Monday, June 9, 2025
முகப்பு பதிவு பக்கம் 756

சௌதி ஓஜர்: தொழிலாளர்களை கொடுமைப்படுத்தும் அல்லாவின் தேசம்!

75

மன்னர் காலித் சர்வதேச விமான நிலையம் (கேகேஐஏ-KKIA)” சௌதி அரேபியாவின் தலைநகர் ரியாத்திற்கு வெளியே 40 கிமீ தூரத்தில் அமைந்திருக்கும் இந்த விமான நிலையம் தான் பரப்பளவில் உலகின் மிகப் பெரிய விமான நிலையம். இங்கு வெகுசில நிர்வாக வேலைகளைத் தவிர ஏனைய அனைத்தும் ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனங்களின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் துப்புறவு, பாதுகாப்பு, பராமரிப்பு உள்ளிட்ட விமான நிலையத்தின் பெரும்பாலான பணிகளை ‘சௌதி ஓஜர்’ எனும் தனியார் நிறுவனம் செய்து வருகிறது. இது தவிர அஃப்ராஸ், பின்லாதின், சௌதி கேட்டரிங் போன்ற நிறுவனங்களும் சிற்சில பணிகளை ஒப்பந்த அடிப்படையில் செய்து வருகின்றன.

சௌதி ஓஜர் நிறுவனம் சௌதி, லெபனான் நாடுகளை ஆளும் கும்பலின் கூட்டு நிறுவனமாகும். அதாவது லெபனானின் முன்னாள் பிரதமர் ரஃபிக் பஹா எல்தின் ஹரிரி உருவாக்கிய இந்நிறுவனத்தில்சௌதியின் முன்னாள் மன்னர் அப்துல் அஜீஸின் குடும்பமும் முக்கியமான பங்குதாரராக கருதப்படுகிறது. இது சௌதியின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்று. கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சௌதி ஓஜர் நிறுவனமே கேகேஐஏ வில் பெரிய ஒப்பந்ததாரராக நீடித்து வருகிறது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்துவரும் கேகேஐஏ சௌதி ஓஜரில் பெரும்பாலானோர் வங்கதேசத்தினர் (பங்களா தேஷ்). இந்தியா, இலங்கை, பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்களும் குறைந்த அளவில் வேலை செய்து வருகிறார்கள். விமானநிலையம், ஊழியர்களுக்கான விடுதி என இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கும் இதில் விமான நிலைய பராமரிப்பு பணிகளை ஓராளவு செய்து வந்தாலும், விடுதியின் பராமரிப்பு பணிகளை தொடர்ந்து புறக்கணித்து வந்திருக்கும் போதிலும் சௌதி ஓஜர் விமான நிலையத்தின் மீப்பெரும் ஒப்பந்த நிறுவனமாக தொடர்ந்து நீடித்து இருப்பதற்கு அது ஆளும் கும்பலைச் சார்ந்த நிறுவனம் என்பதைத் தவிர வேறொன்றும் காரணமில்லை.

இந்தியாவிலோ அல்லது உலகின் வேறு நாடுகளிலோ இரண்டு வகை தொழிலாளர்கள் இருப்பார்கள், நிரந்தர தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள். ஆனால் சௌதியைப் பொருத்தவரை அனைவருமே ஒப்பந்தத் தொழிலளர்கள் தாம். நிரந்தரத் தொழிலாளர்கள் என்று யாரும் கிடையாது. சங்கமாக கூடும் உரிமையையோ, தங்களுடைய பிரச்சனைகளுக்கு ஒன்றிணைந்து குரல் கொடுக்கும் நடைமுறையையோ சௌதியில் நினைத்துக் கூட பார்க்க முடியாது. ஊதிய உயர்வோ, பதவி உயர்வோ, வேறு சலுகைகளோ நிறுவனத்தின், உயரதிகாரிகளின் விருப்பத்தைப் பொருத்தது. உரிமையாக யாரும் கோர முடியாது. இதனால் கேள்வி முறையின்றி நிர்வாகத்திற்கு அடிபணிபவர்களும், கருங்காலிகளுமே இதுபோன்ற சலுகைகளையும் பதவி உயர்வையும் பெறுவது சௌதியில் சாதாரணம்.

இந்த அடிப்படையில் கடைநிலை ஊழியர்களிலிருந்தே கருங்காலிகளைத் தேர்ந்தெடுத்து ஃபோர்மேன்களாகவும், சூபர்வைசர்களாகவும் இன்னும் சில கங்காணி பதவிகளில் அமரவைத்து (சில ஆண்டுகளுக்கு முன் கடைநிலை ஊழியராக வந்த ஒருவர்தான் இன்று மருத்துவ அதிகாரி. ஊழியர்களை பரிசோதித்து இவர் அங்கீகரித்தால் மட்டுமே உடல்நலக் குறைவுக்கு மருத்துவமனைக்கு செல்ல முடியும்) உபரிநேர வேலைச் சுரண்டல், விடுதிகளில் அடிப்படை உரிமைகளைக் கூட செய்து தராமல் தொழிலாளர்களை ஏய்த்து வருகிறார்கள். இன்று சௌதி ஓஜர் நிறுவனம் இந்த கங்காணிகளுக்கும் சேர்த்தே ஆப்பு வைத்திருக்கிறது.

தற்போது இந்நிறுவனம் முனைய(டெர்மினல்) துப்புறவு பணியாளர்களை மட்டும் லிபனெட் எனும் நிறுவனத்திற்கு உள் ஒப்பந்தம் மூலம் மாற்றியிருக்கிறது. தொழிலாளர்களிடம் முறைப்படி அறிவிக்கவோ, தொழிலாளர்களுக்கான புதிய ஒப்பந்தங்களோ எதுவுமின்றி, சௌதி ஓஜரில் பணிபுரிந்தவர்கள் அப்படியே புதிய நிறுவனத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள். தினசரி வேலை செய்யும் ஊழியர்கள் நேற்று சௌதி ஓஜர் நிறுவனத்திற்காக செய்தவர்கள் இன்று புதிய நிறுவனத்திற்காக செய்கிறார்கள். ஐநூறு ரியால் அடிப்படை சம்பளத்தில் வேலை செய்தவர்கள் புதிய நிறுவனத்தில் நூறு ரியால் மட்டும் அதிகம் தருவதாக வாய் மொழியாக கூறியிருக்கிறார்கள்.

பகரமாக எட்டுமணி நேரத்திற்கு பதிலாக 12 மணிநேரம் கட்டாயமாக வேலை செய்ய வேண்டும். அது உபரி நேர வேலையாகவும் கணக்கிடப்படாது. அதாவது நான்கு மணி நேரம் அதிகமாக வேலை வாங்கிவிட்டு 100 ரியால் மட்டும் அதிகமாக கொடுக்கப் போகிறார்கள். இந்த 12 மணி நேரத்தில் தேனீர் குடிப்பதற்குக் கூட இடைவெளி எடுக்கக் கூடாது, உணவு இடைவேளை (வேலை நேரமாக கணக்கிடப்படுவதில்லை என்ற போதிலும்) ஒரு மணிநேரத்திலிருந்து அரை மணியாக குறைப்பு, அதுவும் அறைக்குச் சென்று சாப்பிடாமல் வேலை செய்யும் இடத்திற்கே கொண்டு வந்து சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். ஒதுக்கப்பட்ட இடத்தில் அசுத்தம் ஏதும் கண்டுபிடிக்கப் பட்டால் தொடர்புடைய பணியாளரிடம் எந்த விசாரணையும் செய்யாமல் அறைக்கு அனுப்பிவிட்டு அன்றைய தினத்தை பணிக்கு வராத நாளாக கணக்கிடுவது உள்ளிட்ட பல அடக்குமுறை விதிகளை ஏற்படுத்தி தொழிலாளர்களை வதைக்கிறது.

மட்டுமல்லாது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை விடுப்பில் ஊர் சென்று வரலாம் என்பதை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை என்று மாற்றியிருக்கிறது. அதுவும் ஒருவழி விமான பயணச்சீட்டு மட்டுமே லிபனெட் கொடுக்கும் இன்னொரு வழி பயணச்சீட்டை ஊழியர் தன்னுடைய சொந்த செலவிலேயே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அக்கிரமாக அறிவித்து வருகிறது. இவைகளை எதிர்த்து முணுமுணுத்த ஒரு தொழிலாளியை தனியறைக்கு இழுத்துச் சென்று அடித்து உதைத்து அனுப்பியிருக்கிறார்கள்.

மறுபுறம் சௌதி ஓஜர் நிறுவனமோ புதிய நிறுவனத்தின் அடக்குமுறை பிடிக்காமல் ”நாங்கள் சௌதி ஓஜரிலேயே இருக்கிறோம் வேறு பகுதிகளில் வேலை கொடுங்கள்” என்று வருபவர்களை எந்த வாய்ப்புக்கும் இடமில்லாமல் சொந்த நாட்டுக்கு திரும்ப அனுப்பி வைக்கிறது. மட்டுமல்லாமல் படிப்படியாக எல்லா பகுதிகளையும் புதிய நிறுவனத்திற்கு மாற்றப் போவதாகவும் அறிவித்திருக்கிறது. புதிய நிறுவனத்தின் அடக்குமுறை தாங்காமல் திரும்பி வருபவர்களுக்கு சாப்பாட்டு டோக்கன்களை கூட கொடுக்காமல் பட்டினி போடுகிறது. சௌதி ஓஜரிலேயே வேலை தாருங்கள் என்று திரும்பி வந்தவர்களை இருபது நாட்களுக்கும் மேலாக வேலை கொடுக்காமல் வைத்திருந்து கடந்த வாரத்தில் நூற்றுக்கும் அதிகமானோரை வங்கதேசத்திற்கு திருப்பி அனுப்பிவிட்டது. அதிகாரிகளுக்கு வேண்டிய சிலரை மட்டும் தண்டனை மாறுதலாக ஜித்தாவுக்கு அனுப்பிவைத்திருக்கிறது.

இந்த அநீதிகளுக்கு எதிராக ஆங்காங்கே கிளம்பிய முணுமுணுப்புகள் திரளத் தொடங்கிய வேளையில், நாட்டுக்கு திருப்பி அனுப்பிய நிகழ்வு தொழிலாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி விட்டது. மிகுந்த சிரமங்களுக்கு இடையே தொழிலாளர்களிடையே ஏற்படுத்தப்பட்ட போராட்ட உணர்வு சிதறடிக்கப் பட்டிருக்கிறது, மட்டுமல்லாது போராட்ட முயற்சிகளும் பின்னடைவை சந்தித்திருக்கிறது. கொஞ்சம் வைராக்கியம் காட்டிய தொழிலாளர்களும் நாட்டிற்கு திருப்பி அனுப்பிய நிகழ்வின் பிறகு தங்கள் விதியை நொந்தபடி வேலைக்கு திரும்பி விட்டார்கள்.

உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்கள் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைத் தானே மேற்கொள்கின்றன, இதில் சௌதி மட்டும் விதிவிலக்காகிவிட முடியுமா? என்று பொதுமைப்படுத்த முடியாதபடி இதில் இன்னொரு செய்தியும் இருக்கிறது. சௌதி ஓஜரின் உரிமையாளர்களான ஹரிரி குடும்பத்தினரின் பினாமி நிறுவனம் தான் லிபனெட். ஒரு நாட்டின் ஆளும் வர்க்கமாக இருந்து நாட்டை சூறையாடுவதோடு அவர்கள் திருப்தியடையவில்லை. விதியோ, கடவுள் நம்பிக்கையோ அவர்கள் செயலில் குறுக்கிடவில்லை. ஏழை தொழிலாளியின் வயிற்றிலடிப்பதற்கும் வெறித்தனமாய் திட்டமிடுகிறார்கள். ஆனால், மறுபக்கம் கால் நூற்றாண்டுக்கும் மேலாக சௌதி ஓஜர் நிறுவனத்திற்காக வேலை செய்துவரும் வயதான ஒரு தொழிலாளி நரைத்துப் போன தன் தாடியை தடவிக் கொண்டே கூறுகிறார், “நாங்கள் தொழுது பிரார்த்திக்கிறோம், எங்களுக்கான பதிலை கடவுள் அவர்களிடம் வாங்கியே தீருவார்”

இது நம்பிக்கையா? இயலாமையா? இன்னும் எத்தனை ஆண்டுகள் குடும்பத்தைக் காணாது கடல் கடந்து வேலை செய்தாலும் வளமையை பெறமுடியாமல் தடுப்பது, வர்க்க உணர்வு கொள்ளாமல் இருப்பதும், துன்பங்களின் கண்ணீரை கடவுளின் மாயக்கையை எடுத்து துடைத்துக் கொள்ள நினைப்பதும் தான் என்பது அவருக்கு தெரியவில்லை. மத வேறுபாடுகளோ, நாட்டின் எல்லைக் கோடுகளோ சுரண்டுபவர்களிடம் எந்த பேதத்தையும் ஏற்படுத்துவதில்லை. அவர்கள் சுரண்டும் வர்க்கமாய் ஒன்றிணைந்து நிற்கிறார்கள். ஆனால் ஒன்றிணைய வேண்டிய வர்க்கம் முதுகில் உரைத்த பின்பும் பிரார்த்தனையோடு முடித்துக் கொள்வதா? முயற்சிகள் தொடர்கின்றன. பலனளிக்குமா? காத்திருப்போம்.

–    வினவு செய்தியாளர், சவுதியிலிருந்து….

புதுவை HUL நிர்வாகத்திற்கெதிரான புஜதொமு பொதுக்கூட்டம்!

புதுவை HUL நிர்வாகத்திற்கெதிரான புஜதொமு பொதுக்கூட்டம்!

12-1-2012 வியாழன் மாலை 5.30 மணிக்கு புதுவை சிங்காரவேலர் சிலை அருகில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் (புஜதொமு) இணைந்துள்ள இந்துஸ்தான் யுனிலீவர் ஒர்க்கர்ஸ் யூனியனும் இந்துஸ்தான் லீவர் வெல்ஸ் யூனியனும் இணைந்து HUL நிர்வாகத்தைக் கண்டித்து பொதுக்கூட்டம் நடத்தியது.

கூட்ட நாளன்று பாண்டிச்சேரியின் இன்றைய முதல்வரான என்.ரெங்கசாமியின் அடியாள் படை தொண்டரடிப்பொடி ஒருவன், எங்கள் முதல்வரை திட்டிப் பேசிய நீங்கள் எப்படி பொதுக்கூட்டம் நடத்திவிடுவீர்கள் என பார்த்துவிடுகிறேன், என தொலைபேசியில் மிரட்டியுள்ளான். ஏற்கனவே எல்லா தொழிற்பேட்டை பகுதிகளிலும் விரிவாக தெருமுனைக் கூட்டங்கள் நடத்தி, அணிதிரட்டிய போது தானே புயலின் கோர பாதிப்பு, அரசின் பாராமுகம் மற்றும் மெத்தனப் போக்கைக் கண்டித்ததோடு சட்டப்படி தொழிலாளர் உரிமைக்கு உதவ வேண்டிய அரசு முதலாளிகளின் எடுபிடிகளாக தொழிலாளர் விரோதப் போக்கிலிருப்பதையும் அம்பலப்படுத்தி தோழர்கள் பேசியிருந்தனர். இதனடிப்படையில் தொழிலாளர்கள் தங்களது வர்க்க ஒர்றுமையை நிரூபிக்கும் விதமாக பெருந்திரளாக பங்கேற்றனர். சுமார் ஆயிரம் பேர் வரை திரண்டிருந்த இப்பொதுக்கூட்டத்தில் யூனிலீவர் ஆலைத் தொழிலாளர்கள் தங்களது குடும்பங்களுடன் கலந்து கொண்டனர். இதுதவிர பல்வேறு ஆலையிலிருந்தும் கணிசமான தொழிலாளர்கள் பங்கேற்றனர்

5.30 மணிக்கு இந்துஸ்தான் ஒர்க்கர்ஸ் யூனியன் தலைவர் தோழர். அய்யனார் தலைமையில் கூட்டம் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி தொடங்கப்பட்டது. வெல்ஸ் யூனியன் பொருளாளர் தோழர் விநாயகம், ஒர்க்கர்ஸ் யூனியன் தோழர் லோகநாதன், எல்&டி பட்டாளித் தொழிற்சங்கத் தலைவர் சிவக்குமர், புதுவை புஜதொமு பொதுசெயலாளர் தோழர் கலை ஆகியோர் HUL நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்தும், நிர்வாகம் சட்டத்தை மதிக்காமல் சட்டவிரோதமாகத் தொழிலாளர்களைப் பழிவாங்குவதைக் கண்டித்தும் பேசினர். தொழிலாளர்கள் ஒரே வர்க்கமாகத் திரண்டு பாண்டிச்சேரி முதலாளிகளின் தொழிலாளர் விரோதப் போக்குகளுக்கு சவக்குழி தோண்ட அறைகூவினர். தொழிலாளர்களுக்கே உரிய போர்க்குணத்துடன் நேர்படப் பேசினர்.

கண்டன உரை முடிந்ததும் சென்னை புமாஇமுவின் எழுச்சிமிகு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர், சிறப்புரையாற்றிய உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தோழர் பார்த்தசாரதி, தொழிலாளர்கள் தங்களது உரிமைப் பிரச்சினைகளுக்கு சட்டத்தையும் நீதிமன்றத்தையும் நம்புவது வீணான வேலை என்பதை தனது அனுபவத்தின் மூலமாக நிரூபித்தார். மாறாக தொழிலாளர்கள் தங்களது உரிமைக்கு வர்க்க ஒற்றுமையுடன் போராடுவதே தீர்வு என்பதனை மாருதி தொழிலாளர்களின் போராட்டத்தை உதாரணமாக எடுத்துக் கூறி விளக்கிப் பேசினார்.

அதன்பின் சிறப்புரையாற்றிய தமிழ் மாநில பொதுச் செயலாளர் தோழர் சுப.தங்கராசு, வருங்கால தொழிலாள வர்க்கத் தலைவர்களை முதலாளிகள்தான் உருவாக்குகிறார்கள் என HUL நிர்வாகத்தால் பழிவாங்கப்பட்ட தொழிலாளர்களை மேடையில் அறிமுகப்படுத்தி எழுச்சிமிகு உரையாற்றினார். தொழிலாளர்கள் தங்களது பொருளாதாரக் கோரிக்கைக்காக மட்டும் போராடுவதென்பது தொழிலாளர்களின் உரிமையை வென்றெடுக்குவதற்கு முழுமையான தீர்வாகாது. தொழிலாளர் வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் போதுதான், முதலாளித்துவ அடக்குமுறையிலிருந்து தங்களை முழுமையாக விடுவித்துக்கொள்ள முடியும். எனவே தொழிலாளர்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கத்துடன் தங்களது போராட்டங்களை அமைத்துக்கொள்ளவேண்டும் என அரசியல் போராட்டங்களுக்கு அணிதிரள அறைகூவினார். தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகள் பங்கெடுத்து வரும் முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்புப் போராட்டம், கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டங்கள் பற்றிக் குறிப்பிட்டு, அப்படிப்பட்ட அரசிய போராட்டங்களில் திரளாகப் பங்கேற்க வேண்டியதன் அவசியத்தையும் குறிப்பிட்டு பேசினார்.

இறுதியில் சர்வதேசிய கீதத்துடன் கூட்டம் முடிவடைந்தது.

-புஜதொமு செய்தியாளர், புதுவை

கொலைகார பால்தாக்கரே மீதான கிரிமினல் வழக்குகள் பட்டியல்!

காங்கிரஸ் மறந்துவிட்ட வெறுக்கத்தக்க பேச்சு

கூகுள் இணையதளம், பேஸ்புக் ஆகியவைகூட குற்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருக்கையில், சிவசேனா தலைவர் பால் தாக்கரேயின் வெறியூட்டும் பேச்சுக்கள் தொடர்பாக எத்தனை பழைய வழக்குகள் நடவடிக்கையின்றி விடப்பட்டுள்ளது என்பதை காவல்துறை ஆவணங்கள் காட்டுகிறது.

பால்-தாக்கரே
சிவ சேனை தலைவர் பால் தாக்கரே

மத்திய ஆளும் காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்துறை அமைச்சர் கபில்சிபல் இணைய தளங்களில் “மக்களில் இரு குழுக்களிடையே விரோதத்தை தூண்டும்” விதத்திலான வெறுக்கத்தக்க பேச்சுக்கள் வெளியானதால், கூகுள், பேஸ்புக் ஆகிய நிறுவனங்கள் மீது குற்றவழக்கு தொடர அவரும், அவரின் அமைச்சகமும் அனுமதி அளித்துள்ளது.  ஆனால் மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கூட்டணி அரசு சிவசேனாத் தலைவர் பால் தாக்கரேயின் வெறியூட்டும் பேச்சுக்கள், குற்றங்களின் மீதான வழக்கு தொடரும் நடவடிக்கையில் மிக தாமதப்பட்டு நிற்கிறது.  அவையாவும் கடுமையான குற்றங்களாகும்.

விரோதத்தை தூண்டும் வகையிலான வன்முறை என பேஸ்புக் மற்றும் இதர தளங்களில் உள்ள சில பிரசுரங்களை அபாயம் என அரசு கருதுகிறது. ஆனால் அது போலல்லாமல், திரு தாக்கரேயின் எழுத்துக்கள் மும்பையில் 1992 மற்றும் 1993ல் பல நூறு மக்களின் உயிர்களை பலிகொண்ட வன்முறையை தோற்றுவித்தது என ஸ்ரீ கிருஷ்ணா கமிஷ‌ன் விசாரணை அறிக்கையில் தெளிவுபட சொல்லப்பட்டுள்ளது.

டிசம்பர் 6, 1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை தொடர்ந்து மும்பையில் தோன்றியக் கலவரங்களில் பெரும்பாலானவற்றிற்கு தாக்கரே மீதும், சிவசேனாவின் பத்திரிகையான சாம்னாவின் ஆசிரியர் மீதும் பதிவு செய்யப் பட்டது.  ஆனால் பெரும்பாலானவை நடவடிக்கையின்றி நின்று விட்டது.  கலவரம் தோன்றுவதற்கும், தோன்றிய பின்னரும் பல வழக்குகள் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 153A யின் கீழ் விரோதத்தை தூண்டுவது என்ற வகையில் பதிவு செய்யப்பட்டு, அவற்றில் சில மட்டும் வந்திருக்கிறது.  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மிக நீண்ட போராட்டம் மற்றும் மேல் முறையீடுகள் போன்றவற்றிற்கு பிறகு சில வழக்குகளின் விவரங்களை 2011-ல் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுருங்க சொல்ல வேண்டுமென்றால் 1995 முதல் 1999 வரை சிவசேனா, பாரதீய ஜனதா கூட்டணி அரசு அதிகாரத்தில் இருந்த போதும், அதற்கு பிறகு மூன்று முறை காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்த போதும் தாக்கரே மீதான குற்ற வழக்கை கொண்டு செல்வதில் எந்த வித ஆர்வமும் காண்பிக்கவில்லை. வழக்குகள் முடிக்கப்படவுமில்லை, குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்ய அரசின் அனுமதி கோரப்படவுமில்லை.  தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழான முடிவுகள் குறித்த விபரங்கள் சமீபத்தில் வெளியான மீனாமேனன் என்பவரின் மும்பை வன்முறை மற்றும் அதற்கு பின்னர்: (நாள்பட்ட உண்மைகள் மற்றும் ஒத்திசைவு) என்ற புத்தகத்திலிருந்து திரட்டப்பட்டது.

சுருக்கம்: டிசம்பர் 2004-ல் நான் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ் சிவசேனா தலைவர் பால்தாக்கரே மீது பதிவான காவல் துறை வழக்குகள் தொடர்பான நகல்கள், அவற்றின் மீது என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்ற விவரங்களை காவல்துறையிடம் கோரி மனுச்செய்தேன்.  நான் மேலும் அந்த வழக்குகளின் நிலை, அவற்றில் ஏதேனும் வாபஸ் பெறப்பட்டிருந்தால் அது குறித்த ஆவணங்களின் நகல்களையும் கோரியிருந்தேன்.  மிக நீண்ட போராட்டத்திற்கு பிறகு மும்பை காவல்துறை ஆணையர் அலுவலகத்திலிருந்து 19 மே 2007 நாளிட்ட பதிலின் வாயிலாக, காவல்துறை ஆணையர் அலுவலக பொதுத் தகவல் அலுவலா், சிவசேனா கட்சித்தலைவர் பால்தாக்கரே மற்றும் அதன் கட்சி பத்திரிக்கை சாம்னாவின் ஆசிரியர் ஆகியோர் மீது தொடுக்கப்பட்ட அக்டோபர் 1992 முதல் டிசம்பர் 1993 வரையிலான காலத்திற்கு தொடர்புடைய 8 வழக்குகள் குறித்து விவரங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது.  அந்த வழக்குகள் 20 ஜனவரி 1993-லும், 1 அக்டோபர் 1993-லும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நான்கு வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை 30 ஜூலை 1993-ல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  இந்த 4 வழக்குகளும் தாதர் நீதிமன்றத்திலிருந்து பின்னர் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

இரண்டு வழக்குகளில், குறிப்பிட்ட காலக்கெடு முடிந்தபின் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மீதம் இரண்டு வழக்குகள் சாட்சியம் போதவில்லை என முடிக்கப்பட்டுள்ளது.  அதற்கு மேல் எந்த விவரமும் காணப்படவில்லை. எனது முதல் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது.  ஆனால் 2வது மேல் முறையீடு தலைமை தகவல் ஆணையரால் 30 நவம்பர் 2009-ல் விசாரிக்கப்பட்டது. திரு ஜோஷி தனது 8 அக்டோபர் 2010 நாளிட்ட உத்திரவில் பின்வருமாறு உத்திரவிட்டார்.

திருமதி மேனன் அவர்களின் இதே பொருள் குறித் மேல் முறையிட்டின் மீது 17/04/2007-ல் ஆணையம் தெரிவித்த உத்திரவின் தொடர்ச்சியாக, பால் தாக்கரே மீதான வழக்கில் எப்போது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது என்ற கேள்விக்கு பிரிவு 8(1)(g)ன் கீழ் வழங்க மறுக்கப்பட்டிருக்கிறது.  எனவே இந்த மேல் முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இரு தரப்பையும் விசாரித்தபின் வழக்குகளை வாபஸ் பெறுவது தொடர்பாக நீதிமன்றம் ஏதும் சொல்லியிருப்பின்,அது தொடர்பாக அரசால் முன்வைக்கப்பட்ட வேண்டுகை வாசகங்கள், மற்றும் அதன் மீது நீதிமன்றம் தெரிவித்த முடிவு ஆகியவற்றின் முடிவுகளை மனுதாரருக்கு வழங்க வேண்டுமென உத்திரவிடப்படுகிறது.

எனது தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுக்களுக்கான பதில்கள் 18  ஜனவரி 2011 -லிருந்து வரத் துவங்கியது.  முதல் தவணையாக 18 ஜனவரி 2011-ல் வந்த பதிலில் தாதர், மாஹிம், மற்றும் சிவாஜி பார்க் காவல்நிலையம் தொடர்பான விவரங்கள் பெறப்பட்டது.  தாதர் காவல் நிலையத்தில் 14 வழக்குகள் இந்திய தண்டனைச் சட்ட பிரிவு
153A-ன் கீழ் குழுக்களுக்கிடையே விரோதம் உருவாக்குவது, வெறியூட்டும் எழுத்துக்கள் எழுதுவது மற்றும் இதர பிரிவுகளின் கீழும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் 3 வழக்குகள் மூடப்பட்டுள்ளது.

இரண்டு 31 டிசம்பர் 1991-லும், ஒன்று 26 டிசம்பர் 1991-லும் மூடப்பட்டுள்ளது. 4 வழக்குகளில் நீதிமன்றத்தில் 18 அக்டோபர் 1996-ல் இ.த.ச.153A ன் கீழான குற்றச்சாட்டுகளிலிருந்து தாக்கரே விடுதலை செய்யப்பட்டுள்ளார். இரண்டு வழக்குகளில் 153A ன் கீழான வழக்குகளை குற்றவியல் நடைமுறை தொகுப்பின் பிரிவு 468(2)(c)ஐ குறிப்பிட்டு நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது (அதாவது காலவரையரை தாண்டி நடவடிக்கை எடுக்கக் கூடாது – 6 மாதத்திலிருந்து 3 ஆண்டுகள் வரை அந்தந்த தண்டனையை பொறுத்தது). மேலும் 3 வழக்குகளில் நீதிமன்றத்தால் சாட்சியம் ஏதுமில்லை என ஒப்புக்கொள்ளப்பட்டதால் மூடி முடிக்கப்பட்டது.  ஒரு வழக்கில் ‘C’ தொகுப்பு புலனாய்வு அதிகாரியால் தாக்கல் செய்யப்படவில்லை என்பதால் நிலுவையிலுள்ளது. மேலும் 153A ன் கீழான ஒரு வழக்கில் தாக்கரேயை கைது செய்வதற்கு அரசு இன்னும் அனுமதி வழங்காததால் நிலுவையிலுள்ளது.

மாஹிம் காவல் நிலையத்தில் மூன்று பழைய வழக்குகள் குறிப்பிடப்பட்டுள்ளது.  ஒரு வழக்கில் 15 நவம்பர் 1990-ல் தாக்கரே விடுதலை செய்யப்பட்டுள்ளார்.  மற்றொரு 1984-ம் வருடத்திய பழைய வழக்கில் 153A ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  ஆனால் அந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் பழையதாகவும், கிழிந்தும், தெளிவில்லாமலும் உள்ளது.  1991-ம் ஆண்டிலான மற்றொரு வழக்கிலும் இ.த.ச.153A ன் கீழாகவும், இன்ன பிற பிரிவுகளிலும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப் பட்டுள்ளது.  குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டபின் அமர்வு நீதிமன்றம், பாந்த்ராவிற்கு 27 செப்டம்பர் 1998-ல் மாற்றப்பட்டுள்ளது.  6 ஏப்ரல் 2004-ல் மாநில அரசிடமிருந்து வந்த உத்திரவின் அடிப்படையில் அந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது.  வாபஸ்க்கான காரணம் எதுவும் சொல்லப்படவில்லை.

சிவாஜி பார்க் காவல்நிலையத்தில் இரு வழக்குகள் குறிப்பிடப்பட்டுள்ளது.  2002-ல் பதியப்பட்ட பிரிவு 153A ன் கீழான ஒரு வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய இன்னும் அரசு அனுமதி அளிக்கப்படவில்லை.  வழக்கு இன்னும் நிலுவையிலுள்ளது.  மற்றொரு அவமதிப்பு தொடர்பான 2004-ம் ஆண்டு வழக்கில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு நீதிமன்ற நடவடிக்கையில் இருந்த போதும் குற்றம் சாட்டப்பட்ட தாக்கரே இன்னும் கைது செய்யப்படவில்லை.

காம்தேவி காவல் நிலையத்தில் அவர்களின் 30 டிசம்பர் 2010 நாளிட்ட கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளது என்னவென்றால், அவர்களுக்கு 1984-ல் இ.த.ச.பிரிவுகள் 153A, 295A ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்ட போதிலும், இந்த குற்றங்கள் தொடர்பான தற்போதைய நிலவரம் குறித்து அவர்களுக்கு தெரியவில்லை எனவும், அதன் காரணமாக அது குறித்து தகவல் ஏதுமில்லை என்ற நிலையில் தகவல் எதுவும் தெரிவிக்க இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்முறைகளுக்கு முன்பாகவும் தாக்கரே மீது பல வழக்குகள் பதிவுசெய்யப் பட்டிருந்த போதிலும் அவைகளின் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆவணங்களின் படி, அதாவது காவல்துறை குற்றப்பிரிவு 3 உடைய 12 ஜனவரி 2011 நாளிட்ட கடிதத்தில் இரண்டு வழக்குகள் ஆசாத் மைதான் காவல் நிலையத்தில் 28 மார்ச் 1988ல் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அரசு காவல்துறை குற்றவியல் பிரிவு 3ஐ இந்த வழக்குகள் தொடர்பான புலனாய்வு மேற்கொள்ள 30 மார்ச் 1988-ல் தெரிவிக்கப் பட்டுள்ளது.  புலனாய்வின்படி இ.த.ச.பிரிவு 153A, 153B மற்றும் 505(1)(c)ன் கீழான குற்றம் குறித்து ஏராளமான சாட்சியங்கள் உள்ளது எனவும், அதனால் காவல் ஆணையர் தனது 9 ஜூன் 1988 நாளிட்ட கடிதம் வாயிலாக அரசு உள் துறை செயலாளரிடம் நீதிமன்றத்தில் தாக்கரே மீது வழக்கு தொடர அனுமதி கோரப்பட்டுள்ளது.  அதனை தொடர்ந்து குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையர், 3 பிப்ரவரி 1995ல் மற்றொரு கடிதம் வாயிலாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர அனுமதி வேண்டிய கடிதம் மீது விரைவு முடிவு எடுக்க வேண்டியுள்ளார்.

13 ஏப்ரல் 2000-ல் கூடுதல் தலைமைச் செயலாளா், உள்துறை அனைத்து காவல் நிலையங்களிலும் தாக்கரே மீதுள்ள நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய நிலையிலுள்ள அனைத்து வழக்குகள் குறித்த ஆவணங்களையும் அரசிற்கு சமர்ப்பிக்க கேட்கப்பட்டுள்ளது.  அதற்கிணங்க 25 ஏப்ரல் 2000-ல் குற்றப்பிரிவு 3ன் காவல் அதிகாரி திரு எம்.எம்.குல்கர்னி அனைத்து ஆவணங்களையும் சிறப்பு கிளை 1ன் முன்பாக சமா்ப்பித்துள்ளார்.  அதன் பிறகு இன்றுவரை எந்தவித அனுமதியும் அரசிடமிருந்து பெறப்படவில்லை என தகவல் அறியும் உரிமை மனுவிற்கான பதில் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அரசின் அனுமதி பெறப்படாதவரை நீதிமன்றத்தில் எந்த வழக்கும் தாக்கல் ஆகாது.  அவை நிலுவையில்தான் இருக்கும்.

(மேற்படி பகுதிகள் திருமதி மீனாமேனன் என்பவரின் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.  திருமதி மீனாமேனன் தி இந்து நாளிதழின் மும்பை பிரிவு துணை ஆசிரியர் என்பதுடன், மும்பை பத்திரிக்கை பிரிவிற்கு துணை தலைமையாளரும் ஆவார்)

ஆங்கில மூலம் – திருமதி மீனா மேனன், தி இந்து
தமிழாக்கம்:  சித்ரகுப்தன்

கூடங்குளம் அணு உலையை மூடு! ஆர்பாட்டம்!!

கூடங்குளம் அணு உலையை மூடு கார்டூன் போஸ்டர் பேனர்

படத்தை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்

கூடங்குளம் அணு உலையை மூடு! ஆர்பாட்டம் !!கூடங்குளம் அணு உலையை மூடு ! ஆர்பாட்டம் !!

இந்த அழைப்பிதழ் PDF பெற இங்கே அழுத்தவும்

ஆதார் : விலை போகும் உங்கள் தகவல்கள்!

35

இந்த செய்தித்தாள் நடத்திய விசாரணை ஒன்றில் உங்கள் ஆதார் எண்ணைப் பெறுவதற்காக நீங்கள் தனியார் சேர்க்கை ஏஜன்சிகளிடம் கொடுக்கும் முக்கியமான உடற்கூறு மற்றும் மற்றும் தனிநபர் தகவல்கள் பாதுகாப்பாக இல்லை என்று தெரிய வந்துள்ளது. ஆதார் திட்டத்தின் கீழ் திரட்டப்படும் தகவல்களின் பாதுகாப்பு குறித்த நாடாளுமன்ற நிலைக் குழுவின் அச்சங்களை உறுதி செய்வதாக இது இருக்கிறது.

இந்தியக் குடிமக்களிடமிருந்து மதிப்பு வாய்ந்த தகவல்களை திரட்டும் பொறுப்பை பெற்றுள்ள சேர்க்கை ஏஜன்சிகள், இந்திய தனிப்பட்ட அடையாளஅட்டை ஆணையம் (UIDAI) அமைத்துள்ள விதிமுறைகளை மீறி, சேர்க்கை பணிகளை உள்ளூர் நிறுவனங்களுக்கு சட்ட விரோதமாக வழங்கியிருக்கிறார்கள். இந்த துணை முகவர்கள் யார் யார் என்பது பற்றி UIDAIக்கு எந்த தகவலும் இல்லை. இத்தகைய சட்ட விரோதமான நிறுவனங்கள் மூலம் தகவல் திரட்டப்படுவதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இன்னும் எடுக்கவில்லை. இந்த நாளிதழ் தொடர்பு கொண்ட பல சேர்க்கை நிறுவனங்கள் பணியை ஆள்சேர்ப்பு நிறுவனங்களுக்கு வெளிப்பணியாக கொடுத்திருப்பதாகவோ அல்லது அத்தகைய முகவர்களைத் தேடுவதாகவோ தெரிவித்தன.

இந்த நிருபர் பெங்களூரைச் சேர்ந்த ஒரு மென்பொருள் விற்பனை நிறுவனம் என்ற போர்வையில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த சேர்க்கை ஏஜன்சியை தொடர்பு கொண்ட போது, மும்பையில் ஆதார் எண்களை திரட்டுவதற்கான முகமை தருவதாச் சொன்னார்கள். அவருக்கு மராத்தி மொழி அறிவு சுத்தமாக இல்லை என்றும், தகவல் திரட்டும் பணியில் முன் அனுபவம் இல்லை என்றும் தெரிவித்த பிறகு கூட, சுமார் 50 லட்ச ரூபாய்க்கு 30 எந்திரங்களை வழங்குவதாகவும், வசதிப்பட்ட சமயத்தில் மும்பையில் பணிகளை ஆரம்பிக்கலாம் என்றும் சொல்லப்பட்டது. சட்டப்படி தடை செய்யப்பட்டிருந்தாலும் பல ஏஜன்சிகள் பணியை வெளியில் கொடுத்திருக்கிறார்கள். இன்னும் பலர் UIDAI வகுத்துள்ள முறைக்குள் செயல்படுவது எப்படி என்று தெரியவில்லை என்று ஜாக்கிரதையாக பதில் சொன்னார்கள்.

ஆதார் அடையாள அட்டை - விலைபோகும் தகவல்கள்
நந்தன் நீலகேணி

“அலங்கித் பின்செக், ஆதார் சேர்க்கை பணியை பிற தனியார் அமைப்புகளுக்கு வெளிப் பணியாக கொடுத்தது தொடர்பாக பெங்களூரில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே நிறுவனம், சண்டிகரில் சேர்க்கைப் பணிகளை ஒரு தனிநபருக்கு துணை ஒப்பந்த பணியாக வழங்கியிருக்கிறது. அந்த நபர் இன்னும் பலருக்கு வேலையைப் பிரித்துக் கொடுத்திருக்கிறார். மைசூரில் பொய்யான அடையாளங்களை உருவாக்குவதற்கு லஞ்சம் வாங்கியதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஹூப்ளியில் ஆதார் தகவல் சேகரிக்கப் பயன்படுத்தப்பட்ட மூன்று மடிக்கணினிகள் திருடு போயின,” என்று மேத்தியூ பிலிப் என்ற சமூக ஆர்வலர் சொல்கிறார். அவர் பெங்களூர் செசன்ஸ் நீதிமன்றத்தில் ஆதார் திட்டம் சட்ட விரோதமானது என்றும் பாதுகாப்பற்றது என்றும் வழக்கு ஒன்று பதிவு செய்திருக்கிறார். அலங்கித்தின் கம்பெனி செயலர் வினய் சாவ்லா, தகவல் திரட்டும் பணி வெளியில் கொடுக்கப்பட்டதை ஒத்துக் கொண்டார். ஆனால், UIDAIயிடமிருந்து வழிமுறைகள் வந்த பிறகு அத்தகைய வழக்கத்தை நிறுத்தி விட்டதாகச் சொன்னார்.

“UIDA இந்த நிறுவனங்களுக்கு எல்லாம் ஒப்பந்த பணி கொடுத்த வழிமுறையே பெரும் சந்தேகத்துக்குரியது. டெண்டர் முறை எதுவும் பின்பற்றப்படவில்லை. சேர்க்கக் கோரி விண்ணப்பித்தவர்கள் அனைவரும் அங்கீகரிக்கப்பட்டார்கள். பெரும்பான்மையான நிறுவனங்களுக்கு உடற்கூறு தகவல் சேகரிப்பு அல்லது பெரும் அளவில் தகவல் சேகரிப்பில் முன் அனுபவம் கிடையாது. ஆதார் எண்ணை வழங்குவதற்காக சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களையோ தரவுகளையோ சரிபார்க்கும் நிபுணத்துவம் அவர்கள் வேலைக்கு அமர்த்தும் பணியாளர்களுக்கு கிடையாது.” என்று சொல்கிறார் வழக்கறிஞரும் UIDக்கு எதிரான ஆர்வலருமான பெங்களூரைச் சேர்ந்த வெங்கடேஷ் பப்பர்ஜங்.

UIDAI அங்கீகரித்துள்ள நிறுவனங்களின் பட்டியல் வெங்கடேஷின் கவலைகளை நியாயப்படுத்துவதாக இருக்கிறது. 2010ல் அசாமில் ஆதார் தகவல்களை திரட்டும் ஒப்பந்தப் புள்ளி பாருநகர் டீ எஸ்டேட்ஸ் என்ற தேயிலைத் தோட்டத்துக்கு வழங்கப்பட்டது. பீகார், டெல்லி, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், பஞ்சாப், கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டிலிருந்து தகவல்கள் திரட்டுவதற்கான அங்கீகாரம் சென்னையைச் சேர்ந்த ஹெர்ம்ஸ் I டிக்கெட்ஸ் என்ற பயணம் மற்றும் பயணச்சீட்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. ஒரு கணினி விற்பனை மற்றும் பராமரிப்புக் கடை, அச்சகங்கள், கல்வி மற்றும் தரும நிறுவனங்கள், தெருவணிகர்களின் தேசிய கூட்டமைப்பு, சர்க்கரை ஆலை, காப்பீட்டு நிறுவனங்கள், BPOக்கள், நிதி நிறுவனங்கள், நிலக்கரி மற்றும் உருக்கு நிறுவனங்கள், கட்டிட நிறுவனங்கள் போன்றவை இப்போது சேர்க்கை ஏஜன்சிகளாக அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் அடங்கும்.

பெரும் எண்ணிக்கையிலான சேர்க்கை ஏஜன்சிகளுக்கு அவர்களுக்குத் தெரியாத மொழி பேசப்படும் மாநிலங்களில் உடற்கூறியல், வாழ்வியல் மற்றும் தனிநபர் தகவல்களை திரட்ட ஒப்பந்த புள்ளிகள் வழங்கபட்டிருந்தன. அந்த மாநிலங்களின் உள்ளூர் நிலைமைகள் பற்றிய அறிவும் அவர்களுக்கு இல்லை. உதாரணமாக, ரங்காரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த கௌதமி கல்வி சங்கம் என்ற கல்வி அறக்கட்டளை தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் தகவல் திரட்டும் பணியை பெற்றுள்ளது. ஆந்திர பிரேதசத்தின் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜினா டெக்னாலஜிஸ் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் சேர்க்கை நடத்த அங்கீகரிக்கப்பட்டிருந்க்கிறது, ஆனால் ஆந்திராவில் அங்கீகரிக்கப்படவில்லை.

இந்த தவறான முறை பதிவு ஏஜன்சிகள் உள்ளூர் ஏஜன்டுகளை பணிக்கு அமர்த்தியதற்கு காரணமாக இருக்கிறது. “ஒரு நிறுவனம் அவ்வளவு பெரிய அளவிலான தரவுகளை கையாளுவது என்பது சாத்தியமில்லாத ஒன்று. பணியை வெளியில் கொடுக்காமல் நாங்கள் சமாளித்தாலும், குறிப்பிட்ட பகுதியில் பணியாளர்களை வழங்குவதற்கு உள்ளூர் மனிதவள ஏஜன்சிகளைத்தான் நாங்கள் நம்பியிருக்க வேண்டியிருக்கிறது” என்று சேர்க்கை பதிவுக்கு அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனத்தின் துணைத் தலைவர், பெயர் தெரியக் கூடாது என்ற நிபந்தனையுடன் சொன்னார்.

UIDAI தலைவர் நந்தன் நீலகேனி மற்றும் பதிவுகளுக்கான உதவி இயக்குனர் அலின் காச்சி ஆகியோருக்கு அனுப்பிய மின்னஞ்சல்களுக்கு அச்சுக்குப் போகும் வரை பதில் கிடைக்கவில்லை. UIDAI செய்தித் தொடர்பாளர் அவதேஷ் குமார் கருத்து சொல்வதற்கு கிடைக்கவில்லை.

ஆங்கில மூலம் : உங்கள் ஆதார் தகவல்களை திரட்டுவது யார்?

நன்றி: சன்டே கார்டியன்
தமிழாக்கம்: செழியன்

சாமக்கோழி கூவும் நேரத்திலே…. பாடல்!

அறுவடை செய்யும் விவசாயத் தொழிலாளிக்கு விளைச்சலில் உரிமை இல்லை, அது நிலச் சொந்தக்காரருக்கு உரிமையானது. கட்டிடம் கட்டும் தொழிலாளிக்கு கட்டிடத்தின் மீது உரிமை இல்லை, அது முதல் போட்ட முதலாளிக்கு உரிமையானது. தொழிற்சாலையில் உழைக்கும் தொழிலாளிக்கு உற்பத்திப் பொருளின் மீது உரிமை இல்லை, அது வேலை வாங்கிய முதலாளிக்குச் சொந்தமானது.

இதுதான் மனித வரலாற்றின் மிகப்பெரிய மனித உரிமை மீறல். ‘தனிச் சொத்தும் லாபமும் இல்லா விட்டால் வேலை செய்ய ஊக்கம் இருக்காது’ என்கிறார்கள் முதலாளித்துவ அறிஞர்கள். உண்மையில் உற்பத்தி எல்லாமே, விளைபொருளாலிருந்து சொத்து, லாபம் சேர்க்க முடியாத தொழிலாளர்களின் உழைப்பில்தான் உருவாகிறது.

ஒரு விவசாயத் தொழிலாளரின் எண்ணங்களாக இந்த நிதர்சனத்தின் சோகங்களை இந்தப் பாடலில் கேட்கலாம். இதைக் கேட்கும் போது ‘நாம் போடும் வெள்ளைச் சட்டை, எத்தனையோ உழைக்கும் மக்களின் வியர்வையின் பலன்’ என்ற குற்ற உணர்வு எழாதவர்கள் இருக்க முடியாது.

எரின் புரோக்கோவிச் என்ற திரைப்படத்தில் கணவனைப் பிரிந்த தாயாக நடிக்கும் ஜூலியா ராபர்ட்ஸ், செய்த வேலைக்குத் தனக்குச் சேர வேண்டிய பணம் மறுக்கப்படும் சூழலில் ‘நான் என் குழந்தைகளுடன் செலவிட வேண்டிய நேரத்தில் உழைத்து செய்த வேலை, அதன் பலனை நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்’ என்று பொங்கி எழுவார். இந்தப் பாடலில் வரும்

‘கத்துற பிள்ளைய தொட்டில்ல போட்டுட்டு கால் கடுக்க நின்னு நாத்து நட்டோம்’

என்ற வரி ஒரு தாயின் அத்தகைய சோகத்தை வெளிப்படுத்துகிறது. அந்த உழைப்பின் பலன் அவருக்கும் இல்லை, தாயின் அருகாமையை இழந்த குழந்தைக்கும் இல்லை. ஏனென்றால் நிலம் அவர்களது சொத்து இல்லை. விவசாயத் தொழிலின் கடும் உழைப்பு, உடல் வருத்தம் இவற்றைச் சொல்லும் வரிகள் கேட்பவரையும் அந்த வலியை உணர வைக்கின்றன.

 “ஏ ஊரையே வளச்சிப் போட்டுக்கிட்டு நம்ம உழப்பச் சொரண்டி சேர்த்துக் கிட்டு
உல்லாச போகமா வாழுற கூட்டத்த இல்லாம ஒழிக்க வாருங்கம்மா”

தனது உழைப்பின் பலனை சுரண்டி உல்லாசமாக வாழும் கூட்டத்தின் மீதான அவரது கோபம் நியாயமானது, புரிந்து கொள்ளக் கூடியது, ஆதரிக்கப்பட வேண்டியது.

விவசாயத் தொழிலாளரை வைத்துப் பாடப்படும் இந்தப் பாடல் உழைப்பை விற்று கூலி வாங்கி வாழ்க்கை நடத்தும் அனைத்துத் தொழிலாளருக்கும் பொருந்தும். கட்டிடத் தொழிலாளர்கள், தொழிற்சாலை உழைப்பாளிகள், ஓட்டுனர்கள் என்று உடலுழைப்பு செலுத்துபவர்களுக்கு தமது உழைப்பின் கருவிகளும் சொந்தமில்லை, பலனும் சொந்தமில்லை.

புரிதலுக்காக நடுத்தர வர்க்கம், அதிக சம்பளம் என்று ‘பொறாமைக்குள்ளாகும்’ ஐடி ஊழியர்களை எடுத்துக் கொள்ளலாம். பல ஆண்டுகளாக உழைத்து ஒரு மென்பொருளை உருவாக்கியிருக்கலாம் அல்லது கண் போல பராமரித்து ஒரு வாடிக்கையாளர் உறவை வளர்த்திருக்கலாம். குறிப்பிட்ட கட்டத்தில் வேலையை விட்டுப் போக நேர்ந்தால், அத்தனையையும் இறக்கி வைத்து விட்டு வெறுமையுடன் அடுத்த நிறுவனத்துக்கு நகர வேண்டியதுதான். அங்கும் தனது உழைப்பைச் செலுத்தி அதன் பலனிலிருந்து விலகியே வாழ வேண்டியிருக்கும்.

கூலிக்கு உழைப்பை பரிவர்த்தனை செய்யும் சமூகத்தின் மிகப்பெரிய சோகம் இது. இதனால் ஏற்படும் மன அழுத்தங்கள், வாழ்வின் வெறுமை யாராலும் கணக்கிடப்படவில்லை. இதற்கு தீர்வுதான் என்ன? வயலில் விவசாயக் கூலித் தொழிலாளி சொல்கிறார் கேட்போம்.

=================

சாமக்கோழி கூவும் நேரத்திலே

தை மாதத்துப் பின்னிரவின் கரிய இருளில் உதறி எடுக்கும் பனியையும் குளிரையும் உதறி எறிந்து கூடைக்குள் முடங்கிக் கிடக்கும் கோழியையும் எழுப்பி கொக்கரக்கோ பாடச் சொல்லி விட்டு அறுவடைக்குச் செல்வான் எங்கள் கூலி விவசாயி. அறுவடை செய்யப் போகும் விளைச்சலில் தனக்குப் பங்கில்லை என்பது தெரிந்தும் மகிழ்ச்சியோடு உழைக்கிறான். அந்த மகிழ்ச்சி உழைத்து வாழும் ஒழுக்கத்தால், பெருமிதத்தால் வந்த மகிழ்ச்சி.

சாமக்கோழி கூவும் நேரத்தில….ம.க.இ.க பாடல் – ஆடியோ!ஏ தானே னன்னே னானே னானே
ஏ தானே னானே னானே
தானே னானே
தானே னானே

ஏ… சாமக்கோழி கூவும் நேரத்திலே – நாங்க
சம்பா அறுவட செய்யப் போனோம்
விளக்கு வக்கிர நேரம் வர – ரத்த
வேர்வையும் காயாம பாடுபட்டோம்

கோரஸ் : விளக்கு வைக்கிற நேரம் வர – ரத்த
வேர்வையும் காயாம பாடுபட்டோம்

ஏ… கையுக்குள்ள தூரை சேர்த்து வைத்து – கோணக்
கருக்கருவாள வீசி வீசி
பண்ண வயலில நெல்லறுத்தும் – நம்ம
மண்ணுக் குடிசையும் மாறவில்ல

கோரஸ் : மண்ணுக் குடிசையும் மாறவில்ல

ஏ… அள்ளிப் போட்டு நெல்லக் கட்டுகட்டி – நாங்க
ஆளும் பேருமாக தூக்கிக்கிட்டு
ஊசி வரப்புல போகையிலே – ஏங்கி
மூச்சு விட எம்மா… முடியல..,

கோரஸ் : மூச்சு விட எம்மா முடியல

ஏ… கொட்டும் மழையில கொடலங்கீத்துப் போட்டு
குறுவைப் பயிருக்கு களையறுத்தோம்
கத்துற புள்ளைய தொட்டில போட்டுட்டு
கால் கடுக்க நின்னு நாத்து நட்டோம்

கோரஸ் : கால் கடுக்க நின்னு நாத்து நட்டோம்

ஏ.. ஊத்தும் பனியில தூங்காம – பண்ண
வூட்டு வயலுக்கு நீர் பாய்ச்சி…
மாட்டப் போல தெனம் பாடுபட்டோம் –  நம்ம
வாட்டும் வறுமையும் தீரவில்ல

கோரஸ் : வாட்டும் வறுமையும் தீரவில்ல

ஏ.. ஊரையே வளச்சிப் போட்டுக்கிட்டு – நம்ம
ஒழப்பச் சொரண்டி சேத்துக் கிட்டு
உல்லாச போகமா வாழுற கூட்டத்த
இல்லாம ஒழிக்க வாருங்கம்மா

கோரஸ் : இல்லாம ஒழிக்க வாருங்கம்மா

ஏ.. ஆள மாத்தி ஆளு ஓட்டுப் போட்டு – அய்யோ
என்ன கண்டோமம்மா நீயே சொல்லு
ஆளுற கூட்டத்த பாடைக்கு அனுப்ப
ஆயுதம் ஏந்துவோம் வாருங்கம்மா!

கோரஸ் : ஆயுதம் ஏந்துவோம் வாருங்கம்மா!
ஆயுதம் ஏந்துவோம் வாருங்கம்மா!

சுற்றிவளைக்கப்படும் சீனா!

விரிவடையும் அமெரிக்க மேலாதிக்கம் : சுற்றிவளைக்கப்படும் சீனா !

விரிவடையும் அமெரிக்க மேலாதிக்கம் : சுற்றிவளைக்கப்படும் சீனா !

லிபியாவை மறுகாலனியாக்கி, புதிய உத்தியுடன் ஆப்பிரிக்க கண்டத்தில் தனது காலனியாதிக்க ஆக்கிரமிப்பையும் மேலாதிக்கத்தையும் நிறுவியுள்ள அமெரிக்க வல்லரசு, இப்போது தெற்கு மற்றும் தென்கிழக்காசியாவின் மீது தனது மேலாதிக்க இரும்புப் பிடியை உறுதிப்படுத்தக் கிளம்பியுள்ளது. குறிப்பாக, இப்பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கைத் தகர்த்து, அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிறுவும் நோக்கத்துடன் இப்போது போர்த் தாக்குதலுக்கான ஏற்பாடுகளை வேகமாகச் செய்து வருகிறது. மேற்காசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகியவற்றிலிருந்து சீனா மூலப்பொருட்களைப் பெறுவதை முடக்குவது, இதற்காக கடற்பாதைகளில் முற்றுகையிடுவது  என சீனாவுடன் மோதல் போக்கை மேற்கொள்வதே அமெரிக்காவின் உடனடித் திட்டமாக உள்ளது. அமெரிக்காவின் இம்மேலாதிக்கத் தாக்குதலுக்கு விசுவாசமாக அடியாள் வேலை செய்ய இந்திய ஆளும் வர்க்கம்  கிளம்பியுள்ளது.

கடந்த நவம்பரில் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா நிகழ்த்திய உரையில், அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை தற்போது ஆசியா நோக்கி திரும்பியிருப்பதாக வெளிப்படையாக அறிவித்தார். வடக்கு ஆஸ்திரேலியாவிலுள்ள டார்வின் துறைமுகத்தில் அமெரிக்கப் படைகள் நிலைகொள்ளும் என்றும், அத்துடன் ஆஸ்திரேலியாவின் இதர  விமான மற்றும் கடற்படைத் தளங்களை அமெரிக்க இராணுவம் அதிகமாகப் பயன்படுத்தும் என்றும் அறிவித்துள்ளார். இது, ஆசியாவில் வியட்நாம் போருக்குப் பின்னர் அமெரிக்க இராணுவத்தின் குறிப்பிடத்தக்க விரிவாக்கமாகும்.

மேற்குலக நாடுகளுடனான சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி பெரும்பாலும் மலேசியாவின் மலாக்கா நீரிணை (ஜலசந்தி) வழியாகவே நடைபெறுகிறது. குறிப்பாக,மேற்காசியா மற்றும் ஆப்பிரிக்காவிலிருந்து சீனா இறக்குமதி செய்யும் எண்ணெய், மலாக்கா நீரிணை வழியாகக் கப்பல் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. குறுகிய பாதை கொண்ட மலாக்கா நீரிணை வழியே பெரிய கப்பல்கள் செல்ல முடியாத நிலையில், இன்னும் ஆழமான சுந்தா நீரிணை வழியாகத்தான் செல்ல வேண்டியிருக்கும். வடக்கு ஆஸ்திரேலிய நகரமான டார்வின் இந்த நீரிணைகளுக்கு அருகாமையில் உள்ளதால்தான், அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்காக இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, இந்தியப் பெருங்கடலில் உள்ள ஆஸ்திரேலியாவின் கோகோஸ் தீவுகள் மற்றும் கிறிஸ்துமஸ் தீவுகளிலும் விமானத் தளங்களை அமைக்கும் திட்டம் அமெரிக்காவிடம் உள்ளது.

விரிவடையும் அமெரிக்க மேலாதிக்கம் : சுற்றிவளைக்கப்படும் சீனா !மலாக்கா வழியாகக் கப்பல்கள் மூலம் தென்சீனக் கடல் பகுதிக்கு எண்ணெயைக் கொண்டுசெல்ல ஏறத்தாழ 1200 கி.மீ. சுற்றிக் கொண்டு செல்ல வேண்டியிருப்பதாலும், அமெரிக்காவுடன் மோதல் போக்கை தவிர்க்கும் நோக்கத்துடனும், மலாக்கா நீரிணையை மட்டும் சார்ந்திராமல் தரை வழியேயும் எண்ணெயைக் கொண்டு செல்ல சீனா முயற்சிக்கிறது. இதற்காக, வங்காள விரிகுடாவின் மேற்குப் பகுதியிலுள்ள தனது நட்பு நாடான மியான்மரின் (பர்மாவின்) கியாவ்க்பியூ துறைமுகத்தில் எண்ணெயை இறக்கி, அங்கிருந்து தரைவழியாக  சீனாவின் யுன்னான் மாகாணத்திலுள்ள குன்மிங் வரை கொண்டு செல்ல தரைவழி எண்ணெய்க் குழாயை சீனா பதித்து வருகிறது. 2013இல் நிறைவேறவுள்ள  சீனாவின் இப்பெருந்திட்டத்தைத்  தடுத்து நிறுத்தும் நோக்கத்தோடு மியான்மரைத் தன் பிடியில் விரைவாகக் கொண்டுவர அமெரிக்கா கிளம்பியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதத் தொடக்கத்தில் அமெரிக்க அரசுச் செயலரான ஹிலாரி, மியான்மருக்குப் பறந்து சென்று எதிர்க்கட்சித் தலைவி ஆங் சான் சூ கியையும், அந்நாட்டின் அதிபர் தியன் சியன்ஐயும்சந்தித்தார். 50ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு உயர்மட்ட அமெரிக்க அரசுச் செயலர் மியான்மருக்கு வருவது இதுவே முதன் முறையாகும்.

மியான்மரில் ஜனநாயக உரிமைகளை நிலைநாட்ட  அமெரிக்கா முயற்சிப்பதாகக்  கூறப்பட்டாலும், உண்மையில் சீனாவின் செல்வாக்கை ஆசிய வட்டகையிலிருந்து அகற்றும் அமெரிக்கப் போர்த்தந்திர திட்டத்தின் ஓர் அங்கமாகவே இது நடத்தப்பட்டுள்ளது. சீன உதவியுடன் கட்டியமைக்கப்படும் மியான்மரின் அணுசக்தி திட்டத்தை சர்வதேச அணுசக்தி முகமையின் கண்காணிப்பில் வைக்கவேண்டும் எனப் புதிய கெடுபிடிகளை விதித்துள்ள அமெரிக்கா, மேகாங் நதியின் கீழ் பகுதி நாடுகளுடன்   அதாவது வியட்நாம், லாவோஸ், கம்போடியா, தாய்லாந்து ஆகிய நாடுகளைக் கொண்ட, 2009இல் அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட  “கீழ் மேகாங் முன்முயற்சி” என்ற கூட்டமைப்பில் மியான்மரையும் சேருமாறு நிர்பந்திக்கிறது.

ஹிலாரியின் பயணத்துக்குப் பின்னர்,  இப்போது மியான்மர்  மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்காவும் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களும் அகற்றியுள்ளன. இதனால் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களின் முதலீடுகள் மட்டுமின்றி, இந்தியக் கார்ப்பரேட் நிறுவனங்களின் முதலீடுகளும்  மியான்மரில் பெருக வாய்ப்புள்ள சூழல் நிலவுவதாக  இந்தியப் பெருமுதலாளிகளின் சங்கமான “ஃபிக்கி” பூரிக்கிறது.

இவை ஒருபுறமிருக்க, கடந்த ஈராண்டுகளில் பிலிப்பைன்சுக்கும் சிங்கப்பூருக்கும் அதிநவீன போர்க்கப்பல்களை அமெரிக்கா கொடுத்துள்ளதோடு, வியட்நாமுடன் கூட்டுப் பயிற்சிகளையும் நடத்தியுள்ளது. சீனாவை அடுத்துள்ள தைவானுக்கு மிகப்பெரும் அளவிலான ஆயுதங்களை அளிக்க முன்வந்துள்ளது. மேலும், அண்மையில் சீனாவின் நட்பு நாடான வடகொரிய அதிபரின் மறைவையடுத்து, எல்லையில் படைகளைக் குவித்துப் பதற்றநிலையை ஏற்படுத்தியுள்ளது, அமெரிக்காவின் விசுவாச நாடான தென்கொரியா.  இவையனைத்தும் இந்தியப் பெருங்கடல் மற்றும்  பசிபிக் பெருங்கடல் பிராந்தியம் முழுவதும் அமெரிக்க இராணுவபொருளாதார மேலாதிக்கத்தை வலுவாக நிலைநாட்டும் நோக்கத்தை  உறுதிப்படுத்துகின்றன.

விரிவடையும் அமெரிக்க மேலாதிக்கம் : சுற்றிவளைக்கப்படும் சீனா !அமெரிக்காவின் போர்த்தந்திரத் திட்டத்தின்படி, ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நெருக்கமான பொருளாதார, இராணுவ உறவுகள் அண்மையில் விரிவடையத் தொடங்கியுள்ளன. கடந்த டிசம்பர் 7ஆம் தேதியன்று இந்தியாவுக்கு வருகை தந்த ஆஸ்திரேலியாவின் இராணுவ அமைச்சரான ஸ்டீபன் ஸ்மித், இந்தியாவுக்கு யுரேனியம் விற்பனை செய்வதில் உள்ள தடைகளை ஆஸ்திரேலிய அரசு  அகற்றி விட்டது என்று அறிவித்துள்ளார். இந்தியாவின் அணு ஆயுத இருப்பு சீனாவுக்கு ஒப்பானதாக வர வேண்டும் என்பதே யுரேனிய விற்பனையின் நோக்கம் என்றும், ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் இராணுவப் பிரச்சினைகளில் நடைமுறை ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் என்றும், பாரசீக வளைகுடாவில் உள்ள பஹ்ரைனில் அமெரிக்காவின் ஏழாம் கடற்படையுடன் இந்திய, ஆஸ்திரேலிய கடற்படைகள் முக்கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ளும் என்றும் அவர் அறிவித்துள்ளார். இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் மிகப்பெரிய கடற்படைகளைக் கொண்டுள்ள நாடுகள் இந்தியாவும் ஆஸ்திரேலியாவுமாகும். சீனாவுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன்தான்,  இம்மூன்று நாடுகளின் கூட்டுப் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது என்பதை அவர் மறுத்த போதிலும், அவரது ஒவ்வொரு அறிவிப்பும் இந்தத் திசையை நோக்கித்தான் உள்ளன.

இவையனைத்தும் அமெரிக்காவின் போர்த் தேரில் இந்தியா பிணைக்கப்பட்டிருப்பதையும், சீனாவைச் சுற்றிவளைத்துத் தாக்கும் அமெரிக்காவின் மேலாதிக்கத் திட்டத்துக்கு விசுவாச அடியாளாக இந்தியா மாற்றப்பட்டிருப்பதையும் மெய்ப்பித்துக் காட்டுகின்றன. இந்தியா வல்லரசாக வளர்வதற்கு நாங்கள் உதவுவோம் என்று அமெரிக்கா கூறுவதன் பொருள், அமெரிக்காவின் உலக மேலாதிக்கத் திட்டத்துக்கு இந்தியா விசுவாசமாகச் செயல்பட வேண்டும் என்பதுதான்.

ஏற்கெனவே மறுகட்டுமானப் பணிகள் என்ற பெயரில் ஆப்கானிலும், கடற்கொள்ளையர்களிடமிருந்து கப்பல்களைப் பாதுகாப்பது என்ற பெயரில் சோமாலியாவிலும், அமைதிப்படை என்ற பெயரில் பல ஆப்பிரிக்க நாடுகளிலும் அமெரிக்காவுக்கு விசுவாச சேவை செய்துவரும் இந்தியப் படைகள், இனி சீனாவுக்கு எதிரான பதிலிப் போர்களிலும் ஈடுபடுத்தப்படும். சீனா பாரம்பரிய உரிமை கோரும்  தற்போது வியட்நாமால் உரிமை கோரப்பட்டுள்ள தீவுப் பகுதிகளில் இருந்து எண்ணெய் தோண்டுவதில் வியட்நாமுடன் உடன்பாடுகளைச் செய்து கொண்டுள்ளதன் மூலம், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தென்சீனக் கடலில் சீனாவின் இறையாண்மையுடன் பகிரங்கமாக மோதும் நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க மேலாதிக்க ஆக்கிரமிப்புக்கு ஊழியம் செய்யும் இந்திய அரசு, ஏற்கெனவே  ஆப்கானில் பல இந்தியர்களைக் காவு கொடுத்ததைப் போல, சீனாவுக்கு எதிரான இத்தகைய ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளால் இன்னும் பலரைக் காவு கொடுக்கும் பேரபாயம் ஏற்பட்டுள்ளது.

ஆசிய கண்டத்தில் அமெரிக்காவின் அடியாளாகச் சேவை செய்வதன் மூலம்  இந்திய ஆளும் வர்க்கங்கள் தெற்குதென்கிழக்காசிய நாடுகளில் தமது சந்தையை விரிவுபடுத்தி ஆதாயமடையத் துடிக்கின்றன. இதற்கேற்ப இந்திய அரசும் ஊடகங்களும் தேசபக்தியின் பெயரால் சீன எதிர்ப்புப் பிரச்சாரத்தை நடத்தி வருகின்றன.  இந்தியாவின் அணுசக்தித் திறன் கொண்ட அக்னி5  ஏவுகணை, சீனாவைத் தாக்கி அழிக்கும் அரக்கன் என்று ஊடகங்களால் வர்ணிக்கப்பட்டது. தலாய்லாமாவின் புத்த மாநாட்டுக்கு இந்திய அரசு அனுமதியளித்து சீனாவை ஆத்திரமூட்டிய அதேநேரத்தில், ஏழாம் அறிவு போன்ற திரைப்படங்கள் தமிழனின் பெருமையைப் பறைசாற்றுவதாகக் காட்டிக்கொண்டு சீன எதிர்ப்பை உசுப்பி விடுகின்றன.

விரிவடையும் அமெரிக்க மேலாதிக்கம் : சுற்றிவளைக்கப்படும் சீனா !இந்நிலைமைகள் ஒருபுறமிருக்க, அமெரிக்காவின் விசுவாச நாடான பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுமிடையே அண்மைக்காலமாக முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.  விசுவாச நாடாக இருந்த போதிலும், பாக்.கின் பெயரளவிலான சுயாதிபத்திய உரிமையை மிதித்து, அபோடாபாத் நகரில் அத்துமீறி தாக்குதல் நடத்தி, ஓசாமா பின்லேடனை அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள்  கொன்றொழித்தன. ஆப்கான் எல்லையை ஒட்டியுள்ள  வஜீரிஸ்தான் பகுதியில் நேட்டோ படைகள் நடத்தும் வான் வழித் தாக்குதலாலும், ஆளில்லா விமானத் தாக்குதலாலும்  பாக். மக்கள் வாழ்வுரிமையையும் இழந்து கந்தலாகிக் கிடக்கின்றனர்.

இந்நிலையில், பாகிஸ்தானின் எல்லைப் பகுதியில் கடந்த நவம்பர் 26 அன்று அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் எவ்வித முன்னறிவிப்புமின்றி  நடத்திய தாக்குதலில் 24 பாகிஸ்தானிய சிப்பாய்கள் கொல்லப்பட்டு 13 பேர் படுகாயமடைந்துள்ளனர். இப்படுகொலையை எதிர்த்து, நாடெங்கும் அமெரிக்கக் கொடிகளை எரித்து மக்கள் ஆர்ப்பாட்டங்கள் பெருகியதால், மக்களின் பொதுக்கருத்துக்கு எதிராகச் செல்ல முடியாமல் பாக். அரசு, ஆப்கானுக்குச் செல்லும் நேட்டோ படைகளுக்கான உணவு மற்றும் ஆயுத விநியோகப் பாதையை அடைத்து எதிர்ப்பைக் காட்டியுள்ளது. இப்படுகொலை பற்றி புலன்விசாரணை செய்யும் நேட்டோ தலைமையகத்துக்கும் பாக். அரசு ஒத்துழைப்பு தர மறுத்துவிட்டதோடு, ஜெர்மனியின் பான் நகரில் நடைபெறும் ஆப்கான் குறித்த மாநாட்டிலும் பங்கேற்க மறுத்துவிட்டது. இனி, பாக். மீது அமெரிக்கா அல்லது நேட்டோ படைகள் தாக்குதல் நடத்தினால் திருப்பித் தாக்குவோம் என்று வெளிப்படையாக எச்சரித்துள்ளார், அந்நாட்டின் இராணுவத் தளபதியான கயானி. மறுபுறம், பாக். இராணுவக் கும்பலுக்கும் சிவிலியன் அரசாங்கத்துக்குமிடையிலான அதிகாரப் போட்டியும் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு அபாயமும் நீடிப்பதால், அந்நாட்டில் தீராத குழப்பமும் நிலையற்ற தன்மையும் நீடிக்கிறது.

அமெரிக்காவுக்கு நீண்டகால விசுவாச அடியாளாக இருந்த பாகிஸ்தான் மீதே அமெரிக்கா தாக்குதல் நடத்தி அந்நாட்டை உருக்குலைத்திருக்கும் போது, இந்தியாவோ கொள்ளியை எடுத்து கூந்தலைச் சொறிந்த கதையாக, நாட்டையும் மக்களையும் பேரழிவில் தள்ளிவிட்டு அமெரிக்காவின் புதிய விசுவாச அடியாளாக மாறி, தெற்காசியாவில் ‘வல்லரசாக’ விரிவடையத் துடித்துக் கொண்டிருக்கிறது.

– புதிய ஜனநாயகம், ஜனவரி – 2012

புதிய ஓய்வூதியத் திட்டம்: சட்டபூர்வ வழிப்பறிக் கொள்ளை!

ற்பொழுது நடைபெற்றுவரும் குளிர்கால நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்பொழுது, இரண்டு முக்கியமான துறைகளை அந்நிய மூலதனத்திற்குத் திறந்துவிட எத்தணித்தது, காங்கிரசு கூட்டணி அரசு.  அதிலொன்று, நாடெங்கும் பரவலான எதிர்ப்பைச் சந்தித்த சில்லறை வணிகத் துறை; மற்றொன்று, அரசு, பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள்  தொழிலாளர்களின் ஓய்வூதிய நிதியைக் கையாளுவதில் அந்நிய நிறுவனங்களை அனுமதிப்பது.  காங்கிரசு கூட்டணி அரசு தனது இந்த இரண்டு முடிவுகளையும் நடைமுறைப்படுத்துவதைச் சற்று தள்ளி வைத்திருக்கிறது.  இவை போன்ற சீர்திருத்தங்களைக்  கால தாமதமின்றி நடைமுறைப்படுத்துவதற்கு இந்திய ஜனநாயகம் தடையாக இருப்பதாக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி புலம்பியிருக்கிறார்.  தனியார்மயம் பெயரளவிலான ஜனநாயகத்தைக்கூடச் சகித்துக் கொள்வதில்லை என்பதற்கான ஒப்புதல் வாக்குமூலமாக பிரணாப் முகர்ஜியின் புலம்பலை எடுத்துக் கொள்ளலாம்.

சில்லறை வர்த்தகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைவதை எதிர்ப்பதாக நாடகமாடி வரும் பா.ஜ.க. கும்பல், ஓய்வூதிய நிதித் துறையில் அந்நிய நிறுவனங்கள் நுழைய அனுமதிப்பதை வரவேற்று உள்ளது.  மைய அரசின் முழுக் கட்டுப்பாட்டில் இருந்துவந்த ஓய்வூதியத் துறையைத் தனியார்மயமாக்குவதற்கும், அதில் அந்நிய மூலதனத்தை அனுமதிப்பதற்கும் ‘பிள்ளையார் சுழி’ போட்டுக் கொடுத்ததே பா.ஜ.க.வின் தலைமையில் இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிதான் என்பதை இச்சமயத்தில் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

புதிய ஓய்வூதியத் திட்டம் : சட்டபூர்வ வழிப்பறிக் கொள்ளை !இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கும் நடைமுறை ஆங்கிலேயர்களின் ஆட்சியிலேயே தொடங்கிவிட்டது.  1935-இல், காலனிய ஆட்சிக் காலத்திலேயே அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் அளிப்பது சட்டபூர்வமாக்கப்பட்டது.  1947க்குப் பின், ஓய்வூதியம் என்பது தொழிலாளர்களின் சட்டபூர்வ உரிமை என்பதை உறுதிசெய்து, உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்தது.  எனினும், ‘சுதந்திர’ இந்தியாவில் இந்திய உழைக்கும் மக்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் அளிக்கும் கொள்கையோ, சட்டங்களோ நடைமுறையில் இருந்ததே இல்லை.  மைய மற்றும் மாநில அரசு ஊழியர்கள், ரயில்வே துறை, இந்திய ரிசர்வ் வங்கி, இந்திய அரசு வங்கி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த ஊழியர்கள்  தொழிலாளர்கள் ஆகியோருக்கு மட்டும்தான் ஓய்வூதியம் அளிக்கும் நடைமுறை பல ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வந்தது.  1990  களில்தான் அரசு வங்கிகள், எல்.ஐ.சி., பாரத மிகுமின் நிறுவனம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவன ஊழியர்கள்  தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கும் திட்டம் நடைமுறைக்கு வந்தது.

தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களை எடுத்துக் கொண்டால், அவற்றுள் சில நிறுவனங்கள் மட்டும்தான் தமது தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கும் நடைமுறையைப் பின்பற்றி வருகின்றன.  ஆனால், அந்நிறுவனங்களின் ஓய்வூதியத் திட்டத்தைச் சட்டபூர்வ உரிமையாகக் கோர முடியாது.  சிறுசிறு தொழிற்சாலைகளைச் சேர்ந்த அமைப்புசாரா தொழிலாளர்களை எடுத்துக் கொண்டால், அவர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் எதுவும் கிடையாது என்பது ஒருபுறமிருக்க,  அவர்களுக்கு முதலாளிகள் தம் பங்காக அளிக்க வேண்டிய வருங்கால வைப்பு நிதியைக்கூட முறையாகச் செலுத்துவது கிடையாது.  உதிரித் தொழிலாளர்கள், விவசாயக் கூலிகள், கடைச் சிப்பந்திகள் போன்ற அடிமட்டத் தொழிலாளர்களின் எதிர்காலத்திற்கான எந்தவிதமான சமூக நலத் திட்டங்களும் நடைமுறையில் இருந்ததில்லை.  பல கோடிக்கணக்கான இந்திய உழைக்கும் மக்கள் தங்களின் முதுமை காலத்தில் எவ்வித சமூகப் பாதுகாப்பும் அற்ற அவல நிலையில் இன்றும் இருத்தி வைக்கப்பட்டிருக்கும் சித்திரம் இதுதான்.

புதிய ஓய்வூதியத் திட்டம் : இருப்பதையும் பறிக்கும் சாத்தான்!

இருப்பதையும் பறிப்பது என்பதையே நோக்கமாகக் கொண்ட தனியார்மய  தாராளமயக் கொள்கைகளை அமல்படுத்தி வரும் இந்திய அரசு, ஏற்கெனவே ஓய்வூதியம் பெற்று வரும் அரசு ஊழியர்களிடமிருந்து அந்த உரிமையை 2003 ஆம் ஆண்டின் இறுதியில் ஒரேயொரு நிர்வாக உத்தரவின் மூலம் பறித்தது.  ஜனவரி 1, 2004 க்குப் பிறகு மைய அரசுப் பதவிகளில் சேரும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது.  அதற்குப் பதிலாக அந்த ஊழியர்களின் சம்பளத்திலிருந்து பிடிக்கப்படும் 10 சதவீத வருங்கால வைப்பு நிதிக்கு இணையான தொகையை அவர்களின் வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் மைய அரசு தன் பங்காகச் செலுத்தும் என்ற புதிய ஓய்வூதியத் திட்டத்தை பா.ஜ.க.வின் தலைமையிலிருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவித்தது.

எனினும், இப்புதிய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து இந்திய இராணுவத்துக்கும், துணை இராணுவப் படைகளுக்கும் விலக்கு அளிக்கப்பட்டு, அவர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டம் தொடரும் எனச் சலுகை காட்டப்பட்டது. தனியார்மயம் என்ற கொள்ளையைப் பாதுகாக்கும் சட்டபூர்வ குண்டர்படைக்கு எஜமானர்கள் வீசியெறிந்துள்ள எலும்புத் துண்டுதான் இந்தச் சலுகை.  மைய அரசைப் பின்பற்றி பெரும்பாலான மாநில அரசுகளும் ஜனவரி 1, 2004க்குப் பிறகு சேரும் தமது ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க முடியாது எனக் கைவிரித்தன.

ஓய்வூதியத் திட்டத்தில் மட்டுமின்றி, அரசு மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி மற்றும் ஓய்வூதிய நிதியைக் கையாளுவதிலும் சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்பட்டன.  அரசு மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களிடமிருந்து மாதாமாதம் பிடிக்கப்படும் வருங்கால வைப்பு நிதியை நிர்வகிக்கும் பொறுப்பு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வாரியம் என்ற மைய அரசு நிறுவனத்திடமும், அந்த நிதியை முதலீடு செய்யும் பொறுப்பு இந்திய அரசு வங்கியிடமும் இருந்து வந்தது.  இந்நிறுவனங்கள் இந்த நிதியைத் திறம்பட முதலீடு செய்யும் ஆற்றல் கொண்டதாக இல்லை என்ற காரணத்தைக் கூறி, வருங்கால வைப்பு நிதியை முதலீடு செய்யும் பொறுப்பில் ஐ.சி.ஐ.சி.ஐ., கோடக் மஹிந்திரா வங்கி, ரிலையன்ஸ் கேபிடல், ஹெச்.டி.எஃப்.சி. ஆகிய தனியார் முதலீட்டு நிதி நிறுவனங்களையும் நுழைய அனுமதித்தது, பா.ஜ.க. கூட்டணி அரசு.

புதிய ஓய்வூதியத் திட்டம் : சட்டபூர்வ வழிப்பறிக் கொள்ளை !இந்தியாவில் ஏறத்தாழ 46 கோடி தொழிலாளர்கள் அமைப்புசாரா துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.  இதோடு ஒப்பிடும்பொழுது அரசுத்துறை மற்றும் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றிவரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை சுண்டைக்காய்தான்.  2004 ஜூனில் ஆட்சிக்கு வந்த தேசிய முற்போக்கு கூட்டணி அரசு, இந்தப் பல கோடிக்கணக்கான அமைப்புசாரா தொழிலாளர்களையும் புதிய ஓய்வூதியத் திட்டத்தில்  இழுத்துப் போடும் நோக்கத்தோடு அத்திட்டத்தை விரிவுபடுத்தி, அதற்குத் தேசிய ஓய்வூதியத் திட்டம் என்ற கவர்ச்சிகரமான பெயரையும் சூட்டியது.  மைய  மாநில அரசு ஊழியர்கள் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்து கொள்வது கட்டாயமென்றும், மற்ற துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் தம் விருப்பப்படி இதில் இணைந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியை அரசின் பத்திரங்கள் மற்றும் முதலீட்டுத் திட்டங்களில் மட்டும்தான் முதலீடு செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடும் தளர்த்தப்பட்டது.  இதன்படி, தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணையும் அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனத் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியை அரசு நிறுவனங்கள் மற்றும் பத்திரங்களில் மட்டுமின்றி, பங்குச் சந்தையிலும், தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் வெளியிடும் பத்திரங்களிலும் முதலீடு செய்யும் தாராளமயம் சேமநல நிதி நிர்வாகத்தில் புகுத்தப்பட்டது.

இப்புதிய ஓய்வூதியத் திட்டத்தைச் சட்டபூர்வமாக்கும் நோக்கத்தோடு, ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது.  இம்மசோதாவை நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக முன்வைக்க முயன்று வரும் மன்மோகன் சிங் கும்பல், இன்னொருபுறம் இத்துறையில் தற்பொழுது 26 சதவீத அளவிற்கு அந்நிய முதலீட்டை அனுமதிக்கவும்; நாடாளுமன்றத்தின் ஒப்பதலைப் பெறாமலேயே, ஒரு நிர்வாக ஆணை மூலம் அந்நிய முதலீட்டு வரம்பை அதிகரித்துக் கொள்ளவும்;  இத்துறையில் அந்நியக் கூட்டோடு நுழையும் தனியார் நிதி முதலீட்டு நிறுவனங்கள் பல்வேறு விதமான ஓய்வூதியத் திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.  இவையனைத்தும் நிறைவேறும்பொழுது, தொலைபேசித் துறையில் தனியாரை அனுமதித்த பிறகு அரசின் தொலைபேசி நிறுவனத்திற்கு எந்தக் கதி ஏற்பட்டதோ, அதே போன்ற நிலை  தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டங்களையும், அவர்களின் வருங்கால வைப்பு நிதியையும் பாதுகாத்து வரும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வாரியத்திற்கும் ஏற்படும்.

 

பற்றாக்குறை என்ற பழைய பல்லவி

மக்களுக்கு வழங்கப்படும் மானியங்களை வெட்டுவதற்கு என்ன காரணத்தை அரசு முன்வைத்து வருகிறதோ, அதே காரணத்தைத்தான், அதாவது அரசின் நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பது என்பதைத்தான் பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிடுவதற்கும், ஓய்வூதிய நிதித் துறையில் தனியார்மயத்தைப் புகுத்துவதற்கும் காரணமாக அரசு முன்வைத்து வருகிறது.  ஆனால், ஆறாவது ஊதியக் கமிசனின் சார்பாக அமைக்கப்பட்ட காயத்ரி கமிட்டி, “மைய அரசினால் வழங்கப்படும் மொத்த ஓய்வூதிய நிதியில் 54 சதவீதம் இராணுவச் சிப்பாய்களுக்கும் அதிகாரிகளுக்கும் செல்லுகிறது.  அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கும்பொழுது, அரசின் ஓய்வூதியச் செலவு எப்படிக் குறையும்?” என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.  மேலும், இந்தியாவிலேயே மிகப் பெரும் எண்ணிக்கையில் தொழிலாளர்களைக் கொண்டுள்ள இந்திய ரயில்வே, தனது தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் அளிப்பதற்கு ஒவ்வொரு ஆண்டும் தனது பட்ஜெட்டிலேயே தனியாக நிதி ஒதுக்கீடு செய்து வரும்பொழுது, அரசிற்கு ஓய்வூதிய நிதிச் செலவு கட்டுக்கடங்காமல் அதிகரித்துச் செல்வதற்கு வாய்ப்பில்லை; அரசு தனது ஊழியர்களுக்கு வழங்கி வரும் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் 1960  இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.7 சதவீதமாக இருந்தது.  இது, 200405  இல் 1.8 சதவீதமாகக் குறைந்துவிட்டது.  பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்திவந்தால்கூட, இச்செலவு 202728  இல் 0.54 சதவீதமாகக் குறைந்துவிடும் என்றும் காயத்ரி கமிட்டி சுட்டிக்காட்டியிருக்கிறது.

எனவே, அரசின் பற்றாக்குறையை குறைப்பது என்பது புதிய ஓய்வூதியத் திட்டத்தின் நோக்கமல்ல.  அரசு தனது சட்டபூர்வ பொறுப்பைக் கைகழுவுவதும்;  தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து மாதாமாதம் பிடிக்கப்படும் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புமிக்க வருங்கால வைப்பு நிதியைப் பங்குச் சந்தையில் போட்டுச் சூதாடத் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உரிமை அளிப்பதும்தான் இதன் பின்னுள்ள காரணம்.

வருங்கால வைப்பு நிதி சேமிப்பு பறிபோகும் அபாயம்

இப்புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்கப்படும் ஒவ்வொரு தொழிலாளியின் சம்பளத்திலிருந்தும் பிடிக்கப்படும் வருங்கால வைப்பு நிதி தனியார் முதலீட்டு நிறுவனங்களிடம் செலுத்தப்படும்.  அந்நிறுவனங்கள் இச்சேமிப்பை அரசின் பத்திரங்களில் மட்டுமின்றி, பங்குச் சந்தையிலும், கார்ப்பரேட் நிறுவனங்கள் வெளியிடும் பத்திரங்களிலும் முதலீடு செய்யும்.  இதன் மூலம் கிடைக்கும் இலாபமோ/நட்டமோ, அது ஒவ்வொரு தொழிலாளியின் சேமிப்புக் கணக்கிலும் சேர்க்கப்படும்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தில் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியை எந்தெந்த திட்டங்களில் முதலீடு செய்வது என்பது குறித்து கருத்துக் கூறும் உரிமை தொழிற்சங்கங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.  புதிய ஓய்வூதியத் திட்டத்திலோ ஓய்வூதிய நிதியை நிர்வகிக்கும் தனியார் முதலீட்டு நிறுவனங்கள் அறிவிக்கும் முதலீட்டுத் திட்டங்களில் ஏதாவதொன்றைத் தொழிலாளி தானே தீர்மானித்துக் கொள்ள வேண்டும்; அல்லது, அவர்களின் சார்பில் முதலீட்டு நிறுவனங்களே முதலீடு செய்து கொள்ளும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.  அதாவது, தன்னுடைய ஓய்வூதிய நிதியைக் கொள்ளையிடும் உரிமையை எந்த முதலாளிக்கு வழங்குவது என்று தீர்மானிக்கும் உரிமை தொழிலாளிக்கு வழங்கப்பட்டுள்ளது.  இந்தக் கொள்ளையிலிருந்து தப்பிக்கும் உரிமையோ, தனது ஓய்வூதிய நிதியை வேறுவிதமாகப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமையோ தொழிலாளிக்கு கிடையாது.

இலாபம் கிடைத்தாலும், நட்டமடைந்தாலும், ஒவ்வொரு தொழிலாளியும், தான் ஓய்வு பெறும் வரை மாதாந்திர நிதியைச் செலுத்திக் கொண்டேயிருக்க வேண்டுமே தவிர, இத்திட்டத்திலிருந்து விலகிச் சென்றுவிட முடியாது.  திட்டத்திலிருந்து விலகுவது மட்டுமல்ல, ஒருவர் தனக்குத் தேவைப்படும் நேரத்தில் தனது வருங்கால வைப்பு நிதி சேமிப்பிலிருந்து பணத்தை எடுப்பதுகூட அவ்வளவு எளிதான விவகாரமல்ல. மேலும், ஒரு தொழிலாளி வேலையிழந்து, அதனால் மாதந்தோறும் செலுத்த வேண்டிய சந்தா தொகையைச் செலுத்தத் தவறும் பட்சத்தில் அவரின் சேமிப்பு முழுவதையும் கம்பெனியே முழுங்கிவிடும் அபாயமும் இத்திட்டத்தில் உள்ளது.

தொழிலாளர்கள் ஓய்வுபெறும்பொழுது, அவர்களின் சேமிப்பு சந்தையில் முதலீடு செய்யப்பட்டு ஈட்டித் தந்திருக்கும் வருமானத்திலிருந்து 60 சதவீதம் மொத்தமாகத் திருப்பித் தரப்படும்; மீதி 40 சதவீதம் அவர்களுக்குக் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியம் வழங்குவதற்காக காப்பீடு நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும்.  அதேசமயம், ஒரு தொழிலாளி தான் ஓய்வு பெறுவதற்கு முன்பாக இத்திட்டத்திலிருந்து விலகிக் கொள்ள நேர்ந்தால், அவரது சேமிப்பிலிருந்து 80 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு, காப்பீடு நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும்.  இந்தக் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியம் என்பது சந்தை நிலவரத்தைப் பொறுத்து மாறக்கூடியதே தவிர, உத்தரவாதமானது அல்ல.  சந்தை நிலவரம் குறைந்தபட்ச ஓய்வூதியம் தரக்கூடிய நிலையில் இல்லை என்றால், ஓவ்வொரு தொழிலாளியும் தனக்குக் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியம் அளிப்பதற்காகப் பிடிக்கப்படும் முதலீட்டை அதிகரித்துக் கொண்டே செல்ல நேரிடும்.

இவையெல்லாம், பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களைச் சந்திக்காமல் நிதானமாக வளர்ந்து கொண்டிருந்தால்தான் கைக்குக் கிட்டும்.  பங்குச் சந்தை தலைகுப்புறக் கவிழ்ந்துவிட்டாலோ, பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்ட தொழிலாளியின் வருங்கால வைப்பு நிதி கடலில் கரைத்த பெருங்காயமாகக் காணாமல் போகும்.  இப்படிப்பட்ட அபாயம் நடக்குமா என்ற கேள்விக்கே இங்கு இடமில்லை.  இப்படி நடப்பது தவிர்க்க முடியாதது என்பதைத்தான் முதலாளித்துவத்தின் குருபீடமான அமெரிக்காவின் அனுபவங்கள் நிரூபித்திருக்கின்றன.

அமெரிக்க முதலீட்டு நிறுவனங்கள் ஓய்வூதிய நிதியைப் பங்குச் சந்தையில் கொட்டியதால்,  1980க்கும் 2007க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் அமெரிக்கப் பங்குச் சந்தை எக்குத்தப்பாக வீங்கியது.  இந்த வீக்கத்தால், தொழிலாளி வர்க்கத்தைவிட, வேலியிடப்பட்ட நிதி நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் தரகு நிறுவனங்கள் போன்றவைதான் பலனடைந்தன.  குறிப்பாக, தனியார் முதலீட்டு நிறுவனங்கள் மட்டும் 2000 க்குப் பிந்தைய பத்து ஆண்டுகளுக்குள் ஓய்வூதிய நிதியைப் பயன்படுத்தி 1,700 கோடி அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமாக (85,000 கோடி ரூபாய்) இலாபம் ஈட்டின.  சப்  பிரைம் நெருக்கடியால் அமெரிக்கப் பங்குச் சந்தையின் வீக்கம் வெடித்தபொழுது, ஏறத்தாழ 3 இலட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் (ஒரு கோடியே ஐம்பது இலட்சம் கோடி ரூபாய்) பெறுமானமுள்ள அமெரிக்கத் தொழிலாளி வர்க்கத்தின், நடுத்தர வர்க்கத்தின் ஓய்வூதியச் சேமிப்பு சுவடே தெரியாமல் மறைந்து போனது.

இது போன்ற நிலைமை இந்தியாவிலும் உருவாகும் என்பதை எதிர்பார்க்கும் ஆளும் கும்பல், அதற்கேற்றபடியே புதிய ஓய்வூதியச் சட்டத்தில், “தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச உத்தரவாதமான மாதாந்திர ஓய்வூதியம் வழங்க முடியாது; சந்தையில் திடீர் இழப்புகள் ஏற்பட்டால், சேமிப்புத் தொகையில் ஒரு சிறு பகுதியைத் திருப்பித் தருவதற்குக்கூட உத்தரவாதம் தர முடியாது” என நிபந்தனைகளை விதித்திருக்கிறது.

தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து வருங்கால வைப்பு நிதியைப் பிடித்தம் செய்து, அதனை அரசிடம் கட்டாமல், அந்நிதியில் பல்வேறு முறைகேடுகளையும் கையாடல்களையும் தனியார் முதலாளிகள் செய்துவருவது ஏற்கெனவே அம்பலமாகிப் போன உண்மை.  இனி இப்படிப்பட்ட மோசடிப் பேர்வழிகளும் தனியார் முதலீட்டு நிறுவனங்களும் கூட்டுக் களவாணிகளாகச் செயல்படுவதற்கான வாய்ப்பை இந்தப் புதிய ஓய்வூதியத் திட்டம் திறந்துவிட்டுள்ளது.

இத்தனியார் முதலீட்டு நிறுவனங்கள் கணக்கு வழக்குகளை ஒழுங்காக வைத்திருப்பார்களா, தொழிலாளர்கள் ஓய்வு பெறும்பொழுது அவர்களின் சேமிப்பை முறையாகத் திரும்ப ஒப்படைப்பார்களா எனக் கேட்டால், அவர்களைக் கண்காணிப்பதற்குத்தான் ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணையத்தை உருவாக்கியிருப்பதாகக் கூறுகிறார்கள்.  வேலிக்கு ஓணாண் சாட்சியாம்.  தொலை தொடர்புத் துறையிலும் காப்பீடு துறையிலும் மின் துறையிலும் அமைக்கப்பட்டுள்ள ஒழுங்காற்று ஆணையங்கள் அத்துறைகளில் நுழைந்துள்ள தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளையைச் சட்டபூர்வமாக்கும் திருப்பணியைத்தான் செய்து வருகின்றன.  ஒவ்வொரு தொழிலாளியிடமிருந்தும் மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்பு நிதியை ஒரு இருபது, முப்பது ஆண்டுகளுக்குத் தானே வைத்துக் கொண்டு, தமது விருப்பம் போலப் பயன்படுத்திக் கொள்ளத் தனியார் முதலீட்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளித்திருப்பதை, 2 ஜி  ஐ விஞ்சும் ஊழலாகத்தான் சொல்ல முடியும்.

ஓய்வூதியம்: முதலாளியின் கொடையா, தொழிலாளியின் உரிமையா?

அரசும் முதலாளிகளும் தமது ஊழியர்களுக்கு வழங்கும் ஓய்வூதியம் உள்ளிட்ட பிற பணச் சலுகைகளை, தாங்கள் மனமுவந்து அளிக்கும் கொடையாக, தங்களின் இலாபத்தின் ஒரு பகுதியைத் தொழிலாளர்களுக்குத் தருவதாகக் காட்டிக் கொள்கிறார்கள்.  இதன் காரணமாகவே, அரசும் முதலாளிகளும் தங்களுக்கு ஏற்படும் பற்றாக்குறை அல்லது நட்டம் போன்ற காரணங்களைக் காட்டி, தொழிலாளிகள் போராடி பெற்ற இந்த உரிமைகளைப் பறித்துவிட முயலுகிறார்கள்.

ஒரு தொழிற்சாலையிலோ அல்லது அலுவலகத்திலோ எட்டு மணி நேரம், பத்து மணி நேரம் என வேலை பார்க்கும் தொழிலாளிகளுக்கு, முதலாளிகள் அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளும் முழு உழைப்புச் சக்திக்கு உரிய கூலியை ஒருபோதும் தருவதில்லை.  தொழிலாளிகள் வாழ்வதற்குப் போதுமான, அதாவது தொழிலாளி வர்க்கம் தம்மை மறுஉற்பத்தி செய்து கொள்ளுவதற்கு எவ்வளவு தேவைப்படுமோ, அதனை மட்டுமே கூலியாகத் தருகிறார்கள்.  ஒரு தொழிற்சாலையில் நாளொன்றுக்கு எட்டு மணி நேரம் வேலை செய்யும் தொழிலாளி தன்னை மறு உற்பத்தி செய்து கொள்வதற்கு தேவையான கூலியை இரண்டு மணி நேர உழைப்பின் மூலம் பெற்றுவிட முடியும் என்றால், மீதி ஆறு மணி நேரமும் அத்தொழிலாளி இலவசமாக முதலாளிக்குத் தனது உழைப்புச் சக்தியை வழங்குமாறு நிர்பந்திக்கப்படுகிறார்.  முதலாளிக்குக் கிடைக்கும் இலாபம், நில வாடகை, வரிகள் இத்தியாதி என்னும் எல்லாவிதமான உபரி மதிப்பும் கூலி கொடுக்கப்படாத இந்த உழைப்பிலிருந்துதான் முதலாளி பெற்றுக் கொள்கிறான் என மார்க்ஸ் முதலாளித்துவச் சுரண்டலின் பின்னுள்ள இந்த இரகசியத்தை நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பே அம்பலப்படுத்தியிருக்கிறார்.

எனவே, ஓய்வூதியம் என்பது தொழிலாளிகளுக்குத் தரப்படும் தானமல்ல.  அது அவனிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பறிக்கப்பட்ட கொடுபடா கூலியின் ஒரு பகுதிதான்.  இதனைத் தர மறுப்பதென்பது முதலாளித்துவப் பயங்கரவாதம்தான்.  புதிய ஓய்வூதியச் சட்டத்தைக் கொண்டு வந்து அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதிய உரிமையைப் பறித்ததன் மூலம், தனியார் கார்ப்பரேட் முதலாளிகளும் இன்ன பிற முதலாளிகளும் தொழிலாளிகளுக்கு ஓய்வூதியம் கொடுக்கும் சட்டபூர்வமான பொறுப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள வழியேற்படுத்திக் கொடுத்திருக்கிறது, மன்மோகன் சிங் கும்பல்.  ஓடிஓடித் தேய்ந்து போன இயந்திரங்களைக் கழித்துக் கட்டிக் குப்பையில் வீசியெறிவது போல, உழைத்து உழைத்து இளைத்துப் போகும் தொழிலாளர்களை, அவர்களின் முதுமைக் காலத்தில் எவ்விதச் சமூகப் பாதுகாப்பும் அற்ற நிர்க்கதியான நிலையில், அபாயத்தில் தள்ளிவிடும் முதலா ளித்துவ வக்கிரம்தான் இப்புதிய ஓய்வூதியத் திட்டம்.

போலி கம்யூனிஸ்டுகள் தவிர்த்த பிற எதிர்க்கட்சிகள் அனைத்தும் இப்புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக வாயளவில்கூட எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.  போலி கம்யூனிஸ்டுகளின் எதிர்ப்போ நாடாளுமன்றம் என்ற நான்கு சுவற்றுக்குள்ளேயே முடங்கிவிட்டது.  நாடெங்குமுள்ள அக்கட்சிகளின் தொழிற்சங்கங்களோ ஆலை வாயிலில் ஒழிக கோஷம் போடுவதற்கு அப்பால் தாண்டிச் செல்லவில்லை.  இந்த சம்பிரதாயமான எதிர்ப்புகளால் தனியார்மயம்   தாராளமயத்தை வீழ்த்த முடியாது என்பதை கடந்த இருபது ஆண்டு கால அனுபவம் உணர்த்தியிருக்கிறது.  எனவே, தொழிலாளி வர்க்கம் ஒரே அணியாகத் திரண்டு போலிகளின் இந்தச் சடங்குத்தனமான எதிர்ப்பை மீறி, சம்பிரதாயமான, சட்டத்திற்கு உட்பட்ட போராட்ட முறைகளை மீறிப் போராடினால் மட்டுமே, புதிய ஓய்வூதியத் திட்டம் என்ற இந்த முதலாளித்துவப் பயங்கரவாதத்தைத் துரத்தியடிக்க முடியும்.

– புதிய ஜனநாயகம், ஜனவரி – 2012

குஜராத்: மோடியின் கொலைக்களம்!

மகாராஷ்டிரா மாநிலம்  மும்பய் நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான், அவரது நண்பர் ஜாவேத் ஷேக் என்ற பிரானேஷ் பிள்ளை மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று குஜராத் போலீசாலும், மைய உளவுத்துறையாலும் குற்றம் சாட்டப்படும் அம்ஜத் அலி, ஜிஷன் ஜோஹர் அப்துல் கனி ஆகிய நால்வரும் கடந்த ஜூன் 15, 2004 அன்று குஜராத் மாநிலத் தலைநகர் அகமதாபாத் நகரின் புறநகர்ப் பகுதியில் துப்பாக்கி குண்டுகள் துளைக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தனர். “இந்நால்வரும் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ  தொய்பா அமைப்பினைச் சேர்ந்தவர்கள்; அவர்கள் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைக் கொல்லும் பயங்கரவாத நோக்கத்தோடு குஜராத்துக்கு வந்துகொண்டிருந்தபொழுது அகமதாபாத் நகரக் குற்றப்பிரிவு போலீசாரால் வழிமறிக்கப்பட்டனர்.  அப்பொழுது நடந்த மோதலில்தான் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக” குஜராத் மாநில அரசு அறிவித்தது.  அச்சம்பவம் நடந்து ஏழாண்டுகள் கழிந்துவிட்ட நிலையில், அது ஒரு போலிமோதல் கொலைதான் என்பதனை குஜராத் உயர்நீதி மன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு கடந்த நவம்பர் மாதம் அறிவித்திருக்கிறது.

குஜராத்: மோடியின் கொலைக்களம்!இம்‘மோதல்’ கொலை சம்பவம் நடந்தவுடனேயே, அதன் உண்மைத் தன்மை குறித்து மனித உரிமை அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பினர்.  “தனது மகள் தீவிரவாதி கிடையாது; ஏழ்மையில் வாடியபோதிலும் படித்து ஆசிரியராக வேண்டும் எனக் கனவு கண்ட பெண்; குடும்பத்தின் வறுமை காரணமாகக் கல்லூரியில் படித்துக்கொண்டே வேலைக்கும் போய்க்கொண்டிருந்த அப்பாவிப் பெண்” என அன்றே கதறினார்  இஷ்ரத் ஜஹானின் தாய் ஷமிமா.

செப். 2009இல் இவ்வழக்கை விசாரித்த அகமதாபாத் பெருநகரக் குற்றவியல் நீதிமன்றம், இறந்துபோன அந்நால்வரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் தடயவியல் அறிக்கை ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு, “இதுவொரு போலிமோதல் கொலை; அந்நால்வரும் மோதல் நடந்ததாகச் சொல்லப்படும் நாளுக்கு முதல்நாளே மிகவும் அருகாமையிலிருந்து சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர்” என்று தீர்ப்பளித்தது. மோடி அரசோ அந்நீதிமன்றம் தனது வரம்பை மீறி நடந்துகொண்டுள்ளதாகக் கூறி, அந்நீதிமன்ற முடிவை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டது.

இதனிடையே இஷ்ரத் ஜஹானின் தாய் ஷமிமாவும், இஷ்ரத் ஜஹானோடு சேர்த்துக் கொல்லப்பட்ட ஜாவேத் ஷேக் என்ற பிரானேஷ் பிள்ளையின் தந்தை கோபிநாத் பிள்ளையும் இப்படுகொலை குறித்து சி.பி.ஐ. விசாரணை கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்று இது உண்மையான மோதல் கொலைதானா என்று ஆராய்வதற்காக, தனது கண்காணிப்பின் கீழ் ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்தது, குஜராத் உயர் நீதிமன்றம்.

குஜராத்: மோடியின் கொலைக்களம்!இச்சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்படுவதை ரத்து செய்யக் கோரி மோடி அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது; அதனை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. குஜராத் உயர் நீதிமன்றம் நியமித்த புலனாய்வுக் குழு இம்‘மோதல்’ கொலை தொடர்பாக 240 சாட்சிகளை விசாரித்தது. அந்நால்வரும் ‘மோதலில்’ கொல்லப்பட்ட விதம் குறித்து குஜராத் போலீசு கூறியிருந்தவற்றை மூன்று முறை அப்படியே நிகழ்த்திப் பார்த்து, இது போலி மோதல் கொலைதான் என ஒருமனதாக முடிவுக்கு வந்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் இப்படுகொலையைத் திட்டமிட்டு நடத்திய 21 போலீசு அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யவும், இப்படுகொலையின் மற்ற பின்னணிகள் குறித்து விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளது, குஜராத் உயர் நீதிமன்றம்.

இஷ்ரத் ஜஹான் படுகொலை பற்றிய சிறப்புப் புலனாய்வுக் குழுவின் இந்த அறிக்கை, மோடி அரசை  மட்டுமல்ல, மத்திய அரசையும் அம்பலப்படுத்தியிருக்கிறது. ஏனென்றால், “அந்நால்வரும் லஷ்கர்  இ  தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள்; குஜராத்தில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த வருகிறார்கள்” என மோடி அரசுக்கு உளவுத் தகவல் கொடுத்தது ஐ.பி என்ற மைய அரசின் உளவுத்துறைதான். தற்போது இது போலி மோதல் கொலை என்று நிறுவப்பட்டுவிட்ட போதிலும், “நடந்ததது போலி மோதல் கொலையாக இருக்கலாம். ஆனால், கொல்லப்பட்டவர்கள் நால்வரும்  தீவிரவாதக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்ற மத்திய உளவுத்துறையின் தகவலை உயர் நீதிமன்றம் மறுத்துவிடவில்லை” என்று கூறி மோடி அரசுக்கு முட்டுக் கொடுக்கிறார், மைய அரசின் முன்னாள் உள்துறைச் செயலர் ஜி.கே.பிள்ளை.  அது மட்டுமின்றி, “இஷ்ரத் ஜஹான் பல விடுதிகளில் வெவ்வேறு ஆண்களோடு சேர்ந்து தங்கியிருந்ததாக”க் கூறி அப்பெண், ‘நடத்தை கெட்டவள்’ என்று சித்தரிப்பதன் மூலம் உளவுத்துறையை நியாயப்படுத்த நரித்தனமாக முயன்றுள்ளார்.

இஷ்ரத் ஜஹானின் குடும்பம் இப்பொழுது தானே மாவட்டத்திலுள்ள மும்ப்ரா பகுதியில் குடியிருந்து வருகிறது.  இஷ்ரத்தின் சகோதரன் அன்வரைத் தவிர, அவரின் குடும்பத்தைச் சேர்ந்த யாரும் பள்ளிப்படிப்பைக்கூட முடிக்க முடியாமல் இடையில் நின்றுவிட்டார்கள்.  அதற்கு அக்குடும்பத்தின் வறுமை மட்டும் காரணமில்லை.  குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கு முன்பாகவே, இஷ்ரத் முசுலீம் தீவிரவாதி என முத்திரை குத்தப்பட்டுவிட்டதால், அக்குடும்பம் சமூகத்துக்கு அஞ்சி ஒதுங்கி வாழும் நிலை ஏற்பட்டுவிட்டது. இஷ்ரத் சுட்டுக் கொல்லப்பட்ட பின் அவரது குடும்பம் கடந்த ஏழாண்டுகளில் ஐந்து முறை வீடு மாற வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகியிருக்கிறது.  “இத்தீர்ப்பு வரும் வரை நாங்கள் நரக வேதனையை அனுபவித்தோம்” என்கிறார், இஷ்ரத்தின் தாயார் ஷமிமா. வறுமையோடு அக்குடும்பம் போராடுவதைப் பார்த்தாலே, இஷ்ரத்தின் மீது அவதூறு செய்வதற்கு யாருக்கும் நா எழாது.

குஜராத்தில் நடக்கும் மோடியின் ஆட்சியை அலசிப் பாரத்தால்தான் இஷ்ரத் ஜஹான் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் பின்னணியையும், அதன் பரிமாணத்தையும் புரிந்துகொள்ள முடியும்.  குஜராத் இனப்படுகொலை நடந்துமுடிந்த அடுத்த ஆண்டு, மார்ச் 26, 2003 அன்று மோடிக்கு நெருக்கமானவராக இருந்தவரும், அவரது அரசில் வருவாய்த்துறை இணை அமைச்சராக இருந்தவருமான ஹரேன் பாண்டியா மர்மமான முறையில் நடுவீதியில் காருக்குள்ளே இறந்துகிடந்தார்.  ஹரேன் பாண்டியா முசுலீம் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாகப் பீதி கிளப்பிய மோடி அரசு, இவ்வழக்கு விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்து நடுநிலை நாடகம் ஆடியது.  இப்படுகொலை தொடர்பாகக் கைது செய்யப்பட்ட 12 முசுலீம்களையும் கீழமை நீதிமன்றம் பொடா சட்டப்படி தண்டித்தது.  எனினும், குஜராத் உயர் நீதிமன்றம், அந்த 12 பேர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை எனக் கூறித் தண்டனையை ரத்து செய்துவிட்டது.

குஜராத்: மோடியின் கொலைக்களம்!ஹரேன் பாண்டியாவைக் கொன்றது யார் என்ற மர்மம் இன்னும் விடுவிக்கப்படவில்லை என்றாலும், மோடி கும்பலுக்கு நெருக்கமானவனும் இராசஸ்தானிலுள்ள கிரிமினல் கும்பலைச் சேர்ந்தவனுமான சோராபுதீனுக்கும் பாண்டியாவின் கொலைக்கும் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகம் வலுவாக எழுந்துள்ளது.  2005 ஆம் ஆண்டில் இந்த சோராபுதீன் குஜராத்திற்குக் கடத்தி வரப்பட்டு, அம்மாநில போலீசாரால் போலி மோதலில் கொல்லப்பட்டான்.  சோராபுதீனோடு சேர்த்துக் கடத்தப்பட்ட அவரது மனைவி கவுசர் பீ விஷ ஊசி போட்டுக் கொல்லப்பட்டார்.  ஹரேன் பாண்டியா கொலையில் தொடர்புடையவனும்; சோராபுதீன், அவரது மனைவி கவுசர் பீ கொலைகளின் சாட்சியாகக் கருதப்படுபவனும் சோராபுதீனின் கூட்டாளியுமான துளசிராம் பிரஜாபதி 2006  ஆம் ஆண்டு குஜராத் மாநில எல்லையருகே போலி மோதலில் கொல்லப்பட்டான்.  சோராபுதீன் மற்றும் பிரஜாபதி கொலைகளைப் பற்றி அறிந்திருந்த மற்றொரு சாட்சி அஜம் கானைச் சுட்டுக் கொல்ல நடந்த முயற்சியில் அவன் நல்வாய்ப்பாகத் தப்பிவிட்டான்.  அதன் பின் அஜம் கான் உயிர் பயம் காரணமாக சோராபுதீன் கொலைவழக்கில் பிறழ்சாட்சியாக மாறினான்.  இந்தப் பின்னணியில்தான் இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நால்வரின் படுகொலையையும், அவர்கள் தீவிரவாதிகளாகச் சித்திரிக்கப்படுவதையும் வைத்துப் பார்க்க வேண்டும்.

இஷ்ரத் ஜஹான் படுகொலையைப் போலவே, சோராபுதீன் கொலையும் போலி மோதல்தான் என்பது நிரூபணமாகி, அதில் தொடர்புடைய டி.ஐ.ஜி. டி.ஜி. வன்சாரா, உதவி ஆணையர் நரேந்திர அமின் உள்ளிட்ட போலீசு அதிகாரிகள் விசாரணைக் கைதிகளாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  இந்த போலீசு அதிகாரிகள் கும்பல்தான் இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நால்வரையும் போலி மோதலில் கொன்றொழித்தது.  சோராபுதீன் கொலையில் தொடர்புடைய, மோடி அரசில் அமைச்சராக இருந்த அமித் ஷா பிணையில் வெளியே வந்துவிட்டாலும், அவர் குஜராத்திற்குள் நுழையக் கூடாது என உச்ச நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

ஹரேன் பாண்டியாவின் கொலையில் அரசியல் பின்னணி உள்ளது என்று அவரது தந்தையே குற்றம் சாட்டி வந்தார்.  ஹரேன் பாண்டியா, குஜராத் இனப்படுகொலை தொடர்பாக மக்கள் நீதிமன்றம் என்ற அமைப்பு நடத்திய விசாரணையில், அப்படுகொலையில் மோடிக்கு உள்ள பங்கு குறித்து சாட்சியம் அளித்ததுதான் பாண்டியாவின் கொலைக்கான அரசியல் பின்னணி.  இது போலவே, குஜராத் இனப்படுகொலை வழக்குகளுள் ஒன்றான நரோடா பாட்டியா வழக்கின் முக்கிய சாட்சியான நதீம் அகமது சையதும் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.  குஜராத் இனப்படுகொலையில் மோடி மற்றும் அவரது அரசின் பங்கு குறித்து அம்பலப்படுத்த முன்வந்துள்ள போலீசு அதிகாரிகளான சஞ்சீவ் பட், ராகுல் சர்மா உள்ளிட்ட பலரை, சாமானியர்களைப் போலப் போட்டுத் தள்ள முடியாததால், அந்த அதிகாரிகளைத் தற்காலிகமாகப் பதவி நீக்கம் செய்வது, பொய் வழக்குப் போடுவது என மிரட்டி வருகிறது, மோடி கும்பல்.

குஜராத்: மோடியின் கொலைக்களம்!குஜராத்தை ஆண்டு வரும் மோடியின் தலைமையிலான கிரிமினல் கும்பல் எத்தனை கொடூரமானது என்பதை இந்த விவரங்களிலிருந்து யாரும் புரிந்து கொள்ளலாம்; அக்கிரிமினல் கும்பலின் தலைவனான நரேந்திர மோடியை அப்பழுக்கில்லாத உத்தமனாகவும், பிரதமர் பதவிக்குத் தகுதியுள்ளவனாகவும் முன்னிறுத்து கின்ற பத்திரிகைகள், தரகு முதலாளித்துவக் கும்பலின் யோக்கியதையையும் புரிந்து கொள்ளலாம்.

இஷ்ரத் ஜஹான் என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டுவிட்டாள். அவள் தீவிரவாதியா, இல்லையா என்று விசாரணை நடக்கிறது.  மோடி என்ற இந்து மதவெறிக் கொலைகாரனைத் தண்டிப்பதற்குத் தேவைக்கும் அதிகமான ஆதாரங்கள் குவிந்து கொண்டிருக்கின்றன. தண்டனைதான் தள்ளிப்போய்க் கொண்டிருக்கிறது.

– புதிய ஜனநாயகம், ஜனவரி – 2012

இந்துத்வா கும்பலின் சுதேசிப் பித்தலாட்டம்!

ஒரே வகை வணிகமுத்திரை கொண்ட சில்லறை வர்த்தக நிறுவனங்களில் 100 சதவீதமும், பல்வேறு வணிகமுத்திரைகள் கொண்ட பொருட்களை விற்கும் சில்லறை வர்த்தகத்தில் 51 சதவீதமும் அந்நிய

நேரடி மூலதனத்தை அனுமதிப்பது எனக் கடந்த மாதம் மைய அமைச்சரவை முடிவெடுத்தது. இந்த முடிவை பா.ஜ.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, திருணாமுல் காங்கிரசும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கவே ஓரடி பின்வாங்கியிருக்கிறது, ஐ.மு.கூ. அரசு.

அனைத்துக் கட்சிகளும் ஒரே புரிதலுக்கு வரும் வரை, தனது முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக நாடாளுமன்றத்தில் அறிவித்த போதிலும், தற்போது ஒரு இடைத்தேர்தலை நாங்கள் விரும்பவில்லை என்பதுதான் முடிவைத் தள்ளி வைக்க காரணம் என்று வெளிப்படையாகக் கூறினார், பிரணாப் முகர்ஜி. இந்திய  அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தைப் போல, இதுவும் ஒரு வாக்கெடுப்புக்குப் போனால், எம்.பி.க்களைக் கொள்முதல் செய்து தந்துவிட்டு, சிறைக்கும் போவதற்கு இன்னொரு அமர்சிங் இல்லையென்பதுதான் இந்தப் பின்வாங்கலுக்குக் காரணம்.

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் காங்கிரசின் முடிவு, ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜ.க பெற்றெடுத்த குழுந்தையாகும்
கூட்டுக் களவாணிகள்

இம்முடிவைத் தள்ளிவைத்த சில நாட்களுக்குப் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மன்மோகன் சிங், உ.பி. உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் முடிந்த பிறகு, எல்லாக் கட்சிகளும் ஒன்றாக அமர்ந்து பேசி அதன் பின்னர் இதனை அமல்படுத்துவோம் என்று உறுதிபடக் கூறியிருக்கிறார். தனியார்மய, தாராளமயக் கொள்கைகளை அமல்படுத்தும் விசயத்தில், ஆளும் கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் மாறி மாறி நடத்தும் நாடகங்கள் அவர்களுக்கே புளித்துப் போகும் அளவுக்குப் பழகிவிட்டதால், ஒளிவுமறைவுக்குக்கூட இடமில்லாமல் போய்விட்டது. எனவேதான், தேர்தல் முடிந்தவுடன் அமல்படுத்துவோம் என்று தேர்தலுக்கு முன்னாலேயே அறிவிக்கிறார், மன்மோகன் சிங்.

இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, இன்னொருபுறம் அந்நிய மூலதனத்தைச் சில்லறை வணிகத்தில் அனுமதிப்பதன் சாதகங்கள் குறித்த பிரச்சாரம் பெரிய அளவில் நடந்து வருகிறது. இந்த விவாதமே பொருளற்றது. சாதக பாதக அம்சங்களைச் சீர்தூக்கிப் பார்த்து, அந்நிய மூலதனத்தை அனுமதிக்கலாமா, வேண்டாமா என்ற முடிவை அரசு எடுக்கப் போவதில்லை. அந்நிய நேரடி முதலீட்டினால் நன்மையை விடத் தீமைகள்தான் அதிகம் என்பதை நிறுவிவிட்டால், மன்மோகன் சிங் இதனை நிறுத்திவிடப் போவதும் இல்லை. உலக வர்த்தகக் கழகத்தின் நிபந்தனைக்குக் கட்டுப்பட்டு இந்த முடிவு அமல்படுத்தப்படுகிறது என்பதுதான் இப்பிரச்சினையின் மையப்பொருள். அது குறித்த கேள்வியை எழுப்பாமல் தவிர்த்துக் கொண்டே, பா.ஜ.க., போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கட்சிகள், சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு என்பதைத் தனியொரு பிரச்சினை போல விவாதிக்கின்றனர். இது மிகப்பெரும் மோசடியாகும்.

மைய வணிகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மாவே சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இந்த உண்மையைப் போட்டுடைத்துள்ளார். “இந்தியா உலக வர்த்தகக் கழகத்தில் உறுப்பினராக உள்ளதால், அதன் முடிவுகளுக்கு நாம் கட்டுப்பட்டுத்தான் தீரவேண்டும். அதுமட்டுமின்றி, இது போன்ற கேந்திரமான தொழில்களில் மேலை நாட்டு நிறுவனங்களை இந்தியா அனுமதிக்காவிட்டால், பொருளாதாரச் சிக்கலிலிருந்து அவர்கள் விடுபட முடியாது. அவர்களுடைய பொருளாதாரத்தைச் சார்ந்திருக்கும் நாமும் வளர முடியாது. சில்லறை வணிகத்தில் அந்நிய மூலதனத்தை அனுமதிப்பது குறித்த முடிவை ஏற்கெனவே எடுத்தாகி விட்டது. எந்தத் தேதியில் இருந்து நடைமுறைப்படுத்துவது என்பதில் மட்டுமே ஒத்த கருத்தை எட்டவேண்டியிருக்கிறது” என்று விளக்கினார்,  ஆனந்த் சர்மா.

உண்மை இவ்வாறிருக்க, பா.ஜ.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அந்நிய முதலீட்டைத் தடுப்பவர்கள் போல நடிக்கிறார்கள். ஆனால், தாராளமயக் கொள்கையில் பா.ஜ.க.வின் யோக்கியதையை ஊரறியும். 1998இல் இருந்து 2004 வரை ஆறாண்டுகள் அக்கட்சி ஆட்சி செய்தபோதுதான், இந்தத் தாராளமயத்துக்கான வலுவான அடித்தளங்கள் எல்லாம் போடப்பட்டன. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுதான் ஒரே வகை வணிகமுத்திரை கொண்ட சில்லறை வர்த்தகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைய அனுமதி தருவதற்கு முன்னோடியாக இருந்தது. அந்நிய மூலதனத்தை ஈர்ப்பதற்காக மாபெரும் “மால்கள்” உருவாக்கப்பட வேண்டி, அதற்குத்தக்கபடி நகர்ப்புற நில உச்ச வரம்பை தளர்த்தியதும் பா.ஜ.க.தான்.

பா.ஜ.க.வின் அமைச்சரவையில் வணிகத்துறை அமைச்சராயிருந்த முரசொலி மாறன் சில்லறை வணிகத்தில் அந்நிய மூலதனத்தை 100 சதவீதம் வரை அனுமதிக்க வேண்டும் என்ற திட்டத்தை முன்வைத்தார். 2004 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது தனது தேர்தல் அறிக்கையிலேயே, சில்லறை வணிகத்தில் 26% அந்நிய மூலதனத்தை அனுமதிக்க இருப்பதாகக் கூறியது பா.ஜ.க. ஒருபக்கம் எதிர்ப்பு நாடகம் நடந்து கொண்டிருக்கும் இவ்வேளையிலும் கூட மோடியும், பா.ஜ.க. வின் கூட்டாளியான நவீன் பட்நாயக்கும் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டுக்குத் தமது ஆதரவை தெரிவித்திருக்கின்றனர்.

பா.ஜ.க. இன்று அந்தர்பல்டி அடித்தாலும், நடித்தாலும் அக்கட்சியின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பது காங்கிரசு கும்பலுக்கு நன்றாகவே தெரியும். “சில்லறை வணிகத்தில் அந்நிய மூலதனம் என்பது நீங்கள் பெற்ற குழந்தை. நாங்கள் அதை வளர்க்கிறோம். அவ்வளவுதான்” என்றார் பிரணாப் முகர்ஜி.

அரசியல் ஆதாயத்துக்காகத்தான் என்றாலும், பா.ஜ.க. கொஞ்சம் வரம்பு மீறிச் செல்வதாக ஆளும் வர்க்கங்கள் கருதுவதால், ஊடகங்கள் பா.ஜ.க.வை ‘கொள்கை இல்லாத கட்சி’ என்றும், ஓட்டுக்காகத் தேசத்தின் நலனை அடகு வைப்பதாகவும், தொலைநோக்குள்ள சிந்தனையை இழந்துவிட்டதாகவும் வசைபாடுகின்றன. பா.ஜ.க. தலைவர்களிடம்  அவர்கள் கடந்த காலங்களில் தாராளமயத்துக்கு ஆதரவாகப் பேசியதையெல்லாம் சுட்டிக்காட்டி விளக்கம் கேட்கின்றன. ஊடகங்களின் கிடுக்கிப்பிடியில் சிக்கி பா.ஜ.க.வினர் திணறுகிறார்கள்.  ஆளும் வர்க்கத்தை அதிகமாகப் புண்படுத்திவிட்டோமோ என்ற அச்சமும் பா.ஜ.க. வைப் பிடித்தாட்டுகிறது. அதனால்தான் ‘வால்மார்ட்டைக் கொளுத்துவேன்’ என்று உமாபாரதி கொக்கரித்ததும், அதில் தமக்கு உடன்பாடில்லை என்று பா.ஜ.க. தலைமை அவசரமாக தனது நிலையைத் தெளிவுபடுத்தியது.

காங்கிரசின் கூட்டணிக் கட்சியான திருணாமுல் காங்கிரசின் யோக்கியதையோ தனிக்கதை. எஃப்.ஐ.சி.சி.ஐ. என்ற தரகு முதலாளிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும், சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டைத் தீவிரமாக ஆதரித்தவருமான அமித் மித்ராவை நிதி அமைச்சராக வைத்துக்கொண்டு, மேற்கு வங்கத்தில் தாராளமயத்தைத் தாராளமாக அனுமதித்து வரும் மம்தா, சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை தீவிரமாக எதிர்ப்பதாக நடிக்கிறார். ஜெயலலிதாவைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை.

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதா, வேண்டாமா என்று முடிவு செய்து கொள்ளும் உரிமையை மாநிலங்களுக்கு வழங்கியிருப்பதால், விருப்பமில்லாத மாநிலங்கள் தடை செய்து கொள்ளலாம். ஆனால், அந்நிய மூலதனத்தை விரும்பும் மாநிலங்களும் அதனைப் பெற முடியாமல் தடுப்பது என்ன நியாயம் என்று வாதாடுகிறது காங்கிரசு கட்சி.

மாநிலங்களின் உரிமை மீது காங்கிரசுக்கு எழுந்துள்ள இந்த திடீர்க்காதல், மாநிலப் பட்டியலில் இருந்த பல அதிகாரங்களையும் மத்திய அரசு பிடுங்கிய போது எழவில்லை. கூடங்குளம் அணுமின் நிலையம் வேண்டாம் என முடிவெடுக்கும் உரிமை தமிழகத்துக்கு இல்லை எனக் கூறும் இவர்கள்தான், சில்லறை வணிகப் பிரச்சனையில் மாநிலங்களுக்கு உரிமை வழங்கியிருப்பதாகப் பேசுகிறார்கள். ஒட்டகம் தலை நுழைக்க இடம் கொடுத்துவிட்டால், அது உடலை நுழைத்துக் கொள்ளும் என்ற நம்பிக்கைதான் மாநிலங்களுக்கு வழங்கப்படும் இந்த உரிமைக்கு அடிப்படையாகும்.

அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் பொருளாதார நெருக்கடியில் இடுப்பொடிந்து போய்க் கிடக்கையில், அவற்றைத் தூக்கி நிறுத்த வேண்டுமானால் அந்நாடுகளின் நிதிமூலதனத்தை இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளின் சந்தையில் தடையின்றி அனுமதிக்க வேண்டும். அதற்காகத்தான் வால்மார்ட்டின் கையாளான ஹிலாரி கிளிண்டன் நேரடியாக இங்கு வந்து இந்திய அரசையும், ஆளும் வர்க்கத்தையும் நிர்பந்தித்துவிட்டுச் சென்றுள்ளார்.

இந்தியாவில்  சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு இந்த ஆண்டு 49 சதவீதம் மட்டுமே அனுமதிக்கப்படும் என வால்மார்ட்  நினைத்திருந்தது. ஆனால், அவர்களேகூட எதிர்பார்க்காத வகையில் மன்மோகன் அரசு 51 சதவீதமாக அதனை உயர்த்தியது. அமெரிக்கப் பொருளாதாரம் நன்றாக இருந்தால்தான் இந்தியப் பொருளாதாரம் நன்றாக இருக்கும் என ஆண்டையின் நலன் குறித்துக் கவலைப்படும் அடிமையாக இந்திய ஆளும் வர்க்கம் இருப்பதால்தான் அந்நிய முதலீட்டை இவ்வளவு மூர்க்கத்தனமாக ஆதரிக்கிறது.

சட்டமன்றத் தேர்தல்கள் முடிவதற்காகத்தான் எல்லோரும் காத்திருக்கின்றனர். பா.ஜ.க., தான் பெற்ற பிள்ளையை கைவிட்டு விடுமா, என்ன?

– புதிய ஜனநாயகம், ஜனவரி – 2012

கிழக்கு பதிப்பகம் வழங்கும் டயல் பார் ஷிட்! கார்டூன்!!

30
கிழக்கு பதிப்பகம் கார்டூன்

கிழக்கு பதிப்பகம் வழங்கும் டயல் பார் ஷிட்! கார்டூன்!!கிழக்கு பதிப்பகம் கார்டூன்(படத்தை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்)

நான் புத்தகங்களை வெறும் பண்டமாகத்தான் பார்க்கிறேன். இதை வெளிப்படையாகச் சொல்வதில் எனக்கு வெட்கமே இல்லை. தமிழின் இலக்கிய வானில் சில பதிப்பாளர்கள் அற்புதமான பணியாற்றி, சிறந்த இலக்கியத்தை வெளியே கொண்டுவர உதவுகிறார்கள். நான் அப்படிப்பட்டவன் அல்லன். புத்தகம் உருவாக்கி விற்பது எனக்கு ஒரு தொழில் மட்டுமே. நான் ஒரு வணிகன். எல்லாவிதமான புத்தகங்களையும் பதிப்பிக்க விரும்புகிறேன். அவை நன்றாக விற்கும் என்றால். நன்றாக விற்பனை ஆகாது என்றால் அவற்றைப் பதிப்பிக்க நான் விரும்புவதில்லை. சில புத்தகங்களை என் சொந்த ஆசைக்காகப் பதிப்பிப்பதும் உண்டு. கமெர்ஷியலாகப் பார்க்கும்போது அவை தவறான முடிவுகள் என்று நன்கு தெரிகிறது. வரும் காலங்களில் இந்தத் தவறைக் குறைத்துக்கொள்வேன். எங்கள் புத்தகங்களை மட்டும் விற்பனை செய்வதற்காக என்று நான் உருவாக்கியுள்ள கட்டுமானத்தை இப்போது அனைவருடைய புத்தகங்களையும் விற்பனை செய்ய என்று பயன்படுத்த ஆரம்பித்துள்ளேன்.

– பத்ரி சேஷாத்ரி, தொழிலதிபர் (கிழக்கு பதிப்பகம் – நியூ ஹொரைசன் மீடியா) கட்டுரையிலிருந்து

பாக்கிஸ்தான் கொடி ஏற்றி கலவரத்திற்கு முயன்ற இந்துமத வெறியர்கள்!

25

இந்திய நாட்டை உடைக்க வேண்டுமா? மதக் கலவரங்களை தோற்றுவித்து அப்பாவி இஸ்லாமிய மக்களை கொன்று குவிக்க வேண்டுமா?  அவர்களது பொருட்களை சூறையாட வேண்டுமா? இரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடி, மதக் கலவர பூமியாக குறிப்பிட்ட ஒரு பகுதியை அரசே அறிவிக்கும்படி செய்ய வேண்டுமா? இதன் வழியாக ஓட்டை பொறுக்கி ஆட்சியாளர்களாக மாறி, நாட்டின் வளங்களை கொள்ளையிட வேண்டுமா?

அப்படியானால், பார்ப்பன, பாசிச, இந்துத்துவா கருத்துகளை உங்கள் சிந்தனையின் ஒவ்வொரு துளியிலும் விதைக்க வேண்டும். அப்போதுதான் பொய் பேச முடியும். ஒரு பொருளை தானே திருடிவிட்டு, அந்தப் பழியை இஸ்லாமியர்கள் மீது சுமத்த முடியும். திட்டமிட்டு மக்கள் குவியும் இடத்தில் தாங்களே குண்டு வைத்து விட்டு, இந்தக் ‘படுபாதக’ செயலை நிகழ்த்தியது இஸ்லாமிய அமைப்புதான் என்று குற்றம்சாட்ட முடியும்.

சமீபத்தில், கர்நாடக மாநிலத்தில் இப்படித்தான் இந்துத்துவா சக்திகள் வெறியாட்டம் நிகழ்த்த முயன்றுள்ளன.

கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி, கர்நாடக மாநிலம் சிந்தகியில் உள்ள தாசில்தார் அலுவலம் பக்கமாக வந்தவர்கள் திடுக்கிட்டார்கள். அங்கிருந்த கொடிக் கம்பத்தில் பாகிஸ்தானின் தேசிய கொடி, பட்டொளி வீசி பறந்துக் கொண்டிருந்தது. இந்திய நாட்டில், பாகிஸ்தான் கொடியை ஏற்றி, புத்தாண்டு கொண்டாடுபவர்கள் யார் என்று கேள்வி அனைவரது மனதிலும் எழுந்தது.

ராம் சேனா
ஸ்ரீ ராம் சேனாவின் முத்தாலிக்

சரியாக, அப்போது பார்த்து, ‘இது இந்தப் பகுதியிலுள்ள இஸ்லாமியர்கள் செய்த செயல்…’ என்ற நச்சு தூவப்பட்டது. ஒளியை விட வேகமாக இந்த வாசகம் மக்களின் செவியை அடைந்தது. முதலில் நம்ப மறுத்தவர்கள் கூட, அடுத்தடுத்து வெவ்வேறு வார்த்தைகளுடன் இதே அர்த்தம் பொதிந்த சொற்களை எதிர்கொள்ள நேர்ந்ததும், ஒருவேளை அப்படி இருக்கலாமோ என நினைக்க ஆரம்பித்தார்கள். விளைவு, சில மணி நேரங்களில், சிந்தகி பகுதியில் வசிக்கும் இஸ்லாமியர்கள் அனைவருமே குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டார்கள்.

ஆனால், இந்த அயோக்கியதனத்தை நிகழ்த்தியது, எந்த இஸ்லாமிய குழுக்களும் அல்ல; தனிப்பட்ட இஸ்லாமியரும் அல்ல. பதிலாக ஒரு மதக் கலவரத்தை உண்டாக்குவதற்காக அந்தப் பகுதியில் உள்ள ராம் சேனா குண்டர்கள் நிகழ்த்திய நாடகம் இது. ராகேஷ் மத், என்ற ரவுடியின் தலைமையில் இந்தப் பித்தலாட்டத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள்.

இப்படி இந்து வெறியர்களே பாகிஸ்தானின் தேசிய கொடியை இரவோடு இரவாக ஏற்றிவிட்டு, அந்தப் பழியை இஸ்லாமியர்கள் மீது சுமத்தியது அம்பலப்பட்டு போனதும், விழித்துக் கொண்ட காவல்துறை, ராகேஷ் மத் உட்பட ஆறு ராம் சேனா குண்டர்களை கைது செய்து பிஜப்பூர் சிறையில் அடைத்தது. ஆனால், அந்த சிறையில் இருந்த மற்ற கைதிகள், ‘தேசத்தை துண்டாட முயற்சிப்பவர்களை எங்களுடன் அடைக்க வேண்டாம்’  என கோஷமிட்டதுடன், இந்த இந்துத்துவ பாசிஸ்ட்டுகளை நையப் புடைந்துள்ளனர். இதில், ராகேஷ் மத்துக்கு ‘பூசை’யும், மற்றவர்களுக்கு வெறும் ‘தீபாராதனையும்’ காட்டப்படவே, வேறு வழியின்றி இந்தக் கும்பலை பெல்லாரி மாவட்ட சிறைக்கு கடந்த ஞாயிறன்று (08.01.12) மாற்றியிருக்கிறார்கள்.

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை (10.01.12) இந்த சம்பவத்தில் ஈடுப்பட்ட இன்னொருவரை கைது செய்து பெல்லாரியில் அடைத்திருக்கிறார்கள். இதன் மூலம், கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்திருக்கிறது.

இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த ராம் சேனா அமைப்பினர், ‘ராகேஷ் மத் உள்ளிட்டவர்கள், எங்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள். ஆனால், காவல்துறை திட்டமிட்டு ஆர்.எஸ்.எஸ். பெயர் வெளியில் வராதபடி பார்த்துக் கொள்கிறது. வேண்டுமென்றே எங்கள் அமைப்பை களங்கப்படுத்த முயற்சிக்கிறது…’ என்று கூறியதுடன், இதற்கு ஆதாரமாக ஏராளமான புகைப்படங்களையும் செய்தியாளர்களிடம் கொடுத்திருக்கிறார்கள்.

அதாவது, ராம் சேனா அமைப்பில் இருப்பவர்கள் ‘ரொம்ப’ நல்லவர்களாம். ஆர்.எஸ்.எஸ். ‘பாய்ஸ்’ மட்டுமே கெட்டவர்களாம். கேழ்வரகில் நெய் வடியும் கதையாக கதறுகிறார்கள் ராம் சேனா அமைப்பினர். கலாச்சார காவலர்களாக தங்களைத் தாங்களே அறிவித்துக் கொண்டு, இவர்கள் நிகழ்த்திய – நிகழ்த்தும் வெறியாட்டங்கள் அனைத்தையுமே மக்கள் அறிந்திருக்கிறார்கள். ஊடகங்களும் அதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கின்றன. எனவே ராம் சேனா – ஆர்.எஸ்.எஸ். என பெயர்கள்தான் வேறு வேறே தவிர, மதக் கலவரங்களை நிகழ்த்துவதில் இருவருமே ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்தான்.

என்ன… இந்திய அதிகார வர்க்கத்தில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் ஊடுருவி இருப்பது போல் ராம் சேனா உறுப்பினர்கள் நுழையவில்லை. அதனால் ராம் சேனா செய்யும் அராஜகங்கள், உடனே வெளிச்சத்துக்கு வருகின்றன. ஆனால், ஆர்.எஸ்.எஸ். செய்யும் வெறிச் செயல்கள் முடிந்தவரை அமுக்கப்படுகின்றன. உண்மை அறிந்து மக்கள் போராடத் தொடங்கியதும் வேறு வழியின்றி, ஆர்.எஸ்.எஸ். நிகழ்த்திய பித்தலாட்டங்கள் ஊடகங்களாலும், காவலர்களாலும் ஒப்புக் கொள்ளப்படுகின்றன.

மாலேகான் (குண்டு வைத்த சுவாமி அசீமானந்தாவின் வாக்குமூலம்) உள்ளிட்ட பேர்வாதி குண்டு வெடிப்புகளை செய்தவர்கள் ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள்தான் என்பது இப்படித்தான் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன. இப்படி எசகுபிசகாக தொண்டர்கள் மாட்டிக் கொண்டதும், ‘அவர்களுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை’ என கையை விரிப்பதும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் நரித்தந்திரங்களில் ஒன்றுதான்.

இதையேதான் இப்போது ராம் சேனாவும் ‘ராகேஷ் மத் உள்ளிட்டவர்கள் எங்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் அல்ல…’ என்று சொல்வதன் வழியாக கடைபிடிக்கிறது. பிரதான ‘தாதா’வுக்கும், பகுதி ‘தாதா’வுக்கும் இடையில் அவ்வப்போது ஏற்படும் ‘பங்கீடு’ குறித்த முரண்பாடு போன்றதுதான் இவர்கள் இருவருக்கும் இடையில் இருப்பதும். மற்றபடி பார்ப்பன பாசிச இந்துத்துவா கொள்கை உடையவர்கள் அனைவருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.

இப்போது சிந்தகி பகுதியில் பேரணி நடத்தவும், போராட்டங்கள் நிகழ்த்தவும் மாவட்ட ஆட்சியர் தடை விதித்திருக்கிறார். சட்டம் ஒழுங்கை நிலை நாட்டவாம். அதற்கு பார்ப்பன பாசிச இந்துத்துவா சக்திகளை அல்லவா ஒட்டுமொத்தமாக சிறையில் அடைக்க வேண்டும்?

விலைவாசி உயர்வு, உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு, வேலையில்லா திண்டாட்டம், கல்வி கட்டண கொள்ளை… என நாட்டு மக்கள் இந்த அரசியல் அமைப்பின் மீது அவநம்பிக்கை கொண்டிருக்கும் நிலையில் – அதை திசை திருப்பி அறுவடை செய்வதற்காக இந்துத்துவா சக்திகள் காய் நகர்த்தி வருகின்றன. அதன் ஒரு வடிவம்தான் இந்த பாகிஸ்தான் கொடியை ஏற்றியிருப்பது.

அடுத்து பாகிஸ்தான் கொடியை ஏற்றினால் இந்துக்கள் மத்தியில் ஒரு பதட்டத்தையும் துவேஷத்தையும் கிளப்பி விடலாம் என்று இந்துமதவெறியர்கள் தீர்மானகரமாக இருக்கிறார்கள் என்றால் ‘இந்துக்கள்’ அத்தகைய பலவீனத்தை கொண்டிருப்பது குறித்தும் நாம் கவலைப்பட வேண்டும். இந்தியாவில் அமெரிக்க கொடியெல்லாம் பட்டொளி வீசி பறக்கும் போது பாகிஸ்தான் கொடி பறந்தால் என்ன குடி முழுகிவிடப் போகிறது? பாகிஸ்தான் மீதான வெறியை வளர்த்து போலி இந்திய தேசபக்தியை கிளப்பிவிட்டு ஆதாயம் அடையும் இந்திய ஆளும் வர்க்கங்களின் ஒரு பிரிவுதான் சங்க பரிவாரம். எனவே இந்த கொடி முத்திரை தேச வெறியிலிருந்து மக்களை விடுவிப்பதும் நம் பணியாக இருக்கிறது.

எண்ணெய் வளங்களை அமெரிக்க முதலாளிகள் கைப்பற்றுவதற்காக, இரசாயன ஆயுதங்கள் இருப்பதாக பொய்யாக சொல்லி ஈராக்கையே சுடுகாடாக மாற்றியது அமெரிக்க இராணுவம்.

அமெரிக்காவின் அல்லக்கையாக திகழும் இந்துத்துவா சக்திகள், இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற பொய்யை சொல்லி, நாட்டில் மதக் கலவரங்களை நிகழ்த்த முயன்று வருகிறது.

உண்மையில் ‘உடையும் இந்தியா?’வுக்கு காரணம் பார்ப்பன பாசிச இந்துத்துவ பயங்கரவாதிகள்தான். ஆர்.எஸ்.எஸ். பொறுக்கிகள்தான்.

– அறிவுச் செல்வன்

மே 17 இயக்கத்தினை கண்டிக்கும் கருத்துரிமைக் காவலர்களின் பித்தலாட்டம்!

46

“நினைவின் குட்டை, கனவு நதி” என்ற சுந்தர ராமசாமி, ஜெயமோகன், காலச்சுவடுகளது அற்பவாத இலக்கியத்தை விமரிசிக்கும் புதிய கலாச்சாரம் வெளியீடாக வந்த நூலின் ஆரம்பத்தை இங்கே குறிப்பிடுவது பொருத்தமானது. அதில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மார்க்சிய லெனினிய இயக்கத்தைச் சேர்ந்த தோழர் கேரளா வழியாக தமிழ்நாட்டின் முதுபெரும் முற்போக்கு எழுத்தாளராக சுந்தர ராமசாமியை வந்தடைந்து அவர் மூலமாக தமிழகத்தில் கலை இலக்கிய பண்பாட்டு முயற்சியில் கம்யூனிஸ்ட்டுகள் என்ன செய்தார்கள், இல்லையில்லை என்ன செய்யவில்லை  என்பதை விபரீதமாக கண்டறிகிறார். பின்னர் தற்செயலாக ம.க.இ.க தோழர்களை சந்தித்து உண்மையை சுய விமரிசனத்துடன் அறிகிறார்.

இப்படி தமிழகத்தை பற்றி பிற மாநிலத்தைச் சேர்ந்த பத்திரிகைகள், எழுத்தாளர்கள், அறிவு ஜீவிகள் அறிய வேண்டுமென்றால் அது எப்படி நடக்குமென்று நினைக்கிறீர்கள்? இந்தியா டுடே, டைம்ஸ் நௌ, சிஎன்என் – ஐபிஎன் போன்ற தேசிய ஊடகங்களெல்லாம் தமிழகத்தின் பிரதிநிதிகளாக துக்ளக் சோ, சுப்ரமணிய சுவாமி, சிவசங்கரி, வாஸந்தி, மணிரத்தினம், சுகாசினி போன்ற பார்ப்பனக் குலக் கொழுந்துகளை நியமித்திருக்கின்றார்கள். இவர்களின் மூலமாகத்தான் நமது பிரச்சினைகள் பலவும் இந்திய ‘மக்களை’ சென்றடைய வேண்டுமென்றால் நமக்கு யாரும் ஆதரவு தரத் தேவையில்லை என்று வங்களா விரிகுடாவில் ஒட்டு மொத்தமாக குதித்து தற்கொலையே செய்து கொள்ளலாம்.

இதற்கு அடுத்தபடியாக கொஞ்சம் இடதுசாரிகள், அறிவாளிகள் என்றால் ஹிந்து ராம், சி.பி.எம் பார்ப்பனர்கள், ரவிக்குமார் போன்ற கருப்பு பார்ப்பனர்களை தொடர்பு கொள்வார்கள். இவர்கள் தத்தமது அரசியல் பிழைப்புவாதங்களுக்காக முழு தமிழகத்தை நாடி பிடித்தது போல காட்டிக் கொள்வார்கள். முற்போக்கு என்ற பெயரில் நாசுக்காக ஆளும் வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துவார்கள். சாரு நிவேதிதா போன்றோரெல்லாம் பேஜ் 3 பாணி கேளிக்கையின் ஊடாக காமடி கலகக்காரர்களாக முன்னிறுத்தப்படுகிறார்கள். பத்திரிகையாளர் ஞாநி இந்த அமைப்பினை ஏற்றுக் கொண்டு வழுவாமல் செயல்படும் அறிஞர் என்பதால் கொஞ்ச நஞ்சம் வாய்ப்பளிப்பார்கள். அவரும் நடுத்தர வர்க்கத்தின் மனம் நோகாமல் வேகாமல் சில பல ‘முற்போக்கு’ கருத்துக்களை உதிர்ப்பார்.

ஆக இந்திய அளவில் ஊடகங்களை வைத்து தமிழகத்தை அறிய நினைப்போருக்கெல்லாம் உண்மையில் தமிழகத்தின் பிரச்சினை என்னவென்றே தெரியாது. அந்த வகையில் பெரும்பான்மை தமிழக மக்களின் நலன், கருத்துக்கள் எதுவும் இந்திய ஊடகங்களில் வரவே வராது. இதனால் மற்ற மாநில ஏன் ஒட்டு மொத்த இந்திய  மக்களின் பிரச்சினைகளெல்லாம் இந்த ஊடகங்களில் சரியாக வருவதாக பொருளில்லை. அது தனிக்கதை.

இப்படித்தான் காஷ்மீர், நர்மதா அணை, மாவோயிஸ்டுகள் போராட்டம் முதலான பிரச்சினைகளில் இந்திய அரசையும், கார்ப்பரேட் நிறுவனங்களையும், இந்துத்வா வெறியர்களையும் பகிரங்கமாகக் கண்டித்து போராடும் அருந்ததி ராய் தமிழகத்தில் உள்ள பிரச்சினைகளை அறிந்து கொள்ள ரவிக்குமார், காலச்சுவடு போன்றோர் மூலம் மட்டும் போதும் என்று நம்பியிருப்பார் போலும். இது அருந்ததி ராயின் பிரச்சினை என்பதை விட இந்த அமைப்பு முறை இப்படித்தான் தகவல் வலைப்பின்னலை உருவாக்கியிருக்கிறது என்றும் சொல்லலாம்.

மேலும் காலச்சுவடு போன்ற கம்யூனிச எதிர்ப்பு இலக்கியவாத நிறுவனங்கள் மற்றும் ஏகாதிபத்திய நலனுக்காக மக்களை காவு கொடுக்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் கைகளில்தான்  இத்தகைய அறிவுத்துறை வலைப்பின்னல் இருக்கிறது. இதில் அருந்ததி ராய் மட்டுமல்ல, சில மாக்சிய லெனினிய குழுக்களும் கூட பலியாகியிருக்கிறார்கள். அதைத்தான் இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டோம்.

அருந்ததி ராய் - மே 17 இயக்கத்தினை கண்டிக்கும் கருத்துரிமைக் காவலர்களின் பித்தலாட்டம்!
அருந்ததி ராய்

அந்த வகையில் காலச்சுவடு நடத்திய நூலறிமுகக் கூட்டத்திற்கு அருந்ததி ராய் வந்து கலந்து கொண்டார். இலக்கியத்தை படித்து உண்டு களித்திருப்போர் பாவனையில் உள்ள சுமார் 150 நபர்கள் அதில் கலந்து கொண்டார்கள். அதில் அருந்ததி ராய் மொத்தம் பேசியது அதிக பட்சம் இருபது நிமிடம் கூட இல்லை. இப்படி ஒரு பிராண்டு வேல்யூக்காக மட்டும் தன்னைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது அருந்ததி ராய்க்கு தெரிந்திருக்கவில்லை.

காலச்சுவடு வெளியிட்ட நூலில் அருந்ததி ராயின் உடைந்த குடியரசு என்ற நூல் இருக்கிறது. அதை வைத்து அந்த பதிப்பகம் முற்போக்கானதென்று அவர் அப்பாவி போல நினைத்திருந்தால் அது பரிதாபத்திற்குரியது. உண்மையில் அவர் அரசியலுக்கு பொருத்தமாக ஆயிரக்கணக்கான தோழர்களும், மக்களும் இருக்கையில் அவர்களது மேடையில் ஏறாமல் ஒரு ரோட்டரி கிளப் கனவான்களது கூட்டத்தில் சிக்கிக் கொண்டது மிகவும் ஏமாற்றமளிக்கிறது.

இனி, அருந்ததி ராய் இந்தக் காலச்சுவடு கூட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்று மே 17 இயக்க நண்பர்கள் இணையத்தில் விரிவான பிரச்சாரத்தை மேற்கொண்டார்கள். அதில் காலச்சுவடு என்ற இசுலாமிய எதிர்ப்பு, ஆர்.எஸ்.எஸ் ஆதரவு, தமிழின எதிர்ப்பு கூட்டத்தில் ராய் கலந்து கொள்ளக்கூடாது என்று குறிப்பிட்டிருந்தனர். பாபர் மசூதியை இடித்தது நியாயம் என்று பேசுபவர்களுக்கும் கண்டிப்பாக இடமளிக்க வேண்டுமென்றும், குஜராத் இனக் கலவரத்தின் போது இந்து மதவெறி என்று கூடக் கூறாமல் கனிமொழியை வைத்து காசு வசூலித்து கூட்டம் நடத்திய கனவான்களது ஆழ்மனதை மட்டுமல்ல மேல் மனதை நோண்டினாலே இவர்களது முற்போக்கு அரசியலுக்கு எதிரான அரசியலை அறிந்து கொள்ள முடியும். காஞ்சி கிரிமினல் ஜெயேந்திரன் அம்பலப்பட்ட போதும் இழுத்து மூட வேண்டிய காஞ்சி மடத்தை சீர்திருத்தி காப்பாற்ற எண்ணிய பூணூலிஸ்டுகள்தான் இந்த காலச்சுவடு அம்பிகள். அப்போது கருப்பு பார்ப்பனர் ரவிக்குமாரும் அவர்களுடன் இருந்தார்.

இது போக காலச்சுவடின் கம்யூனிச எதிர்ப்பு, தமிழன எதிர்ப்பும் உலகறிந்த உண்மைகளே. இத்தகைய கூட்டத்தில் ராய் கலந்து கொள்ளக்கூடாது என்று மே 17 கோரியதில் என்ன தவறு? அடுத்து ராய் கலந்து கொண்ட காலச்சுவடு கூட்டத்தில் மே 17 இயக்க நண்பர்கள் மேற்கொண்ட கோரிக்கையை பேனரில் பிடித்தவாறு முழக்கமிட்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தார்கள். இதை காலச்சுவடு கண்ணன் ஏற்கனவே போலிசில் சொல்லியிருப்பார் போலும், அதன்படி போலீசார் அவர்களை உடன் அப்புறப்படுத்தினர்.

அருந்ததி ராயின் கவனத்திற்கு இந்தக் கோரிக்கைகளை நியாயமான முறையில்கொண்டு சென்றதைத் தாண்டி இந்த எதிர்ப்புக்கு வேறு என்ன நோக்கமிருக்க முடியும்?

ஆனால் இந்த எதிர்ப்பை காலச்சுவடு அறிவாளிகள் அருந்ததிராயிடம் வேறு மாதிரி திசை திருப்பியிருக்கிறார்கள். அதன்படி அருந்ததிராய் இதை எப்படிப் பார்க்கிறார்?

காலச்சுவடு வெளியிட்ட நூல்களில் இலங்கையில் ஐ.நா செய்தித் தொடர்பாளராக இருந்த கோர்டன் வெய்ஸ் என்பவர் எழுதிய தி கேஜ் என்ற நூலும் உண்டு. இதில் இலங்கை அரசின் போர்க்குற்றங்களை குறிப்பிட்டிருப்பதோடு விடுதலைப்புலிகளின் மீதான விமரிசனங்களும் கராறாக வருகிறதாம். இதற்காகத்தான் மே 17 இயக்கம் ராயை கலந்து கொள்ளக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்திருப்பதாக அருந்ததி கருதுகிறார். அல்லது கருத வைக்கப்பட்டிருக்கிறார்.

புலிகளை ஆதரிக்கும் மே 17 இயக்கம் அதற்காகத்தான் இந்த எதிர்ப்பை தெரிவித்தது என்றாலும் கூடவே காலச்சுவடு நிறுவனத்தின் ஆர்.எஸ்.எஸ் ஆதரவு, தலித் எதிர்ப்பு, காஷ்மீர் எதிர்ப்பு, இசுலாமிய எதிர்ப்பு, தமிழின எதிர்ப்பு போன்றவற்றை பட்டியலிட்டு பயன்படுத்திக் கொண்டதாக ராய் கருதுகிறார். மற்றபடி காலச்சுவடு அப்படிப்பட்ட நிறுவனம் அல்ல என்பதற்கு சேரனின் கவிதைகள், தலித்தும் தண்ணீரும் என்ற நூல், பஷ்ரத் பீர் எழுதிய காஷ்மீர் நினைவுகள் என்ற நூல், ராய் எழுதிய உடைந்த குடியரசு போன்ற நூல்களெல்லாம் இல்லையா என்று ராய் கேட்கிறார்.

இவையெல்லாம் காலச்சுவடு வெளியிட்டதற்கு காரணம் விற்பனை நோக்கம் தவிர வேறு இல்லை. இந்த நூல்களெல்லாம் படிக்க வேண்டிய நூல்கள்தான், அதை வினவிலும் கூட வெளியிட்டிருக்கிறோம். ஆனால் ஒரு பதிப்பகம் அதன் முழுமையான அரசியல் பார்வை, நடத்தையில்தானே என்ன அரசியல் சார்பு கொண்டிருக்கிறது என்று பார்க்கப்படவேண்டும் ராய் அவர்களே? நாளைக்கே பாபர் மசூதி இடிப்பின் இனிய நினைவுகள் என்று அரவிந்தன் நீலகண்டன் எழுதி, குஜாரத்தில் இசுலாமியர்களை கொன்றொழித்த இனிய நினைவுகள் என்று ஜடாயு எழுதி அவற்றினை காலச்சுவடு வெளியிடாது என்று யாராவது உறுதி மொழி அளிக்க முடியுமா?

காலச்சுவடு-கண்ணன் - மே 17 இயக்கத்தினை கண்டிக்கும் கருத்துரிமைக் காவலர்களின் பித்தலாட்டம்!
காலச்சுவடு-கண்ணன்

மே 17 புலிகளை மிகத்தீவிரமாக ஆதரிக்கும் ஒரு இயக்கம்தான். அதைத் தாண்டி மற்ற பிரச்சினைகளிலும் அவர்கள் கருத்தே கொண்டிருக்க கூடாது என்று எப்படி கூறமுடியும்? எனில் மே 17  தலித்துக்களுக்கு ஆதரவாக, தமிழின உரிமைகளுக்கு ஆதரவாக, இசுலாமியர்களுக்கு ஆதரவாக, காஷ்மீருக்கு ஆதரவாக பேசியிருந்தாலும் அவர்களை புலி ஆதரவு என்று மட்டும் பார்க்கும் நீங்கள் பல கோணத்தில் தோற்றமளிக்கும் காலச்சுவடையும் அப்படி சாரத்தில் இந்துத்தவா ஆதரவு என்று ஏன் பார்க்கவில்லை?

ஐ.நா சபை அறிவாளி இலங்கை அரசையும், புலிகளையும் விமரிசனம் செய்வது இருக்கட்டும். முதலில் அவர் தனது சர்வதேச நிறுவனம் அமெரிக்காவின் கைப்பாவையாக இருந்து ஈராக்கிலும், ஆப்கானிலும் பல இலட்சம் மக்கள் கொல்லப்பட்டதை வேடிக்கை பார்த்தது குறித்து சுயவிமரிசனம் செய்து கொண்டாரா? அந்த விமரிசனம் முள்ளி வாய்க்கால் படுகொலையின் போது வெறுமனே வேடிக்கை பார்த்ததற்கும் பொருந்துமே? இன்று வரை இலங்கை அரசை போர்க்குற்றவாளிகள் என்று ஏன் தண்டிக்க முடியவில்லை? அந்த வகையில் இந்த குற்றத்தில் அவர்களே சொல்வது போல இலங்கை அரசு, புலிகள் தவிர ஐ.நா, இந்தியா, அமெரிக்காவும் உள்ளன என்றும் சொல்லலாமே?

மேலும் இதில் எதிலும் புலிகள் தீர்மானிக்கும் இடத்தில் இல்லையே? இந்த போரை நிறுத்த வேண்டியிருந்தால் அது இலங்கை அரசு, இந்தியா, ஐ.நா மூலமாகத்தானே நடந்திருக்க வேண்டும்? அது நடக்கவில்லை எனும் போது இந்த போரை நடத்தியது இலங்கை அரசா இல்லை புலிகளா?

நாங்களும் விடுதலைப்புலிகளை கடுமையாக எதிர்ப்பவர்கள்தான். அவர்களது பாசிச நடவடிக்கைகளையும், இந்திய அரசின் தயவில் விடுதலையை பெறலாம், அமெரிக்காவை லாபியிங் செய்து ஈழத்தின் நலனை பெற்று விடலாம் என்று சந்தர்ப்பவாதமாய் செயல்பட்ட போதும் பலமுறை அம்பலப்படுத்தியிருக்கிறோம். ஆனால் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு காரணம் என்று இலங்கை அரசையும், புலிகளையும் சமப்படுத்தி பார்ப்பது தவறு என்பதையும் பல முறை விளக்கியிருக்கிறோம். ஏனெனில் இது இந்தியாவின் ஆசியோடு இலங்கை அரசு மட்டும் தொடுத்த போர். அதில் புலிகள் தவறு செய்தார்கள் என்று இரண்டையும் சமப்படுத்தி பார்ப்பது பாரிய பிழை.

அடுத்து புலிகள் எல்லா இடங்களிலும் பயங்கரவாத இயக்கமென்று தடை செய்யப்பட்ட பிறகு இந்தப் போரில் அவர்களை ஏன் குற்றம் சொல்கிறீர்கள? ஒரு வேளை உங்கள் வாதப்படியே புலிகள் அவர்களது தவறுகளுக்காக முற்றிலும் அழிக்கப்பட்ட பிறகு இலங்கை அரசு மட்டும் எந்த தண்டனையும் இல்லாமல் இருப்பதற்கு என்ன காரணம்? இதிலிருந்தே புலிகளையும், இலங்கை அரசையும் சமமாக பார்ப்பது தவறு என்பதை உணரலாமே?

இறுதியாக ராய் கூறுவது என்னவென்றால் விமரிசனங்களை கொல்வது, விவாதங்களை மறுப்பது, கருத்துரிமையை தடை செய்வது, எல்லாம் மொத்தத்தில் அரசியலையே அழிப்பது என்பதாகும். இதுதான் புலிகளின் தோல்விக்கு காரணம் என்கிறார் ராய். சரி இதை ஒத்துக் கொள்வதில் பிரச்சினை இல்லை. ஆனால் இதே விசயங்களை இன்று இலங்கை அரசு அட்சரம் மாறாமல் இராணுவ பலத்தோடு செய்து வருகிறதே அதற்கு என்ன காரணம் ராய் அவர்களே?

ஒருவேளை இலங்கை சிங்கள இனவெறி அரசை இப்படி அடக்குமுறை அரசாக மாற்றியது புலிகளின் வன்முறைதான் என்று கூட காலச்சுவடு அறிவாளிகள் ராயிடம் எடுத்துக் கூறலாம். எனில் இந்த சூட்சுமத்தை நாம் சும்மா கிடந்த அமெரிக்கவை ஆக்கிரமிப்பு செய்யுமாறு தூண்டியது ஈராக் மற்றும் ஆப்கான் மக்களது தவறுதான் என்று கூடக் கூறலாமே? இதையே காஷ்மீருக்கு பொருத்தினால் இந்தியா இராணுவத்தின் பாவச்செயல்களையும் மன்னிக்கலாமே? மன்னிப்பாரா அருந்ததி ராய்?

ஞாநி - மே 17 இயக்கத்தினை கண்டிக்கும் கருத்துரிமைக் காவலர்களின் பித்தலாட்டம்!
ஞாநி

மே 17 நண்பர்கள் முழுமையாக எல்லாப் பிரச்சினைகளையும் அறிந்தவர்கள் அல்லர். முள்ளி வாய்க்கால் அழிவுப் போருக்கு இந்தியாதான் பிரதானமான காரணம் என்பதைக் கூட அவர்கள் முழுமையான அரசியல் பொருளில் புரிந்து கொண்டிருக்கவில்லை. சில வேளை இந்திய அரசு மெச்சும் விதமாக சீனா, பாக்கிஸ்தான்தான் இலங்கை அரசின் அழிவுப்போருக்கு காரணமென்று கூட சொல்லியிருக்கிறார்கள். புலிகளின் தவறுகளையும் அவர்கள் சுய விமரிசனமாக பார்த்திருக்கவில்லை. இது போக ஜெயலலிதாவை ஈழத்தாயாக மற்ற தமிழார்வலர்களைப் போல இவர்களும் பாராட்டியிருக்கிறார்கள். இருப்பினும் இந்த தவறுகள் காலச்சுவடை சரி என்று ஆக்கிவிடாது. அதே போல காலச்சுவடு கூட்டத்தை அருந்ததி ராய் புறக்கணிக்க வேண்டுமென்று மே 17 இயக்கம் கூறியதையும் தவறு என்று சொல்ல முடியாது.

மேலும் தமிழகத்தை பொறுத்த வரை புலி ஆதரவு என்பது இந்திய அரசுக்கெதிரான, பிரிவினை வாத, பயங்கரவாத கோரிக்கையாகத்தான் சித்தரிக்கப்படுகிறது. புலி என்று மட்டுமல்ல ஈழ ஆதரவு என்றாலே இப்படித்தான் திரிக்கப்படுகிறது. அதற்காகத்தான் கடந்த இருபது வருடங்களாக பலரும் அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். புலி ஆதரவை வைத்து தமிழகத்தில் உள்ள இன ஆர்வலர்களை இல்லாமல் ஆக்குவது என்ற செயல் பல ஆண்டுகளாக இங்கு அமலில் இருப்பதை ராய் அறிந்திருக்க வில்லை. அத்தகைய அரச பயங்கரவாத கொடுமையின் ஒரு துளியைக் கூட அருந்தியிருக்காத காலச்சுவடுதான் மாபெரும் கருத்துரிமை இயக்கமென்று அருந்ததி ராய் கருதியிருப்பது விமர்சனத்திற்க்குரியது.

அடுத்து ஈழப்பிரச்சினை தொடர்பாக காலச்சுவடுக்கென்று ஒரு அரசியல் நிலைப்பாடு என்பது அதன் வணிக நலன்களோடு தொடர்புடைய ஒன்று. புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களிடம் தனது சந்தையை கொண்டிருக்கும் காலச்சுவடு அதற்காக மட்டுமே ஈழம் குறித்து பேசுகிறது. அதுவும் இந்திய ஆட்சியாளர்கள் மனம் கோணமல் பேச வேண்டும் என்பதைத் தாண்டி வெறு எதுவுமில்லை. இலக்கியவாதத்தில் ஆர்வம் கொண்ட ஈழத்தமிழர்கள் பலர் அரசியலற்ற முறையில் ஈழத்தை பேசுவார்கள் அல்லது பேசாமல் இருப்பார்கள். காலச்சுவடின் தகுதியும் அதுவே.

இதில் சில இணைய அறிவாளிகள் அருந்ததி ராய் ஈழத்தை குறித்து பேசவில்லை என்று குறை கூறுகிறார்கள். ஆனால் சென்ற ஆண்டு இலண்டன் கூட்டம் ஒன்றில் அருந்ததி ராய் இதைப் பற்றி பேசியிருக்கிறார். ஈழ ஆர்வலர் கூட்டம் ஒன்றிலும் பேசியிருக்கிறார். ஆனால் அருந்ததி ராயின் பொதுக்கூட்டத்திற்கு சென்ற ஈழத்தமிழ் தலைகள் மொத்தம் நான்கைந்து இருந்தால் அதிகம் என்று லண்டன் இனியொரு நண்பர்கள் கூறினார்கள். இப்படி தன்னைத்தவிர வேறு எதனையும் பார்க்கமாட்டேன் என்று அடம்பிடிக்கும் ஈழ தமிழ் மக்களின் தரம் இப்படி இருக்கையில் அருந்ததி ராயை குற்றம் கூறி என்ன பயன்?

அடுத்து ஈழம் குறித்து ராய் அதிகம் பேசவில்லை என்றால் அது குறித்து நாம் அவரிடம் தொடர்பு கொண்டு பேச வேண்டுமென்று கோருவதுதான் சரியாக இருக்குமே அன்றி அவர் பேசும் மற்ற முக்கிய பிரச்சினைகளை ஒன்றுமில்லை என ரத்து செய்வது அகங்காரம் கலந்த அறிவீனம்.

_________________________________

மலையாள-மனோரமா -மே 17 இயக்கத்தினை கண்டிக்கும் கருத்துரிமைக் காவலர்களின் பித்தலாட்டம்!
மூடப்பட்டுள்ள மலையாள மனோரமா அரங்கு

அடுத்து மே 17 நண்பர்கள் சென்னை புத்தகக் கண்காட்சியில் மலையாள மனோரமா பத்திரிகை நிறுவனத்திற்கு எதிராக போராடியது குறித்து சில கருத்துரிமை காவலர்கள் தெரிவித்திருக்கும் பித்தலாட்டத்தை பார்ப்போம்.

நிலநடுக்கம் வந்தால் முல்லைப் பெரியாறு அணை இடிந்து விடும் என்றொரு புரளியை 1970ஆம் ஆண்டுகளில் கிளப்பி விட்ட மலையாள மனோரமா பத்திரிகை இன்றும் மலையாள இனவெறியை பற்ற வைப்பதோடு, முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையை மறுக்கும் வண்ணம் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருவதால் அவர்களை சென்னை புத்தகக் கண்காட்சியிலிருந்து அகற்ற வேண்டுமென்று மே 17 இயக்கம் ஜனநாயக முறையில் போராடியிருக்கிறது. இதில் என்ன தவறு இருக்கிறது?

மலையாள மனோரமா என்பது கேரளத்தின் தினமலர். தினமலர் தமிழ் பத்திரிகை என்பதாலேயே அதை இங்கு அரசியல் ஆர்வலர்கள் யாரும் மதிக்க வில்லை என்பதோடு  புறக்கணிக்க வேண்டுமென்று தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள் ( இத்தகைய விஷக்கிருமி தினமலர்தான், அருந்ததி ராய் போற்றும் காலச்சுவடு நிறுவனத்தின் நிரந்தரப் புலவர்). இது மலையாள மனோரமாவுக்கும் பொருந்தக் கூடிய ஒன்றுதான். இரு மாநில மக்களிடையே பகைமையை உருவாக்கி மோதவிடும் வேலையை கேரள ஒட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகளும், மலையாள வணிக பத்திரிகையுலகும்தான் செய்து வருகின்றன. இவர்களை குறிவைத்து எதிர்ப்பதில் என்ன தவறு இருக்க முடியும்? இதில் கருத்துரிமைக்கு என்ன பங்கம் இருக்க முடியும்?

அந்த எதிர்ப்பில் மே 17 நண்பர்கள் பிடித்திருந்த பதாகையும், முழக்கங்களும் இதைத்தாண்டி வேறு எதனையும் சொல்லவில்லை. ஆனாலும் இதை ஏதோ காட்டுமிராண்டி நடவடிக்கை போல ஹிந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகைகள் சித்தரித்திருக்கின்றன. கிழக்கு பதிப்பக அதிபர் பத்ரி இதை ரகளை, கலாட்டா என்று எழுதி விட்டு இவர்களை கைது செய்து அப்புறப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டு விட்டு பின்னர் எதிர்ப்பு வந்ததும் இந்த வார்த்தைகளை மட்டும் அடித்து விட்டு கருத்தில் மாற்றமில்லை என்று கூறியிருக்கிறார்.

கேரள சி.பி.எம்மை கண்டிக்க துப்பில்லாத தமிழக சி.பி.எம்மின் பாரதி புத்தகலாயமும் இந்த எதிர்ப்பை கண்டித்திருக்கிறது. மலையாள தோழர்கள் அவதூறு செய்யும் உரிமையை ஆதரிக்கும் தமிழகத் தோழர்கள் மலையாள மனோரமா பத்திரிகை அவதூறு செய்யும் உரிமையையும் ஆதரிப்பதில் வியப்பில்லை. காலச்சுவடு பதிப்பகம் மற்ற மாநிலங்களில் நடக்கும் புத்தகக் கண்காட்சியில் கலந்து கொள்கிறதென்றும், நாளைக்கே அதை தமிழ்ப் பதிப்பகமென்று தடை செய்தால் என்ன செய்வதென்று காலச்சுவடு கண்ணனும் தனது வணிக நலன்சார்ந்து மே 17 இயக்கத்தினை கண்டித்திருக்கிறார்.

இது போக தமது பாசிச நடவடிக்கைகளை செயல்படுத்துவோம் என்று பேசும் சங்க பரிவாரங்களின் கருத்துரிமைக்கும் இந்த நாட்டில் இடம் வேண்டும் என்ற கொள்கையை கடைபிடிக்கும் பத்திரிகையாளர் ஞாநியும் இதை கண்டித்திருக்கிறார். கருத்துரிமை என்பதை வர்க்கம் கடந்த தூய கருத்தியலாக மட்டும் பார்ப்பதால் ஞாநி அப்படித்தான் சொல்வார் என்பதால் பிரச்சினை இல்லை.

வெறுமனே எதிர்ப்பு மட்டும் காண்பித்தால் பிரச்சினை இல்லை என்று கூறும் பத்ரி மலையாள மனோரமாவின் ஸ்டாலை மூட வேண்டும் என்று கூறுவது பாசிச நடவடிக்கை என்கிறார்.  மேலும் மலையாள நூல்களை தமிழில் கொண்டு வருவதையும் எதிர்ப்பீர்களா என்று அவதூறும் செய்கிறார். மே 17 இந்த எதிர்ப்பில் குறிப்பான முழக்கத்தை அளித்திருப்பதைத் தாண்டி அதற்கு மேல் அதை திசை திருப்புவது பத்ரியின் மோசடியான நடவடிக்கை.

இதைத் தனித்தனியாக பார்ப்பது நீண்டு விடும் என்பதால் இந்தக் கருத்துரிமையின் அரசியலை மட்டும் குறிப்பாக பார்த்து விடுவோம்.

எல்லாக் கருத்துக்களும் தமது கருத்துக்களை அமல்படுத்தும் ஒன்றிற்காக மட்டும் கருத்தாக தோன்றுகின்றன. பின்னர் அதை மக்களிடம் ஆதரவு தேடி பேசுகின்றன. அதிகாரம் வந்த பிறகு தனது உரிமையை அதாவது அந்த கருத்திற்கு எதிரான மற்றவற்றை தடை செய்து நிறுவுகின்றன. இது எல்லா இயக்கங்களுக்கும், அரசியல்களுக்கும் பொருந்தும். இதைத்தாண்டி தூய கருத்தியல் உரிமை என்று எதுவும் இல்லை.

ஆக ஒரு கருத்தை ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது என்பது அது அமலுக்கு வருவதோடும் சேர்ந்தே இருக்கின்ற ஒன்று என்பது இந்த போலி கருத்துரிமை காவலர்களுக்கு தெரியாத ஒன்று. ஏனெனில் இவர்கள் நிலவும் மக்கள் விரோத கருத்து அதிகாரத்தின் தயவில் வாழ்பவர்கள். அதை ஏற்றுக் கொண்டேதான் பொதுவில் கருத்துரிமை வேண்டும் என்று பேசுகிறார்கள். ஆனால் அந்தந்த ஆளும் வர்க்கம் அவர்களுக்கு பிரச்சினை இல்லாத பட்சத்தில் அனுமதிக்கும் அளவைத் தாண்டி உலகில் எங்கும் கருத்துரிமை என்று ஒன்று இல்லவே இல்லை.

அப்துல் கலாமை அரசவைக் கோமாளி என்று சுவரில் எழுதியதற்காகவும், தாமிரபரணி ஆற்றை உறிஞ்ச வரும் கோகோ கோலா என்று பிரச்சாரம் செய்ததற்காக கூட எங்கள் தோழர்கள் சிறையில் இருந்திருக்கிறார்கள். இவையே இப்படி எனில் இன்னும் நேரடியாக அரசு எதிர்ப்பு இயக்கங்களுக்கு என்ன கதி என்பதையும் அதற்காக பல தோழர்கள் தடா, பொடாவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதையும் பார்த்திருக்கிறோம்.

பத்ரி-சேஷாத்ரி
பத்ரி சேஷாத்ரி

அது போல தமிழகத்தில் ஈழ உரிமை என்று பேசியதற்காக பல இயக்கத்தினரும், தலைவர்களும் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். இது காஷ்மீரிலும், வட கிழக்கிலும், பினாயக் சென்னை ஆண்டுக்கணக்கில் சிறை வைத்த சட்டீஸ்கரிலும் இன்னும் அதிகம். இவையெல்லாம் கருத்துரிமை என்பதின் இந்திய இலட்சணத்தை பறைசாற்றும் சான்றுகள்.

இந்தியாவில் ஆளும் வர்க்கத்தின் நலனுக்கு மட்டும்தான் அனுமதி உண்டு. சான்றாக காஷ்மீர் மக்களது விடுதலை போராட்டத்தை கொச்சைப்படுத்தி மணிரத்தினம் எடுத்திருக்கும் ரோஜா படத்திற்கு ஆளும் வர்க்கங்கள் அளித்த இமாலாய வரவேற்பை பாருங்கள், இன்றும் கூட குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற நாட்களில் அரசு தொலைக்காட்சிகள் இந்தப் படத்தை திரையிடுகின்றன. ஆனால் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் யாசின் மாலிக் பேசினால் மட்டும் சிறையில் அடைத்து விடுவார்கள். அல்லது ஆர்.எஸ்.எஸ் குண்டர்களை அனுப்பி ரகளை செய்வார்கள்.

அண்ணா ஹசாரேவுக்காக மீடியாக்களும், அரசு அமைப்புகளும் எப்படி சேவகம் புரிந்தன என்பதறிவோம். ஆனால் புரட்சிகர ஜனநாயக அமைப்புகள் சிறு போராட்டம் அறிவித்தாலும் அரசு அமைப்புகள் கடித்து குதறுகின்றன.

இனி கருத்துரிமை காவலர்களின் சட்டவாத முறைப்படியே ஒன்றை விளங்க வைப்போம். முல்லைப் பெரியாறு அணை பலமாக இருக்கிறதென்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்று  கூறியிருக்கிறது. இதை மறுத்து மலையாள மனோரமாக கூறி வருகிறது. இந்தப் பிரச்சினையில் ஆளாளுக்கு கருத்து தெரிவித்தாலும் நீதிமன்றம் கூறினால் கடைபிடிப்போம் என்று பல கட்சிகளும் கூறுகின்றனர். அதாவது நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்பு தங்களது கருத்துரிமையை வலியுறுத்த மாட்டோம் என்றுதான் இதற்கு பொருள்.

ஆனால் இதை மலையாள மனோரமா மதிக்கவில்லை. ஆக நீதிமன்ற உத்திரவை மதிக்காத மலையாள மனோரமாவை கருத்துரிமையின் பேரில் ஏன் மதிக்க வேண்டும்? கருத்துரிமையை மிதித்திருப்பவன் அவன்தானே? உடனே நமது கருத்துரிமை காவலர்கள் என்ன சொல்வார்கள்? வேண்டுமென்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடுங்கள் என்று  கூறுவார்கள். ஏதோ வக்கீல் வண்டு முருகனை வைத்து சினிமா கோர்ட்டில் வாதாடி நீதி கிடைத்து விடுவது போல அவர்களுக்கு ஒரு நினைப்பு.

இங்கே மலையாள மனோராமாவோடு பிரச்சினை முடிந்து விடவில்லை. உச்சநீதிமன்றமும், மத்திய அரசும் கூட நீதியின் பாலோ, நீதிமன்ற உத்திரவை அமல்படுத்தும் வண்ணமோ செயல்படவில்லை. எனில் இவர்களுக்கு எதிராக எங்கே யாரிடம் கருத்து தெரிவிப்பது? நமது கருத்துரிமை காவலர்கள் அணி சேர்ந்து உச்சநீதிமன்ற நீதிபதி வீட்டின் முன் ஆர்ப்பாட்டம் செய்யலாம் என்றால் ஒத்துக் கொள்வார்களா?

தீண்டாமை வேண்டும், உடன் கட்டை ஏறுதல் வேண்டும், தலித்துகளுக்கு தனிக்குடியிருப்பு வேண்டும் என்று இந்துத்தவவாதிகள் கருத்து தெரிவிக்கும் உரிமையை கருத்துரிமை என்று ஆதரிக்க முடியுமா? ஒரு பெண்ணை சுலபமாக வண்புணர்ச்சி செய்வது எப்படி என்பதை கருத்துரிமை என்ற பெயரில் கிழக்கு பதிப்பகம் புத்தகமாக போடுமா? கேட்டால் இதெல்லாம் கூடாது என்பார்கள்.

எனில் ஒரு கருத்தில் சரி அல்லது தவறென்று இரண்டுதான் இருக்க முடியுமே அன்றி அந்த சரிக்கும் தவறுக்கும் தாண்டிய கருத்துரிமை என்ற ஒன்று அந்தரத்தில் தொங்க முடியாது. அந்த வகையில் மலையாள மனோரமாக பல ஆண்டுகளாக இந்த புரளியைக் கிளப்பி இருமாநில மக்களிடம் முரண்பாட்டை வளர்த்து வந்திருக்கிறது. இதை கருத்துரிமை என்ற பெயரில் அனுமதிப்பதா, இல்லை எதிர்ப்பதா? ஒரு கருத்தை மக்கள் நலன் நோக்கிலோ இல்லை பொதுவான நீதியின் பால் மதிப்பிட்டோ சரி என்றோ தவறு என்றோ முடிவு செய்கிறோம். முடிவு செய்வதை நாம் அமல்படுத்தும் போது அந்தக் கருத்தை அழிக்கும் மற்ற கருத்துக்களை நாம் மறுக்க வேண்டியிருக்கிறது. ஒரு கருத்தை ஆதரிப்போர் எவரும் மறைமுகமாக அந்தக் கருத்தின் எதிர் கருத்துக்களை மறுக்கத்தான் முடியும். இதைத்தாண்டி கருத்துரிமை என்பது தூய ஒழுக்க வியலாக இருக்க முடியாது. மலையாள மனோரமா பத்திரிகையை இருமாநில மக்கள் நலனுக்காகவே நாம் எதிர்க்க வேண்டியிருக்கிறது. இந்த எதிர்ப்பு என்பது வாய்ப்புகள் இருக்குமிடத்தில் செயலுக்கு அதாவது மலையாள மனோரமாவை முடக்குவது என்று காட்டுவதில் எந்தத் தவறுமில்லை.

எது சரி என்பதை சம்பந்தப்பட்டவர்கள் பதிலளிக்கட்டும்.

பத்ரி-கண்ணன்-சிபிஎம்-தினமலர்-கார்டூன்

இதற்கு மேல் மே 17 இயக்கத்தை குறை கூறுபவர்கள் இந்த நாட்டில் சரியான கருத்துரிமை உள்ளது, இல்லையென்றால் அதற்காக போராட வேண்டும் என்று பிலிம் காட்டினாலும் உண்மையில் பினாயக் சென் போல உள்ளே போவதற்கு தயாரில்லாத காரியவாதிகள். அதைத் தாண்டி இவர்களிடம் கருத்தோ- உரிமையோ எதுவுமில்லை.

இறுதியாக இவர்களது பித்தலாட்டத்தின் முத்தாய்ப்பாக தினமணி ஆசிரியர் வைத்தி மாமாவின் குத்தாட்டத்தைப் பார்க்கலாம். நேற்றைய தினமணி தலையங்கத்தில் மாட்டுக்கறி மாமி என்று நக்கீரன் எழுதியதை ஏதோ மாபெரும் பத்திரிகை தர்ம மீறல் என்று சுதந்திரப் போராட்டம், அரசியல் சட்ட சாசனம் என்று எங்கெங்கோ சுற்றி வரும் மாமா இறுதியில் நக்கீரன் பத்திரிகையை தனிமைப்படுத்தி அகற்றி  நிறுத்த வேண்டும் என்று சாமியாடாத குறையாக சாபம் கொடுக்கிறார். அதாவது பத்திரிகை தர்மத்தை கேடாக பயன்படுத்தினால் அந்த பத்திரிகையை மூட வைப்பதுதான் பத்திரிகை தர்மமாம்.

இதே கட்டுரையின் இறுதியில்  சென்னை புத்தகக் காண்காட்சியில் மலையாள மனோரமா அரங்கத்தை மூட வேண்டுமென்று ஒரு கும்பல் ஆர்ப்பாட்டம் செய்வதும் அதனால் அந்த அரங்கம் மூடப்படுவதும் என்ன விதத்தில் நியாயம் என்று கேட்கிறார். அதுவும் இதுமாதிரி வன்முறைக் கும்பல்கள் சட்டம் ஒழுங்கை கையிலெடுத்துக் கொள்வதை அனுமதிப்பது கண்டனத்திற்குரியது என்று வசைபாடுகிறார்.

மருமகள் உடைத்தால் பொன்குடம் மாமியார் உடைத்தால் மண்குடம் என்ற பழமொழியின் தகுதியிலேயே இன்னும் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் இந்த அறிவாளிகள்தான் கருத்துரிமை குறித்து நமக்கு பாடம் எடுக்கிறார்கள். கேட்க மறுத்தால் கம்பை எடுக்கிறார்கள். அந்தப்படிக்கு இனி நமக்கு கருத்துரிமை தேவையில்லை. கம்புரிமைதான் வேண்டும்.

அறிவாளிகளின் அந்தரங்கம் – லெனின்

94

மார்க்சியத்தை ஏற்கிறேன்; ஆனால் கட்சியில் இருக்க மாட்டேன் என்று ஒருவர் கூறினால் அவர் வேறு எதுவாகவோ இருக்க முடியுமே தவிர கம்யூனிஸ்ட்டாக இருக்க முடியாது. தொழிலாளி வர்க்கத்தின் உயிரே கட்சி அமைப்புதான் என்றார் லெனின். பல்வேறு போக்குகள் கொண்ட குழுக்களாக இருந்த ரசிய சமூக ஜனநாயகக் கட்சியின் இரண்டாவது மாநாடு 1903-இல் நடந்தது. அதில் கட்சி கட்டுவது குறித்த பாட்டாளிகளின் கண்ணோட்டம், செயல்முறை, அமைப்புமுறை பற்றி உறுதியுடன் வழக்காடிய லெனின் அதையெல்லாம் தொகுத்தளித்த நூல்தான் ‘ஓரடி முன்னால் ஈரடி பின்னால்’. கம்யூனிஸ்ட் கட்சிக்குள் அறிவாளிகள் வழியா? பாட்டாளிகள் வழியா? எது சரி என்பதை சுவைபட விவரிக்கிறது இந்நூல்.

மாநாட்டில் லெனினின் வழியை ஏற்ற பெரும்பான்மையினர் போல்ஷ்விக்குகள் என்று பிரிந்தது அப்போதுதான். அன்று மட்டுமல்ல, இன்றும் உண்மையான கம்யூனிஸ்ட் கட்சிகளும், அறிவாளி வர்க்கமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டு நிற்கிறது, இனியும் அப்படித்தான். ஏன்? அறிவாளிகளின் சமூக, உளவியல் பின்னணியை ‘காவுட்ஸ்கி’யின் கட்டுரையின் மூலம் விளக்கி பதில் தருகிறார் லெனின்.

அறிவாளிகளின் பண்புகள் ‘மண்ணுக்கேற்றபடியெல்லாம் மாறுவதில்லை’, உலகெங்கிலும் ஒரே மாதிரிதான். தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு சமூக நடவடிக்கையில் இருப்பதாகக் காட்டிக்கொள்ளும் பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் ஏராளம் இருக்கிறார்கள். புரட்சிகரக் கம்யூனிஸ்டுக் கட்சிகளை எதிர்ப்பதில் மட்டும் இவர்கள் ஒன்றுபடவில்லை. தமது கத்துக்குட்டி அறிவின் மூலம் சமூகத்தை ஏளனமாகப் பார்க்கும் இவர்களது சிந்தனைமுறை, வாழ்க்கை பற்றிய பாதுகாப்பு உணர்வு, தன்னகங்கார தனித்துவம் இன்னும் ஏராளமானவற்றில் ஒன்றுபடுகிறார்கள்.

பெரும்பான்மை மக்களோ, கட்சியோ, சமூகமோ இவற்றுடன் முரண்பட்டு தன்னை உயர்வாய் நினைத்துக் கொள்ளும் அறிவாளிகளின் பாத்திரத்தை ‘அதே அறிவைக்’ கொண்டு ஆய்கிறார் லெனின். இனி அவரது வார்த்தையிலேயே பார்ப்போம்.

_________________

அறிவாளிகளின் அந்தரங்கம் - லெனின்.இந்தச் சந்தர்ப்பத்தில், இங்குமில்லாமல் அங்குமில்லாமல் ஊசலாடும் அறிவாளியின் பண்பு பற்றி கார்ல் காவுட்ஸ்கி அண்மையில் கூறிய சிறப்புமிக்க சமூக, உளவியல் வரையறையை நினைவுக்குக் கொண்டுவராமல் இருக்க முடியாது. பல்வேறு நாடுகளின் சமூக ஜனநாயகக் கட்சிகள் அண்மைக் காலங்களில் இப்படிப்பட்ட குறைபாடுகளுக்கு அடிக்கடி ஆளாகின்றன.

எனவே இத்தகைய நோயின் குணம் பற்றியும் அதிக அனுபவமிக்க தோழர்கள் வாயிலாகக் கற்றுக் கொள்வது நமக்கு மிக மிகப் பயனுள்ளதாக இருக்கும். எனவே குறிப்பிட்ட சில அறிவாளிகள் குறித்த காவுட்ஸ்கியின் வரையறை நாம் எடுத்துக் கொண்ட பொருளிலிருந்து விலகிச் செல்வது போன்று மேற்பார்வைக்குத் தோன்றலாம்.

”இன்றைக்கு நமது கவனத்தை மிகுந்த அளவு ஈர்க்கிற பிரச்சனை அறிவாளிகளுக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கும் இடையே உள்ள பகை முரண்பாடாகும். (ஜெர்மன் சொற்களான லிட்டராட் மற்றும் லிட்டராடென்டம் ஆகிய சொற்களை மொழி பெயர்த்து அறிவாளி, அறிவுத்துறையினர் என்று நான் பயன்படுத்துகிறேன்). நான் இந்த முரண்பாட்டை ஏற்றுக் கொள்வதால் எனது நண்பர்கள் அநேகமாக என்மீது கோபமாக இருப்பார்கள். (காவுட்ஸ்கியே ஓர் அறிவாளி, ஓர் எழுத்தாளர், ஓர் பத்திரிகையாசிரியர்- லெனின்) ஆனால் உண்மையிலேயே அந்தப் பகை முரண்பாடு இருக்கிறது.

ஏனைய விஷயங்களைப் போலவே, இதனை மறுப்பதன்மூலம் வெல்ல நினைப்பது பேதமையான தந்திரமாகும். இம்முரண்பாடு சமூகப் பண்பாகும்; அது வர்க்கங்கள் சம்பந்தப்பட்டது; தனி நபர் சம்பந்தப்பட்டதல்ல. ஒரு தனிப்பட்ட அறிவாளி, ஒரு தனித்த முதலாளியைப் போல, பாட்டாளி வர்க்கப் போராட்டத்தில் பாட்டாளிகளோடு தன்னை இணைத்துக் கொள்ளலாம். அவ்வாறு செய்யும் போது, அவர் தனது குணாம்சத்தையும் மாற்றிக் கொள்கிறார். கீழே பிரதானமாக நான் பேசப்போவது இப்படிப்பட்ட வகை மாதிரியான அறிவாளிகளைப் பற்றி அல்ல. காரணம், அவர்கள் ஒரு சில விதி விலக்கானவர்கள்.

முதலாளித்துவச் சமுதாயத்தின் நிலைப்பாடுகளையே தனது நிலைப்பாடுகளாக ஏற்றுக் கொண்ட பரவலாகக் காண கிடைக்கிற அறிவாளிகளைக் குறிப்பிடவே நான் அறிவாளி என்ற சொல்லைப் பயன்படுத்துகிறேன். அறிவுத்துறையினர் என்ற வகையில் ஒரு தனி வர்க்கத்தின் குணாம்சத்தை அவர்கள் பிரதிபலிக்கிறார்கள். இந்த வர்க்கம் பாட்டாளி வர்க்கத்திற்கு ஒருவகையில் பகை முரண்பாடு கொண்டதாக இருக்கிறது.

”எனினும், இந்த முரண்பாடு முதலுக்கும் உழைப்புக்குமான முரண்பாட்டிலிருந்து வேறுபடுகிறது. அறிவாளி ஒரு முதலாளி அல்ல. அவரது வாழ்க்கைத்தரம் முதலாளித்துவத்தன்மை உடையது என்பது உண்மையே; தான் ஒரு ஓட்டாண்டியாகாமல் தடுக்க அத்தகைய வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது; ஆனால் அதே நேரத்தில் தன் உழைப்பின் விளைபொருளை அவர் விற்கும்படி கட்டாயப்படுத்தப்படுகிறார். பெரும்பாலும் உழைப்புச் சக்தியை விற்கும்படி ஆகிறது. அடிக்கடி அவர் முதலாளியால் சுரண்டப்படுகிறார்; அவமதிப்புக்குள்ளாகிறார்.

எனவே, அறிவாளிக்குப் பாட்டாளி வர்க்கத்தோடு பொருளாதாரப் பகை முரண் ஏதுமில்லை. ஆனால் அவரது வாழ்க்கை நிலையும், உழைப்புச் சூழலும் பாட்டாளி வர்க்க ரீதியாக இல்லை. இதுவே உணர்வுகளிலும் கருத்துக்களிலும் பகை முரண்பாட்டைத் தோற்றுவிக்கிறது.

”தனிப்படுத்தப்பட்ட ஒரு தனிநபராக இருக்கும் பாட்டாளி ஒரு பொருட்டேயல்ல. அவரது சக்தி அனைத்தும், அவரது முன்னேற்றம் முழுவதும், அவரது நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள் எல்லாமும் அமைப்பிலிருந்தும் அவர் தமது தோழர்களோடு சேர்ந்து எடுக்கும் திட்டமிட்ட நடவடிக்கையிலிருந்தும் பெறப்பட்டவை. பெரியதும் வலிமை மிக்கதுமான அமைப்பின் ஓர் அங்கமாக அவர் விளங்கும்போது அவர் பெரியவராக வலிமை மிக்கவராக விளங்குகிறார். இந்த அமைப்புதான் அவருக்குப் பிரதானமானது; இதனோடு ஒப்பிடும்போது தனிநபர் பொருட்டாக மாட்டார். முகம் தெரியாத மிகப் பெரும் மக்கள் திரளின் பகுதியாகப் பாட்டாளி மிகப் பெரும் ஆர்வத்தோடு போராடுகிறார். இதில் சுயநலனுக்கோ, தனிப்பட்டவர் புகழுக்கோ இடமில்லை. தாம் நியமிக்கப்படும் எந்த ஒரு நிலையிலும் சுயகட்டுப்பாட்டோடு அவர் கடமையாற்றுகிறார்; அது அவரது உணர்வுகள் எண்ணங்கள் முழுமையையும் தழுவிக் கொண்டுவிடுகிறது.

”அறிவாளிகளின் விஷயமோ முற்றிலும் வேறானது. தனது சக்தியை வைத்துப் போரிடாமல் வாதங்களை வைத்துப் போரிடுகிறார். அவரது ஆயுதங்களோ அவரது சொந்த அறிவு, சொந்ததிறமை, சொந்த நம்பிக்கைகள் மட்டுமே; எந்த ஒரு பதவியையும் கூட அவர் தனது சொந்தப் பண்புகளால் மட்டுமே அடையமுடியும். எந்த ஒரு வெற்றிகரமான நடவடிக்கைக்கும் தனது தனித்துவத்தைக் கட்டவிழ்த்து விடுவதே அவருக்கு முக்கிய நிபந்தனையாகப்படுகிறது. முழுமைக்குத் தம்மைக் கீழ்ப்படுத்தி ஒரு பகுதியாக விளங்குவதற்கு அவர் மிகுந்த சிரமத்தின் பேரில்தான் ஒப்புக் கொள்கிறார். அதுவும் கூட அவசியத்தினால் ஏற்றுக் கொள்கிறாரே தவிர, ஆர்வத்தினால் அல்ல. ஒழுங்கு கட்டுப்பாடு மக்கள் திரளுக்கு மட்டுமே அவசியம் என்று அவர் அங்கீகரிக்கிறார்; ஆனால் தேர்ந்த உள்ளங்களுக்கல்ல. தம்மை பின்னதாகச் சொல்லப்பட்டவர்களோடு சேர்த்துக் கொள்கிறார்.

நீட்சேயின் தத்துவமே அறிவாளியின் உண்மைத் தத்துவமாகும். அதி மனிதன் கோட்பாட்டையும் சேர்த்து அத்தத்துவத்தில் தனிமனித ஆளுமையை நிறைவு செய்வதே எல்லாம்; இப்படிப்பட்ட தனித்துவத்தை பெரியதொரு சமூக நோக்கத்திற்குக் கீழ்ப்படுத்துவது இழிவானது, கேவலமானது. இத்தத்துவமே அறிவாளியை பாட்டாளிகளின் வர்க்கப் போராட்டத்தில் பங்கேற்க முடியாதபடி ஆக்கி விடுகிறது.

”நீட்சேவுக்கு அடுத்து, அறிவுத் துறையினரின் உணர்வுகளுக்கு விடையளிக்கத்தக்க ஓர் தத்துவத்தை எடுத்து விளக்கியவர் அநேகமாக இப்சனாகத்தான் இருக்க வேண்டும். அவரது ‘மக்களின் எதிரி’ என்ற நாடகத்தில் வரும் டாக்டர் ஸ்டாக்மான், பலர் சொல்வது போல, சோசலிஸ்டு அல்ல; பாட்டாளி வர்க்கத்தோடு நிச்சயம் மோதலுக்கு வரப்போகும் அறிவாளி வகையைச் சேர்ந்தவரே. பாட்டாளி வர்க்க இயக்கத்தோடு மட்டுமல்ல, பொதுவில் வேறு எந்த வகையான மக்கள் இயக்கமாக இருந்தாலும் அதற்குள் அவர் வேலை செய்ய ஆரம்பித்ததுமே அதற்கெதிராக மோதத் தொடங்கி விடுவார்.

பாட்டாளி வர்க்க இயக்கம், ஏன் ஒவ்வொரு ஜனநாயக இயக்கத்தின் அடித்தளமாக விளங்குவது, ஒருவர் தனது சக தோழர்களின் பெரும்பான்மைக்கு மதிப்புக் கொடுப்பதாகும். ஆனால் ஸ்டாக்மன் வகையைச் சேர்ந்த அறிவாளியோ ‘திட்டவட்டமான பெரும்பான்மை’யை தூக்கி எறியப்பட வேண்டிய ஓர் அரக்கனாகவே கருதுகிறார்….

”பாட்டாளி வர்க்க உணர்வுகளோடு ஊறிப்போன ஓர் அறிவாளிக்குச் சிறந்த எடுத்துக்காட்டு ஜெர்மானிய லீப்னெக்ட் ஆவார். இவர் சிறந்த எழுத்தாளராக இருந்தும் அறிவாளியின் குறிப்பான தனிப்பட்ட குணாம்சத்தை இழந்துவிட்டார்; அவர் பாட்டாளிகளின் படை அணிகளோடு மகிழ்ச்சியோடு நடை போட்டவர்; தான் நியமிக்கப்பட்ட எந்த ஒரு பதவியிலும் அவர் பணிபுரிந்தார். நமது மாபெரும் லட்சியத்திற்கு முழுமனத்தோடு தன்னைக் கீழ்ப்படுத்தினார். இப்சனிலும் நீட்சேவிலும் பயிற்சி பெற்ற அறிவாளிகள் தமது தனித்தன்மை ஒடுக்கப்படுகிறது என்று தீனமான குரல் ஊளையிட்டதை அவர் வெறுத்து ஒதுக்கினார்.

சிறுபான்மையில் தங்களைக் காண நேர்ந்த அறிவாளிகள் இப்படிப்பட்ட பண்புகளை வெளியிடக்கூடும். லீப்னெக்ட், சோசலிச இயக்கத்திற்குத் தேவையான அறிவாளி வகையின் எடுத்துக்காட்டாக விளங்குகிறார். காரல் மார்க்சையும் கூட இங்கே நான் குறிப்பிடலாம். அவர் தன்னை முன்னுக்குத் தள்ளிக் கொண்டதேயில்லை; சர்வதேச அகிலத்தில் பலமுறை சிறுபான்மையாக இருந்த போதும் அவர் கட்சிக் கட்டுப்பாட்டோடு நடந்து கொண்டது மிக மிக அசாதாரணமானது.

(மூலம்: ஆங்கிலம். ஓரடி முன்னே ஈரடி பின்னே – லெனின்: தொகுப்பு நூல்கள்  தொகுதி 7, பக்கம் 322 – 4)

– புதிய கலாச்சாரம், ஜூலை 1998

கருத்துரிமைக்குக் கல்லறை!

பொய்க்குற்றம் சாட்டி மரண தண்டனை விதிக்கப்பட்டுச் சிறையிடப்பட்டிருந்த புரட்சிகரக் கலைஞரான தோழர் ஜிதேன் மராண்டி, மரணத்தின் பிடியிலிருந்து விடுதலை பெற்றுள்ளார்.

தோழர் ஜிதேன் மராண்டி ஜார்கந்த் மாநிலத்தின் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடும் மக்கள் கலைஞராவார். பழங்குடி இனத்தைச் சேர்ந்த அவர், அரசியல் கைதிகள் விடுதலைக்கான கமிட்டியின் செயலர்களில் ஒருவர். அவரது பாடல்கள் கார்ப்பரேட் கொள்ளையையும் ஜார்கந்த் அரசின் கட்டாய நிலப்பறிப்பையும் எதிர்த்து முழங்குகின்றன; இதனாலேயே, அவரது குரல்வளையைத் தூக்குக் கயிறால் இறுக்கி அழிக்கத் துடித்தது, ஜார்கந்த் மாநில அரசு.

கடந்த 2007ஆம் ஆண்டு அக்டோபர் 26ஆம் நாள் ஜார்கந்தின் கிரிதி மாவட்டத்திலுள்ள சில்காரி கிராமத்தில், அம்மாநில முன்னாள் முதல்வரான பாபுலால் மராண்டியின் மகனாகிய அனுப் மராண்டி உள்ளிட்டு 19 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இப்படுகொலையை மாவோயிஸ்டுகள் நடத்தியதாக ஆட்சியாளர்கள் கூறிவருகின்றனர். ஜிதேன் மராண்டி என்பவர் தலையிலான 10 பேர் கொண்ட குழு இப்படுகொலையை நடத்தியதாகக் குற்றம் சாட்டி, இந்த 10 பேரின் முகவரியோ, பெற்றோர் பெயரோ இல்லாமல் முதல் தகவல் அறிக்கையை போலீசு  பதிவு செய்தது.

தோழர் ஜிதேன் மாரண்டி : கருத்துரிமைக்குக் கல்லறை!மறுநாள் அக்.29 அன்று ராஞ்சியைச் சேர்ந்த “பிரபாத் கபர்” என்ற நாளேடு, நாட்டுப்புறக் கலைஞரும் அரசியல் கைதிகள் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்தவருமான ஜிதேன் மராண்டி ஒரு மாவோயிஸ்டு தீவிரவாதியாவார் என்று கதை கட்டி, அவரது புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டது. மனித உரிமையாளர்களும் புரட்சிகர ஜனநாயக சக்திகளும் இப்பொய்ச்செய்திக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்ததும், மறுநாள் அக்.30 அன்று  தவறுக்கு வருத்தம் தெரிவித்து, புகைப்படத்திலுள்ள ஜிதேன் மராண்டி வேறு என்றும், தாக்குதல் நடத்திய மாவோயிஸ்டு ஜிதேன் மராண்டி வேறு என்றும் இந்த நாளேடு மறுப்புச் செய்தியை வெளியிட்டது.

இந்நிலையில், கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராகப் போராடிவரும் தோழர் ஜிதேன் மராண்டியையும் புரட்சிகர ஜனநாயக சக்திகளையும் ஒடுக்கும் நோக்கத்துடன் இந்த விவகாரத்தை போலீசு பயன்படுத்திக் கொண்டது.

ஜார்கந்த் மாநிலத்தில் கார்ப்பரேட் முதலாளிகளின் கட்டாய நிலப்பறிப்புக்கு எதிராக கடந்த 2008ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி நடந்த விவசாயிகள் போராட்டப் பேரணி  பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ஜிதேன் மராண்டி மீது கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியதாகப் பொய்க்குற்றம் சாட்டிய போலீசு, அவரைக் கைது செய்து சிறையிலடைத்தது.

2008 ஏப்ரல் 12ஆம் தேதியன்று அவர் பிணையில் வெளிவரும்போது,  2007ஆம் ஆண்டில் சில்காரியில் நடந்த படுகொலையைத் தலைமையேற்று நடத்திய மாவோயிஸ்டு பயங்கரவாதி இவர்தான்  என்று மீண்டும் பொய்க்குற்றம் சாட்டிக் கைது செய்தது, போலீசு. அவரோடு பழங்குடியின ஏழை விவசாயிகளான மனோஜ் ராஜ்வார், சத்திரபதி மண்டல், அனில்ராம் ஆகியோரும் இக்கொலையில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டனர். கடந்த ஜூன் 2009 இல் ஜார்கந்த் மாநிலக் கீழமை நீதிமன்றம் தோழர் ஜிதேன் மராண்டி உள்ளிட்ட நால்வருக்கும் மரண தண்டனை விதித்தது.

ஜிதேன் மராண்டி என்ற பெயரில் ஒரு மாவோயிஸ்டு புரட்சியாளர் தலைமறைவாக இயங்கி வருகிறாராம். அதே பெயரில் உள்ள நாட்டுப்புறப் பாடகரான ஜிதேன் மராண்டியைக் கைது செய்து, இவர்தான் அந்த மாவோயிஸ்டு தீவிரவாதி என்று கணக்கு காட்டியது ஜார்கந்த் போலீசு.

தோழர் ஜிதேன் மராண்டி மீது பொய்க்குற்றம் சாட்டி மரணதண்டனை விதிக்கப்பட்டதைப் பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் எதிர்த்து ஆர்ப்பாட்டங்களை நடத்தின. ஜார்கந்த் விகாஸ் மோர்ச்சா என்ற அமைப்பின் துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான டாக்டர் சவா அகமது, போலீசார் குற்றவாளியைக் கைது செய்துவிட்டதாகக் கணக்குக்காட்டுவதற்காக நாட்டுப்புறக் கலைஞரான ஜிதேன் மராண்டியைக் கைது செய்துள்ளனர் என்று வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார்.

தோழர் ஜிதேன் மராண்டி மீது பொய்க்குற்றம் சாட்டி ஆட்சியாளர்கள் மரண தண்டனை விதிக்கக் காரணம் என்ன? எங்கெல்லாம் கார்ப்பரேட் கொள்ளையும் நிலப்பறிப்பும் தொடர்கிறதோ, அங்கெல்லாம் தோழர் ஜிதேன் மராண்டி தனது  குழுவினருடன் கலைநிகழ்ச்சிகள் நடத்தி மக்களுக்குப் போராட்ட உணர்வூட்டினார்.  மக்களின் போராட்டத்தை எதிரொலிக்கும் அவரது பாடல் ஒலிப்பேழைகள் ஜார்கந்த் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களிலும் உழைக்கும் மக்களிடம் பிரபலமடைந்துள்ளன. அவர் ஜார்கந்த் மக்களின் போராட்ட அடையாளமாகத் திகழ்ந்தார். இதுதான் அரசின் வன்மத்துக்குக் காரணம்.

தோழர் ஜிதேன் மாரண்டி : கருத்துரிமைக்குக் கல்லறை!தோழர் ஜிதேன் மராண்டி மீதான கொலைக்குற்ற வழக்கு கடந்த ஈராண்டுகளாக நடந்துவந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது அவர்கள் குற்றம் செய்தார்கள் என்று நிரூபிக்க வலுவான ஆதாரங்கள் இல்லை என்று கூறி, ஜிதேன் மராண்டி உள்ளிட்ட நால்வரும்  நிரபராதிகள் என்று அறிவித்து, கடந்த 2011 டிசம்பர் 15ஆம் தேதியன்று ஜார்கந்த் உயர் நீதிமன்றம் அனைவரையும் விடுதலை செய்துள்ளது. புரட்சிகர இயக்கத்தின் மீது அடக்குமுறையை ஏவி முடமாக்கும் நோக்கத்துடனும், பழிவாங்கும் வன்மத்துடனும் போலீசார் அவசர கோலத்தில் அடிமுட்டாள்தனமாக சோடித்த பொய்வழக்கு புஸ்வாணமாகிப் போனது. அதேசமயம், ஜிதேன் மராண்டி மற்றும் பழங்குடியின விவசாயிகள் மீது பொய்க்குற்றம் சாட்டப்பட்டு இன்னும் பல்வேறு வழக்குகள் போலீசாரால் சோடிக்கப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து இப்போராளிகளை விடுவிக்கவோ, பொய் வழக்கு சோடித்த போலீசு அதிகாரிகளைக் கைது செய்து தண்டிக்கவோ நீதிமன்றம் முன்வரவில்லை.

இது, ஜார்கந்தில் நடந்த ஏதோ விதிவிலக்கான விவகாரம் என்று ஒதுக்கிவிட முடியுமா? காஷ்மீர் மனித உரிமை குறித்த மக்கள் நீதிமன்றம் என்ற அமைப்பின் கூட்டத்தில் பேசவந்த அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் ரிச்சர்டு ஷாப்ரியோ, காணாமல் போனவர்கள் பற்றிய ஆசியக் கூட்டமைப்பின் சார்பில் காஷ்மீருக்கு வந்த மே அகினோ, காஷ்மீருக்குச் சென்ற மனித உரிமை செயல்வீரரான கௌதம் நாவ்லகா  என அனைவருமே டெல்லி, சிறீநகர் விமான நிலையங்களிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டனர். இந்தியாவுக்கு அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்களின் அதிபர்களும் இயக்குனர்களும் தாராளமாக வந்து போகலாம். ஆனால், காஷ்மீரின் மனித உரிமை பற்றிப் பேசுவதற்கு உள்நாட்டினரோ, வெளிநாட்டினரோ எவரும் வரக்கூடாது என்பதுதான் இந்திய அரசின் எழுதப்படாத விதியாகிவிட்டது.

சட்டிஸ்கரின் தண்டேவாடாவைச் சேர்ந்த பழங்குடியின இளைஞரான லிங்கராம் கோடோபி, மாவோயிஸ்டுகளுக்கு எஸ்ஸார் நிறுவனத்தினமிருந்து பணம் வாங்கிக் கொடுத்தார் என்று பொய்க்குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்து வதைக்கப்பட்டார். ஆட்கொணர்வு மனு மூலம் அவர் விடுவிக்கப்பட்ட போதிலும், அவரது வயதான தந்தை உள்ளிட்டு அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அவரது வீடு  எரிக்கப்பட்டு அவரது கிராமத்தினர் வதைக்கப்பட்டனர். அவரது உறவினரும் பள்ளி ஆசிரியையுமான சோனி சோரி என்பவர் மாவோயிஸ்டுகளுக்குப் பணப்பட்டுவாடா செய்யும் தொடர்பாளராக இருந்தார் என்று பொய்க்குற்றம் சாட்டப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

மனித உரிமை ஜனநாயக உரிமை பற்றியோ, காஷ்மீர் பற்றியோ, கார்ப்பரேட் கொள்ளையைப் பற்றியோ, மாவோயிஸ்டுகள் சார்பாகவோ யாரும் எதுவும் பேசக் கூடாது என்பதுதான் இப்போது இந்திய அரசின் அறிவிக்கப்படாத கொள்கை. மறுகாலனியாதிக்கத்தின் கீழ் மனித உரிமைஜனநாயக உரிமைகள் எத்தகையதாக இருக்கும் என்பதற்கு, தொடரும் கைதுகளும் பொய்வழக்குகளும் மோதல்கொலைகளும் அடக்குமுறைகளுமே இரத்த சாட்சியமாக உள்ளன.

– புதிய ஜனநாயகம், ஜனவரி – 2012