Friday, June 20, 2025
முகப்பு பதிவு பக்கம் 437

சுட்டுக் கொல்லப்பட்ட தோழர் ஜெயராமனின் மனைவி – மகளை சந்தியுங்கள் !

தோழர் ஜெயராமன் மனைவி பாலம்மாள் மகள் நந்தினி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் ஆரியப்பட்டி கிராமத்தை சேர்ந்த மக்கள் அதிகாரத்தின் தோழர் ஜெயராமன் கலந்து கொண்டார். இந்த போராட்டத்தில் கலெக்டர் அலுவலகம் முன்பு முழக்கமிட்டவாறு மக்களோடு சென்று கொண்டிருந்த தோழர் ஜெயராமனை போலீசு சுட்டது. தலையின் வலது பக்க மூளையில் குண்டு பாய்ந்தது. அதில் படுகாயமடைந்த தோழர் ஜெயராமன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 2018, மே – 23-ம் தேதி மரணமடைந்தார்.

தோழர் ஜெயராமன்

தோழர் ஜெயராமன் உசிலை பகுதியில் செயல்பட்டு வந்த விவிசாயிகள் விடுதலை முன்னணியின் அரசியல் செயல்பாட்டால் ஈர்க்கப்பட்டு கடந்த பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு அமைப்பில் இணைந்தார். பிறகு மக்கள் அதிகாரம் அமைப்பில் இணைந்து செயல்பட துவங்கினார்.

ஆரியப்பட்டி கிராமம் முழுவதும் அமைப்பு கொள்கைகளை மக்களிடம் எடுத்து பேசுவது, ஊரின் இரு பகுதிகளிலும் துண்டு பிரசுரங்கள் விநியோகிப்பது என்று முழு மூச்சாக மக்கள் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அமைப்பின் செயல்பாடுகளுக்கு குடும்பத்துடன் வருவார். கடைசியாக தோழர் ஜெயராமன் தனது குடும்பத்துடன் ஆகஸ்டு 5, 2017-ல், தஞ்சையில் நடந்த “விவசாயிகளை வாழவிடு” மாநாட்டில் கலந்து கொண்டார்.

தோழர் வாழ்ந்த கிராமத்திற்கு சென்றோம். வீட்டின் முன்பு தென்னங்கீற்றால் ஒரு பந்தல் போடப்பட்டு கிராமத்தினர் அனைவரும் துக்கம் விசாரித்துக் கொண்டிருந்தனர்.

தோழர் ஜெயராமன் வீட்டின் முன்பு

அனைவருடைய முகத்திலும் கவலை. ஓட்டை உடைசலுடன் ஒரு சிறிய ஓட்டு வீடு. வீட்டில் உருண்டு படுக்க கூட இடமில்லை. தட்டு, முட்டு சாமான்கள் அனைத்தும் சிறிய அறையில் ஓரமாக அடைந்து கிடந்ததன. அந்த அறையிலே சமைத்து சாப்பிட்டு உறங்குவது தான் அந்த எளிய குடும்பத்தின் வாழ்க்கை. கடின உழைப்பாளியான தோழர் ஜெயராமன் கடந்த ஆண்டு பசுமை திட்டத்தின் கீழ் வீட்டை கட்ட முயன்றிருக்கிறார். அதுவும் முடிக்கப்படாத நிலையில் பாதியில் நிற்கிறது. அந்த வீட்டின் உள்ளே நுழைந்ததும் தோழர் பகத்சிங்கின் படம் சுவரில் ஒட்டி இருந்ததை காண முடிந்தது. தோழர் மக்களை எந்த அளவிற்கு நேசித்தார் என்பதை புரிந்துகொள்ள அவருடைய எளிய வாழ்க்கையே நமக்கு உணர்த்துகிறது.

பழைய வீட்டின் ஓரமாக தோழர் ஜெயராமனின் தாய் மற்றும் தந்தை நான்கு நாட்களாக சாப்பிடாமல், தூங்காமல் உடைந்து போயிருந்தனர். அவர்கள் அருகில் கவலையும் கண்ணீருமாக உட்கார்ந்திருந்தார், தோழர் ஜெயராமனின் மனைவி பாலம்மா

தோழர் ஜெயராமன் குடும்பம் (இடமிருந்து வலமாக), தாய் தேனம்மாள்,தந்தை நந்தன், மனைவி பாலம்மாள். மகள் நந்தினி, தங்கை பாண்டியம்மாள்.

கடைசியாக உங்க கணவரை எப்பொழுது பார்த்தீர்கள்?

செவ்வாய் கிழமை காலையில பார்த்தேன் (22.05.2018). நாலு மணிக்கு எழுந்திரிச்சி கிளம்பினார். போயிட்டு வரேன்னு சொன்னார். அவ்ளோதான்.

போராட்டத்துக்கு போனது உங்களுக்கு தெரியுமா?

தெரியும். போராட்டத்துக்கு போறதா முதல்ல அவர் நினைக்கல. ஜோலி நெறையா இருக்குன்னு சொன்னாரு. அதுக்கப்புறம் தான் காலையில எழுந்து கிளம்பி போராட்டத்துக்கு போறேன், கதவ சாத்திக்கன்னு சொல்லிட்டு போனார்.

நீங்களும் இதுக்கு முன்னாடி அமைப்பு நடத்துற வேற போராட்டத்துல கலந்துகிட்டிருக்கிங்களா?

ஆமா. நாங்க எல்லா போராட்டத்துக்கும் போவோம். ஊர் மக்களும் வந்திருக்காங்க.

மருத்துவமனையில உங்க கணவரை பார்த்திங்களா?

பார்த்தேன். இரண்டு நாள் கூட இருந்தேன். பிரேத சோதனை இடத்துக்கு கொண்டு போன பிறகுதான் வீட்டுக்கு வந்தேன். காப்பாத்த முடியாதுன்னு டாக்டருங்க சொல்லிட்டாங்க. நாங்க போயி முதல்ல கேட்டதுக்கு குண்டு சிதறி போச்சி, நாலு பக்கமும். காப்பாத்த முடியாது. எதோ முயற்சி பண்றோம். அது உங்களுக்கு நல்ல நேரம் இருந்தா உண்டு. இப்ப எதுவும் சொல்ல முடியாதுன்னு சொல்லிட்டாங்க.

comrade jayaraman wife and daughter
தோழர் ஜெயராமனின் மனைவி பாலம்மாள் மற்றும் மகள் நந்தினி

தோழருகிட்ட ஏதாவது பேசனிங்களா?

பேசினேன். நான் வந்திருக்கேன்னு சொல்லி கூப்பிட்டேன். எந்த முழிப்பும் இல்ல. எந்திரிக்கல. தொட்டு பார்த்தப்ப கொஞ்ச உணர்வு இருந்துச்சி.

தோழர் என்ன வேலை செய்ஞ்சார்?

காட்டு வேலைக்கு போறது, களை வெட்டுறதுல இருந்து எல்லா வேலையும் செய்வார். இப்ப கொஞ்ச நாளா காட்டு வேலை இல்லாததால ஜவுளி வியாபாரம் பண்ணிட்டிருந்தார்.

இனி குடும்பத்தை எப்படி காப்பாத்த போறீங்க?

காட்டு வேலைக்கு தான் போகணும். ஒரு நாளைக்கு நூறு ரூபா தருவாங்க. அதுவும் எப்பவும் வேலை இருக்காது.

தூத்துக்குடி போராட்டம் பத்தி தோழர் என்ன சொன்னார்?

நூறு நாள் மக்க போராட்டம் பண்ணுறாங்க. எல்லாம் நல்லதுக்காகத்தானே பண்றாங்க. அதனால தான் இவரும் போராட்டத்துக்கு போனாரு. போராட்டம் நடக்குதுன்னு தெரிஞ்சி தான் எல்லாரும் போனாங்க.

துப்பாக்கி சூடு தகவல் கேட்டதும்…

அதிர்ச்சியா இருந்துச்சி. முதல்ல அவரு இல்ல வேற ஆளுன்னு சொன்னாங்க. அப்புறம் மறுபடியும் போன் பண்ணிதான் சொன்னாங்க. (மேற்கொண்டு சொல்ல முடியாமல் அழுகிறார்)

அவரு இயற்கையாவே எல்லா போராட்டத்துக்கும் போறவரு. அப்படி போயிட்டு இறந்துட்டாரு. என்ன ஒரு கஷ்டம்னா கொஞ்சம் செய்முறை இல்லாம இருக்கு. பொண்ணு படிக்கணும். வீடு கட்ட வாங்குன கடன் இருக்கு.

தூத்துக்குடி மருத்துவமனையில மக்கள் என்ன சொன்னாங்க?

அந்த ஆலையை கட்டாயம் மூடியே ஆகணும். அந்த ஊர் மக்களுக்கு மட்டுமில்ல. எல்லா ஊர் மக்களுக்கும் அதுதான் நல்லது. அவரு இருந்த பெட்டு முழுக்க பாதிக்கப்பட்டவங்க. என் கண் முன்னாடியே ரெண்டு பேர் இறந்துட்டாங்க.

ஸ்டெர்லைட் ஆலையை அரசாங்கம் மூட மாட்டேன்னு சொல்லுதே?

அதனால தான் இன்னும் போராட்டம் பண்றாங்க. போராட்டம் பண்றது தான் நல்லது. அவன் காசு கொடுத்து மடக்கத்தான் பார்ப்பான். ஆலையை மூடமாட்டன். போராட்டம் பண்ணாத்தான் மூட முடியும்.

இனிமே  நீங்க தூத்துக்குடி போராட்டத்தில் கலந்துக்குவிங்களா?

மக்கள் கூப்பிட்டா கலந்துக்குவோம். அதுக்கு மேல நடக்கறது நடக்கட்டும்.

கடைசியா உங்க கணவரோட கலந்துக்கிட்ட போராட்டம் எது?

தஞ்சாவூர்ல நடந்த விவசாயிக மாநாட்டுல நாங்க குடும்பத்தோட கலந்துகிட்டோம்.

போலிசு, அதிகாரிகள் வந்து ஏதாவது விசாரிச்சாங்களா?

வந்தாங்க. இங்க ஊர்ல இருக்கவங்க கிட்ட விசாரிச்சிருக்காங்க. அப்ப நான் இங்க இல்ல. தூத்துக்குடி ஹாஸ்பிட்டல்ல இருந்தேன். அங்கேயும் பாடியை வாங்கிக்க சொன்னாங்க. நான் பாடியை வாங்க மாட்டேன்னு சொல்லிட்டேன். எல்லாரும் பாடியை வாங்கும் போது அவரோட பாடியும் வரட்டும். எந்த நோக்கத்துக்காக இறந்தாரோ அந்த நோக்கம் நிறைவேர்ற வரைக்கும் பாடியை வாங்க மாட்டோம்.

தோழர் ஜெயராமன் மகள் நந்தினி, கருமாத்தூரில் உள்ள அருள் ஆனந்தர் கல்லூரியில் B.A முதலாம் ஆண்டு படிக்கிறார்.

“எங்க அப்பா அமைப்புக்கு போறதுக்கு முன்னாடி எப்படி இருந்தார்னு தெரியாது. ஆனா அமைப்புக்கு வந்த பிறகு எங்கள நல்லபடியாத்தான் பாத்துகிட்டார். டி.வியில செய்திய பார்த்து எங்களுக்கு விளக்குவார். நோட்டிசு எல்லாம் கொடுத்து என்ன படிக்க சொல்லுவாரு. மக்கள் படுற கஷ்டத்தை சொல்லுவாரு.

முதல்ல அந்த ஆலையை மூடச்சொல்லுங்கள். அதற்காகத்தான் அப்பா உயிரை விட்டார். அந்த ஆலையை மூட வேண்டும். இது திட்டமிட்டு சுட்டிருக்கிறார்கள். எந்த எச்சரிக்கையும் கொடுக்காமல் சுட்டதால் தான் இந்த இழப்பு. நாங்க இதுக்கு முன்னாடி போராட்டத்துக்கு போயிருக்கோம். மூணு நாள் அடைச்சி வைப்பாங்க. ஆனா இப்படி சுட்டது கிடையாது.

அகிம்சை வழியில் போராடினதுக்கே இத்தனை உயிர் போயிடுச்சி. அப்ப நாமளும் போராட்டத்தை மாத்தித்தானே ஆகணும்.

கலெக்டர் உட்பட எல்லோரும் திட்டம் போட்டு தான் செய்ஞ்சிருக்காங்க. எங்க பஞ்சாயத்து நடந்தாலும் கலெக்டர் அங்க இருந்து தானே ஆகணும். எதுக்கு அந்த இடத்தை விட்டுட்டு போகணும்? எல்லாமே திட்டமிட்டு செஞ்சிருக்காங்க. இதற்கு காரணமானவங்க மீது நடவடிக்கை எடுக்கணும்.

போலீசு நடந்துகிறதை பொருத்துத்தான் நம்ம போராட்டத்தை நடத்தணும். இங்க அகிம்சை வழியில் போராடினதுக்கே இத்தனை உயிர் போயிடுச்சி. அப்ப நாமளும் போராட்டத்தை மாத்தித்தானே ஆகணும்? – என்கிறார் நந்தினி.

குடும்பத்தின் தலைமகன் இறந்து போன நிலையிலும், உற்றார் உறவினர் துக்கம் விசாரிக்க வந்து கொண்டிருந்த நிலையிலும் அவர்கள் நிலை குலையவில்லை. உழைத்தால்தான் வாழ்க்கை எனும் நிலையிலும் அந்தக் குடும்பம் தனது சமூகக் கடமையில் இருந்தும், பொறுப்புணர்விலும் கொஞ்சம் கூட விட்டுக் கொடுக்கவில்லை.

உழைக்கும் மக்களிடம் தான் சோகம், மரணம் எல்லாம் காவியத்துயரமாக கடைபிடிக்கப்படுவதில்லை. போராட்டமே வாழ்க்கை என்பதை அவர்கள் எல்லாத் தருணங்களிலும் உணர்ந்தே இருக்கிறார்கள். வாழ்வில் அனைத்து வசதிகளும் இருந்தும், பொது வாழ்க்கைக்கோ இல்லை அரசியல் போராட்டங்களுக்கோ, இத்தகைய அரசியல் அமைப்புகளில் பணியாற்றுவதற்கோ தயங்கும் நண்பர்கள் இம்மக்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்!  இதே நிலையை தூத்துக்குடியில் கொல்லப்பட்ட  மக்கள் குடும்பங்களிலும் பார்க்கலாம். அவர்களும் இதே போல ஸ்டெர்லைட்டை மூடுவதைத்தான் முதன்மையாக பேசுகிறார்கள்!

13 அல்லது அதிகம் பேர்களைச் சுட்டுக் கொன்ற அரசு இந்த உணர்வையும், உணர்ச்சியையும் என்ன செய்ய முடியும்? இதை அழிப்பதற்கு போலீசிடமும், இராணுவத்திடமும் எந்த ஆயுதமும் இல்லை.

நேர்காணல் – படங்கள் : வினவு செய்தியாளர்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடு | நிர்மலா கொற்றவை | அஜயன் பாலா | செந்தில் | சீனு இராமசாமி

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேரை படுகொலை செய்த அரசைக் கண்டித்து 26.05.2018 அன்று தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டாளர்கள் கூட்டமைப்பு சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பத்திரிகையாளர்கள், திரைக்கலைஞர்கள், எழுத்தாளர்கள் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து தங்களது உள்ளக்குமுறலை, கண்டனத்தை பகிர்ந்து கொண்டனர்.

பகுதி – 1

எழுத்தாளர் நிர்மலா கொற்றவை, எழுத்தாளர் அஜயன் பாலா,  ஊடகவியலாளர் செந்தில், திரைப்பட இயக்குநர் சீனு இராமசாமி ஆகியோரின் கண்டனப் பதிவுகள்.

ஸ்டெர்லைட்டை மூடு ! இலண்டன் இந்தியத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் !

தூத்துக்குடி படுகொலைகளைக் கண்டித்து இலண்டனில் கடந்த 26 மே 2018 சனிக்கிழமையன்று மாலை 3-5 மணிவரை போராட்டம் நடைபெற்றது. இந்தியாவிலும், இங்கிலாந்திலும் வேதாந்தாதாவிற்கு எதிரான நடவடிக்கைகள்  எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கப்பட்டன.

தூத்துக்குடி மக்கள் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட போராட்டத்தில் நட்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். பலர் காயமடைந்திருக்கின்றனர். இதனைக் கண்டித்து இலண்டன் ,அல்டுவிச்சில்( Aldwych, London) இந்திய தூதரகத்தின்( Indian High Commission) முன்பு போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டமானது ஃபாயில் வேதாந்தா(Foil Vedanta) , இங்கிலாந்திலுள்ள தமிழ் மக்கள், பெரியார் அம்பேத்கர் வாசிப்பு வட்டம், தெற்காசிய ஒருமைப்பாட்டு குழுமம், பறை:விடுதலைக்கான குரல், மற்றும் வீரத் தமிழர் முன்னணி ஆகியோரால் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

இப்போராட்டத்தை ஒருங்கிணைத்த ‘பாயில் வேதாந்தா’ அமைப்பைச் சார்ந்த சமரேந்திர தாஸ் கூறுவதாவது: “கடந்த 15 வருடங்களாக இந்தியா மற்றும் சாம்பியாவில் வேதாந்தா செய்துகொண்டிருக்கும் குற்றவியல் செயல்கள் குறித்து எச்சரிக்கை விடுத்து வருகிறோம். சூழலியல் போராட்டத்தில் நடைபெற்ற இந்த கார்ப்பரேட் கொலையானது கடைசியாக இருக்க வேண்டும் . பிரித்தானிய அரசு இதை விசாரித்து, வேதாந்தா நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இப்போராட்டத்தில் பங்கேற்ற இலண்டனில் உள்ள தமிழரான கார்த்திக் கமலக்கண்ணன் கூறுவதாவது, “ஒரு பிரித்தானிய கம்பெனியின் இலாபத்திற்காக மக்களின் பாதுகாப்பு
கேள்விக்குறியாவதும், சுத்தமான காற்றுக்கும், நீருக்கும் அவர்கள் அழுவதும் அருவறுக்கத்தக்கது. இந்த குற்ற பின்னணியுள்ள நிறுவனத்தை காக்க ஸ்னைப்பர் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதைக் கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தோம். சூழலியல் போராட்டத்தை முன்னெடுக்கும் அமைப்புகளின் தலைவர்கள் குறிவைக்கப்படுவது ஆச்சரியமளிக்கவில்லை, ஏனெனில் வேதந்தாவை எதிப்பவர்களை  அவர்கள் இவ்வாறுதான் எதிர்கொள்கிறார்கள். தூத்துக்குடியில் இணையம் தடை செய்யப்பட்டுள்ளது இது ஜனநாயகத்திற்கு எதிரானது. தமிழ் மக்களுக்கு இது ஒரு சோகமான காலம்” என்றார்.

வேதாந்தாவை இங்கிலாந்து பங்குச் சந்தையிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை போராட்டத்தில் ஈடுபட்டோர் இங்கிலாந்து அரசுக்கு முன்வைத்தனர்.

தகவல்:
சமரேந்திரதாஸ்
(+44) 07941 475103

மக்கள் அதிகாரம் தோழர்கள் 6 பேரை கடத்தியது போலீசு !

மக்கள் அதிகாரம் தோழர்கள் 6 பேரை கடத்தியது  போலீசு !
2 நாட்களாகியும் எந்த தகவலும் இல்லை.

உசிலை
1.கோட்டையன்  வ / 40 , த / பெ சின்னன்
கோவில்பட்டி
2.சரவணன் வ , 32 த / பெ பண்டாரம்
ஆலங்குளம்பாப்பாக்குடி காவல் நிலையம்
3.முருகன் வ / 40, த /  பெ செல்லத்துரை
திருநெல்வேலி காவல் நிலையம்
4.கலியலூர் ரஹ்மான் வ / 50, த / பெ கலீல்
5.முகமது அனஸ் வ/ 20 , த / பெ கலியலூர் ரஹ்மான்
6.முகமது இர்ஷத் வ /18 , த / பெ கலியலூர் ரஹ்மான்

இவர்களை 25-ஆம்தேதி நள்ளிரவில் வீடு புகுந்து போலீசு இழுத்துச் சென்றது. கைது செய்யும் போலீசார் எந்த காவல் நிலையத்தை சேர்ந்தவர்கள் என்பதையோ, என்ன வழக்கிற்காக கைது செய்கிறார்கள் என்பதையோ, எங்கு கொண்டு செல்கிறார்கள் என்பதையோ குடும்பத்தினருக்கு தெரிவிக்கவோ இல்லை.

உள்ளூர் காவல் நிலையத்தில் விசாரித்த போது தமக்கு ஏதும் தெரியாது என்று கை விரிக்கின்றனர். தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டில் கொத்து கொத்தாக மக்களை கொன்று, வன்முறை தீ வைப்பை நடத்திவிட்டு தங்களது குற்றத்தில் இருந்து தப்பிப்பதற்கு எமது அமைப்புக்கு எதிராக பொய்களையும், புனை சுருட்டுக்களையும் உளவுத்துறை பரப்பி வருகிறது.

கைது செய்யப்பட்டால் முறையாக தகவல் தெரிவிக்க  வேண்டும் என்பதும் 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்பதும் சட்ட நடமுறையாகும். கடந்த 48 மணி நேரமாக இவர்களை காணவில்லை என்பதால் இந்த தோழர்களுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று அஞ்சுகிறோம்.

தூத்துக்குடி மக்கள் போராட்டத்தை ஆதரிக்கின்ற அனைவரும் மக்கள் அதிகாரம் அமைப்புக்கும், எமது தோழர்களுக்கும் எதிராக போலீசு தொடுத்திருக்கும் இந்த தாக்குதலுக்கு எதிராகவும், இவர்களை விடுவிக்க கோரியும்  குரல்கொடுக்க வேண்டும் என்று கோருகிறோம். இந்த 6 தோழர்களின் கடத்தலுக்கு எதிராக நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்ய இருக்கிறோம்.

தங்கள்
வழக்கறிஞர்.சி.ராஜூ,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்.

 

தூத்துக்குடியில் அமைதி திரும்பிவிட்டதா | வழக்கறிஞர்கள் வாஞ்சிநாதன் அரிராகவன் நேர்காணல்

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் போராட்டக்குழுவின் சட்ட ஆலோசகர்கள் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தூத்துக்குடி வழக்கறிஞர் அரிராகவன் – ஆகியோரிடம் 25.05.2018 மாலை எடுக்கப்பட்ட பேட்டி.

(பாகம்-1)

தூத்துக்குடியில் அமைதி திரும்பிவிட்டதா?

* தூத்துக்குடியில் இயல்புநிலை திரும்பிவிட்டதா? அங்கே இருக்கும் உங்கள் வழக்கறிஞர்கள் என்ன சொல்கிறார்கள்?
* இந்த துப்பாக்கிச் சூடு தமிழக அரசு மற்றும் மாவட்ட போலீசின் நிர்வாகத் தோல்வியா?
* இதை திட்டமிட்ட கொலை என்று சொல்வதற்கு வேறு ஏதேனும் சான்றுள்ளனவா?
* இந்த துப்பாக்கிச் சூட்டின் நோக்கம் என்ன என்று நினைக்கிறீர்கள்?
விரிவாக விவரிக்கின்றனர், போராட்டக் களத்திலிருந்த வழக்குரைஞர்கள்.

 

______

(பாகம்-2)

தூத்துக்குடி படுகொலை : வெளியார் ஊடுருவலின் விளைவா ?

* போராட்டம் வன்முறையில் முடிவதற்கு காரணமே, மக்கள் அதிகாரம் அமைப்புதான் என்று உளவுத்துறை கூறுகிறதே….
* வெளியூர் ஆட்கள் போராட்டத்தில் நுழைந்ததுதான் பிரச்சினைக்கு காரணமா?
* ஸ்டெரிலைட்டை மூடுவதாகச் சொல்கிறார்களே, இதனை வெற்றி என்று கருதலாமா?

 

 

மறக்கக்கூடாத தூத்துக்குடி மரணங்கள் | பத்திரிகையாளர் கலைச்செல்வன்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேரை படுகொலை செய்த அரசைக் கண்டித்து 26.05.2018 அன்று தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டாளர்கள் கூட்டமைப்பு சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பத்திரிகையாளர் கலைச்செல்வனிடம் வினவு நடத்திய நேர்காணல்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | மக்கள் அதிகாரம் போராட்ட செய்திகள்

தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தி, அப்பட்டமான படுகொலையை அரங்கேற்றியப் பின்னரும்; தமிழகத்தைத் தாண்டி உலகெங்குமுள்ள ஜனநாயக சக்திகள் இது அரச பயங்கரவாதம் என்று கண்டனங்களை தெரிவித்து வரும் இந்தச் சூழலிலும், அதே அதிகாரத்திமிரோடு தமக்கு எதிரானப் போராட்டங்களை ஒடுக்கி வருகிறது, எடப்பாடி அரசு.

ஸ்டெர்லைட் அரசு பயங்கரவாதத்தைக் கண்டித்து மக்கள் அதிகாரத்தின் சார்பாக தமிழகமெங்கும் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்து ரிமாண்ட் செய்தது, எடப்பாடி அரசு.

அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தார்கள், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தார்கள் என்று வழக்கமாக பிணையில் விடக்கூடிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் போட்டாலும், இவர்களை வெளியே விட்டால் மக்களை அரசுக்கு எதிராகத் தூண்டிவிடுவார்கள், தமிழகத்தைக் கலவர பூமியாக்கிவிடுவார்கள் என்று நீதிமன்றத்தில் வாதிட்டு பிணை வழங்க மறுத்து வருகிறது, போலீசு.

வழக்குரைஞர்களின் கடுமையான சட்டப்போராட்டத்தையடுத்து, சென்னையில் கைது செய்யப்பட்ட மக்கள் அதிகாரத்தைச் சேர்ந்த 30 தோழர்களை நிபந்தனை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டிருக்கிறது.

மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் ராஜு, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் உட்பட கைது செய்யப்பட்டவர்கள் 30 பேரும் இன்று காலை 8.00 மணியளவில் புழல் சிறையிலிருந்து காட்டுமிராண்டி தமிழக அரசு மற்றும் போலீசைக் கண்டித்து முழக்கமிட்டவாறே வெளியே வந்தனர்.

தகவல்: மக்கள் அதிகாரம், சென்னை.

******
உடுமலை

தூத்துக்குடி துப்பாக்கிசூட்டைக் கண்டித்து 24.05.18 அன்று உடுமலை மக்கள் அதிகாரம் சார்பாக அனைத்துக் கட்சிகளை ஒருங்கிணைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி ஆர்ப்பாட்டம் தொடங்கியது,

கோவை, மக்கள் அதிகார ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி மற்றும் சூர்யா ஆகியோர் உரையாற்றினர். மேலும், வழக்குரைஞர் சாதிக்பாட்ஷா, தோழர் மூர்த்திஐக்கிய கம்யூனிஸ்ட், பால்.நாராயணன், தோழர் மோகன்திராவிடர் விடுதலை கழகம், வழக்கறிஞர் பெரியார்தாசன்அதி தமிழர் பேரவை, ஐயா விவசாய பாரதி உள்ளிட்ட மாற்று அரசியல் கட்சியினர் மற்றும் ஜனநாயக சக்திகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று உரையாற்றினர்.

This slideshow requires JavaScript.

அவர்கள் தங்களது உரையில், ‘’அரசு திட்டமிட்டு துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. போராடினால் இது தான் நடக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் மக்கள் முடிவு செய்துவிட்டார்கள் , புற்றுநோயினால் சாவதைவிட போராடி சாகலாம் என அதனால்தான் மறு நாளும் நெஞ்சை நிமிர்த்தி போராடிவருகிறார்கள் , இந்த துப்பாக்கிச்சூடு இதோடு நின்று விட போவதில்லை, நாளை .என்.ஜி.சி., மீத்தேன், ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ, என அனைத்து எதிர்ப்பு போராட்டங்களிலும் தொடரும், அதற்கான ஒத்திகைதான் இது. திட்டமிட்டு இன்று தமிழகம் இராணுவ மயமாகி வருகிறது. சட்டிஸ்கர், ஜார்கண்ட், காஷ்மீர் போல் இங்கும் தொடங்கிவிட்டது. ஆனால் இதை முறியடிக்க தன் உயிரையும் கொடுத்தாவது அடுத்த சந்ததியை வாழ வைப்பது என மக்கள் போராட துவங்கி விட்டார்கள், அவர்களது போராட்டத்தை கட்சி, வேறுபாடின்றி ஆதரித்து அவர்களுக்கு துணை நிற்கவேண்டுமென்று அறைகூவினர்.

தகவல்: மக்கள் அதிகாரம், உடுமலை.

******
குடந்தை

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய அப்பாவி மக்களை கொடூரமாக கொலை செய்த பாசிச அரசை கண்டித்து 24-05-2018 அன்று குடந்தை மக்கள் அதிகாரம் தோழர்கள் போராட்டம் நடத்தினார்கள். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பகுதி மக்கள் கண்டு ஆதரவளித்தனர்.

தகவல்: மக்கள் அதிகாரம், குடந்தை.

தூத்துக்குடி படுகொலை சமீபத்திய செய்திகள்

தூத்துக்குடி அடையாளம் காட்டும் நவீன நீரோக்கள்!

நிர்மலா தேவிக்காக துண்டைக் காணோம் துணியைக் காணோமென ஓடி வந்து ஊடக சந்திப்பு நடத்திய ஆர்.எஸ்.எஸ் புரோக்கர் ஆளுநர் புரோகித், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 14 பேர்கள் கொல்லப்பட்ட போது ஊட்டி மலர்க்கண்காட்சிக்கு சென்றார். ஏரியில் படகுச் சவாரி போனார்.

எடப்பாடி, பன்னீர் செல்வம் முதலான அடிமைகளோ காது குத்து, பிறந்த நாள் விழாக்களில் குஷியுடன் கலந்து கொண்டனர். தூத்துக்குடி ‘கலவரத்தையே’ ஊடகங்கள் மூலம்தான் பார்த்தேன், 144 தடை உத்திரவு இருப்பதால் அங்கு எப்படி போக முடியும் என கைப்பிள்ளை டயலாக் பேசினார்.

பிரதமர் மோடியோ விராட் கோலி விடுத்த செல்லமான தண்டால் சாகசத்தை ஏற்றார். விரைவிலேயே பத்து தண்டால்கள் எடுப்பதற்கான பயிற்சியில் பல மணி நேரங்களை செலவிட்டு வருகிறார்.

ரோம் பற்றி எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்தான். தூத்துக்குடியில் மரண ஓலம் கேட்ட போது நவீன நீரோக்கள் ஒருக்களித்து படுத்துக் கொண்டனர்.

#வினவு_செய்தியாளர்

ஸ்டெர்லைட் படுகொலைகளைக் கண்டித்தும்…
இணையதளத்தை முடக்கி கருத்துரிமையை
நசுக்கும் அராஜகத்தை கண்டித்தும்….
எழுத்தாளர் கலைஞர்களின் கண்டன முழக்கப் போர்
25.5.2018 மாலை 5 மணி, பெத்தனியாபுரம்,
குரு தியேட்டர் அருகில், மதுரை.

அனைவரையும் அழைக்கிறது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்.

#Sterlite, #BanSterlite, #SterliteProtest, #SterliteProtestMay22nd2018, #Thoothukudi, #SaveThoothukkudi, #PoliceAtrocities, #ThoothukudiMassacre, #StateTerrorism,

__

தூத்துக்குடியில் நடைப்பெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துக் கொண்டு, போலீசால் கொல்லப்பட்ட மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர்.ஜெயராமன் அவர்களுக்கு வீரவணக்கம்.

கருப்புச்சட்டை அணிந்த இளைஞர்களை சிறை வைக்க உயர்நீதிமன்றம் போன எடப்பாடி அரசுதான் தூத்துக்குடியில் அமைதிக்காக பாடுபடுகிறதாம்!

தூத்துக்குடியில் மே 22-ம் தேதி துப்பாக்கி சூடு நடந்த பிறகு 65 இளைஞர்கள் கருப்புச் சட்டை அணிந்திருந்தார்கள் என்ற ஒரே ’குற்றத்திற்காக’ போலீசால் கைது செய்து அடிக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டனர். 23-ம் தேதி தூத்துக்குடி வழக்கறிஞர்கள் வழக்கு தொடுத்து நீதிபதியை அனுப்பி போலீசு நிலையங்களில் சோதனை நடத்தி சட்டவிரோத காவலை கண்டுபிடித்தனர். நேற்று கண்டுபிடித்த உடனே அவர்கள் மீது பொதுச் சொத்திற்கு சேதம் விளைவித்து கலவரம் செய்வதாக பொய் வழக்கு போட்டு 65 பேரை சிறைக்கு அனுப்பியது போலீசு. ஆனால் அவர்களுக்கு பிணை வழங்கியது தூத்துக்குடி நீதிமன்றம். உடனே இன்றைக்கு அவர்களுடைய பிணையை ரத்து செய்யுமாறு மதுரை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது தமிழக அரசு. உயர்நீதிமன்ற நீதிபதி ராம திலகம் அதை நிராகரித்து விட்டார். அமைதி திரும்புவதற்கும் சுமூக நிலையைக் கொண்டு வருவதற்கும் என்கவுண்டர் எடப்பாடி அரசு எடுத்து வரும் முயற்சியின் யோக்கியதை இதுதான்! துப்பாக்கிகள் இன்னும் ஓயவில்லை.

__

இணைய சேவையை கொண்டு வர எடப்பாடி அரசுக்கு நீதிமன்ற அழுத்தம் கொடுத்த வழக்குரைஞர்கள்!

இணைய சேவை முடக்கத்தை எதிர்த்து, பத்திரிகையாளர் கவின்மலரை மனுதாரராக கொண்டு மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்குரைஞர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடுத்திருந்தனர்.

இன்று உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டது.

“இணைய சேவை முடக்கத்துக்கு தமிழக அரசு கூறியிருக்கும் காரணங்கள் அனைத்தும் பொய்யானவை. சமூக ஊடகங்களில் போலீசு அராஜகம் குறித்த உண்மை செய்திகள்தான் வருகின்றனவே ஒழிய யாரும் வதந்தி பரப்பவில்லை. பொய்ச் செய்தி பரப்புவதை தடுப்பதற்காகத்தான் இணைய தடை என்று கூறும் இந்த அரசு, பொய்ச் செய்தி பரப்பியதாக யார் மீதும் ஒரு வழக்கு கூட பதிவு செய்யவில்லை.”

“தொலைக்காட்சி ஊடகங்கள் போலீசு அராஜகம் குறித்த உண்மையை இருட்டடிப்பு செய்கின்ற நிலையில், அவற்றை வெளிக் கொணர்கின்ற சமூக ஊடகங்களை முடக்குவதே போலீசின் நோக்கம். எனவே இணைய முடக்கம் என்பது ஏற்கனவே போலீசு அராஜகத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களை இன்னொரு முறை தண்டிப்பதாகவே அமையும்” என்று நமது வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

தமிழக அரசால் தனது நடவடிக்கையை நியாயப்படுத்தி ஒரு வாதத்தைக் கூட வைக்க முடியவில்லை. மறு உத்தரவு மாலை 6 மணிக்கு என்று கூறி நீதிபதிகள் விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர். வழக்கு நிற்காது என்று தெரிந்தவுடனே, குறைந்த பட்சம் தூத்துக்குடி மாவட்டத்திலாவது இணைய சேவை தடை தொடர்வதை உத்திரவாதப் படுத்திக் கொள்ளவேண்டும் என்ற நோக்கத்துடன், அவசரம் அவசரமாக மற்ற இரு மாவட்டங்களில் இணைய சேவையை வழங்குவதாக அறிவித்திருக்கிறது தமிழக அரசு. இது நல்லெண்ணம் அல்ல, நீதிமன்றத்தை ஏமாற்றும் சூது நடவடிக்கை.

இணைய முடக்கத்தை மூன்று மாவட்டங்களிலும் ரத்து செய்யவேண்டும் என்பதுதான் ம.உ.பாதுகாப்பு மையத்தின் வாதம். என்ன தீர்ப்பு வருகிறது என்று பார்ப்போம்.

இணைய சேவை முடக்கத்தை பொருத்தவரை 2014 இல் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் 11 மாநிலங்களில் 70 முறை இணையம் முடக்கப்பட்டிருப்பதாக செய்திகள் கூறுகின்றன. அதற்கு முன் 2012 இல் காங் ஆட்சியில் காஷ்மீரில் மட்டும் ஒரு முறை முடக்கப்பட்டிருக்கிறது.

2016 இல் இணைய முடக்கத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உச்ச நீதிமன்றம் முடக்கத்தை ரத்து செய்ய மறுத்து விட்டது. வேறு மாநிலங்களில் இணைய முடக்கத்தை எதிர்த்து வழக்கு தொடுத்து முறியடித்திருக்கிறார்களா என்று தெரியவில்லை.

இதில் நாம் வெற்றி பெற்றால், மோடி அரசுக்கு எதிராக தமிழகம் நடத்தி வரும் பல முனைப் போராட்டத்தில், இந்தப் போராட்டத்திலும் தமிழகம் ஒரு முன்மாதிரியைப் படைத்ததாக இருக்கும்.

**

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் போராட்டம்!

மிழகம் – தூத்துக்குடியில் மக்கள் போராட்டத்தின் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து, யாழ்ப்பாணம் – நல்லூர் ஆலய முன்றலில் இன்று முற்பகல் 10.30 மணியளவில் கண்டனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது “மோடி அரசே தமிழகத்திலா உன் சூட்டுப் பயிற்சி, சுடாதே சுடாதே தமிழர்களைச் சுடாதே, அடிக்காதே அடிக்காதே தமிழர்களை அடிக்காதே, சுட்டுப் பழகுவதற்கு தமிழர்கள் என்ன கைப்பொம்மையா?, இந்திய அரசே ஆலை அவசியமானதோ – தமிழனின் உயிர் அவசியமானதோ?, தமிழக ஆட்சியில் தமிழன் என்ன பலி ஆட்டுக் கூட்டமா?” உள்ளிட்ட பதாதைகளை ஏந்தியவாறு நூற்றுக் கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

This slideshow requires JavaScript.

தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது தமிழகப் பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 12 பேர் உயிரிழந்தமை தெரிந்ததே. இதனைக் கண்டித்தே யாழ்ப்பாணம் நல்லூரில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது.

நன்றி: arasangam.lk

__

தமிழக கொலைகார போலீசைக் காறித்துப்பும் முன்னாள் இராணுவ அதிகாரி!

__

அடியாளை விட்டு சுடச்சொல்லியிருந்தாலும், அதே அடியாளிடம் ரிப்போர்ட் கேட்பானாம் ஆண்டை! 25.5.2018

தூத்துக்குடி ‘வன்முறைகள்’ குறித்த அறிக்கையை தமிழக அரசு தற்போது மத்திய உள்துறை அமைச்கத்திடம் கொடுத்திருக்கிறதாம்!
– நாயைக் கொல்வதாக இருந்தாலும் ‘விசாரித்து’ விட்டு கொல்வது போல அடியாளை விட்டு சுடச்சொல்லியிருந்தாலும், அதே அடியாளிடம் ரிப்போர்ட் கேட்பானாம் ஆண்டை!
ANI @ANI

***

சேலத்தில் எடப்பாடி பழனிசாமியின் உருவபொம்மை எரிப்பு! 25.5.2018

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து சேலத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் எடப்பாடி பழனிசாமியின் உருவபொம்மையை எரிக்க முயன்றனர்.

This slideshow requires JavaScript.

நன்றி : makkal athigaram/fb

**

தூத்துக்குடி அரச பயங்கரவாதத்தைக் கண்டிக்கும் நக்கலைட்ஸ் குழுவினர்!

https://www.youtube.com/watch?v=5Ey1v8L_pEc&feature=youtu.be

**

புதுச்சேரியில் அலங்கோலமான ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் ! 25.5.2018

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் வேடமணிந்தவர்களை புதுச்சேரி போராட்டக்காரர்கள் அலங்கோலப்படுத்தினர்.

This slideshow requires JavaScript.

நன்றி : செய்தி_விகடன்

**

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு!
சென்னையில் திருநங்கைகள் போராட்டம்!
25.5.2018

தூத்துக்குடிக்கு தோள்கொடுப்போம் ! புதுச்சேரியில் வேலை நிறுத்தம்!  25.5.2018

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து தமிழகம்-புதுச்சேரியில் இன்று தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது. புதுச்சேரியில் பேருந்துகள் எதுவும் இயக்கப்படாததால் புதுச்சேரி பேருந்து நிலையம் வெறிச்சோடிக் காணப்படுகிறது.

நன்றி : செய்தி_விகடன்

**

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ; வாங்கும் காசுக்கு மேல கூவுறாங்க! டுமிலிசை!
– ஓவியம் முகிலன் 25.5.2018

தூத்துக்குடியில் கலவரத்தை தூண்டுபவர்களை திட்டமிட்டு ஒடுக்க வேண்டும் – டுமிலிசை ஸ்டெர்லைட் முதலாளி போடும் பிச்சைக் காசுக்காக விசத்தை கக்கும் எச்சஇலை!

நன்றி : rsyftn/fb

**

ஸ்டெர்லைட்டை மூடி ! ஆட்சியை விட்டு ஓடு!
– சுவரொட்டி.

எடப்பாடியே!
* நீ ஆண்டது போதாதா?
* தூத்துக்குடியில் 14 உயிர்கள்
மாண்டது போதாதா?
ஸ்டெர்லைட்டை மூடி ! ஆட்சியை விட்டு ஓடு!
25.05.2018 காலை 6.00 முதல் மாலை 6.00 வரை ஆட்டோக்கள் ஓடாது!

ஆட்டோ-டாக்சி ஓட்டுநர் சங்கம், தென்சென்னை.

**

போலீஸ் – கலவரங்களுக்கு எங்களை அனுகவும்! – ஓவியம் முகிலன்

குடிசை கொளுத்துவது, கொலை, விபச்சாரம், லஞ்சம் என அனைத்தும் இங்கு சிறப்பாக செயல்படும்!
அனைத்து விதமான கலவரங்களுக்கு எங்களை அனுகவும்!
420, காவல் நிலையம், தமிழ்நாடு.

நன்றி : rsyftn/fb

**

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; மிக்சர் திண்ணும் மோடி!

*நாட்டின் கால்வாசிக் குழந்தைகள் சத்துக் குறைவால் அவதிப்படும்போது, நமது பிரதமர் #FitnessChallenge குறித்து பேசுவது ஏன்?
*அவர் ஏன் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து பேசுவதில்லை?
*பெட்ரோல்-டீசல் விலை உயர்வு குறித்த கேள்விகளை அவர் தவிர்ப்பது ஏன்?
– இப்படி பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு பதில் குழப்புவதை அவர் என்றாவது நிறுத்துவாரா?

 

**

ஜெனரல் டயர் இல்லை; ஜாலியன் வாலாபாக் படுகொலை!

மக்கள் அதிகாரம் சுவரொட்டி முழக்கம்!
ஜெனரல் டயர் இல்லை
இராபர்ட் கிளைவ் இல்லை
ஆனால்,
ஜாலியன் வாலாபாக் படுகொலை!

மக்கள் அதிகாரம், புதுச்சேரி

**

கார்ப்பரேட்டுகளுக்காக பாயும் தோட்டாக்கள்!

ஓவியம் முகிலன்

__

அமெரிக்காவில் சுட்டா.. அழுவாராம் மோடி!
தூத்துக்குடியில சுட்டா.. தூங்குவாராம்!

அமெரிக்காவில் நடக்கும் துப்பாக்கிசூடுகளுக்கு வருந்தும் இந்தியாவின் பிரதமர், அதே வாரத்தில் 13 இந்தியர்கள் தமிழகத்தின் தூத்துக்குடியில் கொல்லப்பட்ட போது அமைதியாக இருக்கிறார். பிரபலங்களோ இல்லை கிரிக்கெட் நட்சித்திரங்களோ அழைக்கும் சாகச அழைப்புகளை ஏற்பவர், எளிய மக்களின் குரலை எற்பது இருக்கட்டும், கேட்பது கூட இல்லை!

Prime minister of india feels sorry for Americans when shootout was happened in USA and In this week 13 Indians Killed in police shooting in Toothukudi-TN, but he remain silent.He reacts on celebrity or cricketer’s challenge but he never heard any common man’s voice.
#Thoothukudi
டிவிட்டரில் @AlpeshThakor_ குஜராத் ரத்தன்பூர் காங்கிரசு எம்.எல்.ஏ

__

சென்னை வடபழனியில்அடைக்கப்பட்டிருக்கும் கடைகள்.

This slideshow requires JavaScript.

இன்று 25.5.2018 எதிர்க்கட்சிகள் வேலை நிறுத்த போராட்டத்தை ஒட்டி, சென்னை வடபழனியில்அடைக்கப்பட்டிருக்கும் கடைகள்.
__
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஜார்கண்டில் ஆர்ப்பாட்டம்!

ஜார்கண்டில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்தும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் ஆர்ப்பாட்டம்.
23.5.2018

__

நக்சல்பாரி எழுச்சியும் இப்படித்தான் துவங்கியது

தூத்துக்குடியைப் பற்றி இன்று நீங்கள் நினைக்கும் போது ஒன்றைப் பற்றி சொல்ல வேண்டியிருக்கிறது! 51 வருடங்களுக்கு முன்னர் நக்சல்பாரி எழுச்சியும் இப்படித்தான் துவங்கியது. மேற்கு வங்கத்தில் இருக்கும் நக்சல்பாரி கிராமத்தில் அணிதிரண்ட ஆயுதமற்ற பழங்குடி பெண்கள், குழந்தைகள் கூட போலீசால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

–   கவிதா கிருஷ்ணன்

__
சென்னை எழும்பூரில் அடைக்கப்பட்டிருக்கும் கடைகள்!

இன்று 25.5.2018 எதிர்க்கட்சிகள் வேலை நிறுத்த போராட்டத்தை ஒட்டி, சென்னை எழும்பூரில் அடைக்கப்பட்டிருக்கும் கடைகள்.

__

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து சென்னையில் ஐ.டி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.
24.5.2018

பதாகை முழக்கங்கள்
“NEED 10 LAKHS PLEASE SHOOT ME!!”
“KILL STERLITE NOT PEOPLE”

___

தூத்துக்குடி : அரசு மருத்துவர்கள் & செவிலியர்களின் மகத்தான சேவை!

நண்பர் ஒருவரிடம் மாலை பேசிக்கொண்டிருந்தேன் . தூத்துக்குடியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் எப்படிப்பட்ட சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது, வசதிகள் போதுமானதாக உள்ளதா என்பது போன்ற பல விசயங்கள் பேசிக்கொண்டிருந்தோம்.

2 நாட்களாக குவிந்துள்ள மக்களை சிகிச்சை அளித்து காப்பாற்றும் அரும்பணியில் இரவு பகலாக மருத்துவர்கள் , பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள் , மருத்துவ ஊழியர்கள் என்று எல்லோரும் கடுமையாக நெருக்கடி மிகுந்த சூழலில் பணி செய்து வருகின்றனர். குறிப்பாக பயிற்சி மருத்துவர்கள் பம்பரமாய் சுழன்று வேலை செய்து வருகின்றனர் யாரும் அறைக்கு செல்லாமல் தொடர் பணியில் கடமை உணர்ச்சியோடு மிகப் பெரிய பேரிடர் சூழலில் தங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்திகொண்டு 48 மணி நேரமாக வேலை செய்து வருகின்றனர்.

கண் முன்னே ரத்தம் தோய்ந்த உடல்கள் தலை சிதைந்து மூளை சிதறிய போராட்டக்காரர்களின் உடல்கள், சிதறிய எலும்புகளோடு சதையோடும் வலியோடு கதறும் மக்கள் எங்கு பார்த்தாலும் கதறல் அலறல் பதட்டம் படபடப்பு மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற முனைப்போடு 22ஆம் தேதி முதல் போராடி வரும் பயிற்சி மருத்துவர்களின் மன்நிலையை நினைத்துப்பார்க்கிறேன்.

சில வருடங்களுக்கு முன்னால் (2013 ) பயிற்சி மருத்துவர்கள் பகுதி நேர பணி வேண்டி போராட்டம் நடத்தியது நினைவுக்கு வந்தது அதே பயிற்சி மருத்துவர்கள் இன்று மிகப்பெரிய சிக்கல் மிகு சூழலில் தங்களை மறந்து மக்களுக்காக அரும்பணியாற்றி வருவது நெகிழ்ச்சியான ஒரு தருணமாக உள்ளது.

அரசு நெருக்கடி தரும் சூழலில் மக்கள் பக்கம் நிற்கவேண்டும் என்ற நிலைபாடும் அரசு வன்முறையாட்டம் ஒடுக்குமுறை கட்டவிழ்த்துவிடும் சூழலில் எதை பற்றியும் கவலைபடாமல் மக்கள் நலனை முதன்மைப்படுத்தி பணிசெய்து மருத்து அறம் காத்து நிற்கும் பயிற்சி மருத்துவர்கள் நாளை மக்கள் மருத்துவர்களாக வருவார்கள். நிச்சயம் இந்த தூத்துக்குடி போலீஸ் வெறியாட்டம் எல்லோர் வாழ்வையும் மாற்றியுள்ளது. அந்த பயிற்சி மருத்துவர்களின் வாழ்விலும் நிச்சயம் மிகப்பெரிய தாக்கமும் மாற்றத்தையும் ஏற்படுத்தும் என்பதில் துளியளவும் ஐயமில்லை.

மேலும் மக்கள் போராட்டம் நடக்கும் பல்வேறு இடங்களில் அவர்களுக்கு ஆதரவாக நின்று இலவச மருத்துவ சிகிச்சை குழு ஒன்று செயல்படுத்தவும் தோழர் இணை பேராசிரியர் தர்மராஜா கூறியது போன்று இலவச சட்ட உதவிக் குழுவோடு இணைந்து மருத்துவக் குழுவும் இணைந்து செயல்பட வாய்ப்பும் சூழலும் உள்ளது.

அந்நியமாகி இருந்த சூழலில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு மாணவர்களையும் பயிற்சி மருத்துவர்களையும் மக்களின் பக்கம் கொண்டு போய் சேர்த்துள்ளது.

– மருத்துவர் அரவிந்தன் சிவக்குமார், முகநூலிருந்து…

__

இன்று 25.5.2018 எதிர்க்கட்சிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஒட்டி, சென்னை எழும்பூரில் நிறுத்தப்பட்ட போலீசு வாகனங்கள்!

This slideshow requires JavaScript.

__
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து சென்னையில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஒட்டிய சுவரொட்டி.
25.5.2018

அரச பயங்கரவாதத்திற்கு அடிபணிய மாட்டோம்!
கார்ப்பரேட் கைக்கூலி எடப்பாடி அரசே!
* சாவுக்கு அஞ்சமாட்டோம் ஸ்டெர்லைட்டுக்கு சவக்குழி தோண்டும் வரை ஓயமாட்டோம்!
* ஒ.என்.ஜி.சி, நியூட்ரினோ, ரசாயன மண்டலம்… என தமிழகத்தை அழிக்கு அனுமதியோம்!
ஓரணியாய் கிளர்ந்தெழுவோம்!

மக்கள் அதிகாரம், தமிழ்நாடு.
99623 66321.

துப்பாக்கி குண்டுகள் தீரும் வரை சுடுங்கள் | முகிலன்

0

ஜெனரல் டயரின்
வார்த்தைகளில் சொல்கிறோம்…,
“துப்பாக்கி குண்டுகள் தீரும் வரை சுடுங்கள்”
நாங்கள் நகரச் சொன்னால்
நகர்ந்துவிட வேண்டும்,
இல்லையெனில்…. அவர்களை
சுட்டுக்கொண்டே இருங்கள்…..

நாங்கள் நடந்து செல்ல
இனி சிவப்பு கம்பளம் எல்லாம் வேண்டாம்.
சுடப்பட்ட இந்த நாய்களின் இரத்தம்
இன்னும் சற்று நேரத்தில் உறைந்துவிடும்….
அதன்மீது
இனி எமது பாதங்கள் பயணிக்கும்..,
நொறுங்கிய எலும்புத் துண்டுகள்
ஆங்காங்கே இருக்கக் கூடும்
அதை மட்டும் கவனமாக
பொறுக்கி விடுங்கள்…
ஏனெனில் நாங்கள் நடக்கும்போது
எங்கள் காலணிகளை
அவைகள் காயப்படுத்தக் கூடும்.

“அந்த மாணவிக்கு தூயக் காற்று
வேண்டுமாம் சுவாசிக்க..,”
முதலில் அவள் மூச்சை நிறுத்துங்கள்.
இந்த முழக்கத்தோடு ஊரைக் கூட்டும்
அவள் இதழ்களை
துப்பாக்கி குண்டுகள் கொண்டு
துளைத்திடுங்கள்…
அவள் மரணித்திடும் போது எழுப்பும்
முனகல் சத்தம்….
அடுத்த சந்ததிக்கும்,
இந்த அபாயகரமான தருணங்களை
எடுத்துச் செல்லட்டும்.

ஆலை கழிவுகள்
மண்ணுக்குள் சென்று
நிலம் மலடானால்
எங்களுக்கு யார்
வாழ்வாதாரத்தை வழங்குவது….??
சரியான கேள்விதான்
அந்த வார்த்தைகள்தான்
உலர்ந்து போன மலைமுகடுகளில்
பற்றும் நெருப்பாய்
ஜனங்களிடம் நெருங்குகிறது..,
அதனால்தான்
அந்த வார்த்தைகளை
யார் உதிர்க்கிறார்களோ
அவர்களது மார்புகளின் மீது
புல்லட்டை இறக்குங்கள்…
மார்பின் மத்தியில் இறங்கி
எலும்புகளை உரசிவிட்டு செல்லும்
தோட்டாக்களின் ஓசைதான்…
எங்கள் செவிகளுக்கான
இசையாய் அமைய வேண்டும்…

அங்கே இன்னொருவன்…
நீர் மாசுபடுகிறது
உங்களது ஆலையின்
அடாவடித்தனத்தால்” என்கிறான்
அதை உச்சரிக்கும்போது
அவனின் நரம்புகள் ஒவ்வொன்றும் புடைக்கின்றன…..
சொல்லப்போனால்
அந்த புடைக்கும் நரம்புகள்
எங்களுக்கு கொஞ்சம் பயம் காட்டுகின்றன.
அதனால்.. அவனை
ஒரு தெரு நாயியினை சுடுவது போல
கூட்டத்தில் குறிவைத்து சுடுங்கள்….

“காப்பர் உங்களுக்கு
புற்று நோய் எங்களுக்கா”….? என்று
இன்னும்..இன்னும்..
நிறைய வார்த்தைகள்
நெருப்பாய் எங்கள் மீது விழுகின்றன.

இனி எந்த வார்த்தைகளும் கேட்கக்கூடாது
ஒரு மயான அமைதி நீடிக்கும் வரை
சுட்டுக்கொண்டிருங்கள்….
சுடுவதற்க்கு காரணம் வேண்டுமா?
நீங்களே ஊர்திகளை தீ வைத்துக் கொள்ளுங்கள்
“ஜனநாயக விரும்பிகளுக்கும்
நாம் கொஞ்சம் தீணி போடுவோம்”
“போலீசு சும்மாவா சுடுவாங்க?” என்று
தவளைகள் போல கத்திக்கொண்டிருப்பதும்
நமக்கான பாதுகாப்பு வளையம்தான்.

அதனால் பதட்டமில்லாமல்
நிதானமாக நிறுத்தி…
உயிர் பிரியும் வரை சுடுங்கள்……

பிரேக்கிங் நியூஸ் கூட
நமக்கு பிறந்தவைகள்தான்
நமது விந்தனுக்களே
விளம்பர இடைவேளைகளில் வந்துபோகும்.
“போராட்டக் காரர்களின் வெறியாட்டம்”
“போலீசார் துப்பாக்கி சூடு”
என்று வார்த்தைகளால் விசுவாசம் காட்டுவார்கள் ”
அதனால்….. பதட்டமில்லாமல்
சுடுங்கள் குண்டுகள் தீரும் வரை….

இப்போது உங்கள் பணி செம்மையாக முடிந்ததா?…..
ஒரு பத்து பேராவது பிணங்களாகி
படையலுக்கு தயாரா? …போதும்..
அடுத்து வந்தால் பார்த்துக் கொள்வோம்.
துப்பாக்கிகளில் படிந்திருக்கும்
இரத்தக் கறையை துடைத்துவிட்டு
நிம்மதியாக தூங்குங்கள்
இந்தாண்டுக்கான விருதுகள்
உங்கள் வீடு தேடி வரும்…

நீங்கள் ஆயிரம்…,
லட்சம் பேரோடு வாருங்கள்..,
நீங்கள் வந்து உடனடியாக
எங்கள் தலைகளை கொய்து கொள்ள…
நாங்கள் பழைய பிரெஞ்சு மன்னர்கள் அல்ல.
மூலதனத்தாலும் ஆயுத பலத்தாலும்
பிரம்மாண்டமாய் வளர்ந்து நிற்க்கும்
நவீன கார்ப்பரேட்டுகள்..

எங்களுக்கு எதிரான சிந்தனை
உங்களிடம் சென்டிமீட்டர் கணக்கில்
இருந்தால் கூட….அந்த மூளையை
லட்சம் துண்டுகளாய் சிதைத்துவிடுவோம்

இனிமேலும்
விளக்கம் வேண்டுமா..?
ஜனநாயகத்தை காப்பற்ற
உங்கள் பிணங்களை கணக்கெடுக்க..,
ஒரு நபர் கமிஷன் அமைப்பார்கள்…
அவர்களும் அப்படியே …
நாங்கள் வாந்தி எடுத்ததை
துளியும் விரயம் இல்லாமல்
உங்கள் மீது துப்புவார்கள் …
முகத்தில் விழுவதை துடைத்துவிட்டு
நாய்களை போல நகர்ந்து செல்லுங்கள்.

  • முகிலன்

அவசரச் செய்தி : மக்கள் அதிகாரம் தோழர்களைக் கடத்திக் கைது செய்யும் போலீசு !

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு அடியாள் வேலை பார்த்து மக்களை சுட்டுக் கொன்ற போலீசு, நேற்று நள்ளிரவு வரை மக்கள் அதிகாரத்தின் பல தோழர்களை காட்டுமிராண்டித்தனமாக கடத்தி கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களை தூத்துக்குடி கொண்டு சென்று பொய் வழக்கு போடவும் உள்ளது.
போலீசு ஆட்சிக்கு எதிராகப் போராடும் முற்போக்கு, ஜனநாயக சக்திகளை ஒடுக்குவதன் மூலம் கார்ப்பரேட் ஆட்சியை காப்பாற்ற நினைக்கிறது போலீசு. கார்ப்பரேட் ஆட்சிக்கு முடிவு கட்டாமல் மக்களுக்கு தீர்வில்லை.

எமது அமைப்பின் மீதான இத்தாக்குதலுக்கு எதிராக அனைத்து ஜனநாயக அமைப்புகளும் குரல் கொடுக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம். போலீசால் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட எமது அமைப்பின்  நிர்வாகிகள் விவரம் பின்வருமாறு

1.கோட்டையன் – உசிலை ஆரியப்பட்டி
2.சிவகங்கை – கண்ணன்
3.சிவகங்கை – சுரேஸ் கண்ணன்
4.சிவகங்கை – அழகர்சாமி
5.காரைக்குடி – கல்யாணகுமார்
6.காரைக்குடி – மாணிக்கம்
7.திருப்புவனம் – மோகன்
8.கோவில்பட்டி – சரவணன்
9. ஆலங்குளம் – முருகன்
10. நெல்லை – கலீல் ரகுமான்
11. நெல்லை – முகமது அனஸ்
12. நெல்லை – முகமது இர்ஷத் (புமாஇமு)
13. காளையார்கோவில் – முருகன்
14. காளையார்கோவில் – உடையார்
15. காளையார்கோவில் – குருசாமி மயில்வாகனன் (தனி)

இவண்
மருது
செய்தித் தொடர்பாளர்
மக்கள் அதிகாரம்
9962366321

டம்மி அரசனின் குரல் – மனுஷ்ய புத்திரன்

யார் சுட்டார்கள் என்று எனக்குத் தெரியாது
ஏன் சுட்டார்கள் என்று எனக்குத் தெரியாது
யார் சுடச்சொன்னார்கள் என்று எனக்குத் தெரியாது
இறந்தவர்களை எப்படிப் போய் பார்க்க வேண்டுமென எனக்குத் தெரியாது
இருப்பவர்களின் கண்ணீரை எனக்குத் துடைக்கத் தெரியாது
நான் ஒரு டம்மி அரசன்
நான் ஒன்றுமே செய்வதில்லை
இருந்தும் எனக்கு எதற்குமே நேரமில்லை
என்னை ஏன் கேள்விமேல் கேள்வி கேட்கிறீர்கள்
எனக்கு எதுவுமே தெரியாது

நான் இங்குதான் இருக்கிறேன்
நீங்களே பார்க்கிறீர்கள்
நான் தீயதைப் பார்ப்பதில்லை
நான் தீயதைக்கேட்பதில்லை
தீயதை செய்வதில் மட்டுமே எனக்கு விருப்பமுண்டு
நான் ஒரு பிரமாண்டமான தீமையிலிருந்து உருவான
சிறிய தீமை என்றுதான் எல்லோரும் நினைத்தீர்கள்
நானே இப்போது தீமையிலும் பெரிய தீமையாக
வளர்ந்துவிட்டேன்
தயாரிக்கப்பட்ட உரைகளுக்கு அப்பால்
எனக்கு ஒன்றுமே சொல்வதற்கில்லை
மக்கள் சாகிறார்கள்
மக்கள் சாகடிக்கப்படுகிறார்கள்
எல்லாம் அவர்கள் நன்மைக்காகவே
எதிரிகள் என் கழுத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்
எதிரிகள் என் அருகில் உட்கார்ந்திருக்கிறார்கள்
எதிர்கள் என் அறைவாசலில் வழியை மறிக்கிறார்கள்
தூங்கும்போது என் தலையில் கல்லைப்போட
என் சகாக்கள் ஆயத்தமாக இருக்கிறார்கள்
எனக்கு இதையெல்லாம் சமாளிக்கத்தான்
நேரம் சரியாக இருக்கிறது

இது பொறுப்பு மிக்க பதவி என்று
எனக்குத் தெரியும்
இந்தக் கோடையில் மலை வாசஸ்தலங்களிலேயே
பெரும்பாலும் என் அரசியல் பயணத்தை நடத்துகிறேன்
நிறைய திருமணவீடுகளுக்கு போகவேண்டியிருக்கிறது
நிறைய பூப்புனித சடங்குகளுக்கு போகவேண்டியிருக்கிறது
மலர்க் கண்காட்சிகளை திறந்து வைக்க வேண்டியிருக்கிறது
மக்கள் தெருநாய்களைப்போல தினமும் சாகிறார்கள்
சாவு வீடுகளுக்குப்போக சங்கடமாக இருக்கிறது
வருடாவருடம் எங்களால் சாகிறவர்களுக்கு நஷ்ட ஈடாக
ஒரு பெரிய தொகையை தரவேண்டியிருக்கிறது
பட்ஜெட்டில் இதற்காக தனியாக நிதி ஒதுக்குகிறோம்
ஒரு சாவு எவ்வளவு பிரபலமடைகிறதோ
அதற்கேற்ப காசு கொடுக்க வேண்டும்
இதற்கெனெ ஒரு தனி அமைச்சரவை
விரைவில் உருவாக்கபோகிறோம்
கொத்துக் கொத்தாக சாக ஆரம்பித்துவிட்டார்கள்
இதற்காக கூடுதலாக கடன் வாங்க வேண்டியிருக்கிறது

பழங்கால அரசனைப்போலத்தான் நானும்
எனக்கு எதுவும் தெரியாது
என் அந்தப்புரத்தில் வெளிச்சம் வராது
மழை பெய்கிறதா வெய்யிலடிக்கிறதா
என்று எனக்குத் தெரியாது
மாதம் மும்மாரி பெய்கிறதா என
அமைச்சரைக் கேட்டுகொள்வேன்
என் அலிபாபா குகையில்
உட்புட்றமாக பூட்டிக்கொண்டு
தங்கபுதையலில்
படுத்து உறங்குகிறேன்

மக்கள் என்னை வெறுக்கிறார்கள்
நானும் மக்களை வெறுக்கிறேன்
இதில் ஒரு சமநிலை இருக்கிறது

கொல்லப்பட்டவர்களுக்கு
என் ஆழ்ந்த அனுதாபங்கள்
கொல்லபடுபவர்களுக்கு
என் ஆழ்ந்த அனுதாபங்கள்
கொல்லப்பட இருப்பவர்களுக்கு
என் ஆழ்ந்த அனுதாபங்கள்

24.5.2018
பிறபகல் 3.49
நன்றி: மனுஷ்ய புத்திரன்

கோட்டையிலே கொலைகாரக் கூட்டம் ! கொந்தளிக்கிறது ஃபேஸ்புக்

தூத்துக்குடியில் 13 பேரைக் சுட்டுக் கொன்ற அரசின் பயங்கரவாதத்தைக் கண்டித்து ஃபேஸ்புக்கில் பலரும் எழுதிய கருத்துக்களின் தொகுப்பு! பாகம் 2

AD Bala
அரசியல் கட்சிகள் போராட்டங்களை சம்பிரதாயச் சடங்காக மாற்றின. மறுபுறம் அரசு மேலும் மேலும் மிருக பலமும் தடித்த தோலும் உடையதாக, குயுக்தி நிறைந்ததாக மாறியுள்ளது. இதன் காரணமாக போராட்டங்கள் தமது நெருக்கடி தரும் வலுவை இழக்கின்றன.

சூறாவளியாய் எழுகிற தன்னெழுச்சிப் போராட்டங்கள் நடுவழியில் திசை தெரியாத கப்பலாய் சிக்கிக்கொள்கின்றன.

ஒரு தொழிற்சாலையை அகற்ற அது அமைந்துள்ள இடத்தின் மக்கள் கூட்டாக தங்கள் விருப்பத்தை தெரிவிப்பதே போதுமானதாக இருக்கவேண்டும்.

கண்டிப்பா அடிப்பானுங்கனு தெரியும்., ஆனா சுடுவானுங்கனு நினைச்சு கூட பார்க்கல,
“பொம்பளைங்களுக்கெல்லாம் இங்க என்னடி வேலை, ஓடுங்கடி வீட்டுக்கு”னு சொல்லிட்டு தான் அடிச்சாய்ங்க..

இங்கோ 13 உயிர்கள்கூட போதுமானதா தெரியவில்லை.
கிருமிகள் மருந்துக்கு அடங்காதவையாக மாறும்போது மேலும் வீரியமிக்க மருந்துகள் ஆய்வகங்களில் உருவாவதைப் போல வீரியமிக்க போராட்ட வடிவங்களை, சட்ட உரிமைகளை, பாதுகாப்பு மிக்க போராட்டச்சூழலை உருவாக்குவதற்கு என்ன செய்வது என்ற சிந்தனை பல தரப்பிலும் நிகழவேண்டும்.

ஒவ்வொரு குடிமைப் போராட்டத்திலும் உயிர்களை இழப்பது நிகழ்ந்தே ஆகவேண்டிய தியாகமல்ல. மாற்றப்பட்டாகவேண்டிய சமூக ஒழுங்கு.
____________
Barathi Thambi
எழுத்தாளர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட அறிவுத்துறை நண்பர்களே… தூத்துக்குடி மக்கள் மீதான தமிழக அரசின்; தமிழக காவல்துறையின் இரக்கமற்ற கொலைவெறி தாக்குதலை உடனே நிறுத்தக்கோரி வெளிப்படையான போராட்டம் ஒன்றை அவசரமாக நடத்த வேண்டும். அறிவுலகின் இந்த அமைதி உடனே உடைக்கப்பட்டாக வேண்டும். கூட்டறிக்கை போதாது. களத்துக்கு வர வேண்டும். உடனே… இன்றே… இப்போதே… அங்கே அரச பயங்கரவாதம் உயிர்களை இடைவிடாமல் கொன்றொழிக்கிறது. இணையதள சேவைகளை முடக்கி இது ஒரு சாட்சியமற்ற போராக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைந்து வினையாற்றுவது அவசியம்.
__________
கி. நடராசன்
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் உதயம் மனோகரன், மில்லர், பார்வேந்தன், உட்பட மதுரை, நெல்லை, திருச்சி இன்னும் பல நகரங்களில் இருந்து பல குழுக்களாக 60 வழக்கறிஞர்கள் நேற்று தூத்துக்குடி சென்றனர்.

இனி வழக்கறிஞர் உதயம் மனோகரன் என்னிடம் விவரித்தன் சாரம்:
உயர் நீதிமன்ற தீர்ப்பின் படி சென்றதால் அங்காங்கே கும்பலாக இருந்த போலிஸார் தடுக்கவில்லை.. ஆனால் தூத்துக்குடி ஆள் நடமாற்றம் அற்ற சுடுகாடு போல் உள்ளது.
நெல்லை வழக்கறிஞர்கள் சங்கம் இதற்கு முன்பு சாதிரீதியாக பிரிந்து இருந்தன.. இந்த படுகொலைக்கு பின் ஒன்றிணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இணைந்து வழக்காடினர்.
மாவட்ட நீதிபதியிடம் ஆள் கொணர் மனு போட்டு ஆர்டர் வாங்கினர். துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் உட்பட பல இடங்களில் அடைக்கப்பட்டு கிடந்த தூத்துக்குடி மக்கள் 65 பேரை அப்பொழுதுதான் கைது செய்ததாக பொய் வழக்கு போட்டு நீதிமன்றம் கொண்டு வந்தனர். நீதிபதி அவர்களை சொந்த ஜாமீனில் விடுதலை செய்தார்…

தூத்துக்குடி மருத்துமனை முழுவதும் போலிஸ் குவிக்கப்பட்டு உள்ளது. தலை, மார்பு, தொடை, விலா எலும்பு என்று குண்டடிப்பட்டு 45 பேர் அங்கு இருந்தனர். அவர்கள் கூற்று படி மக்கள் அமைதியாக அறவழியில்தான் பேரணியாக சென்றனர். போலிஸ் திட்டமிட்டு தூப்பாக்கி சூடு நடத்தி கொலை செய்துள்ளது.

போலிசார் துப்பாக்கியால் சுட்டனர். அதனால் பலர் குற்றுயிறும் குலையுறுமாய் துடித்தனர்.. அவர்களை மருத்தமனைக்கு தூக்கு செல்லாமல் அப்படியே போட்டு விட்டு சென்றனர். குண்டடி பட்ட ஒருவர் அருகில் உள்ள மருத்தவமனைக்கு செல்ல அங்கு வந்த போலிஸ்காரன்கள் அவரை அடிக்க முயன்றனர். செவிலியர்கள் போலிஸ்கார்களிடம் மன்றாடி கையெடுத்து கும்பிட்டு அவரை காப்பாற்றினர்.
மேலும் இஸ்லாமிய சகோதரர்களின் ஆம்புலன்ஸ்சில் வந்துதான் குற்றுயிறும் குலையுறுமாய் துடித்தவர்களை மனித நேயத்துடன் மருத்துவமனை கொண்டு சென்று சேர்த்தனர்.

75 வயது மூதாட்டி இது வரை பல சாதி கலவரங்களை பார்த்துள்ளேன் ஆனால் இப்படியான போலிஸ் வெறியாட்டம் தனது வாழ்நாளில் பார்த்தது இல்லை என்றார்.
குண்டடி பட்டாலும் நாங்கள் அடிபணிய மாட்டோம்.. புற்றுநோயால் சாவது. போராடி சாவது என்பதுதான் அது. நான் இறந்தால் என் மனைவி போராடுவாள் என்று குண்டடிபட்ட தூத்துக்குடி வாசி உறுதியாக சொன்னார். பல பகுதிகளுக்கு சென்று விட்டு சட்டரீதியாக உதவிகள் என்ன என்ன செய்வது என்று கூறிவிட்டு 60 வழக்கறிஞர்கள் திரும்பினோம்
__________
Mohana Dharshiny

கால்களிலும், கைகளிலும், தோள்பட்டைகளிலும் குண்டுகள் பாய்ந்து சிகிச்சை பெற்று வரும் தூத்துக்குடி போராளிகளை சந்தித்தோம். நாங்கள் நினைத்தது போல் எங்களை பார்த்ததும் அவர்களும் அவர்கள் குடும்பத்தினரும் அழுகவில்லை. புலம்ப வில்லை.

இந்த கேடுகெட்ட அரசிற்கெதிராகவும் காவல்துறைக்கெதிராகவும் ,ஸ்டெர்லைட் டிற்கெராகவும் கோபம் கொப்பளிக்க வீரபாண்டிய கட்டபொம்மனைப் போல வசனம் பேச யதை கேட்டு ஆச்சர்யமடைந்தோம்.

ஆனால் தங்கள் சக போராளிகள் இறந்த விஷயத்தை பகிர்ந்து கொள்ளும் போது நொறுங்கிப் போனார்கள். ஒருவரது அழுகையை எங்களால் நிறுத்த வே முடியவில்லை.மக்கள் சக்தி மகத்தானது.

– தோழர் Suganthi P

//எல்லா பிற்போக்குவாதிகளும் காகிதப் புலிகள். தோற்றத்தில் பிற்போக்குவாதிகள் பயங்கரமானவர்கள். ஆனால் யதார்த்தத்தில் பலமுடையவர்கள் அல்ல. நீண்டகால நோக்கிலிருந்து பார்த்தால் உண்மையில் பலமுடையவர்கள் பிற்போக்குவாதிகள் அல்ல, மக்களே ஆவர்.
#மாசேதுங்///

மக்கள் சக்தியைப் பற்றிய மாவோவின் மதிப்பீடுகள் இப்போதும் மிகச் சரியானவையே…
_________
Naveen Krishnan

ஸ்டர்லைட் போராட்டத்தில் (மே 22) கலந்துகொண்ட தோழி ரோசி மது பதிவு

#போராட்டக்களம்_போர்க்களமானது_எப்படி..?? களத்திலிருந்து ஒரு சாட்சியம்
# முன்குறிப்பு: அந்த போராட்டத்துல கலந்துக்கிட்ட ஒரு சாதாரண பெண்ணோட மனநிலையில் இருந்து தான் இதை நான் எழுதியிருக்கேன்..
# காலையில பெயரளவுக்கு தடுத்துட்டு அனுமதிச்சப்பவே தெரியும், இவிய்ங்களாம் ஒன்னும் அவ்ளோ நல்லவய்ங்க இல்லயேனு.. அங்க ஏதோ விபரீதமா நடக்க போகுதுனு, நாங்க கடந்து சென்ற பாதையில் நின்றிருந்த பெண் போலீசார் சிலரின் முகத்தில் அப்பட்டமாகவே தெரிந்தது..

சில ஆண் போலீசின் முகத்திலோ, ‘போங்கடீ உங்களுக்கு அங்க இருக்கு’ பாவனைகள் தான்.. கடும் தண்ணி தாகத்துல சுட்டெரிக்கும் வெயிலுல வயசு பாகுபாடு இல்லாம ஒரு வயசு குழந்தையில இருந்து கிட்டத்தட்ட 60வயசு பெரியவங்க வரை கலந்துக்கிட்டாங்க..

போற வழி நெடுகிலும் போட்ட கோஷங்களை விட வழியெங்கும் ஒட்டியிருந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டர்ஸ பார்த்து இவருக்கு இந்த கேன்சர், அவருக்கு அந்த கேன்சர்னு காதுல விழுந்தது தான் அதிகமா இருந்துச்சு..

அவங்க அடிபட்டு இருக்காங்கனு வந்த அழுகைய விட, அந்த வலியை கொஞ்சம் கூட முகத்துல காட்டிக்காம இருந்த அவங்களோட போராட்ட வெறி உடல் சிலிர்க்க வச்சுச்சு..

போற வழியில தடுத்து நிறுத்த முற்பட்டானுங்கனும், அதை மீறி மீறி தான் போனோம்னும் ஏற்கனவே சொல்லியிருந்தேன்.. புதுத்தெருவுல இருந்து மாதா கோவில் போற வழியில ரெண்டு இடத்துல தடுத்தானுங்க, மாதா கோவில்ல இருந்து எல்லாரும் சேர்ந்து போனப்போ இரண்டு இடத்துல தடுத்தானுங்க..

மூணாவது தடவையா தடுத்தப்ப தான் கல்லெறிஞ்சுருக்கானுங்க போலீஸ்காரனுங்க.. நிறைய பேருக்கு மண்டை உடைஞ்சு, கால் உடைஞ்சு இரத்தம் ஒழுக ஒழுக தூக்கிட்டு ஓடுனாங்க..

அப்புறம் தான் நம்ம ஆட்களும் திருப்பி கல்லெறிஞ்சு போலீச ஓடவிட்டாங்க.. அதற்கடுத்துதான் சில கிலோமீட்டர் தாண்டி பாலம் வந்துச்சு, அந்த பாலத்துக்கு கீழ பெட்ரோல் குண்டுகளையும், கண்ணீர் புகை குண்டுகளையும் வீசியது போலீஸ்காரனுங்க தான்.. எத்தனை குண்டுகள்னு கணக்கேயில்ல..
பாதிபேர் அந்த புகையையும், நெடியையும், கண்ணெரிச்சல், தோல் எரிச்சல் எல்லாத்தையும் தாண்டி முன்னேறி போயிட்டாங்க.. எங்களை கொஞ்ச நேரம் வெயிட் பன்ன சொன்னாங்க., கண்ணெரிஞ்சது, கண்ல தண்ணியா ஊத்துச்சு, மூச்சு முட்டுச்சு, மூக்கு அரிச்சுச்சு.. கிராஸ் பன்னி போக முடியல..

ஆளாளுக்கு கையில் இருந்த துண்டு, கர்சீஃப், ஷால் எல்லாத்தையும் வச்சு மூஞ்சிய மூடிட்டு முன்னேறி போனோம்..

நாங்க இங்க கொஞ்சம் தாமதிச்ச இந்த சமயத்துல தான் எங்களுக்கு முன்ன போனவங்க கலெக்டர் ஆஃபீஸ் உள்ள போயிட்டாங்க.. அங்கயும் அதிக அளவில் ஏதோ புகை வந்துட்டே இருந்தது.. அப்பவும் ஏற்கனவே எதிர்கொண்ட அதே symptoms..
நீங்க முதல் போட்டோவ கூர்ந்து கவனிச்சீங்கனா நல்லா தெரியும்.. அதுல முன்னாடி ஒரு பெரிய வண்டி நிக்குது, அதுக்கு பின்ன safe-ஆ தான் போலீஸ் படை நின்னுச்சு..

அப்படி இருக்கப்போ பெண்களோடவும், குழந்தைங்களோடவும் போன போராட்டக்காரர்கள் எப்படி அவிய்ங்கள மீறி கலெக்டர் ஆஃபீஸ் உள்ள போய் வேனை எரிக்க முடியும்..?? அவிய்ங்கள தாண்டி உள்ள போக துளி கூட வாய்ப்பில்ல..
இவ்ளோ பழி சுமத்துற அவிய்ங்க, ஒரு இடம்கூட விடாம கேமராவும் கையுமா அலையிற அவிய்ங்க போராட்டக்காரர்கள் கலெக்டர் ஆஃபீஸ் உள்ள வேனை எரிச்சாங்கன்ற வீடியோவ இருந்தா வெளியிட சொல்லுங்களேன் பார்ப்போம்..

அடுத்தடுத்து நிகழ்ந்தவை தான் ஒடுக்குமுறையின் உச்சம்.. முதல்ல உள்ள போனவங்கள ரெண்டு பேர் சுட்டுட்டதா ஓடி வந்தாங்க, ஒருத்தர் அங்கயே இறந்துட்டாருன்னும், இன்னொருத்தர மாற்றுத்திறனாளி ஒருத்தரோட வண்டியில வச்சும் தூக்கிட்டு வந்தாங்க..

அதை பார்த்துட்டு தான் வெளில நின்றிருந்தவங்க இன்னும் ஆக்ரோசத்தோட உள்ள போனாங்க.. திரும்பவும் குண்டுகள் பொழிய ஓடி வந்தாங்க.. துப்பாக்கி குண்டுகளின் சத்தம் கேட்டுட்டே இருந்துச்சு, அது துப்பாக்கி சத்தம் தான்னு நம்ம உறவுகள் செத்து வெளில வந்தப்ப தான் தெரியும்..

முதல் அரைமணி நேரத்துக்கு ஆம்புலன்ஸ் கூட இல்ல, அதுவரை பைக்லதான் குண்டடிபட்டவங்களை தூக்கிட்டு போனாங்க.. அரைமணி நேரம் கழிச்சு தான் ஆம்புலன்ஸ் வந்துச்சு.. நாங்க அங்க இருந்த அந்த சமயத்துல மட்டும் கிட்டத்தட்ட 20தடவைக்கு மேல அந்த ஆம்புலன்ஸ் போயிட்டு போயிட்டு வந்தது..
கண்டிப்பா அடிப்பானுங்கனு தெரியும்., ஆனா சுடுவானுங்கனு நினைச்சு கூட பார்க்கல, முதல்ல ஒருத்தர் சுடப்பட்டார்னு தெரிஞ்சப்பவே ஓடியோடி கேட்டேன், ‘சாவல இல்ல, சாவல இல்ல’னு..

உங்களுக்கு எல்லாம் சுட்டவங்களையும், செத்தவங்களையும் தானே தெரியும்.. ஆனா எத்தனை பேரு மண்டை உடைஞ்சு, கை, கால் உடைஞ்சு அந்த வலியை துளி கூட முகத்துல காட்டிக்காம பைக்ல வச்சு கூட்டி போனாங்கனு தெரியுமா..??
அவங்க அடிபட்டு இருக்காங்கனு வந்த அழுகைய விட, அந்த வலியை கொஞ்சம் கூட முகத்துல காட்டிக்காம இருந்த அவங்களோட போராட்ட வெறி உடல் சிலிர்க்க வச்சுச்சு.. ஒரு பைக்ல இரண்டு பேருக்கு இடையில ஒருத்தர் உட்கார்ந்து போறாருனா அவரு கண்டிப்பா அடிபட்டு இருக்காருனு அர்த்தம்.. அப்படி எத்தனை பேருன்னு கணக்கே இல்ல.,

அவங்க தலையிலயோ, கையிலயோ, கால்லயோ கட்டியிருந்த துணியையும், சட்டை நிறைய படிஞ்சுருந்த இரத்தத்தையும் வச்சுத்தான் அவங்க அடிபட்டு இருக்காங்கனு தெரிஞ்சுக்க முடிஞ்சது..

அடினா அடி சாதாரண அடியில்ல, ஒவ்வொரு அடிக்கும் தோலுரிஞ்சு இரத்தக்காயத்தோட தான் தடியடி இருந்தது.. எத்தனை பேரோட தோள்லயும், கையிலயும், கால்லயும் இரத்தம் வடிய வடிய தடியடிய நான் பார்த்தேன் தெரியுமா..??
அதுக்கு பிறகுதாங்க, சரி தற்போதைக்கு திரும்பி போகலாம்னு முடிவெடுத்து திரும்பி வந்துட்டு இருந்தோம்.. வர்ர வழியில ஒரு பெரிய டீமே காத்திருந்தாய்ங்க.. கிடைச்ச திசையில எல்லாம் ஆளாளுக்கு ஓடி ஒளிஞ்சுட்டோம்.. ஏன்னா கல்லெறிஞ்சாய்ங்க..

ரொம்ப நேரமாகியும், அவிய்ங்க அங்க இருந்து போறதா இல்ல, நாங்களும் வெயிட் பன்னி பார்த்துட்டு, சரி இப்படியே போலாம்னு வேற வழியா 2கிமீல போக வேண்டிய இடத்துக்கு, 8கிமீ நடந்தே வந்தோம்.. நடந்து வந்தோம்னு சொல்றத விட நடைபிணமா வந்தோம்.. ஒவ்வொரு மெயின் ரோடுக்கு போறப்பவும் எதிர்த்தாப்ல வந்தவங்ககிட்ட கேட்டப்ப, அங்க போலீஸ் இருக்கு, இருக்குனே சொன்னாங்க,
திரும்ப திரும்ப வேற வழியில ஒரு வழியா மெயின் ரோட் வந்து சேர்ந்ததும், நடந்த களைப்புல கொஞ்ச நேரம் ஒரு இடத்துல உட்கார்ந்தோம்.. அந்த இடத்துல பைக்ல பின்னாடி உட்கார்ந்து வந்த அம்மா நிலை தடுமாறி கீழ விழுந்துட்டாங்க.. ஓடிப்போய் தூக்கி, தண்ணி கொடுத்து, அவங்கள அனுப்பிட்டு திரும்பி பார்த்தா வரிசையா பெரிய பெரிய வேன்ல வந்தானுங்க..

நாந்தான் ஓடிப்போய் சொன்னேன், நிறைய வண்டி வருது, எதுக்கும் நாம அந்த பக்கம் போயிடலாம்னு சொல்லி கூட முடிக்கல, வண்டியிலயிருந்து திபுதிபுனு இறங்கி அடிக்க துரத்திட்டு வந்தானுங்க..நா சொல்லலனா யாரும் எதிர்பார்க்காம எல்லாரும் அடி வாங்கியிருப்போம்.. ஏன்னா அந்த பில்டிங்கோட பின்பக்கமும் அவிய்ங்க வந்துட்டாய்ங்க..

புள்ளைய தூக்கிக்கிட்டு, புள்ளைய பத்திரமா பார்த்துக்கனுமே, அய்யோ மாட்டுனோமா, அவ்ளோதானானு ஓடி ஒளிஞ்ச அந்த நொடிகளை மறக்கவே முடியாது.. பயந்தியா, ஓடுனியா, ஒளிஞ்சியானா ஆமா, சாதாரண பயமில்ல, உயிர் பயம்..நெஞ்ச நிமிர்த்தி நின்னு வீர மரணம் அடையிறதுக்கு நா ஒன்னும் தனி ஆள் இல்ல, என் மகளுக்காகவாச்சும் உயிர் வாழ வேண்டிய பொறுப்பு எனக்கிருக்கு..

உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓடிய தருணம் வாழ்வில் எப்போதும் மறக்க முடியாதது.. நாங்கள் ஓடி ஒளிந்த இடம் அனைத்துமே முட்டு சந்து, கிட்டத்தட்ட மூணு இடத்தை தாண்டி ஒளிய முயற்சித்த நாலாவது இடமும் மரங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடம்தான்.. ஆண்கள் எல்லாம் சிதறி நாலா பக்கமும் ஓடிட்டாங்க..
பெண்கள் அந்த மரங்களுக்குள்ள ஒளிஞ்சுக்கிட்டோம், “பொம்பளைங்களுக்கெல்லாம் இங்க என்னடி வேலை, ஓடுங்கடி வீட்டுக்கு”னு சொல்லிட்டு தான் அடிச்சாய்ங்க.. கொஞ்ச நேரம் கழித்து தான் வெளில வந்தோம்., ஒவ்வொரு வீட்டுக்குள்ள இருந்தும் ஆண்களும் வர ஆரம்பிச்சாங்க..என்கூட இருந்ததுல நாலு பெண்களுக்கு அடி விழுந்துருக்கு..

வீட்டுக்கு வந்து சேர்ந்த கொஞ்ச நேரத்துல சொல்றாங்க திரேஸ்புரத்துல பெண் உட்பட நாலு பேர சுட்டுட்டானுங்களாம் அப்படினு..
இன்னும் தொடர்ந்துக்கிட்டு தான் இருக்கு அங்க துப்பாக்கிச் சூடும், அடிதடியும்.. என்ன பன்ன போறோம்னு தெரியல..

பிகு: நான் அங்க இருந்தவரை நடந்ததுல கொஞ்சம் தான் எழுதியிருக்கேன்.. இதையொட்டி எழுகிற கேள்விகளும், விளக்கங்களும் எழுதுற மனநிலை இப்போ எனக்கு இல்லை.. இன்னும் மீள முடியாம தான் இருக்கேன்..
_________
Marx Anthonisamy
Outsiders = Outlaws : உருவாகும் புதிய மொழி

“Outsiders” தான் வன்முறைகளுக்குக் காரணம் என ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதற்கு தூத்துக்குடிக்கு வெளியிலிருந்து வரும் தமிழர்களைக் காய்கிறது தமிழக உளவுத்துறை

இன்றைய The Hindu நேற்றைய கொடுமைகள் பற்றிய செய்தியில் அது குறித்து வருவாய்த்துறையினரும் காவல்துறையினரும் என்ன சொல்லியுள்ளனர் என்பதைப் பதிவு செய்துள்ளது.
வருவாய்த்துறை, “உளவுத் துறை சரியான தகவல் கொடுக்கவில்லை” எனக் குற்றம் சாட்டியுள்ளது.

உளவுத் துறையோ எல்லாவற்றிற்கும் வெளியிலிருந்து வந்து ‘தீவிரமாகப்’ பேசிச் செல்லும் போராட்ட ஆதரவாளர்களைக் குற்றம் சொல்லியுள்ளது. “ஜல்லிக்கட்டு மற்றும் ஹைட்ரோகார்பன் போராட்டங்களில் பார்த்த அதே முகங்களை தூத்துக்குடியிலும் பார்க்க முடிந்தது” என outsiders மீது குற்றம்சாட்டுகிறார் அந்த உளவுத்துறை அதிகாரி..

அடுத்து நாம் எதிர்பார்த்தபடியே இந்த outsiders “தீவிரவாத இயக்கங்களுடன இணைக்கப்படுகின்றனர். “பெண்கள்கூட” என்கிறார் அவர்.
ஆக இனி கூடங்குளம் போராட்டம் என்றால் கூடங்குளத்து மக்கள்தான் போராட வேண்டும். வெளியிலிருந்து சுற்றுச் சூழல் இயக்கத்தினரோ இல்லை ஏன் கட்சிக்காரகளோகூட சென்றால் அவர்கள் தடுக்கப்படலாம், ஏன் கைதும் செய்யப்படலாம்.
“ஏன் இப்படியான outsiders ஐத் தனிமைப்படுத்தி கைது செய்யவில்லை?” எனக் கேட்கிறார் The Hindu நிருபர்.

ஊடக மனநிலை இப்படி உள்ளது.
இனி போராட்டங்கள் என்றால் அந்த உள்ளூர்க்காரர்கள்தான் போராட வேண்டும். நாம் யாராவது போனால் அவர்கள் Outsiders எனக் கைது செய்யப்படலாம்.
சென்ற ஆன்டு தெலங்கானாவிலிருந்து சட்டிஸ்கர் சென்ற உண்மை அறியும் குழுவைக் கைது செய்து ஆறு மாதங்கல் வரை சிறையில் அடைக்கவில்லையா அங்குள்ள பாஜக அரசு.
மக்களை இப்படி outsiders X locals என எதிர்வுகளாக்கி outsiders = outlaws என ஆக்கும் இந்த மொழி விளையாட்டு பாசிசமாகும் சூழலுக்கு ஒரு எடுத்துக்காட்டு.
_________
Abdul Hameed Sheik Mohamed
தமிழகத்தை வட கிழக்கு மாநிலங்கள் போல, காஷ்மீர்போல ராணுவமயமாக்க விரும்பும் மத்திய அரசின் நோக்கமே இப்போதையை நிகழ்வுகளில் வெளிப்படுகிறது
_________
Chandran Veerasamy
144 தடை உத்தரவை மீறி, அதிக வாகனங்களில் சென்றதாக ஸ்டாலின், திருநாவுக்கரசர், வைகோ திருமாவளவன், கமல்ஹாசன், ஜி.கே.வாசன், டி.ராஜேந்தர், ரா.முத்தரசன், கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக கூறி இந்திய தண்டனைச் சட்டம் 143, 188 மற்றும் 153(ஏ) பிரிவுகளின் கீழ் தென்பாகம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
#கொலைகாரக் கூட்டம் கோட்டையிலே
உள்ளவரை நாட்டின் நிலை இதுதான் !
_________
Vinayaga Murugan
போலீசுக்கு ரைபிள். சங்கிகளுக்கு போட்டோஷாப். இலக்கு ஒண்ணுதான். ஆயுதங்கள்தான் வேறு வேறு!
_________
Mahendra Kumar
கலவரத்தை அடக்கும் காவ்துறையின் முயற்சியில், தவறுதலாக இறந்துவிட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தான் காலங்காலமாக வழக்கம்.
திட்டமிட்டே சுட்டுக்கொலை செய்துவிட்டு, மீடியாவை சந்திப்பதற்கும், நிவாரணம் வழங்குவோம் என்று சொல்வதற்கும் எவ்வளவு தடித்த தோல் இருக்கவேண்டும் இவர்களுக்கு?

எதற்கும் துணிந்த கொலைகார அரசு இது! இந்த அடிமை அரசையும், அவர்களை சார்ந்தவர்களையும் இனியும் தலையெடுக்க விடாமல் செய்யவேண்டும்.
அதோடு மக்கள் விரோத பாஜக அரசை எந்த ரூபத்திலும் உள்ளே விடவும் கூடாது! இதுவே நமக்கிருக்கும் தலையாய பணி!
_________
Lakshmanasamy Odiyen Rangasamy
தூத்துக்குடி அப்டேசன்
மதியம் 1 மணி, 24-5-2018
1. துணை ராணுவம் எதுவும் வரவில்லை.
2. மற்றமாவட்ட காவல்துறைப்படைகள் தான் அதிகளவில் குவிக்கப்பட்டிருக்கின்றன.
3. நேற்றிரவு மட்டும் 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காவல்துறையினரால் அழைத்துச்செல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனால் காவல்துறை கணக்கில் 132தான் சொல்லப்படுகிறது. மீதமுள்ள நபர்களை சட்டப்படி கைது செய்யவில்லை, எனவே இந்த சட்டமீறலை நிறுத்தவேண்டும்.
4. காவல்துறை அழைத்துச்சென்றவர்கள் போக, 100க்கும் மேற்பட்ட இளைஞர்களைக் காணவில்லை.
5. ஸ்டெர்லைட்டுக்கு மின்சாரம் நிறுத்தப்பட்டாலும், Sterlite நிறுவனமே தனியாக 160மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் யூனிட் வைத்திருக்கிறது. (SESA Sterlite) எனவே இது கண்துடைப்பு.
6. காவல்துறைதான் வதந்திகளை கிளப்புகிறது, நேற்றிரவு காவலர் 2 பேர் வெட்டப்பட்டதாக, குண்டு வீசப்பட்டதாக சொல்வது வதந்தி, அப்படி யாரும் செய்யவில்லை.
7. இணையம் இருந்தால் உண்மை வீடியோக்களைப் பகிரலாம், இல்லாததால் எங்கள் பக்க உண்மைகளைப் பகிர முடியவில்லை, அனைவரும் பயந்துபோய் பதுங்கியிருக்கிறோம்.

அந்த பாலத்துக்கு கீழ பெட்ரோல் குண்டுகளையும், கண்ணீர் புகை குண்டுகளையும் வீசியது போலீஸ்காரனுங்க தான்.. எத்தனை குண்டுகள்னு கணக்கேயில்ல..
பாதிபேர் அந்த புகையையும், நெடியையும், கண்ணெரிச்சல், தோல் எரிச்சல் எல்லாத்தையும் தாண்டி முன்னேறி போயிட்டாங்க..

8. இறந்தவர்கள் எண்ணிக்கை 26 பேர். 26 உடல்களும் தூத்துக்குடி அரசுமருத்தவமனையில் இருக்கிறது, ஆனால் உறவினர்கள் பார்க்க அனுமதி மறுக்கப்படுகிறது.
9. ஒவ்வொரு பகுதி மக்கள் பிரதிநிதியும் அழைத்துப்பேசினாலே பிரச்சினை நின்றுவிடும், ஆனால் காவல்துறையை நம்பிப்போகமுடியவில்லை.
10. தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கையசைத்து உள்ளே வாருங்கள் என்று அழைத்ததே காவல்துறைதான், நம்பிப்போன மக்கள் பிரதிநிதிகளைத்தான் போலீஸ் சுட்டுக்கொன்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மட்டும், 15 பேர் இப்படி சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.
ரா புவன்
_________
வாசுகி பாஸ்கர்
நண்பர்கள் நிறைய பேர் பார்ப்பனர்களையும், பார்ப்பனர்களிடம் கழுவிக்குடிக்கும் சூத்திர அடிமைகளையும், ஸ்டெர்லைட் விவகாரத்தில் அவர்கள் பேசும் பதப்படுத்தப்பட்ட கொழுப்பு வாதத்திற்காக unfriend செய்தபடி இருக்கிறார்கள்.

பலபேர் காலம் வரும்போது தான் உணர்வீர்கள், இதைத்தான் எல்லா பொழுதுகளிலும் சொல்லி வருகிறோம். இன்னமும் இந்த நாட்டில் எஞ்சிருக்கிற அரசியலமைப்பு சட்டம் தான் நம்மை காப்பாற்றி வருகிறது. பார்ப்பனர்களின் மனுநீதி அடிப்படையில் இந்த நாடு இயங்க ஆரம்பித்தால், அப்படியான கொடுங்கோல் ஆட்சியையும், வன்முறையையும், குரூர பாசிச முகத்தையும் உலகத்தின் எந்த பகுதியிலும் நீங்கள் பார்க்க முடியாது.
ஜெர்மனியின் யூத இன அழிப்பை அரிசி சேவை சாப்பிட்டுக்கொண்டே ரசித்தவர்கள் பார்ப்பனர்கள், ஹிட்லரின் கை ஓங்கினால் உருவி பிழைத்துக்கொள்ளலாம் என்று ஜெர்மன் மொழியை கற்க தயரானவர்கள் பார்ப்பனர்கள்.

வெளிச்சத்தை பார்க்கும் கருப்பான் பூச்சிகளை போல, சோப்பு நுரைக்கு முகம் சுளிக்கும் கழிவறை இடுக்குகளில் வாழும் நுண் கிருமிகளை போல பார்ப்பனர்களிடம் அஞ்சி ஓடும் ஒரு தன்மை உண்டு. அது அவர்களின் முகத்தை தோலுரிப்பதே. உண்மையை உள்ளது உள்ளபடி சொன்னால் பார்ப்பனர்களால் பொறுத்துக்கொள்ளவே முடிவதில்லை, பொய் புகழ்ச்சிக்கும், குறுக்கு வழியில் சோறு தின்று குறுக்கு வழியில் உடல் வளர்த்து ஊளைச்சதையில் திளைப்பவர்களால் நிஜத்தை உள்வாங்கவே முடிவதில்லை .

நீங்கள் அதை பேச ஆரம்பித்தால் தானாகவே ஓடுவார்கள், இடுக்குகளில் ஒளிவார்கள், எந்த பார்பனரையும், பார்பனீயவாதிகளையும் நான் நட்பு வட்டத்தில் இருந்து நீக்கியதேயில்லை.

காலத்தால் அவர்களே ஓடினார்கள், ஒருநாள் கூத்தல்ல இது. ஆயிரம் வருஷமா நடக்குற கூத்து. ஸ்டெர்லைட் வரை பேசிவிட்டு பார்ப்பனியத்தின் எல்லா அக்கிரமங்களையும் வருடம் முழுவதும் ஏற்கத்தயாரான உங்கள் நிராகரிப்பில் அவர்கள் வாழ்கிறார்கள்.

ஆகையால், அவர்கள் பேசுவதினால் நீங்கள் விலக கூடாது, இந்த தளமானாலும் இந்த மண்ணானாலும் அக்கறையோடு அறச்சீற்றமடையும் நீங்கள் தான் இங்கே இருக்கவேண்டியவர்கள், ஒட வேண்டியது அவர்கள்.

நாம் பேசித்தான் அவர்களை ஓட்டமெடுக்கச்செய்ய வேண்டும்.
______
Dinesh Guavera
நாங்கள் தான் தமிழ்நாட்டின் எதிர்கட்சி
நீங்கள் எங்களை துச்சமென நினைத்தாலும் உண்டியல் குலுக்கிகள் என்றாலும் செவ்வாழை என்றாலும் ஆளும் வர்க்கத்தை முதலாளித்துவத்தை எதிர்க்க இன்முகத்தோடு உங்களுக்காக களத்தில் நிற்க்கின்றோம் கம்யூனிஸ்ட்கள்… எங்களோடு இணைந்து போராடுங்கள் எங்களுக்கு பலம் சேருங்கள் இது ஓட்டுக்காக அல்ல சுட்டுக் கொல்லப்பட்ட மக்களின் நீதிக்காக…
-தினேஷ் குவேரா
_______
Tamil Selvan
குரல்வளையை நெரிப்பதன் மூலம் கொலைப்பழியிலிருந்து தமிழக அரசு தப்ப முடியாது.

தூத்துக்குடியில் வேதாந்தம் கம்பெனியாரின் உயிர்க்கொல்லி ஸ்டெர்லைட் ஆலையைக் காப்பதற்காக,13 பேரைச் சுட்டுப்பலி கொடுத்த தமிழக அரசு இப்போது உண்மைகளை மறைக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது.அப்பகுதியிலிருக்கும் நண்பர்கள் இளைஞர்கள் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக இணையவெளியில் பல உண்மைகளைப் பேசி வருகின்றனர்.உண்மையில் கொல்லப்பட்டவர்கள் எத்தனைபேர்?காவல்துறை பிடித்துச் சென்ற 122 இளைஞர்களின் கதி என்ன?பெனிஸ்டா என்கிற 18 வயது மாணவியின் வாயில் துப்பாக்கியை வைத்துச் சுட்டது ஏன்? என்று அரசுக்கு நெருக்கடியைத்தரும் கேள்விகள் இணையத்தின் மூலம் வெளி உலகுக்குச் சென்று கொண்டிருப்பதால், எடப்பாடி அரசு தென் மாவட்டங்கள் மூன்றிலும் இணையதள சேவைகளைத் தடை செய்துள்ளது.

கருத்துரிமைக்கு எதிரான இந்நடவடிக்கையை தமுஎகச வன்மையாகக் கண்டனம் செய்கிறது.உடனடியாக முடக்கப்பட்ட இணைய சேவை மீண்டும் இயங்க அனுமதிக்கப்பட வேண்டும்.மக்கள் மீது உண்மையான அக்கறை இருக்குமானால் தமிழக அரசு குற்ற உணர்வு கொண்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பைக் கோரி ,விசாரணைகளை எதிர்கொள்ள வேண்டும்.குரல்வளையை நெரிப்பதன் மூலம் கொலைப்பழியிலிருந்து தமிழக அரசு தப்ப முடியாது.
ச.தமிழ்ச்செல்வன், தலைவர்
சு.வெங்கடேசன், பொதுச்செயலாளர்
________
Jose Antoin
வெளிப்படையாக நமக்கு தெரிவதைவிட பா.ஜா.க. வின் அடிமையான எடப்பாடி அரசின் செயல்பாடுகள் மிகக்கொடூரமான நோக்கம் கொண்டவை. தற்போது சாட்சியங்களற்ற தாக்குதலுக்காக கட்டம் கட்டப்பட்டிருக்கின்ற மூன்று தென் மாவட்டங்களும் (தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாக்குமரி) சிறுபான்மையினர் அதிகமாக வசிப்பவை.(அருகிலுள்ள இராமநாதபுரம் மாவட்டமும் சிறுபான்மையினர்-குறிப்பாக முஸ்லீம்கள்- அதிகமாக வாழும் மாவட்டம்.) ஆக, மக்களை வேட்டையாடி, மத, சாதி அடிப்படையில் பிளவுகளை ஏற்படுத்தி கலவரங்களை மூட்டிவிட்டு கார்பொரேட் நலன்களை பாதுகாப்பதுடன், இந்துத்துவ அரசியலை வலுவாக காலூன்ற வைப்பதே அரசின் எண்ணம்.

குருமூர்த்தியின் “சர்ச்சில் ஏன் போராட்டக்காரர்கள் குழுமினார்கள்” என்ற கயமைமிக்க வாதத்தையும், அவர் ஆன்மீக அரசியல் என்ற போர்வையில் பாசிச அரசியலை முன்னெடுக்கும் ரஜினியை சந்தித்ததையும், பா.ஜ.க – விற்கு ஆதரவு கொடுத்திருந்தால் தூத்துகுடியில் இந்த படுகொலை நிகழ்ந்திருக்காது என்ற பொன். இராதாகிருஷ்ணனின் கூற்றையும் ஒருசேர கணக்கிலெடுத்துப் பார்த்தோமென்றால் நாஜிக்களின் தந்திரோபாயங்களுடன் மத்திய மாநில அரசுகள் செயல்படுவதை பார்க்க முடியும். இது தமிழக வரலாற்றில் மதசார்பின்மை அரசியல் எதிர்கொள்ளும் மிகப்பெரும் சவாலாக இருக்கப் போகிறது. இந்த சூழ்ச்சியை தமிழக மக்கள் முறியடித்துவிட்டால் இந்துத்துவா சக்திகள் இம்மண்ணில் எழுந்திருக்க முடியாதபடி தோற்கடிக்கபட்டிருப்பர். எல்லா ஜனநாயக சக்திகளும் ஒன்றுசேர்ந்து செயல்பட வேண்டிய நேரம் இது.
_______
ஜெனி
நடுநிலைமையாளர்கள் என்றும், வளர்ச்சியின் பக்கம் நிற்பவர்கள் என்றும், தேசாபிமானம் கொண்டவர்கள் என்றும் சொல்லிக் கொண்டு திரிபவர்களே!
உங்களின் பெயரால் தான் இந்த படுகொலைகள் நிகழ்த்தப்படுகின்றன. யார் தேசபக்தர்கள்? நாட்டின் அத்தனை வளங்களையும் அள்ளிக் கொடுத்து விட்டு தன் வருமானத்தையும், அதிகாரத்தையும் பெருக்கிக் கொள்பவர்களா? இல்லை உனக்காகவும், எனக்காகவும், அடுத்த தலைமுறைக்காகவும் குண்டடிப்பட்டு செத்துக் கிடப்பவர்களா?

தூத்துக்குடி இன்று தமிழகத்தின் நோய்களுக்கான தலைநகரம். கேன்சர் இன்று அத்தனை பேருக்கும் வருகிறது. ஏன்னு கேட்டிருக்குறோமா? மாரடைப்பும், கேன்சர் மரணமும் இன்று “இயற்கை மரணங்கள்” category-ல வந்திருக்கு. எப்படி இந்த நிலைமை?

போராடுற மக்கள சிறுமைப்படுத்துகிறவர்களுக்கு ஒரு கேள்வி….
“உங்கள் வீட்டில் கேன்சர் வந்து செத்தவர்கள் இல்லையா? இனிமேல் கேன்சர், இதய நோய் வந்து சாக மாட்டார்களா?”
போராடுற உழைக்கிற மக்களுக்காக இல்லை. உங்களுக்காக, உங்கள் குழந்தைகளுக்காக கேள்வி கேளுங்க.

தமிழ்நாட்டில் கொடைக்கானல், கடலூர், காவிரி பாய்ந்தோட வேண்டும் என்று நாம் விரும்பும் மேட்டூர், சேலம், தென் தமிழ்நாட்டில் தூத்துக்குடி, காயல்பட்டிணம், கூடங்குளம், வடசென்னை முழுவதும் இன்னும் இன்னும் அத்தனை இடங்கள் இன்று தொழிற்சாலைகளால் மாசுபட்டு கிடக்கின்றன. இதை நாமும் எதிர்க்காமல், எதிர்ப்பவர்களை அவங்க கிறிஸ்தவங்க, முஸ்லிமுங்க, இந்துக்களா இருந்தா தீவிரவாதிங்க…. Bore அடிக்குது. உருப்படியா சேர்ந்து வேலை பாக்கலைன்னா, சாவு எல்லாத்துக்கும் சேத்து தான் வரும். பாத்துக்கோங்க.
________
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தை ஒடுக்கும் தமிழக அரசு!
சென்னையில் போராட்டம் நடத்திய இளந்தமிழகம் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தோழர்கள் கைது!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தின் நூறாவது நாளான நேற்று (22-5-2018) ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி சென்ற மக்களைத் தாக்கி வன்முறையில் இறங்கியது தமிழக காவல்துறை. அமைதியான முறையில் பேரணியாக சென்ற மக்கள் ஆட்சியர் அலுவலகத்தைத் தாக்கினர், வாகனங்களைத் தீயிட்டு கொளுத்தினர் என்று உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டு போராடும் மக்கள் மீது தனது வெறியாட்டத்தை நிகழ்த்தியது காவல்துறை. மக்கள் மீது தடியடி நடத்தியதோடல்லாமல் துப்பாக்கிச் சூடு நடத்தியும் வன்முறை வெறியாட்டத்தினை அரங்கேற்றியது.

நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் மட்டும் 11க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கும் நிலையில் பலர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் மருத்துவமனைக்குள்ளும் புகுந்து சிகிச்சை பெறுபவர்களைத் தாக்கி கைது செய்தது எடப்பாடி அரசின் காவல்துறை. இந்நிலையில், காவல்துறையை தன் நேரடி கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களே, காவல் துறையின் இவ்வன்முறை வெறியாட்டத்துக்கு முழு பொறுப்பாகிறார்.

ஆகையால், தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறையை தூண்டிவிட்டு போராடிய பொதுமக்களை பச்சை படுகொலை புரிந்த காவல் அதிகாரிகளின் மீதும் அதற்குத் துணைநின்ற தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் மீதும் கொலை வழக்கு பதியப்பட வேண்டும். மேலும், தமிழக காவல்துறையின் வன்முறை வெறியாட்டத்துக்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மையமாக வைத்து இன்று காலை 9.30 மணி அளவில் இளந்தமிழகம் இயக்கம் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த தோழர்கள் சென்னை அண்ணா சாலையில் மறியல் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுமார் 22 பேரை கைது செய்து சைதாப்பேட்டை காவல் நிலையம் அருகிலுள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்த காவல்துறையினர், கைதானவர்களில் 8 பெண்களை மட்டும் விடுவித்துவிட்டு ஏனைய தோழர்களை இ.பி.கோ 341, 353, 143, 188, 506(1) ஆகிய பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

போராடிய மக்களை துப்பாக்கிச் சூடு நடத்தி பச்சைப் படுகொலை செய்து கொண்டிருக்கும் அதேவேளையில் அம்மக்களுக்குத் தோள் கொடுக்கும் எம் போன்ற தோழர்களையும் வழக்கு பதிவு செய்து சிறையிலடைக்கும் எடப்பாடி அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

மக்கள் போராட்டங்களை சிறைகளோ, துப்பாக்கிக் குண்டுகளோ ஒருபோதும் அடக்கிவிட முடியாது என்பதை எடப்பாடி அரசுக்கு அறிவுறுத்துகிறோம். அரசின் அடக்குமுறைகள் மேலும் மேலும் எங்களை வீரியத்துடன் போராடவே தூண்டும்.

போலீஸ்: அதுக்கு விடமாட்டாங்கம்மா, வெறும் பிஸ்கட்டா திங்கிறோம் முடியல, பசியில இருக்கோம் அதாம்மா கேட்டோம்.
tuty அம்மாக்கள்: சரி, நாங்களும் ரெண்டு மூணு நாளா ஒல(உலை) வைக்கல, சின்னப்பிள்ளைகளுக்கு மட்டுந்தான் ஏதாவது செஞ்சு கொடுக்கோம், சரி கொஞ்சம் பொறுங்க மருமகள ரவ கிண்டித்தரச் சொல்றேன்.

எடப்பாடி அரசே,
1. தூத்துக்குடி ஸ்டெலைட் எதிர்ப்புப் போராட்டத்தை அரச பயங்கரவாதம் கொண்டு நசுக்கும் முயற்சியை உடனடியாகக் கைவிடு!
2. தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் வன்முறையைத் தூண்டிவிட்டு பச்சைப் படுகொலைகள் புரிந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களுக்குத் துணைபோன தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மீது கொலை வழக்கு பதிவு செய்!
3. நீதி கேட்டு போராடிய இளந்தமிழகம் மற்றும் தமிழ்த் தேச மக்கள் முன்னணி தோழர்களை உடனடியாக விடுதலை செய்!
4. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வழிவகை செய்
5. காவல்துறையின் வன்முறை வெறியாட்டங்களுக்கும் நிகழ்த்தப்பட்ட பச்சை படுகொலைகளுக்கும் பொறுப்பேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியே பதவி விலகு!
_______
ராஜசங்கீதன் ஜான்
என் பதிவில் அன்றே சொன்னது— இப்போது இன்று
தூத்துக்குடி பிரச்சினைக்கு ஏன் திருநெல்வேலி மற்றும் கன்யாகுமரி மாவட்டங்களில் இணையம் முடக்கப்படுகிறது? ஏன் மூன்று மாவட்டங்கள் கவனிக்கப்படுகின்றன?
ஏன் சம்பந்தமே இல்லாமல் படகுகள் எரிக்கப்படுகின்றன?
துணை ராணுவத்தை எல்லாம் வரவழைத்திருப்பது வெறும் ஸ்டெர்லைட் பிரச்சினைக்காக மட்டும் அல்ல. உண்மையில் இந்த களேபரம் எல்லாம் சாகர்மாலா திட்டத்துக்காக!

சாகர்மாலா திட்டம் என்றால் என்ன?
கடலோர துறைமுகங்களை வர்த்தக துறைமுகங்களாகவும் இன்னும் புது துறைமுகங்களை உருவாக்குவதும்தான் சாகர்மாலா திட்டம். கடலோரங்களில் பொருளாதார மையங்கள் உருவாக்கப்படும். பன்னாட்டு நிறுவனங்களுக்கு அவை தாரை வார்க்கப்படும்.

மீனவன் வேலை இழப்பான். கடல்சார் உள்நாட்டு தொழில்கள் நசியும். பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் தொழில் மையங்களை நிறுவ அந்த கடலோரங்களில் நிலங்களை ஆர்ஜிதம் செய்ய வேண்டியிருக்கும். அதில் மக்கள் நிலங்கள் கையகப்படுத்தப்படும். பூர்விக இடங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்படுவார்கள். இவை எல்லாம் எப்படி சாத்தியம்?

துணை ராணுவத்தால் சாத்தியம்.
கூடங்குளம், மீனவ பிரச்சினை என மூன்று மாவட்டங்களில் எழும் எதிர்ப்பையும் ஒரேயடியாக நசுக்கியெறிந்து பன்னாட்டு நிறுவனங்களின் லாபவெறிக்கு துணை நின்று தம் சொந்த மக்களையே அரசுகள் கொன்று குவிக்கும் ஒரு நீண்ட வேலைக்கான அடித்தளம்தான் இப்போது அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
________
Chandra Sekaran
மொதல்ல இந்த சினிமாகாரனுங்கள அடிச்சி தொறத்தி விடணும் …போலீஸ்காரனுங்களுக்கு இந்த அளவுக்கு குருட்டு தைரியம் வர போலீஸ் வேஷம் போட்டு இவனுங்க பண்ண கூமுட்டத்தனம் ஒரு முக்கிய காரணம்!
________
Saraa Subramaniam
மாண்புமிகு முதல்வர் என்றும் பாராமல் #EncounterEdappadi என்பதை ட்விட்டரில் சென்னை ட்ரெண்டிங்கில் முதலிடத்தை நீடிக்கச் செய்வதுதான் உங்கள் அறமா?
144 தடை உத்தரவை மதித்து தானே முன்னுதாரணமாகத் திகழ்பவரும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கூட விளிம்புநிலை மக்கள் போல ஊடகம் மூலம் அறிந்துகொள்ளும் சாமானிய மக்களில் ஒருவராகத் திகழ்பவருமான முதல்வர் பழனிசாமியைக் கழுவியூற்ற எப்படி மனசு வருகிறது உங்களுக்கெல்லாம்..?
_______
Ezhilan M
எப்பேர்பட்ட முதல்வர் தமிழகத்தை ஆளும் காலத்தில் வாழ்கிறோம் என நினைக்கும் போது பெருமை பீறிட கண்களில் ஆனந்த கண்ணீர் வழிகிறது.
செய்தியாளர் : துப்பாக்கிச்சூடு நடந்த இடத்திற்கு இதுவரை ஏன் நீங்கள் செல்லவில்லை ?
முதல்வர் : நான் சட்டத்தை மதிப்பவன், அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் நான் அங்கு செல்லவில்லை
செய்தியாளர் : ??????
____________
Bharathi Vasan
போராட்டக்களத்தில் தலையில் கல்லடிபட்ட காவலரை நான்கைந்து இளைஞர்கள் பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கின்றனர்.
மக்கள்திரளில் சிக்கி உதைபட்ட ஒருகாவலரையும் மீட்டு – அனுப்பியுள்ளனர்… இளைஞர்கள்.

இந்தப்போராட்ட களேபரங்களைக் கண்டு மயக்க நிலைக்குப்போன ஒரு பெண்காவலரை கூட்டிவந்து குடிக்க தண்ணீர் கொடுத்து – ஆசுவாசப்படுத்தி இருக்கின்றனர் – பகுதியினர்.

தொலைக்காட்சியில் தொடர்ந்து மக்களின் இந்த மனிதநேயம் – மனிதாபிமானம் குறித்தே சிலாகித்துக் கொண்டிருக்கிறார்கள்…
பாவிகள்…

கொடூரமான போலீஸ் படை திட்டமிட்டு தயவுதாட்சண்யமற்ற 10க்கும் மேற்பட்டவர்களையும் சுட்டுக் கொன்றிருக்கிறது.

மனிதாபிமானமும் மனிதநேயமும் சாதாரண மக்களிடம் மட்டுமே இருக்க வேண்டும் என்பதுதான் நியதியா… அதுதான் போற்றுதலுக்குரியதா….
மக்களிடமும் எதிர்தாக்குதலுக்கான ஆயுதம் வரும் வரையில் – இந்தக் கொடூரக் காட்டுமிராண்டிகளின் அதிகாரம் முடிவுக்கு வராது என்பதே எதார்த்தம்.
_________
Raja Prabhu VK
நடந்த கலவரத்தை ஊடகத்தில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் – எடப்ஸ்
ஒரு முதல்வர் மாதிரி பேசுயா… எதுக்கு சுட்டீங்கன்னு கேட்டா நான் சென்னைல இருந்தேன் சட்டத்தை மதிக்கணும்ன்னு கதை உட்டுகிட்டு
________
Kappikulam J Prabakar
போலீஸ்: யம்மா குடிக்க கொஞ்சம் தண்ணி கொடுங்களேன்..
tuty அம்மாக்கள்: இந்தாப்பா…. ஏம்ப்பா இப்டிப் போட்டு அடிக்கீங்க..
போலீஸ்: இல்லம்மா, எங்களுக்கே முடியல.. மேலதிகாரி சொல்றாங்க.. வெளியூர்காரங்க வந்திருக்காங்க, அவங்களுக்கு என்னன்னே தெரியலம்மா… யம்மா.. எங்களுக்கு சோறு பொங்கித்தர முடியுமா.. எவ்ளோ வேணாலும் காசு தாரோம்..
tuty அம்மாக்கள் : தம்பி உங்களுக்கு சும்மாவே நான் சோறு போடுவேன். ஆனா நீங்க செஞ்ச காரியத்துக்கு உங்கள பாத்தாலே பத்திக்கிட்டு எரியுது. செத்த பொணத்தக் கூட பாக்க விடாம ஆஸ்பத்திரிய பூட்டி வைச்சிருக்கீங்களே.. உங்களால அத தொறந்து விட முடியுமா..?
போலீஸ்: அதுக்கு விடமாட்டாங்கம்மா, வெறும் பிஸ்கட்டா திங்கிறோம் முடியல, பசியில இருக்கோம் அதாம்மா கேட்டோம்.
tuty அம்மாக்கள்: சரி, நாங்களும் ரெண்டு மூணு நாளா ஒல(உலை) வைக்கல, சின்னப்பிள்ளைகளுக்கு மட்டுந்தான் ஏதாவது செஞ்சு கொடுக்கோம், சரி கொஞ்சம் பொறுங்க மருமகள ரவ கிண்டித்தரச் சொல்றேன்.
காத்திருக்கும் காவலரும், கருணையுள்ள எம் மகளிரும்…- #தூத்துக்குடி

சுட்டுக் கொல்றதுக்குத்தான் ஐ.ஏ.எஸ். – ஐ.பி.எஸ். படிச்சாங்களா ? கொதித்தெழும் சென்னை மக்கள்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்தும் அதிகாரவர்க்கத்தின் திமிர்த்தனமான அறிக்கைகள் குறித்தும் தங்களது கருத்துக்களை தெரிவிக்கின்றனர் சென்னைவாசிகள்

பன்னீர்செல்வம் – கட்டிட மேஸ்திரிதூத்துக்குடியில 100 நாளு போராட்டம் பண்ணும்போது இந்த மந்திரிகளும் அதிகாரிகளும் ஏசி ரூம்ல கல்லாக்கட்டிக்கினு உக்காந்திருந்தானுங்க..
போராட்டம் வன்முறைக்குப் போயிடுச்சி… சுட்டோம்.. னு சொல்றானுங்க. நாளைக்கு நம்மளுக்கும் இதே கதிதான். ரேஷன் இல்ல. தண்ணி இல்ல, கரண்ட்டு இல்லனு போராடுனாலும் சுடுவானுங்க

தயாள குமார் – சினிமா கார்பெண்டர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். படிச்சிட்டு எதுக்கு இருக்குறானுங்க.. சுடுறதுக்கா? ஸ்டெர்லைட்டால மக்களுக்கு என்ன பிரச்சினைன்னு பாத்து அவங்களுக்கு வழிகாட்ட வேண்டிய வேலையிலதான அவனுங்க இருக்கானுங்க? சுட்டுட்டு திமிரா பேசுறானுங்க.. இவனுங்க அண்ணனையும் தம்பியையும் சுட்டா விட்றுவானுங்களா? ஜனங்க அடிமை மாதிரி கல்கூட எடுத்து வீசாத சாவனுமா?

சரவணன் – டப்பிங் ஆர்ட்டிஸ்ட்மாவோயிஸ்ட்டு ஊடுருவிட்டாங்கன்னு சொல்றான். நீ சரியில்லன்னா, அவுங்க வராங்க என்ன தப்பு? போலீசு சுட்டுக் கொன்னவங்க எல்லாம் வாலிப பசங்க.. எதிர்கால சந்ததிகள். குறிபாத்து கொலை பண்றானுங்க. ஜல்லிக்கட்டு போராட்டத்துலயும் இதுதான் பண்ணாங்க. எதிர்கால தமிழகம் அடிமைகளா வாழனும்னு திட்டம் போட்டு செய்யுறானுங்க. இவ்வளவு படுகொலை நடந்தபிறகும் எல்லா எதிர்க்கட்சியும் டிராமா பண்றாங்க.. வெறும் அறிக்கையும் அடையாளப் போராட்டமும் விடுறாங்க.

மணி – டீக்கடைக்காரர்:
ஸ்டெர்லைட்டு மண்ணுல எதிர்காலத்துல யாரும் இருக்கக்கூடாது. அந்த ஆலையைத் தவிர 10 வருசத்துக்கு பிறகு எதுவும் இருக்காது. அதான் அவனுங்க திட்டம். ”144 தடையிருக்கு.. யாரும் வீட்ட விட்டு வெளிய வராதீங்க”ன்னு மைக்குல சொல்லிட்டு உள்ள இருக்கவங்களையும் வீடு பூந்து சுடுறான். யார ஏமாத்தறான்?

சின்னதம்பி – ஏசி மெக்கானிக்:
நான் அந்த ஊருக்காரன்தான்.. இப்ப அடிக்க வந்தவன் எல்லாரையும் அங்கேயே புடுச்சி வைக்கனும். அவனுங்கள சுட வேண்டியது இல்ல.. ஒரு வருசம் குழந்தை குட்டியோட அவனுங்கள அங்கேயே வாழச் சொல்லணும்.

கார்த்திக் – ஃபோரம் மால் ஊழியர்
ஏசி ரூம்ல மெட்ராசுல உட்கார்ந்து இருக்கவங்களுக்கே எவ்ளோ நோய், எவ்ளோ ஆஸ்பத்திரி ? அந்த இருக்க ஜனங்க நோயப் பத்தி சொன்னா மட்டும் சுட்டுடுவாங்களா? நாம எல்லாரும் சேர்ந்து அவங்கள காப்பாத்தணும். ஒரே வழி மொத்தமா எல்லாரும் அங்கங்க ரோட்டுல உட்காரணும். பிரச்சினை முடியற வரைக்கும் எழுந்திரிக்க கூடாது.

வேல்ராஜ் – பால் முகவர்:
நான் அந்த ஊருக்காரன்தான். இப்பவும் என் மாமா, சித்தப்பா அங்கதான் இருக்காங்க. பேப்பர்ல சொல்றதவிட சாவு எண்ணிக்கை அதிகம்னு அவங்க போன்ல சொன்னாங்க. குழந்தைக்கு பால் வாங்க, மருந்து வாங்கக் கூட வீட்டிலிருந்து வெளியே போக முடியலன்னு அழுவறாங்க. ஆம்பளைங்க மொத்தமா ஊரவுட்டு தலைமறைவா போறாங்க. அங்க இருந்தா செத்திருவோம்னு .. சொல்றாங்க.

-வினவு புகைப்படச் செய்தியாளர்

திருச்சி – ஓசூர் : தூத்துக்குடி படுகொலை – குற்றவாளிகளை கூண்டிலேற்றுவோம் !

தூத்துக்குடி படுகொலையின் குற்றவாளிகளை கூண்டிலேற்றுவோம் ! ஓசூர் ஆர்ப்பாட்டம்

“ஸ்டெர்லைட்டை எதிர்த்த மக்கள் மீது துப்பாக்கி சூடு ! அரசும் ஸ்டெர்லைட் நிர்வாகமும் திட்டமிட்டு நடத்திய படுகொலை !! படுகொலையின் குற்றவாளிகளை கூண்டிலேற்றுவோம் !!!” என்ற முழக்கத்தை முன்வைத்து ஒசூரில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக 24.05.2018 மாலை 5.00 மணியளவில் இரயில் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை சேர்ந்த பாகலூர் பகுதி பொறுப்பாளர் தோழர் இரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பு.ஜ.தொ.மு.-வின் மாவட்ட செயலாளர் தோழர் பரசுராமன் கண்டன உரையாற்றினார். இறுதியாக, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை சேர்ந்த தோழர் இ.கோ வெங்கடேசன் நிறைவுரையாற்றினார்.

இவ்வமைப்பின் முன்னணி தோழர்கள், பெண்கள், குழந்தைகள், பெரியோர் மற்றும் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டு தூத்துக்குடி படுகொலைக்கெதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தின் தொடக்க நிகழ்வாக ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடி, துப்பாக்கிச்சூட்டில் பலியான போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் “மக்கள் தங்களின் வாழ்வுரிமைக்காக கொலைகார ஸ்டெர்லைட்டை மூடு! என்ற முழக்கத்தை முன்வைத்து அறவழியில் முற்றுகைப்போராட்டம் அறிவித்து நடத்தினர். இது வழக்கமான நடைமுறைதான். இருந்தபோதிலும் ஸ்டெர்லைட் முதலாளியின் இலாபவெறிக்காக மத்திய அரசின் துணைகொண்டு மக்களை கொலை செய்துள்ளது இந்த அரசு.

இப்படுகொலையின் சூத்திரதாரிகளான தமிழக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், கலெக்டர், எஸ்.பி. உள்ளிட்டவர்களை குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி மக்கள் மத்தியில் பொதுவிசாரனை நடத்தி தண்டிக்க வேண்டும்.

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் உணர்வுபூர்வமாக நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தை பலரும் இறுதிவரை கண்டு, கேட்டு தங்கள் ஆதரவை தெரிவித்துச் சென்றனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
ஒசூர். தொடர்புக்கு : 97880 11784.

***

அரச பயங்கரவாதத்துக்கு அடிபணிய மாட்டோம் ! திருச்சி கண்டன ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து “கார்ப்பரேட் கைக்கூலி எடப்பாடி அரசே, சாவுக்கு அஞ்சமாட்டோம் ஸ்டெர்லைட்டுக்கு சவக்குழி தோண்டும் வரை ஓயமாட்டோம்!” என்ற முழக்கத்தை முன்வைத்து திருச்சி பகுதி மக்கள் அதிகாரம் சார்பில் 24.05.2018 அன்று மாலை 6:00 மணியளவில் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் தோழர் செழியன் தலைமை தாங்கினார். தோழர் ராஜா சிறப்புரையாற்றினார். மேலும் பல்வேறு மாற்று கட்சினரும், ஜனநாயக சக்திகளும் தங்களது கண்டனத்தை பதிவு செய்யும் வகையில் உரையாற்றினர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இந்த ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது கலந்துகொண்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.

தகவல் :
மக்கள் அதிகாரம், திருச்சி மண்டலம்.

வெளியிலிருந்து வந்து தூண்டியவன் வேதாந்தா | துரை. சண்முகம்

சவ நாயகம்

கொலை செய்வதையே
கலையாகக் கற்றவர்கள்
சொல்கிறார்கள்,

”வெளியிலிருந்து வந்தவர்கள்
தூண்டி விட்டார்கள்”

வெளியிலிருந்து வந்து
தூண்டியவன் வேதாந்தா
உள்ளிருந்து
குறிபார்த்து சுட்டது போலீசு

வெளிப்படையான
இந்த உண்மைக்கு
முகம் கொடுக்க முடியாமல்,
கொலை நடுக்கம்
கொஞ்சமும் இல்லாமல்,
”சமூக விரோதிகள் ஊடுருவிவிட்டார்கள்”
என பிணங்களின் மீதேறி
பேசுவதுதான் அரசு!

உண்மையில்
சமூக விரோதிகள்
ஊடுருவவில்லை
அரசாங்க கொலைக் கருவியுடன்
உயிர் உருவி நிற்கிறார்கள்.

சமூக விரோதிகளால்
சமூக விரோதிகளுக்காக
நடத்தப்படும் அரசாட்சியில்
நிலைமை கட்டுக்குள்.
இந்த நிலைமை மீறினால்
சுட்டுக் கொல்!
இது ஜனநாயகமல்ல
சவ நாயகம்!

சிங்கள இனவெறிக்கு
சிதைந்தது ஈழத்தமிழினம்
வேதாந்தாவின் லாபவெறிக்கு
அழிவதோ தமிழினம்!
உங்களை ஆளவிட்டது
எங்களை கொலை செய்யவா?

உப்பளத்து பறவைக்கு கூட
கொப்புளம் வராமல்
உறவாடும் மண்ணில்
எத்தனை படுகொலைகள்
எங்கள் வாசலில்..

பேசித் தீர்த்துக்கொள்வதுதான்
ஜனநாயகம் என்றிருந்தோம்,
பேசினாலே தீர்த்து விடுவதுதான்
ஜனநாயகம் என்பதை
எம் பெண்ணின்
வாயைச் சிதைத்த குண்டு
வரும் தலைமுறைக்கு சொல்கிறது!

மூச்சடக்கி முத்தெடுத்த
முத்துநகர் பரம்பரை
மூச்சிழந்து மூளியாகி
தெருப்பிணமாய்
இ‍ழுபடவோ எம் தலைமுறை

பயிர்க் கலையும்
பண்டை துறைமுகத்தை
உயிர் கலையுமாக்கிய
உழைக்கும் மக்களை
உயிர்க்கொலை புரிந்தவன்
மனித இனத்துக்கே கறை.
மன்னிக்காது வரும் தலைமுறை!

கொடிது! கொடிது
குடிமக்களை
கொலை செய்வது
அதனினும் கொடிது
போராடும்
உயிர்ப் பண்புடையோரை
ஒரு தேசம் இழப்பது.

போராட்ட குணமுள்ள
மக்களை மாய்ப்பது
தேசத்துரோகம்.

எதிர்ப்பவர்களை எல்லாம்
எரிப்பது என்றால்
இது தமிழ்நாடா?
இல்லை,
வேதாந்தா சுடுகாடா?

எண்ணி மாளா தோட்டாக்கள்…
எடுத்து மாளா துப்பாக்கிகள்…
கணக்கில்லாத கைத்தடிகள்..
கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வேண்டிய
இராணுவக் கம்பெனிகள்…
எல்லாம் இருக்கலாம்
உங்களிடம்,
ஆனால்,
உங்களிடம் நீதி இல்லை!

அதனால்தான்,
நினைத்த வேகத்தில்
உங்களை புதைக்க விடாமல்,
போராடும் பிணங்களைப் பார்த்தும்
உங்களுக்கு பயம்.
இருப்பவர்களை பார்த்தாலோ
இன்னும் பயம்.
மனிதர்களே இல்லாத
மயான அமைதிக்கு
விகாரமாய் விரிகிறது
உங்கள் மனம்!

எம் தலைமுறைக்கோ
புரிகிறது,
போராடினால்
கொல்லப்படுவோம்,
போராடாவிட்டால்
சாகடிக்கப்படுவோம்.

சாவதை விட
போராடுவதே மேல்!

போராடுவதே
வாழ்க்கை என்பதால்
நாங்கள்
வாழத் துணிந்துவிட்டோம்!
இணையத்தை முடக்கலாம்
மக்களின் இதயத்தை
முடக்க முடியாது!

மனித உணர்வெங்கும்
துடிக்கிறது தூத்துக்குடி!

– துரை. சண்முகம்