Wednesday, June 24, 2026
முகப்பு பதிவு பக்கம் 439

டீசல் விலை உயர்வு : வண்டிய விக்கிறதா உடைக்கிறதான்னே தெரியல !

மோடியின் இந்தியாவில் மக்களின் வாழ்க்கை அதல பாதளத்தை நோக்கி செல்வது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், மக்கள் இந்த நிலைய எப்படி சாமாளிக்கிறார்கள்?

விவசாயத்துல ’உழுதவன் கணக்கு பார்த்தா உழக்குகூட மிஞ்சாது’ன்னு சொல்லுவாங்க… இந்த ஒரு சொல்லே போதும் விவசாயிங்களோடா நிலையை புரிந்து கொள்ள… இப்ப விவசாயிங்களோட நிலைமைதான் போக்குவரத்து தொழிலுக்கும்.

அன்றாடம் விவசாயிகள் விளைவிக்கிற பொருட்களில் இருந்து முதலாளிகளோட உற்பத்தி பொருட்களை கொண்டு போய் சேர்க்கிற வரைக்கும் லாரிக்கு பெரும் பங்கு உண்டு. அந்த லாரி தொழில்தான் இப்பபோது பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கு. ஒவ்வொரு நாளும் உயரும் பெட்ரோல்-டீசல் விலையால கடுமையா பாதிக்கப்பட்டிருக்கு சரக்கு போக்குவரத்து தொழில்.

படம் – வினவு செய்தியாளர்

இந்த பாதிப்பு பத்தி கோயம்பேட்ல இருந்த ஈச்சர் 1110 வண்டியோட டிரைவரும், உரிமையாளருமான அய்யப்பனிடன் பேசிப்பார்த்தோம்…

“வாங்க சார்… எங்க கொறைய யாருகிட்ட சொல்லுறதுன்னுதான் இருந்தேன்….

டெய்லியும் வெல ஏறிட்டே இருக்கு சார். வண்டிய நம்பி எடுக்க முடியல… ஒவ்வொரு நாளும் தலையில கல்ல தூக்கி போட்டது போல இருக்கு. கோயம்பத்தூர்ல இருந்து பன்னிரெண்டாயிரத்துக்கு வாழைத் தார் ஏத்திகிட்டு வந்தேன். அதுல ஒன்பதாயிரம் டீசல் போட்டுட்டேன். வரும்போது போலிசுக்கு படி அறநூறுபா ஆயிடுச்சி. இது நிக்காம ஓட்டுறதால வந்தது. மாட்டியிருந்தா இரண்டாயிரபா கூட புடுங்கியிருப்பனுங்க, எப்படியோ வந்து சேர்ந்துட்டேன்.

இப்ப இந்த (கோயம்பேடு) மார்கெட்டுல இருந்து போறதுக்கு டிரிப்பு இல்லாம காத்துகிட்டு இருக்கேன். டிரிப்பு கெடக்கிறதுக்குள்ள கையில இருக்க காசு கரஞ்சிடும் போலிருக்கு.

அடுத்து என்ன செய்வேன்..? அய்யப்பனின் கவலை (படம் – வினவு செய்தியாளர்)

அடுத்து கேரளா போகனும்னு சொன்னாங்க. என்னன்னு இன்னும் உறுதியா தெரியல. லோடு வந்தா தான் தெரியும். அதுக்கு ஒரு நாள் ஆகுமா, இரண்டு நாள் ஆகுமான்னு தெரியல.  இதெல்லாம் நெனக்கும் போது வண்டிய வித்துடுலாம்னு இருக்கேன்.

ஆனா, வண்டிய விக்க மனசு இல்ல. வண்டிய ஒடச்சி தான் போடனும். அவ்ளோ வெறுப்புல இருக்கேன். வண்டிக்கு ஓனரா இருந்தே என்னால சமாளிக்க முடியல. வெறும் டிரைவருங்க பாடு சொல்லுறதுக்கே தகுதி இல்ல…

ஒரு மாசத்துக்கு பத்து லோடு வந்தா பெரிய விஷயம்..சார்.. அது அப் & டவுன் இருக்கனும். அப்பதான் பொழப்பு நடத்த முடியும்.

மாசம் வண்டிக்கு செலவும், வீட்டு செலவும் கணக்கு போட்டா தலை சுத்துது. ஈச்சர் 1110-இந்த வண்டியோட வெல ஏழு லட்சம்..சார்…

ஆறு வருஷத்துக்கு டியூவ். மாசம் 22,000 கட்டணும். ஆறு வருஷத்து கணக்கு பார்த்தா பத்து லட்சம் ஆவுது. வண்டி ஓடுதோ ஓடலையோ மாசத்துக்கு பத்து டிரிப்பு ஓட்டினாலும் பத்தாயிரத்துக்கு சர்வீஸ் பன்னணும். பராமரிப்பு இல்லனா லாங் ரூட்டு நம்பி ஓட்ட முடியாது. கியர் ஆயில், பிரேக் ஆயில், இஞ்சின் ஆயில், கிரவுன் ஆயில்,  இதுக்கு மட்டும் எட்டாயிரத்து ஐநூரு ஆகும் கூலியோட.

போய்ட்டு வர ஒவ்வொரு டிரிப்புக்கும் டயரை கழட்டி பவுடர் போடனும், கிரீஸ் அடிக்கனும். இதை செய்யலன்னா டயர் சூடாகி வெடிக்கும். போதாக்குறைக்கு ஹெட்லைட், வைப்பர், கிரீஸ் அடிக்கிறது இப்படி எதாவது ஒரு செலவு வந்துகிட்டே இருக்கும்.

படம் – வினவு செய்தியாளர்

இது இல்லாம வீட்டுக்கான செலவ பார்க்கணும். உண்மைய சொல்லனும்னா எனக்கு இரண்டு வீடு. ஒன்னு இந்த வண்டி; இன்னொன்னு பொண்டாட்டி புள்ளைங்க இருக்குற வாடகை வீடு.

சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் சார். இப்ப தொழிலுக்காக கோயம்பத்தூர் வந்துட்டேன். அங்க இருக்க வீட்டுக்கு வாடகை மாதம் 2000 . ஒரே ரூம்தான் சின்னதா இருக்கும். வெறும் சோறு ஆக்குறதுக்கும், துணி மாத்துறத்துக்கும் தான் அந்த இடம். புழங்குறது எல்லாம் வெளில சிமெண்டு ஓடு போட்ட வீட்டுல புழங்கிக்குவோம்.

ரெண்டு பசங்க கவர்மெண்டு ஸ்கூல்ல தான் படிக்குதுங்க. சின்னதா கணக்கு பர்த்தாக் கூட வாரத்துக்கு சோப்பு, சீப்பு, பவுடர் செலவு, குழந்தைங்க செலவு, கை செலவுன்னு நாலாயிரம் ஆகும். அது இல்லாத அரசி, மளிகை வாரத்துக்கு இரண்டாயிரம் ஐந்து பேருக்கு தேவை. எங்க அப்பா, அம்மாவும் எங்க கூடதான் இருக்காங்க, அவங்களுக்கான செலவுன்னு மொத்தமா மாசத்துக்கு 22,000 தேவைப்படும்.

என்னோட வருமானத்துல முக்கிய செலவு எதுவும் செய்ய முடியாது. எல்லாம் கடன் தான் வாங்கனும். அப்பா அம்மாவுக்கு உடம்பு சரியில்ல, சொந்த பந்தம் நிகழ்ச்சிக்கு போகனும் எல்லாத்துக்கும் கடன் தான்.

கல்யாணம் ஆகி ஏழு வருஷம் ஆகுது. திருச்செந்தூருக்கு, ஊட்டிக்கு கூட்டினு போறேன்னு பல தடவை சொல்லிட்டேன். இன்னும் எந்த ஊருக்கும் அதுங்கள கூட்டினு போக முடியல. இத சொல்லியே வீட்டுல சண்ட வரும்” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவருடைய செல்போன் அழைப்பு குறுக்கிட்டதால், பேசி முடித்து விட்டு மீண்டும் தொடங்கினார்.

“இது இல்லாத ஒரு நாளைக்கு வண்டியில உட்கார்ந்தா என்னோட செலவுக்கு  250 ரூபா வேணும். ஒரு வேளைக்கு 60 ரூபா இல்லாத எதுவும் சாப்பிட முடியாது. ரோட்டுல நிறுத்துற இடத்துல படுக்கனும்னா கொசு புடுங்கும். அதுக்கு கொசு வத்தி, பீடி, முழிப்பு வந்தா டீ குடிக்கிறதுன்னு நூறு ரூபா ஆகிடும்.

வாரத்துக்கு ஒரு வாட்டி தண்ணி அடிச்சா அது தனி செலவு. அது எப்படியும் 300 ரூபா ஆகும். எங்க கணக்கே அய்யாயிரம் இல்லாம போவாது. இந்த லட்சணத்துல, நாங்க பெட்ரோல் விலைய ஏத்தினா என்னா பன்றது?

யாரும் சரியில்ல…, கட்சி காரனும் சரியில்ல. அசோசியேசனும் சரியில்ல. டீசல் விலை கூடிடிச்சின்னு பார்டிகிட்ட சேர்த்து பணம் கேட்க முடியாது. லோடு ஆர்டர் கேன்சல் பன்னிடுவாங்க. எங்களுக்கும் பார்டிக்கும் இடையில வர்ற பிரச்சனைய சாமாளிக்க் முடியாம திண்டாடுறோம்.

போலிசு கெடுபிடி வேற. நம்ம வண்டி 7 டன் கொள்ளளவு புடிக்கும்.  எங்களுக்கும், பார்டிக்கும் நஷ்டம் வரக்கூடாதுன்னு நாங்க இரண்டு டன் அதிகமா ஏத்திகிட்டு போவோம். அதை போலிசுகாரனுங்க மோப்பம் புடிச்சி, கேசப் போட்டு அதுக்கு பல மடங்கு பணம் புடிங்கிக்குவானுங்க. சில நேரம் எல்லாம் சரியா இருந்தாலும் போலிசு சும்மா விட மாட்டனுங்க. நிறுத்தினதுக்கு ஐம்பது ரூபா கொடுன்னு சொல்லுவானுங்க. அதுக்கு பேரு எண்ட்ரி போடுறதாம். இந்த எண்ட்ரி எதுக்குன்னே இதுவரைக்கும் எங்களுக்கு தெரியல.

அப்புறம் சோதனைன்ற பேர்ல ஆர்.டி.ஓ வருவாரு. அவருகிட்ட மாட்டினோம்னா ஓவர் லோடுன்னு கேசு போடுவாரு. அதுக்கு 2500 ரூபா. கேசு போடாம விடறுதுக்கு 500 ரூபா கொடுத்தா போதும். இதுல யாருகிட்டயும் மாட்டாம ஓட்டுறது நம்ம சாமர்த்தியம்.

இந்த லட்சணத்துல உடம்புல ஆயிரத்தெட்டு நோயி. பாதி பேருக்கு நாற்பது வயசு ஆனாலே சரியா கண்ணு தெரியாது. ஸ்டியரிங் புடிச்சி இரண்டு கையும் கொடையும். தூக்கம் சோறு எதுவும் நேரத்துக்கு இல்ல. அல்சரு, கை கால் மூட்டு, உடம்பு வலி. இதோடதான் வாழ்க்கைய ஓட்டுறோம். எப்ப ஒழியும்னு தெரியல!

உடம்பும் போயி பணத்துக்கும் வழி இல்ல. இந்த வேலைக்கு எங்க குடும்பத்துல யாரும் வந்துடக் கூடாதுன்னு வேண்டுவோம். வண்டி எடுத்து வீடு போயி சேர்ந்தாதான் இந்த வாழ்க்க நிஜம்..” என்று சொல்லிவிட்டு விடை பெற்றார்.

வெள்ளை நிறம் மீதான இந்தியர்களின் ஆர்வத்தை மாற்றுவது எப்படி ?

கருப்பு – சிவப்பு – வெள்ளை – பழுப்பு :
இந்தியர்களின் வெள்ளை நிறத்தின் மீதான அதீத ஆர்வத்தை மாற்றுவது எப்படி?

ந்திய சமூகத்தைப் பொறுத்தவரையில் பாகுபாட்டின் ஊற்று பார்ப்பனீயமே. சாதி- மத – பாலின – நிற பாகுபாட்டின் குவிமையமாக பார்ப்பனியம் இருக்கிறது. சாதி – மத – பாலின பாகுபாடு சமூகத்தின் எதிர்ப்புக்கு ஆளாக்கப்பட்டு, சீர்திருத்தங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், நிற பாகுபாடு அனைத்து மட்டங்களிலும் வெட்கமற்ற பொது உளவியலாக மாறி நிற்கிறது. அதனை எதிர்த்து ஒன்றிரண்டு குரல்கள் அவ்வவ்போது ஒலித்து வருகின்றன. அந்த வகையில் முனா பீட்டியின் செயல்பாடு சிறு மாற்றத்தை துவக்கி வைத்திருக்கிறது. நிறத்தின் அடிப்படையை வைத்தே ஒருவரின் திறமையை மதிப்பிடுகிறது இந்திய சமூகம் என்கிறார் முனா பீட்டி. நிற பகுப்பாட்டுக்கு எதிரான செயல்பாட்டாளரான முனா, இந்தியர்களுக்கு ‘வெள்ளை’ நிறத்தின் மீதுள்ள அளவற்ற கவர்ச்சியையும் ‘கருப்பு’ நிறத்தின் மீதான அசூயையும் விவரிக்கிறார். பொருத்தமற்ற, பொருளற்ற நிறப்பாகுபாட்டை நாம் இன்னமும் கைவிடாமல் இருக்கிறோம் என்கிற கேள்வியை கேட்பதோடு, அதை கைவிடுவதற்கான சிறு முயற்சிகளை முன்வைக்கிறார்.

♦♦♦

ரபி மொழியில் ‘முனா’ என்கிற என்னுடைய பெயருக்கு ‘விருப்பம்’ அல்லது ‘ஆசை’ என பொருள். ஆனால், கடந்த பல வருடங்களாக ‘கருப்பு’ என பொருள்படும் பல பெயர்களில்தான் நான் அழைக்கப்பட்டிருக்கிறேன்.  ஏனென்றால் என்னுடைய தோல் அடர் நிறத்தில் இருந்தது.

என்னுடைய அப்பா அடர் நிறம் கொண்டவர். அம்மா வெளிர் நிறம் கொண்டவர். நான் அப்பாவின் நிறத்தை எடுத்துக்கொண்டேன். என்னுடைய தோலின் நிறம், வெள்ளையாகவும் இல்லை, கருப்பாகவும் இல்லை. அழகு சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் கருப்பு நிறமாக அடையாளப்படுத்தும் அடர் பழுப்பு நிறம் என்னுடையது.

சிறு வயதிலிருந்தே இது எனக்குப் பிடிக்கவில்லை. என்னுடைய நிறத்தின் காரணமாக நான் முழுமையடையவில்லை என நம்ப வைக்கப்பட்டிருந்தேன். என்னைச் சுற்றியிருந்தவர்கள் எப்போதும் என் நிறத்தை மற்றவர்கள் நிறத்துடன் ஒப்பிட்டபடியே இருந்தார்கள். அவர்களுடைய கருத்துகளிலிருந்தும் தீர்ப்புகளிலிருந்தும் என்னால் தப்பிக்கவே முடியவில்லை.

சொந்த குடும்பமும்கூட என்னுடைய தோற்றத்தைப் பற்றி நகைச்சுவை துணுக்குகளை சொன்னது. அதில் பிரபலமான ஒன்று: “அம்மா என்னை பிரசவிக்கும் நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. அதனால்தான் நான் கருப்பு நிறத்தில் பிறந்தேன்”.

பள்ளியில் என்னுடைய ஆசிரியர் ஒருமுறை, பல்லிளித்தப்படியே இப்படி கேட்டார், “நீ ஆப்பிரிக்காவிலிருந்து வந்திருக்கியா?”.

  • படிக்க: கருப்பாயி !

வளரும் பருவத்தில், வெளிர் நிறத்துக்கு மாறவேண்டும் என எனக்கு அழுத்தம் தரப்பட்டது. பல்வேறு வழிமுறைகள் எனக்குச் சொல்லித்தரப்பட்டன. வீட்டிலே செய்யக்கூடிய மஞ்சள், தயிர், கடலை மாவு பூசுவது முதல் கடைகளில் கிடைக்கும் காஸ்மெடிக் பொருட்கள் வரை என்னுடைய தோலில் பூசப்பட்டு என்னுடைய நிறத்தை அழகாக்க, அதாவது வெள்ளையாக்க முயற்சித்தார்கள்.

வளர் இளம் பருவம் முடியும் தருவாயில் என்னுடைய குடும்பத்தில் எனக்குப் பொருத்தமான வரன் தேடுவது குறித்து பேச்சு எழுந்தது. ஒருமுறை என்னுடைய உறவினர் வழியாக வந்த ஒரு திருமண அழைப்பை அப்பா நிராகரித்திருந்தார். அப்போது, அந்த உறவினர், “எப்படி வேண்டாமென்று சொல்லலாம்? உன் மகளின் லட்சணத்துக்கு இதைவிட நல்ல சம்பந்தம் வருமென்று நீ எந்த நம்பிக்கையில் இருக்கிறாய்? நீ அவளைப் பார்த்தியா? அவள் கருப்பு!” என்று பேசியது என் நினைவில் இருக்கிறது.

நான் எப்போதும் இந்த மனிதர்களின் கருத்துக்களுக்கோ என்னை வைத்து அவர்கள் சொல்லும் நகைச்சுவை துணுக்குகளுக்கோ எதிர்வினை ஆற்றியதில்லை. என்னுடைய பாதுகாப்பின்மை குறித்தோ ஆத்திரப்படுத்தும் எண்ணங்கள் குறித்தோ ஒருபோதும் எவரிடமும் பகிர்ந்ததில்லை. உணர்வற்றவளாக மாறி, வாயை மூடிக்கொண்டேன். புகைப்படங்கள் எடுக்கப்படுவதிலும் குடும்ப விழாக்களில் கலந்துகொள்வதிலும் எனக்கிருந்த அசவுகரியத்தால், எங்காவது தப்பிப்பிப் போய்விடலாம் என்றிருந்தது.

கடந்து போன ஆண்டுகளில் எனக்குள்ளே இந்த வலியை புதைத்து வைத்திருந்தேன்.  இப்போது திரும்பிப் பார்க்கும் போது, மிக ஆழமாக, பெரும்பாலான விஷயங்களை நினைவில் கொண்டுவருவது கடினமாக உள்ளது.

என்னுடைய உணர்வுகளை கையாள்வதற்குப் பதிலாக,  கடினமான நிதர்சனத்துடன் மவுனமாக வாழ பழகிக்கொண்டேன்.

என்னுடைய நிதர்சனம் எளிமையானது, இந்திய சமூகத்தில் என்னுடைய நிறத்தின் காரணமாக என்னுடைய மதிப்பும் குறைவானதே.

வெளிர் நிறம் இந்தியர்களை ஏன் ஆட்டிப்படைக்கிறது?

இந்தியர்களின் வெளிர் நிறத்தின் மீதான அளவற்ற கவர்ச்சி நன்கு அறியப்பட்டது; ஆழமாக வேரூன்றியும் இருக்கிறது. நிறத்தின் மீதான பாரபட்சம் அனைத்து இடங்களிலும் பரவியுள்ளது. மேலும் நாடு முழுவதும் வெளிப்படையாகவே செயல்படுத்தப்படுகிறது.

இந்திய சமூகம் நிறத்தின் அடிப்படையை வைத்தே ஒரு மனிதரை எடைபோடுகிறது. இந்திய கலாசாரத்தில் நல்லவையெல்லாம் ‘வெள்ளை’ நிறத்துடன் தொடர்புபடுத்தப்படுகிறது. கருப்பு நிறம் எதிர்மறையான விஷயங்களுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. சினிமாக்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் ஆகிய அனைத்தும் ‘வெள்ளையே அழகு’ என்கிற சிந்தனையை வளர்க்கின்றன.

இந்திய விளம்பர தர நிர்ணய ஆணையம், நிற பாகுப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் அடர் நிறத்தில் இருப்பவர்கள் தாழ்ந்த மனப்பான்மையுடன் இருப்பதாகக் காட்டும் விளம்பரங்களை 2014-ஆம் ஆண்டு தடை செய்தது. இது மாற்றத்தை நோக்கிய ஒரு அடி என சொன்னாலும், பெரிதாக இதனால் மாற்றத்தை உண்டாக்க முடியவில்லை.

நான்கு ஆண்டுகள் கழிந்தபிறகும்கூட, இந்திய ஊடகங்களும் விளம்பர துறையும் அடர் நிறத்தவர்கள் வெள்ளையாக இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும் என்கிற சிந்தனையை இன்னமும் சொல்லிக்கொண்டே இருக்கின்றன.

மேலும், அடர் நிறத்தில் இருக்கும் பெண்கள், இன்னும் மூர்க்கமாக வெள்ளையாக தெரிய முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். சிலர் வெள்ளை நிற பெண்களைப் போல காட்சியளிக்க மேக்கப்-ஐ பயன்படுத்தில் ‘வெள்ளை அடித்தது’போல காட்சியளிக்க விரும்புகிறார்கள். சிலர் வெளுக்கவைக்கும் ‘ப்ளீச்சிங்’ அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துகிறார்கள்.

எனக்குத் தெரிந்தவர்களில் என்னைவிட சற்று வெளிர் நிறத்தில் இருக்கும் பலர், அந்த நிறம் தங்களுக்குப் போதவில்லை என குறைபட்டுக் கொள்வதை அறிவேன்.

இன்று, நான் ஒரு தாய். ஒரு ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை எனக்குண்டு. என்னுடைய கணவரும் மகனும் வெளிர் நிறத்தவர்கள். என் மகள் என்னைப் போல அடர் நிறத்தவள்.

அவள் பிறந்தபோது, அவளுடைய நிறத்தின் காரணமாக தன்னை மதிப்பு குறைவானவளாக கருதவிடக்கூடாது என நாங்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டோம். சிறுவயதிலிருந்தே அவள் அழகானவள் என்றும் அவருடைய நிறம் அழகானது என்றும் சொன்னோம். ஒருவரின் தோற்றத்தை வைத்து அவரை மதிப்பிடக்கூடாது என சொல்லிக் கொடுத்தோம்.

ஆனால் நிதர்சனம்… அவள் மூன்று வயதாக இருக்கும்போது அவளுடன் படிக்கும் சிறுவன் அவளை விளையாட அழைத்திருக்கிறான்; அவள் தயங்கியிருக்கிறாள். நாங்கள் காரணத்தைக் கேட்டபோது, “அவன் பழுப்பு நிறத்தில் இருக்கிறான்” என்றாள்.

நான் அதிர்ச்சியானோம், எது அவளை இப்படி சிந்திக்க வைத்திருக்கிறது என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவளும்கூட பழுப்புதான் என நாங்கள் அவளுக்கு புரியவைக்க முயற்சித்தோம்.

அந்த சம்பவத்துக்குப் பிறகு, வெளியுலகத்திலிருந்து அவளை காப்பாற்றுவது முடியாது என புரிந்து கொண்டோம். வீட்டை விட்டு, வெளியே செல்ல ஆரம்பித்த பிறகு, பழுப்பு நிறத்தவர்கள் மதிப்பு குறைந்தவர்கள் என்கிற சமூகத்தின் பார்வையை அவள் தெரிந்து கொள்ள ஆரம்பித்தாள்.

உதாரணத்துக்கு, பள்ளியில் நடக்கு கலை நிகழ்ச்சிகளில் உயரத்தின் அடிப்படையில் வரிசையை அமைக்காமல்  நிறத்தின் அடிப்படையில் வெள்ளை நிற குழந்தைகள் முதல் வரிசையில் நிறுத்தப்பட்டார்கள்.  என் மகள் உள்பட அடர்நிற தோலுடைய குழந்தைகள், பின் வரிசையில் நிறுத்தப்பட்டார்கள். இது என் இதயத்தை நொறுக்கியது.

இந்த சம்பவத்துக்குப் பிறகு,  சமூகத்தின் கருத்து மாறும்வரை என் மகளும் இளம் வயதில் நான் நினைத்தது போல நிறத்தின் அடிப்படையிலேயே அனைத்து நிர்ணயிக்கப்படுகிறது என நினைப்பாள் என்பதை உணர்ந்தேன். எனவே, நான் இதை மாற்றும் பொருட்டு எதையாவது செய்ய முற்பட்டேன்.

எனக்கு பொருத்தமான என்னுடைய நிறம்!

என் மகளின் சிறப்பானதொரு எதிர்காலத்துக்கு உதவு வகையில்,  #ColourMeRight என்கிற பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறேன். இந்திய ஊடகங்கள் கருப்பு நிறத்தவர்களை தன்னம்பிக்கை குறைவானவர்களாக சித்தரிப்பதை நிறுத்தும் வகையிலும் என் மகளைப் போல உள்ள குழந்தைகளுக்கு கருப்பு நிற முன் மாதிரியானவர்கள் இருக்கிறார்கள் என சொல்லவும் இந்த பிரச்சாரத்தை முன்னெடுக்கிறேன்.

இந்தியாவில் போராடத்தக்க எத்தனையோ விஷயங்கள் உள்ளன; இதெல்லாம் அற்பமான விஷயம் என ஒருவர் நினைக்கலாம். ஆனால், பாரபட்சம் என்பது பாரபட்சம்தான். தோலின் நிறம் குறித்த மக்களின் பார்வையை மாற்றுவதன் மூலம், என் மகளைப் போன்ற லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு நல்லதொரு வாழ்க்கை உருவாக்கித்தர முடியும் என நம்புகிறேன்.

’கருப்பானவள்’ என இளம் வயதில் என்மீது திணிக்கப்பட்ட பாரபட்சத்தின் காரணமாக நான் இன்னமும் நம்பிக்கை குறைவானவளாகவே உணர்கிறேன். என் மகள் இதுபோன்றதை அனுபவிக்கக் கூடாது. என் மகளின் குணத்துக்காகவும் அவளுடைய தனிப்பட்ட திறமைகளுக்காகவும் அவளை மதிக்கும் ஒரு முற்போக்கு சமூகத்தில் அவள் வளர வேண்டும் என நினைக்கிறேன்.

change.org இணையதளத்தில் #ColourMeRight பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக தனிஷ்க் என்கிற நகை நிறுவனத்தின் விளம்பரத்தை முன்வைத்து தொடங்கினேன். ‘அனைத்து மணமகள்களுக்கான நகைகள்’ என்கிற வாசகங்களுடன் தோன்றிய தனிஷ்க் விளம்பரங்களில் வெள்ளை நிற பெண்கள் மட்டுமே மணமகள்களாக காட்டப்பட்டார்கள்.

கருப்பு நிற பெண்களை திருமணம் செய்வது குறித்து இந்தியாவில் ஒரு மூடநம்பிக்கை உள்ளது; ‘வெள்ளை நிற’ பெண்கள் தேவை என கேட்காத திருமண வரன் தேடும் விளம்பரங்களை காண முடியாது. இதன் காரணமாக வெள்ளை நிற பெண் மட்டுமே மணமகளாக இருக்க வேண்டும் என்கிற விளம்பரங்கள் வருகின்றன. நிச்சயம் அவை ஏற்றுக்கொள்ளக்கூடியவை அல்ல!

என்னுடைய கருத்தை பலர் ஏற்றுக் கொள்வது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. ஆயிரக்கணக்கானவர்களின் ஒப்பத்தை பெற்றபோது தனிஷ்க் நிறுவனம் என்னுடைய முறையீட்டுக்கு செவி சாய்த்தது. நாட்டின் பன்முகத்தன்மையை எதிரொலிக்கும் வகையில் விளம்பரங்களை எடுக்கவிருப்பதாக அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டது.

இது ஒரு சிறிய வெற்றியே, ஆனாலும் நம்பிக்கை அளிக்கிறது. நான் மட்டும் தனியாக இல்லை என்கிற உணர்வை இது அளித்தது. இந்தியாவில் உள்ள ஆண்கள்-பெண்கள் பலர் இந்த பிரச்சினையை சந்திப்பதும், அவர்கள் சமூகத்தின் எண்ணத்தில் மாற்றம் வேண்டும் என கருதுவதையும் அறிந்தேன்.

சமீபத்தில், அழகு சாதனப் பொருட்களை தயாரிக்கும் இந்தியாவின் பெரு நிறுவனமாக ‘லாக்மே’வுக்கு எதிராக ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்திருக்கிறேன்.

உள்ளாட்டு நிறுவனமான லாக்மே, கடந்த ஐம்பது ஆண்டுகளாக அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் முன்னணியில் இருக்கிறது. இந்திய பெண்களின் அழகு தொடர்பான ஆர்வங்களில் லாக்மே முதன்மை இடத்தில் இருக்கிறது.

ஆனால், அவர்களுடைய இணையதளத்தைப் பார்க்கும் போது அனைத்து பொருட்களுக்கும் ஒரே ஒரு நிறம் மட்டுமே முன்மாதிரியாக காட்டப்பட்டிருக்கிறது, அது வெள்ளை நிறம்!

லாக்மே ஃபேஷன் வீக் -இன் இந்த ஆண்டுக்கான பொருள் ‘பாரபட்சமற்ற அழகைக் கொண்டாடுதல்’ ‘எல்லைகளைக் கடந்த அழகு’ என்பதாகும். எனவே இந்நிறுவனம் அழகு சாதனப் பொருட்கள் அனைத்தையும் அனைவரையும் உள்ளடக்கியதே என தெரிந்து வைத்திருக்கிறது. இந்தியாவில் உள்ள வெள்ளை, கருப்பு உள்ளிட்ட அனைத்து நிறங்களுக்கும் ஏற்ற அழகு சாதனங்களை தாயாரிக்கக்கூடிய சாத்தியக்கூறுகளுடன் அந்நிறுவனம் உள்ளது.

என்னுடைய முறையீட்டின் மூலம், லாக்மே தன்னுடைய தவறை உணர்ந்து, சரியான திசையில் செல்லும் என நினைக்கிறேன். இந்திய சமூகத்தின் கருப்பு நிறத்தின் மீதான கருத்துருவாக்கத்தை லாக்மே போன்ற ஒரு பெரு நிறுவனத்தால் மாற்ற முடியும்.

நிற பாகுபாட்டுக்கு முற்றுப்புள்ளி

இந்திய பாகுபாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க நான் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கும். #ColourMeRight தவிர்க்க முடியாத, கடினமான, நீண்ட பயணம். என்னைப் போன்ற நிறபாகுபாட்டால் ஒடுக்கப்பட்ட எண்ணற்ற பெண்களுக்கு குரலாக இந்த பிரச்சாரத்தை முன்னெடுக்க விரும்புகிறேன். இது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும், எத்தனை பேரின் எண்ணங்களை மாற்றும் என எனக்குத் தெரியாது…ஆனால், என்னுடைய மகளின் வாழ்க்கையில் நான் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறேன் என்பது உண்மை.

ஒருமுறை அவள், அந்த சிறுவனின் பழுப்பு நிறத்துக்காக அவனுடன் விளையாட மறுத்தாள். அவள் சமீபத்தில் சொன்னாள், “நானும் உன்னைப் போல பழுப்பு. எனக்கு பழுப்பு பிடித்திருக்கிறது”

நன்றி : அல்ஜசீரா Colour me right: It’s time to end colourism in India
தமிழாக்கம் : கலைமதி

வங்காளிகள் சாதியத்தை புரிந்து கொள்ளாதது ஏன் ? காஞ்சா அய்லய்யா

எழுத்தாளர் காஞ்சா அய்லய்யா.

டதுசாரிகள் ஆட்சி புரிந்த வங்கத்தில் இந்துத்துவ சக்திகள் எப்படி வளர முடியும் என பலருக்கு கேள்வி இருக்கிறது. வங்கத்துக்கும் இந்துத்துவ சக்திகளுக்குமான பிணைப்பு இந்திய ‘தேசத்தின்’ உருவாக்கத்திலிருந்தே தொடங்கிவிட்டது. காலனிய ஆட்சியில் தேசியவாதத்தோடு தோன்றிய சீர்திருத்தவாதிகளில் அனேகம் பேர் நமது நாடு, நமது பண்பாடு, நமது சிறப்பு என்ற பெயரில் இன்றைய இந்துத்துவாவின் மென் வடிவத்தை முன்வைத்தனர்.

இவர்களில் சிலர் பார்ப்பனியத்தின் பிற்போக்கான நடவடிக்கைகளை எதிர்த்த போதும் பலர் தேசியம் என்ற பெயரில் அவற்றுக்கு ‘தத்துவ விளக்கமும்’ சொன்னார்கள். முக்கியமாக பார்ப்பனியத்தின் வருணாஸ்ரம – சாதி ரீதியான பிரிவினையையும், அதன் பௌதீக அடிப்படைகளையும் ஏற்றுக் கொண்டார்கள். சாதி ரீதியான ஏற்றத்தாழ்வில் சில சீர்திருத்தங்களை செய்யலாம் என்பது போக அவற்றை ஒழிக்க வேண்டும் என்று இவர்கள் போகவில்லை. இந்தியாவின் அறிவுப்பூர்வமான நடுத்தர வர்க்கம் முதலில் வங்கத்தில் தோன்றியது என்பதாலும் இந்தப் போக்கின் ஊற்றிடம் வங்கமாக இருந்தது. மும்பை, சென்னை போன்ற மாகாணங்கள் வங்கத்தின் பாதையிலேயே சென்றன.

அதே நேரம் இந்த பார்ப்பனிய சித்தாந்தத்திற்கு எதிரான கருத்துக்களும் இதே மாகாணங்களில் பின்னர் தோன்றின என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இங்கே திராவிட இயக்கம், மராட்டியத்தில் பூலே – அம்பேத்கர், வங்கத்தில் கம்யூனிஸ்டுகள் போன்றவர்கள் அப்படி வளர்ந்தார்கள். வங்கத்தில் இன்றும் சாதியக் கொடுமைகள் மற்ற மாநிலங்கள் போல நடப்பதில்லை. அதே நேரம் இன்று அங்கே பா.ஜ.க வளர்கிறது. சி.பி.எம் கூட அரசியல் அதிகாரத்தை தாண்டி பண்பாட்டு அளவில் பார்ப்பனியத்தை எதிர்த்து பிரச்சாரம் செய்ததில்லை.அதனுடைய விளைவாக இன்று வங்கத்தில் அவர்களால் பார்ப்பனியத்தின் அரசியல் கட்சியான பா.ஜ.கவை எதிர்கொள்ள முடியாத அளவுக்கு பலவீனமாக மாறிவிட்டனர்.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பேசிய எழுத்தாளர் காஞ்சா அய்லய்யா, அரசியல் இந்துத்துவ சக்திகள் வங்காளத்திலிருந்தே வந்தன என்கிற வரலாற்றுத் தகவலை சொல்லியிருக்கிறார். கொல்கத்தாவில் நடந்த ரிதுபர்ன கோஷ் நினைவு கருத்தரங்கில்  அய்லய்யா  ‘சாதி, பாலினம் மற்றும் ஜனநாயகம்’ என்ற தலைப்பில் பேசினார். வங்கத்தில் சி.பி.எம் கட்சியினர் ஏன் தோற்றுப் போனார்கள் என்பதாகவும் காஞ்ச அய்லய்யாவின் பேச்சை பரிசீலிக்கலாம்.

அந்த பேச்சிலிருந்து சில துளிகள்…

“ஆர்.எஸ்.எஸ். 1925-ஆம் ஆண்டு ஹெட்கேவர் உள்ளிட்ட மகாராஷ்டிர பார்ப்பன சிந்தனையாளர்களால் உருவாக்கப்பட்டது. ஆனால், அரசியல் இந்துத்துவ சக்திகள் வங்கத்திலிருந்தே வந்தன. பங்கிம்சந்திர சட்டோத்பாயா-வின் எழுத்துகள் முதல் ஷ்யாம் பிரசாத் முகர்ஜியின்  ஜனசங்கத்தின் (முந்தைய பா.ஜ.க.) துவக்கம் வரை வங்கத்திலிருந்தே தொடங்கியது.

ராம் மோகன் ராய், தாகூர், விவேகானந்தர் குறித்து நாட்டின் அனைத்து பகுதியினரும் அறிவர். வங்காள மாணவர்களுடன் உங்களுக்கு மகாத்மா புலே, பெரியார் பற்றி தெரியுமா எனக் கேட்டால். அந்தப் பெயர்கூட அவர்களுக்கு பரிட்சயமானதில்லை என்பது தெரியவரும்.

வங்காளத்தில் தேசியவாதத்தின் வருகை காலனித்துவ வரலாற்றில், நவீன வங்காளிக்கான அடையாளத்தை உருவாக்கிய முக்கியமான தருணம். அந்த தருணத்திலிருந்து வங்காள அறிவுஜீவிகள் சாதியத்தைப் பயன்படுத்தி இந்து மேலாதிக்கக் கருத்தியலை வளர்த்தெடுத்தார்கள்.

நான் புரிந்துகொண்டதிலிருந்து சொல்கிறேன், வங்காள அறிவுஜீவிகள், தேசியவாதத்தை கட்டமைத்ததில் அடிப்படையிலியே ஏதோ தவறு நிகழ்ந்திருக்கிறது. தேசம் குறித்த ஒட்டு மொத்த பிராந்திய புரிதல் வேறாக இருந்தது. உதாரணத்துக்கு பாம்பே மற்றும் மெட்ராஸ் மாகாணங்களில் இரண்டு விதமான உறுதியான கருத்தாக்கங்கள் உருவாகின. இப்போதைய ஆர்.எஸ்.எஸ். உருவானது. ஆனால், அதற்கு சமமாக சாதி எதிர்ப்பியக்கமும் உருவானது. ஆனால், வங்காளத்தில் அவர்களுடைய தாராளவாதத்துக்கு எதிராக, ரிக் வேதம் சொல்லும் நான்கு வர்ணங்களால் முறைப்படுத்தப்பட்ட சாதிய மரபின் தொடர்ச்சியை முன்வைத்தார்கள். வங்கத்தின் அருகே பவுத்தம் இருந்தபோது,  சாதிய உடைப்பை உருவாக்க வங்கம் தவறிவிட்டது.

சாதி, பாலினத்தின் மீது இது பெரும் தாக்கத்தை உண்டாக்கியது. இந்த இரண்டிலும் ஒன்று பிரதானமாக இருந்தது. அது ’தொழிலாளர்’ நகரங்களை உருவாக்கவும் கிராமங்களை மாற்றியமைக்கவும் பெண்களும் சூத்திரர்களும் முக்கியமான கருவிகள். பெண்கள் விவசாய உற்பத்தியில் முன்னோடிகளாக இருந்த காரணத்தாலேயே வேளாண் பணிகளில் பாலின பாகுபாடு மிகக் குறைவாகவே இருந்தது.

வங்கத்தில் சமஸ்கிருத அறிஞர்கள் செல்வாக்குடன் விளங்கினார்கள். விவேகானந்தரின் தாத்தா, ஒரு சமஸ்கிருத அறிஞர். என்னுடைய அப்பா, தாத்தாவை எடுத்துக் கொள்ளுங்கள், அவர்கள் செம்மறி ஆட்டை வளர்ப்பதிலும், வெள்ளாட்டை மேய்ப்பதிலும் ஈடுபட்டிருந்தார்கள். அவர்களுக்கு படிப்பதற்கான உதவித் தொகை அறிவிக்கப்பட்டிருந்தாலும் அது ஏட்டில்தான் இருந்தது.

எப்படி கம்யூனிஸ்டுகள் இந்த பிரச்சினைகளை இழந்தார்கள்? அவர்கள் அடையாள அரசியல் என்ற கருத்தை ஏற்கவில்லை. சாதி என்பதே இந்திய யதார்த்தம் என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. சாதி, வர்க்கத்தால் ஆளப்படுகிறது. மேலும் அவர்கள் பாலின சமத்துவத்தையும் புறக்கணித்தனர். முழு புரட்சி வரும் காலத்தில் அனைத்து சரியாகும் என அவர்கள் நம்பினார்கள். ஆனால், அது சரியல்ல…

அடையாளத்தின் பங்கு எப்படிப்பட்டது என அவர்கள் புரிந்து கொள்ளவும் அடையாளப்படுத்தவும் முயற்சித்திருக்க வேண்டும். சாதிய கட்டுமான குறித்தும் பாலின கட்டுமானம் குறித்தும் அவர்களுடைய செயல்திட்டத்தில் முக்கிய இடம் தந்திருக்க வேண்டும். இன்றைய வலது அமைப்புகள் செய்துகொண்டிருப்பதைக் காட்டிலும் அது (கம்யூனிஸ்டுகளின் திட்டம்) சமத்துவம் தொடர்பான பிரச்சினைகளை நோக்கி நாட்டை தள்ளியிருக்கும். இப்போதும்கூட இளைய வங்காளிகள் இந்த வேறுபாடுகளை இனம்காண முடியாதவர்களாக இருக்கிறார்கள்.

எழுத்தாளர் காஞ்சா அய்லய்யா.

ராம் மோகன் ராய், தாகூர், விவேகானந்தர் குறித்து நாட்டின் அனைத்து பகுதியினரும் அறிவர். வங்காள மாணவர்களுடன் உங்களுக்கு மகாத்மா புலே, பெரியார் பற்றி தெரியுமா எனக் கேட்டால். அந்தப் பெயர் கூட அவர்களுக்கு பரிட்சயமானதில்லை என்பது தெரியவரும்.” என்ற அய்லய்யா, இன்றைய வங்காளிகள் எதிர்கொண்டுள்ள வேறொரு பிரச்சினையை சுட்டிக்காட்டினார்.

“1931-க்குப் பிறகு 2021 ஆம் ஆண்டு முதன் முறையாக ஓ.பி.சி.- க்கள் குறித்த கணக்கெடுப்பு நடக்கவிருக்கிறது. ஓ.பி.சி. ஆதரவைப் பெற பா.ஜ.க. முயற்சிக்கும் என நினைக்கிறேன். பா.ஜ.க.வின் ஓ.பி.சி. அடையாள கட்டமைப்பை மமதா பானர்ஜியாலும் தடுக்க முடியாது என நினைக்கிறேன். பா.ஜ.க. ஓ.பி.சி., தலித் சாதி அடையாளத்தை ஒருங்கிணைத்து ஓ.பி.சி. முதலமைச்சர் வேட்பாளர்களை அறிவிக்குமானால், அவர்கள் ஆட்சிக்கு வர வாய்ப்பிருக்கிறது”

இறுதியாக , “வங்க அறிவுஜீவிகளுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். தயவுசெய்து வங்கத்தில் சாதி குறித்த உரையாடலை தொடங்குங்கள். வங்கத்தில், சாதி கண்டறியப்படாத புற்றுநோயாக உள்ளது!” என பேசி முடித்தார் அய்லய்யா.

மூலக் கட்டுரை: ‘Bengalis have no understanding of caste’
தமிழாக்கம்:

பிள்ளையார் சிலை பொறுப்பாளர் இந்து முன்னணி அய்யப்பன் நேர்காணல் !

Hindu-Munnani-vinayagar-07

தென்காசியில் 144 தடையுத்தரவு, கலவரச் சூழல், எச்ச ராஜாவின் விஷமத்தனமான பேச்சு என பல அடாவடிகளோடு நிறைவடைந்திருக்கிறது, விநாயகர் சதுர்த்தி. விழா என்ற பெயரில் சிலையை வைத்து அடாவடி செய்வது இந்துமுன்னணியின் வாடிக்கைதான் என்றபோதிலும், இந்தமுறை இவ்வளவு இரைச்சல் எங்கிருந்து வந்தது?

சென்னையில் காசி தியேட்டர் சிக்னலில் இருந்து எம்.ஜி.ஆர். நகர் நோக்கி செல்லும் சாலையில் பத்தடிக்கு ஒரு பிள்ளையார் என ஒரே தெருவில் எட்டுக்கும் மேற்பட்ட பிள்ளையாரை பார்க்க முடிந்தது. அவை எல்லாமே ஆறடிக்கு மேல் உள்ள பிரம்மாண்ட பிள்ளையார்கள். பந்தல் அமைப்பு, சீரியல் செட்டுகள், சவுண்டு சர்வீஸ், பொங்கல், பொரிகடலை சர்வீஸ் என்று ஏகப்பட்ட ஏற்பாடுகள். சங்க பரிவாரக் கும்பல் தமிழகத்தை இலக்கு வைத்திருப்பதையே இவை உணர்த்துகின்றன.

பொன்னாரும், எச்ச ராஜாவும், நிர்மலா சீதாராமன் வகையறாக்களைத் தூக்கி சாப்பிட்டுவிடும் அளவிற்கு அடிமட்டத் தொண்டர்களையும் வெறியூட்டி வைத்திருக்கிறார்கள். சமீபத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை செய்யும் தொழிலாளர்களை சந்திப்பதற்காக எர்ணாவூர் பகுதிக்குச் சென்றிருந்தோம். அங்கு இந்துமுன்னணி நிர்வாகி அய்யப்பனையும் சந்தித்தோம். அவரிடம் எந்த ஒரு பிரச்சினையைப் பற்றி நீங்கள் பேசினாலும் முடிவில் அல்லாவும் கிறிஸ்டினும் திராவிடமும்தான் அதுக்கு மூலக்காரணம் என்று முடிப்பார். அடிமட்ட தொண்டனிடமும் எவ்வாறு இந்துமதவெறியூட்டப்பட்டிருக்கிறது என்பதற்கு அய்யப்பன் ஒரு வகைமாதிரி.

அய்யப்பன்

விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் விதித்திருந்த உத்தரவுக்கேற்ப அரசு சில விதிமுறைகளை வகுத்து சொல்லியிருந்தது. இதனை ஏன் எதிர்க்கிறீர்கள்? என்றுதான் கேள்வியை ஆரம்பித்தோம். அடுத்தடுத்தக் கேள்விகளை நாம் கேட்கத் தேவையில்லாத அளவிற்கு அவரே சரவெடியாய் வெடித்துத் தீர்த்தார். இனி, அய்யப்பனின் வார்த்தைகளில்…

இந்து முன்னணியின் குடோன் வளாகம்.

”கழுத்தப் புடிக்கிற அளவுக்கு கட்டுப்பாடுகள் இருக்கக்கூடாது. எல்லாத்தையும் ஃபாலோ பன்றது முடியாது. ஒவ்வொருத்தனும் தடையில்லாச் சான்று வாங்கனும்னா சாத்தியமே இல்லை. களிமண்ணுலதான் சிலை செய்யனும்னு சொல்றது ஏத்துக்க முடியாது. அதைவிட, சாமிக்கு தடைன்னு ஒன்னு போடுறதே ஏத்துக்க முடியாதுல்ல.. இது இந்து தேசம். வழிபாடு சுதந்திரமா செய்யனும்.

எங்களோட நம்பிக்கை என்னன்னா, விநாயகர் இந்த அண்டத்துல இருக்கிற எல்லோருடைய கஷ்டத்தையும் ஏத்து கடல்ல போயி கரைப்பாரு. அதனாலதான் அஞ்சி நாள், பத்து நாள் வச்சி, வழிபட்டு கடல்ல கரைக்கறதுக்கா கொண்டு போறோம்.

இந்த கூத்தடிக்கிறது, கும்மாளமடிக்கிறது… அதும் இருக்கனும். திருவிழா. திருவீதிஉலாதான். விநாயகர் வீதி உலா வந்தா அத பார்க்குற மக்களுக்கு ஒரு சந்தோசம். ஒரு தீபாவளி வந்த மாதிரி, ஒரு பொங்கல் வந்தா மாதிரி, விநாயகர் சதுர்த்தியும் இந்துக்கள் மனசுல வந்து ஒரு பெரிய எதிர்பார்ப்ப உண்டாக்கியிருக்கு. இது பக்தி.

இது இந்து சமுதாயம். என் நம்பிக்கை. என் விநாயகர். மத்தவங்க சொல்றா மாதிரி வெளிநாட்டுலேர்ந்து வந்ததெல்லாம் கிடையாது. ஹரி ஓம்னு ஆரம்பிக்கிற அரிச்சுவடியே கணபதிக்கிட்டயிருந்துதான். அதுமாதிரி இதெல்லாம் எங்களுடைய மரபு.

என்னை எங்க அம்மா எங்க அப்பாவுக்குத்தான் பெத்தாங்கன்றது என்னோட நம்பிக்கை. எங்க அம்மா காட்டுனதால அப்பானு சொல்றேன். இத நானு ஆராய்ஞ்சிட்டு ஒக்காந்துட்டுருந்தேனு வச்சிக்கிங்களே… என் பிறப்பே தப்பாயிபோயிடும்.

திராவிட கட்சிகள், அதான் நிறைய இருக்காங்களே சீர்திருத்த வாதிகள் வெளிநாட்டுல இருந்து காச வாங்கிட்டு எலும்புத் துண்டுக்காக வேல செய்றவங்கெல்லாம் இருக்காங்க… அவங்களாம் சேர்ந்து ஒரு மாயையை கொண்டு வந்துட்டாங்க. திராவிட பாரம்பரியம்னு சொல்லி இந்துக்களை அப்படியே நசுக்கி வச்சிட்டாங்க.

தமிழ்நாட்டுலதான் இப்படி, மகாராஷ்டிராவில எல்லாம் தடையே கிடையாது. அங்கெல்லாம் சூடு சுரணையுள்ள இந்துக்கள் வாழ்றாங்க. ஒன்னுமில்லைங்க. இந்த இடத்துல ஒரு பிரச்சினை வந்துருச்சின்னு வச்சிக்கிங்களே… நான் போயி கேக்கிறேன். வாய் வார்த்தை ஆயிருச்சி. நீங்க அந்தப் பக்கம் ரோட கிராஸ் பண்ணி போறீங்க. நீங்க என்னா சொல்லிட்டு போவீங்க? அவரு இந்து முன்னணியில இருக்கிறாரு. ஏதோ பிரச்சினை போலருக்குனு போயிட்டே இருப்பீங்க. சொல்றவரு யாரு? கோவிந்தசாமியா இருப்பாரு, கந்தசாமியா இருப்பாரு.

இந்து போயி ஒரு கிறிஸ்டின் காரன அடிச்சானு இருக்கா. ஒரு முசுலீமை காரனை அடிச்சானு இருக்கா. அடிக்கவே மாட்டான். மனசாலயும் எந்தவிதத்திலும் துரோகம் செய்யக்கூடாதுனு நினைக்கிறவன் தமிழன்.

மத்த மாநிலத்துக் காரனுங்களுக்கெல்லாம் மனசாட்சினு ஒன்னு கிடையாது. முதல்ல அடி அப்புறம் பாத்துக்கலானு இருப்பாங்க. தமிழனுக்கு இரக்க குணம் எல்லாம் அதிகம்.

இல்லனா, 56 தேசத்தை ஆண்டவன். இன்னிக்கு ஒரு தேசத்தக்கூட ஆள நாதியில்லாம இருப்பானா? என்னா சொல்றீங்க. தமிழன் ஆண்டாங்க. வேற யாருமில்லை. தமிழன்தான் 56 தேசத்தை ஆண்டவன். ஆனா, தமிழனுக்கு தமிழ்நாட்டுலேயே சாமி கும்பிட 24 தடை. என்னா பன்றது?

பேசினா பேசிகிட்டே இருக்கலாம்ங்க… எந்தெந்த வகையில இந்துக்கள முடக்கி கைய கால முறிச்சி போடனுனு நினைக்கிறாங்க. அந்தளவுக்கு வேலை செஞ்சிகிட்டிருக்காங்க.

பாய் குல்லா போட்டுகிட்டு பைக்ல போறான். அவன விட்டுட்டான். நான் பின்னாடியே போறேன். என்ன புடிச்சான். குல்லா என்ன அல்லா கொடுத்த ஹெல்மெட்டா…? அவனுக்கு ஒரு கேசப் போடு, எனக்கு ஒரு கேசப் போடு! இல்ல தூக்குல கூட போயி போடுங்க. நான் தொங்கறதுக்கு ரெடியா இருக்கேன்னு சொல்லிட்டு நின்னுட்டேன். அவனப் புடிக்கிறதுக்கு உங்களுக்கு தைரியம் இல்லை. 7% இருக்கவங்க மேல இருக்கிற பயம், 83% மேல இல்லை.

ஆனா, இது ரொம்ப நாளைக்கு நீடிக்காது. 84 ல நடந்த மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் பிரச்சினைக்கு அப்புறம்… ஓரளவுக்கு கொஞ்சம் கொஞ்சமா இந்து முன்னணி ஆரம்பிச்சு… சூடு சொரணையோட இந்துக்கள் நிமிர்ந்து நிக்க வந்துட்டான்.

முன்னெல்லாம், தாழ்த்தப்பட்ட ஜாதிக்காரன் வந்து, ஜாதியை சொல்ல பயந்தான். மழுப்பி காலனிக்காரங்கனு சொன்னான். இன்னிக்கு, பறையன் அப்படின்னு தைரியமா சொல்றான். எந்த ஜாதியா இருந்தாலும் சரி, இந்து. நீ என் சகோதரன். அப்படினு சொல்ல வச்சது இந்து முன்னணி. இந்த ஒற்றுமை 80% வந்துருச்சி. இன்னும் 20% வந்துருச்சின்னா, அரசியல்வாதியிலருந்து அத்தனை பேருக்கும் ஒரு பாடம் இருக்கும்.

இனி, இந்துக்கள தொட்டா ஒரு பிரச்சினை பன்னுவாய்ங்க. அப்படின்ற ஒரு இது வந்துரும். வரும். இப்பயே வந்துருச்சி. எங்காளுங்கள வாரவழிபாடுக்கு வாங்கடான்னா.. மண்டைய சொறிவானுங்க. ஏன்னா, கவிச்சி சாப்பிட்டிருப்பான். கோயிலுக்குள்ள வரமாட்டான். ஆனா, டேய் ஒரு பிரச்சினைடான்னா… கட கடன்னு ஓடியாந்து எனக்கு முன்னாடி ஸ்டேசன்ல முற்றுகைப் பன்றதுக்கு நிப்பானுங்க. எவ்வளோ உணர்வு பாருங்க அவனுங்களுக்கு. எல்லாமே விநாயகரோட அருள்தான்.

தனியா நடந்து போனாலே, பிட் நோட்டிஸ் குடுக்குற கூட்டமாயி போச்சு. எவனாவது செருப்ப வீசிருவான். இங்க இருக்கிறவன்லாம் என்னா பன்னுவான், இவ்ளோ நாள் பக்தியா எடுத்துட்டு போற பிள்ளையார் மேல செருப்ப தூக்கி அடிச்சா என்னா ஆகும். கோபப்பட்டிருவாங்க. அப்புறம் சாமிகிட்ட முறையிடுவாங்க. அங்கேயே உக்காந்து போராட்டம், ஆர்ப்பாட்டம்னு பன்னிருவாங்க. ஸ்தம்பிக்க வச்சிருவாங்க சென்னையை… அதனால போலீச நிறைய கொண்டுவந்து குவிச்சி… அந்த மாதிரி யாரும் வராத அளவுக்குத் தடுக்குறாங்க.

நாம போலீசு கொடுத்த வழியிலதான் போகப் போறோம். பெரும்பான்மையா இருக்கிற நமக்கே மசூதி இருக்கு. சுடுகாடு (தர்காவைத்தான் திமிராக சுடுகாடு என்கிறார்.) இருக்கு. இந்தப் பக்கமா போங்கனு சொல்றாங்க. அப்போ, அந்த வழியா போகாதீங்க… போனா, அவங்க உங்களை அடிச்சிருவாங்கனுதானே சொல்றாங்க. தேடி வந்து பைக்கில வந்து கல்ல தூக்கி அடிச்சி சாமிய வந்து ஏதாவது பன்னிட்டு போயிட்டாங்கன்னா.. என்னா பன்றதுனு போலீசு காரங்களுக்கு ஒரு பயம்.

எங்களுக்கெல்லாம் வாழ்றதும் ஒன்னுதான் சாகறதும் ஒன்னுதான். சமுதாயத்துக்காக வேல செய்ய வந்திருக்கோம். இந்த மாதிரி எத்தனையோ பேரு உயிர விட்டவங்க இருக்காங்க. பால கங்காதர திலகரு. சுப்பிரமணிய சிவா., தேசத்துக்காண்டி விட்டவங்க. நாங்க தேசத்துக்காண்டி வேலை செய்றவங்க. அதனால எங்களுக்கெல்லாம் உயிர்மேல ஒரு நாட்டம் கிடையாது. போற உயிரு எப்ப வேணா போகட்டும். ஆனா, இந்த தேசத்துக்காண்டி போகனும்னு நினைக்கிறவன்.

அப்பொழுது அங்கு வந்த மூன்று சிறுவர்கள் மூனரை அடி, ஐந்தரை அடி அளவுகளில் பிள்ளையார் இருக்கா. எவ்வளவு விலை என்று விசாரித்தனர். அவர்களிடம் விலையை சொல்லிவிட்டு அவர்களுடைய ஏரியாவை விசாரித்தார். அந்த சிறுவர்கள், கொருக்குப்பேட்டை என்றனர். உடனே, டேய்.. அந்த ஏரியாவுல பால்ராஜ் தெரியுமாடா உங்களுக்கு. அவங்க கிட்ட கேளுங்க. அவங்கள கூட்டி வந்து வாங்கிட்டு போங்க. இல்லனா, சிந்தாதிரிப் பேட்டையில ஆபிசு இருக்கு. அங்க ரிஜிஸ்டர் பன்னிட்டு வந்து வாங்கிட்டு போங்க..டா… என சொல்லிவிட்டு கிளம்பினார். காவி கொடி கட்டிய வாகனங்களும் வந்த வண்ணம் இருந்தன!

பிள்ளையார் சிலைகளை பக்தர்களோ இல்லை இந்துக்களோ கர்ம சிரத்தையாக வாங்கி தெருவுக்கு தெரு வைத்து வழிபடுவது இல்லை. அனைத்தும் இந்து முன்னணியின் நேரடி ஏற்பாட்டால் வம்படியாக வைக்கப்படுகிறது. இந்த பிள்ளையார் சிலைகள் பெரும் பொருட்செலவுடன் தயாரிக்கப்படுவதால் இந்து முன்னணி பெரும் முதலாளிகள், பணக்காரர்கள் போன்றோரை புரவலர்களாக வைத்து செலவழிக்கிறது. மேலும் பகுதியிலுள்ள உதிரி இளைஞர்கள் இதை வைத்து வசூல் செய்வதற்கும், கெத்து காட்டுவதற்கும் பிள்ளையார் சிலை உதவி செய்வதால் தமிழகம் முழுவதும் இது விசமாய் பரவி வருகிறது.

பிள்ளையார் சிலை கிட்டங்கியின் பொறுப்பாளர் அய்யப்பன் பேசும் இந்து முன்னணி கருத்துக்களில் ஓரிரண்டை பேச ஆரம்பிக்கும் உதிரிப்பாட்டாளிகள் பின்பு கலவரம் வரும்போது அடியாட்படையாக பணியாற்றுகிறார்கள். அடுத்ததாக அய்யப்பன் பேசுவதில் இரண்டு விசயங்கள் இருக்கின்றன. தமிழர்கள்தான் இந்துக்கள் என்பதாகவும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு தோள் கொடுக்கும் சித்தாந்தமே இந்துத்துவம்தான் என்றும் கூறுகிறார். தமிழின அரசியலோ, தலித் அரசியலோ இரண்டையும் இந்துத்துவத்தின் நட்புச் சக்திகளாக மாற்றும் வேலையை ஆர்.எஸ்.எஸ் செய்து வருகிறது. மாறாக இரண்டுமே இந்துத்துவத்திற்கு எதிரானது என்பதை முன்னிறுத்தி முற்போக்காளர்கள் பிரச்சாரம் செய்கின்றனர். புதிய தமிழகம் கிருஷ்ணசாமி முதல் ராம் விலாஸ் பஸ்வான் வரை இந்துத்துவத்தின் தளபதிகளாக மாறும் நிலையில் நாம் இன்னமும் அதிகம் பணியாற்ற வேண்டும்.

குறிப்பு: இந்த நேர்காணலின் முதல் வடிவம் 11.00 மணி அளவில் திருத்தப்படாத நிலையில் வெளியிடப்பட்டது. திருத்திய வடிவத்தை 1.00 மணி அளவில் வெளியிடுகிறோம். இதில் அய்யப்பன் அளித்த நேர்காணல் அப்படியே அவரது வார்த்தைகளில் எந்த மாற்றமும் இல்லாமல் வெளியாகியிருக்கிறது. முன்னுரை, பின்னுரையில் சில கருத்துக்களை இணைத்திருக்கிறோம்.

ரஃபேல் ஊழல் : தேள் கொட்டிய நிலையில் சங்கிகள் !

பொய் சொல்வதில் சில சிக்கல்கள் இருக்கின்றன – முதலில், சொன்ன பொய்யை மறக்காமல் திரும்பத் திரும்ப ஒரே மாதிரியாகச் ஒரே வரிசையில் சொல்ல வேண்டும்; அடுத்து, அந்தப் பொய்யில் வரும் கதாபாத்திரங்கள் அத்தனை பேரும் ஒரே கதையை தேதி-இடம்-வரிசை மாறாமல் சொல்ல வேண்டும்; அடுத்து, நம்மையும் மீறி உண்மை வெளியாகி விட்டால் அதைப் பொய்யாக காட்டும் ’திறமை’ வேண்டும்.

இல்லையென்றால் குட்டு வெளிப்பட்டு விடும் – இப்போது ரஃபேல் விமான ஒப்பந்த விவகாரத்தில் நடந்து கொண்டிருப்பது அது தான்.

modi-ambani-rafale-jet-scamவிமான தயாரிப்பில் எந்த அனுபவமும் இல்லாத அனில் அம்பானியின் ரிலையன்சுக்கு தஸ்ஸால்ட் நிறுவனத்துடன் கூட்டுப் பங்கு கம்பெனி துவங்கவும், விமான உதிரிபாகங்கள் தயாரிக்கவும் ஏன் வாய்ப்பு வழங்கப்பட்டது? ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் கடனில் தத்தளிக்கும் அனில் அம்பானியை கடனில் இருந்து காப்பாற்றுப் பொருட்டே விமானத் தயாரிப்பில் நல்ல அனுபவம் வாய்ந்த பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிட்டெட்க்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதா?

மன்மோகன் சிங் காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி ஒரு  விமானத்தின் விலை தோராயமாக சுமார் 600 கோடி – இதே புதிய ஒப்பந்தத்தின் கீழ் ஒரு விமானத்தின் விலை தோராயமாக சுமார் 1,400 கோடி. 126 விமானங்கள் வாங்குவதற்காக போடப்பட்ட பழைய ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு 36 விமானங்கள் மட்டுமே வாங்குவதற்கான ஒப்பந்தத்தை மோடி இறுதி செய்த போது அவரோடு அனில் அம்பானி இருக்கிறார் – அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சரோ மீன் கடை ஒன்றைத் திறந்து வைத்துக் கொண்டிருக்கிறார்.

இவை சில அடிப்படையான கேள்விகள் மட்டும் தான்; இதே போல் எண்ணற்ற கேள்விகளை ரபேல் விமான ஒப்பந்தம் எழுப்புகின்றது. இந்தக் கேள்விகளுக்கு பல்வேறு சந்தர்பங்களில் பல்வேறு விளக்கங்களை பாரதிய ஜனதா முன்வைத்துள்ளது.

முதலில் இந்திய பொதுத்துறை நிறுவனத்திடம் ரஃபேல் விமானங்களை தயாரிக்க போதுமான தகுதி இல்லை என்றனர் – ஆனால், புதிய ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு சுமார் பத்தே பத்து நாட்கள் முன் (மார்ச் 28ல்) வெறும் ஐந்து லட்ச ரூபாய் ஆரம்ப முதலீடாகப் போட்டு துவங்கப்பட்ட ரிலையன்ஸ் நிறுவனத்தின் தகுதியை எவ்வாறு அளவிட்டனர் என்கிற கேள்விக்கு விடை இல்லை.

இத்தனைக்கும் ஹெச்.ஏ.எல் நிறுவனம் இந்திய அரசின் நவரத்தினா தகுதி பெற்ற நிறுவனங்களில் ஒன்று – நவரத்தினா நிறுவனத்தாலேயே முடியாதது அம்பானியால் எப்படி முடியும்?

அடுத்து, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு விமான ஒப்பந்தத்தை இறுதி செய்யாமல் காலதாமதம் செய்து வந்தது என்றும், விமானப்படை போர் விமானங்கள் இன்றி ஆபத்தான நிலையில் இருந்ததால் நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தாங்கள் 36 விமானங்களுக்கான ஒப்பந்தத்தை இறுதி செய்ததாகவும் சொன்னார்கள்.

ஆனால், 2015 ஏப்ரல் முதல் வாரத்தில் புதிய ஒப்பந்தத்தை மோடி அரசு இறுதி செய்ததற்கு சரியாக இரண்டு வாரங்களுக்கு முன் தஸ்ஸால்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் எரிக் ட்ரேப்பியெர் 126 விமானங்களுக்கான ஒப்பந்தம் 95 சதவீதம் முடிவடைந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் தஸ்ஸால்ட் நிறுவனத்துடன் கூட்டுப்பங்கு கம்பெனி துவங்கியதிலும் ஏராளமான முரண்பட்ட தகவல்கள் வெளிவந்து கொண்டே இருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஊடகங்களுக்குப் பேட்டியளித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், 36 விமானங்களைக் கொள்முதல் செய்ய தாங்கள் செய்து கொண்ட ஒப்பந்தம் அரசாங்களுக்கு இடையிலானது என்றும், தஸ்ஸால்ட்டுடன் ரிலையன்ஸ் கூட்டுப்பங்கு நிறுவனம் துவங்கியதில் இந்திய அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், முன்னாள் பிரான்சு அதிபதி பிரான்கோயிஸ் ஹாலந்தே இணையப்பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதற்கு நேர் முரணான கருத்தைத் தெரிவித்துள்ளார்.

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம், விமான ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன் ஹொலாந்தேவின் மனைவி நடித்த ப்ரென்ச்சு திரைப்படம் ஒன்றுக்கு நிதி உதவி அளித்திருந்தது. இதற்கு கைமாறாகவே (conflict of interest) ரிலையன்சு நிறுவனத்திற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டதாக ப்ரென்ச்சு ஊடகங்களில் அவ்வப்போது அடிப்பட்டு வந்ததையே நிருபர் ஹொலாந்தேவிடம் கேட்கிறார்.

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபன்ஸ் – டஸ்ஸால்ட் ஆகிய நிறுவனங்களின் கூட்டு நிறுவனம் தொடக்க விழா

கேள்விக்கு பதிலளித்த ஹொலாந்தே, இந்த விவகாரத்தில் (ரிலையன்ஸ் உள்ளே நுழைக்கப்பட்டதில்) தமக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்கிறார். மேலும், இந்தியத் தரப்பில் ஒப்பந்தத்தில் மாற்றம் செய்த போது (அதாவது 126 விமானங்களுக்கு பதில் 36 விமானங்கள் கொள்முதல் செய்வத்து என ஒப்பந்தம் மாற்றியமைக்கப்பட்ட போது) அவர்கள் தான் ரிலையன்ஸ் நிறுவனத்தை உள்ளே கொண்டு வந்தார்கள் என்றும், மற்றபடி தஸ்ஸால்ட் நிறுவனம் யாரைத் தெரிவு செய்வது எனத் தீர்மானிப்பதில் தன்னுடைய தலையீடு ஏதுமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஹொலாந்தேவின் பேட்டி இந்தியாவில் பெரும் சூறாவளியைக் கிளப்பி விட்டது. இது தெள்ளத் தெளிவான ஊழல் என்பதற்கு கிடைத்த ஆதாரம் என காங்கிரசு தரப்பில் செய்தியாளர் சந்திப்புகள் நடத்தப்பட்டன. பதிலடியாக இந்திய பாதுகாப்புத் துறை சார்பிலும், பிரான்சு அரசின் சார்பிலும், தஸ்ஸால்ட் நிறுவனத்தின் சார்பிலும் ”விளக்கங்கள்” அளிக்கப்பட்டன.

இந்திய தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கங்களில் ரிலையன்சை கூட்டுப் பங்கு நிறுவனமாக தெரிவு செய்தது தஸ்ஸால்ட்டின் முடிவு எனவும் இதில் இந்திய அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை எனவும் சொல்லப்பட்டத்து.

ஏறத்தாழ பிரான்சு அரசு மற்றும் தஸ்ஸால்ட் நிறுவனங்களின் விளக்கமும் இதே ரீதியில் தான் இருந்தன – எனினும், ஹொலாந்தேவின் கருத்து தவறானது என அவர்கள் மறுக்கவில்லை. அதாவது, ரிலையன்சை தஸ்ஸால்ட் நிறுவனத்திற்கு பா.ஜ.க அரசு தான் ’அறிமுகம்’ செய்து வைத்துள்ளது.

மோடி – ஹாலந்தே

ஏற்கனவே ரஃபேல் விமானங்கள் எதிர்பார்த்தபடி போனியாகாமல் இருக்கும் நிலையில் இந்திய அரசின் ஒப்பந்தம் என்பது தஸ்ஸால்ட் நிறுவனத்திற்கு கிடைத்த மாபெரும் வாய்ப்பு. அதைத் தவற விடக்கூடாது என்பதற்காகவே இந்திய அரசின் சார்பில் (அதிகாரப்பூர்வமான முறையிலோ, அதிகாரப்பூர்வமற்ற முறையிலோ) பரிந்துறை செய்யப்பட்ட ரிலையன்சை தஸ்ஸால்ட் கூட்டுப்பங்கு கம்பெனியாக சேர்த்துக் கொண்டுள்ளது.

ஏப்ரல் 2015, ஒப்பந்தத்தை இறுதி செய்ய பிரான்சு சென்ற மோடியுடன் சென்ற அனில் அம்பானி, தஸ்ஸால்ட் நிறுவனத்தின் தலைவர் எரிக் ட்ரேப்பியெருடன் நீண்ட விவாதங்கள் நடத்தினார் என பாதுகாப்பு துறைசார்ந்த பத்திரிகையாளர் அஜய் சுக்லா அப்போதே எழுதியுள்ளார். தெள்ளத் தெளிவாக இந்திய அரசின் சார்பில் (மோடி அரசு) தஸ்ஸால்ட் நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதன் பேரிலேயே அனில் அம்பானியை அவர்கள் சேர்த்துக் கொண்டுள்ளனர் என்பது தெரிகிறது. இதற்கிடையே தன்னுடைய பேட்டிக்குப் பிறகு வெளியான விளக்கங்களுக்கு பதிலளித்துள்ள ஹொலாந்தே, தான் முன்பு குறிப்பிட்ட கருத்தில் எந்த மாற்றமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், புதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் விமானத்தின் விலை தாறுமாறாக எகிறியிருப்பதற்கும் உரிய விளக்கங்கள் ஏதுமில்லை. துவக்கத்தில் இது அரசுகளுக்கிடையிலான ஒப்பந்தம் என்பதால் விலை விவரங்களைக் குறித்து வெளிப்படையாக அறிவிக்க முடியாது என்றது பா.ஜ.க அரசு. பின்னர் அவ்வாறு அறிவிப்பது தேசத்தின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்து விடும் என்றார்கள் – இவர்கள் இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே விமானத்தின் விலையை வெளியிட்டது தஸ்ஸால்ட் நிறுவனம்.

அதிகரித்த விலைக்கான காரணம் என்ன என்பதற்கும் ஏற்றுக் கொள்ளும்படியான எந்த விளக்கமும் அரசின் தரப்பில் இருந்து வரவில்லை. இது அனில் அம்பானிக்கு போடப்பட்ட கறிவிருந்து என்பதே ஒரே தர்க்கப்பூர்வமான விளக்கமாக இருக்கிறது.

விவகாரம் ஊடகங்களில் வெடித்த பின் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தைக் கொண்டு செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியது பா.ஜ.க. அப்போது, ரிலையன்ஸ் நிறுவனம் தஸ்ஸால்ட்டுடன் கொண்டுள்ள உறவானது 2012ம் ஆண்டில் இருந்தே நீடிக்கிறது என்றும் அப்போது பதவியில் இருந்தது காங்கிரசு தான் என்றும் ரவிசங்கர் பிரசாத் குறிப்பிட்டார்.

இது ஒரு பச்சைப் பொய். அதாவது, 2012ம் ஆண்டு தஸ்ஸால்ட்டுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் – 36 விமானங்களுக்கான ஒப்பந்தம் கையெழுத்தான பின் அந்த நிறுவனத்திடம் ஒப்பந்தம் போட்டுக் கொண்டது அனில் அம்பானியின் ரிலையன்ஸ்.

இவற்றில் முந்தையது புரிந்துணர்வு ஒப்பந்தம் எனும் நிலையிலேயே நீடித்து 2014ம் ஆண்டு காலாவதியாகியும் விட்டது; அதைத் தொடர்ந்து பாதுகாப்புத்துறை உற்பத்தியில் இருந்து முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் விலகிக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்களை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறது பா.ஜ.க.  அதீத தேச பக்தி இருப்பதாக சங்கிகளின் செய்யும் பம்மாத்துகளின் யோக்கியதை இது தான்.  கார்கில் போரில் இறந்த இராணுவ வீரர்களுக்கு வாங்கிய சவப்பெட்டியிலேயே ஊழல் செய்த பாரம்பரியம் கொண்ட கட்சி, விமானங்கள் வாங்கியலில் ஊழல் செய்திருக்கும் என்பதில் நமக்கு எந்த ஆச்சர்யமும் இல்லை. பக்தாள் தான் எப்படி முட்டுக் கொடுப்பது எனத் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் :

மியூசிக்கல்லி செயலி உருவாக்கும் ரசனை எத்தகையது ?

சுமார் இரண்டு மாதங்களுக்கு முன் நண்பர் ஒருவர் அந்தக் காணொளியை அனுப்பி வைத்திருந்தார். மட்டமான தரத்தில் எடுக்கப்பட்ட அந்தக் காணொளியின் பின்னணியில் ”ஆசைய காத்துல தூது விட்டு” என்கிற ஜானி திரைப்படத்தின் பாடல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. நடுத்தர வயதுப் பெண் ஒருவர், 38 வயது இருக்கலாம், 14 அல்லது 15 வயதுச் சிறுவன் ஒருவனை ஆபாசமாக கட்டிப்பிடித்து அந்தப் பாடலுக்கு ஆடிக் கொண்டிருந்தார். 15 வினாடிகள் ஓடியது அந்தக் காணொளி.

நண்பனை உடனே அழைத்து இது என்னடா கண்றாவி எனக் கேட்டேன். “இது தான் ஜி இப்போ ட்ரெண்டு” எனச் சிரித்தவர், மேற்படியான விசயங்கள்  ம்யூசிக்கலி என்கிற செல்போன் செயலியில் அதிகம் கிடைப்பதாகவும், பலர் இவ்வாறான டப்ஸ்மாஷ்களைச் செய்து பதிவேற்றிய இன்னபிற தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். வழக்கமான ‘கசமுசா’ சமாச்சாரங்கள் எனக் கருதி அப்போதைக்கு மறந்து விட்டேன். பின்னர் குன்றத்தூர் அபிராமி தலைப்புச் செய்திகளுக்கு வந்து சேர்ந்தார். அந்த சமயத்தில் வழக்கமான காலை நேர தேனீர்கடை உரையாடலின் போது “அந்த பொண்ணு பிரியாணிக்காரன் கூட சேர்ந்து டப்ஸ்மாஷ்லாம் பண்ணிருக்குங்க…” என்றார் நடைப்பயிற்சி நண்பர்.  அன்றே செல்போனில் மேற்படி செயலியை நிறுவி என்னதான் இருக்கிறதெனப் பார்க்கத் துவங்கினேன்.

♦♦♦

மியூசிக்கலி செயலியை இப்போது சீனாவைச் சேர்ந்த (அதே போன்ற செயலியைக் கொண்ட) நிறுவனம் ஒன்று கையகப்படுத்தி இணைத்து அதன் பெயரை டிக்டோக் (Tik Tok) என மாற்றியுள்ளனர். எனவே மேற்கொண்டு புதிய பெயரிலேயே குறிப்பிடுவோம்.

செயலியின் வடிவமும் பாவிக்கும் முறையும் மிக எளிமையானது. கணக்கு துவங்க தொலைபேசி எண் மட்டுமே கூட போதுமானது. 13 வயதுக்கு மேலிருப்பவர்கள் கணக்குத் துவங்கலாம், ஆனால் 18 வயதுக்கு கீழ் இருப்பவர்கள் பெற்றோரின் வழிகாட்டுதலுடன் செயலியைப் பயன்படுத்த வேண்டும் என்கிறது அதன் விதிமுறைகள். ஆனால், விதிமுறையை யாரும் வாசிப்பதில்லை என்பதோடு 18 வயதுக்கு கீழான பயனரின் அருகே யார் அமர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று கண்காணிக்கும் வசதியும் டிக்டோக்கிடம் இல்லை. எனவே விதிமுறை / கட்டுப்பாடுகள் எல்லாம் ’உலூலுவாய்க்கி’ என்று வைத்துக் கொள்வோம்.

கணக்கைத் துவங்கியதும் ”உங்களுக்காக” (for u) எனும் பகுதியின் கீழ் உங்களுக்கே உங்களுக்கென்று அந்த செயலி தெரிவு செய்யும் காணொளிகள் ஓடத் துவங்கும். நீங்களே யாரையாவது பின் தொடர்கிறீர்கள் என்றால், அவர்களது காணொளிகள் பின்தொடர்வோர் ”Following” எனும் தலைப்பின் கீழ் வரும். ஒவ்வொரு காணொளியும் முடிந்தவுடன் திரையை மேலே இழுத்தால் அடுத்தது வரும்; பக்கவாட்டில் இழுத்தால் அதே பயனரின் மற்ற காணொளிகளைப் பார்க்கலாம்.

செயலியின் உள்ளேயே பதிவாக்கப்படும் காணொளிகள் ஒவ்வொன்றும் 15 நொடிகள் தான். ஏற்கனவே பதிவாக்கப்பட்ட சற்றே நீண்ட காணொளிகளையும் பதிவேற்றம் செய்து கொள்ளலாம். பின்னணியில் பாடல், திரைப்பட வசனம், சொந்த வசனம், நகைச்சுவை வசனம் போன்றவை ஒலிக்க திரையில் அதற்கு வாயசைக்கலாம், நடன அசைவுகளையும் காட்டலாம். நண்பர்களோடு சேர்ந்து கொண்டு வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சி ஒன்றுக்கு (ஒரிஜினல் வசனத்திற்கு) நடித்துக் காட்டலாம்.

நீங்கள் பங்களிப்பாளராக இருக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை.  வெறுமனே செயலியை நிறுவி இருந்தாலே கூட உங்களுக்குப் ”பொருத்தமான” காணொளிகள் வந்து கொண்டிருக்கும். அநேகமாக இந்த செயலி உங்கள் புவி இலக்கை (Geo Location) அறிந்து கொள்ளும். நீங்கள் ஒரிசாவுக்கும், மும்பைக்கும் பயணம் சென்றால் அந்த மொழி காணொளிகளும் இடையிடையே வரும். மற்றபடி நீங்கள் எந்த மாதிரியான காணொலிகளுக்கு விருப்பம் தெரிவிக்கிறீர்களோ (ஹார்டின்) அதே விதமான காணொளிகள் தொடர்ந்து வரும். இவை வழக்கமாக சமூக வலைத்தளங்கள்  செயற்கை நுண்ணறித் திறன் கொண்டு செய்யும் மலிவான வித்தைகள் தாம்.

♦♦♦

முதல் விசயம் : இந்த செயலி மற்ற சமூக வலைத்தள செயலிகளைப் போல் நேரத்தைக் கொல்கிறது; அதோடு கைப்பேசியின் மின்கலத்தையும் (Battery) அநாயசியமாக தின்று தீர்க்கிறது. இதில் இரண்டாவது விசயம் குறித்து யாராது துறைசார் வல்லுநர்கள் ஆராய்ச்சி செய்ய வேண்டும். யுடியூப் போன்ற காணொளி செயலிகளைக் காட்டிலும் அதிகளவு மின்கல ஆற்றலை இச்செயலி கோருகின்றது. வெறுமனே காணொளிகளை மட்டும் காட்டுகின்றதா அல்லது பின்னணியில் வேறு வேலைகளையும் செய்கின்றதா எனத் தெரியவில்லை.

அடுத்து, பயனர்கள் தங்கள் ரசனைக்கு ஏற்ப பல்வேறு வகையான காணொளிகளை பதிவேற்றுகின்றனர். ஆனால், அந்த ”ரசனை” தான் கவனத்திற்குரியதாக இருக்கிறது. சிலர் மென் சோக இளையராஜா பாடல்களுக்கு குளோசப்பில் வாய், கண் முதலிய முகத்தின் பல்வேறு உறுப்புகளை சுழித்துக் கொணஷ்டை செய்கிறார்கள். சிலர் வடிவேலுவின் நையாண்டி வசனங்களுக்கு தங்களால் முடிந்த கொணஷ்டைகளையும் செய்கின்றனர் – இவையெல்லாம் பிரச்சினையில்லை. ஆதித்யா சானலில் இவை அதிகம் வரும். மியூசிக்கல் செயலியின் வெற்றியும் ஆதித்யா சானலோடு கூட பயணப்பட்டிருக்கும்.

ஆனால், மிகப் பலர் குத்துப்பாட்டுகளுக்கு அறைகுறை ஆடைகளோடு ஆபாச உடலசைவைக் காட்டுகின்றனர். ஹரஹரமகாதேவகியின் அருவெறுப்பான பாலியல் காமெடிகளுக்கு வாயசைப்பது, சினிமாவில் வரும் இரட்டை அர்த்த வசனங்களை (இணையுடனோ, இணை இல்லாமலோ) நடித்துக் காட்டுவது, ஆபாச பாடல் / வசனங்களுக்கு ஏற்ப ஏழெட்டு அடுக்கில் மேக்கப்புடன்  வருவது, பாலியல் தொழிலாளிகளைப் போல் கண் ஜாடை காட்டுவது… இப்படி ஒரு நீண்ட பட்டியல் இருக்கிறது.

அடுத்து, ரசிக மகாஜனங்களின் வழக்கமான அக்கப்போர். விஜய், அஜித் ரசிகர்கள் தங்கள் பங்குக்கு பைக்குகளில் சாகசம் செய்து எதிரணி ரசிகர்களுக்கு சவால் விடுவது. சில காணொளிகளில் வெட்டுவேன் குத்துவேன் ரக சவடால்களும் காணக்கிடைத்தது. ஒரு காணொளியில் பத்துப் பதினோரு வயது மதிக்கத்தக்க எலும்பும் தோலுமாய் மெலிந்திருந்த அஜித் ரசிகன் ஒருவன் கையில் நீண்ட அரிவாளை தூக்க முடியாமல் தூக்கிக் காட்டி.. “டேய் தல ஃபேன்டா.. அறுத்துப் போட்னு போய்னே இருப்பேண்டா” என இல்லாத மீசையைத் தடவியதை அவனது பெற்றோர் பார்த்திருக்க வேண்டும்; ஈன்ற பொழுதினும் பெரிதுவந்திருப்பர்.

ரசிகர்களைக் கூட வயதுக்கு வராத சிறுவர்களின் ஆர்வக் கோளாறுகள் என கடந்து போய் விடலாம்.. சாதி வெறியர்கள் தனி ரகம். “டேய் ____ நாயே சத்திரிய வன்னியன்டா.. எங்கள்ட்ட வாங்கித் தின்ன நாய்களா.. எங்களுக்கே மீசைய முறுக்கிக் காட்றீங்களாடா” என்கிறார் தீச்சட்டியில் பிறந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ’ஷத்திரியர்’(!?) ஒருவர். “எலேய் _____ பசங்களா ஆண்ட வமுசம்டா… அரிவாளத் தொட்டா ரத்தம் காணாம விட மாட்டோம்டா” என்கிறார் தெற்கத்திய ஆண்ட வம்சத்தில் பிறந்த பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இன்னொரு ‘ஷத்திரியர்’(!?). இதற்கு ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களும் பதிலடி கொடுக்கிறார்கள் – அதே சாக்கடைத் தரத்தில்.

இத்தனை ரணகளத்திற்கும் இடையில் திராவிட நிறம் கொண்ட பெண்களின் சுயகழிவிறக்க காணொலிகள்.. “அண்ணே.. நாங்கெல்லாம் தமிழ் பொண்ணுங்க. எங்க கலரே இது தாம்ணே. முழுசாப் பார்த்து லைக் போடுங்கண்ணே.. வீடியோவ தூக்கி விட்றாதீய”. குத்துப்பாட்டுக்களுக்கு திருநங்கைகள் சிலருடைய நடன முயற்சிகளும் இடையிடையே தலை காட்டுகின்றன. சில விடலைப் பையன்கள், பெண் பயனர்களின் காணொலியை ஒரு ஓரத்தில் ஓட விட்டு பதிலுக்கு சில அசைவுகளைச் செய்து காட்டுகின்றனர்; பொருந்தாக் காதலுக்கான அவர்களது இம்முயற்சிகள் எந்தளவுக்கு வெற்றியடைந்தன என்பது பற்றி நமக்கு தெரியாது.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் இந்த செயலி பெரும் குப்பைக் கிடங்கு.

♦♦♦

குப்பையை ஏன் கிளறியாக வேண்டியிருக்கிறது? 2018-ன் முதல் காலாண்டில் முகநூல் ட்விட்டர் உள்ளிட்ட மற்ற எல்லா சமூக வலைத்தளங்களைக் காட்டிலும் மிக அதிகமாக (45 மில்லியன்) தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது டௌயின் (Douyin). இந்த டௌயின் செயலி தான் பின்னர் ம்யூசிக்கலியை தன்னோடு இணைத்துக் கொண்டது. கடந்த 2017 நவம்பர் மாதம் 1 பில்லியன் டாலர் கொடுத்து ம்யூசிக்கலியை கையகப்படுத்திய டௌயின், சென்ற மாதம் இணைப்பு வேலையை முடித்து “டிக் டோக்” எனும் பெயரில் சேவையைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த மாத துவக்கத்தில் டௌயின் செயலிக்கு 500 மில்லியன் பயனர்களும், ம்யூசிக்கலிக்கு 100 மில்லியன் பயனர்களும் இருந்தனர். தற்போது சுமார் 65 கோடி பயனர்கள் இருப்பதாகவும், டிக்டோக் பிற சமூக வலைத்தளங்களின் வளர்ச்சியை விஞ்சி சென்று கொண்டிருப்பதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ம்யூசிக்கலியில் வரும் தமிழ்க் காணொளிகளின் முறைமையை (Pattern) அவதானித்துப் பார்த்ததில், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பெண்கள் கணிசமாகவும் அதில் பெரும்பாலும் நடுத்தர வயதை எட்டியவர்களும் இருப்பதை பார்க்க முடிகிறது. இந்தச் செயலியின் வடிவமைப்பே ஒரு குறிப்பிட்ட பயனர் எந்தவிதமான காணொளியைப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதாக இருக்கிறது. உதாரணமாக ஒரு சீசனில் “கட்டிப்புடி கட்டிப்புடிடா கண்ணாளா” எனும் பாடல் பிரபலம் ஆனால், பலரும் அந்தப் பாடலுக்கு நடன அசைவுகள் (இடுப்பசைவு) செய்து பதிவேற்றுகிறார்கள். இதில் யார் அதிகம் லைக் பெறுவது என்கிற போட்டியே யார் குறைந்த உடையுடனும் அதிக ஆபாசத்தோடும் காட்சியளிப்பது என்பதைத் தீர்மானிக்கிறது. இது சினிமா குத்துப் பாடல்களுக்கிடையே உள்ள போட்டி போன்றது.

முகநூல் உள்ளிட்ட பிற சமூக வலைத்தளங்களைப் போலவே டிக்டோக்கும் பயனர்கள் தம்மையே ஒருபண்டமாக கருதத் தூண்டுகின்றது (commodification of Self). ஆனால், மற்றவற்றில் முகம் காட்டும் அல்லது காட்சிப்படுத்தும் கட்டாயமில்லை. மேலும், முகநூல் ட்விட்டர் போன்ற சமூகவலைத் தளங்களில் அரைகுறையாகவாவது ”விவாதம்” என்கிற ஒன்று நடக்கிறது. அதற்கு கருத்து என்கிற ஒன்றைச் சொல்லியாக வேண்டும் – அது எத்தனை மொக்கையானதாக இருந்தாலும்.

டிக்டோக்கில் ”கருத்துக்கு” எந்த இடமும் இல்லை; இங்கே காட்சியே பிரதானம். அதிலும் சிந்திப்பதற்கோ, திறமையை வெளிக்காட்டும் தேவையோ அறவே இல்லை என்பதால் அபாயத்தில் அளவு அதிகரிக்கிறது. காட்சியின் மூலம் பின் தொடர்வோர் எண்ணிக்கையை எப்படி அதிகரிப்பது? விஞ்ஞான, அரசியல், ஆன்மீக விளக்கங்கள் அளிக்கலாம் தான் – ஆனால், பதினைந்து நொடியில் அது சாத்தியம் இல்லை. எனவே ஆபாசப் பாடல்களும், வசனங்களுமே அதிகபட்ச சாத்தியம். அதிலும், பாடலின் வரிகள் எந்தளவுக்கு பாலியல் தன்மை கொண்டிருக்கிறதோ அது தோற்றத்திலும் எதிரொலித்தாக வேண்டும்.

ஒன்றை ஒன்றை வளர்த்துக் கொள்ளும் இந்த அம்சங்கள் எங்கே இட்டுச் செல்கின்றன? ஆண்களுடைய விருப்பத்தின் அளவு எந்தளவுக்கு மேலே செல்கிறதோ அந்தளவுக்கு மேலாடையின் அளவை கீழே இறக்குகிறது. தோலின் நிறம் குறித்த தாழ்வு மனப்பான்மையை ஆடைக் குறைப்பின் மூலமும், ஆபாச அசைவுகளின் மூலமும் கிடைக்கும் பிரபலத்தின் மூலமும் பின் தொடர்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பதன் மூலமும் சமன்செய்து விடுகிறது. பிரபலமாவதற்கு ஆளுமையோ திறமையோ அவசியமல்ல – அழகும், ஆடைக்குறைப்புமே அவசியம். ஆண்களைப் பொருத்தவரை சாதிவெறி, ரசிக கும்பலின் சல்லித்தனங்கள். உலகளவில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் இந்தச் செயலியைப் பயன்படுத்துவோரில் பெண்களின் எண்ணிக்கையே அதிகம் எனத் தெரியவந்துள்ளது.

மேலை நாடுகளிலும் இதே பிரச்சினைகளுடன் தற்கொலையைத் தூண்டும் பதிவுகள் உள்ளிட்ட வேறு சிலவும் உள்ளன. அவையெல்லாம் விரைவில் ’தமிழ்ச் சூழலுக்கும்’ இறக்குமதியாகிவிடும் என எதிர்பார்க்கலாம். இவையனைத்தையும் விட முக்கியமானது – இதில் செலவழிக்கப்படும் நேரமும், இந்தச் செயலியால் வடிவமைக்கப்படும் சிந்தனைப்போக்கும்தான். நடுத்தர வயதை எட்டிய ஒரு பெண் “பட்டுக்கோட்டையிலே ங்கோத்தா பருப்பு விக்கையிலே” என்கிற பாட்டுக்கு ’நடனமாடுகிறார்’; பின்னூட்டத்தில் ஒரு விடலைப் பையன் “ஆண்டி அப்படியே உங்க பேக்கையும் ஆட்டிக் காட்டுங்க” என்கிறான். அதற்கு பதிலாக அந்தப் பெண்மணி ஸ்மைலி போடுகிறார்.

பொது வெளியில் ஒரு பெண்ணிடம் பேசக் கூசும் வார்த்தைகள் அநாயசியமாக புழங்குவது ஒருபக்கம் என்றால், அவ்வாறான வார்த்தைகளைப் பொது இடத்தில் கேட்டால் காட்டும் எதிர்வினைகளுக்கு நேர்மாறாகவே இங்கே எதிர்வினை காட்டுப்படுகிறது. (பெரும்பாலும்) தன்னுடைய பண்டம் விற்க வேண்டும் என்பதற்காக வாடிக்கையாளர் என்னதான் தரக்குறைவான வார்த்தைகள் சொன்னாலும் சகித்துக்கொண்டு சிரிக்கும் சிறுவணிகர்களைப்போல உருமாறி நிற்கிறார்கள். ஆண் ரசிகர்களைக் கவர பெண் பயனர்கள் கீழிறங்கிப்போவது அருவெறுப்பு என்றால் பெண்களை (ஆண்டிகளை) கவர ஆண் பயனர்கள் அடிக்கும் கூத்துகள் ஆபாசத்தின் உச்சம்.

ஒரு பக்கம் பெண்களை சந்தைப் பொருட்களாக உணரச் செய்வதோடு இன்னொரு பக்கம் ஆண்களை பெண்களை அடையத்துடிக்கும் வேட்டை நாய்களாக உணரச்செய்கிறது டிக்டோக். இறுதியில் ஃபோர்னோ எனப்படும் ஆபாச காணொளிகள் இங்கே ஜனரஞ்சகமாக ரசிக்கப்படுகிறது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நேரத்தில், பாலியல் உறவு காரணமாக குடும்பத்தில் ஏற்படும் வன்முறைகள் – கொலைகள் பெருகி வரும் காலத்தில் மியூசிக்கல் செயலியின் பெரு வெற்றி எதைக் காட்டுகிறது?

♦♦♦

தென்னிந்தியாவில் – குறிப்பாக தமிழகம் மற்றும் கேரளத்தில் – பெண்களுக்கு எதிராக பதிவாகும் குற்றங்களின் எண்ணிக்கை வடஇந்திய மாநிலங்களோடு ஒப்பிட்டால் குறைவு என்பதை பல்வேறு சந்தர்பங்களில் செய்திகளில் படித்திருப்போம். இது இம்மாநிலங்களில் கடந்த காலங்களில் ஜனநாயகத்திற்காகவும், சமநீதிக்காகவும் நடந்த அரசியல் போராட்டங்கள் கலாச்சார விழுமியங்களின் மீது செலுத்திய தாக்கம். கேரளாவில் பொதுவுடைமை இயக்கமும் தமிழகத்தில் பெரியாரின் செயல்பாடுகளும் பெண்களை ஜனநாயகப்பூர்வமாக நடத்த வேண்டும் என்கிற உணர்வை ஓரளவுக்கு ஏற்படுத்தி வைத்திருந்தது. எனினும், அடிப்படையில் பழைய நிலபிரபுத்துவ பிற்போக்கு கண்ணோட்டமே செல்வாக்கு செலுத்திவரும் ஒரு சமூகத்தில் கருத்தளவிலான பிரச்சாரங்களின் வலிமை என்னவென்பதை இந்த நவீன தொழில் நுட்பங்களின் பரவல் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.

பெண்களை வெறும் உடைமைகளாக பார்க்க பழக்கப்படுத்தியிருக்கும் பார்ப்பனியத்தின் புண்ணிய பூமியில் டிக்டோக் போன்ற சமூகவலைத்தள செயலிகள் சமூகத்தின் மீண்டும் சில நூற்றாண்டுகளுக்கு பின்னோக்கி இழுக்கின்றன.

– சாக்கியன்

மேலும் வாசிக்க :

தேசிய பசுமைத் தீர்ப்பாய ஆய்வுக்குழுவிடம் தூத்துக்குடி மக்கள் மனு !

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்காக 13 உயிர்களை சுட்டுக் கொன்றது தமிழக அரசு.  அதன் இரத்தக் கவிச்சி காயும் முன்பே, கொலைகார ஆலையை மீண்டும் திறக்க முயற்சிக்கிறது ஸ்டெர்லைட் நிர்வாகம்.

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி 23-09-2018 அன்று ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய வந்திருந்தனர் தேசிய பசுமைத் தீர்ப்பாய ஆய்வுக்குழுவினர். ஆலையை ஆய்வு செய்ததோடு, அருகாமை கிராமங்களிலுள்ள மக்களை சந்திக்க தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக்கில்  மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக ஏன் மூட வேண்டும் என்பதை விளக்கி எழுதப்பட்ட விரிவான கோரிக்கை மனுவை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மக்கள் பெருமளவில் திரண்டு வந்து கொடுத்தனர்.

அம்மனுவின் முழுவிவரம் பின்வருமாறு:

டந்த 1996-ஆம் ஆண்டு தூத்துக்குடியில் துவங்கப்பட்ட ஸ்டெர்லைட் நிறுவனத்தால் சிப்காட்டை சுற்றியுள்ள சுமார் 15 கிராம மக்களுக்கும், தூத்துக்குடி நகர் மக்களுக்கும் தொடர்ந்து புற்றுநோய், கர்ப்பப்பை சிதைவு, மலட்டுத்தன்மை, சிறுநீரகக் கோளாறு, தோல் நோய்கள், ஆஸ்துமா உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. பல லட்சம் மக்கள் ஸ்டெர்லைட்டால் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்படி பாதிப்புகளால் ஆயிரக்கணக்கானோர் இறந்து விட்டனர். எங்கள் கிராமங்களில் கடந்த சில ஆண்டுகளாக பிறக்கும் குழந்தைகள் பல்வேறு பாதிப்புகளுடன் பிறக்கின்றன. இதனால் எங்கள் சந்ததிகள் அழியும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் நிறுவனத்தால் எங்கள் கிராமங்களின் நிலத்தடி நீர் முற்றிலும் நாசமாகி விட்டது. விவசாயம் நலிவடைந்து விட்டது. இனியும் ஸ்டெர்லைட் நிறுவனம் சிப்காட்டில் செயல்பட்டால் நாங்கள் அனைவரும் ஊரைக் காலி செய்து, சொந்த நாட்டில் அகதிகளாக வாழும் சூழல் ஏற்படும். மேற்கண்ட சூழலில்தான் கடந்த பிப்ரவரி, 2018 முதல் மே, 22, 2018 வரை அமைதியான முறையில் நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம். ஆனால் ஸ்டெர்லைட்டும், காவல்துறையும் சேர்ந்து 13 பேரை சுட்டுக் கொன்றுவிட்டார்கள். நூற்றுக்கணக்கானோர் முடமாக்கப்பட்டார்கள். இதற்குப் பின்பும் ஸ்டெர்லைட்டைத் திறக்க முயல்வது அநீதியானது.

கடந்த 2010-ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் நிறுவனம் அரசுக்குச் செலுத்த வேண்டிய 738 கோடி ரூபாய் சுங்க வரியைக் கட்டாமல் ஏய்த்திருப்பது கண்டறியப்பட்டு ஸ்டெர்லைட் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நிர்வாகி வரதராஜன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அனுமதிக்கப்பட்ட அளவிற்கும் மேலாகக் கள்ளத்தனமான முறையில் தாமிரம், கந்தக அமிலம் ஆகியவற்றை ஸ்டெர்லைட் உற்பத்தி செய்து கள்ளச் சந்தையில் விற்றுவருகிறது. 1994-ஆம் ஆண்டு தொடங்கி 2004-ஆம் ஆண்டு வரை ஸ்டெர்லைட்டில் நடந்துள்ள வாயுக்கசிவு உள்ளிட்ட விபத்துக்களில் சிக்கி 13 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்; 139 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

2007-ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி இந்தியாவில் தாமிர உற்பத்தி 9.97 இலட்சம் டன்னாகும். இந்தியாவின் மொத்த தேவை ஆண்டிற்கு 4 இலட்சம் டன்கள்தான். ஏற்றுமதி நோக்கத்திற்காகவே உள்நாட்டுத் தேவையைவிட அதிகரித்த அளவில் தாமிர உற்பத்தி நடந்து வருகிறது. எனவே, ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிட்டால் இந்தியாவில் தாமிர தட்டுப்பாடு ஏற்படும் எனச் சொல்வதற்கு எந்தவொரு அடிப்படையும் கிடையாது. வெளிநாடுகளிலிருந்து மூலப் பொருளை இறக்குமதி செய்து, உற்பத்தி பொருளில் பெரும்பகுதி வெளிநாடுகளுக்கே ஏற்றுமதியாகும் தொழில் இங்கு இயங்க வேண்டிய அவசியம் என்ன? 2011-12ல் செய்த ரூ 19,051 கோடி மதிப்பிலான தாமிரப் பொருட்களின் விற்பனைக்கு ரூ 16,094 கோடி மதிப்புள்ள இறக்குமதி செய்யப்பட்ட தாமிர அடர் கரைசலை மூலப்பொருளாக பயன்படுத்தியிருக்கிறது ஸ்டெர்லைட். சுற்றுச் சூழலையும் மக்கள் உடல்நலனையும் பாதிக்கும் தொழிற்சாலைகளை வளரும் நாடுகளுக்கு இடம் மாற்றி அவற்றின் உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்து பயன்படுத்துவதுதான் அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, ஜப்பான் போன்ற நாடுகளின் சுற்றுச் சூழல் பாதுகாப்பு தந்திரமாக இருக்கிறது. பல பத்தாண்டுகள் முன்னேற்றம் காணாத, பாதுகாப்பற்ற தொழில் நுட்பங்களை பயன்படுத்தி நடத்தப்படும் உற்பத்தியில் வெளியாகும் கழிவுப் பொருட்களை சுத்திகரிக்க செலவழிக்காமல் வெளி விடுவதன் மூலம் ஏற்றுமதி பொருளின் விலை குறைவாக பராமரிக்கப்படுகிறது.

தாமிரம் உற்பத்தி செய்யப்படும்போது கந்தக டை ஆக்சைடுடன், நச்சு வாயுக்களும் வெளியாகின்றன. 1டன் தாமிரம் உற்பத்தி செய்யப்படும் பொழுது 2 கிலோ கந்தக டை ஆக்சைடு வெளியிடப்படுகிறது. காற்றில் கலக்கும் துகள்கள் காற்றை கடுமையாக மாசுபடுத்துகின்றன. தொழிற்சாலையிலிருந்து வெளியாகும் கழிவுநீரில் உள்ள காரீயம், காட்மியம், துத்தநாகம், ஆர்செனிக், பாதரசம் போன்ற உலோகங்கள் நீரை நேரடியாக நச்சுப்படுத்துகின்றன. ஒரு டன் தாமிரம் உற்பத்தி செய்யப்படும்போது, மூன்று டன் திடக்கழிவு வெளியிடப்படுகிறது. திடக்கழிவுகள் கொட்டப்படும் நிலங்கள் மீட்க முடியாதபடி பாழாகின்றன. கடந்த 21 வருடங்களாக எங்கள் மண். காற்று.நீர் அனைத்தும் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தால் மேற்கண்டவாறாக நாசம் செய்யப்பட்டுள்ளது.

எனவே, பணக்கார நாட்டு மக்கள் சுகாதாரமாய் வாழ தமிழகத்தின் ஏழை மக்கள் பலிகடா ஆக்கப்படுகிறோம். இனியும் இந்நிலை நீடிக்கக் கூடாது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் 1.8.1994 அன்று வழங்கிய அனுமதி கடிதத்தில் “சுற்றுச் சூழல் பாதுகாக்கப்பட வேண்டிய மன்னார் வளைகுடாவிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால்தான் தொழிற்சாலை அமைக்கப்பட வேண்டும், தொழிற்சாலையைச் சுற்றி 250 மீட்டருக்கு பசுமை வளையம் அமைக்கப்பட வேண்டும்” என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. ஆனால் 1997-ம் ஆண்டு இயங்க ஆரம்பித்த ஸ்டெர்லைட் ஆலை மன்னார் வளைகுடாவிலிருந்து 14 கிமீ தொலைவில் அமைக்கப்பட்டிருந்தது; ஆலையைச் சுற்றி பசுமை வளையமும் ஏற்படுத்தப்படவில்லை .

21.9.2004 முனைவர் தியாகராசன் தலைமையிலான குழு ஸ்டெர்லைட்டின் இயக்கத்தை ஆய்வு செய்து விதிமுறை மீறல்களை பட்டியலிட்டது. இரு உருளைவடிவ தாங்கு உலைகளையும், கழிவுகளை தூய்மை செய்யும் ஓர் உலையையும், ஒரு ஆனோடு உலையையும், ஒரு ஆக்சிஜன் பிரிவையும், ஒரு கந்தக அமிலப் பிரிவையும், ஒரு காஸ்டர் பிரிவையும், ஒரு கன்வெர்டரையும் எவ்வித அனுமதியும் பெறாமல் கட்டியுள்ளனர். இரண்டு பாஸ்பரஸ் அமில பிரிவுகளும், சுத்திகரிப்பு மற்றும் தொடர்ச்சியான காஸ்டர் ராட் உருவாக்கும் பிரிவும் கட்டப்பட்டு வருவதாகவும் அதற்கும் அனுமதி பெறவில்லை என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டது.

28.9.2010 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எலிப் தர்மராவ், பால்வசந்தகுமார் தலைமையிலான அமர்வு Writ Petitions No. 15501 to 15503 of 1996.

5769 of 19 7& 16861 of 1998 வழக்குகளில் “ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை நிரந்தரமாக மூட ஆணை” பிறப்பித்தது. மேற்படி தீர்ப்பில் “ஸ்டெர்லைட் ஆலை வந்தீவு கிராமத்திலிருந்து 6 கி.மீ. தொலைவிலும் கசுவார் கிராமத்திலிருந்து 7 கி.மீ. தொலைவிலும், கரைச்சல்லி, விளங்குசல்லி கிராமங்களிலிருந்து 15 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இந்த நான்கு கிராமங்களும் மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள 21 தீவுகளில் அடங்குபவை. இதனால் 1995-ல் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கொடுத்த அனுமதி கடிதத்தின் நிபந்தனைகளை ஸ்டெர்லைட் மீறியிருக்கிறது தெளிவாகிறது.”

“இந்த நான்கு தீவுகளையும் சேர்த்து 21 தீவுகளை கொண்டுள்ள மன்னார் வளைகுடா வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் பிரிவு 35(1)ன் கீழ் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த சட்டத்தின் பிரிவு 35(4)ன் கீழ் மன்னார் வளைகுடாவை ஒரு கடல்சார் தேசிய பூங்காவாகவும் அறிவிக்கலாம்” என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. “மன்னார் வளைகுடா சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டிய பகுதி என்பதில் சந்தேகமில்லை . எனவே இந்தப் பகுதியில் உயிர்வாழ் ஆதாரங்களை பாதுகாப்பதற்காக தொழிற்சாலைகளை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது. மத்திய அரசு அத்தகைய உத்தரவை பிறப்பித்ததும் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை சிப்காட் தொழில் வளாகத்திலிருந்து இடம் மாற்ற ஏற்பாடுகள் செய்ய வேண்டும்” என்று தீர்ப்பளித்திருந்தது உயர்நீதி மன்றம்.

கடந்த 2013-ல் CIVIL APPEAL Nos. 2776-2783 OF 2013ன் வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகளை ரத்து செய்த உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பின் பத்தி 42-ல்

“By this judgment, we have only set aside the directions of the High Court in the impugned common judgment and we make it clear that this judgment will not stand in the way of the TNPCB issuing directions to the appellant-company, including a direction for closure of the plant, for the protection of environment in accordance with law.” என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. எனவே தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட உச்சநீதிமன்றத் தீர்ப்பு தடையாக இல்லை.

ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து சிப்காட்டில் இயங்கினால், தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை , ஆரோக்கியம் பாதிக்கப்படும். மராட்டிய மாநிலம் இரத்தினகிரியில் ஸ்டெர்லைட்டின் தொழில் வளாகம் அமைக்கும் முயற்சி விவசாயிகளின் கடும் எதிர்ப்பு போராட்டங்களைத் தொடர்ந்து 1.5.1994-ல் அம்மாநில அரசால் தடை செய்யப்பட்டது. தமிழகத்திலும் தூத்துக்குடியிலும் ஏற்பட்ட பாதிப்புகளை தொடர்ந்து ஆலை மூடப்பட்டடுள்ளது. இந்திய அரசியல் சட்டத்தின் சரத்து 21-ன் படி மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டியது அரசின் அரசியல் சட்டக் கடமையாகும். ஸ்டெர்லைட் இயங்கினால் எங்களின் வாழ்வுரிமை பறிபோகும்.

ஆகவே, மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்து, சுற்றுச் சூழலை சீர்குலைத்து மக்களின் வாழ்வுரிமையை அழித்து தூத்துக்குடி மாவட்டத்தின் சட்டம் – ஒழுங்கு, பொது அமைதியை சீர்குலைத்துவரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உரிய பரிந்துரைகளை வழங்குமாறு வேண்டுகிறேன்.

– வினவு களச் செய்தியாளர்.

இராஜஸ்தான் இலட்சுமியின் பீங்கான் அழகுப் பொருட்கள் !

சென்னை மாதவரம் தேசிய நெடுஞ்சாலை. சரக்கு போக்குவரத்து வாகனங்கள் எப்பொழுதும் அடர்த்தியாக சென்று கொண்டிருக்கும் ஒரு பரபரப்பான மாலை நேரம்.. மஞ்சள் வெயிலின் வெளிச்சத்தை இருட்டு விழுங்குவதற்கு இரண்டு மணி நேரமே இருந்தது… அந்தச் சாலையின் ஓரத்தில் பல்வேறு கடைகள் இருந்தாலும் பார்ப்பவர்களை வெகுவாக கவர்ந்திழுக்கும் விதமாக அமைந்திருந்தது ஒரு கடை.அலுமினிய தகடால் ஆன அஸ்பெஸ்டாஸ் சுவருக்கு முன் இரண்டு கழிகளை நட்டு அதன் மேல் தென்னங்கீற்றைப் போட்டு சுட்டெரிக்கும் வெய்யிலிலிருந்து தங்களை  தற்காத்துக்கொள்ள ஒரு குடிசை அமைத்திருந்தனர்.

நீண்ட வரிசையில் பீங்கானால் செய்யப்பட்டயானைகள், வீட்டு உபயோகப் பொருட்கள்அழகாக நேர்த்தியானமுறையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதில், ராஜஸ்தான் மாடல் குவளைகள் அதிகம் இடம் பிடித்திருந்தன. அதேபோல், பிளாஸ்டர் ஆப் பாரிஸ் கொண்டு அச்சு மூலம் செய்யப்பட்ட, கிருஷ்ணர், சரஸ்வதி உள்ளிட்ட சாமி சிலைகள் என அனைத்தும் கலைநயத்துடன் செய்து அடுக்கி வைத்திருந்தனர்.குடிசைக்குள், ஒல்லியான தேகம் கொண்ட ஒருவர் கண் திருஷ்டி பொம்மைக்கு வண்ணம் தீட்ட, அவருக்கருகில் ஐம்பது வயதைக் கடந்த பெண்மனி தூரிகையின் உதவியோடு உயிரற்ற ஆக்ரோஷமான அந்த திருஷ்டி பொம்மைக்கு உயிரூட்டிக் கொண்டிருந்தார். தூரிகையை பிடித்து அவர் சுழற்றும் லாவகத்திலிருந்தே அவருடைய திறமையை புரிந்து கொள்ள முடியும்.

அவருக்கு எதிரில் நான்கைந்து சிறுவர்கள், ”இந்த ஒரெயொரு முறை மட்டும் பிள்ளையார் சிலை செஞ்சிக் கொடுங்கக்கா” என்று கெஞ்சிக் கொண்டிருந்தனர். அவர்களை நிமிர்ந்துகூட பார்க்க நேரமில்லாமல், ”என்கிட்ட கேக்காதிங்கடா… போயிட்டு ஸ்டேசனுல அனுமதி வாங்கிட்டு வாங்கடா” என்று அச்சிறுவர்களை விரட்டினார். எவ்வளவோ அவர்கள் கேட்டும் தன்  நிலையில் உறுதியாக இருந்தார் அவர்.ஒரு வழியாக அச்சிறுவர்கள் சென்ற பிறகு…. பேசத் தொடங்கினார் லட்சுமி.

“என்னோட சொந்த ஊர் ராஜஸ்தான். எங்க அப்பா அம்மா காலத்துல இருந்து இந்த தொழில் தான் செஞ்சிட்டு இருக்கோம். இருபத்தி அஞ்சி வருஷத்துக்கு முன்னாடி தமிழ்நாட்டுக்கு வந்தோம். என்னோட கணவர், கணவரின் தம்பி’ன்னு குடும்பமே இந்த தொழிலை நம்பித்தான் இருக்கு.எனக்கு மூனு பசங்க இருக்காங்க… எல்லாம் ரெட்டேரியில இருக்க தனியார் பள்ளிக்கூடத்துல படிக்கிறாங்க.

லட்சுமி, வட இந்திய தொழிலாளி, கைவினைப் பொருட்கள் விற்பனை செய்பவர்.

என்னோட தங்கச்சி குடும்பம் ஆந்திராவுல இருக்கு. அவங்களும் இதே தொழிலைத்தான் செய்யுறாங்க. இப்ப அவளுக்கு டெலிவரி ஆகியிருக்கு. என்னோட கணவர் கொழந்தைய பார்க்க போயிருக்காரு.

இங்க வந்த புதுசுல இந்த கண்திருஸ்டி பொம்மை மட்டும் தான் செஞ்சிட்டு இருந்தோம். அப்புறம் போக போக கிருஷ்ணர், சரஸ்வதி, கொலு பொம்மைகள் வரைக்கும் நாங்களே செய்து விக்க ஆரம்பிச்சிட்டோம். இப்ப பீங்கான் பொருட்களை வாங்கிட்டு வந்து விக்கிறோம். இதெல்லாம் பாரீஸ் போயிட்டு வாங்கி வருவோம். முன்னாடி மாதிரி வியாபாரம் எதுவும் இல்ல.

மாசம் 30 பீஸ் செய்வோம். தயாரிப்பு செலவும் கூடிடுச்சி. இந்த திருஷ்டி பொம்மை மட்டும் வீட்டுக்கு வாங்கிட்டு போவாங்க. ஒரு பொம்மையோட வெல 150,200,350 ரூபா வரைக்கும் இருக்கு…. இதையே குறைச்சிதான் வாங்கிட்டு போவாங்க… கிருஷ்ணர் சிலை, சரஸ்வதி சிலை எல்லாம் 1000 ரூபா. ஆனா யாரும் அந்த விலைக்கு வாங்க மாட்டாங்க. 600 ரூபாய்க்கு கேட்டாலும் கொடுத்துவேன். இதை ஸ்டாக் பண்ணி வச்சி என்ன பண்றது?

இந்த வேகாத வெய்யிலுல வந்து வெந்துகிட்டிருக்கோம். காலையில பத்து மணிக்கு சாப்பிட்டா அதோட நைட்டு பத்து மணிக்கு தான் சாப்பிடுவோம். மதியம் கிடையாது. அதுவும் சப்பாத்தி மட்டும் தான்.  அரிசி சோறு சாப்பிடுறது எங்க கலாச்சாரத்துல இல்ல. அதனால இதுவரைக்கும் சாப்பிட்டதும் இல்ல. வருஷத்துக்கு ஒரு முறை ஊருக்கு போயிட்டு வருவோம்.

ஒவ்வொரு வருஷமும் விநாயகர் சதுர்த்திக்கு பிள்ளையார் செஞ்சி விப்போம்.. கொஞ்சம் வருமானம் இருந்துச்சி. ஆனா, இந்த வருஷம் மட்டும் செய்யல. போலிசு செய்யக்கூடதுன்னு சொல்லிட்டதால வருமானம் எல்லாம் போயிடுச்சி. அது மட்டும் தான் கொஞ்சம் கைகொடுத்துச்சி.  இப்ப அதுவும் இல்ல…” என்கிறார் சோகமாக.

இன்றைய நவீன யுகத்தில் கைவினைப் பொருட்களின் மீதான ஆர்வம் குறைந்ததற்கு முக்கிய காரணம், புதிய தொழில்நுட்பத்தின் மூலம் வார்க்கப் பட்ட அச்சுப்பொருட்கள் மிக எளிதாக கிடைக்கின்றன.வரை வீடுகளுக்கு அதேபோல் கலை ரசனை என்பது மேட்டுகுடியினர் வாழ்வியல் சார்ந்து இருப்பதால் சாலையோர வியாபாரிகள் பக்கம் அவர்கள் கவனம் திரும்புவது கிடையாது.

சாதாரன மக்கள் கலை சார்ந்த ரசனையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டிருப்பதால் இயல்பாகவே அவர்கள் இதனை வாங்குவது மிக்ககுறைவு என்பதால் இத்தொழிலை நம்பி வாழ்பவர்கள் மிக எளிதாக வீழ்ச்சியடைந்து விடுகிறார்கள் என்பதே நிதர்சனம்..!

– வினவு புகைப்படச் செய்தியாளர்.

பங்கு சந்தை 5 : லாபத்துக்கு படும் பாடு !

பந்தய மூலதனம் – 5

பங்குச் சந்தை குரங்குகளை வாங்கி விற்கும் சூதாட்டம் மட்டும்தானா?

நாம் ஏன் பங்குச்சந்தை பற்றி புரிந்துகொள்ள வேண்டும், நமக்கும் பங்குச் சந்தைக்கும் என்ன சம்பந்தம்? – கேள்விக்கு விடை தெரிய தொடர்ந்து படியுங்கள்.

ரி, பங்குச் சந்தையில் கோடிகளில் புரளுகிறது பந்தயப் பணம். அத்தனை லட்சம் கோடி பணமும் எதன் மேல் பந்தயம் வைக்கப்படுகிறது? ஒரு பொருளை (அல்லது சேவையை) செய்து விற்பதில், அல்லது வாங்கி விற்பதில் லாபம் சம்பாதிக்க வேண்டும் அல்லது அப்படி தொழில் செய்பவர்களுக்கு கடன் கொடுத்து வட்டி வசூலிப்பதன் மூலம் லாபம் சம்பாதிக்க வேண்டும்.

அதனை  பங்குதாரர்களுக்கு  ஈவுத் தொகையாக அல்லது போனஸ் பங்காக  அல்லது  பங்குகளை வாங்குவதன் மூலம்   பிரித்துக்  கொடுக்க வேண்டும். அதை எதிர்பார்த்து பங்கு விலை அதிகரிக்கும் என்று பந்தயம் கட்டப்படுகிறது

லாபம் எப்படி ஈட்டப்படுகிறது. அதற்கான ஒரு எளிய உதாரணத்தை பார்ப்போம்.

நாம் முன்பு பார்த்த நண்பர் பிரகாஷ் தான் வேலை பார்க்கும் கம்பெனியில் கிடைத்த ரூ 10 லட்சம் போனசை வைத்து பி.எஸ்.எஸ் (பிரகாஷ் சாஃப்ட்வேர் சொல்யூஷன்ஸ்) என்ற பெயரில் மென்பொருள் செய்து விற்கிறார். மன்னார் அண்ட் கம்பெனியின் புராஜக்ட் செய்து கொண்டிருக்கும் போது, ஒரு நாளைக்கு அவருக்கு ஒரு ஃபோன்,

“சார் நீங்கதான் பி.எஸ்.எஸ் கம்பெனி ஓனரா? மன்னார் அன்ட் கம்பெனிக்கு நீங்கதான சாஃப்ட்வேர் செஞ்சு கொடுத்தீங்க? எங்க கம்பெனிக்கும் இதே போல சாஃப்ட்வேர் வேணும். உடனடியாக எங்க ஓனரை வந்து பாருங்க”

“நீங்க யாரு சார்?”

“நான் செல்லமணி கம்பெனி மேனேஜர் மாசிலாமணி சார். எங்க ஓனர் ராமமூர்த்தி உங்கள உடனேயே பாக்கணும்னு சொல்லிட்டார், எப்ப வருவீங்கன்னு சீக்கிரம் சொல்லுங்க”

மன்னார் அன்ட் கம்பெனிக்கு போட்டி கம்பெனி செல்லமணி கம்பெனி. மன்னார் அன்ட் கம்பெனியில் என்ன நடக்கிறது என்று இவர்கள் மோப்பம் பிடித்து காப்பி அடிப்பார்கள். இவர்கள் செய்வதை அவர்கள் மோப்பம் பிடித்து அதே போல செய்வார்கள். சில டஜன் கம்பெனிகள் போட்டி போடும் தொழிலில் இப்படி எல்லாம் துடிப்பாக இருந்தால்தான் தாக்குப் பிடித்து முன்னேற முடியும் என்பதில் ராமமூர்த்தி தெளிவானவர். இப்போது புதுசா ஏதோ சாஃப்ட்வேர் பேச்சு அடிபடுகிறதே என்று ஆளைத் துரத்துகிறார்.

“சரிங்க, நான் அடுத்த திங்கள் கிழமை காலையில் 11 மணிக்கு வந்து பார்க்கிறேன்”.

ராமமூர்த்தி குடும்பம் பழைய காலத்தில் வெல்ல மண்டி நடத்தி பணம் சேர்த்தவர்கள். கரும்பு விவசாயிகள் கரும்புச் சாறை காய்ச்சி கொண்டு வரும் வெல்லத்தை வாங்கி விற்கும் மொத்தத் தொழில் செய்தவர்கள். 30 வருடங்களுக்கு முன்பு அது நலிந்து போவதை புரிந்து கொண்டு, அதில் சம்பாதித்த பணத்தை எதில் போட்டால் லாபம் அதிகம் என்று பார்த்து பிளாஸ்டிக் பொருள் செய்யும் கம்பெனி ஒன்றை ஆரம்பித்து நடத்துகிறார்கள். மூலதனம் லாபம் குறைவான துறையிலிருந்து லாபம் அதிகமான துறைக்கு நகர்ந்து கொண்டே இருக்கிறது.

திங்கள் கிழமை அன்று புதுப்பேட்டையில் ஒரு குறுகலான தெருவுக்குள் மாடியில் இருக்கும் ராமமூர்த்தியின் அலுவலகத்துக்குப் போகிறார் பிரகாஷ்.

பி.எஸ்.எஸ்-ன் மென்பொருள் என்னென்ன செய்யும், எப்படியெல்லாம் உதவியாக இருக்கும், அது பிசினசை எப்படி வளர்க்கும், லாபத்தை எப்படி அதிகப்படுத்தும் என்றெல்லாம் 15 நிமிடங்கள் பேசுவதற்கு தயாரித்துக் கொண்டு போகிறார். பி.எஸ்.எஸ் கம்பெனி பற்றிய விபரங்கள், மென்பொருளிலிருந்து எடுக்க முடியும் மாதிரி அறிக்கைகள், பயன்படுத்தப் போகும் தொழில்நுட்பம் பற்றி விபரங்கள் என்று பக்காவாக ஒரு டாகுமென்ட் செட் தயாரித்து எடுத்துக் கொண்டு போகிறார்.

குறுகலான ஒரு மாடிப்படி ஏறிப் போனால், முதல் மாடியில் ஒரு 1500 சதுர அடியில் குளிரூட்டப்பட்ட அலுவலகம். ராமமூர்த்தி, எம்.டி என்ற பெயர்பலகையுடன் ராமமூர்த்தியின் அறை. சிறிது நேரம் காத்திருந்த பிறகு உள்ளே போகச் சொல்கிறார்கள். கூடவே செல்லமணி கம்பெனியின் பொது மேலாளர் ஒருவரும், கணினி பிரிவின் இன்சார்ஜூம் இருக்கிறார்கள்.

“சார், சாப்ஃட்வேர்ல எனக்கு 15 வருசம் அனுபவம் இருக்கு. இப்பதான் புதுசா கம்பெனி ஆரம்பிச்சிருக்கோம். மன்னார் அண்ட் கம்பெனிக்கு பிளாஸ்டிக் பொருள் தொழில் சம்பந்தமான சாஃப்ட்வேர் நாங்கதான் செஞ்சு கொடுக்கிறோம். இதில அந்த விபரம் எல்லாம் இருக்கு சார்.”

“அப்படியாப்பா, உங்க கம்பெனில எத்தனை பேரு வேலை செய்றாங்க?”

“அதெல்லாம் கவலைப்படாதீங்க சார், நாலு பேரு இருக்காங்க சார், நானும் இப்போ உங்க புராஜக்ட்-க்காக வேலை செய்யப் போறேன். எல்லாம் கரெக்டா முடிச்சிருவோம்”.

“சரிப்பா, இதுல என்னென்ன வசதி இருக்குன்னு சொல்லு பார்க்கலாம்”. அடுத்த இரண்டு மணி நேரம் விவாதம் போனது. ராமமூர்த்தி டீம் கூடுதலாக சொன்ன பல தேவைகளை பிரகாஷ் குறித்துக் கொள்கிறார்.

“சரிப்பா, இதையெல்லாம் செய்றதுக்கு என்ன செலவாகும்? என்ன விலை சொல்றீங்க?”. விற்கப்படும் பொருள் தனக்கு பலனுள்ளது என்று உறுதி செய்து கொண்ட பிறகு அதற்கான விலையைப் பற்றி பேச ஆரம்பிக்கிறார்.

“சொல்றேன் சார், நீங்க நிறைய புதுசா சொல்லியிருக்கீங்க, அதை எல்லாம் கணக்கு போட்டு பார்த்துட்டு நான் உங்களுக்கு டீட்டெய்லா புரப்போசல் அனுப்புறேன் சார்” என்று புறப்படுகிறார் பிரகாஷ்.

“மன்னார் அன்ட் கம்பெனிக்கு கொடுத்ததை பார்த்து நான் கூப்பிட்ட மாதிரி, செல்லமணி கம்பெனில உங்க சாஃப்ட்வேர வாங்குறோம்னு தெரிஞ்சா இன்னும் பலபேரு வருவாங்க. உங்க பிசினஸ் நல்லா டெவலப் ஆகும்” என்று பிரகாஷை மோட்டிவேட் செய்து அனுப்புகிறார். செய்கிறார் ராமமூர்த்தி.

பிரகாஷ் மூளைக்குள் நிறைய கனவுகள். “ஒரு புராஜக்ட் செய்து முடிப்பதற்கு முன்னாலேயே ஆள் தேடி ஆர்டர் வருகிறது. நாம இன்னும் உஷாரா மார்க்கெட்ல இறங்கினா கம்பெனிய பெருசா ஆக்கிறலாம்” என்று யோசிக்கிறார்.

அடுத்த 2 நாட்கள் விபரமாக கணக்கு போட்டு திட்டம் தயாரிக்கிறார். எத்தனை வேலை நாட்கள், என்னென்ன வேலை என்று நுணுக்கமாக திட்டம் போடுகிறார். 20 வருட மென்பொருள் துறை அனுபவம் கைகொடுக்கிறது. அலுவலகத்தில் நான்கு பேருடன் தானும் இறங்கி வேலை செய்தால் சேர்த்து வேலைகளை முடிக்க 8 மாதங்கள் ஆகும் என்று முடிவு செய்கிறார்.

மாதச் செலவாக அலுவலக வாடகை, தொலைபேசி கட்டணம், மின் கட்டணம், போக்குவரத்து செலவு என்று ரூ 50,000. சம்பளச் செலவு 4 பேருக்கும் சேர்த்து ரூ 1 லட்சம், பிரகாஷுக்கு ரூ 1 லட்சம். எல்லாம் சேர்த்தால் மாதம் ரூ 2.5 லட்சம் வீதம் 8 மாதங்களுக்கு ரூ 20 லட்சம் செலவாகும்.

ஆனா, இதில் நிறைய ரிஸ்க் இருக்கிறது.

ஒரு வேளை செல்லமணி கம்பெனி சொன்ன தேவைகளை சரியாக புரிந்து கொள்ளாமல் இருந்திருந்தாலோ, புரிந்து கொண்டதை திட்டமிட்டதில் ஏதாவது இடைவெளி இருந்தால் வேலை இழுத்து விடும். இன்னொரு பக்கம் வேலை யாருக்காவது உடம்பு சரியில்லை, ஏதாவது அவசரமாக லீவு போட வேண்டி வந்தால் வேலை தாமதமாகும்.

வேலை அளவிலும் வேலை செய்யப் போகிறவர்களின் இருக்கும் நிச்சயமின்மையை கருத்தில் வைத்து கூடுதலாக 2 மாதங்கள் சேர்த்துக் கொள்கிறார். 10 மாதங்களுக்கு ரூ 25 லட்சம் செலவு, அதற்கு மேல் லாபத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். 20% லாபம் சேர்த்து ரூ 30 லட்சம் என்று விலை முடிவு செய்து ராமமூர்த்திக்கு அனுப்பி வைத்து விடுகிறார்.

ஏன் 20% லாபம்? ஏன் 30 லட்சம் விலை? அதிக விலை வைத்து அதிக லாபம் பார்க்கலாமே? ரூ 3 கோடிக்கு விற்க முடியாதா? ரூ 30 கோடிக்கு? அவ்வளவு லாபம் சம்பாதிக்கும் நிறுவனங்கள்தான் பங்குச் சந்தையில் சக்கை போடு போடுகின்றன. அவர்களும் பிரகாஷ் போல உப்பு, மிளகு, புளி கணக்கு போட்டுத்தான் விலை வைத்து விற்று லாபம் சம்பாதிக்கிறார்களா? விபரமாக வரும் பகுதிகளில் பார்ப்போம்.

(தொடரும்)
நன்றி : new-democrats

தொடரின் முந்தைய பாகங்கள்:
பங்குச் சந்தை என்றால் என்ன ? – பாகம் 1
பங்குச் சந்தை 2 : செலவழித்தால் பணம் – பெருக்கினால் மூலதனம் !
பங்குச் சந்தை 3 : பங்குகள் இலாபம் பார்ப்பது ஊகத்திலா, நிறுவனங்களின் உற்பத்தியிலா ?

திருச்சி ஆட்டோ ஓட்டுநர்கள் பாதுகாப்பு சங்கம் ஆர்ப்பாட்டம் : அனைவரும் வருக !

பெட்ரோல் அரசியல்:
கலங்கி நின்றுப் பயன் இல்லை!
கலகம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை !

ன்பார்ந்த ஓட்டுனர்களே, பொதுமக்களே

வாகன உற்பத்தியில் இந்தியா உலகின் 7-வது இடத்திலும் இரு சக்கர வாகன உற்பத்தியில் முதலிடத்திலும் உள்ளதாம்! உலகெங்கும் ஆண்டுக்கு 800 மில்லியன் வாகனங்களை உற்பத்தி செய்து குவிக்கிறார்கள் முதலாளிகள். அதில் இந்தியாவின் உற்பத்தி 40 மில்லியன். அதாவது ஆண்டுக்கு 4 கோடி வாகனங்கள். சராசரியாக இந்திய மக்கள் தொகையில் இரண்டு நபர்களுக்கு ஒரு வண்டி வீதம் நம் தலையில் கட்டி விட்டனர். இன்னும் பத்தாண்டுகளில் நம் நாட்டில் மக்கள் தொகையை விட வாகன உற்பத்தி அதிகமாக இருக்கும். உடனடியாக வாகன உற்பத்திக்கு கருத்தடை செய்வதே நாம் வாழும் உரிமைக்கு அடிப்படையான தேவை!

ஆனால், இத்தகைய உற்பத்தியே நாட்டின் வளர்ச்சி என ஆட்சியாளர்கள் தம்பட்டம் அடிக்கின்றனர். அதே நேரத்தில் வாகனங்களில் வெளியாகும் புகையால் மாசு ஏற்பட்டு விட்டது; காற்று கெட்டுப்போச்சு; மனுசங்க மூச்சு விட முடியலை என்ற குரல் அவ்வப்போது அரசாலேயே எழுப்பப் படுகிறது. டெல்லியில் காற்று மாசுபாட்டால் மக்கள் மூச்சுத்திணறி பெரும் துயரத்திற்கு ஆளாகி உள்ளனர், அம்மாநில அரசு வாகனங்களை ஒற்றைப்படை, இரட்டைப்படை என முறை வைத்து இயக்கச் சொன்ன கேலிகூத்தும் நடந்தது. உலகில் மாசு படிந்த முதல் இருபது பெரும் நகரங்களில் நாம் பத்து இடங்களை பிடித்துள்ளோம் என்பதே நாம் கண்ட வளர்ச்சியாகும். இத்தகைய வாகன சந்தையால் பயனடைந்து வருபவர்கள் யார்? பாதிப்புக்கு உள்ளாகி இருப்பவர்கள் யார்? உலகெங்கும் வாகன தொழிற்சாலைகள் இந்தியா போன்ற நாடுகளை நோக்கி படையெடுப்பது ஏன்? கார்ப்பரேட்டுகளின் லாபம். லாபவெறி மட்டுமே!

தொழில் செய்ய வரும் வாகன தொழிற்சாலைகளுக்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம், தடையில்லா தண்ணீர், மானிய விலையில் மின்சாரம், ஒப்பந்தக் கூலி அடிமைகள், வங்கிக் கடன்கள் இவை தொழிற்சாலை துவங்கும் முன் அரசு கொடுக்கும் ஊக்கத் தொகையாகும். அதன்பின் வாகன விற்பனையில் வரும் லாபம், வாகனம் ஓடும் சாலையில் டோல் வரி மூலம் லாபம், வாகன காப்பீடு என்ற பெயரில் கல்லா கட்டுகின்றனர். இதுவும் போதாதென்று இப்போது “வாகன சட்டத் திருத்தம் 2018” என்கிற பெயரில் பம்பர் பரிசு பெற உள்ளன. வாகன புதுப்பித்தல் (FC), பெயிண்டிங், பழுது நீக்கும் பட்டறைகள், உதிரி பாக விற்பனை, ஓட்டுநர் பயிற்சிப்பள்ளி, ஓட்டுனர் உரிமம் வழங்குவது உள்ளிட்ட போக்குவரத்து துறை சார்ந்த அனைத்தையும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைத்து சிறு பட்டரைகள், பயிற்சிப்பள்ளிகள் வரை சிறு முதலாளிகள், தொழிலாளர்கள் பல லட்சம் பேரை தெருவில் நிறுத்த திட்டம் தீட்டுகிறது மோடி அரசு.

திருச்சி ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கம் – கோப்புப்படம்.

இந்தக் கொடுமை போதாதென்று ஆன்லைன் கேப்ஸ் நிறுவனங்கள் ஓலா, உபேர், ஜியோ போன்றவர்களின் அட்டூழியம் வேறு! ஒருபுறம் சலுகை என மக்களை ஏய்ப்பது, மறுபுறம் ஆட்டோ கார் ஓட்டுனர்களை சவாரிக்காக நாள் முழுக்க காக்க வைப்பது, அபராதத் தொகை பிடித்தம் செய்வது என்று இந்த நிறுவனங்கள் பத்து சவாரி எடுப்பதற்குள் ஓட்டுனர்களை நாய் படாதபாடு படுத்தி வருவது பெருங்கொடுமை. இவை டாக்சி, ஆட்டோ வரிசையில் இருசக்கர வாகன சவாரியிலும் ஹோட்டல் உணவுகளை டோர் டெலிவரி செய்யும் சேவையிலும் இறங்கி விட்டன. ஆட்டோ, கார்களை தொடர்ந்து சரக்கு வாகனம், லாரி எனவிரிவுபடுத்த உள்ளன.

பெரும் முதலாளிகள் நம் ரத்தத்தை உறிஞ்சிய பிறகு நமது கார்ப்பரேட்டுகளின் அடிமை அரசு தம் பங்கிற்கு வசூல் வேட்டையை துவங்குகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் – டீசலில் கலால் வரி, சேவை வரி, வாட் வரி, கல்வி வரி, விற்பனை வரி எண்ணெய் நிறுவன லாபம், டீலர் லாபம் என 29 ரூபாய் பெட்ரோலை 85 ரூபாய் வரை உயர்த்தி நம்மை மூச்சு முட்ட வைக்கின்றன. சரி, இதோடு விட்டார்களா என்றால் அதுவும் இல்லை ஒவ்வொரு முச்சந்தியிலும், மூத்திர சந்திலும் நின்று லோக்கல் பிஸ்தாக்களான போலீசு, ஆர்டிஓ உள்ளிட்டோர் வாகனப் பரிசோதனை என்ற பெயரில் தமது கல்லாவை கட்டுவது, அவமானப்படுத்துவது, பொய் வழக்குப்போடுவது என்று கொடுமைப்படுத்துகின்றனர். நாட்டின் போக்குவரத்து மற்றும் மக்களின் சேவைத்துறையில் பெரும் பங்காற்றும் வாகன ஓட்டிகள் மற்றும் உரிமையாளர்களை நாயை விடக் கேவலமாக நடத்துவதை சகித்துக்கொண்டு வாழ்வது, பகுத்தறிவு கொண்ட மனித இனத்திற்கு இழிவானதாகும்.

ஒரு மாட்டை எத்தனை முறை தோலுரிப்பது? ஒரு நியாயம்- நீதி வேண்டாமா? கோடீஸ்வரன் பறக்குற விமானத்துக்கு தரும் முதல் தர பெட்ரோல் ரூ.65-க்கு தரப்படுகிறது. கும்பி கூழுக்கு அழும் போது கொண்டை பூ கேட்குது! என்பதைப் போல, நமக்கே எரிபொருள் இல்லாமல் சிக்கித் தவிக்கும் போது, அமெரிக்காவுக்கு லிட்டர் ரூ.34-க்கு மோடி அண்ணாச்சி ஏற்றுமதி செய்கிறார்.

இது பூனைகளுக்கான கோர்ட்; இங்கே எலிகளுக்கு நியாயம் கிடைக்காது என்பது போல, நடப்பது கார்ப்பரேட் முதலாளிகளின் ஆட்சி; இதில் உழைப்பாளி மக்களுக்கு நியாயம் கிடைக்காது என்பதையே நடக்கும் நிகழ்வுகள் நிரூபித்து வருகின்றன. இது ஆட்டோ டிரைவர்களுக்கான பிரச்சினை மட்டுமல்ல. கார், வேன், லாரிகள், பிற சரக்கு வாகனங்கள், சிறு பட்டறைகள், மெக்கானிக், ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி, பெயிண்டர் உள்ளிட்ட அனைத்து பிரிவினருக்குமான பிரச்சனை என்பதை உணர வேண்டும். இந்த பிரச்சினைகளிலிருந்து நாம் விடுபட வேண்டுமென்றால் அரசின் தவறான கொள்கைகளை முறியடிக்க வேண்டும். நம் கோரிக்கைகளை வென்றெடுக்க பணக்கார சங்கங்களை நம்பிப் பயனில்லை! அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் போன்றவை பரபரப்பாக போராட்டத்தை அறிவிப்பார்கள்; பிறகு பாதியிலேயே பின்வாங்கிவிடுவார்கள் இதுதான் இன்றைய சங்கங்களின் யோக்கியதை!

விவசாயிகளிடமிருந்து விளைநிலமும், மீனவனிடமிருந்து கடலும் பிடுங்கப்படுகின்றன. சிறு தொழில் முனைவோரிடமிருந்து தொழில்கள் பறிக்கப்படுகின்றன. தொழிலாளரிடமிருந்து தொழிற்சங்க உரிமை பறிக்கப்படுகிறது. வணிகம், மருத்துவம், கல்வி, உள்ளிட்ட அனைத்து துறைகளும் கார்ப்பரேட் வசமாகி வருகின்றன. எஞ்சியிருக்கும் மோட்டார் வாகன துறையிலும் மூக்கை நுழைத்து முழுமையாக ஆக்கிரமித்து வருகின்றனர். எதுவும் முடியாது, போராட்டத்திற்கு யாரும் வரமாட்டார்கள், எல்லாம் அவன் செயல் என விதியை நொந்து விழபோகிறோமா? அல்லது பகல் கொள்ளைக் காரர்களெல்லாம் ஓரணியில் நிற்கும் போது பாதிக்கப்பட்டோரெல்லாம் ஒன்று சேர்ந்து உரிமையைப் பெற போராடப் போகிறோமா? விரைவில் முடிவு செய்வோம். 28 அன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு அணிதிரள்வோம். வாரீர்!

  • கண்டன ஆர்ப்பாட்டம்,
  • 28.09.2018, மாலை 5.30மணி,
  • சிந்தாமணி அண்ணாசிலை, திருச்சி.

இவண்:
ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம்
பதிவு எண் : 1219 / TRI-TN/ 2000
இணைப்பு : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, தமிழ்நாடு.
தொடர்புக்கு :97916 92512

வரலாறு : ஷாஜகானை விஞ்சிய இந்து முஸ்லீம் காதலர்கள் !

ஷாஜகான் ஆட்சிக் காலத்தில், காஷ்மீரில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட இந்து முசுலீம் தம்பதிகள் மதம் மாறாமலேயே மணம் செய்துகொண்டு வாழ்ந்திருக்கின்றனர். அன்று அகிலா ஹாதியாவாக மாறவும் இல்லை. அத்தகைய திருமணங்கள் செல்லாது என்று கூற ஒரு உயர் நீதிமன்றமும் இல்லை.

ந்திய துணைக்கண்டத்தின் கணிசமான மக்கள் எப்படி இஸ்லாத்துக்கு மாறினார்கள் என்ற கேள்வியை சங்க பரிவாரத்தின் வரலாற்று ஆசிரியர்கள் யாரை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள். உடனே பளிச் என்று பதில் வரும். மத்தியகாலத்தைச் சேர்ந்த முசுலிம் மன்னர்களால் வாள் முனையில் மதம் மாற்றப்பட்டவர்கள் என்பார்கள். எளிமையான பதில். இல்லையா?

மத்திய காலத்திலோ அல்லது பாக் பிரிவினைக்கு முந்தைய காலத்திலோ புவியியல் ரீதியாக இந்தியாவின் எந்தப் பகுதியில் முசுலிம்கள் அதிகம் இருந்தார்கள் என்பதை பரிசீலித்துப் பாருங்கள். மேற்கே இன்றைய பாகிஸ்தான், கிழக்கே வங்கதேசம், வடக்கே காஷ்மீர், தெற்கே கேரளா ஆகிய பகுதிகள்தான் அவை. இப்பகுதிகள் முகலாய சாம்ராச்சியத்தின் மையப்பகுதிகள் அல்ல. விளிம்புப் பகுதிகள்.

இப்பகுதிகள் தொடர்ச்சியாக முகலாய சாம்ராச்சியத்தின் கீழ் இல்லை என்பதுடன், அவ்வாறு இருந்த காலங்களிலும், இப்பகுதிளின் மீது முகலாய அரசின் அதிகாரம் மிகவும் பலவீனமாகவே இருந்தது. கேரளத்தை பொருத்தவரை அது முகலாய அரசின் கீழ் என்றுமே இருந்ததில்லை. எனவே இந்தப்பகுதிகளில்தான் கட்டாய மதமாற்றம் நடைபெற்றதாக கூறுவது அபத்தமானது.

இன்றைய கிழக்கு பஞ்சாப், டெல்லி, உ.பி., பிகார் ஆகியவைதான் முகலாய அரசின் இதயப்பகுதிகள். இப்பகுதிகளில் மக்கட்தொகையில் 12 முதல் 15 விழுக்காடுதான் முசுலிம்கள். அதாவது முகலாய அரசு அதிகாரத்தின் மையப்பகுதியில், அதன் விளிம்புப் பகுதியைக் காட்டிலும் முசுலிம் மக்கட்தொகை குறைவாக இருக்கிறது.

1830 இல் இந்தியாவுக்கு வந்த பிஷப் ஹீபர், இந்தியாவில் ஆறில் ஒருவர் முசுலிம் என்கிறார். 1941 மக்கட்தொகை கணக்கெடுப்பு, பிரிட்டிஷ் இந்தியாவின் மக்கட்தொகையில் முசுலிம்கள் 24.7% என்று கூறுகிறது. இந்த கணக்கின்படி, இந்த இடைப்பட்ட 110 ஆண்டுகளில் அவர்களுடைய மக்கட்தொகை 50% அதிகரித்திருக்கிறது எனலாம்.

எனவே முசுலிம்களின் எண்ணிக்கைக்கு மதமாற்றம்தான் காரணம் என்று கூறுவதும், அது ஒரு சில தடவைகளில் பெரும் எண்ணிக்கையில் முகலாய அரசால் வாள்முனையில் நடத்தப்பட்டது என்பதற்கும் எவ்வித ஆதாரமும் இல்லை. இது பல நூற்றாண்டுகளில் நடந்த நீண்டதொரு நிகழ்வு. அரசு உள்ளிட்டு இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.

முகலாயர் ஆட்சி என்றாலே கோயில் இடிப்பு, மதமாற்றம் என்றுதான் சிலர் நம்புகிறார்கள். இதற்கு நேரெதிரான நிகழ்வுகளும் நடந்துள்ளன. முகலாயர் ஆட்சிக்காலத்தில் மசூதிகள் இடிக்கப்பட்டு கோயில்கள் கட்டப்பட்டிருக்கின்றன. முசுலிம்கள் இந்துக்களாகவும் மதம் மாறியிருக்கிறார்கள். இது குறித்து சங்கபரிவாரம் உவகை கொள்ளலாம்.

1540 இல் ஹுமாயூனிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றிய ஷெர்ஷா சில இந்து ஜமீன்தார்களை தண்டிக்க விரும்புகிறான். யார் அவர்கள்? அந்த ஜமீன்தார்கள் மசூதிகளை இடித்து அங்கே கோயில்களைக் கட்டியவர்கள் என்று கூறுகிறான் ஷெர்ஷா. இதே காலகட்டத்தில் குஜராத்தைச் சேர்ந்த காம்பே எனும் துறைமுக நகரில் பார்சிகளின் தூண்டுதலின் பேரில் இந்துக்கள் ஒரு மசூதிக்குத் தீ வைத்து, 80 முசுலிம்களைக் கொல்கிறார்கள். இதனை விசாரித்து உண்மைகளை அறிந்த அந்தப் பகுதியின் இந்து மன்னன், மீண்டும் மசூதியைக் கட்ட உத்தரவிடுகிறான்.

மசூதிகளை இடித்து அந்த இடத்தில் இந்துக்கள் கோயில்களைக் கட்டிக் கொள்கிறார்கள் என்று ஷேக் அகமது ஷிர்ஹிந்தி என்ற முசுலிம் மதகுரு அக்பர் காலத்தில் புகார் செய்கிறார். பஞ்சாபில் 7 மசூதிகளை சட்டவிரோதமாகவும் வன்முறையாகவும் கைப்பற்றிக் கொண்டவர்களிடமிருந்து அவற்றை ஷாஜகான் மீட்டதாக ஆவணங்கள் கூறுகின்றன.

அவுரங்கசீபின் அரசவையில் அதி உயர் அதிகாரத்தில் இருந்த ராஜபுத்திர பிரபுவான ஜோத்பூரின் ஜஸ்வந்த் சிங் , மசூதிகளை இடித்து அந்த இடத்தில் கோயில் கட்டியதை 1658 – 59 இல் அவுரங்கசீபே குறிப்பிடுகிறார். ஆனால் அதற்குப் பின் 20 ஆண்டுகள், அதாவது ஜஸ்வந்த் சிங் இறக்கும் வரை அவர் அவுரங்கசீபின் அரசவையில் பதவியில்தான் இருக்கிறார்.

அதே போல முகலாயர் ஆட்சிக்காலத்தின் முசுலிம்கள் இந்துக்களாக மதம் மாறிய நிகழ்வுகளுக்கும் ஆதாரங்கள் உள்ளன. இது பெரிய அளவில் நடந்து விடவில்லை. என்ற போதிலும் ஒருவேளை முகலாயப்பேரரசு என்பது ஒரு மதவாத அரசாக இருந்திருப்பின் இது நடந்திருக்குமா என்பதுதான் நாம் விடை காணவேண்டிய கேள்வி.

முகமது பின் அமிர் அலி பால்கி, என்ற மத்திய ஆசியப் பயணி ஜகாங்கீரின் ஆட்சிக்காலத்தில் இந்தியா வருகிறார். பனாரஸ் நகரில் இந்துப் பெண்களைக் காதலித்த 23 முசுலிம்கள், இஸ்லாத்திலிருந்து விலகி இந்துக்களாக மாறிவிட்டதைக் கண்டு அதிர்ச்சியடைகிறார்.

‘‘சிறிது நேரம் நான் அவர்களிடம் பேசிப்பார்த்தேன். ஏன் இப்படி வழி தவறிப் போனீர்கள் என்று நான் கேட்டபோது, அவர்கள் வானத்தை நோக்கி கையைக் காட்டிவிட்டு, பிறகு நெற்றியில் தமது விரல்களை வைத்துக் கொண்டார்கள். இப்படித்தான் நடக்கவேண்டும் என்பது விதி என்று அவர்கள் சொல்வதாக நான் புரிந்து கொண்டேன் என்று வருத்தத்துடன் பதிவு செய்கிறார் அலி பால்கி.

முகலாய சாம்ராச்சியம் உதிப்பதற்கு முன்னரே காஷ்மீரை ஆண்ட ஜெயின் அல் அபிதீன் என்ற மன்னன், இந்துவாக இருந்து முஸ்லிமாக மாறியவர்களை மீண்டும் இந்துக்களாக மாறுவதற்கு அனுமதித்தார். பின்னாளின் அக்பர் இதற்கென ஒரு சட்டமே இயற்றினார். ஒரு இந்து தனது விருப்பத்துக்கு விரோதமாக எந்த வயதில் மதமாற்றம் செய்யபட்டிருந்தாலும், அவர் தன்னுடைய முன்னோர்களின் மதத்திற்குத் திரும்பலாம் என்றது அக்பரின் சட்டம். 15, 16 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவரும், கவுடியா வைணவம் என்ற பிரிவைத் தோற்றுவித்தவருமான சைதன்ய மகாபிரபு, ஒரிசாவின் முகலாய கவர்னரை கர் வாப்ஸி செய்து வைணவராக்கினார்.

அதுமட்டுமல்ல, முன் எப்போதுமே இந்துவாக இருந்திராத பத்தான் முஸ்லீம்கள் பலரையும் மதம் மாற்றினார். இவர்கள் பட்டாணி வைணவர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

தபிஸ்தான் – இ – மசாஹிப் என்ற 17 ஆம் நூற்றாண்டின் பாரசீக நூல் சமூகத்தின் மேல் மட்டத்தில் பலர் இஸ்லாத்திலிருந்து இந்து மதத்திற்கு திரும்பியதைக் குறிப்பிடுகிறது. குறிப்பாக ஷாஜகானின் அரசவையில் இருந்த மிர்சா சாலி, மிர்சா ஹைதர் என்ற இரண்டு பிரபுக்கள் முதலில் இந்து மதத்திலிருந்து இஸ்லாமிற்கு மாறி, பின்னர் இஸ்லாத்திலிருந்து மீண்டும் இந்து மதத்துக்கு திரும்பியிருக்கின்றனர். இவர்கள் யாரும் எவ்வகையிலும் தண்டிக்கப்படவில்லை.

சமூகத்தின் கீழ் மட்டமும் இதற்கு விலக்கில்லை. காஷ்மீரின் பிம்பார் பகுதியில் முசுலிம் இளைஞர்கள் இந்து பெண்களை மணப்பதும், பிறகு அந்த இளைஞர்கள் இந்துவாக மதம் மாறுவதும் சகஜமாக நடப்பதை அறிந்த ஷாஜகான் அதைத் தடுக்க முயற்சிக்கிறான். ஆனால் அவனுடைய உத்தரவு எதுவும் வேலை செய்யவில்லை.
இது மட்டுமல்ல.

மதம் மாறாமல் அவரவர் மதத்தில் இருந்தபடியே இந்து – முஸ்லீம் ஆண்களும் பெண்களும் திருமணம் செய்து கொள்வதும், சுமார் 5000 தம்பதிகள் அவ்வாறு மதம் மாறாமலேயே கணவன் மனைவியாக வாழ்வதும் ஷாஜகானுக்குத் தெரியவருகிறது. மனைவி மரிக்கும் பட்சத்தில், அவள் கணவனின் மதம் எதுவோ அந்த முறைப்படி எரிக்கவோ, புதைக்கவோ பட்டிருக்கிறாள். இதை தடுப்பதற்கு ஷாஜகான் மேற்கொண்ட முயற்சிகளும் வெற்றி பெறவில்லை.

அதே போல சீக்கிய மதகுருவான, குரு ஹர்கோவிந்த் ஏராளமான பேரை இஸ்லாத்திலிருந்து மதம் மாற்றியிருக்கிறார். பஞ்சாபின் கிராத்பூர் மலைகளுக்கும் திபெத்துக்கும் இடையில் ஒரு முசுலிம் கூட மிச்சமில்லை என்று இந்த மதமாற்றத்தை மிகைப்படுத்தி விவரிக்கிறது தபிஸ்தான் என்ற பாரசீக நூல்.

ஆகவே, வரலாறு என்பதை எளிமைப்படுத்திப் புரிந்து கொள்ளக்கூடாது – எப்போதுமே.

– பேரா. ஹர்பன்ஸ் முக்யா, ஜே.என்.யு. வில் பணியாற்றும் வரலாற்றாசிரியர்.

ஜூலை, 28, 2018, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.

புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2018

மின்னூல்:
புதிய ஜனநாயகம்

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

Dr. Anand Teltumbde interview | Com. Maruthaiyan | Video

Dr. Anand Teltumbde, A renowned intellectual visited Chennai on 08-09-2018 for a Hall meet arranged by Makkal Athikaaram.

During his visit, Comrade Maruthaiyan – General Secretary of People’s Art and Literary Association (PALA) interviewed him on things happening around Bhima Koregoan uprising and the recent arrest of activists.

Here Dr.Anand Teltumbde explains,

  • Significance of Bhima Koregoan and why the Sangh Parivar afraid of it?
  • Do Bhima Koregoan have concealed Anti-Modi Message?
  • Is the recent arrest of activists, an attempt by Sangh Parivar to divert key issues?
  • Do Sanathan sanstha related with RSS? What are their activities?
  • Is the 2019 election, a Modi Vs People war? How should Left and Dalit parties face this?

Don’t miss it.

Observe and Share

– Vinavu Field Reporter

தெலுங்கானா பிரணய் : இந்தியாவை உலுக்கிய சாதிவெறிப் படுகொலை !

பிறக்கப் போகும் குழந்தை குறித்த இனிய கனவுகளுடன் பிரணய் தனது காதல் மனைவியுடன் மருத்துவமனை சென்றார். மாதாந்திர உடல்நலப் பரிசோதனையை முடித்துவிட்டு மருத்துவமனையிலிருந்து வெளிவந்த போது மனைவியின் கண்முன்னேயே வெட்டிச் சாய்க்கப்பட்டார் பிரணய்.

இச்சம்பவம் தெலுங்கானாவில் கடந்த செப்டம்பர் 14 அன்று பட்டப் பகலில் நடந்தது. மனைவியின் கண்முன்னேயே வெட்டி சாய்க்கப்படும் அளவுக்கு பிரணய் செய்த ’குற்ற’மென்ன?

சாதி மாறி திருமணம் செய்து கொண்டதுதான் அது. அம்ருத வர்ஷினி, ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஒரு பெண். அவரது கணவர் பிரணய் ஒடுக்கப்பட்ட தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். இருவரும் பால்யகால சிநேகிதர்கள். நெடுநாட்களாக காதலித்து வந்து கடந்த ஜனவரி மாதம் அம்ருதா வீட்டினரின் எதிர்ப்பையும் மீறி முறையாக திருமணம் செய்து கொண்டனர்.

பிரணய் மற்றும் அம்ருத வர்ஷினி.

இது அம்ருத வர்ஷினியின் வீட்டாருக்கு கடும் ஆத்திரத்தை ஊட்டியது. அம்ருதாவின் தந்தை மாருதி ராவ், பலமுறை உறவினர்கள் மூலம் பெண்ணிற்கு தூது விட்டு, பிரணயை விட்டு வந்து விடுமாறு வற்புறுத்தியிருக்கிறார்.

ஆனால் அம்ருதாவோ தமக்கு ஒரு குழந்தை பிறந்தால் தந்தையின் இந்த மனக் கசப்புகள் அனைத்தும் ஒழிந்துவிடும் என எண்ணியிருக்கிறார். பிரணாய் இறந்த பின்னர் பிபிசி இணையதள பத்திரிகையாளர்களிடம் பேசுகையில் “குழந்தை என்ற புது உறவு எங்கள் இருவருக்கும் இடையில் மலர்வது, என் பெற்றோரை சமாளிக்க உதவும் என்று நான் நம்பினேன்” என கூறியிருக்கிறார் அம்ருதா.

பல்வேறு வழிகளிலும் நைச்சியமாக தமது மகளை பிரணயிடமிருந்து பிரிக்க முயற்சித்தும் வெற்றி பெற முடியாத மாருதி ராவ், பிரணயைக் கொன்று விட்டால் தனது மகள் தன்னிடம் வந்து விடுவாள் என ஒரு கணக்கு போட்டார்.

அம்ருதாவின் தாயார் உட்பட அவரது உறவினர்களும் தம்பதியினர் இருக்குமிடம் மற்றும் அவர்களின் அன்றாட நடவடிக்கைகள் போன்றவற்றை அம்ருதாவிடம் நைச்சியமாகப் பேசி அதனை மாருதி ராவிற்கு தகவல் கொடுத்துக் கொண்டிருந்தனர். இது குறித்து அம்ருதா பிபிசியிடம் கூறுகையில், “பிரணய் இறந்த பிறகு என் வீட்டில் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்பே வரவில்லை. வழக்கமாக என் அம்மா என்னுடன் தொலைபேசியில் பேசுவார். அது என்னுடைய உடல்நலனை விசாரிப்பதற்காக என்று நினைத்தேன், ஆனால் சந்தர்ப்பம் பார்த்து எங்களை பிரிப்பதற்காக என்னிடமிருந்தே தகவலை கறந்தவழி அது என்பதை நான் தெரியாமல் இருந்திருக்கிறேன்” என்கிறார்.

கொல்லப்பட்ட பிணரய்.

செல்வாக்குமிக்க ரியல் எஸ்டேட் அதிபரான மாருதி ராவ், மிர்யாளகுடா நகர காங்கிரஸ் தலைவரான அப்துல் கரீமைத் தொடர்பு கொண்டு பிரணயைக் கொல்ல ஒரு கூலிப்படை கொலைகாரன் தேவை எனக் கேட்டிருக்கிறார். போலீசின் தகவலின் படி கரீம்தான், மாருதி ராவிற்கு அஸ்கர் அலி என்ற தொழில்முறைக் கொலைகாரனுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். யார் இந்த அஸ்கர் அலி?

குஜராத்தில் மோடிக்கு எதிராக குரல் கொடுத்ததால் கடந்த 2003-ம் ஆண்டு மார்ச் 26 அன்று சுட்டுக் கொல்லப்பட்ட குஜராத் அமைச்சர் ஹரேன் பாண்டியா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் அஸ்கர் அலி. இவரின் மேல் நல்கொண்டா மாவட்டத்தில் பல்வேறு வழக்குகள் உண்டு. அதன் பின்னர் சிறப்பு நீதிமன்றம் அஸ்கர் அலி உள்ளிட்டு 11 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. ஆனால் கடந்த ஆகஸ்ட் 29, 2011 அன்று உயர்நீதிமன்றம் இவரை இவ்வழக்கிலிருந்து விடுவித்தது.

போலீசு கொடுத்த தகவலின் படி, அஸ்கர் அலி, முகமது பரி என்ற தனது பால்ய நண்பனை மாருதி ராவிற்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். முகமது பரி தன்னுடன் சில ஆண்டுகளுக்கு முன்னர் சிறையில் பழக்கமான சுபாஷ் சர்மாவைத் தொடர்பு கொண்டு இந்த வேலையை அவரிடம் கொடுத்திருக்கிறார்.

இந்த கொலைக்கு ரூ.1 கோடி பேரம் பேசப்பட்டதாக போலீசு தரப்பில் கூறப்படுகிறது. மாருதி ராவ், முகமது பரியிடம் முன்பணமாக 16 இலட்ச ரூபாயை கடந்த ஆகஸ்ட் முதல் வாரத்தில் கொடுத்துள்ளார். பின்னர் கடந்த ஆகஸ்ட் முதல் வாரத்தில் சுபாஷ் சர்மா தனது முதல் கொலை முயற்சியை மேற்கொண்டிருக்கிறார். அம்ருதா பிரணயுடன் ஒரு அழகு நிலையத்திலிருந்து வெளிவரும் போது கொலை செய்யத் திட்டமிட்டிருந்திருக்கிறார். ஆனால் பிரணயின் நண்பர் ஒருவரும்  அவர்களுடன் இருந்த காரணத்தினால் யார் பிரணய் என்பதில் குழப்பம் ஏற்பட்டு கொலை முயற்சியை நிறுத்திவிட்டு சென்றிருக்கிறார் சர்மா.

கடந்த செப்டம்பர் 14 அன்று பிரணய் அம்ருதாவுடன் மருத்துவமனைக்கு செல்லவிருப்பதை தமது உறவினர்கள் மூலமாக அறிந்து கொண்ட மாருதி ராவ், தகவலை முகமது பரியிடம் தெரிவித்திருக்கிறார். இதனை சர்மாவிடம் பரி தெரிவிக்கிறார். செப்டம்பர் 14 அன்று மருத்துவமனைக்கு வெளியே பிரணயைக் கொன்று விட்டு பெங்களூரு தப்பிச் சென்று விட்டார் சுபாஷ். பின்னர் பீஹாருக்கு தப்பிச் சென்றிருக்கிறார்.

நடந்த சம்பவத்தை உடனிருந்து பார்த்த அம்ருதா, “மருத்துவமனையில் இருந்து நாங்கள் வெளியே வரும்போதும் பேசிக்கொண்டே வந்தோம். நான் ஏதோ ஒரு கேள்வி கேட்க, அதற்கு பதில் வரவில்லையே என்று பார்த்தால், பிரனாய் கீழே விழுந்து கிடந்தார், ஒருவன் அவருடைய தொண்டையை அறுத்துக் கொண்டிருந்தான்”  என்று தான் உறைந்து போன அந்த கணத்தைக் கூறுகிறார்.

”எனக்கு 21 வயதுதான் ஆகிறது, பிரணய்க்கு 24தான் ஆகிறது. எங்களது அழகிய வாழ்வு குறுகிய காலத்திலேயே கொடூரமாக சிதைக்கப்பட்டுவிட்டது.” என்று குமுறுகிறார் அம்ருதா. பிரணயின் மரணத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என ”Justice for Pranoy” (https://www.facebook.com/Amruthapranayperumalla/) ஒரு முகநூல் பக்கத்தையும் தொடங்கியுள்ளார்.

♠♠♠

பிரணாயின் கொலை நடந்து ஒரு வாரத்திற்குள்ளாகவே தெலுங்கானா மாநிலம் மற்றுமொரு சாதிவெறி ஆணவக் கொலையை சந்தித்திருக்கிறது.

கடந்த 19-09-2018 அன்று பட்டப்பகலில் ஆள்நடமாட்டம் மிக்க ஒரு கடைத்தெருவில் புதுமண ஜோடியின் மீது மற்றுமொரு கொலை வெறித்தாக்குதல் நடைபெற்றிருக்கிறது. இங்கு ஒரு சிறிய வித்தியாசம் என்னவெனில் இங்கு கூலிப்படை அமர்த்தப்படாமல் பெண்ணின் தந்தையே கையில் அரிவாள் எடுத்து தனது மகளின் கணவனை வெட்டியுள்ளார். தடுக்க முயன்ற தனது மகளையும் வெட்டியுள்ளார்.

ஹைதராபாத்தில் பொற்கொல்லர் தொழில் செய்யும் சாதிய பின்னணியைச் சேர்ந்தவர் மாதவி. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாதவியும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த சந்தீப்பும் காதலித்துள்ளனர். மாதவியின் குடும்பத்தினர் இவர்களது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.

இந்நிலையில் காதலர்கள் இருவரும் குடும்பத்தாரின் எதிர்ப்பையும் மீறி போலீசில் தஞ்சமடைந்திருக்கின்றனர். இருவீட்டாரையும் அழைத்துப் பேசியது போலீசு. பேச்சுவார்த்தையின் போதே மாதவியின் தாயார், சந்தீப்பின் குடும்பத்தினரை கடுமையாக சாதி ரீதியாக திட்டியுள்ளார்.

சந்தீப் உடன் மாதவி.

மாதவியின் தந்தை மனோகராச்சாரியால், இத்திருமணத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. திருமணத்தில் மாதவியின் குடும்பத்தார் பங்கேற்கவில்லை. சந்தீப், மாதவி திருமணம் முடிந்த பின்னர், இருவரும் சந்தீப்பின் வீட்டில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் மனோகராச்சாரி, சந்தீப் குடும்பத்தினரிடம் தொலைபேசியில் இணக்கமாகப் பேசியுள்ளார். தனது மகளிடமும் பேசிய மனோகராச்சாரி, இருவருக்கும் தாம் துணி எடுத்துத்தர விரும்புவதாகவும், அதனால் இருவரையும் நகரின் முக்கிய கடைத்தெரு பகுதிக்கு வருமாறும் கூறியிருக்கிறார்.

இதனை நம்பி இருவரும் அங்கு சென்றுள்ளனர். அதன்பிறகு அங்கு நடந்தவை அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளன.

சந்தீப்பும், மாதவியும் இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருக்கும் சூழலில் அங்கு வந்து வண்டியை நிறுத்திய மனோகராச்சாரி, தனது பையிலிருந்து அரிவாளை எடுத்துக் கொண்டே அவர்களது வாகனத்திற்கு அருகே சென்று சந்தீப்பை வெட்டத் தொடங்குகிறார். உடனடியாக பின் இருக்கையில் அமர்ந்திருந்த மாதவி தனது தந்தையை கீழே தள்ளி விடுகிறார்.

தனது கோபத்தை தனது மகளின் மீது திருப்புகிறார் மனோகராச்சாரி. மாதவியை சரமாரியாக வெட்டித் தள்ளுகிறார். உடனேயே ஒருவர் இதனைத் தடுக்க ஓடி வருகிறார். அவரை அரிவாளைக் காட்டி மிரட்டி விரட்டுகிறார் மனோகர். பின்னர் மற்றொரு இளைஞர் ஓடி வந்து மனோகரின் முதுகில் ஓங்கி உதைக்கிறார். எனினும் மீண்டும் வெட்டுகிறார் மனோகர். அந்த சி.சி.டி.வி. காணொளிக் காட்சி இவ்வாறு முடிவடைகிறது.

பெற்ற தந்தையால் வெட்டுப்பட்ட மாதவி.

வெட்டுப்பட்ட இருவரையும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர் கூடியிருந்த பொதுமக்கள். சந்தீப்புக்கும் மாதவிக்கும் விழுந்த அரிவாள் வெட்டில், அதிகமாக பாதிக்கப்பட்டது மாதவிதான். அவருக்கு தீவிர கண்காணிப்புப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

♠♠♠

பிரணாய் கொலைக்குப் பின்னர் இரண்டு நாட்களுக்கு அரசுத் தரப்பு இது குறித்து கண்டனமோ அறிக்கையோ எதுவும் அளிக்கவில்லை. இப்படுகொலை குறித்து எதிர்க்கட்சிகள் சட்டமன்றத்தில் குரல் எழுப்பிய பின்னர்தான் பாதிக்கப்பட்ட அம்ருதாவிற்கு 4 இலட்சம் நிவாரண நிதியும் அரசு வேலை வழங்குவதாக அறிவித்துள்ளது. இன்று வரையிலும் இச்சம்பவம் குறித்து தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் வாயைத் திறக்கவில்லை.

படுகாயத்துடன் சந்தீப்.

மாருதி ராவால் ஏற்பாடு செய்யப்பட்ட கூலிப்படை நிகழ்த்திய பிரணய் படுகொலையையும், மாதவி மற்றும் சந்தீப்பின் மீதான மனோகராச்சாரியின் நேரடி கொலை முயற்சியையும், அதீதப் பாசத்தால் செய்யப்பட்ட கொலைகள் என்பதாக சமூக வலைத்தளங்களில் சில பத்திரிகையாளர்கள் உள்ளிட்டு பலரும் விவாதித்து வருகின்றனர். தங்களை யோக்கியர்களாக காட்டிக்கொள்ள, ”கொலை தவறுதான், இருந்தாலும்… இங்கு ஒரு தகப்பனின் அதீத பாசம்தான் அவரது அறிவை மறைத்துவிட்டது என்று நாம் பார்க்கவேண்டும்” என்ற அடிப்படையில் பேசி வருகின்றனர்.

சாதியின் மீதும் போலி கவுரவத்தின் மீதுமான அந்தக் கிரிமினல்களின் அதீதப் பாசத்தை, பெற்ற மகளின் மீதான அதீதப் பாசமாக சித்தரிக்கின்றனர் இந்த ’யோக்கிய சிகாமணிகள்’.

பெற்ற மகளை உணர்ச்சியுள்ள ஒரு உயிராகப் பார்க்காமல் ஒரு அடிமையாகப் பார்ப்பவர்கள்தான் இத்தகைய கொலைகளைச் செய்யும் கிரிமினல்கள். பெண்ணின் உயிரும் உடலும்தான் இந்தியாவில் சாதி மற்றும் மதவெறியர்களின் இனத் தூய்மைக்கான புனிதச் சின்னமாகப் பராமரிக்கப்படுகிறது.

கொலை கார தந்தைகள் : மாருதி ராவ் மற்றும் மனோகராச்சாரி.

அந்தக் கொலைகாரக் கிரிமினல்களுக்கு இத்தகைய நெஞ்சு பதறும் கொடூரத்தை செய்யும் பலத்தை அளிப்பவர்கள்  “பாசமுள்ள தந்தை” என பட்டமளிக்கும் இந்த ’யோக்கியர்கள்’ தான். சாதிவெறியின் வன்முறை வடிவம் என்பதே மௌனமாக இருப்பதாக நம்பப்படும் சாதி செல்வாக்கு, ‘கௌரவத்தின’ அடிப்படையிலேயே உருவாகிறது.

உடுமலை சங்கர் கொலையில், தனது தந்தைக்கு வழங்கப்பட்ட மரணதண்டனை குறித்த கேள்விக்கு பதிலளித்த கவுசல்யா என்ன பதில் கூறினாரோ, அதையேதான் கொல்லப்பட்ட பிரணயின் மனைவி அம்ருதவர்ஷினி கூறியிருக்கிறார்.

“பிரணயின் கொலைக்கு சதித்திட்டம் தீட்டிய என் தந்தைக்கும் சித்தப்பாவுக்கும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தூக்குத் தண்டனை வழங்க வேண்டும்” என்கிறார் அம்ருதா.

இது வெறும் பழிவாங்கல் உணர்ச்சியிலிருந்து வந்ததல்ல என்பதை பின்வரும் வாசகங்களால் உணர்த்துகிறார் அம்ருதா.

“நாங்கள் எங்கள் குழந்தையை சாதிய அடையாளம் இல்லாமல் வளர்க்க கனவு கண்டிருந்தோம். சாதிய அடையாளமற்ற ஒரு சமூகத்திற்காக நான் பிரணாயின் சார்பாக போராடுவேன். பிரணாய் எனக்கு விட்டுச் சென்ற பரிசு என்னுள் வளர்ந்து கொண்டிருக்கிறது. என் குழந்தையையும் சாதியத்திற்கு எதிரான போராளியாக வளர்ப்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்” என்று கூறுகிறார் அம்ருத வர்ஷினி.

– வினவு செய்திப் பிரிவு

நூல் அறிமுகம் : கெளரி லங்கேஷ் – மரணத்துள் வாழ்ந்தவர்

ரு மாலை வேளையில் கெளரி லங்கேஷ் வீட்டருகே வைத்து அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.

இந்த கௌரி லங்கேஷ் யார்?

அவரால் ஆங்கிலத்திலும் கன்னடத்திலும் எழுதப்பட்டு தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட கட்டுரைகள் அவரை நமக்கு கொஞ்சம் கொஞ்சமாக அறிமுகப்படுத்திக் கொண்டே வருகின்றன.

2000 ஆம் ஆண்டுவரை ஆங்கிலம் மட்டுமே தெரிந்த பத்திரிக்கையாளராக தில்லியில் பிரபல ஊடகங்களில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றினார்.

கவிஞரும், எழுத்தாளருமான அவருடைய அப்பா ‘லங்கேஷ்’ என்ற  முற்போக்கு பத்திரிகையை தொடர்ந்து நடத்தி வந்தார்.

அவருடைய இறப்புக்கு பிறகு பத்திரிக்கையை நடத்துவதா வேண்டாமா என பரிசிலீத்த பொழுது பணிபுரியும் ஊழியர்கள் கொடுத்த உற்சாகத்தால் ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார் கெளரி லங்கேஷ்.  கன்னடம் கற்கிறார் மெல்ல மெல்ல முன்னேறி தலையங்கத்தை அவரே கன்னடத்தில் எழுதுகிறார்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கைகள் ஏழைகளின் சாவுக்கே வழிவகுத்தது. மோடியின் ஆட்சி துக்ளக் தர்பார் என சாடினார்.

பாபாபுடன் கிரி என்ற இடத்தை மீண்டும் ஒரு அயோத்தியாக மாற்ற முயன்ற காவி கும்பலை களத்தில் நின்று எதிர்த்தார்.

இன்னொரு குஜராத்தாக கர்நாடகத்தை மாற்றுவதற்கு இந்துத்துவ சக்திகள் குவிந்து வேலை செய்த பொழுது ஜனநாயக சக்திகளோடு அறிவுத் தளத்தில் மட்டுமல்ல களத்திலும் உறுதியாக நின்றார்.

“தான் ஒரு எழுத்தாளர் என்ற முறையில் உண்மையை எழுதுகிறேன் அது என்னுடைய கடமை” என்றார் அருந்ததிராய். இது கௌரி லங்கேஷ்க்கும் பொருந்தும். பத்திரிக்கையில் உண்மையை எழுதியதற்காக தொடர்ந்து பல வழக்குகளை எதிர்கொண்டார்.

கௌரி லங்கேஷ்க்கு இரண்டு தெரிவுகள் இருந்தது. ஒன்று வசதியான வாழ்க்கைப் பாதை. இன்னொன்று அநீதிக்கு எதிராக போராடும் கடினமான பாதை.  இரண்டாவதை துணிந்து தேர்ந்தெடுத்தார்.

அவர் செயல்பாடுகளைக் கவனிக்கிற பொழுது இந்துத்துவ பயங்கரவாத எதிர்ப்புப் போரில் ஒரு தளபதியாக நின்று போராடி இருக்கிறார்.

இந்துத்துவ பயங்கரவாத கும்பல் மிரட்டிப் பார்த்தார்கள். கௌரி லங்கேஷ் பணியவில்லை. இந்து சனாதனத்தை கருத்து தளத்தில் நிறுவ முடியாத கோழைகள், தங்களது ஸ்லீப்பர் செல்களை வைத்து சுட்டுக் கொன்றுவிட்டார்கள்.

“கௌரி மௌனமாகி விட்டாள்!
ஹா! ஹா!! என்ன வேடிக்கை!! சூரியகாந்தி விதைகளை போல்
அவள் திடீரென்று வெடித்துச் சிதறி அனைத்து இடங்களிலும் பரவினாள்.
இந்தியாவிலும்,
கடல்களையும்  தாண்டியும்…
தற்போது மௌனம் கோஷிக்கிறது… எதிரொலிக்கிறது….
“நாங்கள் எல்லோரும் கெளரி”
  – கெளரியின் சகோதரி எழுதிய கவிதையிலிருந்து…

புத்தகம் வாசியுங்கள். கௌரி நம்மிடமும் அழுத்தமாக ஒட்டிக் கொள்வார்.

நம்மில் பலரும் வேடிக்கைப்  பார்ப்பதால் தான் கல்புர்கி, பன்சாரே, கெளரி என பலரும் கொல்லப்படுகிறார்கள். இதை அழுத்தமாய் நினைவில் வைப்போம்.

  • அமிர்தா

நூல்: கௌரி லங்கேஷ்: மரணத்துள் வாழ்ந்தவர்
தொகுப்பு:  சந்தன் கௌடா
தமிழில்: பொன். தனசேகரன்

வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்,
669, கே. பி. சாலை, நாகர்கோவில் 629 001.
பேச: 91-4652-278525
மின்னஞ்சல்: nagercoil@kalachuvadu.com

பக்கங்கள்: 255
விலை: ரூ.150.00

இணையத்தில் வாங்க: பனுவல் | CommonFolks | நம்ம புக்ஸ்

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு:
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி: 99623 90277

கார்ல் மார்க்ஸை மார்க்சியவாதியாக்கிய நகரம் பாரீஸ்

மார்க்ஸ் பிறந்தார் – 18
(கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)

8. முழுமையான மனிதாபிமானமே கம்யூனிசம்

ரகத்தின் வாயிலில் பின்வருமாறு எழுதப்பட்டிருப்பதைப் போல, விஞ்ஞானத்தின் வாயிலிலும் இந்தக் கோரிக்கை வற்புறுத்தப்பட வேண்டும்: “இங்கே அவநம்பிக்கைகளை அகற்றிவிடுங்கள்; எல்லாவிதமான கோழைத்தனத்தையும் ஒழித்துவிடுங்கள்.” கார்ல் மார்க்ஸ்(1)

1840 -களில் பாரிஸ் நகரம் ஐரோப்பாவின் அரசியல் மற்றும் கலாச்சார மையமாக இருந்தது. போலந்து, இத்தாலி, ருஷ்யா, ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்த புரட்சிக்காரர்களும் அரசியல் அகதிகளும் அங்கே திரண்டிருந்தார்கள். ஜெர்மனியைப் போலன்றி அங்கே ஒவ்வொன்றும் புரட்சியை – சமீப காலத்திய மாபெரும் சம்பவங்கள், புதிய சமூக யுத்தங்களை எதிர்நோக்குதல் ஆகிய இரண்டையுமே-முனைப்புடன் நினைவுறுத்தியது.

பாரீஸ் நகரம் (மாதிரிப் படம்)

அக்காலத்திய பாரிஸ் நகரத்தைப் பற்றி இளம் எங்கெல்ஸ் பின்வருமாறு எழுதினார்: “பிரான்சில் மட்டுமே பாரிஸ் உண்டு – அது ஐரோப்பிய நாகரிகத்தின் மிகச் சிறந்த பரிணாமம், அங்கே ஐரோப்பிய வரலாற்றின் அனைத்து நரம்புகளும் ஒன்று சேர்கின்றன, அங்கே உலகம் முழுவதையும் நடுங்கச் செய்யக் கூடிய மின்சார அதிர்ச்சிகள் குறிப்பிட்ட இடைக்காலங்களில் வெளிவருகின்றன; வேறு மக்களைக் காட்டிலும் அந்த நகரத்தின் மக்கள் ஆனந்தமாக வாழ்கின்ற ஈடுபாட்டையும் வரலாற்று நடவடிக்கைக்குரிய உந்துதலையும் ஒருசேரப் பெற்றிருக்கிறார்கள், ஏதன்ஸ் நகரத்தின் மிகவும் பண்பட்ட சிற்றின்பப் பிரியரைப் போல எப்படி வாழ்வதென்றும் அதிகமான வீரமுடைய ஸ்பார்ட்டனைப் போல எப்படி மரணமடைவதென்றும் அவர்களுக்குத் தெரியும்.”(2)

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற உயர்ந்த இலட்சியங்களுக்குப் பதிலாக பணவேட்டையை இலட்சியமாக்கிவிட்ட முதலாளித்துவ அமைப்பின் மீது தீவிரமான அதிருப்தி பாரிசைப் போல வேறு எங்கும் இருக்கவில்லை.

முதலாளித்துவத்தை அகற்றப் போகின்ற சமூகத்தைத் தத்துவ ரீதியில் முன்னூகிக்கின்ற சமூகச் சிந்தனை பாரிசில் தோன்றியதும் தற்செயலானதல்ல. சான்-சிமோனுக்கும் ஃபூரியேயுக்கும் பிறகு கற்பனைச் சமூகங்களை வர்ணித்த காபே, டெஸமீ, பிளான்கி, புரூதோன், லெரூ ஆகியோர் முற்போக்கு அறிவுப் பகுதியினரிடமும் தொழிலாளர்கள் வட்டாரங்களிலும் சங்கங்களிலும் மாபெரும் செல்வாக்குப் பெற்றிருந்தார்கள். பிரான்சின் பாட்டாளி வர்க்கம் முதலாளி வர்க்கத்தை எதிர்த்து நிற்கக் கூடிய மாபெரும் சமூக சக்தியாக உருவாகிவிட்டது.

எதிர்கால வரலாற்று வளர்ச்சியைப் பற்றிப் பாரிசில் தோன்றிய காட்சித் தொடர் ஜெர்மனியுடன் சிறிதும் ஒப்பிட முடியாத அளவுக்குப் பரந்தகன்றும் நெடுநோக்குடையதாகவும் இருந்தது. எனவே மார்க்ஸ் பாரிசில்தான் மார்க்சியவாதி ஆனார் என்பதும் விஞ்ஞானக் கம்யூனிசத்தின் தீர்மானமான கருத்துக்கள் அங்கே தான் வகுத்துரைக்கப்பட்டன என்பதும் இயற்கையே.

புரட்சிகரமான தத்துவத்தைப் படைப்பதற்கு, உண்மையான போர் முழக்கத்தைக் கண்டுபிடிப்பதற்கு கடந்த காலத்தில் நடைபெற்ற வர்க்கப் போராட்டங்களின் அனுபவத்தைப் பொதுமைப்படுத்துவது அவசியம். மார்க்ஸ் ஜெர்மனியில், கிரைத்ஸ்னாக்கில் இந்த அனுபவத்தை ஆராய்வதற்குத் தொடங்கியிருந்தார்; ஆனால் இந்தக் கடமையை நிறைவேற்றுவதற்கு மிகச்சிறந்த நிலைமைகளை அவர் பாரிசில் கண்டார். அவர் முதலாளி வர்க்க வரலாற்றாசிரியர்களான தியெர்ரி, மின்யே, கிஸோ, தியேர், மற்றும் இதரர்களுடைய நூல்களைப் படித்தார். பிற்காலத்தில் மார்க்ஸ் எழுதியதைப் போல அவர்கள் தற்காலத்திய சமூகத்தில் வர்க்கங்களும் வர்க்கப் போராட்டமும் இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். அவர் மாண்டெஸ்கியே, மக்கியவேலி, ரூஸோ ஆகியோருடைய சமூகத் தத்துவங்களையும் படித்தார்.

மக்கியவேலி

எல்லா வரலாறுமே வர்க்கங்களின் போராட்டத்தின் வரலாறு என்றால் பின்வரும் கேள்விகள் தர்க்க ரீதியான முறையில் தோன்றுகின்றன: தற்காலத்திய நிலைமைகளில் புரட்சிகரமான சக்தியைக் கொண்டிருக்கின்ற வர்க்கம் எது? எதிர்காலம் எந்த வர்க்கத்துக்குச் சொந்தம்? அந்த எதிர்காலம் எவ்விதமாக இருக்கும்?

பிரெஞ்சுப் பொருள்முதல்வாதத்திலிருந்து நேரடியாகத் தோன்றிய பிரெஞ்சுக் கற்பனாவாத சோஷலிசம் மற்றும் கம்யூனிசத்தை விமர்சன ரீதியில் ஆராய்வதை நோக்கி மார்க்ஸ் மறுபடியும் திரும்பினார். முதலாளித்துவச் சமூகம் மனிதாபிமானக் கோட்பாடுகளுடன் பொருந்தவில்லை என்ற அடிப்படையான விமர்சனத்தை சான்-சிமோனும் ஃபூரியேயும் ஏற்கெனவே செய்திருந்தனர். அவர்கள் பாட்டாளி வர்க்கத்தைப் பற்றி எழுதினார்கள் என்ற போதிலும் அதை ஒடுக்கப்பட்டு, நலிந்து வாடுகின்ற பகுதியாக, ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருப்பவர்கள் இரக்கம் காட்டி உதவியளிக்க வேண்டிய பகுதியாகவே கண்டார்கள்.

ஹெகல் உலகம் முழுவதையும் தனிமுதலான ஆன்மாவின் வெளியீடு என்று கருதியதைப் போல கற்பனாவாதிகள் சோஷலிசம் மனித உறவுகளைப் பற்றிய தனிமுதலான உண்மையின் வெளியீடு என்று கருதினார்கள். ஹெகலின் தவறான தொடக்க நிலை தனிமுதலான ஆன்மா தன்னைப் புரிந்து கொள்கின்ற வறட்டுக் கோட்பாட்டுத்தனமான அமைப்பை ஏற்படுத்துவதற்கு இட்டுச் சென்றது; அது போல கற்பனாவாதிகளுக்கு – அவர்களில் மிகச் சிறந்தவர்களுக்கும் கூட (குறிப்பாக ஃபூரியேயுக்கு) – எல்லாமே சமூக வளர்ச்சிக்கு இலட்சிய ரீதியான திட்டங்களைத் தயாரிப்பதாக மட்டுமே இருந்தது, இத்திட்டங்களைப் புரிந்துகொண்டால் எல்லா முரண்பாடுகளும் தீர்ந்துவிடும்.

ஹெகலை முறியடிப்பதும் சமூகக் கற்பனாவாதத்தை வெல்வதும் இரண்டு இணைகரமான கடமைகளாக இருக்கவில்லை. அவை ஒரே கடமையே. மனித சமூகத்தின் வளர்ச்சியை நிர்ணயிக்கின்ற முக்கியமான காரணியைக் கண்டுபிடித்துவிட்டால் அக்கடமையை நிறைவேற்ற முடியும்.

எதார்த்தம் தன்னைத் தகவமைத்துக் கொள்ள வேண்டிய “முன்னரே தயாரிக்கப்பட்ட அமைப்பு”, “வறட்டுக் கோட்பாட்டுவாத சூக்குமமான கருத்தமைப்புகள்” ஆகியவற்றைத் தயாரிப்பது ஹெகலின் போதனையிலோ அல்லது கற்பனாவாத சோஷலிசத்திலோ ஒருபோதும் மார்க்சை ஈர்க்கவில்லை. மனிதகுலச் சிந்தனையின் மிகச் சிறந்த சாதனைகளான இவை இரண்டுமே உலகத்தை மாற்றத் தகுதியான கருவியாக இருக்கவில்லை.

ஆனால் இரண்டு போதனைகளுமே தம் எதிர்மறையையும் தமக்குள் கொண்டிருந்தன. ஹெகலிடம் சிந்தனையின் இயக்கவியல் முறை இந்த எதிர்மறையாகும். முதலாளித்துவ உடைமை உறவுகள், மனிதனை முடமாக்குகின்ற மனிதனுடைய சாராம்சத்துக்குப் பொருந்தியிராத உறவுகள் என்ற விமர்சனம் சமூகக் கற்பனாவாதிகளிடம் உள்ள எதிர்மறையாகும்.

முதலாளித்துவ பொருளியல் அறிஞர் ஆடம் ஸ்மித்

இந்த உறவுகளின் தன்மையைச் சட்ட ரீதியில் மட்டுமின்றி பொருளாதாரக் கோணத்திலும் தெளிவாகப் புரிந்து கொள்வதற்காக மார்க்ஸ் முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தை ஆழமாக ஆராய்ந்தார். ஆடம் ஸ்மித், ரிக்கார்டோ, மாக்கூலோஹ், ஜேம்ஸ் மில், ழான் படீஸ்ட் ஸேய், ஸ்கார்பெக், டெஸ்டூட் டெ டிரஸி, புவாகில்பேர் ஆகியோர் எழுதிய நூல்களை ஆராய்ச்சி செய்தார். இளைஞரான பிரெடெரிக் எங்கெல்ஸ் அரசியல் பொருளாதார விமர்சனத்தின் உருவரைகள் என்ற கட்டுரையை Deutsch-Französische Jahrbücher -இல் எழுதியிருந்தார். மார்க்ஸ் அதை மேதாவிலாசம் நிறைந்ததென்று கூறினார். அவர் அரசியல் பொருளாதாரத்தை ஆராய்வதற்கு இக்கட்டுரையும் தூண்டுதலாக இருந்திருக்க வேண்டும்.

மார்க்ஸ் பாரிசில் வசித்த பொழுது அரசியல் எதிர்த்தரப்பின் தலைவர்கள், புரட்சிகர ஜனநாயகவாதிகளும் சோஷலிஸ்டுகளுமான லுயீ பிளாங், பியேர் லெரூ, ஹென்ரிஹ் ஹேய்னெ, ஜொஸேப் புரூதோன் மற்றும் மிஹயீல் பக்கூனின் ஆகியோருடன் நட்புக் கொண்டு பழகினார்.

தத்துவ ரீதியான விமர்சனத்தை வர்க்கங்களின் உண்மையான போராட்டத்துடன் இணைக்க வேண்டும் என்று மார்க்ஸ் விரும்பினார். ஆகவே அவர் ஜெர்மானியக் கைவினைஞர்கள், பிரெஞ்சுத் தொழிலாளர்களுடைய புரட்சிகர வட்டாரங்களில் நெருங்கிப் பழகினார். பாரிஸ் கதவுகளில் ஒன்றின் அருகில், வின்சென் கோட்டைக்குப் பக்கத்தில் நடைபெற்ற புரட்சிகரத் தொழிலாளர்களின் கூட்டங்களில் மார்க்ஸ் கலந்து கொண்டதாகப் போலீஸ் இலாகா அறிக்கைகளில் எழுதப்பட்டிருக்கிறது.

தொழிலாளர்களுடன் மார்க்ஸ் (மாதிரிப் படம்)

எதற்காகப் போராட வேண்டும், எப்படிப் போராட வேண்டும் என்று அறிந்திருக்கின்ற உண்மையான அரசியல் போராட்டக்காரனின் உறுதியும் தெளிவும் மார்க்சிடம் இருப்பதைக் கண்ட புரட்சிகரத் தொழிலாளர்கள் அவர் மீது அதிகமான பற்றுதலைக் கொண்டார்கள். ஜெர்மானியத் தொழிலாளர்களின் அரசியல் சங்கத்தின் தலைவர்களில் ஒருவரான ஹேர்மன் ஏவெர்பேக் பின்வருமாறு எழுதினார். “கார்ல் மார்க்ஸ்… கோ. எஃப். லேஸ்ஸிங்கைப் போல குறிப்பிடத்தக்க மேதை என்பதில் சந்தேகமில்லை. அசாதாரணமான அறிவும் இரும்பு மனமும் கலங்காத மதிநுட்பமும் பரந்த ஞானமும் கொண்டிருக்கின்ற கார்ல் மார்க்ஸ் பொருளாதார, அரசியல், சட்டவியல் மற்றும் சமூகப் பிரச்சினைகளை ஆராய்வதற்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்.”(3)

மார்க்ஸ் தொழிலாளர்களுடைய வாழ்க்கையை நேரடியாகத் தெரிந்து கொண்டார்; புரட்சிகரத் தொழிலாளர்களின் தார்மிக சக்தி, அறிவு வேட்கை மற்றும் மானுடச் சிறப்பை அவர் மென்மேலும் அதிகமாகப் போற்றலானார். அவர் 1844 ஆகஸ்ட் 11ந் தேதியன்று லுட்விக் ஃபாயர்பாஹுக்குப் பின்வருமாறு எழுதினார்: “பிரெஞ்சுத் தொழிலாளர்களிடம் உள்ள பரிசுத்தமான புதுமையை, உழைப்பினால் உருக்குலைந்து போன இந்த மனிதர்களிடமிருந்து பீறிட்டுக் கிளம்புகின்ற மேன்மையை நீங்கள் அறிந்து கொள்வதற்கு அவர்களுடைய கூட்டங்களில் ஒன்றில் கலந்து கொள்ள வேண்டும். ஆங்கிலப் பாட்டாளி கூட மாபெரும் காலடிகளை முன்னால் எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார், ஆனால் பிரெஞ்சுத் தொழிலாளர்களுடைய கலாச்சாரப் பின்னணி அவரிடம் இல்லை. ஆனால் ஸ்விட்சர்லாந்து, லண்டன் மற்றும் பாரிசில் இருக்கின்ற ஜெர்மானியக் கைவினைஞர்களின் தத்துவ ரீதியான தகுதிகளை வலியுறுத்துவதற்கு நான் மறந்துவிடக் கூடாது. எனினும் ஜெர்மானியக் கைவினைஞர் இன்னும் அதிகமான அளவுக்குக் கைவினைஞராகத்தான் இருக்கிறார்.

“என்ன இருந்தாலும், வரலாறு நம்முடைய நாகரிகமடைந்த சமூகத்தின் இப்படிப்பட்ட “காட்டுமிராண்டிகளிடமிருந்து தான் மனித குலத்தை விடுதலை செய்யப் போகின்ற செய்முறைக் கூறைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது.”(4)

கற்பனாவாதிகள் பாட்டாளி வர்க்கத்தைத் தங்களுடைய உணர்ச்சிகரமான கொந்தளிப்புக்களுக்கு இலக்காகக் கருதினார்கள்; ஆனால் மார்க்ஸ் அதைப் புரட்சிகரமான நடவடிக்கைக்கு உரிய சக்தியாகக் கருதினார்.

தத்துவத்தையும் நடைமுறையையும், தத்துவஞானத்தையும் உலகத்தையும் இணைக்கின்ற சங்கிலி பாட்டாளி வர்க்கம்! மார்க்ஸ் சட்டம் பற்றிய ஹெகலியத் தத்துவஞானத்துக்கு விமர்சனம் முகவுரை என்ற கட்டுரையில் இக்கண்டுபிடிப்பை வெளியிட்டார். அக்கட்டுரை உருவத்திலும் உள்ளடக்கத்திலும் விஞ்ஞானக் கட்டுரைக்கு மிகச் சிறந்த உதாரணம் என்று கூறலாம். இக்கட்டுரையும் சிந்தனைப் போக்கில் இதை மிகவும் ஒட்டி வருகின்ற யூதப் பிரச்சினையைப் பற்றி என்ற கட்டுரையும் 1844ம் வருடத்தின் தொடக்கத்தில் Deutsch-Französische Jahrbicher என்ற சஞ்சிகையில் வெளியிடப்பட்டிருந்தன.

“ஒவ்வொரு ரகத்தையும் சேர்ந்த அடிமைத்தனத்தை நொறுக்காமல்” உண்மையான மனிதகுல விடுதலை என்பது சாத்தியமில்லை; மிக அதிகமாகப் பறிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட வர்க்கமாக இருப்பது பாட்டாளி வர்க்கமே என்று மார்க்ஸ் இக்கட்டுரைகளில் எழுதினார். சமூகத்தின் எல்லாத் துறைகளையும் விடுதலை செய்யாமல் பாட்டாளி வர்க்கம் தன்னை விடுதலை செய்து கொள்ள முடியாது.

மனிதகுல விடுதலையின் தலை தத்துவஞானம், அதன் இதயம் பாட்டாளி வர்க்கம்.(5)

மார்க்ஸ் முன்னோக்கி வைக்கின்ற முக்கியமான காலடியை இக்கட்டுரைகளில் பார்க்கிறோம். அவர் உண்மையான போர் முழக்கத்தையும் அதை நிறைவேற்றக் கூடிய தகுதியைக் கொண்ட, மனிதகுலத்தின் மனிதாபிமான இலட்சியங்களைச் சாதிக்கக் கூடிய தகுதியைக் கொண்ட “பொருளாயதச்” சக்தியையும் கண்டுவிட்டார். மார்க்சின் இந்தக் காலடி கருத்துமுதல்வாதத்திலிருந்து பொருள்முதல்வாதத்துக்கு, புரட்சிகரமான ஜனநாயகத்திலிருந்து கம்யூனிசத்துக்கு அவருடைய இறுதியான மாற்றம் என்று லெனின் வர்ணித்தார்.(6)

இருபத்தாறு வயதில் மார்க்ஸ் உலகத்தைப் பற்றிப் புதிய கண்ணோட்டத்தின் சிகரங்களை அடைந்துவிட்டார். ஒப்புவமையில்லாத தத்துவச் சிந்தனைக்குப் பிறகே இது சாத்தியமாயிற்று. தத்துவஞானம், சமூகச் சிந்தனை ஆகிய துறைகளில் ஐரோப்பியக் கலாச்சாரத்தின் மொத்தப் பாரம்பரியத்தையும் அவர் தன்வயப்படுத்திக் கொண்டு விமர்சன ரீதியில் திருத்தியமைத்தார்.

ஃபாலெஸ் முதல் ஃபாயர்பாஹ் மற்றும் மோஸஸ் ஹேஸ் முடிய ஒரு சுதந்திரமான தத்துவஞானியைக் கூட- அவர் எவ்வளவு சாதாரணமானவராக இருந்தாலும்-மார்க்ஸ் ஒதுக்கவில்லை. ஹெரடோடஸ் மற்றும் ப்ளுடார்க் முதல் கிஸோ மற்றும் தியேர் முடிய எல்லா வரலாற்றாசிரியர்களும் எழுதிய அடிப்படையான நூல்கள் அனைத்தையும் அவர் படித்தார். பிளாட்டோ முதல் லெரூ மற்றும் வைத்லிங் முடிய எல்லா சமூகக் கற்பனாவாதிகள் எழுதிய புத்தகங்களையும் படித்தார்.

ஆடம் ஸ்மித் முதல் பிரெடெரிக் எங்கெல்ஸ் முடிய முக்கியமான அரசியல் பொருளாதார நூல்கள் எல்லாவற்றையும் அவர் ஆராய்ந்தார். இறுதியாக மார்க்ஸ் இலக்கியச் செல்வத்தின் எல்லாத் துறைகளையும்-லுக்ரெத்சியஸ் காருசின் கவிதையிலிருந்து ஹென்ரிஹ் ஹேய்னெயின் கவிதை முடிய, எஷ்கிலசின் சோக நாடகங்களிலிருந்து ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் முடிய, பிளாட்டோவின் உரையாடல்களிலிருந்து பல்ஸாக்கின் வசனம் முடிய-ஆழ்ந்து படித்தார்.

ஆனால் இவ்வளவு அறிவுத் திரட்டு கூட ஒரு புதிய உலகக் கண்ணோட்டத்தை விரித்துரைப்பதற்குத் தன்னளவில் போதுமானதல்ல என்று தோன்றும். எல்லாக் காலங்களிலும் ஏட்டுப் புலமையாளர்கள் இருந்திருக்கிறார்கள். இவர்கள் உலகத்திலுள்ள எல்லா அறிவுத் திரட்டையும் அறிந்தவர்கள், ஆனால் சுயமாக ஒரு கருத்தைக் கூடச் சிந்திப்பதற்குத் தகுதியற்றவர்கள். மார்க்ஸ் மனிதகுல மேதாவிலாசத்தின் மாபெரும் சாதனைகளைத் தன்வயப்படுத்திக் கொண்டது மட்டுமல்லாமல், அவற்றை உண்மைக்கு அஞ்சாத படைப்புச் சிந்தனையின் கருவியாக, முறையாகச் செய்தார். அவர் உண்மையை ஓய்வில்லாமல் தேடினார்.

எல்லாவற்றிலும் முக்கியமானது என்னவென்றால் முதலில் மார்க்ஸ் ஜெர்மனியின் ஒடுக்கப்பட்ட விவசாயப் பெருந்திரளினரது கருத்தையும் பின்னர் எல்லாக் காலங்களிலும் புரட்சிகர வர்க்கங்களில் அதிகப் புரட்சிகரமான, சக்திமிக்க வர்க்கமாகிய பாட்டாளி வர்க்கத்தின் கருத்தையும் உணர்வு பூர்வமாக ஏற்றுக் கொண்டதே.

விஞ்ஞான சோஷலிசம் (அல்லது விஞ்ஞான கம்யூனிசம் – இரண்டும் ஒன்றுதான்) மனித குலத்தின் ஆன்மிகச் சாதனைகளின் பொதுமைப்படுத்தல் மற்றும் செய்முறை விளக்கம் என்பது மட்டுமின்றி, முதலாளித்துவச் சமூகத்திலுள்ள குறிப்பிட்ட பொருளாதார மற்றும் சமூக-அரசியல் போக்குகளின் வெளியீடாகவும் (கடைசியாக இக்காரணி தீர்மானமாக இருந்தது) தோன்றியது.

இந்த உண்மையை மனதில் கொண்டுதான் எங்கெல்ஸ் பின்வருமாறு எழுதினார்: “புதுமையான எல்லாத் தத்துவங்களையும் போலவே நவீன சோஷலிசத்தின் மூலவேர்கள் பொருளாயத உண்மைகளில் எவ்வளவு ஆழமாக வேரூன்றியிருந்தாலும் அது கைக்கு எட்டிய அறிவுத்துறையின் கையிருப்புச் சரக்குகளுடன் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டியிருந்தது.”

குறிப்புகள்:

(1)கார்ல் மார்க்ஸ், அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு கருத்துரை, முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, I982, பக்கம் 14.
(2) Marx, Engels, Collected Works, Vol. 7, Moscow, 1977, p. 512.
(3) Auguste Cornu, Karl Marx und Friedrich Engels. Leben und Werk, Bd. 2, S. 18.
(4) Marx, Engels, Collected Works, Vol. 3, p. 355.
(5) Ibid., p. 187.
(6) V. I. Lenin, Collected Works, Vol. 21, p. 80.

– தொடரும்

நூல் : மார்க்ஸ் பிறந்தார்
நூல் ஆசிரியர் : ஹென்ரி வோல்கவ்
தமிழில் : நா. தர்மராஜன், எம். ஏ.
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், 1986 -ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது.

நூல் கிடைக்குமிடம் :

கீழைக்காற்று,
(கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
கடையின் புதிய முகவரி கீழே)
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம், 
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, 
நெற்குன்றம், சென்னை – 600 107.
(வெங்காய மண்டி பேருந்து நிறுத்தம் அருகில்)
பேச – (தற்காலிகமாக) : 99623 90277

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்,
சென்னை.

முந்தைய பாகங்கள்:

  1. மார்க்சின் வாழ்க்கை வழி மார்க்சியம் கற்போம் !
  2. அற்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பிறந்தார் புரட்சியாளர் மார்க்ஸ்
  3. ஜெர்மனியின் ரைன் பிரதேசத்தில் மார்க்ஸ் தோன்றியது தற்செயலானதா ?
  4. பள்ளியில் சுமாரான மாணவராக இருந்தார் கார்ல் மார்க்ஸ் – ஏன் ?
  5. எல்லாவற்றையும் சந்தேகப்படு என்பது மார்க்சுக்குப் பிடித்தமான மூதுரை
  6. சுயவிமர்சனத்தில் இரக்கமற்றவர் கார்ல் மார்க்ஸ்
  7. மார்க்சும் ஏங்கெல்சும் முதலில் எழுதியவை கவிதை நூல்கள் – ஏன் ?
  8. கடவுள் மீது போர் தொடுத்த கார்ல் மார்க்ஸ் !
  9. மதத்தின் மூல வேர்கள் பூமியில் இருக்கின்றன – கார்ல் மார்க்ஸ்
  10. பண்படுத்துவது கலை – பாதை காட்டுவது தத்துவஞானம்
  11. தத்துவஞானத்தை புரிந்து கொள்ள பக்தர்களால் முடியாது !
  12. ஒரு மெய்யான தத்துவஞானியை சந்திக்கத் தயாரா ?
  13. கார்ல் மார்க்ஸ் : ஆய்வின் முடிவுக்கும் அஞ்சாதே ! ஆள்வோரின் ஆட்சிக்கும் அஞ்சாதே !
  14. கார்ல் மார்க்ஸ் : ஊடகங்களின் ஆன்மீகத் தணிக்கையை கட்டுப்படுத்தும் பொருளாதாரத் தணிக்கை !
  15. சுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை – மார்க்ஸ்
  16. எல்லாத் தத்துவஞானத்துக்கும் அப்பால் சுதந்திரமாக இருக்கிறது இயற்கை !
  17. துன்பம் பற்றிய உங்கள் கருத்து என்ன ? கீழ்ப்படிதல் என்கிறார் கார்ல் மார்க்ஸ் !