Saturday, June 21, 2025
முகப்பு பதிவு பக்கம் 432

நூல் அறிமுகம் | மகாராஷ்ட்ர விவசாயிகளின் நீண்ட பயணம்

மகாராஷ்ட்ர விவசாயிகளின் நீண்ட பயணம் !
வரலாற்று சிறப்பு மிக்க ஒரு போராட்டம்.

‘’காலுக்குச் செருப்புமில்லை கால்வயிற்றுக்குக் கூழுமில்லை’’ என்றாலும் செங்கொடியுண்டு, கோரிக்கைகள் உண்டு’ என்பதை உலகிற்குப் பறைசாற்றி மக்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட மகத்தான இயக்கம் மராட்டிய மாநில விவசாயிகளின் நீண்ட பயணம். கோரிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட, அதனால் பலனடைய இருக்கிற பகுதியினரை வென்றெடுப்பதே குதிரைக்கொம்பாய் இருக்கக்கூடிய காலத்தில், விவசாயிகளின் நீண்ட பயணத்திற்கு சமூகத்தின் பேராதரவைப் பெற்று புதிய சரித்திரத்தை எழுதியுள்ளனர்.

மராட்டிய விவசாயிகள் அவர்களுடைய கோரிக்கைகளுக்காக இந்த எழுச்சிமிக்க பயணத்தை மேற்கொண்டிருந்தாலும் நாடு முழுவதுமுள்ள விவசாயிகளுடையே விழிப்புணர்வையும், நாமும் இதுபோல் போராட வேண்டுமென்ற உத்வேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையல்ல !

மார்ச் 11 அன்று காலை 11 மணியிலிருந்து தொடங்கி தெற்கு மும்பையின் மையத்தில் உள்ள ஆசாத் மைதானத்தை மார்ச் 12 காலை 6 மணிக்கு வந்தடைந்தனர். தொடர்ந்து இரவு பகலாக நடந்து தங்களது இலக்கை அடைந்தனர். (பதிப்புரையிலிருந்து)

40,000 பேர் ஒன்றாகத் திரண்டு 200 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தை நடந்தே கடந்து வந்ததும், அதன் கடைசி 10 – 15 கிலோமீட்டர்  தூரத்தை இருளில் மிக அமைதியான வகையில் கடந்து சென்றதும் இன்னும் என் கண்ணிலே நிற்கிறது.

இந்தப் பேரணியில் பங்கேற்றவர்கள் மகாராஷ்டிராவின் ஒரு சில பகுதிகளைச் சேர்ந்தவர்கள்தான்; ஆனால், அவர்கள் பேசியதோ நாட்டிலுள்ள ஒவ்வொரு விவசாயிக்காகவும், தொழிலாளிக்காகவும்.

செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி என்பது மகாராஷ்டிராவைப் பொறுத்தவரையில் மிகவும் அருவெருப்பானதாகவே உள்ளது. மிக ஏழ்மையான பல மாநிலங்களை விட அதிகமான எண்ணிக்கையில் இந்த மாநிலத்தில் பட்டினிச்சாவுகள் நிகழ்ந்து வருகின்றன. 12 மாதங்களில் இந்த மாநிலத்தில் ஆதிவாசிகள் வசிக்கும் பகுதிகளில் மட்டுமே 17,000 பேர் பட்டினியால் மடிந்திருக்கின்றனர். குற்றப்பதிவுகளுக்கான தேசியக் கழகத்தின் புள்ளிவிவரங்களின்படி 1995-க்கும் 2015-க்கும் இடைப்பட்ட காலத்தில் கிட்டத்தட்ட 65,000 விவசாயிகள் மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்கொலை செய்து கொண்டனர்.

கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டுவது தொடர்பான சட்டங்கள், பணமதிப்பழிப்பு ரத்து நடவடிக்கையின் விளைவாக ஏற்பட்ட பேரழிவு ஆகிய இரண்டிலுமே மிக மோசமான வகையில் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக மகாராஷ்ட்ரா இருக்கிறது.

அதைப்போலவே பெருநிறுவனமயமாக்கப்பட்ட ஊடக கலாச்சாரத்தின் கோட்டையாகவும் மும்பை நகரம் விளங்குகிறது. பிரபலமான ஊடகங்களுக்கு விவசாயிகளின் இந்த நீண்ட பயணம் எவ்வளவும் முக்கியமாக இருந்தது என்பதை நாசிக் நகரில் நீண்ட பயணம் துவங்கியபோது நாடு தழுவிய அளவில் செயல்படும் எந்தவொரு பத்திரிக்கையும் தொலைக்காட்சியையும் சேர்ந்த ஒரு நிருபர் கூட அங்கே எட்டிப்பார்க்கவில்லை என்ற உண்மையிலிருந்தே உங்களால் புரிந்து கொள்ள முடியும்.

இந்த நீண்ட பயணத்திற்குப் பின்னாலிருந்த காரணங்களைப் பற்றியும், இந்த மிகவும் ஒழுங்கமைந்த, ஜனநாயகபூர்வமான, கம்பீரமான எதிர்ப்பு நடவடிக்கையை செயல்படுத்துவதில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் மேற்கொண்ட பெருமளவிலான பணிகளையும் அவர் இக்கட்டுரையில் விளக்கியுள்ளார்.

இந்த நீண்ட பயணம் நமக்கு ஒரு வழியைக் காட்டியிருக்கிறது. இப்போது நாம் வலியுறுத்த வேண்டியது ஒன்றைத்தான். நாட்டில் நிலவிவரும் விவசாய நெருக்கடி மற்றும் அதுதொடர்பான விசயங்களைப் பற்றி மட்டுமே விவாதிப்பதற்கென 20 நாட்கள் கூடும் வகையில் நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்பதே நமது கோரிக்கையாக இருக்க  வேண்டும். (அணிந்துரையில், பி.சாய்நாத், மூத்த பத்திரிகையாளர்.)

நூலாசிரியர்: டாக்டர் அசோக் தவாலே
தமிழில்: வீ.பா.கணேசன்.

பக்கம்: 32
விலை: ரூ.20.00

பதிப்பகம்:
பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
தொலைபேசி: 044 – 24332424, 24332924, 2435693.

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

(கீழைக்காற்று விற்பனையகம்  இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. கடையின் புதிய முகவரி கீழே)

1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
(சிவா ஜிம் மாடியில்)

ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை,
நெற்குன்றம், சென்னை – 600 107. 
பேச  : 99623 90277

  • வினவு செய்திப் பிரிவு

கோவில்பட்டி : மக்கள் அதிகாரம் தோழர்கள் குடும்பத்தினரை மிரட்டும் வேதாந்தா எடுபிடி போலீசு !

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்குப் பிறகும் போலீசின் ஒடுக்குமுறை நடவடிக்கைகள் ஓயவில்லை. வன்முறையில்  ஈடுபட்டார்கள், ஆதாரம் இருக்கிறது எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வீடு புகுந்து கைது செய்து சிறையில் அடைத்து, கொடூரமாக அடித்து சித்ரவதை செய்கிறது போலீசு. இன்னும் ரத்தவெறி அடங்கா காட்டேரியாக சுற்றி சுற்றி வருகிறது. தேடித் தேடி ஆட்களைப் பிடித்து தோதான வழக்குகளை ஜோடிக்கிறது.

தூத்துக்குடி போலீசு வன்முறை – ஸ்டெர்லைட்டுக்கு ஏவல்நாய் வேலை பார்க்கும் போலீசு

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள முடுக்கலான்குளம் கிராமத்தில் “மக்கள் அதிகாரம்” அமைப்பை சேர்ந்த தோழர் சக்திவேலைத் தேடி கடந்த 12.06.2018 அன்று  கருப்பு நிறக் காரில் கொப்பம்பட்டிகாவல் ஆய்வாளர்  மற்றும் காக்கிச் சட்டை அணியாத மற்றொரு போலீசும் ஊருக்குள் சென்றனர். மதியம் சுமார் 12 மணிக்கு தோழர் சக்திவேலின் அக்காவும், மாமாவும் வேலை செய்து கொண்டிருந்த தோட்டத்திற்கு வந்துள்ளனர்.

எடுத்த எடுப்பிலேயே காக்கிச் சட்டை அணியாத போலீசு  சக்திவேலின் மாமாவை  பார்த்து  “ஏல ஓ மச்சான் எங்கல ? அவன ஸ்டேசன்ல வந்து ஆஜராகச் சொல்லு. பதிமூனு பேர கொலை பண்ணிருக்கான். அவன் தீவிராவாதி லிஸ்ட்டுல இருக்கான்” என்றார். அதற்கு சக்திவேலின் மாமா “பதிமூனு பேர கொன்னது யாருன்னு உலகத்துக்கே தெரியுமே“ என்று தைரியமாக கூற, சக்திவேலின் அக்கா இடைமறித்து போலீசிடம் “ மரியாத  இல்லாம பேசாதிங்க சார்” என்று கூறியிருக்கிறார்.

அந்த போலீஸோ “ உனக்கு என்ன முண்ட மரியாத “ எனத் திமிராக பேசியதுடன் நிற்காமல், சக்திவேலின் மாமாவைப் பார்த்து ”ஸ்டேசனுக்கு வால” எனக் கோபமாக  கத்தியுள்ளார். சக்திவேலின் மாமா ”அந்த வேட்டி எடும்மா… என்ன செஞ்சுருவாங்க பார்த்துருவோம் ” என கால்சட்டை போட்டு இருந்தவர்  வேட்டி அணிந்து, உழைக்கும் வர்க்கத்திற்கே உரிய தைரியத்தோடு போலீசோடு கிளம்பி இருக்கிறார். பாதி தூரம் நடந்து செல்லும் போது அருகிலுள்ள தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த சக்திவேலின் அத்தை வழி மறித்து என்ன விசயம் என கேட்டிருக்கிறார்.

சீருடை அணியாத போலீசு “இந்த ஆளு இவன் மச்சானை எங்கேயோ ஒழிச்சு வச்சு நாடகமாடுறான். ஸ்டேசனுல கூட்டி போய் விசாரிச்சா உண்மை தெரிஞ்சுரும் , நீ யாரும்மா?”  என திமிராக பதில் சொல்லியிருக்கிறார்.

“நான்  சக்திவேலோட அத்தை. எங்க புள்ளையை  15 – 20  நாளா காணல. எங்களுக்கு உங்க பேருல தான் சந்தேகம் இருக்கு . நீங்கதான் எங்க புள்ளையை கொன்னாலும் கொன்னுருப்பீங்க ! உங்க பேருலதான் கம்ளைண்ட்டு கொடுக்க போறோம்” என்று கோபம் கொப்பளிக்கக் கூறியுள்ளார்.

இப்பதிலில் மிரண்டு போன போலீசு, சக்திவேலின் மாமாவிடம் அலைபேசி எண் மட்டும் வாங்கிக் கொண்டு கிளம்பியது. சிறிது நேரம் கழித்து, கொப்பம்பட்டி SI  சக்திவேலின் மாமாவிற்கு போன் செய்து   “நானும் உங்க சாதிதான், நாங்க வந்தா எங்களுக்கு நீங்க மரியாத குடுக்க மாட்டுக்கிறிங்க, அதான் அவரு உங்ககிட்ட மரியாத இல்லாம பேசிட்டாரு” என  நைச்சிமாக பேசி இருக்கிறார். உழைக்கும் வர்க்கத்தை சாதி ரீதியாக மடக்கப் பார்த்துள்ளார். சக்திவேலின் மாமாவோ இணைப்பைத் துண்டித்தார்.

அவருக்கு இது புதிதில்லை. ஊருக்குள் போலீசின் அராஜகம் ஏற்கனவே அரங்கேறிவிட்டிருந்தது. கடந்த  29.05.2018 அன்று இரவு 1 மணிக்கு ஒரு வேன், ஒரு ஜீப்போடு சுமார் 20 போலீசு சக்திவேலின் ஊருக்குள் புகுந்திருக்கிறது.”ஒருத்தன பிடிக்கிறதுக்கு இத்தினி பேரா?” என ஊரே மிரண்டு போயிருக்கிறது.

”144 தடை உத்தரவு இருக்கும் போது சட்டத்தை எப்படி மீறலாம்?” என போராடிய மக்களை கேள்வி கேட்ட போலீசு, ”போராட்டக்காரர்களின் வீட்டில் உள்ளவர்களை தொந்தரவு செய்யக் கூடாது” என்ற நீதிமன்ற உத்தரவை கழிப்பறை காகிதமாக்கி வீசியது.

மலையையே குடைந்து நின்ற பி.ஆர். பழனிச்சாமியை பிடிக்கப் பாயாத போலீசுப் படை, தாது மணல் கொள்ளையன் வைகுண்டராஜனை பிடிக்கப் போகாத போலீசுப் படை, மக்கள் பிரச்சினைக்காக மக்களோடு தோளோடு தோள் நின்றார் என்பதற்காக தோழர் சக்திவேலை பிடிக்க வெறிகொண்டு அலைகிறதென்றால் இந்தப் போலீசுப் படை யாருக்காக இருக்கிறது ?

“அவன் தீவிரவாதி லிஸ்டுல இருக்கான்” என்று கதை கட்டுவது, இளைஞர்களின் வீடுகளுக்குள் புகுந்து ”கையைக் காலை உடைப்பேன்” என மிரட்டுவது, செல்போனை பிடுங்கிக் கொள்வது என இந்த நிமிடம் வரை ஊருக்குள் அராஜகம் செய்து கொண்டிருக்கிறது போலீசு.

கோவில்பட்டி, சங்கரலிங்கபுரம் பகுதியில் உள்ள தோழர் கணேசன் வீட்டிற்கு சென்ற 13-க்கும் மேற்பட்ட போலீசார், அவரது மனைவியை மிரட்டியுள்ளனர். வீட்டு உரிமையாளர் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து  பார்த்துள்ளது போலீசு. அவர்கள் ஆட்சேபம் தெரிவிக்கவே, ”அவன் தீவிரவாதி, அவனுக்கு ஏன் வீட்ட வாடகைக்கு கொடுத்த ? வீட்ட காலி பண்ணச் சொல்லு, இல்லன்னா குண்டு வச்சு வீட்டை பொளந்துருவோம்” என மிரட்டியுள்ளது. தோழரின் மனைவி இல்லாத சமயத்தில் மறுமுறையும் சென்று அவ்வாறு நெருக்கடி கொடுக்கவே வீட்டு உரிமையாளர் பூட்டை உடைத்து தோழரின் வீட்டுப் பொருள்களை வெளியே எடுத்துப் போட்டிருக்கிறார்.

முதியவர் என்றும் பாராமல் தோழரின் தாயாரின் கையைப் பிடித்து இழுத்து வண்டியில் ஏற்ற முயற்சித்தது போலீசு. “தீவிரவாதின்னு உம் பையனோட படத்த போஸ்டர் அடிச்சு ஒட்டீருவோம்“ என பயமுறுத்திச் சென்றிருக்கிறது. இடி விழுந்த வீட்டில் புயலடித்தால் என்னாகுமோ அப்படி ஆகியிருக்கிறது தோழரின் வீடு. தோழரின் ஸ்டூடியோவிற்கும் சென்று, வேலை பார்ப்பவரையும் மிரட்டியிருக்கிறது போலீசு. “கம்ப்யூட்டரோடு வண்டியில் ஏறு என பணியாளரை மிரட்ட, கட்டிட உரிமையாளர் வந்து சண்டை பிடிக்கவே பின் வாங்கியிருக்கிறது போலீசு.

ஸ்டெர்லைட் ஆலையால் குழந்தைகள் கூட கேன்சர் வந்து சாகிறது. தயவுசெய்து ஆலையை மூடுங்கள் என்று குடிமக்கள் எவ்வளவோ கெஞ்சியும் ஆலையின் ஒரு செங்கல்லைக் கூட அசைக்காத  போலீசு, போராடிய மக்களுக்கு துணை நின்றார் என்ற காரணத்திற்காக தோழரின் வீட்டை குண்டு வைத்து தகர்ப்பேன் என குலைக்கிறதென்றால் யார் போட்ட எலும்புத் துண்டுக்கு வாலாட்டுகிறது?.

கோவில்பட்டி அருகே கூசாலிபட்டியில் இருக்கும் தோழர் பொன்ராஜின் வீட்டிற்குள் அதிகாலை 3 மணிக்கு நுழைந்த போலீசு, 5 மணி வரை வெளியே போகவில்லை. விசாரணை என்கிற பெயரில் குடும்பத்தாரை உளவியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளது. 12.06.2018 அன்று தோழர் பொன்ராஜின் இரு சக்கர வாகனத்தை ‘பைனான்ஸ் கம்பெனியின்’ ரவுடிக் கும்பல் தூக்கிச் செல்வது போல் ஓட்டிச் சென்றுள்ளது போலீசு. எந்த சட்டத்தின்படி இதையெல்லாம் செய்கிறது போலீசு?

இது போல இன்னும் மதுரை, தூத்துக்குடி என பல ஊர்களில் போலீசு வெறி கொண்டு அலைகிறது. தூத்துக்குடியில் இன்னும் பலர் வீடு திரும்பவில்லை. பலருக்கும் போலீசிடம் வாங்கிய அடியின் தடம் மாற நாட்கள் பல பிடிக்கும். வீட்டின் முன் கொஞ்சம் மாடலான “பைக்” நின்றாலே அங்கே ஒரு இளைஞன் இருப்பான் என வீட்டிற்குள் புகுந்திருக்கிறது. இவ்வளவு நெருக்கடிகளிலும் உறுதி குலையாமல் நிற்கின்றனர் மக்கள் அதிகாரத்தின் தென் மாவட்டங்களைச் சேர்ந்த தோழர்களும், ஆதரவாளர்களும்.

ஸ்டெர்லைட்டுக்கு அடியாளாக வேலை செய்யும் இரத்த வெறி பிடித்த கூலிப்படையாகவே செயல்பட்டு வருகிறது போலீசு. நாட்டை, கார்ப்பரேட்டுகளின் வேட்டைக் காடாகாமல் காக்க, அனைத்து அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு போராடும் மக்களுடன் என்றும் இணைந்து நிற்கும் மக்கள் அதிகாரம்.

தகவல்:
மக்கள் அதிகாரம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஏ1 குற்றவாளி எடப்பாடி அரசு | சங்கரசுப்பு

0

க்கள் அதிகாரத்தைச் சேர்ந்த 6 பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ச்சப்பட்டுள்ளது குறித்தும், மக்கள் அதிகாரத்தின் முன்னணியாளர்களின் வீடுகளுக்கு நள்ளிரவில் புகுந்தும் சட்டவிரோதமான முறையிலும் பல்வேறு பொய்வழக்குகளின் கீழ் அவர்களை கைது செய்வதன் மூலம் மக்கள் அதிகாரத்தின் செயல்பாட்டை முடக்க நினைக்கும் எடுபிடி அரசின் நடவடிக்கைகள் குறித்தும் பேசுகிறார், சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு.

# support makkal athikaaram

லெக்ஸாண்டர், டி.கே.ராஜேந்திரன் போன்ற முன்னாள் இந்நாள் உயர் போலீசு அதிகாரிகள் எல்லாம் கூட்டு சதி செய்து எடப்பாடி ஆசியோடு இந்தப் படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

மக்கள் அதிகாரம் இந்தப் போராட்டத்தின் நியாயத்தை மக்கள் முன் எடுத்துச் சொல்லியது. அதற்காக அவ்வமைப்பைச் சேர்ந்த 6 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்திருக்கிறார்கள்.

மோடி அரசுக்கும் எடப்பாடி அரசுக்கும் கட்சி வளர்ச்சி நிதியாக ஸ்டெர்லைட் நிறுவனம் கோடிகளை கொடுத்திருக்கிறது. எனவே, ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக போராட்டத்தை ஒடுக்குகிறது. இந்த நியாயத்தை மக்களிடம் எடுத்துச் சொல்பவர்களை தம்மிடம் உள்ள கருப்புச்சட்டங்கள் வாயிலாக பிரிட்டிஷ் ஆட்சியில் பயன்படுத்தப்பட்ட அதே தேசிய பாதுகாப்புச் சட்டங்களை வைத்துக் கொண்டு ஒடுக்குகிறது.

அன்று கிழக்கிந்தியக் கம்பெனிகளை எதிர்த்தவர்களெல்லாம் தேசியபாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்கள். இன்று?

ஸ்டெர்லைட்டை எப்படியாவது திறக்கனும்.. யாரெல்லாம் இடையூறாக இருக்கிறார்களோ, அவர்களைக் கைது பண்ணி இந்த சட்டவிரோத கருப்புச் சட்டங்கள் மூலமாக அவர்களை பிணையில் வராதபடி சிறையில் அடைத்துவிட்டால், இதை கண்டு அஞ்சி யாரும் போராட்டத்தை முன்னெடுத்து செல்லமாட்டார்கள் என்பதே அரசின் நோக்கம்.

மக்கள் அதிகாரத்தின் குரல்வளையை நெறிப்பது; அவர்களின் போராடும் உரிமையை, கூட்டம் போடும் உரிமையை மறுப்பதன் மூலம் அநீதிக்கு எதிராக மக்களை அணிதிரட்டுவதை தடுக்க முனைகிறது, அரசு.

13 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் எடப்பாடிதான் ஏ1… மற்ற போலீசு உயர் அதிகாரிகளையெல்லாம் ஏ2 போட்டு விசாரிக்கணும்.

இவ்வுண்மைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி தமக்கு எதிராக மக்களை அணிதிரட்டிவிடும் என்ற அச்சத்தின் காரணமாகத்தான் மக்கள் அதிகாரத்தை முடக்க நினைக்கிறது, அரசு.

இயற்கை நீதிக்குட்பட்டு போராடும் மக்களுக்கு சட்ட உதவிகளை செய்த வாஞ்சிநாதன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் மீதும் அரசு பொய்வழக்கு போட்டிருக்கிறது. அதுவும் ஒரே நேரத்துல பத்து எடத்துல அவரு ஒருத்தரே தீ வச்சாருன்னு கேஸ் போட்டுருக்கு போலீசு.

பொய்வழக்குகளிலும், தேசியபாதுகாப்புச் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டுள்ள மக்கள் அதிகாரம் தோழர்களை விடுவிக்க பல்வேறு ஜனநாயக அமைப்புகளோடு கூட்டு சேர்ந்து கூட்டுக்குழு அமைத்து செயல்பட வேண்டும். மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும்.

மதுரை பல்கலை துணைவேந்தர் செல்லதுரை நியமனம் ரத்து | PRPC வழக்கில் தீர்ப்பு

துரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.பி. செல்லத்துரை நியமிக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பாதுகாப்புக் குழு ஆகியவற்றின் சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது. இன்று (14.06.2018) இவ்வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற அமர்வு செல்லத்துரையின் நியமனம் செல்லாது என தீர்ப்பளித்துள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளை அம்பலப்படுத்தி, பி.பி.செல்லதுரையின் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பில் அதன் மதுரை மாவட்ட செயலாளர் லயனல் அந்தோணிராஜ் கடந்த 2017-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். முதலில் மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் விசாரிக்கபட்ட இந்த வழக்கு பின்னர் சென்னை உயர்நீதிமன்ற அமர்விற்கு மாற்றப்பட்டது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பாதுகாப்புக் குழுவும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையமும் இணைந்து நடத்திய இந்த வழக்கில் மனுதாரர்களின் சார்பாக மூத்த வழக்கறிஞர் திரு. பிரபு ராஜதுரை அவர்களும், ம.உ.பா.மையத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் வாஞ்சிநாதனும் இணைந்து வாதாடினர். இந்த வழக்கில் செல்லதுரைக்கு எதிராக மூன்று முக்கிய வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

முதலாவதாக, துணை வேந்தர் பதவிக்கான தகுதிக்கு, குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பேராசிரியராகப் பணிபுரிந்திருக்க வேண்டும். ஆனால் செல்லத்துரையின் நியமனத்தின் போது அவர் 3 ஆண்டுகள் மட்டுமே பேராசிரியராக பணிபுரிந்திருந்தார்.

முன்னாள் முறைகேட்டு துணைவேந்தர் கல்யாணி மதிவாணன்

இரண்டாவதாக, செல்லத்துரை துணை வேந்தராக நியமனம் செய்யப்பட்ட போது அவர் மீது கொலை முயற்சி வழக்கு நிலுவையில் இருந்தது. கடந்த 2014-ம் ஆண்டு மதுரை காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் கல்யாணி மதிவாணன்  மற்றும் செல்லத்துரை (அப்போதைய பல்கலைக்கழக இளைஞர் நலத்துறை செயலர்) உள்ளிட்டோரின் முறைகேடுகளை அம்பலப்படுத்தியதற்காக, மதுரை காமராஜர் பல்கலைக்கழக பாதுகாப்புக் குழு தலைவரும், ஓய்வுபெற்ற தமிழ்ப் பேராசிரியருமான சீனிவாசனை, அவர்கள் இருவரும் கடுமையாகத் தாக்கி கொலை செய்ய முயற்சித்தனர். இது குறித்து அப்போதே மதுரை நாகமலை போலீசு நிலையத்தில் கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

மூன்றாவதாக,  தேர்வுக்குழு முறையாகக் கூடி உரிய முறையில் துணைவேந்தர் தேர்வை நடத்தவில்லை.

இவ்விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே, தேர்வுக்குழு உறுப்பினர்கள் இருவர், நீதிமன்றத்தில் ஆஜராகி ”நாங்கள் செல்லதுரையை முறையாக தேர்வு செய்யவில்லை. அரசின் நிர்பந்தம் காரணமாகவே கையெழுத்திட்டோம்” என்று வாக்குமூலம் தந்துள்ளனர்.

இந்த வழக்கு விசாரணை கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தோடு முடிவுக்கு வந்த நிலையில், தீர்ப்பைத் தள்ளி வைத்து உத்தரவிட்டது உயர்நீதிமன்ற அமர்வு.

நிர்மலாதேவி விவகாரத்தில், ஆளுனர் பன்வாரிலால் புரோகித் தன்னிலை விளக்கம் கொடுத்துக்கொண்டிருக்க, அவருக்கு அருகில் அமர்ந்திருக்கும், பி.பி. செல்லத்துரை

சமீபத்தில் தமிழகத்தை உலுக்கிய நிர்மலாதேவி விவகாரத்திலும் பி.பி. செல்லத்துரையின் பெயர் அடிபட்டது. அவ்விவகாரம் தொடர்பாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் அவருக்கு அருகில் அமர்ந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வழக்கில் இன்று (14.06.2018) உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில், துணைவேந்தராக பி.பி. செல்லதுரை நியமிக்கப்பட்டது செல்லாது எனக் கூறி நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டதோடு, உடனடியாக தேர்வுக் குழு அமைத்து வேறு ஒரு துணைவேந்தரை தெரிவு செய்யும்படி உத்தரவிட்டது.

இத்தீர்ப்பு, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பாதுகாப்புக் குழு இணைந்து நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. உயர்கல்வித்துறை ஊழல் சம்பந்தப்பட்டுள்ள இவ்வழக்கில், மூத்த வழக்கறிஞர் திரு. பிரபு ராஜதுரை, தனிப்பட்ட ஆர்வம் காட்டி, வழக்குக் கட்டணம் எதுவும் பெற்றுக் கொள்ளாமல், 5 முறைக்கும் அதிகமாக சொந்தப் பணத்தில் சென்னை சென்று வந்து இந்த வழக்கில் வாதாடினார்.

துணைவேந்தர் தகுதி நீக்கம் என்பது உயர்கல்வித்துறை ஊழலுக்கு எதிரான  மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் நீண்ட போராட்டத்தில் கிடைத்த ஒரு குறிப்பிடத் தகுந்த வெற்றி !

20.06.2018 அன்று புதுப்பிக்கப்பட்ட செய்தி:

சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து துணை வேந்தர் செல்லத்துரை, உச்சநீதிமன்றத்தில் இடைக்காலத் தடை கோரி வழக்கு போட்டார். அப்படி தடை போடக் கூடாது என மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில் லயோனல் அந்தோணிராஜ் மனுவில் தலையீடு செய்தார். இன்று உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிமன்றம் துணை வேந்தரின் மனுவை நிராகரித்ததோடு புதிய துணை வேந்தரை தெரிவு செய்வதற்கான குழு தனது பணிகளை தொடரலாம் என உத்தரவு போட்டிருக்கிறது. லயோனல் அந்தோணிராஜ் சார்பில் மூத்த வழக்கறிஞர் சஞ்செய் ஹெக்டே ஆஜரானார்.

தகவல்: மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்

போராடும் மக்களை ஆதரிப்பது தேச விரோதக் குற்றமா ? தோழர் தியாகு கண்டனம்

தூத்துக்குடியில் நடைபெற்றது, பெருந்திரளான மக்கள் போராட்டம். போராடும் மக்களுக்கு தேவையான உதவிகளை ஆலோசனைகளை வழங்குகிற பொறுப்பு மக்கள் நலனில் அக்கறை கொண்ட எந்த ஒரு இயக்கத்திற்கும் உண்டு. அம்மக்களுக்குத் தேவையான சட்ட உதவிகளையோ, நடைமுறை சார்ந்த உதவிகளையோ மக்கள் அதிகாரம் செய்ததில் எந்தக் குற்றமோ, குறையோ கிடையாது. செய்யாமல் இருந்தால்தான் அதனை குறையாக நாம் சொல்ல முடியும். இது அவர்களது ஜனநாயக உரிமை, கடமை. இவ்வாறு இம்மக்களுக்கு துணை செய்வதைக் குற்றமாகக் காட்டுவதற்கு சட்டத்திலும் இடமில்லை. நீதியிலும் இடமில்லை.

மக்களுடன் அரசு எவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தியது? போராட்டத்தை இப்படி நடத்துங்கள், இங்கே நடத்துங்கள் என்று பேசியதைத் தாண்டி, போராடும் மக்களை பிளவுபடுத்தியதைத் தாண்டி, அரசு ஆலையை மூடுவதற்காக இன்னின்ன முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறது என்று என்றைக்காவது பேசியிருக்கிறார்களா?

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் யாரோ சிலர் வாகனங்களுக்குத் தீ வைக்கிறார்கள். இந்தக் காட்சிகள் பதிவாகாமல் இருக்க, ஆட்சியர் அலுவலகத்தின் சி.சி.டி.வி. காமிராக்கள் உடைந்து தொங்குகின்றன. இதன் பின்னால் உள்ள சூழ்ச்சித் திட்டமென்ன? ஸ்டெர்லைட் தூண்டிவிட்டு  சில ஆட்கள் செய்தார்களா? அல்லது காவல்துறை சாதாரண உடையில் வந்து இதைச் செய்ததா? அல்லது காவல்துறையால் தூண்டிவிடப்பட்ட சில சமூகவிரோதிகள் செய்துவிட்டு மக்கள் மீது பழிபோடப்படுகிறதா?

இது புதுவகையான போலிமோதல் கொலை. பிரித்தானியா ஆட்சி காலத்தில் துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கென்று வகுத்திருக்கிற எச்சரிக்கை விதிமுறைகளின் படி நடத்தப்படவில்லை. இதுவரை நாட்டில் எங்கும் நடந்திராத வகையில், ஒருவிரிவான திட்டத்தை வகுத்து அதற்குரிய ஆட்களுக்குப் பயிற்சி கொடுத்து, ஆட்களை அடையாளப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை கூட்டத்திற்கு நடுவில் செய்து, உளவாளிகளையும், கைக்கூலிகளையும் கூட்டத்திற்கு நடுவே உலவ விட்டு, யார்யார் சுடப்பட வேண்டியவர்கள் என்று அடையாளம் காட்டி, அவர்களை குறிவைத்து சுட்டு வீழ்த்தியிருக்கிறார்கள்.

லண்டனிலிருப்பவன் தூத்துக்குடியில் தொழிற்சாலை நடத்தலாமாம். வெளியூர் போலீசு, வெளிமாநில இராணுவத்தை வரவழைத்து போராட்டத்தை ஒடுக்கலாமாம். ஆனால், தூத்துக்குடி மக்களைப் பாதுகாப்பதற்கு வெளியூர் தமிழர்கள் கலந்துகொண்டால், அது குற்றமாம்.

எந்தத்தடை வந்தாலும், எத்தனைப்பேரை சிறைப்படுத்தினாலும் மக்கள் போராட்டங்களை கட்டுப்படுத்த முடியாது.

இந்திய அரசினுடைய அழிவுத்திட்டங்கள் பரவ பரவ அந்த அழிவுத்திட்டங்களுக்கு எதிரான போராட்டங்களும் பரவும்.

தமிழ்மக்களாகிய நாம், ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட நாம், இயற்கைச் சுற்றுசூழல் பாதுகாப்பில் நம்பிக்கை கொண்ட நாம், போராடும் மக்கள் பக்கம் நிற்போம். பழிவாங்கப்படுகிற இயக்கங்கள் பக்கம் நிற்போம். சிறைப்பட்டிருக்கிற தோழர்கள் பக்கம் நிற்போம். தமிழ் மக்கள் ஒன்றுபட்டு நின்று இந்த அடக்குமுறையை முறியடிப்போம்.

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு : இதுதாண்டா ஜனநாயகம் !

0

.தி.மு.க 18 எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்கம் குறித்த வழக்கில் இன்று 14.06.2018 தீர்ப்பு அளிக்கப்பட்டது. தீர்ப்பில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சபாநாயகர் தனபாலின் உத்திரவு செல்லும் எனவும், நீதிபதி சுந்தரோ அதற்கு எதிராக சபாநாயகர் உத்திரவு செல்லாது எனவும் கூறியிருக்கின்றனர். இந்த மாறுபட்ட தீர்ப்பால் அ.தி.மு.க-வின் மெகா-பாராதப் போர் அடுத்த அக்கப்போர் கட்டத்திற்கு வந்து விட்டது. நீதிபதிகள் தமது மாறுபட்ட தீர்ப்பால் மூன்றாவது நீதிபதிக்கு இந்த வழக்கை பரிந்துரைத்திருக்கின்றனர்.

மூன்றாவது நீதிபதி யார், எப்போது அறிவிப்பார்கள், அவர் எப்போது விசாரிப்பார், தீர்ப்பளிப்பார் என்பது இன்றைய மாலை நேர வி…………வாதமாக நம் காதுகளைக் கொல்லும். அந்த மூன்றாவது தீர்ப்பு வரும் வரை தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களின் தொகுதிக்களுக்கு இடைத்தேர்தல் நடத்தக் கூடாது, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்றும் பழையை நிலை தொடருமாம்.

இந்த தீர்ப்பு குறித்து ஊடகங்களில் கருத்து தெரிவித்த முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன், “இந்த தீர்ப்பு குறித்து சொல்ல வேண்டுமென்றால் தீர்ப்பே கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும், மூன்றாவது நீதிபதி விசாரித்து தீர்ப்பளிக்க எவ்வளவு காலம் வேண்டுமானாலும் ஆகலாம்” என்று கூறியிருக்கிறார். அதன்படி ஆறு மாதமோ இல்லை ஒரு வருடமோ எடப்பாடி காட்டில் மழைதான். நமக்கு அது அமில மழை! மற்றபடி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்து வாதிடப்பட்டு, தீர்ப்பு வரும் வரையில் எடப்பாடி – மோடி அரசு காட்டில் மட்டுமல்ல வக்கீல்கள் காட்டிலும் மழைதான்.

இந்த தீர்ப்பு குறித்து பேசிய டிடிவி தினகரன், இந்த தீர்ப்பை மக்கள் ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு போல ஆவலுடன் எதிர்பார்த்தனராம். பாண்டிச்சேரி சபாநாயகர் தீர்ப்பை ரத்து செய்த நீதிமன்றம் தமிழக சபாநாயகர் முடிவை மட்டும் ரத்து செய்யாதது ஏன் என்று பாமர மக்களுக்கு கூட சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருக்கிறார். இந்த்க கூற்றை உற்றுப் பார்த்தால் பாண்டிச்சேரி ஒப்பீட்டை விட ஆர்.கே.நகர் ஒப்பீடுதான் முக்கியமானது. ஆர்.கே.நகர் தேர்தலில் பணம் விளையாடியதுதான் மக்களின் தேர்தல் முடிவு ஆர்வத்திற்கு காரணமென்றால், இந்திரா பான்ர்ஜி தீர்ப்பிலும் அது புகுந்து விளையாடியதாக மறைமுகமாச் சொல்கிறாரா தினகரன்?

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் குறித்த தீர்ப்பு – உங்கள் கருத்து என்ன?

  • இனிமேல் நீதிமன்றம் என்பது ஜனநாயகத்தை காப்பாற்றும் அமைப்பு அல்ல!
  • எடப்பாடி – மோடி அரசாங்கங்களால் தீர்மானிக்கப்பட்ட தீர்ப்பு!
  • நீதிமன்ற தீர்ப்பை விமரிசிக்க பயமாக இருக்கிறது!
  • சர்வதேச நீதிமன்றமே மெச்சும்படி ஒரு நியாயமான தீர்ப்பு!

( பதில்களில் இரண்டை தெரிவு செய்யலாம்)

18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் குறித்த வரலாறு இதுதான்.

அ.தி.மு.க. எனும் அடிமைக்கூட்டத்தை அடக்கி ஆண்ட ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு யார் அடுத்த தாதா எனும் போட்டி உருவானது.  ஆரம்பத்தில் இந்தக் சொத்துக் குடுமிப்பிடிச் சண்டையால்  சசிகலா ஆதரவு மற்றும் எதிர்ப்பு அணிகள் உருவாகின. ஊழல் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று ஏ-2 ஆக சசிகலா சிறைசென்ற பின்னர், அவர் ஓரங்கட்டப்பட்டார்.

இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக லஞ்சம் கொடுத்ததாக டி.டி.வி. தினகரன் மீது எழுந்த புகாரைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அணியினர் அவரை பந்தயத்தில் இருந்து வெளியேற்ற முயன்றனர். முன்னதாக சசிகலாவின் தலைமையை ஏற்க விரும்பாத ஓ.பன்னீர்செல்வம் கும்பல் ‘அம்மா’ சமாதியில் தியானம் எனும் கூத்துடன்,  ’தர்மயுத்தத்தை’ துவக்கினர்.

பின்னர் மோடியின் கட்டைப் பஞ்சாயத்தால் எடப்பாடி பழனிசாமி தரப்பினர், பல சுற்று ’பேச்சுவார்த்தை’க்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் அணியினருடன் கடந்த செப்டம்பரில் இணைந்தனர் அல்லது இணைக்கப்பட்டனர். அதன்பிறகு, இருதரப்பினரும் செப்டம்பர் 12-ஆம் தேதி பொதுக்குழுவை நடத்தி சசிகலாவின் தற்காலிகப் பொதுச் செயலாளர் பதவியைப் பறித்ததோடு, அவரால் நியமிக்கப்பட்ட நியமனங்களும் செல்லாது என்று தீர்மானம் போட்டு நாற்காலிகளை தக்கவைக்க முயன்றனர்.

இந்நிலையில் சசிகலாவின் மன்னார்குடி குடும்பத்தினர் கட்சியிலிருந்து ஓரங்கப்பட்டதைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றனர். இதற்கு தினகரன் அந்த எம்.எல்.ஏ.க்களுக்கு வெயிட்டான எதிர்காலம் இருப்பதாக நிகழ்கால வைட்டமின்களை ஊட்டியிருப்பார். இது போக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது தங்களுக்கு நம்பிக்கையில்லை எனக் கூறி, ஆளுநர் வித்யாசாகரை சந்தித்து தனித்தனியாக மனுவும் அளித்தனர். இது இத்துப்போன இந்திய அரசியல்சாசனம் குறித்து பல்வேறு வெட்டி விவாதங்களை கிளப்பியது. அடிப்படை உரிமை, ஆகாச உரிமை என்று டி.வி விவாதங்களில் ஆர்வலர்கள் அக்கப்போர்களை உளறினார்கள்.

இதைத் தொடர்ந்து, 19 பேருக்கும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். அதில், கட்சித் தாவல் சட்டத்தின்கீழ்  ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது? என்றும், இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படியும் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, 19 பேரும் விளக்கம் அளித்தனர்.  இந்த விளக்கம் திருப்தியில்லை என்று கூறிய சபாநாயகர் தனபால், மீண்டும் விளக்கம் அளிக்கும்படி 19 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பினார். இந்த நோட்டீஸுக்கு 18 பேர் விளக்கம் அளிக்கவில்லை. ஆனால், ஜக்கையன் மட்டும் சபாநாயகரைச் சந்தித்து விளக்கம் அளித்ததோடு, முதலமைச்சர் பழனிசாமிக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறினார். இவையெல்லாம் மாபெரும் வரலாற்றுத் திருப்பங்களாக தமிழ் ஊடகங்கள் விவாதித்து மாலை நேரத்தின் ஓய்வு நேரத்தை அந்த நேரமே நொந்து கொள்ளும் அளவிற்கு அடித்துக் கிழித்தன.

இந்நிலையில், ஜக்கையனைத் தவிர்த்து தங்க தமிழ்ச்செல்வன், செந்தில் பாலாஜி, ஆர்.முருகன், மாரியப்பன் கென்னடி, கதிர்காமு, ஜெயந்தி பத்மநாபன், பழனியப்பன், எஸ். முத்தையா, வெற்றிவேல், என்.ஜி.பார்த்திபன், கோதண்டபாணி, ஏழுமலை, ரெங்கசாமி, தங்கதுரை, ஆர்.பாலசுப்பிரமணி, எஸ்.ஜி.சுப்ரமணியன், ஆர்.சுந்தரராஜ், கே.உமா மகேஸ்வரி ஆகியோர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். சபாநாயகரின் வானளாவிய அதிகாரம் எனும் மாபெரும் தத்துவம் விவாதத்திற்கு வந்தது.

சபாநாயகரின் இந்த உத்தரவை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்திருந்தனர். கடந்த செப்டம்பர் மாதம் இந்த வழக்கு தனி நீதிபதி ரவி சந்திரபாபு முன்பு விசாரணைக்கு வந்தநிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களின் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என  இடைக்கால உத்தரவு பிறப்பித்தார். பின்னர், அரசியல் சாசனம் தொடர்பான வழக்கு என்பதால் இந்த வழக்கை ஒன்றிற்கும் மேற்பட்ட நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரைத்தார். இது எடப்பாடி அரசுக்கு மேலும் நேரத்தை கொடுத்ததோடு, டி.வி.க்களுக்கும் தலைப்பு வறட்சியைப் போக்கியது.

இதையடுத்து இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. 18 எம்.எல்.ஏக்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி மற்றும் பி.எஸ்.ராமன் ஆஜராகி வாதிட்டனர். தமிழக அரசுக்கு எதிராக செயல்படாமல் முதல்வரை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்திலேயே ஆளுநரை சந்தித்து மனு அளித்ததாக எம்.எல்.ஏ.க்கள் சார்பில் வாதிடப்பட்டது. தங்களுக்கு எதிராக அரசு கொறடா புகார் அளித்த பிறகு தங்களிடம் முழுமையான விளக்கம் கேட்காமல் சபாநாயகர் பிறப்பித்த இந்த உத்தரவு இயற்கை நீதிக்கு எதிரானது எனவும் வாதிடப்பட்டது. இதற்காக இயற்கை நீதிக்கு நீதி கிடைக்கிறதோ இல்லையோ வக்கீல்களுக்கு நிதி பெரிய அளவில் கிடைத்திருப்பது உறுதி.

நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீது கொடுத்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத சபாநாயகர், தங்கள் மீது மட்டும் அவசர கதியில் நடவடிக்கை எடுத்தது அரசியல் நோக்கம் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் சபாநாயகரின் உத்தரவு என்பது ஒரு தீர்ப்பாயம் வழங்கும் தீர்ப்புக்கு சமமானது என்பதால் சபாநாயகரின் உத்தரவை ரத்து செய்ய உயர்நீதிமன்றத்திற்கு முழு அதிகாரம் உள்ளதாகவும் முத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதிட்டார். சட்டசபைக்கு அதிகாரமா, நீதிமன்றத்திற்கு அதிகாரமா என மாபெரும் மகாபாரதப் போர் நடப்பதாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம். மாண்புமிகு நீதிபதிகளும் மாண்புமிகு அ.தி.மு.க.-வினரும் இந்த நீதியுத்தத்தில் ஈடுபட்டனர்.

அரசு கொறடா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, முதல்வருக்கு எதிராக டி.டி.வி. ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆளுநரை சந்தித்து மனு அளித்த மறுநாளே எதிர்கட்சி தலைவரும் ஆளுநரை சந்தித்தார். இதிலிருந்தே டி.டி.வி. தினகரன் தி.மு.க.வுடன் கூட்டு சேர்ந்து அரசை கவிழ்க்க  முயற்சித்தது உறுதியானதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், முதல்வரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை உட்கட்சிக்குள் பேசி முடிக்காமல் ஆளுநரை சந்தித்தது மரபுக்கு எதிரானது என்பதாலேயே 18 எம்.எல்.ஏக்கள் மீது சபாநாயகரிடம் புகார் அளிக்கப்பட்டதாக விளக்கம் அளித்தார். முந்தைய கவர்னரோ அ.தி.மு.க. இரு கோஷ்டிகளை மாடுபிடி தரகர் போல துண்டைப் போட்டு இணைத்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

சபாநாயகர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அரியமா சுந்தரம், 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ததில் இயற்கை நீதி முழுமையாக பின்பற்றப்பட்டது என விளக்கம் அளிக்கப்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மீதான புகார் குறித்து முழுமையாக ஆராய்ந்த பிறகே நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், தகுதி நீக்கம் செய்வதற்கு முன்னர் 18 எம்.எல்.ஏக்களும் தங்கள் தரப்பு விளக்கங்களை தெரிவிக்க போதிய அவகாசம் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஓ.பி.எஸ் பக்கம் நீதியும், தினகரன் பக்கம் அநீதியும் இருப்பதான இந்த வாதத்தில் இந்திய ஜனநாயகத்தின் கோவணம் இருக்கிறதா இல்லையா என்று வேண்டுமானால் விவாதிக்கலாம்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த ஜனவரி 24-ஆம் தேதியன்று ஒத்தி வைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது.

தீர்ப்பில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சபாநாயகர் தனபாலின் உத்தரவு செல்லும் எனவும், நீதிபதி சுந்தரோ அதற்கு எதிராக சபாநாயகர் உத்தரவு செல்லாது எனவும் கூறியிருக்கின்றனர். இந்த மாறுபட்ட தீர்ப்பால் அ.தி.மு.க.-வின் மகாபாராதப் போர் அடுத்த அக்கப்போர் கட்டத்திற்கு வந்து விட்டது. நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால் மூன்றாவது நீதிபதிக்கு இந்த வழக்கை பரிந்துரைத்திருக்கின்றனர்.

மூன்றாவது நீதிபதி யார், எப்போது அறிவிப்பார்கள், அவர் எப்போது விசாரிப்பார், தீர்ப்பளிப்பார் என்பது இன்றைய மாலை நேர வி…………வாதமாக நம் காதுகளைக் கொல்லும். அந்த மூன்றாவது தீர்ப்பு வரும் வரை தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களின் தொகுதிக்களுக்கு இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என்றும் பழையை நிலை தொடர்கிறது.

மொத்தத்தில் எடப்பாடி – மோடி அரசின் திட்டப்படி இந்த ஆட்சி தற்காலிகமாக தொடர்கிறது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர்களைக் கொன்று விட்டு அது சட்டப்படி சரிதான் என்று வாதிடும் அந்த அயோக்கிய அரசாங்கத்தை பாரிமுனையில் இருக்கும் நீதிமன்றத்தால் மட்டும் தண்டித்துவிட முடியாது என்பது நிரூபணமாயிருக்கிறது.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடினால் ஊபா UAPA சட்டத்தில் கைதா ?

கொரெகான் பீமா வன்முறை சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து வந்த புனே போலீசு, கடந்த 31 டிசம்பர் 2017 அன்று நடைபெற்ற எல்கார் பரிசத் என்ற பொதுக்கூட்டத்தில் தலித் முன்னணியாளர்கள் பேசிய பேச்சுக்கள்தான் மறுநாள் நடந்த கலவரத்துக்குக் காரணம் என்று கூறி அக்கூட்டத்தை ஒருங்கிணைத்த முன்னணியாளர்கள் 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளது. அவர்களுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையிலான தொடர்பு குறித்து ஆதாரங்கள் இருப்பதாகவும் அதனடிப்படையில் ஊபா சட்டத்தின் கீழ் அவர்களைக் கைது செய்திருப்பதாகவும் தெரிவித்தது போலீசு.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரது வீட்டில் இருந்து மாவோயிஸ்டுகளின் கடிதம் கைப்பற்றப்பட்டதாகக் கூறி, அக்கடிதத்தையும் கசிய விட்டது போலீசு. அதில் மாவோயிஸ்டுகள் மோடியைக் கொல்வதற்கு சதி செய்திருப்பதாக எழுதப்பட்டிருந்தது. அக்கடிதம் வெளியானதிலிருந்து இரண்டு நாட்களுக்கு ஊடகங்களெங்கும் ஒரே பேச்சு – “மோடியை கொலை செய்ய மாவோயிஸ்டுகள் சதி” என்பதுதான்.

அதனைத் தொடர்ந்து உடனடியாக மோடிக்கு “இன்னொரு கட்ட” பாதுகாப்பை அதிகரிக்கிறது உள்துறை அமைச்சகம். சங்க பரிவாரங்கள் சமூக வலைத்தளங்களில் பொங்குகின்றன. பணமதிப்பழிப்பின் போது மோடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா போய்வந்து முதலைக் கண்ணீர் விட்டது போல, தற்போதும் கண்ணீர் விட்டுக் கதறாதது மட்டும்தான் பாக்கி.

மாவோயிஸ்டுகள் எழுதியதாகச் சொல்லப்படும் இக்கடிதத்தைப் பற்றி அக்குவேறு ஆணிவேறாக சமூக வலைத்தளங்களில் பலரும் பிரித்து மேய்ந்து, அது நம்பகத்தன்மையற்றது என காறி உமிழ்ந்துவிட்டனர். இருப்பினும் இக்கடிதம் கைப்பற்றப்பட்டதாகச் சொல்லப்படும் பின்னணியைப் பற்றி விரிவாகப் பார்க்கவேண்டிய அவசியம் இருக்கிறது.

***

ராட்டியத்தில் உள்ள பீமா கொரெகான் என்னும் இடத்தில், 1818-ம் ஆண்டு நடைபெற்ற போரில், பேஷ்வா மன்னனின் மிகப்பெரிய படையை, குறைந்த எண்ணிக்கையிலான பிரிட்டிஷ் படையிலிருந்த மகர்கள் (தலித்துகள்) புறமுதுகிட்டு ஓடச்செய்தனர். தம்மை ஆண்டாண்டு காலமாக ஒடுக்கிவந்த ஆதிக்கசாதி வெறிக்கு எதிரான அவ்வெற்றியின் இருநூறாவது ஆண்டு விழாவைக் கொண்டாட, கடந்த ஜனவரி 1, 2018 அன்று கொரெகான் கிராமத்தில் இலட்சக்கணக்கான தலித் மக்கள் திரண்டனர்.

இலட்சக்கணக்கில் திரண்டு வந்த மக்கள் கூட்டம்

அங்கு அமைதிப் பேரணியாக சென்ற தலித் மக்களுக்கு மத்தியில் ஹிந்து மதவெறியர்களான, மிலிந்த் ஏக்போடே மற்றும் சாம்பாஜி பிண்டே ஆகியோரின் தலைமையிலான இந்துத்துவக் காலிகள் கலவரத்தைத் தூண்டிவிட்டனர். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஒருவர் கொல்லப்பட்டார். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

இச்சம்பவம் நடைபெறுவதற்கு முந்தைய நாள் (31.12.2017) நடைபெற்ற  எல்கார் பரிசத் கூட்டத்தில் தலித் முன்னணியாளர்கள் பேசிய பேச்சுக்கள் தான் வன்முறைக்குக் காரணம் எனக் கூறி வழக்குப் பதிவு செய்தது போலீசு. எல்கார் பரிசத் கூட்டத்தில் ஜிக்னேஷ் மேவானி, உமர் காலித், ரோஹித் வெமுலாவின் தாய் ராதிகா வெமுலா, ப்ரகாஷ் அம்பேத்கர், சோனி சோரி, முன்னாள் நீதிபதி கோல்சே பாட்டில், பீம் ஆர்மியின் வினய் ரதன் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

எல்கார் பரிசத் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னணியாளர்கள்

எல்கார் பரிசத் கூட்டம் நடைபெற்ற அன்றே முன்னணியாளர்கள் மீது 2 வழக்குகளும், மறுநாள் வன்முறை சம்பவங்கள் நடந்து முடிந்தவுடன் முன்னணியாளர்கள் மீது மேலும் 8 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

இது தொடர்பாக, எல்கார் பரிசத் கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்களான  சுதிர் தவாலே, ரோனா வில்சன், காட்லிங் ஆகியோரது வீட்டில் கடந்த ஏப்ரல் மாதத்தில் சோதனை மேற்கொண்டது போலீசு. மேலும் மராட்டியத்தைச் சேர்ந்த முற்போக்கு கலாச்சார அமைப்பான கபீர் கலா மஞ்ச் கலைக் குழுவைச் சேர்ந்த ஒருவரது வீட்டிலும் சோதனை நடத்தியது.

ஆனால், கலவரத்தை முன்னின்று நடத்திய இந்து மதவெறியனான சாம்பாஜி பிண்டேயை, போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி போலீசு கைது செய்யவில்லை. கைது செய்யப்பட்ட மிலிந்து ஏக்போடே-வையும் உடனடியாக பிணையில் வெளியேவிட்டது போலீசு.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை (06-06-2018) அன்று, கொரெகான் பீமா வன்முறை வழக்கில் எல்கார் பரிசத் கூட்ட ஒருங்கிணைப்பாளர்களான, ரோனா வில்சன், சுதிர் தவாலே, சுரேந்திரா கட்லிங், சோமா சென். மகேஷ் ரவுத் ஆகிய முன்னணியாளர்கள் 5 பேரை மாவோயிஸ்ட் தொடர்புடையவர்கள் எனக் கூறி ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்தது போலீசு.

ரோனா வில்சன்

இந்த ஐவரில் மோடியைக் ‘கொல்ல’ சதி செய்து மாவோயிஸ்டுகள் எழுதியதாகச் சொல்லப்படும் கடிதத்தை வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்டவர் ரோனா வில்சன். கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவர், டில்லியிலிருந்து செயல்படும் “அரசியல் கைதிகளின் விடுதலைக்கான கமிட்டி”யின் மக்கள் தொடர்புச் செயலராக செயல்பட்டுவருகிறார். ஊபா, ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் உள்ளிட்ட ஆட்தூக்கி கருப்புச் சட்டங்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வருகிறார்.

கடந்த மே, 2014-ல் கைது செய்யப்பட்ட டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் ஜி.என்.சாய்பாபாவின் நெருங்கிய கூட்டாளி இவர் என்றும் சாய்பாபாவிற்குப் பிறகு மாவோயிஸ்டுகளின் வெளியுலகத் தொடர்பாளராக இவர் இருக்கிறார், என்றும் குற்றம் சாட்டியுள்ளது போலீசு.

சுதிர் தவாலே

இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட மற்றொருவரான சுதிர் தவாலே, மராத்தி பத்திரிகையான ‘விரோதி’-யின் ஆசிரியராகப் பணியாற்று வருகிறார். மேலும்,   “தீவிர அம்பேத்கர்” எனும் அமைப்பு மற்றும் தலித்துகளுக்கான பொதுத்தளம் ஒன்றை உருவாக்கியிருக்கிறார்.

இவரை ஏற்கனவே கடந்த 2011-ம் ஆண்டு ஜனவரியில் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு உள்ளவராகக் குற்றம் சாட்டிக் கைது செய்தது போலீசு. பின்னர், வழக்கை சட்டப்படி முறித்து வெளிவந்தார்.

சுரேந்திர கட்லிங்

கைது செய்யப்பட்ட மற்றொருவரான சுரேந்திரா கட்லிங், நாக்பூரைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர். இந்திய ”மக்களுக்கான வழக்கறிஞர் சங்கத்தின்” பொதுச் செயலாளர். பழங்குடியின மற்றும் தலித் உரிமை செயற்பாட்டாளரான இவர் ஏற்கனவே மாவோயிஸ்ட் தொடர்புடையவர்கள் எனக் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஆஜரானார். சாய்பாபா, தவாலே ஆகியோருக்காக வழக்காடியவர்.

சோமா சென்

நாக்பூர் பல்கலைக்கழகத்தில் ஆங்கில பேராசிரியராகப் பணியாற்றுகிறார் சோமா சென்.
இவரது கணவரான துசார்கந்தி பட்டாச்சார்யாவை கடந்த 2010-ம் ஆண்டு குஜராத் போலீசு, மாவோயிச நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட வழக்கு ஒன்றில் கைது செய்தது. பின்னர் அவரை விடுதலை செய்தது போலீசு. தற்போது சோமா சென்-ஐயும் கொரெகான் வழக்கில் மாவோயிச தொடர்பு உள்ளவர் எனக் கைது செய்துள்ளது போலீசு

முந்தைய காங்கிரசு ஆட்சிக்காலத்தில், பிரதமரின் கிராமப்புற வளர்ச்சிப் பணித் திட்டத்தில் ஆராய்ச்சியாளராகப் பணிபுரிந்த மகேஸ் ரவுத்-ஐயும் ,. ”எல்கார் பரிசத்” கூட்டத்தை ஒருங்கிணைத்த ”குற்றத்திற்காக” இவரையும் மாவோயிஸ்ட் தொடர்புள்ளவர் எனக் கூறி கைது செய்திருக்கிறது போலீசு.

மகேஷ் ரவுட்

குறிப்பாக ரோனா வில்சனையும், சுரேந்திரா கட்லிங்கையும் குறிவைத்துதான் எளிதில் வெளிவர முடியாத ஊபா சட்டத்தைப் பாய்ச்சியுள்ளது போலீசு. இதற்கு அடிப்படையான காரணம், அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கும், அவர்களது ஜனநாயக உரிமைகளுக்குமான அனைத்து வகையான சட்டரீதியான முன்னெடுப்புகளையும் செய்து வருகிறார், ரோனாவில்சன். அரசியல் எதிர்க்கருத்துக்களை முடக்கும் அடிப்படையில், அரசியல் கைதிகளை பல்வேறு பொய் வழக்குகளைப் போட்டு சிறையில் முடக்கும் போலீசுக்கு இது மிகப்பெருமளவில் எரிச்சலூட்டும் ஒன்றாக இருந்து வருகிறது.

அடுத்ததாக, சுரேந்திரா கட்லிங் அனைத்து சட்டவிரோத கைதுகள், மாவோயிசத் தொடர்பு எனக் கூறி அரசு மேற்கொள்ளும் கைதுகள், ஆள்தூக்கிக் கருப்புச் சட்டங்களின் அடிப்படையிலான கைதுகளுக்கு எதிராக சட்டப் போராட்டங்களை மேற்கொள்கிறார். இது போலீசுக்கு மேலும் எரிச்சலூட்டக் கூடிய நடவடிக்கையாக இருந்தது. அதனைத் தொடர்ந்தே இவரையும் இவ்வழக்கில் கைது செய்தது போலீசு. இதேபோல, தமிழகத்தில் மாவோயிஸ்டுகள் எனக் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடிய வழக்கறிஞர் முருகனை கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி 8-ம் நாளில், தமிழக போலீசு ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்தது நினைவிருக்கலாம்.

மதுரை வழக்கறிஞர் முருகன்

இந்தக் கைதுகளில் மாவோயிஸ்டுகளுக்கும், கைது செய்யப்பட்டவர்களுக்கு இடையிலான தொடர்புக்கு ஆதாரத்தைக் காட்டுகிறேன் என களத்தில் இறங்கிய போலீசுதான் கரடியே காறித்துப்பும் படியான ஒரு கடிதத்தை ஆதாரமாகக் காட்டியிருக்கிறது. அந்தக் கரடி யார் என்று கேட்கிறீர்களா?

பாஜகவின் இளைய பங்காளியான சிவசேனா தனது சாம்னா பத்திரிகை தலையங்கத்தில், அந்தக் கடித்ததை “நகைக்கத்தக்க திகில் படக்கதை” எனக் குறிப்பிட்டு காறி உமிழ்ந்துவிட்டது. பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல, போலீசு தில்லாலங்கடி வேலைகளைப் பற்றி நன்கு தெரிந்த காங்கிரசு தலைவர்களும், தேசியவாத காங்கிரசு தலைவரான சரத் பவாரும், இக்கடிதம் சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது என்றும், இது மக்களின் கரிசனையைப் பெற மோடி நடத்தும் நாடகம் என்றும் கூறியுள்ளனர்.

மாவோயிசக் கருத்தியலாளரும், எழுத்தாளருமான தோழர் வரவர ராவ், இக்கடிதத்தை மறுத்துள்ளார். தற்போது கைது செய்யப்பட்டவர்கள், அரசியல் கைதிகளை விடுவிக்கப் போராடுபவர்கள். அதனால்தான் அரசு பொய் வழக்கு போட்டு கைது செய்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில், திட்டமிட்டு மக்களின் மீது வன்முறையை செலுத்தியது அரசு. மக்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு அந்தப் பழியை தமது அரசியல் எதிரிகளின் மீது போட்டு அவர்களைக் குற்றவாளிகளாக்கும் முயற்சியை தமிழகத்தில் செய்து வருகின்றன, மத்திய மோடி அரசும் அடிமை எடப்பாடி அரசும். குறிப்பாக மக்கள் அதிகாரம் அமைப்பை முடக்க தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அவ்வமைப்பின் தோழர்கள் மீது பாய்ச்சியுள்ளது. அதனடிப்படையில் மக்கள் அதிகாரம் அமைப்பின் முன்னணியாளர்கள் மீது ஊபா சட்டத்தைப் பாய்ச்சத் தயாராகி வருகிறது.

அதைப் போலவே தமது அரசியல் எதிரிகளுக்கு ஆதரவாக சட்டப் போராட்டம் நடத்தும் போராளிகளை, கொரெகான் பீமா வன்முறைச் சம்பவங்களை காரணமாகக் கொண்டு ஊபா மூலம் முடக்கிவிடத் துடிக்கிறது பாஜக கும்பல்.

அதில் மோடியை வலிந்து கொண்டுவந்து திணித்து, அது தானாகவே அம்பலமாகி நிற்கிறது.

மேலும் படிக்க:
Koregaon Bhima violence case — Among the five picked for ‘Maoist links’: an editor, a lawyer, a professor
Koregaon Bhima violence case: Dalit rights activists among five held for alleged Maoist links

மக்கள் அதிகாரம் தோழர்கள் மீது தொடரும் பொய் வழக்குகள் !

க்கள் அதிகாரம் அமைப்பை முடக்கும் நோக்கத்தோடு அதன் உறுப்பினர்கள் மற்றும் முன்னணியாளர்கள் மீது தமிழக போலீசால் பல்வேறு பொய் வழக்குகள் போடப்பட்டு வருகின்றன. மக்கள் அதிகாரம் தோழர்கள் 6 பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 11.06.2018 அன்று, மதுரையைச் சேர்ந்த மக்கள் அதிகாரம் தோழர்கள் சதீஷ், முருகேசன் ஆகிய இருவரையும் குற்ற எண் 299/18-ன் கீழ் சிப்காட் போலீசு வழக்கு பதிவு செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் காவலில் வைத்தது. அதே நாளில் மாலை 4.30 மணியளவில், குற்ற எண் 320 மற்றும் 321-ன் கீழ் அவர்கள் சிப்காட் போலீசால் சிறைக்குள்ளேயே கைது செய்யப்பட்டனர்.

மறுநாள் (12.06.2018), மொத்தம் 7 குற்ற எண்களின் கீழ் அவர்களைக் கைது செய்து சிறையிலேயே கைதுக்கான குறிப்பாணைகளை வழங்கியது போலீசு. இந்த கைது குறிப்பாணைகளுக்கான முதல் தகவலறிக்கைகளை போலீசு இணையதளத்தில் இன்னமும் வெளியிடப்படவில்லை.

இந்த முதல் தகவலறிக்கைகள், வேறு சில தோழர்களையும் குற்றங்களோடு இணைக்கும் வகையில் தயாரிக்கப்படலாம் என்ற சந்தேகம் எழுகிறது. இவற்றில் கும்பல் வன்முறை நடவடிக்கைகள், கலவரம் விளைவித்தல் போன்ற  இட்டுக்கட்டப்பட்ட குற்றச்சாட்டுகள் இடம் பெறலாம் என்றும் சந்தேகம் எழுகிறது.

இந்தக் கைதுகள் மூலமும், மிரட்டல் மூலமும் மக்கள் அதிகாரத்தையோ, மக்களின் போராட்டங்களையோ ஒரு போதும் ஒடுக்கிவிட முடியாது.

தகவல்:
மக்கள் அதிகாரம்

வெள்ளிவிழா ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கீழைக்காற்று !

முற்போக்கு நூல்களை ஒரே கூரையின் கீழ் கிடைக்க செய்திருக்கும் கீழைக்காற்று வெளியீட்டகம் 25-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கீழைக்காற்று வெளியீட்டகத்தின் விற்பனையகம் இதுவரை செயல்பட்டுவந்த எல்லீசு சாலையிலிருந்து, நெற்குன்றம் ஈ.வெ.ரா.நெடுஞ்சாலைக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

அறிவுத் தேடலுக்கு தூரம் ஒரு பொருட்டல்ல…
செயலின் தாகத்திற்கு நேரம் ஒரு தடையல்ல…
எப்போதும் போல்
உங்கள் தேவையின் காத்திருப்பில் நாங்கள்!
வாருங்கள்!

வெள்ளிவிழா கொண்டாடும் கீழைக்காற்று பதிப்பகம் இதுவரை கடந்துவந்த பாதைகளை பற்றி, வாசகர்களைப் பற்றி நம்மோடு பகிர்ந்துகொள்கிறார், தோழர் துரை சண்முகம். பாருங்கள், பகிருங்கள்!

புதிய முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம், ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை,
நெற்குன்றம், சென்னை – 600 107. பேச : 99623 90277
(வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் எதிரில், சிவா ஜிம் மாடியில்)

சொத்தைப் பல்லால் கஷ்டப்பட்டார் என்பதால் ஹிட்லரை மன்னிப்பீர்களா ?

11

தூத்துக்குடி படுகொலைகள் :
சொத்தைப் பல்லால் கஷ்டப்பட்டார் என்பதால்
ஹிட்லரை மன்னிப்பீர்களா?

மகால தமிழக வரலாற்றின் மிக மோசமான அத்தியாயம் வேதாந்தாவுக்காக எடப்பாடி பழனிசாமி அரசு நடத்திய படுகொலைகள்தான். ஒரு சாதாரண ஊர்வலத்தில் துப்பாக்கிச்சூடு நடக்கும் என்பதை அனேகமாக மாநிலத்தில் யாருமே நம்பியிருக்க மாட்டார்கள்.

மோடியும் எடப்பாடியும் நீங்கள் நம்பவே விரும்பாத காரியங்களை மட்டுமே செய்வார்கள் என்பதால் அந்த சம்பவம் நிகழ்ந்துவிட்டது. அதுகுறித்த ஏராளமான விவாதங்களும் போராட்டங்களும் நடந்து இப்போது தமிழகம் அடுத்த பிரச்சினையை நோக்கி நகர்த்தப்பட்டுவிட்டது.

மேலிட உத்தரவுக்கு கட்டுப்பட்டோ அல்லது பெரும் பணம் கிடைக்குமென்பதற்காவோ உங்களால் ஒரு சிறுமியைக் கொல்ல முடியுமா?

நடந்த விவாதங்களை கவனிக்கையில் ஒரு பொதுத்தன்மையை காண முடிகிறது. போலீஸ் வெறும் ஏவல் நாய் மட்டுமே, நாம் உத்தரவிட்டவர்களை கண்டிப்போம் என்பதாக பலரும் கருத்திடுகிறார்கள்.

போலீஸ் தரப்பில் இருந்து அனாமதேய பொழிப்புரைகளும் ஊடக தரப்பில் இருந்து சில அய்யோ பாவம் பாணி கட்டுரைகளும் வெளியாகின்றன. அவை போலீஸ் வேலை எவ்வளவு கஷ்டம் தெரியுமா என்பதாக இருகின்றன.

எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து புரிந்துகொள்ள முற்படும்போது, நாம் தமிழ்நாடு போலீசின் கொடூர முகத்தை மிகவும் நீர்த்துபோன வடிவில் புரிந்துகொள்ளுமாறு நிர்பந்திக்கப்படுகிறோம் என்பது புலனாகிறது. ஏவல் நாய்கள் என கடும் சொல்லால் அவர்களை அழைப்பதே வேறு வடிவிலான அய்யோ பாவம் பாணி விமர்சனம்தான்.

தூத்துக்குடி படுகொலையின் தீவிரத்தன்மையை உணர்ந்தவர்களால் அது வெறுமனே உத்தரவுக்கு கட்டுப்பட்டு நிகழ்த்தப்பட்ட கொலைகள் அல்ல என்பது புரியும். செத்தவர்கள் அருகாமையில் இருந்து சுடப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் தெளிவாக தெரிகிறது. ஒரு 16 வயது சிறுமியும் அவ்வாறே கொல்லப்பட்டிருப்பார்.

மேலிட உத்தரவுக்கு கட்டுப்பட்டோ அல்லது பெரும் பணம் கிடைக்குமென்பதற்காவோ உங்களால் ஒரு சிறுமியைக் கொல்ல முடியுமா?

காவல் வண்டியின் மீதேறி சுடும் காட்சியின் உரையாடலை கவனியுங்கள், துப்பாக்கிய நீட்டிப் பிடித்திருக்கும் போலீசின் முகபாவத்தை கவனியுங்கள், இறந்து கிடக்கும் இளைஞன் மீது காலால் எட்டி உதைத்து “நடிக்காதடா” என மிரட்டும் போலீசின் எதிர்வினையை கவனியுங்கள்.. இவற்றில் ஏதேனும் ஒரேயொரு உணர்வோடு உங்களால் ஒரு நாயையேனும் கொல்ல இயலுமா?

இவைதான் சாதாரண மனிதனையும் போலீஸ்காரனையும் வேறுபடுத்தும் புள்ளி. ஒரு கொலையை தொழில்முறை கிரிமினல் செய்வதையும் அல்லது ஒரு சித்தாந்த வெறியூட்டப்பட்ட மதத்தீவிரவாதி செய்வதையும் நம்மால் விளங்கிக்கொள்ள முடியும். அவர்கள் அந்தக் கொலை குறித்து குற்ற உணர்வு கொள்ளாதிருக்க பயிற்றுவிக்கப்பட்டிருப்பார்கள்.

அல்லது இயல்பிலேயே குற்ற உணர்வற்ற ஆண்ட்டி- சோஷியல் சைக்கோபாத்கள் அப்படி செய்வதில் ஒரு லாஜிக் இருக்கிறது. ஆனால் இந்த இயல்பு எப்படி சம்பளத்துக்கு வேலை பார்க்கும் ஆட்களிடம் இருக்க முடியும்?

மிக இயல்பாகவும் தொழில் நேர்த்தியோடும் நிராயுதபாணிகளாக ஓடும் மக்களைப் பார்த்து சுட்டுத்தள்ள முடிகிற கும்பலை நம்மிடம் அய்யோ பாவம் என அறிமுகப்படுத்துகின்றன ஊடகங்கள். விமர்சனம் ஏதும் இன்றி நாம் அதனை ஏற்றுக்கொள்கிறோம். பொது சமூகம் தன் தலையில் மண்ணை வாரி போட்டுக்கொள்ள இதைவிட வேறு சிறந்த வழி இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.

உங்களால் தவிர்க்க இயலாத மனிதர்கள், உங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு நியாயத்தை பெற்றுத்தரும் பொறுப்பில் உள்ள மனிதர்கள் “சிலரைக் கொன்றால்” பிரச்சினையை முடித்துவிடலாம் எனும் தீர்வை தீர்மானமாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வசம் துப்பாக்கிகள் இருக்கின்றன.

இறந்து கிடக்கும் இளைஞன் மீது காலால் எட்டி உதைத்து “நடிக்காதடா” என மிரட்டும் போலீசின் எதிர்வினையை கவனியுங்கள்..

அவர்கள் கற்பழிப்பில் ஈடுபட்டாலும் கைது செய்ய இயலாத அளவுக்கு அரசு அவர்களை பாதுகாப்பாக வைத்திருக்கிறது (விழுப்புரம் இருளர் பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்டதற்கு அரசு என்ன செய்த்து என யோசித்துப்பாருங்கள்). இதைவிட மோசமான வாழ்க்கைச் சூழல் அனேகமாக நாஜி அரசிடம் வாழ்ந்த யூதர்களுக்கு வேண்டுமானால் இருந்திருக்கலாம்.

போலீஸ் தரப்பு வாதங்களை பார்க்கையில் மேற்சொன்ன கருத்து ஊர்ஜிதமாகிறது. ரப்பர் குண்டு இல்லை அதனால் நிஜ தோட்டாக்களால் சுட்டோம் என்கிறார் ஒரு அதிகாரி. போராட்டத்தின் காரணம் நல்லதா கெட்டதா என பார்ப்பது போலீசின் வேலையல்ல என்கிறார் டிவி விவாதமொன்றில் கருணாநிதி எனும் முன்னால் போலீஸ் அதிகாரி.

ஒரு போலீஸ்காரரின் பெயரில்லாத வாட்சப் உரை ஒன்று எந்த குற்ற உணர்வும் இல்லாமல் நாங்களே அடிமை வாழ்வு வாழுறோம் என அங்கலாய்க்கிறது. ஒரு பெண் போலீசின் வாட்சப் பேச்சு (இந்து தமிழில் செய்தியாக வந்திருக்கிறது) எங்களுக்கு வேலை பர்க்கும் இடத்தில் கக்கூஸ் இல்ல, வெய்யில்ல நிக்கிறோம், 24 மணிநேரம் வேலை பார்க்குறோம் ஆனாலும் மக்கள்கிட்ட எங்களுக்கு மரியாதை இல்லை என நீள்கிறது. தங்கள் கைகளால் 13 பேரின் உயிர் பறிக்கப்பட்டிருக்கிறது எனும் குற்ற உணர்வோ அல்லது துயரமோ எந்த போலீசின் பேச்சிலும் வெளிப்படவில்லை.

ஏராளமான அரசு ஊழியர்கள் கால நேரம் பார்க்காமல் உழைக்கிறார்கள். பலருக்கு மக்களிடம் மரியாதை இல்லை, சாமானிய மக்கள் பலருக்கு வாழ்நாள் முழுக்கவே சரியான வசிப்பிடமும் கழிவறையும் வாய்ப்பதில்லை. இவர்கள் யாரும் யாரையும் கொன்றுவிட்டு அதற்கு என் வேலைச்சுமையும் மரியாதையின்மையும் காரணம் என எகத்தாளம் பேசுவதில்லை. கஷ்டங்கள் கூடினால் அதிகபட்சமாக தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

உயரதிகாரி வீட்டில் கக்கூஸ் கழுவும்போது வராத ஆத்திரம், அடிப்படை வசதியில்லாமல் வேலை செய்ய நிர்பந்திக்கப்படும்போது வராத ஆத்திரம், மாலை வரப்போகும் அமைச்சருக்காக காலை முதல் வெயிலில் நிற்கச்சொல்லும்போது வராத ஆத்திரம் எல்லாம் உயிருக்கு அஞ்சி ஒடும் மனிதர்கள் மீதும் எதிர்த்து கேட்கும் ஒரு சிறுமி மீதும் வருகின்றது என்றால்… அதன் பெயர் துணிச்சலோ மன அழுத்தமோ அல்ல. உச்சகட்ட சைக்கோத்தனம். குற்ற உணர்வின்மை என்பது கிளினிக்கல் சைக்கோபாத்களின் பெரிய அதிமுக்கிய அறிகுறி.

ஒருபுறம் எந்த நியாயத்துக்கும் கட்டுப்படாமல் யாரையும் ஒடுக்கக்கூடிய கேட்பாரற்ற அதிகாரம், மறுபுறம் தமது அடிப்படை உரிமைகளைக்கூட கேட்க இயலாத நாயினும் கீழான அடிமைத்தனம் இந்த இருதுருவ இயல்பு போலீசை மட்டுமல்ல யாரையும் அபாயகரமானவர்களாக மாற்றிவிடும்.

உயரதிகாரி வீட்டில் கக்கூஸ் கழுவும்போது வராத ஆத்திரம், உயிருக்கு அஞ்சி ஒடும் மனிதர்கள் மீதும் எதிர்த்து கேட்கும் ஒரு சிறுமி மீதும் வருகின்றது என்றால்… அதன் பெயர் உச்சகட்ட சைக்கோத்தனம்.

விவசாயிகள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், சிறுதொழில் முதலாளிகள், மாணவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் போராட வேண்டியதற்கான காரணங்கள் கூடிக்கொண்டே செல்கின்றன. மிடில் கிளாசின் தாலியை அறுக்காமல் அரசாங்கம் நகர இயலாது எனும் அளவுக்கு பொருளாதாரம் பல்லிளிக்கின்றது. யார் வம்புக்கும் போகாமல் வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பாய் வாழ்ந்துவிடலாம் எனும் நடுத்தர வர்க நம்பிக்கை காலாவதியாகிவிட்டது.

போராடாமல் வாழ முடியாது எனும் நிலைமைக்கு மக்கள் வந்திருக்கும் வேளையில் நாலு பேரை போட்டாத்தான் போராட்டம் அடங்கும் எனும் முடிவுக்கு அரசு வந்திருக்கிறது என்பதை தூத்துக்குடி சம்பவம் உணர்த்துகிறது. போலீஸ் எட்டி உதைக்கும் சாத்தியமுள்ள சாலையில் நாம் பயணிக்கிறோம், கேமராவுக்கு முன்பே குறிபார்த்து நிதானமாக சுட்டுத்தள்ளும் சுதந்திரம் கொண்ட காவலர்களின் வசம் நம் பாதுகாப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

எஸ்.வி.சேகரை ஏன் கைது செய்யவில்லை எனும் கேள்விக்கு பதில் சொல்லக்கூட அவசியமற்றவர்களாக காவல் அதிகாரிகள் வாழ்கிறார்கள். காவல்துறை உயரதிகாரி மகளை கேள்வி கேட்டு அதை வீடியோ எடுத்த பாவத்துக்காக கை உடைக்கப்பட்டு நிற்கிறார் ஒரு போலீஸ்காரர், அதை (நக்கீரன் தவிர) செய்தியாக்க விரும்பாத ஊடகங்கள் வழியேதான் நீங்கள் நீதி கேட்டாக வேண்டும்.

வேறு வழியே இல்லை, போலீசின் கேட்பாரற்ற அதிகாரம் குறித்தும், அவர்களின் சிந்தனையில் ஊறிப்போயிருக்கும் சாதாரண மக்கள் மீதான வெறுப்பு, தன்னியல்பாக வெளிப்படும் பணக்கார மற்றும் உயர்சாதி விசுவாசம் ஆகியவை குறித்து பொது சமூகம் மிகத் தீவிரமாக விவாதித்தாக வேண்டும். அவர்களை மகிமைப்படுத்தும் எல்லா செய்திகள் மீதும் நமது விமர்சனங்கள் எழ வேண்டும்.

லாக்கப் கொலைகள் ஏன் பணக்காரர்களுக்கு நிகழ்வதில்லை, எச்.ராஜா எவ்வளவு மோசமாகப் பேசினாலும் ஏன் வழக்கு பாய்வதில்லை, சிறுமியின் வாயில் சுடும் அளவுக்கு கோபக்காரர்கள் ஏன் வினாயகர் ஊர்வலத்தில் மன்றாடி நிற்கும் சாந்த சொரூபிகளாக இருக்கிறார்கள் என்பதாக நாம் கேட்க நூற்றுக்கணக்கான கேள்விகள் இருக்கின்றன.

அவை பரவலாக கேட்கப்படாததால் போலீஸ் இன்னும் தீவிரமாக லத்திக் கம்புகளையும் துப்பாக்கிகளையும் காதலிக்கத் துவங்குகிறது. அவை ஒருபோதும் மக்களைக் காக்க பயன்பட்டதில்லை என்பதை நினைவில் வையுங்கள்.

  • வில்லவன்
    (அரசியல் விமர்சகர்)

பொறியியல் கல்வியின் சீரழிவும் ! கையாலாகாத உயர்கல்வி கட்டமைப்பும் !!

1

டந்த மாதம் அண்ணா பல்கலைக்கழகம் தன் கட்டுப்பாட்டிலுள்ள தன்னாட்சி பெறாத (non autonomous) பொறியியல் கல்லூரிகளுக்கான டிசம்பர் 2017 பருவத்தில் நடந்த தேர்வுகளின் தேர்ச்சி விகிதத்தை வெளியிட்டது. அதில் டிசம்பர் 2017 பருவத்தில் தேர்வேழுதிய 5.25 லட்சம் மாணவர்களில் 2.25 லட்சம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். ஏறத்தாழ 57% மாணவர்கள் தேர்ச்சியடைவில்லை.

டிசம்பர் 2017 பருவ தேர்வில் பங்கு பெற்ற 497 பொறியியல் கல்லூரிகளில் (non autonomous colleges) 115 கல்லூரிகள் மட்டுமே 50% -க்கு மேல் தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளது. மீதமுள்ள 382 கல்லூரிகளில் 50% -க்கும் குறைவான தேர்ச்சியே பெற்றுள்ளது. இதில் 60 கல்லூரிகள் 10% தேர்ச்சியும் 83 கல்லூரிகள் 10-20% தேர்ச்சியையும் மட்டுமே பெற்றுள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளாக இதே நிலையே தொடர்கிறது.

தகுதியற்ற போராசிரியர்கள், மிகவும் குறைந்த ஊதியம், குறைந்த எண்ணிக்கையிலான ஆசிரியர்கள், போதிய உள்கட்டமைப்பு மற்றும் ஆய்வக வசதிகள் இல்லாமை போன்றவைகள் தான் இந்த மோசமான தேர்ச்சி விகிதத்திற்கு முக்கிய காரணமென கல்வியாளர்கள் கூறுகின்றனர். ஆனால் மோடி அரசோ பொறியியல் கல்வியின் தரத்தை இன்னும் மோசமாக்குவதற்கு மாணவர்-ஆசிரியர் விகிதத்தை (1:15-ல் இருந்து 1:20 என) அதிகரித்துள்ளது.

அகில இந்திய தொழில்நுட்ப கழகம் (All India council for technical education – AICTE) சில மாதங்களுக்கு முன்பு தனியார் கல்லூரிகளுக்கான ஆசிரியர்-மாணவர் விகிதத்தை அதிகரித்தற்கான அறிவிப்பை வெளியிட்டது.

இதன் படி தனியார் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் வழங்கும் B.E/B.Tech/B.Arch/MBA/MCA மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்புகளுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த 1:15 என்ற ஆசிரியர்-மாணவர் விகிதத்தை 1:20 எனவும் டிப்ளமோ படிப்புகளுக்கு 1:20 என இருந்ததை 1:25 எனவும் உயர்த்தியுள்ளது. இந்த புதிய விகிதம் வரும் கல்வியாண்டிலிருந்து (2018-19) அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளது.

இந்நடவடிக்கைகளின் காரணமாக பல ஆயிரக்கனக்கான ஆசிரியர்கள் பணியில் இருந்து வெளியேற்ற வாய்ப்புள்ளது. மொத்தமுள்ள 6,60,380 பேராசிரியர்களில் 1,78,809 பேராசிரியர்கள் பணியிலிருந்து வெளியேற்ற வாய்ப்பு இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் மட்டும் 16,500 பேராசிரியர்கள் வேலையிழப்பார்கள்.

மோடி அரசின் இப்புதிய விதியை எதிர்த்து அகில இந்திய தனியார் கல்லூரி ஊழியர்கள் சங்கம் மற்றும் தெலுங்கானா மாநில தனியார் கல்லூரி ஆசிரியர்கள் இணைந்து உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்நிலையில் தனியார் கல்லூரி நிர்வாகமோ இப்புதிய விதியை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இதுவரை 765 பேராசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் கோவை PSG Tech கல்லூரியிலிருந்து 90 பேராசிரியர்களும் சென்னையிலுள்ள ஜெருசலம் கல்லூரியிலிருந்து 50 பேராசிரியர்களும் அடங்குவர்.

பேராசிரியர்களின் எண்ணிக்கை குறைக்கப்படுவதினால் உயர் கல்வியின் தரம் மேலும் மோசமாகும் எனத்தெரிந்தே தான் அரசு இப்புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த சில வருடங்களாகவே இந்திய தரகு முதலாளிகள் உயர்கல்வியின் தரத்தை குறித்து நீலிக்கண்ணீர் வடித்து வருகின்றனர்.

உயர் கல்வியின் தரம் குறைந்து விட்டது; மாணவர்களுக்கு பொறியியலின் அடிப்படை கூட தெரிவதில்லை; திறன் இடைவெளி (skill gap) அதிகமாக உள்ளது; மாணவர்களின் திறனை மேம்படுத்துவதற்கான படிப்புகள் சொல்லிதரவேண்டும் என FICCI, CII, NASSCOM போன்ற தரகு முதலாளிகளின் கூட்டமைப்புகளும் UGC அல்லது AICTE போன்ற உயர்கல்வி ஆணையங்களும் பேசி வருகின்றனர். ஆனால் இவர்கள் தான் கல்வியின் தரத்தை மேலும் நாசமடையச் செய்யும் மேற்சொன்ன விதிமுறைகளை கொண்டுவந்தவர்கள்.

பேராசிரியர்களை குறைப்பதன் மூலம் தனியார் கல்லூரிகள் அதிகம் கொள்ளையடிக்க முடியும். பொதுவாக தனியார் கல்லூரிகள் அங்கீகாரம் பெறுவதற்காக பொய்யான தகவல்களையே அரசிடம் சமர்பிக்கின்றனர். குறிப்பாக பேராசியர்களின் எண்ணிக்கை அவர்களின் கல்விதகுதி மற்றும் ஊதிய விவரங்கள் பற்றிய பொய்யான தகவல்களையே பல்கலைக்கழக மானியக் குழுவிடம் (University grant commission-UGC) சமர்பித்து அங்கீகாரம் பெறுகின்றனர்.

இது அரசாங்கத்திற்கு தெரிந்தே தான் நடக்கிறது. 80,000 போலி பேராசிரியர்களை கல்லூரிகள் கணக்கு காட்டியிருப்பதாக மனிதவள மேம்பாட்டு அமைச்சகமே சமீபத்தில் ஒப்புக்கொண்டது. இந்நிலையில் 1:20 என்ற விகிதம் கல்லூரி நிர்வாகத்திற்கு இன்னும் சாதகமாக அமையும். தனியார் சுயநிதி கல்லூரிகள் கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்றே மோடி அரசு மேற்சொன்ன முடிவை எடுத்துள்ளது.

16.11.2017 அன்று சென்னையில் நடைபெற்ற அகில இந்திய சுயநிதி தொழில்நுட்ப பயிலகங்களின்  கூட்டமைப்பின் கூட்டம்

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அகில இந்திய சுயநிதி தொழில்நுட்ப பயிலகங்களின் கூட்டமைப்பு (All India federation for self financing technical institutions) என்ற அமைப்பை தனியார் கல்லூரி முதலாளிகள் உருவாக்கினர். இக்கூட்டமைப்பு மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு சில கோரிக்கைகளை வைத்தது. அதில் ஆசிரியர் மாணவர் விகிதத்தை 1:25 ஆக உயர்த்த வேண்டும். குறைந்த பட்சமாக 1:20 ஆக மாற்றவேண்டும் என்று கோரியிருந்தது.

இதையே, 2015 -ல் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுவை (All India council for technical education) சீரமைப்பு செய்வதற்காக மோடியால் அமைக்கப்பட்டிருந்த காவ் கமிட்டியும் (Kaw committee) பரிந்துரையாக மத்திய அரசுக்கு கூறியிருதது. கல்வியின் தரம் மோசாமாவதை பற்றியும் லட்சக்கனக்கான பேர் வேலையிழப்பதை பற்றியும் கவலையில்லாமல் கல்வி கொள்ளையர்கள் லாபமடைவதற்காகவே இத்திட்டத்தை மோடி அரசு கொண்டுவந்துள்ளது வெளிப்படை.

சந்தையில் போதிய வேலைவாய்பின்மையால் பொறியியல் படிப்பின் மீதான மோகம் வெகுவாக குறைந்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கனக்கான கல்லூரிகளை மூட UGC அனுமதி அளித்து வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 4.26 லட்சம் பொறியியல் இடங்கள் நீக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கடந்த ஆண்டில் மட்டும் 1.67 லட்சம் பொறியியல் இடங்கள் நீக்கப்பட்டுள்ளன.

பொறியியல் கல்வியின் தரம், பாடத் திட்டம், போராசிரியர்களின் கல்வி தகுதி, ஆய்வக கட்டமைப்பு, அங்கீகாரம் வழங்குவது என ஒட்டு மொத்த பொறியியல் கல்வியையுமே UGC மற்றும் AICTE போன்ற ஆணையங்களே கட்டுப்படுத்துகின்றன. தமிழ்நாட்டிலுள்ள 550 பொறியியல் கல்லூரிகளும் அண்ணா பல்கலைக்கழத்தின் கட்டுபாட்டின் கீழ் உள்ளது.

பல பொய்யான வாக்குறுதிகளை அளித்தும் வளாக நேர்முகத்தேர்வில் (campus interview) வேலைவாய்ப்பு என்று கூறியும் கட்டமைப்பு வசதிகளே இல்லாத இப்பொறியியல் கல்லூரிகள் லட்சக்கனக்கான ரூபாயை கல்வி கட்டணமாக மாணவர்களிடமிருந்து கொள்ளையடிக்கின்றனர்.

இக்கொள்ளை UGC, AICTE அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தெரிந்தே தான் நடக்கிறது. மறுபுறமோ பொறியியல் பட்டம் பெற்ற மாணவர்களில் 85% பேர் திறமையற்றவர்கள் என முத்திரை குத்துகிறது தரகு முதலாளி வர்க்கம்.

தொடர்ந்து நான்கு வருடங்களாக பெரும்பான்மையான பொறியியல் கல்லூரிகள் 50% -க்கு குறைவான தேர்ச்சி விகிதத்தை பெற்றிருப்பதற்கு யார் காரணம்? மாணவர்களா? அல்லது லாபத்தை மட்டும் நோக்கமாக கொண்ட கல்லூரி நிர்வாகமா? பொறியியல் கல்வியின் தரம் மற்றும் மாணவர்களின் திறன் (skill) குறைந்தற்கு யார் காரணம்? வேலைகிடைக்கும் என்ற கனவோடு லட்சக்கணக்கில் கட்டணம் செலுத்தும் மாணவர்களா அல்லது கல்வியை வியாபாரமாக்க கங்கனம் கட்டி அலையும் UGC, AICTE, அண்ணா பல்கலைக்கழகமா?

அதிக வரதட்சனை வாங்கி திருமணம் செய்த ஒருவன், தன்னுடைய உடல்குறையினால் குழந்தை பெற முடியாதை மறைத்து மனைவிக்கு மலடி பட்டம் கட்டி அப்பாவி பெண்ணை குற்றவாளியாகுவதைப் போல, “தரமான கல்வியை வழங்குகிறேன்!” என கூறி பல நூறு கோடிகளை கொள்ளையடித்த கல்வி நிறுவனங்கள், அக்கொள்ளைக்கு துணையான UGC, AICTE, அண்ணா பல்கலைக்கழகம் உள்ளடக்கிய இந்த அரசு கட்டமைப்பு தங்களுடைய தோல்விகளை மறைப்பதற்காக மாணவர்களை திறமையற்றவர்கள் என குற்றஞ்சுமத்துகிறது.

இந்திய ஆளும் வர்க்கத்திற்கும் அதன் அரசாங்கத்திற்கும் தரமான உயர்கல்வியை மக்களுக்கு வழங்கவேண்டும் என்ற எண்ணம் கிஞ்சித்தும் கிடையாது. உயர்கல்வி சந்தையை முற்றிலும் கொள்ளையடிப்பதையே இவர்கள் லட்சியமாக கொண்டுள்ளனர். இவர்களை ஒழிக்காமல் தரமான உயர்கல்வியை நாம் பெற சாத்தியமே இல்லை.

  • விக்ரம்

மேலும் :

மோடியைக் கொல்ல சதி எனும் பெயரால் ஒரு சதி !

பேஸ்புக்கில் நான் எழுதுவதை வாசிப்பவர்கள் ஒரு விஷயத்தை கவனித்திருக்கலாம். பெரும்பாலும், எந்தவொரு பிரச்சினைக்கும் உடனே பதிவு எழுத மாட்டேன். அந்தப் பிரச்சினை பதிவு எழுதப்படும் அளவுக்கு முக்கியமானதா, ஊடகங்களில் வந்த செய்தியின் இதர கோணங்களும் உண்டா, தேவையில்லாமல் ஊதிப் பெரிதாக்கப்படும் சிறிய பிரச்சினையா? வேறு பிரச்சினையிலிருந்து திசைதிருப்புவதற்காக எழுப்பப்படும் பிரச்சினையா? இப்படி பலதையும் ஆலோசித்தபிறகே பதிவு எழுதுவேன்.

பிரதமர் மோடியைக் கொலை செய்ய முயற்சி என்ற செய்தி நேற்று வந்தபோது, அதையும் இப்படித்தான் புறம்தள்ளி வைத்தேன். பிரதமர் என்ன, எந்தவொரு சாமானிய மனிதரும் கொல்லப்படக்கூடாது. அரசால் நடத்தப்படும் மரணதண்டனை என்னும் கொலையாக இருந்தாலும் அது ஏற்கத்தக்கதல்ல. நாட்டின் பிரதமரைக் கொல்வதற்கான சதி நடக்கிறது என்றால், அது உங்களுக்கும் எனக்கும் தெரிவதற்கு முன் உளவுத்துறைக்குத் தெரிந்துவிடும். அவர்களுடைய செயல்பாடும் நடவடிக்கைகளும், முன்னேற்பாடுகளும், பாதுகாப்பு நடைமுறைகளும் நீங்களும் நானும் அறிந்து வைத்திருப்பதற்கும் பல மடங்கு மேலானது.

ஏற்கனவே குஜராத்தில் தன்னைக் கொல்ல சதி என அழுகுணி ஆட்டம் ஆடிய மோடி

உதாரணமாக, பிரதமர் ஓர் இடத்திற்குச் செல்வதாக இருந்தால், அவருக்கான பயணப்பாதை குறித்து தேவையைப் பொறுத்து பல பாதைகள் வகுக்கப்பட்டிருக்கும். எந்தப் பாதையில் செல்லப்போகிறார் என்பது மிகச்சிலருக்கு மட்டுமே தெரியும். பிரதமருக்கேகூடத் தெரியாது. பாதை நெடுகிலும் காவலர்கள் பாதுகாப்புக்காக நின்று கொண்டிருப்பார்கள். பிரதமர் இந்த வழியாகத்தான் போகப்போகிறார் என்று அவர்களும்கூட நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் அவர் வேறு வழியாகப் போயிருப்பார். ஆக, பிரதமரைக் கொலை செய்யும் திட்டம் ஏதும் உண்மையிலேயே இருந்தால் உளவுத்துறையினரும் பாதுகாப்புத் துறையினரும் அதை எப்படி எதிர்கொள்வது என்று பார்த்துக் கொள்வார்கள்.

தில்லித் தமிழ்ச் சங்கத்தில் பதவியைப் பிடிக்கும் போட்டியில் சாதி, பணம், அரசியல் என எல்லாம் விளையாடும். நான் தமிழ்ச் சங்கத்தில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த காலத்தில், இருபது ஆண்டுகளுக்கு முன்னால், நானும் என் நண்பர்கள் சிலரும் சேர்ந்து பிரதமரைக் கொல்ல சதி செய்வதாக ஒரு மொட்டைக்கடிதம் எழுதிவிட்டார்கள் சிலர். சிபிசிஐடி துறை இதை தீவிரமாக விசாரித்தது. பல மாதகால விசாரணைக்குப் பிறகு இது ஆதாரமற்ற புகார் என்று ஃபைலை மூடியது. இந்த விஷயம் மிகத் தறசெயலாக எனக்குத் தெரிய வந்தது. அதுவும்கூட கேஸ் மூடப்படும் நேரத்தில்தான் தெரிந்தது. இல்லையேல் எனக்கோ, என் நண்பர்களுக்கோ தெரிய வந்திருக்காது. உளவுத்துறையின் நடவடிக்கை அவ்வளவு ரகசியமாக இருக்கும்.

ரோனா வில்சன் – மாவோயிஸ்டுகளின் கடிதத்தை இவர் வீட்டிலிருந்து எடுத்ததாகச் சொல்லியிருக்கிறது போலீசு

இப்போதைய சதி விஷயம் இவ்வளவு சாதாரணமாக பகிரங்கமாவதைப் பார்த்தாலே இது நாடகம் என்பது புரிய வேண்டும். ஆனால், ஊடகங்கள் கூவ ஆரம்பித்து விட்டன. இன்சைடு ஸ்டோரி, மோடிக்கு அச்சுறுத்தலை அடுத்து பட்நவிஸையும் கொலைசெய்யும் திட்டம்… என கதைகளுக்கு மேல் கதைகளை அவிழ்த்துவிட ஆரம்பித்து விட்டன. செய்திகளுக்கு உள்ளே போய்ப் பார்த்தால் ஒரு புண்ணாக்கும் கிடையாது. எல்லாம் வெற்று வார்த்தைகளால் அடுக்கப்பட்ட பொய்கள்.

இத்தனையும் செய்கிற ஊடகங்கள் எவை என்று பார்த்தால், காசு வாங்கிக்கொண்டு இந்துத்துவா-பாஜக ஆதரவு செய்திகளை பெய்டு நியூஸாக வெளியிடத் தயார்… நாங்கள் பாஜக ஆதரவுதான் என்று கோப்ரா போஸ்ட் நடத்தி ஸ்டிங் ஆபரேஷனில் தெரிவித்த நக்கித்தின்னி ஊடகங்கள்தான். பொய்த்தகவல்களை நாடெங்கும் பரப்பக்கூடிய அபாரமான வலிமையுடன் இருக்கற ஊடகங்களின் மொள்ளமாரித்தனத்தை வெளிப்படுத்த நமக்கு சமூக ஊடகங்கள் மட்டுமே இருக்கின்றன. எனவே எழுதியாக வேண்டியிருக்கிறது.

மோடியைக் கொலை செய்வதற்கான மாவோயிஸ்ட்களின் சதித்திட்டத்தை வெளிப்படுத்தும் கடிதத்தில் என்னென்ன விஷயங்கள் உள்ளன?

1. சிறையில் இருக்கிற தோழர்களை விடுவிக்க சட்டரீதியான எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.
2. மக்கள் மத்தியில் விழிப்புணர்வு இயக்கங்கள் நடத்துவதில் இன்னின்னார் பெரிதும் உதவியாக இருக்கிறார்கள்.
3. சிராஜ் என்பவர் தன்னால் இயன்ற எல்லா உதவிகளையும் செய்யத் தயாராக இருக்கிறார்.
4. அவருடன் இன்னொருவரை அனுப்பி வைக்கப்படுவார். அவரைப்பற்றிய சிவி – பயோடேட்டா – இத்துடன் இருக்கிற மைக்ரோசிப்பில் இருக்கிறது.
5. 8 கோடி ரூபாய்க்கு ஆயுதம் வாங்க வேண்டும்.
6. அதற்குப் பணம் வேண்டும்.
7. இந்துத்துவ வளர்ச்சி பற்றி பல உறுப்பினர்களும் சீக்ரெட் செல்களும் பகிரங்க அமைப்புகளும் மிகவும் கவலை கொண்டுள்ளன.
8. ஒத்த கருத்துள்ள அமைப்புகளை, அரசியல் கட்சிகளை, சிறுபான்மையினரை இணைக்கும் வேலை நடந்து வருகிறது.
9. மோடி தலைமையிலான பாசிஸ்ட் அரசு ஆதிவாசிகளை கொடுமைப்படுத்துகிறது.
10. பீகாரிலும் மேற்கு வங்கத்திலும் பலத்த அடி விழுந்திருந்தாலும் 15 மாநிலங்களில் மோடி பாஜக அரசை நிர்மாணித்து விட்டார்.
11. ராஜீவ்-காந்தி மாதிரியான நடவடிக்கை எடுப்பது பற்றி நாங்கள் சிந்தித்து வருகிறோம். இதைப்பற்றி சிசி/பிபி (பொலிட் பீரோ / சென்ட்ரல் கமாண்டாம்!) விவாதிக்க வேண்டும். பேரணிகள் இதற்குப் பொருத்தமாக இருக்கும்.

ஆக, ஒரு மாவோயிஸ்ட் இன்னொரு மாவோயிஸ்ட்டுக்கு டியூஷன் நடத்துவதுபோல எல்லாவற்றையும் விளக்கோ விளக்கு என்று விளக்குகிறார் இந்தக் கடிதத்தில்! எக்கச்சக்கமான குளறுபடிகள் இந்தக் கடிதத்தில் உள்ளன என்பது அரசியலை அவதானிக்கும் எவருக்கும் எளிதாகப் புரியும்.

ஒத்த கருத்துள்ள அரசியல் கட்சிகளை, சிறுபான்மையினரை இணைக்கும் வேலை நடக்கிறதாம்! மாவோயிஸ்ட்கள் ஜனநாயகத் தேர்தலை நம்பும் எந்த அமைப்புகளுடனும் இணைவதில்லை என்பது தெரியாதா என்ன? முஸ்லிம்களும் இந்த சதியில் இருக்கிறார்கள் என்று பிரச்சாரம் செய்வதற்காக சிறுபான்மையினர் என்ற வார்த்தை, கூடவே சிராஜ் என்று ஒரு பெயர்! சிராஜுடன் யாரையோ அனுப்புகிறார்கள். அவருடைய சிவி மைக்ரோசிப்பில் இருக்கிறதாம். இவ்வளவு விளக்கமாக எழுதுபவர் அதையும் ஏன் கடித்த்துடன் இணைக்கவில்லை? அதாவது, மைக்ரோசிப் பயன்படுத்தினார்கள் என்று சாட்சியம் உருவாக்க வேண்டும், அதற்கான வரிகள் இவை.

தகவல் தொழில்நுட்ப யுகத்தில், செய்திகளை ரகசிய முறையில் அனுப்ப ஏராளமான வழிகள் இருக்கும்போது, இப்படி எல்லாப் பெயர்களையும் தெள்ளத்தெளிவாக எழுதுகிறார்களாம்! எந்தவொரு குற்றவாளியும் ஏதேனுமொரு தடயத்தை விட்டுவிடுவான் என்று சொல்லப்படுவதுபோலவே, பிளான்ட் செய்யப்படும் எந்தவொரு போலீஸ் நடவடிக்கையும் ஏதேனுமொரு தடயத்தை விட்டுவிடும். இதில் அதுபோல ஏகப்பட்ட குறைகள் உண்டு.

மோடிக்கு சிம்பதி கிரியேட் பண்றதோட, எவனும் தப்ப முடியாதபடிக்கு ‘இஷ்ட்ராங்கா’ ‘எவிடன்ஸ்’ தயார் செய்யணும் என்று மேலதிகாரி சொன்னபடி, எல்லார் பெயர்களையும் இணைத்து தயாரிக்கப்பட்ட கடிதம் என்று தெளிவாகத் தெரிகிறது. இல்லையேல், ஒரு நாட்டின் உச்ச அதிகாரம் கொண்ட பிரதமரையே கொலை செய்வதற்கான திட்டம் குறித்து எழுதப்படும் கடிதத்தில் இத்தனை விஷயங்களா பேசப்படும்?

பிரதமரைக் கொல்லும் சதித்திட்டம் தெரிய வந்தது என்றால் முதலில் செய்யக்கூடிய ஒரே வேலை – உடனே இதை உளவுத்துறைக்குத் தெரிவிப்பது, பாதுகாப்பை பலப்படுத்துவது. இப்படி பகிரங்கப்படுத்துவது அல்ல.

பகிரங்கப்படுத்துகிறார்கள் என்றால், இது தெள்ளத்தெளிவான நாடகம். குஜராத்தில் ஏற்கெனவே பரிசோதிக்கப்பட்டு வெற்றி தந்த நாடகம். அதைத்தான் ‘One more plot’ என்கின்றன ஊடகங்கள்!

இப்போதைக்கு மோடிக்கு நிகரான வாய்ச்வடால் திறமை உள்ளவர் இந்திய அரசியலில் எவருமில்லை என்றாலும், மோடிக்கு எதிரான மனநிலை அதிகரித்துக்கொண்டே போவது நிதர்சனம். நான்குஆண்டுகளில் நாட்டுக்கு ஏற்படுத்திய சோதனைகளே அதிகம். எதிர்ப்பு அலை எப்போதோ வீசத் துவங்கி விட்டது.

இனி உதவக்கூடியது என்னைக் கொல்ல சதி, நான் நாட்டுக்காக உயிரைவிடத் தயார், போன்ற தேய்வழக்கு சவடால்கள்தான். அதற்கான முதல்படிதான் இது. இன்னும் பலதையும் இனிவரும் காலத்தில் பார்க்க நேரலாம். அதில் பாகிஸ்தான், ராமர் கோயில் விவகாரங்களும் வரலாம்.

என்னுடைய கவலை எல்லாம் இதுதான் — முன்னர் எல்லாம், இதுபோன்ற செய்திகள் வரும்போது, போலீஸ் தரப்பு தரும் செய்தியை ஊடகங்கள் அப்படியே விழுங்கி வாந்தி எடுக்காது.

Maoist letter exposes plan to kill PM Modi – என்று போலீஸ் செய்தி கொடுத்தால், அதை
Police claims Maoist letter exposes plan to kill PM Modi அல்லது Alleged plan to kill PM Modi
என்றுதான் எழுதப்படும்.

ஆனால் இப்போது போலீஸ் தரப்புக் கூற்றை ஊடகங்கள் அப்படியே அச்சுபிசகாமல் வெளியிடுகின்றன, அல்லது போலீஸ் தரப்பைவிட அதிகம் கூவுகின்றன.

ஊடகங்கள் இப்படிச் செய்வதன் நோக்கத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால்,
/புனேவை சேர்ந்த காவல்துறை கைது செய்த மாவோயிஸ்ட்களிடம் இருந்து கைப்பற்றிய கடிதங்களில் பிரதமர் மோடியை கொலை செய்ய தீட்டியிருந்த திட்டம் வெளியாகி இருக்கிறது./
என்று பதிவைத் துவக்குகிறார் ஸ்ரீதர்.

  1. கைதுசெய்யப்பட்டவர்கள் மாவோயிஸ்ட்கள் அல்ல. மாவோயிஸ்ட்களுடன் தொடர்பு உடையவர்கள் என்று கருதப்படுகிறவர்கள். மக்கள் இயக்கங்களில் போராடுபவர்கள், வழக்கறிஞர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள். தலைமறைவாக இயங்குபவர்கள் அல்ல.
    2. கைப்பற்றிய கடிதங்கள் அல்ல. கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் கடிதங்கள்.
    3. கொலை செய்யத் தீட்டியிருந்த திட்டம் வெளியாகி இருக்கிறது அல்ல. கொலை செய்யத் தீட்டியிருந்த திட்டம் வெளியாகி இருக்கிறது என்று கூறுகிறது போலீஸ்.

ஸ்ரீதர் போன்ற விவரமான ஆட்களும் உணர்ச்சிவசப்பட்டு போலீஸ் தரப்புக் கருத்தை அப்படியே கையாள்வதுதான் வியப்பையும் கவலையையும் அளிக்கிறது. அதனால்தான் இந்தப்பதிவு.

பி.கு. – ஒருவர் மாவோயிஸ்டாக இருப்பதே குற்றச் செயலாகி விடாது. ஒரு தத்துவத்தை நம்புவதற்கும் செயல்பாட்டுக்கும் வித்தியாசம் உண்டு. ஒரு சித்தாந்தம் இந்திய அரசமைப்புக்கு எதிரான சிந்தனையாக இருப்பதாலேயே அவர் குற்றம் புரிந்தவர் ஆக மாட்டார், அந்தச் சிந்தாந்தத்தின்பேரில் சட்டவிரோத செயல் புரிந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கலாம் என்று உச்சநீதிமன்றமும் உயர்நீதிமன்றங்களும் கடந்த காலத்தில் தீர்ப்பளித்தது உண்டு. அதுவும் இவர்கள் மாவோயிஸ்ட்கள்கூட கிடையாது. போலீஸ் தரப்பின்படியும் மாவோயிச ஆதரவாளர்கள்தான். சதி என்கிற இந்தக் குற்றச்சாட்டும் நீதிமன்றங்களில் நிற்காது என்பது உறுதி.

நன்றி: ஷாஜகான்

நூல் அறிமுகம் : முருகன் வணக்கத்தின் மறுபக்கம்

புராணக் கதைகளுக்கும், மூட நம்பிக்கைகளுக்கும் ஆட்பட்ட மக்களை, சமயநிலைப்பாட்டை சமூக வரலாற்று, பொருளாதார அறிவியல் பின்னணியில் புரிந்து கொள்வதற்கு நாம் உதவ வேண்டும். சமய சக்திகளுக்குள்ளும் மோதல்கள், முரண்பாடுகள் உண்டு. மூடப் பழக்க வழக்கங்களுக்கும், நம்பிக்கைகளுக்கும் எதிரான கலகக்குரல் சமய உலகிலும் உண்டு. சமய உலகில் தோன்றிய பல ஞானிகள் சடங்குகளை எல்லாம்  நிராகரித்திருக்கிறார்கள். சீர்திருத்தம் பேசியிருக்கிறார்கள். வடலூர் சக்தியஞான சபைக்கும் காஞ்சி மடத்திற்கும் வேறுபாடு இல்லையா? இந்த வேறுபாட்டை மேலோட்டமாகப் பார்க்காமல், இவற்றின் வேர்களை மக்களுக்குக் காட்ட வேண்டும்.

தமிழில் அர்ச்சனை, சாதிபாகுபாடு இன்றி அனைத்து மாந்தரும் அர்ச்சகராதல் போன்ற கோரிக்கைகளை கொள்கை அளவில் ஏற்கும் பலர் அதை நடைமுறைப்படுத்திக் கொள்ள தயங்குகிறார்கள். அந்தத் தயக்கம் உடைபட வேண்டும். அந்தத் தயக்கத்தை உடைக்க பக்தர்கள் மத்தியிலேயே பலர் இருக்கிறார்கள். அவர்களை உற்சாகப்படுத்தவும், உறுதுணையாக இருப்பதும், தார்மீகக் கரம் நீட்டுவதும் காலம் இடும் கட்டளையாகும். அந்தக் கட்டளையின் திசைவழிச் செல்ல இந்த நூல் உதவும்.

முருக வழிபாடு குறித்த கருத்தாடலைப் பண்பாட்டுத்தளத்தில் விரிவாகவும், ஆழமாகவும் முன்வைக்கிறது, ‘’முருகன் வணக்கத்தின் மறுபக்கம்’’.

உணவை உற்பத்தி செய்யும் காலத்தில் அல்ல, உணவைத் தேடி அலையும் காலத்தில் தோன்றிய கடவுள் முருகன். இயற்கையை வணங்கிய காலத்தின் நீட்சி இது. கடவுளை வணங்க ஒரு உருவம் தேடினார்கள் மக்கள். அப்போதுகூட மனித உருவம் ஒன்றை அவர்கள் வணங்க முயலவில்லை. உணவைத் தேடி மிருகங்களை வேட்டையாடவும், அம்மிருகங்களிடமிருந்துத் தங்களைக் காக்கவும் அவர்கள் உற்பத்தி செய்திருந்த உற்பத்திக் கருவி ‘’வேல்’’ தான். அதனால் வேலை வணங்க ஆரம்பித்தார்கள். வேலைப் பயன்படுத்துபவன் வேலன் ! இந்த வேலன்தான் பின்னர் முருகன், முதல் உருவ வணக்கம் வேலில்தான் தோன்றியது. சமூக வளர்ச்சியில் இதுதான் சாத்தியம் !

முருகனுக்குத் தந்தை சிவன் என்பதும், தாய் பார்வதி என்பதும், அண்ணன் பிள்ளையார் என்பதும், வள்ளியைக் களவு மணம் புரிந்ததும், கற்புமண மனைவியாக தெய்வயானை ஆக்கப்பட்டதும் பின்னால் காலம் உருவாக்கிய கதைகள்.

முருகன் வரலாற்றுக்கு முந்திய கடவுள் (PRE HISTORIC GOD) வரலாற்றிற்கு முந்திய சமுதாயத்தையும் அதன் வாழ்க்கையையும் மானுடவியல் அடிப்படையில்தான் கண்டு தெளிய முடியும். முருகன் வணக்கத்தையும் மேலே கண்டவாறுதான் அணுகி தெரிந்து கொள்ள வேண்டும். பின்னால் வந்த புராணங்கள் வரலாறு ஆகாது ! உணவைத் தேடும் சமுதாயம் மாறி, உணவை உற்பத்தி செய்யும் சமுதாயம் உருவெடுக்கும்போது, அதாவது நிலவுடைமை தழைக்கின்றபோது, மொழியும் இலக்கியமும் தோன்ற அதன் ஊடாகச் சமுதாயத்தை அறிய முடிகிறது. நமக்குக் கிடைத்திருக்கும் பழந்தமிழ் இலக்கியங்கள் எல்லாம் நிலவுடைமைச் சமூகத்தில் பூத்த மலர்கள் என்ற புரிதலோடு முருகன் வணக்கம் பற்றிய சிந்தனைகளோடு, அடுத்த படியில் ஏற வேண்டும். நிலவுடைச் சமூக இலக்கியங்களிலும் அதற்கு முந்திய காலத்தின் எச்சங்கள் இருக்கும் என்பதையும், நிலவுடைமைச் சமூகத்தின் வளர்ச்சியில் அது ஒரு கட்டம் என்பதையும் கூடவே புரிந்து கொள்ள வேண்டும்.

(நூலிலிருந்து)

நூல்: முருகன் வணக்கத்தின் மறுபக்கம்
ஆசிரியர்: சிகரம் ச.செந்தில்நாதன்
பக்கம்: 136
விலை: ரூ.110.00

பதிப்பகம்: சந்தியா பதிப்பகம்,
பு.எண்:77, 53-வது தெரு, 9-வது அவென்யூ, அசோக்நகர்,
சென்னை – 600083. தொலைபேசி: 044 – 24896979

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

(கீழைக்காற்று விற்பனையகம்  இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. கடையின் புதிய முகவரி கீழே)

1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை,
நெற்குன்றம், சென்னை – 600 107. 
பேச  : 99623 90277

  • வினவு செய்திப் பிரிவு.

மக்கள் அதிகாரத்தை முடக்க சதி ! கேள்விகளுக்கு தோழர் ராஜூவின் பதில் ! வீடியோ

மக்கள் அதிகாரம் தோழர்கள் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது !

ஜூன் 12 செவ்வாய் (12.06.2018) இரவு 9 மணிக்கு ஒளிபரப்பான தோழர் ராஜூவின் நேரலை வீடியோ! Live Streaming!

தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் (NSA) மக்கள் அதிகாரம் தோழர்கள் சிறை!

மக்கள் அதிகாரம் – மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு நேரலையில் பதிலளிக்கிறார்! வினவு யுடியூப், ஃபேஸ்புக் பக்கங்களில் நேரலை! 

நேரலை முடிவுற்றது ! போராடும் மக்களோடு தொடர்ந்து நிற்போம் ! மீண்டும் சந்திப்போம் ! நன்றி !

காணொளி கீழே ..

 

நெருங்குகிறது தூத்துக்குடி மாடல் அடக்குமுறை ! தமிழகமே அஞ்சாதே எதிர்த்து நில் !

நெருங்குகிறது தூத்துக்குடி மாடல் அடக்குமுறை… தமிழகமே அஞ்சாதே எதிர்த்து நில் !

அன்பார்ந்த பெரியோர்களே! தாய்மார்களே!

ஜாலியன் வாலாபாக் படுகொலையை நடத்தியது பிரிட்டிஷ் காலனிய போலீசு. ஸ்டெர்லைட்டை மூடு எனப் போராடிய சொந்த நாட்டு மக்கள் மீது குறிவைத்து 13 பேரை சுட்டுக் கொன்றுள்ளது ‘சுதந்திர’ நாட்டின் போலீசு.

முதல்வர் எடப்பாடி துப்பாக்கிச் சூடு பற்றி எனக்குத் தெரியாது என்றார். பிரதமர் மோடி வாய்திறக்கவில்லை.

“போராட்டம் நடந்த அன்று சட்ட ஒழுங்கை கண்காணிக்க சப்கலெக்டர், நிர்வாகத்துறை நடுவர்கள் 9 பேரை நியமித்திருக்க, அவர்கள் யாருமே சம்பவ இடத்தில் இல்லாத நிலையில், அவர்களின் ஒப்புதல் பெற்றதாக மோசடி செய்து இக்கொலைகளை அரங்கேற்றியுள்ளது, போலீசு.

இதற்கான ஆதாரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. முதல்வரும், டி.ஜி.பியும் சதித் திட்டம் தீட்டி இந்த படுகொலையை செய்திருக்கிறார்கள். அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து, சி.பி.ஐ. அல்லது பணியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி விசாரிக்க வேண்டும்”, என்கின்றன எதிர்க் கட்சிகள்.

கார்ப்பரேட் நாசகார திட்டங்களை எதிர்த்துப் போராடினால், பொய் வழக்கில் சிறை, தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது, முன்னணியாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு படுகொலை – என தூத்துக்குடி மாடலை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த முயல்கிறது போலீசு.

சென்னை – சேலம் எட்டு வழிச்சாலை அமைக்க விவசாயிகளிடமிருந்து நிலம் வலுக்கட்டாயமாக பறிக்கப்படுகிறது. அதை எதிர்த்து தன்னெழுச்சியாகப் போராடும் மக்களை கைது செய்கிறது போலீசு. இதுவும் தூத்துக்குடி மாடல் அடக்குமுறைதான்.

யார் சுடச்சொன்னார்கள் எனத் தெரியாதென்று புளுக ஆரம்பித்த அரசு, பின்னர் தாசில்தாரைக் கோர்த்து விட்டது, அதுவும் அம்பலமாகிப்போனது. ஸ்டெர்லைட்டுடன் கூட்டு சேர்ந்து சதித் திட்டம் தீட்டி குறிபார்த்து சுட்டு மக்களைக் கொன்ற நிகழ்வு இந்தியா முன்னெப்போதும் கண்டிராத ஒன்று.

தமிழ்நாட்டில் இனி யாரும் எதற்காகவும் போராடக் கூடாது என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அச்சத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் போராடும் முன்னணியாளர்களை “ஊபா” (UAPA) என்ற ஆள்தூக்கி கறுப்பு சட்டத்தில் கைதுசெய்து மாதக்கணக்கில் சிறைவைக்கவும், இயக்கங்களை தடை செய்யவும் முயல்கிறது எடப்பாடி அரசு.

தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட்டினால் ஏற்படும் 22 ஆண்டுகால பாதிப்பை உணர்ந்து போராடி வந்துள்ளனர். அவர்களை வெளியூரிலிருந்து சென்றவர்கள் போராடத் தூண்டினர் எனக் கூறுவது அந்த மக்களின் போராட்டத்தை இழிவுபடுத்துவதாகும். அம்மக்களின் நிலத்தை, காற்றை, நீரை, ஆரோக்கியத்தை நாசமாக்கிய ஸ்டெர்லைட் முதலாளி எந்த ஊர்க்காரர்? இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா?

ஸ்டெர்லைட் உருவாக்கிய பாதிப்புகள் குறித்து அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அதிகாரிகளால், அமைச்சர்களால் பதில் சொல்ல முடியுமா? கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிரான போராட்டங்களை ஆதரிப்பதும், கலந்து கொள்வதும் நாட்டுப்பற்று கொண்ட ஒவ்வொருவரின் கடமை!

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மட்டுமல்ல, நியூட்ரினோ, சென்னை – சேலம் எட்டு வழிச்சாலை, ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டம், சாகர்மாலா உள்ளிட்ட மக்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும் திட்டங்களுக்கெதிராக தன்னெழுச்சியாக உள்ளூர் மக்கள் அமைப்பாகத் திரண்டு போராடுகிறார்கள்.

இவ்வாறு தனித்தனிப் பிரச்சினைகளுக்காக நடத்தப்படும் போராட்டங்கள் அனைத்தும் ஒருங்கிணைய வேண்டும். அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணமான அரசின் நாசகாரக் கொள்கைகள் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும். இவற்றில் மக்கள் அதிகாரம் போன்ற இயக்கங்கள் தலையிட்டு சரியான திசையில் எடுத்துச் செல்கின்றன. இதுதான் கார்ப்பரேட்டுகள் ஆத்திரமடையக் காரணம்.

வளர்ச்சி என்ற பெயரில் 15% மக்கள் மட்டும் வளமோடு வாழவும் பெரும்பான்மை மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து அகதிகளாக்கப்படுவதும்தான் பாஜக அரசு பின்பற்றும் கொள்கை. அம்பானி, அதானி போன்ற குஜராத் பனியாக்கள், பன்னாட்டு கம்பெனிகள் இயற்கை வளங்களையும், மனிதவளத்தையும், அரசு வங்கிகளையும் கொள்ளையடித்து கொழுக்க வைப்பதுதான் மோடி அரசின் கொள்கை. இயற்கையை சூறையாடி, உயிரினங்கள் வாழத்தகுதியற்ற நாடாக மாற்றுவதுதான் இவர்களின் ‘வளர்ச்சிப் பாதை’!

மக்களைப் போராடத் தூண்டுவதும், வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவதும் உண்மையில் இவர்களே! இவர்கள்தான் சமூக விரோதிகள்! விஷக் கிருமிகள்!

மக்கள் அதிகாரம் அமைப்பின் கொள்கை, தீ வைப்பதல்ல, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவதல்ல, பஸ்களை உடைப்பதல்ல! மக்களை அரசியல்மயமாக்கி, சரியான இலக்கில் போராட வழிகாட்டுவதுதான்.

இந்த அரசுக் கட்டமைப்பு எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்க வக்கற்று திவாலாகி, எதிராகிவிட்ட உண்மையைப் பேசுகிறோம். டாஸ்மாக்கை மூடச் சொன்னது, ஜெயலலிதாவின் ஊழலை, காவிரியில் தமிழகத்தின் உரிமையை, ஒக்கிப் புயலில் மீனவர்களை அரசே கொன்றதை, பண மதிப்பு நீக்கமெனும் மோசடியை, நீட் திணிப்பை மக்களிடம் திரைகிழித்துப் போராடி… போராடி மக்களின் மதிப்பையும் நம்பிக்கையையும் பெற்றுள்ளது, மக்கள் அதிகாரம்!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை முகாந்திரமாக வைத்துக்கொண்டு தென் மாவட்டங்களில் உள்ள மக்கள் அதிகாரம் தோழர்களின் வீடுகளுக்குச் சென்று தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. கண்ணில் பட்டவர்களை காரணம் சொல்லாமல் கைது செய்து பொய் வழக்கில் சிறையிலடைக்கிறது.

துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட ஜெயராமனோடு இருந்த கோட்டையன், கலிலூர் ரஹமான், 19, 21 வயது கொண்ட அவரது மகன்களான முகம்மது அனஸ், முகம்மது இசாத் மற்றும் முருகன், சரவணன் ஆகியோர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட் டுள்ளனர். இந்த அடக்குமுறை, மக்கள் அதிகாரத்துக்கு மட்டுமல்ல, தமிழ்த் தேசிய அமைப்புகள், தலித் அமைப்புகள், இடதுசாரிகள் உட்பட அனைவர் மீதும் ஏவப்படும்.

சுயமரியாதை பாரம்பரிய மண்ணில் ரஜினியை முன்னிறுத்தி, பார்ப்பனிய அடிமைத்தனத்தை உருவாக்கும் சதித் திட்டத்தை தனது ஏவலடிமை எடப்பாடி மூலம் செயல்படுத்த ஆரம்பித்துவிட்டது ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க.

போலீசு, கலெக்டர், கார்ப்பரேட்டுகளுடன் கள்ளக் கூட்டு வைத்துக் கொண்டு போராட்டத்தை முன்னின்று நடத்துவதுபோல் காட்டிக்கொடுக்கும் என்.ஜி.ஓ.க்கள் (தன்னார்வ குழுக்கள்) தூத்துக்குடி மக்களால் இனம் கண்டு புறக்கணிக்கப்பட்டனர்.

மக்களே தலைமை தாங்கி நடத்திய ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் நமக்கெல்லாம் ஒரு முன்மாதிரி! இதுபோல் வேரெங்கும் நடந்து விடக்கூடாது என அஞ்சுகிறது அரசு. ஸ்டெர் லைட் எதிர்ப்புப் போராட்டம் அறவழியில் அமைதியாக முடிந்து விடக்கூடாது என்ற வஞ்சக நோக்கில், துப்பாக்கிச்சூடு படுகொலை நிகழ்த்திக்காட்டி இருக்கிறது கார்ப்பரேட் அடியாள்படையான போலீசு.

ஆனால், உயிருக்குப் பயந்து போராடாமல் முடங்கி விடாதீர்கள் என அறைகூவுகிறார்கள் களப்பலியில் குருதி சிந்திய 13 வீரத்தியாகிகள்!!

*****

  • தூத்துக்குடி மக்கள் மீது போடப்பட்ட எல்லா வழக்குகளையும் திரும்பப் பெறு!
  • படுகொலைக்குக் காரணமான அதிகாரிகளைத் தண்டிக்க உயர் நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு உருவாக்கி கொலை வழக்கில் விசாரணை நடத்து!
  • ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட தமிழ்நாட்டில் இனி மேல் தாமிர உருக்காலைகளுக்கு இடமில்லை எனக் கொள்கை முடிவெடுத்து தனி சட்டமியற்று!
  • போராடும் உரிமை, கருத்துரிமையை நசுக்கும் கார்ப்பரேட் போலீசு அடக்குறையை எதிர்த்து முறியடிக்க அனைவரும் வீதியில் இறங்கி போராடுவோம்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.
தொடர்புக்கு : 99623 66321