Tuesday, May 6, 2025
முகப்பு பதிவு பக்கம் 744

The Whistleblower (2010) திரை விமரிசனம் : அமெரிக்க, ஐ.நா அமைதிப்படையின் அட்டூழியங்கள்!

3
விசில்புளோயர்-2
அமைப்பு முறைக்குள் நின்று இளம் பெண்களை காப்பாற்ற முடியாத கேதரின்

லகம் முழுவதிலும் போர் நடக்கும் நாடுகளுக்கு ஐ.நா.வின் அமைதிப்படை செல்கின்றதே, அதன் வேலை என்ன? ஏதோ ஒரு நாட்டில் அமைதியை ஏற்படுத்த அவர்கள் ஏன் சிரமப்பட வேண்டும்? அப்படி ஒரு ஆபத்தான பணியை அவர்கள் ஏன் விரும்பி ஏற்றுக் கொள்கிறார்கள்?

இந்தக் கேள்விகளுக்குச் சரியான, அதே நேரம் அதிர்ச்சியான பதிலைச் சொல்லும் திரைப்படம் தான்Whistle Blower . ஐ.நா. அமைதிப்படையின் கோர முகத்தை உறைக்கக் கூறும் இந்த திரைப்படம் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது.

ஐ.நா.வின் அமைதிப்படைகள் தேவ தூதர்கள் அல்ல, வெள்ளைச் சமாதானப் புறாக்கள் அல்ல. பணம், அதிகாரம், கேளிக்கை இவற்றை மையமாகக் கொண்டு ஒன்றிணையும் அதிகார முகங்களின் சாத்தான் படை. இந்தப் படையின் அட்டூழியத்தை எதிர்த்துப் போராடிய ஒரு  சராசரி அமெரிக்கப் பெண் காவல் அதிகாரி காதரின் போல்கோவாக்கின் துணிச்சலான பயணம்  தான் இந்தத் திரைப்படம்.

டிரைலர்

கதை:

விசில்புளோயர்-1அமெரிக்காவில் ஒரு சாதாரண பெண் காவல் அதிகாரியான கேதரின் தன் மகளுடன் குறைந்தபட்ச வசதிகளோடு வாழ முனைகிறார். அதற்கு ஒன்று, பணி இட மாற்றம் வேண்டும், இல்லை வேலையை விட்டு விலக நிறைய பணம் வேண்டும். போர் நடந்து முடிந்திருக்கும் போஸ்னியாவில் ஐ.நா. அமைதிப்படையில் பணி புரிய டெமக்ரா (டைன்கார்ப்)  என்ற  தனியார் பன்னாட்டு நிறுவனம் ஆட்களை எடுக்கின்றது. அந்த விளம்பரத்தைப் பார்த்த கேதரின், டெமக்ரா  ஊழியராக போஸ்னியாவுக்குப் போகும் அமைதிப்படையில் செல்கிறார்.

அந்தப் போர்ச் சூழலில் உயிரைப் பணயம் வைத்து அமைதிக்காகப் பணியாற்ற வந்திருக்கும் டெமக்ரா நிறுவனத்தில் உள்ள தன் சகாக்களை எண்ணிப் பெருமையடைகிறார். அவர்கள் அனைவரும் அமெரிக்கா, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள்.  போஸ்னியாவில் அடிப்படைச் சட்டங்கள் கூட ஒழுங்காகக் கடைபிடிக்கப்படாத நிலையில் அங்கு பெண்களின் உரிமையை காக்கவும் போராடுகிறார். இதனால் அவருக்குப் பதவி உயர்வு கிடைக்கிறது.

ஒரு நாள் மது விடுதி ஒன்றை போஸ்னிய போலிசார் சோதனையிடுகிறார்கள். அங்கிருக்கும் பெண்களைக் காப்பகத்துக்கு அழைத்துச் செல்வதாகச் சொல்கிறார்கள். அந்த விடுதியைப் பார்வையிடும் கேதரினுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. அந்த பெண்கள் 15 வயது முதல் 20 வயதுக்குட்பட்டவர்கள், ஏழை நாடுகளைச் சேர்ந்தவர்கள். ஐரோப்பாவில் ஏதாவது வேலைக்குச் செல்லலாம் என்ற ஆசை வார்த்தைக்கு மயங்கி நாடு கடத்தப்பட்டவர்கள். சட்டத்திற்குப் புறம்பாக, ஐ.நா. அமைதிப்படையினராலேயே கடத்தி வரப்பட்டு, பல அதிகாரிகளின் வக்கிர காம வெறிக்குப் பலியானவர்கள்.

மறு நாள் அந்தப் பெண்கள் அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் காப்பகத்திற்கு செல்கிறார் கேதரின். ஆனால், அங்கு யாரும் புதிதாக வரவில்லை என்று தெரிகின்றது. அவர் பணி புரியும் நிறுவனத்தின்  கணிப்பொறியிலும் இப்படி ஒரு சோதனை நடந்ததற்கான தகவல்கள் ஏதும் இல்லை. பெண்கள் மறுவாழ்வுக் காப்பகத்தின் மருத்துவர் உதவியுடன் இன்னும் பல அதிர்ச்சியான தகவல்களைத் தெரிந்து கொள்கிறார்.

அந்த மது விடுதியின் உரிமையாளர் ஒழுங்காக போலிசுக்கும், டெமக்ரா அமைதிப் படையினருக்கும் பணம் கொடுத்துவிட்டதால் மீண்டும் அந்தப் பெண்கள் மது விடுதியிலேயே விடப்படுகிறார்கள்.

அந்த விடுயில் இருக்கும் இரண்டு பெண்களைச் சாட்சியமாக்கி டெமக்ரா ஊழியர்களையும், போஸ்னிய போலிசையும் தண்டிக்கலாம் என முயற்சி செய்கிறார். ஒரு கட்டத்தில் அவருக்கு ஒரு உண்மை புலப்படுகின்றது. ’இது ஒன்றும் யாருக்கும் தெரியாத ரகசியமில்லை!’ ஐ.நா. அதிகாரிகள் முதல், அரசு அதிகாரிகள், டெமக்ரா நிறுவன மேலாளர்கள் என சகலருக்கும் பெண் கடத்தல் விவகாரம் தெரிந்த ஒன்றுதான் என்ற உண்மைதான் அது.

இதை வெளியே சொன்னால் டெமக்ரா நிறுவனம் ஐ.நா. உடன் போட்டிருக்கும் பல மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் ரத்தாகும். அதனால் இதை மூடி மறைக்க  முயற்சிக்கிறார்கள் ஐ.நா. அதிகாரிகள். கேதரின் போராடுகிறார். கேதரினை மிரட்டுகிறார்கள், பலனில்லை. கடைசியில் அவரை வேலையை விட்டே துரத்துகிறார்கள். கேதரினும் இறுதியில் பல போராட்டங்களுக்குப் பின் அந்த ஆவணங்களை வெளி உலகிற்கு எடுத்துச் சென்று அம்பலப்படுத்துகிறார்.

கேதரின் பிபிசி தொலைக்காட்சியில் இதை அம்பலப்படுத்தும் காட்சியைத் தொடர்ந்து, அதே நிறுவனம் இப்பொழுது ஈராக் அமைதிப்படைக்கான பல மில்லியன் டாலர் ஒப்பந்தம் ஒன்றை ஐ.நா. உடனும், அமெரிக்க அரசுடனும் செய்திருக்கிறது என்ற உண்மைச்  செய்தியுடன் படம் முடிவடைகின்றது.

அரசை நம்பும் சாதாரணமானவர்கள்:

கேதரின் ஒரு சாதாரண அமெரிக்கப் பெண் காவலதிகாரி. அவருக்கு ஒரே மகள். அவர் தனது வேலையை மிகவும் நேசிக்கிறார். அரசை நம்பும் ஒரு சாதாரண பிரஜை அவர். அதிகப் பணம் ஈட்ட அவர் டெமக்ராவின் ஊழியராக போஸ்னிய செல்லும் போது, அங்கு நிலவும் அசாதாரண போர்ச் சூழல் நடுவே அமைதியை நிலை நாட்ட வந்திருக்கும் தன் சக அதிகாரிகளை ஆச்சரியத்துடன் பார்க்கிறார். நாட்டில் அமைதியை மீண்டும் நிலைநாட்ட தான் எவ்வளவு கடுமையாகவும், உண்மையுடனும் உழைக்க வேண்டும் என்று அவருக்கு நன்றாகவே தெரிகின்றது.

ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைமைகளில் தன்னுடன் வேலை செய்யும் சக அதிகாரிகளின் காமக் கொடூர வக்கிரங்களையும், அநியாயங்களையும் முதலில் காணும் போது உடைந்து போகிறார். தன்னைச் சுற்றி இருப்பவர்களில் யாரை நம்ப வேண்டும், யாரை எதிர்க்க வேண்டும் என்று அவருக்கு புரியவே இல்லை. அது அவரை பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது.

அவருடைய நிறுவனத்தையே எதிர்க்க வேண்டிய சூழலில் அவர் நம்பும் ஒவ்வொருவரும் அவரை விட்டு விலகுகிறார்கள். ஒருவர் தவறு செய்கிறார் என அவரைப் பற்றிய புகாருடன் மேலதிகாரியைப் பார்க்க, அவர் இந்தப் புகாரை மழுப்ப முனைகிறார். இப்படிப் புகார் மேல் புகார், மழுப்பல் மேல் மழுப்பல் என நாட்கள் செல்லச் செல்ல, கேதரின் மெதுவாக அந்த அமைப்பின் வேரே தவறாக இருப்பதை தன் அனுபவங்களினூடே புரிந்து கொள்கிறார்.

’நான் ஒரு நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரியாவேன், நல்ல போலீசாக வந்து நாட்டைத் திருத்துவேன், நல்ல அரசியல்வாதியாவேன்’ என்று நிலவும் அமைப்பைப் புரிந்துக்கொள்ளாமல் பல இளைஞர்கள் அந்த அமைப்பினுள் சமரசவாதிகளாக செல்வதைப் பார்த்து இனி போராட நினைப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டியது: ’அமைப்பினுள் இருந்தே சரி செய்யலாம்’ என்ற வாதம் எவ்வளவு சொத்தையானது என்பதைத் தான். கேதரின் தன் அனுபவதில் ஓரிடத்தில் சொல்கிறார் “நான் இந்த அமைப்பினுள் இருந்தே இதை மாற்ற முடியும் என்று எண்ணியது எவ்வளவு பெரிய முட்டாள்தனமான செயல்” என்று.

விசில்புளோயர்-2
அமைப்பு முறைக்குள் நின்று இளம் பெண்களை காப்பாற்ற முடியாத கேதரின்

அமைதிப்படையும், ஐ.நா.வும்:

ஒரு காட்சியில் டெமக்ரா நிறுவனத்தின் தலைவர் சொல்கிறார், ”நான் என் ஊழியர்களுக்கு நன்னடத்தை விதிகளைப் போதிக்க முடியாது”. நன்னடத்தை விதிகளை அமைதிப்படை வீரர்களுக்குப் போதிக்க முடியாதாம். “பல நாள் குடும்பத்த விட்டு பிரிஞ்சிருக்கிற ராணுவ வீரன் போற எடத்துல பொண்ணுங்க மேல கைய வைக்க தான் செய்வான்” என்று பாசிச அரசாட்சியை ஆதரிப்பவர்கள் கூறுவதற்கு நிகரான வார்த்தைகள் இவை. ஆனால் சமகால சமுக சூழலில் இதில் அதிர்ச்சியடைய ஒன்றுமில்லை.

ஐ.நா. நிறுவனமயமாக்கப்பட்டு, ஏகாதிபத்திய நாடுகளுக்கு வாலாட்டுகிற ஒரு நிறுவனம். ஆரம்பித்த நாள் முதல் இந்த நாகரீக காலத்தில் ஐ.நா. எத்தனை போர்களை தடுத்திருக்கின்றது? ஏன் இப்பொழுது கூட அமெரிக்கா ஈராக் மீது ஆக்கிரமிப்புப் போர் நடத்தியதே ! ஐ.நா. என்ன செய்து விட்டது? ஈழத்தில் நடந்து கொண்டிருந்த யுத்தத்தின் சத்தம் ஐ.நா. காதில் விழவே இல்லையே!
ஆனால் எல்லாம் முடிந்தவுடன், இன்று ஈராக் மறுவாழ்விற்க்கும், ஈழத்தின் போர் குற்றங்களுக்கும் ஏதோ பிடில் வாசிக்கின்றது ஐ.நா. ’ஏகாதிபத்திய நாடுகளுக்கு ஆவணப்படுத்த வேண்டுமே’ என்று ஈழ யுத்தத்தை ஆவணப்படுத்தியது, அதற்கு மேல் பேச்சு மூச்சில்லை.

படத்தின் இறுதிக்காட்சியில் சொல்வது போல் இன்று டெமாக்ரா (டைன்கார்ப்)  நிறுவனம் ஈராக்கில் மறு வாழ்வு அமைக்க அமைதிப்படையை அனுப்பும் ஒப்பந்தத்தைப் பெற்றிருக்கின்றது. போஸ்னிய சம்பவம் வெளிவந்து, உலகமே காறித் துப்பிய பின்னும் அந்த  நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டிருக்கிறது என்றால், ஈராக் பெண்களை யார் காப்பற்றுவது?

Human Trafficking: மனிதக் கடத்தல்!

படத்தின் ஆரம்பத்தில் உக்ரைனில் இருந்த இளம் பெண் ஒருவரை அவர் உறவினரே போஸ்னியாவுக்கு விபச்சாரம் செய்ய விற்றிருப்பார். படத்தில் அந்தப் பெண் தப்பிக்க முயல, பல இன்னல்களைச் சந்தித்து இறந்து விடுவார். அந்தப் பென்ணை மீட்க அவரின் தாய் இன்னொரு பக்கம் போராடிக் கொண்டிருப்பார்.

உலக அளவில்,இந்தியா உள்பட்ட ஏழை நாடுகளில் இருந்து பல பெண்கள் உலகளாவிலான இந்தப் பாலியல் சந்தையில் விற்கப்படுகிறார்கள். இந்தச் சந்தை மட்டும் பல பில்லியன் டாலர் பணம் புழங்கும் ஒரு தொழில். அப்பாவிகளான 15 வயதே ஆன சிறுமிகள் கூட பல பணக்காரர்களின் கேளிக்கைக்கும், வக்கிரத்திற்கும் பலியாகிறார்கள்.
எந்நேரமும் சுரண்டலில் ஈடுபடும் பணக்கார முத்லாளிகளின் கேளிக்கைக்கு பாலியல் சுற்றுலா என்று தாய்லாந்து, உக்ரைன், மலேசியா, ஏன் நம்ம ஊர் கோவா, மாமல்லபுரம் வரை பெண்களும், குழந்தைகளும் பலியாகிறார்கள். இதில் மிக முக்கிய விடயம் இவையெல்லாம் சட்டப்பூர்வமானவை.

தாய்லாந்திலோ, காமத்திபுராவிலோ, சோனகச்சியிலோ, ஜப்பான் கிஷாக்களோ எல்லாம் சட்டப்பூர்வமானவை. இராணுவம் முதல் இந்த மாதிரியான அமைதிப்படைகள் வரை அவர்களின் பாலியல் வேட்டை சாதாரண பெண்கள் மீது நீண்டாலும் அதை அரசு கண்டும் காணாமல் விட்டுவிடுகின்றது. இன்னொரு பக்கம், பல பெண்கள் இப்படி கடத்தி வரப்படுவதையும் ஐ.நா. அதிகாரிகள், அறிவாளிகள், அரசு மந்திரிகள் கண்டுகொள்வதில்லை. ஆனால் குளிரூட்டப்பட்ட அறையில் நன்கு தின்று, புளித்த ஏப்பத்துடன் குழந்தைகள் மீதான பாலியல் பிரச்சினைகளைப் பற்றியும், பெண்ணியம் பற்றியும் இவர்கள் மாநாடுகள் போடத் தயங்குவதில்லை.

விசில்புளோயர்-3
கேதரினாக நடித்த ரேச்சல் வெய்சுடன், கேதரின் போல்கோவாக் (வலது)

படம் சொல்லும் தீர்வில் உள்ள பிரச்சினை:

தன் வேலையைக் கூட இழக்கும் கேதரின் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் பெற வேண்டி அந்தத் தனியார் நிறுவனத்தையும், ஐ.நா.வையும் அம்பலப்படுத்த முனைகிறார். அந்த நிறுவனம் ஒரு இங்கிலாந்து நிறுவனம் என்பதால், இந்த ஆவணங்களை பிபிசியில் கொடுக்கிறார். பிபிசி க்கு பேட்டியளிக்கும் ஐ.நா. அதிகாரி, ’ஐநா அமைதிப்படை மீதான இந்தப் பெண் கடத்தல் விவகாரம் ஒரு பொய்’ என்கிறார், அவரின் பேட்டியைத் தொடர்ந்து கேதரினின் ஆதாரங்களுடனான பேட்டி ஒளிபரப்பப்பட்டு, அந்த நிறுவனம் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றது.

கேதரின் ஒரு சாதரண அதிகாரி, தன் நியாய தர்மத்திற்கு அவர் உண்மையாக இருக்கிறார். இந்த அவலத்தை வெளியிடுகிறார். இதுவே பாராட்டப்பட வேண்டியதுதான். அதே போல் இந்தப் படத்தை இயக்கிய லாரிஸாவும் தன் உண்மையான அக்கறையோடு இந்த சம்பவத்தைப் படமாக்கியதுடன், இறுதியில் அந்த நிறுவனம் இன்னும் இயங்குவதையும் சுட்டிக்காட்டுகிறார். அவர்கள் நேர்மையாக இருந்துள்ளார்கள்.

ஏனினும் இந்த மொத்த சம்பவமும் நமக்கு கூறுவதென்ன?, இதற்கு என்ன தீர்வு? சமீபத்தில் ஈழ யுத்தம் நடந்து முடிந்த பிறகு பல தமிழின ஆதரவாளார்களும், மனித உரிமைக் காவலர்களும் ஐ.நா.வின் அறிக்கையை ஒரு புரட்சிகர ஆயுதமாக முன் வைத்தனர். ஐ.நா.வைக் கொண்டு ராஜபக்ஷேவை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என வாதாடினார்கள். அவர்களும் சேர்த்து புரிந்துகொள்ள வேண்டியது இது தான்,

உலகம் முழுவதிலும் ஏகாதிபத்தியங்கள் உலகைச் சுரண்டி கொண்டிருக்கும் வரையில் அவர்களிடம் இந்த ஐநா என்ற நிறுவனம் கைப்பாவையாகத்தான் இருக்கும். படத்தில் வருவது போல் பிபிசி இல் வெளியிட்டு விட்டால் ஒன்றும் மாறி விடாது. ஈழக் காட்சிகள் எத்தனை தொலைக்காட்சிகளில் வந்தன!, விக்கிலீக்ஸ் எவ்வளவு ஆதாரங்களைத் தந்தது!

படத்திலேயே சொல்வது போல் அழுகிப் போன ஒரு அமைப்பினுள் இருந்தே தீர்வைத் தேடுவது முட்டாள்தனமானது மட்டுமல்ல, தீர்வே கிடைக்காது. ஏகாதிபத்திய நலன் சார்ந்த அதிகாரம் வர்க்கம், அரசு, ஊடகம், ராணுவம், பொருளாதாரம் போன்றவற்றை உலகம் முழுவதும் தமது ஆக்டோபஸ் பிடியில் வைத்திருக்கும் போது, அத்தகைய அமைப்பையே தூக்கியெறிய மக்களை அரசியல் படுத்துவது தான் இதற்கு ஒரே தீர்வு. அப்படி அரசியல் படுத்தினால் ஒழிய இந்த ஆவணங்கள் எந்த மதிப்பையும் பெறப் போவதில்லை.
கேதரின் செய்து முடிக்க வேன்டிய வேலை இன்னும் இருக்கிறது.

இறுதியாக முதலாளித்துவ சினிமாவின் கேளிக்கை, பொழுதுபோக்கு என்று மட்டும் சிக்கிக் கொள்ளாமல் தங்களால் இயன்ற அளவு முன் முயற்சியுடன் இந்தப் படத்தை எடுத்த படக் குழுவினருக்கு பாராட்டுக்கள்.

_____________________________________________

–  புதிய கலாச்சாரம், மார்ச் – 2012

___________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

உனக்கும் சேர்த்து தான் மே நாள்!

32

தொழிலாளி என்றால்
வேறு யாரோ போல் நினைக்கிறாய்!

நடை, உடை, பாவனை
நவீன முகப்பூச்சு,
பன்னாட்டு குளிர்பானம் உதட்டில்
பாதிகிழிந்து தொங்கும் ஆங்கிலம் நாக்கில்.

ஒப்பனைகள் எதுவாயினும்
உன் வர்க்கம் பார்த்து
தொழிலாளர் விடுதலை பற்றி
ஒரு துண்டறிக்கை தரவந்தால்,

வெட்டிப்பேசி, விலகி நடந்து
ஏதோ  ஒரு முதலாளி போல்
நீ என்னமாய் நடிக்கிறாய்?

கையில் கணிணி
கனமான சம்பளம்
வார இறுதியில் கும்மாளம்
வசதியான சொகுசு கார்…
அதனால், அதனால் நீ என்ன
அம்பானி வகையறாவா?

அடுத்த வேலை என்னாகுமோ?
கிடைத்த வேலை நிரந்தரமோ?
என எப்போதும் பயத்தில்
ஏ.சி. அறையில் கூலியுழைப்பால்
ஜில்லிட்டுக்  கிடக்கும் உன் இதயத்தைக் கேள்!
சொல்லும்… நீயும் ஒரு தொழிலாளிதான்!

காதலுணர்வை
வெளிப்படுத்துவதை விட மேலானது
வர்க்க உணர்வை வெளிப்படுத்துவது!
அதை வெளிப்படுத்தி
வீதியில் போராடும் தொழிலாளரை
வேறு யாரோ போலவும்,
நீ வேறு வர்க்கம் போலவும்
செங்கொடி பார்த்து முகம் சுழிக்கும்
உன் செய்கையில் ஏதும் பொருளுள்ளதா?

எந்த விலையுயர்ந்த சென்ட் அடித்தாலும்…
எத்தனை உடைகள் மாற்றினாலும்…
எவ்வளவு கசந்தாலும்… இதுதான் உண்மை.

கூலிக்கு  உழைப்பை விற்று
காலத்தை நகர்த்தும் கண்மணியே…
நிச்சயம் நீயும் ஒரு தொழிலாளிதான்!

உணர்ச்சியற்ற தோல்
தொழுநோயின் அறிகுறி..
உணர்ச்சியுடன் போராடுதலே
தொழிலாளி வர்க்கத்தின் அறிகுறி.
இதில் எது நீ அறிவாயா?

உனக்கொன்று தெரியுமா!
உலகியலின் உயர்ந்த அறிவு
பாட்டாளி வர்க்க அறிவு,
மனித குலத்தின் உயரிய உணர்ச்சி
பாட்டாளி வர்க்க உணர்ச்சி.

இளைஞனே.. உணர்ந்திடு!
தருணத்தை இப்போது தவறவிடில்
வேறெப்போது பெறுவாய் வர்க்க உணர்வு.

• துரை. சண்முகம்
______________________________________________

– புதிய கலாச்சாரம், மே – 2012

______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

THE RED MARKET: மனித உடல் உறுப்புகளின் சந்தை!

6
Red Market

The Red Marketல்ல உடல் வளத்துடன் இருக்கும் நான் ஒரு கோடி ரூபாய்க்கு விலை போவேன் என்கிறார் “The Red Market”  புத்தகத்தின் ஆசிரியர் ஸ்கார்ட் கார்னி.  அவர் அமெரிக்கக் குடிமகனாக இருப்பதால் தன் உடல் பாகங்களுக்கான உண்மையான சந்தை விலையைச் சொல்கிறார் போலும். ஒருவேளை அவரே இந்தியா மாதிரியான ஏழை நாடுகளில் வாழ்ந்தால் இதில் 100ல் ஒரு பங்கு விலைக்குக் கூட அவரது உடல் பாகங்கள் விற்காது என்ற உண்மையை அவர் எழுதியுள்ள புத்தகமான “The Red Market”  ஐ படித்தால் எவராலும் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.

உலக அளவில் இன்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடக்குமளவு மருத்துவத் துறை முன்னேறி இருக்கின்றது. ஆனால் உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய மாற்று உறுப்புகள் வேண்டுமே? அது தான் இன்றைய விற்பனைப் பொருள். சந்தையில் பல பில்லியன்கள் இலாபம் தரும் நல்ல சரக்கு. உலகம் முழுவதும் மனித உறுப்புகளின் களவு, விற்பனை, மோசடி, குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் வாழும் ஏழை மக்களை ஏமாற்றி அவர்களுடைய உடல் பாகங்களைத் திருடும் இதயம் இல்லா பன்னாட்டு நிறுவன வியாபாரிகளைப் பற்றி விரிவாகப் பேசுகின்றது “”The Red Market”  .

மாற்று உறுப்புகளை யார் விற்பார்கள்? ஏழைகள் தான். ’அமெரிக்காவில் உள்ள ஒரு பணக்காரர் தன் பழுதடைந்த உறுப்புக்கு மாற்று வேண்டும் என்று விளம்பரம் செய்தால் அமெரிக்காவில் இருக்கும் ஒரு ஏழையிடம் இருந்தா அது கிடைத்து விடப் போகிறது? மிக எளிதாகவும், சட்டப்படியும் தெரியும் இந்த வியாபாரத்தின் “சிவப்புப் பக்கங்களை (இது உடல் உறுப்பு சார்ந்த ரத்தமும், தசையுமான கதை என்பதால் சிவப்புச் சந்தை என்று புத்தகத்திற்கு பெயரிடப்பட்டிருக்கிறது) தோலுரித்துக் காட்டுகிறார் அமெரிக்கப் பத்திரிகையாளாரான ஸ்கார்ட் கார்னி.

உலகம் முழுவதும் பல பணக்கார நாடுகளின் உடற் தேவைகளை அதாவது ரத்தம் முதல் எலும்பு, தசை, கிட்னி, கண், பெண்ணின் கரு முட்டை, தலைமுடி வரை தேவைப்படும் அனைத்தையும் ஈடு செய்வது மூன்றாம் உலக நாடுகளின் மக்கள் தான், குறிப்பாக இந்தியா. அதோடு இலவசச் சேவையாக பல பன்னாட்டு மருந்து கம்பெனிகளுக்கு சோதனை எலிகளாகவும் இருக்கிறார்கள் இந்திய மக்கள். ஏன்?

’தேவைப்படுபவர் வாங்குகிறார், இருப்பவர் விற்கிறார்’ என்ற சராசரி சந்தைப் பொருளாக நம் உடல் உறுப்புக்களைப் பார்க்க முடியாது. உயிருக்குக் கொடுக்கப்படும் அதே மதிப்பு உடல் உறுப்புகளுக்கும் கொடுக்கப்படுகின்றது. ஒவ்வொரு நாட்டின் காகிதச் சட்டமும் இந்த உடல் உறுப்பு தானத்தை மிக உன்னதமாகக் கருதி,  பாதுகாப்பாகவும், சட்டப்பூர்வமாகவும் தானம் செய்ய மக்களை அனுமதிக்கின்றது.

 

உடல் உறுப்புகளின் உலக விலைப்பட்டியல் மற்றும் அதை பெறும் வழிமுறை
உடல் உறுப்புகளின் உலக விலைப்பட்டியல் மற்றும் அதை பெறும் வழிமுறை

படத்தை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்
அல்லது ரைட் கிளிக் செய்து சேவ் செய்யவும்

ஆனால் ஸ்கார்ட் கார்னி இந்தப் புத்தகத்தினூடே  பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து, அந்தந்த  நாடுகளில் உடல் உறுப்பு சம்பந்தமான திருட்டு, விற்பனை, அதில் கொள்ளை இலாபம் பார்க்கும் ஏஜெண்டுகள், கண்டுகொள்ளாமல் விடும் அரசுகள் என சகல கருப்புப் பக்கங்களையும் போட்டு உடைக்கிறார்.

பணத்தின் முன் ஒரு ஏழையின் உடல் என்பது ரத்தமும் தசையுமான விற்பனைப் பண்டம். எப்படி? கொஞ்சம் இதயத்தைக் கடினப்படுத்திக் கொண்டு மேலே தொடருங்கள்.

நூலுக்கான டிரைலர்

எலும்புத் தொழிற்சாலை:

திருப்பதி
திருப்பதி பக்தர்களின் காணிக்கையான தலைமுடி. இவை அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் ஏற்றுமதியாகிறது

அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் மருத்துவம் பயிலத் தேவைப்படும் மனித எலும்பு மாதிரிகள் முழுக்கவும் இந்தியாவில் இருந்து அனுப்பப்படுகின்றன. இந்தியாவில் எலும்பு மாதிரிகள் ஏற்றுமதி செய்யும் நிறுவனம் அதை எப்படிச் செய்கின்றது?

முதலில் கம்பெனியில் இருக்கும் 4 தொழிலாளிகள் நோட்டம் விட்டு தங்கள் ஊரைச் சுற்றியுள்ள சுடுகாடுகளில் பிணங்கள் வருகிறதா எனத் தெரிந்து கொள்வார்கள். புதைக்கப்பட்ட பிணம் என்றால் அப்படியே அலேக், எரிக்கப்படும் பிணம் என்றால் சொந்தக்காரர்கள் திரும்பிப் பார்க்காமல் சென்ற பின், வெட்டியானிடம் பேசி வைத்துப் பாதி எரியும் போதே தூக்கி விடுவார்கள்.

தூக்கிய பிணத்திலிருந்து பதப்படுத்தி எலும்புகளை மட்டும் எடுப்பார்கள். அந்த பதப்படுத்தும் முறை கொடூரமாக இருக்கும். பின்பு எலும்புகளை சுத்தமாக பாலிஷ் செய்து பேக்கிங் செய்து விடுவார்கள். ஆன்மாவுக்கு சொர்க்கமோ நரகமோ, அடுத்த பிறவியோ, என்ன கருமமோ, யாருக்குத் தெரியும்? உயிர் கடவுளுக்கு, உடல் அமெரிக்கப் பல்கலைக்கழகத்திற்கு.

மேற்கு வங்க மாநிலத்தில் இருக்கும், புர்பஸ்தலி  எனும் ஊரில் உள்ள  “யங் ப்ரதர்ஸ் (Young Brothers)” என்ற  ஏற்றுமதி நிறுவனத்தை நடத்தும் முக்தி பிஸ்வாஸுக்கு குடும்பத் தொழில் இது தான். அந்த யங் ப்ரதர்ஸ் நிறுவனம் என்பது ஒரு எலும்புத் தொழிற்சாலை. 150 ஆண்டு காலப் பாரம்பரியம் உடையது. கொள்ளுத் தாத்தாவுக்குத் தாத்தா காலத்தில் இருந்து இப்பொழுது முக்தி பிஸ்வாஸின் மகன் வரை செய்யும் ஒரே குடும்பத் தொழில். நல்ல இலாபம். அவர்களின் கம்பெனியில் இருப்பு வைக்கப்பட்டுள்ள எலும்புகளின்  மதிப்பு மாத்திரம் 70,000 அமெரிக்க டாலர்கள்.

Red Marketஏன் அமெரிக்காவில் கிடைக்காத எலும்புகளா அல்லது அங்கு சாகாத மக்களா? என்று ஒரு கேள்வி எழும். நல்ல கேள்வி! முன்னர் அமெரிக்கா, இங்கிலாந்து முழுவதும் கூட பிணத்திருடிகள் (Grave Robbers) உண்டு.  அவர்கள் பிணத்தைத் திருடிப் போனபிறகு அதனை மீட்க பிணைப்பணம் கேட்பார்கள். இது போல் சார்லி சாப்ளினின் பிணத்தையும் திருடி, அதனை  மீட்ட கதையெல்லாம் கூட உண்டு. பின்பு அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் கடுமையான சட்டங்கள் வந்து விட்டன. அங்கு உடல் உறுப்பு சம்பந்தப்பட்ட வியாபாரம் என்றால் ’சட்டம் தன் கடமையைச் செய்யும்’!

அமெரிக்காவில் தான் இந்தச் சட்டம் கடுமையானது, அதே அமெரிக்க அரசு  இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் இருந்து வரும் மனித உறுப்புகளைக்  கண்டுகொள்வதில்லை.  ஒரு பக்கம், ’ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் செய்யும் தொண்டு’ என்று சால்ஜாப்பு. இன்னொரு பக்கம், பணத்தின் மூலம்  சட்டத்தை வளைத்து விடுவது. இந்த எலும்புத் தொழிற்சாலைகள் நேர்த்தியான கார்ப்பரேட்டுகளாக இயங்குகின்றன.

வாடகைத்தாய்கள்
குஜராத்தில் ஒரு வாடகைத்தாய் நிலையம். ஒன்பது மாதங்களும் இவர்களை கைதி போல பாதுகாக்கின்றனர். வெளிநாட்டினர் தரும் 14,000 டாலர்களில் இவர்களுக்கு 4000 டாலர் வருமானம் கிடைக்கிறது

மூன்றாம் உலக நாடுகள், குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளில் இருக்கும் இந்த உடல் உறுப்புச் சந்தையான சிவப்புச் சந்தை பல பில்லியன் டாலர்கள் புழங்குகின்ற ஒரு துறை. சட்டப்படி இதைச் செய்தால் அதிக செலவு பிடிக்கும். அப்படியே சட்டத்துக்குப் புறம்பாகச் செய்தால் நல்ல கமிஷன் கிடைக்கும். கிட்னி  சந்தையைப் பார்ப்போம், அப்பொழுது புரியும்.

கிட்னிவாக்கம்:

கிட்னிவாக்கம்
ஓராண்டுக்கு முன்னர் 1000 டாலர்கள் பெற்று கிட்னியை விற்ற கலா  இன்னமும் சரிவர வேலை செய்யவியலாமல் தவிக்கிறார். கிட்னியின் சந்தை விலை சுமார் 15,000 டாலர் முதல் 250,000 டாலர் வரை

சென்னை மணலிக்கு அருகில் இருக்கும், சுனாமியில் அடிபட்ட ஒரு  குப்பத்தின் பெயர் கிட்னிவாக்கம். அங்கு கிட்னி விற்காதவர்கள் பிறந்த குழந்தைகள் மாத்திரம் தான்.

சுனாமி நகரில் வாழும் மக்கள் கடற்கரையோரம் வாழ்ந்து, சுனாமியால் வாழ்க்கையை இழந்து, அரசால் மறு-குடியமர்த்தப்பட்டவர்கள். இவர்களைப் பார்த்து புகைப்படம்  எடுத்துக்கொண்டு,  நலம் விசாரிக்க ஜப்பானின் ஜாக்கிசான் முதல் அமெரிக்காவின் மைக்கல் ஜாக்ஸன் வரை வருவார்கள், நடுநடுவே கிளின்டன், நம்ம ஊர் விஜயகாந்த் கூட வருவார்.  இத்தகைய மேன்மக்களுக்குக் காட்சிப் பொருளாக இருக்கும் இம்மக்களது வாழ்க்கை நிலைமை மிகவும் மோசம்.

கலா எனும் பெண்மணியின் கணவர் சுனாமியில் இறந்து விட்டார். அவர்களுடைய தொழிலும் போயிற்று. வரதட்சணை கொடுக்க முடியவில்வில்லை என்பதால் மகள் வாழாவெட்டியாகத் திரும்ப வந்து விட்டாள். அருகில் இருந்த சில கிட்னி ஏஜெண்டுகள் மூலம் தன் கிட்னியை விற்க கலா ஒப்புக்கொண்டார். 50 ஆயிரம் வரும்; பெண்ணுக்கு வரதட்சணை 30,000 போக, மீந்த பணத்தில் இட்லிக் கடை வைத்து சம்பாதித்து விடலாம் என்பது அவரது யோசனை. இப்பொழுது செய்யும் சித்தாள் வேலையை விட்டுவிடலாம். மதுரையில் ஆபரேஷன், முடிந்தவுடன் காசு.

மதுரைக்குச் சென்றார் கலா, ஆபரேஷனில் ஏதோ சிறு தவறு. காயம் ஆற ஒரு மாதம் ஆகும் எனச் சொல்லிவிட்டார்கள், சரி பணம்? ஏஜெண்ட் கமிஷன் போக 40 ஆயிரம் ரூபாய் கைக்கு வந்தது. கிட்னி எடுக்கும் ஆபரேஷன் வரை தான் மருத்துவச் செலவு அவர்களுடையது, அதன் பின் கலா தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.

கலா அந்தத் தனியார் மருத்துவமனைக்குக் கட்டணம் கட்ட முடியாமல் மதுரை அரசு மருத்துவமனைக்குச் சென்றார். உடலைக் காப்பாற்ற 15 ஆயிரம் செலவானது. 25,000 வரதட்சணைக்குக் கொடுத்து விட்டார். ஆபரேஷனுக்குப் பின், முன் போல சித்தாள் வேலையும் பார்க்க முடியவில்லை. சரி காவல்துறையிடம் புகார் கொடுக்கலாம் என்று போனார். ஏட்டு  சட்டத்தை எளிமையாக அவரிடம் எடுத்துச் சொல்லிவிட்டார். “இந்திய சட்டப்படி உங்கள் உடல் உறுப்பைத் தானம் தான் கொடுக்க வேண்டும், விற்பனை செய்தால் விற்றவர் கடுமையான தண்டனை பெற வேண்டும்”.

கிட்னிவாக்கம்
சென்னை மருத்துவமனை ஒன்றில் சிறுநீரகத்தை நீக்கும் நெப்ரெக்டொமி அறுவை சிகிச்சை. 2006-2007 ஆண்டுகளில் கிட்னிவாக்கம் என்றழைக்கப்படும் சுனாமி முகாமில் கிட்டத்தட்ட அனைத்து பெண்களும் தனது கிட்னிகளில் ஒன்றை விற்றுள்ளனர்.

ஏழையால் வேலை செய்து வாழ முடியாத சமுக அவலம், அந்த சமுக அவலத்தைப் பணமாக்கிக் கொள்ளும் இன்னொரு அவலம். இந்த சமூக அவலத்தில் இந்தியாவில் கிட்னி திருட்டும் வியாபாரமும் தழைத்தோங்குகிறது. GDP சேர்த்தால் பல புள்ளிகள் அள்ளலாம். விவசாயிகள் முதல், நெசவாளிகள், மீனவர்கள், மலை வாழ் மக்கள் என பல இலட்சம் பேர் கிட்னி விற்பனை செய்து இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்குப் ’பங்காற்றுகின்றனர்’.

ஆசிரியருடன் பி.பி.எஸ். நேர்காணல்

இரத்த தானம்?

சுபாஷ்
சென்னை தெருக்களிலிருந்து 1999ல் காணாமல் போன தனது மகன் சுபாஷின் புகைப்படத்துடன் சிவகம்மா – நாகேஷ்வர் ராவ். தற்சமயம் சுபாஷ் அமெரிக்காவில் ஒரு கிறுத்தவ குடும்பத்தில் வளர்வதாக சென்னை போலீசார் தெரிவிக்கின்றனர்.

மேலே பார்த்தோம் அல்லவா ? இந்திய சட்டப்படி இரத்த ‘தானம்’ தான் செய்ய வேண்டும் விற்கக் கூடாது. ஆனால் அப்படித் தானமாகப் பெறப்பட்ட இரத்தத்தை உடம்பில் ஏற்ற பணம் கொடுக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் ஆபரேஷன் பில்லில் இதர செலவுகளுடன் உங்களுக்கு ஏற்றப்பட்ட ரத்தத்திற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டிருக்கும். இரத்தம் தானமாகக் கிடைத்திருந்தாலும் காசை வசூலித்து விடுவார்கள்.

அதாவது உடல் உறுப்புகள் கொடுப்பது இலவசம், ஆனால் அந்த உறுப்பைப் பொருத்த நீங்கள் பணம் கொடுக்க வேண்டும். இதில் முதலில் இலாபம் அடைபவர்கள் தனியார் மருத்துவமனைகள். அவர்கள் இன்று இந்த உறுப்புகளுக்கான சந்தையை ஊட்டி வளர்க்கிறார்கள்.

இதே உறுப்புகளுக்கு மாற்று உறுப்பைப் பெறுபவரிடம் பல இலட்சங்கள் வாங்கப்படுகிறது. கலாவிடமிருந்து எடுத்த கிட்னி இந்தியாவில் 4 இலட்சம், அமெரிக்காவிலோ 13 இலட்சத்திற்கு விலை போகும். இடையில் புழங்கிய பணம் மருத்துவமனை, ஏஜெண்டுகளின் பையில் அடைந்து கொள்ளும். இதில் ஏஜெண்டுகளாக பல மருத்துவர்களே உள்ளனர். அரசு மருத்துவமனைகள் முதல் தனியார் மருத்துவமனைகள் வரை கொள்ளை இலாபம் புரளும் தொழில் இது.

இன்னொரு புறம் இரத்தத் தட்டுப்பாடு இருக்கும் இடங்களில் இரத்தம் கொடுக்க பணம் சட்டப்பூர்வமாகவே வசூல் செய்யலாம். நல்ல விஷயம் தான், ஆனால் அது என்ன விபரீதத்தைக் கொண்டு வந்தது தெரியுமா?

கோரக்பூரில் ஒருவன் நான்கு பேரைக் கடத்தி வைத்துக்கொண்டு அவர்களைச் சங்கிலியால் கட்டிப் போட்டு விட்டு, அவர்களுடைய இரத்தத்தை  எடுத்து விற்பனை செய்து கொண்டிருந்தான். பிடிபட்டவுடன் நல்ல வேளையாக அவன் இந்தியாவில் இருந்ததால் சட்டம் அவனைக் காப்பாற்றி விட்டது. என்ன ! பணம் கொஞ்சம் செலவாகியிருக்கும்!

இந்தப் புத்தகம் முழுவதும் அதன் ஆசிரியர் ஸ்கார்ட் கார்னியின் உழைப்பை நாம் மதிக்கத் தக்கதாகவே உள்ளது, ஏதோ புத்தகம் எழுதுகிறோம் என்பதோடு நில்லாமல். நாடு நாடாக, பல ஊர்கள் சுற்றி உடல் உறுப்புகள் பற்றிய சந்தையைப் பற்றி தகவல்கள் திரட்டி நெற்றிப்பொட்டில் அடிப்பது போல் முன்வைக்கிறார்.

அவர் மிகச் சுருக்கமாகக் குறிப்பிடுவது “மூன்றாம் உலக நாடுகளின் உயிர்கள் எப்பொழுதும்  மலிவானவை. இதுதான் காலனியச் சிந்தனை”.  அதை நிரூபிக்கும் அனைத்து ஆதாரங்களையும் தன் புத்தகத்தில் அனைவருக்கும் எளிதாகப் புரியும் வண்ணம் விளக்கியுள்ளார். நாம் மேலே பார்த்ததெல்லாம் அக்கடலில் ஒரு துளிதான்.

பாத்திமா
தனது மகள் சபீனை ஒன்பதாண்டுகளாக தேடிய முயற்ச்சியில் திவாலாகிப்போன பாத்திமாவின் குடும்பம் தற்போது வண்ணாரப்பேட்டையில் வாழ்கிறது

உடல் விற்பனை என்பது, குழந்தைகள் கடத்தல், பெண்கள் விற்பனை, பெண்களின் கரு முட்டை விற்பனை, இரத்தம், கிட்னி, இதயம் உள்ளிட்ட இதர உடல் உறுப்புக்கள், இறந்தவர்களின் தோல், எலும்பு, வாடகைத் தாய் முதல் நம்மூர் திருப்பதியில் இருந்து ஏற்றுமதி ஆகும் தலை முடி வரை எனப் புத்தகம் முழுவதும் அவரின் ஆய்வு விரவிக் கிடக்கின்றது.

ஆமாம் திருப்பதியில் ஆண்கள் தலை முடி பேக்கரியில் பயன்படுத்தும் ஏதோ ஒரு ரசாயனப் பொருள் செய்யப் பயன்படுகிறதாம். பெண்களின் தலைமுடி பல பில்லியன் டாலர் புழங்கும் ‘விக்’ வணிகமாம். ஏலு கொண்டல வாடா! நீ எப்படி கோடீசுவரக் கடவுளாக இருக்கிறாய் என்பது இப்போதுதான் புரிகிறது.

மனிதன் எனும் சோதனை எலி

இதனுடன் இந்த புத்தகம் முடிவடையவில்லை. இதன் இன்னொரு பரிமாணம் என்பது மனித உடல்களைச் சோதனை எலிகளாகப் பயன்படுத்துவது எனும் ஆபத்து பற்றியது. நீங்கள் தமிழில் ஈ என்று படம் பார்த்திருக்கிறீர்களா? சரி அது வேண்டாம். அதன் மூல ஆங்கிலத் திரைப்படமான தெ கான்ஸ்டண்ட் கார்டனர் பார்த்திருக்கிறீர்களா? இந்தப் புத்தகத்தின் 8 ஆம் அத்தியாயம் அந்த அதிர்ச்சியான செய்தியைப் பற்றி தான் பேசுகிறது. பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் சோதனைக்கூடம் ஏழைகளின் உடல் தான்.

ஆப்ரிக்கா முதல் இந்தியா வரை வாழும் மூன்றாம் உலக, ஏழை நாடுகளின் மக்கள் தான் சோதனைச்சாலையின் எலிகள். நிறுவனம் புதிதாகத் தயாரிக்கும் மருந்தைச் சந்தைக்குக் கொண்டு வர, தரச் சான்றிதழ் பெற, அதற்கு முன்னரே சோதனை நிலையில் பலர் மேல் அம்மருந்து பிரயோகிக்கப்படுகிறது. கொடுமை என்னவென்றால் அது யார் மீது பிரயோகிக்கப்படுகிறதோ அம்மக்களுக்கே தெரிவதில்லை.

கோமதியின்-குழந்தை
கோமதி கருவற்றவேளையில் சைக்லோபமைன் (Cyclopamine) என்ற மருந்து அவர் மீது சோதிக்கப்பட்டதன் விளைவாக குழந்தை இப்படிப் ஊனமாக பிறந்ததாக கஸ்தூர்பா காந்தி மருத்துமனை ஊழியர்களால். சந்தேகிக்கப்படுகிறது. அம்மருந்து தற்போது அமெரிக்காவில் புற்றுநோய் சிகிச்சைக்காக சோதிக்கப்பட்டு வருகிறது. இப்படம் எடுப்பதற்கு ஓராண்டு முன்பாக மருந்து கம்பெனிகள் முறையற்ற வகையில் புற்றுநோய் எதிர்ப்பு மருந்தை நூற்றுக்கணக்கான பெண்களின் மீது சோதித்த்தாக தெரியவருகிறது. தற்போது இந்தியாவில் சைக்லோபமைன் விற்பனைக்கு கிடைத்தாலும், எந்த நிறுவனமும் அம்மருந்தை இங்கு சோதித்த்தாக ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை.

இது ஏதோ ஒரு நிறுவனம், ஒரு நபர் சார்ந்த திருட்டு நடவடிக்கை அல்ல. சில நேரங்களில் அந்த நிறுவனங்கள் அந்த நாட்டின் சுகாதாரத் துறையையே விலைக்கு வாங்கி விடுகின்றன. இந்தக் குற்றம் ஒரு குறிப்பிட்ட அமைச்சரின் தனிப்பட்ட ஒழுக்க நெறி சம்பந்தப்பட்டதல்ல. அந்தந்த மருந்து நிறுவனங்களின் இலாப வெறியும், சந்தைப் போட்டியும் தான் இவற்றுக்கு அடிப்படை.

பன்னாட்டு மருந்து கம்பெனிகள் இலாபம் ஒன்றை மாத்திரமே  மையமாகக் கொண்டு இயங்கும்  வைரஸ்கள், ஒன்றில்லை என்றால் இன்னொன்றைப் பிடித்துக் கொள்கின்றன. ஆனால் இது மனித வைரஸ். கொஞ்சம் புத்திசாலித்தனமானது. தனக்கான அரசையே கூட சில ஆப்பிரிக்க நாடுகளில் அது உருவாக்கி விடுகின்றது.

பெரும்பான்மை மக்களின் மருத்துவம் போன்ற துறையில் தனியார் மயம் என்பது தெரிந்தே வைரஸை செலுத்திக் கொண்டது போன்றதுதான். எப்படி புற்றுநோயின் வளர்ச்சி மனிதனை அழிக்கின்றதோ அதே போல்தான் இந்தத் தனியார்மய வளர்ச்சியும் சமூகத்தை அழிக்கிறது. இது கண்ணுக்குப் பருண்மையாகத் தெரிகின்றது. நாம் தான் கண்ணை மூடிக்கொண்டு வளர்ச்சி வளர்ச்சி என்கிறோம். எது வளார்ச்சி என்று சரி பார்த்துக் கொள்வது நல்லது.

யோசித்துப் பாருங்கள், நோய் குணமாகும் என்கிற நம்பிக்கையில் மருத்துவமனைக்குச் சென்று பணத்தை அள்ளி இறைத்த பின் ’நீங்கள் ஒரு சோதனை எலி, உங்கள் உடலில் ஒரு மருந்து சோதனைக்காகச் செலுத்தப்பட்டிருக்கிறது. அதனால் உயிர் இழந்தாலும் உங்கள் குடும்பத்தினருக்கு ஒன்றுமே தெரியாது’ என்ற அவல நிலையை?

முதலாளித்துவம் மனிதனிடத்தில் இருக்கும் உணர்ச்சிகள் அனைத்தையும் பிடுங்கி ஒரு பண்டமாக மாற்றிவிடும் என்று மார்க்ஸ் சொன்னது எவ்வளவு உண்மை? !

படங்கள் : தி ஒயர்ட் மேகசின், ரெட்மார்கெட்

__________________________________________________

– புதிய கலாச்சாரம், மார்ச் – 2012

_________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

மக்களாட்சி அல்ல, மாஃபியா ஆட்சி!

மாபியாமத்தியப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அள்ளப்பட்ட கனிமங்களையும் இரும்புத்தாதுவையும் ஏற்றிவந்த டிராக்டரைத் தடுத்து நிறுத்திய நரேந்திரகுமார் எனும் இளம் ஐ.பி.எஸ். அதிகாரியின் மீது சுரங்க மாஃபியாக் கும்பல் டிராக்டரை ஏற்றிக் கொன்றுள்ளது. சுரங்க முறைகேட்டைத் தடுக்க உயரதிகாரிகளிடம் நரேந்திரகுமார் பலமுறை வலியுறுத்தியும் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கவில்லை. கொள்ளையர்கள் பா.ஜ.க. ஆட்சியின் பாதுகாப்பின் கீழ் அஞ்சாமல் கொள்ளையைத் தொடர்ந்துள்ளனர். மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் முதல் அமைச்சர்கள், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் வரை அனைவரும் சட்டவிரோத சுரங்கக்கொள்ளை நடத்துவதாக முன்னாள் காங்கிரசு முதல்வர்  திக்விஜய் சிங் குற்றம் சாட்டியிருக்கிறார்.

இது படுகொலை என்பதையே மறைத்து, விபத்து என்று சக அதிகாரிகள் தனக்குச் செய்தி அனுப்பியதாகக் குற்றம் சாட்டுகிறார், நரேந்திர குமாரின் தந்தை கேசவ் தேவ். இவர் உ.பி மாநிலத்தில் பணியாற்றும் போலீசு எஸ்.ஐ. கொல்லப்பட்ட நரேந்திர குமாரின் மனைவி  ஐ.ஏ.எஸ். அதிகாரி. தற்போது பேறு கால விடுப்பில் இருக்கிறார். பாரதிய ஜனதா எம்.எல்.ஏ. மோகன்குமார்தான் இந்தக் கொலைக்குக் காரணம் என்று குற்றம் சாட்டும் கேசவ் தேவ், தனது மகனுக்கும் மருமகளுக்கும் மோகன்குமார் கொலைமிரட்டல் விட்டிருந்ததாகவும், இதன் காரணமாகத்தான் தனது மருமகளுக்குத்  திடீரென்று மாற்றல் உத்தரவு போடப்பட்டிருப்பதாகவும் கூறியிருக்கிறார். “மகனை இழந்ததால், பாவம் கேசவ்தேவுக்கு பைத்தியம் பிடித்து விட்டது” என்று ஊடகங்களுக்கு திமிராகப் பேட்டி தருகிறார், ம.பி. உள்துறை அமைச்சர்.

இதே மாநிலத்தில் மணல் கொள்ளை மாஃபியாக்கள், பன்னா மாவட்டத்தில் போலீசு உயர் அதிகாரி கௌட் என்பவர்  மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். சம்பல் பள்ளத்தாக்கு பகுதியில் பா.ஜ.க. முன்னாள் எம்.எல்.ஏ. நரேந்திர சிங் தலைமையிலான கள்ளச்சாராய மாஃபியாக்கள், ஹோலி பண்டிகை அன்று மதுவிற்பனை செய்ததைத் தடுக்க முயன்ற ஐ.பி.எஸ். அதிகாரி ஜெய்தேவன் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.

ம.பி.யின் உமாரியா மாவட்டத்தில் உள்ள அரசு நிலக்கரி சுரங்கங்களில் இருந்து பா.ஜ.க. தலைவர் ஒருவரின் தலைமையில் நிலக்கரி திருட்டில் ஈடுபட்டுள்ள மாஃபியாக்களை அம்பலப்படுத்தி இந்தி, ஆங்கிலப் பத்திரிக்கைகளில் எழுதிக் கொண்டிருந்தார் மூத்த பத்திரிகையாளர் சந்திரிகா ராய்(42). சர்வ கட்சிகள், அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் நடந்துவந்த இக்கொள்ளையை அம்பலப்படுத்தியமையால் சந்திரிகா ராயையும் அவரின் மனைவி, மகன், மகள் அனைவரையும் வீடு புகுந்து படுகொலை செய்துள்ளது மாபியா கும்பல். போலீசு திட்டமிட்டே புலன் விசாரணையை திசை திருப்புகிறது என்றும், கொலைகாரர்கள் குறித்துத் துப்பு கொடுப்பவர்களுக்கு 2 இலட்சம் ரூபாய் பரிசளிப்பதாகவும் பகிரங்கமாக அறிவித்திருக்கிறார், அவரது சகோதரர் மிதிலேஷ் ராய்.

சுரங்க மாஃபியாவை எதிர்த்துப் போராடிய நரேந்திரகுமார் சாதாரண நபரல்ல, ஐ.பி.எஸ். அதிகாரி.  அவரின் மனைவியும் கூட  ஐ.ஏ.எஸ். அதிகாரி. சந்திரிகா ராய் மூத்த பத்திரிகையாளர். சென்ற ஆண்டு மராட்டிய மாநிலத்தில் கலப்பட மண்ணெண்ணை கும்பலைத் தடுக்க முயன்று உயிரோடு கொளுத்தப்பட்டவரோ ஒரு சப் கலெக்டர்.

இருந்த போதிலும், அரிதாகத் தென்படும் சில நேர்மையான அதிகாரிகளையும், எப்போதாவது வழங்கப்படும் கோர்ட்டு தீர்ப்புகளையும் காட்டி ‘நேர்மையானவர்களால்’ இந்த அமைப்பைச் சரிசெய்துவிடமுடியும் என்றும் ஊழலை, கொள்ளைகளை ஒழித்து விட முடியும் என்றும் செய்யப்படும் பிரச்சாரம் தொடரத்தான் செய்கிறது.

சட்டவரையறைக்குள்ளாகவே கிரிமினல்களின் கொட்டத்தைத் தடுத்துவிட முடியும் என விதைக்கப்பட்டிருக்கும் நம்பிக்கை,  நல்லெண்ணம் கொண்ட சில அதிகாரிகளுக்கு மட்டுமல்ல;  சாமானிய மனிதர்களுக்கும் இருக்கத்தான் செய்கிறது.  ஊரின் நலன் மீதும், இயற்கைச் செல்வங்களின் மீதும் அக்கறை கொண்ட இளைஞர்கள், இத்தகைய மாஃபியாக்களுக்கு எதிராகச் சட்டரீதியாகப் போராடும்போது அவர்களும் பலியாடுகளாகி விடுகின்றனர்.

மாபியாதிருநெல்வேலி மாவட்டத்தில் வள்ளியூர் அருகே நம்பியாற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளி வந்த டிப்பர் லாரியைப் பொதுமக்கள் வழிமறித்தபோது,  லாரியை ஏற்றி சதீஷ்குமார் என்ற இளைஞரைக் கொன்றுள்ளனர். சதீஷ்குமார் மட்டுமல்ல, மணல் கொள்ளையை எதிர்த்த சி.பி.ஐ. கட்சித் தொண்டர் சுடலைமுத்துவும், தனியாகப் போராடிய தாசில்தார் ஒருவரும் சில ஆண்டுகளுக்கு முன் பலியாகியிருக்கின்றனர்.

தமிழகத்தின் மணல் கொள்ளை மாஃபியா என்பது ஓட்டுப் பொறுக்கிகளும் அதிகார வர்க்கத்தினரும் இணைந்து அமைத்துள்ள தேர்தல்களுக்கு அப்பாற்பட்ட கொள்கைக் கூட்டணி. இருப்பினும், இந்த உண்மை திட்டமிட்டே மறைக்கப்படுகிறது. சதீஷ்குமார் கொலையை ஒட்டித் தலையங்கம் எழுதியுள்ள தினமணி நாளேடு,  ‘முதல்வர் முறைத்துப் பார்த்தாலே போதும், முறைகேடுகளில் ஈடுபடுவோர் மூலைக்கொருவராக ஓடி ஒளிந்து கொண்டுவிடுவார்கள்’  என்று எழுதுகிறது. எந்தக் கட்சிப் பிரமுகரால் சதீஷ்குமார் கொல்லப்பட்டாரோ, அந்தக் கொள்ளைக் கூட்டத்  தலைவியின் கடைக்கண்ணில் நீதியை எதிர்பார்க்கக் கோருகிறார், தினமணி வைத்தியநாதன்.

ஒட்டுமொத்த அரசமைப்பும் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுப்போன நிலையில், இவ்வமைப்பின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த ஆளும் வர்க்கம் மேற்கொண்ட முயற்சிகளில் ஒன்றுதான் தகவல் அறியும் உரிமைச் சட்டம். தனியார்மய, தாராளமயச் சீர்திருத்தத்துக்கு மனிதமுகம் தருகிறோம் என்ற போர்வையில் ‘அமைப்பை மேலும் ஜனநாயகப்படுத்துவது’ என்று பீற்றிக்கொண்டு கொண்டுவரப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தினால் ஊழலை அம்பலப்படுத்தி அமைப்பை சரிசெய்துவிடலாம் என்ற பிரச்சாரம், பல நேர்மையான  சமூக ஆர்வலர்களை மயக்கத்தில் ஆழ்த்தியது.

இந்த சட்டத்தின் மூலம் தகவல்பெற முயல்பவர்களோ குறிவைத்துக் கொல்லப்படுகின்றனர். மும்பையில் சட்டவிரோதக் கட்டுமானங்கள் குறித்த தகவல்களைக் கேட்டிருந்த பிரேம்கந்த் ஜா, நந்தேடுவில் தகவல் உரிமைச் சட்ட செயல்பாட்டாளர் ராம்தாஸ்,  மராட்டிய ஊழல் அதிகாரிகளை அம்பலப்படுத்திய தத்தா பாட்டில், மும்பையில் ராணுவ அதிகாரிகளின் ஆதர்ஷ் ஊழல் குறித்த தகவல்களை அறிய முயன்ற சந்தோஷ்  திவாரி, அகமதாபாத்தில் சட்டவிரோத இறைச்சிக் கூடங்கள் குறித்த தகவல்களைச் சேகரித்த நதீம் சயீத், பீகாரில் நலத்திட்ட ஊழல்களை எதிர்த்துப் போராடிய சசிதர் மிஷ்ரா, போபாலில் மசூத் எனும் ஊழல் எதிர்ப்புப் போராளி  எனக் கொல்லப்பட்டோரின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. ஆவடி அருகிலுள்ள தனது நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் குறித்து தகவல்களை அறிய முயன்ற புவனேஸ்வரன் (38) என்பவரை தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதனின் அடியாட்கள் கடந்த ஜனவரியில் அடித்தே கொன்றுள்ளனர்.

பொதுச்சொத்தைச் சூறையாடும் கிரிமினல் மாஃபியா கூட்டணியை அதிகார வர்க்கம், போலீசு, நீதித்துறையின் உதவியுடன் எதிர்த்து வெற்றி பெற்று விடலாம் எனும் நம்பிக்கையில் போராடுபவர்களை மாஃபியாக்கள் அழித்து வருகின்றனர். நேர்மையான ஐ.ஏ.எஸ்; ஐ.பி.எஸ். அதிகாரிகளே கொன்று வீசப்படும் சூழ்நிலையில், ‘நீதிமன்றத் தீர்ப்புகள், தகவல் அறியும் உரிமை, லோக்பால்’ போன்றவற்றைக் காட்டி ஊடகங்கள் உருவாக்கும் பிரமைக்கு, அபூர்வமான செயல்வீரர்கள் பலர் பலி கொடுக்கப்படுகின்றனர்.

தனியார்மயம்  தாராளமயத்தின்  விளைவாக உருவாகி இருக்கும் மணல் கொள்ளை மாஃபியாவிலிருந்து சுரங்க மாபியா வரையிலான கிரிமினல் கும்பல்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் சட்ட விரோதமானவையாக இருந்தாலும், அவர்கள் இரகசிய உலகப் பேர்வழிகள் அல்லர். அவர்களெல்லாம் சட்டபூர்வமான பதவிகளில் அமர்ந்திருக்கின்றனர். அவர்களைப் பற்றி அரசிடம் புகார் செய்வதற்கு ஏதுமில்லை. அவர்கள்தான் அரசு.

தனிநபர்களின் போராட்டங்களாலோ, காகிதச் சட்டங்களாலோ இவர்களை ஒழிக்க முடியாது. அவ்வாறு ஒழிக்க முடியும் என்று நம்பிய அப்பாவிகள்தான் ஒழிக்கப்பட்டிருக்கிறார்கள். அன்றாட வாழ்வின் சாதாரண அநீதிகளை எதிர்த்துப் போராடுவதற்குக்கூடப் புரட்சிகர அமைப்பும், போர்க்குணமிக்க  நடவடிக்கையும் தேவை என்பதையே இந்த அனுபவங்கள் காட்டுகின்றன.

______________________________________________________

புதிய ஜனநாயகம், ஏப்ரல் – 2012

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

அணு உலை ஆதரவாளர்களுக்கு புகுஷிமா விடுக்கும் எச்சரிக்கை!

16

கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஜப்பானில் நிகழ்ந்த புகுஷிமா அணு உலை விபத்து அளிக்கும் படிப்பினைகள் என்ன? விபத்து நடந்து ஓராண்டாகியும் அதன் பாதிப்புகள் குறித்த முழு உண்மையும் வெளியிடப்படவில்லை. அணு உலையிலிருந்து வெளிப்பட்ட கதிர் வீச்சின் செறிவு, பாதிக்கப்பட்ட பரப்பளவு, உலை விபத்தில் மாண்டவர்களின் எண்ணிக்கை போன்ற விவரங்கள் குறித்து ஜப்பான் அரசு தொடர்ந்து பொய் சொல்லி வருகின்றது.

எனினும், ஜப்பானின் ஊடகங்களும் பல்வேறு அமைப்புகளும் தகவலறியும் உரிமையைப் பயன்படுத்திப் பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளன. ஜப்பான் நாடாளுமன்றக் குழு இந்த விபத்து குறித்து நடத்திய விசாரணையும், பல அதிர்ச்சியூட்டும் உண்மைகளை வெளிக் கொணர்ந்துள்ளது.

கூடங்குளத்தில் கட்டப்படும் அணு உலை, புகுஷிமா அணு உலையைவிடத் தொழில்நுட்ப ரீதியில் முன்னேறியது, அதனால் இங்கே அதுபோன்றதொரு விபத்து ஏற்படாது என நம் நாட்டு அணுஉலை ஆதரவாளர்கள் தொடர்ந்து கூறிவருகிறார்கள். புகுஷிமா விபத்திற்குக் காரணம் தொழில்நுட்பக் குறைபாடல்ல; முதலாளித்துவ இலாபவெறியும், நிர்வாகச் சீர்கேடுகளும், மனிதத் தவறுகளும்தான் காரணம் என்பதை மேற்கூறிய ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன.

சுனாமிப் பேரலைகள் புகுந்து அணு உலையின் குளிர்விப்பான் இயங்காமல் போனதால் விபத்து ஏற்பட்டதாகவே கூறப்படுகிறது. ஆனால், சுனாமியின் காரணமாக மின் வினியோகம் தடைப்பட்டு, குளிர்விப்பானின் இயக்கம் நின்றுபோனது ஊழியர்களுக்குத் தெரியவில்லை. உலைக்கு உள்ளே வெப்பம் அதிகரித்து. உலை மெல்ல உருக ஆரம்பித்த பிறகுதான் குளிர்விப்பான் செயலிழந்து விட்டதையே அவர்கள் புரிந்து கொண்டிருக்கின்றனர். இது மனிதத்தவறு.

விபத்துக் காலங்களில் அணு உலையை கையாள்வதற்கான கையேட்டில் குளிர்விப்பான் இயங்குகிறதா என்பதைச் சோதிக்கவேண்டும் என்றோ, இயங்காவிட்டால் செய்ய வேண்டியதென்னவென்றோ கூறப்படவில்லை. இது அலட்சியம்.

உப்புநீர் புகுந்தால் கருவிகள் பழுதாகி நட்டம் அதிகமாகும் என்று கூறி, உலையை கட்டிய ஜெனரல் எலெக்டிரிகல் நிறுவனம் கடல் நீரைப் பயன்படுத்தி உலையைக் குளிர்விக்க முயன்றதைத் தடுத்துள்ளது. இது மக்களைப் பற்றிக் கவலைப்படாத முதலாளித்துவத்தின் இலாபவெறி.

வரவிருக்கும் விபரீதம் கண்டு அஞ்சிய அரசு உலையை நிரந்தரமாக மூடுவது என்று முடிவு செய்ததால்தான்  கடல் நீரைப் பயன்படுத்தும்படி உத்தரவிட்டது.

மிகப்பெரிய விபத்தை எதிர்பார்த்த அணு உலை நிர்வாகம், விபத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியைக் கைவிட்டு, 800க்கும் அதிகமான ஊழியர்களில் 50 பேரைத் தவிர மற்ற அனைவரையும் வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளது. அணு உலை வட்டாரத்தில் வாழ்ந்த 80,000 பேரையும் உடனே வெளியேற்றியது.

புகுஷிமாவிலிருந்து 250 கி.மீ. தொலைவிலிருந்த டோக்கியோ நகரத்தையும் காலி செய்யும்படி அணு சக்தித் துறை அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர். டோக்கியோவின் மக்கள் தொகை 3 கோடி. இந்த விபரீத யோசனையை ஏற்க மறுத்த பிரதமர், அதிகமான ஊழியர்களை  ஈடுபடுத்தியாவது, உலையைச் சரி செய்ய உத்தரவிட்டிருக்கிறார். நிர்வாத்தின் பொறுப்பின்மைக்கும் முதலாளித்துவ இலாபவெறிக்கும் இது சான்று.

வெடிப்பைத் தொடர்ந்து, உலையில் ஏற்பட்ட பிரச்சினைகள், அவற்றைச் சரி செய்ய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவை குறித்த விவரங்களை நாடாளுமன்ற ஆய்வுக்குழு தெரிந்து கொள்ளமுடியவில்லை. காரணம், அப்போது நடத்தப்பட்ட கூட்டங்கள் எதற்கும் குறிப்புப் பதிவுகள் (மினிட்ஸ்) இல்லை. இதனால் விபத்தையொட்டி கண்டுபிடிக்கப்பட்ட தவறுகள், குறைபாடுகள் அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த இரகசியங்களாக மறைக்கப்பட்டுள்ளன.

அணு உலையைச் சுற்றி 20 கி.மீ. மட்டுமே கதிர்வீச்சு அபாயம் இருப்பதாக ஜப்பான் அரசு கூறுகிறது. ஆனால், அணு உலை வெடிப்பினால் வெளிப்பட்ட அபாயகரமான ‘சீசியம்’ துகள்கள் 45  கி.மீ. தூரத்தில் உள்ள லிடேட் என்ற கிராமத்தில் கொட்டிக்கிடக்கின்றன. மரங்களில் படர்ந்துள்ள  சீசியம் துகள்கள் காற்று வேகமாக வீசும்போது, காற்றின் திசையில் இன்னும் அதிக தூரத்திற்கு பரவுகின்றன.

கதிர்வீச்சு அபாயம் 20 கி.மீ. மட்டுமே என்று ஜப்பான் அரசு தன் மக்களுக்கு கூறிக்கொண்டிருக்க, அணு உலையிலிருந்து 80 கி.மீ. தொலைவு வரை உள்ள பகுதிகளில் வாழும் அமெரிக்கர்களை உடனே வெளியேறும்படி அறிவுறுத்தியது அமெரிக்கத் தூதரகம். மக்களை அப்புறப்படுத்துவதிலும் ஜப்பான் அரசு முறையாகச் செயல்படவில்லை. பல இடங்களில் மக்கள் தாமாகவே வெளியேறியுள்ளனர். மினாமி என்ற பகுதியிலிருந்த மருத்துவமனையிலிருந்து நோயாளிகளை வெளியேற்ற எவ்வித வசதியும் இல்லாததால் இரண்டு நாட்களில் 12 நோயாளிகள் உயிரிழந்ததுடன், பல நோயாளிகளும், மருத்துவர்களும் கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புகுஷிமாவிலிருந்து வெளியேறிய கதிர்வீச்சு முக்கியமாக நெற்பயிர்களையும், பசு மாடுகளையும் பாதித்துள்ளது. இதன் காரணமாக அரிசியும், பாலும் கதிர்வீச்சுத் தன்மை கொண்டதாக மாறியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான பால்பவுடர் தயாரிப்பதில் முன்னணியில் உள்ள ஜப்பான் நிறுவனமான ‘மெய்ஜி’, புகுஷிமா விபத்திற்குப் பிறகு உற்பத்தி செய்யப்பட்ட தங்களது பொருட்களில் கதிர்வீச்சுத் தன்மை உள்ளதைக் கண்டுபிடித்து, அவற்றை திரும்பப் பெற்றுக்கொண்டது.

புகுஷிமா அணு உலை சுனாமி தாக்குதலையும், திடீர் மின் தடையையும் சமாளிக்கும் வகையில் கட்டப்படவில்லை என ஜப்பானின் அணு சக்திப் பாதுகாப்புத் துறையின் தலைவர் ஹரூக்கி மடாரம் பாராளுமன்ற விசாரணைக் குழுவிடம் தெரிவித்துள்ளார். மேலும் ஜப்பானின் அணு சக்தி விதிமுறைகள் தவறானவையாகவும், காலாவதியானவையாகவும் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

புகுஷிமா அணு உலையைக் கட்டிய டோக்கியோ மின்சார நிறுவனம், அது பூகம்பம் மற்றும் சுனாமி பாதிப்பு ஏற்படக்கூடிய இடம் எனத் தெரிந்தேதான் அணு உலைகளைக் கட்டியுள்ளது.  அங்கே சுனாமி தடுப்புச் சுவரும் கட்டப்பட்டுள்ளது. ஆனால் மிகப்பெரிய சுனாமி அலைகள் இங்கே எழும்பும் என்று எச்சரித்து வெளிவந்த ஆய்வுகளை அறிவியல்பூர்வமற்றவை என்று கூறி நிராகரித்துள்ளது இந்த நிறுவனம். தற்போது தங்கள் கற்பனைக்கு எட்டாத அளவிற்கு சுனாமி அலை எழுந்துவிட்டதாக கூறித் தமது தவறை மறைக்கின்றனர் அதிகாரிகள்.

கடந்த பத்து வருடங்களாக புகுஷிமா அணு உலையின் பாதுகாப்பு குறித்த ஆய்வு மேற்கொள்ளப்படவே இல்லை.  விபத்து ஏற்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு, புகுஷிமா உலையால் சுனாமியைச் சமாளிக்க முடியாது என்று கூறியிருக்கிறது. இவையெல்லாம் இப்போதுதான் தெரிய வருகின்றன.

புகுஷிமா-அணு-உலை

ஜப்பானிய மொழியில் “சொட்கேய்”  என்றொரு சொல் உண்டு. கற்பனைக்கு அப்பாற்பட்டது என்று அதற்குப் பொருள். அணு உலை அதிகாரிகள் வல்லுநர்களிடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எந்தக் கேள்வி கேட்டாலும், இப்படிப்பட்டதொரு தவறு நடக்கும் என்றோ, இயற்கைப் பேரழிவு இவ்வளவு பெரிதாக இருக்குமென்றோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று கூறுகிறார்கள். அதாவது சொட்கேய் என்ற சொல்லுக்குப்  பின்னால் ஒளிந்து கொள்கிறார்கள்.

அதிகாரிகளின் இந்தக் கூற்றை ஏற்க மறுக்கும் ஜப்பான் நாடாளுமன்றத்தின் விசாரணை அறிக்கை, அதிகாரிகள் தங்களது தவறுகளை மறைத்துக் கொண்டு இயற்கையின் மீது பழிபோட்டுத் தப்பித்துக்கொள்ளப் பார்ப்பதாக குற்றம் சாட்டுகிறது.

அணுசக்தித் துறையில் முன்னணியில் உள்ள, அணு உலைகளை ஏற்றுமதி செய்கின்ற நாடுகளில் ஒன்றான ஜப்பானின், கல்வி, மக்களின் விழிப்புணர்வு, வாழ்க்கைத்தரம் ஆகியவற்றில் பெரிதும் முன்னேறிய நாடான  ஜப்பானின் இலட்சணம் இது. மனிதத் தவறுகளும், அதிகாரவர்க்கச் சீர்கேடுகளும் மலிந்த இந்தியாவில் அத்தகைய காரணங்களால் விபத்து ஏற்படுவதற்கான சாத்தியம் பல நூறு மடங்கு அதிகம் என்பதே உண்மை.

அணு உலையைப் பாதுகாக்க எத்தனை முன்னேற்பாடுகளைச் செய்திருந்தாலும், நம் எதிர்பார்ப்புக்கு மேல் இடர் வந்தால் அதன் விலை எத்தனை ஆயிரம் உயிர்களாக இருக்கும் என்ற கேள்விதான் முக்கியமானது. சொட்கேய் என்ற சொல் இலட்சக்கணக்கான மனித உயிர்களைப் பகடைக்காய் ஆக்க நாம் அனுமதிக்க முடியாது.

______________________________________________________

புதிய ஜனநாயகம், ஏப்ரல் – 2012

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

தன்னார்வக் குழுக்கள்: வல்லரசுகளின் வல்லூறுகள்!

12

”டி.வி.எஸ். நிறுவனத்தில் ஒரு தொழிற்சங்கத்தை ஏற்படுத்த நான் பெரிதும் முயற்சி எடுத்தேன். அதன்படி நாங்களே ஐ.என்.டி.யு.சி. சங்கத்தை இங்கே நிறுவினோம்… எப்படியும் ஒரு தொழிற்சங்கம் உருவாகத்தானே போகிறது. அது நமக்கு விசுவாசமான சங்கமாக இருந்தால் நல்லதல்லவா” – இப்படிக் கேட்டார் ஓர் அமெரிக்க ஆராய்ச்சியாளரிடம் டி.வி.எஸ். முதலாளி. (ஆதாரம்: பிசினஸ்இந்தியா, மார்ச் – ஏப்ரல், 1986).

ngo-cartoonஇதே கொள்கையின் அடிப்படையில் ஏகாதிபத்தியங்களால் தோற்றுவிக்கப்பட்டு எண்ணிக்கையில் அடங்காத அளவு இயங்கி வருகின்றவை தாம் தன்னார்வக் குழுக்கள்.

நாடு முழுவதும் ஆங்காங்கே சமூக சேவை உணர்வு ஊற்றெடுக்க அப்படியே அதிலிருந்து தோன்றியவை அல்ல இந்த அமைப்புகள். மாறாக உலக அளவில், மையப்படுத்தப்பட்ட முறையில் ஏகாதிபத்திய சிந்தனையாளர்களாலும், வல்லுநர்களாலும் நன்கு திட்டமிடப்பட்டு, பல ஆயிரம் கோடி டாலர் நிதி ஒதுக்கப்பட்டு கட்டமைக்கப்படும் வலைப்பின்னலின் சிறு சிறு அங்கங்கள் தாம் இந்த ”தன்னார்வக் குழுக்கள்”

எங்கெல்லாம் சுரண்டலும், ஒடுக்குமுறையும் அவலவாழ்வும் தலைவிரித்தாடுகிறதோ அங்கெல்லாம் அவற்றுக்கு எதிராக மக்கள் இயக்கங்களும் அமைப்புகளும், முற்போக்கு சிந்தனையுள்ள இளைஞர் எழுச்சிகளும் தோன்றும். அவை பாட்டாளிகளின் புரட்சி, தேசிய விடுதலை இயக்கங்களின் பால் ஈர்க்கப்படுவதும் இயல்பே. ஆனால் அவற்றை இடைமறித்து தம் பக்கம் ஈர்த்து, நிறுவனமயமாக்கிக் கொள்ளும் மாற்று மையங்களாகவே இந்த அரசு சாரா – தன்னார்வக் குழுக்கள் இயங்கி வருகின்றன.

அன்றாட வாழ்வில் ஆயிரத்தெட்டுப் பிரச்சினைகளிலும் அதிருப்தி, ஆத்திரமடைந்துள்ள மக்களின் உணர்வுகளை நெறிப்படுத்தி, பதப்படுத்தி, அதிகாரபூர்வ, சட்டவரம்புக்குள் அவர்கள் செயல்பாடுகளை முடக்கி வைப்பதற்கு மாற்று அமைப்புக்களும், வழிமுறைகளும், சித்தாந்த விளக்கங்களும் ஏற்படுத்தித் தந்துகொண்டே இருக்க வேண்டும்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகின் மிகப்பெரிய சுரண்டல் – ஒடுக்குமுறை ஏகாதிபத்தியமாக முன்னுக்கு வந்த அமெரிக்காவை ”உலகின் மிகப்பெரிய கொடை வள்ளல் நாடு” என்று பீற்றிக் கொண்டு, அதன் புதிய காலனிய ஆதிக்கத்தை மூடிமறைக்க இந்தத் தன்னார்வக் குழுக்கள் பெரிதும் பயன்பட்டன.

அன்றைய அமெரிக்க அதிபர் ட்ரூமன், ”உலகை சிவப்பு அபாயத்தில் இருந்து காப்பாற்றும் பொருட்டு” முன்வைத்த ”அமெரிக்க அமைதிப் பேரரசு” திட்டத்தில் மனித நேய நிறுவனங்கள், தன்னார்வக் குழுக்கள் முக்கிய இடம் பெற்றன. ஃபோர்டு அறக்கட்டளையோடு, கேர், வோர்ல்டு விஷன் போன்றவையும் சேர்ந்து ஆண்டுக்குப் பலநூறு கோடிடாலர்கள் இந்த ”சமூக சேவைக்காக” செலவிட்டன.

இவை நேரடியாகவும், பின்தங்கிய ஏழை நாடுகளின் கிராமப்புற வளர்ச்சி மற்றும் சமூக நல அமைச்சகங்களின் மூலமும் பல ஆயிரக்கணக்கான அரசு சாரா நிறுவனங்களை நிறுவி, நிதியுதவி செய்து, கண்காணித்து இயக்கின. 1960களில் உலகம் முழுவதும் உள்ள அரசுசாரா நிறுவனங்களை ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைத்து ஜெனீவாவைத் தலைமையகமாகக் கொண்ட சர்வதேச தன்னார்வக் குழுக்களின் கவுன்சில் நிறுவப்பட்டது. இதனுடன் ஏகாதிபத்திய ஆய்வு நிறுவனங்களும், சிந்தனையாளர் குழுக்களும் ஒருங்கிணைந்து செயல்படத் தொடங்கின.

ngo-cartoonஇப்போது அரசு சாரா நிறுவனங்கள், தன்னார்வக் குழுக்கள் இரண்டு மட்டங்களில் பணிபுரிகின்றன. ஒன்று நகர்ப்புறங்களிலும் கிராமப்  புறங்களிலும் நேரடியாக மக்களிடம் சென்று ”சமூக சேவைகள்” புரிவது; இன்னொன்று பிரதானமாக நகர்ப்புறங்களில் தமது தலைமையகங்களை நிறுவி, படித்த அறிவுஜீவிப் பிரிவினரிடையே சமூக பொருளாதார அரசியல், பண்பாட்டு ஆய்வுகளை – பயிற்சி, கருத்தரங்குகளை நடத்துவது.

காலனிய காலத்திலும் அதற்குப் பிறகு சிலகாலமும் மதப் பிரச்சாரத்துடன் இணைத்து கல்வி – வேலைவாய்ப்பு, சுகாதாரம் – சத்துணவு, கைத்தொழில்கள் என்று பல்வேறு இலவசத் திட்டங்களை நடத்துவதே தன்னார்வக் குழுக்களின் பிரதானப் பணிகளாக இருந்தன.

ஆனால் 1960களின் பிற்பகுதியில் இந்தத் தன்னார்வக் குழுக்களின் செயல்பாடுளுக்கு ”முற்றிலும் புதிய கோட்பாட்டு அடிப்படைகள்” வகுத்துத் தரப்பட்டன. இனி மேலும் தன்னார்வக் குழுக்கள் மக்களுக்கான ”இலவசத்திட்டங்கள்” மேற்கொள்ள வேண்டியதில்லை, அதற்கான அளவு வசதியும் கிடையாது. மக்கள் தமது கோரிக்கைகளுக்காகவும் உரிமைக்காகவும்” போராடும் வகையில் விழிப்புணர்வு பெறச் செய்வதும் அவர்களுக்கான செயற்பாட்டுக் குழுக்களை அமைப்பதும் தான் இனித் தன்னார்வக் குழுக்களின் பணியாக இருக்க வேண்டும் என்று உலக அளவில் முடிவு செய்யப்பட்டது.

பிரேசிலைச் சேர்ந்த பவுலோ பீரியனின் ”சுரண்டப்படுவோருக்கான கல்வியியல்”, பிலிப்பைன்சினுடைய பவுல் அபின்ஸ்கியின் ”அதிகாரத்தின் தத்துவம்” ”சிறியதே அழகு”, கிட் டியர்சின் ”விடுதலை இறையியல்” (சூமேக்கரின்) ஆப்பிரிக்காவில் ”கறுப்பின விழிப்புணர்வு இயக்கம்”, ஆசியாவில் புதிய காந்திய, புதிய புத்த மதக் கோட்பாடுகள் ஐரோப்பா, அமெரிக்காவில் ”புதிய இடதுகள்” ”இளைஞர் அரசியல் மற்றும் பசுமை இயக்கங்கள்” ஆகியன தன்னார்வக் குழுக்களின் வழிகாட்டும் கோட்பாடுகளாகின.

இக்கோட்பாடுகளின்படி மதப்பிரச்சார, மதமாற்ற முயற்சிகள் கைவிடப்பட்டு ”மக்கள் பங்கேற்பு அல்லது அடிமட்ட மக்கள் அமைப்புகள்” மூலம் சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே தமது குறிக்கோள்கள் என்று அறிவித்துக் கொண்டன.

மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர்கள் – குறிப்பாக அமைப்பு ரீதியில் திரட்டப்படாத உழைப்பாளிகள், விவசாயிகள், தாழ்த்தப்பட்டவர்களிடையே போய் அவர்களது வாழ்வியல் – சமூக உரிமைகள், மனித உரிமைகள், சுற்றுச் சூழல் – பண்பாட்டுப் பதுகாப்பு இன்னும் இதுபோன்ற பிரச்சினைகளுக்காக போராடும் ”நடவடிக்கைக் குழுக்கள்” அமைக்கப்பட்டன.

”மக்களை அணிதிரட்டுவது”, ”அதிகாரம் பெறுதல்” ”ஒடுக்கப்படுவோரின் விடுதலை” என்று தீவிரச் சவடால்கள் அடித்த போதும் வர்க்கக அணுகுமுறை வர்க்கப் போராட்டம் வர்க்க சித்தாந்தத்தை (திட்டமிட்டு, உணர்வுபூர்வமாகவே) விலக்கி வைப்பதில் குறியாக உள்ளன, இத்தன்னார்வக் குழுக்கள். இத்தகைய நடவடிக்கைக் குழுக்களைத்தான் உண்மையான அடிமட்ட மக்கள் இயக்கங்கள் என்றும் ”புதிய சமூகப் புரட்சியின் முன்னோடிகள்” என்றும் ஆளும் வர்க்கப் பத்திரிக்கைகள் புகழ்கின்றன.

ngo-cartoonஇவை ”வரலாற்றின் நிகழ்ச்சிப் போக்கில் உணர்வு பூர்வமாகத் தலையிடும் செயற்போக்கு” என்று தன்னார்வக் குழுக்களின் சித்தாந்தவாதிகள் கூறுகின்றனர் (கோத்தாரி). இவை ”மாற்று வளர்ச்சிக்கான முழுமைபெற்ற இயக்கமாக மலரும் சாத்தியக் கூறு உடையவை” என்கின்றார் (டி.எல்.சேத்).

இவையெல்லாம் காட்டுவது என்ன? மக்கள் தமது விடுதலை, உரிமைக்கான கோரிக்கைகளுக்காகப் போராடும் மையங்களாக, கம்யூனிசப் புரட்சியாளர்களின் தலைமையிலான வர்க்க அமைப்புகளை மட்டுமே இனிமேலும் நம்பியிருக்க தேவையில்லை.

அவற்றுக்கு மாற்று மையங்களாக இதோ அரசு சாரா, கட்சிசாரா, வர்க்கம் – அரசியல் சாரா நிறுவனங்கள் இருக்கின்றன என ”மாற்றுக்களை” வைப்பதுதான். இதன் மூலம் பாலோடீரியர், பவுன் அலின்ஸ்கி, கிட்டியர்சி, சூமேக்கர் போன்றவர்களின் கோட்பாடுகளை முன்வைத்து, மார்க்சிய சொற்களைப் பிரயோகிப்பது, பல்வேறு மக்கள் பிரச்சினைகளைக் கையிலெடுப்பதால் இந்த அமைப்புகள் இடதுசாரித் தோற்றம் தருகின்றன.

இந்த அமைப்புகள் தமது களப்பணியிலும் கூட ஒருவித இரகசிய – சதிகார அணுகுமுறையைக் கையாள்வதால் அந்நிய உளவாளிகளும் நாச வேலைக்காரர்களும் ஊடுருவுவதற்கும், அதற்காக ஆட்களைத் தெரிவு செய்து கொள்வதற்கும் இவை பயன்படுகின்றன.

1960-களில் இருந்தே ஏகாதிபத்திய வல்லரசுகளின் புதிய காலனிய தேவைகளுக்காக மேற்கத்திய சமூகவியல், அரசியல், பண்பாட்டு சிந்தனையாளர்கள், பல்கலைக் கழகங்கள் மற்றும் ஆய்வுக் கழகங்கள் கீழை நாடுகளின் தமது சகபாடி நிறுவனங்களுடன் இணைந்து கம்யூனிய சித்தாந்தத்துக்கு எதிராக ”புரட்சிகர மாற்றுகளை” உருவாக்கும் பணியில் இறங்கினர்.

”இடது – வலது, முற்போக்கு – பிற்போக்கு என்கிற சித்தாந்த வேறுபாடுகள் அடிப்படையில் தீர்வுகள் முன் வைக்கப்படுவது இனிமேலும் அவசியமில்லை என்பதை முன் வைக்கும் ”சித்தாந்தத்தின் முடிவு” முதலிய கருத்தாக்கங்கள் பிரச்சாரம் செய்யப்பட்டன. பிரான்சிஸ் புக்குயோமாவின் ”வரலாற்றின் முடிவு” என்கிற கோட்பாடு பிறகு வந்தது.

வர்க்கம், வர்க்கப் போராட்டம் மற்றும் வர்க்க சித்தாந்தக் காலகட்டம் இனிமேலும் சாத்தியமில்லை, காலாவதியாகிவிட்டது என்று ஏகாதிபத்திய சித்தாந்தவாதிகள் பிரச்சாரம் செய்தனர். இவர்கள் ”ஸ்டாலினிசம்”, ”மரபுவழி மார்க்சிசம்” என்பதாகக் கற்பனை செய்து கொண்ட தத்துவத்தையும் போலிக் கம்யூனிஸ்டுகளின் சமரச செயல்பாடுகளையும் முன்னிறுத்தி  மார்க்சிய – லெனினிய சித்தாந்தத்தின் மீதே அவதூறு பரப்பினர்.

புறநிலை யதார்த்தத்தில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை முன்னிறுத்தி மார்க்சிய லெனினியத்தைச் செழுமைப்படுத்துவதாகப் புளுகினர்; மார்க்சிய – லெனினியக் கோட்பாடுகள் ஐரோப்பிய முதலாளத்துவத்தை மட்டுமே ஆய்வுக்கெடுத்துக் கொண்டது என்றும் தாம் மண்ணுக்கேற்ற மார்க்சியம் படைப்பதாகவும் சொல்லி அதைப் பகுதியாகவோ, முழுமையாகவோ நிராகரிக்கும்படி தூண்டினர்.

தாமும் மார்க்சியப் புரட்சியாளர்கள் என்று சொல்லிக் கொண்டு கீழை மார்க்சியம் – மேலை மார்க்சியம், இளைய மார்க்ஸ் – முதிய மார்க்ஸ், ஐரோப்பிய கம்யூனிசம், அந்நியமாதல், இருத்தலியல், நவீனத்துவம், அமைப்பியல் வாதம், புதிய இடது சிந்தனைகள் போன்ற பல பிறழ்வுக் கோட்பாடுகளையும் தத்துவங்களையும் பரப்பினர். இதற்காக சார்த்தர், கிராம்சி, மார்க்யூஸ், அல்தூஸ்யர், கெம்யூ, பிராங்ஃபர்ட் சிந்தனையாளர்கள் போன்ற வகுப்பறை ”மார்க்சியக் கோட்பாட்டாளர்”களின் படைப்புகளைக் கடத்தி வந்தார்கள்.

இவர்களின் நோக்கமெல்லாம் ஒன்றுதான். மார்க்சிய – லெனினியம், வர்க்கம், வர்க்கப் போராட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக வர்க்க சமரசத்தையும் பல்வேறு வகை திரிபுகளையும் முன்வைத்து மார்க்கிய லெனினியத்தின் மீதும், புரட்சிகர அமைப்புகளின் மீதும், பாட்டாளி வர்க்க இயக்கத்தின் மீதும் பரந்துபட்ட மக்களை நம்பிக்கை இழக்கச் செய்வதே, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது உண்மையில் கட்சியின் தனிநபரின் சர்வாதிகாரம், எல்லாவற்றையும் உற்பத்தி பொருளாதாரம், வர்க்கம் என்று குறுக்கிச் சுருக்கிப் பேசும் வறட்டுத்தனம் என்று முத்திரை குத்தி கொச்சைப்படுத்தி அதை நிராகரிக்கத் தூண்டுவதே.

இந்திய அரசு சாரா நிறுவனங்களின் சித்தாந்த குரு ரஜினி கோத்தாரி, மார்க்சியம் – தொழிலாளி வர்க்க சித்தாந்தம் வழக்கிழந்து விட்டது என்று வாதம் புரிந்து வந்தார். ”உலகத் தொழிலாளி வர்க்கம் ஒன்றுபடுவதற்கு பதில் சர்வதேச நடுத்தர வர்க்கமே தனது விடுதலையைப் பற்றிய உணர்வுகளைக் கொண்டதாக மாறிவருகிறது” என்று இவர் பிரகடனம் செய்தார்.

இவரும் பிற அரசு சாரா நிறுவன சித்தாந்திகளும் அப்போது வாதிட்டது என்னவென்றால் கம்யூனிசக் கட்சியால் தலைமை தாங்கப்படும் தொழிலாளி வர்க்க இயக்கத்துக்குப் பதிலாக உணர்வூட்டப்பட்ட நடுத்தர வர்க்கத் தொழில் முறைத் தலைவர்களால் கட்சிசாரா அரசியல் நிகழ்ச்சிப் போக்கில் மக்கள் திரளால் வழிநடத்தப்படும் இயக்கம் கட்டியெழுப்பப்படவேண்டும் என்பதுதான்.

ngo-cartoon

டவடிக்கைக் குழுக்களை உருவாக்கி, இயக்கும் அடிமட்டக் களப்பணியிலுள்ள அரசுசாரா நிறுவனங்கள், தன்னார்வக் குழுக்கள் வேண்டுமானால் ஊடுருவல், உளவு, சதி, நாசவேலை, மக்கள் இயக்கங்களை சீர்குலைவு செய்வது போன்றவற்றுக்குப் பயன்படுத்தப்படலாம். அத்தகைய அமைப்புகளை அம்பலப்படுத்துவதும் எதிர்ப்பதும் சரிதான்.”

”ஆனால் சி.டி.ஆர்.ஏ., ஐ.எஸ்.ஐ., ஐ.டி.யாஸ், மிட்ஸ், சாமிநாதன் ஃபவுண்டேசன் போன்ற ஆவணப் பராமரிப்பு மற்றும் ஆராய்ச்சிக்கான அரை அரசு சார் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள், தன்னார்வக் குழுக்கள், அந்நிய நிதியுதவி பெற்ற பல்கலைக் கழக அரங்கங்கள் அப்படிப்பட்டவை அல்ல. விவரங்களை சேகரிக்கவும் ஆய்வுகளை நடத்தவும் முற்போக்கு இயக்கத்தவரும் பயன்படுத்தலாம்” என்று அவற்றுடன் தொடர்புடைய பலரும் நியாயம் கற்பிக்கின்றனர்.

களப்பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வக்குழுக்கள் நேரடியாக மக்கள் முன் வேலை செய்வதால் இன்றோ நாளையோ அம்பலப்பட்டுப் போவது சாத்தியம். ஆனால் ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தங்கள் அடையாளம், பணிகளை மறைத்துக் கொண்டு, அரசுக்கும் ஏகாதிபத்தியத்திற்கும் சேவை செய்பவை, மிகவும் ஆபத்தானவை.

அரசு சாரா தன்னார்வக் குழுக்களின் பணிகளை மதிப்பீடு செய்து கண்காணிப்பது; பல்வேறு சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டுப் போக்குகளைப் பற்றிய விவரங்கள் சேகரித்து, ஆய்வு செய்து அறிக்கைகள் சமர்ப்பிப்பது, அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்குத் திட்டப் பணிகளைப் பரிந்துரை செயவது போன்ற வேலைகளை இந்த ஆராய்ச்சி நிறுவனங்கள் செய்கின்றன.

உதாரணமாக, இந்தியாவிலுள்ள பல ஆயிரக்கணக்கான நெல் மூலக்கூறு (ஜீன்ஸ்)களைக் கடத்திக் கொண்டு போய் ஏகாதிபத்திய பன்னாட்டு விதை, உரம், பூச்சி மருந்து, இரசாயன ஊக்கி உற்பத்தித் தொழில்கள் புரியும் பன்னாட்டு தேசங்கடந்த தொழில் நிறுவனங்களுக்கு விற்பது முதல் நாட்டுப்புற கலை – இலக்கிய மரபுகளைக் கொள்ளையிடுவது வரை சாமிநாதன் ஃபவுண்டேசன் செய்கிறது.

இதேபோல மொழி, மரபுகள், தொற்று நோய்கள் பரவுதல், சிறுவர் – கொத்தடிமை உழைப்பு போன்ற பல ஆராய்ச்சிகளும் ஏகாதிபத்திய பன்னாட்டு தேசங்கடந்த தொழிற்கழகங்களுக்குப் பயன்படுகின்றன. இவையெல்லாம் எப்படி அவற்றின் தொழில்களுக்கும் அரசியல் பொருளாதாரத் திட்டமிடுதலுக்கும், இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் எதிராக எப்படிப் பயன்படுகின்றன என்பது நேரடியாகத் தெரிவதில்லை.

குறிப்பாக, ஏகாதிபத்திய உலகமயமாக்கம், மறுகாலனியாக்கம் என்ற கொள்கையின் கீழ் தாராளமயமாக்கம், தனியார்மயமாக்கம் ஆகிய கட்டுமான மறு சீரமைப்புத் திட்டத்தில் இத்தகைய நிறுவனங்கள் மேலும் புதிய தகுதிகளைப் பெற்றுள்ளன.

ngo-cartoonகட்டுமான மறுசீரமைப்புத திட்டங்களால் உலகின் பல நாடுகளில் பஞ்சம் – பசி – பட்டினிச் சாவுகள், ஆலைகள் மூடி வேலை இழப்பு – வேலையில்லாத் திண்டாட்டம் பன்மடங்கு பெருகி பரந்துபட்ட மக்கள் ஆத்திரமும் கோபமும் கொண்டுள்ள இந்தச் சமயத்தில் அவர்கள் போராட்டத்தில் கிளர்ந்தெழுவதை திசை திருப்புவதற்கு  அரசு சாரா நிறுவனங்கள் முக்கியக் கருவிகளாகப் பயன்படுகின்றன.

80 நாடுகளின் அரசு சாரா நிறுவனங்களுக்குப் பல ஆயிரம் கோடி நிதியுதவி செய்து, ”பசி, உலக வறுமையின் அடிப்படைக் காரணங்கள் குறித்து விவாதங்கள் புரியவும், ஒரு பொதுத்துறை தனியார் வளர்ச்சி உதவித் திட்டத்துக்கான தொகுதியை விரிவுப்பத்தவும், உறுதியூட்டவும்,இந்த வளர்ச்சித் திட்டக் கல்வியில் ஈடுபடும் நிறுவனங்களின் வலைப்பின்னலை வளர்க்கவும் அமெரிக்க சர்வதேச வளர்ச்சிக்கான நிறுவனம் பணியாற்றியது. (வளர்ச்சிக்கான வழிகாட்டும் கல்வித்திட்ட உதவிகள், 1987 பொருளியல் ஆண்டு அறிக்கை)

கட்டுமான மறு சீரமைப்புத் திட்டத்தில் அரசுகளின் பங்கு – பாத்திரங்களை வெட்டிவிட்டு அதற்கு மாற்றாக ”சமூகப் பங்கேற்பு” ”அடிமட்டத் திட்டமிடுதல்” ”வளர்ச்சியில் பங்குதார்கள்” என்ற பெயரில் அரசு சாரா நிறுவனங்கள் ஈடுபடுகின்றன. சமூக நலப்பணிகளுக்கு இனியும் அரசு அதிகாரபூர்வ சட்டபூர்வ அமைப்புகள் பொறுப்பல்ல; அவை மக்களின் சொந்தப் பொறுப்புதான் என சுமையை – பழியை மக்கள் மீதே மாற்றுவதுதான் இதன் நோக்கம்.

அவை மாற்றுப் பொருளாதாரத்திட்ட உருவரைகள் – வரவு செலவுத் திட்டங்கள், மாற்றுப் பொருளாதார உச்சி மாநாடுகள் நடத்துகின்றன. ஐ.எம்.எஃப் – உலக வங்கி ஆகியவை இணைந்து நடத்தும் ஆண்டுக் கூட்டங்களுக்குப் ”போட்டி”க் கூட்டங்கள் நடத்துகின்றன. சூழலுக்குத் தகுந்த பாரிய மதிப்புகளின் அடிப்படையிலான மாற்றுப் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து நீடித்து நிற்கும் வாய்ப்புடைய வளர்ச்சி திட்டங்கள் மூலம் கட்டுமான மறுசீரமைப்பு, உலகமயமாக்குதலை எதிர்ப்பதாக நாடகமாடுகின்றன.

ஆனால் இந்த அரசு சாரா நிறுவனங்கள் இயங்குவதற்கே கூட அதே ஏகாதிபத்திய நிறுவனங்கள் தாம் நிதியுதவி செய்கின்றன. அதனால்தான், இந்த அரசு சாரா நிறுவனங்கள் இயங்கும் எல்லா நாடுகளிலும் அரசியல் – பொருளாதார நெருக்கடிகள் மேலும் மேலும் முற்றி மீளமுடியாத கட்டத்தை எட்டிய போதும், இந்த நாடுகளில் அரசியல் வாழ்வில் பண்பாட்டுச் சீரழிவும், கிரிமினல் மயமாவதும், இலஞ்ச ஊழலும் தலைவிரித்தாடிய போதும், அந்தந்த நாட்டு அரசுகளைத் தகர்ப்பது, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவது பற்றி இந்த அரசு சாரா நிறுவனங்கள் தப்பித் தவறி மேலெழுந்த வாரியாகக் கூட மூச்சு விடுவதே கிடையாது.

”மதபோதனையோ, மத மாற்றமோ கண்காணிப்பும் கிடையாது. ஏராளமான ஆய்வு வசதிகளும், நிதியும் கணிசமான ஆள்பலமும் உள்ள அரசு சாரா – தன்னார்வக் குழுக்களை ஏன் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது, திறந்த மனதுடன் இருக்கும் தங்களிடம் ஒரு உரையாடலை ஏன் நடத்தக் கூடாது” என்று புரட்சி சக்திகளுக்கு இந்தக்குழுக்கள் தூண்டில் வீசுகின்றன. நடுத்தர வர்க்க ஊசலாட்ட நபர்கள் ஓடிப் போய் அந்தத் தூண்டிலைக் கவ்விக் கொள்கின்றனர்.

புரட்சிகர அறிவுஜீவிகளைக் கூட நிரந்தர உரையாடலில் நிறுத்தி வைப்பதுதான் அக்குழுக்களின் நோக்கம். புரட்சியின் மீதும் கட்சியின் மீதும் ஐயவாதத்தை விதைத்து செயலிழக்க வைப்பதுதான் அவற்றின் இலக்கு.

இறுதியாக, அவை அரசு சாரா நிறுவனங்கள் என்று தான் சொல்லிக் கொள்கின்றனவே தவிர அரசு எதிர்ப்பு நிறுவனங்கள் அல்ல என்கிற ஒரு உண்மையே போதும், – அவை மண் குதிரைகள் தாம் என்பதைப் புரிந்து கொள்வதற்கு!

_______________________________________

புதிய கலாச்சாரம், மே 1997
_______________________________________

ஜேம்ஸ்பாண்ட்: ஒரு நாயகன் வில்லனான கதை!

20
ஜேம்ஸ் பாண்ட்
இதுவரை ஜேம்ஸ் பாண்டாக நடித்த நடிகர்கள் - தானே வில்லனான பிறகு யாரைச் சுடுவார்கள்?

ஜேம்ஸ்-பாண்ட்கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் போர் மூண்டு எல்லா வகைப் படைகளோடும் குருஷேத்திரத்தில் சந்திக்கிறார்கள். கண்ணில்லாத திருதராஷ்டிரன் போர்க்களத்திற்கு செல்ல முடியாது என்பதால் போரின் நேரடி வர்ணனையை விவரிக்குமாறு சஞ்ஜயன் என்ற அமைச்சரை நியமிக்கிறான். வியாசரால் ஞானதிருஷ்டி பெற்றவனான சஞ்ஜயன் அப்படியே அட்சரம் பிசகாமல் வர்ணிக்கிறான். போரின் துவக்கமாக அர்ஜுனனின் தடுமாற்றம் வருகிறது. கீதை பிறக்கிறது.

அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு சாகசங்களை நேரில் கண்டுணர முடியாத நம்மைப் போன்றோருக்கு, ஏகாதிபத்தியங்களால் ஊக்குவிக்கப்படும் ஹாலிவுட் உலகம் அதன் நேரடி வர்ணனையைக் காட்சியாக, விறுவிறுப்பான திரைப்படமாகத் தருகின்றது. ஜேம்ஸ்பாண்ட் பிறக்கிறான்.

கீதையும், ஜேம்ஸ்பாண்ட்டும் வெறுமனே லைவ் கமெண்ட்ரி சொல்லும் உபந்யாசகர்கள் மட்டும் அல்ல. ஆன்மீகவாதிகள் சொல்வது போல கீதை என்பது வாழ்வின் நான்கு யோகங்களைச் சொல்லி நம்மை ’நல்வழி’ப்படுத்தும் பார்ப்பனியத்தின் சாரம். ஜேம்ஸ்பாண்டும் சாகசங்கள் செய்து வில்லன்களை வீழ்த்துவதோடு இந்த உலகில் நிலைத்திருப்பது எது என்பதை மாற்ற முடியாத ’தத்துவ’மாக, மனதை மயக்கும் கதையாக முன்வைக்கிறான்.

இந்தப் போரின் ஆரம்பத்தில் அர்ஜுனனுக்கு தடுமாற்றம் வருகிறது. ஜேம்ஸ்பாண்டுக்கு போரின் நடுப்பகுதியில்தான் தடுமாற்றம் வருகின்றது. சொந்த பந்தங்களைக் கொன்று குலநாசம் ஏற்பட்டு, அதர்மம் சூழ்ந்து, குலப்பெண்கள் கெட்டு, வருண குழப்பம் ஏற்பட்டு, தொன்றுதொட்டு வரும் சாதி தர்மங்கள் அழிந்துவிடுமே என்று அர்ஜுனன் கேட்கிறான்.

ஐம்பது ஆண்டுகள் அரும்பாடுபட்டு ’குலநாச’த்தை ஏற்படுத்திய கம்யூனிஸ்டுகளை பூண்டோடு அழித்தும் ஜேம்ஸ்பாண்டின் பணி முடியாது நீண்டு கொண்டே போகின்றது. அதிலும் அவனை பணியிலமர்த்தியிருக்கும் அந்த நாகரீக உலகமே வில்லனாகத் தெரியவரும் போது ஜேம்ஸ்பாண்ட் குழப்பமடைகிறான். அது என்ன வகை குழப்பம்?

••

துவரை 22 ஜேம்ஸ்பாண்ட் படங்கள் வெளியாகியிருக்கின்றன. இந்தப் படங்கள் அத்தனையும் ஒரு ஃபார்முலா மசாலாவுக்குள் அடங்கி விடும்.

படத்தின் ஆரம்பத்தில் ஒரு அதிரடிக் காட்சி இருக்கும். ஜேம்ஸ்பாண்ட் தனது நேச சக்தி கூட்டாளி ஒருவரைக் காப்பாற்றுவான். அல்லது முந்தைய படத்தில் வரும் வில்லனது கூட்டாளியைக் கைது செய்வான். பிறகு வட்டத்தில் அவன் துப்பாக்கியால் சுட்டவாறு டைட்டில் காட்சி ஆரம்பமாகும். படிமங்கள் மறைத்தவாறு நிர்வாணமாகத் தோன்றும் நடன மங்கைகள் ஆட, பாடலுடன் டைட்டில் ஓடும். பிறகு அவனது எம்.16 எனும் உளவுத்துறையின் தலைவரான எம்-உடன் சந்திப்பு. அடுத்த மிஷன் பற்றி அவர் சுருக்கமாக எடுத்துரைப்பார்.

வெடிக்கும் பேனா, பறக்கும் கார், கண்காணிக்கும் குண்டூசி முதலான நவீன ஆயுதங்கள் உளவுத் துறையின் ஆயுத நிபுணரான க்யூ– வால் அவனுக்கு அறிமுகம் செய்யப்படும். பிறகு அவன் வில்லனது உலகோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்வான். அங்கு வில்லனால் அனுப்பி வைக்கப்பட்ட கெட்ட வகைப் பெண்ணைச் சந்திப்பான். முரண்படும் உறவோடு படுக்கை உறவும் நடக்கும். பிறகு அங்கிருந்து தப்பிச் செல்வான். வில்லனது உலகைத் தேடி வரும் பிறநாட்டு உளவாளிப் பெண் போன்ற நல்ல வகைப் பெண்ணைச் சந்திப்பான். அவளோடும் உறவு கொள்வான். இறுதியில் வில்லனது கோட்டைக்குள் புகுந்து வில்லனை அழிப்பான். வேலை முடிந்த பிறகு நல்ல வகை பெண் நாயகியோடு சல்லாபித்திருக்க படம் முடியும். சில சமயம் அடுத்த படத்தின் ஆரம்பமாக ஒரு கேள்விக்குறியோடும் காட்சி முடியும்.

ஜேம்ஸ்பாண்ட் திரும்பி வருவான் என்ற அறிவிப்புடன் தீம் மியூசிக்கோடு படக்குழுவினரை அறிமுகப்படுத்தியவாறு டைட்டில் ஓடும்.

ஜேம்ஸ்-பாண்ட்
இத்தகைய கச்சிதமான, ஆனால் அரதப்பழசான ஃபார்முலாவை வைத்தா ஜேம்ஸ்பாண்டு படங்கள் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக ஓடுகின்றது!? என்ற கேள்வி எழலாம். வடிவத்தின் பிரம்மாண்டம், உள்ளடக்கத்தின் சமூக நிலைமைகள் இரண்டையும் வைத்துக் கொண்டுதான் இத்தனை காலமாக உலக சினிமா ரசிகர்களை ஜேம்ஸ்பாண்ட் கட்டிப்போட்டிருக்கிறான்.

இதுவரை நாம் கண்டிராத அழகான லொகேஷன்கள், கேள்விப்பட்டிராத நாடுகள், தீவுகள், மலைகள், காடுகள், அருவிகள், கடற்கரைகள் அத்தனையும் ஒரு படத்தில் புதிது புதிதாக வந்து கொண்டேயிருக்கும். தமிழ்ப் படத்தில்  நாயகன் ஒரு சந்தை வளாகத்தில் வில்லனை தீர்த்துக்கட்டும் போது இங்கு அந்தக் களம் விண்வெளியிலோ, விமானங்களோடோ, ஹெலிகாப்டர்களோடோ, குகைவழிச் சாலையிலோ, பிரம்மாண்டமான ஆய்வுக் கூடங்களிலோ அமைந்து மிகவும் செலவு பிடிக்கும் சண்டைகளாக அவை நடக்கின்றது. ஜேம்ஸ்பாண்ட் படங்களில் பிகினி உடையில் வரும் அழகான நாயகிகள் அதன் அடுத்த கவர்ச்சி. பிறகு அவன் பயன்படுத்தும் நவீன கார்கள், ஆயுதங்கள், உடைகள், கடிகாரங்கள் கொசுறான நுகர்வுக் கலாச்சாரக் கவர்ச்சி.

ஜேம்ஸ்பாண்ட் படங்களது முன்களக் கதையின் கவர்ச்சியை இத்தகைய படிமங்கள் தீர்மானிக்கின்றது எனில், அதன் பின்களக் கதையின் சமூக நிலைமைகள் பொருத்தமான விகிதத்தோடு கலந்து வரும் போது ஒரு படம் இரசிகனைக் கவருவதற்குப் போதுமானது என்றாகின்றது.

ஏகாதிபத்தியங்களின் சமூக, அரசியல், பொருளாதார ஆக்கிரமிப்பு வரலாற்றின் கலை முகமாக ஜேம்ஸ்பாண்ட் படங்களைப் புரிந்து கொள்ள முடியும். எனினும் இந்த வரலாறு ஜேம்ஸ்பாண்ட் படங்களை உருவாக்கிய படைப்பாளிகள் முற்றிலும் திட்டமிட்டு செய்த ஒன்றல்ல என்றாலும், அவை இயல்பிலேயே அத்தகைய ஒரு வரலாற்றைக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில் ஒரு திட்டம் இல்லாமலில்லை.

••

ஜேம்ஸ்-பாண்ட்
பிளெம்மிங்கின் ஜேம்ஸ் பாண்ட் நாவல்கள்

ங்கிலாந்தின் மசாலாக் கதை எழுத்தாளர் அயன் ஃபிளமிங் 1953 ஆம் ஆண்டு  உருவாக்கிய கற்பனைப் பாத்திரம்தான் 007 எனும் குறியீட்டுப் பெயர் கொண்ட ஜேம்ஸ்பாண்ட். இந்தப் பாத்திரத்தைக் கொண்டு அவர் 12 நாவல்களையும், இரு சிறுகதைத் தொகுப்புகளையும் எழுதியிருக்கிறார். 1964-இல் அவரது இறப்பிற்குப் பிறகு ஆறு எழுத்தாளர்கள் அதிகாரப்பூர்வமாக இந்தக் கதாபாத்திரத்தை வைத்து எழுதியிருக்கிறார்கள். நாவல்கள், படங்கள் தவிர தொலைக்காட்சி – வானொலி தொடர்கள், காமிக்ஸ் கதைகள், வீடியோ விளையாட்டு முதலானவற்றிலும் ஜேம்ஸ்பாண்ட் வருகிறான்.

1962-ஆம் ஆண்டில்தான் டாக்டர் நோ எனும் முதல் ஜேம்ஸ்பாண்ட் படம் வெளியானது. கனடாவைச் சேர்ந்த ஹாரி சால்ட்ஸ்மென், அமெரிக்கரான ஆல்பர்ட் ஆர் ‘கியூபி‘ பிரக்கோலி இருவரது இயான் புரடக்சன்ஸ் எனும் நிறுவனம்தான் தொடர்ந்து ஜேம்ஸ்பாண்ட் படங்களைத் தயாரித்து வருகின்றது. ஹாலிவுட்டின் பெரும் திரைப்பட நிறுவனங்கள் நிதியுதவி அளித்து இப்படங்களை உலகெங்கும் விநியோகித்து வருகின்றன. இதுவரை சீன் கானரி, ரோஜர் மூர், டிமோதி டால்டன், பியர்ஸ் பிரான்சன், தற்போது டானியல் கிரெய்க் முதலான நடிகர்கர்கள் ஜேம்ஸ்பாண்ட் பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

இதுவரை வெளியான 22 ஜேம்ஸ்பாண்ட் படங்களும் மொத்தம் 5 பில்லியன் டாலரை அதாவது 22,500 கோடி ரூபாயை சம்பாதித்திருக்கின்றன. ஹாரி பார்ட்டர் தொடர் வரிசைப் படங்களுக்கு அடுத்தபடியாக ஜேம்ஸ்பாண்ட் படங்களே அதிகம் வசூலித்த தொடர் படமாகும். உலக மக்கள் தொகையில் கால்வாசிப் பேர் ஏதேனும் ஒரு பாண்ட் படத்தைப் பார்த்திருப்பதாக சொல்கிறார்கள். ஜேம்ஸ்பாண்ட் படங்கள் பிரபலமான பிறகு பிளமிங்கின் ஜேம்ஸ்பாண்ட் நாவல்களுக்கு மவுசு ஏற்பட்டு இதுவரை மொத்தம் 2 கோடியே முப்பது இலட்சம் நாவல்கள் விற்பனையாகியிருக்கின்றன.

••

த்ரில்லர் எனப்படும் துப்பறியும் கதைகளுக்கு உலகமெங்கும் வரவேற்பு உண்டு. நிலவுடமைச் சமூகங்களில் நடக்கும் கொலைகளுக்கும், வன்முறைகளுக்குமான காரணங்கள் மர்மம் நிறைந்தவை அல்ல. அந்த வன்முறையின் களம் வரம்புக்குட்பட்டது போலவே அதன் சூத்திரதாரியும் எளிதில் கண்டுணரக்கூடியவன்தான். ஆனால் ஒரு முதலாளித்துவ சமூகத்தில் இதே சமூக வன்முறைகள், கொலைகள், களத்திலும், காரணத்திலும், யார் செய்தார்கள் என்பதிலும் பரந்த பரப்பைக் கொண்டிருக்கிறது. ஒரு கொலையைக் கண்டுபிடிப்பது என்ற முறையில் புலனாய்வு எனும் கலை அறிவியலும், புத்தார்வமும் நிறைந்த ஒன்றாகத் தோன்ற வேண்டியிருக்கின்றது.

நகரமயமாக்கமும், முதலாளித்துவ சமூகமும் வளரும் போது தோன்றிய நாவல் எனும் விரிந்த களத்தையும், நுட்பமான சிந்தனையோட்டங்களையும், பிரச்சினைகளையும் சொல்லக்கூடிய கலை தோன்றும் போது அதன் உட்பிரிவாக இந்த துப்பறியும் கதைகளும் தோன்றுகின்றன. குடும்ப-குழு-பாலின-சமூக வன்முறைகள் எனும் களத்திலேயே ஆரம்பத்தில் இது தோன்றியிருந்தாலும் பின்னர் அது அரசியல் களத்திலும், பொருளாதார அரங்கிலும் கால்பதிக்கின்றது. குடும்ப வன்முறைகளைக் காட்டிலும் அரசியல் அரங்கு ஒரு நகரத்துடனோ, பகுதியுடனோ மட்டும் நின்று விடாமல் நாடுகள், கண்டங்களையும் தாண்டிச் செல்கின்றது. ஹிட்ச்காக் முதலான சாதனைகள் படைத்த இயக்குநர்கள், படைப்பாளிகள் தனி மனிதனின் வன்முறைகளைக் கச்சிதமான படமாகச் சொல்லிய போது வேறு சிலர் தங்களது களத்தினை அரசியல் அரங்கிற்குள் கொண்டு சென்றார்கள்.ஜேம்ஸ்பாண்ட் பாத்திரம் சூல் கொண்டுள்ள இடமும், அதன் பிரம்மாண்டமான மசாலா கதைகளுக்கான தோற்றுவாயும் இதுதான்.

••

இயன்-பிளெம்மிங்
ஜேம்பாண்டை படைத்த இயன் பிளெம்மிங், ஊதாரித்தனமும், அடிமைத்தனமும் கலந்த கலவை

யன் ஃபிளமிங் உருவாக்கிய கற்பனைப் பாத்திரமான ஜேம்ஸ்பாண்ட் ஒரு உளவாளி. இங்கிலாந்து நாட்டின் உளவுத்துறையான எம் 16 எனும் இயக்கத்தில் வேலை செய்கிறான். அந்த உளவுத்துறை இங்கிலாந்து மற்றும் அதன் நேசநாடான அமெரிக்கா போன்ற நாடுகளின் நலனுக்காக எல்லா வகை ’வேலை’களையும் செய்கிறது. இந்த உண்மையுடன் கொஞ்சம் தனிமனித சாகசங்களைச் சேர்த்து விடும் போது ஜேம்ஸ்பாண்ட் படங்கள் பிறக்கின்றது.

பாண்டை உருவாக்கிய அயன் பிளமிங் ஒரு வசதியான செல்வந்தர் குடும்பத்தில் 1908 ஆம் ஆண்டு பிறந்தார். அவரது குடும்பம் ராபர்ட் பிளமிங் அண்டு கோ எனும் வணிக வங்கிக் குடும்பத்துடன் தொடர்புடையது. அவரது தந்தையும் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் 1910 முதல் 1917 இல் இறக்கும் வரை உறுப்பினராக இருந்தவர். இங்கிலாந்தின் பிரபலமான பல்கலைக் கழகங்களிலும், பின்னர் ராயல் மிலிட்டரி அகாடமியிலும் பயின்ற ஃபிளமிங் ஒரு மேட்டுக்குடி ஆங்கிலேயே கனவானுடைய நடத்தையைக் கொண்டிருந்தார். பின்னர் அவர் இங்கிலாந்து கடற்படையின் உளவுத்துறையில் பணிபுரிந்தார். இரண்டாம் உலகப் போர் நடக்கும் போது அவர் சந்தித்த அனுபவங்கள், கதைகள், பாத்திரங்களெல்லாம் பின்னர் பாண்ட் நாவலுக்குரிய கச்சாப் பொருட்களை அளித்தன.

இது போக அவரது தனிப்பட்ட நடத்தையான புகைபிடிப்பது, அதிகம் குடிப்பது, அழகான பெண்களிடம் ஜொள்ளு விடுவது முதலானவையும் ஜேம்ஸ்பாண்ட் பாத்திரத்தில் சேர்ந்திருந்தன. சுருங்கக் கூறின் அவரது தனிப்பட்ட பண்பான கேளிக்கை நடத்தைகளும், அவரது அரசியல் பார்வையான அரசகுலம் சார்ந்த, இங்கிலாந்தின் மேட்டுக்குடி மனோபாவமுமே ஜேம்ஸ்பாண்டின் அடிப்படை விதிகள்.

20 ஆம் நூற்றாண்டு இரண்டு உலகப் போர்களை பெரும் அழிவுடன் சந்தித்திருக்கின்றது. அதன் பிறகு அமெரிக்காவுக்கும், சோவியத் யூனியனுக்குமான கெடுபிடிப் போர் அந்த நூற்றாண்டின் இறுதி வரை நடந்திருக்கின்றது. உலகப் போர்களின் துயரங்களையும், நட்டங்களையும் ஒரு கண்டம் என்ற வகையில் ஐரோப்பிய மக்களே அதிகம் அனுபவித்திருந்தார்கள். இரண்டாவது உலகப் போரின் முடிவுக்குப் பிறகு இங்கிலாந்து, பிரான்சு போன்ற ஏகாதிபத்தியங்கள் தங்களது ராஜ்ஜியத்தின் பெரும்பகுதியை இழந்தும், மிச்சமிருப்பதை தக்க வைத்திருப்பதற்கு பெரும் பிரயத்தனத்துடனும் போராடி வந்தன.

இந்நிலையில் இங்கிலாந்து மக்கள் போரின் அழிவுகளுடனும், புதிய பனிப்போர் நிலைமை காரணமான அச்சத்துடனும் வாழ்ந்து வந்தார்கள். கொரியா, மலாய், கென்யா, கயனா போன்ற நாடுகளில் பிரிட்டிஷ் படைகள் இறுதியாய் போராடி வந்த போது பிரான்சு நாடு வியத்நாமில் தனது அஸ்தமனத்திற்காக போராடி வந்தது. கூடவே நுழைந்த அமெரிக்கா வியத்நாமை கம்யூனிச அபாயத்திலிருந்து காப்பாற்றுவதற்காக பெரும் படையெடுப்பையே நடத்தி வந்தது.

சோவியத் யூனியன், சீனா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் பொதுவுடமை செல்வாக்கிற்கு அஞ்சிய மேற்குலகம்  கம்யூனிச எதிர்ப்பிற்கு அமெரிக்காவின் தலைமையில் பெரும் போர்த்தந்திரத்தை அமல்படுத்தி வந்தன. அமெரிக்க மண்ணிலேயே பொதுவுடமையின் வாசம் கூட தோன்றிவிடக் கூடாது என்பதற்க்காக மெக்கார்த்தி யுகம் எனும் கம்யூனிச எதிர்ப்புப் பாசிசம் அமலில் இருந்தது. இதன் காரணமாகவே சார்லி சாப்ளினுக்கு அமெரிக்க குடியுரிமை மறுக்கப்பட்டு தாயகமான இங்கிலாந்துக்கு அவர் திரும்பினார்.

இதே காலகட்டத்தில் அறிவியல், தொழில்நுட்பப் புரட்சியின் சாதனைகள் உலகை வலம் வரத் துவங்கின. உயிரியில் – உடலியலின் சாதனையாக டி.என்.ஏ கண்டுபிடிக்கப்பட்டது. உலகின் அதிவேக ஜெட் விமான சேவை இங்கிலாந்தில் துவக்கப்பட்டது. இங்கிலாந்து, அமெரிக்க வீடுகளின் அறைகளுக்குள் தொலைக்காட்சி எனும் புதிய தொழில்நுட்பம் பேசத் துவங்கியிருந்தது. அமெரிக்கா, ரசியாவிற்கு அடுத்த நாடாக பிரிட்டன் அணு வெடிப்புச் சோதனை நடத்தி அணு வல்லரசாக அறிவித்துக் கொண்டது. ஹைட்ரஜன் குண்டுகளும் சோதனைக்காக வெடிக்கப்பட்டன. சோவியத் யூனியனிடம் அணுகுண்டு அறிவியலின் நுட்பங்களை அளித்தார்கள் என்று அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் சில அறிவியலாளர்கள் தண்டிக்கப்பட்டார்கள்.

உலகப் போர் முடிந்த இடத்தில் அமெரிக்காவுக்கும், ரசியாவுக்குமான பனிப்போர் எனப்படும் கெடுபிடிப் போர். அந்த வகையில் உலகப்போரின் அச்சத்திலேயே தொடர்ந்து இருக்க மக்களிடம் அடுத்த வில்லன் சோவியத் யூனியன்தான் என்று மேற்குலகங்கள் பிரச்சாரத்தை கட்டியமைத்தன. இங்கிலாந்தின் காலனிய ஆதிக்கம் அரசியல் ரீதியில் பின்னடைவைச் சந்தித்திருந்த நேரம் அது. கூடவே தொழில்நுட்பப் புரட்சியின் சாதனைகள், புதிய வாழ்க்கை என்ற இந்த சமூக உளவியலின் பின்னணியில்தான் ஜேம்ஸ்பாண்ட் நாவல்களை ஃபிளமிங் எழுதுகிறார்.

••

ஜேம்ஸ்-பாண்ட்
யூ ஒன்லி லிவ் டுவைஸ் படத்துக்கான ‘ஸ்பெக்டர் ‘ செட்

நாயகனின் சாகசங்களை சென்டிமெண்டாக உணர்த்துவதற்கு வில்லன்கள் அவசியம். ஒரு குடும்ப நாயகனின் எழுச்சிக்கு ஒரு தெருவோர ரவுடி போதும். அவனே உலக நாயகனாக இருந்தால் வில்லனும் உலக ரவுடியாக இருக்க வேண்டியிருக்கிறது. எம்.ஜி.ஆர் படங்களில் வாய் கூவிச் சிரிக்கும் நம்பியாரும், வீரப்பாவும் போதுமானவர்கள் என்றால் ஜேம்ஸ்பாண்ட் படங்களில் அவன் நவீன தொழில்நுட்பத்தில் மேதையாகவும், அவனது களம் முழு உலகைக் கைப்பற்றுவதாகவும் இருக்கிறது. நிஜ வாழ்வின் பொதுப்புத்தியில் சோவியத் யூனியனும், அதன் உளவுத் துறையான கே.ஜி.பியும்தான் மாபெரும் வில்லன்கள் என்று சித்தரித்து விட்ட பிறகு, அதையே கதையில் கொண்டுவரும் போது ஒரு நம்பகத்தன்மை வந்து விடுகின்றது.

அந்த வில்லனின் ஹைடெக் சமாச்சாரங்களின் சாத்தியங்களை அறிவியல் தொழில்நுட்பப் புரட்சி கொண்டு வரும்போது மசாலா படங்களின் ரிச்சான காட்சிகளுக்கு வழி பிறந்து விடுகின்றது. எனினும் ஃபிளமிங் அவரது நாவல்களில் சோவியத் யூனியனை வில்லனாகவும், உலக அமைதிக்கு எதிராகவும் காட்டியது போல் ஜேம்ஸ்பாண்ட் படங்களில் நேரடியாகக் காட்டவில்லை. அப்போது உலகின் பாதிக்கும் மேற்பட்ட நாடுகளில் கம்யூனிசம் செல்வாக்காக இருந்த காரணத்தாலும், பனிப்போர் விரைவில் முடிந்து விடும் என்று ஃபிளமிங் நம்பியதாலும் உருவாக்கப்பட்ட கற்பனை வில்லன்தான் ஸ்பெக்டர் இயக்கம்.

SPECTRE (SPecial Executive for Counter&intelligence, Terrorism, Revenge and Extortion)  ஸ்பெக்டர் இயக்கத்திற்கு நாடோ, அரசியலோ, கொள்கையோ இல்லை என்று சொன்னாலும் இது உலகளாவிய மேலாதிக்கத்தை இலக்காகக் கொண்டு செயல்படும் பயங்கரவாத இயக்கமாகும். ஆனால் மறைமுகமாக இந்த இயக்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் ஹிட்லரின் இரகசிய போலீசான கெஸ்டபோ, ரசிய கே.ஜி.பியின் ஸ்மெர்ஷ், யூகஸ்லோவேகியாவின் இரகசிய போலிசு, இத்தாலியின் மாஃபியா, பிரான்சின் நிழல் இயக்கமான யூனிஒன் கோர்ஸ் ஆகிய இயக்கங்களைச் சேர்ந்தவர்களாவார்கள்.

பின்னர் இந்த ஸ்பெக்டர் இயக்கத்தை ரசியா, சீனா முதலான பொதுவுடமை நாடுகள் மேற்குலக நாடுகளை வீழ்த்துவதற்குப் பயன்படுத்தியதாக படத்தில் மாற்றினார்கள்.

ஃபிளமிங் மட்டுமல்ல, அன்றைய நாவல் எழுத்தாளர்கள் பலரும் சோவியத் யூனியன், சீனா, கியூபா, கிழக்கு ஐரோப்பா பின்னர் வட கொரியாவையும் வில்லன்களாக வைத்துக் கதைகளை எழுதினார்கள். அதற்காகவே அவர்களில் சிலருக்கு நோபல் பரிசும் தரப்பட்டிருக்கின்றது. பின்னர் 1990களில் இங்கிலாந்தில் வெளியான அதிகாரப்பூர்வமான அறிவிப்பில் இவர்களில் பலர் எம்.16 உளவுத் துறையின் நிதிப் பராமரிப்பில் வாழ்ந்தவர்கள் என்ற உண்மை உலகிற்கு தெரிய வந்தது.

••

ஜேம்ஸ்-பாண்ட்முதல் படமான டாக்டர் நோவின் கதை என்ன? ஜமைக்காவில் ஒரு எம்.16 இன் உளவாளி கொல்லப்பட, அதை விசாரிப்பதற்காக ஜேம்ஸபாண்ட் அங்கு செல்கிறான். அதன் போக்கில் டாக்டர் நோ எனும் ஸ்பெக்டரால் நியமிக்கப்பட்ட வில்லன் ரேடியோ ஜாமரை வைத்து அமெரிக்க ராக்கெட்டுகளை முடக்கும் சதியை அரங்கேற்ற நினைக்கிறான். இவனை சோவியத் யூனியன் பயன்படுத்திக் கொள்ள முனைகின்றது. பிறகு அமெரிக்க சி.ஐ.ஏ உதவியுடன் பாண்ட் டாக்டர் நோவை கொல்கிறான்.

இங்கிலாந்தின் மகத்துவத்தை முன்வைத்து புனையப்பட்ட ஜேம்ஸ்பாண்ட் பாத்திரத்தை ஆரம்பத்தில் ஹாலிவுட் ஏற்கவில்லை என்றாலும், பின்னர் நிஜ உலகில் அமெரிக்காவின் செல்வாக்கை உணர்ந்த பாண்ட் படைப்பாளிகள் கதைகளில் அமெரிக்காவின் முக்கியத்துவத்தைக் கொண்டு வந்தனர். இது முதல் படத்தில் மட்டுமல்ல, பின்னர் வந்த பல படங்களிலும் தொடர்கின்றது. ஜேம்ஸ்பாண்டின் உலகளாவிய, குறிப்பாக அமெரிக்க வசூலுக்கும் அது தேவையாக இருந்தது. அது போல அமெரிக்காவின் சமீபத்திய ஆக்கிரமிப்புப் போர் வரையிலும் இங்கிலாந்துதான் முக்கியமான நேச சக்தி என்பதையும் இங்கே பொருத்திப் பார்க்கலாம்.

முதல் படத்திலேயே பெண்களோடு குத்தாட்டம் போட்டு, நேர்ப்படுபவனையெல்லாம் சுட்டுக் கொல்லும் பாண்டின் செக்ஸ் மற்றும் வன்முறை குறித்து வாத்திகன் கண்டனம் தெரிவித்தது. ஆனால் இரண்டாம் உலகப் போர் காலத்திலேயே ஹிட்லரை, போப் இரண்டாம் பயஸ் ஆதரித்திருப்பது இங்கே நினைவு கூறத்தக்கது. சமீபத்தில் பாதிரிகளின் செக்ஸ் ஸ்கேண்டல்கள் உலகம் முழுவதும் தலைவிரித்தாடி சிலவற்றில் போப் ஆண்டவரே மன்னிப்பு கேட்டதைப் பார்த்தால் அந்த கண்டனத்திற்கு வரலாற்றுச் சிறப்பேதுமில்லை.

இந்தப் படத்தில் பாண்டின் நட்புப் பெண் பிகினி உடையில் வரும் காட்சி பின்னர் வந்த படங்களுக்கு முன்னோடியாக அமைகிறது. அந்த உடையும் கூட 2001 ஆம் ஆண்டு முப்பது இலட்சம் ரூபாய்க்கு ஏலம் போயிருக்கின்றது. படத்தில் மோன்டி நார்மனின் தீம் மியூசிக், வில்லன் ஆய்வுக்கூடம், பாண்டின் கவர்ச்சி உடை நாயகிகள் எனப்படும் பாண்ட் பட குறியீடுகள் உருப்பெருகின்றன. படத்தயாரிப்பை விட ஆறு மடங்கு வசூலை அள்ளிக் குவித்தபடியால் அடுத்த பாண்ட் படங்கள் இன்னும் அதிக செலவுடன் தயாரிக்கப்பட்டன.

மூன்றாவது படமான கோல்டு ஃபிங்கரில், தங்க முதலாளி ஆரிக் கோல்டு ஃபிங்கர் அமெரிக்கக் கருவூலத்தைத் தாக்கிக் கைப்பற்ற முயல்கிறான். அதற்கு சீனத்து அணுகுண்டையும் பயன்படுத்த முனைகின்றான். பின்னர் பாண்ட் இதை முறியடிக்கிறான். அப்போது தங்கம் சர்வதேச பண மதிப்பின் அளவுகோலாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. எழுபதுகளின் இறுதியில் வந்த மூன் ரேக்கர் படம் ஸ்டார் வார்ஸ் படத்தின் போட்டிக்காகவும், அமெரிக்கா, ரசியா ஈடுபட்டிருந்த நட்சத்திர சண்டை காரணமாகவும் வெளி வந்தது. இப்படி நிகழுலக அரசியல் போக்குகளெல்லாம் பாண்ட் படங்களில் மலிவாகப் பயன்படுத்தப்பட்டன.

ஐந்தாவது படமான யு ஒன்லி லிவ் டுவைஸ் படத்தை இங்கிலாந்து ராணி எலிசபெத், பிரீமியர் காட்சியாகவே பார்க்கிறார். கொல்லப்பட்ட அமெரிக்க  அதிபர் கென்னடியும் பாண்ட் நாவல்கள், படங்களின் விசிறிதான். அவருக்கு பிடித்த படம் ஃபிரம் ரசியா வித் லவ். இப்படி பாண்ட் படங்கள் உலகெங்கும் மேற்குலகின் சாகச நாயகனாக வலம் வந்த போது அப்படி முயன்று வந்த அரசுகள், அதிபர்கள் இதை ஆரவாரத்துடன் ஆதரித்தது அதிசயமில்லை.

பதினான்காவது படமான எ வியூ டு எ கில் படத்தில் வில்லன் ரசிய உதவியுடன் கலிபோர்னியாவின் சிலிக்கான் வேலியை தகர்க்க முனைவதை பாண்ட் முறியடிக்கிறான்.

பதினேழாவது படமான கோல்டன் ஐ வெளிவரும் போது கோர்பச்சேவின் காலத்தில் ரசிய சமூக ஏகாதிபத்தியம் தனது வேடத்தைக் கலைத்து விட்டு முழு முதலாளித்துவ அரசாக அறிவித்துக் கொள்கிறது. விடுவார்களா, இந்தப் படத்தின் டைட்டில் காட்சியில் கம்யூனிச சின்னங்கள் அரிவாள் சுத்தியல், லெனின் சிலைகளெல்லாம் தகர்ப்படுகின்ற பின்னணியில் நடன மங்கைகள் ஆடுகிறார்கள். பெர்லின் சுவர் இடிப்பு, லெனின் சிலை இடிப்பு என்று ஏகாதிபத்திய உலகமே கொண்டாடிய போது ஜேம்ஸ்பாண்ட் மட்டும் கொண்டாடாமல் இருப்பானா என்ன?

ஆனால் இந்தக் கொண்டாட்டம் பத்து ஆண்டுகள் கூட நீடிக்க முடியவில்லை. கம்யூனிச நாடுகள் வீழ்ந்தாலும், முதலாளித்துவ நாடுகள் ஒன்றும் பூவுலகில் சொர்க்கத்தை படைக்க முடியவில்லை என்பதோடு நரக வாழ்க்கையை விஸ்தரித்து வந்த நேரம். பல நாடுகளில் வெடித்த பொருளாதாரப் பிரச்சினைகள் மேற்குலகின் மெக்காவான அமெரிக்காவிலேயே ஆட்டம் போட்ட போது ஜேம்ஸ்பாண்டும் நிறைய தடுமாறுகிறான்.

••

ஜேம்ஸ்-பாண்ட்
முதலாளித்துவத்தைக் காப்பாற்ற அவதரித்த பாண்ட் இப்போது முதலாளிகளை வேட்டையாடுகிறான்

2006 இல் வெளிவந்த கேசினோ ராயல், 2008இல் வெளிவந்த குவாண்டம் ஆஃப் சோலஸ் எனும் இரண்டு தொடர் வரிசை ஜேம்ஸ்பாண்ட் படங்கள் வழக்கமான பாண்ட் பாணியிலிருந்து நிறைய வேறுபடுகின்றன. இந்த படங்களில் ஒரு புது வில்லன் இயக்கம், குவாண்டம் என்ற பெயரில் வருகிறது. இவர்கள் யார்? பன்னாட்டு முதலாளிகள், அமெரிக்க, இங்கிலாந்து அரசுகளோடு தொடர்புடையவர்கள், இசுரேலின் மொசாட்டில் உள்ளவர்கள் என்று ஜேம்ஸ்பாண்ட் எந்த முதலாளித்துவ உலகைக் காப்பாற்ற இத்தனை காலம் போராடினானோ அந்த உலகத்தின் சூத்திரதாரிகளே வில்லன்களாக மாறுகிறார்கள்.

கேசினோ ராயலில் இரகசியமாக போராளிக் குழுக்களின் நடவடிக்கைகளுக்காக ஒரு நிதி நிறுவனத்தை நடத்துபவன் அந்தப் பணத்தை வைத்துப் பங்குச்சந்தையில் சூதாடுகிறான். அதில் பணத்தை இழந்து அதனை மீட்பதற்காக பில்லியனர்கள் விளையாடும் சீட்டு ஆட்டத்தில் ஈடுபடுகிறான். பாண்ட் அங்கு சென்று ஆட்டத்தில் சி.ஐ.ஏ பண உதவியுடன் வென்று வில்லனை அமெரிக்காவிடமே கையளிக்கிறான். ஆனால் வென்ற சூதாட்டப் பணத்தை அவனால் மீட்க முடியவில்லை. காதலியையும் இழக்கிறான். காதலியுடன் களித்திருக்கும் போது இனி இந்த பாண்ட் வேலையை செய்யவில்லை, வேறு ஏதாவது நல்ல வேலை செய்கிறேன் என்றும் கூறிவிட்டு இந்த உலகில் அப்படி ஒரு நல்ல வேலை இருக்கிறதா என்று கேட்கிறான். கூடவே எம்.16 உளவுத் துறையின் தலைவர் எம் க்கு ராஜினாமா செய்வதாக மின்னஞ்சல் செய்கிறான்.

ஆனாலும் காதலியின் கொலைக்காக அவனது வேலை அடுத்த படத்திலும் தொடர்கிறது. குவாண்டம் ஆஃப் சோலசில் வில்லன் தென்  அமெரிக்க நாடான பொலிவியாவில் குடிநீர் வளத்தை கைப்பற்றுவதற்கு முயல்கிறான். அதற்காக இருக்கும் அரசை கவிழத்துவிட்டு ஒரு ராணுவ தளபதியின் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைக்கு உதவுகிறான். இவனுக்கு ஆதரவாக அமெரிக்காவின் சி.ஐ.ஏ, இங்கிலாந்து பிரதமரின் நெருங்கிய நண்பர், மொசாட்டில் பணியாற்றி பின்னர் தொலைத்தொடர்பு நிறுவனம் நடத்தும் முதலாளி என்று பலரும் பின்னணியில் இருக்கிறார்கள். இவர்கள்தான் குவாண்டம் எனப்படும்  அந்த இயக்கத்தின் அஸ்திவாரங்கள்.

பாண்ட் இவர்களை விரட்டியவாறு பொலிவியாவுக்கே சென்றாலும் அங்கு அவனால் ஒரு கட்டத்தில் அதிகாரப்பூர்வமாக ஈடுபட முடியவில்லை. எம்.16 உளவுத்துறையே அவனது கைகளைக் கட்டிப் போடுகின்றது. இடையில் அவன் தனது தலைவரின் சங்கேத வார்த்தையைத் திருடி அவர்களது இணைய தளத்தில் நுழைந்து தகவல்களைச் சேகரிக்கிறான். தலைவரது வீட்டிற்கு அவனாகவே நுழைந்து பேசுகிறான். உளவுத்துறை தலைவர் எம் முன்னால் விறைப்புடன் ஒரு இராணுவ வீரன் போல அடிமையாக கிடக்கும் முந்தைய பாண்ட் படங்களிலிருந்து இவன் வேறுபடுகிறான்.

எம்.16 உளவுத் துறையிலும் கூட குவாண்டத்தின் நபர்கள் புகுந்து விடுகிறார்கள். எம் இன் பாதுகாவலராக இருக்கும் ஒருவனே வில்லனது கையாள் என்பதையெல்லாம் அவர்களாலேயே நம்ப முடியவில்லை. இறுதியில் தனது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை மீறி தலைவர் எம் இன் ஆதரவோடு மட்டும் பொலிவியாவில் அந்த வில்லனைக் கொல்கிறான். இறுதியில் வில்லனுக்கு ஆதரவாக இருந்த சி.ஐ.ஏ தலைவர், மற்றும் இங்கிலாந்து பிரதமரின் ஆதரவாளரெல்லாம் மாற்றப்படுகிறார்கள். அது இன்னமும் அந்த முதலாளித்துவ உலகத்தை காப்பாற்றத் துடிக்கும் பாண்டின் இலட்சியத்திற்காகச் சொல்லப்பட்ட புனைவுதான்.

ஆனாலும் புனைவில் உதித்த இந்த முதலாளித்துவ நாயகன் இனி முழுக்க முழுக்க புனைவையே நம்பி வாழ முடியாது. வால் வீதியில் ‘நாங்கள்தான் 99%‘ என்று முழங்கும் சராசரி அமெரிக்க மக்களின் அரசியல் விழிப்புணர்வை இனியும் மடை மாற்ற முடியாது. அதன்படி இனி பாண்ட்டின் படங்களில் காட்டியே ஆக வேண்டிய வில்லனாக முதலாளித்துவமே விசுவரூபமெடுத்து நிற்கிறது.

ஜேம்ஸ் பாண்ட்
இதுவரை ஜேம்ஸ் பாண்டாக நடித்த நடிகர்கள் – தானே வில்லனான பிறகு யாரைச் சுடுவார்கள்?

சாகசங்களை விசுவரூப தரிசனமாகக் காட்டித்தான் இது வரை ஜேம்ஸ்பாண்ட் படங்கள் உலகை வலம் வந்தன. இனியும் வரும். ஆனால் ஜேம்ஸ்பாண்ட் இனி யாருக்காக உழைக்க முடியும் என்ற கேள்வி தொக்கி நிற்கிறது. அதன்படி அவனது நாயகப் பண்புகள் மறைந்து அவனே ஒரு வில்லன் போல தோற்றமளிக்க வேண்டியிருக்கிறது. அது ஒரு நிறுவனத்தை எதிர்க்கும் கலகமாக மாற்றப்பட்டு அவனது பாத்திரம் காப்பாற்றப்படலாம். ஆனால் அதற்கு விலையாகப் பன்னாட்டு நிறுவனங்களையே வில்லனாகக் காட்டும் நிலையில் பாண்டின் படைப்பாளிகள் இருக்கிறார்கள்.

இரண்டில் ஒன்றைப் பலிகொடுக்க வேண்டிய நிலையில் இனி ஜேம்ஸ்பாண்டின் படங்கள் எப்படி இருக்கும்? வழக்கம் போல மசாலா காட்சிகள், பிகினி நாயகிகள் எல்லாம் இருந்தே தீரும். ஆனால் மேற்குலக மக்களின் உணர்வை இனியும் மறைக்க முடியாது என்ற நிலையில் ஜேம்ஸ்பாண்ட் ஒரு பெரும் குழப்பத்தில் நிற்கிறான். அவனது குழப்பத்தை நீக்கி நல்வழிப்படுத்தும் தகுதியை அமெரிக்காவோ, இங்கிலாந்தோ இழந்து விட்டது.

ஆனாலும் அவன் இன்னமும் ஏகாதிபத்தியத்தின் அடியாள்தான். என்றாலும் இந்த அடியாள் இனி நாயகனாக வேடம் கட்டினாலும் நிஜ உலகைப் பொறுத்த வரை அவன் வில்லன்.
____________________________________________

– புதிய கலாச்சாரம், மார்ச் – 2012.

__________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

அணு உலைகளை விட ஆபத்தானவை!

22

ஜெயலலிதா-கருணாநிதி

ஓட்டுப் பொறுக்கி அரசியலில் என்னதான் கேவலமான நாய்ச் சண்டையில் கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஈடுபட்டிருந்தாலும், வேறு பல விடயங்களில் அண்ணனும் தங்கையுமாக உறவு கொண்டு, ஒன்றுபட்டுச் செயல்படுகிறார்கள். இதற்கு, பன்னாட்டு  இந்நாட்டுக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சேவை செய்வதில் இருந்து சோனியா-மன்மோகன் கும்பலுக்குத் துணை நின்று ஈழத் தமிழரின் முதுகில் குத்துவது வரை எவ்வளவோ எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். கருணாநிதி  ஜெயலலிதாவின் பாசப் பிணைப்புக்கு மிகச் சமீபத்திய சான்றாக, கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு மக்கள் போராட்டங்களைக் கொச்சைப்படுத்தி அவதூறு செய்து ஒடுக்குவதில் இருவரும் கை கோர்த்துக் கொண்டு செயல்படுவதைக் கூறலாம்.

இந்த வகையில் காங்கிரசு, பாரதிய ஜனதாக் கட்சி மற்றும் போலி கம்யூனிஸ்டுகளின் “தேசியக் கூட்டணி”யும் கருணாநிதி, ஜெயலலிதாவின் “திராவிடக் கூட்டணி”யும் ஒரே உத்தியைத்தான் பின்பற்றுகின்றன; இரண்டு கூட்டணிகளும் கூட்டுச் சேர்ந்து ஒரு மகாகூட்டணியும் அமைத்துக் கொண்டு செயல்படுகின்றன. கூடங்குளம் அணுஉலை பற்றிய அப்பகுதி மக்களின் அச்சத்தைப் போக்குவதற்காக என்று மத்திய-மாநில அரசுகள் தனித்தனியே இரண்டு நிபுணர் குழுக்களை அமைத்தன. அவை கூடங்குளம் வளாகத்தில் விருந்துண்டு ஏப்பமும் அறிக்கையும் விட்டதோடு சரி. போராடிய மக்களை சந்திக்கவோ, அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கவோ இல்லை.

இந்த நிலையில், அணுஉலை எதிர்ப்புப் போராட்டத் தலைமைக்கு எதிராக “அமைப்புசாரா தொண்டு நிறுவனங்கள் மூலம் அந்நியத் தொடர்பு, அந்நிய நிதி உதவி” என்ற அவதூறு கட்டவிழ்த்து விடப்பட்டது. மன்மோகன்  சோனியாவின் எடுபிடி நாராயணசாமி போதாதென்று சிதம்பரமும் மன்மோகனுமே இந்தப் பொய்ப் பிரச்சாரத்தில் இறங்கினர். சி.பி.ஐ., ஐ.பி. முதலிய மத்திய உளவுப் படைகளை ஏவி விசாரணை, சோதனை, வங்கிக் கணக்கு முடக்கம், ஜெர்மனி சுற்றுலாப் பயணி வெளியேற்றம் என்று அனைத்து ஊடக உதவியுடன் பல கூத்துக்களை நடத்தினர். கடைசியில் அவ்வாறான புகார்கள் எதற்கும் ஆதாரங்கள் இல்லை, “உறுதிப்படுத்தப்படவில்லை” என்று நாடாளுமன்றத்திலேயே அறிவித்து விட்டனர். ஆதாரம் எதுவுமின்றி நாராயணசாமி, சிதம்பரம், மன்மோகன் ஆகியோர் புளுகியதற்கோ, அதற்காக உளவுத்துறைகள் கேடாகப் பயன்படுத்தப்பட்டதற்கோ எந்த விளக்கமும் தரப்படவில்லை.

ஆனால், அணுஉலைக்கு எதிராகப் போராடிய மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறை மற்றும் அவதூறுப் பிரச்சாரம் என்ற தொடர் ஓட்டக் குச்சியை (பேட்டனை) ஜெயலலிதாவும், தமிழக உளவுத்துறையும் கையேற்றுக் கொண்டனர். அமைதிவழி  உண்ணாவிரதப் போராட்டங்கள் மட்டுமே நடத்தியவர்கள் மீது நூற்றுக்கணக்கான பொய் வழக்குகள் போட்டு, பல ஆயிரம் போலீசாரை குவித்து, அதிரடிப்படையின் அணிவகுப்பு மிரட்டல் விடுத்து, குழந்தைகளுக்குப் பால் உள்ளிட்ட உணவுப் பொருள், மின்சாரம், குடிதண்ணீர் வழங்கீட்டைத் தடுத்து, ஏதோ பயங்கரவாதத் தடுப்புப் போல பாசிச அடக்குமுறையை ஏவிவிட்டனர். இதனால் ஏற்பட்ட எதிர்ப்பலைகளைத் திசை திருப்பிவிடுவதற்காக வழக்கமான அவதூறுப் பிரச்சாரத்துடன், போராட்டத் தலைமைக்கு நக்சலைட்டுகளுடன் தொடர்பு, நக்சலைட்டுகள் ஊடுருவல்  அதனால் தீவிரவாத  வன்முறை போராட்டங்களில் குதிப்பார்கள் என்று ஜெயாவின் உளவுத்துறையும் போலீசும் பீதியூட்டும் செயல்களில் இறங்கின.

இந்த அவதூறுக்கு ஆதாரமாக உளவுத்துறையே “முன்னாள் நக்சல்பாரிகள்” என்று சொல்லும் மூன்றுபேரைப்  பிடித்து, அவர்களிடம் வன்முறைக்கு வழிவகுக்கும் கடிதமும், வரைபடமும் சிக்கியதாகவும், போராட்டக்காரர்களிடையே நக்சல்பாரிகள் உள்ளதான “வீடியோ” ஆதாரங்களை ஆய்வு செய்வதாகவும் பலவாறு புளுகுகிறது. பிடிபட்டதாகக் கூறப்படும் எவரும் நக்சல்பாரி அமைப்பினர் அல்ல. போலி ஆதாரங்களைக் கண்டுபிடிப்பதும் பொய் வழக்குகள் புனைவதும் ஜெயலலிதாவின் உளவுத்துறைக்கும் போலீசுக்கும் கைவந்த கலை. கலைஞர் மற்றும் சன் குழுமங்களின் வானொளி அலைவரிசைகள் ஜெயாவின் இந்த அவதூறுப் பிரச்சாரத்தை விசுவாசமாக ஒலிஒளிபரப்புகின்றன.

அப்பாவி முஸ்லீம் இளைஞர்களைப் பிடித்து தீவிரவாதிகள் என்று சுட்டுக்கொல்வது; ஆர்.எஸ்.எஸ் குண்டுவெடிப்புகளுக்குப் பழிபோடுவது;  சீரழிந்த, அமைப்பு சாரா நபர்களைப் பிடித்து அவர்களைக் காட்டி நக்சல்பாரிகளை இழிவுபடுத்துவது  இதெல்லாம் போலீசு, உளவுத் துறையின் கைவரிசை.  வெளிநாட்டவர், நக்சல்பாரிகள் என்பதாலயே நாட்டு மக்களின் நியாயமான எந்தப் போராட்டங்களையும்  ஆதரிக்கக் கூடாதா? மக்கள் மீதான பாசிச அடக்குமுறைகளை எதிர்க்கக்  கூடாதா?  மக்களை ஒடுக்க முயலும் தேசிய, திராவிடக் கூட்டணிகள் அணுஉலைகளை விடவும் ஆபத்தானவை.

______________________________________________________

புதிய ஜனநாயகம், ஏப்ரல் – 2012

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும்

6
நுண்கடன் என்ற நவீன கந்துவட்டிக் கடன் சுரண்டலுக்குப் பலியான ஒரு இளம் விவசாயி
நுண்கடன் என்ற நவீன கந்துவட்டிக் கடன் சுரண்டலுக்குப் பலியான ஒரு இளம் விவசாயி

1995ஆம் ஆண்டு தொடங்கி 2010ஆம் ஆண்டு முடியவுள்ள 16 ஆண்டுகளில் இந்தியாவெங்கிலும் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 2,56,913 என அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது, தேசியக் குற்ற ஆவண ஆணையம்.  இப்பதினாறு ஆண்டுகளில், முதல் எட்டு ஆண்டுகளில் (1995-2002) தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 1,21,157;  அடுத்த எட்டு ஆண்டுகளில் (2003-2010) விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது முந்தையை எட்டு ஆண்டுகளை ஒப்பிடும்பொழுது, ஆண்டொன்றுக்குச் சராசரியாக 1,825 என்ற வீதத்தில் அதிகரித்து, 1,35,756ஐத் தொட்டுவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளது, அந்த ஆணையம்.  இப்புள்ளிவிவரத்தை நுணுகிப் பார்த்தோமானால், இப்பதினாறு ஆண்டுகளில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 44 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போயிருக்கும் அதிர்ச்சிகரமான உண்மை புலப்படும்.

இப்புள்ளிவிவரத்தோடு மைய அரசு வெளியிட்டுள்ள இன்னொரு புள்ளிவிவரத்தைச் சேர்த்துப் பார்ப்போம்.  2010 டிசம்பரில் 68,597.09 கோடி ரூபாயாக இருந்த பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன், அடுத்த ஒரே ஆண்டில், 2011 டிசம்பரில் 1,03,891.27 கோடி ரூபாயாக அதிகரித்துவிட்டது என நிதித்துறை இணை அமைச்சர் நமோ நாராயண் மீனா மாநிலங்களவையில் அறிவித்திருக்கிறார்.

இந்த வாராக் கடன் ஒருபுறமிருக்க, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டு, வசூலாகாமல் நிலுவையாக இருந்து வரும் கடன் தனிக் கணக்கு.  இதில், மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டு நிலுவையாக இருக்கும் கடன் 1,21,000 கோடி ரூபாய்.  விமானப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டு நிலுவையாக இருக்கும் கடன் 39,000 கோடி ரூபாய்.  இந்த 39,000 கோடி ரூபாய் கடனில் சமீபத்தில் போண்டியாகிப் போன கிங் ஃபிஷர் நிறுவனத்தின் பங்கு மட்டும் 7,000 கோடி ரூபாயாகும்.

தனியார்மயம்  தாராளமயம் எந்தளவிற்குத் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுகிறதோ, அந்தளவிற்கு விவசாயிகள் கந்துவட்டிக் கடனில் சிக்கிக்கொண்டு தற்கொலை செய்து கொள்வதும்; கார்ப்பரேட் முதலாளிகள் பொதுத்துறை வங்கிகளிடமிருந்து வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல் நாமம் போடுவதும் அதிகரித்திருப்பதை இந்தப் புள்ளிவிவரங்களிலிருந்து புரிந்து கொள்ளலாம்.  ஆனால், காங்கிரசு கூட்டணி அரசோ, “பொருளாதார மந்தத்தின் காரணமாகத்தான் கடன் பாக்கியும் வாராக் கடனும் அதிகரித்திருப்பதாக’’க் கூறி, கார்ப்பரேட் முதலாளிகளின் மோசடிகளை மூடிமறைக்க முயலுகிறது.  இன்னொருபுறம், கந்துவட்டிக் கடன் சுமையால் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டும் மோசடியிலும் சதித்தனத்திலும் அரசே ஈடுபட்டு வருகிறது.

குறிப்பாக, ஆந்திர மாநிலத்தில், ஒரு விவசாயி கடன் தொல்லையால்தான் தற்கொலை செய்து கொண்டார் என்று நிரூபிப்பதற்கு 13 சான்றாவணங்களைப் பெற வேண்டும் என்ற விதி உருவாக்கப்பட்டுள்ளது.  மகாராஷ்டிராவிலோ, கந்துவட்டிக் கடன் தொல்லையால் நேர்ந்த தற்கொலையா, இல்லையா என்பதை ஆராய்ந்து சான்றளிப்பதற்காகவே ஒரு அதிகார வர்க்கக் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.  இந்தத் தடைகளையும் மீறி, விவசாயிகளின் தற்கொலைச் சாவுகள் குறித்துத் தேசிய குற்ற ஆவண ஆணையம் வெளியிட்டு வரும் ஆதாரபூர்வமான புள்ளிவிவரங்களைத் திட்டமிட்டே புறக்கணிக்கின்றன, மைய, மாநில அரசுகள்; மேலும், தமது கைத்தடி அதிகாரிகள் தரும் புள்ளிவிவரங்களை மட்டுமே நாடாளுமன்றத்திலும் சட்டசபையிலும் அறிவித்து, விவசாயிகள் கடன் தொல்லையால்  தற்கொலை செய்து கொள்வது குறைந்து வருவதாக மாய்மாலம் செய்கின்றன.

இப்புள்ளிவிவர மோசடிகளுக்கு மட்டுமல்ல; கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்கும், விவசாயிகளின் அவல வாழ்க்கைக்கும் நாம் முடிவு காணுவது எப்போது?

______________________________________________________

புதிய ஜனநாயகம், ஏப்ரல் – 2012

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

லெனின் – தலைவர், தோழர், மனிதர்!

24

ஏப்ரல் 22: தோழர் லெனின் பிறந்த நாள் நினைவுக் கட்டுரை!

சாமானிய உழைப்பாளி மக்களை லெனின் நேசித்தார். லெனினது சவ அடக்கத்தின் போது இது பற்றி நதேஸ்தா கன்ஸ்தன்தீனவ்னா நன்றாகச் சொன்னார்:

”எல்லா உழைப்பாளர்களின் பாலும் அவரது நெஞ்சம் ஆர்வமிக்க அன்பு கொண்டு துடித்தது.”

சோவியத் அரசாங்கத்தின் தலைவராக இருந்த போது விளதீமிர் இலீச் (லெனினது இயற்பெயர்) தொழிலாளர்களுடனும் விவசாயிகளுடனும் விருப்பமுடன் உரையாடினார். மத்தியக் கமிட்டி உறுப்பினர்கள், மக்கள் கமிசாரவை உறுப்பினர்கள ஆகியோரின் கருத்தை அறிவது போன்றே தொழிலாளரின், விவசாயியின் மனநிலையை அறிவதும் அவருக்கு முக்கியமானதாகும்.

தொழிலாளர்களுடன் உரையாடுவதற்குக் குறிப்பாக விரும்பினார் விளதீமிர் இலீச். தமது சிந்தனைகளை அவர்களுடன் அவர் பகிர்ந்து கொண்டார். அவர்களது கருத்துக்களை மிகவும் மதித்தார்.

பெத்னதா (”ஏழ்மை”) என்ற பத்திரிகையில் வந்த விவசாயிகளின் கடிதங்களை உயர்வாக மதித்தார்.

”இவையல்லவா உண்மையான மனித ஆவணங்கள்! எந்தவொரு பேச்சிலும் நான் இதைக் கேட்க முடியாது!”

பெத்னதாவின் ஆசிரியராக இருந்த நான் விவசாயிகளின் கடிதங்களை அவரிடம் எடுத்து வரும்போது என்னிடம் அவர் இவ்வாறு சொன்னார். கிராமத்தில் வாழ்க்கை எப்படி இருக்கிறது, கிராமத்தின் தேவை என்ன என்று அவர் நீண்ட நேரம் கூர்ந்து கேட்பார். ஒரு கடிதத்தைக் கையிலெடுத்துக் கொண்டு கவனமாகப் பார்ப்பார். வ்பெரியோத், புரொலித்தாரி (”பாட்டளி”) என்ற பத்திரிகைகளுக்காக, தொழிலாளர்கள் எழுதிய கடிதங்களை எவ்வளவு ஆர்வமுடன் அவர் படித்தார், திருத்தினார் என்பது எனக்கு நன்கு நினைவிருக்கிறது.

1920 – 1921 பனிக்காலத்தில் நடந்த உரையாடல் குறிப்பாக என் நினைவில் பசுமையாக இருக்கிறது. இது கஷ்டமான காலம். உள்நாட்டுப் போர் முடிந்த நேரம். உழைப்பாளர்களின் தியாகங்களும் இழப்புக்களும் உச்சகட்டத்தை அடைந்திருந்த நேரம். பெத்னதாவுக்கு ஏராளமான கடிதங்களை எழுதியது கிராமம். ஒவ்வொரு கடிதத்தையும் பற்றி விளதீமிர் இலீச் என்னை நிறையக் கேள்விகள் கேட்டார்.

”இதோ, சோவியத் ஆட்சி ஜார் ஆட்சியை விட மோசம் என்று எழுதுகிறார்கள்” என்றேன் நான்.

”ஜார் ஆட்சியை விட மோசமா?” என்று திரும்பக் கேட்டுவிட்டுக் கண்களை நெரித்துக் சிரித்தார் விளதீமிர் இலீச். ”எழுதுவது யார்? குலாக்கா? மத்தியதர விவசாயியா?”

விவசாயிகள் கடிதங்களிலிருந்து மேற்கோள்கள் தந்து, கிராமத்திலுள்ள நிலைமை பற்றி விவரமான அறிக்கை சமர்ப்பிக்கும்படி அவர் கோரினார். உரையாடல் அத்துடன் முடிந்தது.

கட்டாயத் தானியக் கொள்முதல்* பற்றியும், விவசாயிகளின் கடிய நிலைமை பற்றியும் ஐம்பதுக்கு மேற்பட்ட கடிதங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. லெனினது சொந்த அறிக்கையில் இவை சேர்க்கப்பட்டன. விவசாயிகள் கடிதங்களின் பொழிப்பு வீணாகப் போகவில்லை என்று நான் விரைவில் உறுதி கொண்டேன். கட்சியின் 10-வது காங்கிரசில் லெனின் சமர்ப்பித்த கட்டாயத் தானியக் கொள்முதலுக்குப் பதிலாக உணவுப் பொருள் வரி விதிப்பது பற்றிய அறிக்கையைக் கேட்ட நான் விவசாயிகளின் கடிதங்களை லெனின் இதற்கு அடிப்படையாகப் பயன்படுத்தியிருக்கிறார் என்று பல சந்தர்ப்பங்களில் உணர்ந்தேன்.

அதிலிருந்து பெத்னதாவின் ஒழுங்கான அறிக்கைகள் தமக்குக் கிட்ட வேண்டும் என்று விளதீமிர் இலீச் கோரினார். விளதீமிர் இலீச் நுணுக்கி நுணுக்கி எழுதிய ஒரு துண்டுக் காகிதம் என்னிடம் இன்னும் இருக்கிறது. அதை அப்படியே கீழே தருகிறேன்.

”26.1.1922.

தோழர் கர்பீன்ஸ்கி!

பின்கண்டவை பற்றி எனக்குச் சுருக்கமாக (அதிகபட்சம் 2-3 பக்கங்கள்) எழுத மாட்டீர்களா? விவசாயிகளிடமிருந்து பெத்னதா பத்திரிகைக்கு எத்தனை கடிதங்கள் வந்திருக்கின்றன? முக்கியமாக (குறிப்பாக, முக்கியமாக), புதியதாக இக்கடிதங்களில் என்ன இருக்கிறது? அவர்கள் மனநிலை எப்படி? முக்கியமான பிரச்னை என்ன?

இரண்டு மாதத்திற்கு ஒருமுறை (அடுத்தது 15.3.1922) இத்தகைய கடிதங்கள் நீங்கள் எழுத முடியுமா?

அ. கடிதங்களின் சராசரி எண்ணிக்கை

ஆ. மனநிலை

இ. மிக முக்கியமான பிரச்னை.

கம்யூனிச வாழ்த்துக்களுடன்,
லெனின்”

 

லெனின்
விவசாயிகளுடன் தோழர் லெனின்

அரசு, கட்சிப் பணிகளில் மனித ஆற்றலுக்கு மேல் அதிகமாக ஈடுபடுத்தி உழைத்து வந்த விளதீமிர் இலீச் பார்வையாளர்களை வரவேற்கவும் நேரம் கண்டுபிடித்தார். தாமே அவர்களை வரவேற்று அவர்களுடன் உரையாடினார். அரசின் தலைவருக்கு இது அவசியம் என்று அவர் கருதியதால் மட்டும் இவ்வாறு அவர் செய்யவில்லை. மக்களுடன் உயிர்ப்புள்ள உரையாடல் நிகழ்த்த வேண்டிய ஒரு கட்டாயத் தேவையை அவர் உணர்ந்ததே இதற்கு முக்கியக் காரணம்.

நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் வாகனங்கள் மூலமாகவும் கால்நடையாகவும் விவசாயிப் பிரதிநிதிகள் லெனினிடம் வந்தார்கள். விவசாயிப் பிரதிநிதிகளைச் சந்திக்க விசேஷ தினம் வைத்திருந்தார் லெனின்.

குறித்த நாளில் கைத்தறித் துணிக் கோட்டுக்களும், மரவுரிச் சோடுகளும் அணிந்து தோள்களில் மூட்டை முடிச்சுகளுடன் அவர்கள் கிரெம்ளினுக்கு வந்தார்கள். மூட்டை முடிச்சுகளைத் தரையிலும் சுவற்றோரமாகவும் வைத்து விட்டு பதட்டத்துடன் கிசுகிசுத்துக் கொண்டு மக்கள் கமிசாரவைத் தலைவரை, விளதீமிர் இலீச்சைப் பார்ப்பதற்கு எப்போது தம்மை அழைப்பார்கள் என்று காத்திருந்தனர்.

சிறிது நேரமே அவர்கள் காத்திருக்க நேர்ந்தது. விரைவில் அவர்கள் கூப்பிடப்பட்டார்கள். இடுப்பு வார்களை இழுத்துக் கட்டியபடி, உள்ளங்கையால் தலைமுடியை நீவிவிட்டுக் கொண்டு மரியாதையுடன் லெனினது அறைக்குள் அவர்கள் நுழைந்தார்கள். அவரோ மேசைக்குப் பின்னாலிருந்து அவர்களை நோக்கி எழுந்து வந்தார். ஒவ்வொருவருடனும் அன்புடன் கை குலுக்கிவிட்டு, விருந்தினர்களை உட்கார வைத்தார்.

”தாத்தா, நீங்கள் இந்தச் சாய்வு நாற்காலியில் உட்காருங்கள்!”

ஒவ்வொருவரின் பெயரையும், குடும்பப் பெயரையும், தந்தை பெயரையும், அவர் எங்கிருந்து வருகிறார் என்படையும் விளதீமிர் இலீச் கேட்டார். எளிய மனப்பூர்வமான உரையாடல் தொடங்கியது.

விளதீமிர் இலீச் எல்லோரையும் நினைவில் வைத்துக் கொண்டு ஒவ்வொருவரையும் குடும்பப் பெயர், தந்தை பெயர் சொல்லி அழைத்தது வந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது. அவர்களது கிராமங்களின் தேவைகள் என்ன என்றும், அவர்களிடம் இருக்கும் நிலம் எத்தகையது என்றும் அவர் அறிந்திருந்ததும் அவர்களைச் சுரண்டுகிற நிலச்சுவான்தாரரின் பெயரையும் கூட விளதீமில் இலீச் சொன்னதும் விவசாயிகளை இன்னும் அதிகமாக வியப்பில் ஆழ்த்தியது. நாட்டின் ஒவ்வொரு பிரதேசத்தின் பொருளாதாரத்தையும் மிகவும் நன்றாக லெனின் ஆய்வு செய்திருந்தார் என்பது பற்றி விவசாயிகட்கு எதுவும் தெரியாது.

வரவேற்பறையில் ஒருநாள் பின்கண்ட சம்பவம் நடந்தது. வந்தவர்களில் ஒருவர் திடீரென்று குதித்தெழுந்து மிகவும் பதற்றத்துடன் சொன்னார்:

”தோழர் லெனின், இதெல்லாம் என்ன?! அவர்கள் எங்களை முன் போலவே கசக்கிப் பிழிகிறார்கள், கசக்கிப் பிழிகிறார்கள்!”

விளதீமிர் இலீச்சுக்கு ஒன்றும் பிரியவில்லை.

”இவான் ரதியோனவிச், அமைதி கொள்ளுங்கள். என்னவென்று விளக்கிச் சொல்லுங்கள். அவர்கள் என்பது யார்?”

”யார் என்கிறீர்களா? எங்கள் கிராம சோவியத்துக் காரர்கள்! அநியாய வரிகள் தண்டி எங்களை வாட்டி வதைக்கிறார்கள்!”

”அவர்களைத் தேர்ந்தெடுத்து யார்?”

”நாங்கள்தான். வேறு யார்?…”

”வேறு ஆட்களைத் தேர்ந்தெடுங்களேன்!”

”அப்படி முடியுமா என்ன?”

”முடியும். அப்படித்தான் செய்ய வேண்டும். மக்களின் நம்பிக்கைக்கு நியாயமாக நடந்து கொள்ளாத எந்த சோவியத் பிரதிநிதியையும், அவரது பணியின் காலம் முடிவதற்குள் ஒதுக்கி வேறொருவரைத் தேர்ந்தெடுக்க சோவியத் சட்டம் அனுமதிக்கிறது. இதுதான் விஷயம், இவான் ரதியோனவிச்!”

இத்தகைய உரையாடல்களுக்குப் பின்பு அவசியமான சந்தர்ப்பங்களில் உடனடியாக ஆணைகள் பிறப்பித்தார் விளதீமிர் இலீச். தொழிலாளர்கள், விவசாயிகளுடன் நடந்த உரையாடல்களில் கிடைத்த தகவல்கள் அவ்வப்போது தீர்மானங்கள் நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகத் திகழ்ந்திருக்கின்றன.

___________

(*கட்டாயத் தானியக் கொள்முதல் – உணவுப் பொருள் சேகரிப்பதற்காக அரசு கடைப்பிடித்த நிர்ப்பந்த முறை. அன்னிய இராணுவத் தலையீட்டின் போது, உள்நாட்டுப் போரின் போது (1918 – 1921) இம்முறையைச் சோவியத் அரசு கடைப்பிடித்தது. விவசாயிகளிடமிருந்த அதிகப்படியான உணவுப் பொருளையும், தீவனத்தையும் நிர்ணயமான ஒரு விலை கொடுத்து அரசு எடுத்துக் கொண்டது. 1921-ல் கட்டாயத் தானியக் கொள்முதலுக்குப் பதிலாக நிர்ணயமான உணவுப் பொருள் வரிவிதிக்கப்பட்டது. இது விவசாயிகட்கு அதிக அனுகூலமானது. –

*V.I.Lenin, collected works, “To V.A.Karpinsky”, Vol. 35, p.543.-

__________________________________________________________________

– கர்பீன்ஸ்கி,
“லெனின் சமகாலத்தவர்களின் நினைவுகள்” – நூலிலிருந்து.

__________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

‘இந்துக்களே’, மரத்துப் போனதா உங்கள் மனசாட்சி?

308

முஸ்லிம்முஸ்லீம்கள் என்றாலே பயங்கரவாதிகள், சந்தேகத்துடன் பார்க்கப்பட வேண்டியவர்கள், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்  இதுதான் இன்று நாட்டு மக்களின் பொதுப்புத்தியில் முஸ்லீம்கள் மீதான அபிப்பிராயமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எங்கே எப்போது குண்டு வெடித்தாலும் முதலில் கைது செய்யப்படுவது அப்பகுதியில் வாழும் இஸ்லாமியர்கள்தான். எல்லா குண்டுவெடிப்புகளுக்கும் காரணம் முஸ்லிம் தீவிரவாதிகள்தான் என ஆளும் வர்க்கமும்  ஊடகங்களும் உடனே தீர்ப்பெழுதிவிடுகின்றன.

ஆனால் உண்மையில் குண்டு வெடிப்புகளில் கைது செய்யப்படுபவர்களில் பலர் அப்பாவி இஸ்லாமியர்கள். பல ஆண்டுகளைச் சிறைச்சாலையில் கழித்த பின்னர் வழக்கிற்கும் இவர்களுக்கும் சம்பந்தமில்லை எனக் கூறி இவர்களில் பலர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். முஸ்லீம் என்ற ஒரே காரணத்திற்காக செய்யாத குற்றத்திற்குத் தங்களது வாழ்நாளை இழந்தவர்கள் கோவை முதல் தில்லி வரை இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரது துயரக் கதைதான் இது.

முகமது அமீர்; 18 வயதில் நாட்டை அச்சுறுத்திய மிகப்பெரிய தீவிரவாதி எனக் கைது செய்யப்பட்டு 14 ஆண்டுகளைத் தனிமைச் சிறையில், இருட்டில் கழித்த இவர், கடந்த ஜனவரி மாதம் அப்பாவி என விடுவிக்கப்பட்டுள்ளார்.

1996 டிசம்பர் முதல் 1997 அக்டோபர் வரை பத்து மாத காலத்தில், தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட சிறிய குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் 5 பேர் கொல்லப்பட்டனர். இவற்றில் 5 குண்டுகள் ஓடும் பேருந்துகளில் வெடித்தன. 1997ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மட்டும் 10 குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன; இவற்றில் 5 ஒரே நாளில் வெடித்தன. அதுவும் வெவ்வேறு இடங்களில். ஒரே நேரத்தில் தில்லியின் சதார் பஜார் பகுதியிலும்,  காசியாபாத் பகுதியிலும் குண்டுகள் வெடித்தன. இதுபோல அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்புகள் ஒரே நேரத்தில் நடந்தன. காசியாபாத்தில் நடந்த குண்டுவெடிப்பு ஓடும் ரயிலில், அதுவும் வெவ்வேறு பெட்டிகளில் நடந்தது.

ஓராண்டு வரை தொடர்ச்சியாக நடந்த இந்தக் குண்டுவெடிப்புகளில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் தில்லி போலீசார் திணறினர். இந்தச் சூழலில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்த பகுதியிலிருந்த அமீர் ஒரு முறை பாகிஸ்தான் சென்று திரும்பியது போலீசின் கண்களை உறுத்தியது. உண்மையில் பாகிஸ்தானில் மணம் முடித்துள்ள தனது சகோதரி வீட்டுக்குத்தான் அமீர் சென்று வந்தார். அதுவும், மேற்கூறிய குண்டு வெடிப்புகள் எல்லாம் முடிந்த பின்னர் 1997ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில்தான் அவர் அங்கே சென்றார். ஆனால் அமீர், பாகிஸ்தான் சென்று குண்டு வைக்கப் பயிற்சி எடுத்து வந்து  இந்தியாவில் குண்டுவைப்புகளில் ஈடுபட்டதாகக் கூறி அவரைப் போலீசார் கைது செய்தனர்.

1998ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அமீர் கைது செய்யப்பட்டார். அவர்மீது கொலை, பயங்கரவாதம், அரசுக்கு எதிராகப் போரிட்டது ஆகிய பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 20 குண்டுவெடிப்பு வழக்குகளில் அமீர் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். இந்த குண்டு வெடிப்புகள் அனைத்தையும் அமீர், அவரது கூட்டாளி சகீலுடன் இணைந்து நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் 10 வழக்குகளில், விசாரணை துவங்கும் முன்னரே சகீல் விடுவிக்கப்பட்டார். அதுமட்டுமன்றி, 2009ஆம் ஆண்டு தாஸ்னா சிறைச்சாலையில் சகீல் பிணமாகத் தொங்கினார்.  அந்தச் சிறைச்சாலையின் கண்காணிப்பாளர் வி.கே.சிங் மீது சகீலைக் கொலை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமீரின் வழக்கறிஞரான என்.டி.பன்சோலி கடந்த 35 ஆண்டுகளாகக் குற்றவியல் வழக்கறிஞராக உள்ளார். இது போன்றதொரு வழக்கைத் தனது அனுபவத்தில் பார்த்ததே இல்லை எனக் கூறும் அவர், ஒரு 18 வயது சிறுவன் தனியாகத் திட்டமிட்டு 20 குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியதாக, எவ்வித ஆதாரமும் இன்றி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்.

நீண்ட நெடிய சட்டப்போராட்டத்திற்குப் பின், இறுதியாக அமீர் சிறைச்சாலையை விட்டு வெளியே வந்துள்ளார். அவர் மீது போடப்பட்ட 20 வழக்குகளில் 18லிருந்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இவற்றில் 17 வழக்குகளில் அவருக்கு எதிராக ஒரு சாட்சியைக் கூட அரசால் காட்ட முடியவில்லை. எஞ்சியுள்ள இரு வழக்குகளிலும் இதே நிலைதான்.

இத்தனை ஆண்டுகளையும் அவர் தனிமையில், இருட்டுச் சிறையில் கழித்துள்ளார். சிறைக்கொட்டடியே அவரது உலகமாக இருந்தது. ஆனால் சிறைச்சாலைக்கு வெளியிலிருந்த உலகம் 14 ஆண்டுகளில் வெகுவாக மாறிப் போயிருந்தது. அவர் பிறந்து வளர்ந்த தில்லி மாநகரம் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருந்தது. அமீரின் தந்தை நோய்வாய்ப்பட்டு இறந்தது கூட அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. அவரது தாய் மூளைக் கோளாறால் பக்கவாதத்தில் பாதிக்கப்பட்டு, ஊமையாகியிருந்தார். இதுவும் சிறையிலிருந்த அமீருக்குத் தெரிந்திருக்கவில்லை.

அமீரின் மீது போடப்பட்ட 20 வழக்குகளில் எதிலாவது அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டிருந்தால் கூட, அவருக்கு வெறும் 10 ஆண்டுகள்தான் தண்டனை கிடைத்திருக்கும். ஆனால் அவர் எல்லா வழக்கிலும் நிரபராதி என விடுவிக்கப்பட்டாலும் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்துள்ளார்.

முஸ்லிம்அமீரைப் போன்றே இன்னும் எத்தனையோ அப்பாவி முஸ்லீம்கள் போலீசால் குற்றவாளிகளாகச் சித்தரிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கோவை குண்டுவெடிப்பு வழக்கி பல அப்பாவிகள் பல ஆண்டுகளைச் சிறையில் கழித்த பின்னர் நிரபராதிகள் என விடுவிக்கப்பட்டுள்ளனர். 10 ஆண்டுகால சிறைவாசத்தில் வெளியே எல்லாம் மாறிவிட, விடுதலையாகி வந்த பின்னர் அவர்களது வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிட்டது.

அமீர் மீதான 20 வழக்குகளும் சிறிய அளவிலான வெடிகுண்டு தாக்குதல்கள் தான். இது போன்ற சிறிய குண்டுகளை ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவா கும்பல் பல இடங்களில் வைத்துள்ளது என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மாலேகான், அஜ்மீர், நாந்தேடு, தானே, கோவா, ஹைதராபாத், கான்பூர், பானிபட், சம்ஜௌதா எக்ஸ்பிரஸ்   என இந்து மதவெறியர்களின் தாக்குதல்கள் நீண்டு கொண்டே செல்கின்றன. ஆனால் எல்லா இடங்களிலும் முதலில் கைது செய்யப்பட்டவர்கள் முஸ்லீம்கள்தான். ஹைதராபாத் மற்றும் உ.பி.யில் நடந்த பல சம்பவங்களில் இஸ்லாமிய சமூகத்தில் முன்னணியில் நின்று போராடுபவர்களைக் குறிவைத்துப் போலீசார் கைது செய்தனர். அவர்கள் நிரபதிகள் என்ற போதும் வழக்கிலிருந்து வெளிவர, குறைந்தது 10 ஆண்டுகளாவது ஆகும் என்பதால் இதை வைத்து அவர்களை முடக்கிவிட அரசு முயற்சிக்கிறது.

வழக்குகளில் குற்றமற்றவராக விடுதலை செய்யப்படுபவர் அனுபவித்த சிறைத் தண்டனை குறித்து யாரும் கவலைப்படுவதில்லை; அதற்கு யாரும் பொறுப்பாக்கப்படுவதில்லை. இதனால் அப்பாவி முஸ்லீம்களை அச்சுறுத்த குண்டு வெடிப்புகளை ஆளும் வர்க்கம் பயன்படுத்திக் கொள்கிறது. இவையெல்லாம் இந்திய அரசும் ஆளும் வர்க்கமும் முஸ்லீம்களை இரண்டாந்தரக் குடிகளாகப் பார்ப்பதையே நிரூபித்துக் காட்டுகின்றன.

___________________________________________

புதிய ஜனநாயகம், மார்ச் – 2012

___________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

_____________________________________________________

_____________________________________________________

_____________________________________________________

_____________________________________________________

_____________________________________________________

முகமது கடாபிக்கு டோனி பிளேயர் கொடுத்த அன்புப் பரிசு!

2
டோனி பிளேர்-கடாபி
பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேயர் 2007ல் லிபிய தலைவர் கடாஃபியை சந்திக்கிறார். புகைப்படம்: ஸ்டீபன் ரோஸ்ஸியொ / PA

திங்கள் கிழமை ஒளிபரப்பான நவீன உளவாளிகள் நிகழ்ச்சி பயங்கரவாதத்தின் மீதான போர் எந்த அளவுக்கு சட்டமில்லா பள்ளத்தாக்கில் வீழ்ந்திருக்கிறது என்பதை உணர்த்தும் ஒரு குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை வழங்கியது. 2004-ம் ஆண்டு, அப்போதைய லிபிய அதிபர் கடா்பியின் எதிரியான, வெளிநாட்டில் வாழ்ந்து வந்த அப்துல் ஹக்கீம் பெல்ஹாஜை கடத்துவதற்கு பிரிட்டனின் உளவு நிறுவனம் எம்ஐ6, சிஐஏ மூலம் ஏற்பாடு செய்தது. அதன் மூலம் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேயர் கர்னல் கடாபியை சந்தித்து நட்பை உருவாக்கிக் கொள்வதற்கான பாதையை எம்ஐ6 போட்டுக் கொடுத்தது.

பெல்ஹாஜூம் அவரது மனைவியும் பிரிட்டனுக்கு போகும் வழியில் பாங்காக்கில் பிடிக்கப்பட்டனர். பிரிட்டிஷ் காலனியான டியேகோ கார்சியா வழியாக திரிபோலியின் தாஜௌரா சிறைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். பெல்ஹாஜ் ஆறு ஆண்டுகளும், அவரது மனைவி நான்கரை மாதங்களும் கடாபியின் பாதுகாப்புத் தலைவர் மௌசா கௌசாவின் கருணை நிறைந்த பாதுகாப்பில் கழித்தார்கள். கர்ப்பமாக இருந்த பெல்ஹாஜின் மனைவி ஒரு மம்மியை போல ஸ்ட்ரெச்சரில் கட்டி வைக்கப்பட்டிருந்தார், பெல்ஹாஜ் முறையாக சித்திரவதை செய்யபட்டார். சித்திரவதையில் தனக்கு எந்த ஈடுபாடும் இல்லை என்று கௌசா இப்போது மறுத்திருக்கிறார்.

இந்த பரிசுடன் வந்த எம்ஐ6-ன் மார்க் ஆலனின் கடிதம் விமான தபால் (பெல்ஹஜ்) பாதுகாப்பாக வந்து சேர்ந்ததற்கான வாழ்த்துக்களை கௌசாவுக்கு தெரிவித்தது. “பல ஆண்டுகளாக நாம் வளர்த்துக் கொண்ட தனிச் சிறப்பான உறவை வெளிப்படுத்த நாங்கள் உங்களுக்கும் லிபியாவுக்கும் செய்யும் குறைந்தபட்ச சேவை இதுதான்” என்று அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. அடுத்த இரண்டு வாரங்களுக்குள், பல்லை இளித்துக் கொண்டு வந்த பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேயரை, கடாபி தனது பிரபலமான பாலைவன கூடாரத்தில் வரவேற்றார். பயங்கரவாதத்தை கை விடுவதாகவும், பேரழிவு ஆயுதங்களுக்கான திட்டங்களை கை விடுவதாகவும் கடாபி அறிவித்தார். அந்தத் திட்டங்கள் போலியானவையாக இருந்திருக்கலாம், ஆனால் அந்த ஒப்பந்தம், ஈராக் ஆக்கிரமிப்பு மோசமாக போய்க் கொண்டிருந்த கால கட்டத்தில் டோனி பிளேயர் வாஷிங்டனில் தலை நிமிர்ந்து நடக்க உதவியது.

இந்த வினோதமான உறவின் மற்ற விபரங்கள் போலியாக இருக்கவில்லை.

1. பிரிட்டன் பெல்ஹாஜை கடாபியிடம் கொண்டு சேர்த்தது மட்டுமின்றி, லிபியாவின் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்கியது.

2. அடுத்த சில மாதங்களுக்குள் கடாபி, எம்ஐ6 அதிகாரியாக இருந்து அரசாங்கத்தின் முழு ஒப்புதலுடன் பிரிட்டிஷ் பெட்ரோலியத்தின் (BP) ஆலோசகராக பொறுப்பேற்றிருந்த ஆலன் துணையுடன் வருகை புரிந்த  பிரௌன் பிரபுவை லிபியாவுக்கு வரவேற்றார்.

3. மூன்று ஆண்டுகளுக்கு பிறகு பிரிட்டிஷ் பெட்ரோலியத்தின் 15 பில்லியன் டாலர் ஒப்பந்தம் உடைந்து போகும் அபாயம் ஏற்பட்ட போது, ஆலன் லிபியாவைச் சேர்ந்த லாக்கர்பீ குண்டு வெடிப்பாளர் அப்துல் பாஸ்த் அல் மெக்ராஹியை விடுதலை செய்யும்படி தனது முன்னாள் எஜமான் ஜாக் ஸ்ட்ராவிடம் வலியுறுத்தினார்.

4. கடாபியின் உலகப் புகழை உயர்த்த உதவிய மானிடர் கன்சல்டன்சியின் மூத்த ஆலோசகராக ஆலன் இருந்தார் . அந்த கன்சல்டன்சி லண்டன் பொருளாதார கல்லூரிக்கு ஆலோசனை வழங்கியது. லண்டன் பொருளாதார கல்லூரியின் ஆலோசனைக் குழுவில் ஆலன் பங்கேற்றிருந்த நேரத்தில் கடாபியின் மகன் பெரிதும் போற்றப்பட்ட தனது பிஎச்டி பட்டத்தை அங்கிருந்து பெற்றார்.

2011 ல், கடாஃபியின் ஆட்சி வெளிப்படையாக தள்ளாடியபோது பிரிட்டன் அமைதியாக அவரை கைவிட்டது. பொருளாதாரத் தடைகள் மீண்டும் விதிக்கப்பட்டன. ஆனால் திரிபோலி வீழ்ந்த போது 2004 சந்திப்பு குறித்த ஆவணங்களை தேடி கைப்பற்றும்படி அங்கிருந்த நேட்டோவின் சிறப்புப் படைகளுக்கு உத்தரவிட யாருக்கும் தோன்றவில்லை. எம்ஐ6க்கு பெரும் அதிர்ச்சியளிக்கும் விதமாக, அங்கு முதலில் போய்ச் சேர்ந்த மனித உரிமை கண்காணிப்பகம் ஆலனின் கடிதத்தை கண்டு பிடித்து பத்திரிகையாளர்களிடம் கொடுத்தது.

இன்னும் மோசம் என்னவென்றால், பெல்ஹாஜ் சிறையிலிருந்து வெளி வந்து இப்போது த்ரிபோலி இராணுவக் குழுவின் தலைவராக இருக்கிறார். அதை விட மோசம், அவரது பழைய எதிரி கௌசா, கடாபி வீழ்ந்த போது புத்திசாலித்தனமாக கட்சி மாறியிருந்தார். அவர் நடந்தவற்றில் பிரிட்டிஷாரின் பங்கு பற்றிய பெல்ஹாஜின் சந்தேகங்களை உறுதி செய்தார்.

பெல்ஹாஜ் தனது மனக் குறைகளை மூடி வைத்துக் கொள்பவராக இல்லாமல் ‘சித்திரவதைக்கு உடந்தை’, ‘மக்கள் பொறுப்பில் முறைகேடு’ என்ற குற்றச்சாட்டுகளை வைத்து ஆலன் மீதும் பிரிட்டிஷ் அரசு மீதும் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது வாயை மூட பிரிட்டிஷ் அரசாங்கம் அவருக்கு 10 லட்சம் பிரிட்டிஷ் பவுண்டு (சுமார் 8 கோடி ரூபாய்கள்) வழங்கியதை வாங்க மறுத்து விட்டிருக்கிறார். பீதி மற்றும் குளறுபடிகள் நிறைந்த இந்த கதை ஸ்மைலியின் மக்களை (1979ல் வெளியான உளவாளி நாவல்) தோற்கடித்து விடுகிறது.

எம்ஐ6 வழக்கம் போல, ‘அமைச்சரவை அங்கீகரித்த அரசு கொள்கையை மட்டுமே தான் பின்பற்றுவதாக’ சொல்கிறது. அந்த கால கட்டத்தில் இதனுடன் தொடர்புள்ள அமைச்சர்கள் வெளியுறவுத்துறை செயலர் ஜாக் ஸ்ட்ரா மற்றும் பிரதம மந்திரி டோனி பிளேயர். அவர்களுக்கு 2004-ல் கடாபியின் தலைகீழ் மன மாற்றம் பற்றியும் அதற்கான காரணம் பற்றியும் முழுமையாக விளக்கப்பட்டிருக்க வேண்டும். பெல்ஹாஜின் கடத்தல் மற்றும் சித்திரவதை பற்றி அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை என்று மறுக்கிறார்கள். அந்த நிகழ்வும் மெக்ராஹியின் விடுதலையும் எண்ணெய் வர்த்தகத்துக்கான (பெட்ரோல்) பதில் உதவி என்பதை மறுத்தார்கள். ‘அமைச்சர்களுக்கு பொறுப்பு இருக்கலாம் ஆனால் அவர்களுக்கு எல்லாம் தெரிந்திருக்க முடியாது’ என்று புகார் சொல்லும் குரலில் சொல்கிறார்கள்.

‘அவரது எஜமானர்கள் மிகத் தீவிரமாக விரும்பியதைத்தான் அவர் செய்தார்’ என்று ஆலனை நியாயப்படுத்தலாம்.

2004-ல் டோனி பிளேயர் வாஷிங்டனுக்கு அடிமைப்பட்டிருந்தார். போராடும் இஸ்லாமுக்கு எதிரான ஜார்ஜ் புஷ்ஷின் சிலுவைப் போரில் தன் பங்குக்கு ஒரு வெற்றியை காட்ட தவித்துக் கொண்டிருந்தார். அந்த காலத்தில் சிஐஏயின் சிறை பிடிக்கும் விமானங்கள் முஸ்லீம் கைதிகளை தரையில் கட்டி வைத்துக் கொண்டு உலகை வலம் வந்து கொண்டிருந்தன. அத்தகைய சூழலில் கருணை பொருந்திய ஒரு சர்வாதிகாரிக்கு பரிசாக இன்னொரு தம்பதியை பலி கொடுப்பது பெரிய விஷயமாக தோன்றவில்லை. இதைப் பற்றிய விபரங்களை ஜாக் ஸ்ட்ராவிடம் ஆலன் தெரிவித்தாரா என்பதை அவரோ ஜாக் ஸ்ட்ராவோ இதுவரை சொல்லவில்லை. ஆலன் எம்ஐ6-ன் தலைவராகும் முயற்சியை ஜாக் ஸ்ட்ரா ஆதரித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்போதைய வெளியுறவு செயலாளர் வில்லியம் ஹேக், இதைப் பற்றி கருத்து சொல்ல மறுப்பதற்கு பெல்ஹாஜின் நீதி மன்ற வழக்கை ஒரு சாக்காக பிடித்துக் கொண்டார். ‘மொத்த விஷயமும் நீதி மன்றத்தில் இருக்கிறது’ என்று பெரிய புன்னகையுடன் அவர் சொன்னார். அவர் கருத்து சொல்வது வழக்கை பாதிக்கும் என்று  என்று கருதுவது, வழக்கு வெளிப்படையாக நடத்தப்படும் என்ற ஊகத்தில்தான். ஆனால், இது போன்ற வழக்குகளை ரகசியமாக நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டுகிறது என்கிறது அமைச்சரவை.

புதை மணல் இன்னமும் கெட்டியாகிறது. பிப்ரவரி 22 அன்று, லண்டனில் இருக்கும் மேல் முறையீடு நீதிமன்றம் (பிரபுக்கள் சபை) “பயங்கரவாதத்தின் மீதான போர்” தன்னையும் வசியப்படுத்தியிருப்பதை வெளிப்படுத்தியது.  இணையத்தில் “பயங்கரவாதம்” பற்றிய தகவல்களை பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்ட லண்டன் பல்கலைக்கழக மாணவர் முகமது குல்லுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை அது உறுதி செய்தது. பரிதாபத்துக்குரிய, தனது செயல்களுக்கு வருத்தம் தெரிவித்த முகமது குல்க்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை கொடுத்ததோடு நின்று விடாத மாண்புமிகு பிரபுக்கள், பயங்கரவாதத்தின் மீதான போர் பற்றிய அரசியல் கோட்பாட்டை விவரிக்கவும் செய்தார்கள்.

“பயங்கரவாதத்தின் மீதான போர் குல் போன்றவர்கள் மீது மட்டும் நடத்தப்படவில்லை. உலகின் எந்தப் பகுதியிலும் ஆயுதப் படைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கும் கிளர்ச்சியாளர்கள் அனைவருக்கும் அது பொருந்தும். அத்தகைய நடவடிக்கைகள் அரசியல் நோக்கங்களுக்காக அந்த நாட்டு அரசாங்கத்தை பாதிப்பதாக இருந்தால் அவை பயங்கரவாதத்துக்கு எதிரான போரின் ஒரு பங்காகவே கருதப்பட வேண்டும்”. பயங்கரவாதம் என்பது வன்முறை செயல்கள் மட்டும் இல்லை. ‘அரசியல் அல்லது மத அல்லது இன அல்லது சித்தாந்த வேறுபாடுகளை தீர்த்துக் கொள்வதற்காக முன் வைக்கப்படும் எந்த ஒரு அச்சுறுத்தலும் அதன் வரையறையில் அடங்கும். இந்த அச்சுறுத்தல்கள் “ஒரு மின்னணு கட்டமைப்புக்கு (இணையம்) தீவிர பாதிப்பை ஏற்படுத்துவது’ ‘பொது சுகாதாரம் அல்லது பொது பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிப்பது’ போன்ற செயல்களையும் உள்ளடக்கியவை.

அனைத்தையும் உள்ளடக்கிய இந்த வரையறையில் எந்த ஒரு அரசாங்கத்துக்கு எதிராக கிளர்ச்சி செய்யும் மாற்றுக் கருத்தாளர்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்கள். ஆயுதக் கிளர்ச்சியின் மூலம் ராணுவத்தை தாக்குபவர்கள் யாரையும் பயங்கரவாதி என்ற வரையறையிலிருந்து ஒதுக்க முடியாது என்று தோன்றுவதாக பிரபுக்கள் குறிப்பிட்டனர். குர்துகள், கோசோவர்கள், பெங்காசியர்கள், திபெத்தியர்கள், இரானிய போராளிகள், இன்றைய சிரிய எதிர்க் கட்சியினர் அனைவருக்கும் அதுதான் தலைவிதி. அவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள்தான்.

இது முட்டாள்தனமானது. முகமது குல்லின் பின் லாடன் பற்றிய பகற்கனவுகள் கடாபியை எதிர்த்த பெல்ஹாஜின் எதிர்ப்புக்கு எந்த வகையிலும் ஈடானவை அல்ல. ஆனால் இரண்டு பேருமே பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கையாட்களால் பிடிக்கப்பட்டு சிறைப்படுத்தப்பட்டார்கள்.

அவர்களுடன் கூடவே உலகெங்கும் சர்வாதிகார அரசுகளுக்கு எதிராக போராடும் அந்த அரசுகளின் ‘ஆயுதப் படைகளுக்கு’ தீங்கு விளைவிக்க எண்ணிக் கொண்டிருக்கும் கோடிக் கணக்கான மக்கள் இந்த சட்ட புதைகுழியில் சிக்கியிருக்கிறார்கள். போராடும் ஒவ்வொரு மாணவரும் பயங்கரவாதி, ஒவ்வொரு இணைய ஹேக்கரும், டீக்கடையில் மாற்றுக் கருத்து பேசுபவரும் சுதந்திர போராட்ட வீரர் அல்லது மற்றும் கிளர்ச்சி படைத் தலைவர். பயங்கரவாதத்தின் மீதான போர் தான் கை வைக்கும் அனைத்தையும் கெடுக்கிறது. நாடாளுமன்றம் ஒடுக்குமுறைக்கான அரிவாளின் ஒவ்வொரு திருகுக்கும் ஒப்புதல் அளிக்கிறது.

___________________________________________________________________________

நன்றி: சைமன் ஜென்கின்ஸ் – கார்டியன்

தமிழாக்கம்: அப்துல்.

___________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

அதிகரிக்கும் போலீசு கண்காணிப்பு: பாசிமயமாகும் அரசு!

70
போலீசு கண்காணிப்பு
சென்னை-என்கவுண்டர்
என்கவுண்டர் செய்யப்பட்ட வடமாநில இளைஞர்கள்

சென்னை  வேளச்சேரியில் ஐந்து வடமாநில இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போலி மோதல் கொலை, திருப்பூரில் ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடையில் நடந்த திருட்டு ஆகிய இரண்டு சம்பவங்களுக்குப் பின், வட மாநிலங்களில் இருந்து பிழைப்பு தேடி வந்திருக்கும் கூலித் தொழிலாளர்கள், தமிழகத்தில் உயர் கல்வி படித்துவரும் வட மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஆகியோர் பற்றிய விவரங்களைப் பதிவுசெய்வதைக் கட்டாயமாக்கி உத்தரவிட்டுள்ளது, தமிழக போலீசு.  சென்னை, திருப்பூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் வடமாநிலக் கூலித் தொழிலாளர்கள் பற்றிய விவரங்களைப் பதிவு செய்வதைத் தமிழக போலீசு அதிகாரிகளே நேரடியாக நடத்தி வருகின்றனர்.

வட மாநிலக் கூலித் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளில் அதிரடியாகப் புகுந்தும், அவர்களைத் திருமண மண்டபங்கள் போன்ற இடங்களுக்கு வலுக்கட்டாயமாக ஓட்டிவந்தும் இப்பதிவினை போலீசார் நடத்தி வருகின்றனர்.  வட மாநிலத் தொழிலாளர்களின் பிறந்த ஊர், தொழில், தற்போதைய முகவரி, கைபேசி எண்கள் ஆகியவற்றோடு, அவர்களின் விரல் ரேகைகளும் போலீசாரால் வலுக்கட்டாயமாகப் பதிவு செய்யப்படுகின்றன.  தமிழகத்திலுள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் தற்பொழுது கணக்குப் பாடம் நடைபெறுகிறதோ இல்லையோ, வடமாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களைக் கணக்கெடுக்கும் பணி மும்மரமாக நடைபெற்று வருகிறது.

தமிழக அரசும், போலீசும் தயாரித்து வரும் இந்த “சந்தேக லிஸ்டு” வடமாநிலத் தொழிலாளர்கள், மாணவர்களோடு மட்டும் நின்றுவிடவில்லை.  சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வாடகைக்கு குடியிருந்து வரும் குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் பற்றிய விவரங்களை அவர்களது புகைப்படம், கைபேசி எண்களோடு பெற்று அருகிலுள்ள போலீசு நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என சென்னை மாநகர போலீசு வீட்டு உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.  இந்த விவரங்களைக் கொடுக்கத் தவறும் வீட்டு உரிமையாளர்களுக்கு ஒரு மாத சிறைத் தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்றும் போலீசு எச்சரித்துள்ளது.

ஈழத் தமிழர்கள் விடுதலைப் புலிகளாக அல்லது அவர்களின் ஆதரவாளர்களாக, முசுலீம்கள் தீவிரவாதிகளாகச் சந்தேக வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டு ஒரு பொதுக்கருத்து உருவாக்கப்பட்டதைப் போல, வடமாநிலக் கூலித் தொழிலாளர்களைக் கொள்ளையர்களாகவும், வாடகைக்குக் குடியிருப்போரைச் சந்தேகத்துக்கு உரியவர்களாகவும் முத்திரை குத்துகிறது, தமிழக போலீசின் இந்த உத்தரவு.  இது, குடிமக்களின் சுதந்திரமாக நடமாடும் உரிமை மற்றும் குடிபெயரும் உரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது; இனப் பாகுபாடு மற்றும் வர்க்கப் பாகுபாட்டை அடிப்படையாகக் கொண்ட ஜனநாயக விரோத நடவடிக்கை எனக் குறிப்பிட்டுப் பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் இந்த உத்தரவுக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்துள்ளன.

போலீசு கண்காணிப்புஎனினும், தமிழகத்தில் நடந்துவரும் கொலை, கொள்ளை ஆகியவற்றைக் காரணமாகக் காட்டி, தனது இந்தப் பீதியூட்டும் உத்தரவை நியாயப்படுத்தி வருகிறது, தமிழக போலீசு.  பாதுகாப்பான நகர வாழ்க்கைக்கு இது போன்ற கணக்கெடுப்பு அவசியமென்றும், மும்பய், டெல்லி, பெங்களூரு, புனே போன்ற நகரங்களில் வசிப்போர் பற்றிய விவரங்களைப் போலீசிடம் பதிவு செய்யும் நடைமுறை ஏற்கெனவே அந்நகரங்களில் அமல்படுத்தப்பட்டு வரும்பொழுது, தமிழகத்தில் இது காலதாமதமாகத் தொடங்கப்படுகிறதென அலுத்துக் கொள்கிறது, தமிழக போலீசு.  அதாவது, சென்னையின் புறநகர்ப் பகுதியில் நடந்த இரண்டு வங்கிக் கொள்ளைகளையடுத்து, வாடகை வீட்டில் குடியிருப்போரைக் கண்காணிக்க வேண்டும் என்ற முடிவுக்கு போலீசு வரவில்லை; அதன் மனதில் ஏற்கெனவே தயாராக இருந்த திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு இந்தக் கொள்ளைகளை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளது என்பதுதான் இப்பதிவின் பின்னணியிலுள்ள உண்மை.

வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் கூலித் தொழிலாளர்கள் மத்தியில் நக்சலைட்டுகளும் கலந்து வருகிறார்கள் என ஏற்கெனவே பீதி கிளப்பி வந்த போலீசு, அவர்களைப் பாகுபடுத்திப் பதிவு செய்வதற்கான வாய்ப்பாக இந்தக் கொள்ளைச் சம்பவங்களைப் பயன்படுத்திக் கொண்டுள்ளது.  நடக்கின்ற எந்தவொரு குற்றத்தையும் தனது அதிகாரத்தையும் மக்கள் மீதான கண்காணிப்பையும் கூட்டிக் கொள்வதற்கான வாய்ப்பாக போலீசு பயன்படுத்தி வருகிறது என்பதுதான் இங்கு நமது கவனத்திற்குரியது.

தமிழகத்தில் போலீசின் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்கெனவே எந்தப் பஞ்சமும் கிடையாது.  தீவிரவாதிகளின் நடமாட்டத்தைக் கண்காணிப்பது என்ற பெயரில் முக்கிய ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், பொது இடங்களில் “மெட்டல் டிடெக்டர் மற்றும் சி.சி.டி.வி. கேமரா” கண்காணிப்பு; இரவு 11 மணிக்கு மேலாகிவிட்டால், வாகனங்களைத் தடுத்து நிறுத்திப் பரிசோதிக்கும் நேரடிக் கண்காணிப்பு; பகல்பொழுதுகளில் தெருவுக்குத்தெரு நடத்தப்படும் வாகனப் பரிசோதனை என்ற கண்காணிப்பு; இவை ஒருபுறமிருக்க, தெருவில் குடிமக்களின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதற்காகப் புறக்காவல் நிலையங்கள் புதிதுபுதிதாகத் திறக்கப்படுவதோடு, பல்வேறு தெருச் சந்திப்புகளில் செக்போஸ்டுகளும், சி.சி.டி.வி. கேமராக்களும் அமைக்கப்படுகின்றன.  போலீசின் “இன்ஃபார்மர்களாக’’ப் பணியாற்றுவதற்காகவே போலீசு நண்பர்கள் குழு, போலீசு பாய்ஸ் கிளப்புகள் ஒவ்வொரு பகுதியிலும் கட்டப்படுகின்றன.  இப்படி தெருக்கள் மற்றும் பொது இடங்களில் இருந்து வரும் போலீசின் கண்காணிப்பு இன்று வீடு வரை நீள்கிறது.

குடும்ப அட்டை, மக்கள் தொகை கணக்கெடுப்பு போன்றவை மூலம் குடிமக்கள் பற்றிய தேவையான விவரங்களை அரசு பெற்று வந்தாலும், மேலும் மேலும் குடிமக்களின் அந்தரங்க விசயங்களை அறிந்து கொள்ளுவதற்கும், அவற்றைத் தொகுத்து வைத்துக்கொண்டு அவர்களின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிப்பதற்கும் அரசு பல்வேறு வழிகளில் முயன்று வருகிறது.  தமிழகத்தில் பயின்று வரும் வடமாநில மாணவர்கள் பற்றி தற்பொழுது தமிழக போலீசு நடத்தத் துணிந்திருக்கும் இந்தக் கணக்கெடுப்பை, மைய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை ஏற்கெனவே எடுத்து வருவதாகக் கூறுகிறார், சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்.  மைய அரசோ தேசிய அடையாள அட்டைத் திட்டம் மூலம் குடிமக்கள் அனைவரையும் தமது முழுக் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரும் முயற்சியினைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது.

தேசிய அடையாள அட்டை (ஆதார்) திட்டம், குடிமக்களின் பெயர், வயது, முகவரி போன்ற வெளிப்படையான விவரங்களை மட்டும் கொண்டிருக்கவில்லை; அவரது வங்கி இருப்பு தொடங்கி அவருக்கு உள்ள நோய் வரை அனைத்து அந்தரங்கமான தகவல்களையும் இந்த ஆதார் அட்டையின் மூலம் அரசு நோட்டம் விடுகிறது.

போலீசு கண்காணிப்புதமிழகத்தில் நடந்து வரும் கொலை, கொள்ளையைச் சாக்கிட்டு தமிழக போலீசு மேற்சொன்ன கணக்கெடுப்பு  கண்காணிப்பை நடத்தி வருகிறதென்றால், மைய அரசு கார்கில் போரைச் சாக்காக வைத்து ஆதார் திட்டத்தைக் கொண்டுவந்தது.  பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் கார்கில் போரை ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட கமிட்டி, தீவிரவாத ஊடுருவலைத் தடுப்பதற்காக எல்லைப்புறப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அடையாள அட்டைகள் வழங்க வேண்டுமென ஆலோசனை கூறியது.  பா.ஜ.க. கூட்டணி ஆட்சி இந்த ஆலோசனையின் அடிப்படையில், தேசிய பாதுகாப்பை மறுசீரமைப்பது என்ற அறிக்கையைத் தயாரித்தது.  அதில் வங்கதேச முசுலீம்கள் ஊடுருவலை மிகப் பெரும் அச்சுறுத்தலாகக் காட்டி, தேசிய அடையாள அட்டைத் திட்டத்தை நாடெங்கும் கொண்டு வரும் முடிவை எடுத்தது.  இதற்கு ஏற்ப, குடிமக்களின் அந்தரங்க விசயங்களையும் பதிவு செய்வதற்கு ஏற்றவாறு மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.  பா.ஜ.க.விற்குப் பின் ஆட்சியைப் பிடித்த காங்கிரசு கூட்டணி அரசு, 2008  ஆம் ஆண்டு மும்பயில் நடந்த தீவிரவாதத் தாக்குதலைச் சாக்காகக் காட்டி, தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு தனியான ஆணையத்தை அமைத்தது.

‘‘தேசிய அடையாள அட்டை இருந்தால்தான் இனி ரேஷன் பொருட்கள் கிடைக்கும்; சமையல் எரிவாயு உருளை கிடைக்கும்; அரசு அறிவிக்கும் சமூக நலத் திட்டங்களைப் பெற முடியும்” என அரசு அடுத்தடுத்து போகிறபோக்கில் அறிவிப்பதன் மூலம் இத்திட்டத்தில் பொதுமக்கள் தாமே முன்வந்து பதிவு செய்துகொள்வதைக் கொல்லைப்புறவழியில் கட்டாயமாக்கி வருகிறது.  ஆதார் அட்டை தனி மனித உரிமைகள், அந்தரங்கங்களை மீறுகிறது என மனித உரிமை அமைப்புகளும், ஜனநாயக இயக்கங்களும் சுட்டிக் காட்டினாலும், அந்த எச்சரிக்கையை நடுத்தர வர்க்கம்கூடப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.  ஏதாவதொரு அட்டை இருந்தால்தான் தமது அடையாளத்தை அரசிடம் உறுதிப்படுத்த முடியும் என்ற நிலைக்குப் பொதுமக்கள் தள்ளப்பட்டிருப்பதால், பொது மக்கள் பற்றிய விவரங்கள் அனைத்தையும் பதிவுசெய்து, அவர்களைக் கண்காணிக்கும் திட்டத்தைச் செயற்படுத்துவது அரசுக்கு எளிதாகிவிடுகிறது.

வடமாநிலத் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் வாடகை வீட்டில் குடியிருப்போர் பற்றித் தமிழகப் போலீசு நடத்திவரும் பதிவின்பொழுது அளிக்கப்படும் புகைப்படங்களும், கைபேசி விவரங்களும் போலீசாரால் தவறாகப் பயன்படுத்தப்படாது என்பதற்கு என்ன உத்தரவாதமுள்ளது என்ற கேள்விக்கு, “எங்களை நம்புங்கள்” என யோக்கியனைப் போலப் பதில் அளித்திருக்கிறது, சென்னை போலீசு.  சென்னை போலீசாரால் பதியப்படும் வழக்குகளுள் 60 சதவீத வழக்குகள் பொய்யானவை என மனித உரிமை ஆர்வலர்கள் வெளியிட்டுள்ள விவரத்தோடு ஒப்பிட்டால், போலீசின் நேர்மையும், நாணயமும் நம்மைப் பீதியடையச் செய்துவிடும்.  சென்னை வேளச்சேரியில் நடந்த போலி மோதலில் சுட்டுக் கொல்லப்பட்ட சுஜய்குமார் வங்கிகளை நோட்டம் விடுவது போல போலீசாரால் வெளியிடப்பட்ட காட்சியின் நம்பகத்தன்மை குறித்து ஐயம் எழுப்பப்பட்டு வரும் சூழ்நிலையில், இந்தக் கேள்வியை அவ்வளவு எளிதாகப் புறக்கணித்துவிட முடியாது.

போலீசு கண்காணிப்பு‘‘போலீசு கேட்கும் விவரங்களை அளிப்பதற்குச் சமூக விரோதிகள்தான் அச்சப்பட வேண்டும்.  சட்டப்படி கண்ணியமாக நடந்துகொள்ளும் பொதுமக்கள் ஏன் அச்சப்பட வேண்டும்?” என்ற எதிர்க்கேள்வியின் மூலம் சாதாரண பொதுமக்களை சமாதானப்படுத்த முயலுகிறது, போலீசு.  சமூக விரோதி யார், சட்டப்படி நடக்கும் குடிமகன் யார் என்ற கேள்விக்கு அரசிடம், போலீசிடம் இருக்கும் அளவுகோலே வேறானது.  ஐந்தாறு மாதங்களுக்கு முன்பாகச் சட்டப்படி நடக்கும் குடிமக்களாகக் கருதப்பட்ட கூடங்குளம்  இடிந்த கரை பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், அணு உலையை எதிர்த்துத் தீவிரமாகப் போராடத் தொடங்கிய பிறகு, அவர்களைச் சமூக விரோதிகளாகக் காட்ட அரசும் போலீசும் தொடர்ந்து முயன்று வருகின்றன.  கோவை பகுதியைச் சேர்ந்த சிறு தொழில் அதிபர்கள் மின்வெட்டைக் கண்டித்துப் போராடியபொழுது, தமிழக போலீசு அவர்களை லத்தியால் அடித்துத் துரத்தியது.  கண்ணியமான குடிமக்கள் சட்டம் ஒழுங்கிற்குச் சவால் விடுபவர்களாக மாறியது அந்தப் போராட்ட தருணத்தில்தான்.

ஆங்கிலேய காலனிய ஆட்சியின்பொழுது தம்மை எதிர்த்துப் போராடிய பழங்குடி இன மக்களைக் குற்றப் பரம்பரை சாதியாக முத்திரை குத்திய வெள்ளை துரைமார்கள், அம்மக்களை இரவு நேரங்களில் போலீசு நிலையங்களில் அடைத்து வைத்துக் கண்காணித்தார்கள்.  தகவல் தொழில்நுட்ப வசதிகள் பெருகிவிட்ட இன்றைய மறுகாலனிய கட்டத்தில், இந்திய மக்களைக் கணினி வழியாகக் கண்காணிக்கத் தொடங்கியுள்ளனர், பழுப்பு நிற துரைமார்கள்.  கண்காணிக்கும் முறை வேண்டுமானால் மாறியிருக்கலாம். ஆனால், இரண்டு துரைமார்களுக்கும் பொதுமக்களைப் பற்றிய பார்வை ஒன்றுதான்.

மைய அரசு சமீபத்தில் தேசிய தீவிரவாதத் தடுப்பு மையம் ஒன்றை அமைக்கப் போவதாக அறிவித்திருக்கிறது.  இந்த அமைப்பின் கீழ் வரும் மைய அரசின் உளவுத் துறைக்கு, சந்தேகப்படும் அனைவரையும் கைது செய்யும் அதிகாரத்தையும் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.  இதனை மாநில அரசுகளின் உரிமையில் தலையிடுவதாகக் கூறி, ஜெயா, மோடி உள்ளிட்டோர் எதிர்த்து சவுண்டு விட்டு வருகின்றனர். இந்தப் பிரச்சினையில் சந்தேக லிஸ்டில் கொண்டு வரப்படும் நபரைக் கைது செய்யும் அதிகாரம் மாநில போலீசிடம் இருக்க வேண்டுமா, அல்லது மைய உளவுத் துறையிடம் இருக்க வேண்டுமா என்பது குறித்துதான் காங்கிரசிற்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே மோதல் நடக்கிறதேயொழிய, மக்களின் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுவது பற்றிப் போலி கம்யூனிஸ்டுகள்கூட அக்கறை கொள்ளவில்லை.

போலீசு கண்காணிப்புஅரசு நடைமுறைப்படுத்தி வரும் தனியார்மய  தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளால் தமது வாழ்வாதாரங்களை இழந்துவரும் விவசாயிகள், தொழிலாளிகள், வணிகர்கள், சிறுதொழில் அதிபர்கள் என ஆகப் பெரும்பான்மையான மக்கள் அரசை எதிர்த்துப் போராடத் தயாராகிவரும் சூழ்நிலையில்தான் அரசு அனைத்துக் குடிமக்களையும் தனது முழு கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரத் தயாராகிறது.  தனியார்மயம்  தாராளமயம் என்ற பெயரில் திணிக்கப்படும் மறுகாலனியாக்கம், சட்டத்தின் ஆட்சி, ஜனநாயகம் போன்றவற்றையெல்லாம் வேண்டாத சதைப் பிண்டமாக, தனக்குத் தொந்தரவு தரும் விசயமாகப் பார்க்கிறது.  மறுகாலனியாக்கம் சட்டத்தின் ஆட்சி என்ற இடத்தில் போலீசின் ஆட்சியைக் கொண்டு வருகிறது. மக்களின் சட்டபூர்வ போராட்டங்களைக்கூட, அது துப்பாக்கி முனையில் தீர்த்துவிடத்தான் முயலுகிறது.

வட மாநிலத்திலிருந்து வரும் கூலித் தொழிலாளர்கள், வாடகை வீட்டில் குடியிருப்போர் பற்றிய விவரங்களையெல்லாம் போலீசிடம் பதிவு செய்ய வேண்டும்; வட மாநில மாணவர்கள் பற்றிய விவரங்களைக் கல்லூரி நிர்வாகம் பதிவு செய்ய வேண்டும்; ஆதார் அட்டையை அல்லது அரசால் தரப்படும் வேறு ஏதாவதொரு அட்டையை, நாய்க்கு மாட்டிவிடும் லைசென்சு போன்று எப்போதும் கழுத்தில் மாட்டிக் கொண்டோ அல்லது சட்டைப் பையிலோ வைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதெல்லாம் சட்டபூர்வமாகவே ஒரு பாசிச ஆட்சி திணிக்கப்பட்டு வருவதன் அடையாளங்கள்தான்.

வாய்ப்பு கிடைத்தால், கொலை  கொள்ளை, தீவிரவாதம் போன்ற குற்றச் செயல்களைக் காட்டி பொதுமக்களை இந்தக் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வருகிறார்கள்; அதற்கு வாய்ப்பில்லை இல்லாதபொழுது, அடையாள அட்டை இருந்தால்தான் அரசின் சமூக நலத் திட்டங்கள் கிடைக்கும்; ரேஷனில் அரிசியும், கோதுமையும் கிடைக்கும் எனப் பொய்யான காரணங்களைச் சொல்லி மக்களைத் தமது கண்காணிப்பிற்குள் இழுத்துக் கொள்கிறார்கள்.

சந்தேகப்படும் யாரையும் கைது செய்யலாம்; அவர்களைப் போலி மோதலில் சுட்டுக்கூடக் கொல்லலாம் என்றபடி அரசு பாசிசமயமாகிவரும்பொழுது, இந்த அடையாள அட்டைகள் சுட்டு வீழ்த்தப்பட்ட அல்லது கொட்டடியில் கொல்லப்பட்ட பிணங்களை அடையாளப்படுத்ததான் பயன்படும்.  மற்றபடி, தீவிரவாதத்தையும் கொலை  கொள்ளை போன்ற குற்றச் செயல்களையும் தடுக்கத்தான் இந்தக் கண்காணிப்பு தேவைப்படுகிறது என இந்திய ஆளுங்கும்பலும் போலீசும் சொல்வதெல்லாம் வெறும் பம்மாத்துதான்.  இதனைப் புரிந்துகொள்ள தீவிரவாதத்தைத் தடுப்பது என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட தடா, பொடா சட்டங்கள் யார் மீது ஏவப்பட்டது என்பதைக் கொஞ்சம் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

______________________________________________________

– புதிய ஜனநாயகம், ஏப்ரல் – 2012

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

சார்லி சாப்லின்: எனது குரல் உங்களுக்குக் கேட்கிறதா?

17
சார்லி-சாப்ளின்

சார்லி-சாப்ளின்

நகைச்சுவையால் உலகைக் குலுக்கிய சார்லி சாப்லின்!

‘தி கிட்’ (சிறுவன்) என்ற பட வேலை நடந்து கொண்டிருந்த நேரம். 1920ஆம் ஆண்டு. சார்லி சாப்லின் பட உலகில் நிலைத்துவிட்ட நாட்கள்.

ஒரு நாள் ஏழு வயது சதுரங்க (செஸ்) நிபுணன் ஸ்டூடியோ வந்திருந்தான். ஒரே நேரத்தில் 20 பேருடன் ஆடப்போகிறான். கலிஃபோர்னியா சதுரங்க நிபுணர் டாக்டர் கிரிபித்சும் அன்று ஆடுகிறார்.

அவன் பெயர் சாமுவேல் ரெஷவ்ஸ்கி. மெலிந்த, வெளுத்த, தீவிரமான முகம். பெரிய கண்கள். யாரைச் சந்தித்தாலும் சவால் விடும் கோபமான பார்வை. சந்திப்பதற்கு முன்பே அவனைப் பற்றி எச்சரித்து விட்டார்கள். திடீரென்று உணர்ச்சிவசப்படுவான், வணக்கம் சொல்லவும் மாட்டான் என்றார்கள்.

சாப்லினுக்கு அறிமுகப்படுத்தினார்கள். சிறுவன் அமைதியாக சாப்லினை வெறித்துப் பார்த்துக் கொண்டேயிருந்தான். அவரோ மும்முரமாகத் தொகுப்பு வேலையில் இருந்தார்.

சில நிமிடங்கள் கழிந்தன, ‘உனக்கு பீச் பழங்கள் பிடிக்குமா?’  என்று சாப்லின் கேட்டார். ‘ஓ’ என்றான் அவன். தோட்டத்திலிருந்து எடுத்துக்கொள்ளச் சொல்லி சாப்லின் தனக்கும் ஒன்று வேண்டுமென்று சொல்லி அனுப்பினார்.

பதினைந்தே நிமிடங்களில் அவன் பழங்களோடு திரும்பினான்.

இருவருக்கும் அப்போதே நட்பு பூத்தது.

”உங்களுக்கு செஸ் ஆடத் தெரியுமா?”

”ஆடத் தெரியாதே!”

”நான் கற்றுத் தருகிறேன். இன்றிரவு நான் ஆடுகிற ஆட்டத்தைப் பார்க்க வாருங்கள். இருபது பேரோடு ஒரே சமயத்தில் ஆடப் போகிறேன்” –பெருமிதம் அவன் குரலில் ஓங்கியிருந்தது.

இரவு-

சாப்லின் ஆட்டத்தைப் பார்க்கவில்லை. சிறுவனையே ஆழ்ந்து கவனித்தார். அற்புதமான ஆட்டம் போடும் அவனது வேகம் அசரவைத்தது. அதேசமயம் சாப்லினது மனத்தை அது கலக்கிவிட்டது. ஆழ்ந்து கவனிக்கும் சிறுவனின் சின்ன முகம் ஒரு நொடி குப்பென்று சிவந்தது. அடுத்த நொடி வடிந்து வெளுத்தது. தனது திறமைக்கு அவன் ஆரோக்கியத்தையே விலையாகக் கொடுத்தான். தன்னையே அழித்துக்கொண்டு, அதையே விற்றுக் காசாக்கிப் பிழைக்கும் ஒரு கலைஞனாக அச்சிறுவனைப் பார்த்தார் சாப்லின். எவ்வளவு அவலமான, கொடூரமான வாழ்க்கை!

சார்லி-சாப்ளின்
சார்லி-சாப்ளின்

சார்லி சாப்லினுக்குள் அவர் சாகும் வரை விழித்துக் கொண்டிருந்த ஒரே உணர்வு – இந்த மனிதத்தன்மை தான். வாழ்க்கையின் அடித்தட்டில் கஷ்டப்பட்ட பல லட்சக்கணக்கான உலக மக்களின் மீது அவர் அன்பு செலுத்திய காரணமும் இதுதான்.

ஒருவேளைச் சோறுக்கே தவித்த ஐரிஷ் இனக் குடும்பத்தில் வாழ்ந்து பின்னாளில் கோடிக்கணக்கில் சம்பாதித்தார் சாப்லின். அவரே ஒரு முறை சொன்னது போல பணத்தோடு வாழப் பழகினாரே தவிர, பணக்காரனாக வாழப்பழகவில்லை. காரணம் – தனது பழைய லண்டன் நாட்களின் அடிவேரை மறக்கவில்லை; மறக்க விரும்பியதுமில்லை.

சாப்லின் பிறந்து வளர்ந்தது கலைக் குடும்பத்தில். தாய், தந்தை இருவரும் மேடை நடிகர்கள். அவர் தேர்ந்தெடுத்ததும் நடிப்புத்துறை. அதிலும் நகைச்சுவை நடிகனாகவே பயிற்சி பெற்றார். அப்போதிருந்து தானே எடுத்த சினிமாப் படங்கள் வரை மிகச் சாதாரண ஏழையின் வாழ்க்கையையே எடுத்துச் சொன்னார். பணக்காரர்களின் போலித்தனமான, கேடுகெட்ட, அற்ப வாழ்க்கையை எள்ளி நகையாடினார்.

சாப்லின் அமெரிக்க ஹாலிவுட் சினிமா நடிப்புக்கு வருவதற்கு முன் லண்டனில் வாழ்ந்தார். தாய் ஒருபக்கம், அண்ணன் ஒருபக்கம், அவர் ஒருபக்கம் என்று வேலைக்குப் போய்விடுவார்கள். சுற்றிலும் உள்ள உலகத்தை அனுபவித்து உணர்ந்து அறியவேண்டிய சின்னஞ்சிறு வயதிலேயே பல வேலைகளைச் செய்தார் சாப்லின். சிறுவியாபாரி, கண்ணாடித் தொழிலில் தொழிலாளி, பழைய துணி விற்பனையாளர், ஓட்டல் சர்வர், சாலை போடுபவர், குத்துச் சண்டை விளையாட்டு நடுவர், ஓவியர், நர்ஸ், துப்புரவாளர், ரொட்டிக்கிடங்குத் தொழிலாளி, ரொட்டி சுடும் சமையல்காரர், பிணங்களை அகற்றும் கூலி, துணை நடிகர், மரவேலை இப்படிப் பல வேலைகளில் நுழைந்து வெளியே வந்தவர் அவர்.

குடிகாரத் தந்தை; வேலைதேடி அலையும் அண்ணன்; முதலில் நடிப்பு, பிறகு தையல் மிஷினில் கூலி வேலைசெய்து, அதற்கும் பிறகு கிடைக்கும் தொழில் எல்லாம் செய்து குடும்பத்தைக் காப்பாற்றிய தாய் – இப்படிப்பட்ட வீட்டுச்சூழல்.

படிப்பு – அப்படி ஒன்று நடந்தது கொஞ்சகாலம். அவரும், அண்ணனும் அனாதை விடுதியில் படித்தார்கள். அவர்களுக்கான செலவுப் பணத்தை ஈடுகட்ட அதே நிர்வாகத்தில் அவரது தாய் உழைத்தாள். எப்போதோ ஒரு நாள்தான் தாயைப் பார்க்கமுடியும். தவறே செய்யாவிட்டாலும்கூட நிர்வாகிகள் கொடூரமாகச் சவுக்கடி கொடுத்துத் தண்டிப்பார்கள். தாயின் அரவணைப்புக்கும், பாசத்துக்கும் ஏங்கித் துடித்து வளர்ந்தார்கள் சாப்லினும் அவரது அண்ணனும்.

பின் அங்கிருந்து வெளியேறி தாயின் ஊழைப்பில் காலந்தள்ளினார் சாப்லின். அண்ணன் கப்பற் படைக்குச் சென்றுவிட்டான். ஒருவேளைச் சோறுகூட இல்லாமல் தவிப்பார். அப்படியே பழகி இரவு மட்டும் தாய் கொடுக்கும் பணத்தில் வெளிச்சாப்பாடு வாங்கிவந்து இருவரும் சாப்பிடுவார்கள். அரைப்பட்டினியும், குறைப்பட்டினியும், கடின உழைப்பும், நிம்மதியற்ற வாழ்க்கையும் தாயின் மூளையைச் சிதைத்தன. பிறகு சாகும்வரை அரைப்பைத்திய நிலையில் மருத்துவமனையில் வாழவைக்கப்பட்டாள்.

ஆரம்பகால துயரங்கள், சித்திரவதைகள் சாப்லினின் மனதில் ஆழ்ந்த வடுக்களாகிவிட்டன. ”ஒரே ஒரு குவளை டீ கொடுத்திருந்தால் நான் குணம்ஆகி இருப்பேன்” என்று அவரது தாய் கதறியது இறுதிவரை மறக்கவேயில்லை.

சாப்லின் என்ற ஏழைப்பங்காளனின் உலகப்பார்வை இங்கிருந்துதான் தொடங்கியது. பிறகு பணம் வந்தபிறகு, எல்லாவற்றையும் மறந்துவிட்டுச் சுயநலத்தோடு வாழாமல் ஏன், எப்படி என்று கேள்விகேட்டுக் கொண்டார். தனக்கோ தன் குடும்பத்துக்கோ மட்டும் இந்நிலை இல்லை, சமூகத்தில் அடித்தட்டு ஒன்று உண்டு. அவர்களே சமூகத்தின் அஸ்திவாரம் என்று புரிந்துகொண்டார். வாழ்நாள் முழுவதும் இந்த உண்மையைச் சொல்லும் கலையே சிறந்தது, இதை மாற்றக்கூடிய போராட்டமே மக்களுக்கானது, மற்றவை மக்களுக்கு எதிரானது என்ற கண்ணோட்டத்தை வளர்த்துக் கொண்டார்.

இந்த கண்ணோட்டம் கலைஞருக்கு அவசியம் என்பதை சககலைஞரிடமிருந்து கற்றுக் கொண்டார். தாயிடமிருந்து அதிகம் கற்றுக் கொண்டார்.

சார்லி-சாப்ளின்தொளதொளத்த கால்சட்டை, இறுக்கமான கோட்டு, கால்களில் பெரிய பூட்சுகள், கையில் நடைக்கம்பு, முகத்தில் ஒப்பனை, பல்குச்சி அளவுக்கு மீசை, கோமாளி நடை – இப்படி ஒரு நாடோடித் தோற்றம் – – இதுதான் சார்லி சாப்லின். திரையில் அந்த உருவம் தோன்றிவிட்டால் போதும் – அரங்கத்தில் சிரிப்பு தொடங்கி விடும்.

இந்த நாடோடி உலகம் முழுவதும் மக்களைச் சிரிக்க வைத்தான். இந்திய, தமிழக மக்களுக்கும் அவனை ஓரளவு தெரியும். ஊமைப்படக் கோமாளி நடிகர் சார்லி சாப்லின்.

இன்றுள்ள அளவு தொழில்நுட்பம் வராத காலம் –ஒலி வசதி கூட இல்லை – வண்ணங்களில் எடுக்கமுடியாது; கறுப்பு – வெளுப்பு மட்டும்தான். எங்கு வேண்டுமானாலும் காமெராவை நகர்த்தக்கூடிய வசதிகள், சாதனங்கள் கிடையாது. பலப்பல வரம்புகள். இவ்வளவையும் மீறி, பேச்சு இல்லாத குறை கொஞ்சம் கூடத் தெரியாதபடி ஒரு மணி, இரண்டு மணிநேரம் பார்ப்பவர்களை ஈர்த்துவிடும் அற்புதத்தைத் திரையில் படைத்தார் சாப்லின். உலகில் தனக்கு முன்னால் நகைச்சுவைக் கலையை மனித நேயத்துடன் நடித்தவர்களின், கதைகள் எழுதியவர்களின் பாரம்பரியத்திலிருந்து அள்ளி எடுத்துக் கொண்டார் சாப்லின். அப்டன் சிங்ளேர், பிரெக்ட், பெர்னார்டு ஷா, தாமஸ் மான், என்று எண்ணற்ற எழுத்தாளர்களிடமிருந்து, நிஜின்ஸ்கி போன்ற நாட்டியக் கலைஞரிடமிருந்து, ஹான்ஸ் ஐஸ்லர் போன்ற பாட்டாளிவர்க்க இசை மேதையிடமிருந்து, ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞானிகளிடமிருந்து, ஐஸன்ஸ்டீன், டான்லெனோ, மார்செலின், டன்வில், மார்க்ஷெரீடன், பிராங்க் காயின், ஜார்மோ போன்ற நகைச்சுவை நடிகர்களிடமிருந்து ஏராளமாகக் கற்றுக் கொண்டார்.

சாப்லின் படங்களை வேகமாக ஒரு நோட்டம் விட்டால் வாழ்க்கை வீச்சை அதில் பார்க்கலாம்.

*1914 கீஸ்டோன் சினிமாக் கம்பெனியில் தயாரித்த தி நியூ ஜானிடர்‘: (துப்புரவு வேலையாள்): இந்தப் படத்தில் அந்தத் தொழிலாளி ஏதோ தவறு செய்துவிட மேனேபஜர் வேலையைவிட்டு நிறுத்திவிடுகிறேன் என்று கத்துகிறான். ‘ஐயா எனக்குப் பெரிய குடும்பம். சின்னஞ்சிறு குழந்தைகள் வேறு. வேலையவிட்டு நிறுத்திடாதீங்கய்யா என்று அவன் கெச்சுவான். இப்படிச் சிறு சிறு சம்பவங்களாக அவனது வாழ்க்கை.

*1917 ஃபர்ஸ்ட் நேசனல் கம்பெனியில் தயாரித்த ஒரு நாயின் வாழ்க்கை‘: ஏழையின் வாழ்க்கையை நாயின் வாழ்க்கைக்கு ஒப்பிட்டு நகைச்சுவைக் காட்சிகள் வரும், எச்சில் சோறு தேடப்போய் நாய்ச்சண்டையில் ஒரு நாயைக் காப்பாற்றுகிறான் நாடோடி; பிறகு அந்த நாய் நட்பாகிறது. இப்படியாக அவனது ஒருநாள் வாழ்க்கைதான் படத்தின் கதை.

*1921 – தி கிட்: குப்பைத் தொட்டியருகே ஒரு குழந்தை அனாதையாக வீசப்படுகிறது. நாடோடி எடுத்து வளர்க்கிறான். அதை வளர்க்க அவன் படும்பாடு. வளர்ந்து சிறுவனானதும் அவன் பெரிய பங்களாக்களின் கண்ணாடிக் கதவுகளை உடைப்பான். நாடோடி சென்று செப்பம் செய்து சம்பாதிப்பான். இருவரும் நடுவே எதிரியாக வரும் போலீசைச் சமாளிப்பார்கள்.

*’தி சர்க்கஸ்‘ : சர்க்கஸ் கோமாளியின் அவல வாழ்க்கை. அவர் மிக உயர்வாக மதித்த மார்செலின் என்ற அற்புதமான மேடை நகைச்சுவை நடிகர் பிழைப்புக்காக பல கோமாளிகளோடு ஒரு கோமாளியாக சர்க்கஸ் கூடாரத்தில் வாழ்வதை நேரில் பார்த்தார். அவரது நசிந்த வாழ்க்கையே இந்த திரைப்படம் என்று சொல்லலாம். ஒரு கலைஞன் எப்படியெல்லாம் துன்பப்படுகிறான் என்பதை சர்க்கஸ் கூடாரத்தில் நடக்கும் சம்பவங்கள் மூலமாகக் காட்டுகிறார். (ராஜ்கபூரின் ‘மேரா நாம் ஜோக்கரி’ன் கடைசிப் பகுதி சாப்லினை மோசமாகக் காப்பியடித்த படமாகும்.)

*’தி ஐடில் கிளாஸ்‘ (சோம்பேறி வர்க்கம்): நாடோடி கோல்ஃப் ஆட்டம் ஆடுகிறான். அங்கு நடக்கும் விருந்தில் அழகிய பெண் ஒருத்தியைச் சந்தித்துப் பழகுகிறான்; அதற்காகவே கனவான்களிடம் அடி உதை வாங்கி வெளியே ஓடுகிறான்; மறுபடி பயணம் தொடருகிறான். பணக்காரச் சோம்பேறி வர்க்கத்தை, அந்த கேவலமான வாழ்க்கையை அலசுகிறார் சாப்லின்.

*’தி சிடி லைட்ஸ்‘ (நகர விளக்குகள்) 1931: இதன் கரு உருவானதே விசித்திரமான கதை. பணக்காரனின் கிளப்பில் இரண்டுபேர் ‘மனித உணர்வுகள் நிலையில்லாதது. அதாவது மாறிக்கொண்டே இருக்கும்’ என்று வாதிட்டார்கள். ஒருநாள் சாதாதாரண ஏழையைக் கொண்டுபோய் தங்கள் பங்களாவில் மது, மாது, பாட்டு நடனம் எல்லாம் கொடுத்தார்கள்; அவன் மயங்கி விழுந்ததும் மறுபடி அவன் வாழ்ந்த நடைபாதையில் கொண்டு போட்டு விடுகிறார்கள். தூங்கி எழுந்த அவன் முந்தின இரவு நடந்தது கனவா, நனவா என்று புரியாமல் விழிக்கிறான். இந்த பணக்காரர்களின் குரூரமான வக்கிரப் புத்தியைச் சந்தித்த சாப்லின் இதிலிருந்து தனக்கான கருவை உருவாக்கினார். கிளப்பில் விவாதித்த சோம்பேறியின் பிரதிநிதியாக ஒரு பணக்காரனைக் குடிகாரனாக்கி, அவன் போதையில் இருக்கும் போது நாடோடியை இழுத்துக் கொண்டு போய் நண்பன் என்று சீராட்டுவான். மறுநாள் காலை போதை தெளிந்ததும் ‘யார்டா நீ’ என்று கேட்டுவிட்டுப் போய்விடுவான். இந்த அதிர்ச்சியிலிருந்து நாடோடி மீள்வதற்க்குள்ளாக மறுபடி வேறொரு நாள் அக்குடிகாரன் அவனைப் பார்த்து நட்பு கொண்டாடுவான்.

சார்லி-சாப்ளின்ழ்மை, வறுமை பற்றி சாப்லின் ஆழ்ந்த கருத்துக்களைச் சொல்வதற்கு பல காரணங்கள் தேடினார்கள். சாமர்செட்மாம் என்ற அமெரிக்க எழுத்தாளர் ”அவரது பழைய நாட்களை விரும்புகிறார், இளவயதில் போராடிய நாட்களின் சுதந்திரத்தை விரும்புகிறார், அதனால் தான் அவரது நகைச்சுவை இப்படி இருக்கிறது” என்றார். அதற்குப் பதில் சொன்ன சாப்லின், ”வறுமை கவர்ச்சிகரமான விஷயம் போல் எழுதிவிடுகிறார்கள். எந்த ஒரு ஏழையும் பழைய வறுமையை மறுபடி விரும்புவதில்லை. அதற்காக ஏங்குவதுமில்லை. அதை போல வறுமையில் சுதந்திரம் காண்பவனும் இருக்கமுடியாது…..” என்று தெளிவாய்ச் சொன்னார். பணக்காரர்களின் அழுகிநாறும் உலகமும் வேண்டாம், ஏழ்மை வறுமையும் வேண்டாம், சுதந்திரமான – ஜனநாயகமான புதிய உலகம் வேண்டும். இதுவே அவரது நடிப்பு, கதை, அரசியல் வாழ்க்கை எல்லாம், இதன் தர்க்கரீதியிலான சிந்தனைகள் அவரைக் கம்யூனிச ஆதரவாளராக மாற்றியது.

உலகைச் சுற்றிலும் ரத்தம் தேடி அலையும் பாசிச அரக்கன் ஜெர்மனி இட்லர்; அதை எதிர்த்த பாட்டாளி வர்க்கத்தின் போரும் தியாகங்களும் – இந்த நிலைமையில் ஹாலிவுட் கலைஞர்களை போதைகளான, ஆபாசமான, பொறுப்பற்ற பொழுதுபோக்குச் சரக்கைத் தயாரிக்கச் சொல்லி பலவந்தம் செய்தார்கள் முதலாளிகள். நேர்மை, தனிவுள்ளம் கொண்ட கலைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். முதலாளிகளின் அராஜகத்தை கேலிசெய்து ‘மாடர்ன் டைம்ஸ்’ என்ற படம் தயாரித்தார் சாப்லின்; இட்லரை எதிர்த்து அம்பலப்படுத்தும் ‘கிரேட் டிக்டேடர்’ (மாபெரும் சர்வாதிகாரி’) என்ற படமும் தயாரித்தார்.

இருபடங்களைத் தொடர்ந்து  அவர் மீது அவதூறு வழக்குகள், 10 ஆண்டுகள் நடந்தன. இதனால் அவரது ‘யுனைடட் ஆர்டிஸ்ட்ஸ்’ பட நிறுவனம் சரிந்தது. ‘அமெரிக்காவில் பல காலம் வாழ்ந்தும் ஏன் குடியுரிமை பெறவில்லை?’ என்ற கேள்வி எழுப்பினார்கள். ‘அயல்நாட்டானை அடித்துத் துரத்து’ ‘சாப்லின் விருந்தாளி. நீண்டநாள் தங்கிவிட்டார்’ என்று ‘கத்தோலிக்க படைப்பிரிவினர்’ எதிர்ப்புக் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார்கள்.

எதிர்ப்புகள் தோன்றத்தோன்ற சாப்லின் உறுதியாக நின்றார். இரண்டாம் உலகப் போரில் நேச நாடுகள் அணி சேர்ந்தன. சோவியத் ரசியா மீது ஜெர்மனி போர் தொடுத்தது. 200 நாஜிப்படைப் பிரிவுகளை எதிர்த்து முதல் போர் முன்னணியைத் தொடங்கியது சோவியத். அங்கு நிவாரணக் குழு அனுப்பவும், அமெரிக்கா இரண்டாவது போர் முன்னணியைத் தொடங்க நிர்ப்பந்தம் செய்தும் சாப்லின் வீர உரைகள் ஆற்றினார்.

அவரைக் கம்யூனிஸ்டு என்று தூற்றினார்கள். சாப்லின் அஞ்சவில்லை.

”நான் ஒரு கம்யூனிஸ்டு அல்ல. நான் ஒரு மனிதன். மனித உணர்வுகள் எனக்குத் தெரியும். எப்பொழுது எப்படி நடந்து கொள்வார்கள் என்று தெரியும். கம்யூனிஸ்டுகள் மற்றவர்களை விட வித்தியாசமான ஜீவன்கள் இல்லை. கம்யூனிஸ்டுகளின் தாயும் மற்ற தாய்களைப் போலத்தான். தனது மகன் போர் முனையிலிருந்து திரும்ப மாட்டான் என்று செய்தி கேள்விப்படுகிற போது அந்தத் தாயும் அழுகிறாள். கதறுகிறாள். இதை நான் புரிந்துகொள்ள கம்யூனிஸ்ட்டாக இருக்க வேண்டியதில்லை. நான் ஒரு மனிதனாக இருந்தாலே போதும்….”

”ரசியப் போர் முனையில் சாவா, வாழ்வா என்ற போராட்டத்தில் ஜனநாயகம் இருக்கிறது. நேச நாடுகளின் விதி கம்யூனிஸ்டுகளின்  கையில் இருக்கிறது…. லிபியாவைக் காத்தோம், இழந்தோம்; பிலிப்பைன்ஸ், பசிபிக் தீவுகள் அத்தனையும் இழந்தோம். ஆனால் ரசியாவை இழக்கவிடக்கூடாது. அது ஏன்? ரசியாதான் ஜனநாயகத்தைத் தீவிரமாகக் காக்கும் போர் முன்னணி. நமது உலகம் – நமது வாழ்வு – நமது நாகரிகம் காலடியில் நொறுங்கிக்கொண்டிருக்கிறது. நாம் உடனே முடிவெடுத்தாக வேண்டும்.”

இந்த நேரத்தைக் கைவிட்டுவிட்டால், ஜெர்மனி இட்லர் ஜெயித்தால், உலகெங்கும் உள்ளே மறைந்திருக்கும் நச்சுக் கிருமிகள் போல நாஜிகள் வெளியே தலைதூக்குவார்கள். வெற்றிபெற்ற இட்லரோடு ஒப்பந்தம் போடச் சொல்வார்கள். எச்சரிக்கையாக இருக்கவேண்டும்

என்று மக்களிடம் அவசரமாக, தீவிரமாக, ஒரு புயல்போல பிரச்சாரம் எடுத்துச் சென்றார்.

சார்லி-சாப்ளின்கடைசியில் அமெரிக்காவை விட்டு வெளியேறினார். எங்கு பல கனவுகளோடு உழைத்துக் கொண்டிருந்தாரோ, எங்கு பாசிச ஆதரவு முதலாளிகளின் மனிதகுல நாசவேலைகள் தீவிரப்பட்டதோ அங்கிருந்து வெளியேறினார். இங்கிலாந்து சென்றார். அங்கும் நாஜி ஆதரவாளர்கள், மக்களின் எதிரிகள் தொல்லை கொடுத்தார்கள். உலகம் முழுதும் பரவியுள்ள நச்சுக் கிருமியாகப் போர் வெறியைப் பார்த்தார் சாப்லின். இறுதி மூச்சுவரை அதை எதிர்த்துக் கலை அரங்கிலிருந்து தாக்குதல் தொடுக்க அவர் தவறவில்லை.

ஒரு சுவையான சம்பவம், இங்கிலாந்தில் சாப்லினுக்கு நேர்ந்த்து. நண்பருக்கு நண்பர் என்று சொல்லிக்கொண்டு ஒருவன் வந்தான். அவரோடு பேசிக் கொண்டிருந்தார். ஐரோப்பாவில் உள்ள நிலைமையைப் பார்த்தால் அடுத்த போரும் வரும் என்றார் சாப்லின். ‘அடுத்தமுறை போருக்குச் செல்ல நான் அகப்படமாட்டேன்’ என்றார் அவர்.  ”உன்னைப் பழிசொல்லி என்ன பயன்? நீ இன்னாரோடு சண்டைக்குப்போ, செத்துப்போ என்று கட்டளை போட இவர்கள் யார்? இதில் தேசபக்தி என்ற பெயர் வேறு. என்று சொன்னார் சாப்லின். அடுத்தநாள் செய்தி ஏடுகளில் பெரிய தலைப்பில் செய்திவந்தது – ”சாப்லின் தேசபக்தர் அல்ல”. பிறகுதான் சாப்லினுக்குப் புரிந்தது, முந்தினநாள் வந்து பேசியது எந்த நண்பருக்கு நண்பனும் அல்ல, ஒரு செய்தியாளர் என்பது.

சாப்லின் அதற்குச் சொன்ன பதில் அவசியம் குறிப்பிடவேண்டிய ஒன்று. ” ஆம் நான் தேச பக்தன் அல்லதான், அதாவது தேச பக்தி என்ற பெயரில் 60 லட்சம் யூதர்கள் கொல்லப்படும்போது” அப்படிப்பட்ட தேசபக்தி போலி தேசியம், அப்படிப்பட்ட ஒரு ஜனாதிபதிக்காக, ஒரு பிரதமருக்காக, ஒரு சார்வாதிகாரிக்காக உயிர்க்கொடுக்க நான் விரும்பவில்லை. – சாப்லின் இவ்வாறு கொதித்துச் சொன்னார்.

ஒரு கலைப் பொருள் பற்றி சாப்லினிடம் விவாதித்ததால் அது மக்களுக்கானதா என்றுதான் அவர் ஆராயத் தொடங்குவார். தனது திரைப்பட நகைச்சுவைக் கலை மூலம் இதைத்தான் சாதித்தார். ஒலிப்பதிவு வந்த பிறகும் அவர் துணிச்சலாக ஊமைப்படம் எடுத்தார். ஊமைப்படத்திலேயே அதன் வரம்புகளை நடிப்பின் மூலம் உடைத்தெறியக் கற்றுத் தேர்ந்ததால், ஒலியைப் பயன்படுத்த முடியவில்லை. இந்த வகைக்கலையில் ஓர் அறிஞர் சாப்லின் என்றுகூடச் சொல்லலாம்.

கட்டளைக்கு ஆடிவிட்டு வரும் கலை மோசமான கலை என்பார் அவர். மனிதனுக்கே எதிரான கருத்தைப் போலித்தனமாக வேஷங்கட்டி ஆடமுடியாது. ஒரு சிறந்த கலைஞர், ஒரு உன்னதமான கலைஞர் அவ்வாறு செய்யமாட்டார். கலைபற்றி பல விதங்களில் விளக்க முற்பட்ட சாப்லின் – உணர்ச்சிகளையும் புத்தியையும் இணைத்துக் கலக்கும் விதம் கலைஞனுக்குக் கைவரவேண்டும். அதற்கு வெறும் திறமை மட்டும் போதாது, கலைநுட்பம், கலைத்திறன் வேண்டும். அதற்கு நல்ல பயிற்சி வேண்டும் என்றார்.

அவர் கலையில் ஓர் எதார்த்த வாதி. வெளியே நடப்பதை அப்படியே திரையில் எடுத்துவைப்பது எதார்த்தம் அல்ல; கற்பனை அந்த எதார்த்தத்திலிருந்து என்ன எடுத்துச் செய்யமுடியுமோ அதுவே முக்கியம் என்பார். உலகெங்கிலும், ஏன் இந்தியாவில் உள்ள ஒரு சில இயக்குனர்கள் கூட எதார்த்தம் என்பதுபற்றி விசித்திரமான கருத்துக்கள் வைத்திருக்கிறார்கள்.

பார்வையாளர்கள் ஒரு குறிப்பிட்ட செட் அல்லது இடத்தைப் புரிந்துகொண்டுவிட்டார்கள் என்றால் போதும். அதற்குப் பிறகும் கதாபாத்திரம் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அசைவது; நகருவது எல்லாம் காட்டவேண்டியதில்லை. இது படத்தின் ஓட்டத்தைக் குறைத்துவிடுகிறது. ஆனால் இதைத்தான் கலைப்படம் என்று சிலர் சொல்கிறார்கள் என்று கேலி செய்தார் சாப்லின்.

நம்நாட்டில் சத்யஜித்ரே, குமார் சஹாரி, அடூர் கோபாலகிருஷ்ணன், அரவிந்தன் போன்றோர் இப்படிப்பட்ட சித்தரிப்பையே எதார்த்தம் என்கிறார்கள்.

அதேபோல அவசியமில்லாமல் காமிரா விளையாட்டு காட்டுவது கலையல்ல என்றார் சாப்லின். ஓர் அறை, கணப்பு அடுப்பு, அதைக் காட்டுவதற்கு எரியும் துண்டுக் கரியின் பார்வையிலிருந்து அடுப்பையும், அறையையும் காட்டவேண்டிய அவசியமில்லையே என்று கேலி செய்தார் அவர்.

வாழ்க்கை முரண்பாடுகள், போராட்டங்கள் நிறைந்தது; அதில் வரும் நோவும் துன்பமும் இல்லாமல் வாழ்க்கை இல்லை. இதிலிருந்துதான் தனது கதைகளை எடுத்துக் கொண்டார் சாப்லின். கற்பனையைத் தூண்டும் சம்பவங்களை ஓயாது தேடும் காவல் கோபுரமாக மனது (மூளை) பயிற்சி பெற்று விட்டது. ஒரு கருவை எடுத்தபிறகு, விரிவாக்குவேன், பிறகு அதில் முழுமூச்சாக ஈடுபடுவேன் என்று தனது கலை ஆக்கத்தைச் சொன்னார் சாப்லின்.

லண்டன் கென்னிங்டன் தெரு பவுனால் ஏழைக்குடியிருப்பில் வித்திடப்பட்ட அக்கலைஞன் நாடுவிட்டு நாடு பயணம் செய்த போதும், நடிப்புத் துறையில் முன்னேறி எவ்வளவோ சம்பாதித்தபோதும் தன் வேரை இடம் பெயர்க்கவே இல்லை. ‘The Great Dictator – மாபெரும் சர்வாதிகாரி‘ திரைப்படத்தின் கடைசிக் காட்சியில் ஓர் முடித்திருத்தும் தொழிலாளி மாறாட்டத்தினால் சர்வாதிகாரியின் இடத்தில் ஆட்சியில் அமர்த்தப்படுகிறார். அந்த எளியவரின் எண்ணங்கள் மாறவில்லை. அவர் பேசுகிறார் – யாரும் எதிர் பாராத பேச்சு – சர்வாதிகாரியையே எதிர்த்துப் பேசுகிறார். கதாபாத்திரம் அங்கே பேசவில்லை – அவர்மூலம் சாப்லின் என்ற மனிதர், ஒரு ஜனநாயகக் கலைஞர் அங்கே பேசுகிறார்:

”இப்போது எனது குரலை உலகெங்கிலும் உள்ள பல லட்சக்கணக்கான மக்கள் நீங்கள் கேட்கிறீர்கள். துன்பப்படும் பல லட்சக்கணக்கான ஆண்கள், பெண்கள், சின்னஞ்சிறு குழந்தைகள் அத்தனைப்பேரும் உங்களையே அடிமைப்படுத்தும் ஓர் அமைப்புக்குப் பலியாகியிருக்கிறீர்கள்:

எனது குரல் உங்களுக்குக் கேட்கிறதா? எனக்குச் செவி கொடுப்பவர்களுக்குச் சொல்கிறேன், தயவுசெய்து கேளுங்கள்: ‘துயரப்படாதீர்கள்’ இத்துன்பம், இத்துயரம் பேராசைக்காரர்களால் வந்தது. அது பனிபோல் நீங்கிவிடும். மனித குலம் முன்னேறும் வேகத்தைக் கண்டு அஞ்சிக்குலை நடுங்கும் அற்பமனிதர்களால்தான் துன்பம் வருகிறது. இனி மனிதர்களுக்கு இடையே உள்ள குரோதங்கள் மறைந்து விடும்; சர்வாதிகாரிகள் செத்து விழுவார்கள். மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட அதிகாரம் மக்களுக்கே திரும்ப வந்து சேரும். இந்த லட்சியத்துக்காக மக்கள் போரிட்டுப் பல தியாகங்கள் செய்கிறார்கள். அவர்கள் காப்பாற்றித்தரும் விடுதலை என்றுமே அழியாது!….. வீரர்களே! அடிமை வாழ்வுக்காகச் சண்டை போடுங்கள்! விஞ்ஞானமும் முன்னேற்றமும் மனித இனத்தை உந்தித்தள்ளும் ஒரு புது உலகத்துக்காகப் போரிடுவோம்! வீரர்களே, ஜனநாயகத்தின் பேரால் நாம் ஓரணி சேருவோம்!

மக்கள் கலைஞனின் சுதந்திரமான இனிய குரலைப் பலமுறை கேளுங்கள்; இந்தியாவின் உண்மையான சுதந்திரத்துக்கான போருக்காக அவ்வினிய குரலிலிருந்து தெம்பினைப் பருகுவோம்!

_______________________________________

புதிய கலாச்சாரம், ஏப்ரல் 1989.

_______________________________________