Wednesday, June 24, 2026
முகப்பு பதிவு பக்கம் 443

இந்துத்துவ பயங்கரவாத இயக்கம் சனாதன் சன்ஸ்தா – அடுத்த இலக்கு சிவாஜி வரலாற்றாசிரியர் !

‘இஸ்லாமிய தீவிரவாதம்’; ‘இடதுசாரி தீவிரவாதம்’ என ஓயாமல் அலறும் ஊடகங்கள் கடந்த சில வாரங்களாக வெளிவரும் இந்துத்துவ தீவிரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தா குறித்த செய்திகளை அடக்கியே வாசிக்கின்றன. இந்த செய்திகளை அடக்கி வாசிப்பதற்காகவே ‘நகர நக்ஸல்’ கைதுகள் இந்து தீவிரவாதத்தை ஊட்டி வளர்க்கும் அரசு தரப்பிலிருந்து அரங்கேற்றப்படுகின்றன.

சனாதன் சன்ஸ்தாவின் பின்னணி என்ன?

‘இந்துராஷ்டிரம் அமைக்க யுத்தத்தில் போராடுகிறவர்கள் சொர்க்கத்தை அடைவார்கள். அவர்களை இந்த உலகம் என்றென்றும் நினைவுகொள்ளும்’ சனாதன் சன்ஸ்தா என்கிற அமைப்பு தன்னுடைய இணைய பக்கத்தில் இப்படி சொல்கிறது.

ஜெயந்த் அத்வாலே, குந்தா அத்வாலே என்ற மருத்துவம் படித்த தம்பதி 1995-ஆம் ஆண்டில் தொடங்கியதே சனாதன் சன்ஸ்தா. இந்த அமைப்பு கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மையமிட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ‘இந்து ராஷ்டிரம்’ என்பதே இலட்சியம் என தன்னுடைய இணைய பக்கத்தில் அறிவிக்கிறது சனாதன் சன்ஸ்தா. சமூக விரோதிகளை அழிக்க மூன்றாம் உலகப் போரை 2016லிருந்து 2018 வரை நடத்தும் என்றும் 2019-2022 வரை கடவுளின் இராஜ்ஜியத்தை அமைப்பது குறித்து ஒத்திகைகள் நடத்தப்படும் என்றும் 2023-ஆம் ஆண்டு இந்து ராஜ்யம் அமையும் என்று உறுதியாக அறிவிக்கிறது.

சனாதன் சன்ஸ்தா வெளியீடுகளைப் படிப்பவர்கள் யார் தங்களுடைய எதிரிகள் என்று அறிவார்கள் என்றும் கூறுகிறது. தன்னுடைய எதிரிகள் என இவர்கள் கைகாட்டுவது கடவுள் மறுப்பு பேசுகிறவர்கள், சிறுபான்மையினர் மற்றும் இடதுசாரிகளை.  கோவா, மகாராஷ்டிராவில் நடந்த குண்டுவெடிப்புகளில் தொடர்புள்ளதாகக் கூறி 2011-ஆம் ஆண்டு இந்த அமைப்பைத் தடை செய்ய பரிந்துரைத்தது காங்கிரஸ் தலைமையிலான மகாராஷ்டிர அரசு. ஆனால், அப்போது உள்துறைச் செயலாளராக இருந்த ஆர்.கே.சிங் இதை நிராகரித்தார். அரசு பணியில் இருந்த ஆர்.கே.சிங், தற்போது பாஜக எம்பி.

‘இந்துத்துவ’ தீவிரவாத அமைப்பை வளர்க்கும் ஆர்.எஸ்.எஸ். அரசு

2013-ஆம் ஆண்டு பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் கொல்லப்பட்ட வழக்கில் ‘சனாதன் சன்ஸ்தா’வுக்கு தொடர்புள்ளதாக மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் படை விசாரிக்கத் தொடங்கியது. காவல்துறையையும் இராணுவத்தையும் தோற்கடிக்காமல் இந்து ராஷ்டிர கனவு நிறைவேற வாய்ப்பில்லை என பகிரங்கமாக வெளிப்படையாக தன்னுடைய வெளியீடுகளில் எழுதியது இவ்வமைப்பு. ஆனால், ‘ஆதாரங்க’ளைத் தேடிக்கொண்டிருந்த தீவிரவாத தடுப்புப் படையால், இடதுசாரி செயல்பாட்டாளர் கோவிந்த் பன்சாரே (2015), எழுத்தாளர் எம்.எம். கல்புர்கி (2015), பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் (2017) ஆகியோரின் படுகொலைகளை தடுக்க முடியவில்லை. இந்த நான்கு படுகொலைகளும் திட்டமிட்டு, ஒரே மாதிரியான செயல்முறைகளுடன் அரங்கேற்றப்பட்டிருந்த போதிலும் ஆளும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. இந்துத்துவ அரசின் நிழலில் இளைப்பாறிக் கொண்டிருந்த குற்றவாளிகளை எளிதில் பிடிக்க முடியவில்லை.

கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கடந்த ஜூன் மாதம் முதல் நிகழ்ந்த அடுத்தடுத்த கைதுகளும் கைதானவர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் வெளிவந்த உண்மைகளும் சனாதன் சன்ஸ்தா தடை செய்யப்பட வேண்டிய தீவிரவாத அமைப்பு என்பதற்குப் போதுமான ஆதாரங்களாக இருந்தன.

கடந்த ஆகஸ்டு 10-ஆம் தேதி மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப்படை  வைபவ் ராட், சரத் கலாஸ்கர், சுதன்வா கொண்ட்லேகர் என்ற மூன்று இந்து தீவிரவாதிகளை கைது செய்தது. சனாதன் சன்ஸ்தா அமைப்பின் துணை அமைப்பான இந்து ஜன் ஜக்ருதி அமைப்பைச் சேர்ந்த வைபவ் ராட்டுக்கு சொந்தமான இடத்தில் வெடிகுண்டுகள், ஜெலட்டின் குச்சிகள், எலக்ட்ரானிக் டெட்டனேட்டர்கள், பேட்டரிகள், விஷ மருந்துகள், சர்க்யூட்டுகள், வயர்கள் என வெடிகுண்டு தயாரிக்கத் தேவையான பொருட்களை தீவிரவாத தடுப்புப் படை கைப்பற்றியது. சுதன்வா கொண்ட்லேகர் என்ற தீவிரவாதிக்கு சொந்தமான இடத்தில் நாட்டு துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், துப்பாக்கி குண்டுகள்  உள்ளிட்டவற்றை கைப்பற்றியது.  கலாஸ்கர் என்பவர் தபோல்கரின் படுகொலையில் நேரடியாக தனக்கு தொடர்புள்ளதை ஒப்புக் கொண்டது தெரியவந்துள்ளது. மேலும், புனேயில் நடக்கவிருக்கும் சன்பர்ன் இசைத்திருவிழாவில் தாக்குதல் நடத்த இவர்கள் திட்டமிட்டதும் தெரிய வந்தது.

இந்துத்துவ தீவிரவாதத்தின் அடுத்த இலக்கு சிவாஜி வரலாற்றாசிரியர்!

சனாதன் சன்ஸ்தா அமைப்பு தன்னுடைய அறைகூவலாக முன்வைக்கும் முழக்கங்களில் ‘சத்ரபதி சிவாஜி வழியில் இந்து ராஜ்ஜியம் அமைப்போம்’ என்பதும் ஒன்று. மகாராஷ்டிர தீவிரவாத தடுப்பு படை வெளியிட்ட தகவலில் சிவாஜி குறித்து நூல் எழுதியதற்காக வரலாற்றாசிரியர் ஸ்ரீமாண்ட் கோகடே  இந்து தீவிரவாதிகளின் ‘தர்மவிரோதிகள்’ ஹிட் லிஸ்டில் இடம்பெற்றிருப்பது வெளிச்சத்துக்கு வந்தது. இந்தப் பட்டியலில் காவல் அதிகாரிகள் இருவருடைய பெயரும் இருந்தது.

மராத்தா சமூகத்துக்கு இடஒதுக்கீடு கேட்டு போராடிவரும் ‘சம்போஜி படை’ என்கிற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவரான கோகடே, ஏன் இந்து தீவிரவாதிகளால் குறிவைக்கப்படுகிறார்?

“இந்துத்துவ அமைப்புகள் சொல்லிக் கொள்வதைப் போல சத்ரபதி சிவாஜி இந்துக்களுக்காக முசுலீம் அரசுகளை எதிர்த்து போரிட்ட மன்னர் இல்லை. அவர் மதச்சார்பற்றவராக இருந்தார் அனைத்து மக்களுக்கானவராகவும் இருந்தார். சாதியைக் கடந்தவராக அவர் இருந்தார். இந்த விஷயங்களை தீவிர ஆய்வின் வழியாகக் கொண்டு வந்தேன். சிவாஜியின் குருவாக தாதோஜி கொண்ட்தேவ் என்ற பார்ப்பனர் இருந்ததாகச் சொல்கிறார்கள். அது முற்றிலும் தவறானது. சத்ரபதி சிவாஜி முற்போக்காளராக அறிவியலை ஏற்றுக் கொள்ளும் தன்மையுள்ளவராகவும் இருந்தார். சனாதன் சன்ஸ்தா, சிவாஜி இப்படி காட்டப்படுவதை விரும்பவில்லை. சிவாஜியை தவறான முறையில் காட்டவே அவர்கள் விரும்புகிறார்கள்” என்கிறார் ஸ்ரீமாண்ட் கோகடே.

இந்து தீவிரவாதிகளால் குறிவைக்கப்படும், கோகடே.

அதாவது சிவாஜி, பார்ப்பனர்களை காப்பதற்காகவே முசுலீம் மன்னர்களை எதிர்த்து போரிட்டதாக இந்துத்துவ அமைப்புகள் கூறிக் கொள்கின்றன. மராட்டியத்தில் கடவுளைப் போல வணங்கப்படும் சிவாஜி மீதான காவி சாயம் பூசும் வேலையை நீண்ட காலமாக செய்துவரும் காவிகளுக்கு கோகடே போன்ற வரலாற்றாசிரியர்கள் பிரச்சினைக்குரியவர்களாக தெரிவதில் வியப்பில்லை.

“கடந்த இருபத்தைந்து வருடங்களாக ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங் பரிவார கும்பலால் எழுதப்பட்ட சிவாஜியின் தவறான வரலாற்றை அடித்தளத்திலிருந்து மாற்ற போராடி வருகிறேன். ராமதாஸ், தாதோஜி கொண்ட்தேவ் என்ற பார்ப்பனர்தான் சிவாஜிக்கு குருவாக இருந்து வழிகாட்டியதாக கூறுகிறார்கள். அதாவது சிவாஜி சுய அறிவு அற்றவராக, பார்ப்பனர்களின் அறிவு பலத்தால் வெற்றிகளைச் சூடியவராக வரலாற்றைத் திருத்தி எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.  பகுஜன்கள், பார்ப்பனர்களைக் காட்டிலும் கீழானவர்கள் என்பதைக் காட்டவே இந்தத் திருத்தல், செருகல்களை செய்தார்கள்.

பரிவார் கும்பலால் சொல்லப்படும் சிவாஜி முசுலீம்களுக்கு எதிரானவர் என்கிற பிம்பமும் முற்றிலும் தவறானது. சிவாஜி அதிகார மையங்களை எதிர்த்து போரிட்டாரே தவிர, குறிப்பிட்ட மதத்துக்கு எதிராக அல்ல! அவருடைய படையில் முசுலீம்கள் இருந்தார்கள். அவருடைய மெய்க்காப்பாளர்களாக முசுலீம்கள் இருந்தார்கள் என்பது வரலாறு” என்கிறார் கோகடே.

சத்ரபதி சிவாஜி யார்?

சிவாஜியின் மறைக்கப்பட்ட வரலாற்றை மீட்கும் முயற்சி கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மராட்டியத்தின் சமூக சீர்திருத்தவாதியான ஜோதிராவ் புலே, 1870-களில் ‘சிவாஜி – சூத்திரர்களின் தலைவர்’ என எழுதியிருக்கிறார். சிவாஜி, ஒடுக்கப்பட்டவர்களின் பாதுகாவலராக இருந்தார் எனவும் புலே எழுதினார்.

20-ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் மராட்டியத்தில் உருவான பார்ப்பனர்களின் ஆதிக்கத்துக்கு எதிரான பார்ப்பனர் எதிர்ப்பியக்கம் வரலாற்றில் முக்கியமானது.  19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்துத்துவத்தை உள்ளூர தூக்கிப் பிடித்த, அப்போது காங்கிரசில் இருந்த பால கங்காதர திலகர் முன்னெடுத்த சிவாஜி விழாக்கள், பார்ப்பனர்களுக்கு எதிரான மராத்திகளின் போராட்டத்தை முனைமழுங்க வைக்கும் முயற்சி என புலே அச்சப்பட்டார். 1895-ஆம் ஆண்டு தன்னுடைய இதழில் ஒரு கவிதை ஒன்றை எழுதினார்…

“நம்பிக்கையற்ற இவர்கள் எப்படி சிவாஜி கொண்டாட முடியும்?
இவர்கள் அறிவை மற்றவர்களுக்கு பரிசாக அளிப்பதை விரும்பாதவர்கள்
இவர்கள் சத்ரபதியை மறைத்து வைத்திருந்தார்கள்
இவர்கள் சிவாஜியின் வழிதோன்றல்களை அழித்தவர்கள்…
சிவாஜி குறித்து பெருமை கொள்ள வேண்டியவர்கள் சத்திரியர்களே
பார்ப்பனர்கள் பேஷ்வாக்களின் புகழை பாடட்டும்”

இடதுசாரி செயல்பாட்டாளரான கோவிந்த் பன்சாரே, மன்னர் சிவாஜி மறைக்கப்பட்ட வரலாற்றை ‘சிவாஜி யார்?’ என்கிற பெயரில் நூலாக  எழுதியிருக்கிறார். 2015-ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார் பன்சாரே. இவருடைய கொலையிலும் சனாதன் சன்ஸ்தா அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்தது.

சிவாஜி யாருக்கு சொந்தமானவர்கள் என்கிற போராட்டத்தில் இப்படி தொடர்ச்சியாக வரலாற்று திரிபுகளை பலர் அம்பலப்படுத்தி வந்துள்ளனர் . 2004-ஆம் ஆண்டு அமெரிக்க கல்வியாளர் ஜேம்ஸ் லெயின் என்பர் எழுதிய ‘சிவாஜி – இஸ்லாமிய இந்தியாவில் ஒரு இந்து மன்னர்’ என்ற நூல் வெளியீடு, புனே பண்டார்க்கர் ஆய்வு மையத்தில்  நடந்தது. அந்த நூல் வெளியீட்டுக்கு எதிராக சம்பாஜி படை என்கிற அமைப்பு போராடியது. அதன் பின்பே, சிவாஜியின் உண்மையான வரலாற்றை நிறுவும் போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கியதாக சொல்கிறார் இந்த அமைப்பில் செயல்படும் வராலாற்றாசிரியர் கோகடே.

சிவாஜி குறித்த உண்மையை காக்கும் சம்போஜி படை!

சிவாஜியின் குருவாக சொல்லப்பட்ட பார்ப்பனர் தாதோஜி கொண்ட்தேவ் – இன் சிலை புனேயின் வரலாற்று சிறப்பு மிக்க லால் மஹாலிலிருந்து 2010-ஆம் ஆண்டு இவர்களின் போராட்டம் காரணமாக அகற்றப்பட்டது. 2015-ஆம் ஆண்டு    மராட்டிய மாநிலத்தின் மதிப்பிற்குரிய விருதான மகாராஷ்டிர பூஷன் என்கிற விருது வலதுசாரி வரலாற்றாசிரியரான பாபாசாகேப் புரந்தாரிக்கு வழங்கப்படும் என பா.ஜ.க. அரசு அறிவித்திருந்தது. இதை இந்த அமைப்பு கடுமையாக எதிர்த்திருக்கிறது. சிவாஜியின் மகனான சம்போஜியை அவமதித்த ராம் கணேஷ் கட்காரி என்கிற எழுத்தாளரின் சிலையை  புனே பூங்காவிலிருந்து அகற்றியது இவ்வமைப்பு.  மராட்டிய மாநிலத்தில் இடஒதுக்கீடு கேட்டு போராடிவரும் அமைப்புகளில் சம்பாஜி படைக்கு முக்கியமான இடம் உண்டு.

சூரத்தில் நடைபெற்ற சிவாஜி ஜெயந்தி விழாவில்…

“மராத்திகளின் அடையாளம் சிவாஜி. அவரை பயன்படுத்தாமல் யாரும் அரசியல் செய்துவிட முடியாது. அவருக்கு எதிராக எது சொன்னாலும் அது பெரும் பிரச்சினையை கிளப்பிவிடும். எனவே, அவரை பலர் பயன்படுத்த முயற்சிக்கிறார்கள். இப்போதைய அரசியல் போராட்டம் மராத்திகளுக்கும் பார்ப்பனர்களுக்கும் இடையே நடக்கிறது. இன்னொரு வகையில் சொல்வதென்றால் காங்கிரசுக்கும் பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் இடையே நடக்கும் அரசியலைப் போன்றது.” என்கிறார் மராட்டிய வரலாற்றாசிரியர் பலாண்டே தாதர்.

எனவேதான் பார்ப்பன சங்பரிவாரங்களுக்கு எதிராக மராத்திகளை திரட்டிக்கொண்டிருக்கும் கோகடே, படுகொலை செய்யப்படவேண்டியவர் பட்டியலில் ‘முன்னுரிமை’ பெற்றிருக்கிறார்.

சனாதன் சன்ஸ்தா தடை செய்யப்பட வேண்டும்.

“சத்ரபதி சிவாஜி குறித்த என்னுடைய கருத்துக்களுக்காக பல முறை இந்துத்துவ அமைப்புகளால தாக்கப்பட்டிருக்கிறேன். ஒரு முறை எனக்கு பார்சல் குண்டுகூட வந்தது. ஆனால், இதுவரை எந்தவொரு பாதுகாப்பும் எனக்கு வழங்கப்படவில்லை. மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு வெளியிட்டுள்ள ஹிட் லிஸ்டின் அடிப்படையிலாவது எனக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என நம்புகிறேன்” என்கிறார் கோகடே.

மராட்டியத்தின் காங்கிரஸ் ஆட்சியிலிருந்த போது ‘சனாதன் சன்ஸ்தா’ அமைப்பின் தீவிரவாத செயல்பாடுகள் குறித்து சுமார் ஆயிரம் பக்கங்களில் அனுப்பப்பட்ட அறிக்கைக்கு அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் தொடர்ச்சியாக பகுத்தறிவாளர்கள், செயல்பாட்டாளர்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள் என்கிற கோகடே, இப்போதாவது சனாதன் சன்ஸ்தா தடை செய்யப்பட வேண்டும், இல்லையென்றால் இன்னும் பல அப்பாவி உயிர்களை பலிகொடுக்க வேண்டியிருக்கும் என எச்சரிக்கிறார்.

– கலைமதி

உதவிய கட்டுரைகள்:

நூல் அறிமுகம் : பிள்ளையார் அரசியல்

ன்றைய இந்தியச் சமூகத்தில் மத உணர்வு ஆழமாக வேர் விட்டுள்ளது. தனிப்பட்டவர்களின் உள் விவகாரமாக மட்டுமின்றி சமூகத்தின் விவகாரமாகவும் மதம் மாறிவிட்டது. மத உணர்வு, வகுப்பு வாதமாக மாற்றப்பட்டு வருகிறது.

வழிபாட்டுத் தலங்களிலும் வீடுகளிலும் மட்டுமே இருக்க வேண்டிய மதம் வீதிக்கு வந்துவிட்டது. சமய விழாக்கள், ஊர்வல அரசியலாக மாறிவிட்டன. கொழுக்கட்டையும் நோன்புக் கஞ்சியும் மத வட்டத்தைத் தாண்டி அரசியலுக்குள் நுழைந்து விட்டன……

– நூலின் முன்னுரையில் ஆசிரியர்: ஆ.சிவசுப்பிரமணியன்

மிழ்நாட்டில் கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் பிள்ளையார் வழிபாடு தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டிலுள்ள மிக பிள்ளையார் கோவிலாகப் பிள்ளையார் பட்டியிலுள்ள பிள்ளையார் கோவிலை தொ.பரமசிவம் (1997: 46-48) கருதுகிறார்.

வணிகர்களின் வாயிலாகத் தமிழ்நாட்டில் பிள்ளையார் பரவியதாகக் கூறும் அவர் பிள்ளையார்பட்டிக் சாத்தினரால் உருவாக்கப்பட்டதைச் சான்றாகக் காட்டுகிறார். பிள்ளையாரின் தொடக்க கால உருவம் இரண்டு கை உடையதாகவும், பூணூல், அணிகலன், ஆயுதங்கள் இல்லாமலும் காட்சியளித்தது. காலப்போக்கில் பிள்ளையாருக்குப் பூணூலும் அணிகலனும் ஆயுதங்களும் வழங்கப்பட்டன. பிள்ளையார்பட்டி கோவிலிலுள்ள பிள்ளையார் உருவம் இரண்டு கைகளை மட்டும் உடையதாயும் பூணூல், அணிகலன்கள் மற்றும் ஆயுதங்கள் இன்றிக் காட்சியளிப்பதாலும் இதுவே தமிழ்நாட்டின் மிகத் தொன்மையான பிள்ளையார் உருவம் என்று நிறுவுகிறார். இதன் பின்னரே தாமரை மலரில் வீற்றிருப்பவராகவும் நான்கு கரங்களையுடையவராகவும் யானைக் கொம்பு, பாசம், அங்குசம், மாம்பழம் போன்றவற்றை ஏந்தியவராகவும் உருப்பெற்றார்.

எந்த இடத்திலும் எழுந்தருளச் செய்து எளிய முறையில் அனைவரும் வணங்கும் பிள்ளையாருக்கு, பிள்ளையார் சதுர்த்தி அல்லது விநாயகர் சதுர்த்தி என்ற விழா ஆண்டுதோரும் தமிழ்நாட்டில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தென்மாவட்டங்களில் வீடுகளில் பிள்ளையார் உருவத்தின் முன் மோதகம், சுண்டல் கொழுக்கட்டை, எள்ளுருண்டை போன்றவற்றைப் படைத்து வழிபாடு செய்வதுடன் பிள்ளையார் சதுர்த்தி நிறைவடைகிறது. பிள்ளையாரின் உருவத்தை நீர் நிலையில் கொண்டு போடும் வழக்கம் தென்மாவட்டங்களில் பாவலாகக் கிடையாது. வட மாவட்டங்களில் கோவில் அல்லது ஊர்ப் பொது நீர் நிலையில் பிள்ளையாரைப் போடும் வழக்கம் உண்டு. ஆயினும் ஊர்வலமாகச் சென்று நீர்நிலையில் பிள்ளையார் உருவத்தைப் போடும் வழக்கம் தமிழ்நாட்டில் பரவலாக இல்லாத ஒன்று.

1981 பிப்ரவரி 19 இல் திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் உள்ள மீனாட்சிபுரத்தில் 180 தேவேந்திர குல வேளாளர் குடும்பங்கள் இசுலாமியச் சமுதாயத்தைத் தழுவின. அதே ஆண்டு மே 23 இல் மேலும் 27 குடும்பங்கள் இசுலாத்தைத் தழுவின. இதன் தொடர்ச்சியாக மதுரை, இராமநாதபுரம் மாவட்டங்களிலும் தேவேந்திர குல வேளாளர்கள் சிறுசிறு குழுக்களாக இசுலாமியச் சமயத்தைத் தழுவினர். இதனை யொட்டி “மறு மதமாற்றம்’, மதமாற்றத்திற்கு எதிரான “தாய்மதம் திரும்பச் செய்தல்’ என்ற குரல் இந்து மத அடிப்படைவாதிகளால் எழுப்பப்பட்டது. வடபுலத்திலிருந்தும் தமிழகத்திலிருந்தும் துறவியர்கள் மீனாட்சிபுரத்திற்கு வந்து சேர்ந்தார்கள். இதனையொட்டி ‘இந்து முன்னணி’ என்ற பெயரில் இந்து மத அடிப்படைவாத இயக்கம் ஒன்று தமிழ்நாட்டில் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது.

இதன் பின்னர் 01.03.1982 முதல் 15.03.1982 வரை கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மண்டைக்காடு என்ற கடற்கரைக் கிராமத்திலும் வேறு பகுதிகளிலும் மதக்கலவரங்கள் உருவாயின.

இக்கலவரத்தை உருவாக்குவதில் பிள்ளையாரைத் துணைக்கு அழைத்தனர். 1982 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திங்கள் சந்தை என்ற ஊரில் உள்ள போக்குவரத்துத் தீவில், பிள்ளையார் சிலை ஒன்றைத் திடீரென்று நிறுவினர். இது போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தமையால் காவல் துறையினரால் அப்புறப்படுத்தப்பட்டது என்ற வதந்தியைத் திட்டமிட்டு உருவாக்கினர். இதனால் பதட்ட நிலை உருவானது. இவ்வாறு குமரி மாவட்ட மதக் கலவரத்திற்குப் பிள்ளையார் சுழி போடப்பட்டது.

1983-84 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ரதயாத்திரை என்ற பெயரில் இந்துமத அடிப்படைவாதம் மிக எளிய சாமானியர்களைச் சென்றடைந்தது. ஞானாரதம், புனித கங்கை தீர்த்தம் அடங்கிய ரதம், சக்தி ரதம் என்ற பெயர்களில் ரதயாத்திரைகள் நடந்தன.

1989 ஆம் ஆண்டில் பாபர் மசூதியை இடித்து அங்கு இராமர் கோவில் கட்டப் போவதாக இந்துமத இயக்கங்கள் அறிவித்தன. இதன் அடிப்படையில் இராமர் கோவில் கட்டுவதற்கான செங்கற்களை இந்தியா முழுவதிலுமிருந்து அயோத்திக்கு எடுத்துச் செல்லும் செங்கல் ஊர்வலம் 1984 இல் நிகழ்ந்தது. இவ் ஊர்வலங்கள் அளித்த ஊக்கத்தின் அடிப்படையில் 1990 ஆம் ஆண்டு பிள்ளையார் ஊர்வலத்தை இந்து முன்னணியினர் உருவாக்கி இன்று வரை தொடர்கின்றனர்.

சமய விழாக்களும் அவை தொடர்பான ஊர்வலங்களும் தமிழ்நாட்டிற்குப் புதியனவல்ல. சைவ, வைணவ கோவில் விழாக்களை ஒட்டியும் நாட்டார் கோவில் விழாக்களை ஒட்டியும் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் இச்சமயக் கடவுளர்கள் வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி இவ்விழாக்களின் முக்கிய அம்சமாகும்.

– நூலின் பக்க எண் 56-58-ல் ஆசிரியர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள்.

இத்தகைய ஊர்வலங்களிலிருந்து இந்து முன்னணியின் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் எவ்வாறு வேறுபட்டது என்பதை பல்வேறு சான்றாதாரங்களிலிருந்து விளக்குகிறார் நூலாசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்.

நூலின் தலைப்பில் உள்ளபடி வெறுமனே பிள்ளையார் என்ற வரம்போடு இந்நூல் நின்றுவிட வில்லை. சமபந்தி – ஓர் எதிர்ப்பண்பாடு; பூசாரிகளுக்கு வலை விரிக்கும் இந்துத்துவ அரசியல்; சாதிய முரண்பாடுகளும் மதமாற்றமும்; தர்காக்களும் இந்து இசுலாமிய ஒற்றுமையும் என்பது உள்ளிட்டு பல்வேறு தலைப்புகளில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதி பல்வேறு இதழ்களில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் இடம்பெற்றிருக்கிறது.

ஆட்சியதிகாரத்தில் அமர்ந்துகொண்டு பா.ஜ.க. பார்ப்பன பாசிசக்கும்பல் நாட்டையே காவிமயமாக்கத்துடிக்கும் இன்றைய காலகட்டத்தில் வரலாற்றாசிரியர் பேரா.ஆ.சிவசுப்பிரமணியனின் இந்நூல் ஜனநாயக சக்திகளுக்கும், வரலாற்றைக் கற்றுக் கொள்ளும் மாணவர்களுக்கும் பயன்படும் அரிய நூலாகும்.

  • வினவு செய்திப் பிரிவு

நூல்: பிள்ளையார் அரசியல்
(மத அடிப்படை வாதம் பற்றிய கட்டுரைகள்)
ஆசிரியர்: ஆ.சிவசுப்பிரமணியன்

வெளியீடு: பாவை பப்ளிகேஷன்ஸ்,
# 16, (142) ஜானி ஜான் கான் சாலை,
இராயப்பேட்டை, சென்னை – 600 014.
பேச: 044 – 28482441, 42155309.
மின்னஞ்சல்: pavai123@yahoo.com

பக்கங்கள்: 204
விலை: ரூ.75.00 (மலிவு விலை பதிப்பு)

இணையத்தில் வாங்க: மெரினா புக்ஸ் (இங்கு ஆறு டாலர் என்று போட்டிருக்கிறார்கள்)

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகலாயம் கடைகளில் கிடைக்கும்.
சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு:
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி: 99623 90277

அபாயமான காலத்தில் வாழ்கிறோம் | பேரா. ஆனந்த் தெல்தும்டே உரை | காணொளி

சென்னையில் கடந்த 08-09-2018 அன்று நடைபெற்ற மக்கள் அதிகாரம் சார்பில் “அச்சுறுத்தும் பாசிசம் – செயல்வீரர்கள் மீது மோடி அரசின் தாக்குதல்” என்ற தலைப்பில் அரங்கக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு தலைமைதாங்கினார். இக்கூட்டத்தில் பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டே கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்தக் காணொளியில் முதலில் பேரா. ஆனந்த் தெல்தும்டே குறித்து தோழர் மருதையனின் அறிமுக உரையும், அடுத்ததாக ஆனந்த் தெல்தும்டேவின் ஆங்கில உரையும், இறுதியாக அவ்வுரைக்கு தோழர் தியாகு செய்த மொழிபெயர்ப்பும் இடம்பெற்றுள்ளது. அவரது உரையின் சுருக்கம் பின்வருமாறு..

”நாம் வலியுறுத்தும் செய்தி நாம் ஆபத்தான கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். காங்கிரசுக்கும் பி.ஜே,பி-கும் முக்கிய வேறுபாடு உள்ளது. காங்கிரஸ் சந்தர்ப்பத்தின் தேவையை ஒட்டி செயல்படுகிறது. ஆனால் பாஜக ஒரு சித்தாந்தத்தோடு, இந்துத்துவா – இந்துராஷ்டிரம் அமைக்க வேண்டும் என்ற இலக்கோடு செயல்பட்டு வருகிறது.

பீமா கோரெகான் கலவரத்தில் முக்கியக் குற்றவாளியான சம்பாஜி பீடே, மோடியால் தனது குருநாதர் எனப் புகழப்பட்டவர். இந்தக் கலவரத்தை திட்டமிட்டு தூண்டிவிட்டது இந்துத்துவக் கும்பல். மராத்திய அரசன் சிவாஜியின் மகனின் சமாதியிலிருந்து கலவரத்தை தூண்ட நினைத்தது இந்துத்துவக் கும்பல். அது உள்ளூர் மக்களால் முறியடிக்கப்பட்டது.

பீமா கோரெகான் கலவரத்துக்கு முன்னால் நடந்த எல்கார் பரிஷத் மாநாட்டில் வன்முறை வெறியேற்றும் விதத்தில் எதுவும் பேசப்படவில்லை என்பதற்கு ஆதாரம் இருக்கிறது. எல்கார் பரிஷத் ஏற்பாட்டாளர்களை மாவோயிஸ்டுகள் என திட்டமிட்டு குறிப்பிட்டது அரசு. அதன் ஏற்பாட்டாளர்களின் வீடுகளில் சென்று அவர்களது கணிணிகளைக் கைப்பற்றி அதில் பல்வேறு கடிதங்களை அவர்களே உருவாக்கி அதனடிப்படையில் பொய் வழக்கு புனைந்தார்கள்.

இந்தக் கடிதங்கள் அனைத்தும் போலியானவை என பலரும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக மோதல் மேலாண்மை நிறுவனத்தின் இயக்குனர் சஹானி அவர்கள் இதை விரிவாக விளக்கியுள்ளார். கடிதம் போலி என்பதை எங்கு வேண்டுமானாலும் நிரூபிக்க முடியும். ஆனால் விசயம் என்னவென்றால், இந்த ஆள்தூக்கி கருப்புச் சட்டங்கள்தான் இங்கு பிரச்சினை.

மோடியின் ஆட்சியில் அனைத்து இயற்கை வளங்களையும் அள்ளி விற்றுக் கொண்டிருக்கிறார்கள். மோடியின் திட்டங்கள் அனைத்தும் மிகப்பெரிய தோல்வியை சந்தித்திருக்கின்றன. எதிர்கட்சிகள் கடுமையாக சிதைந்திருக்கின்றன. மக்கள் கைவிடப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.  அடுத்த தேர்தலுக்கு நேரம் மிகக் குறைவாக இருக்கும் நிலையில், நாம் கட்சிகளுக்கு அழுத்தம் கொடுத்து மோடி ஆட்சியை வீழ்த்த வேண்டும்”

– வினவு களச் செய்தியாளர்

நமது நரிக்குறவர் மக்கள் பிரசவம் பார்ப்பது வீட்டிலா மருத்துவமனையிலா ?

பெண்களின் பேறுகால நேரத்தை வீட்டில் இயற்கை பிரசவம் எனும் பேரில் அபாயகரமாக பிரச்சாரம் செய்து வருகிறார் ஹீலர் பாஸ்கர். அவர் கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்துவிட்டார். திருப்பூரில் நடந்த கிருத்திகாவின் உயிர்பலியும் அதனால் ஏற்பட்ட அதிர்ச்சியும் மக்களிடம் இன்னும் ஓயவில்லை. பிரசவம் குறித்தான பல தலைப்புகளின் கீழ் ஊடகங்களில் தினமும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

பிரசவம் குறித்த நவீன மருத்துவ முறை பற்றிய விழிப்புணர்வில் கிராமப்புறம் தான் பின்தங்கி உள்ளது. பிரசவத்தின் போது ஏற்படும் இறப்பு விகிதமும் கிராமத்தில் தான் அதிகம் உள்ளது. இருந்த போதிலும் கிராமத்து மக்களும் மருத்துவமனை சென்று பிரசவம் பார்த்துக் கொள்ள வேண்டும் என விழிப்படைந்து வருகின்றனர்.

இன்றும் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர்களிடம் பிரசவம் குறித்த விழிப்புணர்வு எப்படி உள்ளது என தெரிந்து கொள்ளும் ஆவல் வந்தது. ஹீலர் பாஸ்கரையோ அவர் பிரச்சாரம் செய்யும் ’வீட்டில் இயற்கை பிரசவ’ உரைகளை கேட்டிராத நரிக்குறவர் மக்கள் வாழும் ஒரு கிராமத்தில் நுழைந்தோம்.

பெரும்பாலான ஆண்கள், பெண்கள் வேலைக்கு சென்றிருந்தனர். மீதமுள்ள சில பேர் இரண்டு குழுவாக பிரிந்து பணம் வைத்து சீட்டுக் கட்டு விளையாடினர். இவர்களுக்கான சாப்பாட்டை வேறு சமூகத்தை சேர்ந்த ஒருவர் பையில் வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். ஒருவர் அணில் கறியை உறித்துக் கொண்டிருந்தார். குழந்தைகள் பசியோடு விளையாடிக் கொண்டிருந்தனர். எங்களை கண்டு கொள்வார் யாருமில்லை.

அவர்களிடம் பேசிப் பார்த்த வரையில் பிரசவத்தோடு தாய் மரணமோ, பிள்ளைகளின் மரணமோ எதனையும் சகஜமாக எடுத்துக் கொள்கிறார்கள். ஏனெனில் அவர்களிடம் இழப்பதற்கு எதுவுமில்லை. முன்பு இருந்த சத்துணவு, ஆரோக்கியம், அதிக வேலை போன்ற பொதுவான பொதுப்புத்தி நம்பிக்கைகள் குறவர் இன மக்களிடம் மட்டுமல்ல, நாங்கள் சந்தித்த செவிலியரிடம் கூட இருந்தது. இதுதான் ஹீலர் பாஸ்கர் போன்றோரது உரைகள் மக்களிடம் எடுபடுவதற்கான அடிப்படை.

தற்போது மருத்தவமனைகள் இல்லையென்றால் அதிக மரணம் என்று கூறும் குறவர் இன மக்கள், முந்தைய அதிக மரணங்களை இயற்கையானது என்று கருதுகிறார்கள். இன்றும் கூட வேறுவழியில்லை என்றால் வீட்டிலேயே பிரசவம் என்பது கூட சிறு எண்ணிக்கையில் உண்டு. பொதுவில் மருத்துவ முன்னேற்றம், பொருளாதார முன்னேற்றம், அரசு உதவிகள் என்பவையே குறவர் இன மக்களிடம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருவதை உணரலாம். எனினும் இன்றும் கூட இந்த மக்கள் தமக்கென்று சொந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் வாய்ப்பற்ற பரிதாப நிலையிலேயே இருக்கிறார்கள். அரசு மருத்தவமனைகள் இல்லை என்றால் நாம், நமது குறவர் இன மக்களையே முற்றிலும் இழக்க வேண்டியிருக்கும்.

ரம்யா

எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. என்னோட பிரசவத்த பத்தி வேணுன்னா செல்றேன். எனக்கு வயசு 17. கர்பமாயி நாலு மாசத்துக்கு பிறகு நர்சம்மா வந்து கணக்கெடுத்தாங்க. சத்து குறைவா இருக்குன்னு ஆஸ்பத்திரி போக சொன்னாங்க. அங்க போனதும் ரத்தம் குறைவா இருக்குன்னு ரத்தமெல்லாம் ஏத்துனாங்க. ஊசி போட்டாங்க. நர்சக்கா வந்து மாசா மாசம் சத்துமாவு தருவாங்க, பிரசவத்துக்கு பணம் வாங்கி கொடுத்தாங்க.

நாங்க ஆஸ்பத்திரி போகாம இருந்தா இதெல்லாம் கெடைச்சிருக்குமா. நாங்க என்னத்த பெரிசா வீட்டுல சாப்புட்ற போறோம். மிஞ்சி மிஞ்சி போனா எங்க வீட்டுக்காரு எலி புடிச்சாந்து கறி ஆக்கி தருவாரு. பெரும்பாலும் சோறு ஆக்க மாட்டோம் கடையில டீ பன்னு வாங்கி திம்போம் ஒரு நேரம் சோறோ, டிபனோ வாங்கி திம்போம்.

சங்கீதா

எங்க அம்மாவெல்லாம் வீட்டுலதான் கொழந்த பெத்துகிட்டாங்க. இப்ப நானும் எங்க அக்கால்லாம் ஆஸ்பத்திரியில போயிதான் கொழந்த பெத்துகிட்டோம். ஒரு வருசத்துக்குள்ள எனக்கு ரெண்டு பிள்ள கலைச்சி போச்சு. மொதல்ல பிள்ள உருவானப்பையும் ஆஸ்பத்திரி போகல, கலைஞ்சப்பையும் போகல. ரெண்டாவதா கலைஞ்சப்ப வீடு முழுக்க ரத்தம், உடம்பு முடியாமெ ஆஸ்பத்திரி போனோம். பிள்ள உருவான ஆரம்பத்துல புருச பொஞ்சாதி சேத்துருக்க கூடாது அதனாலதான் கொழந்த கலைஞ்சு போச்சுன்னு டாக்டருங்க சொன்னாங்க. அவங்க சொன்னத கேட்டுதான் மூணாவதா இந்தக் கொழந்த.

மலர்

முன்னெல்லாம் எங்க ஆளுங்க வீட்டுலதான் கொழந்த பெத்துக்குவோம். இப்ப கொஞ்ச வருசமாதான் ஆஸ்பத்திரி போராங்க. எங்க ஆளுங்கள்ள யாரு தைரியமான பொம்பளையோ அவங்கதான் பிரசவம் பாப்பாங்க. தானா வெளிய வருதான்னு கொஞ்ச நேரம் பொருத்துருந்து பாப்பாங்க. இல்லன்னா கையி ரெண்டையும் கயித்தால மேல தூக்கி கட்டிட்டு மேல் வயித்துல கைய வச்சு கீழ அமுக்குவாங்க. பலதடவ செத்துக்கூட போயிடும். எண்ணிக்க இல்லாமெ பெத்துக்கறதால எறந்தே பொறந்துருச்சுன்னாலும் பெருசா கவலப்பட மாட்டோம்.

ஆத்தாளும் மகளும் ஒன்னா கொழந்த பெத்துப்போம். குடும்ப கட்டுப்பாடே பண்ணிக்க மாட்டோம். இப்ப அதெல்லாம் மாறி போச்சு. எச்சி எலை எடுத்துகிட்டு காடு மேடு சுத்திகிட்டு ஊசி, பாசிமணிய பழய கஞ்சிக்கி குடுத்துட்டு ஊருக்குள்ளேயே இருந்தப்பதான் வீட்டுலேயே பிரசவமெல்லாம். இப்ப அரசு ஆஸ்பத்திரியிலதான் நாங்க யாவரமே பாக்குறோம். ஊசி, பாசியோட சேத்து வேற சில சாமானும் வாங்கி வச்சு டவுனுப்பக்கம் போயி விக்க ஆரம்பிச்சுட்டோம். எல்லாத்துக்கும் ஆஸ்பத்திரிக்கு போவோம்.

மஞ்சுளா

நாங்களும் நாகரிகமா மாறிட்டு வர்ரோம். எச்சிலல எடுக்குறது இல்லை, நெதமும் குளிப்போம், வெளியூரு போன மாராப்பு போட்டு சேல கட்டுவோம். எங்க பசங்க ஐஸ்கூலுல படிக்கிறாங்க. முன்னல்லாம் நாகரிகமா இல்லன்னு சொல்லி ஆஸ்பத்திரியில டாக்டருங்க திட்டுவாங்க. குளிச்சுட்டு வாங்கன்னு சொல்லுவாங்க. இப்ப மாறிட்டதால எல்லா வைத்தியத்துக்கும் ஆஸ்பத்திரிதான் போறோம்.

முன்ன காடை, கவுதாரி, நரிக்கறி, முயல் கறின்னு தின்னுட்டு ஒடம்பு தெடமா வச்சுருப்போம். காட்டு மூலிகை, விலங்கோட எழும்பு, ரெக்க எல்லாத்தையும் கலந்து எரிச்சு எந்த நோயா இருந்தாலும் நாங்களே மருந்து, தைலம் தயாரிப்போம். அதே மாறி பிரசவமும் நாங்களே பாத்துப்போம். இப்ப எங்க வாழ்க்கையே மாறி போச்சு. ஓசிக்காக யாருட்டையும் கையேந்தாம ஒழைக்க ஆரம்பிச்சுட்டோம். நாங்களும் ஒங்களப் போல படிச்சவங்க கிட்டதான் வைத்தியம் பாத்துக்குறோம்.

வனிதா (நரிக்குறவர்களுக்கு சாப்பாடு விற்பவர்.)

அந்த காலம் இந்த காலமுன்னு இல்லிங்க எந்த காலத்துலயும் பிரசவமுன்னாலே பொம்பளைக்கி மறு பொறப்புதான். கெவுருமெண்டு ஆஸ்பத்திரி பிரசவ வார்டுல போயி பாருங்க பொம்பளையாவே பொறக்க கூடாதுன்னு தோணும். வலி தாங்க முடியாத பொம்பளைங்க அல்லாகு அக்பர் அல்லாகு அக்பர், ஏசப்பா ஏசப்பா, மகமாயி, அய்யனாரப்பா, ஏழுமலையானே, கருமாரின்னு தினுசு தினுசா கத்துராங்க. பிள்ள வெளிய வரப்போர நேரத்துல உயிரு பிரிஞ்சுருமுன்னுதான் நெனப்போம். அந்த நேரத்துல தாயும் பிள்ளையும் நல்லபடியாக்குற டாக்டருங்கதான் தெய்வம்.

பத்மா (நர்ஸ் புகைப்படம் தவிர்தார்.)

அந்த காலத்துல கலப்புள்ள(12) பெத்தவங்கள்ளாம் இருக்காங்க. பெத்ததுல பாதிக்கு மேல மண்ணுக்குதான் குடுத்துருப்பாங்க. இருக்குமோ செத்துருமோன்னு பயத்துலதான் அந்த காலத்துல சனங்க பத்து பிள்ளைங்களுக்கு மேல பெத்துகிட்டாங்க. பொறந்தது எல்லாம் முழுசா உயிரோட யாருக்கும் இருந்தது கெடையாது. இன்னைக்கி அப்புடி இல்லையே கணக்கா ரெண்டு பெத்துக்குறாங்க. ஏன்னா டாக்டருங்க எப்பேர்பட்ட பிரச்சனையையும் கண்டுபுடிச்சு காவந்து பன்றாங்க. பிள்ளையே பொறக்காதவங்களுக்கு கூட பிள்ளைய பொறக்க வக்கிராங்க.

அந்த காலத்துல வீட்டுலேயே அத்தன புள்ளையும் அசால்டா பெத்துகிட்டாங்கன்னா அப்ப நெலமெ வேற. அந்த காலத்துல கம்பு, கேப்பன்னு தின்னுட்டு மாங்கு மாங்குன்னு வேல செய்வாங்களாம். ஒரு நாளைக்கி பத்து மரக்கா நெல்லு குந்துவாங்களாம். பத்து புள்ளகுட்டி இருந்தாலும் கம்பு, கேப்பன்னு கல்லு திருவையுல மாவு அறைப்பாங்களாம். கெனத்துல தண்ணி எடுப்பாங்க, வயலுக்கு பாரம் சுமப்பாங்க. அன்னைக்கி சாப்புட்ட சாப்பாட்டுல சத்து கெடச்சது செஞ்ச வேலையில பிரசவத்துக்கான வழி முறையும் இருந்துச்சு. இன்னைக்கி அப்படியா வாழ்ரோம்.

சாப்புற சாப்பாடுல இருந்த சுவாசிக்கிற காத்து வரைக்கும் எதுவும் தரமானது கெடையாது. எல்லாத்துலயும் கெடுதல் கலந்துடுச்சு. சாப்பாட்டுல கெடைக்க வேண்டிய சத்தெல்லாம் மாத்தர வடிவத்துல தரவேண்டிருக்கு. ஆத்துல வர்ர மீனுல கூட ருசியில்ல. எல்லாம் செயற்கையா மாறிப் போச்சு. ஆஸ்பத்திரியில போயி பாருங்க சுகப்பிரசவம் நடக்குற பல பொம்பளைக்கி முக்கக் கூட தெம்பு இல்ல. குளுக்கோச ஏத்தி ஏத்தி முக்க சொல்ல வேண்டிருக்க. இந்த நெலையில மருத்துவம் இல்லாமெ மகப்பேறு கெடையாதுங்க.

– வினவு புகைப்படச் செய்தியாளர்கள்

ஏழாயிரம் கோடி கடன் ஸ்வாகா : நீதிமன்றத்தோடு தாயம் ஆடும் ஆர்ஸ்லர் மிட்டல் !

ஸ்ஸார் ஸ்டீல் (Essar Steel) என்ற நிறுவனம் நாம் கேள்விப்பட்ட நிறுவனம் தான். எஸ்ஸார் பெட்ரோல் பங்குகளை நாம் பார்த்துள்ளோம். இவை இரண்டும் எஸ்ஸார் குழுமத்தின் நிறுவனங்கள் தான். ஒரே குழுமத்தின் நிறுவனங்களாக இருந்தாலும், சட்டப்படி இவை தனித்தனி நிறுவனங்கள்.

எஸ்ஸார் ஸ்டீல், மற்ற பல ஸ்டீல் நிறுவனங்களைப் போல, வங்கிகளிடம் கடன் வாங்கிவிட்டு திரும்ப செலுத்தவில்லை. செலுத்தாததால், அது திவாலான நிறுவனம் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது.

எஸ்ஸார் ஸ்டீல் கடன் தரவில்லை என்றால் வங்கிகள் எஸ்ஸார் பெட்ரோல் பங்கிடம் போய் கேட்க முடியாது, ஏனென்றால், சட்டப்படி அவை தனித்தனி நிறுவனங்கள். ஒரே முதலாளி, ஒரே நிர்வாகம் எல்லாம் இருந்தாலும் அவை தனித்தனியாக பதியப்பட்ட நிறுவனங்கள். இந்த ‘தனித்தனி’ விவகாரம் இந்த கட்டுரைக்கு அவ்வளவு சம்மந்தம் இல்லாத விடயம் என்பதால் இப்போது இதை விட்டுவிடுவோம், வேறொரு கட்டுரையில் இதை பற்றி பார்ப்போம், மீண்டும் வாராக்கடனுக்கு செல்வோம்.

எஸ்ஸார் ஸ்டீல் வாங்கிய கடனை திரும்ப செலுத்தாததால், திவாலான கம்பெனி என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. திவாலான கம்பெனிகளை ஏலம் விட்டு கடனை திரும்பப்பெற 2016-இல் புதிதாக ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது, அது தான் Insolvency and Bankruptcy Code, சுருக்கமாக IBC. இந்த IBC-படி திவாலான கம்பெனிகள் ஏலம் விடப்பட்டு ஏலத்தில் வரும் பணம் கடன் தந்த வங்கிகளுக்கு பிரித்து தரப்படும். (இந்த IBC இந்திய சொத்துக்களை வெளிநாட்டு முதலாளிகளுக்கு அடிமாட்டு விலையில் விற்பதற்காக கொண்டுவரப்பட்டது என்று விமர்சனங்கள் உள்ளன).

ஏலத்தின் முதல் சுற்றில், ரஷ்யாவை சேர்ந்த நியூமெட்டல் (Numetal), வேதாந்தா (Vedanta – ஸ்டெர்லையிட் கம்பனியின் ஓனர்), மற்றும், ஆர்ஸலர்-மிட்டல் (ArcelorMittal) ஆகிய மூன்று நிறுவனங்கள் போட்டியிட்டன.

ஆர்ஸலர்-மிட்டல் மற்றும் நியூமெட்டல் நிறுவனங்கள் முதல் சுற்று ஏலத்தில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டன.

ஆர்ஸலர்-மிட்டல் நிறுவனம் தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கான காரணம் பின்வருமாறு. ஆர்ஸலர்-மிட்டல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி CEO திரு.மிட்டல், KSS Patron – கே.எஸ்.எஸ். பேட்ரான் மற்றும் Uttam Galva Steel – உத்தம் கால்வா ஸ்டீல் ஆகிய இரு நிறுவனங்களின் promotor- துவக்கிய முதலாளியாக இருந்தார். KSS Patron மற்றும் Uttam Galva Steel என்ற இரண்டு நிறுவனங்களுமே கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் வாராக்கடன் என்று அறிவிக்கப்பட்ட நிறுவனங்கள். IBC-படி ஏற்கனவே வாராக்கடன் இருக்கும் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பு வகிப்பவர் எந்த வாராக்கடன் ஏலத்திலும் பங்கு பெற முடியாது. இது மிட்டலுக்கும் தெரியும், அதனால் தான் ஏலத்தில் பங்குபெறுவதற்கு முன்பே அவருக்கு KSS Patron மற்றும் Uttam Galva Steel நிறுவனங்களில் இருந்த பங்குகளை விற்றுவிட்டு ஏலத்தில் பங்கு கொண்டார்.

IBC இதில் கொஞ்சம் தெளிவாகவே இருக்கிறது. வாராக்கடன் என்று அறிவிக்கப்பட்ட கம்பெனியில் இருந்து ஒருவர் வெளியேறினாலும், அந்த கம்பெனி வாராக்கடன் என்று அறிவிக்கப்பட்டபோது அவர் அந்த கம்பெனியில் முக்கிய பொறுப்பில் இருந்திருந்தால், அவரால் IBC நடத்தும் ஏலத்தில் கலந்து கொள்ளும் தகுதியை இழக்கிறார்.

எஸ்ஸார் இரும்பு தொழிற்சாலை.

அதனால் தான் KSS Patron மற்றும் Uttam Galva Steel நிறுவனங்களில் இருந்து வெளியேறி இருந்தாலும் கூட ஆர்ஸலர்-மிட்டல் நிறுவனம் தகுதி நீக்கம் செய்யப்பட்டது.

நியூமெட்டல் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணம் பின்வருமாறு. நியூமெட்டல் என்பது ஒரு கூட்டமைப்பு, VTB என்ற ரஷ்யா வங்கி கூட்டிய கூட்டமைப்பு. இந்த கூட்டமைப்பில் ரேவந் ருயா என்பவரும் இருந்தார். ரேவந் ருயா யாரென்றால், ஏலத்தில் இருக்கிறதே எஸ்ஸார் ஸ்டீல் அந்த நிறுவனத்தின் promotor ரவி ருயாவின் மகன். அப்பா கடன் வாங்கிவிட்டு திரும்ப செலுத்த மாட்டார். அந்த சொத்து ஏலத்தில் வரும்போது குறைந்த விலையில் மகனே அதை வாங்குவார்! அப்படி ஒரு விளையாட்டு இவர்களுக்கு!

IBC-படி இப்படி இருப்பவர்களும் தகுதி இழக்கின்றனர். அதனால் நியூமெட்டலும் தகுதிநீக்கம் செய்யப்பட்டது.

ஆர்ஸலர்-மிட்டல் மற்றும் நியூமெட்டல் நிறுவனங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டவுடன் நீதிமன்றம் சென்றன. நியூமெட்டல் ரேவந் ருயாவை தனது கூட்டமைப்பில் இருந்து நீக்கிவிடுவதாக நீதி மன்றத்திடம் சொன்னது. நீங்கியதால் ஏலத்துக்கு தகுதி பெற்று இரண்டாம் ஏலத்தில் பங்கு பெற்றது.

ஆர்ஸலர்-மிட்டலுக்கு நீதி மன்றம் ஒரு உத்தரவு போட்டது. KSS Patron மற்றும் Uttam Galva Steel நிறுவனங்கள் செலுத்த வேண்டிய கடன்களை செலுத்திவிட்டால் ஆர்ஸலர்-மிட்டலும் ஏலத்தில் பங்கு பெறலாம் என்று நீதி மன்றம் சொன்னது.

இரண்டாம் கட்ட ஏலத்தில் ஆர்ஸலர்-மிட்டலும் ஏலத்தொகை கூறியது, அதாவது ஏலத்தில் பங்கு பெற்றது. நாம் என்ன நினைப்போம், ஆர்ஸலர்-மிட்டல் நிறுவனம் KSS Patron மற்றும் Uttam Galva Steel நிறுவனங்கள் செலுத்த வேண்டிய கடனை செலுத்திவிட்டு ஏலத்தில் பங்கு பெறுகிறது என்று தானே, அது தான் இல்லை. அது சாதாரண மனிதர்கள் செய்வது. இது ஆர்ஸலர்-மிட்டல், பல நாடுகளில் நலிவடைந்த நிறுவனங்களை அடி மாட்டு விலைக்கு வாங்கி பலரை ஏமாற்றி அதில் லாபம் சேர்த்து வளர்ந்த நிறுவனம். அவர்களிடம் இருந்து லேசில் பணம் வாங்கிவிட முடியாது!

ஆர்ஸலர்-மிட்டல் என்ன சொன்னது தெரியுமா? – ‘நாங்கள் KSS Patron மற்றும் Uttam Galva Steel நிறுவனங்கள் செலுத்த வேண்டிய கடன் தொகையை ஒரு Escrow கணக்கில் செலுத்தி விடுகிறோம், நாங்கள் ஏலத்தில் வெற்றி பெற்றால், அந்த escrow கணக்கில் இருக்கும் பணம் இந்த நிறுவனங்களின் கடனை செலுத்த சென்றுவிடும்’. Escrow கணக்கு என்பது வங்கிகள் ஒரு நோக்கத்துக்கு என்று திறப்பது, அந்த நோக்கத்தை தவிர வேறு எந்த நோக்கத்துக்கும் அந்த பணத்தை உபயோகப்படுத்த முடியாது. ஆர்ஸலர்-மிட்டல் திறந்த escrow கணக்கின் நோக்கம் என்னவாக இருக்குமென்றால், ஆர்ஸலர்-மிட்டல் நிறுவனம் ஏலத்தில் வென்றால் escrow கணக்கில் இருக்கும் பணம் KSS Patron மற்றும் Uttam Galva Steel நிறுவனங்களின் கடனை செலுத்த பயன்படும், வெற்றி பெறாவிட்டால் அந்த கணக்கில் இருக்கும் பணம் திரும்ப ஆர்ஸலர்-மிட்டலுக்கே போய்விடும். வெற்றி பெற்றுவிட்டு அந்த கணக்கில் இருக்கும் பணத்தை செலுத்த மாட்டேன் என்று ஆர்ஸலர்-மிட்டலும் சொல்ல முடியாது, வெற்றி பெறாவிட்டால் கடன் தந்த வங்கிகள் அந்த பணம் எங்களுக்கு சொந்தம் என்றும் சொல்ல முடியாது.

IBC மற்றும் நீதி மன்றம் சொல்வதற்கும், ஆர்ஸலர்-மிட்டல் சொல்வதற்கும் உள்ள முரண் உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இருந்தாலும் எளிய மொழியில் சொல்கிறேன்.

நீதி மன்றம்: ‘நீ முதலாளியாக இருந்த இரண்டு நிறுவனங்களின் கடனை செலுத்திவிட்டு இந்த ஏலத்தில் பங்கு எடுக்கலாம்’

ஆர்ஸலர்-மிட்டல்: ‘ஏலத்தில் பங்கு எடுத்து வெற்றி பெற்றால் அந்த இரண்டு நிறுவனங்களின் கடனை செலுத்தி விடுகிறேன்’.

ஆர்ஸலர்-மிட்டல் எவ்வளவு தந்திரமாக வேலை செய்கிறது என்று புரிந்திருக்கும்.

இதில் இன்னொன்றும் இருக்கிறது, ஆர்ஸலர்-மிட்டல் முதலாளியாக இருந்த நிறுவனங்கள் கடனை செலுத்தாமல் வாராக்கடன் என்று அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் இப்போது கொஞ்சம் நெருக்கியதும் ஆர்ஸலர்-மிட்டல் கடனை செலுத்துகிறேன் என்று சொல்கிறது. இதன் அர்த்தம் என்ன? முன்பு கடனை செலுத்த முடிந்தும் செலுத்தாமல் இருந்திருக்கிறது ஆர்ஸலர்-மிட்டல்.

ஆர்ஸலர்-மிட்டல் ஏமாற்றுகிறது என்று ஒரு சிறு குழந்தைக்கு கூட புரியும், ஆனால் நமது சட்டங்கள் நீதிமன்றங்கள் ஆர்ஸலர்-மிட்டலை எதுவும் செய்ய முடியாது செய்ய மாட்டார்கள்.

இதுவே ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்திலோ அல்லது விவசாய குடும்பத்திலோ நடந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? வங்கிகள் எவ்வாறு வசூல் செய்திருப்பார்கள்?! சம்மந்தப்பட்டார் வீட்டுக்கு போய் கேவலமாக திட்டி அந்த வீட்டாரை தற்கொலை செய்ய வைத்திருப்பார்கள். இதிலும் சட்டப்படி அவ்வாறு எல்லாம் போய் திட்டக்கூடாது. ஆனால், இதில் எல்லாம் சட்டத்தை யாரும் பார்ப்பதும் இல்லை, சட்டமும் இவற்றை எல்லாம் கண்டுகொள்வதும் இல்லை.

சரி இந்த நிறுவனங்களின் கடன் எவ்வளவு? ஏலம் கூறும் தொகை எவ்வளவு? ஒவ்வொன்றாக பார்ப்போம்.

எஸ்ஸார் ஸ்டீல் (ஏலம் விடப்படும் நிறுவனம்) வாங்கி கட்டாத கடன் – ரூ. 49 ஆயிரம் கோடி.

ஆர்ஸலர்-மிட்டல் promotor-ஆக இருக்கும் KSS Patron மற்றும் Uttam Galva Steel மொத்தமாக செலுத்தாமல் இருக்கும் கடன் – ரூ. 7 ஆயிரம் கோடி.
வேதாந்தா ஏலம் கோரும் தொகை – ரூ. 34 ஆயிரம் கோடி.
நியூமெட்டல் ஏலம் கோரும் தொகை – ரூ. 37 ஆயிரம் கோடி.
ஆர்ஸலர்-மிட்டல் ஏலம் கோரும் தொகை – ரூ. 42 ஆயிரம் கோடி.

இதில் வெற்றி பெரும் நிறுவனமும் ஏலத்தொகையை உடனே கொடுத்துவிட மாட்டார்கள், தவணை முறையில் சில ஆண்டுகளில் தருவார்கள். அதனால் இந்த ஏலம் விட்ட பணமும் ஏப்பம் விடப்படலாம்.

இருந்தாலும், அதிகபட்ச ஏலத்தொகையான ரூ. 42 ஆயிரம் கோடி வங்கிகளுக்கு கிடைக்கிறதென்று வைத்துக்கொள்ளலாம். அப்படி கிடைத்தாலும் வங்கிகள் இழக்கும் தொகை ரூ. 9 ஆயிரம் கோடி.

IBC முறையில் ஏலம் நடைபெறும் நிறுவனங்களில் இது சின்ன ஏலம், அதனால் வெறும் 9 ஆயிரம் கோடி, மற்ற ஏலங்களில் பல 10 ஆயிரம் கோடிகளில் தான் வங்கிகள் பணத்தை இழக்கின்றன.

இப்படி வங்கிகள் இழப்பதற்கு இவர்கள் வைத்துள்ள பெயர் haircut, அதாவது முடி வெட்டிக்கொள்வது. வங்கிகள் முடி வெட்டிக்கொள்கின்றன என்று பொருள் கொள்ளலாம்.

கேரளா வெள்ளத்துக்கு கேட்கும் நிவாரணம் எவ்வளவு?

தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை தொகை – ஓய்வு பெற்றவர்களுக்கு ரூ. 600 கோடி, வேலையில் இருப்பவர்களுக்கு ரூ. 5 ஆயிரம் கோடி.

செவிலியர்கள் போராடியதும் அவர்களை நீதிமன்றம் தரக்குறைவாக நடத்தியதும் நமக்கு ஞாபகம் இருக்கும். அந்த போராட்டத்தின் சில தகவல்கள். 2015இல் தமிழக அரசு 11 ஆயிரம் செவிலியர்களை பணியில் அமர்த்தியது. இவர்கள் ஊதிய உயர்வு கேட்டு தான் போராடினார்கள். இவர்களின் இப்போதைய மாத சம்பளம் சுமார் ரூ. 8 ஆயிரம். மொத்தம் வருடத்திற்கு ரூ. 108 கோடி இருந்தால் அனைவருக்கும் சம்பளம் தரலாம். சம்பளத்தை இரண்டுமடங்காக்க ரூ. 200 கோடி சொச்சம் இருந்தால் போதும். எஸ்ஸார் ஸ்டீல்க்கு வங்கிகள் ‘முடிவெட்டி’கொள்ளும் தொகை ரூ. 9 ஆயிரம் கோடி.

அர்பன் நக்சல்கள் தான் நமது நாட்டின் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம்!
ஜெயா சாவில் பெரும் மர்மம் உள்ளது!
மோடி நாட்டுக்காக 18 மணி நேரம் உழைக்கிறார்!
போலோ பாரத் மாத்தா கி ஜெய்!

முகநூலில்: Arun Karthik

மூலம்: ArcelorMittal raises bid for Essar Steel

நாம் ஒரு ஆபத்தான காலத்தில் வாழ்கிறோம் ! அச்சுறுத்தும் பாசிசம் அரங்கக் கூட்ட உரைகள் !

பீமே கோரேகான் சம்பவத்தை சாக்கிட்டு அறிவுத்துறையினர் மீது அடுத்தடுத்த அடக்குமுறைகள் ஏவப்படும் இந்தச் சூழலில், ”அச்சுறுத்தும் பாசிசம் : செயல்வீரர்கள் மீது மோடி அரசின் தாக்குதல்” என்ற முழக்கத்தினை முன்வைத்து, சென்னையில் அரங்கக் கூட்டத்தினை நடத்தியது, மக்கள் அதிகாரம்.

செப்டம்பர் – 08 அன்று மாலை, சென்னை நிருபர்கள் சங்கத்தின் கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில், கோவாவைச் சேர்ந்த, ஜனநாயக உரிமைகள் பாதுகாப்புக் குழுவின் பொதுச்செயலர், பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டே, பி.யு.சி.எல். தமிழ்நாடு – புதுவை மாநிலத்தின் பொதுச்செயலர் பேராசிரியர் முரளி, தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் தோழர் தியாகு, மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பொதுச் செயலர் தோழர் மருதையன், மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.

பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்டு சுமார் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விருந்தினர்களின் உரையின் இறுதியில், கேள்வி பதில் நிகழ்ச்சி இடம் பெற்றது. பார்வையாளர்களின் கேள்விகளுக்கு ஆனந்த் தெல்தும்டே, தோழர் மருதையன், தோழர் தியாகு, தோழர் ராஜூ ஆகியோர் பதில் அளித்தனர்.

இந்த அரங்கக்கூட்டத்தில் பங்கேற்ற சிறப்பு அழைப்பாளர்களின் கருத்துரைகளை கீழே தொகுத்தளிக்கிறோம். உரைகள் வீடியோ பதிவாக விரைவில் வினவு தளத்திலேயே வெளியிடப்படும்.

தோழர் ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.

இந்தியா முழுக்க பத்திரிகையாளர்கள் முற்போக்கு சிந்தனையாளர்கள் மீதான அடக்குமுறை என்பது மிகவும் அதிகமாகி வருகிறது. மாவோயிஸ்டுகளுக்கும் இவர்களுக்கும் தொடர்பு உள்ளது என்று கூறி தான் பல பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் வீடுகளில் சோதனை என்ற பெயரில் தேடல் தொடங்கப்பட்டது. அதில் ஒன்று தான்  ஆனந்த் தெல்தும்டே வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. மதிக்கப்படக்கூடிய பல நபர்கள் நீதிமன்றத்தின் கதவை தட்டினார்கள்.

மோடி இந்த நான்கு ஆண்டுகளில் கொண்டு வந்த, மேக் இன் இந்தியா, சுவட்ச் பாரத்,  பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., என அனைத்து திட்டங்களும் தோற்றுப் போய் விட்டன. நூற்றுக்கணக்கான‌ கூலிப்படைகளை ஆர்.எஸ்.எஸ். இறக்கி உள்ளது. இவர்கள் மூலம் தான் கொலைகள் நடத்தப்பட்டு வருகின்றன. கெளரி லங்கேஷ், தபோல்கர் போன்றவர்கள் ஒரே துப்பாக்கியால் தான் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையும் கர்நாடக புலனாய்வு துறை தான் கண்டு பிடித்து சொன்னது. வட இந்தியாவில் செயல்பாட்டாளர்கள் அனைவருமே ஒடுக்கப்படுகிறார்கள். உணர்வுப் பூர்வமாக போராடும் மக்கள் மத்தியில் நாம் அறிவு பூர்வமாக, அறிவியல் பூர்வமாக எடுத்துச் சொல்லும் போது போராட்டம் தீவிரமடைகிறது. வரலாற்றுப் பூர்வமான தகவல்களை சொல்லும் போது மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.

தூத்துக்குடி போராட்டம் 99 நாள் நடந்த போராட்டம் 100 வது நாள் மட்டும் எப்படி கலவரமாகும் என்று கேள்வி கேட்கிறார்கள். அந்த 99 நாளும் அரசு எப்படி கலவரத்தை போராட்டத்தில் உருவாக்கலாம் என்று சிந்தித்து திட்டமிட்டு 100 வது நாள் கலவரத்தை அரசுதான் திட்டமிட்டு செய்தது. தமிழிசையை பார்த்து பி.ஜே.பி. பாசிச ஆட்சி ஒழிக என்று தூத்துக்குடி சோஃபியா முழக்கமிட்டார். அது மிகப்பெரிய குற்றம் போல் கூவுகின்றனர். என்ன நடக்கிறது தமிழகத்தில்? பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு. கருத்துரிமைக்கு தடை.

மக்கள் அதிகார பொதுக்கூட்டத்திற்கு திருச்சியில் அனுமதி மறுத்துள்ளனர். காரணம் கேட்டால் உங்கள் மீது ஒவ்வொரு மாவட்டத்திலும் பல வழக்கு உள்ளது  மேலும் உங்களை அலசி ஆராய்ந்ததில் பிரச்சனை ஏற்படும் எனத் தெரிகிறது எனவே உங்கள் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அடக்குமுறை, பாசிசம், அச்சுறுத்தல் என்று  ஜனநாயகமே இல்லாமல் செய்கின்றனர். இதைத் தான் நாம் விவாதிக்க வேண்டும். அனைவரும் இதற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்.

பேராசிரியர் முரளி, பொதுச் செயலாளர், பி.யு.சி.எல், தமிழ்நாடு & புதுவை.

இது ஒரு அர்த்தமுள்ள நிகழ்வு. ஏன் இது போன்ற கைது என்ற கேள்வி பலருக்கு எழலாம். ஜனநாயகக் குரல்களை நெறிப்பதற்கு விதவிதமாக கற்றுத் தேர்ந்து உள்ளனர். பீமா கோரேகான் நிகழ்ச்சியில் பலர் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கின்றனர். இந்தப் பிரச்சனையை உருவாக்கியது இந்து தீவிரவாதம் தான். 3 மாதங்களுக்கு மட்டும் 22 பேர் UAPA-உபாவில் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். தூத்துக்குடியில் மக்கள் அதிகாரம் என்ன செய்தனர். அவர்கள் மீதும் தேசதுரோக வழக்கு, அடக்குமுறை. என் வீட்டில் விடியற் காலை 3 மணிக்கு வந்து காவல் துறையினர் உனக்கும் மக்கள் அதிகார அமைப்பிற்கும் என்ன தொடர்பு, வாஞ்சிநாதனை எப்படித் தெரியும் என்று கேட்கின்றனர். நான் அவர் ஒரு வழக்கறிஞர், பார்த்துள்ளேன்; பேசுவேன்; என்றதற்கு என் மீது வழக்கு. ஆர்.எஸ்.எஸ் – இன் அடாவடித்தனம் மிகவும் அதிகமாகி வருகிறது. திட்டமிட்டு பயிற்சி அளிக்கப்பட்ட கொலைகாரர்களை கொண்டுதான் கொலை செய்கிறார்கள்.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் அடக்குமுறைக்கு புதிய உத்திகளை கடைபிடிக்கின்றனர். மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்தே எல்லாவற்றின் மீதும் அடக்குமுறை. நீதிமன்றத்திலும் நமக்கு கழுத்தறுப்பு. சட்டத்திற்கு புறம்பாகத்தான் அவர்கள் அனைத்து செயல்பாடுகளையும் செய்கிறார்கள். ஒடுக்குவது, நசுக்குவது, இதற்காக சட்டங்களை அதிகமாக போட்டு உள்ளனர். மக்களின் குரல் என்பது நீதி மன்றத்தின் தீர்ப்பையும் மாற்றி எழுத வைக்கும். சிறைச்சாலைகளை நாம் நிரப்ப வேண்டும்.

தோழர் தியாகு, தமிழ் தேசிய விடுதலை இயக்கம்.

சொற்களுக்கு பொருள் தேடுவதுதான் அழகான உரை. சிறைச்சாலையில் எனக்கும் ஒருவருக்கும்  நடைபெற்ற ஒரு உரைடாலில், கைதி என்றால் அதற்கான பொருள் தப்பித்து செல்பவன். அதனால் தான் பெரிய பெரிய காம்பவுண்ட் சுவர். சுற்றி காவலர்கள். அதே போல் நாட்டின் பிரதமர் என்றால் கொலை முயற்சி மிரட்டல் எல்லாம் இருக்கும். அதற்கு தான் பூனைப் படை, புலிப் படை எல்லாம் இருக்கிறது. ஆனாலும் கொலை செய்து விடுவார்கள் என்றால் எப்படி நடக்கும்? மோடி மட்டும் பிரதமர் ஆகாமல் இருந்திருந்தால் எப்பொழுதோ குற்றவாளிக் கூண்டில் நிற்க வைக்கப்பட்டு இருப்பார். கொலை என்பது இவர்கள் பணி. அதனால் தான் யாரை பார்த்தாலும் இவர்களுக்கு கொலைகாரர்களாகவே தெரிகிறார்கள். மோடி ஒரு RSS வேட்பாளர். மோடி பணியை சரியாக செய்யவில்லை என்றால் மோடியையும் கூட இவர்கள் கொலை செய்வார்கள். கல்புர்கி, கெளரி லங்கேஷ் வரை இவர்கள் தான் கொலை செய்தார்கள். மக்களுக்கு நாம் விழிப்பூட்ட வேண்டும்.

வாஞ்சிநாதன், அரிராகவன் மீது பொய் வழக்கு. மக்களை அச்சுறுத்த இது போன்ற வேலைகள். அந்த வகையில் தான் முற்போக்காளர்கள் 5 பேர் கைது. இந்தியாவில் 5 பேர் இல்லப்பா 5,000 பேர் இருக்கிறோம். மக்களுக்கு நாம் விழிப்பூட்ட வேண்டும். மோடி ஆட்சியை எதிர்த்து சிறை செல்வது நமக்கு பெருமை. மக்கள் அதிகாரம் முன் எடுக்கும் அனைத்து போராட்டத்திற்கும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் முழுமையாக ஆதரவாக நிற்கும்.

தோழர் மருதையன், மாநில பொது செயலாளர், மக்கள் கலை இலக்கிய கழகம்.

உண்மையிலேயே மோடியைக் கொல்ல சதி இருக்கிறதா? உள்துறை அமைச்சகம் மோடியை பாதுகாக்க ஒரு தனி படை அமைத்து இருக்கிறது. அமைச்சர்கள் கூட அனுமதி இல்லாமல் மோடியை பார்க்க போக முடியாது. அந்த அளவிற்கு பாதுகாப்பு. தமிழிசையை பார்த்து ஒரு பெண் பா.ஜ.க. ஆட்சி ஒழிக என்றால் உடனே கொலை செய்து விடுவார்கள் என்று கூவுகின்றனர். நாயை தெருவில் பார்த்தால் கடித்து விடுமோ என்று அஞ்சுவோம். அதுவே திருடனாக இருந்தால் பிடிபட்டு விடுவோமோ என்று அஞ்சுவான். அந்த 2 வது பயம் தான் இவர்களுக்கு. சோஃபியா முழக்கமிட்ட நேரத்திலே அதை வாங்கி பின் இருந்தவர்களும் போட்டிருந்தால் நிலைமையே மாறி இருக்கும்.

உச்சநீதிமன்றம் இந்த 5 பேரை முதலில் 6 நாள் காவலில் வைத்தார்கள். முதலில் இவர்களுக்கும் பீமா கோரேகானில் நடந்த சம்பவத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை இவர்கள் மீது  வழக்கும் இல்லை. ஆனால் இதை நீதிபதி கேட்டால் பதிலும் இல்லை. பல பொய் வழக்குகளை இவர்கள் போட்டு உள்ளனர். இவர்களுக்கு மரண அடி நாம் கொடுக்க வேண்டும். காவல் நிலையத்திற்கு போனாலே தெரியும் எப்படி பொய் வழக்குகள் ஜோடிப்பது என்று அது போல் தான் முற்போக்காள‌ர்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு இவர்கள் ஒடுக்கப்படுகிறார்கள்.

மோடி ஆட்சிக்கு வந்த 4 ½ ஆண்டுகளில் விலைவாசி உயர்வு, சிறு தொழில்கள் அழிவு, கொலை இவையெல்லாம் முதலில் அதிர்ச்சியூட்டும் செய்திகள். பின்னர் அதுவே பழகிவிட்டது. இதனால் தான் போர்க்குணமிக்க போராட்டம் இல்லை.

அவசர நிலை என்பது இந்திரா ஆட்சி காலத்தில் கட்டாயமாக திணிக்கப்பட்டது. அனால், அந்த அவசர நிலையே இன்று நமக்கு பழக்கமாக்கப்படுகிறது. தமிழிசையை அச்சுறுத்தியது கேளாத செவிகள் கேட்கட்டும் என்பதுதான். இது தான் சோஃபியாவின் குரல். இல்லையென்றால் நாம் 1000 ஆண்டு அடிமைத் தனத்திற்கு செல்வோம். அனைவரின் குரலும் ஓங்க வேண்டும்” என்று எளிமையாக புரிய வைத்தார்.

ஆனந்த் தெல்தும்டே, பொதுச் செயலாளர் ஜனநாயக உரிமைகள் பாதுகாப்புக் குழு, கோவா.

நாம் வலியுறுத்தும் செய்தி நாம் ஆபத்தான கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். காங்கிரசுக்கும் பி.ஜே,பி.-க்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அவர்கள் காலத்தின் கட்டாயத்தில் செய்தார்கள். இவர்கள் திட்டமிட்டு இந்துமயம் ஆக்க வேண்டும் என்று  செய்கிறார்கள். பீமா கோரேகானிலும் இவர்கள் தான் திட்டமிட்டு மதக்கலவரத்தை தூண்டினார்கள். சிவாஜி சமாதியில் இருந்து தொடங்கினார்கள். உள்ளூர் மக்களுக்குள் கலவரத்தை ஏற்படுத்த நினைத்தார்கள். ஆனால், ஊர் மக்கள் கூடிப் பேசி இதற்கு இவர்கள் தான் காரணம் என்று தெரிந்த உடன், மக்கள் இந்துத்துவா சக்திகளை எதிர்க்க ஆரம்பித்தனர்.  அங்கு இவர்களால் திட்டமிட்டு கலவரம் ஆக்கப்பட்டது. மாவோயிஸ்டுகளுக்கு பணம் தருவது என்று பொய் சொல்லி கைது செய்கிறார்கள். அவர்களின் கணினிகளை கைப்பற்றுவதுதான் இவர்களின் முதல் நோக்கம். அதன் மூலமே பொய்யான கடிதங்களை தயாரித்து இவர்களே வெளியிட்டு கைது செய்வார்கள். இதை எங்கு வந்து வேண்டுமானாலும் நான் சொல்லத் தயார். முற்போக்கு எழுத்தாளர்கள் பலர் இதை கண்டித்து உள்ளனர். நாம் தனித்தனியாக போராடாமல் அனைவரும் ஒன்றினைந்து போராட வேண்டும்” என்று கூறினார்.

தகவல்:
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு.

ஐ.டி. துறை ஆட்குறைப்பு சரியா தவறா ?

லே ஆஃப், சரியா தவறா – ஒரு கேள்வி, பல பதில்கள்

சிகரெட் குடிக்கிறது நல்லதா அப்படீன்னு ஒரு கேள்வியை கேட்டால்?

இந்தக் கேள்வியை ஒரு 5 வயது பையனிடம் கேட்கும் போது, “தப்பு சார், 5 வயசு பையன் சிகரெட் குடிக்கலாமா?” அப்படின்னு பதில் வரும்.

இந்தக் கேள்வியை ஒரு 10-வது படிக்கிற பையனிடம் கேட்டால், “இப்பதான் சார், ஏதோ ஃபிரெண்ட்ஸ் சொன்னாங்கன்னு சொல்லி ஆரம்பிச்சிட்டோம். விட முடியல, தப்பு சார், நான் சீக்கிரம் விட்டுருவேன்.

கொஞ்சம் தள்ளி போய் ஒரு காலேஜ் படிக்கிற பையனிடம் கேட்டேன், “சார், லைஃப்ல எப்பதான் சார் எஞ்சாய் பண்றது. இதெல்லாம் தப்பு கிடையாது சார், அப்பா காசில குடிக்கிறது தப்புதான். இருந்தாலும், நான் சம்பாதிச்ச பிறகு இன்னும் நிறைய, பெட்டராவே, ஒரு நாளைக்கு ஒன்னு ரெண்டுன்னு குடிக்கிறத விட ரெண்டு பாக்கெட், மூணு பாக்கெட் குடிப்பேன் சார்” அப்படீன்னு ஒரு பதில் வரும்.

சரி, அதே கேள்வியை வேலைக்கு போய் கைநிறைய சம்பாதிக்கும் போது கேட்டா, “ஏய் இதெல்லாம் கேக்கறதுக்கு நீ யாரு? who are you to say about this? என்னுடைய பெர்சனல், என்னோட தனிப்பட்ட விஷயத்தில தலையிட நீ யாரு? don’t you know basic manners” என்று ஒரு பதில் வரும்.

ஆனா, கேள்வி ஒண்ணே ஒண்ணுதான், சிகரெட் பிடிப்பது வீட்டுக்கு நாட்டுக்கு கேடு என்பதை தெளிவாக எழுதினால் கூட பதில்கள் வெவ்வேறாக உள்ளது. சரி, ஏன் இதை பேசறோம்? யூனியன் சார்பா இதை ஏன் பேசுகிறோம்?

கேள்வி, “லே ஆஃப் நல்லதா”.  இந்தக் கேள்வியை ஒரு fresher கிட்ட வைக்கிறேன். இப்பதான் காலேஜ் முடிச்சிட்டு போயி ஒரு கம்பெனில ஜாயின் பண்ணியவர் கிட்ட கேட்டா, “சார் நான் இப்பதான் ஜாய்ன் பண்ணியிருக்கிறேன், முதலாளி எது பண்ணாலும் நல்லதுதான் போலிருக்கு” என்று சொல்வார்.

சரி, ஒரு 5 வருசம் எக்ஸ்பீரியன்ஸ் ஆனவர்கிட்ட போய் கேட்டா, “சார் நான் இப்பதான் லோன் வாங்கி மூணாவது வருஷம் ஈ.எம்.ஐ. கட்டிகிட்டு இருக்கேன். லேஆஃப் தப்புதான் சார், நாங்க இங்கதான் டிரெயின் ஆகியிருக்கோம். லே ஆஃப் தப்பு”ம்பாரு.

ஒரு 15 இயர்ஸ் எக்ஸ்பீரியன்ஸ் எம்ப்ளாயி கிட்ட கேட்டா, “சார், நான் இப்பதான் சார் மூணாவது வீடு ஈ.எம்.ஐ. முடிச்சிருக்கேன். லேஆஃப் தப்புதான் சார். இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு வேலை செய்து, உடல் நலத்தை எல்லாம் காம்பரமைஸ் செய்து கொண்டு, நெஞ்சு வலி வந்தாலோ, முதுகு வலி வந்தாலும் ஆஸ்பிட்டல்லையே அட்மிட் ஆனாலும், தூக்கத்தை மறந்து வேலை செய்து கிட்டு இருகேன் சார், எப்படி இருந்த கம்பெனி, வெறும் 1000 பேர் வேலை செஞ்ச கம்பெனி 1 இலட்சம் பேர் கம்பெனி ஆனதுன்ன என் உழைப்புதான் சார் காரணம். பாருங்க லேஆஃப் தப்புதான் சார்” னு சொல்லுவாங்க.

ஒரு காலேஜ் கிராஜுவேட் கிட்ட போனா, “இண்டஸ்ட்ரியே புரிய மாட்டேங்குது சார், திடீர்னு சம்பாதிக்கிறாங்க, திடீர்னு வேலைய விட்டு தூக்குறாங்க, என்னன்னு புரிய மாட்டேங்குது சார்”

ஒரு 25 years experience இருக்கிற ஒரு title holder கிட்ட போய் கேட்டீங்கன்னா, “சார், national interest-ல லேஆஃப் சரிதான் சார், எங்க கையில ஒண்ணுமே கிடையாது சார். போர்டு என்ன சொல்லுதோ அதைச் செய்றேன், ஒரு அடியாட்கள் நாங்க, அவங்க சொல்றாங்க நாங்க செய்றோம், அதுக்குத்தான் எங்களுக்கு சம்பளம் கொடுக்கிறாங்க. CEO வே board சொல்றத கேட்க வேண்டிய ஒரு ஆள், அவ்வளவுதான்”

இப்படித்தான் பதில் வரும்.

சரி ஒரு share holder கிட்ட போய் கேட்டு பாருங்க லே ஆஃப் நல்லதான்னு, “கண்டிப்பா நல்லது சார், profit முக்கியம், profit  வைச்சுதான் நான் எந்த கம்பெனியிலயும் இன்வெஸ்ட் பண்ணுவேன்”

சரி, ஒரு mutual fund கம்பெனில போய் கேட்டு பாருங்க, “லே ஆஃப் நல்லதா”ன்னு. “சார் லே ஆஃப் நல்லதா கெட்டா என்கிறத விட, லேஆஃப்-ங்கிற நியூசை வைச்சுகிட்டு நான் எவ்வளவு பிரேக் பண்றேங்கிறதுதான் எனக்கு முக்கியம். ஒரு லே ஆஃப் இந்த கம்பெனில நடக்கப் போகுதுன்னா, அந்த கம்பெனில இலாபம் அதிகமாகும்னு சொல்லிட்டு அந்த கம்பெனி ஷேர நான் accumulate பண்ணுவேன். இந்த நியூஸ் வந்திச்சின்னா, அந்த நியூச நாங்க காசாக்குவோம். ஒரு லே ஆஃப் நல்லதா கெட்டதா என்று இல்லை. ஒரு கம்பெனில லே ஆஃப்-ஏ நடக்கலைன்னா, மார்ஜின் பெருசா இம்ப்ரூவ் ஆகாது. ஆனா லேஆஃப் நடக்குதுன்னு நடக்கும் போது சந்தையில ஏற்றம் இறக்கம் இருக்கும். மியூச்சுவல் ஃபண்ட் கம்பெனியா அதுல எனக்கு யூஸ் இருக்கும்” அப்படீன்னு ஒரு பதில் வரும்.

ஒரு CA கிட்ட போய் கேட்டீங்கன்னா, CA-ன்னா, வேற ஒண்ணுமில்லை. முதலாளியோட அல்லக்கைகள். board of directors, executives, கருப்புப் பணத்தை எல்லாம் எப்படி save பண்ணணும், எப்படி வெள்ளையாக்கணும். என் முதலாளி என்ன சொல்றாரோ அதுக்கு அப்படியே ஜால்ரா தட்றது. ஒரு CA. அவர் பேச்சை எல்லாம் நாம் கேட்கணும்னு அவசியம் இல்லை.

அடுத்து, ஒரு முதலாளி கிட்ட போய் கேளுங்க, “லே ஆஃப் நல்லதா”ன்னு. “ஆமா சார், வேலை செய்யாதவனை எல்லாம் எப்படித்தான் இது பண்றது. 15 வருஷமா வேலை செய்துகிட்டு இருந்தான். திடீர்னு ஒரு நாள் எனக்கு தெரிஞ்சிருச்சி. இலாபம் குறையறது மாதிரி இருந்தது. இவனுக்கு அதிகம் சம்பளம் அதிகம் கொடுக்கிறோம்னு திடீர்னு கண்ண முழிச்சி தெரிஞ்சுகிட்டேன். அதனால் எனக்கு வேணாம். லே ஆஃப் நல்லதுதான் நாட்டோட வளர்ச்சிக்கு, ஏன்னா, அவனவனை திருத்திக்கிறதுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கிறேன். வேலையை விட்டு அனுப்பினேன்னா, அவனே நடு ரோட்டுக்குப் போய் பிச்சை எடுத்து வாழ்க்கையை புரிஞ்சிகிட்டு, நான் சொல்றதை எல்லாம் கேட்டுகிட்டு, பாதி சம்பளத்துக்கு வந்துருவான் சார். அதனால், லே ஆஃப் நல்லது” என்பார்.

கடைசியில, யூனியன்கிட்ட கேட்டா, எந்த யூனியனும் ஒரே குரல்ல சொல்றது, “லேஆஃப் என்பது தவறு, லே ஆஃப்னால நாட்டுக்கு இந்த சமுதாயத்துக்கு கேடு, தனிநபர்கள் சேர்ந்ததுதான் சமுதாயம். லே ஆஃப் என்பது தனிநபரை மட்டும் பாதிக்கலை. இந்த சமூகத்தையே பாதிக்கும். எனவே, லே ஆஃப்ஐ எதிர்த்து குரல் கொடுப்போம்”

நன்றி : new-democrats இணையதளத்தில் வெளியான கட்டுரை.

நின் விடுதலை மரித்ததும் போய் நின் கண்ணீர் சிந்து !

முழுத் துயரில் நின் கண்ணீர் சிந்து என் நாடே,
நின் சேகமான மண்ணின் சோகமான விதியையிட்டுப் போய் அழு.
உனக்கு வேதனையாயும் அயலானுக்கு அவனது ஊட்டமாயும்
நினைச் சூழும் அவலத்தில் குடங் குடமாய் நின் கண்ணீர் சிந்து.

நின் அடையாளங்கூறுங் கொடி ஒரு அந்நியக்கொடியின் கீழ்ப்பட்டுக் கிடக்கிறது.
நின் மரபுரிமையான மொழி மற்ற மொழியின் தாழ்வான அடிமையாய் உள்ளது.
அவர்கள் பெருமையாய்க் கொண்டாடுகையில் நின் கண்ணீர் சிந்து
சிறியதின் சவ அடக்கத்தில் பெரியதின் களிப்புக்காக
நின் செல்வமனைத்தும் பிடிபிடியாக நுகர்வுறும்
நின் சுதந்திரமனைத்தும் அதேவேளை கட்டுண்ணும்.

இலக்கு இதயத்தில் நெகிழ்ந்தானதும் நின் கண்ணீர் சிந்து
நின் நெஞ்சில் எரிமலை உறுமுவதை நிறுத்தியதும்
எழுச்சியின் இரவில் எவரும் காவலிராத போது
நின் விடுதலை மரித்ததும் போய் நின் கண்ணீர் சிந்து

நின் கண்ணீர்த்துளிகள் யாவும் பாவித்து முடிந்து உலரும் ஒரு நாள் வரும்
நின் கண்களில் கண்ணீர்த்துளிகள் இனியுந் திரளாத ஒரு நாள் வரும்
ஆனால் நின் குருதி கொதிக்கின்ற உருக்காகும் வேளை
பாய்வது தீயாய் குருதி நிறத் தீயாய் இருக்கும்.

ஆயிரம் தீவட்டிகளின் தீச்சுடரில் நீ வீரமாய் முழங்குவாய்.
நின் கண்ணீர்ச் சங்கிலியை ஒரு தோட்டாவால் அறுப்பாய்.

அமாடோ ஏ. ஹெர்னான்டெஸ்
(13 செப். 1903- 24 மாச் 1970)

(பிலிப்பினியக் (பிலிப்பைன்ஸ்) கவிதை. 1970-களில் அந்நிய அரசியல், பொருளாதார ஆதிக்கத்துக்கும் ஒடுக்கலுக்கும் எதிரான மாணவர்களின் அரசியற் செயற்பாட்டின் போராட்டச் சங்கொலியாயிருந்த பாடல்)

நன்றி: செம்பதாகை, ஆகஸ்டு-2018.
புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி – இலங்கை.

பெட்ரோல் – டீசல் விலை உயர்வைக் கண்டித்து வேலூரில் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் – டீசல் விலை உயர்வைக் கண்டித்து பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராக செப்டம்பர் 10 அன்று நடைபெற்ற முழு அடைப்பை (பாரத் பந்த்) ஆதரித்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் வேலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்புச் சங்கமான    “வேலூர் மாநகர் மாவட்ட சாலையோர வணிகர்கள் மற்றும் சிற்றுண்டி வணிகர்கள் சங்கம்”  அடுக்கம்பாறை கிளையின் சார்பாக அடுக்கம்பாறையில் 10.09.2018 அன்று காலை 11 மணிக்கு நடைபெற்ற இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கிளைத் தலைவர் தோழர் முருகன் தலைமை தாங்கினார். பு.ஜ.தொ.மு மாவட்டச் செயலாளர் தோழர் சுந்தர் கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் சாலையோர வணிகர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். பெட்ரோல் – டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டத்தின் போது எழுப்பிய முழக்கங்கள் மக்களிடை பெரும் வரவேற்பைப் பெற்றன.

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, வேலூர்.

ஸ்வப்னா பர்மன் : ஒளிரும் வைரங்களில் ஒன்று

ஹெப்டெத்லான் என்பது அத்தனை சுலபமான விளையாட்டு அல்ல. ஹெப்டா என்றால் கிரேக்க மொழியில் ஏழு எனப் பொருள். ஏழு தடகள விளையாட்டுக்கள் சேர்ந்ததே ஹெப்டெத்லான் விளையாட்டு. நூறு மீட்டர் தடை ஓட்டம், உயரம் தாண்டுதல், குண்டு எரிதல், 200 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், ஈட்டி எரிதல் மற்றும் 800 மீட்டர் ஓட்டம் என இதே வரிசையிலான போட்டிகளில் பங்கு பெற்று புள்ளிகள் பெற வேண்டும்.  இது பெண்கள் பிரிவு ஹெப்டெத்லான் விளையாட்டில் உள்ள வரிசை. இதே போல் ஆண்கள் பிரிவுக்கும் தனி விளையாட்டு வரிசை ஒன்று உண்டு.மிக அதிகபட்ச உடல் தகுதியையும் ஆற்றலையும் கோரும் இந்த விளையாட்டில் பல் வலியுடனும், முதுகு வலியுடனும், ஆறு விரல்கள் கொண்ட கால்களுடனும், அந்தக் கால்களுக்குத் தனிச் சிறப்பான காலணிகள் இல்லாமலும் வெற்றி பெறுவதும் அப்படிப் பெற்ற வெற்றியில் இந்திய அளவில் அதிகபட்ச சாதனைப் புள்ளிகளைக் கடப்பதும் கற்பனைக்கே எட்டாத சாதனை. அப்படி ஒரு சாதனையைச் செய்திருக்கிறார் ஸ்வப்னா பர்மன். மேற்கு வங்க மாநிலம் ஜல்பய்குரி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்வப்னா பர்மன், சமீபத்தில் இந்தோனேசியாவின் ஜகார்தாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான ஹெப்டெத்லான் விளையாட்டில் கலந்து கொண்டு தங்கம் வென்றுள்ளார்.

ஜல்பய்குரியை அடுத்த கோஷ்பாரா கிராமத்தில் பிறந்த ஸ்வப்னா, தனது பால்ய பருவத்தை கொடும் வறுமையில் கழித்துள்ளார். ரிக்சா இழுக்கும் தொழிலாளியான தந்தை பல ஆண்டுகளுக்கு முன் தாக்கிய பக்கவாதத்தால் படுத்த படுக்கையாகி விட்ட நிலையில், ஸ்வப்னாவின் தாயார் அருகில் உள்ள டீ எஸ்டேட்டில் கூலியாக வேலை பார்த்து வருகிறார். இவரோடு பிறந்தவர்கள் மூன்று பேர். ஆறு பேர் கொண்ட அந்தக் குடும்பத்தால் ஸ்வப்னாவின் தாயாரின் கூலியைக் கொண்டு இரண்டு வேளை உணவு மட்டுமே சாப்பிட முடியும்.

ஸ்வப்னாவின் சிறிய வயதில் அவருக்கு ஓட்டப் பந்தயத்தில் இருந்த திறமையைக் கண்டு வியந்த பயிற்சியாளர் சுபாஷ் சர்கார், இவருக்குப் பயிற்சியளிக்க முன்வருகிறார். எனினும், பிறவியிலேயே இவரது கால்கள் ஒவ்வொன்றிலும் ஆறு விரல்கள் உண்டு. இதற்கென தனிச்சிறப்பான காலணிகள் இருந்தால் தான் ஓட முடியும். ஆனால், குடும்பத்தில் நிலவிய வறுமையின் காரணமாக தனிச்சிறப்பான காலணிகள் வாங்க நிதியின்றி சாதாரணக் காலணிகளுடனேயே ஓடிப் பயிற்சி பெற்றுள்ளார். இப்போது ஜகார்தாவிலும் அவர் சாதாரணக் காலணிகளையே பயன்படுத்தியுள்ளார்.

“எனது கால்களில் எப்போதும் தீராத வலி இருந்து கொண்டே இருக்கும். இப்போது வரை நான் பொறுத்தமான காலணிகள் வாங்கப் போராடிக் கொண்டு தான் இருக்கிறேன்” எனக் குறிப்பிடும் ஸ்வப்னா, ”காலணிகள் ஒரு தொல்லை என்றால், அதன் அடிப்புறத்தில் இருக்கும் ஸ்பைக்குகள் மாபெரும் தொல்லை” என்கிறார். பொறுத்தமற்ற காலணிகளோடு ஓடும் போது அதன் கீழ்புறத்தில் இருக்கும் ஸ்பைக்குகளால் பாதம் முழுக்க வலி பரவும். இத்தனை இடர்பாடுகளைத் தாண்டியே அவர் ஹெப்டெத்லான் விளையாட்டில் படிப்படியாக முன்னேறினார்.

2013 -ஆம் ஆண்டு பெங்களூருவில் நடந்த தேசிய ஜூனியர் அத்லெடிக் போட்டிகளில் ஹெப்டெத்லான் விளையாட்டில் உயரம் தாண்டுதலில் முந்தைய தேசிய சாதனையை முறியடித்து வெற்றி வெற்றி பெற்றார்.  அதன் பின் 2014-ஆம் ஆண்டு கொரியாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு ஐந்தாம் இடம் பிடித்தார். அந்தப் போட்டிகளின் போது தான் முதன் முறையாக அவரது முதுகுத் தண்டுவடத்திலும் கணுக்காலிலும் காயம்பட்டது. அதைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

ஸ்வப்னாவின் வெற்றியைக் கொண்டாடும் கிராமத்தினர்.

இரண்டு ஆண்டுகள் கழித்து கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையேயும், போதிய மருத்துவ சிகிச்சைகள் இன்றியும் பயிற்சிகள் மேற்கொண்டு 2017-இல் நடந்த ஆசிய அத்லெடிக் போட்டியில் களம் புகுந்த ஸ்வப்னா தங்கப்பதக்கம் வென்றார். முதுகு வலிக்கு நிரந்த தீர்வு இன்றி இப்போது வரை தொடர்ந்து மும்பைக்குச் சென்று வலிநிவாரணி ஊசி போட்டு வருகிறார். இத்தனை வலிகளோடும் தான் இந்தாண்டு இந்தோனேசியாவில் நடக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இறங்கினார் ஸ்வப்னா.

”இங்கே வந்த முதல் நாளே என்னால் போட்டிகளில் கலந்து கொள்ள முடியுமா என்கிற சந்தேகம் வந்தது. ஆனால் நான் இறங்கியே ஆக வேண்டும் என நினைத்துக் கொண்டேன். ஒருவேளை கலந்து கொள்ளவில்லை என்றால் நான் எடுத்துக் கொண்ட பயிற்சிகளுக்கும் உழைப்புக்கும் அர்த்தமின்றிப் போயிருக்குமே” என்கிறார் ஸ்வப்னா. இந்தோனேசியா சென்ற போது ஏற்கனவே இருந்த வலிகளுடன் புதிதாக பல்வலியும் சேர்ந்து கொண்டது. பல்வலியின் காரணமாக இறுதிப் போட்டிக்கு முந்தைய நாள் காய்சலும் இணைந்து கொண்டது.

”எனது வலது தாடையில் கடுமையான வலி இருந்தது. ஆனால், இங்கே ஊக்க மருந்து சோதனைகள் கறாராக இருக்கும் என்பதால் வலிநிவாரணிகள் கூட எடுத்துக் கொள்ளவில்லை. கொல்லும் வலியோடு சிறப்பான விளையாட்டுத் திறனை வெளிப்படுத்த முடியுமா என்று முதலில் சந்தேகமாகத் தான் இருந்தது. எனினும், கடந்த இரண்டு நாட்களாக எனக்கு நானே நம்பிக்கை அளித்து தேற்றிக் கொண்டேன்” எனக் குறிப்பிடும் ஸ்வப்னா, “வெல்ல வேண்டும் என்றால், வலியை மறக்க வேண்டும் என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். வலது முட்டியிலும் கூட வலி இருக்கத் தான் செய்தது.. அதையும் சமாளித்துக்  கொண்டேன்” என்கிறார்.

ஸ்வப்னா பர்மனின் வெற்றி ஏராளமான உண்மைகளை நமக்கு வெளிப்படுத்துகின்றது. நூறு கோடிக்கும் மேலான இந்திய மக்கள் தொகையில் திறமைக்குப் பஞ்சமில்லை; ஆனால், அந்த திறமை யாரும் அறியாத திசைகளில் அரசால் கண்டு கொள்ளப்படாமல் விடப்பட்டுள்ளது; அதில் விதிவிலக்காய் ஒளிரும் வைரங்களில் ஒன்று தான் ஸ்வப்னா. மேலும், தன்னை பின்னுக்கு இழுக்கும் அத்தனை சூழலையும் மீறிப் போராடி வெல்லும் இந்தப் போர்க்குணம் உழைக்கும் வர்க்கத்துக்கே உண்டு. விளையாட்டு வீரர்களை மேட்டுக்குடி கிளப்புகளில் தேடுவதை விடுத்து, உழைக்கும் மக்கள் திரளில் இருந்து தேடினால் கோடிக்கணக்கானவர்களைக் கண்டுபிடிக்க முடியும்.

– வினவு செய்திப் பிரிவு

என்னடா இது , திடீர்னு கொண்ட வெளிய கெளம்புது | கருத்துப்படம்

என்னடா இது திடீர்னு கொண்ட வெளிய கெளம்புது

ராஜீவ் கொலை வழக்கு: 7 பேர்களுடைய விடுதலை தவறான முன்னுதாரணமாகிவிடும்! – தமிழ்நாடு காங்கிரசு கட்சித் தலைவர் திருநாவுக்கரசு கருத்து.

♣♣♣

வேதாந்தா நிறுவனத்திற்கு மீத்தேன், ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி.அனில் அகர்வால் : மத்தியில 25 லைசென்ஸ் வாங்கணும், மாநிலத்தில் ஒரு பதினஞ்சு லைசென்சு வாங்கணும். முடிச்சிடலாம். ஒரு பிரச்சினையும் வராது,

செய்தி : தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் எடுக்க வேதாந்தா நிறுவனத்திற்கு ஏலம் விடப்பட்டுள்ளது. காவிரிப் ஆற்றுப்படுகையோ, டெல்டாவோ, தமிழ்நாட்டின் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் தெரிவு செய்யும் உரிமை கார்ப்பரேட் வேதாந்தா நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதை மக்களிடமிருந்து பிடுங்கிக் கொடுக்கும் பொறுப்பு அரசுடையது.

கருத்துப்படம்: வேலன்

உங்களையும் நக்சலைட்டாக்காமல் விடமாட்டார் பகவான் !

2

ந்தியாவுக்கு
வாய் தேவை இல்லை
யாரும் பேசக் கூடாது.
காதுகள் மட்டும்
போதும்.
அதுவும்
மனிதக் காதுகளாய்
இருக்கக் கூடாது.

பார்ப்பன பாசிசத்தின்
அதட்டல்களையும்
ஆணைகளையும்
உள் வாங்கத் தக்க
ஓட்டைகள் மட்டும்
போதும்.

கண்கள்,
கண்டும் காணாத
காட்சி மறதிகளாய்
வெளிப் பார்வையின்
புதை குழிகளாய்
இருக்க வேண்டும்

இயலாதெனில்,
கெடுநிலைக்கு மத்தியில்
நடுநிலை தேடும்
அறிவாளிகளின் அளவுக்காவது
கருவிழிகள் கட்டாயம்
கடை பிடிக்க வேண்டும்.

இதயம்?
அது
இந்து மதத்திற்கு
தேவையே இல்லை!

சொரணையற்று
உள்ளே
புதைந்துக்கொள்வது
இதயம்.

உயிரற்று
வெளியே புதைப்பது
உடல்.

எந்த அளவுக்கு
நீ
நீ அற்றுப் போகிறாயோ
தெய்வ சங்கல்பம்.
நீயானால்,
ஜெயில் சம்பவிக்கும்.

ஏற்றால்
பிரசாதம்
இல்லையேல்,
சம்ஹாரம்.

அவ்வப்போது வரும்
அறிவிப்புகளுக்காக மட்டும்
விழித்துக் கொண்டால் போதும்
மற்றபடி பேசாமல்
மரண யோகாவில்
கண்ணை மூடுவது
உடம்புக்கு நல்லது!

அசரீரீ
அவாளுக்கும்
அகர்வாலுக்கும்
மட்டுமே உரியது,

மாஃபியாக்களுக்கு
எதிராக
சோஃபியாக்கள்
குரல் எழுந்தால்
பின்புலம் ஆராயப்படும்
முன்புலம் முடக்கப்படும்.

அத்து மீறுவதற்கு
அனுமார்களுக்கு மட்டுமே
அனுமதி.
கொலை செய்வதற்கு
ராமனுக்கு மட்டுமே
மனு ஸ்மிருதி!

கார்ப்பரேட் ராமாயணத்திற்கு
துடுப்பசைத்தால்
குகனுடன் அய்வராவோம்.
கார்ப்பரேட் பாசிசத்துக்கு
எதிர்ப்பசைத்தால்
வரவரராவ், சுதா பரத்வாஜ்
கன்சால்வேஸ், அருண் பெரிரா
கவுதம் நவ்லகாவுடன்
கைதாவோம்.

அரசியல் புரியாத
ட் யூப் லைட்டுகளின்
அஞ்ஞான இருளை அகற்றி
அருளுரைக்கிறார் பகவான்,

”சதுர் வர்ணம் நமா சிருஷ்டம்
சாகாதிருந்தால் உன் அதிர்ஷ்டம்
யதா யதாகி
நாடே நக்சலைட்டாகி….”

ந மோ.. நாராயணா..
நாவசைத்தாலே நக்சலைட்னா
அதே..‍ அதாகி..
என குழப்பத்தில்
ஒத்துக்கொள்ள மறுத்தாலும்
உங்களையும் நக்சலைட்டாக்காமல்
விடமாட்டார் பகவான்!

– துரை. சண்முகம்

மீத்தேனுக்காக டெல்டாவைக் காயப்போடும் எடப்பாடி – மோடி அரசுகள் !

டந்த ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் மேட்டூர் அணை மூன்று முறை நிரம்பி, உபரி நீர் கொள்ளிடம் வழியாக வெளியேற்றப்பட்டுக் கடலில் கலந்து வருகிறது. காவிரியில் நீர் வராதா என ஏங்கிக் கொண்டிருந்த டெல்டா மாவட்ட விவசாயிகளும் தமிழக மக்களும் இப்பொழுது பல்லாயிரம் கன அடி உபரி நீர் எவ்விதப் பலனும் இன்றிக் கடலில் கலப்பதை வேதனையோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த ஜூலை 23, 24 தேதிகளில் மேட்டூரிலிருந்து நொடிக்கு 50 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. ஆகஸ்டு மாத இறுதியிலோ மேட்டூரிலிருந்து நொடிக்கு இரண்டு இலட்சம் கன அடி வரை உபரி நீர் வெளியேற்றப்பட்டிருக்கிறது. மேட்டூருக்குக் கீழுள்ள முக்கொம்பு அணை, கல்லணை, கீழணை ஆகியவை ஆழி போல உருவெடுத்துவரும் இந்த வெள்ளத்தைத் தேக்கி வைக்கக்கூடிய கட்டமைப்புகள் அல்ல.

குறிப்பாக, கல்லணையிலிருந்து காவிரியில் ஒரு நொடிக்கு 9 ஆயிரம் கன அடியும், வெண்ணாற்றில் 9 ஆயிரம் கன அடியும், கல்லணைக் கால்வாயில் 2,750 கன அடி நீர்தான் அதிகபட்சமாகத் திறக்க முடியும். இதற்கு அதிகமாக கல்லணைக்கு வரும் நீர் அனைத்தும் கொள்ளிடம் வழியாகக் கடலுக்குச் சென்று விடும்.

வரைமுறையற்ற மணல்கொள்ளை மற்றும் அணைப் பராமரிப்பு பணிகளைக் கைவிட்டதன் காரணமாக உடைந்துபோன மேலணை.

காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் காலங்களில் கரைபுரண்டு ஓடும் தண்ணீரில் ஒரு குறிப்பிட்ட அளவு கடலில் கலப்பது அவசியமே. எனினும், இன்று காவிரியில் நாம் காணும் காட்சி, கிரிமினல் குற்றத்திற்கு இணையானது.

ஒருபுறம், காவிரி வெள்ளம் கடலில் கலந்துகொண்டிருக்க, இன்னொருபுறத்திலோ காவிரியிலும், வெண்ணாற்றிலும், கல்லணைக் கால்வாயிலும் பாசனத்திற்காகத் திறந்துவிடப்பட்ட நீர் கடைமடை பகுதிக்கு மட்டுமல்ல, தலைமடை பகுதியில் உள்ள திருக்காட்டுப்பள்ளியை ஒட்டிய வாய்க்கால்களுக்கும் கூட இன்னும் வந்து சேரவில்லை.

கல்லணைக்குக் கீழேயுள்ள டெல்டா பகுதியில் காவிரி 38 கிளை நதிகளாகப் பிரிந்து 724 கி.மீ. தூரத்திற்கு ஓடிக் கடலில் கலக்கிறது. காவிரி மற்றும் அதன் கிளை நதிகளில் பிரிந்து செல்லும் வாய்க்கால்கள் 28,360 கி.மீ. தூரத்திற்கு நீரை எடுத்துச் செல்கின்றன.

காவிரியும் அதன் கிளை நதிகளும் மணல் கொள்ளை-யாலும் ஆக்கிரமிப்புகளாலும் பாழ்பட்டுக் கிடக்கின்றன. வாய்க்கால்களோ தூர் வாரப்படாமல் புதர் மண்டிக் கிடக்கின்றன. இதனால்தான் ஜூலை 19 அன்று மிகத் தடபுடலாக மேட்டூர் அணை பாசனத்திற்குத் திறக்கப்பட்டு ஏறத்தாழ ஒரு மாதம் நெருங்கும் தருவாயிலும் வெண்ணாறு வடிநிலக் கோட்டத்தில் உள்ள திருமருகல் ஊராட்சி ஒன்றியப் பகுதிக்கு நீர் வந்து சேரவில்லை. இதன் காரணமாக திருமருகல் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் 13,000 ஹெக்டேர் பரப்பளவில் நடைபெற வேண்டிய சம்பா சாகுபடி கேள்விக்குறியாகி நிற்கிறது.

நாகப்பட்டின மாவட்டத்தின் கடைமடைப் பகுதியான திருமருகல் ஊராட்சி ஒன்றியம் மட்டுமின்றி, தஞ்சை மாவட்டத்தின் கடைமடை பகுதியான பேராவூரணி, சேதுபாவாசத்திரம், திருச்சிற்றம்பலம் பகுதிகளிலும்; கல்லணைக் கால்வாய் செல்லும் ஒரத்தநாடு, பாப்பாநாடு, பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளிலும் உள்ள வாய்க்கால்களுக்கும் நீர் வந்து சேராததால், நட்ட நாற்றுகள் கருகிப் போகுமோ எனக் கலங்கி நிற்கிறார்கள் அப்பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள்.

கல்லணைக்கு அருகிலேயே காய்ந்துகிடக்கும் கட்டளைக் கால்வாயில் இறங்கி, காத்திருப்புப் போராட்டம் நடத்தும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர்.

காவிரியின் இயற்கையான வடிகாலான கொள்ளிடம் ஆறு 160 கி.மீ. தூரம் ஓடிக் கடலில் கலக்கிறது. சமவெளிப் பகுதியில் இத்துணை தொலைவு ஓடும் கொள்ளிடம் ஆற்று நீரைத் தடுத்துத் தேக்கி வைப்பதற்கு கீழணையைத் தவிர, வேறு தடுப்பணைகளோ, கதவணைகளோ கிடையாது. குறிப்பாக, கீழணையைத் தாண்டினால், 60 கி.மீ. தொலைவுக்கு காவிரியின் உபரி நீர் எவ்விதத் தடையும் இன்றி ஓடிக் கடலில் மட்டுமே கலக்கும்.

இதனால் 2006-இல் 42.85 டி.எம்.சி., 2007-இல் 64.41 டி.எம்.சி., 2008-இல் 78.15 டி.எம்.சி., 2009-இல் 65.42 டி.எம்.சி. உபரி நீர் எவ்விதப் பயனும் இன்றி வீணாகக் கடலில் கலந்திருக்கிறது. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் கடலில் கலப்பதற்கு 10 டி.எம்.சி. நீரை ஒதுக்கியுள்ளன. அபரிமிதமான வெள்ளப் பெருக்கு ஏற்படும் காலங்களில் கடலில் கலக்கும் உபரி நீர் இன்னுமொரு மடங்கு அதிகரிக்கலாம். ஆனால், அதனைவிடப் பல மடங்கு உபரி நீர் கடலில் கலப்பதைத் தமிழக அரசு எவ்விதக் குற்ற உணர்வுமின்றி அனுமதித்து வருவதை இப்புள்ளி விவரங்கள் அம்பலப்படுத்துகின்றன.

ஒரு டி.எம்.சி. தண்ணீரைக் கொண்டு 6,000 ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய முடியும் என்கிறார்கள் வேளாண் வல்லுநர்கள். காவிரியில் தமிழகத்தின் உரிமையை மறுத்துவரும் கர்நாடகத்தின் அடாவடித்தனத்தால் மட்டுமல்ல, இப்படி காவிரி நீரை வீணடிப்பதன் மூலமும் டெல்டா விவசாயிகள் மீது பெரும் பொருளாதார இழப்பு சுமத்தப்பட்டு வருகிறது.

***

காவிரி உபரி நீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுக்க புதிய நீர்த் தேக்கங்களை உருவாக்கக் கோரி 2014-ஆம் ஆண்டில் தொடரப்பட்ட பொது நல வழக்கில், காவிரியின் துணை ஆறுகளில் 117 கோடி ரூபாய் செலவில் 61 சிறு அணைகளைக் கட்டத் திட்டமிட்டிருப்பதாகத் தமிழக அரசு அறிவித்தது.

அதே ஆண்டில் அப்பொழுது முதல்வராக இருந்த ஜெயலலிதா, கடலூர் மாவட்டம் ஆதனூருக்கும் குமாரமங்கலத்திற்கும் இடையே கொள்ளிடத்தில் 400 கோடி ரூபாய் செலவில் 6 டி.எம்.சி. நீரைத் தேக்கும் அளவிற்குக் கதவணை கட்டப்படும் எனச் சட்டமன்றத்திலேயே அறிவித்தார்.

அ.தி.மு.க. அரசு அறிவித்த இத்திட்டங்கள் அனைத்தும் காகிதத்திலேயே புதைந்து போய்விட்டன என்பது ஒருபுறமிருக்க, “தமிழ்நாட்டில் காவிரிப் பாசன மாவட்டங்கள் சமவெளிப் பகுதிகள் என்பதால், அங்கு தடுப்பணைகளைக் கட்ட முடியாது” என்றொரு புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டிருக்கிறார், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

வாய்க்கால்களைப் பராமரிக்காமல் புறக்கணித்ததால், கரை உடைந்து வெள்ளக் காடான சீர்காழி – நாதல்படுகை.

தமிழகப் பொதுப்பணித்துறையில் தலைமைப் பொறியாளராக இருந்து ஓய்வுபெற்ற பொறியாளர்கள் வீரப்பனும், நடராஜனும் கல்லணைக்கும் கீழணைக்கும் இடைப்பட்ட கொள்ளிடம் வடிநிலப் பகுதியில் ஏழு தடுப்பணைகளைக் கட்டி 10.5 டி.எம்.சி. அளவிற்கு நீரைச் சேமிக்க முடியும் எனக் கூறுகின்றனர்.

கீழணைக்குக் கீழே மூன்று தடுப்பணைகள் கட்ட வாய்ப்பிருப்பதாக அனுபவம் வாய்ந்த விவசாயிகள் கூறுகின்றனர். இக்கூற்றுகளையெல்லாம் ஒதுக்கித் தள்ளும் “சேக்கிழார் புகழ் அறிவாளி” எடப்பாடியோ காவிரியில் தடுப்பணைகளே கட்ட முடியாது என்று உளறுகிறார்.

காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டிய முழுப் பெருமையும் தமக்கே உரியது என உரிமைப் பாராட்டிக் கொள்வதில் எவ்வித அசூயையும் கொள்ளாத அ.தி.மு.க. அரசு, கடந்த ஏழு ஆண்டுகளில் காவிரி நீர்ப்பாசன வழித்தடங்களை முறையாகப் பராமரிக்கவோ, அதனை நடுவர் மன்றம் அளித்திருந்த வழிகாட்டுதல்படி நவீனப்படுத்தவோ ஒரு துரும்பைக்கூட எடுத்துப் போடவில்லை என்பதே உண்மை.

காவிரி – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கான வரைவு பத்தாண்டுகளுக்கு முன்பே, தி.மு.க. ஆட்சிக் காலத்திலேயே உருவாக்கப்பட்டாலும், அத்திட்டம் இதுநாள் வரையிலும் காகித அறிக்கையாகவே இருந்து வருகிறது. 5,166 கோடி ரூபாய் பெறுமான இத்திட்டத்திற்கு மட்டுமின்றி, காவிரி நீர்ப்பாசன வழித்தடங்களை நவீனப்படுத்துவதற்கும் ஒரு நயா பைசாகூட ஒதுக்க முடியாது என மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தமிழக அரசிடம் தெரிவித்துவிட்டதாகச் சமீபத்தில் செய்திகள் வெளிவந்துள்ளன.

நிதி ஆதாரமில்லை என்ற நொண்டிச்சாக்கை இதற்குக் காரணமாகக் கூறியிருக்கிறது, மைய அரசு. (தி இந்து, 12.08.2018) ஆனால், எட்டு வழிச்சாலைக்கு பத்தாயிரம் கோடி ரூபாய் ஒரே சொடுக்கில் ஒதுக்கப்படுகிறது.

காவிரி நதிப் படுகையில் நடந்த மணற்கொள்ளையில் சேகர்ரெட்டி, படிக்காசு கிரிமினல் கும்பலும், அவர்களது எஜமானர்களான ஜெயா ஓ.பி.எஸ். ஆகியோரும் அடித்த பல்லாயிரம் கோடி ரூபாயோடு ஒப்பிடும்பொழுது, இத்திட்டத்திற்கான நிதி ஒன்றும் பெரிய தொகை கிடையாது. எனினும், மைய அரசு போலவே அ.தி.மு.க. அரசும் கடந்த ஏழு ஆண்டுகளில் இத்திட்டத்திற்காக எவ்வித நிதி ஒதுக்கீடும் செய்யாமல் புறக்கணித்திருக்கிறது.

ஆளுயர ஆழத்திற்கு வரைமுறையின்றிச் சூறையாடப்படும் ஆற்றுமணல். பசுமாட்டின் மடியை அறுத்தெறிவதற்கு இணையான கிரிமினல் குற்றம்.

இத்திட்டம் முழுமையாக நிறைவேறியிருந்தால், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களையும் உள்ளடக்கி ஏறத்தாழ 3.37 இலட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதியின் கீழ் கொண்டுவரப்பட்டிருக்கும் எனக் கூறப்படும் நிலையில், மைய, மாநில அரசுகள் இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்காமல் புறக்கணித்ததன் மூலம் தமிழக மக்களுக்குக் கொடூரமான அநீதியை இழைத்திருக்கின்றன.

காவிரி – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டம் மட்டுமின்றி, மேட்டூர் அணையிலிருந்து மணிமுத்தாறு, அய்யாறை இணைக்கும் 6,800 கோடி ரூபாய் பெறுமான திட்டம், கீழ் வெண்ணாறு ஆற்றுப் படுகையில் அடிக்கட்டுமான வசதிகளை உருவாக்கும் 1,560 கோடி ரூபாய் திட்டம், 14,000 கோடி ரூபாய் பெறுமான காவிரிப் பாசன வழித்தடங்களை நவீனப்படுத்தும் திட்டம், ஒகேனக்கல் – தொப்பூர் கால்வாய், மேட்டூர் கால்வாய், ஏற்காடு அடிவாரக் கால்வாய் பட்டணம் இணைப்புத் திட்டங்கள், வீராணம் ஏரியின் துணை ஏரிகளான வாலாஜா ஏரி, பெருமாள் ஏரியைத் தூர்வாரி சீரமைக்கும் திட்டம், கொள்ளிடத்து நீரை சுத்தமல்லி ஏரி, பொன்னேரிக்குக் கால்வாய் வழியாகக் கொண்டுபோகும் திட்டம் என இவையாவுமே காகிதத் திட்டங்களாகவே முடங்கிக் கிடக்கின்றன.

காவிரி மட்டுமின்றி, தமிழகத்தின் பிற நதி ஆதாரங்களை மேம்படுத்தும் திட்டங்களும் கிடப்பில்தான் உள்ளன. குறிப்பாக, அமராவதி அணையின் பின் பகுதியில் உள்ள கூட்டாறு எனுமிடத்தில் மேல் அமராவதி அணையைக் கட்டி 2 டி.எம்.சி. நீரைச் சேமிக்கும் திட்டம், மோயாற்றுடன் பல சிற்றாறுகளை இணைத்துப் பவானி சாகர் அணைக்குக் கூடுதல் நீரை எடுத்துவருவதோடு, மோயாற்று நீரை காவிரியின் கடைமடை பகுதி வரை கொண்டு வரும் திட்டம், பரம்பிக்குளம் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆனைமலையாறு அணை, நல்லாறு அணை ஆகிய இரண்டு அணைகளை கேரள அரசின் மூலம் நிறைவேற்றுவது, தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணைகள் கட்டுவது ஆகிய அனைத்துமே பல ஆண்டுகளாகப் பேசப்பட்டாலும், அவை அனைத்துமே காகிதத் திட்டங்களாகவே உள்ளன.

***

ரு பன்னாட்டு நிறுவனமோ, இந்தியத் தரகு முதலாளியோ தொழிற்சாலை தொடங்க அடிக்கல்லை நடுவதற்கு முன்னரே, அவர்களுக்குத் தேவையான நிலம், நீர், மின்சாரம், சாலை உள்ளிட்ட அனைத்து அடிப்படைத் தேவைகளையும் செய்து கொடுக்கத் தயங்காத ஆட்சியாளர்கள், தமிழக விவசாயிகளின் பாசனத் தேவைக்கும், தமிழக மக்களின் குடிநீர்த் தேவைக்கும் பயன் அளிக்கக்கூடிய திட்டங்களை மிக அலட்சியமாக ஒதுக்கித் தள்ளுகிறார்கள்.

அதிவிரைவுச் சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், புல்லட் ரயில்கள் என்பவையெல்லாம் தொழிற்துறை வளர்ச்சிக்கு அவசியமானவை என நமக்குப் பாடமெடுத்துவரும் ஆட்சியாளர்கள், உணவுப் பாதுகாப்புக்கும் விவசாயப் பொருள் உற்பத்திக்கும் அவசியமான நீர்ப் பாசனத் திட்டங்களை அடிக்கட்டுமானத் திட்டங்களாக ஏற்க மறுக்கிறார்கள்.

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகக் காகிதத் திட்டமாகவே முடங்கிக் கிடக்கிறது, காவிரி – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டம்.

எட்டு வழிச் சாலைத் திட்டத்திற்கு ஒதுக்கியிருக்கும் தொகையில் ஒரு சதவீதத்திற்கும் குறைவான தொகையை ஒதுக்கியிருந்தாலே கொள்ளிடத்தில் ஏழிலிருந்து பத்து தடுப்பணைகளைக் கட்டியிருக்க முடியும். குடிமராமத்துப் பணிகளை விவசாயிகளின் கண்காணிப்பிலும் கட்டுப்பாட்டிலும் விட்டிருந்தால், இந்நேரம் டெல்டா மாவட்டங்களிலுள்ள குளங்களும், ஏரிகளும் நிரம்பியிருக்கும் என்பதோடு, அ.தி.மு.க. அட்டைகள் அடித்த 4,735 கோடி ரூபாய் கொள்ளையும் (தமிழ் இந்து, 19.08.2018) தடுக்கப்பட்டிருக்கும்.

காவிரியிலும் கொள்ளிடத்திலும் தடுப்பணைகள் கட்ட முடியாது என எடப்பாடி வாதிடுவதற்குப் பின்னுள்ள காரணம் மணற் கொள்ளை மட்டுமல்ல. டெல்டா மாவட்டங்களைப் பெட்ரோலிய மண்டலமாக மாற்ற வேண்டும் என்ற சதியும் அதனுள்ளே மறைந்திருக்கிறது.

எடுத்துக்காட்டாக, திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட உக்கடம் – கமலாபுரம் பகுதிக்கு வரும் பாசனக் கால்வாய்களில் நீர் வரவில்லை. இங்குதான் பல கச்சா எண்ணெய் எடுப்புக் கிணறுகளை ஓ.என்.ஜி.சி. இயக்கி வருகிறது. ஏற்கனவே எண்ணெய் எடுப்பால் இப்பகுதியில் நிலத்தடி நீர் பெருமளவிற்குக் கசடாகிக் குடிக்கவோ, பாய்ச்சவோ பயன்படுத்த முடியாத நிலைக்கு வந்துவிட்டது. இப்போது சுத்தமாக நீரை வரவிடாமல் செய்வதன் மூலம் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஏற்றுக்கொள்ளச் செய்யும் ‘‘மன நிலையை” உருவாக்கி வருகிறார்கள்.

இது போன்று நாகை உள்ளிட்ட கடைமடை பகுதிகளில் 47 இடங்களில் கச்சா எண்ணெய் எடுப்பிற்குத் திட்டமிடப்பட்டுள்ளதால், இப்பகுதிகளுக்குத் தண்ணீர் வராமல் பார்த்துக்கொள்ள தூர் வாரப்படவில்லை என்றும், கால்வாயின் மதகுகள் சீர் செய்யப்படாமல் துருப்பிடித்துக் கிடப்பதாகவும் குற்றஞ்சுமத்துகின்றனர், அப்பகுதி விவசாயிகள்.

இன்று காவிரியில் நாம் காணும் காட்சி கிரிமினல் குற்றத்திற்கு இணையானது. ஒருபுறம், காவிரி வெள்ளம் கடலில் கலந்து கொண்டிருக்க, இன்னொருபுறத்திலோ காவிரியிலும், வெண்ணாற்றிலும், கல்லணைக் கால்வாயிலும் பாசனத்திற்காகத் திறந்து விடப்பட்ட நீர் கடைமடை பகுதிக்கு மட்டுமல்ல, தலைமடை பகுதியில் உள்ள திருக்காட்டுப் பள்ளியை ஒட்டிய வாய்க்கால்களுக்கும்கூட இன்னும் வந்து சேரவில்லை.

இந்தச் சதிகளெல்லாம் ஒருபுறமிக்க, ‘‘இந்திய விவசாயிகள் போண்டியாகி அழியத்தான் வேண்டும். அதைத் தடுக்க முடியாது” என்பதைக் கொள்கைப் பிரகடனமாகவே அறிவிக்கும் தனியார்மய ஆதரவாளர்கள், இதன் வழியாகத்தான் பொருளாதார வளர்ச்சியைச் சாதிக்க முடியும் என வாதிடுகிறார்கள் (பார்க்க: புதிய ஜனநாயகம், ஜூலை 2017). கொஞ்சம் விவசாயிகளை மட்டும் வைத்துக்கொண்டு, மற்றவர்களையெல்லாம், விவசாயத்தை விட்டு வெளியேற்றி, அவர்களைத் தொழிற்துறை முதலாளிகளின் இலாபத்திற்காக, அடிமாட்டுக் கூலிக்கு வேலை செய்யும் கொத்தடிமைகளாக மாற்ற வேண்டும் என்பதுதான் தனியார்மயம் – தாராளமயத்தின் நோக்கம்.

இந்த நோக்கத்தைப் படிப்படியாக ஈடேற்றிக் கொள்ளும் நோக்கில்தான் விவசாய மானியங்களை வெட்டுகிறார்கள். விவசாய விளைபொருட்களுக்குச் சந்தையில் உரிய விலை கிடைப்பதை உத்தரவாதப்படுத்த மறுக்கிறார்கள். வங்கிக் கடன் உள்ளிட்ட சலுகைகளை அளிக்க மறுக்கிறார்கள். வளர்ச்சித் திட்டங்கள் என்ற போர்வையில் விவசாய நிலங்களையும் அபகரித்துக் கொள்கிறார்கள்.

இந்தக் கொள்கை தமிழ்நாட்டில் மணல் கொள்ளை, புதிய பாசனத் திட்டங்களைச் செயல்படுத்த மறுப்பது, ஏற்கெனவே இருந்துவரும் நீர்நிலை ஆதாரங்களைப் புறக்கணித்து அழிப்பது என்ற பேரழிவையும் ஏந்தி வருகிறது.

உழவர்களின் எதிரிகள்தான் அதிகாரத்தில் இருக்கிறார்கள் என்பதைத் தமிழக விவசாயிகள் புரிந்துகொண்டு, அதற்கு ஏற்ற வகையில் போராடும்பொழுது மட்டுமே, காவிரியை மட்டுமல்ல, விவசாயத்தையும் விவசாயிகளையும் காப்பாற்ற முடியும்.

– குப்பன்

புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2018

மின்னூல்:
புதிய ஜனநாயகம்

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

பிரக்சிட் – இடியாப்பச் சிக்கலில் இங்கிலாந்து !

ஐரோப்பாவிலிருந்து விலகல் : ஆப்பசைத்த பிரிட்டன்

பிரிட்டன் மற்றும் வட அயர்லாந்து அடங்கிய ஐக்கிய அரசு (யுனைட்டட் கிங்டம்) ஐரோப்பிய ஒன்றியத்துடன் 1975-ம் ஆண்டு இணைந்தது. ஐரோப்பிய ஒன்றியம் என்பது 28 ஐரோப்பிய நாடுகள் ஒன்றாக சேர்ந்து தமக்கிடையே பொருட்கள், மனிதர்கள் பரிமாற்றத்தில் கட்டுப்பாடுகளை நீக்கிக் கொண்ட ஒப்பந்தமாகும்.

இந்த நாடுகளுக்கிடையே தடையற்ற வர்த்தகம், ஒரு நாட்டு குடியுரிமை வைத்திருப்பவர் இன்னொரு நாட்டுக்குச் சென்று வேலை செய்வதில் சுதந்திரம் என்று ஒற்றை பொருளாதார பிரதேசமாக அவை செயல்பட்டு வருகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் உருவாக்கம் முதலாளித்துவத்தின் உற்பத்தி, சந்தை, மூலதனம் ஆகியவற்றை உலக அளவில் சமூக மயமாக்கும் போக்கின் ஒரு வெளிப்பாடு.

ஐரோப்பிய ஒன்றியம்
ஐரோப்பிய ஒன்றியம் – நீல சாயம் பூசப்பட்ட பகுதிகள் (இடது பக்கம் உள்ள பகுதியளவு நீலம் பூசப்பட்ட தீவு அயர்லாந்து – அதன் அருகில் இருக்கும் நீலம் பூசப்படாத பெரிய தீவு பிரிட்டன்)

ஆனால், அந்த சந்தையில் இணைந்த பிரிட்டிஷ் முதலாளிகளுக்கிடையேயான வேறுபாடுகள், அமெரிக்காவுடன் ஐக்கிய அரசுக்கு இருக்கும் நெருக்கம் இவற்றின் காரணமாகவும், முதலாளித்துவ நெருக்கடியால் தொழிலாளி வர்க்கம் வேலை இழப்புகளை எதிர்கொள்வதன் காரணமாகவும் ஐக்கிய அரசு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

அது வெளிநாட்டவர் மீதான வெறுப்பு அரசியலாகவும் தேச பெருமிதமாகவும் பிரச்சாரம் செய்யப்பட்டது. அதன் மீது 2016-ம் ஆண்டு ஜூன் 26 அன்று நாடு முழுவதும் நடந்த கருத்துக் கணிப்பில் 51.9% பேர் ஐக்கிய அரசு வெளியேறுவதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

ஆனால், ஐக்கிய அரசின் ஒரு பகுதியாக இருக்கும், தனியாக பிரிந்து போகும் இயக்கம் தீவிரமாக இருக்கும் ஸ்காட்லாந்தும், வட அயர்லாந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர வேண்டும் என்று மேலே சொன்ன கருத்துக் கணிப்பில் வாக்களித்திருந்தன. ஸ்காட்லாந்தில் 62% பேரும், வட அயர்லாந்தில் 55.8% பேரும் வெளியேறுவதற்கு எதிராக வாக்களித்திருந்தனர்.

எனவே, ஐக்கிய அரசு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதில் பல இடியாப்பச் சிக்கல்கள் உள்ளன.

ஐக்கிய அரசு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறினால், நாங்கள் பிரிந்து சென்று ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்து கொள்வதற்கான கருத்துக் கணிப்பை நடத்த கோருவோம் என்று ஸ்காட்லாந்து தேசியக் கட்சி அறிவித்திருக்கிறது.

ஏற்கனவே 2014-ல் நடந்த அத்தகைய கருத்துக் கணிப்பில் 55% பேர் சுதந்திரத்துக்கு எதிராக வாக்களித்திருந்தனர். அடுத்த கருத்துக் கணிப்பை 2018 இறுதியில் அல்லது 2019 தொடக்கத்தில் நடத்த வேண்டும் என்று அக்கட்சி கோருகிறது.

பிரிட்டன் மற்றும் வட அயர்லாந்து அடங்கிய ஐக்கிய அரசு அயர்லாந்து தீவின் வட பகுதியை தன்னுடன் இணைத்து வைத்திருக்கிறது. அதை எதிர்த்த போராட்டங்களைத் தொடர்ந்து வட அயர்லாந்தை தன்னுடன் வைத்திருப்பதற்கு 1998-ல் ஒரு ஒப்பந்தத்தை பிரிட்டன் போட்டிருக்கிறது.

நிக்கோல் ஸ்டுர்ஜியன்
பிரிந்து போக விரும்பும் ஸ்காட்லாந்து தேசிய கட்சியின் நிக்கோல் ஸ்டுர்ஜியன்

ஐக்கிய அரசு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறினால், வட அயர்லாந்தின் நிலை என்ன? அயர்லாந்து குடியரசுடன் அதன் உறவின் நிலை என்ன?

அயர்லாந்து தீவில் சுதந்திர வர்த்தகம் தடைபடுவது வட அயர்லாந்து பிரிட்டனுடன் இணைந்த 1998 ஒப்பந்தத்தை மீறுவதாக இருக்கும். அப்படி வட அயர்லாந்துக்கும் அயர்லாந்து குடியரசுக்கும் இடையே சுதந்திர வர்த்தகத்தை அனுமதித்தால், வட அயர்லாந்துக்கும் பிரிட்டனுக்கும் இடையே ஒரு சுங்க எல்லை உருவாகி, வட அயர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்திலேயே தொடர்ந்து, அயர்லாந்து குடியரசுடன் நெருக்கமாகி ஒன்றுபடும் சூழல் உருவாகும்.

தலை சுற்றுகிறதா? இதை இந்திய காஷ்மீருக்கும், பாகிஸ்தானிய காஷ்மீருக்கும் இடையே சுங்க ஐக்கியம் ஏற்படுத்தி, அதன் விளைவாக காஷ்மீருக்கும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் இடையே ஒரு எல்லைக் கோடு போடப்படுவது போன்றது என்று குத்து மதிப்பாக புரிந்து கொள்ளலாம்.

இந்தப் பிரச்சனை குறித்து பிரிட்டனில் விவாதம் நடந்து வருகிறது. இதைப் பற்றி ரிக் என்பவர் மார்ச் 1, 2018 அன்று வெளியிட்டிருக்கும் கட்டுரையின் கூடுதல் விளக்கங்களுடனான மொழிபெயர்ப்பு.

*****

யர்லாந்துக்கும் பிரிட்டனுக்கும் இடையே ஒரு கடல் எல்லையை உருவாக்குவது ஒரு முட்டாள்தனமான திட்டம், ஆனால், கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை (ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறவும் வேண்டும், அதே நேரம் வர்த்தக ஆதாயங்கள் தொடரவும் வேண்டும்) என்ற சவடாலும் முட்டாள்தனமானதுதான்.

“ஐரோப்பிய ஒன்றியம் வட அயர்லாந்தை பிரிட்டனிலிருந்து பிரித்து தன்னுடன் இணைத்துக் கொள்ள விரும்புகிறது.”

ஐக்கிய அரசு (பிரிட்டன்+வட அயர்லாந்து) ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது தொடர்பாக ஐக்கிய அரசுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே போடப்பட வேண்டிய ஒப்பந்தத்தை ஐரோப்பிய ஆணையம் முழு விபரங்களுடன் வெளியிட்டதைத் தொடர்ந்து பிரிட்டன் வெளியேறுவதை (பிரெக்சிட்) ஆதரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அறிவு ஜீவிகளும் போட்ட கூப்பாடு இதுதான்.

இவர்களை உண்மையில் கடுப்பேற்றியது அயர்லாந்து / வடஅயர்லாந்து தொடர்பாக அந்த வரைவு ஒப்பந்தத்தின் பக்கம் 98-ல் தரப்பட்டுள்ள விதிமுறைகள்தான்.

அயர்லாந்து தீவின் இரு பிரிவுகளுக்கிடையே (பிரிட்டனின் கட்டுப்பாட்டில் இருக்கும் வட அயர்லாந்துக்கும், தனி நாடான அயர்லாந்து குடியரசுக்கும்) இடையே வலுவான ஒரு எல்லையை உருவாக்குவதை தவிர்க்க வேறு எந்த வழியும் கிடைக்கா விட்டால் வட அயர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்துடன் சுங்க ஐக்கியத்தை தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

இதன் விளைவு என்னவாக இருக்கும்? அயர்லாந்து தீவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே கடலில் ஒரு சுங்க எல்லையை உருவாக்கினால், அது பிரிட்டனும் வட அயர்லாந்தும் அடங்கிய ஐக்கிய அரசை (united kingdom) இரண்டாக பிளந்து விடும்.

“எந்த ஒரு ஐக்கிய அரசு பிரதமரும் இதை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை” என்று பிரிட்டன் பிரதமர் தெரேசா மே சொல்கிறார். பிரிட்டிஷ் நாடாளுமன்றம் ஒருபோதும் இதை நிறைவேற்றப் போவதில்லை என்று சொல்லப்படுவதும் உண்மைதான்.

பிரிட்டன் பிரதமர் தெரேசா மே
“எந்த ஒரு ஐக்கிய அரசு பிரதமரும் இதை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை” என்று பிரிட்டன் பிரதமர் தெரேசா மே சொல்கிறார்.

அரசியல்வாதிகள் ஏற்றுக் கொள்வது, ஏற்க மறுப்பது என்பதைத் தாண்டி அயர்லாந்து கடலில் பிரிட்டனுடன் ஒரு சுங்க எல்லையை உருவாக்குவது தீர்க்கப் போகும் பிரச்சனைகளை விட அதிகமான பிரச்சனைகளை உருவாக்கும் ஒரு முட்டாள்தனமான திட்டம்தான் என்பதில் சந்தேகமில்லை.

வட அயர்லாந்தில் பிரிட்டனுக்கு விசுவாசமான தரப்பினர் (உல்ஸ்டர் புராட்டஸ்டன்ட் பிரிவினர்), வட அயர்லாந்தை அயர்லாந்துடன் இணைக்க விரும்பும் அயர்லாந்து குடியரசுவாதிகளின் தாக்குதல்கள் போன்றவை நிகழக் கூடிய சாத்தியங்களை ஒதுக்கி விட்டாலும் அத்தகைய ஒரு எல்லை நேரடியான பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தும்.

வட அயர்லாந்தின் அன்னிய வர்த்தகத்தில் முதலிடம் பிடிக்கும் வெளிநாடு அயர்லாந்து குடியரசாக இருந்தாலும், அதன் பெரும்பான்மை வர்த்தகம் பிரிட்டனுடன் நடைபெறுகிறது. எனவே, வட அயர்லாந்துக்கும் கிரேட் பிரிட்டனுக்கும் இடையே ஒரு சுங்க எல்லையை உருவாக்குவது, அதற்கும் அயர்லாந்து குடியரசுக்கும் இடையே ஒரு சுங்க எல்லையை உருவாக்குவதை விட அதிக பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தும்.

இது ஒருபுறம் இருக்க, அயர்லாந்து குடியரசு பிரெக்சிட் தொடர்பாக எதிர்கொள்ளும் தலைவலிகளான ஐரோப்பிய ஒன்றியத்தின் பிற பகுதிகளுக்கு தனது ஏற்றுமதி பொருட்களை அனுப்புவதற்கான பாலமாக ஐக்கிய அரசை பயன்படுத்துவதை இழப்பது போன்ற பிரச்சனைகளையும் அது தீர்த்து விடப் போவதில்லை.

ஐரோப்பிய ஆணையத்துக்கு இவை அனைத்தும் தெரியும். அத்தகைய ஒரு நிலைமை (அயர்லாந்து கடலில் சுங்க எல்லை உருவாக்கப்படுவது) பிரிட்டனில் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்றும் அதற்குத் தெரியும். இத்தகைய ஒரு பரிந்துரை வலுவான எதிர்ப்பைக் கிளப்பும் என்பதும் தெரியும்.

இந்நிலையில் அதன் பரிந்துரை பிரிட்டிஷ் உணர்வுகளை மதிக்காத ஒரு மிரட்டலாக இருக்கலாம். அல்லது ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதன் விளைவுகளை இப்போதே எதிர்கொள்ளும்படி பிரிட்டனை கட்டாயப்படுத்துவதற்காக இருக்கலாம். ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர், இதை “அதிர்ச்சி வைத்தியம்” என்று அழைக்கிறார்.

ஐரோப்பிய ஒன்றியம் முன் வைத்துள்ள வரைவு ஒப்பந்தத்தின் 49-வது பத்தி இவ்வாறு சொல்கிறது:

போரிஸ் ஜான்சன்
“அயர்லாந்து எல்லை பிரச்சனை எல்லாம் பெரிய சிக்கல் இல்லை” என்று புறந்தள்ளிய போரிஸ் ஜான்சன், பிரதமர் தெரசா மே உடன்.

“[அயர்லாந்தின்] வடக்கு-தெற்கு ஒத்துழைப்பை உறுதி செய்வதற்கும் இரண்டுக்கும் இடையே ஒரு சுங்க எல்லையை தவிர்ப்பதற்கான உத்தரவாதத்தை அளிக்கவும் ஐக்கிய அரசு (UK) உறுதி அளிக்கிறது. எதிர்காலத்தில் போடப்படும் வேறு எந்த ஒப்பந்தங்களும், மற்ற அனைத்தையும் விட முக்கியமான இந்த நோக்கத்தை உறுதி செய்ய வேண்டும்.

இந்த நோக்கத்தை ஐரோப்பிய ஒன்றியத்துக்கும், ஐக்கிய அரசுக்கும் இடையேயான ஒட்டு மொத்த உறவு சட்டகத்துக்குள் நிறைவேற்றிக் கொள்வதாக ஐக்கிய அரசு உறுதி அளிக்கிறது. ஒருவேளை இது சாத்தியமில்லாமல் போனால், அயர்லாந்து தீவின் தனிச்சிறப்பான நிலைமைகளை உறுதி செய்வதற்கான தீர்வுகளை ஐக்கிய அரசு முன் வைக்கும்.

பரஸ்பரம் ஒப்புதல் உடைய தீர்வுகள் எதுவும் ஏற்படா விட்டால் இப்போதும் எதிர்காலத்திலும் உள்நாட்டு சந்தை, சுங்க ஒன்றியம் தொடர்பான வடக்கு-தெற்கு (அயர்லாந்து) ஒத்துழைப்பு, ஒட்டு மொத்த தீவின் பொருளாதாரம், 1998 ஒப்பந்தத்தை பாதுகாப்பது போன்ற விதிகளை முழுமையாக பராமரிப்பதை ஐக்கிய அரசு உறுதி செய்யும்.”

இதன் பொருள் என்னவென்றால் அயர்லாந்து குடியரசுடனான எல்லை சோதனைகளை தவிர்ப்பதற்கு ஏதாவது ஒரு வடிவிலான வர்த்தக ஒப்பந்தம் அல்லது தொழில்நுட்பத் தீர்வை பிரிட்டன் முன் வைக்கவில்லை என்றால், வடஅயர்லாந்துக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே ஒற்றைச் சந்தை, சுங்க ஒன்றியம் போன்றவற்றை முழுமையாக பராமரிப்பதற்கு ஐக்கிய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

இந்த அறிக்கை வெளியான ஒரு சில நாட்களுக்குள்ளாகவே, இது ஒரு ஒப்பந்தம் இல்லை, வரைவு அறிக்கை மட்டுமே என்று டேவிட் டேவிஸ் என்ற ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார். ஆனால், அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு போவதற்கு வகை செய்யும்படி ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டு விட்டது என்று நினைத்திருந்த பிற ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இதைக் கேட்டு கடுப்பாயின.

எல்லாவற்றையும் எப்படியாவது சரி செய்து விடலாம் என்று சப்பைக் கட்டு கட்டிக் கொண்டிருந்தாலும், விளக்கமான எந்த ஒரு தீர்வையும் முன் வைக்க பிரிட்டிஷ் அரசு தவறியிருக்கிறது. இவ்வாறு உருப்படியான முன்வைப்பு எதுவும் இல்லாத நிலையில்தான் வட அயர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்துடன் சுங்க ஒன்றியத்தை பராமரிக்கும் திட்டம் முன்வைக்கப்படுகிறது.

இந்த வட அயர்லாந்து எல்லைப் பிரச்சனைக்கு எளிதான தீர்வு எதுவும் இல்லை என்று பிரிட்டிஷ் அமைச்சர்கள் நீண்ட நாட்களாகவே உணர்ந்திருக்கிறார்கள். முன்னாள் லண்டன் மேயராகவும் 2016 முதல் 2018 வரையிலும் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் இருந்த போரிஸ் ஜான்சன் உண்மையிலேயே இந்த சிக்கல் லண்டன் மாநகரின் பகுதிகளுக்கும், காம்டன், வெஸ்ட் மினிஸ்டர் போன்ற பகுதிகளுக்கும் இடையே போக்குவரத்து நெரிசலை சமாளிப்பது போன்ற சிக்கல்தான் நினைத்திருந்தால் ஐரோப்பிய ஒன்றியம் முன் வைத்த வேறு வழிகள் அனைத்தும் தோல்வி அடைந்து விட்டால் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றிய முன் வைப்பு குறித்து சிறிதளவும் கவலைப்பட்டிருக்க மாட்டார். ஏனென்றால், இது தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் எளிதாக தீர்க்கப்படக் கூடியது, எனவே இந்த நடைமுறைகள் பற்றி யோசிக்க வேண்டியதில்லை என்று அவர் சொல்லியிருக்கிறார்.

அப்படி இது ஒரு தொழில்நுட்ப பிரச்சனைதான் என்று அவர் உண்மையிலேயே நம்பியிருந்தால் எப்படி எதிர்வினை ஆற்றியிருப்பார்? “எதற்கு இந்த தேவையில்லாத பரிந்துரை அறிக்கை. அப்படிப்பட்ட நிலைமை ஏற்பட்டு விடப் போவதில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. அயர்லாந்து எல்லையில் சுங்க சோதனைச் சாவடிகளை தவிர்ப்பதற்கு தேவையான தொழில்நுட்ப தீர்வு நம்மிடம் உள்ளது” என்று மட்டும் சொல்லியிருப்பார். ஆனால் இதற்கு மாறாக, அவர் கோபப்பட்டு, பிதற்ற ஆரம்பித்தார்.

அவரைப் போல எல்லை பிரச்சனையை தொழில்நுட்பம் மூலம் தீர்த்து வைத்து விடலாம் என்று தொடர்ந்து உறுதியளித்து வந்த எல்லோருமே (அவர்களில் பலர் அது தொடர்பாக எதுவும் பேசாத ஐரோப்பிய ஒன்றிய அறிக்கையை மேற்கோள் காட்டினார்கள்) இப்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த முன்வைப்பு மீது கடுப்பை உமிழ்கிறார்கள். இதுதான் ஒட்டு மொத்த பிரச்சனையின் சாரம் என்று நான் நினைக்கிறேன்

பிரிட்டனின் வெளியேற்றம் ஏற்படுத்தவிருக்கும் தவிர்க்க இயலாத இழப்புகள் பற்றி அரசு இதுவரை தெளிவான அறிக்கை எதையும் வெளியிடவில்லை. கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்ற நிலைப்பாட்டிலேயே அது நிற்கிறது. பொருட்களும், மக்களும் கட்டுப்பாடுகள் இல்லாமல் நகர்வதை முடிவு கட்டி, தனக்கு ஏற்ற வகையில் வர்த்தக ஒப்பந்தங்களை போட்டுக் கொள்ளும் அதே நேரத்தில் அயர்லாந்தில் வலுவான எல்லைக் கட்டுப்பாடுகளை தவிர்க்க முடியும், வர்த்தக பிரச்சனைகள் காரணமாக பொருளாதார இழப்புகள் எதுவும் ஏற்படாமல் தடுக்கமுடியும் என்று கருதுகிறது.

ஆனால், வடஅயர்லாந்து எல்லை பிரச்சனைக்கு எந்த ஒரு மாய தீர்வும் இல்லை. ஐக்கிய அரசு தனது சொந்த வர்த்தக ஒப்பந்தங்களின் கீழ் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்ய ஆரம்பித்த உடனேயே அயர்லாந்து குடியரசுடன் ஒரு சுங்க எல்லை ஏற்படுத்தப்பட வேண்டும்.

எடுக்க வேண்டிய முடிவு நேரானது. ஐக்கிய அரசு பிற நாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றியம் போட்டிருக்கும் ஒப்பந்தங்களை ரத்து செய்து விட்டு தனியாக வர்த்தக ஒப்பந்தங்களை போட வேண்டுமானால் அயர்லாந்துடன் இப்போதைய எல்லை ஏற்பாடுகளை தொடர முடியாது.

இந்த இரண்டில் ஒன்றுதான் சாத்தியம். வலுவான எல்லை என்று முடிவு செய்தால், ஐக்கிய அரசுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்பதே ஐரோப்பிய ஒன்றியத்தின் இப்போதைய நிலைப்பாடு. இதை எவ்வளவு உறுதியாக கடைப்பிடிக்கும் என்பது யாராலும் சொல்ல முடியாது, ஆனால் வர்த்தக ஒப்பந்தம் எதுவும் ஏற்படாமலேயே ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து யு.கே வெளியேற வேண்டியதன் அபாயத்தை இந்த நிலைப்பாடு அதிகரித்துள்ளது.

அதாவது, இதில் ஒரு வெளிப்படையான லாப நஷ்டக் கணக்கு உள்ளது. பிரெக்சிட் ஆதரவாளர்கள் வாக்களித்த ஒரு சில பலன்கள் மட்டுமே நமக்குக் கிடைக்கும் அனைத்தும் கிடைக்கப் போவதில்லை.

நமக்கு எது முக்கியம், அதை பாதுகாப்பதற்கு எதை விட்டுக் கொடுக்க தயாராக இருக்கிறோம் என்று நாம் முடிவெடுக்க வேண்டியிருக்கிறது. ஆனால், இதுவரையில் இவை எதைப் பற்றியும் நாம் முறையான அரசியல் விவாதம் எதையும் நடத்தவில்லை. நாம் எல்லாவற்றையும் வைத்துக் கொள்ளலாம் என்று அரசு சாதித்து வருகிறது. லேபர் கட்சி இதுவரையில் அமைதியாக உள்ளது. இப்போது, வடஅயர்லாந்து தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்வைப்பு, திட்டமிட்ட தூண்டுதலாக இருக்கிறதோ இல்லையோ, அது விஷயத்தை விவாதத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது.

“மலம் எவ்வளவு நாறுகிறது என்பதை சிலருக்கு புரிய வைக்க வேண்டுமானால், அவர்களது தலையை அதற்குள் முக்குவதுதான் ஒரே வழியாக இருக்கிறது” என்று முன்பு என்னுடன் பணியாற்றிய ஒரு நண்பர் சொல்வார். அதை இங்கு நினைவுபடுத்திக் கொள்ளலாம்.

– ரிக்
ஆங்கில மூலம் :
An Irish Sea border is a silly idea but so is the cake-and-eat-it bluster
நன்றி :
 new-democrats இணையதளத்தில் வெளியான கட்டுரை.

பா.ஜ.க. மோடி அரசின் பாசிச அடக்குமுறைகள் | மக்கள் அதிகாரம் கண்டனம்

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சியடைந்துள்ளது. 5-ஆம் வகுப்பு தகுதி உடைய கடைநிலை ஊழியர் பணிக்கு, பட்டப்படிப்பு பி.எச்.டி. படித்தவர்கள் அலைமோதுகிறார்கள். 100 காலி பணியிடங்களுக்கு ஒரு லட்சம் பேர் விண்ணப்பிக்கும் கொடுமை நடக்கிறது. பா.ஜ.க. மோடி அரசு கொடுத்த வாக்குறுதிகள், அனைத்தும் படுதோல்வி அடைந்துள்ளது. ஜி.எஸ்.டி., பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாடு முழுவதும் அழிந்த சிறு தொழில்கள், வேலை இழந்தவர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய விளைவுகள் கொடூரமானது. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிகாரத்தை இழந்து விடுவோம் என்ற அச்சத்தில் இருக்கிறது பா.ஜ.க. மோடி அரசு. தனது தோல்விகளிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பவும், எதிர்ப்பவர்களை அச்சத்தில் உறையவைக்கவும் எட்டு மாநிலங்களில் நடத்தப்பட்டவைதான் அறிவுத்துறையினர் மீதான இந்த ரெய்டு, கைது நடவடிக்கை.

தலித் மக்கள், பழங்குடியின ஆதிவாசி மக்கள் ஆகியோரின் உரிமைகளுக்காகவும், மனித உரிமைகளுக்காகவும் போராடும் இடதுசாரி செயல்பாட்டாளர்களின் மீது அடக்குமுறையை ஏவும் விதமாக அவர்களது வீடுகளை சோதனை செய்வது மற்றும் அவர்களை ஆள்தூக்கி ஊபா சட்டங்களின் கீழ் கைது செய்வது என அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை அமல்படுத்தத் தொடங்கிவிட்டது மோடி அரசு. சனாதன் சன்தன் போன்ற இந்துத்வா பயங்கரவாத மதவெறி அமைப்புகளின் நடவடிக்கைகள் துப்பாக்கி வெடிகுண்டுகளுடன், அம்பலபட்டுவரும் நிலையில், அவற்றிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப பீமாகோரேகான் கலவரம், மோடியைக் கொல்ல சதி, நகர்ப்புற நக்சல் என ஒரு அப்பட்டமான பொய் பிரச்சாரத்தை பரப்பி வருகிறது பா.ஜ.க. மோடி அரசு.

இந்தியாவின் புகழ்பெற்ற சமூக செயல்பாட்டாளர்களான ஆந்திராவின் புரட்சிகர எழுத்தாளர், கவிஞர், வரவர ராவ், தொழிலாளர்களுக்காக பல ஆண்டுகளாக போராடிவரும் வழக்கறிஞர் சுதா பரத்வாஜ் , பேராசிரியர் வெர்ணன் கன்சால்வேஸ் வழக்கறிஞர் அருண் ஃபெரிரா பத்திரிக்கையாளர் கௌதம் நவ்லகா ஆகியோரை மகாராஷ்டிரா போலீசார் ஊபா சட்டத்தில் கைது செய்தது. புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர் ரொமீலா தாப்பர் மூத்த வழக்கறிஞர்கள் அவசரமாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ததாலும், நாடு முழுவதும் எதிர்ப்புகள் அதிகரித்ததாலும் தற்போது அவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் மகாராஷ்டிரா போலீசார் அவர்களை மீண்டும் கைது செய்து நீண்ட நாட்கள் சிறையில் அடைக்க தொடர்ந்து முயன்று வருகிறது.

இதே காரணத்திற்காக பேராசிரியர்கள் சத்யநாராயணா , ஆனந்த் தெல்தும்டே பாதிரியார் ஸ்டாண்சாமி பத்திரிக்கையாளர் குர்மலாக் (வரவரராவ் மருமகன்) கிரந்தி தெகுலா ஆகியோர் வீடுகளில் சோதனை நடத்தியுள்ளனர். ரெய்டு நடத்தப்பட்ட வீட்டில் “ஏன் இவ்வளவு மார்க்ஸ், மாவோ புத்தகங்கள்? நீங்கள் பிராமணப்பெண் ஏன் பொட்டு வைக்கவில்லை?” என கவிஞர் வரவரராவ் மகளிடம் கேட்பது, போலீசார் அதிகார எல்லையைத் தாண்டி காவிப் பாசிசப் படையாக மாறி செயல்படுகிறது என்பதைக் காட்டுகிறது.

பீமாகோரேகான் கலவரத்திற்கு காரணமான முக்கியக் குற்றவாளிகளான இந்துத்வா பயங்கரவாதிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. நாடு முழுவதும் வலைபின்னலை வைத்து கொண்டு கவுரி லங்கேஷ், தபோல்கர் போன்ற அறிவுஜீவிகளை சுட்டுக் கொலை செய்யும் சனாதன் சன்தன் அமைப்பினர் சமீபத்தில் வெடிகுண்டு ஆயுதங்களுடன் மகாராஷ்டிராவில் அகப்பட்டு கொண்டனர். இத்தகைய அமைப்புகளை தடை செய்யவோ, அவர்களை தீவிரவாதிகளாக கருதி ஊபா சட்டத்தில் கைது செய்யவோ பா.ஜ.க. மோடி அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக, அவற்றிலிருந்து திசை திருப்பவும், எதிர்ப்புக் குரலை நசுக்கவும் புகழ் பெற்ற எழுத்தாளர்கள் செயல்பாட்டாளர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கிறது.

கடந்த பிப்ரவரி மாதம் பேராசிரியர், வழக்கறிஞர், ஆராய்ச்சி மாணவர் என 5 பிரபல மனித உரிமைப் போராளிகளை கொடிய ஊபா சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்துள்ளது. அதை நியாயப்படுத்த பிரதமர் மோடியைக் கொல்ல கம்ப்யூட்டரில் கடிதம் எழுதி வைத்திருந்தார் என்பதை யாரும் நம்பமுடியாத செய்தியை ஊடகங்கள் வாயிலாக ஊதிப்பெருக்கியது. அதன் தொடர்ச்சிதான் தற்போதைய கைது அச்சுறுத்தல்.

குட்கா ஊழல் குற்றவாளிகளை தொடர்ந்து பாதுகாக்கும் பா.ஜ.க. பினாமி அரசாக செயல்படும் எடப்பாடி அரசு தமிழகத்தில் மோடிக்கு எதிராக முழக்கமிட்டால், செய்தி வெளியிட்டால், பேசினால், போஸ்டர் ஒட்டினால், வழக்கு கைது நடவடிக்கை, வாழ்வுரிமைகளுக்காக போராடினால் துப்பாக்கிச் சூடு படுகொலை, தேசிய பாதுகாப்பு சட்டம், தேசத்துரோக வழக்கு, குண்டர்சட்ட வழக்கு என்பதை சகஜமாக சாதாரண மக்கள் மீதும் போடுகிறது. முற்றிலும் பேச்சுரிமை, கருத்துரிமை, மறுக்கப்படுகிறது. பா.ஜ.க.வின் பாசிச கொடுங்கோன்மை அபாயம் நாடு முழுவதும் பரவுகிறது.

மே17, திருமுருகன் காந்தி, தமிழகத்தில் பொதுக்கூட்டங்களில் பேசிய இடங்களில் எல்லாம் எண்ணற்ற வழக்குகளை பதிவு செய்து வைத்துக் கொண்டு தொடர்ந்து கைது செய்து அலைக்கழிப்பது, தேசிய பாதுகாப்பு சட்டம், குண்டர் சட்டத்தைவிட கொடுமையானது. பல மாதங்களாக சிறையிலிருக்கும் செயற்பாட்டாளர் முகிலன்; ஊபா சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக பிணை கிடைக்காமல் சிறையிலிருக்கும் வழக்கறிஞர் முருகன்; ஸ்டெர்லைட் போராட்டத்தில் தூத்துக்குடி மக்களுக்கு சட்ட உதவிகள் செய்ததற்காக வழக்கறிஞர் வாஞ்சிநாதன், அரிராகவன் ஆகியோர் மீதான அடக்குமுறைகள்; ஸ்டெர்லைட் போராட்டத்தில் பங்கேற்றதற்காக மக்கள் அதிகாரம் அமைப்பினர் மீது தேசியப் பாதுகாப்புச்சட்டம் எண்ணற்ற வழக்குகளில் கைது அச்சுறுத்தல்; பாசிச பா.ஜ.க. ஆட்சி ஒழிக என முழக்கமிட்ட சோபியா கைது; மாணவி வளர்மதி கைது; பத்திரிக்கை, செய்தியாளர்கள் மீதான அச்சுறுத்தல் என எதிர்ப்புக் குரலை நெறிக்கிறது பினாமி எடப்பாடி அரசு. ஆனால் எச்.ராஜா., எஸ்.வி.சேகர், எதுவேண்டுமானாலும் பேசலாம் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

கடந்த நான்கு ஆண்டுகளில் பா.ஜ.க. அரசின் தோல்வி ஏற்படுத்திய விளைவுகள் மக்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆர்.எஸ்.எஸ். இந்துத்வா அமைப்புகளின் இந்து ராஷ்டிரா கனவை செயல்படுத்த உருவாக்கப்பட்ட தீவிரவாத சங்பரிவார் அமைப்புகளின் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அம்பலப்பட்டு மக்கள் எதிர்ப்புகளை அதிகரித்து வருகிறது. பா.ஜ.க. மோடி அரசுக்கு எதிராக தயங்காமல் எதிர்ப்புகளை காட்டி வரும் எழுத்தாளர்கள் மனித உரிமைப் போராளிகள் இடதுசாரி தலைவர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோரைக் கைது செய்து சிறையலடைத்து அச்சுறுத்துவதன் மூலம் மக்களின் எதிர்ப்புக் குரலை அடக்கிவிடலாம் என மோடி அரசு முயல்கிறது.

அடிப்படை உரிமைகளுக்கும், ஜனநாயகத்திற்கும் எதிரான தேசதுரோக குற்றச்சாட்டு பிரிவு 124 ஏ, ஊபா சட்டம், ஆயுதபடை சிறப்பு அதிகாரச்சட்டம், ஆகியவற்றை உடனே ரத்து செய்யப்பட வேண்டும். பீமாகோரேகான் நிகழ்வையொட்டியும் மோடியைக் கொல்ல சதி என்கிற பொய் குற்றச்சாட்டிலும் கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். கவுரி லங்கேஷ், தபோல்கர் ஆகியோர் படுகொலைக்கு காரணமான சனாதன் சான்ஸ்தா போன்ற இந்துத்வா பயங்கரவாத மதவெறி அமைப்புகளை உடனே தடை செய்ய வேண்டும். கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் திருமுருகன் காந்தி, முகிலன், வழக்கறிஞர் முருகன் ஆகியோரை தமிழக அரசு உடனே விடுவிக்க வேண்டும். பா.ஜ.க. மோடி அரசின் இத்தகைய பாசிச அடக்குமுறைக்கு எதிராக அனைவரும் ஓரணியில் திரண்டு முறியடிக்க வேண்டும் என அறைகூவி அழைக்கிறோம்.

வழக்கறிஞர் சி.ராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம் – தமிழ்நாடு.
தொடர்புக்கு : 99623 66321