Wednesday, June 18, 2025
முகப்பு பதிவு பக்கம் 780

தொழிலாளர்களை ஒடுக்கும் பாசிச மோடியின் வைப்ரன்ட் குஜராத்!

Ø  கூடுதலாக்கப்பட்டுள்ள கடுமையான வேலைப்பளு மற்றும், தொழிற்சாலையின் பணிச்சூழல் காரணமாக சமீப நாட்களில் பலர் முதுகு தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்டு சிரமப்பட்டு வருகின்றனர்.

Ø  சில வாரத்திற்கு முன்பாக ஆய்வு மேற்கொண்ட தொழிற்சாலை ஆய்வாளர் தனது ஆய்வின் போது 7 தொழிலாளா்கள் முதுகு தண்டுவட நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்து பதிவு செய்துள்ளார்.

Ø  பணிச்சுமையை கண்டித்து, கட்டாயப்படுத்திய பணி நேர நீடிப்பை கண்டித்து 30 நாட்களுக்கும் மேலாக தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Ø  சமரச நடவடிக்கை மேற்கொண்டு பிரச்சனையை முடிவிற்கு கொண்டு வாருங்கள் என அறிவுறுத்துவதற்கு பதிலாக “என்ன அங்கே நடக்கிறது என கடுமையோடு வினவும் மாநில முதல்வர்”

Ø  உடல்நலமில்லை, பணியில் சிரமம் இருக்கிறது என தெரிவித்த தொழிலாளர்கள் பலர் அந்த தொழிற்சாலையின் அடுத்தடுத்த மாநிலங்களில் உள்ள கிளைகளுக்கு அதிரடி ஊர் மாற்றம்.

Ø  நிர்வாகத்தின் சார்பில் மாநில முதல்வரை சந்தித்துவிட்டு வந்தபின் வேலைநிறுத்தம் செய்யும் பணியாளர்களில் 250 பேரை டிஸ்மிஸ் செய்யப் போகிறோம் என பத்திரிகைகளுக்கு அறிக்கை கொடுக்கும் நிர்வாகத்தின் துணைத் தலைவர்  பி.பாலேந்திரன்.

Ø  இவையெல்லாம் எங்கே என்று யோசிக்கிறீர்களா?  வருடத்தில் ஒரு நாள் கூட இம்மாநிலத்தில் தொழிலாளாளர்கள் அமைதியின்மை (labour unrest) என்பதை பார்க்க முடியாது என பெருமைப்பட்டுக் கொள்ளும் நம்ம மாண்புமிகு பாசிச நாயகனான மோடியின் குஜராத்தில்தான் !!

__________________________________________________________

குஜராத்: ஜி எம் தொழிலாளர்களை ஒடுக்கும் மோடியும் முதலாளிகளும்!குஜராத்தின் ஹலோல் எனுமிடத்தில் அமைந்துள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ஜெனரல் மோட்டார்ஸ் எனும் பன்னாட்டு நிறுவனம் அமைந்துள்ளது.  இதில் செவ்ரோலெட் உள்ளிட்ட பல நவீன கார்கள், இறக்குமதி செய்யப்பட்ட உதிரிகளை வைத்து தயார் செய்யப்படுகிறது.  இந்த தொழிற்சாலையில் கார்கள் தயாரிக்கும் பணியில் சுமார் 4000 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.  இந்த தொழிற்சாலையில் ஐஎன்டியுசி மற்றும் ஏஐடியுசி தொழிற்சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்டு வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டதன் விளைவாக டிசம்பரில் 3 வருடம் அமுலில் இருக்குமாறு பணிச்சுமை விபரங்களுடன் இணைந்த ஊதிய மாற்று ஒப்பந்தம் ஏற்பட்டது.

இருப்பினும் பணிச்சுமை மிகுதியின் காரணமாக, கட்டாயப்படுத்தி தொடர்ச்சியாக கூடுதல் நேரம் பணிபார்க்க கட்டாயப்படுத்தலின் காரணமாக பலர் தீராத முதுகு வலி மற்றும் முதுகு தண்டுவடத்தில் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர் என்று தெரிவிக்கிறார் மஹிர் தேசாய், பொதுச் செயலாளா், குஜராத் காம்டர் மண்டல் எனும் ஐஎன்டியுசி சார்பு தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்.

குஜராத்தின் தொழிலாளர் விரோத நடவடிக்கையின் விளைவுகளை 2010-11- ம் ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கையிலிருந்து தெரிந்து கொள்ளலாம். மேற்படி ஆண்டில் அதிகமான தொழிற்சாலை கதவடைப்புகள் நடந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது.

ஹலோல் ஆலைப்பிரிவில் சுமார் 900 பணியாளர்கள் வருடத்திற்கு 85,000 கார்களை உற்பத்தி செய்து வருகின்றனர்.  கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வரும் வேலைநிறுத்தத்தினால் சுமார் 1500 கார்கள் உற்பத்தி என்பது பாதிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 21-ம் தேதி பெரும்பான்மையான தொழிலாளர்களின் ஆதரவோடு “தர்ணா”ப்போராக தொடங்கியது, தொடர்ந்து வேலை நிறுத்தமாக மாறியது. வேலை நிறுத்தம் சட்ட விரோதமானது என நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.  ஒரு புறம் சட்ட விரோத வேலைநிறுத்தம் என்று வைத்துக் கொண்டாலும் அதிகமான அளவில் தொழிலாளர்கள் பங்கு பெறும் போது மாநிலத்தின் தொழிலாளர் துறை தலையிட்டு சமரச முயற்சிக்கான நடவடிக்கையை தொடங்க வேண்டும்.  ஆனால் அது போன்ற முயற்சி எதுவும் துவக்கப்படவில்லை.

ஐஎன்டியுசி சங்கத்தின் தலைவர்  நிஹின் மித்ரா தெரிவிக்கையில்  தொழிலாளர்களின் பணிச்சுமை என்பது ஒவ்வொருவருக்கும் சுமார் 30 சதவீதம் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.  அதனால் பலர் உடல் நல பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.  உடல் நலமில்லை என புகார் தெரிவிப்பவர்களில் பலா் இந்த ஆலையின் விற்பனை பிரிவுகளான டில்லி, குர்கான், சென்னை மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.  மறுபுறம் 4 தொழிலாளா்கள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை தலையிட்டு தனது அடக்குமுறையை உபயோகித்து பல தொழிலாளர்களை வெளியேற்றியுள்ளது.  இது போன்ற வேலை நிறுத்தங்களுக்கான தொழிலாளர்களின் ஆதரவு பெருகும் சூழல் ஏற்பட்டால் அருகிலுள்ள மற்ற பன்னாட்டு நிறுவனங்களிலிருந்து தொழிலாளர்களை வரவழைத்து பணியிலிருக்கும் தொழிலாளர்களின் பணி பறிபோய்விடும் என மிரட்டும் போக்கை கடைப்பிடிப்பது இங்கு சிறப்பு பொருளாதார மண்டலங்களில் வழக்கமாக உள்ள ஒன்று என்கின்றனர் இங்கு வேலை நிறுத்தத்தில் இருக்கும் தொழிலாளர்கள்.

அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு வழங்கும் சம்பளத்தில் பத்தில் ஒரு பகுதி கொடுத்தாலே இந்தியாவில் தொழிலாளர்கள் கிடைக்கிறார்கள் என்பதால்தான் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்கு தொழில் துவங்க வருகின்றனர்.

இந்த வேலை நிறுத்தம் தொடர்பாக மனித உரிமை ஆணையத்திற்கு இதன் தொழிலாளர்களால் புகார் அனுப்பப்பட்டு தொழிலாளர் நலன் காக்கும் பணி இவரது பணியில் ஒரு பகுதி என்று கருதக் கூடிய மாவட்ட ஆட்சித்தலைவரை இது குறித்து விசாரித்து அறிக்கை சமா்ப்பிக்க மனித உரிமை ஆணையம் உத்திரவிட்டுள்ளது.

ரூ 7000 மட்டுமே சம்பளமாக பெறும் தொழிலாளியை மாநிலம் விட்டு மாநிலம் மாற்றினால் எவ்வாறு அவரது குடும்பத்தை பராமரிக்க இயலும் என்கின்றனர் இங்குள்ள தொழிற்சங்க தலைவர்கள். இந்த நிறுவனத்தின் உதவி தலைவர் பி. பாலேந்திரன் தெரிவிக்கையில் கடந்த ஊதிய ஒப்பந்தத்திற்கு பிறகு தொழிலாளர்கள் நல்ல முறையில் சம்பளம் பெற்று வருகின்றனர்.  இவர்களது வேலை நிறுத்தம் என்பது தேவையற்றது.  இந்த வேலை நிறுத்தத்தை ஆய்வு செய்த அரசு அதிகாரிகள் இது சட்ட விரோத வேலை நிறுத்தம் என அறிவித்துள்ளனர்.  எனவே தொழிலாளர்கள் உடனடியாக வேலை நீக்கத்தை கைவிட்டு வேலைக்கு திரும்ப வேண்டும் என எச்சரிக்கிறார்.

இதன் நடுவில் பி.பாலேந்திரன் மாநில முதல்வர் நரேந்திர மோடியை சந்தித்தது குறித்து கேட்ட போது சட்ட விரோத வேலை நிறுத்தம் தொடர்ந்து வருவதால் உற்பத்தி பாதிக்கப் பட்டுள்ளது எனவே 250 பணியாளர்களை நிரந்தர பணி நீக்கம் செய்யப் போகிறோம் என அனுமதி கேட்கப்பட்டது என்ற செய்தியை மறுக்கவில்லை.

மற்றொரு புறம் இந்த ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடையுத்திரவு பிறப்பிக்கப்பட்டு 4 பேர்கள் சேர்ந்து நின்றால் கூட காவல் துறையினரால் விரட்டியடிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.  இது மோசமான தொழிலாளர் விரோத நடவடிக்கை என்கின்றனர் தொழிலாளர்கள்.

தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தினால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் இதன் தயாரிப்பு பணிகளை தற்காலிகமாக, மாநிலத்தின் எல்லைக்கருகிலும் மகாராஷ்டிரா மாநிலத்திலுமாக அமைந்துள்ள தலேகான் தொழிற்சாலைக்கு நிர்வாகம் மாற்றியுள்ளது.

இணைய தளங்களில் வெளியான இந்த வேலை நிறுத்தம் பற்றிய செய்திகள், மற்றும் வட மாநில ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் முதற்கட்டமாக இந்த அளவிற்கு மட்டுமே விவரங்கள் நமக்கு தெரிய வந்துள்ளது.

உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் விளைவுகளினால் இந்தியாவில் தாராளமாக திறந்துவிடப்பட்டுள்ள “சிறப்பு பொருளாதார மண்டலங்களின்” கீழ் வரும் பன்னாட்டு நிறுவனங்களில் தொழிலாளர்களை கையாள்வது, அவர்களின் கோரிக்கைகளை கவனிக்காமல் விடுவது, மிரட்டுவது, ஊர்மாற்றம் செய்வது, வேலைநீக்கம் செய்வது, என்பது போன்ற தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் என்பது மிகுதியாகவே இருந்து வருகிறது.  கையாலாகாத தொழிலாளர் துறை என்பது தலையிடுவதோ, தனது குறைந்த பட்ச அதிகாரத்தைப் பயன்படுத்துவதோ சுத்தமாக இல்லை என்பதே எதார்த்தம்.

“தொழில்துறையில் புரட்சி, வளர்ச்சியில் மின்னும் எங்கள் தேசத்தை பாருங்கள்” என்கிற மோடியின் குஜராத் மட்டும் இதற்கு விதிவிலக்கல்ல.  ஓட்டுக்கட்சி சங்க தலைமைகளை புறந்தள்ளி தொழிலாளர்கள் ஒரு வர்க்கமாகவும் புரட்சிகர அரசியலின் கீழ் ஒன்றிணைந்து போராட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதே இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க உதவிகரமாக இருக்கும்.

முதலாளிகளுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து தாலாட்டும் மோடியின் குஜராத், தொழிலாளிகளின் உரிமையை எப்படி காலில் போட்டு மிதிக்கிறது என்பதற்கு இந்த செய்தியே போதுமானது. பாசிச மோடியின் இரசிகர்கள் என்ன சொல்வார்கள்?

________________________________________________

–  சித்ரகுப்தன்
________________________________________________

­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

கப் பஞ்சாயத்து, கவுரவக் கொலை காட்டுமிராண்டிகள்!

கப் பஞ்சாயத்து - வெறிபிடித்தவர்களின் சாதிமன்றம்
கப் பஞ்சாயத்து - வெறிபிடித்தவர்களின் சாதிமன்றம்
சாதி வெறிபிடித்த கப் பஞ்சாயத்தால் கொல்லப்பட்ட மனோஜ்-பப்லி
சாதி வெறிபிடித்த கப் பஞ்சாயத்தால் கொல்லப்பட்ட மனோஜ்-பப்லி

ப் சாதி பஞ்சாயத்து தீர்ப்பினால் கொலை செய்யப்பட்ட மனோஜ் மற்றும் பப்லியை யாரும் மறந்திருக்கமுடியாது. அரியானா மாநிலத்தின் கரோரா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மனோஜ் மற்றும் பப்லி. இருவரும் ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். காதலித்து திருமணம் புரிந்து கொள்ளவும் முடிவெடுத்தனர். குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி இருவரும் 2007-ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர்.

அவர்கள் திருமணம் தொடர்பாகக், கூடிய கப் பஞ்சாயத்து மனோஜ் மற்றும் பப்லியின் திருமணம் செல்லாது என்றும் அவர்கள் பிரிய வேண்டும் என்று தீர்ப்பு அளித்தது. நேரடியாக இருவருக்கும் உறவுமுறை இல்லாவிட்டாலும், ஒரே கோத்திரத்தில்  பிறந்த இருவரும் சகோதர உறவு என்பதுதான் காரணம்..

போலீசை அணுகிய பப்லி மற்றும் மனோஜ், கோர்ட்டுக்குச் சென்று திரும்பும் வழியில், கடத்தப்பட்டு மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர். சில நாட்கள் கழித்து இருவரின் பிணங்களும் ஒரு கால்வாயில் கண்டெடுக்கப்பட்டது. மனோஜின் தாய் சந்தரபதி கொடுத்த புகாரினால் பப்லியின் உறவினர்கள் நான்கு பேர் மீதும், கப் பஞ்சாயத்து தலைவர் கங்காராஜ் மற்றும் டிரைவர் மீதும் வழக்குத் தொடரப்பட்டு விசாரணை நடந்தது. அதோடு இவ்விவகாரம் பெரும் விவாதத்தையும் கிளப்பியது.

இக்குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று அரசு தரப்பு வக்கீல் கேட்டுக்கொண்டார். கடந்த 2010, மார்ச் மாதம் இந்த வழக்குக்கு தீர்ப்பும் அளிக்கப்பட்டது. அதனை வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு என்று சில வக்கீல்கள் கருத்து தெரிவித்தனர்.

அந்த தீர்ப்பு இதுதான், கொலை செய்த குடும்ப உறுப்பினர்களுக்கு மரண தண்டனையும் கொலைக்குக் காரணமான கங்காராஜுக்கு ஆயுள் தண்டனையும் கடத்திச்சென்ற டிரைவருக்கு ஏழு ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதிக்கப்பட்டது. அதோடு அசட்டையாக செயல்பட்ட்ட போலிசார் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு, சாதிப்பிடியில் சிக்கியுள்ள  இந்திய நீதிமன்றங்களின் வரலாற்றிற்கு சற்றும் மாறாமல் தற்போது திருத்தி எழுதப்பட்டுள்ளது.

பஞ்சாப் மற்றும் அரியாணா உயர்நீதி மன்றம் கடந்த 2011 மார்ச் மாதம் கொலைக்குற்றவாளிகள்  நான்கு பேருக்கு மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியளித்ததோடு, முக்கிய குற்றவாளியான கங்காராஜையும் சதீசையும் விடுதலையும் செய்திருக்கிறது.

இந்த செய்தி, மனோஜின் தாய் சந்தரபதிக்கு மிகுந்த மனவேதனையையும் அதிர்ச்சியையும் தந்திருப்பதாகக் கூறூகிறார், சந்தரபதியின் ஆதரவாளர் ஒருவர். என்ஜிஓ-கள்  மற்றும் ஊடகங்களின் தகவல்கள்படி, ஒரே கோத்திரத்தில் மணம் புரிந்ததற்காக மட்டும், கப் பஞ்சாயத்துகள்  ஒரு வாரத்துக்கு நான்கு பேரை கொலை செய்கின்றன. தாலிபான்களின் ஆதிக்கத்தை முற்றிலுமாக அழிக்க  இந்தியா முழு ஒத்துழைப்பு நல்கும் என்று  எங்கெங்கோ சென்று முழங்கி வருகிறார்  மன்மோகன்.

ஆனால் பாராளுமன்றத்துக்கு சற்று அருகிலேயே இந்த கப் பஞ்சாயத்து கொலைகள் சர்வ சாதாரணமாக நடக்கின்றன!

கப் பஞ்சாயத்து - வெறிபிடித்தவர்களின் சாதிமன்றம்
கப் பஞ்சாயத்து – வெறி பிடித்தவர்களின் சாதிமன்றம்

ஒவ்வொரு சாதிக்கும் இங்கு சங்கம் இருப்பதுபோல அங்கு பஞ்சாயத்துகள் இருக்கின்றன. அதனை கப் பஞ்சாயத்து என்றும் கூறலாம். அல்லது கட்டப்பஞ்சாயத்து என்றும் கூறலாம். அந்த பஞ்சாயத்துத் தலைவர்கள் வைத்ததுதான் சட்டம். இந்திய சட்டங்கள் எதுவும் அங்கு செல்லுபடியாவதில்லை. சொல்லப்போனால், இந்திய சட்டத்தையே ‘திருத்தி’ எழுத முயன்று கொண்டிருக்கின்றன, இந்த சாதி சங்கங்கள்.

பல்வேறு கோத்திரங்களின் கப் சங்கங்கள் சேர்ந்து சர்வ கப் பஞ்சாயத்தை அமைத்திருக்கின்றன. இந்தியாவில் கப் பஞ்சாயத்துகள் கி.பி 600-ஆம் ஆண்டிலிருந்தே இயங்கிக்கொண்டிருப்பதாக வரலாறு கூறுகிறது.  ஆரம்பத்தில் ஒவ்வொரு  கப் பிரிவினரையும் பாதுகாக்க தனித்தனி பஞ்சாயத்துகள் இருந்திருக்கலாம். ஒவ்வொரு கப்பும், பொதுவாக 84 கிராமங்களை உள்ளடக்கியது.

அந்த கிராமங்களிலிருப்பவர்கள் ஒரே சாதியின் உட்பிரிவினராக இருப்பார்கள். இது போன்ற 300 உட்பிரிவு கப் பஞ்சாயத்தினரை உள்ளடக்கியது சர்வ கப் பஞ்சாயத்து.  அரியானா, பஞ்சாப்,  உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த கிராமங்கள், தோராயமாக 25,000 கிராமங்கள் இந்த சர்ச கப் பஞ்சாயத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. தனித்தியங்கும் வல்லமை பெற்ற இந்த கப் பஞ்சாயத்துகள் திக்தத் எனப்படும் ஆணைகளை பிறப்பிக்கும்.

கொலை செய்வதற்கான ஆணைகள், கற்பழிப்புகள், ஆட்கடத்தல்கள் மற்றும் சொத்து தொடர்பான பிரச்சினைகள் முதலியன அதில் அடங்கும்.  பெரும்பாலும் குடும்பத்தின் கவுரவம் மற்றும் சாதிப்பெருமையே இதற்கான காரணங்களாக அமையும். இதற்கு அதிகம் இலக்காவது பெண்களே.

அரியானாவில்தான் பெண்சிசுக் கொலை மிகவும் அதிகம் என்பதை இங்கு நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டும். பழைமையில் ஊறிப்போன இந்த கப் பஞ்சாயத்துத் தலைவர்கள் வைப்பதே சட்டம். உள்ளூர் சட்டமும், போலீசும் இதற்கு அடிபணிவதே வாடிக்கை.

மேலும், போலிசும், கப் பஞ்சாயத்தினரை சேர்ந்தவர்களாகவே இருப்பதால் அவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுப்பதில்லை. இப்படி, ஒரே உட்பிரிவைச் சேர்ந்தவர்கள்தான் மனோஜூம் பப்லியும். ஒரே கோத்திரத்தில் பிறந்துவிட்டால் அவர்கள் சகோதர உறவுமுறையினர் என்பதால் அவர்களை கொலைச் செய்ய உத்தரவிடுகிறார் கப் பஞ்சாயத்துத் தலைவர் கங்காராஜ்.

பப்லியின் குடும்பத்தினரும் பப்லிக்கு விசம் கொடுத்தும் மனோஜை அடித்தும் கொடூரமாகக் கொலை செய்கின்றனர். இது வெளிச்சத்துக்கு  வந்த ஒருசில கவுரவக்கொலைகளில் முக்கியமானதொன்று.

இன்னும் வெளியே சொல்லப்படாத எண்ணற்ற கொலைகள் மவுனமான முறையில் நடந்தபடி இருக்கின்றன. பெரும்பாலும் அவை பெற்றோராலும் குடும்பத்தினராலுமே நடத்தப்படுகின்றன. மேலும், அக்கொலைகள் மூடி மறைக்கப்படுகின்றன. கொலையுண்டவர்களின் பிரேதங்கள் வீட்டுக்கு முன்பாக மரங்களில் தொங்க வைக்கப்படும்.

காதலர்களுக்கு மரண பயத்தை கிளப்பும்படியும், இளந்தலைமுறைக்கு படிப்பினையாகவும், தங்கள் பிள்ளைகளை கொலை செய்த குடும்பத்தினரை, ’தீயனவற்றை அழித்த  வீரர்களாக’ போற்றப்படும் கொடுமையும் நடக்கும்.

ஒரே கோத்திரத்தில் மணம் புரிந்த  தங்கள் பிள்ளைகளை யாருக்கும் தெரியாமல் கொலை செய்துவிடுவது கப் பஞ்சாயத்துக்கு காட்டும் விசுவாசமென்றும் கூறுகிறார் கப் பஞ்சாயத்தைச் சேர்ந்த ஒருவர். இதிலிருந்தே கப் பஞ்சாயத்துகளைப் பற்றி கற்பனைச் செய்து கொள்ளலாம். ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்வது தவறு, அந்த தவறுக்கு மரண தண்டனையே சரியென்று கிராமத்தினர் நினைக்கின்றனர்.

கொலை செய்யத்தூண்டும் கப் பஞ்சாயத்தினரோ கொலை செய்பவர்களோ கிராமத்தினருக்கு ஒரு போதும் கொலையாளிகளாகவோ வில்லன்களாகவோ தோன்றியதில்லை.

இப்படித்தான் மனோஜ் மற்றும் பப்லியின் கொலையும் கவுரவமாக எண்ணப்பட்டது. சகோத உறவினர் மணம் செய்து கொள்ள முடியாது. சட்டமும் நீதிமன்றமும் அதனைப் புரிந்து கொள்வதில்லை. பெண்ணின் உறவினர்களுக்கு மரண தண்டனை கொடுப்பதால் என்ன பயன்?

அந்த திருமணம் மிகவும் தவறானது, நீதிமன்றத்தின் தீர்ப்பும் தவறானது என்ற எண்ணமே கிராமத்தினருக்கு இருந்தது. சாட்சி சொல்லவும் யாரும் வரவில்லை. மீடியாக்களின் பிரச்சினைகளுக்குப் பிறகே போலீசு சந்தரபதியின் வழக்கை பதிவு செய்தது. மனோஜின் உறவினர்கள் கைது செய்யப்பட்டபோது  தீர்ப்பினால் குற்றவாளிகளின் குடும்பங்கள் பாதிக்கப்படுமென்று உள்ளூர் செய்திதாள்கள் எழுதின. ஆனால் மனோஜின் குடும்பம் பாதிக்கப்பட்டதை மறந்துவிட்டன,போலும்!

கிராமத்தினருக்கு வயல்வெளிகளைத் தாண்டி வெளி உலகம் சற்றும் பரிச்சயம் இல்லை. இந்த கப் பஞ்சாயத்து இந்துக்கள் பெரும்பாலானோர் சிறு விவசாயிகள். வளர்ந்துவரும்(!) இந்தியப் பொருளாதாரத்தால் கைவிடப்பட்டு வஞ்சிக்கப்பட்டவர்கள். இன்றைய நிலையில் விவசாயம் இவர்களுக்கு பெரும் பலனை தராத பொய்த்துப்போன தொழில்.

சாதிப்பெருமையும் ஆதிக்கசாதி திமிரினாலும் வேறு தொழில்களை மேற்கொள்ளவும் மறுக்கிறார்கள். ஒருவேளை அவர்கள் அப்படி மீறினாலும் பிழைப்பதற்கு வேறு தொழில் எதுவும் இல்லை. தனியார்மயம், தாராளமயம் மற்றும் உலகமயமாக்கத்தின் மூலம் இவர்களது வாழ்க்கைநிலை மேலும் கவலைக்குரியதாக தள்ளப்பட்டிருக்கிறது.

கப் பஞ்சாயத்தினர் சொல்வதே வேதவாக்கு. மேலும், இந்த குடும்ப கவுரவத்தை காப்பதற்கு பெண்னே முக்கியமான கருவி. இந்த மனோபாவத்திற்கு மட்டும் படித்தவர் படிக்காதவர் என்ற வேறுபாடு இல்லை. பெண் உயர்ந்த சாதியாகவும், ஆண் தாழ்ந்த சாதியாகவும் இருந்துவிட்டால் தண்டனைகள் காட்டுமிராண்டித்தனத்தை மிஞ்சி விடும். பார்ப்பன இந்து மதவெறிக்கு பலியாவது காதலர்கள்தான்.

சென்ற வருடத்தில், கவுரவத்திற்காக ஒரு பெண் பத்திரிக்கையாளர் தனது குடும்பத்தாலே கொலை செய்யப்பட்டதை அறிந்திருப்பீர்கள். இத்தனைக்கும் அந்தப்பெண்ணின் குடும்பத்தினர் அனைவரும் உயர் படிப்பு படித்தவர்கள், பார்ப்பன சாதியைச் சேர்ந்தவர்கள். பெரிய பதவிகளில் இருப்பவர்கள். அந்தப் பத்திரிக்கையாளர் தாழ்ந்த சாதி ஆணை காதலித்ததே அவர் கொலை செய்யப்பட்டதற்கான காரணம்.

படித்த படிப்பும், பதவியும் சாதியத்தை அவர்களது மனங்களிலிருந்து மாற்றிவிட்டதா என்ன?

இந்த சாதி மனோபாவம் நீதிமன்றங்களையும் விட்டுவைக்கவில்லை என்பதற்கு மனோஜ் பப்லி வழக்கின் தீர்ப்பும் ஒரு சான்று. இந்த தீர்ப்பு பல கங்காராஜுகளுக்கு சட்டப்பூர்வமாக கொலை செய்யும் அங்கீகாரத்தை வழங்கியிருக்கும் தீர்ப்பு.

கவுரவக்கொலைகள் போன்ற குற்றங்களுக்கு எப்படிப்பட்ட தண்டனையை வழங்கியிருக்கவேண்டும்? மாறாக, முன்னேறிய சமூகத்தில் இதற்கெல்லாம் இடமில்லை என்பதாக எப்படி உரத்துச் சொல்லியிருக்க வேண்டும்? மாறாக, சென்ற வருடத்தின் தீர்ப்பு ஏற்படுத்திய நம்பிக்கைகளை முற்றாக குலைத்து போட்டிருக்கிறது தற்போது உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு.

எத்தனையோ ஆபத்துகளுக்கு மத்தியில் உயிரை பணயம் வைத்து சாதி ஆதிக்கத்தை எதிர்த்து நின்றிருக்கிறார்கள். சொல்லப்போனால், சந்தரபதிதான் அரியாணா மாநிலத்தில் முதன்முதலாக கவுரவக் கொலைகளை எதிர்த்து வழக்குத் தொடுத்தவர். இந்நிலையில் கப் பஞ்சாயத்து தலைவர் கங்காராஜின் விடுதலையானது எத்தனைபேரின் நம்பிக்கையை குலைத்து போட்டிருக்கிறது!

சொல்லப்போனால், சந்திரபதியின் வாழ்க்கை தற்போது பேராபத்தில் இருக்கிறது. விடுதலை செய்யப்பட்ட கொண்டாட்டத்தில் இருக்கும் கங்காராஜ் இன்னும் எத்தனை கவுரவக்கொலைகளை சட்டத்தைப் பற்றி சற்றும் பயமின்றி, தைரியமாகச் செய்யப்போகிறானோ? இனி பாதிக்கப்பட்ட பெண்கள், சாதிவெறியும், ஆணாதிக்கமும் நிறைந்த கப் பஞ்சாயத்து அநீதியை எதிர்த்து நிற்பார்களா?

அல்லது  நீதிமன்றத்தையோ போலீசையோதான் நாடிவர  தைரியம் கொள்வார்களா?

கங்காராஜுக்கு ஒரு அரசியல் பின்புலம் இருப்பதும் இன்னொரு காரணம்.  இங்கு இருக்கும் வாக்கு வங்கி காரணமாக எந்த அரசியல்வாதிகளும் கப் பஞ்சாயத்தினரை பகைத்துக் கொள்ள விரும்புவதில்லை. சாதி இந்துக்களுக்காக சட்டத்தை வளைக்கவும் அவர்கள் தயாராகவே இருக்கிறார்கள்.

தேர்தலின்போது எந்த வேட்பாளரை ஆதரிக்கவேண்டுமென்று கப் பஞ்சாயத்தினர் கூறுகிறார்களோ அவர்களுக்கே மொத்த சமூகமும் வாக்களிக்கிறது. சில அரசியல்வாதிகள் வெளிப்படையாகவே கப் பஞ்சாயத்துகளை ஆதரிப்பதாக சொல்கின்றனர். தங்கள் ஓட்டு வங்கியை இழக்க விரும்பாத அரசியல்வாதிகள் கப் பஞ்சாயத்தை ஆதரிப்பதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. இதில் சித்தாந்த ரீதியாக பா.ஜ,க இந்த கப் பஞ்சாயத்து காட்டுமிராண்டித்தனத்திற்கு நெருக்கமாக இருக்கிறது.

இன்று கங்காராஜையும் கொலையாளிகளையும் விடுவிக்க முடியுமெனில், கப் பஞ்சாயத்தினருக்கு எதிரான சட்டங்களோ மசோதாக்களோ இன்னமும் எந்த வடிவத்துக்கும் வரவில்லையென்றுதானே பொருள்?

சட்ட அமைச்சரும்,மாவோயிஸ்டுகளால் பல பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள் என்று நயவஞ்சகமாகக் கதறும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் கப் பஞ்சாயத்துக்கு கொலைகளுக்கெதிராக நடவடிக்கை எடுப்பார்களா? அல்லது அன்னா ஹசாரேதான் கவுரவக் கொலைகளுக்கு எதிராக கப் பஞ்சாயத்தினருக்கு எதிராக உண்ணாவிரதம் இருப்பாரா? மாறாக, சாதி இந்துக்களின் கோரிக்கைக்கு அல்லவா அதிகார வர்க்கம் மறைமுகமாக செவிசாய்க்கிறது?

அரியாணாவின் முதலமைச்சரும் இவ்விவகாரத்தில் தலையிட மறுத்துவிட்டார். ”கவுரவக்கொலைகள் சமூகப்பிரச்சினை, இதைப்பற்றிய எந்த முடிவை எடுக்கவும் சமூகத்திற்கு உரிமை இருக்கிறது” என்று முடித்துக்கொண்டார். எந்த அரசியல் கட்சியும் கவுரவக்கொலைகளை பற்றி பேசக்கூட தயாராக இல்லை. காங்கிரஸ் எம்.பி நவீன் ஜிந்தால் வெளிப்படையாகவே கப் பஞ்சாயத்தினருக்கு தனது ஆதரவை வழங்கியிருக்கிறார்.

இந்த தைரியத்தில்தான், கப் பஞ்சாயத்தினர் இந்திய திருமண சட்டத்தில் ஒரே கோத்திரத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்துக்கொள்வதை சட்டரீதியாகவும் தடுக்கும்படி திருத்தங்கள் கொண்டுவர கூறுகிறார்கள். தங்களிடம் ஓட்டு கேட்க வரும் வேட்பாளர்களிடமும் அதையே வலியுறுத்துகிறார்கள்.இப்போது புரிந்திருக்குமே, கங்காராஜின் தண்டனை ரத்து செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருக்கும் ரகசியம்!

இந்த பின்னணியில்தான், கொலையாளிகள் நான்குபேரின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு ஆயுள் தண்டனையாக மாறியிருக்கிறது. முக்கிய குற்றவாளியும் விடுதலை செய்யப்படுகிறார். இந்தத் தீர்ப்பு, சாதிக்கு நீதிமன்றங்களும் விதிவிலக்கல்ல என்பதைத்தான் காட்டுகிறது!

இந்தியா அதாகி விட்டது இதாகி விட்டது என்றும் சொல்லப்படுவதை தாண்டி, சற்று நிதானமாக உரித்து பார்த்தால் காணக்கிடைப்பது இதுதான் – பார்ப்பனிய சாதியமைப்பும், அதைப் பாதுகாக்கின்ற அரசு, அரசியல், நீதிமன்றங்களும்தான் இந்த வட இந்தியக் காட்டுமிராண்டித்தனத்தின் பாதுகாலவர்கள். சொந்த நாட்டு காதலர்களைக்கூட காப்பாற்ற வக்கில்லாத இந்த நாடுதான் 2020இல் வல்லரசாகப் போகிறதாம்!

__________________________________________

– சந்தனமுல்லை
__________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

கட்சியாவது வெங்காயமாவது….

7

கட்சியாவது வெங்காயமாவது…. கீழ்வேளூரில் போட்டியிடும் தி.மு.க அமைச்சர் மதிவாணனிடம் நக்கீரன் நிருபர் செல்வகுமார் கேட்கிறார்,” நிலைமை எப்படி இருக்குண்ணே?”.

அதற்கு அந்த அமைச்சர்,”நல்லாவே இருக்கு. ஆனா நாம் தமிழர் இயக்கத்து தம்பிகள்….எனக்கு எதிராக் களமிறங்கி கேன்வாஸ் பண்ணிக்கிட்டு இருக்காங்க. அவங்க தலைவர் சீமான், தி.மு.கவை எதிர்த்து வேலை செய்யச் சொல்லவில்லை. காங்கிரஸ் மட்டும்தான் அவங்க குறி. இங்க மட்டும் எனக்கு எதிரா ஏன்?” என்று வருத்தப்பட்டாராம்.

உடனே நக்கீரன் நிருபர் நாம் தமிழர் மாநில பொறுப்பாளர்களில் ஒருவரான தஞ்சை வழக்கறிஞர் நல்லதுரையிடம் இது குறித்து விசாரிக்க அவர் அதிர்ச்சியானாராம். அதன்படி,”தி.மு.கவுக்கு எதிராக பிரச்சாரம் பண்ணும்படி எங்க தலைமை உத்தரவிடவில்லை. இதை மீறி பிரச்சாரம் செய்த இயக்கத்தவர் யார்னு விசாரித்து நடவடிக்கை எடுப்போம். நாங்க கட்டுப்பாடான இயக்கம்” என்றாராம்.

நல்லா கவனிங்க, இந்த மதிவாணன் ஒரு சாதாரண தி.மு.க தலைவரோ, இல்லை வெறும் எம்.எல்.ஏவோ இல்லை. அவர் அமைச்சர். கூட்டணி தர்மத்தின்படி அவர் சீமான் கட்சியை கடுமையாக எதிர்த்து பேசியிருக்க வேண்டும். ஆனால் அவரோ அதற்கு மாறாக “காங்கிரசைத்தானே தோக்கடிக்கணும்னு சொன்னீங்க, பின்ன ஏன் என்னை எதிர்க்கிறீங்க”ன்னு பாசத்தோடு அந்த தம்பிகள் குறித்து வருத்தப்பட்டால் என்ன பொருள்?

இவ்வளவிற்கும் சீமான் சில இடங்களில் கருணாநிதி ஆட்சியையும் விமரிசித்திருக்கிறார். அது கொஞ்சமா, கூடுதலா என்பது பிரச்சினையல்ல. இல்லை கருணாநிதி கூட தம்பி சீமான் தன்னை எதிர்க்காதற்கு நன்றி என்றா சொன்னார்? இவ்வளவிற்கும் இந்த சீமானை உள்ளே போட்டு ஐந்து மாதங்கள் அடைத்தவரே அவர்தானே? எதன் பொருட்டு இந்த கைது? எல்லாம் காங்கிரசு பெருச்சாளிகளை குளிர்விக்கத்தானே? அது போல இந்த கைதுக்காக சீமானும் கருணாநிதி மீது கோபம் கொள்ளவில்லையா என்ன?

கூட்டிக் கழித்து பார்த்தால் தேர்தலென்பது யதார்த்தத்தில் கட்சிகள், கூட்டணிகள் என்று கூட நடப்பதில்லை. அந்தெந்த தொகுதியில் ஜெயிப்பதற்கு தேவையென்றால் சொந்தக் கட்சியைக்கூட எதிர்ப்பார்களோ, தெரியவில்லை.

இதில் நக்கீரனுக்கு வந்த சோதனை என்ன? அ.தி.மு.கவிற்கு ஒரு ஜூ.வி போல தி.மு.கவிற்கு ஒரு நக்கீரன். அண்ணன் சீமானோட தம்பிகளால் ஒரு தி.மு.க அமைச்சருக்கு பிரச்சினை வரக்கூடாது என்பதற்காக உடனே சீமான் கட்சிக்காரரிடம் போட்டுக் கொடுக்கிறார்கள். ஏன்? தி.மு.க வெற்றிபெற வேண்டுமென்ற விருப்பமும், அதையொட்டிய கருத்துக் கணிப்பும் பலித்தால்தானே அடுத்த ஐந்து வருடங்கள் குப்பை கொட்ட முடியும்?

சரி இதில் கட்டுப்பாடான நாம் தமிழர் தம்பிகள் ஏன் அங்கே கட்சி முடிவுக்கு மாறாக தி.மு.கவை எதிர்க்க வேண்டும்? ஒரு வேளை அண்ணன் சீமானை விட இனவுணர்வு கொண்டு துரோகமிழைத்த தி.மு.கவையும் எதிர்க்க வேண்டும் என்று ஓவர் ஸ்மார்ட்டாக பணி செய்தார்களா? அப்படியெனில் அவர்கள் முதலில் சீமானையல்லவா குறுக்கு விசாரணை செய்திருக்க வேண்டும்? இல்லை அந்த ஊர் அ.தி.மு.க தலைவர்கள் இந்த தம்பிகளை கவனித்தோ இல்லை கன்வின்ஸ் செய்தோ இறக்கினார்களா?

திருச்சியில் அமைச்சர் நேரு போட்டியிடுகிறார். சாதி, பண, அரசியல் என எல்லா செல்வாக்கிலும் லீடிங்கில் இருப்பவர். அவரது தம்பி ராமஜெயம் ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜெயாவிற்கு எதிராக தி.மு.க வேட்பாளர் ஆனந்தனை ஆதரித்து தீவிரமாக வேலை செய்தாராம். உடனே திருச்சி மாவட்ட அ.தி.மு.க பெரும்புள்ளிகள் அவரிடம் ” அண்ணே நாங்க மட்டும் அமைச்சர் நேருவுக்கு எதிராக வேலை செய்யல. அது மாதிரி நீங்களும் ஸ்ரீரங்கத்துல எங்க தலைவிக்காக கம்னுதானே இருக்கணும், ஏம்ணே?” என்றார்களாம். என்ன எழவு அண்டர்ஸ்டேண்டிங் இது?

கரூர் தொகுதியில் அமுல்பேபி ராகுல்காந்தியின் அருளால் போட்டியிடும் பேறுபெற்றவர் ஜோதிமணி. காட்டன் சேலையில் கதர் காங்கிரசு வஸ்திரத்தோடு தெரு தெருவா பெரியவங்க கால்ல விழுந்து “எப்படியாவது என்ன ஜெயிக்க வச்சுருங்க”ன்னு பாடுபட்ட இந்த அம்மணி சீமானுக்கு ஒரு கடிதம் எழுதினாராம். ” அண்ணே நான் உங்க தங்கச்சி மாதிரி, என் தொகுதிக்கு வந்து எதிர்த்து பிரச்சாரம் செய்யாதீங்கண்ணே”ன்னு அதில் உருகியிருந்தாராம். என்ன இருந்தாலும் தமிழ் சினிமாவில் அண்ணன் தங்கை சென்டிமெண்டுக்கு தனி மவுசு உண்டில்லையா?

அதே போல கரூருக்கு வந்த அண்ணன் சீமானும் “தங்கச்சி நீ காங்கிரச விட்டுவெளிய வந்தீன்னா உன்ன நானே ஜெயிக்க வப்பேன். காங்கிரசு ஈழத்தமிழரின் இரத்தம் குடித்த பகைவர்கள்”னு விளக்கம் அளித்து பேசியிருக்கிறார். இதுல நால்லா பாருங்க! சீமான் காங்கிரசை தீவிரமாக எதிர்க்கிறார். அதில் முக்கியமாக சோனியா காந்தியை வறுத்தெடுக்கிறார். அந்த சோனியாவின் புத்திரன் போட்ட பிச்சை சீட்டில் நின்று கொண்டு புத்திரனது அம்மாவை கிழிக்கும் அண்ணனிடம் பாசமுள்ள தங்கையாக ஜோதிமணி கெஞ்சுகிறார் என்றால்…? ஏசுவே ஏசுவே இது என்ன அரசியல்?

தி.மு.க நட்சத்திர பேச்சாளர் வெற்றிகொண்டான் முன்னர் ஒரு கூட்டத்தில் பேசும்போது,” போன தேர்தல்ல பி.ஜெ.பியை ஆதரிக்க வேண்டியிருந்தது. இந்த தேர்தல எதிர்க்க வேண்டியிருக்கு. இப்படியே போன தலைவா அடுத்த வாட்டி ஜெயலலிதா கூட கூட்டணி கீட்டணி வச்சிராத” என்றார். ஆனால் அப்படி கூட்டணி ஏற்கனவே இருக்கத்தானே செய்கிறது?

தி.மு.க ஆட்சியில் மிடாஸ் தொழிலுக்கு எந்த இடையூறும் இல்லை. சுமங்கலியிலும் ஜெயா டி.வி நன்றாகவே தெரிகிறது. ஜெயாவின் பாதுகாப்புக்கும் ஒரு குறையுமில்லை. அதே போல நாளை புரட்சித் தலைவி வந்தால் கருணாநிதி, சன்.டி.வியின் தொழில்களுக்கு எந்த பங்கமும் வராது. அரசியல் வேறு, தொழில் வேறு!

உள்ளூர் அளவிலும் இந்த புரிந்துணர்வு தி.மு.க, அ.தி.மு.க தலைவர்களிடம் இருக்கிறது. ஆளும்கட்சியாகவே இருந்தாலும் சாலை ஒப்பந்தங்கள், மணல் கொள்ளை, சுயநிதி கல்லூரி போன்றவற்றில் எதிர்க்கட்சியினரும் தொழில் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். அவர்கள் பொதுக்கூட்டம், அறிக்கை, மாநாடு என்ற விவகாரங்களில் மட்டுமே ஏதோ கொஞ்சம் மோதிக் கொள்கின்றனர். மற்ற நேரங்களில் ‘சமாதான சகவாழ்வுதான்’.

மக்கள் இந்த இரண்டு கட்சிகளையும் ஏதோ ஜென்ம பகைவர்கள் போல எண்ணிக் கொண்டிருக்கும் போது இரு கழகங்களின் பெருச்சாளிகளும் ஒற்றுமையாக ஊர் வயலை நாசம் செய்து வருகின்றன. பெருச்சாளிகளின் தொழில் ரகசியத்தையும், ஒரே அலைவரிசையையும் மக்கள் உணரும்போது மட்டுமே இந்த திரைமறைவுக் கூட்டணியின் மோசடி அகற்றப்படும். அது வரை மாறி மாறி செட்டப் வழக்காடு மன்றம் போல கேட்டு இரசிப்பதுதான் மக்களது தலையெழுத்தா?

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

தேர்தல் 2011

நரவேட்டை நரேந்திர மோடியை தூக்கில் போடுவது எப்போது?

50

“நான் குல்பர்கா சமூகக் கூடம் எரிந்து தீர்ந்த அடுத்த தினம் அங்கே சென்றிருந்தேன். அதன் தரையெங்கும் மனிதச் சதை தீயில் பொசுங்கி கூழாகப் படிந்திருந்தது. அது எனது காலணியின் கீழ் பகுதியில் சவ்வு போல் ஒட்டிக் கொண்டு நின்றது. அந்தத் தரையின் ஒரு மூலையில் பாதி எரிந்தும் எரியாமலும் இருந்த ஒரு புத்தகத்தை நான் கண்டெடுத்தேன். அது ஒரு பிரிட்டானிக்கா என்சைக்ளோ பீடியா. அதன் மேல் படிந்திருந்த சாம்பலின் மிச்சங்களைத் தட்டிவிட்டு முதல் பக்கத்தைப் புரட்டினேன் – அஸன் ஜாஃப்ரி என்கிற பெயர் அழகான முத்து முத்தான கையெழுத்தில் எழுதப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. அன்றைக்கு நாண் அணிந்திருந்த காலணிகளை அதற்குப் பின் நான் பயன்படுத்தவும் இல்லை – அதன் அடிப்பகுதியை சுத்தம் செய்யவும் இல்லை”

நரவேட்டை நரேந்திர மோடியை தூக்கில் போடுவது எப்போது
சன்சீவ் பட் - படம் தெஹெல்கா

குஜராத் கலவரங்களை விசாரித்து வரும் சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் முன் 2002-ம் ஆண்டு குஜராத் காவல்துறையின் உளவுப் பிரிவு கமிஷனராய் இருந்த சஞ்சீவ் ராஜேந்திர பட்டின் வாக்குமூலத்திலிருந்து வெளியே கசிந்துள்ள பகுதிகளில் மேலே உள்ள பகுதிகள் காணப்படுகிறது. இந்த அறிக்கையின் விவரங்களை தெகெல்கா பத்திரிகை கடந்த மாதம் வெளியிட்டிருந்தது.

பிப்ரவர் 27-ம் தேதி 2002-ம் ஆண்டு கோத்ரா இரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத் முதலமைச்சர் கூட்டிய காவல் துறை உயரதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் சஞ்சீவ் பட் கலந்து கொண்டுள்ளார். அந்தக் கூட்டத்தில் வைத்து முசுலீம்களைப் பழிவாங்கும் நேரம் இதுவென்றும், இந்துக்கள் தமது ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ளப்போகிறார்கள் என்றும், அதைக் காவல் துறை கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும் என்றும் மோடி பகிரங்கமாக உத்திரவிட்டார்.

அடுத்த நாள். இந்துக்களின் பழிவாங்கும் உணர்ச்சி, அரசு இயந்திரத்தின் மௌனமான அங்கீகாரத்துடன் அரங்கேறுகிறது. முசுலீம்களைக் கண்ட இடத்திலெல்லாம் கொன்று குவித்தனர் இந்து பயங்கரவாதிகள். கருவிலிருந்த முசுலீம் குழந்தைகள் கூட அன்றைக்குத் தப்பவில்லை. தொடர்ந்து நடந்த வன்முறை வெறியாட்டத்தில் நூற்றுக்கணக்கான முசுலீம்கள் கொல்லப்பட்டனர், பெண்கள் வன்புணர்ச்சி செய்யப்பட்டனர். காந்தி பிறந்த மண் என்று போற்றப்படும் மாநிலம் முசுலீம்களின் இரத்தத்தால் சிவந்தது.

கலவரத்தால் அச்சமடைந்த நூற்றுக்கணக்கான முசுலீம்கள் மெகானி நகரில் இருக்கும் குல்பர்கா சமூகக் கூடத்தில் தஞ்சமடைந்துள்ளனர். அது பிப்ரவரி 28-ம் தேதி. அன்று அங்கே தஞ்சமடைந்திருந்தவர்களில் ஒருவர்தான் காங்கிரஸின் முன்னாள் எம்.பி ஹஸன் ஜாஃப்ரி. அன்று அந்தக் கூடத்துக்கு வெளியே முசுலீம்களைக் கொன்று போட வேண்டுமென்று கூச்சலிட்டுக் கொண்டு  ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, வி.எச்.பி போன்ற இந்து பயங்கரவாத இயக்கங்களின் தொண்டர்கள் குவிந்த வண்ணம் இருந்திருக்கிறார்கள். அந்தப் பகுதியின் கள நிலவரத்தை பார்வாட் எனும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சஞ்சீவ் பட்டுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்.

சஞ்சீவ் பட் தனது மேலதிகாரிகளைத் தொடர்பு கொண்டு நிகழவிருக்கும் இனப் படுகொலையை  எப்படியாவது  தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் என்று கெஞ்சியிருக்கிறார். ஒருவரும் கண்டு கொள்ளாமல் போகவே முதலமைச்சர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு ஓ.பி. சிங் என்கிற அதிகாரியிடம் பேசுகிறார். ஆனால் அங்கே குல்பர்கா சமூகக் கூடம் அமைந்திருக்கும் மெகானி நகர் பகுதியிலோ கொஞ்சம் கொஞ்சமாகப் பிற பகுதிகளில் இருந்து திரட்டி வரப்பட்ட இந்து வெறியர்களின் கும்பல் பெரிதாகிக் கொண்டேயிருந்திருக்கிறது.

முந்தைய தினம் மோடியின் வாயிலிருந்து உதிர்ந்த வார்த்தைகளின் உண்மையான பொருளை சஞ்சீவ் உணர்ந்து கொண்ட போது அங்கே குல்பர்கா சமூகக் கூட முற்றிலுமாக எரிந்து போயிருந்தது. 69 முசுலீம்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். அஸன் ஜாஃப்ரியை வெளியே இழுத்து வந்த இந்து வெறியர்கள், அவரது கழுத்தில் நாய் பிடிக்கும் இரும்புச் சுருள் கண்ணியை மாட்டி இறுக்கி, தரதர வென்று இழுத்துள்ளனர். பின் இறந்த அவரின் உடலைத் துண்டுத் துண்டாகப் பிளந்து நெருப்பில் அடையாளம் தெரியாத  அளவுக்கு எரித்துள்ளனர்.

இவையெல்லாம் ஏதோ ஆத்திரத்தில் செய்யப்பட்ட கொலைகள் அல்ல. சட்டென்று ஒரு கண நேர கோபத்தில் நிகழ்ந்த வன்முறைகள் அல்ல. அன்றைக்கு நிகழ்ந்த கொலைகளை எப்படியெப்படியெல்லாம் அனுபவித்துச் செய்தார்கள் என்பதையும், கற்பழிப்புகளை எப்படியெல்லாம் திட்டமிட்டு ஒரு கலையைப் போல் நிறைவேற்றினார்கள் என்பதையும், முசுலீம் குழந்தைகளைக் கொன்று களிப்புற்ற தங்கள் அனுபவத்தையும் பின்னர் அவர்களே தெகல்காவின் கேமரா முன் நிதானமாக அசை போட்டுச் சொன்னதைக் கேட்டு நாடே திகைத்து நின்றது. மனசாட்சி கொண்ட மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

தீயிட்டுக் கொளுத்தப்பட்ட குல்பர்கா சமூகக் கூடதை ஆய்வு செய்யச் சென்ற போது எரிந்து போன நிலையில் கண்டெடுத்த அஸன் ஜாஃப்ரியின் என்சைக்ளோ பீடியாவைக் கையில் ஏந்தி நின்ற அந்த கணத்தின் மனப்பதிவுகளை சஞ்சீப் பட் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

“எனது கையில் பாதி எரிந்த போன நிலையிலிருந்த  அந்தப் புத்தகத்தில் இருந்த ஹஸன் ஜாஃப்ரி எனும் அந்த அழகான கையெழுத்தை கொஞ்ச நேரம் வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றேன். அந்த நேரத்தில் எனது பள்ளி நாட்களின் நினைவுகள் நிழலாடியது. அப்போதெல்லாம் இணையம் போன்ற வசதிகள் கிடையாது. என்சைக்ளோ பீடியாவைப் படிக்க வேண்டுமென்றால் சில கிலோ மீட்டர்கள் சைக்கிளை மிதித்து நூலகத்துக்குத் தான் செல்ல வேண்டும். எனது மாணவப் பருவத்தின் லட்சியமே ஒரு நல்ல என்சைக்ளோ பீடியாவை சொந்தமாக வாங்குவது தான். இதோ, எனது கையில் இப்போது ஒரு என்சைக்ளோ பீடியா இருக்கிறது – பாதி எரிந்து போன நிலையில் – தீயில் பொசுங்கிய மனித சதைக் கூழ் படிந்து போன நிலையில். நான் ஜாஃப்ரியை எனது வாழ்நாளில் சந்தித்ததேயில்லை. ஆனால், அந்த அழகான கையெழுத்து நிச்சயம் அந்த மனிதரின் பக்குவப்பட்ட கலாச்சாரத்தை எனக்கு உணர்த்தியது”

2002ம் ஆண்டு குஜராத்தில் இந்து வெறியர்கள் நிகழ்த்திக் காட்டிய அந்த படுகொலைச் சம்பவங்களில் கொல்லப்பட்ட முசுலீம்களில் எத்தனையோ அஸன் ஜாஃப்ரிக்களின் நெஞ்சை உலுக்கும் கதைகள் உள்ளது. படுகொலைச் சம்பவங்களின் பின்னுள்ள சதியை அம்பலப்படுத்தும் முயற்சியில் இறங்கிய தனது சொந்தக் கட்சிக்காரரான ஹிரேன் பான்ட்யாவைக் கூட பின்னர் கொன்று போட்டனர் இந்து பயங்கரவாதிகள். சென்ற வருடத்தின் ஜனவரி மாதம் சிறப்புப் புலனாய்வுப் பிரிவினரின் முன் கொடுக்கப்பட்ட இந்த வாக்குமூலங்களைக் கொண்டு நடப்பிலிருக்கும் சட்டங்களைக் கொண்டே மோடியைத் தண்டிக்க முடியும். தூக்கில் கூட போட்டிருக்க முடியும்.

ஆனால் இதுவரை அதைத் தன் சொந்த அரசியல் நலன்களுக்காகக் கூட முன்னெடுத்துச் செல்ல காங்கிரசு முயலவில்லை. கார்ப்பரேட் உலகத்தால் மோடிக்கு நல்லவர் வல்லவர் என்கிற ஞானஸ்நானம் வழங்கப்பட்டு அவரது பாவங்கள் மன்னிக்கப்பட்டு விட்டன. நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும் நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும்  என்று முதலாளித்துவ ஊடகங்களும் ஒரு முடிவுக்கு வந்து விட்டன. மோடியின் பொருளாதார ‘சாதனைகளின்’ ஒளியில் தான் கருகிப் போன சில ஆயிரம் முசுலீம்களின் கனவுகளும் உள்ளன என்பதை இவர்கள் மிக வசதியாக மறந்து விடத் துடிக்கிறார்கள்.

குஜராத்தின் சாதனைகள் பற்றிய மயக்கத்தில் இருப்பவர்கள் இன்றும் தொழில்கள் பறிக்கப்பட்டு, வாழ்விடம் பறிக்கப்பட்டு, வாழ்க்கையே பறிக்கப்பட்டு, சொந்தங்களை இழந்து குஜராத்தில் அகதிகளாய் அலையும் அந்த அப்பாவி முசுலீம்களிடம் சென்று அதைப் பற்றி பேசட்டும். ஆனால், ஜனநாயகத்திலும், சக மனிதனின் வாழும் உரிமையின் பேரிலும் உண்மையான அக்கறை கொண்டவர்கள் சிந்தித்துப் பார்க்க எம்மிடம் ஒரு கேள்வி உண்டு – “இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த அமைதி?”

(தற்போது இந்த நேர்மையான தைரியமான காவல் அதிகாரி உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்திருக்கிறார். அதில் மோடி நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டதையும், மோடி அங்கே கலவரத்திற்கு ஆதரவாக தெரிவித்த்தையும் கூறியிருப்பதோடு, இது குறித்து சிறப்பு புலனாய்வு குழு தீவிரமாக விசாரிக்கவில்லை என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால் சஞ்செய் பட்டின் இந்த நேரடி வாக்குமூலத்தை மறுத்து மோடியின் பக்தர்களான சில போலீசு அதிகாரிகள் பேசிவருகின்றனர். கோத்ரா எரிப்பு நடந்த இரவில் கூடிய அந்த கூட்டத்தில் இந்த சஞ்செய் பட் இல்லவே இல்லை என்று சக்ரவர்த்தி எனும் அன்றைய டி.ஜி.பி கூறியிருக்கிறார்.

வேறு இரு போலீசு அதிகாரிகள் மோடி கூட்டிய அந்த கூட்டத்தில் யாரெல்லாம் இருந்தார்கள் என்று நினைவில்லை என்று சமாளித்திருக்கிறார்கள். ஆனால் இந்த பச்சைப் பொய்யை சஞ்செய் பட்டின் ஓட்டுநராக இருந்த தாரா சந்த் யாதவ் மறுத்திருக்கிறார். அன்றைய கூட்டத்திற்கு சஞ்செய் கலந்து கொண்டதையும், அவருக்காக வாகனத்துடன் வெளியில் காத்துக் கொண்டிருந்ததையும்  அந்த ஓட்டுநர் துணிச்சலுடன் தெரிவித்திருக்கிறார். இதற்காக மோடி கும்பல் இவரை என்கவுண்டர் செய்தாலும் செய்யலாம்.

ஏனெனில் எந்த கொலைக்கும், பயங்கரவாத செயல்களுக்கும் இவர்கள் துணிந்தவர்கள்தான் என்பதை பிரக்யா சிங், அசீமானந்தா, மோடி மூலம் அறியலாம்.

நூற்றுக்கணக்கான முசுலீம் மக்களை கொன்று குவித்த அந்த கலவரம் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட படுகொலை என்பதும், அதற்கு தலைமையேற்றவர்தான் நரேந்திர மோடி என்பதற்கும் இதை விட என்ன ஆதாரம் வேண்டும்?

கசாப்பை தூக்கில் போடவேண்டும் என்று தும்மினாலும், சிந்தினாலும் கூப்பாடு போடுபவர்களின் கோரிக்கையை நாம் மறுக்கவில்லை. ஆனால் கசாப் கொன்றதை விட அதிக எண்ணிக்கையில் கொன்றவரும், கசாபின் காலத்திற்கும் முந்தையவருமான நரவேட்டை நாயகன் மோடியைத் தூக்கில்  போடவேண்டும் அல்லவா? எப்போது போடுவீர்கள்?

___________________________________________________________________________

தெகெல்காவின் கட்டுரைகளுக்கான இணைப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது. வாசகர்கள் அனைவரும் அவசியம் அவற்றை வாசித்துப் பார்க்க வேண்டும்.

____________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

அம்பானி ஆய் கழுவ 5 இலட்சம் லிட்டர் குடிநீர்!

20

அம்பானி ஆய் கழுவ 5 இலட்சம் லிட்டர் குடிநீர்!

ரிலையன்சின் அதிபர் முகேஷ் அம்பானி குடியிருக்கும் “ஆன்டிலியா” எனும் 27 மாடி குடிசையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இல்லையென்றால் வினவில் முன்னர் வந்த கட்டுரையை படியுங்கள்.
தற்போது ஒரு சமூக ஆர்வலர் தகவல் அறியும் உரிமை சட்டப்படி அம்பானியின் குடும்பம் ஒரு மாதத்திற்கு எவ்வளவு நீரை பயன்படுத்துகிறது என்பதை வெளிக் கொண்டு வந்திருக்கிறார். அதன்படி கிரேட்டர் மும்பையின் முனிசிபால்டி நிர்வாகம், அம்பானியின் ஆன்டிலியா மாளிகைக்கு மாதம் ஐந்து இலட்சம் லிட்டர் நீரைக் கொடுக்கிறதாம்.

அதாவது தினசரி 17,000 லிட்டர் நீர். கற்பனை செய்ய முடியவில்லையா? பிளாஸ்டிக் குடம் கணக்கில் சொன்னால் தினசரி 850 குடங்கள். இவ்வளவு நீரை பயன்படுத்துவதற்கு அம்பானியின் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் எத்தனை பேர்? அம்பானி அவரது சம்சாரம், மூன்று குழந்தைகள் மட்டுமே.

குடும்பத்தில் 5 உறுப்பினர்கள். 5 பேர் வாழும் ஆன்டிலியாவின் பரப்பளவு 5 இலட்சம் சதுர அடிகள். 5 பேர்களுக்கு தேவைப்படும் ஒரு மாத நல்ல நீர் 5 இலட்சம் லிட்டர். எல்லாம் ஐஞ்சுக்கு ஐந்து என்று மேட்சாகத்தான் பொருந்துகிறது. எனினும் அம்பானியின் நீர் தேவையை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. ஆன்டிலியா குடிசையில் உள்ள நீச்சல் குளம், கார்களை கழுவ, நாய்களை குளிப்பாட்ட இன்ன பிற அத்தியாவசிய தேவைகளுக்குத்தான் அந்த நீர் பயன்படுகிறது. இது போக நீரை விரயமாக்கும் பழக்கமெல்லாம் அம்பானியின் பரம்பரைக்கே இல்லை.

மேலும் நீருக்காக முனிசில்பாடி நிர்வாகம் வசூலிக்கும் தொகையை அம்பானி தவறாது கட்டிவிடுகிறார். பிசினசில்தான் அவர் அரசை ஏமாற்றுவார், அது  போக அவர் ஒழுங்காக நீர்வரி கட்டும் நல்ல குடிமகன்தான்.  நாமும் அவரது ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியம் விதிக்கும் கப்பத்தை ஒழுங்காக கட்டுகிறோம் அல்லவா அது போலத்தான் அம்பானியும் நல்ல பிள்ளையாக நீர்வரி கட்டுகிறார்.

இந்த தண்ணி கணக்கு என்பது முனிசிபால்டி அளிக்கும் நல்ல நீர் மட்டும்தான். இது போக ஆன்டிலியாவின் அன்றாடத் தேவைக்காக எவ்வளவு நிலத்தடி நீர் பயன்படுகிறது என்பதை யாரும் தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி கூட அறியமுடியாது. அதெல்லாம் காந்தி கணக்குதான்.

அம்பானி ஆய் கழுவ 5 இலட்சம் லிட்டர் குடிநீர்!

நண்பர்களே, மும்பையின் நெரிசலையும், தாரவி முதலான குடிசைப் பகுதிகளின் நரக வாழ்வையும் நாம் கொஞ்சமாவது கேள்விப்பட்டிருப்போம். பத்துக்கு பத்து தீப்பெட்டி போன்ற இடத்தில் எல்லா பொருட்களோடும், எல்லா குடும்ப உறுப்பினர்களும் தீக்குச்சிகளைப் போல அடைபட்டு வாழ்கிறார்கள். பல குடிசைகளுக்கு ஒரு கழிப்பறை, குளியலறை என்பதுதான் அவர்களது சதவீதக் கணக்கு. காலை கடனுக்காக அதிகாலையில் கழிப்பறை முன்பு எப்போதும் நிற்கும் வரிசை. ஏக், தோ, தீன்….தஸ் என்று எண்ணிவிட்டு கக்கூஸ் கதவு தட்டப்படும். அந்த பத்து கண நேரத்தில்தான் முந்தைய நாளின் சாணியை அதிவேகமாக காலி செய்ய வேண்டும். தாமதித்தால் கதவு உடைக்கப்படும்.

ஒரு நாளைக்கு 850 குடங்கள் என்பது கிட்டத்தட்ட 85 குடும்பங்கள் பயன்படுத்தும் நீர். மும்பையில் இருக்கும் ஏழைகளும், கீழ்தட்டு நடுத்தர வர்க்கமும் தமது முழு தேவைக்கு மாநகராட்சி நீரைத்தான் நம்பியிருக்கிறார்கள். அதிலும் அவர்களுக்கு எல்லா நாளும் போதுமான நீர் கிடைப்பதில்லை. இது மும்பைக்கு மட்டுமல்ல எல்லா மாநகரங்களுக்கும் பொருந்தும். இத்தகைய சூழலில் வைத்துப் பார்த்தால் அந்த 850 குடங்களின் ஆபாசம் நமது கண்ணை உறுத்தும்.

அம்பானி ‘உழைத்து’ முன்னேறிய கதையை கிழக்கு பதிப்பகத்தின் மூலம் வாசிக்கும் அதன் வாசகர்கள் தினசரி பூஜையே செய்கிறார்களாம். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது இந்திய வெற்றிக்காக ஆர்ப்பரித்த அம்பானி தம்பதியினரின் தேசபக்தியைக் கண்டு கிரிக்கெட் இரசிகர்கள் ஆனந்தக் கண்ணீர் விடுகிறார்கள்.

அம்பானிக்கு தேசபக்தி இருக்கிறது என்பதை விட இந்த தேசம்தான் அம்பானி மேல் பக்தி கொண்டிருக்கிறது எனச் சொல்லலாம். அதனால்தான் அம்பானியும் சளைக்காமல் தனது பக்த கோடி அடிமைகளுக்கு அன்றாடம் பங்கு சந்தை மூலம் திவ்ய தரிசனம் தருகிறார். பக்தர்களின் காணிக்கை மூலம் ரிலையன்சு கோவில் தினசரி குடமுழுக்கை நடத்துகிறது. அம்பானி நமஹா என்ற மந்திரம் இந்தியாவின் தேசிய மந்திரமாகிவிட்டது. அதன்படி பார்த்தால் 850 குடம், திருப்பள்ளி எழுச்சி கொள்ளும் பகவான் ஆய் போய்விட்டு கழுவுவதற்கு பயன்படுகிறது என்றால் நாம் செய்த புண்ணியம்தான் என்ன?

_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

சாய்பாபா: “சண்டையில கிழியாத சட்டை எந்த ஊர்ல இருக்கு?”

67

சாய்பாபா செத்துவிட்டார். அவரது பக்தர்களுக்கோ, ‘கடவுள் இறந்துவிட்டார்’! கடவுளின் மரணம் நிச்சயம் ஒரு வருந்தத்தக்க இரங்கல் செய்திதான். ஆனால் நமக்கோ கடவுளை விடவும், பக்தர்களைப் பற்றியே அதிக கவலை!

பல லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களை சேர்த்த சாயிபாபா அந்தப் பணத்தில் கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள், இலவச மருத்துவமனைகள் என கட்டி வைத்துள்ளார். இப்போது அவருக்கான ஆதரவு சக்திகள் தங்களின் தர்க்கத்துக்கு பயன்படுத்தும் பாய்ண்ட்டும் இதுதான். ‘எப்படியோ சம்பாதிச்சுட்டுப் போகட்டும்ங்க.. எவ்வளவு சேவை செய்யிறாரு. கொள்ளையடிக்கிற மத்த எவனும் இதை செய்யிறானா?’ என்பது பக்தர்களுடையது மட்டுமின்றி, பொதுவான மிடில் கிளாஸ் மனநிலையின் வாதமும் கூட.

’எப்படியோ சம்பாதிச்சுப் போகட்டும்’ என்ற சொற்களின் மூலம் மிகப் பெரிய மோசடித்தனங்களையும், ஏமாற்று வேலைகளையும் மிக எளிமையாக இவர்கள் கடந்து செல்கின்றனர். சாயிபாபாவுக்கு மட்டுமல்ல.. இன்று ஸ்பெக்ட்ரம் ராஜாவுக்கும், குவைத் ராஜாவுக்கும் கூட இதே தர்க்கத்தைதான் பொதுப்புத்தி பொருத்துகிறது. தேர்தல் களத்தில் தி.மு.க.வின் ஊழல்கள் எல்லாம் வாக்குக்கு எதிரானதாக மாறாது எனச் சொன்ன டீ கடைக்காரர் ஒருவர், ‘நாட்டுல எவன் சார் கொள்ளை அடிக்கல.. ஏதோ அவன் பத்து காசு பார்த்தானா… நமக்கு ரெண்டு காசு தந்தானா.. ரைட்டு ஓ.கே.ன்னுட்டுப் போக வேண்டியதான்’ என்று பெருந்தன்மையாக ஊழலை அங்கீகரித்தார்.

நாட்டின் மிகப் பெரும் கொள்ளைகளுக்குதான் இப்படி என்றில்லை. பன்னெடுங்காலமாக இந்த சிஸ்டம் மக்களை கொஞ்சம், கொஞ்சமாக Corrupt செய்து  வந்திருக்கிறது. அதன் விளைவு… ஊழல் என்றில்லை… எல்லாமே இப்படித்தான் நடக்கும், ஏற்றுக்கொண்டு அனுசரித்துதான் வாழ வேண்டும் என மக்களின் மனங்கள் பழக்கப்படுத்தப்பட்டுள்ளன. ‘போலிஸ்னா அடிக்கத்தான் செய்வான். அரசியல்வாதின்னா ஊழல் பண்ணத்தான் செய்வான். அதிகாரின்னா லஞ்சம் வாங்கத்தான் செய்வான்’ என சீரழிவுகள் அனைத்தையும் சமூகத்தின் இயல்புகள் என ஏற்றுக்கொண்டிருக்கிறது பொதுப்புத்தி. ‘சண்டையில கிழியாத சட்டை எந்த ஊர்ல இருக்கு?’ என வடிவேல் கேட்பது வெறும் நகைச்சுவை அல்ல, இந்த சமூகத்தின் மனசாட்சி!

அனைத்தையும் அனுசரித்துப் போவதும், ஊழலையும், பொறுக்கித்தனத்தையும், நேர்மையின்மையையும் அன்றாட வாழ்க்கையின் அம்சங்களாக கொள்வதும் தனிப்பட்ட நபரின் விருப்பத் தேர்வாக இருக்கும் வரை அது ஓர் தனிநபரின் ஆளுமைப் பிரச்னை மட்டுமே. ஆனால் எல்லாவற்றையும் அட்ஜஸ்ட் செய்துபோவது ஒரு சமூக மனநிலையாக மாற்றப் பட்டிருக்கிறது. அதனால்தான் தேர்தலில் போட்டியிடும் யாரும் உத்தமர் இல்லை என தெரிந்தும் மக்கள் வாக்களிக்கின்றனர். தேர்தலில் மட்டுமல்ல.. வாழ்க்கையின் ஒவ்வொரு அங்கத்தையும் சமரசத்தால்தான் எல்லோரும் எதிர்கொள்கின்றனர்.

இன்று கல்வி என்பது கொழுத்த பணம் புரளும் வர்த்தகம். தனியார் கல்லூரிகளில் ஒரு எம்.பி.பி.எஸ். சீட் ஒரு கோடி ரூபாய் விலைபோகிறது. இந்த அநீதியை எதிர்த்து ‘கல்வி என்பது அடிப்படை உரிமை. அதை இலவசமாக ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை’ என உரிமையை போராடிப் பெற யாரும் தயாரில்லை. மாறாக, கிடைத்த படிப்பைப் படிக்கவும், ‘பணத்தைக் கொடுத்தாலும் வேலையை முடித்துத் தரும்’ நீரா ராடியாக்களைத் தேடவுமே விரும்புகின்றனர்.

ஆனாலும் அவர்களுக்கு ஒரு கட்டத்தில் மனசாட்சி உறுத்துகிறது. தங்களின் அட்ஜஸ்ட்மெண்ட் வாழ்க்கையை நியாயப்படுத்தத் தொடங்குகின்றனர். மாறாக, தங்களுக்கென ஒரு முற்போக்கு அடையாளத்தை சூடிக்கொண்டவர்களோ… அனைத்தையும் அனுசரித்துச் செல்லும் பச்சோந்தித்தனத்தையே கொள்கையாகப் பேசத் தொடங்குகின்றனர். முற்காலத்தியில் முற்போக்குப் பேசி தற்போது ஓட்டரசியலின் லாபங்களை அறுவடை செய்துகொண்டிருக்கும் (ML to MLA) ரவிக்குமார் இதற்கு ஒரு சிறந்த உதாரணம். சந்தர்ப்பவாத அரசியலுக்கு கொள்கை சாயமடித்து… விளக்குமாற்றுக்கு பட்டுக் குஞ்சம் கட்டும் வேலையை ரவிக்குமார் சிறப்பாக செய்துகொண்டிருக்கிறார்.

இந்த மோசமான சிஸ்டத்தை மாற்றுவதற்குப் பதிலாக இதற்குள் சாமர்த்தியமாக வாழ்வது எப்படி என அனுதினமும் மக்களுக்கு வகுப்பு எடுக்கப்படுகிறது. தன்னை சூழ்ந்திருக்கும் துன்ப துயரங்களுக்கான காரண சக்தியை கண்டறிந்து அகற்றுவதற்குப் பதிலாக… அதன் தாக்குதலை சமாளித்து தற்காத்து வாழ்வது எப்படி என்றே சனங்களுக்குப் போதிக்கப்படுகிறது. ‘ஆயிரம்தான் இருந்தாலும் அவன் புருஷன். நாலு அடி அடிச்சாலும் வாங்கிக்கிட்டு சேர்ந்துதான் வாழனும்’ என்பது அப்பத்தாக்களின் அறிவுரை மட்டுமல்ல… அரசாங்கத்தின் அருளாசியும் இதுதான். ஈஷா தியான மையம், வாழும் கலை… எல்லாம் இந்த கும்பல்தான். நோய் நிவாரணிக்குப் பதில் வலி நிவாரணியும், மயக்க மருந்துமே இவர்களின் பரிந்துரை.

இந்த இடத்தில் நாம் சாயிபாபாவைப் பேசுவோம். சாய்பாபா யார்? அவர் சாதாரண மனிதன். அதனால்தான் இப்போது செத்தும்விட்டார். இத்தனை நாட்கள் தன்னை தெய்வம் என சொல்லிக்கொண்ட சாய்பாபா, மாய மந்திர வித்தைகள் எல்லாம் செய்து உலகம் முழுக்க பக்தர்களை வளர்த்துக்கொண்டு, பல லட்சம் கோடி ருபாய் சொத்துக்களையும் சேர்த்துவிட்டார். அந்த வித்தைகளின் செய்முறை விளக்கம், Working stills வரை வெளியான பின்னும் அவரும் கைவிடவில்லை, மக்களும் அவரை கைவிடவில்லை. இந்த மோசடிகளைப் பேசினால், ‘அவர் தனி மனிதனாக ஒரு நகரத்தையே உருவாக்கியிருக்கிறார். அங்கு பல லட்சம் பேர் மருத்துவ வசதி பெருகின்றனர். கல்வி வசதி பெருகின்றனர்’ என பேச்சை மடை மாற்றுகின்றனர்.

இவ்வளவுப் பேருக்கு இலவசமாக அனைத்தையும் செய்வதற்கு உண்டான பணம் அவருக்கு எங்கிருந்து வந்தது? மாய மந்திரத்தில் கொண்டு வந்தாரா? ரிசர்வ் பேங்க் ஆபீஸர் வந்து ஒவ்வொரு நோட்டிலும் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தாரா? ‘எல்லாம் பக்தர்கள் கொடுத்தது’ என்பார்கள். ’பக்தர்கள் ஏன் கொடுத்தார்கள்?’ என்றால், ‘இது என்ன கேள்வி? அவர் பகவான், இவங்க பக்தர்கள். குடுக்குறாங்க’ என அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். ஆக, தான் இறைவன் அல்லது தெய்வீக சக்தி படைத்தவன் என சாய்பாபா தன்னைச் சுற்றி எழுப்பிக் கொண்ட இமேஜ்தான் இத்தனைக்குமான அடிப்படை. அந்த அடிப்படையே பொய்களாலும், மோசடிகளாலும் உருவாக்கப்பட்டது என்பதுதான் பிரச்னையின் மையம்.

உங்கள் மகனோ, தம்பியோ, தங்கையோ தான் வேலைப் பார்க்கும் இடத்தில் அலுவலகப் பணம் 10 லட்சத்தைத் திருடிவிட்டான் என வைத்துக்கொள்ளுங்கள். திருடியப் பணத்தில் நான்கு அனாதைப் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறான். இப்போது ‘ஏன் திருடினாய்?’ என கேட்டால் ’அதான் அனாதைப் புள்ளைங்களைப் படிக்க வைக்கிறேன்ல’ என பதில் சொன்னால் அது யோக்கியமானதா? ‘ஏதோ தெரியாத்தனமாகத் திருடிவிட்டான். அதை உணர்ந்து பிராயச்சித்தமாக அனாதைப் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறான்’ என்று சொன்னால் கூட அந்த தர்க்கம் புரிந்துகொள்ளக் கூடியது. குற்றத்தை ஒப்புக்கொள்ளும் குறைந்தப்பட்ச நேர்மையேனும் அதில் உண்டு. ஆனால் பாபாவின் பக்தர்களோ திருட்டையே ஒரு தெய்வீகத்தன்மையாகப் பார்க்கின்றனர்.

சாய்பாபா சம்பாதித்தது = திருட்டுப் பணம் என்ற இந்த ஒப்பீட்டில் பொருந்தாப் புள்ளி ஒன்று உண்டு. ஓர் எல்லைக்குப் பிறகு சாய்பாபா தானாக சென்று யாரிடமும் திருடவில்லை. பக்தர்கள் தானாக வந்து கொட்டிய பணம் அது. ’பக்தர்கள் மனமுவந்து கொடுத்ததை அவர் நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்திக்கிட்டார். அது தப்பா?’ என்று கேட்கிறார்கள். வேறு சிலரோ, ’அவர் பணம் சம்பாதிப்பதும், அதற்கு கையாளும் வழிமுறைகளும் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் இறுதியில் அந்த பணம் முழுவதையும் சமூகத்துக்குத் தொண்டு செய்யத்தானே பயன்படுத்துகிறார்? இதில் என்ன தவறு இருக்க முடியும்?’ என கேட்கிறார்கள். அதாவது குடியிருக்குறது குடிசையா இருந்தாலும் போய் சேர்ற இடம் கோயிலா இருக்கனும். காரணம் முக்கியம் இல்லை, விளைவுகளே முக்கியம் என்கிறார்கள். ஆனால் காரணமின்றி செயல் இல்லை. சாய்பாபாவின் மாய மந்திரத்தையும், அவர் நடத்தும் இலவச மருத்துவமனையையும் ஒன்றுடன் ஒன்று பிரித்துப் பார்க்க முடியாது. மந்திரம்தான் மருத்துவமனையின் அஸ்திவாரம்.

இன்று சாயிபாபாவின் பிராண்ட் அம்பாசிடர்களாக இருக்கும் அப்துல் கலாம் முதல் மானா மூனா சிங் வரை, சச்சின் டெண்டுல்கர் முதல் மு.கருணாநிதி வரை சகலரும் பாபாவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். தனி விமானத்தில் புட்டபர்த்தி விரைகிறார் ஸ்டாலின். இவர்கள் எப்போதேனும் மக்கள் பிரச்னைக்காக இத்தனை விரைவாக செயல்பட்டதுண்டா? இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல் தவிட்டுத் தொழிற்சாலையில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால் ஏற்பட்ட தீ விபத்தில் 17 வட மாநிலத் தொழிலாளர்கள் இறந்துபோனார்கள். ஏறக்குறைய 10 நாட்களுக்கும் மேலாக கேட்பாரின்றி கிடந்த அந்தப் பிணங்களை யாரும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஏனெனில் அவை வி.ஐ.பி.களின் பிணங்கள் அல்ல.

அதிகாரத்துடன் ஒத்துப்போவது, அதிகாரத்துக்கு ஒத்து ஊதுவது, எது பொதுப்புத்தியோ, எது பெரும்பான்மை கருத்தோ, எதற்கு சந்தையில் மவுசு இருக்கிறதோ, எது விலைபோகிற பண்டமோ… அதன் பக்கம் நின்றுகொள்வது்… இதுதான் இந்த சந்தைப் பொருளாதாரம் மக்களிடம் கொண்டு வந்திருக்கும் மனநிலை. இதில் நியாயம், நீதி, அறம் என்பவை எல்லாம் பொருளற்ற வெறும் சொற்கள் மட்டுமே. சுருங்கச் சொன்னால் டிரெண்ட்டுக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக் கொள்ள வேண்டும். அவன்தான் சாமர்த்தியசாலி. இப்படி சுயநலமாகவும், ஒட்டுண்ணியாகவும், பச்சோந்தித்தனமாகவும் இருப்பதை கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒரு தகுதியாகவே கணக்கிடுகின்றன. இதை ஊடகங்கள் தெரிந்தே செய்கின்றன.

சத்குரு ஜக்கி வாசுதேவ் மீது மனைவியை கொலை செய்த வழக்கு நிலுவையில் இருப்பது அனைவரும் அறிந்த கதைதான். இதனால் அவரது வியாபாரத்துக்கு எந்த குந்தகமும் இல்லை. ஊடகங்களில் ஊருக்கு உபதேசித்து அறுவடை செய்த இமேஜை அடியுரமாகப் போட்டு இப்போது ஊர், ஊருக்கு ஈஷா யோகா மையம் நடத்திக்கொண்டிருக்கிறார் சத்குரு. இதேபோல் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மீதும், நித்தியானந்தா மீதும் ஏராளமான சர்ச்சைகள் உண்டு. ஆனாலும் ஊடகங்கள் இவர்களை ஐகான்களாக முன்னிருத்துகின்றன. இதன் மறுகோணம், இவர்கள்தான் இந்தியாவின் இந்துத்துவ சாரத்தை தக்க வைத்துக்கொள்கிற குவி மையங்கள். ’ஏன் டி.ஜி.எஸ்.தினகரன் செய்யவில்லையா?’ என்றால், ஆம் அதுவும் இதற்கு இணையான அயோக்கியத்தனம்தான். ஆனால் எந்த மெயின் ஸ்ட்ரீம் பத்திரிக்கையும் டி.ஜி.எஸ்.தினகரனை வைத்து தொடர் எழுதுவது இல்லை என்பதை நாம் கவனமாக கருத்தில் கொள்ள வேண்டும்.

சாய்பாபாவைப் பொருத்தவரை கடைசியில் எல்லோரும் வந்து முட்டி நிற்கும் இடம் மனிதநேயம். ’இதையாவது செய்யிறாருல்ல.. மத்தவன் யாரும் செய்யலல்ல’ என்ற புள்ளியில் வந்து நிற்பார்கள். அரசியல் நீக்கம் செய்யப்பட்ட மனிதநேயம் என எதுவும் இங்கு இல்லை. தமிழ் மக்களின் உள்ளன்போடு கூடிய மனிதநேயத்தை சுனாமி சமயத்தில் நாம் எல்லோருமேப் பார்த்தோம். சுனாமியில் இறந்துபோனவர்களுக்கு வீடும், வாழ்வாதார வசதிகளும் செய்து தருவதாகக் கூறி பல்லாயிரம் கோடி ரூபாய் வெளிநாட்டு நிதி உதவி வாங்கின பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள். இன்றுவரை அதில் பாதிப் பணம் கூட செலவிடப்படவில்லை. பல தன்னார்வ நிறுவனங்கள் மீது சுனாமி நிதி முறைகேடு தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெறுகின்றன. இதை எப்படி மதிப்பிடுவீர்கள்? ‘என்.ஜி.ஓ. காரன் என்னவோ பண்ணிட்டுப் போறான். எங்கேயோ வெளிநாட்டுல பணம் வாங்கி யாரோ நாலு பேருக்காவது வீடு கட்டி தந்தானா, இல்லையா?’ என இதை நியாயப்படுத்துவது சரியானதா? சாய்பாபாவின் ‘எப்படியோ நல்லது செய்தாருல்ல’ லாஜிக்கும் இப்படித்தான். அவை, ஊரை ஏமாற்றிக் கொள்ளை அடித்தவன் தன் ஏமாளி பக்தர்களுக்கு வீசி ஏறியும் பிஸ்கட் துண்டுகள். அதற்குள் நல்லனவற்றைத் தேடுவது என்பது, பெரியாரின் மொழியில் சொல்வதானால், ‘மலத்துக்குள் அரிசி பொறுக்கும் வேலை!’

இது யாவற்றையும் கடந்து பிறந்தால் இறந்துதானே ஆக வேண்டும்? இதை எழுதிய நான் தொடங்கி வாசிக்கும் நீங்கள் வரை ஒருநாள் சாகத்தான் போகிறோம். அதுபோல் இப்போது சாய்பாபாவும் இறந்திருக்கிறார். வடிவேலு வசனத்தைதான் நானும் சொல்கிறேன், ‘சண்டையில கிழியாத சட்டை எந்த ஊர்ல இருக்கு?’!

_________________________________________________

வினவு பின்குறிப்பு:

சாயிபாபா ட்ரஸ்ட்டின் மொத்த சொத்து 40.000 கோடி ரூபாயிலிருந்து 1,45,000 கோடி ரூபாய் வரைக்கும் இருக்கலாம் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதில் கூட சரியான கணக்கை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. போகட்டும். நாம் குத்து மதிப்பாக ஒரு இலட்சம் கோடி என்றே வைத்துக் கொள்வோம். இதில் சாயிபாபா செலவழித்தது எவ்வளவு? தண்ணி டேங்க் கட்ட 100 கோடி, மருத்தவமனைக்கு 100கோடி, கிருஷ்ணா நதிக்கு 100 கோடின்னு கொஞ்சம் கருணை உள்ளத்தோடு கணக்குபோட்டாலும் மொத்தம் ஆயிரம் கோடியைத் தாண்டவில்லை. எனில் மிச்சம் 99, 000 கோடி எங்கே யாரிடம் இருக்கிறது?

அது பிரச்சினையே இல்லை. தற்போது சாய்பாபா ட்ரஸ்ட்டை நிர்வகிக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் ஆதினத்தை கைப்பற்றும் போட்டி ஆரம்பித்து விட்டது. சூடு பிடிக்கும் போது இந்த ஆன்மீகக் கொள்ளையர்களின் கொள்ளையை புரிந்து கொள்ளலாம்.

அடுத்து சாய்பாபவின் பக்தராக இருப்பவருக்கு எதாவது தகுதி வைத்திருக்கிறார்களா? இல்லை. நன்கொடை கொடுக்கப்படும் பணத்தின் ரிஷிமூலத்தை ஆய்வு செய்து தணிக்கை செய்திருக்கிறார்களா? அதுவும் இல்லை.

அதாவது தொழிலில் மோசடி செய்து அபகரிக்கப்படும் பணம், கருப்புப்பணம், இலஞ்சம் பணம், ஊழல் பணம், இன்னபிற கொள்ளைப் பணங்களும், அதன் உரிமையாளர்களான ஃபிராடு பேர்வழிகளும் தாராளமாக சாயிபாபாவை சந்தித்தார்கள். நன்கொடையும் கொடுத்தார்கள். சாயிபாபாவும் அவர்களை பரந்த உள்ளத்தோடு ஏற்று, ஒரு இலட்சம் கோடியில் ஒரு சாம்ராஜ்ஜியத்தையும் கட்டிக் கொண்டார். இடையில் செக்ஸ் மோசடி, கொலை என்று எல்லா மர்மங்களும் கொண்ட திரில்லரில் மறைந்து விட்டு இன்று ஒரே அடியாக போய்ச் சேர்ந்தார். ஆக இந்த வள்ளலின் பின்னணி இதுதான் என்று தெரிந்தால் கைகூப்பி தொழுவீர்களா, காறித் துப்புவீர்களா?

தொடர்புடைய பதிவுகள்:

 

சாய்பாபா மரணம்: பக்தர்களுக்கு விடுதலை இல்லை!

சாய்பாபா மரணம்

சாய்பாபா மரணம்: பக்தர்களுக்கு விடுதலை இல்லை! -டாக்டர் ருத்ரன் உடைந்து போயிருப்பார்கள் பாவம். கடைசி நம்பிக்கையான உயிர்த்தெழுதல் நடக்கவில்லை, ஒரு விசை ஒரு வினாடியில் இயக்கத்தை நிறுத்திவிட்டது.

மற்றவர் சோகத்தில் ஆரவாரிக்கும் அநாகரிகம் எனக்கு இல்லை என்றாலும், இவர்களது கண்ணீரில் என் கண்கள் கலங்கவில்லை. ஆனாலும் இன்று புட்டபத்தி சாய்பாபா பக்தர்களுக்கு என் அனுதாபங்களைத் தெரிவிக்க விரும்புகிறேன்… இன்றைய மனிதனின் மரணத்திற்காக அல்ல, இதுவரைக்கும் மூடர்களாக இருந்த மக்களின் அறிவு மயக்கத்திற்காக.

பொதுவாக நம் நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியம் எல்லாம் ஓர் இழவு விழுந்தவுடன் அழுதுவிட்டு, பிணத்தை ஒழித்துவிட்டு, மூன்றாம், பத்தாம், பதினாறாம் நாளில் விருந்து தின்றுவிட்டு, அடுத்த வேலை பார்க்கப்போவதுதான். வசதியைப் பொருத்து ஓராண்டுக்குப் பின் ஒரு நினைவுநாள் கொண்டாட்டம் பத்திரிகை விளம்பரம்..

ஆனால் எவ்வளவு நெருக்கமானவரின் மரணத்துக்குப்பின்னும், எவரும் வாழ்க்கையை வாழாது விடுவதில்லை. மரணமும் யதார்த்தம் என்று மனத்தின் மூலையில் அறிவு சொல்லிக்கொண்டிருப்பதால்.
அறிவே பழுதாகும்போது மனம் சிதிலமடையும், உடையும், திசைதெரியாமல் தடுமாறும். இதனால்தான் பாபா பக்தர்களிடம் எனக்கு அனுதாபம் அதிகமாகிறது.

வித்தைகாட்டி மயக்கியவனை வித்தகன் என்று கூடச்சொல்லலாம், இறைவன் என்று சொல்ல ஆரம்பித்தால்? காசு வாங்கிக்கொண்டு யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் புகழ்ந்து திரியலாம், ஆனால் காசு கொடுத்து ஒருவனை கடவுள் என்று கூப்பாடு போட்டால்? இங்கேதான் அறிவின் மயக்கம். இங்கேதான் ஆபத்தும்.

எந்த அளவிற்கு தன்னம்பிக்கையிழந்து, தோல்வி வரும் என்ற பயத்தில், நம்மால் முடியாததை இவனாவது செய்வானா என்ற எதிர்பார்ப்பில் இவன்பின் இத்தனை சாதாரண மக்கள் அலைந்திருக்கிறார்கள்! இவன்மூலம் காரியம் சாதிக்கும் தொடர்புகளை விருத்தி செய்துகொள்ள வந்த வியாபாரிகள், இவனது பக்தகோடிகளையும் கவர்வதற்காக வந்து கொஞ்சிய அரசியல்வாதிகளை விட்டுவிட்டாலும், இவன்பின் நின்று நம்பிக்கிடந்தவர்கள் கோடிக்கணக்கானவர்கள். அவர்கள் மீதுதான் என் அனுதாபம்.

அவர்களெல்லாம் பாவம் தைரியம் இழந்தவர்கள், தடுமாறுபவர்கள் வாழ்க்கையில் உழைப்பும் முனைப்புமே வெற்றியைத்தரும் என்பது தெரியாதவர்கள், தன் காலில் நிற்கும் வலிமை இல்லாமல் தூண் தேடியவர்கள்!
அவர்களுக்காகப் பரிதாபப்படுகிறேன்.

தெய்வமே உயிரை இயந்திரங்களில் தொங்கவைத்திருந்த்து என்ற போதும் அந்த தெய்வத்திடம் தன்னையே உயிர்ப்பித்துகொள்ளும் சக்தி இருந்தது என்று நம்பி ஏமாந்தவர்களின் சோகத்திற்கு என்ன ஆறுதல் கூறுவது. அவர்கள் அழட்டும். கண்ணீர் விடட்டும். நம்பி ஏமாறுவதும் மனித இயல்புதான். ஆனால் துக்கத்தின் அளவு நீளமில்லை, extended grief  கூட ஆறுமாதத்திற்கு மேல் தீவிரமாய் இருக்காது. அவர்கள் மீண்டு விடுவார்கள், மரணத்தினை ஏற்று அதையும் தாண்டி வாழ்க்கையை வாழ்வார்கள். ஆனால்….

இதே பக்தர்களில் இரு பிரிவினர் உருவாக வாய்ப்புள்ளது. சிலர் செத்தால் என்ன சாமி அருவமாய் வந்து கூட இருக்கும் எனும் பிரமையில் வாழ்வைத் தொடர்வார்கள். பிறர், சரி இந்த ஒரு தெய்வம் செத்துப்போனாலும் இன்னும் புது தெய்வங்கள் இருக்கும் என்று தேடுவார்கள் –அவர்களுக்காக மீதி இருப்பவற்றுள் ஒன்று வசீகரிக்கும் அல்லது புதிதாய் ஒன்று முளைத்து கடைவிரிக்கும். இவர்களுக்கு இத்துடனாவது இந்த மடமையை விடலாமே என்று மட்டும் தோன்றாது.

இது நுகர்வு கலாச்சாரத்தின் காலகட்டம். ஒரு பொருள் காலாவதியானால் இன்னொன்று உருவாக்கி, விளம்பரப்படுத்தி விற்கப்படும். அதே பொருள்தானே, அப்போதே அது பயன்படவில்லையே என்று நிராகரிக்காமல் புதிய வடிவ-விளம்பரத்தில் விற்கப்படும் அதே வெட்டியானதை வாங்க இன்னும் மக்கள் முண்டியடிப்பார்கள். இவர்களுக்காக அனுதாபம் தெரிவிப்பதைத்தவிர்த்து நான் என்ன செய்ய முடியும்?வரிசையில் நிற்பார்கள், இந்த வரிசையில் செத்தபாபா பக்தர்கள் முன்வரிசைக்கு முண்டியடிப்பார்கள், அவர்களுக்கு அனுதாபம் தெரிவித்து விட்டு வேறென்ன என்னால் செய்ய முடியும்?

_________________________________________________________________________

டாக்டர் ருத்ரன்

__________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 

 

 

 

இப்படிக் கொண்டாடுவோம்.. லெனின் பிறந்த நாளை!

தூக்கம் போதாமல் கொதிக்கும் விழிச்சூட்டில்இப்படிக் கொண்டாடுவோம்.. லெனின் பிறந்த நாளை!
வியர்க்கும் முகம் துடைத்து,
அவசரமாய்… குளித்த தலைதுவட்ட நேரமின்றி
மின்சார ரயிலின் வாசல்படியோரம்
தலைசாய்த்து முடியுலர்த்திப் போகும்
உழைக்கும் பெண்ணே உனக்குத் தெரியுமா?
இன்று லெனின் பிறந்தநாள்!

ன் தலையில் பட்டு வியர்க்கும் சூரியன்
உன் விரல்கள் பட்டு இறுகும் செங்கல்
உன் மூச்சு பட்டு வளையும் கம்பிகள்
உன் உடலில் பட்டு ஆவியாகும் காற்று
உச்சி வெயிலை உழைப்பாய் மாற்றும்
கட்டிடத் தொழிலாளியே உனக்குத் தெரியுமா?
உழைப்பவர்க்கே அனைத்து அதிகாரம் என்பதை
நடைமுறைப்படுத்திய தோழர் லெனின் பிறந்தநாள் இன்று!

கிணற்றுத் தவளைக்கும்
நிலவோடு உறவுண்டு!
மழைக்காலத் தவளைக்கும்
வெளிக்காட்டக் குரலுண்டு!
கணிணித் தவளையாய் கட்டளைக்குத் தாவி
சம்பள ஓசையில் சகலமும் ஒடுங்கி
கசக்கிப் பிழியப்படும் ஐ.டி.துறை நண்பா…
உனக்குத் தெரியுமா?
பிடித்தமான அடிமைத்தனத்தில்
மக்களை வாழவிடாத புரட்சியாளர் லெனினின் பிறநதநாள் இன்று!

ழைத்து மகிழும் வெறும் பெயரல்ல,
உழைக்கும் வர்க்கம் தெரிந்து பின்பற்ற வேண்டிய கருத்து லெனின்.
உலகம் நன்றாய் இருக்க வேண்டும்
என்று ஒவ்வொருவரும் உபதேசித்துக் கொண்டிருந்தபோது,
இந்த உலகை உருவாக்கிய உழைப்பவர் நன்றாயிருக்க வேண்டும் என்று
நடைமுறைப்படுத்தினார் லெனின்.

ண்ணையே பெயர்க்கும் மழை
வேலி முட்களை முறிக்கும் சூறைக்காற்று
கண்களைக் குழப்பும் மின்னல்…
கண்களே திறந்தாலும் எங்கெனும் இருட்டு…
அழுத்தும் பாறை… ஆளுக்கொரு புலம்பல்
இத்தனைக்கும் மத்தியில் நம்பிக்கையுடன் தலைதூக்கும் ஒரு பசுந்தளிர்…
அதுதான் லெனின்…. அதுதான் லெனின்!

சுரண்டப்பட்ட தொழிலாளர் இதயமெங்கும்
ரத்தமாய் கலந்தார்…
எத்தனை முறை கைது செய்தாலும்
உழைக்கும் வர்க்க புரட்சி அலையில்
சித்தமாய் எழுந்தார்…
சிறைப்படுத்த முடியாத சிந்தனையாய்
லெனின் மக்களிடம் கலந்தார்…
வெற்றிடங்களை லெனின் விட்டு வைப்பதில்லை…
பாட்டாளி வர்க்கமாவது.. புரட்சியாவது… என
எள்ளி நகையாடிய எதிரிகளின் மூளையில்
‘பயங்கரமாய்’ நுழைந்தார்…

ன்ன செய்ய முடியும் உங்களால்?
கேட்டது முதலாளித்துவ வர்க்கம்..
என்ன செய்ய வேண்டும்?
விடையறுத்தார் லெனின்…
ரசிய பாட்டாளி வர்க்கமோ புரிந்து கொண்டது… புரட்சி வென்றது.

புரிந்து கொண்டோமா நாம்?
சைபீரியக் கடுங்குளிருக்கு நாடு கடத்திய போதும்
லெனின், தோழர்களின் புரட்சிக் கனல் குறையவில்லை,
சாதாரண ஏ.சி. அறை, பணிப் பாதுகாப்பில் வைக்கப்பட்டவுடனேயே
சடாரென வர்க்கச் சூடு இறங்கி விடுகிறது சிலருக்கு.

க்கள் மீது நம்பிக்கை வைத்து புரட்சியிலேயே இறங்கினார் லெனின்.
தன் மீது நம்பிக்கை வைத்து
ஒரு தெருமுனைக்கூட்டத்தில்  இறங்கவே நமக்குத் திகில்…
ஆசை மட்டும் போதாது…
ஆள்வைத்து புரட்சி செய்யவும் முடியாது…
அவரவரே அனுபவித்து போராடுதலே புரட்சியின் விதி.

புரட்சிக்கு லீவு போட்டுவிட்டு
பொழுதுக்கும் கூலி அடிமைத்தனத்துக்கு வேலை செய்வதா?
இல்லை.. கூலி அடிமைத்தனத்தை ஒழித்துக் கட்ட
கொஞ்சம்.. புரட்சிகர அமைப்பில் இறங்கிப் பார்ப்பதா?

சலாடும் மனங்கள் ஒரு முடிவுக்கு வர
லெனின் பிறந்தநாளை கொண்டாடுங்கள்…

_____________________________________________________

– துரை. சண்முகம்
_____________________________________________________

ன்று, ஒளி வருமெனக் காத்திருந்தோம்.

இருண்ட கண்டத்தின்
கடைக் கோடியில்
கேட்பாரற்றுக் கிடந்த
சோகை படிந்த சிற்றூர்.

இங்கு
இதற்கு
இன்றுதான்
முதன் முதலாய்
ஒளி வரும் என்றார்கள்!

பனிச் சாரல் சடசடக்க
கண்ணாடிச் சன்னல் தடதடக்க
கருப்படர்ந்த இரவின் ஊடாக
வெளியில் பார்வையை
உலவ விட்டுக் காத்திருந்தோம்;
இருளில் வழி சொல்லும்
ஒளிக்காக.

இன்றுதான்
முதன் முதலாய்
ஒளி வரும்
என்றார்கள்.
அந்த ஒளியோடு
ஒரு சேதியும் வருமென்றார்கள்!

எங்கள்
பசிக்கான உணவு
குறைக்கப்பட்டிருந்தது.
எங்கள்
உழைப்பின் கூலி
சுறண்டப்பட்டிருந்தது.
ஜமுக்காளத்துக் கிழிசலில்
ஊதைக் காற்றுப் புகுந்து
உயிர்க் குலையும் சில்லிட்டது.

ஏமாற்றம் தந்த
பாலற்ற முலைக்காம்பால்
நிறுத்தாமல் விசும்பின
பச்சிளங் குழந்தைகள்.
வயது முகவரி எழுதிய
வரிகளின் சுருக்கத்தோடு
ஏதாவது உண்ணக்கேட்டு
ஏக்கத்தோடே கை நீட்டி
எங்களையே பார்த்திருந்தது
எங்கள் மூதாதைக் கூட்டம்.
யாவரும்தான் காத்திருந்தோம்.
தினவெடுத்த தோளோடும்
விலிசுமந்த இதயத்தோடும்
இளைஞர்களும் பெண்களும்
கால் கடுக்கக் காத்திருந்தோம்!

எங்கள் யாவரையும்
ஒன்று சேர்ந்திருக்கச் சொல்லி
சேதி வருமென்றார்கள்.
வருகின்ற ஒளியின் ஊடாய்
வானுயரக் கரமுயர்த்தி
விண்ணதிரக் கோஷமிட்டு
ஆர்ப்பரிக்கும் கூட்டத்துள்
குவிந்துவிடச் சொன்னார்கள்.
காத்திருந்தோம்.

செக்கர் சூரியன்;
உடலின் உழைப்பு;
கரங்களில் கருவி;
இவைகளின் வேதி மாற்றத்தால்
சுரக்கும் வியர்வை.

வியர்வை விழுந்தால்
விளையும் கதிர்.
வளையும் இரும்பு.
உழைப்பு எமது.
எனில்;
அதன் வினையும் எமதன்றோ?

வியர்வையின் வினை
மறுக்கப்பட்டுவிட்டதால்
இந்த இருளில்தான்
நாங்கள்
இருந்து கொண்டேயிருந்தோம்.
பழக்கப் பட்டுப்போன
இருளுக்கு மாற்றுத் தேடித்தான்
இங்கே காத்திருந்தோம்.

இங்கு
இதற்கு
இன்றுதான்
முதன் முதலாய்
ஒளி வரும் என்றார்கள்.

அதோ
வந்துவிட்டது.
வந்தேவிட்டது.
இல்யீச் விளக்கு!
அதன் ஒளிக்கதிரில்
அனைவரும் துள்ளினோம்.
வந்தேவிட்டது
இல்யீச் விளக்கு!

அப்போது எங்களுள்
கூடவே குந்திக்கோண்டிருந்த
பேதமை, மடமை,
ஐயம், மதம்,
கூச்சம், அச்சம்,
அத்தனையும் துணுக்குற்று
இருளில் சிதறியோடியதை
நாங்கள் காணுற்றோம்.

ஒளி சொன்ன சேதியில்,
வந்துதித்த ஒளியினூடாய்,
வானுயரக் கரமுயர்த்தி,
விண்ணதிரக் கோஷமிட்டு,
ஆர்ப்பரிக்கும் கூட்டத்துள்
குவிந்து செயல்பட்டோம்;
குவியல் குவியலாய்.
எங்கள் பின்னால்
எங்களுக்காக,
ஒரு தாயும்கூட நடந்து வந்தாள்.
அப்பக்கூடை தலை சுமக்க!

வினையின் வினையறுக்க
வீர நடையிட்டோம்.
கரத்தில் கரங் கோர்த்து,
நெஞ்சில் உறமிருத்தி,
மண்ணில் குருதி பாய்ச்சி,
நிலம் அதிர நடையிட்டோம்.
அடித்து விரட்டப்பட்டதால்
அரண்மனைக் குகையிலிருந்து
புறமுதுகிட்டோடின
நரித்தோல் உடல்கள்.

பின்,
நாங்கள் வென்றோம்.
வென்ற பின்,
எம் வியர்வை எமதானது;
விளைக் கதிரும் எமதானது;
வளையும் இரும்பு எமதானது;
உழைப்பு எமதானது;
எனில் –
அதன் வினையும் எமதேயானது!
வினை தூண்டியது
இல்யீச் விளக்கு!

நன்றி
விளாதிமிர் இல்யீச் உல்யானோவ்!
உனது பிறப்புக்கும்;
உனது போதனைகளுக்கும்;
உனது வழிகாட்டுதலுக்கும்;
உனது இல்யீச் விளக்குக்கும்!

உனது விரல் நீட்டிய திசையில்
கணக்கிலடங்கா இல்யீச் விளக்குகள்
உதித்துக்கொண்டேயிருக்கும்;
ஒளிர்ந்துகொண்டேயிருக்கும்.
எமை நம்பு
எமதருமை இல்யீச்…!

_____________________________________________________

– புதிய பாமரன்
_____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

அந்தத் ‘தாயை’ சந்திக்க விரும்புகிறீர்களா?

ங்கள் அம்மா பழமையான எண்ணங்களை விடுத்து புதுமையாக இருக்கவேண்டுமென்று எண்ணியிருக்கிறீர்களா?உங்கள் அம்மா வசதியாக சல்வார் அணிந்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணியிருக்கிறீர்களா?  ‘எதுக்கு இவ்ளோ கஷ்டபடறீங்க இந்த  நீளமுடிய வைச்சுக்கிட்டு, கட் பண்ணுங்க‌’ என்று சொல்லியிருக்கிறீர்களா? ‘யாராவது ஏதாவது சொல்வார்கள்’ என்பதற்காக சிரமம் கொடுத்தாலும் தலைமுடியை குறைக்காமல் இருப்பவரா உங்கள் அம்மா?

அப்படியானால், உங்களுக்கும் எனக்கும் ஒற்றுமை இருக்கிறது.

பெரியம்மாவும்,  அம்மாவும் மாடர்னாக இருக்கவேண்டும் என்று நானும் ஆசைப்பட்டிருக்கிறேன்.  பெரியம்மா பொட்டு வைத்துக்கொள்ள வேண்டுமென்று விரும்பியிருக்கிறேன்.  நான் சைக்கிள் ஓட்டும் வயதில், அவர்கள் இருவரும் சைக்கிள் ஓட்டவேண்டுமென்றும், ஸ்கூட்டி ஓட்டியபோது அவர்களும் ஸ்கூட்டி ஓட்டவேண்டுமென்றும் சண்டை போட்டிருக்கிறேன். எட்டாவது படிக்கும்போது ‘சைக்கிள் ஓட்டுங்க’ என்று அம்மாவை நானும் குட்டியும் விழ வைத்து முழங்கையில் காயம் வர வைத்திருக்கிறோம்.

‘டீச்சர்னா கொண்டைதான் போடணுமா, குட்டி முடிலே கூட க்ரோக்கடைல் க்ளிப் வைச்சு கொண்டை போடலாம்’ என்றெல்லாம் முடியை வெட்ட ஐடியா செய்திருக்கிறேன். ‘ரிடையர் ஆகிட்டு என்கூடதானே இருப்பீங்க, அப்போ நான் சொல்றதைதான் கேக்கணும்’ என்று  அதிகாரம் செய்திருக்கிறேன்.

பெரியம்மா, எண்ணத்தில் எனது நண்பர்களின் அம்மாக்களைவிட, முற்போக்காக இருந்தாலும், தோற்றத்தில் பழமையானவரே. எந்த சமூகக் கட்டுபாடுகளையும், அதன் நிழல் கூட என்மேல் படாமல் வளர்த்த பெரியம்மா , நான் கல்லூரி முடிக்கும் தருவாயில்தான் பொட்டிடவும், தலைமுடியை சிறிதாவது வெட்டவும் முன்வந்தார். ஏனெனில், அப்போது அவர் 45 வயதை தாண்டியிருந்தார். ‘வயசுக்கு வந்த பொண்ணு இருக்கு, இந்த அம்மா இப்படி ட்ரெஸ் பண்ணிக்குது’ என்று அந்த வயசுக்கு, இதற்கு மேல் எந்த சமூகமும்  எதுவும் சொல்லவிட முடியாதில்லையா!

தோற்றத்திற்கே, அதுவும் இந்த இருபத்தியொன்றாம் நூற்றாண்டு பெண்மணிக்கே இவ்வளவு  குழப்பங்கள் என்றால்….கடந்த நூற்றாண்டின் பெலகேயா நீலவ்னாவுக்கு எவ்வளவு உள்மனப் போராட்ட்ங்கள், குழப்பங்கள் இருந்திருக்கவேண்டும்?  ஒரு புரட்சியாளரின் தாயாக அவர் தன்னை எத்தனை மாற்றிக் கொண்டிருந்திருக்க வேண்டும்?ஒவ்வொன்றையும் மாற்றிக்கொள்ள எவ்வளவு கடந்து வந்திருக்க வேண்டும்? அந்த வலிநிறைந்த… இல்லை, பழமையை உதறிய வலிமை நிறைந்த போராட்டத் தருணங்களை, உணர்ச்சி ததும்பும் கதை சொல்லல் மூலம் நம்மையும் அந்த காலத்திற்குள் கொண்டு செல்கிறது மாக்சிம் கார்க்கியின் “தாய்” நாவல்.

கார்க்கியின் தாய்
மக்சிம் கார்க்கி

கல்லூரி காலத்தில் ரயில் பயணத்திற்கு வழித்துணையாக வீட்டிலிருந்த ‘தி மதர்’  நாவலை எடுத்து வாசித்திருந்தாலும் முதல் ஒன்பது அத்தியாயங்களுக்கு மேல் தாண்ட முடியவில்லை. அப்போது தாய் நாவலை என்னால் முழுமையாக ஏன் வாசிக்க முடியவில்லை என்று யோசித்து பார்க்கிறேன். அன்றைய இரசிய சமூகத்தின் கொந்தளிப்பான காலத்தைப் போன்றது இல்லை நம் சூழல். கட்டுப் பெட்டியாக மட்டுமே வாழ சபிக்கப்பட்டிருக்கும் தமிழ் சமூகத்தில் ஒரு இளம்பெண் தாய் நாவல் படிப்பதற்கான மன எழுச்சி இங்கே இருக்காதோ?

தற்போது, ‘தாயை’தமிழில் வாசித்தேன். அநேகமாக நாவல் முழுவதும் உண்மையாக நடந்தவையாகவே இருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. அல்லது அந்த காலத்தின் வரலாற்றுணர்வை மாக்சிக் கார்க்கி தனது கலைப் பார்வையின் மூலம் மிகவும் நெருங்கியிருக்கலாமென்றும் தோன்றுகிறது.

பாவெல் எனும் புரட்சியாளரின் தாய் நீலவ்னா கொஞ்சம் கொஞ்சமாக தன் நிலையிலிருந்து எப்படி தனது மகனின் கருத்துகளால் ஈர்க்கப்படுகிறாள்,  உண்மையை புரிந்து கொள்கிறாள்,  புரட்சியாளர்களுக்கு உதவ உத்வேகம் கொள்கிறாள், தனது வாழ்க்கையின் உண்மையான மகிழ்ச்சியை எப்படி கண்டடைகிறாள் என்பதை உணர்வு பொங்க சொல்லுவதோடு நம்மையும் அந்த தாயோடு பயணிக்க வைக்கிறது நாவல்.

ஒரு ஆலைகுடியிருப்பிலிருந்து ஆரம்பிக்கிறது பெலகேயா நீலவ்னாவின் கதை. புகைபோக்கிகளுடனும், தொழிலாளிகளை குறித்த நேரத்தில் வர ஆணையிடும் சங்குடனும் கம்பீரமாக நிற்கும் அத்தொழிற்சாலை அப்பகுதி மக்களை  நாள்முழுதும் சக்கையாக உறிஞ்சியெடுக்கிறது. அவர்களது வாழ்க்கையில் குறிப்பாக ஆண்களது சந்தோஷம் என்பது குடிப்பதும் சண்டையிடுவதுமே. நீலவ்னாவின் கணவனும் இதற்கு விதிவிலக்கல்ல. கிட்டதட்ட இருபது வருடங்கள்  கணவனிடம் அடியும் உதையும் வாங்கியே அவளது இளமைக்காலம் கழிந்துவிடுகிறது. அவளது கணவன் இறந்துவிட, நீலவ்னாவின் மகன் பாவெலும் அதே ஆலையில் வேலைக்குச் சேர்கிறான்.

பாவெலுக்குச் சில தோழர்களுடன் பரிச்சயம் ஏற்படுகிறது. அவனுக்குள் மாற்றங்கள் உண்டாகிறது. ஒரு தொழிலாளி கிட்டதட்ட முப்பது வருடங்கள் உழைத்து கண்ட பலன் ஒன்றுமில்லை, ஆலைதான் வளர்ச்சியடைகிறதே தவிர அவர்களது வாழ்க்கையில் கிஞ்சித்தும் மாறுதல் ஏற்படவில்லை, தமது அடிமை நிலையிலிருந்து விடுவித்துக் கொள்ள வேண்டுமென்றால் தொழிலாளிகள் இறுக்கமாக இணைவதே இதற்கு விடை என்பதை உணர்ந்துக்கொள்கிறான். நிறைய புத்தகங்களை வாசிக்கிறான். அவனோடு இன்னும் பல தோழர்கள் வீட்டிற்கு வருகிறார்கள். ஒன்றாக வாசிக்கிறார்கள். தங்களுக்குள் விவாதிக்கிறார்கள்.

பெலெகேயா நீலவ்னா இவை அனைத்தையும் பார்க்கிறாள். அவர்கள் பேசுவதைக் கேட்கிறாள். அதில் இருக்கும் நியாயத்தை உணர்ந்து கொள்கிறாள். தனது கடந்த கால வாழ்க்கையையும் அவளது தோழிகளின் வாழ்க்கையையும் நினைத்துப் பார்க்கிறாள். பாவெல் பேசுவதைக் குறித்து மகிழ்ச்சியும் புத்துணர்ச்சியை அடைந்தாலும் தனது மகனின் பாதுகாப்புக் குறித்து கலக்கமடைகிறாள். ஏனெனில், பாவெல் படிப்பது அத்தனையும் தடை செய்யப்பட்ட புத்தகங்கள். அவை தொழிலாளிகளின் உண்மை நிலையைப் பேசுவதோடு அந்த நிலைமைய மாற்றுவதற்கான வழியையும் போதிக்கின்றன.

சிறிது சிறிதாக பாவெலின் வீட்டில் கூட்டம் அதிகரிக்கிறது. எங்கிருந்துதான் மனிதர்கள் வருகிறார்களோ தெரியாது, குறித்த நேரத்திற்கு வந்துவிடுவார்கள். அவர்களுக்கு தேநீர் வைத்துக் கொடுப்பதும், வெந்நீர் கொடுப்பதும் அவர்கள் பேசுவதை கேட்பதுமே தாய்க்கு ஆனந்தம். தாயாலும் அவர்களைப் போல வாசிக்க முடிந்தால்…..பாவெலில் நண்பர் அந்திரேய் மூலமாக வாசிக்கக் கற்றுக்கொள்கிறாள் அந்தத் தாய்.

இதன் நடுவில், வீடு போலிசாரால் சோதனையிடப்படுகிறது. பாவெலின் நண்பரை கைது செய்து கொண்டு செல்கிறார்கள். இது தாயை அதிர்ச்சிகுள்ளாக்குகிறது. ஆனாலும், தொழிற்சாலைக்குள் பிரசுரங்கள் பரவுவதை யாராலும் தவிர்க்க முடியவில்லை. தொழிலாளிர்களிடையே பேசிய பேச்சுக்காக போலீஸ் பாவெலை கைது செய்கிறது. தாய்க்கு கதறியழ வேண்டும் போலிருக்கிறது. ஆனால், அமைதியாக ஏற்றுக்கொள்கிறாள்.  கொஞ்சம் கொஞ்சமாக தானே பிரயத்தனப்பட்டு புத்தகங்களை வாசிக்கிறாள். பாவெலின் நண்பர்களுக்கு பிரசுரங்களை ஆலைக்குள் தொழிலாளிகளிடையே தொடர்ந்து விநியோகிப்பது எப்படியென்று தெரியவில்லை.

தாய் இவ்வேலையை செய்ய முன்வருகிறாள். ஒருவேளை விநியோகிப்பது நின்று விட்டால்  செய்தது பாவெல்தான் என்று நிரூபணமாகிவிடும். இதற்கு ஒரேவழி, பிரசுரங்கள் தொடர்ந்து ஆலைக்குள் தொழிலாளிகளுக்குக் கிடைக்கச் செய்வதுதான் என்று நண்பர்கள் பேசுவதைக் கேட்டதும் அவள் அவ்வேலையை செய்வதாக முன்வருகிறாள்.

ஆப்பம் விற்கும் பெண்ணுடன் உதவி செய்பவராக தொழிற்சாலைக்குள் செல்கிறாள் தாய். பிரசுரங்கள் தொழிலாளிகளின் கைகளை அடைகின்றன.

இதில் தாய்க்கு பெரிதும் மகிழ்ச்சி. தனது மகனிடம் இதைப் பற்றி உடனே சொல்லவேண்டும் என்றும் அவன் இதை அறிந்தால் எவ்வளவு மகிழ்ச்சியடைவான் என்றும் எண்ணுகிறாள். இரவுகளில் உறங்கப் போகும் முன் இயேசுவிடம் இந்தக் குழந்தைகளுக்காக பிரார்த்தனை செய்யவும் தயங்குவதில்லை. கொஞ்சம் கொஞ்சமாக தாய் தனது மகனின் புதிய மார்க்கத்திலிருக்கும் உண்மையை அறிந்துக்கொள்கிறாள். அதுவே சத்தியம் என்றும் உழைக்கும் மக்கள் அனைவரும் இதனை உணர்ந்துக்கொள்ள வேண்டும் என்றும் எண்ணுகிறாள். பாவெலும் சிறையிலிருந்து வந்துவிடுகிறான்.

மேநாள் நெருங்குகிறது.

கார்க்கியின் தாய்
'தாய்' திரைப்படத்திலிருந்து

மேநாள் பேரணிக்கான வேலைகள் நடக்கின்றன. மகனின் மேலுள்ள  பாசத்தினால் தாய்க்கு அழுகை முட்டுகிறது. ஏனெனில், பேரணியை தலைமை தாங்கி நடத்தப் போவது பாவெல். போலிஸ் சிறைக்கு அனுப்பினாலும் அனுப்பலாம். தாயால் சிலநேரங்களில் ஒரு தாயாக நடந்துக்கொள்வதை தவிர்க்க முடிவதில்லை. ஆனாலும், தாங்கிக் கொள்கிறாள்.

பெரும் எழுச்சியுடன் மேநாள் பேரணி நடக்கிறது. பெரும் கூட்டம் திரள்கிறது. தாயால் பாவெல் அருகில் கூட நெருங்க முடியவில்லை. ஆனால், பாவெல் தனது மகன் என்று தாயின் மனம் மகிழ்ச்சி கொள்கிறது. பேரணியில் பாவெல் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்படுவதோடு முதல் பாகம் முடிகிறது.

இரண்டாவது பாகத்தில், தாய் ஒரு புரட்சியாளராக பரிணமிப்பதும், நாட்டின் பல பகுதிகளுக்கு பயணம் சென்று பிரசுரங்களை சேர்ப்பிப்பதும், தனது மகனைப் போல பல புரட்சியாளர்களைச் சந்திப்பதும்  உணர்வுமிக்க வகையில் விவரிக்கப்படுகிறது. உழைக்கும் மக்களும்,விவசாயிகளும் ஒன்று சேர்ந்தால்தான் முதலாளித்துவத்தை ஒழிக்க முடியும் என்றும் அதில்தான் மக்களின் விடுதலை இருக்கிறது என்றும் தாய் உண்ர்ந்துக்கொள்கிறாள். புதிது புதிதாக மனிதர்களைச் சந்திக்கிறாள். ஆரம்பத்தில் அவளுக்கு ஏற்படும் தயக்கங்களும், அவர்களுடன் நட்பு கொள்வதும் மிக இயல்பாக எழுதப்பட்டிருக்கிறது.

வாசிக்கும் நமக்கு, அநேக இடங்களில் உணர்ச்சிப் பெருக்கால் கண்களில் நீர் கோர்த்துக்கொள்கிறது.  மக்களின் விடுதலைக்காக தங்கள் இன்னுயிரையும் ஈந்த அநேக இளைஞர்கள்……புதிய உலகை கனவு கண்ட இளைஞர்கள்….

வாசித்துக்கொண்டிருந்தபோது, ஒரு கணத்தில்,  நானும் அந்தத் தாயைப் போல இருக்க மாட்டோமா என்ற ஆசை தோன்றியது. ஏனெனில், இதுநாள் வரை வாழ்ந்து வந்த வாழ்க்கையின் பிழைப்புவாதம் பின்னோக்கி இழுக்க, முற்றிலும் புதுமையான சத்தியமான கருத்துகள் நம்மை முன்னோக்கிச் இழுக்க நமக்குள் நடைபெறும் ஒரு சிறு போராட்டத்தைத்தான் தாயும்  பிரதிபலிப்பதாகத் தோன்றியது. அந்த போராட்டத்தை வாழாமல் நாமும் தாயின் உணர்வை அடைய முடியாது என்றே தோன்றுகிறது.

இவை நடுவில்,  அந்தத் தோழர்களுக்கிடையிலான வாழ்க்கை முறை, அவர்களுக்கிடையிலான காதல், இசை எல்லாம் வெகு இயல்பாக வந்து செல்கிறது. உடல்நிலை சரியில்லாத ஒரு தோழரின் மரணம், அதன் பாதிப்புகள், உழைத்து ஓடாய் தேய்ந்த மனிதனின் வாயிலிருந்து வரும் வார்த்தைகள்,  தாய் ட்ரங்கு பெட்டியில் பிரசுரங்களை கிராமம் கிராமமாக எடுத்துச் சென்று முஜீக்குகளிடம் சேர்ப்பது, தாயை அவர்கள் இனம் கண்டுக்கொள்வது என்று இரண்டாம் பாகம் முழுக்க தாயின் புரட்சிக்கான பயணம் கண்முன் விரிகிறது. இவை நிச்சயம் உண்மை நிகழ்ச்சிகளாகத்தான் நடந்தேறியிருக்க வேண்டும்.

ஆச்சரியப்படுத்தியதென்னவெனில், மக்களனைவரும் பிரசுரங்களை வாசிக்க ஆர்வமாக இருப்பதும், பிரசுரங்கள் கிடைக்காதாவென்று ஏங்குவதும் படிப்பறிவில்லாதவர்களும் கூட தங்களின் அவல நிலைக்கான  உண்மைக் காரணத்தை  அறிந்துக்கொள்ள விரும்புவதும்,  புரட்சிதான்  தீர்வென்று நம்புவதும்தான்.

இன்று நாம் அந்நூற்றாண்டு மக்களைப் போல இல்லை. பலவகைகளில் முன்னே வந்துவிட்டோம். ஆனாலும், அவர்களை போன்ற சிந்தனைகளோ அல்லது சமூகமயமான  தீர்வுகளை நோக்கியோ செல்லாமல் போராட்டக் குணத்தை இழந்து நிற்கிறோம்.

ஒருவேளை பாவெலும்,அவனது நண்பர்களும்,  தாயும் சேர்ந்து கஷ்டபடுபவர்களுக்கு  உணவு கொடுத்தோ அல்லது செருப்பில்லாமல் கஷ்டபடுபவர்க்ளுக்கு செருப்பு வாங்கித் தந்தோ, வேலை வாங்கித்தந்தோ தங்கள் தொண்டுள்ளத்தை நிரூபித்திருக்கலாம். ஒன்றிரண்டு மாதங்களிலோ வருடங்களிலோ அந்த தொண்டும் அணைந்து போயிருக்கும். ஆனால், எதற்கும் சமரசப்படுத்திக்கொள்ளாமல்  மனிதகுல  விடுதலைதான் சமூகமயமான தீர்வு என்று ஏன் தங்கள் வாழ்வையே அர்ப்பணிக்க‌ வேண்டும்?எத்தனையோ ஆபத்துகள் இருப்பது தெரிந்தாலும் அச்செயல்களில் ஏன் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்?

இன்றும் கூட, எண்ணற்ற தோழர்கள் கொள்கை மீது கொண்ட பற்றால்  மனிதகுல விடுதலைக்காக  வாழ்க்கையை முழுவதுமாக அர்ப்பணித்திருக்கிறார்கள். கைது செய்யப்படுவோம் என்று தெரிந்தும் கூட, சற்றும் அஞ்சாமல், சாதிய அடக்குமுறையை எதிர்த்து, அரசாங்கத்தை எதிர்த்து வீதியில் இறங்கி போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள். நாம் வசதி என்று கருதும் அனைத்தையும் அற்பமாக எண்ணி  உதறி தள்ளியிருக்கிறார்கள்.ஆனால் ஹார்வார்டுகளிலும், ஆக்ஸ்போர்டுகளிலும் படித்து வந்த  டாக்டரேட் மேதைகளோ நம்மை சுரண்டுகிறார்கள். நமது உயிரை பணயம் வைக்கிறார்கள். பள்ளியை/கல்லூரியைத் தாண்டாத தோழர்கள், அல்லது அப்படி படித்திருந்தும் அதை தூக்கியெறிந்துதானே சமூகத்திற்காக/நமக்காகக் குரல் கொடுக்கிறார்கள்?

ஆனால், நம்மில் எத்தனை பேர் இதனை உணர்ந்திருக்கிறோம்? ஒன்றிரண்டு பேர்களுக்கு நம்மாலானதை பிச்சையிடுவதைப் போல செய்துவிட்டு தானப்பிரபு பட்டம் கட்டிக்கொள்கிறோம். புரட்சி செய்துவிட்டதைப் போல இறுமாந்து போகிறோம். நாம் சுயநலவாதிகளாக இருந்து கொண்டு, அந்த சுயநலத்திற்கும் காரணம் காட்டிக்கொண்டு தோழர்களை பிழைக்கத் தெரியாதவர்களென்றும்,  ஆக்கப்பூர்வமாக எதையும் செய்யவில்லையென்றும் அவர்களை இழிவுபடுத்தியத்தைத் தவிர வேறு என்ன?

தாயின் உலகில் ஊக்கத்துடன் பயணம் செல்லுங்கள். புதிய மனிதானாகவும், வாழ்க்கையின் பொருளை உணர்ந்தவராகவும் திரும்புவீர்கள்.

புத்தகம் : தாய், ஆசிரியர்- மாக்சிம் கார்க்கி, NCBH வெளியீடு, விலை : ரூ 200

நூல் கிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம்,10, அவுலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002. தொலைபேசி: 044-2841 2367

_____________________________________________________

– சந்தனமுல்லை
_____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

ஒமர் கய்யாமுக்கு…. கொலை செய்த நாட்டிலிருந்து ஒரு கடிதம்!

ஒமர் கய்யாமுக்கு….கொலை செய்த நாட்டிலிருந்து ஒரு கடிதம்!
இந்திய இராணுவத்தால் கொலை செய்யப்பட்ட சிறுவர்கள் சிலர்....

 

ஒமர் கய்யாம் பட்,

இந்த கடிதத்தை உனக்காக எழுதுகிறேன். உனக்கு என்னைத் தெரியாது. ஆனால், சில மாதங்களாக உன்னை எனக்குத் தெரியும். சில நாட்களாக உன்னைப் பற்றிய நினைவுகளும்….துஃபைலும், ஜூபைரும் மற்றும் வாமிக், ஜாவீத்…இனாயத் மற்றும் உன்னோடு கூட, இறந்துபோன இன்னும் சிலரது நினைவுகளும்… ஆமாம், நீ இறந்துவிட்டாய், ஒமர். இல்லையில்லை.. கொல்லப்பட்டாய்….

சில மாதங்களுக்கு முன்புதான் – கடையை மூடியிருந்த ஷட்டரின் மீது தலையை மோதியடிக்கப்பட்டு மயக்கமானாய். பின்னர் காவல்நிலையத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டாய். காவல்துறையினராலும், சிஆர்பிஎஃப் போலீசினாலும் பந்தாடப்பட்டு, கிட்டதட்ட 51 மணிநேர சித்திரவதைக்குப் பிறகு நீ இறந்து போனாய். இறக்கும்போது உனக்கு17 வயதுதான். பதினொன்றாவது வகுப்பைக் கூட தாண்டியிருக்கவில்லை நீ, ஒமர்.

உனது இறப்பு காஷ்மீரைத் தாண்டி வசிப்பவர்களுக்கு பத்தோடு பதினொன்று நூற்றுக்கணக்கில் இறந்துபோனவர்களுள் நீயும் ஒரு ஆள்.

அந்த வெள்ளிக்கிழமை, மசூதியில் பிரார்த்தனை செய்துவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தாய். உனக்குச் சில மீட்டர்கள் முன்னால் சென்று கொண்டிருந்த மக்களை பின் தொடர்ந்து நீயும் சென்றாய். அவ்வளவுதான். காவல்துறையினரும், சிஆர்பிஎஃப்பும் சூழ்ந்து கொண்டு தடிகளால் உன்னைத் தாக்கினார்கள். அடிகளாலும் உதைகளாலும் உன்னை மூர்க்கமாய் கிழித்தெறிந்தார்கள்.

உன்னுடைய தந்தை கய்யாம், ஜெயிலில் நீ கழித்த கடைசி மணித்துளிகளை – மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது நீ சொன்ன வார்த்தைகளை நினைவுகூர்கிறார், ஒமர்.

நீ உயிருடன் இருந்த அந்த கடைசி நிமிடங்களில் என்ன நினைத்தாய், ஒமர்?

ஏன் உனக்கு அது நிகழ்ந்திருக்க வேண்டும்? எனக்கும் தெரியவில்லை.
நீ ஏன் அவ்வளவு கொடூரமாக மரணத்தை நோக்கி துரத்தப்பட்டாயென்று? சில நிமிடங்களில் உன் வாழ்க்கை சின்னாபின்னமாக்கப்பட்டதென்று? உன் தந்தையிடமிருந்தும் உன் மூன்று தமக்கைகளின் வாழ்விலிருந்தும் நீ ஏன் இப்படி அபாண்டமாக பறிக்கப்படவேண்டும்?

ஒமர், நீ யார் மீதும் கல்லெறியவில்லை. கோஷமிட்டுச் சென்றவர்களின் பின்னால் நீ சென்றாய், அவ்வளவுதான். உனது மரண ஊர்வலத்தில் ஆண்களும் பெண்களும் மாரடித்து கதறியபடி சென்ற கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

உனது நண்பர்கள் சில்லிட்டுப்போன உன்னுடலை மாறி மாறி சுமந்தனர். உன் மரணம் அவர்களது ஆத்திரத்தைக் கிளறியது. ஒவ்வொரு படுகொலையும் போராட்டத்தை தட்டியெழுப்புகிறது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த வந்த காவல்துறையினரை நோக்கி கல்லெறியத் தூண்டியது. உன்னுடலை புதைக்குமட்டும் அமைதியாயிருக்கும்படி மன்றாடிய பெரியவர்களுக்காக கண்களில் நீர் வழிய அந்தக் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டனர், அந்த இளைஞர்கள்.

ஆனாலும் நீ கேட்கலாம், உமர்….ஏன் எங்களுக்கு மட்டும் இப்படி? ஏன் எங்கள் பெண்களுக்கு மட்டும் இப்படி? எதற்காக நாங்கள் இவ்வளவு அடக்குமுறைகளை அனுபவிக்க வேண்டும்? எதற்காக அப்பாவி மக்களை கொலை செய்ய வேண்டும்? எதற்காக எங்களது அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படவேண்டும்?

கேள்விகள் நன்றாகத்தான் இருக்கின்றன, ஒமர்!
இந்த நாட்டில் பலர், அதிகாரம் கொண்ட சிலர் காஷ்மீர்தான் இந்தியாவின் தேசிய ஒருமைப்பாடு என்றும், அங்கிருக்கும் ஐந்து வயதுக்குழந்தை கூட தீவிரவாதி என்றும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இதைக் கேட்டு நீ நகைக்கிறாய்தானே, ஒமர். புரிந்து கொள்ளமுடிகிறது.

இதோ, இப்போது உன்னைப் போல பலரும் பலியிடப்பட்ட பின்னர் இரும்புக் கரங்களின் மூலம் அமைதி திரும்பியிருப்பதாகச் சொல்கிறார்கள்.. எல்லோரும் தேசபக்தியை, ஒற்றுமையை உலகுக்கு உணர்த்த இந்தியாவுக்காக கிரிக்கெட் பார்க்கத் துவங்கிவிட்டார்கள். தேசநலன் என்பதும் மக்களின் நலன் என்பதும் பிசிசிஐயின் குழுக்கள் விளையாடும் கிரிக்கெட் பந்தில்தான் உள்ளதே தவிர அரசியல் ஆர்ப்பாட்டங்களில் அல்ல என்றே நினைக்கிறார்கள்.

இலட்சக்கணக்கான போலீசையும் ராணுவத்தையும் குவித்துவிட்டு பழைய நிலைமை திரும்பியிருப்பதாக கூறிக்கொள்கிறது அரசு. விடுதலையைக் கேட்கும் மக்களிடம் இப்படித்தான் நடந்து கொள்கிறது அதிகார வர்க்கம்.

ஜம்மு மற்றும் காஷ்மீரிலிருந்து வரவழைக்கப்பட்ட 44 மாணவர்களிடம் ப,சிதம்பரம் ”முன்னேற்றம் தேவையெனில் அமைதி மிகவும் முக்கியம்” என்று அறிவுறுத்துகிறார், நாட்டின் மற்ற பாகங்களுக்கு கிடைக்கும் எல்லா வசதி வாய்ப்புகளும், முன்னேற்றத் திட்டங்களும் காஷ்மீர் மக்களுக்கும் கிடைக்க வேண்டுமெனில் அங்கு அமைதி நிலவுவது மிகவும் முக்கியம் என்று அவர்களிடம் அழுத்திச் சொல்லுகிறார்.

நாட்டின் மறுகாலனியாக்கத்திற்கு உங்கள் விடுதலை உணர்வும், சுயநிர்ணய உரிமைகளும் நல்லதல்லவே!

எது வசதி வாய்ப்பு? எது முன்னேற்றம்?

நாட்டின் அத்தனை வளங்களையும் பட்டா போட்டு பன்னாட்டு முதலாளிகளுக்கு விற்பதுதான் முன்னேற்றமா? பழங்குடி மக்களை அடக்கி ஒடுக்குவதுதான் வசதி வாய்ப்பா? இந்திய ஜனநாயகம் என்றும் இறையாண்மை என்றும் சொல்லிக் கொள்வதற்கு அர்த்தம்தான் என்ன?

மிலே சுர் மேரா துமாரா என்றும் ஹம் சப் ஏக் ஹென் என்றும் பாடல்களை சொல்லித் தருகிறார்களே, அவையெல்லாம் உண்மையில் என்ன? உரிமைக்கான ஒவ்வொரு போராட்டமும் நசுக்கப்பட்டு, துப்பாக்கியின் முனையில் அன்றாட வாழ்க்கையை கழிக்க வேண்டியதுதானா?

உனது நுரையீரல் நொறுங்கியதாலும், மூளைச்சாவினாலும் நீ இறந்துபோனதாக உனது மருத்துவமனை சான்றிழ் கூறுகிறது. கேள்விகள் ஒமர், உன் முகம் எழுப்பும் அத்தனை கேள்விகள்… என்னை துளைத்தெடுக்கின்றன, ஒமர் கய்யாம்! உன்னைப்போல எத்தனை பேர், விளையாடும்போதும், ஜீலம் நதிக்கரையில் அமர்ந்திருக்கும்போதும், பள்ளிக்கூடம் விட்டு வரும்போதும், தோட்டங்களுக்குச் சென்றிருக்கும்போதும்…. எத்தனையெத்தனை ஒமர்கள்?

இந்தப் படுகொலைகள் ஒவ்வொன்றிற்கும் பதில் சொல்லும் கடமை இந்த நாட்டிற்கு இருக்கிறது, ஒமர். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற மக்களின் கோரிக்கைக்கு இன்னும் பதிலில்லை.

இந்தியாவின் மானப்பிரச்சினையும், தேசபக்தியும் வெளிப்பட வேண்டியது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அல்ல, ரத்தம் சொட்ட சொட்ட மடிந்து போன, வன்முறையால் அடக்கி ஒடுக்கப்பட்ட உங்கள் ஒவ்வொருவரின் சாவுக்கான பதிலிலும்தான்…

இறந்து போன 102 பேருக்கு தலா 5 லட்சங்கள் தருவதாக அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இந்த 5 லட்சங்களுக்கு என்ன அர்த்தம்? நம்பிக்கைக் கீற்றாய், தங்களின் கண்ணுக்குக் கண்ணாய் தாய்க்கும்- தந்தைக்கும் இருந்தவர்களை இந்த இழப்பீடு திரும்பிக் கொண்டுவந்துவிடுமா?

திரும்பவும் கேள்விகள் ஒமர்….கேள்விகளே என்னைச் சூழ்ந்திருக்கின்றன!

சோபோரில் நடந்த அமைதியான ஊர்வலத்தில் ராணுவத்தின் துப்பாக்கிச்சூடால் தன்மகனை இழக்கக் கொடுத்த அந்த தந்தை சொன்னதை நினைவு கூர்கிறேன், ஒமர். அவர் இழப்பீட்டுத் தொகையை பெற மறுத்துவிட்டார், டீத்தூள் வாங்கச் சென்ற தன் மகன் அமைதியான வழியில் எதிர்ப்பைக் காட்ட நடத்தப்பட்ட ஊர்வலத்தால் ஈர்க்கப்பட்டு கலந்துக்கொண்டிருக்கிறான். இடையில் புகுந்த ராணுவம் நிராயுதபாணியாய் நின்றவர்களை – அப்பாவி பொதுமக்களை அதிரடியாய் சுட்டிருக்கிறது. அப்படிக் கொன்றவர்களிடமிருந்தே என் மகனின் தியாகத்துக்கு விலை பேச மாட்டேன் என்று அவர் இழப்பீட்டுத் தொகையை பெற மறுத்துவிட்டார், ஒமர்!

உங்கள் குடும்பத்தினர் உணரும் அந்த வெற்றிடத்தை ஒருநாளும் இந்த பணம் ஈடு செய்யாது. வலிகளையும் போக்காது. விசாரணைக்கு எடுத்துக்கொண்ட 1321 வழக்குகளில் 54ஐ மட்டும் எடுத்துக்கொண்டு மற்றவழக்குகளை தள்ளுபடி செய்துவிட்டது அரசு. இதில் எட்டாயிரம் காஷ்மீர் மக்கள் காணமல் போனது கணக்கிலேயே வராது.ராணுவத்தின் அடக்குமுறைக்கு சாட்சியாக மரித்த மக்களின் பெயர்களை முறையாகக்கூட பதிவு செய்யவில்லை,அரசாங்கம்.

ஆமாம், ஒமர், உங்கள் சுயநிர்ணய உரிமையை இந்த அரசாங்கம் பறித்திருக்கிறது. எங்கள் கண்களால் நாங்கள் இதைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

உங்கள் ஒவ்வொருவரின் உயிரை, வாழ்வை காக்கத் தவறிய அரசாங்கம், தனது இறையாண்மையை, பிச்சையிடுவது போல இந்த தொகையைக் கொடுத்து உறுதிப்படுத்திக்கொள்கிறது. ஒமர், தான் செய்த பல்லாயிரக்கணக்கான கொலைகளை மூடி மறைத்து, ரத்தக்கறை படிந்த தனது கைகளை பொதுவில் சுத்தப்படுத்திக்கொள்கிறது இந்த அரசாங்கம். ஆம், அப்பாவி சிறுபிள்ளைகளை – அவர்களின் கனவுகளோடு உரிமைகளையும் ஒருசேரக் கொடூரமாகச் செய்த கொலைகளை…

__________________________________________________________________

– சந்தனமுல்லை
___________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

கோத்ரா தீர்ப்பு: ஆர்.எஸ்.எஸ் சதிக்கு வக்காலத்து! அப்பாவி முஸ்லீம்களுக்குத் தூக்கு!!

கோத்ரா தீர்ப்பு: ஆர்.எஸ்.எஸ் சதிக்கு வக்காலத்து! அப்பாவி முசுலீம்களுக்குத் தூக்கு!!கோத்ரா வழக்கில், கரசேவகர்கள் பயணம் செய்த ரயில்பெட்டியை தீ வைத்துக் கொளுத்துவது என்று கோத்ரா நகரைச் சேர்ந்த முஸ்லீம்கள் முதல்நாளே சதித்திட்டம் தீட்டி, மறுநாள் அதனை நிறைவேற்றியிருக்கின்றனர்” என்று கூறி 11 பேருக்கு மரண தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்திருக்கிறது குஜராத் சிறப்பு நீதிமன்றம். எனினும் குற்றம் சாட்டப்பட்ட 94 பேரில் 63 பேருக்கு எதிரான சாட்சியங்கள் இல்லை என்பதால், அவர்களை விடுதலையும் செய்திருக்கிறது.

கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு என்பது முஸ்லிம்களால் முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி என்ற தங்களது கூற்றை இந்தத் தீர்ப்பு நிரூபித்து விட்டதாகவும், மதச்சார்பின்மை பேசுவோர் முகத்தில் கரி பூசப்பட்டு விட்டதாகவும் கூறி எக்காளமிடுகிறது பாரதிய ஜனதாக்கட்சி. விபத்தா, தீ வைப்பா என்று தெரிவதற்கு முன்னாலேயே, அதனை‘ ஐ.எஸ்.ஐ சதி’ என்று பிரகடனம் செய்தார் அன்று மத்திய உள்துறை அமைச்சராக இருந்த அத்வானி. “வினை ஒன்று நடந்தால் அதற்கு எதிர்வினை வரத்தான் செய்யும் என்று கூறி, குஜராத் முஸ்லீம்களுக்கு எதிராக பார்ப்பன பாசிஸ்டுகள் நடத்திய இனப் படுகொலையை நியாயப்படுத்தினார் மோடி.

“கோத்ரா ரயில்பெட்டி எரிப்பு என்பது இந்துக்களுக்கு எதிராக முஸ்லிம்கள் திட்டமிட்டு நடத்திய படுகொலை  அதன்பின்  குஜராத் முழுதும் நடைபெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான படுகொலையோ, கோபம் கொண்ட இந்துக்களின் திட்டமிடப்படாத எதிர்வினை”  இதுதான் குஜராத் படுகொலையை நியாயப்படுத்துவதற்கு சங்கபரிவாரத்தினர் முன்வைத்து வரும் வாதம். தற்போது வந்துள்ள தீர்ப்பு ஆர்.எஸ்.எஸ்இன் வாதத்தைத்தான் வழிமொழிகிறது.

கோத்ராவைத் தொடர்ந்து குஜராத் முழுதும் பார்ப்பன பாசிச குண்டர்கள் நடத்திய முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்கள், படுகொலைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட கொலைக்கருவிகள், திரட்டப்பட்டிருந்த கொலைப்படைகள், உடல்களும் தடயங்களும் திட்டமிட்டே அழிக்கப்பட்டது, முஸ்லிம் மக்களின் வீடுகளும், தொழில்களும், குடியிருப்புகளும் ஆக்கிரமிக்கப்பட்டு அவர்கள் அகதிகளாக வெளியேற்றப்பட்ட முறை, இவை அனைத்தும் போலீசு மற்றும் அதிகார வர்க்கத்தின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது.. போன்றவற்றை அவதானித்த பிறகுதான் பல்வேறு ஊடகவியலாளர்களும், சிவில் உரிமை அமைப்பினரும், ஜனநாயக சக்திகளும் குஜராத்தில் நடைபெற்றது கோத்ரா சம்பவத்தின் விளைவாகத் திடீரென்று வெளிப்பட்ட எதிர்வினை அல்ல, மாறாக, அது வெகு நீண்ட காலமாக திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான இன அழிப்பு நடவடிக்கை என்ற முடிவுக்கு வந்தனர்.

பின்னர் தெகல்கா நிருபர் ஆஷிஷ் கேதான் நடத்திய புலனாய்வு, சங்கபரிவாரத்தின் தலைவர்கள் முதல் கீழ்மட்ட தொண்டர்கள் வரை இந்த இனப்படுகொலை நடவடிக்கையில் எப்படி திட்டமிட்டு இயங்கியிருக்கின்றனர் என்பதை அவர்கள் வாயாலேயே வீடியோ வாக்குமூலமாக வரவழைத்தது. ஆகவே, கோத்ரா சம்பவம் என்பது குஜராத் முழுதும் சங்கபரிவாரத்தினர் நடத்த திட்டமிட்டிருந்த இனப்படுகொலைக்குத் தேவைப்பட்ட முகாந்திரம் மட்டுமே; கோத்ரா என்பது குஜராத் என்ற வெடிமருந்துக் கிடங்கைப் பற்ற வைப்பதற்குப் பயன்பட்ட  திரி மட்டுமே என்பது நிரூபணமானது.

தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக எத்தகைய கொடிய பயங்கரவாத செயல்களைச் செய்வதிலும் தேர்ந்த கிரிமினல்களே இந்து பாசிஸ்டுகள் என்பதற்கு வரலாறு முழுவதும் பல ஆதாரங்கள் உண்டு. அசீமானந்தாவின் வாக்குமூலம் இதற்கு சமீபத்திய சான்று. சங்கபரிவாரத்தின் உறுப்பினராயினும், பாஜக அமைச்சராயினும் அவர்களைக் கொலையும் செய்யத் தயங்காதவர்களே பார்ப்பன பாசிஸ்டுகள் என்பதற்கு பிரக்யா சிங் தாகூரும் மோடியுமே சிறந்த எடுத்துக் காட்டுகள்.  ஆகவே, இனப்படுகொலை என்ற தங்களது திட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு இந்து பாசிஸ்டுகள் திட்டமிட்டு அரங்கேற்றிய சதியாகத்தான் கோத்ரா தீவைப்பு இருக்கமுடியும். இந்த ஊகம் அடிப்படையற்றதல்ல. கோத்ரா முஸ்லிம்கள் மீதான குற்றச்சாட்டுதான் அடிப்படையற்றது.

தற்போதைய கோத்ரா வழக்கு விசாரணையின் யோக்கியதையே அதனை நிரூபிக்கிறது. குஜராத் இனப்படுகொலை தொடர்பான பல வழக்குகளில் இனப்படுகொலையை முன் நின்று நடத்திய மோடியும், குஜராத் போலீசும் நடத்திய மோசடிகள் மறைக்க முடியாத வண்ணம் அம்பலமாயின. தீஸ்தா சேதல்வாத் போன்றோரின் பெருமுயற்சியின் விளைவாக, குஜராத் படுகொலை தொடர்பான பல வழக்குகளில் மறு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. குஜராத் போலிசின் பொறுப்பில் இருந்த 9 முக்கிய குற்ற வழக்குகளின் விசாரணைகள், சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு மாற்றப்பட்டன.

26, மார்ச், 2008இல் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட இந்த சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவராக முன்னாள் சிபிஐ இயக்குநர் இராகவன் நியமிக்கப்பட்டார். இந்தக் குழுவின் மற்ற மூன்று உறுப்பினர்களும் குஜராத் போலீசு ஐ.ஜிக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. புலன் விசாரணைக்குத் தேவையான அதிகாரிகளையும் இந்தக் குழு குஜராத்திலிருந்தே பொறுக்கி எடுத்துக் கொண்டது.

கோத்ரா வழக்கில் ஏற்கெனவே குஜராத் போலீசு நடத்தியிருந்த புலன் விசாரணையையும், போலீசு தரப்பு சாட்சிகளையும் தாங்கள் முற்றிலுமாக பரிசோதித்து பார்த்து விட்டதாகவும், குஜராத் போலீசின் விசாரணை சரியான பாதையில்தான் அமைந்திருக்கிறது என்பதால், தாங்கள் அதனை அப்படியே ஏற்றுக்கொள்வதாகவும் சிறப்புப் புலனாய்வுக்  குழுவின் தலைவர் இராகவன் பிப்ரவரி 2009-இல் உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்தார். இவர்கள் ‘முற்றிலுமாகப் பரிசீலித்து சான்றிதழ் அளித்த’ குற்றவாளிகள் 94 பேரில் 63 பேரை நிரபராதிகள் என்று கூறி விடுதலை செய்திருக்கிறது சிறப்பு நீதிமன்றம்.

இது சிறப்புப் புலனாய்வுக் குழு மோடி அரசுடன் சேர்ந்து அரங்கேற்றியிருக்கும் கூட்டுக்களவாணித்தனம்தான் என்பதற்கான ஆதாரங்களை தெகல்கா நிருபர் ஆஷிஷ் கேதான் அடுக்கடுக்காக முன்வைக்கிறார். இந்த சதியின் முதன்மைக் குற்றவாளியாக போலீசால் சித்தரிக்கப்பட்ட மவுல்வி உமர்ஜியை நீதிமன்றம் விடுவித்துவிட்டது. இது முன்கூட்டி திட்டமிடப்பட்ட சதி என்ற தீர்ப்பு, பெட்ரோல் பங்க் ஊழியர்கள் இருவரின் சாட்சியத்தை சார்ந்து இருக்கிறது. அந்த இரு சாட்சிகளும் “துணை போலிசு சூப்பிரெண்டு நோயல் பார்மர், தங்களுக்கு தலா 50,000 கொடுத்து பொய் சாட்சி சொல்லச் சொன்னதாகவும் அந்த அடிப்படையில் தாங்கள் பொய் சாட்சி கூறியதாகவும் தெகல்கா நிருபரிடம் 2007-இல் வீடியோ வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

இந்த வீடியோவும், தெகல்கா நிருபர் கேதான் கோத்ரா வழக்கின் மற்ற சில சாட்சிகள் பற்றி அளித்த வாக்குமூலமும், வீடியோ பதிவுகளும் சிறப்புப் புலனாய்வுக் குழுவால் திட்டமிட்டே வழக்கிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றன. லஞ்சம் கொடுத்து பொய் சாட்சி கூறச் சொன்னதற்காக, குற்றவாளிகள் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டிய  நோயல் பார்மர் எனும் போலீசு அதிகாரியை, கோத்ரா வழக்கின் விசாரணை அதிகாரியாக சேர்த்துக் கொண்டு, இதற்கு கடுமையான எதிர்ப்பு எழவே, பின்வாங்கியது சிறப்புப் புலனாய்வுக் குழு.

ரயில் பெட்டிகளை இணைக்கும் வெஸ்டிப்யூலைக் கிழித்து உள்ளே நுழைந்து பெட்ரோல் ஊற்றித் தீவைத்தனர் என்ற குற்றச்சாட்டு கூட சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்பதுடன், வெஸ்டிப்யூல் கிழிக்கப்படவில்லை என்று கூறிய தடய அறிவியல் அறிக்கை ரத்து செய்யப்பட்டு, மோசடியாக இரண்டாவது அறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பதையும் தெகல்கா நிருபர் ஆதாரத்துடன் சுட்டிக் காட்டுகிறார்.

கோத்ரா தொடர்பாக நியமிக்கப்பட்ட பானர்ஜி குழுவின் அறிக்கை, ‘பெட்டி வெளியிலிருந்து கொளுத்தப்படவில்லை’ என்பதை ஆணித்தரமாக நிறுவியிருக்கிறது. ஆனால், குஜராத் உயர்நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்று இந்த அறிக்கையை முடக்கியுள்ளது மோடி கும்பல். அரசியல் ரீதியிலும் சரி, ஒரு கிரிமினல் குற்ற வழக்கு என்ற முறையிலும் சரி, கோத்ரா ரயில்பெட்டி எரிப்பு என்பது, இந்து பாசிஸ்டுகள் அரங்கேற்றிய சதித்திட்டம் என்பதற்கான ஆதாரங்களே மிகுந்திருக்கின்றன.

ஆனால் குஜராத் படுகொலை குறித்து மோடியிடம் விசாரணை நடத்திய சிறப்புப் புலனாய்வுக் குழு, இப்படுகொலையில் மோடியை குற்றம் சாட்டுவதற்கு போதிய ஆதாரங்கள் இல்லையென்று கூறியிருக்கிறது அதே நேரத்தில், கோத்ரா வழக்கில் மீதமுள்ள 20 பேருக்கும் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என மேல்முறையீடு செய்யப்போவதாகவும் தெரிவித்திருக்கிறது. கோத்ரா எரிப்புதான் ‘ஆதிமுதல் சதி’ என்று சட்டப்படி நிறுவுவதன் மூலம்தான் நரோதா பாட்டியா, பெஸ்ட் பேக்கரி உள்ளிட்ட மற்ற கொடூரமான இனப்படுகொலைகள் அனைத்தையும் இந்துக்களின் தவிர்க்கவியலாத எதிர்வினையாகக் காட்டமுடியும்.

ஸ்டேன்ஸ் பாதிரியாரும் அவரது குழந்தைகளும் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளின் தூக்குதண்டனையை ரத்து செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், “என்ன இருந்தாலும், இது கட்டாய மதமாற்றத்துக்கான  எதிர்வினை என்பதைக் கணக்கில் கொள்ளவேண்டும்” என்று குறிப்பிட்டது நினைவிருக்கிறதா, “2002 குஜராத் படுகொலை என்பது ஒரு எதிர்வினை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்” என்றுதானே மோடியும் வலியுறுத்தி வருகிறார். சிறப்புப் புலனாய்வுக் குழு, மத்திய காங்கிரசு அரசு, நீதித்துறை ஆகிய அனைவரும் மோடி காட்டும் திசையில்தான் செல்கின்றனர் என்று இதனைக் கூறலாமா, அல்லது இந்து மனச்சாட்சிகளிடையே நிலவும் தற்செயலான ஒற்றுமைதான் இது என்று புரிந்து கொள்ளவேண்டுமா?

குஜராத்தின் வளர்ச்சிக்காக கொல்லப்படும் ம.பி தொழிலாளர்கள்!

“ஒருபுறம் இந்தியா ஒளிர்கிறது என்றும் தொழில்துறையில் அபார வளர்ச்சி என்றும் கார்ப்பரேட் முதலாளிகளின் பகட்டான விளம்பரங்கள் – உலக கோப்பை கிரிக்கெட்டில் வென்ற வீரர்களுக்கு சில கோடிகளை மாநில அரசுகள் அறிவித்ததன் மூலம் தேச நலனுக்கு வித்திட்டதாக படாடோப செய்திகள் – மறுபுறம் குறிப்பாக ஊடகங்கள் குஜராத்தைப் பார் ! மோடி அரசின் வளர்ச்சியைப் பார்!! என தம்பட்டங்கள் வேறு. ஆனால் உலகமயமாக்கல் விளைவினால் விவசாயம் அழிந்து, வாழ வழிதேடி மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து புலம் பெயர்ந்து குஜராத்திற்கு வரும் ‘கூலி’ தொழிலாளிகள் ‘சிலிக்கோசிஸ்’ என்ற அபாயகரமான உயிர்க்கொல்லி வியாதியினால் தாக்குண்டு தெரிந்தே, தடுக்க இயலாமல் “சாவை” வரவேற்றுக் கொண்டிருக்கின்றனர் என்பதை இக்கட்டுரை அம்பலப்படுத்துகிறது”

 

A silent killer called Silicosis
படங்கள் - www.thehindu.com

(இடது) சிலிக்கோசிஸ் வியாதியினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயி புத்தா மற்றும் அவரது 16 வயது மகள் காம்மா  (மற்றும்) சிலிக்கான் துகள்கள்
(வலது) குஜராத் பலசினோர் மாவட்ட சிலிக்கான் பாறை நொறுக்கும் தொழிற்சாலையில் பணியாற்றி நோய் தாக்கிய ஒரே வருடத்தில் எலும்புக்கூடாக காட்சி தரும் 20 வயது சனோ.

மெதுவாக ஆனால் கண்டிப்பாக இந்த தொழிற்சாலையினால் “சாவு” எங்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பது தெரிந்த போதிலும், அதைத் தடுக்க இயலாது என்கிறார் மத்திய பிரதேச அலிராஜ்பூர் மாவட்டம், உண்ட்லி என்ற கிராமத்தைச் சேர்ந்த புத்தா என்கிற 45 வயது விவசாயி வேதனையோடு. சமீபத்தில் இவரது 18 வயது மகனை ‘சிலிக்கோசிஸ்’ என்ற உயிர்க்கொல்லி நோயினால் இழந்துள்ளார் என்பதுடன், இவரின் 16 வயது மகள் காம்மா இன்னும் அந்த நோயுடன் போராடிக்கொண்டுள்ளார் என்கிற உண்மை நம்மை சுடுகிறது.

குஜராத்தில் சிலிக்கன் (குவார்ட்ஸ்) பாறையை உடைத்து தூளாக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதற்கு அருகிலுள்ள மத்திய பிரதேச மாநிலத்தின் அலிராஜ்பூர், தர் மற்றும் தாபுவா மாவட்டங்களிலிருந்து பிழைப்பு தேடி புலம் பெயர்ந்து வரும் கூலித் தொழிலாளர்கள் வேலைக்காக ஒப்பந்த காரர்களால் அழைத்து வரப்படுகின்றனர்.

இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் காற்றோடு கலக்கும் சிலிக்கன் துகள்களை தினமும் பணியின் போது 8 முதல் 12 மணிநேரம் சுவாசிக்கின்றனர். இதன் மூலம் மூச்சுத் திணறல், கடுமையான இருமல் போன்ற வியாதிகள் துவங்கி, கண்டிப்பான இறப்பை நோக்கி இவர்களை அழைத்துச் செல்கிறது.
தொழில்வழி உடல் நல பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யும் தேசிய பயிற்சி மையம், குவார்ட்ஸ் கடிகாரம் போன்றவற்றிற்கு பயன்படக்கூடிய இந்த சிலிக்கான் பாறை துகள்கள் இங்கு பணிபுரிகிற அனைவருக்குள்ளும் சென்று பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று தெரிவிக்கிறது. இந்த நோய் தாக்கியிருப்பதை சில மாதங்கள் ஏன் சில வருடங்கள் சென்ற பின்தான் வெளித்தெரிய வருகிறது. இந்த நோய் தனிநபரை மட்டும் பாதிக்காமல், குடும்பத்தில் உள்ள அனைவரையும் தாக்குகிறது. இந்த உயிர்க் கொல்லி நோயைப் பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டுவரும் ஷிப்பி கேந்திரா என்ற அமைப்பு அலிராஜ்பூர், மற்றும் தர் மாவட்டங்களைச் சேர்ந்த இந்நோயினால் பாதிக்கப்பட்ட 105 குழந்தைகளை தத்து எடுத்து பராமரித்து வருகிறது.

இந்த அமைப்பு வெளியிடும் விபரங்களின்படி 2010ல் மட்டும் அலிராஜ்பூர், தாபுவா, தர் மாவட்டங்களைச் சேர்ந்த 386 நபர்கள் இறந்துள்ளனர், 724 நபர்கள் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது. அரசின் பல்வேறு அமைப்புகள் தெரிவிக்கும் புள்ளி விபரங்கள் 238 நபர்கள் இறந்துள்ளனர் எனவும், 304 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கிறது. அலிராஜ்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பதிவுகளின்படி அந்த மாவட்டத்தில் மட்டும் 277 இறப்புகள் ஏற்பட்டதாக தெரியவருகிறது.

ஒவ்வொரு வருடமும், விவசாய பணி குறைவாக இருக்கும் மாதங்களில் ஆயிரக்கணக்கிலான பில் என்றும் பிலல்லா என்றும் அழைக்கப்படும் பழங்குடியின விவசாய கூலி தொழிலாளர்கள் மத்தியப் பிரதேசத்தின் அலிராஜ்பூர், மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களிலிருந்து புலம் பெயர்ந்து குஜராத்தின் கோத்ரா, மற்றும் கேடா மாவட்டங்களுக்கு பிழைப்பு தேடி வருகின்றனர். ஏறக்குறைய 12 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே குஜராத்தை சேர்ந்தவர்கள் இந்த அபாயகரமான தொழிற்சாலை தொழிலுக்கு வர மறுத்ததால், பிற மாநில, மாவட்டங்களிலிருந்து புலம் பெயரும் தொழிலாளர்களை வேலைக்கமர்த்தி பணி வாங்குவது என்ற நிலை துவங்கியிருக்கிறது.

குஜராத்தில் இது போன்ற தொழிற்சாலைகளுக்கு குஜராத் தொழிலாளர்களை வரவழைக்க முடியாத ஒப்பந்தகாரர்களுக்கு, விவசாயம் பொய்த்துப் போய் இது போன்று அருகிலுள்ள மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து புலம் பெயர்ந்து வரும் கூலித் தொழிலாளர்களால் வாழ்வு வளமானது என்றே சொல்ல வேண்டும். அவ்வாறு வரும் தொழிலாளர்கள் கோத்ரா, மற்றும் பலசினோர் மாவட்டங்களில் உள்ள சிலிக்கான் பாறை உடைப்பு தொழிற்சாலைகளில் வேலை செய்ய பணிக்கப் பட்டனர். இவ்வாறு தொழிலாளர்கள் புலம் பெயர்தல் என்பது அருகிலுள்ள தாபுவா, தர் மற்றும் பரவானி மாவட்டங்களிலிருந்து கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகவே நடைபெற்று வருகிறது. இந்த தொழிற்சாலைகளில் பணிபுரிவதென்பது சாவை நோக்கி அழைத்துச் செல்லும் என்று தெரிந்தே ஏன் தொழிலாளர்கள் இங்கு வருகின்றனர்?

பழங்குடியினர் மிகுதியாக வசித்து வரும் அலிராஜ்பூர் மாவட்டத்திற்கும் அருகிலுள்ள மாவட்டங்களுக்கும் மிகப் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. அனைவருமே பரம்பரையாக மேற்கொண்டு வந்த, வாழ்வாதாரமான விவசாயம் அழிந்து போனதால் பசியை முன்னிட்டு புலம் பெயர்ந்து வர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவ்வாறு வந்த கோபால் என்கிற 20 வயது தொழிலாளி சொல்கிறார், இந்த வேலை எளிதானது. ஒரு சணல் சாக்கில் உடைத்த துகள்களை நிரப்பினால் ரூ 1.50 லிருந்து 2.00 வரை கூலியாக கிடைக்கும், நாங்கள் ஒவ்வொரு குடும்பத்தினரும் ஒரு நாளைக்கு 600 முதல் 700 சாக்குகளை நிரப்ப முடியும் என்கிறார் அவர். மேலும் இந்த பணி என்பது மற்ற கட்டிட பணிகள் போன்ற கடுமையான பணிகளோடு ஒப்பிடுகையில் எளிதாக உள்ளது என்கின்றனர் அப்பாவி தொழிலாளர்கள். எனினும் உயிர்க்கொல்லியான வியாதி பீடிக்கிறது என்பது பல மாதங்கள் கழித்துத்தான் சிரமப்பட்டு மூச்சு விடுதல், நடக்க முடியாமல் இரைப்பது, எடை குறைவது போன்ற சில அறிகுறிகளின் மூலம் இவர்களுக்கு தெரியவருகிறது.

உண்ட்லி கிராமத்து மக்கள் திடீரென தங்கள் மாவட்டத்தில் பலர் உயிரிழந்ததினாலும், குறிப்பாக இள வயதினர் உயிர் இழந்ததும், பலர் நோயினால் பாதிக்கப்பட்டது தெரிந்ததும் அனைத்தும் இந்த தொழிற்சாலையின் பணியினால்தான் என்பதை உணர்ந்தனர். குறிப்பாக சில இறந்தவர்களின் உடலை எரித்த போது, உடம்பின் அனைத்து பகுதியும் எரிந்து நெஞ்சுப்பகுதி மட்டும் எரியாமலிருந்தது கண்டு, அதை அறுத்துப்பார்த்தால் நெஞ்சு முழுவதும் மேற்படி பாறைகளின் வெள்ளைத் துகள்களால் நிரம்பியிருப்பதை கண்டவுடன் நோயின் அபாயத்தை முழுவதுமாக உணர்ந்தனர் என்கிறார் இந்த கிராமத்தின் தலையாரியான ஷர்மிளா என்பவரின் கணவர் கேசர்சிங்.

அதிலிருந்து அபாயத்தை உணர்ந்த எங்கள் கிராமத்தை சேர்ந்தவர்கள் இந்த தொழிலுக்கு செல்வதை தவிர்த்து வருகிறோம் என்கிறார் ஷர்மிளா. ஆனால் இந்த உணர்தலுக்கு முன்பாகவே பாதிப்புகள் என்பது பலருக்கு ஏற்பட்டுவிட்டது. பத்திரிகை நிருபரோடு பேசிய மேற்படி கோபால் 500 மீட்டர் தொலைவு நடப்பதற்குள் மூச்சு வாங்குகிறார்.

A-silent-killer-called-Silicosis
சர்தார் சரோவர் அணை கட்டியதால் வாழ்விழந்து, குஜராத்தில் குடியேற்றம் செய்யப்பட்டிருக்கும் ம.பி. விவசாயிகள். விவாசாய வேலை இல்லாத போது இவர்கள் பிழைப்புக்கு குவார்ட்சு குவாரிகளே ஒரே வழி

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாதத் திட்டம் என்பது இந்த மாவட்டங்களில் திறம்பட செயல்படவில்லை. மேலும் ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை தவிர்த்துவிட்டு இந்த தொழிற்சாலையை கூலித் தொழிலாளர்கள் தேடுவதற்கு முக்கியமான காரணம் இந்த தொழிற்சாலையில் உடனுக்குடன் கூலி கிடைக்கிறது என்ற காரணத்தினால்தான். அலிராஜ்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு அசோக் தேஷ்வால் தெரிவிக்கையில், இந்த தொழிற்சாலை பாதிப்பினால் 277 நபர்கள் இறந்துள்ள போதிலும், குறுகிய காலத்தில் பணம் பார்க்க முடியும் என்ற ஆவலே கூலித் தொழிலாளர்களை இந்த மாவட்டத்திலிருந்து குஜராத்தை நோக்கி ஈர்க்கிறது என்கிறார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், நாங்கள் பல விழிப்புளர்வு முகாம்களை நடத்தியுள்ளோம். பலருக்கு அரசின் திட்டமான தீன்தயாள் அந்த்யோதய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் மருத்துவ சிகிச்சையும் சிலருக்கு பென்சனும் கொடுத்துள்ளோம் என்றார். தவிர 10 நபர்களுக்கு மேல் சொந்த தொழில் துவங்குவதற்காக ரூ 2 லட்சம் வரை உதவித் தொகைகள் பெற்றுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

ஆனால் சாதனைகளாக சொல்லிக்கொள்ளப்படும் அரசின் இந்த செயல்பாடுகள் அரைமனதுடன் செய்வதாகவே எதார்த்தமாக தெரியவருகிறது. விழிப்புணர்வு என்பதற்காக அரசின் சார்பாக பெரிய அளவில் பேனர்களோ, சுவற்று விளம்பரங்களோ மாவட்ட தலைநகர்களில் கூட காணப்படவில்லை. மேலும் சொல்லக்கூடிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் என்பதில் சிலிக்கோசிஸ் என்ற வியாதிக்கான மருத்துவம் என்பது சேர்க்கப்படவில்லை என்பதே உண்மையாக இருக்கிறது.

மத்தியப் பிரதேச சுகாதாரத் துறை ஆணையாளர் டாக்டர் மனோகர் அக்னானி பிரச்சனை மிக மோசமானதும் கடுமையானதும் ஆகும் என ஒப்புக் கொள்கிறார். மேலும் அவர் தெரிவிக்கையில் “மாவட்ட அதிகாரிகள் இது குறித்து ஆய்வு செய்து தீர்விற்கான ஆலோசனைகளை வழங்க கேட்கப்பட்டுள்ளனர். அதே போல் அரசு சார்பில்லா நிறுவனங்கள் சிலவற்றிடமும், தீர்விற்கான ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது, அவை பெறப்பட்டவுடன் எங்கள் அடுத்த கட்ட நடவடிக்கையை தீர்மானிப்போம்” என்கிறார்.

கடந்த நவம்பரில் தேசிய மனித உரிமை ஆணையம் குஜராத் அரசிடம் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சிலிக்கோசிஸ்-னால் பாதிக்கப்பட்ட 238 குடும்பங்களுக்கு தகுந்த நஷ்ட ஈடு ஏன் வழங்கப்படவில்லை என காரணம் காட்டக் கோரும் அறிவிப்பை சார்பு செய்துள்ளது. ஆனால் அதன் மீதான நடவடிக்கை என்பது அரசு அலுவலக சிவப்பு நாடா கோப்பு முறையினால் கட்டுண்டு நடவடிக்கையின்றி இருப்பதாகவே தெரிகிறது.

தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் குஜராத் மத்திய பிரதேச மாநிலங்களில் தாவாக்கள் அதிகரிக்க துவங்கியது. தற்போது மாநில அரசு பல்வேறு அதிகார அமைப்புகளுடன் இழப்பீடு வழங்குவது தொடர்பாக கடிதப் போக்குவரத்துக்கள் நடத்திக்கொண்டிருக்கிறது. ஆனால் எதுவும் முடிந்தபாடில்லை என்கிறார் குஜராத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் (தொழிலாளர்) டாக்டர் வரேஷ் சின்ஹா. தேசிய மனித உரிமை ஆணையம் இந்த சிலிக்கோசிஸ் இறப்புக்களை மிகவும் கடுமையாக பார்த்ததுடன், புதுடில்லியில் சிலிக்கோசிஸ் தொடர்பான மாநாடு ஒன்று நடத்தி, ராஜஸ்தான் அரசின் மூலம் பாதிக்கப் பட்டவர்களுக்கு ரூ 1 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

அதிகார வரம்புள்ளவர்களான தொழிலாளர் துறை, மருத்துவத்துறை அல்லது சமூக நலத்துறை எதுவாக இருக்கட்டும், அவர்கள் இந்த சிலிக்கோசிஸ் என்ற உயிர்க்கொல்லும் நோயிலிருந்து அப்பாவி தொழிலாளர்களை காப்பதற்கு உடனடியாக களத்தில் இறங்க வேண்டும். இல்லையெனில் கோடி கோடியாக கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுக்கு கொட்டிக் கொடுப்பதினால் இந்த உயிர்கொல்லி நோயினால் பாதிக்கப்பட்ட அப்பாவிகள் ஒருவர் கூட திரும்பப்போவதில்லை என்பதுதான் நிதர்சனம்.

இந்த தொழிற்சாலையின் பணிநிலை என்பது மிகவும் பரிதாபகரமாக உள்ளது. இதன் தொழிலாளர்களை உயிர்பலிவாங்கும் இந்த அபாயத்திலிருந்து காக்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பாகும் என்கிறார் தேசிய மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் திரு பி.சி.சர்மா.

_________________________________________________________
நன்றி- தி இந்து நாளிதழ் (16-04-11) மற்றும்  செய்தியாளர் திரு மஹிம் பிரதாப் சிங்
தமிழில் – சித்ரகுப்தன்
__________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

புதிய கலாச்சாரம் மார்ச் 2011 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !

புதிய கலாச்சாரம் மார்ச் 2011 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !

புதிய கலாச்சாரம் மார்ச் 2011 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !

புதிய கலாச்சாரம் மார்ச் 2011 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள்:

  1. 1.       கோத்ரா தீர்ப்பு: ஆர்.எஸ்.எஸ் கொலைச்சதிக்கு வக்காலத்து! அப்பாவி முஸ்லீம்களுக்கு தூக்கு!!
  2. 2.       “பிரசாத லட்டு கூட அவா தான் பிடிக்கணும்!” தி.மு.க அரசின் சமூக நீதி!!
  3. 3.       நீரா ராடியா: அம்பலமான மாமா பத்திரிகையாளர்கள்!
  4. 4.       தி கிங்ஸ் ஸ்பீச்: வரலாற்றை பேச மறுக்கும் நாக்கு!
  5. 5.       கிழக்கு பதிப்பகம் பெருமையுடன் வழங்கும் ஆர்.எஸ்.எஸ் புளுகுப் புராணம்
  6. 6.       சிறுகதை: பாம்பின் கால்….
  7. 7.       ஹைத்தி தீவு மக்களைக் காப்பாற்றிய கூபாவின் (கியூபா) மருத்துவ சாதனை!
  8. 8.       அமெரிக்க கூஜாவா! நோபல் பரிசு நிச்சயம்!!
  9. 9.       சி.ஐ.ஏ ஊட்டி வளர்த்த ‘மாடர்ன் ஆர்ட்’! கலையா, அடிமைத்தனமா?
  10. 10.   பத்ரீஸ் லுமும்பா 50-ஆம் ஆண்டு நினைவு: ஏகாதிபத்தியத்தை எதிர்த்து உயிர் துறந்த போராளி!

11.   கவிதை: வாழ்த்து அட்டை!

புதிய கலாச்சாரம் மார்ச் 2011 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 2 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS).

குழந்தை வதை திருமணங்கள்! வல்லரசாகிறது இந்தியா!

குழந்தை வதை திருமணங்கள்! வல்லரசாகிறது இந்தியா! - சந்தனமுல்லை

“எனக்கு திருமணம் நடந்தபோது என்னைச் சுற்றி என்ன நடந்துக்கொண்டிருக்கிறது என்றே என்னால் அறிய முடியவில்லை” என்கிறார் மனியம்மா. ”அப்போது எனக்கு ஆறு வயதுதான். கல்யாணமென்றால் வீட்டை விட்டுச் இன்னொரு வீட்டுக்கு செல்லவேண்டுமென்று மட்டுமே எனக்கு  தெரியும். நான் போக மாட்டேனென்று  அழுது கொண்டேயிருந்தேன். ஆனாலும் என்னை வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்தனர்” என்கிறார் தொடர்ந்து.

மனியம்மா, ஆந்திராவின் ஒரு கிராமத்தில் தனது உறவினர் சூழ அமர்ந்திருக்கிறார். அவர் கட்டியிருந்த சிவப்பு புடவையில் பதினொரு வயதிற்கும் கீழானாவராகவே தெரிந்தார். ஒரு தந்தையால் தன்  குழந்தைக்கு இதை மனமுவந்து செய்ய முடியமா? ஆனால், அவரோ “இங்கெல்லாம் அப்படித்தான் பழக்கம் என்கிறார். இதுதான் எங்களின் பாரம்பரியம், பெண்கள் சிறியவயதில் மணமுடித்துவிடவேண்டும். கணவர்கள் வயதில் எத்தனை பெரியவர்களாக இருந்தாலும் சரி, சூழ்நிலையை அனுசரித்து நடந்து கொள்ளவேண்டும்” என்று முடிக்கிறார்.

உலகிலேயே, அதிகமான குழந்தை மணமகள்களை கொண்டு மூன்றாவது இடத்தை பிடித்திருக்கும் இடமான இந்தியாவிற்கு, 2020-இல் ‘வல்லரசாக’ப் போகும்  நாட்டிற்கு உங்களை வரவேற்கிறோம்.

இந்தியாவில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சிறுமிகளுக்கு இப்படி திருமணமாகிறது. வயதுக்கு வந்ததும் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகின்றனர். இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு 18 வயதுக்கு முன்பே திருமணமாகி விடுவதாக ஒரு ஆராய்ச்சி சொல்கிறது. அப்படி திருமணமான பெண்கள்  உடனடியாக பிள்ளை பேற்றுக்கும் ஆளாகி தங்களது பெண்மையையும் நிரூபிக்க வேண்டும்.

முழுமையாக வளர்ச்சியடையாத சரியான ஊட்டச்சத்தில்லாத இக்குழந்தைகளின் பிள்ளைப்பேறு பெரும்பாலும் மரணத்தில்தான் வந்து முடிகிறது.  ஒவ்வொரு வருடமும் 1,00,000 தாய்களும் ஒரு மில்லியன் குழந்தைகளும் இந்தியாவில் மரணமடைகின்றனர்.

குழந்தை பேற்றுக்கு ஆளாகும் முன்பே மனியம்மாவின் திருமணம் முறிந்துவிட்டது. மணமான இருவருடங்களிலேயே, மனியம்மாவின் கணவர்(வயது 20) மனியம்மாவை வீட்டுக்கு அனுப்பி விட்டார். 20 வயதான அவருக்கு மனியம்மா பாலுறவுக்கு ஏற்ற வகையில் இல்லையென்பதுதான் காரணம். கணவர் உங்களை எப்படி நடத்தினார் என்ற கேள்விக்கு மனியம்மா தயங்குகிறார். “அவரைப் பற்றி எதையும் நான் பேச விரும்பவில்லை” என்கிறார்.

அவர் அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளமுடியாதவராக தென்பட்டார்.  மற்றுமொரு முறை  மணம் செய்துக்கொள்வாரா என்ற கேள்விக்கு இல்லையென்று தலையசைக்கிறார். அக்‌ஷய திருதியை விழாவின் போது, பெரும்பாலான இந்திய கிராமங்கள்  திருமணத்திற்கான ஏற்பாடுகளிலும், பட்டாசுகளிலும் பெண்களின் பாடல்களிலும் மூழ்கியிருக்கும். அந்த திருமணங்களின் மணகள்கள் மனியம்மாவைப் போன்ற குழந்தைகள்தான்.

வடழகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த ஹசீனா பள்ளியை விட்டு நிற்கவில்லை;  அவர் பள்ளிக்கே செல்லவில்லை. ஹசீனாவுக்கு 13 வயதில் முதல் முறையாக மாதவிலக்கு ஏற்பட்டது. ஹசீனாவின் தாய் இறந்ததும் அவரை வளர்த்த அத்தை ஹசீனா உடனே திருமணம் செய்துக்கொள்ள  வேண்டுமென்றார். ஹசீனாவுக்கு அவர் என்ன சொல்கிறாரென்று அப்போது விளங்கவில்லை; தனது வாழ்க்கையை முற்றிலுமாக திருப்பிப்போடுமென்றும் தெரிந்திருக்கவில்லை. “திருமணம் ஒரு விளையாட்டு என்று நினைத்தேன்” என்கிறார் அவர், கணவரது மூங்கில் குடிசையில் அமர்ந்தபடி.

அவரது கைகள் புடவையின் முந்தானையின் ஓரங்களைத் திருகியபடியிருக்கின்றன. ஹசீனாவின் வயது இப்போது 15. அவர் ஐந்து மாத கர்ப்பமாக இருக்கிறார்.பிரசவங்களினால் ஏற்படும் சிக்கல்களும், உடல்நலத்தை பற்றிய அறியாமையும் மருத்துவ வசதியின்மையும் தகுந்த நேரத்துக்கு கிடைக்காத கவனிப்பும் இந்த மரணங்களை அதிகப்படுத்துகின்றன. அதற்கு ஹசீனாவும் விதிவிலக்கல்ல.

ஜெய்ப்பூரைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள் வயது முறையே 11 மற்றும் 13 அஞ்சலி மற்றும் கரிஷ்மா  திருணத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களது குடும்பத்துப் பெரியவர்கள் அவர்களுக்கு தயிரும் மஞ்சளும் சேர்த்து தலையைக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது கைகளிலும் கால்களிலும் மருதாணி இடப்பட்டிருக்கிறது. “ஆமாம், எனக்கு பயமாக இருக்கிறது, இருக்காதா என்ன?” என்கிறார் கரிஷ்மா.  ”நாங்கள் எங்கள் கணவர்களை இன்னும் சந்திக்கவில்லை” என்கிறார்கள், லேசான எரிச்சலுடன்.

எப்படி தனது வீட்டையும், சகோதரியுடன் பள்ளிக்குச் செல்வதையும் நேசித்தார்கள் என்று ரசித்து சொல்கிறார்கள்.தற்போது எல்லாமே முடிவுக்கு வந்துவிட்டது .”கணவரது வீட்டிலிருந்து பள்ளிக்கூடம் செல்வது நடக்காத காரியம். அங்கு சமையலும் வீட்டு வேலைகளையும்தான் செய்ய  வேண்டும். வேறு ஒன்றும் இல்லை. தலையை எப்போதும் துணியால் மூடியிருக்க வேண்டும். எனது மாமியார் என்ன சொல்கிறாரோ அதை கேட்டு நடக்க வேண்டும்”.

குழந்தைத் திருமணங்கள் இந்திய சட்டத்திற்கு புறம்பானவை. குழந்தை திருமண தடுப்புச் சட்டம் பிரிட்டிஷ் காலத்திலேயே, 1929, நிறைவேற்றப்பட்டது. அப்போது பார்ப்பனிய ஆதரவாளர்கள், இந்துமத அமைப்புகள் இதை கடுமையாக எதிர்த்தனர். பின்னர் அம்பேத்கர் அரசியல் சாசனம் எழுதிய காலத்திலும் இந்த எதிர்ப்பு இருந்தது. பார்ப்பனியத்தின் நிலவுடமைப் பண்பாட்டில் ஊறியிருந்த சமூகத்தில் குழந்தைகள் திருமணம் ஆழமாக பதிந்திருந்தது.

திருமணமாவதற்கு பெண்ணுக்கு 18 வயதும் ஆணுக்கு 21 வயதும் நிரம்பியிருக்க வேண்டும். 1947-ல் போலிச் சுதந்திரம் பெற்றபின் இந்திய அரசாங்கம் இந்த சட்டதிட்டங்களை கடைபிடிப்பதில் பெரிய ஆர்வம் காட்டவில்லை. திருமண சீசன்களில் நான்கு வயதான குழந்தைக்கும் கூட மணம் நடப்பதை காணலாம். இந்தியாவிலேயே ராஜஸ்தானில்தான் அதிக  அளவில் குழந்தை திருமணங்கள் நடைபெறுகின்றன. ஜோத்பூரில்  குழந்தைகள் நலவாரியத்தின் அதிகாரிகள் தொலைபேசியில் அது குறித்த புகார் குரலுக்காகக் காத்திருக்கிறார்கள். ஆனால் அப்படி புகார்கள் பெரிய அளவில் வருவதில்லை.

இப்படி சட்டத்திற்கு புறம்பான திருமணங்களைப் பற்றி செய்தியை தெரிவிப்பதற்காக அங்கு ஒரு ஹாட்லைன் இருக்கிறது. ஆனால், இந்த திருமணத்தை நடத்துபவர்கள் மிகவும் சாதுர்யமாக நடந்து கொள்வதாகக் கூறுகிறார்கள் இந்த அதிகாரிகள்.

”அவர்கள் எப்போதும் எங்களைவிட ஒரு அடி முன்பாக இருக்கிறார்கள்.   திருமணத் தேதியை முதலில் அறிவித்து விடுகிறார்கள். பிறகு தேதியையோ அல்லது இடத்தையோ மாற்றிவிடுகிறார்கள். ராஜஸ்தான் ஒரு பெரிய மாநிலம். போலிசாலும் எல்லா இடங்களை கண்காணிக்க இயலாது. தேவையான வாகனங்கள் இருந்தால் திருமணஙக்ளை அவ்விடத்திலேயே நிறுத்திவிடலாம். ஆனால்,  அதற்கு கொஞ்சம்  காலம் பிடிக்கும்” என்கிறார்கள் அவர்கள். அதுவரை அவர்கள் தொலைபேசியைத்தான் நம்பியிருக்கவேண்டும். ராஜஸ்தானில் இன்னும் பல இடங்களில் நிலப்பிரபுக்கள்தான் ஆதிக்கம் செலுத்துவதாக பல அதிகாரிகள் கூறுகின்றனர். இத்தகைய பிராந்தியங்களில்தான் பா.ஜ.க செல்வாக்கோடு இருக்கிறது என்பதிலிருந்து அந்த கட்சியின் பிற்போக்கு அடிப்படையை புரிந்து கொள்ள முடியும்.

சட்டத்தை நிறைவேற்றுவதற்கும் அதை நடைமுறைப்படுத்துவதற்கும் இடையில் ஒரு பாரிய இடைவெளி இருக்கிறது. ஆந்திராவில் இந்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட 4 நான்கு வருடங்களுக்குப் பிறகும் கிராம அளவில் கூட அதிகாரிகளை நியமிக்கவில்லை. போலீசும் வழக்கம்போல கண்ணை மூடியபடி இருக்கிறது.

ஆந்திராவின் வாரங்கலில் உள்ளூர் சமூக ஆர்வலர் ஒருவர் குழந்தைத் திருமண வதையைப் பொறுக்க முடியாமல் நடக்கவிருந்த 60 குழந்தைத் திருமண விவரங்களை சேகரித்து போலிசிடம் கொடுத்தார். தடுத்து நிறுத்த உடனடியாக ஏற்பாடு செய்யும்படியும் கோரினார். ஒவ்வொரு கிராமம் கிராமமாக நடந்து சென்று இந்த விபரங்களைச் சேகரித்தார் அவர்.  இன்ஸ்பெகடர் மோகிலி துர்கையாவோ இதுவரை தான் ஒரு குழந்தைத் திருமணத்தைக் கூட தடுத்து நிறுத்தவில்லை என்கிறார்.

யூனிசெஃப்பின் தென்னிந்தியத்தலைவர் இதுபற்றி கூறுகையில்,”போலீசும் இந்த பாரம்பரிய பின்னணியிலிருந்தே வந்தவர்கள். அவர்கள் தங்களது சொந்த குடும்பங்களுக்கெதிராக பேச விரும்புவதில்லை. பல நூற்றாண்டு காலமாக தொடரும் இந்த பழக்கத்தை தவறென்று சொல்ல அவர்கள் விரும்புவதில்லை. இதுபற்றி அவர்களுக்கே பயிற்சியும்  அறிவும் தேவைப்படுகிறது” என்கிறார். இதுமட்டுமல்ல எல்லா மக்கள் பிரச்சினைகளிலும் அதிகாரத்திமிரோடும், ஆதிக்கத்தில் இருப்பவர்களையும் ஆதரிக்கின்ற போலீசை எப்படித் திருத்த முடியும்?

இந்த பயிற்சியும் அறிவும் வரும் வரையும்  தங்களது வாழ்க்கையை  குழந்தைத் திருமண மேடையில் தியாகம் செய்யும் பல்லாயிரக்கணக்கான சிறுமிகளின் நிலைமை என்ன? குழந்தைத் திருமணம் நமது நாட்டில் பால்ய விவாகம் என்ற பெயரில் தொடர்ந்து  வந்துள்ளது. இதற்கு சாதிய படிநிலையும் ஒரு காரணம். பிறப்பால்  வரும் சாதியும், சொத்துடைமையும்  திருமணத்தை பல்வேறு சாதிகளுக்குள் நடைபெறுவதை அனுமதிப்பதில்லை.

மேலும், இளைய தலைமுறையினர் இவ்விதிகளை உணர்ச்சிவசத்தில் மீறுவதைத் தடுக்கவும் இந்த குழந்தைத் திருமணங்கள் பயன்படுகின்றன. மேலும், தற்போது இப்பழக்கம் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவர்களிடமே பெருமளவில் காணப்படுகிறது. ஆனால் இந்தி பேசும் மாநிலங்களைப் பொறுத்த வரை கிராமங்களில் உள்ள ஆதிக்க சாதி – வர்க்கத்தினரிடமும் இந்த பழக்கம் காணப்படுகிறது. இவர்களெல்லாம் ஏழைகள் அல்ல.

ஒரு சில சமூகங்கள் முன்னேறிக் காணப்பட்டாலும் பல சமூகங்களுக்குள் பெரும் வித்தியாசம் இருக்கிறது. படிப்பு, சாதிநிலை, மதம், வருமானம் மற்றும் வட்டாரங்கள் முதலியவை சமூகப் பொருளாதார வேற்றுமைகளில் பிரதிபலிப்பதோடு குழந்தைபேறு உடல்நலத்தில் பிரதிபலிக்கின்றன.

எடுத்துக்காட்டாக, ஹசினா வாழும் அஸ்ஸாம், சில பத்தாண்டுகளாகவே வளர்ச்சியில் பின் தங்கியுள்ளது. நிர்வாக அலட்சியமும், ஊழலும், ராணுவ அடக்குமுறையும் தொடர்ந்து இருக்கிறது. இது பிரசவகால மரணங்களை பெருமளவு உயர்த்தியுள்ளது. அரசாங்க புள்ளிவிவரப்படி, 100,000 பிரசவங்களில் 480 மரணங்கள் ஏற்படுகின்றன.

ஹைதராபாத்தின் மகாத்மா காந்தி மருத்துவமனையில் 15வயதுப்பெண் அவசர கால சிகிச்சைக்கு விரைந்து எடுத்துச் செல்லப்படுகிறாள்.. வலியால் துடித்தபடி இருக்கும் இந்தப்பெண்ணே, ஒரு குழந்தையே குழந்தையை சுமந்தால் ஏற்படும் நிலைக்கு, ஒரு சிறந்த உதாரணம் என்கிறார் டாக்டர் ஷைலஜா. ”அவளுக்கு ரத்தக்கொதிப்பு உயர்திருக்கிறது. அவளது இடுப்பு மிகவும் சிறியதாக  இருப்பதால் குழந்தை  வெளியே  வர முடியாமல் மாட்டிக்கொள்ளும். இந்த நேரங்களில் சிசேரியனைத் தவிர வேறு வழியில்லை,” என்கிறார் அவர்.

அப்பெண் 200 கிமீ பிரயாணம் செய்து  சரியான நேரத்துக்கு வந்திருக்கிறாள்.ஆனால், பெரும்பாலானவர்கள் வீட்டிலேயே  பிரசவிக்கிறார்கள்.  இம்மாதிரியான சிக்கல்களால் தாயும் குழந்தையும் ஒருசேர இறக்கிறார்கள். சிறுவயதிலேயே இக்குழந்தைகள் திருமணத்தின் பெயரால்  தொடர் கற்பழிப்புக்கும் பாலியல் வன்முறைக்கும் உள்ளாகிறார்கள்.  எதிர்ப்பதற்கோ தடுப்பதற்கோ வழியில்லாமல் இந்த வன்முறைக்கு பழக்கப்பட்டு விடுகிறார்கள்.

”Broken Voice” என்ற புத்தகத்தில் ஒரு பெண் 13  வயதில் திருமணம் என்றால் எப்படி இருக்கும் என்பதை “என் கணவனை பார்த்து எனக்கு மிகவும் பயமாக இருந்தது. அவர் என்னைவிட மிகவும் பெரியவராக இருந்தார்.. அவர் என்னைத் தொடக்கூடும் என்பதால்,  வீட்டுக்கு அவர் வருவதையே நான் விரும்பவில்லை.” என்கிறார்.

18 வயதுக்குள்ளான பெண்களிடம்தான் அதிகளவு எச்ஐவி நோய்த்தொற்று இருப்பதாக ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது. பாதுகாப்பில்லாத பாலுறவு, ஒருவருக்கு மேற்பட்டவர்களுடன் உறவு போன்றவற்றை ஆண்களுக்கிடையே முறைப்படுத்துவது இன்றுவரை சவாலாக இருக்கிறது. குழந்தைத் திருமணங்கள் நடைபெறும் சமூகங்களில் அது இன்னும் அதிகமாக இருக்கிறது.

திருமணமான குழந்தைகளோ பெண்களோ கணவன் மூலமாக  எச்ஐவிக்கு ஆளானால், அவர்களது குடும்பமும் சமூகமும் கணவனது உடல்நிலைக்கு காரணமாக மனைவியையே குற்றவாளிகளாக்குகின்றனர். அதுவும், கருவுற்றிருக்கும்போது உடல்நிலை பாதிக்கப்பட்டால் வீட்டைவிட்டு வீதிக்குத் துரத்திவிடப்படும் குழந்தைகள் இன்னும் அதிகமான ஆபத்துக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

ஹைதராபாத்தின் அந்த மருத்துவமனையில் பிரசவ அறைகளிலொன்றில் நிற்கிறார் டாக்டர் ஷைலஜா. “விரைவில் மகப்பேறுக்கு ஆளானால் ஏற்படும் கதியை பாருங்கள்” என்று சொல்லி, அப்பெண்ணின் நாக்கை உள்அன்னத்தில் மடக்கச் சொல்கிறார். தாய் அனீமிக்காக இருப்பதோடு, குழந்தையும் மிகுந்த எடைகுறைவாக இருப்பதாகச் சொல்கிறார். அதிர்ஷ்டமிருந்தால் இவன் பிழைப்பான் என்று ஆங்கிலத்தில் சொன்னதை அந்தத்தாய் புரிந்து கொள்ளவில்லை.

அங்கிருந்து, பெண்கள் நலப்பிரிவுக்கு சென்றால்,  ஹிஸ்டெரக்டமிக்கு ஆளான அநேக பெண்களை பார்க்க முடிந்தது. 23 வயதுக்கும் குறைவான பெண்கள் அவர்கள். அவர்கள் வீட்டுக்கு செல்லும் போது இனி குழந்தைப்பேற்றுக்கு ஆளாகாத நிலையில் இருப்பார்கள். வீட்டு வேலைகளிலும் அவர்களால் ஈடுபடமுடியாது. பெரும்பாலானோரை அவர்களது கணவர்கள் வீட்டைவிட்டு அனுப்பி விடுவார்கள்.

அஸ்ஸாமைச் சேர்ந்த ஹசீனாவின் நிலைமை இன்னும் மோசம். அவரைப் போன்று மூன்று மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த கிராமங்களில் சிலவற்றிற்கு இன்னும் மின்சார வசதி கூட இல்லை. சாலைகளும்,  பள்ளிகளுமோ அல்லது  பொதுவசதிகளோ எதுவும் இல்லை.பெரும்பாலும் ஆற்றில் மீன் பிடித்தோ விவசாயம் செய்தோதான் வாழவேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.

30 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த மாநிலத்தில் விவசாயத்துக்கு போதிய நிலையில்லா விட்டாலும் எங்கும் செல்ல வசதிவாய்ப்பின்றி இங்கேயே வசிக்க நிர்பந்திக்கப்படுகிறார்கள். ஹசீனா அருகிலிருக்கும் ஒரு வடகிழக்கு ஆராய்ச்சி நிலையத்தின் மருத்துவமனைக்குச் செல்கிறார்.அரசாங்க உதவி பெறும் அந்த மருத்துவமனையிலிருந்துதான் பிரம்மபுத்திரா நதியைக் கடந்து மருத்துவ உதவிகள் ஹசீனாவின் கிராமத்துக்கு வரவேண்டும்.

அந்த மருத்துவமனையின் நர்ஸ் ஹசீனாவின் உடல்நிலையைக் குறித்தும் நலங்களைக் குறித்தும் கேள்விகள் கேட்கிறார். ஹசீனாவுக்கு மருத்துவ வசதிகளுடன் வரும் படகுகளைக் குறித்து தெரிந்திருக்கவில்லை. ஏனெனில், ஹசீனாவின் வீடு இன்னும் ஒரு ஓடையைக் கடந்து இருக்கிறது.அங்கு எந்த மருத்துவ வசதிகளோ வாய்ப்போ இல்லை.மேலும், ஹசீனாவுக்குத் தெரிந்த ஆர்வலரும் அதனைப் பற்றி சொல்லவில்லை.

ஹசீனாவை பரிசோதித்த நர்ஸ் அஸ்ஸாமின் மற்ற எல்லா கருவுற்றிருக்கும் பெண்களைப் போலவே ஹசீனாவும் அனிமிக்காக இருப்பதாக தெரிவிக்கிறார். ஹசீனாவின் ஹீமோகுளோபின் 6.4 என்றும் சொல்கிறார். இந்தியப்பெண்களுக்கு  ஒரு டெசிலிட்டருக்கு 11 கிராம் இருக்கவேண்டும். கருவுற்றிருக்கும் பெண்கள் அனிமிக்காக இருக்கும்போது குறித்த நேரத்துக்கு முன்பாக குழந்தை பிறக்கும் வாய்ப்பு மிகவும் அதிகம். அதோடு நோய்தொற்றுக்கான வாய்ப்புகளும் அதிகம். அதுவும் மருத்துவ வசதிகளெதுவும் இல்லாத அவசரத்துக்கு மருத்துவ வசதிகள் கிட்டாத இப்பெண்கள் மரணத்தின் வாயிலிலிருக்கிறார்கள்.

பேறுகாலத்தில் மருத்துவமனைக்குச் செல்வதைவிட வீட்டில் இருப்பதையே ஹசீனா விரும்புகிறார். அரசாங்க மருத்துவமனைக்குச் சென்றால் அரசாங்கத்திலிருது 1400 ரூபாய்கள் வருமென்றாலும் ஹசீனாவின் வீட்டிலிருந்து மருத்துவமனைக்குச் செல்வது 1500 ரூபாய்களாகும் என்றும்  அதோடு மருத்துவமனைக்கும் ஆரம்பத்தில் பணம் செலுத்த வேண்டியிருக்குமென்றும்  கூறுகிறார். அதோடு, பேறுகாலத்தில் ஆண் மருத்துவர்கள் தன்னை உடலில் துணியில்லாமல் பார்ப்பதை விரும்பவில்லை என்றும் கூறுகிறார்.

பெற்றோர் சொல்வதைப் போல மருத்துவ வசதியில்லாமல் வீட்டில் பிரசவித்தால் இறப்பை சந்திக்க நேரிடும் என்கிறார், நர்ஸ் ஒரு குழந்தைக்குச் சொல்வதைப் போல.  “செத்தா செத்துட்டு போறேன்” என்கிறாள்  ஹசீனா தனது தலையிலிருக்கும் துணியை இழுத்துவிட்டபடி.  ஹசீனாவைப் போன்ற எண்ணற்ற குழந்தை மணமகள்களுக்கு வாழ்க்கை என்பது அவ்வளவுதான்.

இந்தியாவின் கிராமங்களில் அதுவும் பின்தங்கிய மாநிலங்களில் ஏழ்மை காரணமாக சிறு வயதுத் திருமணங்கள் அதிகம் நடக்கின்றன. இந்தி பேசும் மாநிலங்களில் வலுவான பார்ப்பனிய பண்பாட்டு ஆக்கிரமிப்பு காரணமாகவும் நடக்கின்றன. இத்தகைய பின்தங்கிய மாநிலங்கள், கிராமங்களை அரசும், முதலாளிகளும் எப்போதும் புறக்கணித்தே வருகின்றனர். அவர்களுக்கு இலாபம், வருமானம் இருக்கும் பகுதிகளில்தான் வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வருகிறார்கள்.

சாதி, மதம் பிற்போக்குகளுடன் கூடவே மறுகாலனியாக்கம் ஏற்படுத்தியிருக்கும் இத்தகைய ஏற்றத்தாழ்வான வளர்ச்சி, புறக்கணிப்பு காரணமாக இந்த குழந்தைகள் குறிப்பாக பெண் குழந்தைகள் சிறுவயதிலேயே இறக்கின்றனர். அல்லது ஆயுள்கைதிகளைப் போல வாழ்கிறார்கள். சிறுவயது பெண் குழந்தை திருமணம் என்பது அந்தந்த குடும்பங்களில் ஊதியமின்றி வேலை செய்யும் பணியாளின் இடத்திற்கு ஒப்பானதுதான்.

ஆண்டுக்கு ஒரு இலட்சம் தாய்மார்களும், பத்து இலட்சம் குழந்தைகளும் கொல்லப்படும் நாட்டில்தான் விரைவில் வல்லராசகப் போகிறதென்ற கூச்சலை ஊடகங்கள் வாயிலாகவும், அப்துல்கலாம் டைப் நடுத்தர வர்க்கதின் மூலமாகவும் கேட்டுக் கொண்டிருக்கிறோம். கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வைத்து பெருமைப்படும் இவர்கள் மரண கண்டத்தோடு வாழ்வதற்கு சபிக்கப்பட்ட இந்த குழந்தைகளை கொசுக்களைப் போல ஒதுக்குகிறார்கள்.

எனவே குழந்தைகள் திருமணத்தை எதிர்த்து சட்டங்கள் மட்டும்  போதுமானவையல்ல. நடைமுறையில் நாம் பார்ப்பனியத்தையும், மறுகாலனியாக்கத்தையும் எதிர்த்து போராடுவதினூடாகத்தான் நமது குழந்தைகளை மீட்க முடியும்.

______________________________________________

*விவரங்கள், செய்திகள், அனுபவங்கள் சில இணையதளங்கள் மற்றும் கட்டுரைகளிலிருந்து எடுத்தாளப்பட்டிருக்கிறது.

_________________________________________

– சந்தனமுல்லை
_________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

ஊழல்: விருத்தாசலத்தில் நக்சலைட்டுகள் நேரடி நடவடிக்கை!

அண்ணா ஹசாரேவின் மெழுகுவர்த்தி போராட்டத்தையே மாபெரும் புரட்சியாக உச்சி மோந்து மெச்சிய அம்பிகள் இந்தக் கட்டுரையை மனப்பாடம் செய்து படிக்கட்டும். ஊழலை சட்டமோ, சில மேதைகளின் நடவடிக்கைகளோ ஒழித்து விடாது. அதற்கு உழைக்கும் மக்களை அணிதிரட்டி ஊழல் செய்யும் அதிகாரவர்க்கம், முதலாளிகள், அரசியல்வாதிகள் அனைவரையும் எதிர்த்து களத்தில் இறங்கி தண்டிக்க வேண்டும். அரசு கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளை ஏமாற்றி கொள்ளையடித்த ஊழியர்கள், அதிகாரிகள் அவர்களுக்கு துணை போன போலீசு அத்தனை பேரையும், அதே விவசாயிகளை அணிதிரட்டி நீதியை பெற்றிருக்கிறது விவசாயிகள் விடுதலை முன்னணி.

இந்தப் போராட்டத்தில் ஊழல் பணம் 1,70,000 ரூபாய் மீட்கப்பட்டு அங்கேயே அதற்குரிய விவசாயிகளுக்கு பிரித்தும் கொடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் அரசு அலுவலகத்தை கைப்பற்றுதல், நெல் மூட்டுகளை பாதுகாத்தல், அதிகாரிகள் சிறைபிடிப்பு, லாரிகள் சிறைவைப்பு என அனைத்து நடவடிக்கைகளும் இடம்பெற்றிருக்கின்றன.

இவையெல்லாம் அண்ணா ஹசாரே டைப் கனவான்கள் நினைத்தும் பாரக்க முடியாத போராட்டம். ஏனெனில் இது நக்சல்பாரிகளின் போராட்டம். அதே நேரம் இது போன்ற போராட்டத்தில் கலந்து கொள்வதற்கும் அண்ணா ஹசாரேவை நம்பிக் கொண்டிருக்கும் கனவான்கள் முன்வரட்டும். இன்னும் எத்தனை நாள் மெழுகுவர்த்தியையே மட்டுமே ஏந்திக் கொண்டிருப்பது!

-வினவு

______________________________________________________________

ஊழல்: விருத்தாசலத்தில் நக்சலைட்டுகள் நேரடி நடவடிக்கை!

டந்த மார்ச் மாதம் 4-ம் தேதி அதிகாலை 6 மணியளவில் விருதை வட்டார விவிமு(விவசாயிகள் விடுதலை முன்னணி) செயலரை எழுப்பினார் ஒரு விவசாயி. “நமது ஊரில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 1 மூட்டைக்கு 8 கிலோ அதிகமாக வைத்து நெல் கொள்முதல் செய்ததை விவசாயிகள் கண்டுபிடித்துவிட்டனர்.அங்கே வாருங்கள்” என அழைத்தார்.தோழர் உடனடியாக எழுந்து சென்றபோது நூற்றுக்கணக்கான விவசாயிகள் அங்கே குவிந்திருந்தனர்.ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேசினார்கள்.

விவிமு தோழர்கள் அவர்களை ஒருமுகப்படுத்தி நெல்கொள்முதல் நிலைய ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.இப்பேச்சு வார்த்தையின் முடிவில் 19.01.2011 முதல் 3.3.2011 வரை எத்தனை மூட்டை நெல் கொள்முதல் செய்யப்பட்டனவோ, அவை அனைத்திற்கும் மூட்டைக்கு நான்கு கிலோ வீதம் பணம் தந்துவிடுவதாக நெல் கொள்முதல் நிலையத்தின் பட்டியல் எழுத்தர் கூறினார்.இது குறைவாயினும் இதை விவசாயிகள் ஏற்றுக்கொண்டனர். இப்படி பணம் தருவதற்கு தன்னை ஊருக்கு சென்றுவர அனுமதிக்குமாறு அந்த நபர் கோரினார். இதை விவிமு தோழர்கள் ஏற்கவில்லை.ஆனால் விவசாயிகள் கூறியதன் பேரில் அந்நபர் ஊருக்கு சென்றுவர அனுமதிக்கப்பட்டார்.

மாலைக்குள் வருவதாக சொன்ன அவன் மறுநாள் காலை வரை திரும்ப வரவே இல்லை.அங்கே வேலை செய்த சுமைதூக்கும் தொழிலாளிகளும் ஓடிவிட்டனர்.இப்போது அந்த கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட 4000 நெல்மூட்டைகள் இருந்தன.இந்த 4000 நெல்மூட்டைகளையும் அதன் அலுவலக பதிவேடுகளோடு,இரு எடைபோடும் இயந்திரங்கள் ஆகியவற்றை,விவிமு விவசாயிகளின் ஒப்புதலோடு தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது.அலுவலகத்தை விவிமு பூட்டிவிட்டு சாவியை தன்னிடத்தில் வைத்துக்கொண்டது.

05.03.2011 அன்று நெல் கொள்முதல் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் அங்கே வந்தார்கள்,அலுவலகத்தை திறக்குமாறு கேட்டார்கள் இதை விவசாயிகளும்,விவிமுவும் ஏற்க மறுத்துவிட்டனர்.திருடிவிட்டு ஓடிப்போன நெல்கொள்முதல் நிலையத்தின் பட்டியல் எழுத்தரை கொண்டுவந்து ஒப்படையுங்கள் எனக் கோரினோம். இதை அதிகாரிகள் மறுத்துவிட்டு அங்கிருந்து காரில் ஏறிதப்பிக்க முயன்றனர்.உடனே விவிமு வழிகாட்டியதன் அடிப்படையில் உயர் அதிகாரிகளை விவசாயிகள் சிறைபிடித்தனர்.

இதனால் குலை நடுங்கிப்போன அதிகாரிகள்,நாளை மேலும் சில உயர் அதிகாரிகளை அழைத்துவந்து விவசாயிகளிடம் பேசுவதாக கூறினர்.இதை எழுத்துபூர்வமாக எழுதித்தாருங்கள் என்று விவிமு கோரியபடி எழுதிதந்தனர்.இதனால் சிறைபிடிக்கப்பட்ட அதிகாரிகள் 2 மணிநேரத்திற்கு பின்பு விடுவிக்கப்பட்டனர்.அவர்கள் கூறியபடி மறுநாள் கடலூர் மாவட்ட TNCSC –துணைமேலாளர் தலைமையிலான உயர் அதிகாரிகள் குழு 06.03.2011 அன்று மதியம் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.அலுவலகத்தை தங்களிடம் ஒப்படைக்குமாறு அவர்கள் கோரியதை நாங்கள் நிராகரித்தோம். பிரச்சினை தீரும் வரை அலுவலகம் எமது கட்டுப்பாட்டில் தான் இருக்கும் என்று திட்டவட்டமாக அறிவித்தோம்.

பின்னர் பேச்சுவார்த்தை நடந்தது ”தவறு நடந்தது உண்மை தான் ஆனால் கொள்ளை அடிக்கப்பட்ட நெல்லிற்கு எங்களால் பணம் தர இயலாது.சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு தொடுக்கத்தான் முடியும்”என சட்டவாதம் பேசினர். ஆனால் நாங்களோ கொள்ளை அடிக்கப்பட்ட நெல்லிற்கு உடனடியாகவே பணம் தரவேண்டும், என்ற கோரிக்கையில் உறுதியாகவே இருந்தோம்.”கொள்ளை அடிக்கப்பட்ட நெல்லிற்கான தொகையை தற்காலிக ஊழியரான பட்டியல் எழுத்தர் மட்டுமே எடுத்துக்கொள்ளவில்லை.உயர் அதிகாரிகளான உங்கள் அனைவருக்கும் பிரித்து தான் கொடுத்துள்ளார்,ஆகவே நீங்கள் அனைவரும் வாங்கியப் பணத்தை திருப்பித் தாருங்கள்” என பகிரங்கமாகவே கோரிக்கை வைத்தோம்.

எமது இந்த கோரிக்கையை அவர்கள் ஏற்க மறுத்ததால் அவர்களை முற்றுகையிட்டு சிறைபிடித்தோம். எங்களது பிரச்சனையை தீர்க்காமல் நீங்கள் இங்கிருந்து வெளியேற முடியாது என, நூற்றுக்கணக்கான விவசாயிகளுடைய ஒருமித்த ஆதரவோடு அறிவித்தோம்.பின்னர் எடை இயந்திரங்களை பழுது பார்ப்பவர்களை வரவழைத்து இரு எடை இயந்திரங்களும் சரிபார்க்கப்பட்டது.இதில் ஒரு மூட்டைக்கு 4 முதல் 8 கிலோ வரை கூடுதாலாக காட்டியது நிருபிக்கப்பட்டது.இதனால் அதிகாரிகள் தேள்கொட்டிய திருடனை போல் விழித்தாலும்,தங்களால் பணம் தரமுடியாது என்பதில் மட்டும் உறுதியாக இருந்தனர்.இதனால் மாலை வரை முற்றுகை நீடித்தது.வெளியே இருந்த இரண்டு எடை இயந்திரங்களும் அலுவலகத்தில் வைத்து பூட்டப்பட்டது.

மாலை 6.30 மணியளவில்  போலிசு வந்தது. அதிகாரிகளை விடுவிக்காவிட்டால்,வழக்குப் போடுவோம் என மிரட்டியது. இதனால் விவிமு தனது உத்தியை மாற்றியது. உடனடியாகவே புதிய பட்டியல் எழுத்தரை நியமித்து விவசாயிகளின் எஞ்சிய நெல்லையும் கொள்முதல் செய்யவேண்டும், என்ற விவிமுவின் கோரிக்கையை உயரதிகாரிகள் ஏற்றுக்கொண்டதால் முற்றுகையை விலக்கிக் கொண்டு அதிகாரிகளை விடுவித்தோம்.அதே நேரத்தில் “நாளைக்குள் கொள்ளை அடிக்கப்பட்ட நெல்லுக்கு பணம் தராவிட்டால்,தற்போது நிலையத்தில் உள்ள 4000 நெல்மூட்டைகளையும் விவசாயிகளுக்கு பிரித்துத் தருவோம்,”என விவசாயிகளின் ஆரவாரத்திற்கிடையே அறிவித்தோம்.இது சட்டவிரோத செயல் என போலிசு கூறிய போது,நான்கு கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்களிடம் கொள்ளை அடிக்கப்பட்ட நெல்லை திருப்பி எடுத்துக்கொள்ளப் போகிறோம்.இந்நடவடிக்கை சட்டவிரோதம் என்று சொன்னால் அதை செய்வதற்கு நாங்கள் தயங்கமாட்டோம். போலிசால் முடிந்தால் எங்கள் அத்துனை பேர் மீதும் வழக்கு போடட்டும்.நாளை 07.03.2011 அன்று  திருடியதை திருப்பி எடுப்போம், என்ற போராட்டத்தை விவிமு அறிவித்தது.

இதனால் ஏழாம் தேதி காலை கோட்டாட்சியர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக போலிசு எங்களுக்கு தகவல் தந்தது.நாங்கள் பேச்சுவார்த்தைக்கு கோட்டாட்சியர் அலுவலகம் சென்றோம்.”நான் உங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை நீங்கள் வட்டாட்சியரை பாருங்கள்” என்றார் கோட்டாட்சியர்.நாங்கள் வட்டாட்சியரை சந்தித்த போது ”போலிசு ஆய்வாளரிடம் பேசுங்கள்”என்றார்.பேச்சுவார்த்தை போலிசு நிலையத்தில் நடந்தது.

இந்தப் பேச்சுவார்த்தையில் 4000 நெல்முட்டைகளையும் எடை போட்டு கூடுதலாக உள்ள நெல்லிற்கு பணம் தந்துவிடுவதாக TNCSC அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்.”ஏற்கனவே சேமிப்பு கிடங்கிற்கு சென்றுவிட்ட நெல்லிற்கு தங்களால் ஒன்றும் செய்யமுடியாது”, என்று கூறினர்.இதை விவசாயிகள் ஏற்றுக்கொண்டதால் விவிமுவும் வேறுவழியின்றி ஒப்புக்கொண்டது.மறுநாள் வருவதாக சொன்னவர்கள் TNCSC-யில் பணிபுரியும் பட்டியல் எழுத்தர் ஒருவரையும், பணி ஓய்வு பெற்ற முன்னாள் கண்காணிப்பாளர் ஒருவரையும் இடைத்தரகர்களாக TNCSC உயரதிகாரிகள் அனுப்பிவைத்தனர். இவர்கள் ”02.03.2011 , 03.03.2011 ஆகிய இரு நாட்களில் மட்டும் தான் தவறு நடந்துள்ளது,இவ்விரு நாட்களில் எடைபோடப்பட்ட மூட்டைகளுக்கு மட்டும் தான் பணம் தரமுடியும்.எஞ்சிய நாட்களில் எடைபோட்ட மூட்டைகளில் தவறு நடக்கவில்லை” என வாதாடினர்.

4000 நெல் மூட்டைகளில் மேலே அடுக்கிவைக்கப்பட்டு இருந்த முட்டைகளில் 10 மூட்டையை எடைப் போட்டு ”நெல் குறைகிறதே தவிர கூடுதலாக இல்லை”, என விவசாயிகளுக்கு காட்டிவிட்டு லாரிகளில் மூட்டைகளை ஏற்ற ஆரம்பித்தனர்.சுமார் 50 மூட்டைகளை ஏற்றிய பின்பு அடியில் இருந்த மூட்டைகளை எடை போடுமாறு நாங்கள் கோரினோம். நாங்கள் எதிர்பார்த்தது போலவே கீழே இருந்த மூட்டைகளில் 2 முதல் 4 கிலோ வரை கூடுதலாக நெல் இருந்தது.கடைசி இரு நாட்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகளில் கூடுதலாக இருந்த நெல்லிற்கு மட்டும் பணம் தந்துவிட்டு நெல்மூட்டைகளை ஏற்றிச்சென்றுவிடலாம், என்று திட்டமிட்டிருந்த இடைத்தரகர்கள் ஏமாந்து போனார்கள்.

“கடைசி இரு தினங்களுக்கு மூட்டைக்கு 8 கிலோவும் எஞ்சிய மூட்டைகளுக்கு சராசரியாக 2 கிலோவீதம் பணம் தரவேண்டும். அப்போது தான் நெல்மூட்டைகளை ஏற்றுவதற்கு அனுமதிப்போம்” என திட்டவட்டமாக அறிவித்தோம்.இதை உயரதிகாரிகளுக்கு அறிவிப்பதாக கூறிவிட்டு இடைத்தரகர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.திருடப்பட்ட நெல்லிற்கு பணம் தந்துவிட்டு நெல்மூட்டைகளை ஏற்றாமல் வெளியேறக்கூடாது, என விவிமு 6 லாரிகளை சிறைபிடித்தது.

உடனடியாக இத்தகவலை உயரதிகாரிகளுக்கும்,பத்திரிக்கை,தொலைக்காட்சி செய்தியாளர்களுக்கும் தெரிவித்தது.மறு நாள் காலை 10 மணியளவில் லாரிகள் சிறைப்பிடித்திருப்பதை செய்தியாக்கிக்கொண்டு செய்தியாளர்கள் புகைப்படம் எடுக்கமுயன்றனர்.இப்படி புகைப்படம் எடுக்ககூடாது என்று தமிழ்நாட்டில் இல்லாத கட்சியின் (புரட்சிகர சோசலிச கட்சியின்) கடலூர்மாவட்ட செயலாளர் என்று தன்னை கூறிக்கொள்ளும் போலிசு புரோக்கரான செந்தில் என்பவர் தடுக்க முயன்றார். இப்படி லாரிகள் சிறைபிடிக்கப்பட்ட செய்தி பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளில் வெளிவந்தால் எங்கள் ஊர்களின் பெயர் கெட்டுப்போகும் என்று விவிமு செயலரிடம் வாதாடினார்.இதை மறுத்த விவிமு செயலரும்,அந்த நேரத்தில் அங்கே இருந்த விவசாயிகளும் TNCSC திருடர்களுக்கு ஆதரவாக அவர் பேசுவதை அம்பலப்படுத்தி அவரை எச்சரித்தனர்.இச்செய்தி இரண்டாவது முறையாக பத்திரிக்கை மற்றும் தொலைக்கட்சிகளில் வெளிவந்தது.

இதற்கிடையில் இப்படி தொடர்ந்து போராட்டம் நட்த்தினால் TNCSC-யை மூடிவிடுவார்கள் என்று வதந்தியை பரப்பி நெல் விற்ற விவசாயிகள்,விற்காத விவசாயிகள் ஆகிய இருவருக்கிடையில் மோதலை உண்டாக்க முற்பட்டனர்.இவர்களின் இந்த சதியை விவசாயிகளை கூட்டிப் பேசி அவர்களுக்கு புரிய வைத்து விவிமு முறியடித்தது.இப்படி TNCSC-க்கு ஆதரவாக வதந்தி பரப்பி விவசாயிகளின் ஒற்றுமையை சீர்குலைக்க முற்படும் எட்டப்பர்களை விவிமு செயலர் மிக கடுமையாக எச்சரித்தார்.விவசாயிகளும் எட்டப்பர்களின் சதியை புரிந்துகொண்டு தங்களது வாத்தைகளில் திட்டித் தீர்த்தனர்.விவிமு செயலரை திட்டிய ஒருவரிடம் பல விவசாயிகள் சண்டையிட்டனர்,அடிக்கவும் சென்றனர்.இச்சண்டையை விலக்கிவிட்ட விவிமு தோழர்கள் இப்போதைக்கு எட்டப்பர்களோடு சண்டை வேண்டாம் என்றும், இப்படி செய்தால் சட்டம்,ஒழுங்கு பிரச்சனையை உருவாக்க நினைக்கும் அதிகாரிகளின் விருப்பத்திற்கு நாம் பலியாகிவிடுவோம் என புரியவைத்தனர்.

மறுநாள் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளில் இச்செய்தி வெளிவந்ததால் உயரதிகாரிகளின் வழிகாட்டுதல் படி முதல் நாள் ஓடிப்போன இடைத்தரகர்கள் மீண்டும் வந்தனர். விவிமு கோரியபடி 4000 மூட்டைகளுக்கும் ரூபாய் 1 லட்சத்து 70 ஆயிரத்தை TNCSC-கொள்முதல் அதிகாரி முன்னிலையில் இடைத்தரகர்கள் விவிமுவிடம் தந்தனர்.இதன் மூலம் விவசாயிகளிடம் திருடியதில் ஒரு பகுதியை விவிமு திரும்பப் பெற்றது.இப்பணத்தை அனைத்து விவசாயிகளுக்கும் கணக்கிட்டு 14.03.2011 அன்று விவிமு பிரித்து தந்தது.

TNCSC-வரலாற்றிலேயே அவர்கள் திருடியதை திரும்பப் பெற்ற முதல் நடவடிக்கை இது தான்.இப்போராட்டத்தின் மூலம் விவசாயிகளிடம் ஒளிந்திருக்கும் போர்குணத்தை விவிமு மிகச்சரியாக பயன்படுத்தியது.மேலும் எட்டப்பர்களை முறியடிப்பதையும்,சட்டபூர்வ,சட்டபூர்வமற்ற போரட்டமுறைகளை இணைத்து மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதை வெறுமனே பேச்சின் மூலமாக மட்டும் அல்ல,தனது செயலின் மூலமாகவும் விவசாயிகளுக்கு விவிமு உணரவைத்தது.இப்போரட்டத்தின் மூலம் விவாசாயிகள் மத்தியில் போராட்டக் குணத்தை மட்டுமல்ல,விவிமு போன்ற நக்சல்பாரி அமைப்புகள் மட்டுமே மக்களின் உரிமைகளை வென்றேடுக்க விடாப்பிடியாக நின்று போராடுவதுடன்,இப்போராட்டத்தில் தமது உயிரையும் தரத் தயங்காதவர்கள் என்பதையும் விவசாயிகளுக்கு உணர்த்தியது.

இப்போரட்டத்தை சாதி,ஊர் ஆகிய பிற்போக்குத் தனங்களை காட்டி, விவசாயிகளின் ஒற்றுமையை சீர்குலைக்க முயன்ற அதிகாரிகள் மற்றும் எட்டப்பர்களின் சதிச்செயல்களை விவிமு தனது தன்னலமற்ற,உறுதியான நிலைப்பாடுகளாலும்,போராட்டத்தாலும் உடைத்தெரிந்தது.இப்படிப்பட்ட விவசாயிகளின் பிரச்சனைகள் அனைத்தையும் பயன்படுத்தி அடுக்கடுக்கான போராட்டங்களை நடத்துவதன் மூலமே விவசாயிகளின் வாழ்நிலையால் அவர்களிடம் உள்ள பிற்போக்கு தனங்களை உடைத்தெரிந்து,அவர்களிடம் இயல்பிலேயே உள்ள போராட்டக்குணத்தை வெளிக்கொணர்ந்து,விவசாயிகளிடையே ஒற்றுமையையும்,கூட்டுத்துவ சிந்தனையையும் ஜன்நாயக உணர்வையும் உருவாக்க முடியும்.விவசாயிகளை திருத்தமுடியாது,அவர்களை அணிதிரட்ட முடியாது,என்று மார்க்சிய இயங்கியலுக்கு புறம்பாக உளறித்திரியும் மரமண்டைகளுக்கு இது ஒருபோதும் புரியாது!

_____________________________________________________________

– தகவல்: விவசாயிகள் விடுதலை முன்னணி, விருத்தாசலம் வட்டம்.
_____________________________________________________________