Wednesday, June 18, 2025
முகப்பு பதிவு பக்கம் 781

அரசு, அரசியல், அரசாங்கம், உரிமைகளற்ற மக்கள்!

நண்பர்களே,

மறுகாலனியாக்கத்தின் விளைவாக அரசுக் கட்டமைப்பு, அரசாங்கம், அவற்றின் அதிகாரங்கள், தேர்தல் அரசியல் ஆகியவற்றில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் குறித்தும், அரசியலிலிருந்து மக்கள் மென்மேலும் விலக்கி வைக்கப்பட்டு அரசியலற்றவர்கள் ஆக்கப்படுவது குறித்தும் இந்த நீண்ட கட்டுரை விளக்குகிறது. ஓரவளவு அரசியல் தெரிந்தவர்கள், அக்கறை உள்ளவர்கள் இதை படித்து புரிந்து கொள்ள முடியும் என நம்புகிறோம். இந்த ஜனநாயகம் போலி ஜனநாயகமாக மட்டுமல்ல, ஒரு பாசிச அரசாகவும் மாறிவருகிறது என்பதை இந்தக்கட்டுரை தரவுகளோடும், ஆய்வுகளோடும் நிறுவுகிறது.

முதலாளிகளே அரசியல்வாதிகளாகவும், அரசியல்வாதிகளே முதலாளிகளாகவும் மாறும் நிலையில், கார்ப்பரேட் கொள்ளையர்களே அரசு, அரசாங்கம் இரண்டையும் தீர்மானிக்கும் நிலையிலும், இந்தியாவின் விதி ஏகாதிபத்தியங்களால் எழுதப்படும் நிலையில் ஒட்டுமொத்தமாக இன்று நாடு இருக்கும் நிலையில் அதை மாற்றும் கடமையும் நமக்கிருக்கிறது. இதன் பொருட்டு அரசியல் ரீதியதில் நாம் செயல்படவேண்டிய கடமையையும் இந்த கட்டுரை வேண்டுகிறது. வாருங்கள், இணைந்து செயல்படுவோம்!

– வினவு

__________________________________________________

யார் வென்றாலும் தொடரப் போவது  மறுகாலனியாக்கத்துக்கான ஆட்சியே!

இதற்கு சேவை செய்து தமிழ்நாட்டைக் கொள்ளையடிக்க யாருக்கு லைசன்சு?

கருணாநிதி குடும்பத்துக்கா, ஜெயா-சசி கும்பலுக்கா?

தனியார்மயம்  தாராளமயம்  உலகமயம்  மறுகாலனிய கொள்கைகள் புகுத்தப்பட்டதோடு சேர்த்து, அதற்கு ஏற்ப அரசின் பாத்திரமே மாற்றியமைக்கப்பட்டுள்ளது. உழைக்கும் மக்களை அடக்கி ஒடுக்குவதற்கான ஒரு வன்முறைக் கருவி, ஒரு எந்திரம் என்ற அதன் பாத்திரம் மேலும் ஆக்டோபஸ் தன்மை கொண்டதாக்கப்பட்டு இறுக்கப்பட்டுள்ளது. சொல்லப்படுகின்ற போலி ஜனநாயகத்தில் வழங்கப்பட்டுள்ள சிவில், ஜனநாயக உரிமைகள் கூட வெட்டி சுருக்கப்படுகின்றன. பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், தெருமுனைக் கூட்டங்கள் நடத்தும் இடங்கள், மக்கள் கூடாத ஒதுக்குப்புறமான இடங்களாக வரையறை செய்யப்படுகின்றன. பத்து மணிக்கு மேல் கூட்டங்கள் நடத்தப்படக் கூடாது, சுவரொட்டிகள் ஒட்டத் தடை, தொழிற்சங்க உரிமைகள் பறிக்கப்படுவது என இதற்கு எடுத்துக்காட்டுகள் ஏராளமாக உள்ளன. இதற்கேற்ப சட்டங்களும் கடுமையாக்கப்பட்டுள்ளன. படிப்படியாக ஒரு போலீசு அரசாக, பாசிசத்தன்மை கொண்டதாக அரசு மாற்றப்பட்டு வருகின்றது.

மக்களின் வாழ்வாதாரங்களைப் பிடுங்கி  கார்ப்பரேட் முதலாளிகளிடம் ஒப்படைக்கும் தரகனாக அரசு:

இரண்டாவதாக, விவசாயிகள், விவசாயம் சார்ந்த துணைத் தொழில் செய்பவர்கள், விசைத்தறி, சிறு பட்டறைகள் உட்பட சிறு தொழில் நடத்துபவர்கள், சிறு வணிகர்கள் ஆகியோரிடமிருந்து அவர்களது உற்பத்தி சாதனங்களையும் வாழ்வாதாரங்களையும் பறித்தெடுத்துக் கொண்டு (பலாத்காரமாகவோ நிர்ப்பந்தங்கள் மூலமாகவோ பணத்தைக் கொடுத்தோ) அவர்களை கூலி உழைப்பை மட்டும் நம்பி வாழும் ஏதுமற்றோராக நகர்ப்புறங்களை நோக்கி வீசியடிக்கும் ஒரு நிகழ்ச்சிப் போக்கை அரசு அமுல்நடத்தி வருகின்றது.

சட்டிஸ்கர், ஜார்கண்டு போன்ற மிகவும் பின்தங்கிய மாநிலங்கள் முதல் பஞ்சாப், மகாராட்டிரா, குஜராத், தமிழ்நாடு போன்று வளர்ந்த மாநிலங்கள் வரை இந்தியா முழுமையும் நடக்கும் இந்த நிகழ்ச்சிப் போக்கின் விளைவாக இந்தியா முழுமைக்கும் மக்கள் வேலை தேடி செல்வது அதிகரித்து வருகின்றது. வெளிநாடுகளுக்கு செல்வதும் அதிகரித்து வருகின்றது. ஐரோப்பாவில் நடந்த புராதன திரட்சியை ஒத்த இந்த நிகழ்ச்சிப் போக்கின் விளைவாக, இதன் மூலமாக பருத்துக் கொழுத்த பன்னாட்டுக் கம்பெனிகளும், தரகு அதிகார வர்க்க முதலாளிகளும், வீடுமனை வாங்கல்-விற்றல்-கட்டிட தொழில் அதிபர்களும், பறித்தெடுக்கப்பட்ட இந்த உற்பத்தி சாதனங்கள், வாழ்வாதாரங்களை அப்படியே அள்ளிச் சுருட்டி விவசாயம், மற்றும் எல்லாத் தொழில்களையும் தங்களது ஏகபோக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கொண்டிருக்கினர். இதற்கான அடியாட்படையாக, ஆலோசகராக, தாதிப்பெண்ணாக, புரோக்கராக, வேலைக்காரனாக, கருவியாக அரசு மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது.

மேலும் இவ்வாறு விவசாயிகள் மற்றும் சிறு தொழிலதிபர்கள், வணிகர்களிடமிருந்து பறிக்கப்பட்ட உற்பத்தி சாதனங்களை பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும், தரகு அதிகார வர்க்க முதலாளிகளுக்கும் வாங்கித் தரும் புரோக்கராக அரசு நிறுவனங்கள் செயல்படுகின்றன. விவசாய நிலங்கள், புறம்போக்கு நிலங்களை வாங்குவதற்கு கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ), வருவாய் ஆய்வாளர் (ஆர்ஐ), வட்டாட்சியர், நில அளவை ஊழியர்கள், சொத்துப் பத்திரப் பதிவு அலுவலர்கள், ஓட்டுக் கட்சி பிரமுகர்கள், எம்எல்ஏக்கள்,  எம்பிக்கள் ஆகியோர் கூட்டணி அமைத்துக் கொண்டு செயல்படுகின்றனர். அரசே இதை ஊக்குவிக்கிறது.

உணவு தானிய உற்பத்தி, பூ, பழம், காய்கறிகள் ஆகியவற்றின் உற்பத்தி, கொள்முதல், வினியோகம், விற்பனை, பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை தயாரித்தல், விற்றல் ஆகிய தொழில்களில் ஈடுபடவும் இவற்றிற்காக கொள்முதல் நிலையங்கள், குளிரூட்டப்பட்ட கிடங்குகள் கட்டிக் கொள்ளவும், முன்பேர வர்த்தகத்தில் ஈடுபடவும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் தரகுஅதிகார நிறுவனங்களுக்கும் அரசு தாராள அனுமதி அளித்துள்ளது.

இவர்களின் சேவைக்காக, விவசாய பல்கலைக்கழகங்கள், விவசாய ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சில் (ICAR) வேளாண் அமைச்சகங்கள், வேளாண் விரிவாக்க அலுவலகங்கள், திட்டக் கமிஷன், பல வல்லுனர் குழுக்கள் ஆகியவை பணிக்கப்பட்டுள்ளன. இவையனைத்தையும் இயக்க பன்னாட்டு மற்றும் தரகு அதிகார வர்க்க முதலாளித்துவ கம்பெனிகளின் தலைமை நிர்வாகிகள், அரசு அதிகாரிகள், வல்லுனர்கள் அமெரிக்கப் பன்னாட்டு வேளாண் உணவு கழக நிறுவனத் தலைவர்கள் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒவ்வொரு துறையிலும் இந்த முறையில் அரசின் பல்வேறு நிறுவனங்கள், அவர்களின் நோக்கங்கள், திட்டங்கள், பணிகள் ஆகியவை மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

மறுகாலனியாக்க சுரண்டலின் நேரடி அடியாளாக அரசு:

மூன்றாவதாக, ஐரோப்பிய புராதனத் திரட்சியை ஒத்ததொரு நிகழ்ச்சிப் போக்கின் விளைவாக நகர்ப்புறங்களை நோக்கி விசிறயடிக்கப்படும் கோடிக்கணக்கான உழைப்பாளி மக்கள் பெரும் ரிசர்வ் பட்டாளமாக திரண்டு நிற்கின்றனர். இதைப் பயன்படுத்தி அவர்களை மிகக் குறைந்த கூலிக்கு (ஒரு கட்டிடத் தொழிலாளியோ அல்லது வேறு ஒரு தொழிலாளியோ தினக்கூலியாக 200, 300 கூட பெறலாம். ஆனால் அவர்களின் உழைப்பைச் சுரண்டி முதலாளிகள் அடைகின்ற இலாப விகிதத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போதும், கல்வி, மருத்துவம், இருப்பிடம் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கு உழைப்பாளி மக்கள் செலவிடும் தொகை அதிகரித்துக் கொண்டே போவதோடும் சேர்த்துப் பார்க்கும் போதும்தான் இது மிகக் குறைந்த கூலி என்பது தெளிவாகப் புலப்படும்) அன்றாடக் கூலிகளாகவும் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவும் வேலைக்கமர்த்தி 12 மணி நேரம் 14 மணிநேரம், இரண்டு ஷிப்டுகளை தொடர்ந்தாற்போல் செய்ய வைப்பது, எந்த உரிமையும் இன்றி கொத்தடிமைகள் போல நடத்துவது என ஒட்டச் சுரண்டிக் கொழுக்கின்றனர், பன்னாட்டுக் கம்பெனி முதலாளிகளும் தரகு அதிகார வர்க்க முதலாளிகளும்.

சாதாரண தொழிலாளர்கள், அரைத் திறனாளி (ICAR) தொழிலாளர்கள் மட்டுமல்ல, தகவல் தொழில்நுட்பம் மற்றும் பிற பொறியியல் துறைகளில் பணியமர்த்தப்படும் பொறியாளர்கள், கணினி வல்லுனர்கள் வரை அனைவரும் இந்த வகையான தற்காலிக ஒப்பந்த பணியாளர்களாக கொடுமையான கொத்தடிமைச் சுரண்டலுக்கு ஆட்படுத்தப்பட்டுள்ளனர். தொழிற்சங்கம் அமைப்பது என்ற பேச்செடுத்தாலே வேலையை விட்டு தூக்கியெறியப்படுகின்றனர். வெள்ளைக்காலர் தொழிலாளர்கள், வல்லுனர்கள் என்றழைக்கப்பட்ட இவர்கள் கூட இன்று வெள்ளை அடிமைகளாக ஆக்கப்பட்டுள்ளனர். இதற்கான அடியாளாக அரசு மாற்றப்பட்டிருக்கிறது.

மேலும், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பொதுத்துறை நிறுவனங்களின் தொழிலாளர்கள், ஊழியர்கள், அதிகாரிகளின் ஊதியத்தை திட்டமிட்டே சில மடங்குகள் அதிகமாக கொடுப்பது; அதையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போவது; இதன் மூலம் பன்னாட்டுக் கம்பெனிகள், தரகு அதிகார வர்க்க முதலாளிகள் உற்பத்தி செய்யும் நுகர்பொருட்கள், வழங்கும் சேவைகள் ஆகியவற்றிற்கும் வீடுமனை கட்டல்  வாங்கல்  விற்றல் அதிபர்களின் தொழிலுக்கும் தொடர்ந்து கிராக்கியை அதிகரித்து அவர்கள் கொள்ளை இலாபம் அடித்து கொழுக்க வைக்கும் கருவியாக அரசின் செயல்பாடு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதன் இன்னொரு பக்கமாக, பல்வேறு நிதி நிறுவனங்கள் தொடங்கவும் அவைகள் தாராள முதலீடு திரட்டவும், அன்னிய முதலீடுகளை அதிகரித்தும், மேலே சொன்ன பிரிவினர்கள் நுகர்பொருட்கள், வீடுகள், மனைகள் வாங்குவதற்கும் கல்வி, மருத்துவத்திற்கும் ஏராளமான கடன்கள் வழங்கவும், அதற்கேற்ப மத்திய ரிசர்வ் வங்கி மூலம் வட்டியைக் குறைத்தும் ஏற்பாடுகள் செய்து தரும் புரோக்கராக அரசு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வட்டியில்லா கடன், குறைந்த வட்டியிலான கடன், சுலப தவணைகள் என்றெல்லாம் தனது முகவர்களை இந்த நிதி நிறுவனங்களும் பிறரும் அனுப்பி இவர்களை பேசி மயக்கி கடன்காரர்கள் ஆக்குகிறார்கள். கடன் அட்டை வசதியும் இதற்கான சாதனமாக வினியோகிக்கப்படுகின்றது; தவணை கட்டத் தவறினால் அடியாட்களை விட்டு வசூலிக்கவும் சொல்கிறார்கள்; இவ்வாறு அரசாங்கத்தின் பணத்தை, மொத்த மக்களின் நிதியை நிதி நிறுவனங்கள் சுற்று வழியில் சுருட்ட அரசாங்கமே ஒரு சாதனமாக மாற்றப்பட்டுள்ளது.

கார்ப்பரேட் பகற்கொள்ளைக்கான கருவியாக அரசு

நான்காவதாக, “அரசின் கையில் போதிய நிதியில்லை; புதிய முதலீடுகள் செய்ய நிதிப் பற்றாக்குறை உள்ளது” என்ற முகாந்திரத்திலும், ‘பொதுத்துறை நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குகின்றன. “புதிய தொழில் நுட்பங்கள் புகுத்தப்பட்டு தொழில்துறை நவீனமாக்கப்பட வேண்டியுள்ளது” என்ற முகாந்திரத்திலும் கல்வி, மருத்துவம் போன்ற பல சேவைத் துறைகளிலும், பல உற்பத்தி துறைகளிலும் பருத்துக் கொழுத்த பன்னாட்டுக் கம்பெனிகளும் தரகு அதிகார வர்க்க முதலாளிகளும் புகுந்து கொள்ளை இலாபம் ஈட்ட தாராளமாக அனுமதிக்கப்படுகின்றன; பொதுத்துறை நிறுவனங்கள் அடிமாட்டு விலைக்கு அவர்களுக்கு விற்கப்படுகின்றன.

இலாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் பல ஆண்டுகளாக பாடுபட்டு உருவாக்கி வைத்திருக்கும் அடிப்படை கட்டுமானங்கள், சாதனங்கள், பிற வசதிகளை தனியார்துறையினர் பயன்படுத்தவும், அந்த பொதுத்துறை நிறுவனங்களுக்கே போட்டியாக செயல்படவும், காலப்போக்கில் இந்த பொதுத்துறை நிறுவனங்களை ‘நட்டத்தில்’ இயங்கும் நிறுவனங்களாகவும் தனியார்துறையை விட மட்டமான சேவை வழங்கும் நிறுவனங்களாகவும் (எடுத்துக்காட்டாக பி.எஸ்.என்.எல்) மாற்றுவதையும் அரசே திட்டமிட்டு செய்கிறது. பின்னர் அந்த துறையையே கைகழுவுவதையும் செய்கிறது. உயிர்காக்கும் மருந்துகள் தயாரிக்கின்ற, கோடிக்கணக்கான மக்களுக்கு நோய் வராமல் தடுக்கும் தடுப்பூசி மருந்துகள் தயாரிக்கும் நிறுவனங்களையும் தென்கிழக்கு ஆசியாவிலேயே அரசுத்துறையில் சிறந்து விளங்கும் இந்துஸ்தான் போட்டோ பிலிம் போன்ற நிறுவனங்களையும் கூட இந்த முறையில் தனியாருக்குத் தாரை வார்க்கும் தயாளனாக அரசு மாற்றப்பட்டுள்ளது.

தங்களிடம் நிதியில்லை, மூலதனம் இல்லை என்று சொல்லும் அரசே, இன்னொரு பக்கம், கார்ப்பரேட் பெரும் முதலாளிகள் (பருத்து கொழுத்த பன்னாட்டு முதலாளிகள் மற்றும் தரகு அதிகார வர்க்க முதலாளிகள்) தொழில் தொடங்க குறைந்த விலையில் விளைநிலங்களை வாங்கிக் கொடுப்பது, அரசு நிலங்களை அடிமாட்டு விலைக்கு விற்பது அல்லது நீண்டகால வாடகைக்கு விடுவது, மின்சாரம், தண்ணீர் போன்ற சேவைகளை குறைந்த விலையில் வழங்குவது, மானியங்கள், வரிச்சலுகைகள் அளிப்பது என்று அரசு நிதியை நமது பணத்தை வாரி வாரி அவர்களுக்கு வழங்கிக் கொண்டுள்ளது. 2006ஆம் ஆண்டிலிருந்து 2011ம் ஆண்டு வரை இவ்வாறு மத்திய அரசு வழங்கிய வரிச்சலுகைகள் மட்டும் 22 இலட்சம் கோடிகளுக்கு மேல்! அதாவது ஒரு நாளைக்கு 240 கோடி ரூபாய்களை தூக்கிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

இன்னொரு பக்கம் கார்ப்பரேட் முதலாளிகளின் வரிஏய்ப்பு செய்வதற்கும் அந்தப் பணத்தை வெளிநாடுகளுக்கு கள்ளத்தனமான வழிகளில் கொண்டு செல்வதற்கும் பல வசதி, வாய்ப்புகளை அரசு செய்து கொடுத்துள்ளது. எடுத்துக்காட்டாக, மொரிசியஸ் நாட்டிலும் இந்தியாவிலும் பதிவு செய்யப்பட்ட கம்பெனிகளுக்கு இரட்டை வரியிலிருந்து சலுகை என்ற பெயரில் பணத்தை வெளியே கொண்டு செல்ல அனுமதிப்பது; ஏற்றுமதி, இறக்குமதி விதிகளில் சலுகை போன்ற வழிமுறைகள் மூலம் அனுமதிப்பது; இவ்வாறு வரிஏய்ப்பு மூலம் கார்ப்பரேட் முதலாளிகள் கருப்புப் பணமாக ஒரு நாளைக்கு 240 கோடி ரூபாய்களை வெளிநாடுகளுக்கு கடத்தி வருகிறார்கள். இவ்வாறு பல ஆண்டுகளாக எடுத்துச் செல்லப்பட்டு அயல்நாட்டு வங்கிகளில் இரகசிய கணக்குகளில் வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தின் அளவு 72 இலட்சம் கோடிகளுக்கு மேல்! இது அரசு தரப்பில் ஒப்புக் கொள்ளப்பட்ட விபரம்; உண்மை நிலைமை இதைவிட அதிகமாக இருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை.

அரசு வங்கிகளிடமிருந்து கார்ப்பரேட் முதலாளிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்குவதும், வாங்கிய கடனில் ஒரு பெரும்பகுதியை முதலாளிகள் திட்டமிட்டே கட்டாமலிருப்பதும், வாராக் கடன் என்ற பெயரில் இவற்றை அரசாங்கம் கொள்கை முடிவெடுத்து தள்ளுபடி செய்வதும் நடந்து வருகின்றது. இவ்வாறு பல இலட்சம் கோடி ரூபாய்கள் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அள்ளி கொடுக்கப்பட்டு வருகின்றது. இவையெல்லாம் கொள்கை முடிவெடுத்து, பொருத்தமான சட்டதிருத்தங்கள் செய்து பகிரங்கமாக, முறையான வழிகளிலேயே அரசாங்கம் செய்து கொடுக்கின்றது. அப்படிப்பட்டதாகவே மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகள், இயங்குமுறைகள் மாற்றப்பட்டுள்ளன.

இவை மட்டுமின்றி, நாட்டின் இயற்கை வளங்கள் எல்லாம் மிகக் குறைந்த விலைக்கு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரை வார்க்கப்படுகின்றது. இரும்புத்தாது, எண்ணெய் வயல்கள், பாக்சைட், தண்ணீர், மணல், நிலம், காட்டுவளம், கடல்வளம், அலைக்கற்றை என ஐந்துவகை இயற்கை வளங்களும் மிகக் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. மத்திய மாநில அரசுகள் போட்டி போட்டுக் கொண்டு, கொள்கை முடிவெடுத்து, சட்டமன்றங்கள், நாடாளுமன்றங்கள், அமைச்சரவைகளுக்கு தெரியாமலேயே இரகசிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு அதனடிப்படையில் வாரி வாரி வழங்கப்படுகின்றன. இவ்வாறு கார்ப்பரேட் முதலாளிகள் நாட்டின் இயற்கை வளங்களை பகற்கொள்ளையடிப்பதற்கான கருவியாக அரசு மாற்றப்பட்டுள்ளது.

ஜனநாயகத்திலிருந்து மக்களை விலக்கி வைக்கும்  கோடீசுவரர்களின் ஆட்சியாக

ஐந்தாவதாக, இன்று எம்எல்ஏ ஆக வேண்டுமென்றால் கூட, குறைந்தபட்ச தகுதி கோடீசுவரனாக இருக்க வேண்டும், சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக நிற்க குறைந்தது 5 கோடி ரூபாய் செலவழிக்க தயாராக இருக்கவேண்டும். எல்லா தேர்தல் அரசியல் கட்சிகளும் இதை ஒரு விதியாகவே ஆக்கி விட்டன. அமெரிக்க மேல்நிலை வல்லரசு தலைமையிலான ஏகாதிபத்திய நலன்களுக்கு சேவை செய்வது, பருத்து கொழுத்த பன்னாட்டு நிறுவனங்களும் தரகு அதிகார வர்க்க முதலாளிகளும் நமது நாட்டின் வளங்களையும் அரசு சொத்துக்களையும் மக்களின் உழைப்புச் சக்தியையும் ஒட்டச் சுரண்டுவதற்கான முகவர்களாக செயல்படுவது, இந்த சேவைக்காக கார்ப்பரேட் முதலாளிகள் அடிக்கும் பகற்கொள்ளையில் ஒரு பங்கை பெற்றுக் கொள்வது என்ற திருப்பணியைச் செய்வதற்காக யார் ஆட்சியில் இருப்பது என்ற ஒரேயொரு நோக்கத்திற்காக மட்டுமே எல்லா தேர்தல் அரசியல் கட்சிகளும் செயல்படுகின்றன. மற்றபடி வேறு எந்த கொள்கையோ, இலட்சியமோ, நாட்டுப்பற்றோ இவர்களிடம் இல்லை.

பிஜேபி, ஜெயலலிதாவின் கட்சி போன்ற சில கட்சிகள் பார்ப்பனியத்தை அரியணையில் ஏற்றுவது என்ற நோக்கோடு செயல்பட்டாலும், மேலே சொன்னவாறு கார்ப்பரேட் முதலாளிகள் பகற்கொள்ளையடிப்பதற்கோ, அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்கு சேவை செய்வதிலோ இவர்களுக்கும் பிற தேர்தல் அரசியல் கட்சிகளுக்கும் இடையில் வேறுபாடு கிடையாது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாலெ) லிபரேசன், சிபிஐ, சிபிஎம் போன்ற ‘இடதுசாரி’ கட்சிகள் அமெரிக்க மேலாதிக்கத்திற்கும் கார்ப்பரேட் பகற்கொள்ளைக்கும் எதிராக எடுக்கும் நிலைப்பாடுகள் சந்தர்ப்பவாதமாக இருக்கும் அதேவேளையில், இக்கட்சிகளின் மேல்மட்ட தலைவர்கள் உட்பட அடிமட்ட ஊழியர்கள் வரை பலர் இலஞ்ச இலாவண்யம், மோசடிகளில் ஈடுபடுபவர்களாகவும் இருக்கின்றனர். கார்ப்பரேட் பகற் கொள்ளைக்கு இவர்களின் தலைமையிலான அரசுகளே சேவை செய்பவையாகவும் இருக்கின்றன; மேலும், இவர்கள் ஏதாவது ஒரு ஆளும் வர்க்க / போனபாடிஸ்ட் காரியவாத பிழைப்புவாத கட்சிகளின் கூட்டணியில் மாறி மாறி சந்தர்ப்பவாதமாக பங்கேற்கின்றனர். இவர்கள் சேர்ந்துள்ள கூட்டணி பதவிக்கு வந்து, அந்த அரசுகள் கார்ப்பரேட் பகற்கொள்ளைக்கான சாதனமாக செயல்படும்போதும் கூட்டணியிலிருந்து விலகாமல், மென்மையான விமர்சனங்களை வைத்து விட்டு தொடர்ந்து ஆதரித்து, தங்களால் முடிந்தவரை அரசு சன்மானங்களைப் பெற்றுக் கொள்வதிலும் பதவி சுகம் காண்பதிலும் திருப்தி கொள்கிறார்கள். இவ்வாறு இவர்களும் ஆளும் வர்க்க / பிழைப்புவாத கட்சிகளின் கோடீசுவரர்களின் கையாட்களாக செயல்படுகின்றனர்.

கோடிசுவரர்கள்தான் வேட்பாளர்களாக நிறுத்தப்படுகிறார்கள். நிற்க முடியும் என்பதோடு, தனியார்மய  தாராளமயம்  உலகமயம் என்ற மறுகாலனியாதிக்கம் மிகவும் கருணையுடன் பேசும் தருணங்களில் கூட ‘அனைவரையும் தழுவிய வளர்ச்சி’ (Inclusive growth) என்று கூறுகிறதேயன்றி பணக்காரர்களிடமிருந்து எடுத்து ஏழைகளுக்கு கொடுத்தல் என்பதையோ, நலிந்த பிரிவினருக்கு சலுகைகள் வழங்கி கைதூக்கி விடுதல் என்பதையோ பேசுவதில்லை. இத்தகைய ‘கொள்கை வழிபட்ட அரசியல்’ அனைத்தையும் ‘ஜனநாயகத்திலிருந்து’ துடைத்தெறிந்து விட்டது. இதன்மூலம் வேறுபட்ட அரசியல் கொள்கைகளுக்காக வெவ்வேறு அரசியல் கட்சிகளின் பின்னால் மக்கள் அணிதிரளுதல், அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுதல், அதனடிப்படையில் வாக்களித்தல் என்பதற்கான சாத்தியத்தையே நாடாளுமன்ற அரசியல் அரங்கிலிருந்து புதிய தாராளவாதம் எனப்படும் மறுகாலனியாதிக்கப் போக்கு நீக்கி வருகின்றது.

‘சிறந்த அரசாளுமை’ (good governance) என்பதே எல்லா அரசுகளின் நோக்கமாக இருக்க வேண்டுமெனவும் இப்போக்கு வரையறுத்துள்ளது. சர்வதேச நிதி நிறுவனங்களால் முன்தள்ளப்படும் புதிய தாராளவாத வகையிலான கட்டுமான சீர்திருத்தங்களைக் கறாராகவும் ஈவு இரக்கமின்றியும் அமுல்படுத்துவதையே சிறந்த அரசாளுமை என்று உலக முதலாளித்துவம் போற்றுகிறது. மேலும் ‘சுயமாக சுறுசுறுப்பாக இயங்கும் அரசு’ (Proactive state) என்ற என்பதையும் மறுகாலனியாதிக்கத்திற்கு ஏற்ப சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் ‘தோல்வியுற்ற அரசாக’ (failed state) இருக்கக்கூடாது என்பதையும் முன்தள்ளுகிறது.

சிறந்த அரசாளுமை, நல்லாட்சி போன்ற முழக்கங்களையே இன்று எல்லா ஓட்டுக் கட்சிகளும் வரித்துக் கொண்டு விட்டன. இதற்காக உலகவங்கி போன்ற ஏகாதிபத்திய நிறுவனங்கள் தமது அரசுக்கு அளிக்கும் சான்றிதழையும் பெருமையுடன் விளம்பரப்படுத்திக் கொள்கின்றன. மேல்நிலை வல்லரசுகளால் திணிக்கப்பட்ட இந்த கட்டுமான சீர்திருத்தங்களின் எல்லைக்குள் நின்றுதான் நாடாளுமன்ற அரசியலில் முதலாளித்துவக் கட்சிகள் தமக்குள் மோதிக் கொள்கின்றன. இவைகளுக்கிடையில் வேறுபாடுகளே இல்லாத நிலைமையில், தேர்தல் போட்டியும் மாறுபட்ட கொள்கைகளுக்கு இடையிலான மோதலாக இல்லை. மாறாக தனிநபர் பற்றிய குணாதிசயங்கள், திறமைகள், அவர்கள் செய்த இலஞ்சம் மற்றும் பிற முறைகேடுகள், மோசடிகள், சேர்த்த சொத்துக்கள் ஆகியவற்றை முதன்மைப்படுத்துகின்ற, நபர்களுக்கிடையிலான அதிகாரப் போட்டியாகவே தேர்தல்கள் இருக்கின்றன.

கொள்கை வேறுபாடுகள் அற்றுப் போனதால் அரை நிலப்பிரபுத்துவ சமூகத்தின் சாபக் கேடுகளான சாதி, மதவெறி ஆகியவற்றைத் தூண்டி விட்டும், இலவசத் திட்டங்களை அறிவித்தும், நேரடியாக ஓட்டுகளுக்கு விலை பேசியும் தான் ஓட்டுகள் அறுவடை செய்யப் படுகின்றன. அரசு அதிகாரத்திலிருந்து சொல்லிக் கொள்ளப்படுகிற ஜனநாயகத்தை வெளியேற்றி விட்டு, முதலாளித்துவ வர்க்கம் அதனைக் கைப்பற்றியிருப்பது போலவே, எல்லா முதலாளித்துவ அரசியல் கட்சிகளிலும் உட்கட்சி ஜனநாயகம் ஒழிந்து ஒரு கும்பல் அல்லது குடும்பத்தின் அதிகாரமாக சீரழிந்திருக்கிறது. அரசாளுமையிலிருந்து அரசியலை விலக்கிவிட்ட இந்த ஜனநாயகத்தில்தான் ‘முறையாக’ தேர்தல் நடத்தப்பட்டு, பல்வேறு கட்சிகள் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சிக்கு வந்திருக்கின்றன.

இதற்கேற்ப தேர்தல் நடத்தை முறைகளையே கோடீசுவரர்களுக்கு மட்டும் உரித்தான ஒன்றாக, பரந்துபட்ட உழைக்கும் மக்களை அதிலிருந்து விலக்கி வைக்கின்ற நடத்தை முறைகளாக ஆளும் வர்க்கங்களே தேர்தல் கமிஷன்கள் மூலம் அமுல் நடத்துகின்றன. சேஷன் இந்திய தேர்தல் தலைமை ஆணையாளராக இருந்த காலத்திலிருந்து இவ்வாறு தேர்தல் நடத்தை விதிகள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனை சேஷனின் விசேட திறமை, தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும் என்ற அவரது இலட்சியம், அதாவது ஒரு தனிநபரின் முன்முயற்சி என்ற கோணத்தில் பார்க்கக் கூடாது. மாறாக, ஆளும் வர்க்கம் மறுகாலனியாதிக்க கொள்கைகளுக்கேற்ப அரசு, தேர்தல் முறை ஆகியவற்றில் கொண்டு வந்துள்ள பொது மாற்றங்கள் என்று இதைப் பார்க்க வேண்டும்.

இன்னொரு பக்கம், முதலாளித்துவ தேர்தல் ஜனநாயகத்தில் சீரழிவும், ஊழல்களும் ரவுடித்தனமும் அராஜகங்களும் முறைகேடுகளும் மோசடிகளும் சந்தர்ப்பவாதங்களும் பிழைப்புவாதங்களும் மலிந்து நாறுவது என்பது அதிகரித்துக் கொண்டே போகிறது. இத்துடன் மறுகாலனியாதிக்க கொள்கைகள் புகுத்தப்பட்டதைத் தொடர்ந்து எல்லா சமூக மதிப்பீடுகளும் அறநெறிகளும் தூக்கியெறியப்பட்டு வருகின்றன. இதன் தாக்கம் ஏற்கெனவே நாறிக் கொண்டிருக்கும் முதலாளித்து தேர்தல் ஜனநாயகத்திலும் ஏற்பட்டு, தேர்தல் ஜனநாயக நடைமுறைகள் மீதும், முதலாளித்துவ ஜனநாயகத்தின் மீதும் மக்களிடையே வெறுப்பும்  அவநம்பிக்கையையும் அதிகரித்து வருகின்றன. இதன் விளைவாக இந்த சமூக அமைப்பு மற்றும் முதலாளித்துவ தேர்தல் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையிழந்து புரட்சிகர இயக்கங்களின் பக்கம் மக்கள் திரும்புவதைத் தடுக்கும் நோக்கிலும் ஆளும் வர்க்கங்கள் தேர்தல் கமிசனைக் கொண்டு கடுமையான தேர்தல் நடத்தை விதிகளை கட்டவிழ்த்து விட்டு வருகின்றன.

ஆனால் தேர்தல் கமிஷனின் நடத்தை விதிகள் எந்த விதத்திலும் மக்களுக்கு பணம் கொடுத்தல், பிரியாணிபீர் விருந்துகள், அன்பளிப்புகளை வழங்குதல், ஆட்சிக்கு வந்தால் இலவசங்களை வாரி வழங்குவோம் என்று கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு அறிவித்து மக்களை ஈர்த்தல், சாதிய உணர்வுகளைத் தூண்டியும் ரவுடித்தனத்தில் ஈடபட்டும் ஓட்டுப் பொறுக்குதல் போன்ற நடைமுறைகளை தடுக்கவில்லை; மாறாக இவை கனஜோராகவே நடந்து கொண்டிருக்கின்றன. அதிகரித்து வருகின்றன என்று 2009 நாடாளுமன்ற தேர்தலும் குறிப்பாக திருமங்கலம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலும் நிரூபித்துள்ளன. சில கட்சி வேட்பாளர்களிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்வதும், தேர்தல் நடத்தை விதிகளை மீறிவிட்டதாக அமைச்சர்கள் உட்பட பலபேர் மீது ஆயிரக்கணக்கான வழக்குகளை பதிவு செய்வதும், பிறகு தேர்தல் முடிந்தவுடன் இந்த வழக்குகளை அப்படியே விட்டுவிடுவதும்தான் நடைமுறையாக உள்ளது. யாரும் தண்டிக்கப்படுவதில்லை. பதவியும் பறிக்கப்படுவதில்லை.

முன்பெல்லாம் தேர்தல் என்பது சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை எல்லா உழைக்கும் மக்களும் கலந்து கொள்ளும் பிரச்சார முறைகளைக் கொண்டதாக, அவர்களால் மேற்கொள்ளக்கூடிய பிரச்சார முறைகள் எல்லாம் அனுமதிக்கப்பட்டு, இரவு பகலாக ஒரு இரண்டு மாத காலத்திற்கு திருவிழா போல நடைபெறும்; கட்சித் தொண்டர்கள் அங்கும் இங்கும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பார்கள்; ஆனால் மறுகாலனியாதிக்க கொள்கைகளுக்கேற்ப இன்று தேர்தல் என்பது கோடீசுவரர்கள் மட்டுமே பங்கேற்கக்கூடிய, அவர்களால் மேற்கொள்ளக்கூடிய பிரச்சார நடைமுறைகள் மட்டுமே கொண்டதாக தேர்தல் முறை மாற்றப்பட்டு விட்டது. தொலைக்காட்சி நிறுவனம் நடத்த, செய்திப் பத்திரிகைகள் நடத்த அல்லது அவைகளில் விளம்பரம் செய்ய, கார்களில் பவனி வர ஆற்றல் கொண்டவர்கள் மட்டுமே, அதாவது கோடீசுவர வேட்பாளர்கள் மட்டுமே பங்கேற்கும் வண்ணம் தேர்தல் முறைகள் மாற்றப்பட்டு விட்டன.

கொள்கை, கோட்பாடு என்று எந்த வெங்காயமுமின்றி கட்சியே பிழைப்புவாதக் கட்சிகளாக மாறிவிட்ட நிலையில், பிரியாணியுடன் நாள் ஒன்றுக்கு ரூ. 200 கொடுத்தால்தான் வேலை செய்யும் ‘தொண்டர்களை’ கொண்டதாகவே இவைகள் மாறிவிட்டன. பணப்பட்டுவாடா உட்பட பல முறைகேடுகளை ஒழித்து நேர்மையான தேர்தலை நடத்துவது என்ற முகாந்திரத்தில் 85 விழுக்காடு உழைக்கம் மக்கள் தேர்தலில் பங்கேற்பது உட்பட பிரச்சாரத்தில் ஈடுபடுவது வரை தேர்தல் நடைமுறையிலிருந்து விலக்கி வைக்கப்ட்டுள்ளனர். பலாத்காரமாக தடுக்கப்பட்டுள்ளனர். அவர்களின் ஒரே வேலை வாக்களிப்பது மட்டுமே. அவ்வளவுதான்! அதுவும் தேர்தல் நடத்துவதற்கான காலம் குறுக்கப்பட்டு அவசரம் அவசரமாக நடத்தப்படுகின்றது. பத்து அல்லது 15 நாள் பிரச்சாரத்தில் தேர்தல் முடிந்து விடுகின்றது.

எப்படியாவது ஆட்சிக்கு வந்து கொள்ளையடிக்கவேண்டும் என்ற வெறி; ஆட்சியை பிடிக்க முடியாவிட்டாலும் நாலு சீட்டாவது ஜெயித்தால்தான் கட்சியையே தக்க வைத்துக் கொள்ள முடியும். இல்லாவிட்டால் காக்காய்கள் கூட்டத்தில் கல்லெறிந்தது போல கட்சி நிர்வாகிகள் ஓடிப் போய் விடுவார்கள் என்ற பீதி ஆகிய ‘உன்னத நோக்கங்களே’ இன்று கட்சிகளை வழிநடத்துகின்றன. இந்த நோக்கங்களை ஈடேற்றிக் கொள்ள எந்தவிதமான சந்தர்ப்பவாதத்திற்கும் அவமானத்திற்கும் அவமதிப்புகளுக்கும் இழிவுபடுத்தலுக்கும் எல்லாவிதமான பிழைப்புவாதங்கள், தகிடுதத்தங்களைச் செய்யவும் எல்லா தேசிய, பிராந்திய, சாதியக் கட்சிகளும் கூட்டணிகள் அமைத்துக் கொள்கின்றன. கொள்கை, இலட்சியம், தேசப்பற்று, சமூகப்பற்று போன்று எதுவும், எந்த மதிப்பீடும் அறநெறியும் இக்கட்சிகளிடம் இல்லை.

தேர்தலுக்கு முன்பு அமைக்கப்படும் கூட்டணிகள் தேர்தல் முடிந்தவுடன் கலைந்து புதிய கூட்டணிகள் அமையும்; தேர்தலுக்கு தேர்தல் கூட்டணிகள் மாறும். அதேவேளையில் கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்கு சேவை செய்வதிலும் தங்களது தலைமையிலான அரசுகளை அதற்கான கருவியாக பயன்படுத்துவதிலும், அதன்மூலம் எல்லாவிதமான முறைகளிலும் தங்களுக்கான சொத்துக்களை குவித்துக் கொள்வதிலும் இவர்கள் ஒன்றுபட்டு நிற்கின்றனர். ஆட்சி நடத்துகின்ற, அரசை இயக்குகின்ற கட்சிகளின் தன்மையில் இப்படிப்பட்ட மாற்றங்கள் நடந்துள்ளன.

இன்னுமொரு மாற்றம் என்னவென்றால், எல்லா முதலாளித்துவ தேர்தல் அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது பினாமிகளின் (சாதிக் பாட்சா, பல்வா போன்ற பினாமிகளின்) பேரில் சுயநிதிக் கல்லூரிகள் நடத்துகிறார்கள்; ரியல் எஸ்டேட் தொழிலில் கோடி கோடியாக சொத்து சேர்க்கிறார்கள்; மணல் திருட்டு நடத்தி கொள்ளையடிக்கிறார்கள்; கார்ப்பரேட் மருத்துவமனைகளில் பங்குதாரர்களாக உள்ளனர். கனிம வள சுரங்கத் தொழில் நடத்தி கொள்ளையடிக்கிறார்கள். சொந்த மாநிலத்தில் தொழில் நடத்தினால் தெரிந்து விடும் என்பதால் வெளிமாநிலங்களில் தொழில் நடத்துகிறார்கள். இவ்வாறு அரசியல்வாதிகள் முதலாளிகளாக மாறியுள்ளனர். இதன் மறுபக்கமாக முதலாளிகள் குறிப்பாக, அவர்களின் இளைய வாரிசுகள் இன்று அரசியல்வாதிகளாக மாறியுள்ளனர். முதலாளி வர்க்கத்திற்காக அவர்களின் அரசியல் பிரதிநிதிகள் ஆள்வது மாறி, முதலாளி வர்க்கத்தினரே இன்று நேரிடையாக ஆட்சி செலுத்துவதும், முதலாளிகள், நிலப்பிரபுக்களால் சுரண்டப்பட்டு ஒடுக்கப்பட்டு வரும் ஏழைகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோரின் மேம்பாட்டிற்காகவும் நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் ‘சோசலிசம்’, ‘சமூக நீதி’ போன்ற கொள்கைகளின் அடிப்படையில் வறுமை ஒழிப்பு, வேலையின்மை ஒழிப்பு போன்ற திட்டங்களைப் போட்டு அரசியல் சேவை செய்பவர்கள், தொண்டாற்றுபவர்கள் என்ற நிலைமாறி அவர்களே முதலாளிகளாக மாறி நேரடியாக சுரண்டுபவர்களாகவும் ஒடுக்குபவர்களாகவும் மாறிவிட்டனர்.

அரசியல்வாதிகளும், முதலாளிகளும் இணைந்த ஒரு ஒட்டு வகைப் பிரிவினர் (ஒட்டு மாங்காய் போல) தான் இன்று கட்சிகளையும் அரசுகளையும் ஆள்கிறார்கள்; நிர்வகிக்கிறார்கள். இதன் விளைவாக அரசு சொத்துக்களையும், அரசு கஜானாவையும் நாட்டின் இயற்கை வளங்களையும் கார்ப்பரேட் முதலாளிகள் சட்டபூர்வமாகவே, கொள்கை முடிவுகளின்படியே பகற்கொள்ளையடிப்பது அதிகரித்து வருவதோடு, இவர்களின் வரிஏய்ப்பு, தில்லுமுல்லுகளும் அதிகரித்துள்ளன. இவற்றில் புதுப்புது நுட்பங்களும் புகுத்தப்பட்டுள்ளன; இந்த வழிமுறைகளில் ஈட்டப்படும் கருப்பு பணமும் பன்மடங்கு பெருகிவிட்டது. அவற்றை வெளிநாடுகளுக்கு கடத்தும் ஹாசன் அலி போன்ற ஹவாலா ஏஜெண்டுகளும் நீரா ராடியா போன்ற அரசியல் தொழில் புரோக்கர்களும் அவர்களின் செல்வாக்கும் அதிகார பலமும் பன்மடங்கு அதிகரித்துள்ளன.

ஹசன் அலி ஒரு நபர் அல்ல; அவனுக்கு பின்னால் கார்ப்பரேட் முதலாளிகள், மத்திய மாநில அமைச்சர்கள், தேசியக் கட்சிகளின் பெருந்தலைவர்கள், உயர்மட்ட அதிகாரிகள், நீதிபதிகள், ஆயுத கடத்தல், போதை மருந்து கடத்தல் கும்பல்கள் ஆகியவர்கள் உள்ளனர். அவன் மீது கைவைத்தால் இந்த அத்தனை சக்திகளையும் எதிர்த்து நிற்க வேண்டும்; ஹசன் அலியும் அவனது கூட்டாளிகளும் ஏறத்தாழ 72,000 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளனர். அவன் தாவூத் இப்ராஹிமுடனும் ஆயுதக் கடத்தல் பேர்வழி ஆதனன் கஷோகியுடனும் தொடர்பு வைத்துள்ளான். 35,000 கோடி ரூபாய்களை ஹவாலா வழிமுறை மூலம் (அதாவது சட்டவிரோதமான பணப் பரிமாற்றத்தின் மூலம்) வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளான் என்று அரசாங்கமே குற்றம் சாட்டியுள்ளது. (டைம்ஸ் ஆஃப் இந்தியா, 10.3.11); 1984-இல் ஒரு டாக்டர் மீது ஆசிட் வீசி தாக்கிய வழக்கு ஹசன் அலி மீது உள்ளது. இந்த வழக்கு தொடர்பான பதிவேடுகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்று போலீசு சொல்லியுள்ளது. 2008-இல் மூன்று பாஸ்போர்ட்டுகள் வைத்திருந்ததாக இவன் மீது வழக்கு உள்ளது.

தற்போது குதிரைப் பண்ணை அதிபராக உள்ள ஹசன் அலியின் வருமானம் ஆறு ஆண்டுகளில் 54 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2001-02-ஆம் ஆண்டில் இவனது ஆண்டு வருமானம் 528.9 கோடி ரூபாயாக இருந்துள்ளது. அடுத்த ஆண்டில் (2002-03-இல் 5404.7 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. பின்னர் 2006-07ம் ஆண்டு 54,268 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. (தினமலர், 21.3.11). 2002லிருந்து 2006-ம் ஆண்டுக்குள் அதாவது நான்காண்டுகளில் அவனது வருமானம் 10 மடங்கு அதிகரித்துள்ளது.

சாதாரணமாக இதே விகிதத்தில்தான் அவனது சொத்து அதிகரித்திருக்கும் என்று கணக்கிட்டால் கூட, 2006லிருந்து 2010-ம் ஆண்டிற்குள், அதாவது அடுத்த நான்காண்டுகளில் இன்னும் ஒரு 10 மடங்கு அதிகரித்து 2010-ம் ஆண்டில் அவனது வருமானம் 5,40,000 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கும் என்று சொல்லலாம். எனவே தான், அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகள் அவன் மீது வழக்குகள் போடவே தயங்குகின்றன; மரியாதையுடன் அழைத்து வந்து பிஸ்கட், டீ தந்து விசாரித்து விட்டு மரியாதையாக அனுப்பி வைக்கின்றன.

அம்பலமான ஒரு ஹசன் மட்டுமல்ல, அம்பலம் ஆகாமல் பல ஹசன் அலிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும். விசாரணை அமைப்புகள் இவனைப் போன்றவர்கள் மீது கார, சாரமில்லாத குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்யும்; நாட்டின் திறமை வாய்ந்த வழக்குரைஞர்கள் இவன்களுக்காக வாதாடுவார்கள். குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று உச்சநீதி மன்றமே இவர்களை விடுதலை செய்யும்.

ஹசன் அலிகளையும் நீரா ராடியாக்களையும் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அதிகார வர்க்கத்தினரையும் சிபிஐயையும், தலைசிறந்த வழக்குரைஞர்கள், உயர்நீதி மன்ற, உச்சநீதி மன்ற நீதிபதியையும் தங்களது செல்லப் பிராணிகள் போல் ஊட்டி வளர்க்கும் ஒரு புதிய ஒட்டுவகை ஆளும் வர்க்கத்தினரின் கட்சிகளுடைய ஏதோவொரு கூட்டணிதான் இத்தேர்தல்களில் ஆட்சிக்கு வரும். இவர்களின் ஒரே நோக்கமே மக்கள் பணத்தையும் நாட்டின் வளங்களையும் பகற்கொள்ளையடிப்பதுதான்!

எனவே, இன்றைய நிலையில் முதலாளித்துவ தேர்தல் முறையில் மக்கள் ஏதாவது ஒரு கோடீசுவரனைத்தான் எம்எல்ஏ ஆகவோ, எம்பி ஆகவோ தேர்ந்தெடுக்க முடியும். கோடீசுவரர்கள் தான் அமைச்சர்களாகவும் முதலமைச்சர்களாகவும் பிரதமர்களாகவும் இருப்பார்கள். இவர்களின் நோக்கம் செயல்பாடுகள் பற்றி மேலே பார்த்தோம். இப்படிப்பட்ட கோடீசுவரர்களால், கோடீசுவரர்களுக்காக நடத்தப்படும் ஆட்சி மக்கட்தொகையில் ஆகப் பெரும்பான்மையாக உள்ள உழைக்கும் மக்களுக்காக பாடுபடுவார்கள் என்பது நடக்கவே நடக்காது.

கார்ப்பரேட்டுகள் மீதான அரசு அதிகாரம் விலகுதல்   அரசின் மீதான கார்ப்பரேட் அதிகாரம் இறுகுதல்

ஆறாவதாக, ஏகாதிபத்திய மேல்நிலை வல்லரசுகளின் உலக மேலாதிக்கம் மற்றும் உலகமயமாக்கலின் கீழ் ஒரு புதியவகை காலனியாதிக்கம் அதாவது மறுகாலனியாக்கம் இந்தியா போன்ற பின்தங்கிய நாடுகளில் அமுல்படுத்தப்படுகிறது. தங்களது வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் தடையாகவுள்ள தேசிய அரசு, தேசங்களின் இறையாண்மை, அவற்றின் சட்டங்கள் ஆகியவற்றைத் தகர்ப்பதுடன், இத்தகைய தேசிய அரசுகளுடன் சேர்த்து கட்டியெழுப்பப்பட்டுள்ள முதலாளித்துவ ஜனநாயகத்தையும் தகர்த்து அரசமைப்பை முடக்கி அவற்றை தங்களின் (சர்வதேசியமாகியுள்ள ஏகாதிபத்திய நிதிமூலதனம் மற்றும் மேல்நிலை வல்லரசுகளின்) ஆணைக்கு ஆடும் கைப்பாவைகளாக மாற்றி உள்ளன. இவற்றின் கருவிகளான உலகவங்கி, சர்வதேச நாணய நிதியம், உலக வர்த்தகக் கழகம் ஆகியவைதான் இந்தியா போன்ற பின்தங்கிய நாடுகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாளித்துவ ஜனநாயக அரசாங்கங்களை கட்டுப்படுத்துகின்றன; ஆட்டுவிக்கின்றன.

“சந்தைக்கு எல்லாம் தெரியும்” என்ற புதிய தாராளவாத முழக்கத்தின் அடிப்படையில் சந்தையின் விதிகளே ஜனநாயகத்தின் விதிகளாகவும் மாற்றப்பட்டிருக்கின்றன. அரசுக்கும் குடிமக்களுக்கும் இடையிலான அரசியல் ரீதியான உறவை, முதலாளிக்கும், நுகர்வோனுக்கும் இடையிலான பொருளாதார உறவின் சட்டகத்தில் வைத்து, குடிமகனின் அரசியல் உரிமையை, நுகர்வோனின் பொருளாதார உரிமையாக மாற்றும் புதிய அரசியல் வரையறை உருவாக்கப்பட்டிருக்கிறது. வேலையின்மை, வறுமை, தற்கொலைகள் போன்ற அனைத்தும் பெருகி வருவதற்கு ஊழல், அயோக்கிய அரசியல்வாதிகள் தான் காரணம் என்றும், தகுதியான, நேர்மையான, நிர்வாக நுணுக்கங்கள் அறிந்த அதிகார வர்க்கத்தினரிடம் கொள்கை முடிவுகள் எடுக்கும் அதிகாரத்தைக் கொடுப்பதன் மூலமே இத்தகைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்றும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. அதிகார வர்க்கத்தின் கையில் முடிவெடுக்கும் அதிகாரங்களும் மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளன.

கழிவுநீர் அகற்றுதல், குப்பை வாருதல் தொடங்கி கல்வி, தொழில் வளர்ச்சி உள்ளிட்ட அரசின் நடவடிக்கைகள் மற்றும் பொதுத்துறையை சீரமைத்தல், தனியாருக்கு விற்றல் ஆகிய அனைத்து பிரச்சினைகள் தொடர்பான முடிவுகள் எடுக்கும் அதிகாரமும் ஏகாதிபத்திய நிறுவனங்கள் மற்றும் தரகு அதிகாரவர்க்க முதலாளித்துவ நிறுவனங்கள் சார்ந்த வல்லுனர்களிடம் விடப்படுகின்றன.

மேலும் ஜனநாயக அமைப்பிற்கு வெளியே இந்நிறுவனங்கள் இருப்பதால், தமது முறைகேடுகள் தொடர்பாக மக்களுக்கு சம்பிரதாயபூர்வமாக விளக்கத்தினைக் கூட இவை அளிப்பதில்லை. இந்நிறுவனங்கள் அளிக்கின்ற ஆய்வறிக்கைகள் நாடாளுமன்றத்திற்கும் மக்களுக்குமே இரகசியமாக்கப்பட்டு, அதிகார வர்க்கம், பன்னாட்டு நிறுவனங்கள், சர்வதேச நிதிநிறுவனங்கள் என்ற வட்டத்திற்குள்ளேயே புதைந்து விடுகின்றன. இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு பதிலளிக்கும் பொறுப்பிலிருந்து அதிகார வர்க்கத்தையும் மக்களுக்கு பதிலளிக்கும் பொறுப்பிலிருந்து மக்கள் பிரதிநிதிகள் எனப்படுவோரையும் விடுவித்து விடுவதன் மூலம் அம்மணமான கார்ப்பரேட் அதிகார வர்க்கத்தின் ஆட்சியே இன்று இந்தியாவில் நடந்து வருகின்றது. கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் மீது அரசு ஏற்கெனவே விதித்திருந்த கட்டுப்பாடுகள், ஒழுங்குமுறைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஜனநாயக அமைப்பின் அதிகாரத்திலிருந்து கார்ப்பரேட் முதலாளி வர்க்கம் விடுவிக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறு மக்கள் நலன் சார்ந்த துறைகளிலும், முதலாளி வர்க்கத்தை கண்காணித்து நெறிப்படுத்தும் துறைகளிலும் அரசு எந்திரம் வெட்டிக் குறைக்கப்படுகிறது. கார்ப்பரேட் முதலாளிகளின் புதிய தேவைகளை ஈடு செய்யும் திசையில் அதிகார வர்க்கமும் போலீசு இராணுவமும் மென்மேலும் பெருக்கப்படுகிறது. மேலும் பொதுத்துறை தொழில் நிறுவனங்கள் மற்றும் அரசு இலாக்காக்களிலும் மக்கள் நலன் சார்ந்த துறைகளிலும் ஆட்குறைப்பு மற்றும் அவுட்சோர்சிங் முதலான முறைகளைப் புகுத்தி அரசு நிர்வாகமும் தனியார்மயமாக்கப்பட்டு வருகின்றது. கார்ப்பரேட் முதலாளிகளும் ஏகாதிபத்திய தொண்டூழிய தன்னார்வ குழுக்களும் அரசின் இயற்கையான கூட்டாளிகள் என்று முன்வைக்கப்பட்டு, அவர்கள் அரசு எந்திரத்தின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டு வருகின்றனர்.

அரசு அதிகார நிறுவனங்களில் கார்ப்பரேட் முதலாளிகள் மற்றும் அரசு சாரா வல்லுனர்கள், தன்னார்வ குழுக்களின் இயக்குனர்கள் பங்கேற்கின்றனர். அரசுப் பணிகள் தனியாருக்கு அவுட்சோர்சிங் செய்யப்படுகின்றன. அரசுத்துறை தனியார்துறை கூட்டுத் திட்டங்கள் பெருகி வருகின்றன. பொதுத்துறை நிறுவனங்கள் படிப்படியாக தனியாருக்கு விற்கப்பட்டு வருகின்றன. முன்பு அரசு ஏகபோகமாக இருந்து வந்த தொலைபேசி, மின்சாரம் போன்ற துறைகளில் அத்துறைகளுக்குரிய அமைச்சரவைகளுக்கு வெளியே, அதற்கும் மேலே, சுயேச்சையான அதிகாரம் கொண்ட ‘ஒழுங்குமுறை ஆணையங்கள்’ உருவாக்கப்பட்டு, அதன்மூலம் அரசுத்துறைகளை திட்டமிட்டு நட்டப்படுத்தி, அப்புறம் அவற்றை ஒழிக்கும் சதித்திட்டங்களும் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன.

அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் போன்றோர் தனியார் முதலாளிகளுடன் தொடர்பு வைத்திருப்பது ஊழலுக்கு வழிவகுக்கும் என்றும் அத்தகைய உறவுகள் முறைகேடானவை என்றும் நடவடிக்கைக்கு உரியவை என்றும் ஏற்கெனவே கைக்கொள்ளப்பட்டு வந்து மரபுகள் கைவிடப்பட்டிருப்பது மட்டுமல்ல, பொருளாதாரக் கொள்கை முடிவுகள் எடுக்கும் முன் எஃப்ஐசிசிஐ, சிஐஐ போன்ற தரகு அதிகார வர்க்க முதலாளிகளின் சங்கங்களை அரசே அழைத்து கலந்தாலோசிக்கிறது. மக்கள் நலனையும் மக்கள் பிரதிநிதி களையும் புறந்தள்ளி விட்டு, சமூகத்தின் பிரதிநிதியாகவும் அரசு அதிகாரத்தின் அங்கமாகவும் பெரும் கார்ப்பரேட் முதலாளிகளின் வர்க்கத்தை நியமிக்கும் இந்த நடவடிக்கையை நியாயப்படுத்துவதற்காக ‘கார்ப்பரேட் சமூகப் பொறுப்புணர்ச்சி’ என்ற புதியதொரு கோட்பாடு புகுத்தப்பட்டுள்ளது.

“வேர்மட்ட ஜனநாயகம்” என்ற பெயரில் ஏகாதிபத்திய தொண்டூழிய தன்னார்வ குழுக்கள் அரசின் அங்கீகாரம் பெற்ற அதிகார மையங்களாக ஆக்கப்பட்டுள்ளன. ஏகாதிபத்தியங்களின் கண்களாகவும் காதுகளாகவும் விளங்கும் இந்த ஐந்தாம்படை அமைப்புகள், அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான பாலமாக மாற்றப்பட்டுள்ளன. மேலிருந்து கீழ் என்ற அதிகாரப்படிநிலை முறை நிராகரிக்கப்பட்டு, உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி ஆகிய சர்வதேச நிதிநிறுவனங்கள் மத்திய, மாநில அரசுகளைப் புறந்தள்ளி நகராட்சிகளையும் ஊராட்சிகளையும் நேரடியாக தொடர்பு கொண்டு திட்டங்களை அமுல் நடத்துகின்றன. அவற்றிற்கு எதிரான மக்களின் எதிர்ப்புகளை முனை  மழுங்கச் செய்கின்றன.

நீர்வள மேம்பாடு, சாலை போடுதல், கல்வி, காடுவள நிர்வாகம், உள்கட்டுமானப் பணிகள் போன்ற இதுகாறும் அரசின் பொறுப்பு, கடமை என்று கூறப்பட்டு வந்த துறைகள் பலவற்றிலும் தனியார்துறை புகுத்தப்பட்டுள்ளது. நேரடியாக பொதுநலனுடன் தொடர்புள்ள இந்தத் துறைகளிலெல்லாம் தனியார் புகுத்தப்படுவதால், பொதுச் சொத்துக்கள் கார்ப்பரேட் முதலாளி வர்க்க ஆளுகையின் கீழ் கொண்டு வரப்பட்டு மக்கள் இவற்றின் மீது எந்தவிதத்திலும் உரிமை கோர இயலாத நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர்.

மாறியுள்ள உலக நிலைமையில் தமது முழு ஆற்றலையும் வெளிக் கொண்டு வர வேண்டுமானால், அரசுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், ஆய்வுக்கூடங்கள், இன்னபிற அரசு சார் நிறுவனங்களை தன்னாட்சி கொண்ட அமைப்புகளாக மாற்ற வேண்டும் என்ற புதிய தாராளவாதத்தின் கோரிக்கையும் அமுலாக்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் இவற்றுக்கான அரசு மானியங்களை வெட்டுவது மட்டுமின்றி, நாட்டின் பொதுத்தேவையின் அடிப்படையில் வகுக்கப்படும் திட்டங்களுக்கு சேவை செய்வதாக இந்த அமைப்புகள் இருப்பதும் முடிவுக்குக் கொண்டு வரப்படுகின்றன. இந்த நிறுவனங்கள் அனைத்தும் இலாபமீட்டும் முதலாளித்துவ நிறுவனங்களைப் போலவே மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. பன்னாட்டு தரகு அதிகார வர்க்க முதலாளித்துவ நிறுவனங்கள் இவற்றை நேரடியாக தொடர்பு கொண்டு தம் தேவைக்கான ஆய்வுகளைச் செய்யும் ஆய்வுக் கூடங்களாகவும் தமக்கு தேவைப்படுகின்ற துறைகளிலான பட்டதாரிகளை உருவாக்கித் தரும் பட்டறைகளாகவும், தமது வர்த்தக முகவர்களாகவும் பரப்புரையாளர்களாகவும் இவற்றை மாற்றியமைத்துள்ளன.

சாராம்சமாக சொன்னால், மக்கள் நலனை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற, நிலைநாட்டுகின்ற அறுதி அதிகாரம் என்ற தகுதியிலிருந்து அரசு மெல்ல மெல்ல அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றது. தமது அடிப்படைத் தேவைகளையும் கவுரவமான வாழ்க்கையையும் பெற முடியாத குடிமக்களுக்கு அவற்றைக் கிடைக்கச் செய்ய வேண்டியது அரசின் பொறுப்பு என்பதை கருத்தளவில் கூட மறுகாலனியாதிக்க கொள்கைகள் ஏற்பதில்லை. மாறாக, குடிமக்கள் அனைவரையும் நுகர்வோராகவும், எனவே, தமக்கு தேவையான பொருட்கள் மற்றும் சேவைகளை விலைகொடுத்து வாங்கிக் கொள்ள கடமைப்பட்டவர்களாகவுமே அது கருதுகிறது. கல்வி, மருத்துவம், தண்ணீர் போன்ற அடிப்படைத் தேவைகளும் சாலைகள் முதலான சேவைகளும் வணிகப் பொருட்களாக மாற்றப்பட்டு விட்டன. இதனால் குடிமக்களின் பாலான தனது கடமைகளிலிருந்தும் அரசு படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றது.

சமூக ரீதியான தீர்வுகளைக் கோருகின்ற சிக்கல்களுக்கு சமூக ரீதியான தீர்வுகளை மறுத்து, தனிப்பட்ட தீர்வுகளை மக்களே தங்களது சொந்த பொறுப்பில் செய்து கொள்ளுமாறு மாற்றப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் பற்றாக்குறை போன்று சூழலியல் தோற்றுவிக்கும் பிரச்சினைகளுக்கு மழைநீர் சேமிப்புத் திட்டம், புவி சூடேறுதல் பிரச்சினைக்கு கார்பன் வர்த்தகம், விவசாயத்தின் நசிவால் பெருகியுள்ள கிராமப்புற வறுமை, கடன் சுமைக்கு மகளிர் சுயஉதவிக் குழுக்கள், அணைக்கட்டுகள் அல்லது சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் போன்றவற்றிற்காக கிராமம் கிராமமாக அப்புறப்படுத்தப்படும் மக்களுக்கு ஒரு சமூகம் என்ற வகையில் மறுவாழ்வு வழங்குவதற்கு பதிலாக அவர்களுக்கு தனிப்பட்ட ஈட்டுத்தொகை வழங்குதல் என எல்லாப் பிரச்சினைகளிலும் தனிப்பட்ட தீர்வுகளை முன்வைப்பதன் மூலம் ஒரு சமூகம் என்ற வகையில் அரசியல் ரீதியாக சிந்திக்கவும் திரளவும் விடாமல் மக்களின் சிந்தனையையே மறுகாலனியாதிக்க கொள்கைகள் விலங்கிட்டு வைத்துள்ளன.

அதற்கேற்ப இவ்வாறு மறுகாலனியாதிக்க முறையிலான சுரண்டல் ஆதிக்கத்தின் கீழ், இந்திய அரசின் கட்டுமானம், அதன் பாத்திரம், செயலாற்றும் முறைகள், சட்டங்கள், விதிமுறைகள் எல்லாம் மாற்றப்பட்டு கார்ப்பரேட் முதலாளிகள் பகற்கொள்ளைக்கான ஒரு கருவியாக வெளிப்படையாகவே பறைசாற்றிக் கொள்ளும் அரசாக, சோசலிசம், காந்தியம், சமூகநீதி போன்ற பாசாங்குகள் எதுவும் இல்லாமல், நிலையான ஆட்சியை நிலைநாட்டும் வலுவான அரசாங்கம் என்ற இலச்சினை பொறித்த அரசாக மாற்றப்பட்டு விட்டது.

மறுகாலனியாக்கத்துக்கு ஏற்ப   மாற்றியமைக்கப்படும் அரசுக் கட்டமைப்பு:

தனியார்மயம்  தாராளமயம்  உலகமயம் என்ற புதிய தாராளவாத கட்டுமான சீர்திருத்தங்கள் புகுத்தப்பட்ட 1991-ம் ஆண்டிலிருந்து  சரியாக சொன்னால் மேல்நிலை வல்லரசுகளின் உலக மேலாதிக்கத்திற்கான, சர்வதேசியமயமாகி பிரம்மாண்டமாகப் பெருகிவிட்ட நிதிமூலதனம் மற்றும் தேசங்கடந்த தொழில் கழகங்கள் மற்றும் அவர்களின் அடிவருடிகளான இந்தியப் பெருமுதலாளிகளான தரகு அதிகாரவர்க்க முதலாளிகள் ஆகியோரின் தடையற்ற சுரண்டலுக்கான, நமது பணம், நமது உழைப்புச் சக்தி, அரசு சொத்துக்கள், நாட்டின் இயற்கை வளங்கள் ஆகியவற்றை பகற்கொள்ளையடிப்பதற்கான இந்த மறுகாலனியாதிக்க கொள்கைகளும் திட்டங்களும் புகுத்தப்பட்ட 1991-ம் ஆண்டிலிருந்து  கடந்த இருபது ஆண்டு களில், இவைகளின் இந்த நோக்கங்களை அடிபணிந்து அப்படியே நிறைவேற்றும் வகையில் அரசு, அரசியல் கட்சிகள், தேர்தல் ஆகியவைகளின் பாத்திரம், கட்டமைப்பு, செயல்படும் முறைகள் ஆகியவையெல்லாம் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன.

மறுகாலனியாதிக்க கொள்கைகள் புகுத்தப்படுவதற்கு முன்பு, அன்னிய மூலதனத்தின் மீதான தேசிய அரசுகளின் அதிகாரம் கேள்விக்கிடமற்றது என்றும், இந்த அதிகாரம் தேசிய இறையாண்மையின் பிரிக்கவொண்ணாத அங்கம் என்று சொல்லப்பட்டது. நடைமுறையில் இது முழு அளவில் இல்லை; நவீன காலனிய கொள்கைகளுக்கு ஏற்ப அரைகுறையாகவே இருந்தது. இந்த அதிகாரத்தின் அடிப்படையில்தான் ஏகாதிபத்திய நிறுவனங்களின் சொத்துடமைகளை முன்பு இந்திய அரசு நாட்டுடைமை ஆக்கியது. ஏகாதிபத்திய தொழில் நிறுவனங்கள் உள்நாட்டு தொழில்களை அழிக்கின்ற வகையிலான முறைகேடான வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும், உள்நாட்டு அரசியலில் தலையிடுவதையும் தடுக்க தனிச்சிறப்பான சட்டங்களை இயற்றியது. (அன்னிய செலாவணியை நெறிப்படுத்தும் சட்டம், ஏகபோக கட்டுப்பாடு வர்த்தக நடவடிக்கைகள் சட்டம் போன்றவை இதற்கு எடுத்துக்காட்டுகள்)

ஆனால், இன்று மறுகாலனியாதிக்க கொள்கைகள் புகுத்தப்பட்டதிலிருந்து அதன் தேவைக்கேற்ப அரசின் கட்டுமானமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. நிதி தாராளமயமாக்கல் மற்றும் மூலதனக் கணக்கு தாராளமயமாக்கல் என்ற ‘சீர்திருத்தங்கள்’ மூலம் சர்வதேச நிதிமூலதனத்தின் ஆணைக்கு மட்டும் சேவை செய்யும் பணிப்பெண்ணாக அரசின் பாத்திரமும் சட்டதிட்டங்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. தேசங்  கடந்த தொழிற்கழகங்கள் எப்படியெல்லாம் விரும்புகிறார்களோ அப்படியெல்லாம் நமது நாட்டின் இயற்கை வளங்களையும், அரசு சொத்துக்களையும் மக்களின் உழைப்புச் சக்தியையும், பொதுத்துறையையும் பகற்கொள்ளையடிப்பதற்கான கருவியாக, ஆயுதமாக அரசின் கட்டுமானமும் சட்டதிட்டங்களும் மாற்றப்பட்டு வருகின்றன. அமெரிக்க மேல்நிலை வல்லரசின் உலகமேலாதிக்கத்திற்கு அடியாளாக செயல்படும் வகையில் இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையும் இராணுவத்தின் பாத்திரமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

எனவே, நாம் வழக்கமாக சொல்லும் முதலாளித்துவ போலி ஜனநாயக வகைப்பட்ட அரசு, அரசியல் கட்சிகள், தேர்தல் முறைகள் ஆகியவற்றின் பாத்திரம், கட்டமைப்பு, செயல்பாடுகள் எல்லாம் மறுகாலனியாதிக்க காலகட்டத்தில் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. தேசிய அரசுகள், தேசிய இறையாண்மை கொண்ட அரசுகள் என்பவையெல்லாம் தகர்க்கப்பட்டு, உலக வர்த்தகக் கழகத்தின் ஆட்சியை அமல்படுத்தும் கருவியாகவே இந்திய அரசு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. காலனியாதிக்க எதிர்ப்புக் கட்டத்தின் மிச்ச சொச்சங்களாகவும், வளர்முக நாடான இந்தியாவின் அரைகுறை இறையாண்மையானது சர்வதேச நிதி மூலதனத்திற்கு அன்று உருவாக்கி வைத்திருந்த தடைக்கற்களாகவும் இருந்த விதிமுறைகள், சட்டங்கள் ஆகியவை தகர்க்கப்பட்டு, அந்த இடத்தில் புதிய விதிமுறைகள் சட்டதிட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. உலக மேலாதிக்க அரசாக உருவாக்கப்பட்டிருக்கும் உலக வர்த்தகக் கழகத்தின் கைப்பாவையாக, இந்திய அரசின் கட்டமைப்பு மாற்றப்பட்டு வருகின்றது. தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கம் பெரும்பான்மை மக்களின் அரசியல் கோரிக்கைகள் மற்றும் பொருளாதாரத் தேவைகள் தொடர்பான சட்டங்களை இயற்றவோ திட்டங்களைத் தீட்டவோ இல்லாமல், சர்வதேச நிதிமூலதனத்தின் ஆணைக்கு ஆடுவதாகவே அரசு மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது.

பழைய உள்ளடக்கத்தையும்கூட இழந்துவரும் போலி ஜனநாயகம்!

மறுகாலனியாதிக்கத்தின் விளைவாக, இறையாண்மையை முற்றிலுமாக இழந்து வருகின்ற இந்தியாவில், பழைய முறையிலான முதலாளித்துவ போலி ஜனநாயகமே கூட தனது உள்ளடக்கத்தை முற்றிலுமாக இழந்து வருகின்றது. அனைத்து மக்களுக்கு வாக்குரிமை என்பது மட்டுமே ஜனநாயகத்திற்கான அளவுகோலாக மாற்றப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கங்கள் வழியே தனியார்மய  தாராளமய கொள்கைகளை நிறைவேற்றிக் கொள்ள சட்டபூர்வமாக நியாயம் தேடிக் கொள்ளவே ஆளும் வர்க்கங்கள் தேர்தல்களை இன்று நடத்துகின்றன.

முதலாளித்துவ போலி ஜனநாயகத்தின் வர்க்க சாராம்சம் வர்க்க உள்ளடக்கம் மாறாமல் இருக்கும்போதே (அதில் கூட தேசங்கடந்த தொழில்கழக முதலாளிகள் மற்றும் சர்வதேச நிதிமூலதன கும்பல்கள் மற்றும் அவர்களின் இளைய பங்காளிகளாக உள்ள தேசங்கடந்த தரகு அதிகார வர்க்க முதலாளிகளின் பலம் அதிகமாக உள்ளதுடன் அவர்கள்  ஆதிக்கத்திலும் உள்ளனர். நிலப்பிரபுக்களின் எண்ணிக்கையும் பலமும் பங்கும் மிகக் குறைந்ததாகவே மாறிவிட்டது) அரசு எந்திரம், அரசாங்கம், அரசியல் கட்சிகள் ஆகியவைகளின் கட்டுமானம், பாத்திரம், பணிகள், சட்டதிட்டங்கள் எல்லாம் மாற்றப்பட்டு அதற்கேற்ப ‘ஜனநாயக தேர்தலின்’ நோக்கமும் அதில் மக்களின் பாத்திரமும் வெட்டி சுருக்கப்பட்டு மாற்றப்பட்டுள்ளன.

எனவே, எந்தக் கட்சி அல்லது கூட்டணி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தாலும் இந்த அரசை மறுகாலனிய சுரண்டலுக்கும் ஆதிக்கத்திற்கும்தான் பயன்படுத்த முடியும். வேறு எந்த வகையிலும் பயன்படுத்த முடியாத வகையிலும், அத்தகைய தன்மையிலும்தான் கட்டப்பட்டிருக்கின்றது. மறுகாலனியாதிக்கம் என்ற சட்டகத்திற்குள் நின்று கொண்டு சில சீர்திருத்தங்கள் செய்யலாம்; மக்களுக்கு சில சலுகைகள், மானியங்கள், இலவசங்கள் வழங்கலாம்; முற்றாக, எதிரான கொள்கைகளை அமுல்படுத்த முடியாது. அமுல்படுத்த முயற்சிப்போர் தூக்கியெறியப்படுவார்கள்;

நாடாளுமன்ற ஜனநாயகம் என்ற வேலிக்கு வெளியே நிற்கின்ற நக்சல்பாரி புரட்சியாளர்களால் மட்டும் இந்த அரசு எந்திரத்தை தகர்த்தெறிந்து, மறுகாலனியாதிக்கத்தை தூக்கியெறிந்து நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் உண்மையாக சேவை செய்கிற ஒரு புதிய அரசமைப்பை, புதிய ஜனநாயக அரசமைப்பை உருவாக்க முடியும். ஆகையால் வாக்களிக்கும் உரிமை என்பது ஆகமிகக் கொடூரமான மறுகாலனியாதிக்க வடிவிலான ஆதிக்கத்தையும் சுரண்டலையும் மக்கள் மீது திணித்து அமுல்நடத்த, எந்தக் கட்சி அல்லது கூட்டணிக்கு அதிகாரம் கொடுக்கலாம் என்பதைத் தீர்மானிப்பதற்கான உரிமை மட்டுமே.

தேர்தல் அரசியல் என்பது காந்தியம், சோசலிசம், தாராளவாதம், சமூகநீதி என்று வெவ்வேறு கொள்கை பேசும் கட்சிகளுக்கிடையிலான மோதலாக இனிமேலும் இல்லாமல் போய்விட்டதால், சில நட்சத்திர தலைவர்களுக்கிடையிலான போட்டியாகவும், கட்சிகளுக்கிடையிலான விளம்பர போராகவும், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் போன்ற நட்சத்திரங்களால் விளம்பரப்படுத்தப்படும் சந்தைப் பொருளாகவும் விலைக்கு வாங்கப்படும் பண்டமாகவும் ஓட்டுச்சீட்டு அரசியல் மாற்றப்பட்டு விட்டது.

மறுகாலனியாக்கத்துக்கு நியாயம் தேட மட்டுமே தேர்தல்!

இன்று எல்லா முதலாளித்துவ அரசியல் கட்சிகளும், சீர்திருத்தவாத, போலி கம்யூனிச, போலி புரட்சிகர கட்சிகள் அனைத்தும் நேரடியாகவோ, சுற்றி வளைத்தோ மறுகாலனியாக்கத்திற்கு சேவை செய்கின்ற கட்சிகளாகவே மாறிவிட்டன; கொள்கைகள், இலட்சியங்கள், நோக்கங்கள் என்று எதுவும் இக்கட்சிகளுக்கு கிடையாது. கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்கு அடியாளாக வேலை செய்யும் ‘எஸ் பாஸ்’ ஆட்களாக மாறிவிட்டன.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இன்னின்ன கொள்கைகள்,வளர்ச்சித் திட்டங்களை அமுல்படுத்துவோம்; இவ்வாறு வேலையின்மையைப் போக்குவோம்; விலைவாசியைக் குறைக்க இன்னின்ன நடவடிக்கைகள் எடுப்போம் என்று நாட்டுநலன், மக்கள் நலனை முன்னிறுத்துகின்ற கொள்கைகளோ வளர்ச்சித்திட்டங்களோ பொருளாதார திட்டங்களோ எதுவும் இக்கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் இல்லை; தப்பித் தவறி சிலவற்றை அவர்கள் குறிப்பிட்டாலும், அதெல்லாம் ‘வாக்காளர்களைக் கவர வேண்டும், மற்றபடி செய்யப்போவதில்லை’ என்று முடிவெடுத்துக் கொண்டு தான் குறிப்பிடுகிறார்கள்.

“சும்மா ஒரு சம்பிரதாயத்திற்குத்தான் தேர்தல் அறிக்கைகளை வெளியிடுகிறோம்; யார் இதைப் படித்து நினைவில் வைத்துக் கொண்டு கேட்கப் போகிறார்கள். அப்படியே கேட்டாலும் சமயத்திற்கு தகுந்த ஒரு சாமர்த்தியமான பதிலை சொல்லிக் கொள்ளலாம்’” என்று உள்மனதில் கருதிக் கொண்டுதான் தேர்தல் அறிக்கைகளை வெளியிடுகிறார்கள். ஒரே கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் வேறுபட்ட இலவசங்கள், முரண்பட்ட வாக்குறுதிகள் கொண்ட தேர்தல் அறிக்கைகள் இதைத்தான் காட்டுகின்றன. மேலும் எப்படி மாற்றி பித்தலாட்டம் செய்தாலும் ஒன்றும் ஆகிவிடாது; நமக்கு ஓட்டு கிடைக்கும் அந்த அளவுக்கு மக்கள் இளிச்சவாயர்கள், ஏமாளிகள் என்று மக்களை மிகவும் மலிவாக, இழிவாக அற்பர்களாகவே இவர்கள் கருதுகிறார்கள்.

நமது வரிப்பணம், அரசு சொத்துகள், நாட்டின் இயற்கை வளங்கள், பொதுத்துறைகள், மக்களின் உழைப்பாற்றல் ஆகியவற்றை கார்ப்பரேட் முதலாளிகள் பகற்கொள்ளையடிக்கவும் இவர்கள் இலாப வேட்டைக்காக விவசாயிகள், சிறு உற்பத்தியாளர்கள், சிறு வணிகர்கள், குட்டி முதலாளிகள், ஆதிவாசிகள் ஆகியவர்களிடமிருந்து உற்பத்திச் சாதனங்கள் மற்றும் வாழ்வாதாரங்களை பலாத்காரமாக பறித்துக் கொண்டு, அவர்களை நகர்ப்புற உழைப்புச் சந்தைகளை நோக்கி விசிறியடிப்பதிலும், அங்கு இந்த கார்ப்பரேட் முதலாளிகள் அவர்களை கொடூரமாக சுரண்டிக் கொள்ளை இலாபமடிக்கவும் கொள்கை முடிவெடுத்து, சட்டபூர்வமாக அரசு எந்திரத்தை ஒரு கருவியாக பயன்படுத்தி சேவை செய்யும் கொள்கையில் மட்டும் எல்லாக் கட்சிகளும் ஓரணியில் நிற்கின்றனர். கார்ப்பரேட் முதலாளிகள்தான் ஊழலுக்கான ஊற்றுக்கண் என்ற உண்மையும் ஊழலை விட பகற்கொள்ளையில் இவர்கள் அடிக்கும் பணம் பன்மடங்கு அதிகம் என்ற உண்மையையும் வெளியில் சொல்லாதிருப்பதிலும் இவர்கள் ஓரணியில் இருக்கின்றனர். இந்த சேவையை யார் சிறப்பாக செய்வது என்று போட்டி போட்டுக் கொள்கின்றனர்.

கார்ப்பரேட் முதலாளிகள் பகற்கொள்ளையடிக்க சேவை செய்து அதற்கு சேவைக் கட்டணமாக (அதாவது இலஞ்சமாக) ஒரு கவளத்தை (யானைக்கு கவளம் கவளமாக, அதாவது பெரிய பெரிய உருண்டையாகத்தான் உணவளிப்பார்கள். அதில் ஒரு கவளத்தை எடுத்துப் போட்டால் பல்லாயிரக்கணக்கான எறும்புகளுக்கு தீனியாகும் என்பார்கள்) தாங்கள் எடுத்துக் கொண்டு கொழுக்கலாம் என்பதற்காக மட்டுமே தேர்தலில் நிற்கிறார்கள்; இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை விவகாரத்தில் கார்ப்பரேட் யானைகளின் வயிற்றுக்குள் போன பல கவளங்கள் போக ஒரு கவளத்தைத்தான் கருணாநிதி, ராஜாத்தி அம்மாள், தயாளு அம்மாள், கனிமொழி, அ.ராசா, சோனியா குடும்பத்தினர் ஆகியோர் பங்கிட்டுக் கொண்டனர். கார்ப்பரேட் முதலாளிகளுக்கிடையிலான போட்டி காரணமாகவோ, கட்சித் தலைவர்களின் குடும்ப சண்டை, கோஷ்டி சண்டை காரணமாகவோ இந்த இலஞ்சம் அம்பலமானால், அதைப் பயன்படுத்தி, வாய்ப்பிழந்த எதிர்கட்சி கூப்பாடு போடுவதும், பின்னர் இந்த இலஞ்சம் முறைகேடுகளை சொல்லி, அடுத்த தேர்தலில் பதவிக்கு வந்து “காஞ்ச மாடு கம்பங் கொல்லையில் புகுந்த மாதிரி” பதவியிலிருந்த கட்சிக்காரர்களை விட பன்மடங்கு சம்பாதிப்பதும், அதற்கடுத்த தேர்தலில், பழைய கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்து இவர்களை விட பன்மடங்கு கூடுதலாக கொள்ளையடிப்பதும் என மாற்றி மாற்றி கோடீசுவர அயோக்கியன்கள் கொள்ளையடிப்பதற்கான சாதனமாகவே தேர்தல் இருக்கின்றது. எனவே, ஓட்டளிப்பது, வாக்குரிமை என்பது நமது பணத்தை கோடி கோடியாக சுருட்டிக் கொள்ள எந்த கோடீசுவர அயோக்கியனை தேர்ந்தெடுப்பது எந்த கபட வஞ்சகனை முதல்வராக்குவது என்பதற்கான உரிமை மட்டுமே.

முதலாளிகளாகும் அரசியல்வாதிகள்..      அரசியல்வாதிகளாகும் முதலாளிகள்!

சட்டமன்ற தேர்தலுக்காக ஒரு தொகுதியில் குறைந்தது ஐந்து கோடி ரூபாய்கள் செலவு செய்ய தயாராக இருக்கின்றவனை மட்டும்தான் எல்லாக் கட்சிகளும் வேட்பாளராக நிறுத்துகின்றன. எழுதப்படாத ஒரு விதியாகவே இது செயல்படுத்தப்படுகின்றது. ஒரு தேர்தலுக்கு ஐந்து கோடி ரூபாய் செலவு செய்யும் தகுதியுள்ள கோடீசுவரன் யோக்கியனாக இருக்க முடியாது என்பதும் யோக்கியன் எவனும் இப்படிப்பட்ட கோடீசுவரர்களாக முடியாது என்பதும் எல்லோருக்கும் தெரிந்த ஓர் உண்மை. அவன் ஐந்துகோடியை முதலீடு செய்வதே சில பத்து கோடி ரூபாய்களை கொள்ளையடிக்கலாம் என்பதற்காகத்தான்.

மேலும் ஏற்கெனவே ஓரிடத்தில் குறிப்பிட்டபடி, முதலாளிகளே அரசியல்வாதிகளாகவும் அரசியல்வாதிகளே முதலாளிகளாகவும் மாறி, இணைந்து ஒரு ஒட்டுரக முதலாளித்துவ பிரிவு உருவாகியுள்ளது. எனவே, இவர்களைப் பொருத்தவரையில் தனியார்மயம்  தாராளமயம் என்ற மறுகாலனியாதிக்க கொள்கைகள் ஓர் அரசியல் கொள்கையாக அன்றி, சொந்தக் கொள்கையாகவே ஆகியுள்ளது. தரகு அதிகார வர்க்க முதலாளிகளான பஜாஜ், மல்லையா, அனில் அம்பானி ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமனம் பெற்றிருக்கிறார்கள். கருணாநிதி போன்றோரின் குடும்பம் ஒரு தரகு அதிகார முதலாளித்துவ குடும்பமாக மாறியுள்ளது போன்றவை சில எடுத்துக் காட்டுகள்; இன்று இவர்களின் வாரிசுகள் அரசியலில் பெருமளவு நுழைந்துள்ளனர்.

பல்வேறு தொழில், சேவைத்துறைகளை கண்காணிக்கவும் நெறிப்படுத்தவும் அமைக்கப்படுகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் இந்த முதலாளிகளே இடம் பெறுகின்றனர். எடுத்துக்காட்டாக, கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் என்ற தனியார் விமானக் கம்பெனியின் முதலாளி விஜய் மல்லையா சிவில் விமான போக்குவரத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களில் ஒருவர். தகவல் ஒலிபரப்பு துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவில் லோக்மத் பத்திரிகை குழுமத்தின் முதலாளி விஜய் தொரிதா ஓர் உறுப்பினர். தரகு அதிகாரவர்க்க முதலாளிகள் பலரின் கம்பெனி விவகாரங்கள் தொடர்பான ஆலோசகராகவும் வழக்குரைஞராகவும் செயல்பட்ட சிதம்பரம்தான் பின்னர் நிதியமைச்சராக நியமனம் பெற்றார்.

எனவே, வறுமைக் கோட்டிற்கு கீழே வாழுகின்ற மக்களையும், தற்கொலைக்குத் தள்ளப்படும்  விவசாயிகளையும் இன்னும் பிற உழைக்கும் மக்களையும்,  234 எம்எல்ஏக்களும் கோடீசுவரர்களாக இருக்கும் சட்டமன்றமும் அமைச்சரவையும் வாழ வைக்கும் என்று நம்பி ஓட்டு போடுவது மிகப் பெரிய ஏமாளித்தனம்! இதனை  உரிமை என்று சொல்வது ஆக மிகப் பெரிய பித்தலாட்டம்!

அரசியலிலிருந்து மக்களை விலக்கும் மறுகாலனியாக்கம்   அதனை அமலாக்கும் தேர்தல் ஆணையம்!

அடுத்ததாக, அதிகார வர்க்கத்தில் பன்னாட்டுக் கம்பெனிகளான அதிகாரிகளும், சட்டமன்றம், நாடாளுமன்றங்களின் தரகு அதிகார வர்க்க முதலாளிகளும் நேரடியாக பங்கேற்கும் அளவிற்கு மாற்றப்பட்டிருக்கும் இந்த அமைப்பு முறை மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடாமல் தடுப்பதற்குத்தான் தேர்தல் ஆணையமும் களத்தில் இறக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் விதித்திருக்கும் கடுமையான மாதிரி நன்னடத்தை விதிகளும் அவற்றை அமுலாக்க அது எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகளும் ஓட்டுக் கட்சிகள் செய்யும் தில்லுமுல்லுகளையெல்லாம் கண்டுபிடித்து தடுத்து தேர்தலை நேர்மையாக நடத்தும் என்ற பிரமையை மக்களிடையே உருவாக்குவதற்கான ஏமாற்று வித்தைகளே! தேர்தல் ஆணையத்தின் இந்த கெடுபிடி நடவடிக்கைகளின் இன்னொரு நோக்கம் உழைக்கும் மக்களை தேர்தல் நடைமுறையிலிருந்து விலக்கி வைப்பதுதான்! ஓட்டுப் போடுவது தவிர அவர்களுக்கு வேறு எந்த பாத்திரமும் இல்லாமல் செய்வதுதான்! ஏனென்றால், மறுகாலனியாதிக்க சித்தாந்தப்படி மக்களை அரசியலிலிருந்தே விலக்கி வைக்கவேண்டும்; மார்க்சியம், காந்தியம் தேசியம் போன்ற எந்த இசங்களிலும் அறநெறிகள், சமூக மதிப்பீடுகள் எதிலும் நம்பிக்கையோ, மதிப்போ, அக்கறையோ அற்றவர்களாகவும் அவற்றை பிற்போக்கானதாகவும் பத்தாம்பசலித்தனமாகவும் கருதி முகம் சுளித்து ஒதுக்கித் தள்ளுபவர்களாகவும் மாற்ற வேண்டும்.

மறுகாலனிய சித்தாந்தம், அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவில் அரசியல் குடிமகன் என்ற அம்சத்தையே ஒழித்துவிட்டு, குடிமக்களை வெறும் நுகர்வோராக மட்டுமே கருதி நடத்துகிறது. இதற்கேற்பவே அரசும் அரசியலும் மாற்றப்பட்டுள்ளது. “குடிமகனான உனது பணி ஒழுங்காக வேலைக்கு போவது; கடுமையாக உழைத்து பணம் ஈட்டுவது; அதை வைத்துக் கொண்டு வகைவகையான நுகர்பொருட்கள், புதிதுபுதிதாக நவீனமாக வந்து கொண்டிருக்கும் செல்போன் போன்ற நுகர்பொருட்களை வாங்கி அனுபவி; விதவிதமான உணவுப் பொருட்களையும் நொறுக்குத் தீனிகளையம் வாங்கி ருசித்து இன்புறு; மலிவான கிடைக்கும் டிவிடிக்களை வாங்கி வந்து கிளுகிளுப்பூட்டும் திரைப்படங்களைப் பார்; பாடல்களை ரசித்துக் கேள்; கிரிக்கெட் பார், நன்றாக தண்ணி போட்டு ஜாலியாக இரு. கும்பலாக சுற்றுலா சென்று அனுபவி; திருவிழா கொண்டாடு; சமூக சேவை, அரசியல் என்று போய் இவ்வளவையும் இழக்காதே; இளமையை வாழ்க்கையை வீணடிக்காதே’ என்று தான் மறுகாலனிய சித்தாந்தம் கற்பிக்கின்றது. இத்துடன் முதலாளித்துவ ஜனநாயகத்தின் சீரழிவையும் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, “அரசியல் ஒரு சாக்கடை; அந்தப் பக்கம் போகாதே” என்றும் பரப்புரை செய்கிறது.

பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களிலிருந்து அறநெறிகளை கற்பிக்கும் பாடங்கள் நீக்கப் பட்டிருக்கின்றன. மாற்றாக நடனம், யோகா, தற்காப்பு கலைகள் ஆகியவற்றைக் கற்றுக் கொடுப்பதுடன், சுயமுன்னேற்றக் கண்ணோட்டத்தில் ‘படித்து வேலைக்கு போகவேண்டும்; நன்றாக சம்பாதிக்க வேண்டும்; அதற்கு எந்தவித முறையையும் கையாளலாம். வாழ்க்கையை வகைவகையாக அனுபவிக்க வேண்டும்’ என்ற மனோபாவத்தையும், சுயநல போட்டி மனப்பான்மையையும் உருவாக்குவதன் மூலம் மாணவப் பருவத்திலேயே வளரும் தலைமுறையினர் அரசியல் பக்கம் தலைகாட்டாமல் தடுக்கப்படுகிறார்கள். இதற்கேற்ப பள்ளி, கல்லூரிகளில் மாணவர் பேரவைத் தேர்தல்கள் தடைச் செய்யப்படுகின்றன.

வளர்ச்சித் திட்டங்கள், சமூக நலத்திட்டங்களில் ஊராட்சி, நகராட்சி தலைவர்கள், தன்னார்வ குழுக்கள், மகளிர் சுயநிதி உதவிக் குழுக்கள் ஆகியோரை பங்கேற்க வைப்பது; குளங்கள், ஏரிகள், ஆறுகள், காடுகள் போன்ற இயற்கை வளங்களை பராமரிப்பது பயன்படுத்துவதற்கான சுயேச்சையான அதிகாரம் கொண்ட குழுக்களில் மக்களில் சில முக்கியமானவர்களையும் மேலே சொன்னவர்களையும் பங்கேற்க வைப்பது இதன் போக்கில் மாவட்ட ஆட்சியர், போலீசு அதிகாரிகள் ஆகியோருடன் கலந்தாலோசிக்க வைப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம், தங்கள் மூலம்தான் அரசாங்கம் நடத்தப்படுகின்றது என்ற எண்ணத்தை  வேர்மட்ட அளவில் ஏற்படுத்தி, அவர்களை அரசியல் பக்கம் போகாமல் தடுக்கும் உலகவங்கி திட்டமும் அமுல்படுத்தப்படுகின்றது.

ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்த தடை, நடத்த அனுமதித்தாலும் ஆள்நடமாட்டம் அதிகம் இல்லாத இரண்டு, மூன்று இடங்கள் தவிர பிற இடங்களில் நடத்த அனுமதி மறுக்கப்படுவது, பேரணிகள், நடத்த, சுவரொட்டிகள் ஒட்ட தடை போடப்படுகிறது. புதுப்புது அடக்குமுறை சட்டங்கள் கொண்டு வரப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இவை எல்லாவற்றின் நோக்கமும் ஒன்றுதான்; ஆகப் பெரும்பான்மையாக உள்ள உழைக்கும் மக்கள் அரசியலையே வெறுத்து ஒதுக்க வேண்டும்; அரசியலில் ஈடுபாடு கொள்ளக்கூடாது. அவர்களின் ஒரே அரசியல் நடவடிக்கை தேர்தல் வரும்போது ஓட்டுப் போடுவது மட்டுமே. இவ்வாறு அவர்களை அரசியலிலிருந்து விலக்கி வைப்பது, அரசியல் தீண்டாமையை அவர்கள் மீது ஏவி விடுவது என்பதுதான் மறுகாலனியாதிக்க காலகட்டத்தின் நடைமுறையாகும். இந்த நோக்கத்தை நிறைவேற்றத்தான் தேர்தல் ஆணையம் இம்சை அரசனைப் போல் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றது.

தொகுப்பாக,

இதுவரையில் நாம் விவரித்ததை தொகுத்து சாராம்சமாக சொன்னால், தனது ஆதிக்கத்திற்கும் பெருக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் தடையாகவுள்ள ‘தேசிய’ அரசு, தேசங்களின் ‘இறையாண்மை’, அவற்றின் சட்டங்கள் ஆகியவற்றைத் தகர்ப்பதுடன், இத்தகைய தேசிய அரசுகளுடன் சேர்த்து கட்டியெழுப்பப்பட்ட முதலாளித்துவ ஜனநாயகத்தையும் தகர்த்து நொறுக்கி வருகின்றது சர்வதேசியமயமாகிவிட்ட ஏகாதிபத்திய நிதிமூலதனம்.  மேல்நிலை வல்லரசுகளின் வெளிப்படையான தலையீடுகள்  ஆக்கிரமிப்புகள் ஆகியவை ஒருபுறமிருக்க, உலகப் பொருளாதாரத்தை நிர்வகிப்பதற்கான சர்வதேச நிறுவனங்கள் என்றழைக்கப்படும் உலக வர்த்தகக் கழகம், உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற அமைப்புகளின் ஆணைகளுக்கு ஆடும் அரசாகவே இந்திய அரசும் அதன் சட்டமன்றங்கள் நாடாளுமன்றங்களும் மாற்றப்பட்டுள்ளன.

மேல்நிலை வல்லரசுகள் மற்றும் ஏகாதிபத்தியங்களின் அதிகார வர்க்கங்களாலும் தேசங்கடந்த மற்றும் பன்னாட்டு தொழிற்கழங்களின் நிர்வாகிகளிலும் சர்வதேச நிதிமூலதன கும்பல்களாலும் முதலாளித்துவ வல்லுனர்களாலும் நிரப்பப்பட்டுள்ள இந்த நிறுவனங்கள்தான் (எந்த மக்களாலும் இவை தேர்ந்தெடுக்கப்படுவதில்லை) உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று பெரிதும் பீற்றிக் கொள்ளப்படும் இந்திய ஜனநாயகத்தை, அதன் அரசை, கட்டுப்படுத்துகின்றன, ஆட்டுவிக்கின்றன.

மறுகாலனிய சுரண்டலுக்கும் ஆதிக்கத்திற்கும் ஆட்படுத்தப்பட்டுள்ள இந்தியாவின் பொருளாதாரம் எப்படி பன்னாட்டு தொழிற்கழகங்கள் மற்றும் சர்வதேச நிதிமூலதனத்தின் நலனுக்கேற்ப தனியார்மயம் தாராளமயம், உலகமயத்துக்கு உட்படுத்தப் பட்டுள்ளதோ, அதேபோல இவைகளின் நலன்களுக்காகவும் அமெரிக்க மேல்நிலை வல்லரசின் உலக மேலாதிக்கத்திற்காகவும் தனியார்மய, தாராளமய, உலகமயக் கொள்கைகள் அரசுக் கட்டமைப்புக்குள்ளும் புகுத்தப்படுகின்றன. அதன் கட்டுமானம், சட்டங்கள், விதிமுறைகள், பணிகள், செயல்பாடுகள் எல்லாம் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு ‘ஜனநாயக’ அரசமைப்பின் கட்டுமானங்களிலும் அதன் நடைமுறைகளிலும் முதலாளித்துவ சந்தையின் விதிகள் புகுத்தப்பட்டு அவை மறுசீரமைக்கப்பட்டுள்ளன. இதனால் முதலாளித்துவ சந்தையின் விதிகளே ஜனநாயகத்தின் விதிகளாகவும் மாற்றப்பட்டு வருகின்றன.

அரைகுறை இறையாண்மையையும் இழந்து வருகின்ற இந்தியாவில் நிலவுகின்ற  அல்லது மாற்றி உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிற  போலி ஜனநாயகம் கூட அதன் உள்ளடக்கத்தை முற்றிலுமாக இழந்து வருகின்றது. ஏற்கெனவே குறிப்பிட்டபடி, மக்களைப் பொருத்தவரை ஜனநாயகம் என்பது ஓட்டளிப்பதாக மட்டும் வெட்டி குறுக்கப்பட்டு விட்டது. அதுவும் கூட, ‘தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கங்கள் நாட்டு நலன், மக்கள் நலன் கருதி, விருப்பப்பட்டு, எந்தவித நெருக்குதலுமின்றி சுதந்திரமாக சுயேச்சையாக தனியார்மய  தாராளமய கொள்கைகளை மேற்கொண்டு வருகின்றன’ என்று காட்டி மறுகாலனியாதிக்கத்திற்கு நியாயஉரிமை பெறுவது என்ற காரணத்திற்குத்தான் மக்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா ஆங்கிலேயர்களின் நேரடி காலனியாதிக்கத்திற்கு உட்பட்டிருந்த காலகட்டத்தில், விடுதலைப் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதற்கும், எதிர்ப்புகளை நிறுவனமயமாக்குவதற்கும் பதவிகளில் ஒட்டிக் கொண்டு சலுகைகளை அனுபவிக்கவும் பொறுக்கித் தின்பதற்கும் விழைந்த நாட்டுப்பற்று அற்ற பிழைப்புவாத கும்பல்களை ஊக்குவிக்கவும் மேலிருந்து திணிக்கப்பட்டது நாடாளுமன்ற தேர்தல் ஜனநாயகம். காலனியாதிக்கத்தை கட்டிக் காக்க ஆங்கில ஏகாதிபத்தியவாதிகளின் கிரிமினல் மூளையில் உதித்த இந்த சாணக்கிய திட்டம் வெற்றிகரமாகவே நிறைவேறிற்று என்று சொல்ல வேண்டும். காலனிய காலம் தொடங்கி 1950களின் தொடக்கத்தில் திணிக்கப்பட்ட நவீன காலனிய ஆதிக்க காலகட்டத்தில் செழித்து வளர்ந்த அரசியல் பிழைப்புவாதமும் சீரழிவும் 1980, 1990களில் அதன் உச்சத்தை எட்டியது. தனிக்கட்சி ஆட்சி போய் கூட்டணி ஆட்சிகள், கட்சித் தாவல்கள், கூட்டணிகள் உடைவது, அரசாங்கங்கள் கவிழ்வது, புதுக்கூட்டணி, புது அரசு, சில மாதங்கள் வருடங்களுக்குள் மீண்டும் கட்சி தாவல்கள், அரசுகள் கவிழ்வது என்று நாடாளுமன்ற அராஜகம் தலைவிரித்தாடியது.

மேல்நிலை வல்லரசுகளின் தோற்றம், நிதிமூலதனம் சர்வதேசியமயமானது, தேசங்கடந்த மற்றும் பன்னாட்டு தொழில் கழகங்கள், அறிவியல் தொழில்நுட்பப் புரட்சி, ஏகாதிபத்திய பொருளாதார நெருக்கடி ஆகியவைகளின் விளைவாக நவீன காலனியாதிக்கம் அகற்றப்பட்டு மறுகாலனியாதிக்கம் இந்த காலகட்டத்தில்தான் புகுத்தப்பட்டது. சர்வதேச வலைப்பின்னல்களால், ஒரே சங்கிலியால் கட்டப்படிருந்த நிதி மூலதனத்தின் செயல்பாடுகளுக்கும் தேசங்கடந்த தொழில்கழகங்களுக்கும் நாடாளுமன்ற அராஜகமும் நிலையற்ற ஆட்சிகளும் எதிரானவை; எதிர்பாராத வகையில் திடீர் திடீரென தடைபோடுபவை; எனவே, அவற்றை ஒழிக்க வேண்டியது அவர்களுக்கு அவசியமும் கட்டாயமும் ஆகியது. இதற்கேற்பவே மறுகாலனியாதிக்க நலன்களுக்காகவே நிலையான ஆட்சி, சிறந்த அரசாளுமை என்ற முழக்கங்களை முன்வைத்துள்ளனர். நிதிமூலதனம், பன்னாட்டு முதலாளிகளின் தனியார்மய சுரண்டலும் ஆதிக்கமும் தங்கு தடையின்றி நடப்பதற்கு ஏற்ற நிலையான ஆட்சி, சிறந்த ஆளுமை, வலுவான ஆட்சி (failed state ஆக இல்லாமல்) ஆகியவையே தேர்தல் மற்றும் ஜனநாயகத்தின் ஒரே இலக்காக மாற்றப்பட்டுள்ளது.

இந்தியாவில் தேர்தல் என்பது, ஏகாதிபத்தியத்தின் பிள்ளைப்பருவத்தில் அதாவது 20-ம் நூற்றாண்டின் துவக்க பத்தாண்டுகளில், நேரடி காலனியாட்சி பிரதான வடிவமாக இருந்த காலகட்டத்தில், கம்யூனிச, தேசிய இயக்கங்கள் ஏற்றம் பெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில், நேரடிக் காலனிய ஆட்சியைப் பாதுகாக்க ஏகாதிபத்தியவாதிகளால் புகுத்தப்பட்டது. அன்று ஏகாதிபத்திய எதிர்ப்பு விடுதலைப் போராட்டங்களை நீர்த்துப் போக செய்வதற்கும் எதிர்ப்புகளை நிறுவனமயமாக்குவதற்கும், பதவிகளில் ஒட்டிக் கொண்டு அரசு சன்மானங்களை பொறுக்கித் தின்னவும் சலுகைகள் கௌரவங்களை அனுபவிக்கவும் நாட்டுப்பற்று அற்றுப் போகும்படியான பிழைப்புவாத கும்பல்களை உருவாக்கவும் ‘ஜனநாயக தேர்தல் அரசியலைப்’ புகுத்துவது ஏகாதிபத்தியங்களின் நலனுக்கு உகந்ததாக இருந்தது. இன்று ஏகாதிபத்தியத்தின் ஏற்றத்தாழ்வான அரசியல், பொருளாதார வளர்ச்சிப் போக்கின் விளைவாக மேல்நிலை வல்லரசுகள்  அவற்றின் மேலாதிக்கம், ஏகாதிபத்திய பொருளாதார நெருக்கடி, பின்னடைவு மற்றும் சீரழிவு காரணமாக கம்யூனிச தேசிய இயக்கங்கள் தற்காப்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ள உலக நிலைமை ஆகியவற்றின் காரணமாக, மறுகாலனியாதிக்க முறையிலான காலனிய ஆட்சி வடிவத்தை மேலாதிக்க வல்லரசுகள் பிரதானமாக கையாண்டு வரும் நிலைமையில் ஜனநாயகமும் தேர்தலும் வெட்டி சுருக்கப்பட்டு பரந்துபட்ட மக்கள் அரசியலில்  இருந்தே விலக்கி வைக்கப்பட்டு வருகின்றனர்.

‘தேர்தல் அரசியல்’ சீரழிவின் விளைவாக பல்கிப் பெருகி பேயாட்டம் போடுகின்ற பிழைப்புவாதக் கும்பல்கள் நாடாளுமன்ற அராகஜம் ஆகியவற்றினால் பாதிக்கப்படாமல், சட்டமன்றங்கள்  நாடாளுமன்றங்களுக்கு இதுவரையிலிருந்த வரம்புக்குட்பட்ட சட்டமியற்றும் அதிகாரம் உள்ளிட்ட அதிகாரங்களையும் பறித்துக் கொண்டு அவற்றை வெறும் ‘நீயா, நானா’ விவாத மன்றங்களாக்கி விட்டு, அந்த மன்றங்களுக்கு வெளியே எல்லா அதிகாரங்களையும், கார்ப்பரேட் முதலாளிகள், அவர்களின் கூலி வல்லுனர்கள், அதிகார வர்க்கத்தினர் நம்பகமான அரசியல் அடிவருடிகள் ஆகியோரைக் கொண்ட குழுக்களிடம் ஒப்படைக்கும் வகையில் அரசின் கட்டமைப்பும் அதன் செயல்பாடுகளும் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன.

இதன் இன்னொரு பக்கமாகத்தான், எப்படியும் பணம் சம்பாதித்து உல்லாசமாக வாழவேண்டும் என்கின்ற நெறியின்மையிலும், நுகர்வு வெறியிலும், போதையிலும் சீரழிவிலும் மக்களை ஆழ்த்துவதும்,  கிரிக்கெட் திரைப்படம்செல்போன் போன்ற மோகங்களால் மட்டுமே ஆட்டுவிக்கப்படுகின்ற, தேசப்பற்றோ, கொள்கை  இலட்சியங்களோ அற்ற நடமாடும் பிண்டங்களாக மக்களை மாற்றுவதும் திட்டமிட்டு செய்யப்பட்டு வருகின்றது. காலனிய கட்டத்தில் தேர்தல் அரசியலைப் பகுத்தி மக்களைச் சீரழித்த ஏகாதிபத்தியம், மறுகாலனிய கட்டத்தில் மக்களை அரசியல் அற்றவர்களாகவும், அரசியலின்மீதே அருவெறுப்பு கொண்டவர்களாகவும் மாற்றி வருகின்றது. அரசியல் பச்சோந்தித்தனம், பச்சையான அம்மணமான, வெட்கம் மானம் ஏதுமற்ற பிழைப்புவாத அரசியல் தகிடுதத்தங்களால் வெறுப்பின் எல்லைக்கே சென்று, யாராவது நல்லவன் வந்து ஏதாவது நல்லது செய்ய மாட்டானா என எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்து, மக்களது மனம் இறுகி விட்டது. ஓட்டை ஒரு சரக்காக கருதும் மனநிலைக்கு கருத்து ரீதியாகவே அவர்கள் வந்து விட்டார்கள். அல்லது யார் அதிக பொருட்களும் இலவசங்களும் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு ஓட்டை விற்கத் தயாராக இருக்கிறார்கள். “நீ எனக்கு பதவி தா; நான் உனக்கு மிக்சி, கிரைண்டர், மடிக்கணினி தருகிறேன்” என்று பகிரங்கமாக ஓட்டை விலைபேசுவதாக தேர்தலே மாறியிருக்கிறது.

“நல்லவன் ஆட்சிக்கு வந்தால் நல்லது நடக்கும்; ஆனால் அது எங்கே நடக்கப் போகிறது?” என்று நொந்து கொள்வது மட்டுமல்ல, வாய்ப்பு கிடைத்தால் நாமும் பணக்காரனாகி விட வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கியிருக்கிறது. நாடாளுமன்றத்தின் மீதான மாயையும் இல்லை; ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. அது அரசியல் ரீதியில் காலாவதியாகிவிட்டதா என்ற கேள்விக்கும் இடமில்லை. ஏனென்றால், அந்த வேலையை மறுகாலனியாதிக்கவாதிகள் செய்து விட்டனர்.

எனவே, மக்கள் தங்களது அடிமனதில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நல்லவர்கள், மக்களது துயரத்தை தீர்ப்பதற்கான வழிமுறையைக் கொண்டிருப்பவர்கள் நக்சல்பாரிகள் மட்டும்தான். இதை நிறைவேற்றப் போகும் புதிய ஜனநாயகப் புரட்சி மட்டும்தான் மக்களின் எதிர்காலம். அந்த எதிர்காலத்தில் உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்!

___________________________________________________________________________________________________________

ம.க.இ.கவும் அதன் தோழமை அமைப்புகளும் இந்த தேர்தல் புறக்கணிப்புக்காக தயாரித்திருக்கும் விளக்கக் கட்டுரை

___________________________________________________________________________________________________________

உங்கள் ஓட்டு திருவாளர் நாய் வேட்பாளருக்கே!

மக்கள் கலை இலக்கியக் கழகம்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

விவசாயிகள் விடுதலை முன்னணி

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

பெண்கள் விடுதலை முன்னணி

பெறுநர்: ஆசிரியர், வலைப்பூக்கள், தமிழ்நாடு

பொருள்: துவாக்குடி ஆய்வாளரின் ஜனநாயக உரிமை மறுப்பை கண்டித்து திருவாளர் நாய்க்கு ஓட்டுக் கேட்டு பிரச்சாரம் – கைது – தொடர்பாக

அய்யா, அம்மா,

நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு “எங்களுக்கு ஓட்டுப்போடுங்கள்” என்று எல்லா கட்சிகளும் வாக்கு சேகரிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், துவாக்குடி காவல்நிலைய சரகத்தில் “யாருக்கும் வாக்களிக்க வேண்டாம்” என்று பேச எமது அமைப்புகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மாற்றுக் கருத்தை முன்வைக்க மக்களுக்குள்ள உரிமைதான் ஜனநாயகம். ஆனால், ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக நடத்தப்படும் தேர்தல் பிரச்சாரத்திலேயே இந்த உரிமை மறுப்பு துவங்கிவிடுகிறது. இதைத்தான் போலி ஜனநாயகம் என்கிறோம். இது மட்டுமல்ல,

* தேர்ந்தெடுக்கப்பட் மக்கள் பிரதிநிதி மக்களிடம் வாக்குறுதி அளித்ததற்கு எதிராக, மக்கள் விரோதமாக செயல்படும்போது தட்டிக்கேட்கவோ, தண்டிக்கவோ, திருப்பி அழைக்கவோ வாக்களித்த மக்களுக்கு உரிமையில்லை.

* தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிக்கு சட்டம் இயற்ற மட்டுமே அதிகாரம்; அதை அமல்படுத்தும் அதிகாரமோ அதிகாரவர்க்கத்திடம். ஆனால் இந்த அதிகார வர்க்கம் மக்களை மதிக்காமல் அடாவடியாக செயல்படும்போது அவர்களைத் தட்டிக் கேட்கவோ தண்டிக்கவோ மக்களால் முடியாது. ஏனெனில் இவர்கள் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை; இவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை மக்களுக்கில்லை.

* உண்மையில் மக்கள் பிரதிநிதிகளும், அதிகார வர்க்கத்தினரும் மக்களுக்காக ஆட்சி செய்வதில்லை. அவர்கள் அமெரிக்காவுக்கும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கும்தான் சேவை செய்கிறார்கள் என்பதுதான் எமது கருத்து. விக்கிலீக்ஸ் மூலம் கசிந்த செய்திகளும் இதையே உறுதி செய்துள்ளன.

இவற்றை முன்வைத்து, தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி தவறு செய்யும் போது திருப்பியழைக்கும் உரிமை; தேர்ந்தெடுத்த பிரதிநிதிக்கே சட்டம் இயற்றவும் அதை அமல்படுத்தவும் உரிமை; அனைத்து அதிகாரிகளும் கூட தேர்ந்தெடுக்கப்படவும் திருப்பியழைக்கப்படவுமானவர்களாக ஆக்கப்படுதல் என்ற உண்மையான மக்களாட்சிக் கோட்பாடு கொண்ட புதிய ஜனநாயக முறை வேண்டும். இதை ஒரு மக்கள் புரட்சியின் மூலமே அடைய முடியும் என்று விளக்கிப் பிரச்சாரம் செய்ய அனுமதி கோரியிருந்தோம். திருச்சி மாநகரத்தில் அனுமதி தரும்போது இங்கு மட்டும் அனுமதி தர மறுத்தது இந்த காவல் ஆய்வாளரின் தனிப்பட்ட வெறுப்புணர்ச்சியன்றி வேறென்ன?

இத்தகைய சூழலில், இதைக் கண்டிக்கும் முகமாகவும் எமது கருத்தை மக்களிடம் முன்வைத்து ஆதரவு திரட்டும் முகமாகவும் எமது இன்றைய பிரச்சாரம் திட்டமிடப்பட்டது. தேர்தலில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மக்களுக்கான ஆட்சியாக இருக்கப் போவதில்லை. தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற பெயரில் நாட்டையும் வளங்களையும் பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு விற்பதையே நோக்கமாகக் கொண்ட ஆட்சியாகத்தான் இருக்கப் போகிறது, ஊழல் ஆட்சியாகத்தான் இருக்கப் போகிறது. இதை மறைக்க டாஸ்மாக் மூலம் மக்களிடம் பறித்த பணத்தில் மக்களுக்கு இலவசங்களை வழங்கி ஏய்க்கின்றனர் இந்த ஓட்டுக்கட்சிகள்… என்ற கருத்துக்களை முன்னிறுத்தி, “உலக வங்கியின் உத்தரவுக்கு நாய் ஆடினால் என்ன, நரி ஆடினால் என்ன? இதற்கு தேர்தல் ஒரு கேடா?” என்ற தலைப்பில் நாய் வேட்பாளர் பைரவனுக்கு ஓட்டுகேட்டு எமது தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினோம்.

உங்கள் ஓட்டு திருவாளர் நாய் வேட்பாளருக்கே!

உங்கள் ஓட்டு திருவாளர் நாய் வேட்பாளருக்கே!

உங்கள் ஓட்டு திருவாளர் நாய் வேட்பாளருக்கே!

காலை 11 மணிக்கு துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் இந்த பிரச்சார இயக்கத்துக்கு தோழர் சங்கர் தலைமை தாங்க, ம.க.இ.க தோழர் ஜீவா துவக்கி வைத்து உரையாற்றினார்.

பட்டாசு வெடித்து தாரை, தப்பட்டை முழங்க திரளாகக் கூடிசெய்த இந்த பிரச்சாரத்திற்கு பகுதி வாழ் உழைக்கும் மக்களிடையே ஆரவாரத்துடன் கூடிய பெருத்த வரவேற்பு கிடைத்தது. பிரச்சாரத்தையும் மக்களின் பேராதரவையும் கண்ட காவல்துறை ஜனநாயக விரோதமாக பெண்கள் குழந்தைகள் உட்பட 40க்கும் மேற்பட்ட தோழர்களை கைது செய்துள்ளது. இச்செயலை வன்மையாக கண்டிப்பதுடன் கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனே விடுதலை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். நன்றி

இப்படிக்கு

தோழர் து.ராஜா

மாவட்ட செயலாளர், ம.க.இ.க.

__________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

தேர்தல் 2011

விக்கி லீக்ஸ்

டாஸ்மாக் அருளும் இலவசங்கள்! தமிழகத்தை அழிக்கும் வக்கிரம்!!

ந்த தேர்தலில் ஜெயா தலைமையிலான எதிர்க்கட்சிகள் ” ஊழல் எதிர்ப்பு, குடும்ப ஆட்சி எதிர்ப்பு ” என்ற இரண்டு பிரச்சினைகளை வைத்து பிரச்சாரம் செய்கின்றன. ஆனால் ஊழலின் தோற்றுவாயான தனியார் மயம் குறித்து ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரண்டிற்கும் எந்த வேறுபாடுமில்லை. இரண்டுமே அதை ஆதரிக்கின்றன.

ஜெயலலிதாவின் ஊழலை விட பன்மடங்கு பெரிய ஊழல்களைச் செய்து தன் குடும்ப பரிவாரங்களையெல்லாம் கோடீசுவரர்களாக்கி குடும்ப ஆட்சி நடத்தி வரும் கருணாநிதி (தலைமையிலான திமுக கூட்டணி) சென்ற தேர்தலின் போது இலவசத் திட்டங்களை அறிவித்து வெற்றி பெற்றது போல, இப்போதும் வெற்றி பெற பல புதிய கவர்ச்சிகரமான இலவசங்களை அறிவித்துள்ளார்.

ஏட்டிக்குப் போட்டியாக ஜெயலலிதாவும் இலவச திட்டங்களை அறிவித்துள்ளார். இந்த இலவசங்களையெல்லாம் தனது பரம்பரை சொத்திலிருந்தோ அல்லது மனைவி தயாளு அம்மையாரும் துணைவி ராஜாத்தி அம்மையாரும் கொண்டு வந்த தாய்வீட்டு சீதனத்திலிருந்தோ, அல்லது அவரது வாரிசுகள் வேலைக்கு சென்றோ, தொழில் நடத்தியோ ஈட்டிய பணத்திலிருந்தோ கொடுத்ததில்லை; கொடுக்கப் போவதில்லை. ஜெயாசசி கும்பலும் தாங்கள் கொள்ளையடித்த சொத்தை செலவு செய்து இலவசங்களை கொடுக்கப் போவதில்லை.

மாறாக இரண்டு வழிகளில் மக்களிடமிருந்து பணத்தை பறித்தெடுத்துத்தான் அந்தப் பணத்தைக் கொண்டுதான் இந்த “இலவசங்கள்” மக்களுக்கு வழங்கப்படுகின்றன. ஒன்று, டாஸ்மாக் சாராயக் கடைகள் மூலம் உழைக்கும் மக்களிடமிருந்து பணம் பறிக்கப்படுகின்றது. அரசு நிறுவனமான டாஸ்மாக் 1983-84இல் தொடங்கப்பட்டபோது, அதன் முதலீட்டுத் தொகை ரூ15 கோடி. அன்றைய ஆண்டு வருவாய் ரூ. 139 கோடி மட்டுமே. இன்றைய ஆண்டு வருமானம் மட்டும் ரூ. 15,000 கோடி. 25 ஆண்டுகளில் 107 மடங்கு வளர்ச்சி. இந்தியாவில் எந்த நிறுவனமும் இத்தகைய வளர்ச்சியை அடைந்திருக்காது.

மது விற்பனையை தனியார் மூலம் நடத்திய அரசு 2003&04இல் டாஸ்மாக் மூலம் நேரடி விற்பனையைத் தொடங்கியபோது கிடைத்த ஆண்டு வருவாய் ரூ. 2828 கோடி. 2009&10இல் இது ரூ. 12461 கோடியாக உயர்ந்து நடப்பாண்டில் ரூ. 15,000 கோடியைத் தாண்டி விட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ரூ. 50,000 கோடிக்கு மேல் மது விற்பனை மூலம் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது.

இந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு ரூபாய் அரிசித் திட்டத்திற்கு சுமார் ரூ. 15,000 கோடியும், இலவச வண்ணத் தொலைக்காட்சி திட்டத்திற்கு ரூ. 4500 கோடியும் இலவச எரிவாயு அடுப்பு வழங்கும் திட்டத்திற்கு ரூ. 650 கோடியும் செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. (முகவை க. சிவகுமார், தினமணி, 1.3.2011). இன்னும் இருக்கின்ற பிற இலவச திட்டங்களுக்கும் சேர்த்துப் பார்த்தால் கூட கடந்த ஐந்தாண்டுகளில் கருணாநிதி அரசு வழங்கிய இலவச திட்டங்களுக்கு ஒதுக்கிய நிதி அதிகபட்சம் ரூ. 40,000 கோடியைக்கூட தாண்டாது. அரசுக்கு குறைந்தது ரூ. 10,000 கோடியாவது ஆதாயம் கிடைத்துள்ளது.

இன்னொரு பக்கம் மதுவை உற்பத்தி செய்யும் சாராய ஆலை அதிபர்கள் அடைந்த இலாபம் பல கோடிகள் இருக்கும். மதுவிற்பனையை தொடர்ந்து அனுமதித்ததற்காக சாராய ஆலை அதிபர்களிடமிருந்து கருணாநிதி குடும்பம் பெற்ற கட்டிங் எத்தனை கோடிகளோ! எல்லாவற்றையும் விட, டி.ஆர்.பாலு, ராஜாத்தி அம்மையார் போன்றோரே சாராய ஆலையையும் நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் வியாபாரம் மூலம் இவர்களுக்கும் நல்ல லாபம்!

“குடியின் போதையில் வாய்ச்சண்டை முற்றி அடிதடி கொலை, குடிப்பழக்கம் காரணமாக கடனாளியாகி குடும்பமே தற்கொலை, குடிபோதையில் மனைவி, குழந்தைகளை வெட்டிக் கொன்ற விவசாயி” என அன்றாடம் மூன்று நான்கு செய்திகள் பத்திரிகைகளில் வருகின்றன. அண்மைக் காலமாக பாதிக்கு மேற்பட்ட குற்ற நிகழ்வுகள் குடிபோதையினால் நடந்தவையே! அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் வரதட்சணையை விட குடிபோதையில் பெண்களை துன்புறுத்தும் கணவன்மார் மீதான புகார்கள் தான் மொத்தப் புகார்களில் 80% இருக்கின்றது.

நெடுஞ்சாலை விபத்துகள் பல குடிபோதையில் ஏற்படுபவையே! நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது வேகமாக வந்த சரக்கு ரயில் மோதியதன் விளைவாக ஏற்பட்ட ஒரு விபத்தில் 28 பேர் இறந்தனர்; 35 பேர் பலத்த காயமடைந்தனர்; இன்னும் பலருக்கு சிறுகாயங்கள்; விபத்துக்கு காரணம் சரக்கு ரயிலின் ஓட்டுனர் நினைவை இழந்து போகும் அளவுக்கு குடித்திருந்ததுதான் என்று பின்னர் நடந்த மருத்துவ ஆய்வு தெரிவித்தது. தொடர்ச்சியான மதுப்பழக்கத்தால் கல்லீரல் பாதிக்கப்பட்டு மரணம் அடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இவைகளின் காரணமாக தமிழ்நாட்டில் இளம் விதவைகளின் எண்ணிக்கை கணிசமான அளவு  குறிப்பாக நகர்ப்புறங்களில்  அதிகரித்துள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே குடிப்பழக்கம் அதிகரித்து வருகின்றது. இதனால் எதிர்கால தலைமுறையே சீரழிந்து நாசமாய் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குடிபோதையினால் ஏற்படும் உற்பத்தி இழப்பு, மரணங்கள் மூலம் இழப்பு, குடியினால் வரும் உடல்நலக் கேட்டிற்கு மருத்துவம் செய்ய செலவிடும் தொகை ஆகியவற்றைக் கணக்கிட்டால் மது விற்பனையில் வரும் வருவாயைவிட அதிகம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

‘குடி’மக்கள் குடிப்பதை நிறுத்தினால் அதனால் அவர்களின் குடும்ப சேமிப்பு நடக்கும். அல்லது குடிப்பதற்கு செலவிடப்படும் பணம் பிற பயனுள்ள பொருட்களை வாங்க பயன்படுத்தப்படும். இந்த விற்பனை மூலம் மறைமுக வரியாக அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய்கள் வருவாய் கிடைக்கும். பண்பாட்டு சீரழிவும் நோய்களும் மரணங்களும் குறையும்.

இவை பற்றியெல்லாம் எல்லா அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் நன்கு தெரியும். ஆனால் எந்தக் கூட்டணியும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமுல்படுத்துவோம் என்று சொல்லவில்லை. மாறாக, போட்டி போட்டுக் கொண்டு இலவசங்களை ஒன்றையொன்று மிஞ்சும் வகையில் அறிவிக்கின்றன. இந்த இலவசத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமானால் தமிழச்சிகளை தாலியறுக்கும், இளைய தலைமுறையினரை சீரழிக்கும் டாஸ்மாக் கடைகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். கூட்டணித் தலைவர்கள் நம்பியிருப்பது இதைத்தான்! அடுத்த ஐந்து ஆண்டுகளில் டாஸ்மாக் கடைகள் மூலம் கிடைக்கும் வருவாய் ஒரு இலட்சம் கோடி ரூபாய்களைத் தாண்டும் என்று அவர்களுக்கு தெரியும். அதில் அதிகபட்சம் 60&70%ஐ செலவழித்தாலே போதும், இந்த இலவசத் திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்றும் அவர்களுக்கு தெரியும்.

சேவை வரி உள்ளிட்ட மறைமுக வரிகள் மூலம் உழைக்கும் மக்களின் வருமானத்தை பிக்பாக்கெட் அடிக்கின்றது அரசு; இந்த வரிகளும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகின்றன. இதன் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய்களை மக்களிடமிருந்து பிடுங்கிக் கொள்கிறது அரசு.

சாராய விற்பனை  டாஸ்மாக் மூலம் இளம் தமிழச்சிகளின் தாலியறுத்து, இளம் தலைமுறையினரையே சீரழித்து, சின்னாபின்னமாக்கி, குடிகார கணவன்களால் பெண்கள், குழந்தைகளின் மன அமைதியை இழக்க வைத்து, அவர்களை அன்றாடம் சித்திரவதைக்குள்ளாக்கி அந்த அவலம், சோகம், கண்ணீரிலிருந்து கறக்கப்பட்ட பணத்தைக் கொண்டு, பறி கொடுத்த மக்களுக்கு மிக்சி, கிரைண்டர், மடிக் கணினி போன்றவைகளை இலவசமாக தருவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்? எவ்வளவு பெரிய கிரிமினல் குற்றம்? எவ்வளவு பெரிய கொடூரம்? பதவிக்கு வந்து மக்கள் பணத்தை பகற்கொள்ளையடிக்கவும் சாராய அதிபர்கள் பெரும் இலாபம் ஈட்டவும் கொடுக்கப்படும் இந்த இலவசங்கள் ஏதோ அந்தக் கூட்டணித் தலைவரின் தயாள குணத்திலிருந்து பிறந்த மக்கள் மீதான பாசம், பரிவு என்றெல்லாம் சித்தரித்து ஓட்டு கேட்பது எவ்வளவு பெரிய மோசடி? எவ்வளவு பெரிய பித்தலாட்டம்? எவ்வளவு பெரிய வக்கிரம்?

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் “மதுவிலக்கை அமுல்படுத்த போராடுவோம்” என்று அறிவித்துள்ளன. திமுகவுடனான கூட்டணி கொள்கைக்கான கூட்டணி அல்ல; இந்தக் கூட்டணிக்கென்று குறைந்தபட்ச பொதுத்திட்டம் எதுவும் இல்லை; வெறும் தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் என்று கூறியுள்ளனர் பாமக தலைவர் இராமதாசு. அப்புறம் எப்படி இவர் சார்ந்துள்ள கூட்டணி வெற்றி பெற்றால் மதுவிலக்கை அமுல்படுத்தும்? இவர் சார்ந்துள்ள திமுக கூட்டணிகளில் காங்கிரசு, திமுக இரண்டும் உள்ளன. இரண்டும் மத்திய, மாநில அரசுகளை ஆள்பவை. இன்னும் பல கோடி மக்களை குடிபோதையில் ஆழ்த்தி பதவி ஆதாயம் தேடும் கட்சிகள்! இவர்களிடம் மதுவிலக்கை அமுல்படுத்தச் சொல்லி போராடுவாரா இராமதாசு; அப்படிப் போராடினால் கூட்டணியில் நீடிக்க முடியுமா?

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியோ தேசிய அளவில் முழுமையான மதுவிலக்கை அமுல்படுத்த தொடர்ந்து வலியுறுத்தும் என்று தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. கொடூர நகைச்சுவை என்று சொல்வார்களே அதற்கு தலைசிறந்த விளக்கமாக இவர்களின் இந்த தேர்தல் வாக்குறுதி இருக்கின்றது! தமிழ்நாட்டிலேயே கூரையேறாதவர்கள், தேசிய அளவில் வானமேறப் போகிறார்களாம்! நடக்க முடியாத, தாங்கள் வலியுறுத்த விரும்பாத மதுவிலக்கை தேசிய அளவில் அமுல்படுத்த வலியுறுத்துவதாக சொல்வது எவ்வளவு பெரிய பித்தலாட்டம்? மக்களை அந்த அளவிற்கு இளிச்சவாயன்களாக, ஏமாளிகளாக இவர்கள் கருதுகிறார்கள் என்பதுதான் இதன் பொருள். தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் சாராயம் குடிக்கக் கூடாது, குடிப்பவர்களை கட்சியில் சேர்க்க மாட்டோம் என்று அறிவிப்பார்களா? பெண்களுக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் 50% இட ஒதுக்கீடு கேட்டுப் போராடுவோம் என்று சொல்லும் இராமதாசு தனது வேட்பாளராக ஒரு பெண்மணியைக் கூட நிறுத்தவில்லை! இதுதான் இவர்களின் உண்மை முகம்! யோக்கியதை!!

எனவே இலவசங்களை எதிர்பார்த்து ஓட்டளிப்பதென்பது கடவுளின் அருளைப் பெறுவதற்காக தனது தலையில் தானே தேங்காய் உடைத்துக் கொள்வதற்கும், இரத்தம் பீறிட சாட்டையால் பளீர் பளீரென தன்னைத்தானே அடித்துக் கொள்வதற்கும், உடம்பெல்லாம் வெட்டுக்கத்தியால் தானே வெட்டிக் கொள்வதற்கு ஒப்பானதாகும். நமது ரத்தத்தை விலைபேசி அதன் மூலம் நமக்கு பிரியாணி தருவதாக கூறுவதுதான் இந்த தேர்தல். இலவசங்களின் பின்னே நாம் இழக்கப்போவது ஆரோக்கியமான தமிழ் மக்களின் எதிர்காலத்தை!

________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

தேர்தல் 2011

வாக்களிக்க பணம் வாங்குவது குற்றமா?

114

ண்ணா ஹசாரே அன்கோவின் ஊழல் எதிர்ப்பு மேளாவில் மெழுகுவர்த்தியோடு கலந்து கொண்ட நமது அன்பிற்குரிய நடுத்தர வர்க்கம், அதற்கு அடுத்தபடியாக கொஞ்சம் வெறியோடு ஒரு ரஜினி ரசிகனைப் போல ஆதரிப்பது தேர்தல் கமிஷனை! தமிழகத்தில் பறக்கும் படைகளால் பிடிபட்ட கோடிக்கணக்கான பணம், திருச்சி ஆம்னி பேருந்தில் ஐந்து கோடியை பிடித்த வீராங்கனை அதிகாரி, அஞ்சா நெஞ்சன் அழகிரியை தண்ணி குடிக்க வைத்த மதி நுட்பம்….என்று இந்த போற்றுதல்கள் ஊடகமெங்கும் விரவிக் கிடக்கின்றன. முக்கியமாக பெரிசு கருணாநிதியே தேர்தல் கமிஷன் குறித்து எல்லா இடங்களிலும் புலம்பித் தள்ளுவதை நடுநிலையாளர்கள் மாபெரும் வெற்றியாக கருதுகின்றனர்.

ஆனால் இந்த செய்திகளுக்கு பின்னே உங்களையும் உள்ளிட்ட அனைத்து பிரிவு மக்களையும் அரசியலில் இருந்தே விலக்கும் பாசிச போக்கு கலந்திருக்கிறது என்பதை அறிவீர்களா?

அதிகார வர்க்கத்தின் ஒரு பிரிவும், ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவும் ஜெயலலிதாவை ஆதரிப்பதன் விளைவாகவே தேர்தல் கமிஷன் இந்த நடவடிக்கைகளை எடுக்கிறது என்று சிலர் சொல்லக்கூடும். அதில் உண்மையில்லாமல் இல்லை. ஆனால் அதைத் தாண்டி தேர்தல் என்பதே மக்கள் கலந்து கொள்ளும் திருவிழா அல்ல, வெறுமனே வாக்களிப்பு மட்டும் நடக்கும் ஒரு சடங்கு போல மாற்றி வருகிறார்கள்.

தமிழகத்தில் தேர்தல் வரும்போது ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகள் விரிவான தேர்தல் புறக்கணிப்பு இயக்கத்தை நடத்துவது வழக்கம். அதன் அங்கமாக பல இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடக்கும். இந்த தேர்தல் குறைவான  காலத்தில் நடக்கிறது என்றாலும் பல இடங்களில் தோழர்கள் விரிவான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் பல இடங்களில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு போலீசு மறுத்திருக்கிறது. இதுதான் ஜனநாயகத்தின் உண்மையான இலட்சணம்.

பொதுக்கூட்டத்திற்கான விண்ணப்பத்தில் தேர்தல் புறக்கணிப்பு என்ற வார்த்தைகளைப் பார்த்தாலே போலீசு மருண்டு விடுகிறது. உடனே “இது குறித்து தேர்தல் கமிஷனிடம் அனுமதி வாங்க வேண்டும்” என்று சம்பந்தப்பட்ட போலீசு சொல்கிறது. நண்பர்களே, ஒரு தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்வதற்கு தேர்தல் கமிஷனிடம் எதற்கு அனுமதி வாங்க வேண்டும்? அந்த கமிஷன், தேர்தல் எப்படி சட்டப்படி நடத்த வேண்டும் என்பதைத்தானே செய்ய வேண்டும்? இந்த அரசு, அரசியல், அமைப்பு குறித்த ஒரு இயக்கத்தின் கொள்கையை, அதை பிரச்சாரம் செய்யும் உரிமையை அது எப்படி தீர்மானிக்க முடியும்?

சரி, தோழர்கள் அந்தந்த ஊர்களில் இருக்கும் தேர்தல் கமிஷன் பொறுப்பிலுள்ள அதிகாரிகளிடம் கேட்டால் என்ன பதில் கிடைக்கிறது? இதில் சட்டப்படி அவர்கள் பதிலளிக்க முடியாது என்பதால் ” இது குறித்து நீங்கள் போலீசிடமே அனுமதி வாங்குங்கள்” என்கிறார்கள். மீண்டும் போலீசு, மீண்டும் தேர்தல் கமிஷன்….இந்த ஆட்டம் இன்று வரை முடியவில்லை.

நாள் வேறு குறைவாக இருக்கிறதே இதற்கு வழக்கு போட்டு அனுமதி வாங்க முடியுமா என்று தோழர்கள் யோசனையோடு சென்னை உயர்நீதிமன்றம் போனார்கள். தலைமை நீதிபதி இக்பால் தலைமியிலான பெஞ்ச் இந்த மனுவை விசாரித்து சரியாக சொல்வதாக இருந்தால் எந்த விசாரணையும் செய்யாமல் “தேர்தல் புறக்கணிப்பு என்பது ஜனநாயக விரோதம்” என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஆக நாம் இந்த தேர்தலை புறக்கணிப்பது சட்ட விரோதம் என்று திமிருடம் தீர்ப்பு வழங்கியிருக்கின்றனர், மாட்சிமை தாங்கிய நீதிபதிகள். இனி இதை மறுத்து உச்சநீதிமன்றம் போய் வாதாடி அனுமதி வாங்குவதற்குள் தேர்தல் முடிவுகளே வந்து விடும். இதுதான் இந்த நாட்டில் நிலவும் ஜனநாயகம்.

மறுகாலனியாக்கம் மும்முரமாக நடைபெறும் இந்த இருபது ஆண்டுகளில் அரசு மட்டுமல்ல அதற்கு பொருத்தமாக தேர்தலும், கூடத்தான் பாசிசமயமாக  மாறியிருக்கிறது. முன்பிருந்த பொதுவான அரசியல் நடவடிக்கைகளெல்லாம் இன்று கிடையாது. முதலில் இரவு பத்து மணிக்கு மேல் பிரச்சாரம் செய்யக்கூடாது என்றார்கள். திராவிட இயக்க வரலாற்றில் விடிய விடிய நடக்கும் இந்த பிரச்சாரக் கூட்டங்கள்தான் பெருந்திரளான மக்கள் பங்கேற்கும் மாபெரும் அரசியல் நடவடிக்கையாக இருந்தது. அதற்கு ஆப்பு வைத்த கையோடு பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கான முக்கியமான இடங்களை மறுத்தார்கள். ஆளா வராத ஓரிரு இடங்களை மட்டும் ஒதுக்கினார்கள். ஆர்ப்பாட்டங்கள், மறியல் எல்லாவற்றிற்கும் இதுதான் கதி. பின்னர் சுவரெழுத்து, சுவரொட்டிகள், பேனர்கள் எல்லாவற்றுக்கும் தடை விதித்தார்கள்.

இதனால் தற்போது சிறு கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் யாரும் மக்களிடையே பிரச்சாரம் செய்ய முடியாது. அவர்கள் யாரென்றே மக்களுக்கு தெரியாது. பெரிய கட்சிகள் எல்லாம் ஆளுக்கொரு தொலைக்காட்சி வைத்திருப்பதால் பிரச்சினை இல்லை. அதே போல பணபலத்தால் ஊடகங்களில் விளம்பரம் செய்தும் ஈடு செய்கிறார்கள். இந்த நிலை தொடரும் பட்சத்தில் நமது தேர்தலும் அமெரிக்கா போல கார்ப்பரேட் நடவடிக்கையாக மட்டுமே இருக்க முடியும். அமெரிக்காவில் இரண்டு கட்சிகளைத் தவிர வேறு யாரும் வெற்றி பெறவே முடியாது என்ற சூழ்நிலை இங்கும் தோன்றும். அல்லது தோன்றிவிட்டது.

இது தவிர பெரிய கட்சிகள் கூட முன்னர் போல பெருந்திரளான மக்கள் நடவடிக்கைகளை வைத்து தேர்தலை அணுகுவதை இப்போது மாற்றிவிட்டார்கள். வேட்பாளர் மனுக்கொடுக்கும் போது கூட நான்கு பேர்தான் செல்ல வேண்டும், வாகன ஊர்வலத்தில் நான்குக்கு மேல் அனுமதியில்லை என்று ஏராளமான விதிகள் இப்போது அமலில் இருக்கின்றன. இவையெல்லாம் தேர்தலை சிறப்பாகவும், நடுநிலைமையோடும் நடத்துவதற்கு காரணமென்று பலர் அப்பாவித்தனமாய் நம்புகிறார்கள். அரசியலே சாக்கடை என்று கருதுவதற்கு பழக்கப்பட்டிருக்கும் நடுத்தர வர்க்கம்தான் இதனை எந்தவித பரிசீலனையின்றி  போற்றுகிறது.

தேர்தல் கமிஷனின் கெடுபிடிகள் எதுவும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கவில்லை, மறுக்கிறது. இந்த நடவடிக்கைகள் தேர்தல் மற்றும் பொதுவான அரசியல் நடவடிக்கைகளிலிருந்து மக்களை விலக்கி வைக்கிறது. அப்படி மக்கள் விலக விலக அரசு என்பது மேலும் பாசிசமயமாகுவதற்கு உதவியாக இருக்கும். ஆளும் வர்க்கம் தான் விரும்பும் எதனையும் மக்கள் எதிர்ப்பின்றி அல்லது அப்படி எதிர்ப்பு காட்டுவதற்கு வழியில்லாத நிலைமையினை உருவாக்கி சாதித்துக் கொள்ளும்.

கூர்ந்து கவனித்தீர்களென்றால் இந்த தேர்தல் கார்ப்பரேட் கட்சிகளின் நடவடிக்கைகளை மட்டும் ஊக்குவிப்பதை புரிந்து கொள்ளலாம். சோனியா, ராகுல், அத்வானி, ஜெயலலிதா போன்றோர் விமானத்தில், ஹெலிகாப்டரில் பறந்து வந்து பிரச்சாரம் செய்கிறார்கள். ஒரு வேட்பாளர் அதிகபட்சம் 14 இலட்சம் மட்டும் செலவு செய்யலாம் என்று கண்காணிக்கும் தேர்தல் கமிஷன் இந்த பறக்கும் செலவுகளை மட்டும் வேட்பாளர்கள் கணக்கில் சேர்க்காதாம். தொண்டர்களுக்கு பிரியாணி போடுவதை தடுத்து நிறுத்தி மாபெரும் ஜனநாயக நடவடிக்கை எடுக்கும் கமிஷன் இந்த ஹெலிகாப்டரை மட்டும் பெருந்தன்மையுடன் அனுமதிக்கும் இரகசியம் என்ன?

அதே போல பெரிய கட்சிகள் ஆளுக்கொன்றோ இரண்டோ தொலைக்காட்சிகளை வைத்துக் கொண்டு செய்தி, விளம்பரம் என்ற முகாந்திரத்தில் பிரச்சாரம் செய்கின்றன. இதற்கான செலவை மதிப்பிட்டு தமிழகம் முழுவதும் போட்டியிடும் அந்த கட்சிகளது வேட்பாளர்களின் கணக்கில் சரசாரியாக கழிக்க வேண்டியதுதானே? செய்வார்களா?

ஒரு வேட்பாளர் 14 இலட்சத்திற்கு மேல் செலவழிக்க கூடாது என்றால் என்ன செய்திருக்க வேண்டும்? முதலாளிகள், பணக்காரர்கள் போன்ற பணம் படைத்த பிரிவினர் தேர்தலில் பங்கேற்பதை தடுத்து நிறுத்த வேண்டும். ஐந்து அல்லது பத்து இலட்சத்திற்கு மேல் மொத்த சொத்தும் இல்லாதவர்கள்தான் தேர்தலில் பங்கேற்க வேண்டும் என்று மாற்றலாமே? அப்படி செய்தால் இந்த செலவு பிரச்சினையே வராதில்லையா? ஆனால் நடப்பு தேர்தலில் 230க்கும் மேற்பட்ட கோடிசுவர வேட்பாளர்கள் பங்கேற்கிறார்கள். கையில் செலவழிக்க வழியற்று பணத்தை சேர்த்திருக்கும் வர்க்கம் தேர்தலில் நின்றால் செலவழிக்காமல் என்ன செய்வான்?

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை நிறுத்துவதற்காக அதிரடி ரெய்டுகளை செய்யும் கமிஷன் இந்த அக்கறையில் உண்மையாக இருந்திருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? தேர்தல் கமிஷனில் பதிவு செய்திருக்கும், அங்கீகரிக்கப்பட்டிருக்கும் கட்சிகள் எதுவும் எந்த முதலாளிகளிடமும் நன்கொடை வாங்க கூடாது என்று உத்தரவு போட்டிருக்கலாமே? டாடா, அம்பானி, பிர்லா, அம்பானி, பஜாஜ், மல்லையா, டி.வி.எஸ் என்று எல்லா முதலாளிகளிடமும் நன்கொடை வாங்கித்தான் காங், பா.ஜ.க, தி.மு.க, அ.தி.மு.க கட்சிகள் பிழைப்பை நடத்துகின்றன. இந்த சப்ளையை துண்டித்தால் அவர்கள் தேர்தலில் பணத்தை தண்ணியாக செலவழிக்க முடியாதில்லையா? ஏன் செய்யவில்லை?

ஆக ஒட்டுமொத்தமாக ஒன்று புரிகிறது. இந்த தேர்தலும், தேர்தல் கமிஷனும் கார்ப்பரேட் முதலாளிகள் மற்றும் அவர்களது நலனுக்காக இருக்கும் பெரிய கட்சிகளைத்தான் எல்லா சலுகைகளோடும் அனுமதிக்கிறது.

தற்போது ஸ்ரீரங்கத்தில் வாக்களிக்க பணம் வாங்கினார்கள் என்று ஆறு பொதுமக்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். ஏதோ இவர்களெல்லாம் மாபெரும் கிரிமினல்கள் போல அவர்களது பெயர்களையெல்லாம் பெற்றோர் பெயர்களோடு தினசரிகள் பிரசுரித்திருக்கின்றன. இவர்கள் மீது 171 இ எனும் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது நிரூபிக்கப்பட்டால் ஒரு ஆண்டு தண்டனை என்று எல்லா ஊடகங்களும் மக்களை பயமுறுத்துகின்றன. தேர்தலுக்கு வாக்களிப்பதையே அவமானமாக கருதும் மேட்டுக்குடியினர் மற்றும் நடுத்தர வர்க்கத்தின் ஒரு பகுதி இந்த நடவடிக்கைகளை நெஞ்சார வரவேற்கிறார்கள். ஆனால் மக்களை மிரட்டுவதுதான் இந்த வழக்கின் அடிப்படை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

வாக்களிக்க பணம் வாங்குவது தவறு என்றால் அதை மேடையிலேயே ஆதரித்து பேசுபவர்களையல்லவா கைது செய்திருக்க வேண்டும்? ஜெயலலிதா, விஜயகாந்த் போன்றோர் பல இடங்களில் பேசும் போது “தி.மு.க காரன் காசு கொடுத்தால் அதை வாங்கிக் கொள்ளுங்கள், அது நம்ம காசு, வாக்கு மட்டும் எங்களுக்கு மறக்காமல் போடுங்கள்” என்று தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்கள். ஊடகங்களில் பலரும் கூட இதை தெரிவித்திருக்கின்றனர். இப்படி ஆதாரப்பூர்வமாக காசு பெறுவதை ஆதரிக்கும் நபர்கள் மீது தேர்தல் கமிஷன் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவை சேர்ந்த எம்.பிக்கள் பணம் வாங்கிக் கொண்டு அரசுக்கு ஆதரவாக வாக்களித்தார்கள். இதை விசாரித்த உச்சநீதிமன்றம் பணம் வாங்கியதும், வாக்களித்ததும் உண்மையென்றாலும் இரண்டுக்குமுள்ள தொடர்பு ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை என்று தள்ளுபடி செய்தது.

அதை வைத்துப் பார்க்கும்போது வாக்காளர்கள் பணம் வாங்குவதை மட்டும் எப்படி நிரூபிப்பார்கள்? அதாவது ஒருவர் பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்கிறார். அதில் பணம் வாங்குவதை வேண்டுமானால் நிரூபிக்க முடியும், ஆனால் அவர் யாருக்கு வாக்களித்தார் என்பதை எப்படி நிரூபிக்க முடியும்? ஏனெனில் வாக்களிப்பது என்பது இரகசியமானது, அப்படி இரகசியமாக வாக்களிப்பதுதான் வாக்களிப்பவரின் ஜனநாயக உரிமை என்று வேறு பெருமை பேசுகிறார்கள். மேலும் ஒருவர் பணம் வாங்கிக் கொண்டு அந்த கட்சிக்கு மாறாக வேறு கட்சிக்கு கூட வாக்களிக்க முடியும், அதையும் ஏன் என்று கேட்க முடியாதல்லவா? அல்லது வாக்களித்த ஒவ்வொருவரையும் எந்த கட்சிக்கு வாக்களித்தீர்கள் என்று பரிசோதித்து பார்க்க முடியுமா? ஆக இவர்களது நோக்கம் ஜனநாயகத்தை காப்பாற்றுவதா, இல்லை பாமர மக்களை மிரட்டுவதா?

பணம் வாங்கிக் கொண்டு மக்கள் வாக்களிப்பது அவர்களது சுயமரியாதையை இழப்பதாகும் என்று சுயமரியாதையில் கொடிகட்டிப் பறக்கும் நடுத்தர வர்க்கம் சலித்துக் கொள்கிறது. போகட்டும், பொறியியல் கல்லூரியில் மகனுக்கு சீட்டு வாங்க வேண்டுமென்று சில பல இலட்சங்களை வாரிக் கொடுப்பது மட்டும் சுயமரியாதையா? மகனை விடுங்கள் நாலைந்து வயது குழந்தைக்கு எல்.கே.ஜி சீட்டு வாங்குவதற்கு கூட சில பல ஆயிரங்களை எந்த எதிர்ப்புமின்றி வாரி இறைப்பது கூட சுயமரியாதைதானா? பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு எதிராக சிலர் தெருவுக்கு வந்து போராடும்போது இவர்கள் அதில் சேர்ந்து குரலெழுப்புவதற்கு கூட பயப்படுகிறார்களே, இவர்களா ஏழை மக்களின் சுயமரியாதை குறித்து கவலைப்படுவது?

இன்னும் சிலர் வாக்களிப்பது புனிதமான ஜனநாயகக் கடமை என்பதால் பணம் வாங்கிக்கொண்டு வாக்களிப்பது அந்த புனிதத்தை கெடுக்கும் செயல் என்று கவலைப்படுகிறார்கள். ஆனானப்பட்ட வெங்கடாசலபதிக்கே ஸ்பெசல் தர்ஷன் என்று பத்தாயிரம் ரூபாய் கட்டணம் வைத்து அனுமதிக்கிறார்களே அதில் கெடாத புனிதமா? இல்லை நம்ம ஜக்கி வாசுதேவின் ஈஷா மையத்தில் கிண்டி கொடுக்கப்படும் யோக அல்வாவுக்காக பல ஆயிரங்களை கட்டணமாக வாங்குகிறார்களே, அது புனிதத்தை கெடுப்பதில்லையா? ஆக ஆன்மீக சரக்குகளே இப்படி விலை வைத்து விற்கப்படும்போது ஆப்ட்ரால் ஒரு வாக்கு அதுவும் எந்த பிரயோசனமும் இல்லாத சரக்கை விற்பதில் என்ன தவறு? இன்னும் கொஞ்சம் தேசபக்தி ரேஞ்சில் பார்த்தால் பாராளுமன்றத்திற்கே தெரியாமல் அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டாரே மன்மோகன் சிங் அது இந்தியாவின் இறையாண்மை புனிதத்தை ‘கற்பழிப்பே’ செய்திருக்கிறதே?

இவர்களின் கவலை எல்லாம் ஜனநாயகத்தை காப்பாற்றுவதில் இல்லை. ஏழை மக்களின் மீது விலை வாசி உயர்வு, வேலையின்மை முதலான பிரச்சினைகளை தள்ளிவிடுவது போல இந்த போலி ஜனநாயகத்தின் யோக்கியதைக்கு காரணம் அவர்களே என்ற மேட்டிமைத்த் திமிர்தான் இதில் வெளிப்படுகிறது.

நிலம் வைத்திருப்பவன் அதை விற்கிறான், பங்குகள் வைத்திருப்பவன் அதை விற்று இலாபம் பார்க்கிறான், அது போல விற்பதற்கு ஏதுமில்லாத ஏழைகள் தங்கள் வாக்குகளை விற்பனை செய்வதில் என்ன தவறு?

முதலில் இந்த பணம் பெறும் பிரச்சினையை கொஞ்சம் விரிவாக ஆய்ந்து பார்க்கலாம். எல்லா கட்சிகளும் தமது தேர்தல் வாக்குறுதிகளில் இலவசங்களை அள்ளி விடக் காரணம் என்ன? அவையெல்லாம் பலரது வாழ்வில் ஏக்கப் பொருளாய் மட்டும் இருப்பது மட்டுமல்ல, கல்வி, சுகாதாரம், வேலை முதலான அனைத்திலும் அவர்களது உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. அவர்களது உரிமையை பறித்து கொண்டவர்கள் அப்படி பறித்த உரிமையின் விளைவாக கிடைத்த சுருட்டலில் இருந்து சிலவற்றை கிள்ளிக் கொடுக்கிறார்கள். தமது உரிமைகள் பறிக்கப்பட்டதை உணராத மக்கள் அல்லது அப்படி உணர்ந்தும் அதற்கு தீர்வு தேட முடியாத நிலையிலிருக்கும் மக்கள்தான் தமது வாக்குகளை அளிப்பதற்கு சிலநூறு ரூபாய்களை வாங்குகிறார்கள்.

ஆக அந்த மக்களது பறிக்கப்படும் உரிமைகள் குறித்து  கவலைப்படாத எவரும் அவர்கள் வாக்களிப்பதற்காக பணம் வாங்குவது குறித்து கேள்வி கேட்பதற்கு கூட தகுதியற்றவர்களே. ஆனால் அந்த உரிமைகளை போராடிப் பெற வேண்டும் என்று அவர்களிடம் வேலை செய்கின்ற எம்மைப் போன்ற புரட்சிகர சக்திகள் மட்டும்தான் அப்படி பணம் வாங்குவதை தவறு என்று மக்களிடம் பிரச்சாரம் செய்யும் தகுதி படைத்தவர்கள். ஆம். நாங்களும் வாக்களிப்பதற்கு பணம் வாங்குவதை மட்டுமல்ல வாக்களிப்பதையே எதிர்த்து பிரச்சாரம் செய்கிறோம். இது வேறு, அது வேறு.

அடுத்து சோனியா, கருணாநிதி, ஜெயலலிதா முதலானோர் கூட்டத்திற்கு அழைத்து வரப்படும் மக்கள் கூட ஆளுக்கு நூறோ அல்லது இருநூறு ரூபாய் கொடுத்துத்தான் திரட்டப்படுகின்றனர். அதற்கும் காரணம் ஏழ்மைதான். இல்லையென்றால் வேகாத வெயிலில் மேக்கப் போட்ட ஜெயலலிதாவின் எழுதி வைக்கப்பட்ட உரையை யார் கேட்கப்போகிறார்கள்? முடிந்தால் தேர்தல்  கமிஷன் இதை தடுத்து பார்க்கட்டுமே? கூட்டம் கூட்டுவதற்கு யாரும் பணம் கொடுக்க கூடாது, வாகனங்களை ஏற்பாடு செய்யக்கூடாது என்றெல்லாம் அவர்கள் செய்யமாட்டார்கள். ஏன்? கார்ப்பரேட் கட்சிகளின் அரசியல் ஷோக்களுக்கு இப்படித்தான் ஆள் பிடிக்கமுடியும், அப்படி கூட்டினால்தான் அவர்களது அரசியல் நடவடிக்கை வெளியுலகிற்கு தெரியுமென்பதால் அதை அனுமதிக்கிறார்கள்.

இதைத் தாண்டி இப்போது தேர்தல் கூட ஒரு திருவிழா என்ற தகுதியை இழந்து விட்டது. கட்சித் தொண்டர்களின் சுறுசுறுப்பான வேலைகளையும், தெருமுனைக்கூட்டம் துவங்கி பொதுக்கூட்டம் வரையிலும் திரளான மக்கள் பங்கேற்ப்பதையும் இப்போது பார்க்க முடியாது. இனிவரும் காலங்களில் தேர்தல் என்பது வாக்களிப்பது என்பதோடு மட்டும் முடிந்து விடும். மற்ற விசயங்கள் எல்லாம் தொலைக்காட்சிகளில் மட்டும்தான் என்ற நிலை தோன்றும். இதனால் ஏற்படும் இழப்பு என்ன?

இந்த போலி ஜனநாயக அரசியிலில் கூட மக்கள் இடம்பெற முடியாது என்ற நிலைமைதான் தோன்றும். அப்படி தோன்றும் பட்சத்தில் அரசு என்பது தனது பாசிச நடவடிக்கைகளை எதிர்ப்பே இன்றி அல்லது எதிர்ப்பு காட்டுவதற்கு வழியின்றி நிறைவேற்றும்.

இன்று தேர்தல் கமிஷனை எதிர்த்து சண்டாமாருதம் செய்யும் கருணாநிதிக்கு கூட கவலை இதுவல்ல. தனது கட்சியினர் திருமங்கலம் ஸ்டைலில் வேலை செய்ய முடியவில்லையே, அ.தி.மு.கவிற்கு மட்டும் அதற்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறதே என்பதுதான் அவரது கவலை. மக்கள் அரசியல் நடவடிக்கைகளிலிருந்து நீக்கப்படுவது அவருக்கும் உடன்பாடனதுதான்.

சில அறிவாளிகள் 49ஓ குறித்து பிரச்சாரம் செய்கின்றனர். யாருக்கும் வாக்கு இல்லை என்பதை பதிவு செய்வதன் மூலம் தமது எதிர்ப்பை காட்டலாம் என்கின்றனர். வாக்களிப்பது மட்டும் இரகசியம் என்று இருக்கும்போது வாக்கில்லை என்பது மட்டும் வெளிப்படையாக தெரியும் வண்ணம் அமைத்திருக்கிறார்கள். இதனாலேயே யாரும் தைரியமாக இதை செய்யப் போவதில்லை. ஒரு வேளை நாளை வாக்களிக்கும் எந்திரத்திலேயே 49ஓ கொண்டுவந்தால் பெருந்திரளான மக்கள் அதில் வாக்களிப்பார்கள். ஆனால் அப்படி சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வதை ஆளும் வர்க்கம் விரும்பாது. ஆகவேதான் இந்த போலி ஜனநாயகத்தை வீழ்த்துவதற்கு இந்த தேர்தலையே நாம் புறக்கணிக்க வேண்டும் என்கிறோம்.

தேர்தல் கமிஷனது நடவடிக்கைகள் மூலம் தேர்தல் சரியாக நடக்கப் போகிறது என்றோ, அதன் மூலம் தி.மு.கவா, இல்லை அ.தி.மு.கவா யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்றுதான் நாம் கவலைப்படுகிறோம். அல்லது ஆர்வம் கொள்கிறோம். ஆனால் இந்த தேர்தல்மூலம் நாம் நமது அடிப்படை உரிமைகளை இழந்திருக்கிறோம் என்பதால் இதில் மக்கள் தோல்வியடைந்திருக்கின்றனர் என்பதுதான் முக்கியமானது, கோபத்திற்குரியது.

________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

தேர்தல் 2011

விக்கி லீக்ஸ்

 

அண்ணா ஹசாரே: ஊடகங்களின் பிரைம் டைம் விளம்பரம்!

246

அண்ணா ஹசாரே

ஊடகங்களின் திடீர் ஊழல் எதிர்ப்பு: ஒரு நேர்த்தியான விளம்பரத்தைப் போல…

கிரிக்கெட் உலகக் கோப்பைக்குப் பிறகு தேசிய அளவிலான முதலாளித்துவ செய்தி ஊடகங்கள் ‘தேச பக்தியின்’ அடுத்த சுற்றை ஆரம்பித்துவிட்டன. டைம்ஸ் நௌ, என்.டி.டீ.வி, சி.என்.என் ஐ.பி.என் உள்ளிட்ட ஆங்கில செய்திச் சேனல்களில் பளீர் மேக்கப்பில் தோன்றும் செய்தியறிவிப்பாளர்களும் விருந்தினர்களும்  இந்தியாவுக்கும் ஊழலுக்கும் இடையே இறுதி யுத்தம் நடப்பதாக பிரகடனம் செய்கிறார்கள். இந்தியா முழுவதும் கொந்தளிப்பில் இருப்பதாக திகிலூட்டும் பின்னணி இசை அதிர அறிவிக்கிறார்கள். ஊழலை எதிர்த்து தில்லி, மும்பை, அகமதாபாத், ஹைதராபாத், பெங்களூரு, சிரீநகர், கொல்கொத்தா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நடக்கும் புனிதப் போருக்கு அமெரிக்கா உள்ளிட்ட உலகநாடுகளில் இருக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களும் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். கிரிக்கெட்டோ இல்லை ஊழலோ எதுவாக இருந்தாலும் தேசபக்தியை விட்டுக்கொடுக்க முடியாதல்லவா?

நேரடிச் செய்தி ஒளிபரப்புகளில் மெழுகுவர்த்தியும் கையுமாகத் தோன்றும் ஊழல் ஒழிப்புப் ‘போராட்டக்காரர்கள்’, இதை விட்டால் வேறு வாய்ப்பே இல்லையென்கிறார்கள். இப்போது விட்டால் இனியெப்போதும் ஊழலை ஒழிக்கும் சந்தர்ப்பம் அமையாது என்கிறார்கள். நேரடி ஒளிபரப்பு ஒன்றில் பேட்டியளித்த பெங்களூரைச் சேர்ந்த சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரியும்  ‘போராட்டக்காரர்’ ஒருவர், “இன்று காலை எங்க வீட்ல வேலை பார்க்கும் பெண்மணியிடம் கேட்டேன். அவருக்கு லோக்பால்  என்றால் என்னவென்றே தெரியவில்லை. என்னவொரு அநியாயம்? இப்படியும் அறிவில்லாத மக்கள் நாட்டில் வாழ்கிறார்களே? அதனால் தான் ஆபீஸ் முடிந்து வீட்டுக்குப் போகும் வழியில் வந்து போராடிவிட்டுப் போகலாம் என்று வந்துள்ளேன்” என்கிறார். இதைப் போன்ற ‘இலட்சிய வெறியுடன்’ பெருந்திரளான ‘மக்கள்’ நாடெங்கும் கூட்டம் கூட்டமாகத் திரண்டு மெழுகுவர்த்தி ஊர்வலம் நடத்திக் கொண்டிருப்பதாக ஆங்கிலச் செய்தி ஊடகங்கள் அறிவிக்கின்றன. இதனால் ஐ.பி.எல் போட்டிகளுக்கான கொண்டாட்டம் குறைந்துவிடவில்லை.

டைம்ஸ் நௌ சேனலில் தோன்றிய ஷோபா டே, தனது லிப்ஸ்டிக் கலைந்ததைக் கூடப் பொருட்படுத்தாமல் சத்தியாவேசம் பொங்க ஊழல் கறைபடிந்த அரசியல்வாதிகளையும் அதிகார வர்க்கத்தையும் போட்டுக் காய்ச்சியெடுத்து விட்டார். பாலிவுட் நடிகர் ஆமீர்கானும் ஊழல் எதிர்ப்புப் போருக்கு ஆதரவு தெரிவித்து விட்டார். கிரிக்கெட் உலகக் கோப்பையை வெல்ல ஒட்டுமொத்த இந்தியாவும் இந்திய அணிக்கு ஆதரவளித்ததைப் போலவே இப்போதும் ஊழலை ஒழிக்க ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று கோரியிருக்கிறார். அவர் மட்டுமல்லாமல், பல்வேறு இந்தி நடிகர்களும் ஊழலை உண்டு இல்லையென்று ஆக்கிவிடுவதாக சபதம் ஏற்றுக் கொண்டிருப்பதாக ஆங்கிலச் செய்தி ஊடகங்களில் தொடர்ந்து அறிவிப்புகள் வருகின்றன. இதில் உச்சகட்ட பரபரப்பான செய்தியென்னவென்றால், காங்கிரஸ் தலைவி அன்னை சோனியாவும் ஊழல் எதிர்ப்புப் போருக்கு ஆதரவு தெரிவித்து விட்டது தான்.

ஏதோ இந்தியா முழுவதும் படுபயங்கரமான மக்கள் கிளர்ச்சி நடந்து வருவதைப் போன்ற இந்த சித்தரிப்புகள் எல்லாம் கடந்த ஐந்தாம் தேதியில் இருந்து தான் ஆரம்பித்தது. அன்று தான் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த பிரபல சமூக சேவகரும் காந்தியவாதியுமான அண்ணா ஹசாரே தில்லி ஜந்தர் மந்தரில் தனது உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருந்தார். ஒரு பக்கம் பகத்சிங் தோழர்களும் அதற்கு எதிர்புறம் அவர்களைப் பார்த்து பொக்கைவாய் காட்டிச் சிரிக்கும் காந்தியும் பிரிண்ட் அடிக்கப்பட்ட பெரிய ப்ளக்ஸ் பேனர் கட்டப்பட்ட மேடையில், பின்னணியில் காந்தி பஜனைப் பாடல்கள் ஒலிக்க, காந்தி குல்லாயை மாட்டிக் கொண்டு, ஒரு காந்தியப் புன்னகையோடு தனது உண்ணாவிரதத்தை அண்ணா ஹசாரே ஆரம்பித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து முதலாளித்துவ ஊடகங்களால் முன்னெடுக்கப்பட்டு, ஆங்கில இணையத் தளங்களிலும் சமூக வலைத் தளங்களிலும்  பரபரப்பான விவாதப் பொருளாகி, தற்போது நாடெங்கும் உள்ள பல்வேறு பெருநகரங்களில் இருக்கும் படித்த நடுத்தர வர்க்கத்தினரிடையே இது ஒரு இயக்கமாக வளர்ந்து வருகிறது. உச்சகட்டமாக, வரும் ஞாயிற்றுக் கிழமையை மஞ்சள் டி-சர்ட், மஞ்சள் தொப்பி சகிதம் ஒரு ‘மஞ்சள் ஞாயிறாக’ கடைபிடிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். இதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள வலைத்தளத்தில் ஏன் ஞாயிற்றுக் கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதற்குக் கொள்கை விளக்கமாக ‘அது ஒரு விடுமுறை நாள்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேலை நாளைக்கூட தியாகம் செய்ய முடியாதவர்கள் ஊழலை எதிர்த்து என்ன செய்ய முடியும் என்று நீங்கள் தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம்.

ஊடகங்களின் கேமரா வெளிச்சத்தில் முன்னெடுக்கப்படும் இந்தப் போராட்டங்களைப் பற்றி மேலும் விரிவாகப் பார்க்கும் முன், அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதப் பின்னணியைச் சுருக்கமாகப் பார்த்துவிடுவோம்.

அண்ணா ஹசாரேவின் ஆதரவாளர்கள் கோரும் சீர்திருத்தங்கள் – லோக்பால் மசோதாவின் பின்னணி!

பிரதமர், அமைச்சர்கள், உள்ளிட்ட உயர்மட்டப் பொறுப்புகளில் இருப்போர் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க வகை செய்யும் லோக்பால் மசோதா, கடந்த 42 வருடங்களாக நிறைவேறாமல் பாராளுமன்றக் கிணற்றுக்குள் போட்ட கல்லாக அப்படியே கிடக்கிறது. 1969-ஆம் ஆண்டிலிருந்து 2008-ஆம் ஆண்டு வரையில் பத்து முறை இம்மசோதா அறிமுகம் செய்யப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதாவது, வின்னர் கைப்பிள்ளையின் வார்த்தைகளில் சொல்வதானால், கட்சி பாகுபாடின்றி சர்வகட்சிகளும் கூட்டாகச் சேர்ந்து கொண்டு இம்மசோதாவைப் பாராளுமன்ற மூத்திரச் சந்தினுள் போட்டு ரவுண்டு கட்டி தெளிய வைத்து தெளிய வைத்து கும்மியிருக்கிறார்கள்.

இது இவ்வாறிருக்க, சமீப நாட்களாக வெளியாகி வரும் ஊழல் செய்திகள் இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு இமாலய ஊழல்களாக இருக்கின்றது. காமென்வெல்த் விளையாட்டு ஊழல், ஆதர்ஷ் வீட்டு மனை ஒதுக்கீட்டு ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஹசன் அலியின் வருமான வரியேய்ப்பு ஊழல், இஸ்ரோவின் எஸ்-பேன்ட் ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று கரையைத் தாக்கும் கடலின் அலைகளைப் போல மாறி மாறி இந்திய மக்களை ஊழல் செய்திகள் தொடர்ந்து தாக்கி வருகின்றன. இவை பொதுவில் பத்திரிகைகள் வாசிக்கும் படித்த நடுத்தர வர்க்க மக்கட் பிரிவினரிடையே ஓரளவுக்குத் திகைப்பையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில், பாபா ராம்தேவ், ரவிசங்கர் பாபா போன்ற ஆன்மீக பிரபலங்களை உறுப்பினர்களாகக் கொண்ட  ஊழலுக்கு எதிரான இந்தியா எனும் என்.ஜி. ஓ அமைப்பின் சார்பாக, அரசினால் முன்வைக்கப்படும் லோக்பால் மசோதாவுக்கு மாற்றாக முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, கிரன் பெடி, சாந்தி பூஷன், பிரஷாந்த் பூஷன் போன்றோரால், ஜன் லோக்பால் என்கிற மசோதாவின் முன்வரைவு ஒன்றைத் தயாரித்து முன்வைக்கப்பட்டிருக்கிறது.

அரசினால் முன்வைக்கப்படும் லோக்பால் மசோதாவின் படி உண்டாக்கப்படும் ஊழல் தடுப்பு அமைப்பிற்கு ஒரு ஆலோசனைக் கமிட்டிக்கு உண்டான அதிகாரம் மட்டும் தான் உள்ளது. மேலும், புகார்கள் ஏதும் இல்லாத நிலையிலும் ஒரு விவகாரம் பற்றி சுயேச்சையாக விசாரிக்கும் அதிகாரம் (suo moto) இல்லை. மட்டுமல்லாமல், புகார்களை சாதாரண பொதுமக்களிடம் இருந்து பெரும் அதிகாரமும் கிடையாது; மக்களவை சபாநாயகரோ மாநிலங்களவைத் தலைவரோ அளிக்கும் புகார்களை மட்டுமே விசாரிக்க முடியும் அளவிற்குத் தான் அதன் அதிகார வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மாற்றாக ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ அமைப்பினால் முன்வைக்கப்படும் ஜன்லோக்பால் மசோதா, ஊழல் புகார்களின் பேரில் முதல் தகவல் அறிக்கை (FIR) தாக்கல் செய்யும் உரிமை, சுயேச்சையாய் விசாரிக்கும் அதிகாரம், பொதுமக்களிடமிருந்து வரும் புகார்களை ஏற்று விசாரிப்பது, அரசியல் தலைவர்களை மாத்திரமல்லாமல் அரசு உயரதிகாரிகளையும் விசாரிக்கும் உரிமை போன்றவற்றை வலியுறுத்துகிறது. இது மட்டுமல்லாமல், சி.பி.ஐயின் ஊழல் தடுப்புப் பிரிவோடு சேர்ந்து லோக்பால் அமைப்பு தேர்தல் கமிஷனைப் போன்றதொரு சுயேச்சையானதொரு அமைப்பாகச் செயல்பட வேண்டும் என்பதும் இவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளாகும்.

ஊழலுக்கு எதிரான இந்தியா முன்வைத்துள்ள மசோதா முன்வரைவை ஏற்றுக் கொள்ள வலியுறுத்தியும், லோக்பால் மசோதாவை இறுதி செய்ய அரசு போடப்போகும் கமிட்டியில் அரசே நியமிக்கும் உறுப்பினர்கள் மட்டுமல்லாமல், சிவில் சமூகத்தைச் சார்ந்தவர்களையும் இணைத்து ஒரு கூட்டுக் கமிட்டி உருவாக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

மேற்படி மசோதா முன்வரைவைத் தயாரித்த ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ அமைப்பினர், இதை வலியுறுத்தி பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் சோனியா காந்திக்கும் தொடர்ந்து கடிதம் எழுதினார்களாம். இதற்குப் பேசாமல் அந்தக் கடிதங்களை அவர்கள் நேரடியாக ஒபாமாவுக்கே அனுப்பியிருக்கலாம்; அல்லது குறைந்தபட்சம் இங்கேயிருக்கும் அமெரிக்கத் தூதரகத்துக்காவது அனுப்பியிருக்கலாம். சாமியை விட்டுப் பூசாரியிடம் வரம் கேட்டுக் கெஞ்சி இருக்கிறார்கள். போகட்டும்.

மற்ற போராட்டங்களை ஒடுக்கும் ஆளும் வர்க்கம் அண்ணா ஹசாராவை ஆதரிப்பது ஏன்?

மத்திய லஞ்ச ஒழிப்புத் துறையின் தலைமைக் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட அதிகாரியே பேர் போன திருடனாக இருந்தது சமீபத்தில் தான் அம்பலமானது. அது ஊரெல்லாம் தெரிந்து, சகலரும் காறித் துப்பிய பின்னரும் ‘அப்டியா எனுக்கு ஒன்னியுமே தெரியாதே’ என்று விளக்கம் அளித்த நெம்ப நல்லவர் தான் பிரதமர். அப்போது மட்டுமா? இஸ்ரோவின் எஸ்-பேன்ட் ஊழல் உள்ளிட்டு ஒவ்வொரு முறை முறைகேடுகள் பற்றிய விவரங்கள் அம்பலமாகிய போது சலிக்காமல் அவர் அளிக்கும் விளக்கம் ‘தெரியாது’ தான். அந்தக் கல்லுளிமங்கனுக்குத் தான் அண்ணா ஹசாரே கடிதம் எழுதியதாகச் சொல்கிறார். மவுனமோகனின் மற்ற அரசியல் நடவடிக்கைகள் குறித்து அண்ணா ஹசாரேவுக்கு எந்த புகாரும் இல்லை. அவர் எதிர்பார்த்தது ஊழல் குறித்த ஆலோசனைக்கு ஒரு பதில்தான். ஆனால் அவர் எதிர்பார்த்திற்கும் மேலான பதில்கள் பலரிடமிருந்தும் படையெடுத்து வருகின்றன.

இதில் நமது கவனத்திற்குரிய அம்சம் என்னவென்றால், நாடெங்கும் போராடும் மக்கள் மேல் பாய்ந்து குதறும் அரசு, அண்ணா ஹசாரேவிடம் பொறுமையாகப் பதிலளிக்கிறது. ஒன்றுமே தெரியாத பிரதமரே கூட முன்வந்து அண்ணாவிடம் கோரிக்கை வைக்கிறார். சோனியா காந்தி அண்ணாவின் போராட்டத்தை அரசு புரிந்து கொள்ளும் என்று பரிவோடு பேசுகிறார். பாரதிய ஜனதா, போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இந்த உண்ணாவிரதத்தை ஆதரிக்கின்றனர். பிரதமரின் பரிவு, சோனியாவின் ஆதரவு, எதிர்கட்சிகளின் ஆதரவு – இதற்கெல்லாம் மணிமகுடமாக – இத்தனை பேரின் ஆதரவோடு சேர்த்து பீகாரின் மு.க அழகிரியான பப்புயாதவின் ஆதரவையும் அண்ணா ஹசாரே பெற்றுள்ளார். கொலைக் குற்றச்சாட்டு ஒன்றின் பேரில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பப்பு யாதவ், அண்ணாவுக்கு ஆதரவாகத் தாமும் உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்துள்ளார். ஒரு கிரிமினலைக்கூட ஒரு காந்தியவாதி திருத்திவிட்டார் என்றும் நீங்கள் கருதிக் கொள்ளலாம்.

தற்போது ஊடகங்களில் போராட்டக்காரர்களாகவும் புரட்சிக்காரர்களாகவும் கிளர்ச்சியாளர்களாகவும் ஒளிவட்டம் போட்டுக் காட்டப்படும் நபர்கள் யாரும் அரசின் ஊழல்களால் பாதிக்கப்பட்டு அனைத்தையும் இழந்தவர்கள் அல்ல. இவர்கள் தமது சொந்த வாழ்க்கையின் சகல சவுகரியங்களையும் அனுபவித்துக் கொண்டு, சொகுசான வேலைகளில் இருந்து கொண்டு ஓய்வு நேரத்தில் கொஞ்சம் சமூக உணர்வு வந்திருப்பதாக கருதிக் கொள்பவர்கள். சிலர் கேமராமுன் பேட்டியளித்த போது வெவ்வேறு பாலிஷான வார்த்தைகளில் இதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளத் தயங்கவும் இல்லை. இதே அண்ணா ஹசாரே ஒரு பத்து நாளைக்கு முன் – கிரிக்கெட் உலகக் கோப்பை நடந்து கொண்டிருந்த சமயத்தில் – தனது உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருந்தால் ஜந்தர் மந்தரில் ஒரு குஞ்சு குளுவான் கூட கூடியிருக்காது என்பது தான் நிதர்சனம்.

இது ஒருபக்கம் இருக்க, தற்போது ஆங்கில செய்திச் சேனல்களின் கேமாராக்களின் முன் வேலை முடிந்து வீட்டுக்குப் போகும் வழியில் பொங்கியெழுந்து கொண்டிருக்கும் இதே நடுத்தர வர்க்கத்தினர் தான் மத்திய இந்தியாவில் இந்தியாவின் அரிய வளங்களைப் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு இந்திய அரசு படையலிட்ட போதும் அதை எதிர்த்து பழங்குடியின மக்கள் போராடிக் கொண்டிருக்கும் போதும், அந்தப் போராட்டத்தின் மேல் இரத்த வெறியோடு இராணுவம் பாய்ந்து குதறிக் கொண்டிருக்கும் நிலையிலும் அவற்றையெல்லாம் எந்தக் கேள்வியுமின்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பவர்கள். அப்போது மட்டுமல்ல, இன்னும் பல்வேறு சந்தர்பங்களில் மத்திய அரசு தனது மிருகத்தனமான ஒடுக்குமுறையை வடகிழக்கிலும் காஷ்மீரிலும் கட்டவிழ்த்து விட்ட போதும் அதை எதிர்த்து சாமானிய மக்கள் போராடிய போதும் பாப்கார்னைக் கொறித்துக் கொண்டும் கோக்கை அருந்திக் கொண்டும் ஆதரித்தவர்கள்.

அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதம் தொடங்கி மூன்றாம் நாளிலேயே அவரின் கோரிக்கைகளில் ஒன்றான லோக்பால் மசோதாவை இறுதி செய்வதற்கான கூட்டுக் கமிட்டியை அமைக்க அரசு ஒப்புக் கொண்டு விட்டது. காங்கிரசு பார்க்காத கமிட்டியா? இந்த லோக்பால் மசோதாவும் கூட நாற்பத்திரண்டு ஆண்டுகளாக பல்வேறு கமிட்டிகளில் தான் மூழ்கிக் கிடந்தது. இத்தனை நாளும் குட்டையில் முங்கிக் கிடந்த லோக்பால் மசோதாவைத் தூக்கிக் குளத்தில் போடப் போகிறார்கள்.  அநேகமாக இன்னும் இரண்டொரு நாளில் கமிட்டித் தலைவர் யாரென்பதை முடிவு செய்து விட்டு ஊழல் எதிர்ப்புப் போர் ஒரு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு விடும். அதற்கு மேலும் இதை நீட்டித்தால் ‘போராட்டக்காரர்கள்’ உற்சாகத்தை இழக்கவும் கூடும். இந்த ஊழல் எதிர்ப்பு போராட்டத்தை எந்த வரம்பிற்குள் இருந்து கொண்டு செய்ய வேண்டும் என்பது அண்ணா ஹசாரேவுக்கு தெரியாமல் போனாலும் ஊடகங்களுக்கு நன்கு தெரியும்.

ஊழலை எதிர்ப்பதாகச் சொல்லும் இவர்களின் இந்தப் போராட்ட வழிமுறையே உண்ணாவிரதம் என்ற அரதப்பழசான ஆபத்தில்லாத முறையாக இருப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். உங்களுக்கு இப்போது வேறு சில கேள்விகள் தோன்றியிருக்க வேண்டும். மக்கள் போராட்டங்களை அடக்கி ஒடுக்கியே பழக்கப்பட்ட அரசு இதை மட்டும் பரிவோடு பார்ப்பது ஏன்? எங்கெல்லாம் மக்கள் போராட்டங்கள் நடக்கிறதோ அங்கெல்லாம் போராடும் மக்களைத் தீவிரவாதிகளாகவும் பயங்கரவாதிகளாகவுமே சித்தரித்துப் பழக்கப்பட்ட கார்ப்பரேட் ஊடகங்கள் இதற்கு மட்டும் ஏன் இத்தனை முக்கியத்துவம் அளிக்க வேண்டும்? உண்மையில் இவர்கள் எதிர்த்துப் போராடப் போவதாகச் சொல்வது ஊழலைத் தானா?

எது ஊழல்? ஊழலின் ஊற்று மூலம் எது?

தற்போது ஊழலை எதிர்க்க ஆங்கில செய்திச் சேனல்களின் ஸ்டூடியோக்களில் கரம் கோர்த்திருக்கும் நடுத்தரவர்க்க முதலாளித்துவ அறிவுஜீவிகள் ஊழலைப் புரிந்து கொண்டிருக்கும் விதம் அலாதியானது. பேருந்தில் ஒருவன் பிக்பாக்கெட் அடித்தால் அது திருட்டு; அதே அம்பானி அரசாங்கத்திடமிருந்து மக்கள் வரிப்பணத்தைக் கொள்ளையடித்தால் அது தொழில் திறமை; அரசாங்கமே முன்வந்து வரி விலக்குகள் மூலம் மக்கள் வரிப்பணத்தை அம்பானியின் சட்டைப் பாக்கெட்டில் வைத்தால் அது பொருளாதார சீர்திருத்தம்.  உலகமயமாக்கத்தின் விளைவாய் நாட்டின் வளங்களையும், பொதுத்துறைளையும் தனியார் முதலாளிகள் ஒட்டச் சுரண்டுவதோ திருடுவதோ இவர்களுக்குப் பிரச்சினையாகத் தெரிவதில்லை; அது முறையாக நடந்ததா, சட்டப்படி நடந்ததா என்பது தான் பிரச்சினை.

நாட்டு மக்களுக்குச் சொந்தமானதொரு இயற்கை வளமான ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையைத் தனியாருக்கு விற்றதைப் பற்றி இந்த அறிவுஜீவிகளுக்குக் கவலையில்லை – ஏன் அதையே முறையான விதிகளைக் கையாண்டு இராசா செய்யவில்லை என்பது தான் இவர்களின் சத்தியாவேசத்தின் ஜுவாலையைத் தூண்டிவிடுகிறது. சந்தையில் டன் ஒன்றுக்கு 7000 ரூபாய் வரை விலை போகும் இரும்புத் தாதுவை ரெட்டி சகோதரர்கள் வெறும் 27 ரூபாயை அரசுக்குக் கொடுத்து விட்டு அள்ளிச் செல்வது ஊழல்  இல்லையென்கிறார்கள். ஏனெனில் அவரிடம் முறையான ஒப்பந்தமிருக்கிறது சட்டப்பூர்வமான ஒப்புதலமிருக்கிறது. வி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் பங்குகளைக் கைப்பற்றிய டாடா, பலநூறு கோடி மதிப்புள்ள அதன் அசையாச் சொத்துக்களை இலவச இணைப்பாகப் பெற்றதோ, அதன் ரிசர்வ் நிதியையே கடத்திக் கொண்டு போனதோ இவர்களைப் பொறுத்தளவில் ஊழல் இல்லை – ஏனெனில் அது முறையாக சட்டப்பூர்வமாக நடந்துள்ளது.

தனியார்மயப் பொருளாதாரக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்ட கடந்த இரண்டு பத்தாண்டுகளில் எண்ணற்ற பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு அடிமாட்டு விலைக்குத் தாரைவார்க்கப் பட்டுள்ளது. இதுவும் போதாதென்று, ஒவ்வொரு வருட பட்ஜெட்டிலும் லட்சக்கணக்கான கோடிகளை வரிச்சலுகைகளாக தனியார் ஏகபோக முதலாளிகளுக்கு அரசு வாரி வழங்கி வருகிறது. தேசத்தின் பொருளாதாரமே பெரும் சூதாட்டமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருட்கள் முதற்கொண்டு ஊக பேர வர்த்தகத்தில் இணைக்கப்பட்டு விலைவாசிகள் நம்ப முடியாத அளவுக்குச் செயற்கையாக ஏற்றப்படுகிறது. இவையெதுவும் ஊழல் என்பதாக இவர்களால் புரிந்து கொள்ளப்படவில்லை. வெளிநாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாகக் கணக்குக் காட்டி அரசுக்குப் பட்டை நாமம் போடும் அம்பானி இவர்களைப் பொருத்தவரை ஊழல் செய்தவரல்ல; முன்னுதாரணமான தொழிலதிபர்.

அரசு ஏற்று நடைமுறைமுறைப்படுத்தும் பொருளாதாரக் கொள்கைகளே பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் உள்நாட்டுத் தரகு முதலாளிகளுக்கும் சாதகமானதாக உள்ளது. தேசத்தின் வளங்களெல்லாம் கூறு போட்டு ஏகபோக முதலாளிகளுக்கு படையிலிட வகை செய்யும் மறுகாலனியாக்கப் பொருளாதாரக் கொள்கைகளை அரசு ஏற்றுக் கொண்டு விட்டது. இவ்வாறாக, ஊழல் என்பதை  ஏற்கனவே சட்டப்பூர்வமனதாக ஆக்கிவிட்டனர். இதை செயலுக்குக் கொண்டு வரும் வழிமுறைகளை முறையாக நடத்தாமல்  தேனை வழித்துக் கொடுக்கும் போது புறங்கையைக் கொஞ்சம் நக்கிக் கொள்வதை மட்டும் ஊழல் என்பதாக முதலாளித்துவ ஊடகங்கள் முன்னிறுத்துகின்றனர். ஆக, இந்த ஊழல் எதிர்ப்பு வீரர்கள் நம்மிடம் ஔவையாரின் மொழியில் செய்வன திருந்தச் செய் என்கிறார்கள்.

இதனால் தான் தனியார் கம்பெனிகளிடம் தனி ஒப்பந்தங்கள் போட்டு அவற்றின் பங்குகளில் முதலீடு செய்து விட்டு அதன் மதிப்பை சந்தையில் ஊகமாக உயர்த்தும் விதமாக அவற்றின் விளம்பரங்களைச் செய்திகள் போல வெளியிட்ட  டைம்ஸ் நௌ, இந்த ஊழல் எதிர்ப்பு முன்னணியின் ஊதுகுழலாகச் செயல்படுவதைப் பற்றி கூச்சப்படவில்லை. முதலாளிகளுக்குச் சாதகமான நபர்களுக்கு அமைச்சரவைத் துறைகளை ஒதுக்கீடு செய்ய தரகு வேலை பார்த்த பர்க்கா தத், அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதம் பற்றி பெரிய நன்னூல் போல் கேமராவின் முன் பேச வெட்கப்படவில்லை. ஏனெனில், அண்ணாவின் கோரிக்கை எந்தவிதத்திலும் முதலாளிகளின் நலனுக்கும் அவர்களின் அடிவருடிகளாகச் செயல்படும் முதலாளித்துவ ஊடகங்களின் நலனுக்கும் முரண்படவில்லை என்பதில் இருந்தே இவர்களின் ஆதரவு எழுகிறது.

தங்களின் வாழ்வாதாரமான நியாம்கிரி மலையைப் போஸ்கோவிடமிருந்து காப்பாற்ற அதன் கைத்தடியான இராணுவத்தையும் சல்வாஜூடும் குண்டர்படையையும் எதிர்த்து நிற்கும் ஒரு கோண்ட் பழங்குடிக்கும் பெங்களூருவில் இருபத்து நான்குமணி நேரமும் குளிரூட்டப்பட்ட ஏசி அறைக்குள் முடங்கிக் கிடக்கும் ஒரு ஐ.டி கம்பெனி ஊழியருக்கும் ஊழல் பற்றிய பார்வை அடிப்படையிலேயே மாறுபடுகிறது. தனது வாழ்வாதாரமான நிலமே தம்மிடமிருந்து பறிக்கப்படுவதை ஒரு அயோக்கியத்தனமான நடவடிக்கை என்று அவரால் சரியாகப் புரிந்து கொள்ள முடிகிறது. அது தம்மிடமிருந்து திருடப்பட்டுவிட்டால் தமது மக்கள் வாழ்விழந்து போவார்கள் என்பதை உணர்ந்து கொள்வதால் அவர் நிலப்பறிப்பையே ஊழல் என்று சரியாகப் புரிந்து கொண்டுள்ளார் – எதிர்த்துப் போராடுகிறார். ஊடக வெளிச்சத்தில் ஊழலை எதிர்க்கக் கிளம்பியிருக்கும் இந்தத் திடீர்ப் புரட்சியாளர்களோ போஸ்கோவுக்கு அனுமதியளித்ததில் முறையாக டென்டர் கோரப்பட்டதா, யாருக்கும் லஞ்சம் கொடுக்கப்பட்டதா என்று சில்லறை நடைமுறைகளில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர் – நிலம் அபகரிப்பட்டதை ஒரு தொழில் நடவடிக்கையாகவும், நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றும் நடவடிக்கையாகவுமே பார்க்கிறார்கள். இரத்தமும் சதையுமான மனிதர்கள் ஒரு பொருட்டில்லை.

அண்ணா எதைப் பேசுகிறார் என்பதை மட்டும் வைத்து அவருடைய போராட்டத்தின் சாரத்தைப் புரிந்து கொள்ளக் கூடாது; அவர் எதைப் பேசவில்லை என்பதிலிருந்து தான் இந்தப் போராட்டங்களும் உண்ணாவிரதமும் யாருடைய நலனுக்கானது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நாட்டின் வளங்கள் கொள்ளை போவதை ஒரு வழக்குப் போட்டு அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு தடுத்து விட முடியாது. அரசின் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்துத் தொடரப்பட்ட எண்ணற்ற வழக்குகளில் அவை அரசின் கொள்கை முடிவுகள் என்பதால் நீதிமன்றம் அவற்றில் தலையிட முடியாது என்று பல்வேறு சந்தர்பங்களில் அறிவித்துள்ளது. அண்ணாவோ, நடந்து கொண்டிருக்கும் கொள்ளையில் ஏற்படும் சில்லறை நடைமுறைத் தவறுகளையே ஊழல் என்றும் அதை எதிர்த்துப் போராடுவதே ஊழல் எதிர்ப்புப் போராட்டம் என்றும் அறிவிக்கிறார்.

அண்ணா ஹசாரே ஊழலை தோற்றுவிக்கும் தனியார்மயத்தை ஏற்றுக் கொள்கிறார்

இதனால் அண்ணா ஹசாரே இந்த விசயங்களை புரிந்து கொண்டு தவறு செய்கிறார் என்று கருதிவிடக்கூடாது. அவரைப் பொறுத்தவரை இந்த அமைப்பு முறையை அதாவது இந்தியாவின் அரசியல், சமூக, பொருளாதார அமைப்பை அடிப்படையில் ஏற்றுக் கொள்கிறார். அந்த பலத்தில்தான் அவர் ஜன்லோக்பால் சீர்திருத்தத்தைக் கோருகிறார். ஆனால் இந்த அமைப்பு முறையே மக்களைச் சுரண்டும் ஊழலை தன் அடிப்படையாக வைத்திருக்கும் போது நாம் எதை எதிர்த்து போராட வேண்டும்? பளிச்சென்று ஒரு எடுத்துக்காட்டு கூறவேண்டுமென்றால் தாமிரபரணி தண்ணியை கொக்கோ கோலாவுக்கு விற்பது ஊழலா, இல்லை அந்த விற்பனையில் ஒரு கலெக்டர் சில இலட்சங்களை கமிஷனாக பெற்றார் என்பது ஊழலா? முன்னது இந்த நாட்டின் இயற்கை வளத்தை அப்பட்டமாக விற்கிறது. பின்னது அதிகார வர்க்கத்திடம் அன்றாடம் நடக்கும் நிர்வாக ஊழல். இரண்டு ஊழல்களின் பரிமாணங்களும் வேறு வேறானவை. சட்டம் போட்டு கலக்டரையோ, இல்லை மந்திரியையோ தண்டித்து விடலாம். ஆனால் நாட்டை விற்பனை செய்யும் இந்த அரசை எப்படி தண்டிப்பது?

தற்போது நடக்கும் ஊழல் எதிர்ப்பு போராட்டங்களோ, அண்ணாவின் உண்ணாவிரதமோ தமது நோக்கத்திற்கும் நலனுக்கும் எவ்விதத்திலும் முரண்பட்டதல்ல என்பதைப் புரிந்து கொண்டுள்ளதாலேயே ஆளும் கும்பல் இவர்களிடம் பரிவோடு பேசுகிறது. எதார்த்தத்தில் நீதி மன்றங்களும், சட்டமுமே தனியார்மய கார்பொரேட் பகற்கொள்ளைக்கு ஆதரவானதாக இருக்கிறது. உண்மை இப்படியிருக்கும் போது, சட்டவாத நடைமுறைகளைக் கொண்டே ஊழலை எதிர்த்து விடப் போவதாகச் சொல்வதும், அதையே ஊழலுக்கு எதிரான ஆகப் பெரிய போராட்டம் என்பது போலும் சித்தரிப்பது கேடுகெட்ட அயோக்கியத்தனமாகும். இது சுரண்டலுக்கும் ஊழலுக்கும் எதிராக மக்களிடையே இயல்பாக எழும்பக் கூடிய ஆத்திரத்தை மடைமாற்றி விடவே செய்யும். எனவே தான் இந்த போராட்டக்காரர்களிடம் பணிந்து போவது போலும் பரிந்து பேசுவது போலும் ஒரு நாடகத்தை ஆளும் கும்பல் அரங்கேற்றி வருகிறது.

ஒருவேளை இந்தக் கமிட்டியின்  மூலம் வெகுவிரையில் லோக்பால் அமைப்பு  உண்டாக்கப்பட்டு விட்டால் இவர்களே ஊழல் என்று சொல்வதை அது ஒழித்து விடுமா? இல்லை. அந்த அமைப்புக்குத் தலைவராகப் போட பி.ஜே.தாமஸ் போன்ற இன்னொரு அதிகாரி கிடைக்காமலா போய் விடுவார்? ஏற்கனவே மலக்குட்டையில் முக்குளித்துக் கொண்டிருக்கும் உள்ளூர் போலீசு, சி.பி.சி.ஐ.டி, சி.பி.ஐ போன்ற நிறுவனங்களோடு சேர்ந்து புதிதாக இன்னொரு பன்றி என்கிற அளவிலேயே இருக்கும்.

அண்ணாவின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டாலும் அது இந்த அமைப்பு முறையின் அடிப்படையான ஊழலை மாற்றி விடாது. மேலும் முதலாளிகளின் கொள்ளையை நியாயப்படுத்திக் கொண்டே புறங்கையை நக்கியவர்களை மாபெரும் வில்லன்களாக காட்டுவதே இதன் நோக்கம். ஆக அண்ணா ஹசாரேவின் போராட்டத்திற்கு அம்பானியே ஆதரவளித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மும்பையில் நடந்த மெழுகுவர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஒருவர் செய்திச் சேனல் ஒன்றின் கேமரா முன் தான் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வது ஏன் என்று விளக்குகிறார் – “என் தாத்தா காந்தியைப் பற்றி நிறைய சொல்லியிருக்கிறார்.  நான் என் வாழ்நாளில் காந்தியைக் கண்டதில்லை. இப்போது அண்ணாவைப் பார்க்கும் போது காந்தி என்பவர் இப்படித்தான் இருந்திருப்பார் என்று புரிந்து கொள்ள முடிகிறது” என்றார். ஆம், காந்தியும் இப்படித்தான் இருந்தார் – ஒரு மக்களின் நியாயமான எதிர்ப்புணர்ச்சிகளுக்கு ஒரு வடிகாலாய், தன்னெழுச்சியான போராட்டங்களைக் நீர்த்து போக செய்வதற்கான வேலையைத்தான் அவர் செய்தார்.

வருடம் முழுவதும் பிசா, கென்டகி, எம்.டி.வி, ஐ.பி.எல், என்று வாழும் நடுத்தர வர்க்கம் அதற்கு ஊறு இல்லாமல் கொஞ்ச நேரம் காந்தியையும் போற்றுகிறது. வார இறுதி கேளிக்கைளில் கொஞ்சம் சலித்துப் போனால் கோவிலுக்கு போவதில்லையா? ஆக இந்த ஊழல் எதிர்ப்பு கூட வந்து போகும் ஒரு வீக் எண்ட்தான். இது முடிந்த பிறகு அவர்கள் ஐ.பி.எல்லுக்கு போவார்கள். சியர் லீடர்களோடு சேர்ந்து ஆரவரிப்பார்கள். கிரிக்கெட்டோ, ஊழல் எதிர்ப்போ தொடர்ந்து மக்களை ஆரவாரத்தில் வைத்திருப்பதே அவர்களது நோக்கம். அடிப்படையை மாற்றுவது நம் கையில். புரிந்தவர்கள் இந்த உண்ணாவிரதம் தோற்றுவித்திருக்கும் பொய்மையை கலைப்பதற்கு முன்வரவேண்டும்.

_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

விக்கி லீக்ஸ்

யார் கடவுள்? சாயிபாபாவா, பேஸ்மேக்கரா?

யார் கடவுள்? சாயிபாபாவா, பேஸ்மேக்கரா?

”என்னை ஒரு மந்திரவாதியுடன் ஒப்பிடாதீர்கள். என்னிடமிருப்பது  தெய்வீக சக்தி,அதற்கு எல்லை என்பதே கிடையாது. பூமியை வானமாகவும் வானத்தை பூமியாகவும் மாற்றக்கூடிய சக்தி என்னிடமிருந்தாலும் நான் அப்படி செய்யவில்லை. ஏனெனில் அப்படி செய்ய எந்த அவசியமும் இல்லை”

இதைச் சொன்னவர் வேறு யாருமில்லை…. மருத்துவ சாதனங்களின் உதவியால் மூச்சு விட சிரமப்பட்டுக்கொண்டிருக்கும்  சத்ய சாயிபாபாதான்.

வானத்தை பூமியாகவும் பூமியை வானமாகவும் மாற்ற வேண்டிய அவசியமில்லாமல் இருக்கலாம். ஆனால், செயலிழந்து விட்ட அவரது சிறுநீரகங்களையும் நுரையீரலையும் பழைய நிலைமைக்கு மந்திரத்தின் மூலமாவது கொண்டு வர வேண்டிய அவசியம் அவருக்கிருக்கிறது.

பல்லாயிரக்கணக்கான பக்தர்களின்  ஆஸ்த்துமாவையும், கான்சர் கட்டிகளையும் முதுகுதண்டு வடங்களையும் நொடிப்பொழுதில் ‘குணப்படுத்திய’ சாயிபாபா, உலகின் எந்த மூலையிலிருந்தாலும் கஷ்டப்படும் பக்தர்களுக்கு அருகில் சென்று அரவணைத்தும் தடவிக்கொடுத்தும் ‘குணப்படுத்திய’ சாயிபாபா தன்னுடம்பை தானே குணப்படுத்திக்கொள்ளும் அற்புதத்தைக் காண அவரது  பக்தர்கள்  காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவரோ மருத்துவத்தின்  அற்புதத்துக்காக படுக்கையில் காத்துக் கொண்டிருக்கிறார்.

சாயிபாபாவை  பற்றி பெரிதாக  அறிமுகம் எதுவும் தேவையில்லை. வாயிலிருந்து லிங்கத்தை எடுப்பார். கண்ணிமைக்கும் நேரத்தில்  செயினை வரவழைப்பார். மோதிரத்தை கொடுப்பார், விரலுக்கு பொருந்தாவிட்டால் வாயில் ஊதிக் கொடுப்பார். இவை எல்லாரும் ஒரு சில  பெரிய மனிதர்களுக்கும் வெளிநாட்டு பக்தர்களுக்கும்தான். மற்ற சாதாரண பக்தர்களுக்கு  அல்வா…மன்னிக்கவும் விபூதியை விரல்களிலிருந்து கொட்டுவார். ஆனால் அவர் யாருக்கும் இதுவரை பூசணிக்காயை மட்டும் வாயிலிருந்து எடுத்துக் கொடுத்ததில்லை. இப்போது புரிந்திருக்குமே…

ஆந்திரத்தைச் சேர்ந்த புட்டபர்த்தியின் சாயிபாபாதான் அவர். இவருக்கு 165 நாடுகளிலும் பக்தர்கள்  உண்டு.  பல பல்கலைகழகங்களும் மருத்துவமனைகளும் உண்டு. கோடிக்கணக்கில் சொத்துகளும் உண்டு.

1926ஆம் ஆண்டு புட்டபர்த்தியில் பிறந்த இவர் தனது 13ஆம் வயதில்  மந்திர தந்திர சக்திகளை காட்டத் துவங்கினார். பூக்களை வரவழைப்பது,  இனிப்புகளை வரவழைப்பது என்பது வித்தைகளை காட்டினாராம். தன்னை சீரடி சாயிபாபாவின் மறு உருவம் என்று பிரகடனப்படுத்திக் கொண்டு தானே இறைவன் என்றும் சொல்லிக்கொண்டார்,அதனை நிரூபிப்பதற்காக பூக்களை தரையில் வீசினாராம்.,  வீசிய பூக்கள்  தெலுங்கு எழுத்துகளாக மாறி, அவற்றை படித்தபோது சாயிபாபா என்று இருந்ததாம்.. இதனை அவரது பேராசியர் கஸ்தூரி சாயிபாபாவின் வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிட்டிருக்கிறார். கஸ்தூரி அவர்கள் ஹாலிவுட் படங்கள் பார்ப்பதில்லை போலும். இல்லையேல் பூக்களை வானத்தில் வீசி அவைகள் நட்சத்திரமாக மாறி பின்னர் தெலுங்கு முதல் உலக மொழிகள் அனைத்திலும் சாயிபாபா என்று தென்பட்டதாக அடித்து விட்டிருக்கலாம்.

1950ய-இல் சிறு ஆசிரமமாக தொடங்கப்பட்ட பிரசாந்தி நிலையம்  இன்று ஒரு சிறு நகரமாக  வளர்ந்து நிற்கிறது. பல நூற்றுக்கணக்கான ஓட்டல்கள், தங்குமிடங்களோடு, ஆரம்பப்பள்ளி,பல்கலைகழகங்கள், மருத்துவமனைகள் எல்லாம் சாயிபாபாவின் பெயரில் பிரம்மாண்டமான நிறுவனங்களாக  வளர்ந்திருக்கிறது.

அவரது பக்தர்கள் பட்டியலில் பல அரசியல் பிரபலங்கள் அடங்குவர். வாஜ்பேயியிலிருந்து முரளி மனோகர் ஜோஷி,பல உயர் பதவியிலிருக்கும் அதிகாரிகள், விஞ்ஞானிகள் என்று  பலதரப்பினர் அடங்குவர். சாயிபாபா வெளிநாடுகளுக்குச் செல்வதில்லையே தவிர அங்கும் அவருக்கு செல்வாக்குண்டு.

சாயிபாபாவுக்கு முன்பு மிகவும் நெருக்கமாக இருந்து தற்போது பிரிந்துவிட்ட ஸ்வீடனைச் சேர்ந்த கானி லார்சன் கூறுகிறார்.

”நான் 1976-ஆம் ஆண்டிலிருந்து  சாயிபாபாவுடனிருந்தேன். அதற்கு முன்பு டிரான்சிடெண்டல் மெடிட்டிடேஷனில் ஆசிரியராக இருந்தேன். அங்குதான் பாபாவை  பற்றிய அறிமுகம் கிடைத்தது. எந்த விளம்பரங்களும் தேவையில்லை, பணம் எதும் கொடுக்கத் தேவையில்லை, வந்து அமர்ந்து கடவுளின் அருளைப் பெற்றுச் சென்றாலே போதுமானது என்று  மிகவும் எளிமையாக இருந்தது. புட்டபர்த்திக்கு வந்து சாயிபாபாவின் காலடியில் விழுந்தேன். அவர் காலடியிலேயே 21 ஆண்டுகள் கிடந்தேன். நான் அவருடைய  பிரியத்துக்கும் நெருக்கத்துக்குமுரியவனானேன்.  நான்கு  வருட  காலம் எங்களுக்கு அந்தரங்க உறவிருந்தது. ஒருமுறை நான் ஒரு பெண்ணை மணந்துக்கொள்ள விரும்பி அவரையும் சாயிபாபாவிடம் அழைத்து வந்தேன். சாயிபாபா, அந்தப்  பெண்ணின் முகத்தில் அறைந்ததோடு “அவனை ஒருபோதும் தொடாதே,அவன் என்னுடையன், அவனை நான் மணம் புரிந்திருக்கிறேன்”என்றும் கூறினார். நான் அவரது காலடியில் விழுந்ததோடு பிரியத்துக்குரிய எனது காதலியையும் பிரிந்தேன். ஏனெனில், அவரே கடவுளென்றும் கடவுளுக்காக எதையும் செய்யும் மனநிலையிலும் இருந்தேன்.”

1993-ஆம் ஆண்டு பிரசாந்தி நிலையத்தின் ஆறு  உட்குடியிருப்பாளர்கள் சாயிபாபாவின் படுக்கையறையில் மர்மமான முறையில் கொல்லப்பட்டனர். தாக்குதலில்  இரண்டு பேர் இறந்துவிட்டதாகவும் நான்கு பேர் கைகளில் கத்தி வைத்திருந்ததால் போலிசால் தற்காத்துக்கொள்ள சுட்டபோது  இறந்துவிட்டதாகவும் சொன்னார்கள். அனைவரது எதிர்காலத்தையும் அறியும் தெய்வீகச் சக்தி படைத்த சாயிபாபா  அப்போது உயிருக்கு பயந்து ஓடிவிட்டார்.  கொல்லப்பட்ட அனைவரும் சாயிபாபாவுக்கு நெருக்கமானவர்கள்தான்.

அந்த நிறுவனம் ஒரு கொலைகார நிறுவனம். அது  பணத்தை வெளுக்கும் ஒரு நிறுவனம். ஆசிரமத்துக்கு ஒருநாளைக்கு குறைந்தது பத்தாயிரத்திலிருந்து ஒரு லட்சம் பேர்  வரைக்கும் வருவார்கள். ஒவ்வொரு வருடமும் குறைந்தது 55 மில்லியன் டாலர்கள் பக்தர்களிடமிருந்து மட்டும் சாயிபாபாவின் டிரஸ்டுக்குக் வரும். பல அரசியல்வாதிகளிடமிருந்தும் பணம் டிரஸ்டுக்கு வருவதுண்டு. அதுமட்டுமில்லாமல், பல மந்திரிகள்,அதிகாரிகள், கோர்ட்டு நீதிபதிகள்,சிபிஐ  அதிகாரிகள் என்று பலருக்கும் பணம் பட்டுவாடா  நடக்கும்.

அங்கிருக்கும் சூப்பர் ஸ்பெசல்  மருத்துவமனையைக் கட்ட  108 மில்லியன் டாலர்கள் நிதிஉதவி செய்தது, ஹார்ட் ராக் கஃபே.

அந்த மருத்துவமனை பார்க்க ஒரு அரண்மனைபோலவே இருக்கும். அந்த மருத்துவமனையில் ஏழை இந்தியர்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்கப்படும் என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், அவர்கள் வெளியே வரும்போது எத்தனை சிறுநீரகங்களுடன் முழுமையாக  வருகிறார்களா என்பது கேள்விக்குறிதான்.

2000ஆம் ஆண்டு யுனெஸ்கோவும் ஆஸ்திரேலியாவின் பல்கலைகழகமும் இணைந்து சத்ய சாயி டிரஸ்டின் குழந்தைகளுக்காக ஒரு செயல் திட்டத்தை வகுத்திருந்தது. பின்னர் குழந்தைகளை பாலியல் வக்கிரத்தோடு தவறாக பயன்படுத்தும் நோக்கமிருப்பதாகவும் சத்யசாயி டிரஸ்டுக்கான உதவியை பின்வாங்குவதாகவும் யுனெஸ்கோ அறிவித்துவிட்டு http://exbaba.com/shortnews/unesco.html விலகிக்கொண்டது.

“Behind the Mask of the Clown” என்று நான் எழுதிய புத்தகத்தின் மூலம் குறி வைத்து விரட்டப்படுகிறேன். ஆபத்துகள் என்னை சூழ்ந்திருப்பதால்  எனது நாட்டை விட்டு வெளியேறி சைப்ரஸில் வசிக்கிறேன். ஆனால், எது வந்தாலும் நான் அமைதியாக இருக்க மாட்டேன், ஏனெனில் சொல்லப்பட வேண்டியது ஏராளம் இருக்கிறது.”

இதுவே போதும். இதற்கு மேலும் நாம் எதுவும் சொல்லத்தேவையில்லாமல் விளங்கும். சாயிபாபா மற்றும் ஹோமோசெக்சுவாலிட்டி என்று தேடினால் பலரது கதைகள் வந்து விழுகின்றன.  இவை  எல்லாம் சாயிபாபாவுக்கு மட்டுமே சொந்தம் என்று நினைத்துவிடக்கூடாது. இந்தியாவை மையமாக வைத்து உலகெங்கும் எழுப்பப்படும் ஆன்மீகக் கிளைகளில்  இதுதான் நடக்கிறது.

ரவிசங்கரின் வாழும் கலை, அமிர்ந்தானந்தமாயியின் கட்டிபுடி வைத்தியம், கல்கி பகவானின் ஒன்னெஸ் கூட்டங்கள், பால் தினகரனின் ஜெபாலயம் என்று பக்தி இன்று ஒரு முக்கிய வியாபாரப்பொருள்.  ஆன்மீகமும் பக்தியும் ஒருகாலத்தில் ரிடையர்டான பெருசுகளின்  கூடாரமாக இருந்தது போய் இன்று அந்த வியாபாரக் கூடங்களின்  வாடிக்கையாளர்கள் இளைஞர்கள்தான். பெரும்பான்மையினர் படித்த நடுத்தர வர்க்கத்தினர்தான்.

பரபரப்பு மிகுந்த அன்றாட வாழ்க்கையின் இரக்கமற்ற தன்மை, வேலை நிச்சயமற்ற சூழல், பணிச்சுமை, குடும்பப் பிரச்சினைகள், பயமுறுத்தும்    எதிர்காலம், குழந்தைகளின் படிப்பு,போட்டி நிறைந்த உலகில் நிலைநிறுத்திக்கொள்வதற்கு ஏற்படும் போராட்டங்கள் மற்றும் மன அழுத்தங்கள் முன்னெப்போதும் இல்லாமல் இளைஞர்களை பாதிக்கின்றன.

வீட்டுக்கடனிலிருந்து, உயரும் விலைவாசியிலிருந்து,கிரெடிட் கார்டு…இதுபோக உறவுசார் பிரச்சினைகள்..முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு குடும்பப் பிரச்சினைகள் அதிகரித்திருப்பதாகக் கூறுகிறார்கள். தான் இப்படி சுரண்டப்படுவதை உணராத இந்த இளைய சமுதாயம் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பது போல உடனடித் தீர்வுகளை நோக்கி விரைகின்றனர்.

பெரும்பாலான நிறுவனங்களில் இன்று எட்டு மணிநேர வேலை என்பதே இல்லாமல் போயவிட்டது, எட்டு மணிநேரம் உழைப்பைத் தாண்டி எத்தனை மணிநேரங்கள் உழைத்திருக்கிறோம் என்பதும் இருநாளில் செய்துமுடிக்க வேண்டிய வேலையை ஒரே நாளில் செய்து முடிக்கவேண்டுமென்கிற முதலாளித்துவ நிர்பந்தமும் மக்களை யோசிக்கவே விடாமல் செய்கின்றன. ஏதோ தனக்கு மட்டும்தான் இந்த நிலை என்பதுபோல எண்ணி குமைகிறார்கள்.

ஒருநாளின் குறைந்தபட்ச ஓய்வு என்பது கூட தற்போது சுருங்கிவிட்டது. ஓடிக்கொண்டேயிருப்பதுதான் நகர வாழ்வு என்பதாக மாறியிருக்கிறது. தனது நிலைக்கான காரணத்தை  உணர மறுக்கிறார்கள். கரும்பைப் பிழிவது போல சக்கையாக பிழிந்து நடமாடும் பிணங்களாக வாழ்பவர்கள் ஒன்று இயலாமையாலும் மன அழுத்தம் தாங்காமல் தற்கொலையை நோக்கி ஓடுகிறார்கள்  அல்லது இந்த சாமியார்களின்  மடத்துக்கு வருகிறார்கள்.

இந்த இன்ஸ்டண்ட் குருமார்களும், சகல பிரச்சினைகளுக்கும்  தங்களிடம் தீர்வு இருப்பதாகக் கூறி இவர்களை காந்தமாக ஈர்த்துக் கொள்கின்றனர். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் ரிலாக்ஸ் செய்தால் போதும், பிரச்சினைகள் தீர்ந்து போய்விடுமென்று கூறி மயக்குகின்றனர். ஒரு வாரம் தியான வகுப்புக்கு நித்தியானந்தா ஐம்பதாயிரம் வரை வாங்கியதாக கூறுகிறார், அந்த  வகுப்புக்குச் சென்று  வந்தவரொருவர்.  ரவிசங்கரோ வாழும் கலையின் ஆரம்ப  வகுப்புக்கு ஐந்தாயிரம் வரை  வாங்குகிறார்.

தொலைப்பேசியில் பிரச்சினைக்காக ஜெபிக்க பணத்தை அனுப்பினால் போதுமென்கிறது பிரேயர் டவர்ஸ். அடித்தட்டு மக்களாக இருந்தாலும் 100 ரூபாயாவது கொடுத்தால்தான் உறுப்பினராக முடியுமென்கிறார் மேல்மருவத்தூர் அம்மா.  நமது தெருமுனையிலிருக்கும் கல்யாண மண்டபத்தில் நடத்தப்படும் ஈஷா யோகா வகுப்பில் வந்து முடிகிறது,இந்த நீண்ட பட்டியல்.

இவர்கள் அனைவரும் சொல்வது, நல்லதையே பார்த்துப் பழகுங்கள், கெட்டவற்றை நினைக்காதீர்கள், எந்த செய்தியிலும் நல்ல பக்கத்தையே பாருங்கள், பொறுமையோடிருங்கள், உங்களுக்குள் இருக்கும் அமைதியைத் தேடிக் கண்டடையுங்கள்,  ” என்று நீளும் இந்த தத்துவம் கடைசியில் உண்டியலில் வந்து முடியும்.

முதலாளிகள் தேய்த்து அனுப்பும் பழுதான இயந்திரங்களுக்கு மசகு எண்ணெயை வார்த்து திருப்பி அனுப்புவதற்குத்தான் இந்த ஆன்மீக சாமியார்கள் பயன்படுகிறார்கள். ஆளும்  வர்க்கத்துக்கு சாமியார்களின் தயவு தேவை. சாமியார்களுக்கு தங்கள் சாம்ராஜ்யத்தை விரிவு படுத்த அரசு தேவை. அதனால்தான், ஆனந்தாக்களும் பாபாக்களும் வாழையடி  வாழையாக தோன்றிக் கொண்டேயிருக்கிறார்கள்.

கொஞ்சம் யோசித்துப்  பாருங்கள், நாம் அருந்தும் தண்ணீர் உட்பட படிக்கும் படிப்பு வரை இருக்கும் அரசியல் பிரச்சினைகளுக்கு ஆன்மீகம் பதிலாகுமா? பிரச்சினைகளை மழுங்கங்கடிப்பதற்கு வேண்டுமானால் ஆன்மீகம் உதவும். கொலைப்பழி இருந்தபோதும் அவாள்கள் சங்கர மடத்துக்கு போகாமல் இருந்தார்களா என்ன? ஜெயேந்திரன் அம்பலமான பிறகும் சங்கர மடத்துக்கு மவுசு குறையாமல்தானே இருக்கிறது!

அதனால்தான் சாயிபாபாவின் ஆசிரமத்தில் நிகழும் கொலைகளையும், குழந்தைகள் மீதான கொடுமைகளையும் மூடிமறைத்து பாதுகாப்பு கொடுக்கிறது ஆளும் வர்க்கம். சாயிபாபாவின் ஆசிரமத்தில் மன்மோகன் சிங்க்குக்கு  என்ன வேலை? இவரது தெய்வீக சக்தி இருக்கும் போது  மருத்துவ பல்கலைகழகங்களும் பொறியியலும் எதற்கு? தெய்வீக சக்தியையே பயன்படுத்திக்கொள்ள முடியாதா?பூமியை வானமாகவும் வானத்தை பூமியாகவும் மாற்றக்கூடியவருக்கு, முக்காலமும் அறிந்தவருக்கு ஜப்பானில் நிகழ்ந்த சுனாமியை தடுத்து நிறுத்தியிருக்கலாமே!

இதோ, இப்போது உலகெங்கும் அவரது பக்தர்கள்  அவருக்காக வேண்டியபடி இருக்கிறார்கள். இன்னும் சில பக்தர்கள், இது சாயிபாபாவின் லீலைதானென்றும் அவர் விரைவில் குணமாகி வருவாரென்றும் நம்புகிறார்கள். வேறு சிலரோ, அவர் கடவுள்தான் என்றாலும் சாதாரண மனிதனுக்கு நேரும் முடிவை சந்திப்பதற்காகத்தான் அவரை அவரே காப்பாற்றிகொள்ள வேண்டாமென்று  முடிவு செய்திருப்பதாகவும் தங்களைத் தாங்களே தேற்றிக்கொள்கிறார்கள்.

பார்க்கப்  பரிதாபமாக இருந்தாலும், ஆன்மீகம் செய்து வைத்திருக்கும் கோளாறு புரிகிறதா?

மக்களின் போராட்டங்களை அடக்க  ராணுவத்தை குவிக்கும் அரசு இந்த சாமியார்களின் ப்ராடுத்தனத்தால் மக்கள் ஏமாற்றப்படுவதை தடுத்து நிறுத்த முடியாதா என்ன?

முடியும். ஆனால் செய்யாது. பகுத்தறிவு பேசிய கருணாநிதி சாயிபாபா நலம்  பெற்று எழ வேண்டுமென்று செய்தி அனுப்புகிறார். இது ஏதோ மனிதாபிமானத்தின்பாற்பட்டதல்ல. தேர்தல் காலத்தில் தமிழகத்தில் இருக்கும் சாயிபாபா வாக்குகளை கவர் செய்த மாதிரியும் ஆகும். கூடவே கருணாநிதி குடும்பத்தில் இருக்கும் பாப பக்தர்களை திருப்திப்படுத்தியது போலவும் இருக்கும்.

சாயிபாபாவின் மீதான  கருணாநிதியின் அக்கறைக்கு பொருளென்ன? அடிப்படையில் இருவரும் ஒரு நாணயத்தின் இருபக்கங்களே! மக்களுக்கு தங்களது பிரச்சினைகளுக்குக் காரணமான சமூக அமைப்பின் மீது கோபம் வராமல் பார்த்துக்கொள்வதில் இருவரும் ஜாக்கிரதையாக இருக்கிறார்கள்

ஆன்மீகம் தனது பிரச்சினைகளுக்கு ஒருபோதும் மருந்தல்ல என்று மக்கள்  உணரும்போதுதான் சாயிபாபாக்கள் மந்திரவித்தை மோசடிகளை நிறுத்துவார்கள். மாறாக அப்போது சாமியார்கள் மக்களை ஒடுக்கும் ஆளும் வர்க்கத்தின் சர்வாதிகாரத்திற்கு சாணக்கிய ஆலோசனை செய்யும் வேலைக்கு போய்விடுவார்கள். போக வைப்போம்.

_________________________________________________

– சந்தனமுல்லை

____________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 

 

 

 


 

எம்.எல்.ஏ வுக்கு பொறுக்கித் தின்ன மட்டுமே அதிகாரம்! ஆள்வதற்கல்ல!!

12

போலி ஜனநாயகத்தில் மக்களுக்கு உரிமை இல்லை!

“அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே… உங்களுக்காக உழைக்க உங்கள் வீட்டுப் பிள்ளை அண்ணன் ஆக்டோபஸ் அவர்கள் வாக்குகள் சேகரிக்க உங்கள் வீடுகளைத் தேடி வந்து கொண்டிருக்கிறார்… உங்கள் பொன்னான வாக்குகளை குப்பைத் தொட்டி  சின்னத்தில் போட்டு அண்ணன் ஆக்டோபஸ் அவர்களை வெற்றி பெறச் செய்யுமாறு வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறோம்…” இப்படியாக கடந்த சில வாரங்களாகவே மேற்கூரை திறக்கப்பட்ட ஸ்கார்ப்பியோக்களிலும், சபாரிகளிலும் ஸ்பீக்கர்களைக் கட்டிக் கொண்டு, வெள்ளையும் சொள்ளையுமான பண்ணையார்கள் நம் தெருக்களில் புழுதி கிளப்பிக் கொண்டிருக்கும் காட்சிகளை நாம் தவற விட்டிருக்க மாட்டோம்.

சுவரெழுத்துக் கூடாது, கொடி பிடிக்கக் கூடாது, கோஷம் போடக் கூடாது, கூட்டம் சேர்க்கக் கூடாது, ஊர்வலம் கூடாது என்று பல்வேறு ‘கூடாதுகளை’ தேர்தல் கமிஷன் ஒருபுறத்தில் போட்டுத் தாக்கிக் கொண்டிருந்தாலும், தமிழகத்தின் இண்டு இடுக்குகள் தொடங்கி சந்து பொந்துகள் வரை மக்களிடையே சினிமாவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, தேர்தல் சுவாரசியமான விவாதப் பொருளாக முன்னுக்கு வந்துள்ளது. கருணாநிதியின் ஊழலும், ஜெயலலிதாவின் திமிரும், விஜயகாந்தின் ரவுடித்தனமும் வடிவேலுவின் காமெடியின் முன் மண்டி போடுகின்றன.

யாருக்கு ஓட்டுப் போடுவது என்பது பற்றி வெவ்வேறு விதமான கருத்துக்களை நாம் அன்றாடம் சந்திக்கும் மக்களது விவாதங்களின் ஊடாக கவனிக்க முடிகிறது. “என்ன தான் கருணாநிதி அங்க இங்க கைய்ய வச்சிருந்தாலும், மக்களுக்கு எதாவது செய்யறாரே சார்…” என்று சிலரும், “அதெல்லாம் இல்ல சார்… அவரு குடும்பம் தான் நல்லா சாப்டறாங்க. இதே ஜெயலலிதாவுக்குப் பாருங்க, குடும்பமா குட்டியா? அதுமட்டுமில்லாம, அவங்க வந்தாலே நிர்வாகத்த நல்லா கண்டிப்பா நடத்துவாங்க சார்..” இப்படிச் சிலரும், “சார், கட்சி பாத்து ஓட்டுப் போடறது தான் சார் பிரச்சினையே. கட்சியெல்லாம் பாக்காமே அந்தந்த தொகுதில யார் நல்லவங்களோ அவங்களுக்கு ஓட்டுப் போடனும் சார்”  இப்படிச் சிலரும் சொல்வதைக் கேட்டிருக்கிறோம்.

இவர்கள் தவிர, ஓட்டுக்கட்சிகள் மேல் நம்பிக்கையிழந்து விட்ட வேறு சிலரும் இருக்கிறார்கள். அவர்கள் கட்சிகள் மேலான தங்கள் அவநம்பிக்கையைத் தெரிவித்து விட்டு, “படிச்சவன் வரனும் சார்.  இந்த அரசியல்வாதிகளே சுத்த மோசம்.எல்லாம் படிக்காத ரவுடிப் பயலுக. இவனுக பூரா பேரையும் தூக்கிக் கடாசிட்டு நல்ல நேர்மையான அதிகாரிகளை வச்சே கவர்மென்ட்டை நடத்தனும் சார். இல்லைன்னா பேசாம இராணுவ ஆட்சி கொண்டாந்திடனும்” என்பார்கள்.

இது போன்ற உரையாடல்களை நாம் நெரிசலான பேருந்துகளிலோ, இரயில் பயணங்களிலோ, தெருமுனைத் தேநீர்க் கடைகளிலோ சமீப நாட்களில் கேட்டிருப்போம். ஊடகங்களோ அரசியலையும் தேர்தலையும் தனிநபர்களுக்கு இடையிலான மோதல்களாகக் குறுக்கி, அதையே ஒரு பேய்க் கதையைப் போல திகிலூட்டி வருகின்றது. மக்களின் இந்த நம்பிக்கைகளும் விருப்பங்களும் அவர்களின் சொந்த அனுபவத்திற்கும் எதார்த்தத்திற்குமே நேர்முரணாக நிற்பது ஒருபுறம் இருந்தாலும், ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை வரும் தேர்தல் என்பது தம்மை ஆள்பவர்களை – அது யோக்கியனோ அயோக்கியனோ – தேர்ந்தெடுக்கும் உரிமையைத் தமக்கு வழங்கியிருப்பதாக சந்தேகத்திற்கிடமில்லாமல் நம்புகிறார்கள்.

தமது தொகுதிக்கு கட்சி சார்ந்தோ கட்சி சாராமலோ ஒரு நல்ல வேட்பாளரைத் தேர்ந்தெடுத்து விட முடியுமானால் தங்கள் தொகுதியில் இருக்கும் பிரச்சினைகளை ஓவர் நைட்டில் ஒருவழியாக்கி விடுவார் என்று ஓரளவுக்கு நம்புகிறார்கள். அதே போல், தமது வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்ற உறுப்பினர்களும் அவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் முதலமைச்சருக்கும் கேள்விக்கப்பாற்பட்ட அதிகாரம் இருப்பது போன்றும், அந்த பொறுப்புக்கு எப்படியாவது ஒரு நல்லவரைத் தேர்ந்தெடுத்து விட முடியுமானால் அவரால் மக்களைக் கடைத்தேற்ற முடியும் என்றும் நம்புகிறார்கள்.

சத்துணவில் முட்டை போட மட்டுமே அதிகாரம், சுயநிதிக் கல்லூரிகளை அரசுடமையாக்க அதிகாரமில்லை!

மாறி மாறி வரும் அரசுகளால் விலைவாசி ஏற்றத்தைக் கட்டுப்படுத்த முடிந்ததில்லை என்பதை நமது அனுபவமே நமக்குக் காட்டுகிறது. உள்ளூர் அளவிலான சிறு, நடுத்தர தொழில்களின் நசிவை அதிகாரத்தில் இருக்கும் எந்த கட்சியாலும் தடுத்து நிறுத்த முடிந்ததில்லை. விவசாயம் அழிந்து போய் நகரங்களை நோக்கி விரட்டப்படும் மக்களின் இடப்பெயர்வு என்பது தொண்ணூறுகளுக்குப் பின் தொடர்ந்து நடந்து வருகிறது. மத்தியிலும் மாநிலத்தில் ஆட்சியில் மாறி மாறி வந்தமர்ந்த எந்தக் கட்சிகளாலும் இவை எவற்றையும் தடுத்து நிறுத்த முடிந்ததில்லை. இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும் மக்கள் தங்கள் நம்பிக்கையை இழக்கவில்லை; மனம் தளரவில்லை.

விவசாயிகள் வளம் பெற உழவர் சந்தைகள் அமைத்தோம் என்று கருணாநிதி தனது குடும்பத் தொலைக்காட்சிகளில் ஆரவாரமாக பிரஸ்தாபிக்கிறார். ஆனால், இங்கே விவசாயமே அழிந்து போயிருக்கிற நிலையில், விதைக்கும் உரத்துக்கும் ஏகபோக பன்னாட்டு நிறுவனங்கள் விதிக்கும் இமாலய விலையின் முன் விவசாய்கள் விழி பிதுங்கி நிற்கிறார்கள். விவசாயப் பொருட்களின் வினியோக சந்தை என்பது ரிலையன்ஸ், ஐ.டி.சி போன்ற உள்ளூர் தரகு முதலாளிகள் கையிலும் பன்னாட்டு ஊகபேர வர்த்தகச் சூதாடிகள் கையிலும் இருந்து கொண்டிருக்கும் போது கருணாநிதியோ விவசாய சந்தை திறந்தேன் என்கிறார். இதில் கருணாநிதியோ ஜெயலலிதாவோ விவசாய சந்தைகளை மட்டும் தான் திறந்து விட முடியும் – இவர்கள் எவராலுமே விவசாய இடுபொருட்களின் சந்தையையும், விளைபொருட்களின் வினியோகச் சங்கிலியையும் ஏகபோக முதலாளிகளின் பிடியிலிருந்து விடுவிப்போம் என்று அறிவிக்க முடியவில்லை – அது முடியவும் முடியாது. மாறாக சர்வகட்சிகளும் பன்னாட்டு முதலாளிகளின் காலை நக்கிக் கிடக்கிறார்கள்.

நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் தருவோம் என்று ஆரவாரமாக அறித்த கருணாநிதியால் அத்திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. நிலம் எங்கே போனது என்ற ஜெயலலிதாவின் கேள்விக்கு அவரால் பதிலளிக்க முடியவில்லை. ஆனால், அதே நேரம் பன்னாட்டுத் தொழிற்கழகங்களின் மனம் கோணாமல் அவர்கள் விரும்பும் இடத்தில் விரும்பும் அளவுக்கு நிலத்தைக் கையகப்படுத்திக் கொடுக்க முடிகிறது. நிலம் எங்கே போனது என்று கேட்கும் ஜெயலலிதாவுக்கு இங்கே ஏன் போகிறது என்று கேட்கும் துணிச்சல் இல்லை; விவசாயிகளுக்கு வழங்க நிலமில்லை என்று சால்ஜாப்பு சொல்லும் கருணாநிதியோ பன்னாட்டு முதலாளிகளுக்கு நிலத்தை தாராளமாய் வாரி வழங்க கூசவில்லை. கருணாநிதியும் ஜெயலலிதாவும் எதிரெதிர் துருவங்கள் போல பேசிக் கொண்டாலும் பன்னாட்டு முதலாளிகளுக்கான சேவை என்று வரும் போது ஒன்றுபடுகிறார்கள்.

யானையைப் பிடிப்பேன் பூனையைப் பிடிப்பேன் என்று அள்ளி விடும் இவர்களின் உண்மையான யோக்கியதை என்ன? வாய்க்கு வந்ததையெல்லாம் வாரிவிடும் இவர்களுக்கு உண்மையாகவே இருக்கும் அதிகாரம் என்ன? தமிழ்நாட்டில் நிலவும் கடுமையான மின்வெட்டை முன்வைத்து பிரச்சாரம் செய்யும் எதிர்கட்சிகளுக்கு, மின்சாரத்தைத் தடையின்றி சல்லிசான விலைக்கு உறிஞ்சிக் கொள்ளும் பன்னாட்டுக் கம்பெனிகளிடம் அதற்கான முறையான விலையை வசூலிப்போம் என்றோ, மக்களுக்கும் சிறு தொழில் நிறுவனங்களுக்கும் தான் மின்சார வழங்கலில் முன்னுரிமை கொடுக்கப்படும் என்றோ சொல்ல வாய் வருவதில்லை. அவ்வாறு அவர்களால் சொல்லவும் முடியாது.

கடலில் கொல்லப்படும் தமிழக மீனவர்கள் குறித்து இந்த கட்சிகள் ஒப்பாரி வைக்கின்றன. ஆனால் எவரும் தாம் ஆட்சிக்கு வந்தால் தனிப்படை அல்லது போலீசு மூலம் மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கவில்லை. அதற்கு அவர்களுக்குஅதிகாரம் கிடையாது.

மாணவர்களுக்கு இலவசமாய் முட்டை போடுவோம் என்றும் நோயாளிகள் தனியாருக்குச் சொந்தமான நட்சத்திர மருத்துவமனைகளில் சிகிச்சை பெற காசு கொடுப்போம் என்றும் சொல்லுகிற கட்சிகள், அரசுப் பள்ளிகளை நவீனமாக விரிவுபடுத்தி உலகத் தரமான கல்வியை அரசாங்கமே தரும் என்றோ அரசு மருத்துவமனைகளைத் தனியார் நட்சத்திர மருத்துவமனைகளை விட நவீனமான வசதிகள் கொண்டதாக பிரம்மாண்டமாக விரித்துக் கட்டுவோம் என்றோ சொல்ல முடியவில்லை. அவ்வாறு அவர்களால் சொல்லவும் முடியாது. மருத்துவத்தையும் கல்வியையும் கேள்விக்கிடமின்றி தனியாருக்குத் தூக்கிக் கொடுப்பதில் ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் ஒரே கட்சியாகிறார்கள்.

இலவசமாய் அரிசி கொடுப்பேன் என்று சொல்ல முடிந்த ஜெயலலிதாவால் அரிசியை காசு கொடுத்து வாங்கும் அளவுக்கு பொருளாதார வளர்ச்சியை பரவலாக்குவோம் என்றும்,  நசிந்து போன நிலையில் உள்ள உள்ளூர் சிறு தொழில்களையும், அழிந்து போய்க் கொண்டிருக்கும் விவசாயத்தையும் காப்பாற்றுவோம் என்றும், அப்படியான ஒரு பொருளாதார முன்னேற்றத்தை சாதித்துக் காட்டுவோம் என்றும் சொல்ல முடியவில்லை. அப்படிச் சொல்லவும் முடியாது; ஏனெனில் இவர்களுக்கு அந்த அதிகாரம் கிடையாது. உள்ளூர் தொழில் நசிவினாலும் விவசாயத்தின் அழிவினாலும் நகர்ப்புறங்களுக்கு விரட்டியடிக்கப்படும் மக்கள் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு அத்துக் கூலிகளாய்ப் போய்ச் சேருவதை ஆளும் வர்க்கக் கட்சிகளே உறுதிப் படுத்துகின்றன – அந்த அளவில் இவர்களின் அதிகாரவரம்பின் எல்லை தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனில் மெய்யாகவே இவர்களின் அதிகாரவரம்பு எங்கே முடிகிறது? உண்மையில் மக்களை ஆள்வது இவர்கள் தான் என்றால், மக்கள் நலன் சார்ந்த இப்பிரச்சினைகளில் இவர்கள் மக்களின் சார்பாக நில்லாமல் முதலாளிகள் சார்பாக நிற்பதேன்? மக்களின் நலனை முன்னிட்டு கொள்கை சார்ந்த முடிவுகளை எடுப்பதற்கோ நடைமுறையில் இருப்பவற்றை மாற்றியமைப்பதற்கான அதிகாரமோ இல்லாததன் பொருள் என்ன? இவற்றைக் குறித்து நாம் அறிந்து கொள்வதற்கு முன், பலவண்ணங்களில் பல்லிளிக்கும் இந்த ஆளும் வர்க்கக் கட்சிகளும் கருணாநிதி, ஜெயலலிதா, மன்மோகன்சிங், அத்வானி உள்ளிட்டவர்கள் அதிகார அடுக்கில் எந்த இடத்தில் வருகிறார்கள் என்பதைக் குறித்தும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

அரசு – அரசாங்கம் : இரட்டை ஆட்சியின் விளக்கம்!

ஆட்சியில் அமரப் போகும் கட்சி எதுவாயினும் அது என்ன திட்டங்களைப் போடலாம், அதை எவ்வாறு அமுல்படுத்தலாம் என்பதைத் தீர்மானிக்கும்  உரிமை அதற்கு இல்லை என்பது தான் உண்மை. மக்களை ஆளும் அரசு என்பது நிதி-நிர்வாகம், நீதிபரிபாலனை, சட்டம் ஒழுங்கு, சிவில் நிர்வாகம் என்று எப்போதும் மாறாமல் நிரந்தரமாய் தேங்கி விட்ட உறுப்புகளைக் கொண்டது. அதன் ஒரு அங்கமாக வருவது தான் மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கும் அரசாங்கம் என்பது. இந்த அரசாங்கம் என்பது குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து மாறிக் கொண்டிருப்பது. இதுவே எதார்த்தத்தில் மக்களை ஆளும் அரசின் பிற அலகுகளுக்கு ஒரு முகமூடியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

அரசு இயந்திரம் என்பது எப்போதும் இயங்கிக் கொண்டிருப்பது. ஒரு கிராம அளவில் இருக்கும் நிர்வாக அதிகாரியிடம் தான் அக்கிராமத்தின் நிலம் பற்றிய விவரங்கள், அதிலிருந்து கிடைக்கும் நேரடி மறைமுக வருவாய் தொடங்கி, அக்கிராமத்தில் நிகழும் பிறப்பு, இறப்பு, பற்றிய தகவல்கள் வரை இருக்கும். இதற்கு மேலே மாவட்ட அளவிலே வருவாய்த் துறை, வருமான வரித்துறை, சுங்கத்துறை, போன்ற பல்வேறு துறைகள் மற்றும் வருவாய் ஆய்வாளர், டெப்டி தாசில்தார், தாசில்தார், ஆர்.டி.ஓ, சப் கலெக்டர் கலெக்டர் போன்றவர்கள் உள்ளிட்ட அரசு இயந்திரத்தின் பல்வேறு அங்கங்கள் தான் சிவில் நிர்வாகத்தை நடத்திச் செல்கின்றன.

இவர்கள் தான் வரி வசூல், கல்வி, மருத்துவம், சுகாதாரம், குடிநீர் சப்ளை, ரேஷன் சப்ளை போன்ற அத்தியாவசியமான வேலைகளைச் செய்வது. அதாவது, மக்களை நேரிடையாக ஆள்வதும் இயக்குவதும் அதற்காகத் திட்டமிடுவதும் இந்த இயந்திரம் தான். இந்த இயந்திரத்தின் மிக முக்கியமான அங்கங்களான நீதி மன்றங்கள் நீதிபரிபாலனத்தையும் காவல்துறை இராணுவம் உள்ளிட்ட துறைகள் பாதுகாப்பு, குற்றத்தடுப்பு  உள்ளிட்ட விஷயங்களையும் கவனித்துக் கொள்கிறது.

இந்த இயந்திரத்தின் இயக்கத்திற்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களுக்கும் யாதொரு சம்பந்தமும் கிடையாது. தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் இடையீடு ஏதுமின்றியே இந்த இயந்திரம் இயங்கும். இதற்கு நமக்குப் பல்வேறு நடைமுறை உதாரணங்கள் உள்ளன. காஷ்மீரிலும், வடகிழக்கிலும், பஞ்சாபிலும் இன்னும் வேறு பல மாநிலங்களிலும் பல்வேறு சந்தர்பங்களில் வெவ்வேறு காரணங்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றங்கள் கலைக்கப்பட்ட போதும் அரசு நிர்வாகம் தொடர்ந்து நடைபெற்றுதான் வந்தது.

இதில் நமது கவனத்திற்குரிய அம்சம் என்னவென்றால், இந்த அரசு இயந்திரம் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதல்ல என்பதோடு, இது மக்களை அடக்கி ஒடுக்குவதற்கென்றே ஏற்படுத்தப்பட்டது. காலனிய ஆட்சிக் காலத்தில், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அதிகாரத்தை மக்கள் மேல் ஏவிவிடுவதற்கான ஒரு கருவியாக உருவாக்கப்பட்டது தான் இன்று வரையில் மக்களை ஆண்டு வரும் அரசு இயந்திரம். ஆக, இது தன் பிறப்பிலேயே ஜனநாயகமற்ற தன்மையையும் ஏகாதிபத்திய நலனையும் அடிப்படையாகக்  கொண்டு கட்டப்பட்டதாகும். அன்றைக்குக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கும் பிரிடிஷ் ஏகாதிபத்தியத்திற்கும் ஒரு முகமூடியாகச் செயல்பட கருப்புத் தோல் வெள்ளையர்களைக் கொண்டு அமைக்கப்பட்டது தான் இன்று வரை தொடரும் சிவில் நிர்வாக அமைப்பு முறை.

அன்றைக்கு காலனிய ஆதிக்கத்திற்கு விசுவாசமாய் இருந்த அரசு நிர்வாக இயந்திரமும், அதன் உறுப்பான போலீசு இராணுவம் உள்ளிட்ட ஆயுதப் படைகளும் உரிமைக்காகப் போராடிய மக்களை எப்படி ஒடுக்கியதோ அப்படித்தான் இன்றும் பன்னாட்டுக் கம்பெனிகளில் தொழிற்சங்க உரிமைக்காகப் போராடும் தொழிலாளர்கள் மேல் பாய்ந்து குதறுகிறது. இன்று ‘சுதந்திர’ இந்தியாவின் மத்தியப் பகுதி மாநிலங்களில் பன்னாட்டுக் கம்பெனிகள் நம் நாட்டு வளங்களைச் சுரண்டிச் செல்வதை எதிர்த்துப் போராடும் மக்கள் மேல் இராணுவம் பாய்வதற்கும், காலனிய காலத்தில் ஏகாதிபத்தியச் சுரண்டலுக்கு எதிராகப் போராடிய மக்கள் மேல் வெள்ளை இராணுவம் பாய்ந்ததற்கும் சாராம்சத்தில் வித்தியாசங்கள் ஏதும் இல்லை. அன்றைய வைசிராய்க்கு வெள்ளைத் தோலும் பொன்னிற முடியும் இருந்தது என்பதும் இன்றைய பிரதமருக்கு பழுப்புத் தோலும் டர்பனும் இருக்கிறது என்பதும் தான் இவை இரண்டுக்கும் உள்ள பெரிய வேறுபாடுகள்.

நியமனத்தால் அதிகாரத்திற்கு வரும் அரசு இயந்திரத்தின் அங்கங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர்கள் என்பதால் அவர்கள் மக்களுக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டவர்களல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் தவறு செய்யும் பட்சத்தில் கூட அவரைத் திருப்பியழைக்கும் ஜனநாயக உரிமை மக்களுக்கு கிடையாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் நியமனங்களின் மூலம் அதிகாரம் வழங்கப்பட்டுள்ள இந்த அரசு இயந்திரத்தின் அங்கங்கள் முற்றிலுமாக மக்களிமிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கிறது.

தேசத்தின் தலைவிதியையே தீர்மானிக்கும் முக்கியமான முடிவுகள் பாராளுமன்றத்தில் வைத்து விவாதிக்கப்பட்டு மக்களால் ‘ஜனநாயக’ முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் ஒப்புதலோடு நிறைவேற்றப்படுவதல்ல. நாட்டின் பொருளாதாரத்தை அந்நிய நிறுவனங்களுக்குத் திறந்து விட வகைசெய்யும் காட் ஒப்பந்தம் நாட்டு மக்களுக்கும் பாராளுமன்றத்திற்கும் தெரியப்படுத்தாமல், கள்ளத்தனமாக மான்டேக்சிங் அலுவாலியா போன்ற மெத்தப் படித்த அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டு, மன்மோகன் சிங் என்ற முன்னாள் உலகவங்கி அதிகாரியால் தீர்மானிக்கப்பட்டு கையெழுத்தாகியது. அவர் காட்டிய விசுவாசத்தின் பலன் தான் தற்போது வெளியாகியிருக்கும் விக்கிலீக்ஸ் ஆவணங்களில் அமெரிக்கா அவர் மேல் காட்டும் அக்கறையாகப் பல்லிளிக்கிறது.

மக்களால் ‘தேர்ந்தெடுக்கப்பட்ட’ பிரதமரே, ஈரான் ஜனாதிபதியை எப்போது சந்திக்க வேண்டும், எப்படிச் சந்திக்க வேண்டும், சந்திக்கும் போது என்ன பேச வேண்டும் என்பதைக் கூட அமெரிக்காவே தீர்மானித்து, அதை வெளிவிவகார அமைச்சக அதிகாரிகள் மூலமும் பிரதமர் அலுவலக அதிகாரிகள் மூலமும் நடைமுறைப்படுத்துகிறார்கள். இதுவும் விக்கிலீக்ஸ் வெளியிட்டிருக்கும் அமெரிக்க தூதரகங்களின் இரகசிய கேபிள்கள் மூலம் அம்பலமாகியிருக்கிறது. ஆக, அன்றைக்கு பிரிட்டிஷ் ஏகாதிபத்திய சேவைக்கு உண்டாக்கப்பட்ட சிவில் நிர்வாக அமைப்பு முறை  இன்றும் அதே நோக்கத்திற்காக செயல்படுகிறது. வித்தியாசம் என்னவென்றால் அன்றைக்கு மாட்சிமை தாங்கிய பிரிடிஷ் மகாராணியின் காலை நக்கிக் கிடந்தார்களென்றால், இன்றைக்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கிரீடமாக வீற்றிருக்கும் பன்னாட்டுக் கம்பெனிகளின் காலை நக்கிக் கிடக்கிறார்கள்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமையும் அரசாங்கத்தின் பல்வேறு அமைச்சர்களும் தமது துறையின் செயலாளர் காட்டும் திசைவழியில் தான் முடிவுகள் எடுக்கிறார். அரசு இயக்கத்தின் சகல சந்து பொந்துகளிலும் தேர்ச்சிபெற்ற நன்கு ‘படித்த’ இந்த அதிகார வர்க்கத்தின் துணையின்றி தேர்ந்தெடுக்கப்படும் ‘படிக்காத’ அரசியல்வாதிகளால் ஊழல் செய்ய இயலாது. பங்குச் சந்தை ஊழலும், ஹவாலா ஊழலும், இஸ்ரோ-தேவாஸ் ஊழலும், ஆதர்ஷ் வீட்டுமனை ஊழலும், ஸ்பெக்ட்ரம் ஊழலும் படிக்காதவர்களின் மூளையில் தோன்றியதால் ஏற்பட்டதல்ல.

உதாரணமாக, தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டுக்கு அநேகமாக எல்லா பத்திரிகைகளும் காரணகர்த்தாவாகச் சுட்டிக் காட்டுவது மின்சாரத் துறையின் அமைச்சரான ஆற்காடு வீராசாமியை. எதார்த்தத்தில் அவருக்கு முன் உள்ள வாய்ப்புகள் என்ன? ஆற்காடு வீராசாமி நினைத்தால் தமிழகத்தின் அத்தனை வீடுகளுக்கும் சிறுதொழில் நிறுவனங்களுக்கும்  தடையற்ற மின்சாரத்தை வழங்கிவிட முடியுமா?

அரசின் தனியார்மய தாராளமய உலகமயப் பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாக, ஒவ்வொரு மாநிலமும் பன்னாட்டுக் கம்பெனிகள் இங்கே தொழில் நடத்துவதற்கான அடிப்படையான வசதிகளைச் செய்து கொடுத்தாக வேண்டும். அது அவர்களுக்கு உலக வர்த்தகக் கழகத்தாலும், உலக வங்கியாலும் இடப்பட்டிருக்கும் உத்தரவு. இந்த உத்தரவை மீறி நடப்பதற்கான உரிமையோ அதிகாரமோ ஆற்காடு வீராசாமியாகட்டும் கருணாநிதியாகட்டும் எவருக்குமே கிடையாது. நாளை ஜெயலலிதா வந்தாலும் இது தான் நிலைமை. ஆக, அரசினால்  ஏற்றுக் கொள்ளப்பட்ட பொருளாதரக் கொள்கைகள் காட்டும் திசைவழி என்னவோ, அதில் பயணிப்பது மட்டும் தான் இவர்கள் முன் இருக்கும் வாய்ப்பு.

விவசாயத்தைப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு பலிகொடுப்பது என்று தீர்மானித்து விட்ட பின், காற்று வாங்கும் உழவர் சந்தைகளின் எண்ணிக்கையை அதிகரித்து என்ன பயன்? பன்னாட்டுக் கம்பெனிகளுக்குத் தேச எல்லைகளைத் திறந்து விட்டபின், எங்கே நிலம் தர வேண்டும் என்று மட்டும் தான் கேட்க முடியும்; ஏன் உனக்குத் தர வேண்டும் என்று எதிர்த்து நிற்கும் உரிமை அற்றுப் போகிறது. கல்வியையும், மருத்துவத்தையும் தனியாருக்குத் தாரைவார்ப்பது என்று ஒப்புக் கொண்டபின், சத்துணவு முட்டைகளின் எண்ணிக்கையைத் தான் கணக்குக் காட்ட முடியும்; பொன்முட்டைகளை அள்ளிச் செல்வதைத் தடுக்க முடியாது.

கடவுள் இல்லையென்பது  பூசாரிக்குத் தான் நன்றாகத் தெரியும் என்பது போலத் தங்களுக்கு அதிகாரம் இல்லையெனும் இந்த உண்மை வேறு யாரையும் விட ஆளும் வர்க்க அரசியல் கட்சிகளுக்குத் தான் தெளிவாகத் தெரியும். எனவே தான், அரசு இயந்திரத்தின் முகமூடியாக இவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் பாத்திரத்தை நிறைவேற்றிக் கொள்வதோடு தாமும் இதற்குள் எவ்வளவு முடியுமோ அவ்வளது பொறுக்கித் தின்பதை மட்டும் கணக்காக நிறைவேற்றிக் கொள்கின்றனர். சமூக நீதி பேசிய கருணாநிதி இன்றைக்கு கொள்கைகளைப் காற்றில் பறக்கவிட்டு விட்டு ஒரு தரகு முதலாளியாகச் சீரழிந்திருக்கிறார் என்பதை இதனூடாகத்தான் புரிந்து கொள்ள முடியும்.

இந்த ஆட்டத்தின் விதிகள் தீர்மானிக்கப்படுவது  ஏகாதிபத்தியங்களாலும் பன்னாட்டுக் கம்பெனிகளாலும் தான். ஆட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு ஆட முன்வரும் இந்தக் கட்சிகள், தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள முகமூடி எனும் பாத்திரத்தைத் திறம்பட ஏற்று நடிப்பதோடு தாமே பெரும் ஏகபோக முதலாளிகளாக வளர்ந்துள்ளனர். ஜெயா-சசி கும்பலின் சாராய சாம்ராஜ்ஜியமாகட்டும் கருணாநிதி குடும்பத்தின் தொழில் சாம்ராஜ்ஜியமாகட்டும் இந்த அடித்தளத்தின் மேல் தான் கட்டப்பட்டுள்ளது. அப்பாவி மக்கள் சிந்திப்பது போல் இவர்களில் எவர் தேர்தலில் தோற்றுப் போனாலும் அது அவர்களுக்கு தண்டனையாக இருப்பதில்லை. அதிகாரத்தைத் துணையாகக் கொண்டு கட்டப்பட்ட கருணாநிதியின் குடும்பத் தொழில் சாம்ராஜ்ஜியங்கள், அவரின் ஜென்மப் பகையாளியாக ஊடகங்களால் சித்தரிக்கப்படும் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் எந்த நெருக்குதலுக்கும் உள்ளாகப் போவதில்லை. கருணாநிதியின் ஆட்சிக்காலத்திலோ தமிழகத் தெருவெங்கும் டாஸ்மாக் மூலமாக சசிகலாவின் சாராய ஆறு ஓடுவதற்கு தடையெதுவும் விதிக்கப்படுவதில்லை.

உண்மையில் இவர்கள் இருவருமே நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல ஒன்றியிருக்கிறார்கள் என்பது தான் எதார்த்தமாக இருக்கிறது. நாளை ஒருவேளை இவர்கள் அல்லாமல் ஒரு ‘நல்லவர்’ அதிகாரத்திற்கு வந்தாலும் இதே தான் நிலை. அந்த நல்லவரின் ஆட்டத்தையும் தீர்மானிப்பது இந்த விதிகள் தான். இராணுவ ஆட்சியை விரும்பும் நடுத்தரவர்க்க அறிவாளிகளும் இருக்கிறார்கள்; ஆனால், இதே இராணுவமும் போலீசும் தமது பிறப்பிலிருந்து இன்றைய தேதி வரையில் ஆளும் வர்க்க நலனுக்குச் சாதகமாக செயல்பட்டு வந்துள்ளதை கவனிக்கத் தவறுகிறார்கள். இன்றும் உரிமைக்காகப் போராடும் மக்களை ஒடுக்கும் ஆயுதப் படைகள் ஆளும் வர்க்கம் யாருக்கு விசுவாசமாய் நிற்கிறார்களோ அவர்களுக்கே விசுவாசமாய் நிற்கிறார்கள்.

புதிய ஜனநாயகத்திற்கான போராட்டமே தீர்வு, அதற்கு தேர்தலை புறக்கணிப்பது முதல் அடி!

எனவே, மெய்யான சமூக மாற்றத்தை விரும்புபவர்களுக்கான தேர்வு என்பது இருக்கும் நடைமுறையில் இல்லை. இந்த அதிகார அமைப்புமுறையின் அழிவில் இருந்து தான் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் புதிய முறையை உண்டாக்க முடியும். அப்படியொன்றை உண்டாக்குவதற்கான வாய்ப்பு என்பது நடப்பில் இருக்கும் விதிகளைச் சுமந்து கொண்டு போராடுவதில் சாத்தியமில்லை; இந்த விதிகளுக்கும் களத்துக்கும் வெளியே நின்று நடப்பிலிருப்பதை ஒட்டுமொத்தமாகத் தகர்த்தெறிவதில் தான் உள்ளது.

தரகு முதலாளிகள், நிலப்பிரபுக்கள், ஏகாதிபத்தியங்களின் நலனுக்காக இருக்கும் அரசு என்ற ஒடுக்குமுறைக் கருவியின் ‘ஜனநாயக’ முகமூடிதான் தெரிவு செய்யப்படும் அதிகாரமற்ற இந்த அரசாங்கம். அரசாங்கத்திற்கு சட்டங்களை இயற்றத்தான் அதுவும் ஆளும் வர்க்கங்களின் நலனுக்கேற்ப மட்டுமே முடியும். அதை அமல்படுத்தும் அதிகாரம் அரசின் கையில். ஆயுதந்தாங்கிய இராணுவம், போலீசு இரண்டும் இந்த அரசின் ஒடுக்குமுறையை பாதுகாப்பதோடு மக்கள் ஆயுதந்தாங்குவதையும் தடை செய்கின்றன. தெரிவு செய்யப்படும் அரசாங்கத்தின் பிரதிநிதிகளை திருப்பி அழைக்கும் அதிகாரம் மக்களுக்கில்லை. அரசின் எந்த ஒரு உறுப்பிலும் அவர்களது பங்கேற்பில்லை. எனவேதான் இது போலி ஜனநாயகம் என்கிறோம். இந்த தேர்தலை புறக்கணிக்கவும்  கோருகிறோம். மக்களுக்கு உண்மையான ஜனநாயகத்தை வழங்கும் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள வேண்டுமென கேட்கிறோம். மக்கள் பங்கேற்கும் உண்மையான ஜனநாயகத்தை பற்றி அடுத்து விளக்குகிறோம்.

________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

தேர்தல் 2011

விக்கி லீக்ஸ்

புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2011 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

புதிய ஜனநாயகம்

புதிய ஜனநாயகம் ஏப்ரல் 2011 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

1.      “ஸ்பெக்ட்ரம் என்பது வெறும் ஊழல் மட்டுமில்லை, இது கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளை!“  – கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராகப் புரட்சிகர அமைப்புகளின் தொடர் பிரச்சார இயக்கம்.

2.      இதுதான் போலீசு! ஜி.டி.பி. கிரானைட்ஸ் முதலாளிக்கு அடியாளாகச் செயல்படுகிறது சேலம் நகர போலீசு.

3.      “அமெரிக்க ஏகாதிபத்திய நாயே, லிபியாவை விட்டு வெளியேறு!” புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டம்.

4.      சமூக விடுதலையே பெண் விடுதலை” அனைத்துலக மகளிர் தினத்தில் புரட்சிகர அமைப்புகளின் சூளுரை!

5.      பட்ஜெட்டின் நரபலி

6.      பட்ஜெட் 2011  12: அதே செக்குமாட்டுப் பாதையில்…

7.      சென்னை  பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீதான தாக்குதல்: போலீசின் அவதூறு! ஊடகங்களின் பக்கமேளம்!!

8.      தண்ணீர்க் கொள்ளையர்களின் படையெடுப்பு!

9.      தேர்வாய் கண்டிகை – காகரப்பள்ளி: அரசின் நிலப்பறிப்புக்கு எதிராக ஆர்த்தெழுந்த உழைக்கும் மக்கள்!

10.   லிபியா மீதான ஆக்கிரமிப்புப் போர்: அமெரிக்கப் பயங்கரவாதத்தின் நீட்டிப்பு

11.   தமிழக சட்டமன்றத் தேர்தல்: கார்ப்பரேட் கொள்ளைக்கு ஜனநாயக மூடுதிரை

12.   விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தும் வெள்ளை மாளிகையின் விசுவாசி!

13.   கல்விக் கொள்ளையர்களை உலுக்கிய முற்றுகைப் போராட்டம்!

14.   அணு உலை வெடிப்பு: பேரழிவில் ஜப்பான்! மரணவாயிலில் இந்தியா!

________________________________________________

புதிய ஜனநாயகம் ஏப்ரல் 2011 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 5 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS).

__________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

இந்தக் கதை இதோடு முடியவில்லை…..

படம் – www.thehindu.com

இந்த கதை இதோடு முடியவில்லை…..

டெள கெமிக்கல்ஸ் நிர்வாகத்தின் முன்பாக கீழ்கண்ட இரண்டு கேள்விகள் வைக்கப்பட்டது.

(1) 2008 செப்டம்பரில் திரு சிட்காரா என்பவர் அமெரிக்க தூதரக அதிகாரியை மும்பையில் சந்தித்த போது மகாராஷ்டிர மாநிலம் புனேயில் டெள கெமிக்கல் நிறுவனத்தினை அமைக்கும் திட்டத்திற்கு அங்குள்ள வர்க்காரி இன மக்கள் மிகுதியான எதிர்ப்பு தெரிவித்து பல போராட்டங்களை மேற்கொண்டு வருவதால், அவற்றை சமாளிக்க சிவசேனா கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிராவ் அந்தலரோ பாட்டிலால் தெரிவிக்கப்பட்ட மக்கள் தொடர்பு நிபுணர் ஒருவரை மாதம் 20,000 டாலர் சம்பளத்திற்கு நியமித்ததாக‌ தெரிவிக்கப்பட்டதே, அவர் எவ்வளவு காலம் பணியிலிருந்தார் ?  அவரின் சேவையை டெள கெமிக்கல் தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டுள்ளதா?

(2) அதே சிட்காரா தெரிவித்த மற்றொரு தகவலின்படி டெள கெமிக்கல்ஸ் நிறுவனம் குஜராத் அரசிடமிருந்து அந்நிய முதலீட்டிற்கான அனுமதி பெறுவதில் சிரமம் இருந்ததாக சொல்லப்பட்ட பிரச்சினை எப்போது சரி செய்யப்பட்டது? அங்கே அரசின் அனுமதி பெறப்பட்டதா?

அதற்கு டெள அளித்த எழுத்து பூர்வ பதிலில், ஒரு படத்தில் கவுண்டமணி சொல்கிற “அரசியல்ல இதல்லாம் சகஜமப்பா” என்பது போல் எல்லா பன்னாட்டு நிறுவனங்களையும் போல் நாங்கள் எங்கெல்லாம் (பிஸினஸ்) வணிகம் செய்கிறோமோ, எங்கெல்லாம் வளர வேண்டும் என்று நினைக்கிறோமோ அங்கெல்லாம் அரசியல் வாதிகளை, அதிகாரிகளை சந்திப்பதும், நாங்கள் சந்திக்கிற சவால்களை எதிர்கொள்ள நடைமுறைத் தந்திரங்களைக் கையாள்வதும் இயல்புதான். இது இந்த நாட்டில் எங்கும் வியாபாரிகள் கையாள்கிற விஷ‌யம்தான் என்று தெரிவித்துள்ளது. மற்றபடி நீங்கள் கேட்கும் விவ‌ரமெல்லாம் அமெரிக்க அரசின் உள்நாட்டு கடித போக்குவரத்து விபரமாகும், எனவே அவற்றை அரசிடம்தான் நீங்கள் கேட்டுக்கொள்ள வேண்டும் என்றும் பதிலளித்துள்ளது டௌ கெமிக்கல்ஸ்.

இனி இந்தக் கட்டுரையின் விவ‌ரத்திற்கு வருவோம்.  கடந்த 20 தினங்களுக்கும் மேலாக இந்தியாவின் ஒவ்வொரு அரசியல் நிகழ்வுகளிலும் அமெரிக்காவின் தலையீடு இருப்பதைப் பற்றியும், ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகளின் சாக்கடை நடவடிக்கைகள் பற்றியும் விக்கிலீக் இணையதளத்தின் மூலம் கசிந்த அசிங்கங்கள் ஆங்கில நாளிதழான தி இந்துவில் வெளிவந்து கொண்டிருப்பதும், அதில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்கக் கைக்கூலி மன்மோகன் அரசு நீடித்திருக்க வாக்களிப்ப‌தற்காகப் பணம் வாங்கிய விவ‌ரத்தினை மட்டும் (ஏதோ தங்கள் சம்பந்தப்பட்ட நாற்றமாக இருக்கிறதே என்பதற்காக) 2, 3 நாட்கள் நாடாளுமன்றத்தில் கூச்சல் போட்டுவிட்டு அதோடு தம் கடமை முடிந்துவிட்டதாக கருதி பாராளுமன்ற கூட்டத்தொடரை முடித்துக்கொண்டு, அவரவர் சார்ந்த மாநிலத்தின் தேர்தலைக் கவனிக்கச் சென்று விட்டனர்.  ஆனால் ஏப்ரல் 1 மற்றும் 2ம் தேதி தி இந்து வெளியிட்ட விக்கி லீக் விபரங்கள், கொலைகார டெள கெமிக்கலோடு இந்திய அரசியல்வாதிகளின் உறவுகளை அம்பலப்படுத்தி விரிவாக நாறடித்திருக்கிறது.
_____________________________________________

1984ல் மத்தியப்பிரதேசம் போபாலில் யூனியன் கார்பைடு நிறுவனத்தில் நடந்த விஷ‌வாயுக் கசிவினால் ஆயிரக்கணக்கான‌ குழந்தைகளும், பெரியவர்களும் உயிரிழந்ததையும், இன்று வரை அந்த மாநிலத்தில் வாழும் மக்கள் விஷ‌வாயுக் கசிவினால் கண்ணிழந்து, உறுப்புகள் இழந்து நோய்வாய்ப்பட்டு சிரமப்பட்டு வருவதையும், சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற வழக்கில் சொற்ப நஷ்ட ஈட்டுத் தொகையே நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்பதும், அதையும் அந்த மக்கள் இன்னும் பெறவில்லை என்கிற விபரமெல்லாம் வினவு வாசகர்கள் அறிந்த ஒன்றே. அதே போல் அமெரிக்காவின் மற்றொரு பன்னாட்டு நிறுவனமான டெள கெமிக்கல்ஸ் என்ற நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்னர் யூனியன் கார்பைடு நிறுவனத்தை வாங்கியுள்ளது என்பதும், ஏற்கெனவே அந்த பூமியில் இருக்கிற யூனியன் கார்பைடு நிறுவனத்தின் ரசாயானக் கழிவுகளை அகற்றிட‌ மறுக்கிறது என்பதும், இந்திய ஓட்டுக் கட்சி அரசியல்வாதிகள் அதற்கு துணை போவதுடன், அந்தக் கழிவுகளை நாங்கள் அகற்றிக் கொள்கிறோம் எனச் சொல்வதும் அனைவரும் அறிந்த தகவலே.  அதனால்தான் “நாசகார டெள வே  நாட்டை விட்டு வெளியேறு” என கடந்த ஆண்டு ஆகஸ்டு 15 அன்று மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தப்பட்டது.

_____________________________________________

தற்போது கசிந்த நாற்றத்தைப் பார்ப்போம். டெள கெமிக்கல் என்ற அமெரிக்க பன்னாட்டு நிறுவனம் மகாராஷ்டிரத்திலும், குஜராத்திலும் தனது தொழில் விரிவாக்கத்திற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருவதால் அதைச் சமாளிக்க சிவசேனா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிராவ் அடல்ரோ பாட்டிலை தொடர்பு கொண்டபோது, மக்கள் போராட்டங்களை சமாளிக்க நான் ஒரு சிறந்த மக்கள் தொடர்பு அலுவலரைச் சொல்கிறேன், அவரை நியமித்துக் கொள்ளுங்கள் எனப் பரிந்துரைத்ததின் பேரில் அவர் மாதம் 20000 டாலர் சம்பளத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.  மற்றபடி அரசின் அனுமதிகள் பெறுவதற்கு அந்தப் பாராளுமன்ற உறுப்பினரும், அந்த நேரத்தில் மத்திய இரசாயனத்துறை அமைச்சராக இருந்த ராம்விலாஸ் பாஸ்வான் “மிக அதிகமான தொகை லஞ்சமாக கேட்கிறார்” என்கிறது அந்த தகவல் பரிமாற்றம். இது பற்றி இந்து பத்திரிக்கை ராம்விலாஸ் பாஸ்வானிடம் கேட்டதற்கு, டெள எங்கள் அந்தஸ்தை கீழிறக்க வைப்பதற்காக இவ்வாறு தெரிவிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் அமெரிக்கத் தூதரக அலுவலர் அமெரிக்காவுக்குத் தெரிவித்திருக்கும் தகவலில், போபால் இழப்புகள் இன்னும் மக்கள் மனதிலிருந்து மறையாமல் இருப்பதால் சற்று சிரமமாக இருக்கிறது.  மேலும், 2009 பாராளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால், தமது ஓட்டுக்கள் பாதிக்கும் என்பதால் இதைத் தற்காலிகமாக ஒத்தி வைக்கலாம் என இந்திய அரசியல்வாதிகள் கருதுகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெள கெமிக்கல்ஸின் புனே திட்டம் என்பது சாகான் மற்றும் சிண்டே கிராமங்களில் 100 ஏக்கருக்கும் மேலான விளை நிலங்களை வளைத்துப் போட்டு அமையவிருக்கிறது.  இங்குள்ள வர்க்காரி இன மக்கள் இது போன்ற ரசாயன கம்பெனி வந்தால் தெய்வமாக வழிபட்டுக் கொண்டிருக்கிற தங்களின் ஆறு மற்றும் சுற்றுப்புறச் சூழல் ஆகியன கடுமையாகப் பாதிக்கும் என்பதால் தீவிரமாக‌ எதிர்க்கின்றனர். தேர்தலை ஒட்டி மக்களிடம் நல்ல பெயர் எடுப்பதற்காக மகாராஷ்டிர அரசு தற்காலிகமாக கெமிக்கல் கம்பெனிக்கான அனுமதியை நிறுத்தி வைத்ததுடன்,  விசாரிக்க ஒரு விசாரணை கமிசனை நிறுவுகிறது.

இதன் நடுவில் (சிவசேனா) பாட்டீலையும், பாஸ்வானையும் பலமுறை டெள கெமிக்கல்ஸ் நிர்வாகிகள் தொடர்பு கொள்கின்றனர்.  அதற்கு பாட்டீல், இருய்யா! மக்களுக்கு உங்கள் கெமிக்கலால் இழப்புக்கள் வரும் என்பதும், நீங்கள்தான் யூனியன் கார்பைடு நிறுவனத்தை வாங்கியவர்கள் என்பதும் தெரிந்து விட்டது, அதனால் சற்றுப் பொறுத்து நெளிவு, சுளிவாகத்தான் இதைக் கையாள வேண்டும் அவசரப் படாதீர்கள் எனத் தெரிவித்ததாகவும் விக்கி லீக் செய்திக்கசிவு தெரிவிக்கிறது.  இதெல்லாம் சரி செய்ய வேண்டுமென்றால் சற்று செலவாகும், எங்களுக்கு பல   கோடி டாலர்கள் லஞ்சமாகத் தர வேண்டும் எனக் கேட்டிருக்கிறார்கள்.  அதே அரசியல்வாதிகள், இந்த போபால் மக்களுக்கான நஷ்ட ஈட்டு எலும்புத் துண்டுகள் சிலவற்றை டெள கெமிக்கல் வீசியெறிந்து விட்டால், வேலை சற்று சுலபமாகி விடும்  என டெள க்கு ஆலோசனை தெரிவித்திருக்கிறார்கள்.

இதற்கு நடுவில் டெள நிர்வாகிகளைச் சந்தித்த குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி, ஏன் மகாராஷ்டிரத்தில பிரச்சனைன்னா அதை சற்று நிறுத்தி வைத்து விட்டு எங்கள் மாநிலத்திற்கு வாருங்கள் எனச் சிவப்புக் கம்பளம் விரித்ததையும், அதைத் தொடர்ந்து குஜராத்தில் ஏற்கெனவே உள்ள ஐரோப்பிய பன்னாட்டு நிறுவனமான அல்கலீஸ் அண்டு கெமிக்கல் என்ற நிறுவனத்துடன் இணைந்து தொழில் நடத்த ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டதென மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.

டெள கெமிக்கல்ஸ் நிறுவன அதிகாரிகள் இந்திய திட்டக் கமிசன் துணைத் தலைவர் (உலக வங்கி கைக்கூலி) மான்டேக் சிங் அலுவாலியாவைத் தொடர்பு கொண்டு உதவி கேட்டதற்கு “உங்கள் நிலைமை எனக்குப் புரிகிறது. ஆனால் தற்போது எதிர்க்கட்சிகளின் ஆட்சேபணை அதிகமாக இருப்பதால் சற்றுப் பொறுங்கள்’ எனத் தெரிவித்ததாக அந்தச் செய்தி மேலும் தெரிவிக்கிறது.  அமெரிக்கத் தூதர் தன் நாட்டிற்குத் தெரிவித்த செய்தியின் முடிவுரையாக “டெள கெமிக்கல்ஸ் நிர்வாகம் அரசின் அனுமதி பெறுவது சுலபம் என்று குறைத்து மதிப்பிட்டிருக்கிறது.  ஆனால் போபால் நிகழ்வுகளை மக்கள் இன்னும் மறக்காத நிலையில் அனுமதி பெறுவதென்பது டெள நிர்வாகம் மதிப்பிடுவதை விடச் சற்று சிரமமானது” என்று தெரிவித்துள்ளது.

இந்தக் கதை இதோடு முடியவில்லை… என்ற இக்கட்டுரையின் முதல் பத்தியை மீண்டும் ஒருமுறை படித்து விடுங்கள்.

போபால் சம்பவ நஷ்டங்களுக்கு, இழப்புகளுக்கு டெள கெமிக்கல்ஸை பொறுப்பாக்காமல் விடுவியுங்கள் என அமெரிக்கத் தூதரக அதிகாரி முல்போர்டு மற்றும் கருவூலச் செயலாளர் பால்சன் ஆகியோர் இந்திய அரசியல்வாதிகளிடம் தரகு பேசிய விபரங்கள் 2ம் தேதி தி இந்து நாளிதழில் வெளிவந்துள்ளது.

மத்திய, மாநில அரசு உயரதிகாரிகள் மற்றும் ஒரு மாநில முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல்வாதிகள் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தவறுகளுக்கு டெள கெமிக்கல்ஸ் நிறுவனம் பொறுப்பேற்க வேண்டியதில்லை என ஒப்புக் கொண்டதாக ஜூலை யிலிருந்து நவம்பர் 2007 வரை தூதரகத்திலிருந்து அமெரிக்காவிற்கு அனுப்பிய தகவல்களின் வழியே தெரிய வருகிறது.

இந்தியா வெளியிட்டுள்ள பொருளாதார அறிக்கையில் வணிகத்துறை அமைச்சர் கமல்நாத் மற்றும் இந்திய திட்டக்குழுத் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா டெள இந்தியாவில் மேற்கொள்ளவிருக்கிற முதலீட்டை வரவேற்பதாகவும், யூனியன் கார்பைடு நிகழ்விற்கும் அந்தப் பேரழிவு நடந்த இடத்தில் உள்ள இரசாயனக் கழிவுகளை அகற்றுவதற்கும் டெள-தான் பொறுப்பேற்க வேண்டும் என்பதைத் தாங்கள் நம்பவில்லை எனத் தெரிவித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.  (அந்த இடத்திலுள்ள இரசாயனக் கழிவுகளை அகற்ற மறுக்கும் டெள நிர்வாகத்தை எதிர்த்துதான் மக்கள் போராட்டம் என்பது ஒரு புறமிருக்க, கழிவுகளை அகற்றவும், நட்டஈடு தரவும் டெள பொறுப்பேற்க முடியாது என நமது அரசியல் சிகாமணிகளே ஒப்புதல் வாக்குமூலம் தருவது என்ன விதமான கொடுமை)

அந்த ரகசிய கேபிளில் மேலும் தெரிவிக்கப்பட்டள்ள விவ‌ரங்கள் யாதெனில், அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகள் இந்தியாவில் மேற்கொள்வது தொடர்பாக அமெரிக்கத் தூதரக அதிகாரி டேவிட் சி முல்போர்டு, துணைத் தலைவர் ஸ்டீபன் ஜே ஒயிட், கல்கத்தா பிரிவு தூதரக அலுவலர் ஹென்றி வி ஜார்டைன், மேற்கு வங்க முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா மற்றும் மான்டேக் சிங் அலுவாலியா ஆகியோருக்கிடையே இது தொடர்பாக நடைபெற்ற பேச்சு விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா-இந்தியா இடையிலான வர்த்தக உறவு மேம்பட வேண்டுமானால் இந்த விஷ‌யத்தில் விரைவாக ஒரு தீர்மானத்திற்கு வாருங்கள் என அமெரிக்கா இந்தியாவை நெருக்கடி செய்துள்ளது. மேலும் இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டுமெனில், நஷ்ட ஈடு போன்ற வழக்குகள் இருந்தால் எப்படி முதலீடு செய்ய முடியும், நஷ்ட ஈடு தர வேண்டும் என்ற பொறுப்பிலிருந்து டெள நிறுவனத்தைக் கழற்றி விடுங்கள் என்பதே தொடர்ந்து அமெரிக்காவின் நிர்ப்பந்தமாக இருந்திருக்கிறது.  இந்த விஷயத்தில் அலுவாலியா தனது திருவாய் மலர்ந்து, மேலும் சில கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்.  டெள போன்ற மற்றொரு நிறுவனத்தைப் பின்னாளில் எடுத்துக் கொண்ட நிறுவனம், முதன்மை நிறுவனத்தின் நிகழ்வுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என சட்டப்படி சொல்ல முடியாது, இருந்தாலும் எங்கள் பெரிய வக்கீல் ப.சிதம்பரத்துடன் தாங்கள் தொடர்பு கொண்டால் அவர் தங்களுக்கு நல்ல சட்டப்பூர்வ ஆலோசனைகள் அளிப்பார் (என மற்றொரு அமெரிக்க உலக வங்கிக் கைக்கூலியின் முகவரியைக் கொடுத்துள்ளார்) என்றாராம்.

அமெரிக்கக் கருவூலச் செயலாளர் பால்சன் அக்டோபர் 28ம் தேதி மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவை சந்தித்த பின், தனது நாட்டுக்குத் தெரிவித்த தகவலில் ஒரளவுக்குப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும் நிலையில் உள்ளது, சில சட்டப்பூர்வ வழக்குகள் தவிர.  மேற்கு வங்க முதல்வர் தனது மாநிலத்தில் டெள நிறுவனம் தொழில் துவங்க வர வேண்டுமென ஆர்வமாக உள்ளார்.  மேலும் சிபிஎம் முதல்வர் தெரிவிக்கையில் உங்களுக்கு எந்தத் தடங்கல் வந்தாலும் அவற்றை நீக்க நான் உறுதுணையாக இருப்பேன்,  இருந்தாலும் நீங்கள் ஒருமுறை எங்கள் நாட்டின் பிரதம மந்திரியையும், நிதி அமைச்சரையும் சந்தித்து விடுங்கள் என அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்திருக்கிறார்.

டெள நிறுவனத்தின் தலைவர் ஆண்ட்ரு லிவரிஸ், ரோனன் சென் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் இந்திய அரசியல்வாதிகள், அதிகாரிகள் போபால் நிகழ்விற்கு டெள நிறுவனம் பொறுப்பேற்கவில்லை என்பதை ஒப்புக் கொண்டுள்ளனர். போபால் நிகழ்வு என்பது ஒரு சிறு தடங்கல்தான்,  மற்றபடி இந்திய நாட்டில் மான்டேக் சிங் அலுவாலியா, ப.சிதம்பரம், மன்மோகன் சிங், புத்ததேவ் பட்டாச்சார்யா போன்ற நல்லவர்களெல்லாம் இருப்பதால், இங்கு தொழில் துவங்குவதோ முதலீடு செய்வதோ பெரிய சிரமம் இல்லை.  மக்கள் போராட்டம் என்ற சிறிய தடங்கலை எல்லாம் அரசியல்வாதிகளைக் காசால் அடித்துச் சரிசெய்து விடலாம் – எனவே அந்நிய முதலீடுகள் தாராளமாக இந்தியாவிற்குள் வரலாம் என்பதுதான் ஒட்டுமொத்த செய்திக்கசிவின் சாராம்சம்.

இனி மீண்டும் இந்தக் கதை இதோடு முடிவதில்லை.. என்ற முதல் பத்தியை மீண்டும் ஒருமுறை படித்துக் கொள்வோம்.

_____________________________________________

இந்திய வளங்களைச் சுரண்டுவது, மக்களின் உயிர்களைத் துச்சமாக மதிப்பிட்டு அபாயகரமான ரசாயன நிறுவனங்கள், அணு உலைகளை இந்தியாவில் நிறுவுவது போன்ற அமெரிக்க ஏகாதிபத்திய நடவடிக்கைகளை எதிர்த்து அவ்வப்போது எதிர்கட்சி அரசியல்வாதிகள் குரல் கொடுக்கிறார்கள் என ஊடகங்களைப் பார்த்து மக்களாகிய நாம் நம்பினால் நிச்சயமாக மோசம் போவோம் என்பது மேற்கண்ட தூதரக செய்திக் கசிவுகளிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.  எனவே மக்களை அரசியல்படுத்தி போராட்டங்களைத் தீவிரப்படுத்துவதே நிரந்தரத் தீர்வுக்கு வழிவகுக்கும்.

நாசகார டெள-வே இந்தியாவை விட்டு வெளியேறு ! என்ற போராட்டத்தை மீண்டும் கையிலெடுத்து, தீவிரப்படுத்த வேண்டியது இன்றைய உடனடித் தேவையாகும்.

_____________________________________________

சித்ரகுப்தன்
நன்றி- தி இந்து மற்றும் அதன் செய்தியாளர்கள்
_____________________________________________

கார்ப்பரேட் கொள்ளையர்களின் தேர்தலை புறக்கணிப்போம் !

கார்ப்பரேட் கொள்ளையர்களின் தேர்தலை புறக்கணிப்போம்!

புழுத்து நாறிக் கிடக்கிறது, ஓட்டுச்சீட்டு ஜனநாயகம். அதன் உண்மையான பொருளை அறிய விரும்பினால், தமிழகச் சட்டமன்றத் தேர்தலையொட்டி ஓட்டுக் கட்சிகள் நடத்திவரும் பிழைப்புவாத பொறுக்கி அரசியல் கூத்துக்களைப் பார்த்தாலே போதும்.

காங்கிரசுடன் தொகுதிப் பங்கீடு இழுபறி நீடித்தபோது, கூட்டணியிலிருந்தும் மைய அரசின் அமைச்சரவையிலிருந்தும் விலகுவதாக அறிவித்த தி.மு.க.வின் வீராவேசம், கடைசியில் குடும்ப நலனைக் காப்பாற்றிக் கொள்வதற்கான கீழ்த்தரமான உத்தியாகிப் போன கோமாளிக் கூத்து உயர்வானதா? அல்லது, இந்தக் கோமாளிக் கூத்துக்கு பக்கமேளம் வாசித்த வீரமணி, திருமா, ஆகியோர் ஆடிய குத்தாட்டம் மேலானதா? துணை நகரங்கள் அமைப்பது, தனியார் உயர் கல்வி நிறுவனங்களின் கொள்ளை, சில்லறை வணிகத்தில் ஏகபோக நிறுவனங்களின் நுழைவு, அரசின் டாஸ்மாக் சாராயக் கடை முதலானவற்றுக்கு எதிராகச் சவடால் அடித்து வந்த பச்சோந்தி ராமதாசு, அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தி.மு.க. அரசுக்கு முழுமையாக ஆதரவு தருவோம் என்று இப்போது ஆடும் பிழைப்புவாதக் கூத்து மேலானதா?

தன்னிச்சையாக தொகுதிகளை அறிவித்துக் கூட்டணி கட்சிகளுக்குத் தண்ணி காட்டிய ஜெயலலிதா நடத்தி ஆவேசக் கூத்துக்கு முதலிடமா? அல்லது பாசிச ஜெயலலிதாவுடன் கூட்டணி கட்டிக் கொண்ட விஜயகாந்த் மற்றும் இடது  வலது போலி கம்யூனிஸ்டுகள் வீறாப்பு காட்டி நடத்திய கோமாளிக் கூத்து சிறந்ததா? அவமானப்படுத்திவிட்டதாகக் கூறித் தேர்தலைப் புறக்கணித்து காயடிக்கப்பட்ட பன்றியைப் போல கத்திக் கொண்டிருக்கும் வைகோவின் கூத்து உயர்ந்ததா? என்று புரியாமல் தமிழக மக்கள் தடுமாறுகிறார்கள்.

பிழைப்புவாத பொறுக்கி அரசியல் வியாபாரத்தில் மான அவமான உணர்ச்சிகளுக்கும் இடம் கிடையாது. கடந்த சட்டமன்றத்தில் கருணாநிதியை அடிக்கப் பாய்ந்த அ.தி.மு.க.வின் ரவுடியான சேகர் பாபு, இப்போது கருணாநிதியின் உடன்பிறப்பாக மாறி தி.மு.க.வேட்பாளராகப் போட்டியிடுகிறார். கற்பு நெறி பேசி நடிகை குஷ்புவுக்கு எதிராகச் சாமியாடிய ராமதாசும் திருமாவும் இன்று அவர் தி.மு.க. பேச்சாளராகிவிட்டதால் பம்முகின்றனர். பா.ம.க. ஒருபுறமிருக்க, ஆதிக்க சாதிக் கவுண்டர்களின் கொங்குநாடு முன்னேற்றக் கழகத்துக்கு 7 இடங்களை தி.மு.க. கூட்டணி ஒதுக்கியிருக்கிறது. அ.தி.மு.க. கூட்டணித் தலைவி ஜெயலலிதா, நடிகர் சரத்குமாரைத் தலைவராகக் கொண்ட நாடார் சாதியினரின் கட்சிக்கு 2 தொகுதிகளை ஒதுக்கியுள்ளார். இலவசக் கவர்ச்சித் திட்டங்களோடு பணபலம், சாதியபலம், குண்டர்பலம் ஆகிய முப்பெரும் ஆயுதங்களே தமிழக ஓட்டுக்கட்சிகளின் தேர்தல் வெற்றியைத் தீர்மானிப்பவையாக மாறிவிட்டன.

மறுகாலனியாக்க அரசியல்  பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாக, நாட்டின் இறையாண்மையும் மக்களின் வாழ்வுரிமைகளும் சூறையாடப்பட்டு வரும் சூழலில், ஓட்டுச்சீட்டு ஜனநாயகம் என்பதே இந்த அரசமைப்பிற்கு ஒரு கோமாளித் தொப்பியாக மாறி வருவதைத் தமிழகத் தேர்தல் நிகழ்ச்சிப் போக்குகள் நிரூபித்துக் காட்டுகின்றன. கொள்கைகளின் இடத்தைக் கவர்ச்சி  இலவசத் திட்டங்கள் பிடித்துக் கொண்டதைப் போலவே, கட்சிகளைப் பணமுதலைகள் கைப்பற்றிக் கொண்டு விட்டனர்.

தயாநிதியும் ராசாவும் மைய அமைச்சர்களாக்கப்பட்டதற்கும் மு.க.ஸ்டாலின் துணை முதல்வராக்கப்பட்டதற்கும் காரணம் என்ன? வீரபாண்டி ஆறுமுகம் போன்ற தி.மு.க. பழம் பெருச்சாளிகள் தமது வாரிசுகளுக்கு சீட் வாங்கியிருப்பதும், காங்கிரசின் கிருஷ்ணசாமியின் மகன் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பதும் குடும்பத்தோடு நாட்டுக்குச் சேவை செய்வதற்கா? இதில் புரியாத இரகசியம் ஒன்றுமில்லை. கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது, தி.மு.க.அமைச்சர் எ.வ.வேலுவின் சொத்தும் கரூர் பழனிச்சாமியின் சொத்தும் கோடிக்கணக்கில் அதிகரித்திருக்கிறது. தாங்கள் போட்டியிடுவதன் நோக்கம் என்ன என்பதில் வேட்பாளர்கள் தெளிவாகவே இருக்கிறார்கள்.

எந்தவொரு கட்சியின் தலைவர்களும் பிரமுகர்களும் கொள்கை இலட்சியத்துக்காக அந்தக் கட்சியில் அங்கம் வகிப்பதில்லை. அதுபோலவே எந்தவொரு கூட்டணியும் பொதுவான கொள்கை  இலட்சியத்தின் அடிப்படையில் உருவாவதுமில்லை. நாற்காலிகளைப் பகிர்ந்து கொள்வதும் கருப்புப் பணம் கைமாறுவதும்தான் கூட்டணிகள் உருவாவதற்கும், வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்குமான அடிப்படை என்பதும்; கோடீசுவரர்கள், சுயநிதிக் கல்லூரி அதிபர்கள், கந்துவட்டி மணற்கொள்ளை ரியல் எஸ்டேட் மாபியாக்கள்தான் தேர்தலில் போட்டியிட முடியும் என்பதும் இப்போது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. கோடீசுவரர்கள் மட்டும்தான் தேர்தலில் வேட்பாளராக நிற்க முடியும் என்ற இந்த நிலைமை, கட்சி என்ற அமைப்பையே இல்லாமல் செய்து விட்டது. தற்போதைய ஓட்டுச்சீட்டு அரசியலுக்குக் கட்சியும் தொண்டர்களும் எந்த விதத்திலும் தேவைப்படவில்லை என்பதே உண்மை.

இன்றைய கார்ப்பரேட் ஜனநாயகத்தில், யாரை அமைச்சராக நியமிக்க வேண்டும் என்பது ஓட்டுக்கட்சித் தலைமைகளிடம் இல்லை. ராசாவை அமைச்சராக்க டாடா சிபாரிசு செய்த கதை நாடெங்கும் அம்பலமாகியுள்ளது. அமெரிக்காவின் விசுவாசி மன்மோகன் சிங்கைப் பிரதமராகவும், உலக வங்கி அதிகாரியாக இருந்த மான்டேக் சிங் அலுவாலியாவை நிதியமைச்சராகவும் நியமிக்க வேண்டும் என்று அமெரிக்கா நிர்பந்தித்த கதை வெளிவந்துள்ளது. அமெரிக்காவின் உத்தரவுப்படி மணிசங்கர் அய்யரை நீக்கிவிட்டு பெட்ரோலிய அமைச்சராக முரளி தியோரா அமர்த்தப்படுகிறார். அப்படியானால் ஓட்டுச்சீட்டு ஜனநாயகத்தின் உண்மைப் பொருள்தான் என்ன?

மக்களால் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளும்கட்சியின் அமைச்சரவை அரசின் கொள்கை முடிவுகளை வகுப்பதில்லை. கார்ப்பரேட் முதலாளிகளின் நலனும் விருப்பமுமே கொள்கையாக்கப்படுவதும் அதிகார வர்க்கம் இதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுவதுமே இப்போதைய நிர்வாக முறையாகிவிட்டது. துறைசார் வல்லுனர்கள் என்ற பெயரில் ஏகாதிபத்திய ஆலோசனை நிறுவனங்கள் பரிந்துரை செய்வதும், நேரடியாகக் கொள்கை வகுத்துத் தருவதும், நீரா ராடியா போன்ற தரகர்களைக் கொண்டு ஒப்பந்தங்களையும் திட்டங்களையும் நிறைவேற்றிக் கொள்வதும், நாடாளுமன்ற நிலைக்குழுக்களில் முதலாளிகள் அங்கம் வகிப்பதுமாக நிர்வாக முறை மாறிவிட்டது. இத்தகைய குழுக்கள் பரிந்துரைத்ததன் அடிப்படையில் ஒப்பந்தம் போடப்பட்டதாகவே நாடாளுமன்றத்திலும் சட்ட மன்றத்திலும் அமைச்சர்கள் பதிலளிக்கின்றனர்.

அமைச்சர்கள் இத்தகைய ஒப்பந்தங்களில் கையெழுத்துப் போடுவதற்கு மேல் ஒன்றும் செய்வதில்லை. நாடாளுமன்ற  சட்டமன்றங்களில் சில நாட்கள் கூச்சல் போடுவதும், தீர்மானங்களை அவசரமாக நிறைவேற்றுவதும்தான் நடக்கிறது. மக்கள் நலனுக்கு எதிரானதாக இருந்தாலும், இத்தகைய கொள்கை முடிவுகளில் தலையிடமுடியாது என்று நீதிமன்றங்கள் ஒதுங்கிக் கொண்டு கார்ப்பரேட் கொள்ளைஊழலுக்குச் சேவை செய்கின்றன. சட்டமன்றங்கள், நாடாளுமன்றம் மட்டுமல்ல; உள்ளூராட்சிகளில்கூட உலக வங்கி மற்றும் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களின் எடுபிடிகளாக உள்ள தன்னார்வ நிறுவனங்களே திட்டங்களைத் தயாரித்துக் கொடுத்துத் திணிப்பதாகவும், அவற்றின் ஆலோசனைப்படியே உள்ளாட்சிகள் இயங்குமாறும் நிர்வாக முறை மாற்றப்பட்டிருக்கின்றன.

போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் என்ன என்பதை தகவல் அறியும் சட்டத்தின் மூலமாகவும் அறிய முடியாது. இவை அனைத்தும் இரகசியமாக்கப்பட்டுள்ளன. அணுசக்தி ஒப்பந்தம் போல, இது நாட்டின் வளர்ச்சிக்கானது என்று கூறி மறைக்கப்படுகின்றன. குடிமக்களுக்கோ, சட்டமன்ற நாடாளுமன்றப் பிரதிநிதிகளுக்கோ இவை தெரிய வேண்டியதில்லை என்பதுதான் அரசின் கொள்கையாக உள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதாகக் கூறப்படும் நாடாளுமன்றத்திற்கோ, சட்டமன்றத்திற்கோ, உள்ளாட்சி அமைப்புகளுக்கோ கூட இது பற்றிக் கேள்வி கேட்கவும் எவ்வித உரிமையும் இல்லை. ப.சிதம்பரம், அபிசேக் மனு சிங்வி, அருண் ஜேட்லி உள்ளிட்ட பல ஓட்டுக்கட்சி பிரமுகர்கள் பன்னாட்டு நிறுவனங்களின் சட்ட ஆலோசகர்களாகவும், வழக்குரைஞர்களாகவும் பணியாற்றுவதோடு, இத்தகைய கார்ப்பரேட் நிறுவனங்களிலும், கான்கிரீட் வீடு கட்டும் திட்டம், மருத்துவக் காப்பீடு போன்ற ஒப்பந்த நிறுவனங்களிலும் ஓட்டுக் கட்சி பிரமுகர்கள் பங்குதாரர்களாக இருந்தும் ஆதாயமடைவதால், அவர்கள் இத்தகைய ஒப்பந்தங்கள் பற்றி வாய்திறப்பதுமில்லை.

ஓட்டுரிமை என்பது ஐந்தாண்டுகளுக்கு என்ன வேண்டுமாலும் செய்து கொள்ளுமாறு அளிக்கப்படும் ஒப்பந்தப் பத்திரமாகிவிட்டது. ஒருமுறை எழுதிக் கொடுத்துவிட்டால் பின்னர் அதை மாற்றவும் முடியாது. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை தட்டிக் கேட்கவோ, அவரது பிரதிநிதித்துவத்தை ரத்து செய்யவோ மக்களுக்கு உரிமையும் கிடையாது. மொத்தத்தில் தேர்தல் என்பது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் சடங்காகவும், கார்ப்பரேட் நாயகமே ஜனநாயகமாகவும் மாறிவிட்டது. இவ்வளவுக்குப் பின்னரும் ஓட்டுப் போடுவதால் என்ன பயன்?

வாழ்விழந்த விவசாயிகளும் வேலையிழந்த தொழிலாளர்களும் பல கோடிப் பேராக உள்ள நிலையில், தமிழகத்தின் உயிராதாரமான இப்பிரச்சினைகளுக்குக் காரணம் என்ன என்பதைப் பற்றி எந்த ஓட்டுக் கட்சியும் வாய் திறப்பதில்லை. விவசாயம் நசிந்து போனதற்கும், கைத்தறி  விசைத்தறி  சிறுதொழில்களின் அழிவுக்கும், பஞ்சம் பிழைக்க மக்கள் ஊரை விட்டு ஓடும் அவலத்திற்கும் இந்தத் தேர்தலுக்கும் என்ன உறவு? மறுகாலனியாக்கத்துக்கும் விவசாயம்  சிறு தொழில்களின் அழிவுக்கும் என்ன உறவு? இவையனைத்தும் ஓட்டுக்கட்சிகளாலும் செய்தி ஊடகங்களாலும் திட்டமிட்டே இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. அரசியலற்ற அற்ப விவகாரங்களும் கிசுகிசுக்களும் வதந்திகளும் ஊகங்களுமே அரசியலாக ஊதிப் பெருக்கிக் காட்டப்படுகின்றன.

உள்ளூர் தொழிலுக்கும் விவசாயத்துக்குமான மின்சாரத்தை தி.மு.க. அரசு வெட்டி, தமிழகத்தை இருளில் தள்ளிய போதிலும் பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சலுகை விலையில் தடையற்ற மின்சாரம் வழங்கப்பட்டது. தமிழ்நாடு ஏரிகுளங்கள் பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரில் அவசரச் சட்டம் போட்டு நிலமற்ற விவசாயிகள் குறுகியகால சாகுபடி செய்வதையும் ஊருணிகள், குளங்களில் உள்ளூர் மக்கள் மீன் பிடித்துவந்த பாரம்பரிய உரிமையையும் பறித்துவிட்டது. வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமைத் திட்டம், வேளாண் தொழில் ஆலோசகர் ஒழுங்காற்றுச் சட்டம் முதலானவற்றின் மூலம் பாரம்பரிய வேளாண் அறிவையும் தற்சார்பையும் முற்றிலுமாக அழித்து, தமிழக விவசாயிகளைப் பன்னாட்டு நிறுவனங்களின் கொத்தடிமைகளாக்க ஏற்பாடு செய்துள்ளது. பன்னாட்டு கம்பெனிகளின் ஆலோசனைப்படி, மரபணு மாற்றுப் பயிர்கள் கட்டாயமாகத் திணிக்கப்படுகின்றன.

உலகமயமாக்கலுக்கு ஏற்ப சென்னையை நவீன காலனியாக்கி, பன்னாட்டு நிறுவனங்களின் நலன்களைக் காத்திட உலக வங்கி தீட்டித்தந்த திட்டப்படி இரண்டாவது மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டு, சென்னையின் மீனவர்களும் குடிசைவாழ் மக்களும் கறிவேப்பிலை போல வீசியெறியப்பட்டனர். உலக வங்கி திட்டப்படி, புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டு நகர்ப்புற சேவைகளைத் தனியார்மயமாக்கும் வேலை செயல்படுத்தப்பட்டது. பெருந்தொழில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எங்கு, எந்த நிலம் எவ்வளவு வேண்டுமோ, அவற்றை அபகரித்துக் கொடுக்கும் வேலையையும், தமிழ்நாட்டில் அனுமதி பெற்ற 70 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு நிலம் பறிக்கும் வேலையையும் சிப்காட் மற்றும் டிட்கோ ஆகிய அரசு நிறுவனங்களே செய்கின்றன.

தி.மு.க.வின் மைய அமைச்சர்களின் ஊழல் கொள்ளைப் பற்றி அடுக்கடுக்காக குற்றம் சாட்டுகிறார் ஜெயலலிதா. கருணாநிதி குடும்பம் தமிழகத்தைக் கொள்ளையடித்த கதையைப் பேசுகிறார். ஆனால், தமிழகத்தை இருளில் தள்ளிவிட்டு பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தடையற்ற மின்சாரம் வழங்கும் தி.மு.க. அரசின் அநியாயத்தை எதிர்க்கவில்லை. அரசு தொலைபேசித் துறையை முடமாக்கி டாடா, அம்பானி முதலான தனியார் தொலைபேசி முதலாளிகளைக் கொழுக்க வைத்தவர்தான் ‘ஸ்பெக்ட்ரம் புகழ்’ ராசா என்று அவர் குற்றம் சாட்டுவதில்லை. டிரிப்ஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் மருந்துகளின் விலையை ஏழைகளுக்கு எட்டாக் கனியாக்கியவர்தான் அன்புமணி என்று சாடுவதில்லை.

தமிழகத்தில் இயங்கும் பன்னாட்டு நிறுவனங்களிலும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிலும் எவ்வித தொழிற்சங்க உரிமையும் இல்லாமல் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருப்பதைப் பற்றி கருணாநிதி அரசின் சர்வாதிகாரப் போக்கிற்கு ஒரு சான்றாகக்கூடக் காட்டுவதில்லை. தி.மு.க. அரசை விஞ்சும் வகையில் அந்நிய முதலீட்டை அதிகரித்து தமிழகத்தை முன்னேற்றப் போவதாக அறிவிக்கிறார், ஜெயா. மறுபுறம், ஜெயலலிதாவின் ஊழல் கொள்ளையைப் பற்றிப் பட்டியல் போடும் தி.மு.க. கூட்டணி, தாமிரவருணி ஆற்றையே கோகோகோலாவிற்குத் தாரைவார்த்த மாபெரும் ஊழலைப் பற்றி வாயே திறப்பதில்லை.

எனில், தி.மு.க. கூட்டணிக்கும் அ.தி.மு.க. கூட்டணிக்கும் என்ன கொள்கை வேறுபாடு? பாதாள சாக்கடைக்கும் கூவம் ஆற்றுக்கும் இடையிலான வேறுபாடுதான் இவர்களுக்கிடையிலான வேறுபாடு.

மக்கள் வரிப்பணத்தை வாரியிறைத்து கார்ப்பரேட் முதலாளிகளின் தேவைக்காகப் போடப்படும் நால்வழி விரைவுச் சாலைகள், மேம்பாலங்கள் முதலான அடிக்கட்டுமானத்துறையின் வளர்ச்சியைக் காட்டி, இதையே தமது ஆட்சியின் சாதனையாக கருணாநிதியும் ஜெயலலிதாவும் பீற்றிக் கொள்கின்றனர். உலக வங்கி, உலக வர்த்தகக் கழகத்தின் கட்டளைகளையும், அதனடிப்படையில் வகுக்கப்படும் மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகளையும் இவ்விரு கூட்டணிகளும் உடன்பட்டு வரவேற்கின்றன. தனியார்மய தாராளமயக் கொள்கைகள் தோல்வியடைந்து பெருத்த பின்னடைவு ஏற்பட்டுள்ள போதிலும், மீண்டும் அதேபாதையில் இக்கொள்கைகளைத் தீவிரமாகச் செயல்படுத்துவதன் மூலம்தான் தமிழகத்தைத் தொழில் வளமிக்க முதன்மை மாநிலமாக்க முடியும் என்று அவை கூறுகின்றன.

இத்தகைய மறுகாலனியாக்கக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் ஓரணியில் நிற்கும் இக்கூட்டணிக் கட்சிகள், இந்தக் கொள்கைக்கும் அரசியலுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லாததுபோல் மக்களை ஏய்க்கின்றன. அற்பமான வேற்றுமைகளை ஊதிப் பெருக்கி, அதையே அரசியலாகக் காட்டி மக்களை மயங்க வைத்திருக்கின்றன. இந்த லாவணிக்குப் பக்கமேளம் வாசித்து, நம்பிக்கையிழந்து வெறுத்துப் போன மக்களுக்கு மீண்டும் நம்பிக்கையூட்டி, தமிழகச் சட்டமன்றத் தேர்தலையொட்டி செயற்கையாக ஒரு விறுவிறுப்பை உருவாக்கி வாக்காளர்களைக் கவர்ந்திழுக்கக் கிளம்பியுள்ளன முதலாளித்துவ ஊடகங்கள்.

வாக்குரிமையைப் புனிதமான ஜனநாயகக் கடமையாகச் சித்தரிக்கும் ஓட்டுப் பொறுக்கிகள், வாக்குரிமையைப் போலக் கருத்துரிமையையும் போராடும் உரிமையையும் அடிப்படை ஜனநாயக உரிமையாக ஏற்பதில்லை. மக்கள் தங்களுடைய ஜனநாயக உரிமைகளைப் போராடி வென்றெடுப்பதை ஓட்டுப் பொறுக்கிகள் எவருமே விரும்புவதில்லை. அது அவர்களது முதலுக்கே மோசமாகிவிடும் என்று அஞ்சுகிறார்கள். மக்களுடைய போராட்டங்களை முடமாக்கவும் ஜனநாயக உணர்வுகளை மழுங்கடிக்கவும்தான் அவர்கள் முயற்சிக்கிறார்கள். வெள்ளைக்காரன் ஆட்சியைப் போல இன்றும்கூட பொதுக்கூட்டம்  பேரணி நடத்த போலீசிடம் போய் அனுமதி பெற வேண்டியிருக்கிறது. மக்கள் தண்ணீர் கேட்டுப் போராடினால், போராடும் மக்களைச் சந்திக்க அமைச்சர்களோ, எம்.எல்.ஏ.க்களோ, குடிநீர் வாரிய அதிகாரிகளோ வருவதில்லை. போலீசு வருகிறது. வாக்குரிமை என்பது மற்றெல்லா உரிமைகளையும் அடியறுக்கும் ஆயுதமாகவே மாற்றப்பட்டுவிட்டது.

இலவசங்களுக்கும் பணத்துக்கும் விலை போகும் அளவுக்கு, ஓட்டுக்கட்சிகள் தங்களது பிழைப்புவாதத்தை மக்களிடமும் பரப்பி அவர்களையும் சாக்கடையில் தள்ளிவருகின்றன. மறுகாலனியாக்கத்தால் சூறையாடப்படும் தங்கள் வாழ்க்கை பற்றியோ, தாங்கள் இழந்துவரும் அடிப்படை உரிமைகள் பற்றியோ எவ்வித விழிப்புணர்வும் இல்லாத மக்களுக்கு ஓட்டுக்கட்சிகள் அறிவிக்கும் இலவசங்கள் மட்டுமே புரியக்கூடியதாக இருக்கிறது. பண்ணையார்களிடம் பொங்கல் இனாம் வாங்கப் போகும் பண்ணையடிமைகளைப் போல, மக்களைத் தங்கள் முன்னால் கையேந்தி நிற்க வைத்திருக்கிறார்கள், இந்த ஓட்டுப் பொறுக்கிகள். இவர்களிடம் கையேந்தி நிற்பதும் இப்படிப்பட்ட தேர்தலில் வாக்களிப்பதும் நம்மை நாமே பிச்சைக்காரர்கள் என்று ஒப்புக் கொள்வதற்குச் சமமானது.

இத்தனைக்கும் பிறகும் தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளைக் காட்டி, அதிகார வர்க்கம் கடுமையாக நடந்து கொண்டால், ஓட்டுக்கட்சிகளின் அராஜகங்களையும் தேர்தல் சீரழிவுகளைத் தடுத்துவிட முடியும் என்றும், மையப் புலனாய்வுத் துறையும் நீதித் துறையும் அரசியல் தலையீடின்றிச் செயல்பட்டால் ஊழல் கொள்ளைகளைத் தடுத்துவிட முடியும் என்றும் படித்த வர்க்கத்தினர் சிலர் நம்புகின்றனர். ஆனால், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விவரங்களைக் கேட்டு ஊழலையும் கொள்ளையையும் அம்பலப்படுத்த முயற்சிப்பவர்கள் கூட அச்சுறுத்தப்படுவதும், ஏன் கொல்லப்படுவதும் நடக்கும்போது, உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் சிலர் ஊழல் பெருச்சாளிகளாக அம்பலப்பட்டுள்ளபோது, இன்றைய அரசியலமைப்பு முறையே கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளைக்கானதாக இருக்கும் போது, சாக்கடையை அகற்றாமல் கொசுக்களை ஒழித்துவிட முடியாது.

இன்னும் சிலர் எந்தக் கட்சிக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று 49ஓ போடச் சொல்கின்றனர். ஓட்டுக் கட்சிகள் மீதான மக்களின் அதிருப்திக்கு இதுவொரு வடிகாலாக இருக்கிறதே தவிர, 49ஓ போடும் வாக்காளர்களின் எண்ணிக்கை பெரும்பான்மையாக இருந்தாலும்கூட, இது தற்போதைய தனியார்மய  தாராளமயக் கொள்ளைக்கான அரசியலமைப்பு முறையை மாற்றியமைப்பதற்கான ஏற்பாடல்ல.

இந்நிலையில், மின்னணு எந்திரத்தின் பொத்தானை அழுத்திவிட்டு மக்கள் தமது சிந்தனையையும் செயலையும் சிறைப்படுத்திக் கொண்டு இனியும் அதிகாரிகளின் ஓட்டுப் பொறுக்கிகளின் தயவிற்காகக் காத்துக் கிடக்கத்தான் வேண்டுமா? இதற்கு மாறாக, மக்களே தமது சொந்த அரசமைப்பை, ஒரு புதிய உண்மையான மக்கள் ஜனநாயக அரசமைப்பை உருவாக்கிக் கொள்ள முடியாதா? முடியும்; இது சாத்தியமானதுதான் என்பதை ஏற்கெனவே பல நாடுகளின் அனுபவங்கள் சுட்டிக் காட்டியுள்ளன.

ஒவ்வொரு கிராம  வட்டார அளவிலும் மக்கள் குழுக்கள் நிறுவப்பட்டு, அக்கிராம  வட்டார நிர்வாகிகளைத் தேர்வு செய்வதும், அவர்களே நீதிநிர்வாகம், காவல் பணிகளை மேற்கொள்வதும், அதேபோல நகரங்களில் குடியிருப்புப் பகுதிகள்  தொழிலகங்கள் அடிப்படையில் மக்கள் மன்றங்களையும் நிர்வாக அமைப்புகளையும் நிறுவிக் கொள்வதும் சாத்தியமானதுதான். இவற்றைத்தான் மக்கள் சர்வாதிகார மன்றங்கள், உண்மையான ஜனநாயக அமைப்புகள் என்று கருத முடியும். இவற்றின் மூலம் உள்ளூர் அளவிலும் இவற்றின் பிரதிநிதிகளைக் கொண்ட மாநில, மைய மன்றங்களும் நிர்வாக அமைப்புகளும் நிறுவிக் கொள்வதும் சாத்தியமானதுதான்.

தேர்தல்களைப் புறக்கணித்துவிட்டு வேறு என்னதான் செய்வது? ஒரு ஆட்சியும் அரசமைப்பும் இல்லாமல் நிர்வாகம் எப்படித்தான் நடக்கும் என்று பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். வெறுமனே விரக்தியில் தேர்தலைப் புறக்கணிப்பது அல்ல; தற்போதைய ஆட்சி, அரசியலமைப்பு, நிர்வாக முறை அனைத்தையும் ஒழித்துக் கட்டிவிட்டுத்தான் மக்கள் சர்வாதிகார அரசமைப்புகளை நிறுவ முடியும்.

இது ஒரு மாபெரும் மக்கள் ஜனநாயகப் புரட்சியின் மூலமாகத்தான் சாத்தியமாகும். இத்தகைய மக்கள் சர்வாதிகார அரசமைப்பை நாளையே நிறுவிவிட முடியாது என்பது உண்மைதான். இருப்பினும், அதற்கான கருத்துருவாக்கம் முதற்பணி என்ற முறையில்தான் தேர்தலைப் புறக்கணிக்கும் இயக்கத்தின் ஊடாக மக்களை அணிதிரட்ட வேண்டியுள்ளது. இந்த அடிப்படையில்தான் “போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணிப்போம்! புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!”, “ஓட்டுப் போடாதே! புரட்சி செய்!” என்ற அறிவியல்பூர்வமான அரசியல் முழக்கமும் இயக்கமும் இன்றைய அவசியமாகியுள்ளது. கார்ப்பரேட் கொள்ளையர்களால் இழிந்த நிலைக்கு ஆளாக்கப்பட்டு, ஓட்டுப் பொறுக்கிகளின் இலவசத் திட்டங்களுக்குக் கையேந்தும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மக்கள், அரசியல் அறிவைப் பெறுவதற்கும், மக்கள் ஜனநாயக அரசமைப்பு முறை பற்றிய புரிதலைப் பெறுவதற்கும் புரட்சியாளர்கள் இன்னும் கடுமையாகச் செயல்பட வேண்டியிருக்கிறது.

________________________________________________________

– பாலன், புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2011
________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

தேர்தல் 2011

மூஞ்சப் பாரு!

குறிப்பு:

பத்திரிகையாளர் ஞாநி முதல் பதிவுலக மொக்கைகள் வரை தேர்தல் அரசியலை கட்சிகள் – தலைவர்களின், கூட்டணிகள், சவுடால்கள், திருப்புமுனைகள், எதிர்கால இருப்புகள், வெற்றி தோல்வி ஆய்வுகள் என்று ஒரு டி.வி சீரியலைப் போல நாயகன், வில்லன், பாத்திரப்படைப்பு, சம்பவங்களின் சித்தரிப்பு, பரபரப்பு என்று ‘ஆய்வு’ செய்கிறார்கள். உண்மையில் அரசியல் என்றால் என்ன? கட்சி கூட்டணிகளைத் தாண்டி மக்கள் நலன் ஏன் மறைந்திருக்கிறது? தலைவர்களின் இமேஜுக்கு தோதாக படித்தவர்கள் கதைக்கும் அரட்டை அரசியலின் பின்னணி என்ன? ….இவற்றையெல்லாம் இந்தக் கட்டுரை அலசுகிறது.

2006-இல் எழுதப்பட்ட கட்டுரை இது. அப்போது வைகோ, திருமா – அம்மா அணியில். பா.ம.க, இடது-வலது கம்யூனிஸ்டு கட்சிகள், காங்கிரசு – கலைஞர் அணியில். விஜயகாந்த் தனியாக நின்றார். இன்று இந்த கூட்டணியில் திருமாவும், வைகோவும், இடது வலதுகளும் இடம் மாறியிருக்கிறார்கள். ஆனால் கூட்டணி மாறினாலும் கூட்டணிகளின் ‘கொள்கை’ மாறிவிடவில்லை. பரபரப்பான தேர்தல் காட்சிகளைத் தாண்டி, தலைவர்களின் வெத்து சவுடால்களைத் தாண்டி, நீங்கள் அதிகம் ஆர்வம் கொண்டிருக்கும் “யார் ஜெயிப்பார்கள்” என்ற விறுவிறுப்பு புள்ளிவிவரத்தை தாண்டி உங்களை உண்மையான அரசியலுக்கு அழைத்து செல்கிறது இந்தக் கட்டுரை.

– வினவு

___________________________________________________

''மூஞ்சப் பாரு கொள்கையை பாக்காதே'' கொள்ளைக் கூட்டணிகளின் கொள்கை விளக்கங்கள்...
''மூஞ்சப் பாரு, கொள்கையை பாக்காதே'' கொள்ளைக் கூட்டணிகளின் கொள்கை விளக்கங்கள்...

“இது கொள்கைக் கூட்டணியல்ல, அரசியல் கூட்டணி” என்றார் போயஸ் தோட்டத்தை விட்டுவெளியில் வந்த வை.கோபால்சாமி. கொள்கை என்றால் என்ன? அரசியல் என்றால் என்ன? இதற்கு 1999இலேயே திருமாவளவன் பதில் சொல்லியிருக்கிறார். “தேர்தல் புறக்கணிப்பு எங்கள் கோட்பாடு, பங்கேற்பு என்பது நிலைப்பாடு”என்றார்.

திருமாவை வை.கோவுக்கு மொழிபெயர்த்தால், கொள்கை என்பது கோட்பாடு, அரசியல் என்பது நிலைப்பாடு என்று பொருள் வருகிறது. இன்று போயஸ் தோட்டத்தை விட்டு வெளியே வந்தவுடன், “நிலைப்பாடு என்பது வேறு, தேர்தல் உடன்பாடு என்பது வேறு” என்று புது விளக்கம் அளித்திருக்கிறார். திருமா. அதாவது அரசியல் வேறு கூட்டணி வேறு என்று இவர் விளக்கமளிக்கிறார்.

திருமா போயசு தோட்டத்திற்குப் போனது பற்றி ராமதாசு “வருத்தம்’மட்டுமே வெளியிட்டார். மற்றபடி தங்களிருவரையும் கொள்கை ரீதியாகப் பிணைத்திருக்கும் தமிழ்க் கூட்டணிக்கும் இந்தப் பதவிக் கூட்டணிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தெளிவுபடுத்தி விட்டார்.

”தனது கட்சிக்கு நல்லது என்று அவர் கருதியிருக்கலாம்” என்று வை.கோ.வின் கூட்டணித் தாவலை வருணித்தார் வ.கம்யூ தலைவர் தா.பாண்டியன். தானும் போயசு தோட்டத்தின் பக்கம் நாளை தாவ நேரிடும் என்ற எதிர்காலம் குறித்த கவலை அவரது சொற்களில் பளிச்சிட்டது. ”முதலை வாயில் சிக்கிவிட்டார்” என வருத்தப்பட்டார் மார்க்சிஸ்டு தலைவர். நாளை மதச்சார்பற்ற கூட்டணி அமைக்க நேர்ந்து அதில் 4 சீட்டு குறைந்தால் வை.கோ.வை ஜோக்கர் கார்டாகப் பயன்படுத்திக் கொள்ளக் கிடைக்கும் வாய்ப்பை நழுவவிட மார்க்சிஸ்டுகள் விரும்பவில்லை.

”போன தேர்தல்ல பாரதிய ஜனதாவை எதிர்த்துப் பேசினேன். இந்தத் தேர்தல்ல ஆதரிச்சுப் பேசறேன். எனக்கே அலுத்துப் போச்சுய்யா. ஆனா தலைவா, அடுத்த வாட்டி இவளோட (ஜெயலலிதாவோடு) கூட்டணி வெச்சுடாதீங்க. நான் தீக்குளிச்சிடுவேன்.” என்று 1999 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசினார் தீப்பொறி ஆறுமுகம். இன்றோ அவரே புரட்சித் தலைவியின் பொற்பாதங்களில் கிடக்கிறார்.(தற்போது மீண்டும் தி.மு.கவில்)

இன்றைய தி.மு.க.வின் கூட்டாளிகள்தான் 2001இல் அன்புச் சகோதரியின் அராஜக ஆட்சியை அரும்பாடு பட்டுக் கொண்டு வந்தனர். அதேபோல, 5 ஆண்டுப் பதவிக்காலம் முடிந்து “வணக்கம்’ போட்டு லைட்டும் போட்ட பிறகுதான் பாரதிய ஜனதாவின் மதவெறி முகம் தி.மு.க.வுக்குத் தெரியவந்தது.

“நெருநல் உளனொருவன் இன்றில்லையென்னும் பெருமையுடைத்திவ்வுலகு’ என்பதை “பெருமையுடைத்து இத்தேர்தல்’ என்று திருத்தி வாசிக்கலாம். நேற்றெங்கிருந்தாய், நாளை எங்கிருப்பாய் என்ற கேள்விகளுக்குப் பொருளேயில்லாத அத்வைதப் பெருவெளியில் கலந்து கொண்டிருக்கிறது தேர்தல் அரசியல்.

அதனால்தான் இத்தகைய அஞ்ஞானங்களுக்கெல்லாம் ஜெயலலிதா எப்போதுமே ஆட்படுவதில்லை. ”நடந்ததை மறப்போம்  கதவு திறந்திருக்கிறது” என்ற பிரகடனத்தின் மூலம் ஒரு பரந்த கூட்டணிக்கு அடிப்படையாக அமையும் கொள்கையை அவர் வெளியிட்டிருக்கிறார். கூட்டுத் தொகையில் பெரும்பான்மையைத் தருகின்ற எந்தக் கொள்கையும் அவரைப் பொறுத்தவரை நல்ல கொள்கையே.

மேலும் தேர்தலுக்கு முந்தைய கூட்டணியைத் தீர்மானிக்கும் கொள்கையும், பிந்தைய கூட்டணியைத் தீர்மானிக்கும் கொள்கையும் வேறு வேறானவை என்பதும், அந்தக் கொள்கைகளை வைப்பதற்குத் தனித்தனி சூட்கேசுகள் ஒதுக்கப்பட வேண்டும் என்ற உண்மையும் அவருக்குத் தெரியும். ஆகவேதான் கொள்கை விவகாரங்கள் குறித்த சில்லறைச் சச்சரவுகளில் அவர் எப்போதுமே பங்கேற்பதில்லை.

”கொள்கை கொள்கை என்று பேசிக் கொண்டிருந்தால் கட்சியை வளர்க்க முடியாது. முதலில் கட்சியை உறுதிப் படுத்த வேண்டும்” என்பதனால்தான் இப்படியொரு முடிவை எடுத்ததாக வை.கோ. விளக்கம் சொல்லியிருக்கிறார். கட்சியை உறுதிப்படுத்துவது என்றால் என்ன?  மாவட்டச் செயலாளர்களுக்கு தலா ஒரு எம்.எல்.ஏ. சீட்டாவது கிடைக்க ஏற்பாடு செய்து, அடுத்த 5 ஆண்டுகளில் அவர்களும் அவர்களுடைய கைத்தடிகளும் வீடு, கார், நிலம், பஸ், சினிமா தியேட்டர் என்று செட்டில் ஆவதை உறுதிப்படுத்துவது; இந்த உறுதியான அடித்தளத்தின் மீது கட்சியை நிறுத்தி அதன் மீது கொள்கையை வளர்த்துக் கொள்வது” என்பதுதான் வை.கோ. கூறும் விளக்கத்தின் உண்மையான பொருள்.

இந்த விளக்கம் எல்லாக் கட்சிகளுக்கும் பொருந்தும் என்பது மட்டுமல்ல, எப்படி அரசியல் பண்ணுவது’என்பது குறித்து சர்வ கட்சித் தொண்டர்களும் கொண்டிருக்கும் கருத்தும் இதுதான். ”இத்தனை நாள் அரசியலில் இருந்து என்ன பயன்? நாங்களும் நாலு காசு பார்க்க வேண்டாமா?” என்ற கேள்வியை தத்தம் கட்சிப் பொதுக்குழுக்களில் அவர்கள் வெளிப்படையாகவே எழுப்பத்தான் செய்கிறார்கள். அடிக்கும் கொள்ளை முறையாகப் பகிர்ந்தளிக்கப்படாத போது “உட்கட்சி ஜனநாயகத்துக்காக’க் குரல் கொடுக்கிறார்கள். கட்சியில் தன்னை “வளர’ விடுவதில்லை என்று பதவியிலிருப்போரைக் குற்றம் சாட்டுகிறார்கள்.

என்றாலும், தேர்தலின் நோக்கம் குறித்த இந்த உண்மைகளை அவர்கள் மக்களிடம் வெளிப்படையாகக் கூறுவதில்லை. மக்களுக்கு அரைகுறையாகவோ, முழுமையாகவோ இந்த உண்மைகள் தெரியும் என்பதை அவர்கள் அறிவார்கள். ஆளை ரெண்டு துண்டாக அறுத்துப் பிறகு ஒட்ட வைக்கிறான் வித்தைக்காரன். அது தந்திரம் என்று பார்வையாளர்கள் அறிந்து தானிருக்கிறார்கள். அதற்காக அந்த ரகசியத்தை வித்தைக்காரன் வெளியிட்டு விடுவதில்லையே! அந்த மயிர்க் கூச்செறியும் காட்சியில் ரசிகன் கண்களை மூடிக்கொண்டு நாற்காலியை இறுகப் பற்றிக் கொள்ளும்வரைதானே வித்தைக்குக் கூட்டம் சேரும்!

தேர்தல் என்ற இந்த வித்தைக்குக் கூட்டம் சேருவதெப்படி? இந்தக் கேள்விக்குத்தான் நமக்கு விடை வேண்டும்.

­­­­­­­­­­­­­­­­­­_________________________________________

ந்தத் தேர்தல் அரசியல் குறித்து தேநீர்க் கடைகளில் நடைபெறும் விவாதங்களைக் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள். “”வைகோ வேறென்ன சார் பண்ண முடியும், அவரும் கட்சி வளர்க்க வேண்டாமா?” ”கலைஞர் இல்லன்னா நீ பொடாவிலேர்ந்து வெளியே வந்திருப்பியா, கொஞ்சமாவது நன்றி வாணாம்?” ”கலைஞர் பெரிய ராஜதந்திரிங்கிறாங்க, அந்தம்மா பாரு சைலண்டா காய் நவுத்தி வேலய முடிச்சிடுச்சி” ”சும்மா சொல்லக்கூடாது, விஜயகாந்த் போல்டான ஆளுய்யா, ரஜினிதான் இதோ வாரேன், அதோ வாரேன்னு கெடுத்துகிட்டாரு” ”அவன் பேசாம அம்மாவோட கூட்டணி வச்சா 20,30 சீட்டு ஜெயிச்சிட்டு அப்புறமா அடுத்த தேர்தலுக்குள்ள கட்சிய வளர்த்துக்கலாம். தனியா நின்னா டெபாசிட் போய் ஒரேயடியா மங்களம் பாடிட வேண்டியதுதான்.”

அரசியல் ஆர்வம் கொண்டவர்கள் பத்திரிகை படிப்பவர்கள் என்று சொல்லப்படும் பிரிவினர் அரசியலை விவாதிக்கும் முறை இதுதான். இவர்கள் தேர்தல் முடிவு பற்றி ஆரூடம் சொல்கிறார்கள். “பொதுமக்களின்’மனநிலை பற்றி உளவியல் பகுப்பாய்வு செய்கிறார்கள். எப்படிக் கட்சி நடத்தவேண்டும் என்று ஐடியா கொடுக்கிறார்கள். கூட்டணி பேரங்களில் யார் கதாநாயகன், யார் வில்லன் என்பது பற்றி காரசாரமாக வாதாடுகிறார்கள்.

எப்படி எடுத்திருந்தால் படம் வெற்றி பெற்றிருக்கும் என்று சினிமாக் கொட்டகை வாசலில் நின்றபடியே இயக்குநராக மாறும் ரசிகனைப் போலவே, எப்படி அரசியல் பண்ண வேண்டும் என்று இவர்கள் அரசியல்வாதிகளுக்குக் கற்றுக் கொடுக்கிறார்கள்.

ஒரு சின்ன மெகா சீரியலைப் போல ஓடுகிறது தேர்தல். தொலைக்காட்சி சீரியலில் யார் கதாநாயகன்,யார் வில்லன், மற்ற கதாபாத்திரங்கள் யார் யார் என்பதை கதாசிரியர் தீர்மானித்து விடுவதால் ரசிகனின் “கருத்துரிமை’ அங்கே கட்டுப்படுத்தப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரம் நாளைக்கு என்ன செய்யப் போகிறது என்பதை ஊகிக்கும் வரம்பிற்குள் ரசிகனின் “படைப்புத்திறன்’ முடக்கப்பட்டு விடுகிறது.

தேர்தல் எனும் சீரியலோ நாற்புறமும் சுற்றி வளைத்து மக்களைத் தனக்குள் கவர்ந்திழுக்கிறது. காலை  மாலைப் பத்திரிகைகள், வார இதழ்கள், வாரமிருமுறை இதழ்கள்,  தொலைக்காட்சிகள், பொதுக்கூட்டங்கள் போன்றவையனைத்தும் ஒரே கதையை தத்தம் நோக்கில் விதம் விதமாகச் சொல்கின்றன. ஒரு இதழில் வைகோ கதாநாயகன், இன்னொரு இதழில் வில்லன், வேறொரு இதழிலோ கோமாளி. திடீர் திருப்பங்கள், திரைமறைவுப் பேரங்கள், பேட்டிகள்  பேட்டிகளுக்கான பொழிப்புரைகள் என்று விரிந்து சூழும் இந்த சீரியலில் ரசிகன் அவனுக்கே தெரியாமல் கதாபாத்திரமாக மாற்றப்பட்டு விடுகிறான்.

கட்சி கட்டிக் கொண்டு வாதாடுகிறான், தனது ஆதர்ச பாத்திரங்களின் சார்பில் சிந்திக்கிறான், கோபம் கொள்கிறான்,  மகிழ்ச்சியடைகிறான், தன்னுடைய ஊகங்கள் பலிக்க வேண்டுமேயென்று தவிப்பும் கொள்கிறான். கலைஞர், ஜெ., வை.கோ., திருமா., ராமதாசு ஆகியோரது பிரச்சினைகளைத் தனது சொந்தப் பிரச்சினையாகவும், அவர்களது நியாயங்களைத் தனது சொந்த நியாயமாகவும் உணர்ந்து வாதாடுகிறார்கள் அரசியல் ரசிகர்கள்.

ஆனால், எதார்த்த வாழ்க்கையின் கொடுங்கரங்கள் அவர்களை அவ்வப்போது உசுப்பி விடுகின்றன. ”ரேசன் கடைக்குப் போக வேண்டும், வேலைக்கு நேரமாகி விட்டது. பைனான்சுக்காரனுக்குப் பதில் சொல்ல வேண்டும், கரண்டு பில் கட்ட கடன் வாங்க வேண்டும்” என்ற உண்மைகள் அவர்களைத் தீண்டியவுடனே விழித்துக் கொள்கிறார்கள். ”எவன் கதையப் பேசி நமக்கு என்னா ஆவப் போகுதுங்க, நாம உழைச்சாதான் நமக்குச் சோறு, என்னா சொல்றீங்க” என்ற வசனத்துடன் அன்றைய சீரியலை முடித்துக் கொள்கிறார்கள். விட்ட இடத்திலிருந்து  மீண்டும் மறுநாள் தொடர்கிறது சீரியல்.

இவ்வாறு விவாதம் நடத்துபவர்கள் கட்சிக்காரர்களோ அல்லது கட்சி ஆதரவாளர்களோ மட்டுமல்ல;எந்தக் கட்சியயையும் சாராதவர்களென்றும் சரி தவறுகளைச் சீர்தூக்கிப் பார்த்து நல்ல கட்சிக்கும் நல்ல வேட்பாளருக்கும் வாக்களிப்பவர்களென்றும் கூறப்படும் பொதுமக்கள் தொழிலாளர்கள்,  விவசாயிகள், சிறுவணிகர்கள், கைவினைஞர்கள், அரசு ஊழியர்கள், நடுத்தர வர்க்கத்தினர் என அனைவரும் இதில் உண்டு.

எந்தத் தேநீர்க் கடையிலாவது எப்போதாவது இவர்கள் தங்களது வாழ்க்கையைச் சூறையாடும் அரசின் கொள்கைகளைப் பற்றியோ, அவற்றில் பல்வேறு கட்சிகளின் நிலைபாடு பற்றியோ இத்தனை ஈடுபாட்டுடனும் உணர்ச்சி பூர்வமாகவும் விவாதிப்பதைக் கண்டிருக்கிறீர்களா?

தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் நலனுக்காக நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென்கிறார் ராமதாசு. இதைக் காட்டிலும் சுயநிதிக் கல்லூரிகளையே ரத்து செய்து அரசுக் கல்லூரிகளாக்குவது அம்மாணவர்களுக்கு நல்லதில்லையா, இந்த எளிய உண்மை அய்யாவுக்கு விளங்காமல் போனதெப்படி?

கேபிள் டி.வி.யை அரசுடைமையாக்கும் சட்டம் வந்தவுடனே கவர்னரைப் பார்க்கச் சென்ற கலைஞர் விமான நிலையங்களைத் தனியார்மயமாக்கும் முடிவை மத்திய அரசு எடுத்தபோது யாரைச் சென்று சந்தித்தார்?

13 தொகுதிகளைப் பெறுவதற்காக கருணாநிதியிடம் மாபெரும் போராட்டம் நடத்திய மார்க்சிஸ்டுகள், ”2 தொகுதிகளை வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள், ஆனால் தாமிரவருணியை கோகோ கோலாவுக்கு கொடுத்து விடாதீர்கள்” என்று மன்றாடவாவது செய்தார்களா?

பத்தைப் பதின்மூன்றாக்கும் கவுரவப் பிரச்சினைக்காக அறிவாலயத்திற்குப் பாதயாத்திரை போனார் தா.பாண்டியன். பணிநிரந்தரமும், தொழிற்சங்க உரிமையும் இல்லாமல் பன்னாட்டு கம்பெனிகளில் கொத்தடிமைகளாகப் பணிபுரியும் பாட்டாளி வர்க்கம் தன்னுடைய கவுரவத்தைக் காப்பாற்றிக் கொள்ள எந்தக் கோயிலுக்குத் தீர்த்த யாத்திரை போவது?

9 தொகுதிகளை திருமாவுக்கு ஒதுக்கியது இருக்கட்டும். பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி சாதிவெறியர்களை உள்ளே தள்ளுவதாகவும், தலித்துகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு நிரப்பப்படாத அரசுப் பணியிடங்களை நிரப்புவதாகவும் சில கொசுறு வாக்குறுதிகளையாவது தலித் மக்களுக்கு அம்மா போட்டுக் கொடுத்திருக்கிறாரா?

இவையெல்லாம் மக்களின் அறிவுக்கெட்டாத பிரச்சினைகளோ, அவர்களால் எழுப்பமுடியாத கேள்விகளோ அல்ல. எனினும் இந்தக் கேள்விகளுக்கும் தேர்தலுக்கும் தொடர்பிருப்பதாக அவர்கள் சிந்திப்பதில்லை. அத்தகைய அபாயகரமான “தீவிரவாத’ சிந்தனைக்குச் செவிமடுத்து விடாமல் மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பை முதலாளித்துவ ஊடகங்களும், கட்சிகளும் ஏற்றிருக்கின்றன.

­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­________________________________________________

னநாயக சோசலிசம், லோகியா சோசலிசம், திராவிட நாடு என்ற கொள்கை வேடங்களுடன் தொடங்கி,அவையனைத்தும் கலைந்து “அரசு சன்மானங்களைப் பொறுக்கித் தின்பதற்கான கூச்சநாச்சமற்ற போட்டிதான் தேர்தல்’ என்ற நிலையை எய்தியிருக்கும் தருணத்தில், இந்தியத் தேர்தல் ஜனநாயகம் மறுகாலனியாக்கத்தைச் சந்தித்திருக்கிறது.

தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்றழைக்கப்படும் மறுகாலனியாக்கத்தை அமல்படுத்துவதில் போட்டியிடும் இரண்டு கூட்டணிகளிடையே எவ்விதக் கொள்கை வேறுபாடும் இல்லை. விவசாயத்தையும் உள்நாட்டுத் தொழில்களையும், தொழிலாளர் உரிமைகளையும் “மென்னியை நெறித்துக் கொன்று விடலாம்’என்கிறார் புரட்சித்தலைவி. “மருந்து வைத்துக் கொல்லலாம்’ என்கிறார் கலைஞர். “பட்டினி போட்டுக் கொல்வதுதான் மனிதாபிமான முறை’ என்கிறார்கள் போலி கம்யூனிஸ்டுகள். இந்தக் “கொள்கை வேறுபாட்டை’ மக்களுக்குப் புரிய வைக்க அவர்கள் முயற்சித்தால் அவர்களுக்கு நேரக்கூடிய கதி என்ன?

”சில்லறை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிக்கக் கூடாது, வாட் வரி விதிப்பு கூடாது, தண்ணீர் வியாபாரம் கூடாது, கோக்பெப்சியைத் தடை செய்ய வேண்டும்” என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைத்து, இக்கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சிக்குத்தான் வணிகர்கள் வாக்களிப்பார்கள் என்று தமிழ்நாடு வணிகர் சங்கம் அறிவித்தது. எந்தக் கட்சியும் இக்கோரிக்கைகளுக்குச் செவிமடுக்காததால் ”எல்லா கட்சிகளிலிருந்தும் வணிகர்கள் வெளியேறவேண்டும்” என இப்போது அறைகூவல் விடுத்துள்ளது.

விளைபொருளுக்கு விலை நிர்ணயம் கோரி விவசாயிகளும், சுயநிதிக் கல்லூரிகளை அரசே ஏற்கச் சொல்லி மாணவர்களும், பன்னாட்டு நிறுவனங்களில் தொழிற்சங்க உரிமை கோரி தொழிலாளர்களும், தனியார்மயத்தை நிறுத்தவேண்டுமென்று கோரி பொதுத்துறை ஊழியர்களும், ஆளெடுப்புத் தடைச் சட்டத்தை அகற்ற வேண்டுமென வேலையில்லா இளைஞர்களும் கோரிக்கை வைத்து, இந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் கட்சிக்குத்தான் வாக்களிப்போம் என்றும் அறிவித்திருந்தால், வணிகர் சங்கத்திற்கு நேர்ந்த கதிதான் எல்லோருக்கும் நேர்ந்திருக்கும்.

பெரும்பான்மை மக்களுக்கு உணவு, வேலை, கல்வி, மருத்துவம், குடிநீர் ஆகிய அனைத்து உரிமைகளையும் மறுத்து, அவர்களை வறுமைக்கும் பட்டினிச் சாவுக்கும் தற்கொலைக்கும் தள்ளுகின்ற இந்தத் தனியார்மயத் தாராளமயக் கொள்கைகளைப் பெரும்பான்மை மக்களின் ஒப்புதலைப் பெற்று (ஜனநாயக பூர்வமான முறையில்) அமல்படுத்துவது சாத்தியமற்றது என்பது ஆளும் வர்க்கத்துக்குத் தெரியும். எனவேதான் கள்ளத்தனமான வழிமுறைகளின் மூலம் மட்டுமே இவை திணிக்கப்படுகின்றன.

1994இல் நாட்டிற்கும் நாடாளுமன்றத்திற்கும் கூடத் தெரியாமல் நரசிம்மராவ் அரசு காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது முதல், இந்திய  அமெரிக்க இராணுவ ஒப்பந்தத்தில் யாருக்கும் தெரியாமல் மன்மோகன் சிங் கையெழுத்திட்டது வரை இந்தக் கள்ளத்தனம் பல்வேறு வடிவங்களில் தொடர்கிறது.

­­­­­­­­­­­­­­­­­­­­____________________________________________

னினும் கருத்துரிமையும், அதனடிப்படையில் நடத்தப்படும் சுதந்திரமான விவாதமும் இருந்தால்தானே மக்கள் இதனை ஜனநாயகம் என்று நம்புவார்கள்! ஆகவே, தான் அனுமதிக்கும் சட்டகத்திற்குள் விவாதம் நடத்த வாக்காளர்களுக்குப் “பூரண’ சுதந்திரத்தையும் வழங்கியிருக்கின்றன ஆளும் வர்க்கங்கள்.

நுகர்வோனின் “தெரிவு செய்யும் உரிமை’யை சாத்தியப்படுத்துவதற்காகப் பலவிதமான சோப்புகளும் பவுடர்களும் சந்தையில் அடுக்கப்பட்டிருப்பதைப் போலவே, வாக்காளனின் தெரிவு செய்யும் உரிமையை அங்கீகரிக்குமுகமாக தேர்தல் சந்தையில் பல வண்ணக் கட்சிகளைப் பார்வைக்கும் வைத்திருக்கின்றன.

”கொள்கை ரீதியில் தங்களிடையே எவ்வித வேறுபாடும் இல்லாதபோது, தம்மை வித்தியாசமானவர்களாக மக்களிடம் சித்தரித்துக் கொள்வது எப்படி? மக்கள் தம் சொந்தக் கோரிக்கைகள் பற்றி சிந்திப்பதை மறந்து, தம் தலைவர்களின் கோரிக்கைகளையே தமது சொந்தக் கோரிக்கைகளாகக் கருதி விவாதிக்குமாறு செய்வது எப்படி?”  இவை ஓட்டுக் கட்சிகளின் முன் உள்ள கேள்விகள்.

கொள்கை வேறுபாடுகள் பற்றி மக்கள் கஷ்டப்பட்டுச் சிந்திக்கத் தேவையில்லாத சூழ்நிலையை அவர்கள் ஏற்கெனவே உருவாக்கி விட்டார்கள். நெடுஞ்சாலைச் சுவர்களிலும் சுவரொட்டிகளிலும்,பானர்களிலும் தரிசனம் தரும் ”அய்யா, அம்மா, திருமா, கலைஞர், வை.கோ. தளபதி” போன்ற “கொள்கை’களில் ஒன்றை மக்கள் தெரிவு செய்ய வேண்டும்.

சுவரொட்டியில் உள்ள செய்தி கலியாணமா, கருமாதியா என்பதைப் பற்றி யாரும் கவலைப்படத் தேவையில்லை. அது அம்மா கட்சியின் வட்டச் செயலர் பெண்ணுக்கு நடக்கும் பூப்பு நீராட்டு விழாவாகக் கூட இருக்கலாம். அய்யா மரம் நடுவதாக இருக்கலாம். வைகோ ரத்ததானம் கொடுப்பதாகவும் இருக்கலாம். அவர்கள் என்ன செய்கிறார்கள், என்ன சொல்கிறார்கள் என்பதைப் பற்றி யாருக்கென்ன கவலை? “அம்மா’, “அய்யா’ என்பதே முக்கியம்.

குளோசப் காட்சியில் கொள்கைப் பின்புலத்தைக் காண முடியுமா? பெஞ்சு டிக்கெட்டில் உட்கார்ந்து அண்ணாந்து படம் பார்ப்பவனுக்கு எல்லா காட்சிகளும் குளோசப் காட்சிகளே. ரோட்டில் நடந்தால் இந்தத் தலைவர்களின் பெயர்களைக் கடந்து செல்வதற்குள் நமக்குக் கால் வலிக்கிறது. அவர்களது விசுவரூபத்தை அண்ணாந்து பார்க்க முயன்றாலோ கழுத்து வலிக்கிறது.

அர்ச்சுனனின் கேள்விக்குத் தனது விசுவரூபத்தால் விடை சொன்ன கண்ண பரமாத்மாவைப் போல, “நானே கொள்கை, நானே மக்கள்’ என்கிறார்கள் தலைவர்கள். ஆகவே தலைவர்களின் சோகமே மக்களின் சோகம்.

”தள்ளாத வயதிலும் வேலூர் சிறை வாசலில் கால் வலிக்கக் காத்திருந்து உன்னைக் காண வந்த தலைவனின் முதுகில் குத்தி விட்டாயே துரோகி!” என்று சென்டிமென்டு குண்டை வைகோவின் மீது வீசுகிறது தி.மு.க. சீட்டுக் கணக்கைச் சொல்லி இந்த சென்டிமென்டு குண்டைத் தகர்க்க முடியாது என்பதால் ”வேண்டாத விருந்தாளியாக அறிவாலயத்தின் முன் காத்துக் கிடந்தேன்” என்று கண்ணீர் விடுகிறார் வை.கோ.

குண்டர் சட்டம், பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, திண்ணியம் என்ற அனைத்துத் தடைகளையும் தாண்டி அம்மாவைச் சரண் புகுந்த திருமாவுக்கும் சென்டிமென்ட் கை கொடுக்கிறது. ”தனியாகத் தொகுதி கேட்டால் கலைஞர் பா.ம.க.வின் எச்சில் இலையில் சோறு தின்னச் சொல்கிறார்” என்ற திருமாவின் சோக உருவகம்,தலித் மக்களின் தீண்டாமைச் சோகத்தை பதிலி செய்கிறது. திண்ணியம் சோகத்தைக் கூட ஒன்றுமில்லாததாக்கி விடுகிறது.

இவற்றில் எது கிளிசரின் கண்ணீர் எது உண்மைக் கண்ணீர் என்று பகுத்து அறியும் பொறுப்பும்,இவர்களுடைய கண்ணீருக்குப் பதில் சொல்ல வேண்டிய தார்மீகக் கடமையும் இதோ, வாக்காளர்கள் மீது சுமத்தப்பட்டு விட்டது. காண்டிராக்டையும் கட்டைப் பஞ்சாயத்தையும் கைப்பற்றுவதற்காக நடக்கும் ஒரு மோதலில் கண்ணீரையும் சென்டிமென்டையும் புகுத்தி இப்படி ஒரு திரைக்கதை தயாரிக்க முடியுமென்பதை “சென்டிமென்ட்’ சக்ரவர்த்தியான இயக்குநர் ஃபாசில் கூட நினைத்துப் பார்க்க முடியாது.

அகிலமனைத்தையும் தன்னுள் அடக்கும் “சிவாய நம’ என்பதும் கூட ஐந்தெழுத்து மந்திரம். ஆனால் பாமர மக்கள் கொள்கை விளக்கம் பெற 5 எழுத்துக்கள் அதிகம் என்பதால் அதையும்கூடச் சுருக்கி விட்டார்கள் தலைவர்கள்.

வன்னியர் சமூகத்தின் மேன்மை, தமிழ்ப் பெண்களின் கற்புடைமை, காடுகள் மரம் செடி கொடிகளின் பசுமை அனைத்தும் “அய்யா’ என்ற மூன்றெழுத்தில் அடக்கம்; தலித் சமூகத்தின் விடுதலை, கவுரவம்,அதிகாரம் அனைத்தும் “திருமா’ என்ற மூன்றெழுத்துள் அடக்கம்; புலிகளின் துப்பாக்கிச் சத்தத்தை விஞ்சுகின்ற “வைகோ’ எனும் இரண்டெழுத்துப் பேரிரைச்சலில் ஈழத்தமிழர்களின் எதிர்காலமே அடக்கம்;தமிழ் என்ற மூன்றெழுத்து “கலைஞர்’ என்ற நான்கெழுத்தில் அடக்கம்; “தளபதி’க்குள் தி.மு.க. அடக்கம்;தமிழகமே “அம்மா’வில் அடக்கம்!

நேர்மைக்கு ஹமாம், அழகுன்னா லக்ஸ், கூலுன்னா கொக்கோ கோலா அவ்வளவுதான். நேர்மை என்றால் என்ன, அது ஹமாமில் எத்தனை சதவீதம் கலந்திருக்கிறது, அது அழுக்கை அகற்றுமா என்றெல்லாம் ஆராயாமல் குறிப்பிட்ட பிராண்டுக்கு விசுவாசம் காட்டும் நுகர்வோரைப் போலவே வாக்காளர்களும் “சிந்திக்க’ வேண்டும். கொள்கை என்றால் என்ன, அது தலைவரின் சொல்லிலும் செயலிலும் எத்தனைச் சதவீதம் கலந்திருக்கிறது என்ற ஆராய்ச்சிகளில் ஈடுபடக் கூடாது. ஏனென்றால், தலைவர்தான் கொள்கை, தலைவரே மக்கள்!

மாறனுக்கும் அன்புமணிக்கும் மந்திரிப் பதவி கிடைத்தால் “தமிழகத்துக்கு 7 மந்திரிகள்’ என்றே நாம் புரிந்து கொள்ளவேண்டும். திருமாவுக்கு 9 இடம் கிடைத்தால் தலித் சமூகத்துக்கே இடம் கிடைத்ததாகக் கொண்டாட வேண்டும். கிடைக்காவிட்டால் தலித் சமூகத்திற்கு நேர்ந்துவிட்ட இந்த அவமானத்தை எண்ணிக் குமுற வேண்டும். இந்த நிலையில் மக்களை இருத்தி வைப்பது குறித்து ஓட்டுக்கட்சித் தலைவர்கள் இடையறாது சிந்திக்கிறார்கள்.

தி.மு.க. கூட்டணியிலிருந்து டக்கென்று தாவ முடியாமல் வைகோவின் துண்டைப் பிடித்திழுத்த கேள்வி எது? “இது நீதியான முடிவா?’ என்ற கொள்கைக் கேள்வியல்ல, “இந்த முடிவை தனது வாக்கு வங்கி ஒத்துக் கொள்ளுமா?’ என்ற நடைமுறைக் கேள்வி. “அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா’ என்று விடுதித் தலைவர் காளிமுத்து தோட்டத்துக் கதவைத் திறந்து உள்ளே தள்ளிவிட்ட மறுகணமே அவருக்கு தெளிவு பிறந்துவிட்டது. முதன்முதலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்கும்போதும் “கொள்கையைக் கைவிடுகிறோமே என்று தி.மு.க.வினர் யாரும் சஞ்சலப்படவில்லை, “இதை மக்கள் ஒத்துக் கொள்ள வேண்டுமே’ என்றுதான் கவலைப்பட்டனர்.

_________________________________________________

”இந்த சீனை மக்கள் ஒத்துக்குவானா?” என்று சினிமாக்காரர்கள் நடத்தும் ஸ்டோரி டிஸ்கசனுக்கும், “”இந்தக் கூட்டணி கிளிக் ஆகுமா?” என்று ஓட்டுக்கட்சிகள் படுகின்ற கவலைக்கும் அடிப்படையில் எந்த வேறுபாடும் இல்லை. வாக்காளர்களை இரசிகர்களின் நிலைக்குத் தாழ்த்திவிட்ட இந்த இரசவாதம், ஓட்டுச் சீட்டு அரசியலில் ஒரே நாளில் நிகழ்ந்து விடவில்லை. வாக்குறுதிகள், தேர்தல் அறிக்கைகள் போன்ற எவையும் நம்பத் தக்கவையல்ல என்று மக்கள் அனுபவபூர்வமாக உணர்ந்து விட்டநிலையில், எதை வைத்து அவர்களை வாக்குச்சாவடிக்கு இழுப்பது என்ற கேள்விக்கு ஆளும் வர்க்கங்கள் கண்டிருக்கும் விடை இது.

அன்றாட வாழ்க்கையில் தாம் அனுபவிக்கும் துன்பங்களுக்கும், இந்தத் தேர்தலுக்கும் நேரடியாகத் தொடர்பிருப்பதையும், தாங்கள் தேர்ந்தெடுத்து அனுப்பிய பிரதிநிதிகள்தான் தம் குடியைக் கெடுத்த துரோகிகள் என்பதையும் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு தேர்தல் என்பதை ஒரு சினிமாவாகவும் சீரியலாகவும் திருவிழாவாகவும் மாற்றிவிட்டன ஆளும் வர்க்கங்களும் அவர்களின் பிடியில் உள்ள ஊடகங்களும்.

அரசியல், பொருளாதாரம் என்பன பற்றியெல்லாம் தெரிந்து கொள்வதற்கு இதுநாள்வரை அக்கறை காட்டாத மக்கட் பிரிவினரையெல்லாம் அரசில் களத்தில் இறங்குமாறு கட்டாயப்படுத்துகின்றது மறுகாலனியத் தாக்குதல். ஒரு குவளைத் தண்ணீர், ஒரு கவளம் ரேசன் அரிசிச் சோறு, அடுப்பெரிக்க மண்ணெண்ணெய், குடிசையில் எரியும் ஒரு குண்டு பல்பு  என எதைத் தொட்டாலும் “நான் நான்’ என்று முன்னால் வந்து நிற்கிறது உலக வங்கி.

இந்தத் தாக்குதல் எவ்வளவு பருண்மையாகவும் பட்டவர்த்தனமாகவும் இருக்கிறதோ, அந்த அளவிற்கு அதிலிருந்து சூட்சுமமாக விலகிச் செல்கிறது தேர்தல் அரசியல். “நல்லாட்சி’ “அராஜக ஆட்சி’ “முன்னேற்றம்’ “தீயசக்தி’ என்ற பொருள் விளங்காச் சொற்களும், “நன்றி’ “தியாகம்’ “துரோகம்’ “கருணை’ போன்ற உணர்ச்சிப் பசப்பல்களும், இவற்றுக்குப் பொருத்தமான முகபாவங்களுடன் எல்லா முச்சந்திகளிலும் இளித்துக் கொண்டிருக்கும் தலைவர்களின் மூஞ்சிகளுமே வாக்காளர்களின் மூளைகளில் நிரப்பப்பட்டிருக்கின்றன.

இத்தகைய உணர்ச்சிப் பசப்பல்களுக்கும் அரசியல் அரட்டைகளுக்கும் வாய்ப்பில்லாமல் வாழ்க்கையால் தண்டிக்கப்பட்டு, நிதர்சன உலகில் மட்டுமே வாழுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள் பெரும்பான்மையான ஏழை மக்கள். பூடகமான சொற்களால் ஏமாற்றப்படுமளவுக்கு அவர்கள் கல்வியறிவு பெறவில்லையாதலால் அவர்களுக்கு சைக்கிள், குடம், தவலை, வெள்ள நிவாரணம் எனப் பருண்மையான பொருட்கள்!

இந்தத் தேர்தலால் மக்களுக்கு என்ன பயன் என்ற அடிப்படைக் கேள்வியை எழுப்பாமல் அரட்டையையே அரசியலாய்க் கருதும் படித்த வாக்காளர்களின் “அறிவு’, உடனடிப் பயன்களைத் தாண்டி வேறெதையும் பார்க்கத் தெரியாத பாமர மக்களின் அறியாமை  என்ற இரு தண்டவாளங்களின் மீது ஓடிக் கொண்டிருக்கிறது, இந்தப் போலி ஜனநாயகத் தேர்தல்.

______________________________________________

ம்முழு மோசடியைத்தான் “ஜனநாயகத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை’ என்று வருணிக்கிறது ஆளும் வர்க்கம். ஒரு வாதத்திற்கு அதை ஒப்புக் கொள்வதாக இருந்தாலும், ஜனநாயகத்தின் மீதான அதே நம்பிக்கை ஆளும் வர்க்கத்துக்கும் இருந்தால் மட்டுமே இந்தத் தேர்தல் ஜனநாயகம் நீடிக்க முடியும். மக்களுடைய இந்த நம்பிக்கையைப் பராமரிக்கும் நோக்கத்திற்காகவாவது தனது மறுகாலனியக் கொள்கைகள் சிலவற்றை விட்டுக் கொடுக்கவோ கொஞ்சம் தள்ளி வைக்கவோ கூட ஆளும் வர்க்கம் தயாராக இல்லை.

தேர்தல் அரசியலின் நிர்ப்பந்தம் காரணமாக ரேசன் கடை மூடல், பொதுத்துறை ஏலம், தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்தல் போன்ற தனியார்மய, தாராளமய நடவடிக்கைகளை நினைத்த மாத்திரத்தில் ஆளும் வர்க்கத்தால் நடத்த முடிவதில்லை. ”பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் அமல்படுத்தப்படும் வேகத்தை எண்ணி வெட்கப்படுகிறேன்” என்று சமீபத்தில் டாவோஸில் நடந்த உலக முதலாளிகள் கூட்டத்தில் வருத்தம் தெரிவித்திருக்கிறார் ப.சிதம்பரம்.

தாங்கள் ஆட்பட்டிருந்த தேர்தல் ஜனநாயக மாயை குறித்தும் மக்கள் வெட்கத்துடன் திரும்பிப் பார்க்கத்தான் போகிறார்கள். இருக்கின்ற வாழ்க்கையைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும், மிகச் சாதாரணமான அன்றாடக் கோரிக்கைகளுக்காகவும் மக்கள் நடத்தும் போராட்டங்களைக் கூட,மறுகாலனியாக்க எதிர்ப்புப் போராட்டங்களாக மாற்ற வேண்டிய கட்டாயத்தை ஆளும் வர்க்கம் தோற்றுவித்து வருகிறது.

ஆகவே, எந்தக் கூட்டணியைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் மக்களுக்கு இனி இருக்காது. நெல்லை  கங்கை கொண்டானில் நூறு சதவீத மக்களும் கோகோ கோலா ஆலையை வெளியேற்றவேண்டும் என்று போராடுகின்றனர். அங்கே சர்வகட்சிக் கவுன்சிலர்களும் கோக்கின் பின்னால் ஒரே கூட்டணியாக இணைந்து நிற்பதை மக்கள் காண்கிறார்கள்.

அய்யா அம்மா தளபதி வகையறாக்களும் ஒரே அணியில்தான் நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வெவ்வேறு அணியென்று மக்கள் கொண்டிருக்கும் மாயையை வரவிருக்கும் மறுகாலனியாக்க எதிர்ப்புப் போராட்டங்கள் துடைத்தெறிந்து விடும்; போலி ஜனநாயகத் தேர்தல் எனும் இந்த சீரியலை முன் அறிவிப்புகள் ஏதுமின்றி முடிவுக்குக் கொண்டு வந்துவிடும்.

_______________________________________________________

– புதிய கலாச்சாரம், மார்ச் – 2006
_______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

தேர்தல் 2011

உங்கள் பொன்னான வாக்கை குப்பைத் தொட்டியில் போடுங்கள் !

இந்திய அரசியலின் இழிநிலை: ஆ.விகடனில் தோழர் மருதையன் !

இந்திய அரசியலின் இழிநிலை: ஆ.விகடனில் தோழர் மருதையன் !

“தேர்தல் பாதை திருடர் பாதை” –
என்றவுடன்,
அப்படியானால் ஓட்டுப்போடும் நானுமா?
என உள்ளர்த்தம் புரிந்து கொண்டு
கோபப்படும் நண்பா,

உள்ளபடியே சொல்!

“இனி எவன் வந்தாலும்
ஏறுன விலைவாசி இறங்கப் போவதில்லை,
எல்லா பயலும் திருடனுங்க” என
எல்லாமும் நீயே சொல்லிவிட்டு,
சரி… எவனுக்காவது ஓட்டுப்போடுவோம்
என நீ கிளம்பிப்போவது யோக்கியமா?

• கட்டை விரலில் வேப்பெண்ணை தடவினால்
கை சூப்பும் பழக்கம்
அத்தோடு நின்றுவிடும்,
இது என்ன கெட்ட பழக்கமோ?
எத்தனை முறை உன் முகத்தில்
கரி பூசினாலும்
மத்தவனுக்கும் ஒரு வாய்ப்பளிப்போம்
என மாறி, மாறி ஓட்டுப் போடுவது
மனநோயன்றி வேறென்ன?

• கண்டதையும் மிதிக்கக் கூடாது,
கால்தேயக் கூடாதென
செருப்பு போடுவதற்கும்
ஒரு காரணமிருக்கிறது,

கண்டவனும் உன்னை மிதித்தும் கூட
கால் கடுக்கப் போய்
இன்னும் நீ ஓட்டுப் போடுவதில்
என்ன நியாயமிருக்கிறது!

• ஓட்டுப் போடுவது
மிகப்பெரிய ஜனநாயகக் கடமையெனும்
அப்துல்கலாமின் பிரச்சாரம் கேட்டு
அவர் குடியிருக்கும் தெரு நாயே தலைசுற்றி ஓடும்போது..
அதில் ஒன்றிப் போக
நீ என்ன மூளையில்லாத முண்டமா?

ஓட்டுரிமைதான்
மிகப்பெரிய உரிமையென
உனக்கு கிர்ரு… ஏற்றும் சூர்யாவுக்கு
அடுத்த படத்துக்கு … முதலாளியிடமிருந்து
பல கோடியில் ‘அட்வான்ஸ் ரெடி’.

ஓட்டுப் போட்டு ஓட்டுப் போட்டு
உழைப்புக் கேற்ற கூலி கேட்டு
உன் உரிமைக்காக போராடும் பொழுது
ஆறடி அதிவிரைவுப் படையோடு
உனக்கு பல ரவுண்டு தடியடி!

• கல்வி உனக்கு உரிமையில்லை…
வேலை உனக்கு உரிமையில்லை…
விவசாயிக்கு விலைநிர்ணய உரிமையில்லை…
நெசவாளிக்கு கைத்தறி நூல் உரிமையில்லை…
தொழிலாளர்க்கோ சம்பளவிகிதம், பணிப்பாதுகாப்பு,
தொழிற்சங்க உரிமையில்லை…

வாழ்வுரிமை இல்லாத வாக்குரிமை எதற்கு?

• உனது “ஓட்டுரிமையை’ கரைசேர்க்க
அரசாங்கம் இரண்டு வாகனம் வைத்திருக்கிறது.
சித்திரவதைகளைப் பொறுத்துக் கொண்டு செத்துப்போனால்
உனக்கு நூற்றி எட்டு ஆம்புலன்சு
சினங்கொண்டு உரிமைக்காக போராடினால்
உனக்கு நூறு வண்டி போலீசு…
சரியாகச் சொன்னால் உனது சின்னம் ஆம்புலன்சு!

நூறா?  நூற்றி எட்டா?
வாழ்வுரிமையா… ஓட்டுரிமையா?
மானத்தோடு பொங்கியெழுவதா…
இல்லை ஒரு ரூபாய் அரிசியிலேயே தங்கி விடுவதா?
இந்தத் தேர்தலில்
உன்னைத் தெரிவு செய்ய வேண்டிய ஓட்டு இது!

• “எங்கள் விவசாயத்துக்கு தண்ணீர் வேண்டும்…
எங்கள் பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடம் வேண்டும்…
எங்கள் ஊருக்கு மருத்துவமனை வேண்டும்…’’
இப்படி உரிமையாய் நீ கேட்டதனைத்தையும் கொடுக்காமல்
ஓசியிலே மிக்சி,கிரைண்டர் என்றால் உள்ளர்த்தம் என்ன?

பிச்சையாய் எதையாவது வாங்கிக் கொண்டு
ஓட்டுப் போடு!
உரிமையெனக் கேட்பவனை உள்ளே போடு!
இந்தத் தேர்தல் ஜனநாயகத்தால் உனக்கு ஆவதென்ன?

நம் தேவைகளைப் புறக்கணிக்கும்
இந்தத் தேர்தலையே புறக்கணி…
இதைத் தெரிந்து கொள்ளாமல்
கிரைண்டர்.. பிரிட்ஜ் என இண்டு இடுக்கில் புகுந்து கொண்டு வாழும்
என்ன ஜந்து நீ?…

• தட்டைக் காட்டி
போட்டதை வாங்கிக் கொள்ளும் பிச்சைக் காரனுக்கும்
ஓட்டைக் காட்டி
தருவதை வாங்கிக் கொள்ளும் வாக்காளனுக்கும்
வாழ்வு ஒன்றுதான்!

நீயாக எதையும் கேட்க முடியாது…
“அம்மா அந்த பிரிட்ஜில் இருக்கும்
கெட்டித்தயிரை எடுத்துப் போடுங்கள்!’’ என்று
பிச்சைக்காரன் உரிமையுடன் கேட்கவா முடியும்?

தருவதை அனுபவித்து
நிறைவுறும் திருவோட்டை
பிச்சைக்காரன் கூட ரசிப்பதில்லை…
நீயோ, அதை சிந்தனையாய் ருசிக்கிறாய்…
உண்மையில் பெறுவதாக நினைத்துக் கொண்டு
அனைத்தையும் இழப்பவன் நீ…

விவசாய நிலங்களை எடுத்து
முதலாளிகளுக்கு போட்டுவிட்டு
ஒரு ரூபாய் அரிசியை வாங்கிக் கொள்ளும் முட்டாள்
உன்னைப் போல் உலகில் உண்டா?

பன்னாட்டு கம்பெனிகளிடம்
உன் சிறு தொழில் உரிமைகளை இழந்துவிட்டு
அவன் வண்ணத் தொலைக்காட்சியை வாங்குவதற்கு
வரிசையில் நிற்கும் உயிரினம் உண்டா?

குடிநீரும், இயற்கை வளங்களும்
குடிமக்களின் உழைப்பும்
தனியார்மயத்துக்கு தூக்கிக் கொடுத்துவிட்டு
ஐய்! மடி கணிணி கிடைக்கப்போகிறதென்று
ஓட்டுப்போட்டு ஏமாறும்
உன்னைப் போல் ஒரு நாயுண்டா? புழு உண்டா?

ஏழைகளுக்கு நல்லது செய்வதாகச் சொல்லி
அம்பானிக்கும், டாடாவுக்கும் நாட்டை
அள்ளிக் கொடுக்கும் ஏற்பாடுதான் இந்த தேர்தல்…
இதற்கு ஆள்பிடிக்கும் களவாணிகள்தான் ஓட்டுக்கட்சிகள்…
நரிகளின் ஊளையை நம்பாதே…
பின்பு கிட்னியும் போய்விட்டதே என்று வெம்பாதே!

ஈழத் தமிழரை போட்டுத் தள்ளிய காங்கிரசும்
இங்கிருக்கும் தமிழரை டாஸ்மாக்கில் ஊற்றித் தள்ளும் கலைஞரும் கூட்டணி…
“குடிகாரன்’ என விஜயகாந்தை “கொஞ்சிய’ அம்மாவும்
நீதான் ஊற்றி கொடுத்தாயா என ஆசைப்பட்ட விஜயகாந்தும் கூட்டணி…

திருடர்களுக்குள் கூச்சமில்லாமல் கூட்டணி
தேர்தலுக்கு முதல்போட்டு திரைமறைவில் காத்திருக்கிறான்
டாடா… பிர்லா… அம்பானி…

ஓட்டுப்போடும் உழைக்கும் வர்க்கமே! நீ மட்டும்
நெசவாளி, விவசாயி, மாணவன், மீனவன் எனத் தனித்.. தனி…
எதிரிகளின் கூட்டணியை அலசி ஆராய்ந்து
எவன் ஜெயிப்பான் என்பதா… நம் பணி
எதிரிகளுக்கெதிராக உழைக்கும் வர்க்கத்தை ஒரே கூட்டணியாய்
எழுந்து போராட வைப்பதுதான் அறிவு இனி…

என்ன இருந்தாலும்
ஓட்டுப்போடாவிட்டால் என்ன ஆகும்?
நம்மை யார்தான் ஆள்வது? என்ற
அடிமைத்தனத்தின் அதிர்ச்சி வினா தேவையில்லை,

நீ ஓட்டுப்போடாவிட்டால்… ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை,
தேர்தல் ஜனநாயகம் தீர்ந்து போனதனால்,
கருணாநிதி சொத்தை நாட்டுக்கு எழுதிவைத்து விட்டு
திருவாரூர் திண்ணையில் போய் படுத்துக் கொள்ளப் போவதில்லை…
ஜெயலலிதா முடியை அவிழ்த்துப் போட்டுக் கொண்டு
தெருவில் அலையப் போவதில்லை…
கேப்டன் சுய நினைவுக்கு வரப் போவதுமில்லை…

மாறாக, நாட்டை ஆள்வது
ஐ.ஏ.எஸ்., போலீசு, இராணுவம் போன்ற அதிகாரவர்க்கமும்
ஆளும் வர்க்கமும் என்ற உண்மை தெரிய வரும்.
நீ ஓட்டே போடாவிட்டாலும்
எப்பொழுதும் போல் முதலாளிகள் நாட்டைச் சுரண்டும்
உண்மை தெரிந்துவிடும்.

மன்மோகன்சிங் பழையபடி
உலகவங்கி வேலைக்குப் போய்விடுவார்,
சோனியா இத்தாலிக்குப் போய்
பத்துப்பாத்திரமா தேய்க்கப் போகிறார்?
சுவிஸ் வங்கியில் கிடக்கும் சிறுவாட்டுக் காசில்
சிக்கனமாய் குடும்பம் நடத்துவார்.
ராகுல்காந்தி இந்தியாகேட்டில் பானிபூரியா விக்கப் போகிறார்,
பழையபடி டாடா, வேதாந்தாவோடு சேர்ந்து தேசத்தையே விற்கப் போகிறார்…

மோடி என்ன இராமன் கோயில் வாசலிலே
குரங்கை வைத்து பிச்சை எடுக்கப் போகிறாரா?
அத்வானிதான் அனுமார் வேசம்போட்டு
தெருத்தெருவாய் கையை நீட்டப் போகிறாரா?
வழக்கம்போல முதலாளிகளின் பங்குச் சந்தையில்
இராமஜெயம் கல்லா கட்டும்…

ஆதலால், நீ ஓட்டுப் போடாததால் ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை..
இந்த நாட்டில்,
எய்ட்ஸ் வந்து செத்தவரை விட
எலக்ஷன் வந்து செத்தவரே அதிகம்…

தொடர்ந்து ஓட்டுப்போடுவது உடல்நலத்திற்குக் கேடு…
சந்தேகம் இருந்தால்
ஓட்டுப்போட்டு ஓட்டுப்போட்டு உள்ள சத்தும்போய்
தேசமே மருத்துவமனையில் நிரம்பி வழிவதைப் பாரு…

என்ன இருந்தாலும்,
போட்டுப் போட்டு பழகிடுச்சு
என்னால் போடாமல் இருக்க முடியாது…
கையில் இருக்கிற ஓட்டை எங்காவது போட்டே ஆகவேண்டும்…
என்று தவிக்கிறாயா?
நல்லது நண்பா,
உன் பொன்னான வாக்கை
யாருக்கும் போட்டு வீணாக்காதே…
நாட்பட்டு போன அந்த நஞ்சை
பாம்பு, பல்லி, பன்றிகள் வாய்வைக்க முடியாத
கண்காணாமல் ஊருக்கு வெளியே உள்ள
ஏதாவது ஒரு குப்பைத் தொட்டியில் கொண்டு போடு…

இழிவாய் இருப்பது
போராடுவதை விட எளிதாய் இருக்கலாம்…
ஆனால், மனித உணர்வுக்கு சரியாய் இருக்குமா?

உன் கண்ணுக்கு முன்னே
இந்த போலி ஜனநாயக அரசமைப்புக்கெதிராக
போராடும் மக்களிடம் போய்..
என்னையும் உழைக்கும் வர்க்கமாய் இணைத்துக் கொள்கிறேன்…
என்று நீ வாக்களிப்பதே அழகினும் அழகானது.

___________________________________________________

-துரை. சண்முகம்
___________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

தேர்தல் 2011

தலாக் – ஷரியத் சட்டமும் இஸ்லாமியப் பெண்களின் அவலமும் !

113

உழைக்கும் மகளிர்தினச் சிறப்புப் பதிவு  – 11

இசுலாமியப் பெண்களைப் பற்றி எங்கு விவாதம் நடந்தாலும் “புர்கா”வும் தலாக் என்பதும் முதன்மையான தலைப்பாக அமைந்துவிடுகிறது. மற்ற பிரச்சினைகளெல்லாம் பிற மத பெண்களுக்கும் பொதுவானதாக அமைந்து, இவ்விரண்டிலும் மட்டும் இசுலாமியப் பெண்கள் தனித்து எதிர் கொள்வதால்  இவை பிரதானமாக விவாதிக்கப்படுகிறது, அது தவிர்க்க முடியாததாகவும் உள்ளது. உயர் கல்வியும் வேலைக்குச் செல்வதும் பிரச்சனையான ஒன்றாக இருந்தாலும் இப்பொழுது அது வெகுவாக உடைக்கப்பட்டுவிட்டது.

புர்கா, தலாக் குறித்த பிரச்சனைகளில் 1400 ஆண்டுகளுக்கு முன் உள்ள நிலையே தொடர்கிறதா என்ற கேள்வியை எழுப்பி சமூகத்தை பார்ப்போமானால் இல்லை என்பதை ஆணித்தரமாக சொல்லலாம். காலத்திற்கு ஏற்ப மாறிவரும் இவர்களிடம் இது குறித்தான சரியத் சட்டங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி இன்னும் நாம் அதில் செய்யவேண்டியதைப் பற்றி பேசினால் உடனே அவர்களிடம் வரட்டுத்தனமான விவாதம் தலை தூக்கிவிடுகிறது. மத நம்பிக்கையில் மட்டும், அதாவது மதம் சார்ந்த இயக்கங்களில் அணி திரட்டப்படாதவர்களிடம் இது குறித்தான விவாதங்களை முன் வைக்கும் போது காலத்திற்கேற்ற மாற்றங்களை வரவேற்கவே செய்கின்றனர். இதற்கும் கடவுள் நம்பிக்கைக்கும் தொடர்பில்லை என்பதையும் உணர்கின்றனர். ஆனாலும் அதனை ஒரு தீர்மானகரமாக நடைமுறைப்படுத்த ஏனோ பயப்படுகின்றனர். தமது சொந்தப் பிரச்சினைகளில் ஜமாத்துகளோடு இவர்கள் போராடினாலும் இமாம்கள் அல்லது அமைப்புகளின் முன்னோடிகள் “சரியத்” என்ற ஆயுதத்தைக் கொண்டு வெட்டி வீழ்த்தி விடுகின்றனர்.

அதனால் “தலாக்” பற்றிய சரியத் சட்டம், நடைமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றம், தேவையான மாற்றம் என்ற வகையில் இக் கட்டுரையை எழுத முயற்சித்துள்ளேன். சற்று நீளமாக இருக்கலாம். தவிர்க்க முடியாதது என்பதை புரிந்து கொண்டு கருத்தாய்வு தாருங்கள்.

சரியத் சட்டம் என்பது இந்திய பீனல்கோடு போல வரிசையாக தெளிவாக எழுதி வைக்கப்பட்ட புத்தகம் அல்ல. குர்ஆன் வசனங்களிலும் நபிமொழிகளிலும் ஆங்காங்கே காணப்படுபவைகளைக் கொண்டு எடுத்தாளப்படுபவைகள். அவற்றில் நிறைய முரண்பாடுகள் உள்ளன. இன்று சுன்னத் ஜமாத்தினரும் தவ்ஹீத் ஜமாத்தினரும், முரண்பாடுகளை அவரவருக்குப் பிடித்த மாதிரி எடுத்துக் கொண்டு சண்டையிடுவதும், தமக்குத்தாமே அக்மார்க் முத்திரைக் குத்திக் கொள்வதும் போல அன்று முதல் இன்றுவரை தர்க்கமும் சண்டையும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதற்கு அரபிமொழியின் வளமின்மையும் ஒரு காரணம்.

எடுத்துக்காட்டாக குர்ஆன் 2:228-ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள குருஉ எனும் சொல்லின் வினைச் சொல்லான அக்ரஅத் எனும் சொல்லுக்கு ஒரு பெண்ணின் மாதவிடாய்க் காலம் நெருங்கிவிட்டது (மாதவிடாய் ஆரம்பம்) என்ற பொருளும், ஒரு பெண் மாதவிடாயிலிருந்து தூய்மையடையும் காலம் நெருங்கிவிட்டது (மாதவிடாய் நின்றுவிட்டது) என்ற எதிரிடையான பொருளும் உண்டு. இதனை நான் கூறவில்லை. புகாரி அவர்களே பதிவுசெய்துள்ளார்கள். (பார்க்க பாகம்:6 பக்கம் 78) எக்காலத்திற்கும் பொருந்தும் அருள்மறை என்று கூறும் குர்ஆனின் சொல்லிலேயே குழப்பம் என்றால் என்ன சொல்லவது?

தலாக் என்றால் என்ன?

மணவிலக்கு என்று புத்தகங்களில் எழுதுகின்றனர். விவாகரத்து (திருமண முறிவு) என்று பொதுவானவர்கள் புரிந்து வைத்துள்ளனர். நடைமுறையும் இதனையே உணர்த்துகிறது. ஆனால் அதன் நேரடிப் பொருள் விடுவித்தல், அவிழ்த்தல், கைவிடுதல் ஆகியன. ஒரு அரபி இச்சொல்லினை எப்படி புரிந்து கொள்வார் என்பதிலிருந்து தலாக் என்பதன் மூலம் ifif, நடைமுறையில் பெண்ணின் உணர்வுக்கும் உரிமைக்கும் எவ்வளவு மதிப்பளித்திருப்பார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.

தலாக் என்பதுபோல் ஈலா, ழிஹார் என் இருவகை மணமுறிவுகளும் இருந்துள்ளன. ஈலா என்றால் நீ எனக்கு விலக்கப்பட்டவள் (ஹராம்) என சத்தியம் செய்வதால் ஏற்படும் மணமுறிவு. ழிஹார் என்றால் நீ என்க்கு தாயைப் போன்றவள் என்று கூறிவிடுவதால் ஏற்படும் மணமுறிவு. இன்று இது ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளப்பட்டு நடைமுறையில் இல்லை. அதனால் இதற்குள் செல்ல வேண்டாம் என் கருதுகிறேன்.

ஒருவர் தன் மனைவியை தலாக் செய்ய விரும்பினால் “அவிழ்த்து விடுகிறேன்” அதாங்க தலாக் என்று மூன்று முறை சொல்ல வேண்டும். இதனை ஏறக்குறைய ஒருமாத கால இடைவெளியில் மூன்று தவணையாகச் சொல்ல வேண்டும் என்றும் ஒரே தவணையில் சொல்லிவிடலாம் என்றும் அன்றுமுதல் இன்று வரை அறிஞர்கள் ஆய்வு செய்து கொண்டும் தர்க்கம் செய்துகொண்டும் இருக்கின்றனர். சாதாரண மக்கள் எப்படிச் சொன்னாலும் ஒன்றுதான் என்ற புரிதலிலும் நடைமுறையிலும் இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு எப்படிச் சொன்னாலும் பலன் ஒன்றுதான்.

ஒரு ஆண் மூன்று தவணைகளில் தலாக் சொல்லுகிறான் என்று வைத்துகொள்வோம். தலாக்கிற்கு காரணமான தன் கோபம் தனியவோ, அல்லது தன் மனைவி ஒழுங்கங் கெட்டவள் என்று கருதி தலாக் சொல்லியிருந்தால் அது உண்மையா பொய்யா என்று நிதானமாக புரிந்து கொள்ளவோ அவகாசம் கிடைக்கும். மூன்றாவது தலாக் சொல்வதற்கு முன் தன் மனைவியை சேர்த்துக் கொள்ளலாம். பெண்ணைப் பொறுத்தவரை தன் கணவன் மனம் மாறி தன் மீது இரக்கம் காட்டமாட்டானா என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. ஒருமுறை தலாக் என்று சொல்லிவிட்டாலே பெண்ணானவள் “இத்தா” இருக்கத் தொடங்கவேண்டும். (இத்தா பற்றி இங்கு படித்துக்கொள்ளுங்கள்) மூன்றுமுறை சொல்லாவிட்டாலும் ஒரு முறை இந்தச் சிந்தனைக் கணவனுக்கு தோன்றிவிட்டால் காலம் முழுவதும் இந்த நெருக்கடியிலிருந்து அவள் மீளவே முடியாது. அதாவது ஆணாதிக்க வடிவமே “கைவிடுதல்” என்ற சரியத் சட்டம். முத்தலாக்கையும் ஒரே தடவையில் சொன்னாலும் ஆணாதிக்கமே கோலோச்சும். அதுவே ஒரு பெண் தன் சுய வருமானத்தில் இருந்தால்…..

பாத்திமா . அரசுத் துறையில் ஒரு பொறியாளர். கணவர் ஒரு ஆசிரியர். கை நிறைய சம்பளம் வாங்கும் பாத்திமாவிற்கு மேலும் ஒரு அரிய வாய்ப்பு கிடைக்கிறது. வெளிநாட்டில் அரசுத் துறையில் பொறியாளர் வேலை. இலகரத்தில் ஊதியம். வீடு கார் மற்றும் குடும்பத்திற்கான விசா என்று அனைத்து வகையிலும் ஏராளமான சலுகை. ஆனால் பிரிந்து வாழ மனைவியை அனுமதிப்பதில் கணவனுக்கு அளவில்லாத தன்மான உணர்வு. மனைவியை தடுக்கிறார். சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பாத்திமாவிற்கு இந்த பொன்னான வாய்ப்பை இழக்க விரும்பவில்லை. முதலாளித்துவ உலகத்தில் வாழும் அவரால் அதை இழக்க முடியாதுதானே. அப்படி இழக்க பொதுவாக எவரும் விரும்பவும் மாட்டார்கள். பாத்திமா தனது விருப்பத்தில் மாற்றம் செய்துகொள்ள தயாரில்லை. தன் கணவனையும் வேலையை விட்டுவிட்டு வெளிநாட்டிற்கு அழைக்கிறார். பெண் உழைப்பில் தாம் வாழ்வதா என்ற உணர்வு அவருக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. தலாக் செய்து விடுவதாக மிரட்டுகிறார். பலனில்லை. குடும்பத்திலுள்ளவர்கள் சமாதானம் செய்ய இன்று அவர்கள் இருவரும் வெளிநாட்டில். இது நடந்து பதினைந்தாண்டுகளுக்கு மேலாகிறது. இப்பொழுது அவர்கள் அந்நாட்டில் ஒரு பெரிய நிறுவனத்தின் முதலாளிகள்.

பொதுவாக வருமானம் ஈட்டும் பெண்களுக்கு தும்மினாலும் தலாக் என்ற நெருக்கடி இல்லை. அந்த பயமுறுத்தலையும் பெண்கள் எளிதாக கைகொள்கின்றனர். அதுபோல ஆண்களிடமும் மணவாழ்க்கையின் காதல் உணர்வை புரிந்து கொள்ளும் மனமுதிர்ச்சியையும் இன்று நிறையவே காணமுடிகிறது. அதாவது வெளியில் போகக் கூடாது, ஒரு ஆணுடன் பேசிவிட்டாலே சந்தேகம் கொள்வது என்ற பண்புகளில் நிறையவே மாற்றம் உள்ளது.

தலாக் என்பதற்கான “நபிவழி” என்று பின்வருமாறு கூறுகின்றனர். 1. மாதவிடாய், பிரசவ இரத்தப்போக்கு ஆகியவற்றிலிருந்து நீங்கி மனைவி தூய்மையாக இருக்க வேண்டும். 2. மனைவியுடன் தலாக் சொன்னபிறகு உடலுறவுக் கொள்ளக்கூடாது. 3. இரு சாட்சிகள் முன்னிலையில் மணவிலக்கு அளிக்க வேண்டும்.

இரண்டாவது விதியில் எந்தப் பிரச்சனையும் இல்லை. தலாக் என்றாலே அதுதானே. முதலாவது விதிப்படி மாதவிடாய் காலத்தில் தலாக் சொல்லக்கூடாது. ஆனால் சொல்லக்கூடாது என்ற தலைப்பில் குர்ஆன் வசனம் 65: 1 ஐ ஆதாரமாகக் கூறும் புகாரி அவர்கள், அடுத்த தலைப்பிலேயே தலாக் செல்லும் என்றும் தலைப்பிட்டு, இரண்டிற்கும் சாட்சியாக காலிபா உமர் அவர்களின் மகன் அப்துல்லா செய்த ஒரே தலாக் நிகழ்ச்சியை (புகாரி 5251, 5252, 5253) ஆதாரமாக எழுதியுள்ளார். வேடிக்கையான முரண்பாடு. இவர்கள் ஏன் தங்களுக்குள் காலம் காலமாக அடித்துக் கொள்கிறார்கள் என்று புரிகிறதா? இதற்குப் பெயர் தெளிவான மார்க்கமாம்.

தலாக் பற்றி புகாரி அவர்கள் தொகுத்துள்ள எந்த நபிமொழியிலும் இரு சாட்சிகள் முன்னிலையில்தான் தலாக் சொல்ல வேண்டும் என்பதற்கான நபிமொழி ஒன்றும் இல்லை. தலாக் சொல்லிவிட்டு வந்து தான் தலாக் சொல்லிவிட்டதாக பிறரிடம் கூறியதான நபிமொழிகளே காணப்படுகிறது. முகம்மது நபியும் தனது ஒரு மனைவியை தலாக் செய்தபோது எந்த சாட்சியையும் முன்னிருத்தியும் தலாக் செய்யவில்லை. உமையா என்ற அப்பெண்ணிடம் தாம்பத்திய உறவுகொள்ள முற்பட்டபோது அப்பெண் குலப் பெருமைகூறி இணங்க மறுத்துவிடவே, முகம்மதுநபி “உன் குடும்பத்தாரிடம் சென்றுவிடு” என்று கூறிவிட்டு வெளியில் வந்து அபு உசைத் என்பவரிடம் இரு வெண்ணிற சணலால் நெய்யப்பட்ட ஆடைகளை உமையா அவர்களுக்கு கொடுத்து அவரது குடும்பத்தாரிடம் கொண்டு விட்டுவிடுங்கள் என்று கூறியதாக (புகாரி: 5254,5255) நபிமொழி உள்ளது. இந்நிகழ்சி முத்தலாக்கையும் ஒரேதடவையில் முகம்மதுநபியே கூறியதற்கு சாட்சியாகவும் இருக்கிறது.

ஒருவர் தம் மனைவி மீது விபச்சாரக் குற்றச்சாட்டைக் கூறினால் நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவேண்டும். அவ்வாறு கொண்டு வரத் தவறினால் அவருக்கு எண்பது கசையடிகள் தண்டனையும் அதன் பிறகு அவர் அளிக்கும் எந்த சாட்சியும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடாது என்று குர்ஆன் வசன எண் : 24:4 கூறுகிறது.

ஹிலால் பின் உமய்யா என்பவர் ( மற்றொரு நபிமொழியில் இவர் பெயர் உவைமிர் அல் அஜ்லானி என்றுள்ளது. ஆனால் நிகழ்சி ஒரே மாதிரியுள்ளது. பெயரிலுமா இவர்களுக்குள் குழப்பம்?) தன் மனைவி மீது விபச்சாரக் குற்றச்சாட்டை முகம்மது நபியிடம் கூறி தனக்கு என்ன தீர்வு எனக் கேட்கிறார். அதற்கு நான்கு சாட்சிகளைக் கொண்டு வரும்படியும் இல்லையேல் கசையடி கொடுக்கப்படும் என்றும் முகம்மது நபி கூறுகிறார்கள். அதற்கு ஹிலால் அவர்கள் தன் மனைவி அடுத்தவருடன் உடலுறவு கொள்வதை பார்த்ததிற்குமா நான்கு சாட்சிகள் வேண்டும் என்று மீண்டும் கேட்க நடைமுறைச் சிக்கலை புரிந்துகொண்ட முகம்மது நபி தமக்கு வேறு கட்டளை அல்லாவிடமிருந்து வந்துவிட்டதாக (குர்ஆன் வசனம் 24:6-9) கூறி நான்கு முறை தாம் சொன்னது உண்மை என்று சத்தியம் செய்து அதன் பிறகு அப்படி தாம் செய்த சத்தியம் பொய்யானால் தன்மீது அல்லாவின் சாபம் உண்டாகட்டும் என்று கூறினால் போதும் என்றும் கூறிவிடுகிறார்கள். இதற்கு லிஆன் செய்தல் என்று பெயர். அது சரி குற்றம் சுமத்தப்பட்ட பெண் என்ன செய்ய வேண்டும்? ஹிலால் அவர்களின் மனைவி ஷரீக் பின் சஹ்மா அவர்களையும் இவ்வாறு சத்தியம் செய்யச் சொல்லகிறார்கள். (அதாவது அல்லாவிற்கு அஞ்சி சொல்லமாட்டார் என்ற கருத்தில் என கருதுகிறேன்) அவரும் அதேமாதிரி சத்தியம் செய்கிறார். இருவருமே தம் மீது குற்றமில்லை என்று கூறிவிட்டபொழுது என்ன தீர்ப்புச் சொல்லவது? தீர்ப்பை குற்றம் சுமத்தியவரே எழுதிவிடுகிறார். “ நான் இவள் மீது குற்றம் சுமத்திவிட்ட பிறகு இவளை கைவிடாவிட்டால் (தலாக் சொல்லாவிட்டால்) நான் சொன்னது பொய் என்றாகிவிடும் என்று கைவிட்டுவிட்டார். (புகாரி 4747, 5308)

இன்றைய நடைமுறையில் அப்படி தன் விருப்பத்திற்கு ஏற்ப தலாக் என்று சொல்லிவிட முடியாது. ஒருவர் தன் மனைவியை தலாக் செய்ய விரும்பினால் அதற்கான காரணத்தை சொல்லி தன்னுடைய ஜமாத்தில் சொல்லவேண்டும். காரணம் சொல்லத் தேவையில்லை என்று சரியத் சட்டமிருந்தாலும் காரணம் சொல்லாமல் ஜமாத் ஏற்றுக் கொள்வதில்லை. உடலுறவு தொடர்பான ஒழுக்கக் கேட்டிற்குத் தவிர பிற காரணங்களுக்கு தலாக் என்பதை உடனடியாக அனுமதிப்பதில்லை. உடலுறவு தொடர்பான ஒழுக்கக் கேட்டிற்குக் கூட தீர விசாரிக்காமல், அதற்கான சாட்சிகள் இல்லாமல் அனுமதிப்பதில்லை. பிறவகை குற்றச்சாட்டுகளுக்கு சில மாதங்கள், வருடங்கள் கூட தீர்ப்புக் கூறாமல் தள்ளிவைத்து பின்னர்தான் தலாக் என்பதை ஏற்றுக்கொள்கின்றனர்.

ஆனாலும் உலமாக்கள் மன்றங்களும் இசுலாமிய அமைப்புகளும் தன்னிச்சையாக சொல்லப்படும் தலாக்குகளை அங்கீகரிக்கின்றனர். செல்போன் மூலமும் தலாக் சொல்லலாம் என்றும் இவர்கள் அனுமதித்துள்ளனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். விதிவிலக்காக ஜமாத்துகள் கூட பிரச்சனைக்குரியவரின் வசதி வாய்ப்பைப் பொறுத்து ஏற்றுக் கொள்கிறது.

குலா

தலாக் – ஆண் தன் மனைவியைக் கைவிடுதல்- என்பது போல பெண் தன் கணவனை தலாக் சொல்ல முடியுமா?

குலா (அல்குல்வு) என்ற இச்சொல்லிற்கும் கழற்றிவிடுதல் என்றுதான் பொருள். ஆனால் தன்வினையில் பயன்படுத்தக் கூடாது. பிறவினையில் பயன்படுத்த வேண்டும். அதவது பெண் தன் கணவனைப் பிடிக்காவிட்டால் நடுவரிடமோ அல்லது தமக்குப் பொறுப்பாக இருந்து யார் திருமணம் செய்து வைத்தார்களோ அவர்களிடம் முறையிட்டு தன் கணவனை “கழற்றிவிடச் சொல்லுங்கள்” என்று சொல்வதாகும். இதற்கு ஒருமுறை, மூன்றுமுறை என்ற கணக்கெல்லாம் கிடையாது. கழற்றிவிடச் சொல்ல விரும்பும் பெண் தான் பெற்ற மகர் தொகையை திருப்பிக் கொடுக்க வேண்டும். அல்லது ஏதாவது நட்ட ஈட்டுத்தொகை கொடுக்க வேண்டும்

இதிலும் முரண்பாடு இவர்களிடையே உள்ளது. குலா என்பது முழுமையான தலாக் என்றும் இல்லை என்றும் இரண்டு கருத்துண்டு. அதாவது இசுலாமியச் சட்டப்படி தலாக் சொல்லி விட்டால் அவ்விருவரும் மீண்டும் இணைந்து (திருமணம்) வாழ முடியாது. அவ்வாறு வாழ விரும்பினால் அப்பெண் வேறொருவரை திருமண்ம் செய்து அவருடன் உடலுறவு கொண்ட பிறகு அவரிடமிருந்து தலாக் பெற்று அதன் பிறகே ஏற்கனவே வாழ்ந்தவருடன் இணைய முடியும். குலாவில் அதுபோல் வேறு திருமணம் செய்யத் தேவை இல்லை; விரும்பினால் இணைந்து கொள்ளலாம். அது பிரிவினையே தவிர தலாக் இல்லை என்பது ஒருசாரரின் கருத்து.

இதற்கு அவர்கள் கூறும் ஆதாரம் குர்ஆன் வசனம் 4:20. அது, “ஒரு மனைவியிடத்தில் (விவாகரத்து செய்துவிட்டு) மற்றொரு மனைவியை (திருமணம் மூலம்) மாற்றிக் கொள்ள விரும்பினால் அவர்களில் ஒருத்திக்கு ஒரு (பொற்)குவியலையே கொடுத்திருந்தாலும் அதிலிருந்து எதனையும் நீங்கள் (திரும்ப) எடுத்துக்கொள்ளாதீர்கள்.” என்று கூறுகிறது.

குலாவும் தலாக்தான் என்று கூறுபவர்கள் குர்ஆன் வசனம் 2:229 மற்றும் புகாரி 5373 மற்றும் 5230 ஆகியவற்றை ஆதாரமாக கூறுகிறார்கள். “கணவன் மனைவியிடையே இசுலாமிய நெறிப்படி வாழ முடியாது என்று பிணக்கு எற்பட்டால் மனைவியிடம் ஈட்டுத் தொகை பெறுவதில் குற்றமில்லை” என்று குர்ஆன் கூறுகிறது. (குர்ஆனின் எந்த வசனத்தை சரி என்று எடுத்துக்கொள்வது? உங்களுக்கு எதுபிடிக்குதோ அதை எடுத்துக்கொள்ளுங்கள்.)

ஸாயித் பின் கைஸ் என்பவரின் மனைவி முகம்மது நபியிடம் சென்று தனது கணவர் உடலுறவுக்கான தகுதியில்லாததைக் குறிப்பிட்டு தமக்கு தலாக் பெற்றுத் தருமாறு வேண்டுகிறார். அதற்கு முகம்மது நபி, அப்பெண்ணிடம் கணவரிடமிருந்து பெற்ற தோட்டத்தை திருப்பிக் கொடுத்துவிட சம்மதம் பெற்றுக்கொண்டு  ஸாயித் பின் கைஸ் அவர்களை தலாக் செய்யச் சொல்லுகிறார்கள். (புகாரி 5373)

பனூமுகிரா குலத்தினர் தங்கள் புதல்வியை அலி அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க விரும்புகின்றனர். ஆனால் அதற்கு முகம்மது நபி அனுமதியளிக்க மறுத்துவிட்டு, “பாத்திமா  என்னில் பாதியாவார். அவரை வருத்தமடையச் செய்வது என்னை வருத்தமடையச் செய்வது போலாகும். வேண்டுமானால் பாத்திமாவை தலாக் செய்துவிட்டு வேறு திருமணம் செய்து கொள்ளட்டும்” என்று கூறுகிறார்கள். (4 மனைவி ஆதரவாளர்கள் கவனிக்க)

இவைகள் மூலம் முரண்பாடு ஒருபக்கமும், குலா என்பது தலாக் போலல்லாத கழற்றிவிடச் சொல்லி சொல்லுதல் என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

குலா என்பது எப்படியிருந்தாலும் பெண், ஜமாத்தில் முறையிட விசாரணை நடத்தும் ஜமாத் கணவன் மீது குற்றமிருப்பின் கணவனுக்கு தண்டத் தொகை வழங்கவும், அவன் பெற்ற வரதட்சிணையை திருப்பித் தரவும் உத்தரவிடுகின்றனர். வரதட்சணை பெறாவிட்டாலும் இழப்பீட்டுத் தொகை உண்டு. குற்றம் யாருடையது என்பது மட்டுமே கணக்கில் எடுக்கப்படுகிறது. ஆண் தலாக் செய்தாலும் இதுவே இன்றைய நடைமுறை. உலமாக்களின் தலையீடும் செல்லுபடியாவதாகத் தெரியவில்லை. காரணம் திருமணம் என்பதில் பெண்ணைப் பெற்றவர்கள் அல்லவா பெரிதும் இழக்கின்றனர். வரதட்சிணை மட்டுமல்ல பிரச்சனை. திருமணச் செலவு என்பதும் திரும்பப் பெறமுடியாத இழப்பல்லவா. பெண்ணைப் பொறுத்தவரை மறுமணம் என்பது முதல் திருமணத்தை விட கூடுதலாகவே செலவு செய்ய வேண்டியுள்ளது. அல்லது கொஞ்சமும் பொருத்தமில்லாத வயது கூடியவர்களை திருமணம் செய்ய வேண்டும். ஏழைகளைப் பொறுத்தவரை மறுமணம் என்பது கானல் நீர்தான்.

மணவிலக்கு நடந்தால் சரியத் சட்டப்படி குழந்தைகள் கணவனையே சாரும். ஆனால் நடைமுறையில் பெரும்பாலும் பெண்ணே குழந்தைகளைப் பொறுப்பேற்று கொள்கிறாள். மறுமணம் என்று வரும்போது ஏற்படும் பிரச்சனையால் ஆண் தற்காலத்தில் குழந்தைகளை ஏற்றுக் கொள்வதில்லை. பெண்ணைப் பொறுத்தவரை உணர்வுவகை சார்ந்த பாசம் என்ற பிணைப்பால் குழந்தைகளை தன்மீது திணிக்கப்படுவதாக கருதுவதில்லை. குழந்தைகளுக்கான எதிர்காலம், பராமரிப்பு என்ற வகையில் மாதம் மாதம் அல்லது ஒரு நிர்ணயிக்கப்பட்ட தொகையையும் ஜமாத் கணவனிடமிருந்து பெற்றுத் தருகிறது.

அந்தக் காலத்தில் சந்தையில் வாங்கும் பொருள்போல பெண்களை அன்பளிப்பு (மகர்) கொடுத்து திருமணம் செய்துகொண்டனர். பெற்றவர்களும் யாராவது வாங்கிக் கொண்டால் சரிதான் என்று பருவமடையாத பெண்களைக்கூட 50 வயதுக் கிழவனுக்கும் திருமணம் செய்துகொடுத்தனர். ஒவ்வொருவரும் 5, 10 என்று பெண்களை திருமணம் செய்துகொண்டனர். இன்று அப்படி முடியுமா? என்னதான் சரியத்தைக் காக்கும் சட்டமேதையாக இருந்தாலும் தனது 6 வயது மகளுக்கு திருமணம் செய்து வைப்பாரா? இல்லை இரண்டாந்தாரமாக தன் மகளை மணமுடித்துக் கொடுப்பாரா? எந்தப் பெண்ணாவது தன் கணவன் வேறு திருமண்ம் செய்துக் கொள்ளத்தான் அனுமதிப்பாரா? காலம் ரொம்பத்தானே மாறிவிட்டது!

ஆமாம்! மிகவும் மாறிவிட்டதுதான். ஆனாலும் இசுலாமிய ஆண்கள் மனதில் தலாக் பற்றிய சிந்தனை மட்டும் மாறவில்லை. இரு எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம்.

தஞ்சையிலிருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்றுகொண்டிருந்த பேரூந்து கூட்டம் நிரம்பி வழிந்தது. ஒரு இசுலாமிய ஜோடி மூன்றுபேர் இருக்கையில் பயணித்தனர். ஜன்னலோரத்தில் மனைவி. அவருக்கு அருகில் அவரது கணவர். அதற்கடுத்து வேறு ஒருவர். திடீரென்று அவர்களது கைக்குழந்தை அழ ஆரம்பிக்கிறது. எவ்வளவு சமாதனம் செய்தும் அழுகை நிற்கவில்லை. கணவராகப்பட்டவர் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும்படி கூறுகிறார். மனைவி வெட்கப்பட்டுக்கொண்டு மறுக்கிறார். சர்ச்சை முற்றி அப்பெண் குழந்தையை தூக்கிக்கொண்டு இறங்கப் போவதாக எழுந்திருக்க, அவரது கணவன் அடித்துவிட, மூன்றாவதாக இருந்தவர் மேல் அந்தப் பெண் விழுந்துவிடுகிறார். எதிர் இருக்கையில் அதுவரை அமைதியாக இருந்த ஒருப்பெண் (அநேகமாக அப் பெண்ணின் தாயார்போல் தெரிகிறது) குழந்தையை தூக்கிக் கொண்டு “இப்படி பஸ்ஸிலயும் சண்டை போடுகிறீர்களே” என்று கூறுகிறார். கணவராகப்பட்டவருக்கு கோபம் உச்சமடைய மேலும் அதிகமாக அப்பெண்ணை (அசிங்கமாகவும்) திட்டிவிட்டு “உன்னை தலாக் சொன்னாதான்டி சரிவரும். எனக்கு ஒரு தம்ளர் பால் போதும்டி தலாக் சொல்ல. (பால் எதுக்கு என்று எனக்குப் புரியவில்லை) எனக்கு ஆயிரம் பொண்ணு கிடைக்கும்டி” என்று கத்திக் கொண்டே வருகிறார். நல்லவேளையாக ப்ட்டுக்கோட்டை வந்துவிடுகிறது. முன்னாடியே உள்ள நிறுத்தத்தில் நம்ம அற்புதவிளக்கு இறங்க வேண்டிருந்ததால் இறங்கிவிட பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லையாம்.

இலட்சாதிபதி முகம்மது அலி. 55 வயதிருக்கும் அவருக்கு. திருமணம் செய்தநாளிலிருந்து அவரது மனைவிமீது அவருக்கு அலாதியான அன்பு. எதற்கெடுத்தாலும் மஹ்மூதாபீ என்று கூப்பிடாமல் அவருக்கு நேரம் நகராது. எதையும் தன் மனைவியிடம் கலந்து கொள்ளாமல் முடிவெடுக்கமாட்டார். ஆனால் அவருக்கு இந்த வயதில் திடீரென்று என்னானது என்று புரியவில்லை. சில மாதங்களாக இருவருக்கும் பிணக்கு. ஒருநாள் திடீரென்று தம் மனைவியை தலாக் சொல்லிவிடுகிறார். ஜமாத்திற்கெல்லாம் செல்லவில்லை. அவரது பேத்திகளே பிள்ளை பெற்றுவிட்ட இந்த வயதில் பஞ்சாயத்தெல்லாம் சரிபட்டுவருமா? பணக்காரராகவும் உள்ள அவருக்கு அதெல்லாம் அசிங்கமில்லையா! அவரது மகன்களால் (3பேர்) ஏதும் சொல்ல முடியவில்லை. காரணம் சொத்து முழுவதும், இந்து மதத்திலிருந்து சிறுவயதில் வீட்டைவிட்டு ஓடிவந்து இசுலாத்தில் இணைந்த அவரே உழைத்து சேர்த்த சொத்து. (கொஞ்சம் கடத்தல் தொழிலும்தான்). மூச்சுவிட்டால் அனைவரும் வெளியே போகவேண்டியதுதான். அதனால் தந்தைக்கு பிள்ளைகளும் ஆதரவு. அதற்கு சரியத்தும் சென்னை உலமாக்களும் ஆதரவு. சில தினங்களில் தலாக்கிற்கான காரணம் புரிந்தது. முகம்மதலி கேரளப் பெண்ணொருவரை திருமணம் செய்துகொண்டு கேரளாவிலேயே செட்டில் ஆகிவிட்டார்.

நிறைய எடுத்துக்காட்டுகள் தரலாம். தானும் ஒரு பெண்ணுக்கு தகப்பனாக இருந்தாலும் தலாக் என்பதை எளிதாகச் செய்துவிடலாம் என்ற மனநிலையில், அது தன்னுடை ஆண்மைக்கான அடையாளம் என்ற சிந்தனையில் இவர்கள் இன்றும் வாழ்வதற்கு நிறைய எடுத்துக்காட்டுகளைக் கூறலாம்.

இசுலாமிய சமூகத்திலும் சரியத்திற்கு அப்பாற்பட்டு நிறையவே மாற்றங்கள் நடந்துள்ளன. சரியத்தை கடைபிடிப்பதும் முடியாத காரியமாக உள்ளதையும் பார்க்கிறோம். சில பெண்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வாழ வழியில்லாமல் தொடர் ஜீவனாம்சம் கேட்கும்போது மட்டும் இந்த “சரியத்தின் காவலர்கள் என்ற போலிகள்” உச்சாணிக் கொம்பில் ஏறிகொண்டு அனைவரையும் உசுப்பிவிட்டு அதாவது இசுலாத்தை சிதைக்க ஆர்.எஸ்.எஸ்சின் சதி, கம்யூனிஸ்டகளின் சதி என்று இசுலாமியர்களை உசுப்பிவிடுகின்றனர். வழக்கு தொடுப்பவரே இசுலாம் அழிந்துவிடுமோ என்று பயந்துபோய் தனது கோரிக்கையை திரும்பப் பெறும்வகையில் தமது பிற்போக்குத்தனத்தை சாதித்துக் கொள்கின்றனர்.

ஆண்களின் நேரடியாக மணவிலக்கு செய்வதற்கான உரிமையை தடுப்பது, முறைகேடான மணவிலக்கிற்கு ஜீவனாம்சம் பெறுவது, எல்லாவற்றிற்கும் மேலாக சுயமாக வருமானம் ஈட்டவும் அதனை தனது விருப்பத்திற்கேற்ப பயன்படுத்தும் உரிமையைப் பெறுவது ஆகியனவற்றில் மாற்றங்கள் தவிர்க்க முடியாததாக பொருளாதாரச் சூழ்நிலை இன்றுள்ளது. இசுலாமியப் பெண்கள் இதனைப் புரிந்துகொண்டு காலத்திற்கேற்ற தமது உரிமைகளை பெறுவதற்கு போராடவேண்டும். வாழும் உரிமைக்கும் மத நம்பிக்கைக்கும் முடிச்சுப்போட முயற்சிப்பவர்களை அடையாளங்கண்டு அம்பலப்படுத்த வேண்டும்.

__________________________________________________

– சாகித்
__________________________________________________

கிரிக்கெட் பயங்கரவாதம் !

51
சஹாரா கிரிக்கெட்

கொலை செய்வது அலுத்துப் போகும்போது
கொஞ்சம் விளையாட்டு தேவைப்படுகிறது அவர்களுக்கு…

உள்நாட்டு குளிர்பான சந்தையை
கொலை செய்த கோக்,பெப்சி…

வாகனங்களை இறக்கி விட்டு
வயல்வெளியை படுகொலை செய்யும் டாடா…

சிறுவணிகத்தின் விழிகளைத் தோண்டி
தன் முகம் ஜொலிக்கும் ரிலையன்ஸ்…

இவர்களின் இழவெடுத்த மினுமினுப்பில்
உலகக் கோப்பையில் உனது இரத்தம்…

இனக்கொலைக் கழுகுகள்
பிணச்சுவை திகட்டி
மூக்கைத் தேய்த்து இளைப்பாற
மும்பை வான்கடே வருகின்றன.

கொலை செய்தே ரன் குவிப்பதில்
இந்தியாவில் “மேன் ஆஃப் தி மேட்ச்’ அத்வானி!
படுகொலை வேகத்தில் பிணம் குவிப்பதில்
இலங்கையில் “மேன் ஆஃப் தி மேட்ச்’ ராசபக்சே!
கொலைகாரர்கள் ஒன்றாய் கண்டுகளிக்க
கொலைகார ஆட்டம் தயார்…

தண்ணீர் பாட்டிலிலும் இரசாயன குண்டு பீதி
இரசாயன குண்டு வீசியவனுக்கு பாதுகாப்பு, வெகுமதி
எது நடந்தாலென்ன ஆட்டத்தை நோட்டம் பார்த்து
அடுத்த நாள் அலுவலகத்தில் பேசிக் கொள்வதே
இரசிகனுக்கு நிம்மதி..

இதோ இந்த நேரத்தில்….
சுற்றி வளைக்கப்பட்ட முட்கம்பிகளுக்குள்
ஈழத்தமிழரின் உணர்வுகள் மிதித்து
அடித்து விளையாடும் சிங்கள இனவெறி…

இதோ இந்த நேரத்தில்…
சொந்த நிலத்தை தாங்கிப் பிடிக்க எத்தனிக்கும்
ஒரிசா-சத்தீஸ்கர் பழங்குடி மக்களின்
உயிரை குறிவைத்து வீசப்படும் இந்தியக் குண்டுகள்…

இதோ இந்த நேரத்தில்…
இந்தியா – பாகிஸ்தான் எல்லைக் கோட்டிற்குள்
பந்தாடப்படும் ஒரு காசுமீர் பெண்ணின் பிணம்…

விளையாட்டிற்கு இடையூறாக
குறுக்கே விழும் பிணங்களைத் தாண்டி
ரசிக்கக் கிளம்பி விட்ட நண்பனே,
மைதானத்திற்கு வெளியே எது நடந்தாலும்
தானுண்டு, வேலையுண்டு
மைதானத்திற்குள் நடப்பதைப் பார்ப்பதற்கு மட்டும்
எனக்கு ஒருநாள் விடுப்பு உண்டு என்பவனே,

இது கொலை வெறியன்றி வேறென்ன?

கட்டாயம் உன் கிரிக்கெட் வெறி
மன்மோகன்சிங்குக்குத் தேவை…
டெண்டுல்கர் பக்கம் உன் கவனத்தைத் திருப்பி விட்டு
அமெரிக்கா பக்கம் இந்திய வளங்களை  வீசியெறியும் அவர் திறமை
ஹர்பஜன் சிங்குக்கே கைவராதது…

“ஹௌ ஈஸ் தட்” என்று அலறும்
விளையாட்டு வீரனின் குதிப்பில்
“ஜெய் ஸ்ரீராம்” என்ற வெறியைப் பார்த்து
அத்வானியும் கிரிக்கெட்டை ரசிக்கலாம்,
விளாசப்படும் ஒவ்வொரு பந்திலும்
குஜராத்தில் வெட்டியெறியப்பட்ட
இசுலாமியர்களின் தலைகளாய்
அத்வானியின் கண்களுக்கு களிப்பு தரலாம்.

ராசபக்சே ரசிப்பதற்கும் நியாயமுண்டு…
இந்திய ராணுவத்தால் பயிற்சியளிக்கப்பட்டு
எந்த இடம் பார்த்து குண்டு வீச வேண்டுமென்று களம் அமைத்து
இந்தியா வழிநடத்திய ஆட்ட நுணுக்கங்கள்
இறுதிப் போட்டியின் ஆடுகளமாய்
ராசபக்சே கொலைகாரனுக்கு ரசிப்பு தரலாம்..

சொந்த நாட்டின் பாடுகளம் அனைத்தும்
அந்நியன் கைக்கு பறிபோவதைப் பற்றி  அக்கறையில்லை.
கிரிக்கெட்டின் ஆடுகளத்தில் மட்டும்
இந்தியா ஜெயிக்கிறதா என்பதுதான் உன் கவலை.

இந்த ரசனையை விட பயங்கரமானது வேறு உண்டா?

_____________________________________________________

– துரை.சண்முகம்.
_____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

நான் ஒரு பெண் – ஆலங்கட்டி

33

உழைக்கும் மகளிர்தினச் சிறப்புப் பதிவு  – 10

பெண்ணாக என்னை உணரத் தொடங்கிய அந்நாள் இன்னும் என் ஞாபகத்தில் உள்ளது. பத்து வயது வரை என் வயதையொத்த தம்பியுடனும் அவன் நண்பர்களுடனும் ஊரிலுள்ள கால்வாய், குளங்களிலெல்லாம் மீன் பிடித்தும்,அறுவடை முடிந்த வயற்காட்டில் பந்தயப் புறாக்களைப் பறக்க விட்டும், ஓணத்தையொட்டி ஊர் மைதானத்தில் ஓணப் பந்தாடியும், வீட்டிற்கு ஒரு பொருள் தேவையென்றால் கடைக்கு சளைக்காமல் நூறு முறை ஓடியும் திரிந்த காலத்தில் அவர்களெல்லாம்  ஆண்களென்றும் நான் மட்டும் பெண்ணென்றும் எனக்குத் தெரியாது.

திடீரென்று ஒரு நாள் அம்மா என்னிடம் ‘நீ இன்றைக்கு கடைக்குப் போக வேண்டாம். இனி தம்பி பொருள் வாங்கி வருவான்’ என்று சொன்னார்கள். நான் ஆடிப் போய் விட்டேன். அம்மா பலமுறை அவனைக் கெஞ்சிக் கேட்டால் தான் ஒரு பொருளை வாங்க கடைக்குச் செல்வான். நானென்றால் சொல்வதற்குள் ஒரே ஓட்டமாகப் போய் வாங்கி வருவேன். கடைசியாக முந்தைய நாள் எவ்வளவு வேகமாகப் போய் தீப்பெட்டி வாங்கி வந்தேனென்பதை எல்லாம் சுட்டிக்காட்டினேன். கெஞ்சிப் பார்த்தேன். அம்மா அசைந்து கொடுக்கவேயில்லை. காரணம் நான் இன்னும் குழந்தையில்லையாம். அன்று முதல் நான் ‘பெண்’ ணாம். அப்படி நானன்று பெண்ணானேன். என் ‘பொது வெளி’ (public  sphere) என்பது வெறும் பள்ளிக்கூடமாகச் சுருங்கியது. அம்மா வழி குடும்பத்திலெல்லாம் ஆண் பிள்ளைகளான‌ அவர்களுடனான எனது உறவும் ‘என்ன எப்படி இருக்க. நல்லாப் படிக்கிறியா’ என்பது மாதிரியான கேள்விகளில் ஒதுங்கியது. கிராமமாக  இருந்தாலும் அழிந்து கொண்டிருந்த நிலப்பிரபுத்துவ எச்சங்களும், வளர்ந்து கொண்டிருந்த குட்டி முதலாளித்துவ வாழ்க்கை முறையும் காரணமாக எங்கள் குடும்பம் பொதுவாக கிராமங்களிலிருப்பது போல பக்கத்து வீடுகளில் உட்கார்ந்து அரட்டையடிப்பது, அடுத்த வீட்டுப்பெண்களுடன் கோயில் குளமென்று சுற்றுவது போன்ற எந்தப் பழக்கத்தையும் வைத்துக் கொள்ளவில்லை. இது என்னைப் பள்ளிக்கூடமில்லாத விடுமுறை நாட்களில் நான்கு சுவருக்குள் மட்டும் புழங்க வைத்து, என் எல்லைகளை மேலும் சுருக்கியது. நான் பார்த்திருக்க என்னுடனே வளர்ந்த என் தம்பி எந்தவிதக் கட்டுபாடுகளுமில்லாமல் விளயாடச் சென்றான். அவனது நண்பர்களுடன்  மாலை நேரங்களில் அரட்டையடித்தான். இரவு தாமதமாக‌ வந்தாலும் யாரும் அவனைக் கேள்வி கேட்பதில்லை. எனது பள்ளித் தோழியின் வீடு பள்ளிக்குப் போகும் வழியிலிருந்தது. வரும் வழியில் அவள் கூப்பிட்டால் என்பதால் போய் தண்ணீர் குடித்துவிட்டு வந்தேன். வழக்கத்தை விட வீட்டையடைய ஐந்து நிமிடம் தாமதமானது. அன்று முதல் பள்ளித் தோழிகளின் வீட்டிற்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டது.

நான் படித்தது அரசுப் பள்ளிக்கூடத்தில். அங்கு மாணவர்களெல்லாம் ரப்பர் தோட்டங்களில் வேலை செய்துவிட்டு தான் படிக்க வருவார்கள். நான் மட்டும் தான் டீச்சர் பொண்ணு. ஆதிக்க சாதியான  நாயர் வேறு. இயல்பிலேயே அவர்களுக்கு என்னுடன் சகஜ‌மாகப் பழகக்  கூச்சமுண்டு. இந்நிலையில் எனது வீட்டிற்கு அவர்கள் வர முடியாது, அவர்கள் வீட்டிற்கும் நான் செல்ல முடியாதென்பதால் எனது தோழிகள் வட்டமும் மூன்று, நான்கெனச் சுருங்கியது. ஆண் நண்பர்கள் பற்றிச் சொல்லவே வேண்டாம். ஐந்தாம் வகுப்பு வரை கூடவேயிருந்து படித்தவனெல்லாம், ஆறாம் வகுப்பானதும் என்னுடைய முகத்தில் விழிக்கவே மாட்டார்கள். இப்படி எனது உலகம் வீடு பள்ளிக்கூடமெனச் சுருங்கிக் கொண்டிருந்த போது, என் தம்பியின் உலகமோ கராத்தே வகுப்பு, தியேட்டர், கால்ப்பந்து, நகைச்சுவை என விரிந்துகொண்டே  போனது. எனக்கிருந்த ஒரேயொரு பொழுதுபோக்கு அப்பா வாங்கித்தரும் புத்தகங்களும், பத்திரிக்கைகளும்  தான்.

போதாக்குறைக்கு  இப்போதெல்லாம் வீட்டு வேலைகளைச் செய்ய வைப்பதில் அம்மா பாரிய வேறுபாடுகளைக் காட்டத் தொடங்கினார். வீட்டைச் சுத்தம் செய்வதும், பாத்திரம் விளக்குவதும் எனது கட்டாயப் பணியாக்கப்பட்டது. ஒரு நாள் உடம்பு முடியாமலிருந்தாலும் என் தட்டு நான் அதைக் கழுவும் வரை மேசை மேல் தீண்டப்படாமல்  கிடக்கும். ஆனால் தம்பியோ ஆண்பிள்ளை. எச்சிலைத் தொடக் கூடாது. துடைப்பத்தை எடுத்தால் அவனுக்கு மீசை முளைக்காதாம். எனவே வந்து சாப்பிடுவான். கீழே விழும் எச்சிலைக் கூட பெறுக்கிப் போட மாட்டான். தட்டை நானோ அம்மாவோ தான் கழுவுவோம். நாள்தோறும் இதையெல்லாம் பார்த்துக் கொண்டு சும்மாயிருக்க முடியவில்லை. எனது எதிர்ப்பும் கோப‌மும் வார்த்தைகளாக வெடித்தது. அந்த நாட்கள் என் வாழ்கையின் மிகவும் மோசமான நாட்கள். வீட்டில் அப்பா மட்டும் எனக்காகப் பேசுவார். ஆனால் அம்மா மட்டும் எனக்கு எதிரியானார். தம்பி பல நேரங்களில் இதனைப் புரிந்து கொண்டு நடந்தாலும் அவனிடம் முளைவிட்டிருந்த  ஆணாதிக்கம் எனக்கெதிராகவே இருந்தது. அவனை ஒரு சின்ன எறும்பு கடித்தாலும் நான் பொறுப்பேற்க வேண்டியதாயிற்று.

ஒரு நாள் இப்படிப்பட்டதொரு நிகழ்விற்கு அம்மா என்னைப்  பொறுப்பாக்கி ஒரு விறகுக்கட்டையை என் மீது வீசி, என்னைத் திட்டிக் கொண்டேயிருந்தார். அடியின் வலியை விட அவர்களின் குற்றச்சாட்டால் நான் மேலும் உடைந்து அழுதேன். பார்த்துக் கொண்டிருந்த அப்பாவால் தாங்க முடியவில்லை. அவர் என்னை அழைத்து கையில் சிக்கிய‌ சில்லறையைக்  கொடுத்து ‘நீ எங்காவது கடலில் விழுந்து செத்திடு. பொண்ணா பொறந்ததால தானே இப்படிப் பண்றா. இனி நீ வீட்டுக்கு வர வேண்டாம்’ என்று அழுதுகொண்டே சொன்னார். நான் தயங்கி நின்றேன். அவர்களுக்கிடையேயான  சண்டை மேலும் வலுத்தது. நான் அங்கு மேலும் நின்ற கொண்டிருந்தால் சண்டை அதிகமாகுமென்று நினைத்து வெளியே சென்றேன். சிறிது நேரத்தில் என் தம்பி பின்னால் ஓடி வந்து “எங்க போற? நானும் உன் கூட வர்றேன்” என்றான்.’அப்பா கொல்லங்கோட்டு கடலில் விழுந்து சாகச் சொன்னார். கொல்லங்கோடு  எங்கிருக்கென்று   தெரியாது’ என்றேன். எங்களுக்குத் தெரிந்த ஒரே வீடு அப்பாவைப் பெற்ற‌ பாட்டி வீடுதான். அவன் அங்கு செல்லலாம்  என்றான். இரண்டு பஸ் ஏறி பாட்டி வீட்டிற்கு முன் கையில் ஒரு ரூபாயுடன் இறங்கும்போது நேரம் இருட்டி விட்டது.

பாட்டி விஷயம் தெரியாமல் எங்களைத் தனியாக அனுப்பிய அப்பாவைத்  திட்டிக் கொண்டேயிருந்தார். வீட்டில் சித்தப்பாவும் இல்லாததால் பாட்டிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இப்பொழுது போல் தகவல் சொல்ல போன் இல்லாத காலம் அது. இரவு அண்ணனும் (பெரியம்மா பையன்) அவன் நண்பனும்  பைக்கில் வந்து எங்களை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். போகும் வழியில் ஒன்றும் பேசவேயில்லை. வீட்டிற்குப் போகும் முன்னரே சாலையெங்கும்  ஆட்கள். நிறைய வாகனங்கள் இருமருங்கிலும். ஊர் மக்களும் உறவினர்களும் வீட்டில் குழுமியிருந்தனர். உள்ளே அம்மாவும் உறவினர்களும் ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தனர். அப்பா வாசலில் நின்றபடி தலையில் கைவைத்துக் கொண்டிருந்தார். எங்களைப் பார்த்ததும் அம்மா ஓடி வந்து கட்டிப்பிடித்து முத்தமிட்டார். ‘அப்போ அம்மாவுக்கு என்னைப் பிடிக்கும். அவர்களுக்கு நான் வேண்டும்’ என்ற உண்மையே என் கண்ணிலிருந்து மலைமலையாகக் கண்ணீரை வரவழைத்தது. பிறகு தான் தெரிந்து கொண்டேன், நாங்கள் போனவுடன் அம்மாவும் அப்பாவும் சமாதானமாகி எங்களை உறவினர்களின் வீடுகளிலெல்லாம் தேடியும் எங்கும் காணாததால் ஊரிலுள்ள  கிணறு குளமெல்லாம் தேடியுள்ளனர்.

இச்சம்பவம்  நடக்கும் போது நான் ஆறாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். செய்தி பள்ளிக்கூடத்திற்கும் பரவியது. என் அம்மாவும் அங்கே ஆசிரியராக‌ இருந்ததால் நடந்ததை சக ஆசிரியையிடம் சொல்லிருப்பார்  போலும். எனது வகுப்பாசிரியை  என்னிடம் ‘நீ வீட்டில் சண்டை போடுகிறாயாம். அம்மா பேச்சைக் கேட்காமலிருக்கும் அளவுக்கு  உனக்கு என்ன பிரச்சனை’ என்றார். நான் வரிசையாக அடுக்க ஆரம்பித்தேன். ‘அவனுக்கு சைக்கிள்  வாங்கிக் கொடுத்தாங்க. எனக்கு சைக்கிள் ஓட்டவே கத்து தரல.  எனக்கு நீச்சல் சொல்லித் தரல. குளத்துல குளிக்கவும் விடறதில்ல. ஆனா அவன் மட்டும் தினமும் ஒரு மணி நேரம் குளத்தின் இக்கரையிலிருந்து அக்கரைக்கு நண்பர்களுடன் நீச்சல் போட்டி நடத்துகிறான். அவன் கேட்டான் என்பதாலே நூறு ரூபாய்க்கு கலர் மீனும், தொட்டியும் அதில் வைக்க மோட்டாரும் வாங்கிக் கொடுக்கின்றனர். நான் என்னவெல்லாம் கேட்டுருக்கேன், வாங்கித் தந்தாங்களா?. ஏன் அவன் சும்மா இருக்கும்போது என்னை மட்டும் வீட்டு வேலை செய்ய வைக்கிறார். அவன் தின்ற பாத்திரத்தைக் கூட என்னைக் கழுவச் சொல்றாங்களே!’ என அடுக்கிக்கொண்டே போனேன். டீச்சர் சொன்னார் ‘அவன் ஆண்பிள்ளை. நீ தான் அட்ஜஸ்ட் பண்ணிப் போக‌ணும்ய. வீட்டுக்கு வந்தபோது மீண்டும் ஆரம்பித்தது குற்றச்சாட்டு. இப்போது எனக்கு தம்பி மேல் பொறாமை என்று சித்தரிக்கப்பட்டது. இன்றைய‌ எனது முப்பது வயதிலும் கூட அம்மா அச்சம்பவத்தைச் சுட்டிக்காட்டி குறைபடுவதுண்டு, அதற்குப் பின்னால் இருந்த வலியை உணராமலேயே.

வளர்ந்தேன். பன்னிரெண்டாம் வகுப்பில் படிக்கும் போதெல்லாம் எனக்கும் அம்மாவுக்குமிடையே கடக்க முடியாத இடைவெளி உருவாகியிருந்தது. தம்பி அம்மா பக்கமும், அப்பா என் பக்கமுமாக வீடே இரண்டு பட்டது. அப்பா அம்மாவையும் என்னையும் சமாளிக்க முடியாமல் திணறினார். பிளஸ் டூ வில்  மதிப்பெண்கள் மிகக் குறைவாகவே  வந்தது. அந்நேரம் அப்பாவைத் தவிர பிற ஆண்களிடம் இனம்புரியாத வெறுப்பு ஏற்பட்டிருந்தது. நான் வீட்டிலிருந்தால் பிரச்சினை மேலும் பெரிதாகும் என்றெண்ணிய  அப்பா என்னை விடுதியுள்ள பெண்கள் கல்லூரியில் சேர்த்தார். எனக்கு ஒரு இடைவேளை  கிடைத்தது. எனக்கு மனம் விட்டுப் பேச தோழிகளிருந்தனர்.நூலகத்திலுள்ள எல்லா நாவல்களையும்  படித்தேன். அப்பா எனக்கு வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கி இருந்தது, நூற்களை  தேர்வு செய்ய வெகுவாகக் கைகொடுத்தது. கராத்தே கற்றுக் கொண்டேன். என் தோழிகளுடன் குடும்பரீதியான நட்பைப் பேண ஆரம்பித்தேன். இங்கு என்னைக் கட்டுப்படுத்த நான் மட்டுமே இருந்தது என் சமூகரீதியான வளர்ச்சியை மேலும் ஊக்குவித்தது.

முதுகலைக்கு பல்கலைக்கழகத்திற்கு வந்தேன். அங்கும் விடுதி. பல ஆண் நண்பர்களும் இருந்தனர். பள்ளி நாட்களில் என் பின்னே நடந்து வந்து, கிண்டலடித்து, கேலி பேசி ஆதிக்கம் செலுத்திய ஆண்களைப் போல இல்லாமல் இவர்கள் என்ன மரியாதையாக நடத்தினர் என்பதே ஆண்கள் மீதான என் வெறுப்பை மாற்றியது.

இக்காலகட்டங்களில் என் தோழிகள் என் வீட்டுக்கு  வந்து போயினர். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே எங்கள் சாதி தவிர்த்த அனைவருக்கும் எங்கள் உறவினர் வீடுகளிலெல்லாம் வாழையிலையில்  தான் உணவு பரிமாறுவார்கள். என் அம்மாவும் இதற்கு விதிவிலக்கல்ல. இதை அவர் என் தோழிகளிடமும் கடைபிடிப்பார். இதனால் பள்ளி நாட்களிலிருந்தே அம்மா வீட்டிலிருந்தால்  தோழிகளை வீட்டிற்கு அழைத்து வர மாட்டேன். கல்லூரிக் காலத்திலும் வாழையிலைக் கதை தொடர்ந்தபோது நான் அவர்களுக்கு அம்மா முன்னிலையிலேயே  பாத்திரத்தில் பரிமாறினேன். அம்மா பாத்திரங்களை அடுப்பில் போட்டு சுட்டார். மீண்டும் வீட்டுக்கு செல்லும் நாட்களெல்லாம் சண்டை. ஒரு முறை எம்.எஸ்.சி தோழிகள் வீட்டில் இரண்டு நாள் தங்கிச் சென்றனர். இம்முறை அப்பாவின் முயற்சியால் தட்டில் சோறு பரிமாறப்பட்டது. பிரச்சினைகள் தீர்ந்தது எனச் சந்தோஷப்பட்டிருந்த நேரம் ‘அவர்கள் என்ன சாதி’ என்று அம்மா என்னை விசாரித்தார். கோபத்தில் எனக்குக் கண் மண் தெரியவில்லை. ‘நான் ஒரு தலித்தைத் தான் கல்யாணம் செய்வேன். உங்க கையாலேயே அவருக்கு தட்டில் சோறு போட  வைப்பேன் அம்மா’ என்று அப்பாவின் தலையிலடித்து ஆணையிட்டேன். வீட்டில் பயங்கர ரகளை. அது வரைக்கும் எல்லாவற்றுக்கும் எனக்காக வாதாடும் அப்பா கூட ஆடிப் போய் விட்டார். அம்மாவைப் பற்றி சொல்லவே வேண்டாம். இது நடந்தது இரவு. காலை நான்கு மணி வரை தொடர்ந்த சண்டையால் நான் விடியற்காலையிலேயே பல்கலைக்கழகத்துக்குக் கிளம்பினேன். போகும் வழியெல்லாம் அம்மாவின் நிலப்பிரபுத்துவ பின்னணியும், அதனால் தான் அவர்கள் அப்படி நடக்கிறார்கள் என்றும் புரியவைக்க முயற்சி செய்தார் அப்பா. நான் சிறிதும் விட்டுக்கொடுக்க தயாராக இல்லை.

நாட்கள் வேகமாகச் சென்றது. அம்மாவும் அப்பாவும் நடந்ததை மறந்து என்னுடன் சகஜ‌மாயினர். இதற்கிடையே தோழர் ரகுபதியை ஓர் ஆர்ப்பாட்டத்தினூடே சந்தித்தேன். எங்களுக்கிடையே  கொள்கைரீதியான  நட்பு வளர்ந்தது. ஒரு கட்டத்தில் அவர் பேச்சிலிருந்தும் எனக்குப் படிக்கக் கொடுத்த புத்தகங்களிலிருந்தும் அவர் ஒடுக்கப்பட்ட ஏதோ ஒரு சாதியைச் சேர்ந்தவரென்பதைப் புரிந்து கொண்டேன். ஆனால் நான் கேட்கவில்லை, அவரும் சொல்லவில்லை. எம்.எஸ்.சி  முடித்து ஊருக்குப் போகும்போது, திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்தார்.
நான் சரியென்றேன். என்னுடைய வீட்டில் சொல்லிப் போராடி ரப்பர் பாண்ட் மாதிரி இழுக்க எனக்கு விருப்பமில்லையென்றேன். மறுநாளே அவர் அண்ணன் வீட்டில் வைத்து பதிவுத்திருமணம் செய்து கொண்டோம். திருமணத்தன்று காலையில் அவரது அண்ணன் அவரிடம் ‘நாம என்ன சாதின்னு அவளுக்குத் தெரியுமா’ என்றார். அவர் தெரியாதென்றதும், அவரிடமே சொல்லச் சொன்னார் அண்ணன்.’நான் இந்து பறையர் சாதி. உனக்கொன்றும் பிரச்சனையில்லையேய என்றார். ‘இதில் எனக்கென்ன பிரச்சனையிருக்கிறதுய என்றேன். தாலியில்லாமல், மாலையில்லாமல், அய்யர்  இல்லாமல் என‌து திருமணம் நடந்தது.

வீட்டில் அதுவரை நான் இப்படியெல்லாம் இருப்பேனென்று தெரியாததால், முதலில் அப்பாவும் அம்மாவும் அதிர்ச்சியடைந்தனர். முதலில் சுதாரித்தது அம்மாதான் என்று அப்பா பிறிதொரு முறை சொன்னார். தம்பியிடமும் அவர்களே பேசி, அடுத்த வாரத்திலேயே எங்களை நேரில் சந்தித்து வீட்டிற்கு அழைத்தனர். நெஞ்சில் வலியிருந்தாலும் கம்யூனிஸ்ட் என்பதாலேயே அவரை ஏற்றுக்கொண்டனர். திருமணம் முடியும் போது எங்களிருவருக்கும் வேலையில்லை. அவர் SFI ல்  முழுநேரமாக  இருந்தார். இருவருக்கும் வெறும் பிஜி  மட்டுமே இருந்தது. என் பெற்றோர் எனக்காகச் சேர்த்துவைத்த நகையையும் பணத்தையும்  கொடுத்து ‘மேலும் படியுங்கள். நீங்கள் இன்னும் வளர்ந்தால் தான்  உங்களை சமூகம் மதிக்கும்’ என்றனர். என் அப்பா கூடுதலாக  ‘நீ சமூக மாற்றத்திற்கு ஒரு முன்னுதாரணமாக  இருக்க வேண்டும். அதுக்கு உன் கல்வி மட்டும்தான் முதலீடு’ என்றார்.

நாங்களிருவரும் ஆராய்ச்சிக்குச் சேர்ந்தோம். அப்பா அம்மா செலவு செய்தனர். அவரின் குணத்தைப் பார்த்து அம்மாவும், என் உறவினர்களுமே அசந்து விட்டனர். நாங்கள் பார்த்திருந்தால் இப்படியொரு மாப்பிள்ளை கிடைத்திருக்காது என்று அடிக்கடி சொல்வார்கள். அவர் எல்லா வீட்டு வேலைகளையும் தயக்கமின்றி செய்வார். சமைப்பார். வீட்டை சுத்தம் செய்வார். எங்கள் எட்டு ஆண்டு திருமண வாழ்க்கையில் நான் அவரிடம் ஒரு துளியளவு கூட ஆணாதிக்கத்தை உணர்ந்ததில்லை. குழந்தையைக் கூட நான் ஆய்வேட்டை சமர்ப்பித்த பின்னரே பெற்றுக் கொண்டோம். ஊரிலுள்ள பெண்களெல்லாம் தன் கணவரைத் திட்ட அவரை உதாரண‌மாக்கிய போது, ஆண்களெல்லாம் என்னைத் திட்டிக் கொண்டிருந்தனர் – வீட்டு வேலையெல்லாம் ஒரு ஆணைக் கொண்டு செய்விப்பதற்காக. எங்கள் திருமணத்தின் காரணமாக SFI இல் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார். எங்கள் பொது வாழ்க்கையில் வளர்ச்சி ஏற்பட அது மேலும் உரம் சேர்த்தது. காலப்போக்கில் அவர் சிறந்த சமூக ஆய்வாளரானார். நானும்  இயற்பியலில்  முனைவர் பட்டத்தை முடித்து, முதுமுனைவர் ஆய்வுக்காக ஒரு ஆண்டாக மீண்டும் விடுதியில் தங்கியுள்ளேன். மகள் அம்மாவுடன் ஊரில் இருக்கிறாள். அவருக்கு அரசுக் கல்லூரியில் கடந்த‌ மாதம் வேலை கிடைத்தது. யாரிடமாவது மகிழ்ச்சியைப்  பகிர்ந்து கொள்ளலாமென்றால் உடனே கேள்விகளால் என்னைத் துளைத்தெடுக்கின்றனர். ‘நீ எப்போ அவர் கூட வாழப் போற. பெண்ணைக் கூட்டிட்டு வந்து ஒண்ணா இருக்கறத விட்டுட்டு நீ ஏன் படிக்கறேன்னு  இங்கே இருக்க’ என்பது போன்ற கேள்விகளினூடே  நான் குடும்பம் என்ற அமைப்பையே உடைத்தது போல‌ அங்கலாய்க்கின்றனர். கணவ‌ரோ ‘உனக்கு மூன்று வருட முதுமுனைவர் ஆய்வு மூப்பிருந்தால் தான் நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்ய என்கிறார். அம்மாவோ ‘நீ எதுனாலும் படி. நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்கிறார்.

இப்பொழுது எனது போராட்டக்களம் குடும்பத்திலிருந்து பொதுவெளிக்கு வந்துள்ளது. வட மாநிலங்களில் இரயில் பயணங்களின் போதும், இயற்கைச் சுற்றுலாத் தலங்களில் மலையேறப் போகும் போதும், விடுதியில் கடைநிலை ஊழியர்களை ஒடுக்கும் நிர்வாகியிட‌மும், பேருந்துகளில் பின்னாலிருந்து நோண்டும் மனநோயளிகளிடமும் எனப் பொதுவெளியை மற்ற எவரையும் போல் பயன்படுத்த எமக்கிருக்கும் உரிமைக்காகப் போராடுகிறேன். ஒவ்வொரு போராட்டமும் என்னை மீண்டும் மீண்டும் பெண்ணாக உணர வைக்கிறது.

_________________________________________________

ஆலங்கட்டி
__________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 

 

உழைக்கும் மகளிர் தின சிறப்பு பதிவுகள் 2010