Tuesday, June 17, 2025
முகப்பு பதிவு பக்கம் 778

யார் தமிழன்? எவை தமிழர் உணவு? பொதுவுடமை வளர்கிறதா?

34

கேள்வி: தமிழன் இன்று எவ்வாறு அறியப்படுகிறான்?

– குரு

அன்புள்ள குரு,

முதலில் தமிழன் என்ற வார்த்தைக்கு இறுக்கமான இலக்கணத்தை வரையறுக்க இயலுமா தெரியவில்லை. பொதுவில் தமிழ்நாட்டில் வாழ்ந்து தமிழை பேசக்கூடியவர்கள்தான் தமிழரென்று நீங்கள் கருதுவீர்கள் என்றால் இன்று தமிழன் என்ற பெயரில் அவன் அறியப்படுவதில்லை. தமிழோடு பல பெயர்கள் சூழலுக்கேற்றவாறு ஒட்டிக் கொண்டுள்ளன.

சன்.டி.வி மெகா சீரியல் பார்க்கும் குடும்பத் தமிழன், கலைஞர் டி.வியின் மானாட மயிலாடவில் லயிக்கும் குதூகலத் தமிழன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஐ.பி.எல்லில் இரசிக்கும் லோக்கல் தமிழன், டெண்டுல்கர் சதமடித்தால் ஆர்ப்பரிக்கும் இந்தியத் தமிழன், ராணா படத்துக்காக நா தொ போட்டு காத்திருக்கும் இரசிகத் தமிழன், கமலின் அடுத்த கெட்டப்புக்காக தவம் இருக்கும் உலக சினிமாத் தமிழன், தினமலரின் ஜோசியப் பக்கத்தை காசு கொடுத்து நம்பும் மூடநம்பிக்கைத் தமிழன், சாய்பாபாவுக்காக கண்ணீர் விட்டு அழும் பக்தித் தமிழன், நித்தியானந்தாவுக்கு படம் போட்டு பிரச்சாரம் செய்யும் எழுத்தாளத் தமிழன், பால் தினகரனுக்காக பாக்கெட் மணி அனுப்பும் பரதேசித் தமிழன்,  விசா இல்லாமல் மலேசியா சென்று சிறையில் வாடும் கனவுத் தமிழன், விசாவோடு வளைகுடாவில் முடங்கிப் போன நனவுத் தமிழன், பச்சை அட்டையோடு அமெரிக்காவில் செட்டிலான பணக்காரத் தமிழன், தீக்குச்சி அடுக்கி பீடி சுருட்டும் ஏழை இளையத் தமிழன், பங்குச் சந்தையில் சூதாடி பணம் சேர்த்து முன்னேறும் காரியவாதத் தமிழன், பிசா – பர்கர்- கென்டகி சிக்கனோடு வாழும் சிட்டித் தமிழன், முறுக்கு சட்டியோடு ஆந்திராவுக்கு பிழைக்க போயிருக்கும் வில்லேஜ் தமிழன், தேயிலைத் தோட்டங்களில் பனியால் கருகும் தோட்டத் தமிழன், ஆர்கானிக் டீயைச் சுவைத்தவாறே நட்சத்திர விடுதியில் பிசினஸ் பேசும் முதலாளித் தமிழன், கரும்பலகை இல்லாத பள்ளிக்கூடத்தில் பயிலும் கிராமத்து தமிழன், கணினி – செல்பேசியோடு பள்ளிக்கு செல்லும் பட்டணத்து தமிழன், இலங்கை கப்பற்படையிடம் சிக்காமல் கடலில் தொழில் செய்ய பாடுபடும் மீனவத் தமிழன், ஜெயலலிதாவின் காலில் விழுந்து கிடக்கும் மறத் தமிழன், கருணாநிதி குடும்ப அரசியல் தொழிலை ஏற்றுக் கொள்ளும் உடன்பிறப்புத் தமிழன், சோனியாவிடமும் அடிமைப்பட்டுக் கிடக்கும் வேட்டிக் கிழிப்புத் தமிழன்,

இறுதியாக பதிவுலகில் ‘வட போச்சே’ என்று பின்னூட்டமிடும் வெட்டித் தமிழன், போதுமா?

நன்றி

____________________________________________________________

கேள்வி: நம் நாட்டைப் பொருத்தவரையில் பொதுவுடைமைக் கொள்கை என்பது வளரத் துவங்கியிருக்கிறதா? வளர்ந்து கொண்டிருக்கிறதா? அல்லது வளருமா? ஏனென்றால் பொதுவுடைமைப் பற்றிய போதிய சிந்தனை பொதுமக்களிடம் சென்றடையவில்லை என்பதும் உண்மைதானே?

– இனியவன்

அன்புள்ள இனியவன்,

நம் நாட்டில் பொதுவுடைமைக் கொள்கையின் வளர்ச்சி என்பது பொதுவுடமைக் கட்சிகளின் வளர்ச்சி, தேய்வோடு சம்பந்தப்பட்டது. இடது, வலது கம்யூனிஸ்ட் கட்சிகள் பாராளுமன்ற தேர்தல் சகதியில் விழுந்து புரண்டு சரணடைந்து விட்டார்கள். 1925 முதல் 1960கள் வரை இவர்களே பொதுவுடைமைக் கட்சியென அறியப்பட்டார்கள். முக்கியமாக இந்தியாவின் விசேட சமூக நிலைமைகளை ஆய்வு செய்து எவ்வாறு புரட்சி செய்யப் போகிறோம் என்பதில் சோடை போனார்கள். 47க்கு முன்பிருந்தே காங்கிரசு, காந்தியின் வாலாகவும் செயல்பட்டார்கள். தமது சொந்தக் கொள்கையின் மூலம் மக்களைத் திரட்டமுடியும் என்ற நம்பிக்கை இல்லாது இருந்தார்கள்.

இவர்களுக்கு மாற்றாக இவர்களிடமிருந்தே கிளம்பி இவர்களது திரிபுவாதத்தை தகர்த்தெறிந்து 1960களின் பிற்பகுதியில் எழுந்த நக்சல்பாரிக் கட்சி ஆரம்பத்தில் இழைத்த இடது தீவிரத் தவறுகள் காரணமாக பின்னடைவு கண்டது. பிறகு சில மாநிலங்களில் தவறுகளை திருத்திக் கொண்டு தீவிரமாக செயல்பட ஆரம்பித்திருக்கிறது.

1990களில் உலக அளவில் சோவியத் யூனியன் என்ற பெயரில் இருந்த போலி கம்யூனிசம் விழுந்த போது ஒரு அதிர்ச்சி இருந்தது. பின்னர் அடுத்த பத்தாண்டுகளில் முதலாளித்துவ நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக தற்போது மேற்குலகின் மக்கள் பொதுவுடமை கொள்கைகளை தேடிப் படிப்பதாக ஊடகங்கள் கூறுகின்றன.

இந்தியாவிலும் இடதுசாரி முகாமைச் சேர்ந்த அறிவு ஜீவிகளே ஊடகங்களில் காத்திரமான ஆய்வுக் கட்டுரைகளை எழுதுகிறார்கள். மறுகாலனியாக்கத்தின் கேடுகளை எதிர்த்து இடதுசாரி கட்சிகளே தொடர்ந்து போராடுகின்றன. தமிழகத்தில் என்.சி.பி.எச், பாரதி புத்தகலாயம், கீழைக்காற்று கடைகளில் மார்க்சிய நூல்கள் அதிகம் விற்கின்றன. விற்றுத் தீர்ந்த பல நூல்கள் இப்போது கிடைப்பதில்லை.

எனினும் போலிக் கம்யூனிஸ்டுகளின் கெட்ட பெயர் உருவாக்கியிருக்கும் சூழல் எங்களையும் அடிக்கிறது. வினவில் கூட பல புதியவர்கள் சீனா, மே.வங்கத்தை வைத்து எங்கள் விமரிசிப்பது இன்னமும் நடக்கிறது. போயஸ் தோட்டத்தில் சென்று அம்மா காலில் விழாத குறையாக செஞ்சட்டை தலைவர்கள் நடத்தும் பூஜை குறித்து நாங்கள் எவ்வளவுதான் விமரிசித்தாலும் மக்களுக்கு மனம் ஒப்புவதில்லை. இருப்பினும் பொதுவில் போலிக் கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்களையும் உள்ளிட்டு கம்யூனிஸ்டுகள் என்றாலே எளிமையானவர்கள், ஊழல் செய்யாதவர்கள், மக்களுக்காக போராடுபவர்கள் என்று மக்கள் சந்தேகமின்றி கருதுகிறார்கள். கூடவே இவர்களை பிழைக்கத் தெரியாதவர்கள் என்றும் செல்லமாகவும் கடிந்து கொள்வார்கள்.

எங்களைப் பொறுத்த வரை  தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் பேருந்துகள், இரயில்கள், குடியிருப்புகள், ஆலைகள் என எல்லா இடங்களிலும் பல இலட்சக்கணக்கான மக்களை எங்கள் தோழர்கள் சந்தித்து பிரச்சாரம் செய்கிறார்கள். இதற்கு மேலும் பொதுவுடமைக் கொள்கை வளர்கிறது என்பதற்கு வினவின் சிறு வெற்றியையும் சொல்லலாமே?

மற்ற கொள்கைகளெல்லாம் அநீதியான இந்த உலகோடு ஒட்ட ஒழுகும் தன்மையைக் கொண்டிருப்பதால் அவைகள் மக்களிடம் பரப்புவது சுலபம். ஆனால் பொதுவுடைமை கொள்கை என்பது ஒட்டு மொத்த சமூகத்தையும் அடியோடு மாற்றவேண்டும் என்பதை இலக்காகக் கொண்டிருப்பதால் மக்களிடம் பரப்புவது சிரமம். ஆனால் பிரச்சினைகளோடு ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் பொதுவுடைமைக் கொள்கைகள் மட்டுமே மக்களோடு இணைவதற்கான எதிர்காலத்தைக் கொண்டிருக்கிறது.

என்ன சொல்கிறீர்கள்?

நன்றி.

_________________________________________________________________

கேள்வி: ஆங்கிலத்தில் மூன்று வேளை உண்ணுவதற்கும் பிரேக்பாஸ்ட், லஞ்ச், டின்னர் என்று பெயர்கள் உள்ளன. அது போன்று தமிழில் உண்டா?

– சுதா செந்தில்

அன்புள்ள சுதா செந்தில்,

மூன்று வேளை சாப்பாடு ஆங்கிலப் பெயர்களுக்கு இணையாக தமிழில் உண்டா என்று தமிழிறிஞர்களைத்தான் கேட்க வேண்டும். எங்களுக்குத் தெரிந்து இல்லை என்றுதான் நினைக்கிறோம். ஒருவேளை தமிழ் மொழியில் அப்படிப் பெயர்கள் இருந்தாலும் தமிழ் மக்களிடம் இத்தகைய மும்முறை சாப்பாட்டுப் பெயர்கள் வழக்கத்தில் இல்லை என்பதை நிச்சயமாகக் கூறலாம். ஏனெனில் இன்றும் கூட பெரும்பான்மைத் தமிழ் மக்களின் வீடுகளில் மூன்று முறை சமையலோ, சாப்பாடோ கிடையாது. அதிக பட்சம் ஒரு முறைதான் சமையலே! இதுதான் யதார்த்தம் எனும் போது மூன்று பெயர்களுக்கான தேவையே எழவில்லையே?

“தி கிட்” எனும் சார்லி சாப்ளினது திரைப்படத்தில் அவர் ஒரு அனாதைச் சிறுவனை வளர்ப்பார். அவரது குடிசையில் ஓட்டை ஒடிசலுடன் இருக்கும் ஒரு மேசைதான் டைனிங் டேபிள். சாப்பிட இருந்தாலும், இல்லாவிட்டாலும் டேபிள் மேனர்சோடு சிறுவனை சாப்பிடுமாறு சாப்ளின் பயிற்சி அளிப்பார். வயிற்றுக்கில்லையென்றாலும் நாகரீகத்தை விட முடியாதல்லவா என்று சாப்ளின் கேலி செய்வது இங்கு நினைவுக்கு வருகிறது.

தமிழக உணவு வகைகள், வட்டார உணவு ருசிகள் என்று இப்போது நகர்ப்புறத்து நடுத்தர வர்க்கத்தை குறிவைத்து நடத்தப்படும் உணவு மேளாக்கள் எல்லாம் வட்டார ஆதிக்க சாதியினரின் உணவு பழக்கங்களைத்தான் வைத்திருக்கின்றன. ஆனால் நிலமற்ற கூலி விவசாயிகளும் சரி, இல்லை சிறு விவசாயிகளும் சரி, இல்லை கொஞ்சம் வசதியான விவசாயிகளாக இருந்தாலும் சரி இத்தகைய தினுசு தினுசான உணவு வகைகளெல்லாம் அவர்களது வாழ்வில் இல்லை.

காலையில் நீராகாரம், மதியம் வற மிளகாய் அல்லது பச்சைமிளகாயோடு பழையது, இரவு சுடு சோறு என்பதே பெரும்பாலான கிராமத்து மக்களது உணவு. இதுவும் கூட முன்னர் தினை வகைகளோடு கம்பு, கேழ்வரகு, சோளம் முதலியவற்றை வைத்து களி, கூழ், ரொட்டி என்று இருந்தது. இன்றும் கூட பல கிராமங்களில் தீபாவளி, பொங்கல் முதலான பண்டிகைகளின் போதுதான் இட்லி, தோசையை செய்கிறார்கள். தருமபுரியில் களி உருண்டையை சாப்பிடும் திறனை வைத்து சித்தாள், பெரியாள் ஊதியத்தை முடிவு செய்வார்கள். இந்தக் களியை நீங்கள் மென்று சுவைக்க முடியாது. அப்படியே விழுங்க வேண்டும்.

குமரி மாவட்டத்தில் நீர் அதிகம் உள்ள பருப்புக் குழம்பு, தஞ்சையிலோ, ஈரோட்டிலோ இருக்கும் விவசாயிகளிடம் புளி கரைத்த நீர்க்குழம்பு இவைதான் அன்றாட குழம்பு வகைகள். அந்த குழம்பில் அன்று என்ன காய் போடுகிறார்கள் என்பதுதான் அவர்களுக்கு விசேசம். சென்னையின் சேரிகளில் வாழும் மக்கள் அனைவரும் இரவுதான் முறையான சமையல் செய்து சாப்பிடுகிறார்கள். பகலில் தேநீர், பன் என்று ஏதோ ஓட்டுகிறார்கள். இவர்களது அசைவ சமையல் கூட கோழி, மீன்களின் கழிவாக கருதப்படும் பகுதிகளை வைத்தே இருக்கும். அதாவது கோழிக் குழம்பு என்றால் கோழிகளின் தலை இருக்கும்.

அறுசுவைகளுக்கும் பெயர் பெற்ற செட்டிநாட்டு சமையல், பார்ப்பனர் சமையல், சைவ வேளாளர் சமையல், கொங்கு சமையல் போன்றவையெல்லாம் பெரும்பாலான மக்களின் அன்றாட வாழ்வில் இல்லை. ஆனால் பத்திரிகைகளெல்லாம் இவற்றைத்தான் தமிழரது உணவு வகைகள் என்று போற்றுகின்றன. நிலவுடமை சமூகத்தின் சுரண்டலில் தலைமை இடம் வகிக்கும் இத்தகைய சாதிகளது வாழ்க்கை முறையில்தான் இத்தகைய விருந்துகள் இருக்க முடியும். ஆனால் இவற்றை மட்டும் தமிழர் உணவு என்று சொல்வது முழுத் தமிழகத்தையும் பிரதிபலிப்பதாக ஆகாது.

சான்றாக ஆம்பூர் பிரியாணி, மாட்டுக்கறி வறுவலை தமிழர் உணவாக இவர்கள் ஏற்கமாட்டார்கள். ஆனால் இன்று நகர்ப்புறங்களின் கடுமுழைப்பு தொழிலாளிகள் தங்களது புரதத் தேவைக்காக கையேந்தி பவன்களில் மலிவான மாட்டுக்கறி உணவை விரும்பி சாப்பிடுகிறார்கள். டிகாஷன் காபியை விரும்பி அருந்துபவர்கள் அநேகம் பேர் பார்ப்பன ‘மேல்’ சாதியதினர்தான். ஆனால் தேநீர் என்பது தொழிலாளிகளின் பானமாக இருக்கிறது. சென்னை புள்ளாபுரத்தில் அருந்ததியினர் வாழும் பகுதியில் மாட்டுக்கறி உப்புக்கண்டத்தில் செய்யப்படும் சிப்ஸ் மிகவும் பிரபலம்.

ஆக தமிழர்களது உணவு முறைகள் அனைத்தும் வர்க்க வாழ்நிலைக்கேற்ப பிரிந்து இருக்கிறது. சாரத்தில் மூன்று வேளை சாப்பிடும் பழக்கமோ, வசதியோ அற்ற மக்கள் கணிசமாக வாழும் நாட்டில் நாம் ஆங்கில முறையில் மூன்று வேளை உண்ணுவதற்கான பெயர்களுக்கு எங்கே போவது?

மதுரையைச் சேர்ந்த மாவட்டங்களில் என்னதான் விருந்து சாப்பிட்டாலும் மக்கள் “கஞ்சி குடிச்சாச்சா” என்றுதான் கேட்பார்கள். அதையே நாமும் தமிழக உணவு முறைப் பெயராக கொள்ளலாமே? என்ன சொல்கிறீர்கள்?

நன்றி.

__________________________________________

வினவுடன் இணையுங்கள்

மேற்கு வங்கத்தில் போலி கம்யூனிஸ்டுகள் படுதோல்வி ஏன்?

42
உருகுது போலிக் கம்யூனிசம்! மருகுது சமூகப் பாசிசம்!!

மிழகத் தேர்தல் முடிவுகளைப் போல் அல்லாமல் மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகள் ஊடகங்களுக்கும் அதை நெருக்கமாக கவனித்து வந்த மக்களுக்கும் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. என்.டி.டிவி போன்ற ஒரு சில முதலாளித்துவ ஊடகங்களில் இது கம்யூனிசத்துக்கு நேர்ந்த தோல்வியா என்று அலசப்பட்டது. ஆனால் சி.பி.எம் தோழர்கள் தெளிவாக இருக்கிறார்கள். அங்கே கம்யூனிசம் இருந்தால் தானே தோற்பதற்கு? அது மற்றவர்களை விட அவர்களுக்குத் தானே தெளிவாகத் தெரியும்? எனவே, மக்கள் ஒரு மாற்றத்தை விரும்பினார்கள் என்றும் அதனால் தான் தோற்று விட்டோமென தலைவர்கள் சொல்லி வருகிறார்கள்.

இனி இத்தோல்வியை ஆராய்வதற்கென்று சி.பி.எம் கட்சி ஒரு கமிட்டியை அமைக்கும். அவர்களும் கண்களைக் கட்டிக் கொண்டு தோல்வியெனும் இந்தக் கருப்பு யானையைத் தடவித் தடவி விதவிதமாக ஆய்வு முடிவுகளை வெளியிடுவார்கள். அது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால், நாம் சி.பி.எம் கட்சி பெற்றிருக்கும் இந்தத் தோல்வியை அதன் முழுமையான பொருளில் அறிந்து கொள்வது மிகவும் அவசியம். அதற்கும் முன், சி.பி.எம்மின் 34 ஆண்டு கால ‘வெற்றியின்’ மெய்யான அர்த்தம் என்னவென்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இந்தியப் போலி ஜனநாயக அமைப்பில் தொடர்ச்சியாக 34 ஆண்டுகளாக ஒரு மாநிலத்தின் ஆளும் கட்சியாக நீடிக்க முடிந்திருப்பதன் காரணத்தை விளங்கிக் கொள்வதிலிருந்து தான் அவர்களின் இன்றைய தோல்வியையும் புரிந்து கொள்ள முடியும்.

சில முதலாளித்துவ அறிவுஜீவிகள், சி.பி.எம் கட்சி மக்களிடமிருந்து வெகுதூரம் விலகிப் போய் விட்டது என்று சொல்கிறார்கள். இத்தனை நாட்களாக சி.பி.எம் கட்சியின் பிரதானமான பலமாக இருந்த ஊரகப் பகுதியின் ஓட்டு வங்கி சிங்கூரிலும் நந்திகிராமிலும் சி.பி.எமின் வெறியாட்டத்தின் விளைவாய் தகர்ந்துள்ளது என்கிறார்கள். மேலும் மக்கள் ஒரே கட்சிக்குத் தொடர்ந்து வாக்களித்து சோர்ந்து போயிருந்தார்கள் என்றும் இப்போது தான் மம்தா பானர்ஜியின் வடிவில் ஒரு மாற்றத்தைக் கண்டடைந்துள்ளார்கள் என்றும் சொல்கிறார்கள். இதில் முழுமையும் உண்மையில்லை என்றாலும் முழுமையாகப் பொய்யும் இல்லை.

சி.பி.எம் கட்சியின் 34 ஆண்டு ‘வெற்றிக்’ கதை

சி.பி.எம் கட்சியினர் தங்களது மேற்கு வங்கச் சாதனையாக அடிக்கடி சுட்டிக் காட்டுவது அங்கே இவர்கள் செய்ததாக பெருமைபட்டுக் கொள்ளும் நிலச் சீர்திருத்தம். இந்த நிலச்சீர்திருத்தம் தான் சி.பி.எம் கட்சிக்கு மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு வலுவான வாக்கு வங்கியை உண்டாக்கித் தந்தது என்று அவர்களே சொல்கிறார்கள். அதில் உண்மை இல்லாமலும் இல்லை. ஆனால், இந்தியாவிலேயே மிகச் சிறப்பாக நிலச் சீர்திருத்தம் செய்துள்ள முதல் மாநிலமான மேற்கு வங்கம் தான் இந்தியாவில் விவசாயிகள் தற்கொலையில் ஆறாம் இடத்தில் இருக்கிறது. ஆக, இவர்கள் சொல்லும் நிலச் சீர்திருத்தம் உண்டாக்கிய உண்மையான விளைவு என்ன என்கிற இரகசியம் இதற்குள் தான் அடங்கியிருக்கிறது.

எங்கே செல்லும் இந்தப் பாதை...??

மேற்கு வங்கத்தில் எழுபதுகளில் ஆட்சிக்கு வரும் இடது முன்னணி பிற மாநிலங்களோடு ஒப்பிடும் போது ஓரளவுக்குச் சிறப்பான நிலச்சீர்திருத்தத்தை செய்திருந்தது. ஆனால், நிலச்சீர்திருத்ததின் விளைவாக நிலம் பெற்ற விவசாயிகள்  அதிலிருந்து உண்மையான பலன்களை அறுவடை செய்தார்களா? அப்படிச் செய்திருந்தால் ஏன் எழுபதுகளில் 33 லட்சமாக இருந்த நிலமற்ற விவசாகளின் எண்ணிக்கை இன்று இரட்டிப்பாகியுள்ளது? ஏன் பரவலாக விவசாயிகளின் தற்கொலைகள் நிகழ்கிறது? இதையும் மீறி, எப்படி இத்தனை ஆண்டுகளாக ஊரகப் பகுதிகளில் சி.பி.எம் தனது செல்வாக்கை நிலை நிறுத்திக் கொண்டிருந்தது?

இந்தக் கேள்விகள் தனித்தனியாகத் தெரிந்தாலும், இவற்றுக்கான விடை என்பது ஒரு தொகுப்பாகத் தான் பார்க்க முடியும். அதன் அடிப்படையிலிருந்தே சி.பி.எம்மின் வாங்கு வங்கியில் விழுந்த பெரிய ஓட்டையையும் அதன் தொடர் விளைவாய் இன்று அவர்கள் சந்தித்திருக்கும் தோல்வியையும் புரிந்து கொள்ள முடியும்.

நிலச் சீர்திருத்தம் என்றவுடன் நீங்கள் நினைப்பது போல் நிலமற்ற விவசாயிகளுக்கு அப்படியே நிலத்தின் உரிமையை எந்த கேள்வியும் இன்றி மாற்றிக் கொடுத்து விட்டார்கள் என்று பொருள் இல்லை. நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நிலங்களுக்கான பட்டாக்களை விவசாயிகளின் கைகளில் கொடுக்காமல், அவற்றை அந்தந்த பகுதி கட்சி அலுவலகத்திலேயே வைத்துப் பராமரித்துள்ளனர். உண்மையில், அந்தக் கால ஜமீன்தார்களின் இடத்தை வட்டார கட்சித் தலைவர்களைக் கொண்டு மாற்றீடு செய்தது தான் மேற்குவங்கத்தில் ‘தோழர்கள்’ செய்த நிலச்சீர்திருத்தத்தின் மிக முக்கியமான அடிப்படை. ஒருபக்கம் விவசாயிகளுக்கு நிலத்தின் மேலிருந்த உரிமையை உறுதிப்படுத்தியிருந்தாலும், இன்னொரு பக்கம் அதையே தனது வாக்கு வங்கியை உறுதிப் படுத்திக் கொள்ளும் நேரடியான ஒரு பேரப் பொருளாகவும் வைத்திருக்கிறார்கள்.

ஒரு பக்கம் நிலமற்ற விவசாயிகளுக்கு நிலத்தை வழங்கியிருப்பதாகச் சொல்லும் அதே சி.பி.எம் அரசு தான், இன்னொரு பக்கம் விவசாயப் பொருட்களைச் சந்தைப் படுத்துவதற்கான ஒரு சட்டத்தை (Agricultural products marketing commitee act) நிறைவேற்றி, பன்னாட்டு நிறுவனங்கள் கான்டிராக்ட் விவசாயத்தில் ஈடுபடவும், தனியார் விவசாயக் கிடங்குகளை நிறுவவும் அனுமதியளித்தது. இந்தியாவின் மற்ற பகுதிகளில் விவசாயத்தைக் காட்டிக் கொடுத்து விவசாயிகளைக் கருவறுக்கும் மறுகாலனியாக்கப் பொருளாதாரக் கொள்கைகளை எப்படி பிற ‘முதாலாளித்துவக்’ கட்சிகளின் அரசுகள் நடைமுறைப்படுத்தியதோ அப்படியே மேற்கு வங்கத்தின் ‘பாட்டாளி’ வர்க்கக் கட்சியும் நடைமுறைப்படுத்தியது. இப்படி, வெறுமனே நில உரிமையை மட்டும் விவசாயிகளிடம் கொடுத்து விட்டு விவசாயத்தின் மீது அவர்களுக்கு இருந்த உரிமையைப் பறிக்கும் பொருளாதாரக் கொள்கைகளையும் நடைமுறைப்படுத்தியிருக்கிறார்கள்.

இதன் அடிப்படையில் தான் அரசு தானியக் கிடங்குகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு விவசாயிகள் நிர்க்கதியாக விடப்பட்டனர். கடந்த டிசம்பர் – ஜனவரி மாத வாக்கில் இந்தியாவெங்கும் காய்கறிகளின் விலை உயர்ந்து மக்களின் கழுத்தை நெறித்துக் கொண்டிருந்த சமயத்தில் மேற்கு வங்க விவசாயிகளிடமிருந்து ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்டிருந்த 42 லட்சம் டன் உருளைக் கிழங்குகள் முறையான சேமிப்புக் கிடங்கு இல்லாமல் அழுகி நாறிக் கிடந்தது. ஆதாரம் – http://indiatoday.intoday.in/site/video/42-lakh-tonnes-of-potatoes-rot-in-west-begal/1/126469.html

‘பாட்டாளி வர்க்க’ அரசின் சேமிப்புக் கிடங்குகளில் முதலாளித்துவ பெப்சியின் லேய்ஸ் சிப்ஸ் தயாரிப்புக்காக கொள்முதல் செய்யப்பட்ட உருளைக் கிழங்குகளைச் சேமிப்பதற்காக மட்டும் பெரும்பாலான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேற்குவங்க ‘பாட்டாளித்’ தோழர்களின் இந்த துரோகத்தனத்தை எதிர்த்து சமீபத்தில் ஹூக்ளி மாவட்ட உருளை விவசாயிகள் போராடியுள்ளனர்.

சுமார் 6 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களை பகிர்ந்து கொடுத்திருப்பதாகச் சொல்லும் சி.பி.எம், அதில், சுமார் 1.20 லட்சம் விளை நிலங்களை பன்னாட்டு ரியல் எஸ்டேட் முதலைகளுக்கு தாரை வார்த்துக் கொடுத்துள்ளது. சுமார் 4 லட்சம் விவசாயிகள், தங்கள் நிலங்களை வசதியான விவசாயிகளுக்கு விற்று விட்டு விவசாயத்தை விட்டே விலகிச் சென்றுள்ளனர்.

நிலச் சீர்திருத்தம் என்கிற பெயரில் நிலங்களை வழங்கி விட்டு,  கீழ்மட்டத்திலிருந்து விவசாயத்தைக் கருவறுக்கும் வேலையையும் மேலிருந்து தொழில் வளர்ச்சி எனும் பெயரில் விவசாயப் புறக்கணிப்பையும் செய்தது தான் சி.பி.எமின் சாதனை. இது மட்டுமில்லாமல், ஒவ்வொரு துறையிலும் சில பொருளாதாரவாதக் கோரிக்கைகளை நிறைவேற்றுவது – அடுத்து அந்தப் பொருளாதாரமே நிலைத்து நிற்பதற்கான அஸ்திவாரத்தை உடைப்பது எனும் அளவில் தான் கடந்த 34 ஆண்டுகால சி.பி.எம்மின் மேற்குவங்க ஆட்சி நடந்துள்ளது.

சிபிஎம் மேற்கு வங்க மாநிலத்தில் விவசாயத்திற்கு செய்த துரோகத்தனங்களின் விளைவாக ஏற்கனவே ஊரகப் பகுதிகளில் பரந்துபட்ட மக்களிடம் ஒரு வெறுப்பைச் சம்பாதித்து வைத்திருந்த நிலையில் தான் சிங்கூரும் நந்திகிராமும் வருகிறது. ஏதுமில்லாவிட்டாலும் நிலமாவது இருக்கிறதே என்கிற குறைந்தபட்ச நம்பிக்கையிலிருந்த மக்களின் ஆத்திரத்தை இவ்விரு விவகாரங்களும் கிளப்பி விட்டதன் உடனடி விளைவு தான் இன்றைய தோல்வி. ஆனால்,  இது நொறுங்கி விழக் காத்திருந்த சீட்டுக் கட்டு மாளிகையின் மேல் கொசு அமர்ந்ததைப் போன்ற ஒரு விளைவு தான்.

சிங்கூர் நந்திகிராம் பிரச்சினைகளின் போது சி.பி.எம்மின் அராஜகத்தை எதிர்த்துப் போராடிய மக்களோடு மக்களாக மம்தா பானர்ஜி நின்றது அவர்களுக்கு ஒரு நம்பிக்கையூட்டும் மாற்றாகத் தோற்றமளித்துள்ளது. வேறு வழியின்றி தொடர்ந்து ‘இடது’ முன்னணிக்குத் தொடர்ந்து வாக்களித்து வந்த மக்களுக்கு ஒரு மாற்று தோன்றி விட்டதாக நம்பியதன் விளைவு தான் சி.பி.எம்மின் பாரம்பரிய வாக்கு வங்கியில் விழுந்த பலமான அடிக்கு மிக முக்கியமான காரணம். அதே நேரம் முந்தைய தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தனித்து நின்று வாக்குகளைப் பிரித்தது போல் அல்லாமல் இந்த முறை மம்தா போட்டதைப் பொறுக்கிக் கொண்டு சென்றதும் சி.பி.எம்மிற்கு எதிரான வாக்குகள் சிதறாமல் செய்து விட்டது.

சி.பி.எம்மின் சாதனை மைல்கற்கள்!

கடந்த தேர்தல்களில் சி.பி.எம்மின் வலுவான வாக்கு வங்கியாக கிராமப்புற வாக்கு வங்கியே இருந்து வந்தது. நகர்ப்புறங்களில் பரவலாக வாக்குகள் குறைந்தாலும் கூட கிராமப்புறங்களில் கிடைக்கும் வாக்குகளைக் கொண்டே சமாளித்து வந்தது. ஊரகப் பகுதிகளில் தான் கொண்டிருக்கும் வலுவான வலைப்பின்னலைக் கொண்டு மக்களை அச்சுறுத்தியும் மிரட்டியும் தான் இந்த வாக்கு வங்கியைச் சிதறாமல் பார்த்துக் கொண்டது. இத்தனை ஆண்டுகளாக சி.பி.எம்மின் இந்த அடாவடிகளுக்குச் சவால் விடும் ஒரு மாற்று அமையாமல் போனது தான் தொடர்ந்து அந்த மக்கள் வேறு வழியின்றி அதற்கு வாக்களிக்கும் ஒரு நிர்பந்தத்தை உண்டாக்கியிருந்தது. தெருச் சண்டைக்காரி என்று ஊடகங்களால் குறிப்பிடப்படும் மம்தா பானர்ஜி சி.பி.எம்மின் ஆயுதத்தையே எடுத்து அதன் கண்களையே குத்திக் குடைந்ததைப் பார்த்த மக்களுக்கு அவர் ஒரு இயல்பான மாற்றாகத் தோற்றமளித்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை.

ஏற்கனவே பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் மிகக் குறைவான அரசு சுகாதார நிலையங்களைக் கொண்டிருக்கும் மேற்கு வங்க மாநிலத்தில், அரசு பொறுப்பில் இருக்கும் மருத்துவமனைகளும் கூட பன்றித் தொழுவம் போல் நாறிக் கிடக்கும் நிலையில், ஓரளவு பெரிய அரசு மருத்துவமனைகளை சத்தமில்லாமல் தனியார்மயமாக்கும் வேலையைச் செய்து வருகிறது. இந்த வகையில் தான், தெற்கு கொல்கத்தாவில் இருக்கும் அரசு காச நோய் மருத்துவமனையைத் தனியாருக்குத் தாரை வார்த்துள்ளது.

ஒரு புறம் தனக்கு அடிப்படையான பலத்தை வழங்கியிருந்த விவசாயிகளின் கோபத்தை சம்பாதித்திருந்த சிபிஎம், இன்னொரு புறம் தனது கணிசமான வாக்கு வங்கியாக இருந்த இசுலாமிய சமூகத்தின் வெறுப்பையும் ரிஸ்வானூர் ரஹ்மான் விவகாரத்தில் இழந்தது. இதுவும் கூட ரிஸ்வானூர் ரஹ்மான் என்கிற ஒரு தனிநபருக்காக தோன்றிய ஒட்டுமொத்த சமூகக் கோபம் என்று பிரித்துப் பார்க்க முடியாது. சமூக வளர்ச்சிக் குறியீடு, கல்வி, மருத்துவ வசதி என்று அனைத்து அலகுகளிலும் அரசுத் துறை புறக்கணிக்கப்பட்டதால் பின்தங்கியிருக்கும் ஒரு மாநிலத்தில் இயல்பாக உருவாகக் கூடிய ஆட்சிக்கு எதிரான மனநிலை ஏற்கனவே மக்களை சி.பி.எம்மிடம் இருந்து விலக்கியிருந்தது.

ஜோதிபாசுவிற்குப் பின் அதிகாரத்திற்கு வரும் புத்ததேவ் பட்டாச்சார்யாவோ, மக்களோடு எந்தவிதத்திலும் நெருங்கிய தொடர்பு கொண்டவரல்ல. அதற்கு முன் ஒரு வாய் வார்த்தையாகவாவது மக்கள் நலம், விவசாய வளர்ச்சி என்றெல்லாம் சொல்லப்பட்டு ஏற்படுத்தி வைத்திருந்த மாயத் திரையை எல்லாம் புத்ததேவ் வந்து கிழித்தெறிந்து கட்சியை மக்கள் முன் நிர்வாணமாக நிறுத்தினார். முந்தைய தலைவர்களைப் போல் அல்லாமல், எந்த வித மேல் பூச்சும் இன்றி மக்கள் விரோதப் பொருளாதாரக் கொள்கைகளை மிருகத்தனமாகத் திணித்தார் புத்ததேவ்.

கொல்கத்தாவில் கை ரிக்சாக்களை ஒழித்த போது மனிதர்களை வைத்து மனிதர்களே இழுத்துச் செல்வது கொல்கொத்தாவுக்கு வரும் வெளிநாடுகளைச் சேர்ந்த விருந்தினர்கள் நம்மைப் பற்றி  அசிங்கமாக நினைத்துக் கொள்ள வைத்து விடும் என்றார். தமிழகத்தில் கை ரிக்சா ஒழிக்கப்பட்ட போது கூட அது மனிதனின் சுயமரியாதைக்கு எதிரானது என்கிற ஒரு விளக்கம் சொல்லப்பட்டது ஆனால், பாட்டாளித் ‘தோழர்களோ’ கை ரிக்சாக்களை வெளிநாட்டுக்காரர்கள் ரசிக்கமாட்டார்கள் என்கிறது. குஜராத் ‘வளர்ச்சி’ பற்றி மோடி  உண்டாக்கியுள்ள ஊடக மயக்கங்களைப் போலவே மேற்கு வங்க வளர்ச்சி பற்றியும் முதலாளித்துவ ஊடகங்கள் வாயிலாகப் பிரச்சாரங்களை புத்ததேவ் முன்னெடுத்தார். இதற்காகவே, மேற்கு வங்கத்தின் பிராண்டு அம்பாசிடராக வேல்லி ஓவன் என்பவரையும் நியமித்தார்.

தொழில் வளர்ச்சி எனும் பெயரில் நிலங்களைப் பறித்ததை எதிர்த்துப் போராடிய மக்களையெல்லாம் அரக்கத்தனமாக ஒடுக்கியதோடு அதை வெளிப்படையாக நியாயப்படுத்தவும் செய்தார். நிலப்பறிப்புக்கு எதிராகப் போராடும் விவசாயிகள், புத்தாவிடம் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்த போது, ‘யார் இவர்கள், இவர்களோடு பேசுவதெல்லாம் என் தகுதிக்கே இழுக்கானது’ என்று தெரிவித்தார். இது ஏற்கனவே கட்சியை விட்டு விலகிப் போயிருந்த மக்களை முற்றிலும் விரோதமான ஒரு நிலைக்குத் தள்ளுகிறது.

இந்நிலையில் தான் உழைக்கும் மக்களின் தோழன் என்று சொல்லிக் கொள்ளும் கட்சி நேரடியான மக்கள் விரோதியாகவும், முதலாளித்துவக் கட்சியிலிருந்து பிரிந்து வந்து நகர்ப்புற லும்பன்களைத் தனது அடிப்படை பலமாகக் கொண்டிருந்த கட்சி ,மக்களின் நண்பனாகவும் தோற்றமளிக்கும் ஒரு வரலாற்று விநோதமும் நடந்தது.

முதலாளித்துவ எதிர்ப்பையோ மக்கள் விடுதலையையோ தனது திட்டத்திலேயே கொண்டிராத மம்தா பானர்ஜிக்கு பரந்துபட்ட மக்கள் ஆதரவை சி.பி.எம்மே ஏற்படுத்திக் கொடுக்கிறது. லால்கரில் போராடிய மக்களை வன்முறையுடன் அடக்கி ஒடுக்க, ஆயுதம் தாங்கிய தனது கட்சியின் ரவுடிகளை அனுப்பிய புத்ததேவ், அது பழிக்குப் பழிவாங்கும் செயல் என்று கூசாமல் சொல்கிறார் – இன்று முதலாளிகள் சங்கத்தின் தலைவரைத் தனது வேட்பாளராக களமிறக்கிய மம்தா பானர்ஜி, அன்று லால்கரில் போராடிக் கொண்டிருந்த மக்களின் தோளோடு தோள் நிற்கிறார்.

சி.பி.எம் இன்றைக்கு வந்தடைந்திருக்கும் பாசிச வடிவம் என்பது அவர்கள் இத்தனை ஆண்டுகளாக செயல்படுத்தி வந்த பொருளாதாரவாத செயல்திட்டங்களினின்று முரண்பட்ட ஒன்றல்ல. சி.பி.எம்மின் பொருளாதாரவாதத்தின் ஒரு எதார்த்தமான நீட்சி தான் இன்று அவர்களை ஒரு சமூக பாசிஸ்டுகளாக சீரழித்துள்ளது. சிபிஎம் கட்சியின் மிக முக்கியமான பலமாக விளங்கியது அவர்களின் தொழிற்சங்கங்கள். கீழ் மட்ட அளவில் ஒவ்வொரு தொழிற் பிரிவிலும் வலுவான தொழிற்சங்கங்களை நிறுவி அந்தந்தப் பிரிவின் பொருளாதாரக் கோரிக்கைகளை மட்டும் போராடியோ பேரம் பேசியோ வாங்கித் தருவது – மேலிருந்து ஒட்டு மொத்தமாக உள்நாட்டு தேசியத் தொழில்களின் நசிவைக் கோரும் மறுகாலனியாக்கப் பொருளாதாரக் கொள்கைகளை ஏற்றுக் கொள்வது என்கிற இந்த வினோதமான நிலை உண்மையில் ஒரு முரண்பாடே அல்ல.

மேற்கு வங்கத்தின் நீரோ யாரு?

விவசாயத்தின் நசிவிற்கும், உள்நாட்டுத் தொழில்களின் நசிவிற்குமான அடிப்படையான காரணம் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் எனும் மறுகாலனியாக்கப் பொருளாதாரக் கொள்கையாக இருக்கும் போது, அந்தந்தப் பிரிவுக் கோரிக்கைகளுக்கு மட்டும் முகம் கொடுத்து விட்டு ஒட்டுமொத்தமான காரணத்திற்கு முகம் திருப்பிக் கொள்வதன் நீட்சி தான் சி.பி.எம் கட்சி வந்தடைந்திருக்கும் ஒரு குழப்பமான நிலைக்குக் காரணம். அதனால் தான் முதலீடுகளைப் பற்றியும், போராட்டங்களைப் பற்றியும் புத்ததேவ் தெரிவிக்கும் கருத்துக்கள் மோடியின் கருத்துக்களோடும், மன்மோகன் – மான்டேக் சிங் கும்பலின் கருத்துக்களோடும் அசப்பில் அப்படியே ஒத்துப் போகிறது. அதனால் தான் எந்தவிதக் கூச்சநாச்சமும் இன்றி கம்யூனிஸ்டுகளை ஒழித்துக் கட்டிய மலேசிய சலீம் குழுமத்தோடு ஒட்டி உறவாடவும் முடிகிறது.

இப்போது அதிகாரத்திற்கு வந்துள்ள மம்தா பானர்ஜியும் சி.பி.எம்மின் கொள்கைகளில் இருந்து சாராம்சத்தில் வேறுபட்டவரல்ல. இப்போதே ஊடக விவாதங்களில் தமது கட்சி மேற்கு வங்கத்  தொழில் வளர்ச்சிக்கு எந்த வகையிலும் இடையூறாக இருக்காது என்கிற உறுதிமொழிகளை அளிக்கத் துவங்கி விட்டார். இப்போது வேறுபாடு என்பது மறுகாலனியாக்க வளர்ச்சியை வலிந்து திணிப்பதா அல்லது வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல ஏமாற்றிக் கொடுப்பதா  என்பதில் மட்டும் தான். மேல் மட்ட அளவிலான பொருளாதரக் கொள்கைகளில் மாற்றம் ஏதும் கிடையாது என்பதை அறிவித்துள்ள அதே நேரத்தில் கீழ் மட்ட அளவிலும் சி.பி.எம்மின் அதே போக்குகளையே திரினமூல் காங்கிரசும் பின்பற்றத் தொடங்கியுள்ளது.

சி.பி.எம் மாநில அளவில் கீழ்மட்ட அளவில் நிர்வகித்து வந்த வலைப் பின்னலை இப்போது மம்தா கைப்பற்றியுள்ளார். இன்னும் சொல்லப்போனால், கீழ் மட்ட அளவில் சி.பி.எம் உண்டாக்கி வைத்திருந்த கட்சி ரீதியான அதிகாரத்துவ ரவுடிகளும் அந்த அமைப்பும் இப்போது சி.பி.எம் லேபிளைக் கழட்டியெறிந்து விட்டு திரிணாமூல் காங்கிரசின் லேபிளை ஒட்டிக் கொண்டுள்ளது.

உதாரணமாக, கொல்கத்தா நகரில் ஆட்டோ ஓட்டுனர்களை நிர்வகித்துக் கட்டுப்படுத்தும் ஆட்டோ யூனியன்களும் அதன் வட்டாரத் தலைவர்களும் இப்போதே திரிணாமூல் காங்கிரசுக்கு பரவலாக மாறி வருவதாக செய்திகள் வருகிறது. இதையே ஊரகப் பகுதிகளுக்கும் விரித்துச் செல்வதைக் கடந்து மம்தா பானர்ஜிக்கு வேறு வாய்ப்புகள் இருக்காது. மக்களை அரசியல் படுத்தாமல் வெறும் பொருளாதாரவாதக் கோரிக்கைகளுக்கு மட்டும் போராடப் பழக்கப்படுத்தி அதன் மேல் தனது வாக்கு வங்கியைக் கட்டமைக்கும் சி.பி.எம்மின் உத்தி இப்போது அவர்களையே பூமராங் போலத் திருப்பித் தாக்குகிறது.

ஆக, மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரசும் சி.பி.எம்மிலிருந்து சாராம்சத்தில் வேறுபட்டவரல்ல. அந்த வகையில் ஐந்து ஆண்டுகள் கழித்து சி.பி.எம் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றும் வாய்ப்பு கூட இருக்கிறது. ஆனால், அப்போது சி.பி.எம்மிற்கு வேறெந்த ஒப்பனையும் தேவையாக இருக்காது. தி.மு.கவும் அ.திமு.கவும் மாறி மாறி வருவது போல் இவர்களும் செத்து செத்து விளையாடிக் கொண்டிருக்கலாம்.

தனது திட்டத்திலும், நடைமுறையிலும் புரட்சியை ஒழித்துக் கட்டியிருக்கும் சி.பி.எம் கட்சி இனிமேலும் தனது போலி கம்யூனிச அடையாளங்களைக் கூட பின்பற்ற முடியாது என்ற நிலையைத்தான் மேற்கு வங்க தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன. முப்பத்தி நான்கு ஆண்டுகள் பொருளாதாரவாதம், பாசிச நடைமுறை, கட்சி கும்பலின் சர்வாதிகாரம், தொழிலாளிகள்-விவசாயிகள் மீதான அடக்குமுறை என்று சமூக பாசிஸ்டுகளாக மாறிவிட்ட கட்சி இனிமேலும் தங்களை கம்யூனிஸ்டுகள் என்று அழைத்துக்கொள்ளாமல் இருந்தால் பொருத்தமாக இருக்கும். ‘தோழர்கள்’ தயைகூர்ந்து இதைப் பரிசீலித்து அமல்படுத்த வேண்டும்.

நாங்களும் போலிக்கம்யூனிஸடுகள் யார், ஏன் என்று விளக்கமளித்து விளக்கமளித்து சலித்துப் போயிருக்கிறோம்.

_______________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

பெரியகோவிலை வைத்து பார்ப்பன தினமலர் பரப்பும் மூடநம்பிக்கை!

35

பெரியகோவிலை வைத்து பார்ப்பன தினமலர் பரப்பும் மூடநம்பிக்கை !

ந்தத் தேர்தலில் கொங்குவேளாளர், தேவர், நாடார், நாயுடு முதலான ஆதிக்க சாதி சங்கங்கள் – கட்சிகள் எந்தெந்தக் கூட்டணியை ஆதரித்தார்கள் என்பது நமக்குத் தெரியும். ஆனால் தமிழ்நாடு பிராமணர் சங்கம் அ.தி.மு.கவையும், ஜெயலலிதாவையும் ஆதரித்த்து எத்தனை பேருக்குத் தெரியும்? தேர்தல் முடிவு குறித்து தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் அங்கத்தினர்கள் வீட்டில் வடை பாயாசத்தோடு கொண்டாடி வருவது குறித்து அறிவீர்களா? ஆதாரம் வேண்டுவோர் அந்தக் கொண்டாட்டத்தை தினுசு தினுசாக நடத்தி வரும் தினமலர் பத்திரிகையை புரட்டினாலே போதும்!

இந்துத்வாவின் இந்திய நாயகன் மோடி, பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் பொன்.இராதாகிருஷ்ணன் முதலானோர் ஜெயா பதவி ஏற்பு விழாவில் முக்கிய நாயகர்கள். தமிழகத்தில் பா.ஜ.க தனியாக போட்டியிட்டதெல்லாம் சும்மா ஒரு கண்துடைப்பு. “இதுவரை தமிழகம் கண்ட முதல்வர்களிலே ஒரே இந்து முதல்வர் புரட்சித் தலைவிதான்” என்று பார்ப்பன இந்து முன்னணி இராமகோபாலன் வாயால் பாராட்டப்பட்டிருக்கும் போது தமிழகத்தில் பா.ஜ.க என்று ஒரு அரசியல் கட்சியே தேவையில்லையே?

அப்படித்தான் தினமலரும் ‘அம்மா’வின் அறிவிக்கப்படாத கோயாபல்சாக எழுதி வருகிறது. தினமலரை அதன் விரிவான செய்தி கவரேஜூக்காக வாசகர்கள் பார்க்கிறார்கள் என்றால் வருபவர்களை கையைப் பிடித்து வலுக்கட்டாயமாக போயஸ்தோட்டம் உள்ளிட்ட அக்ரகாரங்களுக்கு அழைத்துச்செல்வதை தினமலர் ஒரு கடமையாகவே செய்கிறது.

ஜெய கும்பலின் வெற்றியை புதிது புதிதாக எழுதி வரும் தினமலர் அதில் ஒன்றாய் இந்த பெரிய கோவில் சமாச்சாரத்தை வெளியிட்டிருக்கிறது. பெரியகோவிலுக்கு செல்லும் பிரபலங்கள் தமது பதவியையோ இல்லை உயிரையோ இழப்பார்கள் என்பது ஐதீகமாம். ஏற்கனவே இந்திரா காந்தி, எம்.ஜி.ஆர், சங்கர்தயாள் சர்மா போன்றவர்களுக்கு அப்படி நடந்திருக்கிறதாம். அவர்கள் உயிரை இழந்தார்களா, இல்லை பதவியை இழந்தார்களா, இல்லை இரண்டையும் இழந்தார்களா என்பதை மட்டும் தினமலர் குறிப்பிடவில்லை.

சென்ற ஆண்டு பெரிய கோவில் கட்டி முடிக்கப்பட்ட ஆயிரமாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக தஞ்சை வந்த கருணாநிதியும் அந்த சென்டிமெண்டை மனதில் கொண்டு முன்வாசல் வழியாக வராமல் பின்வாசல் வழியாக கோவிலுக்கு சென்றாராம். அந்த விழாவில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் அ.ராசா இப்போது திகார் சிறையில் இருக்க கருணாநிதியோ பதவியை இழந்திருக்கிறாராம்.

இதன்படி பார்த்தால் கருணாநிதி இறப்பதற்கு கூட இதுதான் காரணமென்று இப்போதே தினமலர் அறிவித்திருக்கிறது. இருக்கட்டும், ராசா பேசிய அதே விழாவில் நாட்டிய பிரபலம் பத்மா சுப்பிரமணியம் ஆயிரம் நடனக் கலைஞர்களோடு பெரிய கோவிலில் நாட்டிய நிகழ்ச்சி நடத்தினாரே அவரும் பிரபலம்தானே? தினமலர் ஆய்வு முடிவுப்படி அவரும் இதற்கு முன்போ இல்லை கூடிய சீக்கிரமோ மண்டையைப் போடவேண்டுமே? ஒரு வேளை இந்த உயிர் துறக்கும் பெரியகோவில் சாஸ்திரம் தமிழ்நாட்டு பார்ப்பனர்களுக்கு மட்டும் கிடையாதோ?

எப்படியெல்லாம் மூடநம்பிக்கையை வெட்கமற்று அயோக்கியத்தனமான முறையில் பரப்புகிறார்கள் பாருங்கள்! தனது கோவிலுக்கு வரும் பிரபலங்களை ஒரு ஆண்டவன் கொல்கிறான் என்றால் அவன் கடவுளா இல்லை டிராகுலாவா? இதற்கு முன் இப்படி பல பிரபங்களை அந்த பெருவுடையார் கொன்றிருக்கிறான் என்றால் அவன் மீது கொலை வழக்கு பதிவு செய்து குற்றத்தை நிரூபித்து தூக்கில் போடுவதுதானே சரியாக இருக்கும்?

பெரியகோவில் குடமுழுக்கின் போது தீவிபத்து ஏற்பட்டு ஐம்பது பேர் செத்துப் போனார்களே அதற்கு என்ன காரணம்? அதை வைத்து தினமலர் பாணியில் ஒரு செய்தி வெளியிடுவதாக இருந்தால், “தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம் நடக்கும் போது கண்டிப்பாக ஐம்பது பேர்கள் இறப்பார்கள்” என்றல்லவா இருக்கும்?

சபரிமலையில் ஆண்டுதோறும் நெரிசல் ஏற்பட்டு பல ஐயப்ப்ப சாமிகள் பரிதாபமாக சாகிறார்கள். இன்று கூட திருப்பதிக்கு சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகி ஐம்பது பக்தர்கள் காயம்பட்டிருக்கிறார்கள். இது போக அமர்நாத், காசி, மதுரா என்று எல்லா  பக்தி சுற்றுலாக்களின் போதும் விபத்து நடந்து பலர் சாகிறார்கள். இதையும் தினமலர் பாணியில் “புண்ணிய ஷேத்தரங்களுக்கு சென்றால் மரணம் நிச்சயம்” என்று வெளியிடலாமே? பார்ப்பன தினமலர் அப்படி வெளியிட்டால் பெரியகோவில் சென்டிமெண்டையும் நாம் மன்னித்து விடலாம்.

கொலைகார சங்கரச்சாரி ஜெயேந்திரனை கைது செய்ததால்தான் சுனாமி வந்து ஆயிரக்கணக்கில் மக்கள் செத்து போனார்கள் என்று அக்மார்க் பார்ப்பனர்கள் பேசிய நாடல்லவா இது. அதன் நீட்சிதான் தினமலரின் இந்த வக்கிரமான செய்தி.

தினமலரின் இளவல் அந்துமணி என்ற இரமேஷ் தனது அலுவலகத்தில் ஒரு பெண்ணிடம் பாலியல் வன்முறை செய்தார் என்ற செய்தி பல பத்திரிகைகளில் வந்து நாறியதே, அதன்படி தினமலரில் புனைபெயரில் எழுதும் அத்தனைபெரும் பொறுக்கிகள் என்று ஒரு சென்டிமெண்டை நாம் ஏன் ஆரம்பித்துவைக்கக் கூடாது?

கால்வாசி நாட்கள் போயஸ்தோட்டத்திலும், முக்கால்வாசி நாட்கள் கொடநாட்டிலும் ஓய்வு அரசியல் நடத்தும் ஜெயலலிதாவே தொட்டதுக்கெல்லாம் ஜோசியம், பில்லிசூன்யம், யாகம், பரிகாரம் என்று வாழ்கிறவர்தான். முந்தைய ஆட்சிக்காலத்தில் ஊட்டியில் நடந்த கஜமுக யாகத்தை நினைவிருக்கிறதா? தமிழகக் கோவிலில் உள்ள யானைகளையெல்லாம் சித்ரவதை செய்து லாரிகளில் ஏற்றி அலைக்கழித்து ஊட்டி கொண்டு சென்று எப்படியெல்லாம் வதைசெய்து ஆடினார்கள்?

கண்ணகி சிலையை லாரி வைத்து இடித்தது, புதிய சட்டமன்றம் வாஸ்துபடி சரியாக இல்லை என்று கோட்டைக்கு திரும்பியது என்று ஜெயலலிதாவின் பார்ப்பன நம்பிக்கைகளுக்காக மக்கள் பணம் எப்படி விரயமாக்கப்படுகிறது என்பதை அறிவோம். அதற்கு சற்றும் குறைவில்லாத படி தினமலரும் தனது பார்ப்பன முட்டாள்தனங்களை கக்கி வருகிறது. இன்னும் ஐந்தாண்டு காலத்தில் இந்தக்கூட்டம் என்னவெல்லாம் ஆடப்போகிறதோ தெரியவில்லை.

முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டும். எடுப்போம்.

ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்லுக்கோதா உபநிடதத்தின் படி பெயரில் வெற்றியை தாங்கியிருக்கும் பெண் ஆட்சியாளரை புகழ்ந்து பாடும் புலவர்கள் (தற்போது பத்திரிகைகள்- அதன் முதலாளிகள், ஆசிரியர்கள்) அனைவரும் சரியாக ஒன்பது மாதங்கள், ஒன்பது வாரங்கள், ஒன்பது நாட்கள், ஒன்பது மணிகள், ஒன்பது நிமிடங்கள், ஒன்பது விநாடியில் ரத்தம் கக்கி சாவார்கள் என்று போட்டிருப்பது நிச்சயம் பலிக்குமாம். ஏனெனில் ஒன்பது என்ற எண் அந்த அல்லிராணியின் ராசியான எண்ணாம்.

இதிலிருந்து தப்ப வேண்டுமென்றால் ஒன்று அந்த அல்லிராணி ஒன்பது மாதங்களுக்குள் ஆட்சியை இழக்கவேண்டும். இல்லையென்றால் அந்தப் புலவர்கள் தங்கள் வாழ்க்கையில் இனி ஒருபோதும் பாட்டு எழுதாமல் இருக்க வேண்டுமாம். ஆக புலவர்கள் பாட்டை நிறுத்தப் போகிறார்களா இல்லை ரத்தம் கக்கி சாகப் போகிறார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 

ஜெயலலிதாவுக்கு…. ஹிந்து – தினமணி ஜிஞ்சக்கு ஜிஞ்சா!

43

கேள்வி 1:
இது அ.இ.அ.தி.மு.க வின் அபார வெற்றியா!
இல்லை தி.மு.க வின் பயங்கர தோல்வியா???

கேள்வி 2:
என்ன காரணம்?

கேள்வி 3:
இந்த வெற்றியில் விஜய்க்கு பங்கு எந்த அளவு?

– மஹாதீர் முஹம்து

_____________________________________________________________________

அன்புள்ள மஹாதீர் முஹம்து

ந்தத் தேர்தல் முடிவில் இளைய தளபதிக்கு எந்தப் பங்கும் இல்லை. எனினும் ஆத்தா வெற்றி பெற்றதும் நெஞ்சிரைக்க ஓடி வந்து வாழ்த்து தெரிவித்து விட்டு இந்த தேர்தலுக்கு வேலைசெய்த தனது இரசிகக் குஞ்சுகளுக்கு அவர் வலிந்து நன்றியை தெரிவித்தார். எல்லாம் ஜெயிக்கிற குதிரையில் பணம் கட்டும் காரியவாதம்தான். இத்தனைக்கும் அவர் தேர்தலில் வெளிப்படையாக பிரச்சாரமோ, டி.வியில் தோன்றி வேண்டுகோளோ கூட தெரிவிக்கவில்லை. எல்லாம் மழுப்பலான அறிக்கைகளோடு முடித்துக் கொண்டார். ஒரு வேளை தி.மு.க மீண்டும் வெற்றி பெற்றால் என்ன நடக்குமோ என்ற சுயநல பயம்தான்.

இதையே சில அரசியலற்ற காரியவாதிகள் “இதற்கு மேல் விஜய் என்ன செய்ய முடியும்” என்று ‘தத்துவ’ விளக்கமும் கொடுப்பார்கள். ஒரு வேளை விஜய் வெளிப்படையாக பிரச்சாரம் செய்திருந்தாலும் அவருக்காக மட்டும் மக்கள் வாக்குகள் சிலிர்ப்புடன் அணிவகுத்திருக்காது. தமிழ்நாட்டில் நட்சத்திரங்கள் அரசியலில் செல்வாக்கு செலுத்தும் நிலை எம்.ஜி.ஆரோடு முடிந்து விட்டது. ஆனானப்பட்ட ரஜினயே ப்யூஸ் போன நிலையில், விஜயகாந்தெல்லாம் கூட்டணி தயவில் குப்பை கொட்ட வேண்டிய காலத்தில் விஜயெல்லாம் எம்மாத்திரம்? ஆனால் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரன் ஒரு தேர்ந்த காரியவாதியாக தனது மகன் பிற்காலத்தில் முதலமைச்சராக வருவான் என்று கனவு காண்கிறார். அது தமிழ்சினிமா கதைமாந்தர்கள் சைக்கிளை மிதித்து ஒரு வட்டத்தில் முதலமைச்சராக எழுவதான ரீல் போன்றது.

இந்த வெத்து வேட்டு ஹீரோக்களை விட ஆனது ஆகட்டும் என்று களத்தில் இறங்கிய காமெடியன் வடிவேலு எவ்வளவோ மேல். இதற்கு மேல் விஜய்க்கு முக்கியத்துவம் கொடுப்பதோ, விளக்கம் அளிப்பதோ தமிழுக்கும், வினவு வாசகருக்கும் இழைக்கப்படும் அநீதி. இந்த பதில் கூட மஹாதீர் முஹம்து போன்ற நல்லவர்கள் கேட்டு விட்டதினாலே எழுதியதுதான். ________________________________________________

இனி முக்கிய கேள்விக்கு வருவோம். இந்த தேர்தல் வெற்றியை எப்படி பார்ப்பது? இது குறித்து வினவில் முன்னர் வந்த இடுகைகளில் சில விசயங்களை கோடிட்டு காண்பித்திருக்கிறோம். இங்கு சற்று விரிவாக…..

_________________________________________________

அ.தி.மு.கவின் மாபெரும் வெற்றி, தி.மு.வின் மரண அடி தோல்வி இரண்டையும் வாக்குப்பதிவு, ஊழல், குடும்ப ஆட்சி, மக்களின் மௌனப் புரட்சி, தேர்தல் கமிஷன்தான் ரியல் ஹீரோ என்று ஒரு பொதுவான  ஃபார்முலாவில் மட்டும் வைத்து விட்டு ஊடகங்களும் அறிஞர் பெருமக்களும் எளிமையாக முடித்து விடுகின்றனர். இவையெல்லாம் உண்மையல்ல என்று சொல்ல முடியாது. அதே நேரம் முழு உண்மைதான் என்று கொள்ளவும் இயலாது.

தி.மு.க பிடிக்கவில்லை என்றால் அ.தி.மு.க, அ.தி.மு.க பிடிக்கவில்லையென்றால் தி.மு.க இதைத் தாண்டி தமிழக மக்கள் அதி புரட்சிகரமாக யோசிப்பதற்கு வழி ஏதும் இருக்கிறதா? இதுவும் உண்மையல்ல என்று சொல்ல முடியாது. இதையே ஒரு ஃபார்முலாவாகக் கொண்டால் மாத்திப் போடு, மாத்தி யோசி, அது இல்லையினா இது என்றும் கூட இந்த தேர்தல் முடிவுகளை சொல்லலாமே?

இந்த தேர்தலில் வரலாறு காணாத அளவு வாக்குப்பதிவு அதிகம் இருந்தது உண்மைதான். அதனால் ஆளும் கட்சி மீது மக்கள் கடும் சினத்தோடு இருந்திருக்கிறார்கள் என்று ஒரு ஃபார்முலாவையும் இவர்கள் கூறுகிறார்கள். இந்த அதிக வாக்குப்பதிவுக்கும் அந்தக் கடுஞ்சினத்திற்கும் என்ன தொடர்பு? ஏன்? தொடர்பு இல்லையென்றால் வேறு என்ன காரணம்?

நண்பர்களே, தேர்தலையும், அரசியலையும் ஒரு சில கணக்கு விவரங்கள், நல்லது கெட்டது, ஊழல் நேர்மை, என்று சில வாய்ப்பாடுகளோடு மட்டும் சிந்திப்பதற்கு பழக்கப்படுத்தப் பட்டுள்ளோம்.  தேர்தல் அரசியலோடு தொடர்புடைய சமூக இயக்கம், மக்கள் மனவோட்டம் என்ன விதிமுறைகளோடு இயங்குகிறது, என்ன விசைகளால் உந்திச் செல்லப்படுகிறது என்பனவற்றை ஆய்வு செய்து கண்டுபிடித்தால் மட்டுமே இந்த தேர்தலில் வெற்றியின் தரத்தையும், தோல்வியின் மகிமையையும் நாம் கொஞ்சமாவது அறிந்து கொள்வோம்.

இந்த தேர்தல் முடிவினை வைத்து தினமணி பத்திரிகை, “”தமிழனென்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா!” என்கிற நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் வரிகளுக்கு உயிர் கொடுத்திருக்கும் தமிழக வாக்காளப் பெருமக்களை “”தினமணி” பெருமிதத்துடன் தலைவணங்கிப் பாராட்டுகிறது!” என்று மெய்சிலிர்க்கிறது. தமிழக மக்கள் பயங்கரமாக ஆர்த்தெழுந்து ஊழல், குடும்ப ஆட்சிக்கு எதிராக ஒரு ருத்ரதாண்டவமே ஆடியிருக்கிறார்கள் என்று வார்த்தைகளே வெட்கப்படுமளவு உச்சிமோருகிறது தினமணி.

அதிலும் பணம் கொடுத்து வாக்களிப்பவர்கள் என்ற அவப்பெயரை துடைத்தெறிந்து இந்தியாவுக்கே முன்னுதாரணமாக மாறி நாட்டையே காப்பாற்றிவிட்டார்களாம், தமிழக மக்கள்! இந்த வரலாறு காணாத தோல்விக்கு காரணமென்று தி.மு.கவின் குற்றப் பட்டியல்களை பட்டியலிடும் தினமணி, இந்த வெற்றிக்கு அருகதையானவர்தானா என்று ஜெயலலிதாவைப் பற்றி மறந்தும் கூட எழுதவில்லை. மட்டுமல்ல, சசிகலாவின் குடும்ப ஆதிக்கம் இருந்தாலும் பரவாயில்லை என்று தமிழக மக்கள் ஜெயா கும்பலை வெற்றிபெற வைத்துவிட்டார்களாம். இந்த ‘பரவாயில்லை’ என்பதன் அரசியல் தரத்தை பரிசீலித்துப் பார்க்கும் போது அந்த இமாலாய சாதனையின் அரசியல் வீழ்ச்சியை புரிந்து கொள்ள முடியாதா என்ன?

தி.மு.க படுதோல்வி, அ.தி.மு.க மாபெரும் வெற்றி என்பதை மற்றுமொரு தேர்தல் முடிவாக எடுத்துக் கொண்டு போனால் கூட பிரச்சினை இல்லை. அதை ஜாக்கி வைத்து வானத்துக்கு தூக்குவதையும், தங்களது பல்வேறு அபிலாஷைகளை  ஏற்றி அழகு பார்ப்பதையும் பார்த்தால் இவர்கள் அ.தி.மு.கவிற்கு மட்டுமல்ல, தி.மு.கவிற்கும் கருணாநிதியே நினைத்திராத ஆழமான பெருமைகளையெல்லாம் வழங்கி விடுகிறார்கள். தங்களது சொந்த முயற்சியில் எதையும் செய்ய முனையாத, விரும்பாத நடுத்தர வர்க்க அறிவு ஜீவிகள் பாமரர்களின் அரசியல் நடவடிக்கைகளுக்கு மட்டும் பொழிப்புரை, விளக்கம் கொடுத்து தன்னை சூப்பர்மேனாக கருதிக்கொள்ளும் அபத்தத்தைத்தான் சகிக்க முடியவில்லை.

தினமணியின் வானாளாவிய பாராட்டின் விளக்கம் ஜெயலலிதாவின் அணுகுமுறையில் பெறும் ஒளிதான் என்ன? மே 13 வாக்கு எண்ணிக்கை துவங்கி முன்னணி நிலவரம் உறுதியான நிலையில் மதியம் ஊடகங்களை சந்தித்த ஜெயலலிதா என்ன கூறினார்? தி.மு.க ஆட்சி மாநிலத்தை குட்டி சுவராக்கிவிட்டதாம், கஜானா காலியாம், சட்டத்தின் ஆட்சி நடக்கவில்லையாம் என்றெல்லாம் சொல்லிவிட்டு அடுத்து அவர் சொன்னதுதான் முக்கியமானது.

தி.மு.க ஆட்சி முடிந்து தான் ஆட்சிக்கு வந்த 91, 2001, 2011 ஆகிய மூன்று முறையும் இப்படித்தான் மாநிலத்தை மீட்டு வளம் கொழிக்க வைத்தாராம். 91 இல் ஆட்சிக்கு வந்து மாநிலத்தை மேம்படுத்தி அடுத்த தேர்தலில் தோல்வியுற்று 96-இல் ஆட்சி தி.மு.கவிற்கு போனதும் மாநிலம் சீர்கேடு அடைந்ததாம்.

கவனியுங்கள் நண்பர்களே, 91-96 ஆட்சிக்காலத்தில் ஜெயா-சசி கும்பல் ஆட்டம் போட்டதும், முழுத் தமிழகத்தை மொட்டை போட்டதும், பின்னர் வந்த தேர்தலில் அமைச்சர்கள் செருப்படி பட்டதும்தான் வரலாறு. இன்று ஜெயா அதை பொற்காலம் என்கிறார். எனில் பாசிச ஜெயா ஒரு துரும்பளவு கூட மாறவில்லை முன்னிலும் திமிராக பேசுகிறார் என்பதைக்கூடவா தினமணி அம்பிகள் புரிந்து கொள்ள முடியாது?

தினமணி தமிழ் அம்பிகளின் கதை இதுவென்றால் ஹிந்து இங்கிலீஷ் அம்பிகளின் கதையைப் பாருங்கள்! சனிக்கிழமை அன்று ஹிந்து பத்திரிகை தலையங்கத்தில் தினமணியின் கருத்தையே ரொம்பவும் பணிவான மொழியில், பிரச்சினையில்லாமல் எழுதியிருந்தார்கள். அதன் சாரமென்னவென்றால் இந்த ஆட்சி மாற்றம் ஆளுங்கட்சிக்கு எதிரான எதிர்ப்பு அலைதான் என்பதே. கான்வென்டு வர்க்கத்தின் தலைவியான ஜெயலலிதாவுக்கு ஹிந்து பத்திரிகைதான் மிகவும் முக்கியமானது. மற்றவர்கள் பேசினால் கூட கவலையில்லை, ஹிந்து பத்திரிகை இப்படி பேசுகிறார்கள் என்றதும் ஜெயலலிதா ஊடகங்களிடம் பகிரங்கமாக அறிவிக்கிறார்,

“இந்த தேர்தலில் ஆளுங்கட்சிக்கு எதிரான எதிரான அலையால் நான் வெற்றி பெறவில்லை. 2001-2006இல் எனது பொற்கால ஆட்சியை மக்கள் நினைவு கூர்ந்து அந்த ஆட்சி வேண்டுமென்றுதான் எனக்கு வாக்களித்திருக்கிறார்கள்” என்று கூறுகிறார். அடுத்த நாள் இந்த நாலுவரிச் செய்தி ஹிந்து பத்திரிகையில் தலைப்பு செய்தியாக வெளிவருகிறது. இடையில் என்ன நடந்திருக்கும்?

ஏற்கனவே மாலினி பார்த்தசாரதியை எப்படியும் கைது செய்ய வேண்டுமென்று மிரட்டிய ஜெயாவின் தர்பாரை மவுண்ரோடு மகாவிஷ்ணு மறந்திருக்கமாட்டார். அதே போன்று தலையங்கத்தில் இந்த முடிவு எதிர்ப்பு அலை என்று எழுதியது அம்மா காதுக்கு போய் மிரட்டல் வந்திருக்கலாம். அல்லது குடும்ப சண்டையில் மூழ்கியிருக்கும் ராம் தலையங்கத்தின் வரிகளை பார்த்து விட்டு அடுத்த நாளே இதை தணிக்கும் வகையில் இந்த செய்தியை திட்டமிட்டு வெளியிட்டிருக்கலாம். ஏனெனில் இந்த தலைப்புச் செய்தி வேறு எந்த ஊடகங்களிலும் முக்கிய செய்தியாக வெளிவரவில்லை.

ஆக இந்த தேர்தல் முடிவுகள் தனது பொற்கால ஆட்சிக்கு ஏங்கிய மக்களின் விருப்பம் என்று பேசும் ஜெயலலிதாவை , வைத்தியநாதனின் தினமணி மேம்போக்காவாவது கண்டிக்குமா?

சரி, 2001லிருந்து ஐந்து ஆண்டுகாலம் ஆட்சி பொற்காலமா, இல்லை அடக்குமுறைக் காலமா? மதமாற்றத் தடை சட்டம், ஆடு-கோழி பலி தடுப்புச் சட்டம், இலட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் பதவி நீக்கம் என்று பார்ப்பனிய பாசிசம் ஆட்டம் போட்டது இந்தக் காலம்தான். இதனாலேயே 2004 தேர்தலில் 39 பாராளுமன்றத் தொகுதிகளிலும் அ.தி.மு.க படுதோல்வி அடைந்தது. அதன் பின்னரே ஜெயலலிதா மேற்கண்ட அடக்குமுறைச் சட்டங்களை திரும்பப் பெறுகிறார். வரலாறு இப்படியிருக்க இதுதான் பொற்காலமென்று மக்கள் விரும்புகிறார்கள் என்று ஜெயலலிதா பேசுகிறார் என்றால் யார் மீது உள்ள நம்பிக்கையில்?

எல்லாம் தினமலர், தினமணி, ஹிந்து அடிமை அம்பிகள் மேல் உள்ள நம்பிக்கையில்தான். இல்லையென்றால் இன்று தலையங்கம் எழுதியிருக்கும் தினமணி, ஜெயலலிதாவுக்கு சில பல ஆலோசனைகளை மிக மிகப் பணிவாக எடுத்து வைத்து, இதெல்லாம் ஜெயலலிதாவுக்கு தெரியாதது அல்ல என்று காலில் விழுகிறது. ஏ துப்பு கெட்ட தினமணியே, ” 91இல் ஊழல் செய்தாய், 2001இல் அடக்குமுறை செய்தாய், இந்த முறையாவது ஒழுங்காக ஆளுகின்ற வழியைப் பார்” என்று கூட சொல்வதற்கு உங்களுக்கு தைரியமில்லையா? பிறகு என்ன நீங்கள் தேர்தல் முடிவு குறித்து தமிழனுக்கு வீரப்பட்டம் கொடுக்கிறீர்கள்?

தேர்தலுக்கு முந்தைய கூட்டணி பேரத்தில் காங்கிரசு, தி.மு.க முரண்பாடு வந்து அமைச்சர்கள் ராஜினாமா என்ற நாடகத்தை தினமலர் என்ன எழுதியது தெரியுமா? இது அத்தனையும் ஜெயலலிதாவின் மாஸ்டர் பிளானாம். இது இன்று நேற்றல்ல, ஜெயா கும்பல் ஆட்சியைப் பிடித்தது முதல் இப்படித்தான் பேசுகிறார்கள். ஜெயா ஒரு தைரியமான நபராம். முழு கட்சியும் அவரது காலில் விழுந்து கிடப்பதுதான் அதன் அடையாளமாம். பாசிசத்தையே இப்படி தைரியமென்று வியந்தோதும் அம்பிகள் தமிழ்நாட்டில் மட்டும்தான் இருக்கிறார்கள் என்பதை அறிந்தால் உலகம் காறித் துப்பும்.

கருணாநிதியை எதிர்ப்பதில்தான் கொஞ்சம் அரசியல் இருக்கிறதேயன்றி, ஜெயாவை ஆதரிப்பதில் கொஞ்சம் கூட அரசியல் இல்லை. இதுதான் இந்த தேர்தல் முடிவின் யோக்கியதை. அந்த வகையில் அ.தி.மு.கவின் வெற்றி என்பது ஒரு விபத்துதானே ஒழிய அது நேர்மறையில் நடந்ததல்ல.

ஒப்பீட்டளவில் 96-2001 தி.மு.க ஆட்சி என்பது பெரிய ஊழல்கள், ஏகபோகம், குடும்ப ஆட்சியோ இல்லாமல் இருந்தது. எனினும் 2001 தேர்தலில் தி.மு.க தோற்றது. அதை ஒட்டி தலையங்கம் எழுதிய தினமணி ” இது அதிர்ச்சியூட்டும் தீர்ப்பு, எனினும் ஜனநாயகத்தின் அழகே தனிதான்” என்றது. ஆக தினமணியே ஒத்துக்கொள்ளும் விதத்தில் இருந்த தி.மு.க ஆட்சி தோற்றதற்கு என்ன காரணம்?

பொதுவில் எம்.ஜி.ஆர், அ.தி.மு.க ஆட்சி குறித்து பாமர மக்களிடையே சில மூடநம்பிக்கைகள் உண்டு. ” இவர்கள் ஆட்சிக்காலத்தில்தான் மழை பெய்யும், விலைவாசி குறையும், பணப்புழக்கம் இருக்கும்”. இப்போது கூட ஜெயா டி.வியில் பேசிய ஒரு கட்சிக்காரர் இவற்றையே காரணங்களாக கூறுகிறார். அதாவது எந்த அரசியல் விழுமியங்களுமற்ற ஒரு லும்பன் சிந்தனையைக் கொண்டிருக்கும் பாமரர் கூட்டம் அ.தி.மு.கவின் வாக்கு வங்கியாக எப்போதும் இருக்கிறது. இந்த தேர்தலில் படித்த லும்பன் கூட்டமும் இதில் சேர்ந்திருக்கிறது.

அதனால்தான் இவர்கள் எல்லாரும் கருணாநிதியை திட்டுகிறார்களே தவிர, நேர்மறையில் அம்மா தகுதியானவர் என்று சொல்வதற்கு தயாரில்லை. ஆனால் ஊடகங்கள் அந்த வேலையை பெரும் ஜால்ரா சத்தத்துடன் செய்து வருகின்றன.

சாராமாகக் கூறில் கருணாநிதி தோற்கடிக்கப்பட்டதில் இருக்கும் அரசியல் ஜெயலலிதாவின் வெற்றியில் இல்லை. இவையெல்லாம் வேறுவழியின்றி போடப்பட்ட வாக்குகளால் மட்டும் வரவில்லை. அரசியலற்ற காரியவாதத்தின் செல்வாக்கு காரணமாகவே இது நடந்திருக்கிறது.

ஜெயாவை முசுலீம்களின் காவல் தெய்வமாக அங்கீகரித்த த.மு.மு.கவின் முகத்தில் கரி பூசும் விதமாக இந்த பதவியேற்பு விழாவில் கொலைகார மோடி கலந்து கொள்கிறார். இப்படி இன்னும் ஒரு சில நாட்களில் பழைய ஜெயலலிதாவை நாம் அப்படியே பார்க்கலாம். ஆனாலும் அதற்கும் கூட நமது ஜால்ரா ஊடகங்கள் புதுப்புது விளக்கங்கள் அளிக்கும். ‘அம்மா’ ஆதரவு காரியவாத மக்கள் கூட்டமும் அதை திக்கெட்டும் புகழாய்ப் பரப்பும்.

இந்த தேர்தல் பரப்புரையில் ஜெயா என்ன பேசினார்? ஆசியாவிலேயே முதல் பெரும் பணக்காரக் குடும்பமாக கருணாநிதி குடும்பம் மாறிவிட்டது, ஊழல் செய்வதில் புது சாதனை படைத்து விட்டது என்றெல்லாம் பேசினார் அல்லவா? இப்போது அதன் பொருட்டு என்ன செய்யப் போகிறார்? கருணாநிதி குடும்பத்திலிருந்து அந்த சொத்துக்களை திரும்ப பறிக்கப் போகிறாரா? அது நடக்க வேண்டுமென்றால் ஜெயாவுக்கு எதிராக கருணாநிதி போட்ட வழக்குகளிலேயே நடந்திருக்க வேண்டுமல்லவா? அத்தனையும் ஊத்தி மூடப்பட்ட நிலையில் இப்போது கருணாநிதிக்கு மட்டும் என்ன நடக்கும்?

கடந்த இரண்டு ஆண்டுகளாக மிடாசின் சரக்கு கருணாநிதி அரசாங்கத்தால் கொள்முதல் செய்யப்பட்ட உண்மையை பார்க்கும் போது சன்.டிவியிலிருந்து மாதந்தோறும் ஒரு கப்பம் போகாமாலா இருக்கும்? ஆக தமிழக மக்கள் இவ்வளவு ஆர்த்தெழுந்து வாக்கு போட்டு விரட்டியடித்த கருணாநிதிக்கு என்ன தண்டனை? கருணாநிதியே சொன்னது போல மக்கள் அவருக்கு ஒய்வு கொடுத்ததுதான். ஊழலுக்கு தண்டனை பதவி கிடையாது என்றால் அதன் பெயர் தண்டனையா?

இந்த ‘தண்டனை’யை வாங்கிக் கொடுத்த தமிழக மக்களைப் போய் அவர்களே வெட்கப்படுமளவு பாராட்டினால் தகுமா?

________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

ஜெயலலிதா: “புதிய கடவுளா? பழைய பிசாசா?”

32

ஜெயலலிதாமே 13-ம் தேதி காலை 10 மணி… தமிழகத் தேர்தல் நிலவரங்கள் தொலைகாட்சிகளில் பரபரப்புடன் ஒளிபரப்பாகத் தொடங்கின. சன், கலைஞர், ராஜ், பொதிகை தொலைகாட்சிகள் தத்தமது ஸ்டுடியோக்களில் அரசியல் கட்சித் தலைவர்களையும், பத்திரிகையாளர்களையும் அழைத்து வந்து நேரடி ஒளிபரப்பு செய்தன. பல்வேறு தொகுதிகளில் இருந்தும் வரும் தேர்தல் முன்னணி நிலவரங்களை சொல்லிக்கொண்டே விருந்தினர்களுடன் தேர்தல் பற்றிய கலந்துரையாடல் நடந்தது. அந்த சமயத்தில் ஜெயா டி.வி-க்கு ரிமோட்டை மாற்றினால்… அங்கு, நான்கு ஜோதிடர்களை அழைத்து வந்து ஸ்டுடியோவுக்குள் அமர வைத்து கணிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருந்தனர். ‘91-ல் ஜெயலலிதா ஆட்சி, 2001-ல் ஜெயலலிதா ஆட்சி. 2011-ல் கண்டிப்பா அம்மா ஆட்சிதான்’ என்று அவர்களும் பின்னி எடுத்தனர். எதிர்வரும் ஐந்தாண்டு கால ஜெயலலிதாவின் ஆட்சி எப்படி இருக்கப்போகிறது என்பதற்கு இது ஒரு முன்னோட்டம்!

மக்களை நம்பாமல், சொந்தக் கட்சிக்காரர்களை நம்பாமல், கூட்டணிக் கட்சியினரை நம்பாமல், கருணாநிதி குடும்பத்தின் அராஜகத்தை மட்டுமே நம்பி தேர்தலில் போட்டியிட்ட ஜெயலலிதா வெற்றி பெற்றிருக்கிறார். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தமிழகத்தை சுரண்டும் அதிகாரத்தை ஜெயலலிதாவுக்கு கை மாற்றிக் கொடுத்திருக்கிறார்கள் மக்கள். அ.தி.மு.க. சுவைத்திருக்கும் இந்த மாபெரும் வெற்றியின் ருசி அவர்களே எதிர்பாராதது! ஆனால் நமது ஊடகங்களும், அரசியல் பார்வையாளர்களும், ஜெயலலிதாவின் வெற்றிக்கு பல்வேறு அரசியல், பொருளாதார காரணங்களையும் ‘கண்டுபிடித்து’ சொல்லிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், ‘இது ஆளுங்கட்சிக்கு எதிரான மக்கள் கோபத்தின் அறுவடை’ என்பதை ஜெயலலிதாவே வெளிப்படையாக ஒப்புக்கொண்டு விட்டார்.

இந்த தோல்விக்கு கருணாநிதி தகுதியானவர் என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை இந்த வெற்றிக்கு ஜெயலலிதா தகுதியானவர் இல்லை. இருவரின் ஊழல் விகிதத்தைக் கூட நாம் கணக்கில் எடுத்துகொள்ள வேண்டாம். குறைந்தப்பட்சம் ஓர் ஓட்டரசியல் கட்சிக்கு உண்டான உழைப்பைக் கூட ஜெயலலிதா வழங்கவில்லை. கொடநாட்டில் ஓய்வு, அவ்வப்போது அறிக்கைகள், இன்பச் சுற்றுலா போல எப்போதாவது ஒரு போராட்டம் என கடந்த 5 ஆண்டுகள் அவர் எதற்கும் உழைத்தது இல்லை.

’ஜெயலலிதா ரொம்ப தைரியமானவங்க. எதையும் போல்டா செய்வாங்க’ என்கிறார்கள் பலரும். இந்த சித்திரத்தின் ஊற்றுகண் எங்கிருந்து வருகிறது? ஒரு சொட்டு மையில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்களை ஒரே நாளில் வீட்டுக்கு அனுப்பினார். சாலை வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படைப் பிரச்னைகளுக்குப் போராடினால் கூட போலீஸ் படையை ஏவிவிட்டு அடித்து நொறுக்கினார். தன் அமைச்சரவையில் அமைச்சர்களை ஒரு மாதத்துக்கு ஒரு தடவை மாற்றிக்கொண்டே இருந்தார். கூட்டணிக்கு வர சொல்லிவிட்டு தன் போக்குக்குத் தொகுதிகளை அறிவித்தார். வைகோ போன்ற தலைவர்களை கடைசி நேரத்தில் கூட்டணியில் இருந்து கழட்டிவிட்டார். ஜெயலலிதாவின் இத்தகைய தடாலடி நடவடிக்கைகளைதான் ‘தைரியம்’ என வரையறுக்கிறார்கள். இதற்குப் பெயர் தைரியம் அல்ல, அரசியல் ரவுடித்தனம். உங்கள் வீட்டில், உங்கள் தெருவில் இத்தகைய நடவடிக்கையோடு ஒருவர் இருந்தால் அதை தைரியம் என்றா சொல்வீர்கள்?

ஸ்பெக்ட்ரம் எனும் பகல்கொள்ளை நடந்தது. கார்பொரேட் முதலாளிகளும், தி.மு.க. பிரைவேட் லிமிட்டெட்டும் சேர்ந்து பல லட்சம் கோடி ரூபாய் பணத்தை கேட்டுக் கேள்வி இல்லாமல் கொள்ளை அடித்தனர். பிரதான எதிர்கட்சியாக ஸ்பெக்ட்ரம் ஊழலை அம்பலப்படுத்த ஜெயலலிதா எடுத்துக்கொண்ட முயற்சிகள் என்ன? எதுவும் இல்லை. போகிற போக்கில் நான்கு அறிக்கைகள் வெளியிட்டதோடு சரி. ஏன் ஜெயலலிதா ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை பெரிதுபடுத்தவில்லை என்பதை ஆராய்வோமேயானால், அதன் பதில் தெரிந்த ஒன்றுதான். அது வெறுமனே தி.மு.க.வுக்கும், கருணாநிதிக்கும் எதிரானது மட்டுமல்ல. அது முதலாளிகளுக்கு எதிரானது. அதனால்தான் ஸ்பெக்ட்ரத்துக்கு எதிரான பிரசாரம் ஓட்டரசியலுக்கு உதவும் எனத் தெரிந்தும் ஜெயலலிதா அதைப்பற்றிப் பேசவில்லை. இரண்டாவது பாய்ண்ட், என்ன இருந்தாலும் ஊழலுக்கு எதிராக ஓவர் ஆவேசத்துடன் பேசுவதற்கு ஜெயலலிதாவுக்கும் கொஞ்சம் கூச்சமாக இருக்கும்தானே?!

இப்போது கருணாநிதி கட்டிய புதிய தலைமைச் செயலகக் கட்டிடத்தில் சட்டசபையை நடத்தாமல் பழைய செயிண்ட் ஜார்ஜ் கோட்டையிலேயே பதவி ஏற்பதற்கான வேலைகள் நடக்கின்றன. இதே அளவுகோளின் படி, கருணாநிதி சென்னையைச் சுற்றி, கொண்டுவந்திருக்கும் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களை திருப்பி அனுப்பவோ, அவற்றுக்கு வழங்கப்பட்டுவரும் சலுகைகளைத் திரும்பப் பெறவோ முன்வருவாரா ஜெயலலிதா? மாட்டார். ஏனெனில் அவை முதலாளிகளுக்கு எதிரான நடவடிக்கைகள். காஞ்சிபுரத்தில் சசிக்கலா கும்பல் Midas Golden Distilleries Limited  என்ற பெயரில் சாராய கம்பெனி நடத்துகிறது. அதே காஞ்சிபுரத்தில் தி.மு.க.வின் ஜெகத்ரட்சகன் SNJ  DISTILLERIES(P) LTD என் ற பெயரில் சாராயக் கம்பெனி நடத்துகிறார். கடந்த தி.மு.க. ஆட்சியில் எப்படி Midas நிறுவனத்துக்கு எந்த பிரச்னையும் வரவில்லையோ, அதுபோல இப்போது ஜெகத்ரட்சகன் கம்பெனிக்கு எந்தப் பிரச்னையும் வரப்போவது இல்லை. இங்கு மட்டுமல்ல… தமிழகம் முழுவதும் கல்விக்கொள்ளை முதல் மணல் கொள்ளை வரையிலான சகலக் கூட்டுக் கொள்ளைகளிலும் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கை கோத்துதான் நிற்கிறது. இதற்கு ஏதேனும் பாதிப்பு வரும் என நினைக்கிறீர்களா?

இலங்கையில் போர் உச்சத்தில் இருந்த சமயத்தில் தமிழகத்தில் போராட்டங்கள் நடத்தவே அனுமதி மறுக்கப்பட்டது. ஓர் அரங்கக்கூட்டம் கூட நடத்த முடியவில்லை. துண்டு பிரசுரங்கள் அச்சடிக்க முடியவில்லை. அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனத்தை அமுல்படுத்தியிருந்தார் கருணாநிதி. உயர்நீதிமன்றத்தில் சுப்பிரமணியசாமியின் முகத்தில் படிந்த முட்டைக் கரையை வழக்கறிஞர்களின் ரத்தத்தால் துடைத்துவிட்டார். இப்போது வரை அடித்த போலீஸுக்கு சிறு தண்டனையும் கிடைக்கவில்லை. தலித்களின் சம்பந்தியாக தன்னை அறிவித்துக்கொண்டவர், உத்தபுரம் தீண்டாமைச் சுவரை இடிப்பதற்கு எதையும் செய்யவில்லை. இவற்றுக்கு எல்லாம் ஜெயலலிதா மாற்றாக இருப்பார் என நீங்கள் நம்புகிறீர்களா?

சந்தேகம் இல்லாமல் இது ஊழலுக்கு எதிரான மக்கள் மனநிலையின் வெளிப்பாடுதான். ஆனால் ஊழல் மட்டுமே இங்கு பிரச்னை இல்லை. நடந்து முடிந்த தேர்தல், ஒரு ஈவண்ட் மேனேஜ்மெண்ட் போல நடத்தப்பட்டிருக்கிறது. போலி ஜனநாயகம்தான் என்றாலும் இதுவரை பெயரளவுக்கேனும் மக்கள் பங்கேற்பு இருந்தது. ஆனால், கடந்த தேர்தலில் திட்டமிட்ட வகையில் மக்கள் தேர்தலில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். ’பணத்தை வாங்குனியா, ஓட்டைப் போட்டியா… போயிட்டே இரு’ என்பதே டீலிங். இதைப்பற்றி வெகுமக்கள் மனநிலை கேள்வி எழுப்பவில்லை. ‘மக்களையே பங்கேற்கவிடாமல் அப்புறம் என்ன மக்களாட்சி?’ எனக் கேட்கும் தார்மீக மனநிலையை பலரும் இழந்துவிட்டனர். சொல்லப்போனால், மக்கள் பங்கேற்பு இல்லாத இந்த ‘அமைதியான’ தேர்தல் மத்தியதர வர்க்க மனநிலையால் வரவேற்கவும் படுகிறது.

ஜெயலலிதாவின் வெற்றியை ஊழலுக்கு எதிரான எழுச்சியாக சித்தரிக்கும் யாரும், தேர்தல் சமயத்தில் ஓட்டுக்குப் பணம் கொடுப்பதையும், வாங்குவதையும் எதிர்க்கவில்லை. மாறாக, ‘ஓட்டுக்குப் பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள். ஏனெனில் அது உங்கள் பணம்’ என பேரம் பேசுவதற்கான உபாயத்தையே சொல்லித் தந்தனர். அண்ணாச்சிக் கடையில் ஹமாம் சோப்பு வாங்கிவிட்டு, ’ஷாம்பு ஆஃபர் இருக்கா?’ எனக் கேட்பதைப் போல… ’ஊழல் காசில் உங்கள் பங்கைக் கேட்டு வாங்குங்கள்’ என்கிறார்கள். இது யோக்கியமான பேச்சா? இப்போதும் கூட பலர் ‘பணத்தை எல்லாம் வாங்கிக்கிட்டு மக்கள் தி.மு.க.வுக்கு வெச்சாங்கல்ல ஆப்பு. பணத்தால் மக்களை விலைக்கு வாங்கிடலாம்னு நினைக்கிறவங்களுக்கு இது ஒரு சவுக்கடி’ என ஷங்கர் படத்தின் க்ளைமேக்ஸ் மக்கள் கருத்து போல பேசுகின்றனர். ’பணத்தை வாங்கினாலும் அந்த தாசில்தார் கரெக்டா வேலையை முடிச்சுக் கொடுத்துட்டாருப்பா’ என்பதற்கும், இதற்கும் ஏதேனும் வேறுபாடு இருக்கிறதா?

’கருணாநிதி அயோக்கியர்தான். ஆனால் ஜெயலலிதா அதற்கு மாற்று இல்லை’ இதை ஏற்றுக்கொள்ளும் பலரும், ‘ஆனாலும் வேற வழி இல்லையே…’ என்ற இடத்தில் வந்து  நிறுத்துகின்றனர். ’வேறு வழி இல்லை’ என்ற வாதத்தை முன் வைக்கும் இவர்கள்தான் அரசியல் கட்சிகளின்; முதலாளிகளின் ஊழல்களைப் பற்றிப் பேசும்போது, ‘இது ஒண்ணும் புதுசு இல்லையே’ என்கிறார்கள். 1. ‘வேறு வழியில்லை, 2. எதுவும் புதுசில்லை… என்ற இந்த இரு வசனங்களும் ஒன்றுக்கொன்று நேரடித் தொடர்பு கொண்டவை. இந்த டுபாக்கூர் ஜனநாயகத்தின் உயிர் ஒட்டிக்கொண்டிருப்பது இந்த இரு புள்ளிகளுக்கு இடையில்தான்.

போலி ஜனநாயகம் மட்டுமல்ல… அநீதியான சாதி, ஊழல் என அனைத்தையும் சமரசப் புள்ளியில் கொண்டு வந்து நிறுத்தும் வாதமும் ‘எதுவும் புதுசில்லை’ என்பதுதான். ஸ்பெக்ட்ரம் பகல்கொள்ளையில், புரோக்கர் வேலைப் பார்த்த ஊடகவியலாளர் பர்கா தத், தன் முகம் அம்பலப்பட்டதும், ‘மீடியாக்காரர்கள் மீடியேட்டராக செயல்படுவது ஒன்றும் புதுசு இல்லையே’ என்றார். ’இவ்வளவு காலமாக அனுமதித்தீர்கள். இப்போதும் கண்டுகொள்ளாமல் இருப்பதில் உங்களுக்கு என்னப் பிரச்னை?’ என்பது பர்க்கா தத்தின் அறச் சீற்றத்தின் அடிப்படை.

நாம் மறுபடியும் ஜெயலலிதாவுக்கு வருவோம். கடந்த ஐந்து ஆண்டுகால குடும்பக் கொள்ளை கருணாநிதியை அதிகாரத்தில் இருந்து அகற்றியிருக்கிறது. இதுவே ஜெயலலிதாவை அதிகாரத்தில் அமர வைத்துமிருக்கிறது. இனிவரும் ஆண்டுகளில் ஜெயலலிதாவும் இதைத்தான் செய்வார் என்பதில் சந்தேகம் தேவை இல்லை. அதனால் இதில் ஒருவரை காட்டி ஒருவரை நியாயப்படுத்தவோ, சமாதானம் அடையவோ எதுவும் இல்லை.

நமது சொந்த மனதின் உணர்ச்சிப்பூர்வமான தர்க்கங்களால் உற்பத்தியாகும் சொற்களுக்கு மெய்யுலகில் மதிப்பும் இல்லை, பொருளும் இல்லை. மெய்யுலகம் வேறு. அது முதலாளிகளால் இயக்கப்படுகிறது. அதன் புரோக்கர்களால் கண்காணிக்கப்படுகிறது. அதன் அடியாட்களால் ஒழுங்குப்படுத்தப்படுகிறது. அதனால்தான் ஜெயலலிதா வெற்றி பெற்ற உடனேயே, ‘தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருக்கிறது. சட்டம் ஒழுங்கை சீர்படுத்த முன்னுரிமைத் தரப்படும்’ என முந்திக்கொண்டு அறிவித்திருக்கிறார். போலீஸ் படை இன்னும் ஐந்தாண்டு காலத்துக்கு ஆட்டம் போடுவதற்கான மனநிலையை இப்போதே பெற்றுவிட்டது. இனிவரும் அடக்குமுறைகளை ‘இது ஒண்ணும் புதுசு இல்லையே’ என சகித்துக்கொண்டுப் போவதா, அல்லது புதிதாக ஒன்றை நோக்கி போராடுவதா? நாம்தான் முடிவு செய்ய வேண்டும்!

தொடர்புடைய பதிவுகள்:

அ.தி.மு.கவின் அசுர வெற்றியும், தி.மு.கவின் நாக் அவுட் தோல்வியும்!

114
அ.தி.மு.கவின் அசுர வெற்றியும், தி.மு.கவின் நாக் அவுட் தோல்வியும்!
பிசாசு ஆட்சி போய் பேயாட்சி வந்திருக்கிறது!

ந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து விட்டன. அஸ்ஸாமில் காங்கிரசே எதிர்பார்க்காத வெற்றி கிடைத்திருக்கிறது. மே. வங்கத்தில் எல்லாரும் எதிர்பார்த்தது போல மம்தா பானர்ஜிக்கு மூன்றில் இரண்டு பங்கு வெற்றி கிடைத்திருக்கிறது. புதுவையில் ரங்கசாமி – அ.தி.மு.க கூட்டணி மயிரிழை வெற்றியும், கேரளத்தில் காங்கிரசு கூட்டணி இரண்டு தொகுதிகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றிருக்கின்றன.

இதில் மேற்கு வங்கம் குறித்து தனிச்சிறப்பான கட்டுரை விரைவில் வெளியிடுகிறோம். இங்கு தமிழக தேர்தல் முடிவுகள் குறித்து மட்டும் பார்க்கலாம்.

மிழகத்தில் அ.தி.மு.க வெற்றி பெறும் என்று கணித்த எக்சிட் போல் கணிப்புகள் கூட இந்த பிரம்மாண்ட வெற்றியை கணிக்க முடியவில்லை. இதுவரை எங்கள் கணிப்புதான் தமிழக தேர்தல் முடிவுகளோடு ஒத்துப் போனது என்று மார்தட்டிய நக்கீரன் பத்திரிகை இப்போது மூக்குடைபட்டிருக்கிறது. மொத்தத்தில் தமிழக மக்களின் முடிவுகளை துல்லியமாக எவராலும் கணிக்க முடியவில்லை. ஆனால் பொதுவில் அ.தி.மு.க வெற்றி பெறும் என்பதை பொதுமக்கள் முதல் பத்திரிகையாளர்கள், சில பதிவர்கள் வரை பேசி வந்தனர். அவர்களும் கூட இந்த அளவு வெற்றியை கணித்திருக்கவில்லை.

இதில் என்.டி.டி.வி ஹிண்டு நிருபர் ஒருவர் டெல்லியில் நடந்த அண்ணா ஹாசாரே போராட்டம் தமிழக வாக்காளர்களின் ஜனநாயக கடமையை எழுப்பி விட்டிருக்கும் என்று கூறினார். இனி இது போன்ற அபத்தங்கள் பல முனைகளிலிருந்தும் வரும். ஜெயலலிதாவின் வெற்றியை சிலாகித்து புதுப்புதுக் கண்டுபிடிப்புகள் குவியலாம்.

தமிழகத்தில் நடந்த அதிக வாக்குப்பதிவு, முதல் முறை வாக்களிப்பவர்கள், விலைவாசி உயர்வு, மின்தடை என்று பல காரணங்களால், அ.தி.மு.க இந்த பெரு வெற்றியை பெற்றிருப்பதாக பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர். இவற்றில் உண்மை இல்லாமல் இல்லை. எனினும் பலரும் கருணாநிதி குடும்ப ஆட்சி கொள்ளையை மட்டும் முக்கிய பிரச்சினையாக பார்த்திருந்தனர். ஆனால் உள்ளூர் அளவில் பல அமைச்சர்களும், தலைவர்களும், பஞ்சாயத்து தலைவர்கள், வார்டு கவுன்சிலர்கள் அனைவரும் முழு வீச்சில் கொள்ளையடித்தது, ஐந்தாண்டுகளுக்குள் ஏகப்பட்ட பினாமி தொழில்கள், கல்வி நிறுவனங்களை உருவாக்கியது என்று முழு தமிழகத்திலும் தி.மு.க கும்பல் மக்களிடையே மிகுந்த கெட்ட பெயரை சம்பாதித்திருந்தது.

இலவசங்கள், காப்பீட்டு திட்டம் போன்ற சலுகைகளை விட விலைவாசி உயர்வு மக்களை வெகுவாக அச்சுறுத்தி வந்தது. வருமானம் உயர்ந்திருப்பதால் விலைவாசியெல்லாம் பிரச்சினையில்லை என்று தி.மு.க அமைச்சர்கள் திமிராக பேசிவந்தனர். அதே போல கல்வி கட்டண உயர்வு, சுயநிதிக் கல்லூரி கட்டணக் கொள்ளை போன்றவை காரணமாக நடுத்தர வர்க்கமும் இந்த ஆட்சி மீது வெறுப்புற்றிருந்தது. சன்.டி.வி, கலைஞர் டி.வி, உதயநிதி ஸ்டாலின், தயாநிதி அழகிரி இவர்களது ஏகபோகத்தால் சிறைபட்டிருந்த சினிமா உலகிலும் கடும் எதிர்ப்பு இருந்தது.

இத்தகைய கடும் மக்கள் விரோத அரசாங்கத்தை தூக்கியெறிய வைக்குமளவுக்கு இங்கே அ.தி.மு.க எந்த போர்க்குணமிக்க போராட்டத்தையும் நடத்தவில்லை. சில அடையாள போராட்டங்களை நடத்தி விட்டு, அம்மா தரும் அறிக்கைகளை வைத்தே அந்தக் கட்சி செயல்பட்டு வந்தது. இதில் முக்கால்வாசி நாட்கள் கொடநாட்டில் ஓய்விலிருந்த ஜெயலலிதாவின் ‘திறமை, அர்ப்பணிப்பு’ காரணமாக இந்த வெற்றி கிடைக்க வில்லை என்பதை இங்கே வலியுறுத்தி சொல்கிறோம்.

தி.மு.கவின் மீது மக்களுக்கு இருந்த அளவு கடந்த கோபமே இப்படி வெளிப்பட்டிருக்கிறது. ஒரு வேளை இந்தத் தேர்தலில் ஜெயா தோற்று தி.மு.க வெற்றி பெற்றிருந்தால், முழு தமிழகத்தையும் மொட்டையடித்திருப்பார்கள். அதையெல்லாம் மக்கள் எண்ணிப் பார்த்திருக்க வேண்டும். ஆக மொத்தம் அ.தி.மு.கவின் வெற்றி என்பது எதிர்மறையில் கிடைத்த ஒன்றாகும். அதில் அவர்களது சொந்த பங்கு எதுவும் இருக்கவில்லை.

சொல்லப்போனால் வைகோவை வெளியேற்றியது, கூட்டணியினரை அவமதிக்கும் வண்ணம் வேட்பாளர் பட்டியலை முந்தி வெளியிட்டது போன்றவற்றால் கெட்ட பெயரைத்தான் அக்கட்சி சம்பாதித்திருந்தது. இருப்பினும் மக்களுக்கு வேறு வழியில்லை என்ற அவலத்தில் ‘புரட்சித் தலைவி’ மீண்டும் ஆட்சி அமைக்க வருகிறார்.

தி.மு.க கூட்டணியில் காங்கிரசின் தோல்வி அனைவரும் எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும், பா.ம.க, வி.சி அனைவரும் மண்ணைக் கவ்வியிருக்கிருக்கிறார்கள். இந்த காரியவாதிகள் தோற்றார்கள் என்று மகிழ்ச்சியடைய முடியாதபடி தே.மு.தி.க எனும் காரியவாதிக் கட்சி பெருவெற்றி பெற்றிருக்கிறது. அதாவது இதுதான் எதிர்க்கட்சியாம்.                                அந்த வகையில் தி.மு.கவை எதிர்க்கட்சி என்ற தகுதியில் வைப்பதற்கு கூட மக்கள் விரும்பவில்லை என்று தெரிகிறது.

இந்தத் தோல்வி அப்பாவி உடன்பிறப்புகளுக்கு வேண்டுமானால் அதிர்ச்சியாக இருக்குமே அன்றி அதே அளவு அதிர்ச்சி தி.மு.க தலைவர்களுக்கு இருக்காது என்றுதான் தோன்றுகிறது. தி.மு.க ஆட்சிக்காலத்தில் உள்ளூர் அளவில் அனைத்து தொழில், காண்ட்ராக்டுகளும் அ.தி.மு.கவினருக்கும் கொடுக்கப்பட்டு நடந்தது போல இந்த ஆட்சியிலும் உள்ளூர் தி.மு.க தலைவர்களை அ.தி.மு.கவினர் கவனிப்பார்கள். அந்த வகையில் தி.மு.க தலைவர்களது தொழில்கள் செவ்வனே நடைபெறும். தி.மு.க அமைச்சர்களெல்லாம் தேவையான கப்பத்தை ஜெயா கும்பலுக்கு கட்டி விட்டு தொழிலை தொடர்ந்து நடத்துவார்கள்.

அசுர பலத்தில் வந்திருக்கும் அ.தி.மு.க ஆட்சி எப்படியிருக்கும் என்பதையும் விளக்கத் தேவையில்லை. ஏற்கனவே ஜெயாவின் இரண்டு இருண்ட காலத்தை தமிழகம் பார்த்திருக்கிறது. கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி தனது தொண்டர்கள் வீட்டின் முன்பு, தெருவில் மக்களோடு மக்களாக கலந்து வெற்றியை பகிர்ந்து கொள்கிறார். ஜெயலலிதாவோ தூங்கிக் களைத்த முகத்தோடு பால்கனியில் மேலிருந்தவாறு கீழே குதிக்கும் தொண்டர்களை பார்த்து இரண்டு விநாடி, இரட்டை விரல்களைக் காட்டிவிட்டு சென்று விடுகிறார். அதன்படி வரும் ஆட்சி இப்படித்தான் இருக்குமென்பதற்கு இந்த படிமமே ஒரு நல்ல விளக்கம்.

கருணாநிதி குடும்பத்தின் ஏகபோக தொழில்களை ஓரளவுக்கு கப்பம் வாங்கி அனுமதித்துவிட்டு ஜெயா சசி கும்பலின் ஏகபோகம் ஆரம்பிக்கும். மறுகாலனியாக்கத்தின் கொள்ளையில் பொறுக்கி தின்பதற்கு தற்போது வாய்ப்பு அதிகமென்பதால் இவர்கள் சட்டபூர்வமாகவும், சட்ட விரோதமாகவம் வெகுவேகமாக கல்லா கட்டுவார்கள். ஐந்து ஆண்டுகள் ஆட்சியிலில்லாத வறட்சியை ஐந்து மாதங்களில் கூட தீர்த்துக் கொள்வார்கள்.

மீண்டும் போலீசின் நேரடி அதிகார ஆட்சி வரும். ஜனநாயகம், பத்திரிகை சுதந்திரம், ஈழ ஆதரவு முதலியவையெல்லாம் மிரட்டல் கண்காணிப்பில் வைக்கப்படும். இதற்கு மேல் ஜெயலலிதா, சசிகலா என்ன விரும்புகிறார்கள், எப்போது என்ன செய்வார்கள் என்பது யாருக்கும் தெரியாது. அந்த திகில் நிறைந்த அடக்குமுறைகளுக்கு நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.

அரசு ஊழியர், தொழிலாளர்கள், மாணவர்கள் அனைவரும் தங்களது நலனுக்காக போராடுவது குதிரைக் கொம்பாக மாற்றப்படும். மீறி போராடினால் கடும் அடக்குமுறையை சந்திக்க வேண்டியிருக்கும். ஆண்டுகள் மாறினாலும் ஜெயலலிதா மாறமாட்டார். இது போக துக்ளக் சோ போன்ற குருநாதர்கள் என்ன திட்டமெல்லாம் வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. பார்ப்பனியத்தின் வேலைத்திட்டங்களெல்லாம் மறைமுகமாகவோ,நேரடியாகவோ கொண்டு வருவதற்கும் வாய்ப்புகள் பல உண்டு.

மொத்தத்தில் பிசாசு ஆட்சி அகன்று, பேயாட்சி வந்திருக்கிறது. அதையும் தமிழக மக்கள் விரைவில் புரிந்து கொள்வார்கள்.

_________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

தேர்தல் 2011

நோய்டா: விவசாயிகள் போராட்டமும், ராகுல் காந்தியின் நாடகமும்!

14

த்திரப்பிரதேச மாநிலத்தின் மேற்குப் பகுதி மாவட்டங்கள் கொதிநிலையில் உள்ளன. ஜெயபிரகாஷ் கௌர் என்கிற தரகு முதலாளிக்குச் சொந்தமான ஒரு கட்டுமானக் கம்பெனி, நோய்டாவில் சுமார் 2,500 ஏக்கர் நிலத்தை அடிமாட்டு விலைக்கு வளைத்து, ‘ஜே.பி க்ரீன் விளையாட்டு நகரம்’ எனும் பெயரில்  மேட்டுக்குடி சீமான்களுக்கான கேளிக்கை மையம் ஒன்றை அமைத்து வருகிறது. இதில், சுமார் 875 ஏக்கர் பரப்பளவில் பார்முலா ஒன் கார் ரேஸ் மைதானம் ஒன்றையும் அமைத்து வருகிறது. இதன் பணிகளை வரும் ஜூன் மாதத்துக்குள் முடித்து, அக்டோபர் மாதம் முதல் சர்வதேச போட்டியை நடத்துவதில் முனைப்பாக உள்ளது.

இதற்கிடையே, நோய்டாவையும் ஆக்ராவையும் இணைக்கும் விதமாக சுமார் 165 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆறு வழி அதி விரைவுச் சாலை ஒன்றையும் 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் இதே ஜே.பி குழுமம் அமைத்து வருகிறது. இந்த திட்டத்திற்காக 334 கிராமங்களைச் சேர்ந்த  கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கான விலை குறைவாக இருந்ததால், கடந்த சில வருடங்களாகவே விவசாயிகள் உரிய விலை கேட்டு போராடிக் கொண்டிருந்தார்கள்.

இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், ஜே.பி குழுமத்திற்கு ஆதரவான தீர்ப்பை கடந்த செப்டம்பர் மாதத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்திருந்தது. தீர்ப்பளித்த நீதிபதி சிர்ப்பூர்கர், ‘பொதுநலனுக்கான இந்தச் சாலை அமைவதற்காக சில தனிநபர்கள் தியாகம் செய்வது தவிர்க்க முடியாதது’ என்று ஒரு தத்துவ முத்தையும் உதிர்த்திருக்கிறார்.

இந்நிலையில் பொறுமையாக இருந்த விவசாயிகள், கடந்த 7-ம் தேதி வேறுவழியின்றி களத்திலிறங்கினார்கள். உ.பி அரசின் நெடுஞ்சாலைத் துறையைச் சேர்ந்த மூன்று அதிகாரிகளைத் தமது கோரிக்கைகளை வலியுறுத்தும் நோக்கத்தில் சிறைபிடிக்கிறார்கள். உடனே பாய்ந்து வரும் போலீசு பட்டாளம், போராடும் விவசாயிகளைத் தாக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில் ஒரு விவசாயி இறந்துள்ளார். ஆத்திரமுற்ற விவசாயிகள், தமது பாதுகாப்புக்காக போலீசின் மேல் எதிர்த்தாக்குதல் தொடுத்ததில் இரண்டு போலீசார் கொல்லப்பட்டுள்ளனர்.

இதையடுத்து போராட்டத்தின் குவிமைய்யமாக இருக்கும் பட்டா பர்சௌல் கிராமத்தைப் பெரும் படையுடன் சுற்றி வளைக்கும் போலீசு, நூற்றுக்கணக்கான விவசாயிகளையும் அப்பாவி கிராமத்து மக்களையும் கைது செய்து சித்திரவதை செய்துள்ளது. வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்த போலீசு குண்டர்கள் பெண்களைத் தாக்கிக்கியுள்ளனர். போலீசின் இந்த வெறியாட்டத்தையடுத்து, நோய்டாவில் மையம் கொண்டிருந்த போராட்டப் புயல் அதையும் கடந்து ஆக்ரா, அலிகார் என்று உ.பியின் வடக்குப் பகுதி மாவட்டங்களெங்கும் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.

தற்போது போராட்டத்திலிறங்கியிருக்கும் விவசாயிகள், தங்களிடமிருந்து அடிமாட்டு விலைக்கு கையகப்படுத்தியுள்ள நிலங்களுக்கான நியாயமான விலையும், கையகப்படுத்தியுள்ள நிலத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் வேலைகளில் 25 சதவீத இடஒதுக்கீடு மற்றும் நிலமற்ற விவசாயிகளுக்கு 120 சதுர மீட்டர் நிலமும், இழந்த ஒவ்வொரு ஏக்கருக்கும் ஐந்து லட்ச ரூபாய் நட்ட ஈடும் கோருகிறார்கள். உ.பி மாநில அரசோ, மக்களுக்காகத் தான் உட்கட்டமைப்பு வசதிகளை உண்டாக்கி வருவதாகவும் விவசாயிகளும் மக்களும் இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்லி வருகிறது – இதையே தான் வேறு வார்த்தைகளில் அலகபாத் உயர்நீதிமன்ற நீதிபதியும் தெரிவித்திருந்தார்.

நாம் இந்த விவகாரத்தின் வெளிப்பாடுகளைப் பற்றிப் புரிந்து கொள்வதற்கு முன் இதற்கெல்லாம் அடிப்படையாக இருக்கும் ‘யமுனை அதிவிரைவுச் சாலை’ என்கிற இந்தத் திட்டத்தையும், அது உண்மையிலேயே மக்களுக்குப் பயன்தரக்கூடிய திட்டம் தானா என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.  அதன் தொடர்ச்சியாக விவசாயிகள் போராட்டத்தின் பின் இருக்கும் நியாயமும் இந்தத் திட்டத்தை ஆதரிப்பவர்களின் அயோக்கியத்தனமும் தெளிவாகப் புரியும்.

தரகு முதலாளிகளின் நவீன காமதேனு – யமுனை அதிவிரைவுச் சாலைத் திட்டம்.

இந்தியாவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளாகட்டும் உள்நாட்டிலேயே பிற பகுதிகளில் இருந்து வட இந்தியாவுக்கு சுற்றுலா செல்வோராக இருக்கட்டும், இவர்கள் தவற விடாமல் தரிசிக்க வேண்டும் என்று நினைப்பது தாஜ் மகால்.  தற்போது உள்ள நெடுஞ்சாலை வழியே தில்லியிருந்து ஆக்ராவிலிருக்கும் தாஜ் மகாலுக்குச் செல்ல வேண்டுமென்றால் 210 கிலோ மீட்டர்கள் தரை வழியே பயணிக்க வேண்டும். இந்நிலையில் தற்போது அமைக்கப்பட்டு வரும் அதிவிரைவுச் சாலை அந்த தொலைவை 160 கிலோ மீட்டர்களாகச் குறைக்கிறது. இதனால் தில்லியிருந்து வெறும் 100 நிமிடங்களில் தாஜ் மகால் செல்ல முடியும்.

அதிவிரைவுச் சாலையென்பதை சாதாரண மக்கள் பயன்பாட்டுக்காக இருக்கும் சாலைகளோடு ஒப்பிட முடியாது. இதில் பயணிக்கும் வாகனங்களுக்கு குறைந்த பட்ச வேகம் நிர்ணயிக்கப்பட்டிருக்கும். சாமானிய மக்கள் சைக்கிளிலோ, ஆட்டோவிலோ, இரு சக்கர வாகனங்களிலோ செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கும். இப்போது தில்லியிலிருந்து குர்காவ்ன் செல்லும் பாதையில் கூட, சாதாரண மக்கள் செல்லும் சைக்கிளோ, விவசாயிகள் பயன்படுத்தும் மாட்டு வண்டி, டிராக்ட்டர் போன்ற வாகனங்களுக்கோ அனுமதியளிக்கப்படவில்லை.

இது ஒருபுறம் இருக்க, தில்லிப் பெருநகரம் என்பது ஏற்கனவே போதுமான அளவிற்கு பெருத்து விட்டது. ரியல் எஸ்டேட் சூதாடிகள் போதுமான அளவிற்கு தில்லியைச் சுற்றி நோய்டா, காஸியாபாத், குர்காவ்ன் என்று சாடிலைட் சொர்க்க நகரங்களை உருவாக்கிக் கறந்து தள்ளி விட்டார்கள். எனவே, தற்போது தில்லி – ஆக்ரா பாதையை யமுனை எக்ஸ்ப்ரஸ் ஹைவே எனும் பெயரில் குறிவைத்து கிளம்பியுள்ளனர்.

தாஜ் தொழில் மேம்பாட்டுக் கழகம் (Taj Industrial Developement Association) என்கிற ஒரு அமைப்பை உருவாக்கி அதன் கீழ் தான் யமுனை அதிவிரைவுச் சாலை, எஃப்1 ரேஸ் மைதானம் போன்ற திட்டங்களை ஜே.பி குழுமத்திற்கு ஒதுக்கியுள்ளனர். இது போக, இந்த அதிவிரைவு சாலை நெடுக அமையவிருக்கும் விளையாட்டு நகரங்கள், சாடிலைட் நகரங்கள், ஐ.டி பூங்காக்கள் என்று பல்வேறு கட்டுமானத் திட்டங்களை டி.எல்.எஃப், யுனிடெக் (ஸ்பெக்ட்ரம் புகழ்) போன்ற கம்பெனிகள் தங்கள் பங்காகப் பெற்றுள்ளனர்.

தற்போது அமையவிருக்கும் அதிவிரைவுச் சாலையை ஒட்டி, தீம்பார்க்குகள், அடுக்குமாடி அப்பார்ட்மென்ட்டுகள், விளையாட்டு நகரங்கள், கோல்ப் மைதானங்கள், ஐ.டி கம்பெனிகள் என்று சீமான்களுக்கும் சீமாட்டிகளுக்குமான உலகத்தை நிர்ணயிப்பது தான் இவர்களின் திட்டம். இதுவும் போக தரகுமுதலாளிகளுக்காக சிறப்பு ஏற்றுமதி மண்டலங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்று நாட்டின் வளங்களை திருடிச் செல்வதற்கான ஒரு திறந்த வாசலாக இப்பிராந்தியத்தை மாற்றியமைக்கும் திட்டத்தின் ஒரு சிறிய அங்கம் தான் இந்த அதிவிரைவுச் சாலை.

அதற்குக் குறிப்பாக இந்த வழித்தடத்தைத் தேர்ந்தெடுத்தற்கான காரணங்களாக, இது மக்கள் அடர்த்தி குறைவான பகுதியென்றும், இங்கேயிருந்து மக்களை விரட்டியடிப்பது மிகச் சுலபமானது என்றும் காரணங்களை அவர்களே சொல்கிறார்கள். இவையெல்லாம் தான் தமது  நோக்கங்கள் என்றும், இன்னின்ன காரணங்களுக்காகத் தான் இந்த வழித்தடம் தேர்ந்தெடுக்கபப்ட்டது என்றும் இதற்கான அதிகாரப்பூர்வமான தளத்திலேயே மிகத் தெளிவாகக் குறிப்பிட்டும் உள்ளனர். http://yamunaexpresswayauthority.com/content/opportunities-area

ஆக, விவசாயிகளிடமிருந்து அநியாயமாக மிகக் குறைந்த விலைக்குப் பறிக்கப்பட்டிருக்கும் இந்நிலங்கள், பன்னாட்டு முதலாளிகளுக்கும் உள்நாட்டுத் தரகு முதலாளிகளுக்கும் ஒரு ரியல் எஸ்டேட் தங்கச் சுரங்கமாக இருக்கப் போகிறது. சாலையின் பயன்பாடு மட்டுமல்ல, சாலை அமைப்பதற்காகவும், பிற திட்டங்களுக்காக அந்நிலத்தை ஒட்டியும் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலத்தில் செயல்படுத்தப் போகும் திட்டங்களில் அம்மண்ணின் மைந்தர்களுக்கு இடமில்லை என்று சொல்வது தான் விவசாயிகளை ஆத்திரமூட்டியுள்ளது.  கொடுத்த விலையும் குறைவு, அதில் வேலையும் கிடையாது என்கிற அரசின் அயோக்கியத்தனமான பொருளாதாரக் கொள்கை தான் இன்று மேற்கு உ.பியின் விவசாயிகளும் உழைக்கும் மக்களும் போர்க்கோலம் பூண்டு களத்தில் இறங்கியிருப்பதற்கான அடிப்படை காரணம்.

இதற்கிடையே விவசாயிகளின் போராட்டம் பரந்துபட்ட மக்களிடையே ஒரு வலுவான ஆதரவுத் தளத்தை உண்டாக்கியிருப்பதைக் காணும் பிற ஓட்டுக் கட்சித் தலைவர்கள், வாயில் எச்சில் வடிய பட்டா பர்சௌலுக்குப் படையெடுத்துள்ளனர். பட்டா பர்சௌலுக்குச் சென்றுள்ள காங்கிரசு கட்சியின் அமுல் பேபியான ராகுல் காந்தி, விவசாயிகளின் துயரங்களைத் தாம் நேரில் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், விவாயிகளுக்கு ஒரு நீதி கிடைக்கும் வரைத் தாம் இந்தப் பிரச்சினையில் இருந்து விலகப்போவதில்லை என்றும் சூளுரைத்திருக்கிறார். உச்சகட்டமாக, விவசாயிகளுக்கு நேர்ந்த கொடுமைகளைப் பார்த்த பின் தன்னை ஒரு இந்தியர் என்று சொல்லிக் கொள்ளவே வெட்கமாக இருப்பதாகவும் சொல்லுகிறார்.

இப்படிச் சொல்லும் ராகுலின் காங்கிரசு தான் நிலப்பறிப்பை சட்டப்பூர்வமாக்கும் வகையில் ஒரு சட்ட மசோதாவைத் தயாரிப்பதில் இப்போது மும்முரமாக இருக்கிறது. கூடியவிரைவில் அதை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றும் முனைப்பிலும் இருக்கிறது. இது போக, கோவா, மகாராஷ்ட்டிரா என்று காங்கிரசு ஆளும் பல்வேறு மாநிலங்களில் சிறப்புப் பொருளாதார மண்டங்களுக்காகச் செய்யப்படும் நிலப்பறிப்பை எதிர்த்து போராடி வரும் மக்கள் மீது போலீசு குண்டர்களை ஏவி மிருகத்தனமாக ஒடுக்கி வருவதும் இதே காங்கிரசு தான்.

இன்றைக்கு வரை பன்னாட்டுக் கம்பெனியான போஸ்கோ, வேதாந்தா போன்ற கம்பெனிகளை தமது நிலத்தைக் கபளீகரம் செய்ய அண்டவிடாமல் தடுத்துப் போராடிக் கொண்டிருக்கும் மத்திய இந்தியாவின் பழங்குடி மக்களின் மேல் இராணுவத்தை ஏவி நூற்றுக்கணக்கான கிராமங்களை எரித்து சாம்பலாக்கியிருப்பதும் இதே காங்கிரசு தான். மறுகாலனியாக்கப் பொருளாதாரக் கொள்கைகளை ஒரு பக்கத்திலிருந்து மக்களின் மேல் ஏவி ஈரத் துணி போட்டு அவர்கள் கழுத்தை அறுத்துக் கொண்டே இன்னொரு பக்கம் பாதிக்கப்பட்ட விவசாயிகளைச் சந்தித்து நீலிக் கண்ணீர் வடிக்கும் இந்த வக்கிர புத்தியின் அயோக்கியத்தனத்தை என்ன்வென்று அழைப்பது?

பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனுபவிக்கும் கொடுமைகளைக் கண்டு மனம் நொந்து போயிருப்பதாகவும் தன்னை இந்தியன் என்று சொல்லிக் கொள்ளவே வெட்கப்படுவதாகவும் முதலைக் கண்ணீர் வடிக்கும் ராகுல் காந்தி, இதே காங்கிரசு ஆளும் மகாராஷ்ட்ராவின் விதர்பா பகுதியைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் கடன் சுமை தாளாமல் தற்கொலை செய்து செத்துப் போனதற்கு இது வரை என்ன செய்துள்ளார்? இந்த மோசடியொன்றும் இவருக்குப் புதிதல்ல. ஒருபக்கம் நிலப்பறிப்பை எதிர்த்துப் போராடும் மக்களைக் கொல்ல இராணுவத்தை மத்திய இந்தியாவிலும் ஒரிசாவிலும் குவித்து விட்டு இன்னொரு பக்கம் ஒரிசாவின் பழங்குடி மக்களை ஒன்றுமே தெரியாத அப்பாவிக் குழந்தை போல் சந்திக்கும் பச்சை அயோக்கியத்தனத்தை இவர் ஏற்கனவே செய்திருப்பவர் தான்.

ராகுல் காந்தி மட்டுமல்ல, உ.பி விவசாயிகளின் போராட்டத்தில் மஞ்சக் குளிக்க கிளம்பி வந்து பட்டா பர்சௌல் கிராமத்தை வட்டமடிக்கும் பிற ஓட்டுக் கட்சி அரசியல்வாதிகளுக்கும் இந்த விவகாரத்தின் மூல காரணமாய் இருக்கும் மறுகாலனியாக்கப் பொருளாதாரக் கொள்கைகளின் மேல் எந்தக் கேள்விகளும் கிடையாது. மாயாவதி ஆட்சியிலிருக்கிறார் – இவர்கள் ஆட்சியில் இல்லை என்பதைக் கடந்து இவர்களுக்குள் எந்த வித்தியாசமும் கிடையாது என்பதே உண்மை. எனவே தான் நிலப்பறிப்பு மசோதாவை இவர்கள் தீவிரமாக வலியுறுத்துகிறார்கள். நிலப்பறிப்பு நடவடிக்கைகள் சட்டபூர்வமாக நடந்து அரசியல் சட்டப்படி மக்களுக்கு பட்டை நாமம் சாற்றப் படுவது தான் பிரச்சினைகளுக்குத் தீர்வு என்று இவர்கள் கோருகிறார்கள்.

ஆக, போராடும் மக்கள் இவர்களின் கள்ளத்தனத்தைப் புரிந்து கொள்வதோடு, தமது போராட்டங்களை யமுனை அதிவிரைவுச் சாலை என்பதோடு குறுக்கிக் கொள்ளாமல் அதற்குக் காரணமான பொருளாதாரக் கொள்கைகளையும் அதைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் இந்த ஓட்டுக் கட்சித் தரகர்களையும் எதிர்த்துப் போராடி வீழ்த்துவதே இந்த மறுகாலனியாகச் சுருக்குக் கண்ணியிலிருந்து மீள்வதற்கு இருக்கும் ஒரே வாய்ப்பு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

போர்க்குணமிக்க விவசாயிகளின் போராட்டம் வெல்லட்டும்!

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

பார்ப்பனியமும் முதலாளித்துவமும் சேர்ந்தியங்குவது எப்படி?

44

பார்ப்பனீயம் குறித்தும் முதலாளித்துவம் குறித்தும் பல கட்டுரைகள் வெளியிடுகிறீர்கள். ஒன்று மற்றதன் தயவில் நிலைத்திருப்பது குறித்த கருத்தையும் இங்குதான் தெரிந்து கொண்டேன் ஆனால் இதுவரை எந்த கட்டுரையும் தெளிவாக விளக்கவில்லை. இரண்டும் சந்திக்கும் புள்ளிகள், சேர்ந்தியங்கும் முறை குறித்து ஒரு நடைமுறை உதாரணம் கொடுக்க முடியுமா? முடிந்தால் ஒரு கட்டுரை வெளியிடுங்களேன்.

– பாஸ்கர்

அன்புள்ள பாஸ்கர்,

இந்தக் கேள்விக்கான பதிலை பொதுவான வாசகரும் புரிந்து கொள்ளும் பொருட்டு சற்று எளிமையாகவும் விரிவாகவும் எழுதுகிறோம்.

பார்ப்பனியம், முதலாளித்துவம் இரண்டும் இரு வேறுபட்ட சமூக அமைப்பு முறைகள். முதலாவது நிலத்தையும், விவசாயத்தையும், நாட்டுப்புறத்தையும், அதற்கு பொருத்தமான ‘மத’த்தையும் அடிப்படையாகக் கொண்ட நிலவுடமைச் சமூகம். இரண்டாவது  பெருந்தொழில்கள், பெருநகரங்களை அடிப்படையாகக் கொண்ட நவீன சமூகம். பார்ப்பனியம் இந்தியாவின் விசேடமான நிலவுடமைச் சமூக அமைப்பு முறை. மற்ற நாடுகளில் உள்ள நிலவுடமைச் சமூக அமைப்புகளோடு இதற்கு பல பொதுத்தன்மைகள் இருந்தாலும் சாதி என்ற தனித்தன்மை இந்தியாவில் மட்டுமே உண்டு. எனினும் இந்த தனித்தன்மை என்பது நிலவுடமை பொருளாதார அமைப்பு என்ற அடிப்படையிலேயே செயல்படுகிறது. வெறும் கருத்து, சிந்தனை சார்ந்த அமைப்பல்ல. சிலர் பார்ப்பனியத்தை வெறும் கருத்தியல் சார்ந்த அமைப்பாகவே பார்க்கின்றனர். அது தவறானது.

1789-இல் நடந்த பிரான்சில் நடந்த பிரெஞ்சுப் புரட்சிதான் முதன்முறையாக நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பை புரட்சி மூலம் அழித்துவிட்டு முதலாளித்துவ சமூக அமைப்பிற்கான விதையை விதைக்கிறது. கத்தோலிக்க திருச்சபையின் அதிகாரம் பறிக்கப்பட்டு, நிலங்கள் மீட்கப்பட்டு, கல்வி – சட்டம் இரண்டிலும் மதம் நீக்கப்படுகிறது. கத்தோலிக்க மதம் என்பது இங்கு பார்ப்பனியம் போன்று ஐரோப்பாவில் இருந்த மத ஆதிக்க நிறுவனம். இது மதத்தோடு மட்டுமல்லாமல் அரசு, சொத்து, சட்டம் அனைத்திலும் அதிகாரம் கொண்டிருந்தது.

பிரெஞ்சுப் புரட்சியில் பங்கேற்ற உழைக்கும் வர்க்கத்தினரின் வன்முறையை பார்த்து அச்சமுற்ற இங்கிலாந்து நாட்டில், நிலவுடமைச் சமூகம் புரட்சி மூலம் அழிக்கப்படவில்லை. வன்முறையற்ற சீர்திருத்தங்கள் மூலமே முதலாளித்துவம் கொண்டு வரப்படுகிறது. அப்படித்தான் படிப்படியாக அரசரின் அதிகாரம் குறைக்கப்பட்டு, முதலாளிகளின் பாராளுமன்ற ஜனநாயகம் கொண்டுவரப்படுகிறது. இந்த மாற்றத்தை பல ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் முதலாளிகளும் பின்பற்றுகின்றனர். சாதாரண மக்களது எழுச்சியைக் கண்டு பயம் கொண்ட அவர்கள், முழுமையாக நிலவுடமை சமூகத்தின் மதம், பண்பாடுகளை விட விரும்பவில்லை. தொழிலாளிகள் அரசியல் எழுச்சி கொள்ளாது இருக்க மதம் அவர்களுக்கு தேவைப்பட்டது. இப்படித்தான் முதலாளித்துவ வர்க்கம் நிலவுடமைச் சமூகத்தை முற்றிலும் அழிக்காமல் அல்லது பண்பாட்டு துறையில் மட்டும் தேவையான அளவுக்கு விட்டு வைத்தது.

1917-இல் தொழிலாளிகள் தலைமையில் ரசியப் புரட்சி நடக்கிறது. முதலாளித்துவ சமூக அமைப்பை தூக்கி எறிந்து விட்டு சோசலிச அமைப்பிற்கான அடிப்படை உருவாக்கப்படுகிறது. இதைக் கண்டு அஞ்சிய முதலாளிகளும், ஏகாதிபத்தியங்களும் அதன் பிறகு உலகம் முழுவதுமிருந்த குறிப்பாக மூன்றாம் உலகநாடுகளில் இருந்த நிலவுடமை சமூக அமைப்பை தகர்க்காமல், அதனுடன் கூட்டு சேர்ந்து கொண்டு காலனிய நாடுகளில் சுரண்டி வந்தனர். இப்படித்தான் பார்ப்பனியமும் ஆங்கிலேயர்களின் ஆசிர்வாதத்தோடு இந்தியாவில் தனது ஆதிக்கத்தை தக்க வைத்தது.

ஆங்கிலேயர் காலத்தில் பார்ப்பன இந்து மதத்தில் சில சீர்திருத்தங்களை கொண்டு வரப்பட்டாலும் அதன் அடிப்படையான சாதிய சமூகத்தை அப்படியே விட்டு வைத்தார்கள். பிரிட்டனுக்கு முன் சாதிய அமைப்பின் மீதான சுரண்டல் மன்னர்களுக்கும், ‘மேல்’ சாதியினருக்கும் சென்றது. இங்கிலாந்து வந்தபின்னர் அது கைமாறுகிறது. பார்ப்பனிய சாதிய அமைப்பின் மேல்மட்டத்தில் உள்ளவர்கள் அரசு, அரசாங்கம், காங்கிரசு, ஜமீன்தார்கள், என அதிகாரத்தை சுவைத்த போது கீழ்மட்டத்தில் உள்ள உழைக்கும் சாதிகள் உடலுழைப்பு கொண்ட வேலைகளுக்கு பயன்பட்டனர். மேலும் இலட்சக்கணக்கில் வெளிநாடுகளில் உள்ள ஆங்கிலேயர்களின் தோட்டத்திற்கும் அனுப்பப்பட்டனர். இப்படித்தான் இந்தியாவில் காலனிய ஆட்சி தங்கு தடையின்றி நடந்தது.

சூத்திர, பஞ்சம சாதிகளைச் சேர்ந்தோர் பார்ப்பன சாதியமைப்பில் கீழ்நிலையில் உள்ளவர்கள். கிராமங்களில் ஒதுக்கப்பட்ட இடங்களில் வாழ்ந்து கொண்டு விதிக்கப்பட்ட வேலைகளை செய்து கொண்டு, தரப்பட்ட பொருளைக் கொண்டு வாழ்க்கையை ஓட்டுபவர்கள். மற்றபடி இவர்கள் யாரும் படித்து, வியாபாரம் செய்து, வேறு தொழில் செய்தெல்லாம் ஆளாவது என்பது கனவில் கூட நடவாது. அந்த வகையில் இந்த உழைப்பு ரிசர்வ் சக்திகள், காலனிய ஆட்சியின் போது நடைபெற்ற இரயில்வே, தோட்டங்கள், ஆலைகள், இராணுவ சிப்பாய் என்று அடிக்கட்டுமான வேலைக்கு மலிவான கூலிக்கு கிடைத்தார்கள்.

சாராமாகச் சொன்னால் ‘மேல்’ சாதியினர் நீதிபதிகள், வக்கீல்கள், தொழிலதிபர்கள், தலைமை நிர்வாகிகள் என்றும், இடைத்தர சாதியினர் குமாஸ்தாக்களாகவும், போலீசாகவும், சிறு வியாபாரம் என்றும், அடித்தட்டு சாதியினர் உடலுழைப்பு வேலைகளுக்காகவும் பயன்பட்டனர். இத்தகைய அருமையான சுரண்டல் அமைப்பை வழங்கிய பார்ப்பனியத்தை வெள்ளையர்கள் ஏன் அழிக்க வேண்டும்? ஆகவே அதை திட்டமிட்டு பாதுகாத்தார்கள்.

சரி வெள்ளையர்கள் சென்ற பிறகும், இந்த நிலைமை இன்னும் மாறிவிடவில்லை. கடந்த 50 ஆண்டுகளாக சில சீர்திருத்தங்கள் மூலம் சில பல ஒடுக்கப்பட்ட சாதி மக்கள் மேல்மட்ட வேலைகளுக்கு வந்தாலும், பெரும்பான்மையான மக்கள் பழைய பார்ப்பனிய நிலவுடமை சாதிய அமைப்பின் படிதான் வாழ்கின்றனர். அதாவது அவர்களுக்கு நிலம் சொந்தமில்லை, கூலி வேலை செய்துதான் வாழ முடியும், படிப்பு, தொழில் என்று வேறு வாய்ப்புகள் இப்போதும் சாத்தியமில்லை என்றுதான் வாழ்கின்றனர்.

பார்ப்பனியம் மனிதரில் ஏற்றத்தாழ்வு வைத்து பிரிப்பதைப் போல முதலாளித்துவம் சந்தை, இலாபத்தை வைத்து நாட்டில் ஏற்றத் தாழ்வை கொண்டு வருகிறது. அதாவது தொழில் வாய்ப்பு, திறமையான உழைப்பாளிகள், போக்கு வரத்து வசதிகள், துறைமுகம், தடையற்ற மின்சாரம், சந்தைக்கு அருகாமை என்று தங்களது தொழிலுக்கு சாதகமான இடங்களை மட்டுமே குறி வைப்பார்கள். அந்த வகையில் வடக்கு தமிழகம், குஜராத், மேற்கு மராட்டியம், கடற்கைரையோர ஒரிசா, ஆந்திராவின் சில பகுதிகள், கர்நாடகாவின் சில பகுதிகள், ஹரியாணா என்று இந்தப் பகுதிகளை மட்டும் தரகு முதலாளிகள், பன்னாட்டு நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன. அரசும் இத்தகைய இடங்களை மட்டும் செல்வு செய்து வளரச் செய்கிறது.

ஆனால் இத்தகைய வசதிகள் அற்ற ராஜஸ்தான், உத்திரபிரதேசம், பீகார், ஒரிசா, மத்தியப்பிரதேசம், போன்ற மாநிலங்கள் எல்லா அளவுகோல்கள் படியும் மிகவும் கீழ்மட்ட வாழ்வில் உள்ளன. முக்கியமாக இந்த மாநிலங்களில் உள்ள ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்கள் உள்ளூரில் உள்ள பார்ப்பனிய நிலவுடைமை அமைப்பு முறையால் குறைந்த பட்ச வாழ்க்கையைக் கூட வாழமுடியாமல் தத்தளிக்கிறார்கள். அந்த வகையில் இவர்கள்தான் இந்தியாவில் மாபெரும் ரிசர்வ் பட்டாளமாக இருக்கின்றனர்.

தற்போது இந்தியாவில் உள்ள எல்லா நிறுவனங்களிலும் பகுதி நேர தொழிலாளிகளாக இவர்களே கடுமையாக சுரண்டப்படுகின்றனர். இன்று தமிழகம் முழுவதிலுமுள்ள சிறு, நடுத்தர, பெரிய தொழிற்சாலைகள் அனைத்திலும் இந்த வடமாநிலத் தொழிலாளர்களை பார்க்கலாம். இவர்களில் யாரும் பார்ப்பன ‘மேல்’ சாதியைச் சேர்ந்தோர் கிடையாது என்பதை விளக்கத் தேவையில்லை.

தமிழகத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். கிராமங்கள், நகரங்களில் உள்ள அக்ரகாரத்தை சேர்ந்த பார்பனர்களும், மேலத்தெருவைச் சேர்ந்த நாயுடு, ரெட்டி, செட்டியார், சைவ வேளாளர் முதலானோர் சென்னை, டெல்லி, லண்டன், அமெரிக்கா என்று செட்டிலாகிவிட்டார்கள். கீழத்தெருவைச் சேர்ந்த சில ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தோர் கொஞ்சம் நிலம் வைத்து ஏதோ விவசாயம் செய்கிறார்கள். சிலர் சிறு தொழில்கள், கீழ்மட்ட அரசு, தனியார் வேலை என்று வாழ்கிறார்கள். மீதிப்பேரும், கிராமத்தின் எல்லையிலிருக்கும் சேரிகளைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டோரும் உடலுழைப்பு வேலைகளுக்காக பெரு நகரங்களை நோக்கி செல்கின்றனர்.

தஞ்சையைச் சேர்ந்த கூலி விவசாயிகள் கேரளாவில் கம்பி கட்டும் வேலைக்கு போவது, தென்மாவட்டங்களைச் சேர்ந்தோர், மும்பை, திருப்பூருக்கு செல்வது, தரும்புரியைச் சேர்ந்தோர் பெங்களூரூவில் கட்டிட வேலைக்கு செல்வது, வட மாவட்டங்களைச் சேரந்தோர் சென்னைக்கு வந்து பிழைப்பது என்று இங்கேயே அந்த நாடோடி வாழ்க்கை இருக்கிறது.

ஆக மறுகாலனியாக்கத்திற்கு தேவைப்படும் மனித வளத்தை சாதியைப் பாதுகாக்கும் பார்ப்பனிய அமைப்பு இப்படித்தான் வழங்குகிறது. அடுத்து உழைக்கும் மக்கள், நடுத்தர வர்க்கம் அரசியல் உணர்வு பெறக்கூடாது என்பதற்காகவே இங்கே பார்ப்பன இந்து மதம் பெரும் பொருட்செலவில் பின்பற்றப்படுகிறது. சாதிக்கு ஏற்ற சாமியார்கள், மடங்கள், நவீன கார்ப்பரேட் சாமியார்கள், ஆதினங்கள், கோவில்கள் எல்லாம் அரசு, முதலாளிகளால் செவ்வனே பராமரிக்கப்படுகிறது.

ஐ.டி துறை நடுத்தர வர்க்கத்தை ஆற்றுப்படுத்தும் வேலையை டபுள் ஸ்ரீ ரவி சங்கர் பார்த்துக் கொள்வது போல உடலுழைப்பு மக்களை பங்காரு பாதுகாக்கிறார். சங்கர மடத்தின் முன் முழு இந்தியாவின் அதிகார வர்க்கமும் மண்டியிடும். வட இந்தியாவில் உள்ள நாட்டுப்புறங்களைச் சேர்ந்த உழைக்கும் மக்களின் ஆட்சியாளராக பண்ணையார்கள்தான் இன்றும் இருக்கின்றனர். யாருக்கு வாக்களிப்பது என்பதைக்கூட இவர்கள்தான் தீர்மானிக்கின்றனர். அதே போல நகரங்களில் சொத்துக்களை வைத்துக் கொண்டு அரசியலில் ஒரு ஆளாக வருவதும் இந்த பண்ணையார்கள்தான்.

ஆக பார்ப்பனியத்தின் சாதிய அமைப்பு இந்தியாவின் முதலாளித்துவத்திற்கு அளப்பரிய சேவை செய்வதை புரிந்து கொள்ள முடியும். தீபாவளி, புத்தாண்டு, அஷ்யத் திரியை இதர பார்ப்பனியப் பண்டிகளெல்லாம் மக்களிடையே நுகர்வுபொருட்களை கொண்டு சேர்ப்பதற்கான நாட்களாக முதலாளிகளால் கொண்டாடப்படுகின்றன.

இறுதியாக கிராமங்களில் விவசாயம் அழிக்கப்டுவதால் யாருக்கு பாதிப்பு ஏற்படுகிறதோ அந்த வர்க்கங்களின் உழைப்பை மலிவாகச் சுரண்டிதான் நகரங்களும், முதலாளிகளும் வாழ்கின்றனர். கிராமங்களில் உழைக்கும் மக்களுக்கு நிலம் சொந்தமாகி, விவசாயம் செய்து பிழைக்க முடியும் என்ற நிலை வந்தால் நகரத்து முதலாளிகளுக்கு மலிவான உழைப்பாளிகள் கிடைக்கமாட்டார்கள். ஆதலால் பார்ப்பனிய நிலவுடமை அமைப்பு இங்கே சமூக ரீதியாக இருப்பதோடு முதலாளித்துவத்திற்கும் சேவை செய்கிறது. பதிலுக்கு முதலாளித்துவம் அதை அழிக்காமல் தேவையான அளவு சீர்திருத்தம் செய்கிறது. இடையில் சிக்கிக் கொண்ட உழைக்கும் மக்கள் என்னடா வாழ்க்கை இது என்று நாட்களை கழிக்கிறார்கள்.

தற்போது இந்த விளக்கம் போதுமென்று நினைக்கிறோம். சரிதானா?

நன்றி.

________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

எக்சிட் போல்! என்ன நடக்கும்?

18

 

வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு இன்னும் இரண்டு நாள் இருக்கையில் நேற்றும், இன்றும் ஊடகங்கள் வெளியிட்டிருக்கும் வாக்குச்சாவடி கருத்துக் கணிப்புகளுக்கு என்ன முக்கியத்துவம் இருக்க முடியும்? தமிழகத்தைப் பொறுத்தவரை இது குதிரைப்பேர வர்த்தகத்திற்கான முன்னறிவிப்பாக, தயாரிப்பாக இருக்குமோ?

சி.என்.என். ஐ.பி.என் - எக்சிட் போல் - மேற்கு வங்கம்
சி.என்.என். ஐ.பி.என் - எக்சிட் போல் - மேற்கு வங்கம்

மேற்கு வங்கத்திற்கு இந்தப் பிரச்சினை இல்லை. எல்லா வாக்குச்சாவடி கணிப்புகளும் திரிணாமூல் காங்கிரஸ் நான்கில் மூன்று பங்கு வெற்றி பெறும் என்பதை தெரிவித்திருக்கின்றன. மார்க்சிஸ்ட் கூட்டணிக்கு 50 முதல் 60 தொகுதிகளும், மம்தாவின் கூட்டணிக்கு 220 முதல் 230 தொகுதிகளும் கிடைக்குமெனத் தெரிகிறது. 34 ஆண்டுகால சி.பி.எம் கூட்டணி ஆட்சி மிகுந்த சோகத்தோடு முடிவுக்கு வருகிறது.

இன்றும் கூட சி.பி.எம் அணிகளுக்கு சீனத்தையும், கியூபாவையும் கம்யூனிச நாடுகளாக காட்டி நம்பிக்கையை வளர்க்க முனையும் அந்த கட்சி உள்நாட்டில் மேற்கு வங்கத்தை காட்டி நம்பிக்கை ஊட்டி வந்தது. இனி அந்த ஒரே நம்பிக்கையும் இல்லை எனும் போது ‘தோழர்கள்’ என்ன செய்வார்கள்? பன்னாட்டு நிறுவனங்கள் நில ஆக்கிரமிப்பை எதிர்த்து இடது சாரிகள் நடத்த வேண்டிய போராட்டத்தை மம்தா நடத்தினார். இடதுசாரிகள் அதை ஒடுக்கினார்கள்.

அரசாங்கம், போலீசு என அனைத்தையும் கட்சி எந்திரமாக்கி, ஆயுதம் ஏந்திய வன்முறை தொண்டர்-குண்டர் கும்பல் மூலம் மாநிலத்தை ஆண்டு வந்த சி.பி.எம் மீது மேற்கு வங்க மக்களுக்கு அளவில்லாத கோபம் இருந்தது. சிங்கூர், நந்திகிராம் போராட்டங்கள் மற்றுமொரு முக்கிய காரணம். எனினும் சின்ன சின்ன விசயங்களுக்கெல்லாம் பெரிய அளவில் உணர்ச்சி வசப்படும் மம்தா பானர்ஜி போன்ற ‘வீராங்கனையே’ இத்தகைய ‘சித்தாந்த’ அமைப்பு பலம் உள்ள மார்க்சிஸ்ட் கூட்டணியை வீழ்த்தப் போதுமானவர் என்பது சி.பி.எம்மின் தரத்தைக் காட்டுகிறது.

மம்தாவைத் தவிர சொல்லிக்கொள்ளும் அளவு தலைவர்கள் இல்லாத, இருக்கும் தலைவர்களும் காங்கிரசு பாரம்பரியத்திலிருந்து வந்தவர்கள் என்பதால் மம்தாவின் ஆட்சி எப்படி இருக்குமென்பதை யூகித்துக் கொள்ளலாம். இது குறித்து அடுத்த வாரம் விரிவாக எழுதுகிறோம். எனினும் தோழர்களுக்கு முன்கூட்டியே ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நக்கீரன் எக்சிட் போல்
நக்கீரன் எக்சிட் போல் - தமிழ்நாடு

தமிழகத்தைப் பொறுத்த வரை நக்கீரன் அளித்திருக்கும் எக்சிட் போல் கணிப்பின் படி தி.மு.க கூட்டணிக்கு 137 இடங்களும் ( தி.மு.க – 84, காங்கிரசு – 24, பா.ம.க – 19, வி.சி – 6, முஸ்லீம் லீக் – 3, மூ.மு.க – 1 ), அ.தி.மு.க கூட்டணிக்கு 89 இடங்களும் ( அ.தி.மு.க – 73, தே.மு.தி.க – 7, கொ.இ.பே – 1, சி.பி.எம் – 5, சி.பி.ஐ – 2, ம.ம.க – 1 ) கிடைக்குமாம். 8 தொகுதிகள் இழுபறியாம். அதில் விஜயகாந்த் போட்டியிடும் ரிஷிவந்தியம் தொகுதியும் அடக்கம் என்ற மகிழ்ச்சியான செய்தியும் உண்டு.

கருத்து கணிப்புக்கு கடினமான மாநிலம் தமிழ்நாடு என்பதை இந்திய அளவு ஊடகங்களே ஒப்புக்கொண்டிருக்கின்றன. அவர்களே அப்படி தவறாக கணித்து மூக்குடைபட்டவர்கள் என்பதோடு, டெல்லியிலிருந்து கொண்டு தமிழ்நாட்டை பார்க்கும் வழக்கம் உள்ளவர்கள் என்பதால் தமிழக மக்களின் உள்ளக்கிடக்கையை அவர்களால் புரிந்து கொள்ள முடிந்ததில்லை. அதனால் நக்கீரன் முடிவுகள் கேள்விக்கிடமற்றவையா?

இதுவரை வந்த தேர்தல்கள் எல்லாம் நக்கீரன் முடிவுகளோடு துல்லியமாக ஒத்துப்போயின என்றும் கூறுகிறார்கள். இப்படித்தான் சென்ற  பாராளுமன்றத் தேர்தல் போது பா.ம.க வும், “நாங்கள் இருக்கும் கூட்டணிதான் ஜெயிக்கும்” என்று சொல்லி மூக்குடைபட்டார்கள். மற்ற ஊடகங்களெல்லாம் எப்படி கருத்துக் கணிப்பு நடத்தின என்பதை முழுமையாக வெளியிடும். நக்கீரன் ரிசல்ட்டை மட்டுமே வெளியிடும். எத்தனை பேரை சந்தித்தார்கள், வாக்கு விகிதம் எத்தனை என்பதெல்லாம் தெரியாது.

மேலும் கொழும்பிலிருந்து எழில், டெல்லியிலிலுந்து சிந்துஜா என்று நக்கீரனில் வரும் கட்டுரைகளை படிக்கும் போதெல்லாம் அப்படி இரு நிருபர்கள் அந்தந்த இடங்களில் இருக்கிறார்களா என்று சந்தேகம் வரும். அது போல போயஸ் தோட்டம், கோபாலபுரம், சி.ஐ.டி காலனி வீடுகளில் நக்கீரன் நிருபர்கள் கூட இருந்து பார்த்தது போலவும் எழுதுவார்கள். அந்த அளவுக்கு நக்கீரனின் பார்வைகள் உலகமெங்கும் பரிந்து விரிந்து கிடக்கின்றன.

தி.மு.க ஆதரவு உள்ள நக்கீரன் நிறையவே அனுபவவாதப் பார்வையோடுதான் தேர்தலை அணுகியிருக்கும். இரண்டையும் வைத்துப் பார்த்தால் நக்கீரன் கணிப்புகள் ஒரு சார்பானது, அறிவியல் பூர்வமற்றது என்று ஆகிறது. எனினும் சில நேரம் அனுபவப் பார்வை சரியாகவும் இருக்கலாம். இரண்டு கூட்டணிகளில் ஏதோ ஒன்று வெற்றி பெறவேண்டும் என்பதால் குருட்டுப் பூனை விட்டத்தில் குறி பார்த்து பாயலாமே?

நக்கீரன் கணிப்பு சரியென்று வைத்துக் கொண்டால் என்ன நடக்கும்?

தி.மு.கவிற்கு 84 இடங்களும், அ.தி.மு.கவிற்கு 73 இடங்களும் கிடைக்கும் என்றால் இது தி.மு.கவிற்கு இனிய செய்தி அல்ல. அ.தி.மு.க கூட்டணிக்கு 89 இடங்களோடு காங்கிரசு, பா.ம.கவை கூட்டினால் மெஜாரிட்டி கிடைக்கும். இது உடனடியாக சாத்தியமில்லை என்றாலும், ஸ்பெக்ட்ரம் ஊழல், கனிமொழி கைது என்று தி.மு.க கூட்டணி முரண்படுவதற்கான நேரம் வந்தால் இதுவும் நடக்கலாம். ஆனாலும் பணபலத்தில் வல்லவர்களான தி.மு.க தலைமை தனது கூட்டணி கட்சிகளையே விலை கொடுத்து வாங்கியோ, மந்திரி பதவி கொடுத்தோ சரிக்கட்ட முயலும். காங்கிரசைப் பொறுத்த வரை வெற்றி பெறும் 24 நபர்களும் குறைந்த்து 24 கோஷ்டிகளாக இருப்பதால் விலைக்கு வாங்குவது சுலபம். பா.ம.கவைப் பொறுத்தவரை சுயமரியாதை துளியும் இல்லாத கட்சி என்பதால் எதிர்காலத்தில் அ.தி.மு.கவோடு போகாது என்பதற்கு உத்திரவாதமில்லை.

மேலும் பா.ம.கவிற்கு 19 தொகுதிகள் என்பது ஒரு ஜாக்பாட் பரிசுதான். அதன் ஆதாயத்தை அதிக பட்சம் கறப்பதற்கு ராம்தாஸ் முயல்வார். எனினும் இந்த கட்சி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குவதோ, கட்சியை உடைப்பதோ சிக்கலான விசயமல்ல. மொத்தத்தில் காங்கிரசு கட்சியின் தலைமை, அதன் கோஷ்டிகளின் நெகிழ்வுத் தன்மை ஆகியவற்றை பார்க்கும் போது தி.மு.க ஆட்சி என்பது தினசரி திகிலோடு நடக்கவே வாய்ப்பிருக்கிறது.

நக்கீரன் கணிப்புபடி தே.மு.தி.கவிற்கு 7 தொகுதிகள்தான் என்பது நிச்சயம் மகிழ்ச்சியடைய வேண்டிய விசயம். இதன்படி இன்று வைகோவிற்கு நடந்தது நாளை விஜயகாந்திற்கும் நடக்கலாம். எப்படியோ தமிழகத்தை கவ்வியிருக்கும் சில அபயாங்களில் ஒன்றாவது இந்த தேர்தலோடு  முடிவுக்கு வந்தால் அது நல்ல விசயம்தான். விஜயகாந்த் கட்சியினரும் தி.மு.கவால் மலிவான விலைக்கு வாங்கப்படக் கூடியவர்கள்தான். அதே நேரம் அ.தி.மு.கவிற்கு குறைவான சீட்டுகள் இருப்பதால் ஆட்சி அமைக்க வாய்ப்பு வந்தால் இந்த வீணாப் போனவர்களுக்கு பிழைப்பதற்கான ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

நக்கீரன் கருத்துப்படி காங்கிரசுக்கு 24 தொகுதிகள் கிடைக்கும் என்பது சற்று அதிகம் என்றுதான் தோன்றுகிறது. இதனால் நாம் தமிழர், சீமான் போன்ற தமிழின ஆர்வலர்களின் பரப்புரைக்கு கிடைத்த வெற்றி என நினைத்து விடாதீர்கள். எந்தப் பரப்புரையின்றியுமே காங்கிரசு இப்படித்தான் தோற்றிருக்கும். இருப்பினும் தி.மு.க, அ.தி.மு.கவிற்கு அடுத்த படியாக மூன்றாவது பெரிய கட்சி என்ற இடத்தில் இருப்பதால் இந்த கருமாதிக்கு போன கட்சி துரதிர்ஷ்டவசமாக வரும் ஆட்சியில் முக்கியத்துவம் பெறும். மேலும் ஸ்பெக்ட்ரம் ஊழல் என்ற கத்தியை வைத்தே 63 இடங்களை வாங்கிய காங்கிரசுக் கட்சி, கூட்டணி ஆட்சியிலும் அதிக பட்ச ஆதாயங்களை அடைய முனையும். டெல்லிக்கு அடிமைகளாகிவிட்ட தி.மு.கவினர் இதை எதிர்த்து ஒன்றும் செய்ய இயலாது.

ஒருவேளை டெல்லித் தலைமையின் முடிவுக்கு மாறாக காங்கிரசுக் கட்சி எம்.எல்.ஏக்களை கட்சி மாற வைப்பது ஒன்றும் பெரிய விசயமல்ல. ஆனால் அந்த தைரியம் தி.மு.கவிற்கு இருக்குமா என்பதுதான் சந்தேகம். நக்கீரன் கருத்துப்படி கொங்கு வேளாளர் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்பது நிச்சயம் நல்ல விசயம்தான். இந்த ஆதிக்க சாதி கட்சியும் இந்த தேர்தலோடு மங்களம் பாடி புதைக்கப்படும்.

நக்கீரன் கணிப்புப் படி மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஐந்து இடங்களும், வலது கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு இடமும் கிடைக்குமாம். தோழர்கள் மேற்கு வங்க தோல்வியையே ஜீரணிக்க முடியாத நிலையில் இருக்கும் போது தமிழக முடிவு குறித்து அவர்கள் ஒன்றும் சொல்வதற்கில்லை.

சி.என்.என். ஐ.பி.என் - எக்சிட் போல் - தமிழ்நாடு
சி.என்.என். ஐ.பி.என் - எக்சிட் போல் - தமிழ்நாடு

அடுத்து சி.என்.என் – ஐ.பி.என் எக்சிட் போல் கணிப்பை பார்ப்போம். தமிழகத்தை சற்றும் அறியாத இந்த டெல்லி கம்பெனியின் கருத்துப்படி அ.தி.மு.க கூட்டணிக்கு 120 முதல் 132 இடங்களும், தி.மு.க கூட்டணிக்கு 102 முதல் 114 இடங்களும் கிடைக்குமாம். ஹெட்லைன்ஸ் டுடே கணிப்பின் படி மேற்கண்ட முடிவுகள் கிட்டத்தட்ட அதே தொகுதிகளில் நேர்மாறாக இருக்கிறது. அதாவது தி.மு.கவிற்கு மயிரிழை பெரும்பான்மையும், அ.தி.மு.கவிற்கு மயிரிழை தோல்வியும் எனச் சொல்கிறது.

சி.என்.என் மதிப்பிட்டீன்படி தி.மு.க கூட்டணிக்கு 44 சதமும், அ.தி.மு.க கூட்டணிக்கு 46 சத வாக்குகளும் கிடைக்குமாம். இதன்படி இரண்டு சதவீதம்தான் வெற்றியைத் தீர்மானிக்கிறது.

இந்தக் கணிப்பு உண்மையெனக் கொண்டால் தமிழகத்தில் நிச்சயம் குதிரைப் பேரம் தீவிரமாக நடக்கும். சிறு கட்சிகளின் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் அனைவரும் மிகுந்த விலையில் வாங்கப்படுவதற்கான முயற்சி தீவிரமாக நடைபெறும். கவர்னர் வழியாக காங்கிரசுக் கட்சி என்ன நிலை எடுக்கும், பணபலத்தில் கோலேச்சும் தி.மு.கவோடு காங்கிரசு என்ன உறவைக் கொண்டிருக்கும் என்பது ஒரு கேள்வி. மேலும் அ.தி.மு.கவும் பணபலத்தில் ஒன்றும் ஏழையல்ல என்பதோடு, காங்கிரசோடு சேர்வதற்கு எப்போதும் காத்துக் கொண்டிருக்கும் கட்சிதான்.

இதன்படி எம்.எல்.ஏக்களை பாதுகாக்கும் பணியும், பறிக்கும் பணியும் மிகத்தீவிரமாக நடைபெறும். எல்லாக் கட்சி தலைவர்களும் ஊடகங்களில் மிகுந்த கவனிப்பை பெறுவார்கள். திரைமறைவு பேரங்கள், கிசுகிசுக்கள், சவடால்கள், பரபரப்பு செய்திகள் என்று  தேர்தலில் இல்லாத காட்சிகள் திகிலோடு நடந்தேறும். ஆள்பிடிப்பதில் வல்லவர் அழகிரியா, செங்கோட்டையனா என்று போட்டி நடக்கும். மன்னார்குடி குடும்பமும், கோபாலபுரம் குடும்பமும் கிட்டத்தட்ட வாழ்வா சாவா என்ற போட்டியில் இறங்கும்.

ராமதாஸ், விஜயகாந்த், திருமா, ராமகிருஷ்ணன், தா.பாண்டியன் போன்றோரெல்லாம் மிகுந்த முக்கியத்துவம் உடைய தலைவர்களாக ஊடகங்களில் வலம் வருவார்கள். ஜூனியர் விகடன் அ.தி.மு.க அணிக்கும், நக்கீரன் தி.மு.க அணிக்கும் இல்லாத செய்திகளை பயங்கரமாக அள்ளி விடுவார்கள். இடையில் கனிமொழி கைது விவகாரமும் வரப்போவதால் ஜூனியர் விகடனுக்கு கொண்டாட்டம்தான்.

இவையெல்லாம் நடக்கும் பட்சத்தில் வாக்களித்த மக்களின் ஜனநாயக கடமை உணர்வு குறுகிய நேரத்திலேயே மரித்து விடும். மக்களும் விறுவிறுப்பான அரசியல் செய்திகளை டி.வி சீரியல் போக பார்த்து விட்டு அடுத்த வேலைக்கு சென்றுவிடுவார்கள்.

மற்றபடி இப்படித்தான் நடக்குமா என்பதை வரும் 13-ம் தேதி உறுதி செய்து கொள்ளலாம். அதுவரை காத்திருப்போம்.

சி.என்.என். ஐ.பி.என் - எக்சிட் போல் - கேரளா - அஸ்ஸாம்
சி.என்.என். ஐ.பி.என் - எக்சிட் போல் - கேரளா - அஸ்ஸாம்

கேரளாவிலும் இரு கூட்டணிகளுக்கும் மயிரிழை வெற்றிதான் கிடைக்குமென்று மாறுபட்ட கணிப்புகள் கூறுகின்றன. அப்படி வரும் பட்சத்தில் கேரளாவிலும் பிரச்சினைதான். அஸ்ஸாமில் மட்டும் காங்கிரசு சிறு அளவு பெரும்பான்மையோடு வெற்றி பெரும் என்று கூறுகிறார்கள்.

ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது மேற்கு வங்கத்தில் மம்தாவின் வெற்றியைத் தவிர மற்ற மாநிலங்களில் வெற்றி என்பது திரிசங்கு நிலைதான். குறிப்பாக தமிழ்நாட்டில் அப்படி ஒரு நிலை வரும்போது நடக்கும் காட்சிகளை நினைத்துப் பார்த்தால் இப்போதே உற்சாகமாக இருக்கிறது. தேர்தலில் அதிக அளவு வாக்களித்த மக்களின் ஜனநாயகத்திற்காக பெருமைப்பட்டவர்கள் எல்லாம் மக்களின் இந்த குழப்பமான முடிவு காரணமாக “என்னய்யா ஜனநாயகம்” என்று நொந்து கொள்வார்கள், ஆக இதுதான் போலி ஜனநாயகம் என்று மக்களிடம் நாம் மீண்டும் உறுதி செய்வதற்கு இந்த தொங்குநிலை சட்டமன்றமும் உதவி செய்யும்.

ஒரு வேளை தி.மு.கவோ, இல்லை அ.தி.மு.கவோ தனிப்பெரும்பான்மை பிடித்து ஆட்சியைப் பிடித்தால் முன்னெப்பொதும் இல்லாத அளவு ஊழல்களும், திரை மறைவு வருமானங்களும் கொடிகட்டிப்பறக்கும் என்பது உறுதி. இதை விட்டாலத் அடுத்த தேர்தலில் எல்லாம் இப்படி தனிப்பெரும்பான்மை கிடைக்காது என்பதால் கிடைத்ததை எல்லாம் அதிவேகமாகச் சுருட்டுவார்கள். ஆக தொங்கு நிலை என்றாலும் சரி, தனிப்பெரும்பான்மை என்றாலும் சரி, தமிழக மக்களுக்கு விமோச்சனம் இல்லை.
___________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

தேர்தல் 2011

உலகமயத்தால் சுரண்டப்படும் தலித்துகள், பெண்கள், ஏழைகள்!

ஒரு தலைப்பட்சமே அடிப்படையாக – ஜெயதி கோஷ்

நகர சுத்தி தொழிலாளர்கள்
திருநெல்வேலி நகர சுத்தி தொழிலாளர்கள் படம்-பிரன்டலைன்

பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் மேற்கொள்ளப் படும் நடிவடிக்கைகள் யாவும் சமூகத்தில் பாரபட்சமாக நடத்தப்பட்டு, விலக்கி வைக்கப்பட்டுள்ள நலிந்த பிரிவினரின் முன்னேற்றத்திற்காகத்தான் என பெரும்பாலான மக்கள் நம்ப வைக்கப்படுகிறார்கள்.  அதற்கு வைக்கப்படும் வாதம் யாதெனில் சந்தையின் சக்தியென்பது காலம் காலமாக இருந்து வரும் சமூக கட்டுப்பாடுகளையும், உடைத்தெறிந்து குறிப்பாக பாலின வேறுபாட்டினால் நீண்டகாலமாக மறுக்கப்பட்ட வாய்ப்புக்களை பெற்று தருகிறது என்பதாகும்.

துரதிருஷ்டவசமாக இந்தியாவில் யதார்த்தம் என்பது அது போலன்றி மிகவும் சிக்கல் வாய்ந்ததாக உள்ளது.  தற்போதைய பொருளாதார முன்னேற்றத்திற்கு உறுதுணையாக சொல்லப்படும் பெரிய அளவிலான முதலீடுகள், அதனுடைய சக்தியினால் அதிகமான தொழிலாளர்கள் ஈடுபடும் உற்பத்தி சார்ந்த வேலை வாய்ப்புக்கள் குறைவாகவும், பாதுகாப்பற்றதாகவும், இருக்கும் போக்கிலிருந்து மாறவில்லை என்பதுடன், பிடிவாதமாக முதலாளித்துவ நலன் சார்ந்தே உள்ளது.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், இந்திய கார்ப்பரேட் முதலாளிகளைப் பொறுத்தவரை முறைசார்ந்த, அல்லது முறைசாராத அனைத்து பணிகைளயும் குறைந்த கூலிக்கு வெளியில் கொடுத்து வாங்குவது என்ற முறை கடைபிடிக்கப் படுவதை சொல்லலாம்.  குறிப்பிட்ட எண்ணிக்கையை மிகுதிப்படுத்தும் அத்தகைய நடவடிக்கையில் கார்ப்பரேட் முதலாளிகளின் உற்பத்தி செலவினம் பெருமளவில் குறைகிறது என்பதோடு, உற்பத்தியில் இருக்கிற அபாயங்களை பல சாதாரண தொழிலாளர்களின் வாழ்வின் ஒரு அங்கமாக இருக்கிற சிறிய பிரிவுகளிடம் தள்ளிவிடுவதற்கும் அது உதவியாக உள்ளது.

இந்தியாவில் வெற்றிகரமான பொருளாதார நடவடிக்கைகள் என்பது, பெரிய அளவில் அங்கீகரிக்கப்படாத, முறைசாரா தொழிலாளர்களின் உழைப்பினால் கிடைக்கக் கூடிய மறைமுக உதவிகளைச் சார்ந்தே இருக்கிறது. அதிகமான பணிகளை வெளியில் கொடுத்து வாங்குவதால் நிர்ணயிக்கப்பட்ட செலவினம் என்பது கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பெருமளவில் குறைகிறது.

உதாரணத்திற்கு இந்தியாவில் கணினி மென்பொருள் தொழிலில் சர்வதேசங்களோடு ஒப்பிடுகையில் மலிவான கூலிக்கு திறமையானவர்கள் கிடைப்பதால், அதன் வெற்றிக்கு வழிவகுக்கிறது.

மேலும் குறிப்பிடத்தக்கவாறு செலவின குறைப்பு என்பது ஒவ்வொரு அலுவலகத்திலும் சுத்தப்படுத்துவது, அலுவலகப் பராமரிப்பு, போக்குவரத்து, காவல்/பாதுகாப்பு பணிகள், அலுவல் முடிந்தபின் நடைபெறும் இதர பணிகள், உணவு சமைத்தல், வழங்கல் போன்ற அனைத்து பணிகளும் வெளியில் சிறு சிறு குழுக்களிடம் கொடுப்பதால் ஏற்படுகிறது. பெரும்பாலும் இவை மிகக் குறைந்த ஊதியத்தில் அதிக நேரம் பணிவாங்கும் சிறிய நிறுவனங்களில் கொடுக்கப்படுகிறது.  இதில் தொழிலாளர்களுக்கான பணி பாதுகாப்பு உள்ளிட்ட எவ்வித பாதுகாப்பும் இல்லை.  இத்தகைய குறைந்த சம்பள பணியாளர்கள் மூலமான செலவின குறைவு இல்லாதிருந்தால் சிறிய கணினி மென்பொருள் நிறுவனங்கள் சர்வதேச நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க மிகுந்த சிரமப்பட நேரிடும்.  இதே நிலை உற்பத்தியில் இருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் புதிய நிறுவனங்களுக்கும் பொருந்தி வரும் உண்மையாகும்.

கார்ப்பரேட் பிரிவில் இத்தகைய நேரடி மற்றும் மறைமுக செலவின குறைப்பு என்பதில் குறைந்த சம்பளத்திற்கு சில சமூக தன்மைகளை வைத்து தொழிலாளர்களை தீர்மானித்து திறம்பட கையாள்வதில் இந்திய முதலாளிகள் கைதேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.  சாதி மற்றும் இனத்தின் வழியான பாகுபாடு காட்டும் தன்மை என்பது இந்தியாவில் நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்திய சமூகத்தில் உள்ள இந்த பிரத்யேக சாதி ஏற்றத் தாழ்வுகளை வைத்துக் கொண்டு கார்ப்பரேட் தரகு முதலாளிகள் மலிவான தொழிலாளர்களை முடிவு செய்கின்றனர்.

பல்வேறு ஆய்வுகளிலிலிருந்து சமூக பிரிவினை என்பது வறுமையோடு தொடர்புடையதாக இருக்கிறது என்பதும், அதன் காரணமாக பணியும், சம்பளமும் சமூக பிரிவுகளில் மிகவும் ஏற்றத் தாழ்வாக அமைகிறது என்பதும் தெரியவருகிறது.  தேசிய மாதிரி ஆய்விலிருந்து குறைவான கூலிக்கு வேலையாட்கள் என்பது பொதுவான சாதி இந்து மக்கள் தொகையோடு ஒப்பிடுகையில் பெரும்பாலும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர், பட்டியலிடப்பட்ட இனத்தவர், இஸ்லாமியர் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் (இந்த வரிசையில்) ஆகியோரே அதிகமாக உள்ளனர் என்பது தெரியவருகிறது.  இது பெரும்பாலும் கல்வியறிவு குறைவினாலும், திறமையின் அளவுகோலாலும் தீர்மானிக்கப் படுகிறது என்பதுடன், கல்வியறிவு பெறுவதிலும் சமூகத்தில் மிகுந்த பாகுபாடுகள் உள்ளது.

அத்தகைய சாதிவாரியான வேறுபாடுகள் என்பது ஊரக மற்றும் கிராமப்புற வேலைவாய்ப்பு சந்தைகளில் நிலவுகிறது.  உதாரணத்திற்கு டெல்லி போன்ற பொருளாதாரத்தில் சிறந்த வளர்ச்சி பெற்ற மாநகராட்சியில் கூட தலித் பணியாளர்களுக்கு வேலை வழங்குவதில் பாகுபாடு கடைப்பிடிக்கப்படுவதுடன், அவர்கள் தான் பெரும்பாலும், மீள முடியாத குறைந்த கூலி பணிகளில் நியமிக்கப் படுகின்றனர்.  உற்பத்தியில் கூட இவையெல்லாம் அத்தியாவசிய பணிகள் அதாவது குப்பை பெருக்குபவர்கள், சுமைப்பணியாளர்கள், கட்டிட பணியாளர்கள், கடைகளில் விற்பனை உதவியாளர்கள் மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்பவர்கள் ஆகிய தொழிலாளர்கள்.  தொடர்புகளின் மூலம் இத்தகைய குறைந்த திறனுள்ள வேலைகளுக்கான ஆட்கள் தேர்வில் வெகு காலமாக இருந்துவரும் சாதிய பாகுபாடு என்பது பிரதான பங்கு வகிப்பதுடன், அவர்களிடம் இருக்கும் ஏழ்மையை பயன்படுத்தி குறைந்த கூலிக்கான ஆட்கள் தேர்வு என்பது மேற்கொள்ளப்படுகிறது.  இந்த சமூக அமைப்பில் அவர்களுக்கான வருமானம் ஈட்டல் என்பதில் உள்ள அவசியத்தினால் அவர்கள் குறைந்த கூலிக்கு அமர்த்தப்படுகின்றனர்.

அதேபோல் ஊரக இந்தியாவில் சாதிய நடைமுறை வழக்கங்களினால் உள்ளூரில் மிகக் குறைந்த கூலிக்கு அவர்களின் ஏழ்மையை பயன்படுத்தி தாழ்த்தப்பட்ட சாதியினரை வேலைக்கு முதலாளிகளிடம் அமர்த்தும் பழக்கம் என்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது.  திரு கன்ஷ்யாம் ஷா என்பவர் எழுதியுள்ள ஊரக இந்தியாவில் தீண்டாமை என்ற புத்தகத்தில் பஞ்சாப், உத்திரப்பிரதேசம், பீஹார், மத்திய பிரதேசம் (சத்தீஸ்கர் உட்பட) ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஒரிஸ்ஸா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய 11 மாநிலங்களில் தீண்டாமை அதிக அளவில் இருந்து வருகிறது என்பதும், இங்குள்ள பெரிய அளவிலான சமூக பழக்க வழக்கங்களினால் தாழ்ந்த சாதியினர் மற்றும் தலி்த் பிரிவினரின் பொருளாதார முன்னேற்றம் என்பது கட்டுப்படுத்தப் பட்டு அதன் காரணமாக அவர்கள் கடுமையான நிபந்தனைகளுடனான மிகக் குறைந்த கூலிக்கு தமது உழைப்பை விற்க வேண்டி நேருகிறது.

இந்த ஆய்வில் 73 சதவீத கிராமங்களில் தலித் மக்கள் தலித் அல்லாதவர்கள் வீட்டில் நுழைய முடியாது என்பது தெரியவருகிறது.  70 சதவீத கிராமங்களில் தலித்துக்கள் தலித் அல்லாதவர்களுடன் அமர்ந்து உண்ண முடியாது.  64 சதவீத கிராமங்களில் தலித்துக்கள் பொதுவான கோவில்களில் நுழைய கூடாது. 36 சதவீத கிராமங்களில் தலித்துக்கள் கடைகளில் நுழைய கூடாது.  ஏறக்குறைய இந்த ஆய்வு மேற்கொண்ட கிராமங்களில் 3ல் ஒரு பங்கு கிராமங்களில் உற்பத்தி பொருட்களை வாங்கி பொதுவாக பயன்படுத்தும் பொருட்களை விற்கும் பணியில் தலித்துக்கள் வியாபாரிகளாக செயல்படுவதை அனுமதிப்பதில்லை என தெரியவருகிறது.  இத்தகைய பழக்க முறைகளினால் தலித்துக்கள் தங்களின் விருப்பப்படி சம்பாதிக்கும் முறையை தேர்வு செய்து கொள்ள முடிவதில்லை என்பதால் கூலி உயரும் காலங்களில் கூட மலிவான கூலி வேலைக்கு அவர்கள் ஆட்பட நேரிடுகிறது. இந்தியாவில் அபரிமிதமான பொருளாதார வளர்ச்சியை கண்டுகொண்டிருக்கும் சூழலிலும் இத்தகைய வழக்கங்கள் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.

ஆனால் முக்கியமாக இங்கே கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவெனில் அத்தகைய பழக்கங்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதோடல்லாமல், பொருளாதாரம் ஓரிடத்தில் குவியும் நடவடிக்கைக்கு அடிப்படையாகவும் அது இருக்கிறது என்பதுதான்.  மற்றொரு வார்த்தைகளில் சொல்வதானால், இந்தியாவில் முதலாளித்துவம் என்பது, குறிப்பாக உலகளாவிய சமீபத்திய  சூழலில், ஏற்கனவே இருந்து வந்த தற்போதும் இருக்கிற சாதிய பாகுபாடுகளை பயன்படுத்தி தாழ்த்தப்பட்டவர்களை தமது சொந்த நலனுக்காக தள்ளி வைப்பதும், அவர்களின் ஏழ்மையை பயன்படுத்தி மிகக் குறைந்த கூலிக்கு அழைப்பதுமான போக்கில் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.

எனவே சமூக பிரிவினைகள் என்பது பொருளீட்டும் நடவடிக்கையில் சுதந்திரமாக இல்லை.  மாறாக கூடுதலாக பணி வாங்குவதும், குறைந்த கூலிக்கு அதிக ஆட்கள் கிடைக்கும் வண்ணம் வழக்கத்தை அதிகரிக்கும் விதமாகவும் உள்ளது.

இதேமாதிரியான பாகுபாடு பார்க்கும் பழக்கம் என்பது பாலினத்திற்கேற்பவும் வேறுபடுவது கண்கூடான ஒன்று.  பெண்களிடம் வேலை வாங்குவது என்பதில் வெளிப்படையாக இந்த நான்கு முரண்பாடுகள் தென்படுகிறது.  கூலி வழங்கப்படும் தொழிலாளி, குறைந்த கூலி வழங்கப்படும் தொழிலாளி, கூலி மறுக்கப்படும் தொழிலாளி மற்றும் வேலை மறுக்கப்படும் தொழிலாளி என்பதாகும்.   வேலைவாய்ப்பு அதிகரித்து, வேலையின்மை என்பது குறையும் போது, அல்லது கூலி பெறுபவர் எண்ணிக்கை அதிகரித்து கூலி பெறாதவர்கள் எண்ணிக்கை குறையும் போது ஏற்படுகிற இது ஒரு முரண் நிலையாகும்.

ஊரக பெண்களைப் பொறுத்தவரை அவர்களின் வழக்கமான வேலை என்பது அதிகரித்து வருவதுடன் குறிப்பாக வீட்டு வேலைகள் மற்றும் உற்பத்தி சார்ந்த வேலைகளில் முக்கியமாக குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்யும் நிலை என்பது ஏற்படுகிறது.  உற்பத்தி என்பதைப் பொறுத்தமட்டில் சமீபத்திய பல பெரிய நிறுவனங்கள் தமது உற்பத்தி சங்கிலியில் அது சார்ந்த பணிகளை சிறிது சிறிதாக வெளியில் கொடுத்து வாங்கும் தன்மையினால், வீட்டிலிருந்து கொண்டே குறைந்த கூலிக்கு வேலை செய்வது என்பது பெண்களிடம்  அதிகரித்திருக்கிறது.

ஆனால் ஏற்றுமதி சார்ந்த வேலைகளில், சமீபத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மண்டலங்களில் கூட ஊரக இந்தியாவில் பெண்களை வேலைக்கு அமர்த்துவது என்பது மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது.  இதன் நடுவில் ஊரக இந்தியாவில் சம்பளத்திற்கு வேலை கிடைப்பதில் உள்ள சிரமத்தின் காரணமாக பெண்களிடம் விவசாயம் சாராத சுய வேலை வாய்ப்பு என்பது அதிகரித்திருக்கிறது.

இந்த பொருளாதார வளர்ச்சி காலத்தில் பெண்களுக்கு வழங்கப்படும் சம்பளம் என்பது 1993-94-லிருந்து 2004-05-க்கு இடைப்பட்ட 10 ஆண்டு காலத்தில் சிறிது கூடியிருக்கிறது.  ஆனால் அதே சமயம் தேசிய தனிநபா் வருவாய் என்பது பெண்களை விட மிக அதிகமாக வளர்ச்சியடைந்திருக்கிறது (ஊரக பட்டதாரிகள் மற்றும் கிராமத்து படிக்காத பெண்கள்),  உண்மையான சம்பளம் என்பது குறைந்திருக்கிறது.  இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையிலான சம்பள வித்தியாசம் என்பது அதிகரித்துள்ளதுடன், உலகிலேயே இங்குதான் அதிகமாக உள்ளது.

பொதுப் பணிகள் என்பது மிகுதியாக குறைந்த கூலி வாங்கும் பெண்களை சார்ந்து இருக்கிறது.  மாதிரி நிர்வாகி என்று செயல்பட வேண்டிய அரசுத் துறை பணிகளில் பெண்களுக்கான வேலை வாய்ப்பு என்பது இன்னும் குறைவாகத்தான் உள்ளது.  அத்தியாவசிய பொதுப்பணிகள் என்பது நிச்சயமற்ற ஒப்பந்த முறையில் குறைந்த கூலி மற்றும் பயன்களுக்கு பெண்களை வேலைக்கமர்த்தும் போக்குதான் நீடிக்கிறது.

இது பள்ளிக் கல்வி போன்ற அரசுப் பணியில் அப்பட்டமாக தெரிகிறது. (அதாவது பகுதிநேர ஆசிரியர்கள் நியமனத்தினால்)  அதே போல் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து (அங்கன்வாடி மற்றும் சமூக நலப்பணிகள்) சார்ந்த பணிகளில் பெண்கள் பகுதி நேர பணியாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாத திட்டம் என்பது ஒன்று வந்தபின் தான் இத்தகைய பாலின வேறுபாடுகள் என்பது குறைந்துள்ளது ஊரகப் பணிகளில் இந்த திட்டம் செயல்படுவதை பார்க்கும் போது தெரிகிறது.  சுய வேலைவாய்ப்பில் பெண்களுக்கான நிபந்தனைகள் என்பது, சம்பளத்திற்கான பணியில் உள்ள நடத்தைப் பாங்கினை சிரமப்படுத்தும் விதமாக உள்ளது.  வருமானம் தொடர்பான குறைந்த எதிர்பார்ப்பின் அடிப்படையில் பெண்களின் விவசாயம் சாராத சுய வேலைவாய்ப்பு தீர்மானிக்கப்படுகிறது என்ற போதிலும் அந்த குறைந்த பட்ச எதிர்பார்ப்பினை கூட பூர்த்தி செய்வதில்லை என்பதுதான் யதார்த்த நிலையாக உள்ளது. தொழில்துறையிலும், சிறு வணிகத்துறையிலும் உயர் வருவாய் என்பது ஏற்பட்டுள்ள போதிலும், ஏற்றுக் கொள்ளக் கூடிய நிலையில் போதிய வருவாய் ஈட்டும் வாய்ப்பு என்பது குறைவாக இருப்பதால், சுயவேலை வாய்ப்பு என்பது சிரமத்துடன் கொண்டுசெல்லும் ஒரு நடவடிக்கையாகவே உள்ளது.

குறிப்பிட்ட பகுதியில் பொருளாதார வளர்ச்சி மேலோங்கியிருந்தாலும், வீட்டு வேலைகள் சார்ந்த பணிகளில், அது பெருவாரியாக ஒரு வேலைக்கு ஒரு கூலி என்று இருப்பதால், குறிப்பாக பெண் தொழிலாளர்களின் வருமானத்தின் பெரும்பகுதி இத்தகையதே என்பதால், அந்த தொழிலிலும், அதனால் வரும் இந்த கூலியும், பெரிய நகரங்களில் வெகுவாக குறைந்து வருகிறது என்று தேசிய மாதிரி கணக்கெடுப்பு எடுத்த ஆய்வும், பல ஆராய்ச்சிக் கட்டுரைகளும் வெளிப்படுத்துகிறது.

அது போல் பெண் தொழிலாளர்களின் பணிக்கு கூலியே கொடுப்பதில்லை என்பதும் அதிகமாகி வருகிறது.ஏனென்றால் பெண்கள் நலனுக்காக ஒதுக்கப்படும் செலவினங்கள் குறைக்கப்படுவதும், அல்லது தனியார் மயமாக்கப்படல், அல்லது வலுவிழந்த பொது சொத்துக்கான கட்டுமானம், மனைகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களின் கிடைப்பதற்கான கால நீடிப்பு ஆகும் வகையில் உள்ள பற்றாக்குறை கட்டுமான வசதியும், அல்லது தெளிவாக சொல்லப் போனால், நல்ல நோக்கமுள்ள பல திட்டங்கள் கூட (உதாரணம்- வன அழிப்பு) பாலினம் சார்ந்ததாக உள்ளது என்பதுமே ஆகும்.

மீண்டும் இந்த பாலின வேற்றுமை தற்போதும் இருந்து கொண்டு இருக்கிறது என்பது அச்சாரமான குறிப்பு என்பதோடு மட்டுமின்றி, (இந்தியாவில் இந்த நிலைப்பாடு மேல்மட்டத்திலும் எடுக்கப்படுகிறது) இது மூலதன குவிப்பிற்கான வழிமுறையில் பிணைந்துள்ளது. எனவே, தற்போதைய வளர்ச்சி, நிலவி வரும் சமூக வேற்றுமையை உடைப்பதற்கு பதில் அதனை சார்ந்திருந்தே வளர்ச்சி பற்றிய கருத்தை முன்னெடுத்து செல்லப்படுகிறது.

_________________________________________________________________

– நன்றி: ஃபிரண்ட்லைன், கட்டுரையாளர் – ஜெயதி கோஷ்

தமிழில் – சித்ரகுப்தன்
__________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

உலகின் நம்பர் 1 பயங்கரவாதி!

14

பின்லேடன் இருப்பும், மரணமும் யாருக்காக?

மே 2-ம் தேதி. அதிகாலை நேரம். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து இரண்டு மணிநேர பயண தூரத்தில் உள்ள அபோதாபாத் நகரத்தில் இருக்கும் காக்கூல் இராணுவ பயிற்சி மையத்திலிருந்து கூப்பிடு தூரத்தில் இருக்கும் அந்த பெரிய கட்டிடத்தை நான்கு உலங்கு வானூர்தியில் வந்த 79 அமெரிக்க சீல்(seals) படையினர் தாக்குகின்றனர். நாற்பது நிமிடங்கள் நீடித்ததாகச் சொல்லப்படும் அந்த சண்டையின் இறுதியில் தமது இலக்கைத் தாக்கியழித்து விட்டு அமெரிக்க வீரர்கள் ‘வெற்றியுடன்’ திரும்புகின்றனர்.

அதற்குச் சற்று நேரத்தில் அமெரிக்க வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்திக்கும் பாரக் ஒபாமா, அமெரிக்கர்களுக்கு நீதி கிடைத்து விட்டது என்கிறார். கடந்த பத்து ஆண்டுகளாக வலை வீசித் தேடி வந்த உலகின் நம்பர் ஒன் தீவிரவாதியான ஒசாமா பின்லேடனை அமெரிக்க வீரர்கள் அபோதாபாத்தில் நடந்த சண்டையில் கொன்று விட்டனர் என்று தெரிவிக்கிறார். அப்பாவி மக்களையும் குழந்தைகளையும் கொன்ற பயங்கரவாதிக்கான நீதியை வழங்கி விட்டதாகவும், ஆனாலும் பயங்கரவாதத்திற்கு எதிரான தமது போர் தொடரும் என்றும் அறிவிக்கிறார்.

அதைத் தொடர்ந்து இந்த விசயம் உலகெங்கும் உள்ள ஊடகங்களில் ஒரு பெரும் விவாதப் பொருளாகியுள்ளது. உலகத்தின் நாகரீக சமூகத்திற்கே ஆகப் பெரிய சவாலாக விளங்கிய படுபயங்கரமான தீவிரவாதி கொல்லப்பட்டதை உலகெங்கிலுமுள்ள முதலாளித்துவ ஊடகங்கள் கொண்டாடின. ஆனால், இவர்களுக்கும் முன்னதாக இந்த ‘நரகாசுரவதத்தைக்’ கொண்டாடத் துவங்கியது அமெரிக்கர்கள் தான். செய்தி வெளியானதும் வெள்ளை மாளிகையைச் சூழ்ந்து கொண்ட நூற்றுக்கணக்கான அமெரிக்கர்கள் ஆடிப் பாடி மகிழ்ந்துள்ளனர். தேசிய வெறி முழக்கங்களைத் தெரிவித்து மகிழ்ந்துள்ளனர்.

இன்னொரு பக்கம் பாகிஸ்தானில் திரளான மக்கள் ஒசாமா கொல்லப்பட்டதை அடுத்து அமெரிக்க எதிர்ப்புப் பேரணிகளை நடத்தியுள்ளனர். புனிதப் போராளியான ஒசாமா பின்லேடனுக்கு சொர்கத்தில் இடம் நிச்சயம் என்று சொல்கின்றனர். வசதியான வீட்டுப் பிள்ளையான ஒசாமா, இசுலாத்தையும் இசுலாமியர்களையும் காப்பதற்காகவே தனது சுகவாழ்க்கையைத் தியாகம் செய்து காடு மலையெல்லாம் அலைந்து திரிந்தார் என்று இவர்கள் நம்புகிறார்கள். அமெரிக்கா என்றாலே இசுலாமிய எதிர்ப்பு என்பது பட்டவர்த்தனமாக நடந்து வரும் வேளையில் ஒரு சராசரி முசுலீம் கூட பின்லேடன் கொல்லப்பட்டது குறித்து வருந்துவார் என்பதில் ஆச்சரியமில்லை. அதைத் தவறாக எண்ணவேண்டிய அவசியமும் இல்லை.

பொதுவில் அமெரிக்காவின் இந்த சாகச நடவடிக்கையைப் போற்றிப் புகழும் ஊடகங்களை விடுத்துப் பார்த்தால், வெகு சில அமெரிக்க எதிர்ப்பு ஊடகங்களிலோ இது மொத்தமும் பெரிய மோசடியென்கிறார்கள். ஒசாமா பின்லேடன் ஏற்கனவே மரணமடைந்து விட்டாரென்றும், இப்போது அமெரிக்கா சொல்வதே பச்சையான பொய் என்றும் சொல்கின்றனர். சர்வதேசப் பெருமந்தம் என்கிற பெரும்  பொருளாதாரப் புதைகுழியிலும் ஆப்கான் போர் என்கிற இராணுவரீதியிலான புதைகுழியிலும் மீளமுடியாமல் சிக்கியிருக்கும் அமெரிக்கா, அதிலிருந்து  மக்களின் கவனத்தை திசை திருப்பவே இப்படி ஒரு நாடகத்தை நடத்தியிருப்பதாகச் சொல்கிறார்கள்.

இவர்களில் சிலர் இன்னும் ஒரு படி மேலே போய், எதிர்வரும் தேர்தலுக்குள் சரிந்து போன தனது செல்வாக்கை நிமிர்த்தும் முகமாகவே பராக் ஒபாமா இப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார் என்று சொல்கிறார்கள். ஒசாமா பின்லேடனை அமெரிக்கத் தயாரிப்பு என்று ஒப்புக் கொள்ளும் சிலரும் கூட, அவரால் அமெரிக்கா படுபயங்கரமான பாதிப்புக்குள்ளாகி விட்டதைப் போன்றும், அவர் அமெரிக்காவுக்கு தீர்க்க முடியாத ஒரு பெரும் சவாலாக விளங்கினார் என்றும் இப்போது படாதபாடெல்லாம் பட்டு அமெரிக்கா அவரைத் தீர்த்துக் கட்டியிருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.

இந்த அம்சங்களை நாம் தனித்தனியே பிரித்துப் பார்த்து பொருள் கொள்ள முடியாது. ஒசாமா யாருக்காக வாழ்ந்தார் என்பதைப் புரிந்து கொள்வதில் இருந்து தான் அவர் யாருக்காக செத்தார் என்பதை விளங்கிக் கொள்ள முடியும். யாருக்காக செத்தார் என்பதை விளங்கிக் கொள்ளும் போது தான் எதற்காகச் சாக வேண்டும் என்பது தெரியவரும். இந்தப் பரிசீலனைகளின் நீட்சியாக எப்போது செத்தார் என்கிற ஆராய்ச்சியின் தேவையும் தேவையின்மையும் அதன் மெய்யான பொருளில் நமக்கு விளங்கும்.

ஒசாமா இறந்தாலும் ஆயிரம் பொன், இருந்தாலும் ஆயிரம் பொன்!

ஒப்பீட்டளவில் ஒசாமாவைக் காட்டிலும் உள்நாட்டு மக்களிடையே ஓரளவு செல்வாக்கு பெற்றிருந்த சதாம் உசேன் பிடிபட்டதையும், விசாரணை என்கிற பெயரில் அவர் அவமானப்படுத்தப்பட்டதையும், பின்னர் அவர் அநீதியான முறையில் கொல்லப்பட்டதையும் வீடியோக்களாக ‘கசிய’ விட்டு ஈராக்கியர்களிடையே பயபீதியை ஏற்படுத்திய அமெரிக்கா, ஒசாமா கொல்லப்பட்டதும் அவரது உடலை வெளியே காட்டாமல் அவசர அவசரமாக கடலில் வீசியெறிந்து விட்டதாகச் சொல்கிறது.

ஒசாமாவைக் கொல்வதற்காக நடத்தப்பட்ட ஆப்பரேஷன் ஜெரோனிமா பற்றிய தகவல்களைக் கூட அமெரிக்க சி.ஐ.ஏவின் உயரதிகாரிகளும் வெள்ளை மாளிகளை அதிகாரிகளும் முன்னுக்குப் பின் முரணாகத் தான் சொல்லி வருகிறார்கள். ஒசாமாவோடு அவரது மனைவியும் மகனும் கொல்லப்பட்டார்கள் என்று ஆரம்பத்தில் சொன்னார்கள் – பின்னர் இல்லையில்லை அது அவரது கூட்டாளியின் மனைவியும் மகனும்  என்று மாற்றினார்கள். அடுத்து, ஒசாமாவே துப்பாக்கியை தூக்கிக் கொண்டு சண்டையிட்டார் என்றார்கள். ஒசாமாவின் உடல் நலிவைப் பற்றி ஊடகங்கள் எழுதத் துவங்கிய பின் இல்லையில்லை அவர் கைது நடவடிக்கையை எதிர்க்கும் விதமான செய்கைகளைச் செய்தார், எனவே தற்காப்புக்காக கொன்றோம் என்கிறார்கள்.

இப்படி மாற்றி மாற்றி அமெரிக்கர்கள் உளறிக் கொட்டுவதைச் சுட்டிக் காட்டும் சிலர், இது மொத்தமுமே ஒரு நாடகம் என்கிறார்கள். ஒசாமா 2001 டிசம்பரிலேயே கொல்லப்பட்டு விட்டதாகவும், தமது ‘தீவிரவாதத்துக்கு எதிரான’  போருக்கு மக்களிடையே ஒரு ஆதரவு தளத்தை உண்டாக்கவும், ஒசாமாவை மோசமான எதிரியாகச் சித்தரித்து அமெரிக்கர்களிடையே போருக்கு ஆதரவானதொரு பொதுக் கருத்தை காட்டமைக்கவே இத்தனை நாளும் அதை மறைத்தார்கள் என்று இவர்கள் கருதுகிறார்கள்.

இரட்டை கோபுரத் தகர்ப்புக்குப் பின் பகிரங்கமாக ஒசாமா வெளியே தலைகாட்டாமல் இருந்ததையும் அதன் பின் வெகு சில சந்தர்பங்களில் வெளியான அவரது வீடியோக்களின் நம்பகத்தன்மை சுயேச்சையான ஆய்வுகளில் (ஃபோரன்சிக் ஆய்வு) கேள்விக்குள்ளாக்கப் பட்டிருப்பதையும் சுட்டிக் காட்டும் இவர்கள், இப்போது ஆப்கானில் இருந்து வெளியேற முடியாமல் அமெரிக்கா தவிப்பதாகவும், போருக்கான செலவினங்கள் அதிகரித்து அமெரிக்கப் பொருளாதாரத்தின் கழுத்தை நெறிப்பதாகவும், இதனால் ஆப்கான் போரை ஒரு கவுரவமான வெற்றியாக சித்தரிக்கும் முகமாகவே இப்போது ஒசாமா கொல்லப்பட்ட நாடகம் நடத்தப்படுவதாகச் சொல்கிறார்கள். இது இன்னொரு பக்கத்தில் ஒபாமாவின் சரிந்து போன செல்வாக்கை உயர்த்தவும் பயன்பட்டுள்ளது என்றும் சொல்கிறார்கள்.

மேற்கண்ட வாதங்கள் முழுமையும் பொய் என்று ஒதுக்கிவிட முடியாது. ஆனால், ஒரு அடிப்படையான அம்சத்தை இவர்கள் காணத் தவறுகிறார்கள். போரிலிருந்து பின்வாங்குவது தான் அமெரிக்காவின் நோக்கம் என்றால், இப்போது லிபியாவின் மேல் ஏன் போர் தொடங்க வேண்டும்? அடுத்து சிரியாவின் மேல் ஏன் குறிவைக்க வேண்டும்? நிதர்சனம் என்னவென்றால், ஏகாதிபத்தியம் போர்களில் இருந்து விலகுவதன் மூலம் தனது நெருக்கடிகளைத் தீர்த்துக் கொள்ள விளைவதில்லை – அது மேலும் மேலும் போர்களில் ஈடுபடுவதன் மூலமே தனது நெருக்கடிக்கான தீர்வை அடைய விரும்புகிறது. அதுதான் ஏகாதிபத்தியங்கள் உயிர்வாழ்தலின் ரகசியம்.

அதே நேரம் ஒசாமா கொலை பற்றி அமெரிக்கர்கள் மாற்றி மாற்றி முரண்பட்ட தகவல்களை அளிப்பதையும், 2007-க்குப் பிறகு ஒசாமா வீடியோ / ஆடியோ உள்ளிட்ட எந்த ரூபத்திலும் தலைகாட்டாத எதார்த்த உண்மையையும், இரட்டை கோபுரத் தகர்ப்பிற்குப் பின் நடந்ததாகச் சொல்லப்படும் ‘இசுலாமிய தீவிரவாத’ தாக்குதல்கள் எதையும் ஒசாமாவின் நேரடிக் கட்டளையின் பேரில் நடக்கவில்லை என்று ஏகாதிபத்தியவாதிகளே சொல்வதையும் நாம் கவனத்தில் கொள்ளாமல் இருக்க முடியாது.

ஆக, உண்மை என்பது இந்த இரண்டுக்கும் இடையில் தான் இருக்கிறது.

ஒசாமா 2001-ல் இறந்தாரா – இல்லை 2011-ல் இறந்தாரா என்பதைப் பற்றிய பரிசீலனைக்குள் போவதற்கு முன், ஒசாமா பின்லேடன் என்கிற பெயர், அதைச் சுற்றி கவனமாக கட்டப்பட்ட பிம்பம், அந்த பிம்பத்தைப் பற்றி அமெரிக்க மற்றும் உலக மக்களின் பொதுக்கருத்தில் முதலாளித்துவ ஊடகங்களால் தொடர்ச்சியாகத் திணிக்கப்பட்ட பயபீதி, இந்த பயபீதியினால் ஏற்பட்ட விளைவுகள் என்ன – அது யாருடைய நலனுக்கு சேவை புரிந்துள்ளது என்பதைக் குறித்து நாம் புரிந்து கொண்டால் தான் முந்தைய கேள்விக்கான பதில் நமக்கு விளங்கும்.

அமெரிக்க அரசின் இயக்கமும் அதன் செயல்பாடுகளும் – அந்தச் செயல்பாடுகளினால் விளையும் நன்மைகளும் முழுக்க முழுக்க பன்னாட்டு முதலாளிகளின் நலன் சார்ந்த ஒன்று. போர் என்பதை நாம் எப்படிப் பார்க்கிறோம்? போர் என்றால் அப்பாவி மக்கள் சாவார்கள். ஒன்றுமறியாத குழந்தைகள் அநியாயமாகச் சாவார்கள். போர் என்றால் ஒரு சமூகத்தின் சர்வநாசம். அதன் சமூகப் பொருளாதாரக் கட்டமைவின் பேரழிவு. இப்படித்தான் போரைப் பற்றி ஓரளவுக்கு விவரம் புரிந்தவர்கள் கூடப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். சரிதானே?

ஆனால், முதலாளிகளைப் பொருத்தளவில் போர் என்பது ஒரு அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம். போர் என்றால் ஆயுத விற்பனை – ஆயுத வியாபாரிகள் கொழிப்பார்கள். போரின் அழிவு என்றால் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு – கட்டுமானக் கம்பெனிகளின் கொழிப்பு. போரின் இறுதியில் தோற்றுப் போகும் நாட்டின் வளங்களின் மறுபங்கீடு. தமது பொருட்களுக்கான சந்தை. இதையெல்லாம் கடந்து வெல்லப்பட்ட நாட்டின் மீது வென்ற நாட்டின் மேலாதிக்கம்.

ஒசாமா பின்லேடன் என்று ஒருவர் இல்லாமல் போய் – இரட்டை கோபுரம் தகர்க்கப்படாமல் இருந்திருந்தாலும் கூட ஆப்கான் போர் என்பது சர்வ நிச்சயமாய் நடந்திருக்கும். அதற்கு இரட்டை கோபுரத் தகர்ப்பு என்பதையும் மனிதகுலத்துக்கே சவால் விடுக்கும் ‘படுபயங்கர’ சாத்தானாகச் சித்தரிக்கப்படும் ஒசாமா பின்லேடனையும் கடந்து பல்வேறு தேவைகளும் காரணங்களும் அமெரிக்காவிடம் இருந்தன. அந்தக் காரணங்கள் என்னவென்பதைப் பற்றி நாம் விரிவாக விளக்கும் முன்,  ஈராக் போருக்கான முக்கியமான காரணமாக அமெரிக்காவால் சொல்லப்பட்ட பேரழிவிற்கான ஆயுதங்கள் என்பது ஒருபோதும் ஈராக்கில் கண்டெடுக்கப்பட்டதில்லை என்பதை நீங்கள் கணக்கில் கொள்ள வேண்டும்.

கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஆப்கானும், அமெரிக்காவின் ஆக்கிரமிப்பும், அல்-காய்தா, தாலிபான் உருவாக்கமும்: ஒரு சுருக்கமான வரலாறு!

சோவியத் யூனியனின் முன்னாள் உறுப்பு நாடுகளாயிருந்த மத்திய ஆசிய நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளின் நிலங்களின் அடியில் அள்ள அள்ளக் குறையாத இயற்கை வளங்கள் கொட்டிக் கிடக்கின்றன. உஸ்பெகிஸ்தானில் கொட்டிக் கிடக்கும் தங்கம், தஜிகிஸ்தானில் புதைந்து கிடக்கும் ஏராளமான வெள்ளி, கஜாக்கிஸ்தானின் யுரேனிய இருப்பு ஆகிவற்றைக் கடந்து, இந்நாடுகளின் நிலத்தினடியில் ஏராளமான இயற்கை எரிவாயு ரிசர்வும் உள்ளது. கஜாக்ஸ்தான், துர்க்மெனிஸ்தான், அசர்பெய்ஜான் ஆகிய நாடுகளில் மட்டும் சுமார் 6.6 டிரில்லியன் கன மீட்டர் எரிவாயு நிலத்தினடியில் இருக்கிறது.

கிழக்கிலும் தெற்கிலும் பாகிஸ்தான், மேற்கே ஈரான், வடமேற்கே துர்க்மெனிஸ்தான், வடக்கே உஸ்பெக்கிஸ்தான் மற்றும் தாஜிகிஸ்தான், வட கிழக்கே சீனாவின் ஜின்சியாங் மாநிலம் ஆகியவற்றைத் தன் எல்லைகளாகக் கொண்டிருக்கும் ஆப்கான் போர்தந்திர ரீதியில் ஒரு புவியியல் கேந்திரமான இடத்தில் அமைந்துள்ளது. மத்திய ஆசியாவின் எரிவாயுவை ஐரோப்பியச் சந்தைக்குக் கடத்திச் செல்ல வேண்டுமானால் ஒன்று ஈரான் வழியே கொண்டு சென்றாக வேண்டும் அல்லது ஜார்ஜியா வழியே கொண்டு சென்றாக வேண்டும்.

ஈரான் அமெரிக்காவுக்குப் படியாத நாடு என்பதைக் கடந்து, ஈரான் வழியே துருக்கியை குழாய் மூலம் இணைப்பது என்பது துருக்கிக்கும் ஈரானுக்கும் பொருளாதாரத்தின் அடிப்படையில் வலுவானதொரு நட்புறவு தோன்றி விட அடிப்படையாய் அமைந்து விடும். ஈரானைத் தனிமைப்படுத்துவதைத் தனது அடிப்படையான மத்தியகிழக்குக் கொள்கையாகக் கொண்டிருக்கும் அமெரிக்காவுக்கு இது கொள்ளிக்கட்டையை எடுத்து தலையைச் சொறிந்த கதையாகி விடும்.

ஜார்ஜியா வழியே குழாய் அமைக்கலாம் என்றால் அங்கே ஆயுந்தாங்கிய மாஃபியா கும்பலின் தொல்லை. அதுவுமின்றி ஜார்ஜியாவின் தெற்கு எல்லைப் பிராந்தியமான ஒஸ்ஸேடியாவை ரசியா சொந்தம் கொண்டாடுகிறது. இவ்விரு நாடுகளுக்குள்ளும் இருக்கும் எல்லைத் தகறாரின் காரணமாக ரசியா அவ்வப்போது ஜார்ஜியாவின் மேல் ராணுவத் தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது. ஜார்ஜியாவை நேட்டோ நாடுகளின் கூட்டமைப்பில் இணைப்பதையும் ரசியா எதிர்த்து வருகிறது. மேலோட்டமாகப் பார்த்தால் ரசியாவுக்கும் ஜார்ஜியாவுக்கும் இடையேயான எல்லைப் பிரச்சினையாகத் தோற்றமளித்தாலும், ஜார்ஜியாவின் ஊடாக மேற்கு நாடுகள் எண்ணைக் குழாய் அமைத்து விடக் கூடாது என்பதில் ரசியா குறிப்பாக இருப்பது புரியும்.

இவ்விரு பாதைகளும் அடைபட்டதும் அமெரிக்காவின் முன் இருக்கும் எஞ்சிய வாய்ப்பு ஆப்கான் – பாகிஸ்தான் – அரபிக்கடல் என்கிற குழாய்ப் பாதை தான். மேலும் இது  மேலே சொல்லப்பட்ட இரண்டு பாதைகளையும் விட குறைந்த செலவு பிடிக்கக் கூடியது. அரபிக்கடலில் இருந்து ஐரோப்பியச் சந்தைக்கும் இந்தியச் சந்தைக்கும் கப்பல் மூலம் எண்ணையை ஏற்றுமதி செய்வது சுலபம். இறுதியாக அமெரிக்காவின் போட்டியாளர்களாக உருவெடுத்து வரும் ரசியா, சீனா இரண்டு நாடுகளையும் கண்காணிப்பதற்கும், பயமுறுத்துவதற்கும், தேவையான இராணுவத் தளங்களை ஆப்கானில் வைத்திருப்பதும் முக்கியமானது.

ஆப்கானின் புவியியல் கேந்திர முக்கியத்துவத்தை உணர்ந்திருந்ததால் தான் பனிப்போர் காலத்திலேயே சமூக ஏகாதிபத்தியமாய் சீரழிந்திருந்த சோவியத்திற்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஆப்கானைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. இந்தப் போட்டியில் எழுபதுகளின் இறுதியில் ரசியாவின் கை ஓங்கியிருந்தது. அப்போது அங்கிருந்து ரசியாவை விரட்ட அமெரிக்கா பெற்றெடுத்த சொந்தப் பிள்ளைகள் தான் தாலிபானும் அல்-காய்தாவும்.

நாத்திகர்களான கம்யூனிஸ்ட்டுகளை இசுலாமிய மண்ணான ஆப்கானில் இருந்து விரட்டுவதற்காகப் பல்வேறு இசுலாமிய நாடுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்களைப் பாகிஸ்தானில் குவித்தது அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ. அங்குள்ள மதரஸாக்களில் வைத்து அவர்களுக்கு சித்தாந்தப் பயிற்சியும் ஆயுதப் பயிற்சியும் அளித்தது பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. இதற்கு தேவையான நிதி உதவியை அமெரிக்க அடிமைகளான சவுதி ஷேக்குகள் அளித்தனர். இப்படியாகத் தான் அரபு நாடுகளில் கட்டுமானத் தொழிலின் மூலம் பெரும் செல்வம் ஈட்டி சவூதி அரச குடும்பத்துக்கு நிகரான பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒசாமா பின்லேடன் ஆப்கான் வந்திறங்கினார்.

பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒசாமாவே சுகவாழ்க்கையை விடுத்து நாத்திகர்களை எதிர்த்து ஜிஹாத்தில் குதித்துள்ளார் என்கிற பிரச்சாரம் ஏழை முசுலீம்களிடம் சிறப்பாக எடுபடும் என்பது அமெரிக்காவின் கணக்கு. அமெரிக்காவின் அந்தக் கணக்கு தப்பவில்லை; ஆனால், அவர்கள் கணக்குப் பண்ணிப் பார்க்க வேண்டும் எண்ணியிராத எதிர்பாராத ஒரு இலக்கிலிருந்து தான் அடுத்த தாக்குதல் இறங்கியது. கம்யூனிச ‘அபாயத்தைக்’ களையும் நோக்கத்திற்காகப் அமெரிக்கா பெற்றுப் போட்ட தாலிபானும், அல்-காய்தாவும் தமது பிறவி நோக்கத்தை செவ்வனே நிறைவேற்றினர். எண்பதுகளின் இறுதியில் சோவியத் படைகள் ஆப்கானில் இருந்து பின்வாங்கின.

அல்-காய்தாவுக்கும் ஆப்கான் போரில் பங்கேற்க முஜாஹிதீன்களைத் திரட்டவும் இசுலாமிய நாடுகளின் இளைஞர்களிடையே ஒரு பிரச்சார முழக்கமாக அமெரிக்கா முன்வைத்திருந்த சித்தாந்தமான இசுலாமிய சர்வதேசியம் பூமராங் போல் திருப்பித் தாக்கும் சந்தர்பமும் உடனடியாக வந்து சேர்ந்தது அமெரிக்காவே எதிர்பார்த்திராத ஒரு சுவாரசியமான திருப்பம். ஆப்கான் போர் முடிந்து சவூதி திரும்பிய பின்லேடனை ஈராக்கின் குவைத் ஆக்கிரமிப்பு எதிர்கொள்கிறது.

இவ்விவகாரத்தில் அமெரிக்கத் தலையீட்டை பின்லேடன் எதிர்க்கிறார். ஈராக்கை தனது அல் காய்தாவையும் முஜாஹித்தீன்களையும் வைத்தே எதிர்கொள்ளலாம் என்கிற பின்லேடனின் விருப்பம் நிராகரிக்கப்படுகிறது. மேலும் சவூதி அரசின் அமெரிக்க விசுவாசமும் சவூதியில் நிலைகொண்டிருந்த அமெரிக்கப் படைகளும், வரலாற்று ரீதியிலான யூத இசுலாமிய முரண்பாடுகளின் பின்னணியில் பின்லேடனுக்கு இருந்த இசுரேல் எதிர்ப்பும், அதற்கு எண்ணை வார்க்கும் இசுரேலின் பிராந்திய ரவுடித்தனமும், அந்த ரவுடித்தனத்தில் குளிர்காய்ந்து கொண்டிருக்கும் அமெரிக்காவின் தாதாத்தனமும் பின்லேடனுக்குள் ஆழமான அமெரிக்க எதிர்ப்புணர்வை  உண்டாக்குகிறது. இது பின்லேடனுக்குள் மட்டுமல்ல மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க அடிமை ஆட்சியாளர்களைத் தவிர்த்த இசுலாமிய மக்கள் அனைவருக்குள்ளும் உருவாகிறது.

என்னதான் அமெரிக்கத் தயாரிப்பாக இருந்தாலும் – அமெரிக்கப்  பாடதிட்டமான இசுலாமிய சர்வதேசியத்தைப் பயின்றிருந்தாலும் பின்லேடன் அதை உணர்வுப்பூர்வமாக பற்றி நின்றிருக்கிறார். இங்கே பின்லேடனிடம் வெளிப்படும் அமெரிக்க எதிர்ப்புணர்வும் பொதுவில் உலகெங்கும் உள்ள கம்யூனிஸ்டுகள் மற்றும் ஜனநாயக சக்திகளிடம் வெளிப்படும் அமெரிக்க எதிர்ப்புணர்வும் அடிப்படையிலேயே வேறு வேறானது. பின்லேடனிடமோ தாலிபானிடமோ வெளிப்படும் அமெரிக்க எதிர்ப்புணர்வு என்பது மக்கள் விடுதலை உரிமை என்கிற அடித்தளத்தின் மீது கட்டப்பட்டதல்ல – அது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இடத்தில் இசுலாமை மாற்றீடு செய்ய வேண்டும் – இழந்த தமது மேண்மையை மீட்க வேண்டும் என்கிற நோக்கத்தின் மீது கட்டப்பட்டது. அரபுலகில் மக்களது ஜனநாயகம் தழைக்க வேண்டுமென்பது அல் காய்தாவின் கோரிக்கையல்ல. அங்கிருக்கும் ஆட்சியாளர்களைத் துறத்திவிட்டு தூய இசுலாமிய சர்வாதிகாரத்தை நிறுவுவதுதான் அவர்களது நோக்கம்.

அதன் பின் 1996-ல் ஆப்கான் திரும்பும் ஒசாமா, தாலிபான்களின் பராமரிப்பில் தனது அமெரிக்க எதிர்ப்புப் போருக்கு ஆயத்தமாகிறார். தாலிபானின் பச்சையான மனித உரிமை மீறல்கள் மற்றும் காட்டுமிராண்டித் தனமான சட்டங்களின் காரணமாக அமெரிக்காவால் ஆப்கான் அரசை வெளிப்படையாக அங்கீகரிக்க முடியா விட்டாலும் அமெரிக்க அடிவருடிகளான பாகிஸ்தானும் சவூதியும் ஆப்கானை அங்கீகரித்திருந்தன. இவர்கள் மூலம் அமெரிக்கா ஆப்கானுடன் தொடர்புகளைப் பேணிக் கொண்டிருந்தது. எண்ணை ஒப்பந்தங்களுக்காக தாலிபான்களின் பிரதிநிதிகள் அமெரிக்காவுக்கும் சென்றுள்ளனர்.

வெளிப்படையான அமெரிக்க எதிர்ப்பு மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான பின்லேடனின் போரை ஆரம்பத்தில் தாலிபான்கள் தங்கள் சொந்தப் பிரச்சினையாகக் கருதவில்லை. முல்லா ஓமர் 98-ன் மத்தி வரையில் பின்லேடனின் இந்த முடிவை எதிர்த்துள்ளதாக அவரை மூன்று முறை பேட்டி கண்ட பாக்கிஸ்தான் பத்திரிகையாளர் ரஹிமுல்லாஹ் யூஸுஃப்ஸாய் தெரிவிக்கிறார். ஆனால் இந்த முரண்பாடு ஓரளவுக்கு மேல் நீடிக்க முடியவில்லை. தூய இசுலாமிய அடிப்படைவாதத்தின் மேல் கட்டப்பட்ட தாலிபான்களும் அவர்களின் முஜாஹித்தீன்களும் ஓரளவுக்கு மேல் அமெரிக்காவோடு உறவாடுவது அவர்களின் அடிப்படையையே அசைத்து விடக்கூடிய அபாயம் கொண்ட விளையாட்டு. தொண்ணூறுகளின் இறுதிப் பகுதியில் ஆப்கானில் இருந்தவாறே பின்லேடன் அமெரிக்கத் தூதரகங்களின் மேல் தொடுத்த தாக்குதல்களை தாலிபான்கள் தடுக்கவில்லை. பின்லேடனின் சர்வதேசிய இசுலாமிய முன்னணியின் செயல்பாட்டையும் முடக்கவில்லை.

இது ஆப்கானை எளிதில் மேய்ந்து விட்டுப் போய்விடலாம் – அதைத் தொடர்ந்து மத்திய ஆசிய எண்ணை வயல்களை சுலபத்தில் வளைத்துப் போட்டு விடலாம் – என்றெல்லாம் நாக்கில் எச்சில் ஊற கணக்குப் போட்டுக் காத்திருந்த அமெரிக்காவுக்கு ஆத்திரத்தைக் கிளப்புகிறது. தொண்ணூறுகளின் இறுதியிலிருந்தே ஆப்கானைத் தாக்கிக் கைப்பற்ற அமெரிக்கா தருணம் பார்த்துக் காத்துக் கிடந்த நிலையில் தான் இரட்டை கோபுரத் தகர்ப்பு நடக்கிறது.

உலக வரலாற்றில் மிகவும் ஆச்சரியப்படவைக்கும் இந்தத் தாக்குதலை அல் காய்தா நிறைவேற்றியதாக சொல்லப்படுகிறது. அதே நேரம் இந்த தாக்குதல் நடப்பதை அமெரிக்க அறிந்து தனது அரசியல் நோக்கத்திற்காக வேண்டுமென்றே  நடக்க அனுமதித்தது என்றெல்லாம் கூட சிலர் கூறுகின்றனர். எது எப்படியோ இந்த தாக்குதலை வைத்து அமெரிக்கா அறுவடை செய்த அரசியல் நடவடிக்கைகள்தான் நம்மைப் பொறுத்த வரை முக்கியமானது.

ஆப்கானின் மேலான அமெரிக்க நிலைப்பாடு பற்றியெறியத் தயாரான நிலையில் இருந்த காய்ந்து போன வைக்கோல் போர் என்றால், இரட்டை கோபுரத் தகர்ப்பு என்பது அதன் மீது விழுந்த சிறு பொறி. அதன் பின் அமெரிக்கா தீவிரவாதத்திற்கு எதிரான தனது போரைத் துவக்குகிறது. அதுவரை தானே தனது நலனுக்காக ஊட்டி வளர்த்த இசுலாமிய சர்வதேசியத்தையும் முஜாஹிதீன்களையும் இப்போது புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப தனது நலனுக்காகவே வில்லனாகச் சித்தரிக்கத் துவங்கியது  அமெரிக்கா. இப்படித்தான் விடுதலைப் போராளிகள், பயங்கரவாதிகளாக மறு நாமகர்ணம் சூட்டப்பட்டார்கள்.

தீவிரவாத ஒழிப்பு என்கிற பெயரில் முதலில் ஆப்கான் மேலும் அதைத் தொடர்ந்து ஈராக் மேலும்  குண்டுகளைப் பொழிந்ததும், அவற்றைத் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததையும், அப்போரில் அநியாயமாய்க் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான அப்பாவிகள் பற்றியும் நீங்கள் கேள்விப்படாமல் இருந்திருக்க மாட்டீர்கள் – ஆனால், இதில் நீங்கள் கேள்விப்படாத இன்னொரு அம்சமும் இருக்கிறது. ஆப்கான் போருக்காக மட்டும் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை அமெரிக்கா செலவிட்டு வருகிறது. இன்றைய நிலையில் ஈராக் மற்றும் ஆப்கான் போர்களுக்காக சுமார் 4 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்பட்டுள்ளது.

அமெரிக்கர்களின் வரிப்பணத்திலிருந்து செலவிடப்படும் இத்தொகையானது ஆயுதக் கம்பெனி முதலாளிகளும், கட்டுமானக் கம்பெனி முதலாளிகளுக்கும், எண்ணைக் கம்பெனிகளுக்கும் தான் பாய்ச்சப்படுகின்றன. இது இந்தப் போரின் பொருளாதார முகம்  என்றால், இந்தப் பிராந்தியத்தில் தனது மேலாதிக்கத்தை நிறுவியுள்ளது அதன் இராணுவ முகம்.

ஆக, இசுலாமிய தீவிரவாதம் என்கிற வளர்த்த கடா அமெரிக்கா விரும்பிய திசையில் பாய்ந்த போதும் சரி  – திரும்பி அமெரிக்காவின் மார்பிலேயே பாய்ந்த போதும் சரி; அதன் பலன்கள் என்னவோ அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளுக்கும் அதன் ஆன்மாவாக இருக்கும் அமெரிக்க முதலாளிகளுக்கும் தான்.

இந்தப் போரின் ஒரு இடைக்கட்டமாக இப்போது ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்திருந்தாலும், அந்த வாக்கியத்தின் இறுதிப் பகுதியான ‘தீவிரவாதத்திற்கு எதிரான போர் இன்னமும் ஓயவில்லை’ என்பதே நமது அக்கறைக்கும் கவனத்திற்கும் உரியதாகும். கடந்த பத்தாண்டுகளாக போதுமான அளவிற்கு ஒசாமா பின்லேடன் என்கிற பூச்சாண்டியைக் காட்டிக் காட்டியே அமெரிக்கர்களிடம் பயபீதியை உண்டாக்கி ஒரு பொதுக்கருத்தை கட்டமைத்து போர் நடத்தியாகிவிட்டது. இப்போது எதார்த்தம் சாமானிய  அமெரிக்கர்களைச் சுடும் நேரம் வந்து விட்டது.

இனிமேலும் இந்தப் பூச்சாண்டியைக் காட்டி கிளைமேக்சே இல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க பட்ஜெட்டிலும் மக்கள் நலத்திட்டங்களைச் சுருக்கி நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை முதலாளிகளுக்குப் படையலிட்டுக் கொண்டிருக்க முடியாது. அதவாது மக்கள் தொட்டறியத்தக்க ஒரு வெற்றி வேண்டும். ஆக, அமெரிக்கா நடத்தி வரும் மெகா சீரியலில் இப்போதைக்கு ஒரு வில்லனைக் காவு கொடுத்து நேயர்களை கொஞ்சம் மகிழ்ச்சிப் படுத்தியாக வேண்டிய தருணம் வந்துள்ளது – ஒசாமா வதமும் நிகழ்ந்துள்ளது.

பின்லேடன் கொல்லப்பட்டதை அறிவித்த பராக் ஒபாமா, அந்த வாக்கியத்தின் இறுதியிலேயே போர் இன்னமும் முடியவில்லை என்பதைத் தெளிவாக அறிவித்திருக்கிறார். இனிமேல் வெறுமனே தீவிரவாதத்தை மட்டுமே  எதிர்த்துப் போர் புரிந்து கொண்டிருப்பது என்பது சராசரி அமெரிக்கர்களின் பொதுக்கருத்தைத் திரட்டுவதற்குப் போதுமான அளவுக்குப் பயனளிக்காது. எனவே, தீமையை அழித்த நன்மையானது அடுத்து தனது நிலையை ஸ்திரப்படுத்திக்  கொள்ள வேண்டுமல்லவா? எனவே எங்கெல்லாம் நன்மை போதுமான அளவுக்கு இல்லையோ அங்கெல்லாம் அமெரிக்க ஏவுகணைகள் நன்மையின் நற்செய்தியைச் சுமந்து செல்கின்றன. லிபியாவிலும், சிரியாவிலும் அமெரிக்கத் தலையீடுகள் இப்படித்தான் நியாயப்படுத்தப்படுகின்றன – அதாவது ‘மனிதாபிமான அடிப்படையிலான’ தலையீடு.

சீரியலின் ஒரு எபிசோடில் இருந்து அடுத்த எபிசோடுக்குச் செல்லும் முன் ஒரு சுப முடிவு தேவை – அந்த சுப முடிவு தான் தீமையின் வடிவமான ஒசாமா பின்லேடனின் கொலை. இதில் ஒசாமா இப்போது செத்தாரா முன்பே செத்தாரா என்பதற்குள் நாம் விரிவாக ஆராயத் தேவையில்லை.  இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்ட பின் கடந்த பத்தாண்டுகளில் ஒசாமா பின்லேடன் என்கிற பெயர் அமெரிக்காவுக்கு அள்ளிக் கொடுத்தது என்னவென்பதும் இப்போது கொல்லப்பட்ட பின் அள்ளிக் கொடுக்கப்போவது என்னவென்பதும் தான் நமது கவனத்திற்குரியது. ஒருவேளை முன்பே செத்திருந்தாலும் அது அமெரிக்க நலன்களுக்கே பயன்பட்டுள்ளது – இப்போது செத்ததும் அமெரிக்க நலன்களுக்கே பயன்படப் போகிறது.

கடந்த பத்தாண்டுகளாக அமெரிக்க முதலாளிகளுக்குப் பொன்முட்டையிடும் வாத்தாக இருந்த அமெரிக்காவின் தீவிரவாதத்துக்கு எதிரான போருக்கான ஒரு நொண்டிச் சாக்காக ஒசாமா இருந்தார் என்றால் இனி அடுத்து வரப்போகும் ‘நல்லெண்ண அடிப்படையிலான’ போர்களுக்கு அமெரிக்கர்களை உளவியல் ரீதியில் தயார்படுத்த இப்போது செத்துள்ளார்.

யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது போல் ஒசாமா பின்லேடனின் வாழ்வும் அமெரிக்க நலன்களுக்குச் சேவை செய்வதாகவே இருந்தது – இப்போது அவரது சாவும் அமெரிக்க நலன்களுக்குச் சேவை செய்வதாகவே அமைந்துள்ளது.

யார் பயங்கரவாதி? அல் காய்தாவா, அமெரிக்காவா?

பின்லேடன் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அச்செய்தியை வெள்ளை மாளிகையில் வைத்து செய்தியாளர்களுக்கு அறிவித்த பராக் ஒபாமா, அப்பாவி மக்களையும் குழந்தைகளையும் அநியாயமாகக் கொன்ற ஒரு பயங்கரமான தீவிரவாதியை ஒழித்து நீதியை நிலைநாட்டி விட்டதாகவும், இத்தோடு நில்லாமல் தீவிரவாதத்திற்கு எதிரான அமெரிக்கப் போர் தொடரும் என்றும் அறிவித்துள்ளார். அதாவது இதுவரை நிலைநாட்டியதைக் கடந்து இன்னமும் நிலைநாட்டப்படுவதற்கு இன்னமும் நீதியை அமெரிக்கா ஸ்டாக் வைத்துள்ளது என்பதே அந்த அறிவிப்பின் உள்ளார்ந்த அர்த்தம்.

பராக் ஒபாமாவின் வார்த்தைகள் ஒரு அம்சத்தில் உண்மையானது தான் – அதாவது அப்பாவி மக்களையும் குழந்தைகளையும் கொல்பவன் ஒரு பயங்கரமான தீவிரவாதியாகத் தான் இருக்க முடியும். அவன் அழித்தொழிக்கப்பட வேண்டும் என்கிற ஒபாமாவின் ஆசையைப் புரிந்து கொள்ளவும் முடிகிறது – அது நியாயமானது தான். எமது ஆசையும் கூட அதுவே தான். நாம் எமது வாசகர்களையும் பொதுமக்களையும் ஒபாமாவின் இந்த ஆசையை நிறைவேற்றி வைக்குமாறு கோருகிறோம். ஆனால், ஒசாமா பின்லேடன் ஒழிந்த பின் இப்போது உலகிலேயே பயங்கரமான தீவிரவாதி யாராக இருக்கும் என்கிற சந்தேகம் உங்களுக்கு இருக்கலாம். அது நியாயமானது தான். எனவே அப்படியொரு தீவிரவாதியை உங்களுக்கு அறிமுகம் செய்து வைப்பது வினவின் தலையாய கடமையாக  கருதுகிறோம்.

இந்த பயங்கரவாதியை நீங்கள் லேசில் எடை போட்டு விடலாகாது. உலகின் அத்துனை கண்டங்களிலும் அதன் சகல மூலைகளிலும் இந்த பயங்கரவாதி கால் வைத்த இடத்திலெல்லாம் சர்வநாசத்தை விளைந்துள்ளான். அப்பாவி மக்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டுள்ளனர். இளம் பெண்கள் தம் பெற்றோர் கண்முன்னேயே கற்பழிக்கப்பட்டுள்ளனர். தாய்மார்கள் தமது பிள்ளைகள் முன்பே மானபங்கப்படுத்தப்பட்டுள்ளனர். ஒன்றுமறியாத சிறு பிள்ளைகள் இந்த பயங்கரவாதி வீசிய குண்டுகளில் சிதைந்து போயுள்ளன. கருவிலிருக்கும் சிசு வரையில் ஊடுருவும் வீரியம் மிக்க அந்த குண்டுகளினால் பிறக்கும் குழந்தைகள் உருவமற்ற வெறும் சதைக்கோளங்களாகப் பிறந்துள்ளன.

ஒசாமா பின்லேடனாவது எந்த நீதிமன்றத்தாலும் விசாரித்து குற்றம் நிரூபிக்கப்பட்டவனில்லை – ஆனால், நாங்கள் அடையாளம் காட்டுவதோ சர்வதேச நீதிமன்றத்தாலேயே குற்றவாளி  என்று தீர்ப்பளிக்கப்பட்ட பயங்கரவாதியை. இன்னமும் தண்டிக்கப்படாமல் சுதந்திரமாக உலாவும் அந்தத் தீவிரவாதி வேறு யாரும் இல்லை – அது அமெரிக்கா தான். உலகெங்கும் ஒரு ஆக்டோபஸின் கரங்களைப் போல் விரியும் அமெரிக்காவின் பயங்கரவாதக் கொலைக் கரங்கள் விளைவித்த சர்வநாசங்களைப் பற்றி ஒரு சிறிய தொகுப்பை இங்கே வழங்குகிறோம். முதலில் அமெரிக்காவின் கொல்லைப்புறமான லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து துவங்குவோம்.

அமெரிக்க பயங்கரவாதம்

அமெரிக்க பயங்கரவாதம் – தென் அமெரிக்க சாட்சியங்கள்!

வட அமெரிக்க கண்டத்தையும் தென்னமெரிக்க கண்டத்தையும் இணைக்கும் மெல்லிய நிலப்பரப்பில் அமைந்திருக்கும் சின்னஞ்சிறிய நாடு நிகரகுவா. 1936-ல் தொடங்கி சுமார் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக அந்நாட்டைத் தன் இரும்புப் பிடிக்குள் வைத்திருந்தது சோமோசா சார்வாதிகார கும்பல். இன்றைக்கு உலகமக்களுக்கு ஜனநாயக விரிவுரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் இதே யோக்கிய அமெரிக்கா தான் அன்று மக்களைக் கசக்கிப் பிழிந்து கொண்டிருந்த சோமோசா கும்பலுக்கு உற்ற பங்காளி.

காலம் காலமாக அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை உணர்வுகள் ஒரு பௌதீக வடிவமாக ஸான்டினிஸ்ட்டா புரட்சியாளர்கள் வடிவில் உருக்கொண்டு எழுந்து சூறாவளியாய்ச் சுழன்றடித்ததில் சோமோசா குடும்பத்தின் கடைசி வாரிசும் அப்போது அதிகாரத்திலிருந்த கொடும் சர்வாதிகாரியுமான அனடேஸியோ சோமோசா டெபாயேல் 1979-ம் ஆண்டு அதிகாரத்திலிருந்து தூக்கியெறியப்பட்டார். மக்களின் விடுதலை உணர்வுகள் வெற்றி பெற்றால் என்ன நடக்கும் என்பதை அமெரிக்கா உணர்ந்திருந்தது. 77-ம் ஆண்டே இதை முன்னறிந்திருந்த அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் இராணுவ உதவிகளை வழங்கியிருந்தார். ஆனாலும் சுழன்றடித்த மக்களின் கோபக் கனலில் சோமோசா சர்வாதார ஆட்சி கவிழ்ந்து சான்டினிஸ்ட்டா புரட்சியாளர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றினர்.

அதிகாரத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட சோமோசா கும்பலுக்கு விசுவாசமான கூலிப்படையினரைப் பொறுக்கியெடுத்த அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ, அவர்களுக்கு கான்ட்ராஸ் என்று பெயரிட்டு பயங்கரவாத நாசவேலைகள் செய்வதற்கு பயிற்றுவித்தனர். இதற்காகவே “ஸ்கூல் ஆப் அமெரிக்கானாஸ்” என்கிற பயங்கரவாத பயிற்சிப் பள்ளிகளை நடத்தி வந்துள்ளது அமெரிக்கா. 1946-ல் துவங்கப்பட்ட இந்த பயங்கரவாதப் பயிற்சிப் பள்ளியில் வைத்து தான் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஒசாமாவுக்கே அப்பன்மார்களையெல்லாம் அமெரிக்கா விரிவாகப் பாடம் நடத்திப் பயிற்றுவித்து உருவாக்கி உலகுக்கு அறிமுகம் செய்து வைத்தது.

சுமார் 60,000 பங்கரவாதிகளை உருவாக்கிய இந்தப் பள்ளியை உள்நாட்டில் கிளம்பிய எதிர்ப்புகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் டிசம்பர் 2000-ல் இழுத்து மூடிய அமெரிக்கா ஒரே மாதத்தில் – 17 ஜனவரி 2001-ல் – மேற்குப் பிராந்தியத்தின் பாதுகாப்பு ஒத்துழைப்பிற்கான பயிற்று மையம்  (Western Hemisphere institute for security cooperation) என்கிற பெயரில் மீண்டும் திறந்துள்ளது. நிகரகுவா மட்டுமின்றி, எல்சால்வடாரில் இயங்கிய கொலைப்படை, பனாமாவின் கொடூர சர்வாதிகாரி மானுவேல் நொரியேகா, கொலம்பியாவின் மாஃபியா கும்பல்கள் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாதிகளையும் பயங்கரவாத கும்பலையும் பெற்றெடுத்துள்ளது இந்தப் பள்ளி.

அமெரிக்க செனேட்டரான ஜோஸப் கென்னடியின் கூற்றுப்படி, சுமார் பதினோரு இலத்தீன் அமெரிக்கச் சர்வாதிகாரிகள் இந்தப் பள்ளியிலிருந்து தான் பயிற்றுவிக்கப்பட்டு அனுப்பப்பட்டனர். மேலும் அவர், உலகிலேயே அதிகளவிலான கொடூர சர்வாதிகாரிகளைத் தோற்றுவித்த ஸ்தாபனம் இதுவாகத் தான் இருக்கும் என்று பெருமை பொங்க குறிப்பிடுகிறார். கம்யூனிஸ்ட்டுகளையும் புரட்சியாளர்களையும் எப்படித் தேடித் தேடிக் கொலை செய்ய வேண்டும், மாட்டிக் கொண்ட அப்பாவிகளை எப்படிச் சித்திரவதை செய்ய வேண்டும், கைது செய்த அரசியல் கைதிகளை எப்படித் துன்புறுத்தி விசாரிக்க வேண்டும், ஒரு சிவில் சமூகத்தில் நாசவேலைகளைச் செய்வது எப்படி என்பதெற்கெல்லாம் விரிவாக கோனார் நோட்ஸ் போட்டு பாடம் நடத்தியுள்ளார்கள். பொறுமையும் மனதைரியமும் இருந்தால் அவற்றில் ஒன்றை நீங்களும் வாசித்துப் பார்க்கலாம்.  அமெரிக்க சி.ஐ.ஏவின் இது போன்ற பயங்கரவாதக் கையேடுகள் இணையத்தில் நிறையக் கிடைக்கிறது.

பயிற்றுவிக்கப்பட்டு களத்தில் இறக்கிவிடப்பட்ட அமெரிக்காவின் இந்த ‘மாணவப்’ படை அப்பாவி மக்கள் மேல் கட்டவிழ்த்து விட்ட பயங்கரங்கள் சொல்லில் வடிக்க முடியாதளவுக்கு ரத்தக் கவுச்சி வீசும் சொல்லொணாத் துயரங்கள். இது பற்றி பதிவு செய்துள்ள நோம் சோம்ஸ்கி

“நிகரகுவாவில் அமெரிக்க அரசால் இயக்கப்பட்ட காண்ட்ரா கொலைப்படையாகட்டும், கவுதமாலா, எல்சால்வடாரில் செயல்பட்ட நமது பினாமி பயங்கரவாதிகளாட்டும், அவர்கள் சாதாரண முறையில் கொலை செய்வதில்லை… குழந்தைகளைப் பாறையில் மோதிக் கொல்வது, பெண்களின் மார்புகளை அறுத்துத் தலைகீழாகத் தொங்கவிட்டு ரத்தம் வெளியேறிச் சாகச் செய்வது, தலையைச் சீவிவிட்டு முண்டத்தை மட்டும் கழுமரத்தில் சொருகி வைப்பது என அனைத்துமே கொடூரமான வக்கிரமான முறைகள்”

பாதிரியாரான சாண்டியாகோ சொல்வது நமது முதுகெலும்பைச் சில்லிட வைக்கிறது –

“சதைகள் பிய்ந்து எலும்பு தெரியும் வரை குழந்தைகளை முள் கம்பிகளின் மேல் புரட்டி இழுத்து அந்தக் காட்சிகளைக் காணுமாறு பெற்றோர்கள் நிர்பந்திக்கப்பட்டார்கள்” இந்தக் கொடூரங்களைச் செய்ய பக்குவப்படுத்தும் பயிற்சி முறைகளை அமெரிக்காவே முன்னின்று கற்றுக் கொடுத்துள்ளது. எல்சால்வடாரின் கொலைப்படையில் இருந்து மன உளைச்சல் தாளாமல் தப்பியோடி வந்த ஒரு அகதி இதை 1990-ம் ஆண்டு அமெரிக்க நீதி மன்றத்திலேயே சாட்சியமாகப் பதிவு செய்துள்ளார்.

“சேரிகளுக்குள் புகுந்து 13, 14 வயது சிறுவர்களை போலீசு அள்ளிக் கொண்டு போகும். அவர்களுக்குப் பயிற்சி முகாமில் கொலை, கற்பழிப்பு, சித்திரவதை ஆகியவைகளை ஒரு மதச் சடங்கைப் போலப் பயிற்றுவிப்பார்கள். ‘மாணவர்கள்’ நாய்களையும் பருந்துகளையும் கழுத்தை முறித்து, பற்களால் தொண்டையைக் கடித்தே கொலை செய்யப் பழக வேண்டும். வெறும் மிருகங்களை வைத்து மட்டும் செய்முறை பயிற்சி அளிக்கப்படவில்லை. தமது ‘மாணவர்களின்’ திறன் வெறும் மிருகங்கள் பறவைகள்  எனும் அளவில் மட்டும் சுருங்கி விடக்கூடாது என்பதில் அமெரிக்கா மிகுந்த கவனம் செலுத்தியிருக்கிறது.

பதிமூன்று ஆண்டுகளாக சி.ஐ.ஏ அதிகாரியாகப் பணியாற்றிய ஜான் ஸ்டாக்வெல் இது போன்ற செய்முறைப் பயிற்சிகளைப் பற்றி அளித்த பேட்டியொன்றில் மாணவர்களைத் தயாரிக்கும் முறைகளை விவரமாக பதிவு செய்துள்ளார். “சித்திரவதை முறைகளைக் கற்றுக் கொடுக்கலாம். ஆனால், மாணவர்கள் தம் சொந்தக் கைகளால் அதைச் செய்து பழக வேண்டுமே. எனவே தெரிவுலிருக்கும் அனாதைகள், பிச்சைக்காரர்கள் ஆகியோரை அள்ளிக் கொண்டு வருவோம். அவர்கள் தான் எங்கள் சோதனைச் சாலை எலிகள்”

“மெல்லிய உறுதியான மின் கம்பியை பற்களுக்கிடையில் நுழைத்து விட்டு இன்னொரு முனையை ஆண் குறியில் முடுக்கி விட்டு மின்சாரத்தைச் செலுத்துவார்கள். துன்பம் தாங்காமல் அவர்கள் கதறுவார்கள். அரசியல் கைதிகளாயிருந்தால் “நிறுத்து. உண்மையைச் சொல்லிவிடுகிறேன்” என்று அலறக் கூடும். இந்த அனாதைகளுக்கோ தம்மை ஏன் சித்திரவதை செய்கிறார்கள் என்பதே தெரியாது. எனவே கதறுவதைத் தவிர அவர்களால் வேறொன்றும் செய்ய இயலாது”

“வலி தாங்காமல் துடித்து மயங்கி விழுந்தவுடன் டாக்டர் வருவார். இந்த ‘சோதனைச் சாலை எலிகளுக்கு’ வைட்டமின் ஊசி போட்டு ஓய்வெடுக்க வைப்பார். சிறிது நேரத்திற்குப் பிறகு அடுத்த வகுப்புக்கு எலிகள் தயாராக வேண்டும்”

“ஒரு கட்டத்தில் அவர்கள் செத்துப் போவார்கள். அவர்களது பிணமும் பயன்படும். பிணத்தை நகரத்தின் நடுவீதியில் வீசியெறிவோம். பிணத்தைப் பார்க்கும் மக்கள் ‘அரசாங்கம் – போலீசு’ என்று நினைத்தாலே குலை நடுங்குவார்கள்”

தற்போது அமெரிக்காவின் ஆசி பெற்ற ‘ஜனநாயகப்’ போராளிகள் லிபியாவில் இப்படித்தான் சண்டை போடுகின்றனர். உயிரோடு லிபிய இராணுவச் சிப்பாயை தலைகீழாக் கட்டி தொங்கவிட்டு நெஞ்சைப் பிளந்து இதயத்தை அப்படியே பிடுங்குகிறார்கள். யூ டியூபில் இந்தக் காட்சியைப் பார்ப்போர் உடைந்து போவது நிச்சயம்.

கம்யூனிஸ்டுகளாகிய நீங்கள் எதற்கெடுத்தாலும் அமெரிகாவைக் குறை சொல்கிறீர்களே என்று சலித்துக் கொள்ளும் சில அறிவாளிகள் இதயத்தில் ஈரமும் கண்களில்  கொஞ்சமாவது கண்ணீரும் மிச்சமிருந்தால் அந்தத் தென்னமெரிக்க அப்பாவிகளுக்காக அது வடியட்டும். மக்கள் நலத்திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியைக் குறைத்து, தனது சொந்த மக்களைத் தவிக்க விட்டு, அவர்களின் வரிப்பணத்திலிருந்து தான் இது போன்ற படுபயங்கரவாதச் செயல்களுக்கு நிதி ஒதுக்குகிறது அமெரிக்கா.

முழு உலகிலும் அமெரிக்க பயங்கரவாதத்தின் ரத்தச் சுவடுகள்

தென்னமெரிக்க கண்டம் மட்டுமல்ல, கொரியப் போர்களில் வீசப்பட்ட நாபாம் குண்டுகளும், வியட்நாமில் வீசப்பட்ட கொத்துக் குண்டுகளும் கருக்கியெறிந்த கனவுகளும் மக்களின் வாழ்க்கையும் எண்ணிலடங்காதவை. தென்னமெரிக்க அனாதைகள் மட்டுமா அமெரிக்காவின் பயங்கரவாதப் பள்ளிகளுக்குச் சோதணைச் சாலை எலிகள்? கொரியாவின் தேசிய விடுதலைக்காக ஜப்பானை எதிர்த்துப் போராடிய கம்யூனிஸ்டுப் போராளிகள் மேல் நாபாம் குண்டுகளையும் பல்வேறு உயிரி ஆயுதங்களையும் வீசி அமெரிக்கா நடத்திய சோதனையின் விளைவு மட்டுமே ஒரு லட்சம் உயிர்கள் பலி. இன்னும் வியட்நாம், யுகோஸ்லோவியா, ஈராக், ஆப்கான், லிபியா என்று அதன் பாவ மூட்டைகளை ஒன்றாகக் குவித்தால் அது இந்த பூமிப் பந்தை விட அளவில் பெரிதாய் இருக்கும்.

ஈராக்கின் மேல் இராணுவத் தாக்குதல் நடத்திக் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை லட்சங்களில் இருக்கும்  என்றால் அதற்கும் முன்பிருந்தே பொருளாதாரத் தாக்குதல் நடத்திக் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காதது. அத்தியாவசிய மருந்துகளைத் தடுத்ததன் மூலம் மட்டுமே ஐந்து லட்சம் அப்பாவிக் குழந்தைகளை ஈராக்கியர்கள் பறிகொடுத்திருக்கிறார்கள். பாலைவன தேசமான ஈராக்கில் கடல் நீரைச் சுத்திகரிக்கும் தொழிற்சாலைகளுக்கான உபகரணங்களை இறக்குமதி செய்யவிடாமல் தடுத்ததன் மூலம் காலரா போன்ற நோய்களுக்குப் பலியானவர்கள் எண்ணிக்கை தனி கணக்கு.

சிதறி ஓடுபவர்களை துரத்தித் துரத்திக் கொல்ல கொத்து குண்டுகள் என்றால், நிலத்தினடியில் பதுங்கிக் கொண்டிருப்பவர்களைக் கொல்ல, நிலத்தையே இருபதடிகள் வரை ஊடுருவித் தாக்கும் டொமஹாக் ஏவுகணைகள் – கருவிலிருக்கும் குழந்தைகளைத் தாக்கியழிக்க அணுக் கழிவு ஏவுகணைகள் என்று ரகரகமாக ஈராக்கிலும் ஆப்கானிலும் குண்டுகளை பொழிந்துள்ளது அமெரிக்கா. ஈராக்கியர்களின் தோல்வியின் ரணம் என்பது சிலவருடங்களில் ஆறிப் போவதல்ல – அது அணு ஆயுத பாதிப்பு என்கிற வகையில் தலைமுறை தலைமுறைகளாகத் தொடர்ந்து வரப்போகும் சாபம்.

ஒபாமா அறிவித்துள்ளதைப் போல் பயங்கரவதாதத்திற்கு எதிரான போர் தொடரத் தான் வேண்டும் ஆனால் யார் மிக மோசமான பயங்கரவாதி? இன்றைய உலகின் மிக மோசமான பயகரவாதம் அமெரிக்க ஏகாதிபத்தியம் உலக மக்களின் மேல் ஏவி விட்டுள்ள பயங்கரவாதம் தான் என்பதற்கு நம்மிடம் ஏராளமான சான்றுகளும் அதனால் உலக மக்கள் அனுபவித்து வரும் பாடுகளும் எதார்த்தத்தில் நம் கண் முன்னேயே உள்ளன. அமெரிக்க பயங்கரவாதத்தின் இலக்கு எங்கோ உள்ள தென்னமெரிக்க கண்டத்து மக்களும் ஆப்கானிய ஈராக்கிய மக்களும் மட்டும் தானென்றும் இங்கே நாமெல்லாம் பாதுகாப்பாகவும் சொகுசாகவும் வாழ்வதாக கருதிக் கொள்ளும் நடுத்தரவர்கத்தினரின் சமையலறை வரையில் அமெரிக்க ஆக்டோபஸின் கரங்கள் நீண்டிருப்பதை உணரவில்லை.

அமெரிக்க ஏகாதிபத்தியம் என்று நாம் சொல்வது ஜார்ஜ் புஷ், ஒபாமா போன்ற ஒருசிலரோடு மட்டும் முடிந்து விடுவதல்ல – இவர்கள் உண்மையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலவர்களாக வீற்றிருக்கும் தேசங்கடந்த தொழிற்கழக முதலாளிகளின் உற்சவ மூர்த்திகள் மட்டும் தான். இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளின் விவசாயத்தையும், உள்நாட்டுத் தொழில்களையும் தாக்கியழித்துக் கபளீகரம் செய்யும் தனியார்மய உலகமயப் பொருளாதாரக் கொள்கைகளாக அது தேச எல்லைகளையெல்லாம் கடந்து நீண்டு கிடக்கிறது. பி.டி கத்தரிக்காயாக உங்கள் சமையலறையில் ஊடுருவியிருக்கும் அதே நேரத்தில் நியாம்கிரி மலையிலும் இன்னும் தேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெவ்வேறு பெயர்களில் தொழில் ‘வளர்ச்சியாக’ சிறகு விரித்துக் கிடக்கிறது.

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் தொடரப் போகிறது – நீங்கள் யாருடைய பக்கம் நிற்கப் போகிறீர்கள்?

__________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

வினவில் கேள்வி-பதில் பகுதி ஆரம்பம்: எது கேள்வி?

26

றிவின் தோற்றம், இருப்பு, வளர்ச்சி என்பது பழைய கருத்துக்கும், அதன் போதாமை காரணமாக பிறக்கத் துடிக்கும் புதிய கருத்துக்கும் இடையே இயங்கிக் கொண்டிருக்கும் மூளையின் போராட்டம். ஆனால் அறிவு என்பது அனைத்தையும் அறிந்து கொண்ட பேரமைதி என்று பலர் கருதுகின்றனர். இப்படித்தான் ஞானிகள், நவீன சாமியார்கள், சூப்பர் ஸ்டார்கள் கொண்டாடப் படுகின்றனர்.

அனைத்தையும் அறிய முயற்சி செய்கிறேன் என்பது வேறு, அனைத்தையும் அறிந்து கொண்டேன் என்பது வேறு. பின்னது மதவாதமாகவும், முன்னது அறிவியலாகவும் இருக்கிறது. எதையும் அறிய முடியாது என்பதன் மறுபக்கமே எல்லாவற்றையும் அறிந்து கொண்டேன் என்று சொல்வது. இந்த உலகை, மனித சமூகத்தை, மனித சிந்தனையை இயக்கும் விதிகளைப் புரிந்து கொண்டு சமூக நலனுக்காக நடைமுறையை நிபந்தனையாகக் கொண்டு வளரும் அறிவு ஒரு போதும் அமைதியாக இருக்காது. அது கொந்தளிப்புடன் கூடிய பேரரறிவுப் பெருங்கடல்.

என்சைக்ளோப்பீடியா போன்றதொரு தகவல் பதிவுகளை மனனம் செய்வதெல்லாம் அறிவாக முடியுமா? குமுதம், விகடன் முதலான பிரபல இதழ்களில் என்சைக்ளோப்பீடியாவின் தகவல்களே கேள்வி பதில்களாக வருகின்றன. அதை விட்டால் கடிகள், ஏட்டிக்குப் போட்டி முதலானவை இருக்கும். முத்தத்தின் வரலாறு, உலகிலேயே இனிப்பான மாம்பழம், உள்ளாடைகள் வளர்ந்த வரலாறு…..இவையெல்லாம் இந்த கேள்வி பதில் நாயகர்கள் அதிகம் அலசும் நொறுக்குத்தீனி விசயங்கள்.

மதன், சுஜாதா போன்றோர் அதிகரித்து வரும் நுகர்வுக் கலாச்சார வசதிகளையே அறிவியல் என்ற பெயரில் கேள்வி பதில்களாக வெளியிட்டனர். மறுபுறம் சமூக பயன்பாடு குறித்த விமரிசனம் இல்லாமல் தூய அறிவியலை மட்டும் மர்மம் நிறைந்த பாடு பொருளாக அறிமுகம் செய்வது சுஜாதா பாணி. சமகால அரசியலில் நீர்த்துப் போன நியாயங்களையும், கிளுகிளுப்பூட்டும் நடிகைகளின் அங்கங்களை ஒப்பிடுவதும், குமுதம் அரசு கேள்வி பதிலின் இலக்கணம்.

சம கால வாழ்வின் இடர்களை புரிந்து கொள்ளவோ, அதை மாற்றியமைக்கவோ வேண்டுமென்றால் யதார்த்தத்தை கேள்வி கேட்பதிலிருந்தே துவங்க முடியும். புத்தர், ஏசுநாதர், நபிகள் நாயகம் போன்றோரெல்லாம் தமது சம கால சமூக அமைப்பை அந்தந்தக்காலம் விதித்திருக்கும் வரம்புகளுக்குட்பட்டு கேள்வி கேட்டவர்கள். மட்டுமல்ல அதற்கான விடையையும் தேடியவர்கள். பின்னர் அவையே கேள்விகளோ, சந்தேகமோ ஏற்படக்கூடாத மத நிறுவனங்களாக நிலை பெற்றன.

வர்க்க சுரண்டலை கேள்வி கேட்க முடியாத அடிமைகள், மறுமையில் காத்திருக்கும் இன்பத்திற்காக, இம்மையின் துன்பத்தை கேள்விகளின்றி ஏற்றுக் கொள்வதற்கு பயிற்றுவிக்கப்பட்டார்கள். அந்த பாத்திரத்தை செம்மையாக நிறைவேற்றிய மதங்கள், ஆண்டைகளுக்கு தேவைப்பட்டன. வர்க்கங்களை சாதிகளாக்கி, ஏற்றத்தாழ்வில் பீடுநடை போட்ட பார்ப்பன இந்து மதம் இதில் ஒரு மைல்கல். இதனால் பல நூறு ஆண்டுகளாக நம் மக்களுக்கு கேள்வி கேட்பது என்னவென்றே தெரியாத நிலை. எல்லா வகை அடிமைத்தனங்களையும் ஏற்றுக்கொண்டு உலகோடு ஒட்ட ஒழுகல் என்ற நிலையில் உழைக்கும் மக்கள் இங்கே மூழ்கடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அந்த வரலாறு இன்றும் மாறிவிடவில்லை. நவீன கார்ப்பரேட் சாமியார்களோ புரிந்து கொள்ள வேண்டிய சமூக இயக்கத்தின் ஆன்மாவை மறைத்து விட்டு, நல்லது – கெட்டது, ஒழுக்கம் – சீர்கேடு என்று அகநிலையை, கற்பனையில் மேம்படுத்தும் இருமை முரண்களாக முன்வைக்கின்றனர். ஆனால் சமூக உலைக்களத்தில் புடம் போடப்படாமல் எந்த மனிதனும் தனது வாழ்க்கைப் பிரச்சினையையும், அதன் தாக்கத்தால் நோயுற்றிருக்கும் சிந்தனையையும் மாற்றிவிட முடியாது.

ஒபாமா, சோனியா காந்தி, மன்மோகன் சிங், அத்வானி, வாஜ்பேயி, கருணாநிதி, ஜெயலலிதா போன்ற நவீன ஆண்டைகள் குழுமியிருக்கும் போது ஊடக அறிவாளிகள் பவ்யமாக, பணிவுடன், பிரச்சினைகளற்ற முறையில் கேள்விகள் – கேள்விகளா அவை?- கேட்பதைப் பார்த்திருப்பீர்கள். உண்மையான கேள்விகளை தணிக்கை செய்து கேட்பதற்குத்தான் நிருபர்கள் பழக்கப்பட்டிருக்கின்றனர். மீறி உண்மையையோ, சொல்லையோ, செருப்பையோ வீசினால் தண்டனை நிச்சயம்.

ஆம். கேள்விகளே இல்லாத, சந்தேகங்களே தோன்றாத, அறிவின் தேடலோ, சமூக அக்கறையின் வெளிப்பாடோ அற்ற ஒரு சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்த வகையில் இந்த உலகின் அநீதிகளை எதிர்த்துப் போராடுவோர் முதலில் மக்களை கேள்விகள் கேட்க வைப்பதற்கு வற்புறுத்த வேண்டும்.

வினவில் கேள்வி பதில் பகுதியை ஆரம்பித்திருக்கிறோம். கேளுங்கள்.

அரசியல், சமூகம், பண்பாடு, நடப்பு நிகழ்வுகள், தத்துவம், சித்தாந்தம், மதம், சாதி, காதல், என்று எது தொடர்பாகவும் அவை இருக்கலாம். எங்களால் முடிந்த அளவு, எவை முக்கியமென்று கருதுகின்ற அளவு பதில் அளிக்கிறோம். அதே நேரம் எல்லாக் கேள்விகளுக்குமான பதில்கள் எங்களிடமில்லை. ஆனால் ஒரு கேள்வியை வெறும் கேள்வி என்ற நிலையிலிருந்து மாற்றிவிட்டு, அந்த கேள்வியின் வரலாற்றுக்காலத்தை புரிந்து கொள்ளும்போது நமக்கு தெரியமால் இருக்கும் விடையை கண்டுபிடிக்கும் வழியை அறிந்து கொள்வோம். அதாவது கேள்விக்கான முதல் அடியே கேள்வியை முற்று முழுதாக புரிந்து கொள்வதுதான்.

கேள்விகளை அதற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் பக்கத்தில் மட்டும் அளியுங்கள், பின்னூட்டங்களில் தெரிவிக்க வேண்டாம். கேள்விகள் மிக மிகப் பொதுவாக இல்லாமல் மிக மிகக் குறிப்பானதாக இருந்தால் கேள்விகளைப் புரிந்து கொள்வதற்கு உதவும்.

ஒரு விசயம் குறித்து புரியவில்லை என்றால் அதை புரிந்து கொள்வதற்கு சொந்த முறையில் களைப்பூட்டும் வரை முயன்று பார்த்து விட்டு அதன் பிறகும் தெரியவில்லை எனும் போது கேள்விகள் கேட்டால், அப்போது கேள்விகளே ஒரு புதிய வாசலைத் திறந்து விடும் சூட்சுமத்தைக் கொண்டிருக்கும். ஒரு கேள்விக்கான பதிலை கண்டுபிடிக்கச் செலவழிக்கப்படும் நேரம் அந்த கேள்வியைத் தயாரிப்பதிலும் இருத்தல் நலம்.

வாரந்தோறும் வெள்ளியன்று கேள்வி பதில் இடம்பெறும். சில நேரம் தனிச் சிறப்பான கேள்வி பதில் கட்டுரைகள் தேவையைப் பொறுத்து எப்போது வேண்டுமானலும் வெளியிடப்படும்.
கேளுங்கள், காத்திருக்கிறோம்!

__________________________________

வினவுடன் இணையுங்கள்

மைக்மோகனால் மதவாதியான ஐயோ பாவம் அதியமான்!

82

அதியமான் ஒரு மதவாதி! – மைக்மோகன் தீர்ப்பு!

மைக்மோகன்வினவில் எந்தக் கட்டுரை வந்தாலும் பின்னூட்டத்தில் கம்யூனிஸ்டுகளின் அபாயம் குறித்து தவறாது லிங்க் போட்டு பேசும் அதியமானை வாசகர்கள் அறிந்திருக்கலாம். அவ்வப்போது கோபித்துக் கொண்டு வினவில் மறுமொழி இடாமலும் இருப்பார். ஆனால் தவறாது படிப்பார்.

ஒருமுறை ஜெயமோகன் எனும் மைக்மோகன் தளத்தில் “வினவில் உரையாடுவது வீண் வேலை, இனி அங்கே விவாதிக்கப் போவதில்லை” என்று அவர் பிரகடனம் செய்த கடிதம் வெளிவந்தது. மைக்மோகனும் கூட அதை மாபெரும் வெற்றிச் செய்தியாக வாசகர்களுக்கு அறிவிப்பதற்காக வெளியிட்டிருக்கலாம். ஆனாலும் அதியமானால் அப்படி இருக்க முடியவில்லை. மீண்டும் வினவில் வந்து பேச ஆரம்பித்தார். என்ன இருந்தாலும் அவர் வெறுக்கும் கம்யூனிசம், வினவு வழியாக ஆயிரக்கணக்கான வாசகரை ‘தவறான’ பாதைக்கு அழைத்துச் செல்வதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஆதலால் இனி எழுதமாட்டேன் என்ற வெற்றுப் பிரகடனத்தை தூக்கிக் கடாசிவிட்டு மீண்டும் வினவுக்கு வந்தார்.

பிறகு அன்றாடம் நான்கைந்து புதிய புதிய பெயர்களில் வந்து புலம்ப ஆரம்பித்தார். இது வாசகரை குழப்பும் வேலை என்றும் ஏதாவது ஒரு பெயரில் மட்டும் பேசுமாறு கோரியதற்கு அவர் இணங்கவில்லை. மீண்டும் கோபித்துக் கொண்டிருக்கிறார்…

இங்கு வாசகர்கள் ஒரு விடயத்தை கவனிக்க வேண்டும். அதியமானுக்கு எதிர் கருத்து கொண்டிருப்பவர்களை அவர் தகாத வார்த்தைகளால் பேசுவது வினவில் மட்டும்தான். வினவைக் கூட அவர் அப்படி அவ்வப்போது அழைப்பார். ஆனால் மைக்மோகன் தளத்திற்கு சென்றால் ஜெயேந்திரனது கால்களில் விழுந்து கிடக்கும் அவாள்கள் போல பவ்யமாக பணிந்து பேசுவார். மைக்மோகனோடு கருத்து வேறுபாடு  இருந்தாலும் அதை ” என்ன ஆண்டவரே, கொஞ்சம் எங்களையும் பரிசீலியுங்கள்” என்றுதான் முன்வைப்பார்.

முக்கியமாக மைக்மோகனது தளத்தில் மறுமொழி என்ற ஜனநாயக உரிமை இல்லை. இடையில் அப்படி அனுமதித்து, தனது இ(ம்சை)சத்தை புரிந்து  கொள்ளும் தரம் இந்த தமிழுலகிற்கு இல்லையே என்று தடாலடியாக பின்னூட்டப் பெட்டியை நீக்கியும் விட்டார். எனினும் விவாதங்களை மறுக்கும் மைக்மோகனை மாபெரும் ஜனநாயகவாதியாகவும், விவாதங்களை தடையின்றி ஊக்குவிக்கும் வினவை மாபெரும் பாசிஸ்ட்டாகவும்தான் அதியமான் கருதுகிறார்.

அதியமானது இந்த பக்திக்கு அடிப்படை என்ன? கம்யூனிசத்தை விக்கி பீடியா லிங்கு மூலம் அழித்து விடலாம் என்று எண்ணிய அதியமான் அதற்கு மேல் சிந்திக்கும் திறனுடையவர் அல்லர். அவரால் விவரங்கள், புள்ளிவிவரங்களை தரமுடிந்த அளவுக்கு அவற்றிலிருந்து உண்மையை கண்டறியும் கலையை அறிய முடியவில்லை.

மைக்மோகனோ இத்தகைய விவரங்களை தவிர்த்து விட்டு உள்ளொளி, அறம், மனித குலத்தின் ஆகப்பெரும் கனவு என்று அகநிலை அம்சங்களை அதாவது வார்த்தைகளால் கோர்க்கப்பட்ட எண்ணப் படிமங்களை அடித்து விடுவதில் வல்லவர். இன்னமும் கூட கோடம்பாக்கம் “அண்ணன் தங்கை சென்டிமெண்ட்” மூலம் தமிழக மக்களை அழவைக்கும் போது மைக்மோகனது சென்டிமெண்டிற்கும் மார்கெட் இருந்தாக வேண்டுமே? எனினும் இந்த வார்த்தை சென்டிமெண்ட் எல்லை மீறும் போது விவரங்களையும், புள்ளிவிவரங்களையும் பொய்யாகக்கூட சொல்வார் மைக்மோகன்.

மைக்மோகன் அளவுக்கு கம்யூனிசத்தை எதிர்த்து கன்வின்சிங்காக நம்மால் பேச முடியவில்லையே என்ற மரியாதைதான் மைக்மோகன் மீது அதியமான் கொண்டிருக்கும் பக்திக்கு அடிப்படை. ஆனாலும் அண்ணன் அதியமான் ஒரு போதும் மைக்மோகனது உளவியலை தெரிந்து கொள்ளவில்லை என்பதுதான் சோகம். அந்த சோகத்தை டபுள் ஸ்கொயராக்கி சமீபத்தில் ஒரு மாபெரும் சோகம் அதியமானுக்கு நடந்திருக்கிறது. வெளியே காட்டிக் கொள்ளாமல் அவர் சகஜமாக இருக்க முயன்றாலும் அண்ணன் பட்ட சோகத்தை இங்கே அனைவரும் புரிந்து கொண்டு உச்சு கொட்ட வேண்டுமென்ற நல்லெண்ணத்தோடு அந்த கதையினை இங்கு தருகிறோம்.

மைக்மோகனிசம், முதலாளித்துவம்: யார் பெரியவர்?

அண்ணா ஹாசாரே, காந்தியம், ஊழல்கள் குறித்து சமீபத்தில் மைக்மோகன் கட்டுரைகள் வெளியிட்டிருந்தார். அதற்கு பாராட்டு தெரிவித்து கடிதம் எழுதிய அதியமான்,” அருமையான கட்டுரைகள், பல விடயங்களை தெளிவுபடுத்தின, முக்கியமாக இடதுசாரி எதிர்ப்பாளர்களின் நிலைப்பாடுகள் பற்றி…” என்று போற்றுதலோடு குறிப்பிடுகிறார். கூடுதலாக 50 ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பாவில் ஊழல் அரசுகள் இருந்தன என்று மைக்மோகன் கூறியிருந்ததை ஏற்க முடியவில்லை என்று வழக்கம் போல பணிவாகவே மற்றும் லிங்குகளுடன் தெரிவித்திருந்தார்.

இது அதியமான் எப்போதும் கூறும் கருத்துதான். வினவில் கூட நல்ல முதலாளித்துவ அரசுகளாக அவர் சில பல ஐரோப்பிய நாடுகளின் பட்டியலை திரும்பத் திரும்பக் கூறுவார். ஒரு முறை ரியல் என்கவுண்டர் என்ற தோழர் அந்த தூய முதலாளித்துவ நாடுகளின் உண்மைகளை, லிங்குகள் மூலம் போட்டு சவால் விட்ட பிறகு, அதியமான் அதை மறுக்க வில்லை. மாறாக ஊழல் இல்லாத நாடு, சொக்கத் தங்கமான நாடு எதுவும் கிடையது என்று ஒரே போடாக முடித்துக் கொண்டார்.

அதியமானைப் பொறுத்த வரை தனது குருநாதர் மைக்மோகன் எல்லா விசயத்திலும் சரியான கருத்துக் கொண்டிருக்கும் போது முதலாளித்துவத்தோடு மட்டும் கொஞ்சம் மாறான கருத்து கொண்டிருப்பதை ஜீரணிக்க முடியவில்லை. அதை மட்டும் குருநாதர் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே அதியமான் நோக்கம்.

அதியமானது இந்தக் கடிதத்தை வெளியிட்ட மைக்மோகன் விரிவான பதில் ஒன்றை அளித்திருக்கிறார்.

அதில்,

அன்புள்ள அதியமான்,

பொதுவாக நான் வாதங்களை தவிர்க்க விரும்புகிறவன். முன்முடிவுள்ள ஒருவரிடம் விரோதம் வரை விவாதித்துச் செல்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆகவே மதவாதிகளிடம் விவாதிப்பதில்லை. அதே கரணத்தால்தான் அவதூறுகளைப் பொருட்படுத்துவதும் இல்லை.

மன்னிக்கவும் அதியமான், நீங்கள் ஒரு முதலாளித்துவ பொருளியல் முன்மாதிரியை ஒரு மத நம்பிக்கை போல முன்வைக்கிறீர்கள். நீங்கள் நம்புவதை நிறுவியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள்.” என்று ஆரம்பிக்கிறார்.

இதன் பொருளென்ன? அதியமான் ஒரு மதவாதி. மத நம்பிக்கை போல முதலாளித்துவத்தை நம்புகிறார். அதற்காகவே எந்த விசயத்தையும் தனது மதநம்பிக்கைக்கேற்ப மறுக்கவோ, நிறுவவோ முயற்சிக்கிறார். இத்தகைய மதவாதிகளிடம் தான் பேசும் வழக்கம் கொண்டவனில்லை என்கிறார் மைக்மோகன். தோழர் அசுரன் கூட ஒரு போதும் மதவாதி என்று அதியமானை விளித்ததில்லை  என்பது இங்கே நினைவுகூறத்தக்க ஒன்று.

அதியமான் மதவாதி என்றால் டோண்டு ராவகன் போன்றோர் அறிவார்ந்தவாதியா? தெரியவில்லை. ஏனெனில் இந்த பார்ப்பனிய தாசரான டோண்டு இன்னமும் மைக்மோகனோடு ‘உரையாடு’கிறார். இது போல பல ஆர்.எஸ்.எஸ் அம்பிகளெல்லாம் மைக்மோகனோடு தொடர்ச்சியான ‘உரையாடல்களில்’ இருப்பவர்கள்தான். மைக் மோகனது வாசகர்கள் யார் என்று சர்வே செய்து பார்த்தால் அதில் பெரும்பான்மையினர் அட்சர சுத்தரமான மதவாதிகள்தான்.

சரி, இப்போது அதியமானை மதவாதி என்று சொல்லும் அளவுக்கு என்ன வந்தது? அதுதான் மைக்மோகனது உளவியலை அதியமான் புரிந்து கொள்ளவில்லை என்கிறோம். இந்த உலகில் கம்யூனிசம், ‘இந்துயிசம்’, முதலாளித்துவ இசம் என்று எத்தனை இசங்கள் இருந்தாலும் அவற்றையெல்லாம் மைக்மோகன் எப்போதும் நிராகரிப்பார். ஏனெனில் இந்த இசங்களை விட மைக்மோகனிசம் என்ற இசம்தான் உலகிலேயே உயர்ந்த இசம். அதை ஏற்றுக் கொண்டவர்களோடு மட்டும்தான் மைக்மோகன் உரையாடுவார். யாரெல்லாம் மைக் மோகனிசத்தை ஏற்றுக் கொள்ளவில்லையோ, இல்லை அதில் சந்தேகம் கொண்டிருக்கிறார்களோ அவர்களெல்லாம் மைக்மோகனைப் பொறுத்த வரை மதவாதிகள்தான். மைக்மோகனிசம் என்றதும் ஏதோ புதுச் சரக்கு என்று நினைத்து விடாதீர்கள். அது நவீனப் பார்ப்பனியம் என்ற புதிய மொந்தைச் சரக்குதான்.

சுயமோகனிசத்தை கேள்விக்கிடமற்ற நம்பிக்கையோடு பின்பற்றாதவர்களை மைக்மோகன் மதவாதி என்கிறார் என்றால் எதைக் கொண்டு அடிக்க, என்னத்தைச் சொல்லி அழ? ஒரு மத ஆதினம், தனது மத நம்பிக்கையை ஏற்காதவர்களை மதவாதி என்றால் எது மதம், எது மத நம்பிக்கை, எது  மதவாதம்?

அதியமான் ஜோசியம், பாரத தர்மம், யோகம், இலக்கியம், நல்ல இந்து மதம்,  கலை, கம்யூனிச எதிர்ப்பு என்று எல்லாவற்றிலும் சுயமோகனிசத்தை ஏற்றுக் கொண்டவராக இருந்தாலும் முதலாளித்துவத்தை மட்டும் சுயமோகனிசத்திற்கு மேல் கருதுகிறார் இல்லையா, இதுதான் பிரச்சினை. கூடவே அவர் ஒன்ஸ் அப்பான் எ டைமில் எழுதிய அரதப் பழசான இத்துப் போன கட்டுரைகளை மாபெரும் அறிவுப்படையலாக லிங்குகள் என்ற பெயரில் போட்டிருப்பது மைக் மோகனை நிச்சயம் படுத்தியிருக்கும். இதை அன்றாடம் பார்க்கும் நமக்கே எரிச்சல் வரும்போது மைக் மோகனுக்கு எவ்வளவு லார்ஜ்ஜாக இருந்திருக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை.

ஊழல்: மைக் மோகன், அதியமானது அபத்த உளறல்கள்!

னினும் அதியமானை வெறுமனே மதவாதி என்று முத்திரை குத்தி மட்டும் மைக்மோகன் சென்று விடவில்லை. முதலாளித்துவ நாடுகளில் முன்னர் ஊழல் இருந்ததை விவரிக்கிறார். அதன்மூலம் அதியமானது முதலாளித்துவ தூய நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்குகிறார். அதில் அவர் சொல்லியுள்ளதின் சுருக்கத்தை மட்டும் பார்ப்போம்.

மைக்மோகன் கருத்துப்படி, மன்னராட்சியாக இருந்த ஐரோப்பிய நாடுகளில் குடியரசு வந்த போது பண்ணையார்களும், முதலாளிகளுமே அரசின் இடங்களை நிரப்பியதால் ஊழல் மலிந்திருந்ததாம். பின்னர் மக்கள் போராட்டங்களின் காரணமாக அரசியலில் சாதாரணமானவர்கள் வந்த போது ஊழல் கிடையாதாம். எனினும் இன்று முதலாளித்துவ நாடுகளில் நாம் நினைக்கும் ஊழல்களை சட்டப் பூர்வமாக்கியிருக்கிறார்களாம். இருந்த போதும் மக்கள் நலத்திட்டங்கள், அன்றாட அரசியல் வாழ்வில் ஊழல் கிடையாதாம், இதுதான் மைக்மோகனது கருத்து.

எதை எடுத்தாலும் ஆதி முதல் அந்தம் வரை அரசியல், தத்துவம், சித்தாந்தம், கலை, கட்சிகள், நபர்கள் என்று இந்த உலகில் உள்ள சகலவற்றையும் ‘ஆய்வு’ செய்து கூறும் மைக்மோகனது கூற்றில் உள்ள அபத்தங்களை எளிமையாக சுட்டிக் காட்ட முடியுமென்றாலும் நாமும் அதே போல ஆதி முதல் அந்தம் வரை எல்லா எழவையும் பேச வேண்டியிருக்கிறது. இதுவே மைக்மோகனைப் பற்றி எழுதுவதற்கு மிகவும் எரிச்சல் ஊட்டுகிறது. இதை இன்னும் ஆழமாக ஏங்கெல்ஸ் ” டூரிக்கிற்கு மறுப்பு” நூலில் ஜெர்மன் அறிவாளிகள் குறித்து விளக்கியிருப்பார். போகட்டும்.

முதலாளித்துவம் என்றால் என்ன என்று மைக்மோகனுக்கும் சரி, அதியமானுக்கும் சரி நிச்சயமாகத் தெரியவில்லை. அவர்கள் இருவருமே தத்தமது விருப்பம் போல அதை தயாரித்திருக்கிறார்கள்.

தனி முதலாளி, தனது இருப்பைக் காக்கவும், அதிகரிக்கவும், போட்டி முதலாளியாகி, பின்னர் தான் மட்டுமே இருந்தால்தான் இலாபம் அதிக அளவில் ஈட்ட முடியும் என்று ஏக போக முதலாளியாகி, பின்னர் அதை அரசு மூலம் நிலை நிறுத்த காலனிய நாடுகளை பிடிக்கும் ஏகாதிபத்தியங்களை உருவாக்கி, தற்போது ஒட்டு மொத்த உலகையும் ஒரே மூச்சில் சுரண்டுவதற்காக மேல் நிலை வல்லராசாகவும் தங்களது அரசுகளை மாற்றி விட்டார்கள்.

இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய விசயம் என்ன வென்றால் ஒரு முதலாளியும், முதலாளி வர்க்கமும் தனது தொழிலை நிறுவதற்காக மற்ற முதலாளிகள், மற்ற வர்க்கங்கள், மற்ற நாடுகள் அனைத்தையும் வென்று காட்டுவதே அவர்களது உயர்வாழும் தன்மையின் இரகசியம். இதை ஆயுத பலத்தினாலா, இல்லை அரசு பலத்தினாலா, இல்லை ஊழல் பலத்தினாலா எதன் மூலம் சாதிக்கப் போகிறார்கள் என்பது குறிப்பிட்ட வரலாற்றுக் காலத்தின் சூழல், தேவையைப் பொறுத்தது.

முதலாளித்துவ சமூகம் என்று அடிக்கடி பலரும் பேசுகிறார்கள். இதில் ஏதோ சில முதலாளிகள் சம்பாதிக்கிறார்கள் என்று மட்டும் எளிமையாக புரிந்து கொள்வது சரியல்ல. ஒரு முதலாளித்துவ சமூகம் நீடிக்க நீடிக்க என்ன நடக்கிறது, சமூகம் எப்படி மாறுகிறது என்பதே முக்கியமானது. அதன்படி அந்த சமூகத்தில் பெரும்பான்மை மக்கள் மேலும் மேலும் வறியவர்களாக மாறுவதும், சில முதலாளிகள் மேலும் மேலும் சொத்துக்களை சேர்ப்பதும் நடக்கிறது. அதனால்தான் இன்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த ஏழைகள், பணக்காரர்களுக்கான சொத்து இடைவெளி இன்று பல மடங்கு அதிகரித்திருக்கிறது.

இதில் மேலை நாடுகளில் தொழிலாளிகள், நடுத்தர வர்க்கம் மூன்றாம் உலக நாடுகளில் உள்ள தனது நிலையினை ஒத்த வர்க்கங்களை விட அதிக சம்பளம், தரமான வாழ்க்கையைக் கொண்டிருக்கிறது என்பதன் காரணம் அந்த நாடுகளின் முதலாளிகள் முழு உலகையும் சுரண்டி அதில் கொஞ்சம் தனது நாட்டு தொழிலாளி, நடுத்தர வர்க்கத்திற்கு அளிக்கிறார்கள் என்பதே. தற்போது இதுவும் பிரச்சினைக்குள்ளாகி வருகிறது.

இந்த கட்டுரையின் வரம்பிற்குள் நின்று மட்டும் பேசுவதாக இருந்தால் முதலாளி வர்க்கம் தனது நலன்களுக்காக அரசு, அரசாங்கத்தை செயல்படவைப்பதில் முனைப்பாக இருக்கும். சொல்லப் போனால் அந்த அரசாங்கங்களே முதலாளிகளது வர்க்கத்தின் பிரதிநிதியாகவே செயல்படும். ஆனால் ஒரு தொழிலில், ஒரு நாட்டில், ஒரு கண்டத்தில் முதலாளிகளுக்கிடையே இருக்கும் போட்டி என்பது அரசிலும் பிரதிபலிக்கும். அப்போது தனது குறிப்பான தேவைகளுக்காக குறிப்பிட்ட முதலாளிகள் ஊழல் முறையின் மூலம் அந்தந்தக் கால அரசாங்கங்களை விலைக்கு வாங்குகிறார்கள், அல்லது செயல்பட வைக்கிறார்கள்.

ஆக மனித சமூகத்தின் வரலாற்றுக் காலத்தில் முதலாளித்துவ சமூகங்களில்தான் முதன்முதலில் ஊழல் என்பது பிரம்மாண்டமாக உருவெடுக்கிறது. அல்லது அப்படி தோன்றுவதற்கான சமூக நிலைமைகள் உருவாகிறது. இதை மன்னராட்சிக் காலத்தில் பெண் கொடுத்தான், தங்கம் கொடுத்தான் என்று ஒப்பிட்டு இணை வைத்துப் பேசுவது அபத்தம. தன்மையிலும், பொருளிலும், அது வேறு, இது வேறு.

இன்று ஊழல் என்பது முதலாளித்துவ நாடுகளில் சட்டப்பூர்வமாகியிருக்கிறது என்பதை மைக்மோகன் ஒத்துக்கொள்கிறார், அதியமான் ஒத்துக் கொள்ளவில்லை. அதியமானைப் பொறுத்த வரை சூதாட்டத்தைக் கூட சட்டப்பூர்வமாக நடத்தலாம். இதில் மைக்மோகன் புரிந்து கொள்ளத் தவறியிருக்கும் விசயம் என்னவென்றால் முதலாளித்துவ நாடுகளில் ஊழல் என்பது ஒன்று சட்ட பூர்வமாகவோ, இல்லை சட்ட விரோதமாகவோ இருந்தே தீரும். ஏனெனில் முதலாளித்துவத்தின் அடிப்படையான வாழ்க்கைக்கு அது மிகவும் அத்தியாவசியம். முதலாளித்துவம் என்பதே ஊழலை அடிப்படையாக வைத்து இயங்கும் ஒன்றுதான்.

ஊழலில் கடைசி இடம், முதல் இடம்: எது அளவு கோல்?

தியமான் போற்றும் ஸ்காண்டிநேவிய (டென்மார்க், ஸ்வீடன், நார்வே, பின்லாந்து, ஐஸ்லாந்து) நாடுகளை எடுத்துக் கொள்வோம். ஸ்வீடனது போபார்ஸ் ஆயுத கம்பெனி தனது விற்பனைக்காக புரோக்கர்களை பிடித்து கமிஷன் கொடுத்து இந்தியாவுக்கு விற்கிறது. இந்த கமிஷன் இல்லை என்றால் அந்த தொகை விற்பனைத் தொகையில் கழிக்கப்பட்டிருக்கும். எனவே இது இந்தியாவுக்கு நட்டம் அல்லது ஊழல் என்றாலும் ஸ்வீடனைப் பொறுத்தவரை ஊழல் கிடையாது. ஸ்வீடனுக்கு மட்டுமல்ல எல்லா பன்னாட்டு நிறுவனங்களும் தமது விற்பனையைப் பெருக்க இப்படி இலஞ்சம் கொடுப்பதை வழமையாக கொண்டிருக்கின்றன.

அடுத்து இந்த உலகில் ஆயுதங்களின் தேவை அதிகம் இருந்தால்தான் போபார்ஸ் நிறுவனம் தனது ஆயுங்களை தொடர்ந்து விற்பனை செய்ய முடியும். அந்த வகையில் மூன்றாம் உலக நாடுகள் ஒன்றுக்கொன்று மோதிக் கொள்வதும், அந்த நாடுகள் செயற்கையான ஒரு பதட்டத்தில் இருப்பதையும் அவர்கள் விரும்புவார்கள். அந்த வகையில் ஆப்பிரிக்க நாடு ஒன்றில் புரட்சி நடத்த விரும்பும் ஒரு போராளிக் குழுவுக்கு இவர்கள் கடன் கொடுத்தாவது விற்பது வழக்கம். மேலும் கள்ளச் சந்தையில் விற்கப்படும் ஆயுதங்களில் பெரும்பான்மை மேலை நாடுகளைச் சேர்ந்தவைதான்.

பின்லாந்தைச் சேர்ந்த நோக்கியா கம்பெனி ஸ்ரீபெரும்புதூரில் ஒரு ஆலை அமைத்து 3000 ரூபாய் குறைவான கூலி கொடுத்து தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி, தொழிற்சங்கம் அமைக்க அனுமதி மறுத்து, இன்னும் பல சலுகைகளோடும், சுரண்டல்களோடும் தொழில் நடத்துகிறது. பெரும் இலாபத்தை இங்கிருந்து கொண்டு செல்கிறது. இதற்காக நேரடியாகவும், மறைமுகமாகவும், சட்ட பூர்வமாகவும், சட்ட விரோதமாகவும் இவர்கள் அரசு அதிகாரிகளுக்கும், ஆளும் கட்சி அரசிசயல்வாதிகளுக்கும் இலஞ்சம் கொடுக்கிறார்கள். இப்போது உலகளவில் இலஞ்சம் வாங்கும் நாடுகளில் இந்தியா முதலிடத்திலும், பின்லாந்து, ஸ்வீடன் கடைசி இடத்திலும் வருகிறதென்றால் இதை நாம் ஏற்க இயலுமா? மைக்மோகனும், அதியமானும் ஏற்கிறார்கள்.

அடுத்து மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள், அன்றாட அரசியல் நிகழ்வுகளில் ஊழல் இல்லை என்பதால் மக்கள் நிம்மதியாக மேலை நாடுகளில் வாழ்வதாக மைக்மோகன் நம்புகிறார். அந்த நிலை இங்கு வர அண்ணா ஹாசாரே போன்றவர்களது போராட்டங்கள் உதவும் என்பதும் அவரது புரிதல்.

இதையும் கொஞ்சம் சுருக்கமாக பார்த்து விடுவோம்.

மேற்குலகின் மக்கள் நலத் திட்டங்கள் – காரணம், பின்னணி என்ன?

முதலில் மேலை நாடுகள் அத்தனையும் 50 ஆண்டுகள் முன்புவரை முழு உலகிலும் காலனிய நாடுகளைக் கொண்டிருந்தன. ஆப்பிரிக்காவிலும், ஆசியாவிலும், தென்னமெரிக்காவிலும் இருந்து இவர்கள் கொள்ளையடித்துச் சென்ற செல்வத்தை தற்போது வட்டியில்லாமலாவது திருப்பிக் கொடுங்கள் என்று கேட்டு அவர்கள் அப்படி கொடுத்து விட்டால், மறுகணமே அந்த மேலை நாடுகள் பிச்சைக்கார நாடுகளாகிவிடும். எனவே இப்படி கொள்ளையடித்த பணம்தான் அந்தெந்த நாடுகளில் சமூக நலத்திட்டங்கள் என்ற பெயரில் மக்களுக்கு வழங்கப்பட்டது. அதனால்தான் அந்த நாடுகளில் உள்ள தொழிலாளி வர்க்கம் பிற்போக்காக இருந்தது. அந்த வகையில் இது போராடாமல் இருப்பதற்கான ஊழல் என்றும் சொல்லலாம்.

மேலும் ரசிய, சீன புரட்சிகளுக்குப் பிறகு முதலாளித்துவ நாடுகள் கம்யூனிச அபாயம் கருதியும் இத்தகைய மக்கள் நலத்திட்டங்களை வேறுவழியின்றி கொண்டுவந்தன. எனினும் மேலை நாடுகள் பல தற்போதைய முதாளித்துவ நெருக்கடிகளால் அந்த நலத்திட்டங்களை ரத்து செய்து வருகின்றன. இதை எதிர்த்து பிரான்சு முதல் கிரேக்கம் வரை மக்கள் போராடுகிறார்கள். பொதுவில் ஐரோப்பாவின் தொழிலாளி வர்க்கத்திற்கு இத்தகைய போராட்ட மரபு கிட்டத்தட்ட 200 வருடங்களாகவே உண்டு. ரசியப் புரட்சி அதன் உச்சம்.

இடையில் தொழிலாளி வர்க்கத்தை முடக்குவதற்காக செய்த நலத்திட்டங்கள் இப்போது இல்லை எனும் போது அந்த போராட்டங்கள் மீண்டும் வருகிறது. எனினும் இந்த போராட்டங்கள் எவையும் முதலாளித்துவ அமைப்பை மாற்றியமைக்க வேண்டும் என்ற அரசியல் நிலையிலிருந்து நடக்கவில்லை. தங்களது வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது என்ற நிர்ப்பந்தித்திலேயே நடக்கிறது. தொடர்ச்சியான போக்கில் இது தனது பிரச்சினை என்ற குறுகிய வட்டத்திலிருந்து நமது பிரச்சினை என்ற தளத்திற்கு நகரும் போது அதன் அரசியல் தன்மை மேலும் மேலும் முன்னேறும்.

காலனியாதிக்கத்தின் மூலம் மூன்றாம் உலக நாடுகளைச் சுரண்டிய மேலை நாடுகள் தற்போது அதை விட அதிகமாக உலகமயத்தின் மூலம் பூமி முழுவதையும் சுரண்டுகின்றன. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் பன்னாட்டு நிறுவனங்கள் மூன்றாம் உலகின் அனைத்து வளங்களையும் சூறையாடுகின்றன. அது நீர் வளமாகவோ, இல்லை கனிம வளமாகவோ, இல்லை மனித வளமாகவோ எதையும் விடாமல் அனைத்தையும் சுருட்டுகின்றன. இவற்றையெல்லாம் புரிந்து கொள்வதற்கு கொஞ்சம் வரலாறும், அரசியலும் அவற்றினை இயக்கும் விதிகளோடும் பரிச்சயம் இருக்க வேண்டும்.

இனி மைக்மோகனது சமூக வாழ்வு திட்டங்கள், அன்றாட அரசியலில் ஊழல் இல்லை என்பதைப் பார்ப்போம். ஐரோப்பாவில் இருக்கும் ஸ்விட்சர்லாந்து நாடு அநேக மனித உரிமைகளுக்கும், மக்கள் நலத்திட்டங்களுக்கும் பிரபலமான நாடாகும். வெளிப்பார்வையில் பார்க்கும் போது இந்த நாட்டில் பிறந்திருக்கலாகாதா என்று கூட நம்ம அதியமானுக்கும், மைக்மோகனுக்கும் தோன்றலாம்.

ஆனால் உண்மை என்ன? ஸ்விட்சர்லாந்து நாட்டின் மொத்த தேசிய வருமானத்தில் பாதி அளவை அந்நாட்டின் வங்கிகள் கொண்டிருக்கின்றன. எனில் ஸ்விட்சர்லாந்து நாட்டிற்கு படியளப்பதற்கு வங்கிகளே காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. சரி, இந்த வங்கிகளுக்கு எப்படி பணம் வருகின்றன? உலக நாடுகளில் உள்ள முதலாளிகள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் அனைவரும் தமது கருப்பு, ஊழல் பணத்தை இந்த நாட்டின் வங்கிகளில்தான் போடுகின்றன. அவற்றின் மதிப்பு மிக மிக அதிகம். இப்படி ஊரைக் கொள்ளியடித்த கயவர்களின் கந்து வட்டி பைனான்ஸ் வங்கியாகத்தான் ஸ்விஸ் இருக்கிறது. இப்படி எந்த தொழிலும் செய்யாமலே, உட்கார்ந்த இடத்தில் பலப் பல டிரில்லியன் டாலரை, யூரோவை, இரத்தப் பணத்தை வைத்திருக்கும் நாடு தனது சொந்த நாட்டு மக்களின் சில நலத்திட்டங்களுக்கு பிச்சை போடுகிறது என்றால் அதை போற்றுபவர்களை என்னவென்று அழைப்பது?

நம்மூரில் அயோத்தி குப்பம் வீரமணி, பங்க் குமார், ஜான் பாண்டியன் முதலான ரவுடிகள் எல்லாம் கட்டப்பஞ்சாயத்து, ஆள்கடத்தல், மாமூல் மூலம் பல இலட்சங்களை சம்பாதிக்கிறார்கள். அதிலிருந்து தத்தமது ஊர்கள், சாதிகளைச் சேர்ந்தோருக்கு கோவில் கொடை, படிப்பு உதவி போன்ற மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களுக்கு செலவிடுகிறார்கள். மைக்மோகனது பார்வைப்படி யாருக்கும் ஐந்து காசு கொடுக்காத வினவை விட இத்தகைய அண்ணன்கள், வள்ளல்கள் மேலானவர்கள்!

முதலாளித்துவ அமைப்பே ஊழல்தான் எனும் போது அன்றாட வாழ்வில் ஊழல் இல்லை என்பது முட்டாள்தனம்!

தாசில்தார் ஆபிஸ், கலெக்டர் ஆபிஸ், பாஸ்போர்ட் அலுவலகம் என்று மிகச் சுருங்கிய உலகை மட்டும் மக்களோடு தொடர்புடைய அரசியலாக மைக்மோகன் பார்க்கிறார். இத்தகைய துறைகளில் மேலை நாடுகளில் ஊழல் இல்லையென அதிசயிக்கிறார். இந்தியாவைப் போன்று மின்சாரம், இரயில்வே, கல்வி, மருத்துவம், சுகாதாரம் என்று சகல துறைகளிலும் அரசு இருப்பதைப் போன்று அங்கில்லை. ஒரு சில விதிவிலக்குகள் இருக்கலாம். தனியாரின் சேவை என்பது இலாபத்தின் மேல் நின்று கொண்டிருப்பதைப் போன்று அரசு துறைகள் செயல்படுவதில்லை. அவை லாப நோக்கமற்ற சேவை அடிப்படையில்தான் நடக்கிறது. அந்த வகையில் மேலைநாடுகளில் உள்ள சாதாரண மக்கள் தமது அன்றாட தேவைகளுக்காக கணிசமான வருமானத்தை தனியார் முதலாளிகளிடம் இழக்கின்றனர். அமைப்பு முறையின் இந்த ஊழலைப் பார்க்காமல் ஒரு சிப்பந்தி லஞ்சம் வாங்குவதில்லை என்று சுயதிருப்தி அடைவது அபத்தம்.

ஐரோப்பாவில் சில நாடுகளில் இத்தகைய அரசு துறைகள் இன்றும் உண்டு என்றாலும், மொத்தத்தில் அது தீர்மானிக்கவில்லை. இந்திய அரசு வங்கிகளில் கடன் வாங்குவதற்கு படாதபாடு படவேண்டும். ஆனால் ஐசிஐசிஐ போன்ற தனியார் வங்கிகள் கடன் வாங்கும் சக்தி உள்ளவர்களுக்கு எந்த சிக்கலுமின்றி அள்ளிக் கொடுக்கின்றன. கடன் அட்டையை அடிக்கடி தேய்க்குமாறும் வலியுறுத்துகின்றன. இறுதியில் 50,000 செலவழித்திருந்தால் அது பல சிக்கலான கணக்குகளோடு 3 இலட்சம் என்று வருகிறது. கட்டத் தவறினால் ஆள்வைத்து மிரட்டி வசூலிக்கிறார்கள். எனில் அரசு வங்கிகளை விட தனியார் வங்கிகள் அதிகம் சேவை தருகின்றன என்று மெச்ச முடியுமா?

தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் உழைக்கும் மக்கள் எந்த அளவுக்கு அரசியல் விழிப்புணர்வைக் கொண்டிருக்கிறார்களோ அந்த அளவுக்கு அந்நாட்டின் சமூக நலத்திட்டங்கள் செயல்படும். முதலாளிகளது ஊழல் அமைப்பும் சுலபமாக செயல்படாத படி தடைகள் இருக்கும். ஆனால் இன்று இந்த நிலைமை எந்த நாட்டிலும் இல்லை என்பதால் நம் புலனறிவு அறியாத படி ஊழல்தான் இந்த முதலாளித்துவ உலகை வழிநடத்துகிறது. அமெரிக்காவிலோ, இங்கிலாந்திலோ, பிரான்சிலோ, ஜெர்மனியிலோ இருக்கும் ஆளும் வர்க்கக் கட்சிகளின் உள்ளூர் தலைவர்களெல்லாம் தொண்டர்களின் பலத்தால் வந்தவர்கள் அல்ல. மாறாக அவர்கள் தேர்தல் பிரச்சாரத்துக்கு எவ்வளவு பணம் வசூலித்து கொடுக்க முடியும் என்பதை வைத்தே தலைவராகிறார்கள்.

இதற்கு மேலும் ஒவ்வொரு தேர்தலையும் ஆயுதம், சேவைத்துறை, நிதி வங்கி, காப்பீடு, மருந்து என்று பல்வேறு முதலாளிகளின் செல்வாக்கே தீர்மானிக்கிறது. ஜார்ஜ் புஷ்ஷை ஆயுத, எண்ணெய் முதலாளிகளும், அல்கோரை மருந்து முதலாளிகளும் முன்னிறுத்தினர் என்பது மேலை நாடுகளின் எல்லா தேர்தல்களுக்கும் பொருந்தும். ஆக தமிழகத்தில் நூறு ரூபாய்க்கு வோட்டுப் போடுவதை ஊழல் என்றும் அமெரிக்காவில் ஆயிரம் டாலர் கட்டி அதிபர் விருந்தில் கலந்து கொள்வது ஊழலற்ற ஜனநாயகம் என்றும் பார்ப்பது முட்டாள்தனம், பாமரத்தனம், அயோக்கியத்தனம்.

தேர்தலில் ஒரு நபருக்கு ஒரு ஓட்டு என்பதையும், லிமிடெட் கம்பெனியில் ஒரு பங்குக்கு ஒரு வோட்டு என்பதையும்  ஜனநாயகம் என்ற முறையில் ஒன்று என்று சொல்ல முடியுமா? ஒன்றுதான் என மைக்மோகனும், அதியமானும் சொல்கிறார்கள்.

மைக்மோகன் தனக்கு தெரிந்த வாழ்க்கையில் நடமாடும் சில கதை மாந்தர்களது பாத்திரத்தை அசைபோடுவது போல, உலக அரசியல், பொருளாதாரம், சமூகத்தை எடை போடுகிறார். கதை சொல்லும் திறனாலேயே, கதைகளை தீர்மானிக்கும் முதலாளித்து சமூகத்தை புரிந்து கொள்ளலாம் என்பது அசட்டுத்தனம்.

மைக்மோகனிசம் ஒன்றுதான் இந்த உலகின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு என்று தன்னைத்தானே நியமித்துக் கொண்ட மைக்மோகனது சன்னிதானத்தை அதியமான் இன்னமும் புரிந்து கொள்ளவில்லை. அதனால்தான் மதவாதி என்ற பட்டம் வாங்கிய பிறகும் சுரணையில்லாமல் மீண்டும் மைக்மோகனிடம் பேசுகிறார். ஒருவர் வார்த்தைகளால் வாழும் மதவாதி. மற்றொருவர் லிங்குகளால் வாழும் காரியவாதி. எனினும் லிங்குகளை விட வார்த்தைகள் மேம்பட்டது என்ற காரணத்தினால் காரியவாதி மீண்டும் மீண்டும் வார்த்தை மதவாதியிடம் சரணடைகிறார்.  மைக்மோகனோ “எவ்வளவு அடித்தாலும் தாங்குறானே” என்று புன்னகையுடன் அதியமானை கடந்து செல்கிறார்.

____________________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

‘வல்லரசின்’ மரணப் பொந்துகள்!

ஜார்கண்ட் மாநிலம்  ஹஸாரிபாக் மாவட்டத்தில் தற்பொழுது வசித்து வரும் ஜாவிர் குமார் என்ற 14 வயது சிறுவனின் வாழ்க்கைக் கதை நம்மை அதிர்ச்சியில் மட்டுமல்ல, பீதியிலும் உறைய வைத்துவிடும்.  10 து 10 சுற்றளவு கொண்ட, 400 அடி ஆழத்திற்குப் பூமிக்குள் இறங்கிச் செல்லும் சுரங்கத்திற்குள் சென்று, நிலக்கரியை வெட்டியெடுத்து வரும் குழந்தைத் தொழிலாளி ஜாவிர் குமார்.

எலி வளையைப் போலப் பூமிக்குள் செல்லும் இச்சுரங்கத்தை மரணக் குழி என்றுதான் சொல்ல முடியும்.  அதற்குள் சென்று நிலக்கரியை வெட்டியெடுத்து வருவது உடலை வருத்தக்கூடியது மட்டுமல்ல, உயிருக்கே உலை வைத்துவிடும் அபாயம் நிறைந்ததாகும்.  சுரங்கத்திற்குள் பரவிக் கிடக்கும் இருளை விரட்டுவதற்கு ஒரு மண்ணெண்ணெய் விளக்கையும், நிலக்கரியை வெட்டியெடுப்பதற்கு ஒரு இரும்புக் கம்பியையும், வெட்டிய நிலக்கரியை வெளியே எடுத்துவருவதற்கு ஒரு கூடையையும் எடுத்துக் கொண்டு அதிகாலை ஐந்து மணிக்கு சுரங்கத்திற்குள் இறங்கும் ஜாவிர் குமார், தனது வேலையை முடித்துக்கொண்டு சுரங்கத்தை விட்டு வெளியே வரும்பொழுது, பொழுது சாய்ந்து இருட்டிவிடும்.  ஒரு இரும்புக் கம்பி, ஒரு கூடை, ஒரு விளக்கு ஆகியவற்றைத் தவிர, வேறெந்த பாதுகாப்புச் சாதனமும் இன்றிச் சுரங்கத்திற்குள் இறங்கும் ஜாவிர் குமார், “சுரங்கத்திற்குள் மண் சரிவு ஏற்பட்டால், உயிரோடு புதைந்து இறந்து போவோம்” எனத் தெரிந்தேதான் இந்த வேலையைச் செய்து வருகிறான்.

ஹஸாரிபாக் மாவட்டத்தில் மட்டும் இது போன்று நூற்றுக்கணக்கான நிலக்கரிச் சுரங்கங்கள் சட்டவிரோதமான முறையில் இயங்கி வருகின்றன.  ஜாவிர் குமாரைப் போன்று ஆயிரக்கணக்கான சிறுவர்களும், சிறுமிகளும், பெண்களும் சுரங்க வேலை என்ற பெயரில் தினந்தோறும் மரணத்தோடு கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.  இச்சுரங்கங்களில் கொத்தடிமைகளாக வேலை செய்ய ஒரிசா, பீகார், சத்தீஸ்கர், அசாம் ஆகிய வறிய மாநிலங்களிலிருந்து சிறுவர்கள் பிடித்து வரப்படுகிறார்கள்.

ஜார்கண்ட் மாநிலத்தின் அமைச்சர்கள், போலீசு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் தெரிந்துதான் இச்சட்டவிரோதச் சுரங்கங்கள் நடந்து வருகின்றன.  இச்சுரங்கங்களை நடத்தி வரும் மாஃபியா கும்பல் அமைச்சர்களையும், அதிகாரிகளையும் “கவனித்து’’விடுவதால், அச்சுரங்கங்களில் ஏற்படும் விபத்துக்களை, சிறுவர்களின் மரணங்களைப் பற்றி பதிவு செய்யவும், விசாரிக்கவும் அரசு முன்வருவதேயில்லை.  அச்சுரங்கங்கள் சட்டவிரோதமாக இயங்கிவருவதைக் காரணமாகக் காட்டியே, இறந்து போகும் சிறுவர்களின் குடும்பத்திற்கு நட்ட ஈடு தரவும் அரசு முன்வருவதில்லை.

வசந்தி தேவி என்ற தாயிடம், “உங்கள் மகனைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி வைக்காமல், அபாயமிக்க சுரங்க வேலைக்கு ஏன் அனுப்பியிருக்கிறீர்கள்?” எனப் பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, “வறுமை” என எந்தவிதமான உணர்ச்சியு மின்றிப் பதில் அளித்தார், அவர்.

தனியார்மயத்தின் பின் அம்பானியும் டாடாவும் உலகக் கோடீசுவரர்கள் பட்டியலில் இடம் பிடிக்கிறார்கள்.  ஜாவிர் குமாரும் வசந்தி தேவியும் அஞ்சுக்கும் பத்துக்கும் தினந்தோறும் மரணத்தோடு போராடுகிறார்கள்.  இந்தியா வல்லரசாகிறது எனப் பல்லைக் காட்டுகிறார், மன்மோகன் சிங்.

_____________________________________________________________

– புதிய ஜனநாயகம், மே – 2011
_____________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

இந்திய அரசின் போர்க்குற்றங்கள் !

காட்டு வேட்டையின் கொடுங்கரங்கள் கடந்த மார்ச் மாதம் சட்டிஸ்கர் மாநிலத்தின் மூன்று கிராமங்களை உருத்தெரியாமல் சிதைத்துவிட்டன. தேடுதல் வேட்டை என்ற பெயரில் துணை இராணுவமும், சட்டிஸ்கர் மாநில போலீசும் இணைந்து ஐந்து நாட்கள் நடத்திய இந்தத் தாக்குதலில் மூன்று அப்பாவிகள் கொல்லப்பட்டனர்; பல பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட்டனர்; முன்னூறுக்கும் அதிகமான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன; நூற்றுக்கணக்கான அப்பாவிகள் கொடூரமாகத் தாக்கப்பட்டனர்; மேலும், தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிசெய்யச் சென்ற சுவாமி அக்னிவேஷ் உள்ளிட்ட சமூக சேவகர்களையும் மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்த செயல்வீரர்களையும்கூட அரசுப் படைகள் தாக்கி விரட்டியடித்து, பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்கு எந்தவிதமான நிவாரண உதவியும் கிடைத்துவிடக் கூடாது என்பதில் குறியாக இருந்து செயல்பட்டன.

சட்டிஸ்கர் மாநில அரசு மாவோயிஸ்டுகளையும், பழங்குடியின மக்களையும் வேட்டையாடுவதற்காகவே சல்வாஜுடும் என்ற குண்டர்படையை நடத்தி வந்தது. இந்தப் படையினரின் கொலைவெறியாட்டமும் மனித உரிமை மீறல்களும் அம்பலமானதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் இப்படையைக் கலைக்குமாறு சட்டிஸ்கர் அரசிற்கு உத்தரவிட்டது. இதன்படி, தற்போது சல்வாஜுடும் கலைக்கப்பட்டுவிட்டதாக அரசு கூறினாலும், கோயா கமாண்டோஸ் என்ற பெயரில் மற்றொரு அரசு கூலிப்படையை உருவாக்கி, அதில் சல்வாஜுடுமில் இருந்த கூலிப்படையினரை இணைத்துக் கொண்டிருக்கிறது. பழங்குடியின மக்களைக் கொண்ட படையைப் போல இதனைக் காட்டுவதற்காகவே, கோயா என்ற பழங்குடியின சமூகத்தின் பெயரை இக்கூலிப்படைக்கு வைத்து ஊரை ஏய்த்து வருகிறது, சட்டிஸ்கர் மாநில அரசு.

இவ்வாறு அமைக்கப்பட்ட 200 கோயா கமாண்டோக்களையும், மத்திய ரிசர்வ் போலீசின் கோப்ரா படைப் பிரிவின் 150 சிப்பாய்களையும் கொண்ட கூட்டுப் படையைக் கொண்டு, மொர்பள்ளி, திம்மாபுரம், தர்மேத்லா ஆகிய மூன்று ’மாவோயிஸ்டு ஆதரவு’ கிராமங்களின் மீது ஏவி தாக்கத் திட்டமிட்டது, சட்டிஸ்கர் மாநில அரசு. அதன்படி, இந்த அரசு பயங்கரவாதத் தாக்குதலின் முதல் இலக்காக மொர்பள்ளி அமைந்தது.

கடந்த மார்ச் மாதம் 11ஆம் தேதி அதிகாலை வேளையில் மொர்பள்ளியைச் சுற்றி வளைத்த படையினர் வானத்தை நோக்கிச் சுட்டவாறு முன்னேறினர். அரசுப் படைகள் தமது கிராமத்தைச் சுற்றி வளைத்துத் தாக்கப் போவதை உணர்ந்துகொண்ட கிராம மக்கள் காட்டுக்குள் ஓடிச்சென்று தப்பித்துக் கொள்ள முயன்றனர். ஆனால், அனைவராலும் அவ்வாறு ஓடி ஒளிய முடியவில்லை. அச்சமயத்தில் புளியமரத்தில் ஏறிப் பழங்களை உலுக்கிக் கொண்டிருந்த மாதவி சுல்லாவால் வேகமாக இறங்கி ஓட முடியவில்லை.

அவரைச் சுட்டுத் தள்ள முயன்ற படையினரிடம் அவரது மனைவி, “சுட வேண்டாம்” எனக் கெஞ்சியதையும் கேளாமல், அவர்கள் தமது கொலைவெறி அடங்கும் வரை சுல்லாவைக் குறிவைத்துச் சுட்டுக் கொண்டே இருந்தனர். துப்பாக்கி ரவைகளால் சல்லடைக் கண்ணாகத் துளைக்கப்பட்ட சுல்லா மரத்திலேயே பிணமானார். படைவீரர்கள் மொர்பள்ளியை விட்டு வெளியேறும் வரை சுல்லாவின் பிணம் மரத்திலேயே தொங்கிக் கொண்டிருந்தது.

அடுத்ததாக அப்படை, அயிம்லா காகி என்ற தாயைச் சுற்றிவளைத்துப் பிடித்துக் கொண்டது. அவரது மகள்கள் கண்ணெதிரேயே அயிம்லா காகி பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்டார். அதுமட்டுமன்றி, அச்சிப்பாய்கள் அவர் வைத்திருந்த 10 ஆயிரம் ரூபாயையும் அபகரித்துக் கொண்டனர்.

மேலும், 37 வீடுகளைத் தீக்கிரையாக்கிவிட்டு, அன்று மதியம் மொர்பள்ளியிலிருந்து திரும்பிச் சென்ற அப்படையினர், தமது வழியில் எதிர்ப்பட்ட மாதவி கங்கா, அவரது மகன் பீமா மற்றும் மகள் ஹரே ஆகியோரை பிடித்துக் கொண்டு போய், மொர்பள்ளிக்கு அருகிலுள்ள சிந்தால்னர் போலீசு நிலையத்தில் சட்டவிரோதமாகச் சிறைவைத்தனர். அக்கொட்டடியிலேயே ஹரேவை விடியவிடியச் சித்திரவதை செய்த சிப்பாய்கள், அவரைப் பாலியல் வல்லுறவு தாக்குதலுக்கும் ஆளாக்கினர். மாதவியும், பீமாவும் மாவோயிஸ்டுகளுக்கு உதவியதாகக் கூறப்பட்டு, அடித்துச் சித்திரவதை செய்யப்பட்டனர். மொர்பள்ளியைச் சேர்ந்த பெண்கள் ஒன்று திரண்டு சிந்தால்னர் போலீசு நிலையத்தை முற்றுகையிட்ட பிறகே மாதவி குடும்பத்தினர் விடுதலை செய்யப்பட்டனர்.

மொர்பள்ளி கிராமத்தில் மாவோயிஸ்டுகள் ஆயுதத் தொழிற்சாலையொன்றை நடத்திவந்ததாகக் கூறி இத்தாக்குதலை நடத்தியிருக்கும் அரசு, அக்கிராமத்தில் ஆயுதத் தொழிற்சாலை இருந்ததற்கான சுவட்டைக்கூடக் காட்டவில்லை. மொர்பள்ளியை மாவோயிஸ்டுகளின் கோட்டையைப் போலச் சித்தரித்தது அரசு. ஆனால், அக்கிராமத்தில் இருப்பதோ மாவோயிஸ்டுப் போராளிகளுக்காக மக்கள் எழுப்பியிருந்த 15 அடி நினைவுத்தூண் மட்டும்தான்.

மொர்பள்ளி கிராமத்தையடுத்து, மார்ச் 13 அன்று கோயா கமாண்டோக்கள் மட்டும் தனியாகச் சென்று திம்மாபுரம் என்ற கிராமத்தைச் சுற்றி வளைத்தனர். திம்மாபுரம் கிராமத்திற்குச் சென்றுகொண்டிருந்தபொழுதே, பர்சே பீமா, மனு யாதவ் என்ற இரு கிராமவாசிகளைச் சிறைபிடித்துக் கொண்டது இக்கூலிப்படை. கோயா படையின் வருகையைத் தெரிந்துகொண்ட அக்கிராம மக்கள் காட்டுக்குள் ஓடி ஒளிந்துகொண்டனர்.

வெறிச்சோடிக் கிடந்த திம்மாபுரம் கிராமத்திற்குள் நுழைந்த அப்படை, கிராம மக்கள் தமது வீடுகளில் விட்டுச் சென்றிருந்த கோழிகளையும் ஆடுகளையும் வெட்டித் தின்றதோடு, கிராமவாசிகள் திரும்பும் வரைக் காத்திருக்க முடிவு செய்து அங்கேயே இரவு தங்கியது. மறுநாள் அதிகாலையில் திம்மாபுரத்திலிருந்த கோயாக்களை மாவோயிஸ்டுகள் தாக்கினர். மதியம் வரை நீண்ட இந்தச் சண்டையில் மூன்று கோயா கமாண்டோக்கள் கொல்லப்பட்டனர்; ஒன்பதுபேர் காயமடைந்தனர். மதியத்திற்குப் பிறகு மாவோயிஸ்டுகள் பின்வாங்கித் திரும்பிவிட அன்று இரவும் கோயாக்கள் அங்கேயே தங்கியிருந்து மீதமிருந்த கோழிகளையும், ஆடுகளையும் வெட்டித் தின்றனர்.

மூன்றாம் நாள் கோயா படையினர் திம்மாபுரத்தைவிட்டு வெளியேறியபோது, ஐம்பதிற்கும் மேற்பட்ட வீடுகளும் தானியக் கிடங்குகளும் தீக்கிரையாக்கப்பட்டிருந்தன. அப்படை, தான் சிறைபிடித்து வைத்திருந்த இருவரில் பர்சே பீமாவைக் @காடரியால் பிளந்து கொன்றுவிட்டுச் சென்றது. அவர்கள் திரும்பிச் சென்ற பின்னர் பீமாவின் மனைவி வந்து பார்க்கும் போது, கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டு, நெஞ்சில் பாய்ந்த @காடரியுடன் பீமா இரத்த வெள்ளத்தில் முழங்காலிட்டபடி இறந்து கிடந்தார். மூன்று நாட்கள் நடந்த இந்தப் படையெடுப்பில் வெறும் கையோடு திரும்ப விரும்பாத கோயா படைக்கு, ஒரேயொரு ஒரு மாவோயிஸ்டின் உடலாவது தேவைப்பட்டது. கோயா படையனரால் சிறைபிடிக்கப்பட்ட மனு யாதவ் சிந்தால்னர் காட்டுக்குள் கொண்டு செல்லப்பட்டு, மாவோயிஸ்டு என முத்திரை குத்தப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தர்மேத்லா கிராமம் மார்ச் 16ஆம் தேதி கோயா படையினரால் தாக்கப்பட்டது. இத்தாக்குதலில் அக்கிராமத்திலிருந்த 200க்கும் அதிகமான வீடுகளும் தானியக் கிடங்குகளும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. அக்கூலிப் படையால் பிடித்துச் செல்லப்பட்ட அந்தக் கிராமத்தைச் சேர்ந்த மாதவி ஹண்டா, மாதவி அயிடா ஆகிய இருவரும் எங்கிருக்கிறார்கள், எப்படியிருக்கிறார்கள் என்பது இன்றுவரை மர்மமாக உள்ளது. அவர்கள் போலி மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கக்கூடும் எனக் கிராமவாசிகள் கருதுகின்றனர்.

தர்மேத்லா கிராமத்தின் மீதான தாக்குதலின் போது படையினரிடம் சிக்கிய மாதவி ஹிட்மே தனது ஒருபக்கப் பார்வையையே இழந்துவிட்டார். அரசுப் படைகள் தமது கிராமத்தைத் தாக்கத் தொடங்கியதை அடுத்து, ஹிட்மே தனது நகைகள், பணம் அனைத்தையும் கட்டியெடுத்துக் கொண்டு காட்டுக்குள் ஓடினார். அப்பொழுது தன்னை வழிமறித்த நான்கு சிப்பாய்கள் தாக்கியதில் மயங்கிச் சரிந்துவிட்டதாகக் கூறும் ஹிட்மே, நினைவு திரும்பி கண்விழித்துப் பார்த்தபோது, உடம்பில் ஒட்டுத் துணிகூட இல்லாமல் நிர்வாணமாக்கப்பட்டுக் கிடந்ததாகவும் கூறுகிறார். அவரது நகை மற்றும் பணத்தை அபகரித்துக் கொண்ட படையினர், அவரை மிருகத்தனமாகவும் தாக்கியுள்ளனர். இதில் அவரது முகத்தின் ஒரு பகுதி சிதைந்து, இடது கண்ணின் பார்வைத் திறனே போய்விட்டது.

ஐந்து நாட்கள் நடைபெற்ற இந்தத் தாக்குதல் குறித்து ஊடகங்களில் எந்தச் செய்தியும் வந்து விடாமல் தடுப்பதில் அரசு மிகுந்த முனைப்பு காட்டியது. பத்திரிகையாளர்கள் உடனடியாக அந்த கிராமங்களுக்குச் சென்றுவிடாமல் போலீசாரால் தடுக்கப்பட்டனர். தாக்குதல் நடந்து பல நாட்களுக்குப் பிறகே பத்திரிக்கையாளர்களால் அங்கே செல்ல முடிந்தது. அதுவும் அரசுப் படையினருக்குத் தெரியாமல் காட்டு வழியில் இரகசியமாகச் செல்ல வேண்டியிருந்தது. சட்டிஸ்கர் மாநில எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் உண்மை நிலையை அறிய முயன்றபோது, அவர்களையும் அக்கிராமத்திற்குள் செல்ல விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தி விட்டனர். ஒரு ஈ, காக்கைகூட காட்டுக்குள் செல்வதை அனுமதித்துவிடக் கூடாது என்பதில் குறியாக இருந்தார், இந்தத் தாக்குதல்களைத் திட்டமிட்டு நடத்திய சிறப்பு போலீசு கண்காணிப்பாளரான கல்லூரி.

மார்ச் மாத இறுதி வாரத்தில் இத்தாக்குதல் குறித்த உண்மை நிலவரங்கள் ஊடகங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்த பிறகு, தாக்குதலில் பாதிக்கப்பட்டு, வீடு, பணம், தானியம்  என அனைத்தையும் இழந்து, காட்டில் நிராதரவாக நிற்கும் கிராம மக்களுக்கு உதவுவதற்காகத் தனது ஆதரவாளர்களுடனும், நிவாரணப் பொருட்களுடனும் அக்கிராமங்களுக்குச் செல்ல முயன்றார், சுவாமி அக்னிவேஷ். இவர், மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மைய அரசால் நியமிக்கப்பட்ட தூதுவர். சில மாதங்களுக்கு முன்னர் மாவோயிஸ்டுகளால் கடத்திச் செல்லப்பட்ட போலீசாரை விடுவிக்கும் பேச்சுவார்த்தையில் முக்கிய பங்கு வகித்தவர்.

அதுமட்டுமன்றி, காட்டு வேட்டையால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்குத் தொடர்ந்து உதவி வருபவர். மார்ச் 11 தாக்குதலில் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க இவர் சட்டிஸ்கர் போகும் முன்பே, அம்மாநில போலீஸ் டி.ஐ.ஜி.யிடம் இது குறித்துப் பேசி, காட்டுக்குள் செல்ல அனுமதியும் வாங்கியிருந்தார்.

ஆனால், மார்ச் 26ஆம் தேதி அதிகாலை இவரும் இவரது குழுவினரும் தொர்னாபால் என்ற நகரத்தில் நூற்றுக்கணக்கான சல்வாஜுடும் குண்டர்களால் வழிமறிக்கப்பட்டனர். இவர்களைத் திரும்பிப் போகும்படி முழக்கமிட்ட அக்கூலிப் படை, கும்பல் சுவாமி அக்னிவேஷ் சென்ற வண்டியை சூழ்ந்துகொண்டு தாக்கியது. அவர்களிடமிருந்து தப்பிய குழுவினர், முதலமைச்சர் இராமன் சிங்கைத் தொடர்புகொண்டு நடந்தவற்றை விளக்கினர். முதல்வர் இராமன் சிங், அவர்களின் பாதுகாப்பிற்கு உத்திரவாதமளித்ததோடு, நிவாரணப் பொருட்களை எடுத்துக் கொண்டு சென்று கொடுக்கும்படியும் கூறியிருக்கிறார்.

முதல்வரின் இந்த உத்திரவாதத்தையடுத்து, நண்பகலில் இக்குழுவினர் மீண்டும் தொர்னாபால் வந்த போது, அங்கே மூவாயிரத்திற்கும் அதிகமான சல்வா ஜுடும் குண்டர்கள், துப்பாக்கி, கத்தி, இரும்புக் கம்பி போன்ற ஆயுதங்களோடு, இக்குழுவினரைச் சூழ்ந்துகொண்டு தாக்கினர். அக்கூலிப்படை கும்பல் இம்முறை அக்னிவேஷை, அவரது தலைப்பாகையைப் பிடித்து இழுத்துச் சாலையில் தள்ளி, கற்களைக் கொண்டு தாக்கியது. இதனைத் தடுக்க முயன்ற பத்திரிக்கையாளர்கள் மீதும், குழுவிலிருந்த மற்றவர்கள் மீதும் கற்களை வீசித் தாக்கியது, அச்சமூக விரோதக் கும்பல். “ஒருபுறம் தங்களைக் கிராமத்திற்குச் செல்ல அனுமதித்துவிட்டு, மறுபுறம் இவ்வாறு குண்டர்களை ஏவிவிட்டுத் தங்களைத் தாக்கியதை தற்செயலானதாகப் பார்க்க முடியாது. சிறப்புப் போலீஸ் எஸ்.பி. கல்லூரியால் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட தாக்குதல் இது” என அக்னிவேஷ் சட்டிஸ்கர் அரசின் மீது குற்றஞ்சுமத்தியிருக்கிறார்.

மேலும் அவர் இது குறித்துக் கூறும் போது, “துப்பாக்கியேந்திய ஒருவர் என்னைக் கொல்ல விரும்புவதாகக் கூறக் கேட்டது மிகவும் பயங்கரமான தருணம்” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பயத்தைத்தான் பழங்குடியினரிடமும், அவர்களுக்கு ஆதரவாகச் செயல்படுபவர்களிடமும் அரசு உருவாக்க முனைகிறது. பழங்குடியினருக்கு மருத்துவ உதவிகளைச் செய்துவந்த பினாயக் சென்னைப் பொய்யாகக் குற்றம்சாட்டிச் சிறையில் தள்ளினார்கள். பழங்குடியினரைக் காணச் சென்ற மேதா பட்கரை கல் வீசித் தாக்கினார்கள். இன்றோ, மனிதாபிமான உதவிகளைச் செய்யச் சென்ற அக்னிவேஷையும் துரத்தித்துரத்தித் தாக்கியுள்ளனர்.

அவர்களுக்கு வேண்டியதெல்லாம் Œட்டிஸ்கரில் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் கொட்டிக் கிடக்கும் கனிம வளங்களை எவ்விதமான எதிர்ப்பும் இன்றி பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிப்பதை உத்திரவாதப்படுத்த வேண்டும். அதற்காகத்தான் இத்தனை தாக்குதல்களும் அழித்தொழிப்புகளும். இத்தாக்குதல்களை,“நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக எடுக்கப்படும் தவிர்க்கவியலாத நடவடிக்கைகள்” எனத் தாராளமயத் தாசர்கள் நியாயப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

_______________________________________________________

-புதிய ஜனநாயகம், மே – 2011
_______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்