கொண்டிருப்பதாக’ தடாலடியாக கூசாமல் புளுகினார், பள்ளி நிர்வாகி அர்ச்சனா.

”நீங்கள் அடைத்து வைத்துள்ளதாக புகார் வந்துள்ளது. நீங்கள் 5 மணிக்கு இன்ஸ்பெக்டரை வந்து பாருங்கள். இவர்களை ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்கிறோம்.” என இருவரையும் அழைத்துச் சென்றது போலீசு. ஸ்டேஷனுக்கு வந்ததும் இருவரையும் தாங்கள் பத்திரமாக இருப்பதாக எழுதிக்கொடுத்துவிட்டு வீட்டுக்குச் செல்லுமாறு கூறியது.

நடந்த சம்பவத்தை பதிவு செய்யும்பொழுது, பள்ளி நிர்வாகத்தால் தெய்வீகன் மிரட்டப்பட்டார் என்றோ, சட்டவிரோதமான முறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார் என்றோ பதிவு செய்ய மறுத்தது, வேளச்சேரி போலீசு.

‘’புருசனை காணோம் னு கம்ப்ளைன்ட் கொடுத்த, உன் புருசனை கூட்டி வந்திட்டோம்ல.. அப்புறமென்ன’’ என்று எகத்தாளமாக பதிலளித்தார் ஒரு போலீசு ஏட்டு. புகார் அளித்தவர் என்ற அடிப்படையில் தெய்வீகனின் மனைவியிடம் கணவரை மீட்டுக் கொடுத்துவிட்டதாகவும் கூறி அவர்களே எழுதிய கடிதமொன்றில் கையொப்பம் வாங்கியுள்ளனர். அக்கடிதத்தின் நகலைக் கேட்டதற்குக் கொடுக்கவுமில்லை. ”அய்யாகிட்ட பேசிக்கோ” என்றிருக்கிறார், அந்த ஏட்டு.

ஏட்டு சொன்ன ‘அய்யா’வான, வேளச்சேரி இன்ஸ்பெக்டர் வேலுவிடம் தொலைபேசியில் முறையிட்டபோது, ‘’நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்’’ என்று வசனம்தான் பேசினாரேயன்றி, விசயத்துக்கு வரவில்லை. “ஸ்டேஷனுக்கு வந்ததும் பேசுகிறேன்” என்றார்.

இதனைத்தொடர்ந்து, அன்று இரவு சங்கத்தின் ஆலோசகரும், பாதிக்கப்பட்ட தெய்வீகனும் ஸ்டேசனுக்கு சென்று அவரது மனைவியிடமிருந்து எழுதி வாங்கிய கடிதத்தின் நகலைக் கேட்டும், தம்மை சட்டவிரோதமாக கடத்தி மிரட்டிய பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் இன்ஸ்பெக்டர் வேலுவிடம் முறையிட்டனர்.

ஸ்ட்ரிக்டு போலீசான இன்ஸ்.வேலு, ”உங்களை பூட்டியெல்லாம் வக்கலைன்னு ஸ்கூல்ல சொல்றாங்க… நீங்க பொய் சொல்றீங்க” என்று தெய்வீகனிடமே திருப்பினார். சங்க ஆலோசகர் உடனிருந்து, சம்பவத்தை விளக்க முற்பட்டபோது, ‘’ நீங்க இப்போ அங்கே வேலை செய்யலைல.. நீங்க வெளியில போங்க’’ என்று எகிறினார், இன்ஸ்.வேலு.

மேலும், ”ஒரு நிர்வாகத்தின் மேல் உங்கள் இஷ்டத்துக்குப் புகார் கொடுப்பீங்களா. அதுக்கு நாங்க அப்படியே வேலை செய்வோமா?” என ஆத்திரம் தலைக்கேற கத்தினார்.

சொந்தப் பிரச்சினைகளுக்காக மட்டுமல்ல; பொதுப்பிரச்சினைக்காகவும் வீதிக்கு வந்திருக்கிறது, சங்கம். (கோப்புப் படம்)

”கொடுத்தப் புகாருக்கு ஒப்புகைச் சீட்டும் கொடுக்க முடியாது; தெய்வீகன் மனைவியிடம் போலீசே எழுதி வாங்கிய கடிதத்தின் நகலையும் வழங்க முடியாது; முடிந்ததைப் பார்த்துக்கொள்” என்று பேட்டை ரவுடியைப் போல மிரட்டி அனுப்பியது வேளச்சேரி போலீசு.

திரில்லர் சினிமா ஒன்றின் திரைக்கதையைப் போல, திகிலும் திருப்பங்களும் நிறைந்திருக்கிறது, அன்புவின் தற்கொலைச் சம்பவம். பள்ளி நிர்வாகத்தோடு போலீசு கூட்டு சேர்ந்து கொண்டு நாடகமாடுகிறது என்பது அப்பட்டமாக அம்பலமாகியிருக்கிறது. எனினும், இதனைத் தாண்டியும் சில கேள்விகள் உள்ளன.

1) அன்பு ஏன் பள்ளிக்கூடத்தில் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்?

2) ஓராண்டுக்கு முன்னரே, சங்கத்திலிருந்து விலகிய ஒருவரிடம் சங்க நடவடிக்கைகள் குறித்து கியூ பிரிவு போலீசை வைத்து விசாரிக்க வேண்டியதன் அவசியம் என்ன?

3) யார் கொடுத்த புகாரின் பேரில் அல்லது யாருடைய தூண்டுதலில் பள்ளிக்கரணை இன்ஸ்பெக்டர்  சிவக்குமாரும் கியூ பிரிவு போலிசும் அன்புவிடம் விசாரணை நடத்தினர்  ?

4) அன்பு தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டதாக செய்தியறிந்த அடுத்த அரை மணிநேரத்திற்குள் அனைத்துத் தொழிலாளர்களிடமும், ‘’இதை வெளியில் சொன்னால், வேலை கிடையாது’’ என்று ஏன் சத்தியம் வாங்க வேண்டும்?

5) சங்கத்தில் சேரச்சொல்லி அன்புவை மிரட்டியதால்தான் அவர் இறந்துவிட்டார் என்றால், அதனை வெளிப்படையாகவே அறிவித்திருக்கலாமே? அவ்வாறே, போலீசிடமும் புகார் கொடுத்திருக்கலாமே? மடியில் கனமில்லாத பள்ளி நிர்வாகம் தற்கொலை செய்தியையே மூடி மறைக்க மெனக்கெட்டது ஏன்?

6) பள்ளிக்கரணை போலீசும், வேளச்சேரி போலீசும் சொல்லி வைத்தாற் போல அப்பட்டமாக பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்படுவதற்குரிய பின்னணி என்ன?

7) அன்புவின் ஆறு மாத அலைபேசி தொடர்பு பட்டியலையும், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவர் யார் யாரிடம் பேசியுள்ளார் என்ற ஆய்வும் ஏன் இதுவரை நடத்தப்படவில்லை?

8) பள்ளிக்கரணை மற்றும் வேளச்சேரி போலீசு இன்ஸ்பெக்டர்களும் மற்றும் கியூ பிரிவு போலீசும் தம் சொந்த வழக்காக எடுத்துக்கொண்டு இதில் இவ்வளவு அக்கறை காட்டுவது ஏன்?

என்பது போன்ற பல்வேறு கேள்விகளை சந்தேகமாக எழுப்புகின்றனர், சக தொழிலாளர்கள்.

சங்கத்தைப் பழிவாங்கும் நோக்கில், சங்க முன்னணியாளர்களை வேலையை விட்டு வெளியேற்றுவதற்காக நிர்வாகம் வகுத்த திட்டத்திற்கு அன்பு உடன்பட மறுத்ததாகவும், அவரைத் தொடர்ந்து டார்ச்சர் செய்ததாலேயே அவர் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டதாக பகிரங்கமாக நிர்வாகத்தின் மீது குற்றஞ்சாட்டுகின்றனர் சக தொழிலாளர்கள்.

சாராய ரவுடி – ‘கல்வி தந்தை’, ஜேப்பியார் !

இவற்றையெல்லாம், வாகன ஓட்டுநர் சங்கம் அம்பலப்படுத்திவிடக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாகத்தான், போலீசை கைக்குள் போட்டுக்கொண்டு, சங்க முன்னணியாளர்கள் மீதே கொலைப் பழிசுமத்தி கூட்டு நாடகமாடுகிறது, பள்ளி நிர்வாகம். என்கின்றனர், இத்தொழிலாளர்கள்.

எம்.ஜி.ஆர். காலத்தில் அவரது இடது கரமாக வலம் வந்த முன்னாள் சாராய வியாபாரியும்  இந்நாள் கல்வி வியாபாரியுமான ஜேப்பியாரின் சத்யபாமா பல்கலை வளாகத்துக்குள்ளேயே, அவரை எதிர்த்து சங்கக்கொடி ஏற்றியவர்கள் இந்த சங்கத்துக்காரர்கள்.

கருங்காலிகளைக் கொண்டு கொலைவெறித்தாக்குதல் நடத்தியபோதும் அஞ்சாதவர்கள். வேலையை விட்டு துரத்தினாலும் அதற்கு அசராதவர்கள். தொடர் பழிவாங்கும் நடவடிக்கைகளைக் கண்டு விரக்தி கொள்ளாமல் மன உறுதியோடு தொடர்ந்து எதிர்த்து நிற்பவர்கள்.

வாகன ஓட்டுநர்கள் என்று பணியமர்த்திக் கொண்டு, தோட்ட பராமரிப்பு முதல் கக்கூசு கழுவுவது வரையில் எந்த வேலை சொன்னாலும் மறுக்காமல் செய்ய வேண்டுமென்று பழக்கப்படுத்தப்பட்ட தொழிலாளர்கள் இன்று, தொழிலாளர் சட்டம், தொழிலாளர் உரிமை என்று பேசுவதை சகித்துக்கொள்ள முடியாமல் போனதன் வெளிப்பாடுகள் இவை.

பள்ளி நிர்வாகம் – போலீசின் மூர்க்கத்தனமான அடக்குமுறைக்கு இதைத்தாண்டி வேறு காரணம் இருக்க முடியுமா, என்ன?

– புதிய ஜனநாயக வாகன ஓட்டுநர்கள், டெக்னீஷியன்கள் மற்றும் ஊழியர்கள் சங்கம், சென்னை.

ரஜினியை என்கவுண்டர் செய்யும் தமிழ் ஃபேஸ்புக் !

Deepa Lakshmi is feeling depressed.
தமிழகமே கொண்டாடும் சினிமா பிரபலம்
பெருஞ்செல்வமும் செல்வாக்கும்
உலகளாவிய புகழும்
காக்கிச் சட்டைக்கும் இந்த அரசு அதிகாரத்துக்கும் எதிராக உண்மையைப் பேச நடுங்குகிறதென்றால்…
என்ன …க்குச் சமம் உன் புகழ்?
போலிசுக்கு வக்காலத்து வாங்கிப் பேசும் போது…சீ
ரஜினி,
சிறுவயதில், உங்களுடைய‌ எத்தனை படங்களை ரசித்துப் பார்த்திருப்போம். அதில் நீங்கள் காட்டிய நாயக பிம்பம் எங்களையுமறியாமல் ஆளுமைகளில் கலந்திருக்கலாம். சினிமா கலாசாரத்தில் இயைந்தது தானே எங்கள் வாழ்க்கை.
இன்று அரசின் பக்கம், அதிகாரத்தின் பக்கம் நின்று கொண்டு நெஞ்சறியப் பொய் சொல்லும் உனைப் பார்க்கக் கண்கள் கூசுகின்றன. காலா என்ன, என்ன வண்ணம் பூசிக் கொண்டு நீ வந்தாலும், அதைத் தாண்டி உன் தோல் உரிக்கப் பட்டு விட்டது.
வீழ்ந்தாய் நீ ரஜினி.

Muralikrishnan Chinnadurai
ஏய் இரசினியை காவல்துறை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும். சமூக விரோதிகள் யாரென்று தனக்குத் தெரியும் என்று பத்திரிகையாளர் வினாவுக்கு பதிலளித்துள்ளார். ஆகவே ஏய் இரசினியை கைது செய்து விசாரிக்க வேண்டும் 13 உயிர்கள் சும்மா இல்லை!

Deepa Lakshmi
வேற கேள்வி இருக்கா?
ம்…உனக்கு வெக்கமே இல்லியா?
ஜெயலலிதாவைத் தைரியலெச்சுமின்னு சொன்ன வாய்க்கு ஸ்னோலின் பத்தி ஒரு வார்த்த சொல்ல முடியல?
அம்புலிமாமா படிச்சிட்டு ஒப்பிக்கிற மாதிரி ‘சமூகவிரோதி இருக்காங்க… புடிக்கிணும் காட்ணும்’ ங்கிறே?
#யார்நீங்க
#நாந்தான்பாரஜினிகாந்த்

_____

_____

Yuva Krishna
பத்திரிகையாளர்கள் மட்டும் வானத்தில் இருந்தா குதித்தார்கள்? அவர்கள் மத்தியிலும் தரை டிக்கெட்டு ரஜினி ரசிகர்கள் இருக்கதான் செய்கிறார்கள்.

ஜல்லிக்கட்டு போராட்டம் உச்சத்தை எட்டிய நிலையில், தமிழக சட்டமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்காக தீர்மானம் நிறைவேற்றுகிறார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். தீர்மானம் நிறைவேற்றிய கையோடு அலங்காநல்லூருக்கு சென்றவருக்கு, ரஜினிக்கு தூத்துக்குடியில் கிடைத்ததைவிட கூடுதலான அவமரியாதை நடக்கிறது.

உடனடியாக சென்னைக்கு திரும்பியவர் விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுக்கிறார்.

“உங்களை மிக கேவலமாக விமர்சிக்கிறார்களே?”

“அரசியலுக்கு வந்துவிட்டால் பாராட்டு மட்டுமல்ல, வசவும் சேர்த்து கிடைப்பதுதான் இயல்பு. இரண்டையுமே தலையில் ஏற்றிக் கொள்ளக்கூடாது” என்று ஃப்ரெண்ட்லியாக சொல்லிவிட்டு சிரித்தார் ஓ.பி.எஸ்.

அவர் அரசியல்வாதி. ரஜினி வெறும் நடிகர் மட்டுமே. ஒருவேளை ரஜினி அரசியலில் குதித்து, துரதிருஷ்டவசமாக ஆட்சியைப் பிடித்தாரேயானால், சட்டமன்றம் என்பது மேய்ச்சல் மைதானம் மாதிரி நடத்தப்படும்

Mathavaraj
ரஜினி மட்டும் அன்றைக்கு தூத்துக்குடியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரனாய் இருந்திருந்தால், போரடிய மக்களை என்னவெல்லாம் செய்திருப்பார் என்று தெரியவில்லை. அத்தனை கோபம், வன்மம், வெறுப்பு எல்லாம் போராடியவர்கள் மீதும், போராட்டங்கள் மீதும் மண்டிக் கிடப்பதை பார்த்து விட்டோம்.

கட்சி ஆரம்பிக்கவில்லை, ஆட்சி அதிகாரத்துக்கு வரவில்லை, அதற்கு முன்னரே இத்தனை உச்சபட்ச திமிரும், அகம்பாவமும் இருக்கிறதென்றால், அது பார்ப்பனியக் கொழுப்பு அன்றி வேறில்லை.

இந்துத்துவ பாசிசத்தின் இன்னொரு ஆபத்தான முகம்.

குறிஞ்சி நாதன்
தமிழின விரோதி ரஜினியின் காலா படத்தை தியேட்டரில் போய் பார்ப்பவன் #சமூக_விரோதிகளே

Thameem Tantra
ரஜினியை விஜயகாந்துடன் ஒப்பிடுவது அயோக்கியத்தனம்.

விஜயகாந்த் உடம்பு சரியில்லாமல் போனதால் மட்டுமே உளறினார். ரஜினிகாந்த் உளறியதால் மட்டுமே உடம்பு சரியில்லாமல் போனார்.

எளிமை பூனைக்குட்டி என்று அவர் புகழ்பாடி கொண்டு இருந்தவர்கள் இன்று அவரின் பத்திரிகையாளர் சந்திப்பை பார்த்து அதிர்ச்சியாகுகிறார்கள். நூறு நாள் அமைதியாக நடந்த போராட்டம் கடைசி கட்டத்தில் வன்முறைக்கு பலியானதை சமூக விரோதம் என்று ஆவேசபடும் ரஜினி, இன்று பத்திரிக்கையாளர்கள் வெறும் நான்கு கேள்விகள் கேட்டதற்கு, நாளாவது கேள்வியில் “யோவ் வேற கேள்வி கேளுய்யா” என்று கையை நீட்டி வாயால் அடிக்க வருகிறார்.

இன்னொரு விசயம், இன்று மக்களை சமூக விரோதி என்றும் போலீஸ்/அரசாங்க அராஜகத்தை நியாயப்படுத்திய ரஜினிக்கே தெரியும்.. இப்படி பேசினால் பொதுப்புத்தி அவருக்கு எதிராக திரும்பும் என்று…

அப்படி இருந்தும் ஏன் பேசினார் ?

ஏன் என்றால்.. ரஜினியின் அரசியல் வருகை நோக்கம் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக இல்லை. மாறாக பல தொகுதிகளில் 1000-4000ரம் ஓட்டை பிரித்து எதிர்க்கட்சியை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பது மட்டுமே. இது சத்தியமாக பலன் தரும் உத்தி. ஜெயலலிதா இதை பலமுறை திமுகவிற்கு எதிராக வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார்… அதையே ரஜினியை வைத்து பாஜக செய்கிறது… இது பாஜகவின் நேரடி ஆட்சியையோ அல்லது எடப்பாடி போன்ற ஆட்சியையோ உறுதிப்படுத்தும்.

திரும்பவும் சொல்கிறேன்…. எடப்பாடியை உதாசீனப்படுத்தினீர்கள்….நடுரோட்டில் அனைவரைரும் சுட்டு தள்ளி உங்களின் மடமை அம்பலப்படுத்தினர்.

இப்போது ரஜினியை குறைத்து எடைபோட்டால் என்ன நடக்கும் என்று …. அடுத்த தூத்துக்குடி படுகொலை சம்பவம் போல் ஒரு சம்பவத்தில் விரிவாக சொல்கிறேன் !

Anbalagan Veerappan

ரஜினியின் போயஸ் தோட்ட வீட்டின் முன்பு குவிக்கப்பட்ட போலீசார்!

காலாவுக்கு காவல்துறை பாதுகாப்பு… சத்திய சோதனை!
பாதுகாப்பு வளையத்துக்குள் நடிகர் ரஜினிகாந்த் வீடு
நடிகர் ரஜினிகாந்த் இன்று இரவு டார்ஜிலிங் செல்கிறார். இரண்டு மாதம் படப்பிடிப்பாம்…

LR Jagadheesan
ரஞ்சித்துக்காக ரஜினிக்கு முட்டுக்கொடுக்கும் தலித்திய மேதாவிகள் யாரும் ஆ ராசாவுக்காக கருணாநிதிக்கு இப்படி முட்டுக்கொடுத்ததில்லையே ஏன்? ஆ ராசாவைவிட ரஞ்சித் மேதாவி என்பதாலா? அல்லது கருணாநிதியைவிட ரஜினி தலித்துகளுக்கு அதிக நன்மைகள் செய்ததாலா? தலித் அரசியல் என்கிற பெயரில் ரஞ்சித் முன்னுறுத்துவது ஆண்டபரம்பரை templateஐ அப்படியே பட்டி டிங்கரிங் பார்த்து உல்டாவாக்கி சுயஜாதி பெருமை பேசும் ஒற்றை ஜாதி heroism. திட்டமிட்ட திராவிட இயக்க நிராகரிப்பு மற்றும் இருட்டடிப்பு. அது உங்களின் சுயஜாதிபற்றுக்கு சொறிந்துகொடுக்கிறது. அதனால் ரஜினி மாதிரி ஒரு facist உடன் கைகோர்த்தாலும் ரஞ்சித் உங்களுக்கு தலித் icon. அப்படியான உங்களின் ஜாதி அரசியலுக்கு பயன்படாத ஆ ராசாவை நீங்கள் கண்டுகொள்ள மறுப்பீர்கள். ராசாவை கடைசிவரை பாதுகாத்து சிறையிலிருந்து விடுதலையாகி வந்தபோது மாலைபோட்டு வரவேற்ற கருணாநிதிக்காக நீங்கள் ஒருநாளும் இப்படி களமாடியதில்லை. ஒட்டுமொத்த இந்திய கட்டமைப்புமே சேர்ந்து நின்று மூர்க்கமாக எதிர்த்தபோது அதை அவர்கள் வகுத்த ஆட்டக்களத்தில் அவர்கள் வரையறை செய்த விதிகளுக்கு உட்பட்டு ஆடி வென்று திரும்பிய ஆ ராசாவை நீங்கள் என்றாவது கொண்டாடியதுண்டா? அவரைப்போன்ற நிஜ உலக போராளிகள் பல்லாயிரம் பேரை உருவாக்கி பாதுகாத்த திமுகவை அதன் தாய் அமைப்பான திராவிடர் இயக்கத்தை ஆண்டைகளின் அமைப்பு சூத்திர இயக்கம் தலித் விரோதிகள் என்று முத்திரை குத்திய மூடர் கூடம் அட்டைக்கத்தி ரஞ்சித்துக்காக ரஜினிக்கு காவடி எடுத்து ஆடிக்கொண்டிருக்கிறது. ஆண்டி முத்து ராசாக்களை உருவாக்கி பாதுகாக்கவல்ல ஒரு இயக்கத்துக்கு அசல் எது போலி எது என்றும் தெரியும். உண்மைப்போராளி யார் நிழலுலக அட்டைக்கத்தி எது என்றும் தெரியும். சினிமா ரசிக கும்பல் சினிமாக்காரர்களுக்கு பாலாபிஷேகம் செய்வதில் தவறில்லை. அது அவர்களின் உரிமை. அரசியலில் வந்து உங்கள் மொன்னையான அட்டைக்கத்திகளை சுழற்ற வேண்டாம். அதுவும் ரஜினிமாதிரி ஒரு காலிப்பயலுக்காக.

Saravana Kanth
சரிடா நாங்க சமூக விரோதியாவே இருந்துகிறோம். அடிமை காலத்தில் இருந்து உரிமைக்காக குரல் கொடுப்பவனுக்கு இதான் பெயர். ஆகையால் வருந்த ஏதுமில்லை…

ஆனால் ஆலயத்தில் கொலை செய்ய ஏவியவர்கள், ஆலயத்தில் குழந்தையை வன்புணர்வு செய்து கொண்டாடியவர்கள், விபத்தா சதியா என தெரியும் முன்னரே மாற்று மத சகோதரகளை கொன்றழித்த கொடூரர்கள், ஒரு மாநில அரசு மெஜாரிட்டி இழந்த பின்னரும் பொய்யான நீதி மூலம் காப்பாற்றி, அவர்களின் ஊழலில் மிரட்டி பங்கு பெறும் ஆட்சியாளர்கள் …. இவர்களுக்கு என்ன பெயர்… ?

ரஜினி ஒரு படத்தில் சொல்லுவது தான்… எச்சச்ச எச்சச்ச கெச்சச்ச கெச்சச்ச… புரியலையா… நானே யாருக்கோ சொம்பா இருக்கிறேன். எனக்கும் சொம்பா இருக்கீங்களேனு அர்த்தமாம்.

Abdul Hameed Sheik Mohamed

ரஞ்சித்திடமிருந்து ரஜினியை பிரிப்பது எப்படி?

ரஜினி நேற்று தூத்துக்குடி சென்று அளித்த மக்கள் விரோத பேட்டியை தொடர்ந்து காலாவை புறக்கணிக்க வேண்டும் என்று எழுதினேன். காலாவை தோற்கடிப்பதாக நினைத்து ரஞ்சிதை தோற்கடித்துவிடாதீர்கள் என்ற அழுகுரல்கள் ஒரு புறம். ரஜினியை தோற்கடித்து ரஞ்சித்தை வெற்றிபெறச் செய்யுங்கள் என்ற போர்தந்திர அறைகூவல் இன்னொரு புறம். தூத்துக்குடியில் மக்கள் செத்ததைவிட காலா தோற்றுவிடக்கூடாது என்ற பதட்டம் பலரிடமும் இருக்கிறது. தூத்துக்குடி பிரச்சினையில் காலாவை கொண்டுவரக்கூடாது என்று நினைப்பவர்கள்தான் காவிரிக்காக ஐ.பி.எல் லை துரத்தியதை ஆரவாரமாக ஆதரித்தவர்கள். ஐ.பி.எல் நடத்துகிறவர்களா காவிரியில் தண்ணீர்விடமாட்டேன் என்று சொன்னார்கள்? அது ஒரு போராட்டத்தின் மீதான கவன ஈர்ப்பு. ரஜினி ஒரு குடிமை சமூகத்தின் உணர்வுகளை மோசமாக அவமானப்படுத்தியிருக்கிறார். அவரை எப்படி எதிர்ப்பது? அவர் படத்தைதான் எதிர்க்க முடியும். ரஜினியினால் ரஞ்சித் ஆதாயம் அடைகிறார் எனில் ரஜினிக்கு ஏற்படும் இழப்புகளிலும் ரஞ்சித் பங்குபெறுவதுதான் நியாயமானது.

காலா ரஜினி படம் அல்ல , ரஞ்சித் படம் என்று சொல்பவர்கள் தங்களைத்தாங்களே ஏமாற்றிக்கொள்கிறார்களா அல்லது மற்றவர்களை ஏமாற்ற முயற்சிக்கிறார்களா என்று தெரியவில்லை. கபாலிக்கு முன்பும் ரஞ்சித் படம் எடுத்திருக்கிறார். அதில் அவர் எவ்வளவு போராடியிருக்கிறார் என்று அனைவருக்கும் தெரியும். கபாலி மற்றும் இப்போது காலாவிற்கு கிடைக்கும் இந்த அதீத முக்கியத்துவம் ரஜினியின் சந்தை மதிப்பிற்கேயன்றி ரஞ்சித் என்ற சிறந்த இயக்குனருக்கு அல்ல. ரஞ்சித் மட்டுமல்ல எந்த சிறந்த இயக்குனருமே தோற்கக்கூடாது என்று விரும்புகிறவன் நான். ஆனால் தமிழ்நாட்டில் இந்துத்துவா அரசியலை விதைக்கும் நாசகார சக்தியாக ரஜினி உருவெடுத்து வருகிறார். அவருடைய அகங்காரம் என்பது அவருடைய சினிமா வெற்றிகளிலிருந்தே பிறக்கிறது. அதைத்தான் பா.ஜ.க இப்போது தனது ஆயுதமாக பயன்படுத்துகிறது.

ரஜினியின் படத்தில் சில தலித்திய குறியீடுகளையும் வசனங்களையும் வைத்து வளர வேண்டிய அளவு தலித்தியம் பலவீனமானதா? கத்தி படத்தில் விஜய் பேசிய வசனத்தால் மார்க்சியம் வளர்ந்ததுபோலத்தான்.

ரஞ்சித் ரஜினியைவைத்து மெட்ராஸ்போன்ற ஒரு எதார்த்த சினிமாவை உருவாக்க முடியுமா? கபாலி போன்ற கேங்க்ஸ்டர் படங்களுக்கு எதற்கு இத்தனை தத்துவார்த்த அரசியல் முகமூடிகள்?

ரஜினியை பயன்படுத்தி ரஞ்சித் வளரலாம். அப்படி வளர்ந்தால் அது எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால் ரஜினி படங்கள் மூலமாக தலித்தியம் ஒரு போதும் வளராது. மாறாக ரஞ்சித் போன்றவர்கள் பா.ஜ.கவின் அடியாளான ரஜினியை ஒடுக்கப்பட்ட மக்களிடம் ஒரு புரட்சிநாயகன் போல காட்டும் வரலாற்று தவறையே செய்கிறார்கள். ஒரு வேளை பல மாநிலங்களில் நடந்ததுபோல ஒரு இந்துத்துவா- தலித் கூட்டணிக்கு ரஞ்சித் பயன்படக்கூடும்.

ஜோடி குரூஸ் என்ற எழுத்தாளர் மோடியை ஆதரித்தற்காக அவரை கடுமையாக எதிர்த்தவர்கள்தான் நாம். ஆனால் இப்போது ரஜினியின் சினிமாவையும் அரசியலையும் பிரிக்க வேண்டும் என்றால் எப்படி? ஒரு ப்ராஜெக்டில் இருவர் வேலை செய்யும்போது ஒருவரை தோற்கடித்து ஒருவரை வெற்றிபெறச் செய்யும் உத்திதான் என்ன? பாதிப்படத்தில் எழுந்து வந்துவிடவேண்டுமா?

ரஞ்சித் ரஜினியை விமர்சிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ரஜினியை வைத்து படம் எடுப்பதற்காக நான் ரஞ்சித்தை விமர்சிக்கப்போவதும் இல்லை. அது அவரது தொழில். அவருக்கு கிடைத்த புதையல். ஆனால் ரஞ்சித் தலித்திய சிந்தனை உள்ளவர் என்பதற்காக ரஜினி என்ற இந்துத்துவா ஏஜெண்டிற்கு எதிராக யாரும் போராடக் கூடாது என்பது என்ன நியாயம்? ரஜினியை மன்னித்து ரஞ்சித்தை காப்பாற்ற வேண்டி அவசியம் ஒன்றுமில்லை.

ரஞ்சித்தை ஒரு அவதாரமாக கருதுபவர்கள் கோயில் கட்டி கும்பிடட்டும். என்னைப் பொறுத்தவரை அவர் தமிழில் உள்ள பல நல்ல இயக்குனர்களில் ஒரு நல்ல இயக்குனர். அவ்வளவுதான். இன்றைய காலகட்டத்த்தில் புரட்சிகர உணர்வுள்ள ஒரு இயக்குனர் ரஜினி போன்ற ஒரு அதிகாரவர்க்க- இந்துத்துவா ஏஜெண்டுடன் சேர்ந்து வேலை செய்கிறார் என்பது எனக்கு மிகுந்த வியப்பளிக்கிறது.

அம்பேத்கரைகூட விமர்சித்துவிடலாம். ரஞ்சித்தை தொட முடியாது போலும்.

சினிமா தமிழனின் அபின்

– மனுஷ்ய புத்திரன்

Vinoth Kumar
ஓர் இளைஞர், “யாரு நீங்க?” என்று கேட்கிறார்.

கடந்த அரைநூற்றாண்டில் ரஜினி எதிர்கொண்டிராத கேள்வி. நிலைகுலைந்துப் போய், “நான் ரஜினிகாந்த், சென்னையிலிருந்து வர்றேன்” என்று இருளடைந்த முகத்தோடு பிளாஸ்டிக் சிரிப்போடு ‘வணக்கம்’ வைக்கிறார்.

மார்பில் வாங்கிய தோட்டாவுக்கு நிகரானதுஅந்த ஒரு வார்த்தை…. ரஜினி மீள சில தினங்கள் ஆகும்

முதல் அடி தூத்துகுடி மக்களிடமிருந்து….

Mano Soundar Mano
மீத்தேன், அணு உலைக்கதிர்வீச்சு, ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ, ஸ்டெர்லைட்-தாமிரம் என ஒட்டுமொத்த விஷமும் கலந்த கலவைதான் ரஜினிகாந்த்!!!

Guna
நிழல் உலகில் நீலம் நிஜ உலகில் காவி – பரட்டை மக்கள் விரோதி.

வி.சி. வில்வம்
ஜெயலலிதா விஷக் கிருமிகளை அடக்கி வைத்திருந்தார் – ரஜினி
எனக்குத் தெரிந்து 2 விஷக் கிருமிகளை அவர் அடக்கி வைத்திருந்தார்.

1)ரஜினி
2) கமல்

Palanivel
சமூக விரோதிகளை ஜெயலலிதா அடக்கி வைத்திருந்தார்__ரசினி.
அவரு அதிமுக காரங்களை தான் சொல்றாரு.

Arun Bhagath
வேதாந்தா அனில் அகர்வாலுக்கும் , ரரஜினிகாந்துக்கும் சிந்தனையளவில் எந்த வேறுபாடும் இல்லை.
ரஜினிகாந்த் தூத்துக்குடிக்கு செல்வது உயிர் நீத்த தியாகிகளுக்கு செய்யும் அவமரியாதை.

மனுஷ்ய புத்திரன்
ரஜினி அரசு எந்திரத்தின் அடியாள்
…….

தூத்துக்குடியில் ரஜினி சற்றுமுன் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு அவர் ஒரு அரச பயங்கரவாதத்தின் கொள்கைப் பிரச்சாரகர் என்பதையும் மக்கள் போராட்டங்களை கொச்சைப்படுத்தும் ஒரு சமூக விரோதி என்பதையும் மறுபடி நிரூபித்திருக்கிறார். காவல்துறையால் படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக குரல் கொடுப்பதற்குப்பதில் ‘ காவல் துறை மேல் கல்லெறிந்தவர்களின் புகைப்படங்களை பத்திரிகைகளில் வெளியிட்டு’ அந்த சமூக விரோதிகளை அடையாளம் காட்டவேண்டும் என்கிறார். போராட்டத்தில் வன்முறையாளர்கள் ஊடுருவி விட்டார்கள் என்று எடப்பாடி- சங்கி கும்பல் எடுக்கும் வாந்தியை மறுபடி எடுக்கிறார். தமிழகத்தில் அதிகரித்துவிட்ட சமூகவிரோத சக்திகளை ஜெயலலிதாபோல இரும்புக்கரம்கொண்டு அடக்கவேண்டும் என்கிறார். துப்பாக்குச்சூட்டிற்கு பொறுப்பேற்று எடப்பாடி பழனிச்சாமி பதவி விலகவேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கைப்பற்றிக் கேட்டால் ‘ எல்லாத்துக்கும் பதவி விலகச் சொன்னா என்ன அர்த்தம்? சும்மா அரசியல் பண்றாங்க’ என்கிறார். போராட்டங்களுக்கு அனுமதி கொடுக்கும்போது இனிமேல் அரசு ஸ்டரிக்டாக இருக்கவெண்டும் என்கிறார். இப்படியே போராடிக்கொண்டே இருந்தால் தமிழகத்தின் தொழில்வளர்ச்சி பாதிக்கப்படும் என்று கவலைப்படுகிறார்.

அரசு எந்திரத்தின் பச்சை ரத்தப்படுகொலையை நியாயப்படுத்தி அதற்கான பொறுப்பிலிருந்து ஆட்சியாளர்களை விடுவிப்பத்கற்காக அவர்களால் அனுப்பப்பட்ட அடியாள் ரஜினி. மக்களின் பிணங்ககளை தன்னுடையை பிரபல்யத்தினால் விற்றுக்கொண்டிருக்கிறார் ரஜினி. ரஜினியின் குரல் எடப்பாடியின் குரல். பா.ஜ.கவின் குரல். போலீசின் குரல்.

ரஜினி ஏன் முன்னிறுத்தப்படுகிறார் என்பதற்கு இனியும் பதில் தேடவேண்டியதில்லை. அடியாள்கள் உதவியின்றி அதிகாரம் சாத்தியமில்லை.

ரஜினி தமிழ்ச்சமூகத்தின் எதிர் அரசியலை சிதைக்க அனுப்பப்பட்டிருக்கும் நச்சுக்கிருமிகளில் தலையாய கிருமி.

Ra Sindhan
ரஜினியை யார் நீங்க என்று கேட்ட அந்த இளைஞர் ஒன்றை நமக்கு உணர்த்துகிறார். போராட்டக் களமே நமக்கு நாயகர்களை அறிமுகப்படுத்துகிறது. அப்போது நாம் பிம்பங்களை தூசாகத் தூக்கியெறிவோம்.

Manikandan Rajendiran
30 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம், கோடிகளில் சம்பளம் பெறுகிறோம், அதிக ரசிகர் மன்றங்களை கொண்டிருக்கிறோம், உலகம் முழுவதும் நமக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள், மீடியாக்கள் நம்மையே என்னேரமும் சுற்றி கொண்டிருக்கும், புதிய அரசியல் கட்சியை தொடங்க இருக்கிறோம், நமக்கு தான் 150 தொகுதிகளில் செல்வாக்கு இருப்பதாக சில பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டன என்ற ஆயிரமாயிரம் எண்ணங்களோடு ஒருவர் பாதிக்கபட்ட மக்கள் முன்னால் நின்றால்…

யார் நீங்க? என்ற ஒற்றை கேள்வியால் செருப்பால் அடித்து அவரின் எல்லா எண்ணங்களையும் கனவுகளையும் சிதைத்து அனுப்பி வைத்துள்ளனர்..
#WAT A MOMENT

Murugeswari Madurai
இனிமேல் ….
ரஜினிகாந்த் என்ற நடிகனின் மூலமாக சமூக புரட்சி , தலித்திய புரட்சி பேச நினைக்கும் சினிமா இயக்குனர் எவரானாலும் அவர்கள் இயக்கும் திரைப்படத்தை அறிவுள்ள மக்கள் புறக்கணிக்கட்டும் .

அதை ” காலா ” – வில் இருந்து தொடங்குவோம் .

வேற நடிகனே கிடைக்கலையா உன் சமூவப்புரட்சிக் கதையில் நடிக்க ?

காலா ரஜினியின் கடைசிப்படமாக இருக்க மானமுள்ள மக்கள் முன்வரவேண்டும் .

Prabhu Rajendiran
பாப்பானுக்கு பல்லுபடாம வேலைபாத்து விட்டா தேசபக்தன் !
மன்னின் மைந்தர்களாம் ஒடுக்கப்பட்ட மக்கள் உரிமைக்காக போராடினால் சமூகவிரோதி , தேசதுரோகி!
Proud to be தேசதுரோகி!

Samsu Deen Heera
ஒரு ஆர்.எஸ்.எஸ் பார்ப்பானுக்கு இருக்கக்கூடிய அதே அகம்பாவமும் திமிரும்

வெளிப்படுத்துகிற ரஜினியின் உடல்மொழி தான் யாரின் கையாள் என்பதைத் தெளிவாகச் சொல்கிறது…

மக்கள் போராடிக்கொண்டே இருந்தால் தமிழகம் சுடுகாடாக மாறிவிடுமாம்.

ஆமாம் ரஜினி அவர்களே… ஆயிரக்கணக்கான மக்கள் உயிர்துறந்து போராடிய சுதந்திரப்போரில், காட்டிக்கொடுத்தும் கூட்டிக்கொடுத்தும் வெள்ளையனின் காலைநக்கிக் குடித்த கும்பலின் அடிமையல்லவா நீங்கள். உங்களுக்கு போராட்டங்களின் மான்புகள் குறித்துத் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான்.

R Muthu Kumar
சென்னை விமான நிலையத்தில் ரஜினி முகத்தில் வெடித்தது தூத்துக்குடியில் பற்ற வைக்கப்பட்ட ‘யார் நீங்க?’ ப்ராண்ட் பட்டாசுதானே தவிர வேறல்ல! #கற்றவைபற்றவை

Aazhi Senthil Nathan
“காலா, உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்”

எவ்வளவு திமிர் ரஜினிக்கு? தூத்துக்குடியிலிருந்து திரும்பிவந்தவரின் விமானநிலையப் பேட்டியைப் பார்த்தீர்களா? அவரது உடல்மொழி! செய்தியாளரை நோக்கி எப்படி ஒரு ஆணவம்!

போராடினால் தமிழ்நாடு சுடுகாடு ஆகுமா?

முட்டாளே, தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடுமோ என்கிற அச்சத்தால்தானே இங்கே போராடுகிறோம்.
உன்னை வாழவைத்தது தமிழ்நாடு. அதை சாகவைக்க வந்திருக்கிறாயா நன்றிகெட்டவனே?

இந்த அதிகாரத்தை யார் கொடுத்தது தமிழ்ச்சமூகத்தின் விரோதியான ரஜினிக்கு?
நாம் தான் கொடுத்தோம்.
கோடம்பாக்கம் கொடுத்தது, மக்களே, கோடம்பாக்கம் கொடுத்தது. எத்தனை வருசம் பாலாபிஷேகம் பண்ணீங்க. உங்களுக்கு ரத்த அபிஷேகம் செய்ய வந்துகிட்டிருக்காரு இந்த ஆளு.

இருபத்தைந்து ஆண்டு காலமாக ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா வருவாரா மாட்டாரா வருவாரா மாட்டாரா, எப்போ கட்சித் தொடங்குவார், எப்படித் தொடங்குவார் என்று ரன்னிங் கமென்டரி கொடுத்துக்கொண்டு அலம்பல் பண்ணிக்கொண்டிருந்த ஊடகங்களை நோக்கி பாயாமல் என்ன செய்வார்? எத்தனை நூறு கவர்ஸ்டோரிகள், எத்தனை ஆயிரம் மணி நேரம் விவாதங்கள்…

ஒளிவுமறைவற்ற பாசிஸ்ட்டான ரஜினி பரமசிவன் கழுத்திலிருக்கும் பாம்பு. தமிழ்நாட்டில் மீண்டும் சர்வவியாபகமாகப் பரவிக்கொண்டிருக்கும் பார்ப்பனீயத்தின் முதல் தளபதி. தமிழ்நாட்டை காலனிநாடாக ஆக்கி இதை கருவறுக்க விரும்பும் மோடி கும்பலின் ரத்த ஏஜென்ட். உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யத் தயங்காத தமிழர்களின் நெ.1 விரோதி.

ரஜினியை தலைதூக்கவிடாமல் அடிக்கவேண்டியது நம் அனைவரின் கடமை.

“காலா,
உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்,
என்றன் காலருகே வாடா,
சற்றே உனை மிதிக்கிறேன்”
என்கிற வார்த்தைகள் இந்த விஷக்கிருமிக்குத்தான் தகும்.

Suba.Veerapandian
“அவ்வண்ணமே கோரும் …….” – #ரஜினிகாந்த்!
————————————————————————

விஷக்கிருமி என்ற சொல் 50 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் பாவலாகப் பேசப்பட்ட ஒரு சொல். 1967 ஆம் ஆண்டு திமுக பதவிக்கு வந்ததும், முன்னாள் முதலமைச்சர் பக்தவத்சலம், “தமிழ்நாட்டில் விஷக்கிருமிகள் பரவி விட்டன” என்றார். அது குறித்த கடுமையான விமர்சனங்கள் பல அன்று வெளிவந்தன.

பிறகு பலரும் அந்தச் சொல்லை அல்லது அப்பொருள்படும் சொல்லை அடிக்கடி கையாண்டனர். அண்மையில் சல்லிக்கட்டுப் போராட்டத்திலும், இப்போது தூத்துக்குடியிலும் அந்தச் சொல் பயன்படுத்தப் பட்டது. இப்போது மீண்டும் தூத்துக்குடிப் போராட்டத்தில் விஷமிகள் பரவி விட்டனர் என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழக முதலமைச்சர் எடப்பாடி ஆகியோர் கூறினர். இப்போது அதே சொல்லையும், கருத்தையும் ஊடக நேர்காணலில் ரஜினி பயன்படுத்தியுள்ளார்,

கொதித்துக் கொந்தளித்து எழுந்த மக்களின் போராட்டத்தை விஷமிகள் நடத்திய போராட்டம் என்று சொல்வது மக்களைக் கொச்சைப்படுத்துவதாகாதா? 99 நாள்கள் அமைதியாக மக்கள் நடத்திய போராட்டத்தை அரசு கண்டு கொள்ளவே இல்லை என்கிறபோது, மக்களிடம் ஒரு கோபம் குடிகொள்ளாதா? அந்தக் கோபம் சற்றுச் சூடேறி வன்முறையில் போய் முடிந்திருக்கிறது. அந்த வன்முறையைப் பற்றி மட்டும் கவலைப்படும் புதிய தேசபக்தர் ரஜினி, அந்த வன்முறையைத் தூண்டிய வன்முறை பற்றி அறிவாரா? மக்களின் உடல்நலம், உயிர்ப்பாதுகாப்பு என எது குறித்தும் கவலை கொள்ளாமல், தனியார் ஆலைக்கு அரசுகள் அளித்த ஆதரவுக்கு என்ன பெயர்? அது வன்முறையில்லையா?

தன் திரைப்படங்களில் ‘வேங்கை மகன் ஒத்தையில நின்னு’ எத்தனை வன்முறைகளை அரங்கேற்றியிருக்கிறார்! அதுதான் வீரம் என்று எத்தனை படங்களில் சொல்லாமல் சொல்லியிருக்கிறார். அவையெல்லாம் வன்முறைக்கான தூண்டுதல்தானே! ஆனால் அவற்றையெல்லாம் நினைப்பில் வைத்தன்று, தங்கள் வாழ்வுக்காக, உயிருக்காகப் போராடிய மக்களிடையே விஷக்கிருமிகளை புகுந்துவிட்டனர் என்பதற்கு என்ன ஆதாரம்? அரசு சொல்வதை அப்படியே திரும்பிச் சொல்வதற்கு ஒருவர் தூத்துக்குடி வரை பயணம் செய்ய வேண்டியதில்லை.எடப்பாடியின் அறிக்கைக்கும், பொன். ராதாகிருஷ்ணன் நேர்காணலுக்கும் கீழே, “அவ்வண்ணமே கோரும்” என்று எழுதிக் கையெழுத்துப் போட்டிருக்கலாம் ரஜினி!

ஆலையை மீண்டும் திறக்க நீதிமன்றம் சென்றால், இனி அவர்கள் மனுஷங்களே இல்லை என்று கூறும் ரஜினிகாந்த்தான், எதுவாக இருந்தாலும் கோர்ட்டுக்குத்தான் போகணும் என்கிறார். என்ன முரண் இது! விஷமிகள் நடத்திய வன்முறை எதிர்ப்புப் போராட்டம்தானே, அதற்காக நாங்கள் ஏன் எங்கள் ஆலையை மூட வேண்டும் என்று அவர்கள் நீதிமன்றம் சென்று கேட்கமாட்டார்களா? மக்கள் போராட்டத்தை விஷமிகள் நடத்திய போராட்டம் என்று திரித்துச் சொல்வதை விட, ஆலை முதலாளிகளுக்கு வேறு எப்படி உதவ முடியும்?

கூட்டத்தை நோக்கிக் கூட இல்லை, குறிபார்த்துச் சுட்டிருக்கின்றனர் காவல்துறையினர். இனிவரும் காலங்களில் எவரும் போராட்டத்தை முன்னெடுக்கக்கூடாது என்னும் ஆகப் பெரிய மிரட்டல்தானே இது! அதனைக் கண்டித்து விட்டல்லவா காவல்துறையினரைத் தாக்கியவர்களைக் கண்டித்திருக்க வேண்டும்?

ஒரு நபர் ஆணையம் மீது நம்பிக்கையில்லை, உளவுத்துறையின் பிழைதான் இது என்று ஒப்புக்குச் சொல்லிவிட்டு, ஒட்டுமொத்தமாய் மக்கள் போராட்டத்தை விஷமிகளின் வன்முறைப் போராட்டம் என்று சொல்லிவிட்டார் ரஜினிகாந்த்!

ஜெயலலிதாவின் இரும்புக்கரத்தைப் பாராட்டும் இவர் போன்றவர்கள் ஆட்சிக்கு வந்தால், நாட்டில் இரும்புக்கரங்கள் மட்டும்தான் மிஞ்சும். மக்கள் மிஞ்ச மாட்டார்கள்! கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை போதாது என்பது போலல்லவா உள்ளது அவருடைய நேர்காணல்!

பூனைக்குட்டி வெளியில் வந்தது ஒருவிதத்தில் நல்லதுதான். ரஜினியின் அரசியல் பயணம் தொடங்குவதற்கு முன்பே தோல்வியடைந்துள்ளது!

Arul Narayana
வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன்னு சொல்லிட்டு…. (திரைப்படத்தில்)
100 நாள் போராட்டத்தை
துப்பாக்கி சூடு நடத்தி முடித்துவைத்து….
பொதுமக்கள்… அடிபட்டு…
மருத்துவமனையில் மருத்துவம் எடுக்க துவங்கி…
8 நாள் கழித்து எட்டிப்பார்க்கும்…
ரஜினி…
Just… another IMPOTENT politician…

செ. விக்னேசு
உங்களுக்கு என்ன தகுதி இருக்கிது ரஜினி……?
இயல்பிலே நடிகனான உங்களின் இந்த வசனமும் நிச்சயம் உங்களுடையது இல்லை, ஆடிட்டர் குருமூர்த்தியினுடையதாக தான் இருக்கும்.

போராட்டத்திற்க்கு தலைமை ஏற்றவர்களை சமூக விரோதி என்கிறீர்கள், காக்கி சட்டைகாரர்களை கதாநாயகர்கள் ரேஞ்சுக்கு சித்தரிக்குறீர்கள், ஜல்லிகட்டு போராட்டத்தை இணைத்து பேசுகிறீர்கள் (அப் போராட்டத்தில் யார் வன்முறையை தூண்டினார்கள், யார் தீவைத்தார்கள் என நாடறியும் ) தற்போதைய ஸ்டெர்லைட் போராட்டத்தில் யார் சமூக விரோதிகள் என்று மக்கள் அறிவர். 100 நாட்களாக போராட்டம் நடத்தினார்கள் அப்பொழுது வாய் திறக்கவில்லை, 13 பேரை காட்டுமிராண்டித்தனமாக சுட்டு படுகொலை செய்துள்ளார்கள் அப்போதெல்லாம் வாய்திறக்காத நீங்கள் இப்போது காலா பட விளம்பரத்திற்கு செல்வதை மறுத்துவிட்டு நான் தூத்துகுடிக்கு வருவேன் என வந்து பொய் பரப்புறை செய்து கொண்டு இருக்கிறீர்கள். காவிரி சிக்கல் பற்றி எறிந்த பொழுது நிர்வாகிகள் யாரும் கருத்து சொல்ல கூடாது என வாய் பூட்டு போட்டவரல்லவா நீங்கள். உங்கள் உபதேசம் எங்களுக்கு தேவை இல்லை, அதை சொல்ல உங்களுக்கு தகுதி இல்லை ரஜினி.

Arul Ezhilan
ரஜினியை விட ஆபத்தானவர் கமல். கமலை விட ஆபத்தானவர் ரஜினி. ஒருவர் தூத்துக்குடி செல்வதற்கு முன்பே “இப்படி எல்லாம் நடந்திடும்ணுதான் நான் போகல்ல” என்பார். ஒருவர் போய் விட்டு வந்து “போராடிட்டே இருந்தா தமிழ்நாடு சுடுகாடு ஆயிடாதாணு “ கேட்பார்….. இந்த இருவரிடமும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

Anbe selva
போராடும் மக்களை சமூக விரோதிகள்னு சொன்ன நாயே நீ யாருடா?..

மருது சகோதரர்களில் இருந்து சுந்தரலிங்கம், தீரன் சின்னமலை கட்டபொம்மன் வரைக்கும் போராடவில்லை என்றால் காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலை ஏதடா?..

காந்தி நேதாஜி போன்ற தலைவர்களை போராடவில்லை என்றால் இந்திய சுதந்திரம் ஏதடா நாயே ?..

8 நாடார் பெண்கள் போராடவில்லை என்றால் முலை வரிக்கும் திரைசீலை கொடுமைக்கும் விடிவு ஏதடா நாயே ?..

முக்குலத்து மக்கள் பெருங்காமநல்லூரில் போராடவில்லை என்றால் குற்றப்பரம்பரை சட்டத்தில் இருந்து விடிவு ஏதடா நாயே ?..

வன்னிய மக்கள் போராடவில்லை என்று சொன்னால் மிகவும் பிறப்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு ஏதடா நாயே..

எண்ணற்ற பெருந்தலைவர்கள் கோவில் நுழைவுக்காக போராடவில்லை என்று சொன்னால் இன்றைக்கும் நீயும் நானும் தெருவிலடா நாயே?..

அம்பேதகர் போராடவில்லை என்று சொன்னால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு விடிவு ஏதடா நாயே?.

பெரியாரும் எண்ணற்ற பெரியோர்களும் இடஒதுக்கீட்டிற்காக போராடவில்லை என்று சொன்னால் இங்கே சமூக விடுதலை ஏதடா நாயே..

18ம் நூற்றாண்டில் அமெரிக்க சமூக விரோதிகள் போராடவில்லை என்று சொன்னால் இன்னைக்கும் 8 மணி நேர வேலை முடிந்து நீயும் நானும் வீட்டுக்கு போகமுடியாதடா நாயே..

போராட்டம்தான் உன்னையும் என்னையும் விடுவித்தது. வரலாற்றில் உனக்காகவும் எனக்காகவும் ரத்தம் சிந்திய போராளிகளின் தியாகத்தில் வயிறு வளர்த்திட்டு, வரலாறு முழுவதும் உன்னையும் என்னையும் ஒடுக்குபவனின் பக்கம் ஒதுங்கும் பொருக்கி நாயே.. புரிந்துகொள்ளடா..

நான்தாம்பா ரஜினிகாந்த்! | துரை.சண்முகம்

நான்தாம்பா ரஜினிகாந்த்!

 

குடும்ப வறுமையில்
போராடி
கொஞ்ச வயிறு சாப்பிட்டு
நிறைய மதிப்பெண் எடுத்தும்
நீட்டால்
அனிதா கொலையான போது
மவுனம்.. மவுனம்..
இமயம் தொடும் மவுனம்.

அரியலூர் நந்தினியும்
காஷ்மீர் ஆசிபாவும்
குதறப்பட்ட போது
சமூக விரோதிகளை நோக்கி
புடைக்கவில்லை நரம்பு!

தெருவுக்கு தெரு
டாஸ்மாக்கால்
தமிழினமே
ஆசீட் வீசி
அழிக்கப்படும் போது,

கடையை
மூடச்சொன்ன மக்களை
தடிகள் குதறிய போது
காது அறுபட
பெண்களின் கன்னம்
அறையப்பட்ட போது
பதறாமல்.. துடிக்காமல்
தடித்திருந்தது தோல்.

மாடு புனிதம் என்று
மனிதன் வெட்டப்பட்ட போது,
நீதிமன்றம் அணுகியும்
காவிரியை தடுத்தபோது
விவசாயம், சிறுதொழில்
சில்லறை வணிகம்
அனைத்தையும் அழித்து
நாட்டையே சுடுகாடாக்கும் போது,
வாய் எனும்
ஒரு உறுப்பே
வந்ததில்லை என் நினைவுக்கு.

துப்பாக்கி சூட்டை
நீங்கள் தாங்கிக்கொள்ள வேண்டும்
ஒரு கேள்வியின் சூட்டை கூட
என்னால் தாங்க முடியாது
செத்தால் கூட
வராத கோபம்
போராடினால் வருகிறது
இதை விட
நான் யார் என்பதை
எப்படிச் சொல்வது?
நான்தாம்பா ரஜினிகாந்த்!

  •  துரை. சண்முகம்