Saturday, June 21, 2025
முகப்பு பதிவு பக்கம் 433

நீங்கள் அறியாத பெண் வலி – என்டொமெட்ரியோசிஸ் !

3

பெண்வலி : என்டொமெட்ரியோசிஸ்

ற்பனை செய்து பாருங்கள் – “உங்கள் உடம்பில் ஒரு கண்ணாடிப் போத்தலை உடைத்துப் பின் அந்த உடைந்த கூரான துண்டுகளை எல்லாம் எடுத்து உங்கள் உள் உடம்பில் தேய்த்தால் எப்படியிருக்கும்?” பதின்ம வயதிலிருந்து நீங்கள் இவ்வாறு மிகுந்த வலியால் துன்புறுகிறீர்கள், ஆனால் மருத்துவர்கள் கூட, “பெண்களுக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம், கொஞ்சமென்றாலும் நீதான் உணர்ச்சிவசப்படுகிறாய், எல்லாம் உன் கற்பனை” என்கிறார்கள். உங்களுக்கு எப்படியிருக்கும்?

இவ்வலி உங்களுக்கு endometriosis (என்டொமெட்ரியோசிஸ்) என்றொரு நோய் இருப்பதால் இருக்கலாம். இந்நோயைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இதை யாருக்கும் தெரியாத மிகப் பொதுவான நோய் என்றும் சொல்வார்கள்.

இடமகல் கருப்பை அகப்படலம் (endometriosis) என்றால் என்ன?

பெயரே சொல்வது போல், கருப்பையை விட்டு அகன்று வேறிடங்களில் வளரும் கருப்பை அகவுறையையே endometriosis என்பர். சூலகங்கள், இடுப்பறையின் பக்கச் சுவர்கள், பலோப்பியன் குழாய்கள் என இந்தத் திசுவிற்கு இடுப்பறையில் எங்கெல்லாம் படிந்து வளர இடமிருக்கிறதோ அங்கெல்லாம் இவ்வளர்ச்சி இடம் பெறலாம்.

கருப்பையினுள்ளே இருக்கும் அகப்படலத்தில் மாதா மாதம் ஏற்படும் மாற்றங்களிற்கு ஒத்தவாறு வெளியில் வளரும் கருப்பை அகவுறையிலும் இடம் பெறும். மாதவிடாய் நேரங்களில் அடிவயிற்றில், அங்கங்களில் இரத்தப்போக்கு, அழற்சி (inflammation), இரத்தம் உள்ள கட்டிகள் இருப்பது மாதிரியான தோற்றம், வயிறு அங்கங்களில் வடுக்கள் போன்றவை இதன் விளைவுகளாகும்.

சரி ஏன் இதைப்பற்றி யாருக்கும் தெரியவில்லை? இது புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்ட நோயா?

இல்லை. கொஞ்சம் மருத்துவ வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்தோமானால், பழைய மருத்துவப் பதிவுகளில் இந்நோயின் அறிகுறிகளுக்கு ஒத்த என்னவென்று குறிப்பாகச் சொல்ல முடியாத இடுப்பு அல்லது வயிற்று வலி போன்ற அறிகுறிகளுடன் துன்புற்ற பெண்களைப் பற்றிய குறிப்புகள் இருக்கும்.

இவர்களெல்லாம் வெறிபிடித்தவர்களாகவும் பேய்/பிசாசு ஆட்கொண்டிருப்பதாகவுமே பழையகால வரலாற்றில் கண்டறியப்பட்டார்கள். இந்த hysteria அல்லது கட்டுப்படுத்த இயலாத வன்முறை நடவடிக்கை என்பது முதலில் பெண்களுக்கு – பெண்களுக்கு மட்டுமே உரித்தானதாகக் கருதப்பட்ட மனநோய்.

கி.பி. 12, 13-ம் நூற்றாண்டுகளில் வந்த மருத்துவப் புத்தகங்கள், இந்த ‘ஹிஸ்டீரியா’-வுக்கு அலைந்து திரியும் கர்ப்பப்பையே காரணம் என்றன. கருப்பையை மற்ற அங்கங்கள் மாதிரி ஒரு அங்கமாகப் பார்க்காமல் ஒரு தாய்மை அடைய வெறிகொண்டலையும் மிருகமாகவே பார்த்தார்களாம்.

இந்த எண்ணங்கள் கிறிஸ்துவிற்கு முன்னிருந்து எகிப்திலே ஆரம்பித்திருந்தாலும் பின்னர் ஹிப்போகிரக்டிக் நூல்கள் (Hippocratic texts), பிளாட்டோ (Plato), மற்றும் ரோமர்களால் பிரபலமாக்கப்பட்டிருக்கலாம். பண்டைய கிரேக்கர்கள் இந்த மாதிரி வலியால் துன்புறுவதாக வரும் பெண்களை ஏணியில் தலை கீழாகக் கட்டி கடுமையாக உலுக்குவார்களாம். அவ்வாறு செய்வதால் கருப்பை அலைந்து திரியாமல் அதன் சரியான இடத்திற்கு வந்து விடுமென நம்பினார்களாம்.

சரி இதெல்லாம் பழைய காலத்தில் தானே, இப்போது நிச்சயமாக இப்படி யாருமே நம்புவதில்லையே என்கிறீர்களா?

முற்று முழுதாக இல்லை. ஆனால் இந்த மூட நம்பிக்கைகளின் எச்சங்கள் நிச்சயம் இப்பபோதும் சமுகத்தில் நிலைத்திருக்கின்றன. பண்டைய காலத்திலிருந்து நிகழ்காலத்திற்கு வருவோம். எத்தனை பெண்களை இந்நோய் பாதிக்கிறதென நினைக்கிறீர்கள்? அதிகாரபூர்வமான தரவுகளின் படி இனப்பெருக்க வயதிலிருக்கும் பெண்களில் 10 சதவீதமானோர். அது உலகளவில் கிட்டத்தட்ட 176 மில்லியன் பெண்கள். அதாவது 17.6 கோடிப் பெண்கள்.

இனப்பெருக்க வயதில் இந்த எண்ணிக்கை என்பது, புற்றுநோய், நீரிழிவு, எயிட்ஸ் ஆகிய நோய்களால் மொத்தமாகப் பாதிக்கப்படுவோரை விட அதிகமானது. ஆனால் இந்நோயைப் பற்றித் தெரிந்தளவுக்கு மக்களுக்கு endometriosis பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

நீண்ட கால இடுப்பு வலி அல்லது கருத்தரிக்க முடியாமல் இருக்கும் பெண்களில் 50%-திற்க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்நோய் இருக்கச் சாத்தியக்கூறுள்ளது.

அயோட்டியரோஆ (Aotearoa – is the Māori name for New Zealand) நியூசிலாந்தில் மட்டும் இதற்கான மருத்துவ அறுவை சிகிச்சைச் செலவு ஒரு வருடத்திற்கு மொத்தமாக ஒரு பில்லியன் டாலருக்கு மேலாகிறது. இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 6,500 கோடி ரூபாய். சிகிச்சை அளிக்கப்படாத எண்டோமெட்ரியோசிஸ் நோய், உடல்நலம் சம்பந்தப்பட்ட வாழ்க்கை தரத்தை குறைப்பதோடு, மன அழுத்தம் மற்றும் பாலியல் செயலிழப்பு போன்ற விளைவுகளுக்கு பங்களிப்பு செய்கின்றது.

இந்நோயால் ஏற்படும் உற்பத்தித்திறன் இழப்பு நோயாளிகளுக்கு ஒரு வாரத்திற்கு சுமார் 11 மணி நேரம் ஆகும். வயது வந்த பெண்களை மட்டுமல்ல பதின்ம வயதுப் பெண்களையும் இது பாதிக்கிறது.

பெண்களுக்கு இந்நோய் இருக்கிறதா எனக் கண்டறிய சராசரியாக 8-10 வருடங்கள் ஆகிறது. இந்தத் தாமதமான கண்டறிதலால் நோயின் தீவிரம் கூடுகிறது. இவை மிகவும் கொடூரமான புள்ளிவிவரங்கள் என்பதை ஏற்றுக்கொள்வீர்களென நம்புகிறேன்.

எனில் இந்த நோயைக் கண்டறிய ஏன் இவ்வளவு தாமதம், பலருக்கு இந்நோயைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் போனது ஏன்?

அண்மையில் அயோட்டியரோஆ நியூசிலாந்த்தில் ஒரு வானொலி ஒலிபரப்பாளர் இந்நோயால் கருப்பையைத் தான் அகற்றியதைப் பற்றிப் நேர்காணல் அளித்திருந்தார். அதில் தனது இருபதுகளிலும் அதற்குப் பின்னரும் மிகக்கடுமையான வலியை அனுபவித்ததாகாகவும் ஆனால் அந்த வலி சாதாரணமானதா, இல்லையா? எனத் தனக்குத் தெரிந்திருக்கவில்லை என்றார்.

பின்னர் தனக்கு இரு குழந்தைகள் பிறந்த பின்புதான், பிரசவ வலியைப் போல் அத்தனை வருடங்களிலும் அவ்வலி இருந்தெனக் கூறினார். கற்பனை செய்து பாருங்கள்! ஒருவர் வருடக்கணக்காக பிரசவ வலியளவிற்குத் தொடர்ந்து வலியை அனுபவித்திருக்கிறார், ஆனால் அது சாதாரண வலியில்லை என அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. ஏன்?

சிகிச்சை தாமதமாவதற்கும் விழிப்புணர்வில்லாததற்கும் முக்கிய காரணம் சமூகத்தில் நிலவும் பாலினவாதமும், ஒருபடித்தான பார்வையுமே (stereotypes) . வலி என்பது பெண்களுக்கு சாதாரணமானதென்ற மூடநம்பிக்கை அநேகமானோரிடம் இருக்கிறது. “மாதவிடாய் மிகுந்த வலியுடன் தொடர்புடையதுதானே, இதற்கெல்லாம் தொண தொணத்துக் கொண்டிறாதே”, என்றே பலநேரம் பெண்கள் நினைக்கிறார்கள்.

அப்படியே வலியைச் சொன்னாலும் அநேகமாக அவர்களை மருத்துவர்கள் கூட நம்புவதில்லை. “அவளால் சாதாரண வலியைக்கூடத் தாங்க முடியவில்லை, சும்மா சொல்கிறாள், எல்லாம் அவளின் மண்டைக்குள் தான் உண்மையில் இல்லை” என்பதே பலருடைய எண்ணங்களாக இருப்பதை ஆய்வுகள் சொல்கின்றன.

இந்நோய் தொடர்பான வலி மட்டுமல்ல, பெண்கள் அநேகமாக என்னவகையான வலியென்றாலும் ஆண்களை விடத் தாமதமாகவே மருத்துவர்களை அணுகுவார்கள். அப்படியே மருத்துவர்களிடம் போனாலும் வலி என்று போகும் ஆண்களை நம்புமளவிற்குப் பெண்களை மருத்துவர்களே நம்புவதில்லை. பலநேரம் பெண்களுக்கு ஆண்களை விடத் தாமதமாகவே வலி நிவாரண சிகிச்சை ளிக்கப்படும். பொதுவில் “அவர்கள் அதிகம் உணர்ச்சிவசப்படுகிறார்கள், hysterical”, என்று கூட விளிப்பார்கள்.

இதற்கும் அப்பால் இந்நோய் பல்வேறு அறிகுறிகளுடையது. சிலருக்கு மாதவிடாய் வருவதற்கு முன் தீவிர வலி வரலாம், சிலருக்கு சமிபாட்டுத்தொகுதியில்* பிரச்சனைகள் வரலாம். பாலினவாதத்துடன் இந்தமாதிரி வெவ்வேறு நோய் அறிகுறிகளும் சேர்ந்து நோயைக் கண்டறிதலைத் தாமதமாக்குகிறது.

இந்நோயைக் கண்டறிவதில் ஏற்படும் தாமதத்திற்கு இன்னொரு காரணம். இந்நோய் இருக்கிறதென நிச்சயமாகக் கண்டறிவதற்கான ஒரே வழி ஊடறுவைச் சிகிச்சையான laproscopy செய்வது மட்டும்தான். இதன் படி வயிற்றில் சிறிய துளைகள் இட்டு, அதனூடாக சிறிய காமராவை இடுப்பறைக்குள் செலுத்தி, அங்கெங்காவது கருப்பை அகவுறை படிந்து வளர்கிறதா என்று பார்ப்பதன் மூலமே இந்நோயைக் கண்டறியலாம். இது மிகவும் இலகுவான செய்முறை ஆயினும் எதற்குச் சும்மா ஊடறுவைச் சிகிச்சை செய்வானென ஒதுக்கி ஒதுக்கியே அநேகர் இந்நோயைக் கண்டறிவதைப் தள்ளிப் போடுகின்றனர்.

இந்நோயை குணப்படுத்தும் வழி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் அறுவைச் சிகிச்சையினாலும் மருந்துகளாலும் ஒரளவுக்குக் கட்டுப்படுத்தப்படுகிறது. அறுவைச் சிகிச்சையின் மூலம் வேறிடங்களில் வளரும் கருப்பை அகவுறை நீக்கப்படுகிறது. நீக்க முடியாவிடில் எரிக்கப்படுகிறது. ஆனாலும் அநேகமானோருக்கு அறுவைச் சிகிச்சை பல தடவை செய்ய வேண்டி வரலாம்.

Endometriosis ஆல் ஏற்படும் வலியைக் (குறிப்பாக மாதவிடாயின் போது) கட்டுப்படுத்த அநேகமாக steroids (உதாரணம்: கருத்தடை மாத்திரைகள்) கொடுக்கப்படுகிறது. அதிலும் இம்மருந்துகள் கிட்டத்தட்ட அரைவாசிப் பெண்களுக்கே வேலை செய்கிறது. அத்தோடு ஒரே மருந்தை நீண்ட நாட்கள் எடுப்பதால் சில வேளை மருந்துகளுக்கு தடுப்பாற்றல் (resistance) கூட வர வாய்ப்பிருக்கிறது.

அதனால் இந்நோயைக் இலகுவாகக் கண்டறிவதற்கும் கண்டறிந்ததும் சிகிச்சையளிக்க பயனுள்ள முறைகளையும் கண்டறிதல் மிக முக்கியமாகும். ஆனால் இந்நோயைக் கண்டறிவதைத் துரிதப்படுத்த விரும்பினால் பெண்கள் தமது உடலில் எதோ சரியில்லை எனச் சொல்லும் போது அதை அசாதரணமாக எடுத்துக் கொண்டு நம்பவேண்டும். இந்த நம்பிக்கைதான் இந்நோயை கண்டுபிடிப்பதின் துவக்கமென நான் நம்புகிறேன். நீங்கள்?

– அன்னா
(கட்டுரையாளர் அறிமுகக் குறிப்பு :  மாதவிடாய், கருப்பை, கருத்தரித்தல் தொடர்பாக உயிரியல் ஆராய்ச்சியில் ஈடுபடும் உயிரியலாளர் மற்றும் பெண்ணியவாதி. கருத்தாடல் பக்கத்தில் “அறிவியல்-பெண்ணியம்-சமூகம்” எனும் தலைப்பில் பத்தி எழுதுகிறார்.)

* மனித இரையகக் குடற்பாதை (Gastrointestinal tract – GIT) என்பது, மனிதனின் வயிறும், குடலும் சேர்ந்த மனித சமிபாட்டு மண்டலத்தின் ஒரு பிரதானப் பகுதியாகும். [1] பொதுவாக மனித இரையகக் குடற்பாதை என்பது வாயில் தொடங்கி குதம் வரை நீண்டிருக்கும் குழாய் வடிவ அமைப்பிலுள்ள வாய், உணவுக்குழாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், குதம் ஆகிய உறுப்புக்களைக் குறிக்கிறது.[1] இவற்றுடன் நாக்கு, உமிழ்நீர்ச் சுரப்பிகள், கணையம், கல்லீரல், பித்தப்பை ஆகிய உறுப்புகளும் இணைந்து மனித சமிபாட்டு மண்டலத்தை உருவாக்குகிறது – விக்கிபீடியா

மேலும் :

குட்கா ஊழல் : தமிழகத்தை ஆள்வது அம்மாவின் ஆவிதான் !

0

டப்பாடி அரசின் அலங்கோலங்களையும் அதனின் அடிவருடித்தனத்தையும் கண்டு சலிப்படைந்திருக்கும் பாமர மக்களுள் சிலர், “அம்மா இருந்திருந்தால், இப்படியெல்லாம் நடந்திருக்கவிட மாட்டார்” என்றவாறு வாதிட்டு வருவதை நம்முள் பலரும் கேட்டிருக்கக்கூடும்.

ஜெயாவின் அறிவு, தைரியம் குறித்துப் பொதுவெளியில் ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டிருக்கும் பிம்பத்திலிருந்துதான் இந்தப் பாமரத்தனமான வாதம் பிறக்கிறது.

அந்த பிம்பத்தின் போலித்தனமும் மோசடித்தனமும் ஒருபுறமிருக்கட்டும். இ.பி.எஸ். – ஓ.பி.எஸ். கும்பல் அம்மாவின் வழியில், அம்மாவின் ஜெராக்ஸ் பிரதியாக இருந்துதான் ஆட்சி நடத்தி வருகிறார்கள். மெய்க்கும் பிரதிக்கும் இடையில் வித்தியாசம் இருக்கத் தானே செய்யும் என வாதிடுபவர்கள்கூட அசந்து போகும்படி, அச்சுப் பிசகாமல் அம்மாவே மறுபிறவி எடுத்து வந்து ஆட்சி நடத்துவதைப் போன்று இ.பி.எஸ். – ஓ.பி.எஸ். கும்பல் நடந்துவருவதை குட்கா ஊழல் விவகாரம் எடுத்துக் காட்டியிருக்கிறது.

குட்கா ஊழல் விவகாரம் ஜெயா உயிரோடு இருந்தபோதே அம்பலத்திற்கு வந்துவிட்ட போதும், அந்த ஊழலில் கைநனைத்த அமைச்சர் விஜயபாஸ்கர் மீதோ, ராஜேந்திரன், ஜார்ஜ் உள்ளிட்ட போலீசு அதிகாரிகள் மீதோ முதலமைச்சர் ஜெயா எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

குட்கா ஊழல் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டவுடனேயே, அமைச்சர் விஜய பாஸ்கரையும், போலீசு டி.ஜி.பி. ராஜேந்திரனையும் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் வைத்த கோரிக்கை செவிடன் காதில் ஊதிய சங்காக முடிந்தது. இத்துணைக்கும் ராஜேந்திரன் ரெகுலர் டி.ஜி.பி. கிடையாது. பதவி நீட்டிப்புப் பெற்று அந்தப் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கிறார். அவர் மீது குட்கா ஊழல் குற்றச்சாட்டு இருப்பது தெரிந்தும் பதவி நீட்டிப்புக் கொடுத்ததே அம்மாவின் வளர்ப்புப் பிராணியான எடப்பாடிதான்.

குட்கா ஊழல் வழக்கை நேர்மையாக விசாரிக்க முயன்ற டி.ஜி.பி. அசோக்குமாரை மிரட்டிப் பதவி விலக வைத்தார், முன்னாள் முதல்வர் ஜெயா. அதே போல, இந்த வழக்கை விசாரிப்பதற்காக மதுரை உயர் நீதிமன்றத்தால் கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப்பட்ட ஜெயக்கொடியையும், இவ்வழக்கில் கூடுதல் அக்கறை செலுத்திவந்த ஊழல் தடுப்புப் பிரிவின் இயக்குநர் மஞ்சுநாதாவையும் பதவி மாற்றம் என்ற பெயரில் தூக்கியடித்து, குற்றவாளிகளைக் காப்பாற்றிவருகிறார், இந்நாள் முதல்வர் எடப்பாடி.

குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றிய உயர் நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி, அவ்வழக்கில் குற்றஞ்சுமத்தப்பட்ட சிவக்குமார் மேல்முறையீடு செய்திருந்தார். உச்ச நீதிமன்றத்தில் வாதிடும் மூத்த வழக்குரைஞர்கள் கேஸ் கட்டை ஒரு புரட்டு புரட்டுவதற்கே பத்தாயிரம் தொடங்கி ஐந்து இலட்ச ரூபாய் வரை கேட்பார்களாம்.

மைய அரசின் முன்னாள் தலைமை வழக்குரைஞர் முகுல் ரோத்தகி

குறைந்தபட்சம் ஒரு கோடி ரூபாயைக் வக்கீல் பீஸாகக் கொடுக்கும் தகுதி இருப்பவர்கள் மட்டும்தான், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியும். சாதாரண சுகாதார ஆய்வாளரான சிவக்குமாரோ உச்ச நீதிமன்றத்தில் தனக்காக வாதிட மைய அரசின் முன்னாள் தலைமை வழக்குரைஞர் முகுல் ரோத்தகியை ஏற்பாடு செய்திருந்தார். “அவரை வைத்து வாதிடுமளவிற்கு சிவக்குமாருக்குப் பணம் எங்கிருந்து வந்தது?” என்ற கேள்வியை எழுப்பிய எதிர்க்கட்சிகள், சிவக்குமார் அமைச்சர் விஜயபாஸ்கரின் பினாமி என அம்பலப்படுத்தின.

குட்கா வழக்கில் சிவக்குமார் எபிஸோட், சொத்துக்குவிப்பு வழக்கில் பவானி சிங்கின் எபிஸோடை நினைவுக்குக் கொண்டு வருகிறது.

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்த சமயத்தில், அவ்வழக்கின் அரசு தரப்பு வழக்குரைஞர் பவானி சிங் நீதிமன்றத்திற்கு வராமல் டிமிக்கிக் கொடுக்கத் தொடங்கினார். தனது விடுப்பை நியாயப்படுத்த போலியான மருத்துவச் சான்றிதழையும் நீதிமன்றத்திற்கு அளித்தார்.

குற்றவாளிகளுக்குச் சாதகமாக அரசு வழக்குரைஞர் நடந்துவருவதைப் புரிந்துகொண்ட நீதிபதி குன்ஹா, பவானி சிங் விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்த நாட்களுக்கு உரிய வழக்குரைஞர் கட்டணத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து பவானி சிங் பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் அவருக்கு எதிராகவே தீர்ப்பு அமைந்தது. அதன் பின்னர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

பவானி சிங்கின் ஒரு நாள் வக்கீல் பீஸ் ஏறத்தாழ் 60,000 ரூபாய்தான். அவர் இரண்டு, மூன்று நாட்கள் தொடர்ந்து சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் போனதற்கு ஏற்பட்ட அதிகபட்ச இழப்பு இரண்டு இலட்ச ரூபாய்க்குள்தான். ஆனால், அவரோ அந்த இரண்டு இலட்ச ரூபாய்க்காக, பத்து இலட்ச ரூபாய்க்கும் மேல் வக்கீல் பீஸ் கொடுத்து உச்ச நீதிமன்றத்தில் வழக்காடினார்.

‘அம்மா’-வுக்கு எதிராக வழக்கில் ஆஜராகாமல் இருந்த அரசு வக்கீல் பவானி சிங் (வலது)

குட்கா வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த சாதாரண சுகாதார ஆய்வாளருக்குப் பின்னால் இருந்தது அமைச்சர் விஜய பாஸ்கர் என்றால், சொத்துக் குவிப்பு வழக்கில் பவானி சிங்கை உச்ச நீதிமன்றம் வரைக்கும் தூக்கிப் போய் ஆட்டி வைத்தது, ஜெயா-சசி கும்பல்.

ஓ.பி.எஸ். ஜெயாவின் சமாதியில் தியானத்தில் அமர்ந்தபோது, அம்மாவின் ஆன்மா உத்தரவு போட்டதாகக் கூறினார். அந்த நகைச்சுவை காட்சியில் மட்டுமல்ல, இந்த ஆட்சியின் அலங்கோலங்கள், முறைகேடுகள் அனைத்தின் பின்னும் அம்மாவின் ஆன்மா மறைந்திருப்பதை நுணுக்கிப் பார்த்தால் காண முடியும்.

என்றாலும், அம்மாவிற்கும் அவர் வளர்த்துவிட்டுள்ள இ.பி.எஸ். – ஓ.பி.எஸ். உள்ளிட்ட ஜந்துக்களுக்கும் இடையே இம்மியளவுகூட வேறுபாடே இல்லை என்றும் புரிந்துகொள்ளக் கூடாது.

ஜெயா, தன்னளவிலேயே பார்ப்பன – பாசிஸ்டாக இருந்து தமிழகத்தைக் கொள்ளையடித்தார். போயசு தோட்டத்தையே தலைமைச் செயலமாக மாற்றி, அவர் நடத்திவந்த வக்கிர ஆட்சிக்குத் தமிழகப் பார்ப்பனக் கும்பல் காவல் நாயாக வேலை செய்தது.

இ.பி.எஸ். – ஓ.பி.எஸ். கும்பலோ, மோடி தொடங்கி எஸ்.வீ. சேகர் வரையிலான இந்து மதவெறி பார்ப்பன – பாசிசக் கும்பலுக்கு எடுபிடியாக இருந்துகொண்டு தமிழகத்தை மொட்டையடித்து வருகிறது.

டெல்லியும் (மோடி) மயிலாப்பூரும் (குருமூர்த்தி) தமிழகத்தின் தலைமைச் செயலமாக இயங்கி, இந்த அடிவருடிகளின் ஆட்சி கவிழ்ந்துவிடாமல் காப்பாற்றி வருகின்றன.

-திப்பு

NSA சட்டத்தில் மக்கள் அதிகாரம் தோழர்கள் சிறை ! தோழர் காளியப்பன் உரை

தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் மக்கள் அதிகாரம் தோழர்கள் 6 பேர் சிறைவைப்பு ! – சென்னை பத்திரிக்கையாளர் சந்திப்பு !

“தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்ட ஒரே காரணத்திர்காக மக்கள் அதிகாரம் தோழர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது போலீசு.

இந்தியாவில் இதுவரை எங்கும் நிகழ்த்தப்படாத ஒரு திட்டமிட்ட படுகொலையை நடத்திவிட்டு இந்த அரசு தனது குற்றங்களை மறைக்க மக்கள் அதிகாரம் தோழர்கள் மீது ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

இது மக்கள் அதிகாரத்தின் மீதான ஒடுக்குமுறையாக மட்டும் சுருக்கிப்பார்க்க முடியாது. இந்த தூத்துக்குடி மாடல் ஒடுக்குமுறை இனி வரும் போராட்டங்கள் அனைத்தையும் ஒடுக்கும் சோதனை முயற்சியாக, பாசிச நடைமுறையாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது. இதனை முறியடிக்க ஜனநாயக சக்திகள், அறிவுத்துறையினர், பத்திரிக்கை – ஊடகங்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டியுள்ளது.” என 11.06.2018 அன்று சென்னையில் நடத்த பத்திரிக்கையாலர் சந்திப்பில், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொருளாளர் தோழர் காளியப்பன் தெரிவித்துள்ளார்.

அப் கீ பார் – ஐ.ஏ.எஸ்.-க்கும் ஆப்படிக்கும் சர்க்கார் !

சில நாட்களுக்கு முன் ஒரு பதிவு எழுதியிருந்தேன்.

1. அரசை பின்னிருந்து இயக்குவது ஆர்.எஸ்.எஸ்.
2. எல்லாத் துறைகளிலும் அதிகாரிகளுக்கும் மேலே ஆலோசனைக் குழுக்கள் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் திணிக்கப்பட்டுள்ளார்கள்.
3. அதிகாரிகளையே மிரட்டுகிறார்கள்.
4. துறைசார் அறிவோ ஞானமோ இல்லாவிட்டாலும்கூட அவர்கள் சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டியதாகிறது.

இதெல்லாம் சாமானியர்களுக்குத் தெரியாமல் உள்ளே நடந்து கொண்டே இருக்கிற விஷயங்கள்தான்.

எந்தத் தகுதியும் இல்லாதவர்களுக்கு அவர்கள் ஆர்எஸ்எஸ் என்பதாலேயே லட்சம் ரூபாய் சம்பளத்தில் பல்கலைக் கழகங்களில் கவுரவப் பேராசிரியர் பதவிகள் தரப்பட்டுள்ளன. இதுபோல காவிகளை நிரப்புவதை சட்டபூர்வமாக்கும் பணியும் துவங்கிவிட்டது.

அரசின் ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு செயலர் இருப்பார். (செயலர் என்றால் பொதுவாக அறியப்படும் பிரைவேட் செகரடரி அல்ல. ஐஏஎஸ் முடித்து, பல ஆண்டுகள் பல துறைகளில் பணியாற்றி அனுபவம் பெற்றவர்.) எந்தவொரு துறையிலும் அமைச்சர் என்பவருக்கு துறைசார் அறிவு இருக்கும் என்று சொல்ல இயலாது. அமைச்சருக்கு ஆலோசனை கூறுவது, துறைசார் முடிவுகள் எடுப்பது, அரசின் முடிவுகளை செயல்படுத்தச் செய்வது எல்லாமே இந்தச் செயலர்கள்தான்.

இணைச் செயலர் பதவிக்கு விண்ணப்பிக்கக் கோரும் விளம்பரம்

சில துறைகளில் ஒரு செயலர் போதாது என்னும்போது கூடுதல் செயலர் இருப்பார். அவர்களும் போதாது என்னும்போது இணைச் செயலர் (ஜாயின்ட் செகரடரி) என்ற பெயரில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். இதில் எந்தத் தவறும் இல்லை. இவர்கள் உதவிச் செயலரோ துணைச் செயலரோ அல்ல; இணைச்செயலர் – அதாவது, செயலருக்கு இணையான அதிகாரம் உடையவர். (செயலர் அல்லது கூடுதல் செயலருக்குக் கீழே இவர் இருப்பார்.)

இந்த இணைச்செயலர் பதவிகளுக்கு ஐஏஎஸ் அல்லாதவர்களைப் பணியில் அமர்த்தும் வேலை பாஜக ஆட்சிக்கு வந்ததுமே துவங்கி விட்டது. 2015-16இல் 260 ஜாயின்ட் செகரடரி பதவிகளுக்கு தேர்வு செய்தவர்களில் 100 பேர் ஐஏஎஸ் அல்லாதவர்கள். இது அப்போதே பத்திரிகைகளில் செய்தியானது. ஐஏஎஸ் ஆட்கள் பற்றாக்குறை என்ற நொண்டிச்சாக்கு கூறப்பட்டது.

இப்போது இன்னும் தைரியம் வந்துவிட்டது. ஜாயின்ட் செகரடரி பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்ற விளம்பரம் வந்துள்ளது.

கல்வித்தகுதி – வெறும் பட்டப்படிப்பு போதும்! (பட்டப்படிப்பு படித்து, யுபிஎஸ்சி நடத்தும் கடுமையான நுழைவுத்தேர்வுக்குப் படித்து, பாஸ் செய்து, அப்புறம் மெயின்ஸ் எனப்படும் தேர்வில் தேர்ச்சி பெற்று, அப்புறம் நேர்காணலில் தேர்ச்சி பெற்று, அதற்குப் பிறகு ஐஏஎஸ் பயிற்சிப் பள்ளியில் பயில்வதெல்லாம் தேவையே இல்லை.)
வயது – குறைந்தபட்சம் 40 (ஒரு ஐஏஎஸ் ஜாயின்ட் செகரடரி பதவியை அடைய சுமார் 50-55 வயதாகிவிடும். இங்கே 40 வயதிலேயே ஜேஎஸ் ஆகலாம்.)

இதர தகுதிகள் – 1. மைய / மாநில அரசில் இந்தப் பதவியை எட்டக்கூடிய தகுதியில் இருப்பவர்கள். அல்லது 2. பொதுத்துறை / தன்னாட்சி நிறுவனங்களில் இந்தப் பதவியை எட்டக்கூடிய தகுதியுடன் 15 ஆண்டு அனுபவம் உள்ளவர்கள். அல்லது 3. தனியார் நிறுவனங்கள் / ஆலோசக நிறுவனங்கள் / பன்னாட்டு நிறுவனங்களில் இந்தப் பதவியை எட்டக்கூடிய தகுதியுடன் 15 ஆண்டு அனுபவம் உள்ளவர்கள்.

அரசுத் துறைகளிலும் காவிச் சார்பு உள்ளவர்களைத் தேர்வு செய்து நிரப்பலாம் என்பது மட்டுமல்ல, கடைசியாகச் சொல்லப்பட்ட மூன்றாவது அம்சம்தான் கவனிக்கத்தக்கது.
தனியார் நிறுவனங்களில் உயர் பதவியில் இருந்ததாகக் கூறப்பட்டு எவரையும் இந்தப் பதவியில் நியமிக்கலாம்.

அப் கீ பார் – ஐஏஎஸ்க்கும் ஆப்படிக்கும் சர்க்கார் !

நன்றி: – ஷாஜகான்

புதிய தலைமுறை டிவி நிகழ்ச்சியில் பாஜகவினர் அட்டூழியம் !

புதிய தலைமுறை டிவி நிகழ்ச்சியில் பாஜகவினர் அட்டூழியம்… வட்டமேசை விவாதம் பாதியில் நிறுத்தம்.!

கோவையில் நடைபெற்ற புதியதலைமுறை தொலைக்காட்சியின் வட்டமேசை விவாதத்தில் கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாத பாஜக, இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் கும்பல் ரகளையில் ஈடுபட்டனர். அங்கிருந்த காவல்துறையினர் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்ட சங்பரிவார் கும்பலை வெளியேற்றுவதற்கு பதிலாக நிகழ்ச்சியை பாதியிலேயே முடிக்கச் செய்தனர்.

கோவையில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் சார்பாக வட்டமேசை விவாதம் நிகழ்ச்சி கோவை எஸ்.என்.ஆர். கல்லூரி அரங்கில் வெள்ளியன்று (08.06.2018) மாலை 6மணியளவில் துவங்கியது. “தொடர் போராட்டங்கள் : அடிப்படை உரிமைகளுக்காகவா? அரசியல் காரணங்களுக்காகவா ?” என்ற தலைப்பில் துவங்கியது.

இதில் அரசியல் காரணங்களுக்காக என்று பேச பாஜக சார்பில் தமிழிசை சவுந்தர்ராஜன், அதிமுக சார்பில் செம்மலை, தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஞானதேசிகன், இந்திய குடியரசு கட்சியின் சார்பாக செ.கு.தமிழரசன் ஆகியோர் ஒரு பக்கத்திலும், மறு புறத்தில் அடிப்படை தொடர் போராட்டங்கள் அடிப்படை உரிமைகளுக்காகவே என்று பேசுவதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திமுக சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன், கொங்கு நாடு இளைஞர் பேரவையின் உ.தனியரசு, இயக்குநரும், நடிகருமான அமீர் ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியை புதிய தலைமுறையின் நிர்வாக ஆசிரியர் காத்திகைசெல்வன் நெறிப்படுத்தினார்.

முன்னதாக நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தி பேசிய நெறியாளர் கார்த்திகை செல்வன் ஒவ்வொருவரும் முதல் சுற்றில் தங்களின் கருத்தை எவ்வித இடையூறுமின்றி 5 நிமிடம் பேசுங்கள்.. அதற்கு அடுத்த சுற்றில் விவாதத்தை கொண்டு செல்லலாம் எனக் கூறி திமுக சார்பில் டி.கே.எஸ். இளங்கோவன் அவர்களை அழைத்தார்.

அப்போது டி.கே.எஸ்.இளங்கோ, நாட்டின் விடுதலை துவங்கி எல்லாமே போராட்டத்தால்தான் பெறப்பட்டிருக்கிறது. நாட்டில் உள்ள மக்கள் நல்ல தண்ணீர் வேண்டும். நல்ல காற்று வேண்டும் என கேட்டு போராடுவது குற்றமா..? என்ற ரீதியில் பல்வேறு உதாரணங்களை சுட்டிக்காட்டி பேசி முடித்தார்.

அதன் பின்னர் பாஜக சார்பில் தமிழிசை சவுந்தராஜனை கார்த்திகை செல்வன் பேச அழைத்தார்.

அப்போது தமிழிசை, தூத்துக்குடி போராட்டத்திற்கு சமூகவிரோதிகள்தான் காரணம்….. போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியிருக்கின்றனர். 24 வருடமாக இந்த ஸ்டெர்லைட் ஆலை இருக்கத்தானே செய்தது. அப்போது போராடாதவர்கள் இப்போது ஏன் இப்படி போராடுகிறார்கள். இப்போது ஏன் வன்முறை வெடிக்கிறது. என வழக்கமான பல்லவியை பாடினார்.. அப்போது எதிரிலிருந்த கே.பாலகிருஷ்ணனை பார்த்தவுடன்,

இந்த கம்யூனிஸ்ட்கள் இங்கே ( தமிழகம் ) கெயில் குழாய் திட்டத்தை எதிர்க்கின்றனர். ஆனால் இவர்கள் ஆளும் கேரளாவில் கெயில் திட்டத்தை ஆதரித்து வருகின்றனர். அவர்களின் ஆட்சியின் சாதனையில் அதனை குறிப்பிட்டும் விளம்பரம் செய்கின்றனர்.

கம்யூனிஸ்ட்கள் போராட்டம் நடத்தியதால்தான் தொழிற்சாலைகள் எல்லாம் பூட்டப்பட்டிருக்கிறது என மூச்சு விடாமல் பேசி முடித்தார்.

அதன் பின்னர், நெறியாளர் கார்த்திகை செல்வன், கே.பாலகிருஷ்ணனை பேச அழைத்தார்..

அப்போது கே.பாலகிருஷ்ணன், இந்த கொங்கு மண் போராட்டத்தால் சிவந்த மண்.. திருப்பூர் குமரன் கையில் கொடியோடு போராடி வீழ்ந்தான், ஸ்டென்ஸ் மில் போராட்டம் என பல்வேறு போராட்டங்கள் நடந்திருக்கிறது. போராடிய தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஆலை முதலாளிகளை எதிர்த்த தொழிலாளர்களின் வீரம் செறிந்த போரட்டங்கள் நடைபெற்ற மண் இந்த கோவை.

விவசாயிகளை திரட்டி போராடிய நராயணசாமி நாயுடு இந்த மண்ணை சேர்ந்தவர்தான்.. உழைப்பாளர்களை திரட்டி போராடிய எங்கள் தோழர் ரமணி உள்ளிட்ட பல்வேறு போராட்ட தலைவர்கள் வாழ்ந்த மண் இந்தமண்.. அம்மையார் தமிழிசை எந்த மண்ணில் இருந்து போராட்டத்திற்கு எதிராக பேசுகிறோம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ( அரங்கம் அதிர கைதட்டல் )

அழுத குழந்தைதான் பால் குடிக்கும்… போராடினால்தான் உரிமைகளை பெற முடியும்.. குழந்தை கூட அழும் போதுதான் தாய் பால் கொடுக்கிறார். குழந்தை சும்மா இருக்கும் போது பால் கொடுப்பதில்லை. குழந்தை கூட அழுது போராடிதான் உரிமையை பெறுகிறது. போராடுவது ஒவ்வொருவரின் உரிமை.( வீசில் சப்தம் காதை பிளக்கிறது )

நெறியாளர் கார்த்திகை செல்வன்

தமிழ்நாட்டில் அதிகமான போராட்டங்கள் நடைபெறுகிறது என்பது உண்மையே. தமிழகம் முன்னைக்காட்டிலும் வேகமும், விழிப்புணர்வும் பெற்றுள்ளது. இன்று அரசின் கொள்கைகளால் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அதனால் மக்கள் தாங்களாகவே எதிர்த்துப் போராடுகின்றனர். சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டால் தவறு. திருடினால் தவறு. ஏன் என்று கேள்வி கேட்டு போராட முன்வருவதை பாராட்ட வேண்டும், வாழ்த்த வேண்டிய நல்ல அம்சமாகும். அத்தகைய போராட்டத்தின் மீது ஏன் கோபம் கொள்கிறீர்கள்?

தமிழிசை அம்மையார் கேட்கிறார்.. 24 வருடமாக இருந்தவர்கள் இப்போது ஏன் போராடுகிறார்கள் என்ன நியாயம் என்று கேட்கிறார்.. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து எத்தனை ஆண்டுகளாக போராட்டம் நடக்கிறது. எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்பது அவருக்கு தெரியுமா?
இந்தியாவில் பிரிட்டீஷ்காரன் கூட 200 ஆண்டுகாலமாக நம்மை அடிமை படுத்தி வைத்திருந்தான். ஆனால் 1947 ல்தான் விடுதலை கிடைத்தது. அப்போது இவ்வளவு நாளாக அடிமையாக இருந்த இந்தியர்கள் இப்போது ஏன் போராடுகிறார்கள் என பிரிட்டீஷ் காரன் கேட்டால் எப்படி இக்குமோ அதே போல்தான் இருக்கிறது.. தமிழிசையின் கருத்து… ( அரங்கமே அதிர்கிறது )

தமிழிசை : … குறுக்கிட்டு பேசவிடாமல் செய்ய முயன்றார்… நான் சுதந்திர போராட்ட பாரம்பரிய குடும்பத்தில் இருந்து வந்தவள்…

கே.பி : கொஞ்சம் அமைதியாக இருங்கள்.. பொறுமை வேண்டும்.. என்னை பதில் சொல்ல அனுமதியுங்கள்..

கார்த்திகை செல்வன் : தலையிடுகிறார்..

கே.பி : அடுத்து சொன்னாங்க… கம்யூனிஸ்ட்கள் கேரளாவில் கெயிலை ஆதரிக்கிறார்கள். இங்கே எதிர்க்கிறார்கள் என்று.. உண்மைதான்.. கேரளாவில் கெயில் பைப் லைன் முழுவதும் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் பதிக்கப்பட்டிருக்கிறது. கேரளாவில் இதுகுறித்துப் போராடிய விவசாயிகளோடும், கெயில் நிறுவனத்தோடும் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாட்டினை உருவாக்கி கெயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

ஆனால் தமிழகத்தில் விவசாயிகளின் வீட்டிற்குள் பைப் லைன் வருகிறது. விவசாய நிலத்தில் வருகிறது. அதனால்தான் எதிர்க்கிறோம்.. நாங்கள் கெயில் பைப் லைன் திட்டம் வேண்டாம் என கூறவில்லை.. விவசாயிகளின் விளை நிலத்தையும், வீட்டையும் அழித்து வேண்டாம் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு.. இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தக் கூட தமிழக அரசும், கெயில் நிறுவனமும் முன்வரவில்லை.

ஏன் கெயில் நிறுவனம் கேரளாவில் ஒரு நிலைபாடும், தமிழகத்தில் ஒரு நிலைபாடும் எடுக்க வேண்டும். அதனை பாஜக ஏன் ஆதரிக்க வேண்டும். ஏன் தமிழகத்திலும் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் கொண்டு சென்றால் விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய இழப்பீடு கூட கொடுக்க வேண்டியதில்லையே… அது அரசின் நிலம்தானே அதில் உங்களுக்கென்ன சிரமம். இங்கே இரு நிலை எடுப்பது கம்யூனிஸ்ட்களாக அல்லது பாஜகவா ? (அரங்கத்தின் ஆரவாரம் அடங்க சிறிது நேரம் ஏற்பட்டது )

கம்யூனிஸ்ட்கள் போராடியதால்தான் தொழிற்சாலைகள் மூடப்பட்டிருப்பதாக கூறுகிறார் தமிழிசை.. நான் கேட்கிறேன்… சென்னையில் ஹூண்டாய், நோக்கியா நிறுவனங்கள மூடியது.. நாங்கள் போராட்டம் நடத்தியதாலா மூடியது.. அரசின் சலுகைகளை பெற்று கொண்டு லாபம் ஈட்டியவுடன் ஓட்டம் பிடித்தன.. நாட்டில் இதுவரை மூடப்பட்டிருக்கும் தொழிற்சாலைகள் எல்லாம் கம்யூனிஸ்ட்கள் போராடியதால் மூடப்படவில்லை, மாறாக முதலாளிகள் வாங்கிய கடன்களை ஏமாற்றவும், ஆலைகளை மூடுவதை வழக்கமாகச் செய்கிறார்கள். இவர்கள் மீது அம்மையாருக்குக் கோபம் வருவதில்லையே.

பாஜக ஸ்டெர்லைட் ஆலையிடம் வீசிய எலும்புத்துண்டை கவ்விக்கொண்டு போராடிய மக்களுக்கு எதிராக, போராட்டத்தை கொச்சை படுத்தி பேசுகிறது….

தமிழிசை : இதனை நான் கடுமையாக கண்டிக்கிறேன்… இதற்கு ஆதாரம் இருக்கிறதா? ( நாற்காலியின் முனைக்கு வந்து கத்தினார்.. )

கே.பி : தமிழிசை கொஞ்சம் பொறுமையாக இருங்க… ஆதாரம் இருக்கிறது… சொல்கிறேன் கேளுங்கள்…

தமிழிசை : பேசவிடாமல் மீண்டும் கத்தி ஏதோ சொல்கிறார்…

கார்த்திகை செல்வன் : தமிழிசையை பார்த்து அமைதியாக இருங்கள் நீங்கள் மறுப்பு தெரிவிக்கலாம். . அதற்கான எல்லா வாய்ப்பும் இருக்கிறது. அவரை பேச அனுமதியுங்கள்…

கே.பி : ஸ்டெர்லைட்டின் வேதாந்தா குழுமத்திடம் இந்தியாவிலேயே அதிகமாக நன்கொடை பெற்ற கட்சி பாஜக. அந்த பணத்தை பெற்றுக்கொண்டுதானே இன்று தூத்துக்குடியில் போராடிய மக்களுக்கு எதிராக பேசுகின்றனர்… இங்கே யார் சமூக விரோதி .. ?

பாஜக வேதாந்தா குழுமத்திடம் இருந்து அதிக நன்கொடை பெற்றது குறித்த வழக்கு கூட நீதிமன்றத்தில் இருக்கிறது. பல்வேறு அமைப்புகள் வேதாந்தா குழுமத்திடம் எவ்வளவு நன்கொடை ? யார் யார் வாங்கியிருக்கின்றனர் என்ற பட்டியலை வெளியிட்டிருக்கின்றன. அது பத்திரிகைகளிலும் வந்திருக்கிறது..

தமிழிசை : மீண்டும் மீண்டும் குறுக்கிட்டு ஏதோ சொல்கிறார்…

கே.பி : நான் சொல்கிறேன்.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எந்த நன்கொடையும் பெற்றதில்லை.. தமிழிசை பாஜக எந்த நன்கொடையும் பெற வில்லை என்று கூற முடியுமா… ஏன் எங்கள் கட்சி பத்திரிகைக்கு வேதாந்தா குழுமம் விளம்பரம் தந்த போது அதனை பிரசுரிக்க முடியாது என மறுத்த இயக்கம்.. வேதாந்தா விளம்பரத்தை வெளியிடாத ஓரே பத்திரிகை எங்கள் பத்திரிகை தீக்கதிர்…

தமிழிசை : உண்டியல் குலுக்கிகள்… வெளிநாட்டில் இருந்து பணம்… என ஏது ஏதோ கத்தினார். உடனே கே.பி பேச்சுக்கு ஆதரவாக அரங்கமே ஆர்ப்பரித்து தமிழிசைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்..

கே.பி : அம்மையார் தமிழிசை கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும்… நான் அதற்கும் பதில் சொல்கிறேன்..

ஆம்.. நாங்கள்.. உண்டியல் குலுக்கிகள்தான்… எங்கள் முழுநேர ஊழியர்களின் அலவன்ஸ்க்கு கூட உண்டியல் குலுக்கி அந்த காசைத்தான் தருகிறோம்.. அதனை மக்களிடம் சென்று உண்டியல் ஏந்தி நேர்மையாக கேட்கிறோம்.. அதில் எங்களுக்கு எந்த வெட்கமும் இல்லை. அதற்காக நாங்கள் பெருமை படுகிறோம்….

ஆனால், பாஜக போன்று ஸ்டெர்லைட், அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட்களிடமும், கள்ளப் பணக்காரர்களிடமும், பெருமுதலாளிகளிடமும் பணத்தை பெற்றுக்கொண்டு அவர்களுக்காக வாலாட்டிக் கொண்டு திரிய மாட்டோம், இப்படி பணம் பெற்றுக்கொண்டு பேசுவது இழிவானது. ( அரங்கமே ஆரவாரத்தில் அதிர்ந்தது )

தொடர்ந்து பேசிய கே.பி இன்றைக்கு மூடும் ஸ்டெர்லைட் ஆலையை மக்கள் 99 நாள் போராடிய போது மூடியிருந்தால் இந்த 13 பேர் உயிரிழப்பே ஏற்பட்டிருக்காது.. அப்ப இந்த உயிரிழப்பிற்கு மத்திய மாநில அரசுகள்தான் காரணம்… போராட்டத்தில் வன்முறை என்கிறார்கள்.

யார் வன்முறை செய்கிறார்கள்? வரலாறு முழுவதுமே அமைதியாகப் போராடிய மக்களின் மீது அதிகாரமும், ஆட்சியாளர்களும், காவல்துறையும்தான் வன்முறைத் தாக்குதல்களைத் தொடுத்து, உயிர்களை எடுக்கின்றனர். இது தொடர்கதையாக நடந்துவருகிறது. மக்கள் தங்கள் பிரச்சனைகளுக்காகத்தான் போராடுகின்றனர். வன்முறையில் ஈடுபடும் நோக்கத்தோடு அல்ல. ஆனால் அவர்களின் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்படுவது இன்று நேற்றல்ல, வரலாறு முழுவதும் நடக்கிறது.

கீழ் வெண்மணியில் அரைப்படி நெல்லைக் கூலி கேட்டுப் போராடியபோது, 44 பேர் தீயிட்டுக் கொளுத்தப்பட்டார்கள். இந்தக் கொடுமையை செய்தது ஆண்டைகள், நிலப்பிரபுக்கள். மக்கள் சிறு வன்முறையில் கூட ஈடுபட்டதில்லை. வரலாற்றில் போராடும் மக்களின் மீது காவல்துறையை ஏவ மாட்டேன் என்று அறிவித்தது மே.வங்க முன்னாள் முதல்வர் தோழர் ஜோதிபாசுதான். அதுபற்றி தொழிற்சங்க தலைவர் முகமது அமீன் தெரிவித்தபோது, “மக்களின் ஒன்றுபட்ட கோரிக்கைகளுக்கும், அமைதிவழிப் போராட்டங்களுக்கும் அரசு ஆதரவாக இருக்கும் என நின்றது ஜோதிபாசுவின் அரசு” என்கிறார்.

போராடும் மனிதன்தான் முழுமையான மனிதன்.. போராடாத மனிதன் அரைகுறை மனிதன் என முத்தாய்ப்பாக முடித்தார்.

அதன் பின்னர் நெறியாளர் கார்த்திகை செல்வன் அதிமுக சார்பில் செம்மலையை பேச அழைத்தார்..

செம்மலை நேரடியாக பதில் அளிக்க முடியாமல் சிகாகோ வரை சென்று பார்த்தார், ஆனால் அரங்கத்தில் இருந்த பார்வையாளர்கள் பொறுமை இழந்து பேசியது போதும் முடியுங்கள் என குரல் கொடுத்தனர்.. அப்படியே கேரளாவிற்கு தாவிய செம்மலை கேரளாவிலும் விவசாய நிலத்தில்தான் கெயில் பைப் லைன் பதித்திருப்பதாக செய்திதாளில் பாத்தேன். அங்கு மக்களை தூண்டி விட ஆள் இல்லை. அதனால் போராட்டம் நடப்பதில்லை.. கூறி மீண்டும் எங்கெங்கோ சென்றார்..

நெறியாளர் காத்திகை செல்வன் இடையில் குறுக்கிட்டு பெரும் பாடு பட்டு ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்திற்கு அழைத்து வந்தார்..

அப்போது செம்மலை… ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சமூக விரோதிகள்… ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள்… கூறினார்..

அப்போது கார்த்திகை செல்வன், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஆட்டோவிற்கு தீ வைத்தது யார் என்பது நீங்களும் வெளிவந்த வீடியோக்களில் பார்த்திருப்பீர்கள் பின் ஏன் சமூக விரோதிகள் என போராடியவர்கள் மீது பழி போராடுகிறீர்கள் என கேட்டு, நேரடியாக கேள்விகளுக்கு பதிலளிக்க கூறினார்… இறுதி வரை கார்த்திகை செல்வன் சமூக விரோதி போல் போராடி செம்மலையிடம் பதிலை பெறமுயன்றார்… ஆனாலும் முடியவில்லை…

அடுத்ததாக அதே அணியில் இருந்த தாமாக ஞானதேசிகனை பேச அழைத்தார்…

ஞானதேசிகன் : அரங்கத்தில் பாஜக, அதிமுகவிற்கு எழுந்த எதிர்ப்பிற்கும், எதிர் முகாமில் இருந்தவர்கள் கொடுத்த பதிலடிக்கும் எப்படியாவது ஒத்தடம் கொடுத்து தேற்ற வேண்டும் என்ற பாணியில் தூப்பாக்கி சூட்டிற்கு சமூக விரோதிகள்தான் காரணம் என வாதிட முயற்சித்தார்… அப்போது தமிழக ஊடகங்கள் திட்டமிட்டு காவலர்கள் தாக்கப்படுவதை வெளியிடவில்லை.. ஆங்கில ஊடகங்கள் வெளியிட்டன… போராட்டக்காரர்களிடம் கையில் தடி எப்படி வந்தது.. கல் எப்படி வந்தது… என்றார்..

கார்த்திகை செல்வன் : அப்படியில்லை.. நாங்களும் காவலர்களை தாக்கும் வீடியோவை ஒளிபரப்பினோம்.. நீங்க பார்க்கவில்லை போலும்..

ஞானதேசிகன் : நான் உங்களை சொல்ல வில்லை சில ஊடகங்களை சொன்னேன்.. என்று அதிலிருந்து நழுவி.. மீண்டும் தொடர்ந்தார்… துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களில் உசிலம்பட்டியை சேர்ந்த ஜெயராமன் என்பவர் இருக்கிறார்.. உசிலம்பட்டியில் இருப்பவருக்கு தூத்துக்குடியில் என்ன வேலை.. இவர் எப்படி அங்கு சென்றார்.. என நீதிமன்றத்தில் குற்றவாளியை மடக்கி விட்டதாக நினைத்து பேசுவது போல் பேசினார்..

காத்திகை செல்வன் : ஏன் தூத்துக்குடி மக்களுக்காக உசிலம்பட்டிக்காரர் போராடக்கூடாதா… ? ஏன் அரசியல் கட்சிகள் மற்ற பகுதிகளில் பாதிக்கப்படும் மக்களுக்காக போராடுவது இல்லையா..?

ஞானதேசிகன் : ஆனால் அவர் அரசியல் கட்சியை சேர்ந்தவர் இல்லை. அவர் ஓர் அமைப்பை சேர்ந்தவர்..

காத்திகை செல்வன் : ஏன் அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராடக்கூடாதா….?

ஞானதேசிகன் : கூடாது..( மக்கள் கடும் எதிர்ப்பு குரல்… நீ எதற்காக இங்கே பேச வந்தாய்… உன் கட்சியில் இங்கே ஆள் இல்லையா…? ) கடும் எதிர்ப்பு எழுந்தது…தொடர்ந்து பேசிய ஞானதேசிகன்.. எம்ஜிஆர், கருணா நிதி, ஜெயலலிதா, காமராஜர் என எல்லா ஆட்சியிலும் துப்பாக்கி சூடு நடந்திருக்கிறது என கூறி 13 பேர் படுகொலையையும் நியாயப்படுத்த முயன்றார்.

மேலும் காவல்துறையில் இருப்பவர்கள் எல்லாம் சமூக விரோதியா… என ஜல்லி கட்டு சம்பவத்தையொட்டி ஆட்டோவிற்கு தீ வைத்த போலீசையும் புனிதராக்கும் முயற்சியில் இறங்கினார்… அதற்கு அரங்கத்தில் இருந்தவர்களின் எதிர்ப்பு கடுமையாக இருந்தது.. அப்படியும், இப்படியும் வாதாடி பார்த்தார்… எதுவும் எடுபடவில்லை..

அதன் பின்னர் நெறியாளர் கார்த்திகை செல்வன்… தனியரசை பேச அழைத்தார்…
அப்போது அவரது ஆதரவாளர்கள் பலத்த கரவோசையுடன் வரவேற்றனர்…

தனியரசு : போராட்டம் இல்லாமல் எதுவுமில்லை.. பாதிக்கப்படும் மக்கள் போராடத்தான் செய்வார்கள்.. ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளாவிட்டால் கண்டுகொள்ளும்படி போராடத்தான் செய்வார்கள்.. புரட்சி வெடிக்கத்தான் செய்யும்.. அதில் சில இழப்புகள் ஏற்படும்… என நேரடியாக சாடினார்… உடனே வன்முறைக்கு ஆதரவளிக்க முடியாது.. என்று கார்த்திகை செல்வன் குறுக்கிட்டார்..

அப்படியென்றால் பாதிக்கப்படும் விவசாயிகள், மக்கள் உரிமைக்காக போராடமால் கை கட்டி கொண்டு அடிவாங்கி சாக வேண்டுமா..? உண்மையான சமூக விரோதிகள் யார் தெரியுமா… ஊர்வலமாக சென்று சட்டத்தை மதிக்காமல் பாபர் மசூதியை இடித்தார்களே அவர்கள்தான்.. என்றார்… அரங்கமே அதிரும் அளவிற்கு பார்வையாளர்கள் அந்த கருத்தை வரவேற்றனர்..

அப்போது குறுக்கிட்ட தமிழிசை :அதனை வன்மையாக கண்டிப்பதாக கூறி… ஏதோ பேச முயன்றார்.. அதற்கு பார்வையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஓசை எழுப்பினர்… தொடர்ந்து பேசிய தனியரசு.. போராடும் இன்றைய சமூக விரோதிகள்தான் நாளைய தலைவர்களாக வருவார்கள்.. ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்றுவார்கள்.. என முடித்தார்..

அதன் பின்னர் இயக்குநரும், நடிகருமான அமீரை கார்த்திகை செல்வன் பேச அழைத்தார்…

அமீர்.. கருவறையில் இருக்கும் குழந்தை கூட போராடித்தான் வெளியே வருகிறது…. மக்கள் அமைதியாக இருக்கத்தான் விரும்புகிறார்கள்.. ஆனால் ஆட்சியாளர்கள் விடுவதில்லை.. மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லை.. அதுபோல ஆட்சியாளர்களும்.., உடனே தமிழிசையும், பார்வையாளர்கள் பகுதிக்கு அழைத்து வரப்பட்டிருந்த பாஜகவினரும் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தனர்… ( அமீர் கூறியதில் பாஜகவினருக்கு என்ன பிரச்சனை என்று பார்வையாளர்கள் குழப்பமடைந்தனர்.. ) அடுத்து ஏதோ அமீர் பேச முயன்ற போது அப்போதும் எதிர்ப்பு தெரிவித்தனர்…

காத்திகை செல்வன் : பாஜகவினரை பார்த்து அமீர் பேசட்டும்.. அதற்கு அனுமதியுங்கள்.. அதற்கு பதில் தர தமிழிசை இருக்கிறார்… அவரும் பேசுவார் என கூறினார்..

அடுத்து அமீர் : கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை செய்யப்பட்ட போது, கோவையில் கடைகள் சூறையாடப்பட்டன… போலீஸ் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன… அப்போது போலீசின் துப்பாக்கி எங்கே சென்றது.. என கேட்டு முடிக்கும் முன் அரங்கின் பல்வேறு பகுதியில் அமர வைக்கப்பட்டிருந்த பாஜக, இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்டோர் மேடையை நோக்கி ஓடினர்… எங்களை பற்றி அமீர் பேசக்கூடாது என உடனே வேளியேற வேண்டும் என பாய்ந்தனர். அங்கிருந்து காவல்துறை மற்றும் புதிய தலைமுறை பணியாளர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர்…

தொடர்ந்து அராஜகத்தில் ஈடுபட்டனர்… காத்திகை செல்வன் உங்கள் தரப்பு மாற்று கருத்தை கூற அரங்கத்தில் தமிழிசை உள்ளிட்ட தலைவர்கள் இருக்கிறார்கள் பொறுமையாக இருங்கள் என்று எவ்வளவோ கெஞ்சி பார்த்தார்.. ஆனால் சங்பரிவார் கூட்டம் கருமமே கண்ணாக எப்படியாவது நிகழ்ச்சியை ஊத்தி மூட வேண்டும் என்ற அடிப்படையில் தொடர் ரகளையில் ஈடுபட்டனர்.

அப்போது கார்த்திகை செல்வன் தமிழிசையை அழைத்து உங்கள் அமைப்பினரை அமைதி படுத்துங்கள் என கூறி கையில் மைக்கை கொடுத்தார்…

ஆனால் தமிழிசை மிகத் தெளிவாக, இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடந்தால் நம் மீது கருத்தியல் ரீதியான அடி பலமாக இருக்கும்.. அரங்கத்தில் இருந்ததில் சங்பரிவார் அமைப்புகளை தவிர்த்த அனைவரும் நமக்கு எதிராக இருக்கிறார்கள்.

ரகளையில் ஈடுபடும் சங்பரிவார் கும்பல்

இந்த நிகழ்ச்சி முழுமையாக நடைபெற்று வெளிவந்தால்… பாஜக இன்னும் அம்பலப்பட்டு விடும் என்ற நிலையில் சுதாரித்த தமிழிசை மைக்கை பிடித்து…. இந்த கருத்தை நாம் அனுமதிக்க முடியாது.. நாம் உயிரை இழந்திருக்கிறோம்.. யார் அதை பற்றி பேசினாலும் அனுமதிக்க முடியாது. ஏற்றுக்கொள்ள முடியாது என மேலும் வெறியை ஊட்டினார்..

நெறியாளர் காத்திகை செல்வன் பாடு பெரும் பாடு ஆனது…. சுற்றி இருக்கும் காவலர்கள் ரகளையில் ஈடுபடுவர்களை வெளியேற்றவில்லை… ரகளை தொடர்ந்து நீடித்து கொண்டே இருந்தது.. மீண்டும் பேசிய தமிழிசை… இந்த பேச்சு டிவியில் ஒளிபரப்பப்படாது.. இதனை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது… என்று மீண்டும் அதே பல்லவியை பாடினார்… பின்னர் நந்த குமார் அப்படியே நம்மவர்களை இங்கேயே அமரச்சொல்லுங்கள் என கூறினார்… ( கலைந்து அவரவர் இடத்திற்கு செல்லுங்கள் என்று கூறவில்லை..)

இந்த களேபரத்தில் அரங்கத்தின் சங்பரிவார் கும்பல் முன்பகுதிக்கு வந்தவுடனேயே அங்கு அமர்ந்திருந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் இடத்தை காலி செய்து வெளியேறினர். ரகளை ஓய்ந்தபாடில்லை.. ஞானதேசிகன், கே.பி, டி.கே.எஸ் இளங்கோ உள்ளிட்டோர் சொல்லி பார்த்தனர் கேட்கவில்லை…

ஒரு கட்டத்தில் கொங்கு இளைஞர் பேரவையை சேர்ந்தவர்கள் முன் பகுதிக்கு வந்து பாஜகவினருக்கு எதிராக ரகளையில் இறங்க… மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.. உடனே தனியரசு வந்து தனது தொண்டர்களை பெயரை சொல்லி அழைத்து அமைதி காக்க வேண்டினார்.. அதனை தொடர்ந்து முன்பகுதி அமைதியாக இருந்தது..

இதற்கிடையில் பின் பகுதியில் இருந்த பொதுமக்கள் சங்க பரிவாரின் அராஜகத்தை கண்டித்தவாறே அரங்கத்தை விட்டு வெளியேறினர்.. அப்போது இந்த பிஜேபி இப்படி பேச விடாம கலவரம் செய்யுறானுங்க… இப்பவே இப்படின்னா… ஒரு வேள இவங்க தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தா.. தமிழ்நாடே சுடுகாடா மாறிடும் என அவரவர் பாணியில் தூற்றி விட்டு சென்றனர்..

இதற்கிடையில் மேடைக்கு சென்ற காவல்துறை அதிகாரிகள் கார்த்திகை செல்வனை தனியே அழைத்து உடனே நிகழ்ச்சியை முடியுங்கள்.. கலவரம் ஏற்பட்டு விடும்.. அனுமதிக்க முடியாது என கூறினர். ( அதே நேரத்தில் அராஜகமாக முன்வரிசைக்கு வந்து ரகளையில் ஈடுபட்டவர்களை கடைசி வரை காவல்துறை வெளியேற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை… அவர்களை அரங்கத்தை விட்டு வெளியேருங்கள் என்று கூட ஒரு வார்த்தை கூற வில்லை. ) கர்த்திகை செல்வன் சிறிது நேரத்தில் முடித்து கொள்கிறோம் என கேட்டுக்கொண்டார். மேலும் காவல்துறை அதிகாரிகள் அமீர் பேசக்கூடாது என்றும் கூறினர்.

அதனை தொடர்ந்து காத்திகை செல்வன் தமிழிசையின் கருத்திற்கு ஆதரவாக பேச வந்திருந்தசெ.கு.தமிழரசனை பேசுமாறு கூறினார். உடனே அவரும் பேசத்துவங்கினார். பின்பகுதியில் மிச்சமிருந்த ஒரு பகுதியினர் இது அநியாயம்.. அமீரை பேசச்சொல்லுங்கள் என கத்தினர்.. ஆனாலும் செ.கு.தமிழரசன் பேசிக்கொண்டிருந்தார்…
மேடையில் இருந்த கே.பாலகிருஷ்ணன் நெறியாளர் காத்திகை செல்வனை பார்த்து… அமீர்தானே பேசிக்கொண்டிருந்தார்.. அவர் முழுமையாக ஒரு நிமிடம் கூட பேசவில்லை… பாஜக எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்பதற்காக அமீரை பேச அனுமதிக்க மறுப்பது எப்படி சரியாக இருக்கும். இது நியாயமே இல்லை… இதனை அனுமதிக்க முடியாது… அமீரை பேச அழையுங்கள் என கூறினார்.. பின்னர்…. அமீர் பக்கம் திரும்பி அமீர் நீங்கள் பேசுங்கள்.. பார்த்துக் கொள்ளலாம் என கூறினார்…

உடனே அருகில் இருந்த தனியரசும் நீங்கள் பேசுங்கள் என கூறினர்.. உடனே அமீர் பேசினார்.. அப்போது அமீர்; யார் மனதையும் புண்படுத்துவது எனது நோக்கம் இல்லை.. நான் அப்படி பேசவும் இல்லை.. ஒரு சம்பவத்தைதான் குறிப்பிட முயன்றேன்.. ஓர் உயிர் போனது குறித்து பேசுவதற்கே நீங்கள் இப்படி ஆவேசமாக என்னை பேசக்கூடாது என்று போராடுகிறீர்களே… அப்படி என்றால் 13 உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கிறதே… அதற்கு போராடாமல் இருக்க முடியுமா… ? போராடுவோம்.

போராட்டம் தொடரும் என்றார்.. உடேன மேடையில் இருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் நேரடியாக அமீரிடம் பேசியது போதும் நிறுத்துங்கள் என வந்தார்.. அப்போது கே.பி தலையிட்டு போலீஸ் அதிகாரியை பார்த்து நீங்கள் ஏன் அமீரை நிறுத்த சொல்கிறீர்கள். ரகளையில் ஈடுபடும் அவர்களை வெளியேற்றுங்கள் என சொன்னார்..

உடனே கார்த்திகை செல்வன் தலையிட்டு நாம் திட்டமிட்டிருந்த நேரம் முடிய போகிறது.. முடியுங்கள் என அமீரை பார்த்து கூறினார்.. அப்போது யார் தடுத்தாலும் எங்கள் போராட்டம் தொடரும் என கூறி முடித்தார்.

அடுத்து மீண்டும் செ.கு.தமிழரசனை கார்த்திகை செல்வன் பேச அழைத்தார்…
ஆனால் செ.கு.தமிழரசன்.. நடந்த நிகழ்வுகளையும், பாஜக – அதிமுகவிற்கு எதிரான ஒட்டுமொத்த பார்வையாளர்களின் எதிர்பையும் உள்வாங்கிய நிலையில், தனது பேச்சை துவங்கினார்.. அப்போது மக்கள் அடிப்படை உரிமைக்காகவே அன்றாடம் போராட்டம் நடத்துகிறார்கள்.. என துவங்கி போராட்டத்திற்கு ஆதரவாக பேசினார்.. அப்போது இருளடித்தது மாதிரி தமிழிசை வைத்த கண்ணுமாறாமல் செ.கு.தமிழரசனை பார்த்துக் கொண்டே இருந்தார்.. சில நிமிடங்கள் கடந்த நிலையில் தனது பேச்சை கார்த்திகை செல்வனின் வேண்டுகோளை ஏற்று முடித்துக் கொண்டார்..

இதற்கிடையில் கோவையின் பல்வேறு பகுதியில் இருந்த காவல்துறையினர், மற்றும் அதிரடிப்படையினர் நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அருகில் இருந்த ஒரு உளவுத்துறை காவலரிடம் ஏன் இவ்வளவு போலீஸ் வரவழைக்கப்பட்டிருக்கின்றனர் எனக் கேட்ட போது, எப்படியாவது அமீரை தாக்கி அதன் மூலம் மீண்டும் கோவையில் ஒரு கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற திட்டம் இருப்பதாக தெரிய வந்திருக்கிறது. ஆகவே எப்படியாவது இந்த நிகழ்ச்சியை கலவரம் இன்றி முடித்திட வேண்டும். அதே நேரம் அமீரையும் பாதுகாப்பாக அழைத்து செல்ல வேண்டும்.. அதற்காகத்தான்.. என்றார் நம்மிடம்…

நிகழ்ச்சி முடிந்த நிலையில் இயக்குநர் அமீர் அவர்களை கே.பாலகிருஷ்ணன், மற்றும் தனியரசு ஆகியோர் கூட்டாக அழைத்து கொண்டு ஓரே காரில் மூவரும் சென்றனர்.. முன்னும் பின்னும் காவல்துறை பாதுகாப்புடன் விமான நிலையத்தை நோக்கி கார்கள் நகர்ந்து சென்றன..

தமிழகத்தில் இப்படி ஒரு அக்கிரமம் எப்பையும் நடந்தது கிடையாது.. மோடி கூட்டம் தமிழகத்தில் ஒரு வேளை தப்பி தவறி வந்தா மனித நடமாட்டமே இருக்காது போல… ரொம்ப உஷாரா இருக்கனும் என்று பார்வையாளர்களில் இருவர் அக்கம் பக்கத்தில் பாஜகவினர் இருக்கிறார்களா என்று பார்த்தபடி தங்களுக்குள் பேசியபடி கல்லூரி வாயிலை விட்டு வெளியேறிச் சென்றனர்.

அதற்கடுத்து வந்த ஒருவர்…. நிகழ்ச்சி நடக்கிறப்பவே.. இந்த பிஜேபி காரனுங்க இப்படி பன்னுராங்க… ஒரு சுற்று கூட முழுமையா முடியவிடல… அதற்குள்ள கலவரத்த ஆரபிச்சனுங்க.. அப்ப இனி நடந்த வரைக்கும் கூட முழுமையா ஒளிபரப்ப விடுவானுங்கன்னு நினைக்கிற… அதுக்கு வாய்ப்பே இல்ல… என கூறிக்கொண்டு ஏதோ சொல்ல வந்தவர் அருகில் இருந்த போலீசை பார்த்ததும் பேசாமல் அப்படியே நகர்ந்து சென்றனர்…

குறிப்பு : சம்வத்திற்கு பின்னர் நேரில் பார்த்ததை கேட்டதை நினைவூட்டி குறிப்பிட்ட விவாதங்கள் மட்டும் இங்கே தொகுத்து தரப்பட்டிருக்கிறது.

நன்றி : தீக்கதிர்

*****

பாஜக பினாமி அரசின் அடாவடி: அராஜகத்தில் ஈடுபட்ட பாஜகவிற்கு பாதுகாப்பு – புதிய தலைமுறை டிவி மீது வழக்கு பதிவு

கோவையில் புதிய தலைமுறை தொலைக்காட்சி சார்பாக நடைபெற்ற வட்ட மேசை விவாதத்தின் போது பாஜக, ஆர்எஸ்எஸ், இந்துமுன்னணி உள்ளிட்ட சங்பரிவார் அமைப்பினர் ரகளையில் ஈடுபட்டனர். மேலும் இயக்குநர் அமீரை பேசவிடாமல் அராஜகம் செய்து நிகழ்ச்சியை பாதியில் முடிக்க செய்தனர்.

இந்த விவகாரத்தில் அராஜகத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக தொலைக்காட்சி நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு! பாஜக பினாமி அரசு சங்பரிவார் அமைப்புகளுக்கு தனது விசுவாசத்தை வெளிப்படுத்தியிருக்கிறது.

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் சார்பாக வெள்ளியன்று கோவை எஸ்.என்.ஆர் கல்லூரி அரங்கில் வட்டமேசை விவாத நிகழ்ச்சி ஒளிப்பதிவு செய்யப்பட்டது. அதில் மார்க்சிஸ்ட் கட்சியின் கே.பாலகிருஷ்ணன், பாஜகவின் தமிழிசை, திமுகவின் டி.கே.எஸ் இளங்கோவன், அதிமுகவின் செம்மலை, தா.மா.க ஞானதேசிகள், கொங்கு இளைஞர் பேரவையின் தனியரசு, தமிழக குடியரசு கட்சியின் செ.கு.தமிழரசன், இயக்குநர் அமீர் ஆகியோர் பங்கேற்று பேசினர்.

அப்போது தமிழிசை, செம்மலை, ஞானதேசிகன் ஆகியோர் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு நடைபெற்று 13 பேர் உயிரிழந்த விவகாரத்தில் காவல்துறை மற்றும் அரசிற்கு ஆதரவாக பேசினர்.

இதற்கு பாஜக கட்சியை சேர்ந்தவர்களை தவிர மற்ற அனைத்து பார்வையாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஸ்டெர்லைட் எதிராக நடைபெற்ற மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக கே.பாலகிருஷ்ணன், டி.கே.எஸ்.இளங்கோவன், உ.தனியரசு ஆகியோர் பேசினர். இதற்கு பார்வையாளர்கள் பலத்த வரவேற்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சி இப்படியே முடிந்தால் ஒளிபரப்பின் போது, ஏற்கனவே மோடி மற்றும் பழனிச்சாமி அரசு மீது இருக்கும் அதிருப்தி மேலும் அதிகரிக்கும் நிலை உருவானது. இந்நிலையில் எப்படியாவது வட்டமேசை ஒளிப்பதிவு நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும் என திட்ட மிட்ட சங்பரிவார் அமைப்பினர், இயக்குநர் அமீர் பேசத்துவங்கிய உடனேயே ரகளையில் ஈடுபட துவங்கினர். அப்போது அனைவரும் தலையிட்டு எதிர்ப்பு தெரிவித்தவுடன் பின்வாங்கினர்.

அதனை தொடர்ந்து அமீர் பேசும் போது, கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை செய்யப்பட்ட போது, கோவையில் கலவரத்தில் ஈடுபட்டு கடைகளை சூறையாடி, காவல்துறை வாகனங்களை தீ வைத்தவர்கள் சமூக விரோதிகள் இல்லையா? அப்போது காவல்துறை ஏன் துப்பாக்கியை தூக்க வில்லை என கேள்வியை முடிக்கும் முன்பு.. அரங்கத்தின் இருந்து ஒட்டு மொத்த சங்பரிவார் அமைப்பினரும் திரண்டு சென்று அமீரை தாக்க முயன்றனர். அப்போது தொலைக்காட்சி நிறுவன ஊழியர்களும், காவல்துறையும் அவர்களை தடுத்து நிறுத்தி இயக்குநர் அமீரை பாதுகாத்தனர்.

அதன் பின்னர் நிகழ்ச்சியை முடித்தால்தான் கலைவோம் என்று விடாப்பிடியாக அராஜகத்தில் ஈடுபட்டனர். ஆனால் காவல்துறை அவர்களை அங்கிருந்து அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

உடனே நிகழ்ச்சியை உடனே முடிக்க வேண்டும் என்று நெறியாளர் கார்த்திகை செல்வனிடம் காவல்துறை அதிகாரிகள் வலியுறுத்தி நெருக்கடி கொடுத்தனர். இதனை தொடர்ந்து சிறிது நேரத்திலேயே நிகழ்ச்சி பாதியோடு முடிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த செய்தி பெரியதாகி விடக்கூடாது என்ற நிலையில், இயக்குநர் அமீரை தாக்கி பிரச்சனையை திசைதிருப்பி அதன் மூலம் கலவரத்தை உண்டு பன்ன திட்டமிடுவதாக உளவுத்துறைக்கு தகவல் வந்தது. இதனை தொடர்ந்து அமீரை கே.பாலகிருஷ்ணன், தனியரசு மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பாக பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். இதனால் கோவைக்குள் தாக்குதல் தொடுக்க முடியாத சூழல் சங்பரிவார் அமைப்பினருக்கு ஏற்பட்டது.

அடுத்தாக அமீர், தனியரசுடன் திருப்பூருக்குதான் செல்வார் என்று நினைத்து முதலிப்பாளையம் அருகில் இரவில் தாக்குதல் தொடுக்க திட்டமிட்டிருந்திருக்கின்றனர். இந்நிலையில் கொங்கு இளைஞர் பேரவையை சேர்ந்தவர்கள் காரில் கொடி கட்டி அந்த வழியாக சென்றிருக்கின்றனர். அதில் அமீர் இருப்பதாக நினைத்து அந்த காரை சரமாரியாக தாக்கியுள்ளனர். அப்போது உள்ளே இருந்து இறங்கியதில் அமீர் இல்லாத நிலையில் பாஜகவினர் அங்கிருந்து ஓடி ஒளிந்திருக்கின்றனர். இதுகுறித்து தனியரசு ஆதரவாளர்கள் புகார் கொடுக்க, வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் மீண்டும் சங்பரிவார் அமைப்புகளின் சதிவேலை அம்பலமான நிலையில், எப்படியாவது இந்த பிரச்சனையை திசைதிருப்ப வேண்டும் என்ற நோக்கில் தற்போது, பாஜக மற்றும் அதிமுக அரசின் திட்டத்தின் படி வட்டமேசை விவாதம் நடத்திய புதிய தலைமுறை நிர்வாகம், மற்றும் செய்தியாளர் சுரேஷ் மற்றும் நிகழ்ச்சியில் பேசிய அமீர் ஆகியோர் மீது காவல்துறையினர் கோவை பீளமேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதில் 505- பொது அமைதியை குலைக்கும் வகையில் செயல்படுதல், 153 ஏ- இரு பிரிவினர் இடையே பிரச்சனை ஏற்படுத்துதல், 3 ( 1) சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது தமிழக பத்திரிகையாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழக அரசின் இந்த ஜனநாயக விரோத செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. உடனே நிகழ்ச்சி குறித்து போடப்பட்டுள்ள பொய்வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

நன்றி : தீக்கதிர்

மோடியை கொல்ல ’சதி’ ! பாஜக-வின் 2019 தேர்தல் அறிக்கை வெளியீடு ! கருத்துப் படம்

மாவோயிஸ்டுகள் மோடியை கொல்ல சதியாம்! – 2019 – பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கை !_____________________________________________________________________

மோடியின் – சேலம் பசுமைவழிச் சாலை

பயிர்கள் சிதைத்து, காடுகள் அழித்து, வாழ்வின் வேரை அறுக்கும், பசுமைவழிச் சாலை. தடுக்கச் சொன்னது நாங்கள், ரோட்டை போடச் சொல்லி தூண்டியது யார்?

கருத்துப் படம்: வேலன்.

தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் மக்கள் அதிகாரம் தோழர்கள் 6 பேர் சிறை வைப்பு !

தூத்துக்குடியில் அரச பயங்கரவாதத்தால் 13 பேர் பலியானதைத் தொடர்ந்து, கடந்த மே 25-ஆம் தேதியன்று நள்ளிரவில் மக்கள் அதிகாரம் தோழர்களை வீடு புகுந்து கைது செய்தது போலீசு. கைது செய்யும் போது தாம் எந்த காவல்நிலையத்தில் இருந்து வந்திருக்கிறோம் என்பதையோ, அவர்களை என்ன வழக்கிற்காக கைது செய்கிறோம் என்பதையோ, அவர்களை எங்கு அழைத்துச் செல்கிறோம் என்பதையோ, குடும்பத்தாருக்கு சொல்லவில்லை. அடுத்த இரண்டு நாட்களுக்கு அவர்கள் குறித்து எவ்விதத் தகவலும் தராமல் மவுனம் சாதித்தது.

உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்ட பின்னர்தான் கைது செய்யப்பட்டவர்கள் குறித்த தகவலை அளித்தது போலீசு. அச்சமயத்தில் கைது செய்யப்பட்ட தோழர்களில் ஆறு பேர் மீது, நேற்று இரவு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளது.

தே.பா.ச. கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட தோழர்கள் குறித்த விவரம் பின்வருமாறு

உசிலை
1. கோட்டையன் வ/40 , த/பெ சின்னன்
கோவில்பட்டி
2. சரவணன் வ/32 த/பெ பண்டாரம்
ஆலங்குளம்  
3. வேல்முருகன் என்ற முருகன் வ/40, த/பெ செல்லத்துரை
திருநெல்வேலி
4. கலியலூர் ரஹ்மான் வ/50, த/பெ கலீல்
5. முகமது அனஸ் வ/20 , த/பெ கலியலூர் ரஹ்மான்
6. முகமது இர்ஷத் வ/18 , த/பெ கலியலூர் ரஹ்மான்

போலீசின் பொய் வழக்குகளுக்கும், அராஜகங்களுக்கும் எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்று கூட வேண்டிய நேரம் இது.

***துப்பாக்கிக் குண்டுக்குத் தப்பினால் தேசியப்பாதுகாப்பு சட்டம்!

ஸ்டெர்லைட் எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்ட குற்றத்துக்காக அடுக்கடுக்கான பொய்வழக்குகளில் கைது செய்யப்பட்ட மதுரை – நெல்லை மாவட்டங்களைச் சார்ந்த  கோட்டையன், வேல்முருகன், சரவணன், கலிலூர் ரகுமான், முகமது அனஸ், முகமது இஸ்ரத் ஆகியோரை நீதிமன்றம் பிணையில் விடுவித்துவிடக்கூடும் என்ற காரணத்தினால், இவர்கள் அனைவரையும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒரு ஆண்டு தடுப்புக்காவலில் வைக்க உத்தரவிட்டிருக்கிறது எடப்பாடி அரசு.

இவர்களில் முகமது அனஸ் ஹோமியோ மருத்துவக்கல்லூரி மாணவர். அனஸ், இஸ்ரத் ஆகியோரின் தந்தை கலிலுர் ரகுமான். மற்ற மூவரும் தொழிலாளர்கள். இவர்கள் யாரும்  வன்முறையிலும் ஈடுபட்டதற்கு எந்த வித ஆதாரமும் இல்லையென்ற போதிலும், நிராயுதபாணியான மக்களை வாயிலும், நெஞ்சிலும், தலையிலும் குறிவைத்து சுட்டுக்கொன்ற குற்றத்தில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக  மக்கள் அதிகாரம் அமைப்பின் மீது பொய்ப்பழி சுமத்துகிறது எடப்பாடி அரசு.

அரசையும் காவல்துறை உயரதிகாரிகளையும் கையில் போட்டுக்கொண்டு அமைதி வழியில் போராடும் மக்களைப் படுகொலை செய்வதற்கு ஒரு கார்ப்பரேட் நிறுவனம் நேரடியாகவே உத்தரவிட முடியும் என்பதற்கு தூத்துக்குடி நிகழ்வு ஒரு முன்மாதிரியாக உள்ளது. 

ஒருபுறம், தூத்துக்குடி வன்முறைக்கு சட்டமன்றத்தில் தி.மு.க. மீது முதலமைச்சர் பொய்க்குற்றம் சாட்டினார். இன்னொருபுறம் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டதாக போராட்டத்தை நடத்திய மக்கள் கூட்டமைப்பினரின் மீதும், அதன் சட்ட ஆலோசகர்களான வழக்கறிஞர்கள் வாஞ்சிநாதன், அரிராகவன், ராஜேஷ் ஆகியோர் மீதும், மக்கள் அதிகாரம் அமைப்பினர் மீதும், புரட்சிகர இளைஞர் முன்னணியினர் மீதும் பொய்வழக்குகள் போடப்படுகின்றன. போராட்டத்தை நடத்திய மக்கள் கமிட்டியை சேர்ந்தவர்களை குறி வைத்து கைது செய்து கொண்டிருக்கிறது போலீசு.

தூத்துக்குடி புலன்விசாரணை சி.பி.சி.ஐ.டி. வசம் மாற்றப்பட்டுவிட்டதாக அரசு ஒருபுறம் அறிவிக்கிறது. இன்னொருபுறம் சட்டவிரோதமான முறையில் உள்ளூர் போலீசார் அடுக்கடுக்கான பொய்வழக்குகளைப் போட்டு மக்களைக் கைது செய்கின்றனர். சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (U.A.P.A) கீழ் எங்கள் அமைப்பும் வேறு சில அமைப்புகளும் தடை செய்யப்படவிருப்பதாக உளவுத்துறை ஊடகங்களில் வதந்தி பரப்புகிறது.

காக்கை குருவிகளைப் போல மக்களைச் சுட்டுக்கொன்ற குற்றவாளிகள் மீது எந்த விசாரணையும் இல்லை. மாறாக ஜாலியன் வாலாபாக் போன்ற படுகொலையை நடத்தியவர்கள் பாதிக்கப்பட்ட மக்கள் மீது மறுபடியும் தாக்குதல் தொடுக்கிறார்கள்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு அரசின் உயர்மட்டத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை என்பதற்கான ஆதாரங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. மே 22 போராட்டத்தை மேலாண்மை செய்வது குறித்து சார் ஆட்சியாளர் பிறப்பித்த உத்தரவுகள் மீறப்பட்டது ஏன் என்ற கேள்வியை எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவருக்கே பேசுவதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் இதுவரை நடந்துள்ள பல துப்பாக்கிச் சூடுகளிலிருந்து தூத்துக்குடி மாடல் முற்றிலும் வேறுபட்டது என்று கருதுகிறோம். அரசையும் காவல்துறை உயரதிகாரிகளையும் கையில் போட்டுக்கொண்டு அமைதி வழியில் போராடும் மக்களைப் படுகொலை செய்வதற்கு ஒரு கார்ப்பரேட் நிறுவனம் நேரடியாகவே உத்தரவிட முடியும் என்பதற்கு தூத்துக்குடி நிகழ்வு ஒரு முன்மாதிரியாக உள்ளது.  சென்னை – சேலம் எட்டு வழிச்சாலைக்கு எதிராக கருத்து கூறும் விவசாயிகள் கருத்து சொன்ன குற்றத்துக்காகவே கைது செய்யப்படுகிறார்கள். இவையெல்லாம் தூத்துக்குடி மாடல் அடக்குமுறைகள்தான்.

சமூக நீதி அடிப்படையிலான நீட் எதிர்ப்புப் போராட்டம், மோடிக்கு எதிரான கருப்புக்கொடி, கார்ப்பரேட் ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் ஆகிய அனைத்திலும் தமிழகம் முன்நிற்பதால் பா.ஜ.க. அரசு தமிழகத்தை குறிவைத்து ஒடுக்குகிறது. எடப்பாடி அரசு டெல்லியின் ஏவலாளாக செயல்படுகிறது.

விரைவிலேயே ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பது, வாழ்வாதாரங்களை காப்பாற்றிக் கொள்ளப் போராடும் மக்களை அச்சுறுத்துவதும், போராட்ட அமைப்புகளை முடக்குவதும்தான் இதன் நோக்கம்.

புதிய தலைமுறை தொலைக்காட்சி நடத்திய பொது நிகழ்ச்சியில் அரங்கிலிருந்து பெரும்பான்மையான மக்கள் தூத்துக்குடி போராட்டத்துக்கு ஆதரவாகவும், பா.ஜ.க.-வுக்கு எதிராகவும் தமது உணர்வுகளை வெளிப்படுத்தியவுடன், அந்த தொலைக்காட்சி மீதும், அங்கே பேசிய இயக்குநர் அமீர் மீதும் வழக்கு போட்டிருக்கிறது எடப்பாடி அரசு. இவையெல்லாம் நாம் தமிழகத்தில் இதுவரை காணாதவை. போராடும் மக்களை ஒடுக்குவது மட்டுமல்ல, போராட்டத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கும் ஊடகங்களையும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்கான ஒரு அபாயகரமான துவக்கம் இது.

காக்கை குருவிகளைப் போல மக்களைச் சுட்டுக்கொன்ற குற்றவாளிகள் மீது எந்த விசாரணையும் இல்லை. மாறாக ஜாலியன் வாலாபாக் போன்ற படுகொலையை நடத்தியவர்கள் பாதிக்கப்பட்ட மக்கள் மீது மறுபடியும் தாக்குதல் தொடுக்கிறார்கள். விரைவிலேயே ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பது, வாழ்வாதாரங்களை காப்பாற்றிக் கொள்ளப் போராடும் மக்களை அச்சுறுத்துவதும், போராட்ட அமைப்புகளை முடக்குவதும்தான் இதன் நோக்கம்.

தமிழ்ச்சமூகம் முழுவதும் இந்த அடக்குமுறையை எதிர்த்து நின்று, போராடும் ஜனநாயக உரிமையை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றும், தூத்துக்குடி படுகொலையின் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கு குரல் கொடுக்க வேண்டும் என்றும் கோருகிறோம்.

தங்கள்
தோழர்.காளியப்பன்,
மாநிலப் பொருளாளர்,
மக்கள் அதிகாரம்.

துப்பாக்கிச் சூட்டில் குறி வைக்கப்பட்ட மக்கள் அதிகாரம் மற்றும் வழக்கறிஞர்கள்

ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகர்கள் சே.வாஞ்சிநாதன், உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர், மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், கெ.அரிராகவன், தூத்துக்குடி மாவட்ட வழக்கறிஞர், தூத்துக்குடி மாவட்டச் செயலாளர், மற்றும் ஜிம்ராஜ் மில்டன், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர், சென்னை மாவட்டச் செயலாளர் ஆகியோர், கடந்த 09.062018 அன்று சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினர்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் எவ்வாறு அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதித்திட்டம் என்பதையும், போராடும் மக்களுக்கு ஆதரவாக சட்ட உதவிகளை செய்துவந்த மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் மற்றும் மக்கள் அதிகாரத்தின் தோழர்கள் துப்பாக்கி முனையில் குறிவைக்கப்பட்டதையும், இன்றுவரையில் தென் மாவட்டங்களில் போலீசின் சட்டவிரோத கைதுகள் தொடர்வதையும், ஊபா, தேசிய பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட கொடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் முன்னணியாளர்களை கைது செய்து இது போன்ற மக்கள் திரள் போராட்டங்கள் தலையெடுக்கவிடாமல் அச்சுறுத்தி முடக்குவது என்ற தீய நோக்கத்துடன் போலீசு செயல்பட்டுவருவதையும் அம்பலப்படுத்துகிறது, அவ்வமைப்பினர் வெளியிட்டிருக்கும் இவ்வறிக்கை.

***

தூத்துக்குடி பேரணியை நடத்திய ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகர்களாக நாங்கள் செயல்பட்டு வருகிறோம். போராட்டத்திற்குப் பின்னர் எங்கள் மீதும், கூட்டமைப்பின் முன்னணியாளர்கள் மீதும், மக்கள் அதிகாரம், புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பினர் மீதும், தூத்துக்குடி சிப்காட், தூத்துக்குடி தெற்கு மற்றும் மத்திய காவல் நிலையங்களில் பல்வேறு பொய் வழக்குகள் போடப்பட்டு வருகின்றன. இதுவரை சுமார் 250- க்கும் மேற்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் பதியப்பட்டுள்ளன.

போலிஸ் வேனைக் கவிழ்த்தது, ஸ்டெர்லைட் ஊழியர் குடியிருப்புக்கு தீ வைத்தது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தாக்கியது, போலீசு வாகனத்தை கொளுத்தியது… என திட்டமிட்டே நிகழ்த்தப்பட்ட அனைத்து வன்முறைகளுக்கும் எங்களையும் மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்பினரையும் பலிகடா ஆக்கும் முயற்சி நடக்கிறது. எங்களையும் போராட்ட முன்னணியாளர்களையும் ஊபா சட்டம் (UAPA) மற்றும் குண்டர் சட்டம் போன்றவற்றில் கைது செய்து சிறையில் அடைத்து மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கி, இந்தப் பின்புலத்தில் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கான முயற்சியில் மத்திய மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன.

தூத்துக்குடி மாடல் துப்பாக்கிச் சூடு என்பது இந்தியாவில் இதுவரை நடைபெற்ற துப்பாக்கிச் சூடுகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. துப்பாக்கிச் சூடு பற்றி எனக்கே தொலைக்காட்சியைப் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்று தமிழக முதல்வர் கூறியது முதல், நேற்று முன்தினம் எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்ட தூத்துக்குடி சார் ஆட்சியரின் உத்தரவு வரை தூத்துக்குடி கொலைத்திட்டத்தில் பல்வேறு சதிப் பின்னணிகள் உள்ளன. இதில் மத்திய மாநில ஆட்சியாளர்கள், மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் கையாட்களாக செயல்பட்டிருக்கின்றனர். இந்தச் சதிகள் ஒவ்வொன்றாக வெளிவரும் சூழலில், தங்களைக் காப்பாற்றிக் கொள்ள, எங்கள் மீதும் போராட்ட முன்னணியாளர்கள் மீதும் வன்முறையாளர்கள் என்ற முத்திரை குத்தப்படுகிறது.

மே 22 அன்று நாங்கள் தூத்துக்குடி அருகிலுள்ள மடத்தூர் கிராமத்திலிருந்து பேரணியாக கிளம்பிய மக்களுடன் இருந்தோம். காலை 9 மணி முதல் சுமார் 11.30 வரை மடத்தூர் விலக்கு அருகே மாவட்ட கண்காணிப்பாளர் மகேந்திரன் தலைமையிலான போலீசார் எங்களைத் தடுத்து நிறுத்தி, மக்கள் மீது தடியடியைத் தொடங்கினர். நாங்கள் தலையிட்டு அதனைத் தடுத்து நிறுத்தினோம். மக்கள் கலைய மறுத்து அதே இடத்தில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர். இவை அனைத்தும் தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்பாகியிருக்கின்றன.

ஆனால், இதே நேரத்தில் நாங்கள் தூத்துக்குடி பனியமாதா கோயில் முன்பு கூடி நகருக்குள் வந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டு, வேன் கவிழ்ப்பு முதல் தீ வைப்பு வரையிலான பல குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக வழக்குகள் பதியப்பட்டுள்ளன. உண்மையில் மடத்தூர் விலக்கில் எஸ்.பி மகேந்திரனால் தடுத்து நிறுத்தப்பட்டதால், துப்பாக்கிச் சூடு நடந்த பின்பே நாங்கள் மூன்றாம் மைல் பகுதிக்கே வர முடிந்தது. பனியமாதா கோயிலுக்கும் மடத்தூருக்கும் சுமார் 6 கி.மீ தூரம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மே 22 போராட்டத்தை அனைத்து ஊடகங்களும் நேரலை செய்திருக்கின்றன. நகரம் முழுவதும் சி.சி.டி.வி. காமெராக்களில் போராட்டம் பதிவாகியிருக்கிறது. காவல்துறை வீடியோகிராபர்கள் மட்டுமின்றி டிரோன் விமானங்களும் கண்காணித்தன. தாக்கப்பட்ட அரசு அலுவலகங்கள், ஸ்டெர்லைட் குடியிருப்பிலும் சி.சி.டி.வி. காமெராக்கள் உள்ளன. மே 22 இல் பதிவான மேற்கண்ட அனைத்து வீடியோ பதிவுளையும் காவல்துறை வெளியிடட்டும். ஏதாவது ஒரு வீடியோ பதிவில் நாங்களோ மக்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகளோ, மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்பினரோ வன்முறையில் ஈடுபட்டதற்கு ஆதாரம் இருந்தால், உடனே நாங்கள் சிறை செல்லத் தயாராக இருக்கிறோம்.

அப்படி ஒரு சான்றைக்கூட காவல்துறையால் காட்ட முடியாது. இருப்பினும் அரசு எங்கள் மீது அடுக்கடுக்காக பொய்வழக்குகள் போடுவதற்கு காரணம் இருக்கிறது. பிப்ரவரி 2018 இல் குமரெட்டியாபுரம் மக்கள் போராடத் தொடங்கியது முதல் இன்றுவரை நாங்கள் மக்களுடன் இருந்து சட்ட உதவி செய்து வருகிறோம். பொய் வழக்குகளில் பிணை எடுப்பது, நீதிமன்றத்தில் பொதுக்கூட்ட அனுமதி பெறுவது, மனுக்கள் தயாரித்து கொடுப்பது, வழக்குகளுக்கு ஆஜராவது எனவும் மே-22 க்குப் பின் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து பாதிக்கப் பட்ட மக்களுக்கு இலவச சட்ட உதவிக்கான உத்தரவு பெற்றது, மறு உடற்கூராய்வுக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்றது.. என சாத்தியமான அளவுக்கு மக்களுடைய போராட்டத்துக்கு துணை நின்றிருக்கிறோம். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கர்சுப்பு, பாவேந்தன், பார்வேந்தன், மதுரை வழக்கறிஞர்கள், தூத்துக்குடி சங்க வழக்கறிஞர்கள் இரவு பகல் பாராமல் உழைத்து சட்ட உதவிகள் செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள வழக்குரைஞர்களை தூத்துக்குடிக்கு அழைத்துச் சென்று இன்றுவரை சட்ட உதவிகள் செய்து வருகிறோம். காவல்துறை அச்சுறுத்தலை மக்கள் எதிர்கொள்வதற்கு எங்களுடைய உதவிதான் காரணம் என்று அரசு நினைக்கிறது. எதிர்காலத்தில் ஆலை திறக்கப்பட்டாலும் நாங்கள் மக்களுடன் நிற்போம் என்ற காரணத்தினால்தான் UAPA, குண்டர் சட்டம் போன்றவற்றை எங்கள் மீதும் பாய்ச்சும்முயற்சி நடக்கிறது.

வழக்குகள் சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்ட பின்பும் சட்டவிரோதமாக உள்ளூர் போலீஸ் கைதுகளை தொடர்கிறது. மாநில, தேசிய மனித உரிமை ஆணையங்கள், சி.பி.சி.ஐ.டி, அரசு விசாரணைக் கமிசன் போன்றவற்றில் மக்கள் சாட்சியமளிப்பதைத் தடுக்கவே, வழக்கறிஞர்களான நாங்கள் குறிவைக்கப்படுகிறோம். மே 22 அன்று கொல்லப்பட்ட பிற முன்னணியாளர்களைப் போலவே, நாங்களும் துப்பாக்கிச் சூட்டில் குறிவைக்கப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன. தற்போது ஜூன் 14 வரை எங்களைக் கைது செய்ய தடை உயர்நீதி மன்றம் தடை விதித்திருப்பதால் உங்கள் முன் பேசுகிறோம்.

(நன்றி: நக்கீரன்)

இந்த அடக்குமுறை என்பது எங்களுக்கு எதிரானது மட்டுமல்ல. தூத்துக்குடி மாடலின் பின்னால் உள்ள குற்றவாளிகளை, தமிழகத்தின் கட்சிகளும் மக்கள் இயக்கங்களும் போராடித் தண்டிக்கத் தவறினால், இந்த தூத்துக்குடி மாடல் அடக்குமுறை தமிழகம் முழுக்க எல்லா மக்கள் போராட்டங்கள், கட்சிகள், அமைப்புகளுக்கும் விரிவாக்கப்படும். இதற்கெதிராக ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் போராடவேண்டுமெனக் கோருகிறோம்.

தங்கள்
சே.வாஞ்சிநாதன், வழக்கறிஞர்,
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்.

சிறப்புக் கட்டுரை : அம்மாவின் ஆட்சியில் கொழிக்கும் டாஸ்மாக் – மணற்கொள்ளை !

0

நெல்லை மாவட்டம், சங்கரன்கோவிலுக்கு அருகேயுள்ள குருக்கள்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தினேஷ் நல்லசிவன் என்ற 17 வயதான பிளஸ் டூ மாணவன், மே 1 அன்று நள்ளிரவில் சங்கரன்கோவில் ரயில்வே மேம்பாலத்தில் தூக்குமாட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டான்.

தினேஷ் நல்லசிவன்.

குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்த தனது தந்தை மாடசாமியை மீட்டெடுக்க, அவன் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோற்றுப் போனதால், மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறான் தினேஷ்.

ரயில்வே மேம்பாலத்தில் தொங்கிக் கொண்டிருந்த தினேஷின் சடலத்தை மீட்டபோது, அவனது சட்டைப் பையில் இருந்த கடிதத்தில், “தனது சாவாவது தன் தந்தையின் குடிப்பழக்கத்தை நிறுத்தட்டும்” என எழுதியிருந்ததோடு, “குடிப்பழக்கத்தை நிறுத்த இந்தியாவில் பிரதமரும், தமிழகத்தில் முதல்வரும் இனிமேலாவது மதுக்கடைகளை அடைக்கிறார்களா? எனப் பார்ப்போம். இல்லையென்றால், நான் ஆவியாக வந்து மதுக்கடைகளை அடைப்பேன்” என்ற தனது ஆதங்கத்தையும் மனவேதனையையும் கொட்டியிருந்தான், அச்சிறுவன்.

ஆவியாக வந்து மதுக்கடைகளை அடைப்பேன் – தினேஷ் எழுதிய கடிதம்.

மருத்துவராகும் கனவைக் கொண்டிருந்து தினேஷின் தற்கொலை அனுதாபத்தோடு பார்த்துவிட்டுக் கடந்துபோய்விடக் கூடிய விசயமல்ல. தினேஷின் தற்கொலை, குடிநோய் என்ற படுகுழிக்குள் தமிழகம் தள்ளப்பட்டிருக்கிறதே, அச்சீரழிவிற்கு எதிராக நடத்தப்பட்டிருக்கும் கலகம்.

மருத்துவராகும் கனவைக் கொண்டிருந்த அனிதாவின் தற்கொலையையும் அதே கனவைக் கொண்டிருந்த தினேஷின் தற்கொலையையும் பிரித்துப் பார்க்க முடியாது. அனிதாவும், தினேஷும் வெவ்வேறு காரணங்களுக்காக உயிரை மாய்த்துக் கொண்டிருந்தாலும், அவையிரண்டுமே தமிழகத்தைக் கவ்வியிருக்கும் இரண்டு அபாயங்களை எதிர்த்து நடத்தப்பட்டவை என்பதை மறுக்கமுடியுமா? எனினும், அனிதாவின் மரணத்திற்குத் தீவிரமாக எதிர்வினையாற்றிய தமிழகம், தினேஷின் மரணத்தையடுத்து டாஸ்மாக்கிற்கு எதிரான போராட்டங்களைத் தீவிரப்படுத்தவில்லை. அச்சமயத்தில் கனன்று கொண்டிருந்த காவிரி பிரச்சினை தினேஷின் மரணத்தை இரண்டாம்பட்சமாக்கிவிட்டது. இந்த துரதிருஷ்டம் எடப்பாடிக்கு அடித்த அதிருஷ்டம்.

தினேஷ் தற்கொலை செய்து கொண்ட ஓரிரு நாட்களிலேயே, அதே நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வடக்கு விஜயநாராயணம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ஜெகதீஷ் துரை, நம்பியாற்றுப் பகுதியில் நடந்துவரும் மணல்கொள்ளையைத் தடுக்க முயன்றபொழுது, மணல் மாஃபியாக்களால் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு ஆற்றுப் படுகையிலேயே படுகொலை செய்யப்பட்டார்.

தினேஷின் தற்கொலை அரசின் சாராயக் கொள்கையின் விளைவு. ஜெகதீஷ் துரையின் கொலை அரசின் மணல் கொள்கையின் விளைவு. ஜெகதீஷ் துரை அரசு ஊழியர் என்பதால், அவரது மரணத்திற்கு இழப்பீடு வழங்கி முதலைக் கண்ணீர் வடித்திருக்கும் எடப்பாடி அரசு, மாணவன் தினேஷின் மரணத்திற்கு அனுதாபம்கூடத் தெரிவிக்கவில்லை. அதேசமயம், தமிழகத்தையே விழுங்கிக் கொண்டிருக்கும் இந்த பிரச்சினைகளில் – குடிநோய், மணல் கொள்ளை – காயத்தில் உப்புத்தாளைப் போட்டுத் தேய்க்கும் வேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறது, எடப்பாடி அரசு.

*      *      *

2015, 2016 ஆம் ஆண்டுகளில் தமிழக மக்கள், குறிப்பாக பெண்கள் மத்தியில் வீச்சாக எழுந்த டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டங்களை ஒடுக்க முயன்று தோற்றுப் போன ஜெயா, தாம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், படிப்படியாக டாஸ்மாக் கடைகளை மூடுவேன் எனத் தேர்தல் வாக்குறுதி அளிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். தேர்தல் ஆணையத்தின் துணையோடு பல தில்லுமுல்லுகளைச் செய்து, 2016 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வென்று மீண்டும் முதல்வர் நாற்காலியைப் பிடித்த அவர், 500 டாஸ்மாக் கடைகளை மூடும் நாடகத்தை அரங்கேற்றினார். மூடப்பட்ட அந்தக் கடைகள் அனைத்தும் கல்லா கட்டுவதில் தேறாத கடைகள் என்பது அவர் கையெழுத்துப் போட்ட மறுநிமிடமே அம்பலமானது.

ஜெயாவும் செத்து, சசிகலாவும் ஜெயிலுக்குப் போன பிறகு, முதலில் தினகரன் தயவிலும், பின்னர் பா.ஜ.க.வின் தயவிலும் தமிழக முதல்வராக உட்கார வைக்கப்பட்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, தன் பங்குக்கு மேலும் 500 டாஸ்மாக் கடைகளை மூடவிருப்பதாக அறிவித்தார். இப்படியாக 1,000 கடைகளை மூடிவிட்டதாக அ.தி.மு.க. அரசு தம்பட்டம் அடித்துக் கொண்டாலும், டாஸ்மாக் கொள்முதலும் குறையவில்லை, அதன் மூலம் அரசிற்குக் கிடைக்கும் வருமானமும் குறையவில்லை என்ற புதிரைப்  பத்திரிகைகள் அம்பலப்படுத்தின.

இந்தப் புதிருக்கான விடை எளிதானது. மற்ற டாஸ்மாக் கடைகளின் விற்பனை இலக்கைக் கூட்டியதன் மூலம் டாஸ்மாக் வருமானம் சரிந்துவிடாமல் பார்த்துக் கொண்டது அ.தி.மு.க. அரசு.

இந்தச் சமயத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளையொட்டி அமைந்துள்ள மதுபானக் கடைகளையும், பார்களையும் ஏப்ரல் 1, 2017 முதல் மூடிவிட வேண்டும் என உத்தரவு போட்டது, உச்ச நீதிமன்றம். இதன் காரணமாக ஏறத்தாழ 2,000 டாஸ்மாக் கடைகளை மூட வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டது அ.தி.மு.க. அரசு. ஆனாலும், நெடுஞ்சாலையைப் பார்த்து இருந்த கடைகளின் முன்புற வாசல் கதவுகளை மூடிவிட்டு, புறவாசல் வழியாக விற்பனையை நடத்தி, உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு பெப்பே காட்டியது தமிழக அரசு.

இதனிடையே தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளும், ஐந்து நட்சத்திர விடுதி அதிபர்களும் உச்ச நீதிமன்ற உத்தரவை மாற்றக் கோரி மேல்முறையீடு செய்தனர். குறிப்பாக, யூனியன் பிரதேசமான சண்டிகர் நகர நிர்வாகம், தனது நகர எல்லைக்குள் செல்லும் அனைத்து தேசிய, மாநில நெடுஞ்சாலைகளையும் உள்ளாட்சி சாலைகளாகப் பெயர் மாற்றி, அச்சாலைகளையொட்டி இயங்கிவந்த மதுபானக் கடைகளையும், விடுதிகளையும் மூடாமல் தொடர்ந்து நடத்தத் தொடங்கியது.

அஞ்சு சுத்து சுத்திட்டு வா… 501 வது மீட்டருல வந்துரும் பாரு…

நெடுஞ்சாலைகளிலிருந்து 500 மீட்டருக்கு அப்பால்தான் மதுக்கடைகள் இருக்க வேண்டும், கடைகள் குறித்த விளம்பரப் பலகைகள்கூட நெடுஞ்சாலைகளில் இருக்கக் கூடாதென்றும் நீதிபதிகள் கறாராக உத்தரவிட்டிருந்ததை, மாநில ஆட்சியாளர்கள் காமெடி பீஸாக மாற்றினார்கள். நெடுஞ்சாலைகளையொட்டியிருந்த மதுபானக் கடைகளை அப்புறப்படுத்தாமலேயே, கடைகளுக்குச் செல்லும் பாதையைத் தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போல மாற்றியமைத்துக் கல்லா கட்டினார்கள்.

ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் தனது உத்தரவின் மீது சாணியை அடித்துவிட்டதைப் புரிந்துகொண்ட உச்ச நீதிமன்றம், “நெடுஞ்சாலைகளில் அமைந்திருக்கும் ஐந்து நட்சத்திர பார்களை மூடியதால் சுற்றுலாத் துறை படுத்துவிட்டது” என்ற பொருளாதாரக் காரணியைப் பிடித்துக்கொண்டு, சண்டிகர் நகர நிர்வாகம் செய்த மாற்றத்திற்கு அனுமதி அளித்தது.

சண்டிகர் நகர நிர்வாகத்திற்கு உச்ச நீதிமன்றம் சலுகை அளித்த மறுநிமிடமே, நெடுஞ்சாலைகளின் பெயரை மாற்றி, அச்சாலைகளில் இயங்கிவந்த டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க முயன்றது எடப்பாடி அரசு. இந்த இழிமுயற்சிக்கு எதிராக பா.ம.க. தொடுத்த வழக்கில், நெடுஞ்சாலைகளைப் பெயர் மாற்றம் செய்வதற்குத் தடை விதித்தது, சென்னை உயர் நீதிமன்றம்.

இந்தத் தடை விதிக்கப்பட்ட சில நாட்களிலேயே,  சண்டிகருக்கு மட்டும் அளிக்கப்பட்ட தளர்வைத் தேசியமயமாக்கி, தான் அளித்த தீர்ப்புக்குத் தானே சவக்குழியைத் தோண்டியது உச்ச நீதிமன்றம்.

உச்ச நீதிமன்றத்தின் இந்தப் புதிய உத்தரவைப் பயன்படுத்திக் கொண்ட எடப்பாடி அரசு, மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி பகுதி எல்லைகளின் வழியே செல்லும் நெடுஞ்சாலைகளில் 1,700 கடைகளைத் திறப்பதற்கான ஆணையை வெளியிட்டது. நெடுஞ்சாலைகளின் பெயர்களை மாற்றுவதற்கு உயர் நீதிமன்றம் விதித்திருந்த தடையை எடப்பாடி அரசு கழிப்பறை காகிதம் அளவிற்குக்கூட மதிக்கவில்லை.

இப்புதிய கடைகளைத் திறப்பதற்கு எதிராக பா.ம.க. மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. தமிழக அரசால் வாய்தாவுக்கு மேல் வாய்தா வாங்கி இழுத்தடிக்கப்பட்ட  அந்த வழக்கில், ஒருபுறம் அந்த 1,700 கடைகளைத் திறப்பதற்குத் தடைபோட்டுவிட்டு, இன்னொருபுறத்தில் உரிய விதிமுறைகளைப் பின்பற்றி நெடுஞ்சாலைகளின் பெயர்களை மாற்றினால், கடைகளைத் திறந்துகொள்ளலாம் என்ற சலுகையைத் தமிழக அரசிற்கு வழங்கியது, உயர் நீதிமன்றம்.

ஆனால், எடப்பாடி அரசோ நெடுஞ்சாலைகளின் பெயர்களை மாற்றுவது என்ற சாதாரண நிர்வாக நடவடிக்கையை எடுக்கக்கூடத் தயாராக இல்லை. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சனிக்கிழமை வெளியாக, அதனை ரத்துச் செய்யக் கோரும் மேல்முறையீட்டு வழக்கை திங்கள்கிழமையே உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்  செய்தது. நீட், காவிரி விவகாரங்களில் காணப்படாத வேகமும் அக்கறையும் டாஸ்மாக் விவகாரத்தில் பொங்கி வழிந்தது.

அம்மேல்முறையீட்டு வழக்கில் உயர் நீதிமன்றம் அளித்த தடையுத்தரவை ரத்து செய்ய மறுத்துவிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “நெடுஞ்சாலைகளின் பெயர்களை மாற்றி மதுபானக் கடைகளைத் திறப்பது தொடர்பாக உச்ச நீதிமன்ற அளித்திருக்கும் உத்தரவுப்படி அறிவிக்கை வெளியிட்டுவிட்டு, கடைகளைத் திறந்து கொள்ளலாம்” என்றவாறு நயவஞ்சகமான தீர்ப்பை அளித்தனர்.

உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கர்.

இத்தீர்ப்பினையடுத்து, நெடுஞ்சாலை பகுதிகளில் புதிய டாஸ்மாக் கடைகளைத் திறப்பதற்கும், ஏற்கெனவே இயங்கிவந்த டாஸ்மாக் கடைகளின் உரிமங்களைப் புதுப்பித்துக் கொள்வதற்கும் ஏதுவாக புதிய அரசாணையொன்றை கடந்த மே 21 அன்று – கவனிக்க தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு முதல் நாள் – வெளியிட்டு, அதனை உச்ச நீதிமன்றத்திலும் தாக்கல் செய்தது, தமிழக அரசு.

“எங்களது கருத்தைக் கேட்காமல் இந்த அரசாணையை அங்கீகரிக்கக் கூடாது” என்று பா.ம.க.வின் சமூக நீதிப் பேரவை உச்ச நீதிமன்றத்தில் வாதாடியது. ஆனால், இந்த வாதத்தின் பின்னுள்ள நியாயத்தைக் காண மறுத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், நவீன் சின்ஹா அமர்வு, “தமிழக அரசின் அரசாணை, நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளைத் திறப்பது தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தளர்த்தப்பட்ட தீர்ப்பின்படி அமைந்திருப்பதாக”க் கூறி, தமிழக அரசின் குடிகெடுக்கும் அரசாணைக்கு உடனடியாக அங்கீகாரம் அளித்தனர்.

உச்ச நீதிமன்ற நீதிபதி நவீன் சின்ஹா.

மேலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் நோக்கம், “குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுவதே தடுப்பதுதானேயொழிய, உரிமம் பெற்று இயங்கும் மதுபானக் கடைகளின் வியாபாரத்தை ஊத்தி மூடுவது அல்ல” என விளக்கமளித்து, சாராய வியாபாரிகளுக்கான நீதியை நிலைநாட்டினர். இனி நீதிமன்றங்களை நம்பி, டாஸ்மாக் கடைகளை மூடும் சட்டபூர்வ போராட்டங்களை நடத்த முடியாது என்பதுதான் நீதிபதிகள் அளித்திருக்கும் விளக்கத்தின் பொருள்.

ஏப்ரல் 2017-க்கு முன்பாகத் தமிழகத்தில் ஏறத்தாழ 6,200 டாஸ்மாக் கடைகள் இயங்கி வந்தன. “நெடுஞ்சாலைகளில் இயங்கிவரும் டாஸ்மாக் கடைகளை மூடுமாறு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றத்தின் நீர்த்துப் போன தீர்ப்பை நடைமுறைப்படுத்தியிருந்தால்கூட, தமிழகத்தில் 2,502 டாஸ்மாக் கடைகள் மட்டுமே இயங்க முடியும். ஆனால், தற்பொழுது தமிழகத்தில் 4,000 கடைகள் நடந்துவருவதாக”க் கூறுகிறது, பா.ம.க. “தமிழகத்தில் தற்பொழுது 3,000 டாஸ்மாக் கடைகள் மட்டுமே இயங்கிவருவதாக”க் கூறுகிறார், அ.தி.மு.க.வைச் சேர்ந்த கோவை செல்வராஜ். எண்ணிக்கை நாலாயிரமோ, மூவாயிரமோ, உச்ச நீதிமன்றம் அளித்துள்ள சலுகையினைப் பயன்படுத்திக் கொண்டு எடப்பாடி அரசு புதிதாகத் திறக்க முயன்றுவரும் 1,700 கடைகளையும் சேர்த்துக் கொண்டால், “படிப்படியாக டாஸ்மாக் கடைகளை மூடுவது” என்ற அ.தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதி ஒரு மாபெரும் மோசடி என்பதை யாரும் புரிந்து கொள்ளலாம்.

*      *      *

ட்டுக்கட்சிகளைப் பொருத்தவரை ஜனநாயகம் என்பது கட்சியிலுள்ள அனைத்து கோஷ்டிகளுக்கும் அரசு காண்டிராக்டு உள்ளிட்ட அனைத்து சன்மானங்களையும் கொள்ளையிடுவதற்குச் சமவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற எழுதப்படாத விதிதான். அந்த வகையில் எடப்பாடி தலைமையில் உள்ள அ.தி.மு.க.வில் ஆறு, ஏரி, குளம், கண்மாய் என எங்கெல்லாம் மணல் காணப்படுகிறதோ, அதனைக் கொள்ளையடிக்கும் உரிமை வட்டார வாரியாகப் பிரித்து வழங்கப்பட்டிருக்கிறது.

ஜெயா உயிரோடு இருந்தபோது, சேகர் ரெட்டி தலைமையில் ஏகபோகமாக நடந்துவந்த ஆற்று மணல் கொள்ளை, எடப்பாடியின் ஆட்சியில் உள்ளூர் அல்லது வட்டார அ.தி.மு.க. பிரமுகர் தொடங்கி மணல் லாரி உரிமையாளர்கள் ஈறாகப் பலரும் பங்குபோட்டுக் கொள்ளும் வண்ணம் பங்கு வைக்கப்பட்டிருக்கிறது.

தமிழகப் பொதுப்பணித்துறை நடத்தி வரும் மணல் குவாரிகளில் ஆற்று மணல் விற்பனை ஆன்-லைன் மூலம் நடத்தப்படுவதால், முறைகேடுகள் ஒழிந்துவிட்டதாக வாய்ப்பந்தல் போடுகிறது, எடப்பாடி அரசு. மணல் குவாரிகளில் இரண்டு யூனிட் மணல் ரூ.1,100, மூன்று யூனிட் மணல் ரூ.1,575/- க்கு விற்கப்படும்போது, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இரண்டு யூனிட் மணல் ரூ.35,000-க்கும், மூன்று யூனிட் மணல் ரூ.50,000-க்கும் விற்கப்படுகிறது. விலையில் காணப்படும் இந்த மாபெரும் வேறுபாடே மணல் விற்பனையில் ஒரு மாபெரும் கொள்ளை நடந்துவருவதை நிரூபிக்கிறது.

“மணல் குவாரிகளில் முன்னைப் போல மணல் தாராளமாக விற்கப்படுவதில்லை. அதேசமயம், கிராக்கியோ அதிகமாக இருக்கிறது. அதனால்தான் இந்த வேறுபாடு” எனச் சமாளிக்க முயலுகிறார்கள், அ.தி.மு.க. அடிவருடிகள். ஆனால், இலஞ்சமும், செயற்கையான விலை நிர்ணயமும்தான் இந்த அசகாய விலைக்குக் காரணம்.

“மணல் குவாரிகளில் இரண்டு யூனிட் மணலுக்கு டி.டி. எடுத்துக் கொடுத்தால், மூன்று யூனிட் மணலை வாரிக் கொட்டுவார்கள். கூடுதலாகக் கொட்டப்பட்ட ஒரு யூனிட் மணல் கணக்கில் வராது. அதற்குப் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு ரூ.5,000/- இலஞ்சம் கொடுத்துவிட வேண்டும். அடுத்து, மணல் குவாரியிலிருந்து வெளிவரும் லாரி, மணல் குவாரி அமைந்துள்ள கிராமத்திற்கு ரூ.5,000/- தர வேண்டும். சென்னை நகரத்திற்குள் மணலை எடுத்துக்கொண்டு வரும் லாரிகள் ஒவ்வொன்றும் போலீசு துறைக்குக் கொடுக்க வேண்டிய மாமூல் ரூ.1,500/-. சுங்கச்சாவடிகளில் வருவாய்த் துறை அதிகாரிகள் சோதனையிடும்போது, அதற்குத் தனியாக மாமூல்” என 1,100 ரூபாய் மணல் 35,000 ரூபாய் வரை விற்கப்படும் பின்னணியை அம்பலப்படுத்துகிறார்கள், மணல் லாரி உரிமையாளர்கள்.

இந்தக் கொள்ளையில் மற்ற யாரும் பங்குக்கு வந்துவிடக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காகத்தான், ஒரு தனியார் நிறுவனத்தால் மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலைத் தமிழகத்தில் விற்பதற்குத் தடை போட்டிருக்கிறது, எடப்பாடி அரசு. இந்தத் தடையை நீக்கிய மதுரை உயர் நீதிமன்றக் கிளை, தனது உத்தரவில் அடுத்த ஆறு மாதங்களுக்குள் தமிழகத்தில் இயங்கிவரும் மணல் குவாரிகள் அனைத்தையும் மூடிவிட வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது எடப்பாடி அரசு.

அவ்வழக்கில் மணல் குவாரிகளை மூடிவிட உத்தரவிட்ட உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்தது, உச்ச நீதிமன்றம். இந்த இடைக்காலத் தடையைப் பயன்படுத்திக் கொண்டு காவிரிப் படுகை உள்ளிட்டு, தமிழகமெங்கும் புதிதாக 21 மணல் குவாரிகளை அமைக்கும் முடிவை எடுத்திருக்கிறது, தமிழக அரசு. காவிரி, கொள்ளிடத்தின் குறுக்கே தடுப்பணைகளைக் கட்டி நீரைச் சேமிக்க முயலாத எடப்பாடி அரசு, மணல் கொள்ளைக்காக காவிரியில் புதிதாக 9 மணல் குவாரிகள் அமைக்கவிருக்கிறது.

திருட்டுத்தனமாக மணல் அள்ளிச் செல்லும் ஒவ்வொரு டிராக்டருக்கும் ரூ.4,000 வரை அப்பகுதியிலுள்ள போலீசு நிலையங்களுக்கு இலஞ்சம் கொடுக்கப்படுகிறது.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் 90-க்கும் மேற்பட்ட மணல் குவாரிகள் இயங்கி வந்ததாகவும், தற்பொழுது திருச்சி மாவட்டப் பகுதியில் மூன்றும், விழுப்புரம் மாவட்டத்தில் ஒன்றும் என நான்கு குவாரிகள் மட்டுமே இயங்குவதாகவும் மணல் லாரி உரிமையாளர்கள் கூறுகிறார்கள். இதிலிருந்து இந்த நான்கு குவாரிகளைத் தவிர்த்து தமிழகத்தின் மற்ற ஆற்றுப் படுகைகளில் மணல் அள்ளப்படுவதில்லை என நாம் புரிந்துகொண்டுவிடக் கூடாது.

ஜெயாவின் ஆட்சியில் சட்டபூர்வமாகத் திறக்கப்பட்ட மணல் குவாரிகளில் சட்டவிரோதமான முறையில் மணல் கொள்ளை நடந்தது. எடப்பாடி ஆட்சியிலோ சட்ட விரோதமாக மணல் அள்ளுவதுதான் சட்டபூர்வமாகிவிட்டது என்பதை நம்பியாற்றுப் படுகையில் காவலர் ஜெகதீஷ் துரை கொல்லப்பட்ட சம்பவம் நிரூபிக்கிறது.

சட்டபூர்வமாக குவாரிகள் திறக்கப்படாத ஆற்றுப் படுகைகளில் சொந்தப் பயன்பாட்டுக்கு என்ற பெயரில் மாட்டு வண்டிகளைக் கொண்டு மணல் கடத்தப்படுவதாக ஆங்கில இந்து நாளிதழ் குறிப்பிடுகிறது. (13.05.2018)

சவுடு மணலை அள்ளுவதற்கு அனுமதி வாங்கிவிட்டு, பல்வேறு மாவட்டங்களில் ஏறத்தாழ 10,000 லோடு வரை ஆற்று மணல் திருடப்பட்டிருப்பதாகக் குறிப்பிடுகிறார், மணல் லாரி உரிமையாளர் நலச் சங்கத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம். (இந்து, 13.05.2018)

2003-ஆம் ஆண்டிலேயே நம்பியாற்றுப் படுகையில் மணல் அள்ளுவதைத் தடைசெய்து நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஆனாலும், அவ்வாற்றுப் படுகையில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிச் செல்லும் ஒவ்வொரு டிராக்டருக்கும் ரூ.4,000 வரை அப்பகுதியிலுள்ள போலீசு நிலையங்களுக்கு இலஞ்சம் தரப்படுவதாகக் கூறுகிறார், சி.பி.எம். கட்சியின் நெல்லை மாவட்டச் செயலர் பாஸ்கரன்.

நம்பியாற்றில் நடக்கும் இந்தச் சட்டவிரோத மணல் கொள்ளையைத் தடுக்க முயன்ற செல்லப்பா என்பவர், காவலர் ஜெகதீஷ் துரை கொல்லப்படுவதற்கு பத்து நாட்கள் முன்னதாகத்தான் லாரி ஏற்றுக் கொல்லப்பட்டார். ஆனால், இக்கொலையை விபத்து என வழக்குப் பதிவுசெய்து, மணல் மாஃபியாக்களுக்கு விசுவாசமாக நடந்துகொண்டிருக்கிறது, நெல்லை மாவட்ட போலீசு.

மேலும், ஜெகதீஷ்துரையின் படுகொலைக்கு, அவர் பணியாற்றிவரும் போலீசு நிலையத்தைச் சேர்ந்த போலீசு அதிகாரிகளே உடந்தையாக இருக்கலாம் என அப்பகுதி மக்கள் மட்டுமல்ல, ஜெகதீஷ் துரையின் மனைவியே குற்றஞ்சுமத்தியிருக்கிறார்.

ஆற்று மணல் மட்டுமின்றி, சவுடு மண் தொடங்கி ஏரி, குளம், கண்மாய் மற்றும் அணைக்கட்டுகளில் சேர்ந்துள்ள வண்டல் மண்ணையும்கூட விட்டுவைக்காமல், ஒரு மாபெரும் கொள்ளை நடந்துவருவதைத் தமிழகப் பத்திரிகைகள் அம்பலப்படுத்துகின்றன.

தோப்பு வெங்கடாசலம்.

“மேட்டூர் அணையைத் தூர்வருவது என்ற பெயரில் வண்டல் மண் கொள்ளை நடந்திருப்பதாக”க் கூறும் பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், “இந்த வண்டல் மண்ணில் பெரும்பகுதி திருப்பூர், பொள்ளாச்சி பகுதிகளில் இயங்கிவரும் செங்கல் சூளைகளுக்கு முறைகேடாக விற்கப்பட்டதாக”க் குற்றஞ்சுமத்தியிருக்கிறார். (தமிழ் இந்து, 13.03.2018)

தோப்பு வெங்கடாசலத்தின் பினாமிகளான கே.ஆர்.சேனாதிபதி, டி.சி.சுப்பிரமணியன் ஆகிய இருவரும் பெருந்துறைப் பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிபந்தனை பட்டா முறையில் வழங்கப்பட்ட நிலங்களிலிருந்து கிராவல் மண்ணைச் சட்டவிரோதமாக வெட்டி எடுத்து விற்றது குறித்து நடைபெற்ற விசாரணையில், 2.35 இலட்சம் கனமீட்டர் மண் கொள்ளையடித்திருப்பது நிரூபிக்கப்பட்டு, அவர்கள் இருவருக்கும் எட்டுக் கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் கொள்ளையை வெளிக்கொண்டுவந்த அப்பகுதியைச் சேர்ந்த சி.கே.நந்தகுமார், “உண்மையில் 100 கோடி ரூபாய் பெறுமானமுள்ள 46.5 இலட்சம் கன மீட்டர் மண் திருடப்பட்டிருப்பதாக”க் கூறுகிறார். (ஜூனியர் விகடன், 18.03.2018)

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே ஒருவந்தூரில், மக்களின் எதிர்ப்பை மீறி, போலீசு பாதுகாப்புடன் திறக்கப்படும் மணல்குவாரி.

காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள ஏரி, குளங்களில் உள்ள வண்டல் மண்ணை வெட்டியெடுத்து விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்து, அம்மாவட்டங்களில் குடிமராமத்துத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது, எடப்பாடி அரசு. இந்தத் திட்டம் மாபெரும் மணல் கொள்ளைக்கான திறவுகோல் என்கிறார்கள், அப்பகுதி விவசாயிகள்.

மூன்று அடி ஆழத்துக்கு மண் எடுக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவிற்கு மாறாக, 30 அடி ஆழத்துக்கு மண்ணை வெட்டியெடுத்து, அதனை விவசாயிகளுக்குத் தராமல், வெளிச்சந்தையில் விற்றுக் கோடிக்கணக்கில் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கொள்ளையடித்திருக்கின்றனர், என்கிறார், டெல்டா விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலர் ஆறுபாதி கல்யாணம்.

நாகை மாவட்டத்தில் மட்டும் இந்தக் குடிமராமத்துத் திட்டத்தின் வழியாகத் தோரயமாக 2,251 கோடி ரூபாய் பெறுமான வண்டல் மண் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என அம்பலப்படுத்துகிறது, ஜுனியர் விகடன் வார இதழ். (09.05.2018)

அரசின் திட்டங்களில் ஊழல் என்பதை மாற்றி, ஊழலுக்காவே திட்டம் என்றும் கொள்ளையடிப்பதற்காகவே ஆட்சி என்றும் கொண்டுவந்தார் புரட்ச்ச்சித் தலைவி ஜெயா. இ.பி.எஸ்ஸும், ஓ.பி.எஸ்ஸும் அம்மா வழியிலேயே ஆட்சி நடத்துவதாக உரிமை பாராட்டி வருகிறார்கள். அது உண்மைதான் என்பதை டாஸ்மாக்கிலும், மணல் விற்பனையிலும் நடந்துவரும் கொள்ளைகளும்; குட்கா தடை, சொட்டு நீர்ப்பாசன மானியம், குரூப் 1 அதிகாரிகள் நியமனம் ஆகியவற்றில் நடந்துள்ள ஊழல்களும் நிரூபிக்கின்றன.

*      *      *

பாகிஸ்தானில் ஊழல் குற்றஞ்சுமத்தப்பட்ட அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் தேர்தல்களில் போட்டியிடுவதை நீதிமன்றம் தடை செய்திருக்கிறது. தென் ஆப்பிரிக்காவின் அதிபராக இருந்த ஜாகோப் ஜுமா ஊழல் குற்றச்சாட்டிற்காகப் பதவி விலக நேர்ந்தது. தென் கொரியா அதிபராக இருந்த பார்க் கியூன் ஹே, தன் மீதான ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டுச் சிறைக்குள் தள்ளப்பட்டுவிட்டார்.

ஆனால், இந்தியாவிலோ, சொத்துக் குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளி என உச்ச நீதிமன்றத்தாலேயே ஒத்துக் கொள்ளப்பட்ட பார்ப்பன பாசிச ஜெயாவின் படம் சட்டமன்றத்தில் திறக்கப்படுகிறது. அவருக்கு 50 கோடி ரூபாய் செலவில் மணி மண்டபம் அமைக்கப்படுகிறது. அவர் பெயரில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அதனைப் பிரதமர் முன்னின்று தொடங்கி வைக்கிறார்.

படத் திறப்பை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், அவ்விசயத்தில் தலையிட முடியாது என உயர் நீதிமன்றம் ஒதுங்கிக் கொள்கிறது. அதோடு, எடப்பாடி அரசிற்கு சட்டமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என்ற உண்மை ஊருக்கே தெரிந்த பின்னும், அச்சட்டவிரோத சிறுபான்மை ஆட்சி தொடருவதை உத்தரவாதப்படுத்தி, சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயகத்தின் மீதும், சட்டத்தின் ஆட்சி மீதும் மூத்திரத்தை விடுகிறது, உயர் நீதிமன்றம்.

இன்னொருபுறத்திலோ, தானும் தின்னமாட்டேன், மற்றவர்களைத் தின்னவும் விடமாட்டேன் என ஊழலுக்கு எதிராக சவுண்டுவிட்டு வரும் பிரதமர் மோடியும், குருமூர்த்தி உள்ளிட்ட தமிழகப் பார்ப்பனக் கும்பலும் இந்தக் கொள்ளைக்கார ஆட்சி தொடருவதற்குப் பூனைப் படையாகச் செயல்பட்டு வருகின்றனர்.

வாழ்க இந்திய ஜனநாயகம்! பாரத் மாதா கீ ஜெய்!

  •  திப்பு

கார்ல் மார்க்ஸ் : ஆய்வின் முடிவுக்கும் அஞ்சாதே ! ஆள்வோரின் ஆட்சிக்கும் அஞ்சாதே !

0

மார்க்ஸ் பிறந்தார் – 13
(கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)

6. “யதார்த்தத்தை இரக்கமற்ற முறையில் விமர்சனம் செய்தல்”
மக்கள் தங்களைப் பற்றியே பயம் அடையும்படி கற்பித்தால் தான் அவர்களுக்குத் துணிவு ஏற்படும்.

-கார்ல் மார்க்ஸ் (1)

முன்னுரை: இந்த அத்தியாயத்தில் பல்கலையில் டாக்டர் பட்டம் முடித்து விட்டு சமூகத்திற்குள் நுழையும் மார்க்சை பார்க்கிறோம். அவரிடம் இந்த ‘பட்டம்’ துளியளவேனும் எந்த விதமான கௌரவத்தையும் வழங்கிவிடவில்லை. வழக்கமான குறும்புத்தனம், இரக்கமற்ற விமர்சனத்துடன் துடிப்பான இளைஞராக தொடர்கிறார் மார்க்ஸ். இவரைப் போன்ற ஒரு ’விட்டேத்தி’க்கு தந்தையின் சொத்தை தரமாட்டேன் என்கிறார் மார்க்சின் தாயார். இதனால் ஜென்னி மார்க்சின் குடும்பத்துடன் முரண்பாடு வருகிறது. ஆனால் தத்துவத்தை சமூக இயக்கத்துடன் ஒன்றிணைய வைத்தல் என்ற பாதையில் கார்ல் மார்க்ஸ் இக்குடும்ப பிரச்சினைகளால் சலிப்படையவில்லை. குண்டுச் சட்டி வாழ்க்கையான பல்கலை ஆசிரியர் பணி அதற்கு இடையூறாக இருக்குமென்று கருதுகிறார். மற்றபடி இந்த கலகக்காரருக்கு எவரும் உடனே வேலை கொடுத்து விடுவதில்லை.

பிரஷ்யாவின் புதிய அரசரும் ஒரு பழைய பிற்போக்கான அரசரே என்று தெரிந்ததும் பலரும் ஏமாறுகின்றனர். காரல் மார்க்சோ முடிவைக் கண்டு அச்சமடையாத ஆய்வுப் பணியும், அரசர்களை கண்டு அஞ்சாத செயலும்தான் தன்னுடைய இரக்கமற்ற ஆய்வுப் பணி என்று குறிப்பிடுகிறார். இறுதியில் ஒரு அரசு அதிகாரியின் கொடூரத்தன்மை என்பது அவரது தனிப்பட்ட பண்பு நலனால் உருவாதில்லை என்பதை அறிகிறார். ஆம். மார்க்சியத்தின் நுழைவாயிலுக்கு வந்து விட்டார்.

படித்துப் பாருங்கள்!

  • வினவு

நீண்ட கால உழைப்புக்குப் பிறகு தத்துவஞானத்தில் டாக்டர் பட்டத்தைப் பெற்ற மார்க்ஸ் 1841ம் வருடத்தின் வசந்தகாலத்தில் சொந்த ஊரான டிரியருக்குச் சென்றார்; புரூனோ பெளவர் அவரை பானுக்கு வரும்படி பல மாதங்களாக அழைத்துக் கொண்டிருந்த காரணத்தால் டிரியரிலிருந்து அங்கே சென்றார்.

டிரியரில் மார்க்சுக்கும் அவருடைய உறவினர்கள் மற்றும் தாயாருக்கும் இடையில் பிணக்கு ஏற்பட்டது. மார்க்சின் தாயார்; மகன் உதவாக்கரை என்று கூறித் தகப்பனாருடைய சொத்தில் அவருடைய பங்கைக் கொடுப்பதற்கு மறுத்தாள். மார்க்சின் தாயாருக்கும் வெஸ்ட்ஃபாலன் குடும்பத்துக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. இதன் விளைவாக ஜென்னி மிகவும் துன்பமடைந்தாள். குடும்பம் நடத்துவதற்குத் தனக்கு வருமானம் இல்லாதபடியால் ஜென்னியைத் திருமணம் செய்து கொள்ள முடியாமற் போகலாம் என்ற நிலை மார்க்சுக்கு வேதனையைக் கொடுத்தது.

இந்த சோக நிலைமை மார்க்சின் திருமணம் நடைபெறுகின்ற வரை நீடித்தது என்ற போதிலும் அவரிடம் பலம், உணர்ச்சி, உற்சாகம் முழு அளவில் இருந்தன. தன்னுடைய திறமைகளையும் அறிவையும் தகுந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்து அவருடைய இதயத்தில் சுடர்விட்டெரிந்தது; அவர் அரசியல் வாழ்க்கையில் தீவிரமாகப் பங்கெடுக்க விரும்பினார்.

மார்க்சுக்கு இருபத்து மூன்று வயதாகி விட்டது. ஆனால் கெளரவமிக்க தத்துவஞான டாக்டர் பட்டம் குதூகலமான இந்த இளைஞனிடத்தில் எவ்விதமான “கெளரவத்தையும்” கூடுதலாக ஏற்படுத்தியதாகத் தோன்றவில்லை. அவர் எப்பொழுதும் போலவே குறும்புச் செயல்களில் ஈடுபட்டிருந்தார், வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களைக் கண்டு சிரிப்பதற்குத் தயாராக இருந்தார்.

மார்க்ஸ் முன்பிருந்ததைப் போலவே குதூகலமான கூட்டங்களின் இதய ஒலியாக இருந்தார், அவரிடம் ஒருவர் இதயந்திறந்து பேசலாம், உற்சாகமாகச் சிரிக்கலாம். ஆனால் அவருடைய குத்தலான கிண்டலும் “இரக்கமில்லாதபடி கொட்டும்”, அது எப்பொழுதுமே புண்படுத்தக்கூடியது அல்ல என்று சொல்ல முடியாது. ஆனால் ஒழுக்கக் குறைவு, அடிமைத்தனம், கீழ்மை சிறிதளவே காணப்பட்டாலும் அவருடைய நகைச்சுவை இரக்கமற்றதாக மாறிவிடும். அப்பொழுது அவருடைய “மிகச்சிறந்த நண்பர் கூடத்” தப்ப முடியாது.

மிதவாத முதலாளி வர்க்கத்தின் தலைவர்களில் ஒருவரான அர்னோல்டு ரூகே.

மார்க்ஸ் சுயேச்சையான நடவடிக்கைக்குப் பல திட்டங்களைத் தயாரித்தார். 1841ம் வருடத்தின் வசந்தகாலத்தின் போது புரூனே பெளவருடன் சேர்ந்து Archiv des Atheisms (“நாத்திக சஞ்சிகை”) என்ற தீவிரவாத இதழை நடத்துகின்ற எண்ணம் அவரிடம் ஏற்பட்டது. மிதவாத முதலாளி வர்க்கத்தின் தலைவர்களில் ஒருவரான அர்னோல்டு ரூகே அப்பொழுது Deutsch-Jahrbucher (“ஜெர்மன் வருடாந்தர சஞ்சிகை”) என்ற இதழை நடத்தி வந்தார்.

அவர் இதைப் பற்றி 1841 செப்டெம்பரில் பின்வருமாறு எழுதினார்: “இப்பொழுது எனக்கு மோசமான நேரம். ஏனென்றால் பு. பெளவர், கார்ல் மார்க்ஸ், கிறிஸ்டியன் ஸென், ஃபாயர்பாஹ் ஆகியோர் அஞ்சா நெஞ்சத்தைப் பிரகடனம் செய்யப் போகிறார்கள் அல்லது அவர்கள் ஏற்கெனவே பிரகடனம் செய்து விட்டார்கள், நாத்திகவாதம் மற்றும் ஆன்மாவின் அழிவு என்ற கொடியை ஏற்றிவிட்டார்கள்; கடவுள், மதம், அமரத்துவம் ஆகியவை கீழே இறக்கப்படும், மக்களே கடவுள்கள் என்று பிரகடனம் செய்யப்படும். நாத்திகவாத இதழ் வெளிவரப் போகிறது, போலீசார் இதை இப்படியே அனுமதித்தால் கொந்தளிப்பு ஏற்படும். ஆனால் அதைத் தவிர்க்க முடியாது.”(2)

இந்தத் திட்டம் நிறைவேறவில்லை. பானில் பேராசிரியர் பதவியைப் பெறுவதென்ற மார்க்சின் நம்பிக்கைகளும் உடைந்தன. ஏனென்றால் பிற்போக்குவாத விமர்சனத் தாக்கத்தின் விளைவாக புரூனோ பெளவர் தன்னுடைய ஆசிரியர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அங்கே மார்க்சுக்கு வேலை கிடைப்பது கடினம் என்பது தெளிவாயிற்று.
இவை அனைத்தைப் பற்றியும் மார்க்ஸ் அதிகம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

உலகத்தோடு தொடர்பில்லாத ஆசிரியரின் பரபரப்பில்லாத வாழ்க்கை அவரைக் கவரவில்லை. அவர் ஃபாயர்பாஹின் “மானிடவியல்” பொருள்முதல்வாதத்தைச் சிறிது காலம் தீவிரமாக ஆதரித்தார். எனினும் ஃபாயர் பாஹ் தன் மனைவியுடன் கிராமத்துக்குச் சென்று, உலகத்திலிருந்து ஒதுங்கி, புரூக்பெர்க் கோட்டையின் கனமான சுவர்களுக்குப் பின்னால் இயற்கையைப் பற்றி அமைதியான தியானத்திலும் உணர்ச்சிமிக்க தத்துவஞான சிந்தனையிலும் ஈடுபட்ட உதாரணம் மார்க்சிடம் எழுச்சியேற்படுத்தவில்லை.

நடைமுறையில் தத்துவஞானம் மற்றும் யதார்த்தத்தின் ஒற்றுமையை ஊக்குவிக்கின்ற செயலில் ஈடுபட வேண்டுமென்று மார்க்ஸ் துடித்தார். தத்துவ ரீதியான ஆராய்ச்சிகளை “வாழ்க்கை ஈடுபாட்டுடன்” இணைக்க வேண்டுமென்ற இத்துடிப்பு எந்த வேலையைத் தேர்ந்தெடுக்கலாம் என்ற உயர்நிலைப் பள்ளிக் கட்டுரையிலேயே பிரதிபலிக்கப்படுகிறது, பல்கலைக்கழகத்தில் படித்த வருடங்களின் போது அது பலமடைந்தது.

மார்க்சின் அரசியல் போக்குகளின் வளர்ச்சியும் இன்றைக்கிருக்கும் சமூக யதார்த்தம் அநீதியானது, அருவருப்பானது, அதைப் புரட்சிகரமாக மாற்றுவது அவசியம் என்று அவரிடம் வளர்ச்சியுற்று ஆழமடைந்து கொண்டிருந்த கருத்துக்களும் அதற்கு உதவி செய்தன.

பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த பொழுது மார்க்ஸ் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தார், “கலப்பற்ற” தத்துவத்தில் முற்றிலும் மூழ்கியிருந்தார். பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்றுக் கொண்டு வெளியே வந்த பிறகுதான் அவர் திடீரென்று அரசியல் பிரச்சினைகளில் ஈடுபட்டார் என்று கருதுவது வழக்கம். இது உண்மையல்ல.

புரூனோ பெளவர்

1837இல் அவர் எழுதிய பல கவிதைகள் அற்பவாத உலகத்துடன் அவர் தீர்மானமாக முறித்துக் கொண்டதைப் பிரதிபலித்தன என்பதை நாம் முன்னரே பார்த்தோம். மேலும் இதே சமயத்தில் எட்வார்டு கான்ஸ் என்பவர் சான்-சிமோனுடைய கருத்துக்களைப் பகிரங்கமான முறையில் பரப்பியதோடு உழைப்பை விடுவிக்க வேண்டும் என்று அறைகூவினார்.

மார்க்ஸ் அவருடைய சொற்பொழிவுகளில் தவறாமல் கலந்து கொண்டு கவனத்தோடு கேட்டார். சீக்கிரத்தில் மார்க்ஸ் அவருடன் நெருங்கிப் பழகினார். மேலும் 1837இல் மார்க்ஸ் டாக்டர் அடோல்ப் ருட்டென் பர்கைத் தன்னுடைய மிகவும் நெருக்கமான நண்பர் என்று குறிப்பிட்டார். அவர் “இளைஞர்கள் சங்கத்தின்” உறுப்பினர் என்பதால் ஒரு தடவை கைது செய்யப்பட்டவர். “தவறான நோக்கங்களைக்” கொண்ட கட்டுரைகளை எழுதிய காரணத்துக்காகப் போலீசின் கண்காணிப்புக்கு ஆளாகியிருந்தார்.

புரூனோ பெளவர் வரலாற்றுப் போக்கின் மீது தாக்கம் செலுத்தக் கூடிய “நடவடிக்கைத் தத்துவஞானத்தை” விரித்துரைக்கின்ற முயற்சியில் ஈடுபட்டிருந்தார்; அதன் காரணமாகவே மார்க்ஸ் அவருடனும் நெருங்கிப் பழகினார். மதத்தைப் பற்றி பெளவர் மற்றும் ஃபாயர் பாஹ் செய்து கொண்டிருந்த விமர்சனமே அந்தச் சமயத்துக்குச் சாத்தியமான ஒரே அரசியல் விமர்சனம் என்று மார்க்ஸ் கண்டார்.

ஆனால் பெளவர் எந்தத் தத்துவ விமர்சனத்தைப் பற்றித் திருப்தி அடைந்தாரோ அது போதுமானதல்ல என்று மார்க்ஸ் தன்னுடைய மாணவ வருடங்களின் இறுதியிலேயே கருதினார். பெளவர் 1841 மார்ச் 31-ந் தேதியன்று மார்க்சுக்கு எழுதிய கடிதத்தில் காணப்படுகின்ற சுவாரசியமான சொற்றொடருக்கு இக்கருத்து வேறுபாடு காரணமாக இருக்கலாம்: “செய்முறையான தொழிலில் நீங்கள் ஈடுபடுவது பைத்தியக்காரத்தனமாகும். இப்பொழுது தத்துவம்தான் மிகவும் வன்மையான செய்முறை; அது எவ்வளவு விரிவான அர்த்தத்தில் செய்முறைத் தன்மையை அடையும் என்பதை நாம் முன்னறிந்து கூற இயலாது.”(3)

இதற்கிடையில் ஜெர்மனியில் வரலாற்று நிகழ்ச்சிகள் வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருந்தபடியால் தத்துவத்திலும் வாழ்க்கையிலும் அரசியல் பிரச்சினைகள் முன்னணிக்கு வரத் தொடங்கியிருந்தன.

நான்காவது பிரெடெரிக் வில்ஹெல்ம்

1840-ம் வருடத்தின் கோடைக்காலத்தில் ஒரு புதிய அரசர், நான்காவது பிரெடெரிக் வில்ஹெல்ம் அரியணையில் அமர்ந்தார். அவர் மிதவாதச் சீர்திருத்தங்களைச் செய்வார், அரசியலமைப்புச் சட்டத்தைக் கொடுப்பார் என்று எல்லோருமே எதிர்பார்த்தார்கள். அவர் அழகான சொற்களையும் பரந்தகன்ற சைகைகளையும் நேசிப்பவர். எனவே சுதந்திரம் கிடைக்கும் என்ற வீண் நம்பிக்கைகளை ஊக்குவித்தார். ஆனால் உண்மையில் அவர் “பிற்போக்குத்தனமான புத்தார்வவாதக்” கொள்கையைப் பின்பற்றினார்; முடியரசு மற்றும் கிறிஸ்துவத் திருச்சபையின் சக்தியைப் பலப்படுத்துவதில் மட்டுமே அக்கறை காட்டினார்.

மார்க்ஸ்-பிற்காலத்தில் அவரே எழுதியதைப் போல-இந்தப் புதிய அரசருடைய “மதிப்பையும் பாத்திரத்தையும்” உடனடியாகக் கண்டார். இந்த “அற்பவாதிகளின் அரசர்” முடிசூட்டு விழாவில் “தன்னுடைய இதயமும் மனமும் எதிர்கால முக்கியமான அரசுச் சட்டமாக இருக்கும் என்று அறிவித்தார்”.(4) அவர் பிரஷ்யாவைத் தன்னுடைய “இராஜ்யம்” என்றும் ஜெர்மன் மக்கள் இன்னும் வயதுக்கு வராத குழந்தைகள், பிர்ச் பிரம்பினாலும் இஞ்சிரொட்டியினாலும் பாடம் கற்பிக்கப்பட வேண்டியவர்கள் என்றும் கூறினார்.

பிர்ச் “பிரம்பு” பிரதானமாக, மதத்துக்கு எதிராகப் போராடுவதற்குத் துணிந்த இளம் ஹெகலியவாதிகளுக்கு எதிராகவே உபயோகிக்கப்பட்டது. பிரபலமான இளம் ஹெகலியவாதிகள் பல்கலைக்கழகப் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டார்கள். ஹெகலியவாதத்தைத் தத்துவ ரீதியாக மறுப்பதற்காக வயோதிகரும் பாதி முதுமைத் தளர்ச்சியடைந்த கருத்துமுதல்வாதத் தத்துவஞானியுமான ஷேல்லிங் பெர்லினுக்கு வரவழைக்கப்பட்டார்.

பிரமைகள் எவ்வளவு வேகமாகத் தோன்றினவோ அவ்வளவு வேகமாக மறைந்தன. பிரஷ்ய அரசிடம் நிதானமான எதிர்ப்பைக் காட்டிய இளம் ஹெகலியவாதிகள் முடியாட்சி இடதுசாரித் திசையில் நகரும் என்ற எல்லா நம்பிக்கைகளையும் இழந்துவிட்டபடியால் தாங்களே இடதுசாரித் திசையில் வேகமாக முன்னேறத் தொடங்கினார்கள்.

நாட்டில் மிதவாத ஜனநாயக இயக்கம் பலமடைந்தது; மக்களின் அரசியல் உணர்வில் விழிப்பேற்பட்டது. ஜெர்மனியில் தொழில்துறை வளர்ச்சியடைந்து தேசிய முதலாளி வர்க்கம் பலமடைந்த பொழுது முடியாட்சியின் நிலப்பிரபுத்துவ விருப்பார்வங்கள் மென்மேலும் காலங்கடந்தவையாக மாறின.

இந்தச் சமயத்தில் மார்க்ஸ் ஒரு புதிய நடவடிக்கைக்குத் தன்னைத் தயாரித்துக் கொண்டிருந்தார். “முற்றிலும் வித்தியாசமான தன்மையைக் கொண்ட அரசியல், தத்துவஞானப் பணிகளின்”(5) காரணமாகப் பண்டைக்கால கிரேக்கத் தத்துவஞான ஆராய்ச்சித் துறையில் என்னுடைய முந்திய திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை என்று 1841ம் வருடத்தின் முடிவில் அவர் எழுதினார்.

அவர் குறிப்பிட்ட பணிகள் எவை?

முதலாவதாகவும் முதன்மையாகவும் மார்க்ஸ் மதத்துடன் கணக்குத் தீர்த்துக் கொள்ள விரும்பினார், அவர் கிறிஸ்துவ மதக் கலையைப் பற்றி ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதிக் கொண்டிருந்தார். ஆனால் அவர் இந்தச் சமயத்தில் அரசு அமைப்பைப் பற்றிய ஹெகலியவாதக் கருத்தை விமர்சித்து எழுதிக் கொண்டிருந்த நூலில்தான் அவருடைய அரசியல் விருப்பார்வங்கள் இன்னும் திட்டவட்டமாக வெளிப்பட்டன.

ஹெகல்

ஹெகலுக்கு-அவரைப் போலவே இளம் ஹெகலியவாதிகளுக்கும்-அரசியலமைப்புச் சட்ட முடியாட்சியே இலட்சியமாக இருந்தது; ஆனால் மார்க்ஸ் இந்தக் “கலப்படப் பொருளின்” மீது யுத்தப் பிரகடனம் செய்தார். “அது முதலிலிருந்து முடிவுவரை தன்னை மறுத்துக் கொண்டு அழித்துக் கொள்கிறது”(6) என்று அவர் எழுதினார்.

1842 மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் கூறப்பட்ட இக்கருத்து மார்க்சினுடைய அரசியல் தீவிரவாதத்துக்குச் சான்றாக இருக்கிறது. அன்றைய முடியாட்சி அமைப்பை மிதவாதத் தன்மை உடையதாக்குவது தீர்வாகாது, அதை ஒழிப்பதுதான் தீர்வு என்று அவர் கருதினார். அவர் ராஜியப் பிரமுகர்களைப் பற்றி அதிகமான வெறுப்போடு “அதிகமான நம்பிக்கை கொண்ட போக்கிரிகள்”, “அனுபவமுள்ள பகட்டர்கள்”, “மக்களை விலங்குகளின் தரத்துக்கு இழிவுபடுத்துவதே”(7) அவர்களுடைய அரசாங்கக் கொள்கை என்று எழுதினார்.

மார்க்ஸ் பத்திரிகைச் சுதந்திரத்தைப் பற்றி எழுதிய கட்டுரைகளில் பிரஷ்ய முடியாட்சியுடன் பகிரங்கமான முதல் சண்டையில் ஈடுபட்டார் (சமீபத்தில் வெளியான பிரஷ்யத் தணிக்கை உத்தரவைப் பற்றிய விமர்ச்சனக் குறிப்புகள் மற்றும் பத்திரிகைச் சுதந்திரத்தைப் பற்றி விவாதங்கள்). பத்திரிகை சுதந்திரம் பொதுவான அரசியல் சுதந்திரங்களின் குறியீடாக இருப்பதால், “பத்திரிகைச் சுதந்திரம் இல்லாமலிருப்பது மற்ற அனைத்துச் சுதந்திரங்களையும் கற்பனை ஆக்கிவிடுவதால்”(8) இந்தப் பிரச்சினை மார்க்சின் கவனத்தை ஈர்த்தது.

1841ம் வருடத்தின் இறுதியில் ஒரு புதிய தணிக்கை உத்தரவு வெளியிடப்பட்டது. அரசருடைய கொள்கைகள் முற்போக்கானவை என்று சொல்லப்பட்டன. ஆனால் அவை உண்மையில் பிற்போக்குத்தனமாக இருந்தன. அக்கொள்கைகளின் போலித் தன்மையின் நிலையான உருவமாக இந்த ஆவணம் இருந்தது.

இந்த உத்தரவு வெளியான பொழுது முதலாளி வர்க்க மிதவாதிகளின் முகாம் உற்சாகத்தில் மூழ்கியிருந்த பொழுது மார்க்ஸ் சொல்லலங்காரம் என்ற போர்வையை அகற்றி “தெய்வீக உரிமையைக் கொண்ட அரசர்” வழங்கியிருக்கும் சுதந்திரங்களின் வறுமையை இரக்கமின்றி எடுத்துக்காட்டினார்.

முதலாளித்துவ யதார்த்தத்தைப் பற்றித் தன்னுடைய விமர்சனத்தின் கோட்பாடுகளை மார்க்ஸ் பின்வருமாறு வகுத்தளித்தார் :

“இன்றைக்கிருக்கும் எல்லாவற்றையும் பற்றிய இரக்கமற்ற விமர்சனத்தை நான் குறிப்பிடுகிறேன் – அடையப்படுகின்ற முடிவுகளைப் பற்றி அச்சமில்லாதிருப்பது, ஆட்சியிலிருப்பவர்களுடன் சண்டையிட்டுக் கொள்வதைப் பற்றியும் அதைப் போலவே சிறிதும் அச்சமடையாதிருத்தல் ஆகிய இரண்டு அர்த்தங்களிலுமே இரக்கமில்லாதிருத்தல்.”(9)

மார்க்ஸ் எழுதிய இந்த வாக்கியங்கள் அரசியல் ரீதியாக மட்டுமில்லாமல் தார்மிக ரீதியிலும் அவரை எடுத்துக்காட்டுகின்றன. இளம் மார்க்ஸ் தன்னுடைய ஆராய்ச்சியில், விஞ்ஞான படைப்பு வேலையில் பின்பற்றிய அளவுகோள்களை நாம் புரிந்து கொள்வதற்கு அவை உதவுகின்றன.

உண்மையை ஆழமாகவும் முரணின்றியும் வெளிப்படுத்த, விஷயங்களின் தர்க்கத்தைத் துணிவாகவும் விடாப்பிடியாகவும் பின்பற்ற, “ஒவ்வொரு பொருளைப் பற்றியும் அதன் சாராம்சத் தன்மைக்கு ஏற்ப எதிர்ச் செயலாற்றுகின்ற சிந்தனையின் சர்வாம்சமான தாராளத் தன்மையைத்”(10) தேட மார்க்ஸ் பாடுபட்டுக் கொண்டிருந்தார்.

ஒரு ஆராய்ச்சியாளர் அந்நியச் சிந்தனைகள் தன்னை உண்மையிலிருந்து திருப்ப அனுமதிக்கக் கூடாது. “வலது அல்லது இடது பக்கம் பார்க்காமல் நேரடியாக உண்மையைத் தேடுவது ஆராய்ச்சியாளரின் முதல் கடமை அல்லவா? குறிப்பிட்ட வடிவத்தில் அதை எடுத்துக் கூறுவதை நான் மறக்கக் கூடாது என்பதில்லாவிட்டால் பொருளின் சாராம்சத்தை மறக்காதிருப்பேனா?”(11)

விஞ்ஞான ஆராய்ச்சியில் விளைவு மட்டும் முக்கியமல்ல, அதற்கு இட்டுச் செல்கின்ற பாதையும் முக்கியமானதே. இங்கே ஆராய்ச்சியாளரின் மனோபாவமும் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படுகிறது: ஒரு குறிக்கோளை அடைவதற்குத் தவறான வழிகளைக் கையாள வேண்டியிருந்தால் அது நியாயமான குறிக்கோளல்ல. விஞ்ஞானத்தில் கோழைத்தனம், அரை மனத்துடன் செயலாற்றல் விஞ்ஞானத்துக்கு துரோகம் செய்வதாகும்.

பத்திரிகைச் சுதந்திரத்தைப் பற்றிய விவாதங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கட்டுரையில் மார்க்ஸ் இந்தக் கருத்தை இன்னும் திட்டவட்டமான வடிவத்தில் எழுதுகிறார்.

பொதுவாக எழுத்துப் பணியைப் போலவே விஞ்ஞானமும் ஒரு “தொழில்” அல்ல. அது ஒரு தொழிலின் நிலைக்குத் தாழ்ந்து விடக் கூடாது. “எழுத்தாளன் வாழ்க்கை நடத்துவதற்காகவும் எழுதுவதற்காகவும் சம்பாதிக்க வேண்டும் என்பது உண்மையே, ஆனால் அவன் வாழ்வதும் எழுதுவதும் சம்பாதிப்பதற்காக இருக்கக் கூடாது.

பெரன்ழே பின்வருமாறு கூறினார் :

நான் பாடல்களை எழுதுவதற்கே வாழ்கிறேன்;
ஆனால் தாங்கள் என்னைப் பதவியிலிருந்து விலக்கினால்,
நான் வாழ்வதற்காகப் பாடல்களை எழுதுவேன்.

ஒரு கவிஞனுக்குக் கவிதை வாழ்க்கைக்கு ஒரு சாதனமாக மாறும் பொழுது அவன் தனக்கே உரிய துறையை விட்டுப் போய்விடுகிறான் என்ற உண்மை இங்கே நகைச்சுவையுடன் ஒத்துக் கொள்ளப்படுகிறது.

எழுத்தாளன் தன்னுடைய எழுத்தை ஒரு சாதனமாக நினைப்பதில்லை. அது ஒரு குறிக்கோளாக இருக்கிறது. அது அவனுக்கும் மற்றவர்களுக்கும் மிகக் குறைந்த அளவிலேயே ஒரு சாதனமாக இருப்பதால், அவசியம் ஏற்படுகின்ற பொழுது அவன் அதன் இருத்தலுக்காகத் தன்னுடைய இருத்தலை தியாகம் செய்கிறான்.”(12)

இந்த வார்த்தைகளில் மார்க்ஸ் தன்னுடைய படைப்பு நெறியை எடுத்துரைத்தார். அவர் “வாழ்க்கை நடத்துவதற்காகப் பாடல்கள் எழுதவில்லை”, அதற்கு மாறாக விஞ்ஞான உண்மையைத் தேடுகின்ற முயற்சியில் தன்னுடைய சொந்த வாழ்க்கையை தியாகம் செய்தார் என்பதைத் தன்னுடைய மொத்த வாழ்க்கையின் மூலம் நிரூபித்தார்.

புதிய அரசருடைய ஆணைகளின் போலி மிதவாதத்தைக் கிண்டல் செய்ததுடன் மார்க்ஸ் நின்றுவிடவில்லை. “கருத்துக்களுக்கு எதிராக” சட்டங்களே இயற்றுவதை அனுமதிக்கின்ற அமைப்பின் சமூக சாராம்சத்தை அவர் வெளிக்காட்டினார். இத்தகைய சட்டங்கள் மக்களுக்கு விரோதமான ஆட்சியில், “அரசின் பகுத்தறிவும் அரசின் ஒழுக்கநெறியும் தன்னிடம் மட்டுமே இருப்பதாக ஏதாவது ஒரு உறுப்பு கற்பனை செய்கின்ற சமூகத்தில், கொள்கையளவில் மக்களை எதிர்க்கின்ற அரசாங்கத்தில்”(13) மட்டுமே சாத்தியம் என்பதை அவர் எடுத்துக்காட்டுகிறார்.

“ஒரு தந்திரமுள்ள அரசியல் கோஷ்டியின் தீங்கான மனம்” மட்டுமே “பழிவாங்கும் சட்டங்களே, கருத்துக்கு எதிரான சட்டங்களைக் கண்டுபிடிக்கிறது”. கருத்துக்களுக்கு எதிரான சட்டங்கள் கோட்பாடுகள் இல்லாமையை, அரசைப் பற்றி ஒழுக்கமில்லாத, கொச்சையான பொருளாயதக் கருத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன.”(14)

மக்கள் விரோதச் சட்டங்களை இயற்றுவதன் மூலம் அந்த “கோஷ்டி” தன்னைச் சட்டத்துக்கு வெளியே நிறுத்திக் கொள்கிறது. அரசைப் பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கின்ற அதன் நடவடிக்கைகள் உண்மையில் அரசு எதிர்ப்புத் தன்மையைக் கொண்டிருக்கின்றன என்ற புரட்சிகரமான முடிவுக்கு மார்க்ஸ் வருகிறார்.

இங்கே மார்க்ஸ் அரசை இன்னும் சூக்குமமான தத்துவஞான நிலையிலிருந்து தான் விமர்சிக்கிறார். அரசின் வர்க்க-வரலாற்று சாராம்சத்தைப் புரிந்து கொள்வதற்குரிய அணுகு முறையை அவர் நெருங்கத் தொடங்கியிருக்கிறார். அரசின் புறநிலையான, தனிப்பட்ட நபரைச் சேராத தன்மையைப் பற்றி அவர் கவனத்தைக் குவிப்பது இத்தகைய தெளிவை நோக்கி அவர் ஒரு காலடி வைப்பதாகும்.

அரசு அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு உண்மையான காரணம் அந்த அல்லது இந்த அதிகாரியின் குணாம்சத்தில், அவருடைய மனோபாவத்தில் அடங்கியிருக்கவில்லை, அது “தலைகீழ் உலகத்தின்” வெளியீடு என்று மார்க்ஸ் எடுத்துக்காட்டினார்.

குறிப்புகள்:
(1) Marx, Engels, Collected Works, Vol. 3, p. 178.
(2) A. Cornu, Karl Marx und Friedrich Engels. Leben und Werk, Bd. 1, S. 245.
(3) Marx/Engels, Gesamtausgabe, Bd. 1, Halbband 2, S. 250.
(4) Marx/Engels,Collected Works, Vol. 3, p.139.
(5) Marx/Engels, Gesamtausgabe, Bd. 1, Halbband 1, S. 34.
(6)Marx, Engels, Collected Works, Vol. 1, pp. 382—83.
(7) Ibid., p. 384.
(8) Ibid., p. 180.
(9) Marx, Engels, Collected Works, Vol. 3, p. 142.
(10) Marx, Engels, Collected Works, Vol. 1, p. 113.
(11)Ibid., p. 111
(12) Ibid., pp. 174-75,
(13) Ibid., p. 120.
(14)Ibid.

தொடரும்

நூல் : மார்க்ஸ் பிறந்தார்
நூல் ஆசிரியர் : ஹென்ரி வோல்கவ்
தமிழில் : நா. தர்மராஜன், எம். ஏ.
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், 1986 -ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது.

நூல் கிடைக்குமிடம் :

கீழைக்காற்று,
(கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
கடையின் புதிய முகவரி கீழே)
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை,
நெற்குன்றம், சென்னை – 600 107.
(வெங்காய மண்டி பேருந்து நிறுத்தம் அருகில்)
பேச – (தற்காலிகமாக) : 99623 90277

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்பிரைவேட் லிமிடெட்,
சென்னை.

முந்தைய பாகங்கள்:

  1. மார்க்சின் வாழ்க்கை வழி மார்க்சியம் கற்போம் !
  2. அற்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பிறந்தார் புரட்சியாளர் மார்க்ஸ்
  3. ஜெர்மனியின் ரைன் பிரதேசத்தில் மார்க்ஸ் தோன்றியது தற்செயலானதா ?
  4. பள்ளியில் சுமாரான மாணவராக இருந்தார் கார்ல் மார்க்ஸ் – ஏன் ?
  5. எல்லாவற்றையும் சந்தேகப்படு என்பது மார்க்சுக்குப் பிடித்தமான மூதுரை
  6. சுயவிமர்சனத்தில் இரக்கமற்றவர் கார்ல் மார்க்ஸ்
  7. மார்க்சும் ஏங்கெல்சும் முதலில் எழுதியவை கவிதை நூல்கள் – ஏன் ?
  8. கடவுள் மீது போர் தொடுத்த கார்ல் மார்க்ஸ் !
  9. மதத்தின் மூல வேர்கள் பூமியில் இருக்கின்றன – கார்ல் மார்க்ஸ்
  10. பண்படுத்துவது கலை – பாதை காட்டுவது தத்துவஞானம்
  11. தத்துவஞானத்தை புரிந்து கொள்ள பக்தர்களால் முடியாது !
  12. ஒரு மெய்யான தத்துவஞானியை சந்திக்கத் தயாரா ?

உசிலை வட்டார வெண்டைக்காய் விவசாயம் | படக் கட்டுரை

துரையில் இருந்து தேனி செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும் உள்ள விவசாய நிலங்கள் பெரும்பாலும் தரிசாகவே இருந்தன. தோழர் ஜெயராமனின் ஆரியப்பட்டி கிராமத்தில் பசுமையாக இருந்த சில இடங்களில் மட்டும் ஆட்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அருகில் சென்று பார்த்தபோது அவைகள் பெரும்பாலும் பயறு வகைகள், சிறு தானியங்கள் மற்றும் தோட்டப்பயிர்களாக இருந்தது. கிணறுப்பாசனம் உள்ளவர்கள் மட்டும் தண்ணீருக்கு எற்றவாரு இப்பயிர்களை செய்து வருகிறார்கள். தமிழில் வரும் சில பிரபலமான விவசாய இதழ்களில் தோட்டப்பயிர்கள் செய்தால் வளம் கொழிக்கும், கை நிறைய சம்பாதிக்கலாம் என்று சொல்கிறார்களே, அந்த ”வளத்தை” தெரிந்துகொள்ள அவர்களை சந்திந்தோம்.

கொடிவீரன், முதுகலை (பொருளாதாரம்)
தம்பி, எங்க இருந்து வாரீக…என்று கேட்டவரிடம் நம்மை அறிமுகப்படுத்திகொண்டதும் நமட்டு சிரிப்புடன் பேச ஆரம்பித்தார். “ தம்பி, விவசாயம் பண்ணா நாறித்தான் போகனும். எனக்கு எட்டு ஏக்கரு, மூணு மோட்டர் செட்டு. எதுலயும் தண்ணி இல்ல. இருக்கிற தண்ணிய வச்சி தோ.. இந்த ஐம்பது சென்ட் நிலத்துல இந்த வெண்டைய போட்டிருக்கேன்.

நட்டதிலிருந்து இரண்டு மாசம் ஆகும் காய் பறிக்க . அதிலிருந்து ஒன்னரை மாசம் கண்ணும் கருத்துமா பராமரிக்கனும். ஒருநாள் விட்டு ஒருநாள் காய பறிச்சி கொண்டு போய் சந்தையில போடுவோம். எனக்கு எல்லா செலவும் போக ஆயிரம் ரூபாய் கூட மிஞ்சாது. எப்படின்னு கணக்கு சொல்லுறேன், உங்களுக்கே எங்க பாடு தெரிஞ்சிடும்!

இந்த அம்பது சென்ட் இடத்துக்கு 2 கிலோ விதை வாங்கனும். சாம்ராட் விதை. இதோட விலை ரூ. 6000. கவர்மெண்ட்ல விதை வாங்கிக்கலாம்னு சொல்றாங்க. ஆனா உடனே கெடக்காது. அப்படியே வாங்கிட்டு வந்து போட்டாலும் மொளக்காது. அதானால தான் தனியார் கிட்ட இருந்து வாங்குறோம். அப்புறம் பரம்பு, பாத்தி கட்டுறவங்களுக்கு கூலி எல்லாம் சேர்த்து 1500 ரூபா. பொம்பள ஆளுவுளுக்கு 500ரூபா.

காம்ப்ளக்ஸ் உரம் பத்து மூட்டை. ஒரு மூட்டை 950 ரூ. ஐந்து தடவை போடனும். அப்புறம் பூச்சி மருந்து தனி செலவு. எல்லாம் சேர்த்து இருபதாயிரம் வரைக்கும் வந்துடும்.

இவ்ளோ செலவு பண்ணி காய பறிச்சி சந்தைக்கு கொண்டு போனா கிலோ 7 ரூபாக்கு எடுக்கிறான். அவன் வெளிய விக்கிறது கிலோ 25 ரூ. போன வாரம் பரவை மார்க்கெட்ல 162 கிலோ போட்டுட்டு வந்தேன். எவ்ளோ வருதுன்னு கணக்கு பண்ணிக்கோங்களேன்.(7*162=1134 ரூ).

காய் பறிக்கிற இரண்டு ஆளுக்கு கூலி 200 ரூ. சாக்கு 45 ரூ. என்னோட வண்டியிலயே சந்தைக்கு கொண்டு போயிடுறேன். பெட்ரொல், டீ செலவு எல்லாம் இருநூரு ரூபான்னு காசு வந்த வேகத்துலயே கையவிட்டு போயிடும். ஐம்பது, அறுபது முறை பறிக்கலாம். ஒவ்வொரு பறிப்புக்கும் இதான் நெலம. இதுவே மொத பத்து பறிப்புக்கு முப்பது, நாப்பது கிலோதான் கெடக்கும். அதெல்லாம் கணக்குலயே இல்ல.

இனிமே இந்த நெலத்த வச்சிக்கிட்டு ஒண்ணும் பண்ண முடியாதுன்னு தான் ஒரு ஏக்கர் நெலத்த பிளாட் போட்டு வித்துட்டேன். இப்ப எல்லாம் விவசாயம் பண்ணினா பொழக்க முடியாது. மோடியே இன்னா சொல்றாரு. ஒரு குடும்பத்துல இருக்க எல்லாரும் விவசாயத்த நம்பி இருக்காதிங்கன்னு சொல்றாரு. அதான் பசங்க எல்லாம் வேற வேலைக்கு போயிட்டாங்க.

தூத்துக்குடியில எல்லாரையும் சுட்டுக் கொன்னுட்டானே, அந்த ஸ்டெர்லைட் ஓனரு மாதிரி கிரிமினலா இருந்தாதான் தம்பி பொழக்க முடியும். அந்த மாதிரி ஆளுங்களுக்கு தான் அரசாங்கமும் துணையா இருக்கு. நம்மள யாரு பாக்குறா? அந்த காலத்துல ஒரு பழமொழி சொல்லுவாங்க. ”விவசாயி கணக்கு பார்த்தா ஏர்கம்பு மிஞ்சாது”ன்பாங்க. இவ்ளோ நாள் உழைச்சும் ஒன்னும் மிஞ்சல!

தெய்வகனி, கூலி விவசாயி.
எங்க கஷ்டத்தை இன்னான்னு சொல்றது. காலைல 7 மணிக்கு வந்தோம். தோ.. உச்சி வெய்யிலு ஒடம்ப உரிக்குது. இன்னும் சாப்பிடாம இந்த சொனையில கெடக்கொம். நாலு ஆளு பறிக்க வேண்டிய காய இரண்டு பேர எடுக்க சொல்லியிருக்காரு. கேட்டா கட்டுபிடியாகாதாம். இந்த சொனையில கையி, காலு எல்லம் அரிக்குது, உடம்பே எரியுது. இன்னும் ரெண்டு பேர் இருந்திருந்தா இன்னேரம் வீட்டுக்கு போயிருக்கலாம். வேற வேலை இருந்தாலாவது அங்க போயிருப்போம். அதுவும் இல்ல. நூறு நாள் வேலையும் நிறுத்திட்டானுங்க. இப்ப பெரிய பையன் பன்னண்டாவது முடிச்சிட்டான். காலேஜில சேக்கனும், வேற வழியில்லையே.

செல்வி.
எனக்கு நாலு புள்ள. மூணு பொண்ணு, ஒரு பையன். இந்த பசங்கள படிக்க வெக்கத்தான் கஷ்டப்படுறேன். என்னா படிக்க வச்சாலும் வேலை இல்லையே. படிக்க வக்க கடன – உடன வாங்கிட்டு படுறோம். பெரிய பொண்ணு நர்சு படிக்க வச்சேன். அவதான் இப்ப வேலைக்கு போயிட்டிருக்கா’ ன்னு சொல்லி முடிப்பதற்க்குள் கொடிவீரன், ”இவிங்க எல்லாம் படிச்சி வேலைக்கு போயிட்டதால தான் கூலிக்கு ஆளு கெடக்கிறதில்லை”ன்னு சொல்லி சிரித்துக் கொண்டிருந்தவரைப் பார்த்து,……

”காலம்பூரா உங்களுக்கு எல்லாம் அடிமையாவே இருக்கனுமா, இந்த காலத்துல உன் புள்ளங்களே உன் பேச்சை கேக்கறது இல்ல”ன்னு வைத்த குட்டில் அமைதியானார்.
“பொறண்டு படுக்ககூட எங்களுக்கு வீடில்ல. அப்படி எல்லாம் நாங்க வாழும்போதே இவங்களுக்கு எரியுது” இவிங்க மத்தியில வாழ்ந்து எப்படி முன்னேற முடியும்!

பிச்சை, விவசாயி.
இதுக்கு பேரு கேரளா தட்டாங்காய். நாற்பது சென்ட் போட்டிருக்கேன். அக்கம்பக்கத்துல போட்டவங்களுக்கு யாருதும் மொளக்கலை. இத காப்பாத்த ரெண்டு மாசத்துல கணக்கு வழக்கு இல்லாம செலவு பண்ணியிருக்கேன். நாலஞ்சி பறிப்பு முடிஞ்சிருக்கு. ஒரு பறிப்புக்கு நூறு கிலோ கெடைக்கும். ரெண்டு நாளைக்கு ஒருமுறை பறிச்சி கொண்டு போயிட்டு உசிலம்பட்டி சந்தையில போடுவோம். கிலோ பத்து ரூபாய்க்கு எடுக்குறான். இதுல நூத்துக்கு பத்து ரூபா கமிசன் எடுத்துக்குறான். நான் கொண்டு போற செலவு, ஆள்கூலி இதெல்லாம் கணக்கு பார்த்தா ஒன்னும் நிக்காது. நாள் செலவு அடங்கும். எப்பாயச்சும் கிலோ அம்பது ரூபா வரைக்கும் எடுப்பான். அப்ப கையில நிக்கும்.

பிச்சையின் மனைவி வனதேவி.
வெண்டை பறிக்கிற மாதிரி இல்ல இது. குனிஞ்சா நிமிர முடியாது. இடுப்பு எலும்பே விட்டு போகும். கொடி நல்லா வளர்ந்தப்புறம் இரண்டு நாளைக்கு ஒருமுறை வந்து நுனி காம்பை பறிக்கனும். அப்பத்தான் காய் காய்க்கும். இல்லனா கொடி வளர்ந்துட்டே போகும். எவ்ளோ வளர்ந்தாலும் பயிறு வராது.. அப்படியே விட்டுடவும் மனசில்ல. உடம்பு முடியலயேன்னு வூட்ல படுத்தா இவ்ளோ நாள் ஒழப்பு வீணாயிடும்….பா..! உசிலம்பட்டிலருந்து ஆட்டோ புடிச்சி காலையில வந்தாதான் வேலை நடக்கும். இத முடிச்சிட்டு வீட்டுக்கு போயி இருக்க வேலையும் செய்யனும். ஒரு நிமிசம் ஓச்சலு (ஓய்வு) இல்ல.

பெருமாயி.
நீங்க என்னத்த ஃபோட்டோ புடிச்சி என்னத்த மாறப்போவுது. காலத்துக்கும் நாங்க காட்டுமேட்டுலதான் கெடக்கோம். உங்களால முடிஞ்சா மோடிகிட்ட சொல்லி நூறு நாளு வேலையாவது தரச்சொல்லுங்க.

முத்து.
இந்த பக்கம் நெறைய வெள்ளக்காரங்க வந்து சுத்தி பார்த்து போட்டோ புடிச்சின்னு போவாங்க. அவங்க எங்களுக்கு எதாவது சின்ன சின்ன பொருள் கொடுப்பாங்க. நம்ம ஜனங்கள போட்டோ புடிச்சி, அவங்க ஊர்ல பார்த்து சிரிப்பாங்களாமே! என வெகுளியாக கேட்கிறார் முத்து.

  • வினவு புகைப்படச்செய்தியாளர்.

நூல் அறிமுகம் : ஹைட்ரோகார்பன் – ஆழத்தில் புதைந்திருக்கும் பேரபாயம் !

0

ஹைட்ரோகார்பன் ஆழத்தில் புதைந்திருக்கும் பேரபாயம் !

மிழகத்தில் தொடர்ந்து பேரச்சமாக நிலைகொண்டிருக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் குறித்த அறிவியலாளர்கள் மற்றும் சூழியலாளர்களின் கட்டுரைகளைத் தாங்கியிருக்கிறது, இப்புத்தகம். ஹைட்ரோகார்பன்கள் என்றால் என்ன என்ற அறிமுகத்திலிருந்து அவற்றை எடுக்கும் முறைகள் அதனால் ஏற்படும் சூழியல் மற்றும் உடல்நலப் பாதிப்புகளையும் இத்திட்டம் யாருக்கானது  என்பதன் அரசியலையும் எளிமையாக விளக்க முயல்கிறது.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி போன்ற மாவட்டங்களை உள்ளடக்கிய நம் காவிரி டெல்டாப் பகுதியின் மீதும், அருகேயுள்ள புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்கள் மீதும் இந்திய ஆளும் வர்க்கம் கண் வைத்துவிட்டது.

முதலில் நரிமணம், அடியக்கமங்கலம், பாணன்குடி, கமலாபுரம், நன்னிலம் போன்ற இடங்களில் இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் கால்பதித்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 1993 ஆம் ஆண்டிலேயே கோட்டைக்காடு என்கிற இடத்தில் பரீட்சார்த்த எண்ணெய்க்கிணறுகள் தோண்டப்பட்டன. அடுத்து 1998ஆம் ஆண்டு வாணக்கன்காடு என்ற இடத்திலும், 2002 ஆம் ஆண்டு வடகாடு, புள்ளான்விடுதி போன்ற இடங்களிலும் தோண்டப்பட்டன.

பூமிக்குள் 600 முதல் 1500 அடிவரை உள்ள நிலக்கரிப்படுகையில், உருவாகி வெளியேற முடியாமல் பிணைந்திருக்கும் இயற்கை எரிவாயு நிலக்கரிப் படுகை மீத்தேன் என்று அழைக்கப்படுகிறது. பூமிக்குள் எரிவாயுக் குழாயைச் செருகி, நிலக்கரி படுகையை அழுத்திக் கொண்டிருக்கும் இலட்சக்கணக்கான லிட்டர் நீரை வெளியேற்றி, இந்த மீத்தேனை குழாய் வழியாக எடுக்கலாம். இங்கும் 40% இடங்களில் நீரியல் உடைப்பு முறையைப் பயன்படுத்த வேண்டியிருக்கும்.

முதலில், பூமிக்கும் கீழ் உள்ள பாறைப் பரப்பை உடைக்க வேண்டும். பூமியின் உள்ளே கிலோமீட்டர் கணக்கில் துளையிட்டு வேதிக் கரைசல்களை உயர் அழுத்தத்தில் செலுத்தி பாறைகளை உடைக்க வேண்டும். இதற்கு நீரியல் விரிசல் முறை என்று பெயர். இதற்கு முன்பாக அந்த இடத்தில் நிலத்தடி நீரை முற்றிலும் வெளியேற்றினால்தான் திட்டத்தையே செயல்படுத்த முடியும்.

அடுத்த 15 ஆண்டுகளில் நாற்பது மில்லியன் டன் எண்ணெய் மற்றும் 22 பில்லியன் கனமீட்டர் எரிவாயுவைத் தோண்டியெடுக்கும் ஒப்பந்தங்களை அரசு வடிவமைத்திருக்கிறது.

நாடெங்கும் நடக்கும் வளக்கொள்ளைகளைத் தடுத்து நிறுத்தாமல் விட்டால், காவிரி டெல்டா முதல் கன்னியாகுமரிமுனை வரை எந்த மூலையையும் விட்டுவைக்க மாட்டார்கள். (நூலிலிருந்து)

நூல்: ஹைட்ரோகார்பன் ஆழத்தில் புதைந்திருக்கும் பேரபாயம் !

பதிப்பகம்: பூவுலகின் நண்பர்கள், ஜி1, எண்:73, சாய்லஷ்மி அபார்ட்மெண்ட்ஸ், 2வது பிரதான சாலை, குமரன் நகர், சின்மயா நகர், கோயம்பேடு, சென்னை – 92.
பேச: 9094990900

பக்கங்கள்: 48
விலை: ரூ.40.00

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,
(கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
கடையின் புதிய முகவரி கீழே)
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை,
நெற்குன்றம், சென்னை – 600 107.
(வெங்காய மண்டி பேருந்து நிறுத்தம் அருகில்)
பேச – (தற்காலிகமாக) : 99623 90277

  • வினவு செய்திப் பிரிவு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் களப்பலியான தோழர் ஜெயராமனின் இறுதிப்பயணம் !

யிர்க்கொல்லி ஆலையான தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக் கோரி மக்கள் போராட்டம் 99 நாட்களைக் கடந்து கடந்த மே 22 ஆம் நாளன்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஸ்டெர்லைட்டை மூடும் வரை அந்த இடத்தை விட்டு போகப் போவதில்லை என்று முடிவெடுத்து, போராட்டத்தை அறிவித்திருந்தனர். இந்த முற்றுகையில் பங்கேற்பதற்காக ஊர்வலமாகச் சென்ற பொதுமக்கள் மீது போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டிலும் தடியடியிலும் 13 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்தக் களப்பலியில் தன்னையும் இணைத்துக் கொண்டு தியாகியானார், மக்கள் அதிகாரம் தோழர் ஜெயராமன்.

இறந்தவர்களின் உடலில் இருந்து தடயங்களை அரசுத் தரப்பு அழித்து விடாமல் இருக்க வேண்டும் என்பதை முன்வைத்து நடத்தப்பட்ட சட்டப் போராட்டத்தின் காரணமாக பிணக்கூராய்வு முடியும் வரை உடல்களைப் பதப்படுத்தி வைக்க உத்தரவிட்டிருந்தது நீதிமன்றம். இந்த நிலையில் ஜூன் 6 அன்று 6 பேர்களின் பிணக்கூராய்வு செய்திட சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டது. அதன்படி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தோழரின் உடல் பிணக்கூராய்வு செய்யப்பட்டது. தோழரின் சொந்த ஊரான உசிலம்பட்டியருகில் உள்ள ஆரியப்பட்டிக்கு பிற்பகல் 3 மணிக்கெல்லாம் உடல் கொண்டு வரப்படும் என்ற எதிர்பார்ப்போடு தமிழகமெங்கும் இருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான தோழர்கள் ஆரியப்பட்டி விலக்கு அருகில் காத்திருந்தனர்.

தூத்துக்குடியிலிருந்து இந்த ஊர் 130 கி.மீ.க்கும் அதிகத் தொலைவிலுள்ளது எனத் தெரிந்திருந்தும் தாமதமாக பிணக்கூராய்வை ஆரம்பித்து இரவு நெருங்கும் நேரத்தில்தான் முடித்தனர். தோழர் ஜெயராமனின் உடலை சுமந்து வந்த ஆம்புலன்ஸ் இரவு 9 மணிக்குதான் ஆரியப்பட்டி விலக்குக்கு வந்து சேர்ந்தது. அங்கிருந்து ஒரு கி.மீ. தூரத்துக்கு ஊர்வலமாக தோழரின் உடலோடு முழக்கமிட்டபடி மக்கள் ஆரியப்பட்டிக்கு வந்தனர்.

“மக்கள் உயிரைக் காத்திட உயிரைக் கொடுத்த தோழனே! எங்கள் ஜெயராமனே! வீர வணக்கம்! வீர வணக்கம்!”, “ஸ்டெர்லைட் வீசி எறிந்த எலும்புத் துண்டுக்கு வாலாட்டும் எடப்பாடி கும்பலும் தமிழ்நாடு போலீசும் மக்கள் விரோதி! சமூக விரோதி!” என்ற முழக்கத்துடன் 500 பேருக்கும் மேல் சென்ற ஊர்வலத்தில் தோழரைக் குறிவைத்துக் கொன்ற போலீசின் மீதான கோபம், “சிந்திய ரத்தம் ஒவ்வொரு துளியையும் மறக்க மாட்டோம்! மன்னிக்க மாட்டோம்!” என முழக்கமாக விண்ணதிர எழும்பியது.

ஊர் எல்லைக்குள் ஊர்வலம் நுழைந்ததும் உறவினர்களும் ஊர்க்காரர்களும் அழுத குரல் அனைவரையும் உருக்கியது. இதைப் பற்றி எவ்விதமான உணர்வுமற்ற போலீசோ ஊர்வலத்தில் வந்தவர்களை துல்லியமாக வீடியோ எடுப்பதில் முனைந்திருந்தது.

தோழர் ஜெயராமனின் வீட்டருகே மக்கள் அதிகாரம், மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர் தலைமையில் இரங்கல் கூட்டம் தொடங்கியது. தோழரின் உடல் மீது மக்கள் அதிகாரத்தின் கொடியை தோழர்கள் காளியப்பனும், சூரியாவும் போர்த்தினர்.

இந்த இரங்கல் கூட்டத்தில் ஆரியபட்டி முன்னாள் ஊராட்சி தலைவர் திரு. பாண்டி, சி.பி.எம். கட்சியின் மதுரை மாவட்ட செயற்குழு உறுப்பினரும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மதுரை மாவட்ட செயலாளருமான தோழர் செல்லக்கண்ணு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விவசாயிகள் பாதுகாப்பு இயக்க மாநில துணைச் செயலாளர் திரு. தென்னரசு, அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மதுரை புறநகர் செயலாளர் தோழர் ஜெயகுமார், தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் மாநிலத் தலைவர் திரு மீ.த.பாண்டியன், மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் சென்னை மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் மில்ட்டன், 58 கிராம கால்வாய் பாசன விவசாயிகள் சங்க துணை செயலாளர் தோழர் ஜெயபிரகாஷ், மதுரை வழக்கறிஞர்கள் கனகவேல், ஆனந்த முனிராசு, ம.க.இ.க.வை சேர்ந்த தோழர் கதிரவன் ஆகியோர் உரையாற்றினர்.

பேசிய அனைவரும் கார்ப்பரேட்டின் லாபவெறிக்காக சொந்த நாட்டு மக்களைக் கொல்லும் அரசின் கொலைவெறியையும், போலீசு எவ்வாறு வேதாந்தாவின் ஏவல் நாயாக தூத்துக்குடியில் மக்களைக் குதறியது என்பதையும், தூத்துக்குடி மக்களின் கோரிக்கைக்காக, மக்களின் விடுதலைக்காக போராடச் சென்று களப்பலியான ஜெயராமனின் பாதையை நாம் வரித்துக் கொள்வோம் என்றும், அவரால் இந்த மண்ணுக்கே பெருமை என்றும் அழுத்தமாக விளக்கினர்.

இறுதியில் உரையாற்றிய மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.ராஜூ, ‘’உயிரைக் கொடுத்து மக்களுக்காக போராடிய தோழரின் தியாகத்தை உயர்த்திப் பிடித்து, அடுத்தடுத்து கார்ப்பரேட்களுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்போம். ஆயிரம் பேரை சுட்டாலும் நாங்கள் ‘சுடு பார்ப்போம்’ என நெஞ்சை நிமிர்த்தி நிற்போம். பின்வாங்க மாட்டோம். ஜெயராமனின் பாதையில் செல்வோம்… ஆனால் எங்களுக்கு அடுத்த தலைமுறை சும்மா குண்டடிபட்டுக் கொண்டே இருக்காது.” என உரையாற்றியதும் இரங்கல் கூட்டம் முடிந்தது.

இரவு 11 மணி ஆகியிருந்தது. தோழர் ஜெயராமனின் இறுதிப்பயணம் தொடங்கியது. மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் போரில் தன் உயிரைக் கொடுத்த தோழனே! உன் பாதையில் ஆயிரமாயிரமாய் அடுத்தடுத்து வருவோம்.! செவ்வணக்கம்!!

தகவல்:

  • மக்கள் அதிகாரம்.

மோடியின் வெறும் பக்கோடாவும் எடப்பாடியின் சிக்கன் பக்கோடாவும் | கருத்துப்படம்

பிரதான் மந்திரி பக்கோடா விக்கச் சொல்லிட்டாரு…
நாம சிக்கன் வளர்த்து சிக்கன் பக்கோடாவே விக்கச் சொல்லலாம்.

யோசனை எப்படி இருக்கு துணை மந்திரியாரே…
க.க.க.போ….

செய்தி: பெண்களுக்கு இலவச நாட்டுக்கோழி; 38,500 பேருக்கு தலா 50 கோழிகள் வழங்கப்படும்: புதிய திட்டத்தை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி

கருத்துப்படம்: வேலன்.

நீட் தேர்வின் இரத்தப் பசிக்கு பலி கொடுக்கப்பட்ட இளங்குருத்துகள் !

டந்த ஆண்டு அரியலூர் மாணவி அனிதாவைக் காவு வாங்கிய நீட் தேர்வு, இந்த ஆண்டு இதுவரையில் 3 பேரைப் பலி கொண்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த பெருவளூர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் ஒரு கூலித் தொழிலாளி. இவரது மகள் பிரதீபா கடந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் 1125 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். சிறு வயது முதலே மருத்துவராகவேண்டும் என்ற கனவுடன் படித்து வந்த பிரதீபா, பத்தாம் வகுப்பில் 490 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார். கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி, தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்ததால் சேரவில்லை.

வறுமையான வாழ்நிலையையும் தாண்டி எப்படியாவது அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றுவிடவேண்டும் என்ற குறிக்கோளில் ஒரு ஆண்டு முழுவதும் நீட் தேர்வுக்குத் தயாரான பிரதீபாவை ஒட்டுமொத்தமாக முடக்கியது நீட். பிரதீபாவை மட்டுமல்ல, தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரையும் திட்டமிட்டு முடக்கியது நீட் தேர்வை நடத்தும் மத்திய அரசு நிறுவனமான சி.பி.எஸ்.ஈ.

நீட் தேர்வின் முதல் பலி அனிதா !

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும், தேர்வு எழுதச்சென்ற மாணவர்கள் பல்வேறு இன்னல்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. தேர்வு மையம் குறித்த குழப்படியில் தொடங்கி, தேர்வுக்கான வினாத்தாளில் சுமார் 49 கேள்விகள் தமிழில் தவறாக மொழிபெயர்க்கப்பட்டது வரை, திட்டமிட்டு கழுத்தறுப்பு வேலைகளில் இறங்கி, தமிழக மாணவர்களை வஞ்சித்தது சி.பி.எஸ்.ஈ.

மொழிபெயர்ப்பில் தவறான பொருள்படும்படியான கேள்விகள், மற்றும் பதிலுக்கான தெரிவுகள் கொடுத்த்தால், மாணவர்களுக்கு ஏற்பட்ட மதிப்பெண் இழப்பிற்கு இழப்பீட்டு மதிப்பெண் அளிக்க வேண்டும் என தேர்வு வாரியத்துக்கு கடிதம் எழுதியுள்ளார் பிரதீபா.

இந்நிலையில் நேற்று நீட் தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து மனமுடைந்த பிரதீபா, எலி மருந்து விசத்தை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். ’நீட்’டின் கொடுங்கரம் வெறுமனே பிரதீபாவோடு மட்டும் நிற்கவில்லை. கடலூர் மாவட்டம் உண்ணாமலை செட்டி சாவடியைச் சேர்ந்த அருண்பிரசாத் என்ற மாணவரையும் பலி கொண்டுள்ளது நீட்.

கடந்த 2016-17ஆம் கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பில் 1150 மதிப்பெண் எடுத்து நீட் தேர்வு எழுதித் தோல்வி அடைந்த அருண்பிரசாத், இந்த முறை மீண்டும் நீட் தேர்வு எழுதினார். ஆனால் இம்முறையும், கேள்வித்தாள் குளறுபடி காரணமாக அவரால் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. இதனால் விரக்தியடைந்த அருண்பிரசாத், வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திருச்சி சமயநல்லூரைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற மாணவியும் , நீட் தேர்வு தோல்வியால் கடந்த 06-06-2018 அன்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.  ‘நீட் ’ தற்கொலைகள் நீண்டு கொண்டே செல்கின்றன.

கூடுதலாக, செஞ்சியை அடுத்த மேல்சேவூரைச் சேர்ந்த மாணவி கீர்த்திகா நீட் தேர்வு குளறுபடியின் காரணமாக விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.  அவரை மீட்டு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நீட் தேர்வு முடிவுகள் வெளியான அன்று முடிவுகளைப் பார்க்கச் சென்ற சென்னை  மாணவி கோடீஸ்வரி என்பவர், தாம் தேர்வாகவில்லை என்பதைக் கண்டு மனமுடைந்து வீட்டை விட்டு வெளியேறுவதாக குடும்பத்தினருக்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு இரயிலேறி பீகார் சென்றிருக்கிறார். அவரைத் தேடிக் கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்து வந்திருக்கின்றனர் அவரது பெற்றோர்.

நீட்-ன் கொலைக்கரம் சில மாணவ மாணவிகளின் உயிர்களைப் பறித்துள்ளது எனக் கடந்து  போக முடியாது. ஏனெனில் தங்களது பெற்றோரையும் உறவினர்களையும் ஆசிரியர்களையும் எதிர்கொள்ள முடியாமல், மன அழுத்தத்தில் புழுங்கி முடங்கியிருக்கும் மாணவ மாணவியரின் எண்ணிக்கை அதிகம். அதற்கு வீட்டை விட்டு வெளியேறிய மாணவி கோடீஸ்வரியே சாட்சி

இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த சில மாணவர்களால், தவறான 49 கேள்விகளுக்கும் தலா 4 மதிப்பெண் வீதம் 196 மதிப்பெண்களை தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தொடுக்கப்பட்ட வழக்கையும் அவசர வழக்காக விசாரிக்க முடியாது என கைவிரித்து விட்டது மதுரை உயர்நீதிமன்ற அமர்வு.

நீட் தேர்வு பலியான பிரதீபா

இந்த ஆண்டு தமிழகத்தில் மட்டும் நீட் தேர்வு எழுதியவர்களின் மொத்த எண்ணிக்கை 1,14,602 பேர். அதில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 45,336  பேர். இந்திய அளவில் நீட் தேர்வில், மொத்த தேர்ச்சி விகிதம் 56%. ஆனால், தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம்: 39.55 % தான்.

நீட் தேர்வுகளில் இராஜஸ்தான், ஹரியானா போன்ற கல்வியில் பின் தங்கிய  மாநிலங்கள் முன்னிலை வகிக்கின்றன. ஆனால் கல்வியில் முன்னேறிய மாநிலமான தமிழ்நாடு 35-வது இடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் மீது தொடர்ச்சியாக திட்டமிட்டு நட்த்தப்பட்டு வரும் தாக்குதல்களில் ஒன்று நீட் தேர்வு.  தமிழகத்தின் கல்வி வளத்தை ஒட்டுமொத்தமாக அழிக்கவும், கிராமப்புற ஏழை மக்களை, உயர்கல்வியிலிருந்து தள்ளி வைக்கவும் கொண்டுவரப்பட்ட தேர்வு முறைதான் நீட்.

தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய 1.14 இலட்சம் பேரில் வெறுமனே 9154 பேர் தான் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள். அதிலும் தேர்ச்சியடைந்த மாணவர்கள் 1,337 பேர்தான். சரியாக சொல்வதென்றால் மொத்த தேர்ச்சி விகிதத்தில் 3% பேர்தான் அரசு, அரசு உதவிபெறும் பள்ளியில் படித்த மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள 97% பேர் தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களே.

நீட் தேர்வு முடிவுகளில் தமிழகம் பின் தங்கியதைத் தொடர்ந்து, தமிழக பாடத்திட்ட்த்தின் மீது பழியைப் போடுகின்றனர் சில ’அறிவுஜீவிகள்’. சி.பி.எஸ்.ஈ. பாட்த்திட்ட்த்திற்கு இணையான பாட்த்திட்டம் இங்கு இல்லை என்று லாவணி பாடுகின்றனர். ”திராவிடக் கட்சிகள், பள்ளிக் கல்வியை சீரழித்த்தன் விளைவுதான் தமிழகம் பின் தங்கியதற்குக் காரணம்” என்கிறார் ராமதாஸ்.

நீட் போன்ற போட்டித்தேர்வுகளில் மாணவர்களைக் குழப்பும் பல்வகைப் பதில்களில் இருந்து ஒன்றைத் தேர்வு செய்ய மிகத் தீவிரமான பயிற்சி தேவை. அதே கேள்விக்கான விளக்கத்தை சாதாரண மாணவர்கள் சிறப்பாக பதிலளிப்பர். ஆனால் அத்தகைய பல் பதில்களிலிருந்து ஒன்றை தேர்வு செய்வது என்பது, அதற்கான் பிரத்யேகப் பயிற்சி பெறப்பட்டவர்களுக்கு மட்டுமே சாத்தியமானது.

கல்வியாளர் எஸ்.ராஜகோபாலன் தனது முகநூல் பக்கத்தில் இதுகுறித்துக் கூறுகையில், “சிபிஎஸ்ஈ பாடத்திட்டம் படித்த நடுத்தர வர்க்கத்தினருக்கானது. இதனை புரிந்து கொள்ளாது பேசுவது சரியல்ல. இதே போல மேனிலைத் தேர்வு வினாத்தாள்களையும் மதிப்பிட வேண்டும். விளக்கமாக விடை எழுத வேண்டும். நீட் தேர்வில் பல்விடைகளில் ஒன்றைத் தெரிவு செய்ய வேண்டும். மாணவரைக் குழப்பும் வகையில் மாற்று விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும். அதே வினாவிற்கு விடை எழுதச் சொன்னால் சரியாக எழுதுவார்கள்” என்கிறார்.

மேலும் போட்டித் தேர்வுக்கான கேள்விகளையும், பாடத்திட்டத்தை அமைக்கும் ஆசிரியர்களின் சிந்தனை முறையையும் தோலுறித்திருக்கிறார். ”பாடத்திட்டக் குழுவில் என்னைத் தவிர இரண்டு பள்ளி ஆசிரியர்கள் இருந்தார்கள். ……… . பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்கள். இந்திய கிராமங்களை அறியாதவர்கள். ஒரு குறிப்பிட்ட பாடம் மாணவர்க்குக் கடினமாக இருக்கும் என்று நான் சொன்ன பொழுது ஒரு பேராசிரியர் ஐந்தாம் வகுப்பு படிக்கும் எனது பெண் சுலபமாக விடை கூறுவார் என்று கூறினார். அனைவர்க்கும் உஙகளைப் போன்ற பெற்றோர் கிடையாது. யமுனையின் அக்கரையிலுள்ள காசியாபாத் பள்ளிக்குச் செல்வோம். மேற்சட்டையில்லாது கிழிந்த ட்ரவுசர் போட்ட மாணவர்களுக்குப் புரிய வைக்கத் தயாரா என்று வினாவெழுப்பினேன். சிபிஎஸ்ஈ பாடத்திட்டம் படித்த நடுத்தர வர்க்கத்தினருக்கானது. இதனை புரிந்து கொள்ளாது பேசுவது சரியல்ல.” என்று கூறியிருக்கிறார்.

நீட் விவகாரத்தில் கீர்த்தனாவின் வெற்றியின் பின்னணியில் உள்ள மருத்துவர் பெற்றோரும், பிரதீபாவின் மரணத்தின் காரணமான ஏழ்மையான சூழலுமே சாட்சி.

தற்போது ஒடிசா மாநில கூடுதல் தலைமைச் செயலராக இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலகிருஸ்ணன், தனது முகநூல் பக்கத்தில் ” “நீட்” தேர்வில் நான் நிச்சயம் தோற்றிருப்பேன்; ஆனால் நான் தமிழில் ஐ.ஏ.எஸ் எழுதி வென்ற முதல் தமிழன்” என்று நீட் தேர்வு நடந்த கேவலமான முறையைச் சாடுகிறார்.

பணம் உள்ள மாணவர்கள், தனியார் பயிற்சி மையங்களில் இலட்சக்கணக்கில் செலவு செய்து, இரண்டு ஆண்டுகள் பயிற்சி பெற்று நீட் தேர்வில் வெற்றி பெற்று விடுகின்றனர். ஆனால், சாதாரண கிராமப்புற ஏழை மாணவர்கள், அத்தகைய உயர்தர பயிற்சிகள் ஏதும் கிடைக்கப்பெறாமல், இந்த போட்டித் தேர்வை சந்திக்கவியலாமல், தமது மருத்துவக் கனவை மாய்த்துக் கொண்டோ அல்லது உயிரை மாய்த்துக் கொண்டோ நீட் தேர்வை கடந்து செல்கின்றனர்.

இந்த ஆண்டு ‘நீட்’டிற்கு இரண்டு உயிர்கள் பலி கொடுக்கப்பட்ட பின்னரும், நீட் தொடரும் என தயக்கமின்றிச் சொல்கிறார் தமிழிசை. எத்தனை பேரைப் பலிகொண்டாலும், மனுநீதியின் புதிய வடிவத்தைக் கைவிட மாட்டோம் என்ற ஆர்.எஸ்.எஸ். – பாஜகவின் குரலைத்தான் எதிரொலிக்கிறார், தமிழிசை.

இது பார்ப்பன சதிக்கு சமாதி கட்டிய மண் என்பதை காவிக் கும்பலுக்கு நினைவு படுத்துவோம். அதுவே நீட் தேர்வின் கொடுங்கோன்மைக்கு களப்பலியானவர்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி.

  • வினவு செய்திப்பிரிவு.