Friday, June 12, 2026
முகப்பு பதிவு பக்கம் 779

கூடங்குளம் போராட்டம்: அனுபவங்களும் படிப்பினைகளும்

14

கூடங்குளம் அணு உலைகளில், அவற்றின் எரி பொரு ளாகிய  யுரேனியத்தை நிரப்பி இயங்கச் செய்வதற்கும், அணு மின் உற்பத்தியைத் தொடங்குவதற்கும் இருந்த தடைகள் அகற்றப்பட்டுள்ளன. “நாறவாய்” நாராயணசாமிகள் கூறுவதைப் போல உடனடியாக இல்லாவிட்டாலும், சில மாதங்களில் அணு மின் உற்பத்தி தொடங்கிவிடும்.

இது, அணுசக்தி எதிர்ப்பு மக்கள் இயக்கம் மற்றும் அதன் தலைமையிலான இடிந்தகரை  கூடங்குளம் வட்டாரக் கிராமங்களின் அணு மின் நிலையத்துக்கு எதிரான மக்கள் போராட்டங்களுக்கு நிச்சயமாகப் பின்னடைவுதான். ஆனால், இப்பின்னடைவு மீளமுடியாததோ, நிரந்தரமானதோ அல்ல. இப்பின்னடைவி லிருந்து மீண்டு, போராட்டங்களைச் சரியான திசையில் முன்னெடுப்பதற்கு முதன்மையான கடமை ஒன்றிருக்கிறது. இப்போராட்டங்களை வழிநடத்திய முன்னணியாளர்கள், அவற்றிலிருந்து சரியான அனுபவங்களையும் படிப்பினைகளையும் பெற்றாக வேண்டும்.

முதலாவதாக, போராட்டங்களுக்கு அணிதிரண்ட மக்கள் மீது, அவர்களை வழிநடத்திய தலைமை மற்றும் முன்னணியாளர்கள் முழு நம்பிக்கை வைக்கவில்லை. அம்மக்களைப் பற்றிய குறை மதிப்பீடு கொண்டிருந்தார்கள். இது மத்திய தர அறிவுஜீவி வர்க்கத்தினர் உழைக்கும் மக்கள் மீது வழக்கமாகக் கொண்டிருக்கும் கீழானதொரு கண்ணோட்டம்தான். “என்னதான் எடுத்துச் சொன்னாலும் மக்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள். மேலும், எல்லா உண்மைகளையும் மக்களிடம் சொல்லக் கூடாது; சொல்லவேண்டிய அவசியம் இல்லை; சொன்னால் பயந்து விடுவார்கள்; போராடத் துணியமாட்டார்கள்; போராட முன் வரமாட்டார்கள்; பின்வாங்கி விடுவார்கள்” என்று அறிவுஜீவிகள் கருதுகிறார்கள்.

உண்மையில் இது அறிவுஜீவிகளிடமே உள்ள குறைபாடு; இருப்பதையும் இழந்துவிடுவோம் என்ற அச்சம் தான் இதற்குக் காரணம். உண்மையில் உழைக்கும் மக்கள் பாட்டாளிகள் மட்டுமல்ல; வரலாற்றுப் படைப்பாளிகள்.

கூடங்குளம் போராட்டம் : அனுபவங்களும் படிப்பினைகளும்கூடங்குளம் அணுஉலைகளையும், அணு மின்நிலையத்தையும் இழுத்து மூடவேண்டும், அவை வரவிடாமல் செய்ய வேண்டுமானால், எத்தகைய எதிரிகளை எதிர்த்துப் போராடி முறியடிக்க வேண்டும் என்ற உண்மை அங்கு போராடும் மக்களிடம் சொல்லப்படவே இல்லை. கூடங்குளம் திட்டம், ஆட்சியாளர்கள், அமெரிக்கரஷ்யா முதலிய மேலைநாடுகள், இந்திய ஆளும் வர்க்கங்கள் ஆகியோருக்கு எவ்வளவு முக்கியமானது; என்ன விலை கொடுத்தாவது, என்ன காரியம் செய்தாவது கூடங்குளம் திட்டத்தை நிறைவேற்றியே தீரவேண்டும் என்பதில் எவ்வளவு மூர்க்கமாகவும் உறுதியாகவும் அவர்கள் இருக்கிறார்கள் என்கிற விவரம் போராடும் மக்களைச் சென்றடையவே இல்லை.

கூடங்குளம் திட்டத்தைத் தொடர்ந்து அதுபோன்ற 60க்கும் மேற்பட்ட அணு மின் திட்டங்கள், அவற்றுக்கான அணுஉலைகள், 70 இலட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் நிறுவப்பட அணிவகுத்து நிற்கின்றன. உற்பத்தி செய்து குவிக்கப்பட்டுள்ள பேரழிவு ஆயுதங்களை விற்றுத் தீரவேண்டும்; அப்போதுதான் மேலை நாடுகளின் ஆயுதத் தொழிற்சாலைகளும் இயந்திரங்களும், மூலதனமும் இடைவெளியின்றிச் சுழன்று, கொழுத்த இலாபமீட்ட முடியும்; அதற்காக கோடிக்கணக்கான மக்கள் செத்து மடிந்தாலும் கவலையில்லை என ஏகபோக ஆயுத உற்பத்தியாளர்கள் வெறிபிடித்து அலைவதைப் போல, மேலைநாடுகளில் காலாவதியாகிப் போன தொழில்நுட்பம், துருப்பிடித்து ஓட்டை உடைசலாகிப் போன நாசகார அணுசக்தி உலைகளை “நம்” தலையிலே கட்டிக் “காசா”க்கிக் கொள்ளத் துடிக்கிறார்கள். அவர்கள் அடிக்கும் கொள்ளையில் பங்கு போட்டு ஆதாயம் அடைவதற்காக, தனியார்துறையில் பல அணு மின் நிலையங்களை நிறுவக் காத்திருக்கிறார்கள், டாடா, அம்பானி, அதானி முதலிய தேசங்கடந்த இந்தியத் தரகு முதலாளிகள். பேரழிவு ஆயுத வியாபாரிகளைப் போல, இவர்களின் கொள்ளை இலாபவெறிக்கு எவ்வளவு கோடி மக்களையும் அணு  உலைகளுக்குக் காவு கொடுக்கவும் தயாராய் உள்ளனர், இந்திய ஆட்சியாளர்கள்.

அடுத்து, எட்டுமாதங்கள், ஒரு சிறு அளவுகூடச் சட்டவிரோதமான வன்முறையில்  கூடங்குளம் அணுமின் திட்ட எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் ஈடுபடவில்லை. பால்குடம் எடுப்பதும், பட்டினி கிடப்பதும் என்ற அமைதி வழியிலேயே, காந்திய வழியிலேயே போராடி வருவதாகத் திரும்பத் திரும்ப உதயக்குமார் முதலியவர்கள் மன்றாடினர். ஆனால், “மூட்டைப் பூச்சிகளை நசுக்குவதற்குப் பீரங்கி வண்டிகளின் அணிவகுப்பா?” என்ற தோரணையில், “மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு!” என்று பெயர் பெற்ற “தி இந்து” நாளேடே வியந்து தலையங்கம் தீட்டியது; அந்த அளவு கூடங்குளம் அணுஉலைகளையும், அணுமின் நிலையத்தையும் திறந்து மின்உற்பத்தியில் ஈடுபடுவதற்கு எந்த எல்லைவரையும் போவது என்று ஆட்சியாளர்கள் வலிந்து நிற்பதைக் கண்டு போராடிய மக்கள் அதிர்ச்சியுற்றனர்.

அதிரடிப்படை உட்பட ஆயுதந்தாங்கிய மத்திய, மாநிலப் போலீசுப் படைகள், உளவுப் பிரிவுகள் ஆகியவற்றின் 7,000 படையினர் குவித்துச் சுற்றி வளைக்கப்பட்டனர். 144 உத்திரவு பிறப்பிக்கப்பட்டு, குடிநீர், மின்சாரம், பால் முதலிய உணவுப் பொருட்கள் வழங்கீடு, போக்குவரத்தைத் தடை செய்து முற்றுகையிடப்பட்டது.  அந்நிய நாட்டு மக்கள் மீது பாய்ந்து குதறுவதற்குத் தயார் நிலையில் இருப்பதைப் போல முப்படைகளும் குவிக்கப்பட்டன. அந்நிய நாடுகளிடம் நிதி பெற்று, அந்நிய நாடுகளின் சதிக்கு உடன்பட்டு கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிராக மக்கள் போராடுவதாக அவதூறும் விசாரணையும் நடந்தது. போதாதென்று “நக்சலைட்டு பீதி” பரப்பப்பட்டு, கைது நடவடிக்கைகள் ஏவிவிடப்பட்டன.

ஏற்கெனவே தலைக்குமேல் தொங்கும் வாளாக போராட்ட முன்னணியாளர்கள் மீது தேசத்துரோகம் மற்றும் அரசு மீது போர் தொடுத்தல், அரசுக்கு எதிராகச் சதி உட்பட நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இப்போது அவற்றின் கீழ் பலரைக் கைது செய்து பணயக் கைதிகளாக்கி, காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தை விலக்கிக் கொள்ளும்படி ஆட்சியாளர்கள் நிர்பந்தித்தனர். மும்பையிலுள்ள கிறித்துவத் திருச்சபை கார்டினல் மூலம் பேரங்கள் நடத்தி, நிர்பந்தங்கள் செய்து, மதுரை மண்டல ஆயர் ஃபெர்ணான்டோவைத் தூது அனுப்பி காரியத்தைக் கச்சிதமாக முடித்தனர், ஆட்சியாளர்கள்.

இவற்றையெல்லாம் போராடும் மக்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால், போராட்ட முன்னணியாளர்கள் எதிர்பார்த்திருக்க வேண்டும்; மக்களை எச்சரித்திருக்கவும் வேண்டும். “நாமென்ன மாவோயிசத் தீவிரவாதிகளைப் போலத் துப்பாக்கி ஏந்தியா போராடுகிறோம். காந்திய வழியில் அமைதியான போராட்டங்களைத் தானே நடத்துகிறோம். ஆட்சியாளர்களும் அவ்வாறுதான் இருப்பார்கள்” என்று எண்ணி ஏமாந்து போனார்கள், போராடிய மக்கள்.

கூடங்குளம் போராட்டம்: அனுபவங்களும் படிப்பினைகளும்ஆனால், நாட்டை மீண்டும் காலனியாக்கித் தருவதற்குத் தவணை முறையில் கையூட்டுப் பெறுவதென்று பேரங்கள் பேசி முடித்து விட்டார்கள், ஆட்சியாளர்களும் ஆளும் வர்க்கங்களும். “எங்கள் வனங்களை அழிக்காதீர்கள், எங்கள் இயற்கை வளங்களை வேட்டையாடாதீர்கள், எங்கள் மண்ணைப் பிடுங்கிக் கொண்டு, எங்களை வெளியே துரத்தாதீர்கள்” என்று நிராயுதபாணிகளாக நின்று முழக்கமிடும் ஒடிசா பழங்குடி மக்களுக்குத் துப்பாக்கிக் குண்டுகளை பரிசாக வழங்குகிறார்கள் ஆட்சியாளர்கள். எல்லாம் எதற்காக?

வேதாந்தா மற்றும் போஸ்கோ போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் இரும்பு, செம்பு, பித்தளை, அலுமினியம் முதலிய தாதுப்பொருட்களை வரைமுறையின்றிக் கொள்ளையடித்து, பல இலட்சம் கோடி ரூபாய் இலாபமீட்டுவதற்குத்தான். அதேபோன்றுதான் உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மலிவு விலையில் தடையற்ற மின்சாரம் வழங்குவதை உறுதிப்படுத்துவதற்காக நாடு முழுவதும் 60க்கும் மேற்பட்ட அணுமின் நிலையங்களை நிறுவிட ஆட்சியாளர்கள் மக்களின் வாழ்வாதாரங்களை மட்டுமல்ல, மக்கள் உயிர்களையும் பலியிடத் துடிக்கிறார்கள்.

இறுதியாக, இவ்வாறான கொடூரமான எதிரிகளை எதிர்த்து முறியடிக்க வேண்டுமானால் நாடு முழுவதும் பரந்துபட்ட மக்களின் ஆதரவைப் போராடும் மக்கள் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் சிங்கூர், நந்திகிராமம் போராட்டங்களுக்கு திரண்டதைப்போன்று பரவலான மக்கள் ஆதரவைத் திரட்டியிருக்கவேண்டும். ஆனால், கூடங்குளம்  இடிந்தகரை வட்டாரத்திலிருந்து விலகிப் போகப் போக அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்திற்கு எதிர்ப்பு கடுமையாகிக் கொண்டே போகிறது. ஓரிரு சிறு கட்சிகள், சிறு ஏடுகள் தவிர அனைத்து ஓட்டுக் கட்சிகளும் செய்தி ஊடகங்களும் எதிர்த்தரப்பில் நிற்கின்றனர். அது மட்டுமல்ல, பரந்துபட்ட உழைக்கும் மக்களும் கூட அணு மின் சக்திக்கு ஆதரவான பொய்ப் பிரச்சாரத்துக்குப் பலியாகி எதிர் அணியாக நிற்கிறார்கள். கடலூர், தூத்துக்குடி, கொச்சி, சென்னைஎண்ணூர் துறைமுகங்களில் இராட்சத பெட்டகங்களை இறக்குமதி செய்து, உள்நாட்டுப் பகுதிகளுக்கு எடுத்துச் செல்லும் தொழிலாளர்களுக்குத் தெரியாது, அவற்றின் உள்ளே அடைக்கப்பட்டுள்ள பொருட்கள் நமது நாட்டின் அத்தியாவசியத் தேவைகள் அல்ல. நமது மக்களின் உயிர்களைப் பலிவாங்கும் மருத்துவக் கழிவுகள், இரசாயனக் கழிவுகள், அணுக் கழிவுகள் என்று.

இவ்வாறான உண்மைகளை உழைக்கும் மக்கள் புரிந்து கொண்டு ஆட்சியாளர்களுக்கும் ஆளும் வர்க்கங்களுக்கும் எதிராக நிச்சயம் எழுச்சியுறுவார்கள். கூடங்குளத்திலிருந்து வெகுதொலைவிலுள்ள சென்னை மக்களிடம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணி போன்ற புரட்சிகர இயக்கங்கள் அணு சக்தி  அணு உலை எதிர்ப்பு இயக்கத்தை எடுத்துச் சென்றபோது கூட முதலில் கடும் எதிர்ப்பையே கண்டார்கள். ஆனால், அவர்கள் பிரச்சார முயற்சியில் அழுந்தி நின்று இயக்கத்தைத் தொடர்ந்தபோது, ஆதரவு தருபவர்களாக மக்கள் மாறினர்.

இதற்கு மாறாக கூடங்குளம் போராட்ட முன்னணியாளர்கள் ஜெயலலிதா போன்ற பிழைப்புவாதக் கழிசடைகளின் மீது நம்பிக்கை வைக்கும்படி சொன்னார்கள். இப்போது அவர்கள் நம்ப வைத்து வஞ்சகம் செய்து விட்டதாகப் புலம்புகிறார்கள். ஆக, மக்கள், மக்கள் மட்டுமே நம்பிக்கைக்குரிய மகத்தான சக்தி என்ற கொள்கையில் ஊன்றி நிற்கும்போதுதான் இலட்சியத்தை எட்டமுடியும் என்பது கூடங்குளம் போராட்டங்கள் நமக்குக் கற்றுத் தரும் படிப்பினை.

_________________________________________

– புதிய ஜனநாயகம், மே-2012

__________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

மே நாளன்று களப்பணியில் தியாகியானார் தோழர் செல்வராசு!

24

தனது இறுதி மூச்சுவரை தனியார்மயத்திற்கு எதிராக போராடி மே நாளில் தியாகியான தோழர். செல்வராசுக்கு வீரவணக்கம்!

அயராது உழைத்த தோழர், மீளாத உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டார்!

தோழர்.செல்வராசு நம்மை வீட்டு பிரிந்துவிட்டார்! தமக்கு பணமும், பதவியும் கிடைக்கவில்லை என்பதற்காகவே வேறு சங்கத்தையும் கட்சியையும் தேடியலையும் பிழைப்புவாதிகள் மலிந்துவிட்ட இந்த காலத்தில் புரட்சிகர அரசியலுக்காகவும், தொழிலாளர் வர்க்க விடுதலைக்காகவும் பணிபுரிய சரியான அமைப்பைத் தேடியடைந்து, அயராது பாடுபட்ட தோழர்.செல்வாராசு மரணமடைந்து விட்டார்! தியாகியாகிவிட்டார்!

எண்ணற்ற நக்சல்பாரி தோழர்களை ஈன்றெடுத்த வட ஆற்காடு – திருப்பத்தூரில் பிறந்த தோழர்.செல்வராசு, நக்சல்பாரி அரசியல் தழைத்தோங்கிய தருமபுரியில் தனது அரசியல் பணியை துடிப்புடன் மேற்கொண்டார். மேநாளில் புரட்சிகர அரசியலைப் பரப்பிக்கொண்டேஅவர் மனம்போல தியாகியானார்! வர்க்கப் போராட்ட தியாகச் சுடர்களில் ஒருவராக ஒளிவீசிக் கொண்டிருக்கிறார். கருவாகி உருவான தோழர்.செல்வராசு!

54 வயதான தோழர்.செல்வராசு சி.ஐ.டி.யூ.சங்கத்தில் நீண்டநாட்களாக இருந்தவர். ஆனால், தொழிலாளர்களுக்காக அயராது குரல்கொடுத்தவர். அநீதிக்கெதிராக போர்க்குணத்தோடு போராடியவர். அந்தக் காரணத்திற்காகவே சி.ஐ.டி.யூ.விலிருந்து முரண்பட்டு வெளியேறியவர். தொழிலாளர்களுக்காக நேர்மையாகப் போராடுபவர்கள், சி.ஐ.டி.யூ.வில் நீடிக்கத் தகுதியற்றவர்கள் என்பதால், பாட்டாளி வர்க்க உணர்வு கொண்டவர்கள் வெளியேறிவந்தது போல செல்வராசும் அப்படியே வெளியேறினார்.

ஒருசமயம் அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாகம் தொழிலாளர்களுக்கு தரமற்ற செருப்பை (தோல் செருப்பு என்று சொல்லி கொடுத்தாலும், அட்டையால் தயாரிக்கப்பட்ட செருப்பு) வழங்கியது. இதற்கு எதிராக எந்த சங்கமும் வாய் திறக்கவில்லை. இந்நிலையில், தோழர்.செல்வராசு, செருப்பை உடைத்து அதில் உள்ள அட்டை வெளியே தெரியும் படி அறிவிப்பு பலகையில் தொங்கவிட்டுவிட்டார். தரமற்ற செருப்பை தொழிலாளர்களுக்கு வழங்கிய நிர்வாகம், இதனைக் கண்டு ஆத்திரமடைந்தது. கூடவே, சி.ஐ.டி.யூ. சங்க நிர்வாகிகளும் கோபப்பட்டு தோழரிடம் தகராறு செய்தனர்.

அட்டை வைக்கப்பட்ட செருப்பைவிட இவர்கள் தரமற்றவர்களாக இருக்கிறார்களே என்று கருதிய தோழர் செல்வராசு அவர்களிடம் சண்டையிட்டார். வர்க்க விடுதலையை சாதிக்கவோ, தொழிலாளர்களுக்குத் தலைமை தாங்கவோ சி.ஐ.டி.யூ. இலாயக்கற்றது என்பதை தனது சொந்த அனுபவத்தின் வாயிலாக புரிந்து வைத்திருந்ததால், அந்த சம்பவத்திற்குப் பிறகு சி.ஐ.டி.யூவை விட்டு வெளியேறினார்.

அதன் பிறகு, தொழிலாளர்களின் உரிமைகளுக்காக அரசியல் பணிகளைச் செய்ய சரியான அமைப்பு, கட்சி எது என இரண்டு மூன்று ஆண்டுகள் தனது தேடுதலைத் தொடங்கினார். ஏ.ஐ.டி.யூ.சி., எப்.ஐ.டி.யூ போன்ற அமைப்புகளில் செயல்பட்டு அவர்களும் பிழைப்புவாதிகள் என்பதைக் கண்டு அதிருப்தியுற்று வெளியேறுகிறார்.

இதனிடையே, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் தோழர்களின் இயக்கப் பிரச்சாரம், புதிய ஜனநாயகம் பத்திரிக்கை விற்பனைகளைக் கண்டு ஈர்க்கப்பட்டவர் புதிய ஜனநாயகம் படிக்கத் தொடங்கினார். இதன் கருத்துக்கள் நேர்மையாகவும், பாட்டாளி வர்க்கத்திற்கு சேவை செய்வதாகவும் இருப்பதை உணர்ந்தவர் தோழர்களை தொடர்பு கொண்டு அரசியல் விவாதங்கள் நடத்தினார். “தொழிலாளர்களுக்கு எப்படி விடுதலைப் பெற்றுத்தரப் போகிறீர்கள்?” என்ற கேள்விகளை எழுப்பி, பதிலையும் பெற்றார். அவருக்குள் புதிய நம்பிக்கை பிறந்தது. தனது 51வது வயதில் புதிய ஜனநாயகம் அவருக்கு அறிமுகமானது!

புரட்சிகர அரசியலில் ஏற்பட்ட ஈடுபாட்டால், அரசுப் போக்குவரத்து தொழிலாளர்கள் மத்தியில் பு.ஜ.தொ.மு. சங்கம் கட்ட வேண்டும் என்ற ஆர்வத்தில் செயல்படத் தொடங்கினார். நிர்வாகத்தின் மிரட்டலும், நக்சலைட் பீதியும் உடனே அவரை மிரட்டியது. தனது வாழ்நாள் முழுவதும் பல்வேறு மிரட்டல்களை கண்டவர், தான் பு.ஜ.தொ.மு.வில் இணைந்த பின் வருகின்ற மிரட்டலின் உண்மையான வர்க்க உணர்வு என்ன என்பதைப் புரிந்து கொண்டார்.ஆம், உழைக்கும் மக்களுக்காகக் குரல் கொடுப்பவர்கள் நக்சல்பாரிகள் என்பதை உணர்ந்தார்!

ஆக, அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் மத்தியில் புரட்சிகர அரசியலைக் கொண்டு செல்ல தன்னை முதல் விதையாக ஊன்றிக்கொண்டார். தான் சந்திக்கும் நபர்களிடம் எல்லாம் எந்தத் தயக்கமோ, யோசனையோ சிறிதுமின்றி “பு.ஜ.தொ.மு.வில் உறுப்பினராகச் சேர்ந்து கொள்ளுங்கள்!” என்று பிரச்சாரம் செய்தார். 18 வயது இளைஞரைப் போன்ற துடிப்புடனும் சுறுசுறுப்புடனும் செயல்பட்டார் தோழர்.செல்வராசு.

அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள்  நிர்வாகத்தின் அடக்குமுறைகளால் பலரும் வேலையிழப்பு, தற்காலிகப் பணி நீக்கம் போன்ற துயரங்களை எதிர் கொண்டுவந்தனர். இவர்களுக்காக நிர்வாகத்திடம் தொடர்ந்து தனியாளாகச் சண்டையிட்டுள்ளார். தங்களது பிரச்சினை முடியும் வரை செல்வராசுவையும் பு.ஜ.தொ.மு.வையும் சுற்றிவரும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள், தங்களது பிரச்சனை தீர்ந்தவுடன் அவரை சிறிதும் கண்டுகொள்ளமாட்டார்கள். இது தொடர்நிகழ்வு! ஆனால், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்காக இறங்குவது, அவர்களுக்காக நிர்வாகத்திடன் சண்டையிட்டு உரிமையைப் பெற்றுதருவதையும் என்றுமே நிறுத்திக் கொண்டதில்லை.

நாம் அந்தத் தொழிலாளர்களுக்கு உதவினோம், ஆனால், அவர்கள் தமது அரசியலை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கருதியதில்லை. அதேவேளையில், இதற்காக என்றைக்குமே சலித்துக் கொண்டதுமில்லை. அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் என்றால், அரசு ஊழியர்கள் என்று மக்கள் கருதிக்கொண்டிருக்கிறார்கள். அதனால், மக்களுக்கு அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்களின் அவலநிலையை விளக்கி, தொழிலாளர்களுக்கும் மக்களுக்கும் இடையே ஐக்கியத்தை உருவாக்க, பு.ஜ.தொ.மு. கொண்டுவந்த சிறு வெளியீடு என்பது அவரின் அளப்பறிய பங்களிப்பால் உருவாக்கப்பட்டது. பல ஆயிரம் படிகள் அது மக்களிடம் கொண்டு செல்லப்பட்டது. இன்றும் கொண்டு செல்லப்படுகிறது.

போக்குவரத்து தொழிலாளர்களும் சரி, சில அதிகாரிகளும் சரி தோழரிடம் பலரும் ஆலோசனைகள் கேட்பார்கள். அரசுப் போக்குவரத்துத் துறையில் எல்லா பிரச்சினைகள், சம்பவங்களையும் எப்போதும் புள்ளி விவரத்துடன் நினைவில் வைத்துக் கொண்டு பேசும் தோழர், அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் மீதான அடக்குமுறைகள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் மீதான அடக்குமுறைகள், தற்காலிகத் தொழிலாளர்களை நிரந்தரமாக்க நடத்தியப் போராட்டங்கள் என எல்லாவற்றிலும் தலையிட்டுள்ளார். போக்குவரத்துத் துறை தனியார்மயமாக்கத்துக்கு எதிராக தனது இறுதி மூச்சுவரை போராடியுள்ளார். அரசுப் பேருந்து, மக்களுக்கு சென்று சேரவேண்டும் என்று அயராது பாடுபட்டார்.

நாட்டில் நடக்கும் எந்த ஒரு சம்பவத்தையும் நிகழ்வையும் அரசியல் கண்ணோட்டத்துடன் புரிந்து கொள்ளவும், அதனை அந்த வகையில் விளக்கவும் விரைவாக தனது வர்க்கப் பார்வையை வளர்த்துக் கொண்டார். நீண்டநாள் புரட்சிகர அரசியலில் இருந்த  முதிர்ச்சியுடன் வர்க்க அரசியலை பரப்பினார். தோழர்.செல்வராசுவின் புரட்சிகர பிரச்சாரத்தால் போக்குவரத்துத் துறையில் பல மாவட்டங்களில், பல பணிமனைகளில் அவரைத் தெரியாதவர்கள் இல்லை என்ற நிலையை ஏற்பட்டது. அவரது பிரச்சாரத்தின் வேகம், நாளையே புரட்சி நடந்துவிடும் என்ற உணர்வை தோழர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் ஏற்படுத்தும் வகையில் இருந்தது.

தருமபுரி என்றாலே நக்சலைட்டுகள் நடமாடும் பகுதி!- இது மக்களிடம் பீதியூட்ட நக்சலைட்டுகளை பூதம் போல காட்ட அரசு பரப்பி வரும் பிரச்சாரம். இதற்கான பு.ஜ.தொ.மு., வி.வி.மு., சுவரொட்டிகளைக் கண்டாலே போலீசு நாய்கள், கழுதைகளாக மாறி சுவரொட்டிகளை மேய்ந்துவிடும். தருமபுரியில் சுவரொட்டி ஒட்டுவதையே பெரும் தேசவிரோத செயலாக சித்தரிக்கப்பட்ட சூழலில், பு.ஜ.தொ.மு.வின் சுவரொட்டிகளை பகலில் பேருந்து நிலையத்தைச் சுற்றிலும் ஒட்டி வைத்தார். நக்சல்பாரிகள் விதியை வென்றவர்கள் என்பதை எல்லோருக்கும் உணர்த்தினார். இதனால் வந்த பல்வேறு மிரட்டல்களையும் துடைத்தெரிந்தார்.

புதிய ஜனநாயகம் வாங்கத் தொடங்கியது முதல் பு.ஜ.தொ.மு.வின் வெளியீடுகள் வாங்கும் வரை ஒரு பிரசுரத்திற்குக் கூட நிதி நிலுவை வைக்காமல் முன்பணம் கொடுத்துப் பெற்றுக்கொள்பவர். அதே போல பிரசுரத்தையும், புத்தகத்தையும் தேக்கம் வைக்காதவர். காரணம் புரட்சிகர அரசியலைத் தாங்கி நிற்கும் இந்த பொருட்கள் மக்களுக்குச் சொந்தமானவை என்பதை அவர் எப்பொழுதும் மறவாதிருந்தார். அதே போல தோழர்கள் கடின உழைப்பில் மக்களுக்கு உணர்வூட்டுவதற்காக தயாரித்தவை என்பதாலும் இதனை அவர் தேக்கம் வைத்ததில்லை, நிதி நிலுவை வைத்ததில்லை.

பு.ஜ.தொ.மு.வின் மாவட்ட செயற்குழு உறுப்பினராக உயர்ந்தார் தோழர்.செல்வராசு. அதன் பின் தோழர்களுடன் கம்யூனிச நூல்களை விவாதிக்கத் தொடங்கினார். 54 வயதான தோழர், 30 ஆண்டுகளுக்கும் மேலாக ‘சிவப்பு சங்கங்களில்’ இருந்திருந்தாலும் இன்றுதான் கம்யூனிசம் என்றால் என்ன என்பதையும், மார்க்ஸ் எழுதிய கூலி, விலை, லாபம் என்ற நூலைப் படித்தப் பின்னர்தான், தொழிலாளர்  வர்க்கத்திற்கு இந்த நூல் எவ்வளவு அவசியமானது, முதலாளித்துவ பிரம்மைகளை எல்லாம் தகர்க்கிறது என்பதையும் உணர்ந்ததாகத் தெரிவித்தார். இளம் வயதிலேயே படிப்பதையும் புதிய  விசயங்களைக் கற்பதையும் சலிப்புடனும் விட்டேத்தித் தனத்துடனும் அணுகும் இன்றைய இளைய சமுதாயம் இருக்கும் நிலையில் தோழர்.செல்வராசு  மார்க்சியத்தின் சிறந்த மாணவராகத் திகழ்ந்தார்!

பாட்டாளி வர்க்கப் போரளி!

தோழர்.செல்வராசின் போராட்டம் முதலாளித்துவம், தனியார்மயத்திற்கு எதிராக மட்டும் போராடுவதுடன் நின்றுவிடவில்லை.“இன்றைய சமூகத்தின் நிலைமைகள் யாவற்றையும் பலவந்தமாக வீழ்த்த வேண்டும் என்று கம்யூனிஸ்டுகள் ஒளிவு மறைவின்றி பறைச்சாற்றுகிறார்கள்” என்று கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை கூறுகிறது. பார்ப்பன சனாதன பண்பாடு நீண்ட காலம் நிலவிய இந்தியாவில், இதுதான் சமூகத்தின் இன்றைய நிலைமைகளில் ஆதிக்கம் புரிகிறது என்பதையும் இவை உள்ளிட்ட இந்த சமூக நிலைமைகளையும் வீழ்த்த வேண்டும் என்பதையும் தோழர் ணர்ந்திருந்தார்.

இந்து புரோகித மரபில் வந்த குடும்பத்தில் பிறந்த தோழர்.செல்வராசு இதுவரை இதற்கான எந்த அடையாளத்தையும் தன்னிடம் வெளிப்படுத்தியதில்லை. தோழரிடம் பழகியவர்கள் பலருக்கும் இவர் உயர்சாதி, ஐதீகங்களை கடைப்பிடிக்கும் மரபில் வந்தவர் என்று தெரியாது. பார்ப்பன இந்துமதவெறி பயங்கரவாதத்திற்கு எதிரான பு.ஜ.தொ.மு. மற்றும் அதன் தோழமை அமைப்புகள் நடத்திய  போராட்டங்களில் வீச்சாக செயல்பட்டார்.

சமூகத்தை மாற்ற வேண்டும் என்று நாம் கருதும் போது முதலில் நாம் மாறியாக வேண்டும் என்பதை சொந்த அனுபவத்தில் வாழ்ந்துகாட்டினார் தோழர்.செல்வராசு! குடும்பத்தையும் அரசியல் படுத்த
தொடர்ந்து முயற்சித்து வந்தார். கோவை, மேட்டூர், தருமபுரி என எங்கு பு.ஜ.தொ.மு. மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் பொதுக்கூட்டம் நடைப்பெற்றாலும் அங்கிருக்கும் தனது உறவினர்களுடன் வந்து பங்கேற்றார்.

தோழர்-செல்வராசு-1

மேநாளில் தியாகியானார்!

மே 1 – தனியார்மயக் கொள்ளையைத் தடுக்க, மறுகாலனியாக்கத்தை மாய்க்க புதிய ஜனநாயகப் புரட்சியே தீர்வு! என்று முழக்கத்தின் பு.ஜ.தொ.மு., வி.வி.மு., பெ.வி.மு. ஆகியவற்றின் சார்பாக ஒசூரில் பேரணி – ஆர்ப்பாட்டம் திட்டமிடப்பட்டது ஒருவார காலமாக பிரச்சாரங்கள் நடந்துமுடிந்து தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் இருந்து தோழர்கள் எல்லோரும் ஒசூரை நோக்கி திரண்டு கொண்டிருந்த நேரம்! தோழர்.செல்வராசுவும் தனது துணைவியாருடன் தருமபுரியில் இருந்து புறப்பட்டார்.

காலை 10 மணிக்கெல்லாம் கிருஷ்ணகிரியை வந்தடைந்துவிட்ட நிலையில், கிடைத்த நேரத்தை ஓய்வெடுக்க விரும்பாமல் பிரச்சாரம் செய்யலாம் என்று கருதிய தோழர்.செல்வராசு, தனது துணைவியாரை பேருந்து நிலையத்தில் அமரச் சொல்லிவிட்டு  கிருஷ்ணகிரியில் பேருந்து பிரச்சாரம் செய்யத் தொடங்கினார். அப்போது படியிலிருந்து கால்தவறி கீழே விழுந்து தலையின் பின்பகுதி தரையில் மோத, மேநாள் பிரசுரங்கள் சிதற, உண்டியல் உருண்டோட கீழே விழுந்த தோழர், வீரமரணமடைந்தார்! மேநாள் ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் நன்றியுரை ஆற்ற வேண்டிய தோழர்.செல்வராசு, சமூக மாற்றத்திற்காக போராட துணைநின்ற நம் எல்லோருக்கும் நன்றி கூறிவிட்டார்!

அவருக்கு எமது சிவப்பஞ்சலியை செலுத்துவதோடு அவர் விட்ட பணியை முடிப்போமென உறுதியும் ஏற்கிறோம்.

தோழர் செல்வராசுக்கு வீர வணக்கம்!

________________________________________________________

– புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, ஓசூர்

________________________________________________

வினவுடன் இணையுங்கள்

 தொடர்புடைய பதிவுகள்

சினிமா விமரிசனம்: ‘காதலில் சொதப்புவது எப்படி?‘

6
காதலில்-சொதப்புவது-எப்படி
இயக்குனர் பாலாஜி மோகன்

உண்மையான காதலென்பது ஆவிகளைப் போல; அதைப் பற்றி அனைவரும் பேசுவார்கள் என்றாலும் பார்த்தவர்கள் சிலர்தான்.

– & François de La Rochefoucauld (17 ஆம் நூற்றாண்டு பிரெஞ்சு எழுத்தாளர்)

காதலில்-சொதப்புவது-எப்படிஎண்பதுகளில் வெளிவந்த அலைகள் ஓய்வதில்லை  முதல் தற்போது படையெடுக்கும் காதல் சார் திரைப்படங்கள் வரை இடம், காலம் மட்டும்தான் மாறியிருக்கின்றன; பொருள் மாறவில்லை. அன்று கிராமம், கடற்கரை, ஏழ்மை, சைக்கிள், பேருந்து, ஊரக விளையாட்டு என்றிருந்தவை இன்று காஃபி ஷாப், ஷாப்பிங் மால், மல்டி பிளக்ஸ், ஸ்கூட்டி, ஃபேஸ்புக், நடுத்தர வர்க்கம் என்று ’வளர்ந்தி’ருந்தாலும் காதலின் சித்தரிப்பு என்னவோ அதேதான்.

அதாவது பையன்கள் விடாது துரத்தி பெண்களை டார்ச்சர் செய்வது, காதலை எதிர்க்கும் வில்லன்கள், பிறகு சுப முடிவு எனும் ஃபார்முலாவை சற்றே மீறியிருக்கிறது ‘காதலில் சொதப்புவது எப்படி‘. காதலை கொஞ்சம் எதார்த்தமாக அணுகியிருப்பதிலும் சரி, காதலின் மகத்துவத்தைக் கொஞ்சம் கிண்டல் செய்திருப்பதிலும் சரி இயக்குநர் சற்றே ஆச்சரியப்படுத்துகிறார்.

அன்பான ஹார்லிக்ஸ் குடும்பத்தில் ஒரே வாரிசாக வாழும் அருண், கல்லூரி இறுதியாண்டில் படிக்கிறான். சண்டையிட்டுக் கொண்டு மணவிலக்கு பெற முயலும் பெற்றோரது மகளான பார்வதி கல்லூரி இரண்டாமாண்டு படிக்கிறாள். இவர்களுக்கிடையே இயல்பாக மலரும் காதல், பின்னர் ஊடல், பிரச்சினைகள் என்று இறுதியில் ஒன்று சேர்கிறார்கள். அருணின் நண்பர்களான காதலுக்கு ஆலோசனை சொல்லும் சிவா, ஒருதலைக் காதலில் அவஸ்தைப்படும் விக்னேஷ், சிவாவின் உறவினரான இராமகிருஷ்ணன், இவனது முன்னாள் காதலியைக் காதலிக்கும் ஜான், இவர்களுக்கிடையே ஏற்படும் சச்சரவுகள் போன்ற கிளைக்கதைகளின் மூலமும் காதலின் பரிமாணங்கள் நிறைய நகைச்சுவையுடன் காட்டப்படுகின்றது.

சண்டை ஒன்றில் பழரச டம்ளரை அருணின் மீது வீசுகிறாள் பார்வதி. மண்டை உடைந்த அருண் தனது காதல் கதையை கொஞ்சம் விமரிசனப்பூர்வமாக தனியே சொல்ல ஆரம்பிக்கிறான். அதன் போக்கில் கிளைக்காதல் கதைகளையும் அலசுகிறான். ஆரம்பத்தில் இந்த உத்தி ஏதோ ஆவணப்படம் ஒன்றின் சாயலை ஏற்படுத்தினாலும், விரைவிலேயே இந்தக் கதை சொல்லும் முறையில் நாம் ஒன்றுகிறோம். வெறுமனே கதை நகர்வு என்றிருந்தால் இத்தகைய அலசலைச் செய்வதற்கு சாத்தியமற்றுப் போயிருக்கும். அந்த வகையில் இந்தக் கதைக்குப் பொருத்தமான கதை சொல்லும் வடிவத்தை இயக்குநர் உருவாக்கியிருக்கிறார்.

இயக்குநர் பாலாஜி மோகன், முதலில் இந்தப் படத்தை பத்து நிமிடக் குறும்படமாக எடுத்திருக்கிறார். அதில் கவரப்பட்ட நடிகர் சித்தார்த் தனது நண்பர்களின் உதவியுடன் இதைத் தயாரித்திருக்கிறார். ஆக, குறும்படமாக இருந்த ஒரு சின்னக் கருவை முழு நீளத் திரைப்படமாகக் கச்சிதமாக எடுத்திருப்பது இயக்குநரின் திறமையைப் பறைசாற்றுகிறது.

இனி படத்தின் மூலமாகக் காதலைக் கவனிப்போம்.

காதலில்-சொதப்புவது-எப்படி‘பாசத்தையும் சரி, வெறுப்பையும் சரி பொண்ணுங்க அளவுக்கு பசங்களால காட்ட முடியாது‘ என்று பார்வதியுடனான பிரிவுக்குக் காரணமான அந்த டம்ளர் சண்டையைப் பற்றி அருண் கூறுகிறான். பெண் குறித்த இத்தகைய சித்தரிப்புகள், வசனங்கள் படம் முழுவதிலும் வருகின்றது. ஏற்கெனவே ’பெண் மனது ஆழமானது‘ போன்ற தத்துவ முத்துக்கள் தமிழ் சினிமாவில் நிரம்பி வழியும் சூழ்நிலையில் இங்கு பெண்ணுக்கு கொஞ்சம் ’சமத்துவத்தை’ அளித்து விட்டு, அடுத்த கணமே அந்த முத்துக்கள் வீசப்படுகின்றன.

பாசம், வெறுப்பு இரண்டையும் ஒரு பெண் அதிகமாகக் காட்ட வேண்டிய அவசியம் என்ன? விக்னேஷின் ஒரு தலைக்காதலி அவனை அண்ணா என்று கூப்பிட்டு விட்டு வேறு ஒருவரைக் காதலிப்பதாகச் சொல்கிறாள். அவளைக் காதலிக்கும் காதலனோ நேரத்திற்கொரு முறை காதலியை மாற்றுபவன். இந்தக் கதையை சொல்லும் அருண், பெண்கள் ஆண்களைத் தெரிவு செய்வதில் சொதப்புவதாகச் சொல்வான். அதே நேரம் தன்னைக் காதலிக்கும் போதே வேறு பெண்களைக் காதலிக்கும்  திருட்டுத்தனத்தை பெண் கண்டுபிடித்து விடுவாள், அது அவளது தனித்துவமான உள்ளுணர்வு என்றும் கூறுவான்.

இந்தச் சித்தரிப்புகளில் பகுதியளவு உண்மை இல்லாமல் இல்லை. அதே நேரம் அந்த சித்தரிப்பைத் தாண்டி உள்ளே செல்லும் போது இதன் பொருளே வேறு மாதிரி ஆகி விடுகின்றது. இன்னமும் சகல மட்டங்களிலும் ஆணாதிக்க சமூகம் கோலேச்சும் போதும், அந்தப் பின்னணியில் உள்ள ஒரு பெண் காதலிக்கும் போதும், காதலை வெளிப்படுத்தும் போதும், அதன் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் போதும் எப்படி நடந்து கொள்வாள் என்பதையும் இயக்குநர் ஆழமாகப் புரிந்து கொள்ளவில்லை.

ஒரு பெண் தன் காதலனிடம் அதிக பாசத்தை வெளிப்படுத்துவதற்கு காரணம் அது அவளது ஜீனிலிருந்து வரும் உயிரியல் விசயமல்ல. பெண்மைக்குப் பாதுகாப்பற்ற சமூகத்தில் தன் பாதுகாப்பை உறுதி செய்யும் வண்ணமே அப்படி வெளிப்படுத்துகிறாள். அவள் இதனைத் திட்டமிட்டு செய்யவில்லை என்றாலும், சமூகத்தின் விதிக்கப்பட்ட செயல்பாடு காரணமாக அது அனிச்சையாகவே நடக்கின்றது. சிறு வயதிலேயே மாராப்பைச் சரி செய்யும் பெண்கள் சாகும் வரை தங்கள் கைகளுக்கு ஓய்வு கொடுப்பதில்லை இல்லையா, அது போலத்தான் இதுவும்.

அடிமைகள் அன்பு செலுத்துவதற்கும், சுதந்திரமானவர்கள் அன்பு செலுத்துவதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. அடிமைகளின் அன்பு, நிறைய எச்சரிக்கை, ஏக்கம், எதிர்பார்ப்புடன் வரும். படத்தில் பார்வதி காதல் வயப்படும் போது அருணிடம் சொல்வதை கவனிப்போம். அம்மாவுடன் சண்டையிட்டுக் கொண்டு வெளியேறும் பார்வதியின் தந்தை தனது அன்பான மகளை ஒரு கணம் எண்ணிப் பார்க்காமல் மறந்து விட்டு போய் விடுகின்றார். சிறு வயதிலிருந்தே அப்பாவைச் சார்ந்து அன்பாகப் பழகி விட்டபடியால் அவரது பிரிவைப் பார்வதியால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால் இனி, ‘யாரு மேலயும் அட்டாச்சுடாவோ, டிபண்டன்டாவோ இருக்க கூடாதுன்னு நினைச்சேன்‘ என்று கூறும் பார்வதி, அது போல அருணது நட்பும் அப்படி மலர்ந்து பின்னர் ஏதும் பிரச்சினை என்று பிரிய நேரிட்டால் அதைத் தாங்கிக் கொள்ளும் வலிமை தனக்கில்லை என்கிறாள்.

இதே பார்வதி முதன்முதலில் அருணைச் சந்திக்கும் போது என்ன சொல்கிறாள்? பெற்றோரின் சண்டை காரணமாக அழுகை கலந்த கோபத்தில் இருக்கும் அவளுக்கு ”சாத்துக்குடி சாறு காலியாகி விட்டது” என்று கேண்டீன்காரர் சொல்லும் போது அருண் கொஞ்சம் மனிதாபிமானியாகத் தனது சாற்றை அவளுக்குக் கொடுக்கிறான். ‘என்னைப் பாத்தா சாரிட்டி எதிர்பார்க்கிற மாதிரி தெரியுதா? பொம்பளைங்க வீக்னெஸ யூஸ் பண்ணிக்கிறதுல ஆம்பளங்களுக்கு என்ன சந்தோஷமோ தெரியல‘ என்று சீறுகிறாள் பார்வதி. அதே போல ஒரு சண்டையில் அருண், ‘நான் உனக்கு எவ்வளவு ஃபீரிடம் கொடுத்து வச்சிருக்கேன்‘ என்று சொல்லும் போது சினமடையும் அவள், மற்றொரு சந்தர்ப்பத்தில் ‘ நீ என்னை மகிழ்ச்சியா வச்சிருப்பேங்கிற நம்பிக்கை போயிருச்சு‘ என்று சொல்வாள்.

இவையெல்லாம் ஒரு ஆளுமையின் முரண்பாடு போலத் தோற்றமளித்தாலும் உண்மையில், இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்தான். உறவு ஏமாற்றமளிக்கின்ற நேரத்தில் அவளது சுயமரியாதை கொஞ்சம் நிமிர்ந்து நிற்கின்றது. உறவுகள் அரும்புகின்ற நேரத்திலோ பாதுகாப்பிற்குள் மட்டும் வாழ வேண்டிய அவளது எதார்த்தம் எச்சரிக்கை செய்கின்றது. பெண்கள் மட்டும் ஏன் ஏதாவது ஒரு உறவைச் சார்ந்து வாழ வேண்டியிருக்கின்றது என்று பரிசீலித்துப் பார்த்தால் பார்வதியின் முரணைப் புரிந்து கொள்ளலாம். எந்த நேரத்திலும் பிரிவதில்லை என்று சத்தியமிட்டுத்தான் அருணும் பார்வதியைக் காதலிக்க ஆரம்பிக்கிறான். அதாவது அவளுக்கு வாழ்க்கை முழுவதும் பாதுகாப்பாகத் துணை வருவேன் என்கிற வாக்குறுதியை அளிக்கிறான்.

காதலில்-சொதப்புவது-எப்படிகாதலைத் தெரிவு செய்வதற்கு சுதந்திரமான சமூகச் சூழல் இல்லாத போது பார்வதிகள் இப்படிப் பயப்பட்டுக் கொண்டுதான் காதலிக்க முடியும். ஆக இப்போதைக்கு நாம் உண்மையான காதலையோ, காதல் கதைகளையோ சந்திக்க இயலாது என்பதை எத்தனை காதலர்கள் ஏற்றுக் கொள்வார்களோ, தெரியவில்லை.

காதலில் பெண்ணின் இடம் இதுவென்றால் ஆண்களின் நிலை என்ன? ஒரு தலைக்காதலில் மனப்பிரமைகளை வளர்த்துக் கொள்ளும் விக்னஷின் கதையை அருண் அழகாகவே சொல்கிறான். அந்தப் பெண் தற்செயலாக விக்னேஷேப் பார்ப்பதை, சிரிப்பதை, கடந்து செல்வதை காதல் என்று நம்புவதன் காரணமென்ன?

அறைக்குள் இருக்கும் மோனலிசா ஓவியத்தை எங்கிருந்து பார்த்தாலும் அதில் சிரித்துக் கொண்டிருக்கும் பெண் நம்மைப் பார்ப்பதாகவே தோன்றும். அப்படித்தான் ஒரு பெண்ணைக் காதலிக்க முனையும் ஆண், அந்தப் பெண் எங்கிருந்து பார்த்தாலும் தன்னைக் காதலிப்பதாகவே எடுத்துக் கொள்வானென்பதை ஒரு கவிதை போல அழகாக வடித்திருக்கிறார் இயக்குநர். ஆண்களின் இந்தக் காதல் பிரமை தோன்றுவதற்கும் ஒரு சமூக அடித்தளமிருக்கிறது.

காதலுக்கு சுதந்திரமிருக்கும் மேற்கத்திய சமூகங்களில் இத்தகைய மோனலிசாக் காதலின் அபத்தம் இல்லை. ஹாலிவுட் படங்களில் கூட காதல் தோன்றுவது ஓரிரு நிமிடங்களில் ஆரம்பமாகிய கையோடு சட்டென்று முத்தத்திலோ, படுக்கையிலோ முடிந்து விடும். காதலிப்பதற்கு வழியற்ற இந்தியச் சமூகத்தில் ஜவ்வாக இழுக்கும் இத்தகைய பாவனைகளை வைத்தே ஒருவன் மனக்கோட்டை கட்ட வேண்டியதாயிருக்கின்றது. பொதுவெளியில் ஆணும், பெண்ணும் அதிகம் பழகாத, பழக முடியாத நமது சமூகங்களில் காதலைத் தெரிவிப்பதில் மட்டுமல்ல, நினைத்துப் பார்ப்பதிலேயே நிறைய தடைகளிருக்கின்றது.

இதையெல்லாம் தாண்டி வேறு ஒரு உளவியலும் ஆண்களிடம் உண்டு. அவன் ஒரு பெண்ணைக் காதலிக்க ஆரம்பித்தால் அவள் அவனைக் காதலித்தே ஆக வேண்டும் என்ற ஆதிக்க மனோபாவமும், உடமைக் கண்ணோட்டமும் அதில் தொக்கி நிற்கின்றது. இத்தகைய டார்ச்சர் காதல்தான் தமிழ் சினிமாவின் காதல் வேதம். இந்த வக்கிரத்தின் பொருட்டு அமிலத்தால் முகத்தை இழந்த பல பெண்களின் கதைகளைக் கேட்டிருக்கிறோம். இந்தக் கொடூரம் அமிலம் வரை போகவில்லை என்றால் அது விக்னேஷ் போல கடைசி வரை அவளையே வம்படியாக நினைத்து வாழ்வதாகவே இருக்கும். ஒரு பெண் ஒரு காதலை அல்லது முன்மொழிதலை நிராகரித்து விட்டு வேறு ஒருவனை ஏற்றுக்கொள்ள உரிமையுண்டு என்பதை சம்பந்தப்பட்ட ஆண்கள் ஜனநாயக ரீதியாகக் கூட ஏற்றுக்கொள்வதில்லை. அரசியலிலேயே ஜனநாயகத்திற்கு பழக்கப்படாத சமூகம் காதலில் மட்டும் சமத்துவத்தைக் கண்டடைந்து விடுமா என்ன?

படத்தில் வரும் பாண்டிச்சேரி அத்தியாயம்தான் இந்தப் படத்தின் மையம். அங்கே அருண் தனது காதல் பிரிவினை குறித்து கேத்தியிடம் பகிர்ந்து கொள்வான். அதே போல கேத்தி தனது முதல் காதலனான இராமகிருஷ்ணனை நிராகரித்ததற்கான அதாவது ’பிரேக்-அப்’பிற்கான காரணத்தைக் கூறுவாள். அவன் அன்பாக இருப்பான், அதே நேரம் அதிக பொசசிவ்நெஸ் என்பது பிறகு சந்தேகமாக மாறி வரம்பை மீறும் போது தாங்க முடியாததாக ஆகி விட்டது என்பாள் கேத்தி. இதிலும் கூட நிறைய மோனலிசா எஃபக்ட் இருக்கிறது. காதல் நிறைவேறும் வரை பணிவாக இருக்கும் ஆண்கள், பின்பு காதலியிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்வதும், அவளை ஒரு கட்டுப்பட்டுக் கிடக்க வேண்டிய சொத்து போலவும் நடத்துவது வழக்கம்.

காதலில்-சொதப்புவது-எப்படி
இயக்குனர் பாலாஜி மோகன்

காதலிலும், காதல் தெரிவிலும், காதலைத் தெரிவிப்பதிலும், காதல் நிராகரிப்பை ஏற்காததிலும் சமத்துவம் நிலவாதது போல காதலியை நடத்தவதிலும் சமத்துவம் இருப்பதில்லை. அன்பு, பாசம், நேசம் இன்ன பிற உணர்ச்சி ’இச’மெல்லாம் நம்முடைய சமூகத்தில் சில விதிமுறைகள், கட்டுப்பாடுகளோடுதான் கிடைக்கின்றது. அந்த விதிமுறைகள் மீறப்படும் போது அந்த அளவில்லாத அன்பு சட்டென்று மாயமாக மறைந்து விடுகின்றது. பூப் போல தனது மகளை வளர்த்து, முழுமையாக நேசிக்கும் ஒரு தந்தை தன் மகள் சாதி மாறிக் காதலித்து விட்டால் அதைச் சகிக்கக் கூட முடியாமல் பாசத்தைத் தூக்கி ஏறியத் தயங்குவதில்லை.

இது வெவ்வேறு உறவுகளில் வெவ்வேறு விதங்களில் செயற்படுகின்றது. ஆணுக்கு அடங்கிக் கிடக்கும் குடும்பம் எனும் நீதியைத் தன் பிறப்பிலிருந்தே உணர்ந்து வாழும் ஒரு ஆண், தனது காதலியையும் அத்தகைய நீதியின்பாற்பட்டே அணுகுகின்றான். அவளது அனைத்து நடவடிக்கைகளும் தனது அனுமதி பெற்றே நடைபெற வேண்டுமென்பதிலும் கறாராக இருப்பான். ஆனால் இதெல்லாம் அவளது மேல் உள்ள அன்பினால் நடைபெறும் தவறுகளாகச் சம்பந்தப்பட்ட ஆண்கள் ’பெரிய’ மனதுடன் கருதுகிறார்கள். ஆனால் அது ரொம்பவும் சின்னத்தனமான பண்பு என்பதை அவர்கள் அறிவதில்லை.

பசையான சம்பளத்துடன் வாழும் இன்றைய படித்த தலைமுறையில் பண்டைய காதலின் ’கற்பு’ வாசம் ஓங்கி அடிக்கும் நிலைமை இல்லை. படத்திலும் காதல், பிரேக்-அப், மீண்டும் வேறு ஒரு காதல் என்றெல்லாம் வருகின்றது. நுகர்வுக் கலாச்சார வாழ்வு காரணமாக காதலில் சுயநலமும், காரியவாதமும் மேலோங்கி இருக்கும் நிலைமையில் பழைய கற்பு, காதல் போனதற்காக மகிழ்ச்சியுற்றாலும், புதிய காதலில் ஜனநாயகம் இருப்பதாக மகிழ முடியவில்லை. கேத்தியின் தோழிகள் இருவர் தங்களுக்கு பாய் ஃபிரண்ட் இருப்பதால் கண்ட்ரோலாக இருக்க வேண்டியிருக்கிறது, இல்லாத மற்றொரு தோழி யாரை வேண்டுமானாலும் சைட் அடிக்கலாம் என்று சலித்துக் கொள்வார்கள். நாய்க் குட்டி வைத்திருப்பது போல பாய் ஃபிரண்ட் வைத்திருப்பதாக சிவா அவர்களைக் கிண்டல் செய்யும் போது அவர்கள் அது உண்மைதான் என்பார்கள்.

எனினும் இன்றைய காரியவாதக் காதல் முறிந்து போவதற்கு ஆணுக்கும், பெண்ணுக்கும் சுயநலத்தைத் தாண்டியும் வேறு காரணங்களும் இருக்கின்றன. காதல் நிறைவேறுவதும், காதலுக்கு உண்மையாக இருப்பதும் எல்லாக் காதலர்களுக்கும் சாத்தியமில்லை. ஆண்கள் தாங்கள் வீழ்த்தி விட்ட காயிடம் தற்போது த்ரில் இல்லை என்பதை வெகு சீக்கிரமே உணருகிறார்கள். வேறு நோட்டமிட்டு அடுத்த காயை வளைத்துவிட்டு பழைய காயை வெட்டுகிறார்கள். இது ருசி சம்பந்தப்பட்ட பிரச்சினை என்றால், பெண்ணைப் பொறுத்த வரை வசதியான, பாதுகாப்பான வாழ்க்கை என்ற கோணத்தில் காய்களை மாற்றுவதும் இன்றைக்கு வழமையாகி விட்டது.

அந்த வகையில் பார்த்தால் இந்தப்படத்தில் காமடிக்காக வரும் சிவா, ஜெயசிம்மா போன்றோர்தான் ஆண்களின் எதார்த்தமான மனநிலையோடு அதிகம் ஒன்றுகிறார்கள். ஆனாலும் நாயகத்தன்மைக்கு மட்டும் படம் பார்க்கும் ஆண்கள் அருணின் காவியக்காதலோடு ஒன்றுகிறார்கள். அதாவது ஊர் உலகம் சிவா போல இருக்கும் என்பதை ஒத்துக்கொள்பவர்கள், தான்மட்டும் அருண் என்று நினைத்துக் கொள்கிறார்கள். நினைத்து விட்டாவது போகட்டும்.

காதல் குறித்த ஆழமான கிணற்றில் இறங்கி தூர் வாரும் தோற்றத்தை ஏற்படுத்தும் படம், இறுதியில் அப்படி குதிக்காமல் வெறுமனே பாவனை செய்வதோடு நின்று விடுகின்றது. காதலில் ஏற்படும் பிரச்சினைகளின் வழியாக அழகான ஒரு சமூக இயக்கத்தைப் படம் பிடித்துக் காட்டும் வாய்ப்பை இயக்குநர் தவறவிட்டு விட்டார். அதனால் அவரது காதல் குறித்த பார்வைகள் நீயா, நானா போல மேம்போக்காகவும் கொஞ்சம் ஆணாதிக்கமாகவும் நின்று விடுகின்றது.

சமூகம் ஜனநாயகமயமாகும் தரத்திற்கேற்பவே காதலும், காதல் குறித்த புரிதலும் இருக்கும். அந்த வகையில் இயக்குநரின் புரிதல் வரம்புகளைப் புரிந்து கொள்வதோடு, காதல் குறித்த நமது பரிசீலனையை மேம்படுத்துவதற்கும் இந்த திரைப்படம் நிறையவே உதவும்.

• இளநம்பி

____________________________________________

– புதிய கலாச்சாரம், மே – 2012

____________________________________________

வினவுடன் இணையுங்கள்

 தொடர்புடைய பதிவுகள்

ஜெயாவின் நிர்வாகத்திறன்: கலைகிறது பார்ப்பன பம்மாத்து! பாகம் – 2

13

பாகம் – 1 படிக்க இங்கே அழுத்தவும்

_______________________________________________________________

சமச்சீர் கல்வி வழக்கில் தமிழக (ஜெயா) அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய மூத்த வழக்குரைஞர் பி.பி.ராவ், “தமிழக அரசைச் சட்டரீதியாகச் சரியாக வழிநடத்தும் ஆளில்லை” என்று வெளிப்படையாக ஒப்புக் கொண்டார். அந்த வழக்கில் அவமானப்பட்டு, அசிங்கப்பட்டு, தோற்றுப்போன பிறகாவது பார்ப்பன பாசிச ஜெயாவுக்குப் புத்தி வந்திருக்க வேண்டாமா? அடாவடியான பல முடிவுகள் எடுத்து, பல வழக்குகளில் மூக்கறுபட்டும் ஜெ திருந்துவதாக இல்லை.

சொத்துக் குவிப்பு வழக்கில் கிட்டத்தட்ட பத்தாண்டுகள் இழுத்தடித்து, ஜெயாசசி கும்பலைக் காப்பாற்றி வந்த வழக்கறிஞர் ஜோதிக்குத் தக்க பரிசு (நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் பதவி) தரமறுத்து, நன்றி கெட்டத்தனமாக நடந்து கொண்டனர். இதன் விளைவாக அவர் தி.மு.க.வுக்கு ஓடிப் போனார். பிறகு அந்த வழக்கை ஒரு ஐந்தாண்டு காலம் இழுத்தடித்த “பட்டை போடும்” நவநீதகிருஷ்ணனுக்கு நன்றிக் கடனாக தமிழக அரசு தலைமை வழக்குரைஞர் பதவியை வழங்கியது ஜெயா அரசு.

ஜெயலலிதா-ஆட்சிஜோதிக்குப் பிறகு, “வாய்தா ராணி” பட்டத்தைத் தக்க வைத்துக் கொள்வதில் ஜெயாவுக்கு விசுவாசமாக உழைத்த நவநீத கிருஷ்ணன் உயர் நீதிமன்றத்தில் பல வழக்குகளிலும் தண்டனிட்டு, கூனிக் குறுகி நிற்கிறார். அரசை நடத்துவதற்கு அரசு நிர்வாகத் திறமை, தகுதி தேவையில்லை;  மக்களை ஒடுக்கி ஒட்டச் சுரண்டுவதோடு, போலீசு அதிகாரிகளும், அரசு உயர் அதிகாரிகளும் செய்வதற்கு எல்லாம் தலையாட்டினால் போதும், அதைவிட முக்கியமாக அரசியல் பழிவாங்குதலில் அவர்களை ஏவிவிட்டால் போதும் என்று கருதி செயல்படுகிறது, ஜெயா அரசு.

“எது குறித்தும் கவலைப்படாமல், தான்தோன்றித்தனமாக முடிவெடுக்கும் ஜெயலலிதா அரசு, கடந்த பல ஆண்டுகளில் வேறெந்த அரசும் காணாத அளவு நீதிமன்றங்களின் தொடர்ச்சியான நிராகரிப்புகளினால் முகத்தில் கரிபூசிக் கொண்டு நிற்கிறது. “தமிழ்நாட்டில் இன்று தறிகெட்டு மூக்கணாங்கயிறு இல்லாத மாடாக ஓடிக் கொண்டிருக்கும் மாநில நிர்வாகத்தை அவ்வப்போது நீதித்துறைதான் சாட்டையைச் சுழற்றி வழிக்குக் கொண்டு வந்து கொண்டிருக்கிறது” என்று சில ஏடுகள் எழுதுகின்றன.

ஆனால், அரசுக்கு எதிரான, உறுதியான நிலைப்பாடு எடுத்து முற்றிலும் நியாயமான தீர்ப்புகளை நீதித்துறை வழங்கி விடுகிறது என்று சொல்லிவிட முடியாது. சில வழக்குகளில் பொதுநிர்பந்தத்தைக் கணக்கில் கொண்டு அரசின் முடிவுகளை மாற்றும் வகையில் தீர்ப்புகள் வழங்கப்பட்டாலும், பெரும்பாலானவற்றில் வழக்குகளை இழுத்தடித்து, எச்சரிக்கை விடுப்பதைப் போல ஒருபுறம் நடித்துக் கொண்டே, மறுபுறம் அரசுக்குச் சாதகமாக மழுப்புகிறது.

எடுத்துக்காட்டாக, வழக்குரைஞர் சங்கரசுப்பு மகன் சதீஷ் கொலை வழக்கில், சி.பி.ஐ. விசாரணைக்கு விட்டும் கூட கொலையாளிகளான போலீசு அதிகாரிகள் கைது செய்யப்படவில்லை. கோவை வழக்குரைஞர் அனந்தீஸ்வரன் தாக்கப்பட்ட வழக்கில் இதேபோல குற்றவாளிகளான போலீசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. திருக்கோவிலூர் அருகே 4 இருளர் பெண்கள் மீது பாலியல் வன்முறையை ஏவிய  போலீசுக்காரர்கள் கைது செய்யப்படவில்லை. இப்படிப் பல வழக்குகள் மீது உயர் நீதிமன்றம் அரசு வழக்குரைஞரிடம் எச்சரிக்கை, கண்டனம், வெறும் உருட்டல் மிரட்டலுக்கு மேலே போக மறுக்கிறது.

ஜெயலலிதா-ஆட்சிஅதேசமயம், ஜெயலலிதா அரசு சாதாரண சட்ட அறிவு கூட இல்லாமல் பல வழக்குகளிலும், குறிப்பாக அரசியல் பழிவாங்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட வழக்குகளில் படுதோல்விகளைக் கண்டுள்ளது. சமச்சீர் கல்வியை ரத்து செய்தது, புதிய தலைமைச் செயலகத்தை அதிநவீன மருத்துவமனையாக மாற்றும் செய்கை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடமாற்றம் செய்யும் முடிவு; ஆளுங்கட்சிக்காரன் வசமுள்ள தோட்டக்கலை சங்கத்திற்கு அரசு நில ஒதுக்கீடு செய்தது; தி.மு.க.வின் ஸ்டாலின், டி.ஆர். பாலு அலுவலகங்களைப் பறிக்க முயன்றது; தி.மு.க. பிரமுகர்கள் மீது ஏராளமான நில அபகரிப்பு வழக்குகள் போட்டுச் சிறையிலடைத்தது, அந்த வழக்குகள் நிற்காத போது பலரைக் குண்டர்கள் சட்டத்தில் சிறையிலடைத்தது; பின்னர் எல்லா வழக்குகளிலிருந்தும் அவர்கள் விடுதலை பெற்றது; 13,500 மக்கள் நலப் பணியாளர்களையும் வேலை நீக்கம் செய்தது; தமிழ்நாடு அரசுப் பணி நியமன ஆணைய உறுப்பினர்கள் மீது இலஞ்ச ஒழிப்பு என்ற பெயரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது; ராஜீவ் காந்தி கொலையில் தூக்குத் தண்டனை பெற்றுச் சிறையிலுள்ள மூன்று பேரின் கருணை மனுக்கள் விவகாரத்தில் மாறி மாறிப் ‘பல்டி’ என்று சட்டநீதித்துறை அறிவின்றி முட்டாள்தனமாக ஜெயா அரசு சிக்கிக் கொண்ட பட்டியல் நீளமானது.

நில அபகரிப்பு என்பது 1991இல் ஜெயா-சசி துவக்கி வைத்த மிகப் பெரும் அளவிலான கிரிமினல் குற்றம். சிறுதாவூர், கொடநாடு தொடங்கி தென் தமிழகத்தில் நெல்லைச் சீமை வரை நகர்ப்புற, கிராமப்புற நிலங்களை ஏராளமாகக் குவித்தது அக்கும்பல்; அதற்கு எதிரான மக்கள் ஆத்திரத்தைப் பயன்படுத்திக் கொண்டுதான் தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது. பிறகு, ராமதாசு, திருமாவளவன் கட்சிகள் வரை ஓட்டுக்கட்சிகள் என்றாலே நில அபகரிப்பு மோசடி வாடிக்கையாகி விட்டது. ஆனால், ஜெயா அரசோ, எதிர்க்கட்சிகளை அடக்கி ஒடுக்கவும், அரசியல் பிரச்சாரத்துக்காகவும் நில அபகரிப்பு மோசடி வழக்குகளை அரசியல் நோக்கத்துக்குப் பயன்படுத்துவதற்கென்றே தனிப் போலீசு பிரிவை உருவாக்கி ஏவிவிட்டது.

எதிர்க்கட்சிப் பிரமுகர்களைக் கைது செய்து நாளேடுகளில் “விளம்பரம்” செய்வது என்ற நோக்கத்திற்குமேல் இந்த வழக்குகள் நகராதபோது, குண்டர்கள் சட்டத்தை ஏவியது, ஜெயா அரசு. ஆனால், மு.க. அழகிரியின் அல்லக்கைகளான பொட்டு சுரேஷ், எஸ்.ஆர்.கோபி, அட்டாக் பாண்டி, மின்னல் கொடி, ஒச்சு பாலு, வி.கே. குருசாமி மற்றும் பூண்டி கலைவாணன், குடமுருட்டி சேகர், சென்னை ப.ரங்கநாதன் என்று குண்டர் சட்டம் பாய்ந்த அனைவரும் அநேகமாக விடுவிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் ஜெயலலிதா அரசும் போலீசும் சட்டப்படி செயல்படவில்லை; அரசியல் உள்நோக்கப்படிதான் செயல்படுகின்றனர் என்று மீண்டும் மீண்டும் தம்மைத்தாமே அம்பலப்படுத்திக் கொண்டனர்.

தமிழக அரசியல் வரலாற்றில் மிக மோசமான சந்தேகப் பிராணிகள், எம்.ஜி.ஆரும், அவரது அரசியல் வாரிசான ஜெயலலிதாவும்தான். இவர்கள் முண்டு தமது  இடுப்பில் இருப்பதைக்கூட நம்பாத பேர்வழிகள் என்பதற்கு மிகச் சிறந்த ஆதாரம் போலீசு உளவுத்துறையை, மற்றெவற்றை விடவும் தம் அமைச்சரவை மற்றும் கட்சிப் பிரமுகர்களைக் கண்காணிப்பதற்குப் பயன்படுத்துவதைக் கூறலாம். அதனாலேயே அமைச்சர்களும் அதிகாரிகளும் பந்தாடப்படுகின்றனர். குறிப்பாக, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில், ஜெயலலிதாசசி சொத்துக் குவிப்பு வழக்குக் குற்றவாளிகள் நேரடி வாக்குமூலம் அளிக்கும் நிலையை எட்டியுள்ளதால், ஜெயலலிதா தனக்குச் சாதகமாக, தனது பங்காளிகள் வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்பதற்காக போலீசையும் உளவுத்துறையையும் பயன்படுத்திக் கொள்கிறார்.

ஜெயலலிதா-ஆட்சிகடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெயலலிதா தனது கட்சியில் சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். சசிகலாவையும் அவரது நெருங்கிய 13 உறவினர்களையும் திடீரென கட்சியில் இருந்து நீக்கம் செய்தார். இந்நடவடிக்கைக்குக் காரணம், அவர்களின் கட்சி விரோதச் செயல்கள் என்ற ஒருவரிச் செய்திக்கு மேல் எதுவும் கூறவில்லை; சில வாரங்களுக்குப் பின் நடந்த கட்சிப் பொதுக்குழுவில், தனக்குத் துரோகமிழைப்பவர்களுக்கு இதுதான் கதி; அவர்கள் மன்னிக்கப்படவே மாட்டார்கள் என்று எச்சரித்தார். ஜெயலலிதாவின் பாதந்தாங்கிகளான பார்ப்பனச் செய்தி ஊடகங்கள் இது பற்றி பலவாறான கிசுகிசு, வதந்திகளைப் பரப்பின. சசி கும்பல் அளவுக்கு மீறி, ஜெயலலிதாவுக்குத் தெரியாமல், ஜெயாவுக்கு எதிராகவே அரசியல் தலையீடுகளிலும் துரோகங்களிலும், நஞ்சு வைத்து ஜெயாவைக் கொல்லவும், அதிகாரத்தைக் கைப்பற்றவும் பல சதிவேலைகளில் ஈடுபட்டதாக கிசுகிசுக்களைப் பரப்பின.

ஜெயா ஆட்சியில் நடக்கும் எல்லா இலஞ்சஊழல், அதிகார முறைகேடுகளுக்கும் சசி கும்பல்தான் காரணம் என்றும், முப்பதாண்டு கால நட்பையும், பாசத்தையும் துணிந்து தியாகம் செய்து அவர்களை வெளியேற்றி விட்டதாகவும், இனி தூய்மையான, திறமையான நிர்வாகம் நடக்கும் என்றும் பார்ப்பன மற்றும் ஜெயாவின் எடுபிடி ஊடகங்களும் புளுகித் தள்ளின. இதை மூன்று மாதங்கள், பொதுமக்களை ஏய்க்க ஒரு பொதுப் பிரச்சாரம் மூலம் அறுவடை செய்து கொண்டபிறகு, ஜெயாசசி கும்பல் நாடகத்தை முடித்துக் கொண்டது. சொத்துக் குவிப்பு வழக்கில் தவறிக்கூட ஜெயலலிதாவுக்குப் பாதகமாக சசிகலா வாக்குமூலம் சொல்லிவிடக் கூடாது என்பதற்காக, அவரது நெருங்கிய உறவினர்கள் மீது வழக்குகள், கைது, சிறை என்ற உருட்டல் மிரட்டல் ஒருபுறம் நடந்தாலும், மறுபுறம் ஜெயாவின் அரசியல் வசனகர்த்தாக்கள் எழுதிக் கொடுத்த சசியின் தன்னிலை விளக்கத்தை ஏற்று, ஊடல் காட்சிகள் முடித்துக் கொள்ளப்பட்டு, இணைபிரியா தோழிகள் மீண்டும் ஐக்கியமாயினர்.

ஜெயாசசியின் ஊடல்-கூடல் நாடகங்கள் முழுக்கவும் போலீசுஉளவுத்துறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சசிகலா உறவினர்கள் மீதான நடவடிக்கைகளில் போலீசும், சொத்துக் குவிப்பு வழக்குக்காக சசிகலாவின் தயாரிப்பு, பாதுகாப்பு, விமானப் போக்குவரத்து, நட்சத்திர விடுதி வசதிகள், ஜெயலலிதாவிடம் சமர்ப்பிக்க உளவு அறிக்கைகள் முதலியவற்றுக்கு உளவுத்துறையும் ஈடுபடுத்தப்பட்டன. அதேசமயம், சசிகலாவின் உறவினர்களிடமிருந்து இலஞ்சஊழல் அதிகாரமுறைகேடுகள் மூலம் குவிக்கப்பட்ட சொத்துக்கள், செல்வங்களைக் கைப்பற்றுவது, கட்சிக்காரர்கள் அவர்களுடன் கொண்டுள்ள இரகசிய உறவுகளைக் கண்காணித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இவை எதுவும் நாட்டின் முதன்மையான செய்தி ஊடகங்களால் கண்டுகொள்ளப்படாத அதேசமயம், ஜெயலலிதாவின் திறமையும், தியாகமும் போற்றப்பட்டன. சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயா அப்பாவி என்றும் கருணாநிதியின் அரசியல் பழிவாங்கலே காரணம் என்றும் குற்றங்களுக்கெல்லாம் தாமே பொறுப்பு என்றும் சசிகலா கொடுத்த வாக்குமூலம் சட்டப்படி மதிப்பில்லாதது என்றாலும், ஆளுங்கும்பலின் அரசியல் பிரச்சாரத்துக்கு நன்றாகவே பயன்படுத்தப்பட்டது.

“தி.மு.க.காரர்களின் இயலாமை, திறமையின்மை, அக்கறையின்மை, லட்சியமின்மை இவையெல்லாம் சேர்ந்து தமிழகத்தைக் குட்டிச் சுவராக்கி இருக்கிறது. இதன் விளைவுதான் கடுமையான மின்வெட்டு. இதிலிருந்து தமிழகத்தை மீட்டெடுத்து சிறப்பான நிலைக்குக் கொண்டு செல்லும் ஆற்றலும் தகுதியும் முதல்வருக்கு உண்டு. எனவே, ஒரு நல்ல நிலையைத் தமிழகம் விரைவில் அடையும்” என்று ஜெயாவின் அரசியல் சகுனி “சோ” புளுகித் தள்ளுகிறார்.

ஜெயலலிதா-ஆட்சிகருணாநிதி ஆட்சியிலும் அதன்பிறகு எட்டு மாதங்களாகவும் நீடித்திருந்த மின் உற்பத்தி அளவைப் பராமரிக்கத் தவறி, மின்வெட்டு 2,3 மடங்கு அதிகரிக்குமளவு சீர்கேடடையச் செய்தது, ஜெயாவின் நிர்வாகமே.  201112ஆம் ஆண்டுகளில் 3000 மெகாவாட் கூடுதல் மின் உற்பத்தியைத் தரும் அளவிலான மின் திட்டங்களை முந்தைய ஆட்சியில் வகுத்து செயல்பட வைத்தும் அவற்றையும் நிறைவு செய்யத் தவறியதும் தேவையான நிதி திரட்டி மத்திய, தனியார்துறையிடமிருந்து மின் வழங்கலைப் பெறத் தவறியதும் ஜெயாவின் நிர்வாகமே. கடும் மின்கட்டண உயர்வைத் திணிக்கவும், கூடங்குளம் அணுஉலையைத் திறக்கச் சாதகமான சூழலை உருவாக்கவும் இவ்வாறு மின்உற்பத்தி சீரழிவதற்கு வேண்டுமென்றே விடப்பட்டது. தமிழ்நாட்டின் தற்போதைய மின் பற்றாக்குறை 3000 மெகாவாட்; ஆனால், 500 மெகாவாட் கூட உற்பத்தி செய்யாது, அதிலும் மொத்த உற்பத்தியில் கால் பங்கு கூட தமிழகத்திற்கு வழங்கப்படமாட்டாது என்றாலும் கூடங்குளம் அணுஉலை திறப்பால் தமிழக மின்வெட்டு  பற்றாக்குறை பிரச்சினை தீரும் என்று பொய்ப்பிரச்சாரம் அனைத்துக் கட்சி, அனைத்து ஊடகத் துணையுடன் நடத்தப்பட்டது.

நாலாந்தர நடிகைக்குரிய தகுதி கூட இல்லாத ஜெய லலிதா, எம்.ஜி.ஆரின் தயவால் முன்னணி நாயகியாகி விட்டதைப் போலவே, அரசியலிலும் அதிகார வர்க்கத்தினர், வல்லுநர்கள், நிபுணர்கள் தயாரித்துக் கொடுக்கும் உரைகள், அறிக்கைகள், திட்டங்களை வாசித்தே “புரட்சித் தலைவி’’யாகவும் திகழ்கிறார். அந்தவகையில் இந்த ஆண்டு சட்டப்பேரவையின் வரவுசெலவுக் கூட்டத்தொடருக்கு ஓரிரு நாட்களுக்கு முன்பாக 2023 ஆண்டுக்கான “தொலைநோக்குத் திட்டம்” என்ற உலக வங்கி அதிகாரிகளின் தயாரிப்பு ஒன்றை வழக்கமான “ஜெயா புகழ்பாடி பூங்கொத்து வழங்கும்” விழாவில் வெளியிட்டார். அடுத்தநாளே, போலீசுக்கு பல நவீனமய, நலத்திட்ட நிதி ஒதுக்கீடுகள், பதவிகள் அறிவித்தார். கூடவே, கல்வியில் கணினிமயமாக்கம், புதிய பேருந்துகள் வருமென அறிவித்தார். வரவுசெலவுத் திட்ட சட்டப்பேரவைக் கூட்டத்திற்கு வெளியே திட்ட அறிவிப்புகள் செய்வதை, கருணாநிதியும், ஸ்டாலினும் கண்டித்த மறுநாளே வழக்கம்போலத் திடீர் பல்டி அடித்தார்; இந்த அறிவிப்புகள் எதுவும் புதிதில்லை; செய்தி ஏடுகள் தவறாக எழுதிவிட்டன என்று குப்புறவிழுந்து தனது அரசியல் “திறமை’’யை வெளிப்படுத்தினார். ஆனால், ஜெயாவின் துதிபாடிகளான இந்து, தினமணி, தினமலர் ஆகிய பார்ப்பன ஏடுகளோ, ஜெயாவின் “திட்ட அறிவிப்புகள்” என்ற சாதனையாகத்தான் செய்தி வெளியிட்டிருந்தன. மு.க. குடும்பத்தின் அற்பமானதொரு அரட்டலுக்கே மிரண்டுபோய் விட்ட ஜெயாவின் ‘துணிச்சலை’ என்ன சொல்ல!

ஜெயலலிதா-ஆட்சிஇந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி எதிர்பார்ப்பை விட 20 சதவீதம் கூடுதலாக, அதாவது அடுத்த 11 ஆண்டுகளில் 11 சதவீதம் மாநில மொத்த உற்பத்தி வளர்ச்சி எதிர்பார்ப்பு இருக்கும் என்று ஜெயலலிதாவின் 2023ஆம் ஆண்டுக்கான தொலைநோக்குத் திட்டம் அறிவிக்கிறது. இந்தக் காலகட்டத்தில் தனிநபர் வருமானம் 6 மடங்கு உயரும்; குடிசைப் பகுதிகளும் ஓலைக் குடிசைகளும் இருக்காது என்று நம்பச் சொல்கிறது.

ஆனால், இந்தத் தொலைநோக்குத் திட்டம் என்பது, உள்நாட்டு, வெளிநாட்டு தரகு கார்ப்பரேட் மற்றும் பன்னாட்டுத் தொழில் கழகங்களின் நலன்களுக்காக, பல இலட்சம் கோடி ரூபாய் அரசுப் பணத்தை வாரி இறைப்பதுதான். அவற்றின் தொழில் முதலீடு மற்றும் முன்னேற்றத்துக்கான அடிப்படைக் கட்டுமானங்களை அமைத்துக் கொடுப்பது, கூட்டு விவசாயம், ஒப்பந்த விவசாயம் என்று விவசாயத்தை முழுவதும் கார்ப்பரேட் நிறுவனச் சேவைக்கானதாக மாற்றுவதுதான் இந்தத் “தொலைநோக்குத் திட்டம்’’. இனிவரும் காலத்தில் ஜெயலலிதா தனது புதிய “உடன்கட்டை” நரேந்திர மோடியின் அடியொற்றி நாட்டுக்கும் மக்களுக்கும் துரோகமிழைக்கும் பாதையில் துணிந்து நடைபோடுவார் என்பதை இந்தத் தொலைநோக்குத் திட்டம் தெட்டத் தெளிவாக்குகிறது.

(முற்றும்)

_________________________________________

– புதிய ஜனநாயகம், மே-2012

__________________________________________

சிறுகதை: ‘குடி’காத்த மாரியம்மன்!

4

“என்ன? வய வேல எதனாச்சும் நடக்குதா! ஆளையே பார்க்க முடியல.”

அதெல்லாம் ஒண்ணுமில்ல. வரப்ப மிதிச்சு மாசம் ஆவுது! நம்ப பயதான் பயணம் போவணும்னு பிடிவாதமா இருக்கான். அந்த வேலயாதான் ஏஜெண்ட பாக்க வடமட்டம் வரைக்கும் போயிருந்தேன். இப்பதான் நம்ப தவக்கள மவன் ட்ரஸ்டி தேடுனார்னு சொன்னான். ஏண்ணே! எதனாச்சும் பஞ்சாயத்தா? “

இருவரும் வீட்டுத் திண்ணையில் அமர, ட்ரஸ்டி பித்தளை வெற்றிலைப் பெட்டியைப் பிரித்து வைத்தார். நாலைந்து வெற்றிலைக் காம்புகளைக் கிள்ளி எறிந்து விட்டு வாயில் அதக்கி லாவகமாகச் சுண்ணாம்பைக் கீழ்ப்பல் நுனியில் ஒரு விரலால் அப்பிய ராசு,  “சொல்லுங்கண்ணே! சமாச்சாரம் என்ன?”

நம்ப பூசாரி ஜோதி பயதான் ரொம்ப கொடச்சல் கொடுத்துக்கிட்டு கெடக்கான். கொஞ்ச நாளாவே அவன் போக்கு சரியில்ல. கோயில கோயிலாவா வச்சிருக்கான். சுத்துப்பட்டு பத்து பதினைஞ்சு கிராமமும் அன்னியூர் மாரியம்மன் கோயில்னா அவ்ளோ ஒசத்தியா கன்னத்துல போட்டுக்கும்! இவன் என்னடான்னா மூணு வேல கற்பூர வாசன கூட காட்ட மாட்டேங்குறான்..

நானும் பாத்துட்டுதாண்ணே இருக்கேன். அங்கயே ஆட்ட கட்டிப் போட்டுக்குறான்; கோழிய வளக்குறான். பின்னாடி தென்னமரம் இந்த வாட்டி நல்ல காய்ப்பு; ஒரு தேங்காய நம்ம கண்ணுல காட்டலயே!.. அதற்கு மேல் வார்த்தைகளை அடுக்க வாய் கொள்ளாதவராய், எழுந்து போய் வெற்றிலை பாக்கு எச்சிலைத் துப்பி வந்தார்.

அன்னைக்கு நான் கோயில ஒரு நோட்டம் விடலாம்னு போறேன். ஒரு ட்ரஸ்டியாச்சேன்னு மட்டு மரியாதை இல்ல ! கண்ட பயலயும் கோயில் திண்ணைல சேத்துகிட்டு கத பேசிட்டு இருக்கான்.. வாசல்லயே இப்ப சைக்கிளுக்கு பஞ்சர் வேற போடுறானாம்.. சரி இவங்க தாத்தா காலத்துலேர்ந்து கோயில் பூசாரிங்களாச்சேன்னு  விட்டா … இவன் சரி வர மாட்டான் போலருக்கே!

மொதல்ல அந்த உண்டியல தொடச்சி வச்சிருக்கானா பாருங்க ! அது மேலயே கையத் தொடச்சி எண்ணப் பிசுக்கா ஆக்கி வச்சுருக்கான்.. ராசுவின்  கை இயல்பாக வெற்றிலைப் பக்கம் போய், எடுத்த வெற்றிலையைக் குப்புறப் போட்டு வேட்டியில் துடைத்தார். ”எடுத்துக்குங்க” என்று வெற்றிலை டப்பாவை அவர் அருகே தள்ளிய ட்ரஸ்டி முக்கியமான விசயத்துக்கு வந்தவர் போல கொஞ்சம் நெருங்கி வந்து, “மத்ததெல்லாம் கூட வுடுங்க! சமீபமா கோயிலுக்கு பின்னாடியே சரக்கு ஓட்டுறான்னு கேள்வி பட்டதுலேர்ந்துதான் மனசு தாங்க முடியலே! திருவிழா டயத்துலேயே பசங்கள வச்சு ஆத்தங்கரைப் பக்கம் சாராயம் ஓட்டுனாண்ணு கேள்விப்பட்டேன். சரி, சரியான முகாந்திரம் இல்லாம கேக்கக் கூடாதுன்னு இருந்தேன்; இப்ப என்னடான்னா கோயில்லேயே செய்யுறான்னா! இனிமே விடக் கூடாதுங்க! கேள்விப்பட்டுதுலேர்ந்து மனசே சரியல்ல ! எப்புடி இருந்த கோயிலு!”

முகம் வாடிப்போன ட்ரஸ்டி வெற்றிலையுடன் மீதி உணர்ச்சிகளையும் மெண்டு விழுங்கினார்.

அய்யய்யோ! ரோம்ப அநியாயமாச்சே!.. ராசுவும் திடுக்கிட்டார்.

அதான்,  நம்ப நாட்டாமக்காரர வச்சுகிட்டு, அவன கோயில வுட்டுத் தூக்கிடலாம்னு பாக்குறேன். இதுக்கு மேல விட்டு வச்சா மாரியம்மன் கோயில சாராயக் கடையாவே மாத்திருவான்.. இது சம்பந்தமா உங்கிகிட்டேயும் ரோசன கேக்கலாம்னுதான் கூப்பிட்டேன்.

அதெல்லாம் சரிதாண்ணே ! பிரச்சினை இந்த அளவுக்கு போறதால இன்னம அவன வுட்டுட்டு தேட முடியாது! இருந்தாலும் முடிவெடுக்கிறதுக்கு முன்னாடி, அவன் கிட்டயும் ஜாடையா நான் நாலு வார்த்த பேசிப் பாக்குறேன். இல்லேனா அவன் வகையறா நாலு பேரு எங்ககிட்ட சொன்னீங்களானு வருவானுங்க! கவலய வுடுங்கண்ணே ! நானே வார்த்தய கொடுத்து உள்ள சேதிய வாங்கிடறேன்..  அப்புறம் தூக்கிடுவோம்.. குடியிருக்க எடத்தக் கொடுத்தா.. மாரியம்மனயே யாருன்னா? நாம விட்டுற முடியுமா? நாளைக்கு சேதி சொல்றண்ணே.. நீங்க கவலப்படாம ஆகுற ஜோலியப் பாருங்க… ட்ரஸ்டியை ஆறுதல் படுத்திவிட்டு தெருப்பக்கம் ராசு கிளம்பினார்.

மாரியம்மன்-கோயில்

என்னாடி ஆச்சி இது! வர வர ஊர்ல ஒதுங்க நிணலே இல்லாமப் போயிரும் போலருக்கு ! மாரியம்மங் கோயிலு மரத்தடி நிணலு எம்மாந் தண்டி இருட்டா இருக்குந் தெரியுமா! என்னமோ வௌக்குமாரு நிணலு மாறி இருக்கு! ஊர்ல அநியாயம் பெருத்துப் போச்சு.. ஆயி! ஆயிரங் கண்ணுடையா… நீதான் புள்ளகள காப்பாத்தணும் ; ஊர காப்பாத்தணும்.. பஸ்ஸுக்கு காத்திருக்க கோயில் பக்கம் ஒதுங்கிய சின்னப்பொண்ணு மாரியம்மனைப் பார்த்து கன்னத்தில் போட்டுக் கொண்டாள். பேருந்துக்கு நிற்கும் ஒரு சிலரைத் தவிர கோவில் பக்கம் யாருமில்லை. கோவில் திண்ணையும் வெறிச்சோடிக் கிடந்தது. இதுதான் தருணம் என்று ராசு மெல்லக் கணைத்துக் கொண்டே கோவிலுக்குள் நுழைந்தார்.

என்ன ஜோதி… ஜோதி.. இருக்கியா…

தோ.. இங்கதா மாமா இருக்கேன்… இப்புடி வாங்க… கோயிலுக்கு இடப்பக்கம் உள்ள கொட்டகைதான் பூசாரி ஜோதியின் வீடு. உள்ளே விளக்குத் திரியைப் பிரித்துக் கொண்டே ராசுவை அழைத்தான்.

வாங்க மாமா! என்ன காத்து இந்தப் பக்கம் அடிக்குது. பையன் பயணம் போகப் போறான்னு கேள்விப்பட்டேன்! ஏதும் அபிசேகம் கொடுக்கணுமா?

இல்ல ஜோதி! இதுவும் கோயில் சமாச்சாரந்தான்… என்ன சின்னப் புள்ளைலேர்ந்து உன்ன தூக்கி வளத்தவன்  நான்… ஒரு நல்லத கெட்டத நாமதான சொல்லித் தரணும். அந்தக் காலத்துல மதகு தெறக்குறதுலேர்ந்து கதவு வைக்கிற வரைக்கும் உங்க அப்பாரு கோவிந்தன் கிட்ட திருநீறும் குங்குமமும், உத்திரவும் வாங்கிட்டுதான் வேல நடக்கும். அவ்ளோ பேமசு…

என்ன மாமா! சுத்தி வளைக்காம சொல்லுங்க… ட்ரஸ்டி எதனாச்சும் அவுத்து விட்டாரா?

எப்படி ஆரம்பிப்பது என்று தடுமாறிய ராசுவுக்கு விசயத்தை தாழ்ப்பாளைத் திறந்து விட்டது மாதிரி தெம்பு வந்து பேச ஆரம்பித்தார்,

“ஒண்ணுமில்ல கோயில கொஞ்சம் சுத்த பத்தமா வச்சிக்கிலேன்னு பேச்சு வருது.. ”

வாசல பாருங்க எதனாச்சும் இல தழ கெடக்குதா? முன்னயாவது கோழி வளர்த்தேன். எவன் கண்ண வச்சானோ! எல்லாம் கீரிப்புள்ளகிட்ட போயிருச்சு… இப்ப கோழிப்பீ கூட்டித் தள்ளவும் வழியில்ல… ராசுவின் கண்ணைப் பார்க்க, ஒரு சுழட்டு சுழட்டி அவர் வேறு பக்கம் பார்த்தார்.

அதில்லடா ஜோதி.. இந்த சாமி துணியெல்லாம் கொஞ்சம் தொவச்சி கிவச்சி சாத்தக் கூடாதா.. எப்பப் பாரு அழுக்கா இருக்கு… சரியா குளிப்பாட்றதும் இல்லேன்னு குறையா இருக்குடா…

நல்ல கதையச் சொன்ன! என் மேலு வேட்டியப் பாரு மாமா? இது மர அழுக்கா கெடந்தாலும், என்  கைக்காசப் போட்டு மூணு பொன்வண்டு சோப்பு வாங்குறேன்… மாரியம்மன் துணிக்கு.. காட்டேரி சிலைக்கு போன திருவிழாவுல கட்டுன துணி பழுப்பேறி பீஸ் பீஸா போயிருச்சு… மானம் போவுதேன்னு… புள்ளைக்கு பொஸ்தகம் வாங்க காசு தராம வாங்கிக் கட்டிருக்கேன்… இவ்ளோ பேசுறானுவளே… ஏதுடா! ஆத்துலயும் தண்ணி ஓடலியே தண்ணிக்கு எங்க போவான்னு இந்த அடிபம்புக்கு ஒரு வாசரை மாத்திக் கொடுத்தானுவளா? காலு கழுவவே தண்ணி இல்ல.. மேலுக்கு ஊத்த எத்தன குடம் நான் இரவல் வாங்குறது.. திருவிழாவுக்கு  திருவிழா கோயில ஜோடிச்சா மட்டும் பத்தாது மாமா…

பேச்சில் வேகம் கூடிக் கொண்டே போய்… ராசு இடைமறிப்பதைக் கேட்காமல் ”இங்க வாங்க.. பாருங்க” என்று கோயில் பக்கம் இழுத்து வந்தான்.

“பாருங்க கற்பூரத்தட்ட காஞ்சி இத்துப் போய் கெடக்கு… சூலத்த பாருங்க துருப்புடிச்சு இத்துப் போயிடக்கூடாதேன்னு கைக்காசப் போட்டு எண்ண வாங்கித் தடவி வச்சிருக்கேன்… பேச்சியாயிக்கு காசப்போட்டு குங்குமத்த கொட்டி வச்சிருக்கேன்… ” ஜோதி பேசிக் கொண்டே காட்ட, பேச்சியாயி சிலை சாட்சி சொல்வதைப் போல நாக்கை நீட்டிக் கொண்டு கிடந்தது.

சரிடா, இதெல்லாம் தேவைன்னு நீ நாட்டாம, ட்ரஸ்டிகிட்ட சொல்லலாம். இல்ல என்கிட்டயாவது சொல்லலாம்ல! உண்டிக்  காசு உடைக்கிறப்பவே இதக் கேளு!

ஊக்கும் கோயில் செலவுக்குன்னு பெரிசா ஒதுக்கிடப் போறீங்க… அட நீ வேற மாமா! எவன் மாரியம்மன் உண்டியல்ல போடுறான்… அவனவன் அய்யாவடி , திருநாகேஸ்வரம்னு தேடிப்போயி போட்டுக்கிட்டு வாரனுவ. உள்ளூர் காரன எவன் மதிக்குறான்! வரப்பு காஞ்சா வய நண்டும் மதிக்காதாம் அத மாதிரி, எவன் இங்க அர்ச்சனைக்கு வாரான்… இவ்ளோ பேசுறியே… நம்ப ட்ரஸ்டி வீட்ல கும்பகோணம் அய்யர வச்சிதானே பூஜை பண்றாரு. புள்ள படிச்சு வெளிநாடு போறப்ப சுவாமி மலைல போய் தங்கத்தேரு இழுக்குறாரு… ஏன் இந்த மாரியம்மனுக்கு தங்கத்துல ஒரு பொட்டு வாங்கி வச்சா என்னா கேடு! கற்பூரம் காட்டவே ஆளில்ல… எவன் தட்ல காசு போடப் போறான்…? ஏதோ எங்க அப்பா சொன்னதுக்காக.. நானும் இந்த ஊர நம்பி நாலு எழுத்து படிக்காம… கோயில்ல அடுகடையா கெடந்தது தப்பாப் போச்சு…

ஜோதி போட்ட போடில் ராசு திக்கு முக்காடிப் போய், இவன மடக்க வந்தா இவன் நம்மளப் புடி போடுறானே என்று மலைத்து ஒரு வழியாகத் திரும்பவும் புகாருக்கு வந்தார், “சரி! எல்லாம் சரி பண்ணலாம். அதுக்காக நீ கோயில்லயே ஆடு வளர்க்கறதும், பஞ்சர் கடை போடறதும் நல்லா இல்லையே! அதுவும் காலனி பசங்களக் கோயில்ல சேத்துகிட்டு சதா திண்ணைல ஏத்திக்கிறதும் ஊரு பழக்கத்துக்கு ஒத்து வருமா? உங்க வகையறாவ மதிச்சு உன்னதானப்பா எங்க கோயில் பூசாரியா ஏத்துகிட்டு இருக்கோம். நீ கோயில் வேலைய வுட்டுட்டு மத்ததெல்லாம் பாத்தா, பாக்குறவங்க தப்பாதானே பேசுவாங்க! எனக்குன்னு வேணாம், உனக்குன்னும் வேணாம். நீயே நியாயத்தப் பேசு!

சரி மாமா… உன் பேச்சுக்கே வர்றேன்! ஏதுடா, திருவிழா முடிஞ்சு ஆறு மாசமாவுதே! அவனுக்கும் புள்ள குட்டி, வாயி வயிறு இருக்கே! எப்புடி பொழப்பான்னு யாராவது கவலைப்பட்டீங்களா? அப்பா காலத்துல ஆளுக்கு மூணு மரக்கா, நாலு மரக்கா ஊர்ல அளந்தீங்க… இப்ப அதுவும் ஒழுங்கா இல்ல. மாசம் வெறும் ஆயிரம் ரூவா கொடுத்தா போதுமா? கேட்டா விவசாயம் முன்ன மாரி இல்லேம்பீங்க… மாரியம்மன மட்டும் முன்ன மாறி ஜோடிக்கணும்னா நான் எங்க போறது?! பொங்குற ரேசன் அரிசில  காட்டேரியிலந்து பேச்சியாயி வரைக்கும் படையல் போட்டு தெனம் காக்காவுக்கும் வைக்கிறேன்… அந்தக் காக்காவே திங்காத சோற… நாங்க தின்னுட்டு கதியேன்னு கெடக்கோம்..

பாக்குற நேரமெல்லாம் ஆள கோயில்ல காணோம்னா! ஆட்ட அவிழ்த்து விட்டு மேய்க்க ஊர்ல எங்க மேச்சல் இருக்கு? போய் இல தழய ஒடிச்சிகிட்டு வர வேணாம்… எங்க அப்பா, தாத்தான்னு கோயில வளர்த்து விட்டு எங்களுக்கு எண்ணத்த கொடுத்திட்டீங்க… நிலம் ஒப்புக் கொள்ளக் கூட இப்ப முடியல… இந்த ஆட்ட வளர்த்து வுட்டாவாவது என் புள்ள குட்டிக படிக்கிறதுக்கு வெல ஆவும்.. அதுவும் ஊரு கண்ண உறுத்துதா?

பேச வந்த ராசுவை மடக்கி “கேளு மாமா? காலனிக்காரன்தான் இன்னும் பய பத்தியா என்ன மாரி மாரியம்மன கட்டிகிட்டு அழுவுறான்… அவனயும் வுட்டா என் பொழப்புக்கு யாரு? மேலத் தெருகாரனா வர்றான்… அவனவனும் பட்டீஸ்வரம், பிரத்தியுங்கான்னு புதுசு புதுசா பாப்பாரக் கோயில தேடிப் போறானுங்க.. நீங்களுந்தான் வாங்களேன். யாரு வேணாங்குறா? அட இருங்க மாமா! மொத்தத்தையும் கேட்டுட்டு நீங்களே நியாயத்தக் கேளுங்க!

தட்டுக் காசும் இல்ல, கலம் நெல்லும் அளக்க மாட்டீங்க! தேங்கா மூடிக்கும் வழியில்ல, உண்டியலும் ரொம்பாதுன்னா… எப்படிதான் நான் கஞ்சி குடிக்கிறது… மாரியம்மனுக்கு துணி கட்டுறது.. மத்த வேல செஞ்சாதான்… மாரியம்மனுக்கே ஒரு முழம் பூவு. ஆமா! என்னமோ நான்தான் பூசாரி வேலய வுட்டுட்டு வேற வேல பாக்குற மாதிரி ஜோடிக்குறானுவல,  கேக்குறேன். ட்ரஸ்டி கோயில் ட்ரஸ்டி வேல மட்டுந்தான் பாக்குறாரா? பைனான்சு நடத்தல, வட்டிக்கு விடல, வாங்குன சொத்து பத்தாதுன்னு கும்பகோணத்து செட்டியாரோட சேர்ந்துகிட்டு ரியல் எஸ்டேட் பண்ண தெரியுது, என் குடிசைக்கு வைக்கோலு வுடறதுக்கு மட்டும் கணக்குப் பாக்குறாரு! நம்ப நாட்டாம, கோயிலு சுவத்தையே பாத்துகிட்டு கெடக்குறாரா… நூறுநாள் வேலைல பொய்க் கணக்கு எழுதல, பஞ்சாயத்து மோட்டாரை கழட்டி பங்கு போடல! ஏன் ஒண்ணும் இல்லாத ஆளா? இந்தக் கோயில் பம்புக்கு ஒரு வாசரை போட்டா என்ன? அவுரும், கணக்குப் புள்ளயும் சேர்ந்துகிட்டு புதூர்ல பிராய்லர் கோழி வளர்க்கலாம். நான் ஒத்த ஆடு வளக்கறது தப்பாப் போச்சா? கேக்குறேன்… ஏதோ அவனவனும் அவனவன் வேலயப் பாக்குற மாரியும்… நான்தான் இடம் மாறிப் போயிட்ட மாரியும் பேசுறாங்களே… எனக்கும் எல்லாச் சேதியும் தெரியும் மாமா… அப்பா சொல்லிட்டுதான் செத்தாரு… மாரியம்மன் தோடு, காட்டேரிக்கு தண்ணி ஊத்துன பித்தாள சொம்பு, பேச்சியாயி கரண்டி எல்லாம்… யார் யார்கிட்ட எப்புடி எப்புடி மாறிப் போச்சுன்னு எனக்குத் தெரியும். வாயத் தொறக்கக் கூடாதுன்னு நான் வலியோட கோயிலக் காத்துகிட்டு கெடந்தா..  என்னய வங்கம் வச்சா நான் சும்மா விட மாட்டேன் ஆமா?

டேய்… டேய்.. ஏன்டா இப்ப கோபப்படுற… நான் கேக்க வந்ததே வேற… தோ பாரு மத்ததெல்லாம் வுடு! நான் பாத்துக்குறேன்… சொல்றேன்னு கோபப்படாதே! கோயில்லயே சாராயம் விக்கிறேன்னு பேச்சு வருது! அந்தப் பேச்சுக்கு எடமில்லாம பாத்துக்க! அததான் நான் சொல்ல வந்தது… நீ வச்சிக்க மாட்ட ! இருந்தாலும்… அப்படி ஒரு பேச்சு அடிபடுது… வராம பாத்துக்க… மிகுந்த எச்சரிக்கையுடனும், கறாராகவும் ராசு ஒரு வழியாகப் பேசி முடிக்க…

“எந்த நாய்.. சொன்னிச்சு..?! சும்மா ஒதுங்கிப் போனா இன்னும் கதயக் கட்டுவானுங்க… என் புள்ளைங்க மேல சத்தியமா இதெல்லாம் சொல்றவன் வாய் இழுத்து சாவான்… இவனுக கிழிக்குற கிழிக்கு… இந்தக் கோயில்ல கெடந்து சாகறத விட… சாராயம் விக்கிறதுக்கே போவலாம்.. தப்பில்ல… ஆனா இதெல்லாம் நான் கோயில்ல செய்யுறேங்குறது எவ்ளோ பெரிய பொய்யி… சாமி  சத்தியமா வுட்டேன்.. வுட்டேன்… அந்த மகமாயிதான் இந்த அநியாயத்தக் கேக்கணும்..”  பேசிக் கொண்டே ஜோதி மண்ணை வாரி இறைக்க…

“டேய்…! டேய்..! நீ வேற! சனம் வேடிக்கைப் பாக்குது…! இல்லேன்னுட்டு போவியா? இதெல்லாம்..! நல்ல ஆளுடா நீ…! போய் ஆக வேண்டியதப் பாரு…”  என்று ராசு ஆளை விட்டால் போதுமென்று நடையைக் காட்டினார்.

“என்னங்க? ”  பதட்டத்துடன் ஜோதியின் மனைவி ஓடி வர, சுத்துப்பட்ட பேயி, பிசாசையை ஒரு கை விபூதில தொரத்துனவரு எங்க அப்பன்! இவுனுங்க மிரட்டலுக்கு எல்லாம் பயப்படலாமா?! கண்ணுக்கு தெரியுற மாதிரி ஒரு கழிப்பு கழிச்சிப் போட்டாதான் பின்பக்கம் வர மாட்டானுங்க… கூட்டுங்க பஞ்சாயத்த பாத்துடலாம். நீ போடி..! அவனவனும் ஆயிரம் விதத்துல காசு சேப்பானுங்களாம். பூசாரி மட்டும் பொகைச்சல்லயே கெடக்கணுமாம்… முனகிக் கொண்டே குடிசைக்குள் போனான் ஜோதி..

_______________________________________

நடந்ததை எல்லாம் அச்சு மாறாமல் ராசு சொல்லி முடிக்க, ட்ரஸ்டிக்கு கோபம் தலைக்கேறியது. அப்படியா பேசுனான் என்று ஆத்திரமாகிப் போனான், “ஆமாண்ணே! அவன் தான் செய்யுறத குத்தம்னே ஒத்துக்குல. என்னமா எகிறி எகிறிப் பேசுறான் தெரியுங்களா! மண்ணை வாரித் தூத்துனதுல எனக்கே பகீர்னு போயிடுச்சு. பேசாம கூட்டத்தப் போட்டு கோயில வுட்டுத் தூக்கிட வேண்டியதுதான்.” ராசு படபடப்போடு மேல்த் துண்டை எடுத்து தாடையில் விசிறிக் கொண்டார். ட்ரஸ்டியின் கோபம் கொழுந்து வெற்றிலையைக் குதறி எடுத்தது. பதட்டப்படாமல் நாட்டாமை நிதானமாக வாயைத் திறந்தார். ”சரிதாண்ணே! திமிராத்தான் இருக்கான், நல்லாத் தெரியுது.. இப்போதைக்கு இவன விட்டா இந்தக் கூலிக்கு பூசாரி வேல பாக்க வேற ஆளு கிடையாது.. ஊர்க்காரப் பயலும் எவன் ஒழுங்கா நெல் அளக்குறான்.. கோயிலுக்கு வெள்ளாமையும் கெடையாது. டொனேசன் வாங்க ஊர்ல எவன் இருக்கான்.. வசதி படைச்சவன் எல்லாம் டவுண் பக்கம் போயிட்டான்.. அவசரப்பட்டு இவனயும் தொரத்தி வுட்டுட்டோம்னு வெச்சுக்குங்க… அப்புறம் ஊர்க்கட்டுப்பாட்டுக்கு பூசாரிக்கு எங்க போறது? கோயில வுட்டுத் தூக்குனா என்னா பண்ணுவாங்கிறீங்க? பத்தடி தள்ளிப்போய் மதகுல உக்காந்து விப்பான்… அதுக்குப் பேசாம கண்டிக்குற ஆள வுட்டு, லைட்டா கண்டிச்சு வுட்டுருவோம். மெல்ல சாராயம் விக்காத அளவுக்கு நேரு சீரு பண்ணிகிட்டா போதும். ரொம்ப இறுக்கிப் புடிச்சோம்னு வச்சுக்குங்க… அப்பறம் நமக்குதான் பிரச்சன.. இதான் எனக்குத் தெரிஞ்ச யோசன… பிறகு நீங்கதான் சொல்லணும். ”

நாட்டாமையின் வார்த்தைகளின் தீவிரம் தெரிந்தவுடன்… ராசுவும், டிரஸ்டியும் கோபத்திலிருந்து விவரத்திற்கு இறங்கி வந்தார்கள். “நல்ல வேலண்ணே! கோவத்துல நாங்க கூட வேற மாதிரி நெனச்சோம். மத்ததப் பத்தி ரோசன வல்ல! சரிதாண்ணே நீங்க சொன்னபடி லைட்டா கண்டிச்சுட்டு வுட்டுருவோம்” மெலிதாகச் சிரித்துக் கொண்டே கலைந்தனர். “மகமாயி… மகமாயி… நீதான் காப்பத்தணும்..”  ட்ரஸ்டியின் குரலில் நெளிவு சுளிவு தெரிந்தது.

-துரை சண்முகம்.

___________________________________________

– புதிய கலாச்சாரம், மே – 2012

_________________________________________________

வினவுடன் இணையுங்கள்

 தொடர்புடைய பதிவுகள்

தோழர் சீனிவாசனின் இறுதி ஊர்வலம் !

12

தோழர்-சீனிவாசன்-இறுதி-ஊர்வலம்செவ்வணக்கம், வீரவணக்கம் என எழும்பிய தோழர்களின் முழக்கங்கள், அவற்றைக் கீறிக்கொண்டு ஒலித்த கதறல்கள், கண்ணீர், மவுனம், விசும்பல்களிடையே தோழர் சீனிவாசனின் உடல் மே 6 அன்று காலை 11 மணியளவில், சென்னை நுங்கம்பாக்கம் மின் மயானத்தின் உள்ளே கொண்டு செல்லப்பட்டது. 30 ஆண்டுகளுக்கும் மேல் தளர்வின்றித் தொடர்ந்த அவரது புரட்சிகர வாழ்க்கைப் பயணம் நேற்று முடிவுக்கு வந்தது.

மே 5 அன்று காலையில் சேத்துப்பட்டில் அவரது வீட்டின் வாயிலில் வைக்கப்பட்டிருந்த அவரது உடல், மாலை முதல் சேத்துப்பட்டு அம்பேத்கர் திடலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தனது இரவு நேரங்களை பகுதி மக்கள், இளைஞர்களுடன் அவர் செலவிட்ட இடம் அது. பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள், விவாதங்களினூடாகப் பல இளைஞர்களை அவர் அமைப்புக்கு ஈர்த்த இடம் அது. சனிக்கிழமை மாலையே திடலுக்கு வந்து குழுமத்தொடங்கிய பல தோழர்கள், அன்றைய இரவை தோழர் சீனிவாசனுடன் அங்கேயே கழித்தனர்.

அமைப்பின் எல்லா நிகழ்ச்சிகளிலும் கூட்டங்களிலும் தோளில் தொங்கும் ஒரு கருப்பு நிற பையுடன் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பைப் போல குறுக்கும் நெடுக்கும் பாய்ந்து நடக்கும் சீனிவாசன் இனி இல்லை.

போராட்டம், பொதுக்கூட்டம், மாநாடு என்று எதுவானாலும் முதலில் நடப்படும் பந்தல்கால் போல வந்து நிற்கும் சீனிவாசன் இனி இல்லை.

நிதிக் கணக்குகள், விற்பனைத் தொகைகள், நிலுவைத் தொகைகள் ஆகியவற்றுக்காக தோழர்களைக் கடிந்து கொள்ளும் “பொருளாளர் சீனிவாசன்” இனி இல்லை.

“ம.க.இ.க சீனிவாசன்” என்று எல்லோராலும் அழைக்கப்பட்டு, அமைப்பையே தனது இனிசியலாகவும், முகவரியாகவும் ஏற்றுக் கொண்ட தோழர் சீனிவாசன் இனி இல்லை.

அம்பேத்கர் திடலில் மக்களையும், தோழர்களையும் பார்த்தபடி தோழர் சீனிவாசனின் உடல் வைக்கப்பட்டிருந்தது. இடப்புறம் அவரது மனைவி, பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர் கண்ணீருடன் அமர்ந்திருந்தார்கள். வரிசையாக வந்து கொண்டிருந்த தோழர்களும் மக்களும் அவருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, உடலுக்கு முன்னால் மண் தரையில் அமர்ந்து கொண்டிருந்தார்கள். கத்திரி வெயில், துயரத்தின் வெம்மையைக் கூட்டத்தொடங்கியிருந்தது. அனைவருக்கும் தண்ணீர் விநியோகித்துக் கொண்டிருந்தார்கள் தொண்டர்கள்.

ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாக திடல் நிரம்பியிருந்தது. திடலுக்கு வெளியே வரிசையாக இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்க, திடலில் இடம் கிடைக்காத மக்கள் சாலையில் செல்பவர்களுக்கு இடையூறு தராமல் நின்றார்கள். அவர்களில் பலருக்கு தோழர் சீனிவாசனைத் தெரியும். ரவுடிகளும் சமூக விரோதிகளும் கொட்டமடித்து வந்த அந்தப் பகுதியில் அவர்களை எதிர்த்து நின்று அவர் போராடியதும் தெரியும். திடலின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த அவரது புகைப்படங்கள் அனைவரிடமும் நினைவலைகளை எழுப்பிக் கொண்டிருந்தன.

காலை 8 மணிக்கு “நினைவஞ்சலி கூட்டம் தொடங்குகிறது” என்று அறிவித்த மகஇக வின் சென்னை மாவட்டச் செயலர் தோழர் வெங்கடேசன், தோழர் சீனிவாசனின் பங்களிப்பை சுருக்கமாக விளக்கி அஞ்சலிக் கூட்டத்தை தொடங்கி வைத்தார்.

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் மாநில தலைவர், தோழர் முகுந்தன், முதலில் பேசினார். ’தோழர் சீனிவாசனை எப்போது கைப்பேசியில் அழைத்தாலும், முதலில் எந்த ஊரில் இருக்கிறீர்கள் என்றுதான் விசாரிக்க வேண்டும். அவரது கறுப்பு நிற பையில் எப்பொழுதும் ஒரு லுங்கி, ஒரு வேட்டி சட்டை இருக்கும். மாதத்தில் 20 நாட்களாவது சுற்றுப்பயணத்திலேயே இருப்பார். வயதோ, உடல்நல குறைபாடோ எந்த வகையிலும் அவரது சுறுசுறுப்பை மட்டுப்படுத்தவில்லை. அமைப்பின் போராட்டம் எங்கே நடந்தாலும், முதல் நபராக சிறிதும் யோசிக்காமல், கிளம்பி விடுவார்…’ என்று நிறுத்தியவர், “அதுபோலவே இன்று நம்மை விட்டும் முதல் ஆளாக பிரிந்து விட்டார்”: என தழுதழுத்தார்.

அடுத்த படியாக உரையாற்ற வந்த புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினரான தோழர் சரவணனுடைய பேச்சில் தந்தையை இழந்த ஒரு மகனின் துக்கம் வெளிப்பட்டது. ‘தோழரால் வளர்க்கப்பட்ட இளைஞர்களில் நானும் ஒருவன். புதிதாக அமைப்பில் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் சமீபத்தில் அவரை பார்க்கச் சென்றிருந்தேன். நோயின் வலியை மறைத்துக் கொண்டே சிரித்தபடி எங்களுடன் பேசினார். “வெங்காயத்தை உரிக்கும்போது எப்படி அருகில் இருப்பவர்களின் கண்களில் கண்ணீர் வருமோ, அதுபோல உங்களைத் தொட்டாலே ஆளும் வர்க்கம் கண்ணீர் விடச் செய்ய வேண்டும்.” இதுதான் என்னுடைய டிப்ஸ் என்று என்னுடன் வந்த இளைஞரிடம் வேடிக்கையாக கூறினார்.

பெண்கள் விடுதலை முன்னணித் தோழர் உஷா, 2009 ஈழப்போரில் இலங்கை அரசுக்கு துணை நின்ற இந்திய அரசை எதிர்த்து, சென்னை இராணுவ அலுவலகத்தின் முன் நடத்தப்பட்ட மறியல் போராட்டத்தில் அவர் ஆற்றிய பாத்திரத்தினை குறிப்பிட்டு, தோழருடன் எப்போது பேசினாலும், நம்மை உற்சாகம் பற்றிக் கொள்ளும் என்றார்.

“முன்பெல்லம் நாங்கள் அதிகாரிகளை சந்தித்து பேசும் போது கூழைக் கும்பிடு போடுவோம். தோழர் சீனிவாசன் அதிகாரிகளை எப்படிக் கையாள வேண்டும் என்பதை எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார். அதன்படி நாங்கள் நடந்தோம், அடிபணியாத போராட்டத்தின் வாயிலாகவே, எங்கள் கோரிக்கைகளில் பலவற்றில் வெற்றியும் பெற்றிருக்கிறோம்” என்றார். நேரு பார்க் மக்கள் மன்றத்தின் அமைப்பாளர்.

’எந்த ஊருக்கு சென்றாலும் அந்த ஊரிலேயே பிறந்து வளர்ந்தவர் போலவே தோழர் சீனிவாசன் நடந்து கொள்வார்…’ என்று தன் உரையை ஆரம்பித்தார் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு. உலக சமூக மன்ற மாநாட்டை அம்பலப்படுத்தும் பொருட்டு, 2004 இல் மும்பை சென்றிருந்த போது, ஏதோ அந்தப் பகுதியில் பழகியவர் போல சர்வசாதாரணமாக நடமாடினார்.  கேட்டதற்கு ’உழைக்கும் மக்கள் இருக்கும்போது எந்த ஊரிலும் நாம் அந்நியரில்லை…’ என்று விளக்கமும் சொன்னார். சிதம்பரம் கோயில் பிரச்னை தொடர்பாக பல்வேறு கட்சியினரும் பங்கேற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுவதற்கு எனக்கு தயக்கமாக இருந்தது. ‘உழைக்கும் மக்கள் சார்பில், அவர்களது பிரச்னைகளை பேசக் கூடிய நேர்மையும் துணிச்சலும் நமக்குத் தான் இருக்கிறது. நாம்தான் பெரிய தலைவர்கள். மேடையில் இருப்பது யாராக இருந்தால் என்ன, பேசுங்கள்” என்று தைரியமூட்டினார்.

புதிய தோழர்களை உற்சாகப்படுத்தி வளர்த்து விடுவது அவருடைய சிறப்பு என்றார் ராஜு.

சேத்துப்பட்டு பகுதியில் கள்ளச்சாராய வியாபாரிகள், ரவுடிகளுக்கு எதிரான போராட்டத்தின் போது தோழர் சீனிவாசன் வெளிப்படுத்திய துணிவினை நினைவு கூர்ந்தார் ம.க.இ.க சென்னைக் கிளைத் தோழர் வாசு. ” அது மிகவும் கொந்தளிப்பாக இருந்த சூழ்நிலை. இந்தப்பக்கம் ம.க.இ.க அந்தப்பக்கம் ரவுடிகள் என்று இரண்டு முகாம்கள். எப்போதும் தாக்குதல் நடக்கலாம் என்ற சூழ்நிலை. இரவு முழுவதும் பகுதி இளைஞர்களும் நாங்களும் இந்த திடலுக்கு அருகில் படுத்துக் கிடப்போம். நள்ளிரவில் ஒரு பையை மாட்டிக் கொண்டு அச்சமே இல்லாமல் தன்னந்தனியாக வீட்டுக்கு நடந்துபோவார். அவரது துணிவு பல இளைஞர்களை ஈர்த்திருக்கிறது” என்று நினைவு கூர்ந்தார்

நினைவுகளை 35 ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் சென்றார் தேனி மாவட்ட விவசாயிகள் விடுதலை முன்னணித் தோழர் மோகன்.

“அப்போது காடம்பாறை நீர்த்தேக்கத்தின் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்தன. தோழர் சீனிவாசன் மின்வாரியத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். மின்வாரியத்தின் உயர் அதிகாரி ஒருவர், அரசாங்க காரில் தன் குடும்பத்தினரை ஏற்றிக் கொண்டு உல்லாசப் பயணம் போன போது, தன்னந்தனியாக நின்று அந்த காரை தோழர் வழிமறித்தார். அரசாங்க காரில் இன்பச் சுற்றுலாவா, என்று சீனிவாசன் கேட்டதற்கு, ’அதைக் கேட்க நீ யார்?’ என்று எகிறினார் அந்த அதிகாரி. தோழர் பின்வாங்கவில்லை. கூட்டம் சேர்ந்து விட்டது. வேறு வழியின்றி, ’மின்வாரிய வேலைகளை பார்வையிட செல்கிறேன்’ என்று சமாளித்தார் அந்த அதிகாரி. அதைக் கேட்டு சிரித்த தோழர், “ஞாயிற்றுக்கிழமை கூட வேலை செய்யும் உங்கள் கடமை உணர்ச்சி வியக்க வைக்கிறது. ஆனால், உங்கள் குடும்பத்தினரையும் அழைத்து செல்கிறீர்கள். காருக்குரிய பணத்தை அலுவலகத்துக்கு கட்டி விட்டீர்களா? ரசீது எங்கே?’ என்று கேட்டார். ஏதேதோ சாக்குப் போக்குகளை அந்த அதிகாரி சொல்லியும் தோழர் விடவில்லை. இறுதியில் கூடியிருந்த மக்கள் முன்னால் உரிய பணத்தை அந்த அதிகாரி கட்டிய பிறகுதான் காரை நகர்த்த அனுமதித்தார்.

அதிகாரியின் ஆதரவு பெற்ற திமுக தொழிற்சங்கத்தை சேர்ந்த ரவுடிகள் அன்று இரவே தோழரின் வீட்டுக்கு அருவாள், கம்புடன் வந்து மிரட்டினார்கள். அத்தனை பேர் முன்பும் தனி ஆளாக அடி பணியாமல் தோழர் நின்றார். இந்த சம்பவத்தை அன்று வேடிக்கை பார்த்த இளைஞர்களில் பத்து பேர் தோழருடன் இணைந்து களப் பணியாற்ற முடிவு செய்தார்கள். அந்த 10 இளைஞர்களில் நானும் ஒருவன்.

என்னைப் போல் பலரை அவர் அமைப்புப் பணிகளுக்கு ஈர்த்திருக்கிறார்.

சென்ற ஆண்டு இறுதியில் முல்லைப் பெரியாறு பிரச்னை கொழுந்து விட்டு எரிந்த போது, என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலவரங்களை கேட்டறிந்தார். ‘மக்கள் நம் பக்கம் இருப்பதால், போராட்டம் வெற்றியை நோக்கி நகர்கிறது’ என்றேன். ‘நான் போட்ட விதை வீண் போகவில்லை” என்று சிரித்துக் கொண்டார். ஆம், தோழரே… நீங்கள் போட்ட விதைதான் நாங்கள். விதைகள் உறங்குவதில்லை. நீங்கள் விட்டுச் சென்ற பணியை முடிப்போம்…’ என்று உணர்ச்சிபூர்வமாகப் பேசி முடித்தார் தோழர் மோகன்.

இறுதியாக ம.க.இ.க மாநில செயலாளர், தோழர் மருதையன் பேசினார்.

“கணையப் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகபட்சம் 6 மாதங்கள்தான் உயிர் வாழ்வார்கள் என்றார்கள் பல மருத்துவர்கள். ஆனால், தோழர், கிட்டத்தட்ட 15 மாதங்கள் உயிர் வாழ்ந்திருக்கிறார். எப்பொழுது வேண்டுமானாலும் மரணம் நிகழும் என்பது அவருக்கும் தெரியும். எங்களுக்கும் தெரியும். திடீரென உடல் நிலை மோசமடையும். பின்னர் கொஞ்சம் சீரடையும். தோல்விதான் முடிவு என்று நிச்சயிக்கப்பட்ட இந்தப் போராட்டத்தில், அவ்வப்போது கிடைக்கும தற்காலிக வெற்றிகளில் நாங்கள் மகிழ்ச்சி கொண்டோம். இந்த ஒன்றரை ஆண்டு காலத் துயரத்தில் கண்ணீர் வற்றி, துயரம் கனக்க நின்று கொண்டிருக்கிறோம். அவருடைய வாழ்நாளை நீட்டிக்க முடிந்ததற்கு இரு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, அவருக்கு சிகிச்சையளித்த சித்த மருத்துவர் சிவராமனின் அக்கறையும் கவனிப்பும். இரண்டாவது, தோழர் சீனிவாசன் காட்டிய துணிவும் போராட்ட குணமும்.

என்னை விட அவர் வயதில் மூத்தவர். ஆனால், எப்போதும் ஒரு இளைஞனுக்கு உரிய உற்சாகத்துடன் இருப்பார். சொல்லப்போனால் பல சந்தர்ப்பங்களில் ஒரு பதின் பருவத்து இளைஞனைப் போல நடந்து கொள்வார். இதற்காகப் பலமுறை நானே அவரை விமரிசித்திருக்கிறேன். கண்டித்திருக்கிறேன்.

இங்கு பேசும் அனைவரும் இன்று தோழரை புகழ்ந்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அதை கேட்கத்தான் அவர் இல்லை. ஒரு கம்யூனிஸ்டின் வாழ்க்கையில் இது நடப்பதுதான். பொதுவாழ்க்கைக்கு பொன்விழா, மணி விழா கொண்டாடுவதையோ, புகழுரைகளைக் கேட்டு புளகாங்கிதம் கொள்வதையோ ஒரு கம்யூனிஸ்டு விரும்புவதில்லை. ஒரு கம்யூனிஸ்டு வாழ்நாள் முழுக்க விமர்சனங்களை எதிர் கொள்கிறான். தனது குறைகளை பரிசீலனை செய்து, தன்னை மேம்படுத்திக் கொள்கிறான். ஒரு முன்மாதிரி மனிதனைப் படைப்பதற்கும் சமூகத்தைப் படைப்பதற்கும் தன்னால் இயன்றதனைத்தையும் செய்கிறான்.

யாரும் குறைகளே இல்லாதவர்கள் இல்லை. தன் மீதான விமரிசனங்களுக்கு காது கொடுக்கவும் தமது குறைகளைச் சரி செய்து கொள்ளவும் ஒரு தோழர் தயாராக இருக்கிறாரா என்பதுதான் விசயம். தோழரிடமும் குறைகள் இருந்தன. ஆனால் தனது தவறுகள் குறித்து ஒரு இளம் தோழர் விமரிசிப்பதையும் கூட அவர் கேட்டுக் கொண்டார். அதனை ஒரு கவுரவப் பிரச்சினையாக அவர் கருதியதில்லை. முகம் திருப்பிக் கொண்டதுமில்லை.

கணையப் புற்றுநோய்க்கு நிவாரணமில்லை என்று எல்லோரும் கூறிவிட்ட போதும், “வெற்றி பெறுவதற்கு ஒரு சதவீதம் வாய்ப்பிருந்தாலும் நீங்கள் அறுவை சிகிச்சையை முயன்று பார்த்திருக்க வேண்டும். அதுதானே அறிவியல் பார்வை” என்று சொன்னார் ஒரு மருத்துவர். அறிவியல் பார்வை குறித்த அந்த மருத்துவரின் கூற்று வேறொரு கோணத்தில் இவ்விசயத்தைப் பார்ப்பதற்கு நம்மைத் துண்டுகிறது. சிறியதொரு இழப்பை சந்திக்க வேண்டுமென்றாலும், அதற்கு முன் புரட்சி வெற்றி பெறுவதற்கு 101 சதவீதம் வாய்ப்பிருக்கிறதா என்று தெரிந்து கொள்ளவே பலர் விரும்புகிறார்கள். “அநாவசியமாக” இழப்புகளை சந்திக்க பலர் தயாராக இல்லை. நம்மில் பலர் பலவிதமான தவறுகளிலிருந்தும் விடுபட முடியாமல் இருப்பதற்கு காரணம் இந்த மனோபாவம்தான்.

ஆனால், யாரிடமும் எந்த விதமான உத்திரவாதமும் கேட்காமல் 1991, 92 வாக்கில் தான் வேலை பார்த்து வந்த மின்வாரிய பணியை ராஜினாமா செய்து விட்டார் சீனிவாசன். இது குறித்து யாருக்கும் அவர் சொல்லவுமில்லை. 1991 – 96 காலகட்டம் தமிழக அரசியலில் முக்கியமானது. ஜெயலலிதாவின் சர்வாதிகாரம் தலைவிரித்தாடிய காலம் அது. அப்போது ‘புதிய கலாச்சாரம்’ இதழின் முகவரி, வில்லிவாக்கத்தில் வசித்து வந்த தோழரின் வீடு. அது மிகச்சிறிய வீடு. அதில்தான் அப்போது தன் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார். எப்போதும் யாராவது வந்த வண்ணமிருப்பார்கள். இதழில் வெளியான கட்டுரைகளுக்காக மிரட்டல் வரும். வீட்டு வாசலில் அறிவிக்கப்படாத புறக்காவல்நிலையம் போல உளவுத்துறை நின்று கொண்டிருக்கும். இத்தகைய சூழ்நிலைகளால் தனது “குடும்ப வாழ்க்கை” பாதிப்புக்கு உள்ளாவதாக அவர் கூறியதோயில்லை.

அந்தக் காலகட்டத்தில் பல போராட்டங்களில் அவர் கைதாகி சிறையில் இருந்திருக்கிறார். தமிழ் தீண்டாமைக்கு எதிராக திருவையாறு தியாகய்யர் உற்சவத்தில் நடைபெற்ற போராட்டத்தில் அவர் ஆற்றிய பாத்திரம் குறிப்பிடத்தக்கது. கருநாடக இசையுலகின் பிரபல வித்துவான்களும், ஐ.ஏ.எஸ் ஐபிஎஸ் அதிகாரிகளும், பார்ப்பன “மேன்”மக்களும் குழுமியிருந்த அந்த அவையில், போலீசு பாதுகாப்பு வலயத்தையெல்லாம் மீறி வி.வி.ஐ.பி வட்டத்திற்குள் சீனிவாசன் நுழைந்து விட்டார். தியாகய்யர் விழாக்குழுவின் தலைவரான ஜி.கே.மூப்பனாரின் பின்னால் அமர்ந்திருந்து, திடீரென்று எழுந்து தமிழ்த் தீண்டாமைக்கு எதிராக அவர் முழக்கம் எழுப்பியதையும், அதைக் கண்டு அதிஉயர் போலீசு அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆத்திரத்தில் நடுங்கியதையும் மறக்க முடியாது.

அவர் சிறை சென்றது மட்டுமல்ல, வழக்கறிஞராக பணிபுரியும் தனது மகள், சுப்பிரமணிய சுவாமியை எதிர்த்து நீதிமன்றத்துக்குள்ளேயே போராடியதற்காகவும், தமிழை நீதிமன்ற மொழியாக ஆக்கும்பொருட்டு போராடி சிறை சென்றதற்காகவும் ஒரு தந்தை என்ற முறையில் அவர் மிகவும் பெருமை கொண்டார். தோழர் என்ற முறையில் மகிழ்ச்சி அடைந்தார்.

அவரது பிரிவு நம்மிடம் ஏற்படுத்தும் துயரத்தை, புரட்சிகர உணர்வாகவும் செயலாற்றலாகவும் மாற்றுவோம்”

என்று கூறி, தோழரது இறுதி ஊர்வல நிகழ்ச்சிக்கு வந்திருந்த மக்களுக்கும், பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் நன்றி கூறி உரையை நிறைவு செய்தார் தோழர் மருதையன்.

காலை 9.30 மணிக்கு தோழருடைய இறுதிப் பயணம் புறப்பட்டது. “தோழர் சீனிவாசனுக்கு வீர வணக்கம், தோழர் சீனிவாசனுக்கு விடை கொடுப்போம்”

என்ற முழக்கங்களுடன் தொடங்கியது ஊர்வலம். செங்கொடி முன்செல்ல தோழரின் உடலைத் தாங்கிய வாகனம் மெல்ல நகரத்தொடங்கியது. ஒலியெழுப்பாத சிவப்புப் பேரலையாய் நகர்ந்து சென்ற மவுன ஊர்வலத்தின் அமைதி, இருமருங்கும் நின்றிருந்த மக்கள் மீதும் பரவியது.

“ம.க.இ.க தோழர் சீனிவாசனுக்கு சிவப்பஞ்சலி” என்று எழுதிய பதாகையில், ஒலி பெருக்கியின் முன் நின்று உரையாற்றிக் கொண்டிருந்தார் தோழர் சீனிவாசன். அவரது தோற்றமும் குரலும் கடந்த காலத்தில் உறைந்துவிட்டன.

நினைவுகளில் ஆழ்ந்தபடி நடந்து சென்று கொண்டிருந்த தோழர்களைத் தட்டியெழுப்பி, நிகழ்காலத்தை நினைவூட்டியபடி முன்னால் சென்று கொண்டிருந்தது கலைக்குழு தோழர்களின் பறையொலி.

வாகனத்தின் முன்னே, காற்றில் படபடத்தபடியே நகர்ந்து சென்று கொண்டிருந்தது செங்கொடி. தோழர் சீனிவாசன் கீழே உறங்கிக் கொண்டிருந்தார். அவர் பின்னால் ஆயிரக்கணக்கான தோழர்கள் அணி வகுத்து சென்று கொண்டிருந்தார்கள்.

________________________________________________

படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்

________________________________________________

வினவுடன் இணையுங்கள்

 தொடர்புடைய பதிவுகள்

புதிய கலாச்சாரம் மே 2012 மின்னிதழ் (PDF) டவுன்லோட்!

4

புதிய கலாச்சாரம் மே 2012

புதிய கலாச்சாரம் மே 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம் பெற்றுள்ள  கட்டுரைகள்:

1.    ஐ.பி.எல்: முதலாளிகளின் மங்காத்தா!

2.    தொப்பை வயிறு, சப்பை மூளை, குப்பை உணவு

3.    ”காதலில் சொதப்புவது எப்படி?” காதலைப் புரிந்து கொள்வது ஜனநாயகத்திலா, மர்மத்திலா?

4.    ‘தை’ரியமாகச் சொல் நீ தமிழறிஞன் தானா?

5.    அமெரிக்க இராணுவம்: பாதிநேரம் படபிடிப்பு! மீதி நேரம் ஆக்கிரமிப்பு!!

6.    வாழ்க்கை: ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு!

7.    குறுக்கு வெட்டு.

8.    காஞ்சிபுரம்: வைணவப் பார்ப்பனர்களின் தீண்டாமை வெறி!

9.    நிஜாமின் கஜானாவுக்கு வரி கிடையாதா?

10.    சிறுகதை: ‘குடி’காத்த மாரியம்மன்

11.    கர்ப்பமாவதை கண்டு சொல்லும் கடைக்காரன்!

12.    திரைவிமர்சனம்: தி ஆக்ஸ் – (The Axe) வேலையின்மை கொலையும் செய்யும்!

13.    கார்ட்டூன் பக்கம்

14.    கவிதை: உனக்கும் சேர்த்துத்தான் மே நாள்!

புதிய கலாச்சாரம் மே 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 3 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து சேவ் லிங்க்  ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK –  SAVE TARGET AS or SAVE LINK AS)

______________________________

வினவுடன் இணையுங்கள்

மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனன் கடத்தல் தவறா?

57

அலெக்ஸ் பால் மேனன் கடத்தல்சுக்மா மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனன் மாவோயிஸ்டு கொரில்லாக்களால் கடத்தப்பட்டிருக்கும் சம்பவம், அரசு மற்றும் ஆளும் வர்க்க ஊடகங்களிடம் ஆத்திரத்தையும் வெறியையும் கிளப்பியிருக்கிறது. “அரசாங்கம் இனிமேலாவது முதுகெலும்புடன் நடந்து கொள்ளவேண்டும்” என்று ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் நரைத்த மீசைகளின் ஊடாக ஆங்கில சானல்களில் உருமுகிறார்கள்.

“தங்களுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லையென்று மாவோயிஸ்டுகள் நிரூபித்துவிட்டதால், எதிரி நாட்டுப் படையாகக் கருதி மாவோயிஸ்டுகளை ஒடுக்கவேண்டும்” என்று தலையங்கம் தீட்டியிருக்கிறது தினமணி. இத்தகைய வழிமுறையைக் கையாண்டிருப்பதன் மூலம், உன்னதமான இலட்சியத்துக்குப் பாடுபடுபவர்கள் என்று கூறிக்கொள்வதற்கான அருகதையை மாவோயிஸ்டுகள் இழந்துவிட்டதாக கூறுகிறது, இந்து நாளேடு.

இதுகாறும் மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவு காட்டி வந்ததைப் போலவும், இந்தக் கடத்தல் நடவடிக்கை காரணமாக மேற்படி ஆதரவை திரும்பப் பெறுவது போலவும் நடிக்கின்றன ஊடகங்கள். நேற்று வரை மாவோயிஸ்டுகளிடம் அரசு மிகுந்த இரக்கம் காட்டியதைப் போலவும், இனி மனதைக் கல்லாக்கிக் கொண்டு அவர்களை ஒடுக்குவதைத் தவிர வேறு வழியில்லை என்பதாகவும் ஒரு பொய்ச்சித்திரம் தீட்டப்படுகிறது.

இந்தக் கடத்தலுக்கான காரணம் விளங்கிக் கொள்ள முடியாததல்ல. பல்வேறு பொய்வழக்குகளின் கீழ் ஆண்டுக் கணக்கில் சிறை வைக்கப்பட்டிருக்கும் பழங்குடி மக்களையும் தமது தோழர்களையும் விடுவிக்கவேண்டும் என்பதுதான் மாவோயிஸ்டுகளின் கோரிக்கை. பிணை மனு, வாய்தா, வழக்கு என்று அலைந்து சட்டபூர்வமான வழிகளில் நிவாரணம் பெறவேண்டுமேயன்றி, இப்படி ஆள்கடத்தலில் ஈடுபடுவது ஜனநாயக முறையல்ல என்பது ஊடகங்கள் மாவோயிஸ்டுகளுக்கு கூறும் அறிவுரை.

“அக்யூஸ்டை பிடிக்க முடியாவிட்டால், அவன் பெண்டாட்டியை, பிள்ளையைக் கடத்து” என்பதுதான் போலீசு ஆத்திச்சூடியின் ‘அறம் செய விரும்பு’. ஆள்கடத்தல் என்பது போலீசின் அன்றாடப்பணி. இந்தியாவில் ஆள்கடத்தலே நடக்காத ஒரு போலீசு நிலையத்தைக் ‘கடவுளாலும் ‘ காட்ட முடியாது. குற்றவியல் நடைமுறைச் சட்டம் உள்ளிட்ட எல்லா புனிதச் சட்டங்களையும், அவற்றை மீறியதற்காக மாண்புமிகு நீதிமன்றங்கள் தெரிவித்துள்ள கடும் கண்டனங்களையும் கால் தூசாகக் கருதி, கடத்தல், சித்திரவதை, வன்புணர்ச்சி, கொலை போன்ற குற்றங்களை போலீசும் இராணுவமும் தொடர்ந்து செய்து வருகின்றன.

ஆள் கடத்தல் என்பதை போலீசின் இயல்பாக அங்கீகரித்து, அத்தகைய கடத்தல் நடவடிக்கைகளுக்குச் சட்டம் போட்டிருக்கும் கடிவாளமல்லவோ ‘ஹேபியஸ் கார்ப்பஸ்’ எனப்படும் ஆட்கொணர்வு மனு. இந்திய உயர் நீதிமன்றங்களின் நாட்குறிப்புகளில் ஹேபியஸ் கார்ப்பஸ் மனு தாக்கல் செய்யப்படாத நாள் ஒன்றை யாரேனும் காட்ட இயலுமா? “இந்த ஜனநாயகத்தின் மீது தங்களுக்கு நம்பிக்கையில்லை, இல்லை, இல்லவே இல்லை” என்று உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ‘தலையில் அடித்து’ சத்தியம் செய்ததே சென்னை போலீசு, அதைத் தொலைக்காட்சிகளில் இந்த நாடே காணவில்லையா?

மக்களுக்கும்கூட இந்த ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லைதான். தங்களுக்கு எதிராக அடுக்கடுக்காக அநீதி இழைக்கப்பட்ட போதிலும், இந்த நாட்டின் மக்கள் கலகம் செய்யாமலிருப்பதற்குக் காரணம் சட்டத்தின் காவலர்கள் எனப்படுவோர் மீது அவர்கள் கொண்டிருக்கும் அச்சமேயன்றி, ஜனநாயகத்தின் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையல்ல. நீதி பெறுவதற்கு வேறு வழியறியாத காரணத்தினால் அடங்கிப் போகும் மக்களின் முன், இந்த அரசைப் பணிய வைப்பதற்கான வழியை மாவோயிஸ்டுகள் காட்டியிருக்கிறார்கள்.

ஜனநாயகத்தில் மாவோயிஸ்டுகளுக்கு நம்பிக்கை இல்லாததால், அவர்கள் மீது போர் தொடுக்கவேண்டும் என்கிறது தினமணி. ஜார்கண்டு மாநிலச் சிறைகளில் 6000 பழங்குடி மக்கள் விசாரணைக் கைதிகளாக அடைபட்டிருக்கிறார்கள். சட்டீஸ்கரின் ஜகதால்பூர் சிறையில் மட்டும் 612 பழங்குடி மக்கள் மாவோயிஸ்டுகளுக்கு உதவியதாக அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் வேறெந்த கிரிமினல் குற்றத்துக்காகவும் சிறையில் இல்லை. டாடா, ஜின்டால் போன்ற கார்ப்பரேட் கொள்ளையர்களுக்கு தங்களது நிலத்தைத் தாரைவார்க்க மறுத்த குற்றத்துக்காகப் பொய் வழக்குகளில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த மக்களெல்லாம் ‘ஜனநாயகத்தின் மீது தாங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை’ நிரூபிக்க வேண்டுமானால், நிலத்தைக் கொடுத்துவிட்டு ஓடிவிடவேண்டும். அல்லது ராம் ஜெத்மலானி போன்ற வழக்குரைஞர்களை அமர்த்தி உச்ச நீதிமன்றத்தில் வாதாடி பிணையில் வெளியே வந்து, அதன் பின்னர் ‘ஜனநாயக முறைப்படி’ வாய்தாவுக்கு அலைய வேண்டும். காஷ்மீரில் போலீசின் மீது கல்லெறிந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் 20,000 சிறுவர்கள் ஆண்டுக்கணக்கில் வாய்தாவுக்கு அலைவதாக சமீபத்திய பி.பி.சி. செய்தி கூறுகிறது.

கூடங்குளத்தில் அமைதி வழியில் தமது எதிர்ப்பை தெரிவித்த ஆயிரக்கணக்கான மக்கள் மீது சுமார் 180 பொய் வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஓரிரு வழக்குகளில் மட்டும் கைது செய்யப்பட்ட 200 பேர், ஒரு மாதம் சிறையிலிருந்து, பின்னர் பிணையில் வெளியே வந்து தற்போது அன்றாடம் போலீசு நிலையத்தில் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். போராட முனைந்தால் பொய்வழக்குகள் இருநூறும் உயிர்த்தெழும்.

அலெக்ஸ் பால் மேனன் கடத்தல்பொய் வழக்கு என்பது மக்களுடைய நெற்றிப் பொட்டில் அழுத்தப்படும் துப்பாக்கி. ‘சத்தம்போடாமல் நிலத்தைக் கொடு, காட்டைக் கொடு, அணு உலையை ஒப்புக்கொள்’ என்று வாயில் துணி அடைத்துப் பணிய வைக்கும் வன்புணர்ச்சி. இந்த அரசு சொல்கிறது மாவோயிஸ்டுகளின் கடத்தல் என்பது அரசை மிரட்டிப் பணியவைப்பதாம், அது ஜனநாயக வழிமுறை இல்லையாம்!

ஆயுதப் போராட்டப் பாதையைக் கைவிட்டு நாடாளுமன்ற அரசியல் நீரோட்டத்தில் கலக்குமாறு மாவோயிஸ்டுகளுக்கு வேண்டுகோள் விடுபவர்களும், இந்த ஜனநாயகத்தின் மீது பெருமதிப்பும், ஜனநாயக வழிமுறைகளின் மீது பெரும்பக்தியும் கொண்டவர்களுமான வலது கம்யூனிஸ்டு கட்சியினருக்கு நேர்ந்திருப்பது என்ன? மாவோயிஸ்டுகள் என்ற பெயரில் சட்டீஸ்கரில் அவர்களும் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். சல்வா ஜூடும் என்ற கூலிப்படையினரும் போலீசும் இணைந்து மக்களுக்கு எதிராக நிகழ்த்திய படுகொலைகளையும் வன்முறைகளையும் விசாரிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த கர்தம் ஜோகா என்ற வலது கம்யூனிஸ்டு தலைவர் மீது “மாவோயிஸ்டு கொரில்லாக்களுடன் சேர்ந்து மத்திய ரிசர்வ் போலீசு படையினர் மீது தாக்குதல் தொடுத்ததாக” வழக்கு போட்டுச் சிறை வைத்திருக்கிறது போலீசு.

வலது கம்யூனிஸ்டு தலைவர்களான ஏ.பி.பரதன், டி.ராஜா போன்றோர் ஜனநாயக முறைப்படி பல தடவை கண்டனம் தெரிவித்தும், நீதிமன்றங்களில் மனுச்செய்தும் சட்டீஸ்கர் அரசு இவரை விடுவிக்கவில்லை. தற்போது மாவோயிஸ்டுகள் வெளியிட்டிருக்கும் விடுவிக்கவேண்டியவர்கள் பட்டியலில் கர்தம் ஜோகாவும் வலது கம்யூனிஸ்டு கட்சியினரும் இருக்கின்றனர். ஜனநாயகப் பூர்வமற்ற வழியில் தனக்குக் கிடைக்கக்கூடிய இந்தப் பிணையில் கர்தம் ஜோகா வெளியே வரலாமா, அல்லது ஜனநாயக வழிமுறையின் மீது தான் கொண்டிருக்கும் விசுவாசத்தை நிரூபிப்பதற்காக அவர் சிறையிலேயே காத்திருக்க வேண்டுமா?

“இந்திய மக்களைக் கண்டு அந்நியர்களான பிரிட்டிஷார் அஞ்சியதைக் காட்டிலும் அதிகமாக, சுதந்திர இந்தியாவின் அரசு அஞ்சுகிறது. தங்களது ஆட்சியைத் தூக்கியெறிய வேண்டுமென்று போராடிய இந்தியர்கள் மீது, அரசியல் ரீதியான வழக்குகள் அன்றி வேறு பொய் வழக்குகளை பிரிட்டிஷ் அரசாங்கம் கூடப் போட்டதில்லை” என்கிறார் அவுட்லுக் (19.12.2011) கட்டுரையாளர் நீலப் மிஸ்ரா.

போஸ்கோவுக்கு எதிராக அமைதி வழியில் போராடி வரும் வலது கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் அபய் சாஹூவின் மீது பாலியல் வன்முறை, தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமை, வரதட்சிணைக் கொலைக்கு தூண்டுதல், திருட்டு முதலான 50 பொய்வழக்குகளைப் போட்டிருக்கிறது ஒடிசா போலீசு. போஸ்கோ எதிர்ப்பு போராட்டத்தின் முன்னணியாளர்கள் 800 பேர் மீது மட்டும் 200 பொய்வழக்குகள் ஒடிசாவில் போடப்பட்டிருக்கின்றன.

சென்ற ஆண்டு சட்டீஸ்கர் சென்ற சுவாமி அக்னிவேஷ் தாக்கப்பட்டது தொடர்பாக விசாரிப்பதற்கு, உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் சட்டீஸ்கர் சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள் மீது, சட்டீஸ்கர் துணைப்படை (பெயர் மாற்றப்பட்ட சல்வா ஜுடும்) துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறது. சுமார் 2 மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நடத்தி மத்திய ரிசர்வ் போலீசு படையினர் தங்கள் உயிரைக் காப்பாற்றியதாகவும், இனிமேல் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் தாங்கள் விசாரணைக்குச் செல்ல இயலாது என்றும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கின்றனர் சி.பி.ஐ அதிகாரிகள். (டைம்ஸ் ஆப் இந்தியா, 14.3.2012) ஆயுதப்படைப் பாதுகாப்பு இல்லாமல் சி.பி.ஐ. அதிகாரிகளே நடமாட முடியாத இடத்தில், சாதாரண பழங்குடி மக்களுக்கு கிடைக்கும் நீதி எத்தகையதாக இருக்கும்?

அலெக்ஸ் பால் மேனன் கடத்தல்நிலைமை இவ்வாறிருக்க, இந்தக் கடத்தல் நடவடிக்கையையே அரசுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகச் சித்தரித்திருக்கிறார் மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ். அலெக்ஸைப் போன்ற இளம் அதிகாரிகளின் அர்ப்பணிப்புமிக்க செயல்பாட்டினால் ஈர்க்கப்படும் மக்கள், தங்களைப் புறக்கணித்து விடுவார்களோ என்ற அச்சத்தின் காரணமாகத்தான் மாவோயிஸ்டுகள் அவரைக் கடத்தியிருக்கிறார்களாம்! அமைச்சர் சொல்வதுதான் உண்மையென்றால், மாவோயிஸ்டுகள் தம் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று விட்டுவிட வேண்டியதுதானே! எதற்காக மீட்பு நடவடிக்கைகள், கண்டனங்கள், வேண்டுகோள்கள்?

“பழங்குடி மக்களுக்காகப் போராடுவதாக கூறிக்கொள்ளும் மாவோயிஸ்டுகள், அவர்களுக்கு வளர்ச்சித்திட்ட உதவி வழங்கச் சென்ற அதிகாரியைக் கடத்தலாமா? ஆயுதம் ஏந்தாத ஒரு ஆட்சியரைக் கடத்தலாமா?”என்று கேள்வி எழுப்புகின்றன ஊடகங்கள். ஏதோ ஆயுதப் போராட்டத்தின் நியாயத்தை அரசு அங்கீகரித்திருப்பதைப் போலவும், யுத்த தருமம் வழுவி நிராயுதபாணியைக் கடத்தியதுதான் பிரச்சினை என்பது போலவும் வெட்கமே இல்லாமல் பேசுகின்றன. தோழர் ஆசாத், தோழர் கிஷன்ஜி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மாவோயிஸ்டு முன்னணியாளர்களையும், சாதாரணப் பழங்குடி மக்களையும், மோதல் என்ற பெயரில் நிராயுதபாணியாக நிற்க வைத்து சுட்டுக் கொன்றிருப்பதுதான் இந்த அரசின் யோக்கியதை. சல்வா ஜுடும் செய்த நூற்றுக்கணக்கான கொலைகள், வழக்குகளாக நீதிமன்றங்களில் உறங்குகின்றன. காஷ்மீரிலோ தோண்டுமிடத்திலெல்லாம் பிணங்கள் ஊற்றெடுக்கின்றன. காஷ்மீர் மாநில அரசே அதிகாரபூர்வமாக ஒப்புக் கொள்ளும் கணக்கின்படி, இராணுவம் அழைத்துச் சென்று அதன்பின் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 1200 க்கும் மேல்!

போலீசு நடத்தியிருக்கும் ஆள் கடத்தல்களையும் போலி மோதல் கொலைகளையும் மறுக்க முடியாதென்பதால், “அரசைப் போலவே நீங்களும் நடந்து கொள்ளலாமா?” என்று நைச்சியமாக கேள்வி எழுப்புகிறது இந்து நாளேடு. மாவோயிஸ்டுகள் அப்படி நடந்து கொள்ள எண்ணியிருந்தால் ஆட்சியர் அலெக்ஸை தண்டகாரண்ய காடுகளில் ‘காணாமல் போக‘ச் செய்திருக்கலாம். மாறாக, அவரைப் பிணைக்கைதியாக வைத்துக் கொண்டு கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

கைதிகளை விடுவிக்கக் கோரும் அவர்களது கோரிக்கைகளில் நீதி இருக்கிறது. “எனினும் அவ்வாறு விடுவிப்பது சட்டத்துக்கு விரோதமானது” என்கிறார்கள் வல்லுநர்கள். உண்மைதான். ‘நீதி’ சட்டவிரோதமானதாகவும், அநீதிகள் சட்டபூர்வமானவையாகவும் நிலைநாட்டப்பட்டிருக்கும் நாட்டில், சட்டப்படி நீதியைப் பெறுவது கடினம்தான்.

காடுகள், மலைகள், ஆறுகள் அனைத்தும் சமூகத்தின் பொதுச்சொத்துகள் என்பதே, மனிதகுலம் இதுகாறும் கடைப்பிடித்துவரும் நீதி. அந்த நீதியை இன்று சட்டவிரோதமாக்கி விட்டது தனியார்மயக் கொள்கை. அதனால்தான் மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவு தெரிவிப்பதே சட்டவிரோத நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

அலெக்ஸ் பால் மேனன் கடத்தல்பழங்குடிகளை, அவர்களது பாரம்பரிய வாழ்விடத்திலிருந்து விரட்டியடிப்பதன் மூலம், சொத்து என்ற சொல்லையே கேள்விப்பட்டிராத அம்மக்களின் மீது தனிச் சொத்தின் ஆவி இறக்கப்படுகிறது. வன்புணர்ச்சிக்கு ஆட்படுத்துவதன் வாயிலாக கற்பின் மேன்மை அவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. நாகரிகத்தின் பொருளையும் நல்லாட்சியையும் (கிராம சுரக்ஷா அபியான்) அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க உலகவங்கி நிதி ஒதுக்குகிறது.

சாலை, மின்சாரம், கல்வி, மருத்துவம் போன்ற பரிசுப் பொதிகளை மோட்டார் சைக்கிளில் சுமந்து கொண்டு முதலில் அலெக்ஸ் பால் மேனன் வருகிறார். அடுத்து தானியங்கித் துப்பாக்கிகளைச் சுமந்தபடி சி.ஆர்.பி.எஃப். விஜயகுமார் வருகிறார். “யாரை முதலில் அனுப்புவது, விஜயகுமாரையா, அலெக்ஸையா? எது முதலில், காட்டு வேட்டையா, வளர்ச்சித் திட்டமா?” என்ற விவாதத்தில் இறுதி முடிவு எடுக்கப்படாததால், சில இடங்களுக்கு அவரும், சில இடங்களுக்கு இவரும் முதலில் அனுப்பப்படுகிறார்கள்.

இரண்டையும் அக்கம்பக்கமாகவே பயன்படுத்தி கூடங்குளம் போராட்டத்தை முடக்கிவிட்டதாக டில்லி முதல்வர்கள் மாநாட்டில் பெருமையடித்துக் கொண்டார் ஜெயலலிதா. “500 கோடி ரூபாய் வளர்ச்சித் திட்டத்தில் புறங்கையை நக்க வேண்டும். மறுத்தால், 200 பொய் வழக்குகளில் சிறை செல்லத் தயாராக வேண்டும். இரண்டில் எது மக்களின் தெரிவாக இருப்பினும், அணு உலை மட்டும் இயங்கியே தீரும்.” — இதுதான் கூடங்குளம் தந்திரம்.

அலெக்ஸ் பால் மேனனின் சொந்த ஊரான நெல்லை மாவட்டத்தில் ஜெ அரசு எதைச் செய்து வருகிறதோ, அதைத்தான் ராமன் சிங் அரசு சட்டீஸ்கரில் செய்கிறது. நலத்திட்டத்தைக் கடை விரித்து அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தை உடைக்கின்ற கைக்கூலிகளான ஊராட்சி மன்ற உறுப்பினர்களை இடிந்தகரை மக்கள் தாக்கியிருக்கின்றனர். அங்கே அலெக்ஸ் கடத்தப்பட்டிருக்கிறார்.

அவர் நேர்மையாளர், சேவை மனப்பான்மை கொண்டவர் என்கிறார்கள். இருக்கலாம், அவையெல்லாம் அவரது தனிப்பட்ட விழுமியங்கள். அவ்வளவுதான். நேர்மையற்ற ஒரு அரசமைப்பை அவர் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார் என்ற உண்மையை, அவருடைய தனிப்பட்ட நேர்மை ரத்து செய்துவிடுவதில்லை. இந்த உண்மை அவர் அறியாததுமல்ல. மக்களை நாற்புறமும் சுட்டெரிக்கும் இந்த அநீதிகளின் மத்தியில், குற்றவுணர்வின்றி ஆட்சியராகப் பணியாற்றும் மனவலிமையை அவருக்கு வழங்கியிருப்பது அவருடைய தனிப்பட்ட நேர்மைதான் என்றால், அந்த நேர்மை ஆபத்தானது.

அவர் இந்தக் கொலைகார அரசின் கோரைப்பற்களை மறைக்கும் மனித முகம். அறம் கொன்று அம்மணமாய் நிற்கும் ஆளும் வர்க்கத்தின் மானத்தை மறைக்கக் கிடைத்த கோவணம். முழு நிர்வாணப் பாசிசமாய் மக்கள் முன் காட்சியளிப்பதற்கு ஆளும் வர்க்கம் இப்போதைக்கு விரும்பவில்லை என்பதால், ‘கோவணம்’ காப்பாற்றப்படும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

வேறொரு கோணத்தில், ஆளும் வர்க்கத்தின் இந்த அவல நிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறது தினமணியின் தலையங்கம். “ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் கைவிடும் நிலையில், மக்களின் பிரச்சினைக்காகக் குரலெழுப்ப ஒரு மாற்றுக் கட்சியும் இல்லாமல் போனால், அந்த வெற்றிடத்தை நிரப்ப மாவோயிஸ்டுகள் போன்ற தீவிரவாதிகள் நுழைந்து விடுவார்கள் என்கிற ஆபத்து இந்தியாவின் எல்லா மாநிலங்களிலுமே இருக்கிறது”

ஆபத்துதான். என்ன செய்வது? பாரதிய ஜனதாவும் காங்கிரசும் பன்னாட்டு நிறுவனங்களை விரட்டினால், மாவோயிஸ்டுகளிடமிருந்து பழங்குடிகளை மீட்டுவிடலாம். முதலாளி வர்க்கம் சொத்துடைமையைத் துறந்து விட்டால் கம்யூனிசத்தையே ஒழித்துவிடலாம். நடப்பதில்லையே!

‘குறைகுடம்’ எனும் தன்னுடைய வலைப்பூவில் செப்டம்பர், 4, 2008 அன்று ஒரு கவிதை எழுதியிருக்கிறார் அலெக்ஸ் பால் மேனன்.

எம் அடிமைத்தனம் பெரிது ,
எமைப் பிணைத்திருக்கும் விலங்குகளோ வலிது,
பின்
உடைத்தெடுக்கும் அடிகள் மட்டும் ,
எப்படி
மெதுவாய்?
வலிக்காமல் ?

_________________________________________
– புதிய ஜனநாயகம், மே-2012
__________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

_______________________________________

_______________________________________

_______________________________________

புதிய ஜனநாயகம் – மே 2012 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

7

புதிய-ஜனநாயகம்-மே-2012

புதிய ஜனநாயகம் மே 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

1. அணு உலையை எதிர்ப்பது தேசத்துரோகமா?
நெல்லை, இடிந்தகரை, கூட்டப்புளியில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் கூட்டங்கள்.


2. வாடகைதாரர்களின் விவரம் திரட்டும் சென்னை போலீசின் உத்தரவுக்கு நீதிமன்றத் தடை!

குடிமக்களை கிரிமினல்களாக நடத்தும் பாசிசத்தை முறியடிப்போம்!


3. மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனன் கடத்தல் தவறா?

அலக்ஸ் பால் மேனனின் ‘சேவை மனப்பான்மை’, அறம் கொன்று அம்மணமாய் நிற்கும் ஆளும்வர்க்கத்தின் மானத்தை மறைக்கக் கிடைத்த கோவணமாகும்.


4. கழிப்பறைக் காகிதமானது சட்டத்தின் ஆட்சி!

காட்டுவேட்டை நடக்கும் சத்தீஸ்கரில் போலீசு சொன்னதுதான் சட்டம் என்ற கேடான நிலைமை உருவாகிவிட்டது.


5. ஜெயாவின் நிர்வாகத் திறன்: கலைகிறது பார்ப்பன பம்மாத்து!

அடாவடி, திமிர்த்தனம்தான் ஜெயாவின் துணிச்சல்; நீதித்துறையால் முகத்தில் கரிபூசப்பட்டதுதான் அவரது நிர்வாகத் திறமை.

6. ”மின்சாரம் தனியார்மயமானதே தமிழகம் இருள்மயமானதற்குக் காரணம்!”
தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் தொடர்பிரச்சார இயக்கம்.


7. கூடங்குளம் போராட்டம்: அனுபவங்களும் படிப்பினைகளும்.


8. ”தனியார்மயக் கொள்ளையைத் தடுக்க, மறுகாலனியாக்கத்தை மாய்க்க, நக்சல்பாரியே ஒரே மாற்று!”

புரட்சிகர அமைப்புகளின் மே தினச் சூளுரை.


9. சி. பி. எம். மாநாடு: வெங்காயம் என்பதா? வெண்டைக்காய் என்பதா?

வழவழ கொழகொழ வியாக்கியானங்களை அளித்து, தனது சந்தர்ப்பவாதத்தையும் பிழைப்புவாதத்தையும் மூடிமறைத்துவிட முயல்கிறது, சி.பி.எம்.


10. வறுமைக்கோடு வரையறை: ஏழைகளை ஒழித்துக்கட்ட ஓர் எளிய வழி!

மைய அரசு நிர்ணயித்துள்ள வறுமைக்கோடு வரையறை, ஆட்சியாளர்களின் வக்கிர புத்தியைத்தான் காட்டுகிறது.


11. தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம்: இன்னுமொரு அரசு பயங்கரவாத அமைப்பு!

தனியார்மய – தாராளமயத்துக்கு எதிராகப் போராடுபவர்களை, எவ்விதத் தடையுமின்றி ஒடுக்கும் அதிகாரத்தோடு இம்மையம் உருவாக்கப்பட்டுள்ளது.


12. பதனி டோலா படுகொலை தீர்ப்பு: நீதிமன்றத்தின் நாட்டாமைத்தனம்!

பீகாரில் நடப்பது ஆதிக்க சாதி நிலப்பிரபுக்களின் விசுவாச ஆட்சிதான் என்பதை இத்தீர்ப்பு நாடெங்கும் புரிய வைத்திருக்கிறது.


13. ஐ.நா. தீர்மானத்துக்குப் பிந்தைய இலங்கை- இந்தியாவின் புதிய நாடகம்


14. கொட்டடிக் கொலைகள்: கேட்பாரற்ற போலீசு ராஜ்ஜியம்!

புதிய ஜனநாயகம் மே 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 2 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து சேவ் லிங்க் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – SAVE TARGET AS or SAVE LINK AS)

__________________________________

வினவுடன் இணையுங்கள்

பிட் அடித்து 100% ரிசல்ட்! தனியார் பள்ளிகள் சாதனை!!

30

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்ற கதையாக, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய மாணவர்களுக்கு ‘பிட்’சப்ளை செய்த திருவண்ணாமலை மவுண்ட் செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேசன் பள்ளி, கையும் களவுமாகச் சிக்கியிருக்கிறது. கைகளில் ‘பிட்’டு காகிதமும், சட்டைப்பையில் ‘காந்தி’காகிதம் சகிதமாக பிடிபட்டிருக்கின்றனர், ஆசிரியர்கள்.

“….பிட்டுக்காக வாத்தியார்கள் பிடிபட்டு சஸ்பெண்ட் ஆனதை இப்பத்தான் கேள்விப்படுகிறோம். கலி முத்திப் போச்சு” என இச்சம்பவம் குறித்து தமிழக மக்கள் பேசிக்கொள்வதாகக் குறிப்பிடுகிறது, ஏப்.26 தேதியிட்ட குமுதம் ரிப்போர்ட்டர் இதழ். மேலும், தமிழகத்திற்கு இது ஏதோ  புதிய விசயமென்றும்; விதி விலக்காக, மதிப்பெண்ணுக்கு ஆசைப்பட்டு அப்பள்ளி  முறைகேட்டில் ஈடுபட்டு விட்டதாகவும்; மற்றபடி பிற தனியார் பள்ளிகளிலெல்லாம் ‘கண்ணியம், நேர்மை’ தவறாது பொதுத்தேர்வை எதிர்கொள்ளவது போலவும் சித்தரித்தன.

ஊடகங்கள் முன்வைப்பதைப் போல, இவை முற்றிலும் புதிய விசயமா என்ன? தினசரிகளுக்கும், செய்தித் தொலைக்காட்சிகளுக்கும் வேண்டுமானால்  இவை புதிய செய்தியாக இருக்கலாம். மற்றபடி, தனியார் பள்ளிகள் அனைத்திலும் விதிவிலக்கின்றி நீக்கமறத் தொடர்ந்து நடைபெற்று வரும் முறைகேடுகளில் ‘ஒன்று’தான் இச்சம்பவம்.  குமுதம் ரிப்போர்ட்டர் இதழ் குறிப்பிடுவதைப் போல இந்தக் ‘கலி’திடீரென நேற்று முற்றியதல்ல,  தனியார் பள்ளிகளின் தொடக்கமே ‘கலி’முற்றியதன் அறிகுறிதான்.

அதிக மதிப்பெண்ணிற்கெல்லாம் ஆசைப்படாமல், தேர்ச்சி பெற்றால் போதும் என்பதற்காக ஒரு சாமான்ய மாணவன்  ‘பிட்’ஐப் பயன்படுத்தினால் அது  தண்டனைக்குரிய குற்றம். இதே முறைகேட்டை தனியார் பள்ளிகள் பின்பற்றினால், மாநில அளவில் முதல் மூன்று இடங்கள், பாராட்டுகள், பரிசுகள்.  மாநில அளவில் முன்னணி இடங்களைக் கைப்பற்றும் தனியார் பள்ளிகளின் ’வெற்றி’ யின் சூட்சுமம் இதுதான்.

“தனியார் பள்ளிகளில் பொதுத்தேர்வுகளின் பொழுது, பாடப் புத்தகத்தை வைத்து எழுதுவது, ஆசிரியரே விடையைச் சொல்லித் தருவது, சங்கேத வார்த்தைகள் மற்றும் நடவடிக்கைகள் வாயிலாக மாணவனுக்கு விடையைத் தெரிவிப்பது, விடைத்தாளை மாற்றுவது, விடைத்தாளைத் துரத்துவது (சேசிங்) என்பதெல்லாம் சர்வ சாதாரணம். இது போன்ற தனியார் பள்ளியில் படித்து ஒரு மாணவன் மாநில அளவில் முதல் இடத்தைக் கூட எட்டியிருக்கலாம், அவன் ‘சாதித்த வெற்றியை’ நாம் புகழ்ந்து பேசும்பொழுது, அவன் மனம் குறுகுறுப்பது அவனுக்கு மட்டுமே தெரியும் ”

என்கிறார், இத்தகைய தனியார் மதிப்பெண் தொழிற்சாலை ஒன்றில் படித்து பொதுத்தேர்வை எதிர்கொண்டிருக்கும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் பிருத்வி.

அகப்படாத வரையில் எவனும் உத்தமன்தான் என்பதைப் போல, தனியார் பள்ளிகளின் இத்தகைய முறைகேடுகள், தமிழகம் இதுவரை ‘அறியாத’ செய்தியாக வேண்டுமானால் இருந்திருக்கலாம். ஏதோ ‘கெட்ட நேரம்’, திருவண்ணாமலையிலுள்ள மவுண்ட் செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேசன் பள்ளி அகப்பட்டு விட்டது. அவ்வளவுதான் வித்தியாசம்.

எனவே, இது ஒரு தற்செயல் நிகழ்வாய் தேர்வறையில் நிகழ்ந்து விட்ட முறைகேடும் அல்ல; விதி விலக்கான சம்பவமுமல்ல; தனியார் பள்ளிகளின் விதியே இதுதான்! பானைச் சோற்றுக்கு திருவண்ணாமலை தனியார் பள்ளி ஒரு பதம்.  வினவின் வாசகர்களுக்காக மற்றொரு பள்ளியின் தகிடுதத்தத்தையும் பதம் பார்க்கத் தருகிறோம்.

கட்டணக்-கொள்ளை

திருவண்ணாமலை மவுண்ட் செயின்ட் ஜோசப் பள்ளியில் நடைபெற்ற முறைகேடு அம்பலமாவதற்கு இரு தினங்களுக்கு முன்பாக, தொலைபேசியில் தொடர்பு கொண்ட நண்பர் ஒருவர், நாமக்கல் அருகே காவேட்டிப்பட்டியிலுள்ள குறிஞ்சி மெட்ரிகுலேசன் பள்ளி என்ற ‘மதிப்பெண் தொழிற்சாலை’ யில் தற்போதைய பொதுத் தேர்வில் நடைபெறும் முறைகேடுகள் குறித்தும், பொதுவில் அங்கு மதிப்பெண்கள் தயாரிக்கப்படும் செயல்முறை குறித்தும் நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் பெருமை மிக்க பள்ளிகளில் ஒன்று இந்த குறிஞ்சி மெட்ரிக் பள்ளி. கண்டிப்புக்குப் பெயர் போனதாம். தினம் ஒரு தேர்வு, அனு தினமும் படிப்பு… கக்கூசுக்கு போகும் நேரம், தூங்கும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களிலெல்லாம் புத்தகமும் கையுமாய் படிப்பு குறித்தே மாணவர்களைச் சிந்திக்கப் பழக்கியிருக்கும் பள்ளி.  தவிர்க்கவியலாத காரணங்களினால், ஒரு நாள் பள்ளிக்குச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டு விட்டால் கூட, எப்பேர்பட்ட பணக்காரனே ஆனாலும், அதிகாரம் பொருந்திய அரசியல்வாதியாய் ஆனாலும் பள்ளி முதல்வரின் தயவைக் கோர கால்கடுக்க காத்துக் கிடக்க வேண்டுமாம்.  அவ்வளவு கண்டிப்பு… அம்பூட்டு டிசிபிளின்…!

‘இப்படியாக’ப்பட்ட, இப்பள்ளியின் நிர்வாக இயக்குநர்களில் ஒருவர்தான் வி.டி. என்று சுருக்கமாக அழைக்கப்படும் வரதராசன். இவரது மகன் கார்த்திக் விஜய் இதே பள்ளியில் பத்தாம் வகுப்புப் பயிலும் மாணவன்.  தனியார் பள்ளி என்ற போதிலும், பள்ளிக்கல்வித் துறையால் அங்கீகரிக்கப்பட்ட பொதுத்தேர்வு நடைபெறும் மையம் என்பதால், அப்பள்ளி மாணவர்கள் தங்களது பள்ளியிலேயே பொதுத்தேர்வை எழுதி வருகின்றனர்.

பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள், தேர்வு மைய தலைமைக் கண்காணிப்பாளர், மற்றும் தேர்வு மைய கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் என அனைவரையும் ‘ஏதோ’ ஒரு வகையில் சரிக்கட்டிய குறிஞ்சி பள்ளி நிர்வாகம், தமது பள்ளியின் நிர்வாக இயக்குநர்களில் ஒருவரான வி.டி.யின் செல்ல மகனுக்கு மட்டும் சிறப்புச் சலுகைகளைப் பெற்றுத் தந்துள்ளது.

இதன்படி, சக மாணவர்களோடு தேர்வறையில் தேர்வை எதிர்கொண்ட கார்த்திக் விஜய் தேர்வு நேரம் முடிந்ததும் தனது விடைத்தாளை தேர்வு மைய கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்காமல், தேர்வு அறையையொட்டி நிறுத்தப்பட்டிருக்கும் பள்ளி வாகனம் ஒன்றின் உள்ளே நுழைகிறார். அங்கே இவருக்காகக் காத்திருக்கும் அந்தந்த பாடப்பிரிவிற்குரிய ஆசிரியர்கள் புத்தகமும் கையுமாக இருந்து, தேர்வு நேரத்தில் அந்த மாணவன் எழுதாமல் விட்ட கேள்விகளுக்கான பதில்களை எழுத உதவி புரிகின்றனர்.

இச்சம்பவத்தை நேரில் கண்ட மாணவர்கள், தேர்வு நேரம் முடிந்தும் விடைத்தாளோடு பள்ளி வாகனத்திற்குள் நுழையும் மர்மம் அறிந்து, விசிலடித்தும், அவ்வாகனத்தின் சன்னல் வழியே எட்டிப்பார்த்தும் கெக்கலித்துக் கூச்சலிட்டிருக்கின்றனர். இதன் காரணமாக அப்பள்ளியைச் சேர்ந்த குண்டர்களால் விரட்டியடிக்கப்பட்ட அம்மாணவர்கள், இச்சம்பவத்தைத் தமது பெற்றோர்களிடம் கூறிப் புலம்பியிருக்கின்றனர்.

இவ்வாறு தனது மகன் மூலம் இக்கொடுமையை அறிந்த நண்பர், தமிழ்ப் பாடத்திற்கான தேர்வு முடிந்தவுடனே, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது குறித்து புகார் அளிக்கிறார். நடவடிக்கை எதுவுமில்லை; ஆங்கிலத் தேர்வின் பொழுதும் முறைகேடு தொடர்கிறது. மீண்டும் மாவட்ட முதன்மை அதிகாரியைத் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்கக் கோருகிறார். முதன்மைக் கல்வி அலுவலரோ, “யாருய்யா நீ? அப்பள்ளி மாணவனின் பெற்றோரா? நீ சொல்றத நான் எப்படி நம்புறது? ஆதாரம் இருக்கா? ஃபோட்டோ வச்சிருக்கியா? செல்ஃபோன்ல வீடியோ எடுத்திருக்கியா?” எனக் கேள்விக் கணைகளாய் வீசுகிறார். ”என் மகனே சாட்சி” என்கிறார் நண்பர். “சார்! நாங்க என்ன பண்ணனும்னு சொல்றீங்க? தேர்வைக் கண்காணிக்க கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்; கூடுதலாகப் பறக்கும் படையை அனுப்பி வைத்தும் கண்காணித்து வருகிறோம். இதற்கு மேல் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது” எனக் கூறி இணைப்பைத் துண்டித்து விடுகிறார்.

இதன்பிறகும் எவ்விதச் சலனமும் இன்றி, கணிதத் தேர்விலும் அதே முறைகேடு தொடர்ந்திருக்கின்றது. இம்முறை மாவட்ட ஆட்சியரிடம் முறையிட முயற்சிக்கிறார் நண்பர். இவரது தொலைபேசி அழைப்பை ஏற்றுப் பதிலளிக்கும் மாவட்ட ஆட்சியரின் உதவியாளரோ, இவரது புகாரை செவிசாய்த்துக் கேட்கக்கூட அவகாசமின்றி, “அய்யா, ஆட்சியரின் தொலைபேசியில் இவ்வளவு நேரம் எல்லாம் பேசக் கூடாது. நீங்க சொன்ன விசயத்தைக் குறித்துக் கொண்டேன். ஆட்சியரின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறேன்”என்ற பதிலோடு, அவரும் இணைப்பைத் துண்டித்து விடுகிறார்.

இவ்வளவுக்குப் பிறகும் கூட, இச்சம்பவம் குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரோ மாவட்ட ஆட்சியரோ அப்பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி, உண்மை விபரத்தைக் கண்டறியவோ, மாணவர்களிடம் விசாரணை நடத்தவோ முயற்சிக்கவில்லை. அறிவியல் தேர்விலும் அதே போல அம்மாணவனுக்குச் சிறப்பு சலுகை தொடர்ந்திருக்கிறது. என்ன ஒரு வித்தியாசம், இம்முறை பள்ளியைச் சேர்ந்த குண்டர்களுக்குப் பதிலாக, நிர்வாக இயக்குநர்களே களத்தில் இறங்கி அம்மாணவனுக்குப் பாதுகாப்பாக பள்ளி வாகனத்தில் உடனிருந்திருக்கின்றனர். தேர்வை முடித்துச் செல்லும்  மாணவர்களை, பள்ளி வளாகத்தை விட்டு உடன் வெளியேறுமாறு விரட்டியிருக்கின்றனர்; மாணவர்கள் மீது எரிந்து விழுந்திருக்கின்றனர்.

இனி யாரிடம்தான் முறையிடுவது என்று தனக்குத்தானே புலம்பிக் கொண்ட அந்த நண்பர், மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டிடம் நேரில் சென்று புகார் அளிக்க முயற்சிக்கிறார்; அதுவும் சில காரணங்களால் முடியாமல் போய் விடுகிறது. எனவே, இறுதி முயற்சியாக முதல்வரின் தனிப்பிரிவிற்கும், பள்ளிக்கல்வித் துறையின் செயலருக்கும் மின்னஞ்சல் வழியே புகாரை அனுப்பி விட்டு இறுதித் தேர்விலாவது அம்முறைகேடு நிகழாது தடுக்கப்படாதா? என அரசின் நடவடிக்கைக்காகக் காத்திருந்தார், அந்த நண்பர். அதிரடி நடவடிக்கைகள் கிடக்கட்டும், அனுப்பிய மின்னஞ்சல் புகாருக்கு ஒற்றை வரி பதில் கூட இல்லை, இதுவரை.

தனியார் பள்ளிகளில் நடைபெறும் முறைகேடுகளை மட்டுமின்றி, அரசு மற்றும் அதிகார வர்க்கத்தின் கள்ளக்கூட்டையும் வெட்ட வெளிச்சமாக்கியிருக்கின்றது இச்சம்பவம். இதற்கு மேலும் வலுச்சேர்க்கும் விதமாக, திருவண்ணாமலை தனியார் பள்ளியின் முறைகேட்டைக் கையும் களவுமாகப் பிடித்த மாவட்ட ஆட்சியர் அன்சூல் மிஸ்ரா தமது அனுபவத்தை இவ்வாறு குறிப்பிடுகிறார்,

“…சில மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகத்தினரே பிட் தர்றாங்கங்கிறத உறுதி பண்ணினேன். அதுக்கப்புறம் இதில் கல்வித்துறையில இருக்கிற அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்குன்னு சொன்னதால நான் வருவாய்த்துறை மற்றும் காவல்துறையில இருக்கிற சிலரைத் தேர்வு செய்து தனியா டீம் ஒன்னு ரெடி பண்ணி ரெய்டுக்கு கிளம்பினோம்”. (நக்கீரன், ஏப். 21-24)

இதில் எது முறைகேடு? இந்த முறைகேட்டிற்கு யார் காரணம்? மாணவர்களுக்கு பிட் வழங்கிய தனியார் பள்ளிகளின் ‘கெட்ட நடத்தை’களும், கையூட்டுப் பெற்றுக்கொண்டு இவற்றைக் கண்டும் காணாமல் வேடிக்கை பார்க்கும் அரசு அதிகார வர்க்கத்தின் அணுகுமுறைகள் மட்டும்தான் முறைகேடா, என்ன?

“தனியார் பள்ளியே ஒரு முறைகேடு. ‘பசங்களுக்கு பிட் பேப்பர் கொடுத்தான், காப்பி அடிக்கிறத கண்டுக்காம விட்டான்’ என்பதெல்லாம் சர்வசாதாரணம். புறம்போக்கு நிலங்களை வளைத்து, தனியார் பள்ளிக்கான கட்டிடம் கட்டுவதிலிருந்தே தொடங்கி விடுகிறது முறைகேடு. வரி ஏய்ப்பு உள்ளிட்டு அரசின் சலுகைகளைப் பெறுவதற்காக கல்வி அறக்கட்டளையின் கீழ் பள்ளிகளை நடத்துவதும், அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தை விடப் பல மடங்கு வசூலிப்பதும், பள்ளிக்கூடம் என்று பெயர்ப்பலகையை வைத்துக்கொண்டு ‘என்னிடம்தான் எல்லாவற்றையும் வாங்க வேண்டும்’ என  மாணவர்களைக் கட்டாயப்படுத்தி, துணிக் கடைகளையும், செருப்புக் கடைகளையும், ஸ்டேஷனரீஸ் கடைகளையும் நடத்துவதும், ஸ்பெசல் கிளாஸ், ஸ்மார்ட் கிளாஸ் என பிலிம் காட்டி பெற்றோர்களிடம் கத்தியைக் காட்டாத குறையாகப் பணத்தை வழிப்பறி செய்வதுமாக நீள்கிறது இத்தனியார் கல்விக்கொள்ளையர்களின் சாம்ராஜ்யம்.

தரமானக் கல்வியை, சிறந்த விழுமியங்களைக் கற்றுத் தருகிறார்கள் என்பதெல்லாம் மோசடி. பணம் சம்பாதிப்பது ஒன்றே இவர்களது நோக்கம். ரியல் எஸ்டேட் பிசினஸ், நகைக்கடை முதலாளிகள்  தமது வியாபாரத் தந்திரத்திற்காக ஆடித் தள்ளுபடி, சிறப்புத் தள்ளுபடி என அறிவிப்பதை போல, இவர்கள் 100% வெற்றி, மாவட்ட, மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்றிருக்கிறோம், பெற்றுத் தருகிறோம் என அறிவிக்கின்றனர். இந்த ‘சாதனை’யை நிகழ்த்திக்காட்ட என்னவெல்லாம் செய்ய முடியுமோ? அவற்றையெல்லாம் செய்யத் துணிகின்றனர்.

பெரும்பாலும் உண்டு உறைவிடப் பள்ளிகளாகவே இயங்கும் இத்தகைய மதிப்பெண் தொழிற்சாலைகள், அதிகாலையே இயங்கத் தொடங்கி நள்ளிரவு வரையில் படி படி என மாணவனைச் சித்திரவதை செய்கின்றன.  பத்தாம் வகுப்பிற்கான பாடங்களை 9ஆம் வகுப்பிலேயேயும், 12ஆம் வகுப்பிற்கான பாடங்களை 11 ஆம் வகுப்பிலேயேயும் நடத்தி முடித்து விடுகின்றனர்.  அதிகபட்ச கட் ஆஃப் மார்க் ஐப் பெறுவதற்காக எதையும் செய்யலாம் என்ற மனநிலையை மாணவர்களிடம் உருவாக்கி விடுகின்றனர். இரு ஆண்டுகளாக ஒரே பாடத்தைப் படிப்பதும், தினம் ஒரு தேர்வை எதிர்கொள்வதும், வார விடுமுறை நாட்கள் மட்டுமின்றி பருவ மற்றும் கோடை விடுமுறைகளில் கூட தம் பெற்றோர்களுடனும் உறவினர்களுடனும் உடனிருந்து மகிழும் வாய்ப்புகளை மறுத்தும், தேர்வுக் காலங்களில் போதுமான கால அளவு நித்திரையை மறுத்தும் என  பல வடிவங்களிலும்  கறிக்கோழி வளர்ப்பைப் போல ‘அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களை’உற்பத்தி செய்கின்றன இப்பள்ளிகள்;  ஒரு கணமும் சமூகத்தைப் பற்றி சிந்திக்கத் தெரியாத மனித உணர்ச்சி ஏதுமற்ற ரோபோ எந்திரங்களாக, அம்மாணவர்களை உருமாற்றித் தள்ளுகின்றன.

ஒன்பது மற்றும் 11 ஆம் வகுப்பிலேயே மாணவர்களை வடிகட்டி விடுவது; பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற மாட்டான் எனச் சந்தேகிக்கும் மாணவனை தனித்தேர்வராக (பிரைவேட்டாக) தேர்வெழுத வைப்பதன் மூலமும் இந்த 100 சத வெற்றியை உத்திரவாதப்படுத்துகின்றன. இவையெல்லாம் தனியார் பள்ளிகள் அனைத்திலும் பின்பற்றப்படுகின்ற பொது விதிகள்.

இவற்றுக்கு அப்பால், இத்தனியார் பள்ளிகள் தனது ‘தகுதி’க்கும் ‘வசதி, வாய்ப்பு’ களுக்கும் ஏற்ப பாடப்புத்தகத்தை வைத்து எழுத அனுமதிப்பது, ஆசிரியரின் மூலம் விடையைச் சொல்லித் தருவது, சங்கேத வார்த்தைகள் மற்றும் நடவடிக்கைகள் வாயிலாக மாணவனுக்கு விடையைத் தெரிவிப்பது, விடைத்தாளை மாற்றுவது, விடைத்தாளைத் துரத்துவது (சேசிங்) போன்ற ‘துணிச்சல் மிக்க’ காரியங்களில் ஈடுபடுகின்றன. இந்த ரிஸ்க்குக்குதான் காசு.

இவற்றின் மூலம்தான் தனியார் பள்ளிகள் நூறு சத தேர்ச்சியையும்; முன்னணி இடங்களையும் கைப்பற்றுகின்றன. இத்தகைய தகுதியையும், தேர்ச்சியையும் பெறுவதன் மூலம் இத்தனியார் பள்ளிகளின் கட்டாய வசூலும் இலட்சங்களை எட்டுகின்றன. இத்தகைய ரிஸ்க்குகளையெல்லாம் அரசு அமைக்கும் கல்விக்கட்டண நிர்ணயிப்பிற்கான கமிட்டிகள் ‘கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை’என்பதே இவர்களது பெருங்குறை. எனவே அரசு நிர்ணயிக்கும் கட்டணமெல்லாம் கட்டுப்படியாகாது என மூர்க்கமாக எதிர்க்கின்றனர். பள்ளிகளை இழுத்து மூடி விடுவோம் என அரசையே மிரட்டிப் பார்க்கின்றனர். இக்கல்விக் கொள்ளையர்கள், தமது கொள்ளையை எவ்விதத் தடங்களுமின்றி நடத்தி முடிக்க தங்களுக்குள் ஒரு வலைப்பின்னலை ஏற்படுத்திக்கொண்டு, எதையும் செய்யத் துணிந்த ஒரு மாஃபியா கூட்டமாகவே செயல்படுகின்றனர்.”

என்கிறார், இத்தனியார் பள்ளிகளின் கொள்ளைக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வரும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சி.இராஜூ.

“மேற்கூரைகளின்றி, இருக்கை வசதிகளின்றி, வகுப்பறைகளின்றி வெட்டவெளியிலும்; போதிய ஆசிரியர்களின்றி கல்வி கற்பதற்கான எவ்விதச் சூழலுமின்றி உழலுகின்றன அரசுப் பள்ளிகள். இப்பள்ளிகளில் பயின்று, நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தும் ‘ஏழை மாணவன்’என்பதனாலேயே மறுக்கப்படுகின்றன, மருத்துவம் பொறியியல் உள்ளிட்ட உயர்கல்விக்கான வாய்ப்புகள். இது முறைகேடில்லையா?

பல ஆயிரங்களில் தொடங்கி சில இலட்சங்கள் வரையில் பள்ளி நிர்வாகம் துண்டுச்சீட்டில் கிறுக்கித்தள்ளும் தொகையை ‘காணிக்கை’யாகச் செலுத்தி தன் பிள்ளையை எப்படியாவது இத்தகைய ‘புகழ்’பெற்ற பள்ளிகளில் சேர்த்து விடுவதைத் தன் வரலாற்றுக் கடமையெனக் கருதும் பெற்றோர்களது நினைப்பில் இல்லையா முறைகேடு? கல்விக் கட்டண வசூலில் செய்யும் அடாவடி தொடங்கி ஓராண்டுக்கு முன்னரே அனைத்துப் பாடங்களையும் நடத்தி முடித்து விடும் முறைகேடு வரையிலான தனியார் பள்ளிகளின் இத்தகைய முறைகேடுகள் அனைத்தையும் நன்கறிந்தும் தமது பிள்ளைகளின் ‘எதிர்காலத்திற்காக’இவற்றையெல்லாம் சகித்துக் கொள்கின்றனரே பெற்றோர்கள், இதற்குப் பெயர் என்ன?  இவற்றையெல்லாம் தரமான பள்ளிகளின் சில ‘தொந்திரவு’களாக மட்டும் தானே பார்க்கின்றனர்?   இங்கே எது முறைகேடு? எதுவரை முறைகேடு? இந்த முறைகேட்டைத் தீர்மானிக்கும் எல்லைக்கோடு எது?”

எனக் கேள்வி எழுப்புகிறார், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில அமைப்பாளர் தோழர் த.கணேசன்.

மேலும்,

“பெருமைமிக்க பள்ளிகளே இத்தகைய முறைகேடுகளைச் செய்யலாமா? நல்லொழுக்கத்தைப் போதிக்க வேண்டிய ஆசிரியர்கள் தரம் தாழ்ந்து போகலாமா? என அறம் சார்ந்த பிரச்சினையாக இதனை அணுகுவதே மோசடி. “நாயே, நாயைத் தின்னும் உலகம் இது. இதில் அறநெறிகளுக்கு இடமில்லை, அப்பட்டமான முதலாளித்துவ இலாபவெறியைத் தவிர!” என்பதே தனியார்மயத்தின் அடிநாதமாக இருக்கையில், இத்தனியார்மயத்தை மனமுவந்து ஏற்றுக்கொண்டு, இதுவொன்றுதான் தமது வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வல்லது என்று திடமாக நம்பும் இவர்கள், இதற்குள் ஒரு நீதி, நேர்மையை எதிர்பார்ப்பது மோசடியன்றி, வேறென்ன? ”

என்கிறார், அவர்.

அவர் சொல்வது இருக்கட்டும், நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

_______________________________________________

இளங்கதிர்.

________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

_____________________________

_____________________________

_____________________________

_____________________________

The Whistleblower (2010) திரை விமரிசனம் : அமெரிக்க, ஐ.நா அமைதிப்படையின் அட்டூழியங்கள்!

3
விசில்புளோயர்-2
அமைப்பு முறைக்குள் நின்று இளம் பெண்களை காப்பாற்ற முடியாத கேதரின்

லகம் முழுவதிலும் போர் நடக்கும் நாடுகளுக்கு ஐ.நா.வின் அமைதிப்படை செல்கின்றதே, அதன் வேலை என்ன? ஏதோ ஒரு நாட்டில் அமைதியை ஏற்படுத்த அவர்கள் ஏன் சிரமப்பட வேண்டும்? அப்படி ஒரு ஆபத்தான பணியை அவர்கள் ஏன் விரும்பி ஏற்றுக் கொள்கிறார்கள்?

இந்தக் கேள்விகளுக்குச் சரியான, அதே நேரம் அதிர்ச்சியான பதிலைச் சொல்லும் திரைப்படம் தான்Whistle Blower . ஐ.நா. அமைதிப்படையின் கோர முகத்தை உறைக்கக் கூறும் இந்த திரைப்படம் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது.

ஐ.நா.வின் அமைதிப்படைகள் தேவ தூதர்கள் அல்ல, வெள்ளைச் சமாதானப் புறாக்கள் அல்ல. பணம், அதிகாரம், கேளிக்கை இவற்றை மையமாகக் கொண்டு ஒன்றிணையும் அதிகார முகங்களின் சாத்தான் படை. இந்தப் படையின் அட்டூழியத்தை எதிர்த்துப் போராடிய ஒரு  சராசரி அமெரிக்கப் பெண் காவல் அதிகாரி காதரின் போல்கோவாக்கின் துணிச்சலான பயணம்  தான் இந்தத் திரைப்படம்.

டிரைலர்

கதை:

விசில்புளோயர்-1அமெரிக்காவில் ஒரு சாதாரண பெண் காவல் அதிகாரியான கேதரின் தன் மகளுடன் குறைந்தபட்ச வசதிகளோடு வாழ முனைகிறார். அதற்கு ஒன்று, பணி இட மாற்றம் வேண்டும், இல்லை வேலையை விட்டு விலக நிறைய பணம் வேண்டும். போர் நடந்து முடிந்திருக்கும் போஸ்னியாவில் ஐ.நா. அமைதிப்படையில் பணி புரிய டெமக்ரா (டைன்கார்ப்)  என்ற  தனியார் பன்னாட்டு நிறுவனம் ஆட்களை எடுக்கின்றது. அந்த விளம்பரத்தைப் பார்த்த கேதரின், டெமக்ரா  ஊழியராக போஸ்னியாவுக்குப் போகும் அமைதிப்படையில் செல்கிறார்.

அந்தப் போர்ச் சூழலில் உயிரைப் பணயம் வைத்து அமைதிக்காகப் பணியாற்ற வந்திருக்கும் டெமக்ரா நிறுவனத்தில் உள்ள தன் சகாக்களை எண்ணிப் பெருமையடைகிறார். அவர்கள் அனைவரும் அமெரிக்கா, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள்.  போஸ்னியாவில் அடிப்படைச் சட்டங்கள் கூட ஒழுங்காகக் கடைபிடிக்கப்படாத நிலையில் அங்கு பெண்களின் உரிமையை காக்கவும் போராடுகிறார். இதனால் அவருக்குப் பதவி உயர்வு கிடைக்கிறது.

ஒரு நாள் மது விடுதி ஒன்றை போஸ்னிய போலிசார் சோதனையிடுகிறார்கள். அங்கிருக்கும் பெண்களைக் காப்பகத்துக்கு அழைத்துச் செல்வதாகச் சொல்கிறார்கள். அந்த விடுதியைப் பார்வையிடும் கேதரினுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. அந்த பெண்கள் 15 வயது முதல் 20 வயதுக்குட்பட்டவர்கள், ஏழை நாடுகளைச் சேர்ந்தவர்கள். ஐரோப்பாவில் ஏதாவது வேலைக்குச் செல்லலாம் என்ற ஆசை வார்த்தைக்கு மயங்கி நாடு கடத்தப்பட்டவர்கள். சட்டத்திற்குப் புறம்பாக, ஐ.நா. அமைதிப்படையினராலேயே கடத்தி வரப்பட்டு, பல அதிகாரிகளின் வக்கிர காம வெறிக்குப் பலியானவர்கள்.

மறு நாள் அந்தப் பெண்கள் அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் காப்பகத்திற்கு செல்கிறார் கேதரின். ஆனால், அங்கு யாரும் புதிதாக வரவில்லை என்று தெரிகின்றது. அவர் பணி புரியும் நிறுவனத்தின்  கணிப்பொறியிலும் இப்படி ஒரு சோதனை நடந்ததற்கான தகவல்கள் ஏதும் இல்லை. பெண்கள் மறுவாழ்வுக் காப்பகத்தின் மருத்துவர் உதவியுடன் இன்னும் பல அதிர்ச்சியான தகவல்களைத் தெரிந்து கொள்கிறார்.

அந்த மது விடுதியின் உரிமையாளர் ஒழுங்காக போலிசுக்கும், டெமக்ரா அமைதிப் படையினருக்கும் பணம் கொடுத்துவிட்டதால் மீண்டும் அந்தப் பெண்கள் மது விடுதியிலேயே விடப்படுகிறார்கள்.

அந்த விடுயில் இருக்கும் இரண்டு பெண்களைச் சாட்சியமாக்கி டெமக்ரா ஊழியர்களையும், போஸ்னிய போலிசையும் தண்டிக்கலாம் என முயற்சி செய்கிறார். ஒரு கட்டத்தில் அவருக்கு ஒரு உண்மை புலப்படுகின்றது. ’இது ஒன்றும் யாருக்கும் தெரியாத ரகசியமில்லை!’ ஐ.நா. அதிகாரிகள் முதல், அரசு அதிகாரிகள், டெமக்ரா நிறுவன மேலாளர்கள் என சகலருக்கும் பெண் கடத்தல் விவகாரம் தெரிந்த ஒன்றுதான் என்ற உண்மைதான் அது.

இதை வெளியே சொன்னால் டெமக்ரா நிறுவனம் ஐ.நா. உடன் போட்டிருக்கும் பல மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் ரத்தாகும். அதனால் இதை மூடி மறைக்க  முயற்சிக்கிறார்கள் ஐ.நா. அதிகாரிகள். கேதரின் போராடுகிறார். கேதரினை மிரட்டுகிறார்கள், பலனில்லை. கடைசியில் அவரை வேலையை விட்டே துரத்துகிறார்கள். கேதரினும் இறுதியில் பல போராட்டங்களுக்குப் பின் அந்த ஆவணங்களை வெளி உலகிற்கு எடுத்துச் சென்று அம்பலப்படுத்துகிறார்.

கேதரின் பிபிசி தொலைக்காட்சியில் இதை அம்பலப்படுத்தும் காட்சியைத் தொடர்ந்து, அதே நிறுவனம் இப்பொழுது ஈராக் அமைதிப்படைக்கான பல மில்லியன் டாலர் ஒப்பந்தம் ஒன்றை ஐ.நா. உடனும், அமெரிக்க அரசுடனும் செய்திருக்கிறது என்ற உண்மைச்  செய்தியுடன் படம் முடிவடைகின்றது.

அரசை நம்பும் சாதாரணமானவர்கள்:

கேதரின் ஒரு சாதாரண அமெரிக்கப் பெண் காவலதிகாரி. அவருக்கு ஒரே மகள். அவர் தனது வேலையை மிகவும் நேசிக்கிறார். அரசை நம்பும் ஒரு சாதாரண பிரஜை அவர். அதிகப் பணம் ஈட்ட அவர் டெமக்ராவின் ஊழியராக போஸ்னிய செல்லும் போது, அங்கு நிலவும் அசாதாரண போர்ச் சூழல் நடுவே அமைதியை நிலை நாட்ட வந்திருக்கும் தன் சக அதிகாரிகளை ஆச்சரியத்துடன் பார்க்கிறார். நாட்டில் அமைதியை மீண்டும் நிலைநாட்ட தான் எவ்வளவு கடுமையாகவும், உண்மையுடனும் உழைக்க வேண்டும் என்று அவருக்கு நன்றாகவே தெரிகின்றது.

ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைமைகளில் தன்னுடன் வேலை செய்யும் சக அதிகாரிகளின் காமக் கொடூர வக்கிரங்களையும், அநியாயங்களையும் முதலில் காணும் போது உடைந்து போகிறார். தன்னைச் சுற்றி இருப்பவர்களில் யாரை நம்ப வேண்டும், யாரை எதிர்க்க வேண்டும் என்று அவருக்கு புரியவே இல்லை. அது அவரை பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது.

அவருடைய நிறுவனத்தையே எதிர்க்க வேண்டிய சூழலில் அவர் நம்பும் ஒவ்வொருவரும் அவரை விட்டு விலகுகிறார்கள். ஒருவர் தவறு செய்கிறார் என அவரைப் பற்றிய புகாருடன் மேலதிகாரியைப் பார்க்க, அவர் இந்தப் புகாரை மழுப்ப முனைகிறார். இப்படிப் புகார் மேல் புகார், மழுப்பல் மேல் மழுப்பல் என நாட்கள் செல்லச் செல்ல, கேதரின் மெதுவாக அந்த அமைப்பின் வேரே தவறாக இருப்பதை தன் அனுபவங்களினூடே புரிந்து கொள்கிறார்.

’நான் ஒரு நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரியாவேன், நல்ல போலீசாக வந்து நாட்டைத் திருத்துவேன், நல்ல அரசியல்வாதியாவேன்’ என்று நிலவும் அமைப்பைப் புரிந்துக்கொள்ளாமல் பல இளைஞர்கள் அந்த அமைப்பினுள் சமரசவாதிகளாக செல்வதைப் பார்த்து இனி போராட நினைப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டியது: ’அமைப்பினுள் இருந்தே சரி செய்யலாம்’ என்ற வாதம் எவ்வளவு சொத்தையானது என்பதைத் தான். கேதரின் தன் அனுபவதில் ஓரிடத்தில் சொல்கிறார் “நான் இந்த அமைப்பினுள் இருந்தே இதை மாற்ற முடியும் என்று எண்ணியது எவ்வளவு பெரிய முட்டாள்தனமான செயல்” என்று.

விசில்புளோயர்-2
அமைப்பு முறைக்குள் நின்று இளம் பெண்களை காப்பாற்ற முடியாத கேதரின்

அமைதிப்படையும், ஐ.நா.வும்:

ஒரு காட்சியில் டெமக்ரா நிறுவனத்தின் தலைவர் சொல்கிறார், ”நான் என் ஊழியர்களுக்கு நன்னடத்தை விதிகளைப் போதிக்க முடியாது”. நன்னடத்தை விதிகளை அமைதிப்படை வீரர்களுக்குப் போதிக்க முடியாதாம். “பல நாள் குடும்பத்த விட்டு பிரிஞ்சிருக்கிற ராணுவ வீரன் போற எடத்துல பொண்ணுங்க மேல கைய வைக்க தான் செய்வான்” என்று பாசிச அரசாட்சியை ஆதரிப்பவர்கள் கூறுவதற்கு நிகரான வார்த்தைகள் இவை. ஆனால் சமகால சமுக சூழலில் இதில் அதிர்ச்சியடைய ஒன்றுமில்லை.

ஐ.நா. நிறுவனமயமாக்கப்பட்டு, ஏகாதிபத்திய நாடுகளுக்கு வாலாட்டுகிற ஒரு நிறுவனம். ஆரம்பித்த நாள் முதல் இந்த நாகரீக காலத்தில் ஐ.நா. எத்தனை போர்களை தடுத்திருக்கின்றது? ஏன் இப்பொழுது கூட அமெரிக்கா ஈராக் மீது ஆக்கிரமிப்புப் போர் நடத்தியதே ! ஐ.நா. என்ன செய்து விட்டது? ஈழத்தில் நடந்து கொண்டிருந்த யுத்தத்தின் சத்தம் ஐ.நா. காதில் விழவே இல்லையே!
ஆனால் எல்லாம் முடிந்தவுடன், இன்று ஈராக் மறுவாழ்விற்க்கும், ஈழத்தின் போர் குற்றங்களுக்கும் ஏதோ பிடில் வாசிக்கின்றது ஐ.நா. ’ஏகாதிபத்திய நாடுகளுக்கு ஆவணப்படுத்த வேண்டுமே’ என்று ஈழ யுத்தத்தை ஆவணப்படுத்தியது, அதற்கு மேல் பேச்சு மூச்சில்லை.

படத்தின் இறுதிக்காட்சியில் சொல்வது போல் இன்று டெமாக்ரா (டைன்கார்ப்)  நிறுவனம் ஈராக்கில் மறு வாழ்வு அமைக்க அமைதிப்படையை அனுப்பும் ஒப்பந்தத்தைப் பெற்றிருக்கின்றது. போஸ்னிய சம்பவம் வெளிவந்து, உலகமே காறித் துப்பிய பின்னும் அந்த  நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டிருக்கிறது என்றால், ஈராக் பெண்களை யார் காப்பற்றுவது?

Human Trafficking: மனிதக் கடத்தல்!

படத்தின் ஆரம்பத்தில் உக்ரைனில் இருந்த இளம் பெண் ஒருவரை அவர் உறவினரே போஸ்னியாவுக்கு விபச்சாரம் செய்ய விற்றிருப்பார். படத்தில் அந்தப் பெண் தப்பிக்க முயல, பல இன்னல்களைச் சந்தித்து இறந்து விடுவார். அந்தப் பென்ணை மீட்க அவரின் தாய் இன்னொரு பக்கம் போராடிக் கொண்டிருப்பார்.

உலக அளவில்,இந்தியா உள்பட்ட ஏழை நாடுகளில் இருந்து பல பெண்கள் உலகளாவிலான இந்தப் பாலியல் சந்தையில் விற்கப்படுகிறார்கள். இந்தச் சந்தை மட்டும் பல பில்லியன் டாலர் பணம் புழங்கும் ஒரு தொழில். அப்பாவிகளான 15 வயதே ஆன சிறுமிகள் கூட பல பணக்காரர்களின் கேளிக்கைக்கும், வக்கிரத்திற்கும் பலியாகிறார்கள்.
எந்நேரமும் சுரண்டலில் ஈடுபடும் பணக்கார முத்லாளிகளின் கேளிக்கைக்கு பாலியல் சுற்றுலா என்று தாய்லாந்து, உக்ரைன், மலேசியா, ஏன் நம்ம ஊர் கோவா, மாமல்லபுரம் வரை பெண்களும், குழந்தைகளும் பலியாகிறார்கள். இதில் மிக முக்கிய விடயம் இவையெல்லாம் சட்டப்பூர்வமானவை.

தாய்லாந்திலோ, காமத்திபுராவிலோ, சோனகச்சியிலோ, ஜப்பான் கிஷாக்களோ எல்லாம் சட்டப்பூர்வமானவை. இராணுவம் முதல் இந்த மாதிரியான அமைதிப்படைகள் வரை அவர்களின் பாலியல் வேட்டை சாதாரண பெண்கள் மீது நீண்டாலும் அதை அரசு கண்டும் காணாமல் விட்டுவிடுகின்றது. இன்னொரு பக்கம், பல பெண்கள் இப்படி கடத்தி வரப்படுவதையும் ஐ.நா. அதிகாரிகள், அறிவாளிகள், அரசு மந்திரிகள் கண்டுகொள்வதில்லை. ஆனால் குளிரூட்டப்பட்ட அறையில் நன்கு தின்று, புளித்த ஏப்பத்துடன் குழந்தைகள் மீதான பாலியல் பிரச்சினைகளைப் பற்றியும், பெண்ணியம் பற்றியும் இவர்கள் மாநாடுகள் போடத் தயங்குவதில்லை.

விசில்புளோயர்-3
கேதரினாக நடித்த ரேச்சல் வெய்சுடன், கேதரின் போல்கோவாக் (வலது)

படம் சொல்லும் தீர்வில் உள்ள பிரச்சினை:

தன் வேலையைக் கூட இழக்கும் கேதரின் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் பெற வேண்டி அந்தத் தனியார் நிறுவனத்தையும், ஐ.நா.வையும் அம்பலப்படுத்த முனைகிறார். அந்த நிறுவனம் ஒரு இங்கிலாந்து நிறுவனம் என்பதால், இந்த ஆவணங்களை பிபிசியில் கொடுக்கிறார். பிபிசி க்கு பேட்டியளிக்கும் ஐ.நா. அதிகாரி, ’ஐநா அமைதிப்படை மீதான இந்தப் பெண் கடத்தல் விவகாரம் ஒரு பொய்’ என்கிறார், அவரின் பேட்டியைத் தொடர்ந்து கேதரினின் ஆதாரங்களுடனான பேட்டி ஒளிபரப்பப்பட்டு, அந்த நிறுவனம் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றது.

கேதரின் ஒரு சாதரண அதிகாரி, தன் நியாய தர்மத்திற்கு அவர் உண்மையாக இருக்கிறார். இந்த அவலத்தை வெளியிடுகிறார். இதுவே பாராட்டப்பட வேண்டியதுதான். அதே போல் இந்தப் படத்தை இயக்கிய லாரிஸாவும் தன் உண்மையான அக்கறையோடு இந்த சம்பவத்தைப் படமாக்கியதுடன், இறுதியில் அந்த நிறுவனம் இன்னும் இயங்குவதையும் சுட்டிக்காட்டுகிறார். அவர்கள் நேர்மையாக இருந்துள்ளார்கள்.

ஏனினும் இந்த மொத்த சம்பவமும் நமக்கு கூறுவதென்ன?, இதற்கு என்ன தீர்வு? சமீபத்தில் ஈழ யுத்தம் நடந்து முடிந்த பிறகு பல தமிழின ஆதரவாளார்களும், மனித உரிமைக் காவலர்களும் ஐ.நா.வின் அறிக்கையை ஒரு புரட்சிகர ஆயுதமாக முன் வைத்தனர். ஐ.நா.வைக் கொண்டு ராஜபக்ஷேவை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என வாதாடினார்கள். அவர்களும் சேர்த்து புரிந்துகொள்ள வேண்டியது இது தான்,

உலகம் முழுவதிலும் ஏகாதிபத்தியங்கள் உலகைச் சுரண்டி கொண்டிருக்கும் வரையில் அவர்களிடம் இந்த ஐநா என்ற நிறுவனம் கைப்பாவையாகத்தான் இருக்கும். படத்தில் வருவது போல் பிபிசி இல் வெளியிட்டு விட்டால் ஒன்றும் மாறி விடாது. ஈழக் காட்சிகள் எத்தனை தொலைக்காட்சிகளில் வந்தன!, விக்கிலீக்ஸ் எவ்வளவு ஆதாரங்களைத் தந்தது!

படத்திலேயே சொல்வது போல் அழுகிப் போன ஒரு அமைப்பினுள் இருந்தே தீர்வைத் தேடுவது முட்டாள்தனமானது மட்டுமல்ல, தீர்வே கிடைக்காது. ஏகாதிபத்திய நலன் சார்ந்த அதிகாரம் வர்க்கம், அரசு, ஊடகம், ராணுவம், பொருளாதாரம் போன்றவற்றை உலகம் முழுவதும் தமது ஆக்டோபஸ் பிடியில் வைத்திருக்கும் போது, அத்தகைய அமைப்பையே தூக்கியெறிய மக்களை அரசியல் படுத்துவது தான் இதற்கு ஒரே தீர்வு. அப்படி அரசியல் படுத்தினால் ஒழிய இந்த ஆவணங்கள் எந்த மதிப்பையும் பெறப் போவதில்லை.
கேதரின் செய்து முடிக்க வேன்டிய வேலை இன்னும் இருக்கிறது.

இறுதியாக முதலாளித்துவ சினிமாவின் கேளிக்கை, பொழுதுபோக்கு என்று மட்டும் சிக்கிக் கொள்ளாமல் தங்களால் இயன்ற அளவு முன் முயற்சியுடன் இந்தப் படத்தை எடுத்த படக் குழுவினருக்கு பாராட்டுக்கள்.

_____________________________________________

–  புதிய கலாச்சாரம், மார்ச் – 2012

___________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

உனக்கும் சேர்த்து தான் மே நாள்!

32

தொழிலாளி என்றால்
வேறு யாரோ போல் நினைக்கிறாய்!

நடை, உடை, பாவனை
நவீன முகப்பூச்சு,
பன்னாட்டு குளிர்பானம் உதட்டில்
பாதிகிழிந்து தொங்கும் ஆங்கிலம் நாக்கில்.

ஒப்பனைகள் எதுவாயினும்
உன் வர்க்கம் பார்த்து
தொழிலாளர் விடுதலை பற்றி
ஒரு துண்டறிக்கை தரவந்தால்,

வெட்டிப்பேசி, விலகி நடந்து
ஏதோ  ஒரு முதலாளி போல்
நீ என்னமாய் நடிக்கிறாய்?

கையில் கணிணி
கனமான சம்பளம்
வார இறுதியில் கும்மாளம்
வசதியான சொகுசு கார்…
அதனால், அதனால் நீ என்ன
அம்பானி வகையறாவா?

அடுத்த வேலை என்னாகுமோ?
கிடைத்த வேலை நிரந்தரமோ?
என எப்போதும் பயத்தில்
ஏ.சி. அறையில் கூலியுழைப்பால்
ஜில்லிட்டுக்  கிடக்கும் உன் இதயத்தைக் கேள்!
சொல்லும்… நீயும் ஒரு தொழிலாளிதான்!

காதலுணர்வை
வெளிப்படுத்துவதை விட மேலானது
வர்க்க உணர்வை வெளிப்படுத்துவது!
அதை வெளிப்படுத்தி
வீதியில் போராடும் தொழிலாளரை
வேறு யாரோ போலவும்,
நீ வேறு வர்க்கம் போலவும்
செங்கொடி பார்த்து முகம் சுழிக்கும்
உன் செய்கையில் ஏதும் பொருளுள்ளதா?

எந்த விலையுயர்ந்த சென்ட் அடித்தாலும்…
எத்தனை உடைகள் மாற்றினாலும்…
எவ்வளவு கசந்தாலும்… இதுதான் உண்மை.

கூலிக்கு  உழைப்பை விற்று
காலத்தை நகர்த்தும் கண்மணியே…
நிச்சயம் நீயும் ஒரு தொழிலாளிதான்!

உணர்ச்சியற்ற தோல்
தொழுநோயின் அறிகுறி..
உணர்ச்சியுடன் போராடுதலே
தொழிலாளி வர்க்கத்தின் அறிகுறி.
இதில் எது நீ அறிவாயா?

உனக்கொன்று தெரியுமா!
உலகியலின் உயர்ந்த அறிவு
பாட்டாளி வர்க்க அறிவு,
மனித குலத்தின் உயரிய உணர்ச்சி
பாட்டாளி வர்க்க உணர்ச்சி.

இளைஞனே.. உணர்ந்திடு!
தருணத்தை இப்போது தவறவிடில்
வேறெப்போது பெறுவாய் வர்க்க உணர்வு.

• துரை. சண்முகம்
______________________________________________

– புதிய கலாச்சாரம், மே – 2012

______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

THE RED MARKET: மனித உடல் உறுப்புகளின் சந்தை!

6
Red Market

The Red Marketல்ல உடல் வளத்துடன் இருக்கும் நான் ஒரு கோடி ரூபாய்க்கு விலை போவேன் என்கிறார் “The Red Market”  புத்தகத்தின் ஆசிரியர் ஸ்கார்ட் கார்னி.  அவர் அமெரிக்கக் குடிமகனாக இருப்பதால் தன் உடல் பாகங்களுக்கான உண்மையான சந்தை விலையைச் சொல்கிறார் போலும். ஒருவேளை அவரே இந்தியா மாதிரியான ஏழை நாடுகளில் வாழ்ந்தால் இதில் 100ல் ஒரு பங்கு விலைக்குக் கூட அவரது உடல் பாகங்கள் விற்காது என்ற உண்மையை அவர் எழுதியுள்ள புத்தகமான “The Red Market”  ஐ படித்தால் எவராலும் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.

உலக அளவில் இன்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடக்குமளவு மருத்துவத் துறை முன்னேறி இருக்கின்றது. ஆனால் உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய மாற்று உறுப்புகள் வேண்டுமே? அது தான் இன்றைய விற்பனைப் பொருள். சந்தையில் பல பில்லியன்கள் இலாபம் தரும் நல்ல சரக்கு. உலகம் முழுவதும் மனித உறுப்புகளின் களவு, விற்பனை, மோசடி, குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் வாழும் ஏழை மக்களை ஏமாற்றி அவர்களுடைய உடல் பாகங்களைத் திருடும் இதயம் இல்லா பன்னாட்டு நிறுவன வியாபாரிகளைப் பற்றி விரிவாகப் பேசுகின்றது “”The Red Market”  .

மாற்று உறுப்புகளை யார் விற்பார்கள்? ஏழைகள் தான். ’அமெரிக்காவில் உள்ள ஒரு பணக்காரர் தன் பழுதடைந்த உறுப்புக்கு மாற்று வேண்டும் என்று விளம்பரம் செய்தால் அமெரிக்காவில் இருக்கும் ஒரு ஏழையிடம் இருந்தா அது கிடைத்து விடப் போகிறது? மிக எளிதாகவும், சட்டப்படியும் தெரியும் இந்த வியாபாரத்தின் “சிவப்புப் பக்கங்களை (இது உடல் உறுப்பு சார்ந்த ரத்தமும், தசையுமான கதை என்பதால் சிவப்புச் சந்தை என்று புத்தகத்திற்கு பெயரிடப்பட்டிருக்கிறது) தோலுரித்துக் காட்டுகிறார் அமெரிக்கப் பத்திரிகையாளாரான ஸ்கார்ட் கார்னி.

உலகம் முழுவதும் பல பணக்கார நாடுகளின் உடற் தேவைகளை அதாவது ரத்தம் முதல் எலும்பு, தசை, கிட்னி, கண், பெண்ணின் கரு முட்டை, தலைமுடி வரை தேவைப்படும் அனைத்தையும் ஈடு செய்வது மூன்றாம் உலக நாடுகளின் மக்கள் தான், குறிப்பாக இந்தியா. அதோடு இலவசச் சேவையாக பல பன்னாட்டு மருந்து கம்பெனிகளுக்கு சோதனை எலிகளாகவும் இருக்கிறார்கள் இந்திய மக்கள். ஏன்?

’தேவைப்படுபவர் வாங்குகிறார், இருப்பவர் விற்கிறார்’ என்ற சராசரி சந்தைப் பொருளாக நம் உடல் உறுப்புக்களைப் பார்க்க முடியாது. உயிருக்குக் கொடுக்கப்படும் அதே மதிப்பு உடல் உறுப்புகளுக்கும் கொடுக்கப்படுகின்றது. ஒவ்வொரு நாட்டின் காகிதச் சட்டமும் இந்த உடல் உறுப்பு தானத்தை மிக உன்னதமாகக் கருதி,  பாதுகாப்பாகவும், சட்டப்பூர்வமாகவும் தானம் செய்ய மக்களை அனுமதிக்கின்றது.

 

உடல் உறுப்புகளின் உலக விலைப்பட்டியல் மற்றும் அதை பெறும் வழிமுறை
உடல் உறுப்புகளின் உலக விலைப்பட்டியல் மற்றும் அதை பெறும் வழிமுறை

படத்தை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்
அல்லது ரைட் கிளிக் செய்து சேவ் செய்யவும்

ஆனால் ஸ்கார்ட் கார்னி இந்தப் புத்தகத்தினூடே  பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து, அந்தந்த  நாடுகளில் உடல் உறுப்பு சம்பந்தமான திருட்டு, விற்பனை, அதில் கொள்ளை இலாபம் பார்க்கும் ஏஜெண்டுகள், கண்டுகொள்ளாமல் விடும் அரசுகள் என சகல கருப்புப் பக்கங்களையும் போட்டு உடைக்கிறார்.

பணத்தின் முன் ஒரு ஏழையின் உடல் என்பது ரத்தமும் தசையுமான விற்பனைப் பண்டம். எப்படி? கொஞ்சம் இதயத்தைக் கடினப்படுத்திக் கொண்டு மேலே தொடருங்கள்.

நூலுக்கான டிரைலர்

எலும்புத் தொழிற்சாலை:

திருப்பதி
திருப்பதி பக்தர்களின் காணிக்கையான தலைமுடி. இவை அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் ஏற்றுமதியாகிறது

அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் மருத்துவம் பயிலத் தேவைப்படும் மனித எலும்பு மாதிரிகள் முழுக்கவும் இந்தியாவில் இருந்து அனுப்பப்படுகின்றன. இந்தியாவில் எலும்பு மாதிரிகள் ஏற்றுமதி செய்யும் நிறுவனம் அதை எப்படிச் செய்கின்றது?

முதலில் கம்பெனியில் இருக்கும் 4 தொழிலாளிகள் நோட்டம் விட்டு தங்கள் ஊரைச் சுற்றியுள்ள சுடுகாடுகளில் பிணங்கள் வருகிறதா எனத் தெரிந்து கொள்வார்கள். புதைக்கப்பட்ட பிணம் என்றால் அப்படியே அலேக், எரிக்கப்படும் பிணம் என்றால் சொந்தக்காரர்கள் திரும்பிப் பார்க்காமல் சென்ற பின், வெட்டியானிடம் பேசி வைத்துப் பாதி எரியும் போதே தூக்கி விடுவார்கள்.

தூக்கிய பிணத்திலிருந்து பதப்படுத்தி எலும்புகளை மட்டும் எடுப்பார்கள். அந்த பதப்படுத்தும் முறை கொடூரமாக இருக்கும். பின்பு எலும்புகளை சுத்தமாக பாலிஷ் செய்து பேக்கிங் செய்து விடுவார்கள். ஆன்மாவுக்கு சொர்க்கமோ நரகமோ, அடுத்த பிறவியோ, என்ன கருமமோ, யாருக்குத் தெரியும்? உயிர் கடவுளுக்கு, உடல் அமெரிக்கப் பல்கலைக்கழகத்திற்கு.

மேற்கு வங்க மாநிலத்தில் இருக்கும், புர்பஸ்தலி  எனும் ஊரில் உள்ள  “யங் ப்ரதர்ஸ் (Young Brothers)” என்ற  ஏற்றுமதி நிறுவனத்தை நடத்தும் முக்தி பிஸ்வாஸுக்கு குடும்பத் தொழில் இது தான். அந்த யங் ப்ரதர்ஸ் நிறுவனம் என்பது ஒரு எலும்புத் தொழிற்சாலை. 150 ஆண்டு காலப் பாரம்பரியம் உடையது. கொள்ளுத் தாத்தாவுக்குத் தாத்தா காலத்தில் இருந்து இப்பொழுது முக்தி பிஸ்வாஸின் மகன் வரை செய்யும் ஒரே குடும்பத் தொழில். நல்ல இலாபம். அவர்களின் கம்பெனியில் இருப்பு வைக்கப்பட்டுள்ள எலும்புகளின்  மதிப்பு மாத்திரம் 70,000 அமெரிக்க டாலர்கள்.

Red Marketஏன் அமெரிக்காவில் கிடைக்காத எலும்புகளா அல்லது அங்கு சாகாத மக்களா? என்று ஒரு கேள்வி எழும். நல்ல கேள்வி! முன்னர் அமெரிக்கா, இங்கிலாந்து முழுவதும் கூட பிணத்திருடிகள் (Grave Robbers) உண்டு.  அவர்கள் பிணத்தைத் திருடிப் போனபிறகு அதனை மீட்க பிணைப்பணம் கேட்பார்கள். இது போல் சார்லி சாப்ளினின் பிணத்தையும் திருடி, அதனை  மீட்ட கதையெல்லாம் கூட உண்டு. பின்பு அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் கடுமையான சட்டங்கள் வந்து விட்டன. அங்கு உடல் உறுப்பு சம்பந்தப்பட்ட வியாபாரம் என்றால் ’சட்டம் தன் கடமையைச் செய்யும்’!

அமெரிக்காவில் தான் இந்தச் சட்டம் கடுமையானது, அதே அமெரிக்க அரசு  இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் இருந்து வரும் மனித உறுப்புகளைக்  கண்டுகொள்வதில்லை.  ஒரு பக்கம், ’ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் செய்யும் தொண்டு’ என்று சால்ஜாப்பு. இன்னொரு பக்கம், பணத்தின் மூலம்  சட்டத்தை வளைத்து விடுவது. இந்த எலும்புத் தொழிற்சாலைகள் நேர்த்தியான கார்ப்பரேட்டுகளாக இயங்குகின்றன.

வாடகைத்தாய்கள்
குஜராத்தில் ஒரு வாடகைத்தாய் நிலையம். ஒன்பது மாதங்களும் இவர்களை கைதி போல பாதுகாக்கின்றனர். வெளிநாட்டினர் தரும் 14,000 டாலர்களில் இவர்களுக்கு 4000 டாலர் வருமானம் கிடைக்கிறது

மூன்றாம் உலக நாடுகள், குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளில் இருக்கும் இந்த உடல் உறுப்புச் சந்தையான சிவப்புச் சந்தை பல பில்லியன் டாலர்கள் புழங்குகின்ற ஒரு துறை. சட்டப்படி இதைச் செய்தால் அதிக செலவு பிடிக்கும். அப்படியே சட்டத்துக்குப் புறம்பாகச் செய்தால் நல்ல கமிஷன் கிடைக்கும். கிட்னி  சந்தையைப் பார்ப்போம், அப்பொழுது புரியும்.

கிட்னிவாக்கம்:

கிட்னிவாக்கம்
ஓராண்டுக்கு முன்னர் 1000 டாலர்கள் பெற்று கிட்னியை விற்ற கலா  இன்னமும் சரிவர வேலை செய்யவியலாமல் தவிக்கிறார். கிட்னியின் சந்தை விலை சுமார் 15,000 டாலர் முதல் 250,000 டாலர் வரை

சென்னை மணலிக்கு அருகில் இருக்கும், சுனாமியில் அடிபட்ட ஒரு  குப்பத்தின் பெயர் கிட்னிவாக்கம். அங்கு கிட்னி விற்காதவர்கள் பிறந்த குழந்தைகள் மாத்திரம் தான்.

சுனாமி நகரில் வாழும் மக்கள் கடற்கரையோரம் வாழ்ந்து, சுனாமியால் வாழ்க்கையை இழந்து, அரசால் மறு-குடியமர்த்தப்பட்டவர்கள். இவர்களைப் பார்த்து புகைப்படம்  எடுத்துக்கொண்டு,  நலம் விசாரிக்க ஜப்பானின் ஜாக்கிசான் முதல் அமெரிக்காவின் மைக்கல் ஜாக்ஸன் வரை வருவார்கள், நடுநடுவே கிளின்டன், நம்ம ஊர் விஜயகாந்த் கூட வருவார்.  இத்தகைய மேன்மக்களுக்குக் காட்சிப் பொருளாக இருக்கும் இம்மக்களது வாழ்க்கை நிலைமை மிகவும் மோசம்.

கலா எனும் பெண்மணியின் கணவர் சுனாமியில் இறந்து விட்டார். அவர்களுடைய தொழிலும் போயிற்று. வரதட்சணை கொடுக்க முடியவில்வில்லை என்பதால் மகள் வாழாவெட்டியாகத் திரும்ப வந்து விட்டாள். அருகில் இருந்த சில கிட்னி ஏஜெண்டுகள் மூலம் தன் கிட்னியை விற்க கலா ஒப்புக்கொண்டார். 50 ஆயிரம் வரும்; பெண்ணுக்கு வரதட்சணை 30,000 போக, மீந்த பணத்தில் இட்லிக் கடை வைத்து சம்பாதித்து விடலாம் என்பது அவரது யோசனை. இப்பொழுது செய்யும் சித்தாள் வேலையை விட்டுவிடலாம். மதுரையில் ஆபரேஷன், முடிந்தவுடன் காசு.

மதுரைக்குச் சென்றார் கலா, ஆபரேஷனில் ஏதோ சிறு தவறு. காயம் ஆற ஒரு மாதம் ஆகும் எனச் சொல்லிவிட்டார்கள், சரி பணம்? ஏஜெண்ட் கமிஷன் போக 40 ஆயிரம் ரூபாய் கைக்கு வந்தது. கிட்னி எடுக்கும் ஆபரேஷன் வரை தான் மருத்துவச் செலவு அவர்களுடையது, அதன் பின் கலா தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.

கலா அந்தத் தனியார் மருத்துவமனைக்குக் கட்டணம் கட்ட முடியாமல் மதுரை அரசு மருத்துவமனைக்குச் சென்றார். உடலைக் காப்பாற்ற 15 ஆயிரம் செலவானது. 25,000 வரதட்சணைக்குக் கொடுத்து விட்டார். ஆபரேஷனுக்குப் பின், முன் போல சித்தாள் வேலையும் பார்க்க முடியவில்லை. சரி காவல்துறையிடம் புகார் கொடுக்கலாம் என்று போனார். ஏட்டு  சட்டத்தை எளிமையாக அவரிடம் எடுத்துச் சொல்லிவிட்டார். “இந்திய சட்டப்படி உங்கள் உடல் உறுப்பைத் தானம் தான் கொடுக்க வேண்டும், விற்பனை செய்தால் விற்றவர் கடுமையான தண்டனை பெற வேண்டும்”.

கிட்னிவாக்கம்
சென்னை மருத்துவமனை ஒன்றில் சிறுநீரகத்தை நீக்கும் நெப்ரெக்டொமி அறுவை சிகிச்சை. 2006-2007 ஆண்டுகளில் கிட்னிவாக்கம் என்றழைக்கப்படும் சுனாமி முகாமில் கிட்டத்தட்ட அனைத்து பெண்களும் தனது கிட்னிகளில் ஒன்றை விற்றுள்ளனர்.

ஏழையால் வேலை செய்து வாழ முடியாத சமுக அவலம், அந்த சமுக அவலத்தைப் பணமாக்கிக் கொள்ளும் இன்னொரு அவலம். இந்த சமூக அவலத்தில் இந்தியாவில் கிட்னி திருட்டும் வியாபாரமும் தழைத்தோங்குகிறது. GDP சேர்த்தால் பல புள்ளிகள் அள்ளலாம். விவசாயிகள் முதல், நெசவாளிகள், மீனவர்கள், மலை வாழ் மக்கள் என பல இலட்சம் பேர் கிட்னி விற்பனை செய்து இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்குப் ’பங்காற்றுகின்றனர்’.

ஆசிரியருடன் பி.பி.எஸ். நேர்காணல்

இரத்த தானம்?

சுபாஷ்
சென்னை தெருக்களிலிருந்து 1999ல் காணாமல் போன தனது மகன் சுபாஷின் புகைப்படத்துடன் சிவகம்மா – நாகேஷ்வர் ராவ். தற்சமயம் சுபாஷ் அமெரிக்காவில் ஒரு கிறுத்தவ குடும்பத்தில் வளர்வதாக சென்னை போலீசார் தெரிவிக்கின்றனர்.

மேலே பார்த்தோம் அல்லவா ? இந்திய சட்டப்படி இரத்த ‘தானம்’ தான் செய்ய வேண்டும் விற்கக் கூடாது. ஆனால் அப்படித் தானமாகப் பெறப்பட்ட இரத்தத்தை உடம்பில் ஏற்ற பணம் கொடுக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் ஆபரேஷன் பில்லில் இதர செலவுகளுடன் உங்களுக்கு ஏற்றப்பட்ட ரத்தத்திற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டிருக்கும். இரத்தம் தானமாகக் கிடைத்திருந்தாலும் காசை வசூலித்து விடுவார்கள்.

அதாவது உடல் உறுப்புகள் கொடுப்பது இலவசம், ஆனால் அந்த உறுப்பைப் பொருத்த நீங்கள் பணம் கொடுக்க வேண்டும். இதில் முதலில் இலாபம் அடைபவர்கள் தனியார் மருத்துவமனைகள். அவர்கள் இன்று இந்த உறுப்புகளுக்கான சந்தையை ஊட்டி வளர்க்கிறார்கள்.

இதே உறுப்புகளுக்கு மாற்று உறுப்பைப் பெறுபவரிடம் பல இலட்சங்கள் வாங்கப்படுகிறது. கலாவிடமிருந்து எடுத்த கிட்னி இந்தியாவில் 4 இலட்சம், அமெரிக்காவிலோ 13 இலட்சத்திற்கு விலை போகும். இடையில் புழங்கிய பணம் மருத்துவமனை, ஏஜெண்டுகளின் பையில் அடைந்து கொள்ளும். இதில் ஏஜெண்டுகளாக பல மருத்துவர்களே உள்ளனர். அரசு மருத்துவமனைகள் முதல் தனியார் மருத்துவமனைகள் வரை கொள்ளை இலாபம் புரளும் தொழில் இது.

இன்னொரு புறம் இரத்தத் தட்டுப்பாடு இருக்கும் இடங்களில் இரத்தம் கொடுக்க பணம் சட்டப்பூர்வமாகவே வசூல் செய்யலாம். நல்ல விஷயம் தான், ஆனால் அது என்ன விபரீதத்தைக் கொண்டு வந்தது தெரியுமா?

கோரக்பூரில் ஒருவன் நான்கு பேரைக் கடத்தி வைத்துக்கொண்டு அவர்களைச் சங்கிலியால் கட்டிப் போட்டு விட்டு, அவர்களுடைய இரத்தத்தை  எடுத்து விற்பனை செய்து கொண்டிருந்தான். பிடிபட்டவுடன் நல்ல வேளையாக அவன் இந்தியாவில் இருந்ததால் சட்டம் அவனைக் காப்பாற்றி விட்டது. என்ன ! பணம் கொஞ்சம் செலவாகியிருக்கும்!

இந்தப் புத்தகம் முழுவதும் அதன் ஆசிரியர் ஸ்கார்ட் கார்னியின் உழைப்பை நாம் மதிக்கத் தக்கதாகவே உள்ளது, ஏதோ புத்தகம் எழுதுகிறோம் என்பதோடு நில்லாமல். நாடு நாடாக, பல ஊர்கள் சுற்றி உடல் உறுப்புகள் பற்றிய சந்தையைப் பற்றி தகவல்கள் திரட்டி நெற்றிப்பொட்டில் அடிப்பது போல் முன்வைக்கிறார்.

அவர் மிகச் சுருக்கமாகக் குறிப்பிடுவது “மூன்றாம் உலக நாடுகளின் உயிர்கள் எப்பொழுதும்  மலிவானவை. இதுதான் காலனியச் சிந்தனை”.  அதை நிரூபிக்கும் அனைத்து ஆதாரங்களையும் தன் புத்தகத்தில் அனைவருக்கும் எளிதாகப் புரியும் வண்ணம் விளக்கியுள்ளார். நாம் மேலே பார்த்ததெல்லாம் அக்கடலில் ஒரு துளிதான்.

பாத்திமா
தனது மகள் சபீனை ஒன்பதாண்டுகளாக தேடிய முயற்ச்சியில் திவாலாகிப்போன பாத்திமாவின் குடும்பம் தற்போது வண்ணாரப்பேட்டையில் வாழ்கிறது

உடல் விற்பனை என்பது, குழந்தைகள் கடத்தல், பெண்கள் விற்பனை, பெண்களின் கரு முட்டை விற்பனை, இரத்தம், கிட்னி, இதயம் உள்ளிட்ட இதர உடல் உறுப்புக்கள், இறந்தவர்களின் தோல், எலும்பு, வாடகைத் தாய் முதல் நம்மூர் திருப்பதியில் இருந்து ஏற்றுமதி ஆகும் தலை முடி வரை எனப் புத்தகம் முழுவதும் அவரின் ஆய்வு விரவிக் கிடக்கின்றது.

ஆமாம் திருப்பதியில் ஆண்கள் தலை முடி பேக்கரியில் பயன்படுத்தும் ஏதோ ஒரு ரசாயனப் பொருள் செய்யப் பயன்படுகிறதாம். பெண்களின் தலைமுடி பல பில்லியன் டாலர் புழங்கும் ‘விக்’ வணிகமாம். ஏலு கொண்டல வாடா! நீ எப்படி கோடீசுவரக் கடவுளாக இருக்கிறாய் என்பது இப்போதுதான் புரிகிறது.

மனிதன் எனும் சோதனை எலி

இதனுடன் இந்த புத்தகம் முடிவடையவில்லை. இதன் இன்னொரு பரிமாணம் என்பது மனித உடல்களைச் சோதனை எலிகளாகப் பயன்படுத்துவது எனும் ஆபத்து பற்றியது. நீங்கள் தமிழில் ஈ என்று படம் பார்த்திருக்கிறீர்களா? சரி அது வேண்டாம். அதன் மூல ஆங்கிலத் திரைப்படமான தெ கான்ஸ்டண்ட் கார்டனர் பார்த்திருக்கிறீர்களா? இந்தப் புத்தகத்தின் 8 ஆம் அத்தியாயம் அந்த அதிர்ச்சியான செய்தியைப் பற்றி தான் பேசுகிறது. பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் சோதனைக்கூடம் ஏழைகளின் உடல் தான்.

ஆப்ரிக்கா முதல் இந்தியா வரை வாழும் மூன்றாம் உலக, ஏழை நாடுகளின் மக்கள் தான் சோதனைச்சாலையின் எலிகள். நிறுவனம் புதிதாகத் தயாரிக்கும் மருந்தைச் சந்தைக்குக் கொண்டு வர, தரச் சான்றிதழ் பெற, அதற்கு முன்னரே சோதனை நிலையில் பலர் மேல் அம்மருந்து பிரயோகிக்கப்படுகிறது. கொடுமை என்னவென்றால் அது யார் மீது பிரயோகிக்கப்படுகிறதோ அம்மக்களுக்கே தெரிவதில்லை.

கோமதியின்-குழந்தை
கோமதி கருவற்றவேளையில் சைக்லோபமைன் (Cyclopamine) என்ற மருந்து அவர் மீது சோதிக்கப்பட்டதன் விளைவாக குழந்தை இப்படிப் ஊனமாக பிறந்ததாக கஸ்தூர்பா காந்தி மருத்துமனை ஊழியர்களால். சந்தேகிக்கப்படுகிறது. அம்மருந்து தற்போது அமெரிக்காவில் புற்றுநோய் சிகிச்சைக்காக சோதிக்கப்பட்டு வருகிறது. இப்படம் எடுப்பதற்கு ஓராண்டு முன்பாக மருந்து கம்பெனிகள் முறையற்ற வகையில் புற்றுநோய் எதிர்ப்பு மருந்தை நூற்றுக்கணக்கான பெண்களின் மீது சோதித்த்தாக தெரியவருகிறது. தற்போது இந்தியாவில் சைக்லோபமைன் விற்பனைக்கு கிடைத்தாலும், எந்த நிறுவனமும் அம்மருந்தை இங்கு சோதித்த்தாக ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை.

இது ஏதோ ஒரு நிறுவனம், ஒரு நபர் சார்ந்த திருட்டு நடவடிக்கை அல்ல. சில நேரங்களில் அந்த நிறுவனங்கள் அந்த நாட்டின் சுகாதாரத் துறையையே விலைக்கு வாங்கி விடுகின்றன. இந்தக் குற்றம் ஒரு குறிப்பிட்ட அமைச்சரின் தனிப்பட்ட ஒழுக்க நெறி சம்பந்தப்பட்டதல்ல. அந்தந்த மருந்து நிறுவனங்களின் இலாப வெறியும், சந்தைப் போட்டியும் தான் இவற்றுக்கு அடிப்படை.

பன்னாட்டு மருந்து கம்பெனிகள் இலாபம் ஒன்றை மாத்திரமே  மையமாகக் கொண்டு இயங்கும்  வைரஸ்கள், ஒன்றில்லை என்றால் இன்னொன்றைப் பிடித்துக் கொள்கின்றன. ஆனால் இது மனித வைரஸ். கொஞ்சம் புத்திசாலித்தனமானது. தனக்கான அரசையே கூட சில ஆப்பிரிக்க நாடுகளில் அது உருவாக்கி விடுகின்றது.

பெரும்பான்மை மக்களின் மருத்துவம் போன்ற துறையில் தனியார் மயம் என்பது தெரிந்தே வைரஸை செலுத்திக் கொண்டது போன்றதுதான். எப்படி புற்றுநோயின் வளர்ச்சி மனிதனை அழிக்கின்றதோ அதே போல்தான் இந்தத் தனியார்மய வளர்ச்சியும் சமூகத்தை அழிக்கிறது. இது கண்ணுக்குப் பருண்மையாகத் தெரிகின்றது. நாம் தான் கண்ணை மூடிக்கொண்டு வளர்ச்சி வளர்ச்சி என்கிறோம். எது வளார்ச்சி என்று சரி பார்த்துக் கொள்வது நல்லது.

யோசித்துப் பாருங்கள், நோய் குணமாகும் என்கிற நம்பிக்கையில் மருத்துவமனைக்குச் சென்று பணத்தை அள்ளி இறைத்த பின் ’நீங்கள் ஒரு சோதனை எலி, உங்கள் உடலில் ஒரு மருந்து சோதனைக்காகச் செலுத்தப்பட்டிருக்கிறது. அதனால் உயிர் இழந்தாலும் உங்கள் குடும்பத்தினருக்கு ஒன்றுமே தெரியாது’ என்ற அவல நிலையை?

முதலாளித்துவம் மனிதனிடத்தில் இருக்கும் உணர்ச்சிகள் அனைத்தையும் பிடுங்கி ஒரு பண்டமாக மாற்றிவிடும் என்று மார்க்ஸ் சொன்னது எவ்வளவு உண்மை? !

படங்கள் : தி ஒயர்ட் மேகசின், ரெட்மார்கெட்

__________________________________________________

– புதிய கலாச்சாரம், மார்ச் – 2012

_________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

மக்களாட்சி அல்ல, மாஃபியா ஆட்சி!

மாபியாமத்தியப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அள்ளப்பட்ட கனிமங்களையும் இரும்புத்தாதுவையும் ஏற்றிவந்த டிராக்டரைத் தடுத்து நிறுத்திய நரேந்திரகுமார் எனும் இளம் ஐ.பி.எஸ். அதிகாரியின் மீது சுரங்க மாஃபியாக் கும்பல் டிராக்டரை ஏற்றிக் கொன்றுள்ளது. சுரங்க முறைகேட்டைத் தடுக்க உயரதிகாரிகளிடம் நரேந்திரகுமார் பலமுறை வலியுறுத்தியும் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கவில்லை. கொள்ளையர்கள் பா.ஜ.க. ஆட்சியின் பாதுகாப்பின் கீழ் அஞ்சாமல் கொள்ளையைத் தொடர்ந்துள்ளனர். மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் முதல் அமைச்சர்கள், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் வரை அனைவரும் சட்டவிரோத சுரங்கக்கொள்ளை நடத்துவதாக முன்னாள் காங்கிரசு முதல்வர்  திக்விஜய் சிங் குற்றம் சாட்டியிருக்கிறார்.

இது படுகொலை என்பதையே மறைத்து, விபத்து என்று சக அதிகாரிகள் தனக்குச் செய்தி அனுப்பியதாகக் குற்றம் சாட்டுகிறார், நரேந்திர குமாரின் தந்தை கேசவ் தேவ். இவர் உ.பி மாநிலத்தில் பணியாற்றும் போலீசு எஸ்.ஐ. கொல்லப்பட்ட நரேந்திர குமாரின் மனைவி  ஐ.ஏ.எஸ். அதிகாரி. தற்போது பேறு கால விடுப்பில் இருக்கிறார். பாரதிய ஜனதா எம்.எல்.ஏ. மோகன்குமார்தான் இந்தக் கொலைக்குக் காரணம் என்று குற்றம் சாட்டும் கேசவ் தேவ், தனது மகனுக்கும் மருமகளுக்கும் மோகன்குமார் கொலைமிரட்டல் விட்டிருந்ததாகவும், இதன் காரணமாகத்தான் தனது மருமகளுக்குத்  திடீரென்று மாற்றல் உத்தரவு போடப்பட்டிருப்பதாகவும் கூறியிருக்கிறார். “மகனை இழந்ததால், பாவம் கேசவ்தேவுக்கு பைத்தியம் பிடித்து விட்டது” என்று ஊடகங்களுக்கு திமிராகப் பேட்டி தருகிறார், ம.பி. உள்துறை அமைச்சர்.

இதே மாநிலத்தில் மணல் கொள்ளை மாஃபியாக்கள், பன்னா மாவட்டத்தில் போலீசு உயர் அதிகாரி கௌட் என்பவர்  மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். சம்பல் பள்ளத்தாக்கு பகுதியில் பா.ஜ.க. முன்னாள் எம்.எல்.ஏ. நரேந்திர சிங் தலைமையிலான கள்ளச்சாராய மாஃபியாக்கள், ஹோலி பண்டிகை அன்று மதுவிற்பனை செய்ததைத் தடுக்க முயன்ற ஐ.பி.எஸ். அதிகாரி ஜெய்தேவன் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.

ம.பி.யின் உமாரியா மாவட்டத்தில் உள்ள அரசு நிலக்கரி சுரங்கங்களில் இருந்து பா.ஜ.க. தலைவர் ஒருவரின் தலைமையில் நிலக்கரி திருட்டில் ஈடுபட்டுள்ள மாஃபியாக்களை அம்பலப்படுத்தி இந்தி, ஆங்கிலப் பத்திரிக்கைகளில் எழுதிக் கொண்டிருந்தார் மூத்த பத்திரிகையாளர் சந்திரிகா ராய்(42). சர்வ கட்சிகள், அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் நடந்துவந்த இக்கொள்ளையை அம்பலப்படுத்தியமையால் சந்திரிகா ராயையும் அவரின் மனைவி, மகன், மகள் அனைவரையும் வீடு புகுந்து படுகொலை செய்துள்ளது மாபியா கும்பல். போலீசு திட்டமிட்டே புலன் விசாரணையை திசை திருப்புகிறது என்றும், கொலைகாரர்கள் குறித்துத் துப்பு கொடுப்பவர்களுக்கு 2 இலட்சம் ரூபாய் பரிசளிப்பதாகவும் பகிரங்கமாக அறிவித்திருக்கிறார், அவரது சகோதரர் மிதிலேஷ் ராய்.

சுரங்க மாஃபியாவை எதிர்த்துப் போராடிய நரேந்திரகுமார் சாதாரண நபரல்ல, ஐ.பி.எஸ். அதிகாரி.  அவரின் மனைவியும் கூட  ஐ.ஏ.எஸ். அதிகாரி. சந்திரிகா ராய் மூத்த பத்திரிகையாளர். சென்ற ஆண்டு மராட்டிய மாநிலத்தில் கலப்பட மண்ணெண்ணை கும்பலைத் தடுக்க முயன்று உயிரோடு கொளுத்தப்பட்டவரோ ஒரு சப் கலெக்டர்.

இருந்த போதிலும், அரிதாகத் தென்படும் சில நேர்மையான அதிகாரிகளையும், எப்போதாவது வழங்கப்படும் கோர்ட்டு தீர்ப்புகளையும் காட்டி ‘நேர்மையானவர்களால்’ இந்த அமைப்பைச் சரிசெய்துவிடமுடியும் என்றும் ஊழலை, கொள்ளைகளை ஒழித்து விட முடியும் என்றும் செய்யப்படும் பிரச்சாரம் தொடரத்தான் செய்கிறது.

சட்டவரையறைக்குள்ளாகவே கிரிமினல்களின் கொட்டத்தைத் தடுத்துவிட முடியும் என விதைக்கப்பட்டிருக்கும் நம்பிக்கை,  நல்லெண்ணம் கொண்ட சில அதிகாரிகளுக்கு மட்டுமல்ல;  சாமானிய மனிதர்களுக்கும் இருக்கத்தான் செய்கிறது.  ஊரின் நலன் மீதும், இயற்கைச் செல்வங்களின் மீதும் அக்கறை கொண்ட இளைஞர்கள், இத்தகைய மாஃபியாக்களுக்கு எதிராகச் சட்டரீதியாகப் போராடும்போது அவர்களும் பலியாடுகளாகி விடுகின்றனர்.

மாபியாதிருநெல்வேலி மாவட்டத்தில் வள்ளியூர் அருகே நம்பியாற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளி வந்த டிப்பர் லாரியைப் பொதுமக்கள் வழிமறித்தபோது,  லாரியை ஏற்றி சதீஷ்குமார் என்ற இளைஞரைக் கொன்றுள்ளனர். சதீஷ்குமார் மட்டுமல்ல, மணல் கொள்ளையை எதிர்த்த சி.பி.ஐ. கட்சித் தொண்டர் சுடலைமுத்துவும், தனியாகப் போராடிய தாசில்தார் ஒருவரும் சில ஆண்டுகளுக்கு முன் பலியாகியிருக்கின்றனர்.

தமிழகத்தின் மணல் கொள்ளை மாஃபியா என்பது ஓட்டுப் பொறுக்கிகளும் அதிகார வர்க்கத்தினரும் இணைந்து அமைத்துள்ள தேர்தல்களுக்கு அப்பாற்பட்ட கொள்கைக் கூட்டணி. இருப்பினும், இந்த உண்மை திட்டமிட்டே மறைக்கப்படுகிறது. சதீஷ்குமார் கொலையை ஒட்டித் தலையங்கம் எழுதியுள்ள தினமணி நாளேடு,  ‘முதல்வர் முறைத்துப் பார்த்தாலே போதும், முறைகேடுகளில் ஈடுபடுவோர் மூலைக்கொருவராக ஓடி ஒளிந்து கொண்டுவிடுவார்கள்’  என்று எழுதுகிறது. எந்தக் கட்சிப் பிரமுகரால் சதீஷ்குமார் கொல்லப்பட்டாரோ, அந்தக் கொள்ளைக் கூட்டத்  தலைவியின் கடைக்கண்ணில் நீதியை எதிர்பார்க்கக் கோருகிறார், தினமணி வைத்தியநாதன்.

ஒட்டுமொத்த அரசமைப்பும் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுப்போன நிலையில், இவ்வமைப்பின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த ஆளும் வர்க்கம் மேற்கொண்ட முயற்சிகளில் ஒன்றுதான் தகவல் அறியும் உரிமைச் சட்டம். தனியார்மய, தாராளமயச் சீர்திருத்தத்துக்கு மனிதமுகம் தருகிறோம் என்ற போர்வையில் ‘அமைப்பை மேலும் ஜனநாயகப்படுத்துவது’ என்று பீற்றிக்கொண்டு கொண்டுவரப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தினால் ஊழலை அம்பலப்படுத்தி அமைப்பை சரிசெய்துவிடலாம் என்ற பிரச்சாரம், பல நேர்மையான  சமூக ஆர்வலர்களை மயக்கத்தில் ஆழ்த்தியது.

இந்த சட்டத்தின் மூலம் தகவல்பெற முயல்பவர்களோ குறிவைத்துக் கொல்லப்படுகின்றனர். மும்பையில் சட்டவிரோதக் கட்டுமானங்கள் குறித்த தகவல்களைக் கேட்டிருந்த பிரேம்கந்த் ஜா, நந்தேடுவில் தகவல் உரிமைச் சட்ட செயல்பாட்டாளர் ராம்தாஸ்,  மராட்டிய ஊழல் அதிகாரிகளை அம்பலப்படுத்திய தத்தா பாட்டில், மும்பையில் ராணுவ அதிகாரிகளின் ஆதர்ஷ் ஊழல் குறித்த தகவல்களை அறிய முயன்ற சந்தோஷ்  திவாரி, அகமதாபாத்தில் சட்டவிரோத இறைச்சிக் கூடங்கள் குறித்த தகவல்களைச் சேகரித்த நதீம் சயீத், பீகாரில் நலத்திட்ட ஊழல்களை எதிர்த்துப் போராடிய சசிதர் மிஷ்ரா, போபாலில் மசூத் எனும் ஊழல் எதிர்ப்புப் போராளி  எனக் கொல்லப்பட்டோரின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. ஆவடி அருகிலுள்ள தனது நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் குறித்து தகவல்களை அறிய முயன்ற புவனேஸ்வரன் (38) என்பவரை தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதனின் அடியாட்கள் கடந்த ஜனவரியில் அடித்தே கொன்றுள்ளனர்.

பொதுச்சொத்தைச் சூறையாடும் கிரிமினல் மாஃபியா கூட்டணியை அதிகார வர்க்கம், போலீசு, நீதித்துறையின் உதவியுடன் எதிர்த்து வெற்றி பெற்று விடலாம் எனும் நம்பிக்கையில் போராடுபவர்களை மாஃபியாக்கள் அழித்து வருகின்றனர். நேர்மையான ஐ.ஏ.எஸ்; ஐ.பி.எஸ். அதிகாரிகளே கொன்று வீசப்படும் சூழ்நிலையில், ‘நீதிமன்றத் தீர்ப்புகள், தகவல் அறியும் உரிமை, லோக்பால்’ போன்றவற்றைக் காட்டி ஊடகங்கள் உருவாக்கும் பிரமைக்கு, அபூர்வமான செயல்வீரர்கள் பலர் பலி கொடுக்கப்படுகின்றனர்.

தனியார்மயம்  தாராளமயத்தின்  விளைவாக உருவாகி இருக்கும் மணல் கொள்ளை மாஃபியாவிலிருந்து சுரங்க மாபியா வரையிலான கிரிமினல் கும்பல்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் சட்ட விரோதமானவையாக இருந்தாலும், அவர்கள் இரகசிய உலகப் பேர்வழிகள் அல்லர். அவர்களெல்லாம் சட்டபூர்வமான பதவிகளில் அமர்ந்திருக்கின்றனர். அவர்களைப் பற்றி அரசிடம் புகார் செய்வதற்கு ஏதுமில்லை. அவர்கள்தான் அரசு.

தனிநபர்களின் போராட்டங்களாலோ, காகிதச் சட்டங்களாலோ இவர்களை ஒழிக்க முடியாது. அவ்வாறு ஒழிக்க முடியும் என்று நம்பிய அப்பாவிகள்தான் ஒழிக்கப்பட்டிருக்கிறார்கள். அன்றாட வாழ்வின் சாதாரண அநீதிகளை எதிர்த்துப் போராடுவதற்குக்கூடப் புரட்சிகர அமைப்பும், போர்க்குணமிக்க  நடவடிக்கையும் தேவை என்பதையே இந்த அனுபவங்கள் காட்டுகின்றன.

______________________________________________________

புதிய ஜனநாயகம், ஏப்ரல் – 2012

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: