Tuesday, May 6, 2025
முகப்பு பதிவு பக்கம் 745

சார்லி சாப்லின்: எனது குரல் உங்களுக்குக் கேட்கிறதா?

17
சார்லி-சாப்ளின்

சார்லி-சாப்ளின்

நகைச்சுவையால் உலகைக் குலுக்கிய சார்லி சாப்லின்!

‘தி கிட்’ (சிறுவன்) என்ற பட வேலை நடந்து கொண்டிருந்த நேரம். 1920ஆம் ஆண்டு. சார்லி சாப்லின் பட உலகில் நிலைத்துவிட்ட நாட்கள்.

ஒரு நாள் ஏழு வயது சதுரங்க (செஸ்) நிபுணன் ஸ்டூடியோ வந்திருந்தான். ஒரே நேரத்தில் 20 பேருடன் ஆடப்போகிறான். கலிஃபோர்னியா சதுரங்க நிபுணர் டாக்டர் கிரிபித்சும் அன்று ஆடுகிறார்.

அவன் பெயர் சாமுவேல் ரெஷவ்ஸ்கி. மெலிந்த, வெளுத்த, தீவிரமான முகம். பெரிய கண்கள். யாரைச் சந்தித்தாலும் சவால் விடும் கோபமான பார்வை. சந்திப்பதற்கு முன்பே அவனைப் பற்றி எச்சரித்து விட்டார்கள். திடீரென்று உணர்ச்சிவசப்படுவான், வணக்கம் சொல்லவும் மாட்டான் என்றார்கள்.

சாப்லினுக்கு அறிமுகப்படுத்தினார்கள். சிறுவன் அமைதியாக சாப்லினை வெறித்துப் பார்த்துக் கொண்டேயிருந்தான். அவரோ மும்முரமாகத் தொகுப்பு வேலையில் இருந்தார்.

சில நிமிடங்கள் கழிந்தன, ‘உனக்கு பீச் பழங்கள் பிடிக்குமா?’  என்று சாப்லின் கேட்டார். ‘ஓ’ என்றான் அவன். தோட்டத்திலிருந்து எடுத்துக்கொள்ளச் சொல்லி சாப்லின் தனக்கும் ஒன்று வேண்டுமென்று சொல்லி அனுப்பினார்.

பதினைந்தே நிமிடங்களில் அவன் பழங்களோடு திரும்பினான்.

இருவருக்கும் அப்போதே நட்பு பூத்தது.

”உங்களுக்கு செஸ் ஆடத் தெரியுமா?”

”ஆடத் தெரியாதே!”

”நான் கற்றுத் தருகிறேன். இன்றிரவு நான் ஆடுகிற ஆட்டத்தைப் பார்க்க வாருங்கள். இருபது பேரோடு ஒரே சமயத்தில் ஆடப் போகிறேன்” –பெருமிதம் அவன் குரலில் ஓங்கியிருந்தது.

இரவு-

சாப்லின் ஆட்டத்தைப் பார்க்கவில்லை. சிறுவனையே ஆழ்ந்து கவனித்தார். அற்புதமான ஆட்டம் போடும் அவனது வேகம் அசரவைத்தது. அதேசமயம் சாப்லினது மனத்தை அது கலக்கிவிட்டது. ஆழ்ந்து கவனிக்கும் சிறுவனின் சின்ன முகம் ஒரு நொடி குப்பென்று சிவந்தது. அடுத்த நொடி வடிந்து வெளுத்தது. தனது திறமைக்கு அவன் ஆரோக்கியத்தையே விலையாகக் கொடுத்தான். தன்னையே அழித்துக்கொண்டு, அதையே விற்றுக் காசாக்கிப் பிழைக்கும் ஒரு கலைஞனாக அச்சிறுவனைப் பார்த்தார் சாப்லின். எவ்வளவு அவலமான, கொடூரமான வாழ்க்கை!

சார்லி-சாப்ளின்
சார்லி-சாப்ளின்

சார்லி சாப்லினுக்குள் அவர் சாகும் வரை விழித்துக் கொண்டிருந்த ஒரே உணர்வு – இந்த மனிதத்தன்மை தான். வாழ்க்கையின் அடித்தட்டில் கஷ்டப்பட்ட பல லட்சக்கணக்கான உலக மக்களின் மீது அவர் அன்பு செலுத்திய காரணமும் இதுதான்.

ஒருவேளைச் சோறுக்கே தவித்த ஐரிஷ் இனக் குடும்பத்தில் வாழ்ந்து பின்னாளில் கோடிக்கணக்கில் சம்பாதித்தார் சாப்லின். அவரே ஒரு முறை சொன்னது போல பணத்தோடு வாழப் பழகினாரே தவிர, பணக்காரனாக வாழப்பழகவில்லை. காரணம் – தனது பழைய லண்டன் நாட்களின் அடிவேரை மறக்கவில்லை; மறக்க விரும்பியதுமில்லை.

சாப்லின் பிறந்து வளர்ந்தது கலைக் குடும்பத்தில். தாய், தந்தை இருவரும் மேடை நடிகர்கள். அவர் தேர்ந்தெடுத்ததும் நடிப்புத்துறை. அதிலும் நகைச்சுவை நடிகனாகவே பயிற்சி பெற்றார். அப்போதிருந்து தானே எடுத்த சினிமாப் படங்கள் வரை மிகச் சாதாரண ஏழையின் வாழ்க்கையையே எடுத்துச் சொன்னார். பணக்காரர்களின் போலித்தனமான, கேடுகெட்ட, அற்ப வாழ்க்கையை எள்ளி நகையாடினார்.

சாப்லின் அமெரிக்க ஹாலிவுட் சினிமா நடிப்புக்கு வருவதற்கு முன் லண்டனில் வாழ்ந்தார். தாய் ஒருபக்கம், அண்ணன் ஒருபக்கம், அவர் ஒருபக்கம் என்று வேலைக்குப் போய்விடுவார்கள். சுற்றிலும் உள்ள உலகத்தை அனுபவித்து உணர்ந்து அறியவேண்டிய சின்னஞ்சிறு வயதிலேயே பல வேலைகளைச் செய்தார் சாப்லின். சிறுவியாபாரி, கண்ணாடித் தொழிலில் தொழிலாளி, பழைய துணி விற்பனையாளர், ஓட்டல் சர்வர், சாலை போடுபவர், குத்துச் சண்டை விளையாட்டு நடுவர், ஓவியர், நர்ஸ், துப்புரவாளர், ரொட்டிக்கிடங்குத் தொழிலாளி, ரொட்டி சுடும் சமையல்காரர், பிணங்களை அகற்றும் கூலி, துணை நடிகர், மரவேலை இப்படிப் பல வேலைகளில் நுழைந்து வெளியே வந்தவர் அவர்.

குடிகாரத் தந்தை; வேலைதேடி அலையும் அண்ணன்; முதலில் நடிப்பு, பிறகு தையல் மிஷினில் கூலி வேலைசெய்து, அதற்கும் பிறகு கிடைக்கும் தொழில் எல்லாம் செய்து குடும்பத்தைக் காப்பாற்றிய தாய் – இப்படிப்பட்ட வீட்டுச்சூழல்.

படிப்பு – அப்படி ஒன்று நடந்தது கொஞ்சகாலம். அவரும், அண்ணனும் அனாதை விடுதியில் படித்தார்கள். அவர்களுக்கான செலவுப் பணத்தை ஈடுகட்ட அதே நிர்வாகத்தில் அவரது தாய் உழைத்தாள். எப்போதோ ஒரு நாள்தான் தாயைப் பார்க்கமுடியும். தவறே செய்யாவிட்டாலும்கூட நிர்வாகிகள் கொடூரமாகச் சவுக்கடி கொடுத்துத் தண்டிப்பார்கள். தாயின் அரவணைப்புக்கும், பாசத்துக்கும் ஏங்கித் துடித்து வளர்ந்தார்கள் சாப்லினும் அவரது அண்ணனும்.

பின் அங்கிருந்து வெளியேறி தாயின் ஊழைப்பில் காலந்தள்ளினார் சாப்லின். அண்ணன் கப்பற் படைக்குச் சென்றுவிட்டான். ஒருவேளைச் சோறுகூட இல்லாமல் தவிப்பார். அப்படியே பழகி இரவு மட்டும் தாய் கொடுக்கும் பணத்தில் வெளிச்சாப்பாடு வாங்கிவந்து இருவரும் சாப்பிடுவார்கள். அரைப்பட்டினியும், குறைப்பட்டினியும், கடின உழைப்பும், நிம்மதியற்ற வாழ்க்கையும் தாயின் மூளையைச் சிதைத்தன. பிறகு சாகும்வரை அரைப்பைத்திய நிலையில் மருத்துவமனையில் வாழவைக்கப்பட்டாள்.

ஆரம்பகால துயரங்கள், சித்திரவதைகள் சாப்லினின் மனதில் ஆழ்ந்த வடுக்களாகிவிட்டன. ”ஒரே ஒரு குவளை டீ கொடுத்திருந்தால் நான் குணம்ஆகி இருப்பேன்” என்று அவரது தாய் கதறியது இறுதிவரை மறக்கவேயில்லை.

சாப்லின் என்ற ஏழைப்பங்காளனின் உலகப்பார்வை இங்கிருந்துதான் தொடங்கியது. பிறகு பணம் வந்தபிறகு, எல்லாவற்றையும் மறந்துவிட்டுச் சுயநலத்தோடு வாழாமல் ஏன், எப்படி என்று கேள்விகேட்டுக் கொண்டார். தனக்கோ தன் குடும்பத்துக்கோ மட்டும் இந்நிலை இல்லை, சமூகத்தில் அடித்தட்டு ஒன்று உண்டு. அவர்களே சமூகத்தின் அஸ்திவாரம் என்று புரிந்துகொண்டார். வாழ்நாள் முழுவதும் இந்த உண்மையைச் சொல்லும் கலையே சிறந்தது, இதை மாற்றக்கூடிய போராட்டமே மக்களுக்கானது, மற்றவை மக்களுக்கு எதிரானது என்ற கண்ணோட்டத்தை வளர்த்துக் கொண்டார்.

இந்த கண்ணோட்டம் கலைஞருக்கு அவசியம் என்பதை சககலைஞரிடமிருந்து கற்றுக் கொண்டார். தாயிடமிருந்து அதிகம் கற்றுக் கொண்டார்.

சார்லி-சாப்ளின்தொளதொளத்த கால்சட்டை, இறுக்கமான கோட்டு, கால்களில் பெரிய பூட்சுகள், கையில் நடைக்கம்பு, முகத்தில் ஒப்பனை, பல்குச்சி அளவுக்கு மீசை, கோமாளி நடை – இப்படி ஒரு நாடோடித் தோற்றம் – – இதுதான் சார்லி சாப்லின். திரையில் அந்த உருவம் தோன்றிவிட்டால் போதும் – அரங்கத்தில் சிரிப்பு தொடங்கி விடும்.

இந்த நாடோடி உலகம் முழுவதும் மக்களைச் சிரிக்க வைத்தான். இந்திய, தமிழக மக்களுக்கும் அவனை ஓரளவு தெரியும். ஊமைப்படக் கோமாளி நடிகர் சார்லி சாப்லின்.

இன்றுள்ள அளவு தொழில்நுட்பம் வராத காலம் –ஒலி வசதி கூட இல்லை – வண்ணங்களில் எடுக்கமுடியாது; கறுப்பு – வெளுப்பு மட்டும்தான். எங்கு வேண்டுமானாலும் காமெராவை நகர்த்தக்கூடிய வசதிகள், சாதனங்கள் கிடையாது. பலப்பல வரம்புகள். இவ்வளவையும் மீறி, பேச்சு இல்லாத குறை கொஞ்சம் கூடத் தெரியாதபடி ஒரு மணி, இரண்டு மணிநேரம் பார்ப்பவர்களை ஈர்த்துவிடும் அற்புதத்தைத் திரையில் படைத்தார் சாப்லின். உலகில் தனக்கு முன்னால் நகைச்சுவைக் கலையை மனித நேயத்துடன் நடித்தவர்களின், கதைகள் எழுதியவர்களின் பாரம்பரியத்திலிருந்து அள்ளி எடுத்துக் கொண்டார் சாப்லின். அப்டன் சிங்ளேர், பிரெக்ட், பெர்னார்டு ஷா, தாமஸ் மான், என்று எண்ணற்ற எழுத்தாளர்களிடமிருந்து, நிஜின்ஸ்கி போன்ற நாட்டியக் கலைஞரிடமிருந்து, ஹான்ஸ் ஐஸ்லர் போன்ற பாட்டாளிவர்க்க இசை மேதையிடமிருந்து, ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞானிகளிடமிருந்து, ஐஸன்ஸ்டீன், டான்லெனோ, மார்செலின், டன்வில், மார்க்ஷெரீடன், பிராங்க் காயின், ஜார்மோ போன்ற நகைச்சுவை நடிகர்களிடமிருந்து ஏராளமாகக் கற்றுக் கொண்டார்.

சாப்லின் படங்களை வேகமாக ஒரு நோட்டம் விட்டால் வாழ்க்கை வீச்சை அதில் பார்க்கலாம்.

*1914 கீஸ்டோன் சினிமாக் கம்பெனியில் தயாரித்த தி நியூ ஜானிடர்‘: (துப்புரவு வேலையாள்): இந்தப் படத்தில் அந்தத் தொழிலாளி ஏதோ தவறு செய்துவிட மேனேபஜர் வேலையைவிட்டு நிறுத்திவிடுகிறேன் என்று கத்துகிறான். ‘ஐயா எனக்குப் பெரிய குடும்பம். சின்னஞ்சிறு குழந்தைகள் வேறு. வேலையவிட்டு நிறுத்திடாதீங்கய்யா என்று அவன் கெச்சுவான். இப்படிச் சிறு சிறு சம்பவங்களாக அவனது வாழ்க்கை.

*1917 ஃபர்ஸ்ட் நேசனல் கம்பெனியில் தயாரித்த ஒரு நாயின் வாழ்க்கை‘: ஏழையின் வாழ்க்கையை நாயின் வாழ்க்கைக்கு ஒப்பிட்டு நகைச்சுவைக் காட்சிகள் வரும், எச்சில் சோறு தேடப்போய் நாய்ச்சண்டையில் ஒரு நாயைக் காப்பாற்றுகிறான் நாடோடி; பிறகு அந்த நாய் நட்பாகிறது. இப்படியாக அவனது ஒருநாள் வாழ்க்கைதான் படத்தின் கதை.

*1921 – தி கிட்: குப்பைத் தொட்டியருகே ஒரு குழந்தை அனாதையாக வீசப்படுகிறது. நாடோடி எடுத்து வளர்க்கிறான். அதை வளர்க்க அவன் படும்பாடு. வளர்ந்து சிறுவனானதும் அவன் பெரிய பங்களாக்களின் கண்ணாடிக் கதவுகளை உடைப்பான். நாடோடி சென்று செப்பம் செய்து சம்பாதிப்பான். இருவரும் நடுவே எதிரியாக வரும் போலீசைச் சமாளிப்பார்கள்.

*’தி சர்க்கஸ்‘ : சர்க்கஸ் கோமாளியின் அவல வாழ்க்கை. அவர் மிக உயர்வாக மதித்த மார்செலின் என்ற அற்புதமான மேடை நகைச்சுவை நடிகர் பிழைப்புக்காக பல கோமாளிகளோடு ஒரு கோமாளியாக சர்க்கஸ் கூடாரத்தில் வாழ்வதை நேரில் பார்த்தார். அவரது நசிந்த வாழ்க்கையே இந்த திரைப்படம் என்று சொல்லலாம். ஒரு கலைஞன் எப்படியெல்லாம் துன்பப்படுகிறான் என்பதை சர்க்கஸ் கூடாரத்தில் நடக்கும் சம்பவங்கள் மூலமாகக் காட்டுகிறார். (ராஜ்கபூரின் ‘மேரா நாம் ஜோக்கரி’ன் கடைசிப் பகுதி சாப்லினை மோசமாகக் காப்பியடித்த படமாகும்.)

*’தி ஐடில் கிளாஸ்‘ (சோம்பேறி வர்க்கம்): நாடோடி கோல்ஃப் ஆட்டம் ஆடுகிறான். அங்கு நடக்கும் விருந்தில் அழகிய பெண் ஒருத்தியைச் சந்தித்துப் பழகுகிறான்; அதற்காகவே கனவான்களிடம் அடி உதை வாங்கி வெளியே ஓடுகிறான்; மறுபடி பயணம் தொடருகிறான். பணக்காரச் சோம்பேறி வர்க்கத்தை, அந்த கேவலமான வாழ்க்கையை அலசுகிறார் சாப்லின்.

*’தி சிடி லைட்ஸ்‘ (நகர விளக்குகள்) 1931: இதன் கரு உருவானதே விசித்திரமான கதை. பணக்காரனின் கிளப்பில் இரண்டுபேர் ‘மனித உணர்வுகள் நிலையில்லாதது. அதாவது மாறிக்கொண்டே இருக்கும்’ என்று வாதிட்டார்கள். ஒருநாள் சாதாதாரண ஏழையைக் கொண்டுபோய் தங்கள் பங்களாவில் மது, மாது, பாட்டு நடனம் எல்லாம் கொடுத்தார்கள்; அவன் மயங்கி விழுந்ததும் மறுபடி அவன் வாழ்ந்த நடைபாதையில் கொண்டு போட்டு விடுகிறார்கள். தூங்கி எழுந்த அவன் முந்தின இரவு நடந்தது கனவா, நனவா என்று புரியாமல் விழிக்கிறான். இந்த பணக்காரர்களின் குரூரமான வக்கிரப் புத்தியைச் சந்தித்த சாப்லின் இதிலிருந்து தனக்கான கருவை உருவாக்கினார். கிளப்பில் விவாதித்த சோம்பேறியின் பிரதிநிதியாக ஒரு பணக்காரனைக் குடிகாரனாக்கி, அவன் போதையில் இருக்கும் போது நாடோடியை இழுத்துக் கொண்டு போய் நண்பன் என்று சீராட்டுவான். மறுநாள் காலை போதை தெளிந்ததும் ‘யார்டா நீ’ என்று கேட்டுவிட்டுப் போய்விடுவான். இந்த அதிர்ச்சியிலிருந்து நாடோடி மீள்வதற்க்குள்ளாக மறுபடி வேறொரு நாள் அக்குடிகாரன் அவனைப் பார்த்து நட்பு கொண்டாடுவான்.

சார்லி-சாப்ளின்ழ்மை, வறுமை பற்றி சாப்லின் ஆழ்ந்த கருத்துக்களைச் சொல்வதற்கு பல காரணங்கள் தேடினார்கள். சாமர்செட்மாம் என்ற அமெரிக்க எழுத்தாளர் ”அவரது பழைய நாட்களை விரும்புகிறார், இளவயதில் போராடிய நாட்களின் சுதந்திரத்தை விரும்புகிறார், அதனால் தான் அவரது நகைச்சுவை இப்படி இருக்கிறது” என்றார். அதற்குப் பதில் சொன்ன சாப்லின், ”வறுமை கவர்ச்சிகரமான விஷயம் போல் எழுதிவிடுகிறார்கள். எந்த ஒரு ஏழையும் பழைய வறுமையை மறுபடி விரும்புவதில்லை. அதற்காக ஏங்குவதுமில்லை. அதை போல வறுமையில் சுதந்திரம் காண்பவனும் இருக்கமுடியாது…..” என்று தெளிவாய்ச் சொன்னார். பணக்காரர்களின் அழுகிநாறும் உலகமும் வேண்டாம், ஏழ்மை வறுமையும் வேண்டாம், சுதந்திரமான – ஜனநாயகமான புதிய உலகம் வேண்டும். இதுவே அவரது நடிப்பு, கதை, அரசியல் வாழ்க்கை எல்லாம், இதன் தர்க்கரீதியிலான சிந்தனைகள் அவரைக் கம்யூனிச ஆதரவாளராக மாற்றியது.

உலகைச் சுற்றிலும் ரத்தம் தேடி அலையும் பாசிச அரக்கன் ஜெர்மனி இட்லர்; அதை எதிர்த்த பாட்டாளி வர்க்கத்தின் போரும் தியாகங்களும் – இந்த நிலைமையில் ஹாலிவுட் கலைஞர்களை போதைகளான, ஆபாசமான, பொறுப்பற்ற பொழுதுபோக்குச் சரக்கைத் தயாரிக்கச் சொல்லி பலவந்தம் செய்தார்கள் முதலாளிகள். நேர்மை, தனிவுள்ளம் கொண்ட கலைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். முதலாளிகளின் அராஜகத்தை கேலிசெய்து ‘மாடர்ன் டைம்ஸ்’ என்ற படம் தயாரித்தார் சாப்லின்; இட்லரை எதிர்த்து அம்பலப்படுத்தும் ‘கிரேட் டிக்டேடர்’ (மாபெரும் சர்வாதிகாரி’) என்ற படமும் தயாரித்தார்.

இருபடங்களைத் தொடர்ந்து  அவர் மீது அவதூறு வழக்குகள், 10 ஆண்டுகள் நடந்தன. இதனால் அவரது ‘யுனைடட் ஆர்டிஸ்ட்ஸ்’ பட நிறுவனம் சரிந்தது. ‘அமெரிக்காவில் பல காலம் வாழ்ந்தும் ஏன் குடியுரிமை பெறவில்லை?’ என்ற கேள்வி எழுப்பினார்கள். ‘அயல்நாட்டானை அடித்துத் துரத்து’ ‘சாப்லின் விருந்தாளி. நீண்டநாள் தங்கிவிட்டார்’ என்று ‘கத்தோலிக்க படைப்பிரிவினர்’ எதிர்ப்புக் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார்கள்.

எதிர்ப்புகள் தோன்றத்தோன்ற சாப்லின் உறுதியாக நின்றார். இரண்டாம் உலகப் போரில் நேச நாடுகள் அணி சேர்ந்தன. சோவியத் ரசியா மீது ஜெர்மனி போர் தொடுத்தது. 200 நாஜிப்படைப் பிரிவுகளை எதிர்த்து முதல் போர் முன்னணியைத் தொடங்கியது சோவியத். அங்கு நிவாரணக் குழு அனுப்பவும், அமெரிக்கா இரண்டாவது போர் முன்னணியைத் தொடங்க நிர்ப்பந்தம் செய்தும் சாப்லின் வீர உரைகள் ஆற்றினார்.

அவரைக் கம்யூனிஸ்டு என்று தூற்றினார்கள். சாப்லின் அஞ்சவில்லை.

”நான் ஒரு கம்யூனிஸ்டு அல்ல. நான் ஒரு மனிதன். மனித உணர்வுகள் எனக்குத் தெரியும். எப்பொழுது எப்படி நடந்து கொள்வார்கள் என்று தெரியும். கம்யூனிஸ்டுகள் மற்றவர்களை விட வித்தியாசமான ஜீவன்கள் இல்லை. கம்யூனிஸ்டுகளின் தாயும் மற்ற தாய்களைப் போலத்தான். தனது மகன் போர் முனையிலிருந்து திரும்ப மாட்டான் என்று செய்தி கேள்விப்படுகிற போது அந்தத் தாயும் அழுகிறாள். கதறுகிறாள். இதை நான் புரிந்துகொள்ள கம்யூனிஸ்ட்டாக இருக்க வேண்டியதில்லை. நான் ஒரு மனிதனாக இருந்தாலே போதும்….”

”ரசியப் போர் முனையில் சாவா, வாழ்வா என்ற போராட்டத்தில் ஜனநாயகம் இருக்கிறது. நேச நாடுகளின் விதி கம்யூனிஸ்டுகளின்  கையில் இருக்கிறது…. லிபியாவைக் காத்தோம், இழந்தோம்; பிலிப்பைன்ஸ், பசிபிக் தீவுகள் அத்தனையும் இழந்தோம். ஆனால் ரசியாவை இழக்கவிடக்கூடாது. அது ஏன்? ரசியாதான் ஜனநாயகத்தைத் தீவிரமாகக் காக்கும் போர் முன்னணி. நமது உலகம் – நமது வாழ்வு – நமது நாகரிகம் காலடியில் நொறுங்கிக்கொண்டிருக்கிறது. நாம் உடனே முடிவெடுத்தாக வேண்டும்.”

இந்த நேரத்தைக் கைவிட்டுவிட்டால், ஜெர்மனி இட்லர் ஜெயித்தால், உலகெங்கும் உள்ளே மறைந்திருக்கும் நச்சுக் கிருமிகள் போல நாஜிகள் வெளியே தலைதூக்குவார்கள். வெற்றிபெற்ற இட்லரோடு ஒப்பந்தம் போடச் சொல்வார்கள். எச்சரிக்கையாக இருக்கவேண்டும்

என்று மக்களிடம் அவசரமாக, தீவிரமாக, ஒரு புயல்போல பிரச்சாரம் எடுத்துச் சென்றார்.

சார்லி-சாப்ளின்கடைசியில் அமெரிக்காவை விட்டு வெளியேறினார். எங்கு பல கனவுகளோடு உழைத்துக் கொண்டிருந்தாரோ, எங்கு பாசிச ஆதரவு முதலாளிகளின் மனிதகுல நாசவேலைகள் தீவிரப்பட்டதோ அங்கிருந்து வெளியேறினார். இங்கிலாந்து சென்றார். அங்கும் நாஜி ஆதரவாளர்கள், மக்களின் எதிரிகள் தொல்லை கொடுத்தார்கள். உலகம் முழுதும் பரவியுள்ள நச்சுக் கிருமியாகப் போர் வெறியைப் பார்த்தார் சாப்லின். இறுதி மூச்சுவரை அதை எதிர்த்துக் கலை அரங்கிலிருந்து தாக்குதல் தொடுக்க அவர் தவறவில்லை.

ஒரு சுவையான சம்பவம், இங்கிலாந்தில் சாப்லினுக்கு நேர்ந்த்து. நண்பருக்கு நண்பர் என்று சொல்லிக்கொண்டு ஒருவன் வந்தான். அவரோடு பேசிக் கொண்டிருந்தார். ஐரோப்பாவில் உள்ள நிலைமையைப் பார்த்தால் அடுத்த போரும் வரும் என்றார் சாப்லின். ‘அடுத்தமுறை போருக்குச் செல்ல நான் அகப்படமாட்டேன்’ என்றார் அவர்.  ”உன்னைப் பழிசொல்லி என்ன பயன்? நீ இன்னாரோடு சண்டைக்குப்போ, செத்துப்போ என்று கட்டளை போட இவர்கள் யார்? இதில் தேசபக்தி என்ற பெயர் வேறு. என்று சொன்னார் சாப்லின். அடுத்தநாள் செய்தி ஏடுகளில் பெரிய தலைப்பில் செய்திவந்தது – ”சாப்லின் தேசபக்தர் அல்ல”. பிறகுதான் சாப்லினுக்குப் புரிந்தது, முந்தினநாள் வந்து பேசியது எந்த நண்பருக்கு நண்பனும் அல்ல, ஒரு செய்தியாளர் என்பது.

சாப்லின் அதற்குச் சொன்ன பதில் அவசியம் குறிப்பிடவேண்டிய ஒன்று. ” ஆம் நான் தேச பக்தன் அல்லதான், அதாவது தேச பக்தி என்ற பெயரில் 60 லட்சம் யூதர்கள் கொல்லப்படும்போது” அப்படிப்பட்ட தேசபக்தி போலி தேசியம், அப்படிப்பட்ட ஒரு ஜனாதிபதிக்காக, ஒரு பிரதமருக்காக, ஒரு சார்வாதிகாரிக்காக உயிர்க்கொடுக்க நான் விரும்பவில்லை. – சாப்லின் இவ்வாறு கொதித்துச் சொன்னார்.

ஒரு கலைப் பொருள் பற்றி சாப்லினிடம் விவாதித்ததால் அது மக்களுக்கானதா என்றுதான் அவர் ஆராயத் தொடங்குவார். தனது திரைப்பட நகைச்சுவைக் கலை மூலம் இதைத்தான் சாதித்தார். ஒலிப்பதிவு வந்த பிறகும் அவர் துணிச்சலாக ஊமைப்படம் எடுத்தார். ஊமைப்படத்திலேயே அதன் வரம்புகளை நடிப்பின் மூலம் உடைத்தெறியக் கற்றுத் தேர்ந்ததால், ஒலியைப் பயன்படுத்த முடியவில்லை. இந்த வகைக்கலையில் ஓர் அறிஞர் சாப்லின் என்றுகூடச் சொல்லலாம்.

கட்டளைக்கு ஆடிவிட்டு வரும் கலை மோசமான கலை என்பார் அவர். மனிதனுக்கே எதிரான கருத்தைப் போலித்தனமாக வேஷங்கட்டி ஆடமுடியாது. ஒரு சிறந்த கலைஞர், ஒரு உன்னதமான கலைஞர் அவ்வாறு செய்யமாட்டார். கலைபற்றி பல விதங்களில் விளக்க முற்பட்ட சாப்லின் – உணர்ச்சிகளையும் புத்தியையும் இணைத்துக் கலக்கும் விதம் கலைஞனுக்குக் கைவரவேண்டும். அதற்கு வெறும் திறமை மட்டும் போதாது, கலைநுட்பம், கலைத்திறன் வேண்டும். அதற்கு நல்ல பயிற்சி வேண்டும் என்றார்.

அவர் கலையில் ஓர் எதார்த்த வாதி. வெளியே நடப்பதை அப்படியே திரையில் எடுத்துவைப்பது எதார்த்தம் அல்ல; கற்பனை அந்த எதார்த்தத்திலிருந்து என்ன எடுத்துச் செய்யமுடியுமோ அதுவே முக்கியம் என்பார். உலகெங்கிலும், ஏன் இந்தியாவில் உள்ள ஒரு சில இயக்குனர்கள் கூட எதார்த்தம் என்பதுபற்றி விசித்திரமான கருத்துக்கள் வைத்திருக்கிறார்கள்.

பார்வையாளர்கள் ஒரு குறிப்பிட்ட செட் அல்லது இடத்தைப் புரிந்துகொண்டுவிட்டார்கள் என்றால் போதும். அதற்குப் பிறகும் கதாபாத்திரம் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அசைவது; நகருவது எல்லாம் காட்டவேண்டியதில்லை. இது படத்தின் ஓட்டத்தைக் குறைத்துவிடுகிறது. ஆனால் இதைத்தான் கலைப்படம் என்று சிலர் சொல்கிறார்கள் என்று கேலி செய்தார் சாப்லின்.

நம்நாட்டில் சத்யஜித்ரே, குமார் சஹாரி, அடூர் கோபாலகிருஷ்ணன், அரவிந்தன் போன்றோர் இப்படிப்பட்ட சித்தரிப்பையே எதார்த்தம் என்கிறார்கள்.

அதேபோல அவசியமில்லாமல் காமிரா விளையாட்டு காட்டுவது கலையல்ல என்றார் சாப்லின். ஓர் அறை, கணப்பு அடுப்பு, அதைக் காட்டுவதற்கு எரியும் துண்டுக் கரியின் பார்வையிலிருந்து அடுப்பையும், அறையையும் காட்டவேண்டிய அவசியமில்லையே என்று கேலி செய்தார் அவர்.

வாழ்க்கை முரண்பாடுகள், போராட்டங்கள் நிறைந்தது; அதில் வரும் நோவும் துன்பமும் இல்லாமல் வாழ்க்கை இல்லை. இதிலிருந்துதான் தனது கதைகளை எடுத்துக் கொண்டார் சாப்லின். கற்பனையைத் தூண்டும் சம்பவங்களை ஓயாது தேடும் காவல் கோபுரமாக மனது (மூளை) பயிற்சி பெற்று விட்டது. ஒரு கருவை எடுத்தபிறகு, விரிவாக்குவேன், பிறகு அதில் முழுமூச்சாக ஈடுபடுவேன் என்று தனது கலை ஆக்கத்தைச் சொன்னார் சாப்லின்.

லண்டன் கென்னிங்டன் தெரு பவுனால் ஏழைக்குடியிருப்பில் வித்திடப்பட்ட அக்கலைஞன் நாடுவிட்டு நாடு பயணம் செய்த போதும், நடிப்புத் துறையில் முன்னேறி எவ்வளவோ சம்பாதித்தபோதும் தன் வேரை இடம் பெயர்க்கவே இல்லை. ‘The Great Dictator – மாபெரும் சர்வாதிகாரி‘ திரைப்படத்தின் கடைசிக் காட்சியில் ஓர் முடித்திருத்தும் தொழிலாளி மாறாட்டத்தினால் சர்வாதிகாரியின் இடத்தில் ஆட்சியில் அமர்த்தப்படுகிறார். அந்த எளியவரின் எண்ணங்கள் மாறவில்லை. அவர் பேசுகிறார் – யாரும் எதிர் பாராத பேச்சு – சர்வாதிகாரியையே எதிர்த்துப் பேசுகிறார். கதாபாத்திரம் அங்கே பேசவில்லை – அவர்மூலம் சாப்லின் என்ற மனிதர், ஒரு ஜனநாயகக் கலைஞர் அங்கே பேசுகிறார்:

”இப்போது எனது குரலை உலகெங்கிலும் உள்ள பல லட்சக்கணக்கான மக்கள் நீங்கள் கேட்கிறீர்கள். துன்பப்படும் பல லட்சக்கணக்கான ஆண்கள், பெண்கள், சின்னஞ்சிறு குழந்தைகள் அத்தனைப்பேரும் உங்களையே அடிமைப்படுத்தும் ஓர் அமைப்புக்குப் பலியாகியிருக்கிறீர்கள்:

எனது குரல் உங்களுக்குக் கேட்கிறதா? எனக்குச் செவி கொடுப்பவர்களுக்குச் சொல்கிறேன், தயவுசெய்து கேளுங்கள்: ‘துயரப்படாதீர்கள்’ இத்துன்பம், இத்துயரம் பேராசைக்காரர்களால் வந்தது. அது பனிபோல் நீங்கிவிடும். மனித குலம் முன்னேறும் வேகத்தைக் கண்டு அஞ்சிக்குலை நடுங்கும் அற்பமனிதர்களால்தான் துன்பம் வருகிறது. இனி மனிதர்களுக்கு இடையே உள்ள குரோதங்கள் மறைந்து விடும்; சர்வாதிகாரிகள் செத்து விழுவார்கள். மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட அதிகாரம் மக்களுக்கே திரும்ப வந்து சேரும். இந்த லட்சியத்துக்காக மக்கள் போரிட்டுப் பல தியாகங்கள் செய்கிறார்கள். அவர்கள் காப்பாற்றித்தரும் விடுதலை என்றுமே அழியாது!….. வீரர்களே! அடிமை வாழ்வுக்காகச் சண்டை போடுங்கள்! விஞ்ஞானமும் முன்னேற்றமும் மனித இனத்தை உந்தித்தள்ளும் ஒரு புது உலகத்துக்காகப் போரிடுவோம்! வீரர்களே, ஜனநாயகத்தின் பேரால் நாம் ஓரணி சேருவோம்!

மக்கள் கலைஞனின் சுதந்திரமான இனிய குரலைப் பலமுறை கேளுங்கள்; இந்தியாவின் உண்மையான சுதந்திரத்துக்கான போருக்காக அவ்வினிய குரலிலிருந்து தெம்பினைப் பருகுவோம்!

_______________________________________

புதிய கலாச்சாரம், ஏப்ரல் 1989.

_______________________________________

கூடங்குளம்: அடக்குமுறைக்கெதிராக நெல்லையில் கூட்டம்! அனைவரும் வருக!

18

கூடங்குளம் அடக்குமுறைக்கெதிராக நெல்லையில் கூட்டம்கூடங்குளம் அடக்குமுறைக்கெதிராக நெல்லையில் கூட்டம்

படத்தை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்

இந்த அழைப்பிதழின் PDF பெற இங்கே அழுத்தவும்

போராடுவதற்கான உரிமையே மற்ற உரிமைகளை பெறுவதற்கான திறவுகோல்!

மக்களுடைய எதிர்ப்பை பொருட்படுத்தாமல் கூடங்குளம் அணு உலை திறக்கப்பட்டு விட்டது!

அணு உலையின் அபாயம் குறித்து மக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அரசு பதிலளிக்கவில்லை!

கேள்வி எழுப்பிய குற்றத்திற்காக அடுக்கடுக்கான பொய்வழக்குகளை தொடுத்துள்ளது!

பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை எதிர்த்துப் போராடிய நாட்டுப்பற்றாளர்கள் மீது போடப்பட்ட தேசத்துரோக வழக்குகளை இன்று போராடும் கூடங்குளம் மக்கள் மீதும் போட்டிருக்கிறது தமிழக அரசு!

ஆபத்தான அணு உலை வேண்டாம் என்று கூறுவது தேசத்துரோகமாம்!

இ.பி.கோ.120 சதித்திட்டம் தீட்டுவது – இ.பி.கோ.121 அரசுக்கு எதிராகப் போர் தொடுப்பது – இ.பி.கோ.124 ஏ ராஜத்துரோகம் – இவற்றிற்கு ஆயுள் தண்டனை மற்றும் மரண தண்டனை வழங்க முடியும்.

இ.பி.கோ.199, 188, 121, 121(A) 123, 124(A), 125, 143, 147, 153(A), 294(b) 341, 342, 353, 447, 500, 505(I), (b) 506(II), 3 Of Ppdl Act, 7(1) (A) CLA Act r\w 120(b) என்ற கடும் குற்றப் பிரிவுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் மீது நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கூடங்களம் அணு உலையை மூட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நடத்திவரும் போராட்டம் அனைத்து மக்களுக்குமானது. இந்திய ஆளும் வர்க்கத்தின் அணு குண்டு, வல்லரசு கனவு, மற்றும் பன்னாட்டு முதலாளிகளின் நலன்களுக்கு எதிரானது. ஆகையால்தான் அரசு இயந்திரங்களும் அதன் அடிவருடிகளும் அப்போராட்டத்தை ஒருசேர ஒடுக்க முயல்கிறார்கள். சாலை மறியல் செய்த பெண்கள், சிறுவர்கள், நோயுற்றவர்கள், உள்பட கூட்டப்புளி மக்கள் 178 பேர் மீது தூக்கு தண்டனை வழங்கும் சட்டப்பிரிவில் சிறையில் அடைக்கிறார்கள். தலைக்கு இருவர் என 356 பேர் வள்ளியூர் நீதிமன்றம் வந்து ஜாமீன் கொடுத்து பிணையில் வந்தாலும், தினமும் காலையில் கொடும் குற்றவாளிகளைப் போல் காவல் நிலையத்தில் கையெழுத்திடச் செய்கிறார்கள். பிணையை தளர்த்த நீதிமன்றம் சென்றால் ஒரு மாதம் கழித்து வாருங்கள் அது எனது கொள்கை என அறிவிக்கிறார்கள். பேருந்து வசதியில்லாத பாதையில் பழவூர் காவல் நிலையத்திற்கு காலை 10-00 மணிக்கு சென்று தினமும் கையெழுத்து போட்டால் பிழைப்புக்கு கடலுக்கு எப்படி செல்வது? குடும்பத்திற்கு கஞ்சி யார் ஊற்றுவது? ஆனால் மக்களின் இப்பிரச்சினைகள் பற்றியும் வாழ்க்கை குறித்தும் அரசு இயந்திரத்திற்கு மயிரளவும் கவலை கிடையாது.

கூடங்குளம் வழக்கறிஞர் சிவசுப்பிரமணியன் உட்பட 18 பேர், கூட்டப்புளி ஃபாதர் சுசிலன் உட்பட 30 பேர் மற்றும் முகிலன், சதீஷ் ஆகியோர் நான்கு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 23 நாட்கள் சிறை வாசத்திற்குப் பிறகு பிணையில் வந்துள்ளனர். வழக்கம் போல் நக்சலைட் பீதியூட்ட முகிலன், சதீஷ் ஆகியோருக்கு பிணை மறுக்கப்பட்டு சிறையில் வைத்துள்ளனர். உதயக்குமார் உட்பட யாரை வேண்டுமானாலும் ஆயிரக்கணக்கில் கைது செய்யும் வகையில் கடந்த ஆண்டே பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

இத்தகைய வழக்குகள் நிலுவையில் இருக்கும் போதுதான் குற்றவாளிகளாக சித்தரிக்கப்படும் போராட்டக்குழுவினர் முதல்வர் ஜெயலலிதாவையும், பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்தித்துள்ளனர். காவல் துறை உயர் அதிகாரிகள், கலெக்டரை பல முறை நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். நேற்று வரை போராட்டத்தில் உங்களில் ஒருத்தியாக இருப்பேன் என்று நாடகமாடிய ஜெயலலிதா, சங்கரன் கோவில் இடைத்தேர்தல் முடிந்தவுடன், 144 தடையுத்திரவு மூலம் போக்குவரத்து, மின்சாரம், பால்,தண்ணீரை நிறுத்திப் போராடும் மக்களை பணிய வைக்க முயற்சித்தார். தமிழக அரசின் இம்முயற்சிக்கு நாடு முழுவதும் கண்டனக்குரல் எழும்பவே பகுதி அளவில் முற்றுகை விலக்கிக் கொள்ளப்பட்டது. வாழ்வுரிமைக்காக போராடியதைத் தவிர வேறு எந்தக் குற்றத்தையும் செய்யாத அப்பகுதி மக்களை வழக்கு, கைது, சிறை என பய பீதியூட்டி வருகிறது தமிழக அரசு. போலீசின் தடியடி, துப்பாக்கி சூட்டைக்காட்டிலும் இது கடுமையான ஒடுக்குமுறை.

ஆபத்தான அணு உலை வேண்டாம் என அடுத்த தலைமுறைக்கும் சேர்த்துப் போராடியதால் அப்பகுதி மக்கள் வேலை இழந்தார்கள், உணவை இழந்தார்கள், வருமானத்தின் ஒரு பகுதியை போராட்ட நிதியாகக் கொடுத்து வருமானத்தை இழந்தார்கள். தற்போது வழக்கு, கைது, சிறை துன்பங்களுக்கு அவர்கள் மட்டுமே பொறுப்பாகிறார்கள். நான்கு வழக்குகளில் 200 பேரை பிணையில் எடுக்க ம.உ.பா. மைய வழக்கறிஞர்கள் 10 பேர் 20 நாட்களாக இரவு பகலாக உழைத்து கட்டணம் வாங்காமல் விடுவித்தோம். நூற்றுக்கணக்கான வழக்குகளில் ஆயிரக்கணக்கான மக்களை அது  போல் பிணையில் எடுப்பது சாத்தியமா? அவசியமா? என்றால் இல்லை. இது நீதிமன்றத்தில் தீர்க்கும் பிரச்சினை அல்ல. மக்கள் மன்றத்தில் தீர்க்கப்பட வேண்டியது.

எனவே அணு உலைகளுக்கு எதிராக மட்டுமல்ல, போராடும் மக்கள் மீதான பொய் வழக்குகள் அனைத்தையும் திரும்ப பெற நாம் அனைவரும் போராட வேண்டும். இன்று நாம் போராட விட்டால் அனைத்து மக்கள் போராட்டங்களையும் ஒடுக்க அரசு இம்முறையை கையாளும். போராடுவதற்கான உரிமையே மற்ற உரிமைகளை பெறுவதற்கான திறவுகோல். ஆகவே சுதந்திரப் போராட்ட வரலாற்றின் தியாகங்களை படித்துப் பெருமை கொள்ளும் நாம் சம காலத்தில் நடக்கும் போராட்டத்தை ஆதரிப்பது, பங்கேற்பது நமது கடமை.

போலீசின் பொய் வழக்குகளும், அரசின் அடக்கு முறைகளும், மக்களின் உரிமைப் போராட்டங்களை நசுக்க நாம் அனுமதிக்க கூடாது! அனைவரும் வாரீர்!

___________________________________

ஆபத்தான அணு உலை வேண்டாம் எனப்போராடுவது தேசத்துரோகமா?

அரசுக்கு எதிராகப் போர் தொடுத்தல், தேசத்துரோகம் உள்ளிட்ட அனைத்து பொய் வழக்குகளையும் திரும்பப் பெறு!

கருத்தரங்கம்

நாள்: 21.4.12 சனிக்கிழமை, நேரம்: காலை 10-00 முதல் 1-00 மணி வரை

இடம்: எம்.எச்.பிளாசா, கோல்டன் ஹால், மதுரை ரோடு, திருநெல்வேலி ஜங்சன், திருநெல்வேலி.

தலைமை: வழக்கறிஞர். சிவராச பூபதி, மாவட்டச் செயலாளர், ம.உ.பா.மையம், நாகர்கோவில்.

கருத்துரைகள்:

வழக்கறிஞர். பாலன், உயர் நீதிமன்றம், பெங்களூரு.

வழக்கறிஞர். சி.ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம்.தோழர். காளியப்பன், இணைப்பொதுச் செயலாளர், மக்கள் கலை இலக்கியக் கழகம்.

பேராசிரியர். அமலநாதன். வழக்கறிஞர். புனித சவேரியார் கல்லூரி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி.

வழக்கறிஞர். சே.வாஞ்சிநாதன் உயர்நீதிமன்றம், மதுரை. ம.உ.பா.மை, மாவட்ட து.செயலாளர்,

வழக்கறிஞர். தௌ.அப்துல் ஜப்பார் செ.கு.உறுப்பினர், வழக்கறிஞர் சங்கம், திருநெல்வேலி.

வழக்கறிஞர். இரா.சி.தங்கசாமி மேனாள் தலைவர், வழக்கறிஞர் சங்கம், திருநெல்வேலி.

வழக்கறிஞர். ஜிம் ராஜ் மில்டன் உயர்நீதிமன்றம், சென்னை ம.உ.பா.மை, மாவட்ட செயலாளர்,

நன்றியுரை: வழக்கறிஞர். சுப.ராமச்சந்திரன் மா.செயலாளர். ம.உ.பா.மை, தூத்துக்குடி.

பன்னாட்டு முதலாளிகளின் இலாப வெறிக்கு சொந்த நாட்டு மக்களைக் காவு கொடுக்காதே!

ஆபத்தான அணு உலையை இழுத்து மூடு! அனைத்து பொய் வழக்குகளையும் திரும்பப் பெறு!

ராஜத்துரோகம் உள்ளிட்ட காலனியாதிக்க சட்டங்கள் அனைத்தையும் ரத்துசெய்!

அணு உலைக்கு எதிராகப் போராடுவது மக்களின் ஜனநாயக உரிமை!

கதிர் வீச்சுக்கும் மரணத்துக்கும் எதிராகப் போராடுவது மக்களின் வாழ்வுரிமை!

21.4.12 அன்று மாலை 2-30 மணிக்கு இடிந்த கரை மத்தியில் போலீசின் பொய் வழக்குகளை எதிர்கொள்வது எப்படி? என மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் விளக்கவுரை ஆற்ற உள்ளனர்.

_____________________________________________________

மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு

கன்னியாகுமரி & தூத்துக்குடி மாவட்டங்கள்

தொடர்பு: 9443527613, 9486643116,

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

கல்வி பெறும் உரிமைச்சட்டம் (RTE) மாபெரும் மோசடி!

36

தனியார்மயத்தைக் கொழுக்க வைக்கும் கல்வி பெறும் உரிமைச்சட்டம்!

2009ஆம் அமைந்த காங்கிரசு தலைமையிலான இரண்டாவது ஐக்கிய முன்னணி அரசாங்கம், தனது தேர்தல் வாக்குறுதிளில் ஒன்றான கல்வி பெறும் உரிமைக்கான சட்டத்தை ஏப்ரல் 1, 2010 அன்று அமலுக்குக் கொண்டு வந்தது. 6 வயது முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகள் அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி பெறும் உரிமையை உத்தரவாதம் செய்வதாக கொண்டு வரப்பட்டுள்ள இந்த சட்டத்தை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்துவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு கடந்த நவம்பர் 8ம் தேதி வெளியிட்டது.

’தனியார் பள்ளிகளில் 25% இடங்கள் பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கு ஒதுக்கப்பட வேண்டும்’ என்பது இந்த சட்டத்தின் முக்கியமான அம்சம். இந்த ஒதுக்கீட்டின் கீழ் அனுமதிக்கப்படும் ஏழைக் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்தை அரசே சம்பந்தப்பட்ட பள்ளிக்குக் கொடுத்து விடுமாம். இப்படி மக்கள் நலனுக்காக தனியார் பள்ளிகள் மீது கட்டுப்பாடு விதிக்கும் சட்டமாக இது சித்தரிக்கப்படுகிறது. ’அரசுப் பள்ளிகள் தரம் குறைந்தவை, தனியார் பள்ளிகள்தான் உயர்தரக் கல்வி தர முடியும்’ என்ற பொதுக்கருத்து உருவாக்கப்பட்டுள்ள நிலையில் ஏழை மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்ந்து படிக்க வழி செய்து தருகிறது என்ற வகையிலும் இது கவர்ச்சிகரமான நடவடிக்கையாக காட்டப்படுகிறது.

தனியார்மயத்தை ஆதரித்துவிட்டு, ஆரம்பக் கல்வி அடிப்படை உரிமையாம் - இந்திய அரசு விளம்பரம்தமிழ்நாட்டில், தனியார் பள்ளிகளுக்கான கட்டணங்களை ரவிராஜ பாண்டியன் கமிட்டி நிர்ண்யித்துக் கொடுத்த பிறகு, அதை எதிர்த்து நீதிமன்றத்துக்குப் போன முதலாளிகள், அப்பரிந்துரைகளை குப்பைத் தொட்டியில் வீசி விட்டு தம் விருப்பப்படி கட்டணக் கொள்ளை அடிக்கின்றனர். அதைத் தடுக்க முடியாத ஆட்சியாளர்கள் ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி அளிக்க தனியார் பள்ளிகளை கட்டாயப்படுத்துவதற்கு சட்டம் கொண்டு வந்திருப்பதாக சொல்லும்போது அதை கவனமாக அலசிப் பார்க்க வேண்டியிருக்கிறது.

1947க்குப் பிறகு இலவச தாய்மொழி வழிக்கல்வி தருவதற்காக அரசு பள்ளிகள் கிராமம் தோறும் தொடங்கப்பட்டன. பல குற்றம் குறைகளுடன் இயங்கினாலும், எல்லாக் குழந்தைகளுக்கும் ஆரம்பக் கல்வி, அனைவருக்கு ஒரே மாதிரியான கல்வி என்ற நோக்கத்தை அவை நிறைவேற்றின. 1980களுக்குப் பிறகு மெட்ரிகுலேசன் பள்ளிகள் என்ற பெயர்ப்பலகையுடன் தனியார் பள்ளிகள் காளான்கள் போல முளைத்தன. லாபம் சம்பாதிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த பள்ளிகளில் பலவற்றுக்கு சரியான கட்டிட வசதிகள் கிடையாது, தகுதியுள்ள ஆசிரியர்கள் கிடையாது.

ஆனால், அரசுப் பள்ளிகளின் நிர்வாகம் அடுத்தடுத்த அரசுகளின் புறக்கணிப்பின் மூலம் சீரழிக்கப்பட்டு அரசுப் பள்ளிகள் என்றால் தரம் குறைந்தவை, தனியார் பள்ளிகள் மூலம் ஆங்கில வழிக் கல்வி பயில்வதுதான் சிறந்தது என்ற கருத்தாக்கம் உருவாக்கப்பட்டது. இதனால் குழந்தைகளுக்கு தரமான கல்வி வழங்குவது என்பது மக்கள் மீது பெருத்த சுமையாக மாற்றப்பட்டிருக்கிறது. உழைக்கும் மக்கள் கூட பல ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி குழந்தைகளை மெட்ரிக் பள்ளிகளுக்கு அனுப்புவதை நகர்ப்புறங்களில் பார்க்க முடிகிறது.

இப்படிப்பட்ட நிலையில் அரசுப் பள்ளிகளின் நிர்வாகத்தை மேம்படுத்தி, தேவைப்படும் இடங்களில் புதிய பள்ளிகளைத் திறந்து, குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வியில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை நீக்கி, எல்லாக் குழந்தைகளுக்கும் தாய்மொழி வழியில் தரமான கல்வி வழங்குவதற்கு ஏற்பாடு செய்வதுதான் நியாயமான திட்டமாக இருக்க முடியும்.  ஆனால் இப்போது நடைமுறைப்படுத்தப்படும் கல்வி பெறும் உரிமைச் சட்டம், இருக்கின்ற ஏற்றத் தாழ்வுகளை சரி செய்து எல்லாக் குழந்தைகளுக்கும் சமமான கல்வி வழங்கும் திசையில் போகவில்லை என்பதோடு, ஏற்றத் தாழ்வுகளை இன்னமும் கெட்டித்துப் போக வழி செய்கிறது. கல்வியை வணிகமயமாக்கி லாபம் சம்பாதிக்கும் நடவடிக்கையாக மாற்றும் தனியார்மயப் போக்கை இந்தச் சட்டம் எந்த வகையிலும் தடுக்கப் போவதில்லை. மாறாக கல்வி தனியார்மயம் என்ற எதார்த்தத்தை அங்கீகரித்து, அதற்கேற்ப மாறிக்கொள்ளுமாறு மக்களுக்கு இது அறிவுருத்துகிறது.

தனியார்மயத்தை ஆதரித்துவிட்டு, ஆரம்பக் கல்வி அடிப்படை உரிமையாம் - இந்திய அரசு விளம்பரம்
படம் - thehindu.com

தற்பொழுது தமிழ்நாடு முழுவதும் 5,255 தனியார் ஆரம்பப் பள்ளிகளில் சுமார் 11 லட்சம் மாணவர்களும், 1,716 தனியார் நடுநிலைப் பள்ளிகளில் சுமார் 8 லட்சம் மாணவர்களும் படிக்கிறார்கள். 8ம் வகுப்பு வரையிலான மொத்த மாணவர்களில் சுமார் 29% இந்த தனியார் பள்ளிகளில் படிக்கிறார்கள். தனியார் பள்ளிகளில் கட்டணங்களைக் கட்டுப்படுத்தி அவற்றின் நிர்வாகத்தை ஒழுங்கு படுத்த வகை செய்யவும் அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும் முன்வராத இந்த சட்டம், அரசு பள்ளிகளின் எண்ணிக்கையைக் குறைத்து ஆரம்பப் பள்ளிக் கல்வியை மேலும் மேலும் தனியார் கைகளில் விடுவதற்கான நோக்கத்தோடு தயாரிக்கப்பட்டுள்ளது.

முதலாவதாக, அரசு உதவி பெறும் பள்ளிகள், கேந்திரீய வித்யாலயா/நவோதயா போன்ற சிறப்புப் பள்ளிகள், அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள் என்று பல அடுக்குகளாக இருக்கும் பள்ளிக் கல்வி முறையை அங்கீகரித்து பள்ளிக் கல்வியில் இருக்கும் வசதி படைத்தவர்களின் குழந்தைகளுக்கும் ஏழைகளின் குழந்தைகளுக்கும் இடையே நிலவும் ஏற்றத் தாழ்வுகளை தொடர்ந்து பராமரிக்க வழி செய்கிறது.

இரண்டாவதாக, எல்லாக் குழந்தைகளுக்கும் இலவசக் கல்வி கிடைக்கும் என்று சட்டத்தில் குறிப்பிடப்படவேயில்லை.

தனியார் பள்ளிகளில் 25% ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்வது தனியார் கல்வி முதலாளிகளுக்கு கட்டாயம் ஏற்படுத்துவது போல தோன்றினாலும் ஏற்கனவே பல்கி பெருகி விட்ட தனியார் பள்ளிகளுக்கு கூடுதல் அங்கீகாரம் அளித்து கணிசமான அரசு நிதியையும் திருப்பி விடுவது இதன் முக்கியமான பணியாக இருக்கப் போகிறது.  அரசுப் பள்ளிகள் தரம் குறைந்தவை என்று கருதப்படும் சூழ்நிலையில் ஏழை மக்கள் 25% இட ஒதுக்கீட்டின் கீழ் தமது குழந்தைகள் தனியார் பள்ளிகளுக்கு அனுப்புவதை பெரிய சலுகையாக நினைப்பார்கள். அதன் மூலம் அரசுப் பள்ளிகள் புறக்கணிக்கப்படுவது இன்னும் தீவிரமாகி அவை முற்றிலும் ஒழிக்கப்படும் சூழ்நிலை உருவாக்கப்படும்.

மூன்றாவதாக குழந்தைகளுக்கு ஆறு வயது வரையிலான இளநிலைக் கல்வி, 14 வயதுக்குப் பிறகான உயர்கல்வி தொடர்பான தனது பொறுப்பை முற்றிலும் கைகழுவி விடும் நோக்கத்தையும் இந்தச் சட்டத்தின் மூலம் அரசு வெளிப்படுத்தியிருக்கிறது.  உயர்கல்விக்காக பல லட்சம் ரூபாய் செலவு செய்ய முடியாத ஏழை மாணவர்கள் இரண்டாம் தர குடிமக்களாக வேலைச் சந்தையில் விடப்படுவார்கள்.

இந்தியாவின் உயர் கல்வி நிறுவனங்களான ஐஐடிகளுக்கு தன்னாட்சி உரிமை வழங்குவது குறித்து ‘அடுத்த 5 ஆண்டுகளில் தனியார் முதலீட்டாளர்களிடமிருந்து எவ்வளவு நிதி திரட்ட முடியும் என்று அவர்கள் சொன்னால், அதற்கேற்ப அவர்களுக்கு கூடுதல் சுயநிர்வாக உரிமை தருவோம்’ என்று மனித வளத் துறை அமைச்சர் கபில் சிபல் அறிவித்தார்.  அதாவது உயர் கல்வி நிறுவனங்கள், தமக்கு நிதி வழங்கும் தனியார் நிறுவனங்களின் விருப்பப்படி செயல்படவிருப்பதைத்தான் தன்னாட்சி என்று சித்தரிக்கிறது அரசு.

“உழைக்கும் வர்க்கத்தினருக்கு அவர்களது வாழ்க்கை நிலைக்கு மேற்பட்ட கல்வி அளிக்கப்படக் கூடாது” என்று 19ம் நூற்றாண்டில் இங்கிலாந்து அரசு கடைப்பிடித்த கொள்கை கூறுகிறது. உழைக்கும் மக்களைப் பொருத்தவரை தற்போதைய சட்டமும் நடைமுறையில் பத்தொன்பதாம் நூற்றாண்டை நோக்கிய பயணமாகவே இருக்கும்.

நான்காவதாக, தனியார் பள்ளிகள் தமது விருப்பப்படி தன்னிச்சையாக நிர்வாகம் செய்து கொள்ளவும், கட்டணங்கள் நிர்ணயித்துக் கொள்ளவும் எந்தத் தடையும் இருக்கப் போவதில்லை. இப்போது இருப்பதைப் போலவே பெற்றோர் பள்ளி நிர்வாகத்துக்கு அஞ்சி நடுங்கி கேட்ட தொகையைக் கட்டி கல்வியை வாங்குவது நடைமுறையாக தொடரும்.  ’தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் நடைமுறையில் இருக்கும் பள்ளிக் கட்டணங்களை ஒழுங்குபடுத்தும் சட்டங்கள், மத்திய அரசின் கல்வி பெறும் உரிமை சட்டம் அமலுக்கு வந்த பின்னர் செல்லாமல் போய் விடும்’ என்று கபில் சிபல் தனியார் பள்ளி உரிமையாளர்களுக்கு உறுதி அளித்துள்ளார்.

மெட்ரிக் பள்ளிகளில் கட்டணத்தை நிர்ணயிக்க சட்டம் நிறைவேற்றப் பட்டாலும், அவற்றை விட பல மடங்கு அதிகமான கட்டணங்களை அந்த பள்ளிகள் வசூலித்துக் கொண்டிருப்பதை யாராலும் தடுக்க முடியவில்லை என்பதை நாம் கண்கூடாக பார்க்கிறோம். கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அப்பல்லோ மருத்துவமனைக்கு போக முடிவதை மகிழ்ச்சியாக கருதும் மக்கள் அந்த மருத்துவமனை காப்பீடு மூலம் பெறும் பணத்துக்கும் மேல் கூடுதலாக கேட்பதை ’மனமுவந்து’ கட்டி விடுவதைப் போல,  குழந்தையின் கல்விக்கான கூடுதல் நன்கொடையை சுமக்கவும் மக்கள் தயாராகிக் கொள்ள வேண்டியிருக்கும்.

25% இடங்களை ஏழைகளுக்கு ஒதுக்கீடு செய்யும் சுமையைத் தாங்கிக் கொள்வதால் கூடுதல் கட்டணம் விதிக்க வேண்டியிருக்கிறது என்ற ’தார்மீகக்’ கடமையை தனியார் பள்ளிகள் ‘சுமப்பதால்’, அவர்கள் விதிக்கும் கட்டணங்களை சட்ட ரீதியாகவோ, தார்மீக ரீதியாகவோ தட்டிக் கேட்கும் உரிமை யாருக்கும் இல்லாமல் போய் விடும்.

ஐந்தாவதாக, இந்தச் சட்டம் 60 குழந்தைகளுக்குக் குறைவாகப் படிக்கும் சுமார் 40% ஆரம்பப் பள்ளிகளில் இரண்டு ஆசிரியர், இரண்டு வகுப்பறை முறை தொடர்ந்து நிலவுவதை மாற்றப் போவதில்லை என்று தெரிகிறது. அரசு ஒப்பந்த முறையில் தற்காலிக, பயிற்சியளிக்கப்படாத, துணை ஆசிரியர்களை நியமித்துக் கொள்ளவும் இந்தச் சட்டம் வழி செய்கிறது. அரசுப் பள்ளி ஆசிரியர்களை தேர்தல் வேலை, மக்கள் தொகை கணக்கெடுப்பு, நிவாரணப் பணிகள் போனவற்றுக்கு அனுப்புவதற்கு இடம் அளிக்கிறது. தனியார் பள்ளியில் குழந்தைகளுக்கு தினமும் பாடம் நடக்கும் போது அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இப்போது இருப்பது போலவே அவ்வப்போது மட்டும் பாடம் நடப்பது தொடரும். பிஎட் பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் திறமை பற்றி சட்டம் எந்த வரையறையும் செய்யவில்லை.

ஆறாவதாக, குழந்தையின் முழுமையான வளர்ச்சிக்குத் தேவை என்று கல்வியாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தாய்மொழி வழிக் கல்வி வழங்குவதிலிருந்து தன்னை முழுவதும் விடுவித்துக் கொள்ளும் முகமாக ’சாத்தியமான சூழ்நிலைகளில் மட்டும் தாய்மொழி வழிக் கல்வி வழங்கப்பட்டால் போதும்’ என்று சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆங்கில வழிக் கல்வி என்ற மாயையின் மூலம் கல்வி வியாபாரிகள் பணம் சம்பாதிப்பதை தொடர்ந்து ஊக்குவித்து, குழந்தைகள் தாய்மொழி வழி கற்பதற்கு இருக்கின்ற வாய்ப்புகளும் ஒழிந்து விடும்.

கல்வி பெறும் உரிமைச்சட்டம் (RTE) மாபெரும் மோசடி
தனியார்மயத்தை ஆதரித்துவிட்டு, ஆரம்பக் கல்வி அடிப்படை உரிமையாம் - இந்திய அரசு விளம்பரம்

வர்த்தகம் தொடர்பான சேவைகள் குறித்த பொது ஒப்பந்தத்தின் (General Agreement on Trade Related Services) கீழ் கல்வி, சில்லறை வணிகம், வழக்கறிஞர்கள் பணி, குடிநீர் வழங்குதல், குப்பை அள்ளுவது, தொலைபேசித் துறை, தபால் துறை, மருத்துவத் துறை என்று பல சேவைகள் வணிகம் சார்ந்த சேவைகளாக வரையறுக்கப்பட்டுள்ளன. அந்தத் துறைகளில் தலையிட்டு சுதந்திரச் சந்தையின் செயல்பாட்டை பாதிக்க அரசுக்கு உரிமை இல்லை. இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டுள்ள இந்திய அரசுக்கு கல்வி உள்ளிட்ட சேவைத் துறைகளை தனியார் சந்தைப் போட்டிக்கு திறந்து விடப்பட வேண்டும் என்ற பன்னாட்டு கடமை விதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு அரசியல் சூழ்நிலைகள், மக்கள் போராட்டங்கள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு செயல்படுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டித்துக் கொள்ளலாமே தவிர அரசு புதிய மருத்துவமனை கட்டுவதோ, பள்ளி கட்டுவதோ, மருந்து செய்வதோ முற்றிலும் நிறுத்தப்பட்டு தனியார் மயமாக்கப்பட்டே தீர வேண்டும்.

உயர் கல்வியையும் தொழிற்கல்வியையும் விற்பனை பண்டமாக மாற்றுவதற்கான ஒரு பரிந்துரையை நமது அரசாங்கம் உலக வர்த்தக நிறுவனத்திடம் சமர்ப்பித்திருக்கிறது. வெளிநாட்டு பல்கலைக் கழகங்களை இந்தியாவில் அனுமதிப்பதற்கான மசோதாவும் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட இருக்கிறது. சந்தைக்கு ஆதரவாக செயல்படும் அரசுகள் ’மெரிடோகிரசி’ மூலம் ஈவு இரக்கமில்லாத கழித்துக் கட்டலை மக்களிடையே செயல்படுத்த முனைகின்றன. மனிதர்கள் ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து உதவிக் கொள்வது என்பது சந்தை போட்டி சூழ்நிலையில் நடக்க முடியாத ஒன்று.

தனியார்மயத்தை ஆதரித்துவிட்டு, ஆரம்பக் கல்வி அடிப்படை உரிமையாம் - இந்திய அரசு விளம்பரம்கல்வி பெறும் வாய்ப்புகளை ஜனநாயக முறைப்படி செயல்படுத்தினால் கல்வி விலைபொருளாக இருக்க முடியாது. ஆனால், மூலதனம் தன்னைத்தானே இயற்கையானதாகவும், சுதந்திரமானதாகவும், ஜனநாயகபூர்வமானதாகவும் காட்டிக் கொள்கிறது. சுதந்திரச் சந்தை அடிப்படையிலான முதலாளித்துவத்தின் மீது வைக்கப்படும் எந்த விமர்சனத்தையும் ஜனநாயக விரோதமானது என்று முத்திரை குத்தவும் செய்கிறது. சந்தைப் போட்டி, தனியார் மயமாக்கம், தரம் குறைந்த பொதுத் துறை சேவைகள், பணம் படைத்தவர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே ஏற்றத் தாழ்வுகள் எல்லாமே நியாயமானவை, இயல்பானவை என்று மக்களை நம்ப வைக்க வேண்டியிருக்கிறது.

கல்வி நிலையங்கள் வழியாக அரசாங்கம் முதலாளித்துவத்தை இயற்கையானதாக காட்ட முயற்சிக்கிறது. சந்தையின் தேவைகளுக்கு அப்படியே பொருந்தும் மனிதர்களை உருவாக்குவதே மூலதனத்தின் தேவையாக இருக்கிறது. அறிவியல் பூர்வமான சிந்திக்கும் திறனுக்குப் பதிலாக வணிக நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட கால கட்டத்தில் தேவைப்படும் திறன்களை வழங்குவதே கல்வியின் வேலையாக திட்டமிடப்படுகிறது. நியோ லிபரல் பொருளாதாரவாதிகள் இளைஞர்களை சந்தையில் வேலை செய்யத் தேவைப்படும் விலைபொருளாக ஒரு பக்கமும், சந்தையில் விற்கப்படும் பொருட்களை வாங்கும் நுகர்வோர்களாக இன்னொரு பக்கமும் பார்க்கிறார்கள். இந்த இரண்டிலும் ஏதாவது தடங்கல் ஏற்பட்டால் அவர்கள்  ஒரு சமூகப் பிரச்சனையாக மாறி விடுகிறார்கள்.

10% மக்களை மட்டும் ஆரோக்கியமாகவும், அறிவுள்ளவர்களாகவும், பணக்காரர்களாகவும் வைத்திருப்பதற்கான எல்லா முயற்சிகளையும் மன்மோகன், சோனியா கும்பல் அமெரிக்க/பன்னாட்டு ஏகாதிபத்தியங்களின் வழிகாட்டலில் செய்து வருகின்றார்கள். அத்தகைய முதலாளித்துவ சொர்க்கத்தில் பெரும்பான்மை மக்கள் அவர்களுக்கென ஏற்படுத்தப்பட்ட கருணை இல்லங்களில் வசித்து, தர்ம பிரபுக்கள் மனமுவந்து போடும் கஞ்சியைக் குடித்துக் கொண்டு, வாய்ப்புக் கிடைக்கும் போது கிடைத்த வேலையைச் செய்து முடித்து விட்டு மீண்டும் இல்லங்களுக்குத் திரும்பி விடுவது மட்டுமே விதியாக இருக்கும்.

__________________________________________

– புதிய கலாச்சாரம், மார்ச் – 2012.

___________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

_____________________________

_____________________________

_____________________________

_____________________________

தண்ணீர் தனியார்மயம்: பேரழிவின் தொடக்கம்!

37

மான்டெக்-சிங்-அலுவாலியாஅரசுத்துறை நிறுவனங்களையும் இயற்கை மூலவளங்களையும் தனியார்மயமாக்கி பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களுக்கும் உள்நாட்டுத் தரகுப் பெருமுதலாளிகளுக்கும் தாரைவார்த்துவரும் இந்திய ஆட்சியாளர்கள்,  இயற்கையின் கொடையான தண்ணீரையும் தனியார்மயமாக்க மூர்க்கமாகக் கிளம்பிவிட்டார்கள்.

இயற்கையின் கொடையான தண்ணீர் உயிரின் ஆதாரம். இயற்கையின் விதிப்படி தண்ணீர் என்பது எல்லா உயிரினங்களுக்கும் இந்த மண்ணுக்கும் உரித்தான பொதுச் சொத்து. தற்போது வாழும் மக்களுக்கு மட்டுமின்றி வரவிருக்கும் தலைமுறைக்கும் அதன் மீது உரிமை உண்டு. அத்தகைய தண்ணீரை பெருமுதலாளிகளின் இலாபத்திற்கான வணிகப் பொருளாக, காசுக்கு விற்கும் கடைச்சரக்காக மாற்றும் அநீதியை கொள்கை அறிவிப்பாக இந்திய அரசு அண்மையில் வெளியிட்டுள்ளது (PDF).

“தேசிய நீர்க் கொள்கை வரைவு 2012” என்ற 31.1.2012 தேதியிட்ட அறிவிக்கையை இந்திய நீர்வள அமைச்சகம் கடந்த பிப்ரவரி முதல் வாரத்தில் தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே வெளியிடப்பட்டுள்ள இந்தக் கொள்கை வரைவின் மீது பொதுமக்கள் தங்கள் கருத்துகளை மின்னஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டுமாம். இவற்றைப் பரிசீலித்து இந்த வரைவு அறிக்கை இறுதியாக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

15 பக்கங்களைக் கொண்ட இந்த வரைவு அறிக்கையானது, தண்ணீர் துறையில் சேவையை அளிப்பவர் என்ற பொறுப்பிலிருந்து அரசாங்கம் விலகிக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. அதற்குப் பதிலாக, சமூகக் குழுக்களும் தனியார் துறையினரும் இச்சேவையை அளிப்பதை ஊக்குவித்து ஆதரிக்க வேண்டும் என்கிறது. தண்ணீரை வியாபாரப் பண்டமாக்குவதன் மூலம், தகாத முறையில் தண்ணீரைப் பயன்படுத்துவதும் விரயமாக்குவதும் குறையும் என்று இந்த அறிக்கை அறிவுறுத்துகிறது.

கடந்த ஆண்டு டிசம்பரில் இந்த நகல் அறிக்கையின் தயாரிப்பு ஏற்பாடுகள் நடந்துவந்த சூழலில், உலக வங்கியின் கைக்கூலியும் திட்டக் கமிசனின் துணைத் தலைவருமான மான்டேக்சிங் அலுவாலியா, “இந்தியாவில் மிகவும் அடிமட்ட விலையில் விற்கப்படும் ஒரே பண்டம்தான்  தண்ணீர். இதை மாற்றியமைக்க வேண்டும்” என்று திமிராக அறிவித்தார். அவரது வழிகாட்டுதலில் தயாராகியுள்ள இந்த வரைவு அறிக்கையானது, விவசாயத்துக்கும் குடிமக்களுக்கும் எந்த வடிவத்திலும் தண்ணீருக்காக மானியம் அளிப்பதை முற்றாக ஒழிக்க வேண்டும் என்கிறது. விவசாயத்துக்கான மின்சாரத்துக்கும், தண்ணீருக்கும் மானியம் அளிப்பது  வீண்விரயமாக்கும் செயல் என்கிறது.

“உலக மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே போகிறது. இதில் இந்தியர்கள் 17 சதவீதத்தினர். ஆனால், உலகப் பரப்பில் உள்ள நீர்வள ஆதாரம் வெறும் 4 சதவீதம்தான். புவி வெப்பமடைகிறது. உயிராதாரமான நீர் பற்றாக்குறையாகி வருகிறது” என்றெல்லாம் கவலையோடு முன்னுரையாக இந்த வரைவு அறிக்கை கூறுகிறது. பின்னர் “கவலைப்படாதே சகோதரா! இதோ தீர்வு கிடைத்துவிட்டது;  இயற்கை மூலவளங்களையும் நீராதாரங்களையும் தனியார் முதலாளிகளுக்கு விற்று விடலாம்” என்கிறது.

தண்ணீர்-தனியார்மயம்-3புதிய தேசிய நீர் கொள்கையின்படி, தண்ணீர் சேவை தனியார் வசம் இருக்குமாம். இருப்பினும், மாநில அரசுகளும் உள்ளாட்சி அமைப்புகளும் குடிமக்களுக்கு அத்தியாவசியமான குறைந்தபட்ச அளவு தண்ணீரைக் கொடுக்க உத்தரவாதப்படுத்த வேண்டுமாம். அதாவது, அரசாங்கங்கள் தனியாரிடமிருந்து தண்ணீரைப் பணம் கொடுத்து வாங்கி மக்களுக்குக் கொடுக்க வேண்டும். இந்தத் தண்ணீரை “இலவசத் தண்ணீர்” அல்லது “விலையில்லாத் தண்ணீர்” என்ற பெயர் வைக்கும் உரிமை மட்டுமே அரசாங்கத்திடம் இருக்கும். ஏனெனில், சேவை அளிப்பவர் என்ற பொறுப்பை அரசாங்கங்கள் படிப்படியாகக் கைவிட வேண்டும் என்கிறது இக்கொள்கை.

மின்சார ஒழுங்குமுறை ஆணையம் போன்று நீர் ஒழுங்குமுறை ஆணையம் ஒன்று அமைக்கப்படுமாம். அது கட்டண நிர்ணயம், நீர் ஒதுக்கீடு, கண்காணித்தல், ஆலோசனை வழங்குதல் முதலானவற்றைச் செய்யுமாம். மின்சாரக் கட்டணத்தை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயிப்பதைப் போல, தண்ணீர் ஒழுங்குமுறை ஆணையம் தண்ணீர்க் கட்டணத்தை நிர்ணயிக்குமாம்.

அப்படியானால் தண்ணீரின் விலை எவ்வளவு? நீர்த் திட்டங்களின் நிர்வாகம், விநியோகம், செயல்பாடு, பராமரிப்பு ஆகியவற்றுக்கான செலவுகளை முழுமையாக வசூலிக்கின்ற வகையில் கட்டணம் தீர்மானிக்கப்பட வேண்டுமென்று கந்துவட்டிக்காரனைப் போல கூறுகிறது இக்கொள்கை அறிக்கை. அதாவது, காசிலிருந்தால் குடிநீர் கிடைக்கும். இல்லையென்றால், நாவறண்டு குடிமக்கள் சாக வேண்டும் என்கிறது, இந்தக் கொள்கை அறிக்கை. அதேசமயம், தனியார் நிறுவனங்கள் கழிவு நீரைச் சுத்திகரிக்கவும், மறுசுழற்சி செய்யவும் அரசாங்கம் மானியம் அளிக்க வேண்டும் என்கிறது. சாதாரணக் குடிமகன் தண்ணீருக்குக் கட்டணம் செலுத்த வேண்டுமாம். தண்ணீர் முதலாளியாய் இருந்தால் மானியமும் ஊக்கத்தொகையும் தரப்படுமாம்.

இந்த வரைவு அறிக்கை இந்திய ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்டதல்ல. “தேசிய நீராதார திட்ட வரைவுக்கான பரிசீலனை  சீர்திருத்தங்களுக்கான திசை வழிகள்” என்ற அறிக்கையை உலக வங்கியின் கீழ் இயங்கும் “நீர் ஆதாரக் குழு2030” என்ற அமைப்பு இந்திய அரசின் திட்டக் குழுவிற்கு வழங்கியது. இந்த “நீர்ஆதாரக்குழு2030” என்ற அமைப்புக்கு கோக், பெப்சி, யுனிலீவர், கார்கில், மெக்கன்சி முதலான பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள்  நிதிவழங்கும் புரவலர்களாக உள்ளன.

இந்த நீர் ஆதாரக்குழு, கடந்த 2011 அக்டோபரில் இந்திய திட்டக் கமிசனுக்கு அளித்த திசைவழி அறிக்கைதான், அப்படியே எந்த மாற்றமுமின்றி “தேசிய நீர்க் கொள்கை2012” என்ற பெயரில் இந்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நகல் கொள்கை அறிக்கை தயாரிப்பதில் செல்வாக்கு செலுத்திய பெருந்தொழில் நிறுவனங்கள், இப்போது இந்த அறிக்கையை வரவேற்று ஆதரிக்கின்றன. ஃபிக்கி எனும் பெருமுதலாளிகளின் சங்கத்தின் முதுநிலை துணை இயக்குநரான ரொமித் சென், தண்ணீருக்கு முறையான விலை வைப்பதன் மூலம் தண்ணீரை வீண் விரயமாக்குவதைத் தடுக்க முடியும் என்று இந்த வரைவு அறிக்கையைப் பாராட்டுகிறார். இவையனைத்தும் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள் மற்றும் தரகுப் பெருமுதலாளிகளின் கொள்ளைக்காகவே தண்ணீர் தனியார்மயமாக்கப்படுகிறது என்பதையும், ஆட்சியாளர்கள் அவர்களின் கைக்கூலிகளாக இருப்பதையும் மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளது.

ஏற்கெனவே உள்ள 2002ஆம் ஆண்டின் தேசிய நீர்க் கொள்கையானது, பொது நீராதாரங்களில் பயன்பாட்டிற்கான முன்னுரிமையைத் தீர்மானித்திருந்தது. இதன்படி, குடிநீர், விவசாயம், நீர் மின்சாரம், சுற்றுச்சூழல், விவசாயம் சார்ந்த மற்றும் சாராத தொழில்கள், போக்குவரத்து மற்றும் இதர பயன்பாடு என்ற வரிசையில் முன்னுரிமை தீர்மானிக்கப்பட்டிருந்தது. இப்போதைய வரைவு அறிக்கையில் இத்தகைய முன்னுரிமை தீர்மானிக்கப்படவில்லை. அதாவது, குடிநீர் இல்லாமல் மக்கள் தவித்தாலும், தண்ணீர் இல்லாமல் விவசாயப் பயிர்கள் கருகிக் கொண்டிருந்தாலும் அவற்றுக்கு முன்னுரிமை தரப்படாமல், பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களுக்கும் தரகுப் பெருமுதலாளிகளின் தொழிற்சாலைகளுக்கும், வாட்டர் போலோ போன்ற தண்ணீரில் நடக்கும் மேட்டுக்குடியினரின் கேளிக்கை விளையாட்டுகளுக்கும்  தண்ணீர் தாராளமாகத் தரப்படும். இதை யாரும் கேள்வி கேட்க முடியாது.

இந்திய அரசியல் சட்டத்தில் அதிகாரம் குறித்த பிரிவுகளில் மத்தியப் பட்டியல், மாநிலப் பட்டியல், பொதுப் என மூன்று பகுதிகள் உள்ளன. இதில் மாநிலப் பட்டியலின் 17வது பிரிவில் பாசனம், கால்வாய்கள், நீர்த்தேக்கம், நீர் மின்சாரம் ஆகியவை உள்ளன. புதிய வரைவுக் கொள்கையானது,  மாநில அரசின் அதிகாரத்தை மறுத்து, பொது அதிகாரப் பட்டியலுக்கோ அல்லது இந்திய அரசின் நேரடி அதிகாரத்துக்கோ மாற்றியமைக்க ஒரு சட்டம் உருவாக்கப்பட வேண்டுமென்கிறது.

1882ஆம் ஆண்டின் இந்திய சொத்துக்களின் மீதான உரிமை கட்டுப்பாடு சட்டம் திருத்தப்பட்டு, நிலத்தடி நீரின் மீது நிலச் சொந்தக்காரர்களுக்கு உரிமையில்லை என்று மாற்ற வேண்டுமென்கிறது புதிய கொள்கை. ஒரு ஊரில் பொதுச் சொத்தாக உள்ள ஏரியோ அல்லது வளமான நீர் நிறைந்த ஒரு விவசாயியின் கிணறோ  இருந்தால், இனிமேல் அவை அவர்களுக்குச் சொந்தமில்லை. அதனைக் கட்டுப்படுத்தி விநியோகிக்கும் பொறுப்பை ஒழுங்குமுறை ஆணையம் பறித்துக் கொள்ளும்.

குடிமக்களுக்கு அடிப்படைத் தேவையான பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க அரசாங்கம் உத்திரவாதம் செய்ய வேண்டும் என்று இந்த நகல் அறிக்கை கூறினாலும், இதனை குடிமக்களின் அடிப்படை உரிமையாக்கி சட்டமாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்த அறிக்கை பரிந்துரைக்கவில்லை.  அத்தியாவசியத் தேவையான பால், மின்சாரம் போன்றவற்றைப் போலவே குடிநீர் கிடைக்கவும் உத்திரவாதம் செய்துள்ளோம், காசுள்ளவர்கள் தாராளமாக வாங்கிக் கொள்ளலாம் என்று அரசு அறிவிக்க வேண்டியதான் பாக்கி.

தண்ணீர்-தனியார்மயம்-2

தென்னமெரிக்காவிலுள்ள ஏழை நாடான ஈக்வடார், மனித இனம் மட்டுமின்றி இயற்கையும் உரிமைகளைப் பெற்றிருப்பதாக 2008ஆம் ஆண்டில் சட்டம் இயற்றியது. இதன்படி இயற்கையின் அங்கமான மலைகளும் ஆறுகளும் ஏரிகளும் பொதுச் சொத்தான தங்களை வணிகப் பொருளாக்குவதையோ, கழிவுகளைக் கொட்டி நாசமாக்குவதையோ எதிர்த்து தங்களது வாழும் உரிமைக்காக, தங்கள் சார்பில் மனித இனத்தைக் கொண்டு வழக்கு தொடுத்து போராட முடியும். ஈக்வடார் நாட்டின் வழியில் பொலிவியாவும் புதிய சட்டத்தை இயற்றியுள்ளது. “தாய்மண் சட்டம்” என்றழைக்கப்படும் இச்சட்டம், மனித இனத்துக்கு இணையாக இயற்கைக்கும் சமமான உரிமைகளை அளித்துள்ளது. இதனை மேலும் 12 நாடுகள் சட்டமாக்க ஆலோசித்து வருகின்றன. அனைத்துலக மனித உரிமைப் பிரகடனத்தின் வழியில் தாய்மண்ணின் உரிமைக்கான பிரகடனத்தை ஐ.நா. மன்றம் அங்கீகரிக்க வேண்டும் என்று பொலிவியா முன்மொழிந்துள்ளது. ஆனால், அமெரிக்காவின் அடிமையாகவும் அடியாளாகவும் இருந்துகொண்டு வல்லரசாகத் துடிக்கும் இந்திய அரசோ, தண்ணீரைத் தனியார்மயமாக்க மூர்க்கமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

தண்ணீர் வியாபாரம் என்பது நமது பண்பாட்டிற்கு எதிரான கொடுஞ்செயல். அடிப்படை மனித உரிமைக்கு எதிரான அநீதி. இயற்கையின் நியதிக்கு எதிரான வன்கொடுமை. உயிரினங்களைப் பூண்டோடு அழிக்கும் பயங்கரவாதம். தண்ணீர் தனியார்மயம் என்பது மறுகாலனியாதிக்கத்தின் கோர வடிவம். எனவே தண்ணீரை எவனுக்கும் தனியுடமையாக்கக் கூடாது. தண்ணீரை வணிகச் சரக்காக்கக் கூடாது. உணவு இல்லாமல்கூட பல நாட்கள் மனிதனால் உயிர் வாழ முடியும். ஆனால், தண்ணீர் இல்லாமல் மனிதனால் ஓரிரு நாட்கள் கூட உயிர் வாழ முடியாது. எனவே நாம் உயிர் வாழ வேண்டுமென்றாலே இத்தனியார்மயத்தை இன்றே இப்பொழுதே எதிர்த்துப் போராடி வீழ்த்த வேண்டும். பொலிவியாவின் கொச்சபம்பா நகர மக்கள் பெக்டெல் எனும் ஏகபோக தண்ணீர் நிறுவனத்தை விரட்டியடித்ததைப் போல, தண்ணீரைக் கைப்பற்றிக் கொண்டு ஆதிக்கம் செய்யவரும் பன்னாட்டு ஏகபோகக் கம்பெனிகளையும் அதற்குக்கைகட்டிச் சேவகம் செய்யும் ஆட்சியாளர்களையும் எதிர்த்து போராட வேண்டும்.

______________________________________________________

புதிய ஜனநாயகம், ஏப்ரல் – 2012

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

என்.டி.சி பஞ்சாலைத் தொழிலாளர் போராட்டம்!

1

தேசிய பஞ்சாலைக் கழகம் (என்.டி.சி.) என்பது ஒரு மத்திய அரசு நிறுவனம். அதில் வேலை செய்பவர்கள் அனைவருக்கும் மத்திய அரசின் ஊதிய விகிதப்படி சம்பளம் தரவேண்டும். என்.டி.சி. அதிகாரிகள் தாங்கள் மத்திய அரசு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என்று கூறிக் கொண்டு மாத ஊதியமாக சுமார் ரூ. 1,20,000/-ஐ எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் தனது இரத்தத்தை வியர்வையாக சிந்தி உழைக்கும் என்.டி.சி தொழிலாளர்களுக்கோ மாநில அரசின் ஊதிய விகிதப்படி மாத ஊதியமாக சுமார் ரூ.8,500/- மட்டும் கொடுக்கப்படுகிறது.

தொழிலாளர்கள் ரூ.8,500/- சம்பளத்தை கொண்டு குடும்பத்தின் உணவு செலவையும், குழந்தைகளின் கல்விச் செலவையும், இன்ன பிற செலவுகளையும் சமாளிக்க இயலாமல் பாதி நாட்கள் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் மத்திய அரசு நிறுவன ஊழியர்களுக்கு நிகரான ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து பு.ஜ.தொ.மு, ஐ.என்.டி.யு.சி, சி.ஐ.டி.யு, ஆகிய சங்கங்களின் கீழ் தொழிலாளர்கள் அணிதிரண்டு 29.02.2012-அன்று உள்ளிருப்பு போராட்டம் செய்தனர்.

இதை தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு எட்டு நாள் சம்பள பிடித்தம் செய்ய ஆலை நிர்வாகம் உத்தரவிட்டது. சட்டப்படி தேர்தல் நடத்தப்பட்டு தொழிலாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல் திமிராக நடந்து கொண்டது நிர்வாகம். பிறகு தொழிலாளர்கள் கிளர்ந்தெழுவார்கள் என்று அஞ்சிய நிர்வாகம், தொழிலாளர்களின் எட்டு நாள் சம்பள பிடித்தத்தை ரத்து செய்தது. ஆனால் IDA உள்ளிட்ட 23 கோரிக்கையை ஏற்க மறுத்தது நிர்வாகம்.

மேற்கண்ட 23-அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும், பு.ஜ.தொ.மு-வை பேச்சுவார்த்தைக்கு அழைக்காததை கண்டித்தும், 22.03.2012 அன்று கோவையிலுள்ள என்.டி.சி தலைமை அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பு.ஜ.தொ.மு-வை சேர்ந்த கம்போடியா மில்லின் கிளைச் செயலாளர் தோழர். K. மோகன்ராஜ் தலைமை தாங்கினார். கோவை மாவட்ட மில் தொழிலாளர் சங்கத்தின் (C..I.T.U) பொதுச் செயலாளர் தோழர். C..பத்மநாபன் அவர்களும், தேசிய பஞ்சாலை தொழிலாளர் சங்கத்தின் (INTUC) துணை பொதுச் செயலாளர் தோழர். V.R..பாலசுந்தரம் அவர்களும் உரையாற்றினார்கள். இறுதியாக கோவை மண்டல பஞ்சாலை தொழிலாளர் சங்கத்தின் (பு.ஜ.தொ.மு) பொதுச் செயலாளர் தோழர் விளவை இராமசாமி அவர்கள் N..T.C -யின் தொழிலாளர் விரோத போக்கையும் கண்டித்து கண்டன உரையாற்றினார். மிகவும் எழுச்சிகரமாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 225 பேர் கலந்து கொண்டனர்.

___________________________________________________________________________

கோவை, திருப்பூர் மாவட்ட புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி

___________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

____________________________________________

____________________________________________

____________________________________________

____________________________________________

____________________________________________

____________________________________________

____________________________________________

____________________________________________

உங்கள் ஐ-போனில் இரத்தம் வழிகிறதா?

44

ஸ்டீவ் ஜாப்ஸ் என்ற ‘மேதை’!

ஸ்டீவ்-ஜாப்ஸ்
ஸ்டீவ் ஜாப்ஸ்

2007-ம் ஆண்டு. ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன், விற்பனைக்கு வெளியாகத் திட்டமிட்ட நாளுக்கு ஒரு மாதம்தான் இருக்கிறது. ஸ்டீவ் ஜாப்ஸ், மேலாளர்கள் சிலரை தனது அலுவலகத்திற்குள் அழைத்தார். சில வாரங்களாக ஐ-போன் கருவியின் மாதிரியை தனது ஜீன்ஸ் பாக்கெட்டில் வைத்திருந்து சோதனை செய்து கொண்டிருந்தார், ஸ்டீவ் ஜாப்ஸ். இப்போது, அந்த மாதிரியை கோபத்துடன் எல்லோருக்கும் காட்டினார். அதன் பிளாஸ்டிக் திரையில் சிறு கோடுகளாக மெல்லிய கீறல்கள் தெரிந்தன.

தனது ஜீன்ஸ் பாக்கெட்டிலிருந்து சாவிக் கொத்து ஒன்றை வெளியில் எடுத்த ஸ்டீவ் ஜாப்ஸ், ‘இந்த போனை மக்கள் தமது பாக்கெட்டுகளில் வைத்திருப்பார்கள். சாவிக் கொத்துகளையும் பாக்கெட்டில் வைத்திருப்பார்கள். கீறல் விழும்படியான ஒரு பொருளை நான் விற்க மாட்டேன்’ என்று கடுப்புடன் சொன்னார். கீறல் விழாத கண்ணாடி திரையை பயன்படுத்துவதுதான் ஒரே வழி. ‘கண்ணாடி திரை வேண்டும். ஆறு வாரங்களுக்குள் பக்காவாக வேண்டும்’.

இதுதான் ஸ்டீவ் ஜாப்ஸ். நுகர்வோர் ஐ-போனை சாவிகளுடன் சட்டைப் பையில் வைத்திருந்தால், அதன் திரையில் ஏற்படக் கூடிய கீறலைப் பற்றி கவலைப் படுவது போல ஒவ்வொரு நுணுக்கமான விபரத்திலும் கவனம் செலுத்துவதுதான் அவரது வெற்றியின் ரகசியமாக போற்றப்படுகிறது. “ஆப்பிள் நிறுவனம் மற்ற நிறுவனங்களைப் போன்றதில்லை. தான் செய்வது எதிலும் உயர் தரத்தை உறுதி செய்வதுதான் ஆப்பிள் நிறுவனத்தின் பலம். அத்தகைய கலாச்சாரத்தை பயிற்றுவித்து வெற்றிக்கு வழிகாட்டிய உன்னதத் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ். ஆப்பிள் நிறுவனம் தயாரித்து விற்கும் பொருட்களின் வடிவமைப்பில் புரட்சிகர மாற்றங்களை அறிமுகப்படுத்தியவர் ஸ்டீவ் ஜாப்ஸ்” என்று பலரும் பாரட்டத் தயங்குவதில்லை.

உலகின் நம்பர் 1 நிறுவனம் ஆப்பிள்

ஆப்பிள்
ஆப்பிள் தயாரிப்புகளின் ஒரு பகுதி

மேக்கின்டோஷ் வரிசை மேசைக் கணினிகள், ஐ-மேக் மடிக்கணினிகள், ஐ-பாட் பாட்டு கேட்கும் கருவி, ஐ-போன் செல்பேசி, ஐ-பேட் கையடக்கக் கணினி என்று கை வைத்த எல்லா துறைகளிலும் ஏற்கனவே இருந்த தயாரிப்புகளை பின் தள்ளி முடி சூடிக் கொண்டது ஆப்பிள் நிறுவனம். மற்ற நிறுவனங்களின் பொருட்களை விட ‘தரத்தில் உயர்ந்த’ ஆப்பிள் பொருட்களின் சந்தை விலை கணிசமாக அதிகம். வழக்கமான mp3 பிளேயர் 1,000 ரூபாய்க்குள் கிடைத்தால் ஆப்பிள் ஐ-பாட் 3,000 ரூபாய்க்கு விற்கும், மற்ற தயாரிப்பாளர்களின் ஸ்மார்ட் தொலைபேசி 15,000 ரூபாய்க்கு விற்றால் அதற்கு இணையான ஆப்பிள் ஐ-போன் தொலைபேசி 30,000 ரூபாய்க்கு விற்கப்படும்.

அவற்றை வாங்குவதற்கு இலட்சக்கணக்கான பயனர்கள் போட்டி போடுவார்கள். ஆப்பிளின் புதிய பொருட்கள் வெளியாகும் நாட்களில் ஆப்பிள் நிறுவனத்தின் கடைகளின் முன்பு நீண்ட வரிசைகளில் காத்திருப்பார்கள் ஆப்பிள் ரசிகர்கள்.

2011-ம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் பங்குச் சந்தை மதிப்பு எக்ஸான் மொபைல் என்ற எண்ணெய் (பெட்ரோல்) நிறுவனத்தின் மதிப்பைத் தாண்டி உலகத்திலேயே முதலிடத்தை எட்டிப் பிடித்தது. மொத்த வருமானத்தின் அடிப்படையிலும், லாபத்தின் அடிப்படையிலும் தகவல் தொழில் நுட்பத் துறையில் உலகின் முதன்மை நிறுவனமாக திகழ்கிறது ஆப்பிள். போட்டியாளர்களான கூகுள், மைக்ரோசாப்டு இரண்டு நிறுவனங்களின் வருமானத்தை ஒன்று சேர்த்தாலும் எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தில் நிற்கின்றது ஆப்பிள்.

ஆப்பிள் சாம்ராஜ்யம் உற்பத்தி செய்யும் பொருட்களின் பளபளப்பு அவற்றை உருவாக்கும் எல்லா நிலைகளிலும் காணப்படுகிறதா? சிறு சிறு விபரங்களிலும் அக்கறை காட்டும் ஸ்டீவ் ஜாப்சிஸ் ஆப்பிள் சாம்ராஜ்யத்தின் எல்லா பகுதிகளிலும் தனது ஆளுமையை, ‘உயர் தரத்துக்கான’ தேடலை செலுத்தினாரா?

அமெரிக்காவின் தேவதை பிசாசு ஆனது!

1990களில் போட்டியாளர்களின் பொருட்களைப் போல் இல்லாமல் ‘ஆப்பிள் பொருட்கள் அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்டவை, அமெரிக்க தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பவை’ என்று மார் தட்டிக் கொண்டிருந்தார் ஸ்டீவ் ஜாப்ஸ். இப்போது ஆப்பிள் பொருட்களின் உற்பத்தி சீனாவில் இருக்கும் தொழிற்சாலைகளுக்கு முழுமையாக நகர்த்தப்பட்டு விட்டது. குறிப்பாக, சீனாவில் பெரிய தொழிற்சாலைகளை நடத்தி வரும் பாக்ஸ்கான் என்ற தாய்வான் நிறுவனம் பெரும்பகுதி உற்பத்தி பணியை செய்து வருகிறது.

‘பெரிய முதலாளித்துவ நிறுவனங்கள் வளரும் போது, அவற்றின் சொந்தக்காரர்களான முதலாளிகள் கோடீஸ்வரர்களாகும் போது, நாட்டில் வேலை வாய்ப்புகள் பெருகும், நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும்’ என்ற தாரம மந்திரத்தில் இயங்கும் அமெரிக்காவிலேயே அந்தக் கோட்பாடு செல்லாமல் போய் விட்டிருக்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் வருமானமும் லாபமும் பங்குச் சந்தை மதிப்பும் உயர்ந்து கொண்டே போன கடந்த 5 ஆண்டுகளில் அமெரிக்க பொருளாதாரமும் பொது மக்களும் வீடுகளை இழந்து, வேலை இழந்து, வாழ்வாதாரங்களை இழந்து நடுத்தெருவில் விடப்பட்டிருக்கிறார்கள்.  ‘அமெரிக்காவின் வேலையில்லா திண்டாட்டம் பற்றி எங்களுக்கு கவலை இல்லை.  அமெரிக்காவின் பொருளாதாரப் பிரச்சனைகளை தீர்த்து வைப்பது எங்கள் வேலை கிடையாது. ஆகச் சிறந்த பொருளை உருவாக்கி சந்தைப்படுத்துவதுதான் எங்களது பணி’ என்கிறார்கள் ஆப்பிள் மேலாளர்கள்.

சுரண்டலையும் ஆதிக்கத்தையும் உடைத்தெறிவதாக 1984-ல் விளம்பரம் வெளியிட்ட ஆப்பிள் நிறுவனம் இன்று அது போன்ற பல பிக்பிரதர்களின் சங்கிலித் தொடர் உற்பத்தி முறையில்தான் பில்லியன் டாலர்களை குவித்துக் கொண்டிருக்கிறது. (ஜார்ஜ் ஆர்வெல் என்ற பிரிட்டிஷ் உளவுத் துறை கைக்கூலி எழுதிய ‘1984’ நாவலில் உருவகிக்கப்பட்ட பிக்பிரதர்கள் இன்றைய பன்னாட்டு நிறுவனங்களுக்கு சரியாக பொருந்துகின்றன).

ஆப்பிள் நிறுவன வெற்றியின் ஊற்றுக்கண்

உங்கள் ஐ-போனில் இரத்தம் வழிகிறதாஆப்பிள் நிறுவனத்தின் தளுக்காக, கச்சிதமாக வடிவமைக்கப்பட்ட பொருட்கள் ஸ்டீவ் ஜாப்ஸ் என்ற மனிதரின் திறமையால் நமது கைகளுக்கு வந்து சேரவில்லை. சீன அரசாங்கத்தின் வரிச் சலுகைகள், சுரண்டப்படும் சீனத் தொழிலாளர்களின் இரத்த வியர்வை, உலகெங்கும் பரந்து விரிந்து நிற்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வல்லாதிக்க பொருளாதார கொள்கைகள் இவற்றின் கூட்டுச் சேர்க்கையின் விளைவுகள்தான் ஆப்பிள் பொருட்கள்.

மேலே சொன்ன ஐ-போன் திரை மாற்றம் முடிவு செய்யப்பட்டு, கண்ணாடித் திரைகளை வெட்டி அனுப்பும் தொழிற்சாலை அடையாளம் காணப்பட்டது. கண்ணாடி திரை வெட்டி கொடுக்கும் வேலைக்காக விண்ணப்பிருந்த சீன தொழிற்சாலைக்கு ஆப்பிள் மேலாளர் போன போது, வேலை கிடைத்தால் பயன்படுத்துவதற்காக புதிய கட்டிடம் கட்டப்பட்டுக் கொண்டிருந்தது. சீன அரசாங்கம் முதலீட்டுக்கு அளித்த மானியம் இந்த கண்ணாடி வெட்டும் தொழிற்சாலைக்கும் கிடைத்திருந்தது. தொழிற்சாலையின் கிடங்கில் ஆப்பிளுக்குத் தேவையான இலவச கண்ணாடி மாதிரிகள் குவிக்கப்பட்டிருந்தன. பொறியாளர்கள் குறைந்த கட்டணத்தில் பணி புரிய தயார் செய்யப்பட்டிருந்தனர். 24 மணி நேரமும் ஊழியர்கள் வேலைக்கு வரும்படியாக தொழிற்சாலைக்குள்ளாகவே தங்கும் அறைகள் கட்டப்பட்டிருந்தன.

அந்த தொழிற்சாலைக்கு கண்ணாடி திரைகள் வெட்டும் வேலை கிடைத்தது. வெட்டப்பட்ட கண்ணாடி திரைகள் ஒரு நள்ளிரவில் ஆப்பிள் பொருட்களை ஒன்று சேர்க்கும் தொழிற்சாலையான பாக்ஸ்கான் நகரத்துக்கு வந்து சேர்ந்தன. மேலாளர்கள் தொழிற்சாலையின் தங்கும் அறைகளில் தூங்கிக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை எழுப்பினார்கள். அவசர அவசரமாக தத்தமது சீருடைக்குள் நுழைத்துக் கொண்ட தொழிலாளர்களுக்கு ஒரு பிஸ்கட்டும், ஒரு கோப்பை தேநீரும் வழங்கப்பட்டது. அரை மணி நேரத்துக்குள் அவர்கள் ஐ-போன்களை பொருத்தி உருவாக்கும் அசெம்பிளி லைனில் அணிவகுத்தார்கள். ஐ-போனில் கண்ணாடி திரைகளை பொருத்தும் 12 மணி நேர ஷிப்டு ஆரம்பித்தது.

96 மணி நேரத்துக்குள் நாளைக்கு 10,000 ஐ-போன்கள் உற்பத்தி ஆரம்பித்து விட்டிருந்தது. 3 மாதங்களுக்குள் ஆப்பிள் 10 லட்சம் ஐ-போன்களை விற்றது. 2011 இறுதி வரை பாக்ஸ்கான் 20 கோடிக்கும் அதிகமான ஐ-போன்களை உற்பத்தி செய்து அனுப்பியிருக்கிறது.

உடைக்கப்படும் சீனத் தொழிலாளர்களின் முதுகுகள்

1. தேவைக்கேற்ப வாரத்துக்கு 7 நாட்கள் கூட வேலை வாங்கப்படுகிறார்கள் பாக்ஸ்கான் தொழிலாளர்கள். ஒரு தொழிலாளர் ஒரு மாதத்துக்கு சராசரியாக 83 மணி நேரம் ஓவர் டைம் செய்வதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. மாதத்துக்கு 36 மணி நேரத்துக்கு மேல் ஒரு தொழிலாளர் ஓவர் டைம் வேலை செய்யக் கூடாது என்ற விதி முறையை கண்டு கொள்ளாமல் தொழிலாளர்களை சக்கையாக பிழிந்து ஐ-போனுக்கு மெருகூட்டப்படுகிறது.

ஓவர் டைம் வேலை என்பதை தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் சலுகையாக பலர் பார்க்கிறார்கள். நம் ஊரிலும் தொழிலாளர்களும் ஆர்வமாக ஓவர் டைம் கேட்டு வேலை செய்கிறார்கள். 8 மணி நேர வேலைக்கு வழங்கப்படும் ஊதியத்தில் வாழ்க்கை நடத்த முடியாமல்தான் ஓவர் டைம் செய்து தமது உடல்நலத்தை அழித்துக் கொள்கிறார்கள் தொழிலாளர்கள். வேலையில் தேயும் தொழிலாளர்களின் உடம்பையும் மனதையும் புதுப்பித்து மறு உற்பத்திக்கு தயார் செய்யத் தேவையான கூலியை மட்டும் கொடுத்து உபரி மதிப்பை சுரண்டுவதுதான் முதலாளித்துவம் என்பது பாரம்பரிய வரையறை. மறு உற்பத்திக்குக் கூட போதாமல் தொழிலாளர்களின் வாழ்க்கையை பறித்துக் கொள்கின்றது இன்றைய பன்னாட்டு ஏகாதிபத்திய முதலாளித்துவம்.

ஆப்பிள் பொருட்கள் தயாரிப்பில் பாக்ஸ்கான் தொழிலாளர்கள்
ஆப்பிள் பொருட்கள் தயாரிப்பில் பாக்ஸ்கான் தொழிலாளர்கள்

2. சீனாவில் உற்பத்தி செய்யப்படும் ஐ-போன் 4G கருவியை உற்பத்தி செய்ய ஆகும் கூலிச் செலவு $6.5 (சுமார் 300 ரூபாய், விற்பனை விலையில் 1.1%) என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. அதே ஐ-போன் கருவி விற்பனையில் ஆப்பிள் நிறுவனம் சுமார் 60% லாபம் ($350, சுமார் 17,000 ரூபாய்) சம்பாதிக்கிறது.

தொழிலாளர்கள் 12 மணி நேர ஷிப்டுகளில் வேலை செய்ய வைக்கப்படுகிறார்கள். நாளைக்கு 8 மணி நேர வேலை என்பது உலகத் தொழிலாளர் வர்க்கம் நீண்ட போராட்டங்களின் மூலம் ரத்தம் சிந்தி ஈட்டிய உரிமை. 8 மணி நேர ஷிப்டு, குறைந்த பட்ச ஊதியம், மனிதர்களுக்கு ஏற்ற பணிச் சூழல் என்ற அடிப்படை மனித உரிமைகள் உலகளாவிய ஏகாதிபத்தியத்தின் பலிபீடத்தில் பலிகொடுக்கப்பட்டு வருகின்றன. தொழிலாளர்களுக்கு நியாயமான பணி உரிமைகளை வழங்கினால் ஐ-போன் விற்பனையில் கிடைக்கும் லாபம் குறைந்து விடும், அதன் மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் வரவு செலவுக் கணக்கில் சிறு சிறு கீறல்கள் ஏற்படுவதைக் கூடத் தாங்க முடியாத மெல்லிய மனம் படைத்த மனிதாபிமானியாகத்தான் ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்ந்திருக்கிறார் என்று தெரிகிறது.

12 மணி நேர ஷிப்டுகள், ஓவர் டைம் வேலை என்று கணக்கு போட்டுப் பார்த்தால் தொழிலாளர்கள் பெரும்பான்மை நாட்களில் சராசரியாக 15 மணி நேரம் வேலை செய்கிறார்கள் என்று தெரிகிறது. ஆப்பிள் லோகோவை ஐ-பேட் கருவியின் மீது பொறிக்கும் வேலை கைக்கருவியால் செய்யப்படுகிறது என்பதை அறிந்து நீங்கள் வியப்படையலாம். அந்த வேலையை மட்டுமே நாள் முழுவது செய்யும் பெண் தொழிலாளர், ஆப்பிள் ஐ-பேட் எப்படி இயங்குகிறது என்று இது வரை பார்த்ததில்லை.

ஆப்பிள்-தொழிலாளர்-குடியிருப்பு
ஆப்பிள் தொழிலாளர் குடியிருப்பு

15 மணி நேர மனதை மரக்கடிக்கும் இத்தகைய இயந்திர வேலைக்குப் பிறகு இளைப்பாறி, தூங்கி, புத்துணர்ச்சி பெறுவதற்கு ஐ-வரிசை பொருட்களின் உற்பத்தி முதலாளிகள் தொழிலாளர்களுக்கு வழங்கியிருக்கும் தங்கும் அறைகள் எந்த தரத்தில் இருக்கின்றன என்று பார்க்கலாம். ரயில் பெட்டிகளில் தூங்கும் வசதி போன்று மூன்றடுக்காக அமைந்த படுக்கையில் தூக்கம், படுக்கையை ஒட்டிய பெட்டியில் பொருட்களை பூட்டி வைத்துக் கொள்ளும் வசதி என்று சிறு அறைகளில் 8 பேர் வரையிலும் பெரிய அறைகளில்  20 பேர் வரையிலும் தங்குகிறார்கள் சீனத் தொழிலாளர்கள்.

போரும் சமாதானமும்

பாக்ஸ்கான் தொழிற்சாலையில் தொழிலாளராக அண்டர் கவர் வேலை செய்யப் போய் தனது அனுபவங்களை சீனப் பத்திரிகையாளர் ஒருவர் பதிவு செய்திருக்கிறார். ‘இது ஒரு தொழிற்சாலையின் கதை இல்லை, ஒரு தலைமுறை சீன இளைஞர்களின் சோகக் கதை’ என்கிறார் அந்த இளம் பத்திரிகையாளர்.

இத்தகைய மன அழுத்தங்களின் வெளிப்பாடாக பாக்ஸ்கான் தொழிற்சாலைகளில் கடந்த 2 ஆண்டுகளில் 17 இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளும் ஊழியர்களை பிடிக்க தொழிற்சாலை நிர்வாகம் பாதுகாப்பு வலைகளை பொருத்தியிருக்கிறது. தொழிலாளர் தற்கொலை பற்றிய விபரங்கள் சீன ஊடகங்களில் அம்பலப்படுத்தப்பட்டு, தொடர்ந்து அமெரிக்க பத்திரிகைகளிலும் வெளியான பிறகு கடந்த 3 ஆண்டுகளில் 900 யுவானாக இருந்த தொழிலாளர்களின் மாதச் சம்பளம் படிப்படியாக உயர்த்தப்பட்டு 2,200 யுவான் ஆகியிருக்கிறது.

பாக்ஸ்கான் தொழிற்சாலையில் இளம் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்ட சீனத் தொலைக்காட்சி நிகழ்ச்சியை இதில் பார்க்கலாம். தற்கொலை செய்து கொள்வதற்காக மொட்டை மாடிக்குள் போகும் பெண் தொழிலாளரின் வீடியோ பாதுகாப்பு கேமிராவில் பதிவாகியிருக்கிறது.

பகுதி 1

பகுதி 2

பகுதி 3

சாவியையும் ஐ-போனையும் சேர்த்து பையில் போட்டு பரிசோதிப்பதன் மூலம் நுகர்வோரின் மனதில் கூட கீறல்கள் விழுந்து விடக் கூடாது என்று நுண்ணறிவுடன் செயல்பட்ட ஸ்டீவ் ஜாப் தலைமையிலான ஆப்பிள் நிறுவனத்துக்கு 17 உயிர்கள் பலி போன பிறகுதான் அவர்களின் வாழ்க்கையைப் பற்றி பரிசீலிக்கும் கவனம் வந்திருக்கிறது. அதுவும், எதிர்மறை பிரபலத்தால் தமது பொருட்களின் விற்பனை பாதிக்கப்பட்டு நிறுவனத்தின் லாபம் குறைந்து அதன் மூலம் தான் வைத்திருக்கும் ஆப்பிள் பங்குகளின் மதிப்பு வீழ்ந்து விடக் கூடாதே என்ற தவிப்பினால்தான் பிச்சைக் காசை தூக்கி எறிந்து தமது இமேஜை பராமரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

‘சரி, லாப வெறி பிடித்த முதலாளித்துவ நிறுவனம்தான் தொழிலாளர்களை கவனிப்பதில்லை. தொழிலாளர்கள் ஒன்று கூடி தொழிற்சங்கம் அமைக்கலாமே, தமது உரிமைகளுக்குப் போராடலாமே’ என்று நினைத்தால், பாக்ஸ்கான் நிறுவனம் சீன அதிகார வர்க்கத்துடன் வைத்துள்ள கள்ளக் கூட்டுறவின் மூலம் அப்படி எதிர்த்து குரல் எழுப்ப முயலும் தொழிலாளர்களுக்கு 12 ஆண்டு வரை சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது.

அவரவர் பிரச்சனை அவரவருக்கு

இப்போது ஆப்பிள் நிறுவனத்தின் கவலை, ‘உபரியாக வங்கியில் உறங்கும் 98 பில்லியன் டாலர் (சுமார் 5 லட்சம் கோடி) கையிருப்பை என்ன செய்வது?’ என்பதுதான்!

அடுத்த முறை பளபளப்பான ஆப்பிள் பொருட்களின் விளம்பரத்தைப் பார்க்கும் போது, ஸ்டீவ் ஜாப்ஸ் என்ற தீர்க்க தரிசியின் வாழ்க்கையை வியக்கும் போது, ஆப்பிள் பொருட்களைத் தடவித் தடவி வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டிருக்கும் வெள்ளுடை வேந்தர்களை போல நாமும் ஆக வேண்டும் என்று நினைக்கும் போது சிதைக்கப்பட்டு வரும் சீனத் தொழிலாளர்களின் வாழ்க்கையும் நமது மனதில் தோன்ற வேண்டும். அதுதான் ‘நமக்கு சோறு போடும்’ இன்றைய முதலாளித்துவ அமைப்புக்கு நாம் செலுத்தும் சரியான காணிக்கையாக இருக்க முடியும்.

________________________________________

– அப்துல்

________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

ஹரி மசூதி படுகொலை வழக்கு: சி.பி.ஐ.-க்குள் ஒளிந்திருக்கும் காவித்தனம்!

58

ஹரி மசூதிஇருபது ஆண்டுகளுக்கு முன்பு, அயோத்தியில் பாபர் மசூதியை இடித்துத் தள்ளிய கையோடு ஆர்.எஸ்.எஸ். சிவசேனா கும்பல் மும்பய் நகரில் நடத்திய கலவரத்தின்பொழுது, அந்நகரின் வடாலா பகுதியில் அமைந்துள்ள ஹரி மசூதியில் தொழுகை நடத்திக் கொண்டிருந்த முசுலீம்கள் மீது மும்பய் மாநகர போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 முசுலீம்கள் கொல்லப்பட்டனர்; மற்றொருவர் ‘காணாமல்’ போனார்.  மும்பய் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இப்படுகொலை சம்பவத்தைக் கடந்த மூன்றாண்டுகளாக விசாரித்து வந்த மையப் புலனாய்வுத் துறை, “இத்துப்பாக்கிச் சூடு சட்டவிரோதமான முறையில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை உறுதி செய்யும் சுதந்திரமான சாட்சியங்கள் (Neutral witnesses)  எதுவுமில்லை” என நீதிமன்றத்தில் கடந்த டிசம்பரில் அறிக்கை அளித்திருக்கிறது.  இத்துப்பாக்கிச் சூடு சம்பவமும், அது பற்றி மையப் புலனாய்வுத் துறை விசாரணை நடத்தி முடிவுக்கு வந்த விதமும் இந்து மதவாதம் அரசு இயந்திரத்தின் பல்வேறு பிரிவுகளிலும் எத்துணை ஆழமாக ஊடுருவி நிறைந்திருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளன.

ஜனவரி, 1993  இல் ஆர்.எஸ்.எஸ்.  சிவசேனை கும்பல் தலைமையில் நடந்த இந்து மதவெறிக் கலவரம் மும்பய் நகரெங்கும் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த ஒரு மதிய வேளையில், போலீசு உதவி ஆய்வாளர் நிகில் காப்சே தலைமையில் வந்த போலீசு பட்டாளமொன்று ஹரி மசூதியைச் சுற்றி வளைத்தது.  மதிய வேளை தொழுகை நடந்துகொண்டிருந்த நேரமது.  அக்காக்கிச் சட்டை கிரிமினல் கும்பல் எவ்வித முன்னெச்சரிக்கையும் செய்யாது, மசூதிக்குள் தொழுகை நடத்திக் கொண்டிருந்த முசுலீம்களை நோக்கிச் சுட்டதில் நான்கு பேர் மசூதிக்குள்ளேயே குண்டடிபட்டு இறந்து போனார்கள்.  ஒருவர் மசூதியிலிருந்து வெளியேற முயன்றபொழுது, நேருக்கு நேராக மிகவும் அருகாமையிலிருந்து சுட்டுக் கொல்லப்பட்டார்.  சுட்டுக் கொல்லப்பட்ட முசுலீம்களின் உடல்களை போலீசு வேனில் எடுத்துப்போட்டு அப்புறப்படுத்திய மற்றொரு முசுலீம் அதற்குப் பின்‘காணாமல்’ போனார்.  பலர் படுகாயமடைந்தனர்.  இத்துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்துவதற்காக, ஹரி மசூதிப் பகுதியில் முசுலீம்கள் கலவரத்தில் இறங்கியதாகவும் கொலைவெறியோடு இந்துக்களைத் தாக்கியதாகவும் மும்பய் போலீசாரால் கதை புனையப்பட்டதோடு, அப்பொய்க் குற்றச்சாட்டின் அடிப்படையில் 50 முசுலீம்கள் கைது செய்யப்பட்டனர்.

இத்துப்பாக்கிச் சூடு நடந்த ஒருசில நாட்களிலேயே அது பற்றி விசாரணை நடத்திய சர்வதேச பொதுமன்னிப்புக் கழகம் (Amnesty International) மும்பய் போலீசின் கட்டுக்கதையை அம்பலப்படுத்தியதோடு, நிகில் காப்சேயின் தலைமையில் துப்பாக்கிச் சூடு நடத்திய போலீசு பட்டாளத்தைக் குற்றவாளியாகவும் அறிவித்தது.  மும்பய்க் கலவரம் பற்றி விசாரணை நடத்துவதற்காக மகாராஷ்டிர மாநில அரசால் நியமிக்கப்பட்ட சிறீகிருஷ்ணா கமிசனும், “மனிதத்தன்மையற்ற முறையிலும் மிகக் கொடூரமாகவும் நடத்தப்பட்ட இத்துப்பாக்கிச் சூட்டை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது” எனத் தீர்ப்பளித்தது.

இத்துப்பாக்கிச் சூடு பற்றிய கிருஷ்ணா கமிசனின் பரிந்துரையை மகாராஷ்டிரா மாநிலத்தைப் பத்தாண்டுகளுக்கு முன்பு ஆண்ட பா.ஜ.க.  சிவசேனா கூட்டணியும் சரி, கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அம்மாநிலத்தை ஆண்டு வரும் காங்கிரசு  தேசியவாத காங்கிரசு கூட்டணியும் சரி, ஒரு பொருட்டாக மதிக்கவேயில்லை.  கலவரத்தின்பொழுது இந்து மதவெறி கிரிமினல் கும்பலுக்குத் துணையாக நின்ற போலீசு அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு அளித்து கௌரவிக்கும் வேலையை இவ்விரண்டு அரசுகளுமே சிரமேற்கொண்டு செய்தன.

இந்நிலையில் இத்துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் படுகாயமடைந்த ஃபரூக் மாப்கர், அப்பாவி முசுலீம்களைச் சட்டவிரோதமான முறையில் படுகொலை செய்த போலீசாரைத் தண்டிக்கக் கோரிப் போராடத் தொடங்கினார்.  இதனையடுத்து, நிகில் காப்சே உள்ளிட்ட போலீசார் மீது துறைரீதியான விசாரணை என்ற நாடகத்தை நடத்தி, அவர்களை உத்தமர்களாக அறிவித்தது, மாநில அரசு.  இதன் பின்னர், உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, ஹரி மசூதி படுகொலை உள்ளிட்டு, அக்கலவரத்தின்பொழுது நடந்த பல படுகொலை சம்பவங்களை விசாரிப்பதற்காகச் சிறப்புப் புலனாய்வுக் குழு ஏற்படுத்தப்பட்டது.  மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த போலீசு அதிகாரிகளைக் கொண்டே உருவாக்கப்பட்ட இச்சிறப்புப் புலனாய்வுக் குழுவும் ஹரி மசூதி உள்ளிட்ட பெரும்பாலான வழக்குகளை ஊத்தி மூடும் வேலையைச் சட்டப்படியே செய்து முடித்தது.  இனி மாநில அரசை நம்ப முடியாது என்ற நிலையில் இப்படுகொலை பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி ஃபரூக் மாப்கர் வழக்கு தொடுத்தார்.

இவ்வழக்கு மும்பய் உயர் நீதிமன்றத்தில் நடந்தபொழுது, “இது சாதாரணமான வழக்கு” எனக் கூறி, இவ்வழக்கு விசாரணையை மீண்டும் மகாராஷ்டிரா போலீசிடமே தள்ளிவிட முயன்றது, சி.பி.ஐ.  எனினும், ஹரி மசூதி படுகொலையை சி.பி.ஐ. விசாரிக்குமாறு மும்பய் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.  மகாராஷ்டிரா மாநில அரசு இத்தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த மேல்முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டது.  இம்மேல்முறையீட்டின்பொழுது, “போலீசு அதிகாரி நிகில் காப்சே இவ்வழக்கின் காரணமாக கடந்த 16 ஆண்டுகளாகப் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாக” வாதாடியது, காங்கிரசு கூட்டணி அரசு.

இத்துணை இழுத்தடிப்புகள், எதிர்ப்புகளுக்குப் பின் விசாரணையைத் தொடங்கிய சி.பி.ஐ., இத்துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து உயிர் பிழைத்த முசுலீம்களின் சாட்சியங்களை ஏற்றுக் கொள்ள மறுத்தது.  “அவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டவர்கள்; எனவே, அவர்களின் சாட்சியத்தை சுதந்திரமான சாட்சியமாகவோ, நம்பகமான சாட்சியமாகவோ கருத முடியாது” என அவர்களுக்கு உள்நோக்கம் கற்பித்து அந்த சாட்சியங்களை நிராகரித்தது. மேலும், நிகில் காப்சே உள்ளிட்ட போலீசு அதிகாரிகளுக்கு எதிராகச் சாட்சியம் அளித்த முசுலீம்கள் அனைவரின் மீதும் கலவர வழக்குகள் பதிவாகியுள்ளன என்ற காரணத்தையும் வலிந்து சுட்டிக்காட்டியது.  அவ்வழக்குகள் பொய் வழக்குகள் என்பதையோ, அந்த உண்மை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு குற்றஞ்சுமத்தப்பட்ட முசுலீம்கள் அனைவரும் நிரபராதிகள் என விடுதலை செய்யப்பட்டதையோ ஒதுக்கி வைத்துவிட்ட சி.பி.ஐ., பாதிக்கப்பட்ட முசுலீம்களைக் குற்றவாளிகளாகவே கருதி ஒருதலைப்பட்சமாகவே தனது விசாரணையை நடத்தியது.

இவ்விசாரணையின்பொழுது, பக்க சார்பு அற்றவர்கள் என்று தன்னால் மதிப்பிடப்பட்ட இரு சாட்சிகளும்  சி.பி.ஐ.ஆல் விசாரிக்கப்பட்டனர். அதிலொருவர் இந்து; மற்றொருவர், முசுலீம் மதத்தைச் சேர்ந்தவர்.  அந்த இந்துவின் சாட்சியம் துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஃபரூக் மாப்கர் அளித்த சாட்சியத்திலிருந்து வேறுபட்டிருந்தது.  முசுலீம் மதத்தைச் சேர்ந்தவர் அளித்த சாட்சியமோ, பாதிக்கப்பட்ட முசுலீம்கள் அளித்த சாட்சியங்களை ஒத்திருந்தது.  ஒரு இந்து அளித்த சாட்சியத்தை நம்பத்தக்கது என்று ஏற்றுக்கொண்ட சி.பி.ஐ., மற்றொரு சாட்சியம் அளித்த வாக்குமூலத்தை, அவர் முசுலீம் என்பதனாலேயே நிராகரித்தது.

ஹரி மசூதிஇவை அனைத்தும் சி.பி.ஐ. நடத்திய விசாரணை ஆர்.எஸ்.எஸ். சார்பு இந்து மதவாதக் கண்ணோட்டத்தில், அதாவது, இந்து பொய் சொல்லமாட்டான், துப்பாக்கிச் சூடு சட்டவிரோதமாக நடந்திருந்தாலும், துப்பாக்கியால் சுட்டவன் நம்ம ஆளு என்ற முசுலீம் வெறுப்பு அரசியல் அடிப்படையிலும்; இந்து மதவெறி கொண்ட போலீசாரைக் காப்பாற்ற வேண்டும் என்ற உள்நோக்கத்தோடும்தான் நடத்தப்பட்டுள்ளது என்பதை நிரூபித்துக் காட்டுகின்றன.  ஃபரூக் மாப்கர் சி.பி.ஐ. அளித்துள்ள இந்த அறிக்கையை நிராகரிக்கக் கோரி தற்பொழுது வழக்கு தொடுத்திருக்கிறார்.

குஜராத் இனப் படுகொலையின்பொழுது நடந்த குல்பர்க் சொசைட்டி படுகொலைகளுக்கும் மோடிக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு, மோடிக்கும் அப்படுகொலைக்கும் தொடர்பில்லை என அறிக்கை அளித்திருப்பதாகக் கூறப்படுவதையும், ஹரி மசூதி படுகொலை வழக்கில் தொடர்புடைய காக்கிச்சட்டை கிரிமினல்களை விடுவித்து சி.பி.ஐ., இறுதி அறிக்கை அளித்திருப்பதையும் வெவ்வேறானதாகப் பிரித்துப் பார்க்க முடியாது.

அதுபோல, குஜராத் இனப் படுகொலையில் பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்கு நீதி வழங்க மறுத்துவரும் ஆர்.எஸ்.எஸ். கும்பலையும், மும்பய்க் கலவரத்தில் பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்கு நீதி வழங்க மறுத்துவரும் காங்கிரசையும் இருவேறு துருவங்களாகப் பார்க்க முடியாது.

அப்சல் குருவுக்கும், கசாபுக்கும் தூக்கு தண்டனை விதிப்பதில் காட்டப்பட்ட நீதிமன்ற முனைப்பும் வேகமும், பால் தாக்கரே, அத்வானி, மோடி உள்ளிட்ட இந்து மதவெறி பாசிச கிரிமினல்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதில்கூடக் காட்டப்படுவதில்லை.  நரேந்திர மோடி மீது கொலைக் குற்றச்சாட்டினைப் பதிவு செய்யக் கோரி ஜாகியா ஜாஃப்ரி கடந்த பத்தாண்டுகளாகவும், நிகல் காப்சே மீது கொலைக் குற்றச்சாட்டினைப் பதிவு செய்யக் கோரி ஃபரூக் மாப்கர் கடந்த இருபது ஆண்டுகளாகவும் சட்டப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.  இந்து மதவெறிக் கலவரங்களால் பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்குச் சட்டப்படியான உரிய நீதியை வழங்காமல் அலைக்கழிப்பதன் மூலம், அவர்களை இந்திய அரசு இரண்டாம்தர குடிமக்களாக நடத்துகிறது என்பது மட்டுமல்ல,  முசுலீம் பயங்கரவாதம் வளர்வதற்கான வாய்ப்பினையும் வாரி வழங்கி வருகிறது.

___________________________________________

புதிய ஜனநாயகம், மார்ச் – 2012

___________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

வல்லரசின் முகத்தில் வழியும் மலம்!

55

வல்லரசு முகத்தில் வழியும் மலம்கொத்தடிமை முறையா? அதெல்லாம் அந்தக் காலமுங்க என்பதுதான் பெரும்பாலோனோரின் எண்ணம். இது பற்றி, அத்தி பூத்தாற் போலத் தினப் பத்திரிகைகளில் வரும் செய்திகளையும் எளிதில் கடந்து சென்று விடுகிறோம்.

உண்மை அத்தனை எளிதில் கடக்கக் கூடியதாய் இல்லை. விழுப்புரம் மாவட்டம் திருவாக்கரையில் கல்குவாரி ஒன்றில் வேலை செய்கிறார் 40 வயதான வெள்ளையன். கடந்த ஜனவரி 31ஆம் தேதி காலை இவரது வீட்டுக்கு வந்த கல்குவாரி முதலாளி துரையின் அடியாட்கள் இவரைச் சரமாரியாக அடித்து இழுத்துச் சென்றுள்ளனர். கல்குவாரியில் சம்மட்டி ஒன்றைத் திருடிவிட்டதாக இவர் மீது குற்றம் சுமத்தியுள்ளனர். தன்னுடன் வேலை செய்யும் வீரப்பன் என்பவரது சம்மட்டியை  இவர் 300 ரூபாய்க்கு விற்றுக் கொடுத்ததுதான் இவர் மீது சந்தேகப்படக் காரணம். இந்தச் சந்தேகத்துக்கு விசாரணை கிடையாது. நேரடியாகத் தண்டனைதான்.

முதலாளி துரையிடம், தான் திருடவில்லை  என்று வெள்ளையன் மன்றாடியுள்ளார்; ஒரு கட்டத்தில் சம்மட்டிக்கான தொகையை வேலை பார்த்துக் கழித்துக் கொள்வதாகச் சொல்லி, தன்னை விட்டுவிடக் கோரிக் கெஞ்சியுள்ளார்.  எதையும் பொருட்படுத்தாத கல்குவாரி முதலாளி, உன்ன மாதிரி ஆட்களுக்கு இப்படி தண்டனை கொடுத்தால்தான் பார்க்கிற மத்தவனுக்கும் புத்தி வரும் என்று சொல்லி, அங்கேயே ஒரு சட்டியைக் கொண்டுவரச் செய்து, மறைவாகச் சென்று தானே அதில் மலம் கழித்து, அதனைக் கொண்டு வந்து வெள்ளையனின் வாயில் திணித்துள்ளான்.

பிற கல்குவாரி தொழிலாளர்கள் மற்றும் வெள்ளையனின் மனைவி முன்னிலையில் இந்தக் கொடுமை அரங்கேறியுள்ளது. பிறகு வெள்ளையனைக் கொடூரமாக தாக்கியுள்ளனர்.  அடி தாங்காமல் மயங்கிச்  சரிந்தவரை  அடைத்து வைத்துக் கொண்டனர். இக்கொடுமைகளை  பார்த்தேயாக வேண்டும் என்று இவரது மனைவியை அடித்து உதைத்து நிர்பந்தித்துள்ளனர். இவையனைத்தையும் செல்பேசியில் படம்பிடித்தும் வைத்துள்ளான் முதலாளி துரை.  வெள்ளையனுடைய மற்றும் அவரது மாமனார் வீடுகளிலுள்ள பொருட்களைக்  கைப்பற்றிக் கொண்டு வீடுகளையும் பூட்டி வைத்துள்ளனர். வெள்ளையனின் 9 வயது மகளுக்கு இச்சம்பவம் பற்றி நினைவு கூர்ந்தாலே பேச்சுக் குழறுகிறது.

ஒரு சம்மட்டிக்காகவா இத்தனை வக்கிரமும், கொடூரமும் நிறைந்த வன்கொடுமை? சந்தேகத்தின் பேரிலேயே மொத்த வாழ்வையும் சீரழிக்கும் தண்டனையை கொடுக்கும் அதிகாரத்தைக் கல்குவாரி முதலாளிக்கு வழங்கியது யார்? எதற்கும் அஞ்சாமல் இத்தகைய கொடூரத்தை இழைக்கும் ஆண்டைத் திமிரை கல்குவாரி முதலாளி எங்கிருந்து பெற்றான்? 300 ரூபாயை முதலாளி முகத்தில் விட்டெறிந்துவிட்டு வேறு வேலைக்குப் போக வழியில்லாத அடிமை நிலையில் வெள்ளையனைக் கட்டுப்படுத்தி வைத்துள்ளது எது? இத்தனை கொடூரமும் கண்முன்னே நிகழ்ந்த போதும் எதிர்க்க இயலா கையறு நிலையில் கல்குவாரியில் வேலை செய்பவர்களைக் கட்டிப் போட்டு வைத்திருந்தது எது? இக்கேள்விகளுக்கு மனசாட்சியுள்ள அனைவரும் விடை காண வேண்டியுள்ளது.

கொத்தடிமை முறை ஒழிப்புச் சட்டம் 1976இல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இது வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் போலவே கொத்தடிமை முறைக்குக் காரணமான சமூகப் பொருளாதார  காரணிகளை ஒழிக்க எந்தத் திட்டமும் இல்லாத வெறும் காகிதச் சட்டம்.  1978இல் நடத்தப்பட்ட  கணக்கெடுப்பின்படி 26 லட்சம் கொத்தடிமைகள் நாடு முழுவதும் இருந்தனர். 1995இல் தமிழகத்தில் மட்டும் 10 லட்சம் கொத்தடிமைகள் இருந்துள்ளனர் என உச்ச நீதிமன்றத்தின் அறிக்கை சொல்கிறது.  இன்றைய நிலையில், தமிழ்நாட்டு கல்குவாரிகளில் மட்டும் 5.5 லட்சம் கொத்தடிமைகள் வேலை செய்கின்றனர் என தமிழ்நாடு கல்லுடைக்கும் தொழிலாளர் சங்க நிறுவனர் ஞானமணி சொல்கிறார். கொத்தடிமைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதைத்தான் இப்புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

நாடு முழுவதும் கொத்தடிமைகளாக இருப்பவர்களில் 80% பேர் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள்.  விவசாயம் பொய்த்துப் போவது, குடும்பத் தேவைகளுக்காக அதிக வட்டிக்குக்  கடன் வாங்குவது, அதனை அடைக்க வேறு வழியின்றிக் கொத்தடிமைகளாக வருபவர்கள் ஒரு பக்கமெனில், பரம்பரை பரம்பரையாகவே கொத்தடிமைகளாக வேலை செய்பவர்களும் தொடர்கிறார்கள்.

திருவாக்கரையில் தாக்கப்பட்ட வெள்ளையன் சேலம் பகுதியைச் சேர்ந்தவர். இவரது தாத்தா, அப்பா காலத்திலிருந்தே கொத்தடிமைகளாக வேலை செய்து வருகின்றனர். வறுமை காரணமாகவும், நாடோடிகள் போலத் திரிய வேண்டியிருப்பதாலும் இவர்கள் வீட்டுப் பிள்ளைகள் படிப்பை பாதியில் நிறுத்தி விடுவதால் வாரிசுகளும் கொத்தடிமைகளாக தொடரும் அவலம் நிலவுகிறது.

கல்குவாரிகள், விவசாயம், செங்கல் சூளைகள், கனிமச் சுரங்கங்கள், தீப்பெட்டி, வெடிமருந்துத் தொழிற்சாலைகள், கோவை மாநகரின் தங்கப்பட்டறைகள் போன்றவைதாம் கொத்தடிமைகளை வேலைக்கு வைத்துள்ள பாரம்பரிய தொழில்துறைகள். இங்கெல்லாம் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அன்றாட நிகழ்வுகளாகும்.

விபத்தின் காரணமாக இறப்போ, உடல் ஊனமோ  ஏற்பட்டால்  எந்த நிவாரணமும் வழங்கப்படுவதில்லை. எதிர்த்து கேள்வி கேட்டால் கொலை வெறித் தாக்குதலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

அவ்வப்போது கணக்குக் காட்டுவதற்காக கொத்தடிமை நிலையிலிருந்து சிலரை  மீட்பதாகக் காட்டிக் கொள்கிறது அரசு. ஆனால், மீட்கப்பட்டவர்களோ மீண்டும் கொத்தடிமைகளாக செல்ல வேண்டிய நிலையில்தான் உள்ளனர். செங்கல் சூளையிலிருந்து மீட்கப்பட்டவர்களுக்கு அரசே  அமைத்துக் கொடுத்த செங்கல் சூளைகளைப் பல இடங்களில் முதலாளிகள் அடித்து நொறுக்கியுள்ளனர்.  கல்குவாரிகளிலிருந்து மீட்கப்பட்ட கொத்தடிமைகள் சொந்தமாகக் கல்குவாரிகள் நடத்த முற்பட்டு, முதலாளிகள் மற்றும் அதிகாரிகளின் கடும் தாக்குதலை எதிர்கொள்கின்றனர்.

அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் ரவுடிகளுடன்  கொத்தடிமைகளை வேலைக்கமர்த்தும் முதலாளிகள் நெருங்கிய வலைப்பின்னலைப் பராமரிக்கிறார்கள். எனவே, எதிர்ப்பவர்களை ஒடுக்குவதும், ஓரிடத்தில் வேலையிழந்தவருக்கு வேறெங்கும் வேலை கிடைக்கவிடாமல் செய்வதும் சாத்தியமாகிறது. தட்டிக் கேட்க யாருமின்றித் தனி அரசாங்கம் நடத்தும் ஆண்டைத் திமிர்தான் தொழிலாளர்களை மிருகத்தினும் கேவலமாக நடத்த வைக்கிறது.

தமிழகத்தில்  ஆறு வருடங்களுக்கு முன்பு கல்லுடைப்போருக்கான குறைந்தபட்ச கூலி நிர்ணயிக்கப்பட்ட போதிலும், அது எங்குமே நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.  மேலும், கல்குவாரிகளில் 20% சட்டவிரோதமானவை என்று சொல்கிறார்  ஏ.ஐ.டி.யூ.சி துணைச் செயலாளர் கே.ரவி. இன்று இணையம், ஊடகங்களின் செல்வாக்கு காரணமாக அநீதிகளைத் தட்டிக் கேட்பதற்கான வாய்ப்பு வளர்ந்து விட்டதாகப் பலர் கருதிக்கொண்டிருந்தாலும், கொத்தடிமைக் கொடூரங்கள் அதிகரித்துத்தான் செல்கின்றன. அதிகாரிகளின் துணையுடன் முதலாளிகளின் நிலப்பிரபுத்துவ ஆண்டைத்தனம்தான் இங்கெல்லாம் ஆட்சி செய்கிறது.

திருவாக்கரை சம்பவம் போன்றவற்றில் தப்பித் தவறி மாட்டிக் கொள்ளும் சிலரும், பின்னர் முறைப்படி வெளியே வந்து விடுகிறார்கள்.

தமிழகம் தொழில்துறை வளர்ச்சியில் மட்டுமின்றி, கொத்தடிமைகள் அதிகமுள்ள மாநிலம் என்ற வகையிலும் இந்தியாவில் முன்னிலை வகிக்கிறது. மறுகாலனியாக்க கொள்கைகள் விவசாயிகளை ஏதுமற்றவர்களாக்கி வீதியில் வீசுகின்றன. சுமங்கலித் திட்டம் என்ற பெயரில் கிராமப்புற ஏழைப்பெண்களையும், அடுக்குமாடிக் கட்டிடங்களையும் நான்கு வழிச் சாலைகளையும் கட்டி எழுப்புவதற்காக எலிப் பொந்துகள் போன்ற தகரக் கொட்டகைகளில் தங்கி வேலை செய்யும் ஒடிசா, பீகார் தொழிலாளர்களையும் நவீன கொத்தடிமைகளாகத் தினமும் உருவாக்கி வருகின்றன.

நாடு நாலுகால் பாய்ச்சலில் முன்னேறுவதாகவும், தொழிலாளர்களின் ஊதியமும் மக்களின் வாழ்க்கைத் தரமும் அதிவேகமாக உயர்ந்து வருவதாகவும் பிதற்றிக் கொண்டிருக்கும் கனவான்களின் முகத்திலறைகின்றன இவ்வுண்மைகள்.

______________________________________________________

புதிய ஜனநாயகம், ஏப்ரல் – 2012

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

ஐ.நா. தீர்மானம்: சிங்கள இனவெறி நாயைப் பாதுகாத்த இந்தியா நரி!

10

ஜெனிவா தீர்மானம் சிங்கள இனவெறி நாயைப் பாதுகாத்த இந்தியா நரி

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கடந்த மார்ச் 22ஆம் தேதியன்று  இலங்கை தொடர்பாக அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானம், இந்தியாவின் சதித்தனமான திருத்தத்துடன் கூடிய ஆதரவோடு வெற்றி பெற்றுள்ளது. சீனா,ரஷ்யா, கியூபா முதலான நாடுகள் இத்தீர்மானத்தை எதிர்த்துள்ளன.

இத்தீர்மானம், இலங்கையின் சிங்கள இனவெறி அரசுக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் என்றும்,  ராஜபக்சேவைப் போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரும் தீர்மானம் என்றும் திரும்பத் திரும்ப தமிழக ஓட்டுக்கட்சிகளும் தமிழினப் பிழைப்புவாதிகளும் ஊடகங்களும் பரபரப்பூட்டுகின்றனர். இத்தீர்மானம் இலங்கையைக் கண்டிப்பது போலவும், ராஜபக்சே கும்பலின் போர்க்குற்றங்களை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென்று கோருவது போலவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். ஆனால், இந்தத் தீர்மானத்தில் சிங்கள இனவெறி பாசிசபயங்கரவாத அரசின் போர்க்குற்றங்களையோ, இனப்படுகொலையையோ கண்டிப்பதாக எதுவுமில்லை. ராஜபக்சேவைப் போர்க்குற்றவாளியாக அறிவிக்கவிக்கவுமில்லை.

ஜெனிவா தீர்மானம் சிங்கள இனவெறி நாயைப் பாதுகாத்த இந்தியா நரிசுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள ஜெனிவா நகரில் இந்தியா, இலங்கை உள்ளிட்டு 47 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள ஐ.நா. மன்றத்தின் மனித உரிமைக் கவுன்சில், எவ்வித அதிகாரமும் இல்லாத ஓர் அலங்கார அமைப்பாகும். ஒரு குறிப்பிட்ட நாடு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருப்பதாக இந்த கவுன்சிலில் பெரும்பான்மை நாடுகள் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினாலும், அதனை ஐ.நா. பொதுச்சபை விவாதித்து, அதனடிப்படையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அங்கீகரித்தால்தான் குற்றம் சாட்டப்பட்ட அந்நாட்டில் தலையிட முடியும். அமெரிக்கா மற்றும் பிற ஏகாதிபத்தியங்கள் தங்களது மேலாதிக்க ஆக்கிரமிப்பு  நோக்கங்களுக்கு ஏற்ப  மனித உரிமைக் கவுன்சிலின் தீர்மானத்தைப் பயன்படுத்திக் கொள்வதுதான் இவ்வமைப்பின் நடைமுறைப் பயன்பாடாக  உள்ளது.

ஈழத்தில் நடந்த இன அழிப்புப் படுகொலைகளுக்குப் பிறகு, கடந்த 2009ஆம் ஆண்டில் மனித உரிமைக் கவுன்சிலில் சுவிட்சர்லாந்து அரசு ஈழப்போர் தொடர்பாக ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தது. அதுவும் சிங்கள இனவெறி அரசின்  இன அழிப்புப் படுகொலைக்கு எதிரான தீர்மானம் அல்ல. மக்களைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டு, இறுதிப் போரின் போது சிவிலியன்கள் மீது புலிகள் தாக்குதல் நடத்தியதாகவும், அதையும் இதர மனித உரிமை மீறல்களையும் இலங்கை அரசே விசாரிக்க வேண்டுமென்றும் அத்தீர்மானம் குறிப்பிட்டது. சிங்கள இராணுவத்தின் போர்க்குற்றங்களைப் பற்றி மவுனம் சாதித்த அத்தீர்மானத்தை,  இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு எதிரான தீர்மானம் என்றும், போர்க்குற்றவாளி ராஜபக்சேவைத் தண்டிக்கக் கோரும் தீர்மானம் என்றும் ஈழ ஆதரவாளர்களும் ஊடகங்களும் அன்று ஊதிப் பெருக்கினர். இத்தீர்மானத்தை எதிர்த்து இந்தியா, இலங்கை, சீனா, ரஷ்யா, கியூபா முதலான பெரும்பான்மை நாடுகள் வாக்களித்ததால் இத்தீர்மானம் தோல்வியடைந்தது.

இதேநேரத்தில் இலங்கை அரசு மற்றொரு தீர்மானத்தை முன்மொழிந்தது. பயங்கரவாதத்தை வீழ்த்தி வெற்றியைச் சாதித்துள்ள இலங்கை அரசையும் இராணுவத்தையும் பாராட்டிய அத்தீர்மானம், போரினால் அகதிகளாகியுள்ள மக்களுக்கும்,  பாதிக்கப்பட்ட பகுதிகளில் புனரமைப்பு செய்யவும் உலக நாடுகள் உதவ வேண்டுமென்று கோரியது. இப்படி ஆடுகளுக்காக அழுத ஓநாயின் தீர்மானத்தைப் பெரும்பான்மை நாடுகள் வாக்களித்து நிறைவேற்றின.

ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் நடந்த இன அழிப்புப் படுகொலை, போர்க்குற்றங்கள் மற்றும்  இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் பற்றி அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் மற்றும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களின் கண்டனங்களைத் தொடர்ந்து, சிங்கள இனவெறி பாசிச ராஜபக்சே கும்பல் 2010 மே மாதம் “கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (எல்.எல்.ஆர்.சி.)”  என்ற ஆணையத்தை நிறுவி விசாரணை நடத்துவதாக அறிவித்தது.  இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச அரங்குக்கு இழுக்கப்படுவதைத் தவிர்த்து, நீதியைப் பெறுவதற்கான வாய்ப்புகள் இலங்கையில் வளமாக உள்ளதாகக் காட்டிக் கொள்ளவும், இதன் மூலம் சர்வதேசத் தலையீட்டை முறியடிப்பதும்தான் இந்த ஆணையத்தை ராஜபக்சே கும்பல் அமைத்ததற்கான காரணம்.

ஜெனிவா தீர்மானம் சிங்கள இனவெறி நாயைப் பாதுகாத்த இந்தியா நரிஇந்த ஆணையம் புலிகளின் போர்க்குற்றங்களை விசாரிப்பதற்காகவே உருவாக்கப்பட்டது. போரில் புலிகள் வீழ்த்தப்பட்டிருந்தாலும், அவர்களுடன் தொடர்புடைய புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களைத் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி வதைக்கும் நோக்கத்துடன் விசாரணையை நடத்தியது. இறுதிக் கட்டப் போரின்போது நடந்த அத்துமீறல்கள், தனிநபர்களின் பாதிப்புகள் பற்றியும் விசாரிப்பதாகத் தெரிவித்தது. இதன் மூலம் அரசு மற்றும் இராணுவ அதிகாரிகளில் ராஜபக்சே கும்பலுக்கு விசுவாசமாக இல்லாதவர்களை இனம் கண்டு களையெடுக்கவும், பழிவாங்கவும் இதனைப் பயன்படுத்திக் கொண்டது.

மனித உரிமை மீறல்கள் பிரச்சினையில் சிங்கள அரசாங்கத்தைப் பாதுகாத்ததில் இழிபுகழ் பெற்ற முன்னாள் அரசுத் தலைமை வழக்குரைஞர் சி.ஆர். டிசில்வா இந்த ஆணைக்குழுவுக்குத் தலைமை தாங்கினார். அரசாங்கத்தின் ரப்பர் ஸ்டாம்பாகச் செயல்பட்ட இந்த ஆணைக் குழு எந்த வகையிலும் சுயேட்சையானதோ, நடுநிலையானதோ அல்ல என்பது யாவரும் அறிந்த உண்மை.

இறுதியாக இந்த ஆணைக்குழு  தனது அறிக்கையை 2011 டிசம்பர் 16 அன்று வெளியிட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரின் போது சிங்கள இராணுவம் எவ்விதப் போர்க்குற்றமும் இழைக்கவில்லை; மக்களைப் பாதுகாக்க அக்கறையோடும் பொறுப்போடும் செயல்பட்டது என்றுதான் இந்த அறிக்கை கூறுகிறது. இந்த அறிக்கையையும்  ஐ.நா. வுக்குச் சமர்பிக்கப் போவதில்லை என்று சிங்கள அமைச்சரவை அறிவித்துவிட்டது.

இந்த நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்துவதுதான், அமெரிக்காவால் முன்மொழியப்பட்டு, தற்போது ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தின் சாரம். இத்தீர்மானம், போரின் இறுதிக் கட்டத்தில் ராஜபக்சே கும்பலால் நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் அப்பட்டமான மனித உரிமை மீறல்களுக்கு எதிரானதல்ல. அந்த விவகாரத்துக்கும் இந்த தீர்மானத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.

போர்க்குற்றவாளியான ராஜபக்சே அரசு தம்மைத் தாமே விசாரணை செய்து கொண்டுள்ளதாகக் கூறும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை ஆதரித்து, அதன் பரிந்துரைகளை விரைவாகச் செயல்படுத்தக் கோருகிறது, இத்தீர்மானம். நல்லிணக்க ஆணைக்குழு கவனத்தில் கொள்ளாத மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நம்பகமான விசாரணை தொடங்கப்படவேண்டும் என்றும், சர்வதேசச் சட்டவிதிகள் மீறப்பட்டது குறித்த குற்றச்சாட்டுகள் பற்றி கவனம் செலுத்துமாறும் இலங்கை அரசை இத்தீர்மானம் கோருகிறது. இந் தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் தனது வலுவான ஆதிக்கத்தை நிறுவும் போர்த்தந்திரத் திட்டத்தின் ஓர் அங்கமாகவே, சீனாவுடனான அரசு தந்திர மற்றும் பொருளாதார உறவுகளிலிருந்து விலகி நிற்குமாறு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காகவே அமெரிக்கா இத்தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளது. மற்றபடி, ராஜபக்சே கும்பலின் போர்க்குற்றங்கள் பற்றியோ, இனப்படுகொலை பற்றியோ இத்தீர்மானத்தில் ஒரு வார்த்தைகூட இல்லை.

ஜெனிவா தீர்மானம் சிங்கள இனவெறி நாயைப் பாதுகாத்த இந்தியா நரி

டப்ளின் தீர்ப்பாயத்தில் முன்னின்று உழைத்த, ஈழத் தமிழர்களால் நன்கறியப்பட்டவரான பால் நியூமென், ஐ.நா. மனித உரிமைகள் கமிசனின் தற்போதைய கூட்டத்தொடரில் இலங்கையில் நடந்துள்ள இனப்படுகொலை, போர்க்குற்றம் பற்றி எதுவுமே விவாதிக்கப்படவில்லை என்று பேட்டியளித்துள்ளார். இத்தீர்மானம் இலங்கையைக் கண்டிக்கும் நோக்கம் கொண்டதல்ல என்று ஜெனிவாவுக்கான அமெரிக்கத் தூதர் எலின் சாம்பர்லெய்ன் டோனஹே தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள மனித உரிமை அமைப்புகள்கூட இந்தத் தீர்மானத்தில் போர்க்குற்றங்களுக்கு எதிராக ஒன்றுமேயில்லை என்கின்றனர். ஆனால், தமிழக ஓட்டுக்கட்சிகளும், சில பிழைப்புவாத ஈழ ஆதரவாளர்களும்  ஒன்றுமில்லாத இந்த வெற்றுத் தீர்மானத்தைத்தான் ஏதோ கேழ்வரகில் நெய் வடிந்த கதையாக ஏற்றிப்போற்றி, அமெரிக்காவானது, இலங்கையைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விடுவதைப் போல சித்தரிக்கின்றனர்.

“போர் முடிந்து மூன்றாண்டுகளே ஆகியுள்ள நிலையில், மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும்” என்று கூறி அமெரிக்கா முன்வைத்த  இந்தத் தீர்மானத்தை ரஷ்யா, சீனா, கியூபா முதலான நாடுகள் எதிர்த்தன.  “இலங்கை போன்ற ஒரு ஜனநாயக நாட்டுக்கு அமைதி மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள போதிய அவகாசம் வழங்க வேண்டும்” என்று கூறி தீர்மானத்தை எதிர்த்த இந்தியா, ஒரு திருத்தத்தை முன்வைத்து ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னர் இத்தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது. “ஐ.நா. மனித உரிமைத் தூதர் அலுவலகம்  அளிக்கும் உதவியை இலங்கை ஏற்க வேண்டும்” என்ற வாசகங்களை நீக்கிவிட்டு, “ஐ.நா. மனித உரிமை தூதர் அலுவலகம் அளிக்கும் எத்தகைய உதவியையும் இலங்கை அரசுடன் கலந்தோலனை நடத்தி அதன் ஒப்புதலுடன் செய்யப்பட வேண்டும்” என்று முக்கியமான  இத்திருத்தத்தின் மூலம் இந்தியா இத்தீர்மானத்தை மேலும் செல்லாக்காசாக்கியுள்ளது. தொழில்நுட்ப உதவி என்ற விதியின் கீழுள்ள இந்த முக்கியமான அம்சத்தை திருத்தியமைத்து, இலங்கையின் மனித உரிமை மீறல் விசாரணைகளில் ஐ.நா. தலையிடுவதற்கன வாய்ப்பையும் அடைத்து, இலங்கை அரசு இத்தகைய சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் காப்பாற்றியிருக்கிறது இந்திய அரசு. இந்தியா செய்துள்ள இந்த ‘சிறிய’ திருத்தம் மனித உரிமை கமிசனிடமிருந்து இலங்கையைக் காப்பாற்றும் கவசமாகப் பயன்படும்.

அமெரிக்காவின் விசுவாச அடியாளாக உள்ள இந்தியா, தனது வட்டார மேலாதிக்க நலன்களுக்காக சிங்கள இனவெறி பாசிச பயங்கரவாதத்தை ஆதரித்து நிற்கும் நோக்கத்துடன்தான் முந்தைய மனித உரிமை பாதுகாப்பு கவுன்சிலில் சுவிஸ் தீர்மானத்தை எதிர்த்தது. பாம்பும் சாகாமல் தடியும் நோகாமல், இப்போதைய தீர்மானத்தை நரித்தனமான திருத்தத்துடன் ஆதரித்துள்ளது. இந்தியா இத்தீர்மானத்தை எதிர்த்ததை விட, ஆதரித்ததன் மூலம் இலங்கை அரசுக்கு மேலும் உதவியுள்ளது. ஆனால், இந்தியாவின் முடிவு இலங்கைக்கு எதிரானதாகவும், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவானதாகவும் உள்ளதாக கருணாநிதி, ஜெயலலிதா மற்றும் பிற ஓட்டுக் கட்சிகளும் பிழைப்புவாதிகளும் போட்டி போட்டுக் கொண்டு உரிமை பாராட்டுகின்றனர்.

ஜெனிவா தீர்மானம் சிங்கள இனவெறி நாயைப் பாதுகாத்த இந்தியா நரிஐ.நா. தீர்மானத்தில் சிங்கள இனவெறி ராஜபக்சேவின் போர்க்குற்றங்களுக்கு எதிராக ஒன்றுமில்லை என்ற போதிலும், ‘இது எங்களுக்கும் தெரியும். இருந்தாலும், இதுவாவது நடக்கிறதே என்று பார்க்கவேண்டும். எவ்வித நடவடிக்கையுமின்றி தறிகெட்டுத் திரியும் சிங்கள இனவெறி பாசிஸ்டுகளுக்கு கடிவாளம் போடும் முயற்சியாகவே இதைப் பார்க்க வேண்டும். இது முதல் அடிதானே தவிர, முழுமையானதல்ல என்பது எங்களுக்குத் தெரியும்’ என்றெல்லாம் தமிழினப் பிழைப்புவாதிகள் நியாயவாதம் பேசுகின்றனர். இரண்டாம் பட்ச எதிரிகளுடன் தற்காலிகமாகக் கூட்டணி அமைத்து, முதன்மை எதிரியான இனவெறி பாசிச ராஜபக்சே கும்பலை வீழ்த்துவது என்ற அரசியல் உத்தியுடன் தாங்கள் அணுகுவதாக இதற்கு நியாயம் கற்பிக்கின்றனர். இப்படிச் செய்ததன் மூலம் இந்தியா போர்க்குற்றங்களிலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டதே, அது நியாயமா?

இட்லரும் முசோலினியும் போல, இந்தியாவும் இலங்கையும் இணைந்து இழைத்ததே தமிழின அழிப்புப் போர்க்குற்றம். புலிகளையும் ஈழத் தமிழ் மக்களையும் பூண்டோடு ஒழிக்குமாறு முள்ளிவாய்க்கால் போரை வழிநடத்தியதில் இலங்கை அரசின் கூட்டாளிதான் இந்திய அரசு. போர்க்குற்றவாளியான இந்திய அரசிடம் பிழைப்புவாத ஈழ ஆதரவு அமைப்புகளும் ஓட்டுக் கட்சிகளும் ஐ.நா. தீர்மானத்துக்கு ஆதரவாக ஓட்டுப் போடச் சொல்லிக் கூப்பாடு போட்டன. ராஜபக்சேவுடன் இந்திய அரசையும் கூண்டிலேற்றுவதற்குப் பதிலாக, இலங்கை மட்டும்தான் போர்க்குற்றவாளி என்றும், இந்தியா முன்நின்று ஈழத் தமிழர்களுக்கு நீதியும் உரிமையும் பெற்றுத்தரும் என்றும் இவர்கள் பிரமையூட்டுகின்றனர். அதன் மூலம் போர்க்குற்றவாளியான இந்தியாவை தப்பவைக்கும் திருப்பணியைச் செய்துள்ளனர். போர்க் குற்றவாளியான இந்திய அரசை நியாயவானாகக் காட்டி, தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்ததன் மூலம் போர்க்குற்றவாளியான ராஜபக்சேவையும் விடுவிக்கத் துணைபோயுள்ளனர்.

ஜெனிவா தீர்மானம் சிங்கள இனவெறி நாயைப் பாதுகாத்த இந்தியா நரிகடல் வற்றி கருவாடு தின்னலாம் என்று காத்திருந்த கொக்கின் கதையாக, இந்திய உதவியுடன் ஈழ விடுதலையைச் சாதிக்க முடியும் என்று நம்ப வைத்து தமிழக இனவாதிகள் நடத்திய சந்தர்ப்பவாத அரசியலின் நீட்டிப்புதான் இது. இந்திய தேசியத்தை எதிர்ப்பதாகவும் தேசிய இன விடுதலையைச் சாதிக்கப் போவதாகவும்  சவடால் அடிக்கும் இத்தமிழினக் குழுக்களும் தலைவர்களும் அரசியல் ரீதியில் இந்திய வட்டார மேலாதிக்க அரசின் அப்பட்டமான கைக்கூலிகளாக உள்ளனர். அன்று ராஜீவ்  ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை வரவேற்று ஆதரித்த இவர்கள்தான், இன்று இந்தத் தீர்மானத்தையும் ஆதரிக்கிறார்கள். எம்.ஜி.ஆர் இருந்திருந்தால் இப்படி நடக்க விட்டிருக்க மாட்டார்; இந்திரா காந்தி இருந்திருந்தால் ஈழத்தை விடுதலை செய்திருப்பார்; வங்கதேச விடுதலையைப் போல தனி ஈழத்தை உருவாக்கியிருப்பார்  என்றெல்லாம் ஏற்றிப் போற்றியவர்களும் இவர்கள்தான். இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்தால், அது இந்தியாவுக்கு பேராபத்து என்று பீதியூட்டி உபதேசம் செய்தவர்களும் இவர்கள்தான். ஈழ விடுதலைக்கு எதிரான பார்ப்பன பாசிச ஜெயலலிதாவை ஈழத்தாயாகச் சித்தரித்தவர்களும் இவர்கள்தான்.

இந்தியா அல்லது அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் முதுகில் ஏறி  ஈழத் தமிழர்க்கு நீதியும் உரிமை யும் பெற்று விட இயலுமெனக் கருதுவது வீண்கனவு மட்டுமல்ல; ஈழ விடுதலைக்கே எதிரான துரோகத்தனமாகும். இந்தியாவையும் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களையும் தாஜா செய்தோ, அவற்றின் தயவினாலோ,  அரசு தந்திர நடவடிக்கைகள், அழுத்தங்கள் மூலமாகவோ  இந்திய  இலங்கை அரசுகளின் போர்க்குற்றங்களுக்கு ஒருக்காலும் நீதி பெற முடியாது. இத்தகைய பிழைப்புவாத  சந்தர்ப்பவாத ஈழ ஆதரவு அமைப்புகளையும் இயக்கங்களையும் அம்பலப்படுத்தி,  சர்வதேச அரசுகளைப் பணிய வைக்கும் தனித்துவமான  உறுதியான புரட்சிகர மக்கள் இயக்கங்களைக் கட்டியமைப்பதன் மூலம்தான் இப்போர்க்குற்றவாளிகளைத் தண்டிக்க முடியும்.

______________________________________________________

புதிய ஜனநாயகம், ஏப்ரல் – 2012

______________________________________________________

படிக்க

108 ஆம்புலன்ஸ் சேவை: தனியார்மயத்துக்கு எதிராகத் தொழிலாளர்களின் பிரச்சாரம்!

7

108 ஆம்புலன்ஸ் சேவை : தனியார்மயத்துக்கு எதிராகத் தொழிலாளர்களின் பிரச்சாரம்!

எதிர்பாராமல் நிகழும் சாலை விபத்துகள், தீ விபத்துகள், திடீர் மாரடைப்பு முதலானவற்றால் பாதிக்கப்பட்டோரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்று காப்பாற்றும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் சேவையை ஜி.வி.கே. இ.எம்.ஆர்.ஐ. (அவசரகால மேலாண்மை மற்றும் ஆராய்ச்சிக் கழகம்) என்ற தனியார் நிறுவனம் இயக்கி வருகிறது.

அரசு சின்னத்தைப் பொறித்துக் கொண்டு ஆம்புலன்ஸ் சேவையை நடத்திவரும் இத்தனியார் நிறுவனத்தில் நாளொன்றுக்கு 12 மணி நேரம் வீதம் இரண்டு ஷிப்டுகளில் கொத்தடிமைகளாகப் பணிபுரியும் ஊழியர்கள், மாதம் ரூ.7000 சம்பளத்தில் வாரத்தில் ஏழு நாட்களிலும் வேலை செய்யுமாறும், பணியாளர்களுக்கு தங்குமிடமோ, ஓய்வறையோ இல்லாமல் வெட்டவெளியில் பணியாற்றுமாறும் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இதுபற்றி வாய்திறந்தால், ஊழியர்களை இடமாற்றம் செய்து பழிவாங்குவதும், மிரட்டுவதும் கேள்விமுறையின்றித் தொடர்கிறது.

இக்கொத்தடிமைத்தனத்துக்கு எதிராகக் குமுறிய சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களின் தொழிலாளர்கள் பு.ஜ.தொ.மு.வின் வழிகாட்டுதலில் தமக்கென “108 தொழிலாளர் சங்கம்” என்ற பெயரில் தொழிற்சங்கத்தைக் கட்டியமைத்து போராடி வருகின்றனர்.  கடந்த 28.2.2012 அன்று இராமநாதபுரம் நகரின் கேணிக்கரையில் உள்ள டி.எஸ். திருமண மண்டபத்தில் ஜி.வி.கே. ஈ.எம்.ஆர்.ஐ. நிறுவனத்தின் ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற்றபோது, இந்நிறுவனம் அரசு நிறுவனமல்ல என்பதையும், இது அரசு வேலைக்கான ஆள்சேர்ப்பு முகாமும் அல்ல என்பதையும் உணர்த்தி, இத்தனியார் நிறுவனம் தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக நடத்திவருவதையும், சட்டவிரோதமாக வாரத்தின் ஏழு நாட்களிலும் 12 மணி நேரம் வேலை வாங்குவதையும்,  ஆம்புலன்ஸ் வண்டியில் மைலேஜ் கணக்கு, பஞ்சர் கணக்கு கேட்பதையும், வண்டியில் உயிர்காக்கும் மருந்துகள்உபகரணங்கள் இல்லாததையும் விளக்கி, இத்தனியார் நிறுவனத்தின் கொள்ளையையும் அடக்குமுறைகளையும் அம்பலப்படுத்தி துண்டுப் பிரசுரம் வெளியிட்டு நேர்முகத் தேர்வுக்கு வந்தவர்களிடமும், பகுதிவாழ் உழைக்கும் மக்களிடமும் 108 தொழிலாளர் சங்கத்தினர் பிரச்சாரம் செய்தனர். விவரம் தெரியாமல் நேர்முகத் தேர்வுக்கு வந்த இளைஞர்களிடம் இப்பிரச்சாரம்  பெருத்த வரவேற்பைப் பெற்றது.

இப்பிரச்சாரத்தாலும், இந்நிறுவனத்தால் சட்டவிரோதமாக வேலை நீக்கம் செய்யப்பட்ட இரு தொழிலாளர்களுக்காக தொழிலாளர் நல அலுவலகத்தில் 108 தொழிலாளர் சங்கம் முறையிட்டதன் பேரில் அதிகாரிகள் இது குறித்து  விசாரணை நடத்தி வருவதாலும் ஜி.வி.கே. நிறுவனம் அரண்டு போயுள்ளது. சங்கத்தின் செயல்பாடுகளால் உற்சாகமும் புதிய நம்பிக்கையும் பெற்றுள்ள தொழிலாளர்கள், தமிழகமெங்குமுள்ள 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை அமைப்பாக்கிப் போராட ஆயத்தமாகி வருகின்றனர்.

______________________________________________________

புதிய ஜனநாயகம், ஏப்ரல் – 2012

______________________________________________________

ராமஜெயம் கொலை: காரணம், பின்னணி என்ன?

93
ராமஜெயம்
ராமஜெயம்

திருச்சியில் முன்னால் அமைச்சர் K.N.நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 29.03.2012 அன்று மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.!

கடந்த தி.மு.க ஆட்சியில் தனது அண்ணன் K.N.நேருவின் அனைத்து அரசுத்துறை, கட்சி சம்பந்தமான எல்லா பேரங்களுக்கும் இடைத்தரகராக இருந்தவர்தான் இந்த ராமஜயம். திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளின் பண்பான ரியல்எஸ்டேட், கல்குவாரி கான்ட்ராக்ட் , கடத்தல், கட்டப்பஞ்சாயத்து என சகல வழிகளிலும் சாம்ராஜ்யத்தை விரிவு படுத்தியதும், கோடிக்கணக்கில் சொத்து சேர்த்தும் இந்த வகையில்தான்.

நிலபேரங்கள், வீடு, ஹோட்டல்கள் இவரால் வளைக்கப் பட்டபோதும், கட்சியில் உள்ள      பிணக்குகள்கூட இவர் தலையீடு இல்லாமல் முடிவது கிடையாது. தி.மு.க தலைவரின் வாரிசுகள் வரும் போதும் போகும் போதும் தி.மு.கவின் தலைமையின் தனி கவனத்தை ஈக்கும்படி செயல்பட்டதுடன் தனது உறவுக்காரர் நெப்போலியனையே ஓரங்கட்டியதும் இந்த வகையில்தான்.

திருச்சியில் சாதாரண ஏர்செல் நிறுவனத்தின் ஏஜண்டாக செயல்பட்ட(Managing Director) காரணத்தால் M D என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார். அண்ணன் அமைச்சர் என்பதால் அரசு அதிகாரிகள் , நில உரிமையாளர்கள், என சகல பிரிவினரையும் மிரட்டி காரியம் சாதித்தனர். இதனால்தான் அமைச்சரின் இலாக்காவில் உள்ள வேலை வாய்ப்புகளுக்கு ஒரு தொகை நிர்ணயித்து வசுலித்தும், குவாரி கான்ட்ராக்ட் முதல் ரியல் எஸ்டேட் வரை, ‘ஜனனி’ மினரல்ஸ், ‘கேர் காலேஜ்’ என தனது சாம்ராஜ்ஜியத்தை சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேஷியா, தென் ஆப்ரிக்கா என பரந்து விரிந்த வர்த்தக தொடர்பு மூலமாகவும் பல ஆயிரம் கோடிக்கு அதிபதியாகவும் மாறினார்.

இந்த காலகட்டத்தில் தான் திருச்சியில் 2007-ல் நில அதிபர் துரைராஜ் காரில் உயிரோடு எரித்து கொன்ற வழக்கிலும் , அதே நிலத்தில் தங்கராஜ் என்பவர் தற்கொலை செய்து கொண்டதிலும் , ராஜெயத்தின் தலையீடு உள்ளதாக காவல்துறை சந்தேகித்தது. ‘கலைஞர் அறிவாலயம்’ , காஞ்சனா பிளாசா, மாயாஸ் ஹோட்டல், பிரபல SRM மருத்துவக்கல்லூரி(‘பாரிவேந்தர் பச்சைமுத்து உடையார்’) கட்டுவது உள்ளிட்ட பிரச்சனையில் மிரட்டப்பட்டதும் திருச்சி மக்கள் அறிந்தது தான். நில அபகரிப்பு நடந்ததாக சில வழக்குகள் தற்சமயம் பதிவு செய்து விசாரிக்க பட்டுவந்தது.

ஆளும் அ.தி.மு.க தலைவி ஜெயலலிதா சட்டமன்ற தேர்தலின் போது வாக்கு சேகரிக்க சென்ற இடமெல்லாம் தி.மு.க அமைச்சர்களை விட ராமஜயத்தை கடுமையாக விமர்சித்தார். திருச்சியில் வாக்கு கேட்டபோது திருச்சியை ‘இந்த கொள்ளை கும்பலிடமிருந்து மீட்க வாய்ப்பு தாருங்கள் ‘ என்று ஓட்டு கேட்டார்.  நேரு குடும்பத்தின் மீது அரசியலை தாண்டி எரிச்சலூடன் ஜெ அணுகுவதற்கு காரணம் ‘அழகிரி பாணி’ அரசியலில் ராமஜெயம் கைதேர்ந்தவர் என்பதுதான். வாகன விபத்தில் மரணமடைந்த சட்டமன்ற உறுப்பினரும், மற்றொரு தீடிர் பணக்கார அரசியல் ரவுடியுமான மரியம் பிச்சை இறப்பை திசைதிருப்பி K.N.நேரு குடும்பத்தினர் மீதும், தி.மு.க அலுவலகம் மீதும் அ.தி.மு.க குண்டர்கள் தாக்குதல் தொடுத்தது வாசகர்களுக்கு நினைவிருக்கும். இப்படி பலதரப்பினருக்கும் ஆளும் அ.தி.மு.கவுக்கும் தலைவலியாக கருதப்பட்ட ராமஜெயம் கடத்தி படுகொலை செய்யப்பட்டார் என்பது ஆச்சரியமல்ல !

மர்மங்கள் நிறைந்த அவரது வளர்ச்சி பாதை ஓட்டுபொறுக்கி அரசியலை ருசித்தவர்கள் வளரும் அதே பாதைதான். போலிசு – அதிகார வர்க்கம், நீதிமன்றங்கள் என அனைத்தும் இப்படிபட்ட திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளை உருவாக்கி கொண்டிருக்கிறது. மறுகாலனியாக்க சுழல் அவர்களின் வளர்ச்சிக்கு பெரிதும் வாய்ப்பை வளர்த்திருக்கிறது.

இவரது கொலை மர்மமாகவே நீடிக்கும் நிலையில் பத்திரிக்கைகளும், மக்களும் ஆளாளுக்கு ஓரு வகையில் பேசிக் கொண்டுள்ளனர். இன்று தூத்துக்குடி பெண் கவுன்சிலர் பிடிபட்டதாக செய்தி வந்துள்ளது.

கொலை எப்படி நடந்தது ! யார் செய்தார்கள் என்ற புலனாய்வுகள் ஒரு புறமிருக்கட்டும். தனது அண்ணனின் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி ரவுடி ராஜ்ஜியத்தை உருவாக்கி அதனுடன் தொழில் சாம்ராஜ்ஜியத்தை பலபடுத்திய புதிய பாணியிலான திடீர் அரசியல் ரவுடிதான் ராமஜயம்.

இவர்களது தாதா தனத்தால் பாதிக்கப்பட்டவர்களில் கீழ்நிலை மக்கள் மட்டுமல்லாமல் மேல்தட்டு பிரிவினரும் அடங்குவர். ரவுடிகளுக்கிடையிலான கோஷ்டி மோதலும் கூட உண்டு.

தருணத்திற்க்காக காத்திருந்த அதில் ஒருவர் தி.மு.க ஆட்சியை இழந்த தருணத்தில் வேலையை முடித்துள்ளார் என்பது மட்டும் அப்பட்டமான உண்மை.! தி.மு.க, அ.தி.மு.க இரு ஆட்சிக்காலங்களிலும் இத்தகைய அதிகார சண்டைகள் வழமையாக நடக்கும் ஒன்றுதான். அதே நேரம் இரு ஆட்சிகளிலும் இரு தரப்பு காண்ட்ராக்ட் முதலாளிகள் எதிர் தரப்பிற்கு கப்பம் கட்டி விட்டு தொழிலை செவ்வனே தொடர்வதும் வாடிக்கையான ஒன்றுதான். அதே நேரம் இதில் ஏகபோகமாக செயல்படுபவர்கள் மட்டும் எதிர்தரப்பு ஆட்சியின் போது சட்டபூர்வமாகவோ, சட்ட விரோதமாகவோ வேட்டையாடப்படுவார்கள்.

ஜெயா ஆட்சியில் தி.மு.க பிரமுகர்கள் மீது சொத்து குவிப்பு வழக்குகள், நில மோசடி வழக்குகள் என்று தீவிரமாக நடந்து வரும் வேளையில்தான் அது போதாது என்று ராமஜெயம் கொல்லப்பட்டிருக்கிறார். இந்த அரசியல் சூழ்நிலையில் குறிப்பிட்ட எதிர்தரப்பினர் பயன்படுத்திக் கொண்டு அவரை கொன்றிருக்கின்றனர். இதில் யார் கொன்றார்கள் என்பதை விட இத்தகைய கொலைகளுக்கும், கொள்ளைக்கும் காரணமான திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளை தோற்றுவிக்கும் அரசியல் – சமூக சூழ்நிலையைத்தான் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

_____________________________________________

செய்தி: ம.க.இ.க, திருச்சி.

______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

மின் கட்டண உயர்வு: அதிர்ச்சியூட்டும் உண்மைகள், சதிகள், கொள்ளைகள்!

18

மின்-கட்டண-உயர்வுமின் வாரியம் கூறும் கட்டணத்தைத் தரத் தயாராக இருப்பவர்களுக்கும் மின்சாரம் கிடைப்பதில்லை என்பதுதான்  மின்வெட்டு என்று கூறப்படுகிறது. கூடுதல் மின்சாரத்தை உற்பத்தி செய்வதன் மூலம் இந்த மின்வெட்டை முடிவுக்குக் கொண்டு வரப்போவதாக அரசு சொல்கிறது. மின் கட்டணத்தை உயர்த்துவதன் மூலமும் இந்தப் பற்றாக்குறையை ‘முடிவுக்கு’ கொண்டு வரலாம்.

பாட்டில் தண்ணீரும் கேன் தண்ணீரும் தண்ணீர் பஞ்சத்தை இப்படித்தான் ‘ஒழித்திருக்கின்றன’. குடிதண்ணீர் வாங்க காசில்லை என்ற பிரச்சினையை தண்ணீர் பற்றாக்குறை என்று யாரும் சொல்வதில்லை. அது பணப்பற்றாக்குறையாகிவிடுகிறது.

ஐந்துக்கும் பத்துக்கும் செல்போன் டாப்அப் செய்வதைப் போல, 20, 30  ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுக் கொள்வதற்கும் எப்படி இன்று பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறோமோ, அதேபோல மின்சாரச் சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கும் பழக்கப்படுத்தப்பட இருக்கிறோம். மின்சாரம் என்பது கத்தரிக்காயைப் போல அன்றாடம் சந்தையில் விலை மாறும் சரக்காகி வருகிறது. இந்த மாற்றம் வெகு வேகமாக நம்மீதும் திணிக்கப்படுகிறது.

டெல்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ‘ஸ்மார்ட் மீட்டர்’ என்ற மின்சார மீட்டரை அறிமுகப்படுத்தவிருக்கிறதாம். காலை, மதியம், மாலை, இரவு என ஒரு நாளின் குறிப்பிட்ட நேரங்களில், ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை என்ன என்பதை இந்த மீட்டரைப் பார்த்து வாடிக்கையாளர்கள் தெரிந்துகொள்ள முடியுமாம். அதாவது, வரவிருக்கும் காலத்தில் மின் கட்டணம் என்பது ஒரு மாதத்திற்கோ, ஒரு நாளுக்கோ கூட நிரந்தரமாக இருக்காது. மின்சாரச் சந்தையின் விலை நிலவரத்துக்கு ஏற்ப ஏறி இறங்கிக் கொண்டிருக்கும். மின்சாரத்தின் விலை அதிகமாக இருக்கும் நேரத்தில் மின்சாரப் பயன்பாட்டை தவிர்த்துக் கொண்டு, விலை குறைவாக இருக்கும் நேரத்தில் மின்சாரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் மின் கட்டண செலவைக் கட்டுப்படுத்த முடியும். இது மின்சாரத்துறையில் செய்யப்படும் இரண்டாம் தலைமுறை சீர்திருத்தமாகும் என்று கூறியிருக்கிறார் டில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பி.டி.சுதாகர். (பி.டி.ஐ; 26.2.12)

மைய அரசு அமைத்திருக்கும் ‘இந்தியா ஸ்மார்ட் கிரிட் டாஸ்க் ஃபோர்ஸ்’ என்ற அமைப்பின் தலைவரான சாம் பிட்ரோடா, மின்சார மீட்டரை ஜி.எஸ்.எம். தொழில்நுட்பத்துடன் இணைப்பதன் மூலம் உருவாக்கப்படும் இந்த ஸ்மார்ட் மீட்டர் கருவிகள் இந்தியா முழுவதற்கும் பத்து கோடி தேவையென்றும், அவற்றை மலிவு விலையில் உருவாக்கும் முயற்சி நடைபெறுவதாகவும் கூறியிருக்கிறார். இந்தியாவிலேயே முதன் முறையாக புதுச்சேரி நகரிலுள்ள 87,000 வீடுகளில் அடுத்த நான்கு மாதங்களில் இந்த மீட்டர்கள் நிறுவப்படும் என்று இந்த டாஸ்க் ஃபோர்ஸ் அமைப்பு அறிவித்திருக்கிறது. (ஐ.பி.என். லைவ், மார்ச் 3, 2012)

மின் விநியோகத்தின் மீதான மையப்படுத்தப்பட்ட நிர்வாகம், மின் திருட்டைத் தடுக்கும் முயற்சி, மின் செலவை மிச்சப்படுத்த மக்களுக்கு தரப்படும் வாய்ப்பு என்ற வார்த்தை ஜாலங்களால் இந்த திட்டத்தை நியாயப்படுத்துகிறது அரசு. உண்மை அதுவல்ல.  மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் மின் கட்டணத்தை நிர்ணயம் செய்வது என்ற முறையையே ஒழித்துவிட்டு, சந்தையில் மின்சாரத்தின் விலை என்னவோ அதைக் கொடுத்துத்தான் ஆகவேண்டும் என்பதற்கு மக்களைப் பழக்குவதே இந்த ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தின் நோக்கம்.

28.3.2012 அன்று சட்டசபையில் மின்கட்டண உயர்வு தொடர்பான ஒரு கேள்விக்கு பதிலளித்த ஜெயலலிதா, கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று மாநில மின்வாரியம் கோராவிட்டாலும்கூட, கட்டணத்தை உயர்த்துகின்ற அதிகாரம் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு உண்டு என்று ஒரு விளக்கமளித்தார்.

மின்-கட்டண-உயர்வுதன்னுடைய அரசு அறிவித்திருக்கும் கட்டண உயர்வுக்கு, தான் பொறுப்பேற்றுக் கொள்ளாமல், வேறு யாரோ வைத்த செய்வினை போல ஜெயலலிதா சித்தரிக்கிறார் என்ற போதிலும், அப்படிப்பட்ட அதிகாரம் ஆணையத்துக்கு வழங்கப்பட்டிருப்பது உண்மையே.

மின்சார ஒழுங்குமுறை ஆணையம் என்பது மின்சார உற்பத்தி மற்றும் விநியோகத்தை தனியார்மயமாக்கும் நோக்கத்திற்காகவே உலக வங்கியின் ஆணைக்கேற்ப உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு.  கட்டண நிர்ணய அதிகாரம், உரிமம் வழங்கும் அதிகாரம் ஆகியவை மாநில அரசிடமிருந்து பிடுங்கி சுய அதிகாரம் பெற்ற அமைப்பான இதனிடம் வழங்கப்பட்டுவிட்டன.  இதற்கான சட்டம் 1998இலேயே இயற்றப்பட்டுவிட்டது.

மின்சாரத்தைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளுக்கு இந்தச் சட்டம் போதுமானதாக இல்லை என்பதால் 2003இல் பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் மத்திய மின்சாரச் சட்டம் இயற்றப்பட்டது.  இச்சட்டம், மின் உற்பத்தி  கம்பிகள் மூலம் கொண்டு செல்லுதல்  நுகர்வோருக்கு விநியோகித்தல் ஆகிய 3 பணிகளையும் மின்வாரியமே செய்வது திறமையின்மைக்கும் ஏகபோகத்துக்கும் வழிவகுப்பதால், வாரியங்களை மூன்றாக உடைக்கக் கூறியது. மின்சாரம் வணிக ரீதியில் விற்கப்படவேண்டும் என்றும், மின்சாரம்  உற்பத்தி செய்ய அரசாங்க உரிமம் தேவையில்லை என்றும், தனியார் முதலாளிகள் மின்னுற்பத்தி செய்வதுடன் மின்சாரச் சந்தையில் ஊக வணிக சூதாட்டமும் நடத்தலாம் என்றும் அனுமதித்தது. மின்வாரியங்கள் சொந்த உற்பத்தியை நிறுத்திவிட்டு, தனியாரிடம் மின்சாரத்தைக் கொள்முதல் செய்யுமாறும், விநியோகத்தையும் அவர்களிடம் ஒப்படைக்குமாறும் வலியுறுத்தியது. தனியாரிடமிருந்து அரசு கொள்முதல் செய்கின்ற மின்சாரத்திற்கு விலை நிர்ணயம் செய்யும் அதிகாரமும் ஆணையத்திடமே தரப்பட்டது. கட்டண உயர்வுக்கு எதிராக யாரும் நீதிமன்றத்தை நாடவியலாதென்றும், இதற்கென உருவாக்கப்படும் ‘மின்சாரத்துக்கான மேல்முறையீட்டு ஆணையம்’தான் தீர்ப்பளிக்க முடியும் என்றும் இச்சட்டம் கூறியது.

மின் உற்பத்தியிலிருந்து மாநில மின்வாரியங்கள் திட்டமிட்டே அகற்றப்பட்டன.  மின்சாரத் துறைக்கான நிதி, மாநில அரசுகளின் திட்ட ஒதுக்கீட்டில் 31.55 விழுக்காட்டிலிருந்து (199091) பத்தே ஆண்டுகளில் 15.25 விழுக்காடாக (200102) வீழ்ச்சி அடைந்தது. இலாபமீட்டி வந்த மின் வாரியங்கள் நட்டத்தில் விழத் தொடங்கின.

மின் வாரியங்கள் நட்டத்தில் விழுவதற்கான காரணமே, விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம்தான் என்ற கருத்தை அரசும், ஊடகங்களும் திட்டமிட்டே உருவாக்கியிருக்கின்றன. 1994-95இல் தமிழக மின்வாரியம் ஈட்டிய உபரி ரூ. 347 கோடி. 2007-08 ஆம் ஆண்டில் இது 3512 கோடி ரூபாய் பற்றாக்குறையாக மாறியது. 1994 இலும் சரி, 2008 இலும் சரி விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுத்தான் வருகிறது. நட்டத்திற்கு காரணம் அதுவல்ல.

1994 இல் தனது மின்சாரத் தேவையில் 0.4 சதவீதத்தை மட்டுமே தனியாரிடமிருந்து கொள்முதல் செய்து வந்த தமிழக மின்வாரியம், 2008  இல் சுமார் 35% மின்சாரத்தைத் தனியாரிடம் வாங்கியது. இன்று தமிழக மின்வாரியத்தின் கடன் சுமார் ரூ.56,000 கோடி. இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே.

“போட்டி இருந்தால் விலை குறையும். சேவைத்தரம் உயரும்” என்பதுதான், அரசுத்துறைகளை ஒழிப்பதற்கும், தனியார் துறையை ஊக்குவிப்பதற்கும் சொல்லப்படுகின்ற காரணம்.  மின்சாரத்துறையில் தனியார் அனுமதிக்கப்பட்ட பிறகு கட்டணம் குறையவில்லை. மாறாக, ஏறிக்கொண்டிருக்கிறது. மின் வாரியத்தை நட்டத்திலிருந்து காப்பாற்றத்தான் இந்த கட்டண உயர்வு என்று அரசு கூறினாலும் உண்மை அதுவல்ல.

தனியார் மின் உற்பத்தியாளர்களுடன் மின்வாரியங்கள் போட்டிருக்கும் மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தங்களின்படி, அந்த முதலாளிகளுக்குத் தரவேண்டிய தொகையைத் தருவதற்கு கட்டண உயர்வு அவசியம் என்று மத்திய மின்சார அமைச்சகத்தின் 21.1.2011 தேதியிட்ட கடிதம் தெளிவாகக் கூறுகிறது. (ஆதாரம் : ‘மின்சாரக் கட்டணம் தனியார்துறையின் வேட்டைக்காடு’, சா.காந்தி, ஒய்வு பெற்ற பொறியாளர்)

மின்-கட்டண-உயர்வுமின்சாரக் கொள்முதல் ஒப்பந்தம் (Power Purchase Agreement) என்பதென்ன? தனியார் நிறுவனங்களிடமிருந்து மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதற்கு மாநில மின்வாரியங்கள் போட்டுக் கொள்ளும் ஒப்பந்தங்கள் இவை. இவற்றின்படி, ஒரு யூனிட் மின்சாரம் என்ன விலை என்பதும் எத்தனை மாதங்களுக்கு அந்த விலையில் மின்சாரத்தை தரவேண்டும்/பெற வேண்டும் என்பதும் தீர்மானிக்கப்பட்டுவிடும்.  மின்சாரத்தின் விலையை இருதரப்பினரும் பேசித் தீர்மானிப்பர்.

இந்த வகை ஒப்பந்தங்களில் மிகவும் இழிபுகழ் பெற்றது என்ரான் ஒப்பந்தம். 90களில் தபோல் மின்நிலையத்திலிருந்து ஒரு யூனிட்  8 ரூபாய் விலையில் மின்சாரத்தை வாங்கிக் கொள்வதாக ஒப்பந்தம் போட்டு விட்டு, அந்த விலைக்கு மின்சாரம் வாங்க முடியாமல், மின்சார உற்பத்தியை நிறுத்தி வைப்பதற்காக மாதந்தோறும் நிலைக்கட்டணம் செலுத்தியே திவாலானது மகாராட்டிர அரசு.

தமிழகத்தில் அப்போலோ (மருத்துவமனை) குழுமத்துக்குச் சொந்தமான பிள்ளைப்பெருமாநல்லூர் மின்நிலையத்திலிருந்து 2005-06  இல் தமிழக அரசு வாங்கிய மின்சாரத்தின் விலை யூனிட்டுக்கு ரூ.17.78.  சாமல்பட்டி பவர் என்ற நிறுவனத்திடமிருந்து யூனிட் ரூ. 8.74; மதுரை பவர்  ரூ. 8.63. சென்னை பேசின் பிரிட்ஜில் மின் வாரியத்துக்குச் சொந்தமான நிலத்தில் அமைந்திருக்கும் ஜி.எம்.ஆர். என்ற தனியார் அனல் மின் நிலையத்திலிருந்து வாங்கப்பட்ட மின்சாரத்தின் விலை யூனிட்டுக்கு ரூ.6.58.  யூனிட்டுக்கு ரூ. 17.74 கொடுத்து அப்போலோ நிறுவனத்தின் மின்சாரத்தை வாங்க முடியாததால், மின்சாரம் வாங்கத் தவறியதற்குத் தண்டமாக, 2005-06  இல் மட்டும் நாளொன்றுக்கு ஒரு கோடி வீதம் 330 கோடி ரூபாயை  கொடுத்திருக்கிறது மின்வாரியம்.(காந்தி, மேற்படிநூல்)

தமிழக மின்வாரியம் உற்பத்தி செய்யும் நீர்மின்சக்தியின் விலை யூனிட்டுக்கு 21 காசுகள். அனல் மின்சக்தியின் அதிகபட்ச விலை ரூ.2.14 காசுகள் என்பதையும் இங்கே ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும். தமிழக மின் வாரியத்தின் 56,000 கோடி ரூபாய் கடனும், அதனைக் கட்டுவதற்கு  நாம் தரப்போகும் கூடுதல் கட்டணமும் அரசுக்குப் போகவில்லை. நேரே முதலாளிகளின் பணப்பெட்டிக்குத்தான் போய்ச் சேர்கிறது.

ஒப்பந்தம் செய்த விலையில் ஒப்பந்தப்படி மின்சாரம் வாங்கவில்லையென்றால், தங்களது மின் நிலையங்கள் இயங்காமல் சும்மா இருப்பதற்கே அபராதக் கட்டணம் வசூலித்து மின்வாரியத்தைத் திவாலாக்கும் கறார் பேர்வழிகளான தனியார் முதலாளிகள், தமது தரப்பில் ஒப்பந்தங்களை மதிக்கிறார்களா?

ஒரு யூனிட் 2.26 காசுக்கு மின்சாரம் சப்ளை செய்வதாக ஏலம் கேட்டு, டாடாவுக்குச் சொந்தமான முந்திரா அல்ட்ரா மெகா பிராஜக்ட் என்ற 4000 மெகாவாட் அனல் மின்நிலையம் ஒப்பந்தம் போட்டுக்கொண்டது. இதற்கான நிலக்கரியை இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்து வந்தது. இப்போது நிலக்கரியின் சர்வதேச விலை உயர்ந்துவிட்டதால், தான் ஏலம் கேட்ட விலையில் மின்சாரம் தர முடியாது என்றும் விலையைக் கூட்டவேண்டும் என்றும் கோருகிறது டாடா நிறுவனம். இந்தோனேசியாவில் உள்ள அந்த சுரங்கங்களும் டாடாவுக்கு சொந்தமானவையே என்பதால், மின்சாரத்தின் விலையைக் கூட்ட மறுக்கின்றன மாநில மின்வாரியங்கள்.

“மின்சாரத்தின் விலையைக் கூட்டித்தர மறுத்தால் மின்நிலையத்தை மூடுவோம். திவாலாகப்போவது நாங்கள் அல்ல, எங்களுக்கு கடன் கொடுத்த பொதுத்துறை வங்கிகள்தான். பரவாயில்லையா?” என்று தெனாவெட்டாக அரசை மிரட்டுகிறார் டாடா பவர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான அனில் சர்தானா. (எகனாமிக் டைம்ஸ், 5.2.2012)

தனியார் மின் உற்பத்தி நிலையங்களுக்கும், மின் வாரியங்களுக்கும் சுமார் 4 இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் கொடுத்திருக்கும் பொதுத்துறை வங்கிகளோ, தங்களைத் திவால் ஆகாமல் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு, மின் கட்டணத்தை உயர்த்துமாறு ஆணையத்திடம் முறையிடுகின்றன.

இன்று இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் பெரும்பகுதி அனல் மின் உற்பத்தியே. இதற்குத் தேவையான நிலக்கரியை பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா தருகிறது. குறைந்த விலையில் மக்களுக்கு மின்சாரத்தை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக மின்வாரியங்களுக்குச் சொந்தமான அனல் மின்நிலையங்களுக்குச் சலுகை விலையில் கரியை விற்கிறது கோல் இந்தியா. கோல் இந்தியா தருகின்ற நிலக்கரி போதாமல், கணிசமான அளவு நிலக்கரியை பொதுத்துறை மின் உற்பத்தி நிறுவனங்கள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து கொள்கின்றன.

மின்-கட்டண-உயர்வுதற்போது உலகச் சந்தையில் நிலக்கரியின் விலை உயர்ந்து விட்டதைத் தொடர்ந்து, மன்மோகன்சிங்கை சந்தித்த டாடா, அம்பானி, ஜின்டால், அதானி உள்ளிட்ட தரகுப் பெருமுதலாளிகள், “மின்சாரத்தின் விலையை உயர்த்துங்கள், அல்லது நிலக்கரியைச் சலுகை விலையில் வழங்குங்கள். இல்லையேல் அனல் மின் நிலையங்களை மூடவேண்டிவரும்” என்று அன்புடன் மிரட்டியுள்ளனர். உடனே சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களையும் அதிகாரிகளையும் கூட்டிய மன்மோகன்சிங், முதலாளிகளுக்குத் தேவையான நிலக்கரியை வெட்டி எடுத்தோ, இறக்குமதி செய்தோ கொடுக்க வேண்டியது கோல் இந்தியா நிறுவனத்தின் பொறுப்பென்றும், ஒப்புக்கொண்டதில் 80% நிலக்கரியைத் தரத் தவறினால் முதலாளிகளுக்கு அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறார். உள்நாட்டு நிலக்கரியை குறைந்த விலையில் விற்பது மட்டுமல்ல; இறக்குமதி செய்து, தள்ளுபடி விலையில் இம்முதலாளிகளுக்கு விற்க வேண்டும்.

டாடாவுக்கு  இந்தோனேசியாவிலும், அதானிக்கு ஆஸ்திரேலியாவிலும் நிலக்கரிச் சுரங்கங்கள் உள்ளன. இந்தோனேசிய டாடாவிடமிருந்து அதிக விலைக்கு வாங்கி, இந்திய டாடாவுக்கு மானிய விலையில் நிலக்கரி விற்பனை! இதற்குப் பெயர் சுதந்திரப் போட்டி, மானியங்களை அகற்றுதல்!

இது மட்டுமல்ல, வரவிருக்கும் 6 ஆண்டுகளில் நிறுவப்படவுள்ள 40,000 மெகாவாட் அனல் மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரிச் சுரங்கங்கள் தரகு முதலாளிகளுக்கு ‘சும்மா’ தூக்கித் தரப்பட்டிருக்கின்றன. இவர்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை சந்தை விலையில் விற்று லாபம் பார்க்கப்போகிறார்கள். (பிசினெஸ் லைன், 15.3.2011)

தனியார் மின் உற்பத்தியாளர்களில் இரு பிரிவினர் உண்டு. உற்பத்தி செய்யும் மின்சாரத்தைக் குறிப்பிட்ட மின்வாரியத்துக்கோ, ஆலைக்கோ,  சில ஆண்டுகளுக்கு குறிப்பிட்ட விலையில் கொள்முதல் ஒப்பந்தங்கள் போட்டுக் கொண்டு, விற்பனை செய்பவர்கள்   சுயேச்சையான மின் உற்பத்தியாளர்கள் (Independent Power Producers).

இத்தகைய ஒப்பந்தங்கள் ஏதுமில்லாமல் சந்தையில் அன்றன்றைக்கு நிலவும் மின்சாரத் தேவையின் அடிப்படையில், மின்சாரத்துக்கு விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்பவர்கள் வணிக மின் உற்பத்தியாளர்கள் (Mercantile Power Corporations). ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை 17 ரூபாய்க்கும் மேல் கூடப் போவதுண்டு. இதற்கு உச்சவரம்பு ஏதும் கிடையாது.  இத்தகைய தனியார் பிணந்தின்னிகளிடம் மின்சாரம் வாங்கித்தான் தமிழக மின்வாரியம் திவாலாகியிருக்கிறது. சான்றாக, 2009-10  இல்  தமிழக மின்வாரியம், தனது மொத்த மின் தேவையில் 19 விழுக்காட்டை  வணிக மின் உற்பத்தியாளர்களிடம் வாங்கிவிட்டு, அதற்கு விலையாக தனது மொத்த வருவாயில் 49.45 விழுக்காட்டை கொடுத்திருக்கிறது.

இன்று 16,000 மெகாவாட் உற்பத்தியுடன் இந்திய மின் சந்தையின் 10%ஐ இவர்கள் கட்டுப்படுத்துகின்றனர். அடுத்த சில ஆண்டுகளுக்குள் மேலும் 40,000 மெகாவாட் இவர்களது பிடிக்குள் வர இருக்கிறது. உலகிலேயே மிகப்பெரிய குறுகிய கால பிணந்தின்னி மின்சந்தை இந்தியச் சந்தைதான். இதனை மேலும் ஊக்குவிக்கும் வகையில் அக். 2008 முதல் ‘பவர் எக்ஸ்சேஞ்ஜ் ஆப் இந்தியா’ என்ற ஆன்லைன் சந்தை தொடங்கப்பட்டு, இதில் சூதாடப்படும் பண்டமாக மின்சாரம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தொடங்கி மூன்றாவது ஆண்டிலேயே 1000 கோடி யூனிட்டுகளுக்கு மேற்பட்ட மின்சாரம் இந்தச் சந்தையில் சூதாடப்பட்டிருக்கிறது என்று பெருமை பொங்க அறிவித்திருக்கிறார் மத்திய மின்சாரத்துறை இணை அமைச்சர் கே.சி.வேணுகோபால்.

தனியார் அணுமின் நிலையங்களும் அனுமதிக்கப்பட இருக்கின்றன. ரிலையன்ஸ் எனர்ஜி, டாடா பவர், லார்சன் அண்டு டூப்ரோ போன்ற நிறுவனங்கள் பிரான்சின் அரேவா, ஜப்பானிய தோஷிபா நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை வருகின்றன. இந்திய அணுசக்திக்கழகத்தின் (NPCIL) முன்னாள் தலைவர் வி.கே.சதுர்வேதி ரிலையன்ஸிலும், எஸ்.ஏ.வோரா என்ற முன்னாள் இயக்குநர் டாடா பவர் நிறுவனத்திலும் பொறுப்பேற்றிருக்கின்றனர்.  (அவுட்லுக், 22 அக்; 2007)

சூரிய ஒளி, காற்றாலை போன்ற மாற்று மின்சார முயற்சிகளும்கூட,  பெரும் தரகு முதலாளித்துவ நிறுவனங்களிடமே தரப்படுகின்றன. அவர்களுக்கு  மானியங்களை வாரி வழங்குவதுடன், அவர்கள் தயாரிக்கும் மின்சாரத்தையும் அடாத விலை கொடுத்து வாங்குகின்றன மின்வாரியங்கள். தமிழக மின்வாரியம் காற்றாலைகளுக்கு வைத்திருக்கும் கடன் மட்டும் 1500 கோடி ரூபாய்.

தற்போது 77% மின்சாரத்தை மத்திய, மாநில அரசு மின்நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன. 23% தனியார் உற்பத்தி.  அடுத்த 5 ஆண்டுகளுக்குள் தனியார் முதலாளிகளின் பங்கை 60% ஆக உயர்த்தவிருப்பதாகக் கூறி அமெரிக்க முதலீட்டாளர்களை வரவேற்றிருக்கிறார் மத்திய மின்சார அமைச்சர் ஷிண்டே.

மின் உற்பத்தி மட்டுமல்ல, மின் விநியோகமும் தனியார்மயமாக்கப்பட்டு வருகின்றது. டில்லி மின்விநியோக நிறுவனத்தின் பெயர், டாடா பவர் கம்பெனி என்றே மாற்றப்பட்டுவிட்டது.  உற்பத்தி, விநியோகம் இரண்டையும் அரசு மின்வாரியமே செய்வது ஏகபோகம் என்று கூறி, மாநில மின் வாரியங்களை உடைத்திருக்கும் அரசு, டாடாஅம்பானிகளின் நிறுவனங்கள் உற்பத்தியிலும் விநியோகத்திலும் மட்டுமின்றி எரிபொருளிலும்  தரகு முதலாளிகள் ஏகபோகம் செலுத்துவதை கேள்விக்குள்ளாக்கவில்லை.

மின்-கட்டண-உயர்வுஇருப்பினும், மோசமான சேவை, அசாத்தியமான கட்டண உயர்வு ஆகிவற்றால் தனியார் சேவை பல்லிளித்துவிட்டது. ஆத்திரம் கொண்ட டில்லி, மும்பை மக்கள் மீண்டும் அரசு மின்வாரியம் கோரிப் போராடுகின்றனர்.

மைய அரசு அமைத்திருக்கும் சுங்லு கமிட்டியோ, மின் தட இழப்பைக் குறைப்பதற்கு, மின் விநியோகத்தை மின்வாரியங்களிடமிருந்து பறித்து, அதைத் தனியார் முகவர்களுக்கு (Franchisee) கொடுக்குமாறும், கம்பிகள் டிரான்ஸ்பார்மர்கள் உள்ளிட்ட கட்டுமானங்களை 25 ஆண்டுகளுக்கு இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ள அவர்களை அனுமதிக்குமாறும் ஆலோசனை கூறியிருக்கிறது. பேருந்துநிலைய கக்கூசை ஏலம் விடுவது போல, 255 நகரங்களின் மின் விநியோகத்தை ஏலம் விட்டு அரசாங்கம் கல்லா கட்டிவிடலாம் என்றும், அந்த ஏலதாரர்கள் மக்களிடம் வசூலித்துக் கொள்ளட்டும் என்றும் ஆலோசனை கூறியிருக்கிறது. பஞ்சாப், ஹரியானாவில் 31 நகரங்களில் முன்னோட்டமாக இது அமல்படுத்தப்பட இருக்கிறது. (இந்தியன் பவர் செக்டார், 10.2.2012) நெடுஞ்சாலைத் துறை டோல்கேட்டுகள் வசூலில் வெற்றியடைந்திருப்பதால், அதே முறையிலான தனியார்துறைபொதுத்துறை கூட்டினை மின் விநியோகத்திலும் அமல்படுத்தலாமென்றும் அரசு சிந்தித்து வருகிறது. மின் கட்டண வசூலை உத்திரவாதப்படுத்த, ஸ்மார்ட் மீட்டருடன் ப்ரீ பெய்டு கார்டு முறையை இணைப்பது குறித்தும் பரிசீலித்து வருகிறார்கள்.

தெற்காசியா முழுவதற்கும் 30,000 கோடி டாலர் செலவில் ஒரு மின் விநியோக வலைப்பின்னலை அமைத்து, ஒரே மின்சாரச் சந்தையின் கீழ் தெற்காசியாவின் எல்லா நாடுகளையும் கொண்டுவரவேண்டும் என்பதும் இந்தியத் தரகுமுதலாளிகளின் வேட்கை. தெற்காசிய சுதந்திர வர்த்தக வலயத்துக்கான அமைச்சர்கள் கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா இதனைக் கூறினார். இத்திட்டத்தின் அடிப்படையில்தான் இந்திய-இலங்கை கடல்வழி மின்தடம் அமைக்கப்பட இருக்கிறது.

இன்று நாம் சந்திக்கும் பிரச்சினையை மின் உற்பத்திப் பற்றாக்குறை தோற்றுவிக்கும் நெருக்கடி என்று மட்டும் குறுக்கிப் புரிந்து கொள்ள கூடாது. குஜராத்திடம் 2000 மெகாவாட் மின்சாரம் உபரியாக விற்க வழியில்லாமல் உள்ளது. முதலாளித்துவ பொருளாதாரத்தில் பற்றாக்குறையைக் காட்டிலும் அபாயகரமான பிரச்சினை உபரி.

நாளை தமிழகம் மின் உபரி மாநிலமாகலாம். ஆனால் அந்த உபரி, சாதாரண மக்களின் மின்சாரப் பற்றாக்குறையை அதிகரிக்கும். இந்திய உணவுக் கழகத்தின் கிடங்குகளில் பிதுங்கி வழியும் தானியம்,  மக்கள் அன்றாடம் உட்கொள்ளும் உணவின் அளவைக் குறைத்து வருவதைப் போல.

உணவுபட்டினியைத் தோற்றுவிக்கும். மின்சாரம் இருட்டையும் தோற்றுவிக்கும்.

______________________________________________________

புதிய ஜனநாயகம், ஏப்ரல் – 2012

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

பட்ஜெட் : செக்கு மீதேறி சிங்கப்பூர் பயணம்!

2

பட்ஜெட் : செக்கு மீதேறி சிங்கப்பூர் பயணம் !குலேபகாவலி என்றொரு பழைய திரைப்படத்தில் இப்படியொரு காட்சி வரும்.  ஒரு வீட்டின் திண்ணையில் உட்காரப் போகும் கதாநாயகனின் நண்பனிடம் அவ்வீட்டின் உரிமையாளர், “திண்ணையில உட்காரதீங்க, அப்புறம் திண்ணை வரி போட்டு விடுவாங்க” என்று எச்சரிப்பார்.  இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் சேவை வரியை விரிவாக்கியதன் மூலம், அப்படிப்பட்டதொரு வரிக் கொள்ளையை, மக்கள் மீது ஏவிவிட்டுள்ளது, மன்மோகன் சிங் அரசு.

தனியார்மயம்  தாராளமயத்தின் பின் அறிமுகப்படுத்தப்பட்ட சேவை வரி, இன்று ஆக்டோபஸ் போல மக்களைச் சுற்றிவளைத்து நெறித்து வருகிறது.  இந்த பட்ஜெட்டில் 17 இனங்களைத் தவிர, மற்ற அனைத்தையும், ஏறத்தாழ 119 இனங்களைச் சேவை வரி விதிப்பின் கீழ் கொண்டுவந்துள்ள மைய அரசு, அவ்வரி விதிப்பையும் 10 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயர்த்திவிட்டது.  சேவை வரியோடு, சுங்க வரி, உற்பத்தி வரிகளையும் உயர்த்தியிருப்பதன் மூலம், கடந்த ஆண்டைவிடக் கூடுதலாக 45,940 கோடி ரூபாயைப் பொதுமக்களிடமிருந்து கறந்துவிடும்படி பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

இவ்வரிக் கொள்ளை ஒருபுறமிருக்க, பெட்ரோலியப் பொருட்களுக்குக் கொடுத்துவந்த மானியத்தில் 25,000 கோடி ரூபாயையும், யூரியாவிற்குக் கொடுத்து வந்த மானியத்தில் 7,000 கோடி ரூபாயையும் வெட்டித் தள்ளியதன் மூலமும்; 30,000 கோடி ரூபாய் அளவிற்குப் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியார் முதலாளிகளுக்கு விற்பதன் மூலமும் கஜானாவை நிரப்பிக் கொள்ளத் திட்டமிட்டுள்ளது, மைய அரசு.

மன்மோகன் சிங் கும்பல் சாமானிய மக்களை என்றுமே ஒரு பொருட்டாகக் கருதியதில்லை.  அக்கும்பல் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வினைக் கட்டுப்படுத்தாததோடு, அப்பொருட்களின் விலை மேலும் உயரும் எனத் தெரிந்தேதான், எரிகிற நெருப்பில் எண்ணெயை எடுத்து ஊற்றுவது போலத்தான், இந்தக் கூடுதல் வரி விதிப்பையும் மானிய வெட்டையும் கொண்டு வந்திருக்கிறது; இது மட்டுமின்றி, பட்ஜெட்டை அறிவித்த கையோடு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவின் விலையை உயர்த்தப் போவதாகவும் திமிரோடு அறிவித்திருக்கிறது.

விவசாய இடுபொருட்களுக்கான விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரி வரும் வேளையில், மன்மோகன் சிங் கும்பல் அக்கோரிக்கையை ஒரு பொருட்டாக மதிக்காமல், தெனாவட்டாக யூரியாவிற்கான மானியத்தை வெட்டியிருக்கிறது.  இதுவொருபுறமிருக்க, தேர்ந்தெடுக்கப்பட்ட 50 மாவட்டங்களில் யூரியாவிற்கான மானியத்தை விவசாயிகளுக்கு நேரடியாக வழங்கும் திட்டத்தையும் இந்த பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தியிருக்கிறது.  இந்நடவடிக்கை, யூரியாவின் விலையை கார்ப்பரேட் முதலாளிகளும் வர்த்தகச் சூதாடிகளும் தீர்மானிக்கும்படி விட்டுவிடும் முன்னோட்டம் தவிர வேறில்லை.  அம்மோனியா, பொட்டாசியம் உரங்களுக்கு மானியம் வழங்குவதையும், அவற்றின் விலையைத் தீர்மானிப்பதையும் நேரடியாகக் கைகழுவிய மைய அரசு, யூரியா விசயத்தில் தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் சதியில் இறங்கியிருக்கிறது.  இப்படியொரு நிலை இந்தியா முழுவதும் விரிவாக்கப்படும்பொழுது யூரியாவிற்கு மானியம் வழங்குவது பெயரளவில் மட்டுமே இருக்கும்; அதே சமயம், யூரியாவின் விலையில் பெரும்பகுதி விவசாயிகளின் தலையில் சுமத்தப்படும்.

‘‘அரசின் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும்” என பட்ஜெட் உரையில் கொள்கைப் பிரகடனம் செய்திருக்கிறார், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி.  இதற்கு இராணுவச் செலவு உள்ளிட்ட அரசின் ஊதாரிச் செலவுகளையும் மேல்தட்டு கும்பலுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் வரித் தள்ளுபடி, வரிச் சலுகைகளையும் கட்டுப்படுத்தினாலே, அரசின் செலவைக் குறைத்துவிட முடியும்.  ஆனால், வழக்கம் போலவே இந்த பட்ஜெட்டும் மேல்தட்டுக் கும்பலின் நலனை முன்னிறுத்தியும், உழைக்கும் மக்களின் நலனைப் பலியிட்டும்தான் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்ஜெட்டில் இராணுவத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 1,93,407 கோடி ரூபாய் நிதியில், 79,500 கோடி ரூபாய் ஆயுதங்களும் நவீன போர் விமானங்களும் வாங்க ஒதுக்கப்பட்டுள்ளது.  ஊழலில் ஊறிப் போன அதிகாரிகளுக்கும் ஆயுத பேரத் தரகர்களுக்கும் இதைவிட இனிப்பான செய்தி வேறெதுவும் இருக்க முடியாது.

நடுத்தர மற்றும் மேல்தட்டு வர்க்கத்தினருக்கு 4,500 கோடி ரூபாய் அளவிற்கு வருமான வரிச் சலுகையினை வாரி வழங்கியிருக்கிறார், நிதியமைச்சர்.  உழைக்கும் மக்களுக்கு மானிய விலையிலோ இலவசமாகவோ அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதை ஓட்டுவங்கி அரசியல் எனத் திட்டித் தீர்க்கும் இக்கும்பல், தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த வருமான வரிச் சலுகை போதாது எனக் கூப்பாடு போடுகிறது.

இந்த ஆண்டிற்கான நிதிப் பற்றாக்குறை 5,21,980 கோடி ரூபாயாக இருக்கும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.  அதேசமயம், கடந்த ஆண்டில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட 5,29,432 கோடி ரூபாய்க்கான வரிச் சலுகைகளுள் ஒன்றைக்கூட நிதியமைச்சர் இந்த பட்ஜெட்டில் ரத்து செய்யவில்லை. நிதிப் பற்றாக்குறை பூதகரமாக வளர்ந்து நிற்பதற்கு இந்த ஊரான் வீட்டு நெய்யே என்ற வள்ளல்தனம்தான் காரணம்.  ஆனால், பற்றாக்குறையைச் சமாளிக்க மானியத்தை வெட்டிய கையோடு, தொழிலாளர் வைப்பு நிதிக்கு வழங்கப்பட்டு வந்த வட்டியை 9.5 சதவீதத்திலிருந்து 8.25 சதவீதமாகக் குறைத்து, 4.5 கோடி தொழிலாளர்களின் எதிர்காலத்தைக் களவாடிவிட்டது, காங்கிரசு கூட்டணி அரசு.  இந்த வட்டிக் குறைப்பு மன்மோகன் சிங் கும்பலின் வக்கிரப் புத்தியையும் அற்பத்தனத்தையும் ஒருசேர எடுத்துக் காட்டுகிறது.

பட்ஜெட் : செக்கு மீதேறி சிங்கப்பூர் பயணம் !திருவாளர் மன்மோகன் சிங் சமீபத்தில், “இந்தியாவில் உள்ள குழந்தைகளுள் 42 சதவீதத்தினர் ஊட்டச்சத்து இன்றி நோஞ்சான்களாக வளருவதாகவும், இதுவொரு தேசிய அவமானம்” என்றும் கூறினார்.  அடித்தட்டு மக்களை எந்தளவிற்கு வறுமையும் ஏழ்மையும் வாட்டி வருகின்றன என்பதை உறுதிப்படுத்தும் புள்ளிவிவரம் இது.  மன்மோகன் சிங் திடீர் ஞானோதயம் வாய்த்தவரைப் போல இப்படிக் கூறியிருக்கும் அதே சமயம், அவரது அல்லக்கையும் திட்ட கமிசனின் துணைத் தலைவருமான மாண்டேக் சிங் அலுவாலியா, “நகர்ப்புறத்தில் தனிநபர் வருமானம் நாளொன்றுக்கு ரூ.28.65க்குக் கீழாகவும், கிராமப்புறத்தில் தனிநபர் வருமானம் ரூ.22.42க்குக் கீழாகவும் இருப்பதுதான் வறுமைக் கோட்டின் அளவுகோல்.  இதன்படி வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் இந்திய மக்களின் எண்ணிக்கை 37.2 விழுக்காட்டிலிருந்து 29.8 விழுக்காடாகக் குறைந்துவிட்டதென” தற்பொழுது தடாலடியாக அறிவித்திருக்கிறார்.  ஒருபுறம் நோஞ்சான் குழந்தைகளுக்காக முதலைக் கண்ணீர் வடித்துவிட்டு, மறுபுறம் வறியவர்களின் எண்ணிக்கைக் குறைந்துவிட்டதாகக் கணக்குக் காட்டுவது எப்பேர்பட்ட கயமைத்தனம்!

திட்ட கமிசன் தற்போது அறிவித்துள்ள வறுமைக் கோட்டின் அளவுகோல், அக்கமிசன் ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்திருந்த அளவுகோலைவிட, ஏறத்தாழ நான்கு ரூபாய் குறைவானது.  விலைவாசி உயர்ந்துகொண்டே செல்லும் சமயத்தில், வறியவர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்ட வறுமைக் கோட்டின் அளவுகோலை வெட்டும் சில்லறைத்தனமான குறுக்குவழியைத் தேர்ந்தெடுத்துக் கொண்டுள்ளது, மன்மோகன்  அலுவாலியா கும்பல்.  இந்தக் குறுக்குப்புத்திக்கு எதிராக நாடெங்கும் கண்டனங்கள் எழுந்த பிறகும் அதைப் பொருட்படுத்தாத அலுவாலியா, “இந்தக் கணக்கு வேண்டுமானால் துல்லியம் இல்லாமல் இருக்கலாம்.  நாட்டில் வறுமை குறைந்திருக்கிறது.  பட்டினிச் சாவுகள் இல்லை என்பது உண்மையே” என இறுமாப்பாகப் பதில் அளித்திருக்கிறார்.

மன்மோகன்  அலுவாலியா  சிதம்பரம் கும்பல் தேர்ந்தெடுத்து அமல்படுத்தி வரும் பொருளாதார வளர்ச்சிப் பாதை, வறுமை, ஏழ்மை, சமூக ஏற்றத்தாழ்வை மட்டும் தீவிரமாக்கவில்லை; நாட்டின் பொருளாதாரத்தையும் சீர்குலைத்து நாசப்படுத்தி வருகிறது.  குறிப்பாக, நாட்டின் பொருளாதாரம் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அவர்கள் எதிர்பார்த்த 8 சதவீத வளர்ச்சியை எட்டமுடியாமல் முடங்கிப் போய்விட்டது.  விவசாயம் போலவே, உற்பத்தி சார்ந்த தொழிற்துறையும் நீண்ட கோமா நிலைக்குச் சென்றுவிட்டது.  இவையனைத்தும் தனியார்மயம்  தாராளமயம் மிகப்பெரும் தோல்வி அடைந்துவிட்டது என்பதைத்தான் எடுத்துக் காட்டுகின்றன.

ஆனால், மன்மோகன் சிங் கும்பல் மண்ணுக்குள் தலை புதைக்கும் நெருப்புக் கோழியைப் போல, இந்த உண்மையைக் காண மறுப்பதோடு, தனியார்மயம்  தாராளமயத்தை இன்னும் தீவிரமாக நடைமுறைப்படுத்தினால் இந்த நெருக்கடியிலிருந்து தப்பித்துவிடலாம் என்ற ஆகாயக் கோட்டையைக் கட்டி காட்டுகிறது.  இந்தச் செக்குமாட்டுத் தனத்தற்கு ஏற்றபடியே, பட்ஜெட்டில் நிதி மூலதனத்திற்கும், பங்குச் சந்தை முதலீட்டிற்கும், விமான சேவை, மின்சாரம் போன்ற துறைகளில் நுழைந்துள்ள கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் சலுகைகள் வாரி வழங்கப்பட்டுள்ளன.  பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புகளைக் கொஞ்சம்கூடப் பொருட்படுத்தாமல்,  சில்லறை வணிகத்தில் 100 சதவீத அந்நிய முதலீட்டை அனுமதிப்பது உள்ளிட்டுப்பல்வேறு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை விரைவுபடுத்தப் போவதாகவும் அறிவித்திருக்கிறது, காங்கிரசு கூட்டணி அரசு.

நாட்டையும் மக்களையும் மீள முடியாத பேரழிவில் தள்ளாமல் ஓய்வதில்லை எனக் கங்கணம் கட்டிக் கொண்டு மன்மோகன் சிங் கும்பல் வேலை செய்து வருவதைத்தான் இந்த பட்ஜெட்டும் எடுத்துக் காட்டியிருக்கிறது.  ஆனால், போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளோ, துடப்பக் கட்டைக்குப் பட்டுக் குஞ்சம் கட்டுவது போல, “பட்ஜெட்டில் இந்த அளவிற்கு மானியத்தை வெட்டியிருக்கத் தேவையில்லை; மக்கள் நலத் திட்டங்களுக்கு இன்னும் கொஞ்சம் கூடுதலாக நிதி ஒதுக்கியிருக்கலாம்” என ஆலோசனைகளை அள்ளிவிட்டு வருகிறார்கள்.

______________________________________________________

புதிய ஜனநாயகம், ஏப்ரல் – 2012

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

 

தமிழ் தேசியத்தின் பெயரால் பாசிச இனவெறி!

145

பொதுவுடைமையைத் தனது பெயரில் தாங்கி, தேசிய இன விடுதலையைத் தனது இலட்சியமாக அறிவித்துக் கொண்ட ஒரு கட்சி குறுகிய இனவெறிக் கட்சியாக, அதுவும் பாசிச இனவெறிக் கட்சியாகவும் இருக்க முடியுமா? முடியும்  என்று திரும்பத் திரும்பக் காட்டி வருகிறது, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி (த.தே.பொ.க.) என்ற பெயரிலுள்ள ஒரு அமைப்பு.

பாட்டாளி வர்க்க அரசியல் சித்தாந்தத்துக்கு மாறாக, எதிராக, இணையாக, தொழிற்சங்கப் பிழைப்புவாதத்தைத் தனது சித்தாந்தமாகக் கொண்டிருந்த நம்பூதிரிபாடின் சீடர்கள் அல்லவா, இவர்கள்! அதனாலேயே தமது தொப்புள் கொடி உறவைக் கைவிட மறுக்கிறார்கள்! தாங்களே அறிவித்துக் கொண்ட இலட்சியத்தையும் கொள்கையையும் மட்டுமல்ல; சொந்த அறிவையும் புதைகுழியில் போட்டுவிட்டு அவற்றுக்கு எதிரான நிலைக்கு வலிந்து வாதம் புரிகிறார்கள்.

“தமிழர் இன எழுச்சி ஏற்படும் போதெல்லாம் தமிழகத்திலுள்ள இடதுசாரி இந்தியத் தேசியவாதிகளும் வலதுசாரி இந்தியத் தேசியவாதிகளும் பீதி அடைகின்றனர். இந்தியத் தேசியத்திற்கும் இந்திய ஒற்றுமைக்கும் இடையூறு ஏற்பட்டு விடுமோ என்று கலவரமடைகின்றனர்; கலங்கித் தவிக்கின்றனர்.”

“இனி முரண்பாட்டையும் இனச் சிக்கலையும் வெறும் வர்க்கச் சிக்கலாகவும் அரசியல் கட்சிகளின் குறைபாடுகளாகவும் திரித்துக் காட்டி இரசவாதம் செய்வார்கள் இந்தியத் தேசிய இடதுசாரிகள்” (த.தே.பொ.கவின் பத்திரிக்கையான  தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம், 2012 மார்ச் 1613) என்று குற்றஞ்சாட்டும் மணியரசன் கும்பல் அதற்கு எடுத்துக்காட்டாக, ம.க.இ.க. மற்றும் அதன் தோழமை அமைப்புகளையும் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் இவற்றின் நிலைப்பாடுகளையும் சுட்டுகிறது.

இன முரண்பாட்டையும் இனச் சிக்கலையும் அலசி ஆராய்ந்து கரை கண்ட மேதையாகிய, சிந்தனைச் சிற்பியாகிய மணியரசனே! நேர்மையிருந்தால் இங்கே நாங்கள் எழுப்பும் சில கேள்விகளுக்கு உங்கள் பேராசான் நம்பூதிரிபாடு பாணியில் சுற்றி வளைக்காமல் நேரடியாகப் பதில் சொல்லுங்கள்:

தமிழ் தேசியம்இந்திய தேசியத்துக்கும் அதனால் சிறைப்படுத்தப்பட்டுள்ள தமிழ், மலையாள, கன்னட, தெலுங்கு, மராத்தி, ஒடியா, வங்காளி, காசுமீரி, பஞ்சாபி, அசாமி முதலிய தேசிய இனங்களுக்கும் இடையிலான முரண்பாடுதானே பகை முரண்பாடு?அவ்வாறின்றி இத்தேசிய இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் பகை முரண்பாடுகளா? ஒடுக்கப்படும் இந்த தேசிய இனங்கள் தமது எதிரியாக, பகைச் சக்தியாகக் கொண்டுள்ளது, இந்திய தேசியத்தைத்தானே தவிர தங்களைப் போன்ற நிலையிலுள்ள பிற தேசிய இனங்களை எதிரியாக பகை சக்தியாகக் கொள்ள முடியுமா?

நேரடியாகவே கேட்கிறோம்: தமிழ் தேசிய இனத்துக்கும் இந்திய தேசியத்துக்கும் இடையிலானதுதான் பகை முரண்பாடு; தமிழ் தேசியத்தின் எதிரியாக, பகை சக்தியாக இருப்பது, இந்திய தேசியம்தான்! அண்டை தேசிய இனங்களாக இருக்கும் மலையாள, கன்னட, தெலுங்கு இனங்களோடு ஆற்றுநீர் பகிர்வு, எல்லைப் பிரச்சினை போன்றவைகளில் முரண்பட்டு நிற்பதாலேயே தமிழ் தேசிய இனம் அவற்றை பகை சக்தியாக எதிரி சக்தியாகக் கருத முடியுமா?

இன்னும் நேரடியாக, பகிரங்கமாகவே கேட்கிறோம்: முல்லைப் பெரியாறு  தேவிகுளம், பீர்மேடு பிரச்சினைக்காக  மலையாளியையும்; காவிரி  கோலார் பிரச்சினைகளுக்காக கன்னடனையும்; பாலாறு  சித்தூர் பிரச்சினைகளுக்காக தெலுங்கனையும் தமிழன் எதிரியாகக் கொண்டு பகைநிலை எடுக்க வேண்டுமா? அப்படிச் செய்வதைத் தானே இந்திய தேசியம் விரும்புகிறது. அதுதானே இந்திய தேசியத்துக்குத் துணைபோவது? இதைத் தானே த.தே.பொ.க தலைமையாகிய நீங்கள் செய்கிறீர்கள்?

இந்திய தேசியத்திற்குள் சிறை வைக்கப்பட்டிருக்கும் தேசிய இனங்களுக்கிடையிலான நதிநீர் மற்றும் எல்லைப் பிரச்சினைகளைப் பகை முரண்பாடுகளாக வளர்த்து மோதவிடுவது தானே இந்திய தேசியத்தை பராமரித்து, பாதுகாப்பது; இதன் மூலம் இந்திய தேசியத்துக்கு எதிரான போராட்டங்களை வலுவிழக்கச் செய்வதுதானே த.தே.பொ.க.வின் வேலையாக இருக்கிறது?

தேசிய இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளைப் பகை  முரண்பாடுகளாக வளர்த்து மோதவிடுவிடும் த.தே.பொ.க.வின் கொள்கையை, வேலையை ம.க.இ.க. மற்றும் அதன் தோழமை அமைப்புகள் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் செய்யவில்லை என்று குத்தாட்டம் போடுகிறது மணியரசன் கும்பல்.

“முல்லைப் பெரியாறு அணைய மீட்க எல்லையை மூடு! பொருளாதாரத் தடைபோடு!” என்ற தலைப்பிலான  ம.க.இ.க. மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் 2012 ஜனவரி வெளியீடு குறித்து, “முல்லைப் பெரியாறு உரிமையை மீட்க, கேரளாவுக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும்,கேரளாவுக்குச் செல்லும் 13 பாதைகளை மூடவேண்டும் என்றும், அது கூறுவது சரி. ஆனால் இதே ம.க.இ.க. கேரளாவுக்குப் பொருளாதாரத் தடை விதிக்கும் நமது கோரிக்கையை 11.02.2010இல் எதிர்த்து தனது வினவு இணையத் தளத்தில் எழுதியது என்று த.தே.பொ.க. வாதிடுகிறது.

முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரளத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான முரண்பாடு 2012  ஜனவரியில் நிலவிய அளவுக்கு 2010  பிப்ரவரியில் கூர்மையடைந்திருக்கவில்லை. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வினவு இணைய தளத்தில் எழுதியதை எடுத்து வைத்துக் கொண்டு மேற்படி கோரிக்கைகளை முன்வைத்த தமிழினவாதிகளின் நிலைப்பாட்டிற்கு எதிராகவும் முன்னுக்குப்பின் முரணாக எழுதுவதாகவும் இப்போதைய ‘தமிழின எழுச்சியை மடைமாற்றுகிறது ம.க.இ.க.’ என்றும் அவதூறு செய்கிறது த.தே.பொ.க.  அப்போதும்கூட கேரளாவுக்கு எதிரான பொருளாதார தடை, முற்றுகை விதிப்பது உடனடி நடவடிக்கையாக இருக்கக்கூடாது கடைசி பட்சமாக நடத்தலாம் என்று தான் வினவு இணையத்தளம் எழுதியிருந்தது.

2012 ஜனவரி வெளியீட்டில் முல்லை பெரியாறு பிரச்சினை கூர்மையடைந்ததற்கான அடிப்படையை விளக்கும் போது தனியார்மயம், தாராளமயம், உலகமயமாக்கத்தின் விளைவாக எழுந்தது என குறிப்பிட்டிருக்கிறோம். இது ஏதோ இனப்பிரச்சினை, வர்க்கப் பிரச்சினையாகவும் இந்திய தேசியத்திற்கு ஆதரவாகவும் மடைமாற்றுவது என்றும் த.தே.பொ.க. வியாக்கியானம் செய்கிறது.

இந்திய தேசியத்தை உருவாக்கிப் பேணி வளர்க்கும் ஆளும் வர்க்கங்களையும் அவர்களின் தனியார்மயம்  தாராளமயமாக்கம்  உலகமயமாக்கத்தையும் ம.க.இ.க. முதலிய புரட்சிகர அமைப்புகள் எதிர்ப்பது, எப்படி த.தே.பொ.க. சொல்வதைப் போல இன உணர்வாளர்களை இந்திய தேசியவாதத்திற்குள் இழுத்துச் செல்வதாகும்?

ஆனால், இந்திய தேசியத்தையும், அதைக் கட்டிக் காக்கும் இந்திய அரசையும் தனது பகைச் சக்தியாக அறிவித்துக் கொண்டுள்ள த.தே.பொ.க. அவற்றுக்கு எதிராக ஒரு புல்லைக் கூட பிடுங்கியதில்லை என்பது இருக்கட்டும்; ம.க.இ.க. முதலிய புரட்சிகர அமைப்புகளைவிட தமிழீழத்தின் உறுதியான, ஆதரவாளராகப் பீற்றிக் கொள்ளும் த.தே.பொ.க.வும் பிற தமிழ் இனவாதிகளும் கூட முள்ளிவாய்க்கால் படுகொலை வரை இந்தியாவை (இந்திய தேசியம், இந்திய அரசு முதலியவற்றை) தமிழீழ விடுதலையின் பகைச் சக்தி என்ற உண்மையைக்  சொல்லத் துணிந்ததுண்டா?

தமிழ் தேசியம்நக்சல்பாரிப் புரட்சிக் கட்சி தோன்றிய காலத்திலிருந்தே இந்திய தேசியத்துக்கு எதிராக தேசிய இனங்களின் விடுதலையை உயர்த்திப் பிடித்து வந்திருக்கிறது. அதனாலேயே தேசிய இனப் பிரச்சினை என்பது இனிமேலும் கிடையாது, முடிவுக்கு வந்துவிட்டது என்று தனது கட்சிப் பேராயத்தில் தீர்மானம் நிறைவேற்றியது, நம்பூதிரியின் போலி மார்க்சிஸ்ட் கட்சி. அப்போதும் அந்தக் கட்சியில்தான் இன்றைய த.தே.பொ.க. தலமை குப்பை கொட்டிக் கொண்டிருந்தது. அதன்பிறகு வெவ்வேறு அவதாரமெடுத்து, தனது விரைவான சொந்த வளர்ச்சிக்கான குறுக்குவழி  “அடையாள அரசியல்” என்ற முறையில் த.தே.பொ.க. தலமை தெரிந்தெடுத்துக் கொண்டதுதான், தமிழ்த் தேசிய இனப் பிரச்சினை. மற்றபடி தமிழ்த் தேசிய இனத்தின் மீது அதற்குள்ள பற்றினால் அல்ல.

ஏற்கெனவே இங்கே பல பத்து தமிழ்த் தேசிய இனக் குழுக்கள் உள்ளன; அவை எல்லாவற்றையும் விடத் த.தே.பொ.கட்சித் தலைமை வித்தியாசமானதும் ஆழ்ந்த சிந்தனையும் தமிழ்த் தேசியத்தின் தீவிரப் பற்றும் தெளிவும் கொண்டதாகக் காட்டிக் கொள்கிறது; ஆனால், நடைமுறையில் தமிழ்த் தேசியத்துக்கு எதிராகவே த.தே.பொ.கட்சித் தலைமை பலவாறு உளறிக் கொட்டிக் கிளறி மூடுகிறது.

நிலவுடைமை பண்பாட்டையும், பார்ப்பனிய சனாதனத்தைப் புகுத்திய நிலவுடைமை மன்னர்களின் அருமை பெருமைகளை ஏற்றிப் போற்றி பாரம்பரிய உரிமை பாராட்டி தமிழ்த் தேசியத்தைக் கொச்சைப்படுத்துகிறது. இந்திய தேசியத்தை  இந்து தேசியத்தை உயர்த்திப் பிடித்த பார்ப்பனிய பாரதியைப் போற்றுகிறது. இராமன் தமிழ்க் கடவுள் என்று சொல்லி இந்துத்துவத்தையும் தமிழ்த் தேசியத்துக்குள் புகுத்துகிறது.

இவ்வாறு உண்மையில் தமிழ்த் தேசியத்துக்கு எதிரான இந்துத்துவ  இந்திய தேசியத்தையும் ஏற்றுக் கொண்டுள்ள த.தே.பொ.க. தலைமை, குறுகிய இனவெறி சிவசேனா பாசிசத்தையும் கையிலெடுத்துக் கொண்டுள்ளதில் வியப்பில்லை. பிற மாநிலங்களில் இருந்து பிழைப்புத் தேடித் தமிழகத்தில் குடியேறும் பிற மாநிலத்தவர்கள் அனைவரும் கிரிமினல் குற்றவாளிகள், தமிழர்களுக்கு எதிராக ஆதிக்கம் புரிபவர்கள், அவர்களை  வெளியேற்ற வேண்டும் என்று கூறி  சிவசேனாக்களின் பாசிச  இனவெறி பாணியில் நஞ்சு கக்குகிறது, த.தே.பொ.க. தலைமை.

“கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்முறை எனப் பலக் குற்றச் செயல் தமிழ்நாட்டில் பெருகிவிட்டதற்கு முகாமையான காரணம் வெளிமாநிலத்தவர்களின் மிகை வருகை என்று தமிழகக் காவல்துறை அறிவித்துள்ளது” என்று கூறும் த.தே.பொ.க. தலைமை, தானும் அதை வழிமொழிந்து, “தமிழகத்தில் தமிழர்கள் நடத்தும் கொள்ளை, பாலியல் வன்முறைகளை விட அதிக விகிதத்தில் வெளிமாநிலத்தவர் நடத்தும் கொள்ளை, பாலியல் வன்முறை நிகழ்வுகள் இருக்கின்றன” என்று பச்சையாக கோயாபல்சு புளுகுகளை அள்ளி வீசுகிறது.

குடியேறும் வெளிமாநிலத்தவர் அனைவரும் ஒரே வகையினர் அல்ல. இன்றைய தனியார்மயம், தாராளமயம், உலகமய சூழலில் வாழ்வாதாரங்கள் பிடுங்கப்பட்டு, துரத்தியடிக்கப்படும் உழைப்பாளி மக்கள் பிற மாநிலங்களுக்குப் புலம்பெயர்ந்து,  ஓலைக்கொட்டைகளிலும்,  தகரக் கொட்டடிகளிலும் புழுங்கித் தவிக்கின்றனர். தமிழ் ஒப்பந்தக்காரர்களிடம் கொத்தடிமைகளாக அற்பக் கூலிக்கும், சில தமிழ்க் கிரிமினல்களின் கேட்பாரற்ற தாக்குதல், வழிப்பறிக்கும் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கும் பலியாகிறார்கள்.

தமிழகத்திலுள்ள சுயநிதிக் கல்லூரிகளில் சேர்ந்து சீரழிந்த பண்பாட்டிலும், கிரிமினல் குற்றங்களிலும் ஈடுபடும் வெளிமாநிலத்தவர் வேறொரு பிரிவினர். இவர்கள், தமது சொந்த மாநிலங்களில் குறுக்கு வழியில் செல்வத்தைக் குவிக்கும் குடும்பங்களின் செல்லப்பிள்ளைகள். இந்த வேறுபாட்டை  மூடிமறைக்கிறது, த.தே.பொ.க. தலைமை.

தமிழ்த் தேசத்தில் குடியேறும் வெளிமாநிலத்தவர்கள் எல்லாம் அடகுக்கடை, சினிமா முதலீட்டாளர்கள், தமிழர்கள் மீது ஆதிக்கமும் சுரண்டலும் செய்பவர்கள் மட்டுமல்ல,  கிரிமினல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் என்று பார்ப்பன  பாசிச ஜெயாவும் அதன் போலீசும் கூறுவதை வழிமொழிந்து மணியரசன் கும்பல் குற்றஞ் சுமத்துகிறது. அதனால் வெளிமாநிலத்தவர் அனைவரையும் வெளியேற்ற வேண்டும் என்று போராடவும் செய்கிறது.

வெளி தேசங்களில் குடியேறும் தமிழர்கள் எல்லாம்  உழைக்கும் மக்கள்;  குடியேறும் தமிழர்கள் அம்மாநிலங்களில் ஆதிக்கம் புரிபவர்களோ சுரண்டுபவர்களோ அல்ல என்று புளுகுகிறது, த.தே.பொ.க. தலைமை.

இதுவும் உண்மையல்ல. வெளிமாநிலங்களில் குடியேறும் தமிழர்களிலும் ஒருபிரிவினர் கந்துவட்டி  லேவாதேவியிலும், அம்பானி, டாடா, பிர்லாக்களின் கார்ப்பரேட் நிறுவனங்களில் அதிகார வர்க்க முதலாளிகளாகவும், (சசிகலா) நடராசன், தம்பிதுரை, தேவநாதன் போன்ற தமிழர்கள் உ.பி., பீகார், அரியானாவில் சுயநிதிக் கல்லூரிகள் வைத்துக் கொள்ளையடிக்கிறார்கள், குடிபெயரும் தமிழர்கள் மற்றும் புலம் பெயரும் ஈழத்தமிழர்களிலும் ஒரு சிலர் குற்றச் செயல்களில் பிடிபடுகின்றனர். அதற்காக எல்லாத் தமிழர்களையும் வெளியேற்ற வேண்டும் என்பது சரியாகுமா என்று மணியரசன் கும்பல்தான் கூறவேண்டும்.

பாசிசக் கழிசடை அரசியல் மணியரசன்களே! ஆசியாவிலேயே மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பையின் தாராவியில் வாழும் ஐந்து இலட்சம் உழைக்கும் தமிழ் மக்களைத் தாக்கும் சிவசேனா இனவெறியர்களுக்கும், உலகம் முழுவதும் புலம் பெயர்ந்து வாழும் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைத் தாக்கும் அந்தந்த நாட்டு நிறவெறி பாசிஸ்டுகளுக்கும் உங்களுக்கும் என்ன வேறுபாடு?

பின் குறிப்பு:  மணியரசன் வகையறாக்கள் எமக்கு எதிராகத் தமது அவதூறுகளைத் தொடர்வதற்கு வசதியாக ஒரு தகவல்:  எமது தோழமை அமைப்பான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி நூற்றுக் கணக்கில் ஒரிசா, ஜார்கண்ட், பீகார், சட்டிஸ்கர், வங்காள புலம்பெயர் தொழிலாளர்களை உறுப்பினர்களாக்கி வருகிறது!

______________________________________________________

புதிய ஜனநாயகம், ஏப்ரல் – 2012

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

தெற்கே வாருங்கள், இளைஞர்களே, ஆனால் இங்கே டிராகன்கள் காத்திருக்கிறது!

22

உழைப்புச் சுரண்டல் – இளைஞர்களை விழுங்கிவரும் தமிழகம் !!

 “தமிழ்நாட்டில் ஏறக்குறைய 10 லட்சம் புலம்பெயர்ந்த பிற மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.  இங்கேயுள்ள தொழிலாளர்கள் குறைந்த கூலி மற்றும் அபாயகரமான பணி சூழல்களுக்கு வர மறுப்பதால் இந்த நிலை.  ஆனால் அத்தகைய புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ‘வட இந்தியர்கள்’ மேலுள்ள தவறான எண்ணம் காரணமாக எளிதாக தாக்குதல்களுக்கு ஆளாகின்றனர்”

டந்த வார இறுதியி்ல், அலங்கோலமான தோற்றத்துடன், உடம்பில் சட்டையின்றி வந்த ஒரு மனிதன் ஏறக்குறைய சாவை சந்திக்கும் அளவிற்கு தாக்கப்பட்டார்.  காவல்துறையினரும், வேடிக்கை பார்த்த பொது மக்களும் அந்த மனிதன் நினைவை இழக்கும் வரை தாக்கப்பட்டதை வேடிக்கை பார்த்தனர்.  ஒரு சிலர் உற்சாகத்துடன் அந்த தாக்கும் கூட்டத்தை ஊக்குவித்தனர்.

இந்த நிகழ்வு நடப்பதற்கு 3 தினங்கள் முன்னதாக சமீபத்திய வங்கி கொள்ளையில் ஈடுபட்டதாக கூறி 5 நபர்கள் நடு இரவில் காவல்துறையினரால் (என்கவுன்டர்) கொல்லப்பட்டதை சென்னை நகரம் கண்டது.

இரண்டு நிகழ்வுகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஒரு விஷ‌யம் பொதுவானதாக இருப்பதை அறியலாம் – ‘வட இந்தியர்’ என்ற காரணம்.  அந்த தாக்குதலை கண்ணுற்ற சாட்சி ஒருவர் பத்திரிகையாளரிடம் விவரிக்கும் போது கூட்டம் ‘வடஇந்திய திருடனை’ தாக்கியது, கடுமையாக தாக்கி நினைவிழந்த நிலையில் மெயின் ரோட்டிற்கு அவன் இழுத்து வரப்பட்டான் என்றார். தோற்றத்தில் வட இந்தியர் போல் காணப்பட்டவர் இறுதியில் ஆந்திராவிலிருந்து இங்கு பிழைக்க வந்த வெங்கட்ராவ் என தெரிய வந்தது.  எனவே யார் இந்த வட இந்தியர்கள், அவர்கள் இங்கே என்ன செய்கிறார்கள்.

தெற்கே வாருங்கள், இளைஞர்களே, ஆனால் இங்கே டிராகன்கள் காத்திருக்கிறது!
கட்டிடத் தொழிலில் வட இந்திய இளைஞர்கள். தமிழகத்தில்ம 10 லட்சம் வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள் - படம் thehindu.com

வடஇந்தியர்

சென்னை உயர்நீதிமன்றம் முன்பாக ஆறு வழக்கறிஞர்கள் மற்றும் சமீபத்தில் என்கவுன்டர் நடந்த வேளச்சேரி பகுதி குடியிருப்போர் ஆகியோர் இணைந்து இரண்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.  இந்த வட இந்தியர்கள் வட மாநிலங்களிலிருந்து கூலிக்கு வேலை தேடி வந்த தொழிலாளர்கள்.  நிதானமாக இங்கு பழகி காலூன்றிய பிறகு பல குற்றங்களை புரிய துவங்கினர்.  பெரும் பாலானவை மிகக் கொடூரமான மற்றும் கடுமையான குற்றங்கள், இவ்வாறாக அவர்களைப் பற்றி விவரிக்கிறது மேற்சொன்ன மனுக்கள்.  மேலும் அதில் விவரிக்கையில் வடஇந்தியர்களால் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது என்றும் சொல்லப்பட்டுள்ளது.  சில குழுக்களான வட இந்தியர்கள் கட்டுப்பாட்டை மீறி செயல்படுவதால் தமிழக மக்களின் அமைதி பாதிக்கப்பட்டுள்ளது.  இத்தகைய மனுக்கள் காவல்துறை மேற்கொண்ட மனித உரிமை மீறல் கொலைகள்தான் நடந்துமுடிந்த என்கவுன்டர் என தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநலன் சார்ந்த மனுக்களை எதிர்த்து சொல்வதற்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  தீய நோக்கம் மற்றும் தவறான எண்ணத்துடன் மேற்படி மனுக்களில் சொல்லப் பட்டவை யாவும் உண்மையல்ல.  அவர்கள் ‘தொழிலாளர்கள்’.  ஆனால் அந்த உண்மை இதோடு நிற்கிறது.

தமிழ்நாட்டில் சென்னை, அதன் சுற்றுப்புறங்கள், கோவை, திருச்சி, மதுரை, ஓசூர், திருப்பூர், கன்னியாகுமரி, மற்றும் திருநெல்வேலி நகரங்களை மையங்களாக வைத்து ஏறக்குறைய 10 லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பணி புரிவதாக கணக்கிடப்பட்டிருக்கிறது.

அசாம், பீகார், ஒரிசா, மேற்கு வங்கம், உத்திரப்பிரதேசம் இன்னும் போபால் போன்ற பகுதிகளிலிருந்து பிழைப்பு தேடி வரும் இத்தகைய தொழிலாளர்கள் தனியார் மற்றும் அரசு சார்ந்த கட்டிட கட்டுமான பணிகள், சிறிய சிறிய பொறியியல் நிறுவனங்களின் பிரிவுகள், ஸ்டீல் ரோலிங் மில், லேத், பனியன் நிறுவனங்கள், ஆகியவற்றில் தொழிலாளர்களாக, சாலையோர உணவகங்கள், இன்னும் நகரின் ஆடம்பர உணவகங்கள் போன்றவற்றில் உணவு தயாரிப்பு, காவலர் பணி இன்னும் பண்ணை வீடுகள் போன்றவற்றில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நாட்களில் ஒரு சேரியையோ அல்லது மீனவ குப்பத்தை கடந்தோ நடந்து செல்லும்போது பெரும்பாலும் இனிமையான குரலில் போஜ்புரி, இந்தி, பங்ளா அல்லது ஒரிய மொழியில் பேச்சுக்கள் அல்லது பாட்டுக்களை கேட்கலாம்.

வட இந்திய “திருடர்கள்” என மோசமாக வருணிக்கப்பட்டவர்களில் யார் திருடர்கள், அவர்கள் திருட்டு எவ்வாறு நடைபெறுகிறது என்பதை அறிய முற்பட்டேன் நான்.  எனவே அப்போதுதான் பணி முடித்து திரும்பியிருந்த பீகார் இளைஞர்கள் சிலரை சந்தித்தேன்.  அவர்கள் நான்கைந்து பேர்களாக பழைய மகாபலிபுரம் சாலை அருகேயுள்ள சேரி ஒன்றில் சிறிய அறையில் வசிக்கின்றனர்.  120 சதுரஅடி அளவிலான அறை, இளம் பச்சை வண்ண சுவர், சுவரில் அடிக்கப்பட்ட ஆணிகளில் சில சட்டைகள், பேண்ட்கள், ஒரு கண்ணாடி, ஒரு பிளாஸ்டிக் சீப்பு, சிறிய பெட்டிகள், பைகள், ஒரு மண்ணெண்ணை அடுப்பு, சில சமையல் பானைகள், சட்டிகள், தட்டுகள், டம்ளர், இரண்டு வாளிகள், தரை விரிப்புகள், சில கைபேசிகள்.  கழிவரை இல்லை, பொது திறந்த வெளி குளிப்பிடம். அடுத்த வீட்டில் குடியிருக்கும் தொழிற்சாலை தொழிலாளி ஒருவருடன் ஒப்பிடும் போது வேறு எந்த குறிப்பிடத்தக்கவையோ, அல்லது இயல்பிலிருந்து மாறுபட்டோ எதுவுமில்லை.  இருவரும் புலம் பெயர்ந்தவர்கள்.  ஒரு வீட்டிலுள்ளவர் பிற மாநிலத்தவர், மற்றொரு வீடு பிற மாவட்டத்தை சேர்ந்தவர். முக்கியமான வேறுபாடு என்பது அவர்கள் பேசும் மொழி.  அடுத்த வீட்டுக்காரர் பேசுவது தமிழ், இந்த இளைஞர்கள் பேசுவது போஜ்புரி.  அடுத்த வீட்டுக்காரருக்கு குடும்பம் உள்ளது.  இந்த இளைஞர்கள் தங்கள் குடும்பங்களை சொந்த மாநிலத்தில் விட்டு விட்டு வந்துள்ளனர்.

பின்னர் சொல்லப்பட்டவர்கள் சந்திக்கும் மற்றொரு குறிப்பிடத்தக்க வித்தியாசம், அவர்கள் அதிகம் தாக்குதலுக்கு உள்ளாகிற அளவிலான மாநிலம் விட்டு மாநிலம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், ஒப்புக்கொள்ளவைக்கும் பணி நிபந்தனைகள் ஆகியவை ஆகும்.  பெரும்பாலான இத்தகைய புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பல்வேறு ஒப்பந்த காரர்கள், சார்நிலை ஒப்பந்தகாரர்களின் கீழ் அணிதிரட்டப்பட்டு பணி வழங்கப்படுகின்றனர்.

முன்னிராஜ் என்ற தலித் ஒப்பந்தகாரர் ஏறக்குறைய 650 பீகார் தொழிலாளர்களை தன்னிடத்தில் வைத்துக் கொண்டு ஓசூரை சுற்றியுள்ள  சிறிய முதலீட்டு பொறியியல் நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு பணிக்கு அனுப்பப்படுகின்றனர்.  எந்த இடமாக இருந்தாலும் இத்தகைய தொழிலாளர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ 3500 முதல் 4000 வரை கூலி கொடுக்கப்படுகிறது,  அவர்கள் அதில் 10 சதவீதத்தை மேற்படி ஒப்பந்த காரருக்கு கொடுக்க வேண்டும்.  அந்த வகையில் ஒப்பந்தகாரருக்கு கிடைப்பது மாதம் உத்தேசமாக ரூ 2 லட்சத்திற்கு மேல்.  இது போல் ஏறக்குறைய 30000 தொழிலாளர்கள் பீகார், மேற்கு வங்கம், ஒரிசா, நேப்பால் பகுதியிலிருந்து வந்து இந்த பகுதிகளில் பணிபுரிகின்றனர்.

நம் பகுதி தொழிலாளர்கள் பெரும்பாலும் உடலுழைப்பு குறைந்த பணிகளை விரும்புவதுடன், இத்தகைய தொழிற்சாலைகளில் பணிபுரிய மறுக்கின்றனர். ஓசூர் சிறு தொழில் சங்கத்தை சேர்ந்த சம்பத் கூறுகையில் இந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நமது கலாச்சாரத்திற்குள் படையெடுப்பு போல் நுழைந்தவர்கள், இந்தி பேசுகின்றனர், துர்கா பூஜை வழிபடுகின்றனர் என்றார்.  முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் ‘விரல்கள்’ என்ற தலைப்பில் உருவாக்கியுள்ள ஆவணப்படத்தில் எவ்வாறு நமது தொழிலாளர்கள் நாசூக்காக இத்தகைய தொழிற்சாலையில் பணிபுரிவதை தவிர்க்கின்றனர் என்பதை படம் பிடித்துள்ளனர்.  அந்த படத்தில் இந்த தொழிற்சாலைகளில் உள்ள ஆபத்தான பணி  சூழல்கள், நிபந்தனைகள் மற்றும் அடிக்கடி அவர்களின் விரல்கள் நசுங்கி இழக்கப்படுவதை விவரிக்கிறது.  இரும்பு தகடுகளை வடிவமைக்கும் பொறிகளில் இது அடிக்கடி நடைபெறுவது வாடிக்கையாகிவிட்டது.  சில மருத்துவ உதவிகள் தவிர இழப்பீடு என்ற வகையில் இவர்களுக்கு எந்த உதவியும் தரப்படுவதில்லை.

துயரம் நிறைந்த கதைகள்

“எங்கள் காயங்களுக்கு எந்த பண உதவியும் தரப்படுவதில்லை. நாங்கள் தான் அவற்றிற்கு செலவழிக்கவேண்டியுள்ளது.  ஏறக்குறைய தினசரி நான் என் கைகளில் அடிபட்டுக் கொள்கிறேன், என்னைப் போன்று பல தொழிலாளர்கள் காயமுறுகின்றனர்” என்று கூறுகிறார் 21 வயதான மனாஸ்.  இவர் கயா மாவட்டத்திலிருந்து இங்கு வந்து கடந்த 6 மாதங்களாக பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள பெருங்குடியில் தண்ணீர் அடிபம்பிற்கான வடிவங்கள் தயாரிப்பு தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.

மனாஸ் தெரிவிக்கையில் என்னுடன் நான் பணிபுரியும் தொழிற்சாலையில் பணிபுரியும் அனைவரும் அசாம் மற்றும் பீகாரிலிருந்து வந்தவர்கள் என்றும், வாரத்தில் 6 நாட்கள் தினமும் 12 மணி நேரம் பணிபுரிகிறோம், எங்களுக்கு மாதச் சம்பளம் 6000 என்கிறார்.  அவருடன் உடன் வசிக்கும் 19 வயது தொழிலாளி கூறுகையில் நான் கடந்த வருடம் வேறு ஒரு தொழிற்சாலைக்கு பணிக்கு வந்தேன்.  அங்கு தினமும் 12 மணிநேரம் அதிகமான பளுவை தூக்கும் பணி என்பதால் நோய் வாய்ப்பட்டு அதை விட்டுவிட்டேன் என்றார்.

“நான் டெல்லியில் ஒரு உணவு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தேன்.  3 மாதங்களுக்கு முன்னர் இங்கு வந்தேன்.  அங்கு தினமும் 16 மணி நேரப்பணிக்கு மாதம் ரூ 5000 கொடுத்தார்கள்.  இங்கு அதைக்காட்டிலும் குறைவான நேர பணிக்கு கூடுதல் சம்பளம் கிடைக்கிறது, இருப்பினும் நான் இங்கு தொடர விரும்பவில்லை, நான் பாதுகாப்பற்றவனாக உணர்கிறேன்.  இங்குள்ள காவல் துறையினர் எங்கள் வாழ்க்கையை துன்பத்திற்குரியதாக ஆக்குகின்றனர்” என்கிறார் நந்த்லால் என்ற கயா மாவட்ட தொழிலாளி.  இவர் 6 பேர் கொண்ட தனது குடும்பத்திற்கு மாதம் ரூ 4000 அனுப்பிவருவதாக கூறுகிறார்.  இதுவரை காவல்துறை துன்புறுத்தலைப் பற்றி எதுவும் கூறாத மனாஸ், வரிசையில் காத்திருந்தது போல், எனக்கும் இரவு 7 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே செல்ல பயமாக இருக்கிறது.  வெளியே சென்றால் நகர்வலம் வரும் காவலர் தடுத்து நிறுத்தி புகைப்பட அடையாள சான்று கோருகிறார்.  இல்லையென்று சொன்னால் காவல் நிலையத்திற்கு விசாரிக்க அழைத்துச் சென்றுவிடுவார்கள் என்றார்.  கடந்த மாத வங்கி கொள்ளை நிகழ்விற்கு பிறகு காவல்துறையினர் அதிகமான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வசிக்கும் சேரிகளில் புகுந்து அவர்கள் அடையாள சான்று, பணிபுரிவதற்கான அத்தாட்சி போன்றவற்றை வினவியுள்ளனர்.

முறைசாரா  தொழிலாளர்கள் சங்கத்தை சேர்ந்த கீதா ராமகிருஷ்ணன் என்பவர் எங்கே, யார் இந்த பிற மாநில தொழிலாளர்களுக்கு அடையாள அட்டையும், பணிச்சான்றும் வழங்குவார்கள் என கேள்வி எழுப்புகிறார்.  பிற மாநிலங்களுக்கிடையேயான புலம் பெயர் தொழிலாளர்கள் சட்டத்தில் மாநிலங்களுக்கிடையே புலம் பெயரும் தொழிலாளி என்பதற்கான விளக்கமே பிரச்சனைக்குரியதாக உள்ளது.  அந்த சட்டம் ஒரு மாநில ஒப்பந்தகாரரால் பிற மாநில நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படும் தொழிலாளர்களை மட்டுமே அங்கீகரிக்கிறது.

பாதுகாப்பில்லை

இதை மொழிபெயர்த்து பார்த்தால் பெரும்பாலான இத்தகைய தொழிலாளர்கள் இந்தசட்ட வரம்பிற்குள் வரமாட்டார்கள்.  எனவே சம்பளம், மாற்றுப் பணிக்கான படிகள், பணி நிபந்தனை, நியமன நிபந்தனை போன்ற அந்த சட்டத்தில் குறிப்பிட்டுள்ள உரிமைகள் தொடர்பாக கேள்விகள் இவர்களுக்கு எழாது. சொல்லப் போனால் 2010-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் அனைத்து கட்டுமான பணி தொழிலாளர்களின் விபரங்கள் பதிவு செய்யப்பட வேண்டுமென்று உத்திரவிட்டது.  இரண்டு அரசாணைகள் காரணமாக இந்த தீர்ப்பு நிறைவேற்ற இயலாத சிரமத்தில் உள்ளது.

அந்த ஆணைகளில் பதிவிற்கு முன்பாக ஒவ்வொரு தொழிலாளியையும் கிராம நிர்வாக அதிகாரியால் சரிபார்க்கப்பட்டு சான்றளிக்கப் பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது.  எந்த ஒரு கிராம நிர்வாக அலுவலரும் இத்தகைய மாநிலம் விட்டு மாநிலம் புலம் பெயர்ந்துள்ள தொழிலாளர்களை சரி பார்த்து சான்று செய்ய தயாரில்லை என்கிறார் கீதா ராமகிருஷ்ணன்.  2009ல் இரண்டு பிற மாநில புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் மானபங்கப் படுத்தப்பட்ட நிகழ்விற்கு பிறகு இத்தகைய தொழிலாளர்களை பாதுகாப்பதற்கு மாநில அளவிலான கொள்கை வரைவு செய்யப்பட்டது.  ஆனால் அது இன்னும் செயல்முறைக்கு வராமல் தூசியடைந்து உள்ளது.

மாநிலம் விட்டு மாநிலம் புலம் பெயர்ந்தவர்கள் நியாயமற்ற முறையில் அடிக்கடி தாக்குதல்களுக்கு ஆளாகும் நபர்களாகிவிட்டனர்.  பாதிக்கப்பட்ட குழுக்களான அவர்கள் பாதுகாப்பின்றி, எவ்வித சட்ட, சமூக காப்புமின்றி உள்ளனர்.  இத்தகைய தொழிலாளர்கள் மாநிலத்தவர்களால், அரசாங்கத்தால், அதிகமான பொறாமையுள்ள தேசியவாத அமைப்புகளால் இன்னும் வேதனையோடு சொல்லப்போனால் உள்ளூர் தொழிலாளர்களால் தாக்குதலுக்கு எளிதாக இலக்காக்கப்படுகின்றனர்.

____________________________________________________________________

நன்றி – மதுமிதா தத்தா (சென்னையில் வசித்துவரும் ஆர்வலர் மற்றும் ஆராய்ச்சியாளர்) – தி இந்து நாளிதழ்

Come south, young man, but here be dragons

தமிழில் – சித்திரகுப்தன்

_____________________________________________________________________

மொழி பெயர்ப்பாளர் குறிப்பு-

  உலகமயமாக்கல் சூழலில் திட்டமிட்டு விவசாயங்கள் அழிக்கப்படுவதால், இத்தகைய புலம் பெயர்தல் என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகிவிட்டது.  குறிப்பாக தமிழக தொழிலாளர் இளைஞர்கள் இதை அடுத்த மாநிலத்தவன்தானே அடிவாங்குகிறான், அல்லது சுரண்டப்படுகிறான் என வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால், நமது உழைப்பின் ஊதியம் என்பதும் படிப்படியாக குறையத் துவங்கும்.  கார்ப்பரேட்களின் இத்தகைய உழைப்பு சுரண்டல்களுக்கெதிராக அணிதிரள வேண்டும்.  அத்தகைய வட மாநில இளைஞர்களையும் அணிதிரட்டி நியாயத்தை பெற போராட சொல்லிக் கொடுக்க வேண்டும்.

­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­_________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்