Wednesday, May 7, 2025
முகப்பு பதிவு பக்கம் 747

கூடங்குளம்: இலண்டன் ஜி.டி.வியில் சபா.நாவலன் நேர்காணல்!

5

இலண்டனில் இயங்கும் ஜி.டி.வி எனும் தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 24.03.2012 சனிக்கிழமையன்று கூடங்குளம் தொடர்பான விவாதமொன்று ஒளிபரப்பானது. வெளிச்சம் எனும் விவாத நிகழ்ச்சிக்காக நடைபெற்ற இந்நிகழ்வில் இனியொறு தோழர் சாபா.நாவலன், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் தோழர் மருதையன் பங்கேற்றனர். நாவலன் நேரிலும், மருதையன் தொலைபேசி மூலமும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

இதன் முழு வீடியோ யூ.டியூபில் வெளியிடப்பட்டிருக்கிறது. சுமார் ஒன்றேகால் மணி நேரம் இடம் பெறும் விவாதத்தில் இரு முறை விளம்பர இடைவேளை வருகின்றது. ஆரம்பத்தில் தோழர் மருதையனின் புகைப்படம் என்று தோழர் மதிமாறனது படத்தை தவறாக காட்டியிருக்கிறார்கள். பின்னர் நீக்கியிருக்கிறார்கள்.

விவாதத்தில் கூடங்குளம் போராட்டம் தொடர்பாகவும், அதன் அரசியல் பரிணாமங்களும் விளக்கப்பட்டிருக்கின்றது. அதன் பொருட்டு அந்த உரையாடலை இங்கு வெளியிடுகிறோம்.

 

படிக்க

கோவை சூரிய பிரபா மில்: பெண்கள் தாலியறுக்கும் சுமங்கலி சுரண்டல் திட்டம்!

7
சுமங்கலி
கொத்தடிமை வாழ்க்கை

கோவை புறநகர் பகுதிகளில் நள்ளிரவு நேரங்களிலோ அல்லது அதிகாலை நேரங்களிலோ தான் குடிதண்ணீர் திறந்துவிடுவது வாடிக்கை. அன்றும் (20. 03. 2012 ) அவ்வாறுதான்  அதிகாலை 4 மணிக்கு கோவை விஜயலட்சுமி மில்ஸ் (கோவையிலிருந்து பாலக்காடு செல்லும் வழியில் குனியமுத்தூர் தாண்டி உள்ள பகுதி) பகுதி மக்கள் தண்ணீர் பிடித்துக்கொண்டு இருந்தனர்.

அப்போது ”காப்பாத்துங்கள்,  காப்பாத்துங்கள்”  என்று ஆறு இளம்பெண்களின் கதறல் கேட்டது. தண்ணீர் பிடித்துக்கொண்டு இருந்தவர்கள் அந்த இளம்பெண்களை பாதுகாத்து மனித உரிமை பாதுகாப்பு மையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

ம.உ.பா.மை தோழர்கள் சென்று பகுதி மக்களை சந்தித்தபோது. தங்களது பகுதியில் (விஜய லக்ஷ்மி மில்ஸ் பகுதியில்) இயங்கி வரும் ”சூரிய பிரபா” பஞ்சு மில்லில் 18 வயதுக்கும் குறைவான பெண்களை சுமங்கலி திட்டம் என்ற பெயரில் கொத்தடிமைகளாக வைத்து வேலை வாங்குவதாகவும்.
மில் நிர்வாகத்தின் கடுமையான துன்புறுத்தலை தாக்குப்பிடிக்க முடியாமல் 6 பெண்கள் மில்லில் இருந்து சுவர் ஏறிக்குதித்து முல்வேளிக்கம்பிகளை தாண்டி வந்து தங்களிடம் அடைக்கலம் புகுந்ததாகவும் தகவல் கூறினார்.

அதன் பிறகு தோழர்கள் அந்த பெண்களை சந்தித்து பேசினார். அதன் பிறகு தங்களுக்கு நடந்த கொடுமைகளை குறித்து அப்பெண்களே தோழர்களிடம் விளக்கமாக கூறி தங்களை எப்படியாவது ஊருக்கு அனுப்பி வைக்கும்படியும்  நிர்வாகத்தால் ஏதும் தீமை நடந்துவிடாமல் தங்களை பாதுகாக்கும் படியும் தங்களது புகைப்படங்களை ஊடகங்களுக்கு அளிக்கவேண்டாம் என்றும் கோரினர்.

சூரிய பிரபா மில்..

கோவை குனியமுத்தூர் பகுதியில் சூரிய பிரபா மில் இயங்கி வருகிறது. இந்த மில்லில் 18 வயதுக்கும் குறைவான பெண்களை சுமங்கலி திட்டத்தின் கீழ் கொத்தடிமைகளாக அடைத்து வைத்து வேலை வாங்குகின்றனர். மில் நிர்வாகம் தங்களை எப்படியெல்லாம் சித்திரவதை செய்கிறது என்பதை அப்பெண்கள் கூறக்கேட்டபோது நமக்கு நெஞ்சம் பதறுகிறது.

மாதம் ரூ 3000 சம்பளம். தங்குமிடம், உணவு இலவசம் எனப்பேசி கூட்டி வந்ததாகவும், ஆனால் உண்மையில் தங்களுக்கு எவ்வளவு சம்பளம் என இதுவரையில் தெரியாது எனவும் கூறினார். நாள் ஒன்றிற்கு ரூ 75 பிடித்தம் செய்வதாகவும், நிர்வாகத்தின் தொலைபேசியில் இருந்து எப்போதாவது ஒருமுறைதான் வீட்டுக்கு போன் பேச அனுமதிப்பார்களாம். அதுவும் நிமிடத்திற்கு 2 ரூபாய் கட்டணத்தில்.அவ்வாறு பேசும் வேலைகளில் அருகிலிருந்து ஒட்டுக்கேட்கவும் செய்வார்களாம்.

உடல்நிலை சரியில்லை என்றால் உடனே மருத்துவமனைக்கு அழைத்து போவதும் இல்லையாம். மிகவும் கவலைக்கிடமானால் அழைத்து சென்றுவிட்டு வாகனம் மற்றும் மருத்துவ செலவிற்கு சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்துகொள்வார்களாம். மாதம் ரூ 200 கொடுப்பார்கள் அதை வைத்துதான் துணி,சோப்பு,குளிக்கும் சோப்பு,நாப்கின்,பேஸ்ட், எண்ணெய்,etc அனைத்திற்கும் பயன்படுத்தி கொள்ளவேண்டுமாம். ஒப்பந்தம் முடியும் வரை வெளியிலோ, சொந்த ஊருக்கோ செல்ல அனுமதிப்பது இல்லை. விடுதியில் தரமற்ற மோசமான. உணவு பிடிக்கவில்லை என்று கீழே கொட்டினால் அதற்கும் அபராதம்(FINE ) போடுவார்களாம்.

தங்குமிடமோ ஒரு பூலோக நரகம். 150 பெண்கள் தங்கி இருக்கும் இடத்தில் 3 கழிவறைகளும்,3 குளியலறைகளும் மட்டுமே உள்ளதாம்.
மேலும் வேலை நேரம் 16 மணிநேரம் வரையும் மில் சுமார் 2 நாட்கள் 48 மணிநேரம் தொடர்ந்தால் போல வேலை செய்ய கட்டாயப்படுத்துவது. போன்ற ஏராளமான கொடுமைகளை அங்கு வேலை செய்யும் பெண்கள் தினமும் சந்தித்துக் கொண்டுதான் இருக்கின்றனர் என்றும் கூறினார்கள் அந்த பெண்கள்.

புரோக்கர் பிரேமலதா

மில் நிர்வாகத்திற்கு புரோக்கராக பிரேமலதா என்ற பெண் உள்ளார். இந்த பிரேமலதாதான் மைனர் பெண்களை பொய் சொல்லி ஏமாற்றி கூட்டிவந்து மில்லில் வேலைக்கு சேர்த்து விடுகிறார் என்றும், இதற்காக மில் நிர்வாகத்திடம் மிக அதிக அளவு பணம் பெற்றுக்கொள்கிறார் என்றும், வேலையில் தொடர விருப்பம் இல்லாத பெண்களின் வீடுகளுக்கு சென்று காவல்துறையில் பொய்யாக புகார் கொடுத்து உங்களை கம்பி என்ன வைத்துவிடுவேன் என மிரட்டி மீண்டும் மில்லில் வேலைக்கு கூட்டி வந்து விடுகிறார் என்றும் கூறினார். இப்படிப்பட்ட எண்ணற்ற கொடுமைகளை கூறி தோழர்களிடம் கண்ணீர்விட்டு அழுதுள்ளனர் பாதிக்கப்பட்ட அந்த பெண்கள்.

ம.உ.பா.மை தோழர்கள் மனு ஒன்றை தயார் செய்து 6 பெண்களையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கூட்டி சென்றனர். RDO விசாரணை நடை பெற்று பின்னர் FACTORY INSPECTOR ஐ வைத்து விடுதியில் ஆய்வு செய்வதாகவும். புகார் தொடர்பாக ஆய்வு செய்வதாகவும் வாக்குறுதி அளித்தனர்.

ஆனால் இந்த வெற்று வாக்குறுதி தங்களுக்கு வேண்டாம் என்றும். 18 வயதுக்கு குறைவான பெண்களை சட்டவிரோதமாக அடைத்து வைத்து கொத்தடிமையாக வேலை வாங்கிய மில் நிர்வாகத்தின் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சுமங்கலி திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும்  மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் தோழர்கள் கோரிக்கை வைத்தனர்.

மேற்கண்ட கோரிக்கையை வலியுறித்தி அப்பகுதிவாழ் மக்களை திரட்டி மனித உரிமை பாதுகாப்பு மையம் அடுத்த கட்ட போராட்டத்திற்கு ஆயத்தமாகி வருகிறது.

____________________________________________________
– மனித உரிமை பாதுகாப்பு மையம் , கோவை.
_____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

கூடங்குளம்: அரசுக்கு எதிராகப் போர் தொடுத்த தீவிரவாதிகளில் 30 சிறுவர்கள், 42 பெண்கள்!

43

கூடங்குளம் குழந்தைகள் பெண்கள்

கூடங்குளம் போராட்டத்தின் இரண்டாவது சுற்று ஆட்டம் தொடங்கிவிட்டது.

மார்ச் 20 ஆம் தேதியன்று கூட்டப்புளியில் கைது செய்யப்பட்ட 178 பேரை திருச்சி சிறையிலும், கூடங்குளத்தில் கைது செய்தவர்களை கடலூர் சிறையிலும் வைத்திருக்கும் செய்தியை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம்.

கூட்டப்புளி மக்கள் 178 பேரில் 106 பேர் ஆண்கள், 42 பெண்கள், 30 சிறுவர்கள். அவர்கள் மீது இ.பி.கோ 143, 188, 353, 294-B, 506(2), 7 1(A) ஆகிய குற்றப் பிரிவுகளின் கீழ் பொய் வழக்கு பதிவு செய்திருந்தது போலீசு. ஆபாசமாக திட்டுவது முதல் வன்முறையில் ஈடுபடும் முயற்சி வரை பல குற்றப் பிரிவுகள் இதில் அடக்கம்.

இவர்களைப் பிணையில் விடக்கோரி உடனே மனு தாக்கல் செய்தார்கள் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்கள். பிணை மனு இன்றைக்கு வள்ளியூர் மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்குரைஞர் தோழர் ராஜுவும் அவருடன் பத்துக்கும் மேற்பட்ட வழக்குரைஞர்களும் கூட்டப்புளி மக்கள் சார்பில் ஆஜராகினர்.

விசாரணை தொடங்கியவுடனே தனது வக்கிரமான அழுகுணி ஆட்டத்தை போலீசு தொடங்கியது. சிறை வைக்கப்பட்டிருக்கும் 178 பேரும், “அரசுக்கு எதிராகப் போர் தொடுப்பது (பிரிவு 121), அவ்வாறு போர் தொடுக்க சதி செய்வது (பிரிவு 121-A), போர் தொடுக்கும் நோக்கத்துடன் இரகசியமாக மறைந்திருப்பது (பிரிவு -123)” ஆகிய குற்றங்களில் ஈடுபட்டிருப்பதாகவும், அவை குறித்து தீவிரமாகப் புலன் விசாரணை செய்யவேண்டியிருப்பதால், இவர்களைப் பிணையில் விடக்கூடாது என்றும் தீவிரமாக ஆட்சேபித்தது போலீசு தரப்பு.

இபிகோ 121 க்கான அதிகபட்ச தண்டனைதூக்கு.                     
இபிகோ
121A, 123 க்கு அதிகபட்சம் ஆயுள் தண்டனை.

சிறையில் இருப்பவர்கள் யார்? சாதாரணமான எளிய மீனவ மக்கள். மீனவப் பெண்கள். சிறையில் வைக்கும் அளவுக்கு வயதில்லை என்பதால் திருச்சி சீர்திருத்தப் பள்ளியில் வைக்கப்பட்டிருக்கும் 30 பள்ளிச் சிறுவர்கள்.

இவர்கள் உண்மயிலேயே செய்த குற்றம் என்ன? கூடங்குளத்தில் போராட்டக்குழுவைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டதற்கு இவர்கள் எதிர்ப்பு தெரிவித்து தங்கள் ஊரில் உடனே சாலை மறியல் போராட்டம் செய்தார்கள். அவ்வளவுதான்.

அரசுக்கு எதிராகப் போர் தொடுத்தார்கள் என்ற குற்றச்சாட்டை கேலி செய்த தோழர் ராஜு,  “போலீசு அதிகாரிதான் குற்றம் சாட்டுபவர், இந்த வழக்கில் சாட்சியமும் அவர்தான். எனவே கூட்டப்புளி மக்களை மட்டுமல்ல, நீதிமன்றத்தில் உள்ள எல்லா வழக்குரைஞர்களையும் அரசுக்கு எதிராகப் போர் தொடுத்ததாக அவர் கைது செய்ய முடியும்” என்று கூறி எள்ளி நகையாடினார். “இபிகோ 302 இல் கொலை வழக்கு போடுவதென்றால் பிணம் ஒன்றைக் காட்ட வேண்டும். பிணமே இல்லாமல் கொலை கேசு போடமுடியாது. அரசுக்கு எதிராகப் போர் தொடுத்ததாக அன்றைக்கு சொல்லாத போலீசு இன்றைக்கு இவ்வாறு கூறுகிறதே, இடைப்பட்ட இந்த நாட்களில் இக்குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கான சாட்சியம் எதையாவது, போலீசு நீதிமன்றத்திற்கு தந்திருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பினார்.

வாதங்கள் எதற்கும் அரசு தரப்பு பதிலளிக்கவில்லை. வள்ளியூர் நீதிமன்ற வளாகம் முழுவதும் வரலாறு காணாத அளவுக்கு போலீசு குவிக்கப்பட்டிருந்தது – அது மட்டும்தான் அரசு தரப்பின் வாதம். மக்களுக்கு மட்டுமல்ல, நீதித்துறைக்கும் சேர்த்து அரசு விடுத்த எச்சரிக்கைதான் அந்த போலீசு குவிப்பு.

நமது தரப்பு வாதத்தைக் கேட்ட நீதிபதி, அரசு தரப்பு வாதத்தைப் பார்த்தார். பிறகு பிணை மனுவைத் தள்ளுபடி செய்தார்.

இனி நெல்லை அமர்வு (செஷன்ஸ்) நீதிமன்றம். அதன் பின்னர் சென்னை உயர்நீதிமன்றம்… மனு, நோட்டீசு, வாய்தா.. . ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி ஜாமீன் வாங்கி விட்டால், சிறையை விட்டு வெளியே வர முடியாமல் அடுத்தது புதிதாக ஒரு வழக்கு வரும்.

இது நாள் வரை கூடங்குளம் போராட்டத்தை ஆதரிப்பதைப் போன்ற தோற்றத்தைக் காட்டி, ஜெயலலிதா ஏமாற்றிக் கொண்டிருக்க, போராடும் மக்கள் மீது சரம் சரமாகப் பல பொய் வழக்குகளை போலீசு பதிவு செய்து வைத்திருந்தது. அம்மாவின் அரசியல் சதுரங்க ஆட்டத்துக்கு “கூடங்குளம் போராட்டம்” என்ற காய் தேவைப்பட்ட நாள் வரையில் யாரும் கைது செய்யப்படவில்லை. இப்போது காய்கள் வெட்டுக் கொடுக்கப்படுகின்றன.

“யாரையும் நாங்கள் ஊருக்குள் புகுந்து கைது செய்யப்போவதில்லை” என்று அன்பும் கருணையும் ஒழுகப் பேசியிருக்கிறார் ஏடிஜிபி ஜார்ஜ். ஆனால் அவர்கள் போட்டிருக்கும் எப்.ஐ.ஆர்களில் அந்தக் கருணை இல்லை. வஞ்சகம்தான் இருக்கிறது.

போலீசு பதிவு செய்து வைத்திருக்கும் டஜன் கணக்கிலான முதல் தகவல் அறிக்கைகள் அனைத்திலும், முதலில் உதயகுமார், சிவசுப்பிரமணியம் என்று சில முன்னணியாளர்களின் பெயர் இருக்கிறது. அதன் பின்னர் மேற்படி நபர்களுடன் கண்டால் அடையாளம் சொல்லத்தக்க இரண்டாயிரம் பேரும் சேர்ந்து என்ற மங்கல வாக்கியம் எல்லா எப்.ஐ.ஆர்களிலும் இடம் பெற்றிருக்கிறது. அந்த இரண்டாயிரம் பேர் யார், யார் என்பதை போலீசு இன்றைய தனது தேவைக்கு ஏற்றபடி எழுதிக் கொள்ளும்.

ஆபாச வசவுக்காக கைது செய்யப்பட்ட 178 பேர் மீது தேசத்துரோக வழக்கு போட்டாகிவிட்டது. திருச்சி சிறையிலிருக்கும் அந்த 178 பேருக்குள்ளேயே 25 பேர் மீது மட்டும் தனியாக வேறு வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன.

இவையெல்லாம் போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு அரசு விடுக்கும் எச்சரிக்கை. “உங்களில் ஒருத்தியாக இருப்பேன்” என்று இச்சகம் பேசி கழுத்தறுத்த அன்புச் சகோதரி, “அந்த 2000 பேரில் ஒருத்தியாக உன் பெயரையும் சேர்த்துக் கொள்ளட்டுமா?” என்று இப்போது மீனவப் பெண்களை மிரட்டுகிறார்.

“எங்களையும் சேர்த்துக்கொள்” என்று பல்லாயிரம் மக்களின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும். ஒலிக்கச் செய்வோம்.

________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

தங்கம் தின்று, கடலைக் குடித்து, அடிமைகளின் உழைப்பில்….துபாய்!

24

துபாய்வளால் பேசமுடியவில்லை. தன் கதையைச் சொல்வதற்கு வாய் திறக்கும் போதெல்லாம் அவள் அழுகிறாள். வாழ்ந்து கெட்டவர்களுக்கே உரிய மங்கிப்போன பொலிவு கரேனின் முகத்தில் தெரிகிறது. துபாயின் மிகச்சிறந்த சர்வதேச நட்சத்திர விடுதி ஒன்றின் கார் நிறுத்துமிடத்தில் அவளைப் பார்த்தேன். அங்கிருக்கும் ஒரு கார்தான் பல மாதங்களாக அவளுடைய வீடு. இது சட்டவிரோதம்தான் என்றாலும் அங்கு வேலை செய்யும் வங்கதேசத்தைச் சேர்ந்த பணியாளர்களுக்கு அவளை விரட்டுவதற்கு மனம் வரவில்லை.  தன்னுடைய துபாய் கனவு இங்கே வந்து முடியும் என்று அவளும் நினைத்துப் பார்க்கவில்லை.

கரேன் கனடாவிலிருந்து இங்கு வந்தாள். ஒரு பிரபல பன்னாட்டு நிறுவனத்தின் துபாய் கிளையில் தனக்கு உயர் பதவி கிடைத்திருப்பதாக அவள் கணவன் டானியேல் சொன்னபோது, “அங்கே வந்து பர்தாவெல்லாம் போட முடியாது. மது அருந்தாமல் இருக்கவும் முடியாது” என்று கூறி முதலில் மறுத்தாள் கரேன். பிறகு கணவன் மீது கொண்ட காதலால் வந்து விட்டாள்.

“இது வயது வந்தவர்களுக்கான டிஸ்னிலாந்து. துபாயின் அதிபர் ஷேக் முகமதுதான் இந்த டிஸ்னிலாந்தின் தந்திரக்கார எலி” என்கிறாள் கரேன். “வாழ்க்கை அற்புதமாக இருந்தது. பிரம்மாண்டமான அபார்ட்மென்டுகள், கூப்பிட்ட குரலுக்கு வேலைக்காரர்கள், வரியே கிடையாது, 24 மணி நேரமும் விருந்து கொண்டாட்டம்தான். நாங்கள் துபாயைப் பருகி அதன் போதையில் திளைத்தோம்”

“டானியேல் இரண்டு சொத்துகள் வாங்கினான். நாங்கள் கொஞ்சம் கடனாளி ஆனோம். பண விவகாரங்களில் கறாராக இருப்பவனான டானியேலா கடன் வாங்குகிறான் என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. காரணம் ஒரு ஆண்டுக்குப் பின்னர்தான் தெரிந்தது. டானியேலுக்கு மூளையில் கட்டி. ஒரு ஆண்டுதான் உயிர் வாழ முடியும் என்றார் ஒரு டாக்டர்.  இன்னொருவர் எந்தப் பிரச்சினையும் இல்லை, சரியாகிவிடும் என்றார். கடன் வளர்ந்து கொண்டிருந்தது.”

“எனக்கு துபாயின் சட்டங்கள் பற்றி தெரியாது. இந்த ஊரில் கடனை அடைக்க முடியாவிட்டால் சிறைத்தண்டனையாம். இங்கிருந்து உடனே கிளம்பி விடுவோம் என்று நான் டானியேலிடம் கூறினேன். வேலையை ராஜினாமா செய்தால் கிடைக்கக் கூடிய செட்டில்மென்ட் பணத்தை வைத்து கடனை அடைப்பது, உடனே துபாயிலிருந்து கிளம்புவது என்று முடிவெடுத்தோம்.  ஒப்பந்தப்படி தரவேண்டிய தொகையைக் கொடுக்காமல் குறைத்துக் கொடுத்தது நிர்வாகம். கடனை அடைக்க முடியவில்லை. துபாயில் ஒரு ஊழியர் வேலையை ராஜினாமா செய்தால், கம்பெனி நிர்வாகம்அந்த தகவலை உடனே ஊழியரின் வங்கிக்கு தெரிவித்து விடும். கடன் நிலுவை இருந்தால் உங்கள் கணக்கை வங்கி முடக்கி விடும். நீங்கள் நாட்டை விட்டு வெளியே போக முடியாது” அப்புறம் நடந்தது என்ன என்று கரேனால் சொல்ல முடியவில்லை. அவளது உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.

அவர்கள் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். டானியேல் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டான். ஆறு நாட்களுக்குப் பின்னர்தான் சிறையில் கரேன் அவனைப் பார்த்திருக்கிறாள். கடனுக்காக கைது செய்யப்பட்ட 27 வயது இலங்கைக்காரனுடன் டானியேல் சிறையில் அடைக்கப் பட்டிருந்தானாம். தன் குடும்பத்துக்கு நேரக்கூடிய அவமானத்தை எண்ணி வருந்திய அந்த இளைஞன் இரவில் பிளேடுகளை விழுங்கிவிட்டான். துடித்துக் கொண்டிருந்த அவனைக் காப்பாற்ற டானியேல் சிறைக்கதவை இடித்துக் கத்திக் கதறியும் யாரும் திரும்பிக்கூட பார்க்கவில்லை. டானியேலின் கண் எதிரிலேயே அந்த இளைஞன் துடித்து அடங்கியிருக்கிறான்.

கரேன் நண்பர்களின் தயவில் கொஞ்ச நாட்களை ஓட்டியிருக்கிறாள். “பிச்சை கேட்டு வாழ்வது அவமானமாக இருந்தது. நான் கனடாவில் சொந்தமாக கடைகள் வைத்திருந்தேன். இப்படி நான் வாழ்ந்ததில்லை” என்று உடைந்து அழுதாள் கரேன். டானியேலுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை. நீதிமன்ற விசாரணை எல்லாம் அரபி மொழியில்தான். ஒன்றும் புரியவில்லை. “என்னிடம் பணம் இல்லை. எதுவும் இல்லை. நான் இப்போது துபாயில் இருப்பதே சட்டவிரோதமாகத்தான். டானியேல் வெளியில் வரும்வரை காலம் தள்ளவேண்டும். எப்படியாவது” என் முகத்தைப் பார்க்கக் கூசி எங்கேயோ வெறித்தபடி, “ஒரு சாப்பாடு வாங்கித் தருவீர்களா?” என்று கேட்கிறாள் கரேன்.

துபாய் எங்கும் அவளைப் போல ஏகப்பட்ட வெளிநாட்டவர்கள். விமான நிலையங்களிலும், கார்களிலும் இரவு நேரத்தைக் கழிக்கின்றனர். இவர்கள் எல்லாம் சட்டவிரோதமாக இங்கே இருக்கிறார்கள்.

“துபாயைப் பற்றி ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இது ஒரு நகரமே அல்ல. செப்பிடு வித்தை. இதனை நவீன உலகமாக காட்டிக் கவர்ந்திழுக்கிறார்கள். அது வெறும் மேல் பூச்சு.  அடியில் இருப்பது மத்தியகாலக் கொடுங்கோன்மை” என்கிறாள் கரேன்.

 •• ••

துபாய்
பாலைவனத்தில் திறந்தவெளி சொர்க்கம் - கண்ணுக்குத் தெரியாத நரகம்

முப்பது ஆண்டுகளுக்கு முன் இன்றைய துபாய் கள்ளிச்செடிகளும் தேள்களும் மட்டுமே நிறைந்திருந்த ஒரு பாலைவனம். பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியில் முத்துக் குளிப்பதற்காக பாரசீகம், இந்தியா மற்றும் அரேபிய நாடுகளிலிருந்து பலர் இங்கே குடியேறினார்கள். தன் கண் முன் உள்ள அனைத்தையும் தின்றுவிடும் தபா என்றொரு ஒருவகை வெட்டுக்கிளியின் பெயரை இந்த ஊருக்கு அவர்கள் வைத்தார்கள். தபா, துபாய் ஆனது. 1971 இல்தான் பிரிட்டிஷ்காரர்கள் துபாயிலிருந்து வெளியேறினார்கள். அபுதாபியை ஒப்பிடும்போது துபாயில் எண்ணெய் வளம் மிகக் குறைவு. எனவே, துபாயின் ஷேக்கான மக்தூம், இந்த ஊரை வரி என்பதே இல்லாத நாடாக, சர்வதேச நிதிச்சூதாட்டம் மற்றும் சுற்றுலா  மையமாக மாற்றுவதென முடிவு செய்தார். உலகெங்கிலுமிருந்து கொட்டியது பணம். மக்கள் தொகையில் 95% வெளிநாட்டுக்காரர்கள். வானத்திலிருந்து திடீரென்று ஒரு நகரம் இந்தப் பாலைவனத்தின் மீது விழுந்ததைப் போல, முப்பதே ஆண்டுகளில் உருவாகிவிட்டது துபாய். ஒரே ஒரு தலைமுறைக்காலத்தில் அந்த மண்ணின் மைந்தர்கள் 18 ஆம் நூற்றாண்டிலிருந்து 21 ஆம் நூற்றாண்டுக்குள் தூக்கி வீசப்பட்டார்கள்.

துபாயை பேருந்தில் சுற்றிப்பார்க்க நீங்கள் கிளம்பினால், அதிலிருக்கும் சுற்றுலா  வழிகாட்டி, மிகவும் நேர்த்தியாகக் கத்தரிக்கப்பட்ட குரலில் சொல்வார், “துபாயின் கொள்கை திறந்த கதவுகள், திறந்த மனம். இங்கே உங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு-விரும்பிய துணிகளை வாங்கலாம்”. பிரம்மாண்டமான கட்டிடங்களை ஒவ்வொன்றாக நீங்கள் கடக்கும்போது, “இது உலக வர்த்தக மையக் கட்டிடம். இதையும் மாட்சிமை தங்கிய மன்னர்தான் கட்டினார்” என்கிறார் வழிகாட்டி. அது பொய். துபாயைக் கட்டியவர்கள் அடிமைகள்.  அவர்கள் இன்னும் இன்னும் அதைக் கட்டியபடியே இருக்கிறார்கள்.

ஒரு துபாய்க்குள் மூன்று வெவ்வேறு துபாய்கள் ஒன்றையொன்று சுற்றிக் கொண்டிருக்கின்றன. கரேனைப் போன்ற வெளிநாட்டவர்கள், ஷேக் முகமதுவின் குடிமக்களான எமிரேட்டின் மைந்தர்கள், அப்புறம் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் உழைக்கும் வர்க்கத்தினர். இந்த நகரத்தைக் கட்டி எழுப்பிவிட்டு அதிலிருந்து வெளியேற வழிதெரியாமல் தவிப்பவர்கள்.

அன்றாடம் மாலைநேரத்தில், பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை துபாய் நகரத்திலிருந்து அள்ளிச்சென்று, நகரத்துக்கு வெளியில் இருக்கும் கண் மறைவான ஒரு கான்கிரீட் பொட்டலில் கொட்டுகின்றன பேருந்துகள். சில ஆண்டுகளுக்கு முன்புவரை அவர்கள் ஒட்டக வண்டியில்தான் கொண்டு செல்லப்பட்டார்கள். அந்தக் காட்சி கண்ணுக்கு உறுத்தலாக இருப்பதாக மேற்கத்திய கனவான்கள் சிலர் தெரிவித்ததால், பேருந்துகள் என்று அழைக்கப்படும் தகரக் கூண்டுகள் இப்பாலைவனத்தில் தொழிலாளிகளை அவித்துச் செல்கின்றன.

மைல் கணக்கில் கற்குவியல்களைப் போலச் சிதறிக் கிடக்கும் ஒரே மாதிரியான இந்தக் கான்கிரீட் கட்டிடங்களில் 3 இலட்சம் மனிதர்கள் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். இதன் பெயர் சோனாப்பூர். அதாவது தங்க நகரம். உள்ளே கால் வைத்தவுடன் கழிவுநீரும் வியர்வையும் நாசியைப் பிளக்கின்றன. தங்கள் துயரத்தை யாரிடமாவது சொல்லத் துடிக்கும் ஒரு கூட்டம் உங்களை மொய்த்துக் கொள்கிறது.

சாஹினால் மொனிர் வங்கதேசத்தின் கங்கைச் சமவெளியிலிருந்து இங்கு வந்திருக்கும் 24 வயது இளைஞன். “உங்களை இங்கே கொண்டு வந்து தள்ளுவதற்காக துபாய் ஒரு சொர்க்கம் என்பார்கள். வந்து இறங்கிய பிறகுதான் புரியும். இது நரகம். “மாதம் 40,000 டாகா (வங்கதேச நாணயம்)சம்பளம்; 9 முதல் 5 வரை வேலை. நல்ல சாப்பாடு, தங்குமிடம். விசா எடுப்பதற்கு 2,20,000 டாகா செலவழித்தால் போதும். ஆறு மாத சம்பளத்தில் அந்தக் கடனை அடைத்து விடலாம்” என்றார்கள். இந்த சொர்க்கத்துக்கு வருவதற்காக பரம்பரை நிலத்தை விற்று, கந்து வட்டிக்கு கடனும் வாங்கினான் சாஹினால்.

துபாயில் வந்து இறங்கியதுமே பாஸ்போர்ட்டை பிடுங்கிக் கொண்டார்கள் கம்பெனிக்காரர்கள். ஐந்து நிமிடம் கூட வெயிலில் நிற்காதீர்களென்று மேல்நாட்டு சுற்றுலா பயணிகள் அக்கறையுடன் அறிவுருத்தப்படும் அந்த 55 டிகிரி வெயிலில், “14 மணிநேரம் கட்டிட வேலை. 9000 டாகா சம்பளம். பிடிக்கவில்லையா, இப்படியே திரும்பிப் போய்விடலாம்” என்று கறார் குரலில் சொன்னார்கள். “பாஸ்போர்ட் உங்களிடம் இருக்கிறது. என்னிடம் பணமும் இல்லை. நான் எப்படிப் போகமுடியும்?”

“நல்லது. அப்படியானால் வேலைக்கு கிளம்பு”

சாஹினால் பீதியடைந்தான். அவன் மனைவி, பிள்ளைகள், பெற்றோர் அனைவரும் பையன் துபாய் போன சந்தோசத்தில் இருப்பார்கள். பணத்தை எதிர்பார்த்திருப்பார்கள். ஆனால் அவன் வாங்கிய கடனை அடைப்பதற்கே 2 வருசம் வேலை செய்யவேண்டும். சம்பளமோ ஊரில் அவன் சம்பாதித்ததை விடக் குறைவு.

அவன் தன்னுடைய அறையைக் காட்டினான். அது ஒரு கான்கிரீட் பொந்து. உள்ளே ஒன்றின் மேல் ஒன்றாக மூன்றடுக்கு படுக்கைகள். 11 பேர் அந்த அறையில். அறை நாறுகிறது. அந்தக் குடியிருப்பின் கழிவறைப் பொந்துகள் நிரம்பி ஈக்கள் மொய்க்கின்றன. அறையில் மின்விசிறி கூட இல்லை. “தூங்க முடியாது. இரவு முழுவதும் புழுக்கம். சூடு தாங்க முடியாவிட்டால் தரையில் படுப்போம், கூரை மேல் படுப்போம், எங்கு வேண்டுமானாலும் படுப்போம், கொஞ்சம் காற்றுக்காக.

கடல்நீரிலிருந்து தயாரிக்கப்படும் குடிநீர் வெள்ளை கேன்களில் வரும். சரியாக சுத்திகரிக்கப்படாத அந்த உப்புத் தண்ணீர்தான் குடிப்பதற்கு. தேடினாலும் வேறு தண்ணீர் கிடையாது.

துபாய்
55 டிகிரி வெப்பத்தில் வேலை; குடியிருப்பது பாலைவனப் பொந்தில்; தொழிலாளியா-அடிமையா?

வேலை? “கொடும் வெயிலில் 50 கிலோ செங்கல் அல்லது சிமென்டை சுமக்க வேண்டும்.  அந்த சூடு இருக்கிறதே, நாள் கணக்கில் அல்ல, வாரக்கணக்கில் சிறுநீரே வராது. உடம்பில் உள்ள தண்ணீர் எல்லாம் வியர்த்து வெளியேறி உடம்பு நாறும்.தலை சுற்றும். மேலேயிருந்து விழுந்தால் செத்து விடுவோம் என்று தெரியும். ஆனால் நிறுத்த முடியாது. நிறுத்தினால் சம்பள வெட்டு. இன்னும் அதிக காலம் இங்கே உழல வேண்டிவரும்.”

பளபளக்கும் ஒரு அடுக்குமாடிக் கட்டிடத்தின் 67 வது மாடியில் சாஹினால் இப்போது வேலை செய்து கொண்டிருக்கிறான். அடுத்த மாடி, அடுத்த மாடி என்று, வானத்திற்குள், வெம்மைக்குள் அவன் கட்டிக் கொண்டே போவான். அந்தக் கட்டிடத்தின் பெயர் அவனுக்குத் தெரியாது. சாஹினால் வந்து நான்காண்டுகள் ஆகிவிட்டன. இன்று வரை அவன் சுற்றுலாப்பயணிகளின் சொர்க்கமான அந்த பளபளக்கும் துபாயைப் பார்த்ததில்லை. இருப்பினும் அதன் ஒவ்வொரு தளத்தையும் அவன்தான் கட்டியெழுப்புகிறான்.

அவனுக்கு கோபம் வரவில்லையா? “இங்கே யாரும் கோபத்தைக் காட்டுவதில்லை; முடியாது. போன வருடம், சில தொழிலாளர்கள் தங்களுக்கு 4 மாதமாக சம்பளம் தரவில்லை என்று வேலைநிறுத்தம் செய்தார்கள். அவர்களுடைய குடியிருப்பை சுற்றி முள்கம்பி வேலி போட்டு, போலீசு வளைத்துக் கொண்டது. தண்ணீர் பீரங்கியால் தாக்கி வேலைக்குத் துரத்தினார்கள். தலைமை தாங்கியவர்களுக்கு சிறைத் தண்டனை.

“ஏன் வந்தோம் என்று வருத்தப்படுகிறாயா சோஹினால்?”  எல்லோரும் தலை குனிந்தார்கள். “அதையெல்லாம் நினைக்க முடியுமா? வருத்தப்பட ஆரம்பித்தால்..” அந்த வாக்கியம் மவுனத்தில் முடிகிறது. இன்னொரு தொழிலாளி அந்த மவுனத்தைக் கலைக்கிறான். “என்னுடைய மண்ணை, குடும்பத்தை இழந்து விட்டேன். ஊரில் விவசாயம் செய்வோம். இங்கே எதுவும் முளைக்காது. எண்ணையும் கட்டிடங்களும் மட்டும்தான்.

பொருளாதார மந்தம் பரவத் தொடங்கியதும் அவர்களுடைய குடியிருப்புகளுக்கு மின்சாரத்தை நிறுத்தி விட்டார்கள். பல கம்பெனிகள் அவர்களுடைய பாஸ்போர்ட்டையும் சம்பளத்தையும் சுருட்டிக் கொண்டு ஓடிவிட்டார்கள். “இருந்தாலும் வங்கதேசத்துக்குத் திரும்பிப் போக முடியாது. அங்கே கந்துவட்டிக் காரன் காத்திருப்பான்.”

சம்பளம் கொடுக்காதது, பாஸ்போர்ட்டை பிடுங்கிக் கொள்வது எல்லாம் சட்டவிரோதம்தான். ஆனால் துபாய் அரசின் ஒத்துழைப்போடுதான் எல்லாம் நடக்கிறது. சாஹினால் இங்கேயே செத்துப் போகலாம். தொழிலாளர் குடியிருப்புகளிலும், கட்டுமானப் பணி நடக்கும் இடங்களிலும் ஏராளமான தற்கொலைகள் நடப்பதாகவும், ஆனால் அவை விபத்துகள் என்று சித்தரிக்கப்படுவதாகவும், கட்டுமானக் கம்பெனியில் வேலை பார்க்கும் பிரிட்டிஷ்காரர் ஒருவர் என்னிடம் கூறினார். வெப்பத்தினாலும், மிதமிஞ்சிய உழைப்பினாலும், தற்கொலைகளாலும் இறப்பவர்களின் உண்மையான எண்ணிக்கை மறைக்கப்படுவதை ஒரு மனித உரிமை அமைப்பு அம்பலமாக்கியது. 2005 ஆம் ஆண்டில் மட்டும் 971 இந்தியர்கள் துபாயில் இறந்துபோனதாக, இந்திய தூதரகமே கணக்கிட்டிருந்தது வெளியில் தெரிந்துவிட்டது. உடனே, ‘சாவுக்கணக்கு வைக்க வேண்டாம்’ என்று தூதரகங்கள் அறிவுருத்தப்பட்டுவிட்டன.

இரவு நான் சோஹினாலுடன் உட்கார்ந்திருக்கிறேன். எல்லோரும் சேர்ந்து கையில் உள்ள காசை சேர்த்து மலிவான ஒரு சாராயத்தை வாங்கி வந்து ஒரே மடக்கில் வெறி பிடித்தாற்போல விழுங்குகிறார்கள். மரத்துப் போக இதுதான் வழி என்கிறான் சோஹினால். தொலைதூர அடிவானில் அவன் கட்டியெழுப்பிய துபாய் மறந்தாற்போல் நின்று மின்னிக் கொண்டிருக்கிறது.

 •• ••

துபாய்
அமெரிக்க முதலாளிகளுடன் துபாயை ஆளும் ஷேக்குகள்! அடிமைகளை அழித்து எழுந்த அரசன் !!

சோஹினாலிடமிருந்து விடை பெற்று பத்து நிமிட கார் பயணத்தில் துபாயின் பிரம்மாண்டமான பளிங்கு மாளிகை ஒன்றில் நுழைந்து விட்டேன். அங்கிருந்து இங்கே – பிரமிப்பாகவும் தடுமாற்றமாகவும் இருக்கிறது. இங்கே தெருவுக்கு தெரு ஒரு மால். நுகர்வியத்தின் தேவாலயங்கள் பொழிகின்ற இந்தக் குளிரூட்டப்பட்ட  அருளில் வாடிக்கையாளர்கள் நனைகிறார்கள். சலிப்படைந்த ஒரு விற்பனைப் பெண் ஒன்றரை இலட்சம் ரூபாய் விலையுள்ள ஒரு ஆடையைக் காண்பித்து அதன் அருமை பெருமைகளை அலுப்பான குரலில் எனக்கு ஒப்பிக்கிறாள். இந்த அங்காடிகளில் காலம் நகர மறுக்கிறது. அதன் மின்விளக்குளின் ஒளியில், தரைகளின் பளபளப்பில் நாட்கள் அடையாளமிழந்து மங்குகின்றன.

குட்டைக் காற்சட்டை அணிந்த ஒரு 17 வயது டச்சுப் பெண்,  தன்னை மொய்க்கும் கண்களைக் கண்டு கொள்ளாமல் அங்கே திரிந்து கொண்டிருந்தாள். “இந்த சூடு, இந்த மால்கள், இந்த கடற்கரை! ஓ, நான் துபாயை காதலிக்கிறேன்!” என்றாள் அவள். “இது ஒரு அடிமைச் சமுதாயம் என்பது பற்றி உனக்கு அக்கறையில்லையா?” என்றேன்.

சோஹினாலைப் போல, இவளும் தலை குனிந்தாள். “அதையெல்லாம் பார்க்காமலிருக்க முயற்சிக்கிறேன்” என்றாள். எதார்த்தத்தை பார்க்காமலும் கேள்வி கேட்காமலும் இருப்பதற்கு இந்தப் பெண் 17 வயதிலேயே கற்றுக் கொண்டுவிட்டாள்.  அதெல்லாம் ரொம்பவும் வரம்பு மீறிய செயல்கள் என்று அவளுக்குப் புரிந்திருக்கிறது போலும்.

வெளிநாட்டவரையும் அடிமை வர்க்கத்தினரையும் அணுகுவது போல, எமிரேட்டின் குடிமக்களை அணுகி கேள்வி கேட்க முடியவில்லை. “உங்கள் நாடே வெளிநாட்டவர்களால் நிரம்பி வழிவது பற்றி எப்படி உணர்கிறீர்கள்?” கேட்டால் பெண்கள் வெறிக்கிறார்கள். ஆண்கள் அவமதிக்கப்பட்டது போல ஒரு பார்வை பார்க்கிறார்கள். எனவே வலைத்தளங்களைப் படித்துப் பார்த்து துபாயின் ஒரு இளைஞனைத் தெரிவு செய்து சந்தித்தேன். வேறெங்கே ஒரு மாலில்தான்.

அகமது அல் அதார். 23 வயது இளைஞன். நேர்த்தியாக கத்தரிக்கப்பட்ட தாடி, கச்சிதமான வெள்ளை அங்கி, விலை உயர்ந்த கண்ணாடி. லண்டன், லாஸ் எஞ்சல்ஸ், பாரிஸைப் பற்றி  மேலை நாட்டவரைக் காட்டிலும் தனக்கு நன்றாகத் தெரியும் என்பதை சுத்தமானஅமெரிக்க ஆங்கிலத்தில் வெளிப்படுத்தினார். “இளைஞனாக இருப்பதற்கு உலகிலேயே சிறந்த இடம் இதுதான். பி.எச்டி வரையில் படிப்பதென்றாலும் அரசாங்கம் பணம் கொடுக்கிறது. திருமணமானால் இலவச வீடு. இலவச மருத்துவம் – இங்கே வேண்டாமென்றால் வெளிநாட்டு மருத்துவமனையில். தொலைபேசி இலவசம். அநேகமாக எல்லோருக்கும் ஒரு வேலைக்காரி, ஒரு தாதி, ஒரு ஓட்டுனர். வரி என்பதே கிடையாது. துபாயில் பிறந்திருக்கக்கூடாதா என்று உங்களுக்குத் தோன்றவில்லையா?”

இந்த துதிபாடல் மீது கேள்வி எழுப்ப நான் முயன்றவுடனே அவன் சொன்னான்,    “இதோ பாருங்கள். என்னுடைய தாத்தா அன்றாடம் காலையில் கண்விழித்தவுடன் கிணற்றுக்கு ஓடுவார். தண்ணீருக்காக அவர் சண்டை போடவேண்டும். கிணறுகள் வற்றி விட்டால் ஒட்டகத்தின் மூலம்தான் தண்ணீர் கொண்டுவர வேண்டும். நிரந்தரமாக பசி, தாகம், வேலையின்மை. என் தாத்தாவுக்கு கால் எலும்பு உடைந்தது. மருத்துவம் கிடையாது. ஆயுள் முழுதும் நொண்டிக்கொண்டிருந்தார். இப்போது எங்களைப் பாருங்கள்!”

அவர்களைப் பொருத்தவரை அரசாங்கம் ஒரு கிறிஸ்துமஸ் தாத்தா. அது எப்படியோ பணம் பண்ணுகிறது. ஆனால் இவர்களுக்கு வாரிக்கொடுக்கிறது. ஆனால் எல்லா இளைஞர்களும் அகமதுவைப் போலத்தான் சிந்திக்கிறார்களா? பத்திரிகையாளரும் சீர்திருத்தவாதி என்று அறியப்படுபவருமான 31 வயது சுல்தான் அல் குசேமியை சந்தித்தேன். மேற்கத்திய உடை அணிந்திருந்தார். அதி வேகமாகப் பொரிந்து தள்ளினார்.“மக்கள் சோம்பேறிகளாகிக் கொண்டிருக்கிறார்கள். அம்மா அப்பாவால் பெத்த பிள்ளைகளைக் கூட வளர்க்க முடியாதா என்ன? அரசாங்கம் ரொம்பவும் தான் சீராட்டுகிறது” என்று சீறினார்.

துபாய்
அடிமைகள் உழைப்பில் அதிசயங்கள் - துபாயின் செயற்கை தீவுகள்

ஆனால் அடிமை உழைப்புதான் துபாயை உருவாக்கியிருக்கிறது என்ற விசயத்தை நான் பேசத்தொடங்கியதுமே அவர் ஆத்திரப்பட்டார். “அவர்கள் எங்களுக்கு நன்றி சொல்லவேண்டும். உலகத்திலேயே மிகவும் சகிப்புத்தன்மை கொண்ட மக்கள் நாங்கள்தான். இங்கே வருபவர்கள் எல்லோரும் மரியாதையாகத்தான் நடத்தப்படுகிறார்கள்” என்றார்.

சோனாப்பூர் என்றொரு இடம் இருப்பதாவது அவருக்குத் தெரியுமா? மெல்லக் கேட்டேன். அவர் ஆத்திரத்தில் வெடித்தார். “நியூயார்க்கில் மெக்சிகோகாரர்கள் மோசமாக நடத்தப்படவில்லையா? மக்களை கவுரவமாக நடத்தவேண்டும் என்று புரிந்து கொள்வதற்கே பிரிட்டனுக்கு எத்தனை காலம் பிடித்தது? நானும் லண்டனுக்கு வந்து ஆக்ஸ்போர்டு வீதியில் இருக்கும் வீடற்றவர்களைப் பற்றி எழுதி, ஒரு மோசமான நகரமாக அதை சித்தரிக்க முடியாதா? பிடிக்கவில்லை என்றால் தொழிலாளிகள் போகலாம். இந்தியனோ, ஆசியனோ.. பிடிக்கவில்லை என்றால் கிளம்பட்டுமே.”

“கிளம்பமுடியாதே. அவர்களுடைய பாஸ்போர்ட்டை பிடுங்கி வைத்திருக்கிறார்கள். சம்பளமும் கொடுப்பதில்லை” என்றேன். உடனே “அப்படி நடந்திருந்தால் அது தவறுதான். யாராயிருந்தாலும் தண்டிக்கப்படவேண்டும்” என்றார்.

“நீங்கள் ஏன் தொழிலாளிகளின் வேலைநிறுத்த உரிமையைப் பறித்து அவர்கள் மீது வன்முறையை ஏவுகிறீர்கள்?” என்றேன். “கடவுளே, வேலை நிறுத்தத்தை நாங்கள் அனுமதிக்கவே முடியாது. அது பெரிய அசௌகரியம். வேலையை நிறுத்தி விட்டு தெருவுக்கு வருவார்கள். நாங்கள் பிரான்சு மாதிரி ஆவதை அனுமதிக்க முடியாது.” என்றார்.

“அப்படியானால் ஏமாற்றப்பட்ட தொழிலாளிகள் என்னதான் செய்வது?” என்று கேட்டேன். “நாட்டை விட்டுப் போகட்டும்” என்றார். நான் பெருமூச்சு விட்டேன்.   “மேலை நாட்டுக்காரர்களுக்கு எங்களைக் குறை சொல்வதே வேலையாகிருக்கிறது” என்று அலுத்துக் கொண்ட சுல்தான், தன் குரலை கீச்சுக்குரலாக மாற்றிக் கொண்டு, “மிருகங்களை நல்லபடியாக நடத்தமாட்டீர்களா?” “உங்கள் ஷாம்பூ விளம்பரத்தை கொஞ்சம் தரமாக செய்யக்கூடாதா?” “தொழிலாளிகளை கவுரவமாக நடத்தக்கூடாதா?” என்று கிண்டலாகப் பேசிக்காட்டினார்.

விலங்குகள், ஷாம்பூ விளம்பரம் அப்புறம் தொழிலாளிகள்! இந்த வரிசைக் கிரமத்தின் அமைப்பே உண்மையை எடுத்தியம்புகிறது.

“மேற்குலக பத்திரிகையாளர்கள் எங்களை விமரிசிப்பதன் மூலம், தங்கள் பாதங்களையே சுட்டுக் கொள்கிறார்கள்” என்று கூறி புன்னகைத்தார் சுல்தான்.  “துபாய் தோற்றுவிட்டால், மத்திய கிழக்கு மிகவும் அபாயகரமான பகுதியாக மாறும். ஒரு நவீன முஸ்லிம் நாடாக இருப்பது எப்படி என்பதை நாங்கள் காட்டிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் தோற்றால் துபாய் இரானின் வழியில் இசுலாமியப் பாதையில் சென்றுவிடும்”என்றார்.

 •• ••

புள் டெக்கர். இது பிரிட்டனிலிருந்து குடியேறியவர்கள் கூடும் ஓட்டல். “துபாயின் வாழ்க்கை முறைக்காகத்தான் இங்கே தங்குகிறோம்” என்று எல்லோரும் கூறுகிறார்கள். “அதென்ன வாழ்க்கை முறை?” என்று கேட்டால் பலருக்கு விளக்கத் தெரியவில்லை. ஆன் வார்க் என்ற பெண்மணி அதை விளக்குகிறார். “ அன்றாடம் இரவு இங்கே கேளிக்கைதான். நம் ஊரில் அப்படி கிடையாது. நிறைய ஓய்வு நேரம் இருக்கிறது. பணிப்பெண்களும் ஆட்களும் இருப்பதால் நமக்கு வேலை இல்லை. எப்போதும் பார்ட்டிதான்”

இருந்தாலும் துபாயில் அவர்களுக்கு ஏமாற்றமும் உண்டு. “இங்கே விபத்து கேசில் சிக்கிவிட்டால் அப்பப்பா பயங்கரம். ஒரு பிரிட்டிஷ் பெண் எவனோ ஒரு இந்தியன்மீது காரை ஏற்றிவிட்டாள். அதற்காக 4 நாள் அவளை லாக் அப்பில் வைத்து விட்டார்கள். இந்த இந்தியர்கள் இருக்கிறார்களே, அவர்கள் வேண்டுமென்றே காரில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறார்கள். செத்தால் அவர்களுடைய குடும்பத்துக்கு பணம் கிடைக்குமே அதற்குத்தான். ஆனால் போலீசு நம்மைத்தான் குற்றம் சொல்லும். பாவம் அந்தப் பெண்!” என்றாள் ஜூலிஸ் டெய்லர்.

“அதெல்லாம் இருக்கட்டும். ஜனநாயகமே இல்லாத ஒரு நாட்டில் வாழ்வது எப்படி இருக்கிறது?” என்று கேட்டேன். சிலர் என்னை விநோதமாகக் கருதிப் பார்த்தார்கள். சிலர் தம்மை அவமானப் படுத்தியதாக கருதினார்கள். “இது அரேபியக் கலாச்சாரம்” என்று கத்தினான் ஒரு இளைஞன்.

பிறகு அழகு சாதனத் துறையில் வேலை செய்யும் ஒரு அமெரிக்கப் பெண்ணிடம் பேச்சுக் கொடுத்தேன். “சொந்த ஊரில் விலைபோகாதவன் எல்லாம் இங்கே வந்து சேர்கிறார்கள். தங்கள் தகுதிக்கு மீறிய உயர் பதவி, பணத்தில் திடீரென்று குளிப்பதால், தங்கள் தனித்திறமை பற்றி பினாத்துகிறார்கள். எதற்கும் லாயக்கில்லாத மனிதர்கள் உயர்பதவிகளில் நிறைந்திருப்பதை உலகில் வேறு எங்கும் நான் கண்டதில்லை. இங்கே ஐரோப்பியப் பெண்கள் செய்யும் அதே வேலையை பிலிப்பைன்ஸ் பெண்கள் செய்கிறார்கள் – ஆனால் அவர்களுக்கு கால் பங்கு சம்பளம்தான். பச்சையான நிறவெறி!” என்று அவள் பொரிந்து தள்ளினாள்.

இந்தப் பெண் மட்டும் ஒரு விதிவிலக்கு. மற்றப்படி இங்கே மேல்நாட்டினர் அனைவரும் கருத்தொருமிக்கும் ஒரே விசயம் – பணிப்பெண்கள். நீங்கள் இங்கே ஒருபெண்ணை வேலைக்கு அமர்த்திக் கொண்டுவிட்டால்,  அவள் பாஸ்போர்ட்டை பிடுங்கி வைத்துக் கொண்டுவிடலாம். அதுதான் இங்கே மரபு. பிறகு அவளுக்கு என்ன வேலை, எப்போது ஓய்வு, எப்போது சம்பளம், அவள் யாருடன் பேசலாம், பேசக்கூடாது என்று அனைத்தையும் நீங்கள் முடிவு செய்யலாம்.

துபாய்
பகலிலும் இருண்டு போன அடிமைகளின் வாழக்கை மீது ஒளிமையாமான துபாயின் இரவு வாழ்க்கை

ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டு சுற்றுலாப்பயணி சொன்னாள். “மால்களில் நடமாடுவதற்கே பயமாக இருக்கிறது. என்னைப் பார்த்தவுடன் பல பணிப்பெண்கள் ஓடி வருகிறார்கள். ‘காப்பாற்றுங்கள். என்னைக் கைதியாக வைத்திருக்கிறார்கள். வீட்டுக்கு போன் பேச விடுவதில்லை. ஓய்வு நாளே இல்லை’ என்று கதறுகிறார்கள்.  ‘அப்படியா, தூதரகத்துக்கு தெரிவிக்கிறேன். எங்கே வேலை பார்க்கிறீர்கள். அந்த வீட்டின் முகவரியைச் சொல்லுங்கள்’ என்று கேட்டால் அவர்கள் யாருக்கும் முகவரி தெரிவதில்லை. தூதரகமோ இவர்களைப் பற்றிக் கவலைப்படுவதேயில்லை. என்னால் எதுவும் செய்ய முடியாத கையறு நிலை!” என்றாள்.

துபாயில் பெண்களுக்காக ஒரேயொரு விடுதிதான் இருக்கிறது. அதில் இருப்பவர்கள் அனைவரும் தப்பித்து வந்த பணிப்பெண்கள். மேலா மாதாரி என்ற எத்தியோப்பியப் பெண் தன் கதையை சொல்கிறாள். இது சொர்க்கம் என்று நம்பித்தான் 4 வயது மகளை ஊரில் விட்டு விட்டு அவள் இங்கே வந்திருக்கிறாள். நான்கு குழந்தைகள் கொண்ட ஒரு ஆஸ்திரேலிய குடும்பத்தில் வேலை. சொன்ன சம்பளத்தில் பாதிதான் கொடுத்தார்கள். அன்றாடம் 19 மணிநேர வேலை. விடுமுறை கேட்டதற்காக வீட்டு எசமானி அடித்திருக்கிறாள். இரண்டு வருட ஒப்பந்தம் முடியும்போதுதான் சம்பளம் தருவேன் என்கிறாள் எசமானி. ஒரு நாள் அடி பொறுக்க முடியாமல் வீட்டை விட்டு தப்பித்து வந்து எத்தியோப்பிய தூதரகத்தை தேடி இரண்டு நாட்கள் நடந்திருக்கிறாள். அவர்களோ பாஸ்போர்ட்டை வாங்கிக் கொண்டு வந்தால்தான் உன்னை ஊருக்கு அனுப்ப முடியும் என்கிறார்கள். “நாட்டை இழந்தேன். மகளை இழந்தேன். எல்லாவற்றையும் இழந்து விட்டேன்” என்கிறாள் மேலா.

“துபாயில் உங்களுக்கு ரொம்பவும் பிடித்த விசயம் என்ன?” என்று டபுள் டெக்கர் ஓட்டலில் ஒரு பிரிட்டிஷ் பெண்ணிடம் கேட்டேன். “வேலைக்காரர்கள்” என்று அவள் கூவிய குரல் என் காதிலேயே இருக்கிறது. “நீங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை. அவர்களோ உங்களுக்கு எது வேண்டுமானாலும் செய்வார்கள்”

  •• ••

துபாய் முழுவதும் பல கிறுக்குத்தனமான திட்டங்கள் பொருளாதர மந்தத்தின் காரணமாகப் பாதியில் தொங்குகின்றன.  குளிரூட்டப்பட்ட கடற்கரை ஒன்றைக் கட்டிக் கொண்டிருந்தார்கள். கடல் மணலுக்கு அடியில் குளிரூட்டும் குழாய்கள். தண்ணீரில் கால் வைப்பதற்கு முன் பணக்காரர்களின் பாதங்கள் பொசுங்கிவிடக்கூடாதல்லவா – அதற்காக.

அட்லான்டிஸ் – செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு  தீவில் 1500 அறைகள் கொண்ட உல்லாச விடுதி. தென் ஆப்பிரிக்கப் பெண் எனக்கு விடுதியை சுற்றிக் காட்டுகிறாள். நெப்டியூன். இது 3 மாடிகள் கொண்ட ஒரு அறை. அறையின் கண்ணாடிச் சுவர்களுக்கு வெளியே கடல்.  கட்டிலில் படுத்தால் கண்ணாடிக்கு அந்தப்புறத்திலிருந்து சுறாமீன்கள் உங்களை வெறிக்கும். இதுதான் உலகின் அதி உயர் ஆடம்பரம். அந்த ஓட்டலின் உணவு மேசையில் நான். என்னைத்தவிர ஒரு நாதியில்லை. பொருளாதார மந்தம். ஓட்டலே காலியாக இருக்கிறது. அட்லான்டிஸ் அழிந்து போன கண்டமல்லவா?

துபாயின் பெருமிதம் என்று கூறப்படும் புர்ஜ் அல ஆரப் விடுதி. லண்டனிலிருந்து வந்திருந்த ஒரு ஜோடியிடம் பேச்சுக்கொடுத்தேன். பத்து ஆண்டுகளாக வருகிறோம். ஒவ்வொரு முறையும் புதிதாக ஒரு மாற்றம் இருக்கும். வழக்கமாக நாங்கள் தங்கும் அறையின் சன்னலுக்கு வெளியே போன வருடம் கடல் இருந்தது. இந்த வருடம் அந்த இடத்தில் ஒரு தீவையே உருவாக்கி விட்டார்கள்.”

எங்கும் நிறைந்திருக்கும் வேலைக்கார அடிமைகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டேன். “அதற்காகத்தானே வருகிறோம். அற்புதம்! உங்களுக்காக உங்களை கையால் எந்த வேலையையும் நீங்கள் செய்ய முடியாது” என்றாள் மனைவி. கணவன் தொடர்ந்தான், “குளியலறைக்குப் போனால் கதவைத் திறந்து விடுகிறார்கள். குழாயையும் திறந்து விடுகிறார்கள். அதற்கப்புறம் உங்கள் முயற்சியில்தான் சிறுநீர் கழிக்கவேண்டும். அதற்கு அவர்கள் உதவ முடியாது”  சொல்லிவிட்டு இருவரும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்.

  •• ••

ங்கே நிலத்தடி நீர் கிடையாது. இருப்பது மிகவும் சொற்பம். துபாய் கடலைக் குடிக்கிறது. கடல்நீரை சுத்திகரித்துக் குடிநீராக்கும் நிலையங்கள் வளைகுடாவெங்கும் இருக்கின்றன. உலகிலேயே இதுதான் மிகவும் விலை உயர்ந்த தண்ணீர். பெட்ரோலைச் சுத்திகரித்து எடுப்பதைக் காட்டிலும் தண்ணீரை சுத்திகரிக்கும் செலவு இங்கே அதிகம். பொருளாதார நெருக்கடி முற்ற முற்ற இங்கே தண்ணீரும் வற்றத் தொடங்கும். ஒரு வாரத்துக்குத் தேவையான தண்ணீர் மட்டுமே துபாயின் கையிருப்பு. ஏதாவது காரணத்தால் சுத்திகரிப்பு நின்றாலோ அல்லது எண்ணெய்க்கு மாற்றாக வேறொரு எரிபொருளை உலகம் கண்டுகொண்டாலோ .. அவ்வளவுதான்.

“இது பாலைவனம். அதன் சூழலை மறுக்க நாம் முயற்சிக்கிறோம். பாலைவனத்துடன் மோதினால் நாம் தோற்றுவிடுவோம்” என்கிறார் வளைகுடா ஆராய்ச்சி மையத்தின் சுற்றுச்சூழல் இயக்குநர் முகமது ரவூப்.

“துபாயில் எல்லாமே பொய். காண்பதனைத்தும் பொய். மரங்கள் பொய், தொழிலாளிகளின் ஒப்பந்தங்கள் பொய், தீவுகள் பொய், புன்னகைகள் பொய், இந்தத் தண்ணீரும் பொய். ஆனால் நான் இங்கே சிக்கிவிட்டேன்” என்று சொல்லிப் பெருமூச்செறிந்து விட்டு  தொடர்கிறாள் வரவேற்பறையில் நிற்கும் பிலிப்பைன்ஸ் பெண், “துபாய் ஒரு பாலைவனக் கானல்நீர். அது ஒரு மாயை. தூரத்திலிருந்து பார்த்தால் தண்ணீர் தெரியும். தாகத்துடன் நெருங்கிச் சென்றால் வாய் நிறைய மணல்தான் கிடைக்கும்”

அவள் சொல்லி முடிப்பதற்குள் ஓட்டலுக்குள் ஒரு புதிய வாடிக்கையாளர் நுழைகிறார். “ஐயா, இன்றிரவு உங்களுக்கு எந்த விதத்தில் நான் உதவ முடியும்?” வலிந்து வரவழைக்கப்பட்ட துபாய் சிரிப்பில் விரிகிறது அவள் முகம்.

  •• ••

_____________________________________

மத்திய கிழக்கின் சொர்க்கமாகவும், மேற்கத்திய முதலாளித்துவம் மற்றும் அரேபியத் தொழில்முனைவின் ஒளிமிக்க சின்னமாகவும் சித்தரிக்கப்படும் துபாயின் இருண்ட பக்கத்தை அம்பலப்படுத்துகிறார் ஜோஹன் ஹாரி. லண்டனிலிருந்து வெளிவரும் இன்டிபென்டெட் நாளேட்டில் (7.04.09) வெளிவந்த அவரது கட்டுரையின் சுருக்கப்பட்ட தமிழாக்கம் இது.

தமிழாக்கம்: மருதையன்

__________________________________________________________

புதிய கலாச்சாரம், மார்ச் – 2012.

___________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

ஜெனிவா தீர்மானம்: முப்பதாண்டுகளாக உருகாத வெண்ணெய், சிக்காத கொக்கு!

49

ஜெனிவா தீர்மானம் : முப்பதாண்டுகளாக உருகாத வெண்ணெய், சிக்காத கொக்கு !ராஜபக்சே அரசு நடத்திய இன அழிப்புப் போர் தொடர்பாக விசாரிப்பதற்கு, ராஜபக்சே அவர்களால் நியமிக்கப்பட்ட LLRC குழுவின் பரிந்துரைகளை, ராஜபக்சே அரசு விரைந்து நிறைவேற்றியிருக்கிறதா என்பதை, ஐ.நா மனித உரிமைகள் குழு கண்காணிக்க வேண்டும் என்பது ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம்.

மனித உரிமை என்பது மற்ற நாடுகளின் கையை முறுக்குவதற்கு அமெரிக்கா பயன்படுத்தும் கருவி என்பதும் ஐ.நா மன்றம் எனப்படுவது அமெரிக்க ஆக்கிரமிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கும் ரப்பர் முத்திரை என்பதும் எவ்வளவு உண்மையோ, அதே அளவிற்கு, ராஜபக்சே போன்ற பாசிசக் கிரிமினல்கள், தமது குற்றத்தை மறைத்துக்கொள்ளும் முகத்திரையாக மட்டுமே இறையாண்மை என்ற சொல் பயன்படுகிறது என்பதும் உண்மை.

இலங்கையின் இறையாண்மை விசயத்தில் இலங்கையை விடவும் அதிகமாக இந்திய அரசுதான் கவலைப்பட்டு வருகிறது என்பதே வரலாறு. இப்போதும் கூட அமெரிக்காவின் தீர்மானத்திற்கு திருத்தம் கொண்டு வந்திருக்கிறது இந்தியா. “ராஜபக்சே ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் ஐ.நா கண்கணிக்கலாம்” என்பது இந்தியா இந்த தீர்மானத்துக்கு கொண்டு வந்திருக்கும் திருத்தம்.

நேற்றைய தினமணியின் முதல் பக்க செய்தியைப் படித்துப் பாருங்கள்:

“போர் முடிந்து 3 ஆண்டுகள் ஆன பின்னரும் மனித உரிமை மீறல் பற்றி விசாரித்து எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்று தீர்மானத்தினை அறிமுகப்படுத்தும் அமெரிக்க பிரதிநிதி பேசுகிறார்.

“போர் முடிந்து 3 ஆண்டுகளே ஆகியுள்ளது. மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த நாடுகள் பேசியிருக்கின்றன.

“இலங்கை போன்ற ஒரு ஜனநாயக நாட்டுக்கு அமைதி மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள போதிய அவகாசம் வழங்க வேண்டும்” என்று தீர்மானத்தை எதிர்த்துப் பேசிய இந்தியப் பிரதிநிதி, வாக்கை மட்டும் தீர்மானத்துக்கு ஆதரவாக அளித்திருக்கிறார். இந்தியா முன்வைத்த திருத்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது.

திருத்தப்பட்ட இந்த தீர்மானம், 2009 நாடாளுமன்றத் தேர்தல் நாளுக்கு முன், கருணாநிதி உண்ணாவிரதமிருந்து பெற்றுத்தந்த “போர்நிறுத்தத்தையும்”, ஈழத்தாய் வாங்கித் தர விரும்பிய “தமிழ் ஈழத்தையும்”  ஒத்ததாக இருப்பதனாலோ என்னவோ, கருணாநிதி ஜெயலலிதா ஆகிய இருவருமே இதனை ஆதரித்திருக்கின்றனர்.

இந்திய அரசின் உதவியும் வழிகாட்டுதலும் இல்லாமல் இன அழிப்புப் போரை ராஜபக்சே துவங்கியிருக்கவும் முடியாது, முள்ளிவாய்க்காலில் முடித்திருக்கவும் முடியாது என்பது அனைவரும் அறிந்த, மறுக்கவியலாத உண்மை.  எனினும், அமெரிக்க அரசின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென்று, தமிழக காங்கிரசு தொடங்கி, தமிழுணர்வாளர்கள் வரை அனைவரும் ஓரணியில் நின்று மத்திய அரசிடம் வலியுறுத்தினார்கள்.

மன்மோகன் அரசின் முடிவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் இன அழிப்புப் போர்க்குற்றத்திற்காக ராஜபக்சே அரசாங்கத்தின் மீது சர்வதேச விசாரணக்குழுவின் நேரடி விசாரணை நடத்தப்படவேண்டும் என்ற திருத்தத்துடன் இந்தியா இத்தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்றும் கோரினார் பழ.நெடுமாறன்.

ஈழத்தமிழர்களின் கழுத்தில் ஈரத்துணி போட்டு இறுக்கிய இந்திய அரசு, கத்தி வைத்து அறுத்த ராஜபக்சேவுக்கு எதிராக வாக்களித்தால், அது இந்தியா செய்த பாவத்துக்குப் பிராயச்சித்தமாகி விடுமா? இன அழிப்புப் போர்க்குற்றத்துக்காக ராஜபக்சே மீது இந்தியா விசாரணை கோரவேண்டும் என்றால், இந்தக் குற்றத்தின் பங்காளியும் வழிகாட்டியுமான இந்தியா மீது யார் விசாரணை கோருவார்கள்? இந்தியக் குடிமகன் என்ற முறையில் இந்திய அரசின் குற்றத்தை அம்பலப்படுத்திக் கூண்டிலேற்றுவது நம்முடைய கடமையா, அல்லது இந்திய ஆளும் வர்க்கத்தை தப்பவைப்பதா?

இந்த விமரிசனம் தமிழுணர்வாளர்களுக்கு உவப்பானதாக இருக்காது. அமெரிக்க ஏகாதிபத்தியம், இந்திய வல்லாதிக்கம் பற்றியெல்லாம் தங்களுக்குத் தெரியுமென்றும், ராஜபக்சே அரசை சர்வதேச சமூகத்தின் முன் கூண்டிலேற்றுவதற்கு கிடைத்த ஒரு வாய்ப்பாக மட்டுமே இதனைப் பயன்படுத்திக் கொள்வதாகவும் அவர்கள் கூறக்கூடும்.

“இது இந்தியக் கொக்கின் தலையில் வெண்ணெய் வைத்து அமுக்கும் ராஜதந்திரம்” என்றும் அவர்கள் இதற்கு விளக்கம் தருவார்கள். இதுவும் 1983 முதல் நாம் பலமுறை கேட்டுப் புளித்த வசனம்தான். இந்திய உதவியுடன் ஈழ விடுதலையை சாதிக்க முடியும் என்று நம்ப வைத்து தமிழக, ஈழ இனவாதிகள் 1983 முதல் நடத்திவரும் சந்தரப்பவாத அரசியலின் நீட்டிப்புதான் இன்றைய கோரிக்கையும்.

மறுபடியும் முதல்லேர்ந்தா? அமாம், அதுவேதான்.

000

இனி தீர்மானத்துக்கு வருவோம். இரந்தேனும் இந்திய அரசின் ஆதரவைப் பெறவேண்டிய அளவுக்கு அந்த தீர்மானத்தில் என்ன இருக்கிறது? ஐ.நாவின் மனித உரிமைகள் மன்றத்தின் முன் வைக்கப்பட்ட அமெரிக்க அரசின் நகல் தீர்மானம், இலங்கையின் மீது இனக்கொலைக் குற்றமோ, போர்க்குற்றமோ சாட்டவில்லை. இத்தகைய குற்றங்கள் தொடர்பாக ஒரு சுயேச்சையான சர்வதேச விசாரணை வேண்டும் என்றும் கோரவில்லை.

மாறாக, “ராஜபக்சே அரசால் நியமிக்கப்பட்ட Lessons Learnt and Reconcilliation Commission (படிப்பினைகளைக் கற்றல் மற்றும் நல்லிணக்கத்தை உருவாக்குதலுக்கான ஆணையம்) முன்வைத்துள்ள ஆக்கபூர்வமான பரிந்துரைகள் இலங்கையின் தேசிய நல்லிணக்கத்துக்கு வழிவகுக்கும்” என்று பாராட்டுகிறது. அதன் ஆக்கபூர்வமான சிபாரிசுகளை அமல்படுத்துமாறும், எல்லா இலங்கையர்களுக்கும் நீதி, சமத்துவம் மற்றும் நல்லிணக்கத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும், இதற்கான திட்டவரைவு ஒன்றினை, சாத்தியப்பட்ட அளவு விரைவில் முன்வைக்குமாறும் கோரியிருக்கிறது.

LLRC என்ற அமைப்பை ராஜபக்சே அரசு நியமிப்பதற்கான நோக்கம் என்ன? இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச அரங்குகளுக்கு இழுக்கப்படுவோமென்பதை இலங்கை அரசு அறியும். நீதியைப் பெறுவதற்கான வாய்ப்புகள் இலங்கையில் அடைபட்டுவிடவில்லை என்று காட்டுவதன் மூலம் சர்வதேச தலையீட்டினை முறியடிப்பதுதான் ராஜபக்சே LLRC என்ற அமைப்பை நியமிப்பதற்கான நோக்கம். இது லாக் அப் கொலை நடந்தவுடன் அரசு போடும் ஆர்.டி.ஓ விசாரணையைப் போன்றது.

போரின் துவக்க காலத்தில், சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்கள் இராணுவத்தால் கொலை செய்யப்பட்டது மற்றும் பிற மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் எழுந்ததையொட்டி, அவற்றை சமாளிப்பதற்காக, 2007 இல் “சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழு” ஒன்றை, ஓய்வு பெற்ற இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி பி.என்.பகவதி தலைமையில் இலங்கை அரசு நியமித்தது. அதுவும் LLRC யைப் போன்றதொரு இழுத்தடிப்புத் தந்திரமே. இந்த தந்திரங்கள் அனைத்தையும் இந்தியாதான் இலங்கைக்குச் சொல்லிக் கொடுத்து வருகிறது.

தற்போது இந்தியா கொண்டுவந்திருக்கும் திருத்தம், “தொழில் நுட்ப உதவி” என்ற ஷரத்தின் கீழ் இலங்கை மனித உரிமை மீறல் விசாரணைகளில் ஐ.நா தலையிடுவதற்கான வாய்ப்பையும் அடைத்து விட்டது. தீர்மானத்தை ஆதரிப்பது என்ற பெயரில் இந்தியா கொண்டு வந்திருக்கும் இந்த “சின்ன” திருத்தம், மனித உரிமைக் கமிசனிடமிருந்து இலங்கையைக் காப்பாற்றும் கவசமாக செயல்படும். இது இந்திய இலங்கை அரசுகள் பேசி வைத்துக் கொண்டு நடத்தியிருக்கும் கபட நாடகம்.

ஐ.நா தீர்மானத்தை ஆதரிக்குமாறு இந்திய அரசிடம் மன்றாடியவர்கள், இனப்படுகொலைக் குற்றவாளியான மன்மோகன் அரசை, அக் குற்றத்திலிருந்து விடுவித்தது மட்டுமின்றி, நீதிபதியாகவும் நியமித்து விட்டார்கள். தீர்ப்பை “திருத்தி” எழுதி, குற்றவாளி ராஜபக்சேவை விடுவித்து விட்டார் மன்மோகன் சிங்.

இந்தியக் கொக்கின் தலையில் 30 ஆண்டுகளுக்கு முன், 1983 இல்  தமிழுணர்வாளர்கள் வெண்ணெய் வைத்தார்கள்.

“உருகு .. உருகு” என்று வெண்ணெயிடமும் கொக்கிடமும் மாறி மாறி இவர்கள்தான் மனமுருகினரேயன்றி, வெண்ணெய் உருகவில்லை.

உருகும் என்பது உணர்வாளர்களின் நம்பிக்கை.

__________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

_______________________________________________________

_______________________________________________________

_______________________________________________________

_______________________________________________________

_______________________________________________________

_______________________________________________________

_______________________________________________________

_______________________________________________________

_______________________________________________________

” நடனத்திற்குப் பின் ” – டால்ஸ்டாயின் புகழ்பெற்ற சிறுகதை!

7

முன்னுரை:

எதனால் காதல் வயப்படுகிறோம் என்பதற்கு ஆழமான காரணங்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் எதனால் காதலை துறக்கிறோம் என்பதற்கு ஆழமான காரணங்கள் இருந்தாக வேண்டும். புறத் தோற்றம் காதலிப்பதற்கும், அகக் கட்டமைப்பு காதலின் பிரிவுக்கும் காரணமாக இருக்கிறது என்பதை இங்கு ஒரு தேர்ந்த திரைப்பட இயக்குநர் போல டால்ஸ்டாய் படம் பிடித்துக் காட்டுகிறார்.

மனிதர்களின் வாழ்வில் தற்செயலாக நடக்கும் சம்பவங்களே அவர்களது வாழ்வில் தீர்மானகரமான பாத்திரத்தை ஏற்படுத்துவதாக இக்கதையில் வரும் கதை சொல்லி கூறுகிறான். இதையே எழுத்தாளர் ஜெயமோகனும் பலமுறை சலிப்பூட்டும் விதத்தில் சுற்றி வரும் சொல்லாடல்கள் மூலம் கூறியிருக்கிறார்.

ஆனால் வாழ்வில் வரும் தற்செயலான சம்பவங்கள் நம் அகத்தில் சுற்றுப்புறச்சூழலினால் அல்லது அவரவருக்கு கிடைத்திருக்கும் சமூக சூழலின் மதிப்பீடுகளின்படிதான் பாதிப்பு ஏற்படுத்துமே அன்றி அவை முற்றிலும் தற்செயலானதல்ல. அதாவது அதன் நிகழ்வு மற்றுமே தற்செயலாக இருக்குமே அன்றி அதன் விளைவு நீடித்து வரும் சமூக மதிப்பீடுகளோடு தொடர்பு உடையவை.

ஒரு மனிதனின் வாழ்வில் அவனது வர்க்கம், சமூக சூழ்நிலை என்னென்ன விதத்தில் பாத்திரம் ஆற்றுகிறது, காதல், காதலின் சர்வலோக அன்பு மயத்தின் காரணம், என்று இந்தக் கதை முக்கியமான சில விசயங்களை அலசுகிறது.

கதையின் ஆரம்பத்தில் கதை சொல்லி எதன் பொருட்டு இந்தக் கதையை சொல்ல வந்தானோ அதை மறுத்தே கதையின் முடிவு இருக்கிறது. இதை உங்களால் கண்டு பிடிக்க முடியுமென்றால் நீங்கள் மார்க்சியத்தின் முதல் பாடத்தை கற்றுக் கொண்டவராகிறீர்கள் என்பதோடு ஜெயமோகன் போன்ற இலக்கியவாதிகளையும் புரிந்து கொள்ளும் சக்தியை வரித்துக் கொண்டவராவீர்கள். முயன்று பாருங்களேன்!

– வினவு

_______________________________________

ப்படியானால் நீங்கள் சொல்லுகிறீர்கள், நல்லது எது, கெட்டது எது என்று தானாகவே புரிந்துகொள்ள மனிதனால் முடியாது, எல்லாம் சுற்றுச் சார்பைப் பற்றிய விஷயம், மனிதன் சுற்றுச் சார்புக்கே வசப்பட்டவன் என்று. ஆனால் நானோ, எல்லாம் தற்செயலைச் சார்ந்த விஷயம் என்று கருதுகிறேன். என்னைப் பற்றியே சொல்கிறேன், கேளுங்கள்….”

தனி மனிதனைச் செவ்வைப்படுத்துவதற்கு மக்கள் வாழ்ந்துவரும் நிலைமைகளை மாற்றுவது இன்றியமையாதது என்பது பற்றி எங்களுக்குள் நடந்த உரையாடலின் முடிவில், எல்லோராலும் மதிக்கப்படும் இவான் வஸீல்யெவிச் இவ்வாறு கூறினார்.  நல்லது எது, கெட்டது எது என்று தானாகவே புரிந்துகொள்ளது இயலாது என உண்மையில் யாருமே சொல்லவில்லைதான், ஆயினும் உரையாடலினால் தூண்டிவிடப்படும் தமது சொந்த எண்ணங்களுக்கு விடையளிப்பதும், இந்த எண்ணங்களின் தொடர்பாகத் தன் வாழ்க்கை நிகழ்ச்சி எதையாவது விவரிப்பதும் இவான் வஸீல்யெவிச்சின் வழக்கம். அடிக்கடி தம் கதையில் ஒரேயடியாக ஈடுபட்டுப்போய், அதைச் சொல்ல வந்த காரணம் என்ன என்பதையே மறந்து விடுவார், அதிலும் விசேஷமாக அவர் உளமாரவும் உண்மையுடனும் பேசியபடியால்.

இப்போதும் அவர் அவ்வாறே செய்தார்.

”என்னைப் பற்றியே சொல்கிறேன். என் வாழ்க்கை முழுவதும் இன்னொரு வகையில் இன்றி, இந்த வகையில் உருவாகியிருப்பது சுற்றுச்சார்பினால் அல்ல, முற்றிலும் வேறொன்றினால் தான்” என்றார்.

”எதனால்?” என்று கேட்டோம்.

”அது நீண்ட கதை. உங்களுக்குப் புரிய வேண்டுமானால் நிறையச் சொல்ல நேரும்.”

”சொல்லுங்களேன்.”

இவான் வஸீல்யெவிச் சற்று யோசித்துவிட்டுத் தலையை ஆட்டினார்.

”ஆம், ஒரே இரவில், அல்லது அதிகாலையில் நடந்த நிகழ்ச்சியால் என் வாழ்க்கை முழுவதுமே மாறிவிட்டது” என்றார்.

”ஏன்? என்ன நடந்தது?”

”நடந்தது என்ன வென்றால், அப்போது நான் ஆழ்ந்த காதல் கொண்டிருந்தேன். முன்பும் பல தடவை நான் காதலித்தது உண்டுதான், இருந்தாலும் இம்முறை ஒரு போதுமில்லாத அளவு ஆழ்ந்த காதல் கொண்டு விட்டேன். என்றைக்கோ நடந்துபோன சேதி. அவளுடைய பெண்களுக்கு எப்போதோ கலியாணாமாகிவிட்டது. அவள் பெயர் ப…. ஆம், வாரெனிகா ப….” (இங்கே இவான் வஸீல்யெவிச் அவளுடைய குலப்பெயரைக் கூறினார்.)

”ஐம்பது வயதிலே கூட அவள் குறிப்பிடத்தக்க அழகியாகத் திகழ்ந்தாள். இளமையில், பதினெட்டாண்டுப் பருவத்திலோ, உயரமும், ஒடிசலும், ஒயிலும், பெருமிதமும் – ஆம், பெருமிதமும் – இலங்க, மோகனாங்கியாக விளங்கினாள். தலையைச் சற்றே பின்னுக்குச் சாய்த்தவாறு, எப்போதும் உடம்பை நேராகவே வைத்திருப்பாள் – குனியவே இயலாதவள் போல; ஒரே ஒடிசலாக, எலும்புந் தோலுமாகப் போல, இருந்த போதிலும், இந்த வழக்கமும், எழிலும் உயரமும் சேர்ந்து அவளுக்கு ராஜகம்பீரமான தோற்றப் பொலிவை அளித்தன. கனிவும் எப்போதும் மகிழ்ச்சிப் பெருக்கும் கொண்ட மென்முறுவல், கவர்ச்சியும் ஒளியும் சுடரும் விழிகள், இனிமையும் இளமையும் மிளிரும் தன்மை, இவையெல்லாம் இல்லாவிட்டால, இந்த ராஜகம்பீரம் அவளை அணுகவொட்டாதபடி பிறரை வெருட்டியிருக்கும்.”

”அடேயப்பா, எப்படிப் பிரமாதமாக வருணிக்கிறார் இவான் வஸீல்யெவிச்!”

”அட நான் என்னதான் பிரமாதமாக வருணித்தாலும், அவள் உண்மையில் இருந்தபடியே நீங்கள் புரிந்து கொள்ளும்படி வருணிப்பது இயலாது. ஆனால் முக்கிய விஷயம் அதுவல்ல. நான் சொல்ல வந்த நிகழ்ச்சிகள் ஆயிரத்து எண்ணூற்று நாற்பது – ஐம்பது ஆண்டுகளில் நடந்தன. அப்போது நான் பிராந்தியப் பல்கலைக் கழகம் ஒன்றில் மாணவனாயிருந்தேன். நல்லதோ கெட்டதோ, அறியேன், ஆனால் அந்தக் காலத்தில் எங்கள் பல்கலைக் கழகத்தில் எத்தகைய தத்துவ ஆராய்ச்சி வட்டங்களோ, எவ்விதமான சித்தாந்தப் பேச்சுக்களோ கிடையா; நாங்கள் வெறுமே இளைஞர்களாயிருந்தோம்; இளைஞரின் இயல்புக்கேற்ப, படிப்பதும் உல்லாசமாயிருப்பதுமாக வாழ்ந்தோம்.

நான் மிகுந்த களிப்பும் உற்சாகப் பெருக்கும் கொண்ட இளைஞன், அதோடு பணக்காரன். என்னிடம் துடியான குதிரையிருந்தது. சீமான்கள் வீட்டுப் பெண்களை அழைத்துக்கொண்டு ஸ்லேட்ஜில் சவாரி செய்வேன் (ஸ்கேட் செய்வது அப்போது மோஸ்தருக்கு வரவில்லை); நண்பர்களோடு குடியும் கேளிக்கையுமாகக் களிப்பேன் (அந்தக் காலத்திலே நாங்கள் ஷாம்பெயின் தவிர வேறு ஒன்றும் பருகுவதில்லை; பணமில்லாவிட்டால் ஒன்றுமே குடிக்க மாட்டோம், ஆனால் இப்போது போல வோத்கா குடித்ததே கிடையாது). எல்லாவற்றையும் விட எனக்கு உவப்பானவை விருந்துகளும் நடனங்களுமே. நான் நன்றாக நடனம் செய்வேன், தோற்றத்திலும் அப்படி விகாரமானவன் அல்ல.”

”ஓகோகோ, ரொம்பத்தானே சங்கோசம் பாராட்ட வேண்டாம்” என்றாள் கேட்டுக் கொண்டிருந்தவர்களில் ஒரு பெண். ”உங்களுடைய ‘டாகரோடைப்’ போட்டோவைத்தான் நாங்களெல்லோரும் பார்த்திருக்கிறோமே. விகாரமானவர் அல்ல என்று சொன்னால் போதாது. நீங்கள் அழகராயிருந்தீர்கள், ஆமாம்” எனக் கூறினாள்.

”அழகனென்றால் அழகன் என்றே வைத்துக்கொள்வோம். ஆனால் முக்கியமான விஷயம் அதுவல்ல. நான் மிக ஆழ்ந்த காதல் கொண்டிருந்த அந்தச் சமயத்தில், ‘ஷ்ரோவ்டைட்’ விழாவின் கடைசி நாளன்று குபெர்னியத் தலைமைப் பிரபு அளித்த நடன விருந்தில் கலந்து கொண்டேன். அந்த மனிதர் நல்லியல்புள்ள முதியவர், செல்வந்தர், விருந்துபசாரம் செய்வதில் விருப்பமுள்ளவர். அவரைப் போலவே இனிய சுபாவமுள்ள அவர் மனைவி, செம்பழுப்பு மகமல்கவுனும் வைர முடியணியும் இலங்க அவரருகே நின்று விருந்தினரை வரவேற்றாள். கொழுத்து வெளிறிய அவளது மூப்புற்ற கழுத்தும் தோள்களும் – பேரரசி எலிஸவெத்தா பெத்ரோவ்னாவின் படங்களில் காண்பது போல – திறந்திருந்தன.

நடன விருந்து பிரமாதம்: ஹால் நேர்த்தியாயிருந்தது; இசைப் பிரியரான ஒரு நிலப்பிரபுவின் பண்ணையடிமைகளாயிருந்த, அக்காலத்தில் புகழ் பெற்ற வாத்தியக்காரர்கள் வந்திருந்தார்கள்; உணவு வகைகள் ஏராளம்; ஷாம்பைன் கடலாகப் பொங்கிப் பெருகியது. நான் ஷாம்பெயினில் மோகங்கொண்டவனாயினும், மதுவின்றியே காதல் போதை ஏறியிருந்த படியால், குடிக்கவில்லை. ஆனால் கால்கள் தளர்ந்து தொய்யும்வரை நடனமாட மட்டும் செய்தேன். குவாட்ரில், வால்ட்ஸ்,போல்க்கா என்று எல்லா வகை நடனங்களும் ஆடினேன், அவற்றிலும் முடிந்தவரையில் வாரெனிகாவுடனேயே ஆடினேன் என்று சொல்லத் தேவையேயில்லை.

அவள் வெள்ளை உடையும், ரோஜா நிற இடைக்கச்சும், ஆட்டுக்குட்டித் தோலால் செய்த வெள்ளைக் கையுறைகளும் (இவை அவளது மெல்லிய, கூர்ந்த முழங்கை வரை எட்டியும் எட்டாமலுமிருந்தன), வெண்பட்டு ஸ்லிப்பர்களும் அணிந்திருந்தாள். மஸூர்க்கா நடனத்தில்தான் அனீஸிமவ் என்ற பாழாய்ப் போகின்ற எஞ்சினீயர் ஒருவன் அவளை என்னிடமிருந்து பறித்துக்கொண்டான் – அதன்பின் இன்றளவும் அவனை என்னால் மன்னிக்க முடியவில்லை. அவள் ஆட்ட மண்டபத்தில் அடிவைத்ததுமே அவன் அவளை நடன ஜோடியாக இருக்கும்படி வேண்டிக் கொண்டுவிட்டான்; நானோ, கையுறைகளை எடுத்து வருவதற்காக நாவிதன் கடைக்குப் போனவன், காலந்தாழ்த்துவிட்டேன்.

ஆக மஸூர்க்கா நடனம் அவளுடன் ஆடமால், முன்பு நான் ஓரளவு மோகங் கொண்டிருந்த ஜெர்மானியப் பெண் ஒருத்தியுடன் ஆடினேன். ஆனால் அன்று மாலை அந்தப் பெண்ணிடம் மிக அசட்டையாயிருந்திருப்பேன் என நினைக்கிறேன். நான் அவளோடு பேசவோ, அவளைப் பார்க்கவோ இல்லை. நான் கண்ணாரப் பருகியதெல்லாம், வெள்ளை உடையும் ரோஜா நிற இடைக்கச்சும் அணிந்து, உயரமும் ஒடிசலுமாக இலகிய நங்கையின் வடிவம், ஒளிர்வும் செம்மையும் படர்ந்து, கன்னங்களில் சுழியிட்டிருந்த அவளது வதனம், கனிவும் இனிமையும் பளிச்சிட்ட அவளது கண்கள் இவற்றை மட்டுமே. நான் ஒருவனேயல்ல, எல்லோருமே அவளைக் கண்டு வியந்தார்கள். ஆண்களும், பெண்களுங் கூட, அவள் அவர்களை மங்க அடித்துவிட்டபோதிலும், பார்த்து மகிழ்ந்தர்கள். அவளை வியக்காமலிருக்க முடியவில்லை ஒருவராலும்.

”சட்டப்படி சொல்வதானால் மஸூர்க்கா நடனத்தில் நான் அவளுடைய இணை அல்லதான், ஆயனும் உண்மையில் அநேகமாக நேரம் முழுவதும் நான் அவளுடனேயே ஆடினேன். அவள் கொஞ்சங்கூடத் தயக்கமில்லாமல் ஹாலின் ஒரு கோடியிலிருந்து நேரே என் அருகே ஆடி வருவாள்; நான் அழைப்புக்காகக் காத்திராமல் பாய்ந்து அவளிடம் செல்வேன்; தனது விருப்பத்தை நான் உய்த்துணர்ந்து கொண்டதற்காக அவள் புன்னகையால் எனக்கு நன்றி தெரிவிப்பாள்.

நடனம் ஆடியவாறே நாங்கள் அவளருகே இட்டுச் செல்லப்பட்டு, அவள் எனது தன்மையை ஊகித்துக் கொள்ளத் தவறி, மற்றோருவன் பக்கம் கரத்தை நீட்டி விடும் போது, மெல்லிய தோள்களைக் குலுக்கி, என்னைத் திரும்பிப் பார்த்து, வருத்தமும் தேறுதலும் தோன்ற முறுவலிப்பாள். மஸூர்க்கா ஆட்டப் பாங்கு சுழன்றாடும் வால்ட்ஸ் நடனமாக மாற்றப்பட்டதும், நான் நெடுநேரம் அவளுடன் வால்ட்ஸ் ஆடுவேன், அவளோ மூச்சு இரைக்க இள நகை அரும்பி, “Encore”(“Encore” என்ற பிரெஞ்சுச் சொல் ‘இன்னும்’ என்பது அதன் பொருள்) என மொழிவாள். அவ்வளவுதான், உடல் கனத்தையே உணராதவனாக நான் மேலும் மேலும் சுழன்றாடிக்கொண்டே போவேன்.”

”உணராமலாவது ஒன்றாவது, நன்றாய்ச் சொன்னீர்களே. அவளை இடையுற அணைத்துக் கொண்டு நடனமாடிய போது, சொந்த உடலை மட்டுமல்ல, அவளுடைய மேனியையுங்கூடத் தான் நன்கு உணர்ந்திருப்பீர்கள்” என்றான் ஒரு விருந்தாளி.

இவான் வஸீல்யெவிச் சட்டென முகம் சிவப்பேற, சீற்றம் பொங்க அநேகமாகக் கத்தினார்:

”ஆமாம், இதுதான் உங்கள், இந்தக் காலத்து வாலிபர்களின், நோக்கு. உடம்பைத் தவிர வேறு எதுவுமே உங்கள் கண்களுக்குப் படுவதில்லை. எங்கள் காலத்திலே இப்படிக் கிடையாது. நான் எவ்வளவுக் கெவ்வளவு ஆழ்ந்த காதல் கொண்டிருந்தேனோ, காதலி எனக்கு அவ்வளவுக் கவ்வளவு உடலற்றவளாகத் தோன்றினாள். இந்தக் காலத்திலே நீங்கள் என்னடா வென்றால், கால்களையும் கணுக்கால்களையும், இன்னும் எதெதை யெல்லாமோ பார்வையிடுகிறீர்கள், காதலித்த பெண்ணை ஆடையற்றவளாக்குறீர்கள்; என்க்கோ, Alphonse Karr* – (*அல்பான்ஸ் கார் என்ற பிரெஞ்சு எழுத்தாளர்.) அருமையான எழுத்தாளர் அவர் – சொன்னது போல, என் காதலின் இலக்கு மீது எப்போதும் வெண்கல உடை திகழ்ந்தது. ஆடையைக் களைவதற்குப் பதிலாக நாங்கள் நிர்வாணத்தை மூடி மறைக்கவே முயன்றோம் – நோவாவின் நற்புதல்வன் செய்தது போன்று. ஊம், இதெல்லாம் உங்களுக்குப் புரியாது…”

”அட அவன் கிடக்கிறான், விடுங்கள். அப்புறம் என்ன நடந்தது?” என்று எங்களில் ஒருவன் கேட்டான்.

”ஆயிற்றா. இப்படியாக நான் பெரும்பாலும் அவளுடனேயே நடனமாடினேன், நேரம் கழிவதையே உணராமல். வாத்தியக்காரர்கள் ஒரேயடியாக களைத்துப் போய் – நடன நிகழ்ச்சி முடிவில் இப்படி ஏற்படுவது சகஜந்தானே – மஸூர்க்கா ஆட்ட இசையையே விடாமல் இசைத்துக் கொண்டிருந்தார்கள்; அம்மாமாரும் அப்பாமாரும் இரவு போஜனத்தை எதிர்பார்த்துச் சீட்டாட்ட மேஜைகளை விட்டு அகலத் தொடங்கினார்கள்; எடுப்பாட்கள் எதெதையோ கொண்டு வருவதும் வைப்பதுமாக ஓடிச் சாடிக் கொண்டிருந்தார்கள். இரவு மணி மூன்றாவதற்கிருந்தது. இறுதிக் கணங்களைப் பயன்படுத்துவது அவசியமாயிற்று. நான் இன்னோரு முறை அவளை ஆட்டத்திற்கு அழைத்தேன். நாங்கள் நூறாவது தடவையாக ஹாலின் ஒரு கோடியிலிருந்து மறு கோடிக்கு ஆடிச் சென்றோம்.

” ‘இரவு உண்டிக்குப் பின்பு குவாட்ரில் ஆட்டத்தில் நான்தானே உங்கள் ஜோடி?’ என், அவளை இருக்கைக்குக் கொண்டு அமர்த்துகையில் கேட்டேன். ” ‘கட்டாயமாக, என்னை வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போய்விடாவிட்டால்’ என்றாள் அவள், புன்முறுவலுடன்.

” ‘அதற்கு விடமாட்டேன்’ என நான் சொன்னேன்.

” ‘என் விசிறியைக் கொடுங்களேன், சற்றே’ என்றாள்.

”சாதாரண வெண்ணிறகு விசிறியை அவள் பக்கம் நீட்டியவாறே, ‘திருப்பிக் கொடுப்பதற்கு வருத்தமாயிருக்கிறது’ என்றேன். ” ‘அப்படியானால் இந்தாருங்கள், நீங்கள் வருந்தாதிருப்பதற்காக.’ இவ்வாறு கூறி, விசிறியிலிருந்து ஓர் இறகைப் பிய்த்து எனக்குத் தந்தாள்.

”இறகை வாங்கிக்கொண்ட எனக்கு, பேருவகையையும் நன்றியையும் பார்வையினால் மட்டுமே வெளியிட முடிந்தது. நான் மகிழ்வும் மனநிறைவும் மட்டும் கொண்டிருக்கவில்லை, இன்பமுற்றிருந்தேன், பேரானந்தத்தில் திளைத்தேன், நல்லுணர்ச்சி வயப்பட்டிருந்தேன். நான் நானாகவே இல்லை, நிலவுலகைச் சேராத, தீமையே அறியாத, நன்மை மட்டுமே புரியத் திறன் கொண்ட, வேறு ஏதோ ஜீவனாகிவிட்டேன். இறகைக் கையுறைக்குள் மறைத்துக் கொண்டு, அவளை விட்டு அகல மாட்டாதவனாய் அங்கேயே நின்றேன்.

”வெள்ளித் தோள் சின்னங்கள் இலங்க, வீட்டு எஜமானியுடனும் வேறு சில பெண்டிருடனும் கதவருகே நின்று கொண்டிருந்த உயரமும் கம்பீரத் தோற்றமும் வாய்ந்த கர்னல் ஒருவரை வாரெனிகா சுட்டிக் காட்டி, ‘அதோ பாருங்கள், அப்பாவை நடனமாடச் சொல்லுகிறார்கள்’ என்றாள்.

” ‘வாரெனிகா, இப்படி வாருங்கள் சற்றே’ என்று கூவியழைத்தாள் வைர முடியணியும் பேரரசி எலிஸவெத்தா போன்ற தோள்களுமாக இலகிய வீட்டெஜமானி.

”வாரெனிகா கதவுப பக்கம் போனாள், நான் அவள் பின் சென்றேன்.

” ‘உங்கள் தந்தையாரை உங்களுடன் நடனமாடச் சொல்லுங்களேன் சற்றே, Ma chere*’ (”ma chere” என்ற பிரெஞ்சுச் சொல். ‘என் அன்பே’ என்று பொருள் படுவது.) என வாரெனிகாவிடம் கூறிவிட்டு, ‘ஊம், ப்யோத்ர்வ்ளாதிஸ்லாவிச், தயவு செய்து ஆடுங்கள்!’ என்று கர்னலிடம் சொன்னாள் வீட்டெஜெமானி.

”வாரெனிகாவின் தகப்பனார் மிகுந்த அழகர்.  மிடுக்கான  தோற்றமும், உயரமும், நிகுநிகுப்பும் கொண்ட முதியவர். செக்கச்சிவந்த முகம், முதலாவது நிக்கொலாய் போல முறுக்கிவிடப்பட்ட நரை மீசை, மீசையைத் தொட்டுக் கொண்டிருந்த கிருதா, பொருத்துக்கு மேல் முன்பக்கமாக வாரிவிடப்பட்ட கேசம். புதல்வியனது போலவே கனிவும் மகிழ்வும் ததும்பும் இளநகை அவர் கண்களிலும் உதடுகள் மீதும் ஒளிர்ந்தது. இராணுவ தோரணையில் முன்துருத்திய, அதிக ஆடம்பரமின்றிப் பதக்கங்களால் அலங்கரிக்கப்பட்ட அகன்ற மார்பும், வரிய தோள்களும், நீண்ட, வடிவான கார்களுமாக அவர் மிக நல்ல உடற்கட்டு வாய்ந்திருந்தார். பழவ்கால மாதிரியான, நிக்கொலாய் பாணியைச் சேர்ந்த இராணுவ அதிகாரி அவர்.

”நாங்கள் கதவருகே வந்த சமயம் கர்னல் நடனமாடுவதையே தாம் மறந்து விட்டதாகக் கூறி ஆட மறுத்தார். ஆயினும் முறுவலித்து, கையை இடப்புறம் கொண்டுபோய், உடைவாளை உறையிலிருந்து உருவி, தொண்டு செய்யத் தயாராகக் காத்திருந்த ஓர் இளைஞனிடம் அதைக் கொடுத்துவிட்டு, வலக்கையில் ‘ஸ்வீட்’ கையுறையை மாட்டிக்கொண்டு, ‘எல்லாம் சட்டப் பிரகாரம் இருக்கவேண்டும்’ என்று புன்னகையுடன் சொல்லிவிட்டு, புதல்வியின் கையைப் பற்றியவாறு கால்வாசி திரும்பி, தாளவாய்ப்பை எதிர்பார்த்து நின்றார்.

”மஸூர்க்கா நடன இசை தொடங்கியதுமே அவர் ஒரு காலை விரைவுடன் தரையில் டக்கென வைத்து, மற்றொரு காலை வீசியாட்டி முன் சென்றார். பின்பு அவரது உயரமான கனத்த உருவம் இக்கணம் மெதுவாகவும் ஒயிலுடனும், மறுகணம் ஓசையுடனும் விரைவுடனும் பாதங்களைத் தரைமீதும் ஒன்றோடொன்றும் அடித்தவாறு ஹாலைச் சுற்றிவந்தது. வாரெனிகாவின் எழில் வடிவம், கவனிக்க முடியாதபடி, தக்க தருணத்தில் அடிகளை அகற்றியும் குறுக்கியும் வைத்தவாறு, தனது சின்னஞ்சிறு பட்டுப்பாதங்கள் அவரது பாதங்களுடன் இணையும் வகையில் அவரருகே ஒய்யாரமாக நீந்திச் சென்றது. இந்த ஜோடியின் ஒவ்வோர் அசைவையும் ஹாலில் இருந்தவர்கள் யாவரும் உற்று நோக்கிக் கொண்டிருந்த்தார்கள்.

நானோ, வியப்பும் பாராட்டும் மட்டுமின்றி, பேரின்பமும் கனிவும் பெருக்கிட அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். கர்னலின் பூட்சுகளைக் கண்டு எனக்கு விசேஷ உளநெகிழ்ச்சி உண்டாயிற்று. அவை கன்றுக்குட்டித் தோலால் செய்த நல்ல ஜோடுகள்தாம், மோஸ்தர்படி நுனிப்புறம் கூராயில்லாமல் சப்பையானவை. பட்டாளச் செம்மான்தான் அவற்றைத் தைத்துக் கொடுத்திருக்க வேண்டும் என்பது தெளிவாய்ப புலப்பட்டது. ‘பெண்ணுக்கு நல்லுடை அணிவித்து அவளை நாலு இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதற்காகவே இவர் மோஸ்தர்படி அமைந்த ஜோடுகளை வாங்காமல் சாதாரண பூட்சுகளைப் போட்டுக்கொள்கிறார்’ என எண்ணினேன். அந்தச் சப்பை நுனி பூட்சுகள் என் நெஞ்சை ஒரேயடியாக உருக்கி விட்டன.

ஒரு காலத்தில் அவர் நேர்த்தியாக நடனமாடியிருக்க வேண்டும் என்பது துலக்கமாகத் தெரிந்தது. இப்போதோ, உடல் கனத்துப் போய்விட்டது, அவர் ஆடமுயன்ற  விரைவும் அழகும் வாய்ந்த ஜதிவரிசைகளுக்கெல்லாம் ஏற்றவாறு கால்களில் போதிய லாகவம் இல்லை. இருந்த போதிலும் ஒயிலாக இரண்டு சுற்று வந்தார். பின்பு அவர் கால்களைத் துடியாக அகற்றி, மறுபடி டக்கென ஒன்று சேர்த்து, ஒரு முழங்காலை – சற்று கனமாகவேதான் என்றாலும் – தரையில் ஊன்றி அமர, அவள் அவர் முழங்காலுக்கடியில் சிக்கிக்கொண்ட ஆடை நுனியைப் புன்முறுவலுடன் விடுவித்துக் கொண்டு ஒயிலாக அவரைச் சுற்றி வரவே, எல்லோரும் பலத்த கரகோஷம் செய்தார்கள். ஓரளவு சிரமத்துடன் அவர் கால்களை நிமிர்த்தி எழுந்து, மென்மையும் கனிவும் ததும்பப் புதல்வியின் காதுகளைப் பற்றி அவளுடைய நெற்றியில் முத்தமிட்டுவிட்டு, நான்தான் அவளது நடன ஜோடி போலும் என்று எண்ணி அவளை என் அருகே அழைத்து வந்தார். அவளது இணை நான் அல்ல என விளக்கினேன்.

”அவரோ, பரிவுடன் முறுவலித்து, வாளை உறையில் செருகியவாறே, ‘அதற்கென்ன, பரவாயில்லை. இப்போது நீங்கள் அவளுடன் சேர்ந்துகொள்ளுங்கள்’ என்றார். ”புட்டியிலிருந்து வெளிப்படும் முதல் துளியைத் தொடர்ந்து பெரிய பெருக்கு குபுகுபு வென்று கொட்டுவது போல, வாரெனிகா மீது எனக்கு உண்டான காதல் என் உள்ளத்தில் மறைந்திருந்த அன்பு செய்யும் திறனையெல்லாம் கட்டவிழ்த்து விட்டது. அந்தக் கணத்திலே நான் உலகம் முழுவதையும் காதலால் தழுவிக் கொண்டேன். வைர முடியணி பூண்ட வீட்டெஜமானி, அவள் கணவன், அவளது விருந்தாளிகள், அவளுடைய பணியாட்கள், எல்லோர் மீதும், என் மேல் காட்டமாயிருந்த எஞ்சினீயர் அனீஸிமவினிடம் கூட, அன்பு கொண்டேன். சாதாரண பூட்சுகள் அணிந்து, அவளைப் போலவே கனிந்த புன்னகையுடன் இலகிய அவளது தந்தையின் பாலோ, அப்போது எனக்குள் மகிழ்பொங்கும் மெல்லுணர்வு ஊற்றெடுத்தது.

”மஸூர்க்கா நடனம் முடிந்தது. வீட்டுக்காரர்கள் விருந்தினர்களை இரவு உண்டி உண்பதற்கு அழைத்தார்கள். கர்னல், தாம் மறுநாள் அதிகாலையில் எழுந்திருக்க வேண்டி யிருப்பதாகக்கூறி, வீட்டுக்காரர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். எங்கே அவர் வாரெனிகாவையும் அழைத்துக்கொண்டு போய்விடுவாரோ என்று அஞ்சினேன். ஆனால் அவள் தன் தாயுடன் தங்கிவிட்டாள்.

”உண்ட பின்பு, அவளுடன் ஏற்கனவே பேசிவைத்துக் கொண்டபடி குவாட்ரில் நடனம் ஆடினேன். எல்லையற்ற இன்பத்தில் திளைத்துக் கொண்டிருந்தேனாயினும், எனது இன்பம் நொடிக்கு நொடி அதிகரித்துக் கொண்டே போயிற்று. காதலைப் பற்றி நாங்கள் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. அவள் என்னைக் காதலிக்கிறாளா என்று நான் அவளையோ என்னையேதானோ கேட்கவில்லை. நான் அவளைக் காதலிக்கிறேன் என்பதே எனக்குப் போதுமானதாயிருந்தது. ஏதாவது எனது இன்பத்தைக் குலைத்து விடக்கூடாதே என்று மட்டுமே அஞ்சினேன்.

”வீட்டுக்கு வந்து, மேல்கோட்டைக் களைந்து விட்டு, உறங்கலாம் என்று எண்ணியவன், அது முற்றிலும் இயலாத காரியம் என்பதைக் கண்டேன். அவளது விசிறியிலிருந்து எடுக்கப்பட்ட இறகும், அவள் தாயாரையும் அவளையும் நான் கைலாகு கொடுத்து வண்டியில் அமர்த்தி பின், விடை பெற்றுக்கொள்ளும் போது அவள் அளித்த கையுறையும் என்கையில் இருந்தன. அவற்றை நோக்கினேன். அப்போது விழிகளை மூடாமலே அவளை என் எதிரே கண்டேன்: நடனங்களுக்கிடையே இரண்டு ஆடவரில் ஒருவனைத் தேர்ந்தெடுக்கையில், எனது தன்மையை ஊகித்துக்கொண்டு, ‘கர்வமோ? ஊம்?’ என்று இனிய குரலில் மொழிந்தவாறே மகிழ்வுடன் என் புறம் கையை நீட்டிய சமயத்திலிருந்த அவளது தோற்றம் ஒரு கணம் தென்படும்; மறுகணம், இரவுச் சாப்பாட்டின் போது ஷாம்பெயின் பருகியபடியே கிளாசும் கையுமாகக் கனிந்த பார்வையுடன் அவள் என்னை நோக்கிய காட்சி தோன்றும். எல்லாவற்றையும் விட எனக்குக் கவர்ச்சி அளித்தது, தனது தந்தையுடன் ஒயிலாக இணைந்தாடியவாறு நடனம் புரிந்து கொண்டே, அவர் மீதும் தன் மீதும் கர்வமும் உவகையும் பெருக்கெடுக்க, வியந்து நோக்கும் பார்வையாளர்களை அவள் கடைக்கணித்த ஒய்யாரந்தான். என்னையுமறியாமலே அவர்கள் இருவரும் என் உள்ளத்தில் கனிவும் பரிவும் வாய்ந்த உணர்ச்சியில் ஒன்றாகிவிட்டார்கள்.

”எனது காலஞ்சென்ற சகோதரனும் நானும் அப்போது தனியாக வாழ்ந்து வந்தோம். சகோதரனுக்கு ஜனங்களுடன் பழகுவதில் விருப்பம் கிடையாது. நடனத்துக்கோ அவன் போவதே இல்லை. இப்போது தான் அவன் ‘காண்டிடேட்டு’ பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருந்தான், மிகமிக ஒழுங்கான வாழ்க்கை நடத்தி வந்தான். அவன் உறங்கிக் கொண்டிருந்தான். தலையணையில் புதைந்து, போர்வையால் பாதி மூடப்பட்டிருந்த அவனது தலையைப் பார்த்ததும் எனக்கு அன்பு கனிந்த வருத்தம் உண்டாயிற்று – நான் அனுபவிக்கும் இன்பத்தை அவன் அறியவுமில்லை, பகிர்ந்து கொள்ளவுமில்லையே என்ற வருத்தம்.

எங்களது பண்ணையடிமைப் பணியாள் பித்ரூஷ்க்கா மெழுகுவத்தி விளக்கும் கையுமாக என்னிடம் வந்து உடைமாற்றிக் கொள்வதில் எனக்கு உதவ விரும்பினான். ஆனால் நான் அவனைப் போகச் சொல்லி விட்டேன். அவனது தூங்கிவழிந்த முகமும் கலைந்த முடியும் என் உள்ளத்தை உருக்கி விட்டன. ஓசைப்படாமலிருப்பதற்காக நுனிக்காலால் நடந்து என் அறைக்குப் போய்ப் படுக்கைமீது உட்கார்ந்தேன். ஊஹும், மகிழ்ச்சிப் பெருக்கில் எனக்குத் தூக்கம் வருவதாயில்லை. கதகதப் பூட்டப்பட்ட அறைக்குள் எனக்கு ஒரே வெப்பமாயிருந்தது. உடுப்பைக் கழற்றாமலே சத்தமின்றி ஹாலுக்குச் சென்று, மேல் கோட்டைப் போட்டுக்கொண்டு வாயிற்கதவைத் திறந்து, தெருவுக்குப் போய் விட்டேன்.

”நடனம் முடிந்து நான் வெளிவந்த போது அநேகமாக ஐந்து மணி. அதன் பின் வீடு திரும்பி, வீட்டிலே உட்கார்ந்திருந்ததில் இன்னும் இரண்டு மணி நேரம் கழிந்திருந்தது. ஆகவே, நான் தெருவுக்கு வந்தபோது வெளிச்ச மாகிவிட்டது. ‘ஷ்ரோவ்டைட்’ விழாக்காலத்துக் கேற்ற பருவ நிலை: மூடுபனி அடர்ந்திருந்தது; தெருக்களில் ஈர வெண்பனி உருகிக் கொண்டிருந்தது; எல்லக் கூரைகளிலிருந்தும் தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. அந்த நாட்களிலே வாரெனிகாவின் குடும்பத்தார் நகர எல்லைக்கு வெளியே, பெரிய வயலின் ஓரத்திலிருந்த வீட்டில் வசித்து வந்தார்கள். வயலின் ஒரு கோடியில் உலாவு திடலும் மறு கோடியில் பெண்கள் பள்ளியும் இருந்தன. வெறிச்சோடிக் கிடந்த எங்கள் சந்தைக் கடந்து நான் பெரிய தெருவுக்கு வந்தேன்.

அங்கே கால்நடையாகச் செல்பவர்களும், ஸ்லேட்ஜ்களில் விறகேற்றிக் கொண்டு வரும் வண்டிக்காரர்களும் எதிர்ப்பட்டார்கள். ஸ்லேட்ஜ்களின் அடிச் சட்டங்கள் நடைபாதைவரை வெண்பனியைச் செதுக்கிக் கொண்டு போயின. என் கண்களுக்கு எல்லாமே – வார்னிஷ் அடித்த நுகங்களுக்கு அடியில் ஈரத் தலைகளை லயத்துடன் அசைத்தாட்டிச் சென்ற குதிரைகள், மரவுரிப் பாய்களைத் தோள்கள் மேல் போர்த்து, பிரம்மாண்டமான பூட்சுகள் அணிந்து, ஸ்லேட்ஜ்களுக்கு அருகாக நளுக்குப் பனிச் சேற்றில் சளப்சளப்பென்று நடந்து சென்ற வண்டிக்காரர்கள், தெருவின் இரு மருங்கிலும் மூடுபனியில் மிக உயரமாகத் தென்பட்ட வீடுகள் –எல்லாமே வெகு இனியவையாகவும், பொருள் பொதிந்தவையாகவும் இருந்தன.

”அவர்கள் வீடு இருந்த வயலை அடைந்ததும், உலாவு திடல்பக்கத்துக் கோடியில் பெரியதும் கரியதுமாக எதையோ கண்டேன், குழலும் டமாரமும் ஒலிக்கக் கேட்டேன். எனது இதயம் இவ்வளவு நேரமும் இசைத்துக் கொண்டுதான் இருந்தது; அவ்வப்போது மஸூர்க்கா நடன இசை என் காதுகளில் ஒலிக்கும். ஆனால் இது ஏதோ வேறு, கொடிய, கெட்ட இசை.

” ‘என்ன அது?’ என்று எண்ணிய நான் வயல் நடுவே சென்றிருந்த சறுக்கு வண்டித் தடத்தோடு நடந்து, ஒலிகள் வந்த திக்கை நோக்கிப் போனேன். ஒரு நூறடி நடந்ததும் பனி மூட்டத்திற்கிடையே எத்தனையோ மனிதர்களின் கரிய வடிவங்கள் எனக்குத் தென்பட்டன. படைவீரர்களாயிருக்க வேண்டும். ‘ஆமாம், கவாத்து பழகுகிறார்கள்’ என்று நினைத்து, எண்ணெய்க் கறை படிந்த ஏப்ரனும் கோட்டுமாக ஏதோ மூட்டையைச் சுமந்து சென்று கொண்டிருந்த கருமான் ஒருவனுடன் மேலே நடந்து அவர்களை அணுகினேன். கறுப்புக் கோட்டுகள் அணிந்த படைவீரர்கள், துப்பாக்கிகளைக் கால்களுக்கருகே நாட்டியவாறு இரண்டு வரிசைகளில் எதிரும் புதிருமாக அசையாமல் நின்றார்கள். அவர்களுக்குப் பின்னே நின்ற குழலூதுபவனும் டமாரம் அடிக்கும் பையனும் வேதனை தரும் கர்ண கடூரமான மெட்டை மறுபடி மறுபடி ஒலித்துக் கொண்டிருந்தார்கள்.

” ‘என்ன செய்கிறார்கள் இவர்கள்?’ என்று பக்கத்தில் நின்று கொண்டிருந்த கருமனை வினவினேன்.

”இரட்டை வரிசையின் மறு கோடியை உறுத்து நோக்கியபடியே, ‘தப்பியோடப் பார்த்த தாத்தார் ஒருவனை இழுத்து வருகிறார்கள்’ என்று முறைப்புடன் பதிலளித்தான் கருமான்.

”நானும் அதே திக்கில் பார்வையைச் செலுத்தியவன், இரு வரிசைகளுக்கும் நடுவே, பயங்கரமான ஏதோ ஒன்று என் பக்கமாக வந்து கொண்டிருக்கக் கண்டேன். என்னை நெருங்கிக் கொண்டிருந்தவன் இருமருகிலும் இரண்டு சிப்பாய்கள் பிடித்துக் கொண்டிருந்த துப்பாக்கியுடன் சேர்த்துக் கட்டப்பட்டு, இடுப்புக்கு மேல் வெற்றுடம்பாயிருந்த ஒரு மனிதன். இராணுவ மேல்கோட்டும் தொப்பியும் அணிந்த உயரமான அதிகாரி அவனருகே வந்து கொண்டிருந்தான். அதிகாரியின் உருவம் எனக்கு அறிமுகமானதாகப் பட்டது.

கைதி, இரு புறமிருந்தும் மாறி மாறிப் பொழிந்த அடிகளைப் பட்டுக் கொண்டு, உடம்பெல்லாம் துடிதுடித்து நெளிய, உருகும் வெண் பனியில் பாதங்கள் சளப்பிட, ஒரு கணம் பின்னே சாய்வதும் மறுகணம் முன்னே குனிவதுமாக என் பக்கம் நெருங்கினான். துப்பாக்கியைப் பிடித்திருந்த சிப்பாய்கள் அவன் பின்னே சாயும் போது இழுத்து முன்னுக்குத் தள்ளுவதும் முன் சரியும் போது அவன் விழுந்து விடாதபடிச் சுண்டி இழுப்பதுமாயிருந்தார்கள். உயரமான அதிகாரி பின் தங்கிவிடாமல் உறுதியாக எட்டு வைத்து அவனைத் தொடர்ந்து வந்தான். செக்கச் சிவந்த முகமும், நரை மீசையும் கிருதாவுமாக விளங்கிய அந்த அதிகாரி வாரெனிகாவின் தந்தையே தான்.

”ஒவ்வோர் அடி விழும்போதும் கைதி வேதனையால் சுளித்த முகத்தை அடி வந்த பக்கமாக வியப்புற்றவன் போலத் திருப்பி, வெண் பல்வரிசைகள் தெரியக் காட்டி, ஏதோ ஒரே மாதிரியான வார்த்தைகளைத் திருப்பித்திருப்பிச் சொன்னான். அவன் எனக்கு மிக அருகே நெருங்கிய பின்புதான் அந்தச் சொற்கள் என் செவிக்கு எட்டின. அவன் பேசவில்லை, ‘அண்ணன்மாரே, கொஞ்சம் இரக்கங் காட்டுங்கள். அண்ணன்மாரே, கொஞ்சம் இரக்கங் காட்டுங்கள்’ என்று தேம்பினான். ஆனால் அண்ணன்மார் இரக்கங் காட்ட வில்லை. அவர்கள் எனக்கு நேர் எதிராக வந்ததும், ஒரு சிப்பாய் தீர்மானத்துடன் முன்னே அடியெடுத்து வைத்து, பிரம்பை ஓங்கி ‘உஷ்’ ஷென்று  இரையும் படி முழுவலிமையுடன் தாத்தாரின் முதுகில் சொடேரென விளாறியதைக் கண்டேன். தாத்தார் முகங் குப்புறச் சரிந்தான், ஆனால் துப்பாக்கியைப் பிடித்திருந்த சிப்பாய்கள் அவனைச் சுண்டி இழுத்து நேராக்கி விட்டார்கள்.

பின்பு மறு பக்கத்திலிருந்து அதே போன்ற அடி, பிறகு இப்புறமிருந்து, பின் அப்புறமிருந்து… கர்னல் ஒரு கணம் தனது பாதங்களைப் பார்ப்பதும், மறு கணம் கைதியை நோக்குவதும், ஆழ்ந்து மூச்சு இழுத்து விடுவதும், கன்னங்களைக் காற்றால் உப்பிக் கொண்டு, குவிந்த உதடுகள் வழியே மெதுவாகக் காற்றை ஊதுவதுமாக, தாத்தாரின் அருகே நடந்து வந்தான். அவர்கள் நான் நின்ற இடத்தைக் கடந்து செல்கையில், படைவீரர் வரிசையின் இடை வழியே கைதியின் முதுகு சட்டேன என் பார்வையில் பட்டு மறைந்தது. கம்பி கம்பியாகத் தழும்பிட்டு, சொதசொதத்து, செக்கச் செவெலென்று, இனங்கண்டு கொள்ள முடியாததாயிருந்த அந்தப் பயங்கரம், மனித உடலின் அங்கம் என்று நம்பவே எனக்கு இயலவில்லை.

” ‘ஐயோ ஆண்டவனே!’ என முணுமுணுத்தான் என் பக்கத்தில் நின்ற கருமான்.

”அவர்கள் மேலே நடந்தார்கள். இடறிவிழுந்து தள்ளாடித் தவித்துத் துடித்துக் கொண்டிருந்த மனிதன் மீது இரு புறமிருந்தும் அடிகள் முன்போலவே விழுந்த வண்ணமாயிருந்தன, முன்போலவே டமாரம் ஒலித்தது, குழல் இசைத்தது, கர்னலின் வாட்டசாட்டமான, மிடுக்கான உருவம், கைதியின் அருகே முன் போலவே உறுதியாக அடிவைத்து  நடந்தது. திடீரெனக் கர்னல் நின்று, ஒரு சிப்பாயை விரைந்து நெருங்கினான்.

” ‘குறி தவறுகிறதோ? இதோ காட்டுகிறேன் உனக்கு! ஊம்? இனிமேல் தவறுவாயா? தவறுவாயா குறி? ஊம்?’ என்று அவன் இரைந்ததைக் கேட்டேன்.

”அந்தப் பக்கம் நோக்கியவன், ‘ஸ்வீட்’ கையுறையணிந்த கர்னலின் வலிய கரம் சிறுகூடான, நோஞ்சல் சிப்பாயின் முகத்தைப் புடைக்கக் கண்டேன் – அந்த மனிதன் தாத்தாரின் வழன்று சிவந்த முதுகில் போதிய உரத்துடன் பிரம்பால் அடிக்கவில்லை என்பதற்காக.

” ‘புதுப் பிரம்புகள் வரட்டும்!’ என்று கூவினான் கர்னல். இப்படிச் சொல்லிவிட்டுத் திரும்பியவன் என்னைப் பார்த்துவிட்டான். என்னை அடையாளந் தெரிந்துகொள்ளாதது போலப பாவனை செய்து, குரூரமும் சினமும் பீரிட முகத்தைச் சுளித்து, சட்டெனத் திரும்பிவிட்டான். எனக்கு ஒரேயடியாக ஏற்பட்ட வெட்கத்தில், ஏதோ அவமானகரமான இழிசெயல் புரிந்து விட்டவன் போன்று, எங்கே பார்ப்பது என்று தெரியாமல், தலை கவிழ்ந்து விரைவாக வீட்டைப் பார்க்க நடந்தேன். டமாரத்தின் அதிரலும், குழலின் கீச்சொல்லியும், ‘அண்ணன்மாரே, கொஞ்சம் இரக்கங் காட்டுங்கள்’ என்ற சொற்களும், கர்னலின் தன்னம்பிக்கை நிறைந்த கோபக் குரல், ‘இனிமேல் தவறுவாயா? தவறுவாயா குறி? ஊம்?’ என்று இரைவதும் ஒன்று மாற்றி ஒன்றாக வழி நெடுகிலும் என் காதில் கேட்டுக் கொண்டிருந்தன.

இவற்றால் எனது நெஞ்சில் உடல் வலி போன்ற, குமட்டலுண்டாக்கும் வேதனை ஏற்படவே, நான் பலதடவை நின்று நின்று போக வேண்டியதாயிற்று. நான் கண்ட காட்சி என்னுள் நிறைத்திருந்த ஆபாசமெல்லாம் இதோ, இதோ வாந்தியாக வெளிவந்துவிடப் போகிறது எனப் பட்டது. எப்படி வீடு சேர்ந்தேனோ, கட்டிலில் படுத்தேனோ, அறியேன். ஆனால் தூக்கம் வர ஆரம்பித்ததுமே எல்லா நிகழ்ச்சிகளும் மீண்டும் தோற்றமளித்தன, செவியில் ஒலித்தன. நான் துள்ளியெழுந்தேன்.

” ‘எனக்குத் தெரியாதது எதுவோ அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்பது தெளிவு’ எனக் கர்னலைப் பற்றி எண்ணமிட்டேன். ‘அவருக்குத் தெரிந்திருப்பது எனக்குத் தெரிந்திருந்தால் நான் கண்டதைப் புரிந்து கொண்டிருப்பேன், அது எனக்குத் துன்பமளித்திருக்காது’ என்று நினைத்தேன். ஆனால் எவ்வளவோ சிந்தித்துப் பார்த்தும், கர்னல் அறிந்திருப்பது என்ன என்பதை என்னால விளங்கிக் கொள்ள முடியவில்லை. மாலையில் தான் எனக்கு உறக்கம் பிடித்தது – அதுவும் ஒரு நண்பன் வீட்டுக்குப் போய் முழு போதையேறும் வரை குடித்த பின்பே.

”நான் கண்டது ஏதோ கெட்ட விஷயம் என்று நான் அப்போது முடிவு செய்ததாக நினைக்கிறீர்களோ? கிடையவே கிடையாது. ‘இதெல்லாம் இவ்வளவு நிச்சயத்துடன் செய்யப்பட்டு, அவசியமான தென்று எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப் படுகிறது என்றால், எனக்குத் தெரியாத ஏதோ ஒன்று அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்று ஆகிறது’ – இவ்வாறு எண்ணி, அது என்ன விஷயம் என அறிந்து கொள்ள முயன்றும் என்னால் இதை அப்போதும் சரி, அப்புறமும் சரி, தெரிந்து கொள்ளவே முடியவில்லை. அதற்கு முன் இராணுவத்தில் சேர்ந்து பணிபுரியத் தீர்மானித்திருந்தேன். ஆனால், இந்த விஷயத்தைத் தெரிந்து கொள்ளாமல் இராணுவத்தில் சேர என்னால் முடியவில்லை. இராணுவத்தில் பணி புரியாதது மட்டுமல்ல, எங்குமே பணி புரியவில்லை. விளைவாக, நீங்கள் காண்பது போலவே, ஒன்றுக்கும் உதவாதவனாகிவிட்டேன்.”

”ஓகோகோ, நீங்கள் எப்படி ஒன்றுக்கும் உதவாதவராகி விட்டீர்கள் என்பதை நாங்கள் அறிவோம். நீங்கள் மட்டும் இல்லாவிட்டால் எத்தனையோ பெயர் ஒன்றுக்கும் உதவாதவர்கள் ஆகியிருப்பார்கள் என்று சொல்லுங்கள். அதுதான் உண்மை” என்றான் எங்களில் ஒருவன்.

”இதுதான் அடிமுட்டாள் பேச்சு” என்று உண்மையான சள்ளையுடன் சொன்னார் இவான் வஸீல்யெவிச்.

”கிடக்கட்டும். காதல் என்ன ஆயிற்று?” என்று கேட்டோம்.

”காதலா? அந்த நாள் முதல் காதல் கொஞ்சங் கொஞ்சமாகத் தேய்ந்து போய்விட்டது. வழக்கமாகச் செய்வது போல அவள் முகமெல்லாம் புன்னகை ஒளிர, சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் போது, வயலில் கண்ட கர்னலின் தோற்றம் அக்கணமே எனக்கு நினைவுக்கு வந்துவிடும். அவ்வளவுதான், அசட்டுப் பிசட்டென்று சங்கடமாயிருக்கும் எனக்கு. வர வர, அவளைப் பார்ப்பதையே நிறுத்தி விட்டேன். காதல் மங்கி மாய்ந்து போயிற்று. அதுதான் சொல்கிறேன், இந்த மாதிரிச் சம்பவங்கள் நிகழ்கின்றன, இவற்றினாலேயே மனிதனின் வாழ்க்கை மாறி விடுகிறது, நடத்தப்படுகிறது என்று. நீங்கள் என்னடா வென்றால் சுற்றுச் சார்பு என்கிறீர்கள்.” இவ்வாறு கூறி முடித்தார் இவான் வஸீல்யெவிச்.

______________________________________________________________________________

லியோ டால்ஸ்டாய் ( லேவ் தல்ஸ்தோய்)

லகப் புகழ்பெற்ற எழுத்தாளர். போரும் சமாதானமும், அன்னா  கரேனினா, மறு உயிரிப்பு முதலிய நாவல்கள் புகழ் பெற்றவை. “நடனத்திற்கு பின்” என்ற கதை (1903) அவரது இறுதி காலப் படைப்புக்களில் ஒன்று

_______________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

மார்ச் 23 தியாகிகள் தினம்: நினைவுக்கு உயிர் கொடு!

6
பகத் சிங் - சுகதேவ் - ராஜகுரு
பகத் சிங் - சுகதேவ் - ராஜகுரு

மார்ச் 23 – பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவுநாள்.

இன்னும் எத்தனை வார்த்தைகள்
நமக்காக பேசியிருப்பானோ!
தூக்குக் கயிறு அதற்குள்
பகத்சிங்கின் தொண்டையை இறுக்கியது.

இன்னும்,
எத்தனை உணர்ச்சிகளை
உருவாக்கியிருப்பானோ!
அதற்குள்,
ராஜகுருவின் கண்களை
பிதுக்கிவிட்டது கயிறு.

இன்னும் எத்தனை தூரம்
மக்களைத் திரட்ட நடந்திருப்பானோ?
அதற்குள்,
துடித்து அடங்கிவிட்டன
சுகதேவின் கால்கள்.

சட்லெஜ் நதியில்
கரைந்த சாம்பல்
முல்லைப் பெரியாறில்
முழங்கும்போது,

லாகூர் சிறையில்
முழங்கிய குரல்கள்
இடிந்தகரையில்
எதிரொலிக்கும்போது,

அவர்கள் இல்லையென்று
எப்படிச் சொல்வது?

நாலாபக்கமும்
சுற்றி வளைக்கப்பட்டிருக்கும்
இடிந்தகரை
இன்னுமொரு ஜாலியன்வாலாபாக்காய்
நம் கண்ணில் தெரியுது!

கூட்டப்புள்ளியில் படகினிலேறி
சீருடை கயவரை
துடுப்பினில் ஒதுக்கி,
இடிந்தகரையினில் கால்வைக்கும் துணிச்சலில்
இருக்குது பகத்சிங், சுகதேவ், ராஜகுரு உணர்ச்சிகள்!

போராடும் மக்களுக்கு
மின்தடை, பஸ்தடை, பால்தடை
என வெறியாடும் போலீசின்
பயங்கரவாதத்துக்கு மத்தியில்,

உண்ணாவிரதப் பந்தலில்
தாயின் பசியறிந்து
தானும் நீரருந்தி
சகல படைகளுக்கும் சவால்விட்டு
பயமறியா குழந்தைகளின்
பார்க்கும் விழிகளில்
பகத்சிங்கின் போர்க்குணம் தெரியுது!

கொளுத்தும் வெயிலில்
கண்கள் செருகுது,
கண்ணிமை நுனியில்
பொழுதுகள் கருகுது

முன்னேறும் போலீசை தடுக்கும்
அந்த மூதாட்டியின்
போராட்டக் குரலில்…
சுகதேவின் தீவிரம் தெரியுது!

என்னமாய் படையைக் குவித்தாலும்
துரோகி கருணாநிதி, ஜெயலலிதா இணைந்தாலும்
தெலுங்கானா போராட்டம் போலவே
மார்க்சிஸ்டும், தா.பாவும் காட்டிக் கொடுத்தாலும்
இன்னுமென் உயிர் உள்ளவரை
அந்நியன் கால் மிதிபட்டு
என் தாய்மண் அழுக்கடைய
அனுமதியோம்! என
திண்ணமாய் போரிடும்
தெக்கத்திச் சீமை இளைஞர்களின் ஆவேசத்தில்
ராஜகுருவின் பிடிவாதம் தெறிக்கிறது!

சுற்றி வளைக்கப்பட்டது
முள்ளிவாய்க்கால்!
கழுத்து இறுக்கப்படுகிறது
இடிந்தகரை!

மறுகாலனியச் சுருக்கில்
மாட்டித் தவிக்கிறார்கள் மக்கள்.

இப்படியொரு சூழலில்,
சும்மாய் நினைவுகளை
சுமந்து நிற்பது
பகத்சிங்கிற்கு பாரம்!

நீ பகத்சிங்காய் இயங்குவதொன்றே
பகத்சிங் பார்வையில் நியாயம்!

__________________________________________

–  துரை. சண்முகம்.

_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

பகத் சிங் – அந்த வீரன் இன்னும் சாகவில்லை….பாடல்!

5
பகத் சிங் - சுகதேவ் - ராஜகுரு
பகத் சிங் - சுகதேவ் - ராஜகுரு

உழைக்கும் மக்கள் பிரச்சனைகளை எதிர் கொண்டு எப்படி போராட வேண்டும் என்பதற்கு வழிகாட்டியாக வாழ்ந்து தாய் நாட்டுக்காக உயிர் நீத்தவர் பஞ்சாப் சிங்கம் பகத்சிங். அவரது வீரவரலாறு தலைமுறை தலைமுறையாக நாட்டுப் பற்றுள்ள இளைஞர்களுக்கு ஊக்கமளித்து வருகிறது. உணர்வுபூர்வமாக பகத்சிங்கின் வீரத்தைப் போற்றும் இந்தப் பாடல் பகத்சிங்கின் நினைவைப் போலவே எழுச்சியளிக்கிறது.

======

பகத்சிங். இந்திய விடுதலை வானில் ஒரு விடிவெள்ளி. காங்கிரசின் துரோகத்தாலும் வஞ்சகத்தாலும் அணைக்கப்பட்ட விடுதலைத் தீயை விசிறி எழச் செய்த இளம் சூறாவளி. விடுதலைப் போராட்ட உணர்வை லட்சக் கணக்கான இளைஞர்களின் இதயத்தில் விதைத்திட தன் மரணத்தையே செயல்திட்டமாக மாற்றிக் கொண்ட போராளி. அங்குமிங்குமாய் நடந்த  ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களை தேசமெங்கும் விசிறியடிக்கச் செய்தது பகத்சிங்கின் உயிர்த்தியாகம். விடுதலை எழுச்சியைப் பூட்டி வைக்க நினைத்த காந்தியின் துரோகத்தை உடைத்தெறிந்தது பகத்சிங்கின் வீரமரணம். இந்திய முதலாளியாகவோ, பிரிட்டிஷ் முதலாளியாகவோ, அல்லது இரண்டின் கலப்பாகவோ இருக்கலாம். முதலாளிகளின் சுரண்டல் ஒழிக்கப்படும் வரை இந்தப்போர் தொடரும். இந்தப் போர் எங்களோடு தொடங்கவுமில்லை, எங்கள் வாழ்நாளோடு முடியப் போவதுமில்லை என்றான் பகத்சிங். ‘நாளை அணையப் போகின்ற விடியற்காலை விளக்கு நான், நாட்டு மக்களே தைரியமாக இருங்கள்’ என்றான் பகத்சிங்.  தேச விடுதலைப் போராளியாக களத்தில் கால் பதித்த பகத்சிங் தனது மரணத்தில் கம்யூனிசச் சுடராக ஒளிர்ந்தான்.

_______________________________________

பாடல்:

 

தாய் நாட்டின் மானம் காக்க…
தூக்கு கயிற்றை துணிந்தே முத்தமிட்ட…
எங்கள் பஞ்சாப் சிங்கம் பகத்சிங் தோழனே… தோழனே… தோழனே…

அந்த வீரன் இன்னும் சாகவில்லை – அவன்
தியாகம் இன்னும் மறையவில்லை

கோரஸ் : அந்த வீரன் இன்னும் சாகவில்லை – அவன்
தியாகம் இன்னும் மறையவில்லை
அந்த வீரன் இன்னும் சாகவில்லை

அண்ணல் காந்தியின் அகிம்சைப் பாதையிலே
வீரத்தை அடகு வைத்து மண்டியிட்ட நேரத்திலே

கோரஸ் : வீரத்தை அடகு வைத்து மண்டியிட்ட நேரத்திலே

வெள்ளை ஆதிக்க இருள்தன்னை கிழித்திடவே
வானில் விடிவெள்ளிகள் மூன்று உதித்தனவே..

கோரஸ் : உதித்தனவே… உதித்தனவே…

ஜாலியன் வாலாபாக்கில் மண்ணெடுத்து – அதில்
தேச விடுதலை உணர்வை வளர்த்தெடுத்து –

கோரஸ் : அதில் தேச விடுதலை உணர்வை வளர்த்தெடுத்து

தூக்குக் கயிறு இறுக்கி உயிர் துடித்த நேரத்திலும் – மண்ணில்
விழிபதித்து புன்னகைத்த வீரர்களே

கோரஸ் : வீரர்களே… வீரர்களே…

தூக்கு மரம் நெருங்கி வந்த நேரத்திலும் – நெஞ்சம்
துவளாது எதிர்கொண்ட தீரர்களே

கோரஸ் : நெஞ்சம் துவளாது எதிர்கொண்ட தீரர்களே

அன்று மறுகணமே மரணம் என்ற நேரத்திலும் – அந்த
மாமேதை லெனின் உங்கள் கைகளிலே..

கோரஸ் : கைகளிலே… கைகளிலே…

சினிமா சூதாட்டப் போதையிலே – மூழ்கி
சீரழியும் என்னருமை இளஞர்களே

கோரஸ் : மூழ்கி சீரழியும் என்னருமை இளஞர்களே

இந்த தியாகச் சுடர் பகத்சிங்கின் பெயராலே
அணிதிரண்டிடுவோம் கொடுமைகளை அழித்திடவே…

கோரஸ்: அழித்திடவே…அழித்திடவே…

அந்த வீரன் இன்னும் சாகவில்லை
அவன் தியாகம் இன்னும் மறையவில்லை

அந்த வீரன் இன்னும் சாகவில்லை…சாகவில்லை…சாகவில்லை..

_____________________________________

(இந்தப் பாடல் மக்கள் கலை இலக்கிய கழகம் வெளியிட்டுள்ள ‘நான் உலகம்’ என்ற பாடல் ஒலிக் குறுந்தகடில் இடம் பெற்றுள்ளது)

ஒலிக்குறுந்தகடு தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

1.      புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம், 2வது நிழற்சாலை, அசோக் நகர்,
சென்னை – 600 083. தொலைபேசி: 044-23718706
செல்பேசி: அலுவலக நிர்வாகி தோழர் பாண்டியன் – 99411 75876

2.      கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002.
தொலைபேசி: 044-2841 2367

_____________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

கூடங்குளம்: இடிந்தகரையில் HRPC வழக்கறிஞர்கள் – நள்ளிரவுக் கூட்டம்!

11

கூடங்குளம்-இடிந்தகரை-போராட்டக்-காட்சிகள்-13

நேற்று மாலை திட்டமிட்டபடி மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் இடிந்தகரைக்கு சென்று சேர்ந்தனர். ஆனால் இதுவே ஒரு சாகச பயணம் போல இருந்தது. ஏனெனில் இடிந்தகரைக்கு செல்லும் இரு சாலைகளையும் ஆயிரக்கணக்கான போலீஸ் தடுத்து பெரும் நந்தி போல காவல் காத்து வருகிறது. கிராமத்திலிருந்து 3, 4 கீ.மீட்டர்களில் இருக்கும் போலீசின் கண்காணிப்பைத் தாண்டி யாரும் ஊருக்குள் நுழையவோ, வெளியேறவோ முடியாது.

இந்நிலையில் இடிந்தகரை இளைஞர்களின் உதவியோடு கடற்கரையோரப்பாதை, காட்டுப்பாதை என 3 கி.மீட்டர்கள் சுற்றி நடந்து, போலிசின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு ம.உ.பா.மை வழக்கறிஞர்கள் போராட்டப் பந்தலை அடைந்தனர். இடிந்தகரைக்கு சென்றே ஆகவேண்டுமென்ற ம.உ.பா.மையத்தின் போராட்டம் நேற்றுதான் வெற்றிபெற்றது.

வெளியிலிருந்து யாரும் வந்து பார்க்க முடியாத நிலையில் வழக்கறிஞர்களை பார்த்த உடன் தெருவெங்கும் கூடியிருந்த மக்கள் மகிழ்வுடன் வரவேற்று போராட்ட மேடைக்கு அழைத்துச் சென்றனர்.

இடிந்தகரை போராட்ட பந்தலில் சுமார் பத்தாயிரம் மக்கள் குழுமியிருந்தனர். மேலும் ஒரு பத்தாயிரம் பேர் பந்தலுக்கு வெளியே கடற்கரையோரம் மற்றும் ஊர் முழுவதும் தங்கியிருக்கின்றனர். இங்கு இருப்பவர்களில் சுற்றுவட்டார மீனவ கிராமங்கள் மற்றும் சில விவசாயக் கிரமங்களைச் சேர்ந்தவர்களும் உண்டு. கூடங்குளத்தில் திங்கட்கிழமை முதல் கடையெடுப்பு போராட்டம் நடந்து வருகிறது. அதே போல இடிந்தகரை வட்டார மீனவ கிராமங்களைச் சேர்ந்த ஆண்களும் திங்கட் கிழமை முதல் கடலுக்கு செல்லவில்லை. அந்த வகையில் மீனவர்கள், விவசாயிகள் ஒற்றுமையாக இங்கு குழுமியிருக்கின்றனர். அவர்களின் போராட்ட உணர்வு இப்போதும் குன்றாமல் துடிப்புடன் இருந்து வருகிறது.

ம.உ.பா.மைய வழக்கறிஞர்கள் போராட்ட மேடைக்குச் சென்று உதயக்குமாரிடம் வழக்கு விவரங்களை தெரிவித்தனர். அதையும், அதை எப்படி எதிர்கொள்வது என்பதை மக்களிடம் தெரிவிக்குமாறும் போராட்டக்குழுவினர் கேட்டுக் கொண்டனர். அதன்படி மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ சுமார் ஒரு மணிநேரம் பேசினார்.

“கடலூரிலும், திருச்சியிலும் சிறை வைக்கப்பட்டவர்களை பிணையில் கொண்டு வர வள்ளியூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் போராடி வருகின்றனர். அணு உலை வேண்டும் என்று கூறுபவர்களுக்கு உள்ள உரிமை, வேண்டாம் என்று சொல்வதற்கும், போராடுவதற்கும் அரசியல் சட்டப்படியே உரிமை இருக்கிறது. அந்த உரிமையைத்தான் தமிழக அரசும், காவல்துறையும் காலில் போட்டு மிதித்திருக்கிறது. இன்று இடிந்தகரை வந்து போராட்டக்குழவினரை கைது செய்வதற்கு போலீஸ் அஞ்சுவதற்கு காரணம் இங்கே ஆயிரக்கணக்கில் திரண்டிருக்கம் மக்கள்தான். அந்த மக்கள் சக்தியைப் பார்த்துத்தான் போலீசு அஞ்சுகிறது. அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தப்படி 17 இலட்சம் கோடி ரூபாய்க்கு இங்கே அணு உலைகள் வரவிருக்கின்றன. உங்கள் போராட்டம் வெற்றி பெற்றால் அந்த வணிகம் முதலாளிகளுக்கு நட்டமாகிவிடும் என்பதால் அரசும், காவல்துறையும் இங்கே போர் தொடுத்துள்ளது. தொடர்ந்து போராடுவோம், வெற்றி பெறுவோம்”

என்று அவர் பேசி முடித்ததும் மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். அப்போது மணி இரவு 11 இருக்கும். மக்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க வழக்கறிஞர்கள் இரவு அங்கேயே தங்கினர். இடிந்தகரையின் இரு சாலைகளும் போலீசால் தடுக்கப்பட்டிருப்பதால் அத்தியாவசிய பொருட்கள் வரவில்லை. மின்சாரமும் நேற்றுதான் கிடைத்திருக்கிறது. மாணவர்கள் பள்ளி செல்ல முடியாமல் தவிக்கின்றனர். கடலில் படகுகள் மூலமாக அத்தியவாசிய பொருட்கள் இடிந்தகரைக்கு வருகின்றன. அங்கேயே கூட்டாக மக்களுக்கு கஞ்சி, சாதம் சமைக்கப்பட்டு கொடுக்கப்படுகின்றது.

உதயகுமாருடன் சுமார் 15 பேர் சாகும் வரை உண்ணாவிரதம் கடந்த திங்கட்கிழமை இரவு முதல் இருக்கின்றனர். ஆரம்பத்தில் ஊடகங்களுக்கும் அங்கே செல்வதற்கு தடை இருந்தது. பின்னர் நேற்று மாலை முதல் அது விலக்கப்பட்டிருக்கிறது. ஆங்கில ஊடகங்கள் அங்கிருந்தே நேரடி ஒளிபரப்பு செய்கின்றனர்.

இன்னமும் போலீசு ஊருக்குள் வரவில்லை. அப்படி வாகனங்கள் வருவது போல இருந்தால் மக்கள் உடன் கேள்விப்பட்டு ஊர் எல்லையில் குழுமிவிடுகின்றனர். சுற்று வட்டார மீனவ கிராமங்களிலிருந்து மக்கள் வந்த வண்ணமாகவே இருக்கின்றனர். போலீசின் பிரம்மாண்டமான அணிவகுப்பு அந்த மக்களின் உறுதியை கிஞ்சித்தும் குறைத்துவிடவில்லை.

போராடும் மக்களுக்கு தோள் கொடுப்போம். போராட்டத் தீயை அணைய விடாமல் பாதுகாப்போம்.

____________________________________________________________

– மனித உரிமைப்பாதுகாப்பு மையம்

_______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

இது இடியாத கரை – இடிந்தகரையின் போராட்டக் காட்சிகள் !

18

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

கூடங்குளம்: நாகர்கோவிலில் உதயகுமாரின் பள்ளிக்கூடம் இடிப்பு

14

இடிந்தகரையில் போராடும் மக்களோடு காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வரும் அணுசக்திக்கு எதிரான மக்கள் சக்தி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரை மிரட்டும் வண்ணம் போலீசு தொடர்ந்து செயல்பட்டுவருகிறது. ஆரம்பத்தில் அவரை தொலைபேசியில் கூப்பிட்ட அதிகாரிகள் சரணடைந்து விடுமாறு மிரட்டினர். அவரோ தான் எங்கேயும் ஒளிந்து கொண்டிருக்கவில்லை, மக்கள் மத்தியில் பகிரங்கமாக இருந்து வருகிறேன், மக்கள் முடிவின் படிதான் இங்கு இருக்கிறேன் என்று அந்த மிரட்டலை புறந்தள்ளினார். இதனால் ஆத்திரமுற்ற போலீசு வேறு ஒரு வழியினை கண்டுபிடித்திருக்கிறது.

உதயகுமாரின் மனைவி மீரா உதயகுமார் நாகர்கோவிலில் சாக்கர் மெட்ரிகுலேஷன் நடுநிலைப்பள்ளியினை நடத்தி வருகிறார். ஏற்கனவே இங்கு இந்துமுன்னணி காலிகள் சுற்றுச்சுவரை இடித்து நாசப்படுத்தியிருக்கின்றனர். அதை புகார் செய்த பிறகு காவல்துறை ஒரு போலீஸ் சென்ட்ரியை பாதுகாப்பிற்கு நியமித்திருக்கிறது. ஆனால் முந்தாநாள் மட்டும் அந்த போலீசு காவலை வாபஸ் வாங்கியிருக்கிறது. போலீசு சென்ற பிறகு போலிசு அமர்த்திய கூலிப்படையினர் பள்ளிக்குள் நுழைந்து அனைத்தையும் நாசப்படுத்தியிருக்கின்றனர். பள்ளி வேன், நூலகம், நாற்காலிகள், கண்ணாடிகள் என ஒன்றையும் விட்டு வைக்கவில்லை அந்த கும்பல்.

இது போலீசு செய்ததாகவோ இல்லை போலிசு ஏற்பாடு செய்து நடத்தியதாகத்தான் இருக்க முடியும். ஏனெனில் உதயகுமாரை சரண்டர் செய்யுமாறு மிரட்டியதற்கு அடுத்த நாள்தான் இது நடந்திருக்கிறது. அதுவும் போலீசு காவலை நீக்கிய பிறகு கச்சிதமாக நடந்திருக்கிறது. இதை எதிர்த்து மீரா உதயகுமார் புகார் செய்தும் அதை பதிவு செய்து வரிசை எண் கொடுப்பதற்கு போலீசு மறுத்து வருகிறது.

அணு உலையை எதிர்க்கிறேன் என்று பேசுவதற்கு கூட இந்த நாட்டில் ஜனநாயக உரிமை இல்லை என்பதோடு அப்படி பேசினால் வாழும் உரிமை கூட இல்லை என்பதற்கு இந்த சம்பவமே சான்று. கீழே பள்ளியில் வன்முறைக்கும்பல் நடத்திய அராஜகத்தினை விள்க்கும் புகைப்படங்கள் உள்ளன.

படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்

______________________________________________________________

– செய்தி-படங்கள்: மனித உரிமைப் பாதுகாப்பு மையம்.
______________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

கூடங்குளம்: தடையை மீறி இடிந்தகரை நோக்கி HRPC வழக்கறிஞர்கள்!

24

கூடங்குளம் போராட்டத்தை நசுக்குவதற்க்காக பாசிச ஜெயாவின் போலீசு கிட்டத்தட்ட முழுப் போரையே இடிந்த கரை மக்கள் மீது தொடுத்துள்ளது. சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்கள் எதுவும் அங்கே செல்ல முடியவில்லை. மேலும் அருகாமை இடங்களில் பேருந்து மூலம் செல்லும் மாணவர்களும் முடக்கப்பட்டிருக்கின்றனர். கிராமத்தை சுற்றி ஆயிரக்கணக்கான போலீசு எப்போதும் கண் கொத்திப் பாம்பாக முற்றுகை இட்டு வருகிறது.

கடலூரில் கைது செய்யப்பட்டுள்ள 11 முன்னணியாளர்களில் ஒருவர் பார்வையற்றவர். மற்றொரு முதியவருக்கோ இரண்டு முறை மாரடைப்பு வந்துள்ளது. திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட மக்களில் பெண்களும், சிறுவர்களும் கூட உண்டு. இவையெல்லாம் போலீசின் காட்டு தர்பார் எத்தகையது என்பதை விளக்குகின்றன.

இந்நிலையில் இடிந்தகரை நோக்கி மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்கள் இன்று செல்கின்றனர். இதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  மனு கொடுத்தனர். மாவட்ட ஆட்சியர் பயணத்தில் இருந்ததால் அவரது நேர்முக உதவியாளர் மனுவை பெற்றுக் கொண்டு ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறினார். ஆனாலும் இதுவரை அதிகார வர்க்கம் எவரையும் இடிந்தகரை நோக்கி விடவில்லை.

இந்நிலையில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரும் தன்னை சந்திக்க வரும் வழக்கறிஞர்களை போலிசு தடுப்பதாக ஊடகங்களிடம் தெரிவித்தார். அவர்களை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் தெரிவித்தார். தற்போது வள்ளியூர் நீதிமன்றத்தில் மக்களை பிணையில் எடுப்பதற்கு ஏற்பாடுகளைச் செய்து விட்டு ம.உ.பா.மை வழக்கறிஞர்கள் அனைவரும் இடிந்தகரை நோக்கி செல்கின்றனர்.

போராடும் மக்களுக்கு தோள் கொடுப்போம். போராட்டத் தீயை அணைய விடாமல் காப்போம்.

மாவட்ட ஆட்சியருக்கு அளிக்கப்பட்ட மனு:

அனுப்புநர்;
எஸ் ராஜூ, வழக்கறிஞர்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மனித உரிமைப் பாதுகாப்பு மையம் / தமிழ்நாடு

பெறுநர்; உயர்திரு மாவட்ட ஆட்சியர் / மாவட்ட நிர்வாகத்துறை நடுவர் திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி.

பொருள்; ”கூடங்குளம் இடிந்தகரைப் பகுதி மக்களுக்கு சட்ட உதவி வழங்க வழக்கறிஞர்களை அனுமதிக்க கோரி”

அய்யா, வணக்கம்!

கூடங்குளம் அணு உலையை மூடக்கோரி நடக்கும் அப்பகுதி மக்கள் போராட்டம் வாழ்வுரிமைக்கானதாகும். அது ஜனநாயக முறைப்படி அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை ஆகும். சமீபத்தில் டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தை தடைசெய்து கு.வி.மு.ச. பிரிவு 144-ன்படி உத்தரவிட்டதை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளதை தாங்கள் அறிவீர்கள் என நம்புகிறோம்.

தாங்கள் ராதாபுரம் தாலுக்காவில் பிறப்பித்த பிரிவு 144 தடை உத்தரவின் விளைவாக அந்த சுற்றுவட்டார பல்வேறு கிராமப் பகுதிகளில் குடிநீர் தடைசெய்யப்பட்டுள்ளது. பால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. பல்வேறு பள்ளிக் கூடங்களில் சென்று படிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் முழுமையாக தடுக்கப்பட்டுள்ளார்கள்.

கூத்தங்குளிக்கு சென்று தொழில் நுட்பக் கல்லூரியில் படிக்கும் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் முழுமையாக தடுக்கப்பட்டுள்ளனர். 10,000க்கும் மேற்பட்ட போலீசாரைக் குவித்து கிராமமே போர்க்கோலமாக காட்சியளிக்கிறது. சாலை மறியல் செய்ததற்காக 42 பெண்கள் உட்பட 178 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை பிணையில் எடுக்கவும், அவர்களின் உறவினர்களை சந்தித்து விவரங்களை கேட்டறியவும், மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்களும், மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களும் கூடங்குளம் காவர்நிலையத்திற்கு சென்று கேட்டபோது அனுமதி மறுக்கப்பட்டனர். தொலைப்பேசி வாயிலாக D.I.G.-யை கேட்டபோது, அவரும் 144 தடை உத்தரவால் அனுமதிக்க முடியாது எனக் கூறிவிட்டார்.

மேலும் போராட்டக்குழுவினர் இந்த அணுசக்திக்கு எதிரான நிலுவையிலுள்ள உயர்நீதிமன்ற வழக்குளை எங்களிடம் ஒப்படைத்து அவர்கள் சார்பாக நாங்கள் நடத்திவருகிறோம். போலீசாரால் பாதிக்கப்பட்ட நபர்கள் அரசுக்கு எதிராக நீதிமன்றம் சென்று தற்காத்துக் கொள்வதற்கு அவர்கள் வழக்கறிஞர்களை சந்திப்பதற்கு உரிமையுண்டு. அதுபோல் வழக்கறிஞர்களும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று விசாரித்து நீதிமன்றத்தில் வாதிட உரிமையுண்டு. இது அரசியலமைப்புச்சட்டம் நமக்கு வழங்கியிருக்கக்கூடிய அடிப்படை உரிமையும், இயற்கை நீதியுமாகும். 144 தடையுத்தரவால் மக்களின் வாழ்வுரிமைகளான அடிப்படை உரிமைகளை நிறுத்திவைக்கவோ, ரத்து செய்யவோ முடியாது. மேலும் 144 தடையுத்தரவை ரத்துசெய்து காவல்துறையை திரும்ப பெறவேண்டுமென சென்னை, மதுரை உயர்நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரனைக்கு வந்துள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்தித்து சட்ட உதவிகளை வழங்க காவல்துறை அனுமதி மறுப்பது சட்டபுறம்பானது, மனித உரிமைகளுக்கெதிரானது. எனவே மக்களை சந்திப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க ஆவண செய்ய வேண்டுகிறோம்.

இடம்: திருநெல்வேலி

தேதி: 21.03.2012

இப்படிக்கு உண்மையுடன்
(எஸ். ராஜூ)

____________________________________________________________

– தகவல்: மனித உரிமைப் பாதுகாப்பு மையம்.

____________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

கூடங்குளம்: கைதான மக்களுக்கு திருச்சி, கடலூர் சிறைகளில் நள்ளிரவு வரவேற்பு!

21

கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஆரம்பிக்க ஒப்புதல் அளித்த கையோடு அடக்குமுறை தர்பாரையும் ஏவிவிட்டிருக்கிறது, பாசிச ஜெயா அரசு. ஏற்கனவே முன்னணியாளர்கள் 11 பேர்களை கைது செய்து கடலூர் சிறையில் அடைத்திருக்கிறது. இந்தக் கைதை எதிர்த்துக் கிளம்பிய கூட்டப்புளி கிராம மக்கள் 178பேர்களை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்திருக்கிறார்கள். இவர்களில் 45 பேர் பெண்கள். மேலும்20க்கும் மேற்பட்ட சிறுவர்களும் இதில் உண்டு. அவர்கள் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்டிருக்கின்றனர்.

பாளையங்கோட்டை மத்திய சிறை அங்கிருக்க இப்படி தொலைவில் உள்ள வேறு மத்திய சிறைகளில் அடைக்க வேண்டிய அவசியம் என்ன? தொலை தூரமென்றால் போராடும் மக்கள் விரக்தியடைவார்கள், சொந்த பந்தங்கள் யாரும் சடுதியில் பார்க்க முடியாது என்ற பாசிச நோக்குடன் தமிழக போலீசு இந்த சதித்திட்டத்தை அரங்கேற்றி வருகிறது.

அதன்படி கூட்டப்புளி மக்கள் நேற்று இரவு பத்து மணி அளவில் திருச்சி சிறைக்கு கொண்டு வரப்பட்டனர். இந்த செய்தியைக் கேள்விப்பட்ட உடன் ம.க.இ.கவும் அதன் தோழமை அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் விரைவாக அணிதிரண்டு சிறை வாசலில் காத்திருந்தனர். பேருந்துகள் வந்த உடன் போராடும் மக்களை வாழ்த்தியும், பாசிச ஜெயாவின் காட்டு தர்பாரைக் கண்டித்தும் விண்ணதிர முழக்கங்கள் போடப்பட்டன.

தமது கிராமத்தை விட்டு தொலைவில் இருக்கும் திருச்சியில் நம்மை யார் கவனிப்பார்கள் என்று இருந்த மக்கள் இந்த உற்சாகமான வரவேற்பைப் பார்த்து அவர்களும் முழக்கம் இட்டனர். மேலும் ம.க.இ.க கலைக்குழுத் தோழர்கள் ஏற்கனவே இடிந்தகரை வட்டாரத்தில் விரிவான பிரச்சாரம் செய்திருந்த படியால் மக்கள் தோழர்களை அடையாளம் கண்டு கொண்டதோடு கைதான கவலையை விடுத்து அச்சமின்றி சிறை வாசலில் முழக்கமிட்டனர்.

கைதான மக்களை சிறையில் தள்ளிவிடும் நேரம் என்பதால் போலீசு உணவு ஏதும் வழங்கவில்லை. சிறைத்துறையோ நேரம் கடந்துவிட்டபடியால் உணவு இல்லை என்பதாக கைவிரித்து விட்டது. பொதுவில் கைதாகி செல்லுபவர்கள் அனைவருக்கும் இப்படித்தான் ‘வரவேற்பு’ இருக்கும். இந்நிலையில் தோழர்கள் போலீசின் அலட்சியத்தை கண்டித்ததோடு உடனே அருகாமை கடைகளில் இருந்து பிரட், பழம் வாங்கி மக்களுக்கு அளித்தனர்.

இதே போன்று கைது செய்யப்பட்ட 11 முன்னணியாளர்களும் நள்ளிரவில் கடலூர் மத்திய சிறைக்கு கொண்டு வரப்பட்டனர். அப்போது கடலூர் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் அணிதிரண்டு இரவு 1.30 மணிக்கு சிறை முன்னால் ஆர்ப்பாட்டம் நடந்தனர். அந்த நேரத்திலும் தம்மை வரவேற்க திரண்டிருந்த தோழர்களை கண்டு கூடங்குளம் முன்னணியாளர்கள் நெகிழ்ந்து போயினர்.

திருச்சி, கடலூர் சிறைகளுக்கு கொண்டு சென்று விட்டால் இந்த மக்களை தனிமைப்படுத்தி முடக்கிவிட முடியும் என்று நினைத்த போலீசின் திமிரை முறியடிக்கும் வண்ணம் இந்த சிறை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிறைக்கு செல்லுமுன்னே மக்களிடம் தோழர்கள் உணர்ச்சிகரமாக உரையாற்றினர். தொடர்ந்து தமது புரட்சிகர அமைப்புகள் அவர்களுடன் உடனிருப்பதாக உறுதி அளித்தனர்.

படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்

_________________________________________________________________

– செய்தி, புகைப்படங்கள்: ம.க.இ.க, திருச்சி, பு.மா.இ.மு, கடலூர்.

____________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

அரசு கல்லூரிகளில் அடிப்படை வசதி கோரி மாணவர் ஆர்ப்பாட்டம்!

3

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் குடி நீர், கழிவறை வசதி, உணவக வசதி மற்றும் போதிய கட்டிடங்கள், நூலகம் போன்ற அடிப்படை தேவைகள் இல்லாமல் உள்ளன. மேலும் அக்கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் திறமையை ஊக்குவிக்கும் வகையில் கலை பண்பாட்டு விழாக்களோ,விளையாட்டு விழாக்களோ நடத்தப்படுவது இல்லை. இதனை உடனே கல்லூரிகளில் நடத்த தமிழக அரசை உத்தரவிட வலியுறுத்தியும், மாணவர்கள் தங்கள் ஜனநாயக உரிமைகளுக்காக போராடும் போது அவர்கள் மீது அரசு நடத்தும் தாக்குதலை முறியடிக்க மாணவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் புரட்சிகர மாணவர் –  இளைஞர் முன்னணி, சார்பில் ஆர்ப்பாட்டம் 01.03.2012 அன்று மெமோரியல் ஹால் அருகில் நடைபெற்றது.

காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் முழக்கங்களோடு தொடங்கியது.

செய்து கொடு ! செய்து கொடு!
அரசுக் கல்லூரிகள் அனைத்திலும்
அடைப்படை வசதிகளை
உடனடியாக செய்து கொடு!

லட்சக் கணக்கில் மாணவர் படிக்கும்
அரசுக் கல்லூரிகள் எதிலுமே
குடிநீர் இல்லை  கேன்டீண் இல்லை
கழிவறை வசதிகள் எதுவும் இல்லை!
கல்லூரி என்று சொல்வதே
வெட்கக் கேடு! மானக்கேடு!

வகுப்பறை இல்லை வாத்தியார் இல்லை
கல்வி கற்கும் சூழலும் இல்லை
பட்டம் வாங்க வழி சொல்ல
வக்கில்லாத கவர்மெண்டு
அரசுக் கல்லூரி மாணவர்களுக்கு
வெளி நாட்டுப் பல்கலைக்கழகத்தில்
பாடம் பயிற்சி என்று சொல்லி
வேசம் போடுது! வேடிக்கை காட்டுது!
வெட்கக் கேடு !  மானக்கேடு!

பள்ளிக் கல்லூரி மாணவர்களின்
மதியை மயக்கும் டாஸ்மாக்கு
தெருவுக்கொன்று திறந்துகிடக்கு!
சிந்தனையை சீரழிக்கும்
சினிமாக்களோ சுண்டி இழுக்குது!
ஆபாச அறுவருப்பை
அள்ளி கொடுக்குது தொலைக்காட்சி!

மாணவர்களுக்கு வெறியூட்ட
புதுசு புதுசா கடைவிரிக்குது
நுகர்வு வெறி கலாச்சாராம்!
அடியாட்களாக விலை பேசுது
ஓட்டுக்கட்சிகளின்  பிரியாணி!

அசிங்கத்தை எல்லாம் அப்புறப்படுத்த
துப்பில்லாத நீதிபதிகள்!
அறிவுரை சொல்லும் அதிகாரிகள்!
ஆதங்கப்படும் அறிவு ஜீவிகள்!
மாணவர்கள் சமுதாயத்தை
ரவுடிகள் என்றும் பொறுக்கிகள் என்றும்
அவதூறாக பேசுவது
அயோக்கியத்தனம்! அயோக்கியத்தனம்!

தன்மானமுள்ள மாணவர் நாங்கள்
ரவுடிகள் அல்ல! பொறுக்கிகள் அல்ல!
இந்தி திணிப்பை எதிர்த்து நின்றோம்!
ஈழத்தமிழர்களுக்காக களம் கண்டோம்!
கல்விக் கொள்ளையர்களின் கொட்டம் அடக்க
வீதியில் இறங்கினோம்! சிறை சென்றோம்!
தன்மானமுள்ள மாணவர் நாங்கள்
ரவுடிகள் அல்ல! பொறுக்கிகள் அல்ல!

குயின்மேரிஸ் பச்சையப்பன்
கலை அறிவியல் கல்லூரிகளை
கணப்பொழுதில் இடிக்க நினைத்த
ஜெயா- கருணா கனவுகளை
தவிடு பொடியாக்கினோம்! தடுத்து நின்றோம்!

சமச்சீர்பாட புத்தகத்தை
முடக்க நினைத்த  ஜெயா அரசின்
சதியை எதிர்த்து வெற்றி கண்டோம்!
தன்மானமுள்ள மாணவர் நாங்கள்
ரவுடிகள் அல்ல! பொறுக்கிகள் அல்ல!

மகிழ்ச்சிக்குரிய கல்லூரி வாழ்வை
மயானமாக்கியது அரசுக் கொள்கை
வணிகமயக் கல்விக் கொள்கை!
மாணவர்சங்கத் தேர்தலை இழந்தோம்
உடற் கல்வி- விளையாட்டு
கவிதை-கட்டுரை-கலாச்சாரவிழா
கனவுகள் அனைத்தும் களைந்துபோனது
இருக்கும் விழா ஒன்றே ஒன்று
அது பஸ்டே என்று பறைசாற்றுவோம்!

இனியும் இழக்க கேணைகள் அல்ல
இழந்த உரிமைகளை மீட்டெடுப்போம்!
பஸ்டே விழாவை காத்து நிற்போம்!

தடையை நீக்கு ! தடையை நீக்கு!
மாணவர் எங்கள் உரிமையான
மாணவர் சங்கத் தேர்தல்
தொழிலாளர்-மாணவர் ஒற்றுமைக்கு
அடையாளமான பஸ்டே மீதான
தடையை நீக்கு! தடையை நீக்கு!

தன்மானமுள்ள மாணவர்களே!
புறக்கணிப்போம்! புறக்கணிப்போம்!
ஓட்டுப் பொறுக்கிகள் –சினிமா கழிசடைகளை
புறக்கணிப்போம்! புறக்கணிப்போம்!
எதிர்த்து நிற்போம்! எதிர்த்து நிற்போம்!
மாணவர் மீதான அடக்குமுறைகளை
எதிர்த்து நிற்போம்! எதிர்த்து நிற்போம்!

கட்டியமைப்போம்! கட்டியமைப்போம்!
மாணவர்கள்- ஆசிரியர்கள்
உழைக்கும் மக்கள் ஒற்றுமையை
கட்டியமைப்போம்! கட்டியமைப்போம்!

முறியடிப்போம்! முறியடிப்போம்!
வணிகமயக் கல்வியை ஊக்குவிக்க
அடிப்படை வசதிகள் இல்லாமல்
அரசுக்கல்லூரிகளை சீரழிக்கும்
தனியார்மயம்-தாராளமயம்
உலகமயக் கொள்கைகளான
மறுகாலனியாக்க கல்விக்கொள்கையை
முறியடிப்போம்! முறியடிப்போம்!

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய பு.மா.இ.மு சென்னைக்கிளைச் செயலாளர், தோழர்.வ.கார்த்திகேயன் ”அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில்  குடி நீர், கழிவறை, நூலகம் , போதிய ஆசிரியர்கள் இல்லாதது மற்றும் பல ஆண்டுகளாக இக்கல்லூரிகளில் கலாச்சார பண்பாட்டு விழாக்களை நட்த்தப்படாமல் உள்ளதையும் அதேவேளையில் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவனின்  நிலையையும் ஒப்பிட்டு இதற்கு காரணமான  அரசின் வணிகமயக் கல்விக் கொள்கையை அம்பலப்படுத்தியும் கல்லூரியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தாத அரசு 24 மணி நேரமும் தடையற்ற டாஸ்மாக்கைவழங்குவதையும் ” அம்பலப்படுத்தி பேசினார்.

அடுத்ததாக பேசிய மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர் தோழர் மில்டன் “மாணவர்கள் மீது மட்டுமல்ல போராடுகின்ற மக்கள், வழக்கறிஞர்கள், தொழிலாளிகள் என அனைவரையும் அரசு போலீசு கொண்டு தாக்கி ஒடுக்குகிறது. போராடுகின்ற அனைவரையும் பொறுக்கிகளாகவும் ரவுடிகளாகவும் சித்தரிக்கிறது ஊடகங்களும் அரசும். குறிப்பாக பச்சையப்பன் கல்லூரியில் சமீபத்தில் கல்லூரிக்குள் புகுந்து தாக்கிய போலீசு 13 பேர்களை கைது செய்தது. அதில் மூன்று பேர் அப்பகுதியில் டீ அருந்திக்கொண்டிருந்த பகுதி இளைஞர்கள். ஆனால் அவர்கள்தான் பஸ்டேவில் கலவரம் செய்த மாணவர்கள் என்று கூறுகிறது போலீசு மேலும் 200 பேர்களை கைது செய்யவும் எத்தணிக்கிறது. நீதிமன்றமும் மாணவனின் கருத்தைக் கேட்காமல் ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறது. அதை எதிர்த்து மனித உரிமை பாது காப்பு மையம் நீதிமன்றத்தில் சட்ட ரீதியாக போராடிக்கொண்டுள்ளதை ” விளக்கிப்பேசினார்.

அடுத்ததாக சென்னைக்கிளை செயற்குழு உறுப்பினரும் சட்டக்கல்லூரி மாணவருமான தோழர் மருது”தமிழகம் முழுவதுமுள்ள அடிப்படை வசதிகள் இல்லாமல் சீரழிந்து போன அரசு கல்லூரிகளுக்கு ஒரு சான்று வேண்டுமானால் அது சென்னை அரசு சட்டக்கல்லூரிதான். மாடு மேய்ப்பதற்கு கூட லாயக்கற்ற இந்த இடத்தில் தான் மேன்மைக்குரிய சட்டம் கற்பிக்கப்படுகிறது. பாலாஜி நாயுடு மோசடியாக முதல்வர் பதவியைப் பெற்று வந்த அயோக்கியத்தனத்தனத்தை பு.மா.இ.மு போராடி சட்ட ரீதியாக அம்பலப்படுத்தியுள்ளதையும் இதற்காக கல்லூரி முதல்வர் மீது போலீசு நடவடிக்கை எடுக்கவில்லை. போராடுகின்ற மாணவர்கள் மீது மட்டுமே தாக்குதலைத் தொடுக்கும் இந்த அரசை மாணவர்கள் அனைவரும் இணைந்து மட்டுமே முறியடிக்க முடியும்” என்று கூறினார்.

பு.மா.இ.மு மாநில அமைப்பாளர் தோழர். த. கணேசன் தனது கண்டன உரையில் “அரசும் போலீசும் மாணவர்கள் ரவுடிகள், பொறுக்கிகள் மாணவர்களால் வன்முறை கலாச்சாரம் பரவுகிறது என்ற பொய்ப்பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன. அனைத்துக் கல்லூரி வாசல்களிலும் காக்கிச் சட்டைகள் காவல் காக்கின்றன. ஆனால் மொத்த சமூகம் எப்படி இருக்கிறது? கொலை கொள்ளை என திரும்பிய பக்கமெல்லாம் இருப்பதற்கு என்ன அடிப்படை என்பதை அரசு ஆராய்வதில்லை. மாணவனின் தரப்பினைக் கேட்காமலேயே அவனை குற்றவாளியாக்குகிறது.

அரசு கல்லூரிகளில் மாணவனின் அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்ட சூழலில் ,அவனுக்கு அடிப்படை வசதிகள் இல்லாத சூழலில், கலாச்சார விழாக்கள் நடத்தப்படாத சூழலில் அவனாக அவனுக்கு என்று  ஏற்படுத்திக்கொண்ட விழா என்றால் அது பஸ்டேதான். ஆண்டு முழுக்க தன்னை சுமந்த  பேருந்து தொழிலாளர்களுக்கு புது உடை எடுத்துக்கொடுத்து, தனது சொந்தப் பணத்தில் கொண்டாடி மகிழும் விழாதான் அது. பல ஆண்டுகளாக பஸ்டேவும், ட்ரெயின் டேவும் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதே பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பஸ்டே விழாவை கயிறு கட்டி நடத்தியும் இருக்கிறார்கள் அது வரலாறு. ஆனால் ஓட்டுப்பொறுக்கி கட்சிகளோ தங்களுக்கு அடியாள் வேலை செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு பங்கு சீரழிவை பரப்பியது எனில்  சினிமாக்கள் தன் பங்கிற்கு சீரழிவைப்பரப்பியது.

சங்கரன் கோயிலில் இடைத்தேர்தல் என்ற பெயரில் அந்த ஊரையே நாசாமாக்கி வரும் அரசியல் கட்சிகளை தடுக்க வக்கில்லாத அரசும் போலீசும் எப்படி மாணவனை நேர்வழிக்கு கொண்டுவரும்?.  சாலையில் பேருந்தினை விழாவாக கொண்டு செல்வது பிரச்சினை என்று தடுத்து அடித்து துவம்சம் செய்யும் போலீசு எந்த அரசியல் கட்சி ஊர்வலத்தையோ கோயில் திருவிழாவையோ தடுப்பது இல்லை. ஆக மாணவனை பொறுக்கியாக ரவுடியாக சித்தரிக்க பஸ்டே ஒரு வாய்ப்பு மட்டுமே அரசுக்கு . பச்சையப்பன் கல்லூரியாகட்டும் குயின்மேரீஸ் கல்லூரியாகட்டும் மாணவர்கள் தங்களில் கல்லூரியைக்காக்க நடத்திய வீரஞ்செறிந்த போராட்டம் ஜெயா, கருணா அரசுகளை அசைத்துப் பார்த்து இருக்கிறது.

இந்தி எதிர்ப்பு, சமச்சீர் பாட்த்திட்டம், ஈழத்தமிழர் என அனைத்து போராட்டங்களிலும் முன் நிற்பது மாணவர்கள் தான் அவர்களை மக்களிடமிருந்து தனிமைப்படுத்தி ஒடுக்குவதே அரசின் முதல் வேலை . அதற்குதான் இந்தப் பொய்ப்பிரச்சாரம். இதனை முறியடிக்க உண்மையான எதிரியான போலீசு, அரசை மாணவர்கள் போராடி வீழ்த்துவார்கள்.” என கூறினார்.

தோழர்.வ.கார்த்திகேயன்  நன்றியுரை கூற ஆர்ப்பாட்டம் நிறைவுபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கல்லூரி மாணவர்கள் – மாணவிகள், பெற்றோர்கள், இளைஞர்கள்என 150பேர்கள் கலந்து கொண்டனர். மாணவர்கள் ரவுடிகள், பொறுக்கிகள் என்று அரசு,  நீதிமன்றம், போலீசு, ஊடகங்கள் என அனைவரும் பொய்ப்பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்ட வேளையில் மாணவர்கள்தான் வருங்காலத்தூண்கள் அவர்கள் வரலாற்றை மாற்றியவர்கள், மாற்றப்போகிறவர்கள் என்பதையும் தற்போதைய சூழலில் மாணவனுக்கு ஆதரவாக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மட்டுமே இருப்பதையும் பறைசாற்றியது.

________________________________________________________

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,  சென்னை

_________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

______________

_____________________

_______________________

கொலைக்களமாகுமா கூடங்குளம்? நேரடி ரிப்போர்ட்!

31

koodankulam-கூடங்குளம்கூடங்குளத்தை ஒரு கொலைக்களமாக மாற்றுவதற்குத் தயார் நிலையில் நின்று கொண்டிருக்கிறது போலீசு. போராட்டக்குழுவைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் உள்ளிட்ட 11 பேர் நேற்றே கைது செய்யப்பட்டு, போலீசு வேனிலேயே நாள் முழுவதும் வைக்கப்பட்டிருந்தனர். 2011ஆம் ஆண்டு இறுதியில் சிவசுப்பிரமணியன் மீது போடப்பட்ட ராஜத்துரோகம், சதி உள்ளிட்ட பொய்வழக்குகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். ராஜத்துரோகம், சதியில் ஈடுபட்ட அவரையும் உதயகுமார் போன்றோரையும்தான் முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் சந்தித்து உரையாடினார் என்பது நினைவிருக்கலாம். கைது செய்யப்பட்ட 11 பேரும் கடலூர் சிறைக்கு அனுப்பப் பட்டிருக்கின்றனர்.

இந்தக் கைது நடவடிக்கையை எதிர்த்து கூட்டப்புளி கிராமத்தில் கைது செய்யப்பட்ட 184 பேர் நேற்று நள்ளிரவு நெல்லை ஆயுதப்படை மைதானத்துக்கு கொண்டு வரப்பட்டனர். அவர்களை இரவோடு இரவாக சிறைக்கு அனுப்பும் முயற்சியை வழக்குரைஞர்கள் முறியடித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 45 பேர் பெண்கள். மாணவர்களும் அடக்கம். சிறை வைக்கப்படுவதை எதிர்த்து பெண்கள் போராடினர். இவர்கள் அனைவரும் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.

இடிந்தகரையில் உதயகுமார் காலவரையறையற்ற உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார். அங்கே பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கூடியிருக்கின்றனர். ஆயிரக்கணக்கான போலீசார் அங்கே குவிக்கப்பட்டிருக்கின்றனர். மரியாதையாக வந்து சரணடைந்து விடுமாறு போலீசு எஸ்.பி தன்னை மிரட்டுவதாக மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்குரைஞர்களிடம் உதயகுமார் தொலைபேசியில் தெரிவித்திருக்கிறார். கைது ஆவதற்குத் தான் தயாரென்றும், ஆனால் மக்கள் அதனை விரும்பவில்லை என்பதால், மக்களின் விருப்பத்தையே தான் நிறைவேற்ற இயலும் என்றும் அவர் போலீசுக்கு பதிலளித்திருக்கிறார்.

அங்கே கூடியிருக்கும் மக்களை மிரட்டும் வகையில் சுமார் 60, 70 ஆயுத போலீசு வாகனங்கள் அதிரடியாக வருவதும் பின்னர் பின்வாங்குவதுமாக ஒரு உளவியல் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கின்றன. நரித்தனமாக உதயகுமாரைக் கைது செய்து கூட்டத்தைக் கலைப்பது அல்லது ரத்தக் களறி நடத்தியாவது இன்றிரவு இதனை செய்து முடிப்பது என்ற திட்டத்தில் போலீசு இருப்பதாகவே தெரிகிறது.

இடிந்தகரை செல்லும் சாலை வழிகள் எல்லாம் போலீசால் அடைக்கப்பட்டு விட்டன. 144 தடையாணை பிறப்பிக்கப் பட்டிருக்கிறது. கடல் வழியாக வந்து இடிந்தகரைக்குள் நுழையும் மீனவர்களைக் கண்காணிப்பதற்கும் தடுப்பதற்கும் ஏற்ப டார்னியர் விமானங்கள் கடலின்மீது வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன.

நேற்று மதியம் முதலே கைது செய்யப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்கள் வள்ளியூர், நெல்லை நீதிமன்றங்களில் செயல்பட்டு வருகிறார்கள். இடிந்த கரைக்கு செல்வதற்கு அனுமதிக்க வேண்டுமென்று போராடிய மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்கள் 15 பேர் நெல்லை டி.ஐ.ஜி யை சந்தித்திருக்கிறார்கள். அவர்களுக்கு இடிந்தகரை செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

கைது செய்யப்பட்டவர்களைச் சந்திக்க கூடாது என்று அனுமதி மறுக்கவோ, இடிந்தகரைக்கு செல்லக்கூடாது என்று வழக்குரைஞர்களை தடுக்கவோ போலீசுக்கு சட்டப்படி அதிகாரமில்லை. இப்போது அங்கே நடந்து கொண்டிருப்பது துப்பாக்கியின் ஆட்சி. மத்திய அரசும், ஊடகங்களும், திமுக, காங்கிரசு, போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கட்சிகளும் தனக்குத் துணை நிற்கும் தைரியத்தில் ஒரு பேயாட்டத்தை நடத்துவதற்கு தயாராகி வருகிறது பாசிச ஜெயா அரசு. நலத்திட்டம் என்ற பெயரில் தான் வீசிய 500 கோடி ரூபாய் லஞ்சப்பணத்துக்கு பல்லிளித்து அடிபணியாமல் போராட்டம் தொடரும் என்று மக்கள் அறிவித்து உறுதியாக நிற்பதால், கூடங்குளம் அணு உலைக்கு முன்னதாக, அம்மாவின் தாயுள்ளம் வெடிக்கத் தயாராக காத்து இருக்கிறது.

இந்த அடக்குமுறைகளும், கைதுகளும் ஏற்படுத்தும் தற்காலிகப் பின்னடைவுகளை வென்று முன் செல்வோம். ம.க.இ.க, வி.வி.மு, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, பெ.வி.மு அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் போராடும் மக்களுக்குத் துணை நிற்பார்கள். “கூடங்குளம் அணு உலையை மூடு, அடக்குமுறையை நிறுத்து, பொய்வழக்கில் கைது செய்தவர்களை விடுதலை செய்” என்ற முழக்கங்களின் கீழ் இவ்வமைப்புகளின் சார்பில் தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவிருக்கின்றன.

மின்வெட்டைக் காட்டி கூடங்குளத்துக்கு தமிழக மக்களிடம் ஆதரவு தேடும் சதியை திரைகிழிக்கும் வகையில் தமிழகமெங்கும் பிரச்சாரம் தொடங்கப்பட்டு விட்டது. கூடங்குளத்தின் மக்களை அடக்குமுறையால் சிதறடித்து விட்டால், அப்போராட்டம் அடங்கிவிடாது. தமிழகமெங்கும் அதனைக் கொண்டு செல்வோம். அம்மக்களின் போராட்டத்தைத் தமிழக மக்களின் போராட்டமாக மாற்றியமைப்போம்.

___________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: