Wednesday, June 24, 2026
முகப்பு பதிவு பக்கம் 441

டெல்டாவை அழிக்கும் மோடி எடப்பாடி அரசுகள் ! திருவாரூர் ஆர்ப்பாட்டம்

டெல்டா விவசாயத்தை திட்டமிட்டு அழிக்கும் எடப்பாடி, மோடி கும்பலைக் கண்டித்து திருவாரூரில் ஆர்ப்பாட்டம் !

காவிரி நீர்ப் பங்கீட்டில் கழுத்தறுப்பு, காவிரி தடுப்பணைகளை உரிய முறையில் பராமரிக்காதது, கால்வாய்களைத் தூர் வாராமல் விடுவது எனத் தொடர்ச்சியாக டெல்டா விவசாயத்தை சீரழிக்கும் நாசவேலையில் மத்திய மோடி அரசும் அடிமை எடப்பாடி அரசும் ஈடுபட்டுவருகின்றன. இவையனைத்தும் காவிரி டெல்டாவைப் பாலைவனமாக்கி விவசாயிகளைக் கூண்டோடு விரட்டிவிட்டு, ஒட்டு மொத்த டெல்டா பகுதியையும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் படுகைகளாக மாற்றி வேதாந்தா உள்ளிட்ட கார்ப்பரேட் கும்பலுக்குத் தாரைவார்க்கும் சதித்திட்டமே.

இந்த மாபாதகச் செயலைச் செய்துவரும் மோடி, எடப்பாடி அரசுகளைக் கண்டித்து  மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக 20-09-2018 (வியாழக் கிழமை) காலை 10 மணியளவில் திருவாரூர் இரயில் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.

ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்பீர் !

தகவல்: மக்கள் அதிகாரம்
தொடர்புக்கு: 96263 52829

*****

எச்.ராஜாவை ஊபா சட்டத்தில் கைது செய் !
மக்கள் அதிகாரம் கடலூர் மண்டலம் சுவரொட்டி பிரச்சாரம்!

பிள்ளையார் சதுர்த்தி நிகழ்ச்சிகளை ஒட்டி, தமிழகத்தில் வன்முறையையும் கலவரத்தையும் தூண்டும் வண்ணம் தொடர்ந்து பேசி வரும் பாஜகவின் தேசியச் செயலர் எச்.ராஜா-வை ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யவேண்டும் என மக்கள் அதிகாரம் கடலூர் மண்டலம் சுவரொட்டி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளது.

தமிழகத்தில், வன்முறையை தூண்டி கலவர பூமியாக மாற்றும் பயங்கரவாதி எச்.ராஜாவை ஊபா சட்டத்தில் கைது செய் !

தகவல்: மக்கள் அதிகாரம், கடலூர் மண்டலம்
தொடர்புக்கு: 81108 15963

பெரியாரை நமக்கு ஏன் பிடிக்கிறது ? துரை சண்முகம் | காணொளி

ருவருக்கு எதுவெல்லாம் பிடிக்காது என்பதிலிருந்து அவரை மதிப்பிடமுடியும் என்றார் காரல் மார்க்ஸ். தந்தை பெரியாருக்கு சாதி பிடிக்காது, மதம் பிடிக்காது, பெண்ணடிமைத்தனம் பிடிக்காது, சமத்துவமின்மை பிடிக்காது. அதனால்தான் அவரை சங்க பரிவாரத்துக்குப் பிடிக்காது. ஆனால், அதே காரணத்தால்தான் அவரை நம் அனைவருக்கும் பிடிக்கிறது.

சங்க பரிவாரக் கும்பல் கூறிவருவது போல, பெரியார் இந்துமதத்தை மட்டும்தான் எதிர்த்தாரா? பெரியார் கடவுள் மறுப்பு மட்டும்தான் போதித்தாரா? பெரியார் பார்ப்பனரல்லாதவர்களுக்காக மட்டும்தான் பாடுபட்டாரா ? இந்துமதப் பெண்கள் பணிக்குச் செல்வது குறித்து இந்துமதத்தின் ஆன்மிகச் சுடர் ‘மகா பெரியவா’ என்ன கூறினார்? நாத்திகப் பெரியார் என்ன கூறினார்?

பெரியார் குறித்த சங்க பரிவாரத்தின் புரட்டுகளை நொறுக்கி உண்மையான பெரியாரை அடையாளம் காட்டுகிறார், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர் துரை. சண்முகம்.

பாருங்கள் ! பகிருங்கள் !

– வினவு களச் செய்தியாளர்

பெட்ரோல் – டீசல் விலை உயர்வு : தண்டல் – வட்டி வாங்காத ஆட்டோகாரனே கெடையாது !

ஜான்சன் (ஓட்டுனர் சீட்டில் இருப்பவர்), சுரேஷ் (நீல சட்டை அணிந்திருப்பவர்)

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளைகளின் வரலாறு காணாத விலையேற்றத்தின் காரணமாக மக்களிடையே ஏற்பட்டிருக்கும் கடும் அதிருப்தியை சமாளிப்பது எப்படி என தெரியாமல் வாய்க்கு வந்த பொய்யையெல்லம் அள்ளி வீசி வருகிறது பா.ஜ க. அரசு.

விலையுயர்வை குறைப்பதற்கான சாத்தியமில்லை என்று ஜேட்லியும், விலையுயர்வுக்கு காரணம் அமெரிக்காதான் என்று அமித்ஷாவும் மாறி மாறி அறிக்கை விடுகிறார்கள். இவர்கள் எத்தனை அறிக்கை விட்டாலும், என்ன விளக்கம் கொடுத்தாலும் மக்கள் இவர்களை நம்புவதில்லை.

அதேசமயம் இந்த விலையேற்றத்தையும் வேறு வழிதெரியாமல் சுமந்து கொண்டு அன்றாட பணியின் பொருட்டு மூலைமுடுக்கெங்கும் பயணிக்கிறார்கள். இந்த விலையேற்றம் எங்கள் முதுகின் மேல் வந்திறங்கிய கூடுதல் சுமை என்பதை விவரிக்கிறார்கள் சென்னை கோயம்பேட்டின் ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள் சுரேஷ், ஜான்சன், சேகர்.

ஜான்சன் (ஓட்டுனர் சீட்டில் இருப்பவர்), சுரேஷ் (நீல சட்டை அணிந்திருப்பவர்)

“நாங்க பதினைந்து வருஷத்துக்கு மேல ஆட்டோ ஓட்டுறோம். டீசல் விலை 38 ரூபாய் இருக்கும்போது வண்டி ஓட்ட ஆரம்பிச்சது. இப்ப டீசல் 78 ரூபாய்க்கு வந்து நிக்குது. ஆனா எங்க டிக்கெட் ரேட் மட்டும் இன்னும் ஏறல. ஒரு ஸ்டாப்புன்னா ஐந்து ரூபா. அதுக்கப்புறம் பத்து, இருபதுன்னுதான் இப்ப வரைக்கும் இருக்கு. இன்னும் கூடுதலா விலையை ஏத்தினா ஜனங்க ஏறாது.

இப்படி ஓட்டியே ஒரு நாளைக்கு 1200, 1500 பாக்குறதுக்குள்ள எங்களுக்கு மூச்சி முட்டிடும். அதுல 500 ரூபா வாடகை.. 500 ரூபா டீசலு, பெட்ரோல் ஆட்டோன்னா இன்னும் கூட ஆகும். இந்த செலவு போக கையில 200,300 தான் நிக்கும்.

ஜாக்பாட்டா வாரத்துல இரண்டு நாள் 2,000 ரூபா கிடைக்கும். அதை வச்சிக்கினு கலக்சன் வராத நாளை ஓட்டனும். அப்படி இல்லையா, காலைல ஆறு மணிக்கு எடுத்தா சாயங்காலம் ஆறு மணிக்கு நிறுத்துற வண்டிய நைட்டு ஒன்பது, பத்து மணி வரைக்கும் ஓட்டுவோம். அப்படி கூடுதலா ஒழச்சா 300 லிருந்து 500 ரூபா வரைக்கும்  வரும். அப்பதான் வீட்டுக்கு கொடுக்க முடியும்.

ஒரு நாளைக்கு கொறஞ்சது 300 ரூபா கொடுக்கனும் பொண்டாட்டி கிட்ட. இல்லனா வீட்டுல சண்ட வரும். தண்டலுக்கு தெனமும் 200 ரூபா எடுத்து வைக்கனும். எங்க செலவு பாக்கு, சிகரெட்டுன்னு கொறஞ்சது 100 ரூபா ஆகும்.  இதையெல்லாம் சாமளிக்கனும்னா, லீவு போடாம வண்டி ஓட்டனும்.

நாங்க சொந்த வண்டி ஓட்டுறோம். இதுவே வாடகை வண்டி ஓட்டுறவங்களுக்கு பெரும்பாடு. வண்டி நிக்காம ஓடிகிட்டே இருந்தாத்தான் சமாளிக்க முடியும். இல்லனா வர காச வாடகை கொடுத்துட்டு சும்மா பேருக்கு வேலை பார்த்துட்டு போக வேண்டியதுதான்.

இதெல்லாம் அன்னைக்கு பொழப்புக்குத்தான். இதுபோக வண்டிக்கு டியூவ் (தவணை)கட்றதுக்கு, புள்ளைங்க படிக்கிற பீசு, சொந்தகாரங்க விஷேஷம் இதுக்கெல்லாம் தண்டல்தான். தண்டல் – வட்டி வாங்காத ஆட்டோகாரனே கெடையாது. அடிக்கடி தண்டல் வாங்குவோம். அதுதான் எங்களுக்கு இருக்க ஒரே விமோசனம்.

அது என்ன தண்டல்னு கேக்குறிங்களா…..?

இப்ப இருபதாயிரம் தண்டல் வாங்கினா 17,000 நம்ம கையில கொடுப்பன். நாம 20,000 க்கு  டெய்லியும் 200 ரூபா 100 நாள் கட்டணும். இது இல்லாத திடீர்னு பசங்களுக்கு உடம்பு சரியில்லனா வட்டிக்கு தான் வாங்குவோம். அதுவும் ஸ்பீடு வட்டி.

அதாவது, ஆயிரம் ரூபா நான் வட்டிக்கு வாங்குறேன்னு வையுங்க, அந்த அசல் பணம் ஆயிரபா கொடுக்கிர வரைக்கும், எனக்கு பணம் கொடுக்கிறவருக்கு நான் தினமும் நூறு ரூபா கொடுக்கனும். அஞ்சி நாள்னா ஐநூற், பத்து நாள்னா ஆயிரம்னு… போயிட்டே இருக்கும்.

அப்புறம் இன்னொரு கொடும இருக்கு…… கலக்சன் இல்லாத போது, இல்ல வந்த காசுக்கு வேற முக்கியமான செலவு வந்து இரண்டு மூனு நாள் வண்டி வாடகை கொடுக்க முடியாம போகும். அதுக்கும் வட்டி போட்டு தான் வாடகைய கொடுக்கனும். இப்படி வட்டி கொடுத்தே எங்க வாழ்க்கை அழிஞ்சி போயிடும்” என்கிறார் ஜான்சன்.

இதுக்கே டயர்ட் ஆனா எப்படி… இன்னும் இருக்கு என்று கிண்டால சொல்லிவிட்டு ஆரம்பிக்கிறார் சேகர், “சொந்த வண்டி ஓட்டினாலும் ஒரு முன்னேற்றமும் இல்ல. இந்த வண்டிக்கு எப்.சி பன்ன 30,000 இல்லாம நடக்காது. டிங்கரிங், பெயிண்டிங், ஆயில் சர்விஸ், டயர் மாத்துறது இப்படி செலவு இழுத்துக்குனே போவும். அறுபது ரூபா வித்த ஆயில் இப்ப  300 ரூபா விக்குது.  இன்னும் விலைவாசி எங்க போயி நிக்கும்னு தெரியல.

சேகர்

மாசம் முப்பது நாள், வருஷம் 365 நாள் நாங்க உழைக்கிறோம். ஆனாலும் கடன்ல இருந்து எங்களால மீள முடியல. உடம்பு சரியில்லானக் கூட நாங்க மாத்திரை போட்டுனு வண்டி ஓட்டுவோம். சொந்தகாரங்க யார்னா செத்தாதான் அரை நாள் லீவு போடுவோம். இப்படி உழச்சாலும், குழந்தைகளுக்கு அதுங்க கேக்குற நொறுக்கு தீனிகூட வாங்கி கொடுக்க முடியல. மிக்சர், கெஜரா, காராபூந்தின்னு எதாவது ஒன்னு கேட்பாங்க. பல நாள் நாங்க வெறும் கையோட தான் போயி நிப்போம்.

வாரத்துக்கு ஒரு நாள் கவிச்சி…… மீனோ, கோழியோ.. எதாவது வாங்கி போடலாம்னு நெனப்போம்…… பல நாள் அதுவும் முடியாது. இதனாலயே படுத்தா தூக்கம் வராது. ஒரு நாளைக்கு ஐந்து மணிநேரம் துங்குறதே அதிகம். இப்ப விலைவாசி உயர்வால சுத்தமா தூக்கம் இல்ல.

டீசல் விலையுயர்வுக்கு முன்னாடி 12 மணி நேரம் உழச்சோம். இப்ப 18 மணி நேரம் உழைக்கிறோம். அதிகமா உழைக்கிறதால அதிகமா பணம் வரும்னு நெனக்க வேணாம். பழைய வசூலுக்கே இப்ப ரெண்டு மடங்கு உழைக்க வேண்டியதா இருக்கு.

இப்ப நாங்க இரண்டு முறையில வண்டி ஓட்டிட்டு இருக்கோம். ஒன்னு லைன்ல போறோம். இன்னொன்னு டிரிப் அடிக்கிறோம். காலையில மாலையில ஆபிஸ் டைம்னு லைன்ல போறோம். விடிய காலை, மதிய நேரத்துல லைன்ல ஆளு இல்லாத போது ட்ரிப்பு அடிக்கிறோம்.

உடம்புக்கு ஓய்வு ஒழிச்சல் இல்ல. உடம்பு புண்ணா நோவுது. திரும்பவும்  வேலை செய்யனும்னா பாக்கு, சிகரெட்னு புடிக்கனும். எப்பனா தண்ணி அடிக்கனும். அந்த செலவு பன்றதா? பசங்க கேக்குறத வாங்கி கொடுக்கிறதா? தலையே வெடிச்சிடும் போல இருக்கு” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே  அந்தப் பக்கம் கடந்து சென்ற டாடா மேஜிக்கை காட்டி, “இந்த வெள்ள வண்டியால பொழப்பு போயிடுச்சி” என்றார்.

அங்கிருந்து அமைதியாக விடைபெறும் தருவாயில், சற்று தொலைவில்  சவாரிக்காக காத்திருந்தார் ஒரு டாடா மேஜிக் வண்டியின் ஓட்டுநரும், உரிமையாளருமான  சரவணன்.

“சார்……. நாங்க சொகுசு கார் ஓட்டுறோம்னு ஆட்டோகாரங்க எங்கள பார்த்தா எறிஞ்சி விழுறாங்க. எங்களால தான் அவுங்களுக்கு டிக்கெட் ஏறலன்னு. ஆனா எங்க லட்சணம் அதுக்கு மேல இருக்கு. நான் சொந்த வண்டிதான் வச்சிருக்கேன், வெத்தல, பாக்கு, பீடின்னு எந்த செலவும் செய்ய மாட்டேன். ஆனாலும் கடன்…. கடன்…. ஊரை சுத்தி கடன்..!

மாதிரிப் படம்

பெரிய வண்டி பெரிய செலவு. வருஷத்துக்கு எப்.சி பன்ன 80 ஆயிரம் இல்லாம வேலை நடக்காது. இன்சுரன்ஸ் 25,000, ரோடு டாக்ஸ் 12,000, டிங்கரிங் 6000, பெயிண்டிங் 6000, இஞ்சின் செலவு 5000, ஆர்.டி.ஓ – பிரேக் இன்ஸ்பெக்டர் செலவு 2500, ஸ்டிக்கர் 1500, பத்து நாள் வேலை இல்லாம அலையிறது, அதுக்காக கடன் வாங்குறதுன்னு ஒரு லட்சம் வரைக்கும் செலவு பன்னாதான் ரோட்டுல வண்டி ஓடும்.

சரி வண்டி ஓடினா இதையெல்லாம் சம்பாதிச்சிடலாமேன்னு நீங்க நெனக்கலாம். அதுதான் தப்பு… இந்த கடனை அடைக்கதான் வண்டியே ஓடும். அதுக்கப்புறம்தான் நம்ம செலவு.  ஒரு நாளைக்கு இரண்டாயிரம் சம்பாதிச்சா அது நல்ல நாள்னு அர்த்தம். அதுவும் 200 கிலோ மீட்டரு ஓட்டினா தான் கிடைக்கும். அதுக்கு  800 ரூபா டீசல் போடனும்.

டிராபிக்குல 15 கிலோ மீட்டர் போறதுக்கு ஒன்னரை மணி நேரம் ஆகும். கை எல்லாம் உட்டு போயி, கண்ணு பூத்து போயிடும். ஒவ்வொரு டிரிப்புக்கும் இறங்கி டீ, காபி சாப்பிட்டா தான் ஒரு தெம்பு வரும். இதுல சிகரெட், பான்பராக் போடுறவன் கதை மோசம். எனக்கு அந்த பழக்கம் இல்லாததால 700, 800 ரூபா நிக்கும். இல்லனா முதலுக்கு மோசமாயிடும்.

இதுல, டீசல் விலைய ஒரு நாளைக்கு ஒன்பது வாட்டி ஏத்துறானுங்க. நாங்க ஜனங்க கிட்ட இதை எப்படி சொல்லுறதுனு தெரியல. நாங்க இரண்டு ரூபா ஏத்தினாலும் ஜனங்க எங்கள புடிபுடின்னு புடிச்சிடுறாங்க. என்ன பன்றதுன்னு வழி தெரியல. இந்த தொழிலை விட்டு நாங்க இனிமே எங்க போறது? அத நெனச்சாதான் கலக்கமா இருக்கு!

-வினவு களச் செய்தியாளர்

மம்பட்டி அறுவாவ வித்து குடிக்கிற குடியானவன் குடும்பத்த காப்பாத்துவானா ?

0

ப்பனும் மகனும் ஒன்னு சேந்து குடிச்சுட்டு அவுந்து விழுற வேட்டிய எடுத்துக் கட்டும் நிதானம் கூட தெரியாம அசிங்கப்படுத்தினா எப்பேர்ப்பட்ட அம்மாவுக்கும் அவமானமாதான் இருக்கும். வேலைக்கி போன கூலி காசுக்கு சாராயம் குடிக்கிறது பத்தாம வீட்டுல உள்ள காசையும், பொருளையும் திருடி குடிச்சா எப்புடி குடும்பம் பன்றது? இதெல்லாம் பொருக்க முடியாமெத்தான் சோலையம்மா வீட்ட விட்டு போனதும் நடந்தது.

அப்பனும் மகனும் குடிச்சுட்டு அசிங்கப்படுத்துறதும் அதுக்காக சோலையம்மா கோச்சுகிட்டு போறதும் புதுசில்ல, கோவங்கற பேருல  பத்துநாளு ஒருவாரம் எங்கனா தெரிஞ்ச எடத்துல தங்கி கூலி வேல பாத்துட்டு பெறவு தலவிதின்னு வீட்டுக்கு திரும்பி வாரதும் புதுசில்ல.

ஆனா இந்த மொற கோவம் தீந்து வீட்டுக்கு திரும்பி வரும் போது சோலையம்மாவுக்காக காத்திருந்தது மரண ஓலம்.

“என்னத்த சொல்ல எங்கதைய. செத்தப் பொணம் வீட்டுல கெடக்க எழவு வீட்டுப் பொம்பள நானு வயக்காட்டுல நின்னு வயிராற கஞ்சிகுடிச்சுட்டு வாயாற வெத்தலப் போட்டேன். எழவு விழுந்த சேதி என்ன வந்து சேர அஞ்சு நாளச்சு…

நா.. ஒன்னும் பத்து ஏக்கர் பண்ணையம் பண்ணி பணக்கார வாழ்க்க வாழனுமின்னு ஆசப்படல. கூலி பாடுபட்டு சோறு தின்றோம் அத புள்ள, புருசனோட சந்தோசமா சேந்து திங்கனுமுன்னு நெனச்சேன். அதுக்கு குடுப்பன இல்ல.

இந்த பத்து வருசத்துக்குள்ள குடிச்ச குடியில கொடலே அழுகிருச்சுன்னு டாக்டருங்க சொல்றாங்க. கொடலு, கிட்னி, மஞ்சக்காமால இத்தனயும் ஒரு ஒடம்புல இருந்தா எதப்பாக்குறது?

அந்த மனுசன கெட்டவன்னு சொல்ல முடியாது. இந்த குடிதான் அவன கெடுத்துபுடுச்சி. குடிக்காதையா குடிக்காதையான்னு தலப்பாடா அடிச்சுகிட்டேன் கேக்காம இன்னைக்கி அனாதையா விட்டுட்டு போயிட்டான்.

நா.. கலைஞர் கச்சி அதனால எம்புள்ளைகளுக்கு தமிழ்லதான் பேரு வப்பேன்னு மூனு பிள்ளைக்கும் ஆசையா பேரு வச்சா..ன் அந்த மனுச… கதுரறுப்பு சீசன்ல ராத்திரி எத்தன மணிக்கி வீடு வந்தாலும் நெல்ல வித்து தீனி வாங்கிட்டுதான் வருவான். பிள்ளைங்க மேல உயிரையே வச்சுருந்தாரு.

வேலபாத்த அசதிக்காக சாரயத்த தேடிப் போயி குடிச்சப்ப பொண்டாட்டி பிள்ளையின்னு நிதானமா வீடு வந்தான். தடிக்கி விழுந்தா சாராயக் கடன்னு ஆன பொறவு எம்பொழப்பு சீரழிச்சி போச்சு.

பெரிய பொண்ண கட்டிக் குடுக்குற வறைக்கும் நிதானமாதான் இருந்தாரு. இந்த பத்து வருசத்துக்குள்ள குடிச்ச குடியில கொடலே அழுகிருச்சுன்னு டாக்டருங்க சொல்றாங்க. கொடலு, கிட்னி, மஞ்சக்காமால இத்தனயும் ஒரு ஒடம்புல இருந்தா எதப்பாக்குறது? மாசத்துக்கு ரெண்டு தரம் ஆஸ்பத்திரி கூட்டிப் போகனும் ஒருக்க பஸ்சுக்கு போக 200 செலவு ஆயிடும்.

மூனு வருசமா நாங்க ஆஸ்பத்திரிக்கி கூட்டிட்டு போறதும் டாக்டருங்க குடிக்காதிங்கன்னு சொல்றதும் பொழப்பா போச்சு. ஆஸ்பத்திரிலேருந்து திரும்பி வந்த மறு நாளே சாராய கடைக்கி போயிடுவான். நாத்து நட்டு, களப்பறிச்ச கூலிய ஏழு இடுக்குள பதுக்கி வச்சாலும் எடுத்துருவான். சாராயக் கட தூரமா இருந்தா போக முடியாது. காலடியில இருக்கதால தூங்கி முழிக்கிறதே அங்கதான்.

இப்பெல்லாம் எந்த வெவசாய வேலையும் சாராயம் இல்லாமெ நடக்குறதுல்ல. ஒரு மூட்ட நாத்தரிக்க, ஒரு ஏக்கர் நடவு நட, ஒரு ஏக்கர் கருதறுக்க கூலி இவ்வளவு, பாட்டுலுக்கு காசு தனி அப்புடிதான் ரேட்டே பேசுறானுங்க… ஈவுபாவா நல்லா வேல பாக்குற ஆளுக்கு வயக்காரங்க ரெண்டு பாட்டுலு சேத்தே வாங்கி தாராங்க.

எங்கூட்டாளு நாளைக்கி ஒங்களுக்கு வேலைக்கு வரேன்… இன்னைக்கி அவசரமா 100, 200 குடுங்கன்னு வாங்கியாந்து குடிச்சுருவாரு. காசு குடுத்தவங்க திட்டவும் செய்வாங்க சமயத்துல ரெண்டு அடியையும் போடுவாங்க. காசு குடுத்ததுக்காக முடியும் போது ஏதாச்சும் வேலைய வாங்கிப்பாங்க.

இந்தாள நம்பி ஒன்னுத்துக்கும் வேலைக்காதுன்னு ஆனபொறவு சின்ன பொண்ண துணிக்கடையில வேலப் பாக்க சென்னைக்கி அனுப்புனே. அது ஏதோ மூனு பவுன வாங்குச்சு துணிமணியெல்லாம் எடுத்து வச்சுருந்தா… அத போட்டு கல்யாணம் செஞ்சி வச்சோம்.

சின்னப்புள்ளைய கட்டிக்குடுத்து நாலு வருசமாச்சு. கல்யாணம் சீமந்தமுன்னு வாங்குன கடனுல அடைச்சது போக குழுக்கடனு 60 ஆயிரம் இருக்கு.  தலைய அடகு வச்சாவது மாசாமாசம் தவண பணம் கட்டியாகனும்.

வீட்டுக்குள்ள ஒரு பொருளுருக்கா பாத்தியளா… கரி படிஞ்ச குண்டானத் தவிர வேற எதுவும் இல்ல என் வீட்டுல. தண்ணி எடுக்குற கொடம் தவல, வீட்டுல இருந்த சைக்கெளு… எல்லாத்தையும் வச்சு குடிச்சுட்டான். அதவிட கொடுமெ ஒரு நாளு மம்பட்டிய(மண்வெட்டி) வித்துட்டு குடிச்சுட்டு வந்தான். மம்பட்டி அறுவாவ வித்து குடிக்கிற எந்த குடியானவனும் குடும்பத்த காப்பாத்துவான்னு நம்ப முடியுமா..?

இந்த காலனி வீடு கட்டி எட்டு வருசம் ஆகப்போவுது. இருந்த இரும்பு கதவும் துரு..தின்னு சாத்த முடியாமெ போச்சு. வேற மாத்துக் கதவு போட முடியல. எங்கூட்டாளு ஒன்னும் வேல தெரியாத மனுசனில்ல. ஓங்கி வெட்டுன ஒரு கொட்டு மண்ணு ஒரு ஒடப்படையும் உழப்பாளி மனுசென்… சாராயம் எங்க வாழ்க்கைய மாத்திபுடிச்சு.

சாராயக் கட இல்லன்னா எங்கூட்டாளு நல்லவந்தான்னு சொல்லிட்டே இருந்தா கடன குடுத்தவங்க ஏத்துப்பாங்களா? ஆத்துல தண்ணி இல்லாம ஊருக்குள்ள வேலை நெரந்தரமா கெடைக்க மாட்டேங்குது. எப்புடி கடனடைக்க..?

நெனச்சு பாக்கையில ஆத்தரம் அதிகமா வரும். அப்பனும் மகனும் எப்படியாச்சும் ஆக்கி தின்னுங்கடான்னு விட்டுட்டு… போருங்க (ஆழ்துளை கிணறு) அதிகமா இருக்குற பட்டுக்கோட்ட, மன்னார்குடி பக்கம் போயிடுவேன். வாரம், பத்து நாளு தங்கியிருந்து வேலை செஞ்சுட்டு கூலிய கடங்குடுத்த குழுவுக்கு கட்டிட்டுதான் வீட்டுக்குள்ளேயே வருவேன்.

இந்த தடவையும் அப்புடிதான்……. சின்னமக புள்ளைக்கி முடியெடுக்க போறேன்னு சொல்லிச்சு. ஒரு சட்டதுணி வாங்கிப் போடலான்னு காசு வச்சுருந்தேன் அப்பா எடுத்தானோ மகன் எடுத்தானோ காச காணோம். கேட்டா ரெண்டு பேருமே அடுச்சுபுட்டாய்ங்க… போக்கத்தவளுக்கு ஏது எடம், வழக்கம் போல திரும்பவும் கோச்சுகிட்டு வேலை தேடி போயிட்டேன்.

பத்துநாளைக்கு பெறவு என் போட்டா போட்டு கடையில ஒரு போஸ்டரு ஒட்டிருந்துச்சு. என்னையா எழுதிருக்குன்னு விசாரிச்சேன். அவசரமா வீட்டுக்கு வரனுமின்னு எழுதிருக்குன்னாங்க. ஒரு தடவையும் நம்மள தேடுவாரில்லையே இது என்ன புதுசான்னு… அடிவயிற கலக்கிருச்சு.

எங்கூட்டாளு ஒன்னும் வேல தெரியாத மனுசனில்ல. ஓங்கி வெட்டுன ஒரு கொட்டு மண்ணு ஒரு ஒடப்படையும் உழப்பாளி மனுசென்… சாராயம் எங்க வாழ்க்கைய மாத்திபுடிச்சு.

அடிச்சுபுடிச்சு வீட்டுக்கு ஓடியாந்தா அப்பா செத்து அஞ்சு நாளாச்சு… எங்கம்மா போனேன்னு கத்துறா எம்பொண்ணு. வெளிக்கி போன எடத்துலேயே ரெத்த வாந்தி எடுத்து செத்துக் கெடந்துருக்காரு அந்த மனுசென்…வயசு 49 – தாண்டலை!

ஒரு வருசமா சரியா நடக்கக் கூட முடியல. ஆனா சாராயம் காலடியிலேயே கெடைக்கிறதால நிறுத்தாம குடிச்சுட்டு இருந்தாரு…

நா.. பொலம்பி அழுதா போன உசுறு திரும்பி வருமா? கலங்கி படுத்தா கடங்காறன் விடுவானா? நா என்ன செய்யப் போறேன்?

ஊரா இது, ஒரு கட்டுப்பாடு இல்லாமெ போச்சு. பக்கத்து ஊரு டாஸ்மார்குல சாராயத்த வாங்கி ஊருக்குள்ள வச்சுகிட்டு சில்றையா டம்ளர்ல ஊத்திக் கொடுத்து யாவாரம் பாக்குறாங்க. முழுசா பாட்டுல வாங்க காசில்லன்னு கலங்கி நிக்க தேவையில்ல. கையில இருக்குற காசுக்கு தக்கன.. வாங்கி குடிச்சிக்கிடலாம். வேல முடிச்சு பொழுதுக்கா கூலி வாங்குனதும் முழு பாட்டுலு வாங்க டாஸ்மார்க்கு போறாங்க.

விடியக்காத்தாலயே ஊருக்குள்ள டீக்கடப் போல சாராயத்த விக்கிறதால வயக்காட்டுக்கு போற அத்தன ஆம்பளையும் வந்து குடிச்சுட்டு போறானுங்க. இது சரியில்லன்னு கேக்க முடியுமா? ஈனச்சிறுக்கி, பறச்செரிக்கி நாங்க எப்புடி நடந்துக்கனுன்னு தெருவுக்குள்ள வந்து நீ சொல்லித்தரியான்னு ஏசுவானுக.

எங்க தெருக்காரங்க எல்லாம் சேந்து போயி ஊரு பெரிய மனுசங்கிட்ட சொல்லியும் ஒன்னும் நடக்கல. டாஸ்மார்கு இருக்க கூடாதுன்னு சொல்லி கடைக்கி முன்னாடி உக்காது போராட்டம் செஞ்சும் ஒன்னும் நடக்கல.

அப்பனப் பாத்து எம்மகனும் 14 வயசுலேயே குடிக்க ஆரம்பிச்சுட்டான். இப்ப 17 வயசு ஆவுது காளை போல இருக்கான் ஒரு குடும்பத்த தாங்கலாம். ஆனா எந்த வய வேலையும் தெரியாது. குடிக்க கையில காசு இல்லன்னா மட்டும் சித்தாளு வேலைக்கி போவான். அவன நம்பி வீட்டுல அஞ்சு பத்து வைக்க முடியாது. இந்த சாராயக்கடைங்கள எடுக்காம வச்சுருந்தா எம்புருசனப் போல பிள்ளையையும் எழந்துடுவேனோன்னு பயமாருக்கு”

சாராயத்தால ஊருக்கூரு இதே நெலமெதான். யார் வீட்டு எழவொ பாய் போட்டு தூங்குனு… யாரும் கண்டுக்க மாட்டேங்குறாக.

குறிப்பு: உண்மைச்சம்பவம், ஊர்,பெயர் அடையாளங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.

  • சரசம்மா

டிவிட்டர் டிரண்டிங்கில் தந்தை பெரியாரின் 140-வது பிறந்த நாள் !

ல்லிக்கட்டு போராட்டத்திற்குப் பிறகு தமிழகத்தில் தந்தை பெரியாரின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. மத்தியில் ஆளும் பாசிச பா.ஜ.க. ஆட்சியின் ஒடுக்குமுறைக்கு எதிரான தமிழகத்தின் குரலுக்கு அடிநாதமாகத் திகழ்பவர் பெரியார்.

பெரியாரின் 140-வது பிறந்த நாளோடு பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளும் சேர்ந்து வந்தது (17.09.2018). தமிழக டிவிட்டர்வாசிகள் மட்டுமல்ல, இந்திய அளவிலான டிவிட்டர்வாசிகளும் பெரியாரின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக அவரது பணிகளை, அவரது கொள்கையை உரக்கக் கூறிக் கொண்டிருக்கின்றனர். தமிழகத்தைப் பொறுத்த வரை டிவிட்டர் டிரண்டிங்களில் மோடியை விட பெரியாரே முன்னணி வகித்தார்.

படிக்க:

யார் இந்த காந்தி ? தந்தை பெரியார்
பிள்ளையார் வரலாறு – தந்தை பெரியார்
ஐயர் மனசுல பெரியார் !

இது சங்கிகளுக்கு வயிற்றெரிச்சலாகவே உள்ளது. இந்த சங்கிகளுக்கு பெரும்பான்மை இந்துக்கள் வாழும் தமிழகம், “கடவுள் இல்லை” என்று கூறிய இந்த ஈரோட்டுக் கிழவனை ஏன் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறது என்று புரியவில்லை.

இந்துத்துவ அடிமைகளுக்கு சுயமரியாதையின் அவசியமும், மகத்துவமும் தெரியுமா என்ன?

டிவிட்டரில் பெரியாரைக் கொண்டாடும் பல்லாயிரம் பதிவுகளில் சிலவற்றை தொகுத்திருக்கிறோம்.

Prabha Raj

சங்கிகளால், கடவுளை வெளிப்படையாக மறுக்கிற ஒரு மனிதன், 87.58% ஹிந்துக்களைக் கொண்ட தமிழகத்தின் கனவு நாயகனாகத் திகழ்வதையும், பெரியார் மண்ணை ஏன் தங்களால் காவிமயமாக்க முடியவில்லை என்பதை அவர்கள் எப்போதும் அறிந்துகொள்ளப்போவது இல்லை. தமது மரணத்துக்குப் பின்னர் பல பத்தாண்டுகள் கடந்தாலும் சங்கிகளுக்கு கொடுங்கனவாக வாய்த்த ஒரே மனிதன் #HBDPeriyar140

carpe diem

இதற்கு சுட்டுரை எதுவும் தேவையில்லை.

Shabbir Ahmed

தமிழகத்தின் முதல் அர்பன் நக்சல் (நகர்ப்புற நக்சல்) #HBDPeriyar140

புத்தன்

இதுதான் இன்றைய புகைப்படம் #BleedBlack #HBDPeriyar140

Elite Naxal

என் கொள்ளுத்தாத்தாவுக்கு இதைவிட பொறுத்தமான புகைப்படம் இல்லை என்றே நான் கருதுகிறேன்  #HBDPeriyar140

THE ONE

எங்கும் கிடைக்காது #HBDPeriyar140

Amaranth

பாஜகவின் அதிகாரத்திற்கான பசி, பெரியாரின் கொள்கைகளுக்கு முன்னால் #HBDPeriyar140

Ashraf
#HBDPeriyar140 சங்கிகளின் கொடுங்கனவு

S.Prince Ennares Per

140 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நாளில் ஒரு அஞ்சாத தைரியமான மனம் பிறந்தது. கட்டுக்கடங்காது ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டிருந்தவர். தனது இறுதி மூச்சுவரையிலும் எதற்கும் பணியாமல் நின்றவர். ஒரு சட்டகங்களுக்குள் அடைபடாத மனிதர். #HBDPeriyar140

Voice of RaavanaN

தமிழகம் பெரியாருக்கு சிறந்த பிறந்தநாள் பரிசைக் கொடுப்பதாக இருந்தால், இன்று @HRajaBJP-ஐ கைது செய்து சிறையிலடைக்க வேண்டும்.

கமல்

#HBDPeriyar140 90-வது வயதில் 180 கூட்டம். 91-வது வயதில் 150 கூட்டம். 93-வது வயதில் 249 கூட்டம். 94-வது வயதில் 229 கூட்டம். வாழ்க்கையின் கடைசி 98 நாட்களில் (95-வது வயதில்) 42 கூட்டம். மக்களுக்காக அவர்கள் சுயமரியாதைக்காக உரையாடினார்! அவர்தாம் பெரியார் ! இவருக்கு ஈடு இணை யார்?

Arunmozhi

சட்டகங்களுக்குள் அடைக்கமுடியாத ஒரு மனிதர். அவர் இல்லாத தமிழகத்தை கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. இந்த மனிதர் இல்லையெனில் தமிழகத்தில் பல்வேறுதரப்பினரும், தங்களது பெயருக்குப் பின்னால் இந்தியாவின் பிற பகுதியினரைப் போல் சாதிப் பெயரோ, குடும்பப் பெயரோ இட்டுக் கொண்டிருப்பர்.

Chozhar parambarayil oru MLA

பெருந்திரளின் தலைவர், எனது விருப்பமிக்க தலைவர் #HBDPeriyar140. @narendramodi – நீங்களும் அவரது பிறந்தநாளில் பிறந்திருக்கிறீர்கள். இது எங்களுக்கு மிகபெரிய அவமானகரமானது. அவரது வயதில் கிட்டத்தட்ட பாதி வயதை அடைந்திருப்பீர்கள். அவருக்காக சிறிதேனும் நல்ல எண்ணங்களைக் கொண்டிருங்கள். உங்களது பிறந்தநாள் பரிசாக எதிர்வரும் தேர்தலில் தயவு செய்து பிரதமர் பதவிக்கு போட்டியிட்டுவிடாதீர்கள்.

Pirai Kannan

பார்த்துட்டு சாவுங்கடா………! #HBDPeriyar140 #Periyar140

Martin Joseph

#HBDPeriyar140 யோவ் கிழவா!! நானெல்லாம் படிக்கனும்தானே 93 வயசு வரைக்கும் கஷ்டப்பட்ட, படிச்சு நல்ல நிலைமைக்கு வந்துட்டேன் வந்து பாருய்யா..!! நன்றியோடு கடைசி வரைக்கும் இருப்பேன்யா.. Love you கிழவா!!

நித்யா

#HBDPeriyar140 #பெரியார்140 பெரியார் யார்? மானம் கெடுப்பாரை… அறிவைத் தடுப்பாரை… அடியோடு பெயர்த்த கடப்பாரை – அவர்தான் #பெரியார்

prem vendan

எங்களை எதிர்ப்பவர்கள் எல்லாம் இவர்கள் கடவுள் விரோதி, மத விரோதி, பார்ப்பனரை எதிர்கின்றார்கள். இப்படித்தான் கூறுவார்களே ஒழியே, எங்களால் என்ன கேடு என்று எவனும் கூற முடியாது. – தந்தை பெரியார். #Periyar #HBDPeriyar140

பைஜூ யுவன்

உன் இனத்தில் யார் பெயர் சொன்னால் எதிரி குலைநடுங்குகிறானோ அவனே உன் இனத்தின் தலைவன்! #தந்தைபெரியார் #HBDPeriyar #HBDPeriyar140

Dinesh

எங்கெல்லாம் ஏதாவது ஒரு இனம் ஒடுக்கபடுகிறதோ அங்கெல்லாம் அந்த பெருங்கிழவனின் பெயர் உச்சரிக்கபட்டே தீரும். #HBDPeriyar140

Surya Born To Win

காவிகள் திராவிடர்களை விழுங்க முற்படுகிறர்கள். ஆனால் தொண்டையில் சிக்கிய முள் போல் ‘பெரியார்’ இருக்கிறார், விடமாட்டார்! #HBDPeriyar140

SàãNàã

அரசியல் சாசனத்தை எரித்தீர்களா? ஆம் எரித்தேன் .. தெறிக்க விடலாமா !!! #HBDPeriyar140

Aravindhan Annadurai

உன் வெண் தாடியும் கருப்பு சட்டையும் இல்லையெனில்.. என்றோ காவி எங்களையும் காவு வாங்கி இருக்கும்..! #HBDPeriyar140

amutharasan‏

ஒரு மனிதன் இறந்து 45 ஆண்டுகள் ஆன பின்பும் அவரது கருத்து எதிரிகளுக்கு சிம்ம சொப்பணமாக திகழ்கிறது எனில் அத்தகைய ஒரே தலைவர் தந்தை பெரியார் ஒருவர் தான். #HBDPeriyar140

 

– வினவு செய்திப் பிரிவு

வேலூர் – திருச்சியில் தந்தை பெரியார் 140-வது பிறந்த நாள் விழா

வேலூர்: பெரியார் பிறந்தநாளைக் கொண்டாட போலீசு கெடுபிடி

காவல்துறை அனுமதி மறுப்புக் கடிதம்

ந்தை பெரியாரின் 140–வது பிறந்தநாளை பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் மூலம் சிறப்பாகக் கொண்டாடுவதற்கு மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில் அனுமதி கோரப்பட்டது. ஐந்து நாட்களுக்கு முன்பு விண்ணப்பித்திருக்க வேண்டும் எனவும், பேரணி நடத்தப்படும் நேரம் போக்குவரத்து அதிகம் உள்ள நேரம் என்பதாலும், பாதுகாப்பு தரவேண்டிய காவலர்கள் வேறு பணிகளுக்கு அனுப்பப்பட்டுவிட்டதாலும் அனுமதி மறுக்கப்படுகிறது என கடைசி நேரத்தில பேரணிக்கான அனுமதியை மறுத்துள்ளார் வேலூர் வடக்கு போலீசு நிலைய ஆய்வாளர். மோடியின் இரண்டு செருப்புகள் தமிழகத்தை ஆளும் போது, பெரியார் பிறந்த மண்ணில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவைக் கொண்டாட இத்தனை கெடுபிடிகள் நடப்பது இயல்புதானே!

வேலூர் – மகஇக பேரணி

பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டாலும் ஒலிபெருக்கி இல்லாமல் வேலூர் மீன் மார்க்கெட்டிலிருந்து தலைமை அஞ்சலகம் அருகில் அமைந்துள்ள பெரியார் சிலை வரை 17.09.2018 காலை 11.00 மணிக்கு மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில் அமைதிப் பேரணி நடத்தப்பட்டது. பெரியார் சிலை அருகே ம.க.இ.க மாவட்டச் செயலாளர் தோழர் இராவணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ம.க.இ.க தோழர் வாணி மற்றும் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த தோழர் தி.க.சின்னதுரை ஆகியோர் பெரியார் குறித்து கருத்துரை வழங்கினர். இறுதியில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொண்ட பெண்கள் சார்பாக பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.

ம.க.இ.க ஆர்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே இடையிடையே தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிய-பெரியாரிய பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட கட்சியினர் மற்றும் சேண்பாக்கம் அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் சார்பில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பு செலுத்தப்பட்டது.

இவை தவிர பல்வேறு கட்சிகள் சார்பில் வேலூர் நகரெங்கும் பெரியார் பிறந்த நாள் விழா சுவரோட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

பார்ப்பனியத்தின் கொடுக்குகள் எஞ்சியிருக்கும் வரை தந்தை பெரியாரின் தடி சுழன்று கொண்டேதான் இருக்கும். வாழ்க பெரியார்!

தகவல் : மக்கள் கலை இலக்கியக் கழகம், வேலூர்

திருச்சி: பெரியார் சிலைக்கு மாலை, முழக்கங்களுடன் பெரியார் பிறந்தநாள் விழா

ந்தை பெரியார் அவர்களின் 140-வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் திருச்சியில் 17.09.2018 அன்று மாலை 5 மணியளவில் மத்திய பேருந்து நிலையத்திலுள்ள அவரது உருவச்சிலைக்கு மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வினை ம.க.இ.க-வின் மாவட்டச் செயலாளர் தோழர் ஜீவா தலைமை தாங்கி நடத்தினார்.

தோழர்கள் பெரியாரை வாழ்த்தியும் பாஜக, ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு எதிராகவும் முழக்கங்களிட்டனர். மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பாடகர் கோவன் அவர்கள் பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், ”மக்களின் உரிமையை பா.ஜ.க பறித்துக் கொண்டிருக்கும் தற்போதைய சூழலில் தந்தை பெரியாரின் தேவை முன்பைக் காட்டிலும் இப்போது அதிகரித்துள்ளது.

திருச்சி: பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து முழக்கமிடும் ம.க.இ.க. தோழர்கள்

H.ராஜா பெரியார் சிலையை உடைப்போம் என்று கூறிய போது தமிழகத்தில் இலட்சக் கணக்கான இளைஞர்கள் இணையத்தில் பெரியாரைப் பற்றி தெரிந்து கொண்டார்கள். எனவே இவர்களது நடவடிக்கைகள் அவர்களுக்கே எதிர்மறையாகப் போகுமே ஒழிய தமிழகத்தில் அவர்களால் காலூன்றவே முடியாது. தந்தை பெரியாரின் தொண்டு, புகழ் ஒருபோதும் அழியாது. இவர்களது நடவடிக்கைகள் மக்களிடம் பெரியாரின் மதிப்பை மேலும் மேலும்  உயர்த்துமே ஒழிய ஒருபோதும் தாழ்த்தாது. அவருடைய பிறந்தநாளில் அவரது சமூகத்தொண்டை, பார்பனிய எதிர்ப்பை தொடர்ந்து மக்களிடம் எடுத்துச் செல்வோம்” என்றார்.

இந்நிகழ்வினை மத்திய பேருந்து நிலையத்திலுள்ள பொதுமக்கள் அனைவரும் நின்று ஆர்வத்துடன் கவனித்து சென்றனர். ஒரு வெளியூர் பயணி அனைத்து தோழர்களுக்கும் தேநீர் வாங்கிக் கொடுத்து தமது ஆதரவை தெரிவித்துச் சென்றார்.

தகவல்: ம.க.இ.க., திருச்சி.

சென்னையில் மோர் விற்கும் ஒரிசாவின் அமர் பிரசாத்

சென்னை மாதவரம் பால்பண்ணை சாலையோரம் கடந்து சென்றபோது கண்ணில் பட்டது அமர்பிரசாத்தின் ஜூஸ் கடை. வாகை மரத்து நிழலில் ஒரு தள்ளுவண்டி, ரெண்டு மரப்பலகை. அதுதான் அவரது கடை. வெயிலுக்கு இதமாக அவர் கொடுத்த மோரின் குளுமையைவிட, அவரது தமிழ் பேசும் பாங்கு இனிமையாயிருந்தது. வடமாநிலத்தொழிலாளி என்று யூகிக்க முடியாத அளவிற்கு சரளமான பேச்சு. கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்த போது இருவிரல் துண்டாகிப்போன அவரது கை கண்ணில் பட்டது.அமர் பிரசாத்துக்கு வயது 30. திருமணமாகவில்லை. ஒரிசாவையடுத்த கட்டாக் சொந்த ஊர். திருமணமான ஒரு அண்ணன் கல்லூரி படிக்கும் இரண்டு தம்பிகள். சொந்த வீடிருந்தாலும் விவசாய நிலமில்லை. பிளஸ்டூ வரை படித்திருக்கும் அமர்பிரசாத், பிழைப்புக்காக சென்னைக்கு வந்தபோது அவரது வயது 19.

”11 வயசுல அம்மா இறந்துட்டாங்க. என் சின்ன தம்பிக்கு ரெண்டு வயசு. சொந்தக்காரங்க எவ்ளோ சொல்லியும் அப்பா ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கல. சின்ன வயசில இருந்து நானே சமையல் பண்ணி சாப்ட்டு எல்லா கஷ்டமும் அனுபவச்சிட்டோம். ரெண்டு தம்பிங்க படிக்கணும்னு நான் வெளிய வந்துட்டேன். அப்பா கூட விவசாய வேலை செஞ்சி அந்தளவுக்கு வருமானம் வரல. சரி ரெண்டு தம்பிங்கள படிக்க வைக்கனும்ணு நான் இங்கெ வந்துட்டேன்.”

சென்னைக்கு எப்படி வந்தீங்க?

”இங்க சொந்தக்கார பசங்க இருந்தாங்க. கூப்டாங்க வந்துட்டேன். மெட்ராசுக்கு வந்து 12 வருசம் ஆகுது.”

இந்த 12 வருடத்தில் சொந்த உழைப்பில் தம்பிகளை படிக்க வைத்ததைத் தாண்டி, அமர்பிரசாத் சம்பாதித்தது சில தமிழ் உறவுகளை. இழந்தது, இரு விரல்களை.

கடைசியாக, 9,500 சம்பளத்தில் சில்வர் பாத்திரம் தயாரிக்கும் கம்பெனியொன்றில் பணியாற்றிய அமர்பிரசாத், இரு விரல்களை இழக்க நேரிட்ட அந்த விபத்தைப் பற்றி பேசவே சங்கபடப்படுகிறார். அந்நினைவுகளை வலியோடு கடந்து போகிறார்.

”நடந்தது நடந்து போச்சு. அத மனசுல இருந்து நீக்கிட்டு நானும் முன்னேறி போயிட்டு இருக்கிறேன்.”

யாரு மேல தப்பு?

”வேலை செய்றப்போ. மிஷின்ல ப்ராப்ளம் இருந்திச்சி. ஆக்சிடன்ட் மாதிரி. நாமளே ரோட்ல போறோம் ஆக்ஸிடண்ட் ஆவுதில்லை.”

அது சரி… தலைக்கு ஹெல்மெட், காலுக்கு ஷூ, கைக்கு குளோவ்ஸ் எல்லாம் கம்பெனியில கொடுத்தாங்களா?

”நான் ஒன்னு சொல்லட்டுமா… கம்பெனி நடக்கிறவங்க.. எல்லா பெரிய பெரிய எடத்துல போயிட்டு… பணம் கொடுத்து சரி பண்றாங்க. ஆயிரம் சொன்னாலும் ஒன்னும் நடக்காது. அவங்கதான் பவர்ல இருக்கிறாங்க. கவர்மெண்டு சேப்டிக்கு ரூல்ஸ் போட்டுருக்கலாம். ஆனா, அந்த சேப்டி எல்லோரும் ஃபாலோ பன்றாங்களா? யாரும் பன்னமாட்டாங்க.”

”சின்ன கம்பெனி கூட லைசன்ஸ் வெச்சுகிட்டும் ஓட்றாங்க… இல்லாம ஓட்றாங்க. நாம சாப்டறதுக்கு வழியில்லனுதான் வேலைக்கு வந்திருக்கோம். சம்பாதிக்கிறோம். அவ்ளோதான். நாம அதெல்லாம் கவனிக்க முடியுமா?”

சரி.. கம்பெனில கவனிச்சாங்களா? காசு ஏதும் கொடுத்தாங்களா?

”கொடுத்தாங்கோ. சொல்றதெல்லாம் வேணாம். எல்லாம் முடிஞ்சி போச்சி. அவங்கிட்ட பெரிய பெரிய ஆளுங்கெ இருக்காங்க. நாம என்ன சொன்னாலும் கேட்க மாட்டாங்க. நம்ம உயிருக்கு ஆபத்து இருக்குன்னு எல்லாம் விட்டாச்சு. இதே மாதிரி லட்ச கணக்குல கம்பெனி ஓட்றாங்க. நீங்க எத்தன கம்பெனிய போயி இந்தமாதிரி கேட்க முடியும்.”

”எனக்கு இங்க யாருமே கிடையாது. நான் ஒரு ஆளுதான் இங்க இருக்கிறேன். நான் குடியிருக்கிற வீட்டுக்கு எதிரிலதான் அந்த கம்பெனி இருக்குது. வீட்டு ஓனரு கட்சி காரங்க மூலமா போயி கேசு பைனல் பன்னிட்டேன். இதுக்கு மேல பேசுனா எனக்கே ஆபத்து. எனக்கு மனசு கஷ்டம் ஆயிட்டதால உங்ககிட்ட சொல்லிடறேன். அவ்ளோதான்.”

தமிழ் ஆளுங்க உதவி செஞ்சாங்களா?

”ஆக்ஸிடன்ட் ஆனப்போ எல்லா வந்தாங்க உதவி செஞ்சாங்க அவ்ளோதான். ஹவுஸ் ஓனரு தமிழ் ஆளுங்க எல்லாம் சேர்ந்து கேட்டாங்க. என்னா ஒரு வருத்தம் வருதுன்னா கை கால் அடிபட்டிருது, நமக்கு இ.எஸ்.ஐ., பி.எஃப். இருந்தா ஒரு சேப்டியா இருக்கும் லைப்.

ஸ்டேன்லி ஆஸ்பிட்டல போயி சரிபன்னினேன். ஆறு மாசம் ஆச்சி. வேலைக்கு போவல. வீட்லதான் இருந்தேன். அதுலயே காசும் கரைஞ்சி போச்சி.”

இறுக்கமான அந்தத் தருணங்களை கடந்து வர எங்களுக்கு சிறிது நேரம் பிடித்தது.

இவ்வளவு சரளமா தமிழ் பேசுறீங்களே? எப்படி கத்துக்கிட்டீங்க?

”கம்பெனியிலதான் கத்துகிட்டேன். அப்போ இங்க உள்ள சாப்பாடு கூட பிடிக்கலை. பாசை பேசறதே புரியலை. தமிழு ஆளுங்க கூட வேலை செய்யிறப்போ, அவங்க சொல்றது புரியாது. ஏற்கெனவே இருக்கிற எங்க ஆளுங்க.. இத செய்ய சொல்றாருனு சொல்வாங்க. அப்டிதான் கத்துகிட்டேன். அவங்க சொல்றது புரியும். ஆனா, பதில் பேச முடியாது. அவங்ககிட்ட பதில் பேசனும்னு ஆசை வந்திச்சி. அந்த இன்ட்ரஸ்ட்ல கொஞ்ச கொஞ்சமா  கத்துகிட்டேன்.”

”என்னடா வாடா, போடா”னு பேசுவோம். லேடிஸ்ங்க கிட்ட கூட அப்போ வாடா, போடானு பேசினேன். லேடிஸ் வந்து புரிய வச்சி சொல்லிடுவாங்க. நம்மகிட்ட இதெல்லாம் பேசக்கூடாது. நம்மள அக்கானு கூப்டுனும் சொல்வாங்க. லேடிஸ்கிட்ட எப்படி பேசனும், ஜென்ட்ஸ்கிட்ட எப்படி பேசனும், சின்ன பசங்ககிட்ட எப்படி பேசனும் கத்துகிட்டேன்.”

பார்க், பீச், சினிமா எல்லாம் போவீங்களா?

”25 வயசு வரைக்கும் சினிமா போகலை. இங்க வந்து தண்டையார்பேட்டையில வேல செஞ்சப்போ தியேட்டர்ல போயி படம் பார்த்தேன்.”

”தமிழ் கத்துகிடனுனு இன்ட்ரஸ்ட் வந்துச்சினா அதுக்கு ஒரே காரணம் வடிவேல் சார். காமெடியன். அவங்க காமெடி வந்து எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். என்கூட இருக்கவங்களோட டி.வி. பார்க்கறப்ப அவங்களுக்கு தமிழ் புரியும். எனக்கு புரியாது. ஆனா, சிரிப்பு வரும்ல.

இப்ப மனசுக்கு கஷ்டமா இருந்தா கூட, அவங்க காமெடிய பாக்கனும்னு எனக்கு தோனும். அவங்கள ஒரே ஒருமுறை மீட் பண்ணலாமானு தோணும்… நானே ஊரு விட்டு வந்துருக்கிறேன், எப்படி பாக்கறது?”

பீடி, சிகரெட்..?

”அந்த பழக்கமில்லை. 6-வது 7-வது படிக்கிறப்பவே எல்லாரும் உட்கார வச்சி நம்ம லைப்ஃல எப்போவுமே இந்த போதை பொருள தொடக்கூடாதுனு காந்தி புஸ்தகத்தில சத்தியம் பண்ணி விட்டாங்க. அது மைண்ட்ல ஏறிடுச்சி. நியூஸ்-ல பார்ப்பேன், தண்ணிலாம் சாப்ட்டு குடும்பத்துல ஒரு ஹாப்பினெஸ் இருக்காது. போதை சாப்ட்டாலே உடம்பு கெட்டு போயிடும். இதெல்லாம் பார்த்து அதுமேல வெறுப்பு வந்திருச்சி.”

”பீர் மட்டும் குடிச்சிருக்கேன். உங்கிட்ட பொய் சொல்லமாட்டேன். பிரண்ட்ஸ் கூட சேர்ந்து. அதுவும் போதை இருக்காது, உடம்புக்கு நல்லதுனு சொல்லவும் குடிச்சிருக்கேன்.”

இதெல்லாம் எப்படி சாத்தியம். உங்க வயசு பசங்க எல்லாம் எப்படியெல்லாமோ லைஃப்ப என்ஜாய் பன்றாங்களே… சொல்லி முடிக்கும் முன்னரே தொடர்ந்தார், அமர்பிரசாத்.

”எல்லாம் சிச்சுவேசன்தான். 11 வயசில அம்மா இறந்தாங்க. அதில இருந்து எவ்ளோ கஷ்டம் பார்த்தாச்சு. 1999-ல சூப்பர் சைக்ளோன் (ஒரிசாவைத் தாக்கிய பெரும் புயல்) வந்தது. வெள்ளி, சனி, ஞாயிறு மூனு நாளக்கி ஒரே இடத்துல தண்ணிக்குள்ள உக்காந்து இருந்தோம். செத்துபோயிருவோம்னு நினைச்சினு இருந்தோம். உசிர் பொழச்சி வந்தோம். அதுல இருந்த வீடும் போயிருச்சி. அதுக்கப்புறம்… என் குடும்பத்து மேல உள்ள பாசத்துல நான் வாழ்ந்துட்டிருக்கேன். அதனாலதான் லவ்வு அதல்லாம் எனக்கு வரல. எனக்கு என் ரெண்டு தம்பிங்க படிச்சி நல்லா வேலையில சேரனும். அம்மா விட்டுட்டு போயிட்டாங்க. குடும்பம் நல்லா இருக்கனும். அந்த நினைப்பில கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசை கூட படல நானு.”

தன்னை மறந்து பேசிக்கொண்டிருந்தாலும், அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு மோரும், பால் சர்பத்தும் கலக்கி கொடுத்து கொண்டேயிருந்தார்.

இந்த வியாபாரத்துக்கு எப்படி வந்தீங்க? வியாபாரம் பரவாயில்லியா?

”அடிபட்டதுக்கு அப்புறம் டெய்லர் மெஷின் மெக்கானிக் வேலை கத்துகினேன். சொந்தமா கடைகூட வச்சிருந்தேன். அந்தளவுக்கு வருமானம் வரலை. ரூம் வாடகை 2,500. கடை வாடகை 2,000. அப்புறம் சாப்பாடு செலவு. கணக்கு பார்த்தா 7,000 செலவு ஆகும். வரவுக்கும் செலவுக்கும் சரியா இருந்துச்சு.”

”அடிபட்டதுக்கு அப்புறம் ஊருக்கு சரியா காசு அனுப்பலை. கம்பெனில இருந்தப்போ மாசம் 4,000 ரூபா, 5,000 ரூபா அனுப்புவேன். கம்பெனில ஓவர் டைம் இருக்கும். எக்ஸ்ட்ரா காசு வரும். என் குடும்பத்துக்கு எவ்வளோ சேப்டி பன்னனுமோ அவ்ளோ பன்னினேன்.”

”இப்போ, கடை போட்டு நாலு அஞ்சு மாசம்தான் ஆவுது. அதுல மூனு மாசம் வரைக்கும் அந்தளவுக்கு வருமானம் வரலை. போன மாசம்தான் ஜனங்க வர்ற ஆரம்பிச்சாங்க. டெய்லி முன்னூறு, நானுறுரூபா சம்பாதிக்கிறேன்.”

ஒரு நாளைக்கு எவ்ளோ நேரம் வேலை செய்றீங்க?

”காலைல 5 மணிக்கு எழுந்திருச்சி, எல்லா ரெடி பண்ணிட்டு பத்து மணிக்கு வருவேன். சாந்திரம் 5 மணி வரைக்கும் இருப்பேன். இதெல்லாம் எடுத்து போயி கழுவி வைக்கனும். நாளைக்கு என்னென்ன வேணும்னு கடைக்கு போயி வாங்கனும். ரெஸ்ட் அந்த அளவுக்கு இருக்காது. ஏன்னா சொந்த தொழில் செய்யிறோம் அப்டிங்கிற சந்தோசம் இருக்கிது, அவ்ளோதான்.

இதுல ஒருநாளைக்கு வருமானம் வரும். வராது. நூறு ரூபா சம்பாதிச்சாலும் ஃஹேப்பியா இருக்கிறேன். அவ்ளோதான்.”

உங்களுக்கே உடம்பு சரியில்லாம கடை போட முடியலனா எப்படி சமாளிப்பீங்க?

”ஆமா ஒன்னும் பண்ண முடியாது. நடுவுல மூனு நாள் மழை பேஞ்சிச்சு. கடை போடல. அப்ப என்ன பண்ண முடியும். கடவுள் ஏதாவது ஒரு வழி காட்டுவாரு.”

ஊருக்கு கடைசியா எப்போ போனீங்க?

”ஊருக்கு… வருசத்துக்கு ஒருவாட்டி போயிட்டு ஒருமாசம் தங்கிட்டு வருவேன். மனசு சரியில்ல, ஒரு எமர்ஜென்சினா போவேன். போயிட்டு வர்றனும்னா கையில ஒரு பத்தாயிரம் இருந்தாதான் போயிட்டு வர முடியும். ட்ரெயின் டிக்கெட், நம்ம செலவு, துணிவாங்க, ஹாப்பியா இருக்கனும். தம்பிங்களுக்கு ஒரு பேண்ட் சர்ட் எடுக்கணும், அப்பாவுக்கு, அண்ணா, அண்ணிக்கு எதாவது எடுத்துட்டு போனும்.”

ஊர்ல திருவிழா நடந்தா கிளம்பி போவீங்களா?

”இதுவரைக்கும் திருவிழாவுக்கு போறதுக்கு ஒரு சான்ஸ் வரலை எனக்கு. இங்க ஆயுதபூஜை மாதிரி அங்க தசரானு விழா. ரொம்ப பேமஸ். ஆனா, 12 வருசம் ஆச்சி நான் தசரா பாக்க முடியல. தசரா போனும்னு ஆசை. ஆனா, சிச்சுவேசன் இருக்காது.

ஏன் போ முடியாதுனா. கம்பெனில தீபாளிக்கு போனஸ் தருவாங்க. வேலை செஞ்சா தருவாங்க. ஆயுத பூஜைக்கு 15 நாள் கழிச்சி போனஸ் தருவாங்க. அந்த நேரத்துல வேலை டைட்டா இருக்கும். அந்த நேரத்துக்கு ஊருக்கு போனாலே ஒரு மாசம் ஆயிரும்ல. ஓனரு என்ன நல்ல மனுசனா இருந்தாலும் கோவிச்சிப்பாரு.

ரெண்டு டைம் ஊருக்கு போயி ஓட்டு போட்டுட்டு வந்துட்டேன். ரெண்டு வாட்டி மிஸ் பண்ணிட்டேன். பக்கத்துல இருந்தா நைட் கிளம்பி போயிட்டு வரலாம். ட்ரையின் சீட்டு கிடைக்கிறது ரொம்ப கஷ்டம். ஒரே எடத்துல நின்னுகிட்டே கூட மெட்ராசுக்கு வந்துருக்கேன்.

ஆயிரம் துயரங்களைக் கடந்து வாழ்வதற்காக கணந்தோறும் போராடிக் கொண்டிருக்கும் அமர்பிரசாத்திடம் விடைபெற்றோம். குடும்பம், மொழி, பண்பாடு, உணவு அனைத்தையும் துறந்து இங்கே அவர் தன்னந்தனியாக போராடிக் கொண்டிருக்கிறார். அவரிடம் குறைகள் ஒன்றுமில்லை. இரு விரல்களை இழந்தாலும், தசராவிற்கு போகவில்லை என்றாலும் பரவாயில்லை. இழப்பதற்கு ஏதுமற்றவர்கள் என்பதால் மட்டுமல்ல, போராட்டக் குணம் அதிகம் இருப்பதாலும் அமர் பிரசாத்தின் பயணம் தொடர்கிறது.

– வினவு களச்செய்தியாளர்கள்.

நீதிமன்றம் மயிரென துள்ளிய எச். ராஜா – பம்மிய போலீசு | கருத்துக் கணிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மெய்யபுரத்தில், கடந்த 15-ம் தேதி  (15.09.2018) அன்று தடையை மீறி நடந்த விநாயகர் ஊர்வலத்தில் பாஜக தேசியச் செயலாளரும் ஃசைபர் சைக்கோவுமான  ஹெச்.ராஜா பங்கேற்றார். அப்போது, போலீசாருடன் கடும் வாக்குவாதம் செய்த அவர், உயர்நீதிமன்றத்தையும், போலீசாரையும் இழிவான வார்த்தைகளில் பேசினார்.

நேற்று (16.09.2018) முதல் ஃசைபர் சைக்கோ எச்.ராஜா-வின் அந்த ஆக்ரோசமான பேச்சு  வீடியோ  சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

அந்த வீடியோவில், உயர்நீதிமன்றத்தால் மேடையமைத்துப் பேச தடை செய்யப்பட்ட ஒரு பகுதியில் மேடை போட்டு பேசுவேன் என அடம்பிடிக்கிறார் எச்ச ராஜா.

தடுத்து சமாதானப்படுத்த கூனிக்குறுகி வரிக்கு வரி அண்ணாச்சி என கெஞ்சிக் கேட்கும் போலீசு அதிகாரிகளை  நாயை விட இழிவாக நடத்துகிறார் எச்.ராஜா. நொடிக்கு நொடி போலீசு அதிகாரிகளின் முகத்துக்கு நேரே கையை நீட்டி, “Police is Corrupt” எனக் கத்துகிறார். அந்த போலீசு அதிகாரியோ மானத்தை வீட்டிலேயே கழட்டி வைத்துவிட்டு வந்திருப்பார் போல. எச்.ராஜாவின் அழிச்சாட்டியத்துக்கு சமாதானம் கூற மீண்டும் முயல்கிறார். “அண்ணாச்சி, ஹை கோர்ட் ஆர்டர் அண்ணாச்சி” என காலில் விழாத குறையாக கெஞ்சுகிறார்.

அதற்கு எச்.ராஜாவோ பார்ப்பனக் கொழுப்போடு “ ஹை கோர்ட்டாவது மயிராவது !” எனத்துடிக்கிறார். நீதிபதிகளுக்கும் மானம் இல்லை என நினைத்தார்களோ என்னவோ அந்த போலீசு அதிகாரிகள் மீண்டும் எச். ராஜாவிடம் கெஞ்சத் தொடங்கினர்.

இன்னும் ஒரு படி மேலே ஏறிப் பேசினார் எச்.ராஜா. “வெட்கமா இல்லையா டிஜிபி வீட்டில ரைடு நடக்கிறது. அன்னைக்கே நீங்கள்லாம் யூனிஃபார்மைக் கழட்டிப் போட்டுட்டு வீட்டுக்கு போயிருக்கனும்.”, ”லஞ்சம் வாங்குறீங்களேயா லஞ்சம் … கிறுஸ்தவன்ட்ட முசுலீம்கிட்ட வாங்குறதயெல்லாம் சேத்து நான் தர்றேன்யா லஞ்சம்.”எனக் கதறிக் கொண்டே தனது அடிபொடிகளுக்கு அங்கு மேடை போட உத்தரவிடுகிறார்.

எச்.ராஜாவின் நோக்கம் போலீசின் கிரிமினல் வேலைகளையோ, இல்லை லஞ்ச லாவண்யங்களையோ அம்பலப்படுத்துவது அல்ல! தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தி 13 பேர்களைக் கொன்ற போலீசுக்கு பாராட்டுப் பத்திரம் வாசித்தவர் இந்த எச்ச ராஜா. அப்போது இந்த குட்கா ஊழல் போலீசு நினைவுக்கு வரவில்லை! இல்லை அமித்ஷா மகன் கோடி கோடியாக ‘சம்பாதித்த’ தொழில் குறித்து எந்த போலீசும் விசாரிக்கவில்லை என இவர் ‘எழுச்சி’ காட்டவில்லை!

ஸ்டெர்லைட் போராட்டமோ, எட்டுவழிச்சாலை போராட்டமோ கருத்து சொன்னவர்களையே தேடித்தேடி கைது செய்த போலீசு இங்கே ராஜா முன் பயந்து நடுங்குகிறது. நீங்கள் இப்படி பேசலாமா என்று கெஞ்சுகிறது. அவர் என்ன பெரிய புடுங்கியா என்று ஒரு போலீசுக்காரர் கூட கேட்கவில்லை. மத்திய அரசின் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் அவரை ராயல் வமிச அரசர் போல கருதுகிறது போலீசு. தமிழகத்தில் பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு கூடும் கூட்டம் கூட எச்.ராஜாவுக்கு கூடுவதில்லை. ஆனால் போலீசோ பயப்படுகிறது. அடிமை எடப்பாடி அரசு போல தமிழக போலீசும் ஆர்.எஸ்.எஸ்-க்கு அஞ்சி நடப்பது ஆச்சரியமானது அல்ல!

சமூகவலைத்தளங்களில் கடும் கண்டனம் எழுந்த பிறகே பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், அனுமதியின்றி கூடுதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின்கீழ் திருமயம் போலீசார் எச்.ராஜா மீது வழக்கு தொடுத்திருக்கிறார்கள். அவர்களை கைது செய்ய திருமயம் காவல் ஆய்வாளர் மனோகரன், பொன்னமராவதி காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் 2 தனிப்படைகளும் அமைக்கப் பட்டிருந்தாலும் இதுவரை கைது செய்ய முடியவில்லை. மேலும் பாஜக தேசியச் செயலர் ஹெச்.ராஜா உயர்நீதிமன்றத்தை அவமதிப்பதாகக் கூறி தமிழக டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆ.. ஊ.. என்றால் நீதிமன்றத்தையும், நீதிபதிகளையும் அவமதித்துவிட்டார்கள் என்று கொதித்தெழும் நீதியரசர்களும் இந்த விவகாரத்தை தாமாகவே கையில் எடுத்து நீதிமன்ற வழக்கு தொடுக்குமாறு உத்திரவிடவில்லை. என்ன இருந்தாலும் ராஜா ‘தேசியக் கட்சியின் செயலாளர்’ அல்லவா?

திருவாளர் எச்ச ராஜா

இதுகுறித்து எச்.ராஜா மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சி.ராஜசேகர் என்பவர் முறையீடு செய்தார். இந்த முறையீட்டை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மறுத்ததோடு எச்.ராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்காக தொடர்ந்தால் அதுகுறித்து நீதிமன்றம் விசாரிக்க தயார் என்றும், தாமாக முன்வந்து விசாரிக்க முடியாது எனவும் கூறியுள்ளனர். அவர்களுக்கும் ஏதோ பயம் இருப்பது தெரிகிறது.

பிரச்சினை பெரிதான பிறகு அந்த வீடியோவில் பேசியது என் குரல் அல்ல என்று ‘அட்மின்’ புகழ் எச்.ராஜா பல்டி அடித்துள்ளார். இதிலிருந்தே அவர் ‘இந்து’வாக அந்த இடத்தில் பேசவில்லை. கூட இருந்த ‘இந்துக்களிடம்’ தான் ஒரு அப்பாடக்கர் என்று காட்டுவதற்காக ஜம்பமடித்துள்ளது தெரிகிறது. அதனால்தான் வீடியோவில் வாங்கிய காசுக்கு மேல் கூவும் முறையில் கத்தியுள்ளார் போலும்!

எச்.ராஜா உடன் எப்போதும் போலீசு பாதுகாப்பு உண்டு. அந்தப் போலீசாரை தமிழக போலீசுதான் ஷிப்ட் முறையில் அனுப்புகிறது. ஆக எச்ச எங்கே இருக்குமென்று தமிழக போலீசுக்கு தெரியாமல் இருக்காது. ஆனால் ராஜா இதுவரை கைது செய்யவில்லை. அவரைத் தேட போலீசு இரு படைகளை போட்டு அலைகிறதாம். எஸ்.வி.சேகர் போல ராஜாவும் இனி நீதிமன்றத்தில் முன்பிணை வாங்கும்வரை இப்படி போக்கு காட்டுவார்!

தமிழகத்தில் மதக்கலவரத்தை தோற்றுவிக்கும் முகமாக எப்போதும் ஊளையிடும் இந்த நபரை குண்டாசில் கைது செய்து ஐந்தாறு வருடங்கள் வெளியே வராதபடி செய்யும்வரை இந்த வெறியரை தடுக்க முடியாது! அடிமை அரசு இதை செய்யாது! அப்படி செய்ய வைக்க வேண்டுமென்றால் மக்கள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீதிமன்றத்தையும், போலீசையும் எச்.ராஜா கடுமையாக திட்டி பேசியதற்கு என்ன காரணம்?

  • பார்ப்பனக் கொழுப்பு
  • பேசியது அட்மின்தான், அவரல்ல
  • இந்துக்கள் மீது இழைக்கப்படும் அநீதி
  • தன்னை மறந்த கைப்பிள்ளையின் வெத்துவேட்டு
  • ஒரு தேசபக்தனின் அஞ்சாத வீரம்
  • எவன் கைது செய்வான் எனும் திமிர்
    (பதில்களில் மூன்றை தெரிவு செய்யலாம்)

 

ட்விட்டரில் வாக்களிக்க:

யூடியூபில் வாக்களிக்க:

https://www.youtube.com/user/vinavu/community

ஃபேஸ்புக்கில் வாக்களிக்க:

 வினவு செய்திப் பிரிவு

கேரள வெள்ளத்திற்கு முல்லைப் பெரியாறு நீர் காரணமல்ல : மத்திய நீர் ஆணையம்

“கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டபோது தமிழ்நாடு நியாயமாக நடந்துகொண்டிருக்க வேண்டும். அணையின் நீரை முன்கூட்டியே திறந்துவிட்டிருக்க வேண்டும்” என்று கூறியவர்கள் எல்லாம் வரிசையாக வாருங்கள். கேரளாவில் ஏற்பட்ட மாபெரும் வெள்ளம் குறித்த மத்திய நீர் ஆணையத்தின் அறிக்கை வந்துவிட்டது. கேரளாவில் ஏற்பட்ட இந்த வெள்ளத்திற்கு அதீதமாகப் பெய்த பருவமழையே காரணமென்றும் அணைகளிலிருந்து திறந்தவிடப்பட்ட தண்ணீர், குறிப்பாக முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் காரணமல்லவென்றும் அந்த அறிக்கையில் தெளிவாக சொல்லப்பட்டுவிட்டது.

இந்த அறிக்கையில் முல்லைப் பெரியாறு அணை, இடுக்கி அணை, இரண்டின் நீர்பிடிப்புப் பகுதிகள், பெரியாறில் ஏற்பட்ட வெள்ளம் குறித்து இந்த அறிக்கையில் உள்ளவற்றின் சுருக்கம் இதுதான்.

1. கேரளாவில் ஆண்டு தோறும் பெய்யும் மழையின் அளவு 3000 மி.மீ. இதில் 90 சதவீதம் 6 மாத காலத்தில் பெய்கிறது. இந்த ஆண்டு ஜூன் 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 19ஆம் தேதிவரை மிகக் கடுமையான மழை அங்கே பெய்தது. இந்த காலகட்டத்தில் பெய்ய வேண்டிய மழை 1649.5 தான். ஆனால், 2346.6 மி.மீ அளவுக்கு மழை பெய்துவிட்டது. வழக்கமான அளவைவிட 42 சதவீதம் அதிகம். ஆகஸ்ட்டில் மட்டும் 164 சதவீதம் அதிகம் பெய்தது. ஆகஸட் 8-9 தேதிகளில் பெய்த மழையை அடுத்து எல்லா அணைகளும் தங்கள் முழுக் கொள்ளளவை எட்டத் தொடங்கியிருந்தன. இதற்குப் பிறகு 14ஆம் தேதி துவங்கி 19ஆம் தேதிவரை மீண்டும் கடுமையான மழை பெய்தது. இதனால், மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களில் 13ல் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. 1924க்குப் பிறகு ஆகஸ்ட் 15-17ல் அவ்வளவு மழை பெய்தது இப்போதுதான்.

2. ஆகஸ்ட் 15-17ல் ஏற்பட்ட மழை பீர்மேட்டை மையம் கொண்டு கேரளா முழுவதும் விளாசித் தள்ளியது. அணைகள் முழுமையாக நிரம்பியதால் மாநிலத்தில் உள்ள 35 அணைகள் திறக்கப்பட்டன. 26 ஆண்டுகளுக்குப் பிறகு முழுவதும் நிரம்பியதால், அதன் மதகுகளும் திறக்கப்பட்டன.

3. கேரளாவில் மொத்தம் 57 அணைகள் இருக்கின்றன. இதில் 4 அணைகள் தமிழகத்தால் இயக்கப்படுகின்றன. இந்த 57 அணைகளில் 7 அணைகள் மிகப் பெரியவை. கேரள அணைகளில் தேக்கப்படும் நீரில் 74 சதவீதம் இந்த அணைகளில்தான் தேக்கப்படுகின்றன. அவை, 1. இடுக்கி, 2. இடமலையாறு, 3. கல்லாடா, 4. காக்கி, 5. பரம்பிகுளம், 6. முல்லைப் பெரியாறு, 7. மலம்புழா.

4. இருநூற்றி நாற்பத்து நான்கு கிலோ மீட்டர் நீளத்திற்கு ஓடும் பெரியாறுதான் கேரளாவின் மிகப் பெரிய நதி. இதன் தண்ணீர் பாயும் பகுதிகளில் 98 சதவீதம் கேரளாவிலும் 2 சதவீதம் தமிழகத்திலும் உள்ளது. இந்த நதியின் குறுக்கில் கட்டப்பட்டுள்ள மூன்று பெரிய அணைகள் முல்லைப் பெரியாறு, இடமலையாறு, இடுக்கி ஆகியவை. முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்புப் பகுதியின் பரப்பு 237 ச.கி.மீ. இடுக்கிக்கும் முல்லைப் பெரியாறு அணைக்கும் இடையில் உள்ள நீர்பிடிப்புப் பகுதியின் பரப்பு 605 ச.கி.மீ.

5. ஆகஸ்ட் 15 லிருந்து 17 வரை மூன்று நாட்களில் முல்லைப் பெரியாறு நீர்ப் பிடிப்பு பகுதியில் பெய்த மழையின் அளவு மட்டும் 1147 மி.மீ. முல்லைப் பெரியாறு அணைக்கும் இடுக்கிக்கும் இடையில் உள்ள பரப்பில் பெய்த மழை 1445 மி.மீ.

6. இந்த பெரியாறு நீர்ப்பிடிப்புப் பகுதியில் நீலேஸ்வரம் என்ற இடத்தில் வெள்ளத்தைக் கண்காணிக்கும் தளம் இருக்கிறது. அதன் பெயர் Neeleshwaram G&D stie. அந்த அளவீட்டின்படி,. ஆகஸட் 15-17ல் நதியில் பாய்ந்த நீரின் அளவு 1.93 பில்லியன் கன அடி. ஆகஸ்ட் 15-17 காலகட்டத்தில் இடுக்கி அணைக்கு வந்த நீர், அதில் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறக்கப்பட்ட நீர், இடுக்கி அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட நீர் எவ்வளவு என்பதை வரைபடம் ஒன்றிலிருந்து தெரிந்துகொள்ளலாம். அதாவது இந்த மூன்று நாட்களில் இடுக்கி அணைக்கு வந்த நீரில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே முல்லைப் பெரியாறில் இருந்து வந்த நீர்.

7. இந்த அறிக்கையின் முக்கியப் பகுதி இங்கேதான் வருகிறது. அதாவது இடுக்கி அணைக்கு உச்சகட்டமாக நீர்வரத்து இருந்தபோது அணையிலிருந்து வினாடிக்கு 1500 மில்லியன் கன அடி நீர் திறக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் நீலேஸ்வரம் வெள்ள அளவீட்டு மையத்தில் ஓடிய வெள்ளத்தின் அளவு 8800 மில்லியன் கன அடி. இதில் அணையிலிருந்து திறக்கப்பட்ட நீரான 1500 மில்லியன் கன அடியைக் கழித்தாலும் 7300 மில்லியன் கன அடி நீர் ஆற்றில் ஓடியிருக்கும். அது மழை நீர். இடுக்கி அணை திறப்புக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. வெள்ளத்திற்கும் மிகப் பெரிய இடுக்கி அணை திறப்புக்கும் சம்பந்தமில்லையென்றால், அதில் மூன்றில் ஒரு பங்கு நீரை இடுக்கிக்குத் திறந்த முல்லைப் பெரியாறு அணைக்கு என்ன தொடர்பு இருக்க முடியும்? பெரியாற்று வெள்ளத்தில் இடுக்கி அணையின் பங்கு மிக மிகக் குறைவு என்பதுதான் இதன் அர்த்தம்.

8. ஆகஸ்ட் 1-19 வரை பெய்த மொத்த மழையான 758.6 மி.மீ மழையில் 15-17 ஆகிய மூன்று நாட்களில் மட்டும் 414 மி.மீ மழை பெய்திருக்கிறது. இதுதான் வெள்ளத்திற்குக் காரணம்.

படம் 2

9. புள்ளி விவரங்களை வைத்து நீங்களே ஒரு முடிவுக்கு வந்தால் போதுமா? அறிக்கையில் எங்காவது இதைச் சொல்லியிருக்கிறார்களா என்றால், ஆம் என்பதுதான் பதில். “கேரளாவில் உள்ள அணைகளால் வெள்ளம் ஏற்படவில்லை. அதே சமயம் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தவும் அவை உதவவில்லை. அணையின் நீர்மட்டத்தை குறைவாக வைத்திருந்தால், வெள்ளத்தைக் கட்டுப்படுத்தியிருக்கலாம் என்று சொல்ல முடியாது. குறைவாக வைத்திருந்தாலும் முதல் நாள் மழையிலேயே அவை நிறைந்து, திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்” என்கிறது ஆணையம். (பார்க்க படம் -2.)

ஹிமான்ஷு தாக்கூர் தன் கட்டுரையில் சொன்னபடி, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 147 அடியை எட்டியதாக ஒரு இடத்திலும் அறிக்கையில் சொல்லப்படவில்லை. இதைச் சுட்டிக்காட்டியதற்குத்தான் தமிழ்த் தேசியவாதிகளின் உளறல் என்றார்கள்.

நன்றி: Muralidharan Kasi Viswanathan

பங்குச் சந்தை 3 : பங்குகள் இலாபம் பார்ப்பது ஊகத்திலா, நிறுவனங்களின் உற்பத்தியிலா ?

பந்தய மூலதனம் – 3

பங்குச் சந்தை குரங்குகளை வாங்கி விற்கும் சூதாட்டம் மட்டும்தானா?

நாம் ஏன் பங்குச்சந்தை பற்றி புரிந்துகொள்ள வேண்டும் ,நமக்கும் பங்குச் சந்தைக்கும் என்ன சம்பந்தம்? – கேள்விக்கு விடை தெரிய தொடர்ந்து படியுங்கள்.

ம்ம அமித் பாய் தன்னுடைய 10 லட்சம் ரூபாயை என்ன செய்தார் என்று இப்போது பார்க்கலாம். புடவை வாங்கி விற்று சம்பாதிப்பதில் அவருக்கு ஆர்வம் இல்லை; வாடிக்கையாளரிடம் ஆர்டர் பிடித்து பொருள் செய்து கொடுத்து சிரமப்படுவதையும் அவர் விரும்பவில்லை; உற்பத்தி அல்லது வணிகம் செய்பவருக்கு கடன் கொடுத்து வட்டி வசூலிப்பதில் இறங்கவும் அவர் தயாராக இல்லை. நோகாமல் அடுத்தவர் தோள் மீது சவாரி செய்து பணத்தை பெருக்குவதற்கு என்ன வழி என்று பார்க்கிறார்.

இதை நமது எளிய உதாரணத்துடன் பொருத்தி பார்க்கலாம். இஷா 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்து ஒரு வருடத்தில் ரூ 2 லட்சம் லாபம் ஈட்டியுள்ளார். அடுத்த ஆண்டில் அருந்ததியிடமிருந்து 10 லட்ச ரூபாய் கடன் வாங்கி தொழிலை இன்னும் விரிவாக்கியிருக்கிறார். இந்த அடிப்படையில், தான் முதலீடு செய்த ரூ 10 லட்சத்தில் 10%-ஐ (ரூ 1 லட்சம் மதிப்பு) பங்குகளாக அமித்துக்கு விற்கிறார். அதற்கு ரூ 10 லட்சம் விலை வைக்கிறார்.

நியூயார்க் பங்குச் சந்தை

முந்தைய பகுதியில் குறிப்பிட்ட டி.சி.எஸ், விப்ரோ, எச்.சி.எல் போன்ற மென்பொருள் நிறுவனங்கள் தமது மூலதனத்தை சிறு பகுதிகளாக பிரித்து பங்குகளாக விற்றுள்ளன. ரெனால்ட் நிசான், டி.வி.எஸ், ஹீரோ, மாருதி போன்ற வாகன உற்பத்தி நிறுவனங்களும் அவ்வாறு பங்குகளை வெளியிடுகின்றன. பாரத ஸ்டேட் வங்கி, முத்தூட் ஃபைனான்ஸ் போன்ற வட்டிக்குக் கடன் கொடுக்கும் நிறுவனங்களும் தமது மூலதனத்தில் ஒரு பகுதியை பங்குகளாக விற்கின்றன.

“இஷா நல்ல திறமையாக வியாபாரம் செய்கிறார், இன்னும் ரூ 10 லட்சம் அவர் கையில் போனால் அவரது லாபம் அதிகரிக்கும், எனவே இந்த பங்குகளை வாங்கிக் கொள்ளலாம்” என்று அமித் தனது 10 லட்சத்தை இஷாவின் பங்குகளை வாங்க பயன்படுத்துகிறார்.

இனிமேல், இஷா நிறுவனத்தின் லாபத்தில் இருந்து ஒரு பகுதியை ஈவுத் தொகையாக அமித்துக்கு கொடுப்பார். அதை விட முக்கியமாக சுறுசுறுப்பாக வளரும் வியாபாரத்தைப் பார்க்கும் நரேன் என்பவர் இஷாவின் பங்குகளை வாங்க ஆர்வம் காட்டினால், அமித் தன் கைவசம் இருக்கும் பங்குகளை ரூ 15 லட்சத்துக்கு அவரிடம் விற்று விடுவார். அமித்துக்கு ரூ 5 லட்சம் லாபம்.

நிறுவன பங்குகளை வெளியிடுவது என்பது இப்படி எளிமையாக ஓரிரு முதலீட்டாளர்கள் மூலம் நடைபெறுவதில்லை என்பது உண்மைதான்.

டி.சி.எஸ் முதலான பெரிய நிறுவனங்கள் கோடிக்கணக்கான பங்குகளை வெளியிடுகின்றன. அதை வாங்குவதற்கு லட்சக்கணக்கான சிறிய, பெரிய முதலீட்டாளர்களும், நிதி நிறுவனங்களும் விண்ணப்பிக்கின்றனர். டி.சி.எஸ்-ன் கடந்த கால செயல்பாடுகள், ஆண்டு வருமானம், ஆண்டு லாபம், லாப வீதம், எதிர்கால சாத்தியங்கள், நிர்வாகக் குழுவின் திறமை, அது செயல்படும் சந்தையில் உள்ள வாய்ப்புகள் என்பதை எல்லாம் பார்ப்பார்கள்.

மும்பை பங்குச் சந்தை

அதன் அடிப்படையில் அந்நிறுவனத்தின் பங்குகளை கூடுதல் விலை கொடுத்து வாங்குவது வொர்த்-தான் என்று முடிவு செய்கிறார்கள். அதாவது ரூ 10-க்கான பங்குகளை ரூ 100 கொடுத்து வாங்கும் அளவுக்கு நிறுவனத்தின் எதிர்கால வருவாயும், லாபமும் இருக்கும் என்று தனது பணத்தை பந்தயம் கட்டுகிறார் முதலீட்டாளர்.

இவற்றைப் போன்ற நூற்றுக் கணக்கான நிறுவனங்களின் பங்குகள் அவற்றின் முக மதிப்பை விட (1000 ரூபாய் நோட்டின் முக மதிப்பு ரூ 1000) சில, பல மடங்கு அதிகமான விலையில் வெளியிடப்பட்டுள்ளன. முதல் முறை நிறுவனத்திடமிருந்து பங்குகளை வாங்கிய பிறகு பிற முதலீட்டாளர்களிடம் அவற்றை விற்கவோ, புதிய பங்குகளை வாங்கவோ பயன்படும் சந்தைதான் பங்குச் சந்தை.

இங்கும் குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்கு விலை எதிர்காலத்தில் ஏறுமா, இறங்குமா என்பதற்கான நூற்றுக்கணக்கான முதலீட்டாளர்களுக்கிடையேயான போட்டியின் மூலம் பங்கு விலை ஏறி இறங்குகிறது. இங்கும் வாங்குபவரின் முதலீடு என்பது நிறுவனத்தின் எதிர்கால செயல்பாடு மீது பந்தயம் கட்டுவதாகவே இருக்கிறது.

அமித் தனக்குக் கிடைத்த 10 லட்சம் ரூபாயை மும்பை பங்குச் சந்தையில் இது போன்ற பல்வேறு நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதில் செலவிட்டார். இந்த நிறுவனங்கள் ஒவ்வொன்றும் பிரகாஷ் போலவே, இஷா போலவோ, அருந்ததி போலவோ வியாபாரத்திலோ, உற்பத்தியிலோ, கடன் கொடுப்பதிலோ தமது பணத்தை போட்டு (அதாவது முதலீடு செய்து) லாபம் ஈட்டும் தொழிலில் உள்ளன.

அவர்கள் லாபம் ஈட்டுவார்கள் என்ற பந்தயம்தான் அமித்-ன் முதலீடு. நிறுவனம் லாபம் ஈட்டினால் மொத்த லாபத்தில் ஒரு பகுதி ஈவுத் தொகையாக முதலீட்டாளருக்குக் கிடைக்கும். அதை விட முக்கியமாக, இந்நிறுவனத்தின் செயல்பாடுகள் பிரமாதமாக இருக்கும் என்று இன்னும் பல பேர் அதன் மீது பந்தயம் கட்டி அதன் பங்குகளை வாங்க முன் வந்தால், பங்குச் சந்தையில் அதன் விலை ஏறும். அந்த நேரத்தில் கூடுதல் விலைக்கு கைவசம் வைத்திருக்கும் பங்குகளை விற்று லாபம் சம்பாதித்துக் கொள்ளலாம்.

இவ்வாறு அமித் வாங்கிய பங்குகளில் பலவற்றின் விலை ஏறிவிட ஒரு ஆண்டு இறுதியில் அவரது கைவசம் இருக்கும் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ 15 லட்சமாக உள்ளது. அதாவது பங்குகள் மீது அவர் கட்டிய பந்தயத்தில் அவர் வெற்றி பெற்றிருக்கிறார்.

இந்த 5 லட்சம் அதிகரித்தது பிரகாஷ் போலவோ, இஷா போலவோ, அருந்ததி போலவோ ஈட்டிய லாபத்தினால் அல்ல. தான் வாங்கிய பங்குகளுக்கு சொந்தக்கார ஹீரோ மோட்டார், ஹிந்துஸ்தான் யூனிலீவர் அல்லது இன்ஃபோசிஸ் ஈட்டிய லாபத்திலிருந்து கிடைத்த ஈவுத்தொகையாலும் இல்லை. இதில் பெரும்பகுதி அமித் போன்று இந்நிறுவனங்களின் எதிர்கால செயல்பாடு மீது பந்தயம் கட்டிய பிற முதலீட்டாளர்கள் அதிக விலை கொடுத்து பங்குகளை வாங்கியதன் விளைவு.

அவர்கள் அனைவரின் நம்பிக்கையும், கணிப்பும் இந்த நிறுவனங்கள் ஏதோ பொருளை உற்பத்தி செய்து விற்று, அல்லது வாங்கி விற்று அல்லது அப்படி விற்பவர்களுக்கு கடன் கொடுத்து லாபத்தை ஈட்டுவதன் மீது இருக்கின்றன.

உதாரணமாக, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பங்கு விலை அடிப்படையிலான டி.சி.எஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ 6.8 லட்சம் கோடியை ($10,000 கோடி) தாண்டியது. ஆனால், 2017-18-ம் ஆண்டில் அந்நிறுவனத்தின் மொத்த ஆண்டு வருவாயே ரூ 1.03 லட்சம் கோடி, அதன் லாபம் ரூ 25,000 கோடி. அதாவது அதன் பங்கு விலை லாபத்தை விட சுமார் 27 மடங்கு. லாப ஈவுத் தொகை அடிப்படையில் கணக்கிட்டால், பங்குகளை வாங்கியவருக்குக் கிடைக்கும் லாபம் ஆண்டுக்கு சுமார் 3% தான் (இது வங்கி ஃபிக்சட் டெப்பாசிட் வட்டி வீதத்தை விட குறைவு). ஆனால், பலரும் பங்குகளை வாங்குவது டி.சி.எஸ்-ன் பங்கு விலை தொடர்ந்து ஏறும், அதை எதிர்காலத்தில் அதிக விலைக்கு விற்று விடலாம் என்ற நம்பிக்கையில் கட்டும் பந்தயம்தான்.

இந்த பங்குச் சந்தை என்பது ஆயிரக்கணக்கான நிறுவனங்கள், லட்சக்கணக்கான நபர்கள், அரசுகள், வங்கிகள், கோடிக்கணக்கான மக்களோடு தொடர்புடையது. பல ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி வளர்ந்து வந்த வரலாற்றைக் கொண்டது. இவை அனைத்தையும் சுருக்கமாக எளிமையாக புரிந்து கொள்ள முயற்சிக்கும் போது கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும். இதை எளிதாக புரிந்து கொள்வதற்கு உலகிலேயே முதல் முறை பங்குகளை வெளியிட்ட நிறுவனம் ஒன்றின் தோற்றம், வளர்ச்சி, வீழ்ச்சி பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

மூலதனம் பற்றி சுருக்கமாக இன்னொரு முறை சொல்ல வேண்டுமானால், சங்கரின் பணம் செலவாகி விட்டது. பிரகாஷின் பணம் உற்பத்தி மூலதனமாகி பெருகியது, இஷாவின் பணம் வணிக மூலதனமாக பெருகியது, அருந்ததியின் பணம் வட்டி மூலதனமாக பெருகியது. அமித்-ன் பணமோ இது போன்ற நிறுவனங்களின் செயல்பாடு மீது பந்தயம் கட்டப்பட்டு பெருகியுள்ளது. இதை பந்தய மூலதனம் (speculative capital) என்று அழைக்கிறோம்.

என்னவாக இருந்தாலும் சரி, தன்னைத் தானே பெருக்கிக் கொள்ளும்படியான பணத்தைத்தான் மூலதனம் என்று அழைக்கிறோம். அந்த வகையில் உற்பத்தி மூலதனமும், வணிக மூலதனமும், வங்கி மூலதனமும், பந்தய மூலதனமும் வெவ்வேறு வழிகளில் பெருகினாலும் ஒரு பொதுவான தன்மையை, ஒன்றோடொன்று இணைப்புகளும் உறவுகளும் கொண்டுள்ளன.

(தொடரும்)
நன்றி : new-democrats

தொடரின் முந்தைய பாகங்கள்:
பங்குச் சந்தை என்றால் என்ன ? – பாகம் 1
பங்குச் சந்தை 2 : செலவழித்தால் பணம் – பெருக்கினால் மூலதனம் !

உ.பி காவி தர்பார் : 1200 போலி மோதல் கொலை – 160 பேர் NSA – வில் கைது ! சிறப்புக் கட்டுரை

ந்துத்துவ பாசிஸ்டுகளின் கையில் ஆட்சி அதிகாரம் கிடைக்கும்போது, சிறுபான்மையினருக்கு அது எத்தகைய கொடுங்கனவாக இருக்கும் என்பதற்கு மோடியின் குஜராத் மிகச் சிறந்த உதாரணம். மோடிக்கு போட்டியாக இப்போது களமிறங்கியிருக்கிறார் இந்துத்துவ சாமியார் ஆதித்யநாத். இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தின் முதலமைச்சரான ஆதித்யநாத்தின் ஆட்சி முசுலீம்களுக்கு கொடுங்கனவாக மாறிக்கொண்டிருக்கிறது.  ஆதித்யநாத் பதவியேற்ற ஓராண்டுக்குள் 160 பேர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த கைதுகள் குறித்த பின்னணியையும் கைதானவர்களின் சமூகச் சூழலையும் மிக விரிவாக பதிவு செய்திருக்கிறார் பத்திரிகையாளர் நேஹா தீட்சித். த வயர் இணையதளத்தில் வெளியான அவருடைய அறிக்கையின் சுருக்கப்பட்ட பதிவு இங்கே.

ஓராண்டில் 160 கைதுகள்:
உ.பி. யில் முசுலீம்களுக்கு எதிரான புதிய ஆயுதம் ‘தேசிய பாதுகாப்புச் சட்டம்’

த்தர பிரதேச மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவோம் எனக் கூறிக்கொண்டு ஆட்சியைப் பிடித்த ஆதித்யநாத், தான் பதவியேற்றதிலிருந்து ஒரே ஒரு மதக்கலவரம் கூட நிகழவில்லை என 2018 மார்ச் 4-ஆம் தேதி கூறினார். பத்து நாட்களுக்குப் பிறகு மத்திய உள்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் மதக்கலவரங்கள் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் உத்தரபிரதேசம் முதலிடத்தில் தொடர்வது தெரியவந்தது. 2017-ஆம் ஆண்டு மத வன்முறை தொடர்பான மோதல்களில் 44 பேர் இறந்துள்ளனர்; 450 பேர் காயமுற்றுள்ளனர் என அந்த அறிக்கை சொன்னது.  ஆதித்யநாத், சட்டம் ஒழுங்கு சரியில்லை என சொன்ன முந்தைய ஆட்சிக் காலத்தில் அதாவது மத வன்முறைகளால் 2016-ல் 29 மரணங்களும் 490 பேருக்கு காயமும் ஏற்பட்டதாக அறிக்கை சொல்கிறது. 2015-ஆம் ஆண்டு 22 மரணங்களும் 410 பேர் காயமுற்றதாகவும் மத்திய அரசின் புள்ளிவிவரம் சொன்னது. உ.பி-யின் புலாந்த்சாஹர் மற்றும் சஹாரன்பூரில் நடந்த மதக்கலவரத்துக்கு ஆதித்யநாத் தலைமையில் ஹிந்து யுவ வாஹினி மற்றும் உள்ளூர் பாஜகவினரே காரணமாக இருந்தது வெட்ட வெளிச்சமாக தெரிந்தது. ஆங்காங்கே கண்டனங்கள் எழுந்தனவேயன்றி எந்தவித சட்ட நடவடிக்கையும் இவர்களின்மேல் எடுக்கப்படவில்லை.

ஜனவரி 16, 2018-ஆம் ஆண்டு ஆதித்யநாத்தின் அரசு, சட்டம் – ஒழுங்கை காப்பாற்றும் பொருட்டு 160 பேர் தேசிய பாதுகாப்புச் சட்டதின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாக பத்திரிகை செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. பத்து மாதங்களில்  போலீசாரை ஏவி 1,200 என்கவுண்டர்களை நடத்திய பாசிஸ்ட் சாமியாரின் சாதனைக்கு அடுத்த சாதனையை சொன்னது மேற்கண்ட அறிக்கை. தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைதானவர்களில் பீம் ஆர்மியின் நிறுவனர் சந்திரசேகர் ஆசாத்தும் ஒருவர். 2017 மே மாதம் முதல் இவர் சிறையில் இருந்தார்.

பீம் சேனை என்ற அமைப்பின் நிறுவனரான சந்திர சேகர ஆசாத் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சஹரன்பூரில் தலித் மக்கள் மற்றும் தாக்கூர்களுக்கு இடையில் நடந்த மோதல் வழக்கில் ஆதித்யநாத் அரசால் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து கடந்த 2017, நவம்பரில அவருக்கு பிணை வழங்கியது அலகாபாத் உயர்நீதிமன்றம். உடனடியாக அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்து சிறையிலடைத்தது போலீசு. தற்போது அவ்வழக்கில் எவ்வித முகாந்திரமும் இல்லாத நிலையில் கடந்த 13.09.2018 அன்று அவர் மீதான தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்தது உ.பி அரசு. 14.09.2018 அன்று அவர் சிறையிலிருந்து வெளிவந்தார்.

வழக்கறிஞர் இல்லை; மேல் முறையீடு இல்லை; வாதங்கள் இல்லை… இதுதான் தேசிய பாதுகாப்புச் சட்டம். 1980, செப்டம்பர் 23-ஆம் தேதி நடைமுறைக்கு வந்த இந்த சட்டத்தின் நோக்கம், “சில வழக்குகளில் அல்லது சில விஷயங்களில் தொடர்புள்ளவர்களை முன்னெச்சரிக்கையாக கைது செய்யும் நடவடிக்கை” என சொல்லப்பட்டிருக்கிறது. ‘தேசத்தின் பாதுகாப்பு மற்றும் பொது அமைதி’யை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எந்த ஒரு நபரையும் இந்த சட்டத்தின் மூலம் கைது செய்ய முடியும். 12 மாதம் வரையிலும் இந்த சட்டத்தில் கைது செய்யப்படும் ஒரு நபரை தடுப்புக் காவலில் வைக்க முடியும். மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டாலோ அல்லது போலீசு கமிஷ்னராலோ உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கைது நடந்தாலும் மாநில அரசிடமே கைது குறித்த அறிக்கையை சமர்பிக்க வேண்டும்.

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள்.

இந்த சட்டத்தில் கைதாகிறவருக்கு, அவர் ஏன் கைது செய்யப்பட்டார் என்கிற தகவலை சொல்லாமல் 10 நாட்கள் வரைக்கும் வைத்திருக்கலாம். பொதுநலன் கருதி இந்தத் தகவலை சொல்லாமல் வைத்திருக்க அதிகாரம் தருகிறது இந்த சட்டம்! அதோடு, கைது குறித்து கைதானவர் யாரையும் கேள்வி கேட்க முடியாது என்பது சட்டத்தின் மற்றொரு ‘சிறப்பம்சம்’. இந்த சட்டத்தில் கைதாகி மூன்று மாதத்துக்கு மேல் சிறையில் உள்ளவர்களின் காவலை நீட்டிக்கலாமா வேண்டாமா என்பதை மூன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழு அல்லது அதற்கு இணையான உயர் நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட குழு முடிவு செய்யும். அவர்களின் முடிவுபடி கைதானவர்களின் காவல் 12 மாதம் வரை நீட்டிக்கப்பட முடியும்.

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள்.

இப்படியான ஆள் தூக்கி சட்டத்தில் கைதான 160 பேரில் 15 குடும்பங்களைச் சந்தித்திருக்கிறார் பத்திரிகையாளர் நேஹா தீட்சித். இந்த 15 பேரும் உத்தரபிரதேசத்தின் கிழக்குப் பகுதியான பூர்வாஞ்சலைச் சேர்ந்தவர்கள். மதக்கலவரம் பின்னணியில் இந்தக் கைதுகள் அரங்கேற்றப்பட்டிருக்கின்றன. ஹிந்து யுவ வாஹினி, ஹிந்து சமாஜ், அகில பாரதிய ஹிந்து மகாசபா போன்ற காவி பயங்கரவாத குழுக்களைச் சேர்ந்தவர்கள் இந்தக் கலவரங்களைத் தூண்டியவர்கள் என சொல்லப்பட்டபோதும், முசுலீம்கள் மட்டுமே சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் முதலில் பிணை வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், உடனடியாக அவர்கள் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 2014 நடந்த மக்களவை தேர்தலை முன்வைத்து ஆங்காங்கே சிறிய அளவிலான மதக்கலவரங்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டன. இப்போது நடக்கும் கைது சங்பரிவார், 2019 மக்களவை தேர்தலை எதிர்க்கொள்ள போட்டுள்ள திட்டத்தின் ஒரு பகுதி என்கிறார்கள் உள்ளூர்வாசிகள்.

திட்டமிட்டு நடத்தப்படும் மதக்கலவரங்கள்

உ.பி. காவல் நிலையங்களில் மதம் தொடர்பான வழிபாடுகள் நடத்தப்படுவது குறித்த ஊடக கேள்வி ஒன்றுக்கு முதலமைச்சர் ஆதித்யநாத், “சாலையில் நமாஸ் செய்வது தடுத்து நிறுத்தப்படாதபோது, காவல் நிலையங்களில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுவதை தடுத்து நிறுத்த எனக்கு உரிமை இல்லை” என்றார்.

சிவபக்தர்கள் என்கிற பெயரில் பெரும் ஒலியெழுப்பும் ஸ்பீக்கர்களை கட்டிக்கொண்டு வீதிவீதியாக ரவுடியிசம் செய்பவர்கள் குறித்து ஆதித்யநாத் இப்படி சொன்னார், “அவர்கள் சிவ யாத்திரை செய்கிறார்கள்; சவ யாத்திரை அல்ல”. அதாவது ஆதித்யநாத் என்ற இந்து சாமியாரின் ஆட்சியில் மத கொண்டாட்டங்கள் என்கிற ரவுடியிசம் சட்டத்துக்கு அப்பாற்பட்டது.

கான்பூரில் மன்சூரின் கூடார இருப்பிடம் கொழுத்தப்பட்டது.

கடந்த ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி முகரம் பண்டிகை வந்தது. இந்துக்களின் பண்டிகையில் ஒரு பகுதியான துர்கா சிலையை நீரில் கரைக்கும் சடங்கும் அந்த நாளில் வந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த நாளில் கலவரங்கள் ஏற்பட வாய்ப்புண்டு என உளவுத்துறையினர் எச்சரித்திருந்தனர். மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அக்டோபர் 1-ஆம் தேதி துர்கா சிலையை கரைக்க வேண்டாம், 2-ஆம் தேதியிலிருந்து 4-ஆம் தேதிக்குள் சிலைகளை கரைக்கலாம் என வேண்டுகோள் விடுத்திருந்தார். பாஜகவினரிடமிருந்து எதிர்ப்புகள் வந்தபோது, அங்கே பிரச்சினைகள் ஏதுவும் ஏற்படவில்லை. ஆனால், உ.பியின் முதலமைச்சர் பகிரங்கமாக விடுத்த அழைப்பின் காரணமாக வீதிகள் தோறும் கொண்டாட்டங்கள் நடந்தன. கான்பூர், பாலியா, பிலிபத், கோண்டா, அம்பேத்கர் நகர், சம்பால், அலகாபாத், கவுசாம்பி மற்றும் குஷிநகரில் அக்டோபர் 1-ஆம் தேதி இரண்டு மத பண்டிகைகளும் வந்த காரணத்தால் மதக்கலவரம் உருவாகும் சூழல் உண்டானது.

அக்டோபர் 1-ஆம் தேதி, கான்பூரில் இரண்டு பெரிய மத வன்முறைகள் நடந்தன. ராவத்புராவில் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் ராம் லீலா கமிட்டி ராமரின் திருமண விழாவினை கொண்டாடியது. இதே நாளில் முகரம் விழாவின் பகுதியான தாஜியாவும் வந்தது. வன்முறை ஏற்படக்கூடும் என உளவுத்துறை எச்சரித்தபோதும், அரசு கண்டு கொள்ளவில்லை. கல்வீச்சு சம்பவம் நடக்குமளவுக்கு அங்கே பிரச்சினை உருவானது. துப்பாக்கிச் சூடு நடந்தது; இரண்டு காவலர் உள்பட பலர் காயமடைந்தனர். ராம் லீலா கமிட்டியைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு, பிறகு விடுவிக்கப்பட்டனர்.

அதே நாளில் ஜுகி பரம் பூர்வா பகுதியில் நடந்த முகரம் ஊர்வலத்தை, ஹிந்து சமாஜ் பார்டியை சேர்ந்தவர்கள் துர்கா சிலையை கரைக்கும் ஊரவலம் நடப்பதாகக் கூறி நிறுத்தினர். இங்கேயும் துப்பாக்கிச்சூடும் கல்வீச்சு சம்பவங்களும் அரங்கேறின. இந்தச் சிறிய பகுதியில் முசுலீம்கள் ஒருபுறத்திலும் தலித்துகள் இன்னொருபுறத்திலும் வாழ்கிறார்கள். இந்த வன்முறையின்போது ஒரு போலீசு வாகனமும் தலித் பகுதியில் வசித்த ஒரே ஒரு முசுலீமின் வீடும் கடையும் கொளுத்தப்பட்டன. 57 பேரை போலீசு அப்போது கைது செய்தது. ஹக்கீம் கான், ஃபர்குன் சித்திக், முகமது சலிமை தவிர, மற்ற அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இவர்கள் மூவருக்கும் உள்ளூர் நீதிமன்றம் பிணை வழங்கியிருந்த நிலையில், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் மீண்டும் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சிறைக் கம்பிகளுக்குள் கடந்த பத்து மாதங்களாக அடைபட்டிருக்கும் இவர்களில் ஹக்கீமுக்கு மகள் பிறந்திருக்கிறாள்; ஃப்ரகுன்னின் மகள், கிரிமினலின் மகள் என்ற கேலிப்பேச்சுக்கு ஆளாகி பள்ளிக்குப் போக முடியாமல் இருக்கிறாள். சலிமின் குழந்தைகள், வாழ வழியின்றி உறவினர்கள் வீடுகளுக்கு மாறி மாறி சென்றுகொண்டிருக்கின்றனர்.

லோதேஷ்வர் கோவில் அழைக்கிறது… (புகைப்படம் நேஹா தீக்-ஷித்)

35 வயதான் ஹக்கீம் கான், சஹாரா குழுமத்தில் இன்சூரன்ஸ் ஏஜெண்டாக பணிபுரிந்தவர். மத அமைதி ஏற்படுத்தும் பல விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவராக இருந்திருக்கிறார் ஹக்கீம். அக்டோபர் 1-ஆம் தேதி கூட, இரண்டு தரப்புக்கும் அமைதி ஏற்படுத்தும் பொருட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார்.

“அவர் கோயில் திருவிழாக்களில் கலந்துகொள்வார். அனுமனுக்கு செவ்வாய் கிழமைகளில் அன்னதானம் செய்வார். கோயில் படிக்கட்டுகளை சுத்தம் செய்வார்” என்கிறார் ஹக்கீமின் வீட்டருகே வசிக்கும் ராம் பிரகாஷ்.

அக்டோபர் 2-ஆம் தேதி போலீசு ஹக்கீமை கைது செய்திருக்கிறது. “அவரை பெல்டால் அடித்து இழுத்துச் சென்றார்கள். ‘நீ இஸ்லாம் வாழ்க என அடிக்கடி சொல்வாய் இல்லையா?’ என ஒரு காவலர் அவரைக் கேட்டார்” என்கிறார் ஹக்கீமின் மூத்த சகோதரர் முகமது காசிம்.

ஃபர்குன் சித்திக் கைது செய்யப்பட்டதற்காக அவருடைய 12 வயது மகள் தன்னுடைய பள்ளியில் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகியிருக்கிறார். ‘கிரிமினலின் மகள்’ என அவளுடைய பள்ளி ஆசிரியர் அழைத்திருக்கிறார். அவளுடன் பயிலும் சக மாணவர்கள், ‘முசுலீம்கள் தீவிரவாதிகள்’ என எப்போதும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். தினசரி எதிர்கொள்ளும் இத்தகைய செயல்பாடுகளால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண், கல்வியாண்டின் மத்தியில் பள்ளிக்கு போவதை நிறுத்தியிருக்கிறார். கடந்த மாதம், வேறு பள்ளியில் சேர்ந்தபோதும் இதே விஷயங்கள் அவளை அச்சுறுத்தியிருக்கின்றன.

“அவர் நகராட்சியில் ஒப்பந்தக்காரராக பணியாற்றினார். வருமான வரி செலுத்தும் ஒருவர் திடீரென தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கைதாகி பத்து மாதங்கள் ஆகின்றன. நீங்களே சொல்லும் மதத்தை வைத்து ஒடுக்குவதன்றி இதன் பெயர் வேறன்ன?” என்கிறார் ஃபர்குனின் மனைவி சோபியா. அவர்களுடைய சேமிப்பெல்லாம் இந்த வழக்குக்காக கரைந்து வருவதாக சொல்கிறார் இவர்.

தலித் பகுதியில் இருந்த ஒரே முசுலீம். ஓலை குடிசை கடை சலீமுக்கு சொந்தமானது. அந்தக் கடையை ஒட்டியே அவருடைய வீடும் இருந்தது.  “நாங்கள் பல ஆண்டுகளாக இந்த இடத்தில்தான் வசிக்கிறோம். ஒருபோதும் யாருக்கும் அச்சுறுத்தலாக இருந்ததில்லை” என்கிறார் சலீமின் மனைவி ருகி.  வன்முறை அரங்கேறிய அந்த நாளில் முதலில் கடைக்கு தீ வைக்கப்பட்டிருக்கிறது, பிறகு வீட்டுக்கு வைத்திருக்கிறார்கள்.

“துர்கா சிலையை கரைக்கும் நிகழ்வில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்; அத்தனை பெரிய கூட்டத்தை இதுவரை கண்டதில்லை. அப்போது ஒருவர் கடையை அடித்து நொறுக்கினார். பிறகு கடைக்கும் வீட்டுக்கும் தீ வைத்தனர்” என்கிறார் ருகி. இவருடைய இரண்டு வயது மகள், வன்முறை வெறியாட்டத்தின்போது மயங்கி விழுந்திருக்கிறார். மூன்று மணி நேர போராட்டத்துக்கு பின் இவர்கள் உறவினர்களால் காப்பாற்றப்பட்டிருக்கின்றனர்.

“இந்த வன்முறையில் ஈடுபட்டவர்களில், அக்கம்பக்கத்தில் வசித்த இரண்டு மூன்று பேரும் உண்டு. போலிசுக்கு அழைத்து போனால் அவர்களை நான் அடையாளம் காட்டுவேன்” என்கிறார் சலீமின் 12 வயது மகன் பாப்பு.

பஹ்ரைச்சில் தனது மகள்களுடன் அகீலா. (படம்: நேகா தீக் ஷித்)

இந்துத்துவ கும்பலின் கும்பல் வன்முறையால் தன்னுடைய குடிசையையும் கடையையும் இழந்த முகமது சலீம், கைது செய்யப்பட்டிருக்கிறார்.  அவருடைய குடும்பம் வாழ வழியின்றி, உறவினர்களின் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளது. சொல்லப்போனால் தெருவுக்கு வந்திருக்கிறது. அதே நேரத்தில் கடை இருந்த இடத்திற்கு அருகே துர்கா தேவி கோயில் ஒன்று முளைத்திருக்கிறது.

மக்களவை, சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மை பெற்றபோதும் பாஜகவுக்கு உள்ளாட்சித் துறை தேர்தல் இறங்குமுகமாகவே இருந்தது. டிசம்பர் 2017-ல் நடந்த உள்ளாட்சித் துறை தேர்தலில் 29% வாக்குகளையே பாஜக பெற்றது.

முகரம் பண்டிகை முடிந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்த தேர்தல் நடைபெற்றது. ஹக்கீம் ஜுகி வார்டு பதவிக்கு போட்டியிட இருந்ததாகவும் அப்படி போட்டியிட்டிருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருப்பார். அவருக்கு இந்து, முசுலீம்களிடையே நற்பெயர் இருந்தது என்கிறார் ராம் பிரகாஷ்.  போலீசின் பாரபட்ச அணுகுமுறை காரணமாக ஹக்கீம் கைது செய்யப்பட்டிருப்பதாக சொல்லும் முகமது காசிம், வன்முறையை தூண்டிய ஹிந்து சமாஜ் பார்ட்டினரை ஏன் கைது செய்யவில்லை என கேட்கிறார். இரு மதத்தினர் மீதும் அன்பும் மரியாதையையும் கொண்டிருந்த ஒரு மனிதருக்கு கிடைக்கும் நீதி இதுதானா என்கிறார் காசிம்.

அகில் பாரதிய ஹிந்து மகாசபை தொடர்புடைய ஹிந்து சமாஜ் பார்டி மத உணர்வுகளை தூண்டுவதில் பெயர் பெற்றது. “சலீமின் கொட்டகையை கொளுத்தியதன் மூலம் அவர்கள் ஒரு செய்தியை சொல்கிறார்கள். ‘முசுலீம்களை வேரோடு அழிக்க வேண்டும்’. அடுத்த நாளே துர்கா கோயிலை அங்கே உருவாக்கியிருப்பது அவர்களுடைய வருமானவே மதவாதத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதை காட்டுகிறது. இந்துக்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் முசுலீம்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்பதைத்தான் அவர்கள் சொல்லிச் சென்றிருக்கிறார்கள்” என்கிறார் செயல்பாட்டாளரான ராஜுவ் யாதவ்.

முகரம் ஊர்வலத்தை வைத்து நடத்தப்படும் அரசியல் கான்பூருக்கு புதிதல்ல. ஒவ்வொரு வருடமும் போராட்டங்களும் பதட்டமும் இருந்துகொண்டே இருக்கிறது. முந்தைய நிகழ்வுகளுக்கும் இப்போது நடப்பவைகளுக்கும் என்ன வித்தியாசம் என்றால், முன்பு இந்து – முசுலீம் என்கிற பிரிவுகளுக்கிடையே பிரச்சினை இருந்தது. இப்போது தலித்துகளுக்கும் முசுலீம்களுக்குமான பிரச்சினையாக மாற்றப்பட்டிருக்கிறது. ஆச்சரியமளிக்காத வகையில் தலித் பாசி சாதியைச் சேர்ந்த பாஜக வேட்பாளர் ராகேஷ் குமார் பஸ்வான், ஜுகி வார்டு பதவியை வென்றார்.

மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சியமைத்த பிறகு 2015 ஆகஸ்டு மாதம், 2011-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மதவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள்  வெளியிடப்பட்டன. இந்த புள்ளிவிவரங்கள், இந்துத்துவ மதவெறி கும்பலால் தவறான பரப்புரைக்கு பயன்பட்டன. அதாவது இந்துக்கள் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் முசுலீம் ‘இஸ்லாம் ஜிகாதி’ என்ற பெயரில் எண்ணிக்கையை பெருக்குவதாகவும் பரப்புரை செய்தார்கள். ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி, பஜ்ரங் தள் போன்ற காவி அமைப்புகள் முசுலீம்களை இந்துக்களாக மாற்றும் ‘கர்வாப்ஸி’ இயக்கங்களை நடத்தினார்கள்.  மதமாற்றம் தடை செய்யப்படும் வரை ‘கர்வாப்ஸி’ தொடரும் என சாமியார் ஆதித்யநாத் பேசினார்.

பஹ்ரைச்சில் உள்ள காசிமியான் மஷருக்கு பயணிக்கத் தயாராகும் பக்தர்கள். (படம்: விபின் படேல் / யூ-டியூப்)

உ.பி-யில் தலித்துகள் அதிகம் உள்ள தொகுதிகளில் பக்ரீச் – உம் ஒன்று.  இந்த மக்களவை தொகுதி தலித்துகளாக ஒதுக்கப்பட்டுள்ளது. 2017-ஆம் ஆண்டு நடந்த சட்டப் பேரவை தேர்தல் பிரச்சாரத்தின்போது ஆர்.எஸ்.எஸ்.- பாஜக தலித் ஆளுமைகளை இந்துக்களாக்கும் முயற்சியில் இறங்கியது. சங்பரிவார் விநியோகித்த வெளியீடு ஒன்றின் தலைப்பு ‘பாட்சாவும் ராஜாவும்’. பக்ரீச் அருகே 11-ஆம் நூற்றாண்டில் சுல்க்தேவ் என்ற தலித் தலைவருக்கும் உபி-யை ஆக்கிரமிக்கும்பொருட்டு படையெடுத்த முசுலீம் அரசர் காசியா சயது சலமார் மசூத் என்பவருக்கும் போர் மூண்டதாகவும் அப்போது தன்னை பாதுகாக்கும் பொருட்டு பசுக்களை கவசமாக பயன்படுத்த முசுலீம் அரசன் முனைந்ததாகவும் போருக்கு முந்தைய இரவில் பசுக்களை சுல்க்தேவ் விடுவித்ததாகவும் அந்த வெளியீடு சொல்கிறது. பிறகு மசூத்தை கொல்ல சென்றதாகவும் தெரிவிக்கிறது. சில வரலாற்றாசிரியர்கள் மசூத்தை சுல்க்தேவ்வால் கொல்ல முடியவில்லை, மசூத் முன்னேறிச் செல்வதை தடுக்கவும் முடியவில்லை என்கிறார்கள்.

மசூத் இறந்த நாளில் நடக்கும் ஊர்ஸ் ஊர்வலத்துக்கு எதிராக போராடும்படியும் சுல்க்தேவை கொண்டாடும்படியும் அந்த வெளியீடு அறைகூவல் விடுத்திருந்தது. இந்த முயற்சிகள் தலித் – முசுலீம் ஒற்றுமையை குலைக்கவே செய்யப்படுகின்றன. 2017-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் இந்தப் பகுதியில் மொத்தமுள்ள ஏழு தொகுதிகளில் ஆறில் வென்றது பாஜக. சாவித்ரி பாய் புலே என்ற தலித் பெண், பாஜக-வின் மக்களவை உறுப்பினராக இந்தத் தொகுதியிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவரும் தன்னை சாமியார் என சொல்லிக்கொள்கிறார்.

இறைத்தூதுவர் முகமதுவின் பிறந்த நாளில் பாராவஃபட் என்ற விழா உபி-யில் முசுலீம்கள் மற்றும் இந்துக்களால் கொண்டாடப்படும் விழாவாக நடக்கும். சாமியார் உ.பி முதலமைச்சராக பதவியேற்றவுடன் இந்த பண்டிகை அரசு விடுமுறை நாள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது. நன்பாராவில் உள்ள குர்குட்டா என்ற கிராமத்தில் கடந்த டிசம்பர் 2 தேதி நடந்த பாராவஃபட் ஊர்வலத்தில்  300 பேர்  நுழைந்து கலவரம் ஏற்படுத்தியுள்ளனர். ஹிந்து சமாஜ் பார்டி மற்றும் பஜ்ரங் தள் காவி அமைப்புகளை சேர்ந்தவர்கள் இருபுறமும் கற்களால் தாக்கியுள்ளனர். இருதரப்பிலிருந்தும் மத முழக்கங்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன. இறுதியாக போலீசு வந்து 38 பேரை கைது செய்துள்ளது. சிம சுரக்‌ஷா பல் என்ற கலவரங்களை கட்டுப்படுத்தும் போலீசு குழு கிராமத்திலிருந்த ஆடு, கோழிகளை அள்ளிக்கொண்டு சென்றிருக்கிறது. அதில் சிலர் ஆடுகளை வெட்டி சமைத்து தரும்படி கேட்டிருக்கிறார்கள் என்கிறார் அந்த கிராமத்தைச் சேர்ந்த கன்னையா.

9 பேரின் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. அவர்களுக்கு பிணை வழங்கப்பட்ட நிலையில் ஐந்து பேர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். செங்கல் சூளையில் பணியாற்றிய முன்னா, மதராசாவில் ஆசிரியராக பணியாற்றிய மசூத் ரசா, ரிக்‌ஷா ஓட்டிக்கொண்டிருந்த நூர் ஹசன், ஹர்சாத் என்ற மாணவர் ஆகிய ஐவரும் கடந்த ஒன்பது மாதங்களாக சிறையில் இருக்கின்றனர். இவர்களை நம்பியிருந்த குடும்பம் இருந்த சேமிப்பை வழக்கு செலவுகளுக்காக தொலைத்துவிட்டு, நடுத்தெருவில் நிற்கிறது. ஹர்சாத் என்ற கல்லூரி மாணவர், தற்கொலை செய்துகொள்ளக்கூடிய மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தன் குடும்பத்தினரிடம் தெரிவித்திருக்கிறார்.  கேரளாவில் படித்துக்கொண்டிருந்த இவர் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்தபோது தே.ப.சட்டத்தில் கைதாகியிருக்கிறார்.

கான்பூரில், ஹக்கிமின் மனைவி மகள் மற்றும் தாயார். (படம்: நேஹா தீக்‌ஷித்.)

ஒவ்வொரு ஹோலி பண்டிகையின் போதும் பராபங்கி மாவட்டத்தில் உள்ள சுஃபி துறவியான ஹாஜி வாரிஸ் அலி ஷாவின் தேவா ஷரிப் பல வண்ணங்களுடன் ஒளிரும். 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த துறவியான அலி ஷா, மதங்களைக் கடந்து அன்பும் அரவணைப்பும் இருக்க வேண்டுமென வலியுறுத்தியவர். இந்து, முசுலீம், கிறித்துவ மற்றும் சீக்கியர்கள் இவருடைய பக்தர்களாக இருக்கிறார்கள். அனைவரிடத்திலும் ஒற்றுமை உணர்வை உருவாக்கும் வகையில் ஹோலி பண்டிகையை கொண்டாடும் வழக்கத்தை துவக்கி வைத்திருக்கிறார். இப்போதும் அது கடைபிடிக்கப்படுகிறது. ஆதித்யநாத் பதவியேற்ற ஒரு மாதத்துக்குப் பின், அவருடைய அமைச்சர் ராஜேந்திர பிரதாப் சிங், முந்தைய அரசு தேவா ஷரீப்புக்கு மின்சார வசதியை செய்துகொடுத்ததாகவும், ஆனால் இந்து கோயிலான லோதேஸ்வர் மகதேவ் கோயிலுக்கு அந்த வசதியை செய்யவில்லை எனவும் பேசினார்.

லோதேஸ்வர் மகதேவ் கோயில், இந்த சூஃபி கோயிலிருந்து ஒரு மணி நேர பயண தூரத்தில் கார்கா ஆற்றின் கரையோரம் ராம்நகர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. பாண்டவர்கள் சிவனுக்காக இந்த இடத்தில் யாகம் வளர்த்ததாக புராண கதை ஒன்று சொல்லப்படுகிறது. இந்த கோயிலுக்கு வெளியே பூஜை சாமான்கள் விற்கும் கடைகளை இந்து, முசுலீம்கள் நடத்துகின்றனர். வருடந்தோறும் நடக்கும் சிவராத்திரியும் மாட்டு சந்தையும்  புகழ்பெற்றவை. இந்து-முசுலீம் மக்கள் ஆர்வத்துடன் இந்த விழாக்களில் பங்கேற்பர். முந்தைய காலங்களில் இந்த கோயில் பூசாரிகள் மத ஒற்றுமையை பேணிக்காப்பதில் அக்கறையுடன் இருந்தனர்.

ஒவ்வொரு நான்கு வருடத்துக்கு ஒருமுறை கோயில் தலைமை பூசாரி பதவிக்கு ஏலம் நடக்கும். யார் அதிகம் ஏலத்தொகை தருகிறாரோ அவரே தலைமை பூசாரி. இந்த முறையே பெரும்பாலான வடமாநில கோயில்களில் பின்பற்றப்படுகிறது. கடந்த ஆண்டு நடந்த ஏலத்தில் மஹந் ஆதித்யநாத் திவாரி என்பவர், சாமியார் ஆதித்யநாத்தின் வழியை பின்பற்றுவதாக சொல்லிகொள்பவர் ரூ. 5 லட்சம் கொடுத்து தலைமை பூசாரியாகியுள்ளார். சிவா டிரேடர்ஸ் என்ற பெயரில் கோயில் வளாகத்துக்குள்ளேயே தனது வியாபாரத்தை தொடங்கிய குட்டி சாமியார் கோயிலை சுற்றிலும் இந்து கடவுளர்களுக்கு சிறு கோயில்களை கட்ட ஆரம்பித்திருக்கிறார்.

உள்ளாட்சித் துறை தேர்தல் பிரச்சாரத்தின்போது ஆதித்யநாத் பயன்படுத்திய அதே ‘மின்சார’ பிரச்சினையை குட்டி சாமியாரும் கிராம சபை தலைவர் பதவிக்கு போட்டியிட்டபோது பயன்படுத்துகிறார். கோயிலுக்கு பக்கத்தில் இருக்கும் மசூதி ஒலியெழுப்பிகளை தூக்கி எறிவோம் என பிரச்சாரம் செய்த இவர், ஜான் முகமது என்ற வேட்பாளரிடம் தோற்றார்.

அஷம்கரில், ஆசிஃபின் தந்தை இஃப்தெகார் அகமது.

ஆதித்யநாத் தொடங்கிய ஹிந்து யுவ வாஹினி என்ற குண்டர் படை சிவ் பகவான் சுக்லா என்பரின் தலைமையில் லட்டூ கோபால் சிலையை தூக்கிக் கொண்டு லோதேஸ்வர் கோயிலுக்கு ஆசி வாங்க 2018-ஆம் ஆண்டு மார்ச் 24 தேதி நூறு பேருக்கும் மேல் கூட்டத்தைச் சேர்த்து வந்திருக்கிறது. வழி முழுக்க இந்த குண்டர் படை கூச்சலிட்டபடி, கலர் பொடிகளை தூவி, பெண்களை பாலியல் சீண்டல் செய்துகொண்டு வந்திருக்கிறது. 13 வயதான ஷா ஃபகத் என்ற சிறுமியை சீண்டும்போது, உடன் வந்த சகோதரர் அதை தட்டிக்கேட்டுள்ளார். உடனே அங்கே இது பெரும் பிரச்சினையாகி, வன்முறையில் முடிந்திருக்கிறது.

அதே நேரத்தில் லட்டூ கோபால் சிலையை முசுலீம்கள் சேதப்படுத்தி தூக்கி எறிந்ததாக ஒரு வதந்தியை கிளப்பிவிட்டிருக்கிறார்கள். அருகாமை பகுதிகளில் இது பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சில வினாடிகள், இந்த பிரச்சினைக்கு மதச்சாயம் பூசப்பட்டு, உள்ளூர் போலீசும் வந்துவிட்டது.

அன்று மாலையில் ராம்நகர் போலீசு சிவ் பகவான் சுக்லாவின் புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கை ஒன்றை பதிகிறது. அதில் 40-க்கும் மேற்பட்ட முசுலீம்கள் சிலை ஊர்வலத்தில் புகுந்து அடித்ததாகவும், இந்து பெண்களின் நகைகளை கொள்ளையடித்ததாகவும் இந்த தாக்குதலில் 12 பேருக்கு காயம்பட்டதாகவும் சொல்லப்பட்டிருந்தது. ஷா ஃபகத் என்ற சிறுமி எதிர்கொண்ட பாலியல் சீண்டலை போலீசு கண்டுகொள்ளவில்லை. மாறாக, அடையாளம் தெரியாத 40 பேரின் புகார் கொடுத்ததன் அடிப்படையில் 12 பேரின் மீது எஃப்.ஐ.ஆர் பதியப்பட்டது. சாட்சியங்கள் அனைவரும் ஹிந்து யுவ வாஹினி குண்டர் படையைச் சேர்ந்தவர்கள்! ஐந்து நாட்களில் 12 பேருக்கும் பிணை கிடைத்தது. அதில் ஐவர் மீது தே.ப. சட்டம் பாய்ந்தது.

இவர்கள் ஐவரில் இருவர் கோயில் வளாகத்தில் கடை வைத்திருந்தவர்கள். ஒருவர் டெய்லர். மற்ற இருவர் கூரை வேய்பவர்களாகள். இவர்கள் எப்படி தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்க முடியும் என்கிற கேள்வியை இவர்களுடைய குடும்பங்கள் கேட்கின்றன. ஆதித்யநாத்தின் வழியில் குட்டி சாமியார், 200 ஆண்டுகள் பழமையான கோயிலுக்கு அருகே உள்ள மசூதிகளை இடிக்க திட்டமிடுவதாக உள்ளூர்வாசிகள் சொல்கிறார்கள்.

“உள்ளூர் தேர்தலில் பிரிவினையை உண்டாக்கி வெல்ல முயன்றார்கள். அது முடியாமல் குட்டி சாமியார் தோற்றார். முசுலீம்கள் மீது வீண் பழி சுமத்தி கைது செய்தார்கள். 2019 தேர்தலுக்காக மசூதியை இடிக்க நினைக்கிறார்கள். போலீசுக்கு இதெல்லாம் தெரியாமல் இருக்குமா? அல்லது நாங்கள்தான் அதிகமாக எதிர்பார்க்கிறோமா?” என வெறுமையுடன் பேசுகிறார் ஷகிலா.

இதேபோன்று உ.பி-யில் பல பகுதிகளிலும் ஆதித்யநாத் அரசின் ஆசிகளுடன் காவி கும்பல்கள் வன்முறையைத் தூண்டி அப்பாவி முசுலீம் இளைஞர்களை சிறைக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறது. இந்திரா காந்தி அரசால் 1980-களில் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய பாதுகாப்புச் சட்டம் கருப்பு மார்கெட் நடத்துகிறவர்களையும் கடத்தல்காரர்களையும் கைது செய்வதற்காக பயன்படுத்தப்படும் என்று சொன்னது. ஆனாலும் இந்த சட்டத்தின் கீழ் முதலில் கைது செய்யப்பட்டவர்கள் தொழிற்சங்கவாதிகள்தான்.  அவர்களுடைய செயல்பாடுகளுக்காக கைது செய்யப்படாமல் அரசை விமர்சித்தார்கள் என்பதற்காகவும் பொதுக்கூட்டத்தை நடத்தினார்கள் என்பதற்காகவும், அரசுக்கு ஒத்துழைப்பு தரமாட்டோம் என்றவர்கள் மீதும், நிலுவைத் தொகையை கேட்டவர்கள் மீதும் தே.பா.ச. பாய்ந்தது.

குட்டி சாமியார் – மஹந் ஆதித்யநாத் திவாரி.

தெற்காசிய மனித உரிமை ஆவண மையத்தைச் சேர்ந்த ரவி நாயர், “முன்னெரிச்சரிக்கை கைது சட்டத்தில் மிக மோசமானது. இதுபோன்ற சட்டங்களை பயன்படுத்தும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இது சர்வாதிகாரத்தால் பயன்படுத்தப்படும் சட்டம். ஜனநாயகத்தை பகுதி நேரமாக பாவிக்கும் நாடுகள்கூட ஒவ்வொரு ஆண்டும் இத்தகைய முன்னெச்சரிக்கை தடுப்பு சட்டங்கள் தேவையா என பரிசீலிக்கின்றன. ஆனால், இந்தியா அதை செய்வதில்லை” என்கிறார்.

“கைதானவர் மீது எந்தவித கிரிமினல் வழக்குகளும் இல்லாதபட்சத்தில் தே.பா.சட்டத்தில் கைதாகிறவருக்கு ஏன் கைது செய்தோம் என்கிற தகவல் அளிப்பதில்லை. இது ஒருவருக்குள்ள சுதந்திர வாழ்க்கைக்கான வாழும் உரிமையை தெளிவாக மறுப்பதாகும். இதுபோன்ற சட்டங்கள் முழுக்க முழுக்க அரசியல் ஆயுதமாகத்தான் பயன்படுத்தப்படும், நிச்சயம் சட்டமாக ஒரு பயனும் இல்லை” என்கிறார் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்.

கிழக்கு உ.பி-யில் நடந்தேறிய தேசிய பாதுகாப்புச் சட்ட கைதுகள் அனைத்தும் போலீசின் அதிகார துஷ்பிரயோகத்தையே காட்டுகிறது. ஹிந்து சமாஜ் பார்டி, ஹிந்து யுவ வாஹினி மற்றும் உள்ளூர்வாசிகளை சாட்சிகளாக வைத்தே அனைத்து கைதுகளையும் நடத்தியிருக்கிறது போலீசு. சாமியார் ஆதித்யநாத், பெரும் எண்ணிக்கையிலான முசுலீம்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என நிறுவ பார்ப்பதாக பல செயல்பாட்டாளர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

“இது மனுவாத நடைமுறையின் ஒரு பகுதி. முசுலீம்களையும் தலித்துகளையும் இந்து ராஷ்டிர செயல்திட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து தேசிய கட்சிகள் எப்போதும் சேர்த்துக்கொள்வதில்லை. 2019-ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தலுக்கு முன், தே.பா.சட்டம் குறிப்பிட்ட சிலரின் மேல் பாய்ந்து, அவர்கள்தான் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என காட்டுவார்கள். மதவாத அடிப்படையில் வாக்கு வங்கியை ஒருங்கிணைக்க இத்தகைய நடவடிக்கைகள் அவர்களுக்கு உதவும்” என்கிறார் செயல்பாட்டாளர் ராஜுவ் யாதவ்.

நன்றி: நேஹா தீட்சித், மற்றும் தி வயர்

தமிழாக்கம்: கலைமதி

செயற்பாட்டாளர் கைது : பா.ஜ.க.வின் வண்டு முருகனாய் வாதாடும் புனே போலீசு !

பீமா கோரேகான் வழக்கில் கடந்த ஜனவரி 1, 2018 அன்று புனேயில் நடைபெற்ற வன்முறை சம்பவம் குறித்து மராட்டிய போலீசு நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கைகளில் பெருமளவிலான முரண்பாடுகள் உள்ளன.

வரலாற்றாளர் ரொமீலா தாப்பர் உள்ளிட்ட 4 பிரமுகர்கள், கடந்த ஆகஸ்ட் 28 அன்று நடைபெற்ற கைது நடவடிக்கையை, ”போலீசின் அதிகார துஷ்பிரயோகம்” என்று குறிபிட்டு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். இதற்கு புனே நகரப் போலீசு, கடந்த செப்டம்பர் 3 அன்று தாக்கல் செய்த பதில் மனுவில் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 31 அன்று நடைபெற்ற எல்கார் பரிஷத் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள்தான் மறுநாள் பீமா கோரேகானில் ஏற்பட்ட வன்முறைக்குக் காரணம் என்று குறிப்பிட்டது.

இரண்டு ஓய்வு பெற்ற நீதிபதிகள் உள்ளிட்ட எல்கார் பரிஷத் மாநாட்டின் ஏற்பாட்டாளர்களோடு அம்பேத்கரிய அமைப்புகள் மற்றும் இடதுசாரி செயற்பாட்டாளர்களையும் ஒன்றிணைத்தது அந்த மாநாடு. போலீசோ, தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பினரும் சேர்ந்துதான் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளனர் என தனது பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் ஆறு மாதங்களுக்கு முன்னதாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மற்றொரு மனுவில், வன்முறை சம்பவங்களுக்கு முற்றிலும் வேறானதொரு காரணத்தைக் கூறியுள்ளது மராட்டிய போலீசு. புனே புறநகர் போலீசு கடந்த பிப்ரவரி 13-ம் தேதியன்று தாக்கல் செய்த மனுவில் ”சமஸ்தா ஹிந்து அகாடி” என்ற அமைப்பின் தலைவரான மிலிந்த் ஏக்போடேதான் ஜனவரி 1 நெருங்குவதற்கு முன்னாலிருந்தே வன்முறையைத் தூண்டும் விதமாக நோட்டீசுகள் கொடுத்து வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.

நீதிமன்ற விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட, ”சமஸ்தா ஹிந்து அகாடி” என்ற அமைப்பின் தலைவன் மிலிந்த் ஏக்போடே.

புனே நகரின் துணை மேயர் அளித்துள்ள அறிக்கையும், பீமா கோரேகான் மற்றும் அதனருகில் உள்ள ஒரு கிராமம் குறித்து அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ள வரலாறு தவறானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

”குற்றம்சாட்டப்பட்டுள்ள இந்த வழக்கில், விசாரணையின் போது, மிலிந்த் ஏக்போடே, இக் குற்றச் சதியில் உத்வேகமாகப் பங்கேற்றிருக்கிறார் என்பது அம்பலமாகி இருக்கிறது… ————- …மேலே கூறப்பட்ட குற்றங்களைச் செய்ய ஏக்போடே திட்டமிடுகையில்….. ——– …..சமூக ஒற்றுமை மற்றும் சட்ட ஒழுங்கை அபாய நிலைக்குத் தள்ளியுள்ளார். இதன் காரணமாக கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொது மற்றும் தனியார் உடைமைகள் சேதமடைந்திருக்கின்றன.” என்று போலீசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.

அவரது பிணை மனுவை எதிர்த்ததோடு, விசாரிப்பதற்காக அவரை போலீசு காவலில் எடுக்க வேண்டிய அவசியம் இருக்கிறது என்றும், இந்த வன்முறை, குற்றங்களோடு வேறெந்த இந்து தீவிரவாத அமைப்பு சம்பந்தப்பட்டுள்ளதா என கண்டுபிடிக்க வேண்டியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது போலீசு.

ஏக்போடே கடந்த மார்ச் 14 அன்று கைது செய்யப்பட்டார். மற்றும் அவரது முன்பிணை மனுவை நிராகரித்தது உச்சநீதிமன்றம். ஆனால் புனே செசன்ஸ் நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 4 அன்று பிணை பெற்று வெளியே வந்துவிட்டார் ஏக்போடே.

உச்சநீதிமன்றத்தில் முற்றிலும் முரணான இரண்டு மனுக்களை மராட்டிய போலீசு எவ்வாறு தாக்கல் செய்ய முடியும் என்பது புரியவில்லை.

மேலும், கடந்த ஜூலை மாதம் நீதி விசாரணைக் குழுவின் முன்னால் இந்த இரண்டு முரணான மனுக்களுக்கும் முரணான வேறொரு காரணத்தைக் கூறியுள்ளது மராட்டிய போலீசு. பீமா கோரேகானில் நடைபெற்ற இந்த வன்முறைச் சம்பவம் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற்றுவந்த சண்டைகளின் விளைவாகவே நிகழ்ந்தது எனக் கூறியுள்ளது. போலீசின் சார்பாக வாதிட்ட ஷிஷிர் ஹிரே, எந்த ஒரு அமைப்பையோ, எந்த ஒரு குழுவையோ வன்முறைக்கான காரணகர்த்தாவாக குற்றம்சாட்டும் நிலையில் தாங்கள் இல்லை என்றே கூறியிருக்கிறார்.

நீதி விசாரணைக்காக, கடந்த பிப்ரவரி மாதம் அரசால் நியமிக்கப்பட்ட இரு நபர் கமிசன், மே மாதம் முதல் ஜூலை மாதம் வரையில் சாட்சியங்கள் மனுத்தாக்கல் செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

மராட்டிய போலீசு சுமார் 10,000 பக்கங்கள் உள்ள 110 மனுக்களை தாக்கல் செய்தது. தாக்கல் செய்யப்பட்ட 490-க்கும் அதிகமான மனுக்களில் 10-க்கும் குறைவான மனுக்கள் மட்டுமே புனே அல்லது மும்பையைத் தவிர பிற இடங்களிலிருந்து வந்திருந்தன. மற்றவையனைத்தும் புனே மற்றும் மும்பையிலிருந்து வந்தவையே. இந்த விசாரணைக் கமிசன் தமது விசாரணையின் முதல் சுற்றை கடந்த வாரம் மும்பையில் தொடங்கியுள்ளது. ஸ்க்ரோல் இணையதளம் இந்த விசாரணையில் மொத்தம் மூன்று நாட்கள் பார்வையாளராகக் கலந்து கொண்டது.

முதல் நாளில் 44 வயதான மனிஷா கோப்கர் விசாரணையில் கலந்து கொண்டார். அவரும் அவருடன் சேர்ந்து ஒரு குழுவினரும் தானேவிலிருந்து ஒரு பேருந்தை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு பீமா கோரேகானிற்கு வந்ததை விவரித்தார். மனிஷா கோப்காரும் அவருடன் வந்தவர்களும் வாகன நிறுத்துமிடத்திலிருந்து நினைவிடத்திற்கு நடந்து செல்கையில், அங்கு வன்முறை நடப்பதாக சிலர் தெரிவித்ததால் திரும்பிவிட்டதாகவும் தெரிவித்தார்.

தாங்கள் ஒதுங்கியிருந்த கட்டிடத்தின் மாடியில் இருந்து பலரும் தங்கள் மீது கற்களை எரிந்தனர் என்றும், தனது மகளைக் காப்பாற்ற எத்தனித்த தமக்கும் காயம் ஏற்பட்டதையும் கோப்கார் குறிப்பிட்டுள்ளார். தமது வாகனத்திற்கு வந்து சேர்ந்ததும், தங்களை அம்பேத்கரியர்களாக அடையாளப்படுத்தும் நீலக் கொடியை தமது வாகனங்களிலிருந்து உடனடியாக நீக்கியதாகவும், அப்போது அங்குவந்த மஞ்சள் சட்டை அணிந்த நபர்கள் தங்களது வாகனத்தின் மீது கற்களை வீசியதாகவும் குறிப்பிட்டார்.

இரண்டாம் நாளில் அவரை அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஷிஷிர் ஹிரே கேள்வி கேட்கையில், தாம் ஜூலை மாதம் பேசியதை அப்படியே மாற்றிப் பேசினார். “இந்த வன்முறையை நிகழ்த்த காவி அல்லது நீலத்தைத் தவிர வேறு ஒரு மூன்றாவது சித்தாந்தம் இருக்க வாய்ப்பிருக்கிறதா?” என கோப்காரிடம் இருமுறை கேள்வி கேட்டார். இங்கு காவி என ஹிந்துத்துவாவை அவர் குறிப்பிடுகிறார்.

கோப்கார் பதிலளிக்கையில், இவையிரண்டையும் தவிர, அன்று வன்முறையில் ஈடுபடுவதற்கு மூன்றாம் சித்தாந்தத்திற்கும் வாய்ப்பிருக்கிறது என்றும் தான் என்ன பார்த்தேனோ அதுமட்டுமே தமக்குத் தெரியும் என்றும் கூறியுள்ளார்.

இவ்விசாரணையின் போது ஹிரே, ”மூன்றாம் சித்தாந்தமானது பல்வேறு குழுக்களுக்கு மத்தியில் அராஜகத்தை உருவாக்கக்கூடிய சித்தாந்தமாகும்” என்று கூறினார். ஆனால் அதனை மேலதிகமாக விளக்கவில்லை.

அவர் குறிப்பாக என்ன சொல்கிறார் என்பதையும், அவரது நிலைப்பாட்டின் மாற்றத்திற்கான காரணம் குறித்த விளக்கத்தையும் ஸ்க்ரோல் இணையதளம் கேட்கையில் அதற்கு பதிலளிக்க மறுத்துவிட்டார் ஹிரே.

”கோப்காரின் மனுவிலேயே நீலம் மற்றும் காவிக் கொடிகள் குறித்து குறிப்பிட்டுள்ளார். மூணாவது சித்தாந்தம் எது என்பதை உங்களது சிந்தனைக்கே விட்டு விடுகிறேன். ஏதேனும் மூன்றாம் சித்தாந்தம் ஒன்று இருக்கிறதா என அனைத்து வகையான வாய்ப்புகளையும் ஆராய்ந்து வருகிறோம். அனைத்து காரணங்களையும் விசாரணைக் கமிசனின் முன்னால் கொண்டுவந்து சேர்ப்பது எங்களது கடமை” என்று ஹிரே கூறினார்.

மேலும், “கமிசனின் முன்னால் வந்த சாட்சிகள் பீமா கோரேகான் வன்முறைக்கான காரணம் மற்றும் அதன் பின்விளைவுகள் குறித்த புனே புறநகர் போலீசின் விசாரணைக்குப் பொருத்தமான சாட்சிகளாவர். புனே நகர போலீசின் விசாரணை முற்றிலும் வேறானது. விசாரணைக் கமிசனுக்கு முன்னால் புனே புறநகர் போலீசு தமது அறிக்கையை அடுத்த மாதத்தில் சமர்ப்பிக்கும். புனே நகர போலீசு தமது அறிக்கையை எப்போது வழங்குவார்கள் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை” என்கிறார் ஹிரே.

இன்னும் சொல்லப்போனால், மோடியின் குருநாதர் சாம்பாஜி பீடே மீதான வழக்கை, திசை திருப்புவதோடு, மோடியின் மீதான ரஃபேல் ஊழல், சனாதன் சன்ஸ்தா கொலைக்கும்பல் கைது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளிலிருஎது காவிக் கும்பலை மீட்க, ரெட்டை நாக்கு என்ன ரெண்டாயிரம் நாக்குகளாகவும் பேசத் தயங்காது காவிமயமாகிப் போன போலீசு

நன்றி: scroll
தமிழாக்கம்: – வினவு செய்திப்பிரிவு.

மூலக் கட்டுரை: Many voices of Maharashtra police: Contradictory claims on Bhima Koregaon violence in SC and outside

ஐ.நா அறிக்கையில் இந்தியாவின் மனித உரிமை மீறல் ! கருத்துக் கணிப்பு

ஐ.நா.-வின் பொதுச் செயலர் ஆன்டானியோ ஐக்கிய நாடுகள் சபையின் ஒன்பதாவது ஆண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் மனிதநல ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் – செயற்பாட்டாளர்கள் கொல்லப்படுவது, கைது செய்யப்படுவது, பழிவாங்கப்படுவது ஆகிய குற்றங்கள் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அதிகரித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமைக் கமிஷனில் உறுப்பினர்களாக உள்ள 38  நாடுகளில் மேற்கண்ட மனித உரிமை மீறல் குற்றங்கள் நடப்பதாக அறிக்கை கூறுகிறது. இந்த நாடுகளில் உள்ள சட்டம், நீதி அமைப்பு, அரசியல், அரசு நிர்வாகம் ஆகியவை சமூக ஆர்வலர்களை பழிவாங்குவதற்கு தவறாக பயன்படுத்துவது அதிகரித்து வருவதாகவும் அறிக்கை கூறகிறது.

இத்தகைய மனித உரிமை மீறல் நடக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா போக, அல்ஜீரியா, பக்ரைன், சீனா, எகிப்து, ஈரான், ஈராக், ஜப்பான், மெக்சிகோ, மொராகோ, மியான்மர், பாகிஸ்தான், ருவண்டா, சவுதி அரேபியா, தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், உஸ்பகிஸ்தான், வெனிசுலா ஆகிய நாடுகள் உள்ளன.

குறிப்பாக சீனா மற்றும் இந்தியாவில் அரசு மற்றும் அமைப்புகளின் ஊழல்களை தட்டிக்கேட்கும் சமூக ஆர்வலர்கள் பழிவாங்கப்பட்டு கொல்லப்பட்டு வருகின்றனர் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்க முதலான வல்லரசு நாடுகளின் கையில் இருக்கும் ஐ.நா.வின் பாரபட்சமான போக்கிற்கு சான்றாக இப்பட்டியலில் மேலை நாடுகள் இல்லை. எனினும் இந்த விமர்சனத்தை இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் வைப்பது போன்று வலது சாரி வெறியர்கள் கூற முடியாது. ஏனெனில் பட்டியலில் இருக்கும் இந்தியா, சவுதி அரேபியா, ஜப்பான், பாகிஸ்தான் போன்றவை தீவிரமான அமெரிக்க அரசு ஆதரவு நாடுகள். அதிலும் இந்தியாவெல்லாம் தன்னை முற்று முழுதாக அமெரிக்க சேவைக்கு ஒப்படைத்துக் கொண்ட நாடு.

சீனா, வெனிசுலா போன்ற நாடுகள் கூட அமெரிக்காவின் அரசியலுக்கு ஏற்ப எதிர்க்கப்படுவதற்கு காரணம் இருக்கிறது. ஆனால் அமெரிக்காவின் அடியாளாக இருக்கும் இந்தியா ஏன் இப்பட்டியலில் இடம்பெறுகிறது?

ஏனென்றால் மோடி ஆட்சி ஏற்ற பிறகு இந்துமதவெறியர்கள் தங்களுக்கு பிடிக்காத சமூக ஆர்வலர்களைக் கொல்வது, கைது செய்வது மிகவும் அதிகரித்திருக்கிறது. கடைசியில் அறிவுத்துறையினரைக் கூட கைது செய்யும் போது அது உலக அளவில் கல்வி – அறிவுத் துறையினர் மூலம் பெரிதும் பேசப்படும் செய்தியாகிறது.

ஆகவே ஆர்.எஸ்.எஸ். மற்றும் அமெரிக்காவின் அடிமைகளாக இருக்கும்  பா.ஜ.க.-வினர், ஐ.நா. கூறியிருக்கும் இந்தக் குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டே ஆகவேண்டும்.

மக்களுக்காக பாடுபடும் சமூக ஆர்வலர்களை வதைக்கும் இந்திய அரசை ஐ.நா. அம்பலப்படுத்தியதற்கு இவர்களிடம் பதிலேதும் இல்லை!

கேள்வி:

இந்தியாவில் சமூக ஆர்வலர்கள் பழிவாங்கப்படுவதாக ஐ.நா. அறிக்கை கூறியிருப்பதற்கு என்ன காரணம்?

  • அதிகமாகும் ஒடுக்குமுறை
  • ’கிறித்தவ நாடு’களின் சதி

ட்விட்டரில் வாக்களிக்க:

யூடியூபில் வாக்களிக்க:

https://www.youtube.com/user/vinavu/community

ஃபேஸ்புக்கில் வாக்களிக்க:

  • வினவு செய்திப் பிரிவு

நூல் அறிமுகம் : அம்பேத்கரியர்கள் – நெருக்கடியும் சவால்களும்

ம்பேத்கரியர்களிடம் உள்ள முக்கிய குறைகளில் ஒன்று என அனுபவம் காட்டுவது என்னவென்றால், அவர்கள் கடந்தகாலத்தை நோக்கியவர்களாக உள்ளார்கள் என்பதுதான். அம்பேத்கரியர்களின் சொல்லாடல்களில் பெரும்பாலானவை கடந்தகாலத்தை நோக்கிய வையாகும். அவர்கள், சாதிகளின் மூலங்களையும் அவற்றின் கூறுகளையும் புரிந்து கொள்ள அம்பேத்கர் மேற்கொண்ட முயற்சிகளை தாங்களும் செய்ய விரும்புகிறார்கள்.  அதற்கான காரணம் எதுவாக இருந்தபோதிலும், சூத்திரர்கள் யார்? தலித்துகள் யார்? சாதி அமைப்பு தோன்றியது எவ்வாறு?, தலித்துகள் பௌத்தர்களாக இருந்தது எவ்வாறு?, இந்து வழிபாட்டுத் தலங்கள், முன்பு பௌத்த விகாரைகளாக இருந்தனவா? திருப்பதி, சபரிமலை, வித்தல் கோவில்கள் முன்பு என்னவாக இருந்தன ? காந்தியோ நேருவோ செய்தது என்ன? என்பன போன்ற கேள்விகளை எழுப்புவதில் அவர்கள் மகிழ்ச்சியடைவதாகத் தோன்றுகிறது.

தலித்துகளின் நிலை சரிந்துவருவதும், அவர்களிடையே நிலமற்றோர் எண்ணிக்கை அதிகரித்துவருவதும், கடந்த பத்தாண்டுகளில் பொதுத்துறை, அரசாங்க வேலைகள் கிடைப்பது தொடர்ந்து குறைந்து கொண்டே வந்து நிகர இட ஒதுக்கீடு என்பது பூஜ்ஜியமாக ஆகிவிட்டதும் அவர்களது அக்கறைக்குள்ளாவதில்லை.

முதலாளியம் உலகத்தை எவ்வாறு வடிவமைத்துள்ளது? உலகமயமாக்கலால் கொண்டு வரப்பட்ட மாற்றங்கள் என்ன? அந்த மாற்றங்கள் மூலம் நமக்கு ஏற்பட்டுள்ள நிலை என்ன? புவிசார் அரசியல் மாற்றங்களிலிருந்து நாம் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டுள்ளோமா? அமெரிக்காவிலோ, ஆப்பிரிக்காவிலோ உள்ள கறுப்பின மக்கள் சாதித்துள்ளவற்றோடு ஒப்பிடுகையில் நாம் சாதித்துள்ளவற்றின் அளவு என்ன? உலக முதலாளியம் மக்களின் ஆதார வளங்களைக் கொள்ளையடித்து வருவதற்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களில் நமக்கு ஒரு பாத்திரம் இருக்க வேண்டாமா? இன்னும் ஏராளமான கேள்விகள் உள்ளன. எனவே நமக்குள்ள சவால் என்பது தலித் அம்பேத்கரியர்களைக் கடந்த காலத்திலிருந்து நிகழ்காலத்துக்கு இழுத்து வந்து எதிர்காலத்தைப் பார்க்கும்படி அவர்களை உந்தித் தள்ளுவதுதான். அப்போதுதான் அவர்கள், சாதி – எதிர்ப்பு இயக்கம் தொடங்கி ஒரு நூற்றாண்டுக் காலத்திற்குப்பிறகு சாதி அமைப்பில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை அறிந்து கொள்வார்கள். பாம்பு அவர்களைக் கடந்து ஓடிவிட்டபிறகு தாங்கள் பாம்புத் தடத்தை அடித்து கொண்டிருந்ததை உணர்வார்கள். அவர்கள் எதிர்கொள்ளவேண்டியது நடப்புக்கால யதார்த்தம்தானேயன்றி, அதன் மீதுள்ள கடந்தகால அடையாளங்கள் அல்ல என்பதை உணர்வார்கள்.

அம்பேத்கரியர்கள் நிகழ்காலத்துக்கு வந்தவுடன், தமக்கு எதிரே உள்ள சவால்களை அவர்களாகவே பார்ப்பார்கள். உறங்கிக்கொண்டிருக்கும் இராட்சசனைப் பற்றிப் பழங்கதைகளில் சொல்லப்படுகிறதே, அவனைப் போன்றவர்கள் தலித் அம்பேத்கரியர்கள். அந்த இராட்சதனை தூக்கத்திலிருந்து எழுப்பினால், அவன் உலகத்தை அசைத்துக் குலுக்குவான். அம்பேத்கரியர்கள் மயக்கத்தில் ஆழ்ந்துள்ளனர், தவறான கருத்து நிலை மருந்துகள் அவர்களைத் தூக்கத்தில் ஆழ்த்தியுள்ளன என்று கருதுபவர்களில் நானும் ஒருவன். அவர்கள் தங்களது யதார்த்த நிலை, தங்களது சுற்றுச்சூழலின் யதார்த்த நிலை ஆகியவற்றைக் காண்பதற்கு தூக்கத்திலிருந்து விழித்தெழுவார்களேயானால், இந்தியாவின் இன்றைய நிலை இனி அப்படியே தொடர்ந்து இருக்காது.
ஆனந்த் டெல்டும்டே
(நூலில் பக்கம் 48, 49)

  • வினவு செய்திப் பிரிவு

நூல்: அம்பேத்கரியர்கள்
(நெருக்கடியும் சவால்களும்)
ஆசிரியர்: ஆனந்த் டெல்டும்டே
தமிழில்: எஸ்.வி.ராஜதுரை

வெளியீடு: விடியல் பதிப்பகம்,
88, இந்திரா கார்டன் 4 – வது வீதி, உப்பிலி பாளையம் – அஞ்சல், கோயம்புத்தூர் – 641 015.
பேச: 0422 – 2576772 ; 9443468758.
மின்னஞ்சல்: vidiyalpathippagam2010@gmail.com

பக்கங்கள்: 56
விலை: ரூ.35.00,
என்சிபிஹெச் வெளியீட்டில் விலை ரூ. 50.00

இணையத்தில் வாங்க: மெரினா புக்ஸ்| (இங்கு என்.சி.பி.ஹெச் வெளியீடாக விலை ரூ. 50ல் கிடைக்கிறது)

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு:
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி: 99623 90277