Wednesday, June 25, 2025
முகப்பு பதிவு பக்கம் 220

நூல் அறிமுகம் : சாம்பவான் ஓடை சிவராமன் || சுபாஷ் சந்திரபோஸ் || காமராஜ்

மதர்ம லட்சியத்திற்காக தன் வாழ்க்கையை அர்பணித்த ஒரு போராட்ட வீரனின் வாழ்க்கைப் பயணம் ஒரு திரைப்படம் பார்ப்பது போல் சிறப்பாக இந்நூலில் விவரித்து சொல்லப்பட்டிருக்கிறது.

போர்க் குணமிக்க போராட்ட நடைமுறை, வீரசாகசங்கள், உயிர்தியாகம் ஆகியவற்றின் ஊடாக மாமனிதர்கள் மக்களின் மனங்களில் நீங்காத நினைவுகளாக நிலைபெற்று விடுகின்றனர். போராட்ட வரலாற்றில் தனிமுத்திரை பதித்த போராளிகளில் ஒருவர்தான் சாம்பவான் ஓடை சிவராமன்.

மாவீரன் சிவராமன் , 1925-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி சாம்பவான் ஓடை கிராமத்தில், திருமேனி – சிவபாக்கியத்தம்மாள் தம்பதியருக்குப் பிறந்தார்.

“என்னா சிவராமா ஓரேடியாக யோசனையில் முழுகிட்ட..”

“ஓ…….ஒன்னுமில்லே அண்ணே; நாம சேரி மக்களை எவ்வளவு மிருகத்தனமாக கொ….. கொடுமைப்படுத்துகிறோம்”

“தீண்டாமைங்கிறத வச்சுக்கிட்டு நாமபடுத்துறது ஒருபக்கம்……… அடிமைங்கிறத வச்சுக்கிட்டு பண்ணையாருங்க படுத்துறது ஒருபக்கம். உலகத்திலே, நம்ம நாட்டிலே சேரி மக்கள் படுகின்ற துன்பம் மாதிரி வேறுயாரும் பட்டு இருப்பாங்களாங்கிறது சந்தேகமாக இருக்கு”

17 வயதில் சிவராமனுக்கு ஏற்பட்ட சமத்துவ உணர்வின் வெளிப்பாடே இந்த உரையாடல். தஞ்சை தரணியில் கோலோச்சிய பண்ணை பயங்கரத்திற்கு முடிவுகட்ட புயற்பறவையாய் தோழர் சீனிவாசராவ் வந்தார். அவரது போர்க்குரல் கீழ் தஞ்சை முழுவதும் எதிரொலித்தது.

“உங்களை தாக்கினால் திரும்பி தாக்குங்கள் – சங்கமாய் ஒன்றுசேர் – சளைக்காமல் போராடு!” என்ற மந்திர சொற்கள், பண்ணை அடிமைகளின் வாழ்வில் புதிய வெளிச்சத்தை காட்டியது.

“இன்னைக்கு அடிவிழாமல் இருந்தால் விடிஞ்ச பொழுது நல்ல பொழுது” என்று எண்ணிக் கொள்வார்களே தவிர எதிர்த்து நிற்கவேண்டும் என்ற நினைப்பு பண்ணை அடிமைகளின் கனவிலும் வராது. தோழர் சீனிவாசராவ் ஆற்றிய உரைகள் பண்ணை அடிமைகளின் ரத்த நாளங்களின் புது ரத்தம் பாய்ச்சியது. அடங்கி கிடந்தவர்கள் அமைப்பாக திரளத் துவங்கினர்.

படிக்க :
♦ இந்தியா 2020 : வல்லரசு கனவும் – தொடரும் துயரமும்
♦ கிரிமினல்களின் கூடாரமாகும் சங்கபரிவாரம் !

1942-ல் பொது உடைமை இயக்கத்தின் மீதான தடையை காலனிய ஆட்சியாளர்கள் நீக்கினார்கள். சீனிவாசராவ் – ஏ.கே.கோபாலன் – நெடுங்காடி ராமசந்திரன் போன்ற தலைவர்கள், கிராமங்கள் தோறும் அரசியல் பயிற்சி வகுப்புகளை நடத்தி, எண்ணற்ற செயல் வீரர்களை உருவாக்கினார்கள்.

தலைமறைவாய் கட்சி பணியாற்றுவது மிகவும் கடினமான பணியாகும். பண்ணையார்களின் கையாட்களாக செயல்பட்ட கருங்காலிகள், காவல்துறைக்கு தகவல் சொல்லும் ஒற்றர்கள், போலீசு உளவுப்பிரிவு என மக்கள் விரோதிகளின் கண்களில் மண்ணை தூவிவிட்டு களப்பணி ஆற்ற வேண்டும்.

டீக்கடை – தையற்கடை – சலவைக்கடை – பெட்டிக்கடை போன்ற நம்பகமான ஆதரவாளர்கள் உள்ள இடங்கள், கட்சியின் தகவல் தொடர்பு மையங்களாக செயல்பட்டன. இத்தகைய தலைமறைவு வாழ்க்கை பற்றிய விவரங்கள் இப்புதினத்தில் இடம் பெற்றுள்ளன.

ஊரில் யாராவது ஒருவர் இறந்து விட்டால் ‘வெட்டிமை’ தொழில் செய்யும் சேரி மக்கள் படும் இன்னல்கள் சொல்லிமாளாது. குடிவேலை செய்வது, மாடு செத்தால் தூக்குவது – இறப்பு செய்தியை சொல்வது, தப்பு கொட்டுவது, பிணம் எரிப்பது என எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும்.

பண்ணையார்கள் – ஆதிக்கசாதியினர் தங்கள் மீது நடத்தும் அட்டூழியங்களை – அடக்குமுறைகளை எதிர்த்து பேசவோ, தடுத்து நிறுத்தவோ சேரி மக்கள் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது.

இறந்து போனவர் நல்லவரா – கெட்டவரா என்பதை இடுகாட்டில் பேசுவதை வைத்தே எடை போடலாம்.

“பாவி இவன் எப்பந்தொலைஞ்சு போவான்னு ஊரே எதிர்பாத்துச்சி, ஊரை அடித்து உலையில் போட்டான் – தொலைஞ்சான் – “முண்டுனா கோடாலியால போடுங்கடா”

“இந்தா மாப்புளே முண்டுறாறு நம்பள பார்த்தா இவன் வாயில நல்ல வார்த்தை வராதே. எத்தனை பெண்களை கெடுத்து இருப்பான். கண்டந் துண்டமா வெட்டுங்கடா”

“பாவம் இந்த ஆயா, மகராசி மொகத்தை பார்த்தே பசியால இருக்கான்னு கஞ்சி ஊத்தும்”

வன்கொடுமை புரிந்த ஆதிக்க சாதிவெறி கொடுங்கோலர்களை எதிர்த்து நிற்க முடியாமல் அடங்கி கிடந்த சேரிமக்கள், சாதிவெறியர்களின் பிணத்தின் மீது காட்டும் ஆற்றாமையும் வெறுப்பும் மிக நுட்பமாக இப்புதினத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எல்லா ஊர்களிலும் சேரிகள் ஊருக்கு வெளியே இருந்தன. “இரண்டு பக்கமும் பண்ணை நிலங்கள் சேரிக்கு செல்லும் உழங்கையை ஒற்றையடிப் பாதையாகவே மாற்றி இருந்தன. இரண்டு பக்கங்களிலும் மலங்கழித்து அசிங்கப்படுத்தி இருப்பார்கள்”

சிவராமனின் மனைவி இறந்தவுடன் மறுமணம் செய்து கொள்ள பெற்ற தாயும் சுற்றத்தாரும் வற்புறுத்துகிறார்கள்.  “எனக்கு புள்ளையும் வேணாம். கு………….. குட்டியும் வேணாம் எ……….. என் பேரை சேரி சொல்லும் நா…… செத்தா சேரிகளே அழும்” என்று கூறி தன் வாழ்வையே உழைக்கும் மக்களின் விடுதலைக்கு அர்ப்பணித்த தியாக உள்ளத்தை எண்ணி நம் நெஞ்சம் விம்முகிறது.

பொதுக்குளத்தில் தண்ணீர் அள்ளி குடித்ததற்காக தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த ஒரு முதியவரை ஆதிக்க சாதி இளைஞர்கள் தாக்கி விடுகின்றனர். அந்த கிழவனை அடித்த இளைஞர்களை தேடிப்பிடித்து சிவராமன் நியாயம் கேட்கிறான். தாங்கள் செய்தது நியாயம் தான், தீட்டு என்பது எங்கு உள்ளது என்று கூறிய இளைஞர்களிடம் “ஏர் உழுது, நாற்றுநட்டு, களத்து மேட்டில் நெல்லை குவிப்பவர்கள் சேரிமக்கள், அதில் நாம் தீட்டு பார்ப்பதில்லை. ஆனால் நமது ஆதிக்கத்தை நிலைநாட்ட தீட்டை பயன்படுத்தி கொள்கிறோம்.” என்றார். இளைஞர்கள் செய்தது எவ்வளவு மனிதத்தன்மை அற்ற செயல் என்பதை இளைஞர்களுக்கு புரிய வைத்தார் சிவராமன்.

சிவராமன் ஆதரவாக அவர்களின் தோளில் மீது கை வைத்தான். மூவரும் சேரிக்கு போனார்கள் கிழவனை அழைத்துக் கொண்டு அதே குளத்திற்கு போனார்கள். சேரி கிழவனை குளத்து நீரைக் குடிக்க வைத்தனர்.

“அண்ணே இனிமே ஒங்களோட சேர்ந்து சேரி மக்களுக்கு நாங்களும் பாடுபடுகிறோம்” என்று மூன்று இளைஞர்களும் சிவராமனோடு கரம் சேர்க்கின்றனர்.

சிவராமன் தன்னுடைய பொது சேவையை ஒரு கண்ணாகவும், நேர்மை – ஒழுக்கத்தை இன்னொரு கண்ணாகவும் பார்த்தான். தோழர்களும், சேரிமக்களும் சிவராமன் மீது அளவில்லாத பாசத்தை பொழிந்தார்கள்.

தனக்கு சேர வேண்டிய சொத்துக்களை விற்று ஒரு பகுதியை உடன்பிறந்த சகோதரிகளுக்கும், பாதியை சல்லிகாசு கூட தொடாமல், கட்சி செலவிற்காக பணம் முழுவதையும் மறவக்காடு கிருஷ்ணனிடம் கொடுத்து விடுகிறார்.

தோழர் எம்.வி.சுந்தரத்தின் பாதுகாப்பிற்காக வெளிநாட்டு நண்பர் ஒரு கை துப்பாக்கியை அவருக்கு கொடுத்தார். சிவராமனின் துடிப்பான செயல்பாட்டை பார்த்த தோழர் எம்.வி.சுந்தரம் அந்த கைதுப்பாக்கியை சிவராமனிடம் கொடுத்து விடுகிறார். ஆனால் எப்போதும் அதை தவறாக பயன்படுத்த வேண்டும் என்று அவர் எண்ணியதே இல்லை

படிக்க :
♦ சாதியப் படிநிலையை ஏற்றுக்கொள் : பிரக்யா சிங் முதல் சிறைச்சாலை வரை !
♦ உடுமலை சங்கர் கொலை வழக்கு தீர்ப்பு : சாதி ஆணவக் கொலைகளுக்கான அங்கீகாரம் !

நாடு விடுதலை பெற்றதாக அறிவிக்கப்பட்டும், அடக்குமுறையும், கொடுமைகளும், காவல்துறையின் காட்டுமிரான்டித்தனமும் எள்ளளவும் குறையவில்லை. நெடும்பலம் பண்ணையாரின் அட்டகாசம் உச்ச நிலையை அடைந்து சிறுகளத்தூரில் தீரத்தான், வெங்கடாசலம் ஆகிய தோழர்களின் குடிசைகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

மே 1ம் தேதி மலேயா கணபதி, வீரசேனன் வெள்ளை அரசாங்கத்தால் கொல்லப்பட்டார்கள். இரண்டு பொதுவுடமை புரட்சி தியாகிகளுக்கு அஞ்சலி கூட்டம் சிவராமன் தலைமையில் நடைபெற்றது. அதே நாளில் நெடும்பலம் பண்ணைக்கு பாடம் புகட்ட தக்க தருணத்தை எதிர்பார்த்த சிவராமன், “கிளம்புங்கள் நெடும்பலத்தை நோக்கி” என்று உணர்ச்சி மேலிட உரத்து முழங்கினான்.

ஆயிரக்கணக்கான கூலி ஏழை உழவர்கள் நெடும்பலத்தை நோக்கி அணிவகுத்தனர்.
நெடும்பலத்தை நோக்கி பண்ணைத் தொழிலாளர்கள் படை வருவது போலீசுக்கு தெரிந்துவிட்டது. கூட்டத்தின் எண்ணிக்கை கேட்டு போலீசு பிரமித்து போய் நின்றுவிட்டது.

பண்ணை மாளிகையின் முன்பகுதி அடித்து நொறுக்கப்பட்டது. நாலாயிரம் கலம் நெல்லும், பத்தாயிரம் பேர்களால் பங்கு போடப்பட்டது நாலாப்பக்கமும் கூட்டம் நெல் மூட்டைகளுடன் போய் கொண்டிருந்தது.

பண்ணை கொடுமைக்கு பாடம் புகட்டிய இந்த வீரசாகசம் சிவராமன் தலைமையில் வெற்றிகரமாக நடந்தப்பட்டது. கம்யூனிஸ்ட்களை காட்டி கொடுக்கும் கருங்காலித்தனத்தை முழுநேரப்பணியாக செய்து கொண்டிருந்த நிலப்பிரபு பாலசுப்ரமணியன் என்பவனை பழி தீர்க்க திட்டமிட்டான் சிவராமன்.

அஞ்சா நெஞ்சன் இரணியனுடன் இணைந்து அவனை தாக்க முற்படும் போது, மயிரிழையில் உயிர்தப்பி பாலசுப்ரமணியன் ஓடிவிட்டான். புரட்சிகர வீரசாகத்தை அடுத்தடுத்து அரங்கேற்றிய ஒரு பொதுவுடமை வீரனின் உணர்ச்சிமிகுந்த வரலாறு, உயிர்துடிப்போடு இப்புதினத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

ஆயிரக்கணக்கான கூலி ஏழை உழவர்கள் சிவராமனை பார்த்து தங்களிடம் இருந்த பயத்தை ஒழித்தார்கள். மனிதனாய் தலைநிமிர்ந்து வாழ கற்றுக் கொண்டார்கள்.

எலிக்கூட்டம் பூனையை பாய்ந்து தாக்கியதைப்போல் நெடும்பலம் பண்ணையை தாக்கினார்கள்.

தலித் பெண்ணை வன்புணர்ச்சி செய்யும் வெறியோடு ஆதிக்க சாதி இளைஞர் இரண்டு பேர் துரத்திக் கொண்டு வருகின்றனர். அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு திரும்பிய சிவராமன் அந்த காமூகர்களிடம் இருந்து அந்த பெண்ணை காப்பாற்றி பத்திரமாக அனுப்பி வைக்கிறார்.

சிவராமனை கைது செய்யவோ, அல்லது சுட்டுக் கொல்லவோ வேட்டை நாயைப் போல் காவல்துறை கிராமத்தின் மூலை முடுக்கெல்லாம் தேடி அலைந்தனர். தங்குமிடம் தெரிந்து காவல்துறை சுற்றி வளைக்கும் போது சிவராமன் தப்பி விட்டார். ஆனால் காலில் கண்ணாடி குத்தி காயமாகிவிட்டது.

இரணியன் மறைந்து இருக்கும் இடத்திற்கு எப்படியாவது போய்விட வேண்டும் என்று எண்ணியபடியே ஒரு தோப்பில் அயர்ந்து தூங்கிவிட்டார்.

திடுக்கிட்டு விழித்த சிவராமன் எழுந்து உட்கார்ந்தார். இரண்டு பெண்கள் சற்று தூரத்தில் பயந்தபடியே நின்றார்கள். சிவராமனை பார்த்த ஒரு பெண் “சாமி நீங்களா? காலுல என்னகட்டு” ஓடிவந்து கால்களை தூக்கி மடியில் வைத்து கொண்டாள். கால் யானைக்கால் போல் வீங்கி இருந்தது. அந்த பெண் காலில் உள்ள கட்டையை அவிழத்து, சுடுதண்ணீரில் நனைத்து துடைத்து மருந்தை வைத்து கட்டினாள்.

“நீ ?”

“நானே தான்! அந்த பாவிப் பயலுவளுக்கிட்ட இருந்து காப்பாத்துனியளே! அண்ணைக்கு நீங்க இல்லாட்டி இந்நேரம் என்னை பொதச்ச எடத்தில் பில்லு மண்டி போயிருக்கும்.”

சிவராமனுக்கு உடனே அந்த பெண்ணை அடையாளம் தெரியவில்லை. அந்த இளைஞர்களிடம் இருந்து காப்பாற்றியது பின்னர் நினைவுக்கு வந்தது.

சிவராமனால் காப்பாற்றப்பட்ட அந்த பெண் நன்றி உணர்ச்சி மேலாட தன் கணவனை அறிமுகப்படுத்தினாள். குழந்தையைக் காட்டினாள்.

“உன் குழந்தைக்கு நான் பேர் வைக்கவா?” என்றான் சிவராமன்.

“என்னா பேரு?”

“மா……மார்க்ஸ்….., லெ………லெனின் ஏதாச்சும் ஒண்ணு.”

“அதெல்லாம் எங்களுக்கு புரியாத பேரு… நாங்கபேரு வச்சுட்டோம்.”

“எ………என்ன பேரு”

“ஒங்க பேரு!”

“ஏ……..ஏம்பேரா? எங்க சொல்லுங்க பார்ப்போம்.”

“ஒங்களுக்கு நேரா சொல்லமாட்டோம்.”

“புள்ளை பேர சொல்லு கா….காதால கேக்கனும்”

“மாட்டேன்…   இந்தாச் சொல்றேன் சாமி, சிவராமன்”

“கூ…..கூப்பிடு ”

“சிவராமா”

சிவராமனுக்கு மனம் நிறைந்தது, வானத்தில் பறப்பது போல் இருந்தது. தன்னுடைய பெயரை வைத்ததற்காக அப்படி பரவசப்படவில்லை. கம்யூனிஸ்ட் கட்சிக்கும் – தனக்கும் மக்கள் மனங்களில் கிடைத்துள்ள அங்கீகாரத்தை எண்ணிப் பார்த்தான். தான் பிறந்த பயனை அடைத்து விட்டதாக எண்ணினான்.

நூற்றுக்கணக்கான போலீசு தேடுதல் வேட்டையில் கிராமங்களின் மூலை முடுக்கெல்லாம் தேடி அலைந்தனர். அந்த பகுதியில் செயல்பட்ட கம்யூனிஸ்ட்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். கை கால்களை அடித்து பல தோழர்களை ஊனமாக்கியது போலீசு.

சிவராமன் உறவினர்களை துன்புறுத்தியது நாட்டுச்சாலை என்ற இடத்தில். டீ கடையில் சிவராமனை பார்த்த மஞ்சுவேளார் என்ற கருங்காலி போலீசின் சன்மானத்திற்கு ஆசைப்பட்டு சிவராமனை காட்டிக் கொடுத்தான். 1950-ம் ஆண்டு மே 3 ந்தேதி போலீசால் சுட்டுக் கொல்லப்படுகிறார்.

“முதுகில் சுடாதே.. நெஞ்சில் சுடு..” என்று நெஞ்சை நிமிர்த்தி நின்றான் சிவராமன்.

மூன்று குண்டுகள் சிவராமனின் மார்பை துளைத்தன.

வாட்டாக்குடி இரணியன் மற்றும் ஆம்பலாப்பட்டு ஆறுமுகம் ஆகியோர் மே 5-ம்தேதி போலீசாரால் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்.

மாவீரன் சிவராமன் , வாட்டாக்குடி இரணியன் மற்றும் ஆம்பலாப்பட்டு ஆறுமுகம் ஆகிய மூவரும் ஒன்றாகவே சுடுகாட்டில் அடக்கம் செய்யப்படுகிறார்கள்.

“எவர் அச்சமின்றி இறந்தனரோ அவர்கள் தாம் நாங்கள் – எவர் அச்சமின்றி மரணத்தை நோக்குகிறார்களோ அவர்கள்தாம் நாங்கள்” என்றான் ஒரு கவிஞன்.

கடந்தகால வரலாற்றை தெரிந்து கொள்ளாமல் எதிர்கால வரலாற்றை உருவாக்க முடியாது. ஏற்றுக்கொண்ட லட்சியத்தை நிறைவேற்ற தம்மை முழுவதுமாக தியாகம் செய்ய தயாராக இருந்த நெஞ்சுரமிக்க போராளிகள், தன்னிகரற்ற தனி நபர்களின் துணிச்சல் தியாகங்களால் மக்கள் எழுச்சி பெறுகிறார்கள். தூக்கு மரங்களுக்கும், துப்பாக்கி ரவைகளுக்கும், கொலை வாளுக்கும் அஞ்சாமல் எதிர்கொண்ட விதம்தான் மக்களுக்கு உத்வேகம் ஊட்டியது.

சிறைத்தண்டனை, சித்ரவதை, மரணம் போன்றவற்றை சந்திக்கும்போது அவர்கள் காட்டிய வீரஞ்செறிந்த துணிச்சல் ஆகியவையே நமக்கு உத்வேகம் ஊட்டும் முன்மாதிரிகள். தனிநபர் வீரத்தியாகம் இன்றி சமூக மாற்றத்திற்கான புரட்சியோ, வெற்றியோ கிடையாது. தன்னிகரற்ற மாமனிதர்களின் தியாக வாழ்வே நமக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்குகள்.

தலைமுறை இடைவெளியின் காரணமாக இந்த போராட்ட வரலாறு இன்றைய இளைஞர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. பொதுவுடைமை லட்சியத்திற்கான இந்த புகழ்மிக்க போராட்ட வரலாற்றை புதிய தலைமுறையினர் படித்துப் பயன்பெற வேண்டும். போராட்டப் பயணத்தில் புத்துணர்ச்சி பெற, இந்த வரலாற்றுப் புதினம் இன்றைய காலகட்டத்தின் தேவையும் அவசியமும் ஆகும்.

நூல் : சாம்பவான் ஓடை சிவராமன்
நூல் ஆசிரியர் : ச.சுபாஷ் சந்திரபோஸ்
வெளியீடு : பாக்கியம் பதிப்பகம்
விலை : ரூ.250.00
கிடைக்குமிடம் : பாக்கியம் பதிப்பகம்,
22பி / 2739, தொப்புள் பிள்ளையார் தெரு,
தஞ்சை – 1
தொடர்புக்கு : 99405 58934

நூல் அறிமுகம் : காமராஜ்

disclaimer

கேரளா : சாதி ஆணவப் படுகொலையும் சமூக மனநிலையும்

கொலை செய்யப்பட்ட அனீஷ்

மிழகத்தில் நாடகக்காதல் என்ற பெயரில் சாதிவெறி ஆணவக்கொலைகள் அடிக்கடி நடக்கின்றன. ஆனால் கம்யூனிஸ்டுகள் ஆளும் கேரளாவிலும் கூட ஆணவக்கொலைகளா என்று நம்மில் சிலர் அதிர்ச்சி அடையலாம். ஆனால் கேரளாவின் இரண்டாண்டுகளில் அடுத்தடுத்த நடந்த இரண்டு சாதி ஆணவப் படுகொலைகள் அம்மாநிலத்தில் புரையோடியிருக்கும் சாதிவெறி முடைநாற்றத்தை வெளிக்கொணர்ந்திருக்கின்றன.

கெவின் ஜோசப் என்ற தலித் கிருத்துவ இளைஞர் 2018 ஆம் ஆண்டில் அவரது மனைவி நீனுவின் குடும்பத்தினரால் (லத்தீன் கிருத்துவம்) ஆணவப்படுகொலை செய்யப்பட்ட போது அது கேரளாவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 27 வயது இளைஞரான அனீஷ் அதே போல ஆதிக்கச் சாதிவெறியர்களால படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.

சாதியிலும், பொருளாதாரத்திலும் தன்னை விட ஆதிக்க சக்தியாக இருக்கும் பிள்ளை சாதியைச் சேர்ந்த ஹரிதாவை அனீஷ் காதலித்து திருமணம் செய்திருந்தார். இந்த சாதியப்படுகொலை நடந்த பிறகு, சமூக வலைதளங்களில் அதுக்குறித்து தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் கேரளாவில் புரையோடியிருக்கும் சாதி அமைப்பையும், சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

பேஸ்புக்கில் வந்த பல்வேறு கருத்துக்கள் கொலையாளிகளான ஹரிதாவின் தந்தை பிரபு குமார் மற்றும் அவரது மாமா சுரேஷ் இருவருக்கும் ஆதரவாக இருப்பதை காணலாம். ‘தந்தையின் பாச உணர்ச்சியால்’ நடந்தது என்றும், “ஒரு அப்பா தன்னுடைய மகளை வளர்த்த பாசத்தால் பைத்தியமாகிவிட்டார்” என்றும் பலரும் குற்றவாளிகளை நியாயப்படுத்தி மன்னித்து விடுகிறார்கள்.

தெலுங்கானா பிரணய் : இந்தியாவை உலுக்கிய சாதிவெறிப் படுகொலை !
உடுமலை சங்கர் கொலை வழக்கு தீர்ப்பு : சாதி ஆணவக் கொலைகளுக்கான அங்கீகாரம் !

தெலுங்கானா, நல்கொண்டா மாவட்டத்தில் செப்டம்பர் 14, 2018 அன்று நடந்த பிரணய் சாதி ஆணவப்படுகொலை குறித்தும் கூட இதே போன்ற கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன.

பட்டியல் சாதியைச் சேர்ந்த பிரணய், பார்ப்பனரல்லாத ஆதிக்க சாதியைச் (கோமதி) சேர்ந்த அம்ருதாவை காதலித்து மணந்தார். தனது மனைவி மற்றும் தாயின் முன்னால், பகல் நேரத்தில், ஒரு பொது இடத்தில் வைத்து பிரணய் கொல்லப்பட்டார். பிரணயை கொலை செய்ய 1 கோடி ரூபாய் கொலையாளிகளுக்கு கொடுத்தாக அம்ருதாவின் தந்தை மாருதி ராவ் கைது செய்யப்பட்டார்.

கொலையான அனீஷின் மனைவி ஹரிதா

ஆதிக்கச்சாதிகளை சேர்ந்த சாதிவெறியர்கள் பலரும் தெலுங்கு ஊடகங்கள் மற்றும்சமூக வலைதளங்களில் நெஞ்சை பதறச்செய்யும் இந்த படுகொலையை ஆதரித்து கருத்திட்டனர். இந்த கொலையை, மகள் மீதான ”தந்தையின் பாசம்” என்று கூறியதுடன், அம்ருதாவை ஒரு “ஒழுக்கக்கேடான பெண்” என்றும், பெற்றோர் மீதும் அவர்களுடைய மானம், மரியாதை குறித்தும் அவருக்கு துளியும் அக்கறை இல்லை என்றும் வசைபாடினார்கள்.

அனீஷின் படுகொலைக் குறித்தும் அதே மாதிரியான கருத்துக்கள் தான் சமூக வலைதளங்களில் காணக்கிடக்கின்றன. பெரிய வேறுபாடு எதுவும் இல்லை.

  • “பெண்ணின் அப்பாவைக் குறித்து நான் வருத்தப்படுகிறேன். அவரது அன்பு மகள் ஒரு வெறும் பயலுடன் வாழ்கிறாள் என்பதை அறிந்து அவர் எவ்வளவு வருத்தப்பட்டிருப்பார்” என்று அனீஷ் கொலை குறித்த வெளியான செய்திக் கட்டுரைக்கு கீழே ஒருவர் பின்னூட்டம் செய்துள்ளார்.
  • “ஒரு மகளை பாசத்தோடு வளர்த்த ஒரு தந்தையால் இந்த செயலை செய்ய முடியும்” என்று ஒருவர் பேஸ்புக்கில் கொலையை நியாயப்படுத்தினார். “ஏமாற்றப்பட்டு தோற்கும் ஒரு தந்தை இப்படி பைத்தியம் ஆவது உண்டு” என்று மற்றொருவர் கூறுகிறார்.
  • “இங்கே கொலையை நியாயப்படுத்தவில்லை. ஆனால் இவர்கள் ஒருபோதும் தங்கள் சொந்த சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணையோ அல்லது அவர்களின் வாழ்க்கைத் தரத்தில் உள்ள ஒரு பெண்ணையோ காதலிக்க மாட்டார்கள். மதம் மாறியவர்கள் இதில் கருத்து தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், காதலித்து எப்படி மதம் மாற்றப்படுகிறாகள் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. உங்கள் சொந்த சமுதாயத்தில் உள்ள பாகுபாட்டையும் வேறுபாடுகளையும் முதலில் சரி செய்யுங்கள்” என்று மற்றொரு நபர் எழுதுகிறார். இப்படியாக பல கருத்துகள் பகிரப்படுகின்றன.

பெண்ணின் அப்பா மற்றும் மாமா செய்த இந்த கொலையை நியாயப்படுத்தவில்லை என்று கூறும் பலரும் கொலையாளிகள் மீது வருத்தப்படுவதாக கூறுவது தான் முரண்நகை. இவர்கள் நடுநிலை அவதாரம் எடுத்து சாதிவெறியை நாசூக்காக கக்குகிறார்கள்.

தர்மபுரி சாதிமறுப்பு திருமணம் : இளைஞரின் குடும்பத்தையே கட்டி வைத்து அடித்த ஆதிக்க சாதி வெறி !
கொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே !

கொலையாளிகளுக்காக வரிந்துகட்டுவது ஒருபுறமிருக்க, பாதிக்கப்பட்ட ஹரிதாவையும் குற்றம் சாட்டுவதற்காக பலரும் கதைகளை கட்டமைக்கிறார்கள். “இந்த பெண்ணால் தான் ஒரு இளைஞன் உயிரை இழந்திருக்கிறான், மேலும், இருவர் சிறையில் இருக்கிறார்கள்” என்று அனீஷின் கொலைக்கு வருந்துவது போல மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி, கொலையாளிகளுக்கு ஆதரவாக தீர்ப்பெழுதுகிறார்கள்.

  • “அந்தப் பெண் முன்கூட்டியே இதுக்குறித்து சிந்தித்திருக்க வேண்டும். தன்னுடைய வீட்டில் ஆடம்பரமாக வாழ்ந்த அவள், அந்த பையன் அந்த வசதிகளையெல்லாம் கொடுக்க முடியாமல் போனவுடன் மனம் உடைந்து போவாள். பின்னர் திருமண உறவு கசந்து, உடைந்து போயிருக்கும் … இன்னும் சொல்லலாம்” என்று மற்றொருவர் இறுதித்தீர்ப்பே எழுதி விட்டார்.
  • “காதல் என்பது வேடிக்கையான ஒன்று. இந்த காதல் திருமணங்களில் பெரும்பாலானவை வேடிக்கை முடிந்த பின் மணமுறிவில் முடிவடைகின்றன….. திருமணத்திற்குப் பிறகு, எதார்த்தம் சில வாரங்களில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது” என்று மற்றொரு நபர் எழுதினார்.

“தன்னுடைய குடும்பத்தை அழித்ததற்காக” அந்த பையனுக்கு பதிலாக ஹரிதா கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் உள்ளனர்.

  • “வேறொருவரின் மகனுக்கு பதிலாக அவர்கள் ஏன் தங்கள் சொந்த மகளை கொல்ல கூடாது. அவளுடைய செயலால் அவர்கள் வேதனை அடைந்தால், அவள் தான் கொல்லப்பட வேண்டும்” என்று ஒருவர் கூறுகிறார்.
  • “அவள் தண்டிக்கப்பட வேண்டும், அவளது தந்தையை அவள் தான் ஏமாற்றினாள். அவள் ஒரு குடும்பத்தையே அழித்துவிட்டாள். அவளுடைய தந்தையின் வலியை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை” என்று மற்றொரு நபர் எழுதுகிறார்.

பாலக்காட்டில் உள்ள தென்குரிசியைச் சேர்ந்த ஓவியரான அனீஷ், டிசம்பர் 25 அன்று ஹரிதாவின் தந்தை மற்றும் மாமாவால் படுகொலை செய்யப்பட்டார். மூன்று மாதங்களுக்கு முன்பு இவர்கள் திருமணம் செய்து கொண்டாலும், ஹரிதாவின் குடும்பத்தினர் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

சாதி ஆணவப் படுகொலையாளிகள் குறித்தான சமூக ஊடகங்களின் தீர்ப்பு, மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்டம் புதியதல்ல. ஒருபுறம் நீதித்துறையின் தாமதம் மறுபுறம் சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் இருந்தபோதிலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த கவுசல்யா போன்றவர்கள் சாதி ஆணவப் படுகொலைகளை எதிர்த்து இன்னும் இடைவிடாமல் போராடுகிறார்கள். கவுசல்யாவின் கணவரான சங்கர், ஒரு தலித் இளைஞர். மார்ச் 2016 இல் சங்கர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டபோது, ​​ சமூக வலைதளங்களில் பலரும் கொலையாளிகளுக்கு வாழ்த்துக்கள் சொன்னது மட்டுமல்ல, இது போல கலப்பு மணம் புரிபவர்களுக்கு துணிச்சலாக சமூக வலைதளங்களில் மிரட்டல்களையும் விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆறுமுகம்
நன்றி :  The news minute

சி.ஏ.ஏ. சட்ட ஆதரவாளர் வேளாண் சட்ட எதிர்ப்புப் போராளியானது எப்படி ?

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடந்து வரும் விவசாயிகளின் போராட்டத்தில் ஒரு இளைஞரின் புகைப்படம் அதிக கவனத்தைப் பெற்றது. ‘இரத்தத்தை உறையவைக்கும் கடுங்குளிரில், மேலாடையின்றி, ஒருவர், தனது முதுகில் புல்வாமா வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட வீரர்களின் பெயர்களையும், வந்தே மாதரம் என்றும் பச்சை குத்தியிருந்த’ புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இந்த படத்தினை சமூக ஆர்வலர் ஜாகிர் தியாகி (Zakir Tyagi) தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

சில மாதங்களுக்கு முன்பு நான் (அலிஷன் ஜாஃப்ரி) பார்த்த ஒரு கோரமான காணொலியை இந்த புகைப்படம் எனக்கு நினைவூட்டியது. ஆனால், இந்த படத்தில் உள்ள நபரின் முகம் தெரியாததால் நான் ஜாகிரை அணுகினேன். இதை அவர் Lallantop-லிருந்து எடுத்ததாக தெரிவித்தார். பின்னர் இந்த படத்தை எடுத்தது பி.டி.ஐ.யின் புகைப்பட பத்திரிகையாளர் ரவி சவுத்ரி என்று தெரிந்ததும் அவரை நான் தொடர்புகொண்டேன். அப்போதுதான் இந்த படத்தில் உள்ள நபர் விஜய் இந்துஸ்தானி என்பது உறுதியானது.

படிக்க :
♦ இன்றைய பாசிச நிலை குறித்து மோடியின் முன்னாள் பக்தர் !
♦ காவி பயங்கரவாதம் : முன்னாள் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்கின் ஒப்புதல் வாக்குமூலம் !

விஜய் தனது முகநூல் பக்கத்தில், ஏபிபி நியூஸ், ஆஜ் தக், ஜீ நியூஸ், நியூஸ் 24 ஆகியவற்றின் வீடியோக்களை பகிர்ந்துள்ளார். இந்த சேனல்களில் விவசாயி தலைவர் ராகேஷ் டிக்காய்ட்டுடன் பேசுவதை நாம் காணமுடியும். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து அரசாங்கத்திற்கு தனது இரத்தத்திலேயே கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். தனது மார்பில் “நாங்கள் CAA, NRCயை ஆதரிக்கிறோம்” என்ற வாசகத்தை பச்சை குத்தியுள்ள விஜய், இப்போது அதனை வெளிகாட்ட விரும்பவில்லை. அதனால், அவ்வாசகம் பொறித்திருந்த இடத்தில் “நான் விவசாயிகளை நேசிக்கிறேன்” என்ற வாசகத்தை ஒரு காகிதத்தில் எழுதி ஒட்டியிருப்பதை காணமுடியும்.

2020-ம் ஆண்டு தொடக்கத்திலும், விஜய் இந்துஸ்தானியுடைய வீடியோ ஒன்று வைரலானது. அந்த வீடியோவில் ஷாகின் பாக்கில் CAA-விற்கு எதிராக நடத்தப்பட்டு வந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை 48 மணி நேரத்திற்குள் போராட்ட களத்திலிருந்து வெளியேற வேண்டும் என்றும் அவ்வாறு வெளியேறாவிட்டால், அதன் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார் விஜய்.

CAA-க்கு எதிரான போராட்டம் பெருமளவில் வெடித்தபோது வடகிழக்கு டெல்லியின் பல பகுதிகளில் முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதலும் கும்பல் வன்முறையும் அதிகரித்தது. கலவரத்தின் மையப்பகுதியான மாஜ்பூரில் நடந்த வன்முறை வெறியாட்டத்தில் விஜய் இந்துஸ்தானி முஸ்லீம்களை அச்சுறுத்தி வந்ததை நாம் காணமுடியும். அதில் அவர், “பாகிஸ்தானை சேர்ந்த நீங்கள் டெல்லியை விட்டு ஓடிவிடுங்கள் இல்லையேல், மோடிஜி மற்றும் விஜய் இந்துஸ்தானி உங்களை வெளியேற்றிவிடும் நாள் வெகு தொலைவில் இல்லை” என்று முஸ்லீம்கள் மீதான அவதூறு பிரச்சாரத்தில் இறங்கினார் விஜய் இந்துஸ்தானி.

அவரது முகநூல் பக்கத்தில் கடந்த டிசம்பர்-பிப்ரவரி மாதம் வரை பதிவிட்டிருந்த அனைத்து பதிவுகளையும் நீக்கியிருக்கிறார். ஆனால் பிப்ரவரி 22 ஆம் தேதி அவர் பதிவிட்டிருந்த வீடியோ ஒன்றில், “யாராவது இந்தியாவில் வாழ விரும்பினால் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழங்குங்கள்” என்று விஜய் கூறும் வீடியோ ஒன்றை நாம் காணலாம்.

விஜய் ஹிந்துஸ்தானி

விஜய் இந்துஸ்தானின் சமூக ஊடக Profile-ஐ மேலோட்டமாக பார்த்தாலே, அவரது பல தவறான தகவல்களையும், இஸ்லாமிய வெறுப்பு பதிவுகளையும் நாம் காணமுடியும். மேலும், அவர் லவ் ஜிகாத்துக்கு எதிரான சட்டங்களுக்கு ஆதரவாக பிரச்சாரமும் செய்துள்ளார். CAA-க்கு ஆதரவளித்து விஜய் பதிவிட்டிருந்த பதிவுகளை தீவிர வலதுசாரி தீபக் ஷர்மா பகிர்ந்திருக்கிறார். இப்படி இந்துத்துவா பிரச்சாரத்தில் தீவிரமாக செயல்பட்டிருந்த விஜய் அண்மையில், போராடும் விவசாயிகளுக்கு எதிராக பதிவிட்டிருந்த தீபக்கின் ட்விட்டினை கண்டித்து விமர்சித்துள்ளார்.

வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிவரும் விவசாயிகளை பல இந்துத்துவா கும்பல் அச்சுறுத்தி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு, இந்துத்துவ சித்தாந்தவாதியான ராகிணி திவாரி, “மீண்டுமொரு ஜஃப்ராபாத் பார்க்க நேரிடும், CAAக்கு எதிராக போராடியவர்களுக்கு நடந்தது போன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிக் கொண்டு வருபவர்களுக்கும் நடக்கும்” என்று எச்சரித்தார்.

திவாரியின் வெறுப்பு பேச்சு, வடகிழக்கு டெல்லி கலவரத்தின்போது போராடுபவர்கள் மீது அவர் கற்களை வீசும் வீடியோக்கள், அவர் விடுத்த கொலைமிரட்டல்கள் ஆகியவை சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில், முகநூலில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பின் தொடர்ந்துவரும் வலதுசாரி செல்வாக்குள்ள விஜய் இந்துஸ்தானி என்ற விஜய் குமார், மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்ட களத்தில் நிற்பது என்பது நம்பமுடியாத ஒன்று.

மோடி அரசாங்கத்தின் மீதான விஜய்யின் அதிருப்தியும், அவரின் இந்த மாற்றத்திற்கான காரணம் என்ன என்பதையும் பார்க்கலாம்.

தீவிர வலதுசாரி அமைப்புடன் தொடர்பு கொண்டுள்ள நீங்கள், எப்படி விவசாயிகள் போராட்டத்தை ஆதரிக்கிறீர்கள்?

விஜய்: நான் அந்த அமைப்பில் இருந்தேன். ஆனால் விவசாயிகளை காலிஸ்தான் ஆதரவாளர்கள் என்று அவர்கள் கூறியபிறகு அவர்களுடன் தொடர்புகொள்ள என்ன இருக்கிறது? நாடு முழுவதும் நோய்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தபோது நமக்கு உணவு வழங்கியவர்கள்மீது இன்று அவதூறு பரப்புகிறார்கள். நான் விவசாயி மகன். என் அப்பாவும், தாத்தாவும் விவசாயிகள். அதனால்தான் இப்போராட்டத்தை ஆதரிக்கிறேன்.

புல்வாமா தாக்குதலில் இறந்தவர்களின் பெயர்களை உங்கள் முதுகில் பச்சை குத்திக் கொள்ள உங்களை தூண்டியது எது?

விஜய்: புல்வாமாவில் பயங்கரமான தாக்குதல் நடந்து நான்கு நாட்களுக்கு பிறகு, அத்தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் பெயரை நான் பச்சை குத்திக்கொண்டேன். நம்மை பாதுகாக்க தங்கள் உயிரைப் பணயம் வைத்த துணிச்சலான இதயங்களுக்கான எனது அஞ்சலிதான் இது. இந்தியர்கள் அனைவரையும் நான் எனது குடும்பமாக கருதுகிறேன். அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு, கண்காணிப்பு இருந்தபோதிலும் இதுபோன்ற தாக்குதல் எவ்வாறு நிகழ்ந்தது என்பது எனக்கு புரியாத புதிராக இருக்கிறது.

பாஜக தேசியவாத கட்சி என்றும், நீங்கள் தேசியவாதி என்றும் கூறிக்கொள்கிறீர்கள். பாஜகவின் ஆதரவாளராகவும் குரல் கொடுத்துவந்தீர்கள். பிறகு உங்களிடம் எப்படி இந்த மாற்றம் ஏற்பட்டது?

விஜய்: பிஜேபி கட்சியின் ஆதரவு என்பது விவசாயிகளுக்கோ, இராணுவ வீரர்களுக்கோ அல்ல, பெரிய கார்ப்பரேட்டுகளுக்குதான். மோடிஜி எங்களை காந்தி வழியை பின்பற்றுங்கள் என்கிறார். ஆனால் அவரது அமைச்சர்களோ கோட்சேவை ஆதரிக்கிறார்கள். இது என்ன தேசியவாதம்?

காசுக்கு வேலைசெய்யும் பிஜேபியின் ஐடி செல், புதிய வேளாண் சட்டத்தை விவசாயிகள் ஆதரிப்பதாக சமூக ஊடகத்தில் பொய் பிரச்சாரத்தை பரப்பிக் கொண்டு வருகிறது. சமூக ஊடகத் தாக்கம் தலைத்தூக்கியுள்ள இந்த காலத்தில் பொய் செய்திகளை அதிகமாக பரப்பமுடியும். இங்குள்ள விவசாயிகள் யாரும் தேச விரோத நடவடிக்கையில் ஈடுபடவில்லை. ஒரு விவசாயி என்ற முறையில் சொல்கிறேன், அரசாங்கத்தின் இந்த கொள்கைகள் எனது குடும்பத்திற்கு பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளன.

படிக்க :
♦ வர்த்தமனம் படத்துக்குத் தடை : மாணவர் போராட்டம் பற்றிய படம் என்பதால் தேசவிரோதமாம் !
♦ அமர்த்தியா சென் : மாற்றுக் கருத்துக்களை ஒடுக்கி வரும் மோடி அரசு !

பாஜக அரசு மின் கட்டணத்தை உயர்த்துகிறது. ஆனால் 2013-லிருந்து விவசாயிகளுக்கு கரும்பு விலை உயர்த்தப்படவில்லை. பெரும்பாலான விவசாயிகள் இச்சட்டத்தை எதிர்ப்பதால், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக ஹனுமான் பெனிவால் தெரிவித்துள்ளார்.

ஷாகின்பாக்கில் நடந்த சாலை மறியலை எதிர்த்தீர்கள். இங்கு மட்டும் எப்படி ஆதரிக்கிறீர்கள்?

விஜய்: போராட்டத்தால் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு இடையூறாக இருந்தது என்பதால் அன்று எனது எதிர்ப்பினை தெரிவித்தேன். இப்போது இந்து, முஸ்லீம் என அனைத்து அகதிகளும் பாகுபாடின்றி பாதுகாக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் அந்த மசோதாவில் அப்படி எதுவும் இல்லை. அதை நீங்கள் படித்தீர்களா? இதற்கு மேல் CAA எதிர்ப்புப் போராட்டம் பற்றி சொல்ல விரும்பவில்லை. நான் இப்போது அவர்களின் (பாஜக) எந்தப் பிரிவையும் ஆதரிக்கவில்லை.

CAA சார்பு ஆர்ப்பாட்டங்களில் அவர் கண்ட காட்சி மற்றும் பங்கேற்றது குறித்து சொல்ல விஜய் மிகவும் தயக்கம் காட்டினாலும், இந்த விவசாயப் போராட்டத்தில் அரசாங்கம் மற்றும் நாட்டின் பிரதான ஊடகங்கள் பற்றிய தனது கண்ணோட்டத்தை மாற்றிக் கொண்டதாக தெரிவித்தார். விவசாயிகளின் அமைதியான போராட்டத்தினை கொச்சைப்படுத்தும் ஆர் பாரத், ஆஜ் தக் மற்றும் ஜீ போன்ற செய்தி சேனல்களை குறிப்பிட்டார். ஒருவேளை அந்த சேனல்களை நம்பியதனால் CAA மற்றும் சிறுபான்மையினர் குறித்த தனது கருத்தை அவர் உருவாக்கியிருக்கலாம்.


கட்டுரையாளர் : அலிஷன் ஜாஃப்ரி
தமிழாக்கம் : ஷர்மி
நன்றி : The Wire

லவ் ஜிகாத் தடைச் சட்டம் : இந்தியாவின் பன்முகத் தன்மையை ஒழிக்கும் முயற்சி !

ட்டவிரோத மதமாற்றுத் தடை அவசரச் சட்டம்  (Prohibition of Unlawful Conversion of Religion Ordinance ) 2020 என்ற சட்டத்தை பாஜக ஆளும் மாநிலமான உத்தரப் பிரதேசம் சமீபத்தில் நிறைவேற்றியது.  அதனைத் தொடர்ந்து, மத்திய பிரதேச மாநிலமும் இச்சட்டத்தை அவசரச் சட்டமாகக் கொண்டுவந்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் இந்தச் சட்டம் நவம்பர் மாதம் முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் கடந்த ஓரு மாதத்தில் மட்டும் சுமார் 14 வழக்குகளில் 51 பேரைக் கைது செய்துள்ளது உ.பி. அரசு. அதில் இன்னுமும் 49 பேர் சிறையில் உள்ளனர்.

மத மாற்றத்திற்கு எதிரான சட்டம் என்ற பெயரில்  உ.பி-யில் ஆளு பாஜக அரசால் அறிவிப்க்கபட்டிருந்தாலும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானதாக இருக்கிறது இந்தச் சட்டம். இந்தச் சட்டத்தை அவசரச் சட்டமாகக் கொண்டு வந்துள்ளது யோகி ஆதித்யநாத் அரசு.

படிக்க :
♦ அமர்த்தியா சென் : மாற்றுக் கருத்துக்களை ஒடுக்கி வரும் மோடி அரசு !
♦ ” லவ் ஜிகாத் ” சட்டத்தை அமல்படுத்தும் பாஜக மாநில அரசுகள் !

அமெரிக்காவில் கருப்பினர்களுக்கும், ஜெர்மனியில் யூத மக்களுக்கும் எதிராக கொண்டுவரப்பட்ட சட்டங்களைப்போன்று கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்தன்மை கொண்டது இச்சட்டம். சிறுபான்மை மக்களை ஒடுக்கி அவர்களை அச்சத்தில் ஆழ்த்துவதோடு, மத நல்லிணக்கம் பேணும் பெரும்பான்மை மதத்தினரையும் அச்சுறுத்துகிறது இச்சட்டம்.

கட்டாய சட்டவிரோத மத மாற்றத்திற்கு எதிரான சட்டம் என்று சொல்லப்பட்டாலும், உத்தரப் பிரதேசத்தில் இது அழைக்கப்படும் பெயர் லவ்-ஜிகாத் தடுப்புச் சட்டம்தான்.

லவ் ஜிகாத்

லவ் ஜிகாத் என்று சொல்லப்படுவது இந்து பெண்களை முஸ்லிம் ஆண்கள் காதலிப்பது போல் நடித்து அவர்களை திருமணம் செய்து மதம் மாற்றம் செய்வதுதான் என்கின்றன சங்க பரிவார அமைப்புகள். மேலும், இத்தகைய மதமாற்றத்தைத் தடுத்து இந்து பெண்களின் நலன் காக்கவே உத்திரபிரதேச அரசு லவ் ஜிகாத்க்கு  எதிரான  லவ் ஜிகாத் எதிர்ப்புச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது என்று இச்சட்டத்திற்கு நியாயம் கற்பிக்கின்றன.

ஆனால் இந்திய அரசியலமைப்புச் சட்டம், 18 வயதுக்கு மேலான ஆணும், பெண்ணும் அவரவரது வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் உரிமையை அனைவருக்கும் வழங்கியிருக்கிறது. மத நடவடிக்கைகளுக்கான சுதந்திரத்துக்கும் (Freedom of Religious acts), கண்ணியம் மற்றும் சமத்துவத்தைப் பாதுகாக்கும் அரசியலமைப்புக் கொள்கைகளுக்கும் விரோதமாக இருக்கிறது.

தனது வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுத்துக் கொள்ள அனைவருக்குமான உரிமையை அரசியல்சாசன சட்டம் வழங்கியிருந்தாலும், இந்த புதிய லவ் ஜிகாத் எதிர்ப்பு அவசரச் சட்டத்தின் படி ஓரு இந்துப் பெண் முஸ்லிம் ஆணை திருமண செய்ய வேண்டுமானால் ஓரு மாதத்திற்கு முன்பே ஆட்சியர் அலுவலகத்தில் அனுமதிப் பெற்றிருக்க வேண்டும். அப்படியில்லை எனில் அது சட்டவிரோத திருமணமாகக் கருதப்படும். இதை மீறி திருமணம் செய்யும் ஆணுக்கு 5 வருட சிறைத் தண்டனையும் ரூ. 15,000 அபராதமும் செலுத்த வேண்டும்.

உண்மையில் இந்தச் சட்டம் கட்டாய மத மாற்றத்தைத் தடுப்பதற்காக கொண்டுவரப்படவில்லை என்பதை இச்சட்டம் உத்தரப் பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தப் பட்டதிலிருந்தே புரிந்து கொள்ளலாம். இச்சட்டம் நடைமுறைக்கு வரும் முன்பே திருமணம் செய்து கொண்ட இந்துப் பெண் – முஸ்லீம் ஆண் தம்பதியினர் திருமணத்தைப் பதிவு செய்யச் சென்ற போது அங்கு வந்த இந்து அமைப்பால் தாக்கப்பட்டு, முசுலீம் கணவரும் அவரது சகோதரரும்  இரண்டு வாரங்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அந்தப் பெண்ணை அரசு காப்பகத்தில் வைத்து தொல்லை கொடுத்தனர். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலின் காரணமாக அந்தப் பெண்ணின் கரு கலைந்தது. இது ஒரு உதாரணம் மட்டுமே, உத்தரப் பிரதேசத்தில் இச்சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட கைதுகள் அனைத்தும் இத்தகைய பின்னணியைக் கொண்டவையே.

சட்டமும் சமூகநீதியும்

நம் நாட்டில் சாதி, மத மறுப்புத் திருமணங்கள் ஒப்பீட்டளவில் மிகவும் குறைவாகவே நடக்கின்றன. இத்தகைய மதமாற்றத் தடைச் சட்டங்கள் இத்தகைய திருமணங்களையும் தடுத்து நிறுத்தும் வேலையையே செய்யும். மேலும் சிறுபான்மைச் சமூகத்தினரை அடக்கி ஒடுக்கவும் இது வழிவகை செய்கிறது. மேலும் பெண்கள் பொருளாதார சுதந்திரம் பெற்று முன்னேறும் சூழலிலும் கூட அவர்களது வாழ்க்கையை அவர்களே தீர்மானிப்பதை இச்சட்டம் தடை செய்கிறது.  இதனை நோக்கமாகக் கொண்டே சங்க பரிவார அமைப்புகள் இச்சட்டத்தைக் கொண்டுவந்துள்ளன.

கூடுதலாக, உத்தரப் பிரதேச போலீசு இச்சட்டத்தை அமல்படுத்துவதில் குண்டர்களைப் போலவே நடந்து கொள்கிறது. 1961-ம் ஆண்டில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் நீதிபதி ஆனந்த நரேன் முல்லா, இந்திய காவல் துறையை ஓரு “ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் கும்பல்” போல் நடந்து கொள்வதாகக் குறிப்பிட்டார்.

உ. பி அரசாங்கம் அத்தகைய அவதானிப்புகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதில் உயர்நீதிமன்றத்தின் கருத்து காவல்துறையின் செயல்திறனைக் குறைத்து மதிப்பிடக்கூடும் என்ற அடிப்படையில் நீதிபதி ஆனந்த நரேன் முல்லாவின் கருத்தை நீதிமன்றம் நீக்கியது.

படிக்க :
♦ ஹிட்லரின் நியூரெம்பர்க் சட்டங்களின் மறுவடிவம்தான்  ‘லவ் ஜிகாத்’ தடைச் சட்டம் !
♦ முசுலீம்கள் பசுக்களை வளர்ப்பதும் ’ லவ் ஜிகாத் ‘ தானாம் !

ஆனால் எதார்த்தத்தில் நீதிபதி ஆனந்த நரேனின் கருத்துக்களை உண்மை என்றே போலீசு நிரூபிக்கிறது. அதற்கு லவ் ஜிகாத் தடுப்புச் சட்டங்களை செயல்படுத்தும் போலீசின் செயல்முறைகள் நல்ல சான்றாக அமைகின்றன.

இச்சட்டமானது எந்தவித ஜனநாயக கொள்கையுடனும் உடன்படாமல் மதத்தின் பெயரால் பாகுபாட்டை வளர்க்கவும் முசுலீம் மதம்சார்ந்த மக்களை தவறானவர்களாக சித்தரிக்கவும் முயல்கிறது. இந்த சட்டமானது இந்தியாவின் மதச் சார்பற்ற தன்மையையும் இறையாண்மையையும் கேள்விக்குட்படுத்துகிறது.

இந்திய சமுதாயத்தின் பன்முகக் கலாச்சார தன்மையை சீர்குலைப்பதாகவும், இயற்கை நீதிக்கு புறம்பானதாகவும் இச்சட்டம் இருக்கிறது. இந்திய அரமைப்பில் இது போன்ற சட்டங்கள் சமூகத்தை பின்னுக்கு தள்ளுவதோடு மட்டுமில்லாமல் அடக்குமுறைகளுக்கும் வழிவகுக்கும் தன்மையைக் கொண்டது.

உ.பி, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து பாஜக ஆளும் மாநிலங்களான அரியானா, அசாம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் இச்சட்டங்களை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. சமூக நீதியையும், அரசியல் சாசனத்தையும் காக்க வேண்டுமெனில், இத்தகைய சட்டங்களுக்கு எதிராகப் போராட வேண்டியது அவசியமாகும்.

நன்றி : National Herald , Article-14

சிந்துஜா
சமூக ஆர்வலர்

disclaimer

கீழ்வெண்மணி : ஆண்டுகள் பல கடந்தாலும் அணையா நெருப்பு | கருத்துப் படம்

டிசம்பர் 25 : கீழ்வெண்மணி தியாகியர் நினைவு தினம்

கீழ்வெண்மணி

ஆண்டுகள் பல கடந்தாலும் அணையா நெருப்பு !

வர்க்கப் போராட்டமே எழுதும் இறுதித் தீர்ப்பு !!

கருத்துப்படம் : மு. துரை

கருவறைத் தீண்டாமை ஒழியும் நாள்தான் பெரியாரின் ஏக்கம் தீரும் நாள் !!

நாள்:24.12.2020

அர்ச்சகர் பயிற்சி பெற்ற பார்ப்பனரல்லாத மாணவர்களின் ஏக்கம் தீரும் நாள் எந்நாளோ அன்றே பெரியாரின் ஏக்கமும் தீரும்! தீரும்!

தந்தை பெரியாரின் 47 ஆம் ஆண்டு நினைவு நாள் டிசம்பர் 24, 2020

பத்திரிகை செய்தி

ன் வாழ்நாளின் இறுதி தருணம் வரை பார்ப்பனல்லாதோரின் இழிவை நீக்க தனியொரு இயக்கமாக சுழன்றவர் தான் பெரியார். கருவறையில் நிலவும் தீண்டாமை இழிவை போக்க இயலாத நிலையில் நம்மை விட்டு பிரிந்தார்.

அர்ச்சகர் வாரிசுரிமை ஒழிப்பு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராக சட்டம் ஆகியவை தமிழகத்தில் கொண்டு வரப்பட்டன. இருந்த போதிலும் ஆகமம், ஐதீகம், பாராம்பரியம் என அரசியலமைப்பு சட்டம் வளைக்கப்பட்டு பார்ப்பனர் அல்லோதோரின் பூசை செய்யும் சட்ட உரிமைகள் நெறிக்கப்பட்டன. அரசால் பயிற்சி அளிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சாதிகளை சேர்ந்த மாணவர்கள் பார்ப்பன அர்ச்சகர்களின் எடுபிடிகளாகவோ, பார்ப்பனர்களால் ஒதுக்கப்பட்ட கோயில்களின் அர்ச்சகராகவோ இருந்து வாழ்க்கையை நடத்தும் அவலமே பல்லாண்டுகளாக தொடர்கின்றது.

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள்

கடந்த 28-2-2007 அன்று அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் பயிற்சிக்கான சேர்க்கை விண்ணப்பப்படிவும் வெளியானதும் திருவண்ணாமலை கோயிலில் 600 பேர் விண்ணப்பித்தனர். மூன்று நாட்கள் நேர்காணல் நடைபெற்றது. 40 மாணவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டனர். அதுபோல் மதுரை திருச்செந்தூர், பழனி ஆகிய கோயில்களில் 1000க்கும் மேற்பட்டோர் நேர்காணல் செய்யப்பட்டு 120 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டார்கள். திருவரங்கம், சென்னை பார்த்தசாரதி கோயில்களில் 500க்கும் மேற்பட்டோர் நேர்காணல் செய்யப்பட்டு 80 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டார்கள். இறுதியில் 207 பேர் மட்டும் ஒன்றரை ஆண்டு காலம் அர்ச்சகர் பயிற்சியை நிறைவு செய்தனர்.

இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் கீழ் உள்ள கோயில்களின் கருவறைகளை பக்தர்களை போல நாங்களும் பெரும் வலியுடன் வேடிக்கையே பார்க்க இயலும். ஆகம பயிற்சி பெற்றும் நாங்கள் நுழைந்து பூசை செய்வதை எது தடுக்கிறது? எங்களுடைய பிறப்பிலான சாதி. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி எங்களை அர்ச்சகர்களாக அரசால் நியமிக்க முடியும் என்கிறார்கள். ஆனால் தீர்ப்பு வந்து ஆண்டுகள் பல கடந்து விட்டன.

தமிழ்நாட்டில் 207 மாணவர்கள் பயிற்சியை முடித்துள்ளனர். அதில் இரண்டு மாணவர்கள் இறந்துவிட்டனர் மீதமுள்ள 205 மாணவர்களில் 2 பேருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டது.

படிக்க :
♦ வாடிவாசல் திறந்தோம் – கருவறையும் திறப்போம் !
♦ கருவறை தீண்டாமை, ஜெயா அரசின் துரோக சதி !

மதுரை பாடசாலையில் படித்த மாரிச்சாமி என்கின்ற மாணவருக்கு தல்லாகுளம் ஐயப்பன் கோயிலில் பணி நியமனம் வழங்கப்பட்டது. அடுத்தது நாகமலை புதுக்கோட்டையில் உள்ள விநாயகர் கோயிலில் தியாகராஜன் என்கின்ற மாணவருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டது.

சமுக நீதி கோலோச்சிய தமிழகத்தில் 203 மாணவர்களுக்கு இன்னமும் பணி நியமனம் வழங்கப்படவில்லை. வாழ்நாள் முழுவதும் அருங்காட்சியப் பொருளாய் நாங்கள் ஆகிவிடும் நிலையே உள்ளது.

இது அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களின் வாழ்வாதார, வேலை நியமன பிரச்சினை இல்லை. தமிழகத்தில் மிச்சமுள்ள கருவறை தீண்டாமையை ஒழிக்கும் கடமை. பெரியாரின் பெரு ஏக்கத்தினை போக்கும் நம் வரலாற்று கடமை.

வா.ரங்கநாதன்,
தலைவர்,
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் – தமிழ்நாடு,
(TAMILNADU ASSOCIATION FOR TRAINED ARCHAKAS)
128, கோகுலம் இல்லம், அரச மரத் தெரு, திருவண்ணாமலை
தொடர்புக்கு : 90474 00485.

புதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்

23/12/2020

ன்பார்ந்த புதிய ஜனநாயகம் வாசகர்களுக்கு,

செவ்வணக்கம்!

புதிய ஜனநாயகம்டிசம்பர் 2020 இதழ் அச்சுப் பிரதியாக வெளிவந்திருக்கிறது. தனிப் பிரதி வேண்டுவோர், இதழின் விலை ரூ.20.00 + அஞ்சல் செலவு ரூ.5.00 சேர்த்து மொத்தம் ரூ. 25.00-ஐ எமது G-pay account (G Pay-94446 32561)-க்குச் செலுத்தி, அத்தகவலை, அஞ்சல் குறியீட்டு எண்ணை உள்ளடக்கிய முழுமையான முகவரியுடன் எமது வாட்ஸ்-அப் எண்ணுக்கு (94446 32561) அனுப்பி வைக்கக் கோருகிறோம்.

ஆசிரியர் குழு,
புதிய ஜனநாயகம்.

இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :

♠ தலையங்கம் : கார்ப்பரேட் நிர்பர்
♠ 7.5% இட ஒதுக்கீடு: புண்ணுக்கு புனுகாகிவிடக் கூடாது!
♠ “எனது பாவ்லோஸ் தனி ஒருவனாக அவர்களைத் தோற்கடித்துவிட்டான்!”
♠ பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு: நரியைப் பரியாக்கிய காவித் திருவிளையாடல்!
♠ இந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா?
♠ குவாட் கூட்டணி: சீனாவிற்கு எதிரான இராணுவ முஸ்தீபு!
♠ எது அபாயகரமானது ? கரோனாவா? ஆர்.எஸ்.எஸ்.-ன் அவதூறா?
♠ குற்றவியல் சட்டத்திருத்தம் : மறுகாலனியாக்கத்துக்கு ஏற்ப மறுவார்ப்பு!
♠ போராட்டங்களின் நோக்கம்
♠ யார் தேசவிரோதி?
♠ இந்திய தேசிய ஜோதியில் தமிழகம் கலக்க மறுப்பதேன்?

நூல் அறிமுகம் : ஸ்டாலின் பற்றிய குருச்சேவின் பொய்கள் || குரோவர் ஃபர்

“இருபதாம் நூற்றாண்டின் புகழ்பெற்ற ஒரு உரை” (குருசேவின் இரகசிய உரையை இப்படித்தான் பிரிட்டனின் “டெலிகிராப்” நாளிதழ் அன்று அழைத்தது) முழுக்க முழுக்க பொய்யும் புரட்டுமானதா?

குருசேவின் அந்த “புகழ்பெற்ற” உரைக்குப் பின்னர், “சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவரே சொல்லிவிட்டார் பார்த்தீர்களா – ஸ்டாலின் ஒரு சர்வாதிகாரி – கொடுங்கோலன் என்று நாங்கள் சொன்னபோதெல்லாம் மறுத்தீர்களே இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?” என்றெல்லாம்  இடதுசாரிகளை நிலைகுலையச் செய்து கொண்டிருந்தனர் முதலாளித்துவவாதிகளும், “நடுநிலைவாதிகளும்”.

ஸ்டாலின் மறைவிற்குப் பிறகு 1956-ம் ஆண்டு ஃபிப்ரவரி 25-ல் ஒரு இரகசிய உரையில் ஸ்டாலின் பற்றி குருசேவ் அடுக்கடுக்கான அவதூறுகளைக் கூறினார் குருசேவ். ஸ்டாலினுடைய வாழ்நாளிலேயே முதலாளித்துவ நாடுகள் பல்வேறு அவதூறுகளை பரப்புரை செய்தாலும், நடைமுறையில் அப்படியான அவதூறுகளுக்கு ஸ்டாலினும் அவர் தலைமையில் இரசிய மக்களும் தக்க பதிலடி கொடுத்தனர்.

இதனால் அடுத்தடுத்த காலங்களின் மக்கி மண்ணாகி இருக்க வேண்டிய முதலாளித்துவவாதிகளின் பொய்ப் பரப்புரைகளுக்கு, ஸ்டாலினுடன் இருந்த குருசேவின் பொய்கள் தாங்கி நிற்கும் ஆதாரமாய் மாறி நின்றன. இதனைப் பயன்படுத்தி தோழர் ஸ்டாலினை அவதூறு செய்வதன் மூலம், சோசலிச வெறுப்புணர்வையும் வளர்த்து பரப்புரையும் செய்தார்கள்.

குருச்சேவின் ”புகழ்பெற்ற உரை”யில் கிடந்த அனைத்துப் பொய்களுக்கும், சோவியத் ரசிய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆவணங்களில் இருந்தும், கடிதப் போக்குவரத்துகளில் இருந்தும் தரவுகள் எடுத்து அத்தனையையும் ஆதாரப்பூர்வமாக மறுத்துள்ளார் நூலாசிரியர் குரோவர் ஃபர். இந்நூலை தமிழில் செ.நடேசன் அவர்கள் சிறப்பாக தமிழாக்கம் செய்திருக்கிறார்.

படிக்க :
♦ ஐ.ஐ.டி.-களில் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய துடிக்கும் மோடி அரசு !
♦ அம்பானி – அதானி கொழுக்கவே வேளாண் சட்டத் திருத்தம்!

இந்த நூலில் இருந்து, ”ஸ்டாலின் ட்ராட்ஸ்கியர்கள் குறித்து தவறான நிலைப்பாடு எடுத்ததாக” குருசேவ் சொல்லும் குற்றச்சாட்டை குரோவர் அம்பலப்படுத்தும் பகுதியை மட்டும் இங்கு வழங்குகிறோம்.

000

டிராட்ஸ்கியர்கள்

குருச்சேவ் :

நாம் டிராட்ஸ்கியர்களின் உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். மிக நீண்ட வரலாற்றுக் காலத்துக்குப் பின்பான இப்போது டிராட்ஸ்கீயர்களுடனான சண்டைப்பற்றி முழு அமைதியோடு உணர்ச்சிவசப்படாமல், போதுமான குறிக்கோளோடு இந்த விஷயத்தை பேசி ஆய்வு செய்யலாம்.  இவ்வளவு காலத்திற்குப் பிறகும் டிராஸ்கியைச் சுற்றியிருந்தவர்கள் எந்தவகையிலும் முதலாளித்துவ சார்ந்தவர்கள் என்பதற்கான அடையாளங்களைக் காண முடியவில்லை . அவர்களில் ஒருபகுதியினர் கட்சி சிந்தனையாளர்கள்; மற்றும் ஒரு குறிப்பிட்ட பகுதி தொழிலாளர்களிடமிருந்து பணியமர்த்தப்பட்டவர்கள். புரட்சிக்குப்பின் டிராட்ஸ்கியர்களோடு சேர்ந்த பல தனிநபர்களின் பெயர்களை கூறலாம். ஆனாலும், அதே தனிநபர்கள் புரட்சிக்கு முன்பும், அக்டோபர் சோசலிசப் புரட்சியின்போதும் இந்த மாபெரும் புரட்சியின் வெற்றியை ஒருங்கிணைத்தபோதும் அவர்கள் டிராட்ஸ்கியசத்திலிருந்து வெளியேறி லெனினிய நிலைகளுக்குத் திரும்பியவர்கள். தொழிலாளர் இயக்கங்களில் பாடுபட்டவர்கள். இத்தகையவர்களை நிர்மூலம் செய்தது தேவைதானா?

1937 பிப்ரவரி – மார்ச் மத்தியக்குழு பிளீனத்தில் டிராட்ஸ்கியர்களைப் பற்றி ஸ்டாலின் – மார்ச் 3

  1. “அந்நியப் புலனாய்வுத்துறைகளுக்காக, அவர்களின் பிரதிநிதிகளாக, திசைத்திருப்புபவர்களாக, அழிவுவேலைகளில் ஈபடுபவர்களாக, உளவாளிகளாகத் தீவிரமாகச் செயல்படும் டிராஸ்கியர்கள் ஏற்கனவே தொழிலாளி வர்க்கத்தின் அரசியல்களைப் பிரதிநிதித்துவபடுத்துபவர்கள் என்ற நிலையை இழந்துவிட்டார்கள். தொழிலாளிவர்க்க நலன்களுக்கான சிந்தனைகளை தருபவர்கள் என்ற நிலையையும் அவர்கள் இழந்துவிட்டார்கள். அவர்கள் அழிவுசக்திகளாக, இசைதிருப்புபவர்களாக, உளவாளிகளாக, கொலைகாரர்களாக எந்தவிதமான கொள்கையோ, சிந்தனையோ இன்றி அந்நிய உளவுத்துறை நிறுவனங்களுக்குப் பணியாற்றிவருகிறார்கள். இது நமது கட்சித் தோழர்களுக்கு கட்டாயம் விளக்கப்படவேண்டும்.”இப்போதைய டிராட்ஸ்கியர்களுக்கு எதிரான போராட்டங்களில் விவாதங்கள் என்ற பழைய முறைகளைப் பயன்படுத்தப் படக்கூடாது. அவர்களை அழித்தொழிக்கின்ற, வேருடன் பிடுங்கி எறியவேண்டிய புதியமுறைகளில் நடத்தப்படவேண்டும் என்பது கட்டாயம் விளக்கப்படவேண்டும்J.V.Stalin, Mastering Bolshevism. NY: Workers Library Publishers,1937, pp.26-7;
    cited from’ http://www.marx2mao/stalinMB37

மார்ச் 5-இல் பிளீனத்தின் நிறைவுரையில் ஸ்டாலின்:

“ஆனால், இங்கே ஒருகேள்வி எழுகிறது. ஜெர்மனிய, ஜப்பானிய ஏஜண்டுகளான டிராட்ஸ்கியர்களை அழித்தொழிக்கின்ற, வேருடன் பிடுங்கி எறிகின்ற நடைமுறைப் பணிகளை எவ்வாறு செயல்படுத்துவது? இதன்பொருள் உண்மையான டிராட்ஸ்கியர்களை மட்டுமல்லாமல், டிராட்ஸ்கியர்களை நோக்கி சிலநேரங்களில் ஊசலாடியவர்களையுமா? அதன்பின் நீண்டநாட்களுக்கு முன்பே டிராட்ஸ்கியத்திலிருந்து விலகி வந்தவர்களையுமா? முன்னொரு காலத்தில் நீண்டதெருக்களில் டிராட்ஸ்கிய ஏஜண்டுகளாக அழிவுவேலைகளில் ஈடுபட்டு, அதன்பின் டிராட்ஸ்கியர்களைவிட்டு நீங்கியவர்களையும் கூடவா? அத்தகைய குரல்கள் ஏதோ ஒருவிதத்தில் இந்தப் பிளீனத்தில் கேட்டன. அத்தகைய பொருள்விளக்கத்தை நாம் தீர்மானத்தில் பரிசீலிக்கவேண்டுமா? இல்லை. நாம் அதை சரியானது என்று கருதமுடியாது.

இந்தப் பிரச்சனையில், மற்ற எல்லாப் பிரச்சனைகளையும் போலவே, ஒரு தனிப்பட்ட, மாறுபட்டதான அணுகுமுறை இருந்தாக வேண்டும். நீங்கள் எல்லோரையும் ஒரே அளவுகோலில் அளந்து விடக் கூடாது. அத்தகைய துல்லியமற்ற பொதுப்படையான அணுகுமுறை உண்மையான டிராட்ஸ்கிய அழிவுசக்திகளுக்கும், உளவாளிகளுக்கும் எதிரான நமது போராட்டங்களுக்குத் தீங்குகளை மட்டுமே விளைவிக்கும்.

நமது பொறுப்பு மிக்க தோழர்களிடையே குறிப்பிட்ட எண்ணிக்கையிலான முன்னாள் டிராட்ஸ்கியர்கள் உள்ளார்கள். அவர்கள் நீண்டகாலத்துக்கு முன்பே டிராட்ஸ்கியத்திலிருந்து விலகியதோடு, டிராட்ஸ்கியத்தை எதிர்த்து இப்போது போராடுகிறார்கள். டிராட்ஸ்கியத்தை நோக்கி ஒருபோதும் அலைபாயாத நமது மதிப்புக்குரிய சில தோழர்களைவிட சிறப்பாக அதைவிட நல்லமுறையில் போராடிவருகிறார்கள். இப்படியான தோழர்களை இப்போது இழிவாகப் பேசுவது முட்டாள்தனமானது.

நமது தோழர்கள் தத்துவார்த்தரீதியாக எப்போதும் டிராட்ஸ்கியத்தை எதிர்த்து வருபவர்களாக இருந்தாலும், தனிப்பட்ட டிராட்ஸ்கியர்களுடன் சொந்தத் தொடர்புகளைக் கொண்டிருந்தார்கள். அப்போதும்கூட, தங்கள் கிராமங்களில் டிராட்ஸ்கியர்கள் இருப்பது தெரிய வந்தபோது அதை ஒழிக்க அவர்கள் தாமதித்ததில்லை. இருந்தாலும் டிராட்ஸ்கியர்களுடனான தனிப்பட்ட தங்களது நட்புறவுகளை அவர்கள் இன்னமும் துண்டித்துக் கொள்ளாமலிருப்பது நல்லதல்ல. ஆனால், இத்தகைய தோழர்களை – டிராட்ஸ்கியத்துடன் ஒட்டுமொத்தமாக சேர்ப்பது சிறு சிறுபிள்ளைத்தனமானது”

– Ibid, pp.43-4

1937 பிப்ரவரி – மார்ச் பிளீனத்தில் ஸ்டாலின் முன்வைத்ததை குருச்சேவ் தன் சொந்த வார்த்தைகளால் எப்படி வெளிபடுத்தினார் என்பதை மிகச்சரியாக நினைவு கூர்வோம்:

எல்லாவற்றுக்கும் அப்பால், டிராட்ஸ்கியைச் சுற்றியிருந்த மக்களின் பாரம்பரியம் எந்தவகையிலும் முதலாளித்துவ சமூகம் என்று எந்தவழியிலும் கண்டுபிடிக்க முடியாது. அவர்களில் ஒருப்பகுதியினர் கட்சியின் அறிவுத்துறை சார்ந்தவர்கள். குறிப்பிட்ட பகுதியினர் தொழிலாளர்களிடமிருந்து நியமிக்கப்பட்டவர்கள். நாம் பல தனிமனிதர்களை அவர்கள் காலத்தில் டிராட்ஸ்கியர்களுடன் சேர்ந்தவர்கள் என்று பெயர் குறிப்பிடலாம். ஆனால், அதே தனிமனிதர்கள் புரட்சிக்குமுன்பும், அக்டோபர் சோசலிசப் புரட்சியின்போதும், இந்த மாபெரும் புரட்சியின் வெற்றிகளை ஒருங்கிணைத்தபோதும் தொழிலாளர் இயக்கங்களில் தங்களை தீவிரமாகப் பங்கெடுத்துக்கொண்டவர்கள். அவர்களில் பலர் டிராட்ஸ்கியத்துடன் முறித்துக்கொண்டு லெனினிய நிலைக்குத் திரும்பினார்கள்’ (மேலே பார்க்க)

1930-களில், சோவியத் சோசலிச குடியரசு ஒன்றியத்தில் டிராட்ஸ்கியர்கள் என்ற பிரச்சனை திரும்பவந்தது என்பதை இங்கு பரிசீலிப்பது வசதியாக இருக்கும் என்று ‘இரகசிய உரையின் ஒருபகுதியில் குருச்சேவ்:

1927-ல் 15-ஆவது கட்சிக் காங்கிரஸ் நிகழ்வில் வெறும் 4,000 வாக்குகள்தான் எதிர்த்தரப்பான டிராட்ஸ்கிய- ஜியானோவீவியர்களுக்குக் கிடைத்தது. அப்போது 7,24,000 பேர் கட்சி தரப்பு நிலைபாட்டில் இருந்தனர் என்பதை நாம் கட்டாயம் நினைவில் கொள்ள வேண்டும். 15-ஆவது கட்சி காங்கிரஸுக்கும், பிப்ரவரி – மார்ச் கட்சி பிளீனத்துக்கும் இடையே கடந்த 10 ஆண்டுகளில் டிராட்ஸ்கியர்கள் முற்றிலும் நிராயுதபாணிகளாக்கப்பட்டுள்ளனர். பல முன்னாள் டிராட்ஸ்கியர்கள் தங்கள் சிந்தனைகளை, தங்கள் முந்தைய பார்வைகளை மாற்றிக்கொண்டு பல்வேறு பிரிவுகளில் சோசலிச கட்டுமானத்துக்கு வேலை செய்தார்கள். சோசலிச வெற்றியின் சூழல் நிலவும் நாட்டில் தீவிர எதிர்ப்பாளர்களுக்கு பெரும்பான்மை கிடைக்க அடிப்படை இல்லை என்பது தெளிவாகிறது”

1937 பிப்ரவரி – மார்ச் மத்தியக் குழு பிளீனத்தில் ஸ்டாலின் :

1927-இல் நமது கட்சியில் டிராட்ஸ்கியர்கள் பற்றி நடைபெற்ற விவாதங்களை மனதில் நினைவுகூருங்கள். அந்த நேரத்தில் இருந்த 8,54,000 கட்சி உறுப்பினர்களில் 7,30,000 பேர் வாக்களித்தார்கள் . அவர்களில் 7,24,000 பேர் போல்ஷ்விக்குகளுக்கு ஆதரவாக , டிராட்ஸ்கியத்துக்கு எதிராக வாக்களித்தனர். 4,000 கட்சி உறுப்பினர்கள் அல்லது ஒரு சதவீதத்தில் பாதியினர் டிராட்ஸ்கியர்களுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அப்போது 2,600 கட்சி உறுப்பினர்கள் வாக்களிப்பதிலிருந்து விலகி நின்றனர். இந்த எண்ணிக்கையிலும் பலர் இப்போது டிராட்ஸ்கியத்தின்மீது அவநம்பிக்கை கொண்டு அதைவிட்டு விலகிவிட்டனர்: மேலும் டிராட்ஸ்கிய சக்திகள் குறிப்பிடத்தக்க அளவில் இல்லை என்ற கருத்துக்கு நீங்கள் வந்தீர்கள் என்பதையும் இணைத்துக்கொள்ளுங்கள்.

J.V. Stalin, Mattering Bolshevism. NY; Workers Library Publishers. 1937, pp. 59-60. At http://www.marx2mao.com/Stalin/MB37.html (Emphasis added in both cases-GF)

ஸ்டாலினுடைய இந்தப் பேச்சிலிருந்து குருச்சேவ் மிக நன்றாக நகலெடுத்திருக்கிறார்!

டிராட்ஸ்கியர்களின் குற்ற உணர்வு பற்றி சுலோப்டலோல்:

டிராட்ஸ்கியும் அவரது ஆதரவாளர்களும் 1930-களில் வெளிநாடுகளில் அரசியலோடு இணைந்த நடவடிக்கைகளில் பிரச்சாரம் மட்டுமே செய்தார்கள் என்று சொல்லப்பட்டது. அனால் அது அவ்வாறு இல்லை. டிராட்ஸ்கியர்கள் வேறு செயல்பாடுகளிலும் ஈடுபட்டார்கள். ஜெர்மன் இராணுவ புலனாய்வுத்துறையான (The Abwehr)’அப்வெஹ்ர்’ உடன் தொடர்புகொண்டிருந்த நபர்களைப் பயன்படுத்தி அவர்கள் 1937-ல் பார்சிலோனா குடியரசுக்கு எதிரான வன்முறை கிளர்ச்சிகளை உருவாக்கினார்கள். பிரான்சு, ஜெர்மனி சிறப்புப் புலனாய்வு சேவையில் இருந்த டிராட்ஸ்கிய வட்டங்கள், அந்த நாடுகளில் உள்ள சோவியத் யூனியனை ஆதரிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளைக் காட்டிக்கொடுக்கும் செய்திகள் வந்தன. 1937-ல் பார்சிலோனா வன்முறைக் கிளர்ச்சியில் டிராட்ஸ்கியத் தலைவர்களின் தொடர்புகள் பற்றிய தகவல்கள் நமக்கு ஸ்சுல்ஸே – பாய்ஸன் மூலம் தெரிவிக்கப்பட்டது …. அதன்பின் அவர் கைது செய்யப்பட்டார். இந்தத் தகவலை நமக்கு தந்தார் என அவர் மீது கெஸ்டாபோ குற்றம் சாட்டினார். இது ஹிட்லரின் நீதிமன்றத்தில் அவருக்கு மரண தண்டனையைப் பெற்றுத்தந்தது.

மற்ற எடுத்துக்காட்டுக்கள்:

1941-இல் பாரிஸில் தமது வசிப்பிடங்களில் மறைந்திருந்த நமது பிரான்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களை டிராட்ஸ்கியர்கள் தங்கள் அப்வெஹ்ர்’ உறவுகளைப் பயன்படுத்தி தேடினார்கள். இதை வஸிலெவ்ஸ்கி நமக்கு தெரிவித்தார். அவர் 1940 இல் கோமிண்டர்னின் செயற்குழுவில் கலந்து கொள்ளும் உரிமை கொண்ட பதவியில் நியமிக்கப்பட்டவர்.

English translation from Gen. Sudplatov, The Intelligence Service and the Kremlin, Moscow 1996.p 58:

சுடப்லடோவ் கருத்தை சரிபார்க்கும் நாஜி இராணுவ நீதிமன்றத்தின் சம்பந்தப்பட்ட பத்தி : ஆங்கில மொழியாக்கம்:

குற்றம்சாட்டப்பட்டவர் 1938-களின் துவக்கத்தில் ஸ்பானிஷ்  உள்நாட்டுப் போரின் போது, பார்ஸிலோனாவின் எல்லையில் அலுவலகப்பொறுப்பில் இருந்தார். அவர் சிவப்பு அரசுக்கு எதிரான உள்ளூர் கலகக்காரர் என்பதை உணர்ந்து ஜெர்மனியின் இரகசிய சேவையில்  ஒத்துழைக்க தயாரானர். இந்தச் செய்தி போலினிட்ஸ் தகவலுடன் அவரால் பாரிஸிலுள்ள சோவியத் தூதரகத்துக்கு அனுப்பப்பட்டது.

(இந்த போலினிட்ஸ் என்பவர் ஜி செல்லாவான் போலினிட்ஸ். அண்மையில் ‘சிவப்பு இசைக்குழுவில் -Rote wanelle- நாஜிகளுக்கு எதிரான சோவியத் உளவுவேலையில் நியமிக்கப்பட்டவர். அவர் யுனைடெட் பிரஸ்ஸுக்காக வேலை செய்தார். அவர் இந்த அறிக்கையை சோவியத் தூதரக அஞ்சல் பையில் திணித்தார்” Shareen Blair Brysac, Resistung Hitler. Mildred Harnack and the Red Orchestra. Oxford University Press, 2000,p.237)

 

நூல் : ஸ்டாலின் பற்றிய குருச்சேவின் பொய்கள்
ஆசிரியர் : குரோவர் ஃபர்
தமிழாக்கம் : செ.நடேசன்
வெளியீடு : பொன்னுலகம் பதிப்பகம், திருப்பூர்.
விலை : ரூ.500
தொடர்பு : 94866 41586

விவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை !

வேளாண் சட்ட திருத்தங்களை மத்திய அரசு கைவிட கோரி டெல்லி போராட்ட களத்தில் உயிர் நீத்த விவசாயப் போராளிகளுக்கு வீரவணக்கம் என்கிற தலைப்பில் மதுரையில் ஞாயிற்றுக்கிழமை (20/12/2020) மாலையில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.

வேளாண் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் கடும் குளிரில் போராடிவரும் பஞ்சாப் அரியானா விவசாயிகளின் போராட்ட குணத்தையும் அதில் உயிர் நீத்த தியாகிகளின் தீரத்தையும் உயர்த்திப் பிடிக்கும் வண்ணம் முதலில் அவர்களுக்கு “வீர வணக்கம்” நிகழ்வுடன் கூட்டம் தொடங்கியது.

படிக்க :
♦ பாசிசத்தை ஆதரித்து நிற்கும் ஃபேஸ்புக் !
♦ என்.ஐ.ஏ., உபா சட்டத் திருத்தங்கள் : சட்டப்பூர்வமாகிறது பாசிசம் !

மக்கள் அதிகாரம் மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் குருசாமி, தனது தலைமை உரையுடன் கூட்டத்தை துவங்கி வைத்தார். இந்த வேளாண் சட்ட திருத்தத்திற்கு எதிராக பஞ்சாப் அரியானா விவசாயிகள் குடும்பம் குடும்பமாக குழந்தை குட்டிகளுடன் சாரை சாரையாக ஊர்வலமாக வந்து எப்படி இவ்வளவு தீரத்துடன் கடும் குளிரை கூட பொருட்படுத்தாமல் போராடி வருகின்றனர் என்பதை பார்க்கும் போது ஒரே வியப்பாக உள்ளது. இது போன்ற போராட்டங்கள் தான் நாடு முழுவதும் நடக்க வேண்டும். அதற்கு பஞ்சாப் அரியானா விவசாயிகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என தன் தலைமையுரையில் கூறினார்.

அடுத்ததாக மக்கள் அதிகாரம் மாநில செய்தி தொடர்பாளர் தோழர் மருது, இது வெறும் போராட்டம் அல்ல; இது ஒரு போர்; ஏனென்றால் மன்னர்கள் காலத்தில் தன் படைகளை எல்லாம் எல்லையில் குவித்து வைத்து தன்னுடைய பலத்தை காட்டி மக்களை மிரட்டி பணிய வைக்க முயற்சி செய்வார்கள். அதுபோலத்தான் இந்த கார்ப்பரேட் காவி மோடி அரசு டெல்லி எல்லைப்பகுதியில் ராணுவத் துருப்புகளை நிறுத்திவைத்து அங்கு போராடி வரும் விவசாயிகளை மிரட்டும் விதமாக நடந்து கொண்டது ஆனால் அங்கு விவசாயிகள் அனைத்தையும் தகர்த்தெறிந்து விட்டு முன்னேறினர். இந்த வேளாண் சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெறும் வரை நாங்கள் எக்காரணம் கொண்டும் பின்வாங்க மாட்டோம் இப்போராட்டம் ஒன்று வெல்லும் இல்லையேல் இங்கே மடிந்து சாவோம் என உறுதியுடன் போராடி வருகின்றனர்.

இதற்கு ஆதரவு தெரிவித்து பல கலைஞர்கள் இந்த மத்திய அரசிடம் வாங்கிய சக்ரா, சாகித்திய அகடாமி போன்ற விருதுகளை திரும்ப ஒப்படைத்தனர் இது பெரும் அவலம் என்பதை புரிந்து கொண்ட சாகித்திய அகடாமி விருதை திரும்ப பெற எங்களுக்கு உரிமை இல்லை என கூறி வருகின்றனர்.

இப்போராட்டத்திற்காக தன்னுடைய சிறைத்துறை டிஜிபி பதவியை துறந்த லக்மிந்தர் சிங் ஜாகர் முதல் பிஎச்டி பட்டம் படித்த இளைஞர்கள் வரை அவர்கள் கூறுவது ஒன்றுதான்; ”முதலில் நாங்கள் விவசாயிகள் விவசாயிகளின் பிள்ளைகள் பின்புதான் காவலர்கள் அதிகாரிகள்” என வர்க்கப் பார்வையுடன் பதாகைகளை ஏந்திக் கொண்டு இந்தப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் ஆர் எஸ் எஸ் சங்கிகளுக்கும் ஊடகங்களுக்கும் மத்திய அரசுக்கும் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

பஞ்சாப் அரியானா விவசாயிகள் போன்று நாடு முழுவதும் உள்ள விவசாயிகள், ஒரே வர்க்கமாய் அணிதிரண்டு போராடுவதன் மூலம்தான் இந்த கார்ப்பரேட் காவி அரசை நாம் வீழ்த்த முடியும் என்பதன் அவசியத்தை எடுத்துக் கூறி தனது சிறப்புரையை முடித்துக் கொண்டார்.

இறுதியாக மக்கள் அதிகாரம் மதுரை பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் ராமலிங்கம் நன்றி உரையாற்றினார்.

தகவல்
மக்கள் அதிகாரம்
மதுரை

விவசாயிகள் போராட்டத்தை திட்டமிட்டு கொச்சைப்படுத்தும் பி.ஜே.பி ட்ரோல்கள் !

த்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யவேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் மாபெரும் போராட்டத்தை விவசாயிகள் நடத்திக்கொண்டு வருகிறார்கள். இவர்களுக்கு நாடு முழுவதுமுள்ள ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள், மருத்துவர்கள் என பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கைக்காக அறிஞர்கள் பலரும் தாங்கள் பெற்ற விருதுகளையும் திருப்பி அளித்து வருகிறார்கள்.

வேளாண் சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்று தொடங்கிய விவசாயிகளின் இந்தப் போராட்டமானது, தற்போது அதானி குழுமத்தின் பொருட்களை புறக்கணிப்போம் என்ற தனியார்மய எதிர்ப்புப் போராட்டமாக பரிணமித்துள்ளது.

இப்படி சமூக மாற்றத்தை நோக்கி நகர்ந்து வரும் விவசாயிகளின் போராட்டத்தினைக் கண்டு அஞ்சி நடுங்கும் பாஜக, போராட்டத்திற்கு பெருகும் ஆதரவினை தடுக்க முடியாததால், நரித்தனமாக போராடும் விவசாயிகளின் மீதான வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. போராட்டத்திற்கு சிறிதும் தொடர்பில்லாத பழைய படங்களை தற்போது நடந்துவரும் போராட்டத்துடன் தொடர்புப்படுத்தி, சமூக வலைதளங்களில் பரப்பிக் கொண்டு வருகிறது.

படிக்க :
♦ டிசம்பர் 14 : பாஜக அலுவலகங்களை முற்றுகையிடுவோம் – விவசாயிகள் சங்கம் அறைகூவல் !
♦ அரியானா பாஜக கூட்டணி அரசை உலுக்கும் விவசாயிகள் போராட்டம் !

போராட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த டிசம்பர் 8-ம் தேதி நாடு தழுவிய பாரத் பந்தினை அறிவித்தார்கள் விவசாயிகள். அன்றைய தினத்தில் எடுக்கப்பட்டது என்று சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது.

அப்படி பகிரப்பட்ட ஒரு புகைப்படத்தில், ‘தெருவின் நாலா புறமும் காய்கறி பழங்கள் சிதறியிருப்பதை’ நாம் பார்க்க முடியும். இது விவசாயிகள் அறிவித்திருந்த பாரத் பந்த் அன்று எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும், விவசாயிகளின் பாரத் பந்திற்கு வியாபாரிகள் யாரும் ஆதரவு தெரிவிக்கவில்லை என்ற கோபத்தினால் ஆத்திரமடைந்த விவசாயிகள், வியாபாரிகள் மீது நடத்திய வன்முறை வெறியாட்டம் என்றும் இப்புகைப்படமானது சமூக வலைதளத்தில் வைரலாக பரப்பப்பட்டது.

இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த புஷ்பேந்திரகுல்ஷ்ரேத் என்பவர், “கல்வியறிவற்றவர்களே (விவசாயிகளே) இதுதான் உங்கள் பாரத் பந்தா? ஏழைகளின் உணவினை வீணாக்க உங்களுக்கு வெட்கமாக இல்லையா? உங்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்காததால், எந்தளவிற்கு கீழ்த்தரமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளீர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்தப் படத்தினை பகிர்ந்த மேலும் சிலர், “விவசாயிகள் என்ற போர்வையில் பாரத் பந்திற்கு அழைப்புவிடுத்த துரோகிகள்” என்று பதிவிட்டிருக்கிறார்கள். இது முகநூலிலும், ட்விட்டரிலும் அதிகளவில் பரப்பப்பட்டு, விவசாயிகள் மீதான வெறுப்பு பிரச்சாரத்தை அதிகளவில் தூண்டியது.

உண்மையில் இது டிசம்பர் 8 ஆம் தேதி எடுக்கப்பட்ட புகைப்படம் இல்லை என்ற உண்மை நிலவரத்தை ஆல்ட் நியூஸ் டாட் இன் (Alt news.in) என்ற இணையதளம் வெளியிட்டுள்ள தரவுகளில் இருந்து பார்க்கலாம்.

இது மே 5, 2020 அன்று அதாவது கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் தெளிவாகியுள்ளது. இதற்கு ஒரு ஆதாரம், காங்கிரஸ் கட்சியின் ஊடகக் குழு உறுப்பினரான சுரேந்திர ராஜ்புத் தனது ட்விட்டர் பக்கத்தில், “கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கையில், அரசாங்கத்தின் முழு பாதுகாப்புடன் சாராயக் கடை இயங்கிக் கொண்டு வருகிறது. ஆனால் அதே நேரத்தில் மக்களின் அத்தியாவசிய தேவையான காய்கறி பழங்களை விற்ற வியாபாரிகள் மீது அரசு தனது வன்முறை வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்துள்ளது” என்று இந்த புகைப்படத்தை மே 5, 2020 அன்று வெளியிட்டுள்ளார்.

 

இரண்டாவது ஆதாரம், இந்தப் படத்திலுள்ள ஒரு வாகனத்தின் நம்பர் பிளேட்டில், WB என்று குறிப்பிட்டுள்ளது. கடைகளின் பெயர் பலகைகளிலும் வங்காள மொழியில் எழுதப்பட்டிருப்பதை கவனிக்கலாம். இதுகுறித்த ஒரு பதிவும் வங்காள மொழியில் பகிரப்பட்டிருக்கிறது. எனவே இந்தப் புகைப்படத்திற்கும் தற்போது டெல்லியில் நடந்து வரும் போராட்டத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நிரூபணமாகியுள்ளது.

இது போன்று போராட்டத்திற்கு சிறிதும் தொடர்பில்லாத பழைய படங்களை போராட்டத்தின் போது நடத்தப்பட்ட அட்டூழியங்கள் என்று பகிரப்பட்டு வருகிறது.

இதில், முதல் புகைப்படத்தில் ஒருவர் வாகனம் ஒன்றினை சேதப்படுத்தும் காட்சி பதிவாகியுள்ளது. இது பாரத் பந்த் அன்று நடத்தப்பட்ட வன்முறை என்ற பொய்யான செய்தியும் பரப்பப்பட்டு வருகிறது.

செப்டம்பர் 10, 2018 அன்று தி அவுட்லுக் இணையத்தில் வெளியான கட்டுரை ஒன்றில் இப்புகைப்படம் இடம் பெற்றிருக்கிறது. இந்தப் படத்தில் இருக்கும் நபர் ஜன் அதிகார் கட்சியின் ஆதரவாளர் என்றும் எரிவாயு விலைவாசி உயர்வை கண்டித்து அக்கட்சி நடத்திய போராட்டத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் உண்மை தெரியவருகிறது.

இரண்டாவது புகைப்படத்தில் கொடியுடன் இருக்கும் இருவர், இருசக்கர வாகனத்தில் வருபவர்களை தாக்கும்படியான காட்சி இடம்பெற்றிருக்கிறது. இந்தப் படமும் 2018 ஆம் ஆண்டு அதே அவுட்லுக் இணையத்தில் வெளியானது. எரிவாயு விலைவாசி உயர்வு மற்றும் பணமதிப்பு இழப்பை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது புவனேஷ்வரில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது.

மூன்றாவது மற்றும் ஐந்தாவது படங்களில், பிரதான சாலை ஒன்றில் வாகனத்தை மறித்து கற்களையும் தடியையும் கொண்டு தாக்கும் காட்சியைப் பார்க்கலாம். இந்தப் படமும் 2018 ஆம் ஆண்டு ஜன் அதிகார் கட்சியின் ஆதரவாளர்கள், எரிவாயு விலைவாசி உயர்வை கண்டித்து பாட்னாவில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம். எனவே இதற்கும் தற்போது நடந்துவரும் விவசாயப் போராட்டத்திற்கும் துளியும் சம்பந்தமில்லை என்று தெளிவாக நிரூபணமாகிறது.

நான்காவது படத்தில் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் காட்சியினை காணமுடியும். ஆனால் இது ஜூலை 27, 2018 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த வேலை நிறுத்தப்போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று அப்போது டி.என்.ஏ என்ற இணையத்தளத்தில் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த ஐந்து படங்களையும் பாஜக தலைவரான கபில் மிஸ்ராவால் ஆதரிக்கப்படும் இணையதளமான Kreately-யில் கட்டுரையாகவே வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த கட்டுரையை சம்பந்த் சரஸ்வத் என்பவர் எழுதியிருக்கிறார். அதில், “பாரத் பந்த் என்பதே தேச விரோதம். பாரத் பந்திற்கு அழைப்பு விடுத்தவர்களையும், அதற்கு ஆதரவு தெரிவித்தவர்களையும் கண்டு நான் அவமானப்படுகிறேன்” என்று எழுதியிருக்கிறார்.

படிக்க :
♦ மிரட்டும் பாஜக : தமிழகத்திலும் வருகிறது என்.ஐ.ஏ கிளை !
♦ பாஜகவை விமர்சித்த ராகுல் பஜாஜ் மீது சமூக ஊடகங்களில் காவி ட்ரோல் படை தாக்குதல் !

இப்படி விவசாயப் போராட்டத்திற்கு துளியும் சம்பந்தமில்லாத பழைய புகைப்படங்களை பி.ஜே.பி.யின் ஐ.டி. விங் பரப்புவதோடு மட்டுமல்லாமல், விவசாயிகள் எதிர்ப்புப் பிரச்சாரத்தை வெறிகொண்டு செய்து வருகிறது.  விஷயங்களை தவறாக சித்தரிப்பது, மாற்று கருத்துக்களை விமர்சிப்பது, பேச்சு – எழுத்து சுதந்திரத்தினை ட்ரோல்கள் மூலம் ஒடுக்குவது என்பதனை ஒரு வழக்கமாகவே செய்து வருகிறது.

தீவிர வலதுசாரி குழுக்கள், ஆளும் பாஜக அரசுக்கு எதிராகச் சமூக ஊடகங்களில் கருத்துத் தெரிவிப்பவர்களை எப்படி எதிர்கொள்கிறது? என்பதையும் எப்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக ஒரு மாய அலையை சமூக ஊடகங்களில் உண்டாக்கி வருகிறது? என்பதையும், எப்படி பல ட்விட்டர் கணக்குகள் பெண்கள் மற்றும் ஊடகவியலாளர்களைக் கொச்சைப்படுத்தப் பயன்படுத்தப்படுகின்றன? என்பதையும் இந்தச் செயலை செய்வதற்காக இளைஞர்கள் எப்படி மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள் என்பதையும், ”நான் ஒரு ட்ரோல்” என்ற புத்தகத்தின் ஆசிரியரும், பத்திரிக்கையாளருமான சுவாதி சதுர்வேதி நன்றாக விளக்கியிருப்பார்.

தற்போது பாஜக-வின் இத்தகைய சமூக வலைத்தளக் கணக்குகள் தங்களது உரிமைகளுக்காக போராடிக் கொண்டு வரும் விவசாயிகளுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பாசிஸ்டுகளின் ஆட்சிக்கு என்றும் கோயபல்ஸ்கள் தான் ஆதாரமாக இருந்துள்ளனர். இன்று அந்த வேலையை சமூக வலைத்தளங்கள் மூலம் கூலிப்படையை அமர்த்தி செய்து வருகிறது பாஜக !


ஷர்மி
நன்றி : Alt News

ஐ.ஐ.டி.-களில் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய துடிக்கும் மோடி அரசு !

நாட்டின் மிக உயர்ந்த கல்வி நிறுவனமான இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT), தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான பணி நியமன மற்றும் உயர்கல்விக்கான இட ஒதுக்கீட்டு உரிமையை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு முடிவு செய்துள்ளது.

டெல்லி ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.ராம் கோபால்ராவ்.

மத்திய கல்வி அமைச்சகம் ஐஐடி நிறுவனங்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காக பேராசிரியர் வி.ராம் கோபால்ராவ் (இயக்குனர், ஐஐடி டெல்லி), அவர்கள் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. இக்குழு,  ஐஐடி உயர்கல்வி நிறுவனங்களில் பேராசிரியர் பணி நியமனங்களின்போது பின்பற்றப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டு நடைமுறையை முற்றிலும் ரத்து செய்ய பரிந்துரை செய்துள்ளது.

உலகில் உள்ள மற்ற முன்னணி உயர்கல்வி நிறுவனங்களுக்கு இணையாக சீர்மிகு செயல்பாடு தேவைப்படுவதாகவும்,  உலகத்தரம் வாய்ந்த கல்வி, ஆய்வுப்பணிகள், ஆசிரியப்பணி ஆகியவற்றை சிறப்பாக நிறைவேற்ற  இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவது பொருத்தமில்லாதது என்கிறது கோபால்ராவ் அறிக்கை.

மத்திய கல்வி நிறுவனங்கள் (ஆசிரியர் பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு) சட்டம் 2019 பிரிவு 4-ன்படி இட ஒதுக்கீடு இல்லாத உயர்கல்வி நிறுவனங்களின் பட்டியலில்,  ஐஐடி- ஐஐஎம் ஆகியவற்றையும் சேர்த்து, அதனடிப்படையில் இட ஒதுக்கீட்டில் இருந்து ஐஐடி நிறுவனத்திற்கும் விலக்கு அளிக்க வேண்டும் என்று  இக்குழு பரிந்துரை செய்துள்ளது. இந்தக் கமிட்டி எதற்காக உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கத்திற்கு எதிராக தனது பரிந்துரையை கொடுத்திருக்கிறது.

இப்பரிந்துரையின் அறிக்கையில், திட்டம் இரண்டில் பேராசிரியர் அடுக்கு ஒன்று மற்றும் அடுக்கு இரண்டு பதவிகளுக்கு மட்டும் இட ஒதுக்கீடு தர வேண்டும் என்கிறது.  தொடர்ந்து வரும் குறிப்புகளில் மிக தந்திரமாக உதவிப் பேராசிரியர்,  பேராசிரியர் பதவிகளுக்கு ஒதுக்கீட்டில் இருந்து விலக்கு அளிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

மேலும், ஒரு ஆண்டுக்குள் இட ஒதுக்கீடு செய்யப்பட்ட பதவிகள் நிரப்பப்படவில்லை என்றால்,  நிரப்பப்படாத காலியிடங்களை அடுத்த ஆண்டுக்கு எடுத்துச் செல்வது,  (carry forward of backlog vacancies) என்ற நடைமுறையை ஒழித்துக்கட்டும் நோக்கத்தோடும் இந்தப் பரிந்துரை உருவாக்கப்பட்டுள்ளது.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிய இடங்களை பொதுப் பட்டியலுக்கு மாற்றுவதற்கு தாழ்த்தப்பட்ட பழங்குடி இன தேசிய ஆணையத்தின் ஆலோசனையைப் பெற வேண்டும். சம்மந்தப்பட்ட  அமைச்சகங்களின் ஒப்புதல் பெற வேண்டும் என்ற இப்போது உள்ள நடைமுறைகளை அப்பட்டமாக நிராகரிக்கும் வகையில் இந்த பரிந்துரை அமைந்துள்ளது.

பரிந்துரையின் மூன்றாவது பிரிவு தாழ்த்தப்பட்ட பழங்குடி இன மாணவர்கள் முனைவர் பட்டப் படிப்புகளில் அதிக எண்ணிக்கையில் இடம் பெறுவதை உறுதி செய்வதாகக் கூறினாலும், அவர்கள் முனைவர் பட்டம் பெறுவதை தடை செய்யும் மறைமுக நோக்கத்தோடு இந்தப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்கள் முனைவர் படிப்புக்கு விண்ணப்பிக்கும்போது அவர்களின்  தகுதியின் அடிப்படையிலேயே மதிப்பீடு செய்யும் தேர்வு இருக்குமாம்.

தகுதி – தகுதி என்று இவர்கள் ஓலமிடுவதன் நோக்கம்  ஏகலைவன் கட்டை விரலை காவு வாங்கிய கதைதான்.  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வர்ணாசிரமக் கொடுமைகளை அரங்கேற்றி,  அடித்தள உழைக்கும் மக்கள் கல்வியை கற்க விடாமல் தடுத்து நிறுத்திய பார்ப்பனியம் மீண்டும் புதிய வடிவம் எடுக்கிறது. போராடிப் பெற்ற இட ஒதுக்கீட்டு உரிமைகளைப் பறித்தெடுக்கிறது.

பார்ப்பன உயர்சாதியினர் தவிர மற்றவர்கள் எவரும் படிக்கக் கூடாது என்ற மனுநீதி கோட்பாட்டை,  மீண்டும் தகுதி, திறமை என்ற மாய்மால வார்த்தைகளின் பின்னே  மிகவும் தந்திரமாக அரங்கேற்றும் சதித் திட்டத்தை உள்ளடக்கியதுதான் இந்த பரிந்துரை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் நாட்டிலுள்ள 23 ஐஐடி-களில் முனைவர் பட்ட ஆய்வுக்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் 9.2% தாழ்த்தப்பட்ட மாணவர்கள், 2.1% மலைவாழ் இன மாணவர்கள்; இந்திய அரசியல் சட்டம் அளித்துள்ள குறைந்தபட்ச இட ஒதுக்கீட்டின் அளவை கூட இது எட்டவில்லை. கான்பூர் ஐஐடியில் அனுமதிக்கப்பட்ட மலைவாழ் மாணவர்கள் 0.5%, பார்ப்பனர்களின் கோட்டையான சென்னையில் 4% விழுக்காடு (ஆதாரம்: இந்திய கல்வி அமைச்சருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்கள் அனுப்பிய கடிதம்).

படிக்க :
♦ 7.5 சதவீத இட ஒதுக்கீடு : புண்ணுக்குப் புனுகாகிவிடக் கூடாது
♦ அரசு மருத்துவர்களுக்கு இடஒதுக்கீடு ரத்து

இந்திய உயர்கல்வி நிறுவனங்களை கட்டுப்பாட்டில் வைத்து உள்ளவர்கள் யார்? பலன் அடைபவர்கள் யார்? என்பதை இந்தப் புள்ளிவிவரங்கள் தெளிவாகக் காட்டுகிறது.

உலகில் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்களில் சோதனை செய்து லண்டன் டைம்ஸ் ஏடு ஆய்வு அறிக்கையை வெளியிட்டது. 290-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள், பல்லாயிரக்கணக்கான கல்லூரிகள், ஒரு கோடிக்கும் மேலான மாணவர்கள் உள்ளடக்கிய உயர் கல்வி அமைப்பு கொண்ட இந்திய நாட்டில்,  உலகத் தரம் வாய்ந்த உயர்கல்வி தரவரிசையில் ஒரே ஒரு ஐஐடி நிறுவனம் மட்டுமே  இடம் பெற்றுள்ளது. இதைவிட வெட்கக்கேடு வேறு எதுவுமில்லை

“தகுதி – திறமை” என்று கொக்கரிக்கும் மெத்தப் படித்த  பார்ப்பன அறிவுஜீவிகள், கல்வித்தரத்தை வளர்த்த இலட்சணத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து விட்டது லண்டன் ஏடு வெளியிட்ட ஆய்வறிக்கை.

ஐஐடி நிறுவனத்தில் ஒரு தொழில்நுட்பவியலாளரை உருவாக்க மக்கள் வரிப்பணம் பல லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்யப்படுகிறது. நுழைவுத் தேர்வில் முதல் வரிசையில் தேர்ச்சி பெற்று ஐஐடி நிறுவனத்தில் சிறப்பாக பட்டம் பெற்று, அமெரிக்க விசா கிடைத்து, சுக போகங்களில் திளைக்க சொர்க்கபுரி செல்லும் வண்ணக் கனவுகளோடு “தகுதி – திறமை படைத்த அம்பிகள்” பறந்து விடுகின்றனர்.

ஆர்.எஸ்.எஸ் – ஏ.பி.வி.பி குண்டர்களால் தற்கொலைக்குத் தூண்டப்பட்ட உயர்கல்வி மாணவன் ரோஹித் வெமுலா.

சமூகத்தின் விளிம்பில் உள்ள ஒடுக்கப்பட்ட  பிரிவைச் சேர்ந்த ஒரு மாணவன் உயர்கல்வி வாய்ப்பை பெறுவது அவ்வளவு எளிதானது அல்ல. அரசு நடத்துகின்ற அத்தனை போட்டி தேர்வுகளிலும் வெற்றி பெற்றால்தான் இந்த வாய்ப்பு கிடைக்கும்.

பல்வேறு தடைக்கற்களை தாண்டி உயர்கல்வியில் இடம்பிடிக்கும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் சந்திக்கும் அவமானங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல, ஐஐடி நிறுவனங்களில் கோலோச்சி வருகின்ற பார்ப்பன உயர்ஜாதி கும்பல் காட்டுகின்ற பாகுபாட்டின் காரணமாக தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.

நமது நாட்டில் உள்ள ஐஐடி நிறுவனங்களில் காட்டப்படும் பாகுபாட்டின் காரணமாக, தலித் மாணவர்கள் மீது வெறுப்பை உமிழும் பார்ப்பனக் கும்பலின் சாதி வெறியின் விளைவாக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். 27 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில் சென்னை ஐஐடி முதலிடம் வகிக்கிறது. அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டத்தை தடை செய்து, வர்ணாசிரம வெறிபிடித்த சனாதான கும்பல் சென்னை ஐஐடியில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களை கொடூரமாக பழிவாங்கியது.

சக மனிதர்களும் நம்மைப்போல் மனிதர்களே, அவர்களும் நம்மைப் போல் செயல்திறனும் வாழ்க்கை வாய்ப்புகளையும் பெற வேண்டும் என்ற சனநாயக உணர்வை இன்றைய கல்வி உருவாக்கவில்லை.

நாடெங்கிலும் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகங்களில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில்,  இட ஒதுக்கீட்டு சமூகநீதிக்கு வேட்டு வைக்கும் இந்த பரிந்துரை, கார்ப்பரேட் நலன் காக்கும் இந்துத்துவப் பாசிச மோடி அரசின் மிகப்பெரிய சதித் திட்டமாகும்.

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட,  ஒடுக்கப்பட்ட மலைவாழ் மக்களின் குறைந்தபட்ச முன்னேற்றத்தைக் கூட சகிக்காமல் அவர்களது கல்வி -வேலைவாய்ப்பு உரிமைகளில் மிகப்பெரிய தாக்குதலை மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி அரசு தொடுத்துள்ளது.


இரணியன்

அம்பானி – அதானி கொழுக்கவே வேளாண் சட்டத் திருத்தம்!

யிரம் ஆயிரமாய் அணிவகுத்து இந்திய தலைநகர் டெல்லியில் இலட்சக்கணக்கான  விவசாயிகள் முற்றுகையிட்டு நிற்கின்றனர். பல்லாயிரக்கணக்கான  ட்ராக்டர் வாகனங்களில் அணி அணியாய் விவசாயிகள் டெல்லியை நோக்கி போர்ப்பரணி பாடி வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் எந்த விவாதமும் இன்றி மோடி அரசு கொண்டு வந்திருக்கின்ற வேளாண்மை திருத்த சட்டங்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு வேட்டு வைத்து விடும் என்று மிகப்பெரும் அச்ச உணர்வு விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. உலகமயத்தின் கோரப்பிடியில் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கும் இந்திய விவசாயிகளின் தலையில் பேரிடியாக இந்த சட்டம் அமைந்துள்ளது.

உலகமயம் – தனியார்மயம் – தாராளமயக் கொள்கைகளால் விவசாயம் மிகப்பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இடுபொருள்கள் விலை உயர்வு, விவசாயத்துறைக்கு அளித்துவந்த அரசு மானியங்கள் அளவை குறைப்பது,  இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால் விளைபொருள் வீழ்ச்சி, வங்கிக்கடன் மறுப்பு, விவசாயத் துறைக்கு வழங்கப்படும் ஒதுக்கீட்டு நிதியை குறைப்பது. இவற்றின் விளைவாக விவசாயிகளின் வாழ்வு கேள்விக்குறியாகி விட்டது.

கடன் நெருக்கடி, வேலையின்மை, பட்டினிச் சாவுகள் – இதுவே இன்றைய கிராமங்களின் அவல வாழ்வு. கடன் நெருக்கடி தாங்காமல் விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆறு ஆண்டுகளில் 60 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2019-ல் மட்டும் 10 ஆயிரத்து 281 விவசாயிகளின் தற்கொலை மரணம் நிகழ்ந்துள்ளன. 30 நிமிடத்துக்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்வதாக அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது.

மூன்று வேளாண்மை அவசரச் சட்டங்களை 2020, ஜூன் மாதம் மோடி அரசு பிறப்பித்தது. 1955 ஆண்டு உருவாக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தங்களை செய்து ஒரு அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் கூட விவாதிக்காமல் ஜனநாயகத்தின் கழுத்தை நெரித்து கொண்டுவரப்பட்ட இந்த அவசரச் சட்டம் யாருடைய நலனுக்காக? இந்த சட்டத்தால் ஆதாயம் அடையப் போவது யார்? இந்திய விவசாயத்தில் வேளாண் சட்டங்கள் 2020 அமுல்படுத்துவதால் நிகழப்போகும் மாற்றங்கள் என்ன?

விவசாயிகளுக்கு விலை உத்தரவாதம் மற்றும் விவசாய சேவைகள் (அதிகாரம் அளித்தல் மற்றும் பாதுகாப்பு சட்டம்) 2020.

இச்சட்டம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்காக கொண்டுவரப்படுகிறது என்று கூறப்படுகிறது. விவசாய உற்பத்திப் பொருட்களை கார்ப்பரேட் நிறுவனங்களுடன் விவசாயிகள் ஒப்பந்தம் செய்துகொண்டு நல்ல விலையை பெறுவார்கள் என்று இச்சட்டம் கூறுகிறது.

இந்தச் சட்டங்கள் தனியார் முதலீடுகளை கொண்டுவரும் என்கிறது மோடி அரசு. பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் கரங்களில் விவசாயத்தை மொத்தமாக ஒப்படைப்பதற்கான ஒரு ஏற்பாடுதான் இச்சட்டம். சட்டம் நாடாளுமன்ற அவையில் நிறைவேறுவதற்கு முன்பாகவே மோடியின் பேரன்பை பெற்ற கார்ப்பரேட் முதலாளி அதானி குழுமம் உணவு கொள்முதல் நிலையங்களை பிரம்மாண்டமான முறையில் கட்டி அமைத்ததன் மர்மம் என்ன?

அன்னிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதற்காக இந்திய விவசாயத்தை காவு கொடுக்க கார்ப்பரேட் நலன் காக்கும் மோடி அரசு முடிவு செய்துவிட்டது. கவர்ச்சிகரமான வாக்குறுதிகளின் பின்னே அம்பானி, அதானி கார்ப்பரேட் குழும முதலாளித்துவ கொள்ளைக் கும்பலின் நலன் ஒளிந்திருக்கிறது.

வயலில் பயிர்கள் வளரும் நிலையிலேயே கார்ப்பரேட் நிறுவனங்கள் விலையை தீர்மானித்து விவசாயிகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும். நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு தானியங்களை அறுவடை செய்து கொள்ளும். ஆனால் அதைவிட பலமடங்கு கொள்ளை லாபத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் விற்றுக் கொள்ளும்.

நிலம் மட்டுமே விவசாயிகளிடம் இருக்கும்.  நிலத்தில் எதைப் பயிரிட வேண்டும்; எந்த உரங்களை,  எந்த பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்த வேண்டும் என்பதை கார்ப்பரேட்டுகளே தீர்மானிக்கும். விவசாய கருவிகள், இயந்திரங்கள், தொழில் நுட்பங்கள் அனைத்தையும்  கார்ப்பரேட் நிறுவனங்களே முடிவெடுக்கும். தீர்மானிக்கப்பட்ட விலைப்படி,  உற்பத்தியும் கணக்கிட்டு, செலவுகளை கழித்துக்கொண்டு மீதி உள்ளதை மட்டுமே விவசாயிகளுக்கு வழங்கும்.

உற்பத்திப் பொருட்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் பெறுகின்ற பொழுது, அதற்கான காலம், விலை, விளைபொருட்களின் தரம் இவற்றை பற்றி மூன்றாவது நபர் சான்றிதழ் வழங்குவார்கள். தரம் இல்லை என்று உற்பத்திப் பொருள்கள் கொள்முதல் செய்வதற்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் மறுப்பதற்கான வாய்ப்பு இதில் உள்ளது.

இயற்கையின் சீற்றங்கள் – வறட்சி,  வெள்ளம் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டால் கார்ப்பரேட் நிறுவனங்கள் பொறுப்பேற்காது. அரசாங்கம் வெள்ள நிவாரணம், வறட்சி நிவாரணம் வழங்காது. தரக் கட்டுப்பாடு என்ற பெயரில் உற்பத்திப் பொருட்களை ஆய்வுக்கு உட்படுத்துவது நடக்கும்;  தரசான்றிதழ் வழங்கினால் மட்டுமே நிறுவனங்கள் கொள்முதல் செய்யும்.

உற்பத்திப் பொருட்களை குறைவாக மதிப்பிட்டு விவசாயிகளின் வயிற்றில் அடிப்பார்கள். விவசாயிகள் நஷ்டம் அடைந்து கார்ப்பரேட் நிறுவனங்களுடன் வாங்கிய முன் தொகைக்கு ஈடு செய்ய இயலாமல் தங்களது வாழ்வாதாரமான நிலங்களை இழந்து நிற்கும் கொடுமைக்கு தள்ளப்படுவார்கள்.

விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப் படுத்துதல்) சட்டம்2020

உற்பத்திப் பொருளை வாங்குவதிலும் விற்பதிலும் விவசாயிகளுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் தேர்வு செய்துகொள்ளும் உரிமையை இந்த சட்டம் வழங்குவதாக மோடி அரசு கூறுகிறது. இலாபகரமான விலை விவசாயிகளுக்கு கிடைக்கும்.  உற்பத்திப் பொருள் விற்பனை தடை இல்லாமல் நடைபெறும். இத்திட்டம் நடைமுறைப்படுத்தும்போது ஒரு சில வினாடிகளில் உலகத்தின் எங்கோ ஒரு மூலையில் உள்ளவருக்கு இங்குள்ள விளைபொருள் உரிமையாகும்.

மின்னணு வர்த்தகத்தின் மூலமாக கார்ப்பரேட் நிறுவனங்கள் உள்ளூரில் சேமிப்புக் கிடங்கை வைத்துவிட்டு ஆன்லைன் மூலமாக பிற நாடுகளுக்கு விற்று விடுவார்கள். தொடர்ந்து பொருள்கள் ஏற்றுமதி ஆகிவிடும்.

உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள், மண்ணின் மைந்தர்களுக்கு கையளவு உணவு பொருள் கூட கிடைக்காமல் போகும். கார்ப்பரேட் நிறுவனங்கள் உணவுப் பொருட்களை பல மடங்கு விலை ஏற்றி கொள்ளை அடிப்பார்கள். இதன் விளைவாக உணவு பஞ்சமும் பட்டினிச் சாவுகளும் நிகழ இருக்கின்றன. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தங்கு தடையற்ற வர்த்தக சுதந்திரத்தை இந்தச் சட்டம் வழங்குகிறது.

ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே இந்தியா, ஒரே விவசாயம்,  ஒரே சந்தை; இந்த லட்சியத்தை நோக்கி நாலுகால் பாய்ச்சலில் முன்னேறுகிறது மோடி அரசு.

நாட்டின் செல்வவளங்கள் அனைத்தையும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்த்துக் கொடுத்தது போதாதென்று மிச்சமிருக்கும் விவசாயத்தையும் அவர்களது கரங்களில் ஒப்படைக்கும் ஏற்பாடுதான் இந்த புதிய வேளாண் சட்டங்கள்.

எதிர்காலத்தில்

சமூக மாற்றத்திற்கான முன்னெடுப்புகளுக்கும், மக்களை விழிப்புறச் செய்வதற்கும் விவசாயிகளின் போராட்டம்

துவக்க உரையாக அமைந்துள்ளது. இந்தத் துவக்க உரையைத் தொடர்ந்து முடிவுரையை இந்திய பாட்டாளி வர்க்கம் விரைவில் எழுதி முடிக்கும். இதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை.

60 சதவீதத்துக்கும் மேலான மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்கிறார்கள். இந்திய அரசின் கணக்குப்படி சிறு மற்றும் குறு விவசாயிகளின் எண்ணிக்கை 86 விழுக்காடு, பணக்கார விவசாயிகளின் எண்ணிக்கை 14 விழுக்காடு, இந்திய வேளாண்மை துறையின் கணக்கெடுப்பின்படி குறு விவசாயிகள் ஒன்னேகால் ஏக்கர் முதல் 2  -1/2 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ளனர். சிறிய விவசாயிகள் இரண்டரை ஏக்கரில் இருந்து 5 ஏக்கர் நிலத்தைசொந்தமாக வைத்துள்ளனர். நடுத்தர விவசாயிகள் பத்து ஏக்கரில் இருந்து 25 ஏக்கர் வரை வைத்து உள்ளனர். விவசாயிகளின் மொத்த எண்ணிக்கையில் 86 விழுக்காடு இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள்.

மோடி அரசு கொண்டு வந்துள்ள இந்த மூன்று வேளாண்மை திருத்தச் சட்டங்களும் அனைத்து விவசாயிகளையும், கூலி ஏழை உழவர்களையும், ஒட்டுமொத்த மக்களையும் பாதிக்கக் கூடியது. இந்தச் சட்டத்தின் மூலம் விவசாயிகள் வருமான வரி வளையத்திற்குள் கொண்டு வரப்படுவார்கள். விவசாயிகளுடைய ஒவ்வொரு வருமானமும் கணக்கிடப்பட்டு வருமான வரி பிடித்தம் செய்யப்படும்.

படிக்க :
♦ விவசாய மசோதாக்கள் : பஞ்சாப் விவசாயிகளின் உள்ளக் குமுறல் …
♦ டெல்லி சலோ : வெல்லட்டும் விவசாயிகள் போராட்டம் !!

வேளாண் திருத்த சட்டங்கள் அரசியல் சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள மாநில உரிமைக்கு வேட்டு வைக்கக் கூடியவை. கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானவை.

கார்ப்பரேட் காவி பாசிசத்தை அமல்படுத்தும் மோடி கும்பலுக்கு கணக்கின்றி நிதி ஆதாரத்தையும் நன்கொடைகளையும் வாரி வழங்குகின்றன கார்ப்பரேட் அம்பானி, அதானி கும்பல். அதற்கு நன்றிக் கடனாக விவசாயத்தை முற்றிலுமாக கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்ப்பது என்பதே மோடி அரசு கொண்டுவந்திருக்கும் இச்சட்டங்களின் நோக்கம்.

ஆட்சியாளர்கள் தங்களது அகண்ட பாரத கனவை நிறைவேற்ற, மாநில உரிமைகளைப் பறித்து,  ஒரே நாடு என்கின்ற ஒற்றை இந்தியாவை உருவாக்குவதை இலட்சியமாகக் கொண்டு இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

ரோம் நகர் பற்றி எரிகின்ற பொழுது நீரோ மன்னன் பிடில் வாசித்ததாக சொல்வார்கள். நாட்டின் தலைமை அமைச்சர் மோடி அலங்காரங்களோடு புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பூமி பூஜை செய்கிறார். உறைய வைக்கும் கடும் குளிரிலும் போராடிக்கொண்டிருக்கிறார்கள் விவசாயிகள்.  கார்ப்பரேட் நிறுவனங்கள் வீசி எறியும் எலும்புத் துண்டை கவ்விக்கொண்டு சில ஊடகங்கள் மாபெரும் விவசாயிகளுடைய எழுச்சியை கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறது.

டெல்லி தலைநகரை அதிர வைத்துக் கொண்டிருக்கும் போராட்டம், பஞ்சாப், அரியானா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகளின் உரிமையை வென்றெடுக்கும் போராட்டம் மட்டுமல்ல, இந்திய துணை கண்டத்தின் அனைத்து விவசாயிகளுடைய வாழ்வாதாரத்தை காப்பதற்கான போராட்டம். அனைத்து மாநில விவசாயிகளும் ஓரணியில் போராட்டக் களத்தில் நின்றால், ஆட்சியாளர்களின் ஆணவத்தை அடக்கி வெற்றியை  நோக்கி இந்தப் போராட்டம் செல்லும்.

வரலாற்றின் திசையை மாற்றும் வல்லமை கொண்டவர்கள் இந்திய விவசாயிகள்.

டெல்லி தலைநகர் இதுவரை கண்டும் கேட்டிராத போராட்டக் களத்தை சந்தித்து வருகிறது. நாடாளுமன்ற பெரும்பான்மை பலத்தை வைத்துக் கொண்டு எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று இறுமாப்போடு இருக்கும் ஆட்சியாளர்களுக்கு சிம்ம சொப்பனமாய் திகழ்கிறது விவசாயிகளின் போராட்டம். மாபெரும் மக்கள் சக்திக்கு முன்னால் பாசிஸ்டுகள் படு தோல்வி அடைவது திண்ணம்.

எதிர்காலத்தில் சமூக மாற்றத்திற்கான முன்னெடுப்புகளுக்கும், மக்களை விழிப்புறச் செய்வதற்கும் விவசாயிகளின் போராட்டம் துவக்க உரையாக அமைந்துள்ளது. இந்தத் துவக்க உரையைத் தொடர்ந்து முடிவுரையை இந்திய பாட்டாளி வர்க்கம் விரைவில் எழுதி முடிக்கும். இதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை.


இரணியன்

 

டெல்லி சலோ : வெல்லட்டும் விவசாயிகள் போராட்டம் !!

கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவை செய்து விவசாயிகளை சாகடிக்கும் மோடி அரசுக்கு எதிராக எனது கோபத்தையும், வலிமையையும் வெளிப்படுத்த என்னையே தியாகம் செய்கிறேன் – சீக்கிய மதகுரு பாபா ராம் சிங்

வெல்லட்டும் விவசாயிகள் போராட்டம் !
வீழட்டும் கார்ப்பரேட் காவி மோடி அரசு !!

0-0-0

பணமதிப்பழிப்பு – ஜி.எஸ்.டி – என்.ஆர்.சி – கும்பல் படுகொலை
– இது மோடி இந்தியா

மெரினா எழுச்சி – ஷாகின் பாக் – டெல்லி சலோ
– இது மக்கள் இந்தியா

000

நாங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் அரசிடம் பேசத் தயாராக இருக்கிறோம், ஒருபோதும் போராட்டத்திலிருந்து பின்வாங்க மாட்டோம். அரசோ உச்ச நீதிமன்றத்தின் உதவியை நாடுகிறது., அவர்களது அகம்பாவம் இன்னும் மாறவில்லை. அவர்களது பேச்சில் வெளிப்படைத் தன்மை வேண்டும்.

– போராட்டக் களத்தில் ஒரு விவசாயி

000

 

 

சாதியப் படிநிலையை ஏற்றுக்கொள் : பிரக்யா சிங் முதல் சிறைச்சாலை வரை !

ராஜஸ்தானில் உள்ள ஆல்வார் மாவட்ட சிறையில் 2016-ம் ஆண்டில் 18 வயதாகும் அஜய் என்பவரிடம் ”நீ எந்த சாதியை சேர்ந்தவன்” என்று கேட்டு அவர் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர் என்று தெரிந்ததும் அவருக்கான வேலைகளை ஒதுக்குகிறார் சிறைக் காவலர். சிறையிலுள்ள கழிப்பறைகளை சுத்தம் செய்ய வேண்டும், வார்டின் வராண்டாவை துடைக்க வேண்டும், தண்ணீர் சேமித்தல் மற்றும் தோட்டக்கலை போன்ற பிற வேலைகளுக்கு உதவ வேண்டும். அவரது பணி விடியற்காலையில் தொடங்கி ஒவ்வொரு நாளும் மாலை 5 மணி வரை தொடரும்.  “இது ஒவ்வொரு புதிய கைதியும் செய்ய வேண்டிய ஒன்றல்ல. கழிப்பறைகளை சுத்தம் செய்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர் மட்டுமே அவ்வேலைகளை செய்தனர்” என்று கூறுகிறார் அஜய்.

மேலும் அவர், “ஒருநாள் சிறை வார்டில் கழிப்பறைகள் இரவு முழுவதும் நிரம்பி வழிந்தது. சிறை அதிகாரிகள் அதை சுத்தம் செய்ய வெளியிலிருந்து யாரையும் அழைக்கவில்லை. அவர்கள், நீதான் இந்த வேலையை செய்ய வேண்டும் என்றனர். இந்த வேலை எனக்கு தெரியாது என்று எதிர்ப்பு தெரிவித்தேன். ஆனால் அவர்கள் மெல்லிய மற்றும் இளமையான யாரும் இங்கு இல்லை என்று கூறி செப்டிக் டேங்கின் உள்ளே இறங்க சொன்னார்கள். நான் கீழே இறக்கி தொட்டி மூடியை திறந்து மனித மலத்தின் உள்ளே சென்றேன். துர்நாற்றத்தால் இறந்து விடுவேன் என நினைத்து அலறித் துடித்தேன். மற்ற கைதிகளிடம் சொல்லி என்னை வெளியே இழுக்கச் சொன்னார் ஒரு சிறை காவலர். இச்சம்பவம் மிகவும் வேதனையளித்தது” என்கிறார் அஜய்.

படிக்க :
♦ சாதி உங்களுக்கு என்ன செய்தது ?
♦ ஜாட் கலவரம் : சாதி என்றொரு பெருந்தீமை !

மனித கழிவுகளை மனிதன் அள்ள தடை செய்யும் சட்டம் 2013-ம் ஆண்டில் திருத்தப்பட்ட பிறகு சிறை அதிகாரிகள் அஜய்யைச் செய்யுமாறு நிர்பந்தித்தது கிரிமினல் குற்றமாகும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்துவமான சிறை கையேடுகள் இருந்தாலும் பெரும்பாலும் அவை சிறைச்சாலை சட்டம்-1894 ஐ அடிப்படையாக கொண்டுள்ளது. அதன்படி, பிராமணர் மற்றும் உயர்சாதி இந்து கைதி சமையல்காரராக வேலை செய்யும் தகுதியுடையவர் ஆகிறார்.

கோவா, டெல்லி, மகாராஷ்டிரா, ஒடிசா போன்ற மாநில சிறைகளில் சாதி அடிப்படையிலான தொழில்கள் இருந்தன. 2010 முதல் 2017-ம் ஆண்டுக்கு இடையில் மும்பை மற்றும் மகாராஷ்டிராவின் பல வழக்குகளை எதிர்கொண்ட லலிதா என்ற பெண் கைதி பைக்குல்லா பெண்கள் சிறையில், எழுதப்படாத சிறை நடைமுறை இருந்ததாக கூறுகிறார். 2008-ம் ஆண்டு நடைபெற்ற வடக்கு மகாராஷ்டிராவின் மாலேகான் குண்டுவெடிப்பு மீதான வழக்கில் கைதான பிரக்யா தாகூருடன் லலிதாவும் இருந்துள்ளார்.

Pragya-thakur-NIAபிரக்யா கைது செய்யப்பட்டதும் சிறைச்சாலையிலும், சிறை அதிகாரிகளிடமும் செல்வாக்கு செலுத்தியுள்ளார். அவருக்கென ”வி.ஐ.பி செல்” என அழைக்கப்படும் மூன்று அறைகளை உடைய தனி அறை ஒதுக்கப்படுகிறது. புதிதாக சமைத்த வீட்டு உணவு விடியற்காலையில் சிறைச்சாலையை அடையும். ”ஜாட்” எனும் ஆதிக்க சாதியை சேர்ந்த ஒரு பெண் அவரது மெய்க் காப்பாளராக நியமிக்கப்பட்டார். ஒரு உள்ளூர் தலித் பெண் அவரது கழிப்பறையை சுத்தம் செய்ய நியமிக்கப்பட்டார் என்று கூறினார் லலிதா.

இந்த பிரக்யாதான் 2017-ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டு 2019-ம் ஆண்டு போபால் தொகுதியில் எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த பயங்கரவாத பெண்  ‘சாமியார்’ தான் சமீபத்தில், தங்களை சூத்திரர்கள் என்று அழைப்பதை பல சூத்திரர்கள் தவறாக நினைக்கிறார்கள். அவர்களிடம் போதுமான புரிதல் இல்லை என்று கூறியிருந்தார். மேலும், ஒரு சத்திரியரையோ, பிராமணரையோ, வைசியரையோ அப்படி வர்ணங்களின் அடிப்படையில் அழைத்தால் அவர்கள் தவறாக நினைப்பதில்லை என்றும் சூத்திரர்கள் மட்டும்தான் தவறாக நினைப்பதாகவும் கூறியிருக்கிறார்.

பிரக்யா கூறுவதைத் தான் அதாவது மனுநீதியைத் தானே இந்திய சிறைச்சாலைகள் இன்று நடைமுறைப்படுத்துகின்றன.

சிறைச்சாலை சாதிப் படிநிலைக்கு தமிழக சிறைச்சாலையும் விதிவிலக்கல்ல. 1994-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் குடும்ப சண்டை ஒன்று வன்முறையாக மாறியது. அந்த கொலைக்காரத் தாக்குதலில் ஈடுபட்ட ஒன்பது பேரில் செல்வம் என்ற 20 வயது இளைஞர் ஒருவரும் கைது செய்யப்படுகிறார். அவர் திருநெல்வேலியில் உள்ள பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றப்படுகிறார். நான்கு ஆண்டுகளுக்கு பிறகு 1998-ம் ஆண்டு செல்வம் குற்றவாளி என நிருபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை வழங்கப்படுகிறது. அந்த சமயம் சிறையில் தேவர்கள், நாடார்கள், பள்ளர்கள் என்று கைதிகள் சாதிகள் அடிப்படையில் பிரிக்கப்பட்டு தனித்தனி அறையில் வைக்கப்பட்டிருந்தனர் என்கிறார் செல்வம்.

படிக்க :
♦ குஜராத் மாடல் : விவசாயிகளின் டெல்லி சலோவில் குஜராத் பங்கேற்காத பின்னணி ?
♦ இந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா?

மேலும் அவர், ”தேவர்கள் இருக்கும் சிறை கேண்டீன், நூலகம், மருத்துவமனைக்கு அருகில் அவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அதற்கு அருகில் நாடார் சமூகத்தை சேர்ந்த கைதிகள் இருந்தனர். தொலைத்தூரத்தில் கடைசியாக பள்ளர் சமூகத்தை சேர்ந்த கைதிகள் தங்க வைக்கப்பட்டனர்” என்று கூறினார்.

”இந்திய அரசு சிறைக்கு வெளியே பிரிவினை மற்றும் பாகுபாட்டை நியாயப்படுத்த முடியுமா? அப்படியானால் சிறைகளில் மட்டும் இது எப்படி நியாயமானது?” என்று கேள்வி எழுப்புகிறார் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை பெஞ்சில் பயிற்சி பெற்ற வழக்கறிஞர் ஆர்.அழகுமணி.

மக்களை சாதிரீதியாகவும், மதரீதியாகவும் பிரிக்கும் மனுஸ்மிருதியை தீயிட்டு எரித்தார் அம்பேத்கர். அதை மீண்டும் ஆட்சியில் அமர்ந்து கொண்டு நிறைவேற்றத் துடிக்கிறது பாசிச மோடி கும்பல். ஆட்சி நாற்காலி முதல்  சிறைச்சாலை வரை சாதியால் கட்டமைக்கப்பட்டிருக்கக் கூடிய இந்த சாதிய கட்டமைப்பைத் தகர்க்க பார்ப்பனியத்தையும் அதைக் கட்டிக்காக்கும் சங்க பரிவாரக் கும்பலையும் ஒழிக்காமல் சாத்தியமில்லை.


மேகலை
நன்றி : The Wire

குஜராத் மாடல் : விவசாயிகளின் டெல்லி சலோவில் குஜராத் பங்கேற்காத பின்னணி ?

வேளாண் சட்டத்திருத்தங்களை எதிர்த்து டெல்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகளின் முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொள்வதில் இருந்து குஜராத் விவசாயிகளை தடுத்து நிறுத்தும் வகையில் பல்வேறு ஒடுக்குமுறைகளையும் அச்சுறுத்தல்களையும் கட்டவிழ்த்து விட்டுள்ளது மோடி அரசு.

கடந்த டிசம்பர் 6 அன்று மோடி பிறந்த மண்ணாகிய குஜராத்தைச் சேர்ந்த பல்வேறு விவசாய சங்கங்களைச் சேர்ந்த பல்பாய் அம்பாலியா, யாக்கூப் குராஜி, ஜயேஷ் பட்டேல் மற்றும் பல்வேறு தலைவர்கள் ஒன்றிணைத்து, குஜராத் கிசான் சங்கர்ஷ் சமிதியை உருவாக்கியுள்ளனர். இக்கூட்டத்தில் டெல்லி சலோ போராட்டத்தில் கலந்துகொண்டு தங்களது ஆதரவைத் தெரிவிக்கத் திட்டமிட்டனர்.

கிட்டத்தட்ட அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துத் தலைவர்களையும் வீட்டுக்காவலில் வைத்துள்ளது குஜராத் மாநில அரசு. இந்தப் போராட்டத்தில் பங்கேற்க குஜராத் விவசாயிகளும் விரும்புவதாகவும், மாநில அரசு அதனைத் தடுப்பதாகவும் தி வயர் இணையதளத்திடம் தெரிவித்துள்ளார் அம்பாலியா.

படிக்க :
♦ இந்திய தேசிய ஜோதியில் தமிழகம் கலக்க மறுப்பதேன்?
♦ விவசாயிகளின் போராட்டத்தை இழிவுபடுத்தும் இந்து தமிழ் திசை !

குஜராத் விவசாய சங்கத் தலைவர்களின் அழைப்புகள், வாட்சப் போன்றவற்றை போலீசு தொடர்ச்சியாக கண்காணித்து வருவதாகவும், அவர்களை சந்திக்க வருபவர்களையும் கண்காணிப்பதாகவும் தி வயர் இணையதளத்திடம் ஒரு பிரபல விவசாய சங்கத் தலைவர் தெரிவித்திருக்கிறார்,

கடந்த டிசம்பர் 11 அன்று டெல்லி போராட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற தன்னை போலீசு கைது செய்து எவ்வித அடிப்படைக் குற்றச்சாட்டும் இல்லாமல், அன்று இரவு முழுக்க சிறையில் அடைத்து வைத்தது என்கிறார், மற்றொரு விவசாயிகள் சங்கத் தலைவரான யாக்கப் குராஜி.

அவரை விடுவிக்கக் கோரி பிற விவசாயிகள் போராடத் துவங்கிய பின்னர், அவரது குடும்பத்தினரை அழைத்து கேள்விகளால் துளைத்துள்ளனர். பின்னர் மறுநாள் காலையில்தான் அவரை விடுவித்தது போலீசு.

கடந்த 15-ம் தேதி குஜராத்தின் கட்ச் பகுதியில் பெரிய மின் உற்பத்தி நிலையத் துவக்க விழாவில் பேசிய மோடி, இந்திய அரசாங்கம் விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டுள்ளதாகவும் அவர்களது பிரச்சினைகளை கவனிக்கும் என்றும் கூறி, தேசம் ஒரு வரலாற்று முன்னெடுப்பை எடுக்கும் சமயத்தில் எதிர்க்கட்சிகள், விவசாயிகளை தவறாக வழிநடத்துகிறார்கள் என்றும் கூறியிருக்கிறார்.

இது குறித்து விவசாய சங்கத் தலைவர் அம்பாலியாவுடன் பேசியது கீழே சுருக்கித் தரப்பட்டுள்ளது.

முதலில், போலீசின் கண்ணில் சிக்காமல் எப்படித் தப்பினீர்கள் ?

டிசம்பர் 6 அன்று அகமதாபாத்தில் குஜராத் கிசான் சங்கர்ஷ் சமிதி என்ற பெயரில் நடைபெற்ற எங்களது சந்திப்பை குஜராத் அரசு எப்படியோ கண்டுபிடித்து விட்டது. அந்த சந்திப்பில் “கிசான் சம்சாத்” நிகழ்ச்சியை டிசம்பர் 11 அன்று நடத்த வேண்டும் என அறிவித்திருந்தோம்.

அந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு முன்னர், குஜராத் அரசாங்கத்திடம் அனுமதி கேட்டிருந்தோம். ஆனால் அனுமதியளிக்கப்படவில்லை. எங்களது திட்டம் கிசான் சன்சத் நிகழ்ச்சியை நடத்திவிட்டு அங்கிருந்து 2000 விவசாயிகளும் தொழிலாளர்களும் பேரணியாக டெல்லி நோக்கிச் செல்வதுதான். விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றி மட்டும் பேச திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அரசாங்கம் எங்களுக்கு அனுமதி தரவில்லை.

இவை அனைத்துக்கும் மேலாக, போலீசு, அனைத்து விவசாய சங்கங்களின் தலைவர்களையும் ஒருவர் பின் ஒருவராகக் கைது செய்யத் துவங்கியது.

இது தெரிந்தவுடன், நான் துவாரகாவில் இருக்கு எனது வீட்டிலிருந்து கிளம்பி, ஜுனாகர் பகுதிக்கு சென்றுவிட்டேன். எனது அலைபேசியை அணைத்து விட்டேன்., ஜுனாகர் பகுதிக்குச் சென்ற உடன் சிறிது நேரம் எனது போனை ஆன் செய்தேன். அதையும் உடனடியாகக் கண்டுபிடித்து தொடர்ச்சியாக என்ன அழைத்தது போலீசு. அங்கிருந்து செல்லக் கூடாது என்றும் என்னிடம் கூறியது.

ஆனால் நான் எனது தொலைபேசியை அணைத்துவிட்டேன். எனக்கு போலீசு எவ்வழியே என்னைப் பிடிக்க வருவார்கள் என்பது தெரியுமாதலால் அதற்கு எதிர்த் திசைஇல் பயணித்தேன். கட்ச்-க்கு சென்று அங்கிருந்து காந்திநகர் சென்றேன். போலீசு என்னைத் தேடிக் கொண்டிருந்த சமயத்தில் அங்கிருந்து நான் தப்பி வந்துவிட்டேன்.

குஜராத்திலிருந்து ’தப்பி’ வந்து சிங்கு எல்லையில் போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள்!

ஜுனாகரில் மாறுவேடம் அணிய முடிவெடுத்தேன். எனது முடியை மாற்றிக் கொண்டேன். பாரம்பரியமான வேட்டியையே நான் அணிவேன். ஆனால் இரண்டு ஜீன்ஸ் மற்றும் சட்டைகளை வாங்கி அவற்றை அணிந்து கொண்டேன். எனது காரை மற்றொருவருக்குக் கொடுத்துவிட்டு, நான் மற்றொரு காரை மாற்றிக் கொண்டேன். டிசம்பர் 12 அன்று உதய்பூரை அடைந்தேன்.

அதே போல, தஹ்யாபாய் கஜேரா மற்றொரு விவசாய சங்கத் தலைவரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். போலீசு அவரது வீட்டு முன்வாசலில் இருக்கையில், தனது மகனின் உதவியுடன் பின்வாசல் வழியாகத் தப்பிவிட்டார். அவரது மகன் அவரை அருகில் உள்ள பேருந்துநிலையத்தில் விரைவாக க் கொண்டு சென்று இறக்கிவிட்டுள்ளார். அங்கிருந்து உதய்பூருக்கு ரகசியமாக பேருந்து ஏறி வந்தார் தஹ்யாபாய்.

குஜராத்தில் 16 விவசாய சங்கத் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். போலீசின் துரத்தலைத் தாண்டி வருவதற்கான பலம் அனைவரிடமும் இதேபோல கிடையாது. எங்களில் வெகு சிலரால் மட்டுமே இப்படிச் செய்ய முடிந்தது. எங்களைத் தவிர இதுவரை வெளியேற முடிந்தவர்கள் சுமார் 150 பேர் குஜராத்தை விட்டு வெளிவர முடிந்திருக்கிறது. எங்களில் சிலர் டெல்லி – ஜெய்ப்பூர் எல்லையில் இருக்கிறோம்; வேறு சிலர் சிங்கு எல்லையில் இருக்கிறார்கள்.

குஜராத விவசாயிகள் எப்போதிருந்து வேளாண் சட்டங்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கிறார்கள்?

குஜராத் விவசயிகள் முதல் நாளிலிருந்தே இந்த சட்டங்களுக்கு எதிராக ஒன்றிணைந்து வருகின்றனர். அது வரைவாக இருக்கையிலும் அதனை நாங்கள் கண்டித்தோம். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதையும் கண்டித்தோம். ஆனால் எங்களில் யாரும் எங்களது கண்டங்களை ஒன்றிணைந்து அறிவிப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை.

விவசாய சங்கங்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுப்பதற்கு முந்தைய நாளில், குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, பத்திரிகையாளர் சந்திப்பு மூலம் விவசாயிகளுக்கு ஆதரவளிக்கக் கூடாது என குஜராத் வியாபாரிகளுக்கு அறிக்கை விடுத்தார். அதனைத் தொடர்ந்து 144 தடையுத்தரவை பிறப்பித்தது குஜராத் அரசு. இவையனைத்தும் ஒரு அச்சமிக்க சூழலை உருவாக்குவதற்காகவே போடப்பட்டது.

குஜராத் அரசு ஏன் நீங்கள் டெல்லி போராட்டக் களத்திற்குச் செல்வதை விரும்பவில்லை

அவர்கள் கொண்டுள்ள மிகப்பெரிய அச்சம் என்னவென்பதைக் கூறுகிறேன். அவர்கள் இயற்றிய புதிய சட்டங்களை அவர்கள் எந்த அளவிற்குப் புகழ்ந்து போற்றுகிறார்கள் என்பதைப் பாருங்கள். அவர்கள் கிராமங்களில் உள்ள மக்களைச் சந்தித்து அவர்களிடம் இச்சட்டங்களை ஏற்கச் செய்ய முயற்சிக்கிறார்கள். தற்போது இந்தச் சட்டங்கள் பாராட்டப்படுவது போலவே சில ஆண்டுகளுக்கு முன்னர், பயிர் காப்பீட்டு திட்டத்தை அவர்கள் கொண்டுவந்த போதும் அச்சட்டத்தையும் புகழ்ந்து போற்றினார்கள்.

ஆனால் இன்று குஜராத்தில், அந்த மொத்த திட்டமும் மிகப்பெரிய தோல்வி என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது.

காப்பீட்டு நிறுவனங்களும் அரசாங்கமும் ஊழல்மிக்கவை இந்தத் திட்டம் பிரதமந்திரியின் கனவுத்திட்டம் என்று வேறு அழைக்கப்பட்டது. பின்னர் ஏன் அது குஜராத்தில் நிறுத்திவைக்கப்பட்டது? நாங்கள் இதையெல்லாம் டெல்லி சங்கமத்தில் பேசுவோம். அதனால்தான் நாங்கள் அங்கு செல்வதை அவர்கள் விரும்பவில்லை. நாங்கள் அங்கு சென்று பேசினால் உண்மையான குஜராத் மாடல் அனைவருக்கும் அம்பலப்பட்டு போகும்.  

படிக்க :
♦ ரஜினி ரசிகர்களே ! இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை !
♦ கமல்ஹாசன் – சூரப்பாவின் #நேர்மை, #திறமை, #அஞ்சாமை !!

குஜராத்தில் இருந்து எத்தனை விவசாயிகள், டெல்லி எல்லையில் நடக்கும் போராட்டத்தில் இணைந்து கொள்ள இருக்கிறார்கள்?  

மேலும் சுமார் 200 பேர் தற்போது கிளம்பி டெல்லிக்கு வருகிறார்கள். அவர்களும் நான் ரகசியமாக கிளம்பியதைப் போல கிளம்புவார்கள். இப்போதைய நிலையில் குஜராத்தில் நீங்கள் டெல்லிக்குப் போகிறேன் என்று கூட சொல்ல முடியாது. குஜராத்தில் இருந்து வெளியேறிய பின்னர் தான் நீங்கள் இது குறித்திப் பேச முடியும். இதுதான் குஜராத் மாடல். எங்களது அனைத்து தொலைபேசிகளும், வாட்சப் உடையாடல்களும், எங்களது வாகனங்களும், அனைத்தும் கண்காணிக்கப்படுகின்றன.

இன்று (15-12-2020) பிரதம மந்திரி கட்ச் பகுதியில் உள்ள விவசாயிகளைச் சந்திக்கிறாரே, அவர்களை சந்தித்து அவர்களது பயத்தைப் போக்குவதற்குச் சந்திக்கிறாரா ?    

கடந்த 2002-ம் ஆண்டுக்குப் பிறகு, கட்ச் பகுதி வர்த்தகத்துக்குச் சுதந்திரமான இடமாக மாறியது. இச்சமயத்தில், பல சர்தார்கள் கட்ச் பகுதிக்கு வியாபாரம் செய்ய வந்தார்கள். கட்ச் பகுதியில் உள்ள சர்தார்கள் அனைவரும் வர்த்தகர்களே தவிர விவசாயிகள் அல்ல. கட்ச் பகுதியிம் மண் விவசாயம் செய்யும் அளவிற்கு வளமான மண் அல்ல.

பாஜகவின் நடைமுறைத் தந்திரம் எப்போதுமே, தங்களது மொழியைப் பேசும் நபர்களிடம் பேசுவதுதான். அவர்கள் சந்திக்கும் விவசாயிகள் அதைச் செயுவார்கள். அதற்காக பாஜகவில் உறுப்பினர்களாகவும் ஆதரவாளர்களாகவும் விவசாயிகள் இல்லை என்ரு ஆகிவிடாது. பாஜகவிலும் அவர்களது கட்சியின் சித்தாந்தத்தை நம்பும் விவசாயிகள் இருக்கிறார்கள்.

கட்டுரையாளர் : பவன்ஜோத் கவுர்  

தமிழாக்கம் : கர்ணன்
நன்றி : The Wire