1947- என்பது ஆங்கிலேயரிடமிருந்து இந்தியா விடுதலை அடைந்த ஆண்டு மட்டுமல்ல, இந்தியா என்கிற ஒரு நாடு, இந்தியா, பாகிஸ்தான் என்று இரண்டாக பிரிக்கப்பட்ட ஆண்டும் கூட. நாட்டுப் பிரிவினை என்ற எல்லைக் கோட்டினால் பல கோடி மக்களின் இதயத்தில் மாறாத வலியையும், வடுவையும் கொடுத்த ஆண்டு.
ஆங்கிலேயர்களின் பிடியிலிருந்து இந்தியா ‘சுதந்திரம்’ பெற்றதால் நாட்டின் மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளில் கொண்டாட்டத்திலிருந்த போது மேற்கிலும், கிழக்கிலும் மற்றும் வடக்கின் பல பகுதிகளிலும் பிரிவினையின் அர்த்தத்தை கோடான கோடி மக்கள் வர்ணிக்க முடியாத துயரங்களுடனும் இழப்புகளுடனும் உள்வாங்கிக் கொண்டிருந்தனர்.
இந்தப் பிரிவினைக்குக் காரணம் முஸ்லீம் லீக் தான் என்று ஒரு சாரரும் , முகம்மது அலி ஜின்னா தான் என்று சிலரும் , காங்கிரஸ் தான் என்று ஒரு சாராரும், காலங்காலமாக சாதி இந்துக்கள் இஸ்லாமியரை தீண்டத்தகாதவராக நடத்தியது தான் காரணம் என்று பலரும், ஆங்கிலேயர்கள் தங்களது பிரித்தாளும் சூழ்ச்சியால் இந்தியர்கள் தங்களுக்குள் வெட்டிக் கொண்டு சாகட்டும் என்று எடுத்த முடிவு தான் காரணம் என்று ஒரு வாதமும் அப்போது எழுந்தது.
பிரிவினையால் கோடிக்கணக்கான மக்கள் இப்படி இடம் பெயர நேரிடும் என்று யாரும் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. அடுத்து, பிரிவினையால் நவகாளியிலும் ராவல்பிண்டியிலும் நடைபெற்ற கலவரங்கள் மக்களின் ஒற்றுமையைச் சிதைத்து விட்டன. நம்மில் பலரும் அறியாத அந்த வலிகள் நிறைந்த வரலாற்றை கீழ்காணும் ஆறு கட்டுரைகள் மூலம் கொடுத்துள்ளார் ச. தமிழ்ச்செல்வன்.
அவையாவன,
1- 1947 2- தோஆ கல்சாவின் துயரம் 3- பாக்கிஸ்த்தானிலிருந்து ஒரு குரல் 4- மௌனங்களும் சிரிப்புகளும் 5- வங்கதேசத்திலிருந்து ஒரு குரல் 6- பிரிவினையில் இரயில்வே தொழிலாளி
முதல் கட்டுரையான 1947 இல் உள்ள சாராம்சத்தை பார்க்கலாம்.
• “ராவல்பிண்டியில் 14 அறைகள் கொண்ட இரண்டடுக்கு மாளிகையும் நகரை அடுத்து அறுபது ஏக்கர் விளைச்சல் நிலமும் சொந்தமாகக் கொண்ட ஒருவர் இந்தியாவில் கான்பூர் அல்லது லக்னோவை ஒட்டிய நகர்ப் பகுதியில் இதற்கு ஈடான சொத்துக்கள் உடைய ஒருவருடன் அப்படியே பரிமாற்றம் செய்துகொள்ள தயாராக இருக்கிறார்” என்பது போன்ற எண்ணற்ற விளம்பரங்கள் தினசரிகளில் வரத் துவங்கின. ஆகஸ்ட் 15-க்கு முன்பே இந்தப் பரிமாற்றங்கள் நிகழத் துவங்கி விட்டன. எனினும் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை விட்டு விட்டு உயிரைச் காப்பாற்றிக் கொள்ள பூர்வீக ஊர்களை நிரந்தரமாக துறந்து இருபக்கமும் மக்கள் புலம் பெயர்ந்தனர்.
• பல கிராமங்கள் ஊரைக் காலி செய்துவிட்டு கால்நடைகளுடனும் தட்டுமுட்டுச் சாமான்களுடனும் இந்தியாவை (அல்லது பாகிஸ்தானை) நோக்கி நடக்க ஆரம்பித்தனர். சாலைப் பயணம் நீள நீள நடக்கின்ற கூட்டமும் பத்தாயிரம் பேர் இருபதாயிரம் பேர் எனப் பெருகும். இந்த ஊர்ந்து போகும் மக்கள் திரளை “கஃபிலா’ (Kafila) என்று அழைத்தனர். மிகப் பெரிய கஃபிலாவில் ஒரு சமயம் 4 லட்சம் பேர் நடந்து வந்தனர். இந்த அனாதரவான கஃபிலா ஒரு இடத்தைக் கடக்க எட்டு நாள் ஆனது. இடையில் மதவெறியர்களின் தாக்குதலுக்கு இந்த கஃபிலா ஆளாகும். பெண்கள் கடத்திச் செல்லப்படுவார்கள்… ஒன்றும் செய்ய முடியாது. கதறி அழுதபடி ‘கஃபிலா’வின் பயணம் தொடரும். எதிரெதிர் திசைகளில் கஃபிலாக்களின் நகர்தல் குடிக்க நீரின்றி, உண்ண உணவின்றி, நோய்க்கு மருந்தின்றி, செத்துச் செத்து விழுந்த மக்கள் ஏராளம்.
• குறைந்தது 10 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். பஞ்சாபில் மட்டும் ஒரு கோடிப் பேருக்கு மேல் எல்லையை கடந்தனர். 75000 பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகினர்.
• கடத்தப்பட்ட தங்கள் பெண்கள், குழந்தைகள் பற்றி முறையாக புகார் தந்தவர்கள் பலர். விபரம் தெரியாமல் கண்ணீருடன் காலத்தில் புதைந்து போனவர்கள் பலர். புகார்களின் எண்ணிக்கை பெருகப் பெருக 1949-ல் இந்திய அரசு ஒரு சட்டம் கொண்டு வந்தது. “கடத்தப்பட்டவர்களின் மீட்பு மற்றும் மறு வாழ்வுக்கான சட்டம் 1949” கடத்தப்பட்டவர் யார் என்பதை அந்தச் சட்டம் விளக்கியது. 1957 வரை தேடும் பணி தொடர்ந்தது. 1957 உடன் இச்சட்டம் காலாவதியானது. அதற்கு மேல் தேடுவதற்கு இரு நாடுகளிலும் அனுமதி இல்லை.
• 01.03.1947 க்குப் பிறகும் 01.01.1949 க்கு முன்பும் தங்கள் குடும்பத்தாரிடமிருந்து பிரிக்கப்பட்ட 16 வயதுக்கு கீழ்ப்பட்ட ஆண் மற்றும் எல்லா வயது பெண்களும் இந்த தேதிகளுக்கு இடையே பிறந்த குழந்தைகளும் கடத்தப்பட்டவராக கருதப்பட்டனர். இந்திய மற்றும் பாகிஸ்தானியர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு புகார்களின் அடிப்படையில் இரு நாடுகளிலும் தேடும் பணி நடைபெற்றது. பலர் மீட்கப்பட்டு அவரவர் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
• பிரிவினையின் போது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களுக்குப் பிறந்து அனாதையான குழந்தைகளை என்ன செய்வது என்பது இரு நாடுகளுக்கும் பிரச்சினை ஆனது. ஒரு இந்து தகப்பனுக்கும் முஸ்லீம் தாய்க்கும் பிறந்த குழந்தை எந்த மதத்தை சேரும்? அல்லது முஸ்லீம் தகப்பனுக்கும் இந்து தாய்க்கும் பிறந்த குழந்தையை எங்கே வைத்திருப்பது? இந்தியாவிலா? பாகிஸ்தானிலா? அது எந்த நாட்டுப் பிரஜையாக இருக்கும்? நாடாளுமன்ற அவைகளில் அமைச்சர் பெருமக்கள் அறிஞர்கள் விவாதித்தனர். அதிர்ச்சியூட்டும் கருத்துக்களை அறிஞர்கள் அவைகளில் அள்ளி வீசிக் கொண்டிருக்க அனாதைக் குழந்தைகள் இந்திய பாகிஸ்தான் தெருக்களில் குழந்தை உழைப்பாளிகளாக பிச்சைக்காரர்களாக சில்லறைத் திருடர்களாக தங்கள் பால்ய காலத்தை கரைக்கத் துவங்கி விட்டிருந்தனர்.
• 50,000 தாழ்த்தப்பட்ட குடும்பங்கள் பாகிஸ்தானிலிருந்து தப்பி இந்தியா வந்து சேர்ந்திருந்தனர். நிவாரண முகாம்களில் அவர்களுக்கு அடைக்கலம் தராமல் அதிகாரிகள் தட்டிக் கழித்தனர். எல்லைப்பகுதியில் இரண்டு வகையான நிவாரண முகாம்கள் அப்போது இயங்கின. பாகிஸ்தானிலிருந்து தப்பி வந்த இந்துக்கள், சீக்கியர்களுக்கான முகாம் ஒன்று. பாகிஸ்தான் செல்வதற்காக காத்திருக்கும் முஸ்லீம்களுக்கான முகாம் ஒன்று. சாதி இந்துக்களை முகாம்களில் சேர்க்க முழு முயற்சியில் ஈடுபட்ட அதிகாரிகள் தாழ்த்தப்பட்ட மக்களை எதிலும் சேர்க்க மறுத்தனர். முகாம்களில் இருப்பவர்களுக்குத் தான் ரேஷன் கிடைக்கும்.
• தேசப்பிரிவினையின் போது பெண்ணின் உடம்பின் மீது எழுதப்பட்ட வரலாறு:
i. “எதிர்”மதத்தின் பெண்களை இழிவுபடுத்துவது என்பது அவர்களுடைய மதத்தை, நம்பிக்கைகளை, அவர்களுடைய தன்மானத்தை, ஆழமாக கிழிக்கும் செயல் என்பதாக பரஸ்பரம் இந்துக்களும் முஸ்லீம்களும் புரிந்து கொண்டிருந்தனர்.
ii. மாற்று மதத்தவரின் இளம் பெண்களை கடத்திச் சென்றனர். பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கினர். அவர்களை பாலியல் வன்புணர்வு செய்ததன் மூலம் அப்பெண்களின் உடம்பின் மீது செய்யும் ஆக்கிரமிப்பு பிற மதத்தவர் மீது நாட்டிய வெற்றிக் கொடியாக கருதப்பட்டது.
iii. “அவர்களது” பெண்களை நிர்வாணமாக்கி நடுத்தெருவில் ஓடச்செய்வது.
iv. பெண்களை நிர்வாணமாக்கி அவர்களது மார்பகங்களை அறுத்து எறிவது (இதனால் இறந்தவர்கள் ஏராளம்).
v. பெண் உறுப்பு மற்றும் மார்பகங்களில் பிறைச்சந்திரன் / திரிசூலம் சின்னத்தை சூட்டுகோலால் வரைவது என, என்றுமே அழியாத இழிவாக பெண்ணின் அந்தரங்க உறுப்பில் மாற்று மதத்தின் சின்னத்தை இருக்கச் செய்வது.
vi. “அவர்கள்” தாக்க வருகிறார்கள் என்று அறிந்தும் தாங்கள் வீட்டுப் பெண்களை கொன்று விட்டு தப்பிச் செல்வது அல்லது தம் வீட்டுப் பெண்களை தற்கொலை செய்து கொள்ளுமாறு தூண்டுவது நிர்ப்பந்திப்பது வழிகாட்டுவது.
vii. தங்கள் உயிரை பலியாகக் கொடுத்த தம் வீட்டுப் பெண்களை குல தெய்வமாக்கி இன்றும் வணங்கி வருவது, தற்கொலை செய்ய மறுத்து இன்றும் உயிர்வாழும் தம் வீட்டுப் பெண்களை மாற்றுக் குறைவாக மதிப்பது.
இப்படி முடிவற்று நீண்டு செல்லும் துயர்மிக்க கதைகளை தேசப்பிரிவினை நமக்குப் பரிசாகத் தந்துவிட்டது என்று கூறும் ச. தமிழ்ச்செல்வன், 1947 பற்றி சில கேள்விகளையும் நம் முன் வைக்கிறார்.
1. லட்சக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டது தீவிரவாதிகளால் அல்ல. சாதாரணமாக, இணக்கமாக, இயல்பாக வாழ்ந்து கொண்டிருந்த இந்துக்களும் முஸ்லீம்களும் பரஸ்பரம் கொலையாளிகளாகவும் பெண்களை கடத்துபவர்களாகவும் பாலியல் பலாத்காரம் செய்பவர்களாகவும் மாறியது எப்படி?
2. சமாதான காலங்களில் தூவப்படும் வகுப்புவாத விதைகள் கொழுந்து விட்டெரிய சந்தர்ப்பங்கள் தான் தேவைப்படுகின்றன. நாம் சமாதானமான நேரங்களில் சும்மா இருந்துவிட்டு கலவரம் முடிந்த பிறகு மட்டும் தீவிரமாக வகுப்புவாத எதிர்ப்பு இயக்கம் நடத்துவதால் என்ன பயன் விளையும்?
3. கலவர நேரங்களில் மனிதர்கள் தங்கள் எல்லா அடையாளங்களும் மறக்கடிக்கப்பட்டு இந்து, முஸ்லீம் அல்லது தம் சாதி என்ற ஒற்றை அடையாளத்துடன் மோதுகிறார்கள். எப்போதும் தங்கள் பன்முக அடையாளங்களை இழக்காதிருக்க இடைவிடாத கருத்துலக இயக்கம் நமக்குத் தேவை அல்லவா?
4. பெண்ணின் உடம்பு இலகுவான ஆக்கிரமிப்புக்கான நிலப்பரப்பாக தொடர்வதை எந்த நூற்றாண்டில் நாம் முடிவுக்குக் கொண்டு வரப்போகிறோம்? குடும்ப மானம் என்பது என்ன? மதத்தின் மானம், தேசத்தின் மானம் என்பதெல்லாம் என்ன? பாலியல் பலாத்காரத்தை வெறும் உடல் மீதான வன்முறையைப் போல பாவிக்கும் நமது புரையோடிப்போன கலாச்சாரத்தை எப்படி ஒழிக்கப் போகிறோம்? வக்கிரங்கள் ஒழியும் நாள் எது? பெண்ணுக்கு நாம் சொல்லப்போகும் பதில் என்ன?
5. தாழ்த்தப்பட்ட தீண்டத்தகாதவர் என ஒதுக்கப்பட்ட மக்களுக்கு நம் தேசமும் நம் சரித்திரமும் முட்டிக் கொள்ளும் மதங்களும் என்ன பதில் சொல்லப் போகின்றன?
6. கலவரங்களின் போது அனாதையாக்கப்படுகிற குழந்தைகளின் பால்ய காலம் அதிர்ச்சியில் கன்றிப் போவதை நாம் எப்படி சரி செய்யப் போகிறோம்?
7. 1947-ல் நடத்தப்பட்ட பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு மார்புகள் அறுத்தெறியப்பட்ட இளம் பெண்கள் இன்று 80 வயது , 90 வயது தாண்டிய மூதாட்டிகளாக நம் தேசத்தின் மூலை முடுக்குகளில் நடமாடிக்கொண்டு தான் இருக்கிறார்கள். மாற்று மதக் குறியீடுகளுடன் சூடுபட்ட தம் உறுப்புகளைத் தேசத்துக்குத் திறந்து காட்டுகிறார்கள். அவர்கள் திறந்து காட்டும் சட்டைக்குள்ளே மார்பகங்கள் இல்லை. அறுத்த அடையாளமாக இரண்டு குழிகள் மட்டுமே இந்தியாவை வெறித்துப் பார்க்கின்றன. இது தான் தங்களுக்கு “1947” தந்த பரிசு என்று பேசாமல் பேசும் அந்த தாய்மார்களுக்கு நம் தேசத்தின் பதில் என்ன?
மொத்தத்தில் , 1947 என்பது இந்திய விடுதலை மட்டுமல்ல; மேலே நீளமாக பேசப்பட்டுள்ள அத்தனை துயரங்கள், அவலங்கள் மற்றும் மனிதக் கேவலங்கள் ஆகியவற்றின் ஒட்டு மொத்தமான குறியீடாகவும் நிற்கிறது.
இரண்டாவது கட்டுரை : பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி மாவட்டத்தில், கஹூதா தாலுகா, தோ ஆ கல்சா என்ற கிராமத்தில் நடந்த மனதை உருக்கும் நிகழ்வை பீர் பகதூர் சிங் என்பவர் கூறியதை அவரின் வாய் மொழியாகப் பதிவு செய்துள்ளார்.
பீர் பகதூர் சிங் கூறுகிறார்; “அப்போது நான் சிறு பையன், கலவரத்தின் போது ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் பெரும்படையாக வந்து எங்கள் கிராமத்தை தாக்கிய போது நாங்கள் சண்டையிட்டுத் தோற்றோம். சரணடைந்து சமாதானப் பேச்சுவார்த்தைக்கு முன் வந்தோம். அவர்கள் எங்கள் இனத்துப் பெண் ஒருத்தியை தரச் சொல்லிக் கேட்டார்கள். பேச்சுவார்த்தைக்கு தலைமையேற்ற என் தந்தை சந்த் ராஜ சிங், பெண்களைத் தருவது என்ற பேச்சே எடுக்கக்கூடாது என்று கறாராக சொல்லிவிட்டார். அதற்காக 30,000 ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு முஸ்லீம்கள் அன்றைக்கு திரும்பி விட்டார்கள்.
ஆனால், மறுதினம் அவர்கள் மீண்டும் தாக்க வந்து விட்டார்கள். சண்டை ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க சர்தார் குலாப் சிங்கின் பெரிய வீட்டில் ஊர்ப் பெண்களை எல்லாம் மாடியின் முற்றத்தில் என் தந்தையார் திரட்டினார். இளம் பெண்கள் 25 -26 பேர் இருப்பார்கள். முதலில் என் தந்தையார் தன் மகளை முன்னுக்கு வருமாறு அழைத்தார். கிரந்தத்திலிருந்து சில வார்த்தைகள் சொல்லித் தொழுதார். “உனது சீக்கியம் கறை படியாது இருக்கவே எங்கள் புத்திரிகளை இன்று பலியாகக் கொடுக்கிறோம்” என்று அவர் கைகளை உயரே தூக்கிச் சொன்ன போது அவரது கைகளும் உதடுகளும் நடுங்கின.
என் சகோதரியை கொல்லும் முன்பு தன்னைக் கொல்லுமாறு எங்கள் வீட்டின் பணியாள் ராம்சிங் கேட்டுக் கொண்டார். சிறிது நேரத்தில், ராம் சிங், ஜஸ்டிஸ் ஹர்னாம் சிங், என் சகோதரி ஆகியோர்களின் தலை துண்டானது. எனது பெரியம்மாவின் மருமகள் ஹர்னாம் கௌர் அப்போது கர்ப்பிணியாக இருந்தாள். என் தந்தையால் அவளைக் கொல்ல முடியவில்லை. அவளுடைய கணவனே அவளை துப்பாக்கியால் சுட்டான். பிறகு தன்னையும் சுட்டுக் கொண்டு உடனே இறந்து விட்டான். பின்பு 26 வாள் வீச்சுகள்; அங்கிருந்த இளம் பெண்கள் அனைவரும் வெட்டி வீழ்த்தப்பட்டனர்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் முஸ்லீம்கள் ஊரைக் கைப்பற்றிவிட்டார்கள். இன்னும் நூறு பெண்கள் வரை அந்த இடத்தில கூடி இருந்தார்கள். என் தாய் லஜவந்தியின் தலைமையில் அவர்கள் குசுகுசுவென்று பேசிக் கொண்டார்கள். அடுத்த இரண்டு நிமிடங்களில் அருகில் இருந்த கிணற்றில் 88 பெண்களும் கிணற்றில் குதித்து விட்டனர். பசந்த் கௌர் என்றொரு பெண்மணி தன் ஆறு குழந்தைகளும் கிணற்றில் விழுந்து சாக, மேலே விழுந்த அவள் சாக முடியவில்லை . கிணறு நிரம்பி விட்டது . அவளைக் கொல்ல போதுமான ஆழமில்லை. அவள் உள்ளே கிடக்கும் தன் பிள்ளைகளைப் பார்ப்பாள் . மீண்டும் ஏறிவந்து மறுபடியும் உள்ளே குதிப்பாள். திரும்பத் திரும்ப அவள் குதித்துக் கொண்டே இருந்தாள்- பைத்தியம் பிடித்தது போல். ஆனால் அவள் சாகவில்லை. இன்னும் இதே டெல்லியில் வாழ்கிறாள். (இப்பகுதியை வாசித்த ஒவ்வொரு முறையும் நான் கண்ணீர் சிந்தியிருக்கிறேன்; இதை எழுதும் போதும் கூட)
அதன் பிறகு இராணுவம் வந்தது. எஞ்சிய நாங்கள் உயிர் தப்பி டெல்லி வந்து சேர்ந்தோம். நாங்கள் தப்பி வந்த சில தினங்கள் கழித்து, ஜவஹர்லால் நேரு எங்கள் தோ ஆ கல்சா கிராமத்திற்குச் சென்றார். அந்தக் கிணற்றைப் பார்த்து அப்படியே நின்று அடக்க முடியாமல் அழுதிருக்கிறார்.
இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்த பகுதிகளில் இதுபோல கூட்டமாக முஸ்லீம் பெண்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் நடந்துள்ளது. பொற்கோவில் வளாகத்தில் ஓர் இரவு முழுக்க 200 முஸ்லீம் பெண்கள் நிர்வாணமாக நடனமாட நிர்ப்பந்திக்கப்பட்ட செய்தியறிந்து அவமானப்பட்டேன்” என்று கூறுகிறார் பீர் பகதூர் சிங் . பிரிவினையின் துயரத்தைக் கூறும் அடையாளச் சின்னமாக தோ ஆ கல்சாவும் , அந்தக் கிணறும் இருக்கிறது !
மூன்றாவது கட்டுரையில் : உலகப்புகழ் பெற்ற (பாகிஸ்தானி) வரலாற்று அறிஞர் இக்பால் முகம்மது கூறியுள்ளதை பதிவு செய்து இருக்கிறார், ” இந்தியாவிலுள்ள உங்களுக்கு மிகப்பெரிய பாரம்பரியம் இருக்கிறது. மிகத் தொன்மை வாய்ந்த கலாச்சார பின்னணி கொண்ட தேசம் இந்தியா. ஆனால் யார் செய்த சதியாலோ பாகிஸ்தான் என்ற புதிய நாடு உருவானது. எங்கள் பாகிஸ்தான் மக்களுக்கு எந்தப் பாரம்பரியத்தின் மீதும் உரிமை கொண்டாடி பெருமை கொள்ள எந்த அடையாமுமில்லை என்ற உணர்வு இருக்கிறது. எங்கள் மன அழுத்தத்தின் வலியை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா?” என்ற கேள்வியை வைத்துள்ளார். ஒரு வரலாற்று ஆய்வாளரான அவருக்கு பதில் சொல்ல நம்மிடம் வார்த்தைகள் இல்லை,
மௌனங்களும் சிரிப்புகளும் என்ற நான்காவது கட்டுரையில் : பாகிஸ்தானில் வாழும் ராணா என்பவரைப் பற்றியும் , திரிலோக சிங் என்பவரைப் பற்றியும் எழுதியிருக்கிறார்.
தேசம் பிரிக்கப்பட்ட போது உடன் பிறந்தவர்களெல்லாம் இந்தியாவிற்கு ஓடி வந்து விட ராணா* மட்டும் சொத்துக்காக தன் தாயாருடன் லாகூரிலேயே இருந்துவிடுகிறார். பின்னர் அவர் முஸ்லீமாக (அப்துல்லா) மதம் மாறி விடுகிறார். தன் தாயாரையும் மதம் மாற்றி விடுகிறார். பிளவுபட்ட மனநிலையுடன் சரியான தூக்கமின்றி, எவருடனும் பேச மொழியற்று இன்னும் பாகிஸ்தானில் வாழ்ந்து வருகிறார்.
தேசப்பிரிவினையின் போது திரிலோக் சிங்கின் வயது 9. இந்தியாவுக்குத் தப்பி வருமுன்னர் தங்கள் வீட்டுப் பெண்களையும் குழந்தைகளையும் கொன்று விடுவது என வீட்டுப் பெரியவர்கள் முடிவு செய்தனர். வழியில் பிடிபட்டு கட்டாய மதமாற்றத்திற்கும், பாலியல் பலாத்காரத்துக்கும் ஆளாகாமல் தடுக்க பலவீனமானவர்களை (பெண்கள், குழந்தைகள்) அவர்களைத் தாங்களே கொன்று விடுவதுதான் அன்று வழக்கத்தில் இருந்தது. திரிலோக் சிங் தன்னை கொல்லவேண்டாம் என்று கெஞ்சி கேட்கிறான். அவனைத் தவிர அவனது குடும்பத்தினர் 17 பேர்களும் வெட்டிக் கொல்லப்படுகிறார்கள். தப்பி வந்த ஆண்களில் இடையில் கொல்லப்பட்டது போக எஞ்சியது அவனது மாமா மங்கள் சிங்கும் , திரிலோக் சிங்கும் மட்டுமே.
இருவரும் இன்று அமிர்தசரஸில் வாழ்ந்து வருகின்றனர். திருமணம் செய்து கொண்டு , புதிதாக குடும்பம் அமைத்து , குழந்தை குட்டிகளுடன் வாழ்கின்றனர். ஆனால் , அவர்கள் இருவரும் தனியாக இருக்க நேரிடும் சந்தர்ப்பங்களில் நிழல் படிந்த மௌனம் ஒன்று கவிந்து விடுகிறது. தனிமையில் அவர்கள் இருவரும் பேசிக் கொள்வதில்லை. கடந்த 50 ஆண்டுகளாக அந்த நாளின் குற்ற உணர்வுடன், எல்லோரையும் இழந்த பின்பு தங்கள் மட்டுமே வாழ்வதற்க்காகவும் குற்ற உணர்வு கொண்டு சுமக்க முடியாத மௌனத்துடன் – தங்கள் இருவருக்கும் இடையில் மரணம் ஒரு மௌனக் கத்தியாக, நிரந்தர நிகழ்காலமாகத் தொங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தபடி வாழ்கிறார்கள்.
வங்கதேசத்திலிருந்து ஒரு குரல் என்ற ஐந்தாவது கட்டுரையில் : பங்களாதேஷ் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் பற்றி பேசுகிறது. 1992 டிசம்பர் 6-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதும் பங்களாதேஷில் இருந்த இந்துக்கள் முஸ்லிம்களால் வேட்டையாடப்பட்டதைப் பற்றிய விபரங்களுடன் அவர் “லஜ்ஜா” என்ற நாவல் எழுதியுள்ளார். அதற்காக முஸ்லீம் அடிப்படைவாத அமைப்பு அவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது. தான் எந்த மிரட்டலுக்கும் பயப்படப் போவதில்லை, தொடர்ந்து மத அடிப்படைவாதத்திற்கு எதிராக எழுதுவேன் என்ற கூறியுள்ள அந்த வீரப்பெண்மணி பாராட்டிற்கு உரியவர்தான்.
இறுதிக் கட்டுரையில் : பிரிவினையின் போது இந்திய இரயில்வே துறை சரியான முறையில் இயங்கவில்லை என்ற குற்றசாட்டைப் பதிவு செய்திருக்கிறார்**. துரதிருஷ்டவசமாக இரயில்வேத் துறையைச் சேர்ந்த இந்து மற்றும் முஸ்லீம் ஊழியர்கள் உயிருக்கு அஞ்சி ரயிலை ஓட்ட மறுத்துவிட்டனர். இவ்விரு பகுதிக்குமிடையே ரயில் போக்குவரத்தை துரிதப்படுத்தியிருந்தால் பெருமளவு படுகொலைகளைத் தவிர்த்திருக்க முடியும் என்கிறார்.
ஆனாலும், தென்னிந்திய இரயில்வே தொழிலாளர் சங்கத் தோழர்கள் நெஞ்சுரத்துடன் முன்வந்தனர். சங்கத் தலைவர்கள் ஜே.பி. புருஷோத்தமன், என், கிருஷ்ணசாமி தலைமையில் தோழர்கள் திரண்டனர். இரத்தத் சிதறல்களுக்கும், பிணக் குவியல்களுக்கும் நடுவில் 150 ஊழியர்கள் ஐந்து மாத காலம் இரவு பகலாக லூதியானாவை மையமாகக் கொண்டு துணிவோடு தங்கள் பணியைச் செய்தனர். அதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பி.சி. ஜோஷியும் , சங்கத் தலைவர் எம். கல்யாணசுந்தரமும் லூதியானவிற்கே சென்று பாராட்டியதையும் பதிவு செய்துள்ளார் ச. தமிழ்ச்செல்வன்.
அந்தப் பணியின் போது என். கிருஷ்ணசாமி, ஒரு இஸ்லாமிய தாயையும், அவரது மகளையும் உயிரைப் பணையம் வைத்து காப்பாற்றி பாகிஸ்தானிற்கு அனுப்பி உள்ளார். அந்த தாய், “ஐயா! உங்களுக்கு என்ன கைம்மாறு செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை” என்றபோது “ஒன்றும் வேண்டாம். இந்தப் பெண்ணின் திருமணத்தின் போது அவளது திருமணப் பத்திரிக்கையை அனுப்பி வையுங்கள்” என்று கூறியிருக்கிறார் என். கிருஷ்ணசாமி .
பல ஆண்டுகளுக்கு பிறகு , உருது மொழியில் அச்சிடப்பட்ட அந்த கல்யாணப்பத்திரிக்கை அவர் கையில் கிடைத்த பொழுது மனம் நெகிழ்ந்திருக்கிறார், என். கிருஷ்ணசாமி . சமூகத்தில் ஒரு நல்ல மனிதனாக தான் வாழ்ந்ததற்கான திருப்தியை அந்த கல்யாணப் பத்திரிக்கை அவருக்குத் தந்திருக்கும்!
இந்திய வரலாற்றில், 1947-ம் ஆண்டு என்பது மக்களுக்கு துயரத்தைக் கொடுத்த ஒரு களங்கம் நிறைந்த ஆண்டாகவே இருக்கிறது.
இந்த நூலை வாசித்து முடித்ததும் எனக்கு இரண்டு விஷயங்கள் மிகத் தெளிவாக புரிந்தது. ஒன்று, இந்திய மக்கள் , அது இந்துவாகட்டும் அல்லது முஸ்லிமாகட்டும் உயிரைவிட மத நம்பிக்கைகளை பெரிதாக நம்புகிறார்கள். மற்றொன்று, இரண்டு மதத்தவர்களும் பெண்களை தங்களது உடைமைப் பொருளாகவே கருதி வாழ்கிறார்கள்.
இந்த எண்ணங்களே இந்தியாவில் அகமணத்தையும் , சாதீயத்தையும் இன்னும் தூக்கிப் பிடித்து வருகின்றன. ஆனாலும், மதத்தின் பிடியில் சிக்கிச் சுழலும் ஒரு சிலரையாவது இந்த நூல் சிந்திக்க வைக்கும் என்று நம்புகிறேன்.
பிரிவினையின் அவலத்தையும் மக்களின் துயரத்தையும் நம் உள்ளே கடத்தியிருப்பதோடு, மதவாதத்திற்கு எதிராக நம் சிந்தனையையும் வழிநடத்திக் கொண்டு செல்கிறார் தமிழ்ச்செல்வன். அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல்.
பின்குறிப்பு: * இந்த ராணாவை பற்றிய உண்மையான வரலாற்றை அவரது சகோதரியின் மகள் ஊர்வசி புடடாலியா என்பவர் ” THE OTHER SIDE OF SILENCE ” என்ற நூலில் எழுதியுள்ளார். இந்நூல் கிழக்குப் பதிப்பக்கத்தின் மூலமாக “மௌனத்தின் அலறல்” என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது.
** மேற்கண்ட நூலில் (மௌனத்தின் அலறல்) இரயில்வேதுறை சிறப்பாக இயங்கியதாக ஊர்வசி புட்டாலியா குறிப்பிட்டுள்ளார்.
நூல் விமர்சனம் : சு. கருப்பையா, மதுரை.
நூல் : 1947 ஆசிரியர்: ச. தமிழ்ச்செல்வன் பதிப்பகம்: பாரதி புத்தகாலயம், 7 ஆம் பதிப்பு2015 பக்கங்கள்: 32 விலை: 20
நா. வானமாமலை முதன் முதலில் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை அவர்களது கருத்தை எடுத்துக் கொள்வோம். அவர்கள் சொல்வது போல பாரத ராமாயணத் தலைவர்களுக்குச் சமமாகப் பாட்டுடைத் தலைவனைப் புகழ்ந்து கூறுவது தமிழ்ப் புலவர்களது மரபுதான். ஆனால் மோரியர்களைப் பற்றி வரும் குறிப்புக்களில் அவர்கள் பழங்காலத்து மன்னர்கள் என்ற கருத்து காணப்படவில்லை. புறநானூற்றுப் பாடலில் ஆதனுங்கனது அறத்துறை, மோரியர் ஆட்சி நிலைபெற்று விளங்குகின்ற இடங்களில் நிலைபெற்ற அறத்துறை போன்றது என்று சொல்லப்படுகிறது. ஆதனுங்கன் காலமும், மோரியர் காலமும், நிகழ் காலத்தில் பேசப்படுகின்றன. எனவே இது மோரியர் காலத்தையே குறிக்கிறதென்பது வெளிப்படை.
இதே செய்யுள் தேர்ப்படை மிகுதியுடைய மோரியரது வெற்றிச் சிறப்பைக் கூறுகிறது. எக்காலத்திலோ நடைபெற்ற போர்களில் கிடைத்த வெற்றிகளைப் பெருமையாகச் சொல்லிக் கொள்ள வேண்டியது இல்லை. இவ்வெற்றிகளெல்லாம் சமீப காலத்தில் கிடைத்த வெற்றிகளையே குறிக்கின்றன.
மேலும் மோரியர் பரம்பரை அழிந்த பிற்பாடு கலிங்கத்தில் காரவேலர் போன்ற பேரரசர்களும் வட இந்தியாவில் கங்கர் பரம்பரையும் தோன்றிவிட்டன. பிள்ளை அவர்கள் கூறுவதுபோல கி.பி. முதல் நூற்றாண்டில் இப்பாடல்கள் எழுதப்பட்டிருந்தால் அக்காலத்தில் மௌரிய சாம்ராஜ்யம் மறைந்து இந்தியாவின் வடமேற்குப் பகுதி கிரேக்கர்களின் ஆட்சியிலும் வடகீழ்ப்பகுதி இரண்டு, மூன்று சக்கரவர்த்திகளின் கீழும் சென்று விட்டன.
ஆகவே முன்னூறு வருஷங்களுக்கு முன் அழிந்து விட்ட பரம்பரையைக் குறித்து புலவர் நிகழ் காலத்தில் கூறியிருக்க மாட்டார்.
தவிரவும், வம்பமோரியர் என்ற சொற்றொடர் புதியவர்களான மோரியர் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. வம்ப மாகள், வம்பலர், என்ற சொற்கள் ஊருக்கோ நாட்டுக்கோ புதியவர்கள் என்ற பொருளில் பண்டைப் புலவர்களால் கையாளப்பட்டது. வம்பன் என்பதற்குத் தற்காலத்தில் இருக்கும் பொருளை அகநானூறு, புறநானூற்றில் வரும் இடங்களில் கொள்ளக் கூடாது. வம்பர் என்பது தற்காலத்திலுள்ள பொருளைத்தான் ‘இந்தியாவில் புராதன சரித்திரம்’ என்ற நூலில் ஆசிரியர் upstarts என்று விளக்கம் கொடுத்தார்.
புதியவர் என்றால் செய்யுள் எழுதப்பட்ட காலத்தில் அல்லது அதற்குச் சற்று முன்பாவது அவர்கள் தமிழ் நாட்டினருக்கு அறிமுகமானவர்களாக இருக்க வேண்டும். இவர்கள் தென்திசை நோக்கிப் படையெடுத்து வந்தார்களென்பது அகநானூறு, 281-ம் செய்யுள்ளால் விளங்கும். இதுவும் ஒரு சமீப கால நிகழ்ச்சியையே குறிப்பிடுகிறது. இவையனைத்தையும், ஒன்று சேர்த்துப் பார்க்கும்பொழுது, மோரியர் காலத்திலேயே இங்கு மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் பாடல்கள் எழுந்தன என்று உறுதியாகக் கருதலாம்.
இச்சான்றுகளைக் கொண்டு சுமார் கி.மு. 321-க்கும் கி.மு.156-க்கும் இடையில் மேற்கோள் காட்டப்பட்ட பாடல்கள் தோன்றியிருக்கக்கூடும் என்று முடிவு செய்யலாம். இன்னும் கூர்ந்து நோக்கினால் புறநானூற்றுப் பாடல்களிலிருந்து வேறொரு வழியாலும் அப்பாடலின் காலத்தைக் கொண்டு நிர்ணயிக்கலாம்.
ஆணைச் சக்கரத்தையும், தர்மச் சக்கரத்தையும் ஒன்றாக்கி தர்மமே ஆணைக்கு அடிப்படையாக இருத்தல் வேண்டுமென்று அசோகன் பறை சாற்றினான். அவனுக்கு முன்பிருந்த சந்திரகுப்தனும், சாணக்கியனும் ராஜா ரீதியில் தண்டத்தையே முதன்மைப் படுத்தினார்கள். ஆக்ஞா சக்கரத்தையும், தர்மச் சக்கரத்தையும் ஒன்றாக இணைக்க முற்பட்டவன் அசோகன். அவன் தனது கலிங்கப்போருக்கு முன் தண்டத்தையே நம்பியிருந்தான்.
கலிங்கப் போருக்குப் பின் அவன் புத்த தர்மத்தை மேற்கொண்டு தர்மச்சக்கரமே ஆக்ஞா சக்கரம் என்று பாறைகளிலும் கற்களிலும் எழுதி வைத்தான். இப்பாடலிலும் மோரியர் திகிரி என்பது மோரியர் ஆணைச் சக்கரத்தைக் குறிக்கிறது. கதிர்த்திகிரி என்பது அவர்கள் ஆட்சியின் சிறப்பைக் குறிக்கிறது. அவர்கள் நாட்டு அறத்துறை போன்றது. ஆதனுங்கனது அறத்துறை இங்கே அவர்கள் ஆணைச்சக்கரம் பரவிய இடங்களில் தர்மச்சக்கரம் பரவியிருந்தது என்ற கருத்தை கவிஞர் சுட்டிக் காட்டுகிறார். அப்படியாயின் இக்கருத்து அசோகன் காலத்தில் கலிங்கப் போருக்குப் பின் அவனுக்குத் தோன்றிய கருத்தாகும்.
அசோகனது முதல் பிரகடனம் கி.மு. 259. அசோகனது மரணம் கி.மு. 237. இக்காலத்தில் புத்தமதக் கொள்கைகள் இந்தியா முழுவதும் பரவின. எனவே இக்காலத்திலேயே மோரியர் பற்றிய இச்செய்யுள்கள் தோன்றியிருக்கலாம். புறநானூற்றில் சில செய்யுள்கள் கி.பி. முதல் நூற்றாண்டைச் சார்ந்தனவாக இருக்க வேண்டும். எனவே வையாபுரிப்பிள்ளை அவர்கள் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.
வரலாற்றாய்வாளர் டி.டி. கோசாம்பி
அடுத்து டி.டி.. கோஸாம்பியின் கருத்துகளை ஆராய்வோம். கோஸாம்பி, மௌரியர் காலத்தைக் தமிழ் நாட்டில் புதுக் கற்கால நாகரிகம் நிலவிய காலம் என்று கூறுகிறார். அப்படியானால் தமிழ் நாட்டில் உழவுத்தொழில் முன்னேறியிருக்கவில்லை. நாடும் நகரமும் தோன்றியிருக்கவில்லை. உலோகங்கள் உபயோகத்திற்கு வரவில்லை. எழுத்தும் இலக்கியமும் தோன்றவில்லை. வாணிபம் சிறிதளவும் தோன்றவில்லை என்பதே இதன் பொருள். அவருடைய ஆதாரம் எல்லாம் வையாபுரிப் பிள்ளையின் தமிழிலக்கிய வரலாறு ஒன்றுதான். அவருடைய கருத்துக்களை நாம் முன்னரே பரிசீலித்தோம். பிள்ளையவர்களின் கருத்துக்களின் அடிப்படையிலேதான் இம்முடிவுக்கு கோஸாம்பி வருகிறார். அக்காலத்திலிருந்த தமிழ் நாட்டின் பண்பாட்டு நிலையை அறிந்து கொள்ள சான்றுகள் அகப்படவில்லையென்று அவர் கூறுகிறார்.
கி.மு.வில் தமிழ் நாட்டின் வரலாற்றை அறிந்துகொள்ள வலுவான சான்றுகள் இல்லையென்பது உண்மைதான். ஆனால் இருக்கிற சான்றுகளைப் புறக்கணித்துவிட்டு முடிவுக்கு வருவதும் தவறாகும். டாக்டர் கோஸாம்பியின் சரித்திரக் கண்ணோட்டமும் கொள்கையும் எனக்கு உடன்பாடுதான். ஆனால் தமிழ் நாட்டைப் பொறுத்தவரை கிடைக்கும் அளவு சான்றுகளைக் சேகரித்துத் தமது திறமையையும் அறிவையும், கண்ணோட்டத்தையும் பயன்படுத்தி பண்டைத் தமிழ் நாட்டின் சமூக வளர்ச்சியைப் பற்றி ஒரு சிறு குறிப்பாவது அவர் எழுத வேண்டுமென்று நான் ஆசைப்படுகிறேன்.
மோரியர் காலத்தில் தமிழ் மக்கள் கற்காலத்தை விட்டு முன்னேறியிருந்தார்கள் என்பதைக் காட்டக் கீழ்வரும் சான்றுகள் உதவும்.
1. மேலே காணப்பட்ட அகநானூறு, புறநானூறு செய்யுட்கள். 2. ஆனைமலையிலும், பிற இடங்களிலும் கிடைக்கும் பிராமி எழுத்துச் சாசனங்கள். இவை கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. 3. கிரேக்கர் எழுதிய நூல்களில் தொண்டி, முசிறி போன்ற தமிழ் நாட்டுத் துறைமுகங்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. வாணிபம், கற்கால மனிதர்களின் சிருஷ்டி அல்ல. உயர்ந்த நாகரிகமுடைய மக்கள் அதனைத் தோற்றுவிக்க முடியும். 4. சந்திர குப்தன் காலத்திலிருந்த மெகஸ்தனீஸ் எழுதிய இந்தியாவைப் பற்றிய நூல்களிலிருந்து பாண்டிய அரசைப் பற்றி அறிகிறோம். கற்கால மனிதர்களின் குழுக்களுக்கு அரசனும், ஆட்சியமைப்பும் இருந்திருக்க முடியாது. ‘வேதங்களின் தமிழ் சொற்கள்’ என்ற ஆராய்ச்சிக் கட்டுரையில் வேதங்களின் தமிழ் மூலத்திலிருந்து, தோன்றிய சொற்கள் நூற்றுக்கணக்கானவை உள்ளன என்று டாக்டர் கமில் சுவலபில் அவர்கள் நிரூபித்துள்ளார்கள்.
மோரியர் காலத்திற்கும், வேத காலம் 2000 ஆண்டுகள் முற்பட்டது. புதிய கற்கால மனிதர்கள் வளர்ச்சியுற்ற ஒரு மொழியைப் பேசியிருக்க முடியாது. எழுதியிருக்கவும் முடியாது. தமிழ்ச் சொற்கள் வேதத்தில் உள்ளன என்றால் வேதகாலத்திலேயே தமிழர்கள் கற்காலத்தைக் கடந்த நாகரிகத்தை உடையவர்களாக இருந்திருக்க வேண்டும். அதற்கு 2000 ஆண்டுகளுக்குப்பின் அவர்கள் சமூக முன்னேற்றப் பாதையில் வளர்ச்சியுற்றிருப்பார்களே தவிர பின்னோக்கிச் சென்றிருக்க முடியாது.
மேற்கூறிய சான்றுகளால் மோரியர் காலத்தில் தமிழ் நாட்டு மக்கள் பழைய கற்கால மனிதர்கள் அல்ல என்பது தெளிவு. கிடைக்கிற ஆதாரங்களிலிருந்து சிறு இன முறைக்குழுக்கள் ஒன்று சேர்ந்து முடியரசுகள் வளர்ச்சியடைகிற ஆரம்ப நிலவுடைமைக் கட்டத்தில் நமது நாகரிகம் இருந்தது என்று கூறலாம்.
சமீபத்தில் அகப்பட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பாண்டிய நாணயங்களும் அயல் நாட்டு நாணயங்களும் தென் தமிழ் நாட்டில் அகப்படுவதால் ஆரம்ப வியாபாரம் அக்காலத்திலேயே தோன்றியிருந்தது என்பதைக் காட்டுகிறது. தமிழ் நாட்டின் பண்டைக்கால வரலாற்றை அறிந்து கொள்வதற்கு மறைந்தும், புதைந்தும் கிடக்கும் ஆதாரங்களை வெளி கொணர வேண்டியது தொல் பொருள் ஆராய்ச்சித் துறையினர் கடமையாகும்.
வாட்ஸ் அப் பல்கலைக்கழகம் தொடந்து முன்னோக்கி வளர்ந்து வருகிறது. அதாவது போலிச் செய்திகள் அதிகம் பரவுவதன் மூலம் போலி வரலாறுகளை உருவாக்கும் விதமாக வளர்ந்து வருகிறது.
கல்வித் துறை வரலாற்று நூல்கள் முக்கியமாக பல்கலைக் கழக அமைப்புகளில் தொழில்முறை வரலாற்று ஆசிரியர்களால் ஒழுங்கு நெறிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. இந்த நெறிமுறைகளில் வாத-பிரதிவாதங்கள், உரிமைக் கோரல்கள் போன்றவற்றை தீவிர ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். இந்தத் துறையில் ஆராய்ச்சி அடிப்படையில் புத்தகங்கள் ஒரு நிறுவப்பட்ட பல்கலைக்கழக அச்சகத்திலிருந்து வெளியிடப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது. இது போன்ற எண்ணற்ற எழுதப்படாத விதிகள் முறையான வரலாற்றாசிரியர்களின் படைப்புகளுக்கு உண்டு.
சமீபத்தில் மீரா விஸ்வநாதன் எனும் வரலாற்றாசிரியர் கேரவன் பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். ”வரலாற்றுக்கு எதிராக” என்ற தனது கட்டுரையில் தற்போது இந்திய அரசின் முதன்மை பொருளாதார ஆலோசகராக இருக்கும் சஞ்சீவ் சன்யால் இந்திய வரலாற்றை திருத்தி எழுத முயற்சிப்பது குறித்து அம்பலப்படுத்துகிறார். பொருளாதாரத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் வாங்கியுள்ள சஞ்சீவ் சன்யால், இந்திய வரலாற்றை எழுதுகிறார்.
மீரா விஸ்வநாதன் வரலாற்று துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். சமஸ்கிருதம், பிராகிருதம் ஆகிய மொழிகளில் திறமை வாய்ந்தவர். பண்டைய இந்தியாவைப் பற்றி வகுப்புக்கள் எடுப்பது மட்டுமல்லாமல் ஆராய்ச்சியும் செய்கிறார். மீரா விஸ்வநாதன் கேரவனில் எழுதிய தனது கட்டுரையில், சஞ்சீவ் சன்யாலை அம்பலப்படுத்துவதன் வழியாக “வரலாற்றை எழுதுவது” என்றால் என்ன? என்பது பற்றியும் எதுவெல்லாம் “வரலாறு” இல்லை என்பதைப் பற்றியும் தெளிவுபடுத்துகிறார்.
இத்தகைய போலி வரலாற்றாசிரியர்கள் எங்கிருந்து உருவாகிறார்கள்? இவர்களின் நோக்கம் என்ன ? இவர்களது “ஆய்வுகளின்” விளைவுகள் என்ன ?
போலி வரலாறுகள் உருவாகும் வரலாறு :
போலி வரலாறு என்பது முதலில் ‘சதி’ என்ற அறிவிப்பின் மூலம்தான் பிறக்கிறது. போலி வரலாறுகள் பெரும்பாலும் சமூக ஊடகங்களில்தான் நிர்வகிக்கப்படுகின்றன. பல்வேறு யூடியூப் காணொளிகளில் இதனைக் கண்டிருக்கலாம். குறிப்பாக, இடதுசாரிகள், லிபரல்கள் மற்றும் நேரு ஆதரவு வரலாற்றாசிரியர்கள் இந்தியாவின் மோசமான வரலாற்றை சதி செய்து எழுதியதாகவே துவங்குவார்கள்.
இத்தகைய போலி வரலாற்றாசிரியர்கள், எக்காலத்திலும் வரலாறு சம்பந்தப்பட்ட தரநிர்ணய பத்திரிகைகளில் எழுதமாட்டார்கள். யாருக்கும் பதில் சொல்ல கடமைப்படாத தளங்களான சமூக வலைத்தளங்களில் போலி வரலாற்றை பதிவு செய்துவிட்டு அமைதியாகிவிடுவார்கள்.
இத்தகைய பொறுப்பேற்க அவசியமில்லாத வகையில் கருத்தை தெரிவித்துவிட்டு ஓடி விடுவது ஒரு வழிமுறையாகவே பின்பற்றப்படுகிறது. இவர்களின் உள்ளார்ந்த நோக்கம் மக்களை பயிற்றுவிப்பது அல்ல. மாறாக அவர்களிடம் வெடிக்கத்தக்க உணர்ச்சியை உண்டாக்கும் நோக்கத்திலேயே போலி வரலாறுகளை பரப்புகின்றனர். இந்த போலி வரலாற்றாய்வாளர்களுக்கு, உண்மையான வரலாற்றாசிரியர்களுக்கு இடதுசாரிகள், லிபரல்கள், நேரு ஆதரவு வரலாற்றாசிரியர்கள் என முத்திரை குத்தவும் வசதியான இடமாக சமூக வலைத்தளங்கள் தான் அமைந்துள்ளன.
இந்த போலி வரலாற்றாசிரியர்களுக்கு இந்தியாவின் கடந்த காலத்தை புரிந்துகொள்வது என்பது, தவிர்க்கமுடியாமல் தீவிர உணர்ச்சியை தூண்டிவிட்டு உண்மையான காரணங்களை மூடி மறைப்பதுதான். இத்தகைய திட்டத்தில், சந்தேகத்துக்கோ, மாற்றுக் கருத்துக்கோ, ஆழ்ந்த சிந்தனைக்கோ இடம் கிடையாது. இந்த அதிவேகமாக பரவக்கூடிய இத்தகைய போலி வரலாறுகளின் நோக்கம், எப்போதும் எதைப் பற்றியோ, யாரைப் பற்றியோ அணையாத கோபம் கொண்டுள்ள கும்பலைத் திரட்டுவதுதான்.
உண்மையான வரலாற்றாசிரியர்கள், எப்போதுமே தங்களது படைப்புகளின் மீதான விமர்சனத்தையும் மாற்றுக் கருத்தையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பார்கள். ஏனெனில், அவர்கள் காரண காரியங்களில் இருந்து வரலாற்றை ஆய்வு செய்பவர்கள். ஆனால், போலி வரலாற்றாசிரியர்கள், சமூக ஊடகங்களின் விளைபொருளே. அவர்கள், தங்களை விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களாக நிறுத்திக் கொள்கிறார்கள். பிறர் வைக்கும் விமர்சனங்களை தங்கள் மீதான தனிப்பட்ட தாக்குதலாக சித்தரித்து பரிதாபம் தேடிக் கொள்ள பார்ப்பார்கள்.
உதாரணமாக, சாவர்க்கரின் வாழ்க்கை வரலாற்றை இரண்டு பாகமாக எழுதிய விக்ரம் சம்பத் என்பவர், தமது நூலின் மீதான வரலாற்றாசிரியர்களின் விமர்சனத்தையும், சமூக வலைத்தளவாசிகளின் விமர்சனத்தையும் தமது மீதான தனிப்பட்ட தாக்குதலாக சித்தரிக்கிறார். தன்னையும் தனது படைப்பையும் அவமரியாதை செய்வதாக சித்தரிக்கிறார்.
உண்மையான வரலாற்று ஆசிரியர்களுக்கு விமர்சனங்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் எப்போதுமே உதவியாகவும் அறிவுபூர்வமாகவும் இருக்கும். கல்வித் துறையில் அவர்கள் எப்போதும் உயரத்தில் நின்று முன்னோக்கி பார்க்க முயற்சிக்க வேண்டியதாக உள்ளது. இத்தகைய கற்றலில் சக மதிப்பாய்வு மற்றும் பொருள் குறித்த நிபுணத்துவம் கொண்ட ஆராய்ச்சி நெறிமுறைகள் மூலம் அறிவதும் வளர்ப்பதும் அவசியம்.
நுணுக்கமான மற்றும் அதிநவீன கல்வி உள்ளடக்கத்தை உள்வாங்குவதன் மூலம் கல்வி வரலாற்று ஆசிரியர்கள் மிகவும் நேர்மறையான அணுகுமுறைகளை கொண்டு, சமூக ஊடகங்களின் தற்போதைய பாதையை வளைக்க கவனமாக முயற்சிக்க வேண்டும்.
கடந்த காலமானது நிகழ்காலத்திலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது என்பதை புரிந்துகொள்ளும் முயற்சியில் முறையான வரலாற்றாசிரியர்கள் ஈடுபட்டுள்ள போதிலும், போலி வரலாற்றாசிரியர்கள் இதற்கு நேர்மாறாக, நிகழ்காலத்தை கடந்த காலத்திற்கு எதிராக முன்னிறுத்த முயலுகிறார்கள்.
போலி வரலாற்று ஆசிரியர்கள் உற்பத்தியாவதை தடுக்காவிட்டால், அறிவியல் பூர்வமான வரலாறுகள் அழிக்கப்பட்டு போலி வரலாறுகள்தான் எதிர்காலத்தில் ஆதிக்கம் செலுத்தும்.
அஷ்பகுல்லாகான் : புரட்சிகர அறிவுஜீவி, காக்கோரி தியாகி, கவிஞர் என பன்முகத்தன்மை கொண்ட ஒரு போராளி !!
அஷ்பகுல்லாகான் பிறந்த நாளில் (அக்டோபர் 22) பலரும் அவரை நினைவுகூர்கின்றனர். இந்திய விடுதலைகாகப் போராடிய முசுலீம் தியாகியாக மட்டுமே அவரை சிலர் குறிப்பிடுகின்றனர். அஷ்பகுல்லாகான் புரட்சிகர இயக்கத்தின் சிறந்த கொள்கைப் பற்றாளராக, புரட்சிகர இயக்கத்தின் வடிவத்தை மாற்றியதில் பங்களிப்பு கொண்டவராக திகழ்ந்தார்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் அஷ்பகுல்லாகானின் தியாகத்தை பற்றி விவரிக்கும் பலரும் அவர் முசுலீம் மதத்தவர் என்பதை தவறாமல் குறிப்பிடுகின்றனர். ராம்பிரசாத் பிஸ்மில்லின் பெயருடனும், காக்கோரி கொள்ளை வழக்குடனுமே வரலாறு முழுக்க எப்போதும் அவரது பெயர் உச்சரிக்கப்படுகின்றது. காலனிய எதிர்ப்பு மற்றும் புரட்சிகர இயக்கத்தின் முக்கியமான நபரான அஷ்பகுல்லாகானின் மதச்சார்பற்ற மற்றும் மதநல்லிணக்கத்திற்கான அவரின் கருத்துக்கள் எப்போதையும்விட இன்றைய மதவாத நச்சுச்சூழலில் தேவைப்படுகின்றன.
அஷ்பகுல்லாகானின் அரசியல், சிந்தாந்தப் பயணம் மற்றும் சமூகத்திற்கான போராட்டம் கற்பனையின் அடிப்படையிலானதல்ல. இந்த நாட்டிற்காக தன்னை ஏன் அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்பதில் சித்தாந்த தெளிவுள்ளவராக அவர் இருந்ததார். அவரின் கடிதங்கள், டைரி குறிப்புகள், கவிதைகள் வழியே அவரின் புரட்சிகர அரசியலை அறிய முடிகின்றது.
1900-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 22-ம் தேதி இன்றைய உத்தரபிரதேசம் ஷாஜான்பூர் மாவட்டத்தில் உள்ள வசதிமிக்க ஒரு நிலப்பிரபுவின் குடும்பத்தில் சாபிகுல்லாகான், மஹருன்னிசா ஆகியோருக்கு மகனாக அஷ்பகுல்லாகான் பிறந்தார். ஜெண்டாலால் தீக்ஷித்-தால் தலைமைதாங்கி நடத்தப்பட்ட மெயின்பூரி ‘சதி’ (1918) சம்பவமே அஷ்பகுல்லாகான் புரட்சிர இயக்கத்தினுள் நுழைவதற்கான உந்துதல் என்றால் அதுமிகையல்ல. அச்சம்பவத்தின் போது அவர் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார்.
வங்காளத்தைச்சேர்ந்த கனையலால் தத், குதிராம் போஸ் ஆகிய தியாகிகளின் வரலாற்றை அஷ்பகுல்லாகான் அறிந்திருந்தார். அவர் படித்துக்கொண்டிருந்த பள்ளியில் திடீரென பிரிட்டிஷ் போலீசு ரெய்டு நடத்தியது. மெயின்பூரி சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சக மாணவரான ராஜாராம் பாரதீயா கைது செய்யப்பட்டார். அப்போது முதலே உத்தர பிரதேசத்தில் உள்ள புரட்சியாளர்களுடனான தொடர்பை எதிர்ப்பார்த்த வண்ணம் இருந்தார். அவரின் நண்பரான பனார்சிலாலிடம் (பின்னாளில் காக்கோரி சதி வழக்கில் அப்ரூவர் ஆனவர்) மெயின்பூரி சதி வழக்கில் தலைமறைவான ராம்பிரசாத் பிஸ்மில்லை சந்திக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்று கேட்டார்.
1920-ல் பிரிட்டிஷ் அரசரின் பொது மன்னிப்பினால் மெயின்புரி வழக்கின் குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இதனால் பிஸ்மில் தண்டனையில் இருந்து தப்பினார். ஷாஜன்பூருக்கு திரும்பிய அவருடன் நட்பை உருவாக்கிக்கொண்ட அஷ்பகுல்லாகான் , பிஸ்மில் இறக்கும்வரை அவருடனேயே பயணித்தார்.
அடுத்த ஏழு ஆண்டுகள் அவர்கள் இணைபிரியா போராளிகளானார்கள். அவர்கள் இருவரும் சுவராஜ் கட்சியில் இணைந்து ஒத்துழையாமை இயக்கத்திலும் இந்துஸ்தான் ரிபப்ளிகன் ஆர்மி (HRA) அமைப்பில் இணைந்து காலனித்துவ எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதுடன் புகழ்பெற்ற காக்கோரி ரயில் கொள்ளையிலும் (1925ம் ஆண்டு) பங்கேற்றனர்.
காக்கோரி கொள்ளையில் ஈடுபட்ட பின்னர் அவ்வழக்கில் சிறைபடுத்தப்படுவதில் இருந்து தப்பிப்பதற்காக நேபாளத்திற்கு சென்றார். அங்கிருந்து கான்பூர் சென்றார். டோல்கன்ச்சில்(தற்போதைய ஜார்கண்ட்- புலமாவ் மாவட்டம்) இருந்து கிளம்புவதற்கு முன்னர் விடுதலைப் போராட்ட வீரரும் புகழ்பெற்ற பத்திரிகை ஆசிரியருமான கணேஷ் சங்கர் வித்யார்தியை சந்தித்தார். பின்னர் வேறொரு பெயரில் ஆறு மாதங்கள் தலைமறைவாக கிளார்க் வேலை செய்தார். மீண்டும் நேபாளம் செல்வதற்காக டெல்லி வழியே தொடர்ச்சியான, சிறிதும் ஓய்வற்ற வகையிலான பயணங்களை மேற்கொண்டார். வெளிநாட்டுக்கு செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது அஷ்பகுல்லாகானுடன் அறையில் தங்கி இருந்த நண்பன் ஒருவனால் காட்டிக் கொடுக்கப்பட்டார்.
அஷ்பகுல்லாகான் புரட்சியாளர் மட்டுமல்ல, ஹஸ்ரத், வர்சி ஆகிய பெயர்களில் கவிதைகள் எழுதி வந்தார். ஒரு பள்ளியை துவங்க வேண்டும் என்ற பெரும் ஆசையுடன் இருந்தார். காக்கோரி சதி வழக்கில் தலைவர்களான அஷ்பகுல்லாகான், ராம்பிரசாத் பிஸ்மில், ரோசன் சிங் ஆகியோர் 1927-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19-ம் தேதி காலனிய அரசால் வெவ்வேறு சிறைகளில் தூக்கிலிடப்பட்டனர்.அவ்வழக்கின் நான்காவது புரட்சியாளரான ராஜேந்திர நாத் லகிரி இரு நாட்கள் கழித்து தூக்கிலிடப்பட்டார்.
புரட்சிகர சிந்தாந்தம்
மெய்ன்புரி சதி வழக்கில் தன்னுடன் படித்த சக மாணவனைக் கைது செய்ததில் இருந்து அஷ்பகுல்லாகானின் காலனிய எதிர்ப்பு இயக்கத்தின் தொடர்பு துவங்கியது. எட்டாம் வகுப்பு பாடத்தில் இடம்பெற்றிருந்த வால்டர் ஸ்காட்-ன் “Love of Country”
என்ற பாடல் புரட்சிகர அரசியல் மீது அவருக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது.
எட்ருஸ்கன் ராணுவத்துக்கு எதிராகப் போரிட்ட ராணுவத் தளபதியான பப்லியஸ் ஹொராசியஸ் காக்ல்-ன் கதை அஷ்பகுல்லாகானிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தாமஸ் பாபிங்டன் மெக்காலேயின் பாடலை பலமுறை தன்னுடைய எழுத்துக்களில் குறிப்பிடுகிறார்.
அஷ்பகுல்லாகான், ராம்பிரசாத் பிஸ்மில், ரோஷன் சிங்
மெய்ன்புரி சதி வழக்கின் போது அஷ்பகுல்லாகான் “இப்பாடல் என்னுடைய நாட்டுப்பற்றுக்கு அடித்தளமிட்டது” என்று பதிவு செய்தார். “உலகிற் சிறந்த தேச பக்தர்கள் (Patriots of the World)” என்ற புத்தகத்தை அவரின் பள்ளி ஆசிரியர் பரிசளித்தார். அதை படித்த பின்னர்”நாட்டுக்காக போராடி உயிர் துறப்போர் ஒரு போதும் மரிப்பதில்லை” என்ற முடிவுக்கு வந்ததாக பதிவு செய்கிறார்.
இளம் புரட்சியாளர்களை காலனிய அரசு அராஜகவாதிகள் என்று அவதூறு செய்ததற்கு எதிராக “அந்த இளைஞர்கள் சுதந்திர தேசத்தில் பிறந்திருந்தால் புதியதொரு தேசத்தை நிர்மாணம் செய்பவர்களாக அங்கீகரிக்கப்பட்டவர்களாக இருந்திருப்பர்” என்கிறார்.
தன்னுடைய முதல் அரசியல் கடிதத்தை,1921-க்கும் 1922-க்கும் இடைப்பட்ட காலத்தில் நண்பனான பனாசிர் லாலுக்கு எழுதினார். அதில் புரட்சிகரப் பாதையை தான் மேற்கொள்ளப் போவதென்ற முடிவைத் தெரிவிக்கிறார். இந்தியப் புரட்சியாளர்களுக்கு உத்வேகமூட்டிய போல்ஷ்விக்மயமான புரட்சியை தலைமை தாங்கி நடத்திய தோழர் லெனினுக்கு கடிதம் எழுத வேண்டும் என்ற ஆவலை கீழ்கண்டவாறு பனாசிர்லாலுக்கு தெரிவிக்கிறார்.
”உன்னுடைய கடிதத்தின் மூலம் லெனினைப் பற்றி கொண்டேன். அவருக்கு கடிதம் எழுத வேண்டும் என்று யோசித்துக்கொண்டு இருக்கிறேன்.”
அவரின் நிதி நிலைமைகள், தனிப்பட்ட சுதந்திரம், சொந்த வாழ்க்கை ஆகியவற்றைப் பற்றிய நீண்ட விவாதத்திற்குப் பின்னர் நாட்டின் விடுதலைக்காகப் போராட வேண்டிய அவசியத்தை தெரிவிக்கிறார். அவ்விவாதத்தின் இறுதியில் ஆணித்தரமாக தன்னுடைய கருத்தை பின்வருமாறு கூறுகிறார். “ இந்தியாவின் விடுதலையானது விவசாயிகளை அணிதிரட்டுவதை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.”
இந்த முடிவுக்கு அவர் வந்தடைந்ததில் ஆவாத் விவசாயிகள் மற்றும் குத்தகைதாரர்கள் எழுச்சி (1920-1922) முக்கிய பங்கு வகித்தது. தங்களைச் சுரண்டிய தாலுக்தார்கள், நிலப்பிரபுக்கள், பிரிட்டிஷ் அரசு ஆகியோருக்கு எதிரான போராட்டமே ஆவாத் விவசாயிகள் மற்றும் குத்தகைதாரர்களின் எழுச்சி ஆகும். விவசாயம் செய்து அதன் மூலம் கிடைக்கும் நிதியில் இருந்து விவசாயிகளை அணிதிரட்ட வேண்டும் என்ற யோசனையையும் வைத்திருந்தார்.
“நாட்டின் விடுதலை என்பது, ஏழைகளின் மகிழ்ச்சிக்கானதாகவும் அவர்களின் வாழ்நிலையை மேம்படுத்துவதாகவும் இருக்க வேண்டும். நான் ஆண்டவனை வேண்டுவது ஒன்றுதான், என்னுடைய இறப்புக்குப் பின்னர் கூலி விவசாயிகளும் தொழிலாளர்களும் நிலப்பிரபுக்களுக்கு நிகரான அந்தஸ்தை பெற வேண்டும் என்பதே.”
தான் தூக்கிலிடப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர், தான் எதற்காக? எப்படிப்பட்ட விடுதலைக்காகப் போராடுகிறேன் என்பதை விளக்கும் வகையில் நாட்டுப்புற விவசாயிகளுக்கு தன்னுடைய இறுதி கடிதத்தை எழுதினார்.
அக்கடிதத்தில், அஷ்பகுல்லாகான் இரு வகையிலான சமத்துவத்தின் தேவையை கூறுகிறார். பொருளாதார மற்றும் சமூக பண்பாட்டுத் தளத்திலும் சமத்துவம் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். அதே கடிதத்தில் கம்யூனிஸ்டுகளுக்கு தன்னுடைய ஆதரவைத் தெரிவிக்கிறார்.
“நான் உங்களுடன் உடன்படுகின்றேன். ஏதும் உதவியற்ற தொழிலாளர்கள் மற்றும் ஏழை விவசாயிகளுக்காக மட்டுமே என்னுடைய இதயம் அழுது கொண்டிருக்கின்றது. நான் அவர்களுடன் தங்கி இருந்தபோது அவர்களின் பரிதாபகரமான நிலையை கண்டு பல முறை கண்ணீர் விட்டுள்ளேன். எங்களுடைய இந்த நகரத்தை பிரகாசிக்க வைத்தவர்கள் அவர்கள்தான். எங்களின் தொழிற்சாலைகள் அவர்களால்தான் இயங்குகின்றன.
இவ்வுலகின் ஒவ்வொரு வேலையும் அவர்களால்தான் நடைபெறுகின்றது. அனைத்தையும் அவர்களே உற்பத்தி செய்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு எதுவும் சொந்தமில்லை. எவ்வித சிறுபங்கும் இல்லை. அவர்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இதற்கு வெள்ளை அரசாங்கமும் தரகர்களுமே முழுப்பொறுப்பு என்பதிலும் உங்களின் அரசியல் இலக்குகளுடனும் உங்களுடன் நான் உடன்படுகின்றேன். கிராமங்களுக்குச் செல்லுங்கள், ஆலைகளுக்குச் செல்லுங்கள், அம்மக்களோடு வாழுங்கள், அவர்களின் வாழ்நிலையை கண்டுணருங்கள், அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.”
மேற்கண்ட கூற்றுகள் எல்லாம் வெறும் வெற்றுச் சொல்லாடல்கள் அல்ல; பொருளாதார நிலைமைகள் பற்றிய ஆழமான விவாதத்தில் இருந்து நாட்டின் விடுதலை பற்றி அவர் வந்தடைந்த முடிவுகளே. “தொழிலாளர்களை ஒட்டச் சுரண்டி அவர்களின் ரத்தத்தை குடிப்பதன் மூலம் முதலாளிகளும் விவசாயிகளை சுரண்டியதன் மூலம் நிலப்பிரபுக்களும் தங்கள் செல்வ வளத்தைப் பெருக்கிக் கொள்கிறார்கள்.” என்று எழுதுகிறார்.
சிறையில் அவர் தன்னுடையை மிகச்சிறியதொரு சுயசரிதையை எழுதினார். அதில் “இந்திய அரசாங்கம் மட்டுமல்ல , உலகில் உள்ள பல அரசுகளும் சட்டவிரோதமானவையே.
அ. அவை ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளை அங்கீகரிப்பதில்லை.
ஆ. அவை நிலப்பிரபுக்கள் மற்றும் முதலாளிகளின் உரிமைகளையே பிரதிபலிக்கின்றன.
இ. தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் சரி உரிமையை அளிப்பதில்லை.
ஈ. ஏற்கனவே உள்ள அநீதியான வேறுபாடுகளை பராமரிக்கவே சட்டங்கள் உள்ளன.”
மேலும் அவர் கூறுகையில்,
” இந்தியா வெள்ளையர்களிடமிருந்து விடுதலை பெறுமானால், இந்நாட்டின் மக்கள் அரசைக் கைப்பற்ற வேண்டும். நாட்டின் விடுதலைக்குப் பின்னரும் ஏழை , பணக்காரன் மற்றும் விவசாயி , நிலப்பிரபு என்ற சமமற்ற இந்த அநீதி தொடருமானால் , சம உரிமை கிடைக்கும் வரை சுதந்திரம் வேண்டாம் என்று ஆண்டவனை நான் வேண்டுவேன் என்பதை நான் உறுதியாகச்சொல்கிறேன். இதனால் என்னை நீங்கள் கம்யூனிஸ்ட் என்று அழைத்தீர்கள் என்றால் அதற்கு நான் கவலைப்படப் போவதில்லை. அவர் யாரையும் அசமத்துவமாகப் படைக்கவில்லை என்பதில் நான் உறுதியாக கடவுளை நம்புகிறேன்.”
அஷ்பகுல்லாகான் மதம் தொடர்பாக சில கொள்கைகளை வைத்திருந்தார்.
1. மதத்தின் அடிப்படையில் விமர்சிப்பது என்பது அடையாள அரசியலாகும்.
2. வகுப்புவாதம் மீதான கடும் விமர்சனம்
3. மதம் என்பது தனி நபர் சார்ந்தது.
“இந்திய ஆசிரியர்கள் எப்போதுமே இந்து மற்றும் முசுலீம்களுக்கிடையிலான வேறுபாட்டை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.இது அடிப்படையில் பொருளற்றது. இவர்கள்தான் தேசத்தின் எதிரிகளாவர். பிற மதத்தினர் பற்றிய பொதுவான கருத்துக்கள் தவறானவை.”
பிஸ்மில் கூட தனது சுயசரிதையில் ஆரம்பத்தில் அஷ்பகுல்லாகான் முசுலீம் என்பதால் HRA-வில் சேர்வதில் உள்நோக்கம் இருக்கும் என அவர் மீது சந்தேகம் கொண்டதை தெரிவித்துள்ளார்.
வகுப்புவாதம் தொடர்பாக பிஸ்மில் மற்றும் அஷ்பகுல்லாகான் ஆகியோரிடையில் பல விவாதங்கள் நடைபெற்றுள்ளன. இருவரும் சுவராஜ் கட்சியில் இருந்தபோது வகுப்புவாதங்களுக்கு எதிரான பிரச்சாரங்களிலும் பேரணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்ய சமாஜத்தினர் இந்துமத சுத்திகரிப்பு பிரச்சாரம் செய்வது, அதற்கு பதிலாக இசுலாமியர்கள் தப்லீக் பிரச்சாரம் செய்வதையும் அவர் விமர்சிக்கிறார்.
ஒரு மதம் இன்னொரு மதத்திலிருந்து வேறுபடுத்திக்காட்ட தன்னை உயர்வாகக் காட்டுவதே வகுப்புவாதத்திற்கு கொண்டு செல்லும் என்றும் தெரிவிக்கிறார். மேலும் தங்கள் மத வேறுபாடுகளைக் கடந்து பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் போராட வேண்டும் என்பதை தனது இறுதி வேண்டுகோளாக மக்களுக்கு தெரிவித்தார்.
அஷ்பகுல்லாகான் தொடர்ச்சியாக மதவாதத்திற்கு எதிராக தன்னுடைய கருத்துக்களை கூறிவந்தது என்பது அக்காலத்திய புரட்சிகர இயக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர் புரட்சிகர இயக்கம் வளர்ந்து கொண்டிருந்த காலத்தில் இருந்தவராவர். அவரும் ஏனைய காக்கோரி தியாகிகள் தூக்கிலிடப்பட்ட பின்னர் பகத்சிங், ஆசாத் ஆகியோர் HINDUSTAN REPUBLICAN ARMY என்பதை HINDUSTAN SOCIALIST REPUBLICAN ARMY என்று பெயர் மாற்றம் செய்தனர். இது இலட்சியவாத சோசலிசத்தில் இருந்து வரலாற்றுப் பொருள் முதல்வாதத்திற்கும், ஆத்திக மதச்சார்பின்மையிலிருந்து கறாரான நாத்திகத்தை நோக்கி புரட்சிகர இயக்கம் சென்றுள்ளதை அறிய முடிகிறது.
அவரை முசுலீம் என்று குறிப்பிடுவது புரட்சிகர இயக்கத்திற்கு சரியான வடிவம் கொடுக்க முயன்ற அஷ்பகுல்லாகானின் பங்களிப்பினையும் முயற்சிகளையும் குறைப்பதாகவே அமையும்.
(The wire-ல் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான கட்டுரை)
கட்டுரையாளர்கள் : ஹர்ஷ்வர்தன், பிரபல் சரண் அகர்வால்
தமிழாக்கம் : மருது , மக்கள் அதிகாரம் நன்றி : The wire
பா.ஜ.க.வின் எம்.பி.யான தேஜாஸ்வி சூர்யா கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம், இஸ்லாமிய மதத்திற்கு எதிராக கடுமையான மதவெறியை கக்கும் ட்வீட் ஒன்றை போட்டிருந்தார். “தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது. ஆனால், தீவிரவாதிக்கு கண்டிப்பாக மதம் இருக்கிறது. பெரும்பாலான சமயங்களில் அது இஸ்லாமாக இருக்கிறது”. இந்து மதவெறியின் அரசியல் சக்தியான பா.ஜ.க அரசே இதை நீக்க ட்விட்டர் நிறுவனத்திடம் கேட்டுக்கொண்டது எனில் அந்தக் கருத்தின் யோக்கியதையை நாம் தனியாகக் கூறத் தேவையில்லை.
அதற்கு சற்றும் குறையாமல் இந்த வாரம் மற்றுமொரு ட்வீட் செய்திருக்கிறார் சூர்யா. தீபாவளி பண்டிகை காலத்துக்கான தன்னுடைய விளம்பரத்தில் உருது வாக்கியமான Jash-e-Riwaaz ‘ஜாஸ்-இ-ரிவாஸ்’ – ‘பாரம்பரியத்தின் கொண்டாட்டம்’ என ஆடை நிறுவனமான ஃபேப் இந்தியா பயன்படுத்தியிருந்தது. இதை எப்படி இந்து – முஸ்லீம் மோதலாக திருப்பியிருக்கிறார் என்பதை அவரது சமீபத்திய ட்வீட் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
பா.ஜ.க.வின் எம்.பி.யான தேஜாஸ்வி சூர்யா
“தீபாவளி, ஜாஸ்-இ-ரிவாஸ் கிடையாது. பாரம்பரிய இந்து ஆடைகள் இல்லாமல் விளம்பர நடிகர்களை சித்தரித்து இந்துமத பண்டிகைகளை திட்டமிட்டு ஆபிரகாமியமயமாக்கும், இந்த முயற்சி கண்டிப்பாக திரும்பப் பெறப்பட வேணடும். மேலும், ஃபேப் இந்தியா போன்ற நிறுவனங்கள் இத்தகைய திட்டமிட்ட தவறான செயல்களுக்கு பொருளாதார இழப்புக்களை எதிர்கொண்டாக வேண்டும்” என்று ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.
இந்த பாஜக தலைவரின் ட்வீட்டில் பல விடயங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. மொழி (உருது) மற்றும் மதம் (ஆபிரகாமியமயமாக்கும்) இடையே புனையப்படும் வகுப்புவாத கண்ணோட்டம் அதில் ஒன்று. அடுத்து, நடிகா்கள் அணிந்திருக்கும் ஆடைகள் (புடவை, சல்வார்-கமீஸ் மற்றும் குர்தா-பைஜாமா) பாரம்பரிய இந்து உடைகள் இல்லை என்ற விசமத்தனமான எதிர்ப்பு இது.
இந்தியாவின் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் உருதும் ஒன்றாகும். மேலும், ஆங்கிலத்தைப் போலல்லாமல் உருது, ‘இந்தியாவில்’ தோன்றிய மொழியாகும். அதன் சொற்கள் சரியாக உச்சரிக்கப்படாவிட்டாலும் கூட பாலிவுட்டில் அதற்கென்று தனி இடம் இருக்கிறது. தீபாவளியை “ஜஷ்ன்-இ-சரஹன்” – விளக்குகளின் திருவிழா என்று முகலாயர்கள் அழைத்தனர்.
பெரும்பாலும் சல்வார்-கமீஸ் மற்றும் குர்தா ஆடைகள் இந்திய ஆடைகள் அல்ல என்ற வரலாற்று தோற்றம் நன்கு அறியப்பட்டிருந்தாலும், நவீன உடைகள் மத அடையாளத்தைக் கொண்டிருப்பதாக நம்மில் பெரும்பாலோர் கருதுகின்றனர். விளம்பரத்தில் நடிகர்கள் நெற்றிப்போட்டு வைக்காமல் இருப்பதை மற்றொரு முக்கியமான இந்துத்துவா ஆர்வலர் எதிர்த்திருக்கிறார். மேலும், தீபாவளியை ‘அன்பு மற்றும் ஒளியின் திருவிழா’ என்று குறிப்பிடுவதை “இந்துத்துவ நீக்கம்” என்று கூறியிருக்கிறார்.
தீபாவளியை “ஒளியின் திருவிழா” என்று கூறும் பிரதமர் அலுவலகத்தை நோக்கி தமது விமர்சனங்களை வைக்க அவருக்கு நான் பரிந்துரைக்கிறேன். ஸ்பானிஷ் பேசும் நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் தீபாவளியை, “Festival de las Luces” – “விளக்குகளின் திருவிழா” என்றுதான் வழக்கமாக அழைக்கின்றன. பாஜக அவர்களுக்கு கண்டிப்பாக ஒரு குறிப்பாணை அனுப்ப வேண்டும்.
விளம்பரத்தில் உருது வாக்கியமான Jash-e-Riwaaz ‘ஜாஸ்-இ-ரிவாஸ்’ – ‘பாரம்பரியத்தின் கொண்டாட்டம்’ என ஆடை நிறுவனமான ஃபேபி இந்தியா பயன்படுத்தியிருந்தது.
விளம்பரத்தை நீக்குவதற்கு ஃபேப் இந்தியா நிறுவனம் விரைவாக முடிவு எடுத்தது வருத்தமளித்தாலும், அதற்காக நான் ஆச்சரியப்படவில்லை. ‘ஜஷ்ன்-இ-ரிவாஸ்’ என்ற சொற்றொடர் தீபாவளியை குறிக்க பயன்படுத்தவில்லை என்று அது கூறியது மழுப்பலாக தான் தெரிகிறது. ஆனால் உண்மை என்னவென்றால், இந்தியாவின் பெரிய நிறுவனங்கள் இந்துத்துவா மதவெறியை எதிர்கொள்ளத் தடுமாறுகின்றன.
கடந்த ஆண்டு, டாடா குழுமத்திற்கு சொந்தமான தனிஷ்க், மத ஒருமைப்பாட்டு அடையாளமாக ஒரு கலப்பு சமூக வீட்டை காட்டும் அழகான விளம்பரத்தை எடுத்தது. மறுபுறம், சர்ஃப் எக்செல், ஒரு முஸ்லீம் சிறுவன் மற்றும் இந்து சிறுமியை நண்பர்களாக காட்டும் மனதுக்கு நெருக்கமான ஹோலி விளம்பரத்திற்காக ஒரு கொடூரமான தாக்குதலை எதிர்கொண்டது. ஆனால், அதன் தாய் நிறுவனமான இந்துஸ்தான் யுனிலீவர் ஒரு பன்னாட்டு நிறுவனமாக இருந்ததால் அந்த எதிர்ப்பினை சமாளித்தது.
தங்களது விளம்பரங்கள் தவறானதாலோ அல்லது வாடிக்கையாளர்களிடம் இருந்து அந்நியமாகி விடுவோமே என்ற அபாயத்தினாலோ ஃபேப் இந்தியா மற்றும் தனிஷ்க் நிறுவனங்கள் வளைந்து கொடுக்கவில்லை, மாறாக இந்தியா, சட்டத்தின் ஆளுகைக்கு உட்பட்ட ஒரு நாடு அல்ல என்பது அவர்களுக்கு தெரியும். அரசாங்க ஆதரவு சக்திகள் தங்களது கடைகள் மற்றும் ஊழியர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடலாம். மேலும், அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் போலீசு செய்து தரும் என்பதும் அவர்களுக்கு தெரியும். இந்துத்துவாவின் எதிர் பக்கத்தில் இருந்தால் பல்வேறு வழிகளில் தாங்கள் குறிவைக்கப்படுவோம் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.
“இந்துக்களின் மனதை புண்படுத்துகிறது” என்று போலீஸால் வழக்கு தாக்கல் செய்யப்படலாம், வருமான வரி சோதனை நடக்கலாம்; அமலாக்க இயக்குநரகம் சில அற்பமான புகார்களையும் சிக்கல்களையும் தோண்டி எடுத்து வழக்கு தொடுக்கலாம். நிறுவனமும் அதன் உரிமையாளர்களும் நீதிமன்றத்தில் போராடுவதற்கு பல ஆண்டுகள் செலவிட வேண்டியிருக்கலாம்.
ஃபேப் இந்தியா போன்றவற்றை விமர்சிப்பது கிளர்ச்சியூட்டுவதாக இருக்கிறது என்றாலும், நம்முடைய கோபத்தை வேறு இடத்தில் குவிக்க வேண்டும். வேறு இடத்தில் என்று நான் குறிப்பிடுவது சூர்யா மற்றும் பிற இந்துத்துவா வெறுப்பு ட்வீட்களை அல்ல. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக நாட்டின் இந்துக்களும், அவர்களுடைய மதமும் தாக்குதலுக்குள்ளாகி வருவதாக போலி பிரச்சாரம் செய்து வரும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அரசியல் தலைமைகளை தான்.
ஏற்கனவே ‘லவ் ஜிஹாத்’, ‘நில ஜிஹாத்’, ‘UPSC ஜிஹாத்’ மற்றும் ‘Vendor ஜிஹாத்’ ஆகியவற்றை இந்துத்துவ பிரச்சார இயந்திரம் கொண்டு வந்துள்ளதைப்போல இப்போது ‘விளம்பர ஜிஹாத்’ தையும் கண்டுபிடித்துள்ளனர். இந்துக்களை பாதுகாப்பற்றவர்களாக உணரச் செய்வதும், அவர்களுக்கும் இந்தியாவின் மத சிறுபான்மையினருக்கும் இடையே ஒரு ஒற்றுமையின்மையை ஏற்படுத்துவதுமே இதன் நோக்கம்.
கடந்த மாதம் உத்தரப்பிரதேச முதலமைச்சரும் இதுபோன்ற ஒன்றை செய்த பின்னர்தான் பிரதமர் மோடி இடமிருந்து ‘சிறந்த நிர்வாகத்திற்கான’ பாராட்டு பெற்றார். இதனால், தேஜஸ்வி சூர்யாவால் ஒரு உருது சொற்றொடரை எளிதில் குறிவைக்க முடிந்திருக்கிறது. பாஜக உருவாக்கிய வக்கிரமான இந்த அரசியல் உணர்வுச் சங்கிலியில் யார் யாரெல்லாம், முஸ்லீம்கள், இஸ்லாம் மற்றும் ‘ஆபிரகாமிய’ நம்பிக்கைகளை எவ்வளவு அதிகமாக குறிவைக்கின்றனரோ, அவ்வளவு வேகமாக அவர்கள் உயர் பதவிக்கு செல்வார்கள். இதுதான் இந்தியா எதிர்கொள்ள வேண்டிய உண்மையான சமூக சீர்கேடு.
கட்டுரையாளர் : சித்தார்த் வரதராஜன்
தமிழாக்கம் : ஆறுமுகம் நன்றி : த வயர்
உத்தம் சிங் இந்திய விடுதலை போராட்டத்தின் பிரிக்க முடியாத ஆனால் வெளி உலகம் பெரிய அளவுக்கு அறியாத ஒரு பெயர். ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு ஆணையிட்ட அன்றைய பஞ்சாப் கவர்னர் மைக்கேல் ஓ டயரை லண்டனில் 21 ஆண்டுகளுக்கு பிறகு சுட்டு பழிதீர்த்தார் உத்தம் சிங்.
தனது நெருங்கிய நண்பரான பகத்சிங்-கின் பல உன்னத குணங்களை உத்தம் சிங் கொண்டிருந்தார். பகத்சிங்கை விட வயதில் மூத்தவராக இருந்தாலும் அவரை மானசீக வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டவர். லண்டன் விசாரணையின் பொழுது உனது உண்மை பெயர் என்ன எனும் கேள்விக்கு உத்தம் சிங் பதில் அளித்தார் “ராம் முகம்மது சிங் ஆசாத்”. ராம் என்பது இந்து மதத்தையும் முகம்மது என்பது இஸ்லாத்தையும் சிங் என்பது சீக்கியத்தையும் ஆசாத் என்பது விடுதலையையும் குறிக்கும். மத ஒற்றுமையில் பகத்சிங்கின் உன்னதமான கோட்பாடை உத்தம் சிங் கொண்டிருந்தார். உத்தம் சிங்-கும் தூக்கில் போடப்பட்டார். மரணத்திலும் பகத்சிங் வழியில் உத்தம் சிங்!
மைக்கேல் ஓ டயரை சுட்டுக் கொன்ற உத்தம் சிங் பயங்கரவாதியா? புரட்சியாளரா? 21 ஆண்டுகளுக்கு பின்னரும் ஏன் லண்டன் வந்து ஓ டயரை கொல்ல வேண்டும்? அதற்கான அரசியல் / சமூக / உளவியல் காரணங்கள் என்ன? இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க முயல்கிறது “சர்தார் உத்தம் சிங்” எனும் திரைப்படம். இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு தான் இரண்டு நாட்கள் தூங்கவில்லை என ஒரு விமர்சகர் கூறினார். அது மிகை அல்ல!
ஆப்கானிஸ்தான் வழியே சோவியத் யூனியனுக்கு!
பகத்சிங் தூக்கிலிடப்பட்ட சில நாட்களுக்கு பிறகு உத்தம் சிங் சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுகிறார். அவரை சந்திக்க வரும் போராளியிடம் பகத்சிங் உருவாக்கிய “இந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிக் ஆர்மி” (எச்.எஸ்.ஆர்.ஏ)-யை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என உத்தம் சிங் கூறுகிறார். ஏனெனில் தனக்கு ஏதாவது நிகழ்ந்தால் இந்த அமைப்பின் பாரம்பரியத்தை உத்தம்தான் முன்னெடுக்க வேண்டும் என பகத்சிங் அவரிடம் கூறியிருந்தார்.
ஆனால், அந்த போராளி கூறுகிறார்: “ஒருவர் கூட மீதம் இல்லை. அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனர் அல்லது சிறைகளில் உள்ளனர்; எப்படி எச்.எஸ்.ஆர்.ஏ.-வை உயிர்ப்பிக்க முடியும்? நீ லண்டன் சென்று முயன்று பார்! ஆனால், கப்பலில் செல்ல முடியாது. உனது பெயரை சுங்கத் துறையில் பதிவு செய்துள்ளனர்” என்று கூறி சில லண்டன் முகவரிகளை தருகிறார். அவர் வெளியே செல்லும் பொழுது எச்சரிக்கிறார்:
“ஒரு உளவு அதிகாரி உன் வீட்டை 24 மணி நேரமும் கண்காணித்து கொண்டுள்ளார்.” அதனால், தனது சீக்கிய மதத்தின் அடையாளங்களை துறந்துவிட்டு மாறுவேடத்தில் உத்தம் சிங் தப்பிக்கிறார். அவரை கைது செய்ய அனைத்து கப்பல் துறைமுகங்களும் உஷார்படுத்தப்படுகின்றன. ஆனால், உத்தம் கப்பலில் செல்லவில்லை. ஆப்கானிஸ்தான் சென்று உறைய வைக்கும் கடும் பனியில் பல நாட்கள் நடந்து இமயமலை கடந்து ரஷ்யா செல்கிறார். அப்பொழுது ரஷ்யாவில் சோசலிச ஆட்சி! இந்தியச் சூழல்கள் குறித்து ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களிடம் விவாதிக்கிறார். பின்னர் ரஷ்ய கம்யூனிஸ்டுகளின் உதவியுடன் உத்தம் லண்டன் வருகிறார். அங்கு இந்திய விடுதலைக்காக செயல்படும் “இந்திய தொழிலாளர் சங்கம்” ஊழியர்களை சந்திக்கிறார்.
எச்.எஸ்.ஆர்.ஏ.-வை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என உத்தம் வாதிடுகிறார். சூழல் பாதகமாக இருப்பதால் சில நாட்களுக்கு அமைதியாக இருக்குமாறும் ஏதாவது வேலையில் இணையுமாறும் அவர்கள் கூறுகின்றனர். தச்சு வேலை / துணி விற்பனை / விற்பனை பிரதிநிதி என பல வேலைகளை செய்கிறார். அப்பொழுது பிரிட்டன் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பல போரட்டங்களில் கலந்து கொள்கிறார். எய்லின் பார்மர் எனும் பெண் தோழர் மூலம் ஐரிஷ் விடுதலை போராளிகளை சந்திக்கிறார்.
தமது தேசத்தில் பிரிட்டனின் அதிகாரத்தை எதிர்த்து போராடுபவர்கள் ஐரிஷ் விடுதலை போராளிகள். பிரிட்டனில் திரட்டிய நிதி மூலம் ஐரிஷ் போராளிகளிடம் ஆயுதங்கள் கொள்முதல் செய்ய உத்தம் முயல்கிறார். அந்த ஆயுதங்களை இந்திய விடுதலை இயக்கத்துக்கு பயன்படுத்துவது என்பது திட்டம். ஆனால், பிரிட்டன் போலீசுத்துறை ஆயுதக் கிடங்கை கைப்பற்றியது மட்டுமல்லாமல், ஐரிஷ் போராளிகளையும் கொன்று விடுகிறது. எனவே, உத்தம் சிங்-கின் திட்டத்தில் பின்னடைவு ஏற்படுகிறது. இரண்டாம் உலகப்போர் மூள்கிறது. இந்தச் சூழலில் பிரிட்டனில் உள்ள இந்திய தொழிலாளர் சங்கம் போர் முடியும் வரை வேறு எந்த செயலிலும் இறங்க வேண்டாம் என உத்தமிடம் கூறுகிறது. ஆனால், இந்த மதிப்பீடை உத்தம் ஏற்கவில்லை.
இந்திய உயிர்கள் துச்சமா?
லண்டனில் தங்கியிருக்கும் பொழுது இரவு தூக்கம் வராமல் உத்தம் துன்புறுகிறார். ஜாலியன் வாலாபாக் படுகொலை அவர் நினைவில் உழல்கிறது. எச்.எஸ்.ஆர்.ஏ.-வை உயிர்ப்பிக்க முடியாத சூழலில் ஜாலியன் வாலாபாக் கொலைகாரர்களை பழிவாங்கும் எண்ணம் அவருக்கு வலுக்கிறது. துப்பாக்கிச் சூடு நடத்திய ஜெனரல் டயர் மற்றும் அதற்கு ஆணையிட்ட மைக்கேல் ஓ டயர் ஆகியோரை தேடுகிறார். ஆனால், ஏற்கெனவே ஜெனரல் டயர் இறந்துவிட்டார். மீதமிருப்பது மைக்கேல் ஓ டயர் மட்டும்தான்! அவரது நகர்வுகளை துல்லியமாக ஆய்வு செய்கிறார்.
ஒரு நாள் அவரது அலுவலகத்துக்கு விற்பனை பிரதிநிதியாக செல்கிறார். ஒரு பேனாவை பரிசாக அளிக்கிறார். நீங்கள் பஞ்சாப் கவர்னராக இருந்த பொழுது உங்கள் கீழே பணியாற்றினேன் என கூறுகிறார். பின்னர் அவர் வீட்டிலேயே உத்தம் சிங் பணியாளராக சேர்கிறார்.
ஒரு நாள் இரவு மைக்கேல் ஓ டயர் மது அருந்தி கொண்டே கேட்கிறார்: “1919-ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதி நீ எங்கு இருந்தாய்?” “பஞ்சாலையில் பணியாற்றிக் கொண்டிருந்தேன்” “அன்றைக்கு அந்த துப்பாக்கிச் சூடு (ஜாலியன் வாலாபாக்) மிகவும் அவசியமாக இருந்தது. இல்லையெனில் பிரிட்டன் பேரரசுக்கு பெரிய இழப்பு உருவாகியிருக்கும்.” “அன்று ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர் ஐயா!” “ஆனால், லட்சக்கணக்கானவர்கள் காப்பாற்றப்பட்டனர். இன்னொரு 1857 தடுக்கப்பட்டது.” என மைக்கேல் ஓ டயர் நியாயப்படுத்துகிறார். “ஐயா! பெண்களும் குழந்தைகளும் கூட கொல்லப்பட்டனர்.”
“அது தவிர்க்க இயலாதது”. இப்படித்தான் பிரிட்டன் ஆட்சியாளர்கள் ஜாலியன்வாலாபாக் படுகொலையை நியாயப்படுத்தினர். கணிசமான பிரிட்டன் மக்களை நம்பவும் வைத்தனர். உத்தம் சிங்-க்கு ரத்தம் கொதிக்கிறது. மைக்கேல் ஓ டயர் மது அருந்திக் கொண்டு உட்கார்ந்தபடியே தூங்கி விடுகிறார். அருகில் எவரும் இல்லை. உத்தம் சிங் துப்பாக்கியை எடுத்து குறி பார்க்கிறார். ஆனால், சுடவில்லை. ஏன்? விசரணையின் பொழுது இந்த கேள்விக்கு பதில் தருகிறார்: “நான் அப்பொழுது சுட்டிருந்தால் அது ஒரு முதலாளிக்கும் அவரது பணியாளுக்கும் இடையே நடந்த சம்பவம் என சுருக்கப்பட்டிருக்கும். அனைத்துப் பணியாளர்களுக்கும் கெட்ட பெயர் உருவாகியிருக்கும். நான் அதை விரும்பவில்லை.”
உத்தம் சிங் எவ்வளவு நுணுக்கமாகச் சிந்தித்தார் என்பதை இது வெளிப்படுத்துகிறது. ஒரு கட்டத்தில் இந்தியா திரும்ப எண்ணுகிறார். அதற்காக விண்ணப்பிக்க சம்பந்தப்பட்ட அலுவலகம் செல்கிறார். அப்பொழுது அந்த அலுவலர் மேலதிகாரிகளுக்கு தகவல் தர முயற்சிக்க இதனை அறிந்த உத்தம் சிங் வெளியேறி விடுகிறார். சாலையில் நடக்கும் பொழுது தான் அந்த சுவரொட்டி கண்ணில்படுகிறது. காக்ஸ்டன் அரங்கில் இந்தியாவில் பிரிட்டன் ஆட்சி குறித்து மைக்கேல் ஓ டயர் பேசுகிறார். அங்கு வேறு பல அதிகாரிகளும் வர உள்ளனர்.
இதுதான் சரியான தருணம் என அந்த நொடியில் உத்தம் சிங் முடிவெடுக்கிறார். ஒரு புத்தகத்தில் துப்பாக்கியை மறைத்துக் கொண்டு அரங்கிற்குள் நுழைந்து விடுகிறார். மைக்கேல் ஓ டயர் உரையாற்றிவிட்டு மேடை விட்டு கீழே இறங்குகிறார். நேருக்கு நேராக அவரை இரண்டுமுறை சுடுகிறார். மேலும், இரண்டு முன்னாள் இந்திய கவர்னர்களை சுடுகிறார். தப்பித்து ஓடாமல் அங்கேயே நிற்கிறார். பின்னர் கைது செய்யப்படுவதும் அவரது சகாக்களின் பெயரை கேட்டு போலீசுத்துறை சித்ரவதை செய்வதும் பின்விளைவுகள்.
எவ்வளவு சித்ரவதை செய்தும் ஒரு வார்த்தை அவரிடமிருந்து பெற முடியவில்லை. எனவே, ஸ்வைன் எனும் சிறப்பு விசாரணை அதிகாரியை நியமிக்கின்றனர். அப்பொழுதும் ஒரு வார்த்தை கூட உத்தம் சிங்-ன் வாயிலிருந்து வரவில்லை. ஆனால், அந்த விசாரணையின் பொழுது ஸ்வைனுக்கும் உத்தமுக்கும் சில முக்கிய உரையாடல்கள் நடக்கின்றன.
ஸ்வைன் : “பிரிட்டன் மீது உனக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு?”
உத்தம் : “பிரிட்டன் மீது எனக்கு எந்த வெறுப்பும் இல்லை. இந்தியர்களை விட எனக்கு பிரிட்டன் நண்பர்கள்தான் அதிகம். பிரிட்டன் தொழிலாளர்கள் மீது எனக்கு துளி கூட வெறுப்பு கிடையாது. உங்கள் மீது எனக்கு வெறுப்பு இல்லை. உங்கள் கடமையை உங்கள் தேசத்தில் நீங்கள் செய்கிறீர்கள். ஆனால், எங்கள் தேசத்தை ஆக்கிரமித்து எங்கள் மக்களை துன்புறுத்துபவர்களை நான் வெறுக்கிறேன்.”
பயங்கரவாதியா? புரட்சியாளரா?
உத்தம் சிங்-க்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. தண்டனை நிறைவேற்றுவதற்கு முதல் நாள் ஸ்வைன் உத்தம் சிங்-ன் சிறை அறைக்கு வருகிறார். அவர் கையில் உத்தமுக்கு மிகவும் பிடித்த லட்டுக்கள் நிறைந்த பெட்டி.
உத்தம் : “மிஸ்டர் ஸ்வைன்! அனைத்தையும் நான் கூறிவிட்டேன். இன்னும் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? எதற்கு இனிப்புகள்?”
ஸ்வைன் : “நீங்கள் அடிப்படையில் கொலைகாரர் இல்லை என்பதை விசாரணை உரையாடல்கள் மூலம் உணர்ந்து கொண்டேன். ஆனால், ஏன் இந்த கொலை? அதுவும் 21 ஆண்டுகள் கழித்து! என்னதான் நடந்தது ஜாலியன் வாலாபாக்கில்?”
அப்பொழுதுதான் ஜாலியன் வாலாபாக் நிகழ்வுகள் குறித்து உத்தம் சிங் ஸ்வைனுக்கு விவரிக்கிறார். சுமார் 30 நிமிடம் ஓடும் இந்த காட்சிகள் ஜாலியன் வாலாபாக் துப்பாக்கிச் சூடும் அதற்கு பின்னர் என்ன நடந்தது என்பதையும் 19 வயதே நிரம்பிய உத்தம் சிங்-ன் சிந்தனையில் அது என்ன மாற்றத்தை உருவாக்கியது என்பதையும் இந்த காட்சிகள் விவரிக்கின்றன.
நம்மை 1919-ஆம் ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதிய ஜாலியன் வாலாபாக்கில் கொண்டு போய் நிறுத்தி விடுகின்றன இந்தக் காட்சிகள்! எவரிடம் கோபத்தை அல்லது அழுகையை இந்தக் காட்சிகள் உருவாக்கவில்லையோ அவர்கள் கல்மனம் படைத்தவர்கள் என முடிவு செய்வது தவறாகாது. உங்களது கடைசி விருப்பம் என்ன என ஸ்வைன் கேட்கிறார். நான் ஒரு புரட்சியாளன் என்பதை உலகுக்கு சொல்லுங்கள் என்கிறார் உத்தம் சிங். ஆம்! உத்தம் சிங் பயங்கரவாதி அல்லது கொலைகாரர் அல்ல! அவர் ஒரு புரட்சிவாதி! அவரது சிந்தனைகளை செதுக்கியது கீழ்க்கண்ட அமைப்புகள்:
ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பழிதீர்க்க மட்டுமே உத்தம் சிங் செயல்பட்டார் என பெரும்பான்மையான கருத்தாக்கங்கள் முன்வைக்கின்றன. அவர் அடிப்படையில் சமூகப் புரட்சி கோட்பாடுகளை ஏற்றுக்கொண்ட தீவிர செயல்பாட்டாளர். ஜாலியன் வாலாபாக் பழிதீர்த்தல் என்பது அதன் ஒரு பகுதிதான்! இதனை இந்த திரைப்படம் பதிவு செய்தாலும் போதுமான அழுத்தம் தர தவறிவிடுகிறது.
எனினும், உத்தம் சிங் குறித்தும் ஜாலியன் வாலாபாக் குறித்தும் இன்றைய தலைமுறையினருக்கு அழுத்தமாக வெளிப்படுத்தி ஹாலிவுட் தரத்துக்கு இணையான திரைப்படத்தை அளித்த இயக்குநர் சுஜித் சர்க்கார் / உத்தம் சிங்-காகவே வாழ்ந்து காட்டிய நாயகன் விக்கி கவுசல் / பகத்சிங்காக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய அமோல் பரஷர் உட்பட அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.
இந்தத் திரைப்படம் பார்க்கும் பொழுது மாற்றுக் கருத்துகளை இரும்புக்கரம் கொண்டு நசுக்க எத்தனிக்கும் இன்றைய ஆட்சியாளர்களுக்கும் அன்றைய பிரிட்டிஷ் அடக்குமுறையாளர்களுக்கும் பெரிய வேறுபாடு இல்லை என்பதை உணர்வதற்கு அதிக சிரமம் ஏற்படாது. அமேசான் பிரைமில் வெளியிடப்பட்டுள்ள இந்த திரைப்படம் தமிழ் உட்பட அனைத்து மொழிகளிலும் வெளியிடப்படுவது பயனுள்ளதாக அமையும்.
அகநானூறிலும், புறநானூறிலும், மோரியரைப் பற்றி ஐந்து பாடல்களில் குறிப்புகள் காணப்படுகின்றன. இக்குறிப்புகளைக் கொண்டு பல்வேறு விவாதங்கள், ஆராய்ச்சியாளரிடையே நடைபெற்று வருகின்றன. அவ்வாராய்ச்சிக்குப் பொருளாக அமைந்துள்ள வினாக்கள் வருமாறு :
* தமிழிலக்கியங்கள் குறிப்பிடும் மோரியர் யாவர்? *இவர்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு எவ்வகையில் அறிமுகமாயினர்? * மோரியரைக் குறிப்பிடும் பாடல்கள் மோரியர் காலத்திலேயே தோன்றினவா? * இக்குறிப்புகளைக் கொண்டு புறநானூற்று அகநானூற்றுக் காலங்களைக் கணிக்க முடியுமா?
இவ்விவாதங்களுக்குப் பல தலைசிறந்த ஆராய்ச்சியாளர்கள் தங்கள் கருத்துக்களை வழங்கியுள்ளார்கள். அவர்களுள் சிலர், வையாபுரிப் பிள்ளை , டாக்டர் எஸ்.கே.சட்டர்ஜி, ஆர்.ஜே.மஜும்தார், டாக்டர் டி.டி. கோஸாம்பி, எஸ். கிருஷ்ணசாமி அய்யங்கார் முதலியோர்.
மௌரியர் என்ற பெயரை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அந்தப் பரம்பரையின் ஸ்தாபகர் சந்திரகுப்தர். சந்திரகுப்தன், சாணக்கியன் ஆகிய இருவரது கதைகளை சுருக்கமாகவேனும் அறியாதவர் இல்லை. சந்திரகுப்த மௌரியனுடைய காலத்திலிருந்து தான் தொடர்ச்சியான சரித்திரம் தொடங்குகிறதென்று சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
தாழ்த்தப்பட்ட ஜாதிப் பெண்ணிடத்து அரசனுக்குப் பிறந்த மகன் சந்திரகுப்தனென்று சில புராணக் கதைகள் கூறுகின்றன. அவன் தாயின் பெயர் மூரா என்றும் அதனாலே அவனுக்கு அப்பெயர் அமைந்தது என்றும் சில மொழியாராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். வேறு சிலர் புத்தருடைய வம்சமான சாக்கிய வம்சத்தில் சந்திரகுப்தன் தோன்றியதாகக் கூறுவர். இவ்விரண்டில் எது உண்மையாயினும் சந்திரகுப்தன் முந்திய அரசபரம்பரையின் நேர்வாரிசு அல்ல, என்பது தெளிவு.
அவன் நந்த மன்னர்களிடம் படைத்தலைவராக இருந்து அரசனது அதிருப்திக்குள்ளானான். இதுபோன்ற அதிருப்திக்குள்ளான விஷ்ணுகுப்தன் என்னும் சாணக்கியனோடு சேர்ந்து மன்னனை எதிர்த்து ஓர் மறைவான இயக்கத்தைத் தோற்றுவித்தான். இறுதியில் நந்தர் பரம்பரை வீழ்ந்தது. சந்திரகுப்தன் முதல் மௌரியனாக முடி சூடிக் கொண்டான்.
சுமார் கி.மு. 32-ல் மௌரிய பரம்பரை தோன்றிற்று. சந்திர குப்தன் காலத்திலேயே வட இந்தியாவிலுள்ள பல்வேறு சிற்றரசர்களையும், வனத்தில் வாழும் உறவுமுறைக் கூட்டத்தாரையும் வென்று அடிமைப்படுத்தி, மௌரிய சாம்ராஜ்யத்தை விஸ்தரித்தான். அவனுடைய காலத்திற்குப்பின் மௌரிய சக்கரவர்த்திகளில் பெயர் பெற்றவன் அசோகன்.
அசோகன் அறவாழ்க்கையை மேற்கொள்வதற்கு முன்னால் வட இந்தியாவில் தற்போது காஷ்மீரம் என்று வழங்கும் காம்போஜத்திலும், தெற்கே கலிங்கத்திலும் மெளரிய ஆட்சியைப் பரப்பினான். அவனுடைய ஆட்சிக்காலத்தைப்பற்றி சாசனங்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் அகப்படுகின்றன. மௌரிய பரம்பரையின் ஆட்சிக்காலம் கி.மு. 321லிருந்து கி.மு.156 வரை என்று கொள்ளலாம்.
இதே காலத்தில் தமிழ்நாட்டில் சேர, சோழ, பாண்டியர்களும், நூற்றுக்கணக்கான குறுநில மன்னர்களும் ஆட்சி புரிந்து வந்தார்கள். இந்தியாவிலேயே வலிமைமிக்க மௌரியர்களைப் பற்றி அவர்கள் அறிந்திருக்கக் காரணங்களுண்டு. தமிழ்நாட்டுத் துறைமுகங்களிலிருந்து வாணிபப் பொருள்கள் கலிங்கத்துக்கும், வட நாட்டு நகரங்களுக்கும் சென்றன. தமிழ் நாட்டு வணிகர்கள் சிறு சிறு கூட்டங்களாக வடநாட்டில் பல பகுதிகளிலும் குடியேறி வாணிபம் செய்து வந்தார்கள்.
தக்ஷசீலத்திலும், பாடலிபுத்திரத்திலுமுள்ள புத்த பிக்குகள் நாகார்ஜுன் கொண்டாவுக்கும், தென்பாடலிக்கும், காஞ்சீபுரத்திற்கும் கற்பதற்கும், கற்பிப்பதற்குமாக வந்து போய்க் கொண்டிருந்தார்கள். இதன் காரணமாக மௌரிய சாம்ராஜ்யத்தைப்பற்றித் தமிழ் மன்னர்களும் தமிழ்ப்புலவர்களும் அறிந்திருக்கக் கூடும் என்பது சரியானதோர் முடிவே.
மௌரியர்களோடு, போர்கள் மூலமும் திருமணத்தொடர்பு மூலமும், வாணிபத் தொடர்பு மூலமும் உறவுகொண்டிருந்த கிரேக்கர்கள் அவர்களைத் தங்களுடைய மொழியில், மேரீஸ், என்று அழைத்தார்கள்; வடமொழியில் ‘மௌரிய‘ என்ற சொல் மோரியர் என்று திரிந்து வழங்கியது. பௌத்தமத அறநூல்களும் அசோகனது கல்வெட்டுக்களும், புத்த ஜாதகக் கதைகளும், ராஜதரங்கிணி, தாரநாதம் முதலிய புத்தமத வரலாறுகளும் பாலி மொழியிலேயே உள்ளன. கலிங்கத்திலும் தமிழ் நாட்டிலுமுள்ள அறக்கல்லூரிகளில் பாலி மொழியிலே புத்த தருமம் போதிக்கப்பட்டது. எனவே, தமிழ்நாட்டில் மௌரியர் என்ற சொல் ‘மோரியர்‘ என்று வழங்கப்பட்டது.
புலவர்கள், தங்களுக்குப் பரிசில் அளிப்பவர்களை மிகையாகப் புகழ்வது வழக்கம். தமிழ்நாட்டில் மோரியர் ஆட்சிக்காலத்தில் மிகச்சிறிய நிலப்பரப்புள்ள பகுதிகளையே மன்னர்களும், குறுநில மன்னர்களும் ஆண்டு வந்தனர். ஆயினும் புலவர்கள் அவர்களைப் புகழ்ந்து பாடும் போது கடல் சூழ்ந்த புவிக்கெல்லாம் ‘தலைவன்‘ என்றே பாடுவார்கள். அவன் செய்யும் அறச்செயல்களை உலகத்திலேயே சிறந்த பேரரசனது அறச்செயல்களுக்கு ஒப்பிடுவார்கள்.
பிற்காலத்து சாசனங்கள் கூட கொங்குநாட்டில் 200 சதுரமைல் பரப்புள்ள ஒரு சிறுபகுதி மன்னனைத் திரிபுவனச் சக்கரவர்த்தி என்று அழைக்கிறது. இதேபோல் கோப்பெருஞ்சிங்கன் என்னும் சிற்றரசனை சகல புவனச் சக்கரவர்த்தி என்று சாசனம் அழைக்கிறது. எனவே குறுநிலத்தை மோரியர் சாம்ராஜ்யத்தோடு ஒப்பிட்டும் குறுநிலமன்னனை மோரியச் சக்கரவர்த்திகளோடு ஒப்பிட்டும் கூறுவது புலவர்களது உயர்வு நவிற்சியுக்தியாகும். மேற்சொன்ன கருத்துக்களை மனதில் கொண்டு அகநானூறில், வரும் மோரியர் பற்றிய குறிப்புக்களை ஆராய்வோம்.
…………… வென்வேல் விண்ணுறு நெடுங்குடைக் குடைத்தேர் மோரியர் திண் கதிர் திகிரி திரிதரக் குறைத்த உலக விடைகழி மறைவாய் நிலை இய மலர்வாய், மண்டிலத்தன்ன நாடும் பலர்புற விதிர்ந்த அறத்துறை யன்னே
(புறநானூறு 175 ஆதனுங்கனை ஆதிரையானார் பாடியது)
(புலவர் தன்னை ஆதரிக்கும் குறுநில மன்னனைப் புகழ்ந்து பாடுகிறார். உனது அறத்துறை மோரியரது ஆட்சியின் கீழுள்ள பரந்த நிலப்பரப்பில் நிலைபெற்ற அறத்துறை போன்றது.)
விண் பொரு நெடுங்குடை இயல்தேர் மோரியர் பொன் புனை திகிரி திரிதரக் குறைந்த அறை (அகநானூறு 69)
(வானத்தளவு உயர்ந்த நெடிய குடையையும், விரைந்து செல்லும் தேர்ப்படையையும் உடைய மோரியர்களது ஆணைச்சக்கரத்தால் குறைப்பட்ட இடங்கள் )
வம்ப மோரியர் புனைத்தேர் நேமி உருளிய குறைத்த விலங்கு வெள் அறிவிய அறை (அகநானூறு 251)
(புதியவர்களான மோரியரது அணி செய்யப்பட்ட தேர்களின் சக்கரங்கள் உருண்டதால் பள்ளம் விழுந்து நீர் அருவியாகப்பாயும் இடங்கள்)
மோரியர் தென்றிசை மாதிர முன்னிய வரவிற்கு, விண்ணுற ஒங்கியபனி இருங்குறை ஒண்கதிர்த் திகிரி உருளியர் குறைந்த அறை
(அகநானூறு 281)
(மோரியர் தென்திசை நோக்கி வரும்பொழுது வானளாவ வளர்ந்த பனி மூடிய குன்றங்கள் மீது தேர்ச்சக்கரங்கள் பதிந்து குன்றங்கள் தேய்ந்து தாழ்ந்தன.)
மேலே காட்டிய மேற்கோள்களைக் குறித்து வையாபுரிப் பிள்ளை அவர்கள் கருத்து வருமாறு : மோரியர் என்பது மௌரியர்களைக் குறித்ததாகலாம். ஆனால் மேலே குறிப்பிட்ட செய்யுள்கள் மோரியரது ஆட்சிக் காலத்திலேயே எழுதப்பட்டிருக்க வேண்டுமென்று அவசியமல்ல. தான் புகழ நினைக்கும் தலைவனது பெருமையை பழங்காலப் புராணத் தலைவர்களது பெருமையோடு ஒப்பிடுவதும் உண்டு. மகாபாரதத்தில் போரிட்ட இருதரப்புப் படையினருக்கும், பெருஞ்சோற்றுதியன் என்னும் சேரமன்னன் விருந்தளித்தான், என்று புறநானூற்றுச் செய்யுள் ஒன்று கூறுகிறது. இது வரலாற்று உண்மையாக இருக்க முடியாது.
பாரதக் கதையோடு தமது மன்னனைத் தொடர்புபடுத்துவதாகப் புனைந்து கூறப்பட்ட செய்தியே அது. அது போலவே மோரியரைப் பற்றிய பழஞ் செய்யுள்களிலும், புலவர்கள் தங்களது மன்னர்களைப் பெருமைப் படுத்துவதற்காக, முற்காலத்தில் வாழ்ந்த மோரியர்களோடு அவர்களை ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார்கள். உண்மையில் புறநானூறு செய்யுள்களில் பழமையானவை எழுதப்பட்ட காலம், கி.பி. முதல் நூற்றாண்டே. எனவே மோரியரைப் பற்றிய குறிப்புகளெல்லாம் பழைய சங்கச் செய்யுள்கள் எழுதப்பட்ட காலத்துக்கு இரண்டு, மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தவை. இதுவே பிள்ளையவர்களது கருத்தாகும்.
டி.டி. கோஸாம்பி அவர்கள் புராதன இந்திய சரித்திர அறிமுகம்‘ என்ற நூலில் மோரியர் பற்றிய இலக்கியச் சான்றுகள் பற்றி தமது கருத்தை வெளியிட்டுள்ளார். மோரியர் காலத்தில் தமிழிலக்கியம் வளர்ச்சியடைந்திருந்தது என்பதை ஒப்புக்கொள்ள முடியாது. மோரியர் காலத்தில் தமிழ் நாட்டில் புதிய கற்கால நாகரிகம் நிலவியிருந்தது. எழுத்தும், இலக்கியமும் தோன்றவில்லை. இக்கருத்தைத் தாம் மாற்றிக் கொள்வதற்கு ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை, என்று அவர் கூறுகிறார்.
பாரதீய வித்தியா பவனம் வெளியிட்டிருக்கும், ‘புராதன இந்திய சரித்திரம்‘ என்னும் நூலில் வம்ப மோரியர் என்ற சொற்றொடருக்கு upstart mauryas என்ற பொருள் கொடுத்து மோரியர் காலத்திலேயே தமிழ் நாட்டுப் புலவர்கள், மௌரிய சாம்ராஜ்யத்தைப் பற்றியும், மௌரியர்களைப் பற்றியும் அறிந்திருந்தார்கள் என்று கூறுகிறார். இதன் மூலம் மௌரியப் பரம்பரை ஆட்சிக் காலத்தில், மொழியும் இலக்கியமும் தமிழ் நாட்டில் வளர்ச்சியுற்றிருந்ததை இவ்வரலாற்று ஆசிரியர் ஒப்புக்கொள்கிறார். ஆனால் மோரியர்களைப் பற்றிய குறிப்புகளுள்ள, பாடல்களைக் கொண்டு தமிழ் நாட்டின் வரலாற்றைத் தெளிவாக அறிவதற்கு அந்நூலில் முயற்சி எதுவும் செய்யப்படவில்லை.
இக் கருத்துகளைப் பற்றி என்னுடைய கருத்து என்ன என்பதைச் சுருக்கமாகக் கூறுகிறேன்.
கேள்வி:நீங்கள் 1997ல், உங்கள் தந்தை மறைந்து கால் நூற்றாண்டு கழித்து அரசியலுக்குள் நுழைந்திருக்கிறீர்கள். அதற்கு ஏதேனும் சிறப்பான காரணம் உண்டா?
பதில்: எங்கள் அம்மா மறைந்த பின்னர் நான் அரசியலுக்கு வந்தேன். பிறந்தது முதல் அரசியலைச் சுவாசித்துக்கொண்டிருந்த நான், எப்படி அரசியலிலிருந்து விலகி இருக்க முடியும்? அது எனக்குள்ளேயே இருந்தது. இயக்கத்துக்குத் திரும்பி வருவது தவிர்க்க முடியாதது. அப்படித்தான் நான் சிபிஐ எம்எல் விடுதலையில் சேர்ந்தேன். கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த வினோத் மிஸ்ரா எங்களின் தந்தைக்கும் குடும்பத்திற்கும் மிகவும் நெருக்கமானவர். அவர் கட்சியில் சேரும்படி என்னை அழைத்தார்.
கேள்வி: நக்சல்பாரியின் இன்றைய பொருத்தப்பாடு என்ன?
பதில்: நக்சல்பாரி எழுச்சியின் மைய பிரச்சனையாக நிலம் இருந்தது. 100 சதம் நிலச் சீர்திருத்தம் வேண்டும் என்பதுதான் கோரிக்கையாக இருந்தது. நிலப்பிரபுக்களிடம் இருந்த கூடுதல் நிலத்தைப் பறித்தெடுப்பது போராட்ட வடிவமாக இருந்தது. நிலமற்றவர்களும் விவசாயத் தொழிலாளர்களும் இப்போராட்டத்தில் சேர்ந்து கொண்டனர். ஆனால், பொருளாதார சீர்திருத்தங்கள், 1991-க்குப் பின்பு கொண்டுவரப்பட்ட தாராளமயமாக்கம் காரணமாக நிலவரம் மாற்றம் கண்டுள்ளது.
இப்போது கார்ப்பரேட் நிறுவனங்கள் தேசத்தின் வளங்களைக் கொள்ளையடிக்கிறார்கள். எந்த கட்சியும் ஆட்சிக்கு வந்திருக்கலாம். ஆனால், அவர்கள் கார்ப்பரேட்களின் பக்கத்தில்தான் நிற்கிறார்கள். நிலம் மறுபடியும் மையமான பிரச்சனை ஆகிவிட்டது. பழங்குடி, தலித் அமைப்புகளின் தலைமையில், பயிர் செய்யக் கூடிய நிலம் கோரி பல இடங்களில் போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. நிலத்திலிருந்து வெளியேற்றுவதற்கு எதிராக மக்களின் போராட்டங்கள் நடக்கின்றன. தங்களின் வாழ்வாதாரமாக இருக்கும் நிலத்தைப் பறிக்க முயலும் அரசிடமிருந்தும், மிகப்பெரிய கம்பெனிகளிடமிருந்தும் எப்படி தப்பிப்பது என்பது சாதாரண மக்களின் விவசாயிகளின் கவலையாக இருக்கிறது. நில உரிமை மிகவும் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்றாக எழுந்து வந்துள்ளது. நக்சல்பாரிக்குப் பின்பு 50 ஆண்டுகள் கடந்திருந்தபோதும், நிலம் மையமான பிரச்சனையாக தொடர்ந்து இருந்து வருகிறது. அதனால்தான், நந்திகிராம், சிங்கூர், பாங்கார் போன்ற பிரச்சினைகள் எழுகின்றன.
அரசுடன் நேரடி மோதல் என்பது ஓர் ஆயுதப் போராட்டமாக மாறலாம். ஆனால், ஆயுதங்கள் ஆதிக்கம் செய்வதை அனுமதித்துவிடக் கூடாது. இயக்கத்துக்குக் கீழ்ப்பட்டதாக ஆயுதப் போராட்டம் இருக்க வேண்டும். மக்களைத் திரட்டுவதைப் பற்றி கவலையின்றி, முழுக் கவனமும் ஆயுதப் போராட்டம் என்று ஆகிவிட்டால் விஷயம் (தலைகீழாக) மாறிப்போய்விடுகிறது.
உலக வங்கியின் உத்தரவின்படி அனைத்து மாநில அரசுகளும் நில வங்கிகளை உருவாக்கியிருக்கின்றன. நிலம் இப்போது வங்கியில் இருக்கிறது. அது யாருடைய நிலம்? மேற்கு வங்கத்தின் நில வங்கியில் 10 ஆயிரம் ஏக்கர் நிலம் இருக்கிறது என்று சமீபத்தில் மம்தா பானர்ஜி சொன்னார். அது யாருடைய நிலம்? அது அரசு நிலம் என்று எடுத்துக்கொண்டால் கூட, முதலாளிகளின் ஜனநாயக வரையறைகளின்படியும் அது மக்களின் நிலம்தான். அது மம்தா பானர்ஜிக்கோ மோடிக்கோ சொந்தமானதில்லை.
மாண்சாண்டோவும் பிற மிகப்பெரிய கம்பெனிகளும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை எப்படி பரிசோதனை செய்கிறார்கள்? நக்சல்பாரி கேள்வி கேட்டதே, அந்த நிலக் குவிமானத்தை வைத்துத்தான் இந்த பரிசோதனைகள் நடக்கின்றன. அப்போது நடந்ததுதான் இப்போதும் நடக்கிறது. நிலம் இப்போது அரசின் கையிலும் கார்ப்பரேட்களின் கையிலும் இருக்கிறது.
புதிய நிலப் போராட்டங்களில் சேர்த்துக்கொள்வதன் மூலமாகவோ அல்லது அவர்களுடன் ஒருமைப்பாடு தெரிவிப்பதன் மூலமாகவோ நக்சல் அமைப்புகள் தங்களின் இருத்தலைப் பதிவு செய்கின்றன. நீங்கள் என்னைப் பார்க்க வரும்போது இங்கேயிருந்த தோழர் பீகாரைச் சேர்ந்தவர். அவர் அசாமுக்கு வந்திருந்திருக்கிறார்.
அசாம், அருணாசலப் பிரதேசத்தின் எல்லையில், அகதிகளுக்கான மறுவாழ்வு திட்டத்தின்படி அவர்களுக்கு நிலம் வழங்கப்பட்டது. ஆனால், இப்போது அந்த நிலத்தை மீண்டும் அரசு கேட்கிறது. நிலத்திலிருந்து வெளியேற மறுத்த மக்கள் மீது ஆயுதப்படையினர் துப்பாக்கியால் சுட்டனர். 15 பேர் கொல்லப்பட்டனர். பீகார் தோழர் அந்த துப்பாக்கி சூட்டின் முதல் ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்திருந்தார். இன்னும் நிறைய எதிர்ப்புப் போராட்டங்கள் நாட்டின் பல பகுதிகளில் நடந்துகொண்டிருக்கின்றன. போஸ்கோ, நியமகிரி, தாத்திரி…. நிலம், வாழ்வாதாரம், ஜனநாயகம் என்பது தற்போதைய போராட்டங்களின் மையமான பிரச்சனையாக இருக்கிறது. நாங்கள் இந்த பிரச்சனைகளில் கவனம் செலுத்துகிறோம்.
கேள்வி: சாதி, ஆணாதிக்கம் போன்ற சில பிரச்சனைகளை மிகவும் ஆழமான வேர்களைக் கொண்டுள்ளன. இப்பிரச்சனைகளை நக்சல் குழுக்கள் உட்பட, கட்சிகள் யாரும் எடுப்பதில்லையே?
பதில் : இப்பிரச்சனைகளை, (பாரம்பரியப்படி/ கடந்த காலத்தில்) இயக்கம் எடுக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், இப்போது நிலைமை அப்படியில்லை. நாங்கள் தலித் குழுக்களுடன் தொடர்ந்து விவாதம் நடத்துகிறோம். மேலும், ஒன்று சேர்ந்து முன்னேறுவதற்காக வழிகளை நாங்கள் தேடுகிறோம். உலகம் மாறியிருக்கிறது தலித் இயக்கங்களின் உள்ளேயும் கூட பல மாறுதல்கள் வந்துள்ளன.
நாங்கள் அம்பேத்கரை மறுபடியும் கற்றுக்கொள்கிறோம், மறு மதிப்பீடு செய்கிறோம், அவரில் புது கண்டுபிடிப்புகளை மேற்கொள்கிறோம். அவரைப் புதிதாக புரிந்துகொள்ள முயற்சியெடுக்கிறோம். அம்பேத்கர் சாதியை ஒழிக்க விரும்பினார். இந்திய சமூக நிலைமைகளில் பார்க்கும்போது இது மிகவும் முற்போக்கான நிலைப்பாடாகும். ஆனால், அதேசமயத்தில் அவர் இடதுசாரியும் அல்ல.
உனா எதிர்ப்புப் போராட்டத்தின் பின்பு ‘பாசிசத்தை, சாதியத்தை, பார்ப்பனியத்தை எதிர்ப்பதற்கு தலித்துகள் இடதுசாரிகளோடு சேர்ந்து நிற்க வேண்டும்’ என்று ஜிக்னேஷ் மேவானி திரும்பத் திரும்ப சொன்னார். ஒவ்வொரு இயக்கத்திலும் பல்வேறு விதமான மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டுள்ளன. நாங்கள் ஏற்கனவே, ‘எழுக என் தேசமே’ என்ற போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளோம். இதே போன்ற நிலைமைதான் பாலின பாரபட்சத்திலும் இருக்கிறது. புதிய பரிசீலனைகள் செய்யப்படுகின்றன. பாலின பாரபட்சம் மிகவும் சிக்கலான ஒரு பிரச்சனை. அது வீட்டிலிருந்து துவங்குகிறது. அதேசமயம், மேற்கத்திய பெண்ணிய தத்துவங்களை பொருத்துவது தீர்வைக் கொண்டுவராது. இந்திய எதார்த்தங்கள் மாறுபட்டவை. இயக்கத்தில் ஏற்பட்டுள்ள பிழைகளை நாங்கள் விடாது பரிசீலித்து வருகிறோம்.
கேள்வி: 60கள், 70களின் நக்சல்பாரி இயக்கத்துக்கும், தற்போதைய நிலைமைக்கும் இடையில் அரை நூற்றாண்டு கால வித்தியாசம் உள்ளது. இப்போதைய பிரச்சனைகள் என்று பார்க்கும்போது இயக்கத்தின் நிலைப்பாடுகளில் என்னென்ன மாறுதல்கள் வந்துள்ளன?
பதில் : பழைய காலத்து நக்சல் இயக்கம், அடிப்படையில், சிறு விவசாயிகளையும், விவசாய தொழிலாளர்களையும், ஒரு வர்க்கமாக நிலப்பிரபுக்களுக்கு எதிராக அமைப்பாக்குவதற்கு முயற்சித்தது. தற்போதைய யதார்த்தம் மாறுபட்டது.
கிராமங்களுக்குள், அல்லது விவசாய தொழிலாளர் என்ற அளவில் வேலையை நிறுத்துவது சாத்தியம் இல்லை. நகர்புற வேலை என்றொரு ஆவணத்தை நாங்கள் தயார் செய்துள்ளோம். வாழ்வாதாரத்துக்காக மாநகரங்களுக்குப் புலம் பெயர்வது, நகரங்களில் உள்ள வறுமை, குடிசைப்பகுதி வாழ்க்கை… என்று அனைத்துமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். இப்போது, அனைத்துமே மிகவும் சிக்கலானவையாக இருக்கின்றன. விவசாயம் எந்த அளவு மாறிப்போயிருக்கிறது என்று யோசித்துப் பாருங்களேன். மிகவும் கொண்டாடப்பட்ட பசுமை புரட்சியின் வன்முறை விவசாயிகளை மிகவும் கடுமையாக பாதித்துள்ளது. அவர்களின் பாரம்பரிய விவசாயத்திலிருந்து அவர்கள் அன்னியப்பட்டுவிட்டார்கள். உரமும், பூச்சி மருந்துகளும் நிலத்தின் உற்பத்தித் திறனைக் குறைத்துவிட்டன. நிலமும் நீரும் மாசுபட்டு கிடக்கின்றன. விதைகளின் மீது விவசாயிகளுக்கு உரிமை இல்லை.
மான்சாண்டோ போன்ற பன்னாட்டுக் கம்பெனிகளின் சொத்தாக விதைகள் மாறிவிட்டன. நான் முன்பு குறிப்பிட்டதுபோல, நிலச்சீர்திருத்தம் எப்படி செய்யப்பட வேண்டுமோ, அப்படி எந்த அரசும் நிலச்சீர்திருத்தம் செய்யவில்லை. அதற்கு மாறாக, அவர்கள் நிலத்தைப் பறித்துக் கொண்டார்கள். பறித்த நிலத்தை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கொடுக்கிறார்கள். எந்த அளவு முடியுமோ அந்த அளவுக்கு தாராளமாக நிலம் கையகப்படுத்தும் விதிகள் உருவாக்கப்படுகின்றன. கனிம வளம் நிறைந்த வனங்களில் வாழும் பழங்குடிகள் வெளியேற்றப்படுகின்றனர். பற்பல ஐந்தாண்டுத் திட்டங்கள் கடந்துபோய்விட்ட நிலையிலும், பழங்குடிகள் தலித்துகளின் நிலைமை முன்பு போலவே பரிதாபமாக இருக்கிறது. இப்போது, சந்தை அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது. சிறப்பு பொருளாதார மண்டலங்கள் காளான்கள் போல முளைக்கின்றன. பல வகையான பொருளாதார சலுகைகள் அவர்களுக்கு அளிக்கப்படுகின்றன. ஆலைகள் ஏற்படுத்தும் மாசுபாடு தொடர்கிறது.
ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையிலான பள்ளத்தாக்கு விரிந்துகொண்டே போகிறது. அதிகாரத்தில் இருக்கும் இடது கட்சிகள் மேலும் மேலும் ஏழைகளை விட்டு விலகிப்போகின்றனர். இடதுசாரிகள் மத்தியில் பெரிய வெற்றுவெளி ஏற்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ்- பிஜேபி போன்ற பாசிஸ்ட்கள் மென்மேலும் வலுவடைந்து கொண்டிருக்கிறார்கள். மதவெறியும் பாசிசமும் எழுந்து வரும் போக்காக இருக்கின்றன. கல்வி வளாகங்களிலிருந்து அரசியல் அகற்றப்பட்டு வருகிறது.
முதலாளித்துவத்திற்கான கூலித் தொழிலாளர்களை உற்பத்தி செய்யும் ஆலைகளாக பல்கலைக்கழகங்கள் மாறிவிட்டன. பிரதான ஊடகங்கள் கார்ப்பரேட் கம்பெனிகளின் கைப்பிடியில் உள்ளன. மேலும், மக்கள் சிந்திக்கும் வழிமுறைகளைக் கூட தங்களுக்கு உகந்தவகையில் மாற்றி வைத்திருக்கின்றனர். 2014 பொதுத் தேர்தலின்போது, பிஜேபி பற்றியும் மோடி பற்றியும் ஊடகங்கள் உருவாக்கிய மாய பிம்பங்களை நாம் கண்டோம். இதுபோன்ற ஒரு நிலைமையில் பிரச்சனைகள் மிகவும் சிக்கலாக இருக்கின்றன. இந்த நிலைமையில் பலவீனப்பட்டு நிற்கிற இடதுசாரி அரசியலைப் பலப்படுத்த நாங்கள் முயற்சி செய்கிறோம்.
கேள்வி: கடந்த 25 ஆண்டுகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்தால், அனைத்து பிரிவினரையும் முதலாளித்துவப் புரட்சி ஆட்கொண்டுள்ளதைக் காண முடியும். மாற்றம் பற்றி பேசுபவர்களையும் அது ஆட்கொண்டுள்ளது. இந்த யதார்த்த நிலையை எப்படி மாற்றுவீர்கள்?
பதில் : ஆமாம். இது இரண்டாவது சுதந்திரப் போராட்டத்திற்கான நேரம். இது புதிய வகை அரசியலுக்கான, முற்போக்கு அரசியலுக்கான காலம். முதலாளித்துவப் புரட்சியை அழிப்பதன் மூலம் நாம் மீண்டு எழ வேண்டும். மற்றுமொரு உலகம் சாத்தியம் என்பதை நாட்டில் நடைபெற்ற பல்வேறு சிறு முயற்சிகள் காட்டுகின்றன. அதுபோன்ற குழுக்கள் ஒன்றுபட்டு சேர்ந்து மேலும் பலம் பெற வேண்டும்.
இரண்டாவது சுதந்திரப் போராட்டம், மிகப்பெரும் புரட்சியாக உருவெடுத்து வருகிறது. ரோகித் வெமுலாவின் தற்கொலை ஒரு தற்கொலையல்ல அது ஒரு கொலை. அந்த கொலையில் அரசு நேரடி பாத்திரம் வகித்தது. புதிய வகை அரசியலின், முற்போக்கு அரசியலின் அடையாளமாக ரோஹித் இருக்கிறார். அதனால்தான் ரோஹித்தைக் கண்டு அரசாங்கம் அஞ்சியது. அதனால்தான் அவரை அழித்தொழித்தது.
எந்தவொரு இயக்கத்தையும் அரசியல் வழிநடத்த வேண்டும். அதற்கு மக்கள் மத்தியில் ஒரு வெகுஜன அடித்தளம் வேண்டும். ஜனநாயக வழியிலான அனைத்துப் போராட்ட முறைகளும் தோல்வியடையும்போது, வேறு வழியின்றி ஆயுதப் போராட்டம் முன்னுக்கு வரும். ஆயுதங்கள் அவசியமாகும் என்றால், வேறு வழியில்லை, அவற்றைப் பயன்படுத்தித்தான் ஆக வேண்டும். அரசோடு நடக்கும் நேரடி மோதல் ஆயுதப் போராட்டமாக வடிவெடுக்கலாம். ஆனால், ஆயுதங்கள் தீர்மானிப்பதாக நிலைமையை அனுமதிக்கக் கூடாது. இயக்கம் ஆயுதங்களை வழிநடத்த வேண்டும்.
மக்களை அணி திரட்டாமல் ஆயுதப் போராட்டத்தில் மட்டும் கவனம் குவித்தால் விஷயம் திசை மாறிப்போய்விடும். அரசு தனது படைகளுக்கு நவீன ஆயுதங்கள் வாங்கும் என்றால், இயக்கத்துக்கும் வேறு வழியில்லை. தனது ஆயுதங்களை இயக்கம் நவீனப்படுத்தியாக வேண்டும். கூடுதல் ஆயுதங்கள் என்றால் கூடுதல் பணம் என்று பொருளாகும். அதற்குப் புரவலர்கள் வேண்டும். அனேகமாக, பல சமயங்களில் பணம் அளிப்பது கார்ப்பரேட் கம்பெனிகளாக இருக்கும். இப்படியாக, அரசும், அரசை எதிர்ப்பவர்களும் கார்ப்பரேட் கம்பெனிகளால் கட்டுப்படுத்தப் படுபவர்களாக ஆகிப்போவார்கள். மாவோயிஸ்ட்டுகள், தெரிந்தோ தெரியாமலோ இந்த வலையில் வீழ்ந்துவிட்டார்கள்.
நிலத்திற்கான போராட்டம் பற்றி நாம் விவாதித்தோம். அது நிலத்தின் உரிமை யாருக்கானது என்பது பற்றியது. ஆனால், நமது பூமிக்கிரகமே அழிவை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. பருவநிலை மாறுகிறது, பூமி வெப்பமடைகிறது. பூமி மேலும் வறுமைமயமாகும். ஏற்கனவே வறுமையில் தள்ளப்பட்டுள்ள மக்கள் ஏற்படப்போகும் பாதிப்பையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால், இவை எவையுமே அரசியல் பிரச்சனைகள் ஆக்கப்படுவதில்லை.
நீங்கள் சொல்வது சரிதான். அதுபோன்ற மிக முக்கியமான பிரச்சனைகள் அரசியல் பிரச்சனைகள் ஆக வேண்டும். பூமி இல்லாது போய்விடும் என்றால், அரசியல் எதற்கு? நாங்கள் இப்போது இந்த மாறுதல்களை நாங்கள் ஆய்வு செய்துகொண்டுள்ளோம். ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையே உள்ள பள்ளத்தாக்கை இவை எப்படி அதிகப்படுத்திக்கொண்டு வருகின்றன, ஓரங்கட்டப்பட்டவர்கள் மேலும் ஓரங்கட்டப்படுவது எவ்வாறு என்று ஆய்வு செய்கிறோம். வள ஆதாரங்களை மிகையாகச் சுரண்டுவதாலும், இயற்கையைச் அழிப்பதாலும் இப்பிரச்சனைகள் உருவாகியுள்ளன. பெரிய கம்பெனிகளின் சூறையாடல்கள் பற்றி நாங்கள் பேசும்போது, வள ஆதாரங்களின் உரிமை யாருக்கு, யார் நிர்வகிப்பது என்று பேசும்போது பூமி எதிர்காலத்திலும் இருக்க வேண்டும் என்ற பிரச்சனையையும் கூட நாங்கள் பேசுகிறோம்.
கேள்வி: கம்யூனிச இயக்கத்தின் மிகப்பெரிய தோல்வி எது என்று கருதுகிறீர்கள்?
பதில் : இளைஞர்களை ஈர்க்க முடியவில்லை என்பதுதான் கம்யூனிச இயக்கத்தின் மிகப்பெரிய தோல்வி! நக்சல்பாரி இயக்கத்தின்போது இளைஞர்கள் அதனை நோக்கி ஈர்க்கப்பட்டனர். பல்வேறு படிப்புகளில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் இயக்கம் நோக்கித் திரண்டனர். ஆனால், இன்றைய இளைஞர்கள் முதலாளித்துவ புரட்சி என்ற மாயையில் சிக்கிக்கொண்டுள்ளனர். அவர்கள் தங்களின் பொருளாதாரத்தை பெருக்கிக்கொள்வது பற்றி கவலைப்படுகிறார்கள். சமத்துவம் அடிப்படையிலான சமூகம் வேண்டும் என்று யோசிப்பதில்லை. அவர்கள் முதலாளித்துவம் உருவாக்கிய மாயைகளை விரட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அது அவர்களின் குற்றம் இல்லை. அது அரசியல் இயக்கத் தோல்வியின் விளைவு. தலையீடுகள் தேவைப்படுகின்றன. முழக்கங்கள் மாற்றப்பட வேண்டும். இளைஞர்களின் பிரச்சனைகள் பற்றியும் அவர்களின் கனவுகள் குறித்தும் மேலும் படிக்க வேண்டும்.
கேள்வி : புதிய உலகம் என்பது நடைமுறை சாத்தியமற்ற கற்பனைக் கனவு, புனைவு என்று அதனைப் புறந்தள்ளும் போக்கு இருக்கிறது. எல்லோரும் உடனடி பலன்களை எதிர்நோக்குபவர்கள் ஆகிப் போய்விட்டார்கள்.
பதில் : எந்தவொரு புரட்சிகர சிந்தனையும் ஓரளவு புனைவாகத்தான் இருக்கும். இல்லையென்றால் புதிய உலகம் ஒன்றை மனக்கண்ணில் பார்க்க முடியாது. புனைவு கருத்துகளை கருத்தியல் முன்னேற்றமாக மாற்ற வேண்டும். அதற்கு கடின உழைப்பு வேண்டும். கடுமையான நிலைமைகளுக்குத் தன்னை ஆட்படுத்திக்கொள்ளும் விருப்பம் வேண்டும். சமூக அரசியல் கட்டமைப்பில் முழுமையான மாற்றத்தைக் கொண்டுவருவதில் பழைய நக்சல்பாரி இயக்கம் தோல்வியடைந்திருக்கலாம். ஆனால், மாற்றம் குறித்து தலைவர்கள் கண்ட கனவும், கருத்துகளும் இன்றும் பொருத்தம் இழக்கவில்லை. புதிய இயக்கங்களும், மக்களின் போராட்டங்களும் அவற்றை மேலும் வலுப்படுத்தும்.
(முற்றும்)
(பேட்டி எடுத்த எம். சுசித்ரா கேரளாவின் கொச்சினைச் சேர்ந்த சுதந்திரமான பத்திரிகையாளர் ஆவார். இந்த பேட்டி, முதலில் மே 21-27, 2019 மாத்ருபூமி இதழில் மலையாளத்தில் வெளிவந்தது.)
ஆங்கிலம் மூலக் கட்டுரை :The Wire முகநூலில் – ஆங்கிலம் வழி தமிழாக்கம் :சி. மதிவாணன் (சி.மதிவாணன் – சிபிஐ(எம்.எல்) லிபரேசன் கட்சியின் மாநில கமிட்டி உறுப்பினர்)
குறிப்பு :
நக்சல்பாரி எழுச்சியின் அடிப்படை மற்றும் அந்த எழுச்சியில் உழைக்கும் மக்களின் பங்கு குறித்து வாசகர்கள் அறிந்துகொள்ளும் வகையில் இந்த நேர்காணலின் தமிழாக்கத்தை மூன்று பாகமாக வெளியிடுகிறோம் – வினவு
கேள்வி : ஆக, உங்கள் தந்தையும் தாயும் ஜெய்பெல்குரியில் முதலில் சந்தித்துக்கொண்டனர்?
பதில் : ஆமாம். 1940களில் சந்தித்துக்கொண்டனர். அவர்கள் இருவரும் தோழர்கள். அவர்கள் இருவரும் கட்சியின் துடிப்பான ஊழியர்கள். அவர்கள் சேர்ந்தே வேலை செய்தார்கள். ஒருவரை ஒருவர் அறிந்துகொண்டனர். வாழ்க்கைத் துணைவர்களாக இருக்கலாம் என்று முடிவு செய்தனர். அவர்களின் திருமணம் 1952-ல் நடைபெற்றது. அதன்பின் அவர்கள் இருவரும் சிலிகுரி வந்துவிட்டனர். அதுதான் என் தந்தையின் ஊர். அவர்கள் இருவரும் டார்ஜிலிங் சிபிஐ கட்சியில் உறுப்பினர்களாக இருந்தனர்.
1964-ல் கட்சி பிளவுபட்டபோது இருவரும் சிபிஐ எம் கட்சிக்கு வந்தனர். எனது தந்தை மேற்கொண்ட புரட்சிகரமான நிலைப்பாடுகளை சிபிஐ எம் கட்சியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவரை கட்சியை விட்டு நீக்கிவிட்டனர். அவரும், சிபிஐ எம்மில் தொடர தனக்கு விருப்பமில்லை என்ற நிலையெடுத்துவிட்டார். அவரும் அவரைப் போன்ற தலைவர்களும் சிபிஐ எம்மை விட்டு வெளியே வந்தனர். தாங்கள் செய்துவந்த புரட்சிகர வேலைகளைத் தொடர்ந்து விவசாயிகள் மத்தியில் செய்து வந்தனர். நக்சல்பாரிக்குப் பின்பு 1969-ல் அவர்கள் சிபிஐ எம்எல் கட்சியை நிறுவினர்.
கேள்வி: உங்கள் தாயின் நிலை என்ன? அவர் இந்த அரசியல் மாற்றத்தை ஏற்றுக்கொண்டாரா?
பதில் : சிபிஐ எம்மில் தொடர விரும்பவில்லை என்று அம்மா ஒருபோதும் சொன்னதில்லை. அதேசமயம் அவர் கட்சி உறுப்பினர் தகுதியைப் புதுப்பித்துக்கொள்ளவும் இல்லை. அவர் கட்சியில் துடிப்பாக வேலை செய்வதை நிறுத்திக்கொண்டார். அதற்கு மாறாக, அப்பாவிற்கு அவர் கட்சி வேலைகளில் துணையாக நின்றார். கணவருக்கான ஒரு பெண் தனது அரசியல் பாத்திரத்தை விட்டுத்தருவது சரியானதுதானா என்ற கேள்வி எழும்புகிறது. ஆனால், என்ன செய்வது… அதுதான் நிகழ்ந்திருந்தது.
1960-களின் நடுப்பகுதியில் அப்பாவின் உடல் நலம் சீர்கெட ஆரம்பித்தது. 1965-ல் அவருக்கு இதய தாக்குதல் ஏற்பட்டது. அடிக்கடி நெஞ்சுவலி ஏற்படுவது வழக்கமான ஒன்றாக ஆகிவிட்டது. அவருக்கு ஆஸ்துமாவும் இருந்தது. எனவே, அம்மாவின் கைநிறைய வேலை வந்துவிட்டது. அப்பாவின் அரசியல் வேலை, அவரின் உடல் நலப் பிரச்சனைகள், தினமும் வீட்டுக்கு வரும் தோழர்கள், குடும்பத்தை ஓட்டுவது, எங்களின் கல்வி, அப்பாவின் தலைமறைவு வாழ்க்கை, போலீஸ் ரைடு.. ஆனால், இவை எவற்றாலும் அம்மாவை உடைக்க முடியவில்லை. அவர் மிகவும் வலுவான மனதுள்ள பெண். துணிச்சலான பெண்.
கேள்வி: ஆனால், நக்சல்பாரியால் உருவான சூழல்… அது எப்படி உங்கள் வீட்டைப் பாதித்தது?
பதில்: அரசியல் காரணங்களுக்காக போலீஸ் சோதனை நடப்பது வழக்கமான ஒன்றாக ஆகிவிட்டது. நக்சல்பாரிக்கு முன்பும் பின்பும் போலீஸ் சோதனை இரவில்தான் நடக்கும். கதவைத் தட்டினார்கள் என்றால், அப்பாவை அழைத்துப்போக போலீஸ் வந்துவிட்டது என்று எங்களுக்குப் புரிந்துவிடும். எங்கள் வீட்டில் ஒரே ஒரு பெரிய படுக்கைதான் இருந்தது. நாங்கள் ஐந்துபேரும் அந்தப் படுக்கையில்தான் படுத்து உறங்குவோம். மின்சாரம் கிடையாது. ஒரு மண்ணெண்ணெய் விளக்குதான் எரிந்துகொண்டிருக்கும். போலீஸ் வரும்போது அம்மா தான் முதலில் எழுந்திருப்பார். பிடியாணை இருக்கிறதா என்று கேட்பார். இல்லையென்றால் அவர்களை உள்ளே விட மாட்டார். அப்போது மழையாக இருந்தாலும், வெயிலாக இருந்தாலும், குளிராக இருந்தாலும் போலீஸ் வெளியேதான் காத்திருக்க வேண்டிவரும்.
அதுமட்டுமல்ல.. போலீஸ் கொண்டுவந்த துப்பாக்கிகளையும், துப்பாக்கிக் குண்டுகளையும் அம்மா பட்டியலிட்டுக்கொள்வார். போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்த பட்டியலில் கையெழுத்து இட வைப்பார். அது ஓர் ஆவணம் ஆகிவிடும். போலீஸ் பொய் சொல்லி ஏமாற்றிவிடக் கூடாது என்று இந்த ஏற்பாடு. பொய்யான குற்றச்சாட்டைத் தடுப்பதற்காக, அனைத்துவிதமான முன்தயாரிப்பையும் அம்மா செய்வார். இந்த முன் தயாரிப்பு எல்லாவற்றையும் முடித்த பின்னர்தான் அவர்களை அம்மா உள்ளே விடுவார். குறிப்பிட வேண்டிய முக்கியமான மற்றொரு விசயம் அம்மாவின் குரல். அது கணீர் என்று உரத்ததாக, ஆழமான ஒன்றாக இருக்கும். அதனைக் கேட்கும் எவரும் அதிர்ந்து போவார்.
கேள்வி: போலீஸ் உள்ளே வருவதற்கு பலப்பிரயோகம் செய்ய மாட்டார்களா?
பதில்: இல்லை. அவர்கள் ஒருபோதும் அதற்குத் துணியவில்லை. நாங்கள் இங்கே உள்ள அனைவருக்கும் தெரிந்தவர்கள். அப்பாவின் மீதும், அம்மாவின் மீதும் இங்குள்ளவர்களுக்கு அளப்பரிய மரியாதை. அப்பா சிலிகுரியில் பிறந்து வளர்ந்தவர். அவர் பண்பாட்டுத் தளத்திலும் வேலை செய்து வந்தார். இந்த காரணங்களால் போலீஸ் மரியாதையாக நடந்துகொண்டார்கள் என்று நினைக்கிறேன்.
கேள்வி: நக்சல்பாரிக்குப் பின் உங்கள் அப்பா தலைமறைவாக சென்றுவிட்ட பின்பு இங்கே நிலைமை எப்படியிருந்தது?
பதில்: எங்கள் வீட்டைச் சுற்றி எப்போதும் ஆயுத போலீஸ் நின்றுகொண்டிருக்கும். வங்க போலீஸ், சிஆர்பிஎப் எல்லோரும் இருப்பார்கள். எங்களுக்கு அது போகப்போக பழகிவிட்டது.
கேள்வி: நக்சல்பாரிகள் என்றால் பயங்கரவாதிகள், கொலைகாரர்கள் என்று முத்திரை குத்தப்பட்ட காலம் அது. அரசு, அரசியல் கட்சிகள், ஊடகம் என்று அனைவரும் இயக்கத்துக்கு எதிராக நின்றனர். உங்களுக்கு அருகாமையில் வாழ்ந்தவர்கள் உங்களை எப்படி பார்த்தனர்? அவர்கள் உங்களை விட்டு விலகவில்லையா?
பதில் : ஒருபோதும் இல்லை. அவர்கள் எப்போதும் எங்களின் பெற்றோர்களை மதித்தனர். எங்களுக்கு ஆதரவு அளித்தனர். நக்சல் என்ற வார்த்தையை உருவாக்கியதே ஊடகங்கள்தான். துவக்கத்தில் சிபிஐ எம்மை விட்டு விலகியவர்களை தூற்றவும், அவமானப்படுத்தவும் நக்சல் என்ற வார்த்தையை அவர்கள் உருவாக்கினார்கள். இயக்கத்தை சிதைப்பதுதான் அவர்களின் நோக்கம். ‘இங்கே பயங்கரவாதிகள் இருக்கின்றனர். ஆயுதங்களைச் சேகரிக்கின்றனர்’ என்று அவர்கள் தினமும் கதை கட்டினார்கள்.
வழக்கமான போக்கிலிருந்து உடைத்துக்கொண்டு வெளியேறியவர்களை அசிங்கப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட வார்த்தைதான் நக்சல் என்பது. ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக அந்த வார்த்தைக்கு மரியாதை கிடைக்க ஆரம்பித்தது. நக்சல் என்ற அடைமொழியைச் சேர்த்தால் அது மரியாதைக்குரியது என்ற காலமும் வந்தது. எப்படியிருந்தாலும் உள்ளூர் மக்கள் அரசின், போலீசின் துஷ்பிரச்சாரங்களை நம்பவில்லை. மக்கள், அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, எங்களுக்கு எப்போதும் உதவியாக இருந்தனர். உண்மையிலேயே அதனை அங்கீகரித்து பாராட்ட வேண்டும்.
கேள்வி: உங்கள் தந்தையை நீங்கள் கடைசியாகச் சந்தித்து எப்போது ?
பதில்: கடைசியாக என் தந்தை 1969 நவம்பரில் தலைமறைவானார். 1972 ஜூலையில் அவர் கைது செய்யப்பட்டார். அவரை கொல்கத்தாவின் லால்பஜார் போலீஸ் லாக் அப்பில் வைத்திருந்தனர் 12 நாட்கள் கடந்த பின்னர், ஜூலை 28 அன்று அவர் இறந்துபோனார். அவர் போலீஸ் காவலிலிருந்தபோது நானும் எனது சகோதரிகளும் அம்மாவும் அவரை இரண்டு முறை சந்தித்தோம். கடைசியாக அப்பாவை 25 அன்று சந்தித்தோம். அந்த சமயத்தில் என் மூத்த அக்கா மருத்துவ முன் படிப்புக்காக கொல்கத்தாவில் தங்கியிருந்தார்.
கேள்வி: கைதுக்குப் பின்பு அவரை நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றார்களா?
பதில்: இல்லை. நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லாமல் இருப்பது சட்ட விரோதம் என்றபோதும், ஒருமுறைகூட அழைத்துச் செல்லவில்லை. அவர் போலீஸ் காவலிலேயே செத்துப் போனார். அவர் உடல் நலமின்றி இருந்தார்.
கேள்வி: அவர் காவலிலிருந்தபோது உடல் ரீதியாக அவரைத் துன்புறுத்தினார்களா?
பதில்: தெரியாது. எனக்குத் தெரியாது. அவரை நான் பார்த்தபோது அவர் நிலைகுலைந்திருந்தார். எப்போதும்போல, போலீசின் முன்னிலையில்தான் சந்திப்பு நடந்தது. டெபி ராய், விபூதி சக்கரவர்த்தி போன்ற, நக்சலைட்டுகளைக் கொன்றதால் புகழ்பெற்ற காவல் அதிகாரிகள் அப்போது இருந்தார்கள். அவர்கள் எப்போதும் அங்கேயே இருப்பார்கள். இருந்தாலும், ‘நீங்கள் பலவீனமாகி விட்டீர்களே?’, ‘போலீஸ் அதிகாரிகள் உங்களை என்ன செய்தார்கள்?’ என்ற கேள்விகளை அம்மா கேட்டார். ‘உங்களைச் சித்திரவதை செய்தார்களா?’ என்பதுதான் அம்மா கேட்டதற்கான பொருள்.
‘அவர்கள் எப்போதும் வருகிறார்கள். காலை, மதியம், மாலை, இரவு என்று எல்லா நேரமும் வருகிறார்கள்.அவர்கள் என்னைத் தூங்க விடுவதில்லை ‘ என்று அப்பா சொன்னார். அப்படியென்றால், விசாரணை இடைவெளியின்றி தொடர்ந்து பல மணி நேரம் நடந்தது என்று பொருள். மேலும், அவரின் உயிரைக் காப்பதற்கான மருந்துகள் அவருக்கு லாக்கப்பில் கொடுக்கப்படவில்லை.
அவருக்கு இதயப் பிரச்சனை இருந்தது என்பதால், சில மருந்துகளை அவர் ஒருவேளை கூட தவறாது சாப்பிட வேண்டும். வீட்டில் இருக்கும்போது அவருக்கு ஒருசமயம் நெஞ்சுவலி ஏற்பட்டது. பக்கத்தில் உள்ள ஒரு மருத்துவரை அழைப்போம். மருத்துவர் ஒரு கம்யூனிஸ்ட். அவர் வந்து அப்பாவின் அருகிலிருந்து பார்த்துக்கொள்வார். ஆனால், இந்த வசதிகளெல்லாம் லாக்கப்பில் இல்லை. அவரை ஓய்வெடுக்க விடவில்லை. மருந்து கொடுக்கவில்லை. உயிர் காக்கும் வசதி எதுவும் அங்கிருக்கவில்லை. இது ஒவ்வொன்றுமே சித்திரவதைதானே? இலையா? இவை அனைத்துமே ஒட்டுமொத்த மனித உரிமை மீறல்கள்.
கேள்வி: அவரின் இறப்பு பற்றி எப்படி உங்களுக்குத் தெரிய வந்தது?
பதில்: என் சகோதரிக்குத்தான் முதலில் தகவல் வந்தது. பெரிய அக்கா தங்கியிருந்த மருத்துவக் கல்லூரி விடுதிக்கு போலீஸ் வந்து, அவசரமாக எங்கள் தந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள். அக்காவை தன்னோடு வரும்படி போலீஸ் அழைத்திருக்கிறார். ஆனால், இதெல்லாம் நாடகம் என்று என் அக்காவின் உள் மனது சொல்லியிருக்கிறது.
என் அப்பா போலீசிடம் அதுபோன்ற உதவிகளை ஒருபோதும் கேட்க மாட்டார் என்று அக்காவுக்குத் தெரியும். இறந்த உடலை ஒரு வெள்ளை துணியால் போர்த்தியிருந்த காட்சிதான் என் அக்காவிற்குக் காட்டப்பட்டது. சிலிகுரியில் இருந்த எங்களுக்கும் போலீஸ் தகவல் வந்தது. எங்களின் அண்டை அயலார் விமான டிக்கெட் ஏற்பாடு செய்து கொடுத்து கொல்கத்தாவுக்கு அனுப்பி வைத்தனர்.
நாங்கள் மாலையில் மருத்துவமனைக்குச் சென்று சேர்ந்தோம். அந்த சமயத்தில் உடலைப் பிணவறைக்குக் கொண்டு சென்றிருந்தனர். இறந்தவரை அடையாளம் காணவும், உறுதி செய்யவும் போலீஸ் எங்களை அழைத்துச் சென்றது. அந்த இடம் முழுவதும் போலீஸ்காரர்கள்தான் இருந்தார்கள். என் அப்பா பாதங்களின் பின்புறம் கருப்பாக இருந்தது. அட்டைக் கரி போலக் கருப்பாக இருந்தது. அப்படி இருப்பது இயற்கையா என்ன? அந்த கருப்புப் பாதங்கள் இப்போதும் கண் முன்னே இருக்கின்றன. அவை ஒருபோதும் மறையாது.
கேள்வி: உடலை சிலிகுரி கொண்டுவந்தீர்களா?
பதில்: இல்லை. உடலை எங்களிடம் கொடுங்கள் என்று அம்மா கேட்டார். உடலை சிலிகுரியிலிருந்து கொண்டு செல்ல வேண்டும் என்று அவர் விரும்பினார். அவர்கள் முற்றிலுமாக மறுத்துவிட்டார்கள்.
கேள்வி: உடலை எங்கே எரித்தார்கள்?
பதில்: கொல்கத்தா சுடுகாட்டில். வங்கத்தின் ஆயுதப் போலீசும், சிஆர்பிஎப்-பும் சுடுகாட்டில் நிறைக்கப்பட்டிருந்தனர். நகரத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது போன்ற நிலை இருந்தது. ஆனால், எனக்கு நன்கு நினைவில் இருக்கிறது. சுடுகாட்டிற்கு அப்பா உடலை எடுத்துச்சென்றபோது, சின்ன சந்து போன்ற தெருக்களிலிருந்து 4 அல்லது 5 பேர் கொண்ட குழுக்களாக, சட்டென்று தோன்றி அப்பாவுக்கும், இயக்கத்துக்கும் செவ்வஞ்சலி செலுத்தி, புரட்சிகர முழக்கங்களை எழுப்பி்விட்டு சட்டென்று மறைந்தனர். மூலை முடுக்கெல்லாம் போலீஸ் நிறைந்திருக்க இப்படிச் செய்வதற்கு விசேஷமான துணிச்சல் வேண்டும். அந்த ஒருமைப்பாடு நிகழ்வை நான் என் வாழ்நாளில் மறக்க மாட்டேன்.
அப்போது கட்சிக்காரர்கள் தலைமறைவாக இருந்தார்கள். அவர்கள் வெளியே வந்தால் பிடிக்கப்படுவார்கள், சித்திரவதைக்கு ஆளாவார்கள், கொலை செய்யப்படுவார்கள். இதற்கெல்லாம் துணிந்து அஞ்சலி செலுத்த வந்தவர்களை நினைத்து நாங்கள் பெருமைகொண்டோம். அதுமட்டுமல்ல, எங்களுக்கு அது ஆறுதல் தருவதாக இருந்தது. அந்த மிகப்பெரும் இழப்பின் நடுவே, துயரின் நடுவே, நாங்கள் தனியே இல்லை என்பதை நாங்கள் உணர்ந்தோம்.
சாரு மஜும்தாரின் இணையர் லீலா சென்குப்தா
கேள்வி: உங்கள் அப்பாவின் மரணத்தை உங்கள் தாய் எப்படி எதிர்கொண்டார்?
பதில்: அவர் நொறுங்கிப்போனார். அவர் அழுததை அந்த நாள் நாள் நாங்கள் யாரும் பார்த்ததில்லை. அதன்பின் அம்மா எவரோடும் அரசியல் பேசவில்லை. அவர் ஊடகங்களிடமும் பேசவில்லை. போனில் கூட ஊடகங்களுக்கு பதில் சொல்வதில்லை. அது மிக ஆழமான மெளனம். இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் கூட பலரும் அழைப்பார்கள். ஆனால், அந்த அழைப்புகளுக்கு அம்மா பதில் கொடுப்பதில்லை. அந்த முழுமையான அரசியல் மௌனம் அவர் இறப்பது வரை நீடித்தது.
கேள்வி: அம்மா எப்போது இறந்தார்? பதில்: ஜூன் 25, 1995.
கேள்வி: உங்கள் தாய் ஓர் அரசியல்வாதி என்று சொன்னீர்கள்? அவர் ஏன், ஏறக்குறைய 20 ஆண்டுகள், மௌனம் சாதித்தார்?
பதில்: உண்மையிலேயே எனக்குத் தெரியாது. ஆனால், அது அப்படித்தான் நடந்தது. ஒருவேளை, குழந்தைகளின் பாதுகாப்பு கருதி அவர் மௌனம் சாதித்திருக்கலாம். எங்களைப் பாதுகாப்பாக, பத்திரமாக வளர்க்க வேண்டும் என்று அவர் கருதியிருக்கலாம். அரசியல் ஈடுபாடு உள்ள ஒருவரின் சிந்தனையும் செயல்பாடும் எப்படி இப்படி மாற முடியும் என்று நாங்களும் ஆச்சரியப்பட்டிருக்கிறோம். அவர் மௌனத்திற்கு மற்றொரு காரணமும் இருக்கலாம்.
1972 வாக்கில் இயக்கம், அரசின் ஒடுக்குமுறை காரணமாக, கணிசமாக பலவீனப்பட்டுவிட்டது. மேலும் கருத்து வேறுபாடுகளும் இருந்தன. சாரு மஜூம்தாரின் அரசியல் வழிக்கு எதிராகவும், செயல் தந்திரங்களுக்கு எதிராகவும் கடுமையான விமர்சனங்கள் வந்தன. கட்சி பிளவுபட்டுப் போனது. அவர் இறந்த பின்னர் மோதல்கள் கடுமையாக மாறின. எங்கள் தந்தையோடும், குடும்பத்தோடும் நெருக்கமாக இருந்த பலர் தங்களுக்குள் முரண்பட்டு பிரிந்து நின்றனர். இயக்கத்தில் பல சின்னஞ்சிறு குழுக்கள் உருவாகின.
குடும்ப உறுப்பினர்கள் என்கிற அளவுக்கு கருதப்பட்ட சிலர் பிரிந்து நின்றதும், விலகி நின்றதும் அம்மாவை மிகவும் காயப்படுத்தியது. ஏதோ ஒரு பக்கத்தில் சேர்ந்து நிற்பது சரியானது அல்ல என்று அவர் கருதினார். உண்மையில் அது ஒரு பெரிய பிரச்சனையாக இருந்தது. இதுபோன்ற சூழலில் மௌனமாக இருப்பது நல்லது என்று அம்மா யோசித்திருக்கலாம்.
கேள்வி: அவர் இந்த சமயத்திலும் உழைத்துக்கொண்டிருந்தாரா?
பதில்: ஆமாம். அவர் ஓய்ந்தது இல்லை. அவரின் உழைப்புதான் வருமானத்திற்கான ஒரே வழி. அம்மாவுக்கு ஓய்வாக இருப்பது என்பதே தெரியாது. அவர் எல்ஐசி முகவர் வேலையைத் தொடர்ந்தார். ஊரெங்கும் சுற்றி பலரையும் பாலிசி எடுத்துக்கொள்ள வைத்தார். எனது மூத்த சகோதரி அம்மாவைப் பற்றி வங்க மொழியில் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். என் அப்பா எதிரிகளைக் கொன்றொழித்தார், கொலை செய்தார் என்று கதைகள் பரப்பப்படும் சூழலில், பிள்ளைகளைப் பாதுகாப்பதற்காக லைப் இன்சூரன்சை எங்கள் அம்மா விற்பதில் உள்ள முரண்பாட்டை அந்த நூலில் என் சகோதரி பேசுவார்.
கேள்வி: உங்கள் அப்பாவின் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரவில்லையா?
பதில்: அந்த சமயத்தில் நாங்கள் கேட்கவில்லை. உலகத்தைப் பார்க்காமல் அம்மா முகத்தைத் திருப்பிக்கொண்டுவிட்டார் என்று நாங்கள் உங்களுக்குச் சொன்னேன் அல்லவா? அப்போது நாங்கள் படித்துக்கொண்டிருந்தோம். எங்களில் தோழர்கள் பலரும் ஒன்று தலைமறைவாக இருந்தார்கள் அல்லது சிறையிலிருந்தார்கள். அந்த சமயத்தில் எங்களோடு யாரும் இல்லை. அப்புறம், 1997ல் நான் அரசியலில் இறங்கிய பின்னர், நீதி விசாரணை வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தை அணுகினோம். எங்கள் அப்பா, வங்கத்தின் கட்சி மாநில செயலாளராக இருந்த சரோஜ் தத்தா மரணம், அந்த சமயத்தில் நடத்தப்பட்ட பிற கொலைகள் குறித்து நீதி விசாரணை வேண்டும் என்று கோரினோம். அந்த மனு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதன்பின் உச்சநீதிமன்றம் சென்றோம். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை.
கேள்வி: நீங்கள் மாணவர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டீர்களா?
பதில்: இல்லை. நாங்கள் மாணவர் அரசியலில் ஈடுபடவில்லை.எங்களின் படிப்பிலேயே கவனமாக இருந்தோம். ஆனாலும் நாங்கள் சமூக சேவை செய்தோம். தந்தையின் மரணம். அவரைப் பற்றிய பாரதூரமான குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள்…. இவையெல்லாம் எங்களை மிகவும் ஆழமாக பாதித்தன. படிப்பை விட்டு வெளியேறுங்கள், கிராமங்களுக்கு சென்று புரட்சிகர பணியாற்றுங்கள் என்று மாணவர்களுக்கு அழைப்பு விடுத்த ‘சாரு மஜூம்தாரின் பிள்ளைகள் பூர்ஷ்வாக்களின் படிப்பைப் படிக்கிறார்கள்’ என்று எங்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
சாரு மஜூம்தாரின் பிள்ளைகள் என்பதால் நாங்கள் எப்போதும் கவனிக்கப்பட்டுக் கொண்டிருந்தோம். தெருவில் நடக்கும் போது கூட எங்களைக் கவனிக்கிறார்கள் என்ற உணர்வு எங்களுக்கிருந்தது. கடைகளில் நிற்பவர்கள் எங்களைப் பார்க்கிறார்கள், நல்லதாகவோ, வேறு மாதிரியோ பேசுகிறார்கள் என்று நாங்கள் என்பதைக் கவனித்தோம். எப்போதுமே கவனத்துடன் இருந்தபடி வளர்வது சிறார்களுக்கு நல்லதல்ல. எங்கள் தாய் நாங்கள் நாங்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று நினைத்தார். அதே சமயம், ‘நீங்கள் எந்த தொழிலை தேர்ந்தெடுத்தாலும் மக்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும்’ என்று எங்களிடம் சொன்னார்.
ஆங்கிலம் மூலக் கட்டுரை :The Wire முகநூலில் – ஆங்கிலம் வழி தமிழாக்கம் :சி. மதிவாணன் (சி.மதிவாணன் – சிபிஐ(எம்.எல்) லிபரேசன் கட்சியின் மாநில கமிட்டி உறுப்பினர்)
குறிப்பு :
நக்சல்பாரி எழுச்சியின் அடிப்படை மற்றும் அந்த எழுச்சியில் உழைக்கும் மக்களின் பங்கு குறித்து வாசகர்கள் அறிந்துகொள்ளும் வகையில் இந்த நேர்காணலின் தமிழாக்கத்தை மூன்று பாகமாக வெளியிடுகிறோம் – வினவு
திரிபுராவில் இந்துவெறி குண்டர்களின் வெறியாட்டம் !
தேவை : பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியும் போராட்டங்களும்!
ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவோம் என்று 2014−ல் பா.ஜ.க. வாய்ச்சவடால் அடித்து ஒன்றிய ஆட்சியைக் கைப்பற்றியது. அதேபோல, திரிபுரா மாநிலத்தில் ஆண்டுக்கு 50,000 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவோம், 7−வது ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்துவோம் என்று 2018 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வெற்று வாக்குறுதிகளை அள்ளி வீசி, சிறிய வாக்கு வித்தியாசத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை (சி.பி.எம்) வீழ்த்தி அம்மாநில ஆட்சியைக் கைப்பற்றியது.
தேர்தலில் வெற்றி பெற்றவுடனே பெலோனியா நகரில் இருந்த பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனின் சிலையை உடைத்து, தனது வன்முறை வெறியாட்ட வக்கிரத்தையும் திமிரையும் இந்துவெறி பாசிச கும்பல் பறைசாற்றியது. ஆட்சிக்கு வந்த பிறகு, ஆளும் பா.ஜ.க. கும்பல் தேர்தல் வாக்குறுதிகளைக் காற்றில் பறக்க விட்டது.
வேலையின்மை, விலையேற்றம் முதலானவற்றால் ஆளும் பாஜக ஆட்சியின் மீதான வெறுப்பு அம்மாநில மக்களிடம் அதிகரித்து வருவதோடு, ஆங்காங்கே போராட்டங்களும் பெருகி வருகின்றன. இதிலிருந்து மக்களைத் திசைதிருப்பும் நோக்கத்திலும், கம்யூனிஸ்டுகளை ஒழிப்பது முக்கிய வேலைத்திட்டம் என்ற வகையிலும் சி.பி.எம். கட்சியினர் மீது இந்துவெறி பாசிஸ்டுகள் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
தலாய் மாவட்டம் அம்பாசாவில் நடைபெற்ற பா.ஜ.க.-வின் நிகழ்ச்சியில், ‘‘2023−க்குள் கம்யூனிஸ்ட்களை திரிபுராவிலிருந்து வேரோடு பிடுங்கியெறிய வேண்டும்’’ என்று ஊழியர்களிடம் வெறிகொண்டு பேசியுள்ளார், திரிபுராவின் பா.ஜ.க. முதல்வர் பிப்ளவ். போர்த்தந்திர ரீதியில் சீனா மற்றும் வங்க தேசத்திற்கு எதிராகவும், வங்கதேச முஸ்லீம்களின் ஊருவல் என்ற பெயரில் சிறுபான்மையினர் மீது தாக்குதல் தொடுக்கவும், வடகிழக்கு மாநிலங்களில் கிறித்துவர்களுக்கு எதிராகவும் தேசியவெறியையும் மதவெறியையும் தூண்டி வன்முறைக் கலவரங்களைக் கட்டவிழ்த்துவிட்டு அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பதே இந்துவெறி பாசிச கும்பலின் நோக்கமாக உள்ளது.
இதனை நிரூபிக்கும் வகையில், ‘‘இந்துராஷ்டிரக் கனவை நிறைவேற்ற வடகிழக்கு மாநிலங்கள் ஆர்.எஸ்.எஸ்−க்கு முக்கியத்துவம் வாய்ந்த பகுதி’’ என்று கூறுகிறார், முன்னாள் ஆர்.எஸ்.எஸ் ஊழியரும், திரிபுரா தேர்தல் பொறுப்பாளருமான சுனில் தியோடர்.
திரிபுராவில் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுவதைக் கண்டித்தும், ஆண்டுக்கு 50,000 வேலை வாய்ப்பை உருவாக்குவோம் என்ற பா.ஜ.க. கும்பலின் வெற்று வாக்குறுதியை அம்பலப்படுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், ‘‘எங்கே எனது வேலை’’ என்ற முழக்கத்துடன் முறையான அனுமதியுடன் பேரணி நடத்தத் திட்டமிட்டிருந்தது. ஆனால், திடீரென பேரணிக்கு அனுமதியை போலீசு மறுத்ததையடுத்து, தடையை மீறி பேரணி செல்ல முயன்றவர்கள் மீது பா.ஜ.க குண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
திரிபுராவில் மொத்தம் 60 சட்டமன்றத் தொகுதிகளில் 20 இடங்கள் பழங்குடியினர் நிறைந்துள்ள பகுதியாகும். தேர்தல் வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டதால், மக்கள் மத்தியில் பா.ஜ.க. மீது அதிருப்தியும் வெறுப்பும் தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த ஏப்ரல் 2021−இல் பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளுக்கான (TTAADC) தேர்தலில் பா.ஜ.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் படுதோல்வியடைந்துள்ளன. இப்பாசிச சக்திகள் திரிபுராவில் தொடர்ந்து தனிமைப்பட்டுப் போயுள்ளதால், அடுத்து நடைபெறவுள்ள 2023 ஆண்டின் சட்டமன்றத் தேர்தலில் வெற்றியைச் சாதிக்க வன்முறையும் பயங்கரவாதமும்தான் ஒரே வழி என்று இந்துவெறிக் கும்பல் தீர்மானித்துள்ளது.
கடந்த மார்ச் 2018−லிருந்து ஜூன் 2021 வரை, 662 சி.பி.எம். கட்சி அலுவலகங்கள், 204 மக்கள்திரள் அமைப்புகளின் அலுவலகங்கள், கட்சி ஊழியர்களின் 3,363 வீடுகள், கட்சி ஆதரவாளர்களுக்குச் சொந்தமான கடைகள், 1,500 மீன்பிடி கலங்கள் மற்றும் ரப்பர் மரங்கள் ஆகியவற்றை தாக்கி இந்துவெறி கும்பல் சேதப்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 8−ஆம் தேதியன்று சி.பி.எம் கட்சி ஊழியர்கள் மீது கொலைவெறித் தாக்குதலைக் கட்டவிழ்த்துவிட்டுள்ள சங்கப் பரிவார கும்பல், சி.பி.எம்−க்கு சொந்தமான 42 கட்சி அலுவகங்களையும், கட்சி ஊழியர்களின் வீடுகள், கடைகள் என 67 கட்டிடங்களையும், தேசர்கதா என்ற பத்திரிக்கை அலுவலகத்தையும் தீ வைத்து எரித்துள்ளது.
சி.பி.எம். கட்சி அலுவலகங்கள் மட்டுமின்றி, இதர அரசியல் கட்சிகளின் அலுவலகங்களும் பல்வேறு நாளேடுகளின், மின்னணுச் செய்தி ஊடகங்களின் அலுவலகங்களும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. தலைநகர் அகர்தலா மட்டுமின்றி, பல்வேறு நகரங்களிலும் இத்தகைய அட்டூழியங்கள் நடந்துள்ளன. இத்தகைய வன்முறை வெறியாட்டத்தின்போது அம்மாநிலப் போலீசு கைகட்டி நின்றது. சி.பி.எம். மத்தியக் கமிட்டியின் கூற்றுப்படி, சி.பி.எம். கட்சி அலுவலக வாயிலில் நிறுத்தப்பட்டிருந்த மத்திய ரிசர்வ் போலீசுப் படையானது, இத்தாக்குதலுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகத் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்கள் இத்துடன் நின்றுவிடப் போவதில்லை. ஆட்சி அதிகாரத்தைக் கையில் வைத்துள்ள இந்த பாசிச கும்பல், ஒட்டுமொத்தமாக இடதுசாரி கருத்தாளர்கள், பகுத்தறிவாளர்கள், சிறுபான்மையினர் அனைவரையும் அழித்தொழிக்கும் வரை ஓயாது. தேர்தல் மூலம் இந்துவெறி பாசிச பயங்கரவாத கும்பல்களை ஒருக்காலும் ஒழித்துவிடவும் முடியாது.
ஆர்.எஸ்.எஸ். என்பது தேர்தல் முறையில் நம்பிக்கையற்ற அரை ரகசியமாக இயங்கும் கொடிய பாசிச அமைப்பு. அது, வேர்மட்ட அளவில் தொடங்கி உயர்மட்டம் வரை சித்தாந்தத்தால் பயிற்றுவிக்கப்பட்டு ஆயுதப் பயிற்சி உட்பட பல பயிற்சிகள் அளிக்கப்பட்டு அமைப்பு ரீதியாகத் திரட்டப்பட்டுள்ள இயக்கமாகும். எனவே, தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டும் இந்துவெறி பாசிச அமைப்பை முறியடிக்கும் வகையில் ஆற்றல் கொண்ட ஓர் அமைப்பு அல்லது பல்வேறு அமைப்புகளின் கூட்டணியால்தான் பார்ப்பன பாசிசத்தை வீழ்த்த முடியும்.
ஆனால், காவி பாசிச குண்டர்களை எதிர்கொள்வதற்கு எந்தத் திட்டமும் இல்லாமல், சி.பி.எம். கட்சி இப்பிரச்சினையை எதிர்கொள்ளும் விதமே அதன் கையாலாகாத்தனத்தை அம்பலப்படுத்திக் காட்டுகிறது. இத்தாக்குதலை, ‘‘எதிர்க்கட்சிகள் மீதான தாக்குதல், ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்’’ என்று மொன்னையாகப் குறிப்பிடுகிறார், சி.பி.எம். கட்சியின் பொதுச் செயலாளரான சீதாராம் யெச்சூரி. இக்கொலைவெறித் தாக்குதலைக் கண்டித்து மாநிலத் தலைநகர் அகர்தாலாவில் அடையாளப் பேரணியையும், பிற மாநிலங்களில் அடையாளப் போராட்டங்களையும் நடத்துகிறது, சி.பி.எம். கட்சி.
தற்பொழுது நடைபெற்ற தாக்குதலுக்கு எதிராக மட்டுமல்ல, மோடி ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து, 2018 திரிபுரா சட்டமன்றத் தேர்தலுக்கு முந்தைய நான்காண்டு காலத்தில் சி..பி.எம். ஆட்சியிலிருக்கும் போதுகூட பாசிச சக்திகளுக்கு எதிராக மக்களைத் திரட்டவோ, ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்கப் பரிவார அமைப்புகளின் வளர்ச்சியைத் தடுக்கவோ எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.
அதாவது, காவி பாசிச சக்திகளை, இன்னுமொரு தேர்தல் அரசியல் கட்சியாகக் கருதி ஜனநாயக பூர்வமான அணுகுமுறையில் அணுகி வருகிறது சி.பி.எம். கட்சி. இதனால், சி.பி.எம். ஆட்சியிலிருந்த காலகட்டத்திலேயே திரிபுராவில் ஆர்.எஸ்.எஸ். வேகமாக வேரூன்றத் தொடங்கியது. 2013 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தோல்வியடைந்த பிறகு, பல்வேறு அமைப்புகள் மூலம் பலதரப்பட்ட மக்கள் மத்தியில் வேலை செய்ததன் மூலம், 2014−ல் 60−ஆக இருந்த ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்களின் எண்ணிக்கை 2018−ல் 265 ஆக உயர்ந்தது.
2018 தேர்தலில், சி.பி.எம். கட்சியைச் சேர்ந்த பெருமளவிலான அரசு ஊழியர்களும், குடும்ப உறுப்பினர்களும் பா.ஜ.க.விற்கு வாக்களித்துள்ளனர் என்பதே இதற்கு சிறந்த உதாரணம். மக்கள் மத்தியில் மட்டுமல்ல, தன் கட்சி அணிகளுக்கூட இந்துவெறி பாசிச ஆர்.எஸ்.எஸ். − பா.ஜ.க பற்றிய புரிதலை சி.பி.எம். கட்சி கொடுக்கவில்லை. இதைதான், ‘‘சாதாரண மக்களுக்கு மார்க்ஸ் யாரென்று தெரியாது, அவர்கள் மூலதனத்தையும் படித்ததில்லை’’ என்கிறார், உள்ளூர் ஆர்.எஸ்.எஸ்.காரர்.
இப்படி, பாசிச சக்திகளை களத்தில் எதிர்த்து முறியடிக்கும் திட்டம் இல்லாமல், மக்களை கையறுநிலைக்கு சி.பி.எம். கட்சி தள்ளியதற்கு காரணம், அக்கட்சி பின்பற்றி வரும் திரிபுவாத – நாடாளுமன்ற துரோகப் பாதைதான். திரிபுராவில் பாசிசம் அரங்கேறி வருகின்ற இந்த நிலைமைகள் வரலாற்றில் முதல்முறையாக நடக்கும் விசயமல்ல. ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்கு வந்தவுடன் யூதர்கள் மீது படுகொலை நடத்துவதற்கு முன்னதாக, கம்யூனிஸ்டுகளைத்தான் நரவேட்டையாடினான் என்பதும், அங்கிருந்த திரிபுவாத கம்யூனிஸ்ட்களின் துரோகத்தால்தான் ஹிட்லரால் ஆட்சியைக் கைப்பற்ற முடிந்தது என்பதும்தான் வரலாறு.
ஆகவே, சி.பி.எம். ஊழியர்கள் மீதான கொலைவெறித் தாக்குதலை இந்தப் பின்னணியில் இருந்தும், பரிமாணத்திலிருந்தும்தான் பார்க்க வேண்டும். மக்களுக்கு இந்துவெறி பாசிச பயங்கரத்துக்கு எதிராக விழிப்புணர்வூட்டி, செயலுக்கமிக்க வகையில் திட்டமிட்டுப் போராடி பாசிச குண்டர் படைகளை களத்தில் எதிர்கொண்டு முறியடிக்க வேண்டும். இதற்கு திரிபுராவில் உள்ள புரட்சிகர அமைப்புகள், ஜனநாயக சக்திகள், போராடும் உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்து பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியைக் கட்டியமைத்துப் போராட வேண்டியது காலத்தின் கட்டாயம்!
நக்சல்பாரிக்கு முன்பிருந்து துவங்கி… நிகழ்காலத்தைத் தாண்டி எதிர்காலத்தை நோக்கிச் செல்லும் இந்திய கம்யூனிச இயக்கம்
பாகம் – 1
(“நக்சல்பாரி ஐம்பதாவது ஆண்டு தினத்தில் புரட்சிகர தந்தை அளித்துச் சென்ற மரபுரிமை செல்வம் என்னவென்று பரிசீலிப்போம்” என்ற தலைப்பிடப்பட்டு வெளிவந்த கட்டுரை. 1972ல் மரணிக்கும் வரையிலும் இந்திய அரசோடு வன்முறை மோதலை நடத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்டை வழி நடத்திச் சென்ற சாரு மஜூம்தாரின் மகன் அபிஜித் மஜூம்தாருடன் நேர்காணல்) நேர்காணல் : M. சுசித்ரா
(பேட்டியாளர் எம். சுசித்ரா கேரளாவின் கொச்சினைச் சேர்ந்த சுதந்திரமான பத்திரிகையாளர் ஆவார். இந்த பேட்டி, முதலில் மே 21-27, 2019 மாத்ருபூமி இதழில் மலையாளத்தில் வெளிவந்தது.)
புரட்சியாளர் சாரு மஜூம்தார் குறித்த நினைவுகளை அவரின் மகன் அபிஜித் மஜூம்தார் பகிர்ந்துகொள்கிறார்.
ஜூலை 28, 1972
அது மாலை நேரம். கல்கத்தாவின் எஸ்.எஸ்.கே.எம். மருத்துவக் கல்லூரியிலிருந்து இறந்தவரின் உடலை கல்கத்தாவின் சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்றனர். அது முழு இரகசியமாக செய்யப்பட்டது. ஆயுதம் தாங்கிய காவலர்கள் சாலைகளில் பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்தனர். நகரத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது போல தோன்றியது. சாலையிலிருந்த அனைவரையும் வீட்டுக்குப் போகச் சொன்னார்கள். சாலையின் இரண்டு பக்கமும் போலீஸ் அணி வகுத்திருந்தது. வெகு நேரம் கழித்த பின்னர் அந்த உடல் சுடுகாட்டுக்கு எடுத்து வரப்பட்டது. அங்கேயும் கூட துணை ராணுவப்படைகள் எல்லா இடத்திலும் நிறுத்தப்பட்டிருந்தனர். சிறுவன் ஒருவனிடம் ஒரு போலீஸ்காரர் தீப்பந்தத்தை அளித்தார். அந்தப் பையனின் தந்தைதான் அங்கு சடலமாக கிடந்தார். சடலத்திற்கு தீ வை என்று அந்த பையனுக்குச் சொல்லப்பட்டது.
இப்படியாக, புரட்சிகரமான தலைவரான சாரு மஜூம்தாரின் உடல், நள்ளிரவில் தீக்கு இரையாக்கப்பட்டது. அவர்தான் நக்சல்பாரியின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாலெ)-யின் கருத்தியலைக் கட்டமைத்தவர். மக்கள் மத்தியில் அளப்பரிய மரியாதைப் பெற்ற அந்த மனிதர் அரசின் கண்களுக்கு, மிகப் பயங்கரமான எதிரியாக தெரிந்தார். அழித்தொழிப்பையும், வன்முறை அரசியலையும் முன்னெடுத்துச் சென்றவர் என்று அவரைப் பற்றி சொல்லப்பட்டது.
சாரு மஜூம்தார்
இந்த சம்பவம் 45 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. ஆனால், தந்தையின் சிதையிலிருந்து எழுந்த தீ, 57 வயதான அபிஜித் மஜூம்தாரின் மனதில் இன்னமும் கனன்றுகொண்டிருக்கிறது. அதுபோன்ற ஒரு மனிதருக்கு மகனாக இருப்பது அத்தனை எளிதான விஷயம் இல்லை. எப்போதும், பிள்ளையைத் தந்தையோடு ஒப்பிட்டுக்கொண்டிருப்பார்கள். அவன் தன் தந்தையின் பாதையைப் பின்பற்றுகிறானா என்று பார்ப்பார்கள். சொந்த தந்தையின் அரசியல் இலக்குகள்தான் மகனின் அரசியல் இலக்குகளா என்று யோசிப்பார்கள். விடாது எழும் கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஊடகங்கள் உள்ளிட்டு, பல தரப்பாரும் எப்போதும் கேள்வி கேட்பார்கள்.
அபிஜித் சாக் பீஸ் கொண்டு கல்கத்தாவின் தெருக்களில் “துப்பாக்கி முனையிலிருந்துதான் அதிகாரம் பிறக்கிறது” என்று எழுதித் திரிந்த சிறு பையனாக ஒரு காலத்தில் இருந்தபோதும், பல ஆண்டுகள் அவர் அரசியல் செயல்பாடுகளை விட்டுவிட்டார். அவரின் தந்தை இறந்து 25 ஆண்டுகள் கழித்த பின்னர்தான் அவர் மறுபடியும் அரசியலில் கால் எடுத்து வைத்தார். தற்போது அவர் CPI ML (Liberation) கட்சியின் டார்ஜிலிங் மாவட்ட செயலாளராக இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அக்கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினருமாகவும் இருக்கிறார். சிலிகுரியில் உள்ள ஒரு கல்லூரியில் ஆங்கில ஆசிரியராக இருக்கிறார்.
அவரின் தந்தை வழி நடத்திய கட்சியைப் போலல்லாமல் சிபிஐ எம்எல் சட்ட ரீதியாக, வெளிப்படையாக இயங்கும் ஒரு கட்சியாக இருக்கிறது. தேர்தலில் பங்கெடுக்கிறது. ‘ஆயுதப் போராட்டத்தில்’ ஈடுபடுவதில்லை.
இந்த நேர்காணலில் அபிஜித் நக்சல்பாரியைப் பற்றி பேசுகிறார். அவரது பெற்றோர்களைப் பற்றி, இப்போதைய புதிய யதார்த்தம் குறித்து விரிவாக பேசுகிறார். பேட்டியின் போது, ஒரே ஒரு சமயம் மட்டும் அபிஜித் கண் கலங்கினார். அது அவர் தன் தாய் லைலா பற்றி பேசிய நேரம்.
கேள்வி: நக்சல்பாரிக்குப் பின்பு அரை நூற்றாண்டுகள் கடந்துவிட்டன. இன்னதும் அந்த நாட்களை நினைவில் வைத்துள்ளீர்களா?
பதில்: நக்சல்பாரி எழுச்சி நடக்கும்போது எனக்கு ஏழு வயதுதான். எனவே, என் அனுபவத்தின் ஒரு பகுதியாக அதனைப் பற்றி நான் பேச முடியாது. ஆனால், நான் ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும். மே 25, 1967 அன்று போலீஸ் துப்பாக்கியால் சுட்டது அமைதியாக போராட்டம் நடத்திக் கொண்டிருந்த ஒரு பெண்கள் குழு ஒன்றின் மீது! எட்டு பெண்கள், இரண்டு குழந்தைகள், ஒரு ஆண் அன்று இறந்துபோனார்கள். அதுபோன்ற நிகழ்வுகள் இன்றும் நடக்கின்றன. நந்திகிராம், சிங்கூர், பாங்கார்… இப்படி மேற்கு வங்கத்திலும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இது நடந்துகொண்டுதான் இருக்கிறது.
நக்சல்பாரி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அதனைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறார்கள். அனைவருக்கும் நக்சல்பாரியின் கதை தெரியும். ஆனால், அப்போதிருந்த (ஒன்றுபட்ட) கம்யூனிஸ்ட் கட்சிக்குள் என்ன நடந்துகொண்டிருந்தது என்று வெகு சிலருக்கு மட்டுமே தெரியும். ஒரு நாள் காலையில் எல்லாமும் துவங்கின என்று பலரும் நினைக்கிறார்கள். அது உண்மையல்ல. பல்வேறு தொடர் நிகழ்வுகளின் உச்ச கட்டம்தான் நக்சல்பாரி. பற்பல ஆண்டுகளாக, கம்யூனிஸ்ட் புரட்சியாளர்கள் ஆற்றிய கடும் பணி அதன் பின்னே உள்ளது.
கேள்வி: நக்சல்பாரியில் என்ன நடந்தது? அது ஓர் ஆயுதப் போராட்டம்தானே?
பதில்: ஆமாம். அது ஓர் ஆயுதப் போராட்டம்தான். நக்சல்பாரியும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் பழங்குடிகள் அதிக அளவு வாழும் பகுதிகள். அங்கே உள்ள தேயிலைத் தோட்ட தொழிலாளர்களும், விவசாயத் தொழிலாளர்களும் நிலமற்றவர்கள். அவர்கள் நிலப்பிரபுக்களின் கடும் சுரண்டலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவர்கள் தங்களின் பாரம்பரிய ஆயுதங்களைத் தாங்கிக்கொண்டு கலகம் செய்தனர். விவசாயிகளிடம் துப்பாக்கிகளும் இல்லை. துப்பாக்கி குண்டுகளும் இல்லை. வெடி குண்டுகளும் இல்லை. அரசிடம்தான் அதுபோன்ற ஆயுதங்கள் இருந்தன. போலீசிடமிருந்து ஆயுதங்களைக் கைப்பற்றுங்கள் என்று தெளிவான அறைகூவல் விடுக்கப்பட்டிருந்தது.
உண்மை என்னவென்றால், தெபகா இயக்கத்தின் தொடர்ச்சிதான் நச்கல்பாரி இயக்கம். தெபகா இயக்கம், வடக்கு வங்கத்திலும், தற்போது வங்கதேசமாக இருக்கும் சில பகுதிகளிலும் 1940களில் நடைபெற்றது.இங்கே தெபகா இயக்கம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, தெலுங்கானாவிலும் விவசாயிகள் தொழிலாளர்களின் ஆயுதப் போராட்டம் நடந்துகொண்டிருந்தது. தெபகா இயக்கத்தின் படிப்பினைகளைப் பெற்ற சாரு மஜூம்தார், கனு சன்யால், ஜங்கல் சந்தல், சரண் கோஷ் மற்றும் தெபகா இயக்கத்தின் தலைவர்கள் பலரும் நக்சல்பாரியில் தோட்டத் தொழிலாளர்களையும், விவசாயத் தொழிலாளர்களையும் அமைப்பாக்கத் துவங்கினர். நான் முன்னமேயே சொன்னது போல அது பல ஆண்டுகள் எடுத்துக்கொண்டது.
கேள்வி: தெபகா இயக்கம் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?
பதில்: 1946 -47 ஆண்டுகளில் தெபகா இயக்கம் நடைபெற்றது. தெபகா என்றால் மூன்றில் (2/3) இரண்டு பங்கு என்று பொருள். நேரடியாக விவசாயத்தில் ஈடுபட்ட குத்தகையாளர்கள், நில உடமையாளர்களுக்கு விளைச்சலில் சரி பாதியைக் கொடுக்க வேண்டியிருந்தது. அவர்கள் அதியார்கள் என்று அழைப்பார்கள். அதாவது அதா என்றால் பாதி என்று பொருள். பாதி விளைச்சலை வரியாக கொடுத்துவிட வேண்டும் என்பதால் அவர்கள் அதியார்கள் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் பண்ணை அடிமைகள் போல இருந்தனர். அவர்களுக்கு உரிய பாதி கூட அவர்களுக்கு கிடைக்காது.
1939-களின் இறுதியின்போது, கம்யூனிஸ்ட் கட்சி இப்பிரச்சனையைக் கையில் எடுத்தது. வாரக் குத்தகையாளர்களை அருகாமையில் உள்ள ஜெல்பெய்குரி மாவட்டத்திலும் அமைப்பாக்கியது. இந்த சமயத்தில்தான் என் தந்தை கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். அவர் 1939ல் அவருக்கு 20 வயது ஆனபோது கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். வாரக் குத்தகைதாரர்கள் அறுவடையில் மூன்றில் ஒரு பகுதியைத்தான் குத்தகையாக கொடுப்போம் என்று உறுதியாக சொன்னார்கள். அவர்கள் அமைப்பான பின்பு அவர்கள் தங்களுக்குத் தேவையானதை தங்களுக்கு என்று வைத்துக்கொண்டார்கள். இயக்கம் மெதுவாக வலுப்பெற ஆரம்பித்தது. அத்துடன் சேர்ந்து அரசு ஒடுக்குமுறையும் வலுப்பெற ஆரம்பித்தது. 1942ல் கட்சியின் வேலைகள் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் மத்தியிலும் விரிவடைந்தது. ரயில் வே தொழிலாளர்கள் மத்தியிலும் அமைப்பு உருவானது.
அடுத்த ஆண்டு மாபெரும் பஞ்சம் ஏற்பட்டது. தொழிலாளர்கள் பட்டினி கிடக்க ஆரம்பித்தனர். மக்கள் ஒன்றுபட வேண்டும் என்று சாரு மஜூம்தாரும் மற்ற தலைவர்களும் வலியுறுத்தினர். நிலப்பிரபுக்களின் தானிய களஞ்சியங்களைக் கைப்பற்றுங்கள், தானியங்களை பறிமுதல் செய்யுங்கள் என்று வழிகாட்டினர். “நாங்கள் துப்பாக்கி குண்டுகளால் சாவோம்… பட்டினியால் சாக மாட்டோம்” என்ற முழக்கம் எழுப்பப்பட்டது. விரைவில் போராட்டம் வேகம் பிடித்தது. தொழிலாளர்களும் விவசாயிகளும் பேரணிகளை நடத்தினர். தொழிலாளர்கள் பயிரை அறுவடை செய்தனர், தானியக் களஞ்சியங்களைத் தாக்கி, பதுக்கப்பட்ட தானியத்தை மக்களுக்கு வினியோகம் செய்தனர். மக்களை ஒடுக்குவதற்கான அரசின் தாக்குதல் மேலும் மேலும் காட்டுமிராண்டித்தனமானது. அதுபோன்ற பேரணியொன்றில் விவசாயிகள் போலீசிடமிருந்து துப்பாக்கியைப் பிடுங்க முயன்றனர். இதன் காரணமாக போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது. 11 விவசாயத் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே இறந்துபோனார்கள்.
பதில்: தலைவர்கள் தொடர்ந்து விவசாயிகளை அமைப்பாக்கினர். 1953ல், மத்தியில் இருந்த நேரு அரசாங்கம் ஜமீன்தாரி முறை ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தது. ஆனால், அது நடைமுறைக்குக் கொண்டுவருவது நேரு அரசாங்கத்தின் நோக்கம் அல்ல. மக்களை ஏமாற்றி திசை திருப்புவதற்காகத்தான் அந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. அப்போதைய கம்யூனிஸ்ட் கட்சி அதனைப் பற்றியும் கேள்வி எழுப்பியது. 1959-ல், உச்சவரம்புக்கு அதிகமாக நிலப்பிரபுக்களிடம் இருக்கும் நிலத்தை பறித்தெடுங்கள் என்று கட்சி அழைப்பு விடுத்தது. இயக்கம் மேலும் மேலும் வலுப்பெற ஆரம்பித்தது. கட்சியின் மாநில தலைமை போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தது.
என் தந்தை தனது ஊருக்கு, அதாவது சிலிகுரிக்கு 1952-ல் திரும்பியிருந்தார். டார்ஜிலிங் மாவட்டத்தில் விவசாயிகளை அமைப்பாக்குவதில் முழுமையும் ஈடுபட்டிருந்தார். அவர் கட்சியின் போராட்ட வாபஸ் அறிவிப்பால் அதிர்ச்சியடைந்தார். அவர் மட்டுமல்ல, மாவட்டத்தின் பிற தலைவர்களும் ஏமாற்றம் அடைந்தார்கள். கட்சியின் கருத்துரையை ஏற்காமல் மாவட்டத்தில் வேலையைத் தொடர்ந்தனர். விவசாயிகளையும், தேயிலை தொழிலாளர்களையும் அமைப்பாக்கினர். உபரி நிலத்தைக் கைப்பற்றுங்கள் என்று சொன்னார்கள். நிலப்பிரபுக்களின் சுரண்டலுக்கு எதிராக கலகம் செய்யுங்கள் என்றனர். அதன் உச்சமாக நக்சல்பாரி நடந்தது.
கேள்வி: சாரு மஜூம்தார் மிகவும் கண்டிப்பான தந்தையாக இருந்தாரா?
பதில்: ஒரு நாளும் அவர் அப்படி இருந்ததில்லை. அவர் மிகவும் அன்பான, பரிவுணர்ச்சியுள்ள தந்தை. இரக்கமேயில்லாத புரட்சியாளன், தொழிலாளர்களின் வர்க்க எதிரிகளைக் கொன்றொழிக்கச் சொன்னவர் என்பதெல்லாம் ஊடகங்களும், அரசாங்கமும் வேண்டுமென்றே பரப்பிய கட்டுக்கதை. அவர் ஒரு நாளும் அப்படிப்பட்டவர் இல்லை. அவருக்கு எங்களோடு செலவு செய்ய நேரமிருக்கவில்லை. இருந்தாலும் அவர் வீட்டிலிருக்கும்போதெல்லாம் எங்களோடு அன்போடு பழகுவார். அவருக்கு அரசியல் மட்டுமே பிடித்திருந்தது என்பது இல்லை. அவருக்கு இலக்கியம் பிடிக்கும். சாஸ்திரிய சங்கீதம் பிடிக்கும்.
எனக்கும் என் அக்காவுக்கும் அவர் இலக்கியங்களையும் சங்கீதத்தையும் கற்றுக்கொடுத்தார். (எனது பெரிய அக்கா ஒரு மருத்துவர். இரண்டாவது அக்கா மதுமிதா ஓர் ஆசிரியர்). அவர் எங்களுக்கு ரவீந்திரநாத் தாகூரை அறிமுகம் செய்தார். பக்கிம் சந்திர சட்டர்ஜியையும் பிறரையும் அறிமுகம் செய்தார். வங்க இலக்கியத்தை மட்டும் அவர் எங்களுக்கு அறிமுகம் செய்யவில்லை. ஆங்கில நாவல்களையும் படிக்க கொடுத்தார். இலக்கணம் படித்தால் மட்டும் ஆங்கிலம் வசப்படாது. நல்ல புத்தகங்களைப் படிப்பதன் மூலமே ஆங்கிலத்தில் புலமை பெற முடியும் என்று சொல்வார். எனது ஹீரோ எனது தந்தைதான்.
கேள்வி: நக்சல்பாரி எழுச்சியின் போது உங்களுக்கு ஏழு வயது என்று சொன்னீர்கள். உங்கள் குழந்தைப் பிராயம் எப்படி இருந்தது?
பதில்: எனது குழந்தைப் பருவம் மற்றவர்கள் போல இருக்கவில்லை. எனது நண்பர்கள் வளர்ந்தது போல நாங்கள் வளரவில்லை. கட்சித் தலைவர்களும், ஊழியர்களும், மாணவர்களும் என் தந்தையைப் பார்க்க வருவார்கள். மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல… ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, கேரளாவிலிருந்தெல்லாம் வருவார்கள். என் தந்தையைப் பார்த்துவிட்டு இங்கிருந்து புறப்பட்ட, ஸ்ரீகாகுளத்தைச் சேர்ந்த, பஞ்சடி கிருஷ்ணமூர்த்தி, பலசாவில் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இயக்கத்தின் தலைவர்கள் பலரையும் பார்க்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது.
நாங்கள் வளர்ந்தபோது புரட்சி என்பது எங்களுக்கு மிகவும் பழக்கமான சொல் ஆகிவிட்டது. ஆனால், இயற்கையாகவே, சிறார்களான எங்களுக்கு அரசியல் புரியவில்லை. ஆனால், எங்களுக்கும் ஒரு பாத்திரம் இருக்கிறது என்று நாங்கள் கருதினோம்.
எங்களுக்குப் புரட்சியைப் பற்றி எதுவும் தெரியாது என்றாலும் பெரிய புரட்சியாளர்கள் போல நடந்துகொண்டோம். அது மிகவும் துணிச்சல்கரமான காரியம் என்று நாங்கள் புரிந்து வைத்திருந்தோம். அந்த நேரத்தில் இயக்கத்தின் முழக்கங்கள் எல்லாம் மிகவும் பிரபலமாகிவிட்டன. அந்த முழக்கங்களை எழுப்பியபடி நாங்கள் ஊரைச் சுற்றி வருவோம். எங்கள் வீட்டில் மர சுவர்களால் ஆன சிறு அறை ஒன்று இருந்தது. அதனை வாடகைக்கு விட்டு வைத்திருந்தோம். ஆனால், நக்சல்பாரி நிகழ்ந்தபோது அந்த அறை காலியாக இருந்தது. சிறுவர்கள் எல்லாம் அந்த அறையில் கூடுவோம். அந்த மரச் சுவர்களில் உடைந்த கையெழுத்தில், “துப்பாக்கிக் குழாயில் இருந்து அரசியல் அதிகாரம் பிறக்கிறது”, “சீனத் தலைவர் எம் தலைவர்” என்றெல்லாம் எழுதி வைப்போம். (சிரிக்கிறார்). புரட்சியென்பது மிகவும் துணிவுகரமான வேலை என்று நாங்கள் நினைத்தோம்.
கேள்வி: வீட்டில் நிதி நிலைமை எப்படியிருந்தது? வீட்டு செலவுகளை எப்படி சரிக்கட்டினீர்கள்?
பதில்: எங்கள் குடும்பம் ஒரு நடுத்தர வர்க்க குடும்பம். ஆமாம். நாங்கள் வாழ்வதற்குப் போராட வேண்டியிருந்தது. எங்கள் தாய் (லைலா மஜூம்தார்) எல்ஐசி முகவராக செயல்பட்டு வந்தார். அதுதான் எங்களின் ஒரே வருமானம். எங்களின் உறவினர்கள் சிலரும் எங்களோடு வாழ்ந்து வந்தனர். அம்மாதான் எல்லோரையும் பார்த்துக்கொண்டார். அவர் மிகவும் கடினப்பட்டு உழைக்க வேண்டியிருந்தது. பல வீடுகளுக்கும் சென்று எல்ஐசி பாலிசி எடுத்துக்கொள்ளுங்கள் என்று பேசுவார். அப்படித்தான் அவர்கள் எங்களைப் பார்த்துக்கொண்டார். நாங்கள் எங்கள் தாயிற்கு மிகவும் கடன்பட்டுள்ளோம். நாங்கள் வாழ்க்கையில் என்ன பெற்றிருக்கிறோமோ அதெல்லாம் அம்மா கொடுத்தது. நல்ல கல்வி உட்பட அனைத்தையும் அவர் கொடுத்தார். அதற்காக அரும்பாடுபட்டார்.
கேள்வி: அவருக்கு அரசியலில் எப்போதாவது ஆர்வம் இருந்ததா?
பதில்: அம்மாவைப் பற்றி சொல்ல நிறைய இருக்கிறது. எல்லோருக்கும் என் அப்பாவைப் பற்றி தெரியும். அவரைப் பற்றி நிறைய எழுதப்பட்டாகிவிட்டது. ஆனால், வெகு சிலருக்கே அம்மாவைப் பற்றி தெரியும். நான் சந்தித்ததிலேயே மிகவும் தைரியமான பெண் என் அம்மாதான். அவரின் உள்ளும் புறமும் அரசியல்தான் இருந்தது. அவர் கேட்டதெல்லாம் அரசியல்தான். பேசியதெல்லாம் அரசியல்தான். 13 அல்லது 14 வயது முதல் அவர் மூச்செல்லாம் அரசியல்தான்.
கேள்வி: அவருடைய பின்னணி என்ன?
பதில்: அம்மாவின் தந்தை ஒரு மருத்துவர். ஹரேந்திர குப்தா என்பது அவரின் பெயர். அவர் அரசு மருத்துவராக இருந்தார். அவர் கடைசியாக ஜெய்பல்குரி மாவட்டத்தில் ராஜ்கன்ஞ் மருத்துவமனையில் பணியாற்றினார். அப்போது அம்மாவுக்கு 13 அல்லது 14 வயது. அவரின் வீட்டுக்கு அந்த நாட்களில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் பலர் வருவார்கள். அவர்களில் பலர் மீது வழக்கு இருந்ததால் அவர்கள் மாவட்டத்தை விட்டு வெளியே செல்ல முடியாது. படித்த மருத்துவரின் பார்வையாளர் கூடத்தில் பல்வேறு பத்திரிகைகள் இருக்கும். அவர்கள் அங்கே வந்து பேப்பர் படிப்பார்கள். அரசியல் பேசுவார்கள். அம்மா அவர்களுக்கு தேனீர் அளிப்பார். அவர்களுடன் உட்கார்ந்து அம்மாவும் அரசியல் பேசுவார். அதனால், அவர் மனதில் ஏகாதிபத்திய எதிர்ப்பு கருத்துகள் ஆழமாகப் பதிந்தன. பின்னர், அவர் ஒரு கம்யூனிஸ்ட் ஆனார்.
கம்யூனிஸ்ட் கட்சியின் பெண்கள் பிரிவில் அவர் துடிப்போடு பணியாற்றினார். அதுபோல தெபகா விவசாய போராட்டத்திலும் பங்காற்றினார். அதன் பின்பு அவர் ஜெய்பெல்குரி மாவட்டத்தின் தலைவர்களில் ஒருவராக ஆனார். 1948-ல் கட்சி தடை செய்யப்பட்ட போதும், 1950-ல் கட்சி தடை செய்யப்பட்டபோதும் அவர் சிறையிலடைக்கப்பட்டார்.
கேள்வி: அவர் முழு நேர கட்சி ஊழியரா? அல்லது வேறு ஏதாவது வேலை பார்த்தாரா?
பதில்: அவர் எப்போதுமே உழைக்கும் பெண்தான். அம்மா பாலர் வகுப்புப் பிள்ளைகளுக்குப் பாடம் எடுப்பார். அவர் மிகப் பெரிய குடும்பத்திலிருந்து வந்தவர். அதனால், அவர் உழைத்துக்கொண்டே இருக்க வேண்டியிருந்தது.
ஆங்கிலம் மூலக் கட்டுரை :The Wire முகநூலில் – ஆங்கிலம் வழி தமிழாக்கம் :சி. மதிவாணன் (சி.மதிவாணன் – சிபிஐ(எம்.எல்) லிபரேசன் கட்சியின் மாநில கமிட்டி உறுப்பினர்)
குறிப்பு :
நக்சல்பாரி எழுச்சியின் அடிப்படை மற்றும் அந்த எழுச்சியில் உழைக்கும் மக்களின் பங்கு குறித்து வாசகர்கள் அறிந்துகொள்ளும் வகையில் இந்த நேர்காணலின் தமிழாக்கத்தை மூன்று பாகமாக வெளியிடுகிறோம் – வினவு
பண்டைத் தமிழ் நூல்களில் பல அரசர் சிற்றரசர்களைப் பற்றிப் படிக்கிறோம். சிறப்புப் பெற்ற அவர்களெல்லாம் ஆண்கள். அவர்கள் தாய்முறை ஆண் வழியாகவே காணப்படுகிறது. தெய்வங்களில் ஏற்றமுடைய அனைத்தும் ஆண் வழியாகவே காணப்படுகின்றன. குறிஞ்சித் தெய்வமான சேயோன் (முருகன்), முல்லைத் தெய்வமான மாயோன் (திருமால்), நெய்தல் தெய்வமான வருணன், மருதத் தெய்வமான இந்திரன், ஆகிய அனைவரும் ஆண்பால் தெய்வங்களே. காவியங்களில் ஆண்களே தலைமை பெறுகிறார்கள்.
மணிமேகலை கதைத் தலைவியாக உருவாக்கப்பட்டிருப்பினும் அவளது ஆசிரியர் அறவணர் என்ற ஆண் என்பது சிந்தனைக்குரியது. சீவக சிந்தாமணி, பெருங்கதை ஆகிய காவியங்களில் ஆண் தலைமை பெறுவதும், பல பெண்கள் அவனுக்கு வாழ்க்கைப்பட்டு அவனது வெற்றிக்கு உதவுவதும் பெண்களுக்கு ஆணுக்குத் தாழ்ந்த ஸ்தானத்தைத் தான் காவியங்கள் அளிக்கின்றன என்பது தெளிவாகிறது.
புறநானூற்றில் பெரும்பாலான செய்யுட்கள், ஆண்களின் வெற்றிச் சிறப்பையும், கொடைச் சிறப்பையும் போற்றுகின்றன. பெண் கவிகள் சிலர் பாடிய செய்யுட்கள் இத்தொகை நூலிற் காணப்பட்ட போதிலும், அவை ஆண்களுடைய வீரத்தையும், கொடையையும் பாராட்டுவனவாகவே உள்ளன. ஒன்றிரண்டு செய்யுட்கள் பெண்களுடைய துயரங்களைச் சித்தரித்த போதிலும் அவை ஆண்களைப் பிரிந்தபோது பெண்கள் படும் வேதனையாக இருக்கிறது.
இவை எல்லாவற்றையும் சான்றாகக் காட்டி தமிழ் நாட்டில் எப்பொழுதும் தந்தை வழிச் சமுதாயமே இருந்து வந்திருக்கிறதென்றும், ஆண் ஆதிக்கச் சமுதாயமே எப்பொழுதும் நிலை கொண்டிருந்தது என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் முடிவுக்கு வருகிறார்கள். அவர்கள் முடிவு சரிதானா? மேற்கூறிய சான்றுகளை மட்டும் தொகுத்து முடிவு கண்டால் அவர்கள் முடிவு சரியே. ஆனால் தாய்வழிச் சமூகம், இலக்கிய காலத்திற்கு முந்தியது. சரித்திர காலத்திற்கு முந்தியது. மிகவும் பழமையானது என்பதைக் கவனத்தில் கொண்டால் இலக்கியச் சான்றுகளிலிருந்து மட்டும் மேற்கண்ட முடிவுக்கு வருவது தவறாக முடியும்.
தற்போது இருக்கும் சமூகத்தில் ஆண் ஆதிக்கத்துக்கே சான்றுகள் அதிகமாக உள்ளன. சமீபகால முறைக்குச் சான்றுகள் அதிகம் அகப்படுவது இயற்கையே. பெண் ஆதிக்கச் சமுதாயம் மறைந்துவிட்டது. மறைந்துவிட்ட சமூக முறைகளைப் பற்றிய சான்றுகள் தேடிப் பிடித்தால்தான் அகப்படும். அதுவும் சிற்சில எச்சமிச்சங்களே கிடைக்கும். அவற்றிலிருந்து அச்சமுதாயத்தை நாம் புனரமைத்து வருணிக்க வேண்டும்.
இத்தகைய எச்சமிச்சமான சான்றுகள் இன்று அகப்படுகின்றனவா? என்றாவது தமிழ்நாட்டில் பெண் ஆதிக்கச் சமுதாயம் இருந்ததா? இருந்திருந்தால் எந்தச் சமூக அடிப்படையின் மீது மேற்கோப்பாக அது இயங்கிற்று என்பதையும் நாம் அறிந்து கொள்ள முயலுவோம்.
மனிதன் தனது உணவை வேட்டையாடிப் பெற்றான் என்பது சமூக நூல் ஆராய்ச்சியாளர் முடிவு. வேட்டையாடி உணவு பெற்ற மனிதரை ‘வில்லேறுழவர்’ என்று பண்டை நூல்கள் அழைக்கின்றன. அக்காலத்தில் வேட்டைத் தொழிலில் சிறந்தவர்களுக்கு ஏற்றம் இருந்தது. காரணம் சமூகத்திற்குத் தேவையான உணவை அவர்களே தேடி அளித்தார்கள்.
உலோகங்கள் கண்டு பிடிக்கப்பட்ட காலத்தில் மனிதன் வேலை செய்தான். வேல், வேட்டைக் கருவி ஆயிற்று. வேலைக் குறி பார்த்துத் திறமையாக எறிபவன் சிறப்பாக வேலன் என்று அழைக்கப்பட்டான். உணவு தேடுவதில் அவனுக்கிருந்த முக்கியப் பங்கு குறித்து அவன் சிறப்புப் பெற்றான். வேலன் சக்தி மிகுந்தவன் என்று கருதப்பட்டான். அவனை வேடர்கள் போற்றினார்கள். தங்கள் வாழ்க்கையில் தோன்றும் சங்கடங்களைப் போக்க அவனை நாடினார்கள். மற்றவரைவிட அவன் அறிவு மிகுந்தவன் என்று நம்பினர். வர வர இவனுக்குச் செல்வாக்கு மிகுந்தது. நாட்பட அவன் தெய்வமானான். வேடர்கள் உணவு தேட வேறு வழி தேடிக்கொண்டபோதும் வேலனை மறக்கவில்லை. உணவு தந்த வேலன் உணவு தராதபோதும் செழிப்பின் சின்னமாகிவிட்டான். அவனை அவர்கள் கற்பனையில் தங்களைவிட சக்தி மிகுந்தனவாகக் கருதித் தெய்வமாக வழிபட்டனர்.
மனிதன் வேட்டையாடி உணவு தேடிய காலத்தில் ஆண்களே வேட்டைத் தொழில் செய்தனர். அவர்களே சமுதாயத்தில் ஆதிக்கம் வகித்தனர். அதனால் பெண்கள் குகைகளிலும், குடிசைகளிலும் தங்கினர். அவர்கள் செடி, கொடிகளைக் கண்டனர். அவற்றின் இனப்பெருக்கத்தை அனுபவத்தில் கண்டனர். இயற்கையைப் பின்பற்றித் தாங்களும் கொட்டைகளைப் பூமியில் விதைத்தனர். விதைகளை நிலத்தில் ஊன்றினர். கிழங்குகளை நிலத்தை அகழ்ந்து புதைத்து மூடினர். அவை வளர்ச்சியுற்றுப் பலனளித்தன. இவ்வாறு பண்டைப் பயிர்த் தொழில் தோன்றிற்று. பயிர்த் தொழிலிலிருந்து. வேட்டைத் தொழிலிருந்து கிடைப்பதை விட அதிகமாக உணவு கிடைத்தது.
முதலில் பெண்களே பயிர்த்தொழிலில் ஈடுபட்டனர். அவர்களே பயிர்த் தொழிலை கண்டுபிடித்தனர். பயிர்த் தொழில் செய்ய ஆள்பலம் வேண்டும். அதற்குரிய மக்களை ஈன்றதும், அவர்களுக்குப் பயிர்த்தொழிலைக் கற்றுக் கொடுத்ததும் பெண்களே. ஆண்கள் வேட்டைக்காக நெடுந்தூரம் சுற்றி அலைவார்கள். சில நாட்களுக்கு ஒருமுறையே குடில்களுக்குத் திரும்புவார்கள். ஆகவே பயிர்த் தொழிலின் தொடக்கக் காலத்தில் ஆண்களுக்கு அதில் அதிகப்பங்கு இருந்ததில்லை. குடும்ப வளர்ப்பிலும், அதிகப்பங்கு இருந்ததில்லை.
பெண்களே புராதனப் பண்பாட்டை உருவாக்குவதில் முக்கியப் பங்கு பெற்றனர். வேட்டை முக்கியத் தொழிலாக இருந்தது மாறி பயிர்த் தொழில் முக்கியத் தொழிலாயிற்று. பயிர்த் தொழிலில் பங்கு பெற்ற பெண்களும் ஆண்களை விட உயர்வு பெற்றனர். தொல்குடிகளைப் பற்றி ஆராய்ந்த அறிஞர் அனைவரும் ஒருமுகமாக ஒப்புக் கொள்ளும் உண்மை இது.
இந்நிலையில் மனிதனது கருத்துக்களும் மாறின. பெண் ஆதிக்கச் சமுதாயம் தோன்றி வளரும் சரித்திர முற்காலத்தில் பெண் தெய்வங்கள் தோன்றின. பயிர்த் தொழில் செழிப்பைக் கொடுத்தது. ஆகவே செழிப்பைக் குறிக்கும் தெய்வங்கள் பல நாடுகளிலும், பெண் தெய்வங்களாகவே இருக்கின்றன.
சீதேவி, கிரேக்க தெய்வங்களான சைபீல்டெடோனா, டெல்பி முதலியவை பெண் தெய்வங்களே, செழிப்பை வேண்டி நடத்தப்படும் விரதங்களிலும், விழாக்களிலும், இன்றும் ஆண்களுக்குப் பங்கில்லை. உதாரணமாக பாவை நோன்பை நோக்குவோம். பாவைகள் பலவகைப்படும்; அல்லிப்பாவை, கொல்லிப்பாவை, தெற்றிப் பாவை, மணற்பாவை, வண்டற்பாவை முதலியன. நாடு வளம் கொழிக்க இவற்றைப் பெண்கள் பூசை செய்வார்கள். மழைவளம் சுரக்கவும், ஆற்று நீர் நிலத்தை விதையேற்கும் பருவமாக்கவும், முளை வளரவும், பயிர்வளம் பல்கவும் பாவையை வாழ்த்துகிறார்கள்.
‘திருப்பாவை’ இப்பாவை நோன்பை வருணிக்கிறது. இந்நோன்பிலே ஆண்களுக்கு இடமில்லை. பாவையை வணங்கி விழா கொண்டாடினால் வளம் சுரக்கும். பெண்மக்களுக்கு இன்பமும் சுரக்கும் என்று ‘திருப்பாவை’ கூறுகிறது. பாவைக்கு நோன்பு செய்தால் கண்ணன் பறை தருவான், அருள் தருவான் என்றும் ‘திருப்பாவை’ கூறுகிறது. இதிலே கூர்ந்து நோக்க வேண்டியது, கண்ணனுக்குப் பூசை இல்லை, விழாவும் இல்லை. பாவைக்குத்தான் பூசை, பாவை மணலாலும் வண்டலாலும் கிழங்கினாலும் செய்யப்பட்டது.
பாவை நிலத்திற்கு அடையாளம், நிலமோ பெண்; பெண்ணே செழிப்பைத் தருபவள். அவளை வணங்கினால் வளம் அருளுவாள். இங்கே கண்ணன் பார்த்து நிற்பவனே; அவனுக்கு முக்கியத்துவம் இல்லை. ஆண்டாளுடைய காலத்துக்கு முன் தமிழ் நாட்டுப் பெண்கள் பாவை நோன்பு கொண்டாடியிருக்க வேண்டும். அப்பொழுது கண்ணனுக்கு அதில் சற்றும் இடமிருந்திராது என்பது நிச்சயம். பாவை நோன்பு, பாவைக்கு மட்டுமே, அதில் பங்கு பெறுபவர் பெண்கள் மட்டுமே, ஆண்டாள் காலத்தில், மிகப் புராதன காலத்தில் நடந்த விழா வொன்றின் மிச்சங்கள் பாவை நோன்பில் எஞ்சிக் காணப்பட்டன.
பண்டைத் தமிழ் நூல்களில் பெண் தெய்வம் ஒன்றின் பெயர் காணப்படுகிறது. அவள் பலவாறு அழைக்கப்படுகிறாள். ‘முதியோள்’ என்பது அவளது பெயர்களுள் ஒன்று. எல்லோரிலும் பெரியவள் என்று அதன் பொருள். அதே பொருளில் அவள் ‘பழையோள்’ என்றும் அழைக்கப்பட்டுள்ளாள், இவள் யாரால் வணங்கப்பட்டாள்? அதற்கு அவளுடைய மற்றொரு பெயர் பதிலளிக்கிறது.
பரிபாடல் பதிகத்தில் அவள் ‘காடுகள்’ என்று அழைக்கப்படுகிறாள். ‘காடு கிழாள்’ என்ற மறு பெயரும் அவளுக்கு உண்டு. குறிஞ்சி நில மக்கள், வேட்டைத் தொழிலிலிருந்து புராதனப் பயிர்த் தொழிலுக்குத் திரும்பிய காலத்தில் புன்புலப்பயிர் செய்யத் தொடங்கினார்கள். அக்காலத்தில் பெண்கள் ஆதிக்கம் பெறத் தொடங்கினார்கள். ஆகவே காட்டில் பெண்கள் பயிர் செய்யத் தொடங்கிய காலத்தில் காடு கிழாளும் தோன்றினாள்.
அதற்கு முன்பே. சேயோன் (வேலன்) கடவுளாகி விட்டானல்லவா? அவனுடையச் சிறப்பு ஆண் ஆதிக்கத்தையல்லவா குறிக்கிறது? பெண் ஆதிக்கச் சமுதாயம் அவனுக்கும் ஓர் இடம் கொடுக்க வேண்டும். ஆகவே அவனைக் காடு கிழாளின் மகனாக ஏற்றுக் கொண்டது. அவன் வீரன் ஆகவே அவளையும் வீரமங்கையாக்கியது. வீரத் தொழிலில் வெற்றி பெறுவோருக்கு அவள் கொற்றவை ஆனாள். அவனும் கொற்றவைச் சிறுவன் ஆனான்.
பிற்காலத்தில் வேட்டைத் தொழிலை விட்டு, ஆண்கள் ஏர் உழவின் மூலம், பயிர்த் தொழிலில் முக்கிய பங்கு பெறத் தொடங்கியபின், மறுபடியும் வேலன் தாய்க் கடவுட் சேய் ஆகிவிட்டான். பெண்ணாதிக்கச் சமுதாயத்தில் தாய்வழி உறவு பெருமையாகச் சொல்லப்படுகிறது. ஆணாதிக்கச் சமுதாயத்தில், தந்தை வழி உறவு பெருமையாகச் சொல்லப்படுகிறது.
சிலப்பதிகாரத்தில் கொற்றவை வழிபாட்டு முறை சொல்லப்படுகிறது. கொற்றவை கோயில் ஐயைக் கோட்டம் என அழைக்கப்படுகிறது. ஐயைக்கு விழாச் செய்ய வேண்டுமென நாள் குறித்துச் சொல்லுபவள். அவள் தெய்வவெறி கொண்டு ஆடுபவள். ‘பழங் கடனுற்ற முழங்குவாய்ச் சாலினி’ என்று அவள் வருணிக்கப்படுகிறாள், ஐயைக்குப் படிவமில்லை. ஒரு குமரிப் பெண்ணைக் கோலம் புனைந்து ஐயை என்று பெயரிட்டுக் கலைமான் மீது ஏற்றி வணங்குகிறார்கள்.
‘இட்டுத் தலையெண்ணும்
எயின ரல்லது
சுட்டுத் தலை போகா
தொல்குடிக் குமரியை
சிறு வெள்ளாவின்
குருளை நாண் சுற்றி,
குறு நெறிக் கூந்தல்
நெடு முடி கட்டி,
இளை சூழ் படப்பை
இழுக்கிய வேனத்து,
வளை வெண்கோடு
பறித்து மற்றது
முளை வெண்
திங்க ளென்னச் சாத்தி
மறங் கொள் வயப்புலி
வாய்பிளந்து பெற்ற
மாலை வெண் பற்றாலி
நிரை பூட்டி
வளியும், புள்ளியும்
மயங்கு வான் புறத்து
உரிவை மேகலை
உடீ இப்பரிவோடு
கருவில் வாங்கும்
கையத்துக் கொடுத்து ……….
பறையும், குழலும் சூறைச் சின்னமும், முழங்கவும் மணியிரட்டவும் தெய்வமென எழுந்தருளுவித்து வேடர்கள் (எயினர்) வணங்குகின்றனர். பூசைக்குரிய சந்தனத்தையும், மலரையும், சாம்பிராணியையும் எயிற்றியர் (பெண்கள்) ஏந்தி வருகிறார்கள். தெய்வமும், பெண் தெய்வம் பூசனை முழுவதும் பெண்களின் உரிமை. இது பழங்காலப்
பெண்ணாதிக்கத்தின் எச்சம், சிலப்பதிகார காலம் ஆணாதிக்கமும் தந்தை வழி முறையும் நன்றாக வளர்ச்சி பெற்றிருந்த காலம், அக்காலத்திலும் தொன்மையின் எச்சம் இவ்வழிபாட்டில் காணப்படுகிறது.
பிற்காலத்தில் ஆணாதிக்கச் சமுதாய அடிப்படையில் தோன்றிய கடவுளர்களும், இத்தெய்வங்களின் உறவினர்களாக்கப்படுகின்றனர். இத்தெய்வத்தின் செயல்களெனப் புராணங்கள் வருணிக்கும் நிகழ்ச்சிகள், ஐயை மீது ஏற்றிக் கூறப்படுகின்றன. உதாரணமாக சிவனது தன்மைகள் சில ஐயை மீது ஏற்றிக் கூறப்பட்டுள்ளது.
எப்படியாயினும் இப்பெண் தெய்வத்தின் கணவன் எவன் என்று கூறப்படவில்லை. இவளே குமரி, இவளே செழிப்பின் செல்வி, இவளது வழிபாட்டை நடத்தும் உரிமையுடையவர்கள் பெண்களே, ஆண்கள் எட்ட நின்று அருள் பெறுவதற்கே உரியவர்கள், பெண்ணாதிக்கச் சமுதாயத்தின் எஞ்சிய மரபென்று இதனை ஐயமறக் கொள்ளலாம்.
இனி தந்திரம் என்றழைக்கப்படும் சித்தர் தத்துவத்திலிருந்து பெண்ணாதிக்கச் சமுதாயத்தின் எச்சங்களைச் சுருக்கமாகக் காணலாம். சித்தர்கள் சக்தி உபாசகர்கள். பட்டினத்தாரையும், இராமலிங்கரையும் தற்காலத்தார் சித்தர்களாக்கிவிட்டனர். உண்மையான சித்தர்கள் தந்திரத்தில் நம்பிக்கையுடையவர்கள். தந்திரம் தொன்மையான மந்திரவாதம் அதன் அடிப்படை சக்தி. இச்சக்தி பெண்மைதான். அவர்கள் பெண் பிறப்புறுப்பை (அல்குல்) இரண்டு வித அடையாளங்களால் குறிப்பிடுவர். ஒன்று தாமரை, மற்றொன்று முக்கோணம்.
பெண்மையின் ஆற்றலை அடைந்தால் பிரபஞ்சத்தை அடக்கி ஆளலாம் என்பது அவர்கள் தத்துவம். இதற்காகப் பெண்மை ஆற்றலையடைய அவர்கள் யோக முறைகளை ஏற்படுத்தினார்கள். இதற்கு ஒரு புராதன விஞ்ஞான விளக்கமும் கொடுக்கிறார்கள். முதுகுத் தண்டிலுள்ள சுழுமுனை என்னும் நரம்பில் சட்சக்கர பேதம் என்று படிப்படியாக உயரும் நிலையில் 7 தாமரைகள் இருப்பதாகவும் யோகத்தின் மூலம் மனம் ஒவ்வொரு படியாக ஏறிக் கடைசியில் சகல சக்திகளையும் அடையும் என்பதும் அவர்கள் தத்துவம். இவையனைத்தும் பெண்மையின் சக்தியைப் பெறும் முயற்சியே.
ஆண்கள் பெண்களின் சக்தியை ஏன் பெற வேண்டும்? பெண்கள் உயர்வானவர்கள் என்று மதிக்கப்பட்ட காலத்தில்தான் அத்தகைய எண்ணம் தோன்ற முடியும். அது பெண்ணாதிக்கம் உண்மையிலேயே இருந்த காலத்தில் உருவான கருத்து, பெண்ணாதிக்கத்திற்கு அடிப்படையான சமுதாய அமைப்பு மாறிய பின்னரும், சக்தி வழிபாட்டிலும், தந்திர முறைகளிலும் சித்தர் தத்துவங்களிலும், எச்சங்களாகக் காணப்படுகின்றன. இவையனைத்தையும் ‘வாமாசாரம்’ என்ற சொல்லால் இந்தியத் தத்துவ நூலார் அழைக்கிறார்கள்.
வாமம் என்றால் பெண், ஆசாரம் என்றால் ஒழுக்கம். பெண்ணொழுக்கத்தைக் கடைப்பிடித்து பெண்மையின் சக்தியைப் பெறுவதே இம்முறைகளின் நோக்கம். இம்முறைகளின் மூலவேர் பெண்ணாதிக்கச் சமுதாயத்திலிருந்தது என்பதில் ஐயமில்லை.
இனி இன்று நிலவி வரும் அம்மன் வணக்கத்திலிருந்து சில சான்றுகள் காணலாம். ஆண்டு தோறும் நவராத்திரி உற்சவம் நடைபெறுகிறதல்லவா? ஒவ்வொரு ஊரிலும் பெண் தெய்வங்களுக்குத் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இத்தெய்வங்களுக்கு ஆகம முறைப்படி பூசனையில்லை. தந்திரீக முறைகள் சிலவும் தொன்முறை வழக்கங்களும் இப்பூசனைகளில் இடம்பெறுகின்றன.
அம்மனுக்கு முன் முக்கோணம் அல்லது தாமரை வடிவத்தில் யந்திரங்கள் கோலமாகப் போடப்படுகின்றன. இவை எதனைக் குறிக்கின்றன என்று முன்னரே கண்டோம். அவற்றின் மீது பூரண கும்பம் வைத்து, நெல் நிரப்பி, மஞ்சளும், தேங்காயும் வைக்கிறார்கள். அல்குல் இனவிருத்திக்கு அடையாளம். அதனோடு தொடர்பு கொள்ளும், நெல்லும் மஞ்சளும், தென்னையும் பல பயிர்வகைகளுக்கு அடையாளங்கள். பயிர்களெல்லாம் ஒன்று நூறாகப் பெருக வேண்டும் என்பது இச்செய்கையில் மறைந்திருக்கும் பொருள். அம்மனுக்குக் குங்குமம் அர்ச்சனை செய்கிறார்கள். தந்திர நூல்களில் குங்குமம் மாதவிடாய் இரத்தத்தைக் குறிக்கும்.
முதன் முதலில் பூப்பெய்தியதிலிருந்து, மாதவிடாய் நிற்கும் காலம் வரை, பெண் செழிப்பின் சின்னம். அதற்கு முன்னும் பின்னும் அவள் கருவுயிர்த்து, இனச்செழிப்புக்குக் காரணமாவதில்லை. ஆகவே மாதவிடாய் உதிரம் மாயசக்தி உடையது. செழிப்புக்கு அறிகுறி என்ற கருத்துப் புராதன மக்களுக்கு ஏற்பட்டது. இன்னும் நாகரிகமடையாத தொல்குடி மக்களுக்கு இந்த நம்பிக்கை உள்ளது. மாதவிடாய் பருவத்திலுள்ள பெண்களை விதை முளைக்கும் வயலைச் சுற்றி வரச் செய்தால் விதை வளர்ந்து நல்ல பயன்தரும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
இதற்கு அடிப்படையான காரணம் மனிதனது பிறப்புக்கு ஆண் பெண் உறவு காரணமாவது போல உலகில் எல்லாம் தோன்றுவதற்கு உடலின் நிகழ்ச்சிகள் போன்ற வேறு பிரகிருதி நிகழ்ச்சிகள் காரணம் என்ற நம்பிக்கையும், பிரகிருதியின் செழிப்பை, பெண்ணின் செழிப்புச் சக்தி வளர்க்கும் என்ற நம்பிக்கையுமே. எல்லா அம்மன்களுக்கும் சிவன் கணவன் என்ற கதை இன்று வழங்கி வருகிறது. முத்தாரம்மன் கதை , குமரியம்மன் கதை போன்ற கதைகளில் இவ்வம்மன்மார் சிவனது மனைவிமாராக பேசப்படவில்லை. சிவனை எதிர்த்துப் போராடிய அசுரர்களுக்கு உதவியாகவும் கதை சொல்லுகிறது. இக்கதைகளைப் பற்றிய விரிவான ஆராய்ச்சி தாய் வழிச் சமுதாயம் பற்றிய புதிய கருத்துகளைக் கொடுக்கும்.
இக்கட்டுரை தமிழகத்தின் வரலாற்று முற்காலத்தை அறிய ஆதாரமாகும் சில சான்றுகளை மட்டுமே குறிப்பிட்டது. ஒவ்வொரு சான்றையும் விளக்கினால் அது ஒரு விரிந்த நூலாகிவிடும். அத்தகைய ஒரு நூல் முற்கால தமிழகத்தின் சமுதாய வளர்ச்சியை அறிய மிகவும் அவசியம். மார்க்சீய அறிவும், இலக்கிய அறிவும், சரித்திர அறிவும் அமையப் பெற்ற பலர் கூட்டுறவில் இத்தகைய நூல் தோன்றுமாக.*
(தொடரும்)
அடிக்குறிப்புகள் :
* ஆதார நூல்கள்: புறநானூறு, சிலப்பதிகாரம், பரிபாடல், திருப்பாவை, சித்தர் பாடல்கள், நாடோடிப் பாடல்கள், “Lokayatha’ Debiprasad Chatopadyaya; Orgin of the Family and the state-Engeles: Art and Social life – Plekonov; Forgotton sons of India -Subborayan, Retired DSP; Science in History – Bernal. Matriarchy in India-Ehrenfels.
பென்னாகரம் பேருந்து நிலையத்தை போர்க்கால அடிப்படையில் கட்டிக் கொடுக்கவும், பேருந்துநிலையம் புதுப்பிப்பது என்ற பெயரில் பேருந்து நிலையத்தை கழிவுநீர்க் குட்டையாக மாற்றிய அவலத்தைக் கண்டித்தும், மோசமான நிலையில் உள்ள பென்னாகரம் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளுக்கு வாடகை வசூல் செய்யக்கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்தும் மக்கள் அதிகாரம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என திட்டமிடப்பட்டது. அதனடிப்படையில் 16.10.2021 இன்று பென்னாகரம் பேருந்து நிலையத்திற்கு முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தற்காலிக பேருந்து நிலையத்தில் பயணிகள், மாணவர்கள், போக்குவரத்து ஊழியர்கள் வெயில், மழை காலங்களில் நிற்க இடம் இல்லாமல் தவித்து வருகின்றனர். மேலும், சிறுநீர், மலம் கழிக்க இடமில்லாமல் இருப்பதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தொடர்ச்சியாக மக்கள் கோரிக்கை வைத்தும், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பேருந்து நிலையத்தை இடித்தது முதல் இன்றுவரை பேருந்து நிலையத்தை கட்டி முடிப்பதற்கான எந்த வேலையும் செய்யாமல், குழியை மட்டும் தோண்டி வைத்துள்ளனர். இதனால் மழைக்காலங்களில் கழிவுநீர் தேங்கி நோய் பரவுகிற அவலநிலை ஏற்பட்டு இருக்கிறது.
பேருந்து நிலத்தை கட்டி முடிப்பதற்காக டென்டர் என்கிற பெயரில் கோடி கோடியாக கொள்ளை அடிப்பது மட்டும்தான் ஓட்டுக் கட்சிகளின் தொடர்கதையாக இருக்கிறது. முந்தைய ஆட்சியில் அதிமுக மாவட்ட நிர்வாகி ஒருவர் இந்த டெண்டரை எடுத்துள்ளார். ஒன்னறரை ஆண்டு காலங்களில் குழியை மட்டுமே தோண்டிவிட்டு எந்த வேலையும் செய்யாமல் இழுத்தடித்து வருகிறார், ஆனால் அரசு அதிகாரிகளோ இலஞ்சத்தை பெற்றுக்கொண்டு கண்டுகொள்ளாமல் விடுவதும், பேருந்து நிலையம் கட்டும் வேலையை தள்ளிபோடுவதும் தொடர்கிறது.
இதனால் நகரத்திலுள்ள வணிகர்கள், சிறு வியாபாரிகள், தரைக்கடை வியாபாரிகள், என பலதரப்பட்ட மக்களும் வாழ்விழந்து நிற்கின்றனர். எனவே இந்த அவல நிலையை போக்க போர்க்கால அடிப்படையில் பேருந்து நிலையத்தை கட்டி முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் வகையில் இந்த ஆர்ப்பட்டம் நடத்தப்பட்டது.
1 of 6
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டலக் குழு உறுப்பினர் தோழர். அருண் தலைமை தாங்கினார். புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தர்மபுரி மாவட்ட அமைப்பாளர் தோழர் சத்தியநாதன், CPI(ML) (விடுதலை)-யின் மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகரச் செயலாளர் தோழர் லட்சுமணன், மக்கள் ஜனநாயக இளைஞர் முன்னணி, தருமபுரி மாவட்ட பொறுப்பாளர் தோழர் பெரியண்ணன், தமிழ் புலிகள் கட்சியின் தருமபுரி மாவட்ட செயலாளர் முனுசாமி, தர்மபுரி மாவட்ட முடி திருத்துவோர் நலச்சங்கத்தின் நிர்வாகிகளான, தோழர் மகேஸ்வரன், தோழர் கருணாகரன், தோழர் லட்சுமிகாந்தன், தோழர் சிவாஜிஆகியோர் கண்டன உரையாற்றினர்.
மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் முத்துக்குமார் சிறப்புரை ஆற்றினார். இறுதியாக முடி திருத்துவோர் நலச்சங்கத்தின் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தோழர் சத்தியமூர்த்தி நன்றியுரையாற்றினார். இதில் பெருந்திரளாக வணிகர்களும் மக்கள் அதிகாரம் தோழர்களும் கலந்து கொண்டனர்.
தகவல் மக்கள் அதிகாரம்
தருமபுரி மண்டலம் 97901 38614
‘Dying for an iphone’ APPLE, FOXCONN AND THE LIVES OF CHINA’S WORKERS
உலகின் பொருள் உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்றுவதே எங்கள் இலக்கு. இந்தியாவில் முதலீடு செய்யப்படும் மூலதனங்களுக்கு எந்தப் பாதகமும் வராது. உலகச் சந்தைக்காக அந்நிய நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்கி, உற்பத்தியாகும் பொருட்களை உலகின் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது என்று கூறி “மேக் இன் இந்தியா” திட்டத்தை மோடி முன்வைத்தார்.
தன்னுடைய கார்ப்பரேட் சேவைக்காக தொழிலாளர்களை நவீன கொத்தடிமைகளாக மாற்றும் பொருட்டு, இந்தியாவில் நடைமுறையில் இருந்து வரும் 44 தொழிலாளர் நலச் சட்டங்களை நீக்கிவிட்டு, அவற்றுக்குப் பதிலாகத் தொழிலாளர் நலம் குறித்த 4 வழிகாட்டுதல் தொகுப்புகளை இயற்றி, அவற்றைச் சட்டமாக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது மோடி அரசு.
மறுபுறம் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு ஆதரவாக, சீனாவிலிருந்து பல கார்ப்பரேட் நிறுவனங்கள் வெளியேறி இந்தியாவில் தொழில் தொடங்கப் போகின்றன என்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள் மோடியின் துதிபாடிகள்..
சீனாவில் உள்ள பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் எப்படி சீனத் தொழிலாளர்களை சுரண்டுகின்றன? இந்நிறுவனங்கள் இந்தியாவிற்கு நுழைந்தால் அச்சுரண்டல் எப்படி நம் நாட்டு தொழிலாளர்கள் மீது தீவிரமடையும் என்பதை எந்த நிறுவனமயமாக்கப்பட்ட பத்திரிக்கைகளும் தொழிலாளர்களுக்கு கூறுவதில்லை.
சீனாவில் உள்ள பாக்ஸ்கான் நிறுவனத்தில் வேலைப்பார்க்கும் தொழிலாளர்களின் நிலைமைகளையும், அவர்கள் மீதான சுரண்டல்களையும் படம் பிடித்து காட்டுகிறது இப்புத்தகம்.
சீனாவில் உள்ள பாக்ஸ்கான் தொழிற்சாலைகளில் நடந்த தொடர் தற்கொலைகளை மையமாக வைத்து ‘Dying for an iphone’ APPLE ,FOXCONN AND THE LIVES OF CHINA’S WORKERS என்ற புத்தகம் எழுதப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் நிலைமைகள் ஏதோ இங்கிலாந்தில் தொழிற் புரட்சி ஏற்பட்ட காலத்தில் நடந்தது அல்ல. இது நடப்பது நாம் வாழும் காலத்தில்தான்.
இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் கிராமப்புறத்திலிருந்து வந்து நகர்ப்புறத்தில் உள்ள பாக்ஸ்கான் நிறுவனத்தில் வேலை பார்க்கின்றனர். தங்கள் குடும்பத்தை விட்டுப் பிரிந்து வாழ்கின்றனர். நெரிசலான தொழிலாளர்கள் தங்கும் விடுதியில் தங்கி இருக்கின்றனர். இதற்காக அவர்களின் சம்பளத்திலிருந்து வாடகை பணம் கழிக்கப்படுகிறது . அமெரிக்காவிற்காக 24 மணி நேரமும் உற்பத்தி நடக்கிறது.
தொழிலாளர்கள் தங்கள் மீதான துஷ்பிரயோகம், குறைந்த ஊதியம், அலுமினியத் தூசுகள் போன்ற இராசயன நச்சு கழிவுகள் ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
சீனாவின் பல தொழிற்துறை நகரங்களில் உள்ள பாக்ஸ்கான் நிறுவனத்தில் இலட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர்.
பாக்ஸ்கான் நிறுவனம் முதன்மையாக ஆப்பிள் நிறுவனத்திற்காக உற்பத்தி செய்கிறது. ஆப்பிள் நிறுவனத்திற்கு மட்டுமில்லாமல் ஆல்பபெட், பிளாக்பெர்ரி, சிஸ்கோ, டெல், புஜிட்சு, க்யூ ஹப், ஜபம், இன்டெல், லஃப், மைக்ரோசாப்ட், நிண்டெண்டோ, பானோசோனிக், பிலிப்ஸ், சாம்சங், சோனி மற்றும் தோஷிபா போன்ற நிறுவனங்களுக்கும் மேலும் சீன நிறுவனங்களான லெனோவா, ஹவாய், ZTE போன்றவைகளுக்கும் உற்பத்தி செய்கிறது. பாக்ஸ்கான் iPhones, iPads, iPods, Macs, TVs, Xboxes, PlayStations, Wii U’s, Kindle, printer போன்றவற்றை அசெம்பிள் செய்கிறது. இந்நிறுவனம் 2018-ம் ஆண்டில் சீனாவின் மொத்த இறக்குமதி மற்றும் ஏற்றுமதியில் 4.1% பங்கை கொண்டுள்ளதோடு 175 பில்லியன் டாலரை வருவாயாக பெற்றுள்ளது.
’Dying for an iphone என்ற புத்தகத்தின் ஆசிரியர்களான ஜென்னி சான், மார்க் செல்டன் மற்றும் புன் ங்காய், சீன நகரங்களான ஷெஞ்ஜன், ஷாங்காய், குன்ஷான், ஹாங்சோ, நாஞ்சிங், தியான்ஜின், லாங்ஃபாங், தையுவான் மற்றும் வுஹான் ஆகிய நகரங்களில் உள்ள ஃபாக்ஸ்கானின் முக்கிய உற்பத்தித் தளங்களில் உள்ள தொழிலாளர்கள் மத்தியில் பல வருடங்களாக ஆய்வு மேற்கொண்டதன் அடிப்படையிலேயே இப்புத்தகத்தை எழுதியுள்ளனர்.
தொழிலாளர்கள் எப்போதும் கண்காணிப்பிலேயே வாழ்கின்றனர். அவர்கள் அந்நிறுவனத்தின் பாதுகாப்பு படைப்பிரிவால் காவல் காக்கப்படுகிறார்கள். அடுக்கு மாடியிருப்பிலான தங்கும் விடுதிகளில் ஒரே அறையில் எட்டு முதல் பத்து தொழிலாளர்கள் தூங்குகிறார்கள். முன்பு இந்த அடுக்குமாடி குடியிருப்பு விடுதிகளில் ஏற்பட்ட தற்கொலை நிகழ்வுகளை தடுப்பதற்காக தற்போது வலைகள் மற்றும் இரும்பு கம்பிகள் வைக்கப்பட்டுள்ளன.
ஒரேபகுதியில் இருந்து வரும் தொழிலாளர்களோ அல்லது ஒரே இடத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்களோ ஒரே அறையில் தங்க விடாமல் பார்த்துக் கொள்கின்றனர். திருமணமான ஆணும் பெண்ணும் பணியாற்றினால் அவர்களை ஒரே அறையில் தங்க நிர்வாகம் அனுமதிப்பதில்லை. பிற தொழிலாளர்களை அறைக்குள் கூட்டி வருவதற்கே பல கட்டுப்பாடுகளை நிர்வாகம் விதித்திருக்கிறது.
தங்குமிடமும், பணியிடமும் அருகருகே இருப்பது நிறுவனத்திற்கு 24 மணிநேர அதிவேக உற்பத்திக்கு வழிவகுக்கிறது. பிற மனிதர்களின் அன்பு இல்லாமை, ஒரு திரைச்சீலை, பங்க் வடிவிலான படுக்கை, சிறிய அறை இது தான் தொழிலாளர்கள் வாழ்விடம் என்று தொழிலாளர்களின் வாழ்நிலையை குறிப்பிடுகிறார்கள் இந்த நூலின் ஆசிரியர்கள்.
ஒரு மணி நேரத்திற்கு இரண்டு டாலர்கள் அல்லது மாதத்திற்கு சராசரியாக 390 டாலர்கள் வழங்கப்படுகிறது. நிறுவன வளாகத்திலேயே ஏ.டி.எம் இயந்திரம் மூலம் இதை பரிமாற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொழிற்சாலையில் 10-12 மணி நேரம் வேலை. மேலாளர்கள், லைன் லீடர்கள், போர்மேன் போன்றோர்கள், தொழிலாளர்களை வேலை நேரத்தின் போது பேச விடாமல் கண்காணிக்கின்றனர். அசெம்பிளி லைனில் மெதுவாக வேலை செய்தால் இவர்கள் கண்டிப்பார்கள். குறைபாடுள்ள பொருட்களை உற்பத்தி செய்தால் தொழிலாளர்கள் தண்டிக்கப்படுவார்கள்.
ஒரு தொழிலாளர் ஆலையின் விதிகளை மீறினால், சக தொழிலாளர்கள் மத்தியில் சுய விமர்சனம் ஏற்றுக்கொள்ள வேண்டும். தகுதி மதிப்பீட்டில் ‘D’ grade பெறும் தொழிலாளர்கள் வேலையிலிருந்து நீக்கப்படுகின்றனர்.
அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை கிடையாது. ஒவ்வொரு இரண்டாவது வாரத்தில் ஒரு விடுமுறை அல்லது மாதத்திற்கு இரண்டு முறை விடுமுறை எடுக்கலாம். அவ்வளவுதான். இது போக தொழிலாளர்கள் பகலிலிருந்து இரவு ஷிப்டிற்கு மாற வேண்டியது இருக்கும்.
காலை ஏழுமணிக்கு வேலைக்கு போகும் தொழிலாளர்களின் அன்றாட நிலைமைகளை இந்நூலின் ஆசிரியர்கள் விளக்குகின்றனர். “அங்க அடையாளம் உறுதிப்படுத்தப்பட்ட பின்பு தொழிற்சாலையின் உள்ளே செல்ல தொழிலாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். ஆலை வாயிலில் நுழைந்தவுடன் அடுத்தடுத்த கண்காணிப்பு கருவிகளால் கண்காணிக்கப்படுகின்றனர். ஒரு நாட்டிற்குப் பாதுகாப்பு படை இருப்பது போல, பாக்ஸ்கானுக்கு ஒரு தனி படை இருக்கிறது” என்று குறிப்பிடுகின்றனர்.
ஆலையின் உள்ளே நுழைந்தவுடன், தொழிலாளர்கள் சந்திக்கும் (சகித்துக் கொள்ளும்) வழக்கமான சடங்கைப் பற்றி ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
“ஷிப்ட் தொடங்கும் போது, ஆரம்பக் கூட்டத்தில் மேலாளர் தொழிலாளர்களிடம் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் (How are you?) என்று கேட்பார். இதற்கு தொழிலாளர்கள் Good! Very good! Very very good! என்று சத்தமாக கத்த வேண்டும். இது தொழிலாளர்களை ஊக்குவிப்பதற்காக நடக்கும் பயிற்சி என்று கூறப்படுகிறது.
ஷிப்ட் ஆரம்பிக்கும் முன்பு மூன்று முறை விசில் ஒலிக்கும். முதல் விசில் ஒலிக்கும் போது தொழிலாளர்கள் தங்கள் இருக்கைகளை சரிசெய்ய வேண்டும். இரண்டாவது விசிலின் போது தொழிலாளர்கள் தங்கள் கையுறைகள் மற்றும் உபகரணகங்களை அணிய வேண்டும். மூன்றாவது விசிலில் உட்கார்ந்து வேலை பார்க்க வேண்டும்.” என்று இந்நூலில் குறிப்பிடுகின்றனர்.
“வேலை நேரத்தின் போது நாங்கள் பேசக்கூடாது, சிரிக்க கூடாது, தூங்க கூடாது, சாப்பிடகூடாது. இது தொழிற்சாலையின் முதல் விதி” என்கிறார் லேசர் சால்டிரிங் தொழிலாளி.
ஒரு லைன் லீடர் கூறும் போது “பத்து நிமிடங்களுக்கு மேல் கழிவறைக்கு சென்று வந்தால் அத்தொழிலாளி வாய்மொழி எச்சரிக்கைக்கு உள்ளாக்குப்படுவார். வேலை நேரத்தில் பேசினால் எழுத்துப்பூர்வ எச்சரிக்கை விடப்படும்“ என்கிறார்.
“இந்நிறுவனத்தில் கையில் நகம் வளர்த்து இருந்ததற்காக நான் என்னுடைய மதிப்பெண்களை இழந்தேன். இவ்வாறு மதிப்பெண்களை இழப்பது என்னுடைய போனசு இழப்புக்கு வழிவகுக்கும்” என்கிறார் இங்குள்ள பெண் தொழிலாளி. எப்படியெல்லாம் நூதனமாக தொழிலாளர்களின் காசைத் திருடித் தின்றிருக்கிறது இந்தக் கும்பல் ?
“என் நண்பன் ஒரு தடவை மொபைல் போனில் ஒரு திருகாணியை அசெம்பிள் செய்யாமல் விட்டதற்காக, பாக்ஸ்கான் சேர்மனின் பொன்மொழி ஒன்றை முந்நூறு தடவை எழுத நிர்ப்பந்திக்கப்பட்டான்” என்கிறார் அப்பெண் தொழிலாளி.
பாக்ஸ்கான் நிறுவனத்தில் வேலை என்பது சோர்வாகவும், திரும்ப திரும்ப அதே வேலையே செய்வதாகவும், மன அழுத்தத்தை தருவதாக உள்ளதாகவும் ஆசிரியர்கள் கூறுகிறார்கள். ஒரு ஐ போனில் நூற்றுக்கு மேற்பட்ட பாகங்கள் உள்ளன. ஒவ்வொரு தொழிலாளியும் ஒரு குறிப்பிட்ட செயலை செய்வதற்காக வேலை செய்ய வேண்டும். .இவர்கள் இந்த செயலை ஒரு குறிப்பிட்ட வேகத்தில் தினசரி பத்து மணிக் கணக்கில், மாதக் கணக்கிலும் இந்த இயக்கத்தை தொடர வேண்டும்.
இந்தப் புத்தகத்தில் அசெம்பிளி லைனில் விஷுவல் இன்ஸ்பெக்டராக வேலைபார்க்கும் பெண் தொழிலாளி, தனது நேர்காணலில், “மதர்போர்டு ஓவனில் இருந்து என் கைகள் மதர்போர்டை எடுக்க நீளும். என் தலை இடமிருந்து வலது பக்கமாக இயங்கும். கண்கள் இடமிருந்து வலது பக்கமாகவும், மேலிருந்து கீழாகவும் குறுக்கீடு இல்லாமல் அசையும். நான் ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான தடவை இதை செய்கிறேன். என் மூளை துருப்பிடிக்கிறது” என்கிறார்.
அமெரிக்காவின் டெய்லரிசம், முதலாளித்துவ சமுதாயத்தில் தொழிலாளிகளின் மூளைகளில் இது போன்ற இரசாயன மாற்றத்தை தான் ஏற்படுத்துகின்றன போலும் !
தான் பார்க்கும் வேலை நிலைமைகளை பற்றி விளக்கும் போது , “இந்நிறுவனத்தில் ஒவ்வொரு விநாடியும் இலாபத்தை நோக்கியே எண்ணப்படுகின்றன. 1. மதர்போர்டை நான் எடுக்க வேண்டும்; 2. அதன் லோகோவை ஸ்கேன் செய்ய வேண்டும்; 3. அதை ஒரு பையில் இட வேண்டும்; 4. அதன் மீது லேபிளை ஒட்ட வேண்டும்; 5. அதை அசெம்பிளி கன்வேயரில் வைக்க வேண்டும். இதை நான் பத்து விநாடிக்குள் செய்ய வேண்டும். ஒவ்வொன்றையும் இரண்டு விநாடிக்குள் செய்து முடிக்க வேண்டும்” என்கிறார் ஒரு தொழிலாளி.
“தொழிற்சாலை எஞ்சினியர்கள் ஸ்டாப் வாட்ச்களோடு அசெம்பிளி லைனுக்கு வரும் போது நாங்கள் மெதுவாக வேலை பார்க்க ஆரம்பிப்போம். நான் 7விநாடிகளில் 8 ஸ்குருக்களை ஒரு ஸ்மார்ட் போனில் அசெம்பிள் செய்வேன். அவர்கள் வரும் போது நாங்கள் வேகமாக வேலை செய்தால் நாங்கள் இதை மாதக்கணக்கில் தொடர வேண்டும். அதற்காக நாங்கள் அவர்கள் வரும் நேரம் பார்த்து மெதுவாக வேலை பார்போம் என்கிறார் ஒரு தொழிலாளி. இந்த எஞ்சினியர்களுக்கு எங்களுடைய வலது கையோ அல்லது இடது கையோ ஒரு விநாடி கூட சும்மா இருந்து விடக்கூடாது. வலது கை எலக்ட்ரானிக் ஸ்குரு டிரைவரை இயக்கும் போது இடது கை ஸ்குருக்களை எடுக்க வேண்டும்” என்று அங்குள்ள உற்பத்தி திறனுக்காக வடிவமைக்கப்பட்ட டெய்லரிசத்தை விவரிக்கிறார் ஒரு தொழிலாளி.
லைன் லீடர்களின் வேலை நிலைமைகள் பற்றியும் ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றன்ர.
“நாங்கள் ஒரு ஷிப்ட் உற்பத்தியில் 99.65% உற்பத்தி பொருட்களை தரத்தோடு உற்பத்தி செய்ய வேண்டும். இது ஒரு ஷிப்டில் 4 தரமற்ற பொருட்களாக இருக்கலாம். மாணவப் பயிற்சியாளர்கள் அதிகமாக வந்ததால் நாங்கள் இந்த சதவீதத்தை சாத்தியமாக்குவதற்கு மிகவும் திணறுகிறோம்.”
“எங்கள் மேலதிகாரிகள் அவர்களின் கோபத்தை எங்கள் மீது காட்டுகிறார்கள்; நாங்கள் தொழிலாளிகள் மீது காட்டுகிறோம். தொழிலாளிகள் தங்கள் கோபத்தை யார் மீது காட்டுவார்கள்? இதுதான் அவர்களை கட்டத்தின் மீதிலிருந்து குதிக்கத் தூண்டுகிறதோ?” என்கிறார் ஒரு லைன் லீடர்.
“வேலை முடிந்த பிறகு உங்கள் கண்கள் உற்சாகமிழந்து, உணர்ச்சியிழந்து, உயிரற்று போய், உங்கள் முகமும் தலையும் அழுக்கோடு இருந்தால் நீங்கள் ஒரு பாக்ஸ்கான் தொழிலாளி” என்கிறார் ஒரு தொழிலாளி.
“அங்குள்ள வேலை சுற்றுப்புறமும் மோசமானதாக இருக்கிறது. பாலிசிங் இயந்திரம் அலுமினிய தூசுகளை உமிழ்கிறது. இந்த தூசு கண்ணில் எரிச்சலை ஏற்படுத்துவதோடு கண்ணீரை வரவைக்கிறது. நுண்ணிய அலுமினிய தூசு தொழிலாளர்களின் முகங்களிலும் ஆடைகளிலும் பூசுகிறது” என்கிறார்கள் ஆசிரியர்கள். ஒரு தொழிலாளி, “நான் பாக்ஸ்கானில் அலுமினிய தூசுகளை ஒரு vacuum cleaner போல சுவாசிக்கிறேன்” என்கிறார். ஆலையின் சன்னல்கள் மூடப்பட்டிருப்பதால் தொழிலாளர்களுக்கு சுவாசப் பிரச்சினைகளும் ஏற்படுகிறது.
செங்குடு பகுதியில் உள்ள ஆலையில் மே20, 2011 அன்று தீப்பிடிக்க இந்த அலுமினியத் தூசு வழிவகுத்தது. எலெக்டிரிக் சுவிட்ச் போடும் போது அலுமினிய தூசுகள் மூலம் தீப்பிடித்து நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் காயமடைந்தனர். இது நடந்த ஏழு மாதங்களுக்கு பின்பு ஷாங்காயில் உள்ள ஐ போன் உற்பத்தி ஆலையில் அலுமினியத் தூசு மூலம் தீப்பிடித்து 61 தொழிலாளிகள் கடுமையாக தீக்காயத்திற்கு உள்ளாகினர். பலர் நிரந்தர ஊனமுற்றனர் என்று சுட்டிக் காட்டுகின்றனர், இந்நூலின் ஆசிரியர்கள்.
ஒரு ஷிப்ட்டுக்கு ஆயிரக்கணக்கான தொடுதிரைகளை தொழிலாளிகள் சுத்தம் செய்ய வேண்டும். இதற்கு தொழிற்சாலை ஆல்கஹாலை விட வேகமாக ஆவியாகும் என்–ஹெக்சேன் என்ற வேதிப் பொருள் பயன்படுத்தப்படுகிறது. இதை ஆண்டுக்கணக்கில் பயன்படுத்தும் போது இந்த வேதிப் பொருளால் கண் எரிச்சல், தசைப் பிடிப்பு, தலை வலி, நடுக்கம், மங்கலான பார்வை போன்ற உடல்ரீதியிலான பிரச்சினைகள் தொழிலாளிகளுக்கு ஏற்படுகிறது. சுவாசக் கருவிகள் அணிந்து நல்ல காற்றோட்டமான இடத்தில் மட்டுமே இதைப் பயன்படுத்த வேண்டும். இந்த வசதி இல்லாமல் தொழிலாளர்கள் நோய் வாய்ப்பட்டுள்ளனர். இது குறித்து பலரும் குரல் எழுப்பவே இந்த வேதிப் பொருள் ஆலை வளாகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த பாக்ஸ்கான் ஆலைகள் அதிகளவு உலோகங்கள் மற்றும் கழிவு நீரை ஆறுகள் மற்றும் நிலத்தடி நீரில் கலக்கச் செய்கின்றன. ஆலைகளுக்கு அருகில் உள்ள ஆறுகள், கருப்பு நிறத்தில் ஓடுகின்றன. பிளாஸ்டிக் கழிவுகளால் நிரம்பி வழிகின்றன. குடிநீர் நிறம் மாறி துர்நாற்றம் வீசுவதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
முன்பு அசெம்பிளி லைனின் நவீன ரோபாக்கள் தொழிலாளர்களை வேலையிலிருந்து வெளியேற்றியது. அவர்கள் ஏற்கெனவே பார்த்த சால்டிரிங், வெல்டிங், ஸ்பிரே, தர பரிசோதனை, PCB அசெம்பிளி போன்ற வேலைகள் ரோபோக்கள் மூலம் செய்யப்பட்டன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நிரந்தர தொழிலாளர்கள் ரோபோக்கள் மூலம் வேலை இழப்பதில்லை.
அத்தொழிலாளர்கள் பெருகி வரும் மாணவப்பயிற்சியாளர்கள் மற்றும் துணை ஒப்பந்த தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவன் மூலம் வெளியேற்றப்படுகிறார்கள். பாக்ஸ்கானில் ஆயிரக்கணக்கான தொழிற்பயிற்சி மாணவர்கள் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு குறைந்த பட்ச ஊதியமே வழங்கப்படுகிறது. அவர்கள் நன்னடத்தை காலத்தை கடந்தாலும் 400 யுவாங் கூட வழங்கப்படுவதில்லை.
தொழிலாளர்களின் போராட்டங்கள் பாக்ஸ்கானில் நடந்து வருவதை பற்றி ஆசிரியர்கள் கூறும் போது ஆப்டிக்ஸ் பள்ளத்தாக்கு என அழைக்கப்படும் ஹூபேயின் கிழக்கு ஏரியின் உயர் தொழில்நுட்ப மேம்பாட்டு மண்டலத்தில், ஜனவரி 3, 2012 அன்று 150 பாக்ஸ்கான் தொழிலாளர்கள் தங்களுடைய ஊதிய பிரச்சினை மற்றும் கட்டாய இடமாற்றங்களை எதிர்த்துப் போராடியுள்ளனர். தங்கள் கோரிக்கைகளை மேலாளர் ஏற்காவிட்டால் தாங்கள் கட்டத்தின் மேலிருந்து தற்கொலை செய்து கொள்வதாக கூறியுள்ளனர்.
வேலை நிறுத்தங்கள் , போராட்டங்கள் பற்றி சீன அரசு இரகசியம் காத்தாலும் அவை இப்போது அதிகரித்து வருவதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன என்கிறார்கள் நூல் ஆசிரியர்கள். வேலை நிறுத்தங்கள் விரைவாகவும் கொடூரமாகவும் நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரிகளாலும், காவல் துறையினராலும் ஒடுக்கப்படுகின்றன. வேலை நிறுத்தத்தை முன்னின்று நடத்தும் தலைவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.
தொழிற்புரட்சியின் காலக்கட்டத்தில் உள்ள தொழிலாளர்களின் நிலைமைகளை விட தற்போதைய தொழிலாளி வர்க்கம் உரிமைகளை இழந்து நிற்கிறது.
தொழிற்சங்களுக்குத் தடை, அதிக வேலை நேரம், வேலைப் பறிப்பு, தொடர் கண்காணிப்பு, விதிமீறல்களுக்கு தண்டனை, பல நோய்களின் உருவாக்கம், வயது முதிர்ந்த தொழிலாளிகள் நசுக்கப்படுதல் இன்னும் பிற சுரண்டல்கள் தீவிரமாயிருக்கிறது.
உலகில் நடக்கும் வர்த்தக உடன்படிக்கை அனைத்தும் தொழிலாளர்கள் சுரண்டலின் தீவிரத்தை அதிகமாக்குவதையே முனைப்பாக்குகிறது.. இலட்சக்கணக்கான வேலைகள் வளரும் நாடுகளிலிருந்து மூன்றாம் உலக நாடுகளுக்கு மாற்றப்பட்டு வருகிறது. தொழிலாளர்கள் மீதான தீவிர சுரண்டல் சீனாவில் மட்டும் இல்லை; உலகம் முழுவதும் தீவிரமாயிருக்கிறது. இந்த வர்க்க சுரண்டலில் அமெரிக்க, ஜப்பானிய, ஐரோப்பா பனிப்போர் எல்லாம் இல்லை. உலக முதலாளிகள், முதலாளித்துவ வர்க்க உணர்வோடு ஓரணியில் நிற்கிறார்கள்.
அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் போன்ற நாடுகளின் கார்ப்பரேட் நிறுவனங்கள் அந்நாடுகளிலிருந்து உற்பத்தி தளங்களை இடம் மாற்ற செய்யும் போது தன் நாட்டு தொழிலாளர்களை கைவிடும். அதே சமயத்தில் மற்ற நாடுகளின் தொழிலாளர்களை சுரண்டுவதில் கூட்டுச் சேர்கின்றன. அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்களும், சீன உற்பத்தி நிறுவனங்களும் தொழிலாளர்களை நெருக்கமான தங்கும் விடுதிகளில் உலக பெருந்தொற்று காலகட்டத்தில் அடைத்து வைத்திருக்கின்றனர்.
தொற்று நோய்க்காலகட்டத்தில் ஆப்பிள் நிறுவனம் தன் தயாரிப்புகளை அதிகளவில் விற்று இலாபம் ஈட்டியுள்ளது. ஜனவரி 2021- மார்ச் 2021 வரையிலான காலாண்டில் மட்டும் இதன் இலாபம் இரட்டிப்பாகியுள்ளது. ( 23.6 பில்லியன் டாலர்). வருவாய் 54% உயர்ந்துள்ளது.
இது இன்று சீன தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைமைகள் என்று நாம் ஒதுக்கி விட முடியாது. நாளை கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் இலாப வேட்கைக்காக குறைந்த கூலி பெறும் இந்தியா போன்ற நாடுகள் நோக்கி தங்கள் உற்பத்தி தளங்களை மாற்றலாம். அப்போது மோடி அரசும் கார்ப்பரேட் கூட்டுகளும் தொழிலாளர்களை சுரண்டுவதில் ஓரணியில் நிற்பார்கள்.
நாம் அவர்களை எதிர்க்க வேண்டுமானால் ஒப்பந்த தொழிலாளர்கள், அப்ரடிண்ஸ் பயிற்சியாளர்கள், மாணவப்பயிற்சியாளர்கள், நிரந்தர தொழிலாளர்கள், என்று தனியே பிரிந்து நின்று காவி- கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிக்க சாத்தியமில்லை. மார்க்ஸ் எங்கெல்ஸ் ஆகியோரின் “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்’! என்ற முழக்கத்திற்கு செயல் வடிவம் கொடுக்கும் போது தான் இந்த காவி- கார்ப்பரேட் பாசிசத்தை எதிர்த்து முறியடிக்க முடியும்!
திராவிடம், சமூகநீதி போன்ற கொள்கைகளை முன்னிறுத்தி செயல்படும் கட்சியாக தி.மு.க. தன்னைக் காட்டிக் கொண்டாலும், உண்மையில் கொள்கை கோட்பாடற்ற, கவர்ச்சிவாதத்தை முன்வைக்கின்ற கட்சியாவே இருக்கிறது என்றும், ஆவின் பால் விலைக்குறைப்பு, பெண்களுக்கு பேருந்துகளில் இலவச பயணம் போன்ற அறிவிப்புகள் கூட மக்கள் நலத் திட்டங்களைப் போலத் தோன்றினாலும் அவை ‘‘கவர்ச்சிவாத திட்டங்களே’’ என்றும் சென்ற புதிய ஜனநாயகத்தில் எழுதியிருந்தோம்.
அதைப் படித்துவிட்டு, சில வாசகத் தோழர்கள் தி.மு.க.வின் ‘‘கவர்ச்சிவாத அரசியல்’’ குறித்து விளக்கி விரிவாக எழுதுமாறு கோரியிருந்தார்கள். அவர்களது கோரிக்கைக்காக மட்டுமல்லாமல், தி.மு.க.வின் கார்ப்பரேட் பாணியிலான நடவடிக்கைகளும் அக்கட்சி தொடர்ச்சியாக அறிவித்துவரும் கவர்ச்சிவாதத் திட்டங்களும் சமூகநீதி வாய்சவாடல்களும் மக்களிடையே ஒருவித ‘‘மயக்க நிலை’’யைத் தோற்றுவித்திருக்கும் இத்தருணத்தில் உண்மை நிலையை புரியவைக்கும் நோக்கத்திலும் இத்தலைப்பிலான கட்டுரையை எழுதுகிறோம்.
– புதிய ஜனநாயகம்
கவர்ச்சிவாத அரசியல் : முதலாளித்துவ ஜனநாயகத்தின் இழிந்த இறுதிநிலை
முதலாளித்துவ ஜனநாயகத்தின் (தேர்தல் அரசியலின்) இழிந்த, இறுதிநிலை வடிவமே கவர்ச்சிவாத அரசியல். திராவிடம், தமிழ்த் தேசியம், இந்திய தேசியம், தலித்தியம், கம்யூனிசம் என தங்களுடைய அரசியல் கொள்கைகளை முன்னிறுத்தி, அதை பரந்துபட்ட மக்களிடம் பிரச்சாரம் செய்து அணிகளை − அமைப்புகளை கட்டுவது, இதன் மூலம் கிடைக்கும் மக்கள் ஆதரவிலிருந்து தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிபெறுவது என்ற முறைகளெல்லாம் எப்போதோ கேலிக்கூத்தாக்கப்பட்டு விட்டது.
பிற்போக்கு சித்தாந்தங்களை வைத்து பரந்துபட்ட மக்களை இனிமேலும் ஈர்க்க முடியாது என்கிற அரசியல் ஓட்டாண்டித்தனம் தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு ஏற்படும்போது, பாமர மக்களின், குறிப்பாக உதிரித் தொழிலாளர்கள், ஓட்டாண்டிகளான கிராமப்புற ஏழைகளின் அன்றாடத் தேவைகள், விருப்பங்கள், சுவைகளுக்கு ஏற்ப தமது கொள்கைகளை வகுத்துக் கொண்டு அரசியல் நடத்துவதே கவர்ச்சிவாதமாகும்.
சோசலிசம், கம்யூனிசம் பற்றிய பாமர மக்களின் மிகமிக மோசமான கருத்துகளுக்கு ஏற்ப கவர்ச்சிவாத நடவடிக்கைகளை மேற்கொள்வது, கவர்ச்சிவாத ஒளிவெள்ளத்தில் மக்களின் கண்களைக் குருடாக்குவது, பாசிச, குரூர, கோமாளித்தனமான ஆட்சியாக இருந்தாலும் சத்துணவு, சைக்கிள், மிக்சி, கிரைண்டர், சேலை, தண்ணீர் குடம் முதலான இலவசத் திட்டங்களால் நல்லாட்சி நடப்பதாக பிரமையை உருவாக்குவது, போராடும் மக்களை ஈவிரக்கமின்றி ஒடுக்குவது என்பதே கவர்ச்சிவாத அரசியலாகும்.
நிலவுகின்ற அரசியல் கட்டமைப்புக்குள் தங்களது கொள்கைகளை நிறைவேற்ற முடியாமல் அம்பலப்பட்டு போய் பிழைப்புவாதத்தில் வீழ்ந்துவிட்ட அரசியல் கட்சிகள், கொள்கை − கோட்பாடுகள் என்ற ‘சுமைகளை’யெல்லாம் தூக்கியெறிந்து விட்டனர். பிற கட்சிகளிலிருந்து தங்களை தனித்துக் காட்டிக் கொள்ளவதற்கான ‘‘அடையாள அட்டை’’யாகவே கொள்கைகளை வைத்துள்ளனர். இந்த நிலையில் மக்கள் ஆதரவைப் பெற்று தொடர்ந்து தங்கள் பிழைப்புவாதத்தை நடத்த அவர்கள் தேர்ந்தெடுத்த அஸ்திரம்தான் ‘‘கவர்ச்சிவாதம்’’, இதையே ஒரு ’அரசியலாக’ (தேர்தல் அரசியல்) செய்வதுதான் ‘‘கவர்ச்சிவாத அரசியல்’’. சுருக்கமாக சொன்னால் பிழைப்புவாதம் என்னும் பித்தளை நாணயத்தை மினுமினுக்கச் செய்யும் தங்கமுலாம்தான் ‘‘கவர்ச்சிவாத அரசியல்’’.
தங்கள் அரசியல் கொள்கைகளுக்கு பதிலாக தனிநபரை முன்னிறுத்தி ‘புரட்சித் தலைவர்களையும் தலைவிகளையும் தளபதிகளையும்’ உருவாக்குவது; ‘தலைவர்’ புகழ்பாடுவதையே கட்சித் தொண்டர்களின் ’கொள்கைப் விளக்கப் பிரச்சாரமா’க மாற்றுவது; விரிவாகவும் வீச்சாகவும் ஊடகங்களின் மூலம் துதிப் பிரச்சாரங்களை மேற்கொள்வது போன்றவை இக்கவர்ச்சிவாத அரசியலின் முக்கியமான கூறுகளாகும்.
இப்படி கட்டியமைக்கப்படும் தலைவர்களின் இமேஜை ஒவ்வொரு பகுதிக்கும் கொண்டுசேர்ப்பதற்காகவே தோன்றும் குட்டித் தலைவர்கள்தான் ‘‘ரத்தத்தின் ரத்தங்கள்’’, ‘‘உடன்பிறப்புகள்’’ ஆகிய கட்சிகளின் தூண்கள். இக்கவர்ச்சிவாத அரசியலின் மூலம்தான் உழைக்கும் மக்களின் போராட்டங்களையும் புரட்சிகர அமைப்புகளையும் ஒடுக்கி தமிழகத்தில் போலீசு ராஜ்ஜியத்தை நிறுவிய பாசிஸ்ட்டுகளான எம்.ஜி.ஆர். ‘‘பொன்மனச் செம்மலானதும்’’ ஜெயா ‘‘இதய தெய்வம் அம்மா’’−வாக ஆனதும் நடந்தது.
பணம் சம்பாதிப்பதற்கான ஒரு தொழிலாகக் கருதி இயங்கும், தரகு வேலை செய்யும் அரசியல் அமைப்புகளேயே பிழைப்புவாத அமைப்புகள் என்கிறோம். மேல்மட்டத்திலிருந்து கீழ்மட்டம் வரை பிழைப்புவாதத்தையே தொழிலாகக் கொண்ட கட்சி அமைப்புகள், தரகு வேலையை ஒரு தொழிலாக, அதற்கே உரிய விதிமுறைகளுடன் செய்வது, கட்டப் பஞ்சாயத்து செய்வது, தேர்தல் காலங்களில் ஆள் பிடிப்பது, மற்ற காலங்களில் நலத் திட்டங்களில் அதிகாரிகளுடன் சேர்ந்து கூட்டுக் கொள்ளையடிப்பது என்கிற அமைப்பு முறையைக் கொண்டுள்ளதாக பிழைப்புவாதம் வேரூன்றியுள்ளது.
தேர்தல் நேரத்தில் ஓட்டுக்கு கொடுக்கப்படும் பணம், ஆண்களுக்கு விநியோகிக்கப்படும் குவாட்டர் – கோழி பிரியாணி, இல்லத்தரசிகளுக்கு வீடு தேடி வரும் குத்துவிளக்கு, புடவைகள் உள்ளிட்ட ‘அன்பளிப்புகள்’ மற்றும் பல்வேறுபட்ட மக்கள் பிரிவுகளையும், குறிப்பாக, பெரும்பான்மையாக உள்ள அடித்தட்டு மக்களைக் கவர்வதற்காக அறிவிக்கப்படும் ‘கலைஞர்’ தொலைக்காட்சிப் பெட்டி, மிதிவண்டி, அம்மா மிக்ஸி−கிரைண்டர், லேப்டாப், ஆடு−மாடு திட்டம், பொங்கல் பரிசு போன்ற அற்பமான இலவசக் (விலையில்லா) கவர்ச்சித் திட்டங்கள் எல்லாம் பிழைப்புவாதிகளின் கவர்ச்சிவாத அரசியலில் தோன்றிய கலாச்சாரங்கள்தான்.
கார்ப்பரேட் சூறையாடலுக்கு அழைப்பு : “முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு” – விழா.
இத்திட்டங்கள் எதுவும் மக்களுடைய வாழ்வாதாரத்தில் எந்த முன்னேற்றத்தையும் கொண்டுவந்ததில்லை. மாறாக, இத்திட்டங்களை முன்னிறுத்தி ‘‘பொற்கால ஆட்சி’’ நடப்பதாக பிரச்சாரங்களை செய்துகொண்டு மறைமுகமாக ஆளும் வர்க்கத்திடமும் அதிகார வர்க்கத்திடமும் கூட்டுவைத்துக் கொள்ளையடிப்பதற்குத்தான் இவை துணை புரிந்திருக்கின்றன.
இவற்றிற்கெல்லாம் தி.மு.க. எந்த வகையிலும் விதிவிலக்கல்ல. சொல்லப்போனால், தமிழகத்திலேயே இக்கவர்ச்சிவாத அரசியலைத் தோற்றுவித்த பெருமை கருணாநிதிக்குத்தான் உண்டு. ஆனால், அதை சிறிதும் ’கொள்கைக் கலப்பட’மில்லாமல் தூய்மையாக வளர்த்தெடுத்த பெருமை எம்.ஜி.ஆருக்கும் ஜெயாவுக்கும் உண்டு. இவர்களுக்கு பின்னர் வந்த மு.க.ஸ்டாலினோ கவர்ச்சிவாத அரசியலையே கார்ப்பரேட் பாணியில் திறம்பட மேற்கொள்கிறார்.
கார்ப்பரேட் பாணி கவர்ச்சிவாத அரசியலின் தோற்றம்
நம் நாட்டில் ‘‘கவர்ச்சிவாத அரசியல்’’ என்பது இன்று நவீன தொழில் நுட்பங்களுடன் இணைந்து வீரியமான வடிவத்தை எடுத்துள்ளது. 1990−களில் தகவல் − தொழில்நுட்ப புரட்சி தோற்றுவித்த இணைய வசதியின் நீட்சியாக டிவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்−அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் ஆகியன உலக மக்களிடையே பெருமளவில் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இதனோடு ‘‘தரவுப் பகுப்பாய்வு’’ (data analysis) எனும் தொழில்நுட்பமும் வளர்ந்துள்ளது. நமது சமூக ஊடக செயல்பாடுகளையும் இணைய உலாவலையும் தரவுகளாக (datas) சேகரித்து வைத்து, அதிலிருந்து நமது சொந்த விருப்பு−வெறுப்புகள், எண்ணங்கள் போன்றவைகளையும் கூட அறிந்துகொள்ள முடியும் என்ற நிலைக்கு இது இட்டுச் சென்றுள்ளது.
இதே காலத்தில் இத்தகவல் பகுப்பாய்வைப் பயன்படுத்தி மக்களின் தேவைகளையும் அரசியல் விருப்பங்களையும் தெரிந்துகொண்டு அதற்கேற்ப நேர்த்தியான வியூகங்களையும் கொள்கைகளையும் அரசியல் கட்சிகளுக்கு வகுத்துக் கொடுப்பதற்கென்றே தேர்தல் வியூக நிறுவனங்கள் பல தோன்றின. முதன் முதலில் இத்தகைய தேர்தல் வியூக நிறுவனங்கள் தோன்றியதும் தேர்தல் வெற்றிகளில் தாக்கம் செலுத்தியதும் அமெரிக்காவில்தான். படிப்படியாக இந்த முறை ஐரோப்பிய நாடுகளிலும் மற்ற நாடுகளிலும் அறிமுகத்துக்கு வந்தது.
இதேபோல, இந்தியாவில் முதன்முதலில் தோன்றிய நிறுவனம்தான் நமக்கெல்லாம் அறிமுகமான பிரஷாந்த் கிஷோரின் ஐ−பேக் (i−pac) நிறுவனம். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் இந்து மதவெறி பாசிஸ்டான மோடியை ’வளர்ச்சியின் நாயகனாக’ உருமாற்றம் செய்து ‘‘மோடி அலையை’’ உருவாக்கியது பிரஷாந்த் கிஷோர் தலைமையிலான குழுதான். அந்த அளவிற்கு நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்திய அதன் பிரச்சார உத்திகள் இருந்தன. 2015−ல் பீகாரில் நிதிஷ் குமாருக்காகவும், 2017−இல் பஞ்சாபில் அமரீந்தர் சிங்குக்காகவும், 2019−ல் ஆந்திராவில் ஜெகன்மோகன், மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரேவுக்காகவும் தேர்தல் வியூகங்கள் வகுத்துக் கொடுத்து வெற்றியடைச் செய்தது ஐ−பேக் நிறுவனம்.
மு.க.ஸ்டாலினின் கார்ப்பரேட் பாணி கவர்ச்சிவாத அரசியல்
நடைபெற்று முடிந்த 2021 சட்டமன்றத் தேர்தல்களில் தமிழகத்தில் தி.மு.க.வுக்காகவும் மே.வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசுக்காகவும் ஐ−பேக் நிறுவனம் வியூகங்களை வகுத்துக் கொடுத்துள்ளது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சிறந்த தலைவராக தன்னை முன்னிறுத்திக் கொள்வதற்கும் பெரும்பான்மை இடங்களில் வென்றதற்கும் தமிழகத்தின் பா.ஜ.க. எதிர்ப்பு அலையோடு ஐ−பேக் நிறுவனத்திற்கும் குறிப்பிட்ட பங்கு உள்ளது. அவர்கள் வகுத்துக் கொடுத்த உத்திகள் தமிழக மக்களிடையே மிகப்பெரிய கவனத்தை ஈர்க்கக்கூடியதாக இருந்தன.
ஐ−பேக் நிறுவனம் தி.மு.க.விற்கு செய்த சிறப்பு என்னவென்றால், தமிழகத்தின் அரசியல் சூழலுக்கு பொருத்தமாக தி.மு.க.வின் தேர்தல் பிரச்சார உத்திகளை வடிவமைத்துக் கொடுத்ததுதான். தமிழகத்தில் உள்ள பல்வேறு பிரிவு மக்களின் தேவைகள், விருப்பங்கள் மற்றும் அவர்களின் அரசியல் கருத்துகளை தரவுப் பகுப்பாய்வு (data analysis) செய்து மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டதுதான் தி.மு.க.வின் பிரச்சாரங்களும் தேர்தல் அறிக்கையும்.
தொடர்ச்சியாக மக்கள் விரோத காவி− கார்ப்பரேட் பாசிசத் திட்டங்களை அமல்படுத்திக் கொண்டிருக்கும் பா.ஜ.க.வின் மீதும், அதற்கு அடிமைச் சேவகம் புரிந்த அ.தி.மு.க.வின் 10 ஆண்டுகால ஆட்சியின் மீதும் தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ள வெறுப்பையும் ஆத்திரத்தையும் பயன்படுத்திக் கொள்ளும் வண்ணமும், பா.ஜ.க.−அ.தி.மு.க. கூட்டணிக்கு எதிராகவும் மாற்றாகவும் விளங்குவது தி.மு.க.வும் மு.க.ஸ்டாலினும்தான் என்றும் வீரியமான கார்ப்பரேட் பாணி பிரச்சாரங்களை மேற்கொண்டது தி.மு.க.
மு.க.ஸ்டாலின் தனது உரைகளிலெல்லாம் நீட், புதிய கல்விக் கொள்கை, எட்டுவழிச்சாலை, ஹைட்ரோகார்பன், பொள்ளாட்சி பாலியல் வன்கொடுமை, ஸ்டெர்லைட் படுகொலை, ஏழுபேர் விடுதலை போன்ற பிரச்சனைகளைத் தவறாமல் பேசியது, இணைய வழியில் ‘‘ஆதிக்கவாதிகளும் வேண்டாம், அடிமைகளும் வேண்டாம்’’ என்ற பெயரில் கொடுக்கப்பட்ட விளம்பரங்கள், பாசிச ஹிட்லராக மோடியும் அவரை வீழ்த்தும் ஜோசப் ஸ்டாலினாக மு.க.ஸ்டாலினும் இருப்பது போன்ற கருத்துப் படங்கள் எல்லாம் மக்கள் மனவோட்டத்திற்கேற்ப தயாரிக்கப்பட்ட விளம்பரங்கள்.
மேலும் ‘‘அ.தி.மு.க.வை நிராகரிப்போம்’’ என்ற முழக்கத்தை முன்வைத்து கிராமசபைகள் தோறும் மக்கள் கூட்டங்களை நடத்தியது; அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் குற்றப் பத்திரிக்கையை தயாரித்து கவர்னரிடம் வழங்கியது; ‘‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’’ என்ற பெயரில் தமிழகத்தின் மூலைமுடுக்குகள் எங்கும் பொதுக்கூட்டங்களை நடத்தியது; அதில் ஸ்டாலினது பேச்சுக்களை மக்களிடம் திரையிட்டுக் காட்டியது − போன்றவைகளெல்லாம் கார்ப்பரேட் பாணியில் மேற்கொள்ளப்பட்ட தேர்தல் பிரச்சாரங்களாகும்.
2014−ல் மோடி பிரதமர் வேட்பாளராக நின்றபோது தேநீர் கடையில் தேநீர் குடித்துக்கொண்டே மக்களுடன் உரையாடுவது போன்று நடத்திய நிகழ்ச்சியான ‘‘சாய் பே சர்ச்சா’’ என்ற நிகழ்ச்சி; 2017−இல் பஞ்சாபில் அம்ரீந்தர் சிங் முதல்வர் வேட்பாளராக நின்றபோது காஃபி குடித்துக் கொண்டே மாணவர்களுடன் அரசியல் உரையாடுவது போல அமைக்கப்பட்ட ‘‘காஃபி வித் கேப்டன்’’ என்ற நிகழ்ச்சி; 2019−ல் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வர் வேட்பாளராக நின்றபோது அவர் மேற்கொண்ட மாநிலத்தில் 3,648 கிலோமீட்டர் பயணம் செய்து 2 கோடி மக்களை சந்தித்த ‘‘பாத யாத்திரை’’ என்ற நிகழ்ச்சி − போன்றவைகளெல்லாம் தேர்தல் வியூக நிறுவனங்களால் வகுக்கத்து கொடுக்கப்பட்ட கார்ப்பரேட் பாணி பிரச்சாரங்களே.
‘‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’’ என்ற பெயரில் ஒவ்வொரு தொகுதியிலுமுள்ள மக்களின் கோரிக்கைகளையும் சேகரித்து, ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் நிறைவேற்றுவதாக தி.மு.க. கொடுத்த வாக்குறுதியெல்லாம் புத்தம் புதிய விஷயங்கள் அல்ல; அச்சு பிசகாமால் 2017 பஞ்சாப் தேர்தலில் ‘‘ஹல்கே விச் கேப்டன்’’ (சட்டமன்றத்தில் கேப்டன்) என்ற பெயரில் மேற்கொண்ட பிரச்சார வடிவம் தான். இன்னும் கூட பல சான்றுகளை இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
விரிவான மக்கள் பகுதியை தன்னை நோக்கி ஈர்ப்பதற்காகவும் முன்னிறுத்தப்படும் வேட்பாளரின் மீது ஒரு கவர்ச்சியைத் தோற்றுவிப்பதற்காகவும் தேர்தல் வியூக வகுப்பாளர்களால் இதுபோன்ற நிகழ்ச்சிகள் பரிந்துரைக்கப்படுகின்றன. 68 வயதான மு.க.ஸ்டாலினை வயதானாலும் இளமை குன்றா நாயகன் போல முடியையும் முகத்தையும் அழகுபடுத்தியதற்கும் அதுதான் காரணம்.
எதிர்ப்புகளை நீர்த்துப்போகச் செய்து நிறுவனமயமாக்க முயற்சிக்கும் தி.மு.க :
தேர்தலுக்கு பின்னர், தான் உருவாக்கி வைத்துள்ள கவர்ச்சியான பிம்பங்கள் உடைந்துவிடாமல் மிகவும் கவனமாக தி.மு.க. பராமரிக்கிறது. தன் மீதான எதிர்கருத்துக்கள் அனைத்தையும் மிகவும் கூர்ந்து கவனித்து வருகிறது; அதை சரிகட்ட முனைகிறது. சமூகத்திலுள்ள பல்வேறு பிரிவு மக்களையும் தனது ஆதரவு சக்திகளாக மாற்றத் தொடர்ந்து முனைந்து வருகிறது. இந்த விசயங்களையெல்லாம் செய்வதற்காக, தனக்கு பின்னணியில் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்பப் பிரிவையே வைத்துள்ளது.
இந்துசமய அறநிலையத்துறை மூலம் கோயில் நிலங்களை மீட்பது என்ற நடவடிக்கையை மிகப் பெரிய விளம்பரத்தோடு செய்து வருகிறது தி.மு.க., பழைய − பராமரிப்பில்லாத கோயில்களைப் புனரமைப்பதற்காக பலகோடி ரூபாய் நிதிகளை ஒதுக்கியிருக்கிறது. சரிவர பூசைகள் நடக்காத கோயில்களில் ஆறுகால பூசைகள் நடப்பதற்கு ஏற்பாடுகளைச் செய்கிறது.
சமீபத்தில் அனைத்துக் கோயில்களிலும் பக்தர்களுக்கு ‘‘இலவச மொட்டை’’ திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறது. சுருக்கமாக சொன்னால், தமிழகத்தில் ஒரு நவீன பக்தி இயக்கத்தை ‘‘பெரியாரின் வாரிசுகள்’’ என்று சொல்லிக்கொள்ளும் தி.மு.க. தொடங்கி வைத்திருக்கிறது, இவையெல்லாம் எதற்காக? தி.மு.க.வை இந்து விரோத சக்தியாக காட்டும் ஆர்.எஸ்.எஸ். − பா.ஜ.க. கும்பலுக்கு தானும் ‘‘இந்துக்களின் காவலன்’’தான் என்று காட்டும் வேலையே தவிர வேறல்ல.
இப்பேர்பட்ட தி.மு.க.தான் ‘‘சமூகநீதி, திராவிட பாரம்பரியம்’’ கொண்ட கட்சி என்று தன்னை விளம்பரப்படுத்திக் கொள்கிறது. இந்த அடிப்படையில் தன்னை ஆதரித்த சக்திகளின் நம்பிக்கையைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதற்காக சில விசயங்களை செய்துவருகிறது. அதில் ஒன்றாக, பெரியாரின் பிறந்த நாளை ‘‘சமூகநீதி நாளா’’க அறிவித்திருக்கிறது. மேலும் வ.உ.சி., கட்டபொம்மன், அயோத்திதாசர் ஆகியோருக்கு சிலை வைப்பது உள்ளிட்ட திட்டங்களையும் அறிவித்துள்ளது,
இந்தத் தலைவர்களை முன்னிறுத்தி சாதி அரசியல் செய்யும் பிழைப்புவாத சாதிச் சங்கங்களையும் அதன் கீழுள்ள மக்களையும் அணிதிரட்டும் முயற்சியாகவும் கூட இதை பார்க்க வேண்டியிருக்கிறது. ஏனெனில், தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, அமைச்சரவையில் ‘‘எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடம் கொடுத்து கவுரவித்த முதல்வருக்கு நன்றி’’ என்று பல்வேறு சாதிச் சங்கங்கள் சுவரொட்டி ஒட்டியதும், தி.மு.க.வின் வெற்றியைத் தொடர்ந்து சாதிச் சங்கங்கள் நடத்தும் பாராட்டு விழாக்களில் தி.மு.க.வினர் வெளிப்படையாக கலந்துகொண்டு தங்கள் சாதியை முன்னிறுத்திக் கொண்டதெல்லாம் நாம் கண்ட காட்சிகள்தானே!
எதிர்கட்சியாக இருந்தபோது வன்னியர்களுக்கு கொடுத்த 10 சதவிகித இடஒதுக்கீட்டினை சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தாமல் அறிவித்தது தவறு என கருத்து தெரிவித்ததுவிட்டு, ஆட்சியைப் பிடித்த பின்பு 10 சதவிகித இடஒதுக்கீட்டை அனுமதித்தது தி.மு.க. மேலும் 1987−ல் வன்னியர்கள் தங்களுக்கு 20 சதவிகித இடஒதுக்கீடு கோரிய போராட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட 21 பேருக்கு மணிமண்டபமும் அவர்கள் குடும்பத்திற்கு அரசு வேலையும் கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளது. இதுபோன்ற அறிவிப்புகளின் மூலம் அந்த பகுதியிலுள்ள ஆதிக்க சாதிகளிடம் தன்னுடைய ஆதரவு தளத்தை தி.மு.க. விரிவுபடுத்த முயற்சிக்கிறது. வாய்கிழியப் பேசும் ‘சமூகநீதி அரசியலின்’ யோக்கியதை இதுதான்.
அடிப்படைக் கோரிக்கையை மூடிமறைக்கும் கவர்ச்சிவாத அரசியல் :
அ.இ.அ.தி.மு.க.வும் தற்போது தி.மு.க.வும் மாறி மாறி ஆட்சி செய்த கடந்த 38 வருடங்களில் எந்த அடிப்படை ஜனநாயக உரிமைகளோ மிக மிக அடிப்படையான சமூக வசதிகளோ இன்றி முகாம்களில் வாழும் ஆயிரக்கணக்கான ஈழத் தமிழ்க் குடும்பங்களின் வாழ்க்கை அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டின் 28 மாவட்டங்களில் 115 முகாம்களில் 70,000 க்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 34,135 இலங்கைத் தமிழ் அகதிகள் தமிழ்நாட்டில் முகாமில் இல்லாத அகதிகளாகத் தங்கியுள்ளனர்.
சாதிய அரசியலும் கவர்ச்சிவாத அரசியலும் கலந்த கலவை தி.மு.க.
சில அகதிகள், விடுதலைப் புலிகளுடனான உறவு தொடர்பாக இந்திய அரசாங்கத்தால் சந்தேகிக்கப்பட்டு, செங்கல்பட்டு, பூந்தமல்லி, திருச்சி உட்பட பல இடங்களில் தனி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த ‘சிறப்பு முகாம்கள்’ உண்மையில், சிறைச்சாலைகளைப் போன்றது. அவர்களுக்கு வெளியில் சென்றுவர உரிமை இல்லை. இந்த முகாம்கள் மாவட்ட நகரங்களில் இருந்து வெகு தொலைவில் உள்ள கிராமப்புறங்களில் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் போலீசு மற்றும் தமிழ்நாடு கியூ பிரிவு உளவு அமைப்பால் கண்காணிக்கப்படுகிறது. முகாமில் உள்ள உறவினர்களைப் பார்க்க வருவோர் போலீசு மற்றும் உளவுத்துறையால் விசாரணைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.
2009−ல் இலங்கை அகதிகளால் தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டுமென மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் மேல்விசாரணை 2021 ஆகஸ்டில் நடக்கையில், மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம், இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த அகதிகள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என வகைப்படுத்தியது. இது, இலங்கை அகதிகள் மத்தியில் இருந்துவந்த நீண்டகால எதிர்பார்ப்பை தகர்த்ததோடு, தொடர்ச்சியான போராட்டங்களையும் தூண்டிவிட்டுள்ளது.
திருச்சி சிறப்பு அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 80 இலங்கைத் தமிழர்கள் தங்களை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்களை விடுவிக்கவும், தங்கள் குடும்பத்துடன் வாழவும் அனுமதி கோரி பல்வேறு உண்ணாவிரதப் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். கடந்த மாதம், ‘சிறப்பு முகாமில்’ உண்ணாவிரதம் தொடர்பாக 20 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், தூக்க மாத்திரைகளை உட்கொண்ட, தூக்கில் தொங்க அல்லது வயிற்றை கிழிக்க முயன்ற 16 பேரின் கூட்டு தற்கொலை முயற்சி தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில், ‘‘இலங்கைத் தமிழர் அகதிகள் முகாம்’’ என்பதை இனி ‘‘இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்’’ என அழைக்க வேண்டும் என ஒரு அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள், அதிகாரிகள், ஈழத்தமிழின ஆதரவு அமைப்புகள் ஆகியோரின் பாராட்டுக்களையும் பெற்றது. ‘‘ஈழத் தமிழர் படுகொலைக்கு காரணம் தி.மு.க.’’, ‘‘தமிழினத்தின் துரோகி தி.மு.க.’’ என்று சீமான் உள்ளிட்ட தமிழ்த் தேசியவாதிகள் தி.மு.க. மீது தொடுக்கும் உணர்ச்சிகர போர்களை தவிடுபொடியாக்கி அவர்கள் வாயை அடைப்பதற்காகவே இலங்கைத் தமிழர்களின் நலத்திட்டங்களுக்காக 317 கோடியே 40 லட்சம் ரூபாய்களை ஒதுக்கியிருக்கிறது தி.மு.க. அரசு. ஆனால், எந்த இடத்திலும் இலங்கைத் தமிழர்களின் அடிப்படை கோரிக்கையான இரட்டை வாக்குரிமை குறித்து வாய்திறக்கவில்லை!
மன்னர்கள் வாழ்க, பொற்கிழிகள் வாழ்க, பொற்கால ஆட்சி வாழ்க !
தமிழகத்தில் ஒரு ‘‘பொற்காலத்தை’’ உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ள ‘மன்னர்’ மு.க.ஸ்டாலின், தன் அரசை புகழ்ந்து பாடி பரிசில் பெறும் புலவர்களையும் உருவாக்கி வருகிறார். சாகித்ய அகாடாமி, ஞானபீட விருது மற்றும் மத்திய − மாநில அரசுகளால் மிக உயர்ந்த விருதுகள் பெரும் தமிழ் அறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு தமிழக அரசு சார்பில், அவர்கள் விரும்பும் இடத்தில் ‘‘கனவு இல்லம்’’ கட்டித் தருதல்; தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியோருக்கு ஆண்டுக்கு மூன்று பேருக்கு ஐந்து இலட்ச ரூபாய் ரொக்கப் பணத்துடன் கூடிய ‘‘இலக்கிய மாமணி’’ விருது; தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் வகையில், ‘‘தகைசால் தமிழர்’’ என்ற புதிய விருது போன்ற அடுக்கடுக்கான அறிவிப்புகளின் மூலம் பொற்கிழிகளை தி.மு.க. அரசு தயாராக வைத்துள்ளது.
தேர்தல் வியூக வகுத்துக் கொடுத்த ஐ-பேக் நிறுவனத்தின் பிரசாந்த் கிஷோருடன் (இடது) மு.க.ஸ்டாலின் மற்றும் சபரீசன்.
திரை உலகினருக்குப் பொதுவாக சலுகைகள் வழங்கியது மட்டுமல்ல, சில திரை உலக பிரபலங்களின் தனிப்பட்ட பிரச்சினைகளையும் தீர்த்துக் கொடுத்துள்ளார் மு.க.ஸ்டாலின். இதனால், விஜய்சேதுபதி, வடிவேலு, சத்தியராஜ், விஷால், பாக்கியராஜ் போன்ற திரை பிரபலங்கள் தி.மு.க. ஆட்சியையும் முதல்வர் ஸ்டாலினையும் பாராட்டி வருகின்றனர்.
சட்டமன்றத்தில் செந்தில் பாலாஜி போன்ற அமைச்சர்கள், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் முதல் தற்போதைய முதல்வர் ஸ்டாலின், உதயநிதி என ஒவ்வொருவரைப் பற்றியும் மணிக்கணக்கில் வரிசையாக வானளாவ புகழ்ந்து துதிபாடுவதை அமைதியாக ரசித்துவிட்டு, உரை முடிந்த பின்னர், ‘‘தனிப்பட்ட புகழ்ச்சிகளை செய்ய வேண்டாம்’’ என ‘பெருந்தன்மை’யாக ‘மறுத்தார்’ முதல்வர் ஸ்டாலின். கவர்ச்சிவாத துதிபாடும் அரசியலின் எடுப்பான சான்றுதான் இந்நிகழ்வுகள்.
தி.மு.க.வின் ஐ.டி. பிரிவு மற்றும் தினகரன், தமிழ் முரசு, குங்குமம் போன்ற தி.மு.க. ஆதரவு ஊடகங்கள் மட்டுமல்லாது தினமணி, தமிழ் இந்து உள்ளிட்ட பார்ப்பன பத்திரிகைகளும் தி.மு.க. அரசின் ஒவ்வொரு அறிவிப்புகளையும் புகழ்ந்து விளம்பரம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளன.
முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் பாட நூல்களில் பதிப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வரின் படங்களை அகற்றாமல் அப்படியே வினியோகிக்கலாம், இதன் மூலம் அரசு நிதி 13 கோடியை மிச்சப்படுத்தலாம் என மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின். இந்த அறிவிப்பு பெரிய அளவில் ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்பட்டது. அ.தி.மு.க.வினரைப் போல ஸ்டிக்கர் ஒட்டுவதன் மூலம் மக்களிடையே இழிசொற்களைத் தான் சம்பாதிக்க முடியும் என்பதை நன்கு உணர்ந்திருந்த தி.மு.க. ‘‘விளம்பரம் வேண்டாம்’’ என்பதையே மிகப்பெரிய விளம்பரமாக்கிவிட்டது.
அரசின் நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் அறிவித்ததைப் போல நின்றுகொண்டே கடைகளில் வேலைபார்க்கும் தொழிலாளர்களுக்கு நாற்காலி கொடுக்க வேண்டும் என்று மசோதா நிறைவேற்றி அவர்களின் ‘நெஞ்சை’த் தொட்டுவிட்டார் ஸ்டாலின். ஆனால், ஆயிரக்கணக்கான தூய்மைப் பணியாளர்கள் தங்களது வேலைகள் பறிக்கப்பட்டதையும் காண்டிராக்ட் மயமாக்கப்பட்டதையும் கண்டித்துப் போராடும்போது, அதைக் கண்டுகொள்ள மறுக்கிறது, போலீசை வைத்து மிரட்டுகிறது, தி.மு.க. அரசு.
எச்சரிக்கை!
நீட், வேளாண் திருத்தச் சட்டங்கள், குடியுரிமைத் திருத்தச் சட்டம் போன்றவைகளுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது தி.மு.க. அரசு. இந்த காகித நடவடிக்கைகள் தான் கவர்ச்சி அரசியலின் உச்சபட்சவரம்பு. இதற்கு மேல் திமுக−வால் செல்ல இயலாது. இக்காகிதங்கள் காவி −கார்ப்பரேட் பாசிசத் தாக்குதல்களிலிருந்து நம்மை எந்தவகையிலும் காப்பாற்றப் போவதில்லை.
’சட்டப்போராட்டங்களின்’ மூலம் நீட் தேர்வை தடுக்க முடியவில்லை என்ற அனுபவம் இருந்தபோதும், ‘‘அடுத்த ஆண்டிற்குள் சாதித்துக் காட்டுவோம்’’, ‘‘சட்டப் போராட்டம் தொடரும்’’ என்று தோற்றுப்போன பாதையையே மாற்றாக காட்டுகிறது தி.மு.க. அதைத் தாண்டி மோடி அரசை நிர்பந்திக்கும் வகையிலான எந்த களப் போராட்டங்களையும் தி.மு.க. மேற்கொள்ளத் தயாரில்லை. உண்மையில், அத்தகைய போராட்டங்களை தடுக்கும் வேலையைத்தான் தி.மு.க. செய்து வருகிறது.
தி.மு.க. அரசின் செயல்பாடுகளை இவ்வாறு விமர்சனப் பூர்வமாக பார்க்கும் போதுதான், நீட், புதிய கல்விக் கொள்கை, ஏழு தமிழர் விடுதலை, ஜி.எஸ்.டி. வரி நிலுவை, பெட்ரோல் − டீசல் − காஸ் விலையுயர்வு போன்ற பிரச்சினைகளுக்காகவும், மோடி அரசின் காவி − கார்ப்பரேட் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராகவும் தி.மு.க.வின் வெற்று சவடால் ‘சட்டப் போராட்டங்களை’ நம்பி இருக்காமல் மக்கள்திரள் போராட்டங்களின் மூலம் வென்றுகாட்டும் துணிவு பிறக்கும்.
கவர்ச்சிவாத அரசியலுக்கு ஒரு எல்லை உண்டு. மக்களின் உண்மையான பிரச்சினைகளைத் தீர்க்காமல் மேற்கொள்ளப்படும் மேற்கண்ட கவர்ச்சிவாத நடவடிக்கைகள் விரைவில் அம்பலப்பட்டு போவதை தி.மு.க.வால் தடுக்க இயலாது. இப்போது தி.மு.க.விற்கு ஆதரவு கொடுத்து வருகின்ற கூட்டணி கட்சிகளும், பார்ப்பன ஊடகங்களும் ஒருசேர தி.மு.க.விற்கு எதிராகத் திரும்பி, ‘குடும்ப அரசியல்’, ‘ஊழல் ஆட்சி’, ‘துதிபாடிகளின் கட்சி’ என்று தூற்றும் நாள் வெகுவிரைவில் வந்துசேரும்.
அப்போது, மோடி அரசின் காவி − கார்ப்பரேட் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டங்களையும் தமிழக மக்களின் உரிமைகளுக்கான போராட்டங்களையும் 2021−இல் தி.மு.க. ஆட்சி அமைவதற்கு முன்பு நாம் விட்டுச் சென்ற இடத்தில் இருந்து மீண்டும் தொடங்க வேண்டியிருக்கும். அதுமட்டுமல்ல, பாசிச பா.ஜ.க. கூட்டணி ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ளும் காரிருளும் சூழ்ந்திருக்கும். எச்சரிக்கை!