Wednesday, June 18, 2025
முகப்பு பதிவு பக்கம் 782

மாடர்ன் ஆர்ட்: சி.ஐ.ஏ ஊட்டி வளர்த்த கலை!

மாடர்ன் ஆர்ட்: சி.ஐ.ஏ ஊட்டி வளர்த்த கலை!
ஜாக்சன் போலாக்கின் புகழ் பெற்ற சித்திரம் எண் 8

இது சில வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம். நண்பர் ஒருவருடன் பெருநகரம் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓவியக் கண்காட்சி ஒன்றிற்கு செல்ல நேர்ந்தது. நகரின் மையப்பகுதியில் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட அரங்கு அது. அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தவை மாடர்ன் ஆர்ட் வகைப்பட்ட ஓவியங்கள்.

அரையிருளில் இருந்த அரங்கத்தினுள் நல்ல இடைவெளியில் அழகான சட்டகங்களுக்குள் தனித்தனியாய் ஸ்பாட் லைட்டுகள் வைக்கப்பட்டு ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. ஒவ்வொன்றின் முன்பும் பணக்கார வாசம் வீசும் சிலர் எதையோ தேடுவது போன்ற பாவனையில் முகத்தை வைத்துக் கொண்டு ஓவியங்களை முறைத்துப் பார்த்தவாறே நின்றனர். குறிப்பிட்ட ஒரு ஓவியத்தின் முன் நின்ற சின்னக் கும்பலோடு நானும்  நண்பரும் இணைந்து கொண்டோம்.

அது ஒரு வண்ணக் குழப்பம். சரியாகச் சொல்வதானால், யாரோ ஒரு மார்வாடி  பான்பராக்கை மென்று வெள்ளைத் துணியில் காறித் துப்பியது போல் இருந்தது. நீண்ட நேரம் உற்று உற்றுப் பார்த்த பின்னரும் மார்வாடியின் முகத்தை என் மனத்திரையிலிருந்து அகற்ற முடியவில்லை. அரங்கத்திலோ குண்டூசியைப் போட்டாலும் குண்டு போட்டதைப் போன்ற சப்தம் எழுமளவுக்கு நிசப்தம்.  நான் மெல்ல எச்சிலைக் கூட்டி விழுங்கியபடியே, பக்கத்தில் நின்றவரிடம் “இது எதைப் பற்றிய ஓவியம்?” என்று கேட்டேன்.

மேலிருந்து கீழ் வரை என்னை ஒரு பார்வை பார்த்தவர், முகத்தைச் சுளித்துக் கொண்டே வெடுக்கென்று வேறு பக்கம் திரும்பிக் கொண்டார். அது கேட்கக் கூடாத கேள்வி என்று அப்போது எனக்குப் புரியவில்லை. கேட்கக்கூடாதவரிடம் கேட்டுவிட்டோம் என்று எண்ணிக்கொண்டு, அந்தக் கண்காட்சியின் பொறுப்பாளரைத் தேடிக் கண்டுபிடித்து, அவரிடமும் அதே கேள்வியைக் கேட்டேன்.

அவரோ ஒரு நீண்ட மௌனத்திற்குப் பிறகு, “தனது அர்த்தத்தைத் தானே தீர்மானிக்காமல் பார்க்கும் கண்களே தீர்மானித்துக் கொள்ளும் உரிமையை இந்த ஓவியங்கள் வழங்குகின்றன. ஒரு ஓவியம் எவ்வாறு தன்னை ஒழுங்கமைத்துக் கொள்வது என்பதைத் தீர்மானிக்கும் உரிமை அந்த ஓவியத்துக்கே உரியது. தனக்கான மொழியை அது தானே தீர்மானித்துக் கொள்ளும்” என்றார். “அதே நேரம் ஓவியத்தைப் பார்க்கிறவரின் உரிமையிலும் அது தலையிடாது. பார்வையாளரின் உள்மன ஒளியில் இந்த ஓவியம் ஏற்படுத்தும் பிம்பங்கள் உண்டாக்கும் அர்த்தங்ளை அவரவர் விருப்பத்திற்கு விளங்கிக் கொள்ளலாம் என்றும் இவை ஒரு பயன்பாட்டையோ அர்த்தத்தையோ முன்வைத்து வரையப்பட்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதெல்லாம் ஓவியரின் மேல் திணிக்கும் சர்வாதிகாரமாகும்” என்று ஆரம்பித்து பேசிக்கொண்டே போனார்.

அன்று அவர் வாயிலிருந்து வழிந்தவையென்னவோ ’தமிழ்’ வார்த்தைகள் தான்; ஆனால் எனக்கோ பண்டைய அராமிக் பாஷையில் யாரோ என்னோடு பேசியது போன்றதொரு உணர்வு எற்பட்டது. சொற்களால் அவர் தீட்டிய சித்திரமும் கிட்டத்தட்ட அந்த பான்பராக் ஓவியத்தையே ஒத்திருந்ததால், மெதுவாக அந்த அரங்கிலிருந்து நழுவிவிட்டேன்.

அன்றைக்கு ஓவியத்தை முன்வைத்து அவர் பேசிய அதே கருத்துகளை, கவிதை, சிறுகதை, நாவல் உள்ளிட்ட பல்வேறு இலக்கிய வடிவங்களை முன்வைத்தும் பலர் பேசுவதையும், ‘கலை கலைக்காகவே‘ என்ற கருத்து சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப வித விதமான உருவங்களில் உலவுவதையும் பின்னாளில் கவனிக்க முடிந்திருக்கிறது.

ஒரு கதை, கவிதை அல்லது ஓவியத்தை கலைஞனின் உள்மன எழுச்சிதான் உருவாக்குகிறது என்பதை நாம் மறுக்கவில்லை. அப்படி ஒரு உண்மையான அக எழுச்சி இல்லாமலேயே மலர்விக்கப்படும் காகிதப்பூக்களும், சொற்களாலும் வண்ணங்களாலும் நிகழ்த்தப்படும் கழைக்கூத்துக்களும்தான் கலை, இலக்கிய உலகில் நிரம்பியிருக்கின்றன என்ற உண்மையையும் யாரும் மறுக்க முடியாது. எனினும், ஒரு கலை வெளிப்பாட்டை நோக்கி “அதன் பொருள் என்ன, அது வெளிப்படுத்தும் உணர்வு என்ன என்று கேள்வி எழுப்புவது அந்தக் கலையின் சுதந்திரத்தில் தலையிடுவதாகும் என்பதும், சர்வாதிகாரம் என்பதும் அவர்கள் தரப்பு வாதம்.

மாடர்ன் ஆர்ட்: சி.ஐ.ஏ ஊட்டி வளர்த்த கலை!
ஓவியம் 'தீட்டும்' ஜாக்சன் போலாக்

கலை இலக்கியம் ஓவியம் போன்ற துறைகளில் இத்தகைய சர்வ சுதந்திரக் கோட்பாட்டை குன்றின் மீது நின்று முழங்கிய பல சிங்கங்களுக்கு கறித்துண்டு போட்டு வளர்த்தவர்கள் அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ வினர்தான் என்றொரு செய்தி நெடுநாட்களாகவே அடிபட்டு வந்தது எனினும், அது கம்யூனிஸ்டுகளின் அவதூறு என்றே இதுநாள்வரை  புறந்தள்ளப்பட்டு வந்தது.

பிரான்சிஸ் ஸ்டோனார் சாண்டர்ஸ் எழுதிய சி.ஐ.ஏ வும் பண்பாட்டுப் பனிப்போரும் என்ற நூல் (Who paid the piper, The CIA and the cultural cold war) இதனை ஆதாரங்களுடன் வெளிக்கொண்டு வந்திருக்கிறது. அப்ஸ்டார்க்ட் எக்ஸ்பிரஷனிசம் என்று வகைப்படுத்தப்படும் மாடர்ன் ஆர்ட் ஓவியங்களை சி.ஐ.ஏ. உருவாக்கவில்லை. எனினும் அதனை அடையாளம் கண்டு தடுத்தாட்கொண்ட பெருமை நிச்சயம் சி.ஐ.ஏ.வுக்கே உரியது.

இரண்டாம் உலகப்போர் முடிந்த பின் 1947 ஆம் ஆண்டு அமெரிக்காவில் சி.ஐ.ஏ என்ற உளவு நிறுவனம் துவங்கப்பட்ட போதே, பண்பாடு மற்றும் கலை இலக்கியத் துறைகளில் சோசலிச எதிர்ப்பு சக்திகளையும் உளவாளிகளையும் உருவாக்குவது அதன் இலக்குகளில் ஒன்றாகத் தீர்மானிக்கப்பட்டு விட்டது.

இரண்டாம் உலகப் போரில் உலகையும் ஐரோப்பிய கண்டத்தையும் பாசிச அபாயத்திலிருந்து காத்தது ரஷ்யாவின் செம்படை. ஹிட்லருக்கு எதிராக ரசிய செம்படை களத்தில் காட்டிய தீரம் தியாகம் மட்டுமின்றி, போருக்குப்பின் பாசிஸ்டுகளை விசாரணைக்கு உட்படுத்தித் தண்டிப்பதில் ரசியா காட்டிய தீவிரமும் மேற்கு ஐரோப்பிய நாட்டு மக்களிடமும், அறிவுத்துறையினரிடமும் கம்யூனிசத்தின் பால் ஒரு ஈர்ப்பை உருவாக்கியிருந்தது.

பொருளாதாரம்,  இராணுவம் ஆகிய துறைகளில் சோசலிச முகாமுக்கு எதிராகத் தனது சொந்த நிறுவனங்களை உருவாக்க முடிந்த அமெரிக்காவால், அறிவுத் துறையினரிடையே, குறிப்பாக மேற்கு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த நடுத்தர வர்க்க அறிவுத்துறையினரிடையே,  சோசலிசம் பெற்று வந்த செல்வாக்கைத் தடுக்க இயலவில்லை.

அமெரிக்க மெக்கார்த்தியிசத்தின் வன்மம் கொண்ட கம்யூனிச எதிர்ப்பு, சார்லி சாப்ளின் உள்ளிட்ட பிரபல கலைஞர்களையெல்லாம் கூண்டிலேற்றியிருந்ததால், அமெரிக்க ஜனநாயகத்தின் முகவிலாசம் ஏற்கெனவே அம்பலமாகியிருந்தது.  பண்பாட்டுத்துறையில்  முதலாளித்துவ கலைஞர்கள் மேற்கொண்ட சில அபாயமற்ற புதிய முயற்சிகளைக் கூட சகித்துக் கொள்ள இயலாத அளவுக்கு பிற்போக்கின் உச்சமாக இருந்தது மெக்கார்த்தியிசம். ஏற்கெனவே அமெரிக்க பண்பாட்டின் மீது மதிப்போ மரியாதையோ கொண்டிராத ஐரோப்பிய கலைஞர்களையும், அமெரிக்காவின் தலைமையிலான புதிய அரசியல் இராணுவ அணிசேர்க்கையை எதிர்த்த ஐரோப்பிய அறிவுத்துறையினரையும் தம் பக்கம் ஈர்ப்பதற்கு புதியதொரு அரசியல் அணியை உருவாக்கவேண்டும் என்பதை சி.ஐ.ஏ. உணர்ந்திருந்தது. கலை இலக்கியம் பண்பாட்டுத்துறையில்  ‘கட்டற்ற படைப்பு சுதந்திரம்’, அரசியல் துறையில்  ‘ஜனநாயக இடதுசாரித்துவம்’ என்பனவற்றை நைச்சியமாக முன்தள்ளியதன் மூலம், கம்யூனிசத்தில் ஜனநாயகமோ, தனிமனித படைப்பு சுதந்திரமோ கிடையாது என்பதை கம்யூனிசத்துக்கு எதிரான பனிப்போரின் மையமுழக்கமாக்கியது சி.ஐ.ஏ.

கலைஞனின் சூக்குமமான உளப்பதிவுளை முன்நிறுத்தும் (Abstract Expressionism)  மாடர்ன் ஆர்ட் வகைப்பட்ட ஓவியங்கள் கம்யூனிசத்துக்கு எதிரான போரில் ஏன் பயன்பட்டன என்பதை 1949இல் சி.ஐ.ஏ.வின் கலைத்துறை தலைமை அதிகாரியாக செயல்பட்ட டாம் பிராடன் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்: “எக்ஸ்பிரஷனிசம் என்பது சுதந்திரத்தின் சித்தாந்தம், கம்யூனிச எதிர்ப்பு சித்தாந்தம், சுதந்திர முதலாளித்துவத்தின் சித்தாந்தம். அது சூக்குமமானது, அரசியல்ரீதியில் மவுனமானது, சரியாகச் சொன்னால் சோசலிச எதார்த்தவாதத்துக்கு நேர் எதிரானது.”

இந்தப் பயன்பாட்டை மனதிற்கொண்டுதான் கலாச்சார விடுதலைக்கான காங்கிரசு என்ற அமைப்பையும், அப்ஸ்ட்ராக்ட் எக்ஸ்பிரஷனிச ஓவியங்களுக்கான ஒரு கண்காட்சிக் கூடமாக மியூசியம் ஆப் மாடர்ன் ஆர்ட்ஸ் (MoMA) எனும் அமைப்பையும் சி. ஐ.ஏ நிறுவியது. சி.ஐ.ஏவின் முன்னாள் உயரதிகாரிகள் பலரும் இந்த ஓவியக் கண்காட்சிக் கூடத்தின் பொறுப்பு வகித்துள்ளனர். போல்லாக், டி கூனிங் போன்ற பிரபல ஓவியர்களின் கண்காட்சிகளை ஐரோப்பா முழுவதும் நடத்துவதற்கு சி.ஐ.ஏ. செலவு செய்தது. அப்ஸ்ட்ராக்ட் எக்ஸ்பிரஷனிசக் கலைஞர்கள் சிலருக்குத் தாம் யாரிடம் இருந்து பணம் பெறுகிறோம் என்று தெரிந்துள்ளது  ஆனால், பெரும்பாலானவர்களுக்குத் தாம் யாரிடம் இருந்து பணம் பெறுகிறோம் என்கிற விபரம் தெரிவிக்கப் படவில்லை.

பெறுபவர்கள் இருக்கட்டும், கொடுப்பவரான அமெரிக்க அரசின் அதிபர் ட்ருமெனுக்கே இது தெரியாது. “இதுவெல்லாம் கலை என்று சொன்னால், என்னை காட்டுமிராண்டி என்று அழைத்துக் கொள்ளவே நான் விரும்புவேன்” என்று மாடர்ன் ஆர்ட் ஓவியங்களைப் பற்றி கருத்து கூறியவர் ட்ருமென். அவர் மட்டுமல்ல, வெளிப்படையான கம்யூனிச எதிர்ப்பாளர்களான பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த நாசூக்கான முறையை விளக்கிப் புரிய வைத்து நிதி ஒதுக்கீடு பெறுவது இயலாது என்று சி.ஐ.ஏ வுக்கு புரிந்திருந்ததால், அது தனது ரகசிய நிதியிலிருந்தும், ராக்பெல்லர் போன்ற முதலாளிகளிடம் பெற்ற நன்கொடைகளிலிருந்தும் இத்தகைய கண்காட்சிகளை நடத்தியது.

இர்விங் கிரிஸ்டல், மெல்வின் லாஸ்க்கி, ஐசாயா பெர்லின், ஸ்டீபன் ஸ்பென்டர், சிட்னி ஹூக், டானியல் பெல், ட்வெய்ட் மெக்டொனால்ட், ரோபர்ட் லோவெல், ஹன்னா, மேரி மெக்கார்த்தி உள்ளிட்ட பல்வேறு அறிவுஜீவிகளின் புரவலராக சி.ஐ.ஏ செயல்பட்டுள்ளது.

பிற்காலத்தில் கலாச்சார காங்கிரஸ், மோமா போன்ற கலை கலாச்சார நிறுவனங்களுக்கும் சி.ஐ.ஏவுக்கும் இடையிலான உறவு அம்பலமானபோது, அது பற்றி கருத்து தெரிவித்த மோமாவின் முன்னாள் தலைவரான ப்ராடன், சி.ஐ.ஏ தனது பாத்திரத்தை ஏன் இரகசியமாக வைத்துக் கொண்டது என்பதை விளக்குகிறார்.

“எது சிறந்த பிரச்சாரமாக அமையும் என்பதை சி.ஐ.ஏ வரையறுத்துள்ளது. கலைஞன் (சி.ஐ.ஏ.வின் மொழியில் ‘சப்ஜெக்ட்’) நாம் விரும்பும் திசையில் சிந்திக்க வேண்டும். ஆனால் அது நாம் சொல்லிக் கொடுத்ததாக இல்லாமல், தனக்கு சொந்த முறையில் சரி என்று படுகின்ற காரணங்களுக்காக, அவனே அந்த திசையை தெரிவு செய்ததாக இருக்க வேண்டும்.”

கம்பனை சடையப்ப வள்ளல் அடையாளம் கண்டு வாரி வழங்கலாமேயன்றி, வள்ளல் சொல்படி கம்பன் என்று இராமாயணம் எழுதினால் எடுபடாது என்பதைத்தான் பிராடன் கூறுகிறார். அமெரிக்காவின் வெறி கொண்ட கம்யூனிச எதிர்ப்பு, பாப் கலாச்சாரம் மற்றும் நுகர்வுக் கலாச்சாரத்தின் சீரழிவுகள், அமெரிக்கத் திமிர் ஆகியவை குறித்து ஐரோப்பிய கலைஞர்களுக்கு வெறுப்பு இருந்ததென்னவோ உண்மைதான். எனினும், கம்யூனிச எதிர்ப்பின் இடத்தில் கட்சி எதிர்ப்பு, பாப் கலாச்சாரத்தின் இடத்தில் மேட்டிமைக் கலாச்சாரம், அமெரிக்க திமிரின் இடத்தில் அறிவாளித் திமிர் ஆகியவற்றைக் கொண்டிருந்த ஐரோப்பிய அறிவுத்துறையினர், அமெரிக்க நாணயத்தின் மறு பக்கமாகவே இருந்தனர். தமது சொந்தக் காரணங்களுக்காகவே சி.ஐ.ஏ விரும்பிய வழியில் சென்றனர்.

சி.ஐ.ஏ.வின் எலும்புத்துண்டுகளைப் பொறுக்கிக் கொண்ட கலைஞர்கள், அமெரிக்காவின் எல்லா வெளியுறவுக் கொள்கையையும் அப்படியே ஆதரிக்க வேண்டுமென்பதில்லை, அவ்வப்போது எதிர்க்கலாம் என்ற சுதந்திரத்தை சி.ஐ.ஏ இவர்களுக்கு வழங்கியிருந்தது. ஆனால், அதற்குரிய எல்லையையும் தீர்மானித்திருந்தது. சி.ஐ.ஏ.விடம் பெருமளவு நிதியுதவி பெற்ற என்கவுன்டர் எனும் பத்திரிகையில் முன்னாள் ஆசிரியராக இருந்த மெக்டொனால்ட், பின்னர் ஒரு சந்தர்பத்தில் தனது ‘அமெரிக்கா அமெரிக்கா‘ எனும் கட்டுரையில் அமெரிக்க நுகர்வு பற்றியும், வெகுஜன கலாச்சாரம் பற்றியும் விமரிசித்து எழுதிய கட்டுரை சி.ஐ.ஏ.வால் நிறுத்தப்பட்டது.

தங்களது சுதந்திரத்தின் எல்லை குறித்தும் இந்தப் படைப்பாளிகள் அறிந்தே இருந்தனர். அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் நிலவிய வெள்ளை இனவெறியைக் குறித்தோ, இந்தோசீனப் பகுதிகளிலும் அல்ஜீரியாவிலும் அமெரிக்கா நிகழ்த்திய கொத்துக் கொத்தான படுகொலைகள் பற்றியோ இவர்கள் பேசவில்லை. “அப்படி பேசுவது கம்யூனிசத்துக்கு ஆதரவாகப் போய் விடும்” என்று மெல்வின் லாஸ்கி மற்றும் சிட்னி ஹூக் போன்ற ’அறிவுஜீவிகள்’ கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அறுபதுகளின் இறுதியில் இந்த விவரங்கள் ஓரளவு கசியத் துவங்கிய போது சில அறிவுஜீவிகள் தமக்கு ஒன்றுமே தெரியாது என்று கைகழுவி விட எத்தனித்தனர். தாங்கள் யோக்கிய சிகாமணிகள் என்றும், சி.ஐ.ஏ தமக்கே தெரியாமல் தங்களைப் பயன்படுத்திக் கொண்டது ஒரு அயோக்கியத்தனமான நடவடிக்கை என்றும் ’பொங்கியெழுந்தனர்’. இந்தப் பொங்கல் எல்லாம் அமெரிக்கா அதன் மேல் தண்ணீர் தெளிக்கும் வரை தான் நீடித்தது.

சி.ஐ.ஏ.வின் டாம் ப்ராடன் தமது பட்டியலில் இருந்த கலைஞர்கள் பற்றியும், அவர்கள் தெரிந்தே தம்மிடம் கைநீட்டி சம்பளமும் கிம்பளமும் வாங்கிய விவரங்களையும் வெளியிட்டதும் அறவுணர்ச்சியோடு பொங்கியவர்கள் அப்படியே மௌனத்தில் ஆழ்ந்து விட்டனர். (மேற்படி நூல், பக்கம்  397 to 404)

சி.ஐ.ஏவின் இரகசிய ஆவணங்கள் தொண்ணூறுகளில் வெளிடப்பட்ட போது இந்தக் கள்ளக் கூட்டு இன்னும் விமரிசையாக அம்பலமானது. எனினும், அறிவுத்துறையினர் எவரும் தமது அப்ஸ்ட்ராக்ட் எக்ஸ்ப்ரஷனிசக் கலைகளையும் படைப்புகளையும் மறு ஆய்வுக்கு உட்படுத்த முன்வரவில்லை. ஏனெனில் அவர்கள் உணர்வுப் பூர்வமாகவே அந்தக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டிருந்தனர்.

படைப்பாளியின் சுதந்திரத்தை மறுப்பதால்தான் கம்யூனிச அமைப்புகளையும் சித்தாந்தத்தையும் எதிர்ப்பதாக சண்டமாருதம் செய்த இந்தக் கலைஞர்கள், தங்களது ஓவியங்களையும் படைப்புகளையும் ஆதரித்து விழா எடுத்ததற்கான காரணத்தை சி.ஐ.ஏ வெளிப்படையாகக் கூறிவிட்ட பின்னரும் அது குறித்து கருத்து கூறவில்லை. சி.ஐ.ஏ. வின் காசில்தான் தங்கள் கலை ‘உலக உலா’ வந்திருக்கிறது என்று தெரிந்த பின்னரும் வெட்கப்படவில்லை.

இது தான் இவர்கள் சோசலிச எதார்த்தவாதக் கலைகளுக்கும் படைப்புகளுக்கும் எதிராக நிறுவ முயன்ற சுதந்திரத்தின் யோக்கியதை. அதாவது அமெரிக்காவிற்கு நேர்ந்து விடப்பட்ட இந்த  அடிமை ஆடுகள், அந்த அடிமைத்தனத்தையே சுதந்திரம் என்று வரித்துக் கொண்டதோடு, சமூக நோக்கத்திற்காக படைப்பூக்கத்துடன் செயல்பட்ட படைப்பாளிகளை அடிமைகள் என்று முத்திரை குத்தி குற்றம் சாட்டினர்.

இவர்களை வெறுமனே கைக்கூலிகள், அடிமைகள் என்று சொல்வது முழுவதும் சரியல்ல. இவர்கள் கைக்கூலித்தனத்தையும் அடிமைத்தனத்தையும் தமது சொந்த சிந்தனையின் அடிப்படையில் ஆத்மார்த்தமாக வரித்துக் கொண்டவர்கள். அமெரிக்க நுகர்வு வெறியின் பின்னுள்ள அதே அராஜகவாதத்தையே இவர்கள் வேறொரு நளினமான மொழியில் வெளிப்படுத்தியவர்கள். வெளிப்பாடுகள் வேறு வேறென்றாலும் உள்ளடக்கம் ஒன்று தான்.

________________________________

சி.ஐ.ஏ.வும் அதன் கையாட்களாகச் செயல்பட்ட அறிவாளிகளும் ஓரளவுக்கு அம்பலப்பட்டுவிட்டனர் என்ற போதிலும், சிறந்த கம்யூனிச எதிர்ப்பு ஆயுதம் என்று சி.ஐ.ஏ வால் தேடித் தெரிவு செய்யப்பட்ட அந்தக் கலைக்கோட்பாடு இன்றும் செல்வாக்கு செலுத்தவே செய்கிறது. கலைஞர்கள் மற்றும எழுத்தாளர்கள் பலர், பல்வேறு அரசியல் சமூகப் பிரச்சினைகளில் ஏகாதிபத்தியத்துக்கு எதிராகவும், முதலாளித்துவச் சுரண்டலுக்கு எதிராகக் கருத்து தெரிவிக்கின்றனர். சிலர் போராடவும் செய்கின்றனர்.

ஆனால், அவர்கள் படைக்கின்ற ஓவியம், இசை, இலக்கியம் ஆகியவற்றில் வர்க்கப்போராட்டம் குறித்த கருத்தோ, ஏகாதிபத்திய எதிர்ப்புக் கருத்தோ உள்ளடக்கமாக இருப்பதில்லை. ஏனென்றால், புறவயமான உண்மைகள் அல்லது கருத்தியல் ரீதியான உண்மைகள் ஆகியவை தமது கலைப்படைப்பின் உள்ளடக்கத்தைத் தீர்மானிக்குமாயின், தமது படைப்பு கலைத்தரம் இழந்து, வெறும் பிரச்சார இலக்கியமாகிவிடும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

அன்று, பனிப்போர் காலத்தில் ஐரோப்பிய அறிவுஜீவிகளின் மூளையைக் குறிவைத்து சி.ஐ.ஏ தொடுத்த தாக்குதல், உலகெங்கும் உள்ள படைப்பாளிகளின் சிந்தனையை இன்றளவும் ஆட்டுவிப்பதையே நாம் காண்கிறோம்.

___________________________________________________________

– தமிழரசன், புதிய கலாச்சாரம், மார்ச் – 2011
___________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

பெண் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படுவது ஏன்? – ஜெயந்தி

10

உழைக்கும் மகளிர்தினச் சிறப்புப் பதிவு  – 9

ரு பெண் கல்வி கற்றால் அவள் குடும்பமே கற்றதாகும். தான் கற்ற கல்வியை தன் பிள்ளைகளுக்கும் கற்றுக்கொடுப்பாள். அந்தக் குடும்பமே கல்வி கற்ற குடும்பமாக மாறும். இன்றைய காலகட்டத்தில் கல்வியின் அருமையை அனைவரும் அறிந்தே இருக்கின்றனர்.

அரசாங்கமும் தன் மக்கள் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக சத்துணவு, சத்துணவுடன் முட்டை என்று பிள்ளைகளை பள்ளிக்கூடங்களுக்கு அழைக்கிறது. இன்னும் என்ஜிஓ அமைப்பு என்று தனியார் அமைப்புகளின் வாயிலாகவும் குழந்தைகள் படிக்க வேண்டும் என்று பாடுபடுகின்றனர். பார்க்க சந்தோஷமாகத்தான் இருக்கிறது.

சரி இன்றைய கிராமப்புறங்கள் எப்படி இருக்கின்றன. இவ்வளவு ஏற்பாடுகள் பண்ணப்படும்போது கல்வி கற்பதில் நிச்சயம் வளர்ச்சிதானே இருக்க வேண்டும். இதைத் தெரிந்துகொள்ள முயன்றபோது எனக்குக் கிடைத்த தகவல்கள் இவை.

கிராமப்புறங்களில் ஓரளவு வசதியுள்ளவர்கள் பக்கத்து நகரங்களில் உள்ள ஆங்கிலப்பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை படிக்க வைக்கின்றனர். அக்குழந்தைகள் வேன்களில் பள்ளிக்குச் சென்று வருகின்றனர். அடுத்த நிலையில் உள்ளவர்கள் அரசாங்கப் பள்ளியிலாவது தங்கள் குழந்தைகள் படித்துவிட வேண்டும் என்று நினைக்கின்றனர். அதிலும் ஆண் குழந்தை எப்படியாவது படிக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். பெண் குழந்தைகளை படிக்க வைப்பதில் அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை. அம்மா, அப்பா வேலைக்குச் சென்றால் வீட்டைப் பராமரிக்க பெண் குழந்தைகள் பயன்படுகின்றனர்.

அரசாங்கப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் எப்படி படிக்கிறார்கள்? நமது கல்வித்திட்டம் பிள்ளைகள் ஆர்வத்துடன் படிக்கும் விதத்தில் இல்லை. இது ஒருபுறம் என்றால் நமது அரசாங்கப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் செயல்கள் பிள்ளைகளை முற்றாக பள்ளியையும் கல்வியையும் வெறுக்கச் செய்கின்றன. ஆசிரியர்கள் சைடு(மெயின்) பிசினஸ்களாக வட்டிக்கு விடுதல், ரியல் எஸ்டேட், எல்ஐசி ஏஜண்ட் என்று பலவேலைகளுக்கு நடுவில் பிள்ளைகளுக்கும் எப்போதாவது பாடம் நடத்த வேண்டியுள்ளது. பிள்ளைகளுக்கு படிப்பின்மீது எப்படி ஆர்வம் தோன்றும்? இப்போது சமச்சீர் கல்விமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அது பிள்ளைகளுக்கு ஆர்வமுடன் கற்கக்கூடியதாக இருப்பதாக தெரிகிறது. இது கொஞ்சம் பசுமையான கிராமங்களில் மட்டுமேயான நிலை.

தமிழ்நாட்டில் ஏராளமான கிராமப்புறங்கள் எப்படி இருக்கிறது? அங்குள்ள மக்களின் வாழ்நிலை எவ்வாறு உள்ளது?

உலகமயமாக்கலின் விளைவுகளை இங்கேதான் கண்கூடாக காண முடிகிறது. சாஃப்ட்வேர் கம்பெனிகள் வந்துவிட்டன. மக்களின் வாழ்நிலை உயர்ந்துவிட்டது என்று ஏசி ரூம்களின் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பவர்கள் கிராமங்களில் சென்று பார்த்தால் அப்போது அவர்களுக்கு உண்மை நிலை புரியவரலாம். விவசாயம், குடும்பத் தொழில்கள் அனைத்தும் நசிந்துவிட்டன.

அந்தக்காலத்துல ஒரு கிராமம்னு எடுத்துக்கிட்டா அவங்க தேவைகளை அவர்களே பூர்த்தி செய்துகொள்வார்கள். அப்படித்தான் ஒவ்வொரு கிராமமும் அமைக்கப்படும். விவசாய வேலைன்னா அதுக்குத் தேவையான கலப்பை, மண்வெட்டி, அருவா போன்ற தொழில் செய்பவர்கள், சமையலுக்குத் தேவையான மண் பாத்திரங்கள் செய்வோர், ஆடு, மாடு, கோழி வளர்ப்பவர்கள், விவசாயக் கூலிகள் என்று அனைவருக்கும் ஏதோ ஒரு வேலை வாய்ப்பு இருக்கும். ஆனால் இப்போது விவசாயம் பொய்த்துப்போன நிலையில் பெரு விவசாயிகள் ஓரளவு சமாளித்துக் கொள்கின்றனர். சிறு விவசாயிகள் நிலங்களை விற்றுவிட்டு பிழைப்புத் தேடி நகரங்களை நோக்கி வருகின்றனர். விவசாயம் சார்ந்த தொழில் செய்தவர்களின் நிலையும் இதுவே.

பக்கத்து சிறு நகரங்களிலோ பெரு நகரங்களிலோ உள்ள பேக்டரிகளிலும் கம்பெனிகளிலும் வேலை செய்து தங்கள் குடும்பத்தை ஓட்டுகின்றனர். அதிலும் ஆண்கள் தனது சம்பாத்தியத்தை குடித்துவிடுவார்கள். பெண்தான் கடுமையான உழைத்து பிள்ளைகளையும் வளர்க்க வேண்டும் புருஷனுக்கும் சோறு போட வேண்டும். புருஷனிடம் அடியும் வாங்கிக்கொள்ள வேண்டும்.

பெண்ணியம் பேசுபவர்களை கிண்டலடித்து காலிபண்ணுவதற்கென்றே நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் இப்படி பல சிரமங்களுக்கிடையே குடும்பத்தை நடத்தும் பெண்களைப் பார்த்தால் காந்தியின் குரங்கு பொம்மைகள் போல் எல்லாத்தையும் மூடிக் கொள்கிறார்கள். இந்தப்பெண்களைப் பற்றி மறந்தும் அவர்கள் பேச மாட்டார்கள். கோடிக்கணக்கான பெண்களின் நிலை இதுதான். இப்படி சாப்பாட்டிற்கே சிரமமான சூழ்நிலையில் பிள்ளைகளை படிக்க வைப்பது பற்றி அவர்களுக்கு யோசிக்க எங்கே நேரம்?

இன்னும் விவசாயத் தொழிலாளர்கள், பின்னலாடைத் தொழிலாளர்கள், தாங்கள் வாங்கிய கடன் வட்டி குட்டிபோட்டு வளர்ந்துகொண்டே இருக்கும் சூழ்நிலையில் தங்கள் பிள்ளைகளை அடமானம் வைக்கின்றனர்.

இப்போது சமீபத்தில் கேரளாவில் வீட்டு வேலைக்காக விலைக்கு வாங்கப்பட்ட பெண்ணை துன்புறுத்தி சாகடித்தது அனைவருக்கும் நினைவிருக்கலாம். தங்கள் பெண் குழந்தைகளை பத்தாயிரம் இருபதாயிரம்னு விலைக்கு விற்று தங்கள் கடனின் வட்டியைக் கட்டுகின்றனர்.

குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பெல்லாம் ரிஜஸ்ரேஷன் பண்ணப்பட்ட கம்பெனிகளில்தான் நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆடு,மாடு மேய்க்க, வீட்டிலேயே தீப்பெட்டி ஒட்டுவது, தீக்குச்சி அடுக்குவது, பீடி லேபிள் ஒட்டுவது, தூள் வைத்து பீடி சுற்றுவது போன்ற வேலைகள் இல்லாமல் பிச்சை எடுக்க வைக்கப்படுவது, குப்பை பொறுக்குவது, பாலியல் ரீதியான வேலைகளைச் செய்வது போல பிள்ளைகளுக்குத்தான் எத்தனை வேலைகள்.

இப்படி சின்ன வயசுலயே கடுமையாக வேலை வாங்குவதால் பிள்ளைகளின் மூளை வளர்ச்சி சரியானபடி இருக்காதாம். ஒருவித முரட்டுத்தனத்துடன் வளர்வார்களாம்.

சென்னையிலிருந்து திருவள்ளூர் வரை நிறைய தொழிற்சாலைகள், பன்னாட்டு நிறுவனங்கள் என்று நிறைய இடங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இது இல்லாமல் அரக்கோணம் வரை உள்ள விளை நிலங்கள் ப்ளாட் போடப்பட்டு விற்கப்படுவதை நாம் தினமும் நம் வீட்டு தொலைக்காட்சியிலேயே பார்க்கலாம். கோயமுத்தூர் பக்கம் எடுத்துக்கொண்டால் திருப்பூரிலிருந்து தஞ்சாவூர் வரையான நிலத்தடி நீர் சாயப்பட்டறைகளின் விளைவாக கெட்டுவிட்டது. அங்கேயுள்ள மக்களுக்கு விவசாய நிலங்களுக்கு அனுப்ப வேண்டிய நீரை குடிநீராக வழங்க வேண்டிய நிலை. அதனால் பொள்ளாச்சி வரையிலான நிலங்கள் விவசாயம் செய்ய முடியாத நிலை. இப்படி வாழவே முடியாத சூழ்நிலையில் மக்கள் வாழ்வாதாரம் தேடி சென்னை நோக்கியோ, ஆந்திரா நோக்கியோ சென்று கொண்டிருக்கிறார்கள். இதில் பிள்ளைகளின் படிப்பு பற்றி யாரால் நினைக்க முடியும்?

—————–

குடும்பங்கள் தங்களது வேலைவாய்ப்பிற்காக கிராமத்திலிருந்து நகத்திற்கு இடம் பெயர்ந்து செல்வதால் குழந்தைகளும் உடன் செல்கின்றனர். பல குழந்தைகள் சென்ற இடத்தில் பள்ளி செல்லாமல் வேலையில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவ்வாறான குடும்பங்கள் கூடுதல் வருமானத்திற்காகவும் முன்பணம் பெற்றும் இடம்பெயர்கின்றனர். இதனால் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.

தொழிற்சாலை உரிமையாளர்களிடமிருந்து பெற்றோர் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாத சூழலில் குழந்தைகள் அதே தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர். கடன் பெற்ற தொகைக்கான வட்டி விகிதம் அதிகரித்துக் கொண்டேயிருப்பதால் ஒவ்வொரு வருடத்திலும் திரும்பச் செலுத்த வேண்டிய தொகை கூடிக் கொண்டே போகிறது. அவ்வாறான சூழலில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

வீடுகளில் தங்கள் குழந்தைகளை வீட்டு வேலைக்கு அமர்த்துதல், கைத்தொழில் மற்றும் குடிசைத்த தொழிலில் ஈடுபடுத்துதல், விவசாய வேலைகளில், கால்நடை வளர்ப்பில், கட்டிட வேலைகளில் மற்றும் வரையறைக்குட்படாத பிற பணிகளில் குழந்தைகள் ஈடுபடுதல் உதாரணம் குப்பைகளை பொறுக்கும் பணியில், சுயமாக தொழில் செய்தல், பிற நிறுவனங்களின் உரிமையாளர்களால் கொத்தடிமைகள்போல் பணியில் ஈடுபட வைத்தல், கம்பளி செய்தல், எம்பிராய்டரி, இயந்திர பணிகள், சுரங்கங்களில், வீடுகளில் வேலை செய்தல், பிச்சை எடுத்தல், பாலியல் தொழிலில் ஈடுபடுத்துதல் போன்றவை.

குழந்தைகளை குறைந்த கூலிக்கு வேலைக்கு அமர்த்தி அதன் மூலம் தங்கள் ஆதாயத்தை அதிகரிப்பதே முதலாளிகளின் நோக்கமாகும். குறைந்த கூலி, அதிக நேரம் வேலை. அடிப்படை வசதிகளற்ற வேலைச்சூழல் போன்றவற்றை எதிர்த்து குழந்தைகள் குரல் கொடுக்காது என்பதாலும் சங்கம் அமைத்து போராட மாட்டார்கள் என்பதாலும் முதலாளிகள் குழந்தைகளை வேலைக்கு அமர்த்த விரும்புகிறார்கள். குழந்தைகளை எளிதில் வேலைக்குப் பழக்க முடியும். ஒரே வேலையை திரும்பத் திரும்ப சலிப்பின்றி செய்ய வைக்க முடியும். சிறு சலுகைகள் வழங்கி பெருமளவு அவர்கள் உழைப்பை சுரண்ட முடியும் என்பது போன்ற காரணங்களால் குழந்தைகள் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர்.

மேலே உள்ள நான்கு பத்திகளையும் சொன்னது முதலாளித்துவத்தை எதிர்ப்பவர்களோ, கம்யூனிசம் பேசுபவர்களோ, லொட்டு லொசுக்குக் கட்சியைச் சேர்ந்தவர்களோ, தங்கள் நலனையும் தங்கள் குடும்ப நலனையும் பெரிதாக எண்ணாமல் மக்களுக்காக தொண்டாற்றிக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான கம்யூனிஸ்டுகள் என்று அழைக்கப் படுபவர்களோ சொல்லவில்லை.

வேறு யார் சொன்னது. அரசாங்கத்தின் மாநில குழந்தைத் தொழிலாளர் மறுவாழ்வு மற்றும் நலச்சங்கம் வெளியிட்டுள்ள பயிற்சியாளர் கையேட்டில் உள்ளது.

அந்தப் புத்தகத்தில் உள்ள ஒரு அழகான கவிதை உங்களுக்காக,

ஒரு குழந்தையின் வேண்டுகோள்

நான் ஒரு குழந்தை
உலகமே என் வருகைக்காக காத்திருக்கிறது

நான் என்னவாகப் போகிறேன் என்று
இந்தப் பூமி ஆர்வத்துடன் கவனிக்கிறது

நாகரீகம் ஊசலாடுகிறது
இன்று என்னவாக இருக்கிறேனோ
எனது நாளைய உலகம்
அவ்வாறு அமையும்
அந்தக் கணத்திற்காகவே
இந்த நாகரிகம் காத்திருக்கிறது

நான்தான் அந்தக் குழந்தை
என் எதிர்கால்ததை உங்கள் கரங்களில் பற்றியுள்ளீர்கள்
நான் தோல்வியுறுவேனா, வெற்றியுறுவேனா
எனத் தீர்மானிப்பதும் நீங்கள்தான்

எனக்கு மகிழ்ச்சியூட்டுவனவற்றை
நீங்கள் தரவேண்டுமென்று பிரார்த்திக்கின்றேன்
உலகின் ஆசியாக நான் மாறுவதற்கு
என்னைப் பயிற்றுவிக்கும்படி உங்களை வேண்டுகிறேன்.

மேம் ஜீன் கோல்

_________________________________________________

– ஜெயந்தி
__________________________________________________

உழைக்கும் மகளிர் தின சிறப்பு பதிவுகள் 2011

உழைக்கும் மகளிர் தின சிறப்பு பதிவுகள் 2010

தளியில் இளிக்கும் போலிக் கம்யூனிஸ்டுகளின் சந்தர்ப்பவாதம்!

79

திண்டுக்கல் சி.பி.எம் வேட்பாளர் பாலபாரதியின் சொத்து மதிப்பு வெறும் ஒரு இலட்சம்தான் என்று சி.பி.எம் தோழர்கள் தங்கள் கட்சியின் எளிமையை ஆடம்பரமான அ.தி.மு.க கூட்டணிக்குள் இருந்து கொண்டு கடை விரிக்கிறார்கள். கொள்வார்தான் யாருமில்லை.

திருப்பூரின் தி.மு.க வேட்பாளர் கோவிந்தசாமி சென்ற தேர்தலில் சி.பி.எம் சார்பில் வெற்றி பெற்றார். திருப்பூரில் இவர் வளைத்திருக்கும் சொத்துக்கள் குறித்து உடன்பிறப்புகளே அசந்து போனதால்தான் அய்யாவுக்கு ஒரு பணக்காரர் கட்சியில் சீட்டு கிடைத்திருக்கிறது. கோவிந்தசாமி ஏராளமான சொத்து சேர்த்ததாகட்டும், இல்லை முதலாளிகளுக்கு ஆதரவாக அமைச்சரிடம் சூட்கேஸ் கொடுத்தாக இருக்கட்டும் அப்போதெல்லாம் சி.பி.எம் கட்சி இவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பின்னர் கருணாநிதிக்கு பாராட்டு விழா எடுக்கப் போகிறார் என்றதும்தான் வேறு வழியின்றி கட்சியை விட்டு வெளியேற்றியது.

பாலபாரதி போன்ற காந்திய எளிமைக்காரர்கள் இருக்கும் கட்சிதான் கோவிந்தசாமிகளையும் உருவாக்குகிறது. எனில் இந்த எளிமை தனிநபர் சம்பந்தப்பட்டதா, இல்லை கட்சி உருவாக்குவதா? கேரள முதலமைச்சர் அச்சுதானந்தன் கூட சொத்துக்கள் இல்லை என்றுதான் மனு தாக்கல் செய்திருக்கிறார். ஆனால் சி.பி.எம் மாநில செயலாளர் பினரயி விஜயன் லாட்டரி அதிபர் மார்ட்டினிடம் கட்சிக்காக ஆட்டையைப் போடவில்லையா? இந்த மார்ட்டின்தான் கருணாநிதிக்கு ஐம்பது இலட்சம் கொடுத்து கதை வசனம் எழுதி வாங்கி இளைஞன் படத்தை எடுத்து வெளியிட்டிருக்கிறார். கேரளாவில் சி.பி.எம் கட்சியின் சொத்து மதிப்பு மட்டும் சில ஆயிரம் கோடிகளைத் தாண்டிவிட்டது.

எளிமையான கட்சி என்றால் இந்த கோடி மதிப்பில் உள்ள சொத்து எதற்கு? மக்களைத் திரட்டி புரட்சி செய்யப்போவதில்லை என்று உறுதியாயிருக்கும் கட்சி சொத்துக்களை திரட்டி செட்டிலாவதில் வியப்பொன்றுமில்லை. இவர்கள் இன்னமும் கம்யூனிச நாடாக அங்கீகரிக்கும் சீனத்தின் கம்யூனிஸ்டுக் கட்சியில் சீனத்து டாடா, பிர்லா, அம்பானிகளெல்லாம் உறுப்பினர்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த உண்மை தெரியாததால்தான் அதியமான் போன்ற முதலாளித்துவ கடுங்கோட்பாட்டுவாதிகள் கம்யூனிசத்தை எதிர்க்கிறார்கள். யாராவது அதற்குரிய சுட்டிகளை அளித்தால் அண்ணன் அதியமான் நாளை முதல் சி.பி.எம் கட்சியில் சேருவது உறுதி. எத்தனை நாளைக்குத்தான் விலை போகாத லிபரேட்டிரியனாக தனிமையில் வாட முடியும்?

போலிக் கம்யூனிஸ்டு கட்சிகளில் நிரூபன் சக்கரவர்த்தி போன்ற எளியவர்களும், கோவிந்தசாமி போன்ற வலியவர்களும் சேர்ந்து செயல்பட முடியும் என்பதுதான் முக்கியமானது. ஓட்டுக் கட்சி அரசியலில் மூழ்கி எல்லா சந்தர்ப்பவாதங்களையும் கற்றுத் தேர்ந்த கட்சியில் இனியும் எதற்கு அந்த எளிமை சென்டிமெண்ட்?

சரி, இனி இந்த தேர்தல் தளியில் அளித்திருக்கும் ஒரு சந்தர்ப்பவாதத்தின் கதையை பார்ப்போம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி தொகுதியில் சென்ற சட்டமன்ற தேர்தலில் சி.பி.ஐ கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டவர் நாகராஜ் ரெட்டி. தமிழகத்தில் சாதிப்பெயர் போடும் வழக்கம் எப்போதோ ஒழிந்தாலும் சமத்துவம் பேசும் போலிக் கம்யூனிஸ்டுகள் மட்டும் இன்னும் அதை விடவில்லை. கிடக்கட்டும். இந்த நாகராஜ் ரெட்டிக்கு தொகுதி போனதால் ஏமாற்றம் அடைந்த சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் சுயேச்சையாக போட்டியிட்டு 2,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைகிறார்.

அப்போது சி.பி.எம், சி.பி.ஐ இரண்டும் தி.மு.க கூட்டணியில்தான் இருந்தன. காங்கிரசு கட்சியில்தான் சீட்டு கிடைக்காத நாட்டாமைகள் போட்டி வேட்பாளராக மல்லுக்கட்டுவது வழக்கம். இந்தத் தேர்தலிலும் அதையே பார்க்கிறோம். ஆனால் போலிகளும் இதற்கு விதிவிலக்கு அல்ல. கட்சி முடிவு செய்ததை மீறி போட்டிட்டு வெற்றிபெறும் அளவுக்கு அவர் தனிப்பட்ட சாதி, வர்க்க செல்வாக்கோடு அந்த தொகுதியில் இருந்திருக்கிறார் என்பது தெரிகிறது. இதனால் தர்மசங்கடத்திற்கு ஆளான சி.பி.எம் கட்சி அந்த ராமச்சந்திரனை கட்சியிலிருந்து நீக்கி விடுகிறது.

சரி, அத்தோடு அந்த ராமச்சந்திரனது கம்யூனிஸ்ட்டு நாடக வாழ்க்கை முடிவுக்கு வந்ததா என்றால் இல்லை. இந்த ராமச்சந்திரன் சுயேட்சை வேட்பாளராகவே வெற்றி பெறுமளவு செல்வாக்கு கொண்டவர் என்பதால் சி.பி.ஐ கட்சி இவரை சேர்த்துக் கொண்டது. இது தி.மு.க, அ.தி.மு.க இரண்டிலும் மாறி மாறி சேரும் பெருச்சாளிகளின் நடவடிக்கைகளுக்கு ஒப்பானது.

இந்த தேர்தலில் தளி தொகுதி சி.பி.ஐ கட்சிக்கு ஒதுக்கப்பட்டு அதன் வேட்பாளராக இதே ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். தளி தொகுதிக்கு முட்டி மோதி வாய்ப்பு கிடைக்காத நாகராஜ் ரெட்டி காரு தற்போது ராமச்சந்திரனை எப்படியாவது தோற்கடிக்க வேண்டுமென்று அறிவித்திருக்கிறார். இதற்காக மாவட்டம் முழுவதும் சுற்றுப்பிரயாணம் செய்து எதிர்த்து போட்டியிடும் தி.மு.க வேட்பாளரை வெற்றிபெற வைப்போமென சபதமும் ஏற்றிருக்கிறார்.

மேலும் நம்ம ரெட்டிகாரு ஒரு குண்டை தூக்கி போட்டிருக்கிறார். தளி சீட்டை ஐம்பது இலட்ச ரூபாய்க்கு தா.பாண்டியனும், மகேந்திரனும் (சி.பி.ஐ தலைவர்கள்) விற்றுவிட்டதாக குற்றம் சாட்டியிருக்கிறார். உடனே போயஸ் தோட்டத்து பூசாரி தா.பாண்டியன் ரெட்டியை கட்டம் கட்டி கட்சியை விட்டு நீக்கி விட்டார். மேலும் ஐம்பது இலட்சம் ரூபாய் மேட்டருக்காக அவதூறு வழக்கு போடப்போவதாகவும் சும்மா ஒரு பேச்சுக்கு அறிவித்திருக்கிறார்.

நாகராஜ் ரெட்டி ஏதோ ஒரு சாதாரண பொறுப்பில் உள்ளவர் அல்ல. கம்யூனிஸ்டு கட்சிகளில் ஒருவர் உறுப்பினராக வேண்டுமென்றால் தேர்வு நிலைக்காலம், பயிற்சிக்காலம் எல்லாம் முடித்து விட்டுத்தான் ஆக முடியும். அதனால் ஒரு தோழர் மாவட்ட செயலாளராக வர வேண்டுமென்றால் அவர் பல சுற்று நிலைகளை முடித்து விட்டுத்தான் வரமுடியும். அப்படிப்பட்டவர் தா.பாண்டியன் ஐம்பது இலட்சத்திற்கு தொகுதியை விற்று விட்டார் என்று சொன்னால் அது சாதாரணமானதில்லையே?

சரி ஒரு வேளை தொகுதி இவருக்கு கிடைத்திருந்தால் எவ்வளவு தொகை  கொடுத்திருப்பாரோ தெரியாது. ஒருவேளை இவருக்கு பேரம் படியவில்லையோ தெரியவில்லை. கூட்டிக் கழித்து பார்த்தால் இது கம்யூனிஸ்டு கட்சியா, இல்லை வேட்டியை கிழிக்கும் தமிழக காங்கிரசு கட்சியா என்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால் நம்ம தோழர்களுக்கு தோன்றவில்லையே?

தேர்தல் பாதையில் சீரழிந்து எல்லா சந்தர்ப்பவாதங்களையும் அணிந்து கொண்டு போலிக் கம்யூனிஸ்டுகள் இன்னமும் தங்களை கம்யூனிஸ்டு கட்சி என்று அறிவித்துக் கொள்வதுதான் கொடுமையிலும் கொடுமை. இன்னமும் மக்களை நேசித்து, புரட்சியை நெஞ்சிலேந்தி வாழ்வதில் உண்மையாக இருக்கும் தோழர்கள் இந்த போலிக் கம்யூனிஸ்டுகட்சிகளிலிருந்து வெளியேறி புரட்சிகர கட்சிகளில் சேர வேண்டும். தேர்தல் பாதை திருடர் பாதை என்பதை அவர்கள் இன்னமும் உணரவில்லை என்றால் அவர்களும் கூட்டணி தலைவி புரட்சித் தலைவயின் தலைமையில் புர்ரரச்சி செய்ய வேண்டியதுதான். வரலாறு பழித்துரைக்கும் தோழர்களே, முடிவெடுங்கள்!

கிரிக்கெட் தேசபக்தர்களே! இந்தியா அமெரிக்காவின் அடிமையான கதை தெரியுமா?

23
1991 பட்ஜெட் தாக்கலின் போது மன்மோகன் சிங் மற்றும் 1997 பட்ஜெட் தாக்கலின் போது சிதம்பரம்

மிழகத்தில் இது தேர்தல் காலம். யாருக்கு ஓட்டுப் போடுவது;  யாரை வீட்டுக்கு அனுப்பித் ‘தண்டிப்பது’  குறித்தெல்லாம் இப்போது ஒரு முடிவுக்கு வந்திருப்பீர்கள். மாறி மாறி வரும் ஆட்சியாளர்களிடையே அவர்கள் கட்சிக் கொடியில் காணப்படும் வண்ணங்களைத் தாண்டி வேறெந்த வித்தியாசத்தையும் நீங்கள் உணர்ந்திருக்க மாட்டீர்கள் – அவ்வாறு வித்தியாசப்படுத்திக் காட்டுமாறு உங்களிடம் கேட்டால் உங்களால் மௌனத்தைத் தவிற வேறு பதில் எதையும் சொல்லிவிடவும் முடியாது தானே. ஆனாலும் நீங்கள் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுக்கும் கட்சி இனி ஐந்தாண்டுகளுக்கு நாட்டை ஆளப் போவதாகவும், கொள்கை முடிவுகள் பலவற்றை எடுக்கப் போகிறது என்றும் நம்பிக் கொண்டு இருக்கிறீர்கள் தானே? நமது பிரச்சினைகளும் நல்வாழ்வும் இப்படித் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் கட்சி உறுப்பினர்களாலேயே தீர்மானிக்கப்படுகிறது என்பது உங்கள் அசைக்கமுடியாத நம்பிக்கையாக இருக்கிறதல்லவா?

ஒருவேளை அரசியல் கட்சிகளின் மேலான நம்பிக்கையை இழந்து விட்டவராயிருப்பின் நீங்கள் இவ்வாறும் நினைக்கலாம் – “இந்த அரசியல்வாதிகளே சுத்த மோசம் தான் சார். எல்லாம் படிக்காத பயலுங்க. ஆனா, நல்லா படிச்ச ஆபீஸருங்க கிட்ட நிர்வாகத்தை ஒப்படைச்சிட்டா எல்லாம் சரியாப் போகும்”. இதில் படித்தவர் நல்லவன் தப்பு செய்யமாட்டான் என்றும் படிக்காதவனெல்லாம் அயோக்கியனென்றும் தொனிக்கும் பாரமரத்தமான அரசியல் புரிதலை ஒருபக்கம் வைத்து விட்டாலும் கூட, நமது அரசின் முக்கியமான உள்நாட்டுக் கொள்கைகளும் அயல் விவகாரத் துறைக் கொள்கை முடிவுகளும் நம்மவர்களாலேயே எடுக்கப்படுகின்றது என்கிற நம்பிக்கை உங்களுக்கு அசைக்க முடியாமல் இருக்கிறது அல்லவா?

ஆம் எனில் உங்களுக்கு சில மிக முக்கியமான கேள்விகள் இருக்கின்றன.

உண்மையில் இந்த தேசத்தை ஆள்வது யார்?

கடந்த பதினான்காம் தேதி தொடங்கி இந்து பத்திரிகையில் விக்கிலீக்ஸ் வசமிருக்கும் அமெரிக்காவின் இரகசிய ஆவணங்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருகிறது. விக்கிலீக்ஸ் இணையதளத்தின் வசம் பல்வேறு நாடுகளில் இருக்கும் அமெரிக்கத் தூதரகங்கள் தமது தலைமையகத்திற்கு அனுப்பிய இரகசியமான தகவல்கள் அடங்கிய கோப்புகள் கிடைத்துள்ளன. அவற்றில் இந்தியா தொடர்பான கேபிள்களை தற்போது இந்துப் பத்திரிகை வெளியிட்டு வருகிறது.

கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக வெளியாகி வரும் இந்த ஆவணங்களைக் கவனமாக வாசிக்கும் எவருக்கும் சில அடிப்படையான சந்தேகங்கள் எழுந்திருக்க வேண்டும். அமெரிக்கத் தூதரகத்தின் அதிகாரிகள் அனுப்பும் அனேகமான கேபிள்களில் தமக்கு மேற்படித் தகவல்களைக் கொடுத்தது முக்கியமான அலுவலகங்களில் இருக்கும் தமது  ‘தொடர்புகள்’ என்றே குறிப்பிடுகின்றனர். ஒவ்வொரு துறையின் தலைமைச் செயலகத்திலும் உள் தகவல்களைப் பெற்றுக் கொள்ள தமக்கு விசுவாசமான ஐந்தாம்படை ஆட்களை விதைத்துள்ளது தெரியவருகிறது.

இந்த ஆவணங்கள் வெளியாகத் துவங்கிய நாட்களில் பிற முதலாளித்துவ ஊடகங்களில் இதற்குக் கொடுத்த முக்கியத்துவம் தற்போது மட்டுப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் மக்களின் நினைவுகளில் இருந்தும் இவ்விவகாரங்கள் மங்கிப் போய் விடலாம். ஆனால், இங்கே அரசாங்க மட்டத் தொடர்புகளைப் பேணும் நோக்கத்தோடு இயங்கி வருவதாகச் சொல்லப்படும் அமெரிக்கத் தூதரமும் அதன் அதிகாரிகளும் ஒவ்வொரு அரசாங்க அலுவலகங்கள் வரையிலும் தொடர்புகளை உண்டாக்க வேண்டியதன் அவசியம் என்னவென்று ஊடகங்களோ பாராளுமன்றத்தில் வாய்கிழியப் பேசும் எதிர்க்கட்சிகளோ கேள்வியெழுப்பவில்லை. அவர்களின் இந்தக் காரியவாத மௌனம் என்பது அமெரிக்கர்கள் நமது தேசத்தையும் அதன் நிர்வாக இயக்கத்தையும் பல்வேறு துறைகளில் எடுக்கப்பட வேண்டிய முக்கியமான  முடிவுகளையும் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் சுயமாக எடுத்துக் கொண்டு விட்ட உரிமையை  மறைமுகமாய் அங்கீகரிப்பதாய் இருக்கிறது.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் போன்ற மிக முக்கியமான பதவியில் உள்ளவர்களோடு கூட தனிப்பட்ட முறையில் மாமன் மாச்சானிடம் பேசுவது போன்று மிக இயல்பாகப் பேசி உள்விவகாரங்களைக் கறந்துள்ளனர். அப்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த எம்.கே நாராயணனுக்கும் சிதம்பரத்துக்கும் இடையே நடந்த குத்துபிடி விளையாட்டை அமெரிக்கர்கள் மிகுந்த கவனத்தோடு கவனித்து வந்துள்ளார்கள். 2010-ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி அமெரிக்கத் தூதர் திமோத்தி ரோமர் அனுப்பும் கேபிளில் இவற்றைப் பற்றி மிக விலாவாரியாக அலசுகிறார். இதில் அமெரிக்க அதிகாரிகளிடம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் இவர்கள் இருவருக்கும் இடையிலான பிரச்சினைகளைப் பற்றி போட்டுக் கொடுத்துள்ளார்.

தொடர்ந்து நாராயணனிடம் பேசிய விவரங்களைப் பதிவு செய்யும் ரோமர், நாராயணன் போன்று அமெரிக்க நலன்களுக்கு விசுவாசமாய் இருக்கும் ஒருவர் கிடைப்பது அரிது என்பதையும் தவறாமல் பதிவு செய்கிறார். அமெரிக்க நலன் சார்ந்த முடிவுகளை இந்திய அதிகார வர்க்கத்திடையே செயல்படுத்துவதில் நாராயணன் மிகவும் திறம்பட செயல்பட்டதாக அவருக்குப் பாராட்டுப் பத்திரமும் வாசிக்கிறார். இப்படி, ஒவ்வொரு துறையிலும் தமக்குத் தகவல்கள் அளிக்க ஐந்தாம் படைகளை நிறுவி, அதன் உள்விவகாரங்களைப் பற்றிய உளவுத் தகவல்களைப் பெற்று வந்துள்ளனர்.

இவர்கள் தூதரக அதிகாரிகளா இல்லை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உளவாளிகளா? இவர்களுக்கு எந்தக் கூச்சமும் இன்றி தகவல்களை அளிக்கும் இந்த அதிகாரிகள் அமெரிக்கக் கைக்கூலிகள் இல்லையா? போலி கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்ட பாராளுமன்ற ஓட்டுக்கட்சி அரசியலில் நம்பிக்கை கொண்டுள்ள கட்சிகள் ஏன் அமெரிக்க அதிகாரிகள் நமது நாட்டு உயர் அலுவலகங்களில் மூக்கு நுழைப்பதைக் கேள்வி கேட்க மறுக்கிறார்கள்?

படித்தவர், அப்பழுக்கற்றவர் என்பது போல முதலாளித்துவ ஊடகங்களால் சித்தரிக்கப்படும் மன்மோகன் சிங்கிலிருந்து அழகிரியின் கையாளான பட்டுராஜன் வரைக்கும் ஒரு தொடர்புச் சங்கிலியை அமெரிக்க தூதரக அதிகாரிகள் உண்டாக்கி வைத்துள்ளனர். மாநிலத் தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து வக்குகளை வளைப்பதில் இருந்து தேசத்தின் தலைவிதியையே தீர்மானிக்கும் பாராளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பணம் கொடுத்து எதிர்க் கட்சிகளின் எம்.பிக்களை வளைப்பது  வரைக்கும் அமெரிக்கத் தூதரக அதிகாரிகளிடம் இவர்கள் மனம் விட்டு ‘விவாதிக்கிறார்கள்’ என்றால் – இவர்கள் யாருடைய ஆட்கள்?

மன்மோகன் சுதந்திரஇந்தியாவின் பிரதமரா; காலனிய கால வைசிராயா?

பிரணாப் முகர்ஜி நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட சமயத்தில் ஹிலாரி கிளிண்டன் இங்குள்ள தூதரக அதிகாரிக்கு கேபிளில் அனுப்பிய கேள்விகளை நீங்கள் கவனமாகப் படித்தால் ஒரு விஷயம் தெளிவாக விளங்கும். அது அமெரிக்கர்களுக்கு மன்மோகன் மேல் இருக்கும் ஆழ்ந்த அக்கறை. அதில் பிரணாப் எந்தத் (தரகு) முதலாளிக்கு நெருக்கமானவர் என்பதில் தொடங்கி அவருக்கும் மன்மோகனுக்கும் உள்ள உறவு என்ன, ஏன் மான்டேக் சிங் அலுவாலியா நிதி அமைச்சராக நியமிக்கப்படவில்லை என்று நிறைய கேள்விகளை முன்வைக்கிறார். இன்னும் வெவ்வேறு கேபிள்களின் உள்ளடங்கங்களில் ஒரு சங்கிலி போல் துலக்கமாகவும் எடுப்பாகவும் இந்த அம்சம் தெரிகிறது.

மன்மோகன் மேல் இத்தாலிய அன்னை சோனியா காந்திக்கு இல்லாத அக்கறை அமெரிக்க அன்னை ஹிலாரி கிளிண்டனுக்கு இருப்பதன் இரகசியம் என்னவாக இருக்க முடியும்? நீங்கள் மறைந்து கிடக்கும் ஒன்றின் காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டுமானால் முதலில் அதனால் விளைந்த காரியம் என்னவென்பதைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். மன்மோகன் தன் வரலாற்றில் சாதித்துக் கொடுத்த காரியங்களே அவரை அமெரிக்க சேவல் அடைகாத்துக் கொண்டிருப்பதற்கான காரணங்கள்.

பொருளாதார சீர்திருத்தங்கள் என்ற பெயரில் நாட்டின் பொருளாதாரத்தைப் பன்னாட்டு ஏகபோக முதலாளிகளுக்கும் உள்நாட்டுத் தரகு முதலாளிகளுக்கும் திறந்து விட்ட விசுவாசமாகட்டும், இந்தியாவின் வளங்களைக் கூறு போட்டுத் தன் குலசாமிகளான ஏகாதிபத்திய முதலாளிகளுக்குப் படையலிட்ட பக்தியாகட்டும், நிதிமூலதன சூதாடிகளுக்கு தேச எல்லையைத் திறந்து விட்ட அடிமைத்தனமாகட்டும், இராணுவ ஒப்பந்தங்கள் எனும் பெயரில் தேசத்தின் இறையாண்மையைக் காவு கொடுத்த கைக்கூலித்தனமாகட்டும், அமெரிக்க அணு ஒப்பந்தம் எனும் பெயரில் நாட்டின் சத்தித் துறையை பலிகடாவாக்கிய துரோகத்தனமாகட்டும் – இன்னும் இது போல் எண்ணிரந்த சந்தர்பங்களில் மன்மோகன் சிங் என்னும் இந்த முன்னாள் உலக வங்கி அதிகாரி தனது அமெரிக்க எஜமானர்களுக்கு சாதித்துக் கொடுத்த காரியங்களைப் பட்டியலிடுவதானால் அதற்கு தனியே ஒரு புத்தகமே போட வேண்டியிருக்கும் – அதன் காகிதங்களுக்கு இந்தியக் காடுகள் மொத்தத்தையும் கூட அழிக்க வேண்டியிருக்கலாம்.

இதனால் தான் மன்மோகன் சிங்கிற்கு வேறு எவர் மூலமும் எந்த நெருக்கடியும் விளைந்து விடக் கூடாது என்பதில் அமெரிக்கா மிகுந்த கவனம் செலுத்துகிறது. அயல் விவகாரக் கொள்கைகளில் தனது சொந்த அதிகாரிகளின் தயக்கங்களையும் கடந்து இந்தியா செயல்பட மன்மோகன் சிங் தான் காரணம் என்பது அம்பலமாகியிருக்கிறது. பதினெட்டாம் தேதியிட்ட இந்துப் பத்திரிகையில் வெளியாகியுள்ள கேபிள் ஒன்றில் 2005-ஆம் ஆண்டு மன்மோகனின் அமெரிக்க விஜயத்திற்கு முன் அப்போது தூதராயிருந்த டேவிட் முல்ஃபோர்ட் அனுப்பிய தகவல்களில், ஈரான் விஷயமாய் ஒரு கடினமான முடிவை எடுக்க வெளிவிவகாரத் துறை அதிகாரிகள் தயங்குவதாகவும், மன்மோகன் அமெரிக்கா வரும் போது இது பற்றிக் கறாராக பேசி விடவேண்டும் என்றும், ஈரான் விஷயத்தில் தயங்குவது அணு சக்தி ஒப்பந்தம் நிறைவேற தடையாய் இருக்கும் என்று அவரிடம் சொல்லி விட வேண்டும் என்றும் அவர் தகவல் அனுப்புகிறார்.

பின்னர் இந்தியா ஈரானை ஐ.ஏ.இ.ஏவில் கைவிட்டது நாம் அறிந்த செய்தி தான். இதிலிருந்து இரண்டு விஷயங்கள் தெளிவாக விளங்குகிறது. ஒன்று – துறைசார்ந்த அதிகாரிகளின் தயக்கங்களையும் மீறி மன்மோகன் அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு இந்திய நலன்களை பலிகொடுத்துள்ளார்; இரண்டு – அணு சக்தி ஒப்பந்தத்தை அமெரிக்கா இந்தியாவைப் பணிய வைக்க ஒரு துருப்புச் சீட்டாக பயன்படுத்தியுள்ளது. அதாவது பிளாக்மெயில் செய்துள்ளது.

ஹிலாரியின் மேற்படி கேபிளில் வேறு சில சுவாரசியமான கேள்விகளும் இருக்கின்றன. மான்டேக் சிங் அலுவாலியாவிற்குத் தற்போது கொடுக்கப் பட்டுள்ள பணியைப் பற்றியும் அதில் அவர் திருப்தியாய் இருக்கிறாரா என்று மிகுந்த அக்கறையோடு குசலம் விசாரிக்கிறார் ஹிலாரி. அவரது கேபிளில் இருந்த பல்வேறு கேள்விகளுக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்த பதில்கள் என்னவென்பது  இன்னும் வெளியாகவில்லை – இருந்தாலும் அந்த பதில்கள் என்னவாயிருக்கும் என்பதில் உங்களுக்கு இன்னமும் சந்தேகங்கள் ஏதும் இருக்காதல்லவா?

ஆளும் கட்சி மட்டுமல்லாது சி.பி.எம் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களோடும் நட்பு ரீதியில் ‘உரையாடும்’ தூதரக அதிகாரிகள், அவர்கள் பற்றிய தகவல்களையும் அவர்களால் அமெரிக்க நலனுக்கு  ஏற்படக்கூடிய சாதக பாதகங்களையும் அலசுகிறார்கள். கடந்த பாராளுமன்றத் தேர்தலுக்கு முன் அத்வானியைச் சந்தித்துப் பேசும் தூதரக அதிகாரி ஒருவர், அவரால் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எவ்வித பாதிப்பும் வந்து விடாது என்றும், இதை அவரே தன் வாயால் மறைமுகமாக சுட்டிக்காட்டினார் என்றும் குறிப்பிடுகிறார். இன்றைக்கு தொடர்ந்து கேபிள்கள் வெளியாகிவரும் சூழலில், அவை ஒவ்வொன்றிலும் வெவ்வேறு விதமான முக்கியமான தகவல்கள் இருக்கும் நிலையில், இவற்றை முன்வைத்து தமது சொந்த அரசியல் நலன்களுக்காகக் கூட எதிர்கட்சிகள் அரசுக்கு நெருக்கடி கொடுக்கவில்லை. இத் தகவல்கள் வெளியானது தொட்டு இன்று வரையில் இவர்கள் பாராளுமன்றத்தில் போட்டு வரும் கூச்சல்கள் கூட மக்களின் கவனத்திற்கு அப்பால் தான் நடக்கிறது என்பதோடு அதன் வீரியமும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது. மிக முக்கியமாக, இந்த அம்பலப்படுத்தல்களை மக்களிடையே எடுத்துச் சென்று அரசை வீழ்த்த வேண்டு என்கிற முனைப்பு இவர்கள் எவரிடமும் இல்லை.

இந்த விக்கிலீக்ஸ் கேபிள்கள் ஒரு பிரம்மாண்டமான வலைப்பின்னலின் ஒரு சிறிய அங்கத்தின் ஒரு குறுக்குவெட்டுச் சித்திரத்தை நமக்கு வழங்குகிறது. அமெரிக்கா தனது உலக மேலாதிக்கத்தை நிலைநாட்ட ஒரு பக்கம் சட்டத்திற்குப் புறம்பான வகைகளில் ஒரு உளவுச் சங்கிலியை உருவாக்கி வைத்துள்ளது. இராணுவம், போலீசு தொடங்கி சகல அரசு மட்டங்களிலும், கலை கலாச்சாரத் துறைகளிலும், என்.ஜி.ஓக்கள் மூலம் சமூகமட்டத்திலும் – சரியாகச் சொன்னால் – ஒரு ஆக்டோபஸ்ஸின் கரங்கள் எப்படி சகல திசைகளிலும் நீண்டு இயங்குகிறதோ அவ்வாறே இந்த வெவ்வேறு கரங்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட துறைகளில் இயங்கி, அங்கேயிருந்து தகவல்களைச் சேகரித்து அனுப்ப  அமெரிக்காவில் உள்ள தமது தலைமையகத்தோடு பிணைக்கப்பட்டுள்ளது. இது நீளும் ஒவ்வொரு திசையிலும் தமக்குத் தேவையான தகவல்களைப் பெறுவது, சூழலைத் தமக்குச் சாதகமாக முன்னெடுத்துச் செல்வது என்று நமது கற்பனைக்கும் எட்டாத ஒரு பிரம்மாண்டமான இயந்திரம் போல இயங்குகிறது.

உலகெங்கும் புவியியல் ரீதியிலும் இராணுவ ரீதியிலும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளை மிகத் தந்திரமாகத் தன் வலைக்குள் கொண்டு வந்துள்ளது அமெரிக்கா. இதற்காக, பல நாடுகளில் பொருளாதார நெருக்கடிகளை உண்டாக்குவது, உள்நாட்டு எதிர்ப்புக் குழுக்களுக்கு ஆயுத உதவி வழங்கி  திடீர் புரட்சிகளை உண்டாக்குவது, இராணுவப் புரட்சிகளை ஏற்பாடு செய்வது, பொம்மை சர்வாதிகாரிகளை நிறுவுவது என்று சந்தர்பத்திற்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்ப வெவ்வேறு அணுகுமுறைகளைக் கையாள்கிறது. ஈராக் போன்று தனக்குப் பணியாத நாடுகளில் மொன்னையான காரணங்களை முன்வைத்து நேரடியாகவே இராணுவத் தலையீடு செய்யவும் தயங்குவதில்லை. இதற்கு, தென்னமெரிக்க நாடுகள் தொடங்கி, பல்வேறு ஆப்ரிக்க நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்டு பல்வேறு ஆதாரங்கள் நம் கண்முன்னே உள்ளன.

இந்தியாவைப் பொருத்தளவில், இராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டிய அளவுக்கெல்லாம் இங்குள்ள தலைவர்கள் ‘ஒர்த்’ இல்லை என்பதாலும், அவர்கள் ஏற்கனவே அமெரிக்க அடிமை வேலைக்கு மனுப் போட்டுக் காத்திருக்கும் அற்பப் புழுக்கள் என்பதாலும் இங்கே அவர்களின் அணுகுமுறை வேறு விதமாய் உள்ளது. மக்கள் மத்தியில் பரவலான என்.ஜி.ஓ வலைப் பின்னலும், பல்வேறு மட்டங்களில் சட்டவிரோதமான உளவாளிகள் வலைப்பின்னலும், அரசு மற்றும் அரசாங்க மட்டத்தில் நேரடியாக தூதரக அதிகாரிகளும் இந்தியாவின் முடிவுகளைக் கண்காணிக்கவும், ஒற்றறியவும் செய்து வருகிறார்கள்.

இந்தியாவை மிரட்டிப் பணிய வைக்க நேரடியான இராணுவ ஒப்பந்தங்களை ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். மார்ச் 28-ஆம் தேதியிட்ட இந்துப் பத்திரிகையில் இந்திய அமெரிக்க இராணுவ ஒத்துழைப்புச் சட்டகத்தின் விளைவாய் அமெரிக்கா அறுவடை செய்யக் கூடிய பலன்களைப் பற்றி தூதரக மட்டத்தில் பரிமாறிக் கொள்ளப் பட்ட கேபிள்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. குறுகிய காலத்தில் சுமார் 27 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான அமெரிக்க இராணுவத் தளவாடங்களை இந்தியாவிற்கு விற்க முடியும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்கர்கள் மேல் ஓரளவு சந்தேகம் தெரிவிக்கும் அதிகாரிகளையும் மீறி, அமெரிக்காவுடனான இராணுவ ஒத்துழைப்பை இன்னும் அதிகமாக்க ஆளும் கும்பல் எடுத்து வரும் முயற்சிகள் பலவற்றையும் குறிப்பிட்டுள்ளனர். இதில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சம் என்னவென்றால், அமெரிக்கா தான் விற்கும் ஆயுதங்களின் பயன்பாட்டைக் கண்கானிக்கும் உரிமையின் அடிப்படையில் எப்போது வேண்டுமானாலும் இந்திய இராணுவத் தளங்களுக்குள் நுழைய முடியும். இது மறைமுகமாக இந்திய இராணுவத்தை அமெரிக்காவுக்கு அடகு வைப்பதற்கு ஒப்பானதாகும். இப்படி பச்சையாக இந்திய நலனை அமெரிக்காவுக்கு அடகு வைக்கும் இந்த இராணுவ ஒத்துழைப்புச் சட்டகத்தின் ஒரு தொடர்ச்சி தான் அணு சக்தி ஒப்பந்தமாகும்.

அணுசக்தி ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடுவதை எதிர்த்து 2008 ஜூலை மாதம் அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை போலி கம்யூனிஸ்டுகள் விலக்கிக் கொள்கிறார்கள். அப்போது, அரசைக் காப்பாற்ற எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுத்த விவரங்களும் அதை அமெரிக்க தூதரக அதிகாரிகளிடமே காங்கிரசு பெருச்சாளிகள் விவரித்திருப்பதும் சில நாட்கள் முன்பு விக்கிலீக்ஸ் வெளியிட்ட கேபிளில் வெளியாகி இருந்தது. அந்த சமயத்தில் பாராளுமன்றத்தில் விளக்கம் அளித்த காங்கிரசு, விக்கிலீக்ஸின் வெளியிட்டுள்ள இந்த ஆதாரத்தை சட்டபூர்வமானதாக ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் இவைகள் நம்புவதற்கில்லை என்றும் சொன்னது.

அவர்கள் சொல்லி வாயை மூடவில்லை – அவர்களின் எஜமானர்களான அமெரிக்கர்களே அவர்கள் முகத்தில் கரியைப் பூசினர். விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள கேபிள்கள் பற்றிக் கருத்துத் தெரிவித்த அப்போதைய தூதர் டேவிட் முல்போர்ட், அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தியுள்ளார். பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகளைப் பார்த்து “இதெல்லாம் கோர்ட்டில் நிற்குமா” என்று அடித்தொண்டையில் கத்திய பிரணாப் முகர்ஜியின் முகத்திலும், தாம் பணம் கொடுக்கவில்லையென்றும் அப்படிக் கொடுப்பட்டிருந்தால் தமக்குத் தெரியாது என்றும் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள கேபிள்கள் தவறானவை என்றும் விளக்கமளித்த பிரதமரின் முகத்திலும் விக்கிலீக்ஸ் தளத்தை ஆரம்பித்து இரகசியங்களை வெளியிட்டு வரும் ஜூலியஸ் அசாஞ்சே நேரடியாகக் கரிபூசியுள்ளார்.

பல்வேறு நாடுகளில் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ஆவணங்களை ஒரு ஆதாரமாகக் கொண்டு வழக்குகள் நடந்து வருவதைச் சுட்டிக் காட்டும் அசாஞ்சே, அங்கெல்லாம் இவை ஆதாரங்கள் என்பதை கடந்து இந்த விவரங்களை அமெரிக்க தூதரக அதிகாரிகள் பெற்றுள்ள வழிகளையும் ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமர் மக்களைத் தவறாக வழிநடத்துவதாகக் கூறிய அசாஞ்சே, அவர் சொல்வது பச்சைப் பொய் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது மட்டுமின்றி, இந்த இரகசியத் தகவல்கள் முதலில் விக்கிலீக்ஸில் வெளியாகத் துவங்கியதும் அமெரிக்காவே நேரடியாக அனைத்து உலக நாடுகளையும் தொடர்பு கொண்டு இதனால் ஏற்படக்கூடிய பின்விளைவுகள் பற்றி எச்சரித்ததும், அமெரிக்காவின் மாகாணம் ஒன்றில் பல்கலைக்கழக மாணவர்கள் விக்கிலீக்ஸ் தளத்தை பார்க்கத் தடைவிதித்ததும் உள்ளிட்ட அமெரிக்க ஆளும் வர்க்கம் வெளிப்படுத்திய பதட்டமும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இவையனைத்துமே இந்த ஆவணங்களின் உண்மைத் தன்மையைப் பறைசாற்றுகிறது.  ஜூலியன் அசாஞ்சே மேல் நேரடியாக இரகசியத்தைத் திருடிய குற்றச்சாட்டை வைத்து கைது செய்ய முடியாமல் நொட்டை நொள்ளையாக பெட்டி கேசு போட்டுக் கொண்டு கையைப் பிசைந்து கொண்டு நிற்பதற்கும் காரணம் இருக்கிறது. அவ்வாறு செய்வது, இந்த இரகசியங்கள் உண்மையானது என்று அமெரிக்காவே சான்றளித்தது போலாகி விடும் – அதாவது திருடனுக்குத் தேள் கொட்டினால், அமுக்கமாக முனகிக் கொள்ள மட்டும் தான் முடியும். வாய் விட்டு அலற முடியாது.

இந்தியாவின் சர்வகட்சிகளும் சேர்ந்து கொண்டு தொடர்ச்சியாக வெளியாகி வரும் கேபிள்களைப் பகுதி பகுதியாகத் தனித் தனியே பார்ப்பதும், ஒவ்வொன்றிற்கும் ஓரிரு நாட்கள் கூச்சலிட்டு விட்டு பின்னர் அடுத்ததற்குத் தாவுவதாகவுமே உள்ளனர். இதில் இவர்கள் அனைவருமே அமெரிக்க நலன்களுக்கு பாதிப்பு வருமளவிற்குத் தமது எதிர்ப்பு சென்று விடக்கூடாது என்பதிலும் இதனை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லக் கூடாது என்பதிலும் மிகக் கவனமாக இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

ஆக, அனைத்து ஓட்டுக் கட்சிகளும் எந்தப் பாகுபாடுமின்றி அமெரிக்க அடிவருடித்தனத்தை தங்கள் சொந்த குணமாக உணர்வுப் பூர்வமாக வரித்துக் கொண்டு விட்ட ஒரு நிலையில் இருக்கிறார்கள். இங்கே நடத்தப் படும் தேர்தல் கேலிக் கூத்துகள் எல்லாம் ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் தேசம், தேசபக்தி, இறையாண்மை, தேச எல்லையின் புனிதம் என்றெல்லாம் வாய்கிழியப் பேசும் இவர்கள் எதார்த்தத்தில் நாட்டைக் காட்டிக் கொடுக்கும் எட்டப்பன்களாகவே இருக்கிறார்கள்  என்பது இப்போது அம்பலமாகியிருக்கிறது.

இதெல்லாம் தெரிந்தது தானே, அமெரிக்காவுக்கு அடங்கிப் போவதைத் தவிர்த்து நமக்கு வேறு என்ன வழி என்று சிந்திக்கும் அடிமைப் புத்திகளுக்கு அல்ல இந்தக் கேள்வி; உண்மையில் நமது நாட்டின் மேல் அக்கறையும் பற்றும் கொண்டவர்கள் தாமே சிந்தித்துப் பார்த்துக் கொள்ளட்டும் – இந்த பன்றிக் குட்டையில் நீங்களும் விழுந்து புரளத்தான் வேண்டுமா? தொண்டைமானின் வாரிசுகள் அதிகார பீடத்தில் அமர்த்தப்பட்டுத்தான் வருகிறார்கள் ; ஆனால் அவர்கள் தங்கள் மூதாதையர்கள் போலவே தாமும் தலையாட்டி பொம்மைகள்; அப்போது பிரிட்டன் – இப்போது அமெரிக்கா. நீங்கள் தொண்டைமானின் வாரிசுகளோடு உங்களை அடையாளம் காண விரும்புகிறீர்களா இல்லை ஒரு கட்டபொம்மனைப் போல இந்த இழிவுகளை எதிர்த்துப் போராடப் போகிறீர்களா?

_______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

கிரிக்கெட்: பாகிஸ்தான் வெற்றி பெற வாழ்த்துவோம்!

195
கிரிக்கெட்: பாக்கிஸ்தான் வெற்றி பெற வாழ்த்துவோம்!

கிரிக்கெட்: பாக்கிஸ்தான் வெற்றி பெற வாழ்த்துவோம்!

தேர்தல் காலத்தில் கிரிக்கெட்டையும் கொஞ்சம் கவனிக்க வேண்டியிருக்கிறது. இந்தியாவில் இந்து மதத்தை விட பெரிய மதம் கிரிக்கெட். ஆனாலும் ஐந்து, பத்து வருடங்களுக்கு முன்னர் இருந்த கிரிக்கெட் பரபரப்பு இப்போது குறைந்திருக்கிறது. இரண்டு மாதத்திற்கு ஒருமுறை போட்டி, கோப்பை என்று மக்களுக்கு சலித்துப் போகுமளவு ஏராளமான ஆட்டங்கள். 20 ட்வெண்டி வந்ததும் அதன் பரிமாணம் நிறையவே மாறியிருக்கிறது. இரசிகனை பொறுத்த வரை முன்னர் போல நுணுக்கங்களை அணுஅணுவாய் இரசிக்கும் தேவை இப்போது இருப்பதில்லை. ஆறு, நாலு என பரபரவென்று அவன் கூச்சலிடுகிறான்.

சரி, ஒழிந்து போகட்டும் என்றால் கிரிக்கெட்டை வைத்து கல்லா கட்டும் முதலாளிகள் அந்த விளையாட்டை ஏதோ மாபெரும் தேசபக்த போர் போல சித்தரிக்கும் கொடுமை இருக்கிறதே அதைத்தான் தாங்க முடியவில்லை. ஆஸ்திரேலிய அணியுடனான கால் இறுதி ஆட்டத்தில் இந்திய தேசிய கீதம் ஒலித்த போது பலர் அலுவலகங்கள், வீட்டில் எழுந்து நின்றார்களாம். ஒரு அலுவலகத்தில் ஒரு தோழர் எழுந்து நிற்கவில்லை என்று அவரை குமுறி எடுத்துவிட்டார்களாம். கிரிக்கெட் எப்படி தேசபக்தியின் அடையாளமாக மாற முடியும்?

உலகக் கோப்பை கிரிக்கெட்டிற்காக பாக், இந்தியா இரண்டிலும் விளம்பரங்கள் மூலம் தேசபக்தியை உலுப்பிவிடும் பெப்சி தேச எல்லையைத் தாண்டி கல்லாக் கட்டுகிறது. இரசிகன் மட்டும் வாயில் பெப்சியை உறிஞ்சிக் கொண்டு பாரத் மாதாகி – பாக் மாதாகி ஜெய் என்று அலறுகிறான். அதிலும் இந்தியா –  பாக் போட்டி என்றால் ஊடகங்களெல்லாம் சிலிர்த்துக் கொண்டு தேசபக்தியை கிளறி விடுகின்றன.

இப்போது கொஞ்சம் பரவாயில்லை.முன்பெல்லாம் பாக் கிரிக்கெட் அணியை  வெறி பிடித்தவர்கள் போல சித்தரித்து எழுதுவார்கள். நிறைய போட்டிகளில் பாக் அணியே வெற்றி பெற்றிருக்கிறது. கடந்த 33 ஆண்டுகளாக இந்திய பாக் அணிகள் 119 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் முடிவில்லாத 4 போட்டிகளைத் தவிர பாக் அணி 69-லும்,இந்திய அணி 46-லும் வென்றுள்ளன. விளையாட்டு என்றால் வெற்றி தோல்வி சகஜம் என்று போனால் பிரச்சினை அல்ல. அதை ஒரு மானப்பிரச்சினை போல இவர்கள் சித்தரிக்கிறார்கள்.

1986-ஆம் ஆண்டு ஷெர்ஜாவில் நடந்த போட்டியில் கடைசி பந்தில் 4 ரன் அடித்தால் வெற்றி என்ற நிர்ப்பந்தத்தில் பாக் அணி இருக்கிறது. சேதன் சர்மா போட்ட புல்டாசை ஜாவித் மியான்தத் சிக்சருக்கு அனுப்ப இந்திய ரசிகர்கள் அதை எண்ணி எண்ணி பல மாதங்கள் தூங்கவே இல்லை. இப்படி நிறைய முறை பாக் அணி இந்திய ரசிகர்களை தூங்க விடாமல் செய்திருக்கிறது.

காஷ்மீர் பிரச்சினையை வைத்து இருநாட்டு ஆளும் வர்க்கங்களும் உள்நாட்டு மக்கள் பிரச்சினைகளை திசை திருப்பும் வண்ணம் இந்த தேசபக்தி வெறியை அவ்வப்போது கிளப்பி விடும். இன்னொரு புறம் ஆயுதங்களை போட்டி போட்டு வாங்கும். இந்தியா அணுகுண்டு வெடித்தால் பாக்கும் வெடிக்கும். இப்படி இந்த போலி தேசபக்தியால் இருநாட்டு மக்களும் இழந்த செல்வத்தின் மதிப்பு எத்தனை இருக்கும்? ஆயுதங்களுக்கும், இராணுவத்திற்கும் ஒதுக்கும் தொகையை மக்கள் நலனுக்கு ஒதுக்கியிருந்தால் இரண்டு நாட்டு ஏழைகளுக்கும் ஓரளவாவது கதிமோட்சம் கிடைத்திருக்குமே?

எனினும் இந்த தேசபக்தி வியாபரத்தில் முதன்மைக் குற்றவாளி இந்தியாதான். காஷ்மீர் மக்களை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொன்று குவிப்பதும், அது இயல்பாகவே பாக்கிஸ்தானில் ஒரு இந்திய வெறுப்பை தோற்றுவிக்கவும் காரணமாக இருக்கிறது. பாக் ஆளும் வர்க்கம் இதை வைத்து அரசியல் ஆதாயம் அடைகிறது. இரண்டையும் முற்ற வைத்து ஆயுதங்களை விற்பனை செய்து கல்லா கட்டும் அமெரிக்கா எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்கிறது. அமெரிக்க நலனுக்காக பாக்கில் உருவாக்கப்பட்ட தீவிரவாதிகள் பின்பு பல காரணங்களால் முரண்பட்டு இன்று சுயேச்சையாக செயல்படுகிறார்கள். இந்தியாவில் இவர்கள் நடத்திய குண்டுவெடிப்பை விட பாக்கில் நடத்திய வெடிப்புகளும், கொலைகளும் அதிகம். அன்றாடம் ஏதாவது ஒரு பாக் நகரில், மசூதியில் குண்டு வெடிப்பது தொடர்கதையாகி வருகிறது.

காஷ்மீரில் தேச விடுதலை இயக்கங்களை மதவெறி மூலம் மாற்றியமைத்த பெருமை இந்தியா, பாக் இரண்டு நாடுகளுக்கும் சேரும். அதன் விளைவை இப்போது இருவரும் அனுபவிக்கிறார்கள்.

இந்த பின்னணியில்தான் கிரிக்கெட் போட்டிகளையும் கார்கில் போர் போல மாற்றுகிறார்கள். கிரிக்கெட் போட்டியில் பாக் வெற்றி பெற்றால் இந்திய முசுலீம்கள் பட்டாசு வெடித்து கொண்டாடுவார்கள் என்ற அவதூறை இன்றும் இந்து முன்னணி செய்து வருகிறது. முசுலீம் மக்கள் அனைவரும் பாக்கிஸ்தானின் நலனுக்காக வாழ்பவர்கள் போன்ற சித்திரத்தை உருவாக்கி அவர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக்குவதுதான் இந்துமதவெறியர்களின் நோக்கம்.

இந்தியாவில் இந்து மதவெறியர்களால் கொல்லப்பட்ட் இசுலாம் மக்கள் எத்தனை ஆயிரம் பேர்? இதில் எந்த வழக்கிலும் குற்றவாளிகள் தண்டிக்கபடவில்லை எனும்போது ஒரு அப்பாவி முசுலீம் இளைஞன் இயல்பாகவே பாக் கிரிக்கெட் வெற்றியை ஆதரிப்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி நடப்பதில்லை. ஏதோ விதியை நொந்து கொண்டு இந்தியாவில் கிட்டத்தட்ட அகதிகளாகத்தான் வாழ்கிறார்கள்.

அகமதாபாத்தில் நடந்த கால் இறுதிப் போட்டியில் இந்திய அணி வென்றதும் பரிசுகளை வழங்கியவர் மோடி. முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலையின் சூத்திரதாரி இந்திய அணிக்கு பரிசளிக்கிறான் என்றால் அதை பார்ப்பதற்கு விகாரமாக இல்லையா? அந்த மைதானத்தில் இந்திய வெற்றிக்காக கூச்சல் போட்ட நடுத்தர வர்க்கம்தான் பங்குச் சந்தையில் அதிக அளவு பங்குகளை வாங்குவதோடு குஜராத் கலவரம் நடந்த போது அதை வேடிக்கை பார்த்தும் ஆதரித்தது. மோடிக்கு இணையாக முகேஷ் அம்பானியும் போட்டியை குடும்பத்துடன் கண்டு களித்தார். ஆக எல்லாரும் ஒன்றாகத்தான் இணைந்திருக்கிறார்கள்.

கிரிக்கெட் - பாகிஸ்தான் வெற்றிபெற வாழ்த்துவோம்

கிரிக்கெட்டிற்கும் தேசபக்திக்கும் என்ன சம்பந்தம்? இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் உடைகளை பன்னாட்டு நிறுவனங்களின் முத்திரைதானே அலங்கரிக்கின்றது? போட்டிகளுக்கு ஸ்பான்சர் செய்யும் பெப்சி, சோனி, ஹோண்டா போன்ற நிறுவனங்களெல்லாம் உலகமெங்கும் தொழில் செய்கின்றன. இவர்களின் தயவில் இந்தியாவின் தேசபக்தி எப்படி? இந்தியா ஒரு போட்டியில் வென்றதும் மகிழ்ச்சியில் கூட இரண்டு புரோட்டாவையும், பீயரையும் முழுங்குவதுதான் தேசபக்தியின் விளைவுகள். தேசபக்தி இவ்வளவு சுலபமானது என்றால் டாஸமாக்தான் இந்தியாவின் மிகப்பெரிய தேசபக்தி நிறுவனமாக இருக்கும்.

ஆர்.எஸ்.எஸ் அம்பிகள் வீட்டில் பாரதமாதா படத்திற்கு பூஜை செய்வதை தேசபக்தி என்கிறார்கள். கிரிக்கெட் ரசிகர்கள் மைதானத்தில் “கமான் இந்தியா” என்று கூவுவதை தேசபக்தி என்கிறார்கள். இந்தியாவில் கிரிக்கெட்டை இளைஞர்களின் மதமாக மாற்றி நுகர்வு கலாச்சார சந்தையில் சக்கை போடு போடும் நிறுவனங்களை அம்பலப்படுத்த, தேசபக்தி போதையில் மூழ்கியிருக்கும் தருணம் பார்த்து இவர்கள் உங்களது சட்டைப்பையிலிருக்கும் பணத்தை திருடும் வழிப்பறிக்கொள்ளயை தடுத்து நிறுத்த வேண்டுமென்றால் நாம் பாக் அணியை ஆதரித்தே ஆக வேண்டும்.

தேசம் என்பது அங்கு வாழும் மக்களை குறிக்கும். அந்த மக்களது வாழ்க்கை நலனுக்காக செய்யும் நடவடிக்கைகளே தேசபக்தியோடு தொடர்புடையவை. காஷ்மீரில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது, குஜராத்தில் முசுலீம் மக்கள் வேட்டையாடப்பட்டது, தமிழக மீனவர்கள் கடலில் கொல்லப்படுவது, விவசாயிகள் தற்கொலை இதற்கெல்லாம் ஏதாவது சிறு துரும்பையாவது செய்தீர்களென்றால் அது தேசபக்தி எனலாம். அப்படி எதுவும் செய்யாமல் டி.வியை பார்த்து ஐந்தாம் ஜார்ஜ் மன்னனை வாழ்த்தி எழுதப்பட்ட ஜனகனமனவை எழுந்து நின்று பாடி, பின்னர் உருளை சிப்சை விழுங்கி, பெப்சியை அருந்திக் கொண்டு டெண்டுல்கர் பாடில் ஸ்வீப் அடிப்பதை சிலாகித்தால் அது தேசபக்தியா? இல்லை இதுதான் தேசத்துரோகம்.

பாக்கிஸ்தான் நமது அண்டை நாடு மட்டுமல்ல நமது ரத்தமும் கூட. பாக்கிஸ்தான் மக்கள் நமது சகோதரர்கள். நம்மிடமிருந்து அந்தநாடு பிரிந்ததற்கு ஆங்கிலேயர்கள், காங்கிரசு மற்றும் இந்துமதவெறி கும்பல்தான் முதன்மையான காரணம். இன்று இந்திய ஆளும் வர்க்கங்களால் ஏழை நாடாக வாழ வேண்டிய அவல நிலையில் இருப்பவர்கள். அமெரிக்காவுடன் கூடிக் குலவும் பாக் ஆளும் வர்க்கத்தால் சொந்தநாட்டில் பயங்கரவாத நிகழ்வுகளோடு செத்துப் பிழைக்கும் துர்பாக்கியவாதிகள்.

பாக் கிரிக்கெட் அணியையே எடுத்துக் கொள்ளுங்கள். இலங்கை அணியோடு நடந்த டெஸ்ட் போட்டியில் தீவிரவாதிகள் தாக்கிய பிறகு எந்த அணியும் அங்கே செல்வதில்லை. இந்த உலகப் போட்டியும் கூட அங்கு நடக்க வேண்டியது, ரத்து செய்யப்பட்டது. பாக் கிரிக்கெட் வாரியத்திற்கு கூட ஏதோ கொஞ்சம் நட்ட ஈடு கொடுத்து வாயை அடைத்தார்கள். மற்ற அணி வீரர்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும்போது அவர்களுக்கு அந்த வாய்ப்புகள் இல்லை. எளிதாக மேட்ச் பிக்சிங் புரோக்கர்கள் கைகளில் விழுகின்றனர்.  மேட்ச் பிக்சிங் விவகாரத்தில் இந்தியா உட்பட மற்ற நாட்டு அணிகளது யோக்கியர்களும் அடக்கம் என்றாலும் பாக் அணிதான் இதில் மிகவும் கெட்ட பெயரை சம்பாதித்திருக்கிறது. தற்போது கூட பாக் உள்துறை அமைச்சர் பாக் அணி வீரர்களை நேரடியாகவே மேட்ச் பிக்சிங் குறித்து மிரட்டியிருக்கிறார். அவர்களது ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்படுகிறது என்று எச்சரித்திருக்கிறார். இதையெல்லாம் ஏற்றுக் கொண்டு அடிமைகளைப் போல ஆடவேண்டிய நிலைமையில் அந்த அணி இருக்கிறது.

இந்தியா பாக் இரண்டு நாடுகளின் மேட்டுக்குடி சூதாடிகள் மொகலியில் நடைபெற இருக்கும் ஆட்டத்தை வைத்து பத்தாயிரம் கோடிக்கு சூதாடப் போவதாக செய்திகள் கூறுகின்றன. ஆனால் அப்பாவி இரசிகர்களோ தமது நாடு வெல்லப் போவதை எண்ணி காத்திருக்கிறார்கள். விளையாட்டை விளையாட்டாக பார்க்காமல் இப்படி ஒரு போலி தேசபக்தி சண்டைக்கு என்ன அவசியம் இருக்கிறது?

தற்போது மவுனமோகன்சிங் அழைப்பின் பேரில் பாக் பிரதமர் கிலானி வர இருக்கிறார். இதை கண்டித்து எழுதும் பால்தாக்கரே அப்படியே “கசாப், அப்சல் குருவுக்கும் டிக்கெட் எடுத்துக் கொடுத்து அழையுங்கள்” என்று கேலி செய்கிறார். முன்னர் போல ஆடுகளத்தை சேதம் செய்யும் பலம் இன்று சிவசேனாவிற்கு இல்லை என்றாலும் இந்துமதவெறியரின் மனப்போக்கிற்கு இதுதான் எடுத்துக்காட்டு. பாக்குடன் எந்த உடன்பாடும் காணாதபடி இருப்பதையே இவர்கள் விரும்புவார்கள். இவர்களது திமிருக்காக இருநாட்டின் ஏழை குடும்பங்களிலிருந்தும் இராணுவத்திற்கு சென்று வாழும் சிப்பாய்கள் மட்டும் சுட்டுக் கொண்டு சாகவேண்டும். ஆர்.எஸ்.எஸ் அம்பிகளோ பூட்டிய அறைக்குள் பாதுகாப்பாக நின்று பாரத்மாதாகி ஜெய் என்று முழங்குவார்கள்.

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் நடந்த கால்பந்து போட்டியில் ஈரான் வென்றதை அந்நாட்டு மக்கள் அரசியல் வெற்றி போல கொண்டாடியதை கூட ஆதரிக்க முடியும், புரிந்து கொள்ள முடியும். ஆனால் இரண்டு பரதேசி நாடுகள், ஏழைகளை அதிகம் கொண்டிருக்கும் நாடுகள் இப்படி மோதிக் கொள்வதையும், விளையாட்டு வெற்றியை போர் வெற்றி போல சிலாகிப்பதையும் எப்படி ஆதரிக்க முடியும்?

எனவே இந்த போலி தேசவெறியை தோலுரிக்கும் வண்ணம் நாம் பாக் அணியை ஆதரிக்க வேண்டும். இந்திய-பாக் மக்களின் ஒற்றுமை மூலமே இந்தியா பாக் ஆயுத போட்டியை நாம் தட்டிக்கேட்க முடியும். உடனே சில தேசபக்த குஞ்சுகள் கசாபை அனுப்பிய நாட்டிற்கா நமது ஆதரவு என்று வெடிப்பார்கள். சரி சம்ஜூத்தா எக்ஸ்பிரசுக்கு சங்க பரிவாரங்களை அனுப்பியது மட்டும் என்னவாம்? அதில் கொல்லப்பட்ட பாக்கின் அப்பாவி மக்களது உயிர் மட்டும் மலிவானதா?

பொதுவில் கிரிக்கெட் என்பதே சோம்பேறித்தனமான விளையாட்டு. மனித உடலின் அதீத சாத்தியங்களுக்கும், கொண்டாட்டத்திற்கும் அங்கே இடமில்லை. கால்பந்து, ஹாக்கி போல மனதுக்கும், உடலுக்கும் வேலை கொடுத்து ஆற்றுப்படுத்தும் சக்தி அதற்கில்லை. வீரர்கள் பெரும்பான்மை நேரங்களில் அசையாமல் இருப்பதுதான் கிரிக்கெட்டின் பண்பு. அதனால்தான் அதுஆங்கிலேய ‘துரை’களின் மத்தியில் பிரபலமாக இருந்தது. இந்தியாவில்கூட பெரும்பான்மை ஆதிக்க சாதிகளை சார்ந்தோரே  கிரிக்கெட்டில் நுழைந்து பெரிய ஆளாகும் வாய்ப்பை இன்றும் பெறுகிறார்கள்.  இந்திய அணியின் பலவீனமாகக் கருதப்படும் வேகப்பந்து வீச்சாளர்கள் குறைவுக்கும் இது முக்கிய காரணம். மற்ற அணிகள் மூன்று வருடத்துக்கு ஒரு அதிவேக பந்து வீச்சாளர்களை தயார் செய்துவிடும் போது இங்கே முப்பது வருடத்துக்கு ஒரு நட்சத்திர ஆட்டக்காரர் வருவது பெரிய பாடாக இருக்கிறது. மாட்டுக்கறி சாப்பிட்டு வளர்ந்தால்தான் நூறு மைல் வேகத்தில் பந்து போட முடியும். பார்ப்பனிய ‘மேல்’சாதியினர் பிடியில் இந்திய கிரிக்கெட் இருக்கும் போது இது இப்போதைக்கு சாத்தியமில்லை.  அந்த வகையில் ‘மேல்’சாதி இந்திய அணிக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்கள் பாக் அணியைத்தான் ஆதரிக்க வேண்டும். வட இந்தியாவில் இருப்பது போன்ற இந்து தேசிய வெறி தமிழகத்தில் இல்லை. இதன் பாதிப்பில்தான் சென்னையில் இந்திய அணிதோற்றாலும் வெற்றிபெற்ற அணியை இரசிகர்கள் எழுந்து நின்றுபாராட்டுவார்கள் என்பது உலகறிந்த செய்தி. என்ன இருந்தாலும் பெரியார் பிறந்த மண் அல்லவா?

வெல்லட்டும் பாக் கிரிக்கெட் அணி ! ஒழியட்டும் போலி இந்திய தேசபக்தி !!

_________________________________________
– இரவிசங்கர்
_________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 

 

 

சோனியா,ஜெயா, குஷ்பு, புவனேஸ்வரி, கனிமொழி…பெண்களின் பெருமையா?

25

வர்க்க விடுதலையும் பெண் விடுதலையும்

ரசியல் என்பது ஆண்கள் கோலேச்சும் துறைதான், பெண்களுக்கு அங்கே இடமில்லை என்று பொழுது போக்கு பெண்ணியவாதிகள் சிலர் அவ்வப்போது சலித்துக் கொள்வார்கள். இந்த சலிப்பினாலேயே சோனியா, ஜெயா, குஷ்பு, புவனேஸ்வரி, கனிமொழி போன்ற பெண் தலைவர்களின் அரசியல் வெற்றியை ஆரவாரத்துடன் வரவேற்பார்கள். இந்த பெண் தலைவர்கள் மீது அரசியல் ரீதியான விமரிசனங்கள் இருந்தாலும் ஆணாதிக்கம் மிகுந்த அரசியலில் இவர்கள் பெற்ற வெற்றியை சிலாகிப்பார்கள்.

முதலில் எந்த ஒரு துறையையும் அதில் ஆதிக்கம் செலுத்தும் சக்திகளையும் இப்படி ஆண், பெண் என்று பாலின வேறுபாட்டால் எளிமையாக பிரிப்பது அபத்தம். இந்த உலகில் அரசியல், பொருளாதாரம், சமூகம் அனைத்தும் பாலின வேறுபாட்டை அடிப்படையாக வைத்து மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. செயல்படுவதில்லை. மேற்கத்திய நாடுகளில் எழுந்த நடுத்தர வர்க்க பெண்ணியவாதிகள்தான் முதலில் இப்படி பார்க்கும் பார்வையை பரப்பினார்கள். முதலாளித்துவம், கம்யூனிசம் எல்லாமே ஆணாதிக்கம்தான் என்று ஒப்பிட்டு பேசுவார்கள். சரி, இதிலிருந்து எப்படி விடுதலை என்று கேட்டால் அது இறுதியில் முதலாளித்துவ ஜனநாயகத்தின் கோரிக்கையாக மட்டுமே இருக்கும். இன்று அந்த பார்வை தேய்ந்து காற்றில் கரைந்து போயிருக்கிறது. காரணம் அது யதார்த்தத்தோடு கொண்டிருக்கும் கற்பனையான உறவுதான்.

அதே நேரம் உலகம் முழுவதும் சமூக இயக்கத்தில் பெண்ணடிமைத்தனமும், ஆணாதிக்கமும் அப்பட்டமாகவும், நுட்பமாகவும் பின்பற்றப்படுகிறது என்பதில் சந்தேகமில்லை. இந்த பிரச்சினையை வார்த்தை, மொழியில் மட்டும் ஆய்வு செய்து கண்டுபிடிப்பவர்கள் எவரும் நடைமுறையில் உழைக்கும் வர்க்கத்தின் பெண் விடுதலை குறித்து எதுவும் பேசுவதில்லை, செய்வதில்லை. அது குறித்து அறிந்ததும் இல்லை. ஏனெனில் பெண்கள் எல்லாருக்கும் பிரச்சினைகள் என்பது ஒரே மாதிரியாக இல்லை. பாலியல் ரீதியான பிரச்சினைகளும் வர்க்கத்திற்கு ஏற்றவாறு மாறுபடுகிறது. பொதுவில் வசதியானவர்கள், ஏழைகள் என்ற வர்க்க வேறுபாடே பெண் உலகத்தையும் தீர்மானிக்கிறது. ஏழைப் பெண்ணின் விடுதலை என்பது பொருளாதாரா துறையில்தான் மையம் கொண்டிருக்கிறது. ஆணாதிக்கம் என்பது அதற்கு உட்பட்ட ஒன்றுதான். அந்த வகையில் ஒடுக்கப்பட்ட மக்கள் என்ற வகையில் ஆண்களும், பெண்களும் ஒன்றாகத்தான் அவதிப்படுகிறார்கள்.

இந்த உலகில் ஆணாதிக்கத்தை நிர்மூலமாக்குவதற்கு, பொருளாதார அடிமைத்தனத்திற்கு எதிரான போராட்டத்தின் மூலம் ஒடுக்கப்பட்ட பெண்களே துவக்கினார்கள், சாதித்திருக்கிறார்கள். உழைக்கும் மகளிர் தினத்தின் வரலாறே அதற்கு சான்று. சென்னை சேரி ஒன்றில் வாழும் பெண்ணிடம் என்ன பிரச்சினை அவரது வாழ்வில் முதன்மையானது என்று கேட்டால், “நேரத்திற்கு வராத குடிநீர், கழிப்பறை வசதி இல்லாதது, விலைவாசி உயர்வு, நிலையான வேலை கிடைக்காமை, ஆண்களின் குடிப்பழக்கம் ” என்று பட்டியிலிடுவார். இதையே ரோட்டரி கிளப்பிற்கு வரும் சீமாட்டிப் பெண்ணிடம் கேட்டால், சினிமா, விளம்பரத் துறை, தொழில் முனைவோர், அரசியல் கட்சி போன்றவற்றில் பெண்கள் முன்னிலை வகிக்காதது குறித்து வருந்துவார். அந்த வருத்தத்திற்கு பின்னர் ரோட்டரி கிளப்பின் உறுப்பினர் ஒருவர் அளிக்கும் நட்சத்திர விருந்துடன் அந்த மகளிர் தின கொண்டாட்டம் முடிவுக்கு வரும்.

இன்றைய அரசியலின் பெண் தலைவர்கள் யாருடைய பிரதிநிதிகள்?

பாராளுமன்றத்தில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு இன்னமும் நிறைவேறாமல்தான் இருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வட இந்திய சமூக நீதிக் கட்சிகள் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கான இட ஒதுக்கீடு தேவை என்கிறார்கள். 33 சதவீத இட ஒதுக்கீடும் சரி, இல்லை அதற்குள் சாதி ரீதியான இட ஒதுக்கீடும் சரி இந்த நாட்டின் பெரும்பான்மை உழைக்கும் பெண்களது வரவை நிறைவேற்றப் போவதில்லை. வர்க்க ரீதியாக ஆதிக்கம் செய்யும் குடும்பத்தின் பெண்கள்தான் இந்த இட ஒதுக்கீட்டை பெறப் போகிறார்கள். அந்த வகையில் அவர்களது பிரதிநிதித்துவமும், செயல்பாடும் வசதி படைத்த வர்க்கத்தின் சார்பாகவே நடைபெறும். இதில் ஆணென்ன, பெண்ணென்ன? இன்று அரசியல் என்பதே மேட்டுக்குடி குலக்கொழுந்துகளின் தொழில் என்றான பிறகு அதில் பெண்களுக்கு அளிக்கப்படும் இட ஒதுக்கீடு மட்டும் அன்றாடங்காய்ச்சிகளின் வாய்ப்பாகவா இருக்கப் போகிறது?

மயிலாப்பூர் தொகுதியில் காங்கிரசு சார்பாக போட்டியடும் ஜெயந்தி தங்கபாலுவை வைத்து பெண்ணுரிமைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று யாராவது பேசினால் சிரிக்க மாட்டீர்களா? தங்கபாலுவின் மனைவிக்கு இடம் கிடைத்தமைக்கு காரணம் அவர் தங்கபாலு என்ற அரசியல தரகர், சுயநிதிக் கல்லூரி முதலாளி, மெகா டி.வி ஓனர், மற்றும் காங்கிரசு தலைவர் என்ற ஒரு மாகாராஜாவின் மகாராணி அந்தஸ்தை பெற்றிருப்பதுதான்.

தமிழகத்தின் உள்ளூராட்சி தேர்தலையே எடுத்துக் கொள்ளுங்கள். இதில் சில இடங்கள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டு அவர்களும் வெற்றி பெற்று செயல்படுகிறார்கள். இந்த பெண்களில் பெரும்பான்மையினர் தங்கபாலு போன்ற உள்ளூர் அரசியல் ஆதிக்க குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்தான். மேலும் இன்றும் கூட இந்த பெண் தலைவர்களை யாரும் உள்ளூரில் பஞ்சாயத்து தலைவர்களாக கருதுவதில்லை. ஊராட்சி தலைவர் யார் என்று கேட்டால் கணவனது பெயரைத்தான் மக்கள் சொல்லுவார்கள். இதனால் மக்கள் ஆணாதிக்க கண்ணோட்டம் கொண்டவர்கள் என்று பொழுது போக்கு பெண்ணியவாதிகள் கருதலாம். உண்மை அதுவல்ல.

ஆதிக்கம் செய்யும் குடும்பத்தின் தலைவனாக இருக்கும் கணவனது செயல்பாட்டில் இந்த மனைவியும் பங்கு பெறுவதன் நீட்சிதான் பஞ்சாயத்து தலைவர் அவதாரம். சாதி, வர்க்க ரீதியாக ஆதிக்கம் செய்யும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் யாரும் தங்களை பாலின ரீதியாக அடையளம் காண்பதில்லை. மக்களும் அவர்களை அப்படி பார்ப்பதில்லை.

எனில் அரசியலில் பெண்களின் உண்மையான பிரதிநிதித்துவத்தை யார் செய்யமுடியும்? உழைக்கும் வர்க்கங்களைச் சேர்ந்த பெண்கள் வரும் போது மட்டும்தான் அவர்கள் உண்மையிலேயே பஞ்சாயத்து தலைவர்களாக அறியப்படுவார்கள். அவர்களின் கணவர்களது பெயரில் அறியப்படமாட்டார்கள். இதை இன்னும் எடுப்பாக பார்க்க வேண்டுமென்றால் நாடறிந்த பெண் தலைவர்களது பாத்திரத்தின் மூலம் எதிர்மறையாக அறியலாம்.

நேரு குடும்பத்தின் சீமாட்டி சோனியா காந்தி

காங்கிரசு கட்சியின் தலைவராக இந்திய மக்களின் தலைவிதியை தீர்மானிக்கும், வழிநடத்தும் சோனியாவின் அருகதை என்ன? ஆக்ஸ்போர்டில் அவர் ராஜீவ் காந்தியை காதலித்தார் என்பதுதான். ராஜ குடும்பத்தை சேர்ந்த இளவரசரை காதலிக்கும் தகுதியே ஒரு பெண்ணை நாடாளும் ராணியாக மாற்றிவிடும் என்றால் அந்த நாட்டை யாராலும் காப்பாற்ற இயலுமா என்ன? முக்கியமாக சோனியாவுக்கு இந்தியாவைப் பற்றியோ, இல்லை இந்திய மக்களது பிரச்சினைகளைப் பற்றியோ இன்று வரை எதுவும் தெரியாது. இது அவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்பதால் மட்டுமல்ல. உள்நாட்டிலேயே பிறந்த பிரியங்கா காந்திக்கு மட்டும் உண்மையான இந்திய வாழ்க்கை குறித்து என்ன தெரியும்?

ராஜிவ் காந்தி அரசியலுக்கு வந்தது சஞ்செய் காந்திக்கு நடந்த விபத்து காரணமென்றால், சோனியா காந்தி வந்ததும் கூட ராஜிவ் காந்திக்கு நடந்த விபத்துதான். ஆக காங்கிரசின் தலைவராக வருவதற்கு இத்தகைய விபத்துக்களே போதுமென்றால் நாடு எத்தகைய ஆபத்தில் இருக்கிறது? ராஜிவ் காந்தி கொல்லப்பட்டதும் சோனியா காந்தியை கெஞ்சிக் கூத்தாடி காங்கிரசின் தலைவராக்கியது காங்கிரசின் ஆண் தலைவர்கள்தான். இதனால் சோனியா காந்தி அரசியல் ஆசைக்கு அப்பாற்பட்டவர் என்பதல்ல. இத்தகைய சீன்கள் நடந்தால்தான் தன்னைப்போன்ற வெளிநாட்டுப் பெண் பதவிக்கு வருவது பொருத்தமாக இருக்கும் என்பது அவரின் அணுகுமுறை.

நேரு குடும்பத்தை சேர்ந்த ஒரு பொம்மையைக் கூட முன்னிறுத்தி இந்திய மக்களை வசியப்படுத்தலாம் என்று காங்கிரசு பெருச்சாளிகள் முடிவு செய்ததன் அபத்தம்தான் சோனியா. இப்படி ஜனநாயகமற்ற முறையில் குடும்ப அந்தஸ்து காரணமாக தலைமைக்கு வந்த சோனியா அதே போல பல காங்கிரசு குடும்ப பெருச்சாளிகளை வைத்துத்தான் அரசியல் செய்ய முடியும். செய்தும் வருகிறார்.

அந்த வகையில் இன்றைய காங்கிரசு மேல் மட்டத் தலைமை என்பது பரம்பரை பரம்பரையாக ஆணாதிக்க இந்துத்வ நிலவுடைமை விழுமியங்களில் புரண்டு நெளியும் கூட்டம்தான். அதன்படி இங்கே இந்த ஆணாதிக்க அடக்குமுறைக்கு தலைமை தாங்கும் வேலையைத்தான் சோனியா செய்து வருகிறார். இதனால் சோனியா பெண் என்பதோடு பெண் விடுதலைக்கும் எதிரியாகவே இருக்கிறார். தள்ளாத வயதிலும் கூட பொறுக்கியாக முடியும் என்று சாதனை படைத்த என்.டி.திவாரி போன்ற மகான்களையெல்லாம் கவர்னர் ஆக்கியது அன்னை சோனியாதான் என்பதை நினைவில் கொள்க.

புரட்சித் தலைவரின் ஆசியுடன் புரட்சித் தலைவி

ஜெயலலிதாவை எடுத்துக் கொள்வோம். எம்.ஜி.ஆரின் படங்களிலும் அவரது வாழ்க்கையிலும் ஆசை நாயகியாக பணி செய்த பலரில் இவரும் ஒருவர். எம்.ஜி.ஆர் கருத்தளவிலும், நடைமுறையிலும் ஒரு பாசிஸ்ட்டாக நடந்து கொண்ட தலைவர். இந்த பாசிசத்துக்குள் பெண்ணை பச்சையாக அடிமைப்படுத்தி ருசிக்கும் விகாரமும் இயல்பாகவே இருக்கிறது. இதை ஏற்றுக் கொண்டுதான் புரட்சித்தலைவியின் இளமைப் பருவம் கழிந்தது. அந்த தகுதியிலேயே பின்னர் கட்சியின் தலைமையை கைப்பற்றினார். ஜானகி, லதாவுக்கு மாற்றாக இந்த தலைவியை சில அ.தி.மு.க பெருச்சாளிகள்தான் திட்டமிட்டு திணித்து வெற்றி பெற்றனர். தமிழகம் கண்ட மிகப்பெரும் அரசியல் விபத்தாகவும் அது மாறிப் போனது.

இந்த அ.தி.மு.க பெருச்சாளிகளும் சரி, பின்னர் வந்த சசிகலா கும்பலின் பெருச்சாளிகளும் சரி, சாதி ஆதிக்கத்திற்கும், பொருளாதார சுரண்டலுக்கும் பெயர் பெற்றவர்கள். அதன் உள்ளீடாக இருக்கும் பெண்ணடிமைத்தனம்தான் இவர்களது கோட்பாடு மற்றும் நடைமுறை என்பதை விளக்கத் தேவையில்லை. ஜெயாவின் சாணக்கிய குருவான சோ கூட தன்னை அப்பட்டமான பெண் விடுதலையின் எதிரியாக பேசி, எழுதி வருபவர்தான். அ.தி.மு.க மகளிர் அணி தலைவிகள் என்றாலே பொதுவில் புரிந்து கொள்ளப்படும் இழிவான பொருளுக்கான அடிப்படையை இவர்கள்தான் உருவாக்கியவர்கள்.

ஆனானப்பட்ட தேவர் சாதி சிங்கங்களே ஜெயாவின் காலில் விழுந்து கும்பிடுவதை வைத்து இது ஆணாதிக்கத்தின் தோல்வி என்றோ பெண் விடுதலையின் வெற்றி என்றோ முடிவு செய்து விடக்கூடாது. இங்கே ஆதிக்க சாதி – வர்க்கத்தின் தலைவியாகவே ஜெயாவுக்கான பாசிசத் தலைமை வழங்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் அம்மா காலில் விழுபவர்கள் அனைவரும் தனிப்பட்டமுறையில் பெண்களை கேடாக நினைத்து நடத்துபவர்கள்தான். அவர்களது குடும்பத்தை சேர்ந்த பெண்கள் கூட பொதுவில் அடிமை ராணிகளாகத்தான் வாழ்கிறார்கள். ஆனாலும் பாமரர்களை அடிமைப்படுத்தும் அடிமை ராணிகள்.

பெண்ணுரிமை திடீர் போராளி குஷ்பு

ந்தியா டுடே மூலம் பெண்ணுரிமை போராளியாக அவதரித்த குஷ்புவை எடுத்துக் கொள்வோம். கதாநாயகி என்றால் சுண்டி விழும் சிவப்பு நிறத்தில் உள்ள வட இந்திய பெண்கள்தான் வேண்டும் என்று அலைகிற தமிழ் இயக்குநர்களின் தேடலில் கிடைத்த குஷ்பு வடக்கிலிருந்து வந்தார். கதாநாயகியாக நிலைபெற்றார். பிரபுவுடன் காதல். அவரை மணம் செய்ய்யப் போகிறார் என்றெல்லாம் பேசப்பட்டு வந்த நேரம். ஆனாலும் பரம்பரை பண்ணையார் மரபுகளுடன் வாழும் சிவாஜியின் குடும்பம் ஒரு நடிகையை ஏற்க தயாரில்லை. அங்கீகாரமில்லாமல்தான் வாழ வேண்டும் என்ற நிலையில் அது முடிவுக்கு வந்தது. சரி, பெண்ணுரிமை போராளியான குஷ்பு அப்போது இது குறித்து போராடவோ குறைந்த பட்சம் பேசக்கூட தயாரில்லை. என்ன இருந்தாலும் பெரிய இடத்து விவகாரமல்லவா!

பின்னர் சுந்தர் சியை மணந்தார்.  ஜாக்பாட் தொலைக்காட்சி தொடர்களின் மூலம் தனது இமேஜை உயர்த்திக் கொண்டார். திரைப்படங்களை தயாரிக்குமளவும் வளர்ந்தார். ஆரம்பத்தில் அம்மாவுடன் நெருக்கமானார். பின்பு ஏதோ பிசினஸ் தகராறு காரணமாக அய்யா கட்சியில் சேர்ந்தார். இடையில் இந்தியா டுடே மூலம் மண உறவுக்கு முந்தைய பாதுக்காப்பு குறித்து பேசினார். தமிழ் ஆர்வலர்கள் பொங்கி எழுந்து குஷ்புவை பெண்ணுரிமை போராளியாக மாற்றி விட்டார்கள். கடைசியில் அதே தமிழ் ஆர்வலர்கள் மூர்ச்சையாகுமளவு தி.மு.கவிலே சேர்ந்து செம்மொழி மாநாட்டிலெல்லாம் முதல் வரிசையில் இடம்பெற்றார். தமிழ் பெற்ற பேறு!

தமிழ் திரையுலகம் திரையில் மட்டுமல்ல திரைக்கு பின்னாலும் பெண்களை வதைக்கும் கொடுமைகள் சொல்லி மாளாதது. அந்த உலகில் அந்த கொடுமைகளை ஏற்றுக் கொண்டு சம்பாதித்து ஆளான குஷ்பு அது குறித்து எங்கேயும் பேசியதில்லை. ஏனெனில் அந்த விழுமியங்கள் சினிமாத் துறையில் இயல்பாக இருக்கும் ஒன்று. அதை ஒத்துக் கொண்டுதான் ஒரு நடிகை அவர் பிரபலமானாலும் குப்பை கொட்டமுடியும். சரியாகச் சொன்னால் பெண்ணை போகப் பொருளாக பார்க்கும் கதைகளில் நடித்து கோடிகளில் சம்பளம் வாங்கும் ஒரு நடிகை பெண்ணுரிமை குறித்து கனவிலும் கூட பேச முடியாதல்லவா?

இன்று தி.மு.கவின் உள்ளூர் பண்ணைகளை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்கிறார். புரட்சித் தலைவியின் புகழ் பரப்பும் அ.தி.மு.கவிற்கு எதிராக தி.மு.க இறக்கியிருக்கும் மற்றுமொரு புரட்சித் தலைவிதான் குஷ்பு. எனினும் கருணாநிதி குடும்பப் பெண்கள் பொறாமை பயம் காரணமாக விதித்திருக்கும் வரம்பிற்குள் நின்றுதான் குஷ்பு தனது அரசியல் கடமையை ஆற்றுகிறார். பதிலுக்கு தி.மு.கவின் வர்த்தக சாம்ராஜ்ஜியத்தில் அவருக்கும் ஒரு பங்கு காத்திருக்கிறது. எனில் குஷ்புவின் அரசியல் வெற்றியை பெண்களின் வெற்றியாக பார்க்க முடியுமா?

முக்குலத்தோர் வீராங்கனை புவனேஸ்வரி

ரசிகர்களால் பூனைக்கண் என்று அன்பாக அழைக்கப்படும் புவனேஸ்வரியின் கதையை பார்ப்போம். சினிமாவில் சில காட்சிகளில் வந்து போகும் பாத்திரமாகவும், தொடர்ந்து தொலைக்காட்சி சீரியல்களில் வில்லியாகவும் நடித்து ஏதோ கொஞ்சம் புகழ் பெற்றார். பிறகு வாய்ப்பு கிடைக்காத போது அல்லது கிடைத்த வாய்ப்புகளை வைத்து மற்ற நடிகைகள் செய்யும் ‘தொழிலை’யும் செய்து வந்தார். அதில் ஏதோ உள் குத்து நடந்து விபச்சார வழக்கில் கைதானார். தன்னைக் கைது செய்தவர்கள் மற்றவர்களை ஏன் கைது செய்யவில்லை என்று புவனேஸ்வரி போட்ட பட்டியிலில் தமிழ் திரையுலகமே கொஞ்சம் பயந்து போனது. அதை எதிர்த்து பெரிய ஆர்ப்பாட்டமும் செய்தது. இடையில் புவனேஸ்வரி பேசத் துவங்கினால் பெரிய கைகள் சிக்கும் என்று அந்த வழக்கை ஏதோ ஊற்றி மூடிவிட்டார்கள்.

பிறகு திடீரென்று ஒரு நாளில் தேவர் குல நாட்டாமை சேதுராமன் கட்சியில் சேர்ந்து மகளிர் அணித் தலைவியாக அறிவிக்கப்பட்டார். விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட பெண்ணையே இப்படி ஒரு பதவியில் நியமித்தது குறித்து அந்த தேவர் குல சிங்கத்திற்கு விளிம்பு நிலை மனிதர்களை வாழ்விக்க வந்த திலகம் என்று பட்டம் கொடுக்க முடியுமா? புரட்சித் தலைவியின் காலில் விழுந்த சிங்கங்கள் இப்படி புவனேஸ்வரியையும் தலைவியாக்கி அழகு பார்ப்பதில் பெரிய முரண்பாடு இல்லை. இன்று புவனேஸ்வரி போயஸ் தோட்டம் சென்று அம்மா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய கையோடு தேர்தல் பிரச்சாரத்திற்கும் சென்று விட்டார்.

இங்கே கவர்ச்சிக்கு அறியப்பட்ட ஒரு நடிகையை மலிவாக பயன்படுத்தும் ஓட்டுக் கட்சி அரசியலைத்தான் காண்கிறோம். தொழில் செய்யும் ஒரு நடிகை அரசியலுக்கு வரக்கூடாதா என்று சிலர் கேட்கலாம். ஆனால் அன்றாட வாழ்வில் ஆயிரத்தெட்டு இடர்களுடன் வாழும் உழைக்கும் வர்க்க பெண்களை இந்த நடவடிக்கை இழிவுபடுத்தவில்லையா? மேக்கப் போட்ட ஒரு கவர்ச்சி நடிகையை வைத்து தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி கூட்டம் சேர்க்கலாம் என்பது கூட சாராம்சாத்தில் விபச்சாரம் போன்றதுதான்.

கவிஞர் கனிமொழியின் அரசியல் பிரவேசம்

ஸ்பெக்ட்ரம் ஊழலில் வெயிட்டாக அடிபடும் கனிமொழி சமீபத்தில் குமுதம் ரிப்போர்ட்டரில் ” நான் பெண் என்பதால் டார்கெட் செய்யப்படுகிறேன்” என்று கூறியிருந்தார். பெண்ணுரிமை என்னபாடு படுகிறது பாருங்கள்.

அரசியலுக்கு வருவதற்கு முன்னர் கனிமொழி காலச்சுவடிலும், உயிர்மையிலும் சில வீணாய்ப் போன கவிதைகளை எழுதி வந்தார். எல்லாம் திராவிட இயக்கத்தோடு ஒட்டவே ஒட்டாத தனிமனித – உள் மன – அடி ஆழக் – கவிதை கண்றாவிகள். கனிமொழிக்கு ஜால்ரா போட்டால் தி.மு.க அரசில் பொறுக்கித் தின்னலாம் என்று கணக்கு போட்ட சில இலக்கியவாதிகள் இந்த கவிதைகளுக்கு தேனே,மானே என்று டன்கணக்கில் ஐஸ் வைத்தார்கள். கனிமொழியும அதை உண்மையென நம்பி அவர்களை ஆதரித்தார்.

பிறகு கருணாநிதியின் குடும்பத்திற்குள் பாகப்பிரிவினை வந்த போது ராஜாத்தி அம்மாள் “எனக்கு ஒன்னுமே இல்லையா” என்று மூக்கைச் சிந்திய போது கனிமொழி எம்.பியானார். பிறகு டெல்லியில் தி.மு.க மையமானார். ஸ்பெக்ட்ரம் ஊழலில், ராடியா டேப்பில் புகுந்து விளையாடினார். இவரும் தற்போது தேர்தல் பிரச்சாரத்திற்காக கிளம்பியிருக்கிறார்.

கனிமொழியின் அரசியல் வருகையை பெண்ணுரிமையின் வெற்றியாக யாரும் எடுத்து கொள்ள முடியாதில்லையா? சொல்லப்போனால் அவரது நைனா பலகாலம் அங்கீகரிக்காத துணைவியின் மகள் என்ற முறையில் அவர் பெண்ணுரிமைக்காக பேசுவதாக இருந்தால் கருணாநிதியைத்தான் லெப்ட் அன்ட் ரைட் வாங்கியிருக்க வேண்டும். கருணாநிதி மட்டுமா, தி.மு.கவில்தான் எத்தனை இரண்டு பெண்டாட்டிகாரர்கள்! சமீபத்தில் டி.ஆர் பாலுவின் அதிகாரப்பூர்வ மனைவி ஆந்திராவிலிருக்கும் நாவிதரானா அதிகாரப்பூர்வமற்ற மனைவிக்கு எந்த அங்கீகாரமுமில்லை என்று பத்திரிகைக்கு செய்தியே அனுப்புகிறார். இதில் நாவிதர் என்று குறிப்பிட்டு இழிவுபடுத்தும் அளவு கேவலமான இந்த கட்சியில் கனிமொழி பெண்ணுரிமைக்காக பேசுவதாக இருந்தால் பாலுவை அல்லவா குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும்?

இரண்டு பெண்டாட்டிகள், எண்ணிக்கையில்லாத வைப்பாட்டிகள் என்று வாழும் தி.மு.க ஆணாதிக்கவாதிகளின் வெற்றிக்குத்தான் நம்ம கவிஞரம்மா இப்போது கிளம்பியிருக்கிறார். இதில் தமிழச்சி தங்கபாண்டியன், சல்மா போன்ற கொசுறு கவிஞர்களெல்லாம் கூட கலந்து கொள்கிறார்கள். இவர்களெல்லாம் பெண்களின் பிரதிநிதி என்றால் நாம் தமன்னாவையும், பிரியங்கா சோப்ராவையும் ஏன் ஷகிலாவையும் கூட முன்னோடிகளாக ஏற்கலாம்.

உழைக்கும் வர்க்கத்திலிருந்தே பெண் தலைவர்கள் தோன்றுவார்கள்

ஜெயலலிதா தொடங்கி, குஷ்பு, கனிமொழி, புவனேஸ்வரி வரைக்கும் தாங்கள் பெண்கள் என்பதால் தாக்குதலுக்கு உள்ளாகிறோம் என்று கூறுவது அருவெறுப்பாக இல்லையா?

கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்னது போல இந்தியாவில் சாதி, வர்க்க ரீதியாக ஆதிக்கம் செய்யும் குடும்பங்கள்தான் அரசியலிலும் கோலேச்சுகிறார்கள். இந்த குடும்பங்களிலிருந்து திணிக்கப்பட்ட இந்த பெண் தலைவர்களை நாம் எப்படி பெண்ணுரிமையின் வெற்றியாக போற்ற முடியும்? உண்மையில் பெண்ணுரிமையின் அபாயத்தையும், அவல நிலையையும்தான் இந்த தலைவர்களது வருகை காட்டுகிறது.

கொதிக்கும் வெயியில் தார் போடும் பெண்கள், சில்லிடும் குளிரிலும் தேயிலைக் கொழுந்து பறிக்கும் பெண்கள், குடலை புரட்டும் துற்நாற்றத்தில் நின்று கருவாடு பதம் செய்யும் பெண்கள், வாடிப்போன மலர்களாக ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்கள், குடும்பத்திற்காக தமது வாழ்வை அர்ப்பணிக்கும் நடுத்தர வர்க்கத்து பெண்கள்…. இவர்களிடமிருந்துதான் உண்மையான பெண் தலைவர்கள் தோன்றி வரமுடியும்.

ஆனால் இந்த சமூக அமைப்பும், தேர்தல் அரசியலும் இந்த உழைக்கும் பெண்களை நுழையவிடாமல் பல்வேறு தடைகளை பூட்டி வைத்திருக்கிறது. அதை உடைக்க வேண்டுமென்றால், பெண் விடுதலையை சாதிக்க வேண்டுமென்றால் நாம் இந்த தேர்தல் முறைக்கு வெளியே இருந்துதான் போராட வேண்டும். அதற்கு முதலில் இந்த தேர்தலை புறக்கணிக்க வேண்டும்.

_________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

தேர்தல் 2011

 

லிபியா மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு! அதிர்ச்சியூட்டும் உண்மைகள்!!

71

லிபியா மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு! அதிர்ச்சியூட்டும் உண்மைகள்!!

நேட்டோ படைகளின் சீறும் போர்க்கப்பல்கள் மத்தியதரைக் கடலின் நீரைக் கொதிநிலைக்குக் கொண்டு சென்றிருக்கின்றன. உலக ரவுடியாக தன்னைத் தானே நியமித்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் தலைமையில் நேட்டோ படைகள் லிபியாவின் தலைநகர் திரிப்போலியின் மேல் குண்டு வீச்சு நடத்தி வருகின்றன. அதில் வழக்கம் போல அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த நாற்பத்தியிரண்டு வருடங்களாக லிபியாவின் சர்வாதிகாரியாய் இருந்து வரும் முவாம்மர் கடாஃபியை எதிர்த்து ஜனநாயகத்துக்காகப் போராடி வரும் ஜனநாயக வீரர்களுக்கு உதவும் பொருட்டு ‘மனிதாபமானத்தின்’ அடிப்படையில் தான் தாங்கள் இந்தத் தாக்குதலைத் துவங்கியதாக நேட்டோ நாடுகள் அறிவித்துள்ளன.

அமெரிக்க மனிதாபிமானத்தின் கந்தக நெடியை லிபியர்களுக்குப் பரிசளிக்கும் விதமாய்க் கடந்த 19-ஆம் தேதி நேட்டோ நாடுகளின் நாசகாரிக் கப்பல்களில் இருந்து லிபியாவை நோக்கி நூற்றுக்கணக்கான தொமொஹாக் ஏவுகணைகள் பறந்து சென்றன. சரியாக எட்டு ஆண்டுகளுக்கு முன் – 2003-ஆம் ஆண்டு மார்ச் 19-ஆம் தேதி – இதே போன்றதொரு மனிதாபிமானத்தின் செய்தியை ஈராக்கியர்களுக்குச் சொன்னான் வெள்ளைத் தோல் ஒபாமாவான ஜார்ஜ் புஷ். லட்சக்கணக்கான மக்கள் மாண்டு போயும், உடல் உறுப்புக்களை இழந்தும் கூட இன்று வரை பணியாமல் நின்று புதைகுழி என்பது எப்படியிருக்கும் என்று அமெரிக்கர்களுக்குப் பாடம் நடத்தி வருகிறார்கள் பண்டைய பாபிலோனியாவின் வீரம் செரிந்த அந்த மக்கள்.

அரபுலகின் எழுச்சியும் அமெரிக்க நலனும்!

இலட்சக்கணக்கான ஈராக்கியர்களின் ஆவி அடங்கும் முன்பாகவே கருப்புத் தோல் ஜார்ஜ் புஷ்ஷான ஒபாமா இன்று லிபியாவைக் குறிவைத்துக் கிளம்பியிருக்கிறார். இந்தப் போரில் அமெரிக்காவின் நாசகாரிக் கப்பல்களும், எப்-16 விமானங்களும், தொமொஹாக் ஏவுகணைகளும் என்னென்ன வேலைகளைச் செய்யுமோ அதே வேலைகளை சர்வதேச அளவிலான முதலாளித்துவ ஊடகங்களும் செய்து வருகின்றன. கடாஃபியை எதிர்த்து நடந்து வரும் மக்கள் புரட்சியை அவர் கொடூரமான வழிமுறைகளைக் கையாண்டு ஒடுக்கி வருவதாகவும், மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்று வருவதாகவும் மிகைப்படுத்தப்பட்ட செய்திகளை கடந்த சில வாரங்களாகவே மிகத் தீவிரமாக உலகெங்கும் பரப்பி வருகின்றன.

முதலில் இப்போது லிபியாவில் கடாஃபிக்கு எழுந்துள்ள எதிர்ப்பு என்பது பிற அரபு நாடுகளில் உண்டான எதிர்ப்பில் இருந்து சாராம்சத்திலேயே வேறுபட்டது. அதைப் பற்றி விரிவாகப் பார்க்கும் முன், ‘வண்ணப் புரட்சிகள்’ என்று மேற்கத்திய முதலாளித்துவ ஊடகங்களால் சித்தரிக்கப்படும் அரபு தேசங்களில் ஏற்பட்ட மக்கள் எழுச்சிகளுக்கும் லிபியாவில் நடந்து வரும் போராட்டங்களுக்கும் உள்ள வேறுபாட்டினை புரிந்து கொள்வது அவசியம்.

மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணை வளம் அறியப்பட்ட துவக்க ஆண்டுகளிலேயே அந்நாடுகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கும் போட்டியின்றி அதன் எண்ணை வளத்தை உறிஞ்சிக் கொள்ளவும்  ஏகாதிபத்திய நாடுகளிடையே நாய்ச்சண்டை ஆரம்பித்து விட்டது. ஐம்பதுகளுக்குப் பின் இரண்டாம் உலகப் போரினால் கடுமையாக பலவீனமடைந்திருந்த பிற ஏகாதிபத்தியங்களைப் பின்னுக்குத் தள்ளி அமெரிக்கா ஒரு உலக வல்லரசாக உருவெடுத்திருந்ததால், இப்பிராந்தியத்தின் அரபு தேசங்களை மற்றவர்களுக்கு முன் முந்திக்கொண்டு சுலபமாக வளைத்துக் கொண்டது. மத்திய கிழக்கின்  பெரும்பாலான அரபு தேசங்களில் பெயரளவுக்கு ஒரு பொம்மை சர்வாதிகாரியை வைத்துக் கொண்டு அவற்றை தமது மறைமுகக் காலனிகளாக கட்டியாள்கிறது அமெரிக்கா. வளைகுடா எண்ணை வர்த்தகம் முழுவதையும் கட்டுப்படுத்துவது ஆங்கிலோ அமெரிக்கப் பன்னாட்டு எண்ணைக் கம்பெனிகள் தாம்.

இந்நிலையில் பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்து ஜனநாயகம் மறுக்கப்பட்டு வந்த நிலையில், சமீப வருடங்களாக உலகெங்கும் ஒரு பொதுப் போக்காக இருக்கும் உணவுப் பொருட்கள் விலை உயர்வு, மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக பெரும்பாலான மத்திய கிழக்கு நாடுகளில் மக்களிடையே சர்வாதிகாரத்திற்கான எதிர்ப்புணர்வு உருவாகியுள்ளது. இது கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தும்  சிறியதும் பெரியதுமான போராட்டங்களாக முளைவிடத் துவங்கியது.

பொருளாதாரக் கோரிக்கைகளுக்கான இப்போராட்டங்கள், அரசுக்கு எதிரான போராட்டமாக கொஞ்சம் கொஞ்சமாக பரிணமித்து வந்த நிலையில், இதன் காரணமாக தனது மேலாதிக்கத்திற்கு எந்தவிதமான சவாலும் உருவெடுத்து விடக் கூடாது என்பதில் அமெரிக்கா தீவிர கவனம் செலுத்தியது. தொடர்ந்த போராட்டங்களின் மைய்யமாக மக்களை வாட்டி வதைக்கு மறுகாலனியாதிக்கத்திற்கான எதிர்ப்பாக இல்லாமல், ஜனநாயகம், பலகட்சி ஆட்சி முறை  போன்ற சில சில்லறை முதலாளித்துவச் சீர்திருத்தக் கோரிக்கைகளைச் சுற்றியே அமைந்தது. இது எதார்த்தத்தில் வெறுமனே சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டமாக மட்டுமே சுருங்கிப் போனது. அதாவது வறுமை, வேலையின்மை, விலைவாசி உயர்வு முதலான பிரச்சினை காரணமாக எழுந்த எதிர்ப்புணர்வு பின்னர் வெறும் ஆட்சியாளரை மாற்றும் போராட்டமாக மட்டும் மாறிப்போனது. இந்த போராட்டங்களில் உழைக்கும் மக்கள் வெகுவாக அணிதிரண்டாலும் அவர்களை வழிநடத்தியது நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த அறிவுஜீவிகள்தான்.

எகிப்திலும், துனீசியாவிலும் ஏற்பட்டிருக்கும் ‘மாற்றம்’ வெறுமனே ஆட்சியாளர்களின் பெயர் மாற்றம் மட்டும் தான் – பென் அலிக்கு பதிலாக பதவிக்கு வந்துள்ள முகம்மது கன்னோசி ஆகட்டும்; எகிப்தில் முபாரக்கை அடுத்து அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கும் இராணுவமாகட்டும் – இவர்களுக்குள் கொள்கையளவில் எந்த வேறுபாடும் கிடையாது. துனீசியாவின் முகம்மது கன்னோசியும் அவரது கூட்டாளிகளும் இவர்களைத் தாங்கி நிற்கும் இராணுவமும் அமெரிக்க அடிவருடிகள் தான். அதே போல் எகிப்தில் அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கும்  இராணுவமும் அமெரிக்க ஆதரவு இராணுவம் தான். இந்நாடுகளில் தன்னெழுச்சியாகத் துவங்கிய மக்கள் போராட்டங்களின் திசைவழி இன்னதென்பதை  அமெரிக்காவே தீர்மானிப்பதாகவே அமைந்தது.

இப்படியாக, எகிப்து மற்றும் துனீசியாவில் நடந்த மக்கள் எழுச்சி ஆயுதம் தாங்கிய போராட்டமாக அல்லாமல் அமைதியான வழியிலேயே நடத்தப்பட்டன. மேலும், போராட்டக்காரர்களுக்கு அயல் நாடுகளில் இருந்து ஆயுத உதவியோ இராணுவ உதவியோ வழங்கப்படவில்லை. எகிப்தின் பல்வேறு நகரங்களின் கட்டுப்பாடுகளை முபாரக் இழந்து கொண்டிருந்த சமயத்தில் பிற நாடுகள் எதுவும் போராட்டக்காரர்களோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு தமது தூதர்களை அனுப்பி வைக்கவில்லை, இப்போது பஹ்ரைனில் அரச எதிர்ப்பாளர்களை இராணுவம் மிருகத்தனமாக ஒடுக்கிக் கொண்டிருக்கும் போதும் அம்மக்களுக்கு ஆதரவாக நேட்டோ படைகள் களத்தில் இறங்கவில்லை – ஆனால், இது அனைத்தும் லிபியாவில் நடந்து கொண்டிருக்கிறது. மட்டுமல்லாமல், லிபியாவில்  கடாஃபியை எதிர்த்த போராட்டங்கள் துவங்குவதற்குச் சில மாதங்கள் முன்பிருந்தே அதன் மீது இராணுவ நடவடிக்கை ஒன்றிற்கான தயாரிப்புகளில் அமெரிக்காவும் அதன் அல்லக்கை நாடுகளும் ஈடுபட்டிருந்தன.

லிபியா மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு! அதிர்ச்சியூட்டும் உண்மைகள்!!
ஒபாமா - கடாஃபி

லிபியாவில் நடப்பது ஜனநாயகத்திற்கான போராட்டமா? அமெரிக்காவின் ஐந்தாம் படை வேலையா?

மக்களுக்கான ஜனநாயகத்தை கடந்த நாற்பத்திரண்டு ஆண்டுகளாக முவாம்மர் கடாஃபி மறுத்து வந்ததும், தனக்கு எதிரான போராட்டங்களை அவர் ஒடுக்கி வந்ததும், இவற்றின் காரணமாக லிபியாவில் ஜனநாயகத்திற்கான கோரிக்கை இருந்து வந்ததும் எந்தளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை தான் இன்று மேற்கத்திய ஊடகங்களால் ஜனநாயகத்தைக் காக்க வந்த ‘புரட்சியாளர்கள்’ என்பது போல சித்தரிக்கப்படும் போராட்டக்காரர்கள் உண்மையில் அமெரிக்கத் தயாரிப்புகள் என்பதும்.

லிபியாவின் ஜனநாயகப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவும் – முவாம்மர் கடாஃபியை பதவி விலக்கம் செய்யவும், அமெரிக்கா எந்த விதமான உதவியையும் செய்யத் தயார் என்றும், லிபியப் புரட்சியாளர்களோடு அமெரிக்கா தொடர்பு கொண்டு வருகிறது என்று ஹிலாரி கிளிண்டன் பிப்ரவரி 27-ஆம் தேதி அறிவித்துள்ளார். லிபியாவின் 80% எண்ணையைக் கொண்டுள்ள சிர்ட்டே வளைகுடா பிராந்தியத்தில் இருக்கும் சைரென்னிகா, பெங்காஸி டோப்ருக் போன்ற கலவரக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளுக்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளில் இருந்து இராணுவ ஆலோசகர்களும், உளவுப்பிரிவு அதிகாரிகாரிகளும் வந்திறங்கியுள்ளனர்.

அதற்கும் முன்பாக சென்ற வருட அக்டோபர் மாத வாக்கிலேயே லிபியாவோடு எண்ணை வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த செவ்ரான் மற்றும் ஓக்ஸிடென்டல் பெட்ரோலியம் ஆகிய பன்னாட்டு நிறுவனங்கள் எண்ணை துரப்பணத்திற்காகவும் புதிய எண்ணை வயல்களைக் கண்டுபிடிக்கவும் பெற்றிருந்த லைசென்சுகளை புதுப்பிக்கவில்லை. அப்போதே ரசிய ஊடகங்கள் லிபியாவின் மேல் மேற்கத்திய நாடுகள் இராணுவ நடவடிக்கை ஒன்றைத் துவங்குவதற்கான சாத்தியங்கள் பற்றி எழுதத் துவங்கிவிட்டன.

லிபியாவின் கிழக்கு எல்லையில் இருக்கும் எகிப்தின் வழியே நவீன ஆயுதங்களும் வெடி பொருட்களும் கடந்த மாதத் துவக்கத்திலிருந்தே போராட்டக்காரர்களுக்கு வழங்கப்பட்டு வந்துள்ளது. யுகோஸ்லோவிய விவகாரத்தில் கையாண்ட அதே போன்ற தந்திரத்தை லிபியாவிலும் வெற்றிகரமாக நிறைவேற்றி விடலாம் என்று மேற்கத்திய நாடுகள் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், மார்ச் மாதத் துவக்கத்தில் கடாஃபியின் இராணுவம் தொடுத்த எதிர்த் தாக்குதல்கள் ஒரு எதிர்பாராத திருப்பமாக அமைந்து விட்டது. மார்ச் 4-ஆம் தேதி துவங்கிய லிபிய இராணுவ நடவடிக்கையின் விளைவாய் கலக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த முக்கியமான நகரங்களை இராணுவம் மீண்டும் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது.

உடனடியாக தனது ஊதுகுழலாக செயல்படும் சர்வதேச ஊடகங்கள் மூலம் லிபியாவில் படுபயங்கரமான இனப்படுகொலை நடப்பதாக பீதியூட்டும் பிரச்சாரங்களை அமெரிக்கா கட்டவிழ்த்து விடுகிறது. இதன் மூலம், லிபியாவில் நடந்து கொண்டிருப்பது துனீசியா, எகிப்து போன்ற அமைதி வழிப் போராட்டம் என்பது போன்றும் அதை கடாஃபி ஆயுதம் கொண்டு கொடூரமாக ஒடுக்குகிறார் என்பது போன்றும் ஒரு சித்திரம் திட்டமிட்ட ரீதியில் கட்டமைக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து “மனிதாபிமானத்தின்” அடிப்படையில் தாம் லிபிய விவகாரத்தில் தலையிடுவதாகச் சொல்லிக் கொண்டு மார்ச் 19-ஆம் தேதி துவங்கி தொடர்ந்து விமானத் தாக்குதலையும் ஏவுகணைத் தாக்குதலையும் நடத்தி வருகிறது.

பொதுவில் நீண்ட நாட்களாக மக்களுக்கான ஜனநாயகத்தை கடாஃபி மறுத்து வந்துள்ளார். மொத்த நாட்டையும் அதன் பொருளாதாரத்தையும் அவரது குடும்பமே கட்டுப்படுத்தி வந்திருக்கிறது. மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்க நாடுகள் பலவற்றில் உள்ள சர்வாதிகாரிகளுக்கும் மன்னர்களுக்கும் கடாஃபிக்கும் இந்த அம்சங்களில் பெரும் ஒற்றுமை இருந்தது உண்மை தான். ஆனால், அடிப்படையில் வேறு ஒரு முக்கியமான அம்சத்தில் கடாஃபி மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டார் – அது தன் தேசத்தின் வளங்களை மேற்கத்திய ஏகாதிபத்தியங்களின் கைகளில் முழுமையாக ஒப்படைக்காமல் இருந்தது தான்.

ஜனநாயகக் கோரிக்கை லிபியாவில் ஓரளவுக்கு இருந்து வந்தது என்பதும், மக்களில் ஒரு பிரிவினர் கடாஃபியின் மேலான நம்பிக்கையை இழந்திருந்தனர் என்பதும் உண்மை தான். ஆனால், துனீசியா, எகிப்து உள்ளிட்ட அரபு தேசங்கள் போல் அல்லாது லிபியாவில் பெருமளவிலான மக்கள் போராட்டங்களோ எதிர்ப்புகளோ உருவாகிவிடவில்லை. ஆக, தற்போது லிபியாவின் ‘ஜனநாயகத்துக்காகப்’ போராடிவரும் ‘லிபிய விடுதலைக்கான தேசிய முன்னணியின்’ (National Front for the salvation of Libya) வரலாறு என்னவென்பதை அறிந்து கொள்வது அவசியமாகிறது. அதிலும் மிகக் குறிப்பாக லிபியாவின் கிழக்குப் பிராந்தியத்தை ஏகாதிபத்திய நாடுகள் உடனடியாகப் பிரித்து எதிர்ப்பாளர்களை அங்கீகரிக்க காட்டிவரும் அக்கறையும் கவனத்திற்குரியது.

1983-ஆம் ஆண்டு அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ மற்றும் யு.எஸ்.எய்ட் ஆகிய அமைப்புகளின் நேரடி ஏற்பாட்டில் ‘ஜனநாயகத்திற்கான தேசிய அறக்கட்டளை’ (National Endowment for Democracy) எனும் அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது. இராணுவ பலத்தோடு ஜனநாயகத்தை உருவாக்க முடியாத பிராந்தியங்களில் செயல்படுவதற்கென்று உருவாக்கப் பட்ட இவ்வமைப்பின் நோக்கம் – தமக்கு ஒத்துவராத சர்வாதிகாரிகள் ஆளும் நாடுகளில்  ஊடுறுவி, மக்கள் மத்தியில் எதிர்ப்புணர்வை விதைப்பதே. அவ்வகையில் இவ்வமைப்பு எண்பதுகளில் இருந்தே லிபியர்கள் மத்தியில் ஒரு நீண்ட கால நோக்குடன் கடாஃபிக்கு எதிரான வேலைகளை ஆரம்பித்திருந்தது.

மேற்படி அமைப்பின் தீவிர ஆசியைப் பெற்றது தான் தற்போது அப்பாவிப் புரட்சியாளர்கள் என்று மேற்கத்திய ஊடகங்கள் போற்றிப் புகழும் ‘லிபிய விடுதலைக்கான தேசிய முன்னணி’. இந்த அப்பாவிகள் தமது பிறப்பிலேயே அமெரிக்க அடிவருடித்தனத்தைக் கொண்டிருந்தனர். 1981-ஆம் ஆண்டு சூடானின் அமெரிக்கக் பொம்மை சர்வாதிகாரியாக இருந்த கலோனல் ஜாஃபர் நிமிரியின் முன்னிலையில் தான் இந்த அமைப்பே தோற்றுவிக்கப்பட்டது. இவ்வமைப்பின் தேசிய காங்கிரஸ், பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க உளவுத் துறைகளின் ஏற்பாட்டில் 2005-ஆம் ஆண்டு லண்டனிலும் பின்னர் ஜூலை 2007-ஆம் ஆண்டு அமெரிக்காவிலும் நடைபெற்றுள்ளது.

கடாபியின் சரணடைவும், தேசிய எண்ணைய் நிறுவனமும்

இதில் மிகவும் கவனத்திற்குரிய அம்சம் என்னவென்றால், அமெரிக்க இரட்டை கோபுரத் தகர்ப்பிற்குப் பின், தீவிரவாதத்திற்கு எதிரான போர் எனும் பெயரில் தன் எதிரி நாடுகளை வேட்டையாட அமெரிக்கா துவங்கியிருந்த ஆரம்ப நாட்களில் லிபியாவையும் தீமைக்கான அச்சு நாடுகள் பட்டியலில் சேர்த்திருந்தது. ஆப்கான், ஈராக்கைத் தொடர்ந்து தனது கொலைப் பட்டியலில் ஈரானையும் லிபியாவையுமே வைத்திருந்த நிலையில், வேறு நாடுகளின் ஆதரவு இல்லாத நெருக்கடியில் கடாஃபி தன்னிச்சையாக அமெரிக்க ஆதரவு நிலையை எடுக்கத் தள்ளப்படுகிறார்.

அவரே சுயமாக முன்வந்து தமது நாட்டின் அணு ஆயுதத் திட்டங்களைக் கைவிடுவதாக அறிவித்ததோடு அல்லாமல், அது தொடர்பாக லிபியா சேகரித்து வைத்திருந்த தொழில்நுட்ப விபரங்களையும் கருவிகளையும் ஒப்படைக்கவும் செய்கிறார். மட்டுமல்லாமல், அல்குவைதா அமைப்பைப் பற்றிய மிக முக்கியமான உளவுத் தகவலையும், அணு ஆயுதக் கள்ளச் சந்தை பற்றிய உளவுத் தகவல்களையும் கூட அமெரிக்க உளவுத் துறைக்கு கையளிக்கிறார். அதைத் தொடர்ந்து லிபியா திருந்தி விட்டதாக ஞானஸ்நானம் அளிக்கும் அமெரிக்கா, அதன் மேல் இருந்த பொருளாதாரத் தடைகளையும் 2004-ஆம் ஆண்டே விலக்குகிறது. கடாஃபியும் தனது படை பரிவாரங்களோடு ஐரோப்பிய தேசங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் – கடாஃபியின் பில்லியன் கணக்கான பெட்ரோ டாலர்கள் அமெரிக்காவின் நிதிமூலதனச் சூதாடிகளான ஜே.பி.மார்கன் மற்றும் சிட்டி குரூப்பில் முதலீடு செய்யப்படுகிறது.

அமெரிக்காவின் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்களான எக்ஸான்மொபில், ஹாலிபர்ட்டன், செவ்ரான், கொனாகோ மாரத்தான் ஆயில் போன்ற பெட்ரோலிய நிறுவனங்களும், ரேய்த்தியன் நார்த்ராப், க்ரம்மன் போன்ற ஆயுதக் கம்பெனிகளும் டவ் கெமிக்கல்ஸ் போன்ற பன்னாட்டுக் கம்பெனிகளும் அமெரிக்க லிபிய பொருளாதார மேம்பாட்டுகென அமைப்பு ஒன்றையும் (USLBA) 2005-ஆம் ஆண்டு துவங்குகிறார்கள்.

ஆக, தெளிவாக ஒரு மேற்கத்திய ஆதரவு நிலையை கடாஃபி எடுத்த பின் இந்தப் போருக்கான தேவை ஏன் எழுந்தது? ஒரு பக்கம் கடாஃபியோடு உறவாடி வந்த நிலையில், இன்னொரு பக்கம் அவரின் எதிர்ப்பாளர்களை அமெரிக்காவும் அதன் அல்லக்கை நாடுகளும் ஏன் வளர்த்து விட வேண்டும்? லிபியர்களுக்கு ஜனநாயகத்தை வழங்குவதற்காகவே அப்படிச் செய்தார்கள் என்பதை விரல் சூப்பும் குழந்தை கூட ஒப்புக் கொள்ளாது. அப்படி ஜனநாயகத்தின் மேல் உண்மையில் அமெரிக்காவுக்கு காதல் இருக்குமானால், டொமஹாக்கின் முதல் இலக்கு பஹ்ரைனாகவோ சவூதியாகவோ தான் இருந்திருக்க முடியும்.

அமெரிக்க ஆக்கிரமிப்பு ஜனநாயகத்திற்கா, எண்ணெய் வளத்தை கைப்பற்றவா?

அமெரிக்க ஜனநாயகக் காதலின் இலக்காக லிபியா மாறியதன் மிக முக்கிய காரணம் லிபியாவின் பெட்ரோலும் யுரேனியம் தங்கம் உள்ளிட்ட அதன் அள்ள அள்ளக் குறையாத கனிம வளங்களும் தான். லிபியாவின் பெட்ரோல் வர்த்தகத்தில் அமெரிக்க ஐரோப்பிய நிறுவனங்கள் ஈடுபட்டிருந்தாலும் அது இன்று வரையில் முழுமையாக தனியார்மயமாக்கப் படவில்லை. தேசிய பெட்ரோலிய கார்ப்பொரேஷன் எனும் அரசுடைமை ஆக்கப்பட்ட நிறுவனத்தின் கீழ் தான் லிபியாவின் எண்ணை வளம் இருந்து வருகிறது. அதோடு கூட்டு ஒப்பந்தங்கள் வழியாகத் தான் அமெரிக்க நிறுவனங்கள் பெட்ரோல் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றது.

தற்போதைய ஆய்வு முடிவுகளின் படி, லிபியாவில் 60 பில்லியன் பேரல் எண்ணை ரிசர்வாக உள்ளது. உலகின் மொத்த எண்ணை மற்றும் எரிவாயு ரிசர்வுகளில் 3.34% லிபியாவில் இருக்கிறது. அமெரிக்க ஐரோப்பிய எண்ணை நிறுவனங்கள் லிபியாவின் தேசிய எண்ணை கார்பொரேஷனுடன் கூட்டு ஒப்பந்தங்கள் மூலம் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தாலும், சீனாவின் தேசிய பெட்ரோலிய கார்பொரேஷனும் லிபியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது.எண்ணை துரப்பணம் உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக சுமார் 30,000 சீனத் தொழிலாளிகள் லிபியாவில் உள்ளனர். லிபியா மட்டுமல்லாமல், சீனா பிற ஆப்ரிக்க தேசங்களிலும் கனிமங்கள், பெட்ரோல் போன்ற இயற்கை வளங்களின் வர்த்தகத்தில் மேற்கத்திய நாடுகளுக்கு ஒரு போட்டியாக உருவெடுத்து வருகிறது.

இந்தப் பின்னணியில், அமெரிக்காவின் லிபியா போர் என்பது நேரடி ஆக்கிரமிப்பு என்பதையும் கடந்த ஒன்றாகும். வட ஆப்ரிக்கா, மத்திய கிழக்காசிய மற்றும் மத்திய ஆசியப் பிரதேசங்களைக் கட்டுப்படுத்துவதன் ஊடாக, உலகின் 60% எண்ணை ரிசர்வைக் கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் விரிவான திட்டத்தின் ஒரு சிறிய அங்கம் தான் லிபியப் போர்.

தற்போது லிபியாவின் ஜனநாயகப் ‘போராளிகள்’ முக்கியமாகக் கட்டுப்படுத்தும் பிரதேசங்கள் கடாஃபியால் 1969-இல் பதவியிறக்கப்பட்ட முன்னாள் மன்னருக்கு ஆதரவானவர்கள் நிறைந்த பிரதேசம் என்பதும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த எண்ணை வயல்களும் எரிவாயுக் குழாய்களும் கொண்ட பகுதி என்பது தற்செயலானதல்ல. மட்டுமல்லாமல், கலகக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிராந்தியத்தை அங்கீகரித்து, சட்டப்பூர்வமானதாக அறிவிக்கவும் மேற்கத்திய நாடுகள் முயன்று வருகின்றன.

அமெரிக்காவின் உலக மேலாதிக்கக் கனவுகள் நிறைவேறத் தேவையென்றால் எந்த நாட்டின் மேலும் எப்போது வேண்டுமானாலும் தனது இராணுவத்தை ஏவி விடலாம் என்கிற ஒரு எதார்த்தத்தை ஈராக் யுத்தத்திற்குப் பின் அமெரிக்கா நிலைநாட்டியுள்ளது. இறையாண்மை, தேசம், தேச எல்லைகளின் புனிதம் என்றெல்லாம் பேசியது மெல்ல மெல்லப் பழங்கதையாகி வருகிறது. லிபியாவில் ஜனநாயகத்தை நிலைநாட்டவோ, அதற்காக அதன் மேல் தாக்குதல் தொடுக்கவோ அமெரிக்காவுக்கு இருக்கும் உரிமை குறித்து உலக நாடுகள் எந்தக் கேள்வியும் கேட்காமல் லேசான முணுமுணுப்புகளோடு ஒப்புக் கொள்ளும் அடிமை மனநிலைக்கு வந்து விட்டன. ஒரு வேளை லிபியாவின் அரச படைகளை தங்கள் ஆதரவையும் ஆயுதத்தையும் பெற்ற ‘புரட்சியாளர்கள்’ வென்று முழு லிபியாவையும் கைப்பற்ற இயலாது போனால், குறைந்தபட்சம் அவர்கள் வசமிருக்கும் எண்ணை வயல்கள் மிகுதியாகக் கொண்ட பிரதேசத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிப்பதன் மூலம் லிபியாவின் எல்லைக் கோடுகளை திருத்தி வரையும் முயற்சியிலும் மேற்கத்திய நாடுகள் இறங்கியுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையில் லிபியாவின் மேல் நேட்டோ படைகளின் தாக்குதலுக்குக்கு ஒப்புதல் பெறும் வாக்கெடுப்பில் தீர்மானத்தை எதிர்த்து வாக்காளிக்காமல் புறக்கணித்த இந்தியா பிரேஸில் உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவின் கைக்கூலிகள் என்றால், ஜெர்மனிக்கு லிபியாவோடு கடந்த நவம்பரில் போடப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தின் நிலை பற்றித் தான் கவலை. மற்றபடி, இரசியா சீனா உள்ளிட்ட பிற நாடுகளும் கூட, லிபிய விவகாரத்தில் தலையிடும் அமெரிக்க உரிமை குறித்து கேள்வியெழுப்பவில்லை.

ஒரு உலக ரவுடியாக  உருவெடுத்துள்ள அமெரிக்கா, தன்னைத் தானே உலகப் போலீசாகவும் நியமித்துக் கொண்டுள்ளது. யேமனிலும், பஹ்ரெய்னிலும், சவூதியிலும் நடந்து வரும் அரச எதிர்ப்பு / சர்வாதிகார எதிர்ப்புப் போராட்டங்களை அந்தந்த நாடுகளின் அமெரிக்க ஆதரவு பெற்ற அடிவருடிக் கும்பல்கள் மிருகத்தனமாக ஒடுக்கிவரும் நிலையில், லிபியாவின் மேல் அமெரிக்கா அக்கறை கொள்வதன் உண்மையான நோக்கம் ஜனநாயகம் அல்ல – அது எண்ணையும் இயற்கை வளங்களும் தான்.

அமெரிக்க ஆக்கிரமிப்பின் செலவு உங்கள் தலையில்!

ஒவ்வொரு முறை பெட்ரோலிய நாடுகள் மீது அமெரிக்கா போர் தொடுக்கும் போதும் உலகளவில் பெட்ரோலியப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்திருப்பதை கடந்த கால அனுபவங்களில் இருந்து நாம் உணர்ந்து கொள்ள முடியும். அந்த வகையில் ஏகாதிபத்தியங்களின் மேலாதிக்க வெறியின் செலவு மறைமுகமாக உலக மக்கள் அனைவரின் தலைமேல் தான் சுமத்தப்படுகிறது. மறைமுகமாக நம்முடைய செலவில் கொல்லப்படும் ஒவ்வொரு ஈராக்கியனின் உயிருக்கும், லிபியனின் உயிருக்கும், ஆப்கானியனின் உயிருக்கும் பதில் சொல்ல வேண்டிய தார்மீகப் பொறுப்பு நமக்கும் இருக்கிறது.

நம்மை அன்றாடம் அலைக்கழிக்கும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் நமது நாட்டோடும் ஆட்சியாளர்களோடும் மட்டுமே தொடர்புடைய ஒன்றல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். போர்களின் ‘நன்மைகளை’ ஏகாதிபத்தியங்களும் அதன் பன்னாட்டுக் கம்பெனிகளும் அறுவடை செய்து கொள்ளும் அதே வேளையில் அதன் சுமை உலகம் மொத்தமும் உள்ள உழைக்கும் மக்களின் தலையில் தான் சுமத்தப்படுகிறது.

அன்று கொஸாவாவிலும், நேற்று ஈராக்கிலும் ஆப்கானிலும், இன்று லிபியாவிலும் வெடித்துச் சிதறும் டொமஹாக் ஏவுகணைகளின் நேரடி இலக்குகளாக அந்த நாடுகளின் அப்பாவி மக்கள் இருந்தார்கள் என்றால் அதன் மறைமுக இலக்கு நாம் தான். எனவே, இது எங்கோ அப்ரிக்கக் கண்டத்தின் ஒரு மூலையில் இருக்கும் லிபியர்களின் பிரச்சினை மட்டுமல்ல. நம்முடைய பிரச்சினையும் தான். அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடி முறியடிக்கும் கடமை ஈராக்கியர்களோடும் ஆப்கானியர்களோடும் லிபியர்களோடும் மட்டும் முடிந்து விடுவதல்ல – அது நம் ஒவ்வொருவரின் கடமையும் கூட.

______________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

வாரன் பப்பெட் வாரான்! சொம்ப எடுத்து உள்ளார வை!!

லகப் பணக்காரன், அமெரிக்க கோடீஸ்வரன் வாரன் பப்பெட்டின் இந்திய விஜயம் களைகட்டத் தொடங்கியிருக்கிறது. இந்து, எக்ஸ்பிரஸ் போன்ற அவாளின் மேல் லோகங்கள் மட்டுமல்ல, தினகரன் பத்திரிகை வரை எஜமான் காலடி மண்ணெடுத்து எழுத ஆரம்பித்து விட்டன.

“பாவம்! பப்பெட் கஷ்டப்பட்டு பாட்டில் கழுவி பங்குச் சந்தை வரை முன்னேறி, ஜெயலலிதா நான் ஏழு வயசுல இளநி வித்தவ என்று பாடியது போல பப்பெட் பதினேழு வயசுலயே பங்குச் சந்தையை வித்தவன்னு தினகரன் பலூன் ஊதுகிறது. தமிழ்நாட்டு சனீஸ்வரன் கோயிலுக்கும் திருச்செந்தூருக்கும் சட்டையில்லாமல் பக்திப் பழமாகும் கர்நாடக -எடியூரப்பா பெங்களூருவில் குண்டு குண்டுன்னு போய் அமெரிக்க குலதெய்வம்   பப்பெட்டை கோட்டு சூட்டோடு ஈர்த்து வரவேற்றிருக்கிறார்.

திரைக்கு வந்து சில மாதங்களே ஆன உத்தமபுத்திரன் படத்தில் அமெரிக்க கோடீஸ்வரனுக்கு பொண்ணைக் கொடுத்து தானும் கோடீஸ்வர சம்பந்தியாக கொண்டைய அறுத்துக் கொள்ளும் அந்தப் படத்தின் அற்ப கதாபாத்திரங்களை நிஜத்தில் தோற்கடித்து விட்ட்டார் எடியூரப்பா. வெளிநாட்டு மூலதனத்தை ஈர்ப்பதில் கருணாநிதி கறுப்புக் கண்ணாடியை துடைத்து மாட்டுவதற்குள் எடியூரப்பா முந்திக் கொண்டாலும், வந்தாரை வாழவைக்கும் தமிழனின் பண்பாட்டுப்படி பப்பெட்டை சென்னைக்கு அழைத்து வந்து ஒருவாய் சோறுபோடாமலா அனுப்பி விடுவார் தளபதி… உலகப் பணக்காரனோடு சம்பந்தம் வைத்துக் கொள்வதன் மூலம் அப்படடியே நாமும் ஒரு ஓரத்தில் உள்ளூர் பணக்காரனாக சுவிஸ் வங்கியில் ஒரு குடிசையைப் போட்டுக் கொள்ளலாம் என்ற இந்த அடிமைகளின் ஆசை தனிக்கதை..

விருந்து சாப்பிட வர்றேன்னு வீட்டு அட்ரச வாங்கிட்டு, இலை போடுற நேரத்துல எங்க உன் பொண்டாட்டிய தர்றியேன்னு  கேட்ட கதையாய், இந்தியாவுக்கு வருவதற்கு முன்பே “என் விருந்துக்கு உபசாரமாய் இந்தியாவின் இன்சூரன்ஸை தூக்கி தரவேண்டும் என்கிறான் பப்பெட். எம்பெருமான் மனம் நோகாதிருக்க இயற்பகை நாயனார்கள் எதை வேண்டுமானாலும் கொடுக்கலாம். மூலதன அடியார்கள் முற்றும் துறந்தவர்கள். நாட்டின் மீது பற்று கொண்டவர்கள் பப்பெட்டை லெப்ட் ரைட் வாங்க வேண்டாமா?

அமெரிக்காவில் பணம் கட்டி படிக்கப் போன இந்திய மாணவர்களையே சந்தேகக் கேசு என்று காலில் கேமராவைப் பொருத்தி இழிவுபடுத்துகிறான். அங்கு போய் நாம் வாழ்வதற்கான உரிமைக்கே போராட வேண்டியிருக்கிறது.  இங்கு வரும் அமெரிக்க பணக்காரனோ ஒரு விருந்துக்கே இட்லி வடையைக் கேட்பது போல் இன்சூரன்ஸை கேட்பதும் சில்லறை வணிகத்தை திறந்து விடச் சொல்வதும் இந்திய சந்தையை தடையில்லாமல் மேய்ந்து கொள்ள கனிம வளங்கள் வரை கையை வைப்பதும் இந்தியாவின் கேட்பாரற்ற நிலைமையையும், அமெரிக்க ஆதிக்கத்தின் கொக்கரிப்பையும் நம் கண்முன்னே நிறுத்துகிறது.

வாரன்பப்பெட்டுடன் யார் விருந்தில் கலந்து கொண்டாலும் அவனுக்கு 11 கோடி ரூபாய் தரவேண்டுமாம். அவனோடு விருந்து சாப்பிட தரப்படும் “மொய்” அவனது அறக்கட்டளைக்கு போய்ச் சேருமாம். இதற்குப் பெயர்தான் ஊரை அடித்து உலையில் போடுவது! இவனோடு உக்காந்து ஒருவாய் சோறுதிங்க 11கோடி கேட்கும் இந்த பங்குச் சந்தை தாதா இந்தியாவில் மட்டும் தன்னோடு விருந்து சாப்பிட இந்திய இன்சூரன்ஸ் துறையின் அதிகாரி நாராயணனை விரும்பி அழைப்பதாகவும், அவர் தனக்கு 11 கோடிக்குப் பதில் இன்சூரன்ஸ் துறையிலிருக்கும் வெளிநாட்டு மூலதனத்திற்கான வரம்பு  26 சதவீதம் என்பதை 49 சதவீதமாக உயர்த்த வேண்டும் என திருவாய் மலர்ந்திருக்கிறான் பப்பெட். உண்ட வீட்டுக்கு ரெண்டகம் என்பார்கள். இவனோ உண்ண வரும்போதே ரெண்டகம். ஊரான் வூட்டு நெய்ய, பப்பெட்டு கையேன்னு இந்தியாவையே வழிச்சு நக்க பாக்கறான்.

அதாவது மத்தவன மாதிரி நான் மட்டமான ஆள் கிடையாது. ஒரு வேள விருந்துக்கு உன் வீட்ட எழுதித் தர்றவேணாம்…. வயசுக்கு வந்த பொண்ண குடுங்குறான்… விலை மதிப்பில்லாத பொதுத்துறைகளை மட்டுமல்ல முன்பு இந்தியாவுக்கு வந்த ஒபாமா, ஜனாதிபதி வரவேற்பில் இடம்பெற்ற ஒட்டகத்தைக் கொடு  என்று ஆசைப்பட்டு கேட்க, ஒட்டகத்தோடு இந்திய அணுசக்தி உரிமையையும் ஒட்ட ஓட்டிவிட்டனர் அடிமைகள்.

பொதுவாக நம் ஊரில் விருந்துக்குப் போகிறவன்தான் மொய் வைத்துவிட்டு வருவது வழக்கம். அமெரிக்க, பன்னாட்டு முதலாளிகளோ இந்தியாவில் விருந்துக்கு வந்தாலே மின்சாரம், தண்ணீர், மருத்துவம் என்று எல்லாப் பொதுத்துறைகளையும் மொய்யாய் வை.. என அன்புக் கட்டளையிடுகிறான். எச்சிலை எடுக்கும் பாராளுமன்ற மாமாக்களோ பப்பெட் கடைக்கண் பார்வை காட்டிவிட்டால் மன்மோகன் சிங்குக்கு மாமலையும் ஓர் கடுகாம்..என ஆடை வரைக்கும் அவிழ்த்துப் போட தயாராகி விட்டார்கள்.  பொதுத் துறைகள் மட்டுமல்ல வெளிநாட்டுக் காரன் பிள்ளை பெற இந்தியாவின் கருப்பைகள் வரை உலகச் சந்தைக்கு திறந்துவிடப் பட்டுவிட்டது. வர்றவன் போறவன்லாம் இந்த நாட்டையே எச்சிலை ஆக்கும் இழிநிலையை உலகப் பணக்காரர்களையே இந்தியா ஈர்த்துவிட்டது என்பது போல பிரச்சாரம் செய்கின்றன மானங்கெட்ட ஊடகங்கள்.

தலையைக் கவிழ்ந்து கொண்டு தானுண்டு வேலையுண்டு என்று கைக்குட்டைகளால் மட்டும் இந்த அவமானத்தை துடைத்து விட முடியாது. அமெரிக்க மற்றும் பன்னாட்டு மூலதன ஆதிக்கத்திற்கெதிரான போராட்ட அணிகளில் கை கோர்ப்பதன் மூலமாகவே நாடும் நாமும் இனி தலைநிமிர்ந்து வாழமுடியும்.

________________________________________

– துரை.சண்முகம்
________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

காங்கிரசின் வேட்டி கிழிப்பும், கோஷ்டி மோதலும் ஒரு ‘ஆய்வு’ !

18

தேசியக் கட்சி என்ற பந்தாவுடன் வலம் வரும் காங்கிரசு கும்பல்தான்  இந்நாட்டின் எல்லா வகை அரசியல் சீரழிவுக்கும் தோற்றுவாய். காலனிய ஆட்சியின் போதே வெள்ளையனது பிச்சையால் உருட்டித் திரட்டப்பட்ட இந்த கட்சியில் அப்போதும் இப்போதும் மிட்டா மிராசுதார்களும், பண்ணைகளும்தான் தலைவர்களாக உலா வருகிறார்கள். காந்தி, காமராஜ், கக்கன் என்று மக்கள் திரளுக்கு மட்டும் அதுவும் பண்டாரங்கள், பரதேசிகளைப் போன்ற சித்திரத்தை காட்டிவிட்டு உள்ளூர் முதல் மாநிலம், டெல்லி வரை ‘மேல்’சாதி, மேட்டுக்குடி, பரம்பரை பணக்காரர்களே ஆதிக்கம் செலுத்துவார்கள்.

தூய வெள்ளையும் சொள்ளையுமாய் கதராடை அணிந்து வரும் இந்த எளியவர்களது சொத்துக் கணக்கை கேட்டீர்கள் என்றால் அந்த எளிமை ஆபாசமாக உறுத்தத் துவங்கும். விருந்தினருக்கு சுதேசி பானமான நீர் மோரைத் தரும் வீட்டுக்காரர் ஒரு சீமைச்சாராய அதிபர் என்றால் என்ன சொல்வீர்கள்?

ஆகஸ்டு 15 அதிகார மாற்றத்திற்கு பின்னர் இந்தியா முழுவதும் இந்த ஆண்டைகளின் கட்சிக்கெதிராக மக்கள் உணர்வு கொந்தளிக்க தொடங்கியிருந்தது. ஒவ்வோரு மாநிலத்திற்கேற்ப இந்த எதிர்ப்புணர்வு பிராந்திய அரசியல் இயக்கமாக எழத் துவங்கியிருந்தது. கேரளம், மே.வங்கத்தில் இடது சாரி இயக்கம், தமிழகத்தில் திராவிட இயக்கம், மராட்டியத்தில் சிவசேனா, இந்தி மாநிலங்களில் சமூக நீதிக்கட்சிகள், பா.ஜ.க என்று 50களில் துவங்கி 80கள் வரை இந்த போக்கை காணலாம்.

தமிழகத்தில் கூட தி.மு.க தனது சொந்த அரசியல் கொள்கை காரணமாக வெற்றி பெற்றது என்பதை விட காங்கிரசு மேல் இருந்த மக்களின் எதிர்ப்புணர்வு காரணமாக வெற்றி பெற்றது என்றே மதிப்பிடலாம். நேர்மறை அடிப்படையில்லாத ஒன்று எதிர்மறை காரணமாக வென்ற சூழல் அது. பரம்பரை பணக்காரர்களான காங்கிரசு தலைவர்களை எதிர்த்து எளிய பின்னணியிலிருந்து வந்த தமிழக இளைஞர்கள் தி.மு.க என்ற பெயரில் வெற்றி கொண்டார்கள்.

ஆந்திராவில் கூட என்.டி.ராமாராவ் காங்கிரசு எதிர்ப்புணர்வு காரணமாகவே குறுகிய காலத்தில் ஆட்சியைப் பிடித்தார். லல்லு, மொலாயம், மாயாவதி என்று பலரும் இதே காரணத்தினாலேயே அரசியலில் வெற்றி பெற்றார்கள்.

எனினும் இந்த போக்கு காரணமாக காங்கிரசின் பலம் வெகுவாக குறைந்தாலும், சரியான மாற்று உருவாகாத நிலையில் அதுவே இன்னமும் ஆளும் கட்சியாக தொடருகிறது. மேலும் காங்கிரசை எதிர்த்து வந்த கட்சிகள் அனைத்தும் இன்று குட்டி குட்டி காங்கிரசாக மாறிவிட்டன. அரசியல் கொள்கை, பொருளாதாரக் கொள்கை, வெளியுறவுக் கொள்கை என்று எல்லாவற்றிலும் அவர்களுக்கிடையே வேறுபாடு இல்லை. காங்கிரசு அகில இந்திய கார்ப்பரேட் கம்பெனி என்றால் இந்த கட்சிகள் பிராந்திய அளவிலான கம்பெனிகளாக நிலைபெற்று விட்டன.

இன்று கூட்டணி பலத்தால் ஆளும் காங்கிரசு கும்பல் தனது அதிகார மேன்மை காரணமாகவே கட்சி உறுப்பை பேணி வருகிறது. 90களுக்கு பிறகு இந்தியாவில் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் தீவிரமாக அமல்படுத்தபட்ட காலங்களில் காங்கிரசின் அரசியல் பலம் குறைந்திருந்தாலும் அதன் ஊழல், நிறுவன பலம் பல மடங்கு உயர்ந்திருக்கிறது. நரசிம்மராவ் மகன் துருக்கியிலிருந்து இறக்குமதி செய்யாத நிலக்கரி ஊழலாகாட்டும், சுக்ராம் வீட்டில் கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றியதாக இருக்கட்டும், போபார்ஸ் மூதல் பேர்ஃபாக்ஸ் வரை இராணுவ இறக்குமதி ஊழல், பங்கு சந்தை ஊழல், தொலைத்தொடர்பு ஊழல் என்று நாடறிந்த பிரம்மாண்டமான ஊழல்கள் அத்தனையிலும் காங்கிரசு ஆதாயம் அடைந்திருக்கிறது.

பன்னாட்டு முதலாளிகள், இந்திய முதலாளிகள், அமெரிக்கா முதலான ஏகாதிபத்தியங்கள் அனைவரும் இன்று காங்கிரசையே முதன்மையான கூட்டாளியாக பயன்படுத்துகின்றனர். இரண்டாவது பங்காளி பா.ஜ.க. இன்று அம்பானிகளின் ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவிலேயே பெரும் நிறுவனமாக எழுந்திருப்பது காங்கிரசின் ஆட்சி மூலம்தான்.

இந்தப் பின்னணியில் தமிழக காங்கிரசைப் பார்போம்.

___________________________________________

60கள் வரை பலநூறு ஏக்கர் நிலம் சொந்தமான பண்ணையார்கள், ‘மேல்’சாதியினர், மேட்டுக்குடியினர் எல்லாரும் காங்கிரசை அலங்கரித்தனர். காமராசரின் ஆட்சி கூட இவர்களுக்குத்தான் நன்கு பயன்பட்டது. இதன்பின் திராவிட இயக்கம் அதிகாரத்திற்கு வந்த பின்னர், காங்கிரசு தனது சமூக அடிப்படையை முற்றிலுமாக இழந்தது. இன்றும் தொடர்கிறது. மத்தியில் ஆட்சி அதிகாரம், திராவிட இயக்கத்தின் சீரழிவு, திராவிட கட்சிகள் கூட்டணி போன்றவற்றை வைத்தே  காங்கிரசு வாழ்கிறது. இதனால் கருமாதிக்கு போக வேண்டிய கட்சி இன்றும் தமிழகத்தில் சவுண்டு விடுகிறது.

இந்த போக்கினாலேயே காங்கிரசு என்பது தலைவர்கள் மட்டும் இருக்கும் கட்சியாக மாறிவிட்டது. தொண்டர்களை வழங்கும் சமூக அடித்தளத்தை காங்கிரசு இழந்தாலும் தேர்தலுக்கு தேர்தல் தி.மு.கவோ, அ.தி.மு.கவோ இந்த உண்டு கொழுத்த சொகுசுக் கனவான்களது கட்சியை சுமந்தன. 70,80களில் இந்த பண்ணையார்கள் கல்யாண மண்டபங்கள், திரையரங்குகள், மொத்த ஏஜென்சிகள், கேஸ்-பெட்ரோல் முகவர்களாக பரிணமித்தனர். 90களுக்கு பிறகு அபரிதமான அரசு வங்கிக் கடன் மூலம் பெரும் முதலாளிகளாகவும் வளர்ந்து விட்டனர். இன்று தமிழக காங்கிரசில் இருக்கும் அத்தனை தலைவர்களும் சுயநிதிக் கல்லூரிகளை வைத்தும் நடத்துகின்றனர்.  இன்று அரசு வங்கிகளின் வராக்கடன்களது பட்டியிலில் பல காங்கிரசு தலைவர்கள் அடக்கம்.

பார்ப்பன ஊடகங்கள், மேட்டுக்குடியினரை பொறுத்த வரை திராவிட இயக்கம் என்றால் லோ கிளாஸ் மக்களது ரவுடி இயக்கம், காங்கிரசு என்றால் நாகரீகமான கட்சி என்ற ஸ்டீரியோ டைப் கருத்தை அன்றும் இன்றும் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் இந்த காங்கிரசு முதலைகளுக்கு எப்போதும் ஒரு மேட்டிமைத்தனமான பார்வை இருக்கும். தாங்கள்தான் ஆளப்பிறந்தவர்கள் என்று கூச்சமில்லாமல் கருதிக் கொள்வார்கள்.

தலைவர்கள் நிரம்பிய கட்சி என்பதாலேயே இங்கு தொண்டர்கள் யாருமில்லை. தலைவர்கள் மட்டும் இருப்பதினால்தான் இங்கு வேட்டி கிழிப்பு கலாச்சாரம் ஒரு தேசிய அடையாளமாக அனைவராலும் ஒத்துக்கொள்ளப்படுகிறது.

இன்று திடீர் பணக்காரர்களாக ஆனவர்கள், குறுக்கு வழியில் தொழிலதிபர்களாக மாறியவர்கள், அதிகாரத்தின் உதவயால் தொழில் செய்பவர்கள் என அனைவரும் தமது தொழில் பாதுகாப்பு காரணமாக காங்கிரசில் சேர்ந்து ஒரு தலைவர் பதவியை போட்டுக் கொள்கின்றனர். இந்த அடையாளம் தொழில் போட்டி, தாவாக்கள், பஞ்சாயத்துக்கள், போலிசு பிரச்சினை என சர்வரோக நிவாரணியாக செயல்படுகிறது.

தி.மு.க, அ.தி.மு.க போன்ற கட்சிகளில் எல்லாம் அத்தனை சுலபமாக தலைவர் பதவியை பெற்று விட முடியாது. அதற்கு ஏதோ ஒரு விதத்தில் களப்பணி செய்து ஒரு சமூக அடிப்படையை திரட்ட வேண்டும் என்ற ஒழுங்கு இருக்கிறது. காங்கிரசுக்கு அந்த களப்பணி தேவை இல்லை என்பதால் இங்கு சுலபமாக தலைவர் பதவியை பெற்றுவிடலாம். அதற்கு தேவைப்படும் தொகையை கட்டி விட்டீர்களென்றால் பதவி வீடு தேடி வரும்.

மேலும் உங்களுக்கு தலைவர் பதவி வந்துவிட்ட படியாலேயே நீங்கள் கிரமமான கட்சி வேலைகள் எதுவும் செய்ய வேண்டிய அவசியமில்லை. அப்படியே செய்ய விரும்பினாலும் காங்கிரசில் என்ன எழவு களப்பணி காத்திருக்கிறது? அவர்களுக்கு இருக்கும் ஒரே பணி சத்தியமூர்த்தி பவனில் வேட்டியைக் கிழித்துவிட்டு எதிர் கோஷ்டியை பதம்பார்ப்பதுதான். அதுவும் கூட காசு கொடுத்தால் எப்போதும் திரட்டிவிடலாம். இதனால் உள்ளூர் முதலாளிகள், வர்த்தகர்கள், பைனான்ஸ்காரர்கள், என்று பலரும் காங்கிரசில் விருப்பத்தோடு சேர்கின்றனர்.

________________________________________

2.2.2011 தேதியிட்ட குமுதம் ரிப்போர்ட்டரில் “காங்கிரசில் பதவி வாங்க டீ, சுண்டல் போதும் – மதுரை காங்கிரசு காமடி” என்ற உண்மையிலேயே காமடியான கட்டுரை ஒன்று வந்திருக்கிறது. அதில் வரும் சில பத்திகளை அப்படியே தருகிறோம்,

“…மதுரை காங்கிரசில் முக்கிய நிர்வாகியாக இருப்பவர் வாசன் ஆதரவாளரான கோடீஸ்வரன். கட்சிப் பதவிகளை விற்பதுதான் அவர் செய்யும் கட்சிப்பணி. ஒரு உதாரணத்திற்கு, சமீபத்தில் ரோட்டில் தள்ளு வண்டியில் பிளாஸ்டிக் பாத்திரம் விற்கும் ஒருவரிடம் நான் பிளாஸ்டிக் சாமான்கள் வாங்கினேன். நான் கதர் சட்டை வேஷ்டி கட்டியிருப்பதைப் பார்த்த அவர், “நீங்க காங்கிரஸ்காரரா?” எனக் கேட்டார்.

நான் என் கட்சிப் பதவியைச் சொன்னேன். பதிலுக்கு அவர், “நீங்க எவ்வளவு பணம் கொடுத்தீங்க, நான் இருபதாயிரம் கொடுத்து துணைத்தலைவர் பதவி வாங்கியிருக்கிறேன். இது மாதிரி எட்டு வண்டி சிட்டியில ஓடுது. பாதுகாப்புக்கு இருக்கட்டுமேன்னுதான் இந்த கார்டு” எனச் சொல்லி மதுரை நகர் காங்கிரசு துணைத் தலைவர் என அச்சடித்த விசிட்டிங் கார்டை என்னிடம் காண்பித்தார். அரண்டு போனேன்.

அது போல காங்கிரசு கட்சியில் இருந்தவர் கட்சியிலிருந்து விலகி ஹோட்டல் தொழில் செய்து வந்தார். அவர் பத்தாயிரம் கொடுத்து கட்சியின் துணைத் தலைவர் ஆகியிருக்கிறார். அவர் ஒரு காலத்தில் கட்சியில் இருந்தவர் என்பதால் பத்தாயிரம் ரூபாய் சலுகையாம். இதே போல டாக்டர் ஒருவருக்கும் இருபதாயிரம் ரூபாய் கொடுத்து பதவி வாங்கப்பட்டிருக்கிறது.

தினமும் டீ, சுண்டல் வாங்கிக் கொடுத்தவரை சர்க்கிள் கமிட்டி தலைவராக்கி விட்டார்கள். “டீ, சுண்டல் உடம்புக்கு ஆகாது. மட்டன் சுக்கா சாப்பிடுங்க” என்று ஐஸ் வைத்தவருக்கு டீ, சுண்டல் பார்ட்டியிடமிருந்து கமிட்டி தலைவர் பதவி பிடுங்கி அளிக்கப்பட்டது. டீ, சுண்டலுக்கும், மட்டன் சுக்காவுக்கும் இதனால் சண்டை ஏற்பட நிர்வாகி மட்டன் சுக்காவுக்கே ஆதரவளித்தார்.

அண்மையில் கட்சி ஆபீஸில் டீ, சுண்டல் பார்ட்டியைப் பார்த்தேன். “அண்ணே, நான் இப்ப மாவட்டப் பொதுச் செயலாளர் ஆயிட்டேன்” என்றார். எனக்கு தூக்கிவாரிப் போட்டது. “ஆபிஸ் பக்கமே வரக்கூடாதுன்னு உன்னை அவர் விரட்டினாரே” என்ற போது ” அதெல்லாம் சமரசம் ஆயிட்டோம். தொடர்ந்து பிரியாணி வாங்கிக் கொடுத்தேன். டெலிபோன் பில் கட்டினேன். இதெல்லாம் நம்ம கட்சியில சகஜம்தானே”…

_________________________

சிரித்துக் கொண்டே படித்துவிட்டீர்களா? காங்கிரசில் சேர்வதும், ஆளாவதும் இத்தனை சுலபமா என்று இனி வலிந்து விளக்கத் தேவையில்லை.

காங்கிரசு கட்சி ரொம்ப ஆக்டிவாக இருப்பது தேர்தல் காலத்தில்தான். கூட்டணி கட்சிகளின் தயவில் சொகுசாக வெற்றி பெற்று எம்.எல்.ஏ, எம்.பி என்று செட்டிலாவதற்கான வாய்ப்பை அதுதானே வழங்குகிறது? தேர்தல்  காலங்களில் காங்கிரசு குறுநில மன்னர்கள் நடத்தும் மகாபாரதப் போர் தனி ரகம். அதை கதையாக எழுத அந்த வியாசன் வந்தால் கூட நடவாத ஒன்று.

இந்த குறுநில மன்னர்கள் தனித்தனியாக நின்று சண்டையிட்டு கொள்வதற்கு பதில் ஆளுக்கொரு கோஷ்டியாக அணி பிரித்து சிலம்பாடுவார்கள். அதிலும் கொட்டை போட்ட  கோஷ்டிகள் சாமர்த்தியமாக காய் நகர்த்தும். தற்போது 63 தொகுதிகளுக்கும் காங்கிரசு கட்சி ஒருவழியாக வேட்பாளர்களை அறிவித்து விட்டது. தங்கபாலு மனைவிக்கு, கிருஷ்ணசாமி மகனுக்கு, செல்வந்த ரவுடி செல்வபெருந்தகைக்கு, பழம் பெருச்சாளிகள் செல்வக்குமார், ஞான சேகரன், பீட்டர் அல்போன்சுக்கு, மொத்தத்தில் வாசன் கோஷ்டி, தங்கபாலு கோஷ்டி, பி.சிதம்பரம் கோஷ்டி, என்று முடித்து விட்டார்கள்.

இதில் என்னமாய் பீலா விட்டார்கள்? இரண்டு முறை உறுப்பினராக இருந்தவர்களுக்கு சோனியா காந்தி நோ சொல்லிவிட்டார் என்று அள்ளி விட்டார்கள். பட்டியலைப் பார்த்தால் மூன்றுமுறைக்கும் மேல் எம்.எல்.ஏவாக இருந்தவர்களெல்லாம் இருக்கிறார்கள். தங்கபாலு மைலாப்பூர் தொகுதியை ராவாக லபட்டியிருக்கிறார் என்றாலே இந்த வேட்பாளர் ஒதுக்கீடையும் அதற்கு அன்னை சோனியாவின் அருளையும் புரிந்து  கொள்ளலாம்.

ராகுல் காந்தி எனும் நேரு குடும்பத்தின் இளவரசரது சிபாரிசால் யுவராஜ் போன்ற புதிதாக வந்த செல்வக் கொழுந்துகளுக்கு யோகம் அடித்திருக்கிறது. அதிலும் ராகுல் காந்தியின் முயற்சியில் தமிழகத்தில் 13 இலட்சம் உறுப்பினர்களை சேர்த்திருக்கிறார்களாம். அவர்களெல்லாம் பயோடேட்டா, புகைப்படம், சான்றிதழ் கொடுத்து சேர்ந்திருக்கிறார்களாம். இதையெல்லாம் சிலர் மாபெரும் சாதனையாக பீற்றுகின்றனர். கொடுத்தவனெல்லாம் நாளைக்கு ஏதாவது அப்பாயிண்ட்மெண்டோ, இல்லை தொழில் லைசோன்சோ, இல்லை வங்கிக் கடனுக்கோ இந்த உறுப்பினர் பில்டப் பயன்படும் என்று கொடுத்திருக்கிறான். மற்றபடி இந்த 13 இலட்சம் பேரில் பத்துபேர் கூட காங்கிரசுக்கு ஓட்டு அளிப்பது நிச்சயமில்லை.

___________________________________________________

ப்படித்தான் மாபெரும் கொழுப்பு சேர்ந்த ஒரு சதைப்பிண்டமாக காங்கிரசு உப்பி வருகிறது. இத்தகைய ‘ஜனநாயக’ நடைமுறை கொண்ட கட்சிதான் இந்தியாவை வேகமாக ஏகாதிபத்தியங்களுக்கு விற்பனை செய்து வருகிறது. காங்கிரசின் அத்தனை அரசியல் நிலைப்பாடுகளையும் துளிக்கூட வேறுபாடில்லாமல் ஏற்கும் கட்சிகள்தான் தி.மு.கவும், அ.தி.மு.கவும். இதில் தி.மு.க மற்றுமொரு காங்கிரசு கட்சியாக மாறிக் கொண்டிருக்கிறது.

காங்கிரசு இந்த நாட்டில் உள்ள ஏல்லா சீர்கேடுகளுக்கும் ஊற்று. இந்த ஊற்றை இந்த நாட்டின் நீதித்துறை, நிர்வாகத்துறை, இராணுவத்துறை என்று சகல அமைப்புகளும் காத்து வருகின்றன. காங்கிரசை ஒழித்தால்தான் இந்தியாவின் தலையெழுத்து மாற்றப்படும். ஆனால் காங்கிரசை தேர்தல் முறையின் மூலம் ஒழிக்க முடியாது. ஏனெனில் இந்த தேர்தலையும், இந்த அரசியல் அமைப்பையும் எது காத்து நிற்கிறதோ அதுவே காங்கிரசையும் காத்து நிற்கிறது.

காங்கிரசு என்ற கட்சியின் அடியொற்றித்தான் தமிழகத்தின் முக்கிய கட்சிகள் பயணிக்கின்றன. இவர்களது ஒட்டுமொத்த அழிவில்தான் காங்கிரசின் அழிவும் அடங்கியிருக்கிறது. ஆகவே தேர்தல் புறக்கணிப்பு என்ற ஆயுதமே இதற்கு முதலில் தேவைப்படும் போராட்டமாகும். இந்த போலி ஜனநாயகத் தேர்தல் முறை ஒழிக்கப்படும் போது அங்கே தன்னியல்பாக காங்கிரசின் சமாதியும் சர்வ நிச்சயமாக கட்டப்படும். கட்டுவோம்.

_________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

தேர்தல் 2011

பகத்சிங்கை நினைவு கொள்ளச் சம்மதமா?

பகத் சிங் - சுகதேவ் - ராஜகுரு
பகத் சிங் – சுகதேவ் – ராஜகுரு

தியாகத்தையும் ஆளும் வர்க்கம்
சுரண்டாமல் விடுவதில்லை.

பகத்சிங், சுகதேவ், ராஜகுரு…
ஏகாதிபத்திய எதிர்ப்புச் சுடர்களை
ஏகாதிபத்திய ஏவல்நாயின் நீலிக்கண்ணீர்
அணைத்துக் கொல்லப் பார்க்கிறது.
கள்ள அழுகையால் கொள்ளையிடுகிறான்,
தியாகிகளது விடுதலைக் கனவுகளின்
தீராத விழிகளை!

அவர்கள் உயிரோடு மட்டும் இருந்திருந்தால்
தியாகிகள் தினம் என்ற அரசு விளம்பரம்
மேற்கண்ட தீவிரவாதிகள் பற்றி
தகவல் தருபவர்களுக்கு தக்க சன்மானம் என்று
தகவல் ஒளிபரப்பு விளம்பரமாய் இருந்திருக்கும்.

நக்சல் தேடுதல் வேட்டையில் பகத்சிங்கை போட்டுத்தள்ள
ப.சிதம்பரத்தின் கூலிப்படை கிளம்பியிருக்கும்…
தேசத்தின் வளர்ச்சிக்கு சவாலாய் இருப்பதால்
தேடப்படும் ‘பயங்கரவாதிகள்’ ராஜகுரு, சுகதேவை
முதலாளிகளின் சாணக்கிய குரு மன்மோகன் விழி குறிபார்த்து சுட்டிருக்கும்

செத்ததனால் நினைவஞ்சலி
இருந்திருந்தால் என்கவுண்ட்டர்!

பகத்சிங் நினைவுகளின் நீட்சியைக்
கொலை செய்பவனே… நினைவஞ்சலி செலுத்துவதும்,
புரட்சியின் குரல்வளையை நெறிப்பவனே
மலர்வளையம் வைப்பதும்,
இறந்தவர்களுக்கல்ல,
இன்னும் புரட்சியை நிகழ்ச்சி நிரலாக்காமல்
உயிரோடிருக்கும் நம் இயலாமையின்
அவமானங்கள்!

வெறும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும்
சம்பவம் என்பதற்காக அவர்கள் தூக்கிலிடப்படவில்லை.
வர்க்க ‘ஒழுங்கை’ ஆதிக்கத்தை புரட்டிப்போடும்
அவர்களின் அரசியல் கண்டு ஆடிப்போனது
ஆங்கிலேய ஏகாதிபத்தியமும் ஆளும் வர்க்கமும்.

பகத்சிங்கின் அரசியலைப் பார்த்து மருண்டு போனது
பகைவர்கள் மட்டுமா?
ஏன்… இன்னும் புரட்சியின் தேவைகளுக்கு
செவிமடுக்காத நீயும் என்கிறது
அவர்களின் நினைவுகள்…

பசும்புல்லின் வேரிலும்
விசும்பின் நீரிலும்
கேட்பாரற்ற ஏகாதிபத்திய மேலாதிக்கம்.
தாய்ப்பாலும் கருப்பையும் கூட
தனியார்மயத்தின் விற்பனைச் சரக்காகும்
கார்ப்பரேட் பயங்கரவாதம்…
சூறைக்காற்றில் நடுங்கி நிற்கும்
மாடப்புறாக்களாய்…
திகைத்து நிற்கும் ஏழை மக்கள்…
உழைப்புச் சந்தையில்.. உறவுகள் யாருமற்று
அரசியல் அநாதைகளாய் நம் கண்முன்னே
பரிதவிக்கும் உழைக்கும் மக்கள்…

பகத்சிங் இருந்திருந்தால்
இதைப்பார்த்துக் கொண்டு சும்மாயிருப்பானா?

தன்வேலை பறிபோகும் என்ற அச்சத்தில்
கண்முன்னே போராடும் வர்க்கத்தை விட்டு ஒதுங்கி
சுகதேவ்தான் தானுண்டு வேலையுண்டு என நடப்பானா<?

புரட்சி கிளம்பும்போது
நாமும் படியில் ஏறிக்கொள்ளலாம் என
இராஜகுருதான் சாமர்த்தியம் நினைப்பானா?

எல்லாம் தெரிந்த உன்னால்
உழைக்கும் வர்க்கத்தோடு இணையத் தெரியாவிடில்
மூலதன ஆதிக்கத்திற்கெதிராக முழங்கத் தெரியாவிடில்…
பகத்சிங்கை நினைப்பதற்கும் உரிமையுண்டா?

பகத்சிங் தோழர்கள் தியாகம்
அவர்கள் சாவில் இல்லை,
பாட்டாளி வர்க்க இலட்சியத்திற்காக
சமரசமற்ற அவர்கள் வாழ்வில் உள்ளது.

வாழச் சம்மதமெனில் வா.. நண்பா!
பகத்சிங்கை நினைவு கொள்!

_____________________________________________

— துரை.சண்முகம்
_____________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

திமுக : திராவிட முதலாளிகள் கம்பெனி !

38
திராவிட முதலாளிகள் கம்பெனி
படம் - தெஹல்கா

தி.மு.க, காங்கிரசு கூட்டணி முறியும் என்ற நாடகம் ஊடகங்களில் பரபரப்பாய் பேசப்பட்ட நேரம். ஒரு வேலையாய் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சென்றிருந்தேன். புதிய சட்டமன்றத்தின் எதிரே இருக்கும் இந்த நெடுஞ்சாலையிலிருந்து இரண்டு பக்கமும் பிரியும் சந்துகளில் ஏராளமான மேன்சன்கள் எனப்படும் தங்கும் விடுதிகள் இருக்கின்றன. இவற்றில் மாதவாடகைக்கும், தினசரி வாடகைக்கும் அறைகள் கிடைக்கும். திருமணமாகாமல் சென்னை வரும் இளைஞர்கள் இங்கிருந்தே தமது தலைநகரத்து வாழ்க்கையை ஆரம்பிக்கின்றனர்.

தமிழகத்தின் தலைவிதியை தீர்மானிப்பதாக நம்பப்படும் தேர்தலில் சீட்டு கேட்டு வந்த நிறைய கட்சி பிரமுகர்களும் அங்கே தங்கியிருந்தனர். சென்னை தவிர்த்த எல்லா மாவட்டங்களிலிருந்தும் வந்திருந்தனர். அ.தி.மு.கவை விட தி.மு.க கறை வேட்டிகளே அதிகம் தென்பட்டன. அதிலும் ஸ்டிக்கர் கூட பிரிக்கப்படாத புத்தம் புதிய வேட்டிகளும் இருந்தன. அந்த குறுகிய சந்துகளில் இவர்களது இனோவா, ஸ்கார்பியோ கார்கள் பெரும் நெரிசலை தோற்றுவித்தன. இவர்களெல்லாம் யார்? என்ன நம்பிக்கையில், தகுதியில் சீட்டு கேட்டு வருகிறார்கள்?

தி.மு.க போட்டியிடும் 121 தொகுதிகளில் வாய்ப்பு கேட்டு 15,000 பேர் விண்ணப்பத்திருக்கின்றனர். இதில் தலைவர்களுக்காக பரிந்துரைக்கும் காக்கா ஐஸ் மனுக்களைத் தவிர்த்து விட்டு பார்த்தாலும் ஒரு தொகுதிக்கு சுமார் 80 முதல் 90 பேர் வரை விண்ணப்பித்திருக்கின்றனர். இதை கருணாநிதியும் பெருமையுடன் தெரிவித்திருக்கிறார்.

விண்ணப்பித்திருப்போர் நேர்காணலுக்காக தி.மு.க வரலாற்றை படித்து தயார் செய்து வருவதாக ஒரு பத்திரிகை குறிப்பிட்டிருந்தது. ஆனால் தி.மு.க நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்விகள் எதுவும் வரலாறு குறித்து இல்லை. அது வைட்டமின் ப குறித்துதான் மையம் கொண்டிருந்தது. ” எவ்வளவு ரூபாய் செலவழிப்பீர்கள், தொகுதிக்குள் சாதி செல்வாக்கு என்ன, குடும்பப் பின்னணி” போன்றவைதான் முக்கிய கேள்விகள். இந்த கேள்விகள்தான் மற்ற கட்சிகளிலும் கேட்கப்படுகின்றன என்றாலும் இதில் ட்ரெண்ட் செட்டர் தி.மு.கதான். வந்தவர்களில் பெரும்பான்மையினர் ஐந்து கோடி ரூபாய் செலவழிக்கும் தகுதி கொண்டவர்கள் என்றும், இதில் கூடக்குறைய இருந்தாலும் தி.மு.க என்றால் வேட்பாளர் குறைந்த பட்சம் ஐந்து கோடி செலவழிக்க வேண்டும் என்பதுதான் சந்தை நிலவரம் என்கிறார்கள்.

எனில் ஒரு தொகுதியில் ஐந்து கோடி ரூபாயை செலவழிக்கும் ஐம்பது தி.மு.க காரர்கள் குறைந்த பட்சம் இருக்கிறார்கள் என்றாகிறது. இதில் விதிவிலக்கு இருக்கலாம். ஆனாலும் நாம் பொதுவிதியைப் பற்றியே இங்கு பேசுகிறோம். வெற்றி, தோல்வி இரண்டில் எது வந்தாலும் இப்படி 5 கோடி ரூபாயை செலவழிக்கும் வல்லமையை இவர்கள் எங்கிருந்து பெற்றார்கள்? ஒரு வேளை வெற்றி பெற்றாலும் இந்த ஐந்து கோடிக்கு ரிடர்ன் எவ்வளவு கிடைக்கும்?

இந்தியாவில் ஊழல் முறைகேடுகள் என்றால் அதில் ஆதாயம் அடைந்த அரசியல்வாதிகள்தான் நம் நினைவுக்கு வருகிறார்கள். ஆனால் இந்த ஆதாயத்தின் கடைசி நபராகத்தான் அரசியல்வாதி இருக்கின்றார். முதலில் முதலாளிகள், அதிகாரிகள், அரசியல்வாதிகள்தான் என்றுதான் அந்த வரிசை இருக்கின்றது.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் கூட முதலாளிகள், அதிகாரிகள், காங்கிரசு, தி.மு.க என்று இருப்பதைப் பார்க்கலாம். இதில் தி.மு.கவின் மேல்மட்டமே முதலாளிகளாக இருப்பதால் அவர்களில் ஒரு சிலர் முதலாவதாகவும் இருக்கலாம். அப்போதும் கூட ரிலையன்ஸ், டாடா போன்ற தரகு முதலாளிகளின் ஆதாயத்தை அவர்கள் அடைந்திருக்கவில்லை.

இதனால் அரசியல்வாதிகள் ஊழல் செய்த பணம் குறைவு என்ற பொருளில்லை. உலகமயம் அமுலுக்கு வந்த பிறகு ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகள் பெருமளவு சொத்து சேர்த்திருக்கின்றனர். நாட்டின் இயற்கை வளத்தையும், மக்கள் வளத்தையும் ஒருங்கே அபகரிக்கும் முதலாளிகள் அதற்கு உதவி புரியும் அரசியல்வாதிகளுக்கு கணிசமான தொகையை அளிக்கிறார்கள். இதன் அளவு நமது கற்பனைக்கு அப்பாற்பட்டது என்பதை ஸ்பெக்ட்ரம் ஊழலில் பார்த்திருக்கிறோம்.

இதை கீழ்மட்டத்திலிருந்து பார்க்கலாம். ஒரு வார்டு கவுன்சிலர் எப்படியெல்லாம் சம்பாதிக்கிறார்?

சென்னை மாநகராட்சி, வார்டு ஒன்றுக்கு குறைந்த பட்சம் ஒரு கோடி முதல் 5 அல்லது 10 கோடிகள் வரை ஒரு வருடத்தில் செலவழிக்கிறது. இதில் மற்றவருக்கான கமிஷன் போக கவுன்சிலருக்கு பத்து சதவீதம் செல்கிறது. இதன்படி ஒரு கவுன்சிலர் பத்து இலட்சம் முதல் ஐம்பது இலட்சம் வரை சம்பாதிக்கிறார். அடுத்து அந்த வார்டில் வீடு கட்டுபவர் அதன் மதிப்பை பொருத்து கவுன்சிலருக்கு சன்மானம் அளிக்க வேண்டும். எதிர்த்துக் கேட்டால் ரோட்டில் கட்டிட பொருட்களை போடக்கூடாது என்பதிலிருந்து, குடிநீர், கழிவுநீர் இணைப்பு வரை பிரச்சினைக்குள்ளாகும். ஒரு வார்டில் ஒரு வருடத்தில் சுமார் நூறு வீடுகள் கட்டப்படுமென்றால் அதில் கவுன்சிலர் குறைந்தது 25 இலட்சம் முதல் 50 இலட்சம் சம்பாதிப்பார்.

பிறகு வார்டில் உள்ள புறம்போக்கு நிலம் இருந்தால் அதை வளைத்து விற்பது உண்டு. இதை யார் செய்தாலும் அதில் குறிப்பிட்ட தொகை கவுன்சிலருக்கு போக வேண்டும். அதே போல வார்டில் நடைபெறும் நில, மனை விற்பனையிலும் கவுன்சிலருக்கு ஒரு கழிவுத் தொகையை புரோக்கரே தனியாக எடுத்து வைப்பார். இதில் வருமானம் கோடியைத் தாண்டும். இறுதியாக வார்டில் நடைபெறும் கட்டப்பஞ்சாயத்துக்களிலும் கவுன்சிலர் இருப்பதை பலரும் விரும்புவார்கள். போலிசார் கூட தங்களிடம் வரும் பஞ்சாயத்துக்களில் கவுன்சிலர் இருப்பதையே விரும்புவார்கள். இந்த வருமானம் தனி.

வார்டில் நடக்கும் கட்சி பொதுக்கூட்டங்களுக்கு வசூல், கோவில் கும்பாபிஷேகத்திற்கான வசூல், மாநகராட்சிக்கான ஊழியர் நியமன வருமானம் எல்லாம் தனி. இதில் கவுன்சிலரின் படங்கள் பிளக்சில் எல்லா முக்கிய இடங்களிலும் வீற்றிருக்கும். ஆக ஐந்து வருடம் கவுன்சிலராக இருக்கும் ஒரு நபர் தனது சொத்துமதிப்பை சில பல கோடிகளில் தேற்றிவிடுகிறார். இவர்கள் எவரும் ஸ்கார்ப்பியோ காருக்கு குறைவாக பவனி வருவது கிடையாது. வார்டில் நான்கைந்து வீடுகள், கடைகள் என்று ஆயுசுக்கும் போதுமான மதிப்பை சுருட்டி விடுகிறார்கள். இது எல்லா கவுன்சிலருக்கும் பொருந்துமென்றாலும் ஆளும் கட்சி என்பதால் தி.மு.க கவுன்சிலர்கள் அதிகம் சம்பாதித்து விடுகிறார்கள்.

சென்னையில் தி.மு.க கவுன்சிலர்களின் ‘சம்பாத்தியம்’ உருவாக்கியிருக்கும் கெட்ட பெயரால் தி.மு.கவின் தலைவர்கள் பலர் வெளித் தொகுதிகளுக்கு சென்றிருக்கிறார்கள் என்ற செய்தியில் உண்மை இல்லாமல் இல்லை.

_______________________________________________________

ஒரு கவுன்சிலரே இவ்வளவு சம்பாதிக்கிறார் என்றால் பல வார்டுகளைக் கொண்ட ஒரு சட்ட மன்றத் தொகுதியில் வருமானம் எவ்வளவு இருக்கும் என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளலாம். ஒரு சட்டமன்றத் தொகுதியில் தமிழக அரசு செலவழிக்கும் எல்லா திட்டங்களுக்கான ஒப்பந்ததாரர் தொகையில் ஒரு கழிவுத் தொகை உறுப்பினருக்கு சென்றுவிடும். மேலும் இவர்கள் சுருட்டுவதோடு தங்களது அல்லக்கைகள் சம்பாதிப்பதற்கும் வாய்ப்பு ஏற்படுத்தி ஒரு கூட்டத்தை வைத்துக் கொள்கிறார்கள். மக்களிடையேயும் ஒரு வள்ளல் தோற்றத்தை உருவாக்கிகொண்டும், சாதி ரீதியாகவும் செல்வாக்கை உருவாக்கி கொள்கிறார்கள்.

மணல் விற்பனை, ரியல் எஸ்டேட், டாஸ்மார்க்கின் பார், ஓட்டுநர் நடத்துநர் போன்ற நியமன அரசு ஊழியர் பதவிகள், தொழில் லைசென்சுகள், தொழில் மாமூல்கள், கிரானைட் தொழில், என்று ஏராளமான வகைகளில் வருமானம் கொட்டுகிறது. இதுபோக கட்சியின் தலைமைக்கு அவ்வப்போது பெரும் தொகையை வசூலித்தும் கொடுப்பார்கள். எம்.ஏஎல்.ஏக்கள், எம்.பிக்கள், கழகங்களின் மாவட்ட செயலாளர்கள் எல்லாம் இந்த ரகத்தில் வருவார்கள். இவர்கள் அந்தந்த மாவட்ட பகுதிகளின் குறுநில மன்னர் என்று கூட சொல்லலாம்.

கலைஞர் குடும்பம், அமைச்சர்கள் முதலான தி.மு.கவின் மேல்மட்டத்தினர் அவர்களே முதலாளிகளாவும் இருக்கிறார்கள். அனைவருக்கும் பெரும் தொழில் நிறுவனங்கள் உண்டு. மாநிலத்தின் அனைத்து ஒப்பந்ததாரர்களின் கழிவுத் தொகையும் இவர்களுக்கு சென்று விடும். பன்னாட்டு நிறவனங்கள் தொடர்பான அரசு முடிவுகள் இவர்கள் மூலமே நடப்பதால் அதில் நாம் நினைத்தும் பார்க்க முடியாத வருமானம் செல்கிறது. சான்றாக ஹூண்டாய் தொழிற்சாலை கழிவுப் பொருட்களின் மாத மதிப்பு 50 இலட்சமாகும். இது ஒரு தி.மு.க மேல்மட்டத்திற்கு செல்கிறது. மற்றும் எல்லா அமைச்சர்களும் பொறியியல் கல்லூரிகள் முதல் காஸ்ட்லியான பள்ளிகளையும் வைத்து நடத்துகிறார்கள்.

ஓட்டல் முதலாளிகள் சங்கம், ஆம்னி பஸ் முதலாளிகள் சங்கம், தனியார் மருத்தவ மனைகள் சங்கம், தனியார் பள்ளிகள் சங்கம், தனியார் கல்லூரிகள் சங்கம், சிமெண்ட் மற்றும் கட்டுமான முதலாளிகள் சங்கம் என்று எல்லா தொழில்களுக்குமான முதலாளிகள் சங்கத்தினர் அந்தந்த அமைச்சருக்கு குறிப்பிட்ட காலத்திற்கான மாமூலை பெரும்தொகையில் தருகிறார்கள். சில இடங்களில் இது சொத்து பரிவர்த்தனையாகவும் நடக்கிறது. தமிழகத்தின் பெரும் மதிப்பிலான முன்னணி ரியல் எஸ்டேட் வர்த்தகங்களையும் இவர்களே கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள்.

இவர்கள் தமது சொத்துக்களை நம்பிக்கையான பினாமி மற்றும் குடும்பத்தினர் மூலம் வைத்து உப்ப வைக்கிறார்கள். ஹவாலா, அண்டை நாடுகளில் சொத்துக்கள் வாங்குதல், சுவிஸ் வங்கி என்று இவர்களது முறைகேட்டு பணம் எளிதில் கண்டுபிடிக்க இயலாதபடி மறைந்திருக்கிறது. மேலும் தி.மு.கவில் கட்சிப்பதவிகள் அனைத்திலும் கொட்டை போட்ட பெருச்சாளிகளின் வாரிசுகளே இப்போது வருகிறார்கள். அ.தி.மு.கவில் கூட அம்மாவின் தயவால் சில சாதாரணமனிதர்கள் பொறுப்புக்கு வருவது என்பதெல்லாம் தி.மு.கவில் கனவில் கூட நடவாத காரியம்.

91, 2001-ஆம் ஆண்டுகளில் பதவியேற்ற ஜெயா கும்பல் அடித்த கொள்ளையை விட அளவிலும், வகைகளிலும் தி.மு.க கும்பல் இந்த 5 ஆண்டுகளில் அடித்த கொள்ளை அதிகம். மேலும் தொடர்ந்து மத்தியில் கூட்டணி அமைச்சரவையில் பங்கேற்றிருப்பதும் இதற்கு ஒரு காரணம்.

_______________________________________________

தி.மு.கவின் வட்ட செயலாளர் முதல் அறிவாலயத்தை கட்டி ஆளும் கலைஞர் குடும்பம் வரை இவர்களது உணர்வையும், உணர்ச்சியையும் தீர்மானிப்பது இந்த வர்த்தக உணர்வுதான், கொள்கை சார்ந்த அரசியல் உணர்வல்ல. தி.மு.கவில் ஒருவர் வட்ட செயலாளராகவோ இல்லை மாவட்ட பிரமுகராவோ, சட்ட மன்ற உறுப்பினராகவோ ஆக வேண்டுமென்றால் அதற்கு அவரது அரசியல் உணர்வு ஒரு போதும் தீர்மானிக்கும் காரணமாக இருப்பதில்லை. அவரால் தி.மு.க எனும் கார்ப்பரேட் கம்பெனிக்கு எப்படி சம்பாதித்து கொடுக்க முடியும், அந்த சம்பாத்தியத்திலிருந்து கட்சியை எப்படி நடத்த முடியும் என்பதிலிருந்தே அவரது செல்வாக்கு தீர்மானிக்கப்படுகிறது.

மாநாடுகள், கட்சி கூட்டங்கள், அமைச்சருக்கான அணிதிரட்டல்கள் அத்தனையும் ஒரு வணிக நிறுவனம் போலவே நடக்கிறது. சுவரொட்டி ஒட்டுவது, கொடி நடுவது, கூட்ட வேலைகள் அனைத்தும் இப்போது தொண்டர்கள் செய்வதில்லை. மேலும் இதற்கு தேவையில்லாத வகையில் இப்போது கட்சியின் பிரச்சாரத்தை ஒன்றுக்கு இரண்டாக தொலைக்காட்சிகளே செய்கின்றன. பூத் ஏஜெண்ட், வட்டபொறுப்பாளர், தொகுதி பொறுப்பாளர் அத்தனைக்கும் ஒரு ரேட் உண்டு. கூடுதலாக இதில் திருமங்கலம் முறை என்று ஒரு பெரிய முறையையே உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

நேர்காணலில் ” எவ்வளவு செலவழிப்பீர்கள்?” என்ற கேள்வி முதன்மையாக இருப்பதன் பின்னணி இதுதான். அதனால்தான் தி.மு.க எனும் கட்சியில் இருப்பது ஒரு வர்த்தக உணர்ச்சிதான் என்கிறோம். இதற்கு பொருத்தமான சான்றாக தி.மு.க – காங்கிரசு மோதல் நாடகத்தை பார்க்கலாம்.

தி.மு.கவில் அரசியல் உணர்ச்சியோடு இருக்கின்ற தொண்டர்கள் இருக்கிறார்கள். எனினும் அதனோடு பிழைப்புவாதம், சந்தர்ப்பவாதம், ஊழல் எல்லாம் கலந்துதான் இருக்கிறது. இவர்கள் நேரடியாக தி.மு.க எனும் வர்த்தக வளையத்தில் ஒரு ஆளாக வரமுடியாத கீழ் நிலையில் இருப்பவர்கள். அந்தந்த குறுநில மன்னர்களின் எலும்புத்துண்டில் காலத்தை ஓட்டுபவர்கள். இவர்கள்தான் காங்கிரசுடனான கூட்டணி முறிவு என்ற சேதி வந்ததும் துள்ளிக் குதித்தார்கள்.

இது ஏதோ ஒரு வகையில் கொஞ்சம் தன்மான உணர்வினைக் கொண்டிருக்கிறது என்பதும் உண்மைதான். மேலும் காங்கிரசை பிடிக்காத மற்ற நடுநிலைமையாளர்கள் கூட தி.மு.கவின் முடிவை வெகுவாக வரவேற்றார்கள். ஆனால் தி.மு.கவில் பொறுப்பில் இருக்கும் எவரும் இத்தகைய தன்மான உணர்ச்சியில் இதை பார்த்திருக்க் மாட்டார்கள் என்பது நிச்சயம். அவர்களை பொறுத்த வரை இது இரண்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கிடையே எழுந்த சிக்கல். ஒன்றின் வாழ்வு மற்றதனைச் சார்ந்து  இருப்பதால் அவர்கள இதை தீர்க்கவே நினைத்தார்கள்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக பாரளுமன்றத்தில் அடக்கி வாசிக்கும் காங்கிரசு சி.பி.ஐ விசாரணையில் தலையிட முடியாது என்றதும், போபார்ஸ் வழக்கை ஊற்றிய மூடியது போல இதையும் மூட வேண்டும் என்று தி.மு.க  கோரியதும் உண்மையாக இருக்கலாம். மற்றபடி இந்த விசாரணை வேறு எதையும் அதாவது பாதிப்பு ஏற்படுத்தும் வண்ணம் இருக்காது என்பது இருவருக்கும் தெரியும். அப்படி ஒரு பாதிப்பு வரும் பட்சத்தில் அது ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஆதாயம் அடைந்த முதலாளிகளின் பிரச்சினை என்பதால் அதை யாருமே விரும்பமாட்டார்கள்.

காங்கிரசுக்கு தமிழகத்தில் ஒரு வோட்டு கூட கிடையாது, தனித்து நின்றால் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாது என்பது தி.மு.கவிற்கு தெரியும். ஆனால் மத்தியில் ஆட்சியில் பங்கேற்றிருப்பதால் அடைந்த ஆதாயத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் காங்கிரசு கேட்கும் தொகுதிகள் அதிகமில்லை என்பதும் தி.மு.க அறியும். இதை வைத்தே காங்கிரசு தி.மு.கவை வழிக்கு கொண்டு வந்தது என்பது இப்போது அனைவரும் அறிந்த ஒன்று.

இப்படி இரு கட்சிகளுக்கும் சாதக பாதக விசயங்கள் இருப்பதும் அவை இரண்டு கம்பெனிகளின் வர்த்தக முரண்பாடுகளினால் எழுந்தது என்பதும்தான் நாம் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான அம்சம். இதில் காங்கிரசு மேல் கை எடுத்தற்கு அது தி.மு.கவை விட பெரிய கம்பெனி என்பதை தாண்டி வேறு இரகசியங்கள் ஏதுமில்லை. ஆரம்பத்தில் இந்த முரண்பாடு தி.மு.கவின் தன்மானத்திற்கு விடப்பட்ட சவால் என்பதாக சித்தரித்த கருணாநிதி பின்னர் காங்கிரசு கேட்ட அதே 63 தொகுதிகளை ஒப்புக் கொண்டார் என்பதிலிருந்தே இது தன்மானப்பிரச்சினை இல்லை, பொறுக்கித் தின்பதில் உள்ள அடிமைத்தனம் என்பதை  புரிந்து கொள்ளலாம்.

வியாபாரத்தில் தனிப்பட்ட மான அவமான உணர்ச்சி இல்லை என்பது தி.மு.கவிற்கும் நன்கு பொருந்தும். சென்ற சட்டமன்றத்தில் கருணாநிதியை அர்ச்சித்த சேகர்பாபு இப்போது தி.மு.க வேட்பாளராக போட்டியிடுகிறார் என்பது அதற்கு சமீபத்திய சான்று.

தி.மு.க எப்படி ஒரு கார்ப்பரேட் கம்பெனியாக செயல்படுகிறதோ அதே போன்றுதான் அ.தி.மு.கவும் செயல்படுகிறது. ஆட்சியில் இல்லை என்பதால் இந்த கம்பெனியின் வரவு செலவு நட்டத்தில் இருப்பது என்பதைத் தாண்டி வேறு வேறுபாடு எதுவும் இல்லை.

அன்றாட வாழ்க்கைக்கு பயன்படாத தி.மு.க அரசின் நலத்திட்டங்களைத் தாண்டி விலைவாசி உயர்வு, கருணாநிதி குடும்பத்தின் ஆதிக்கம் போன்றவை காரணமாக மக்கள் அதிருப்தியிலும் கோபத்திலும் இருக்கிறார்கள். எனினும் ஒரு தொகுதியில் 5000 முதல் 10000 வாக்குகளை தலா ரூ. 5000 கொடுத்து வாங்கிவிடலாம் என்று தி.மு.க அசாத்திய நம்பிக்கையுடன் இருக்கிறது. மேலும் பூத் ஏஜெண்டு முதல் வட்டார பொறுப்பாளர் வரை அனைவரும் அவர்கள் எந்தக் கட்சியாக இருந்தாலும் அவர்களை விலைகொடுத்து வாங்கும் நிலையிலும் தி.மு.க இருக்கிறது.

இதனால்தான் ஜெயலலிதாவும் கூட தி.மு.கவின் கொள்கை அரசியலுக்காக பயப்படவில்லை. அவர் பயப்படுவது தி.மு.கவின் கார்ப்பரேட் வர்த்தக பலத்திற்குத்தான். அதையும் மீறி மக்கள் தமக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் அவர் இருக்கிறார்.

___________________________________________________

டாவடி அழகிரியும், கோட்டு சூட்டு தயாநிதி மாறனும்தான் தி.மு.கவின் இன்றைய முகங்கள். தமிழனது சுயமரியாதையைக் காப்பாற்றுவோம் என்று முழங்கி தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்த தி.மு.கவின் இன்றைய வடிவமைப்பை உலகமயத்தின் தயவில், முதலாளிகள்தான் தீர்மானிக்கிறார்கள். தி.மு.கவின் பாதையில்தான் மற்ற கட்சிகளும் பயணிக்கின்றன. வர்த்தகத்தில் யார் பெரியவர் என்பதுதான் அவர்களுக்கிடையே உள்ள போட்டி.

அரசியல் என்பதை இப்படி இலாபம் பார்க்கும் தொழிலாக மாற்றியதைத்தான் இன்றைய சமூக அமைப்பு சாதித்திருக்கிறது. இந்த அமைப்பிற்குள் இருந்து கொண்டு தி.மு.க, அ.தி.மு.க என்று மாற்றி மாற்றி வாக்களிப்பது மூலம் நாம் எந்த பயனையும் அடையப்போவதில்லை என்பதோடு பெரும் துன்பங்களையும், துயரங்களையும்தான் சந்திக்கிறோம். எனவே நமது மாற்று பார்வை என்பது இந்த அமைப்பிற்கு வெளியே இருந்துதான் வரமுடியும். அதற்கு முதற் கண்ணாக இந்த தேர்தலை நாம் புறக்கணிக்க வேண்டும். வாக்களிப்பது ஒரு ஜனநாயகக் கடமை என்று காதில் பூ சுற்றுவார்கள். இல்லை இந்த போலி ஜனநாயகத் தேர்தலை புறக்கணிப்பதன் மூலமே நாம் உண்மையான ஜனநாயகத்தின் முதல் படியை எடுத்து வைக்க முடியும்.

________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

தேர்தல் 2011

தேர்தலில் மூழ்கிய தமிழகமே, இந்தியா விலைபோன கதையைக் கேள் !

45
மன்மோகன்-சிங்

ந்திய வரலாற்றின் முக்கியமான தினங்களில் ஒன்று 2008-ஆம் ஆண்டு ஜூலை 22-ஆம் தேதி. அன்றைய நாளில் தான் இந்திய ஜனநாயகத்தின் மாண்பு சுடர்விட்டுப் பிரகாசித்தது. உலகிலேயே முதலாம் பெரிய ஜனநாயகம் என்று போற்றப்படும் இந்திய ஜனநாயகத்தின் கருவறையான தில்லி பாராளுமன்றத்தில் அன்று நடந்த ஆபாச நடனங்கள் தான் அந்த நாளை இன்றும் நாம் மறக்காமல் நினைத்துப் பார்க்கக் காரணம்.

காஞ்சிக் கருவறையில் காம நர்த்தனம் புரிந்த தேவதாதனே கூச்சப்படுமளவிற்கு மேற்படித் தேதியில் ஓட்டுக் கட்சிகள் நடத்திய ஜனநாயக ரிக்கார்டு டான்சை ஒரு முறை நாம் திரும்பிப் பார்ப்போம். “இப்ப ஏன் சார் கொசுவர்த்திய சுத்தரீங்க” என்று நீங்கள் கேட்பது புரிகிறது – கொஞ்சம் பொறுத்தீர்களானால் விடையை நீங்களே இறுதியில் கண்டடைவீர்கள். 2008-ஆம் ஆண்டின் மத்தியில் முதலாம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்காளி பங்காளியாக இருந்த இடது வலது போலிக் கம்யூனிஸ்ட்டுகள் கூட்டணி அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை வாபஸ் பெற்றுக் கொண்டதால் ஆளும் கூட்டணி நம்பிக்கை வாக்கெடுப்பு ஒன்றை நடத்தியது.

போலிகள் அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றார்கள் என்றதும் உடனே இது ஏதோ கொள்கையின் அடிப்படையில் தேச நலனை முன்னிட்டு எடுக்கப்பட்ட முடிவு என்பதாக நீங்கள் யாரும் குழப்பிக் கொள்ளக் கூடாது. எனவே வினவு வாசகர்கள் பாராளுமன்றத்தில் நடந்த ஜனநாயகக் குத்தாட்டத்தைப் பற்றி அறிந்து கொள்ளும் முன், இந்தப் போலிகளின் ‘ஆதரவு வாபஸ்’ நாடகத்தைப் பற்றிய ஒரு சுருக்கமான பின்னணியை அறிந்து கொள்வது அவசியம்.

_________________________________________________________

சென்ற நூற்றாண்டியின் இறுதியில் இருந்தே அமெரிக்காவுக்குத் தெற்காசியப் பிராந்தியத்தில் வலுவான பேட்டை ரவுடி ஒன்றின் தேவை இருந்தது. தனது எண்ணைப் பசிக்காக மத்திய கிழக்கு நாடுகளை எந்தவித இடையூறும் இன்றி உறிஞ்சிக் கொள்வதற்கு எதிராக ஒரு சின்ன முணுமுணுப்பு கூட ஆசிய பிராந்தியத்தில் இருந்து எழுந்து விடக்கூடாது என்பதில் அமெரிக்கா தீவிர கவனம் செலுத்தியது.  ஏற்கனவே முதலாளித்துவப் பாதைக்குத் திரும்பிய சீனத்தின் அசுர வளர்ச்சி அமெரிக்காவுக்கு உறுத்தலாய் இருந்தது.

சீனம் தொடங்கி மத்திய கிழக்கு வரை அமெரிக்க நலனுக்கேற்ற சரியானதொரு அடியாளாக இந்தியா தெற்காசியப் பிராந்தியத்தில் அமைந்தது. இந்தியாவைத் தனது நீண்டகால அடிமையாக வைத்துக் கொள்ளும் நோக்கத்திற்காக நம் தலைமீது திணிக்கப்பட்டது தான் இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம். அந்த ஒப்பந்தம் பல்வேறு அம்சங்களில் இந்தியாவைக் கட்டுப்படுத்துவதோடு அமெரிக்காவின் ஒரு மறைமுகக் காலனி நாடாகவும் உறுதிப்படுத்துகிறது.

இந்த ஒப்பந்தத்தை வெறுமனே அணுசக்தியின் மூலம் மின்சாரம் தயாரிக்க அமெரிக்கா இந்தியாவுக்கு உதவுவதற்காகப் போடப்பட்டதாக மட்டும் புரிந்து கொள்ளக் கூடாது. ஜூலை 2005-ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஜார்ஜ் புஷ் – மன்மோகன் விடுத்த கூட்டறிக்கையில் இது இந்திய-அமெரிக்க இராணுவ ஒத்துழைப்புச் சட்டகத்தின் தொடர்ச்சியே என்று அறிவித்துள்ளனர்.

மேற்கத்திய நாடுகள் ஏற்கனவே ஏறக்கட்டிய தொழில் நுட்பத்தை இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவின் தலையில் கட்டுவதால், இதையே காரணமாகக் காட்டி இந்தியாவை ஈரானுடன் பெட்ரோல் வர்த்தகம் வைத்துக் கொள்வதை நிறுத்த முடியும். மேலும், சர்வதேச அரங்கில் அமெரிக்க நலன்களுக்கு ஏற்ப இந்தியாவை ஆட வைக்க முடியும். மூன்று லட்சம் கோடி மதிப்புள்ள அணு உலைகளை அமெரிக்க முதலாளிகள் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய வகை செய்யும் இந்த ஒப்பந்தம், பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அமெரிக்க முதலாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம். இப்படி இந்த ஒப்பந்தத்தின் பக்க விளைவுகள் நிறைய உள்ளன.

இதெல்லாம் போலி கம்யூனிஸ்டுகளுக்குத் தெரியும். இந்த ஒப்பந்தத்திற்கான ஏற்பாடுகள் முன்பே நடந்து வந்ததும் தெரியும்.  கூட்டு ஒப்பந்தம் பற்றியும் 2005-ஆம் ஆண்டு முதலே தெரியும். அவர்களை விடுங்கள்; செய்தித் தாள்களை வாசிக்கும் எவருக்கும் இதெல்லாம் தெரிந்தே தான் இருந்தது. ஒப்பந்தம் நிறைவேறுவதைத் தடுக்க வேண்டுமென்று அவர்கள் நினைத்திருந்தால், அரசுக்கான ஆதரவை முன்பே வாபஸ் பெற்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசைக் கவிழ்த்திருக்க முடியும். ஆனாலும் அவர்கள் வெற்றுச் சவடால்கள் அடித்துக் கொண்டும், செல்லமாகக் கோபித்துக் கொண்டும் ஜூலை  2008 வரை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள் – காரணம் அடுத்த பத்து மாதங்களில் வரவிருந்த பாராளுமன்ற பொதுத் தேர்தல்!

ஆதரவு விலக்கப்பட்டதற்காகக் காங்கிரசும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அவர்கள் பார்க்காத ஜனநாயகமா இல்லை அவர்கள் பார்க்காத பாராளுமன்ற வாக்கெடுப்பா. அது அவர்கள் வழக்கமாக சிக்ஸும் ஃபோருமாக விளாசும் சொந்த மைதானமல்லவா? காங்கிரசு தனது கட்சியின் ஜனநாயகக் காவலர்களை பன்றி பிடிக்க பெட்டியும் கையுமாக பாராளுமன்றக் மலக்குட்டையில் இறக்கி விட்டது. இந்தப் பின்னணியில் தான் ஜூலை 22-ஆம் தேதி 2008-ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்திய ஜனநாயகத்தின் புனிதத்தலமான தில்லி பாராளுமன்றத்தின் மையத்தில் பாரதிய ஜனதா எம்பிக்கள் சிலர் கத்தை கத்தையாக கரன்சி நோட்டுகளைக் கொட்டினர். இந்தப் பணம் தாங்கள் அரசுக்கு ஆதரவாக ஓட்டுப் போட கொடுக்கப்பட்ட லஞ்சம் என்கிற குட்டையும் உடைத்தனர்.

இதற்கிடையே, வாக்கெடுப்பிற்கு முன்பாகவே சி.என்.என்- ஐபிஎன் தொலைகாட்சி எம்பிக்களிடம் பணம் கொடுக்கப்பட்டதைப் பதிவு செய்திருந்தது. ஏற்கனவே தனது இந்துத்துவ அரசியலால் ஓட்டாண்டியாகி நடுத்தெருவில் நின்றுகொண்டிருந்த நிலையில், எதிர்வரும் தேர்தலைக் குறிவைத்து பாரதிய ஜனதா தனது எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுத்ததை இரகசியமாகப் பதிவு செய்து ஓட்டெடுப்புக்கு முன்பு தொலைக்காட்சியில் வெளியிட வேண்டும் என்று சி.என்.என்- ஐபிஎன் மூலம் அந்த ஏற்பாட்டைச் செய்திருந்தது. இப்படிச் செய்ததால் பாரதிய ஜனதாவுக்கு அணு ஒப்பந்தத்தைத் தீவிரமாக எதிர்க்க வேண்டும் என்கிற எண்ணமோ அமெரிக்க எதிர்ப்புணர்வோ  இருந்ததாக நினைத்துக் கொள்ள வேண்டாம் –  அமெரிக்க எதிர்ப்புணர்வென்பது அவர்கள் கனவில் கூட வந்ததில்லையென்கிற உண்மையை கடந்த பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக அத்வானியே  அமெரிக்க தூதரக அதிகாரியிடம் சொல்லியிருப்பது தற்போது அம்பலமாகியிருக்கிறது.

இது ஒருபக்கம் இருக்க, தாங்கள் பத்திரிகையாளர்கள் என்பதும், ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்பதும், ஜனநாயகப் பூந்தோட்டத்தைக் காவல் காக்கும் காவல் நாய்கள் என்பதுமான தீடீர் ஞானோதயம் சி.என்.என்னுக்கு ஏற்பட்டு விடுகிறது. எனவே, பாராளுமன்ற ஜனநாயகத்தின் மேல் மக்களுக்கு இருக்கும் ‘நம்பிக்கையைக்’ காப்பற்றப் போவதாகவும், அதற்காக பதிவு செய்யப்பட்ட மேற்படி கண்கொள்ளாக் காட்சிகளை வெளியிடுவதில்லை என்றும் சி.என்.என் முடிவு செய்து, அந்தப் பதிவுகளை இவ்விவகாரம் பற்றி விசாரிக்கப் போகும் கமிட்டியிடம் அளித்து விடப்போவதாக அறிவித்தது.

ஜூலை 22-ஆம் தேதி நடந்த ஆபாசக் கூத்துகளைத் தொடர்ந்து பாராளுமன்ற ஜனநாயகத்தின் முகத்தில் அப்பிக் கொண்டிருந்த நரகலைக் கழுவி பவுடர் பூசி பொட்டிட்டு மலர் சூடி சிங்காரிக்க வேண்டிய தேவை சர்வ கட்சிகளுக்கும் உண்டானது. ‘சுதந்திர’ இந்தியாவில் லஞ்ச ஊழல் முறைகேடுகளைக் கையாளும் பாரம்பரிய வழக்கத்தின் படி காங்கிரசு எம்பியான கே.சி. தியோவின் தலைமையில் ஏழு பேர் கொண்ட கமிட்டி ஒன்று  அமைக்கப்படுகிறது. மார்க்சிஸ்டு, பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்கள் கொண்ட அந்தக் குழுவிடம் தான் சி.என்.என் பதிவு செய்த டேப்புகளும் ஒப்படைக்கப்பட்டது.

அதே ஆண்டு டிசம்பர் மாதம் தனது அறிக்கையைச் சமர்பித்த மேற்படி கமிட்டி, அதில் குற்றச்சாட்டிற்கு உள்ளான அகமது பட்டேல் மற்றும் அமர்சிங் இருவரும் குற்றமற்றவர்கள் என்றும் தம்மிடம் ஒப்படைக்கப் பட்ட ஆதாரங்கள் போதுமானவைகள் அல்லவென்றும் குறிப்பிட்டது. மேலும், எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளான மற்ற மூவரின் மீதும் உரிய புலனாய்வு நிறுவனங்களைக் கொண்டு விசாரிக்கலாம் என்று சொல்லி மொத்தமாக விசயத்தை ஊத்தி மூடி விட்டது.

ஜூலை மாத நம்பிக்கை வாக்கெடுப்பைத் தொடர்ந்து நான்கு மாதங்களாக சாமியாடி வந்த பாரதிய ஜனதாவோ, நேர்மை எருமை கருமை என்று பெரிய நன்னூல் போல பேசிக் கொண்டிருந்த போலி கம்யூனிஸ்ட்டுகளோ இந்த விவகாரத்தை மேற்கொண்டு முன்னெடுத்துச் செல்லாமல் அப்படியே கமுக்கமாக இருந்து விட்டார்கள். மேற்கொண்டு வெளிப்படையான விசாரணை கோரியிருக்கலாம்; அல்லது நீதி மன்றத்தை நாடியிருக்கலாம்; அல்லது மக்கள் முன் எடுத்துச் சென்றிருக்கலாம் – ஆனால், இவர்கள் மொத்தமாக மவுனம் காத்தார்கள். அவர்களுக்கே தெரியும் – இதற்கு மேல் இந்த விவகாரத்தை நோண்டினால் ஜனநாயக செப்டிக் டேங்கின் மூடியைத் திறந்து முகர்ந்து பார்த்தது போலாகி விடுமென்று. எனவே தங்கள் கள்ள மவுனத்தின் மூலம் ஜனநாயகத்தின் மாண்பை காத்துக் கொண்டார்கள்.

நிற்க.

இப்போது என்ன சார் பழைய விவகாரத்தையெல்லாம் எடுக்கறீங்க என்கிறீர்களா? விஷயம் இருக்கிறது.

________________________________________________________

ம் கிராமத்து மக்களிடையே ஒரு சொலவடை உண்டு – “யாருக்கும் தெரியாம போகட்டுமின்னு அய்யரு கிணத்துல முங்கிக் குசு வுட்டாராம்” என்பார்கள். பாராளுமன்றத்தில் பிரிந்த ஜனநாயகக் குசுவின் நாற்றம் ஏழு பேர் கமிட்டியென்னும் கிணற்றைத் தாண்டி வெளியே வராது என்று இத்தனை நாட்களாக சர்வகட்சி ஜனநாயக அபிமானிகளும் நினைத்துக் கொண்டிருக்க, கடந்த மார்ச் பதினேழாம் தேதி விக்கிலீக்ஸ் வடிவத்தில் குமிழிகளாக வெளிப்பட்டிருக்கிறது.

விக்கிலீக்ஸ் வசம் உள்ள அமெரிக்காவின் இரகசிய ஆவணங்களில் இந்தியா தொடர்பானவற்றை இந்து பத்திரிக்கை கடந்த வாரத்திலிருந்து வெளியிட்டு வருகிறது. இந்திய ஆளும் கும்பல் நேரடியாக அமெரிக்கப் பாதந்தாங்கிகளாக செயல்பட்டு வருவது பற்றிய விபரங்கள் தற்போது வெகு விமரிசையாக அம்பலமாகி வருகிறது. அமெரிக்கா தனது ஐந்தாம் படைகளை இந்திய அதிகார அடுக்குகளின் பல்வேறு மட்டங்களில் விதைத்து வைத்திருந்ததும், அவர்கள் நாய்களே நாணிக் கோணும் படிக்கு தமது அமெரிக்க எஜமானர்களின் கால்களை நக்கிக் கிடந்ததும் இந்தச் செய்திகளின் ஊடாக தெட்டத் தெளிவாக அம்பலமாகியுள்ளது.

மார்ச் 17-ஆம் தேதியிட்ட இந்து நாளிதழில் வெளியான – விக்கிலீக்ஸிடம் இருந்து பெறப்பட்ட – அமெரிக்கத் தூதரகத்தின் இரகசிய ஆவணமொன்றில், 2008-ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கொண்டுவந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்க்கட்சி எம்.பிக்களின் ஆதரவைப் பெற காங்கிரஸ் பிரமுகரும் நேரு குடும்ப விசுவாசியுமான சதீஷ் சர்மா, ஜூலை 22-ஆம் தேதி நடைபெறப் போகும் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்ல காங்கிரசு கடுமையாக முயற்சித்து வருவதாக தூதரக அதிகாரி ஸ்டீபன் வொய்ட்டிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் அவரின் நெருங்கிய கூட்டாளியான நச்சிகேத்த கபூர் என்பவர் இரண்டு பெட்டிகளில் திணிக்கப்பட்டிருந்த கரன்சி காகிதங்களைத் தூதரக அதிகாரியிடம் திறந்து காட்டி அது எம்.பிக்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய லஞ்சப் பணம் என்று தெரிவித்துள்ளார். அவரே மேலும், பிரதமரே நேரடியாக சந்த் சத்வால் என்பவர் மூலமாக அகாலி தளத்தின் எட்டு எம்பிக்களை வளைக்க முயன்றதாகவும் அது வெற்றி பெற வில்லையென்றும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தூதரக அதிகாரியிடம் ஏதோ மாமன் மச்சான் போல் அத்தனை உரிமையெடுத்துக் கொண்டு பேசும் நச்சிகேதா கபூர், “துட்டு குடுப்பது ஒன்னியும் பெரிய மேட்டரேயில்ல.. ஆனா இந்தப் பயலுக வாங்கிக்கினு ஒயுங்கா நமக்கு ஓட்டுப் போடுவானுங்களான்னு தான் சந்தேகமா கீது” என்று தனது சந்தேகத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.  இப்படி அணு சக்தி ஒப்பந்தம் நிறைவேறுவதை மிகக் கவனமாக கவனித்து வரும் அமெரிக்கத் தூதரக அதிகாரி ஓட்டெடுப்புக்கு முன்னரே தனது கணிப்பாக மன்மோகனின் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்பிப் பிழைக்குமென்றும் – அது இன்னின்ன எண்ணிக்கையில் வாக்குகள் வாங்கும் என்றும் ஒரு கணிப்பை அமெரிக்காவுக்கு அனுப்புகிறார். ஆச்சரியப்படத்தக்க வகையில், வாக்கெடுப்பில் மன்மோகன் அரசு வாங்கிய ஓட்டுக்களின் எண்ணிக்கை ஏறக்குறைய அந்த அதிகாரியின் கணிப்பை ஒட்டியே இருந்தது!

ஏற்கனவே நெருப்பின் மேல் வைக்கோலைப் போட்டு மறைத்து விட்டோம் என்று எல்லோரும் நிம்மதியாக இருந்த நிலையில் இப்போது வெளியாகியுள்ள அமெரிக்காவின் இரகசிய ஆவணங்கள் மீண்டும் ஒரு முறை பாராளுமன்றத்தில் கூச்சல் குழப்பத்தை உண்டாக்கியிருக்கிறது. 2008-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து வாயை மூடிக் கொண்டிருந்த பாரதிய ஜனதாவும், போலி கம்யூனிஸ்டு தவளைகளும் ஒரு பாட்டம் புலம்பித் தீர்த்திருக்கிறார்கள்.

2008-ஆல் விவகாரம் நாலு மாதங்கள் சூடாக இருந்தது என்றால் இப்போது விஷயம் நாலே நாளில் மீண்டும் ஆழமான குழிக்குள் போய் முடங்கிக் கொண்டு விட்டது. வழக்கம் போல் பிரதமர் மவுனமோகன் வரலாற்றில் நீங்காத இடம் பிடித்துக் கொண்டுள்ள தனது வழக்கமான விளக்கத்தை அளித்து விட்டார் – அதை இனி நாம் புதிதாகச் சொல்லித் தான் வினவு வாசகர்களுக்குத் தெரிய வேண்டும் என்பதில்லை. என்றாலும் ஒரு சம்பிரதாயத்துக்காக அந்த விளக்கத்தை இங்கே அறியத்தருகிறோம்; அது – “தெரியாது”

இதற்கு மேலும் இதில் நோண்டிக் கொண்டிருப்பது ஜனநாயகத்தின் மாண்புக்கே பேராபத்தாக முடிந்து விடும் என்பதை உணர்ந்து கொண்ட சி.பி. ஐ, சி.பி.எம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், தமது நவதுவாரங்களையும் பொத்திக் கொண்டு அடுத்த இந்து இதழில் என்ன செய்தி வரும் என்று காத்துக் கிடக்கிறார்கள். சாவு வீடாகவே இருந்தாலும் சாப்பிட்டாக வேண்டுமே? இனி அடுத்தடுத்து வரப்போகும் இரகசிய ஆவணங்களையும், அது தெரிவிக்கப் போகும் உண்மைகளையும் இவர்கள் எதிர்கொள்ளப் போகும் செயல்தந்திரம் இது தான் – முதல் நாள் கூச்சல், ரெண்டாம் நாள் விளக்கம் கோரி சவடால், மூன்றாம் நாள் ஒன்னும் தெரியாத பிரதமரின் எல்லாவற்றையும் தெரியப்படுத்தும் ‘விளக்கம்’, நான்காம் நாள் இன்டர்வெல், அடுத்த நாள் அடுத்த பிரச்சினை.

ஒவ்வொரு முறை ஆளும் கட்சி அம்பலமாகும் போதும், பாராளுமன்ற ஜனநாயக கோவணம் கிழிந்து தொங்கும் போதும் இவர்கள் நடத்தும் இந்த ‘செத்து செத்து விளையாடும்’ விளையாட்டு நமக்குப் புதிதில்லை. ஆனால், இந்த விக்கிலீக்ஸின் ஆவணங்கள் வேறு சில கேள்விகளை நம்முன் வைக்கிறது. நீங்கள் மெய்யாகவே இந்நாட்டின் மீது அக்கறை கொண்டவராக இருந்தால் அந்தக் கேள்விகள் உங்கள் மனதில் ஒரு சின்ன உறுத்தலையாவது உண்டாக்கியே தீர வேண்டும்.

____________________________________________________________

லஞ்சம் கொடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்ற மன்மோகன் சிங் அரசு நிறைவேற்றிய அணு சக்தி ஒப்பந்தத்தை இரத்து செய்ய வேண்டும் என்று ஏன் எவருமே கோரவில்லை? லஞ்சம் கொடுத்தாவது அரசைக் காப்பாற்றி அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றியே தீருவோம்; அதனால் நமது தேச நலன்களனைத்தும் அமெரிக்காவுக்கு காவு கொடுக்கப்பட்டாலும் பரவாயில்லை என்று இத்தனை தீவிரமாக வெறியோடு மன்மோகன் கும்பல் இறங்கியிருக்கிறதே, இவர்கள் யாருடையா ஆட்கள்?

அமெரிக்கத் தூதரகத்தின் தகவல் தொடர்புகளின் உண்மைத் தன்மையை உறுதி செய்துள்ளார் முன்னால் அமெரிக்கத் தூதர் டேவிட் முல்ஃபோர்ட்; எனில் அதில் பிரதமரே நேரடியாக லஞ்ச விவகாரத்தில் தொடர்புடையதாக குறிக்கப்பட்டிருக்கும் தகவல் குறித்து நல்லவரான பிரதமரின் விளக்கம் என்ன? தனக்கு ஒன்றுமே தெரியாது என்று வழக்கமான பல்லவியைப் பாடும் மன்மோகன், அமெரிக்கர்கள் தமக்குள் பேசிக்கொண்டது தவறு என்று அடித்துச் சொல்ல முடியாமல் மென்று முழுங்குவது ஏன்? இவர் இத்தனை பச்சையாக அம்பலமாகி நின்ற பின்னும் முதலாளித்துவப் பத்திரிகைகள் இவரை ஒரு நல்லவர் போன்றும், ஒன்றும் தெரியாத அப்பாவி போன்றும் சித்தரிக்கும் அயோக்கியத்தனத்தை ஏன் தொடர்கிறார்கள்?

அணு ஒப்பந்தம் நிறைவேற வேண்டுமானால் காங்கிரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றாக வேண்டும்; இதை உறுதிப்படுத்திக் கொள்ள பிரதமர் தொடங்கி மந்திரிகள் தொட்டு எம்பிக்களின் கையாட்கள் வரை அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் தொடர்பு கொண்டு பேசியிருப்பது இப்போது அவர்கள் வாயாலேயே அம்பலமாகியிருக்கிறது –  அந்த ஒப்பந்தம் தெள்ளத் தெளிவாக இந்தியாவின் நலன்களுக்கு எதிரானது என்பது ஏற்கனவே தெளிவான நிலையில் இப்போதும் கூட அணு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பாராளுமன்றத்தில் சவடால் பேசும் பாரதிய ஜனதா கோராமல் இருப்பது ஏன்?

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக களத்தில் நின்ற அத்வானி, தூதரக அதிகாரியொருவரிடம் “அரசாங்கம் என்பது ஒரு தொடர்ச்சி தான்; சர்வதேச ஒப்பந்தங்களை நாங்கள் இரத்து செய்ய மாட்டோம்; அதை நாங்கள் மதிப்போம்” என்று சொல்லியிருக்கிறார். எனில், இன்று அவர்கள் போடும் கூச்சலின் பொருள் என்ன?

இந்தியா இப்படி அப்பட்டமான விற்பனையான கதை ஊடகங்கள், எதிர்க்கட்சிகளால் வெறுமனே சவுண்டு விடும் பரபரப்பு கதையாக மட்டும் வினியோகிக்கப்படுகிறது. ஜப்பானில் சுனாமி வந்தபிறகுதான் அணுவுலைகள் வெடித்திருக்கின்றன. இங்கோ அமெரிக்க அணுவுலைகள் வருவதற்கு முன்னாடியே அதன் கதிர் வீச்சு இந்தியாவின் இறையாண்மையில் வெடித்துப் பாய்கிறது. அமெரிக்க அடிமைத்தனம் என்பதில் காங்கிரசு, பா.ஜ.க கும்பல் இத்தனை பட்டவர்த்தனமாக செயல்படுகிறது என்றால் இந்தியாவின் எதிர்காலம் குறித்து விளக்கத் தேவையில்லை. நாடு மீண்டும் காலனியாகிறது என்று புரிந்தவர்கள் மீண்டுமொரு சுதந்திரப் போராட்டத்தை துவங்க வேண்டும். அடிமைத்தனத்தை ஏற்றுக் கொண்டவர்கள் ஆளும் வர்க்கங்கள்தான், நாமல்ல என்பதை அறிவிப்போம், போராடுவோம்.

பாரதி : ஒரு அபலையின் கதை! – சந்தனமுல்லை

உழைக்கும் மகளிர்தினச் சிறப்புப் பதிவு  – 8

வேலை முடிந்து வந்து வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார் பாரதி.  எக்ஸ்போர்ட் கம்பெனியில் ஓயாமல் 8 மணிநேரம் வேலை செய்த களைப்பு. கணவர் வேலை விஷயமாக வெளியூர் சென்றிருந்தார். பதினொரு மணி இருக்கும். பக்கத்து வீட்டில் பாரதிக்காக வந்த தொலைபேசி பாரதியின் அன்றைய நிம்மதியான உறக்கத்தை மட்டுமல்ல…வாழ்நாளில் நிம்மதியான உறக்கமே இல்லாமலும் செய்துவிட்டது.

வந்த தொலைபேசிச் செய்தி இதுதான்: “அவரது கணவர் பயணம் செய்த பஸ் உளுந்தூர்பேட்டைக்கருகே விபத்துக்குள்ளாகியிருக்கிறது. உடனே கிளம்பிவரவும்.” வீட்டில் மாமியார் மட்டும். எப்படி அந்த நேரத்தில் கிளம்புவது, எப்படிச் செல்வது என்று ஒன்றும் புரியாமல் கணவரது அண்ணனின் குடும்பத்தினருக்குச் சொல்லியிருக்கிறார். திருச்சியில் இருக்கும் அவரது தங்கைகளுக்கும் தொலைபேசியிருக்கிறார்.

சென்னையிலிருந்து அனைவரும் அதிகாலை ஐந்துமணிக்குக் கிளம்பியிருக்கிறார்கள். அங்கு மருத்துவமனையில்  அவரது கணவரின் உயிரற்ற உடலைத்தான் பாரதியால் பார்க்க முடிந்திருக்கிறது.

ஆமாம், பாரதி ஏன் அவரது தாய் வீட்டினருக்கு போன் செய்யவில்லை?

பாரதி, பிறந்ததும் மருத்துவமனையில் பெற்றோராலேயே கைவிடப்பட்ட குழந்தை. அனாதையாக இருந்த குழந்தையை மருத்துவரொருவர் நுங்கம்பாக்கத்திலிருக்கும் காமராஜ் இல்லத்தை ஒட்டி இருக்கும் சத்யமூர்த்தி பவனில் கொண்டுவந்து விட்டிருக்கிறார்.

இன்று முப்பத்திமூன்று வயதாகும் பாரதி ,வளர்ந்தது முழுக்க அங்கேயேதான். அங்கு அவரைப் போல பல குழந்தைகளுண்டு, இன்றும் 3000 ஆண்களும் பெண்களுமாகச் சிறார்கள் அங்கு வளர்ந்து வருகிறார்கள். பலரும் பாரதியைப்போல, யாருக்கும் வேண்டப்படாதக் குழந்தையாக அங்கு வந்து சேர்ந்தவர்கள் அல்லது அப்பாவாலோ அம்மாவாலோ அங்கு கொண்டு வந்து விடப்பட்டவர்கள்.  அங்கிருக்கும் பாலமந்திரிலேயே எட்டாவது வரை படித்திருக்கிறார், பாரதி.  விடுமுறைக்குச் சில பிள்ளைகளை அம்மாவோ அப்பாவோ வந்து அழைத்துச் செல்வதுண்டு. இல்லாவிட்டால், விடுதியே கதி. விடுமுறைக்காலங்களில், அந்தப் பிள்ளைகளின் வாழ்க்கைக்கு உதவும் என்று கைத்தொழில்கள் கற்றுத்தரப்படும். அதில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டுவிட, எட்டாவதுக்குப் பிறகு படிப்பு வரவில்லை என்று எம்ப்ராய்டரி மற்றும் தையல்வேலையை கற்றிருக்கிறார்.

அதை முடித்தபின் அங்கிருந்தபடியே ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலைக்குச் சென்றிருக்கிறார். விடுதியில் பதினைந்து வயதாகிவிட்டாலே, பதினெட்டு வயது முடியும்போது அந்தப் பெண்ணை எப்படியாவது யார் தலையிலாவது கட்டுவதற்கு வேலைகள் நடக்கும். அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் என்று அனைவரிடமும் சொல்லி வைத்துவிடுவார்கள். “யாராவது இருந்தால் சொல்லுங்கள்” என்று செய்திகள் பறக்கும். முடிந்தவரை, பதினெட்டு வயதாகும்போதே மணம் செய்துக் கொடுத்துவிட ஏற்பாடுகள் நடக்கும். அதற்கு மேலானால், செய்தித்தாளில் விளம்பரங்கள் கொடுப்பார்கள்.

அதைப்பார்த்து யாராவது கேட்டு வந்தால் மணமுடித்துக் கொடுத்து விடுவார்கள். விடுதிப்பெண்கள் வேலைக்குச் சென்றால் சம்பளப் பணத்தை மேலாளரிடம் கொடுத்துவிட வேண்டும். அவர்கள் கணக்கில் வைத்திருந்து அந்தப்பெண்களின் திருமணத்தின்போது ரொக்கமாகவோ அல்லது பொருளாகவோ கொடுப்பார்கள். நகை எதுவும் போடமாட்டார்கள்.

பாரதிக்கும் அப்படி செய்தித்தாளில் விளம்பரம் கொடுத்திருக்கிறார்கள். விளம்பரத்தைப் பார்த்துவிட்டு மணமகனின் அண்ணன் வந்து விசாரித்திருக்கிறார். பின்னர் மணமகனின் தாயாரும் வந்த பார்க்க, பாரதிக்கு ஹைதர் அலியுடன்  விடுதியிலேயே மிகவும் எளிய முறையில் மணமாகியிருக்கிறது. திருமணமாகும்போது, பாரதிக்கு வயது இருபத்தியிரண்டு. மணமகனுக்கு முப்பத்தியிரண்டு வயது. இருவருக்கும் பத்து வயது வித்தியாசம். ஹைதர் அலியின் தாய் இந்து, தந்தை முஸ்லிம்.

வேலை என்று பெரிதாக எதுவும் அவருக்கு இல்லை. கூலி வேலைதான் செய்து வந்தார். வெல்டிங் வேலை – சிலநாட்கள் இருக்கும். பலநாட்கள் இருக்காது. மற்றபடி நிரந்தரமான வேலை எதுவும் கிடையாது. தரமணியில் வாடகை வீட்டில் தாயுடன் குடித்தனம். ஹைதர் அலியின் தந்தை டில்லியில் டைலராக வேலை செய்திருக்கிறார். பாரதியின் எக்ஸ்போர்ட் கம்பெனி வேலையால்தான் குடித்தனம் நடந்திருக்கிறது. பலநாட்கள் ஓவர்டைம்  செய்துதான்  குடும்பத்தை ஓட்டியிருக்கிறார் பாரதி.

அதாவது, காலை எட்டு மணிக்கு முதல் ஷிஃப்ட்.  மாலை ஆறரை மணிக்கு அடுத்த ஷிப்ட் ஆரம்பிக்கும். அப்படி இரவு பகலாக உழைத்து, அந்த பணத்தில் சீட்டுக்கட்டி வீட்டிற்குத் தேவைப்படும் பொருட்களாக வாங்கியிருக்கிறார். அதாவது, சாமான் செட்டுகளிலிருந்து, வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் நகைகள் வரை.

அப்படி அவர் வாங்கிய சாமான்கள்  விடுதியின் வராண்டாவில் மூட்டைக் கட்டப்பட்டு இன்று கேட்பாரற்றுக் கிடக்கின்றது. அவர் சீட்டுக் கட்டி வாங்கிய  டீவி இன்று விடுதியில் ஓடிக் கொண்டிருக்கிறது. பாரதி வாங்கும் சம்பளம் குடும்பத்திற்கே சரியாக இருந்திருக்கிறது. இறப்பதற்கு நான்கு வருடங்கள் முன்பாகத்தான் ஹைதர் அலிக்கு ஒரு வேலை கிடைத்திருக்கிறது. சாலையில் அம்புக்குறிகளுடன் ஊர்பெயர்கள் தாங்கிய இரும்பு பலகைகளை  நடும் வேலை. அதில்தான்,சொல்லிக் கொள்ளும்படியாக இல்லாவிட்டாலும் நிரந்தரமாக ஒரு வருமானம் வந்திருக்கிறது.

வயதான மாமியார் மற்றும் வேலையில்லாத கணவனை சுமந்ததோடு பர்வீன் என்ற பெண்குழந்தைக்கும் தாயாகியிருக்கிறார். அந்தக்குழந்தை ஐந்து வயதாகும்போது மாமியார் இறந்துவிட, பார்த்துக்கொள்ள யாருமில்லாததால் மகளை திருச்சியிலிருக்கும்  தனது நாத்தனாரிடம் படிப்புக்காக விட்டிருக்கிறார் பாரதி. அவரது நாத்தனாருக்கு குழந்தையில்லாததால் இன்று வரை மகள் அங்கேயே வளர்கிறார். அவர்களே படிக்கவும் வைக்கிறார்கள். வருடத்திற்கு ஒருமுறை கோடை விடுமுறையில் சென்று பார்த்து வருவார். மகளுக்குத் தேவையானவற்றை வாங்கித்தருவார். அவ்வப்போது நாத்தனாருக்கும் பணம் கொடுத்துவிடுவார்.

_________________________________________________________

ப்படி ஓடிக்கொண்டிருந்த வாழ்க்கையில் வந்து விழுந்த பேரிடிதான் சென்ற வருடம் நிகழ்ந்த கணவரின் மரணம். அவரது மரணத்துக்குப்பின் தனித்து விடப்பட்ட பாரதி வீட்டை காலி செய்ய வேண்டியதாயிற்று. செல்வதற்கு யாருமில்லாத நிலையில் ஒரு வீட்டில் வேலை செய்வதற்குச்  சேர்ந்திருக்கிறார். அனைத்து வீட்டு வேலைகளையும் செய்வதற்கு சம்பளம் நானூறு ரூபாய். நூறு ரூபாய் அதிகம் கேட்டதற்கு வீட்டுக்காரம்மா மறுத்து சண்டை போட அங்கிருந்தும் கிளம்ப வேண்டியதாயிற்று.

திக்கு தெரியாமல், ஏதோ செய்தித்தாளில் பெண்களின் விடுதியென்று வந்திருந்த விளம்பரத்தைப் பார்த்து விசாரிக்க அதன்மூலம் தற்போது இருக்கும் வீட்டுக்காரம்மாவிடம் வந்து சேர்ந்திருக்கிறார். அந்த விடுதி அவருடையதுதான். அது ஒரு வொர்க்கிங் உமன்ஸ் ஹாஸ்டல். அதை நடத்துபவர் வீட்டில் தற்போது வேலை செய்கிறார் பாரதி. முதலில் மூவாயிரம் ரூபாய் என்று சொன்னாலும் தற்போது ஆயிரத்தி ஐநூறு ரூபாய்தான் தருவதாகக் கூறுகிறார் இந்த வீட்டுக்காரம்மா. கேட்டால், தங்குவதற்கும், சாப்பாட்டுக்கும் ஆகும் செலவைப் பார்த்தால் இந்த ஆயிரத்தைநூறு ரூபாயே அதிகம் என்றும் வாதிட்டு வாயடைத்து விடுகிறார்.

பாரதியின் முன்னாலிருக்கும் கேள்விகளில் முதன்மையானது, தங்குவதற்கு இடம் என்பதுதான். ஒரு வீடெடுத்து தங்குவதுதானே என்று எளிதாகச் சொல்லிவிடலாம். ஆனால், பாரதிக்குதான் அதன் கஷ்டங்கள் தெரியும். போகும்போதும், வரும்போதும் ஆண்களின்-பெண்களின் கேலிப்பேச்சுகள், அதுவும், “என்னாடா இது ஒரு பொம்பளை தனியா இருக்குது,என்னாடா விஷயம்” என்பதும், “நீ வச்சிருக்கியாடா” என்று காதுபட வம்பிழுப்பதும், இரவுகளில் கதவை தட்டி தொல்லை கொடுப்பதுமாக தனியாக வாழவே விடமாட்டார்கள்.

நிம்மதியாகவும் வாழ இயலாது. மாதம் இருமுறையோ அல்லது இயன்ற போதோ விடுதிக்கு சென்று அப்போது வந்திருக்கும் குழந்தைகளை பார்ப்பதுதான் பாரதிக்கு தாய்வீடு செல்லும் வைபவம்.அங்கு  படிக்கும்  குழந்தைகள்தான் பாரதியின் சோகத்தை ஆற்றும் நண்பர்கள். எப்போது சென்றாலும் அங்கிளையும் பாப்பாவையும் தவறாமல் கேட்பார்கள் அவர்கள். அங்கிள் இறந்துட்டார் என்று சொன்னாலும் நம்ப மறுக்கிறார்கள். இப்போதிருக்கும் வீட்டுக்காரம்மா பாரதி தனது இல்லத்திற்கு செல்வதற்கும் மறுக்கிறார்.

முகத்தை காட்டுகிறார்.“இது என்ன, பொம்பளையா வீட்டுல இல்லாம வெளியேல்லாம் போய்க்கிட்டு” என்று சடைத்துக்கொள்வார். அவர் ஒரு பியூட்டி பார்லர் வைத்து நடத்துகிறார். அங்கு இருக்கும் டவல்கள்,  துண்டுத் துணிகளை கொண்டு வந்து பாரதியை துவைக்கச் சொல்வார். அன்றாடம் அது ஒரு வண்டி சேர்ந்துவிடும். அவர் கொடுக்கும் பணம் துணி துவைக்கவே காணாது. அதோடு வீட்டு வேலைகள் முழுதும் செய்ய வேண்டும் டீவி பார்க்கக் கூடாது. விடவும் விடமாட்டார். அவர் வீட்டிலிருக்கும்போது பாரதி, வேலையில்லாமல் ஓய்வாக இருப்பதைப் பார்த்தால் “அதை பண்ணு, இதப் பண்ணு” என்று வேலையை ஏவிவிட்டுக் கொண்டே இருப்பார்.

சுருக்கமாகச் சொன்னால் ஒரு அடிமையைப் போலத்தான் நடத்துகிறார். பாரதிக்கு அந்த வீட்டுக்காரம்மாவை நினைத்தால்  ஆத்திரம் பொங்குகிறது. தனது உழைப்பை சுரண்டுகிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. தனது கையாலாகாத நிலையை அவர் பயன்படுத்திக்கொள்கிறார் என்பதை உணர முடிகிறது. அதே ஆத்திரம் அவரது பெற்றோர் மீது பாயும்போது உணர்ச்சி மயமாகிவிடுகிறார். “என்னைக்காவது எங்கப்பாவைப் பாத்தா நல்லா நாலு வார்த்தை கேப்பேன்” என்று தனது தந்தையை நினைத்து பொருமுகிறார்.

“அம்மா, அப்பா இருந்தா பாப்பாங்க” என்று அன்பிற்கும் உறவுக்கும் ஏங்குகிறார்.  அவரது பெற்றோர் யாரென்று இன்று வரை தெரியாது. யாரும் இதுவரை பார்க்கவும் இல்லை. விடுதி காப்பாளருக்கும் தெரியாது. ஒரு மருத்துவர் அவரை அங்கு வந்து விட்டுச் சென்றது மட்டும்தான் தெரியும். அந்த மருத்துவரையும் தெரியாது. இப்படி குழந்தைகளை விட்டுச் செல்வது இன்று நேற்றல்ல…முப்பத்தி மூன்று வருடங்களுக்கு முன்பிருந்தே நமது சமூகத்தில் புரையோடியிருக்கிறது. ஒருநாளைக்கு மூன்று அல்லது நான்கு குழந்தைகள் கூட வருமாம்,. ஆனால், ஒரு நாளைக்கு ஒரு குழந்தை நிச்சயம் என்கிறார் பாரதி. பெண் குழந்தைகளை அனாதையாக விட்டுச் செல்வது கூட பாரதியால் புரிந்துக்கொள்ளமுடிகிறது. ஆனால், ஆண் குழந்தைகளையும் விட்டுச் செல்வது ஆச்சரியமாக இருக்கிறது.

பாரதிக்கு இந்தச் சமூகம் பற்றி, தன்னுடைய இந்த நிலைக்கு காரணம் என்பதெல்லாம் அவரது தலையைத் தாண்டிய கேள்விகள். தனது வாழ்க்கையில் எது வந்தாலும்,போனாலும் நிகழ்ந்தாலும் எந்தக் கேள்வியோ கோபமோ மறுப்போ இன்றி ”இதுதான்” என்று ஏற்றுக்கொள்ள முடிகிறது. அதீத பணிவும் அடக்கமும் எதையும் எளிதில் நம்பிவிடும் இயல்பும் கொண்டவராயிருக்கிறார். ஆதரவற்றவர்கள் வேறுவழியின்றி இப்படித்தான் உருவாக்கப்படுகிறார்கள். இது இந்த சமூக அமைப்பு ஆதரவற்றவர்களை மலிவாக சுரண்டும் போக்கினால் உருவாகிறது. பாரதிக்கென்று எந்த எதிர்பார்ப்புமில்லை. கிட்டதட்ட ,ஒரு அடிமை மனநிலைக்கு தள்ளப்பட்டவராக இருக்கிறார்.

அவரது கணவர் வேலை செய்த இடத்தில் கூடவே வேலை செய்த ஒருவர் கணவரது மறைவிற்குப் பிறகு அன்பாகப் பழகியிருக்கிறார்.  திருமணம் செய்துக்கொள்வதாகவும்  கூறியிருக்கிறார். அவரது குடும்பத்தினரை அழைத்து வந்து தன்னை சந்திக்குமாறு கூறிய பாரதியிடம் அந்த நபர் பின்பு தொடர்பு கொள்ளவே இல்லை. சிலநாட்கள் கழித்து தொடர்பு கொண்ட அந்த நபர் தனக்கு ஒரு அத்தைப் பெண் இருப்பதாகவும் அவரைத் திருமணம் செய்துக்கொள்ள குடும்பத்தினர் அவசரமாக நிர்பந்தப்படுத்தியதாகவும் வேறு வழியில்லாமல் ஒரு கோயிலுக்குச் சென்று திருமணத்தை முடித்து விட்டதாகவும் கூறியிருக்கிறார். இதையும் பாரதி நம்பியிருக்கிறார்.

தன்னை மறந்துவிடுமாறு அந்த நபர் சொல்லியிருக்கிறார். இருவாரங்கள் கழித்து திரும்பவும் அந்த நபர் தொடர்பு கொண்டிருக்கிறார். திருமணம் முடிந்ததென்று சொன்னபின் ஏன் அந்த நபர் தொடர்பு கொள்ள வேண்டும்? பாரதியிடம் பழகும்போது இல்லாத அத்தைப் பெண், பாரதி அவரது குடும்பத்தினரை சந்திக்க விரும்பியதும் திடீரென்று வந்தது எப்படி? அதுவும் உடனடியாக திருமணமும் ஆகியிருக்கிறது. இதிலேயே அந்த நபரின் நோக்கம் தெளிவாக புரிகிறதுதானே!

யாருமற்று இல்லாமல் தனித்திருக்கும் ஒரு பெண்ணை யார் வேண்டுமானாலும் எந்தவகையிலும் சுரண்டலாம். வீட்டுக்காரம்மாக்கள் உழைப்பைச் சுரண்டினால் ஊர் மேயும் ஆண்கள் பாலியல் ரீதியாகச் சுரண்டுவார்கள். இதுதான் பாரதியின் வாழ்க்கைக் காட்டும் யதார்த்தம்.

_________________________________________________________

பாரதி யாருமில்லாமலே தனித்து நிராதரவாக விடப்பட்டும் இன்று நன்றாகத்தானே இருக்கிறார் என்று வாசிக்கும் உங்களுக்கு தோன்றக்கூடும். சொந்தக்காரர்கள் இருந்தால்தானே கஷ்டம், இல்லாவிட்டால் நிம்மதிதானே  என்றும் நமது மனம் எடைபோடும். சற்று யோசித்துப் பார்த்தால், அவருக்குக் கிடைத்தது ஒரு விடுதி வாழ்க்கை. எதையும் சொல்லித் தருவதற்கோ அன்பு காட்டுவதற்கோ உற்றார் உறவினர்கள் என்று எவரும் இல்லை. யாராவது கொடுத்தால் கிடைக்கும் என்ற நிலைதான் அவருக்கு எப்போதும் இருந்திருக்கிறது.

அவருக்கு மட்டுமில்லை, எல்லா அனாதைக் குழந்தைகளுக்கும் அந்த நிலையில் வளர்க்கப்படுகிறார்கள். விடுதியில் எப்போதும் வெஜிடேரியன் சாப்பாடுதான். யாராவது பணம் கொடுத்தால் மட்டும் சாப்பாடு கொஞ்சம் விசேஷமாக இருக்கும். இல்லாவிட்டால் எப்போதும் போல ஆறாக ஓடும் சாம்பார்தான். துணிமணிகள் விடுதியில் வருடத்திற்கு ஒருமுறையோ இருமுறையோ எடுத்துத்தருவார்கள். பெரும்பாலும், பெரும்பணக்காரர்கள் உடைகளை தானம் செய்வதுண்டு. அப்படிப்பட்ட உடைகள்தான் உடுத்துவதற்குக் கிடைக்கும். கமலும் ரஜினியும் வருடத்திற்கு இருமுறை இந்த இல்லத்திற்கு  தானமளிப்பார்கள்.

அப்படி ’பெரிய’ மனிதர்கள் வரும்போது மேடையில் வீற்றிருக்கும் அவர்களுக்காக இந்தக்குழந்தைகள் தங்களை குறையற்றோராகக் காட்டிக்கொள்ள, இருப்பதிலேயே நல்ல ஆடைகளை உடுத்தி புன்னகையுடன் காட்சியளிப்பார்கள். படியளப்பவர்கள் வந்ததும் அவர்களுக்காக ஆடிப்பாடி, அவர்களது குழந்தைகளுக்காக வேண்டிக்கொள்வார்கள்.  உண்ணும் உணவிலிருந்து உடுத்தும் உடை வரை இப்படித்தான் எல்லாம் .பணிவோடு பெற்றுக்கொண்டு நன்றியைக் காட்ட வேண்டியவர்களாகத்தான் இந்த சமூகம் கைவிடப்பட்ட குழந்தைகளை வைத்திருக்கிறதே தவிர, அவர்களுக்கு சுயமரியாதை இருப்பதை சற்றும் ஏற்றுக்கொள்வதில்லை.

“இதுவாவது கிடைச்சுதே” என்று சந்தோசப்படுவதற்குத்தான் பயிற்றுவிக்கிறதே தவிர “ஏன் கிடைக்கவில்லை” என்றும்  வாழ்வுரிமைகளைக் குறித்தும் என்றைக்கும் யோசிக்க வைப்பதில்லை. பெரும்பணக்காரர்களின்,நடிக நடிகையரின் ‘தாராள’ உள்ளத்தை பறைச்சாற்றிக்கொள்ள வேண்டுமானால் இந்த இல்லங்கள் உதவலாமேயோழிய இந்த இல்லம் நம் சமூகத்தின் அழுகிய  பாகத்தின் ஒருபகுதியே! மேட்டுக்குடியினருக்கு தங்கள் மனிதாபிமான தாகத்தை தணித்துக்கொள்ள மட்டுமே இந்த இல்லங்கள் ஒரு ஊற்றுக்கண்.

இல்லத்தில் இருக்கும் பள்ளியிலேயே படிப்பு. லயோலா கல்லூரி மாணவர்களும் ராணி மேரிக்கல்லூரி மாணவர்களும் மாலைவேளைகளில்  வந்து சொல்லிக்கொடுத்தால் அதுதான் ட்யூஷன். படிப்பை முடித்ததும், “பிழைக்க ஏதோ ஒரு தொழில்” என்ற நோக்கில்தான் –  ஆண்களாக இருந்தால் கார்ப்பெண்டர் போன்ற கைத்தொழில்கள். பெண்களாக இருந்தால் முக்கால்வாசி நர்ஸ் பட்டயப்படிப்பு. இந்த படிப்புகளால் என்ன பெரிய வருமானம் வந்துவிடப் போகிறது? அல்லது, வாழ்க்கையில் ’புஷ்’ வந்துவிடப் போகிறது?

கையெழுத்து போடும் அளவிற்கு இருக்கும் படிப்பை வைத்து என்ன பெரிதாக சாதித்துவிட முடியும்? விடுதியிலிருந்து, படித்து உயர்ந்தவர்கள் என்று ஏதோ ஒரு சிலர்தான். எவ்வளவு வேண்டுமானால் படிக்கலாம் என்று சொல்லிக் கொண்டாலும் பனிரெண்டாவதையே பெரும்பாலானோர் தாண்ட முடிவதில்லை. பாரதியுடன் வளர்ந்தவர்களில் ஓரிரு தோழிகள் நல்லபடியாக வாழ்கிறார்கள். பெரும்பாலோனோர் இதே துயரமும், விரக்தியுமான வாழ்க்கையையே வாழ்ந்து தீர்க்கிறார்கள்.

இந்த நம்பிக்கையற்ற வாழ்க்கையில்  அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளை ஒருவேளை அவர்களே கூட கைவிடக்கூடும். அதன் பின்னான காரணங்களை தள்ளிவிட்டுவிட்டு “என்ன இருந்தாலும் பெத்தக் குழந்தையை இப்படி விட்டுட்டு போவாங்களா”என்ற தாய்ப்பாச செண்டிமெண்ட்  கேள்விக்கணைகள்தான் நம்முன்னால் விசுவரூபம் எடுக்கக்கூடும். ஏன், “பெத்த குழந்தைய இப்படி விட்டு போயிருக்கா” என்று பாரதியின் தாயைக்கூடவாசிக்கும்போது நீங்கள் மனதுக்குள் வைதிருக்கலாம்.  இதற்குக் குற்றமானவர்கள் என்று பெற்றோரை  மட்டும் சாடுவதும் சரிதானா? எந்தத் தாயும் தனது குழந்தைகளை மனதார பிரிவதில்லை. அது அவலமான சூழலில் வேதனையுடன் எடுக்கப்படும் ஒரு முடிவு. நம்மைப் போல பாதுகாப்பான வாழ்க்கை வாழ்பவர்கள் அதை புரிந்து கொள்ள முடியுமா, தெரியவில்லை.

பாரதிக்குத் தற்போது தனது மகள் தன்னுடன் இல்லை என்ற கவலை எதுவும் இல்லை. தனது மகள் தன்னுடன் இல்லாவிட்டாலும் நன்றாக படித்தால் போதும்,அதற்காக பிரிவை ஏற்றுக் கொள்ளலாம் என்று நினைக்கிறார். வருடத்திற்கு ஒரு முறைதான் பார்க்கச் செல்ல முடியும் என்றாலும் காத்திருக்கிறார். இப்போது, அவர் வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொண்டு  மகளுடன் தனியாக வசித்தால் வரும் செலவை முதலில் கணக்கு செய்கிறார்.

வீடு வாடகைக்கு எடுத்தால், மாதம் குறைந்தது இரண்டாயிரம் ரூபாய் ஆகும். பின்னர் இதர செலவுகள். போக்குவரத்துச் செலவுகள். படிப்புச் செலவு. இரவுபகலாக உழைத்தாலும், அவருக்கு அதிகப்பட்சமாக ஐயாயிரம் சம்பளம் வந்தாலும் சமாளிக்க முடியுமா? வயது வந்த மகளுடன் பாதுகாப்பாக வாழ முடியுமா? இதையெல்லாம் அன்றாடம் நினைத்துப் பார்த்து குமைந்து, அவரது நாத்தனார் இப்போது மகளை அவளை புர்க்கா போடச் வற்புறுத்தி  வளர்த்தாலும் மகளை நன்குப் பார்த்துக்கொள்வதாகவும், “படிச்சால்தான் வாழ்க்கை என்று ஸ்ட்ராங்காகச்” சொல்லியிருப்பதாகவும் தன்னைத் தேற்றிக்கொள்கிறார். எவ்வளவு வேண்டுமானாலும் படிக்கட்டும், நான் தயாராக இருக்கிறேன் என்கிறார் அந்த அபலைத்தாய்.

பாரதிக்கு தாய்ப்பாசம் இல்லையென்று யாராவது சொல்லிவிடமுடியுமா? பொருளிருந்தால்தானே பாசமும் அன்பும் அக்கறையும் இன்னபிறவும்!

_________________________________________________________

டுத்தர வர்க்கமோ அல்லது மேல்தட்டு வர்க்கமோ தனது மனிதாபிமானத்தை காண்பிக்க இந்த இல்லம் ஒரு வடிகாலாக பயன்படுகிறதே தவிர  இந்த இல்லங்கள் சமூகத்தின் அவமானச் சின்னங்களே! தனது குடிமக்களில் சிலரை இப்படி ஒதுக்கித் தள்ளும் சமூக அமைப்புதான் இதற்கு முழுமுதல் குற்றவாளி. நாமோ அநாதைகளின் பெற்றோரை மட்டுமே குற்றவாளியாக பார்க்க பழக்கப்பட்டுள்ளோம்.

வயது வந்த பெண்களை சுமையாகக் கருதி, மணமகளுக்கும் மணமகனுக்குமான வயது வித்தியாசங்களைக் கூட கணக்கிலெடுக்காமல் தள்ளிவிடத்தானே துடிக்கின்றனவே, இதற்குப் பெயர் என்ன?

பாரதிக்கு இதைப்பற்றிய எந்த எண்ணங்களோ யோசனைகளோ  இல்லாமலிருக்கலாம். வாழ்வில் எந்தச் சுவையையும் மகிழ்ச்சியையும் காணாத  அவரது ஒரே கனவும் லட்சியமும் மகளை படிக்க வைத்து பெரிய வேலையில் அமர்த்திப் பார்ப்பதுதான். பிறரது சுரண்டலுக்காக தனது வாழ்க்கையை உருக்கிக்கொண்டிருக்கும் அந்த அபலைத்தாயிடம் இருப்பதெல்லாம் கனவும் ஆசைகளும் ஓரிரு பவுன் நகைகளும் எதிர்காலத்தின் மீதான கொஞ்சூண்டு நம்பிக்கையுமே!

அந்த நம்பிக்கையையும் சமயங்களில் ஆட்டங்காண வைக்கிறது. இந்த வீட்டுக்காரம்மாவின் சுரண்டலிலிருந்து தப்பித்து தனது உழைப்புக்குச் சரியான ஊதியம் கொடுக்கும் வேலையை, பாதுகாப்பான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது என்பதுதான் இரவுகளில் அவர்முன் வந்து நிற்கும் கேள்விக்குறி!

பாரதியை பார்த்து நீண்ட நேரம் பேசிவிட்டு திரும்புகிறேன். இரவு முழுவதும் அவரது உலகில் என்னை வைத்து பார்த்து யோசிக்கிறேன். கற்பனை என்றாலும் அந்த ஆதவரற்ற நிலை என்னை அச்சுறுத்துகிறது. கிடைத்திருக்கும் இந்த வாழ்க்கையின் குற்ற உணவர்விலிருந்து என்னால் அத்தனை சுலபமாக விடுபடவில்லை. ஆனாலும் இந்த சோக உணர்விலிருந்து அனாதைகளை உருவாக்கும் இந்த சமூக அமைப்புக்கெதிரான கோப உணர்விற்கு என்னை மாற்றிக் கொள்கிறேன். பாரதிக்கு நாம் செய்யக்கூடிய உதவியில் இதுதான் சிறந்தது என்று நினைக்கிறேன்.

______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 

 

உழைக்கும் மகளிர் தின சிறப்பு பதிவுகள் 2010

ஆருயிர் நண்பன் சாதிக் பாட்சாவிற்கு ஆ.ராசாவின் இரங்கற் கவிதை!

(சிற்சில காரணங்களால், திகார் சிறையிலிருக்கும் ராசா நேரடியாக எழுத இயலாமையால்.. அண்ணனின் இதயக் குமுறலை இங்கே கொட்டித் தீர்க்கிறோம்…)

_______________________________________________________

டியெனத் தாக்கிய
உன் இறப்பின் செய்தியால்,
திகார் சிறையில் – நான்
தின்பதற்காக எடுத்து வைக்கப்பட்ட முட்டைகள்
கருக்கலைந்து போயின.
திரண்டதோர் கண்ணீரோ – உனது
திராவிட இயக்க பங்களிப்பெண்ணி
உருக்குலைந்து போனது!

எனது பெரம்பலூர் பெருங்கனவே!
சாவிலும் என்னை நீ வென்று விட்டாய்..
எனக்கெதிராம் சாட்சிகளை
செத்த பின்பும் கொன்று விட்டாய்…!

செத்ததனால்… கலைஞர் மனதிலும்
நீங்காமல் நின்று விட்டாய்!
நிலைத்திடும் உன் கிரீன் புரமோட்டர்ஸ்,
அண்ணா அறிவாலயத்தின் குட்டிச் சுவரில் பாசமாய்…

நீதிக்கும் நமக்கும் நெடுந்தூரம் – ஆயினும்
சாதிக்கும் வெறியோடு
வெகுதூரம் பறந்த சாதிக்கே!
அசன் அலி போல் ஜொலிப்பாயென நினைத்திருக்க,

வயல் எலிபோல் மருண்டாய்… சுருண்டாய்!
வடக்கிருந்து உயிர் துறந்த
தமிழ் மன்னன் மானம் என்ன? – சி.பி.ஐ.
வழக்கிருந்து உயிர்துறந்த
உன் தமிழ் மானம் விட பெரிதாமோ?!

அதியமான் நெடுநாள் வாழ
அவ்வை தந்தாளாம் நெல்லிக்கனி…
ஸ்பெக்ட்ரம் நட்புக்காக உன் உயிரையே தந்த
நீ தானடா உண்மையான கழகக் கண்மணி!

சுனாமியாய் சி.பி.ஐ. தாக்கியபோது
என் ஆவியை, உன் ஆவியாய்க் காத்து நின்ற பினாமியே…
உனது.. வங்கி லாக்கரின்
தகத்தகாய கொள்கைத் தங்கத்தையும்,
உனது ஏ.டி.எம். சிரிப்பொலியையும்
எப்போது காண்பேன் இனி?

அய்யகோ…! மேவிய என் சொத்துக்கள் அனைத்திலும்
உன் ஆவி துடிக்குதே!
பாவி எனக்கு பழைய நினைவுகள் வந்து தொலைக்குதே!
ஆயினும் நண்பா ஆறுதல் கொள்!
உன் சாவின் மீது சத்தியம்!
‘எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்’ என
நமது மங்காத ‘புகழை’
மறுபடியும் சேர்ப்பேன் வங்கிக் கணக்கில்…
வருந்த வேண்டாம்! நண்பா
ஆகையால் அமைதி கொள்!

ஸ்பெக்ட்ரம் ஊழ்வினை வந்து உறுத்தையில் – இனி வாழ்வது
குற்றம் என உயிர் கொடையீந்த உடன்பிறப்பே,
காற்புள்ளியாய் தொடங்கி
முற்றுப் புள்ளியாய் முடிந்து போன உன் புகழ்
கழக வரலாற்றில் பெரும்புள்ளியாய் பதியப்படும்
திராவிட இயக்கத்தின் தியாகக் குண்டலத்தில்
ஒளிரும் உன் முகம் பார்த்து… குழறும் நாக்கோடு
பெருமிதமாய் பற்றி அழவும் எனக்கு தோளில்லை…
பக்கத்து அறையில் ‘பல்வாவின்’ குறட்டை தொல்லை!

தண்டவாளத்தில் தலைவைத்த தலைவனின்
வண்டவாளங்களுக்காக தலைகொடுத்த குமணனே…
கழக வரலாற்றில் களப்பலி புதிதல்ல…
அன்று அண்ணா நகர் ரமேஷ்.. இன்று நீ…
நாளை?.. அது நானாக கூட இருக்கலாம்…
ஆயினும்,
எடுத்த ஸ்பெக்ட்ரம் முடிக்கும் வரைக்கும்
எந்த தியாகத்திற்கும் தயாராயிருக்கும்
கொள்கை மறவர்களைக் கொண்டதடா நம் கழகக் குடும்பம்,
அதில் முன்ஏர் பிடித்த உன் சாவைப் பார்த்து
கண்ணேறு படுதடா… சாதிக்… கட்சிக்கே!

கவச குண்டலங்களையும்
கழக குண்டலங்களையும்
காப்பாற்றுவதற்காக,
நீ உயிரையே கழட்டிக் கொடுத்த
உசத்தியான கர்ணனடா!

நீ சாகவில்லை சாதிக்!
கலைஞரின் பேனாவில் மையாய்…
ஸ்டாலின் கைப்பேசியில் ரிங் டோனாய்…
அழகிரி உருட்டுக்கட்டையில் உணர்ச்சிக் கொதிப்பாய்…
இந்த ஆ.ராசாவின் அடிமனதில்… ரகசியமாய்
நீ வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறாய் நண்பா!
வாழ்வதற்கு கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில்
உனக்கு இடமில்லை என்றாலும்
வரலாற்றில் உனக்கு நிச்சயம் இடமுண்டு!

உடன்பிறப்புகளே… உருக்குலையாமல்
சாதிக்கின் சமாதியின் மேல் சபதமேற்போம்…
“நண்பா உன் தியாகம் வீண் போகாது..
ஆயிரம் ஸ்பெக்ட்ரங்கள் நம்மை அடையக் காத்திருக்கின்றன…

தோழர்களே!
சாதிக்கைப் போல தியாகத்திற்கு தயாராய் இருங்கள்
தேர்தல் கிடக்கட்டும் தியாகிகளே வரிசையில் நில்லுங்கள்
விரைவில்… தலைவர் தேதி குறிப்பார்…!

________________________________________________________

– துரை.சண்முகம்

________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

தேர்தல் 2011

வைகோ vs போலி கம்யூனிஸ்டுகள் – ஒன்னு பெருசா இல்ல ரெண்டு பெருசா?

40
வைகோ vs போலி கம்யூனிஸ்டுகள் - ஒன்னு பெருசா இல்ல ரெண்டு பெருசா?
தாயே உன்னடி சரணம்! அம்மா தாயே உன் பாதம் சரணம் !!

“சுயமரியாதையை இழந்து பதவியைப் பெறவேண்டிய தேவை ம.தி.மு.க வுக்கு இல்லை” என்று கூறி தேர்தலைப் புறக்கணிப்பது என்று முடிவு செய்திருக்கிறது ம.தி.மு.க.

இந்த அறிக்கை அம்மாவைக் குத்தியதோ இல்லையோ, மார்க்சிஸ்டுகளை குறிபார்த்து அல்லையில் குத்திவிட்டது. ஒவ்வொரு தேர்தலிலும் எட்டுக்கும் பத்துக்கும் திமுக அதிமுகவிடம் காவடி எடுக்கும் சூழ்நிலையால் மனம் வெறுத்துப் போன கட்சித் தோழர்களில் சிலர் , “நாமும் வைகோ பண்ணின மாதிரி பண்ணிடலாம்” என்று சொல்லத் தொடங்கி விட்டால் தங்கள் நிலை என்ன என்பது தா.பா, மற்றும் ராமகிருஷ்ணனின் கவலையாக இருக்கக் கூடும்.

“அப்ப எங்களுக்கெல்லாம் சுயமரியாதை இல்லைங்கிறீங்களா? நாங்கள்லாம் மானம் கெட்டு பதவிக்காக அலைகிறோம் என்கிறீர்களா?” என்று வைகோ வை கேட்க வேண்டும் என்பதுதான் மார்க்சிஸ்டுகளின் விருப்பம். ஆனால் அப்படிக் கேட்பதில் பல ஆபத்துகள் இருக்கின்றன என்பதால், “வைகோ தனது முடிவை மறுபரீசிலனை செய்து, அதிமுக அணியில் பங்கேற்க வேண்டும்” என்று அவருக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். இப்படி ஒரு வேண்டுகோளை அன்பு சகோதரி விடவில்லை என்பதும், அன்பு காம்ரேடுகள்தான் விட்டிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

“சுயமரியாதை இழந்து” என்ற சொல்லுக்கு பொது வரையறையை எப்படி நாம் சொல்லமுடியும்? அது பற்றி நமது வரையறையும் தேர்தலில் பங்கேற்கின்ற கட்சிகளின் வரையறையும் வேறு வேறாக இருக்கலாமல்லவா? கூட்டணிக் கட்சிகளிலேயே சுயமரியாதை பற்றிய வைகோவின் வரையறையும், தா.பா வின் வரையறையும் வேறுபடலாமே!

ஏழு, எட்டு என்று தொகுதி எண்ணிக்கையைக் குறைத்து வைகோவை ஜெ அவமதித்தது என்னவோ உண்மைதான். ஆயினும், “அம்மா எப்ப கூப்டுவாரோ?” என்று போயஸ் தோட்டத்து வாசலில் வைகோ காத்திருக்கவில்லை என்பதும் உண்மை. அம்மா என்னிக்கு கூப்புடுவார்னே தெரியாமல், தெனம் காலையில சாப்பாடைக் கட்டிகினு வந்து தா.பா தலைமையில் தோட்டத்து வாயிலில் காத்திருந்தார்கள் வலது இடது தலைவர்கள்.

கோர்ட்டுலயாவது இன்னிக்கு வாய்தான்னு போட்டுட்டா, சாயங்காலத்துக்குள்ள எப்பவாவது கூப்ட்டுறுவாய்ங்க. ஆனா என்னிக்கு வாய்தான்னே தெரியாம நாள் கணக்கில காத்திருக்கிற கொடுமை இருக்கே அது பெருங்கொடுமை. கோர்ட் வாசல்ல வாய்தாவுக்கு ஒக்காந்திருக்கிறவன் கிட்ட, “சார் உங்கள எப்ப கூப்புடுவாங்க?”ன்னு கேட்டு எந்த மீடியாக்காரனும் வந்து டென்சனக் கிளப்ப மாட்டான். இங்கயோ அந்த நிம்மதியும் கிடையாது. டென்சனும் ஆக முடியாது. அம்மா கூப்புடுவாங்களா மாட்டாங்களான்னு தெளிவா தெரியாதபோதே, “இரட்டை இலையின் வெற்றிக்குப் பாடுபடுவோம்”னு டிவிக்கு பேட்டி கொடுக்கணும். கொடுத்தாங்க.

இதெல்லாம் சுயமரியாதைக் கேடுன்னு நாம் நினைக்கலாம். அம்மாவைப் பொருத்தவரை இதெல்லாம் கூட்டணிக் கட்சிகளுக்கு வைக்கப்படும் என்ட்ரன்ஸ் எக்ஸாம். இந்தக் கட்டம் வரையில் நடந்த விசயங்கள் எதுவும் தமது சுயமரியாதையை சிதைத்து விட்டதாக கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கருதவில்லை. தங்கள் சுயமரியாதை பத்திரமாக இருப்பதாகவும், வைகோவின் சுயமரியாதைக்குத்தான் அம்மா சோதனை வைத்திருப்பதாகவும் அவர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

இப்படியாக பல்வேறு விதமான என்ட்ரன்ஸ் எக்ஸாம்களிலும் பாஸ் பண்ணி, ஒவ்வொரு கூட்டணிக் கட்சியிலயும் எத்தனை ஆழ்வார்களுக்கு சீட் என்றும் முடிவாகி போட்டோவுக்கும் போஸ் கொடுத்தாகிவிட்டது.  எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதி என்று உடன்பாடு இறுதியாக வேண்டும். அப்புறம் அந்த தொகுதியில யாரை நிப்பாட்றதுன்னு அந்தந்த கட்சி முடிவு செய்யணும். இதுதான் இந்திய ஜனநாயகத்தின் கூட்டணி அரசியலில் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் மரபு, தருமம். மரபுகள் தருமங்களை உடைத்துக் கடாசுபவரல்லவோ புரட்சித்தலைவி! அது மட்டுமல்ல, நெடுஞ்சாண்கிடையாக காலில் விழுந்து கிடந்தாலும், அப்படிக் காலில் விழுந்து கிடப்பவன் மீது காறித்துப்பி, அதற்கு அவனுடைய எதிர்வினை என்ன என்று தெரிந்து கொள்வதில் அம்மாவுக்கு எப்பவுமே ஒரு பேரார்வம்.

கூட்டணி பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வராத நிலையில், கூட்டணிக் கட்சிகள் கேட்டிருந்த தொகுதிகள் அனைத்தையும் உள்ளடக்கி அடாவடியாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது போயஸ் தோட்டம். இதனைக் கண்டிக்கின்ற சொரணையோ, ஜெயலலிதாவிடம் விளக்கம் கேட்கும் தைரியமோ கூட்டணிக் கட்சிகள் யாருக்கும் இல்லை. தா.பா போன்றோருக்குக் கூடவா சுயமரியாதை இல்லை என்று அவசரப்பட்டு யாரும் எண்ணிவிடக் கூடாது.

கோயிலுக்குப் போகும் பக்தர்கள் வாசலில் செருப்பைக் கழற்றிவிட்டு செல்கிறார்கள். கேரளத்தில் சட்டையையே கழற்றுகிறார்கள். அவர்களுக்கெல்லாம் சுயமரியாதை இல்லை என்று சொல்லிவிட முடியுமா? போயஸ் ஆலயத்துக்குள் நுழைவதற்கு முன், காலணிகளுடன் வெட்கம், மானம், சூடு, சொரணை, சுயமரியாதை போன்ற அனைத்தையும் கேட்டிலேயே கழட்டிக் கொடுத்து டோக்கன் வாங்கிக் கொண்டு நுழைவதுதான் கூட்டணிக் கட்சிகளின் மரபு. “இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டு கூட்டணி தருமத்தையும் மரபையும் அம்மா மீறிவிட்டார் என்புது உண்மையே என்றாலும், அதற்காக நாமும் நம்முடைய மரபையும் சம்பிரதாயத்தையும் மீறி திடீரென்று இருமுடியை இறக்கிவிட முடியாது” என்று “குருசாமி” தா.பா கூட்டணிக் கட்சிகளுக்கு அறிவுருத்தியிருப்பார்.

ஏன் துப்பினார்கள், என்ன மாதிரி சூழ்நிலையில் காறித்துப்ப வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள் என்றெல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்கு முன், அவசரப்பட்டு எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அறிக்கை விடுவதோ, உறவை முறித்துக் கொள்வதோ, மூன்றாவது அணி தொடங்குவதோ அறிவுக்கு உகந்ததல்ல என்பதை மார்க்சிஸ்டுகள் மற்றவர்களுக்கு அறிவுருத்தியிருப்பார்கள்.

இதெல்லாம் தெரியாமல், “மூன்றாவது அணி என்று ஒன்று தொடங்கினால், அதற்கு வைகோ தான் தலைவர்” என்று முன்கூட்டியே துண்டு போட்டு ரிசர்வ் செய்தார் நாஞ்சில் சம்பத். மூன்றாவது அணியின் தலைமைப் பதவிக்கு தா.பா வோ, ராமகிருஷ்ணனோ, கேப்டனோ போட்டிக்கு வரவில்லை. “வடக்கிருந்து சாவதுதான் முடிவு என்ற நிலைமை ஏற்பட்டு விட்டால், அதற்கு வைகோ தலைமை தாங்குவதே பொருத்தமாக இருக்கும்” என்று அவர்கள் கருதியிருக்கக்கூடும்.

“இன்று 21 தொகுதிக்கு குறைவான எதையும் ஒப்புக் கொள்ள முடியாது” என்று கூறியிருக்கும் வைகோவிடம், தேர்தல் புறக்கணிப்பை கைவிடுமாறும் அதிமுக அணியில் பங்கேற்குமாறும் மார்க்சிஸ்டுகள் கூறுகிறார்களே, இதன் பொருளை நாம் எப்படிப் புரிந்து கொள்வது? “12 தொகுதியை வாங்கிக் கொண்டு பொழைக்கிற வழியப் பாருய்யா” என்பதுதான் இதன் பொருள்.

“அம்மாவோடு கூட்டணி வைத்து பத்து இடத்தில் நின்று 2 இடத்திலாவது ஜெயிப்பதா, அல்லது மூன்றாவது அணி அமைத்து முப்பது இடத்தில் நின்று முப்பது இடத்திலும் டெபாசிட் இழப்பதா? எது கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லது?” என்பதுதான் அன்று வலது இடதுகளின் கட்சிகளுக்குள் நடைபெற்ற விவாதமாக இருந்திருக்கும்.

ஒருவேளை வலதுக்கு 3, இடதுக்கு 4 – இதுதான் முடிவு. என்று அம்மா சொல்லியிருந்தால்? தா.பா வும் மார்க்சிஸ்டுகளும் என்ன செய்திருப்பார்கள்? பதவியை விட சுயமரியாதையே பெரியது என்று கூட்டணியை விட்டு வெளியேறியிருப்பார்களா? ஒருக்காலும் இல்லை. சுயமரியாதை இல்லாமல் கட்சி உயிர்வாழ முடியும், ஒரு எம்.எல்.ஏ கூட இல்லாமல், கட்சி உயிர் வாழ முடியுமா? உயிரே இல்லாத பிணத்துக்கு சுயமரியாதை இருக்க முடியுமா? ஆகவே, வலதுக்கு ஒண்ணு, இடதுக்கு ஒண்ணரை என்று அம்மா தொகுதி ஒதுக்கியிருந்தாலும் ஒப்புக் கொண்டிருப்பார்கள். பூச்சியத்தை விட ஒண்ணு பெரியது என்ற உண்மையை தா.பா தனது தோழர்களுக்கு புரியவைத்திருப்பார்.

“திமுகவின் குடும்ப ஆட்சியை அகற்றுவது, மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகளை முறியடிப்பது” என்ற கொள்கைகளுக்காக கூட்டணி அமைத்திருக்கும் கம்யூனிஸ்டுகள், அந்தக் கொள்கை வெற்றி பெறுவதற்காக சொந்த தொகுதிகளையும்,  சுயமரியாதையையும் தியாகம் செய்திருக்கிறார்கள் என்று விளக்கமும் சொல்வார்.

பதவிக்காக சுயமரியாதையை தியாகம் செய்ய முடியாது என்று கூறியிருக்கிறார் வைகோ. இரண்டையும் தியாகம் செய்யலாம் என்பது வலது இடதுகளின் நிலை. யார் பெரிய தியாகி வைகோ வா, தாபா வா? எது பெரிது – ஒண்ணா ரெண்டா?

_________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

தேர்தல் 2011